இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.[1]
செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது.
டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகப் போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு நடந்த செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளைக் குறிப்பிடுகின்றனர்.[2]
ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் (A.J.P. Taylor) கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது.
இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள்குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளைக் குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது.[3] அவ்வாறே செருமனியுடன் இறுதி தீர்வு ஒப்பந்தம் 1990 வரை மேற்கொள்ளப்படவில்லை.