என்னிடம் வரும் ஜாதகர்கள், அந்தோணி ராஜ் என்ற பெயரில் அறிமுகமானாலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மதம் மாறி, அண்ணாமலை எனப் பெயர் வைத்துக் கொள்கின்றனர்.
அவரை விசாரித்ததில், திருவண்ணாமலைக்கு ஒருமுறை கிரிவலம் சென்றதாகவும், அப்போது தன் மனதில் இனம்புரியாத ஒரு நிம்மதி கிடைத்ததால், “அண்ணாமலையானுக்கு அரோகரா” எனக் கூறி தனது பெயரை மாற்றிக் கொண்டதுடன், சிவன் நாமத்தை ஜெபித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மதமாற்றத்தைப் பொறுத்தவரை, முன்ஜென்மத்தில் ஒரு குறிப்பிட்ட விடயத்துடன் ஏற்பட்ட தொடர்பு, அடுத்த ஜென்மத்திலும் தொடர்வதாகவே கருதப்படுகிறது. இதைத்தான் “விட்டகுறை தொட்டகுறை” என்று ஜோதிடத்தில் கூறுகிறோம்.
அந்தோணிராஜ் ஆக இருந்து அண்ணாமலையாக மாறியவருக்கு ரிஷப ராசி, ரிஷப லக்னம். ரிஷபம் சிவனின் ராசி என்பதால், அவருக்கு சிவன் அருள் கிடைத்தது. அதனால் அவர் மதம் மட்டுமல்ல, மனமும் மாறினார்.
துவக்கத்தில் அவரது குடும்பத்தினர் அவரை கடுமையாகக் கண்டித்தாலும், சிவனை வணங்குவதில் அவர் தீவிரமாக இருந்தார். அடிக்கடி என்னை சந்தித்து அவர் பேசுவது உண்டு. அப்போது அவருக்கு ஞான மார்க்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தேன்.
திருவண்ணாமலைக்கு அடிக்கடி கிரிவலம் மேற்கொள்ளும் அவருக்கு, அங்குள்ள சித்தர்களின் தொடர்பும் கிடைத்தது. சித்தர்களின் பாஷையையும் அவர் புரிந்து கொண்டதாக பின்னர் என்னிடம் கூறினார். இதுபோல் ஒவ்வொரு மதம் மாற்றத்திற்குப் பின்னாலும் பல்வேறு தொடர்புகளும், காரணங்களும் உண்டு.