Author Topic: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~  (Read 85770 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம். ஐம்புலங்களில் ஆக விலைமதிக்க முடியாதது 'கண்'தான். கண் பார்வையிழந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத முடங்கி கிடந்த காலம் உண்டு. அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்து அவர்கள் எழுத, படிக்க ஓர் எளியமுறையை வகுத்துத்தந்த ஓர் அற்புத வரலாற்று மாந்தரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் 'பிரெய்ல்' எனப்படும் எழுத்துமுறையை உருவாக்கித்தந்த லூயி பிரெய்ல் (Louis Braille).



1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிரான்சில் பிறந்தார் லூயி பிரெய்ல். அவரது தந்தை ஓர் தோல் வியாபாரி பலவித தோல்களை வெட்டி கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றை தைத்து விற்பனை செய்வார் அதுதான் அவர்களது குடும்பத்தொழில். சிறுவயதிலிருந்தே மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவென்றும் இருந்த பிரெயிலுக்கு தந்தையைப் பார்த்து அவரைப்போலவே தோலை வெட்டி தைத்து விளையாடுவதில் அலாதி பிரியம். அவருக்கு மூன்றே வயதானபோது ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பா இல்லாத சமயம் அவர் கத்தி ஊசியுடன் தோல் தைத்து விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று அலறல் சத்தம் சமயலறையிலிருந்து ஓடிவந்து பார்த்த அம்மாவின் இதயத்துடிப்பு சில வினாடிகள் அடங்கிப்போனது. ஒரு கண்ணில் இரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் துடித்துக்கதறினான் பிஞ்சு பாலகன் பிரெய்ல்.

தோலில் துளைபோட உதவும் கூர்மையான ஊசிபோன்ற கருவி அவன் கண்ணை பதம் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த தாய் பதறியடித்துக்கொண்டு பிரெயிலை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். பிரெயிலை பரிசோதித்த மருத்துவரைப் பார்த்துக்கொண்டே பிரார்த்தனையில் மூழ்கினார் அந்த தாய். பிரெய்ல் ஒரு கண்ணில் பார்வை இழக்கப்போகிறான் என்ற செய்தியை மருத்துவரின் கவலை தோய்ந்த கண்கள் அந்த தாய்க்கு உணர்த்தின. ஒரு கண்ணில் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார் மருத்துவர். பிரெயிலுக்கு இருள் என்றாலே பயம் இரவில் தூங்கும்போதுகூட மெழுகுவர்த்தி ஒளியில்தான் தூங்குவான். சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை "அம்மா இருட்டிவிட்டது ஏன் இன்னும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை?" என்று கேட்டான் பிரெய்ல் தாயின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது ஏனெனில் அப்போது பட்டப்பகல் நேரம்.

முதல் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் இரண்டாம் கண்ணும் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்துவிட்டான் பிரெய்ல் என்பதை அறிந்து உள்ளுக்குள்ளேயே அழுதது அந்த தாய் உள்ளம். அப்போது பிரெயிலுக்கு வயது நான்குதான். அன்று அந்த தாய் சிந்திய கண்ணீருக்கு ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமே இன்று நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வயதில் ஏற்பட்ட இயலாமைதான் பார்வையற்றோரின் சரித்திர நாயகனாக பிரெயிலை பிற்காலத்தில் உயர்த்தியது. பார்வையிழந்தும்கூட இரண்டு ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்கு சென்றார் பிரெய்ல். ஆனால் எழுதவும் படிக்கவும் முடியாது என்பதால் பள்ளியை தொடர முடியாமல் போனது.



பிரெயிலுக்கு பத்து வயதானபோது பாரீஸில் (paris) உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர். அந்தப்பள்ளியில் வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது ஆனால் எழுத கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கான எழுத்துகள் தாள்களில் புடைத்திருக்கும் அதனை விரல்களால் தொட்டு உணர்ந்து ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க வேண்டும் அது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு வாக்கியத்தை படித்து முடிக்கும் முன் ஆரம்ப எழுத்துகள் மறந்து போகும். தம்மைப்போன்றோர் வாசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த முறை இருக்க வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினார் பிரெய்ல்.

ஒருமுறை அந்தப்பள்ளிக்கு Charles Barbier என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார். பணிரெண்டு புள்ளிகளை கொண்ட அந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம் அதனை 'sonography' என்று அவர் அழைத்தார். ஆனால் அது சிரமமானது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்த இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது அது பயன்படட்டும் என்று Charles தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார். அதனை ஆராய்ந்த பிரெய்லுக்கு அதில் நிறைய விசயங்கள் அடங்கியிருப்பதாகபட்டது. அதனை கொஞ்சம் எளிமைப்படுத்தினால் ஒரு நல்ல முறையை உருவாக்கலாம் என்று நம்பிய அவர் அடுத்த சில மாதங்களுக்கு சொந்தமாகவே பல சோதனைகளை செய்து பார்த்தார். அதன்பலன் மூன்றே ஆண்டுகளில் அவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார். அதுதான் அவரது பெயரிலேயே 'பிரெய்ல்' முறை என்று இப்போது அழைக்கப்படுகிறது.



பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம். உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் 'பிரெய்ல்' முறை. அந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்த பிரெய்ல் சில ஆண்டுகளில் கணிதத்திற்கும், இசைக்கும்கூட எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் பிரெய்ல் முறையை அந்தப்பள்ளிக்கூடம் கண்டுகொள்ளவில்லை ஓர் ஆசிரியர் அதற்கு தடைகூட விதித்தார். ஆனால் நாளடைவில் அந்த முறையின் மகிமையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு 'பிரெய்ல்' முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தாம் கற்ற பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் பிரெய்ல். துரதிஷ்டமாக அவருக்கு காசநோய் ஏற்பட்டு 1852-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தனது 43-ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறந்தபிறகுதான் அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது பிரெஞ்சு அரசாங்கம். சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1952-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட புகழ்பெற்ற 'Pantheon' அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது.



'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் ஒளவையார் கொன்றை வேந்தனில். ஆனால் அந்த கண்களே இல்லாதவர்களுக்குகூட எண்ணையும், எழுத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார் லூயி பிரெய்ல். அவர் தந்த வரத்தால்தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது. பிரெய்ல் நான்கு வயதிலேயே பார்வையை இழந்தபோதும் எல்லாப் பாடங்களிலும் மிகச்சிறப்பாக தேறினார் என்பதும் Chello, Organ ஆகிய இரண்டு இசைக்கருவியையும் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்பதும் நாம் வியக்க வேண்டிய் வரலாற்று உண்மைகள்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவருக்கு இருகண்களாக செயல்பட்டன. நம்மில் பெரும்பாலோர் ஐம்புலங்களும் நன்றாக செயல்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் ஐம்புலங்களில் ஆக முக்கியமான கண்ணை இழந்தபோதும்கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை லூயி பிரெய்ல். ஓர் அபூர்வ கண்டுபிடிப்பால் தன்னைப் போன்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார் அவர். அந்த தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் நம் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் செயல்படுவோருக்கு வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுகூட இயற்கையின் நியதிதான்.
« Last Edit: January 20, 2013, 07:42:59 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மிக்கைல் கொர்பசோவ் - வரலாற்று நாயகர்!

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Clod War' எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.   

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev). 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் நாள் தெற்கு ரஷ்யாவின் Stavropol வட்டாரத்தில் உள்ள  Privolnoye எனும் கிராமத்தில் பிறந்தார் கொர்பசோவ். அவர் சிறுவயதாக இருந்தபோது ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மோசமான கொடுங்கோலர்களில் ஒருவர் என்று வரலாறு வருணிக்கும் ஸ்டாலினின் ஆட்சியில் ஒன்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் கொர்பச்சொவின் தாத்தா Andreyevich Gorbachev. ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வளர்ந்தார் கொர்பசோவ்.



பள்ளியில் சிறந்து விளங்கிய அவர் தமது பதினைந்தாவது வயதிலேயே இளையர் கம்யூனிஷ்டு லீகில் சேர்ந்தார். 1950-ஆம் ஆண்டில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே கம்யூனிஷ்டு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழகத்திலேயே தான் சந்தித்த  Raisa Titarenko என்ற பெண்ணை தான் பட்டம் பெற்ற 1953-ஆம் ஆண்டிலேயே மணந்து கொண்டார். சட்டத்தில் பட்டம் பெற்று தாம் பிறந்த Stavropol வட்டாரத்திற்கு திரும்பிய கொர்பசோவ் கம்யூனிஷ்டு கட்சியின் தலைமைத்துவத்தில் படிப்படியாக முன்னேறி பல பொறுப்புகளை வகுத்தார். 1970-ஆம் ஆண்டு கட்சியின் வட்டார செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்த ஆண்டே மத்திய ஆளும் குழுவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.   

1980-ஆம் ஆண்டு சோவியத் ஆளும் குழுவின் முழு உறுப்பினராக அவர் பதவி உயர்வு பெற்றார். அந்தக்காலகட்டம் வரை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த  Fyodor Kulakov 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது  Andropov-வும், இரண்டு ஆண்டுகளில் அவர் மறைந்தபோது Chernenko-வும் அதிபர் பொறுப்பை ஏற்றனர். 1985-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள்  Chernenko இறந்தபோது அடுத்த நாளே கட்சியின் பொது செயலாளர் பொறுப்பும், அதிபர் பொறுப்பும் கொர்பசொவின் கைகளுக்கு வந்தது. முந்தைய சோவியத் அதிபர்களைப்போல் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு நிறைய பயணங்களை மேற்கொண்டவர் கொர்பசோவ். அதனால் அவரது பார்வையும், அணுகுமுறையும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பதவியேற்றபோது மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது சோவியத் யூனியன். ஆயுத போட்டா போட்டிக்கு அளவுக்கு அதிகமாக சொத்து செலவழிக்கப்பட்டது அதற்கு முக்கிய காரணம்.



பதவியேற்ற வேகத்திலேயே ஆயுத போட்டா போட்டியை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தார் கொர்பசோவ். அப்போதைய அமெரிக்க அதிபர் Ronald Reagan-னின் அழைப்பை ஏற்று இருவரும் நான்கு உச்ச நிலை சந்திப்புகளை நடத்தினர். அதன் பயனாக 1987-ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அந்தக்கணமே சோவியத் யூனியனின் தலையெழுத்தும் மாறத்தொடங்கி விட்டது என்பதனை உலகம் அப்போது உணரவில்லை. அடுத்த ஆண்டே இன்னொரு முடிவையும் அறிவித்து உலகை அசத்தினார் கொர்பசோவ். ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளை மீட்டுக்கொள்வதாக அவர் அறிவித்தார். முன்னைய தலைவர்கள் அவமானம் கருதி செய்ய மறுத்த செயல் அது. வெறும் வீம்புக்காக படைகளை அங்கே வைத்திருந்து இழப்பை அதிகமாக்கிக் கொள்வதை விட அங்கிருந்து வெளியேறி இழப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது விவேகத்தை உலகம் பாராட்டியது. 

அந்த இரண்டு வெளியுறவுக்கொள்கைகளுக்கும் தந்த அதே முக்கியத்துவத்தை நாட்டின் பொருளியலை சீர்படுத்துவதிலும் தந்தார் கொர்பசோவ். perestroika என்ற பொருளியல் சீர்திருத்தத்தை அவர் அறிவித்தார். அந்த சீர்திருத்தத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் இரும்புப்பிடி தளரத்தொடங்கியது. சில துறைகளில் தனியார்மயத்திற்கு அனுமதி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு Glasnost என்ற திறந்த கொள்கையை அறிவித்தார். அந்தக்கொள்கைதான் கம்யூனிசத்தின் அழிவிற்கு அடிகோலியது. சோவியத் யூனியனில் மூடியிருந்த பல கதவுகளை அது திறந்து விட்டது. தனிமனிதர்களும், பத்திரிக்கைகளும் அச்சமின்றி அரசியல் பேச அனுமதிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு இன்னும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது முதன்முறையாக சோவியத் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியை கைபற்றிய பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தேர்தல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்கேரியா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. அந்தக்கட்சிகள் அனைத்துமே மக்களால் வெறுக்கப்பட்டன. அந்த நாட்டின் கம்யூனிச தலைவர்கள் சோவியத் இராணுவத்தின் துணையுடனும், ரகசிய போலீஸ் துணையுடனும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு இரும்புக்கரங்களுடன் கோலோச்சினர். ஆனால் 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிசயித்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1989-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியில் கொந்தளிப்பு ஏற்பட்டது இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்த பெர்லின் சுவற்றை (Berlin Wall) தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு செல்ல மக்கள் முயன்றனர். அப்போது கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த Erich Honecker வழக்கம்போல் அடக்கு முறையை கையாள நினைத்த அந்த தருணத்தில் பெர்லினுக்கு அவசர வருகை மேற்கொண்டார் கொர்பசோவ்.




அடக்கு முறையை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ததோடு சீர்திருத்தத்தை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்திய கொர்பசோவ் எந்த அடக்கு முறைக்கும் சோவியத் படைகள் பயன்படுத்தக்கூடாது என்றும் Honecker-ரிடம் கூறினார். அப்போது 380 ஆயிரம் ரஷ்யப்படைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தன. தக்க தருணத்தில் அவர் தலையிட்டதால் ரத்தக்களறி தவிர்க்கப்பட்டது இரண்டே வாரங்களில் Honecker பதவி துறக்க நேரிட்டது. அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் நம்ப முடியாத ஒன்று நடந்தது ஆம் பெரிலின் சுவர் திறந்து விடப்பட்டது. மில்லியன் கணக்கான கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்தனர். வரலாற்றில் ஒரு களங்கமாக இருந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அதன் எதிரொலி மற்ற கம்யூனிச நாடுகளிலும் கேட்கத் தொடங்கியது. பல்கேரியாவில் இரும்புக்கரத்தோடு ஆட்சி செய்து வந்த டோடொ ஜிப்கோப் நவம்பர் 10-ஆம் நாள் பதவி துறக்க நேரிட்டது. ஒரு வாரது கழித்து செக்கோஸ்லவாகியா தலைநகர் ஃப்ராகில் மிகப்பெரிய மக்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஹங்கேரியில் நவம்பர் 26-ஆம் நாள் சுதந்திர தேர்தல் நடைபெற்றது பெரும் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியாளர் தோல்வியைத் தழுவினர். போலந்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டு 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அங்கு சந்தைப் பொருளியல் அறிமுகமானது. தன்னுடைய சகாக்கள் ஒவ்வொருவராக மண்ணைக் கவ்வுவதைப் பார்த்த போதும் ருமேனியாவின் சர்வாதிகாரி விடாப்பிடியாக ஆட்சியைத் தொடர்ந்தார். ஆனால் மக்களின் ஆவேசம் எந்த சர்வாதிகாரியையும் விட்டு வைக்காது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமாக அமைந்தது டிசம்பர் 25-ஆம் நாள் நிகழ்ந்த அந்த சம்பவம். அன்றைய தினம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் சிறை பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சர்வாதிகாரி Sakharov. அதோடு கிழக்கு ஐரோப்பாவின் கடைசி கம்யூனிஸ்டு சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இவற்றையெல்லாம் விரிந்த புருவங்களோடு பார்த்துக் கொண்டிருந்த சில சோவியத் குடியரசுகளும் சுதந்திர கோரிக்கை விடத் தொடங்கின.



1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர் ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.

சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. அதே ஆண்டு சொந்தமாகவே பதவி விலகினார் கொர்பசோவ் அவர் பதவியேற்று ஆறே ஆண்டுகளில் அத்தனையும் நடந்து முடிந்தது. இருபதாம் நூற்றாண்டை பாதுகாப்பற்றதாக மாற்றிய எத்தனையோ தலைவர்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக அதன் பாதுகாப்பை உறுதி செய்தவர் கொர்பசோவ். இன்று உலகில் ஓரளவுக்கு அமைதி நிலவுவதற்கு வித்திட்டு தேவையற்ற கொள்கைகளை தைரியமாக தூக்கியெறிந்தவர் அவர். கெளரவம் கருதி ஆயுதங்களை குவித்த தலைவர்களுக்கு மத்தியில் பொருளாதாரமும், உலக அமைதியும் கருதி ஆயுத போட்டா போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அவரை வரலாறு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். 'The only disability in life is a bad attitude' தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு. 'Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get' அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி, எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வால்ட் டிஸ்னி - வரலாற்று நாயகர்!

உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதில் அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டினார்.



சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள் அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார். தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.



அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse' முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.

1932-ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா? ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.

அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலர் ஆரூடங்கள் கூறினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வருணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது.



ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும். இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது? வால்ட் டிஸ்னியே ஒருமுறை அதைப்பற்றி கூறினார்....

"வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan-லிருந்து Hollywood-டிற்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."

கற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய். வால்ட் டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன? அவரே கூறுகிறார் இவ்வாறு.....



மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளப்பூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள் அதுதான் வெற்றியின் ரகசியம். வால்ட் டிஸ்னிற்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு C மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் வால்ட் டிஸ்னிற்கு கற்பனை என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

கணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதில் ஆச்சரியமில்லைதான். கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த துறையில் மேதைகளாக விளங்கினர். எனினும் உலகுக்கு கணிதத்தின் பல்வேறு கூறுகளை அறிந்து சொன்னவர்களும், விளக்கி கூறியவர்களும் கிரேக்கர்கள்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ போன்ற தலைசிறந்த தத்துவமேதைகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் உதித்தனர் கிரேக்க மண்ணில். அவர்கள் விட்டு சென்ற சொத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் மனுக்குலத்திற்கு மேன்மை தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

அவர் தொகுத்து தந்த எலிமென்ட்ஸ் (Elements) எனப்படும் கணிதத் தொகுப்புதான் உலகின் முதல் பாடப்புத்தகம் (Text Book) என்று புகழப்படுகிறது. 'கணிதத்தின் தந்தை' என வரலாறு போற்றும் அவரது பெயர் யூக்ளிட் (Euclid). கணிதத்தின் பல்வேறு கூறுகளை ஒருமுகப்படுத்தி தந்த யூக்ளிட் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் துல்லியமாகப் பதிந்து வைக்கப்படவில்லை. அவர் பிறந்த வருடம், இறந்த வருடமும்கூட சரிவரத் தெரியவில்லை. அநேகமாக அவர் கிமு.325-ஆம் ஆண்டில் பிறந்து கிமு.265-ஆம் ஆண்டில் அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) இறந்திருக்க வேண்டும் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. எந்த நகரத்தில் பிறந்தார் என்பதுகூட குறிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் கணிதத்தின் மிக முக்கிய கூறுகளில் ஒன்றான 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்தை உலகுக்குத் தந்ததால்தான் இன்றும் அவரது பெயர் வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறது.



யூக்ளிட் தன் அடிப்படைக் கல்வியை ஏதென்ஸ் நகரத்தில் பிளேட்டோவின் சீடர்களிடம் கற்றதாக நம்பப்படுகிறது. எகிப்தில் நைல் நதிப்படுகையின் மேற்குபகுதியிலுள்ள அலெக்சாண்ட்ரியா (Alexandria) என்ற நகரில் கிமு.300-ஆம் ஆண்டில் யூக்ளிட் கணிதம் போதித்து வந்தார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. கிமு.332-ஆம் ஆண்டில் மாவீரன் அலெக்சாண்டரால் புதுப்பிக்கப்பட்டு புதுப்பெயர் பூண்டது அலெக்சாண்ட்ரியா (Alexandria). அலெக்சாண்டரைப் பற்றி வரலாறு அதிகமாகவே அக்கறைக் காட்டியிருப்பதால் அவரது காலக்கட்டத்தில் வாழ்ந்த யூக்ளிடைப் பற்றிய ஒருசில குறிப்புகளும் பதிவாகியிருக்கின்றன. யூக்ளிடுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சில கணித மேதைகள் கிரேக்க மண்ணில் உதித்திருந்தனர். உதாரணத்திற்கு கிமு.585-ஆம் ஆண்டில் வாழ்ந்த Thales, Miletus ஆகிய கணித மேதைகளை குறிப்பிடலாம்.

அவர்களைப்போன்ற அறிஞர்கள் கணிதத்தின் பல்வேறு கூறுகளையும், 'Theorems' எனப்படும் தேற்றங்களையும், 'proofs' எனப்படும் மெய்ப்பிப்பு அல்லது ஆதாரங்களையும் ஏற்கனவே கண்டுபிடித்து உலகுக்குத் தந்திருந்தனர். ஆனால் வெவ்வேறாக சிதறிக் கிடந்த கணிதத்தின் அத்தனை கூறுகளையும் ஒழுங்குபடுத்தி எளிய உதாரணங்களால் விளக்கி செம்மையாக திட்டமிட்டு அவற்றை ஒரு நூலாக முறைப்படுத்தித் தந்தவர் யூக்ளிட்தான். அவ்வாறு அவர் முறைப்படுத்தி தந்ததுதான் 'Elements' எனப்படும் 'மூலக்கோட்பாடுகள்' என்ற நூல். அந்த நூல்தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கணிதத்தின் சிறந்த பாடநூலாக பயன்பட்டு வருகிறது. இதுவரை எழுதப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் அதுவே மிகச்சிறந்ததாகவும் கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக கணிதம் கற்பிப்பதற்கு அந்த நூல்தான் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.



முன்பிருந்த கணிதக் கோட்பாடுகளை முறைப்படுத்தித் தந்ததோடு மட்டுமல்லாமல் 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்திலும், 'arithmetic' எனப்படும் 'எண்கணித'த்திலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்து தனது முடிவுகளை அந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார் யூக்ளிட். ஒரு தெளிந்த கணித மேதைக்கான இயல்போடு மிக உன்னதமாக அந்த நூலை யூக்ளிட் வடிவமைத்திருந்ததால் அதற்கு முன் எழுதப்பட்ட வடிவியல் பாடநூல்கள் அனைத்தும் வழக்கொழிந்து போயின. யூக்ளிட் கிரேக்கத்தில் எழுதிய மூலக்கோட்பாடுகள் எனும் நூல் பல நூற்றாண்டுகள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது. ஜொஹேன்ஸ் குட்டன்பெர்க் உலகுக்கு அச்சு இயந்திரத்தைத் தந்த முப்பது ஆண்டுகளில் அதாவது 1482-ஆம் ஆண்டு அந்த புத்தகம் முதன் முதலாக அச்சிடப்பட்டு வெளி வந்தது. அதன் பின்னர் அது பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

கடந்த 500 ஆண்டுகளில் அந்த நூலின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் சர்.ஐசக் நியூட்டனின் 'Principia' என்ற புகழ் பெற்ற புத்தகமும் யூக்ளிடின் வடிவியல் கணித முறையைப் பின்பற்றிதான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே யூக்ளிடின் தாக்கம் தற்கால விஞ்ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அறிவியலின் மொழியே கணிதம்தானே எந்தவொரு விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளரும் தங்கள் முடிவுகளை உணர்வதற்கும், அவற்றை மெய்பிப்பதற்கும் கணிதத்தின் துணையையே நாட வேண்டும். எனவே கணிதத்தின் தந்தையான யூக்ளிடை 'அறிவியலின் தந்தை' என்று போற்றினாலும் தகும்.



கணிதம் தவிர வேறு பல துறைகளிலும் ஆராய்ந்து மொத்தம் 13 நூல்களை யூக்ளிட் எழுதியிருப்பதாக ஒரு குறிப்பு கூறுகிறது. அவற்றில் மூன்றைத் தவிர வேறு எந்த நூலும் பாதுகாக்கப்படவில்லை. யூக்ளிட் அலெக்சாண்ட்ரியாவில் ஒரு பள்ளியை நிறுவி கணிதம் போதித்து வந்தபோது ஒரு மாணவன் அவரிடம் இதையெல்லாம் படித்து எனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? என்று கேட்டானாம். உடனே யூக்ளிட் தனது பணியாளரை அழைத்து இவன் லாபத்தை எதிர்பார்த்து கற்க வந்திருக்கிறான் இவனுக்கு சிறிது பொருளை கொடுத்து வெளியே அனுப்பி விடுமாறு கூறினாராம். பின்னர் தம் மற்ற மாணவர்களைப் பார்த்து கல்வி என்பதே நமக்குப் பெரிய லாபம்தான் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதும், தெரியாதவற்றை அறிந்துகொள்வதுமே மிகப்பெரிய பலன்தான் என்றாராம். இன்றைக்கும்கூட பொருந்தும் உண்மையல்லவா! அது.

கிரேக்கத்தை ஆண்ட 'Ptolemy' என்ற மன்னனுக்கும் கணிதம் கற்பித்து வந்தார் யூக்ளிட். சிரமப்பட்டு கணிதத்தை கற்க விரும்பாத அந்த மன்னன் யூக்ளிடைப் பார்த்து கணிதத்தைக் கற்க வேறு சுலபமான மார்க்கம் ஏதாவது உண்டா? என்று கேட்டாராம். அதற்கு யூக்ளிட் கணிதத்தைக் கற்க உழைப்பைத் தவிர வேறு வழியே கிடையாது. மன்னாரானாலும் மற்றவர்களைப் போலவே சிரமப்பட்டு, வியர்வை சிந்தியே கற்க வேண்டும் என்றாராம். அந்த உண்மையும் இன்றைக்கும் பொருந்துமல்லவா! எனவே கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் யூக்ளிடின் வாழ்க்கை நமக்கு கூறும் எளிய உண்மைகள் இரண்டுதான். ஒன்று எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இரண்டாவதாக உழைப்புக்கு நிகராண பண்பு வேறு எதுவும் கிடையாது என்பதுதான் அந்த உண்மைகளாகும். யூக்ளிட் கூறியதுபோல் கல்வியும், உழைப்பும் இணையும் போது நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) - வரலாற்று நாயகர்!

ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.



1451-ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனோவா( Republic of Genoa) நகரில் பிறந்தார் கொலம்பஸ். நம்மில் சிறுவயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும் ஆனால் கொலம்பஸ் கண்ட கனவு என்ன தெரியுமா? கடல்களை கடந்து புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு தந்த உந்துதலின் பேரில் பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். கடல்வழி மார்க்கம் என்பதே இல்லாத அந்தக்கால கட்டத்தில் பண்டமாற்றும், வணிகமும் தரை வழியாகத்தான் நடந்தன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் அங்கு கூடுவார்கள். தாங்கள் கொண்டு வந்த பேரிச்சைம்பழம், கலை நயமிக்க தரை விரிப்புகள், அரேபிய குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்து விட்டு அவற்றுக்கு ஈடாக பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள், பவளம் கோமிதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழிமார்க்கமாக சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஐரோப்பியர்கள் தங்கம் கொடுத்து அவற்றை வாங்குவார்கள்.

ஐரோப்பாவில் குறிப்பாக மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். ஏனெனில் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை உதவின. அந்த நறுமணப் பொருள்கள் அத்தியாவசிய தேவை என்று உணர்ந்த ஐரோப்பியர்களுக்கு அவை இந்தியாவிலிருந்து வருகின்றன என்று தெரியும். ஆனால் இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது. எவ்வுளவு காலம்தான் அரேபிய இடைத்தரகர்களுக்கு தங்கத்தை கொடுப்பது என்று எண்ணிய அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால் அந்தப் பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். 1476-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால் ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வமாக இருந்தது.

தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் ஆனால் அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த இரு அரசாங்களும் உதவ மறுத்தன. இறுதியில் அவருக்கு கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி கூறினார் ராணி இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களிலிருந்து கொலம்பஸ் கொண்டு வரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.



1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் தமது 41-ஆவது வயதில் தனது கனவை நோக்கி புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். சுமார் இரண்டு மாதங்கள் நிலப்பரப்பையே காணாமல் கடலில் அலைந்த கொலம்பஸுக்கு அக்டோபர் 12-ஆம் நாள் நிலம் கண்ணில் பட்டது. இந்தியாவையே கனவு கண்டு கொண்டிருந்ததால் தாம் இந்தியாவை அடைந்து விட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைந்தார் கொலம்பஸ். ஆனால் அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல வடஅமெரிக்காவின் 'பகாமஸ் தீவு' என்பது அவருக்கு அப்போதும் மட்டுமல்ல இறந்தபோதும் தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. அதன்பிறகு அவர் மேலும் சில கடல் பயணம் மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார்.

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும், வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. பல தேசங்களைக் கண்டுபிடித்த களிப்பிலும், களைப்பிலும் ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் 1506-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் காலமானார். தனது கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடி புறப்பட்டதால்தான் உலகின் ஆழ அகலத்தை மனுகுலம் உணர முடிந்தது. கியூபா, பகாமஸ், மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் கண்டுபிடித்தனர்.



பூமியின் பல பிரதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய இந்தியா கடைசியாக 1498-ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பஸ் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கனவு காண தயங்ககூடாது என்பதுதான். உலக வரலாற்றின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் ஓர் உண்மை மட்டும் மாறாதிருக்கும். அந்தப் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கனவு கண்டவர்கள் என்பதுதான் அந்த உண்மை. கனவு காணத் துணிந்தவர்களால்தான் சாதித்தும் காட்ட முடிகிறது. உங்கள் கனவு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டபோது எத்தனை பேர் அதனை பகல்கனவு என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். உங்கள் கனவுகளையும் பகல்கனவு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அது இயற்கையின் நியதி உங்களால் மாற்ற முடியாது. ஆனால் கனவு காண்பதோடு அதனை நனவாக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கொலம்பஸுக்கு அமெரிக்கா வசப்பட்டதைப்போல உங்களுக்கு உங்கள் கனவும் அதன் மூலம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாற்று நாயகர்!

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலைஉலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர்.

அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை. கேமரா மற்றும் புகைப்படங்களின் வரவு வேறு ஓவியக்கலையை சற்று பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தது. ஓவியர்கள் எவ்வுளவுதான் தத்ரூபமாக வரைந்தாலும் அந்தப் படைப்புகளால் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓவியக்கலை கிட்டதட்ட மரணித்துப்போகுமோ? என்று அச்சம் முளைவிடத் தொடங்கிய அந்தத் தருணத்தில் உதித்தார் ஓர் அற்புத ஓவியர். அவர்தான் 'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை உலகுக்குத் தந்ததன் மூலம் 'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற புகழைப் பெற்றிருக்கும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso).



1881-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் ஸ்பெயினில் பிறந்தார் பிக்காஸோ. அவர் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறது ஒரு வரலாற்றுக்குறிப்பு. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று எண்ணிய தாதி குழந்தையை மேசையில் வைத்துவிட்டு சென்று விட்டார். அதனைக்கண்ட அவருடைய மாமா ஓடிப்போய் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை வழங்கியதால்தான் உயிர் பிழைத்தார் பிக்காஸோ. பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை வைத்துக்கொண்டு வட்டம் வட்டமாக கிறுக்கிக்கொண்டிருப்பாராம் பிக்காஸோ. அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வளர்த்தார். Malaga கடற்கரையில் மணலில்கூட ஓவியம் தீட்டுவாராம் பிக்காஸோ. பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும் நன்கு கற்றுக்கொண்டார்.

1904-ஆம் ஆண்டு தனது 23-ஆவது வயதில் கலைகளின் தலைநகரம் என்றழைக்கப்படும் பாரிஸூக்கு வந்தார் பிக்காஸோ. அன்றிலிருந்து மரணம் வரை அவர் பிரான்சில்தான் வாழ்ந்தார். அவரது திறமையையும், புகழையும் கண்ட பிரெஞ்சு அரசாங்கம் எத்தனையோ முறை பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அவர் தனது ஸ்பானிய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. பாரிஸூக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அவர் வரைந்த  'Les Demoiselles d'Avignon' என்ற ஓவியம் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. அதில் ஐந்து பெண்களை அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல நவீன ஓவியத்துறைக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும் கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம்தான் 'கியூபிசம்' என்ற ஓவிய பாணியைத் தொடங்கி வைத்தது.

அதன்பின் பலர் அந்த ஓவிய பாணியை பின்பற்றத் தொடங்கினர். உலகம் முழுவதிலிருந்த ஓவிய விற்பன்னர்களின் மரியாதையை பெற தொடங்கினார் பிக்காஸோ. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் பிக்காஸோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறுவயதிலிருந்தே ஓவியனாக வரவேண்டும் என்ற நிறைவேறா கனவுகளோடு வளர்ந்த கொடுங்கோலன் ஹிட்லரோ பிக்காஸோவின் ஓவியங்களை ஒரு பைத்தியக்காரன் கிறுக்கியது என்று சொல்லி அந்த படைப்புகளை ஜெர்மனியில் தடை செய்தார். இருப்பினும் ஜெர்மனி பிரான்சின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதுகூட பிக்காஸோவை பகைத்துக்கொள்ள ஜெர்மன் படைகள் தயங்கின. அந்தளவுக்கு பிக்காஸோ உலகப்புகழ் பெற்றிருந்ததே காரணம்.

1936-ஆம் ஆண்டு பிக்காஸோவின் தாய்நாடான ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் நாசிப்படைகள் 'Guernica' என்ற நகரின் மீது கடுமையான ஆகாயத்தாக்குதல் மேற்கொண்டன. அந்த தாக்குதலில் Guernica நகர் சின்னாபின்னமாக சிதைந்தது. மரண ஓலம் ஒலித்த அந்த நகரின் வேதனை பிக்காஸோவின் நெஞ்சை பிழிந்தது. தனது உணர்வுகளை அவர் கேன்வஸ் துணியில் ஓவியமாகத் தீட்டி அதற்கு 'Guernica' என்று பெயர் சூட்டினார். தனது நாட்டில் இறந்து போனவர்களுக்காக அவர் தீட்டிய அந்த அதீத ஓவியம் இறவாப்புகழ் பெற்றது. ஹிட்லரின் நாசி ஆட்சியை எதிர்க்கும் சின்னமாக அந்த ஓவியம் கருதப்பட்டது. அந்த சின்னத்தை மட்டுமல்ல உலகிற்கு இன்னும் ஓர் அற்புத சின்னத்தையும் வழங்கினார் பிக்காஸோ.



கம்யூனிச கொள்கைகளால் கவரப்பட்ட அவர் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்த கட்சி ஏற்பாடு செய்த பல அனைத்துலக கூட்டங்களில் கலந்து கொண்டார். அவ்வாறு 1950-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதி மாநாட்டுக்காக அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில் அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார். அற்புதமாக அமைந்திருந்த அந்த ஓவியத்தையே அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம். சீனா ஒருபடி மேலே சென்று அந்த ஓவிய சின்னத்தை தன் தபால் முத்திரையில் பதித்துக் கொண்டது. ஓவியக்கலையில் மட்டுமின்றி ஆடை வடிவமப்பதிலும் திறமைக் காட்டினார் பிக்காஸோ. ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலெ நடனக்குழுவுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த நடனக்குழுவில் இடம்பெற்றிருந்த Olga Khokhlova என்பவரை பிக்காஸோ மணந்துகொண்டார். 

ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார் பிக்காஸோ. அவர் புனைந்த சில கவிதைகள்கூட மிகச்சிறந்தவை என்று சமகால கவிஞர்களால் பாராட்டப்பட்டன. 78-ஆண்டுகளில் அவர் உலகிற்கு வழங்கிய படைப்புகளின் எண்ணிக்கை எவ்வுளவு தெரியுமா? சுமார் 13500 ஓவியங்கள், சுமார் 34000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்கள். அவரது ஒட்டுமொத்த படைப்புகளின் தற்போதைய மதிப்பு சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.



ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஓவியக்கலைக்கு ஓர் புது உற்சாகத்தைக் கொடுத்த அந்த அற்புத ஓவியன் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தமது 92-ஆவது வயதில் பிரான்சில் காலமானார். தனது படைப்புகளில் பிக்காஸோ பின்பற்றிய சித்தாந்தம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒருமுறை கூறினார் இவ்வாறு....

"ஒரு காட்சியை நமது கண்கள் எப்படி பார்க்கின்றனவோ அதை அப்படியே ஓவியமாக வரைவதில் என்ன புதுமை இருக்க முடியும்? அந்தக் காட்சி நம் மனத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தக்காட்சியின் அசல் பிரதிப்பலிப்பாக இருக்கக்கூடாது".

இப்படி 'Thinking out of the box' எனப்படும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படும் முறையை பின்பற்றியதால்தான் பிக்காஸோவால் உலகப்புகழ் பெற முடிந்திருக்கிறது. 'நவீன ஓவியம்' என்ற வானத்தையும் வசப்படுத்த முடிந்திருக்கிறது. பிக்காஸோவைப் போலவே எதனையும் புதுமையாக சிந்தித்து வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும், துணிந்து செயல்படுவோருக்கும் அவர்கள் விரும்பிய வானமும் நிச்சயம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம் நுற்றாண்டு வரலாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. ஒருவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஒழித்து இந்திய மண் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்து தந்த அண்ணல் காந்தியடிகள். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உயிரை பரிசாக தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவரையுமே ஏற்கனவே நமது வரலாற்று நாயகர்கள் தொடரில் சந்தித்துவிட்டோம். அவர்கள் இருவருக்குமே துப்பாக்கி குண்டுகளைத்தான் உலகம் பரிசாக தந்தது.


இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவரை வாழும் காந்தி என்றுகூட சிலர் வருணிக்கின்றனர். அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.



சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து என்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.



இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......



'நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்'.

இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர்  F. W. de Klerk அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள்....

"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா.... 
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"....

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் மன்னிப்பு எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சியந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg).



சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Menu scripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.



குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.



தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.



1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.



சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .



குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரூசோ - வரலாற்று நாயகர்!

உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே  கூர்மையாக செயல்பட்டிருக்கிறது. வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் 'பிரெஞ்சு புரட்சி'யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

வாழும்போது வறுமையுடன் போராடிய அவர் மறைந்தபோது ஒரு சராசரி மனிதனாக கருதப்பட்டு சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார். ஆனால் பதினாறு ஆண்டுகள் கழித்து அவருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கவே புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து வர புகழ்பெற்ற Pantheon-அரங்கில்  மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இப்படிபட்ட மரியாதையை பெற்றவர் அவர் ஒருவர்தான் அவர் பெயர் ரூசோ. 1712-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28-ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐசக் ரூசோ, சுசேன் பெர்னார்ட் ரூசோ தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரூசோ. பிறந்த ஒருவாரத்திற்குள் அவரது தாயார் காலமானார். எனவே தந்தையின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார் ரூசோ.



தந்தை கடிகாரம் பழுது பார்க்கும் வேலையில் இருந்தார். குடும்பம் ஏழ்மையில் வாடியது. தந்தைக்கு தலைசிறந்த தத்துவ நூல்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் ரூசோவுக்கும் பரவியது. குடும்ப ஏழ்மை காரணமாக அவர் முறையாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. ரூசோவுக்கு ஏழு வயது நிரம்பும் முன்னே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தார் தந்தை. அந்த சிறிய வயதிலேயே கிரேக்க காவியங்களையும், ரோமின் வரலாற்றையும் மகனுக்கு படித்துக் காட்டுவார் தந்தை. அதனால் பலவித நூல்களை படிக்கும் ஆர்வம் ரூசோவுக்கு இளம்வயதிலேயே ஏற்பட்டது. பதினான்காம் வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்கு சேர்ந்தார் ரூசோ. நீதிமன்ற தீர்ப்புகளை நகல் எடுப்பது அவரது பணி. அந்த வழக்கறிஞர் தன்னை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டு வெளியேறினார்.   

வறுமை காரணமாக ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை எனவே ஒரு சிற்பியிடம் வேலைக்கு சேர்ந்தார். அந்த சிற்பி ரூசோவை அடிமைபோல் நடத்தியதாலும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் காட்டுமிராண்டித்தனமாக தண்டித்ததாலும் அந்த வேலையை விட்டும் அவர் வெளியேறினார். 'ஒருவனை சார்ந்து வாழ்வதைவிட சாவதே மேல்' என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. இருந்தாலும் வறுமை விரட்டியதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பல்வேறு வேலைகளை செய்தார். என்னதான் பிரச்சினை வந்தாலும் அவர் நூல்கள் வாசிப்பதை கைவிட்டதில்லை. எப்போதும் ஏதாவது நூலை படித்துக்கொண்டே இருப்பார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம். ஒருமுறை கடையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தார் ரூசோ. அதை எப்படியாவது வாங்கி வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்தார் தெரியுமா? தனது உடைகளை விற்று அந்த புத்தகத்தை வாங்கினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாப்பாடு இல்லை இருந்தும் புத்தகத்தை படித்து முடிப்பத்திலேயே அவர் கவனம் செலுத்தினார்.

இப்படி புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ தமது முப்பதாவது வயதில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இத்தாலி, பாரிஸ் என்று இரண்டு இடங்களிலும் சில ஆண்டுகளை கழித்தார். அங்கும் எந்த வேலையிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. சுயசிந்தனையும், தன்மான உணர்வும் கொண்ட ரூசோவினால் எவரிடமும் அடங்கிப் பணியாற்ற முடியவில்லை. இடையில் நாடகம் கவிதை என நிறைய எழுதினார். ஒருமுறை பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று 'அறிவியல் வளர்ச்சி மனிதனின் ஒழுக்கத்தை உயர்த்தியிருக்கிறதா' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தமது எண்ணங்களை அழகாகவும், தெளிவாகவும் எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினார் ரூசோ. அந்த போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரிசிலேயே பல ஆண்டுகள் தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். 



ரூசோ எழுதிய மிகச்சிறந்த தத்துவ நூல் 'The Social Contract' எனப்படும் சமுதாய ஒப்பந்தம். "மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமை சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்" என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் அந்த நூல் 1762-ஆம் ஆண்டு வெளியானது. அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம் என்பதுதான் அந்த நூலில் அவர் கூறியிருந்த கருத்து. அதன்பிறகு அவர் எழுதிய 'Emile' எனும் நூல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு கல்வி கற்கும் முறை பற்றி எடுத்துரைத்தது அந்த நூல்.

ரூசோவின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அந்த இரண்டு நூல்களுமே சமயத்திற்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடங்கினர். பிரான்சும், ஜெனிவாவும் அந்த நூல்களை தடை செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் அவரது எதிர்ப்புப்போக்கை வெறுத்ததால் பாரிஸ் நீதிமன்றத்திற்கு முன் அவரது நூலை தீயிட்டுக் கொளுத்தியது. ரூசோ கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று அஞ்சி அவரை பிரான்சுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது. பின்னர் தாம் எழுதிய 'Perpetual peace' என்ற நூலில் ஐரோப்பிய நாடுகளுக்கென கூட்டுசங்கம் ஒன்று உருவாக வேண்டும். ஒவ்வொரு நாடும் போரை வெறுக்க வேண்டும். ஏதாவது ஒரு நாடு அவ்வாறு செய்யத்தவறினால் மற்ற நாடுகள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதோடு ஐரோப்பிய படைகள் அந்த நாட்டை நசுக்க வேண்டும். என்ற கருத்துகளை கூறியிருந்தார் ரூசோ. அந்த கருத்துதான் பல ஆண்டுகள் கழித்து ஐக்கியநாட்டு சபை உருவாக காரணமாக இருந்திருக்கும் என சில வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.   

ரூசோவின் சிந்தனைகள் படித்தவர்கள், இளையர்கள், தொழிலாளிகள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்றது. தன் எழுத்தாலும் சொல்லாலும் மக்களை சிந்திக்கத் தூண்டியவர் அவர். அப்போது பிரான்சின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் ஊழலும், அதிருப்தியும், அதிகார துஷ்பிரயோகமும்தான் நிலவின. அரசன் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று கருதப்பட்ட அந்தக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் காப்பதை அரசன் மீறும்போது மக்களும் கட்டுப்பாட்டை மீறலாம் என்ற புரட்சிக்கருத்தை வெளியிட்டார் ரூசோ. அதனால்தான் 1789-ஆம் ஆண்டு மக்கள் ஒன்று கூடி அரசனுக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை செய்தனர். அந்த பிரெஞ்சு புரட்சியில் மன்னன் லூயியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு பிறகு உலகில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை போராட்டம் போன்றவற்றுக்கும் ரூசோவின் சிந்தனைகள் உதவியிருக்கின்றன.



அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிக்கு வித்திட்ட ரூசோ 1778-ஆம் ஆண்டு ஜுலை 2-ஆம் நாள் தமது 66-ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரெஞ்சு புரட்சி வெடித்தது. ரூசோ இல்லாதிருந்தால் பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டிருக்காது என்று மாவீரன் நெப்போலியன் கூறியிருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வறுமையில் கழித்தும் வளமான சிந்தனைகளை உலகுக்கு தந்தார் ரூசோ. முறையாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் அவரால் உலகம் போற்றும் சிந்தனைகளை தர முடிந்தது. ஒரு தேசத்தையே வீறுகொண்டு எழச்செய்ய முடிந்தது. அதற்கு காரணம் அவரிடம் இருந்த சிந்தனைத்தெளிவும் அடிமைத்தனம் என்பதே இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான். ரூசோவைப்போன்று நல்ல எண்ணங்களையும், தெளிவான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளும் எவராலும் புரட்சிகளை உருவாக்க முடியும் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாற்று நாயகர்!

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா? மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் 'ஜேம்ஸ் வாட்' என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்று முன்னொரு வரலாற்று நாயகர் தொடரில் தெரிந்து கொண்டோம். 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் இன்னொரு வரலாற்று நாயகர். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.

இங்கிலாந்தின் 'Cornwall' என்ற பகுதியில் 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் ரிச்சர்ட் ட்ரெவிதிக். அவருடைய தந்தை வெள்ளிய சுரங்கம் ஒன்றின் நிர்வாகியாக இருந்தார் அதனால் ட்ரெவிதிக்கும் சுரங்கத்தொழிலுக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அதனால் எப்போதும் ஏதாவது  இயந்திரங்களை வடிவமைப்பதிலும் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக அவர் பள்ளிப்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ படிப்பை முடித்து ஒரு சுரங்க பொறியாளராக தேர்ச்சி பெற்றார். அந்தக்காலத்தில் சுரங்கங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடும். அதனால் சுரங்கப்பணிகள் முடங்கிப்போகும் அப்படி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நீராவி இயந்திரங்கள்தான் பயன்பட்டன.



நீராவி இயந்திரங்களின் செயல்பாட்டை  ட்ரெவிதிக் நன்கு அறிந்திருந்ததால் எந்த சுரங்கத்தில் நீராவி இயந்திரங்கள் பழுதானாலும் அவற்றை சரி செய்ய அவர்தான் அழைக்கப்படுவார். அவற்றை பழுதுப்பார்ப்பதோடு நின்று விடவில்லை  ட்ரெவிதிக்கின் ஆர்வம், குறைந்த அழுத்தமுடைய அந்த நீராவி இயந்திரங்களிள் சில முன்னேற்றங்களை செய்து சுரங்கங்களில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரது அன்றாட எண்ணமாக இருந்தது. முதலில் உச்ச அழுத்தமுடையதாக நீராவி இயந்திரத்தை மாற்றி அமைத்தார். பின்னர் அதனை எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் அளவுக்கு வடிவமைத்தார். அப்போதுதான் தானாகவே நகர்ந்து செல்லும் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அப்படிபட்ட ஒரு கருவியை உருவாக்கிவிட வேண்டும் என்று கனவு காணத்தொடங்கினார். அந்தக்கனவை பதினெட்டாம் நூற்றாண்டு மக்களிடம் அவர் சொல்லியிருந்தால் மற்ற சாதனையாளர்களுக்கு கிடைத்தது போன்ற பரிகாசம்தான் அவருக்கும் கிடைத்திருக்கும்.   

தனது கனவை நனவாக்க அயராது உழைத்து 1801-ஆம் ஆண்டு நகரும் நீராவி இயந்திரத்தை அவர் உருவாக்கினார். Cornwall வீதிகளில் அதனை ஓட்டியும் பார்த்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ஏதோ கோளாற்றினால் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வீதியில் ஓடிய அந்த முதல் நீராவி இயந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லாமல் போனது. சோதனைகள் வரும்போது சோர்ந்து போவோருக்கு வாழ்க்கையும், வானமும் வசப்பட்டதில்லையே! வரலாற்றில் நிலைத்து நிற்க விரும்பியதால்  ட்ரெவிதிக்கும் அந்த முதல் தோல்வியால் சோர்ந்து போய் விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் இன்னொரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். அது இயங்கும் முறையை தன நண்பர்களுக்கு காண்பித்தபோது அது விளையாட்டு பொம்மை என்று கூறினார்கள். ஆனால் அது பொம்மை அல்ல உண்மையான ரயில் வண்டி என்பதை நிரூபிக்க அதனை வீதியில் ஓட்டிக்காட்டினார் ட்ரெவிதிக்.

'குக்' 'குக்'... என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் 'Puffing Devil' அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  ட்ரெவிதிக் உருவாக்கிய அந்த நீராவி இயந்திர இரயில் மணிக்கு எட்டு முதல் ஒன்பது மணி வேகத்தில் ஓடியது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்  ட்ரெவிதிக்கின் அந்த புதிய கண்டுபிடிப்பைக்கண்டு தங்கள் பிழைப்பில் மண் விழப்போகிறது என்று கோபம் அடைந்தனர் குதிரை வண்டிக்காரர்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தரைப்பயணத்திற்கு குதிரை வண்டியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.  ட்ரெவிதிக்கின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட குதிரை வண்டிக்காரர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் தனது முயற்சியை தொய்வின்றி தொடர்ந்த  ட்ரெவிதிக் 1804-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் South Wales-ல் நீராவி இயந்திரத்தால் பொருட்களையும், பயணிகளையும் இழுத்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.



70 பயணிகளையும் 10 டன் எடையுள்ள இரும்பையும் ஒன்பது மைல் தூரத்திற்கு இழுத்து சென்றது அந்த இரயில் வண்டி. ஆனால் இன்று போல் அப்போது தண்டவாளங்கள் கிடையாது என்பதால் இரும்புத்தகடு நிரப்பிய பாதையில்தான் அந்த இரயில் வண்டி ஓடியது. இரயில் வண்டியின் கணம் தாங்காமல் அந்த தகட்டுப்பாதை பழுதானது. எனவே அது அதிக செலவு பிடிக்கும் ஒரு சமாச்சாரம் என்று எண்ணி எந்த தொழிலபதிரும் இரயில் கட்டமைப்பில் முதலீடு செய்ய முன்வரவில்லை. அதனால் வெறுப்படைந்த  ட்ரெவிதிக் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரது கண்டுபிடிப்புகளைப்பற்றி நன்கு அறிந்திருந்த தென் அமெரிக்கா அவரை இருகரம் கூப்பி வரவேற்றது. 1816-ஆம் ஆண்டு Peru-விற்கு சென்ற  ட்ரெவிதிக் அங்குள்ள சுரங்கங்களுக்கு நீராவி இயந்திரங்கள் அமைத்துக் கொடுத்தார். சுரங்கங்கள் நல்ல லாபம் ஈட்டத்தொடங்கின.

1826-ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் அமேரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இருந்தாலும் தனது கனவை நனவாக்க முடியாமல் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்  ட்ரெவிதிக் அப்போது தான் கண்டுபிடித்த நீராவி இரயில் சில முன்னேற்றங்களுடன் புழக்கத்திற்கு வந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். எனினும் தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இரயில் வண்டி உருவானது என்பதால் தனக்கு உதவிப்பணம் தருமாறு அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேலை இல்லாமல் சிரமபட்ட  ட்ரெவிதிக்குக்கு தனது நிறுவனத்திலேயே வேலை கொடுக்க முன் வந்தார் ஒருவர். அவர் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தின் அடிப்படையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்து பிரபலமான இரயில் வண்டியை உருவாக்கியவர். எனவே நன்றி உணர்வுடன் அவர்  ட்ரெவிதிக்குக்கு அந்த வேலையை தர முன் வந்தார். 



முதலில் சம்மதித்தாலும் பின்னர் அங்கு வேலை செய்ய மறுத்து விட்டார்  ட்ரெவிதிக். வறுமையிலும், வேதனையிலும் வாடிய அவர் 1833-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தனது 62-ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்தபோது கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அவருக்குரிய மரியாதையை வழங்காமல் போயிருக்கலாம். மனிதன் தவறு செய்தாலும் வரலாறு தவறு செய்வதில்லை. எனவேதான் ட்ரெவிதிக்கை 'இரயில் வண்டியின் முன்னோடி' என்று இன்றும் அது நினைவில் வைத்து போற்றுகிறது. இப்போது நாம் சொகுசாக பயணம் செய்யும் பெருவிரைவு இரயில்கள் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இரயிலின் வழித்தோன்றல்தான் என்று நன்றியோடு நினைத்துப் பார்த்தாலே அந்த வரலாற்று நாயகருக்கு நாம் மரியாதை செய்தவர்களாவோம்.   

இன்று உலகம் முழுவதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்கள் எல்லாமே ட்ரெவிதிக் விட்டு சென்றுள்ள நினைவு சின்னங்களே. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம். அந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமையாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்!

மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது. ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அன்னல் காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங். 

1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.



ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வுளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது. 1955-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி கருப்பர்களின் பொறுமை எல்லைக் கடக்கும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த தினம் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) என்ற கருப்பின பெண் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் அதே பேருந்தில் ஏறினர். அப்போது அவர்கள் அமர இருக்கை இல்லாததால் ரோஸா பார்க்கை அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு அதட்டினார் பேருந்து ஓட்டுனர். எழுந்திருக்க மறுத்ததால் ரோஸா பார்க் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டிருந்த கருப்பினத்தவர்கள் இம்முறை விடுவதாக இல்லை. ரோஸா பார்க் சம்பவத்தைக் கண்டித்து சுமார் 50000 கருப்பர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருப்பினும் கருப்பினத்தவர்களின் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது.

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார். சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர். அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.

அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். உலகை மெய் சிலிர்க்க வைத்த பேச்சில் அவர் இவ்வாறு கூறினார்.....

"எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்".



அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டே 1964-ஆம் ஆண்டு சம உரிமைக்காகப் பாடுபட்ட லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேறு வழியில்லாமல் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரின் மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆத்திரம்தான் லூதர் கிங்கின் உயிருக்கு உலை வைத்தது.

டென்னசியில் (Tennessee) 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. இந்தியாவில் வென்ற அகிம்சை அமெரிக்காவிலும் வென்றது. ஆனால் காந்தியடிகளுக்கு கிடைத்தது போலவே மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் துப்பாக்கி குண்டுதான் வெகுமதியாக கிடைத்தது. லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாள்.



சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது. அகிம்சை வெல்லும் என்பதை இந்தியாவில் நிரூபித்தார் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் அதே உண்மையை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். லூதர் கிங்கைப் போல் அகிம்சை என்ற அறவழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் வரலாறும், அந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்!

நோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே? எனக்கு ஏன் இந்த பரிசு? என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா?! அவர்தான் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் சைவ உணவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து கிட்டதட்ட 95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மறைந்த ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா.

1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார் பெர்னாட் ஷா. இரண்டு சகோதரிகளை அடுத்து மூன்றாவது பிள்ளை அவர். அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவரது தந்தை George Carr Shaw குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை பணம்கூட குடுக்க முடியாமல் கடற்கரையோரம் ஓர் ஓட்டைப்படகில் அவர்கள் வசித்த நாட்களும் உண்டு. குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை பிஞ்சு வயதிலேயே உணர்ந்தார் பெர்னாட் ஷா. எனவே மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார். 1885-ஆம் ஆண்டு தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைத்தார் பெர்னாட் ஷா. அதுவும் சுமார் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது. ஆனாலும் சொந்தமாகவே நூல்கள் வாசிப்பதில் அவருக்கு அலாதி பிரியம்.



பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் அதிக கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவர் பின்னாளில் உலகப்புகழ் பெறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கி, இருபதாவது வயதில் இங்கிலாந்து வந்த அவர் நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும். எந்த சராசரி எழுத்தாளனும் சோர்ந்து போயிருப்பான். அவருடைய எழுத்துகளை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. ஆனால் தன் எழுத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட பெர்னாட் ஷா தொடர்ந்து எழுதினார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். முயற்சி வீண் போகவில்லை அவ்வுளவு நிராகரிப்புகளை சந்தித்தப் பிறகு அவருடைய படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வுளவு என்று கணக்கிட்டு சன்மானத் தொகை வழங்கபட்ட நிலையும் வந்தது என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்ல அவர் என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைகளில் செய்தியானது.

தன் தாயிடமிருந்து இசைக் கற்றுக்கொண்ட பெர்னாட் ஷா இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். அவர் விமர்சனம் எழுதப்போகிறார் என்றாலே இசை கலைஞர்களுக்கு நடுக்கம் எடுக்குமாம். பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் நாமே ஏன் நாடகங்கள் எழுதக்கூடாது? என்று எண்ணி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. அவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின. நாடகங்களில் அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம். தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை சரமாரியாக கலந்து கொடுத்தார் அவர். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக சில புகழ்பெற்ற சம்பவங்கள் உண்டு.



ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தாராம், அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றாராம் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். இன்னொரு புகழ்பெற்ற சம்பவம்.. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாட் ஷாவை சந்தித்த ஓர் அழகிய நடிகை நீங்கள் பெரிய அறிவாளி, நான் சிறந்த அழகி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என் அழகும், உங்கள் அறிவும் கொண்ட குழந்தை நமக்கு பிறக்குமல்லவா? என்று கேட்டாராம். அதற்கு புன்னகைத்துக் கொண்டே அந்தக் குழந்தை உங்களுடைய அறிவையும் என்னுடைய அழகையும் கொண்டு பிறந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம் பெர்னாட் ஷா.

மிகப்பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இருந்தது பெர்னாட் ஷாவுக்கு. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றாராம். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். திணவு இல்லாதவர்கள் தடுமாறிப் போயிருப்பார்கள் ஆனால் பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாராம் லாவகமாக. அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. அவர் எழுத்துத் திறனைப் பார்த்து உலகமே வியந்தது.



உண்மையில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாதான். அவருடைய நாடகங்கள் சமூக, அரசியல், சமயப் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசின. சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாக சாடின. திட்டமிடப்பட்ட வகுப்புவாதமற்ற சமூகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். அதனாலயே அவ்வபோது  அவரிடம் தலைதூக்கிய தற்பெருமையையும், ஆணவத்தையும் இலக்கிய உலகம் பெரிதுபடுத்தவில்லை. பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கெளரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார். அவருக்கு 'Order of the Merit' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால் இப்போது அது எனக்கு தேவையில்லை என்று கூறினார் பெர்னாட் ஷா.



தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை. தினசரி குறைந்தது ஐந்து பக்கங்கள் எழுதுவாராம். தன் வாழ்நாளில் கிட்டதட்ட 50 நாடகங்களையும், 5 நாவல்களையும் எழுதினார் அவர். நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார். ஆங்கில இலக்கிய உலகின் பெருமதிப்பைப் பெற்றிருந்த பெர்னாட் ஷா 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தமது 94-ஆவது வயதில் காலமானார்.

"ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது".

பெர்னாட் ஷா கூறிய பல பொன்மொழிகளில் இதுவும் ஒன்று. அவர் நீண்டகாலம் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவருக்கு உதவிய பண்புகள்...தோல்வியைக் கண்டு துவளாத மனோபாவமும், நகைச்சுவை உணர்வும், தீயப்பழக்கங்களை வெறுத்து ஒதுக்கியதும்தான். அந்தப் பண்புகளையும், பழக்கங்களையும் நாமும் பின்பற்றினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
'தமிழ்க் கடல்' மறைமலை அடிகள் - வரலாற்று நாயகர்!

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு  மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த வரலாற்று மாந்தர் மறைமலை அடிகள். 

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பினார். அந்த பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்றானது.



வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.

நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.

மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.



முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஹிந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார். 

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் காதலித்த விசயங்கள் இரண்டு ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.



'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு வரைதான் கல்வி கற்றிருந்தாலும் ஆசிரியர் பணியை எட்டும் துணிவு அவரிடம் இருந்தது. அந்தத் துணிவால் ஆசிரியர் பணி கிடைத்தும் தன்னுடையக் கொள்கைக்காக அந்தப் பணியை விட்டு விலகி வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பி விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அவர் தன்னுடையக் கொள்கைகளை வாழ்ந்தும் காட்டினார். இவற்றால்தான் அவருக்கு தமிழ் வரலாற்றில் ஒரு தனி இடம் கிடைத்தது. 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அவரிடம் இருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளை வாழ்ந்து காட்டும் திடமும் நமக்கு இருந்தால் நமக்கும் நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
« Last Edit: January 22, 2013, 09:21:47 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜேம்ஸ் வாட் - வரலாற்று நாயகர்!

'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்பை அவர் செய்திருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்! அவரது கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த ஒரு கண்டுபிடிப்பு. இயந்திர சக்தியின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஓர் அற்புத கண்டுபிடிப்பு, உலகம் தொழில்மயமாவதற்கு உதவிய ஓர் அபூர்வ கண்டுபிடிப்பு. 'நீராவி' என்ற இயற்கை சக்திக்கு கடிவாளமிட்டு அதனை மகத்தான சக்தியாக மனுகுலத்துக்கு தந்த அந்த வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட். அவர் கண்டுபிடித்துத் தந்த கருவி 'Steam Engine' எனப்படும் நீராவி இயந்திரம்.

1736-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் Greenock எனும் ஊரில் பிறந்தார் ஜேம்ஸ் வாட். அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம் அந்தக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தில் அடிக்கடி ஆக்ரமிப்பு செய்ததால் நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையில் இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டுக்கு வரைவது என்றால் கொள்ளை ஆசை. ஆனால் வரைவதற்கு தாள் வாங்கி தரக்கூடாத முடியாத அளவுக்கு குடும்பம் வறுமையில் இருந்தது. அதனால் வீட்டின் தரையில் ஆசை தீர வரைந்து தள்ளுவார் ஜேம்ஸ் வாட். அவர் வரைந்தவை எல்லாம் என்ன தெரியுமா? வட்டங்களும், சதுரங்களும், முக்கோணங்களும் கொண்ட கணித சம்பந்தமான படங்கள். பிறந்ததிலிருந்தே உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்தார் ஜேம்ஸ் வாட். எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் அவரது நிலை இன்னும் மோசமாகும். அந்த நேரங்களில் அவரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார் தாயார்.



பள்ளிக்கு சென்ற நாட்களில் அவருக்கு 'geometry' என்ற கணிதக்கூறில் அதிக ஆர்வம் இருந்தது. பிந்நாளில் அவர் பொறியியலில் சிறந்து விளங்க அது ஒரு முக்கிய காரணம். அந்தக்காலத்தில் அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து எப்படி இருந்தது தெரியுமா? எங்கும் அமைதியும் நிசப்தமுமாக இருக்கும். நகர்ப்புறங்களில் குதிரைகளின் குளம்பொலியும், அவை இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கர ஒலியும்தான் கேட்கும். கிராமப்புறங்களில் ஆற்றில் நீர் இறைக்கும் சக்கரங்களின் ஒலி கேட்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளும் காடுகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தொழிற்சாலைகள் இருந்தன. அங்கெல்லாம் உடல் உழைப்பினால் பொருட்களை உற்பத்தி செய்தார்கள். pulley, lever ஆகியவற்றால் இயங்கக்கூடிய ஒரு சில இயந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றை இயக்கவும் மனித சக்தி தேவைப்பட்டது.

எந்த வேலையை செய்யவும் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் சக்திகள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி தேவை என்ற தவிப்பு மனுகுலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனுகுலம் தேடி வந்த அந்த சக்தி நீராவிதான் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் ஜேம்ஸ் வாட். அவருக்கு முன்பாகவே 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார். அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் என்ற ஆங்கிலேயர். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.



1764-ஆம் ஆண்டு தாமஸ் நியூக்கோமனின் நீராவி இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட்டிற்கு கிட்டியது. அப்போதுதான் அவருக்கு நீராவி சக்தியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பு கிட்டியது. அப்போது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தை பழுது பார்த்து தருமாறு பல்கலைக்கழகம் அவரைக் கேட்டுக்கொண்டது. அந்தக் கருவியில் நிறைய குறைகள் இருந்ததை உணர்ந்தார் ஜேம்ஸ் வாட். குறிப்பாக அதிக சக்தியை விரயமாக்கியது.

விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். 1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார் ஜேம்ஸ் வாட். சிறு வயதிலிருந்தே அவர் ஆரோக்கியமற்று இருந்ததால் அந்தக்கால கட்டத்திலும் அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அவருக்கு வர்த்தகத் திறமை அவ்வுளவாக இல்லை எனினும் 1775-ஆம் ஆண்டு மேத்யூ போல்டன் என்ற பொறியாளருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாட்டும் போல்டனும் பல்வேறு நீராவி இயந்திரங்களை தயாரித்து பெரும் செல்வம் சேர்த்தனர்.



நீராவி இயந்திரத்தை மட்டுமின்றி வேறு சில கண்டுபிடிப்புகளையும் செய்தார் ஜேம்ஸ் வாட். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'centrifugal governor' என்ற கருவியையும்,  'pressure age' என்ற அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்துத் தந்த நீராவி இயந்திரம் மனுகுலத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பல தொழில்களுக்கு உதந்தவாறு நீராவி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதுவரை மனிதன் மற்றும் விலங்குகளின் தசை வலிமையையே நம்பியிருந்தது தொழில் உலகம். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. அதனால்தான்  'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் என்று ஜேம்ஸ் வாட்டை பெருமைப்படுத்துகிறது வரலாறு.

ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பு பல துறைகளில் ஊடுருவியுள்ளது. 1783-ஆம் ஆண்டு ஒரு படகில் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி அதனை இயக்கினார் marques de zafra என்பவர். 1804-ஆம் ஆண்டு Richard Trevithick என்பவர் நீராவி இயந்திரத்தைக் கொண்டு இயங்கும் இரயில் வண்டியைக் கண்டுபிடித்தார். அவையிரண்டும் ஆரம்பத்தில் வெற்றியடையாவிட்டாலும் சில ஆண்டுகளில் நீராவிப் படகும், நீராவி இரயிலும் முறையே கடல் மற்றும் நிலப்போக்குவரவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. நீராவிப் படகுகள் கடல் அலைகளை வெற்றிக் கொண்டன. நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றிக் கண்டன. 'Horsepower' என்ற அளவு முறையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் அது.

ஒரு பலம் வாய்ந்த குதிரை ஒரு சராசரி வேலையை செய்வதற்கு எவ்வுளவு சக்தியைப் பயன்படுத்துகிறதோ அதுதான் ஒரு குதிரை சக்தி. 33000 பவுண்ட் எடையை ஒரு நிமிடத்திற்குள் ஓர் அடி உயரத்திற்கு தூக்குவதற்கு தேவைப்படும் சக்தியை ஒரு குதிரை சக்தி அதாவது ஒரு  'Horsepower' என்று நிர்ணயித்தார் ஜேம்ஸ் வாட். இன்றளவும் எந்த இயந்திரத்தின் வலிமையும் குதிரை சக்தி அளவில்தான் கணக்கிடப்படுகிறது. உலகின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த ஜேம்ஸ் வாட் 1819-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 19-ஆம் நாள் தமது 83-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.



வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட நோயாளியாகவே வாழ்ந்த ஒரு மனிதனால் மனுகுலத்திற்கு எவ்வுளவு பெரிய சக்தியைக் கொடுக்க முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? வறுமையும் நோயும் அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வானத்தை வசப்படுத்த உதவிய காரணங்கள் இன்றைக்கும்கூட பொருந்தக்கூடியவைதான். ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும் எப்போதும் எந்த வானமும் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கன்பூசியஸ் (தத்துவ மேதை) - வரலாற்று நாயகர்!

தத்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு வருவது கிரேக்கமாகத்தான் இருக்கும். அந்த தேசம்தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ் வள்ளுவனைத் தந்தது தமிழ்நாடு. கன்பூசியஸ் என்ற அறிஞரைத் தந்தது சீனா. இவர்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் தத்துவம் என்பதே எள்ளி நகையாடப்பட்டது. தத்துவத்தைப் பேசியவர்களை இருட்டறையில் கருப்பு பூனையைத் தேடி அலையும் குருடர்கள் என்று சமுதாயம் முத்திரைக் குத்தியது. அந்த இழிவுகளையெல்லாம் தாண்டிதான் தங்கள் முத்திரைப் பதித்திருக்கின்றனர் உலகம் போற்றும் பல தத்துவ மேதைகள். அவர்களுள் கிட்டதட்ட கடவுள் அந்தஸ்துக்கு வணங்கப்பட்ட ஒருவரைப் பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் சீன தேசம் உலகுத்தத் தந்த பெருங்கொடை கன்பூசியஸ்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் Shandong மாநிலத்தில் பிறந்தார் கன்பூசியஸ். அவரது தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார் அந்த மனைவிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது அந்த பிஞ்சு வயதிலேயே அவருக்கு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. பல வேலைகளை செய்து பொருள் ஈட்டினார். சிறு வயதிலேயே தாம் சிரமபட்டதாலோ என்னவோ மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்களின் அறியாமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார்.



இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். தமது 20-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமுதாய நலன் பற்றியே அவரது எண்ணங்கள் இருந்ததால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வுளவாக நிறைவைத் தரவில்லை. இருப்பினும் தமது மூன்று பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வருமானம் தேவை என்பதால் வேலை தேடி அலைந்தார். அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக அவரை வேலையில் அமர்த்தியது. அதில் பல மாற்றங்களை அவர் அறிமுகபடுத்தியதைக் கண்டு மகிழ்ந்த அரசாங்கம் மற்ற அரசாங்க வேலைகளிலும் அவரை பயன்படுத்திக் கொண்டது. 

அரசியலை அறவே வெறுத்தவர் கன்பூசியஸ் ஆனால் அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார் அதன் மூலம் அவரது மதிப்பு கூடியது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அது அரிஸ்டாட்டில் நிறுவிய லைசியம் அகாடமியைப் போன்றதொரு கலைக்கழகமாக செயல்பட்டது. அதில் அரசாங்க நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைப் பண்புகள், ஒழுக்கம் போன்ற பாடங்களை இளையர்களுக்கு போதித்தார். 

'அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு' என்பதே கன்பூசியஸின் அடிப்படை சித்தாந்தம். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும், சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவதிலும் அவரது முனைப்பைக் கண்ட சீனர்கள் அவரை தெய்வமாகவே மதிக்கத் தொடங்கினர். ஆனால் அதனை கன்பூசியஸ் விரும்பவில்லை ஏனெனில் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. மக்கள் மத சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக வெளிப்படையாகவே சொன்னார்.



வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ். பெரும்பாலோர் மதித்தாலும் சில அரசாங்க அதிகாரிகள் அவரை குறை கூற ஆரம்பிக்கவே அரசாங்கப் பணியிலிருந்து விலகினார் கன்பூசியஸ். பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை விதைத்தார். சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை அறிந்து அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் வறுமையில் வாடியபோதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்தார் கன்பூசியஸ். அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கெளரவிக்க விரும்பியது ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார்.

ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தமது 70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது கடைசிக் காலத்தை சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். தமது சிந்தனைகளையெல்லாம் ஒருங்கினைத்து "வசந்தமும் இலையுதிர்க் காலமும்" என்ற நூலை உருவாக்கினார். தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு அவர்மீது நன்மதிப்பால் அவரது கொள்கைகளை 'கன்பூசியனிஸம்' என்று கிட்டதட்ட ஒரு மதமாகவே மதிக்கத் தொடங்கினர் சீனர்கள். சீனாவில் பெளத்தம், தாவிசம், கம்யூனிசம் என்று எத்தனையோ மதங்களும் மாறுதல்களும் வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது கன்பூசியனிஸம். அதற்கு காரணம் அந்த தத்துவஞானியின் உயரிய சிந்தனைகள்தான்.

ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்போதே சொன்னவர் கன்பூசியஸ். எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும் அரசாங்கம் கல்வியை கண்ணாக போற்றி வளர்க்க வேண்டும், இளையர்களின் சுதந்திர சிந்தனைகளை தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் கன்பூசியஸ். நாம் எப்படி வள்ளுவரின் திருக்குறளைப் பெரிதாக மதித்துப் போற்றுகிறோமோ அதே போன்று சீனர்கள் கன்பூசியஸின் கருத்துகளை வேதமாகப் பின்பற்றுகின்றனர். சீனா தந்த அந்த அருந்தவப் புதல்வனின் சில சீரிய சிந்தனைகள் இதோ.....

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை".

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்".

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".



இப்படிப்பட்ட அறிய பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் கன்பூசியஸ். ஒரு பில்லியன் சீனர்கள் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் இன்றும் அவரை மதிப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும்தான். இதுபோன்ற பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் ஏழ்மையில் பிறந்தவர்களுக்குகூட அந்த வானம் வசப்படும் என்பதுதான் தத்துவ மேதை கன்பூசியஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.