காலமாகாத காதலொன்று..!
அவள் கழற்றிக் கொடுத்த மோதிரத்தில்
கைரேகையின் நுண்ணிய வியர்வை படிமக்கூறுகள்
இன்னும் காயாமல் கதைகள் பேச..
வறண்ட காற்றொன்றின் கண்ணீர் கசிவுகள்
பிரிவின் வேதனையை பாடிச் செல்கிறது .
அவனுக்கென்றிருந்த மனிதர்களின் வேசம் கலைந்தபோது
ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முட்களில் குத்தி கிழிபடுகிறது
காலமாகாத காதலொன்று அனாதையாய் !..
சுயநலம் பீறிடும் இருப்பின் காட்சிகளில்
மயங்கி நிற்கும் மனங்களெல்லாம்
என்றேனும் ஒருநாள் பார்க்க கூடும்..
அன்பெனும் அம்புகள் விஷம் தோய்த்து ஏவப்பட்டதில்
பனிக்கட்டி இதயங்கள் சுக்கு நூறாய் நொறுங்கி கிடப்பதை..!!!