Author Topic: சந்திரன் ஆதிக்கத்தில் ( 2,11, 20, 29) பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்  (Read 1957 times)

Offline kanmani


இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய  ஆங்கில எழுத்துக்கள் ஙி.ரி.ஸி  ஆகியவை.

குண அமைப்பு

2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள்.  சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.
இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில்  உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.

வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு  கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள். தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு  பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால்  சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.

குடும்ப வாழ்க்கை

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு  முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும்.  தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.

உடல் அமைப்பு ஆரோக்கியம்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள்  சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள். மெலிந்த குரலில்  பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால்  இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி,  தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம்  எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.

பொருளதாரம்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும்  பிறருக்கு கொடுக்க வேண்டிய  கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

தொழில்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும்.  அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள், பகைவர்கள்

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள்.  நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.

சந்திரனுக்குரிய காலம்

ஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம் தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும்.  சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.

சந்திரனுக்குரிய திசை

சந்திரனுக்குரிய  திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கல்

சந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள்  குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள்

சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை

அதிர்ஷ்ட தேதி, 1,10,19,3, 12,21,30

அதிர்ஷ்ட நிறம்  வெள்ளை, பொன் நிறம்

அதிர்ஷ்ட திசை  தென் கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை  திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட கல் முத்து, சந்திரகாந்தகல்

அதிர்ஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி, துர்க்கை