FTC Forum

தமிழ்ப் பூங்கா => நாவல்கள் => Topic started by: Gayathri on May 31, 2013, 02:09:23 PM

Title: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 02:09:23 PM
எஸ். ராமகிருஷ்ணன்


(http://i1287.photobucket.com/albums/a621/MyTranquilize/Naval/im210_zpsae0a8d1a.gif)

S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like Baba, Album, Chandaikkozhi, Unnale Unnale, Bhima, Dhaam Dhoom, Chikku Bukku and Modhi Vilaiyadu with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are  Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 02:20:45 PM
எதிர் கோணம்

சிறுகதை

பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான்,

ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது

சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான்,

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் பார்த்திருக்கிறார், சமீபத்தில் அவர் பார்த்த ஒரு திரைப்படத்தில் கூட அதன் நாயகன் இது போன்ற ஒரு கேமிராவை கையில் வைத்திருந்த ஞாபகம் வந்தது.

அதே  கேமிரா தான், பார்க்க பார்க்க ஆசையாக வந்தது, ஒரு காலத்தில் சவரிமுத்துவிற்கு சொந்தமாக ஒரு அக்பா கேமிரா ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்த்து, ஆனால் அதற்காக அவரால் பணம் சேர்க்க முடியவில்லை, மூத்த மகள் சுகுணாவிற்கு திருச்செந்தூரில் மொட்டை போட சென்ற போது மச்சினன் வைத்திருந்த யாசிகா கேமிராவை இரவல் வாங்கிக் கொண்டு போய் புகைப்படம் எடுத்தார்,

பிளாஷ் இல்லாத காரணத்தால் உருப்படியாக போட்டோ எடுக்கமுடியாமல் போய்விட்டது, ஆனாலும் இரண்டு நாட்களாக அந்த கேமிராவை தன்னோடு கூடவே வைத்திருந்த்து அவருக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது, கேமிராவை கழுத்தில் போட்டுக் கொண்டவுடன் திடீரென தனது உயரம் மிக அதிகமாகிப்போனது போலவும், தன்னையே எல்லோரும் வியப்போடு பார்ப்பது போலவும் அவருக்கு தோன்றியது,

அந்த உந்துதலில் தான் டைம்கீப்பர் லாசரிடமிருந்த பழைய கேமிரா ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் கடன்வாங்கி ரகசியமாக கேமிராவை வாங்கி வந்தார், பொங்கல் விடுமுறையில் பிள்ளைகளை ஆற்றின் மணல்திட்டிற்கு அழைத்துப் போய் விதவிதமாகப் போட்டோ எடுக்க வேண்டும் என்று இரண்டு பிலிம் ரோல்கள் கூட வாங்கி வைத்திருந்தார்

தைப்பொங்கலுக்கு மறுநாள் வைப்பாற்றுக்குள் பெரிய விழா நடக்கும், ராட்டினங்கள், பலூன்விற்பவர்கள், விதவிதமான ரிப்பன் வளையல் விற்பவர்கள், தூள் ஐஸ், பாம்பே விற்பவர்கள், குறவன் குறத்தி ஆட்டம்,  இசைக்கச்சேரி என்று ஒரே குதூகலமாக இருக்கும்,

ஆற்றின் தென்பகுதியில் ஒரு உயரமான மணல்திட்டிருந்த்து, அதிலேறி பிள்ளைகள் மணலறச் சறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள், அந்த உயரமான மணல்திட்டினை ஒட்டி எஸ் வடிவில் வளைந்த கூந்தல்பனைமரம் ஒன்றிருந்தது,

அந்த பனைமரத்தின் அருகில் கையில் ஒரு ஒலைக்கிளி ஒன்றை கொடுத்து இரண்டுபிள்ளைகளையும் நிறுத்தி கலர் படம் எடுத்தால் மிக அழகாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்தார், அதற்காகவே பிள்ளைகளுக்கு அடர்ந்த நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் உடைகளும் வாங்கியிருந்தார்,

அன்றைக்கு ஆற்றில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, தனது கைப்பையில் இருந்து அவர் கேமிராவை வெளியே எடுத்த போது சுகுணா ஆச்சரியத்துடன் ஏதுப்பா என்று கேட்டாள்

டிரைவர் ரவியோடது என்று பொய் சொல்லி சமாளித்தபடி அவர்களை மணலில் நடத்திக் கூட்டிக் கொண்டுபோனார், அவர்கள் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக ஒலைக்கிளி ஒன்றை வாங்கி கொடுத்து பனைமரத்தடிக்கு கூட்டிப் போனார்,

மணல்மேட்டில் இருந்து சரிந்து விழும் சிறுவர்கள் கைகளை விரித்தபடியே கூச்சலிட்டிக் கொண்டிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து சென்று கொண்டிருந்தது, பருத்திப்பால் விற்கின்றவன் தனது பானையில் மணல் விழுந்துவிட்டது என்று ஏசிக் கொண்டிருந்தான்,

சறுக்கும் சிறுவர்களை விலக்கி விட்டு இரண்டு மக்ள்களையும் பனைமரத்தடியில் நிறுத்திவிட்டு வாகான ஒரு கோணத்தில் படம் பிடிப்பதற்காக கேமிராவை முடுக்கினார், அதன் ஷட்டர் திறந்து கொள்ளவேயில்லை, கேமிராவை ஒரு குலுக்கி குலுக்கிவிட்டு மறுபடியும் இயக்கிப் பார்த்தார், இப்போது பட்டனை அமுக்கவே முடியவில்லை, எரிச்சலுடன் ஒங்கி அழுத்தினார், பட்டன் அப்படியே அமுங்கி நின்றுவிட்டது, என்ன எழவு கேமிரா என்று அலுத்துக் கொண்டபடியே அதை மறுபடியும் கடகடவென குலுக்கினார், கேமிராவின் அமுக்கும் பட்டன் வேலை செய்யவேயில்லை,

இப்போது கேமிராவை கழட்ட முடியாது, பிலிம்ரோல் வேறு போட்டாகிவிட்டது, என்ன செய்வது என்று புரியாமல் அதை மேலும் கீழுமாக மறுபடியும் குலுக்கி பார்த்தார், கேமிரா சுத்தமாக வேலை செய்யவில்லை, சே ஆயிரம் ரூபாயை ஏமாற்றி பிடுங்கிவிட்டானே என்று லாசர் மீது ஆத்திரமாக வந்தது, பிள்ளைகள் கையில் ஒலைக்கிளியோடு நின்று கொண்டேயிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து கொண்டேயிருந்தது

சவரிமுத்துவின் மனைவி கலா பொறுமையற்றவளாக சொன்னாள்

சுகுணா நீங்க போயி விளையாடு, உங்கப்பா போட்டோ எடுக்க ரெடியானது நானே கூப்பிடுறேன்

பிள்ளைகள் குடை ராட்டினத்தை நோக்கி நடந்து போனார்கள்,

சவரிமுத்து சலிப்போடு ஆற்றின் கரையில் டெண்ட் அடித்து பேமிலி போட்டோ எடுத்த தரும் ராயல் ஸ்டுடியோவிற்கு போய் ஆலோசனை கேட்கலாம் என்று நடந்து போனார், அங்கே போட்டோ எடுப்பதற்காக நிறைய கூட்டம் சேர்ந்திருந்த்து,

வேலை நேரத்தில் இதை எல்லாம் கவனிக்கமுடியாது என்று ஸ்டுடியோ முதலாளி சவரிமுத்துவை துரத்திவிட்டார்

திரும்பி வந்த போது ஏமாற்றமாக இருந்தது, வெயில் வேறு போய்க் கொண்டேயிருந்த்து, நினைத்தது போல ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது,

சவரிமுத்துவின் மனைவி மணலில் ஜமுக்காளத்தை விரித்து உட்கார சொன்னாள், ஒரமாக உட்கார்ந்தபடியே கேமிராவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்,

தன்னை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்ஙகள், ஆடல் பாடல்கள் எதுவும் அவர் மன்தின ஈர்க்கவேயில்லை, கேமிராவை எப்படியாவது சரிசெய்து பிள்ளைகளை போட்டோ எடுக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணம் ஒடிக் கொண்டிருந்த்து,

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் தலைகலைந்து பறக்க, உடைகள் கசங்க, அவரிடம் ஒடி வந்து கேமிராவை சரி பண்ணியாச்சாப்பா என்று கேட்டார்கள்,

இல்லைடா கண்ணு, நாளைக்கு எடுப்போம் என்று தலைகவிழ்ந்தபடியே சொன்னார், அவரது வருத்தமான முகத்தை கண்ட கலா சொன்னாள்

போட்டோ வேணும்னா, ஸ்டுடியோவில போயி பிடிச்சிகிடலாம், அதுக்கு எதுக்கு நல்ல நாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கிவச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க,  கைமுறுக்கு கொண்டு வந்திருக்கேன், தரவா

வேண்டாம் என முறைத்தபடியே கையில் மணலை அள்ளி அள்ளி மறுபக்கம் கொட்டிக் கொண்டிருந்தார், அன்று உருவான தீராதமனவருத்தம் இன்றைக்கு விழித்துக் கொண்டது

பஸ்ஸின் படியில் நின்றிருந்த அந்த பையன் கழுத்தில் இருந்த கேனான் கேமிரா அவரது ஆசைளை கிளறிவிட்டது,

பக்கத்தில் உள்ள சமணர்மலைக்கு போய்விட்டு வருகிறான் போலும்,

இந்த வயதில் டிஜிட்டல் கேமிரா, நிறைய லென்சுகளும் வைத்திருக்கிறான், கொடுத்துவைத்த பயல், ஆசையை அடக்கமுடியாமல் அவனிடம்  சவரிமுத்து கேட்டார்

கேனான் 5 டியா

அந்தப் பையன் காற்றில் மோதும் கேசத்தை இடது கையால் ஒதுக்கிவிட்டபடியே சொன்னான்

5டி, மார்க் 3, சிங்கப்பூர்ல வாங்கினது

பள்ளிபடிப்பை கூட முடித்திருப்பானா என்று தெரியாது, அதற்குள் 5 டி மார்க் 3 வாங்கியிருக்கிறான், அதுவும் சிங்கப்பூருக்கு போய் வாங்கியிருக்கிறான்,

வாழ்க்கை சிலருக்கு எல்லாவற்றையும் வாறி வழங்குகிறது, சிலருக்கு எதையும் அடைய முடியாமல் செய்துவிடுகிறது என ஆத்திரமாக வந்தது

பேருந்து சின்ன ஒடை பஸ் ஸ்டாப்பில் நின்றது, நாலைந்து கிராமவாசிகள் ஏறிக் கொண்டார்கள், சவரிமுத்து விசில் அடித்துவிட்டு கேமிரா வைத்திருந்த பையனுடன் எப்படி பேச்சு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்,

பஸ்  சீரற்ற சாலையில் சென்று கொண்டிருந்த்து, ஒரு பள்ளத்தில் டயர் விழுந்து ஏறியதில் பேருந்து குலுங்கியது.

தம்பி நீங்க வேணும்னா என் சீட்ல வந்து உட்காருங்க.  ஏன் கேமிராவை வச்சிகிட்டு சிரமப்படுறீங்க என்று தனது சீட்டை விட்டு எழுந்து கொண்டான் சவரிமுத்து

அந்த பையன் வேண்டாம் என்று மறுத்தபடியே படியிலே நின்று கொண்டான்,, அதுவரை கால்கடுக்க நின்று கொண்டுவந்த ஒரு முதியவர் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார்,

சவரிமுத்து அந்த பையனிடம் பேசுவதற்கு தோதாக தானும படிக்கட்டில் நின்று கொண்டான். பையன் போட்டிருந்த பாரீன் செண்டின் மணம் தூக்கலாக இருந்தது

கேமிரா என்ன விலையாகுது எனக் கேட்டான் சவரிமுத்து

ஒன் செவண்டி எயிட் என்றான் அந்த பையன்

ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் கொடுத்து ஒரு கேமிராவை விலைக்கு வாங்கியிருக்கிறான், ஒரு வருஷம் கண்டக்டர் உத்யோகம் செய்தால் கிடைக்க கூடிய வருமானமது,

என்ன வேலையிது, எதற்காக இந்த கண்டக்டர் உத்யோகத்தில் வந்து சேர்ந்தோம், எதற்காக திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டோம், ஏன் கைக்கு கிட்டாத விஷயங்களை மனது திரும்ப திரும்ப ஆசைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என தன்மீதே ஆத்திரமாக வந்த்து

சமண மலைல மேற்கே ஒரு குகை இருக்குமே, அதுக்குள்ளே போனீங்களா, பேக் லைட்ல பாக்க ரொம்ப நல்லா இருக்கும், என ஆர்வத்துடன் சொன்னான் சவரிமுத்து

அந்த பையன் பதில் பேசவில்லை,  கேமிராவை நைசாக கையால் தொட்டு பார்க்கலாமா என ஆசையாக இருந்தது

பைபர் பாடியா என்று கேட்டான் சவரிமுத்து

அந்த பையன் கண்டு கொள்ளவேயில்லை, வேண்டுமென்றே தலையை திருப்பி சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை வேடிக்கை பார்த்தபடியே வருவது சவரிமுத்துவுக்கு ஆத்திரமூட்டுவது,

படிக்கிறவயதில் ஆசைப்பட்டதை வாங்கமுடியாமல் போவதை கூட தாங்கிக் கொள்ள முடிகிறது, ஆனால் வேலைக்கு போன பிறகும் ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியவில்லை என்றால் என்ன வாழ்க்கையிது என்று எரிச்சலாக வந்த்து

பேருந்தின் வேகத்தில் அந்த பையன் கழுத்தில் இருந்த கேமிரா ஊசலாடி சவரிமுத்துவின் மேல்பட்டது, அந்த உரசலை அவர் ஆனந்தமாக அனுபவித்தார், எப்படியாவது ஒரு முறை அந்த கேமிராவை  கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும், முடிந்தால் ஒரு ஸ்நாப் அடித்துவிட வேண்டும் என உள்ளுற தோன்றிக் கொண்டேயிருந்தது

அந்த பையன் டீசர்ட்டினுள் காற்று புகுந்து சட்டையை படபடக்க செய்ய ஏகாந்தமாக  வந்து கொண்டிருந்தான்

என்ன இருந்தாலும் பிலிம்ல எடுக்குற மாதிரி கான்டிராஸ்ட் டிஜிட்டல்ல வராது, இப்போ கோடாக் பிலிம் கம்பெனியை நிறுத்திட்டாங்களாமே, என்றார் சவரிமுத்து

இதெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்பது போல அந்த பையன் சவரிமுத்துவை முறைத்துப் பார்த்தான், பிறகு தானாக நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துக் கொண்டான்,

அந்த சிரிப்பு சவரிமுத்துவிற்கு ஆத்திரமூட்டியது , ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை,

இதுல மெமரி 64  ஜிபியா.  பாடி மட்டும் எவ்வளவு வெயிட் இருக்கும் என மறுபடியும் கேட்டார்,

பையன் கடந்து செல்லும் வேப்பமரங்களையே பார்த்தபடி வந்தான்,

தன்னோடு அந்த பையன் பேசவிரும்பவில்லை என்பது சவரிமுத்துவிற்கு நன்றாக புரிந்த்து, ஏன் பேசினால் என்ன குறைந்து போய்விடுவான், காக்கி சட்டை போட்டுக் கொண்டு கண்டக்டராக இருப்பவனுடன் கேமிரா பற்றி பேசுவது அவமானத்திற்கு உரிய ஒன்றா, இந்த காலத்து பையன்கள் பெற்றோர்களுடன் கூட முகம் கொடுத்து பேசுவதில்லை, பிறகு எப்படி வெளியாட்களுடன் பேசுவார்கள்,

அந்த பையனின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று சவரிமுத்துவிற்கு தெரியவில்லை, அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏறினார்கள், பேருந்தினுள் முண்டியத்து  டிக்கெட் கொடுத்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்த பையன் முன்படிக்கட்டிற்கு மாறியிருந்தான், சவரிமுத்துவிற்கு ஆத்திரமாக வந்த்து,

தன்னை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் முன்படிக்கட்டிற்கு போயிருக்கிறான், அவனை அப்படியே விட்டுவிடக்கூடாது, பயணிகளை விலக்கி  தள்ளி  நகர்ந்து முன்படிக்கட்டிற்கு வந்த போது அந்த பையன் ஒற்றைக் கையில் தொங்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

சவரிமுத்து ஒங்கி விசில் அடித்தார், பேருந்து சடன் பிரேக் போட்டு நின்றது

புட்போர்ட்ல நிக்குறவங்க எல்லாம் மரியாதையா மேலே வாங்க, யாராவது கிழே விழுந்து செத்துகித்துப் போனா நான் போலீஸ் கேஸ்ல லோல்பட வேண்டியிருக்கும், யோவ் உன்னை தான்யா  சொல்றேன், மேலே வா, என கத்தினார்

புட் போர்டில் நின்றிருந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கேலி செய்தபடியே சற்று உடலை வளைத்து உள்ளே வந்தார்கள்,

படியில் நின்றிருந்த நடுத்தரவயது ஆளின் சட்டையை  பிடித்து உள்ளே இழுத்து கத்தினார் சவரிமுத்து,

உனக்கெல்லாம் என்ன இளவட்டம்னு நினைப்பா, அவங்க தான் தண்ணி தெளிச்சிவிட்ட மாதிரி அலையுறாங்க, உனக்கு என்ன கேடு வந்துச்சி, உள்ளே வாய்யா

அந்த ஆள் வெளிறிப்போன முகத்துடன் உள்ளே காத்துவரலை, அதான் என்று சமாளித்தார்

காத்து வரல்லன்னா, டாப்புல ஏறி உட்காந்துக்கோ, ப்ரீயா காத்துவரும் என்றார் சவரிமுத்து,

அதைக்கேட்டு யாரோ சிரித்தார்கள், தனது வேடிக்கையை பேருந்தில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நடுத்தரவயது ஆளை மேலும் கிண்டல் செய்த ஆரம்பித்தார் சவரிமுத்து, படியில் நின்றிருந்த கேமிராபையன் அந்த வேடிக்கைகளை ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்தில் தெரிந்தது,

புளியம்பட்டி ஸ்டாப்பை தாண்டியதும் பேருந்து பிரேக் அடித்து நிற்க துவங்கியது  சவரிமுத்து தலையை வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது, இந்த நேரத்திற்கு தூத்துக்குடி செல்லும் கூட்ஸ் ரயில் ஒன்று கடந்து போகும்,  கூட்ஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிஷமிருக்கிறது,

கேமிரா வைத்திருந்த பையன் கிழே இறங்கி நின்றிருந்தான், கிழேயே அவனிடம் பேசி கேமிராவை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையோடு சவரிமுத்து   இறங்கி நின்று கொண்டார்,

அந்த பையன் வேண்டுமென்றே அவரை விட்டு விலகி ரயில்வே கேட் அருகில் போய் ரயில் வருவதை போட்டோ எடுப்பதற்கு உரிய இட்ம் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்த கல்லு மேல ஏறி நின்னு  ரயிலை போட்டோ எடுக்கலாம், நல்ல வியூ கிடைக்கும் என்றார் சவரிமுத்து

ரயிலை எல்லாம் போட்டோ எடுக்க பிடிக்காது என்றான் அந்த பையன்

அந்த குரலில் எரிச்சல் இருந்த்து போல தெரியவில்லை, நம்மோடு பேச ஆரம்பித்துவிட்டான், இனி அப்படியே பிடித்துக் கொள்ள வேண்டியது தான், என்று மனதிற்குள் சொல்லியபடியே, லோ ஆங்கிள்ல தண்டவாளத்தோட் கூட்ஸ் டிரைனை போட்டோ எடுத்தா சூப்பரா இருக்கும். என்று சொல்லி சிரித்தார் சவரிமுத்து

அந்த பையன் பதில் சொல்லாமல் ஒரு சூயிங்கத்தை வாயிலிட்டு மெல்ல ஆரம்பித்தான்

நானும் உன் வயதில் போட்டோ எடுத்திருக்கிறேன், அதில் ஒன்றுக்கு காஷ்மீரின் சுற்றுலா துறை விருது கூட கிடைத்திருக்கிறது என்பதை எப்படி சொல்வது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் சவரிமுத்து,

கடந்த காலத்தை இந்த ஐந்து நிமிசத்திற்குள் சொல்லி புரிய வைப்பது எளிதானதில்லை,

கூட்ஸ் ரயில் வருவத்ற்குள்  கேமிராவை ஒரேயொரு முறை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிக் கொண்டிருந்த்து

எதற்குத் தயக்கம், வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான் என்பது போல அந்த பையனிடம் சிரித்த முகத்துடன் சொன்னார்

நானும் நல்லா போட்டோ எடுப்பேன்,

அந்த பையன் உதட்டை மடித்து அழுத்தியபடியே அப்படியா என்பது போல தலையாட்டினான், அந்த செய்கை சவரிமுத்துவை மேலும் ஆத்திரப்படுத்திய போதும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை, தொலைவில் இருந்து ரயில்வரும் ஹார்ன் ஒசை கேட்க ஆரம்பித்தது

உங்க கேமிராவை ஒரு நிமிஷம் பாக்கலாமா என்று கேட்டார் சவரிமுத்து,

அதை காதில் கேட்காதவனை போல நடித்த அந்த பையன் த்ரையில் கிடந்த ஒரு சிறிய கல்லை எடுத்து தண்டவாளத்தை நோக்கி வீசினான்

ஒருவேளை தான் கேட்டது அந்த பையனுக்கு நிஜமாகவே காதில் விழாமல் போயிருக்குமோ,இன்னொரு முறை எப்படிக் கேட்பது என்று கூச்சமாக இருந்தது,

அதற்காக கேட்காமல் விட்டுவிட்டால் இது போன்ற லேட்டஸ்ட் கேமிராவை கையால் தொட்டு பார்ப்பது இயலாமல் போய்விடுமே, சவரிமுத்து மீண்டும் முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார்

நல்ல சாப்ட் லைட்டிங் இருக்கு, பஸ் பக்கத்தில வந்து நில்லுங்க, நான் உங்களை ஒரு போட்டோ எடுத்து தர்றேன்

நோ, ஐ டோண்ட் வான்ட் என்றான் அந்த பையன்,

இப்போது எதற்காக ஆங்கிலத்தில் பேசினான், டிக்கெட் கேட்கும் போது ஒழுங்காக தமிழில் தானே பேசினான், பிறகு இப்போது என்ன கேடு,  அவன் வேண்டுமென்றே தன்னை எரிச்சல்படுத்துகிறான், போடா மசிரே என்று திட்டுவதற்கு பதிலாக நாகரீகமாகச் சொல்கிறான், ஆனாலும் ஆத்திரப்படக்கூடாது,  வயது பையன்கள் அப்படிதானிருப்பார்கள்,  அது அவர்களின் இயலபு, மறுபடியும் அவனோடு இயல்பாக பேச வேண்டும்,

கூட்ஸ் ரயில் வரத் துவங்கியது, நிறைய பெட்டிகள் கொண்ட கூட்ஸ் அது, தடக் தடக் என நீண்டு போய்க் கொண்டேயிருந்த்து, பேருந்தின் கசகசப்பில் பெருமூச்சிட்டுக் கொணடிருந்தவர்கள் கூட தங்களை மறந்து கூட்ஸ் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள், வண்ணத்துபூச்சிகளின் கூட்டம் ஒன்று சாலையோரம் அடர்ந்திருந்த தும்பை செடிகளின் மீது பறந்து கொண்டிருந்தன,

பேருந்து  மறுபடியும் கிளம்பியது, அந்த பையன் இப்போது தனது கேமிராவையும் முதுகில் இருந்த பையையும் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் நீட்டி மடியில வைச்சிகிடுங்க, இறங்கும் போது வாங்கிகிடுறேன் என்றான், அந்த பெண் வாங்கிக் கொண்டாள்

சவரிமுத்துவால் அதை தாங்கிக்  கொள்ளவேயில்லை, இந்த மயிரான் வேண்டுமென்றே தன்னுடன் விளையாடிவிட்டான், அவனுக்கு தான் யார் என்பதை புரிய வைக்க வேண்டும் போலிருந்தது,

பேருந்து வள்ளிக்குளம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒடிவந்து ஆட்கள் பேருந்தில் ஏற முண்டியத்தார்கள், துணிமூட்டையுடன் ஒரு ஆள் பேருந்தில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான், சவரிமுத்துவின் ஆத்திரம் அந்த துணிவியாபாரி மீது திரும்பியது

துணிமூட்டையை உள்ளே திணித்துக் கொண்டிருந்த ஆளின் சட்டையை பிடித்து கிழே இறக்க முயன்றார் சவரிமுத்து, அந்த ஆள் அதை கண்டுகொள்ளாமல் முண்டியத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்

சவரிமுத்து ஆத்திரத்துடன் கத்தினார்

யோவ் அறிவு கெட்ட முண்டம், பஸ்ஸை விட்டு கையை எடுயா, இவ்வளவு பெரிய துணிமூட்டையை எல்லாம் பஸ்ல ஏத்த முடியாது, கிழே இறங்கு

டபிள் லக்கேஜ் வாங்கிக்கோங்க, எப்பவும் கொண்டு போறது தானே , இப்படி ஒரமா வச்சிருக்கிடுறேன், என்றான் துணிவியாபாரி

லக்கேஜ் எவ்வளவு போடணும்னு எனக்கே சொல்லி தர்றியா,  வண்டில ஏற்றமுடியாதுன்னா, முடியாது தான், துணிமூட்டையை ஏத்திகிட்டு போக இது என்ன கழுதையா, கையை எடுய்யா,

பேருந்தினுள் இருந்து  ஒருவர் குரல் கொடுத்தார்

கண்டக்டர், ஏன்யா வெட்டியா தகராறு பண்றே, பாசஞ்சர் லக்கேஜ் கொண்டுவரக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா, காக்கி சட்டையை போட்டுட்டா பஸ்ஸே இவங்க அப்பன் வீட்டு இதுனு நினைச்சிடுறாங்க

அதைக்கேட்ட சவரிமுத்துவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது,

சட்டம் பேசுற அந்த முகரை யாரு, எங்கே காட்டு பாப்போம், யாருடா அது, என சப்தமிட்டார்

பேருந்தினுள் அப்படி பேசியது யார் என தெரியவில்லை, பேருந்து மெதுவாக புறப்பட்டது, சவரிமுத்து கோபம் தணியாமல் ஒங்கி விசில் அடித்தான்,

பேருந்து பிரேக் அடித்து நின்றது

துணிவியாபாரிக்கு ஏண்டுகிட்டு சப்தம் போட்ட முகரை யாருனு தெரியாம வண்டி கிளம்பாது, கண்டக்டர்ன்னா என்ன இளக்காரமாக போச்சா,  நானும் காலேஜ்ல படிச்சிருக்கன், எனக்கும் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கு, காஷ்மீர்ல போயி வேலை பாத்தவன்டா நான்,  எகத்தாளம் பேசுன அந்த ஆள் யாருனு இப்ப தெரிஞ்சாகணும்

தாடி நரைத்துபோயிருந்த ஒருவர்  அமைதியான குரலில் சொன்னார்

கண்டக்டர், யாரோ தெரியாம பேசிட்டாங்க விடுங்க, நீங்க் தான் அனுசரிப் போகணும்

அப்படி விடப்போயி தான் தலைமேல ஏறுறாங்க, இன்னைக்கு நான் ரூல் படி தான் நடக்க போறேன், படிக்கட்டில நிக்குற எல்லா ஆட்கள் எல்லாம் கிழே இறங்கி அடுத்த பஸ்ல வாங்க, இல்லேன்னா பஸ் கிளம்பாது

படியில் நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிரைவர் ஹார்ன் அடித்தபடியே நேரமாச்சி சவரியண்ணே என்று குரல் கொடுத்தார்

படியில நிக்குற ஆள் எல்லாம் தான  இறங்குறாங்க, இல்லே நான்  போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச்சொல்லட்டும்மா என்றார்

சும்மா ஒண்ணும் நிக்கலை, டிக்கெட் எடுத்திருக்கோம் என்று யாரோ சொல்வது கேட்டது

அப்போ வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுவோம், புட்போட் டிராவலுக்கு 500  ரூவா பைன்னு சட்டம் இருக்கு, தாசண்ணே வண்டியை எடுங்க,

படிக்கட்டில் நின்றிருந்த ஏழெட்டு பேர் பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டார்கள், கேமிரா பையன் தனது பையை, கேமிராவை அந்தபெண்ணிடம் இருந்து வாங்கிக் கொண்டான், அவன் முகத்தில் கலக்கம் தெரிகிறதா என்று சவரிமுத்து பார்த்தார், சலனமேயில்லை, அவன் கேமிராவை  கழுத்தில் போட்டபடியே நடக்க துவங்கியிருப்பது தெரிந்தது

பேருந்து கிளம்பியது, வெளியே எட்டிப்பார்த்தார், அந்த பையன் தனது கேமிராவை திறந்து ஒடும் பஸ்ஸையும் அதிலிருந்து எட்டிப்பார்க்கும் சவரிமுத்துவையும் சேர்ந்து போட்டோ எடுப்பது தெரிந்தது

தனது முகம் அந்த போட்டோவில் நன்றாக வந்திருக்குமா, என்ன லென்ஸ் போட்டிருப்பான், அவன் நின்ற இடத்தில் இருந்து பேருந்து எவ்வளவு தூரத்தில் போய் கொண்டிருந்தது, போகஸ் சரியாக வந்திருக்குமா, என்று அடுத்தடுத்து ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின,

எதற்காக  தேவையில்லாமல் இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆழமான வருத்தமும் அவருக்குள் எழுந்து அடங்கியது,

அந்த பையனை அப்படி நடத்தியிருக்ககூடாது என்று நினைத்தபடியே பேருந்தின் விசில் அடித்து அடுத்த ஸ்டாப்பில் இருந்த கல்லூரி மாணவர்களை படியில் ஏற்றி கொண்டார்,

படியில ஆள் ஏத்தக்கூடானு இப்போ தான் சண்டைபோட்டு கத்துனான் அதுக்குள்ளே என்ன ஆச்சி  என டிரைவர் திட்டுவது காதில் கேட்டது,

விடுங்கண்ணே, நாம தான் அனுசரிப்போகணும் என்றபடியே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தான் சவரிமுத்து

•••


உயிர்மை இதழில் வெளியான சிறுகதை.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 02:31:06 PM
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை

2007ல் வெளியான சிறுகதை


ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் பலமுறை முயன்றிருக்கிறாள். ஆனால், தண்ணீருக்குள் வீசிய ரப்பர்பந்து தானே மேலே வந்துவிடுவது போல, அவள் எவ்வளவு முயன்றாலும் பிறந்த நாள் தானே நினைவுக்கு வந்துவிடுகிறது.

ஜி.சிந்தாமணி ராயப்பேட்டையில் வசிக்கிறாள். 40 வயதை நெருங்குவதற்குள் நரையேறி, பருத்த சரீரம் கொண்டவளாகிவிட்டாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்குக்கூட இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது.

அதை யார் கவனிக்கப் போகிறார்கள்! இப்போது அவள் முகத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள் யார் இருக்கிறார்கள். அவளாகவே தன்னைப் பார்த்துக்கொள்வதைத் தவிர மற்றவர்களுக்கு அவளிடம் ஈர்ப்பில்லை.

அவள் கடந்த சில வருடங்களாகவே எப்போதும் ஒரு வட்டக்கண்ணாடியை தனது ஹேண்ட்பேகில் வைத்திருக்கிறாள். அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ, சாப்பிட்டு முடித்த பிறகோ அந்தக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மீதே தாங்க முடியாத வேதனை கவிழத்தொடங்கிவிடும். கண்ணுக்குத் தெரியாமல் உப்பு தண்ணீரில் கரைந்துவிடுவதைப் போல அவளிடமிருந்த அழகு யாவும் கரைந்து போய்விட்டது அவளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்குத் தனது பிறந்தநாள் வரப்போவது நினைவுக்கு வந்தது. அதை அலுவலகத்தில் உள்ள யாரிடமாவது சொல்லலாமா என்று யோசித்தாள். கேலி செய்வதைத் தவிர அவர்களால் தனது பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த முறை எப்படியாவது அந்த நாளை மறந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவளுக்கு இரண்டு நாட்களாகவே பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன வயதில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் போலிருந்தது.தன்னை அறியாமல் ஒவ்வொருவரையாகக் கூர்ந்து பார்க்கத் துவங்கினாள். உலகில் 40 வயதைக் கடந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது. அதோடு, எவரும் தங்கள் வயதை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை என்பது அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

இன்றைக்கும் அவள் விழிப்பதற்கு முன்பாகவே மனதுக்குள் ஒரு குரல் ‘இன்றைக்கு உனது பிறந்தநாள்’ என்று கூவியது. அதற்குச் செவிசாய்க் காதவளைப் போல கொஞ்ச நேரம் வேண்டுமென்றே படுக்கையில் கிடந்தாள். கல்லூரிக்குச் செல்லும் மகள் குளித்துவிட்டு ஈரத்தலையோடு அறைக்குள் வந்து தனது உடையை தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணி ஆறரையைத் தாண்டி யிருக்கவேண்டும்.

சிந்தாமணி எழுந்து எப்போதும் போல அவசர அவசரமாகச் சமையல் செய்யத் துவங்கினாள். இருப்பதிலேயே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அரக்கு நிற பூ போட்ட சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வீட்டில் அவளது கணவன் டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சின்னவள் பள்ளிக் கூடம் கிளம்புவதற்காகபுத்த கங்களை எடுத்துத்திணித்துக் கொண்டிருந்தாள்.

யாராவது தனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பார்களோ என்று ஒரு நிமிஷம் தோன்றியது.அவர வருக்கு அவரவர் அவசரம். இதில் தானே சொல்லாமல் எப்படித் தன் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்தபடியே, தன் டிபன்பாக்ஸில் சாப் பாட்டை அடைத்துக்கொண்டாள். மணி எட்டு இருபதை நெருங்கும்போது அவள் மணிக்கூண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பாள். இன்று ஐந்து நிமிஷம் லேட்!

பேருந்து நிலையத்தில் பூ விற்பவள் முன்பாக சிவப்பு, மஞ்சள் ரோஜாக்கள்குவிந்து கிடந்தன. கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருந்தவள் சிந்தாமணியைக் கண்டதும் மௌனமாகிவிட்டாள். தான் மஞ்சள் ரோஜாவை வாங்கமாட்டோம் என்று எப்படி இந்தப் பூக்காரி முடிவு செய்தாள் என்று அவள் மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் இனிஒரு போதும் பூ வாங்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகள் எதற்கோ சத்தமாகச் சிரிப்பதும் ஒருவரையருவர் வேடிக்கையாக அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ‘40 வயதைத் தொடும்போது உங்களிடமிருந்து சிரிப்பு யாவும் வடிந்து போய்விடும். அதற்குள் சிரிக்கிற மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்’ என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்.

ஜி.சிந்தாமணியின் அலுவலகம் சானிடோரியத்தை ஒட்டியிருந்தது. இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அன்றைக்கு பேருந்துகளில் கூட்டம் ததும்பிக்கொண்டு வந்தது. அதோடு பேருந்து நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினார்கள். அவள் ஓடிப்போய் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. பெருமூச்சு வாங்க அவள் நின்றபோது, பிறந்த நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படி உயிரைக் கொடுத்து ஓடுகிறோமோ என்று வருத்தம் கொப்பளித்தது.

பிரமாண்டமாக சிதறிக்கிடக்கும் இந்த நகரம், அதன் லட்சக்கணக்கான மக்கள், இரக்கமில்லாத சூரியன், நெருக் கடியான சாலைகள், எவரையும் அர வணைத்துக்கொள்ளாத கடல், புகையும் தூசியும் படிந்துபோய் காற்றில்லாமல் நிற்கும் மரங்கள் என எல்லாவற்றின் மீதும் கோபம் பொங் கியது. தனக்குத்தானே அவள் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை அருகில் இருந்த பெண்கள் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வெயில் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தது. முன்பாவது அவள் குடை வைத்திருந்தாள். அதை கல்லூரிக்கு செல்லும் மகள் கொண்டு போக துவங்கியபிறகு புதிதாக குடை கூட வாங்கத் தோன்றவில்லை.

ஒவ்வொரு பேருந்தாகக் கடந்து சென்றபடியே இருந்தது. மணி 9:20&ஐ தாண்டியது. அலுவலகம் போய்ச் சேர் வதற்குள் மணி பத்தரை ஆகிவிடும் போலிருந்தது. இன்றைக்கு ஏலச்சீட்டு விடும் நாள் வேறு. அவள் சீட்டு பிடிக்கிறவள் என்பதால், அதை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.

சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு பசு தின்றுகொண்டு இருந்தது. போஸ்டர் தின்னும் பசுவின் பாலைத்தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சிறு ஆத்திரம் முளைவிட்டு எழுந்து, மறுநிமிஷமே அடங்கியது.

ஷேர் ஆட்டோ வந்து நின்றது. ஜி.சிந்தாமணி அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டபோது மூச்சு முட்டியது. ஆட்டோவினுள் ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருங்கி, அடைந்து கிடந் தார்கள். அந்த முகங்களில் நிம்மதி இல்லை.

ஆட்டோ சம்ஸ்கிருத கல்லூரியைக் கடந்தபோது, ‘எதற்காக நான் அலுவலகம் போகவேண்டும்? ஏன் இப்படிப் பறந்து பறந்து வேலை செய்யவேண்டும்? யாருக்குப் பயந்து இப்படி அல்லாடவேண்டும்?’ என்று தோன்றியது. அந்தக் கேள்விகள் அவளுக்குள் நீருற்று போல வேகத் தோடு பொங்கி வழியத்தொடங்கின.ஏதோ முடிவு செய்தவளைப் போல, லஸ் கார்னரில் ஆட்டோ நின்றபோது இறங்கிக்கொண்டாள்.

சாலையைக் கடந்து எதிர் திசைக்கு வந்தபோது, மனது சிக்கலில் இருந்து விடுபட்டது போன்ற நிம்மதி அடைய துவங்கியது. என்ன செய்வது என்று யோசித்தாள். முதலில் ஒரு பூக்காரி யிடம் மஞ்சள் ரோஜாவாகப் பார்த்து வாங்கவேண்டும் என்று தோன்றியது.அவள் தன் ஹேண்ட் பேகை திறந்து பார்த்தாள். சீட்டுப் பணம் ரூ.2000 இருந்தது. ஒன்று போல உள்ள இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வாங்கிக் கூந்தலில் சொருகிக்கொண் டாள். பிறகு, தன் வட்டக்கண்ணா டியை எடுத்து முகம் பார்த்துக்கொண் டாள். அந்த ரோஜா அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்லிய வெட்கம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

ஏதாவது ஓட்டலில் போய் இனிப்பு சாப்பிடவேண்டும் போல் இருந்தது. ஆட்டோவில் ஏறிக் கொண்டு, பெங்கால் ஸ்வீட்ஸ் விற்கும் கடைக்குப் போகச் சொன்னாள். கடை முழுவதும் குளிர்சாதனம் செய்யப் பட்டிருந்தது. காலை வேளை என்ப தால் ஆட்கள் அதிகம் இல்லை. அவள் ரசகுல்லா, குலோப் ஜாமூன் என நான்கு விதமான இனிப்பு சாப் பிட்டாள். பில் கொடுக்கும்போது, கடையில் இருந்த வயதானவங்காளியிடம் தனக்கு இன்று பிறந்தநாள் என்று சொன்னாள். அவர் மௌனமாகத் தலையாட்டியபடியே மீதிச் சில்லறையைக் கொடுத்தார்.

வெளியே வந்தபோது, சாலையில் வெயில் ஒரு சினைப்பாம்பு போலத் திணறியபடியே ஊர்ந்துகொண்டு இருந்தது. அவள் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள். கடைக்குச் சென்று, பெரிய ஃப்ரேம் வைத்த கறுப்புக் கண்ணாடி ஒன்றை 200 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வேடிக் கையாக இருந்தது.

திடீரென உலகம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு சாந்தம்கொண்டது போலிருந்தது. ஸ்பென்சருக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அவள் தன் மகளோடு ஸ்பென்சருக்கு சென்றிருக்கி றாள். ஆனால், தனியே இது போன்ற இடங்களுக்குப் போனதில்லை.

ஸ்பென்சரில் போய் இறங்கியபோது, உள்ளே இருபது வயதைத் தொட்டும் தொடாமலும் உள்ள இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி ஆங்காங்கே நிரம்பியிருந்தார்கள். இவ்வளவு பேர் இங்கே என்ன வாங்குவார்கள் என்று யோசனையாக இருந்தது.

நீலநிற ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு இளைஞனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மறுகையால் அவன் முகத்தைத் தடவியபடி நடந்துபோய்க்கொண்டு இருந்தாள். ஆங்காங்கே இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

தான் வாழ்வில் ஒரு முறைகூட இதுபோலப் பொதுஇடங்களில் கணவனோடு கை கோத்து வந்ததில்லை; ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றுக் கடந்து போய்விட்டது! 17வய தில் கல்யாணம் நடந்தது.அப்போதும் சிந்தாமணி வேலைக்குப் போய்க்கொண்டு தான் இருந்தாள். திருமணத் துக்காக ஐந்து நாள் லீவு கொடுத் தார்கள். அந்த ஐந்து நாட் களும் அவள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனதும், ஒரேயரு சினிமா வுக்குப் போனதும் மட்டுமே நடந்தது.

திருமணமான மூன்றாம் மாதமே அவள் சூல்கொண்டு விட்டாள். அதன் பிறகு எங்கேயும் போகவே முடிந்ததில்லை. அடுத்த வருஷம் ஒரு பையன், அதன் இரண்டு வருஷம் தள்ளி ஒரு பெண் என்று மாறி மாறி குழந்தைப் பேறு. வைத்தியம், வீடு, வேலை தவிர, அவள் இந்த யுவதிகள் போல ஐஸ்க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துச் சாப்பிடுவதை அறிந்ததே கிடையாது.

சிந்தாமணி மிகப்பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கிக்கொண்டு, தனியே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். ஐஸ்க்ரீமை உதட்டின் நுனியில் வைத்து சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். இந்த ஐஸ்க்ரீம் கரைந்துபோவது போல தன் வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடக்கூடாதா என்று தோன்றியது.

15 வயதில் அவளைப் பார்த் தவர்கள், அவள் நடிகை தேவிகாவைப் போலவே இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்கு தேவிகா வின் நினைவு வந்தது. ‘நீலவானம்’ படத்தில் தேவிகா இப்படியரு கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஓலைத் தொப்பியும் அணிந்திருப்பாள். அவள் சிரிப்பது தன்னைப் போலத்தான் இருக்கிறது. அதை யார் ஒப்புக்கொள்ளாவிட் டாலும் கவலை இல்லை என்று தோன்றியது. தனது ஹேண்ட் பேகில் இருந்த வட்டக் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண் டாள். முகத்தின் ஊடாக எங்கோ தேவிகாவின் சாயல் ஒளிந்துகொண்டிருப்பது போலி ருந்தது.

தான் இப்படிக் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்போல் இருந்தது. அதோடு, எதற்காகவோ தான் சத்தமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. இது போன்ற வணிகவளாகங்களில் எங்கு பார்த்தாலும் சிரிப்பு சிந்திக்கிடக்கின்றது. ஆனாலும், தன் வயதுடைய பெண்களில் எவரும் சிரிக்கிறார்களா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவள் மேஜையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம் இன்று தனக்குப் பிறந்தநாள் என்று சொன் னாள். அவன் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

எழுந்து லிப்டில் ஏறி, மூன்றாவது தளத்துக்குச் சென்றாள். விரல் நகங்களுக்கு பூசும் மினுமினுப்பாக பச்சையும் ஜிகினாவும் கலந்த நெயில்பாலீஷ் ஒன்றை வாங்கி பூசிக் கொண்டாள். பினாயில் வாசம் வீசும் பாத்ரூமின் மிகப் பெரிய கண்ணாடி முன் நின்றபடியே தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

வயது அன்று ஒரு நாள் மட்டும் அவளிடமிருந்து பின்திரும்பிப் போய்க்கொண்டு இருந்தது போலிருந்தது. அவள் சிரிப்பை அடக்கமுடியாமல் கர்சீப்பால் வாயைப் பொத்தியபடி வெளியே வந்தாள். தனது டிபன்பாக்ஸில் இருந்த சாப்பாட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு காலி டிபன்பாக்ஸை பையில் போட்டுக்கொண்டாள். நாள் முழுவதும் அப்படியே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

திடீரென இந்த நகரம் அவளுக்கு மிகப் புதிதாக தெரிந்தது. தான் இதுவரை பார்த்திராத கட்டடங் களும் கார்களும் மனிதர்களும் நிரம்பியதைப் போல் இருந்தது. கால் டாக்ஸியிலும் ஆட்டோவிலு மாக அவள் சுற்றி அலைந்தபடியே இருந்தாள். தனக்கு இந்த நகரில் வீடில்லை. குடும்பமில்லை. தெரிந்த மனிதர்கள்கூட யாருமில்லை. தான் தனியாள், தன் பெயர் தேவிகா என்று சொல்லிக்கொண் டாள். அன்றைய பகல் முழுவதும் திரையரங்கம், உணவகம், ஜவுளிக் கடைகள் என்று அலைந்து திரிந் தாள்.

மாலையில் அவள் கடற்கரையைக் கடந்தபோது, ஆயிரமாயிரம் கால்கள் தழுவிச் சென்றபோதும் கடல் தனிமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அலுவலகம் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில், அன்றைய நாள் முடிந்து கொண்டு இருப்பது அவளுக்குள் புகையைப் போல ஒரு மெல்லிய வேதனையை வளர்க்கத் துவங்கியது. இன்றைக்கு ஏல நாள்; தன்னை எதிர்பார்த்துக்கொண்டு ஆட்கள் காத்திருப்பார்கள் என்று தோன்றியது. மறுநிமிஷமே அது தனக்கில்லை; ஜி.சிந்தாமணிக்கு! தான் தேவிகா என்று அவளாகவே சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

இரவில் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே நகரின் வீதிகளில் நடந்துகொண்டிருந்தாள். இரானி டீக்கடையில் அமர்ந்து சமோசாவும் டீயும் குடித்தாள். புதிதாக ஒரு செருப்பு வாங்கிக் கொண்டாள். யோசிக்கும்போது, அவளுக்கு தன்னிடம் ஆசைகள்கூட அதிகம் இல்லை என்று தோன்றியது.

சாலையைக் கடந்தபோது காய்கறிக் காரன் ஒருவன் அப்போதுதான் பறித்து வந்தது போன்ற கேரட்டுகளை குவித்துப் போட்டு விற்றுக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள். திருமணமான இந்த 22 வருஷத்தில் எவ்வளவு காய்கறிகள் வாங்கிவிட்டோம்! இனியும் எதற்காக வாங்கவேண்டும் என்று எரிச்சலாக வந்தது. ஒரேயரு கேரட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கடித்துத் தின்றபடியே, சாலையைக் கடந்து நடக்கத் தொடங்கினாள்.

சாலையோரம் ஒரு ஆள் ரப்பர் பந்துகள், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தான். அவன் முன்னால் நாலைந்து பேர் தரையில் கொட்டிக்கிடந்த பொருட்களில் தேடி ஏதோ வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிந்தாமணி குனிந்து தானும் ஒரு தண்ணீர்த் துப்பாக்கி வாங்கிக் கொண்டாள். அதில் எப்படி தண்ணீர் ஊற்றுவது என்று கேட்டதும், பொம்மை வியாபாரி தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த கலங்கிய தண்ணீரை அதில் ஊற்றி அடித்துக் காட்டினான். அவள் அதைக் கையில் வாங்கி சாலையை நோக்கித் துப்பாக்கி விசையை அமுக்கினாள். தண்ணீர் சாலையில் நெளிந்து போனது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

மணிக்கூண்டை நெருங்கும் போது, மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. பேருந்து நிலையத் தில் யாருமே இல்லை. ஒரேயரு பிச்சைக்காரன் மட்டும் தனியே ஏதோ கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருந்தான். அவள் தன் வீட்டை நோக்கி நடந்து வர துவங்கியபோது நடை வேகம் கொள்ளத் துவங்கியது. எங்கிருந்தோ மறைந்திருந்து வயது தன்மீது தாவி ஏறிக் கொண்டது போலிருந்தது. அவள் தன்னிடமிருந்த கறுப்புக் கண்ணாடி மற்றும் நெயில் பாலீஷை என்ன செய்வது என்று தெரியாமல், இருட்டில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு இருந்த சந்தில் தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

தன்னிடமிருந்த தண்ணீர்த் துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு அவள் முகத்தில் வழிந்தது. ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றபடியே அழத் தொடங்கினாள். அன்றைக்குத் தனது பிறந்த நாள் என்பதை நினைத்து, கேவிக் கேவி அழுதாள். பிறகு, ஆத்திரத்தோடு அந்தத் துப்பாக்கியை குப்பைத் தொட்டியை நோக்கி வீசினாள்.

கடகடவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீடு பூட்டிக்கிடந்தது. உள்ளே தொலைகாட்சி ஓடும் சத்தம் கேட்டது. காலிங்பெல்லை அமுக்கும்போது, ஒரு முறை அவளை அறியாமல் தேவிகா வின் நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் ஜி.சிந்தாமணி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

கதவு திறந்து, வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அவளை உள்வாங்கிக் கொண்டது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 02:39:09 PM
தூய வெளிச்சம்

சிறுகதை

கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று,

இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த குடும்பமது, எண்பது வருஷத்திற்கும் மேலாக மூன்று தலைமுறையினர் வாழ்ந்தவீடு கண்முன்னே இடிபட்டுக் கொண்டிருந்தது,

அந்த வீட்டை பத்து வருஷமாக கோர்ட் கேஸ் ஒன்றின் காரணமாக மூடிப்போட்டிருந்தார்கள், இப்போது சென்னையில் உள்ள குமாரசாமி மகன் பக்கம் கேஸ் ஜெயித்துவிட்டதாகவும் அவன் உடனே கைமாற்றி விற்றுவிட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்

வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்ற யோசனையுடன் கோச்சடை சாலையிலே நின்று கொண்டிருந்தான், அந்த வீட்டிற்குள் அவன் ஒரேயொரு முறை இரவில் திருடுவதற்காக போயிருக்கிறான், வீட்டிற்குள் அவன் வந்து போனது வீட்டுஆட்கள் எவருக்கும் தெரியாது, திருடியதை கூட யாரும் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடைக்கு நன்றாக நினைவிருந்தது

அன்று மழை நாள், அந்த வீட்டிற்குள் நீலநிற விடிவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது, அந்த வெளிச்சத்தில் சுவரில் இருந்த புகைப்படங்கள்,  காலண்டர் மற்றும் மரமேஜை யாவும் விசித்திரமாக தெரிந்தது, ஹாலில் பெரிய ஊஞ்சல் போட்டிருந்தார்கள், அந்த ஊஞ்சலை தாண்டியதும்  சாப்பிடும் மேஜை கிடந்தது, சாப்பிடும் நாற்காலியில் அழுக்கு துணியொன்று தொங்கிக் கொண்டிருந்த்து, கழுவப்படாத குழந்தைக்கான ரப்பர் பாட்டில், திறந்து கிடக்கும் பால்பவுடர் டின்,  காபி டம்ளர்கள், பாதி சாப்பிட்டு மிச்சம் வைத்த பருப்புசாதமுள்ள கிண்ணம் யாவும் தென்பட்டன, வெளியே கம்பீரமாக தெரியும் வீடு உள்ளே அலங்கோலமாக கவனிப்பாரற்று கிடந்தது

மழையின் காரணமாக எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால் வீடு வெம்மையாக இருந்தது, மயக்கமூட்டிய அந்த வெளிச்சமும் வெளியே கொட்டிய மழையும், ஒத்தடம் கொடுப்பது போன்ற வெம்மையும் அவன் நினைவில் அப்படியே இருந்தன

இடிபடும் வீட்டிலிருந்து ஒரு ஆள் வெளியே வந்து ஒரு பழைய காலண்டர் ஒன்றினை வீசி எறிந்தான், சரஸ்வதி படம் போட்ட காலண்டர்,  கோச்சடை குனிந்து அதை எடுத்துப்பார்த்தான், காலண்டரில் யாரோ ஒரு பெண் பால் கணக்கு எழுதி வைத்திருந்தாள், வீடு ஒங்கிஒங்கி இடிபட உதிரும் கற்களுடன் பலத்த  புழுதி கிளம்பியது, ஒரு கல்தெறித்து சாலை வரை வந்து விழுந்தது, காலம் எவ்வளவோ வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது,

அவன் சிறுவனாக இருந்த காலத்தில் சென்டரல் தியேட்டருக்கு போகின்ற வழியில் குமாரசாமியின் வீடு மட்டுமே இருந்தது, வீட்டின் முகப்பில் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள் துதிக்கையை வளைத்து நிற்பது போன்ற ஆர்ச் அமைக்கபட்டிருக்கும், அதன் ஆர்ச்சின் மீது விளக்கு ஒன்றைப் பொருந்தியிருந்தார்கள், அதன் தூய வெளிச்சம் தெருவிளக்கு போல இரவெல்லாம் ஒளிர்ந்து கொண்டிருக்கும்,

குறிப்பாக இரவு செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு திரும்புகின்றவர்கள் அந்த வெளிச்சத்தை அதிகம் அனுபவித்திருக்கிறார்கள், பள்ளிவயதில் கோச்சடையே பலநாட்கள் அந்த வெளிச்சத்தில் பாதுகாப்பாக தெருவை கடந்து போயிருக்கிறான், வெளிச்சம் ஒரு துணை, ஆள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஆறுதல் என்று தோன்றும், ஆனால் களவிற்குப் போன பிறகு வெளிச்சம் பிடிக்காமல் போய்விட்டது,  கண்கள் இருட்டிற்கு பழகிப்போய்விட்டன

இளைஞனாக இருந்த போது குமாரசாமி வீட்டினை கடந்து போகையில் ஒவ்வொரு முறையும் இப்படி அழகாக வீடு கட்டி குடியிருக்க எத்தனை பேருக்கு அதிர்ஷடமிருக்கிறது என்று நினைத்துக் கொள்வான், சில சமயம் அந்த வீட்டின் பின்பக்கச்சுவர் அருகே ஒட்டி நின்று கொண்டு வீட்டின் உள்ளிருந்து ரிக்கார்ட் பிளேயரில் ஒலிக்கும் கனவு கண்ட காதல் கதையாகி போச்சே பாடலை கேட்டிருக்கிறான், அந்தப் பாடலை அவனுக்கு பிடிக்கும், அவன் யாரையும் காதலித்து கிடையாது, ஆனாலும் சோகத்தில் பாடுகின்ற பாடல்களை கேட்கின்ற நேரத்தில் அது மனதில் வலியை உண்டாக்கிவிடுகிறது

யார் அந்த பாடலை இப்படி அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோச்சடைக்கு தெரியாது, அந்த வீட்டுப் பெண்களை வெளியே காண்பது அபூர்வம், எப்போதாவது குமாரசாமியின் மனைவி கெடிலாக் காரில் கோயிலுக்கு போய்வருவதை பார்த்திருக்கிறான், அந்த கார்  அழகானது, சென்ட்ரல் தியேட்டரை கடந்து போகையில் டிக்கெட் எடுக்க நிற்கின்ற பலரும் அந்த காரை திரும்பி பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

ஒரு முறை குமாரசாமியின் வீட்டிற்கு ஜெமினி கணேசனும் சாவித்திரியும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள் என்று அவர்களை பார்ப்பதற்காக ஊரே கூடியிருந்தது, வீட்டின் மாடியில் நின்றபடியே ஜெமினியும் சாவித்திரியும் கை அசைத்ததை கோச்சடையின் மனைவி மீனா சிறுமியாக பார்த்திருக்கிறாள்,

ஜெமினியும் சாவித்திரியும் அந்த வீட்டில் எந்த அறையில் உறங்கியிருப்பார்கள், எந்த தட்டில் சாப்பிட்டு இருப்பார்கள், எந்த டம்ளரில் பால் குடித்திருப்பார்கள், அதை எல்லாம் ஒரு முறை தொட்டுபார்க்க வேண்டும் போலிருக்கும்,

கோச்சடை சிலசமயம் பின்னிரவில் சைக்கிளில் வரும்போது அந்த வீட்டின் முன்பு வேண்டுமென்றே சைக்கிளை நிறுத்தி ஏறிட்டு பார்ப்பான், யானை படுத்திருப்பது போல பிரம்மாண்டமாக தோன்றும், அதன் கழுத்துமணி போல அந்த குண்டுபல்ப்பின் வெளிச்சம் ஒளிர்ந்து கொண்டிருக்கும், அந்த காட்சி இன்றும் அவன் மனதில் அப்படியே உறைந்து போயிருந்தது

இன்று அந்த வீட்டினை ஒரு நாளைக்குள் பாதிக்கும் மேலாக உடைத்து போட்டுவிட்டார்கள், வீட்டை கட்டுவதற்கு தான் மாசக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது, இடிப்பதற்கு அதிக நாட்களாவதில்லை, மனிதர்களின் அழுகையும் சிரிப்பும் வலியும் கவலையும் அறிந்த வீடு மரம் முறிந்து கிடப்பது போல மௌனமாக இடிந்து கிடந்தது

குமாரசாமி பிள்ளையின் வீட்டிற்கு கோச்சடை திருடச் சென்ற போது அவன் மனைவி மீனா மூன்றாவது பிள்ளை உண்டாகி கர்ப்பிணியாக இருந்தாள், ரத்தசோகை கண்டிருக்கிறது அவளை பொது மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் பெட்டில் வைத்திருந்தார்கள், அவளுக்காக பழங்களும், சத்து டானிக்குகளும் வாங்க வேண்டும் என்று நினைத்து தான் கோச்சடை களவிற்கு கிளம்பியிருந்தான்

திருடுவதற்காக இல்லாவிட்டாலும் அந்த வீட்டின் உட்புறங்களை பார்க்க வேண்டும், ஜெமினி படுத்த தலையணையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்பதற்காகவாவது அந்த வீட்டிற்குள் ஏறிக்குதிக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இருந்தது. இப்படியான சில கிறுக்குதனங்களில் அவன் விரும்பியே ஈடுபடுவான்,

முன்பு ஒரு முறை தம்பானூர் முதலாளி வீட்டிலிருந்த  கறுப்பு நிற குதிரை ஒன்றினை பார்ப்பதற்காக பதினாறு அடி உயர இரும்பு கேட்டை தாண்டி குதித்திருக்கிறான்,  கறுப்பு நிற அரபுக்குதிரையை பார்ப்பது அபூர்வம், தம்பானூர் முதலாளி மைசூர் ராஜாவிடமிருந்து அந்த  கறுப்பு குதிரையை வாங்கி ஆசையாக வளர்த்துக் கொண்டிருந்தார், அக்குதிரையை பார்க்கும் போதெல்லாம் ஒருமுறையாவது அதில் ஏறிபார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும்,

அதற்காகவே கோச்சடை அவ்வீட்டினை பல நாட்கள் நோட்டம் பார்த்து பின்பனிக்காலத்தில் ஒருநாளிரவு யாருமறியாமல் வீட்டிற்குள் நுழைந்து லாயத்தில் கட்டியிருந்த குதிரையின் மேலே ஏறினான், கால்களை அகட்டி உட்கார முடியாமல் கஷ்டமாக இருந்த்து, ஆனாலும் குதிரையின் மேலே உட்கார்ந்து இருப்பது சிரிப்பாக வந்தது, கண்ணை மூடிக் கொண்டு ராஜா போல தன்னை நினைத்துக் கொண்டு ஹேஹே என்று கையை அசைத்தான், குதிரை தலையை அசைத்து அவனை முதுகில் இருந்து கிழே தள்ளியது, ஆள் அரவம் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து யாரோ வருவது தெரிந்த்துவுடன் அவன் குதிரையின் காதை தடவி கொஞ்சிவிட்டு தப்பியோடிவிட்டான், அதெல்லாம் ரத்தவேகம் கூடிய இளவட்டமாக இருந்த போது நடந்தது,

கோச்சடை குமாரசாமியோடு பேசியதில்லை, ஆனால் பார்த்திருக்கிறான், ஆள் குள்ளமான உருவம், நெற்றியில் திருநிறுபூசி கழுத்தில் ருத்ராட்சமாலை போட்டிருப்பார், தூய வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை,  கையில் எப்போதும் ஒரு குடை வைத்திருப்பார், வீட்டில் கார் இருந்தாலும் அவர் பஜாரில் இருந்த பாத்திரக்கடைக்கு நடந்து போய்வருவதை பார்த்திருக்கிறான், நாள் தவறாமல் மாலைநேரத்தில் அவர் கோவில் தெப்பக்குளத்தின் படியில் உட்கார்ந்து கொண்டு மீனிற்கு பொறி போடுவார், இப்போது கோவில் குளம் பாசியேறி தூர்ந்துகிடக்கிறது,  பொறி விற்பவனையும் கண்ணில் காண முடியவேயில்லை,

ஆனால் அவனது பால்ய வயதில் கடைமுதலாளிகள் பலரையும் தெப்பக்குளத்தில் வைத்து பார்க்கலாம், அது தான் கடன் கேட்கிற இடம், யாருக்காவது ஏதாவது உதவி தேவை என்றால் அங்கே வைத்து தான் கேட்பார்கள், கோவிலில் கேட்டால் மறுக்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை, கோச்சடை ஒரேயொரு முறை வக்கீல்பிள்ளையை பார்ப்பதற்காக அங்கே போயிருக்கிறான், மற்றபடி அவனுக்கு கோவிலுக்கு போவது பிடிக்காது

மீனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த இரண்டாம் நாள் சோமுவை பார்த்து கடன்கேட்டுவிட்டு கோச்சடை திரும்பி வந்து கொண்டிருந்தான், தம்பா பிள்ளை தெருவை தாண்டும் போது அடர்ந்த இருட்டாக இருந்தது, சட்டென மண்டையில் உறைத்தது, குமாரசாமிபிள்ளை வீட்டில் லைட் எரியவில்லை, ஏன் அணைத்து விட்டிருக்கிறார்கள், ஒரு வேளை பல்ப் ப்யூஸாகி இருக்குமோ,

இருட்டிற்குள்ளாகவே நடந்து வீட்டின் முன்பாக நின்று பார்த்தான், எப்போதும் ஒளிரும் அந்த மஞ்சள் வெளிச்சமும் அதைச் சுற்றிபறக்கும் ஈசல்களின் பறத்தலும் நினைவில் வந்து போனது, மௌனமாக அந்த வீட்டினையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் எதற்கென தெரியாமல் உள்ளுக்குள் ஆத்திரமாக வந்தது,

மறுநாள் கைவண்டி இழுக்கும் மாரியப்பனிடம் இதைபற்றி பேசியபோது, காலம் காலமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை, வெட்டித்தெண்டமாக எரிகிறது  என்று  குமாரசாமியின் மருமகள் பேச்சியம்மாள் அணைத்துவிட சொல்லி தகராறு செய்து விட்டாள், இனிமேல் அந்த வீட்டில் முகப்புவிளக்கு எரியாது என தெரிந்து கொண்டன், அன்றைக்கு தான் கோச்சடை அந்த வீட்டில் திருடுவது என்று முடிவு செய்தான்

அவன் திருடுவதற்கு துணையாக அன்று மழை சேர்ந்து கொண்டது, மழை பெய்யும் நாட்களில் மனிதர்களை பீடிக்கும் தூக்கம் விசித்திரமான ஒன்று, அது எவரையும் எளிதில் எழும்ப விடாது, மழைநாளில் வரும் கனவுகள் அபூர்வமானவை, அன்றும் கனவில் ஊறிக்கிடப்பவர்களை போல தான் குமாரசாமியின் வீட்டில் ஆழ்ந்து உறங்கிக் கிடந்தார்கள்,

மழைக்குள்ளாக நனைந்தபடியே பின்பக்கச்சுவரில் இருந்த தூம்புவாய் வழியே ஏறி அவன் அடுப்பங்கரை இருந்த பின்கட்டிற்கு வந்தான், எல்லா வீடுகளும் முகப்பில் தான் அலங்காரமாக இருக்கின்றன, அடுப்படி கருமைபடிந்து அலங்கோலமாக தானிருக்கிறது, குமாரசாமிபிள்ளை வீட்டிற்குள் அவன் குதித்த போது வெளியே மழை சீராக பெய்து கொண்டிருந்தது, அவன் பூனையை போல நடந்து சென்று குமாரசாமியின் படுக்கை இருந்த அறையைத் தேடினான், வீட்டினுள் நான்கு அறைகள் தெரிந்தன, இடது பக்கமிருந்த ஒரு அறைக்கதவு லேசாக திறந்து வைக்கபட்டிருந்தது, அப்படியானால் அந்த அறையில் முதியவர்கள் உறங்குகிறார்கள் என்று அர்த்தம்,

வயதானவர்கள் கதவை மூடிக்கொண்டு உறங்குவதில்லை, குமாரசாமி பிள்ளைக்கும் அப்போது அறுபது வயதை தாண்டியிருந்தது, அதுவும் மனைவி இறந்து போன மனிதர் என்பதால் எதற்காக கதவை மூடிக் கொள்ளப்போகிறார் என்று கோச்சடைக்கு தோன்றியது

அவரது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி  அதே வீட்டில் தான் வசித்தார்கள், ஒருச்சாத்திய கதவை ஒசைப்படாமல் தள்ளி உள்ளே சென்ற போது குமாரசாமி ஒரு சிறுவனை போல சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், அறையின் மூலையில் பெரிய இரும்புப் பெட்டியிருந்தது.

திண்டுக்கல்  கோபாலகிருஷ்ணா கம்பெனி தயாரிப்பு அது , அந்த வகை இரும்புப்பெட்டிக்கு இரண்டு பூட்டுகளிருக்கும், மறைவாக உள்ள விசையை அழுத்திக் கொண்டு திறக்காவிட்டால் பூட்டை திறக்கமுடியாது, இது போன்ற சூட்சுமங்கள் அத்தனையும் அவனுக்குத் தெரியும்,  இரும்பு பெட்டியைத் திறந்து உள்ளே பார்த்த போது உள்ளே ஒரு பட்டுச்சேலை, இரண்டு  வெள்ளி டம்ளர்கள், ஒரு வெள்ளிதட்டு, குழந்தைகளின் மோதிரம் ஒன்று இவை மட்டுமேயிருந்த்து, ரொக்கம் கூட நூறு ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது,

கோச்சடைக்கு ஆச்சரியமாக இருந்தது, இவ்வளவு பெரிய வீடுள்ள மனிதன்  வீட்டில் கையிருப்பும் இல்லை, நகையும்  இல்லை, குடும்பம் கடனில் ததளித்துக் கொண்டிருக்கிறது போலும், வெளியே சொல்லாமலே நிலைமையை சமாளித்து வருகிறார்கள் என்று தோன்றியது

பட்டுபுடவையை தொட்டு பார்த்தான், நிறைய ஜரிகை வைத்திருப்பது தெரிந்தது, மீனா இதுவரை பட்டுபுடவையே கட்டிக் கொண்டதில்லை, ஆனால் யாரோ ஒருத்தி கட்டிய புடவையை அவளுக்கு திருடிக் கொண்டு போய் கொடுக்ககூடாது, மதுரைக்கு அழைத்துப் போய் பெரிய ஜவுளி கடையில் அவளுக்கு நீலநிற பட்டுபுடவை வாங்கி தர வேண்டும என்று நினைத்துக் கொண்டு இரும்பு பெட்டியில் இருந்து ஒரு வெள்ளி டம்ளரையும் ஐம்பது ரூபா பணத்தையும் குழந்தையின் மோதிரம் ஒன்றையும் மட்டுமே திருடி எடுத்துக் கொண்டான்,

அவன் அந்த வீட்டிற்குள் திருட வந்ததையோ, பொருட்கள் காணாமல் போனதையோ மறுநாள் அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை, ஆனால் கோச்சடை உணர்ந்ததைப் போல அந்த குடும்பம் கொஞ்சநாளில் கடன்சிக்கலில் மாட்டிக் கொண்டது, பனிரெண்டு லட்சம் கடன் என்றார்கள், அவரது மூத்தமகன் தேவையில்லாமல் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்திருக்கிறான் என்று குமாரசாமி வேதனைபட்டுக் கொண்டார்

அதனால் உருவான சண்டையில் மூத்தவன் தன் மனைவி பிள்ளைகளை மதுரையில் தனியே வீடு பார்த்து கூட்டிக் கொண்டு போனதோடு அப்பாவிடம் தனக்குரிய சொத்தை கேட்டு தகராறு செய்ய ஆரம்பித்தான், தான் செத்துப்போனபிறகு தான் பிள்ளைகளுக்கு சொத்து என்பதில் குமாரசாமி உறுதியாக இருந்தார்

அப்படியானால் நீ செத்து போ, நீ உசிரோட இருந்து இந்த மசிருக்கு கூட பிரயோசனமில்லை  என்று அப்பாவை இதே வீட்டு வாசலில் வைத்து திட்டினான் மூத்தமகன் நெட்டிலிங்கம்,

அந்த வருத்தத்தில் குமாரசாமி பிள்ளை தாடி வளர்க்க ஆரம்பித்து கொஞ்ச நாளில் அவரது நரைத்த தாடி மார்பில் புரளும்படியானது, அவரது கண்களில் சொல்லமுடியாத வருத்தமும், நடையில் தளர்ச்சியும் இருப்பதை கோச்சடை கண்டிருக்கிறான், இரவு கோவில் நடைசாத்தும்வரை கோவில் குளத்திலே அவர் உட்கார்ந்திருப்பதையும் பலநேரம் தனக்கு தானே பேசியபடியே வீட்டை நோக்கி நடந்து வருவதையும் கூட பார்த்திருக்கிறான்,

அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கும் தனக்கும் ஏதோவொரு ஒட்டுதல் இருப்பது போலவே தோன்றும், தான் அந்த வீட்டிற்குள் போகிறோம், அவ்ரது இரும்பு பெட்டியை திறந்து பணம் எடுத்திருக்கிறோம், அவர்கள் அறியாவிட்டால் என்ன, அந்த வீட்டில் திருடிய மோதிரத்தை தானே மூன்றாவது மகன் பிறந்த போது கையில் போட்டிருந்தோம், இதை என்னவிதமான உறவென்று சொல்வது என்று கோச்சடைக்கு புரியாது

ஆனால் அதன்பிந்திய நாட்களில் குமாரசாமிபிள்ளை வீட்டினை கடந்து போகையில் விளக்கு அணைக்கபட்டிருப்பதை காணும்போது தாங்கமுடியாத வருத்தமாக இருக்கும்.

கோச்சடையின் கண்முன்னே அவ்வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறத் துவங்கியது, குமாரசாமியின் சாவுக்கு பிறகு அந்த வீட்டில் எவரும் குடியிருக்கவேயில்லை, மூத்தவன் ஊரைவிட்டுப் போய்விட்டான், இளையவன் குடித்து கடன்வாங்கி மனைவியின் ஊரான தென்காசிக்கு போய் வேன் ஒட்டுகிறான் என்றார்கள்,

கோச்சடை குமாரசாமியின் சாவுக்கு போயிருந்தான், வீட்டின் உள்ளே போய் துக்கம் கேட்க கூச்சமாக இருந்தது, வாசலை ஒட்டி போடப்பட்டிருந்த பந்தலில் நின்று கொண்டிருந்தான், பிணம் சுடுகாடு போகையில் கூடவே நடந்து போய் வந்தான், சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பி வரும்போது சாலையில் கிடந்த உதிர்ந்த ரோஜா இதழ்களை கண்டதும் தாங்கமுடியாத வருத்தம் பீறிட்டது

அதன்பிறகு கோச்சடை தாரமங்கலத்தில் களவு செய்யப்போன போது  பிடிபட்டு  நாலுவருசம் சிறையில் இருந்தான், அவன் ரிலீஸ் ஆகி வெளியே வந்த போது அந்த வீடு சிமெண்ட் குடோனாக மாறியிருந்தது, இரவும் பகலும் சிமெண்ட் மூடைகள் வந்து இறங்கும் போவதுமாக இருந்தன, அப்போதும் கூட ஒரேயொரு தடவை பகலில் அந்த வீட்டிற்குள் போய் பார்த்துவர வேண்டும் என்று தோன்றும், ஏதோவொரு தயக்கத்தில்  போகாமல் வாசலில் நின்றே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திரும்பிவிடுவான்

அதன்பிறகு அந்த வீடு கைவிடப்பட்டு பல ஆண்டுகள் பூட்டியே கிடந்த்து, ஆர்ச்சில் இருந்த யானைகளின் தும்பிக்கைகள் உடைக்கபட்டிருந்தன, தூசியும் குப்பையும் அடைந்து போய்  சாலையில் அடிபட்டு செத்துப்போன பறவை  ஒன்றை போலவே அந்த வீடு மாறியிருந்தது, பல நேரம் அவ்வீட்டினைக் கடந்து போகும்போது திரும்பிக் கூட பார்க்க வேணாம் என்று தோன்றும், ஆனாலும் அவனால் பார்க்காமல் இருக்க முடியாது

கைவிடப்பட்ட வீட்டைக் காண்கையில் இவ்வளவு தான் வாழ்க்கையா என் வருத்தம் கவ்வும், கண்முன்னே ஊரில் அவன் பார்த்த மனிதர்கள் மறைந்து கொண்டேவருகிறார்கள், அவன் கூடவே வாழ்ந்த மீனா இப்போதில்லை, குமாரசாமி வீட்டில் திருடி மோதிரம் போட்டு பார்த்த மூன்றாவது மகனும் இப்போது உயிரோடில்லை, பதினெட்டுவயதில் களவு செய்ய துவங்கி நாற்பத்தைந்து வயதில் எல்லாம் ஒடுங்கிப்போக மிஞ்சிய வாழ்க்கையை ஒட்டுவதற்காக வாழைக்காய் மண்டியில் வேலைக்கு சேர்ந்து இன்று கோச்சடை செயிண்ட் ஆண்ட்ருஸ் பள்ளியின் வாட்ச்மேனாக இருந்தான்,

பல நாட்கள் மூடப்பட்ட பள்ளியின் வாசலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆள்இல்லாத வீதியை பார்த்துக் கொண்டேயிருப்பான், இவ்வளவு தானா  வாழ்க்கை என்று தோன்றும், கூடவே குமாரசாமிபிள்ளை வீட்டின் மஞ்சள் வெளிச்சம் நினைவில் வந்து போகும்

இன்றைக்கும் கூட அந்த வீட்டினை இடிப்பதற்குள் அதற்குள் ஒருமுறை போய்விட்டுவர வேண்டும் என்பதற்காகவே அவசரமாக அங்கு வந்திருந்தான்,  ஆனால் வாசலில் வந்து நின்றபோது வீட்டிற்குள் போவதற்கான தகுதி தனக்கு இல்லை என்று தோன்றியது,  வெளியிலே நின்று கொண்டேயிருந்தான், இடிபட்ட கற்கள் தெறித்துவிழுந்து கொண்டிருந்தன, அதை பார்க்க பார்க்க இறந்த குழந்தையை குழிக்குள் தள்ளி மண்ணை போட்டு மூடுவதை விடவும் அது சோகமானதாக தோன்றியது

கோச்சடை தலைகவிழ்ந்தபடியே மௌனமாக நின்று கொண்டேயிருந்தான், அப்போது சாலையில் ஒரு டாக்சி வந்து நிற்கும் சப்தம் கேட்டது, வெளிர்நீல சட்டைஇ வேஷ்டி அணிந்த ஒருஆள் கிழே இறங்கி போன்பேசியபடியே நடந்தவர் கோச்சடை பக்கம் திரும்பி என்ன வேணும் என்று கேட்டார்,

ஒண்ணுமில்லை அண்ணாச்சி சும்மா பாக்கேன் என்றான் கோச்சடை,

அந்த ஆள் உள்ளே  நடந்தபடியே கத்தினார்

டேய் வேலு, என்னடா செய்றீங்க, களவாணிப்பயக உடைஞ்சி கிடக்கிற  மரச்சாமானை தூக்கிட்டு போயிறப் போறாங்கடா , வெளியே ஒருத்தன் நிக்கான் அவன் முகரையே சரியில்லை, அடிச்சிபத்தி விடுங்கடா

யாரோ ஒருவன் உள்ளேயிருந்து கையில் ஒரு இரும்பு ராடுடன் வாசலை நோக்கி ஆவேசமாக வருவது தெரிந்தது

இடிந்து கிடந்த வீட்டில் இருந்து தெறித்து விழுந்த ஒரு சிறுகல்லை எடுத்து சட்டை பையில் போட்டு கொண்டு கோச்சடை மெதுவாக வீட்டை நோக்கி நடந்து போக ஆரம்பித்தான், சுவர் விழுந்து எழுந்த புழுதி காற்றில் கரைந்து கொண்டிருந்தது
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 03:34:54 PM
மழைமான்

சிறுகதை

தேவபிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது.

எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு அலுவலகமது. காரை உதிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய ஹாலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வலது புறம் நேராக நடந்து போனால் உயரதிகாரிகளின் அறைகள். அதை ஒட்டியது போல காப்பறை. கடந்து போனால் கீழும் மேலுமாகச் செல்லும் சிமெண்ட் படிக் கட்டுகள். அலுவலகத்தில் மொத்தம் முப்பத்தியெட்டு படிகள் இருக்கின்றன.

தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப்போய்விடுகின்றன. ஒருவேளை தன்னைப் போல புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

இடது பக்கம் நீளும் வழி எப்போதுமே இருட்டடிந்து போயிருக்கிறது. மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமர மிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசிபடிந்து, வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளி யைப் போல அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள்.  மூன்றாவது மாடியில் வேலைசெய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன. அந்த மரத்தில் இருந்து ஒரு அணில் அலுவலகத்திற்குள் வந்துவிடுகிறது என்று சொல்லி புனிதவல்லி எரிச்சல்பட்டு பெரிய கிளை ஒன்றை வெட்டிவிடச் செய்தாள். அதன் பிறகு அந்த அணில் வருவதும் நின்று போய்விட்டது.

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது. ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற மதிய நேரம் அந்த எண்ணம் அவரை உந்தத் துவங்கியது.

உடனே கிளம்பி சுந்தரவதனியைப் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனக்குரல் ஆவேசமாகச் சொல்லத் துவங்கியது. ஏடிஎம் போய் பணம் எடுத்துவர வேண்டும் என்று உயரதிகாரியிடம் பொய் சொல்லிவிட்டு அன்பு பீறிட சுந்தரவதனி வீடு இருந்த ராமாவரத்திற்கு ஆப்பிள் பழங்களுடன் போயிருந்தார்.

அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடு தானிருப்பாள்.  ஒரு மழை நாளில் அவர் ஏறிய ஷேர் ஆட்டோவில் அவளும் உடன் பயணம் செய்தாள். அப்போது தனது வீடு ராமாவரத்தில் உள்ளதாகத் தெரி வித்திருந்தாள். அதைத் தவிர அவளோடு அதிகம் பேசிப் பழகியதில்லை.

ராமாவரத்தில் அவளது வீட்டை விசாரித்துக் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது. இரும்பு கேட் போட்ட பெரிய வீடு. வீட்டின் முகப்பில் எண்டோவர் கார் நின்றது. இவ்வளவு வசதியானவள் என்பதை அவள் காட்டிக் கொள்ளவேயில்லையே என்று தோன்றியது. காலிங்பெல்லை அடித்தபோது சுந்தரவதனி நைட்டியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்த மாத்திரம் திகைத்துப் போனவளாக சோபாவில் உட்காரச் சொன்னாள்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என விருப்பமற்ற குரலில் கேட்டாள்.

‘சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்றார் தேவபிரகாஷ்.

அவள் அதை நம்பமுடியாதவள் போல ‘ஏதாவது கடன்கிடன் வேணுமா?’ என்று நேரடியாகக் கேட்டாள்.

‘அதெல்லாமில்லை. ஆறுமாதமாக நீங்க ஆபீஸ் வரவில்லையே… அதான்’ என்று சமாளித்தார்.

தன்னை வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என நினைத்து அவள் கடுமையான முகத்துடன் ‘நான் சிக் லீவுல இருக்கேன்’ என்றாள். பிறகு அவரிடம் ‘இது போல போன் செய்யாமல் பார்க்க வருவது தனக்குப் பிடிக்காது. இனிமேல் இப்படி வராதீர்கள்’ என்று சொல்லி ஆப்பிள் பழத்தை அவரையே திரும்பி எடுத்துக் கொண்டு போகும்படியாகச் சொன்னாள்.

ஆத்திரத்தில் அவள் வீட்டின் வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களைப் போட்டுவிட்டு அலுவலகம் போகாமல் வீட்டிற்குப் போய் படுக்கையிலே கிடந்தார். யோசிக்க யோசிக்க  சகல மனித உறவுகளும் அர்த்தமற்றுப் போய்விட்டதாகத் தோன்றியது. யாரும் யாரையும் நம்புவதில்லை. காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியமானதில்லையா?  ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்து வேதனை கொண்டார்.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமான-வர்கள் என்றோ நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதிய சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை.,ஒரு கோடி பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை.  முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டே பிரிவுதான்.

ஐம்பதாவது வயதில் நுழையும் வரை அவருக்கு ஒருநாளும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போது தான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத்துவங்கி முழுவதும் ஆக்ரமித்துவிடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை.

ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறைவேற்றும் படியாக அவரை வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அக்குரலைக் கண்டு-கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்ப-தோடு, உடலிலும் மெல்லிய படபடப்பு உருவாகிவிடுகிறது.

இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது. மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. இதற்கு முன்பு எப்போது எங்கே வைத்து மானைப்பார்த்தோம் என்ற நினைவுகள் மனதில் குமிழ்விடத் துவங்கின.

பதினைந்து வருஷத்தின் முன்பு ஒரு முறை தேக்கடியில் வைத்து அவர் மானைக் கண்டிருக்கிறார். அப்போது அவரது  மகள் விலாசினிக்கு ஐந்து வயது. மான்கள் உலவும் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. கம்பிமீது ஏறியபடி அவள் மானைக் கையசைத்துக் கூப்பிட்டாள். புல்வெளியில் உலவிக் கொண்டிருந்த மான்கள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

‘அப்பா, மானை எப்படிக் கூப்பிடுவது?’ என்று விலாசினி கேட்டாள்.

மானை என்ன சொல்லிக் கூப்பிடுவது என்று அவருக்கும் தெரியவில்லை. அதை மறைக்க விரும்பி-யவரைப் போல “கையசைத்துக் கூப்பிடு. வரும்” என்றார்.
அதற்குள் அவளாகப் ‘பூசி பூசி’ என்று அர்த்தமற்ற ஒரு சொல்லைக்  கொண்டு குரல் கொடுத்தாள்.

ஒரு மான் தலை திரும்பியது.

“அப்பா, நான் கூப்பிடுறது அதுக்குக் கேட்குது. புள்ளி புள்ளியா மான் ரொம்ப அழகா இருக்குல்லே! நாம இந்த மானை வீட்டில கொண்டு போய் வளக்கலாமா?” என்று கேட்டாள்.

“இல்லை விலாசினி, மானை வீட்ல வளர்க்கவிடமாட்டாங்க” என்றார்.

“யாரு?” என கேட்டாள்.

“கவர்மெண்ட்” என்றார்.

மானை ஆசையாகப் பார்த்தபடியே மறுபடியும் கேட்டாள்.

“ஏன்பா விடமாட்டாங்க?”

“அதுக்கு நாம் கவர்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கணும்மா” என்றார்.

“நீங்க கவர்மெண்ட்ல தானே வேலை பாக்குறீங்க, அப்போ பெர்மிஷன் வாங்க வேண்டியது தானே” என்று சொன்னாள்.

“இல்லைடா, மானை வீட்ல வளர்க்க முடியாது. மான் வளரணும்னா காடு வேணும்ல.” என்றார்.

அவள் ஆதங்கத்துடன் “அப்போ நம்ம வீட்டைச் சுற்றிக் காடு வளர்த்திட்டா, பிறகு மான் வளர்க்க விடுவாங்களா?” என்று கேட்டாள்.

“முதல்ல நாம ஒரு காடு வளர்க்கலாம். பிறகு மானை வாங்கிடலாம்” என்று சமாதானம்  சொன்னார். ஊர்வரும்வரை மான் வளர்ப்பதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் விலாசினி. அதன்பிறகு மானை மறந்து போய்விட்டாள். குழந்தைகள் தனது ஆசையை எளிதாகக் கைவிட்டுவிடுகிறார்கள். அவரும் அதன்பிறகு மானை மறந்து போயிருந்தார்.

இப்போது எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மறுபடி வந்தது எனப் புரியவேயில்லை. ஆனால் அந்த எண்ணம் மனதைக் கொஞ்சம் கொசமாக வதைக்க ஆரம்பித்திருந்தது.

மானை எங்கே போய் பார்ப்பது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்த பெரிய டெலிபோன் டைரக்டரியைத் தேடி எடுத்து வந்து புரட்டத் துவங்கினார். மானைப் பற்றி எதில் தேடுவது என தெரியாமல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்.  எப்போதோ ஒரு முறை பரங்கிமலைச் சாலையில் மான் ஒன்று அடிபட்டுக் கிடந்ததாக பேப்பரில் செய்தி ஒன்றை வாசித்த நினைவு வந்தது,

பரங்கிமலைக்குப் போனால் மானைப் பார்க்க முடியுமா என்ன… யாரைக் கேட்கலாம்?  இருபத்திநாலு மணி நேர இலவச சேவையான ஹலோ சிட்டி நம்பருக்கு போன் செய்து கேட்டால் சொல்லிவிட மாட்டார்களா என்று நினைத்தபடியே அலுவலக போனில் இருந்து ஹலோ சிட்டியைத் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ஒரு இளம்பெண் மென்மையான குரலில் பேசத் துவங்கினாள். தயங்கித் தயங்கி அவளிடம் இந்த நகரில் மான்கள் எங்கேயிருக்கின்றன என்ற விபரம் தனக்குத் தெரிய வேண்டும் என்றார்.

அவள் குறிப்பாக ஏதாவது ஒரு இனத்தைச் சேர்ந்த மானைப் பற்றிக் கேட்கிறாரா அல்லது பொதுவாக மான்களைக் காண விரும்புகிறாரா என்று கேட்டாள்.

தனது மகளை அழைத்துப் போய் வேடிக்கை காட்ட விரும்புவதாக அவர் பொய் சொன்னார்.

அவள் இதற்கான  பதிலைத் தருவதற்குள் அவரது சுயவிபரங்களைப் பதிவு செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி அவரது வயது, வேலை, முகவரி என ஆறு கேள்விகளைக் கேட்டாள். முடிவில் வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் மான்கள் இருக்கின்றன.  ஆனால் இன்று விடுமுறைநாள் என்றாள். நாளை வரை தன்னால் காத்திருக்க முடியாது. வேறு எங்காவது  மான்கள் இருந்தால் சொல்லுங்கள். தூரத்தில் நின்று பார்த்தால் போதும் என்றார்.

வேறு எங்கும் மான்கள் இருப்பதாகத் தகவல்மையம் தெரிவிக்கவில்லை. உங்கள் மகளுக்காக ஒரு ஆலோசனை சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கிண்டி கவர்னர் மாளிகை தெரியுமில்லையா? அதன் உள்ளே பாதுகாப்பு பணிக்காக வசிப்பவர்களுக்கான குடியிருப்பு இருக்கிறது. அதில் யாரையாவது தெரியும் என்று பொய் சொல்லி உள்ளே போய்விடுங்கள். அங்கே மான்களை எளிதாகக் காண முடியும். நான் அப்படி ஒரு முறை என் தோழிகளை அழைத்துப் போயிருக்கிறேன் என்றாள்.

இதைச் சொல்லும்போது அவள் சிரித்தாள். அது சந்தோஷத்தின் வெளிப்பாடா அல்லது தன்னை மாட்டிவிட முயற்சிக்கிறாளா என புரியாமல் இருந்தது. குரலை வைத்து அந்தப் பெண்ணின் இயல்பைக் கற்பனை செய்துக்கொள்ள முடியாது. ஒரு வேளை அந்த சிரிப்பு இயந்திரக் குரலாகக்கூட இருக்கக் கூடும்.

கிண்டிக்குப் போய் மானைக் காண முயற்சி செய்ய வேண்டியதுதான் என்றபடியே  தனக்குக் குளிர் சுரம் போல இருப்பதாகச் சொல்லி அலுவலகத்தில் இருந்து அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டார். கொண்டு வந்திருந்த மதிய சாப்பாட்டை பையில் வைத்து  எடுத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து விடைபெற்றபோது மணி பனிரெண்டரையாகி இருந்தது. கிண்டி செல்வதற்கான பேருந்திற்காகச் சாலையில் காத்துக்கிடந்த போது அவரது வயதில் யாராவது இப்படி திடீரென மானைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு போவார்களா எனத் தோன்றியது. தான் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறோமா? என்ன மனநிலையிது. . . மனது வேறு எதையும் யோசிக்க மறுத்தது.

மான் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.  உலகில் வேறு எந்த மனிதனும் இப்படி தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சே, என்ன சிந்தனையிது.

இதிலிருந்து உடனே விடுபட வேண்டும். இல்லா-விட்டால் மனது துவண்டு போய்விடுகிறது, தலையைத் திருப்பிச் சாலையைக் கவனித்தார்.

அவரது வயதை ஒத்த பலர் பரபரப்பாக பைக்கிலும், காரிலும் போய்க் கொண்டிருந்தார்கள். பொதுவாக அவரது கண்ணில் சிறுவர்கள், முதியவர்கள் மட்டுமே தென்படுகிறார்கள். இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பதின்வயது பையன்கள், பெண்களைக் காணும்போது மனதில் தேவையில்லாத பொறாமையுணர்வு அல்லது கோபம் உருவாகிவிடுகிறது. பெரும்பாலும் அவர்களைக் கண்டுகொள்ளாதவரைப் போலவே நடந்து கொள்கிறார். ஆனால் உலகில் இளைஞர்கள்தான் அதிகமாக நடமாடுகிறார்கள். கூடிப்பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். ஆரவாரம் செய்கிறார்கள். கனவுகளுடன் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அவரது வயதை ஒத்தவர்களுடன்  பேசப் பழக அவருக்குப் பிடிப்பதில்லை. அதே நேரம் அவரை விட மிகவும் வயதானவர்களுடன் பேசும்போது சலிப்பாக இருக்கிறது. ஈரமில்லாமல் சுண்ணாம்பு உலர்ந்து உலர்ந்து பொக்காகி உடைந்து சிதறுமே, அப்படித்தான் தானும் மாறிக் கொண்டிருக்கிறோமா என தோன்றும். இல்லை, வெடித்துப்போன பலூன் இனி எவருக்கும் உபயோகமில்லாமல் கிழிந்து கிடப்பது போன்றதுதான்  தனது வாழ்க்கையா? அவருக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் தன்னை அப்படித் தாழ்மையாக உணர்கிறோம் என்ற மறுயோசனையும் அவருக்குள் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
கிண்டி செல்லும் நகரப்பேருந்து வந்து நின்றது. ஏறிக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். இந்தப் பேருந்தில் யாராவது மானைப் பார்க்கப் போகிறவர் இருப்பாரா என்ன… அவர் டிக்கெட் எடுத்து பையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

***

போனவாரம்  இது போன்ற ஒரு காலை நேரத்தில் மனதில் பென்சில் சீவி எவ்வளவு நாளாயிற்று என்று ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. பகல் முழுவதும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

பென்சில் திருகிகள் வந்த பிறகு பிளேடால் பென்சிலை சீவுவது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டது. அன்றாடம் பென்சிலை உபயோகிப்பதே அரிதாகிப் போன பிறகு பென்சிலை ஏன் பிளேடால் சீவ வேண்டும். வீட்டில் மூத்தமகள் ஓவியம் வரைவதற்கு வண்ணமயமான பென்சில்களை வைத்திருக்கிறாள். ஆனால் சாதாரண மஞ்சள், பச்சை நிறப் பென்சில்கள் அவளிடமும் கிடையாது.

அவரும் பள்ளி வயதிற்குப் பிறகு பென்சிலை விலை கொடுத்து வாங்கியதே கிடையாது. பிறகு எதற்கு அந்த யோசனை வந்தது எனப் புரியவில்லை. அலுவலக மேஜையைக் குடைந்து ஏதாவது பென்சில் கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தார். உடைந்துபோன ரெனால்ட்ஸ் பேனாக்கள், அழிரப்பர்கள், ரெவின்யூ ஸ்டாம்ப், நூல்கண்டு, துளையிடும் கருவி, ஜெம்கிளிப் என ஏதேதோ இருந்ததேயன்றி பென்சிலைக் காணோம்.

உடனே பென்சிலை வாங்கி சீவ வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடையத் துவங்கியது. சே, என்ன இழவு யோசனை… ஏன் நம்மை இப்படிப் படுத்துகிறது என்று நினைத்தபடியே அலுவலக பியூன் பழனியை வரவழைத்து ரத்னா பென்சில் ஒன்றை வாங்கிக் கொண்டு வரும்படியாகச் சொன்னார்.

‘சார், அதெல்லாம் இப்போ கிடையாது. நட்ராஜ் பென்சில் இருக்கும், வாங்கிட்டு வரவா?’ என்று பழனி கேட்டான்.

‘அப்படியே ஒரு புது பிளேடு ஒன்றும் வேண்டும்’ என்று சொல்லி இருபது ரூபாயை நீட்டினார்.

“பிளேடு எதற்கு சார்!  பென்சில் சீவி இருக்கு, நானே சீவிக் கொண்டுட்டு வர்றேன்” என்றான்,

அதுதான் அலுவலக நடைமுறை. உயர் அலுவலர், ஊழியர்கள் அனைவரின் பேனாவிற்கு மை ஊற்றுவது, பென்சிலை சீவித் தருவது, கழற்றிய பேனாவின் மூடியை மாற்றி விடுவது, தபாலைப் பிளேடால் பிரித்துக் கொடுப்பது, ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒற்றித் தருவது, கீழே விழுந்த குண்டூசியைப் பொறுக்கி எடுத்துத் தருவது, இதெல்லாம்தான் பியூனின் வேலைகள், இதுவரை ஒரு உயர் அலுவலர் கூட தானாகக் கீழே விழுந்த குண்டூசியைக் குனிந்து எடுத்த சரித்திரமே கிடையாது.

“வேணாம் பழனி, நானே சீவிக்கிடுவேன். நீ பென்சில், பிளேடு மட்டும் வாங்கிட்டு வா” என்றார்

இது போன்ற அற்ப எண்ணம் யாருக்காவது வருமாயென்ன…  சிறுவயதில் பென்சிலை சீவும்போது பிளேடு கையில் பட்டு பெருவிரலில் ரத்தம் வந்த நாட்கள் நினைவில் வந்து போனது. பழனி வரும்வரை மனது கொதிப்பிலே இருந்தது.

பழனி பென்சிலையும் பிளேடையும் நீட்டினான். அரக்கு வண்ணக் கோடு போட்ட பென்சிலது. அதை முகர்ந்து பார்த்தபோது வாசனையேயில்லை. வழக்கமாக புதுப்பென்சிலில் ஒரு மணமிருக்குமே. அது ஏன் இந்தப் பென்சிலில் இல்லை என்று ஆழமாக நுகர்ந்து பார்த்தார். ஒரு வாசனையும் இல்லை.

பிளேடைப் பிரித்து பென்சிலை  சீவ ஆரம்பித்தார். ஆப்பிள் பழத்தின் தோலை உரிப்பது போல கவனமாக, மெதுவாக, வளைய வளையமாக அவர் பென்சிலை சீவத் துவங்கினார். அந்த நிமிசம் மனம் மெல்ல சந்தோஷம் கொள்ளத் துவங்கியது. பென்சிலை சீராக சீவச்சீவ மனது தீவிரமாக உற்சாகம் கொள்ளத் துவங்கியது.

பென்சில் முனையைக் கூர்மையாகத் தீட்டினார். அழகாகச் சீவப்பட்டு பென்சில் எழுதத் தயாராக இருந்தது. ஏதாவது வரையலாமா என்று யோசித்தார். என்ன வரைவது?  ஒரு முட்டை போல வரைந்து அதற்கு இரண்டு கண்கள் வைத்தார். மூக்கை எப்படி வரைவது என்று யோசிப்பதற்குள் படம் வரையும் ஆசை வடிந்துவிட்டிருந்தது.

மனதில் அதே குரல் மீண்டும் எழுந்தது.

பென்சில் சீவு.  நன்றாக பென்சில் சீவு.

‘என்ன இம்சை இது’ என்றபடியே அவர் பென்சில் நுனியை மேஜையில் அழுத்தி உடைத்தார். மறுபடியும் பிளேடை எடுத்து பென்சிலை சீவத்துவங்கினார். அன்று மாலை வரை அது ஒரு முடிவில்லாத விளையாட்டு போலவே நடந்தேறியது. அலுவலகம் விடும்போது அவர் கையில் சுண்டுவிரல் அளவு பென்சிலே மீதமிருந்தது.

சீவிச்சீவிப் போட்ட பென்சில் வளையங்கள் அவரது மேஜையடியில் சிதறிக்கிடந்தன. மனதில் அந்தக் குரல் அடங்கியிருந்தது. என்ன விளையாட்டு இது, யாராவது தனது செய்கையைக் கவனித்திருப்பார்களா? சுற்றிலும் திரும்பிப் பார்த்தார். ஒருவேளை அவர்களும் தன்னைப் போல விசித்திர விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று தோன்றியது.

மீதமான பென்சிலைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். பென்சிலை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போக வேண்டும். மனைவி துணி துவைக்கும்போது கவனமாக அதை வெளியே எடுத்து வைக்கிறாளா எனப் பரீட்சை செய்து பார்க்க வேண்டியதுதான் என தோன்றியது. இதை வைத்து அவள் தன்மேல் கொண்டிருக்கிற அக்கறையை முடிவு செய்துவிடலாம் என்றபடியே பென்சிலை சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு வேண்டுமென்றே அவராக சட்டையைக் கழட்டி அழுக்குக் கூடையில் போட்டுவந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவி துவைத்து தேய்த்து வைத்த சட்டைகளில் ஒன்றாக இருந்த அந்த சட்டையைக் கண்டார். உடனே மனைவியை அழைத்து “இதில் ஒரு பென்சில் இருந்ததே, அதைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

அவள் “அப்படி எந்தப் பென்சிலையும் தான் பார்க்கவில்லை” என்றாள்.

“சட்டைப் பையில்தான் வைத்திருந்தேன். அதைக் கூட கவனிக்கவில்லையா?: என்று கடுமையான குரலில் சொன்னார்.

அவளோ அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போல “சட்டையை அப்படியே எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு இருப்பேன். இப்போ எதுக்கு அந்தப் பென்சில்!” என்று முறைத்தபடியே கேட்டாள்.

அவருக்கு ஆத்திரமாக வந்தது. இவ்வளவுதான் தனது இடம். வீட்டில் தன் மீது யாருக்கும் எவ்விதமான அக்கறையும் கிடையாது. தனது சம்பாத்தியத்திற்காக மட்டுமே தன்னை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலை இப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது என்று கோபம் பொங்கியது.

“சட்டையில் என்ன இருக்குனு பாக்கவே மாட்டாயா?” என்று கோபப்பட்டார்.

“அதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்லை. கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னு தெரியலை.  வாஷிங் மிஷின்ல கதவு சரியில்லாமல் தண்ணி ஒழுகுது. இதுல உங்க இம்சை வேறயா? ஒருநாள் நீங்க பக்கத்தில இருந்து துணி துவைச்சிப் பாருங்க, அப்போ தெரியும்” என்றாள்.

தாங்க முடியாத ஆத்திரத்துடன் அன்று காலை உணவை வீட்டில் சாப்பிட மறுத்துப் பசியோடு அலு வலகம் வந்து சேர்ந்தார். அலுவலக பாத்ரூமிற்குள் போய் நின்றுகொண்டு தனது முகத்தை தானே பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்கள் ஒடுங்கியிருந்தன. புருவம் தளர்ந்திருந்தது. கண் இரைப்பைகள் ஊதி தொங்கிக் கொண்டிருக்கின்றன. நெற்றி, கன்னம் இரண்டும் உலர்ந்து போயிருக்கிறது. உதட்டில் ஒட்டியிருந்த சிரிப்பு உதிர்ந்து விட்டிருக்கிறது.  தன்னிடமிருந்த யௌவனம் முற்றிலுமாகப் போய்விட்டது. இனி தன் முகத்தில் ஒருபோதும் இளமையில் கண்ட பொலிவு திரும்ப வரப்போவதில்லை. தான் தோற்றுவிட்டோம். இளமையை இழந்துவிட்டோம். அதுதான் இது போன்ற கிறுக்குத்தனமான எண்ணங்களை உருவாக்குகிறது. இனி தான் ஒரு காலிபாட்டில் மட்டுமே… நினைக்க நினைக்க தன்மீதே ஆத்திரமாகவும் கோபமாகவும் வந்தது.

சே, என்ன வாழ்க்கையிது… முடுக்கிவிடப்பட்ட இயந்திரம் போல பேருந்து பயணம். அலுவலகம், மதிய உணவு, வேலை முடிந்து வீடு திரும்புதல், டி.வி.பார்ப்பது, இரவு உணவு, உறக்கம், விடிகாலையில் அலாரம் வைத்து எழுந்து கொள்ளுதல், குளிப்பது, சாப்பிடுவது, மறுபடி பேருந்துப் பயணம் என ஓடிக் கொண்டேயிருப்பது தாங்க முடியாத சலிப்பூட்டுகிறது.

அதே பற்பசை, அதே சோப்பு, அதே சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி, அதே இட்லி, தோசைகள், அதே கோடு போட்ட சட்டை, கைக்குட்டை, செருப்பு, அலுவலக மரமேஜை, குண்டூசிகள், தனது வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது.

மாற்றம் வேண்டும். ஏதாவது செய்து உடனே தனது வாழ்வை மாற்றியாக வேண்டும் என்ற குரல் ஆழமாக எழுந்தது. என்ன செய்வது, எப்படி மாற்றுவது, யாரிடம் கேட்பது, அவர் குழப்பத்தினுள் ஆழ்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

என்ன செய்து இதை மாற்றுவது என்று புரியவில்லை. ஆனால் மாறிவிடு மாறிவிடு என்ற அந்தக் குரல் மண்டைக்குள் சதா கேட்டுக் கொண்டேயிருந்தது. அதுவரை நிம்மதியாக உலவி வந்த தினசரிவாழ்வின் இயல்பிற்குள் அடங்கவிடாமல் அக்குரல் அவரைத் திணறடித்துக் கொண்டிருந்தது.

அது ஒரு மீளமுடியாத அவஸ்தை. இந்த ஆதங்கம் பற்றியோ, வேதனை குறித்தோ மனைவியோ, பிள்ளைகளோ கவலைப்படவேயில்லை. அவர்களிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது என்று தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாளிரவு படுக்கையில் கிடந்தபடியே மனைவியிடம் கேட்டார்:

“சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, டி.வி. பார்ப்பது, உறங்குவது என இதையே  திரும்பத் திரும்பச் செய்வது அலுப்பாகயில்லையா?”

“அலுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி ஒன்றும் இல்லையே” என்றாள்.

“நீ ஏன் இப்போது  இரட்டை சடை பின்னிக் கொள்வதில்லை? நிறைய நேரங்களில் பவுடர் கூட போட்டுக் கொள்வதில்லையே” என்று கேட்டார்.

“பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனிமேல் எதற்கு பவுடர்? ஜடைபின்னல்? வரவர கண்ணாடி பார்க்கவே அலுப்பாக இருக்கிறது. நிறைய நேரங்களில் கண்ணாடி பார்க்கும்போது அழுகை வந்துவிடுகிறது” என்றாள்.

அது நிஜம். தன்னாலும் இருபது வயதில் கண்ணாடியை ரசித்தது போல இன்று ரசிக்க முடியவில்லை. ஆழமான குற்றவுணர்ச்சி மேலோங்கிவிடுகிறது. கண்ணாடி மௌனமாகப் பல உண்மைகளை நமக்குப் புரிய வைத்து விடுகின்றது.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காதோரம் நிறைய நரைமயிர்கள் வந்துவிட்டிருக்கின்றன. அதை மைபூசி மறைக்க விரும்பாதவள் ஆகிவிட்டாள். உடலில் இருந்த பெண்மையின் நளினங்கள் மறைந்து போய்விட்டன. தொடர்ச்சியாக ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பதன் மூலம் தனது அலுப்பைக் கடந்து போய்விடுகிறாளோ என்று தோன்றியது.

நரை மயிர்கள் பெண்களுடன் பேசும் என்று அம்மா சொல்வாள். இவளிடம் அவளது நரைமயிர் என்ன பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

மாற வேண்டும் என்று நீ நினைக்கவில்லையா என்று கேட்க நினைத்தார். ஆனால் அதை அவளிடம் கேட்கவில்லை. அவள் தலையணையால் முகத்தை மூடியபடியே உறங்கத் துவங்கியிருந்தாள். இதே போலத்தான் இத்தனை ஆண்டுகாலமாகத் தூங்குகிறாள். அது அவளது இயல்பு. ஒருவர்  போல இன்னொருவரால் உறங்கவே முடியாது. அன்றிரவு குழப்பமான சிந்தனைகள் அவரை வாட்டி எடுக்க ஆரம்பித்தன.

சொந்த வீடு வாங்கியாகிவிட்டது. பேங்க் சேமிப்பு இருக்கிறது. பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். உடம்பில் சக்கரை நோய் வந்துவிட்டது. இனி என்ன மிச்சமிருக்கிறது. ஆனால் வாழ்வின் பாதியில் தானே வந்துநிற்கிறேன். சைக்கிள் சுற்றுபவன் ஒரே வட்டத்திற்குள் ஓய்வேயில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பது போன்றதுதான் மிச்சமிருக்கும் வாழ்க்கையா? அதுதான் நிஜமென்றால் அது எவ்வளவு பெரிய தண்டனை!

இதை அனுமதிக்கக் கூடாது, மாறிவிட வேண்டும்.

ஒருநாள் பேருந்தில் போவதற்குப் பதிலாக ஆட்டோ வில் அலுவலகம் போய் பார்த்தார். வீட்டு உணவைச் சாப்பிடாமல் பீட்சா கார்னரில் போய் பீட்சா சாப்பிட்டுப் பார்த்தார். கோடு போட்ட சட்டைக்குப் பதிலாக டீசர்ட் போட்டார். வழக்கமாகக் கேட்கும் பழைய பாடல்களுக்குப் பதிலாக ராப் பாடல்கள் கேட்கத் துவங்கினார். விடுப்பு எடுத்து ஊட்டிக்குப் போய் தனியே இருந்து வந்தார். ஆனால் இந்த மாற்றங்கள் எதுவும் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. மாறாக, மனம் பழைய விஷயங்களை ஆழமாகப் பற்றிக் கொள்ளத் துவங்கியது.

இவ்வளவுதானா வாழ்க்கை, இதற்காகவா ஓடியோடி வேலை செய்தோம். அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எங்கோ ஒரு தவறு செய்திருக்கிறோம் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அந்தத் தவறை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. எதிலும் ஒன்ற முடியாத தத்தளிப்பு அவரை இப்படிக் காரணமில்லாத எண்ணங்களாகத் துரத்தியது.

***

பேருந்து கிண்டி வந்து நின்றதும் இறங்கி அவர் ராஜ் பவனை நோக்கி நடந்து போகத் துவங்கினார். பலமுறை பேருந்தில் இதைக் கடந்து போயிருக்கிறார். ஒருமுறை கூட ராஜ்பவன் உள்ளே போனது கிடையாது. இப்போது யார் கவர்னர் என்று கூட அவருக்குத் தெரியாது.

ஆர்ச் உள்ளே நடந்தபோது வெள்ளையும் காக்கியுமாக யூனிபார்ம் அணிந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை நிறுத்தி யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர் மின்சாரத்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார்.  அவரை உள்ளே செல்வதற்கு அனுமதித்தார்கள். இவ்வளவு பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி சென்னைக்குள் தானிருக்கிறது என்பது வியப்பாக இருந்தது. கவர்னரின் மாளிகை என்பது பழங்கால அரண்மனை போல இருந்தது. அதைக் கடந்து உள்ளே போனபோது ஒரு இளம்பெண் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்தபடியே தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேச்சின் ஊடாகவே அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகை செய்தாள்.

அவர் நடந்து உள்ளே சென்றபோது சிவப்பு ஓடு வேய்ந்த குடியிருப்புகள் தெரிந்தன. முதுமலையில் பார்த்த வனசரகர்களுக்கான குடியிருப்புகள் நினைவிற்கு வந்தன. பசுமையின் ஊடாக அமைந்த அந்த வீடுகளும் அதன் முகப்பில் பீச்சியடிக்கும் தண்ணீர்க் குழாயும்  சாலை முழுவதும் உதிர்ந்து கிடக்கும் பூக்களும் விட்டு விட்டுக் கேட்கும் குயிலின் குரலும் அந்த இடத்தை மிகுந்த ஈர்ப்புடையதாக்கியது.
மான்கள் எங்கேயிருக்கின்றன என ஒரு நடுத்தர வயது ஆளிடம் கேட்டதும் அவன் தெற்குப்பகுதியை நோக்கி கையைக் காட்டினான்.

அந்த மண்சாலையில் உள்ளே நடந்தபோது காய்ந்து போன சருகுகள் பழுத்து மக்கியிருந்த வாசனை அடித்தது. கவர்னர் மாளிகையின்  புறத்தோற்றத்திற்கு மாறாக உட்புறம் அடர்ந்த காடு ஒன்றின் பகுதி போலவே இருந்தது. அவரது காலடிச் சப்தம் கேட்டு எங்கிருந்தோ ஒரு பறவை சடசடவென சிறகடித்துப் பறந்து போனது.

அவர் ஈரம் படிந்த மண்ணில் நடந்து திரும்பியபோது காய்ந்துபோன புற்களின் ஊடாக நாலைந்து மான்கள் வெயில்பட படுத்துக் கிடப்பதைக் கண்டார். அந்த மான்கள் சோர்வுற்றிருந்தன. அதன் கண்களில் அச்சம் மேலோங்கியிருந்தது. அவை வாகனங்களின் சிறுசப்தத்திற்குக் கூட திடுக்கிட்டு எழுந்தன. நகரம் மான்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லை. சூழ்நிலைக்குப் பழகிப் போய்விடுவதுதான் மான்களின் பிரச்சினை.  தனக்கு விருப்பமான சூழ்நிலையை மான்களால் உருவாக்கி கொள்ள முடியாது.  வாழ்நாள் முழுவதும் துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான் அதன் வாழ்க்கை, எவ்வளவு பெரிய அவலமது.

மான்களைப் பார்க்கப் பார்க்க அதன் உடலில் இருந்த புள்ளிகள் உதிர்ந்து போய் அவை வெறும் ரப்பர் பொம்மைகள் போல தோன்றின. தான் காணவிரும்பியது இது போன்ற சலிப்பூட்டும் மான்களையில்லை. இவை நகரவாசிகள் வேடிக்கை பார்ப்பதற்காக  வளர்க்கப்படும் மான்கள்.

இந்த நகரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது என்பதை நினைவூட்டுவதற்காக மிச்சமிருக்கும் மான்கள். இவை குற்றவுணர்வின் சின்னங்கள். மனசாந்தியை அளிப்பதற்குப் பதிலாக இவை குற்றவுணர்வைத் தூண்டுகின்றன.

ஒரு மான் வீசி எறியப்பட்ட காகிதம் ஒன்றினை முகர்ந்து பார்த்துவிட்டு மூக்கால் உரசத் துவங்கியது. எரிச்சலூட்டும் இந்த மான்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். போய்விடலாம் என்று தோன்றியது.

நிழல் விரிந்து கிடந்த மரங்களுக்கு இடையில் நடந்து வந்தபோது சிவப்பு ஓடு வேய்ந்த வீடுகள் தென்பட்டன. அதன் ஊடாகவே நடந்தார்.  ஒரு வீட்டின் வாசலில் கோடுபோட்ட ஜிப்பா அணிந்த ஒரு முதியவர் கையில் ஒரு மான்குட்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது,

ஆச்சரியத்துடன் அவரை நெருங்கிப் போய் நின்றார்.

அந்த முதியவர் சிறிய பால்புட்டி ஒன்றினை மானுக்குப் புகட்டி விட்டுக் கொண்டிருந்தார். மான் புட்டிப்பால் அருந்துவது வியப்பாக இருந்தது. மான் குட்டியைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. வய-தானவர். சும்மா தொடுங்க என்றார். அவர் மான்குட்டி-யின் உடலில் கை வைத்தபோது மிருதுவாக, கோரைப் புல்லைத் தடவுவது போல இருந்தது. மானின் மூச்சுக் காற்று சீராகக் கையில் பட்டுக் கொண்டிருந்தது.

“இந்த மான்குட்டியோட தாய் ரோட்டை கிராஸ் பண்றப்போ கார்ல அடிபட்டுச் செத்துப்போச்சி. அதான் குட்டியைத் தூக்கிட்டு வந்து நான் பால்குடுத்து வளக்கேன். தானாக இரை எடுக்கிற வரைக்கும் வளர்த்து விட்டுட்டா அப்புறம்  அது புல்லைத் தின்னு வளர்ந்துக்கிடும். இப்படி எது மேலயாவது நாம அக்கறை காட்டாட்டி நாம வாழ்ந்து என்ன பிரயோசனம்? சொல்லுங்க” என்றார்.

அவர் மௌனமாக அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

இது முதுமையில் ஏற்படும் மனப்பக்குவம். மிச்சமிருக்கும் வாழ்க்கையை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அன்பைப் பற்றி பேசச் செய்கிறது. அதிகாரியாக இவர் வேலை செய்த காலத்தில் தனது அலுவலகத்தை விட்டுவிட்டு இப்படி மான்குட்டிக்குப் புட்டிப்பால் கொடுப்பாரா என்ன… சூழ்நிலையைத் தனக்குச் சாதமாக்கிக் கொள்கிறார். அவ்வளவே. நாளை இந்த மான்குட்டியைப் பற்றி இவர் ஒரு கட்டுரை எழுதுவார். மான்குட்டியை அணைத்தபடியே உள்ள தனது புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டி சந்தோஷப்படுவார். சுயநலம் கலந்த அன்பிது.
அவர் வெளியேறிச் சாலையில் நடந்தபோது வெயில் உச்சிக்கு வந்திருந்தது. வீடு செல்லும் பேருந்தில் ஏறிய போது ஒரு பள்ளிச் சிறுவன் அருகே இருக்கை காலியாக இருந்தது. அதில்  போய் உட்கார்ந்து கொண்டார்.

அந்த சிறுவன் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அவனிடம் “நீ மானைப்  பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

அவன் டி.வி.யில் பார்த்திருப்பதாகச் சொல்லியதோடு, தன்னால்  நன்றாக மானை வரையமுடியும் என்றான்.

தான் ஒரு அதிசயமான நீலப்புள்ளிகள் கொண்ட மழைமானைப் பார்த்து வந்ததாகவும், அந்த மான் அமேசான் மழைக்காடுகளில் மட்டுமே வாழக்கூடியது என்றும், அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு தண்ணீரை அருந்தாது என்றும் தொடர்ச்சியாகப் பொய் சொல்லத் துவங்கினார். சிறுவன் வியப்போடு “அப்படியான மான் எங்கேயிருக்கிறது” என்று கேட்டான்.

தான் இப்போது தான் அதை கவர்னர் மாளிகையினுள் கண்டதாகவும், அதை மெக்சிகோவில் இருந்து கொண்டு வந்திருப்பதாகவும் கதைவிடத் துவங்கினார். அந்த சிறுவன் நீலநிறப் புள்ளிகள் எது போல இருந்தன என்று கேட்டான். அது எரியும் சுடர் போல ஒளிர்ந்தன என்று சொன்னார். அந்த சிறுவன் கண்ணை மூடிக் கொண்டு நீலப்புள்ளி கொண்ட மழைமானைப் பற்றிக் கற்பனை கொள்ளத் துவங்கினான். அதன்பிறகு அச்சிறுவன் மானைப் பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்தை விட்டு இறங்கும்போது சிறுவனை ஏமாற்றியது மிகவும் வருத்தமாக இருந்தது. தான் நிஜமாக நீலப்புள்ளி உள்ள ஒரு மழைமானைக் கண்டிருக்கக் கூடாதா என ஆதங்கமாக இருந்தது.
வீடு வந்து சேரும்போது திடீரெனத் தோன்றியது, எதையுமே நாமாக கற்பனையில் நினைத்துக் கொள்வது தான் சுகம். நிஜம் ஒருபோதும் ருசிப்பதில்லை. தேவையில்லாமல் நம்மை நாம் அலைக்கழித்துக் கொள்கிறோம் என்று.

வீடு வந்த சேர்ந்தவுடன் அவரது மனைவி  அலுவலகப் பையை வாங்கி வைத்துவிட்டு “முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு? கிட்ட வாங்க, கண்ல ஏதோ ஒட்டியிருக்கு” என்றாள்.
சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டபடியே சொன்னார்:

“அது மானோட உடம்புல இருந்து உதிர்ந்த புள்ளியாக இருக்கும். இன்னைக்குத் திடீர்னு ஆபீஸ்ல இருந்து கவர்னரைப் பார்க்கப் போகச் சொல்லிட்டாங்க. அங்கே ஒரு மழைமானைப் பார்த்தேன். அப்பா, என்ன ஒரு ஜொலிப்பு! நீ பாக்கணுமே. அந்த மான் மழைத்துளியைத் தவிர வேறு எதையும் குடிக்காதாம்” என்று கடகடவென தனக்குத் தோன்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவள் அதைக்கேட்டு சிரித்தபடியே சொன்னாள்:

“போதும் உங்க கதை. நான் ஒண்ணும் பச்சைப்பிள்ளையில்லை, எனக்கும் வயசாகுது.”

“எனக்கும்தான்” என்றபடியே அவர் சிரித்துக் கொண்டார். பிறகு அப்படி சிரித்ததற்காக மிகவும் வருத்தமாக உணர்ந்தார். அந்த வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 03:48:37 PM
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது

சிறுகதை

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று,

கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் கூட சுவாரஸ்யமான நிகழ்வாக மாற்றிவிடுகின்றன, ரத்தக்கறை படியாத நாளிதழ்களேயில்லை,

விபத்தில் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஏன் நாளிதழ்கள் இவ்வளவு பெரியதாக வெளியிடுகின்ற்ன, யார் அதைக் காண்பதற்கு ஆசைப்படுகின்றன மனிதன், ஒருவேளை வன்முறையின் களியாட்டத்தை நாம் உள்ளுற விரும்புகிறோமோ, கோகிலவாணியை தலைப்பு செய்தியாக்கியதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளமுடியாது, அவள் நம்மைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள், நம் யாவரையும் விட்டு விலகிப் போயிருக்கிறாள்,

இன்றைக்கும் அவளது கால்கள் சாலையில் நடப்பதற்கு பயப்படுகின்றன, கைகள் தன்னை அறியாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, யாராவது அருகில் வருவதைக் கண்டால் கண்கள் காற்றிலாடும் அகல்விளக்கின் சுடரைப்போல தட்டளிகின்றன, இவ்வளவு ஏன்  அவளுக்கு உறக்கத்தில் கூட நிம்மதியில்லை, குரூரக்கனவுகளால் திடுக்கிட்டு அலறுகிறாள்,

அவள் சாகவாசமாகப் புழங்கி திரிந்த உலகம் ஒருநாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது, தோழிகள். குடும்பம். படிப்பு, வேலை அத்தனையும் அவளிடமிருந்து உதிர்ந்து போய்விட்டிருந்தது, களிம்பு மருந்துகளும் டஜன் கணக்கான மாத்திரைகளும் ரணசிகிட்சையும் அவளது அன்றாட உலகமாகியிருக்கிறது, அழுதழுது ஒய்ந்து ஒடுங்கிப் போயிருக்கிறாள், பலநேரங்களில் தன்னைக் கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்துபோன தீக்குச்சி ஒன்றை போலவே  உணர்ந்திருக்கிறாள்,

ஒரு சம்பவம் என்று எளிதாக நாளிதழ்களால் விவரிக்கப்பட்ட அந்த துயர நிகழ்வு இப்படியாகத் தான் செய்திதாளில் விவரிக்கபட்டிருந்தது


சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோகிலவாணி என்ற 23 வயது பெண் மீது துரை என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் துரை என்பவர் கோகிலவாணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கோகிலவாணியோ மகேஷ் என்ற கல்லூரி மாணவனை காதலித்து வந்திருக்கிறார்

தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கோகிலவாணியை துரை பலமுறை எச்சரித்திருக்கிறான், ஆனால் துரையின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவேயில்லை, இதனால் ஆத்திரமான துரை தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி கோகிலவாணியின் முகத்தில் ஆசிட் வீச தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்‘ ஆசிட்டை வாங்கியிருக்கிறான். மறுநாள் காலை கிண்டி ரயில்நிலையத்திற்கு செல்லும் வழியில் கோகிலவாணியை வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் துரை தப்பியோடினான்.

இதனால் கோகிலவாணியின் முகம்  வெந்து போனது. சம்பவ இடத்தில் அலறியபடியே மயங்கி  விழுந்த அவளை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத அளவுக்கு முகம்வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்,


**

பதினைந்து வயதிலே காதலிப்பதை பற்றிய கற்பனைகள் கோகிலவாணிக்குள் புகுந்துவிட்டன, பள்ளி நேரத்தில் அதைப்பற்றியே அவளும் தோழிகளும் ரகசியமாக பேசிக் கொண்டிருப்பார்கள், காதலைப்பற்றி பேசும்போதெல்லாம் பனிக்கட்டியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருப்பதை போல அவள் உடலில் கிளர்ச்சி உருவாவதை உணர்ந்திருக்கிறாள்,

சாலையில், பயணத்தில், பொதுஇடங்களில் தென்படும் பதின்வயது இளைஞர்களை காணும் போதெல்லாம் இதில் யார் தன்னைக் காதலிக்கப்போகிறவன் என்று குறுகுறுப்பாக இருக்கும், அவள் காதலிப்பதற்காக ஏங்கினாள், யாராலோ காதலிக்கபடுவதற்காக காத்துக் கொண்டேயிருந்தாள், அதைப்பற்றி தனது நோட்டில் நிறைய கிறுக்கி வைத்திருக்கிறாள், கவிதைகள் கூட எழுதியிருக்கிறாள்

அவளுக்கு திவாகர் என்ற பெயர் பிடித்துப் போயிருந்த்து, இவ்வளவிற்கும் அந்த பெயரில் ஒருவரையும் தெரியாது, ஆனால் ஏனோ அந்த பெயர் பிடித்திருந்த்து, அந்தப்பெயரிலே ஒருவனை காதலிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது, ஆனால் அது நடக்குமா என்ன,

அந்த பெயரை தன் பெயரோடு சேர்த்து திவாகர் கோகிலவாணி என்று ரகசியமாக எழுதி பார்த்துக் கொண்டேயிருப்பாள், ஒரு நாள் தோழி இந்திரா அவளிடம் யாருடி அந்த திவாகர் என்று கேட்டதற்கு பக்கத்துவீட்டில் இருக்கின்ற பையன் அவனை நான் லவ் பண்ணுகிறேன் என்று பொய் சொன்னாள்,

அந்த பொய்யை இந்திரா நம்பிவிட்டதோடு அந்த காதல் எப்படி ஆரம்பித்த்து, எவ்வளவு நாளாக நடக்கிறது என்று கேட்கத்துவங்கிவிட்டாள், அவளுக்காகவே கோகிலவாணி நிறைய கற்பனை செய்து திவாகரை பற்றி கதைகதையாக சொல்லிக் கொண்டேயிருப்பாள்,

அதை கேட்டதில் இருந்து இந்திராவும் யாரையாவது காதலிக்க விருமபினாள், ஆனால் எப்படிக் காதலிப்பது என்று பயமாக இருந்த்து, அவர்கள் டியூசன் படிக்கப் போகின்ற வீட்டில் இருந்த முரளிடம் இந்திரா தயங்கி தயங்கி தான் அவளை காதலிப்பதாகச் சொன்னாள், அவன் தானும் அவளை காதலிப்பதாக சொல்லி மாடிஅறைக்கு வரச்சொல்லியிருந்தான்,

பயமும் ஆர்வமுமாக மாடிக்குப்போன இந்திரா கத்தி அலறியபடியே கிழே இறங்கி ஒடிவந்தாள், என்னடி ஆச்சு என்று கோகிலா கேட்ட போது இந்திரா பதில் சொல்லவேயில்லை, அழுது கொண்டேயிருந்தாள், வீடு திரும்பும் போது பேருந்தில் வைத்து லவ் பண்றேனு சொல்லிட்டு கிஸ் குடுத்து உதட்டை கடிச்சிட்டான்டி, அசிங்கமாக இருக்கு, என்று சொல்லியபடியே கண்ணீர் விட்டாள்,

கோகிலவாணிக்கு நல்லவேளை நாம் யாரையும் காதலிக்கவில்லை என்று தோன்றியது, மறுநாள் முழுவதும் இந்திரா லவ் பண்ணுவது தவறு என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள், உள்ளுற அதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்திராவிற்காக தானும் திவாகரை லவ் பண்ணுவதை விட்டுவிட்டதாக சொன்னாள் கோகிலவாணி, ஆனால் மனதிற்குள் பலவந்தமாக கிஸ் பண்ணாத  நல்லபையனாகப் பார்த்து லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்த்து

••

கோகிலவாணி எட்டாவது படிக்கும் போது ருதுவெய்தினாள், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு சில மாதங்கள் அருகாமையில் இருந்த எஸ்டிடி பூத்தில் வேலை செய்தாள், அங்கே வரும் இளைஞர்களில் ஒருவன் கூட அவளை கண்டுகொள்ளவேயில்லை, கருத்துப்போய் மெலிந்த உடலோடு இருப்பதால் தான் தன்னை எவருக்கும் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொள்வாள், அவளிடம் இரண்டே இரண்டு நல்ல சுடிதார்கள் இருந்தன, அதையே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு வேலைக்கு போவாள், சம்பளப்பணத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த டர்மெரிக் கிரிம் வாங்கி உடல்முழுவதும் பூசிப் பார்த்தாள், பேர் அண்ட் லவ்லியை வாங்கி ரகசியமாக உபயோகித்து பார்த்திருக்கிறாள், பாலில் குங்குமப்பூபோட்டு குடித்து அழகை மேம்படுத்த முயன்றிருக்கிறாள், அப்படியிருந்தும் அவள் மீது யாருக்கும் ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை அனுப்பி சிகரெட் வாங்கி வரச்சொல்வான், அவள் ஒரு பெண் என்று கூடகவனிக்காமல் பச்சை பச்சையாக போனில் பேசிக் கொண்டிருப்பான், தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருந்தது,

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது தனக்கு மட்டும் ஏன் கழுத்து எலும்புகள் இப்படி தூக்கி கொண்டிருக்கின்றன, தாடை ஒடுங்கிப்போயிருக்கிறது என்று ஆத்திரமாக வரும், தன்னை எப்படியாவது அழகாக்கி கொண்டுவிட வேண்டும் என்று புதுசுபுதுசாக சோப்பு வாங்கி பார்த்தாள், தலைமயிரை சுருளவிட்டு பார்த்தாள், மூன்று மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பிற்கு கூட போய்வந்தாள், ஆனாலும் யாரும் அவளைக் காதலிக்கவேயில்லை

ஒரு மாலைநேரம் போன் செய்யவந்த ஜீன்ஸ் மற்றும் வெள்ளைகோடு போட்ட சட்டை அணிந்த இளைஞன் அவளிடம் வேண்டும் என்றே சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளது பெயரை கேட்டு தெரிந்து கொண்டு போனான், அந்த நிமிசமே அவன் மீது காதல் உருவாக ஆரம்பித்தது,  அவன் மறுபடி எப்போது வருவான் என்று காத்துக் கொண்டேயிருந்தாள், பெயர் கூட தெரியாமல் அவனை மனதிற்குள் காதலித்து கொண்டிருந்தாள்

ஆனால் ஒருநாள் அந்த பையன் பைக்கில் ஒரு இளம்பெண்ணை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமா தியேட்டர் பக்கமாக போகையில் அவளை கையை காட்டி ஏதோ சொல்லிவிட்டு போவதை கண்டதும் அவன் மீது ஆத்திரமாக வந்தது,

காதலிக்க துவங்கும் முன்பே காதல் தோல்வியிடைந்துவிட்ட கோபத்தில் அவள் இரண்டு மூன்று நாட்கள் மதியச்சாப்பாடை சாப்பிடாமலே தூக்கி எறிந்தாள், ஆனால் பசியை அவள் காதலால் வெல்லமுடியவில்லை,

சில வேளைகளில் கடற்ரைக்கு போகையில் இவ்வளவு பேர் எப்படி காதலிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும், கடலை வேடிக்கை பார்ப்பதை விடவும் காதலர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள், அவளை விட சுமாராக உள்ள பெண்கள் கூட காதலிக்கிறார்கள், தன்னை ஏன் ஒருவரும் காதலிக்கவில்லை என்று ஆதங்கமாக இருக்கும், அதை நினைத்து நிறைய கவலைப்பட்டிருக்கிறாள், அதிகமாக சம்பளம் வாங்குகின்ற பெண்ணால் இருந்தால் காதலிப்பார்கள் என்று இந்திரா சொன்னதை கேட்டது தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது, காதல் மட்டும் தான் அவள் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் போல நினைத்துக் கொண்டிருந்தாள்

மாம்பலத்தில் சொக்கநாதன் புதிதாக துவங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றிய போது தினசரி மின்சார ரயிலில் போய்வர வேண்டிய அவசியமானது, அப்படி தான் மகேஷை சந்தித்தாள், இரண்டுநாட்களில் பேசிப்பழகிவிட்டான்,

மகேஷ் அவளை விட ஒல்லியாக இருந்தான், பெரும்பாலும் நீலநிற பேண்ட் தான் அணிந்துவருவான், ஒரு ஒரியண்ட் சலூனில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொன்னான், மகேஷை அவளுக்கு பிடித்து போனது, தினமும் மகேஷ்  அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டுவருவான், ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால்கூட அவன் கை அவள் மீது படாமல் பார்த்துக் கொள்வான், அவளது தண்ணீர்பாட்டிலை வாங்கி குடிக்கும் போது கூட அண்ணாந்து தான் குடிப்பான், அதை விடவும் அவள் புது உடையோ. பாசியோ. பொட்டோ. ஹேர்கிளிப்போ எது அணிந்து வந்தாலும் இது உன்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டுவான், அதனாலே தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக பெருமை கொண்டாள் கோகிலவாணி

ஒருநாள் மாலை மகேஷ் வருவதற்காக மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் காத்திருந்த போது கால்வலிக்கிறது என்று ஒரு பைக்கில் சாய்ந்து நின்றிருந்தாள், எதிர் கடையில் இருந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்த மறுநிமிசம் தனது துப்பட்டாவை சரிசெய்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள் கோகிலவாணி, அந்த இளைஞன் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டே புகையை ஊதிக் கெர்ண்டிருந்தான், மகேஷ் வருவதற்கு தாமதமாவது ஆத்திரமாக வந்தது, அவன் சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்து நின்று இது என் பைக், வேணும்னா ஏறி உட்காந்துகிடலாம் , இல்லை எங்கே போகணும்னு சொல்லுங்க நானே கொண்டுபோய்விடுறேன் என்று சொல்லி சிரித்தான்,

அதை பவ்வியமாக அவன் சொன்னவிதம் அவளுக்கு சிரிப்பாக வந்த்து, அதை கேட்ட அந்த இளைஞன் பைக்சாவியை எடுத்து நீங்களே வேணும்னாலும் ஒட்டிகிட்டு போகலாம் என்றான், கோகிலவாணி வேண்டாம் என்று மறுத்துவிட்டு சிரிப்போடு நகர்ந்து  நின்று கொண்டாள், அந்த இளைஞன் அவளிடம் வீடு எங்க என்று கேட்டான், அவள் பதில்சொல்லாமல் ஸ்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் தன் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாறிவிட்டபடியே ஒரு பபிள்கம்மை எடுத்து அவளிடம் நீட்டினான்,

அவள் விடுவிடுவென ரயில்நிலையத்தின் உள்பகுதியை நோக்கி நடந்து போக துவங்கினாள், அவன் சிரிப்பது கேட்டது, மகேஷ் வந்து சேரும்வரை அவள் திரும்பி பார்க்க்கவேயில்லை, மகேஷிடம் அந்த இளைஞனை பற்றி சொல்லவா வேண்டாமா என்று தயக்கமாக இருந்த்து, ஆனால் சொல்லவேயில்லை,

இரண்டு நாட்களின் பின்பு அந்த பைக் இளைஞனை மறுபடியும் ரயிலில் பார்த்தாள், அவன் நெருங்கி அருகில் வந்து நின்று அவளையே பார்த்தபடியே வந்தான்,  கோகிலவாணி அவனை ஒரக்கண்ணால் பார்க்கும் போது அவன்  உதட்டை கடிப்பதும் உள்ளங்கையில் ஐ லவ்யூ, யுவர்ஸ் துரை என்று தன் பேனாவில் எழுதிக்காட்டுவதும், கள்ளசிரிப்புடன் கையசைப்பதுமாக இருந்தான்,

ஒருவாரத்தின் பிறகு ஒருநாள் காலையில் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அருகில் வந்து உனக்காக தான் தினம் தாம்பரத்துல இருந்து இதே ரயில்ல வர்றேன் என்றான், , கோகிலவாணி  அவனிடம் பேசவேயில்லை

அவனோ நெடுநாள் பழகியவன் போல அருகில் வந்து படத்துக்குப் போவமா என்று கேட்டான், அவளுக்கு அதை கேட்ட போது பயமாக வந்த்து, அதைக்காட்டிக் கொள்ளாமல் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாள்,

துரை சிரித்தபடியே அப்போ நீ என்னை லவ் பண்ணலையா என்று கேட்டான், கோகிலவாணி கோபத்துடன் நான் எதுக்கு உன்னை லவ் பண்ண்ணும் என்று கேட்டாள்,

அப்போ அன்னைக்கு மட்டும் சிரிச்சே, தினம்தினம் லுக்விட்டயே அது எதுக்கு என்றான் துரை,

நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலே, நான் மகேஷை லவ் பண்றேன், பிரச்சனை பண்ணாம போயிடு என்றாள்,

உடனே துரை பச்சை பச்சையாக அவளை திட்டியதோடு நீ என்னை லவ் பண்ணிதான் ஆகணும், நான் டிசைட் பண்ணிட்டேன் என்றான், அவனுக்கு பயந்து கொண்டு சில நாட்கள் பஸ்ஸில் வரத்துவங்கினாள்,

ஒருநாள் மகேஷிடம் ஒரு பையன் தன்னை பின்னாடியே துரத்துவதாக சொன்னாள், மகேஷ் சற்றே கலக்கத்துடன் நான் பேசிப்பாக்குறேன் என்று ஆறுதல் சொன்னான், அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு மகேஷ்ஷை பார்க்கவே முடியவேயில்லை, அவனை தேடி ஒரியண்ட் சலூனுக்கு போன போது மகேஷின் முகத்தில் அடிவாங்கிய  வீக்கமிருந்த்து,

மகேஷ் தலையை குனிந்தபடியே அந்த ரௌடிப்பய துரை என்னை அடிச்சிட்டான் கோகிலா, நாம ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தா கொன்னுருவேன் சொல்றான், என்ன செய்றதுனு தெரியலை, சலூன் ஒனர்கிட்டே யோசனை கேட்டேன், லவ் எல்லாம் எனக்கு சரிப்படாதுனு சொல்றார், இப்போ என்ன செய்றதுனு தெரியலை ஒரே குழப்பமா இருக்கு என்றான், கோகிலவாணி அங்கேயே அழுதாள், மகேஷ் சலூன் ஒனரிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அருகாமை தேநீர்கடையில் ராகிமால்ட் வாங்கி தந்து நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்பிறகு மகேஷ் அவளை பார்க்க வரவேயில்லை, ஆனால் கோகிலாவால் காதலைவிட முடியவில்லை, திரும்பவும் ஒருநாள் மகேஷை காண சலூனுக்கு போனாள், அப்போது சலூனில் யாருமேயில்லை, மகேஷ் மட்டும் தனியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவளை பார்த்தவுடன் சலூன் நாற்காலியில் உட்கார சொன்னான், எதிரில் உள்ள கண்ணாடியில் அவள் முகம் தெரிந்த்து, மகேஷ் சிரிப்போடு உனக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிவிடவா என்று கேட்டான்,

கோகிலவாணி ஆத்திரத்துடன் அவனை திட்டினாள், பிறகு ஆவேசமானவள் போல அவனை கட்டியணைத்து இறுக்கமாக முத்தம் கொடுத்தாள், அதன்பிறகு இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருந்தார்கள், ஒன்றாக அன்று வீடு திரும்பினார்கள், கோகிலவாணி மறுபடியும் காதலிக்க துவங்கினாள்,

ஆனால் அவர்களை ஒன்றாக உதயம் தியேட்டரில் பார்த்த துரை நான் மட்டும் தான்டி உன்னை லவ் பண்ணுவேன், வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே, உன் மேல ஆசிட் ஊத்திருவேன், பாத்துக்கோ என்று கடுமையாகத் திட்டினான், கோகிலவாணிக்கு அது உண்மையாகப் போகிறது என்று அப்போது தெரியாது,

அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு துரை நிறைய குடித்துவிட்டு அவளது ஜெராக்ஸ் கடைக்கு வந்து நீ என்னை லவ் பண்றயா இல்லையானு இப்பவே தெரியணும் சொல்லுடி,  என்று மிரட்டினான், கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை, அவன் அசிங்கமாக கத்தினான், அவனுக்கு பயந்து சில நாட்கள் வேலைக்கு போகாமலும் இருந்தாள், ஆனால் அவன் விடவேயில்லை, வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டேயிருந்தான், குளியல் அறையை ஒட்டிய சந்தின் இடைவெளியில் வந்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான், அவளுக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது

••

துரை அவள் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முந்திய நாள் காலையில் கோகிலவாணியின் அப்பாவிடம் யாரோ அவள் மகேஷை காதலிக்கிறாள் என்பதை பற்றி சொல்லியிருந்தார்கள், அதற்காக அப்பா தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவள் முகத்தில் மாறிமாறி அறைந்ததோடு மகேஷின் ஜாதியை சொல்லி கேவலமாகத் திட்டியதோடு அவள் தன்னுடைய மகள் என்பதையும் மறந்து ஆபாசமான வசைகளை பொழிந்தார்,

அவர் கூடவே செல்வம் அண்ணனும் சேர்ந்து கொண்டு அவன் மட்டும் இல்லைப்பா, துரைனு இன்னொரு பையனும் இவ பின்னாடி சுத்துறான், ஒரே நேரத்தில ரெண்டு பையக கூட சுத்துறா என்று ஏற்றிவிட்டான்,

அப்பா அவள் தலைமயிரை பிடித்து இழுத்து சுவரோடு முட்டவைத்து ஒடுகாலி நாயி என்று மறுபடியும் ஏச ஆரம்பித்தார், அம்மா அவரது பலமான பிடியில் இருந்து கோகிலாவை விடுவித்து சோற்றுகரண்டியால் காலிலும் புட்டத்திலும் அடித்தாள், கோகிலவாணி காதலுக்காக தான் அடிபடுகிறோம் என்பதால் அழுது கத்தவேயில்லை

••

ஆசிட் ஊற்றப்பட போகின்ற நாளின் காலையில் துரை அவள் முன்னால் வந்து நின்றபோது எப்படியாவது அவனிடம் கெஞ்சிப்பேசி தான் மகேஷை காதலிப்பதை புரிய வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கோகிலா,

ஆனால் துரை ஒருவார்த்தை கூட அவளிடம் பேசவும் இல்லை, பேசவிடவும் இல்லை, பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுப்பது போல சிறிய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான், தொலைவில் மின்சார ரயில் வருவதற்காக ஒசை  கேட்டது, அவள் ரயில் நிலையத்தின் படியை நோக்கி நடப்பதற்கு அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான்,

கொதிக்கும் நெருப்பினுள் முகத்தை நுழைத்துவிட்டது போல எரிய ஆரம்பித்த்து, காது முகம் நாசி கன்னம் என்று அத்தனையும் உருகியோடுவது போல தாங்கமுடியாத வலி பீறிட்டது, கோகிலவாணி அலறினான், கூட்டத்தை விலக்கி கொண்டு துரை ஒடுவது தெரிந்தது, அவள் முன்னிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மயங்க துவங்கியது,

••

கோகிலவாணி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றாள், வலது பக்க முகம் முற்றிலும் எரிந்து போயிருந்த்து, காதின் நுனி சிதைந்து போனதால் பாதி காதே மிச்சமாக இருந்த்து, ஆசிட் முகத்தில் பட்டதோடு பின்னந்தலை வரை பரவியிருந்த காரணத்தால் அவளது தலைமயிரையும் பாதி கத்தரித்து இருந்தார்கள், அவளது தோற்றத்தை காண அவளாலே சகிக்கமுடியவில்லை

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறிமாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தார்கள்,

கோகிலவாணியின் எரிந்த முகத்தை கண்ட அப்பா  அப்படி என்னடி உனக்கு லவ்வு கேட்குது, செத்து போயிருந்தா சனியின் விட்டுச்சினு தலைமுழுகிட்டு போயிருப்பேன், இனிமே உன்னை எவன் கட்டிகிடுவான், உன்னை எங்கே கொண்டு போய் தள்ளுறது என்று தனது முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டு அழுதார்,

எதற்காக காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா, ஏன் துரை இப்படி தன்முகத்தில் ஆசிட் ஊற்றினான், அவளுக்கு நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது

அவள் கூட படித்த மாணவிகள், தெரிந்தவர்கள், தோழிகள் எவரும் அவளைப்பார்க்க வரவேயில்லை, ஆசிட் அடிக்கப்பட்டவளின் தோழி என்று யார் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்கள், மகேஷ் கூட அவளை பார்க்க வரவேயில்லை,

பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை லவ்வர்டி என்று நக்கலாக கேட்பார், கோகிலவாணி பதில் சொல்வதேயில்லை,

மருந்தாளுனரும் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்கமாட்டான், நீ எங்கே வேணும்னாலும் போகலாம், எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம், உன்னை யாரு பாலோ பண்ண போறாங்க என்பார்,

கோகிலவாணிக்கு ஆத்திரமாக வரும் ஆனால் வாய் திறந்து பேசமாட்டாள் , இப்படி அவமானப்பட்டு வாழ்வதற்கு பதிலாக பேசாமல் அப்பா சொன்னது போல செத்துப்போயிருக்கலாம், எதற்காக பிழைத்துக் கொண்டோம், மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கடத்தப்போகிறோம், அந்த வலி ஆசிட்டின் கொதிப்பை விட அதிகமாக இருந்த்து

••

கோகிலவாணி அந்த வழக்கிற்காக இருபத்தியாறு முறை கோர்ட்டிற்கு சென்று வர நேர்ந்த்து, ஒவ்வொரு முறையும் அவளது காதலை யாராவது பரிகாசம் செய்வார்கள், எரிந்த முகத்தை காட்டி அவளது கதையை சொல்லிச் சிரிப்பார்கள், விசாரணைக்கு மகேஷ் வரமறுத்துவிட்டதுடன் தான் அவளை ஒருபோதும் காதலிக்கவேயில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறான், துரையோ அவள் தன்னை பலமாதங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் தந்திருந்தான், கோகிலவாணி தான் யாரையும் காதலிக்கவில்லை, துரை தன்னை காதலிக்கும்படியாக மிரட்டினான் என்றே சொன்னாள், வழக்கறிஞர் அவள் யாரோடாவது பாலுறவு கொண்டிருக்கிறாளா, ஆண் நண்பர்க்ள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று துருவிதுருவி கேட்டார்,  கோகிலவாணி நீதிமன்றத்தில் நிறைய முறை அழுதிருக்கிறாள், ஆனால் யாரும் அவளை தேற்றவேயில்லை, முடிவில் துரை  தண்டிக்கப்பட்டான்

•••

பாதி எரிந்த முகத்துடன்  எலிவால்முடி போல கொஞசம் தலைமயிருடன் கோகிலவாணி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தாள், டிவி பார்ப்பது கூட கிடையாது, தலையில் பூ வைத்துக்  கொள்வதோ, கண்ணாடி பார்த்து திருநீறு வைத்துக் கொள்வதோ கூட கிடையாது, ,இரண்டு முறை அவளுக்கு கல்யாணப்பேச்சு துவங்கியது, ஆனால் எவரும் அவளை கட்டிக் கொள்ள முன்வரவேயில்லை, கோகிலவாணி தனிமையை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே காளான் வளர்த்துவிற்பனை செய்ய துவங்கினாள், தினமும் அம்மாவும் அப்பாவும் அவளை வாய்க்கு வாய் திட்டினார்கள், வீட்டின் எந்த விசேசத்திலும் அவள் கலந்து கொள்ள அனுமதிக்கபடவேயில்லை, சிரிப்பை மறந்தவளாக  கோகிலவாணி ஒரு நடைப்பிணம் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள்

••

உபாசனா என்ற தன்னார்வ நிறுவனம் அவளை தஙகள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்திரெண்டை கடந்திருந்த்து, அது பார்வையற்றவர்களுக்காக சேவை செய்யும் நிறுவனம், பார்வைக்குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கெர்ண்டிருந்தனர், அதனால் யாரும் அவளை கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய்வரத்துவங்கினாள், அங்குள்ள நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துக் கொண்டேயிருப்பாள்,

சில சமயம் அவள் அறியாமல் உடலின்பம் பற்றி மனது நாட்டம் கொள்ள துவங்கும் அப்போது விரலால் முகத்தை தடவிக் கொள்வாள்,, மின்சாரத்தில் கைப்பட்டது போல மனது உடனே அந்த நினைவில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளும்

••

சென்றவருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்த்தாள், அவனுக்கு திருமணமாகி பெண் குழந்தையிருந்த்து, இரண்டு வயதான அந்த குழந்தை ஒரு வண்ணபந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, மணலில் உட்கார்ந்தடிபயே துரையின் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தாள், நல்லநிறம், அரஞ்சு நிற புடவை கட்டியிருந்தாள், கையில் ஒரு ஹேண்ட்பேக், கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தாள், துரையும் முழுக்கை சட்டை அணிந்து தலையை படிய வாறியிருந்தான்,

ஏனோ துரையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போலிருந்த்து, அந்த குழந்தையை ஒருமுறை கொஞ்சலாமா என்று கூட தோன்றியது, அவள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை துரை கவனித்தவுடன் மனைவியிடம் ஏதோ சொன்னான், அவர்கள் எழுந்து கொண்டார்கள்,

நாம் தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும், அவன் ஏன் தன்னை பார்த்தவுடனே எழுந்து ஒடுகிறான், பயமா, கடந்தகாலத்தின் நினைவுகள் எதுவும் தன்முன்னால் வந்துநின்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனை பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன? அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம், ஆனால் தனக்கு, கண்ணில் இருந்து துரை மறையும்வரை அவனையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்,

கடற்கரையெங்கும் காதலர்கள் நிரம்பியிருந்தார்கள், இவர்களில் ஏதோவொரு பெண் தன்னை போல முகம் எரிந்து போககூடும், அல்லது வன்கொலை செய்யப்படவும் கூடலாம், வசை. அடி. உதை, எரிப்பு, கொலை இவை தான் காதலின் சின்னங்களா, காதல் வன்முறையில் தான்   வேர் ஊன்றியிருக்கிறதா,

அவள் கடல் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தான், இருட்டும்வரை வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று தோனற்வேயில்லை

உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நிர்கதிக்கு உள்ளாக்கி வைத்திருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்தின் பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்,

ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது ஏனோ தனக்கு முப்பத்தியாறு வயது முடிந்துவிட்டது என்பது நினைவிற்கு வந்தது.

ரயில் செல்லும்போது வீசிய கடற்காற்று தழும்புகள் நிறைந்த முகத்தில் பட்டதும் மனது தானே காதலைப்பற்றி நினைத்துக் கொள்ள துவங்கியது, உடனே மனதிற்குள்ளிருந்து இத்தனை வருசங்களாகியும் மறையாத திராவகத்தின் எரி மணமும் திகுதிகுப்பும் பீறிட்டு கிளம்பியது, தன்னை மீறிய உள்ளார்ந்த வலியை அவளால் தாஙகிக் கொள்ள முடியவில்லை

கோகிலவாணி திரும்பி பார்த்தாள், எதிர்சீட்டில் ஒரு இளம்பெண் ஒரு இளைஞன் மடியில் சாய்ந்து கொண்டு ரகசியமான குரலில் பேசியபடியே காதலித்துக் கொண்டிருந்தாள்,

கோகிலவாணி அவர்களை பார்க்காமல் வெளியே இருந்த இருட்டையே பார்த்துக் கொண்டு வந்தாள், இருட்டில் பறந்த மின்மினி பூச்சி ஒன்று முகத்தை உரசிக் கொண்டு போனது,

காதல்ஜோடி பேசிச்சிரிப்பதைக் கேட்க கேட்க கோகிலவாணி தன்னை அறியாமல் விசும்பத் துவங்கினாள், தன் காதலை  உலகம் ஏன் ஏற்க  மறுத்தது, எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனை வழங்கபட்டது என்பதை நினைத்து அவள் அழுது கொண்டேயிருந்தாள், ரயிலின் கூடவே மின்மினிகள் பறந்து வந்து  கொண்டேயிருந்தன, அது இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருப்பதை போலவே இருந்தது

••


2011 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கதை
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 04:02:22 PM
அந்தக் காலத்திலே....

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானது




அந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய்

முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட ஓர் வழிப்போக்கன் காசு கொடுத்து விலைக்கு வாங்கிப்போய், ஜார் மன்னனிடம் அரும் பொருளாக விற்றுவிட்டான்.

மன்னன், தனது சபையில் உள்ள அறிஞர்களை அழைப்பித்து, இது முட்டையா அல்லது தான்ய மணியா என்பதினைக் கண்டறிந்து சொல்லுமாறு ஏவினான்.

அறிஞர்கள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. இது பயனற்றது என்று கைவிட்டுவிட்டனர்,

ஒருநாள் அங்கு பறந்து வந்த பறவையொன்று அதை தனது அலகால் குத்தித் துளை பண்ணிவிட்டது. இப்போது, இது தானியமென்பது என்பது அறிஞர்களுக்குத் தெரிய வந்தது.

வியப்போடு தானியத்தை ஜார் மன்னனிடம் கொண்டு சேர்த்தனர் .

ஆச்சரியமடைந்த மன்னன், இது எங்கே, எப்பொழுது பயிரிடப்பட்டது என்று தெரிந்து சொல்லச் சொன்னான். அறிஞர் யோசித்தனர்; புத்தகங்களைப் புரட்டினர்; பயனில்லை. “எங்கள் புத்தகங்களில் இதைப் பற்றி ஒன்றுங்காணோம். எங்கட்குத் தெரியாது. விவசாயிகளிடம் வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம். ஒருவேளை அவர்கள் மூதாதைகளிடமிருந்து யாராவது இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம். விசாரிக்க உத்தரவிடுங்கள்” என்றார்கள்

ஜார் மன்னன் கட்டளைப்படி, விவசாயிகளில் மிகவும் வயதான கிழவன் ஒருவன் அரசசபைக்கு கொண்டுவரப்பட்டான். இக்கிழவன், சோகை பிடித்துப் பல்லில்லாமலிருந்தான். இரண்டு கோல்களில் சாய்ந்த வண்ணம் வருந்தி நடந்தான்.

மணியைச் சரியாய்க் கூடப் பார்க்க முடியாதபடி கிழவனது பார்வை மங்கிப் போயிருந்தது. பாதி கண்ணாலும், பாதி கை உணர்ச்சியாலும் அவன் தடவிப் பார்த்தபிறகு, ஜார் அவனைப் பார்த்து,-

“பெரியவரே, இது எங்கே பயிரானது, தெரியுமா உனக்கு? உமது வயலில் இப்படி தானிய மணிகளை நீர் விதைத்த துண்டா? இல்லை, உமது காலத்தில் இவை போன்றவைகளை விலைக்கு வாங்கியதாவது உண்டா?”என்று கேட்டான்.

கிழவன் செவிடு. நிரம்பச் சிரமப்பட்டுத்தான் புரிந்து கொண்டான். பதிலும், தட்டுத் தடுமாறித்தான் சொன்னான்: “இந்த மாதிரித் தானியங்களை நான் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை, வாங்கவுமில்லை. நாங்கள் வாங்குவது எல்லாம் சிறியதாய், மெருகோடிருக்கும். என் தகப்பனாரைக் கேட்டுப் பார்க்கலாம்; அவருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும்.”

அவனது தகப்பனை அனுப்பிவைக்கும்படி ஜார் பணித்ததும், தகப்பனும், ஒரு கோல் மட்டும் ஊன்றிக் கொண்டு வந்து சேர்ந்தான். இவனுக்குக் கண் நன்றாயிருந்ததால், நன்றாய்ப் பார்க்க முடிந்தது. இவனிடமும் முன்போல் கேட்டான் அரசன். இவன் காதும் மந்தந்தான். ஆனால், மகனைக் காட்டிலும் தெளிவாய்க் கேட்டது

“இந்த மாதிரி தானியமணிகளை நான் விதைத்ததுமில்லை, அறுத்ததுமில்லை, வாங்கினதுங்கூட இல்லை. ஏனென்றால், எங்கள் காலத்திலெல்லாம் பணம் புழங்கத் தொடங்கிவிடவில்லை. தனக்கு வேண்டிய ரொட்டிக்கான கோதுமையை மட்டும் தான் பயிரிட்டுக் கொண்டோம். மற்ற தேவைகட்கு ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம். ஆகவே இது எங்கே பயிராகி இருக்கக் கூடுமென்பது எனக்குத் தெரியவில்லை. எங்கள் காலத்துக் கதிர் மணிகள் இப்போதையைக் காட்டிலும் பெரியவைதான். மாவு நிறையத் தரும். ஆனாலும், இதுமாதிரி நான் கண்டதில்லை. தமது காலத்தில் தானிய அறுவடை நல்லபடியாயிருக்குமென்று என் தகப்பனார் சொல்லிக் கொள்வார். அது இன்னும் பெரிதாம். நிறைய மாவு தருமாம். அவரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்”என்று இவன் கூறினான்.

அப்படியே, இவனுடைய அப்பன் அழைத்து வரப்பட்டான். கைக்கோல் எதுவும் இல்லாமலேயே அரசன்முன் சரளமாய் நடந்து வந்து சேர்ந்தான். கண்கள் இன்னும் ஒளி வீசின. பேச்சுத் தெளிவாயிருந்தது. அரசன் காட்டிய தான்யத்தைக் கிழவன் புரட்டிப், புரட்டிப் பார்த்தான்.

“இப்படி தானிய மணியை நான் பார்த்து நிரம்ப நாளாச்சே”என்று கூறிவிட்டு,தானிய மணியைச் சிறிது பல்லாற் கடித்துச் சுவைத்தான். அப்புறம், “அதேதான்!”என்று வியந்துரைத்தான்.

“எங்கே, எப்பொழுது இத்தகைய மணிகள் பயிராயின, பெரியவரே? நீர் உமது வயலில் இப்படி விதைப்பதுண்டோ? இல்லை, வேறு யாரிடமாவது விலைக்கு வாங்குவதுண்டோ?”என்று மன்னன் வினவினான். அதற்கு முதியவன் பதில் சொன்னான்: “என் காலத்திலே இந்த மாதிரி தான்யம் நாடெங்ககும் அறுவடையாயிற்று. இந்த தானியங்களைக்  சாப்பிட்டு தான் நாங்கள் பிழைத்து வந்தோம். இவற்றையே நான் விதைத்து, அறுவடை செய்து, அரைத்துமிருக்கிறேன்.”மீண்டும் மன்னன் கேட்டான் “இவற்றை நீர் எப்போதாவது, எங்காகிலும் விலைக்கு வாங்கும் வழக்கம் உண்டா? இல்லை, உமது சொந்த நிலத்திலே, எப்போதும் நீரே விதைப்பீரா?”

கிழவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “தான்யத்தை விற்பது வாங்குவது போன்ற பாபத்தைச் செய்ய எவனும் என்னுடைய காலத்தில் ஒருவனும் எண்ணமாட்டான். பணத்தைப் பற்றி நாங்கள் கேள்விபட்டதே கிடையாது. எல்லாரிடமும் வேண்டிய தானியமிருந்தது இல்லாதவர்களுக்கு எங்களுடையதை பகிர்ந்து தருவோம்”என்று பதில் கூறினான் கிழவன்.

ஜார் மன்னர் மறுபடியும் கேள்வி கிளப்பினார்

“நீர் விதைப்பு நட்ட இடமெங்கே? உமது வயல் இருப்பதுதான் எங்கே?”

கிழவன் சொன்னான்:

“என் வயல் கடவுள் அருளிய எங்களுர் மண்ணே . நான் உழுத இடமே எனது வயல்வெளி.  அப்போது பூமி செழிப்பானதாகயிருந்தது,  யாவரும் ஒன்று கூடி பாடுபட்டோம்,

“இன்னும் இரண்டே விஷயங்கள் நீர் எனக்குச் சோல்ல வேண்டும். முதலாவது, -முன்பு விளைந்தது போல இப்போது ஏன் பயிர்கள் விளைவதில்லை? இரண்டாவது உமது பேரன் இரு தடி தாங்கி நொண்டுகிறான்; உம்முடைய மகன் ஒரே கோலூன்றி நகர்கிறான்; நீரோ கோலெதுவுமின்றிச் சுலபமாய் நடக்கிறதோடு மட்டுமின்றி, உமது கண்களில் இன்னும் ஒளிவீசுகிறது; பற்கள் வலுவாயிருக்கின்றன; பேச்சும் தெளிவாய், அன்போடிருக்கிறது. இது ஏன்? இவை இரண்டுக்கும் காரணம் என்ன?”

முதுகிழவன் மொழிந்தவை:

“இவை இரண்டுக்கும் காரணம், மனிதர் தங்கள் உழைப்பால் மட்டும் வாழ்வதை நிறுத்திவிட்டுத், தம் அண்டையிலிருப்பவரது பொருட்களின் மீது ஆசைப்பட்டு குறுக்குவழியில் பிழைப்பதும், சத்தேயில்லாத உணவை உண்பதுமே காரணம் . அந்தக் காலத்தில் மக்கள் உண்மைக்கு பயந்து நடந்தனர், கடவுள் சொற்படி நடந்தனர். தமது உடைமைக்கு எஜமானராயிருந்தனர். பிறர்க்குச் சொந்தமானவற்றை இச்சிக்கவில்லை. அக்காலத்தில் ஒருவரும்  தனது சுயநலத்திற்காக இயற்கையை அழித்ததில்லை , நாங்கள் பூமியை நேசித்தோம், அது தான் காரணம் என்றார் ”


தமிழாக்கம்: சுப நாராயணன்
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on May 31, 2013, 04:11:24 PM
புத்தனாவது சுலபம்

சிறுகதை

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாக்க் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**


பாரம்பரியமிக்க கணையாழி இலக்கிய இதழ் மறுபடியும் துவங்கப்பட்டுள்ளது, தசரா அறக்கட்டளை சார்பில் டாக்டர் மா. ராஜேந்திரன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்துகிறார்,  கணையாழி ஏப்ரல் இதழில் இந்தக்கதை  வெளிவந்திருக்கிறது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 07:19:12 PM
சொந்தக்குரல்

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்

என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.

சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்

இல்லைம்மா. பயத்திற்காக சொல்லவில்லை. நீ கிழே விழுந்து வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்பேன்.

விழுந்தா, போய்ச் சேர வேண்டியது தான். என் மனசில இருக்கிற ப்ரகாசம் எல்லாம் அணைச்சி போய் பல வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான் என்றபடியே இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருப்பாள்.

அப்படி தான் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்

 கடந்த சில வருசங்களாகவே அம்மா இப்படிதானிருக்கிறாள். சில நேரங்களில்  வீட்டில் உள்ளவர்கள் பெயர்களே கூட மறந்து போய்விடுகிறது. டேய் இவனே. அல்லது இங்கே வாயேன் என்று தான் கூப்பிடுகிறாள்.  முதுமை அடையும் போது உடலின் எடை குறைந்து மெலிந்து போய்விட வேண்டும் இல்லாவிட்டால் யாரால் தூக்கி கொண்டுபோய் டாய்லெட்டில் உட்கார வைக்க முடியும் என்று அவளாகவே சொல்லிக் கொள்கிறாள். அதற்காக சாப்பாட்டை க் குறைத்துக் கொள்வதுடன் தன்னை வருத்திக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தாள்

இளவயதில் அம்மா நல்ல பருமனாக இருந்தாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் ,அப்பா,

அவர் எப்படிக் காரணம் என்று கேட்டால் நினைவுகளைக் கொட்டத் துவங்கிவிடுவாள்.

அவருக்கு வீட்ல சமைச்ச எதுவும் மிச்சம் ஆகிறக்கூடாது. வேற என்ன செய்றதுனு சமைச்ச  மிச்சத்தை எல்லாம் நானே கொட்டிகிட்டேன். அப்போ உடம்பு பெருத்துப்போகாமல் என்ன செய்யும். அத்தோட மாசத்துக்கு ஒருநாள் கோவிலுக்கும் தெரிஞ்சவங்க வீட்டுக்கும் போறதை தவிர வீட்டை விட்டு வெளியே போனதே கிடையாது. ஒரு தேங்காய்ச் சில்லு வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாக் கூட உங்கப்பா தான் போயிட்டு வருவார். கல்யாணமாகி எனக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்து அதுல ரெண்டு செத்தும் போச்சி. அத்தனை வருசத்துக்கு பிறகும் உங்கப்பாவுக்கு என்னைத் தனியா அனுப்புறதுன்னா பயம்.

கோடையில சிவசு மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு ரயில் ஏத்திவிட வரும் போது ஸ்டேஷன்ல வச்சி ஒண்ணுக்கு பத்து தரம் அட்வைஸ் பண்ணுவார்.

அது பத்தாதுனு ரயில்க்குள்ளேயே ஏறி இவளைப் பத்திரமாக கொண்டு போய் விட்ருங்கன்னு பக்கத்து மனுசங்க கிட்டே வேற சொல்லிவிடுவார்.

ரொம்ப அவமானமா இருக்கும்.

அதே நேரம் நம்ம மேல இருக்கிற அக்கறையில் தான் இப்படி எல்லாம் செய்றாருனு சமாதானம் பண்ணிகிடுவேன். அப்போ உனக்கு வயது நாலோ அஞ்சோ இருக்கும். ஞாபகமிருக்குமோ என்னமோ.

அக்கறை காட்டுறதுக்காக நாம செய்ற காரியங்கள் அடுத்தவரை எவ்வளவு இம்சை பண்றதுனு  நாம புரிஞ்சிகிடுறதேயில்லை.  அதுக்கு உங்க அப்பா ஒரு ஆள் போதும்.

செத்துப் போன மனிதரைப் பற்றி இப்போ பேசி என்ன ஆகப்போறது.

ஆனாலும் மனுசன் செத்து போயிட்டாலும் அவன் படுத்தின பாடு. பண்ணின அக்ரமம் எல்லாம் கூடவே செத்து போயிடுறதில்ல. அது யார் மனசிலயாவது அழியாம இருந்துகிட்டே தான் இருக்கு.

இப்போ கூட கனவுல உங்கப்பா முகம் வந்துச்சின்னா திடுக்கிட்டு முழிச்சிகிடுறேன்.

உங்கப்பா வாழ்நாள் முழுவதும் யாரையாவது திட்டிகிட்டே இருந்தார்.

அவருக்குப் பிள்ளைகள் எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்.

அப்படியொரு மனசு.

ஒண்ணுக்குப் பத்துத் தடவை கேட்டா தான் எதுவும் கிடைக்கும்.

சோமா, உங்களை நினைச்சி நான் நிறைய நாட்கள் அழுதிருக்கேன்டா.

ஏன்டா சோமா, நீ, உன் தம்பி,  எல்லாம் எங்களுக்குப் பிள்ளையா வந்து பிறக்கணும்.

எப்பவாது யோசிச்சி பாத்திருக்கியா.

என் பிள்ளைகளை பற்றி நான் நிறைய யோசிச்சி பாத்திருக்கேன்.

இதுகள் எல்லாம் ஏன் என் வயிற்றுல வந்து ஜனிச்சிருக்கு. நான் என்ன கொடுப்பினை பண்ணினே அதுக்கு. சில நேரம் பாத்தா நீங்க எல்லாம் யாரோ எவரோங்கிற மாதிரியும் இருக்கு. குறத்தி பின்னாடி பிள்ளைகள் வேடிக்கை பாக்க கூடவே வருவாங்களே அப்படி தான் உங்களையும் தோணுது, நான் தான் அந்தக் குறத்தி.

சோமா, எனக்கு நீங்கள் எல்லாம் சின்ன வயசா இருந்த போது  ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சி. அது என்னன்னா, யாராவது தொலைஞ்சி போயிடுவீங்களோனு.

எதுக்கு அப்படிப் பயந்தேனு தெரியலை.

ஆனா உள்ளுக்குள்ளே அந்தப் பயம் உலை கொதிக்கிற மாதிரி கொதிச்சிகிட்டே இருந்துச்சி.

தெருவில் பிள்ளைகள் விளையாடிக்கிட்டு இருக்கிறப்போ கூட அடிக்கடி வந்து இருக்காங்களானு எட்டிப் பாத்துகிடுவேன்.

ஸ்கூல் விட்டு லேட்டா வந்தா மனசு தாங்காது.  திடீர்னு மதிய நேரம் யாராவது வந்து கதவைத் தட்டினா அய்ய்ய்யோ பிள்ளை காணாமப் போயிருச்சினு தான் பயப்படுவேன். பதறி எழுந்து வந்து கதவைத் திறந்து பார்ப்பேன்.

உங்கப்பாவுக்கு அந்தப் பயமே கிடையாது.

அது எப்படிறா, பொண்டாட்டிக்கு இருக்கிற பயத்தில ஒண்ணு கூட புருஷனுக்கு இருக்கிறதில்லை.

உன் தங்கச்சி லட்சுமி இருக்காளே. அவ என்னை கிறுக்கா ஆக்கி வச்சா. ஒரு நாள், ஒரு பொழுது வீட்ல அடங்கிக் கிடக்க மாட்டா. இத்தனை ஆம்பளைப் பசங்க வீட்ல ஒடுங்கி இருந்தப்போ அவளுக்கு கால் ஒரு இடத்தில நிக்காது.

ஒட்டம். ஒட்டம். அடுத்த வீடு. அடுத்த வீதி. சத்திரம் சாவடி லைப்ரரினு ஒடிக்கிட்டே இருப்பா.  எங்கேயோ தொலைஞ்சி போகப்போறாளோ.னு பயமா இருக்கும்.  ஆனா அப்படி எதுவும் நடக்கலை.

ஒழுங்கா படிச்சி கல்யாணம் ஆகி புருஷனோட ஜாம்ஷெட்பூருக்குப் போயி வாழ்ந்து நாற்பத்தியெட்டு வயசில எனக்கு முன்னாடியே செத்தும் போயிட்டா.

அவசரம். எதுலபாரு அவசரம். ஆனா அவளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அம்மா கிட்டே அதை எல்லாம் சொன்னதில்லை.

பிள்ளைகள் நிறைய விசயத்தை பெத்தவங்ககிட்டே சொல்றதேயில்லை. பாவம் அம்மா இதை நினைச்சி வருத்தப்படுவானு நினைச்சிருப்பா.

ஆனா சொல்லாம இருக்கிறது தான்டா ரொம்ப வலிக்குது. ஒரு நாள் அவள் என் கனவுல வந்து எதுவும் சொல்லாம அழுதா. அழுகைன்னா அவ்வளவு அழுகை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட தோணலை. அழுதுமுடிச்சி கையைத் துடைச்சிகிட்டு அம்மா உனக்கு புரிஞ்சிருச்சானு கேட்குறா.

உடம்பு சிலிர்த்து போச்சி. கை கால் நடுக்கம் வந்து தூக்கத்தில இருந்து எழுந்து உட்கார்ந்துகிட்டேன். மனது துவண்டு போச்சுடா.  அவளைக் கனவுல ஏன் பார்த்தேன்.

என்னாலே ரெண்டு நாளுக்கு ஒரு வாய் சோறு சாப்பிட முடியலை. செத்துப் போயிட்டாளே இனிமே அவளுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும். ஆனாலும் செத்து போனபின்னாடியும் நினைப்போட வலி ஆறாதது தானா.  அதை நினைச்சி தூக்கம் வராம பலநாள் அழுதிருக்கேன்,

சோமா, உனக்கும் அழுகணும்னு ஆசையா இருந்தா இப்பவே அழுதுரு.

என்னாலே  உன்னைத் தேற்ற முடியாது. ஆனா உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சிகிட முடியும். ஏன்னா நீ என் பிள்ளை. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க கஷ்டம் அவங்க சொல்லி தான் தெரியுறதுன்னா அதை விட கேவலம், அவமானம் வேற எதுவுமில்லை.

நீ உன் தங்கச்சி, உங்க தம்பி எல்லாம் என் உடம்புல கொஞ்சம் பிஞ்சி எடுத்துட்டு பிறந்தவங்க தானே. எனக்குக் கை கால் வலிக்குன்னா யாராவது வந்தா சொல்றாங்க. நானா தெரிஞ்சிகிடுறது இல்லை.. அப்படி தான் உங்க கஷ்டம் வலியும்.

நானாத் தெரிஞ்சிகிடுறேன். எனக்கு உங்க யாரு மேலயும் கோபம் இல்லைடா. ஆனா நிறைய வருத்தம் இருக்கு. ஆதங்கம் இருக்கு. அது என் சுபாவம். எனக்கு நடந்ததை நான் யார்கிட்டேயும் சொல்லாம புத்து மாதிரி எனக்குள்ளேயே வளர்த்துகிட்டேன். புத்து வளர்ந்து என்னையை மூடிகிடுச்சி. அதுக்கு வேற யாரும் பொறுப்பில்லை.

சோமா. எனக்கு ஒரேயொரு ஆசைடா. நான் ஒரு கதை எழுதணும். சொன்னா  உனக்கு ஆச்சரியமா இருக்கும். நான் ஒரு கதை எழுதி அது கலைமகள்ல 1952வது வருசம் வெளியாகி இருக்குடா. கதைக்கு தலைப்பு பிராப்தம். அதுக்குப் படம் போட்டது யார் தெரியுமா. ஒவியர் சங்கர். என்ன அருமையா வரைஞ்சிருப்பார் தெரியுமா. எதுக்கு அந்தக் கதையை எழுதுனேன்னு தெரியலை. ஆனா அப்போ தான் கல்யாணம் ஆகி உங்க அண்ணன் பிறந்து இருந்தான். உங்க அப்பா வத்தலகுண்டில தாசில்தார் ஆபீஸ்ல வேலையா இருந்தார்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு லைப்ரரி. பகல்ல உங்க அப்பாவுக்கு தெரியாம அங்கே போயி காண்டேகர் எழுதுன புத்தகங்களை எடுத்துட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னைப் பத்தியே எழுதியிருக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ தான் மனசில ஒரு கதை தோணுச்சி. அதை காண்டேகர் கதை மாதிரியே பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையை எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலை.

அந்த லைப்ரரியன் கிட்டே கேட்டேன். அவர்தான் கலைமகளுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி முகவரி கொடுத்தார். அனுப்பி வச்சிட்டு மறந்துட்டேன். நாலு மாதம் கழிச்சி அது வெளியாகி இருந்துச்சி.  அச்சில என் கதையைப் பார்த்த சந்தோஷம் தாங்க முடியலை. உங்க அப்பா மதியச்சாப்பாட்டுக்கு வந்தப்போ அவர் கிட்டே பத்திரிக்கையை நீட்டினேன். நீ எழுதுனதானு கேட்டார். தலையாட்டினேன். சாப்பிட்டு முடிச்சிட்டு ஊஞ்சல் உட்கார்ந்து படிச்சார். பரிட்சை பேப்பர் திருத்திற வாத்தியார் முன்னாடி நிக்கிற பொண்ணு மாதிரி கையைக் கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தேன்.

உங்க அப்பா படிச்சி முடிச்சிட்டு ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு எழுந்து சமையற்கட்டுக்குள்ளே போனார் ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த கதையை கிழிச்சி அதுக்கு தீவச்சார். வேற ஒண்ணுமே பேசலை. அப்படியே போய் மாடில அவர் ரூம்ல போய் தூங்கப் போயிட்டார். எரிந்து கிடந்த காகிதத்தைப் பாத்துகிட்டே இருந்தேன். அழுகை முட்டிகிட்டு வருது. அவமானமா இருந்துச்சி, சாயங்காலம் அவர் வெளியே கிளம்பும் போது காபி கொண்டுவந்து வச்சிட்டு கதை பிடிக்கலையானு கேட்டேன்.

அவர் யாரைக் கேட்டுடி நீ கதை எழுதுனேனு கேட்டார்.

மனசுல தோணுச்சி எழுதுனேன்னு சொன்னேன்.

உனக்கு ஏதுடி பேனா. காகிதம், யாரு கொடுத்ததுனு கத்தினார் 

வீட்ல இருக்கிறதே உங்க பழைய பேனா. வெள்ளைக் காகிதம் நயினார் கடைல போயி வாங்கினேனு சொன்னேன்.

பகல்ல தனியா கடைக்கு வேற போயிட்டு வர ஆரம்பிச்சிருக்கியா, வேற என்ன திருட்டுதனம் பண்ணினே சொல்லு என்றபடியே உனக்கு இந்த கலைமகள்க்கு அனுப்பணும்னு ஐடியா  யார் சொன்னது என்று கேட்டார். நான் ஒளிக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

உங்கப்பா பல்லைக்கடித்துக் கொண்டு இப்பவே உங்க அப்பாவை வரச்சொல்லி தந்தி குடுக்குறேன்னு சொல்லி வெளியே கிளம்பி போயிட்டார். சொன்னது போலவே எங்க அப்பாவை தந்தி குடுத்து வரச் சொன்னார்.  எங்க அப்பா கோவில் கணக்குப்பிள்ளை, இயலாத மனுசன், அவரு மாப்பிள்ளை கோபமா இருக்காருனு தெரிஞ்சதும் என்ன செஞ்சார் தெரியுமா.

சாஷ்டாங்கமா உங்க அப்பா கால்ல விழுந்து கெட்டியாப் பிடிச்சிகிட்டு என் பொண்ணு செஞ்ச தப்பை மன்னிருச்சி ஏத்துக்கோங்கன்னு அழுதார்.

உங்க அப்பாவுக்கு அது போதலை. என்னாலே உங்க மக செஞ்ச தப்பை மன்னிக்க முடியாது. அவளை உங்க வீட்டுக்கு கூட்டுட்டு போயிருங்கன்னு சொல்லி என் புடவை பெட்டி எல்லாம் தூக்கி வெளியே வீசி எறிஞ்சார்.

அய்யோ அப்படி சொல்லாதீங்கனு எங்க அப்பா கோபத்தில் என்னை நாலு அறை அறைஞ்சி மாப்ளே கிட்டே மன்னிப்பு கேளுடி. இனிமே கதை எழுதுனே உன்கையை ஒடிச்சி மொண்டி ஆக்கிடுவேன்னு சொன்னாரு.

நானும் உங்க அப்பா கிட்டே மன்னிப்பு கேட்டு சத்தியம் பண்ணிக்குடுத்தேன, உங்க அப்பா என்னை ஏத்துகிட்டார். ஆனா எப்பவாவது கோபம் வந்தா நீ திமிர் பிடிச்சிப்போயி கதை எழுதுறவ ஆச்சே. இதையும் எழுதுடி என்று சொல்லிக்காட்டுவார்.

அதுல இருந்து வாரப் பத்திரிக்கை படிக்கிறதை எல்லாம் விட்டுட்டேன்.

ஆனா உங்க அப்பாவுக்கு தெரியாம மனசுக்குள்ளயே ஒரு கதையை எழுதிகிட்டு வர ஆரம்பிச்சேன். அந்த கதைக்கு தலைப்பு எல்லாம் கூட வச்சிருக்கேன். தலைப்பு என்ன தெரியுமா. பரமபதம்.  அதுல வர்ற பொண்ணு பேரு சரஸ்வதி. அது என்னோட கூட படிச்ச  ஒரு பொண்ணோட பேரு. அவளை ஸ்கூல்ல படிச்சதுக்கு அப்புறம் திரும்ப பார்க்கவேயில்லை.  ஆனா அவ முகம் மறக்கவே முடியலை. அதனாலே அந்தப் பெயரை வச்சிகிட்டேன்.

சும்மா இருக்கிற நேரம் எல்லாம் அந்தக் கதையை மனசுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே இருப்பேன். எங்கே மனசில இருக்கிற கதையை உங்கப்பா கண்டுபிடிச்சிருவாரோனு கூட பயமா இருக்கும். ஆனா அவர் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லை.

உங்க அப்பா எனக்கு நிறைய நகை வாங்கி குடுத்து இருக்கார். என் பேர்ல ஒரு வீடு வாங்கி குடுத்தார். வருசத்துக்கு ஒரு பட்டுபுடவை.. இஷ்டப்பட்ட கோவில்குளம் எல்லாம் கூட்டிட்டு போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்கு கட்டுபடுற நல்ல வேலையாள். அவ்வளவு தான்.

நீ சென்னைக்கு போயிட்டே உன் தம்பிகள் அவனவன் பாட்டை பாத்து ஆளுக்கு ஒரு திக்கு போயாச்சி, வீட்ல நானும் உங்க அப்பாவும் ரெண்டே ஆளு, பிள்ளைகள் இல்லாம வீட்ல தனியா இருக்கிறது கொடுமைடா, கிறுக்கச்சி மாதிரி நீங்க விளையாண்ட் சுவரை தொட்டு பாக்குறதும் படுத்த படுக்கையை தடவி பாக்குறதுமா இருப்பேன்,

ஏன்டி வீட்லயே இருக்கே,, வெளியே  எங்காவது கோவில் குளம்னு போயிட்டு வர்றதுன்னா போயிட்டு வானு உங்க அப்பா சொல்லிகிட்டே இருந்தார். வயசானதுக்கு அப்புறம் அவரு தப்பை உணர்ந்துகிட்டாருனு நினைக்கிறேன்.

எனக்குத் தான் வெளியே போகப் பிடிக்கலை.

செக்குமாட்டை அவுத்துவிட்டா அது எங்கே போகும். உங்க அப்பா இறந்து போனபின்னாலும்  என் கூடவே அவர் இருக்கிற மாதிரியே தான் இருக்கு.  என்  ரெண்டாவது கதையை எழுதி வெளியிடுறதுக்கு துணிச்சலே வரலை.

இனிமே நான் கதை எழுதி என்ன செய்யப்போறேன். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்கப்பாவுக்கு நான் எழுத மாட்டேனு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். அதை அவர் இல்லேங்கிறதுக்காக என்னாலே மீற முடியாது. அதனாலே சோமா உன்கிட்டே அந்தக் கதையை சொல்றேன்.

நீ எழுதி கலைமகளுக்கே அனுப்பி வச்சிரு. ஆனா உன் பேரு போட்டுக்கோ. ஏன்னா ஆம்பளைப்பசங்க கதை எழுதினா உங்கப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார்.  அந்தக் கதை  என் மனசில இருந்து ரொம்ப ரணப்படுத்துடா. ஒரு வேளை அதை சொல்லாமலே நான் செத்து போயிட்டா ஒரு கதை அநியாயமா என்னோடவே புதைஞ்சிபோயிரும்டா. அந்தப் பாவத்தை என்னாலே தாங்க முடியாது.

சோமா,  அந்தக் கதையை உன்கிட்டே சொல்லட்டும்மா. கவனமா கேட்டுகிடுறயா. நான் சொல்றதுல எதையும் மாத்திராதே.

பேருக்கு தான் அது கதை. ஆனா நடந்தது எல்லாம் நிஜம்.

கதைன்னாலே அப்படித் தானே.  கிட்டே வா. உங்கப்பா பக்கத்தில் இருந்து கேட்டுகிட்டு இருக்கப்போறார். என்றபடியே அம்மா தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்

 மருத்துவமனையில் ஒடும் மின்விசிறியின் சப்தம் மட்டும் சீரற்று கேட்டுக் கொண்டிருந்தது, அம்மா மௌனமாகிவிட்டிருந்தார்

அம்மாவினை எழுப்பி என்னம்மா கதை கிதைனு ஏதோ சொல்லிகிட்டு இருந்தியே என்னது அது என்று கேட்டேன்

கலக்கத்துடன கண்விழித்தபடியே தெரியலைடா மறந்துபோச்சி. ஞாபகம் வந்தா சொல்றேன் என்றாள்,

பிறகு அந்தக் கதையை அம்மா நினைவு கொள்ளவேயில்லை தான் இறக்கும்வரை   

•••


பெமினா ஆங்கில இதழின் புதிய தமிழ்பதிப்பு வெளியாகி உள்ளது, அதன் முதல் இதழில் வெளியான சிறுகதை.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 07:29:43 PM
கடவுளின் குரலில் பேசி

சிறுகதை


ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான்.

பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலரிடம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசிரியன் பலகாலமாக முயன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள்.

ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள்.

இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.

“என்ன நடக்கிறது இங்கே”

‘நாடகம்’

‘யார் எழுதியது’

‘யாரும் எழுதவில்லை’

‘பின்னே’

“அவர்களாக வருகிறார்கள், நடிக்கிறார்கள். சொல்லப் போனால் நீங்கள் இருவரும்கூட இரண்டு பாத்திரங்கள்” தான்.

“நாங்கள் விசாரிக்க வந்திருக்கிறோம்”

விசாரிக்கும் இரண்டு பாத்திரங்கள்”

‘நாங்கள் நினைத்தால் உன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், கைது செய்யக் கூட முடியும்’

‘நாடகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’

அவர்கள் அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள். சில பாத்திரங்கள் தங்கள் வேலைகளை விட்டு இதை வேடிக்கை பார்த்தன. காவலர்கள் பேசாமல் திரும்பிப் போய் விட்டார்கள். மறுநாள் மாலையிலும் வந்தார்கள். வந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருந்த ஒரு பாத்திரம் ஓடியபடியிருந்தது. இரண்டு அரசியல்வாதிகள் பேசிக் கொண்டார்கள். ஜானிடம் காவலர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருந்தது.

‘இது நாடகமில்லை. நீங்கள் எதிர்ப்பாளர்கள்’

‘தெரியவில்லை எனக்கு’

‘நீ என்ன செய்கிறாய்’

‘நாடகம் எழுதுபவன்’

‘இதன் முன்பு என்ன நாடகம் எழுதியிருக்கிறாய்.

‘சவரக் குறிப்புகள்’

அவர்கள் சிரித்துவிட்டார்கள். ஜான் திரும்பிப் பார்த்த போது சதுக்கம் எங்கும் ஆட்கள் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் குடைகளை விரித்த படி முன்னும் பின்னும் நடந்தார்கள். ஜான் காவலர்களிடம் திரும்பினான். அவனுக்கு அவர்கள் நாடகப் பாத்திரங்கள் போலவே தோன்றின. நாடகப்பாத்திரங்கள் சொல்லும் வசனத்தைத்தான் குறித்துக்கொள்ள வேண்டுமென முயற்சி செய்தான். காவலர்கள் விசாரித்ததை அவன் பேப்பரால் குறித்துக் கொண்டதை காவலர்கள் கண்டார்கள். காவலர்கள் அந்தப் பேப்பரை பிடுங்கிக் கொண்டார்கள். பின் அவனிடம் கேட்டார்கள்.

‘எங்கே அந்த நாடகப் பிரதி’

‘வீட்டில் இருக்கிறது’

‘வா, போகலாம்…’

‘நாடகம் இன்னமும் முடியவில்லை.’

காவலர்கள் சதுக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். சதுக்கம் எங்கும் வெளிச்சம் பரவியது. நேரமாகிக் கொண்டே போனது. சோடியம் விளக்கு எரிய துவங்கியது. அவரவர்களாக கலைந்து போகத் தொடங்கினார்கள். வெகு நேரம் வரை பேப்பர் வாசிப்பவர்களும் ஜானும் மட்டுமே இருந்தார்கள். கடைசியாக அவன் பேப்பரைச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஜானிடம் சொன்னான்.

“எவ்வளவோ நடக்கிறது வெளியே”

ஜான் அவனுக்கு பதில் சொல்லவில்லை. காவலர்களைக் கடந்து போகும் போது அவன் மாலை பேப்பரை ஆட்டி வணக்கம் வைத்துப் போனான். ஜான் மேஜையைத் திருப்பி ஒரு பழைய கட்டிடத்தின் உள் கொண்டு போய் போட்டு வைத்தான். காவலர்கள் அவனோடு வெளியே வந்தார்கள். ஜான் சிகரெட் பிடித்தான். அவர்கள் ஜானிடமிருந்து சிகரெட்டு வாங்கிக் கொண்டார்கள். பின் அவர்களில் ஒருவன் கேட்டான்.

“நாங்களும் இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் என்கிறாயா?”

“இருக்கலாம்”

“எனக்கு அப்படித்தான் படுகிறது”

மற்றொரு காவலர் முறைத்தார். உடனடியாகப் பதில் சொன்னார்.

நாம் எல்லா விபரங்களையும் சேகரித்து அனுப்ப வந்திருக்கிறோம். பாத்திரங்கள் அல்ல

“அப்படியானால் அங்கே நடந்தது நாடகல்ல.”

“பின் என்ன அது”

அவரவர் காரியங்களை அவரவர் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நமக்கு அலுப்பும் எரிச்சலும் வருகிறது. குறிப்பாக அந்தடைப்பிஸ்ட் கணக்குப் பார்ப்பவன், வாத்தியார், கேஷியர்.. சே..

நீ அவர்களோடு சேர்ந்து பேசுகிறாய்.

காவலர் என்பதும் பாத்திரம்தான்…

“உளறாதே, நீ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஆள். ஊழியன்

ஜான் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்தான். பின் அவர்களிடம் திரும்பிச் சொன்னான்.

“பாத்திரங்கள் பேசிக் கொள்வதுபோல நிஜ வாழ்க்கையில் கூட எவரும் பேசிக் கொள்வதில்லை… அற்புதம் மிக அற்புதம்.

“உளறாதே.. இது நிஜவாழ்க்கை.. உன் நாடகம் அல்ல. அத்தோடு நாங்கள் நடிகருமல்ல”

“நடிகர்கள் எப்போதும் நடிகர்களாகவே இருப்பதில்லை. அவர்களும் வீடு திரும்பி விடுகிறார்களே”

“எங்களைக் குழப்பி… நீ எங்களை உன் நாடகத்தில் நடிக்க வைக்க பார்கிறாய்.. அப்படித்தானே உன் வீடு எங்கே”?

ஜான் அவர்களிடம் பேசவேயில்லை. மூவரும் நடந்தார்கள். இருட்டடைந்த சந்துகள்; வெங்காய வாடைவீசும் தெருக்கள். நிழல்கள் சரிகின்றன. வெளிச்சம் மங்கி நிற்கும் வீடுகள். காரைகள்பெயர்ந்த குடியிருப்புகள். மரங்கள் கூட இலைகள் உதிர்ந்து நின்றன. நாய்கள் குரைக்காது பின்தொடர்கின்றன. தெருவை அடைத்தபடி கிடக்கும் கோவில்மாடுகள். யார் வீட்டிலோ கேட்கும் பாட்டுச்சத்தம். பிள்ளைகள் பாடம் வாசிக்கும் சப்தம். காவலர்கள் மீண்டும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“நாம் வீடு திரும்ப வெகு நேரமாகிவிடும்.”

அவர்களின் சலிப்புத் தாங்கமுடியாததாகியிருந்தது. ஜான் சிறிய ஓட்டுவீட்டில் இருந்தான் ஜானின் மனைவி உறங்கியிருந்தான். கதவைத் தட்டியதும் திறந்து வந்தாள். அவள் காவலர்களைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து லைட்டைப் போட்டுக் கேட்டாள்.

“இப்போதுதான் நாடகம் முடிந்ததா…”

“இன்னும் முடியவில்லை”

அவர்கள் யார்.. நடிப்பவர்களா…

நாடகப்பிரதிவேண்டி வந்திருக்கிறார்கள்..

அவள் மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துவந்தாள். பின் அவனைப்பார்த்துச் சொன்னாள்.

“உறக்கம் வருகிறது எனக்கு. சீக்கிரமாக அவர்களை அனுப்பு”

அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மரமேஜை கிடந்தது. பெரிய கிதார் ஒன்று. சில நாடகப் பொருட்கள், பேப்பர்கள், பூஜாடி, மீன் தொட்டி, காலி சிகரெட்பெட்டிகள், வர்ணக்காகிதங்கள். அவர்கள் இருவரும் ஸ்டூலில் உட்கார்ந்தார்கள். ஜான் பழைய பெட்டியில் தேடி நாடகப்பிரதியை எடுத்துவந்தான். பழுத்துப்போன காகிதத்தில் கறுப்பு மசியில் எழுதப்பட்ட நாடகம். அவர்கள் அந்தக்காகிதத்தை எடுத்துப்படித்துப்பார்த்தார்கள். பின் சுருட்டிக் கொண்டார்கள். ஜான் அவர்களுக்கு அந்த நாடகத்தைப் பற்றி விளக்கி பேசினான்.

‘மூன்று பாத்திரம் மட்டும்தான். ஒன்று கடவுள், மற்ற ஒன்று சவரக்காரன். மூன்றாவது நபர் காத்திருப்பவன்… நாடகம் கடவுளுக்கும் சவரம் செய்பவனுக்கும் நடக்கும் உரையாடல். உங்களுக்கே தெரியும் தானே… முகத்தில் மயிர் இருப்பது எந்தக் கடவுளுக்குத் தான் பிடிக்கும் சொல்லுங்கள். மழிக்கப்பட்ட கடவுள் முகம்தான் எல்லாருக்கும் வேண்டும்… இங்கே கூட அப்படித்தான். உங்களுக்குத் தெரியும்தான்’

அவர்கள் அவளிடம் உரக்கப் பேசினார்கள்.

நாங்கள் இதை நாடகம் போடக் கேட்கவில்லை… விசாரணைக்காகக் கேட்கிறோம்.. இதன் பிரதிகள் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்… நிச்சயம் உனக்குத் தண்டனை கிடைக்கும்.

இதை நானாக எழுதவில்லை. சவரம் செய்யும் இடத்தில் பேசிக்கொண்டவை. இவை நாவிதனின் வசனங்கள் நான் அவற்றைக் குறித்து வந்தேன்… அவ்வளவு தான்.

அவர்கள் திரும்ப ஒரு முறை பிரதியைச் சரிபார்த்துக் கொண்டார்கள். பின் அவர்கள் கிளம்பிப் போனார்கள். நள்ளிரவாதலால் தெருவில் ஜன நடமாட்டமில்லை. வெறிச்சோடிய தெரு. காவலர்களில் ஒருவன் பேசினான்.

“அந்த ஆளை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.”

“நமக்கு சம்பந்தமில்லாதது”

“நாளையும் நாம் சதுக்கத்திற்கு வரவேண்டுமா?”

“தினமும் நம் வேலை அதுதான்…”

ஞாயிற்றுக் கிழமையன்று ஜானின் நாடகத்தில் நூறு பேர்கள் நடித்தார்கள். இடைவிடாத சப்தம், கூக்குரல், நிறைய பெண்கள், பெண் பாத்திரங்களில் சில ஜானிடம் வந்து நின்று ஏங்கி கேட்டன.

காதல் நாடகம் எழுதேன் ஜான்.

எனக்குத் தெரியாதது அது.

ஜான் காதல் இல்லாத நாடகம் வேண்டாம்… இளம் உள்ளங்களை வதைக்கும் காதல் நாடகம் போடு ஜான்

மிகச் சிறந்த நடிகையாக இருக்கிறாய் நீ…

அந்தப் பெண் வெட்கப்பட்டாள் ஜானிடம் ஒருவயதான நபர் வந்து நின்று பேசினார்.

ஜான் என் கண்ணே… நான்தான் அப்பா…

யாருடைய அப்பா…

நாடகத்தில் வரும் அப்பா… நான். நீ நாடகங்களே பார்த்ததில்லையா..

இருக்கலாம்.

அப்பா பாத்திரம் ஜானை விட்டு விலகிப்போனதும் ஜான் காகிதங்களைப் புரட்டினான். கோழிமயிர்சொருகி, வைக்கோல் தொப்பி வைத்த பாத்திரம் ஒன்று மஞ்சள் சட்டையிட்டு கறுப்புப் பேண்ட்டை கால்வரை மடித்துவிட்டு, பழையகால பூட்ஸ்போட்டு, கிடாரோடு வந்து நின்று சிரித்தது. அவன் கிடாரிலிருந்து சப்தம் விநோதமாக வந்தது. அவன் ஜானிடம் மண்டியிட்டுக்கேட்டான். ஜான் என்பிரிய நண்பனே, நான் தான் சாகசக்காரன். கோமாளி, என் பாத்திரம் என்ன சொல் ஜான். அவனைப் பார்த்ததும் ஜானுக்குச் சிரிப்பு வந்தது.

உனக்கு எதற்குப் பாத்திரம். உன் சாகஸங்களை நீ காட்டுவது தானே உன் இயல்பு. உன்னை நான் பழைய நாடகங்களில் பார்த்திருக்கிறேனே என்றான். கிடாரிலிருந்து இனிய சப்தம் வர அவன் பேசினான். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா கப்பில் நாடகம் நடித்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் அவர் தான் நடித்தார். அவரிடம் ஹாம்லெட்டின் கத்தி இருந்தது. ஒத்தல்லோவின் கர்சீப் இருக்கிறது. நீண்ட கால் கொண்ட மதுக் கோப்பைகள் இருந்தன. ஒத்தல்லோவின் கர்சீப்பை தான் என் தாத்தா தலையில் கட்டிக்கொண்டு வருவார் ஒத்தல்லோ என்று கறுப்பனின் இசைப்பாடல் இதோ. படுவேகமாக வாசித்தான். கூட்டம் சிரித்தது. அவன் தன் வைக்கோல் தொப்பியை எடுத்துச் சுழற்றி வீசினான்.

ஜானின் பேனா பலவாறாக முயன்று புதிய நாடகம் எழுதப்பார்த்தது. யாருடைய கதையை நாடகமாக்குவது என யோசித்தான். சிறையில் இறந்து போன நாடகக் காரனைப்பற்றிய நாடகத்தை எழுதலாம் என நினத்தான். அவனுக்கு நாடகத்தில் கோரஸ்பாடுவது பிடித்திருந்தது. ஜானுக்கு கோரஸ் பாடல்கள் பிடித்திருந்தன. கோரஸ்காரர்கள் சுழன்று சுழன்று பாடும் நாடகம் எழுத விரும்பினான். சதுக்கத்தில் வெயில் மிஞ்சியிருந்தது. இன்றைக்கு நிறைய பாத்திரங்கள் நடிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். கடற்கரையில் உலவும் யானை என ஒருவன் அவனாக நினைத்துக் கொண்டு கைகளை உயரே தூக்கி பிளிறிக்காட்டி நடித்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வேடிக்கைப் பார்க்க குழந்தைகள் நிறைய வந்திருந்தன. அவை ஜான், ஜான் எனக் கூச்சலிட்டன. சிறு கண்ணாடி கொண்டு ஜான் மீது வெயிலைப் பாய்ச்சி கண்களைக் கூச வைத்தன.

ஜான் சதுக்கமெங்கும் அலைந்தான். அவ்வளவு பெரிய நகரத்தில் மக்கள் கூட்டம் நிறையவேயிருந்தது. எல்லாவற்றையும் ஆட்கள் விசாரித்தார்கள். ஜானிடம் அப்பா பாத்திரம் வந்தது.

ஜான்… ஆசிர்வதிக்கப்பட்ட மகனே… என்னை என்ன செய்யப் போகிறது… வயதான அப்பாவிற்கு தனிமை தானா.

நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை..

நீ நாடகம் எழுதுபவன், ஜான். நான் பாத்திரம்…. பலரின் நாடகத்திலும் வந்த பாத்திரம்…

நீங்கள் மட்டுமா…

நான் மட்டுமில்லை. அம்மா, அக்கா, காதலி, காதலன், நீதிபதி, அச்சுகா; பாலி எல்லாம் பாத்திரங்கள் என் ஜானே… நான்லியர்… எனக்கு மூன்றுபெண்கள் உண்டு.

நான் என்ன செய்ய வேண்டும்..

அப்பாவை எதிர்க்கும் மகன் நாடகம் எழுதாதே ஜான், அப்பா வயதானவர், நோயாளி சிடுசிடுப்பானவர். இப்படிவசனம் எழுதாதே ஜான்… அப்பா நல்லவர், , ஜான்.

போய்விடுங்கள் இப்போது நான் நாடகம் எழுத வில்லை.

ஜான் என்னை மறக்காதே.. ஜான்.. ஜான்.. பலகுரல்கள் கேட்டன. ஜான் மேஜைமீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் சிலர் கேலி செய்தார்கள். ஜான் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். நாயை வைத்துக் கொண்டு உலவும் ஒருவயதானவன் கூட இன்றைய நாடகத்தில் இருந்தான். ஜானிடம் ஒருவன் கேட்டான்.

இந்த நாடகத்தின் பெயரென்ன..

கூட்டம்

பேப்பர் வாசிக்கும் ஜான் பக்கம் திரும்பிக் கேட்டான்.

எங்கே நடக்கிறது கூட்டம். யார் பேசுகிறார்கள்?

தெரியவில்லை.

மாலைப்பேப்பரில் செய்திவரவில்லையே… இரண்டு காணாமல் போன பையன்கள் படம்தான் வைத்திருக்கிறது.

ஜான் காவலர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடன் வேறு ஒரு ஆள் வேறு வந்தான். அவன் உயர மானவனாக இருந்தான். அவர்கள் சதுக்கத்தின்பக்கம் வந்து நின்று கேட்டார்கள்.

ஜான் உன் நாடகத்தை நிறுத்து.

நான் எந்த நாடகமும் நடத்தவில்லை.

உன் கூட்டத்தை நிறுத்து.

அது என் வேலையில்லை… உங்களுடையது.

காவலர்கள் உரக்கக்கத்தினார்கள். சதுக்கம் விரைவில் காலியானது. உயரமான நபரின் கையில் நாடகப்பிரதி இருப்பதை ஜான் பார்த்தான். உயரமான நபர் மீசை மழிக்கப்பட்டு பெரியகண்களோடு இருந்தார். அவர் ஜானைப் பார்த்துக் கேட்டார்.

இது உன்னுடைய நாடகம்தானே.

இல்லை .. குறிப்பு…

சவரக்குறிப்பு… இதை நிகழ்த்திக்காட்டு… எதுவுமே புரியவில்லை வாசிக்க.

என்னிடம் நடிகர்கள் இல்லை.

எங்கே போனார்கள்.

நான் நடிகர்களைத் தேடுவதுமில்லை… அவர்கள் என்னுடன் நடிப்பதுமில்லை.

இப்போது என்ன செய்வது.

நீங்கள் நினைத்தால் நாம் மூவரும் நடிக்கலாம்… மூன்று பாத்திரங்கள்… நீங்கள் கடவுள் நான் நாவிதன்.. மூன்றாம் ஆள் காத்திருப்பவன்.

சதுக்கத்தில் பலர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜான் தன்னுடைய சட்டையை கழட்டிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்தான். அவன் எதிரில் இரண்டு கல்லை தூக்கிப்போட்டு அதிகாரியை உட்காரச்சொன்னான். மற்றொரு ஆள் தள்ளி நின்றான்.

ஜான் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான். அதிகாரியின் சட்டையும் கழட்டப்பட்டது. ஜான் அவருடைய முகத்தைக் கைகளால் தடவிவிட்டுக் கேட்டான்.

கடவுளே உங்கள் முகம்தான் எவ்வளவு வழவழப்பானது… நீங்கள்தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி.. ஜானின் நாடகத்தில் கடவுளுக்கு வசனம் இல்லை. கடவுளின் மொழி பற்றி யோசிக்க யோசிக்க யோசிக்க ஜானுக்குக் குழப்பமே மிஞ்சியது. அதனால் கடவுள் தலையை மட்டும் ஆட்டினார். காத்திருப்பவன்தான் அதிகம் பேசினான். காத்திருப்பவன் ஒரு கைதியைப்போல, குடும்பஸ்தனைப்போல கல்லூரி மாணவனைப்போல பல குரலிலும் பேசினான். ஜானின் கத்தி கடவுளின் கன்னங்களில் உரசியது ஜான் இப்போது நாவிதனாகவே மாறிப் போயிருந்தான். அவன் குரல் உயர்ந்து கேட்டது.

நீசத்தனமானவனே… உன் பெயர் கடவுளா… முட்டாள்.. சவரக்கத்தியின் முனையால் எந்த சரித்திரத்தையும் மாற்ற முடியும் ததெரியுமா.. உன் பெயர் என்ன? கர்னலா… சக்கரவர்த்தியா, எண்ணெய் வயலுக்கு சொந்தக் காரனா, உளவாளியா யாராயிருந்தாலும் சவரக்கத்தியின் நுனியில் உன் தலை எப்போதும் இருக்கிறது தெரியுமா…

காத்திருப்பவன் அவசரப்படுத்தினான்.

இன்னுமா சவரம் செய்கிறாய். நேரமாகிறது… சினிமா போகவேண்டும். காதலியைச் சந்திக்கவேண்டும்.. தப்பிக்கவேண்டும்.. வேகம்..

கடவுளகாக இருந்த அதிகாரியின் முகம் வெளுத்துக் கொண்டு வந்தது. சதுக்கத்தில் ஆட்கள் குறைந்து கொண்டிருந்தார்கள். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் ஜானின் கண்கள் மின்னின. அதில் இனம் புரியாத குரூரம் தோன்றுவதைக் கண்ட அதிகாரி சப்தமிட்டான். ஜான்… நாடகம் போதும்.. நிறுத்து

கடவுளுக்குப் பேச உண்மையில்லை.. இன்னமும் சவரம் பாக்கியிருக்கிறது. காத்திருப்பவன் ஜானின் முதுகில் அறைந்து பேசினான்.

கிழப்பிணமே.. அவசரமாக சிரைத்துவிடு.. அவசரம் ஜானின் கத்தி அதிகாரியின் தொண்டையின் கீழே போனது. ஜானின் கண்களை அவர் பார்த்தபடியிருந்தார். ஜான் சரால் என ஒரு இழு இழுத்தான். ரத்தம் பெருகியது காவலர்கள் தன்னிலை பெற்றார்கள்.

ஜான் .. டேய்… என்ன செய்கிறாய்.

அதிகாரி ஜானை எட்டி உதைத்தார். ஜான் தள்ளிப் போய் விழுந்தான். அவர்கள் ஜானை பிடித்துக் கொண்டார்கள். அதிகாரி  கர்சீப்பால் கழுத்தை ஒத்திக்கொண்டார். ஜான் முகத்தை உலுக்கிக் கேட்டார். ஜான் தலையை திருப்பாது சொன்னான்.

நாடகம் அது.

என்ன நாடகம்… மடையனே.. உன்விரல் நகங்களை பிடுங்கினால் தான் உனக்கு சொரனை வரும்.

அவர்கள் ஜானைத் தள்ளிக் கொண்டுபோனார்கள். ஜானின் மேஜை, பேப்பர் அப்படியே கிடந்தது. ஜான் தெருவில் நடக்கும் போது கூட நாடகத்தில் நடிப்பது போலவே அவனுக்குத்தோன்றியது உடன்வரும் மூன்று பாத்திரங்களுடன் தான் போவது போலவேயிருந்தது. ஒருவன் கையில் நாடகப்பிரதியிருந்தது. ஜான் முடிவடையாத தன் நாடகத்தை நினைத்துக்கொண்டே போனான். ரத்தம் வழிந்த இடத்தில் தீயாக எரிந்தது அதிகாரி புலம்பினான் , ஜானோ ஒரு நாடகப் பாத்திரம் போலவே மெதுவாக உடன் நடந்து போனான்.

••


(ஏப்ரல் 1993 வெளியான இந்த சிறுகதை மலையாளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது )
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 07:45:17 PM
வேனல்தெரு

சிறுகதை

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் ஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

 ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

 தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?

மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?


காலச்சுவடு-இதழ்19,1997
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 07:55:36 PM
வழி

சிறுகதை

வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது.

காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார். ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய யோசனையாக உருமாறியது. இருள் பம்மிய வீதியில் சைக்கிள் சென்றபடியிருந்தது. எல்லா வீடுகளும், தெருவும் மனிதர்களும் பார்த்து பழகின தொல்பொருள்களாகவே அவருக்குத் தெரிந்தன. மனது வாயு தொல்லைக்குரிய மருந்து, வீட்டு வாடகை, வரப்போகும் அம்மன் கொடை என உருமாறி சுழன்று கொண்டே வந்தது. கல் பரவின தெருக்களில் சைக்கிள் போகும்போது நாய்கள் விழித்துக்கொண்டன.

கடலைக்காரத் தெருவைக் கடந்து வலப்பக்கமாக திரும்பினார். நீண்ட தானாக்கார வீதி தெரிந்தது. குளிர்கால இரவென்பதால் ஜன்னல் மூடப்பட்ட வீடுகள் ஈரமேறியிருந்தன. தானாக்கார தெருவை கடக்கும் முன்பே அடுத்தது வாடியான் தெரு, அடுத்து ஒரே சந்து, பிறகு நந்தவனம் என மனம் முந்தியது. சைக்கிள் வாடியான் தெருவுக்குள் நுழைந்தது. மிகக்குறுகலான தெரு. அதன் முதல் வீடாகயிருந்தது பச்சைப் பெயிண்ட் அடித்த வீயெஸ்வி வீடு. தாண்டினால் வரிசையாக இருப்புறமும் வீடுகள். யோசித்தபடியே பரிச்சயமான அத்தெருவினுள் போய்க்கொண்டிருந்தார்.

தெருவின் கடைசி வீடு காரையார் வீடு. கம்பியிட்ட திண்ணையும் ஆறுபடிகளும் கொண்டது. வலப்புறமாகத் திரும்பினால் சுப்பையாக்கோனார் சந்து. அதன் முடிவில் திலாக்கிணறு உள்ள நந்தவனமிருந்தது. சைக்கிளில் காரையார் வீட்டை கடக்கும்போது பார்த்தார். விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. எதையோ யோசித்தபடி வலப்பக்கம் சைக்கிளை திருப்பி மிதித்தார். சைக்கிள் வீயெஸ்வி வீட்டை கடந்து சென்றது.

ஒரு நிமிஷ நேரம் திகைத்தவராக சைக்கிளை மெதுவாக ஓட்டினார். சைக்கிள் வாடியான் தெருவுக்குள்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போதுதான் இதைக்கடந்து போனோம் எனத் தோணியது. ஒரு வேளை கடந்து போகவில்லையோ, எதோ யோசனைதான் கடந்ததாக நினைக்கச்செய்துவிட்டதோ என சுயசமாதானம் கொண்டவராக காரையார் வீட்டைக் கடந்தபோது அதே விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வலப்பக்கம் சைக்கிளை திருப்பி ஓட்ட வீயெஸ்வி வீட்டு முன்பு திரும்பி ஊர்ந்தது. வாடியாள் தெரு தாண்டினால் சுப்பையா கோனார் சந்தல்லவா வர வேண்டும் ?

இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா ? இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவிளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை.

இது எப்படி சாத்தியம் ? தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன ? தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் ? திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா ? அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா ? யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க முடியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது.

துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது.

யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா ? யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா ? கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது.

கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார்.

வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் ? நினைத்தவுடனே என்ன சொல்லி உதவி கேட்க என்ற யோசனையும் தோண மெளனமாகி கொண்டார். தன் வாழ்நாள் முடியப் போகிறதோ. ஸர்ப்பம் போல தெரு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டிருக்கிறதா. எழுந்து நடந்து தெருமுனைவரை சென்றார். சுப்பையாக் கோனார் சந்து புலப்படவில்லை. தெருவின் வட்டம் சுருங்கிக் கொண்டே வந்து நத்தைகூடு போல ஆகிவிடக்கூடுமோ, என்ன இழவு யோசனைகள் என விரல்களை இறூக்கிக்கொண்டார். பள்ளத்தை தாண்டி குதிப்பதுபோல இருளைத்தாண்டி குதித்தால் அடுத்த தெருவந்துவிடாதா. உடல்வலியுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். வேகமாக இருளில் தாவிக்குதித்தார்.

எதன் மீதோ மோதி அவர் கீழே விழும் சப்தம் அதிர்ந்தது. வீழ்ந்த இடத்தில் கை ஊன்றி தலை தூக்கிப் பார்த்தார். காரையார் வீட்டில் லைட்டைப் போட்டுக்கொண்டு யாரோ கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்து கொண்டு வாடியான் தெருவில் இறங்கி, கையில் இருந்த குப்பைக்கூடையுடன் வலப்பக்கம் மெதுவாக திரும்பி இருளில் நடந்து அவர் வீழ்ந்து கிடந்த இடத்தருகே வந்து குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு அவரைப் பார்க்காது திரும்பிப் போனாள். அவர் உடனே தெருவை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே சுப்பையாக்கோனார் சந்து என்ற பெயர் தெரிந்தது.

**


திண்ணை இணைய இதழில் வெளியானது
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 09:09:36 PM
மிருகத்தனம்

சிறுகதை

அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமணமாகி வரும்வரை அவள் நாய் வளர்த்ததில்லை. ஆனால் அவளது கணவன் ராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருந்தது. பெங்களுரில் பிரம்மசாரியாக தனியே வசித்த போது கூட இரண்டு நாய்கள் வளர்த்தாக சொல்லியிருக்கிறான்.

அவர்களது திருமணபரிசாக ஜோசப் தயாளன் தந்தது தான் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட். இரண்டு மாத குட்டியாக இருந்தது . அதற்கு நோவா என்று பெயர் வைத்தது கூட ராஜன் தான். தினசரி குளிக்க வைப்பது, இறைச்சி, பிஸ்கட் வாங்கி போடுவது. நடைபயிற்சிக்கு கூட்டி போவது என்று ராஜன் அதன் மீது மிகுந்த நெருக்கத்துடனிருந்தான். ஜெர்மன் ஷெப்பர்ட்டால் வெக்கை தாங்கமுடியாது. அதற்கு இரவில் குளிர்ச்சி தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் படுக்கை அறையின் ஒரத்திலே வந்து படுத்து கொள்ளும். அந்த அறையில் மட்டும் தான் குளிர்சாதன வசதியிருந்தது.

பலநேரங்களில் அவனோடு உடலுறவு கொள்ளும்போது நாய் அவளை பார்த்து கொண்டிருக்கிறதோ என்று சியாமளாவிற்கு தோன்றும். இருளில் நாய் சலனமில்லாமல் கிடப்பது தெரிந்த போது அந்த கூச்சம் மனதில் மூலையில் அகலாமலே இருந்தது. அதை ராஜன் கண்டு கொண்டதேயில்லை.

அதனால் தானோ என்னவோ அவளுக்கு நோவாவை பிடிக்காமலே இருந்தது. சில நேரங்களில் அலுவலகம் விட்டு அவனுக்கு முன்னால் சியாமளா வீடு வந்த போது நோவா வேகமாக வந்து அவள் மீது தாவி ஆசையோடு நக்க துவங்கும். அவள் எரிச்சல் அடைந்தபடியே அதை விலக்குவாள். கடுமையாக திட்டுவாள்.

அந்த நாய்க்கு ஆங்கிலம் பழகியிருந்தது. அவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டார்கள். கோபம் அதிகமான நேரங்களில் மட்டுமே ராஜன் தமிழில் கத்துவான்.   எந்த மொழியில் பேசினாலும் நாய்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்க போகிறதா என்ன? அந்த நாயின் மூதாதையர்கள் வேட்டைக்கு பிரசித்தி பெற்றவர்கள் என்றும், பனிபிரதேசங்களில் வாழ்ந்து பழகியவர் என்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி ராஜன் நிறைய சொல்லியிருக்கிறான்.

ஏன் இப்படி தன்னைப் போல அதுவும் தன் பூர்வீகம் மறந்து இப்படி தங்கள் வீட்டில் வந்து அடைபட்டு கிடக்கிறது என்று தோன்றும் நிமிசங்களில் அதன் மேல் ஒரு பரிவு உண்டாகும். நாயை தடவி கொடுப்பாள்.

ராஜன் அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அந்த நாயோடு சேர்ந்தே தானிருப்பான். அவன் டிவி பார்க்க துவங்கும் போது அது காலடியில் படுத்து கொள்ளும். அவன் உற்சாகமாக கைதட்டி விளையாட்டினை ரசிக்கும் போது அதன் முகத்திலும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கும். ராஜன் அலுவல பயணமாக கிளம்பும் நாட்களில் நோவா பரிதவிக்க துவங்குவத கண்டிருக்கிறாள். அது தன்னை விடவும் அவன் மீது அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருக்கிறதோ என்று கூட தோணும்.  நாயோடு உளள் உறவை பொறுத்தவரையில் ராஜன் அருமையான மனிதன் தான். ஆனால் அவளால் தான் அவனோடு சேர்ந்து வாழ முடியாமல் போயிருந்தது.

அவர்கள் திருமணமாகி ஒன்றரை வருசத்திற்குள் பிரிந்து விட்டார்கள். அவன் அதே நகரில் வேறு அலுவலகத்திற்கு இடம்மாறி போய்விட்டான். எப்போதாவது அவளிடம் தொலைபேசியில் பேசுவதுண்டு.  அவர்கள் பிரியும் நாளில் அவள் தான் நோவா தன்னிடம் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டாள். சில நாட்களிலே வேலை வீடு என்று தனித்து வாழ பழகிய அவளுக்கு நோவாவை கவனிப்பதும். அதோடு பேசுவது. அதை கட்டிக் கொண்டு உறங்குவது மட்டுமே இயல்புலமாக இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாகவே நோவா குலைப்பதில்லை என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். கடைசியாக நோவா எப்போது குரைத்தது. யோசிக்கையில் மனதில் அப்படியொரு நாள் தென்படவேயில்லை. அறியாத மனிதர்கள் வரும்போது ஒடி அவர்களை வழிமறிக்கிறதே அன்றி அது கத்துவதேயில்லை. ஏன் இப்படியிருக்கிறது என்று அவள் கவனிக்க துவங்கினாள்.

 நோவா அந்நியர்களை கண்டுமட்டுமில்லை. எதற்குமே சப்தமிடுவதேயில்லை. அதன் முகத்தில் தீர்க்கமுடியாத துயரொன்று படர்ந்திருந்தது. அதை கலைப்பதற்காக அவள் புத்தகம் ஒன்றால் அதை அடித்து கூட பார்த்துவிட்டாள். அது சப்தமிடவேயில்லை. எதற்காக இந்த உக்கிரமௌனம். உலர்ந்த காயம் போல அதன்குரல் ஒடுங்கி போயிருக்கிறதா?.

நாயின் மௌனத்தை அவளால் தாங்க முடியவேயில்லை. சில நாட்கள் அவள் பாதி உறக்கத்தில்  விழித்து பார்த்த போது நோவா இருட்டிற்குள்  உட்கார்ந்திருப்பது தெரியும். எழுந்து அதை தன்னோடு இறுக்க கட்டிக் கொண்டு என்னடா வேணும் என்பாள். அதன் காதுகள் விடைத்து கொள்ளும். கண்களில் பரிவு கசியும். அவள் நாயின் ரோமங்களை நெற்றியை தடவி விட்டபடியே இருப்பாள். ஏன் இந்த நாய் தன் இயல்பை மறந்து இப்படியிருக்கிறது என்று யோசித்து கொண்டேயிருப்பாள்.

தெரிந்தவர்கள். நண்பர்கள் பலரிடமும் அதை எப்படி சரி  செய்வது என்று கேட்டாள். இதற்காகவே நோவாவை கடற்கரைக்கு அழைத்து போனாள். சில வேளைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளுக்கு கூட அதை கூட்டி சென்றாள். செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயை வைத்து அதன்மீது தண்ணீரை பாய்ச்சி விளையாடினாள். அது துள்ளியது. தாவியது. ஆனால் சப்தமிடவேயில்லை. குரைக்காத நாயாக இருப்பது அவளுக்கு குற்றவுணர்ச்சி தருவதாக இருந்தது.

இதற்காகவே ஒரு முறை மணவிலக்கு பெற்று பிரிந்த ராஜனை தேடி போய்  நோவாவை பற்றி பேசினாள். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் விசித்திரமானவை. அதை கையாளுவது எளிதில்லை. உன்னால் அதை வளரக்க முடியாது. விற்றுவிடு என்று ஆலோசனை சொன்னான். அவள் அப்படியில்லை. உன்னை பிரிந்திருப்பது தான் காரணமாக இருக்க கூடும். சில நாட்கள் அதை உன்னோடு வைத்திருந்து பார் என்றாள். அவனும் பார்க்கலாம் என்றான்.  மறுநாள் அவளே ராஜன் தங்கியிருந்த குடியிருப்பில் நோவாவை கொண்டு போய்விட்டு வந்தாள்.

மூன்றாம் நாள் ராஜன் போன் செய்து நோவா ரொம்பவும் மாறிவிட்டது. அவள் சொன்னது போல அது கத்துவதேயில்லை. அது சுவரை வெறித்து பார்த்தபடியே இருக்கிறது. நாய்களை புரிந்து கொள்ள முடியாது. அதன் கண்களில் வெறுப்பு பீறிடுகிறது. நீயே வந்து கூட்டி போய்விடு என்றான்.

அன்றிரவு நோவாவை வீட்டிற்கு கூட்டி வந்து நெடுநேரம் அதோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் ராஜனை காதலித்த கதையை அதற்கு சொல்லிக் கொண்டிருந்தாள். நோவா தலைகவிழ்ந்தபடியே இருந்தது. மறுபடி சொல்லும் போது யாருக்கோ நடந்த  கதை ஒன்றை போலிருந்தது. இவ்வளவிற்கும் அது என்றோ நடந்த விசயமில்லை. இரண்டு வருசங்களுக்குள் தானிருக்கும்.

அப்போது தான் சியாமளா அலுவலகத்திற்கு பெங்களுரில் இருந்து ராஜன் வந்திருந்தான். அனிருத்தாவின் பிறந்த நாள் பார்ட்டியின போது தான் அவர்கள்  நிறைய பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு சியாமளாக தான் அவனை பிடித்திருப்பதாக முதலில் தெரிவித்தாள்.

ஒரு வேளை  பதவி உயர்வில்  தான் அமெரிக்கா போவதாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள இரண்டு ஆண்டுகள் ஆகும் பரவாயில்லையா என்று ôஜன் கேட்டான். அவள் தானும் அமெரிக்கா வந்துவிடுவதாக சொன்னாள்.

அவர்கள் அதிகம் காதலிக்கவில்லை. இரண்டு முறை ஒன்றாக திரைப்படம் பார்த்தார்கள். ஒரு முறை ஒன்றாக உடன்வேலை செய்யும் திருமுருகனின் திருமணத்திற்காக பாபநாசம் சென்றார்கள்.  அன்று ராஜன் அருவியில் குளிக்கவில்லை. திரும்பி வரும்போது அவளோடு ரயிலில் சீட்டு விளையாடினான். பொதுவில் அவன் அதிகம் கலகலப்பில்லாதவன் என்று தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளோடு நெருக்கமாகவும், வேடிக்கையாகவுமே ராஜன் பேசினான்.

சியாமளாவிற்கு முன்பாகவே அவளது தங்கை சித்ராவிற்கு திருமணமாகியிருந்தது. அவள் இரண்டு வருசங்கள் ஆஸ்திரேலியாவில் உயர்படிப்பு படிக்க போன காலத்தில் அது நடந்திருந்தது. அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வேலைக்கு போன போது சியாமளாவின் மனதிற்குள் தனக்கு முன்பாக சித்ரா திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் தானிருந்தது.

ஒவ்வொரு முறை தங்கையை பார்க்கும் போது அவள் அப்போது தான் புணர்ச்சியிலிருந்து எழுந்து வந்திருக்கிறாள என்பது போல மனதில் தோன்றுவதை சியாமளாவால் கட்டுபடுத்தவே முடியவில்லை. அதற்காகவே சியாமளா வேகமாக திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களாகவே திருமணத்திற்கான நாளை குறித்தார்கள். உடைகள், நகைகள் வாங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு குடியேற போகும் புதிய வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகம் நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். ராஜன் அன்று மிகுந்த பதட்டத்துடன் இருந்தான் என்பது அவனது முகத்தில் துல்லியமாக தெரிந்தது.
முதலிரவிற்காக கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்கள். உடற்கிளர்ச்சிகள் ஆவேசமாக துவங்கி அரைமணி நேரத்திற்குள் அடங்கிவிட்டிருந்தது. ராஜன் தனது லேப்டாப்பில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். படுக்கையில் கிடந்தபடியே அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அவன் கேசத்தை கோதின. அவன் விரல்களை விலக்கிவிட்டு டெலிபோனை எடுத்து தனக்கு பசிப்பதாக சொல்லி சான்ட்விட்ச் ஆர்டர் செய்வதாக சொன்னான்.

அவள் சற்றே எரிச்சலுற்றபடியே தான் உடையை மாற்றிக் கொள்வதாக சொல்லி குளியலைறைக்குள் சென்றாள். அவன் தனது போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான்.  அவள்  கதவை திறந்து வெளியே வந்து கடற்காற்றை பார்த்தபடியே இருந்தாள். ராஜன் வெளியே வரவேயில்லை.
அலை இருளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து கொண்டிருந்தது. அவள் சப்தமாக கடற்கரை மணலில் நிற்கலாமா என்று ராஜனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் வேண்டாம் என்றபடியே கதவை திறந்து வைத்தால் ஏசி வீணாகிவிடும் என்று சொன்னான்.

அவள் தன் கன்னிமை இழந்த நாளின் இரவு வானத்தை பார்த்து கொண்டிருந்தாள். நிறைய நட்சத்திரங்கள் இருந்தன. அவள் நிறைய கற்பனை செய்திருந்தாள். அவை கால்சுவடுகளை அலை கரைத்து அழிப்பதை போல கண்முன்னே மறைந்து போய்விட்டன. இனி அந்த நிமிசங்கள் திரும்பிவராது.
அவள் நட்த்திரங்களை பார்த்தபடியே அவன் தன்னை முத்தமிட்டானா என்று யோசித்து கொண்டிருந்தாள். ஒரேயொரு முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவு பொட்டலத்தை சுற்றி கட்டப்பட்ட நூலை அவிழ்ப்பவனின் அவரசம் போன்றே இருந்தது. அவள் நிறைய முத்தங்களை அவனுக்கு தந்தாள். அவன் அந்த அளவு திரும்பி தரவில்லை. அவர்களை மீறி உடல்கள் ஒன்றையொன்று சேர்ந்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொண்டன. அவ்வளவுதானா என்பது போலிருந்தது. அன்று தான் திருமணவாழ்க்கை துவங்கியிருக்கிறது என்று அவள் சுயசமாதானம் கொண்டாள்.

ஆனால் நாட்களின் போக்கில் ராஜன் சாப்பாடு, பணம், அதிகாரம் இந்த மூன்றை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். வார விடுமுறை நாட்களை பியர் குடிப்பதற்கு மட்டுமேயானதாக கருதினான். உடைகளில் அவனுக்கு விருப்பமேயில்லை. ஏதாவது ஒரு உடையை அணிந்து கொண்டு அலுவலகம் வந்துவிடுவான். அவனுக்கு தன் வருமானத்தை போல இன்னொரு வருமானம் தேவையானதாக இருந்தது. அதற்காகவே அவளை திருமணம் செய்து கொண்டதாக வெளிப்படையாக சொன்னான்.

அவர்கள் சண்டையிட்டார்கள். விட்டுகொடுத்து சமாளித்துவிடலாம் என்று முயன்று பார்த்தாள். அந்த பிளவை சரிசெய்யவே முடியவில்லை. முடிவாக ராஜன்  தன் சேமிப்பில் இருந்து எதையும் அவள் எதிர்பார்க்காவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம் என்று சொன்னான். அப்படியே ஆனது. அவள் அலுவலகம் அருகிலே இடம் மாறி போனாள். ஊருக்கு போவதோ. அப்பா தங்கைகளை காண்பதையோ குறைத்து கொண்டாள்.  பெரும்பான்மை நேரங்களில் உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டு பசியை கடந்து சென்றாள்.

 பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் உடல் கிளர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்து இருளை பார்த்தபடி இருந்தாள். என்ன பிடிப்பில் தான் இப்படி நாட்களை கடந்து  கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். அது போன்ற நேரங்களில் அவளை விடவும் அந்த நாயின் மீது அவளுக்கு அதீதமான துக்கம் வந்து சேரும்
நாயின் வாழ்க்கையை பத்தோ,பனிரெண்டோ வருசங்கள் தான் அதற்குள் யாருக்கோ விசுவாசமாக இருந்து. யாரையோ அண்டி வாழ்ந்து. எங்கோ வழியில் கண்ட இன்னொரு நாயுடன் கலவி கொண்டு தன் இச்சைகளை தீர்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை வீடெங்கும் வழிய விட்டு என்ன வாழ்க்கையிது.

 நாய்கள் ஏன் மனிதர்களோடு இவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கின்றன. தன் மூதாதையர்களை போல வேட்டையாடவோ. பனியில் தனித்து அலைந்து திரியவோ. அடிவானத்து சூரியனை பார்த்து குரைக்கவோ ஏன் இந்த நாய்கள் முயற்சிப்பதேயில்லை.

அதன் மனதில் அந்த நினைவுகள் துடைத்தெறியப்பட்டதை எப்படி இயல்பாக எடுத்து கொண்டன. இல்லை ஒருவேளை இன்றும் அதன் கனவில் பனிபொழியும் நிலமும், துரத்தியோடும் வேகமும் இருந்து கொண்டுதானிருக்குமா? தான் அலுவலகம் போன பிறகு நாள் எல்லாம் அந்த நாய் வீட்டின் சுவரை வெறித்தபடியே என்ன நினைத்து கொண்டிருக்கும். தன்னை ஏன் இப்படி நாய்கள் வருத்திக் கொள்கின்றன. அவள் அந்த நாய்க்காக வேதனை கொள்வாள். அப்போதும் கூட தன்னால் ஒரு போதும் அதன் நிஜமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றும்.


நாய்களின் மௌனம் இத்தனை வலிமையானது என்பது அவளை அப்போது தான் அறிந்து கொள்ள துவங்கினாள். தொண்டையை விட்டு கிழே இறங்காமல் எதை விழுங்கி கொண்டாய் என்று பார்த்தபடி இருப்பாள். நோவாவின் காதுகள் அசைந்து கொண்டேயிருக்கும். பற்களை தவிர நாய்களின் உடல் ரப்பரை போன்று மிருதுவானவை. அவை குழந்தைகளின் வெதுவெதுப்பை கொண்டிருக்கின்றன. அதன் நாக்கு தான் ஒய்வற்று துடித்து கொண்டிருக்கிறது. அந்த நாக்கு மொழியற்றது. எதையோ சொல்ல முயன்று வாழ்நாள் எல்லாம் தோற்று போய்க் கொண்டிருக்கிறது போலும்.

**
மருத்துவமனை மிக சுத்தமானதாக இருந்தது. மருத்துவர் அவளை விடவும் வயதில் இளையவராக இருந்தார். அவர் நோவையை பரிசோதனை செய்துவிட்டு அது ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லியபடி அவளது பிரச்சனை என்னவென்று விசாரித்தார். நோவா குரைப்பதேயில்லை என்றாள். அவர் சிரித்தபடியே நல்லது தானே என்றார்.

இல்லை அது திடீரென குரைப்பதை நிறுத்தி கொண்டுவிட்டது என்று சொன்னாள். அவர் நாயின் அருகில் சென்று அதன் குரல்வளையை தன் கைகளால் பிடித்து பார்த்தார். அது சப்தமிடவில்லை. சிறிய டார்ச் லைட்டால் அதன் வாயை பரிசோதனை செய்தார். பிறகு வியப்புடன் குரல்வளையில் எந்த பிரச்சனையுமில்லை. ஏன் அது கத்துவதில்லை என்று அவளிடமே திரும்ப கேட்டார். அவள் எப்போதிருந்து அது குலைக்கவில்லை என்று தனக்கு தெரியவில்லை என்றும் கடந்த சில வாரங்களாகவே அப்படிதானிருக்கிறது என்றாள்

மருத்துவர் அந்த நாயின் வயதை விசாரித்தார். இரண்டரை இருக்கும் என்றாள். அந்த நாய் இதுவரை ஏதாவது பெட்டைநாயோடு பழகியிருக்கிறதா என்று கேட்டார். இல்லை அது தன் வீட்டிற்குள்ளாகவே வளர்கிறது என்றாள் சியாமளா. ஒருவேளை பாலுணர்ச்சி காரணமாக நாய் கத்தாமல் இருக்க கூடும் என்றபடியே அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்றார். ஒரு பெட்டை நாயை எப்படி கண்டுபிடிப்பது. எப்படி அதை இதோடு பழக விடுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

அவர் தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து இவர்களை பார்த்தால் இந்த நாய்க்கு பொருத்தமான பெண்நாயை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று சொன்னார். எப்போது அங்கே தான் போவது என்று மருத்துவரிடம் கேட்டபோது அதற்கும் முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்றார்

அங்கிருந்தபடியே அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மறுநாள் மதியம் மூன்று மணிக்கு அழைத்து வரும்படியாக முன்பதிவு செய்து கொண்டாள். அடுத்த நாள் நாயை வீட்டிலிருந்து கூட்டி போகும் போது அவளுக்கு  கூச்சமாக இருந்தது.  முதன்முறையாக நோவா ஒரு பெண்ணை அடைய போகிறது. அவளை நோவாவிற்கு பிடித்திருக்குமா. எளிதாக அதன் பாலுணர்ச்சியை தீர்த்து கொண்டுவிடுமா. அவன் குழப்பமான யோசனைகளுடன் நாயை அழைத்து கொண்டு சென்றாள்.

அது நாய்களுக்கான பிரத்யேக பொருள்விற்பனையகமாக இருந்தது. அந்த வீட்டில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் மட்டுமே இருந்தார். நோவாவிற்கு இணையாக போகிற பெண் நாய் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடக்கூடும் என்றார். அவள் நோவாவோடு காத்து கொண்டிருந்தாள்.

நீல நிற சான்ட்ரோ கார் ஒன்றிலிருந்து இன்னொரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் இறங்கியது. அது தனது நோவாவை விடவும் பருத்திருந்தது. அந்த நாயை அழைத்து கொண்டு வந்த ஆள் நோவாவை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். நோவா அந்த பெண் நாயின் பக்கம் திரும்பவேயில்லை. இரண்டையும் ஒன்றாக விட்டபோதும் கூட அது விலகி விலகி வந்தது. பெண் நாயின் உரிமையாளன் தனக்கு தெரிந்த வழிகளை முயற்சித்து நோவை ஈர்க்க முயற்சித்தான். நோவா வாலை அசைத்தபடியே ஒடி அவள் அருகில் வந்து நின்று கொண்டது. அதற்கு பால்கிளர்ச்சிகளே இல்லை போலும்.

பெண் நாய் அதை கண்டு சப்தமிட்டது. ஆனால் நோவா சப்தமிடவேயில்லை. அரைமணி நேர போராட்டத்தின் பிறகு பெண் நாயை கூட்டிக் கொண்டு அந்த ஆள் கிளம்பி போனான். அவள் நோவாவை திரும்ப ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தாள். ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. வீட்டில் அன்று அவளும் சாப்பிடவில்லை. நோவாவிற்கும் எதையும்  கொடுக்கவில்லை.
தான் நோவாவை விட்டு பிரிந்துவிடுவதை தவிர வேறு வழிகள் எதுவுமில்லை என்று அவளுக்கு தோன்றியது. அதை தன்னோடு வைத்து கொண்டிருந்தால் தன் இயல்பு மாறிவிடுவதோடு நடந்து போன திருமண முறிவு மனதில் ஆறாத ரணமாகி கொண்டிருப்பதை அவள் உணர துவங்கினாள். இரண்டு நாட்கள் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்து விட்டு முடிவில் ஒரு ஏஜென்சியிடம் சொல்லி அதை விற்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

அவள் அலுவலகத்தில் இருந்த நேரத்தில் ஒரு பேராசியர் போன் செய்து அதை தான் வாங்கி கொள்ள விரும்புவதாக சொன்னார்.  அவள் நோவாவை பற்றி எடுத்து சொன்ன போது அவர் தனக்கு எழுபது வயதாகிறது என்றும் அதுவும் தன்னை போல வாயை மூடிக்கொண்டிருப்பதில் தனக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்றார். அவள் ஞாயிற்றுகிழமை காலையில் வீட்டிற்கு வரும்படியாக சொன்னாள்.

அந்த ஞாயிற்றுகிழமை அவள் நோவை குளிக்க வைக்கும்போது அதை விற்று விட்டதை பற்றி அதனிடமே சொன்னாள். அது காதை ஆட்டிக் கொண்டேயிருந்தது. பதினோறு மணி அளவில் பேராசிரியர் வருகை தந்தார். அவருக்கு நோவாவை பிடித்திருந்தது. அதை தான் வாங்கி கொள்வதாக சொல்லி அதற்கான காசோலையை அவளிடம் நீட்டினார். அவள் அன்று ஒரு நாள் மட்டும் தன்னோடு அந்த நாய் இருக்கட்டும் என்றபடியே தானே காலையில் அவர் வீட்டில் கொண்டுவந்துவிடுவதாக சொன்னாள்.

அவர் கிளம்பி போன பிறகு சியமளா  வெளியில் போய் சாப்பிடலாம் என்று அதை அழைத்து கொண்டு போனாள்.  பகலெங்கும் நகரில் அலைந்து திரிந்தாள். இரவு வீடு திரும்பும் போது நோவா எப்போதும் போல இருளில் படுத்து கொண்டது. அவள் அதை பார்க்க மறுத்து புரண்டு படுத்திருந்தாள். நாயின் கண்கள் இருளிற்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பிறகு தன்னை அறியாமல் விசும்பியபடியே எழுந்து அதை கட்டிக் கொண்டாள். நாயின் வெதுவெதுப்பு அவள் உடலெங்கும் நிரம்பியது.

என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியுதுடா. நான் நல்லவயில்லை.. செல்பிஷ் என்று அவள் ஆவேசத்துடன் புலம்பியபடி கட்டிக்  கொண்டாள். நாயின் நாக்கு  ஈரத்துடன் அவள் கைகளை தடவியது. அதன் பரிவை தாங்கமுடியாமல் அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். நோவா மௌனமாக காதுகளை அசைத்தபடியேயிருந்தது. இருவராலும் அவ்வளவு தான் செய்யமுடியும் என்பது  போலவே அவர்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தது அறையின் இருள்.

 ****


2009 தினமணி தீபாவளி சிறப்பிதழில் வெளியான சிறுகதை.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 01, 2013, 09:22:05 PM
புர்ரா

சிறுகதை

அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.


சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் திரும்ப திரும்ப கத்துவதை சகித்து கொள்ள முடியாமல் இருந்தது. கோபமான குரலில் என்னடி இது என்று கேட்டேன். அவள் அதற்கும் புர்ரா என்று கத்தினாள். உன்னை தான்டி கேட்குறேன். யார் கிட்டே இதை கத்துகிட்டே என்று கேட்டதும் அவள் உதட்டை கடித்தபடியே பேசாமல் இருந்தாள்.


அர்த்தமில்லாமல் உளறக்கூடாது புரிஞ்சதா என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டு என் அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது புர்ரா என்ற சப்தம் மறுபடி கேட்டது


தினமும் சுகு பள்ளியிலிருந்து எங்கள் இருவருக்கும் முன்பாக வீடு திரும்பி வந்துவிடுகிறாள். நான் வீடு வருவதற்கு ஐந்தரை மணியை கடந்து விடும். அதுவரை இரண்டு மணிநேரம் அவள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியோடு பேசிக் கொண்டோ, தன்நிழலோடு விளையாடிக் கொண்டோ தானிருக்கிறாள். சில நேரங்களில் அதை காணும் போது குற்றவுணர்ச்சி மனதில் உருவாகிறது. அதை வளரவிடாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் வேலைக்கு போவதால்  இதை தவிர்க்க முடியாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.


என் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்கிறாள். எனது அலுவலகமோ தரமணியில் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம். அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.


அவளை கவனிப்பதை இருவருமே தவிர்க்க முடியாத ஆனால் விருப்பமில்லாத வேலையை போலவே உணர துவங்கினோம். சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாலுôட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.


அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. சுகு எனது குழந்தை என்றபோதும் உறக்கத்தில் அது அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சில நாட்கள் தலையணையை வைத்து முகத்தை பொத்திக் கொண்டுவிடுவேன்.
உடல்நலமற்று சுகு வீறிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகும் இரவில் தூங்கமுடியாதபடி அவள் என்னை படுத்தி எடுப்பதாக மனதிற்குள் கடுமையாக திட்டியிருக்கிறேன்.

 குழந்தையை புரிந்து கொள்ள முடியாமல் நானும் மனைவியும் மாறிமாறி கத்தி சண்டையிட்டிருக்கிறோம். எதுக்காடி நீ பிறந்து என் உயிரை எடுக்குறே என்று ஒரு நாள் என் மனைவி சுவரில் தலையை முட்டிக் கொண்டு கத்தியபோது அவளை காண்பது எனக்கு பயமாக இருந்தது. குழந்தைகள் உண்மையில் விருப்பமானவர்கள் இல்லையா? தொல்லைகள் தானா?  எனக்கும் குழப்பமாக இருந்தது. அரிதான ஒன்றிரண்டு நிமிசங்களில் மட்டுமே சுகுவை காண்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுகு எங்கள் ஆற்றாமையோடு தான் வளர்ந்தாள்.


அவளது பிறந்த தின கொண்டாட்டங்களில் கூட எங்கள் இருவர் முகத்திலும் மறைக்க முடியாதபடி விருப்பமின்மை படர்ந்திருந்ததை புகைப்படங்களில் காணமுடிகிறது. அதை மறைக்க நாங்கள் இருவருமே அதிகம் நடிக்க கற்று கொண்டோம். சுகுவை மாறிமாறி முத்தமிடுவதை இருவரும் செய்த போது நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தி பல மாதகாலம் ஆகியிருந்தது ஏனோ என் நினைவில் எழுந்து அடங்கியது.


திருமணமான சில மாதங்களிலே முத்தமிடுவது அபத்தமான செயல்போலாகியிருந்தது. அதை காபி குடிப்பதை போல எந்த சுவாரஸ்யமற்ற செயலாக நாங்கள் மாற்றியிருந்தோம். குறிப்பாக அவளது கேசங்கள் மீது ஏனோ எனக்கு அசூயை உருவாகிக் கொண்டேவந்தது. முகத்தில் வந்து விழும் அவளது கேசத்தை விலக்கும் போது அதை பிடுங்கி எறிந்துவிடலாம் போன்ற ஆத்திரம் உருவாகி எனக்குள்ளாகவே அடங்கிவிடும்.


சமீபமாகவே சுகுவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுவிடுவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது சுகுவின் காரணமாக நாங்கள் சண்டைபோட்டுக் கொள்வதுண்டு.

சுகுவிற்கு எங்கள் சண்டையும் கூச்சலும் பழகிப்போயிருந்தது.
நாங்கள் சண்டையிடும் நாட்களில் சுகு எளிதில் உறங்குவதில்லை என்பதை கண்டுபிடித்திருக்கிறேன். சுகு உறங்கினால் மட்டுமே நானும் மனைவியும் உடலுறவு கொள்ள முடியும். அதுவும் பின்னிரவாகிவிட்டால் மறுநாள் வேலைக்கு போவதில் சிக்கல் உருவாகிவிடும். எங்கள் இச்சை அவள் மீது கோபமாக பலஇரவுகள் மாறியிருக்கிறது.


போர்வையை அவளது முகத்தில் போட்டு உறங்குடி என்று அழுத்தியிருக்கிறோம். சில நிமிசங்கள் அவளது கண்கள் மூடிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவள் பாதி கண்ணை திறந்து வைத்தபடியே குளிர்சாதன இயந்திரத்தில் மினுங்கும் எண்களை முணுமுணுத்த குரலில் எண்ணிக் கொண்டிருப்பாள்.


சுகுவிற்காக நாங்கள் கண்டுபிடித்த வழி இரவு விளக்கில்லாமல் அறையை முழு இருட்டாகிவிடுவது என்று. சில நாட்கள் அது எங்களுக்குள்ளே விசித்திரமான அனுபவமாக இருந்தது. அது எங்கள் படுக்கை அறை என்பது மறந்து பூமியின் ஆழத்தில் இரண்டு புழுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும்.


சுகு இருட்டிற்குள்ளும் விழித்துக்கொண்டிருக்க பழகியிருந்தாள். அவள் கண்கள் இருளை கடந்து பார்க்க பழகியிருந்தன. அவள் உதடுகள் உறங்க மறுத்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நாங்கள் அவளது முணுமுணுப்பினை சட்டை செய்வதேயில்லை. அவள் குரல் தானே ஒயும்வரை விட்டுவிடுவோம்.


சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம். சுவர்கள் ரோஸ் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. கண்ணாடி கதவுகள், மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போன்று இயல்பான துள்ளலுடன் நடந்து திரியும் சிறுமிகள். ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். பொம்மைகள். பள்ளியிலே மதிய உணவு தந்துவிடுவதால் சுகுவை கவனிப்பதற்கு நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை

. ஒரு நாள் கூட அவள் வகுப்பறைக்குள் போய் நான் பார்த்ததேயில்லை. ஏன் அப்படியிருந்தேன் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை.
சுகு பள்ளிக்கு போவதற்கு தயக்கம் காட்டவேயில்லை. அவள் தன்னுடைய அம்மா  அலுவலகம் கிளம்புவது போன்று பரபரப்பாக பள்ளிக்கு கிளம்புவாள். தானே குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு அம்மாவை போலவே லேசாக ஈரம் படிந்த தலையுடன் முகத்திற்கு திட்டு திட்டாக பவுடர் அப்பிக் கொண்டு நின்றபடியே சாப்பிட பழகியிருந்தாள். அப்படி சுகுவை காண்பது தன்னை பரிகசிப்பது போல என் மனைவி உணர்ந்திருக்க வேண்டும். ஏன்டி நின்னுகிட்டு சாப்பிடுறே.. உட்காரு என்று அழுத்தி பிடித்து உட்கார வைப்பாள்.


சுகுவின் முகம் மாறிவிடும். நீ மட்டும் நின்னுகிட்டு சாப்பிடுறே. நான் சாப்பிட்டா என்னவென்று கேட்பாள். சனியன் ஏன்டி உயிரை வாங்குறே. உன்னோட சண்டை போட்டுட்டு இருந்தா. ஆபீஸ் அவ்வளவு தான் என்று அவசர அவசரமாக டிபன் பாக்ûஸ பைக்குள் திணித்து கொண்டிருப்பாள்.  சுகுவை பள்ளி பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பது எனது வேலை. அது வரும்வரை நானும் சுகுவும் மாடி ஜன்னலில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்போம்

சுகு சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிக் கொண்டிருப்பாள். அவள் என் மகள் தானா என்று ஏனோ சந்தேகமாக தோன்றும். பள்ளி பேருந்தை கண்டதும் தாவியோடுவாள். பேருந்தில் ஏறியபிறகு கையசைப்பதோ, விடைபெறுவதையோ ஒரு நாளும் அவள்  செய்வதேயில்லை.


என் மனைவியும் அப்படிதானிருக்கிறாள். அவள் வீட்டின் படியை விட்டு வெளியேறியதும் என் உலகிலிருந்து அவள் துண்டித்து போய்விடுவதை கண்டிருக்கிறேன். ஒரு நாளிரவு மின்சார ரயிலில் தற்செயலாக அவள் தன் அலுவலக பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டு வருவதை கண்டேன். யாரோ முன் அறியாத பெண்ணை போலிருந்தாள். அவள் கையில் ஒரு வேர்கடலை பொட்டலம் இருந்தது. அவள் வயதை ஒத்த இரண்டு பெண்கள் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த ரயிலில் வருவேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.


அதிகம் பரிச்சயமில்லாத ஒரு நபரை பார்த்து சிரிப்பதை போல மெலிதாக என்னை பார்த்து சிரித்துவிட்டு தோழிகளுடன் முன்போலவே  பேசிக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கையில் புதிதாக யாரோ ஒரு பெண்ணை பார்ப்பது போலிருந்தது. என்னோடு அவள் பேச முயற்சிக்கவோ, எனக்காக எழுந்து கொள்ள முயற்சிக்கவோ இல்லை. மாறாக அவளது உலகிற்குள் எனக்கு இடமில்லை என்பதை உணர செய்பவள் போல அந்த பெண்களுடன் விட்ட சிரிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள்.


அந்த பெண்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் எழுந்து கொண்டார்கள். அவளது அருகாமை இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால் நான் உட்கார வில்லை. அவள் உட்காரும்படியாக சொல்லவும் இல்லை. வேண்டும் என்றே வேறு ஒரு இருக்கை தேடி உட்கார்ந்து கொண்டேன். அவள் ரயிலை விட்டு இறங்கும்வரை என்னோடு பேசவேயில்லை.


பிளாட்பாரத்தில் நடக்கும் போது காய்கறி வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். இருவருமாக நடந்து காய்கறி மார்க்கெட்டினுள் போனோம். மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் எல்லா காய்கறிகளும் ஒரே நிறத்திலிருந்தன. அவள் ஒரு கேரட்டை ஒடித்து என்னிடம் தின்னும்படியாக தந்தாள். மாட்டிற்கு கேரட் போடுவது ஏனோ நினைவிற்கு வந்தது. அவளோடு சண்டையிடுவதற்கு அந்த ஒரு காரணம் போதுமானதாகயிருந்தது.


காய்கறி கடை என்பதை மீறி அவளோடு சண்டையிட்டேன். அவள் பொது இடம் என்பதை மறந்து அழ துவங்கினாள். அவள் அழுவது எனக்கு பிடித்திருந்தது. அதற்காக தான் நான் சண்டையிட்டேனோ என்று கூட தோன்றியது. மறுநிமிசம் நான் அவளை சமாதானம் செய்வது போல அவளது ஹேண்ட்பேக்கை என் கையில் எடுத்து கொண்டேன். விடுவிடுவென அவள் நடந்து முன்னால் செல்ல ஆரம்பித்தாள். நிச்சயம் அன்று இரவு சமையல் கிடையாது என்று எனக்கு தெரியும்.


வழியில் இருந்த உணவகத்தில் நான் அவளுக்கும் சுகுவிற்குமாக சேர்ந்து உணவு வாங்கி கொண்டேன். வீட்டை அடையும்  போது சுகு அடிவாங்கி கொண்டிருந்தாள். நான் அதை கண்டு கொள்ளாதது போல உணவை சமையற்கட்டில் வைத்துவிட்டு படுக்கை அறைக்கு திரும்பியிருந்தேன். சுகு அன்றிரவு முழுமையாக உறங்கவில்லை என்பதை மறுநாள் அவள் கண்கள் வீங்கியிருப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிந்தது.


சுகுவிற்காக தான் விடுமுறை எடுத்துக் கொள்ள போவதாக என் மனைவி சொன்னாள். மறுநாள் முழுவதும் தாயும் மகளும் உறங்கியிருந்தார்கள். மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரை சென்றோம். இனிமேல் சுகுவை கவனிப்பதற்காக நாங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி உறுதிமொழிகள் எடுத்து கொண்டோம். கடற்கரை மணலில் சுகு விளையாடவேயில்லை. அவளுக்கு கடலின் சப்தத்தை கேட்பது மட்டுமே பிடித்திருந்தது.


என் மனைவி அப்போது தான் சுகுவை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவேண்டும் என்பதை பற்றி சொன்னாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே பள்ளியில் படித்தாள் மட்டுமே அவளது அறிவு வளரும் என்று தன்னோடு வேலை செய்யும் கலைவாணி சொன்னாதாகவும் அவள் பிள்ளைகள் அப்படிதான் படிக்கின்றன என்றாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

நாங்கள் சுகுவிடம் பள்ளிமாறுவதை பற்றி பேசவோ கேட்கவோயில்லை. எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து நாங்கள் இருவரும் அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஆள் பிடித்து பிரெஞ்சும் ஆங்கிலமும் போதிக்கும் அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் பிடித்து முதல்வகுப்பில் சேர்த்தோம்.
சுகு அந்த பள்ளிக்கு அழைத்து போன முதல்நாள்  வீட்டிலிருந்து கொண்டு போன மதியஉணவை சாப்பிடவேயில்லை. வகுப்பறையில் அவள் அர்த்தமில்லாத சொற்களை கத்திக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு முறை அவளது டயரியில் வகுப்பாரிசிரியை எழுதி அனுப்பியிருந்தாள்.

என்ன சொற்களை கத்துகிறாள் என்று கேட்காமலே அவளுக்கு அடி விழுந்தது.
அதன்சில நாட்களுக்கு பிறகு அவள் வீட்டில் முதன்முறையாக டியாங்கோ. டியாங்கோ என்று கத்துவதை என் மனைவி தான் கண்டுபிடித்தாள். இப்போ என்னமோ சொன்னயே அது என்னடி என்று சுகுவிடம் கேட்ட போது அவள் உற்சாகமாக டியாங்கோ டியாங்கோ என்று சொன்னாள். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு டியாங்கோ என்று பதில் சொன்னாள். என்ன சொல் இது. என்ன பொருளாக இருக்கும் என்று புரியúயில்லை.


போதும் நிறுத்து உளறாதே என்று மனைவி அடக்கியதும் அந்த சொல் சுகுவிற்குள் அடக்கிவிட்டது. ஆனால் நாங்கள் எங்காவது அவளை வெளியே அழைத்து கொண்டு போகையில் சப்தமில்லாமல் அவள் இது போன்ற சொற்களை சொல்லிவிளையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதை எங்கிருந்து கற்றுக் கொள்கிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மட்டுமே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.


இதற்காகவே ஒரு நாள் அவளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வரும்போது அவளிடம் யாரெல்லாம் அவளது வகுப்பு தோழிகள் என்று கேட்டேன். யாருமேயில்லை.  வகுப்பில் யாரோடும் பேசவே மாட்டேன் என்று சொன்னாள். எதற்காக என்று கேட்டபோது தனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு அவள் தனக்கு தானே எதையோ சொல்லிக் கொள்வதை கேட்டேன்.


அன்றிரவு இதை பற்றி என் மனைவியிடம் சொன்ன போது அதற்கும் சுகுவிற்கு அடி விழுந்தது. ஏன்டி ஊமைக்குரங்கா இருக்கே. உடனே நீ பிரண்ட்ஸ் பிடிச்சாகணும் புரிஞ்சதா என்று மிரட்டினாள்


அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்வதை போல சுகு தலையாட்டினாள். அதன் பிறகும் அவள் இயல்பு மாறவேயில்லை. வீட்டில் அவளை யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றினால் அர்த்தமற்ற சொற்களை தன் முன்னால் குவித்து அவள் விளையாட துவங்கிவிடுவாள். அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதறி வெடித்து போவதை கண்டு அவளுக்கு சிரிப்பாக இருக்கும். இயந்திரத்தின் குரலில் அந்த சொற்களை அவள் பேசுவதை கூட சில வேளைகள் கேட்டிருக்கிறேன்.


அப்போது எனக்கு பயமாக இருக்கும். ஒருவேளை அவளது மனநலம் பாதிக்கபட்டு இருக்கிறதோ என்று பயப்படுவேன். ஏன் இப்படி அர்த்தமில்லாத சொல்லை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று கடுப்பாகி கத்துவேன். சுகு அடங்கிவிடுவாள். அந்த சொற்கள் வாயை திறக்காமலே அவளுக்குள் உருண்டு கொண்டிருக்க கூடும்.


இன்றைக்கும் அப்படியொரு சொல்லை தான் கத்தினாள். அதை இதன் முன்னால் எங்கேயோ கேட்டது போலவும் இருந்தது. சுகுவை அருகில் அழைத்து மறுபடியும் அதை சொல்ல சொன்னேன். தயங்கியபடியே புர்ர்ரா என்றாள்.  நீயா கண்டுபிடிச்சியா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னாள். அவளை போலவே நானும் புர்ரா என்று சொல்ல முயற்சித்தேன். அது அவளுக்கு சிரிப்பாக வந்தது.


அப்படியில்லைப்பா என்றபடியே புர்ரா என்று கத்தினாள். அந்த நிமிசம் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளை போலவே நானும் கத்த முயற்சித்தேன். ஏதோவொரு கூச்சம் அது போல கத்துவதற்கு எனக்கு வரவேயில்லை. நான் அவளது அர்த்தமற்ற சொல்லை ரசிப்பதை உணர்ந்து கொண்டவள் போல அவள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு காரில் போவது போல புர்ரா. புர்ரா என்று ஒடிக் கொண்டேயிருந்தாள். அந்த ஒரு சொல் எங்கள் வீடு முழுவதும் உதிர்ந்து கிடந்தது.


இரவில் என் மனைவி அலுவலகம் விட்டு வீடு வரும்வரை அந்த சொல் காற்றில் பறந்து அலையும் சோப்பு குமிழ்கள் போல அலைந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் வருகையின் போது அவை கரைந்து போய்விட்டன. சுகு ஒடிவந்து என்னிடம் ரகசியமான குரலில் இதை அம்மாகிட்டே சொல்லாதே. அடிப்பா என்றாள். எங்கள் இருவரையும் பார்த்த மனைவி என்ன திருட்டுதனம் பண்ணுறீங்க என்று கேட்டாள்.


நான் பதில் பேசவில்லை. எழுந்து போய் அவளை முத்தமிட விரும்பி அருகில் இழுத்தேன். சுகு இதை காண விரும்பாதவள் போல வேடிக்கையாக கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். என் முகத்தை விலக்கியபடியே கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க என்று  சொன்னாள் மனைவி. என் முகம் சிடுசிடுப்பேறி மாறியது.
அவசரமாக குளியல் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டேன். ஆத்திரமாக வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு புர்ரா..  என்று கத்தினேன்


கத்த கத்த  மனதில் இருந்த கோபம் வடிந்து போய்க் கொண்டிருந்தது.  எனக்கு சுகுவை அந்த நிமிசத்தில் ரொம்பவும் பிடித்திருந்தது. நானும் அதை போன்ற சொற்களை நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மறுபடியும் கண்ணாடி முன்பாக புர்ரா என்று சப்தமிட்டேன்.


என் முகத்தை அப்படி காண்பது எனக்கே விசித்திரமானதாக இருந்தது.


***
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 03, 2013, 09:02:10 PM
தரமணியில் கரப்பான்பூச்சிகள்

என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது.

பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது அதுவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சிறுவயதிலே எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அடுத்தவர்களுக்காக ஏன் நான் ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயரால் எனக்கு என்ன நன்மை. அது தேவையற்ற ஆறாவது விரல் ஒன்றை போல ஏன் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று. உலகில் பெயரில்லாமல் எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன. நம் கண்ணிலும் படுகின்றன. அதை நாம் ஒரு போதும் பெரிதாகக் கருதியதேயில்லை. அப்படி நானும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறிருக்ககூடும்.

என்றாலும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பெயர் வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பெயர் போதும். அது ஒற்றை எழுத்தாகக் கூட இருந்தாலும் அங்கீகரித்துவிடுகிறார்கள். அதனால் ஒபேர் நிறுவனம் எனக்கு உருவாக்கிய கரப்பான்பூச்சி மருந்து விற்பவன் என்ற பெயரே போதுமானதாகயிருக்கிறது. அதை நான் ஆங்கிலத்தில் சொல்லும் போது தமிழை விடக் கூடுதலான ஒரு நெருக்கத்தை நீங்கள் அடைகிறீர்கள். கரப்பான்பூச்சிகளைக் கூட காக்ரோஷ் என்று தான் பெரும்பான்மை வீடுகளில் சொல்கிறார்கள். கரப்பான்பூச்சி அளவில் கூட தமிழ் ஒட்டிருப்பது மாநகரவாசிகளுக்குப் பிடிப்பதில்லை போலும்.

என்னைப் பற்றி அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு இரண்டு மணி நேரம் பணியிடை ஒய்வு இருக்கிறது. ஆகவே அதைப் போக்கி கொள்வதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயிற்சிப் பணியாளராக இருந்த போது நெசப்பாக்கம் பகுதியின் முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் தினமும் காலையில் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு தலைவராக இருந்தவர் மணிநாராயணன். அவர் கரப்பான்பூச்சிமருந்து விற்பதில் தமிழகத்திலே மூன்றாவது ஆளாக சாதனை படைத்தவர்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இருநூறு ஸ்பிரே விற்க வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்திருந்தார். ஆகவே காலை ஏழு மணிக்கு குழு குழுவாகப் பிரித்து பணியிடத்திற்கு அனுப்பிவிடுவார். அவரிடம் கரப்பான்பூச்சிகள் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்ளுமா அல்லது உறக்கத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை நான் ஒரு போதும் கேட்க முடிந்ததேயில்லை.

அவர் தனது கறுப்பு சூட்கேஸில் மாநகரின் வரைபடத்தை நான்காக மடித்து வைத்திருக்கிறார். அந்த வரைபடத்தில் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வண்ணத்தில் தனித்துப் பிரிக்கபட்டிருக்கும். எந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் அதிகமிருக்கும். அங்கே எத்தனை பேர் போக வேண்டும் என்று வட்டமிட்டிருப்பார்.

ஒரு நகரை கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனித்தனியாக பிரித்திருப்பது எவ்வளவு பெரிய விந்தை. அதை மணி நாராயணன் உணர்ந்திருப்பாரா?

அவர் கறாரான முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவார். அது கூட வயதான ஒரு கரப்பான்பூச்சி பேசுவது போலதானிருக்கும். அவர் இளைஞராக இருந்த காலத்தில் சென்னையில் அதிக கரப்பான்பூச்சிகள் இருந்திருக்க கூடும். அதில் பெரும்பகுதியை ஒழித்து ஒரு இனத்தின் அடிவேரைப் பாதியாக அழிந்த பெருமை அவருக்கு உண்டு.

அன்று நெசப்பாக்கம் பகுதிக்குள் நாங்கள் ஆறு பேர் பிரித்து அனுப்பபட்டோம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அது இன்னமும் ஒரு கிராமத்தின் சாயலை கொண்டிருந்தது. பால்மாடுகள், சாலையில் நின்று குளிப்பவர்கள், சிறிய ஒட்டுவீடுகள், முருங்கைமரங்கள், வறட்டி தட்டி விற்பவர்கள், மரப்பெஞ்சு போட்ட தேநீர்கடைகள், நகரப் பேருந்துகள் உள்ளே வராத சாலைகள், முட்டுச்சந்துகள், என்று கலவையாக இருந்தது. நான் அதன் தென்பகுதியில் உள்ள பனிரெண்டுவீதிகளை மதியத்திற்குள் முடித்துவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று புரியாமல் நடந்து கொண்டேயிருந்தேன். எங்கள் பணியில் முதல் சத்ரு நாய்கள். அது தெருநாயாகவோ, வளர்ப்பு நாயாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கு எங்களைப் பிடிப்பதேயில்லை. எங்களைக் கண்டு வாய் ஒயாமல் குறைக்கின்றன. கடிக்கப் பாய்கின்றன. இதே நாய்கள் பெண் விற்பனையாளரைக் கண்டு மட்டும் குலைப்பதில்லை. வாலாட்டுகின்றன. அது என்ன பேதம் என்று தான் புரியவேயில்லை. நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையேக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல நடந்து கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இதனால் நான் நாய்களை வெறுக்க ஆரம்பித்தேன். சீனாவில் மாநகரங்களில் நாய்கள் வளர்க்கவோ. வீதியில் அலையவோ அனுமதிக்கபடுவதேயில்லை என்று ஒருநாள் காலைபேப்பரில் வாசித்தேன். அது தான் என் வாழ்நாளின் கனவும் கூட. ஆனால் நகரவாசிகள் நாய்களை நேசிக்கிறார்கள். எவரோ தெருநாய்களுக்கு கூட உணவளித்து அதன் வம்சவிருத்தியை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு மக்களை புரிந்து கொள்ள முடியவேயில்லை.

விற்பனையாளராக நான் பணியில் சேர்ந்த போது ஒருவார காலம் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்கபட்டது. அதில் எத்தனை விதமான வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன என்று புகைப்படத்துடன் பெரிய கேட்லாக் ஒன்றை எங்களுக்கு தந்தார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. நானூற்று பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்து வாழ்கின்றன. கரப்பான்பூச்சிகளில் தான் எத்தனை விதம். நிறத்தில் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. கண்ணில் பார்க்கும் போது நாம் அதை இவ்வளவு துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியவில்லை. அத்தோடு கரப்பான்பூச்சிகளுக்கு தனியான பெயர்கள் இல்லை என்பதால் அதை நாம் பொதுவான ஒன்றாகவே கருதுகிறோம்.

அந்தப் பூச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த போது நாமும் சிறு பூச்சிகள் போல தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அந்தப் புகைப்படத்தை உண்மையில் நான் நேசித்தேன். ஒவ்வொரு கரப்பான்பூச்சியையும் நேரில் பார்த்து அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்பது போல ஆசைப்பட்டேன். ஆனால் அவர்கள் அதை எப்படிக் கொல்வது. எங்கே அவை ஒளிந்து கொண்டிருக்கும். எவ்வளவு நேரத்தில் ஒரு கரப்பான்பூச்சி செத்துப் போகும் என்பதிலே கவனமாக இருந்தார்கள்.

உண்மையில் கரப்பான்பூச்சிகளைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள். அது கடித்தால் விஷமா என்று சக ஊழியரைக் கேட்டேன். அவர் அது ஒரு பொய். பல காலமாக இந்தப் பொய்யை நாம் வளர்த்துக் கொண்டே வந்துவிட்டோம். அந்தப் பொய்யில் தான் நமது சம்பாத்தியம் அடங்கியிருக்கிறது என்று சிரித்தபடியே சொன்னார்.

என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகம் ஏன் கரப்பான்பூச்சிகளை வெறுக்கிறது. கண்ணில் பட்டாலே அருவருப்புக் கொண்டுவிடுகிறது. என்ன பகையிது. ஏன் இவ்வளவு வெறுப்பும் அசூயையும் என்று ஐந்து நாளும் யோசித்தேன். அப்படியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களது பயிற்சி வகுப்பை நடத்த கல்கத்தாவில் இருந்து வந்திருந்த மோகித்சென் வங்காள உச்சரிப்பிலான ஆங்கிலத்தில் நீங்கள் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டியதும் சொல்ல வேண்டிய முதல் பொய் எது தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அந்தப் பொய் அற்புதமானது. அது எந்த வீட்டையும் திறக்ககூடிய சாவியைப் போன்றது என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சொன்னார். அவரது பொய்யைக் கேட்க ஆவலாக இருந்தோம்.

உங்களது முதல் பொய் இது தான். உங்கள் அருகாமையில் விஷமான கரப்பான்பூச்சிகள் பெருகிவருவதாக அறியப்படுகிறது. அவை கடித்தால் விபரீதமாகிவிடும். அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்பைப் பரிசோதித்து பார்க்க கூடாது என்பதே.

இந்தப் பொய்யை நீங்கள் உணர்ச்சிவசப்படமால், கண்களில் மிகுந்த அன்பும் வாஞ்சையோடும் சொல்லிச் சொல்லி பழகவேண்டும். காரணம் புதிய மனிதர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் கண்களைத் தான் மக்கள் கவனிக்கிறார்கள். என்றார்

அதைக் கேட்ட போது எனக்கு எரிச்சலாக வந்தது. எந்த மனிதனும் அடுத்தவனின் உதடை ஏன் கவனிப்பதில்லை. கண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. உதடுகள் தான் பொய் சொல்கின்றன. ஆனால் அதை மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். எனக்கு என்னவோ அடுத்தவரின் பொய்கள் மீது நாம் உள்ளுற ஆசை கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.

அன்று எங்கள் பயிற்சி வகுப்பில் நாங்கள் நாற்பத்தி ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களில் அன்பு ஒழுக உங்கள் வீட்டின் அருகாமையில் விஷமுள்ள கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டன .எங்கள் தெளிப்பானை உபயோகித்து அவற்றைக் கொல்லுங்கள் என்று நேசத்துடன் சொல்லிப் பழகினோம்.

மிக அபத்தமான நாடகம்ஒன்றில் பாத்திரமாகிவிட்டதைப் போல இருந்தது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நான் பதினைந்து நிமிசங்களிலே அந்த வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய்விட்டது. நான் அதைச் சொல்லும் போது அந்த வீட்டில் கரப்பான்பூச்சிகள் ஒடுவது என் கண்ணில் நிஜமாக தெரிவது போல இருக்கிறது என்று மோகித் சென் பாராட்டினார்.

பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிது. அந்தப் பயிற்சிகாலத்தில் மக்களைப் பயமுறுத்த வேண்டியதே நாங்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலை என்று அறிவுறுத்தபட்டது.

அது எளிதான ஒன்றில்லை. மக்கள் எப்போது எதைக் கண்டு பயப்படுவார்கள் என்பது மாபெரும் புதிர். ஆனால் கரப்பான்பூச்சிகளைச் சொல்லி பெண்களை எளிதாக பயமுறுத்திவிடலாம். ஆகவே ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நாங்கள் கதவைத் தட்ட வேண்டியிருந்தது.

பெண்கள் கரப்பான்பூச்சி குறித்து விதவிதமான கற்பனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை என் பணி அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வேறு எந்தப் பூச்சியை விடவும் கரப்பான் அந்த அளவில் துரதிருஷ்டசாலி . அதைப் பெண்கள் வெறுக்கிறார்கள். அழித்து ஒழிக்க பணம் செலவழிக்கிறார்கள். பெண்களால் வெறுக்கபடுவது அழிந்து போவது இயற்கை தானே.

நான் பெண்களிடம் கரப்பான்பூச்சி பற்றி விதவிதமாக பொய் சொல்லப் பழகியிருந்தேன். குறிப்பாக அவர்கள் குளியல் அறையில் வந்து ஒளிந்து கொள்ளும் கரப்பான்பூச்சிகள் ஒருவிதமான பச்சை நிறத் திரவத்தை உமிழ்கின்றன என்றும் அது உடலில் பட்டால் உடனே தோலில் புள்ளிபுள்ளியாக உருவாக துவங்கிவிடும் என்றும் மிரட்டினேன். அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் ஒரு மாத காலத்தில் உடலெங்கும் நோய் பரவி அகோரமாகிவிடுவார்கள் என்றும் சொல்வேன்.

இந்தப் பொய் ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. அதிலிருந்து எந்தப் பெண்ணும் தப்பவே முடியாது. ஒரு பெண் இந்தப் பொய்யைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதாள். அப்படி அவள் உண்மையில் கரப்பான்பூச்சிகளால் கடிபட்டிருக்கிறாள் என்றும் அந்த சந்தேகத்தை நான் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லி உடனடியாக எனது தெளிப்பானை வாங்கி கொண்டதுடன் இதற்கு என்னவிதமான சிகிட்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு கேட்டாள்.

இதற்காக நான் கூடுதலாக கொஞ்சம் அழகுக்கலை குறிப்புகளை வாசிக்க வேண்டிய அவசியமிருந்தது. அதற்கு நான் பெரிய சிரமம் ஒன்றும் எடுக்கவில்லை. பழைய பேப்பர் கடைகளில் உள்ள ஐந்தாறு வருச பழைய பெமினா, ஈவ்ஸ் வீக்லி போன்ற இதழ்களைப் புரட்டி அதில் வெளியான அழகுகுறிப்புகளை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஒரு கரப்பான்பூச்சி கொல்லி விற்பவன் எவ்வளவு நுட்பமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். அந்தப் பெண் நான் சொன்ன அழகுகுறிப்பை நிச்சயம் பயன்படுத்தத் துவங்கியிருப்பாள். எல்லா அழகு குறிப்புகளும் பயத்திலிருந்து உருவானவை தானே.

கரப்பான்பூச்சி பற்றிய பொய்களை மக்கள் சந்தேகம் கொள்வதேயில்லை. பூச்சிகள் கொல்லப்படும் போது மக்கள் நிம்மதி அடைகிறார்கள். கரப்பான்பூச்சிகள் எவ்வளவு காலம் உயிர்வாழ கூடியவை. அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இருக்கிறாதா? வயதாகி செத்த கரப்பான்பூச்சி என்று ஒன்றாவது உலகத்தில் இருக்குமா என்று எவரும் என்னிடம் கேட்டதேயில்லை

நான் இந்தப் பணியில் ஆரம்ப நாட்களில் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க கூச்சப்பட்டிருக்கிறேன். காலிங்பெல் மீது கை வைத்தவுடனே எனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து எந்த வயதில் யார் வெளியே வருவார்கள் என்று மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலும் என் கற்பனை பொய்யாகிவிடும். அரிதாக ஒன்றிரண்டு முறை நான் நினைத்தது போலவே மெலிந்த உடலும் நெளிகூந்தலும் தூக்கம் படிந்த முகத்தோடு பெண்கள் வந்திருக்கிறார்கள்.

நான் பயிற்றுவிக்கபட்ட கிளி போல சொல்வதை அவர்கள் காதுகள் கேட்டுக் கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டாம் என்றோ, ஏன் காலிங்பெல்லை அடித்தேன் என்று கோபபட்டோ கதவை மூடிவிடுவார்கள். மூடிய கதவிற்கு வெளியில் சில நிமிசங்கள் நின்று கொண்டிருப்பேன். அப்போது மனதில் சில விபரீதமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்று கரும்புகை சுழல்வதை போல தீவினைகள் என் மனதில் புகைய ஆரம்பிக்கும். பிறகு அது தானே அடங்கி ஒடுங்கியதும் இறங்கிப் போய்விடுவேன். பூச்சிமருந்து விற்பவன் வேறு என்ன செய்ய முடியும்.

விற்பனைப் பிரதிநிதி என்பவன் பொதுவெளியில் அலையும் ஒரு நடிகன். நாடகக் கதாபாத்திரம் ஒன்று தான் எப்போது மேடையில் நுழைவோம் என்று திரையின் பின்னால் நின்றபடியே காத்துக் கொண்டிருப்பது போன்ற மனநிலை தான் தினமும் எனக்கு நேர்கிறது.

ஒவ்வொரு நாளும் பூச்சிமருந்துகளுடன் தெருவில் நடந்து போகத் துவங்கியதும் எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று குழப்பமாக இருக்கும். எனது சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் இதற்கான தனியான வழிமுறை ஒன்றை வைத்திருந்தார்கள்.

மூத்த விற்பனையாளரான சங்கரன் எப்போதுமே வலதுபக்கம் உள்ள வீட்டைத் தான் முதலில் தட்டுவார். எல். கோவிந்துவிற்கு ஒன்பது ராசியான எண் என்பதால் எட்டுவீடுகளை தவிர்த்துவிட்டு ஒன்பதாவது வீட்டில் யாரும் இல்லாமல் போயிருந்தால் கூட அதைத் தான் முதலில் தட்டுவார். நான் இப்படி எந்த பழக்கத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை. மாறாக நான் நடக்க துவங்குவேன். சில நேரம் வீதியின் கடைசி வரை கூட நடந்து கொண்டேயிருப்பேன். மனதில் நடிக்கத் துவங்கு என்ற குரல் கேட்க ஆரம்பிக்கும். அது உச்சத்திற்கு எட்டியதும் சட்டென ஏதாவது ஒரு வீட்டு கதவை தட்டிவிடுவேன்.

பகல்நேரங்களில் திறக்கபடும் வீடுகளை கவனிக்கிறேன். எல்லா வீடுகளும் அலங்கோலமாகவே இருக்கின்றன. ஒழுங்கின்மை, கவனமின்மை பீடித்திருக்கிறது. தேவையற்ற பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. பயத்தோடு தான் கதவைத் திறக்கிறார்கள். சில வீடுகளில் கதவை திறப்பதேயில்லை. ஆனால் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. அப்படித் திறக்கப்படாத கதவுகளை பொய் சொல்லி திறக்க வைப்பதே எங்களது சாமர்த்தியம்.

ஆகவே கதவின் முன்னே நின்றபடியே நான் சுகாதாரத் துறையில் இருந்து வந்திருப்பதாக பொய் சொல்லுவேன். உடனே கதவு திறந்துவிடும். மக்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான குணமது. அவர்களிடம் சுகாதாரத் துறை இந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டதாக அடையாளம் கண்டுள்ளது என்று கறாரான குரலில் சொல்வேன். அவர்கள் கலக்கத்துடன் அது தன்னுடைய தவறில்லை என்பதுபோலவே கேட்டுக் கொள்வார்கள். என்னிடம் உள்ள குறிப்பு நோட்டில் அந்த வீட்டோர் பற்றிய விபரங்களை கேட்டறிந்து மறுநாள் எனது சகாக்களில் ஒருவனை அங்கே அனுப்பி தெளிப்பானை விற்பது வழக்கம்.

மக்கள் தங்களை விட சிறிய உயிரினங்கள் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள். கொன்றுவிட துடிக்கிறார்கள். அதில் குழந்தைகள் கூட விதிவிலக்கில்லை. எந்தக் குழந்தையும் ஒரு எறும்பைக் கூட நேசிக்கவில்லை. எறும்பை தலைவேறு உடல்வேறாக பிய்த்து கொல்வதில் எவ்வளவு ஆனந்தம் கொள்கின்றன. இவ்வளவு ஏன், அழகிகளாக நாம் கொண்டாடும் பெண்கள் வன்மத்துடன் பூச்சிகளை கட்டையால் அடித்துக் கொல்வதை நீங்கள் அருகில் இருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு ஆவேசம். எவ்வளவு ஆத்திரம்.

ஆண்கள் பூச்சிகளுடன் வாழ்வதில் அதிக பேதம் காட்டுவதில்லை. எப்போதாவது அதைக் கண்டு சலித்து கொள்கிறார்கள். சில வேளைகளில் அதைக் கட்டுபடுத்த முடியாத தனது ஆண்மையை நினைத்து கோபம் கொள்கிறார்கள். ஒன்றிரண்டு மெல்லிதயம் படைத்த ஆண்கள் மட்டுமே பூச்சிகொல்லிகளை உபயோகிக்கிறார்கள். இது பொது உண்மையில்லை எனது கண்டுபிடிப்பு.

கரப்பான்பூச்சி மருந்து விற்பவர்கள் இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கரப்பான்பூச்சியைக் கொன்ற பிறகு பெரும்பான்மை மக்கள் அதன் மீசையைப் பிடித்து மட்டுமே தூக்கி வெளியே எறிகிறார்கள். காரணம் மீசையின் மீதுள்ள தாங்கமுடியாத வெறுப்பு. மனிதர்கள் எவராவது இப்படி மீசையைப் பிடித்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்களா?

பெரும்பான்மை வீட்டுப் பெண்களின் கவலை எல்லாம் எனது தெளிப்பானை எவ்வளவு மலிவாக வாங்கிவிட முடியும் என்பதே. நாங்களே அந்தத் தந்திரத்தை நுகர்வோருக்கு அளித்திருந்தோம். எங்கள் பூச்சி மருந்து தெளிப்பானின் விலை பனிரெண்டு ரூபாய் முப்பது காசுகள். அதை நாங்கள் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வீடு தேடி வரும் சலுகை என்று அதை ஐம்பது ரூபாய் குறைத்து இருநூற்றுக்கு விற்பனை செய்கிறோம். அதை அடித்துபேசி விலை குறைக்கும் பெண்களிடம் உங்களுக்காக மட்டும் நூற்று ஐம்பது என்று விற்பனை செய்வோம். அப்படி வாங்கிய பெண் அளவில்லாத சந்தோஷம் கொள்வதை என்னால் காண முடிந்திருக்கிறது. ஒரு கரப்பான்பூச்சி மருந்தை விலை குறைத்து வாங்கிவிட்டது எளிய செயலா என்ன?

ஒரேயொரு முறை ஒரு பெண் என்னிடம் எனது தெளிப்பானால் எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல முடியும் என்று கேட்டாள். எங்கள் பயிற்சிகாலத்தில் இந்தக்கேள்வியை நான் கேட்டிருந்தால் நிச்சயம் கைதட்டு கிடைத்திருக்கும். மொகித்சென் அதற்கான விடையை உடனே சொல்லியிருப்பார். ஆனால் அன்று அந்தபெண் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. உடனடியாகப் பொய் சொல்லவும் முடியவில்லை.

நான் சமயோசிதமாக உங்கள் வீட்டில் உள்ள அத்தனை கரப்பான்பூச்சிகளையும் கொல்ல முடியும் என்று மட்டுமே சொன்னேன். உடனே அந்த பெண் எறும்புகளை இதனால் கொல்ல முடியுமா என்று கேட்டாள். எறும்புகள் ஈக்கள், பொறிவண்டுகள், விளக்குபூச்சிகள் என அத்தனையும் கொல்ல முடியும் என்று சொன்னேன். அவள் பல்லியைக் கொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்டாள். பல்லியைக் கொல்வது பாவம் என்று மட்டுமே சொன்னேன். அவளும் அதை உணர்ந்து கொண்டவளை போல தலையாட்டிவிட்டு பணத்தை எண்ணித் தந்தாள். அந்த பணத்தில் ஒரு கிழிந்து போன ஐம்பது ரூபாய் இருந்தது. அதை என்னிடம் தந்திரமாக தள்ளிவிட்ட திருப்தி அவளுக்கு இருந்திருக்கும். ஒருவேளை அதற்காகவே இந்த தெளிப்பானை அவள் வாங்கியிருக்கவும் கூடும்.

மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் என்பதே என் அனுபவம். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

ஒரு நாள் ஸ்ரீனிவாசா திரையரங்கு அருகாமையில் உள்ள வீட்டின் கதவை தட்டினேன். மதியமிருக்க கூடும். பெரும்பான்மையினர் மதியத்தில் உறங்கிவிடுகிறார்கள். மனிதர்கள் உறங்கும் போது உலகம் அமைதி அடைகிறது என்று காலண்டர் தாளில் ஒரு வாசகம் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதனால் நாங்கள் மதியம் இரண்டு முதல் நான்கு வரை வேலை செய்வதில்லை. எங்காவது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அன்று நான்கு மணிக்கு சற்று முன்பாக அந்த வீட்டின் கதவை தட்டியிருந்தேன். வயதான ஒருவர் கதவைத் திறந்தார். அவரிடம் நான் பூச்சிமருந்து விற்பனையாளன் என்று சொன்னதும் அவர் உள்ளே வரச்சொன்னார். அந்த வீடு அழுக்கடைந்து போயிருந்தது. சுவெரங்கும் மழைநீர் இறங்கிய கறை. மூடிக்கிடந்த ஜன்னல். அதில் ஒரே போல நாலைந்து உபயோகமற்ற பல்துலக்கிகள். அறையெங்கும் பழைய நாளிதழ்கள். வார மாத இதழ்கள், புத்தகங்கள். குப்பை போல குவிந்து கிடந்தன. அவர் அதற்கு ஊடாகவே ஒரு சாய்வு நாற்காலியை போட்டிருந்தார். அருகாமையில் துருப்பிடித்து போன ஒரு கட்டில் அதன் மீது முழுவதும் வெவ்வேறு விதமான புத்தகங்கள், அடியிலும் கட்டுகட்டாக பழைய நாளிதழ்கள். கயிற்றுகொடியில் பழுப்பேறிய வேஷ்டி பனியன்கள் காய்ந்து கொண்டிருந்தன. நிச்சயம் அவரிடம் எளிதாக ஒரு தெளிப்பானை என்னால் விற்றுவிட முடியும் என்று தோன்றியது.

நான் தூசியால் ஏற்பட்ட அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் ஒரு நாளிதழ் கட்டைக் காட்டி அதில் ஏறி என்னை உட்காரச் சொன்னார். நான் அதில் உள்ள தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறித் தும்மல் வந்தது. எனது தெளிப்பானை வெளியே எடுத்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

அவர் அதைப் பிறகு பார்த்து கொள்ளலாம். தான் நிச்சயம் ஒன்றை வாங்கி கொள்கிறேன் என்றபடியே எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். குடிக்கிற பழக்கமிருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று அவசரமாக மறுத்தேன். அவர் தலையாட்டிக் கொண்டு கேலியான தொனியில் இதுவரை எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல உதவியிருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டார். அது என்னை குத்திபார்ப்பது போல இருந்தது.

அது உபயோகமில்லாதவை அழிக்கபட வேண்டியவை தானே என்று கறாராக சொன்னேன். அவர் தலையாட்டிக் கொண்டார். பிறகு என் அருகில் இருந்த ஒரு பேப்பர்கட்டை காட்டி அதை பிரிக்கும்படியாக சொன்னார். நான் குனிந்து எடுத்து அதை பிரித்தபோது 1978 வருசம் நவம்பர் 7ம் தேதி பேப்பரை எடுக்கும்படியாக சொன்னார். எதற்காக இவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

பளுப்பேறி எழுத்து மங்கிப் போயிருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். அதன் ஆறாம்பக்கத்தை உரக்க படி என்று சொன்னார். பிரித்து பார்த்த போது அதில் ஒரு கரப்பான்பூச்சி படமிருந்தது. சப்தமாக படித்தேன். மடகாஸ்கரில் காணப்பட்ட ராட்சச கரப்பான்பூச்சியது. அது ஐந்து அங்குல நீளமுடையது. முப்பது கிராம் எடை கொண்டது அதை கரப்பான்பூச்சிகளின் டைனோசர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர் அதை கவனமாக கேட்டு கொண்டிருந்துவிட்டு இது போல ஒன்றை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்றேன்.

இது நம் ஊரில் இருந்து அழிக்கபட்ட இனம். நான் பார்த்திருக்கிறேன். நான் இதை பற்றி மறுப்பு எழுதி அனுப்பினேன். அது பத்திரிக்கையில் வரவேயில்லை என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். அவர் விஞ்ஞானம், வானவியல், ஜோசியம், ஜன்ஸ்டீன் குவான்டம் தியரி, ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று எழுந்து கொள்ள முயன்றேன்.

அவர் தனது பர்சில் இருந்து இருநூறு பணத்தை எடுத்துத் தந்து தெளிப்பான் எனக்கு வேண்டாம். நீயே உபயோகபடுத்தி கொள். உனக்கு நேரமிருந்தால் என்னோடு வந்து பேசிக் கொண்டிரு. ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு தெளிப்பானை வாங்கி கொள்கிறேன். காரணம் நானே ஒரு கரப்பான்பூச்சி போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வயது எழுபத்தியாறு. பனிரெண்டு வருசமாக இந்த அறையை விட்டு வெளியே போவதே கிடையாது. பிள்ளைகள் அமெரிக்க போய்விட்டார்கள். யாரும் என்னைத் தேடி வருவது கிடையாது.

நான் முப்பது வருசம் அறிவியல் ஆய்வுதுறையில் வேலை செய்திருக்கிறேன். பதவி, சம்பாத்தியம், உறவு, பெயர் புகழ் எல்லாம் பொய். மயக்கம். எதுவும் நமக்கு கை கொடுக்கபோவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலை போலிருக்கிறது.

பழைய நாளிதழ்களை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. இந்த செய்திகள் யாவும் நடந்து முடிந்துவிட்டவை தானே. ஆனால் அவற்றை பற்றி கற்பனை செய்து கொள்ளும்போது ஏனோ மிக சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு நேரமிருந்தால் என் வீட்டு கதவை நீ எப்போதும் தட்டலாம், ஒரு வேளை நீ வரும்போது நான் செத்துகிடந்தால் இந்த புத்தகத்தின் உள்ளே கொஞ்சம் பணமிருக்கிறது. எடுத்து செலவுசெய்து எரித்துவிடு. என்று சொன்னார்.

நான் உண்மையில் பயந்து போய்விட்டேன். அவர் தந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரைச் சந்தித்த பிறகு நான் சென்ற வீடுகளில் எதிலும் ஒரு தெளிப்பானை கூட விற்பனை செய்ய முடியவில்லை. மனதில் அவரது குரல் என்னை வதைக்க துவங்கியது. அவர் என்னை மிகவும் பாதித்திருந்தார். இதற்காக அன்றிரவு நானும் செல்வரத்தினமும் குடிப்பதற்காக சென்றோம்.

ஒயின்ஷாப்பின் மதுக்கூடங்களில் அதிக கரப்பான்பூச்சிகள் வளர்க்கபடுகின்றன. அவற்றை குடிகாரர்கள் நேசிக்கிறார்கள். போதையில் பேச ஆள்கிடைக்காத போது கரப்பான்பூச்சிகளோடு பேசுகிறார்கள். சேர்த்து குடிக்கிறார்கள். நான் போதையேறி செல்வரத்தினத்திடம் நமது மேலாளராக உள்ள மணிநாராயணைக் கொல்ல வேண்டும். அவன் ஒரு பெருச்சாளி போல நம் உழைப்பை தின்று ஊதிக் கொண்டு வருகிறான் என்று கத்தினேன். அவன் கட்டுபடுத்த முடியாமல் அழுதான். விற்பனை பிரதிகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை நானும் அறிவேன். ஆகவே அவனோடு சேர்ந்து அழுவதற்கு முற்பட்டேன். என்னால் அப்படி பொது இடத்தில் அழ முடியவில்லை. செல்வரத்தினம் அழுவதை கண்ட ஒரு குடிகாரன் அவன் மீது அன்பாகி தனது மதுவை பகிர்ந்து கொண்டான்.

அப்போது எனது இருக்கையின் அருகில் உள்ள செங்கல் சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்றபடியே என்னை பார்த்து கொண்டிருந்தது. அது என்னோடு பேச விரும்புகிறதோ எனும்படியாக அதன் பார்வையிருந்தது. நான் என்ன பேசுவது என்று புரியாமல் அதை தவிர்க்க துவங்கினேன். என்றாவது இப்படியொரு இக்கட்டு உருவாக கூடும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை இந்த நிலையில் என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகவே நான் கோபத்துடன் கரப்பான்பூச்சிகளை விரட்டியடிங்கள் என்று கத்தினேன்.

அங்கிருந்த பணியாளர்கள் எவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்த பூச்சி திமிரோடு என்னை பார்த்து கொண்டிருந்தது. எனக்கு குற்றவுணர்ச்சியானது. நான் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறி தனியே நடக்க ஆரம்பித்தேன்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு மோசமான வியாதி. அதை ஒரு போதும் வளர விடவே கூடாது. இல்லாவிட்டால் அது நம்மை வாழவிடாமல்செய்துவிடும். நீண்டநேரம் கடற்கரை சாலையில் சுற்றியலைந்துவிட்டு அறைக்கு திரும்பினேன். உறக்கம் கூடவேயில்லை. சுழல்விசிறியை பார்த்தபடியே படுத்துகிடந்தேன். நான் படித்திருக்கிறேன் என்பது தான் பொது இடங்களில் அழமுடியாமல் என்னை தடுக்கிறது என்பதே அன்றிரவே கண்டுபிடித்தேன்.

அந்த வயதானவரை திரும்பச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அதன்பிறகு நான் தரமணி பகுதிக்கு வேலையை மாற்றம் செய்து கொண்டுவிட்டேன். அது வசதியானவர்கள், மென்பொருள்துறை சார்ந்த அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதி. ஆகவே எளிதாக விற்பனையில் சாதனை படைத்து பதவிஉயர்வு பெற்றுவிடலாம். தரமணியில் பூச்சிமருந்துவிற்பதற்கு பெரிய போட்டியே இருந்தது.

நான் காய்களை நகர்த்தி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டேன். மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தரமணியில் பொருட்கள் விற்பது எளிதாகவே இருந்தது. தரமணியில் கரப்பான்பூச்சிகள் கூட ஆங்கிலம் பேசுகின்றன. அவை மற்ற பகுதியில் காணப்படுவது போல பயந்து ஒடுவதில்லை. மெதுவாகவே செல்கின்றன. அங்கே எளிய இதயம் கொண்டவர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு நாளில் ஐநூறு தெளிப்பான்கள் வரை கூட விற்க முடிந்தது. அத்துடன் தெளிப்பான்கள் அறிமுகத்திற்கு என்று தொலைபேசியில் நேரம் குறித்துவிட்டு விற்க போகலாம். கரப்பான்பூச்சி பற்றி பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.

அப்படியொரு நாள் சீவியூ டவர்ஸ் உள்ளே ஒரு வீட்டிற்கு தெளிப்பான் அறிமுகம் செய்ய போய்விட்டு திரும்ப வெளியே வந்த போது குடியிருப்பின் காவலாளி என்னைப் பிடித்து கொண்டுவிட்டான். பதிவுபுத்தகத்தில் நான் கையெழுத்து இடவில்லை என்பதைக் காரணம் காட்டி என்னைத் திருடன் என்று அவன் சந்தேகபட துவங்கினான்.

நான் அடையாள அட்டைகள், தெளிப்பான்களை காட்டிய போதும் நம்பிக்கை கொள்ளவேயில்லை. என்னைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைப்பதன் வழியே தனது வேலையில் முன்னேற்றம் காண அவன் விரும்புகிறான் என்று புரிந்தது. நான் அதற்கு என்னை ஒப்பு கொடுத்தேன். நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற். எவ்வளவு அழகான வாசகம்.

அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒப்படைத்தான். நான் ஏதாவது திருட முற்பட்டேனா என்று காவலர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் நீண்ட விளக்கம் தந்து கொண்டிருந்தான். மாலை வரை என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். காவல்நிலையத்திற்குத் தேவைப்படுகிறது என்று இரண்டு தெளிப்பான்களை இலவசமாக வாங்கி கொண்டு என்னை இரவில் வெளியே அனுப்பிவைத்தார்கள். அன்று இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டானது.

யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். மணிநாரயணன் நினைவு வந்தது. அவரிடமே கேட்டால் என்னவென்று இரவோடு அவர் வீட்டிற்கு போய் நின்றேன். அவர் வீட்டின் வரவேற்பரையில் உட்கார வைத்து குடிப்பதற்கு பில்டர் காபி தந்தார். சுவரில் மிகப்பெரிய தொலைக்காட்சியிருந்தது. அதி நவீனமான சோபா, அலங்காரமான சுவர் ஒவியங்கள். மீன்தொட்டிகள். கரப்பான்பூச்சிகள் அவரை சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கின்றன.

மணிநாராயணன் என் பிரச்சனைகளைக் கேட்டு சிரித்தபடியே நீ ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறாய். நீயா கரப்பான்பூச்சிகளை கொல்கிறாய். அது ஜெர்மன் நிறுவனத்தின் வேலை. நாம் வெறும் அம்புகள். கர்த்தா அவனே என்று பகவத்கீதை போன்ற நீண்ட உரையை வழங்கினார். நான் அவரிடம் உங்களைப் போல நான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நேரடியாக கேட்டேன்.

அவர் சிரித்தபடியே மனிதர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் எப்போதும் அதிகம். அதன் ஒரு அடையாளம் தான் கரப்பான்பூச்சி. அது ஒருவேளை நம்மை கடித்துவிட்டால் என்னசெய்வது என்ற பயமிருக்கிற வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஆகவே எந்த வீட்டின் கதவை தட்டும்போதும் உன்னை ஒரு தேவதூதனைப் போல நினைத்துக் கொள். அவர்களை மீட்பதற்காகவே நீ வந்திருப்பதாக நம்பு. இரண்டு மாசத்தில் நீ மேலே போய்விடுவாய் என்றார்.

எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். மறுநாளே இதை நடைமுறைபடுத்த துவங்கினேன். என் பேச்சில் கண்களில் புதிய நம்பிக்கை பீறிட்டது. என் சொற்களை நகரவாசிகள் நம்பினார்கள். ஒரு ஆள் ஒரே நேரம் மூன்று தெளிப்பான்களை வாங்கினான். அந்த அளவு நான் பேசி மயக்க தெரிந்து கொண்டுவிட்டேன். ஆங்கிலம் ஒரு வசதியான மொழி. அதில் தான் எவ்வளவு லாவகம், எவ்வளவு சூட்சுமம்.

மணிநாராயணன் சொன்னது உண்மை. நான் இலக்கை மீறி விற்றுச் சாதனை செய்திருந்தேன். அலுவலகமே விடுமுறை தந்து ஒய்விற்காக ஒரு வார காலம் கோவாவிற்கு அனுப்பி வைத்தது. கூடுதல் சம்பளம். வாகன வசதிகள். அத்தோடு இப்போது எனக்குக் கிழே ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மணிநாராயணன் இடத்தை ஒரு வருசத்தில் அடைந்துவிடுவேன். இயற்கை மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது நிஜம்.

உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கரப்பான்பூச்சிகள் இருக்ககூடும். அவற்றை அலட்சியமாக பார்க்காதீர்கள். அவை ஒழிக்கபட வேண்டியவை. என்னை அறிந்து கொண்ட உங்களுக்காக நாற்பது சதவீத சிறப்புசலுகை விலையில் தெளிப்பான்களை தருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை எப்போதும் அழைக்கலாம். வீடு தேடி வந்து இலவசமாக விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

**
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 03, 2013, 09:09:26 PM
குதிரைகள் பேச மறுக்கின்றன

சிறுகதை

ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என் வீட்டின் வாசல்கதவை திறந்து அவர் நிதானமாக  குதிரையை தென்னை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு எதுவும் நடக்காதவரைப் போல சுவரோரம் உள்ள தண்ணீர் குழாயில் காலைக் கழவிவிட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு நாளிதழைப் புரட்டி படிக்கத் துவங்கினார்.

சவரம் செய்தபடியே அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு குழப்பமாக இருந்தது. நான் ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன். குதிரையே தான். எப்படி அது. நாயை கூட்டிக் கொண்டு தானே வாக்கிங் சென்றார். யாருடைய குதிரை. அதை எதற்காக நமது வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார். விலைக்கு வாங்கிவிட்டாரா இல்லை யாராவது சில நாட்கள் வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார்களா என்று ஆயிரம்கேள்விகள் ஒரே சமயத்தில் மண்டையில் மோதின.

சவரம் செய்வதை பாதியில் நிறுத்தவிட்டு மீனாவைச் சப்தமாக கூப்பிட்டேன். அவள் சமையல் அறையில் எதையோ பொறித்தபடியே இருங்க வர்றேன் என்று பதில் தந்தாள். என் அறையை விட்டு வெளியே வந்து குதிரையை நன்றாகப் பார்த்தேன். அது தலைகவிழ்ந்தபடியே நின்றிருந்தது. கறுப்புநிறம். அராபியக்குதிரை போலிருந்தது. நாக்பூரில் இப்படியான குதிரைகளை பார்த்திருக்கிறேன். அந்த ஊரே அரசர் காலத்திலிருந்து மீளமுடியாமல் இருப்பதுபோலதானிருக்கிறது

பெங்களுரில் உள்ள சில பூங்காகளில் கூட வயதான குதிரைகள்  அலைந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டிருக்கிறது. ஆனால் என் வீட்டின் வாசலில் நின்றது வயதான குதிரையில்லை. அது வாளிப்புடன் திண்ணெனவே இருந்தது. அதன் மயிர் அடர்ந்த வால் அசைந்தபடியே இருக்க தலையை வலப்பக்கமாக சாய்த்தபடியே நின்றிருந்தது.

அப்பா நான் பார்ப்பதைக் கண்டு கொள்ளாதவர் போல பேப்பர் படித்து கொண்டிருந்தார். நான் அந்த அலட்சியத்தைத் தாங்கி கொள்ள முடியாமல் என்ன இது என்று கேட்டேன். அவர் திரும்பிப் பார்த்துவிட்டு குதிரை என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார். எதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவேயில்லை. யாருடைய குதிரை என்று சற்று குரலை உயர்த்தி கேட்டேன். நம் குதிரை தான் என்று சொல்லிவிட்டு குளிப்பதற்காக தன் அறைக்குள் சென்றுவிட்டார்

நமக்கு குதிரை எதற்கு. ஒரு குதிரை என்ன விலையிருக்கும். யாராவது குதிரை வாங்குவார்களா என்ன? இதை வைத்து ஏதாவது புது திட்டம் வைத்திருக்கிறாரா? வீட்டில் குதிரை வளர்ப்பதை வீட்டு ஒனர் அனுமதிப்பாரா? அதை என்ன செய்வது. அதற்கு என்ன உணவு அளிப்பது. நாளை அப்பா ஊருக்கு போய்விட்டால் அதை என்ன செய்வது என்று குழப்பம் ஊற்று எடுக்க துவங்கியது. இதற்குள் மீனா வெளியே வந்து குதிரையின் அருகில் சென்று அதை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

பிறகு என்னிடம் உங்களுக்கு குதிரை ஒட்டத் தெரியுமா என்று கேட்டாள். நான் முறைத்தபடியே எதற்கு என்றேன். உங்களுக்காகத் தானே உங்கப்பா குதிரை வாங்கிட்டு வந்திருக்கார் என்று கேலி செய்தாள். அவளிடம் இந்தக் குதிரையை என்ன செய்வது என்று நீயே கேள் என்று கத்தினேன்.  அவள் மறுபடியும் கேலியாக இதிலேயே உங்கப்பா சொந்த ஊருக்கு கிளம்பிப் போனாலும் போவாரா இருக்கும் என்றாள்.

அப்பாவை அவள் அடிக்கடி பரிகாசம் செய்கிறாள். குத்திக்காட்டுகிறாள் என்று எனக்கு கோபமாக வருகிறது ஆனால் அதைப் பற்றி பேசினால் உடனே சண்டை துவங்கிவிடும் என்பதால் நான் பல்லைக்கடித்தபடியே குதிரையைப் பார்த்து கொண்டிருந்தேன். அப்பா குளித்துவிட்டு ஈரத்தலையைத் துவட்டியபடியே வெளியே வந்து நின்றார். நரைத்து போன தலைமயிர்கள். களைத்து போன கண்கள். அப்பா  குதிரையை மிக பரிவோடு பார்த்து கொண்டிருந்தார்.

நான் அவர் முன்னால் போய்நின்றபடியே நமக்கு எதுக்குப்பா குதிரை என்று கேட்டேன். அவர் நீ எதுக்காக நாய் வளர்த்தியோ அது போல தான் இதுவும் என்றார். நாய் வீட்டை பாதுகாக்கும். குதிரை பாதுகாக்குமா என்று கோபமாக கத்தினேன். பாதுகாக்காது என்று உனக்கு எப்படி தெரியும். நீ எத்தனை குதிரைகள் வளர்த்திருக்கிறாய் என்று அமைதியாக கேட்டார். யாராவது வீட்ல குதிரை வளர்க்கிறார்களா என்று மறுபடி சப்தமிட்டேன்.  நூறு வருசத்திற்கு முன்பு வரை குதிரை வசதியான எல்லோர் வீட்டிலும் இருந்தது தானே என்றார்

என்ன பைத்தியக்காரன தனமான பேச்சிது. வாகனங்கள் இல்லாத காலத்தில் குதிரைகள் வைத்திருத்திருந்தார்கள். அதில் ஏறிப் பயணம் சென்றார்கள். இப்போது தான் விதவிதமான கார்களும் பைக்கும் வந்துவிட்டதே. பிறகு எதற்கு என்று ஆத்திரமாக வந்தது. இந்தக் குதிரை உங்களுக்கு எப்படி கிடைச்சது  இது யாருடையது என்று உண்மையை சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கத்தினேன் . அவர் மிக நிதானமாக இது நம்ம டிங்கி தான். அது தான் குதிரையாக மாறிவிட்டது என்றார்

சின்னபிள்ளையைப் போல பொய் சொல்கிறாரே என்று எரிச்சலும் கோபமும் பீறிட்டது. நாய் எப்பிடிப்பா குதிரையா மாறும் என்று முறைத்தேன். அவர் குதிரையின் அசைந்து கொண்டிருக்கும் இடதுகாதை காட்டி அதில் எல் என்ற எழுத்தை போல உள்ள முத்திரையை சுட்டிக்காட்டி இது டிங்கி காதுலயும் இருந்தது இல்லையா என்றார். அது உண்மையே. என்னுடைய நாயின் காதில் எல் என்ற எழுத்து போல அடையாளம் இருந்தது  அது எப்படி குதிரை காதிற்கு வந்திருக்கிறது.

நான் அருகில் சென்று காதை உன்னிப்பாக் பார்த்தேன். அப்படி அச்சு அசலாக அது நாயின் காதில் இருந்தது போலவே காணப்பட்டது. அத்துடன் குதிரை என்னை பார்த்தவுடன் நட்போடு வாலையும் அசைத்தது.   என்ன கர்மமிது. ஒரு நாய் எப்படிக் குதிரையாக மாற முடியும். அது ஒரு போதும் சாத்தியமில்லை. யாராவது அப்பாவை ஏமாற்றியிருக்கிறார்களா அல்லது அப்பாவிற்கு ஏதாவது மனப்பிரச்சனையா என்று குழப்பமாக இருந்தது.

அப்பா வழக்கம் போல காய்கறிகள் வாங்கிவருவதற்காக கூடையுடன் கிளம்ப தயராக இருந்தார். நான் அவரை வழிமறித்து முதல்ல நாயை என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க என்றேன். அவர் எப்பவும் போல வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன் என்றார். எங்கே போனீங்க. என்ன செஞ்சீங்கனு என் கூட கார்ல வந்து காட்டுங்க என்று கத்தியபடியே  காரை வெளியே எடுத்து அப்பாவை ஏற்றிக் கொண்டேன்.

அப்பாவின் முகம் இறுக்கம் அடைந்து போனது. அவர் மெதுவான குரலில் வழி சொல்லிக் கொண்டே வந்தார். முக்கால்வாசி பெங்களுரை சுற்றிவந்து மைசூர் சாலையில் கார் செல்ல துவங்கியது. இவ்வளவு தூரம் அப்பா தினமும் நடந்துவருகிறாரா. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகத்துடன் அவர் சொன்ன வழியில் சென்று கொண்டேயிருந்தேன். சாலை ஒரு இடத்தில் பிரிந்தது. அப்பா அந்தக் கிளைவழியாக செல்லும்படி சொன்னார். கார் மெதுவாக சென்றது. மரங்கள் அடர்ந்த சாலை வரத்துவங்கியது. அதன் உள்ளே சென்றதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வரச்சொன்னார்.

பத்து நிமிசம் நடந்திருப்பேன். நாணல புதர்வளர்ந்து போன பகுதியாக இருந்தது. அதை தாண்டி உள்ளே சென்றால் சிறிய ஏரி. அதைச் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். ஜில்லென அந்த இடம் குளிர்ச்சியேறியிருந்தது. ஒரேயொரு வாத்து நீரில் நீந்தியபடியே சென்று கொண்டிருந்தது. ஏரி தண்ணீரில் சலனமேயில்லை. ஆகாசம் நீரில் மின்னிக் கொண்டிருந்தது. இவ்வளவு அமைதியும் அழகுமான இடத்தை அப்பா எப்படிக் கண்டுபிடித்தார். ஆறுவருசமாக பெங்களுரில் எத்தனையோ கிளப்புகள், கொண்டாட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். இது போல ஒன்றை கண்டதேயில்லை. அப்பா எப்போதும் தான் அமரும் கல் என்று ஒன்றை காட்டினார்.

அதில் பாதி தண்ணீருக்குள் முழ்கியிருந்தது. அப்பா அதில் உட்கார்ந்து கொண்டு தன் காலை தண்ணீரில் விட்டு கொண்டார். சட்டென அவருக்கு வயது கலைந்து போய் பத்துவயதுச் சிறுவனை போலதோன்றினார். அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் அமைதியாக அந்த இடத்தை பார்த்தபடியே இருந்தேன். கேமிராவை கொண்டுவராமல் போய்விட்டோமே என்று மனதில் தோன்றியபடியே இருந்தது.

வந்த வழியை கவனமாக பார்த்து வைத்து கொண்டுவிட்டால் நாளை மீனாவை அழைத்துகொண்டு வரலாம் என்றும் தோன்றியது. அப்பா என்னிடம் பேசவேயில்லை. அவர் மௌனமாக ஏரியைப் பார்த்தபடியே இருந்தார். அப்படி என்ன இருக்கிறது ஏரியில் என்று தெரியவில்லை. நான் அங்கிருந்த மரங்களின் ஊடே நடந்து சென்றேன். சப்தமேயில்லை அது ஏதோவொரு தனித்தீவு  போல இருந்தது..  அப்பாவை போல பலரும் அங்கே வரக்கூடும் போலும். ஒரு இடத்தில் தூண்டில் ஒன்று சொருகி வைக்கபட்டிருப்பதை கண்டேன்

அரைமணி நேரமாகியிருக்க கூடும். அப்பா தண்ணீரை பார்த்தபடியே இருந்தார். அருகில் போய் நின்று இங்கே நாய் எப்படி குதிரையாக மாறியது என்று கேட்டேன். நாயைத் தனியே அலைய விட்டுவிடுவேன். வீடுதிரும்பும் போது அது தானாக என்னைத் தேடிவந்துவிடும். இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அது திரும்பிவரும்போது குதிரையாக மாறி இருந்தது என்றார்.

அது தான் எப்பிடி நடந்தது என்று கேட்டேன்.  எனக்கு அதைப் பற்றி யோசிக்க விருப்பமில்லை. அது நமது டிங்கி என்று பார்த்தவுடனே தோன்றியது. வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் என்றார். ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்று ஆத்திரமாக வந்தது

அது ஒருவேளை வேறு யாருடைய குதிரையாகவோ இருந்திருந்தால். அவர் நாளை நம்மைத் தேடி வந்து கேட்கமாட்டாரா என்று கேட்டேன். அப்பாவிடம் பதில் இல்லை. நாய் அப்பாவிடமிருந்து தப்பி எங்கோ ஒடிபோயிருக்க கூடும். அதைச் சமாளிக்க அப்பா ஒரு குதிரையை அழைத்து வந்து நாடகம் ஆடுகிறாரோ என்று கூட தோன்றியது. அப்பா ஆனால் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு அவரது பேச்சு அலுத்துப் போகத் துவங்கியது. நாங்கள் வீடு திரும்பிய போது அண்டை அடுக்குமாடி வீட்டில் இருந்தவர்கள் தங்கள் ஜன்னல்களை திறந்து எங்கள் குதிரையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மட்டும் குதிரை அழகாக இருக்கிறது அங்கிள் என்று பாராட்டினாள். நான் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றேன். இதை என்னசெய்வது. எப்படிச் சமாளிப்பது என்று தலைவலிக்க துவங்கியது. மீனாவிற்கு டிங்கிக்கு என்ன ஆனது என்ற கவலை பிடித்து கொண்டது. அந்த நாயை வாங்கியவள் அவள். டிங்கி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்

பகலில் தனியாக இருக்கும் வீட்டினைப்  பாதுகாக்க நாய் தேவைப்பட்டது. நானும் மீனாவும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். வேறு வேறு அலுவலகங்கள். ஆகவே இருவரும் காலை எட்டு இருபதிற்குள் வீட்டில் இருந்து கிளம்பிவிட வேண்டும்.  பகல் முழுவதும் வீட்டைப் பார்த்துக் கொள்வது நாய் மட்டுமே.  அதற்கான உணவும் தண்ணீரும் வெளியே ஒரு தட்டில் போட்டு வைக்கபட்டுவிடும். அது நாள் முழுவதும் வாசல்படியை ஒட்டியே தான் படுத்து கொண்டிருக்கும். பகலில் நாய் என்ன செய்து கொண்டிருக்கும் என்று நாங்கள் யோசித்ததே கிடையாது. நாங்கள் நாயை வெளியே அழைத்து போக நேரமும் இருப்பதில்லை.

டிங்கியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக மட்டுமே அப்பா ஊரில் இருந்து கிளம்பி வருகிறாரோ என்று சந்தேகப்படும் அளவில் அப்பா இரண்டுவாரம் ஒரு முறை ஊரிலிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார். தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் அதை நடத்தி கூட்டி கொண்டு செல்வார். முழுபெங்களுரையும் சுற்றிவிட்டு தான் திரும்புவார்கள் போலும். எப்படியும் நடைபயிற்சி முடித்து திரும்பி வர மூன்று மணிநேரமாகும். அதன்பிறகு நாயின் சுபாவம் ஒருவாரத்திற்கு உற்சாகத்துடன் இருக்கும்.

அப்பா எங்களுடன் இல்லை. அவருக்கு இந்த ஏப்ரலோடு எழுபத்திமூன்று வயதாகிறது. அவர் தனியாக சொந்த கிராமமான செவல்பட்டியில் வசிக்கிறார்.  இருபத்தியாறு வயதுவரை தனியாக வசித்து வந்த அவர் நாக்பூரில் அம்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு போதும் தனியாக இருந்ததேயில்லை.

வீட்டில் அம்மாவும் நான்கு குழந்தைகளும் அத்தையும் அவர்களது மூன்று பிள்ளைகளும் என்று நாங்கள் பெரிய குடும்பமாக இருந்தோம். ஐம்பது வருசங்களுக்கு முன்பாக தனி ஆளாக அப்பா நாக்பூருக்கு வந்துசேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணியில் இருந்த திரவியம் மாமாவின் ஆலோசனையாக இது இருக்க கூடும். அதை பற்றியெல்லாம் அப்பா பேசிக் கொண்டதேயில்லை.

ஆனால் மொழியறியாமல் தன் இருபது வயதில் அப்பா நாக்பூரில் போன்ஸ்லேயின் ஆரஞ்சு மண்டியில் வேலை  செய்திருக்கிறார். தள்ளுவண்டியில் பழங்களை விற்று பிழைத்திருக்கிறார். ரகுஜிராவ் என்ற நண்பரின் உதவியால் அப்பா ஆரஞ்சு ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்த போது வயது இருபத்தியாறு. அதன்பிறகு அவர் வேலை மாறவேயில்லை. ஆனால் நாக்பூருக்கு வந்த ஆறு ஆண்டுகளில் அப்பா எங்கேதங்கியிருந்தார் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.

என் அம்மாவின் பெயர் சாந்த துர்கா, அவர் மராத்தியைச் சேர்ந்தவர். அவரைத் திருமணம் செய்து வைக்க அப்பாவிற்கு உதவியது லட்சுமண் ரானே என்று சொல்வார்கள். வீட்டில் அவரது ஒரு புகைப்படம் இருக்கிறது. நாங்கள் பிறப்பதற்கு முன்பாக அவர் இறந்து போயிருந்தார். அம்மாவின் கிராமத்தில் இருந்து தான் அப்பாவின் மண்டிக்கான ஆரஞ்சு பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன. அந்த தொடர்பில் அவர் கிராமத்திற்கு சென்றிருக்க கூடும். அம்மாவைப் பற்றி அறிந்திருக்ககூடும். இவை எல்லாம் எங்களது யூகங்கள். அம்மா தன் திருமணத்தின் முன்பு அப்பாவை பற்றி ஒரு வார்த்தை கூட கேள்விபட்டதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறாள்.

எப்படி உங்கள் திருமணம் நடந்தது என்று கேட்டபோது அவளது அப்பா இறந்து போய் மாமாவீட்டில் வசித்து வந்ததால்  திருமணம் பற்றி யாரும் அவளிடம் ஆலோசிக்கவேயில்லை என்று சொல்வார். அப்பாவிற்கு யாரையும் கடிந்து கொள்ளவோ கோபப்படவோ பிடிக்காது. அவர் ஒரு நிழலை போலவே நடந்து கொள்வார்.

அவர் வீட்டிற்குள் வருவதும் போவதும் கூட சப்தமில்லாமல் தான் நடக்கும். யோசனை. தீராத யோசனை அவர் முகத்தில் எப்போதுமிருப்பதை கண்டிருக்கிறேன். நான் வீட்டின் கடைசிபிள்ளை.நான் பிறந்த பிறகே அம்மா மிகவும் நோய்வாக படத் துவங்கினார். அதன்பின்னான ஏழு வருசங்களில் அம்மா இறந்து போனார். எங்களை பார்த்து கொள்வதற்காக ஊரில் இருந்து அத்தையும் குடும்பமும் எங்களுடன் சேர்ந்து வாழ துவங்கினார்கள்.

நானும் அக்காக்களும் நாக்பூரில் படித்தோம். பிறகு நான் டெல்லிக்கு படிக்க சென்றேன். அப்பா ஒரேயொரு முறை என்னைப் பார்க்க டெல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு வந்திருந்தார். அன்று நான் காலை ஏழு மணிக்கே பயிற்சிவகுப்பிற்கு சென்று விட்டதால்  விடுதியின் வெளியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் காலை முதல் மாலை ஆறு வரை உட்கார்ந்திருந்திருக்கிறார். அதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சலித்து கொள்ளவில்லை. எனக்குத் தேவையான பணத்தை தந்துவிட்டு இரவே அவர் ஊருக்கு புறப்பட்டும் போனார். அவ்வளவு தான் அவரை பற்றிய எனது நினைவுகள் . மற்றபடி அவரை நான் நெருக்கமாக உணரவேயில்லை. எனக்கு வேலை கிடைத்து பெங்களுர் வந்து அப்பாவின் விருப்பபடியே மதுரையில் படித்த தமிழ்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆறுவருசமாக பெங்களுரில் வசித்து கொண்டிருக்கிறேன்.

அப்பாவிற்கு எங்கள் யாரோடும் சேர்ந்து இருப்பதற்கு பிடிக்கவேயில்லை. அதை என் பெரிய அக்கா ஒரு முறை அவரிடமே சொல்லியும் விட்டாள். அதற்கு அப்பா தூரத்தில் வசிக்கும் போது மட்டும் தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைப்பு வருகிறது. அருகில் இருந்தால் வேறு யாரையோ போலிருக்கிறீர்கள் என்றிருக்கிறார். அப்படிதான் அப்பாவின் பேச்சு எப்போதுமிருக்கும். அது இயல்பானதா அல்லது தன்னை மறைத்து கொள்ள அப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. நானே சில வேளை அப்படி பேசுகிறேன் என்று என் மனைவி சொல்கிறாள். எதற்காக இந்த பழக்கம்.

அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளபடாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். சொற்ப வருமானத்தில் பெரிய குடும்பம் ஒன்றை வளர்த்து காப்பாற்றிவருவது எளிதானதில்லை. யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது. சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையை தந்து அவரைக் காரில் அழைத்து கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள் வாங்கி தந்து அன்பாக வைத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்தக் கனவுகுமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.

அப்பா வயதாக ஆக எதை எதையோ நம்பத் துவங்குகிறார் என்பதற்கு முதற்சாட்சி நாக்பூரை விட்டு நாங்கள் காலி பண்ணியது. அப்பா திடீரென ஒரு நாள் காலை தான் சொந்த ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியிருக்கப் போவதாக சொன்னார்.  எனக்கும் தங்கைகள் எவருக்கும் அந்த யோசனை பிடிக்கவில்லை.   தன்னுடைய கனவில் அந்த ஊர் திரும்ப திரும்ப வருவதாக  சொல்லிய  அப்பா அடுத்த வாரமே செவல்பட்டிக்கு சென்று வீடு ஒன்று கட்ட துவங்கிவிட்டார். மூன்றே மாதங்களில் நாக்பூரில் நாங்கள் வசித்து வந்த பூர்வீக வீடு விற்கபட்டு எங்களது நாற்பத்தியோறு வருட நாக்பூர் வாழ்க்கை முடிந்து போனது.

சொந்த ஊரில் என்ன இருக்கிறது. அப்பா இருபது வயதில் ஊரைவிட்டு ஒடிப்போனவர் என்பதால் அங்கிருந்த யாருக்கும் அவரோடு உறவில்லை. அப்பாவைத் தவிர மற்ற உறவினர்கள் ஊரை காலி செய்து அருகாமை நகரங்களுக்கு போய்விட்டார்கள். ஆகவே உறவினர்களும் அங்கில்லை. அந்த கிராமத்திற்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே போய்வருகிறது. நிறைய புளிய மரங்கள் அடர்ந்த ஊரது. எதற்காக அங்கே குடியிருக்க வேண்டும். ஏன் இந்த தடுமாற்றம். அப்பா அதைச் சொல்வதேயில்லை. அவராக எதையோ கற்பனை செய்து கொள்கிறார். பேசமறுக்கிறார் என்று ஆத்திரமாகவே இருக்கிறது.

அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே அவர் நாய் தான் குதிரையாக மாறிவிட்டது என்று சொல்வதாக நினைத்தேன். அன்று பகல் முழுவதும் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அப்பா நாள் எல்லாம் குதிரையின் அருகிலே உட்கார்ந்திருந்தார். அதன் உடலை சுத்தம் செய்தார். அதற்குத் தேவையான குடிநீரை வாளியில் பிடித்து வைத்தார். மீனா அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று உறுதியாக சொன்னாள்.

யாரிடம் இதைப்பற்றி பேசலாம் என்று தெரியாமல் என்னோடு வேலைபார்க்கும் வித்யாகருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவன் குதிரையை தனது பையன் நெடுநாட்களாக பார்க்க வேண்டும் என்று சொல்லி மாலை வீட்டிற்கு வருகிறேன். நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டான்.

மாலை வித்யாகர் குடும்பம் வந்திருந்தது. குதிரையை அவன் வான் உயர புகழ்ந்து தள்ளினான். அது போன்ற குதிரையின் விலை பத்து லட்சமிருக்க கூடும் என்று சொல்லி உன் அப்பா பெரிய அதிர்ஷடத்தை கொண்டுவந்திருக்கிறார் என்று பாராட்டினான். குடும்பமே குதிரையின் முன்பாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள். அவன் அப்பாவிடம் தனக்கு குதிரைகள் பற்றியுள்ள ஞானம் முழுவதையும் கொட்டித் தீர்த்தான். அப்பா அதில் சலனமடையவேயில்லை.

இரவில் மீனா நாளை நாம் என்ன செய்வது என்று கேட்டாள். எதற்கு என்று புரியாமல் கேட்டேன். காலை ஆறுமணி ரயிலில் உங்கள் அப்பா ஊருக்கு கிளம்பி போய்விடுவார். நீங்கள் ஒருநாள் விடுமுறை எடுத்து கொண்டு இந்த குதிரையைக் காலி செய்யப்பாருங்கள் என்றபடியே புரண்டு படுத்து கொண்டாள். குதிரையை என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது. தூக்கம் பிடிக்கவேயில்லை. காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா ஊருக்கு கிளம்பி போயிருந்தார்.

குதிரை அதே இடத்தில் நின்றிருந்தது.  நான் அன்று ஒருநாள் விடுமுறை போட்டேன். என்னிடம் உள்ள ஒவ்வொரு தொலைபேசி எண்ணாக பேசிபேசி குதிரையை என்ன செய்வது என்று திட்டமிட துவங்கினேன். அதைப் பற்றி காவல்துறையில் புகார்செய்ய வேண்டும் என்று ஒரு நண்பன் மிரட்டினான். அதை விற்க முடியாது சிக்கல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை ஏதாவது ஒரு சேவைநிலையத்திற்கு தள்ளிவிடு என்றொரு ஆலோசனை வந்தது. என்ன செய்வது என்று முடிவாக எதுவும் தெரியவில்லை.

திடீரென குதிரை நேற்றில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்ற யோசனை தோன்றியது. குதிரை சாப்பிட என்ன தருவது. எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள காய்கறிகளை ஒரு காகிதத்தில் அள்ளி போட்டு அதன்முன்னே வைத்தேன். அது எதையும் சாப்பிடவில்லை. ஒரு குதிரை என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும், எப்போது உறங்கும், என எந்த விபரமும் தெரியவில்லை. அது குதிரை என்ற பெயர் மட்டுமே தெரிந்திருக்கிறது

உடனே கம்ப்யூட்டரில் குதிரையை பற்றிய அடிப்படை விபரங்களை தேடத் துவங்கினேன். ஆயிரமாயிரம் பக்கமாக நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. குதிரைகளின் வியப்பான சரித்திரத்தை அது என்றாவது நினைவில் கொண்டிருக்குமா. நினைத்து வேதனை அடையுமா என்ற நினைப்போடு குதிரைகளின் புகைப்படங்களை பார்த்தபடியே இருந்தேன். அதில் ஒரேயொரு தகவல் குதிரை சாப்பிடுவதற்கென தனியான புல் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றிருந்தது. அதன் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு எனது குதிரைக்கான புல்வேண்டும் என்று ஆர்டர்  செய்தேன்.

உண்மையில் என்னுடைய குதிரை என்று சொல்வதற்கு கூச்சமாகவே இருந்தது. இரண்டு மணிநேரம் சென்று ஒரு வேனில் புற்கட்டுகள் வந்து இறங்கியது. ஒரு வயதானவர் அதை எடுத்து வந்து என் குதிரையின் முன்னால் போட்டுவிட்டு குதிரை நன்றாக இருக்கிறது என்ன வம்சமது என்று கேட்டார். நான் அது என் அப்பாவின் குதிரை என்று மட்டும் சொன்னேன். அவர் என் அப்பாவை ஒரு ராஜா போல கற்பனை செய்து கொள்ளக் கூடும். அது ஏனோ எனக்கு பிடித்திருந்தது. இனிமேல் யாராவது கேட்டால் அது என் அப்பாவின் குதிரை என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

குதிரை அமைதியாக புல்லைத் தின்றபடியே நின்றிருந்தது. அதன் அருகாமையில் போய் தொட்டு பார்த்தேன். இதன்மீதேறி தான் மனிதர்கள் நூற்றாண்டுகாலமாக பயணம் செய்திருக்கிறார்கள். சண்டையிட்டிருக்கிறார்கள். பந்தயம் கட்டி ஒட விட்டிருக்கிறார்கள். இன்று இயந்திரங்கள் இந்தக் குதிரைகளை நம் கவனத்தில் இருந்து முழுவதாக அப்புறப்படுத்திவிட்டதே என்று தோன்றியது.

குதிரையின் கண்களை கவனித்தேன். எவ்வளவு சாந்தம். நாயின் கண்களில் இல்லாத அமைதியது. அது சாப்பிடுவதில் கூட அதிக விருப்பம் கொள்ளவேயில்லை. அதன் நெற்றியில் கைவைத்து தடவிவிட்டேன். குதிரையை நெருங்கிப் பார்க்கும் போது நானே சிறுவனாகிவிட்டது போல தோன்றியது. சிறுவயதில் ஒரு மரக்குதிரை ஒட்டியிருக்கிறேன். இப்போது தான் நிஜக்குதிரையை தொட்டு தடவி பார்க்கிறேன். அதன் முதுகு எலும்புகள் இரும்பை போல உறுதியாக இருந்தன.  பகல் முழுவதும் குதிரையைப் பார்த்து கொண்டேயிருந்தேன்.

மீனா அலுவலகம் விட்டு திரும்பியதும் குதிரை அதே இடத்தில் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தாள். தான் உடனே கிளம்பி ஊருக்கு போகப் போவதாக மிரட்டினாள். உனக்கு எதற்காக குதிரையை பிடிக்கவில்லை என்று கேட்டேன். அவள் அது நாய்போல இல்லையே என்று சொன்னாள். இல்லை இதோடு நாம் இன்னமும்பழகவில்லை என்று சொன்னேன்.  உங்கள் அப்பாவை போலவே பேசாதீர்கள். எனக்கு குதிரைகள் வேண்டாம். நாம் என்ன நெப்போலியனா, இல்லை ராஜாதேசிங்கா குதிரையில் போக என்று கேட்டாள்.

அவள் சொன்னபிறகு தான் பெருமைக்குரிய குதிரை வைத்திருந்தவர்கள் பற்றிய தகவல்கள் மண்டைக்குள் பீறிட துவங்கின. இரண்டு நாளில் அந்தக் குதிரையை எப்படியாவது அனுப்பிவிடலாம் என்று சமாதானம் சொன்னேன். இரவில் அவள் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் போனில் குதிரை பற்றியே பேசிக் கொண்டேயிருந்தாள். நான் மறுபடி அப்பாவை போனில் கூப்பிட்டு இது யாருடைய குதிரை உண்மையை சொல்லிவிடுங்கள் என்று கேட்டேன். அப்பா  அது நமது டிங்கியே தான் என்றார். ஒரே பொய்யை ஏன் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் என்று கத்தினேன். மறுமுனையில் பேச்சேயில்லை.

மறுநாள் நாங்கள் குதிரையை பற்றி யோசிக்க கூடாது என்று முடிவுசெய்து காலை அவசரமாக  வீட்டை பூட்டிக் கொண்டு அலுவலகம் சென்றோம். பகலில் வேலையின் நடுவில் குதிரை என்னவாக இருக்கும் என்ற யோசனை தோன்றி மறையும். ஆனால் அதை பற்றி நினைக்க கூடாது என்று கறாராக இருந்தேன். மாலை வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் பெரிய கூட்டம் நின்றிருந்தது. அத்தனையும் குதிரையை வேடிக்கை பார்க்கும் கூட்டம். அருகாமை வீட்டின் கூர்க்கா தான் கேட்டை தாண்டி போய் குதிரைக்கு குடிதண்ணீர் வைத்ததாக விளக்கம் தந்து கொண்டிருந்தான்.  குதிரையை நானே கொண்டுபோய் எங்காவது விட்டுவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து அதை கையில் பிடித்து கொண்டு நடக்க துவங்கினேன்

வீதியில் குதிரையோடு நான் செல்வதை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று தோன்றியது. குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துகொண்டு நடப்பது அவமானமாக இருந்தது. அதை சகித்தபடியே நடத்தி கொண்டு சென்றேன். எங்கே கொண்டுபோய்விடுவது என்று தெரியவில்லை. வழியில் ஒரு பயம் வந்தது. ஒருவேளை அப்பா அடுத்தவாரம் திரும்பிவந்து அந்த குதிரை யாருடையது என்ற உண்மையை சொல்லிவிட்டால் திரும்பி கொடுக்க என்ன செய்வது. குதிரையைக் கொடுக்க முடியாவிட்டால் பத்து லட்சம் பணம் அல்லவா தர வேண்டியது இருக்கும். நான் குதிரையோடு வீடு திரும்பிய போது இரவாகியிருந்தது.

குதிரையை நான் ஏன் வெறுக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அன்றிரவு குதிரைகளைப் பற்றி நிறைய படித்தேன். உயிருடன் கம்பீரமாக என் வீட்டின் வாசலில் நிற்கும் அதை ஏன் நான் அலட்சியப்படுத்துகிறேன் என்று குழப்பமாக இருந்தது.

இரண்டுநாட்களில் அந்த குதிரை எங்கள் வீட்டின் அடையாளமாகி போனது. கூரியர் ஆள், காய்கறிவிற்பவன், கேஸ்சிலிண்டர் கொண்டுவருபவன் என எல்லோரும் அதை நேசித்தார்கள். அதற்கு என்ன பெயர் என்று ஆசையாக கேட்டார்கள். அடுத்த மாதம் தனது தம்பி திருமணத்திற்கு அந்த குதிரையை இரவல் தர முடியுமா என்று தபால்காரன் அன்போடு கேட்டான். தலையாட்டிக் கொண்டேன். என் மனைவிக்கு குதிரையை பிடிக்கவேயில்லை. பூனை நாயை கூட பிடிக்கும் அவளுக்கு குதிரை மீது ஏன் இவ்வளவு வெறுப்பு.

குதிரைக்கு தினமும் ஒரு கட்டு புல்லும், குடிதண்ணீரும் வைக்கும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன். சிலவேளைகளில் அதன் வயிற்றை தடவிவிடுவேன். நெற்றியில் விரலால் அழுத்தி கொடுப்பேன். குதிரைசாணத்தின் நாற்றத்தை என் மனைவியால் சகித்து கொள்ள முடியவேயில்லை. அதையும் நானே சுத்தம் செய்ய துவங்கினேன். குதிரையை நம்பி வீட்டை விட்டு சென்றேன். குதிரையோ வந்த நாளில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.

சில நாட்களில் எனக்கு குதிரையைப் பிடித்துபோக துவங்கியது. அதை நேசிக்க ஆரம்பித்தேன். அப்பாவை போல அதை நானும் வாக்கிங் கூட்டி செல்ல முடியுமா என்று நினைத்தேன். சிறுவர்களை குதிரையோடு விளையாட அனுமதித்தேன். அண்டை வீட்டோர் என்னை புரியாமல் பார்த்தார்கள்.

ஒரு வெள்ளிகிழமை இரவு எப்போதும் போல அப்பா பிறகு வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் குதிரை எப்படியிருக்கிறது என்று தான் கவனித்தார். பிறகு அவர் அதை காலையில் தான் வாக்கிங் அழைத்து செல்வதாக சொல்லியபடியே நெருங்கி உட்கார்ந்து கொண்டார். இரவில் அப்பா குதிரையோடு ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா குதிரையை அழைத்து கொண்டு வாக்கிங் சென்றிருந்தார். என் மனைவி தனது தோழியின் வீட்டிற்கு போக கிளம்பி கொண்டிருந்தாள்.காலை ஒன்பது மணியிருக்ககூடும். அப்பா திரும்பிவருவது தெரிந்தது. அப்பாவின் கையில் டிங்கியிருந்தது. குதிரை எங்கே போனது. எப்படி நாய் திரும்பவந்தது என்று திகைப்பாக இருந்தது.

அப்பா மிக இயல்பாக  நாயை அதன் இடத்தில் கட்டிவிட்டு  வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படிக்க துவங்கினார். தனது நாயை பார்த்த சந்தோஷத்தில் மீனா டிங்கியை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். நான் அப்பாவிடம் குதிரை எங்கே போனது என்று கேட்டேன்.

குதிரை மறுபடியும் நாயாக மாறிவிட்டது என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரிடம் வேறு கேள்விகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. நாயை கண்டுகொள்ளாமல் குளிக்க சென்றேன்.

இரும்பு கேட்டின் வெளியே சிறுவர்கள் குதிரையைத் தேடி வந்து விசாரித்து கொண்டிருப்பது கேட்டது. அப்பா சொல்வது எல்லாம் உண்மை என்று எனக்கு அப்போது தோன்றியது. நாய்களைப் போல ஏன் குதிரை தன் இருப்பை காட்டிக் கொள்ள சப்தமிடுவதோ கத்துவதோ இல்லை என நான்  குதிரையை பற்றியே நினைத்துகொண்டிருந்தேன். என்னை அறியாமல் மனதில் வலி கவ்வியது. அப்பா எப்போதும் போல காய்கறி வாங்க கூடையுடன் வெளியே கிளம்பி போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

**
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 03, 2013, 09:13:19 PM
சீட்டாட்டம்

சிறுகதை

இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்,

அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற்றும் உணவு அப்படியே சாப்பிடப்படாமல் இருக்கின்றன, சில நேரம் சிகரெட் தேவை என்ற குறிப்பு ஜன்னலில் சொருகப்பட்டிருக்கிறது, அந்தச் சமையற்காரன் உள்ளே விளையாடும் மூவரையும் பார்த்ததேயில்லை ஆனால் அவர்களைப் பற்றி அவனாக நிறையக் கற்பனை செய்து வைத்திருக்கிறான்

அவர்கள் மூவரும் சீட்டாடத்துவங்கிய போது மூன்று நிபந்தனை விதித்தார்கள், முழுமையாக ஒருவர் வெற்றி பெரும்வரை ஆட்டத்தைப் பாதியில் விட்டு எவரும் விலகிப் போக கூடாது. விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது, சீட்டாட்டம் முடிவுக்கு வரும்வரை அந்த அறையின் கதவு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை,

அந்த மூவருக்கும் பெயர்கள் இருந்த போதும் அவர்கள் 3, 6, 9 என அவர்களின் விருப்பமான எண்களால் அழைக்கப்படவே விரும்பினர், மூன்றாம் எண் உள்ள அந்த ஆள் இருபத்தியோறு வயது நிரம்பியிருந்தான், அதிகம் குடித்து அலையும் அவன் நான்குமுறை காதல் தோல்வியடைந்திருந்தான், ஆறாம் எண் உள்ளவன் ஒரு வணிகன், அவன் மனைவி அழகானவள், அவளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான், அவளது அழகு நெருப்பைப் போல காண்பவரைப் பற்றிக் கொண்டுவிடுகிறது என்று சந்தேகம் கொண்டவானயிருந்தான், ஒன்பதாம் எண் உள்ளவன் நாற்பது வயதான ஒரு உயர் அதிகாரி அவன் மற்றவர்களைத் தோற்கடிப்பதில் ஏற்படும் சந்தோஷத்திற்காகவே சீட்டில் ஆர்வம் கொண்டிருந்தான், இவர்கள் மூவரும் ஒன்பதாம் எண் உள்ளவனின் ரகசியத் தோழியான வினி என்பவள் வீட்டினைச் சீட்டு விளையாடத் தேர்வு செய்தார்கள்,

சீட்டாட்டத்தில் அவர்கள் மாறிமாறி ஜெயிப்பதும் தோற்பதுமாக இருந்தார்கள், ஒரு ஆள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற முடியாதபடி விளையாட்டு நீண்டு கொண்டேயிருந்த்து, இந்த விளையாட்டு அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய சில யூகங்களே நிஜத்தை விட முக்கியமானது, அவர்கள் இப்படி எல்லாம் நினைத்திருக்க்கூடும் என்பதே இதன் புதிர்தன்மை,

யூகம் 1 : சீட்டில் ஆறர்ம் எண் கொண்டவன் தோற்றுப்போய்விட்டால் அதற்கு ஈடாக அவன் மனைவியை பறித்துக் கொண்டு அவளுடன் சல்லாபம் செய்யலாம் என்பதைப் பற்றி கற்பனை செய்து கொண்டான், அது சீட்டு விளையாட்டினை விட சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்தான் 3ம் எண் உள்ளவன்

யூகம் 2 : 3ம் எண் உள்ளவன் இன்று தோற்றுப்போய் விட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொண்டுவிடுவான், அவனது சாவின் பிறகு அவனது பழைய காதலிகளை சந்தித்து அவனது கடைசி நிமிசம் பற்றிச் சொல்லி அவர்களோடு நெருங்கிப் பழக அதிக சாத்தியமிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தான் 6ம் எண் மனிதன்

யூகம் 3  :ஒன்பதாம் எண் உள்ளவன் தன் எதிரில் ஆடும் நபர்கள் திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் அவர்களுடன் எப்படி உறவு கொள்ளலாம் என்று கற்பனை செய்தான்

யூகம் 4   : தனது தோல்விக்குக் காரணமான ஒன்பதாம் எண் உள்ளவனை கொல்வதற்கு என்ன ஆயுதங்களை தேர்வு செய்வது எப்படிக் கொல்வது என்று நினைத்தபடியே மௌனமாக விளையாடினான் ஆறாம் எண்

யூகம் 5 : இந்தச் சீட்டுவிளையாட்டு ஒரு சதித்திட்ட்ம் இதைத் தீட்டியவள் 9ம் எண்ணின் கள்ளக்காதலி அவள் மூவரையும ஒழிப்பதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கிறாள்,  இந்தச் சதி அவள் நினைத்த்து போல நடக்க கூடாது, ஆகவே ஆட்ட முடிவில் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்3 எண் உள்ளவன்

யூகம் 6   :கையில் உள்ள சீட்டுக்ள் யாவும் உயிருள்ள பறவைகள் போல பறந்துவிடந்து துடிக்கின்றன, அதைக் கட்டுபடுத்தி வைப்பது சிரம்மானது என்று திகைத்தபடியே சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் ஆறு எண் உள்ளவன்

யூகம் 7  :இரவும் பகலும் மாறிக் கொண்டேயிருக்கிறது, கடிகாரம் இல்லாமல் சீட்டின் உதவியாலே காலத்தை அளக்கமுடிகிறது, இதுவரை எவ்வளவு சீட்டுகள் இறஙகியிருக்கின்ற்ன  எவ்வளவு ஆட்ட்ம் முடிந்திருக்கிறது என்பதை வைத்து நாட்களைக் கணக்கிடுவது ஒரு விசித்திரம். என்றான் 3ம் எண் உள்ளவ்ன்

யூகம் 8  :ஒரு சீட்டினை ஒருவன் கையில் இருந்து கிழே போடுவதற்கும் மற்றவன் அதை எடுப்பதற்கும் இடையில் எண்ணிக்கையற்ற  உலக நிகழ்வுகள் நடக்கின்றன, பலர் பிறக்கிறார்கள் பலர் சாகிறார்கள் பலர் புணர்கிறார்கள் பலர் முத்த்மிட்டுக் கொள்கிறார்கள் பல கொலைகள் நடக்கின்றன பலர் காதலிக்க துவஙகுகிறார்கள் பலர் துரோகம் செய்கிறார்கள், பலர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் சகமனிதனை துன்புறுத்துகிறார்கள், இதற்கு இடையில் தான் சீட்டாட்டம் நடக்கிறது என்றான 9ம் எண் உள்ளவன

யூகம் 9  :ஒரு மலர் உதிர்வதை அல்லது பூப்பதைப் போல ஒரு விந்தையே ஒரு சீட்டை எடுப்பது, சீட்டு விளையாட்டு ஒரு விசித்திரத் தியானம், அங்கே நமது எண்ணங்கள் ஒடுங்கிவிடுகின்றன நாம் கரைந்து போய்விடுகிறோம் கண்களும் கைகளும் மட்டுமே செயல்படுகின்றன என்றான் ஆறாம் எண்

யூகம் 10 : சீட்டுவிளையாட்டு என்பது நமது வெறுப்பு. ஆசை மற்றும் கோபத்தை அளவிட உதவும் ஒரு கருவி. சீட்டு ஆடுகின்றவர்கள் தன்னைப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், சீட்டுவிளையாட்டில் தோல்வியை இயல்பாக ஒருவராலும் எடுத்துக் கொள்ள முடியாது, புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபமடைந்தே தீருவான் என்றாம் 3ம் எண் ஆள்

யூகம் 11  :சீட்டுவிளையாட்டில் மனம் எப்போதுமே இல்லாத விசயங்களைக் கற்பனை செய்கிறது, நடக்காத சாத்தியங்களை நிறைவேற்றி பார்க்கிறது, சீட்டு ஆடுபவர்களுக்கு உலகம் ஒரு இலந்தைபழம் அளவு சுருங்கிப்போய்விடுகிறது என்றான் 9ம் எண் ஆள்

யூகம் 12  :ஒருவர் கையில் உள்ள சீட்டும் மற்றவர் கையில் உள்ள சீட்டும் விநோதமான உறவு கொண்டிருக்கின்றன, அவை மனிதர்களின் வழியே தன் ஒன்ற சேருதலையும் பிரிவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன என்றான் 6ம் எண் மனிதன்

யூகம் 13  :எல்லாச் சீட்டுகளும் ஒன்று போலக் காணப்பட்டாலும் அதன் மதிப்பும் சேர்கையும் ஒன்றுபோல இருப்பதில்லை ஆகவே உலகை கையில் எடுத்து விளையாடுவதன் சிறிய வடிவமே சீட்டாட்டம், ஆகவே சீட்டாடி வெல்ல தெரிந்தவன் உலகை எளிதாக புரிந்து கொண்டுவிடுவான் என்றான் 9ம் எண்மனிதன்

யூகம் 14  :ஒவ்வொரு முறை சீட்டில் தோற்கும் போது காம்ம் பொஙகுகிறது, வென்றவனும் காமத்தை பற்றியே நினைக்கிறான், ஆகவே சீட்டு விளையாட்டின் வெற்றியும் தோல்வியும காமத்தூண்டல்களே, எல்லா விளையாட்டின் வெற்றியும் புணர்ச்சியால் மட்டுமே சாந்தியடைகிறது மனிதன் தனது ஒரே புகலிடமாக பாலின்பத்தையே கொண்டிருக்கிறான் என்றான் 3ம் எண் உள்ளவன்

யூகம் 15  :சீட்டுவிளையாட்டின் போது உருவாகும் மௌனம் தூக்கின் முன்னால் நிற்கும் மௌனம் போல அடர்த்தியானது, அது தொடர்ந்து மனதை வன்முறையை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறது, சீட்டு மனிதன் கண்டுபிடித்த ரகசியமான ஆயுத்ம் என்று நினைத்தான் 6ம் எண் கொண்டவன்

யூகம் 16  :ஏதாவது ஒரு நிமிசம் 3வரும் ஒரே சீட்டைத் தேர்வு செய்வதும் 3வரும் ஒரே சீட்டை கிழே போடுவதும் நடக்கிறது  அப்போது ஒரே ஆள் தான் மூன்று தோற்றத்தில் விளையாடுவது போல உள்ளது என்றான் 9ம் ஆள்.  சீட்டாட்டம் உச்சமடையும் போது நிர்வாணமாக இருப்பது போலேவே தோன்றுகிறது, அறைக்கு வெளியே உள்ள உலகின் சிறு சப்தம் கூட பேரோசையாகி விடுகிறது, ஆகவே சீட்டு விளையாட்டு உலகின் நுண்மையை மனம் அறியும் தருணம் என்றான் 6ம் எண் மனிதன்

யூகம் 17  :சீட்டில் வைக்கப் பணம் இல்லாத போது வீட்டின் அருகாமையில் உள்ள மரங்கள் தெருநாய்கள் காட்டில் உள்ள மிருகங்கள் அருவி ஆறு மலை ஆகாசம் நட்சத்திரம் சூரியன் சந்திரன் என எதையும் பந்தயப்பொருளாக வைத்துச் சூதாடலாம், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே, அதை எவரும் ஆட்சேபணை செய்ய முடியாது. சீட்டுவிளையாட்டு   கணிதத்தின் உன்னத நிலை அதை விளையாடி அனுபவிக்கிறோம் என்றான் 9ம் எண் உள்ளவன்

யூகம் 18  :கள்ளத்தனத்தை கற்றுக் கொள்வதற்கு எளிமையான பயிற்சியே சூதாட்டம், சீட்டு ஆடும் மேஜையில் வைக்கபடும் உணவு பானகம் இரண்டும் ருசியிழந்துவிடுகின்றன, சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது என்றான் 3ம் எண்காரன்

யூகம் 19  :விதியை நேர்கொள்ள விரும்பினால் சூதாடி பார்க்கலாம்,   எல்லா சீட்டுவிளையாட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் விதியும் சேர்ந்து உட்கார்ந்தே ஆடுகிறது, அதன் பரிகாசக்குரலை பல நேரங்களில் நாம் கேட்க முடியும் என்றான் 6ம் எண்

யூகம் 20  :தோற்றுத்திரும்புகின்றவன் அடையும் வலி சொல்லற்றது, அதை புரிந்து கொள்ள சூதாடினால் மட்டுமே முடியும் ஆகவே சூதாட்டம் என்பது வலியை விரும்பி ஏற்றுக் கொள்வது என்றான் 9ம் எண்

இப்படி அவர்கள் நினைத்த யூகங்களைத் தாண்டி அவர்கள் விளையாடிக் கொண்டேயிருந்தார்க்ள் 8365 நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் விளையாடிய போதும் சீட்டாட்டம் முடிவடையவேயில்லை, ஒரு நாள் சமையல்காரன் அந்த அறைகதவை திற்ந்து பார்த்த உள்ள மூன்று காலி நாற்காலிகள் மட்டுமே இருந்தன, அதன் முன்னே உள்ள மேஜையில் சீட்டுகள் சிதறியிருந்தன, அவர்களை காணவில்லை, எங்கே போனார்கள் யார் ஜெயித்தார்கள் எப்போது வெளியேறி போனார்கள் என்பது இன்றுவரை மர்ம்மாக இருக்கிறது, சீட்டுவிளையாட்டினைப் போலவே அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் முடிவில்லாத சாத்தியங்கங்கள் இருக்கின்றன, அதனால் அவர்களை யாரும் தேடவேயில்லை

••

 (உயிர்மை இதழில் வெளியான சிறுகதை)

••
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 03, 2013, 09:18:37 PM
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

சிறுகதை

அவர்கள் தன்னை வெறுக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் டக்ளஸ் பிராங் உணர்ந்து கொண்டேயிருந்தான்.

திரிசடைத் தீவு முத்து குளிப்பதற்குப் பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் குழந்தைகளின் கண்களைப் போல வசீகரமும் மென்னொளியும் கொண்டவை என்றும் அது போன்ற ஒளிரும் முத்துகள் மன்னார் வளைகுடா பகுதியில் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் கடற்வணிகர்கள் தெரிவித்தனர். அதனினும் கூடுதலாக ஒரு காரணமிருந்தது. அது,  விக்டோரியா மகாராணியின் கவனம் பெறவேண்டுமானால் திரிசடை முத்துகளில் ஒன்று கைவசம் இருந்தால் கூடப் போதும் என்பதே.

லண்டனில் நடைபெற்ற விக்டோரியா மகா ராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது உத்கலா ராஜா காலிப் அலியின் மனைவி பேகம் உம்ரா அணிந்திருந்த வெண் முத்துமாலையின் மீது வசீகரமான மகாராணி, தனக்கு அது போன்ற மாலையொன்று உடனடியாகத் தேவை என உத்தரவிட்டாள்.

அவை மிக அரிதான கேசி முத்துகள் என்றும் தென்னிந்தியாவில் உள்ள திரிசடை தீவில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும் கம்பெனி வணிகர்கள் தெரிவித்தார்கள். முத்துகளைத் தேடி  அதன் மறுநாளே ராயல் ரெஜிமெண்ட்டின் இரண்டு பிரிவுகள் திரிசடை தீவிற்குப் புறப்பட்டன.

ஆனால் ஒன்றரை ஆண்டுகாலமாகியும் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவேயில்லை என்பதுடன் அவர்கள் உடல்கள் கூட கிடைக்கவில்லை. மறுமுயற்சியாக, 104வது படைப்பிரிவின் முப்பது வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களாலும் திரிசடை முத்துகளைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்த முப்பது உடல்களும் விஷம் பாரித்த நிலையில் கடலில் மிதந்ததை வணிகக்கப்பல்கள் கண்டு பிடித்தன. அதிலிருந்து திரிசடைக்கு முத்துகளைச் சேகரிக்கச் செல்வது துர்சாபமான செயல் என்று கருதப்பட்டது.

தொடர்ந்த ஏமாற்றத்தால் ஆத்திரமடைந்த கவர்னர் ரபேல் வாலீஸ் இது குறித்து விசாரிக்கும்படி மத ராஸ் கோட்டைக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஒரு வரைபடத்துடன் பதில் வந்திருந்தது. அதில் திரிசடை தீவில் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களால் அந்த முத்துப் படுகையை அறிந்து கொள்வதோ அறுத்து எடுப்பதோ இயலாது  என்றும், அங்கே முத்து கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை கவர்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே தனது படைப் பிரிவில் இருந்து பதினோரு நபர்களைத் தேர்வு செய்து திரிசடைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதில் ஒருவனாகவே டக்ளஸ் தீவிற்குப் புறப்பட்டான். ஒன்பது நாள் கடற்பயணத்தின் ஊடே கப்பலில் அவன் கடலோடிகள் அந்தத் தீவைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகளை வாசித்தபடியே வந்தான். தேவதைக் கதைகளில் வரும் மந்திரத் தீவைப் போன்று எண்ணிக்கையற்ற கதைகள் திரிசடையைப் பின்னியிருந்தன.

திரிசடை தீவில் வசிப்பவர்கள்  கடலுக்குள் நாள் கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள் தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக்கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிக போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.

தீவுவாசிகள் மிக எளிமையானவர்கள். அவர்கள் கடல்நண்டுகளைப் போல தங்கள் வளைக்குள்ளாகவே ஒளிந்து வாழ்பவர்கள். வெளிஉலகம் மீது அவர்களுக்கு ஈர்ப்போ. அக்கறையோ இருப்பதேயில்லை. அந்த தீவு சங்கு போன்ற வடிவத்திலிருக்கிறது. எந்த சப்தமும் அதற்குள் சென்றால் அதிகமாகி விடும். ஆகவே அங்கே ஓசை அடங்குவதேயில்லை.

அதிலொன்று, அந்தத் தீவில் உள்ள கற்களில் ஒன்று கடலில் மிதக்கக் கூடியது என்றும் அதைத்தான் தீவுவாசிகள் படகு போல பயன்படுத்துவதாகவும் சொன்னது. மிகையான கதைகள் என்று டக்ளஸ் சிரித்தபடியே கடலோடிகளின் பயம் தான் கதைகளாக உற்பத்தியாகியிருக்கிறது என்று சக வீரர்களிடம் சொன்னான். ஒன்பது நாள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் திரிசடை தீவுக்கு ஒரு கல் தொலைவில் கப்பலை நிறுத்திக் கொண்டு நான்கு நாட்டுப்படகில் தீவை நோக்கிச் சுமைகளுடன் புறப்பட்டார்கள். அப்போது கோடை துவங்கி இரண்டு வாரமாகியிருந்தது.

திரிசடை தீவு மிகச்சிறியது. அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. முதல் குடும்பம் ‘ஆலா‘ என்று அழைக்கப்பட்டது. அவர்கள் கடலில் முத்துவிளையும் படுகையை அறிந்து சொல்லக் கூடியவர்கள். மற்ற குடும்பம் ‘பட்டங்கட்டி‘ என்று அறியப்பட்டிருந்தது. அவர்களே முத்து அறுத்து எடுத்து வருபவர்கள்.  இரண்டிலுமாகச் சேர்ந்து பதினெட்டு பேர் இருந்தார்கள். அதில் மூன்று குழந்தைகள். ஐந்து பெண்கள்.

நூற்றாண்டு காலமாக அதே தீவில் வசித்து வந்த அந்தக் குடும்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று திரு மணம் செய்து கொண்டன. இறந்து போனவர்களை அவர்கள் புதைப்பதில்லை. மாறாக, சவத்தோடு பெரியகல் ஒன்றைச் சேர்த்துக்கட்டி கடலின் அடி ஆழத்திற்குக் கொண்டு போய் போட்டுவந்து விடுவார்கள். இறந்தவரின் ஆன்மா ஓளிரும் குமிழ்களாக கடலாழத்தில் மிதந்து கொண்டேயிருக்கும் என்றும் அந்த நீலக்குமிழ்களே முத்துப் படுகைகளை அடையாளம் காட்டுகின்றதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்திலிருந்து தனது பத் தொன்பதாவது வயதில் இந்தியாவிற்கு வருகை தந்த  டக்ளஸ் பிராங் பெங்கால் ரெஜிமெண்டில் ஐந்தரை வருஷங்கள் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது துப்பாக்கி சுடும் திறமை அசாத்தியமானது. காற்றில் மிதக்கும் இலையின் நரம்புகளைக் கூட அவனால் குறிவிலகாமல் சுட்டுவிட முடியும். அதன்காரணமாகவே அவனை கவர்னரின் வேட்டைப்பிரிவில் எட்டாம் ஆளாகச் சேர்த்திருந்தார்கள்.

கவர்னர் வாலீஸ் மாதம் ஒருமுறை வேட்டைக்குக் கிளம்பிவிடுவார். அவருக்கு மிருகங்களைச் சுடுவதில் அதிக ஈடுபாடு கிடையாது. மாறாக, கொல்லப்பட்ட மிருகங்களின் தலைமீது தனது காலை வைத்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். அதற்காகவே அவருடன் ஜான் மெக்கே என்ற புகைப்படக் கலைஞர் இருந்தார்.

கவர்னரின் இந்த வேட்டைப் பிரிவில்  பன்னிரெண்டு துப்பாக்கி வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளில் கவர்னர் தனது வேட்டைக் குழுவினருடன் வனவிஜயம் கிளம்பி விடுவார். அவரை வரவேற்றுக் காட்டிற்குள் அழைத்துப் போவதற்காக நவாப்பின் ஆட்கள் யானைகள், குதிரைகளுடன் தயாராக இருப்பார்கள்.

அந்த வேட்டைக் குழுவில் டக்ளஸ் பிராங்கே அதிக புலிகளைக் கொன்றவன். தான் கொன்ற புலியின் உடலில் இருந்து ஒரு கொத்து மயிர்களை மட்டும் டக்ளஸ் தனியே வெட்டி எடுத்து ஒரு குப்பியில் அடைத்துக் கொள்வான். எப்போதாவது அந்த மயிர்களைக் கையில் தொடும்போது புலியின் சீற்றமான துடிப்பும் மூச்சும் அதில் இருப்பது போலவே உணர்வான்.

மற்றபடி டக்ளஸை வசீகரிப்பது, சுடப்போகும் மிருகத்திற்காக காத்திருப்பது மட்டுமே. அவன் காட்டிற்குள் நுழையும்போதே இன்று தான் எந்த மிருகத்தைக் கொல்லக்கூடும், அது இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிக்கத் துவங்கிவிடுவான். எந்தப் புள்ளியில் தானும் அந்த மிருகமும் சந்திக்கப் போகிறோம், அது ஏன் தன் கையால் சாகிறது என்று ஏதேதோ மனதில் தோன்றியபடியே இருக்கும். கவர்னர் யானை மீது அமர்ந்தபடியே வனத்தை ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் போல நினைத்து உவகை கொள்வார்.

அவர்கள் காய்ந்துபோன நாணலை மிதித்து நடந்து ஆற்றைக் கடந்து வனத்தின் அடிவயிற்றை நோக்கிச் செல்லும்போது டக்ளஸின் கண்கள் ஒவ்வொரு இலை அசைவையும் ஊடுருவிச் செல்லும். வாசமும் கவனமும்தான் அவனது வழித்துணைகள்.

புலியின் வருகையை அவனது உள்ளுணர்வு எப்போதுமே முன் கூட்டி அறிவித்து விடுகிறது. அவன் புலியின் கண்களைச் சந்திக்கும்வரை எந்த சலனமும் இல்லாமல் காத்துக் கொண்டேயிருப்பான். எங்கிருந்தோ புலியின் பாதங்கள் பூமியில் மிக நிதானமாக நடந்து தன்னை நோக்கி முன்னேறி வருவது அவனால் உணரமுடியும். அந்த நிமிடங்களில் அவன் பரபரப்பு கொள்வதில்லை. மாறாக, சொல்லமுடியாத ஒரு வலியை உணர்வான்.

அந்த வலி சில நிமிஷங்கள் விருட்டென மீனொன்று நீரின் மீது துள்ளி விழுவது  போல அசைந்து ஒடுங்கி விடும். பிறகு அவனுக்குப் புலி, அடித்து வீழ்த்தவேண்டிய வெறும் இலக்கு மட்டுமே. தனது துப்பாக்கியின் விசையை அவன் விரல்கள் அழுத்திய பிறகு அவன் பெருமூச்சிட்டுக் கொள்வான். நிச்சயம் அது புலியைக் கொன்றிருக்கும் என்று  நம்புவான். அவனது நம்பிக்கை ஒருபோதும் பொய்யாகவேயில்லை.

செத்துக் கிடக்கும் புலி அவனை வசீகரிப்பதேயில்லை. புலி தன்னை நோக்கி வரும்வரை காத்திருந்த அந்த அரிய நிமிஷங்களை நினைத்த படியே அவன் ஏதாவது மரநிழலில் படுத்துக் கொள்வான். அவனது சுபாவத்தை கவர்னர் உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ டக்ளஸை பெங்கால் ரெஜிமெண்டில் இருந்து முத்துகளைச் சேகரம் செய்து வருவதற்காக திரிசடை தீவிற்கு அனுப்பி வைத்தார்.

மகாராணியின் விருப்பத்தை நிறைவேற்றினால் நிச்சயம் தான் மதராஸ் ரெஜிமெண்டின் லெப்டினென்டாக நியமிக்கப்படக்கூடும் என்பதற்காகவே டக்ளஸ் திரிசடை பயணத்திற்குத் தலைமை ஏற்க ஒப்புக்கொண்டான். தனது அதிகாரம் மற்றும் வீரத்தால் எதையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்று நம்பினான். ஆகவே அவனோடு ஐந்து துப்பாக்கி வீரர்களும் ஒரு சமையல் ஆளும் மட்டுமே போதுமானவர்கள். வேட்டைத் துப்பாக்கிகளைத் தவிர வேறு ஆயுதங்கள்  எதுவும் தேவையுமில்லை என்று  உறுதியாகச் சொன்னதோடு, அதன் மறுநாளே கப்பலில் பயணம் கிளம்பினான். அப்போது அவன்  திரிசடை தீவில் ஒன்பது வருஷங்கள் தான் காத்துக்கிடக்கப் போவதை அறிந்திருக்கவில்லை.

திரிசடை தீவிற்கு அருகில் வேறு தீவுகள் இல்லை. அது, கண்ணில் விழுந்த மணல் இமை ஓரமாக ஒதுங்கிக் கொள்வது போல கடலின் கிழக்கு ஓரமாக ஒதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு மீன்பிடிப் படகுகள் எப்போதாவது அதைக் கடந்து போவதுண்டு. திரிசடை தீவின் நடுவே ஒரு சிறிய குன்று இருந்தது. அதன் மேற்குப்பகுதியில் இரண்டு குகைகள் இருந்தன. மழைக்காலத்தில் முத்துக் குளிக்கும் குடும்பங்கள் அந்த குகைக்குள் ஒதுங்கிக் கொண்டு வசித்தனர். மற்ற நாட்களில் அவர்கள் தரையில் இருந்து ஐந்தடி அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மர வீட்டில் வசித்தனர்.

கடற்தாழைகளும் நீர்ச்செடிகளும் மணலெங்கும் வளர்ந்திருந்தன. அந்தத் தீவிலிருந்த அடர்பச்சை நிற தவளைகள் அளவில் மிக சிறியவையாக இருந்தன. அவை எழுப்பும் ஓசை கூட விக்கல் எடுப்பது போன்றே இருந்தது. தீவின் உட்புறத்தில் கருஞ்சுனையொன்று இருந்தது. அதிலிருந்து சொட்டும் தண்ணீரைத் தான் தீவுவாசிகள் குடித்துவந்தார்கள்.

தாமரை இலைகள் போன்று அகன்று விரிந்த இலைகள் கொண்ட சுக்ருதம் என்ற செடிகள் தீவெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதிலிருந்து வீசும் நாள்பட்டு போன சாணம் போன்ற வாசனை எப்போதும் காற்றில் இருந்துகொண்டேயிருந்தது . காற்றில் சுக்ருத இலைகள் எழுப்பும் ஓசை யாரோ கையால் அடித்து தாளமிசைப்பது போன்ற ஒரு அதிர்வைத் தந்தபடியே இருந்தது. தீவின் தென்கிழக்கில் கல்லால் ஆன பந்தல் ஒன்றும் ஒரு பலிபீடமும் காணப்படுகிறது. அதைத் தங்களது குலதெய்வமான சூதனி என்று தீவுவாசிகள் வழிபட்டார்கள்.

டக்ளஸ் வந்து இறங்கிய நாளில் தீவுவாசிகள் எவரும் அவனைத் தடுக்கவோ, வரவேற்கவோ செய்யவில்லை. அவனும் துப்பாக்கி வீரர்களும்  படகிலிருந்து தங்களது பொருட்களைக் கரை இறக்கிக் கொண்டிருக்கும்போது தொலைவில் இருந்து ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். பத்து வயதிருக்கக் கூடும். அவளது சுருண்ட கேசம் காற்றில் அசைந்தபடியே இருந்தது. டக்ளஸ் அவளை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தான். அவளிடம் சலனமேயில்லை. மணலில் கால் புதைய அவளை நோக்கி நடக்கத்  துவங்கினான்.  அவள் வெறித்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பார்வை அவள் தன்னை வெறுக்கிறாள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அதைக் கண்டுகொள்ளாதவன்  போல அவளை நோக்கிச் சிரித்தான் டக்ளஸ். பதிலுக்கு அவள் சிரிக்கவில்லை. தன் வெறுப்பைக் கண்களின் வழியே உமிழவிட்டாள். அவன் பொய்க் கோபத்துடன் அடிப்பது போல கையை ஓங்கினான். நிச்சயம் அதற்குப் பயந்து அவள் ஓடிவிடக்கூடும் என்று நினைத்தான். ஆனால் அவள் டக்ளஸைப் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் தீவில் உள்ள மற்றவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று சைகையில் கேட்டான் டக்ளஸ். அவள் பதில் சொல்லாமல் அவனையே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பற்கள் நறநறவென கடிக்கப்படும் சப்தம் டக்ளஸிற்குக் கேட்டது. அவன் இறுக்கமான முகத்துடன் அவளது தலை மயிரைத் தொட முயன்றான். ஆவேசமாக அவள் அந்தக் கைகளைத் தட்டிவிட்டபடியே அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

படகில் இருந்த பொருட்களைச் சுமந்து வந்தவர்கள் அதை எங்கே கொண்டு செல்வது என்று கேட்டார்கள். டக்ளஸ் அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிய படியே அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து தன்னை அழைத்துப் போகும்படியாகச் சொன்னான். அவள் திமிறிக் கொண்டு முறைத்தாள். டக்ளஸ் அவளைப் புறக்கணித்து நடந்து  மேடேறித் தீவின் உள்ளே நடந்து கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அவன் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள்.

அன்றைய பகலில் டக்ளஸ் அங்கிருந்த இரண்டு குடும்பங்களையும் பார்த்து வந்தான். அவர்களில் ஒருவர் கூட அவனோடு ஒரு வார்த்தை பேசவேயில்லை. வெளியாட்கள் அங்கே வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது. கடல் தனக்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதுவும் தருவதில்லை. வெளியாட்கள் கடலை ஒருபோதும் தங்களுக்குள் நிரப்பிக் கொள்வதில்லை. கண் வழியாக இதயத்தில் கடல் நிரம்பாதவரை அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று தீவுவாசிகள் நம்பினார்கள். ஆகவே தங்களது மறுப்பை அவர்கள் பார்வையின் வழியாகவே தெரியப்படுத்தினர்.

பேசாத அந்த உதடுகள் அவன் மீது மௌனமாகவே ஏளனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. தனது முகத்தின் ஆழத்திற்குள் கண்களால் ஊடுருவிப் போய்விட முடியும் என்பது போல அந்த பார்வைகள் இருந்தன. அவர்களது கண்களை டக்ளஸ் உற்றுப் பார்த்தபோது திட்டுத் திட்டாக மேகம் செல்வது போல வெறுப்பு மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்.

டக்ளஸ் தனது ஆட்களுடன் தீவின் வடக்குப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டான். வெளிச்சத்தின் துளி கூட அந்தத் தீவில் இல்லை. கூடாரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் பிடித்துத் தின்பதற்காகவே ஒரு வகை பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவை ஆசையோடு சுடரை விழுங்கிக் கொண்டு பறந்தன.  தீவுவாசிகள் விளக்கைப் பயன்படுத்துவதேயில்லை. அவர்கள் இருட்டிற்குள்ளாகவே நடமாடப் பழகியிருந்தார்கள்.

தீவில் இருள் கருஞ்சாந்து போன்ற பிசுபிசுப்புடன்  அடர்ந்திருந்தது. அவர்கள் தங்களது கண்களால் இருட்டைத் துளைக்க முடியாததை உணர்ந்தார்கள். டக்ளஸ் படுக்கையில் கிடந்தபடியே இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமாக ஆக தீவு மறைந்து போய் தான் கடலின் மீது உறங்குவது போலவே தோன்றியது. பின்னிரவு வரை விழித்துக் கிடந்த அவனைத் தூக்கம் தன்னையறியாமல் பீடித்தது.

விழித்தபோது காலை வெளிச்சம் கடற்கரையில் பிரகாசம் கொண்டிருந்தது. கடல் நண்டு ஒன்று அவசரமாக நடந்து மணலேறிச் சென்றது. இளவெயிலின் மிருதுவும் நுரை ததும்பும் அலைகளின் மெல்லோசையும் அவன் மனதை சாந்தம் கொள்ளச் செய்வதாக இருந்தது. தனியே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். தாடை போல துருத்திக் கொண்டிருந்த ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலும் தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்ந்தான். முன்பு ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாக கடலைத் தான் அறிந்ததில்லை என்பது போலிருந்தது. கடல் எதையோ சொல்வது போல தோணியது. என்ன சொல்கிறது என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நாளைக்குள்ளாகவே முத்து குளிப்பவர்களை எளிதாக மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். பிறகு தான் கொண்டு வந்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, வாசனை சோப்புகள், அலங்காரத் துணிகள், மெழுகு வர்த்திகள், பீங்கான் கோப்பைகள் போன்றவற்றைப் பரிசாக எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பங்களைத் தேடிச் சென்றான்.

பட்டங்கட்டியிடம் தான் இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்தின்படி முத்துகள் வேண்டி வந்திருப்பதாகவும் அதைக் கடலில் இருந்து அறுவடை செய்து தரவேண்டியது அவரது பொறுப்பு என்றும் அன்பான குரலில் சொன்னான்.

பட்டங்கட்டி அதற்கு பதில் பேசவேயில்லை. மாறாக, தரையில் ஒரு குச்சியால் கோடு கிழித்தபடியே பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். செம்பட்டை படிந்த தலை. பருத்த உதடுகள், ஆள் மெலிந்து உயரமானவராக இருந்தார். கழுத்தில் மீன் எலும்பு ஒன்றை மாலையாகப் போட்டிருந்தார்.  அவரது வீட்டுப் பெண்கள் டக்ளஸின் துணைக்கு வந்திருந்த துப்பாக்கி வீரர்களை வெறித்துப் பார்த்த படியே இருந்தனர். பிறகு பட்டங்கட்டி எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

இதுபோலவே தான் ஆலா குடும்பத்திலும் நடந்தது. அவர்களும் டக்ளஸின் பரிசை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆத்திரத்தில் அந்தப் பரிசுகளை கடற்கரையில் வீசி எறிந்து வந்தான் டக்ளஸ். கடலில் விளைவதை அறுவடை செய்து தருவதற்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம். கடல் முத்துகள் இவர்களது சொத்துக்களா என்ன? அதைத் தனக்குத் தருவதன் வழியே என்ன இழந்துவிடப் போகிறார்கள். ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று யோசித்தபடியே இருந்தான்.

சில வாரங்கள் அங்கே தங்கி அவர்களது தினசரி வாழ்க்கையை அவதானிப்பதன் வழியே முத்துக் குளிப்பவர்களை வசீகரித்துவிட முடியும் என்று டக்ளஸ் நம்பத் துவங்கினான். அதற்காக அவன் பகலிரவாக அந்தத் தீவில் நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு  நாளும் அதிகாலை வெளிச்சம் அந்தத் தீவை ஒரு பெரிய மலரைப் பூக்கச் செய்வதைப் போல ஒளிர்வு கொள்ள வைக்கிறது. புலரியில் ஒரு ஆள் படகில் கிழக்கு நோக்கிப் போவதையும் அந்த ஆள்  திரும்பி வரும்போது படகு நிறைய மீன்களும் கடற்சிப்பிகளும் வந்து சேர்வதையும் டக்ளஸ் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த மீன்கள்தான் தீவுவாசிகளின் பிரதான உணவு. நாளின் பெரும்பான்மை நேரங்கள் அவர்கள் கடலை வெறித்துப் பார்த்தபடியே கரையோரம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.

அவர்கள் கடலோடு பேசுகிறார்கள். கடலும் அவர்களுடன் பேசுகிறது போலும். காற்றையும் இருளையும் வெயிலையும் அவர்கள் வரவேற்கிறார்கள். தாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள். பலநேரங்களில் காற்றில் சிறுசெடியின் இலை அசைவதைப் போல நளினமாக அவர்கள் கடலின் முன்னே நடனமாடுகிறார்கள்.

திரிசடைவாசிகளாக இருந்த பெண்கள் பருத்த ஸ்தனங்களும், குள்ளமான உருவத்துடனும் இருந்தனர். அவர்கள் சங்கு அறுப்பதில் தேர்ச்சி கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மூங்கில் சீப்பைத் தலையில் செருகியிருந்தாள். ஒருவர் சீப்பைப் போல மற்றவரிடம் இல்லை. சீப்பு தலையில் இருந்து நழுவி விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஒவ்வொரு நாளின் மாலையும் அந்தப் பெண்கள் சிவப்பும் மஞ்சளுமான மலர்களைத் தங்களது தலை நிறைய சூடிக் கொண்டு குழந்தையைச் சீராட்டும் குரலில் கடலை நோக்கி எதையோ பாடுகிறார்கள். கடல் அதைக் கேட்டுத் துயில்கிறது போலும். அந்தப் பெண்களில் ஒருத்திக்கு இடது கால் இல்லை. சுறா கடித்துத் தின்றுவிட்டதைப் போல எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.  அவள் டக்ளஸை எங்கே கண்டபோதும் உடனே குனிந்து கைப்பிடியளவு மணலை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டு எதையோ தனக்குள்ளாக முணு முணுப்பாள். என்ன சொல்ல விரும்புகிறாள் அவள். அதுவும் வெறுப் பின் அடையாளம்தானா?

கோடானு கோடி மணல் துகள்களில் ஒன்றைப் போல அவனது வாழ்க்கையும் விதியின் கைகளால் மட்டுமே அடித்துக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தான் அவள் உணர்த்துகிறாள் என்று டக்ளஸ் அன்று அறிந்திருக்கவில்லை.

வெயிலேறிய பகலில் பெண்களும் குழந்தைகளும் கடற்சிப்பிகளைச் சுழற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் மரநிழலில் ஒன்றாக உட்கார்ந்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதும் நடந்தது.  அவனை தீவுவாசிகள் கண்டுகொள்ளவேயில்லை. தீவைப்பற்றி கடலோடிகள் எழுதியதில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் கற்பனை என்றே தோன்றியது.

ஒரு நாளிரவு துப்பாக்கி வீரர்களில் ஒருவன் தன்மீது ஒட்டிக் கொண்டிருந்த கொசுவைத் துரத்துவது போல கைகளை ஆவேசமாக வீசி எதையோ விரட்டிக்  கொண்டிருந்தான். எதைத் துரத்துகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்த போது அவன் கூக்குரலிட்டுக் கத்தினான். என்ன செய்கிறது என்று மற்றவர்கள் அவனைப் பிடித்து உலுக்கிக்கேட்கவே ‘தீவுவாசிகளின் வெறுப்பு, தன்மீது சாக்கடைப் புழுக்கள் போல ஊர்ந்து  கொண்டேயிருக்கிறது. அந்த வெறுப்பைத் தன்னால் தாங்க முடியவேயில்லை. உடல் முழுவதும் கம்பளிப் பூச்சிகள் அப்பிக் கொண்டிருப்பது போல வெறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களும் கூட நம்மை வெறுக்கிறார்கள். அந்தக் கண்கள் நம் உடலைத் துளைக்கின்றன. ஊசிமுனை போல குத்துகின்றன. அதை என்னால் தாங்க முடியவில்லை‘ என்று அரற்றினான். அந்த உண்மையை யாவருமே உணர்ந்திருந்தார்கள். ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளாமலே இருந்தார்கள். டக்ளஸை அது ஆத்திரப்படுத்தியது.

மறுநாள் டக்ளஸ் பட்டங்கட்டி குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்துத் தனது கூடாரத்திற்கு இழுத்து வந்து மணலில் பாதி உடம்பு வெளித்தெரியும்படியாக புதைத்து வைத்து அவர்களில் எவராவது தன்னோடு பேசும்வரை அவளை விடப்போவதில்லை என்று கத்தினான். அந்தப் பெண்ணின் கண்களில் பயமேயில்லை. அவளது கூந்தல் காற்றில் அலைந்தபடியே இருந்தது. அதுபோன்ற உக்கிரமான கண்கள் எதையும் டக்ளஸ் கண்டதேயில்லை.

காட்டுப்புலிகள் கூட தன்னை அவன் கொல்ல வந்திருக்கிறான் என்று அறிந்த போதும் இப்படியான வெறுப்பை உமிழ்ந்ததில்லை. ஏன் இவர்களிடம் இத்தனை உக்கிரமான வெறுப்பு. அவன் தன் முன்னே புதையுண்டிருந்த  பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பல்லை உடைக்க வேண்டும் போன்ற ஆத்திரம் உருவானது. ஏன் அவர்களில் ஒருவரும் அவனை எதிர்ப்பதேயில்லை. அவனைத் தாக்கிக் கொல்ல வரும் புலியின் ஆவேசம் அவனுக்குத் தேவைப்பட்டது. அப்போது தான் அவனது ரத்தம் சூடாகும். ஆனால் அவர்கள் தணிந்து போகிறார்கள். உறுதியான தங்கள் மறுப்பைக் கண்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

என்ன தந்திரமிது. ஒருவேளை இந்த யுக்தியால் தன்னை அவர்கள் துரத்திவிடவும் கூடுமோ. அவன் புதையுண்டு கிடந்த பெண் முகத்தருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்த படியே தன்னோடு ஏதாவது பேசும் படியாகக் கட்டாயப்படுத்தினான். அவள் முகத்தில் அசைவேயில்லை. அவன் தனது கைவிரல்களால் அவள் பற்களைத் திறந்து பேச்சை வெளியே பீறிடும்படி செய்ய முயற்சிப்பவன் போல பலத்தைப் பிரயோகம் செய்தான். அந்தப் பற்கள் திறந்து கொள்ளவேயில்லை. அவள் காதிற்குள் மிக மோசமான வசையைக் கத்தினான். அப்போதும் அவள் தலை கவிழ்ந்தேயிருந்தது.

அன்றிரவு ஆலா குடும்பத்தின் வயதான ஒருவர் ஆமை ஓடு ஒன்றில் அவித்த மீனும் நீரிணிபழத் துண்டுகளும் கொண்டு வந்து டக்ளஸிடம் தந்து, கடலடியில் முத்து விளையும் படுகையைக் காற்றடி காலம் முடிந்த பிறகே அறிந்து வர முடியும் என்றும் சொல்லி அந்தப் பெண்ணைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். காற்றடி காலம் எப்போது  என்று டக்ளஸ் கேட்க விரும்பினான். ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணும் முதியவரும் அங்கிருந்து விலகிப் போகத் துவங்கியிருந்தார்கள்.

அன்றிரவு டக்ளஸ் தான் சுட்டுக்கொன்ற புலியின் ரோமங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தீவுவாசிகளின் செயல்பாடு அவனது புலிவேட்டை சாகசங்களைக் கேலி செய்வது போலவே இருந்தது. திடீரென அவர்களை நள்ளிரவில் தாக்கிக் கொன்றுவிட்டால் என்னவென்று கூட தோன்றியது.

அவன் மனது தடுமாறிக் கொண்டேயிருந்தது. தனது சாகசங்கள் வெறும் கற்பனைகள் தானோ என்று தோன்றத் துவங்கியது. ஒருவேளை புலிகள் தன்னைக் கொல்வதற்கு அவனை அனுமதித்திருக்கின்றன என்பதுதான் நிஜமா?  தனது வேட்டை அத்தனையும் மிருகங்களின் ஒப்புக்கொடுத்தலால் ஏற்பட்டதுதானா? எந்தப் புலியும் ஏன் தன்னைத் தாக்கிக் கொல்ல முயற் சிக்கவேயில்லை. ஏன் ஒரு புலி அவனிடம் சுடப்பட்டுச் சாக விரும்புகிறது. அவனுக்குள் வாழ்வில் முதன் முறையாக பயத்தின் ஒரு துளி கசியத் துவங்கியது. அவன் விடியும்வரை மணலில் படுத்தே கிடந்தான். நல் முத்துகள் இல்லாமல் வெறும்கையோடு திரும்பிப் போகமுடியாது. எப்படியாவது காத்திருக்க வேண்டும். இது புலிக்காகக் காத்திருப்பதைவிட அதிக பொறுமையும் கவனமும் கொண்டது. அதில் தான் தோற்றுப் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த உக்கிரம் கொள்ளத் துவங்கினான்

••


பகுதி 1
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 03, 2013, 09:23:42 PM
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – 2

மறுநாள் டக்ளஸ் தன்னிடமிருந்த வானியல் வரைபடங்களைக் கொண்டு காற்றடிக் காலம் துவங்குவதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கணித்தான். எழுபத்திமூன்று நாட்கள் மீதமிருந்தன. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றபடியே அவனும் தீவுவாசிகளைப் போலவே பகலில் மரநிழலில் படுத்துக் கிடக்கத் துவங்கினான். ஆனால் அவனது துப்பாக்கி வீரர்களால் அப்படியிருக்க முடியவில்லை. தன்னோடு பேச மறுப்பவர்களுடன் சண்டையிடவும் சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தவும் முயற்சித்தார்கள். ஒரு துப்பாக்கி வீரன் பட்டங்கட்டி வீட்டுப் பெண் ஒருத்தியின் உதடை அறுத்து எடுத்து விட்டதுகூட நடந்தேறியது. டக்ளஸ் கடலைப் பார்த்தபடியே இருந்தான். கடல், உலகின் ஆதி நிகழ்வுகளின் சாட்சிபோலவே தோன்றியது. கடல் எவ்வளவு மனிதர்களைக் கண்டிருக்கும். எவ்வளவு மாற்றங்களை உள் வாங்கியிருக்கும்.

கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பது துப்பாக்கி வீரர்களுக்குச் சித்ரவதை தருவதாக இருந்தது. ஆரம்ப நாட்களில் தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருந்த துப்பாக்கி வீரர்கள் மெல்ல அதைத் தவிர்க்கத் துவங்கினார்கள். சமையற்காரன் தன்னையே வேறு ஆளாக நினைத்துக் கொண்டு பேசிக் கொள்பவனாகிப் போனான்.  மற்றவர்கள் அந்தத் தீவில் உள்ள மரம் செடிகளின் இலைகளோ அல்லது பறக்கும் வண்டுகளில் ஏதோவொன்று தங்களுடன் பேசினால் கூடப் போதும் என்பது போன்ற தீவிர மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தீவுவாசிகளுக்குக் கிடைப்பது போன்ற மீன்கள் தங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். எதைச் சாப்பிட்ட போதும் நாவில் ஒரே ருசியாக ஏன் இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை.

டக்ளஸ் ஒவ்வொரு நாளும் அந்தத் தீவுவாசிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தபடியே இருந்தான். ஆரம்ப நாட்களில் தொடர்பற்றது போல தெரிந்த பல விஷயங்கள் பிரமாதமான ஒழுங்கு ஒன்றின் வரிசையில் செயல்படுவதை அவன் உணரத் துவங்கினான். அந்தத் தீவு வாழ்க்கை பகலில் செயலற்றது போல தெரிந்தாலும் நூற்றுக்கணக்கான செயல்களால் பின்னப்பட்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. அலைகளை அவதானிப்பது, படகில் செல்வது, மீன்பிடிப்பது, சங்கு அறுப்பது, பிரார்த்தனை செய்வது, மழைக்காலத்திற்கான நெருப்பிற்கு வேண்டி காய்ந்த விறகுகளைச் சேகரிப்பது,  கடினமான மீன் எலும்புகளை அறுத்து கத்தி செய்வது என்று அங்கே ஒரு தினசரி வாழ்க்கை எளிமையாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

காற்றடிக் காலம் துவங்கப் போகிறது என்பதை ஒரு மாலைநேரத்தின்  ஓயாத கடல் அலையின் எழுச்சி காட்டித் தந்தது. அது போன்று உயரமாக அலைகள் சீறுவதை அதன் முன்பு அவன் கண்டதேயில்லை. அலைகள் சீறும்பாம்பின் நாக்கு போல துடித்துக் கொண்டேயிருந்தன. அலை வேகம் கண்டு மணலில் முளைத்த சிறுசெடிகள் கூட வேக வேகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு காற்று விசை கொள்ளத் துவங்கியது. பெருந்துயரம் ஒன்றின் ஆவேசமான கதறல் போன்று காற்றின் ஊளையிடும் சப்தம் உயர்ந்து கொண்டேயிருந்தது. அது கட்டுக்கடங்காமல் ஆவேசமாகி மொத்த தீவையே பிடுங்கி எறிந்துவிடுவது போலிருந்தது. டக்ளஸின் கூடாரத்தைக் காற்று பிடுங்கி வீசியது. மணலை வாரி அடித்தது. துப்பாக்கி வீரர்கள் தனியே நடப்பதற்குக் கூட பயந்தார்கள். யாரோ பதுங்கி வந்து முதுகில் அடிப்பது போல காற்று வீசியது. காற்றின் வேகம் அலைகளை உயரச் செய்தபடியே இருந்தது. வானம் தெரியாதபடி அலைகள் உயர்ந்தன.

அதன் பிந்திய நாட்களில் பகல் இரவாக காற்று வேகமெடுத்தபடியே சீறியது. ஆனால் காற்றடிக் காலத்திற்குப் பழகிய தீவுவாசிகள் எப் போதும் போல இயல்பாக தங்களது படகில் மீன்பிடிக்கச் செல்வதும் சமைப்பதும் விளையாடுவதுமாக இருந்தார்கள். ஆனால் டக்ளஸிற்கும் அவனது துப்பாக்கி வீரர்களுக்கும் காற்றின் உரத்த சப்தம் கேட்டுக் கேட்டு காது நரம்புகள் சிவந்து போய் துடித்துக் கொண்டிருந்தன. ஓசை அதிகமாகியதும் மண்டைக்குள் நரம்புகள் வெடித்து விடுவது போல வேதனை கொள்ளத் துவங்கின. காற்றில் அங்கிருந்த பாறைகள் கூடப் பறந்து போய்விடுமோ என்பது போலிருந்தது.

தீவுவாசிகள் எப்படிக் காற்றை எதிர்கொள்கிறார்கள் என்று டக்ளஸ் கற்றுக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அந்த சூட்சுமம் புரியவேயில்லை. காற்றடிக் காலத்தின் பகல் மிக மெதுவாக இருந்தது. உறக்கம், விழிப்பு இரண்டுமே வேதனை தருவதாக மாறியது. உலர்ந்துபோன கண்களுடன் அவர்கள் வெளிறிய வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்கள். காற்றின் வேகத்தில் கிழித்து எறியப்பட்ட இலைகள் தீவெங்கும் சிதறிக் கிடந்தன. காற்று ஒடுங்கவேயில்லை.

டக்ளஸ் உள்ளுர பயப்படத் துவங்கினான். எதற்காக இந்த வீண் முயற்சி. அவர்களைத் துப்பாக்கி முனையில் கடலில் அழைத்துச் சென்று முத்து குளிக்கும்படியாக வற்புறுத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது என்று ஒரு குழப்பம் உருவாகத் துவங்கியது. தன்னுடைய மன இயல்பைக் காற்று சிதைத்து வருவதை அவன் உணரத் துவங்கினான். அவனை மீறியே அவன் கோபப்பட்டான். கத்தினான். பசியும் தூக்கமும்காம உணர்ச்சிகளும் கூட தீவைச் சுற்றியிருந்த கடலின்  எழுச்சியால்  தூண்டப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதையும் அவன் அறிந்து கொண்டபோது வியப்பாக இருந்தது. பல நேரங்களில் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமல் இருப்பதற்கு அங்கு வீசும் கடற்காற்றே காரணமாக இருந்தது.

சூறைக்காற்று உச்சத்தை தொட்ட ஒரு நாள் டக்ளஸ் ஆவேசமாகி,  துப்பாக்கியை வானை நோக்கி வெடித்தான். பிறகு வெறி கொண்டவன் போல கத்தினான். இன்றைக்கு அவனுடன் படகை எடுத்துக் கொண்டு முத்துக் குளிக்க அவர்கள் உடனே புறப்பட வேண்டும் என்று மிரட்டினான். தீவுவாசிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சினத்துடன் அவன் தனது துப்பாக்கியால் பட்டங்கட்டி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளின் பாதங்களில் சுட்டான். ரத்தம் பெருகியோடியபோதும் அந்த ஆள் வலியால் கத்தவேயில்லை. மற்ற ஆண்கள் டக்ளஸை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். காற்றடிக் காலம் முடியும்வரை அவனது மிரட்டல்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவேயில்லை. பின்பு ஒரு நாள் காலை சுக்ருத இலைகள் அசைவற்றுப் போயின. காற்று ஒடுங்கிக் கொண்டு விட்டது. கடல் இப்போது அலைகள் ஒடுங்கித் தணிந்திருந்தது. ஆலா குடும்பத்தின் ஆள் டக்ளஸைத் தேடிவந்து மறுநாள் காலை அவர்கள் முத்துப்படுகையைக் காண கடலுக்குள் போகலாம் என்று சொன்னான்.

விடிகாலையில் அவர்கள் இரண்டு நாட்டுப் படகில் புறப்பட்டார்கள். ஒரு படகில் டக்ளஸ் மற்றும் இரண்டு துப்பாக்கி வீரர்களும்  மற்ற படகில் ஆலா குடும்பத்து மூன்று ஆண்களுமிருந்தார்கள். படகை வலித்தபடியே கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால் செல்லச் செல்ல அடிவானம் வேக வேகமாகப் பின்னால் போய்க் கொண்டேயிருந்தது.  திசை அறிய முடியாத கடலின் ஒரு புள்ளியில் அவர்களது படகு நின்றது.

ஆலா குடும்பத்தின் இரண்டு ஆண்கள் பிறை வடிவக் கல்லைக் காலில் கட்டிக் கொண்டு நீண்ட கயிற்றோடு  கடலில் குதித்தார்கள். அவர்களுடன் தானும் காலில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு டக்ளஸ் குதித்தான். கடலின் அடிப்பகுதியை நோக்கி அவர்கள் சென்றபடியே இருந்தனர். கண்ணை யாரோ கையால் பொத்துவது போல நீர் முகத்தை மறைத்துக் கொண்டது. எடையற்ற உடல் சரிந்து அடியாழம் நோக்கி நழுவிக் கொண்டிருந்தது. பவளப்பாறை போல ஏதோ மினுங்கிக் கொண்டிருந்தது.

தன்முன்னே அசையும் நிழல்களைத் துரத்தியபடியே டக்ளஸ் கடலுக்குள் சென்றான். அவன் கண்கள் மெல்லிய வெளிச்சத்தை உணர்ந்தபோது தன்னோடு சேர்ந்து குதித்த இருவரையும் காணவில்லை. எது முத்து விளையும் படுகை, அவர்கள் எங்கே போனார்கள் என எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. எப்படித் தன் கண்ணில் இருந்து மறைந்தார்கள். அவன் கடலுக்குள்ளாகத் தேடி அலைந்தான். ஓய்ந்து சலித்துப் போய் டக்ளஸ் படகிற்கு வந்தபோது  துப்பாக்கி வீரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். டக்ளஸ் தனி ஆளாகப்படகை வலித்தபடியே திரிசடை தீவிற்கு வந்து சேர்வதற்குள் இரவாகியிருந்தது. தனது துப்பாக்கியுடன் அவன் ஆலா குடும்பத்தை நோக்கி ஓடினான். அவர்கள் ஒரு வரும் வீட்டில் இல்லை. கடலுக்குள்ளாகவே மூச்சடக்கி இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. விடிகாலை அவன் மறுபடியும் நாட்டுப் படகில் புறப்பட்டுச் சென்றான். அவனால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆனால் அவன் திரும்பி வந்தபோது அதே ஆலா குடும்பத்து ஆண்கள்  மிக இயல்பாக வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை அவர்கள் ஏமாற்றி விட்டதாகக் கத்திக்  கூச்சலிட்டான்.  வயதான மனிதன் மட்டும் பதற்ற மற்ற குரலில் முத்துப்படுகையில் விளைச்சல் இல்லை. காத்திருக்க வேண்டும் என்று சொன்னான். டக்ளஸால் அதை நம்பமுடியவில்லை. அவர்களைக் கொன்று விடப் போவதாக மிரட்டினான். அதை எவரும் சட்டைசெய்யவேயில்லை. கடலின் கூச்சலுக்குப் பழகிப் போனவர்கள் தனது மிரட்டலுக்கா பயப்படப் போகிறார்கள் என்று அவனுக்கே தோன்றியது. தான் இனி  என்ன செய்வது என்று புரியாமல் அவன் குழப்பமடைந்தான்.

காற்றில் கிழிந்துபோன கூடாரத்திற்குப் பதிலாக ஒரு பாறையின் ஓரமாக  மரத்தடுப்பு ஒன்றை உருவாக்கி அதில் தங்கியிருந்த டக்ளஸ் தனது கூடாரத்திற்குள்ளாகவே நாளெல்லாம் படுத்துக்கிடந்தான். அவனது உடல் கொதிப்பு கொண்டது. கண்கள் சிவந்து எரிச்சலூட்டின. மூத்திரம் கூட கடுகடுத்தது.  இரவில் அவன் ஒளிரும் நட்சத்திரங்களைக் கண்டு பயந்து அலறினான். அவனுக்காகத் துப்பாக்கி வீரர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு டக்ளஸ் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். தீவில் மஞ்சள் வெயிலடித்துக் கொண்டிருந்தது. உடலின் நீர்மை உறிஞ்சப்பட்டு தான் ஒரு  காய்ந்த இலை போல உணர்ந்தான்.

இது நடந்த ஐந்தாம் நாளில் ஒரு துப்பாக்கி வீரன் கடலை நோக்கி ஓடி கத்திக் கூச்சலிட்டபடியே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான். அது மற்றவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. அவர்கள் நடுக்கத்துடன் அந்தத் தீவிலிருந்து கிளம்பிப் போக இருப்பதாகச் சொன்னார்கள். டக்ளஸ் ஆத்திரமடைந்தான். அவர்களைத் தானே கொன்றுவிடப் போவதாகக் கத்தினான். அந்த மிரட்டல்  அவர்களைத் தீவில் தங்க வைக்கப் போதுமானதாகயில்லை. முடிவில் டக்ளஸ் அறியாமல் அவர்கள் இரவோடு தப்பிப் போக முயற்சித்தார்கள். ஆனால் ஓநாய் போல அலைந்து கொண்டிருந்த டக்ளஸ் அவர்களை மடக்கிப் பிடித்து  ஆயுதங்கள் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை விடி காலையில் கிளம்பும்படியாகச் சொன்னான். மறுநாள் காலை துப்பாக்கி வீரர்களின் படகு செல்வதைத் தொலைவில் நின்று தீவுவாசிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டக்ளஸ் மட்டும் தீவிலிருந்து போகவேயில்லை.

அவன் கடல்நண்டுகளைப் பிடித்து சமைத்துத் தின்பதும், காற்றில் அலையும் சுக்ருத இலைகளின் சப்தத்தை ரசித்தபடியும் நாட்களைக் கழித்தான். அந்தத் தீவும் மனிதர்களும் அவனுக்குப் பழகியிருந்தார்கள். தீவுவாசிகளால் தன்னை நேசிக்க முடியாது. தன்னாலும் அவர்களை நேசிக்க முடியாது. ஒருவேளை என்றாவது  மனவேகம் முற்றி அவர்களைத் தானே கொன்று விடக்கூடும் அல்லது அவர்கள் வெறுப்பின் உச்சத்தில் என்றாவது தன்னைக் கொல்லவும் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது.  இதில் யார் புலி – யார் வேட்டைக்காரன் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலம் துவங்கியது. பகலிரவாக மழைபெய்தபடியே இருந்தது. கடலில் விழும் மழைத்துளிகள் அடையாளமின்றி பிரம்மாண்டத்தில் ஒளிந்து கொண்டுவிடுகின்றன. மிகுமழையில் கடற்கரையே தெரியவில்லை. நுரைத்துப் பொங்கி வழிகிறது கடல். காற்றில்லாத அடர் மழை. நனையாத இடம் என்று உள்ளங்கை அளவு கூட அந்தத் தீவில் இல்லை. முத்துக் குளிப்பவர்கள் ஒண்டியிருந்த குகையின் வாசலை டக்ளஸ் மழைக்குள்ளாகவே ஒரு நாள் கடந்தபோது அவர்கள் தண்ணீருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அப்போதும் அந்தக் கண்கள் அவனை வெறுப்பதையே உணர்ந்தான்.

டக்ளஸின் துப்பாக்கி வீரர்கள் பெங்கால் போய்ச் சேருவதற்குள் நோயுற்றுக் கடலிலேயே இறந்து போனார்கள். அவர்களில் ஒருவனாக டக்ளஸ் இறந்து போயிருக்கக் கூடும் என்று கவர்னர் முடிவு செய்திருக்க வேண்டும். அவனைத் தேடி வேறு படைப்பிரிவுகள்  வரவேயில்லை.  காலம்  உருமாறிக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொரு ஆண்டின் காற்றடிக் காலத்திலும் அவர்கள் முத்துக் குளிக்க கிளம்புவார்கள். முன்பு போலின்றி இப்போது ஒரே படகில் அவர்கள் ஒன்றாகச் சென்றார்கள். டக்ளஸ் அவர்களோடு ஒன்றாகவே குதிப்பான். ஆனால் கடலின் உள்ளே அவனால் ஒருபோதும் முத்துப்படுகையைக் காண முடிந்ததேயில்லை.  அவர்கள் எப்போதும் போல அவனைத் தனித்துவிடுத்துக் கரையேறிப் போய்விடுவார்கள். இன்னமும் முத்து விளையவில்லை என்ற பதில் அவனை அதே தீவில் காத்திருக்க வைத்தபடியே இருந்தது.

அவன் உருமாறிக் கொண்டேயிருந்தான். அவனுக்குள் நல்முத்துகளை அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஆசைகள் அத்தனையும் வடிந்து போயிருந்தன. சில வேளைகளில் அவன் அந்தத் தீவில் அலையும் காட்டுப்பூனையொன்றைப் போலவே தன்னை உணர்ந்தான். சில வேளைகளில் அவன் தன்னை மணலில் துளையிடும் குழி எறும்பு போல நினைத்துக் கொள்வான். அவன் மனதில் இருந்த வேட்கைகள் வடிந்து விட்டன. ஒரேயொரு நெருப்பு. அதுவும் அணையாத பெருநெருப்பாக எரிந்து கொண்டேயிருந்தது. அது நல்முத்துகள் தனக்கு வேண்டும் என்பதே.. அதைத் தான் அறுவடை செய்த மறுநாள் அந்தத் தீவை விட்டு விலகிப் போய்விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக கடலைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனது முத்துகள் விளைந்துவிட்டதா என்று உள்ளூர கேட்டுக் கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் படகில் ஐந்து வணிகர்கள் அந்தத் தீவிற்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் அன்னாசிப்பழங்களும் காடாத் துணிகளும் சாம்பி ராணியும் ஊதுபத்திகளும் கொண்டு வந்து தீவின் உள்ளே இருந்த சூதனி கோவிலில் வைத்து வழிபட்டார்கள். தீவுவாசிகள் அவர்களை வரவேற்றுக் கடற்சிப்பிகளையும் சங்கையும் அள்ளி அள்ளித் தந்தார்கள்.. தீவுவாசிகள் முத்துகளை ஒருபோதும் விற்பதில்லை என்பதையும் அவர்கள் அறுத்து எடுத்த முத்துகளை மருத்துவம் செய்வதற்காக அருகாமையில் உள்ள சூதனி கோவிலில் வைத்துப் போய்விடுவார்கள் என்றும் வணிகர்கள் சொன்னார்கள்.

டக்ளஸ் கடந்த மூன்று வருஷங்களாக முத்துகளுக்காக காத்திருப்பதாகச் சொன்னான். வணிகர்கள், முத்துகள் கடலில் விழும் கண்ணீர்த் துளிகள் என்றும் சூதனியின் கண்ணீர்த்துளிகள் கடலில் விழுந்தே முத்தாகிறது என்று அந்த மக்கள் நம்புவதாகச் சொன்னார்கள். சிறு வயதில் அப்படியான மாயக்கதையைத் தானும் கேட்டிருப்பதாக டக்ளஸ் சொன்னான். வணிகர்கள் தீவுவாசிகள் தந்த பொருட்களைத் தங்களது படகில் ஏற்றிக்கொண்டு புறப்படும் போது அவன் விரும்பினால் அவர்களோடு கூட வரலாம் என்றார்கள். டக்ளஸ் மறுத்துவிட்டான். அவன் கனவில் முத்துகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

ஒன்பது வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அதிகாலை திரிசடை வாசிகள் முத்துக் குளிப்பதற்காக டக்ளஸை அழைத்துக் கொண்டு கடலுக்குள் போனார்கள். டக்ளஸ் ஒடுங்கியிருந்தான். அவனிடம் பர பரப்பில்லை. கடலில் வீசி எறியப்பட்ட மரத்துண்டு மிதப்பதைப் போலவே தன்னை உணர்ந்தான். கடல் அவனுக்குப் பழகியிருந்தது. கண்ணால் காணும் கடல் வெறும் பொய்த் தோற்றம் என்பது புரிந்திருந்தது.  தான் கடலினுள் முத்தைத் தேடிக் குதிக்கப் போவதில்லை என்று சொல்லி அவர்கள் உடலோடு சேர்த்துக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுப்பவர்களில் ஒருவனாகப் படகில் இருக்கப் போவதாகச் சொன்னான்.

அவர்கள் கடலில் குதித்தார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் கடலின் உள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டு முத்து விளைந்துவிட்டதாகவும் மறுநாள் அறுத்துவிடலாம் என்றும் உற்சாகமாகச் சொன்னான். முதன்முறையாக அவர்கள் தன்மீது அக்கறையோடு பேசுவதை டக்ளஸ் உணர்ந்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஒன்பது வருஷங்கள் காத்திருந்த முத்துகள் நாளை அவன் கைக்கு வந்துவிடும் என்பது மனதைக் களிப்படையச் செய்தது. தனது பயணத்திற்கான நாட்டுப்படகைத் தயார் செய்யத் துவங்கினான்.

மறுநாள் விடிகாலை பட்டங்கட்டியும் இரண்டு ஆண்களும் தயாராக இருந்தார்கள்.  டக்ளஸ் அவர்களுடன் கடலுக்குள் சென்றான். அன்றும் அவன் கயிற்றைப் பிடித்துக் கொள்பவனாகவே இருந்தான். இரண்டு மூங்கில் கூடைகள் நிறைய முத்துகளை அறுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். கரைக்கு வந்த பிறகு அவர்கள் சூதனி கோவில் முன்பாக இருந்த கல்பாறையில் சிப்பிகளைத் திறந்து பார்த்தார்கள். பெரிது பெரிதாக முத்துகள். சுக்ருத இலையொன்றைப் பறித்து அதில் முத்துகளை அள்ளி சூதனி முன்பாகப் படைத்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். டக்ளஸ் முத்துகளை வியப்புடன் பார்த்தபடியே இருந்தான். அதன் வசீகரமும் அழகும் கடித்துத் தின்றுவிடலாம் போலிருந்தது. பிறகு பட்டங் கட்டி அவன் விரும்பினால் அத்தனை முத்துகளையும் அள்ளிக் கொண்டு புறப்படலாம் என்று சொன்னார்.

டக்ளஸ் ஆவேசத்துடன் முத்துகளை அள்ளி அதற்காகவே வைத்திருந்த சுருக்குப் பையிலிட்டுத் தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டான். அங்கிருந்த ஒருவரோடும் பேசவில்லை. தனது நாட்டுப் படகை எடுத்துக்கொண்டான். கடலில் அவன் புறப்படத் தயார் ஆனபோது அதே குடும்பங்கள் கரையில் வந்து நின்று அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தன. அந்தக் கண்களில் இப்போது வெறுப்பில்லை. மாறாக ஏளனம், கேலி மட்டுமே ததும்பிக் கொண்டிருந்தது.

அவன் துடுப்பை வேகவேகமாக வலிக்கத் துவங்கினான். தீவு கண்ணை விட்டு மறையத் துவங்கியது. நடுக்கடலுக்கு வந்தபோது தொண்டை காய்ந்து தாகமாக இருந்தது. வெளிர்நீல வானத்தின்கீழ் அவன் மட்டுமே இருந்தான். கடலின் பிரம்மாண்டம் கண்கொள்ள முடியாமலிருந்தது. தனது நீர்க் குடுவையை வாயில் வைத்து உறிஞ்சியபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலின் மீது தயங்கித் தயங்கி வெயில் ஊர்ந்து கொண்டிருந்தது. தீவுவாசிகளின் கேலிப்பார்வை அவன் கூடவே வருவது போலிருந்தது.

எங்கோ அதிகாரத்தில் உள்ள  ஒருவரின் அற்ப சந்தோஷத்திற்காகத் தனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தமற்றுச் செய்துவிட்டதைத் தான்  தீவுவாசிகளின் கேலி வெளிப்படுத்துகிறதா? கடல் இத்தனை நாட்களாக அவனிடம் சொல்ல விரும்பியது இதுதானா? யோசிக்க யோசிக்க தீவுவாசிகளின் பரிகாச முகத்தின் உண்மை அர்த்தம் புரியத் துவங்கியது. துடுப்பு வலிப்பதை நிறுத்தி விட்டு அவன் இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை வெளியே எடுத்து முத்துகளைக் கையில் கொட்டிப் பார்த்தான்.

ஏனோ வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அந்த முத்துகளைத் தடவிப் பார்த்தான். முத்துகளின் மீது தீவுவாசிகளின் தீராத வெறுப்பு பிசுபிசுப்பாகப் படிந்து போயிருப்பதை அவனால் உணர முடிந்தது. தான் ஒரு இழிபிறவி என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதான். அவனை ஆறுதல்படுத்த அங்கே யாருமேயில்லை.

முடிவில் அடங்கமுடியாத மன வலியோடு தன் கையில் இருந்த முத்துகளைக் கடலில் வீசி எறிந்தான். பிறகு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் கடலை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். காற்று அவன் தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடற்பறவையொன்று அவனைக் கடந்து மேற்காகச் சென்றது.  நீண்ட யோசனையின் பிறகு மெதுவாக திரிசடை தீவை நோக்கித் தனது படகைச் செலுத்தத் துவங்கினான்.   

****
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 11:04:28 AM
பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

சிறுகதை


ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ஆர்யமாலா என்ற பணிப்பெண் மட்டுமே உடனிருந்தார். பி. விஜயலட்சுமிக்கு அளிக்கபட்ட சிகிட்சை பற்றி அவளது பெற்றோருக்கு எதுவும் தெரியாது. அவளது கணவரான வைகுந்தராமன் மட்டும் மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமையில்  அவளை பார்ப்பதற்கு அனுமதிக்கபட்டிருந்தார்; ஆனால் அவர் பெரும்பாலும் வருவதேயில்லை. மருத்துவசெலவிற்கான தொகை மட்டும் மருத்துவமனை பெயருக்கே காசோலையாக அனுப்பபட்டு வந்தது.

சிகிட்சைக்கு கொண்டு வரப்பட்ட நாள்:

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலையில் பி. விஜயலட்சுமி 21.4. 2003 அன்று பின்னிரவில் நாலு மணிக்கு  உள்நோயாளியாக அனுமதிக்கபட்டாள். அன்று அவள் டி.என்.3792 என்ற டாக்சியில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்தாள். அவள் வந்த இரவு கொச்சினை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தால் காரின் ஒட்டுனர் வழி தவறி நெடுங்காடு என்ற இடத்திற்கு சென்று சுற்றியலைந்து விசாரித்த போது அது போல ராமவர்மா வைத்தியசாலை இங்கே இல்லை என்றும் அது அடுத்த ஊரான சர்ப்பக்காவில் இருக்க கூடும் என்றார்கள்.

வயல்வெளிகளில் கார் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த போது பின்சீட்டில் சுருண்டுகிடந்தாள் பி. விஜயலட்சுமி. அவளது காலில் லேசாக குளிர்காற்று உரசிக்கொண்டிருந்தது. தலைமயிர் சுற்றிய பித்தளை வளையம் ஒன்று அவளது இடதுகாலை கவ்விபிடித்தபடியிருந்தது. பித்தவெடிப்பேறிய அவளது பாதங்களை மடக்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்தாள் பரிமளம். யாரோ கதவை தட்டுவது போல மழை காரின் மீது தன் விரல்களால் தட்டியபடியே வந்தது. அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் மட்டுமே வந்திருந்தார்.அவரும் சக்கரைநோயாளி என்பதால் உறக்கத்தை கட்டுப்படுத்துவது இயலாததாக இருந்தது. கார் புனலுர் தாண்டும் போதே உறங்கியிருந்தார்.

காரை ஒட்டிவந்த சுப்பு மட்டும் எப்போதாவது பின்சீட்டில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து கொண்டே வந்தான். ஒரு சாயலில் அவன் குடியிருந்த லயன் வீட்டில் இருந்த கணபதி புலவரின் மகளை போலவே அவள் இருந்தாள். பி. விஜயலட்சுமியின் தோற்றம் உருக்குலைந்திருந்தது.அவளது தலைமயிர் எண்ணெய் வைக்கபடாமல் சிடுக்கேறியிருந்தது. நெற்றி ஏறிப்போய் கழுத்து எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது வலதுகையில் பெரிய காயம் ஒன்று சீல்வடிந்து கொண்டிருந்தது. தண்ணீருக்குள் விழுந்த பஞ்சை போல அவள் உடம்பு சுருங்கிப்போயிருந்தது. அவளது கண்கள் மஞ்சளேறியிருந்தன. இமைகள் பருத்து வீங்கி அவள் பல நாட்களாக உறங்காமலேயிருக்கிறாள் என்பது பார்த்த நிமிசத்திலே தெரிந்தது.

சர்ப்பக்காவில் உள்ள வைத்தியசாலையை தேடி டாக்சியில் சென்று சேர்ந்தபோது வெளிவாசலை மூடியிருந்தார்கள். மழைக்குள்ளாகவும் ஏதோவொரு மூலிகை செடியின் வாசனை கமந்து கொண்டிருந்தது. நோயாளியை உள்ளே கூட்டிக் கொண்டு போய்விடலாமா என தெரியாமல் டிரைவர் வெளியில் இருந்தபடியே ஹார்ன் அடித்து கொண்டிருந்தான். யாரும் வரவில்லை. மழைசப்தத்தில் கேட்காமலிருக்க கூடும் போலிருந்தது. பாதி உறக்கத்தில் இருந்த வரதராஜ பெருமாள் ஹார்ன் சப்தத்தில் விழித்து கொண்டு உள்ளே போய் கேட்டுவரச் சொன்னார்

டிரைவர் மழைக்குள் இறங்கி ஒடத்துவங்கிய போது பி. விஜயலட்சுமி மழைக்குள் அசைந்தபடியே இருக்கும் ஒரு கேந்திபூச்செடியை பார்த்து கொண்டேயிருந்தாள். மழையின் வேகத்தை தாங்கமுடியாமல் கேந்திச்செடி வளைந்து கொண்டிருந்தது. டிரைவர் உள்ளே ஒடியபோது ஒரேயொரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அவன் பலத்த குரலில் சப்தமிட்டான். உள்ளிருந்து அறுபது வயதை கடந்த ஒரு ஆள் வெறும்மேலோடு வெளியே வந்து நின்று யார் வேணும் என்று மலையாளத்தில் கேட்டார். சங்கரன்கோவிலில் இருந்து தான் வருவதாகவும் நோயாளியை கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னான். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அதைபற்றி தனக்கு தெரியாது என்றும் நோயாளி ஒரு பெண் என்றும் சொன்னான். அந்த ஆள் உள்ளேயிருந்த லைட்டை போட்டு பெரிய பேரேடு ஒன்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது அறையின் மூலையில் வைக்கபட்டிருந்த பாடம் பண்ணப்பட்டிருந்த முதலை ஒன்றை கண்டான். அறையில் ஆள் உயர விளக்கு ஒன்று இருந்தது. சுவரில் நடனமாடும் பெண்ணின்  சித்திரம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

மருத்துவமனை ஆள் பொண்ணுக்கு என்ன கோளாறு என்று கேட்டான். டிரைவர் தயங்கியபடியே சித்தபிரம்மை என்று சொன்னதும் அதுக்கு வைத்தியசாலை ஆள் ஆனங்குளம் வைத்தியசாலைக்கு இல்லே நீங்கள் போகணும் என்றான். டிரைவர் அது எங்கேயிருக்கிறது என்று கேட்டதும் நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். இப்படியே நாற்பது கிலோ மீட்டர் கிழக்காக போனால் மெயின்ரோடு வந்து சேரும். அங்கிருந்து மேற்காக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தான்.

டிரைவர் மழைக்குள்ளாகவே வாசலுக்கு வந்தபோது காரின் பின்கதவு திறந்து கிடந்தது. பின்சீட்டில் இருந்த பரிமளம் கிழே இறங்கி போய் ஒரு செடியின் மறைவில் குத்துகாலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். அவளது முதுகில் மழை பெய்து கொண்டிருந்தது. பி. விஜயலட்சுமி அந்த கேந்தி செடியை விட்டு கண்ணை விலக்கவேயில்லை. தலையில் விழுந்த மழைத்துளியை தட்டிவிட்டபடியே பரிமளம் காரில் ஏறிக் கொண்டு என்னப்பா ஆச்சு என்றாள். அந்த ஆஸ்பத்திரி வேற எங்கயோ இருக்காம் என்றபடியே காரை எடுத்தான் டிரைவர்.

பரிமளம் தனது பருத்த கையால் பி. விஜயலட்சுமியின் தலையில் ஒரு அடி கொடுத்தபடியே இந்த எழவை கட்டி இழுக்குறத்துக்குள்ளே என் தாலி அறுந்து போகுது என்றாள். பி. விஜயலட்சுமியின் கவனம் அப்போதும் அந்த செடியின் மீதே இருந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருந்தது.

மிக மெதுவாக கார் ஊர்ந்து சென்றது. ஒரு செக்போஸ்டில் கார் நின்றபோது வரதராஜ பெருமாள் தனக்கு பசிக்கிறது என்றார். டாக்சி டிரைவரும் அவரும் இறங்கி சாலையோர உணவகத்தில் பிஸ்கட் சாப்பிட்டார்கள். ஆனங்குளத்தை தேடி அவர்கள் போய் சேர்ந்த போது மழை பெய்து முடித்திருந்தது.

வைத்தியசாலை நூற்று நாற்பது ஏக்கர் பரப்பில் மிகப்பெரியதாக இருந்தது. நுழைவாயிலில் யானை சிலை ஒன்றிருந்தது. இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து அந்த சிலை நிஜ யானையை போன்றேயிருந்தது. தாழ்வான ஒடு வேய்ந்த கட்டிடங்கள். சிறியதும் பெரியதுமான குடியிருப்புகள். செதுக்கி வளர்க்கட்டிருந்த பெரிய புல்தரை, வளைந்து செல்லும் மரங்கள் அடர்ந்த சாலைகள் என அது ஒரு தனி உலகமாக இருந்தது. கார் உள்ளே சென்ற போது இரவு பணியாளர்கள் விழித்திருந்தனர். ஏதோ தைல எண்ணெய் காய்ச்சிக் கொண்டிருப்பது போல மணம் கமழ்ந்து வந்து கொண்டிருந்தது. வரதராஜ பெருமாள் அவர்கள் நீட்டிய பேரேடுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

முண்டு அணிந்த ஒரு வயதான பெண் காரின் கதவை திறந்து பி. விஜயலட்சுமியை எழுப்பிய போது அவள் அங்கிருந்த கல்வாழையின் இலை அசைவதை  பார்க்க துவங்கியிருந்தாள். முண்டு அணிந்தவள் பரிமளத்திடம் நீங்கள் அவளது அம்மாவா என்று கேட்டாள். அதற்கு பரிமளம் எரிச்சலுடன் அந்த நாய்கள் தன்வேலை முடிச்சிருச்சினு எங்க தலையில கட்டிட்டு போயிட்டாங்க. நாங்க தான் உசிரை கொடுக்கிறோம் என எரிச்சல் அடைந்தபடியே நான் இவ அத்தை என்றாள். முண்டு அணிந்தவள் விஜியை கைகொடுத்து துக்கிய போது ஒரு பள்ளி சிறுமியை துக்குவது போலவே இருந்தது.ஒரே ஜாக்கெட்டை பலமாதமாக அணிந்திருந்த காரணத்தால் அவளது முதுகில் பட்டை போல தடம் விழுந்திருந்தது.பி. விஜயலெட்சுமியின் பொருட்கள் என்று ஒரு பழைய வயர்கூடையில் அடைத்து எடுத்து வரப்பட்டிருந்த பொருட்களை பரிமளம் தன் கையில் எடுத்து கொண்டாள்.

முண்டு அணிந்தவள் மழை தண்ணீர் தேங்கியிருந்த பாதையில் விஜயலட்சுமியை தன்னோடு சாய்த்து கொண்டு நடந்த போது விஜயலட்சுமிக்கு நடக்கவே கால் கூசுவதை உணர்ந்தாள். உடம்பில் பிசுபிசுப்பும் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கிழக்கு பார்த்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே விஜயலட்சுமியை படுக்கையில் உட்கார வைத்த போது பரிமளம் பெருமூச்சுவிட்டபடியே கதவை மூட வேண்டாம் அவ துங்கவே மாட்டா . நிலை குத்தினது மாதிரி உட்கார்ந்தே இருப்பா. என்றாள். முண்டு அணிந்தவள் தலையசைத்தபடியே அறையின் பூட்டை மேஜையின் மீது வைத்து விட்டு வெளியேறினாள்.

வரதராஜ பெருமாள் அந்த அறைக்கு வந்து சேர்ந்தபோது விஜயலட்சுமி சுவரை பார்த்தபடியே ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பரிமளம் இரவிலே கிளம்பி போய்விடுவதா இல்லை காலையில் புறப்படலாமா என்று கேட்டாள். இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள். முன்பு வந்த அதே முண்டு அணிந்த பெண் இப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியும் கொசுவர்த்தி சுருள் ஒன்றும் கொண்டு வந்து வைத்தபடியே ஆம்பளைகள் இங்கே தங்குவதற்கு அனுமதியில்லை என்றாள். வரதராஜ பெருமாள் தாங்கள் இரவிலே கிளம்பவுதாக சொல்லியபடியே இரண்டு நாட்களுக்குள் அவளுக்கு துணையாக யாராவது ஒரு ஆளை ஊரிலிருந்து அனுப்பி வைப்பதாக சொன்னார். முண்டு கட்டியவள் அதைக் கேட்டு கொண்டதாகவே தெரியவில்லை. வரத ராஜ பெருமாள் கிளம்பும் போது அந்த பணிப்பெண்ணிடம் இவளுக்கு பச்சைதண்ணி ஆகாது.. குளிக்க வச்சா கத்துவா என்று சொல்லியபடியே டாக்சியை நோக்கி நடந்தார்.

மழைக்கு பிந்திய இரவு என்பதால் வானில் நட்சத்திரங்களே இல்லை. டிரைவர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்த போது வரதராஜ பெருமாள் இதுக்கு மாசம் ரெண்டாயிரம் ஆகும். இந்த சனியனை கட்டிகிட்டு வந்ததுக்கு என்னவெல்லாம் தொரட்டை அடைய வேண்டியதிருக்கு பாரு என்றார். பரிமளம் பின்சீட்டில் தனி ஆளாக சாய்ந்து படுத்தபடியே மூளைக்கோளாறு ரொம்ப நாளாவே இருந்திருக்கணும். நம்ம தலையில கெட்டி வச்சிட்டாங்க இனிமே இவ செத்தாலும் பிழைச்சாலும் நமக்கென்ன விடு என்றாள்.

கார் பிரதான சாலைக்கு வந்த போது விடிய துவங்கியிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திரும்பவும் பசிக்க துவங்கியிருந்தது. அவர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஹோட்டலில் நிறுத்த சொன்னார். டிரைவர் ஆற்று பாலத்தை கடந்து போன போது அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு குளித்து ஒரு துக்கம் போடலாம் என்று நினைத்தான். காரில் இருந்த இரண்டு பேரும் உறங்கியிருந்தார்கள். சாலை ஈரத்தில் நனைந்து கிடந்தது. ஏனோ அவனுக்கு பி. விஜயலட்சுமியை பற்றிய வருத்தம் உண்டானது. அவன் பாதி துக்கமும் மனதில் வலியுமாக வண்டியை சங்கரன்கோவிலை நோக்கி ஒட்டி போய் கொண்டிருந்தான்

நோய் குறிகள்

பி. விஜயலட்சுமி கடந்த ஒரு வருட காலமாக உளவியல் மருத்துவர் டாக்டர் செல்வமகேந்திரனிடம் சிகிட்சை பெற்றிருக்கிறாள். அவரது மருத்துவகுறிப்பின்படி அவளுக்கு ஏற்பட்டிருப்பது அதீத பயம் மற்றும் மனசிதைவு. இதற்கான காரணங்களாக அவர் கருதுபவை
1) விஜயலட்சுமி திருமணம் நடந்த நாளில் இருந்து ஒரு மாதகாலம் பகலிரவு என பேதமில்லாமல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறாள். அதனால் அவளது பால்உறுப்பு அழற்சி அடைந்திருக்கின்றது. அத்தோடு அவளது உடலில் பதினோரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பல்லில் ஒன்று பாதி உடைபட்டிருக்கிறது
2) விஜயலட்சுமி கடந்த 11.7.2002 முதல் தொடர்ந்து நாற்பத்திரெண்டு நாட்கள் துங்காமல்  இருந்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அவள் படுக்கையில் கிடந்தபடியே உறக்கம் வராமல் புரண்டு படுத்திருக்கிறாள். அதன்பிறகு அவள் படுத்துக்கொள்வதேயில்லை. சுவர் ஒரமாகவே இரவு முழுவதும் நின்று கொண்டேயிருந்திருக்கிறாள். யாராவது அவளை அழுத்தி உட்கார வைத்தால் கூட தானா எழுந்து நின்று கொண்டு விட்டிருக்கிறாள்.  இதற்காக அரசு பொதுமருத்துவனையில் மூன்று நாட்கள் சிகிட்சை அளிக்கபட்டபிறகு அவள் எழுந்து நிற்பதில்லை. மாறாக கர்ப்பசிசுவை போல கைகால்களை ஒடுக்கி கொண்டு உட்காந்திருந்திருக்கிறாள்
3) 2002ம் வருட ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை அவளை திருவந்தியம் கோவிலுக்கு அழைத்து போயிருந்த போது அவள் இடைவிடாமல் மூத்திரம் பெய்தபடியே இருந்திருக்கிறாள். அதனால் ஆத்திரமாகி அவளை அடித்ததில் இடதுதொடையில் பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது
4) பி. விஜயலெட்சுமி திருமணமாகி வந்த இரண்டு மாதங்களில் நாலைந்து முறை  கணவனோடு சண்டையிட்டிருக்கிறாள். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் அவளை கணவனோ அல்லது அவனது வீட்டு ஆட்களோ தாக்கியிருக்கிறார்கள். ஒரு முறை அவளை வீட்டில் உள்ள ஒரு ஆண் ( யார் என்று தெரியவில்லை) தனது ஆண் உறுப்பை அவளது முகத்தில் தேய்த்திருக்கிறார். அன்று அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்து கண்டுபிடிக்கபட்டு சமையல்பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கபட்டிருக்கிறாள்.
5) இரண்டு முறை அவளுக்கு கர்ப்பசிதைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறை திருமணமான நாற்பதாவது நாளும் இரண்டாவதுமுறை கரு வளர்ந்து 95 நாட்கள் ஆன பிறகும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் அவள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டியிருக்கிறாள். சில நேரங்களில் அவள் அழுவது நாள் கணக்கில் நீடித்திருக்கிறது
6) 2002ம் ஆண்டின் மேமாதத்தில் அவள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தனது பதிவு எண்ணை நீடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதை அனுமதிக்க மறுத்ததோடு அவள் தானே கிளம்பி போய்விடக்கூடும் என்று அவளது சான்றிதழ்களை யாவையும் எரித்து விட்டார்கள் என்றும் அன்றிரவு அவள் திரும்புவம் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றபட்டு தயாளன் ஆர்எம்பி என்ற மருத்துவரிடம் சிகிட்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்த சிகிட்சை முடிந்து வந்த சில வாரங்களுக்கு பிறகு அவளது உடலில் ஆங்காங்கே காரணமில்லாமல் பருத்து வீங்க துவங்கியிருந்தது. இதற்கான சிகிட்சை அளிக்கபடவேயில்லை
7) துக்கமின்மை. நடந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்வது. கற்பனையாக பயம் மற்றும் தான் இறந்து போய்விட்டதாக நம்புவது உள்ளிட்ட பல நோய்கூறுகள் அவளிடம் துல்லியமாக வெளிப்படுகின்றன

உளவியில் மருத்துவரின் இந்த நோய்கூறுகள் பற்றிய அவதானிப்புகளை போல அவளது கணவன், மாமனார், மாமியார், சின்ன அத்தை மற்றும் அந்த வீட்டின்  வேலைக்காரி  ஆகியோர் அவதானித்த அவளது நோய் குறிப்புகள்

1) விஜயலட்சுமிக்கு திருமணத்தின் போது இருபத்தைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அதை பெண் வீட்டில் இருபது என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இதை அவளது கணவன் வைகுந்தராமன் சான்றிதழ்களில் இருந்து கண்டுபிடித்தான். அதைபற்றி விஜயலட்சுமியிடம் கேட்டபோது வைகுந்த ராமனுக்குகூட முப்பத்தைந்துவயது முடிந்து விட்டிருக்கிறது, ஆனால் பொய் சொல்லிதானே கல்யாணம் செய்திருக்கிறான் என்று வீண்வாதம் செய்தாள். இதனால் அவளை வைகுந்தராமன்  கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிரவு இந்த சண்டை காரணமாக அவள் உடலுறவு கொள்வதற்கு அனுமதி மறுக்கவே வைகுந்தராமன் அவளை கட்டிலில் இருந்து கிழே தள்ளி வன்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவள் பிடித்து தள்ளியதில் வைகுந்தராமனின் முந்நுறு ரூபாய் பெறுமானமுள்ள ஆல்வோ கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து போனது குறிப்பிட்டதக்கது.
2) விஜயலட்சுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தபாலில் எம்ஏ படிக்க முயன்றிருக்கிறாள். அப்படி அவளுக்கு வந்த பாடப்புத்தகங்களை அவள் ஒளித்து வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கையின் அடியில் வைத்திருந்தை தற்செயலாக அவளது மாமனார் வரதராஜ பெருமாள் கண்டுபிடித்து விசாரித்த போது அவள் படிப்பது தவறு ஒன்றும் இல்லையே என்று வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்த போது அவர் வழியில்லாமல் அவளது செவுளில் இரண்டு அடி தரவேண்டியதாகியது. அன்றிரவும் விஜயலட்சுமி வன்புணர்ச்சிக்கு உள்ளாகினாள். ஆனால் அவள் மற்ற நாட்களை போல இல்லாமல் ஆடைகளே இல்லாமல் வீட்டின் ஹாலுக்கு வந்து தனது மாமனார் முன் நின்றபடியே நீதானடா சொல்லி குடுக்குறே. என்று மரியாதையின்றி கத்தியிருக்கிறாள்.
3) விஜயலட்சுமியின் தம்பி விடுமுறைக்கு வந்த நாளில் அக்காவின் கட்டிலில் ஒரு மதியம் உறங்கி கொண்டிருந்ததை கண்டு வைகுந்தராமன் அவனை அடித்து எழுப்பி விரட்டவே அந்த பிரச்சனையை விஜி பெரிதாக எடுத்து கொண்டு கத்தியிருக்கிறாள். அப்போது அவளை வைகுந்தராமன் அடிக்க முற்பட அதை விஜியின் தம்பி தடுத்திருக்கிறான் வேறு வழியில்லாமல் அந்த பையன் கழுத்தை பிடித்து தள்ளி இனிமேல் அவனோ, அவளது வீட்டு ஆட்களோ அவளை தேடி வரக்கூடாது என்று விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது
4) விஜயலட்சுமிக்கு சினிமா பாட்டுகளை கேட்பதும் பாடுவதுமான பழக்க மிருந்திருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடிக் கொண்டேயிருந்ததால் அதை தடுப்பதற்கு வேறு வழியில்லாமல் அவளது உதட்டில் சூடு போட வேண்டிய நிர்ப்ந்தம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது
5) விஜயலட்சுமி கணவனையும் மற்றவர்களையும் சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு  தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அதை தடுத்து அவளை பொதுமருத்துவமயில் சேர்த்து மின்சார சிகிட்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் செலவு மட்டும் பனிரெண்டாயிரம் ஆனது. அதை மாமனார் வீட்டில் வைகுந்தராமன் பெருந்தன்மையாக கேட்கவேயில்லை

6) கணவரை உடல் உறவில் திருப்தி படுத்த முடியாத தன்மையும், வீட்டில் வேலைகள் செய்யாமல் கற்பனையில் முழ்கி கிடப்பதும் புத்தகம் படிப்பதும் அவளது முக்கிய நோய்குறிகள்.

பி. விஜயலட்சுமியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்

2002ம் வருடம் மார்ச் மாதம் 8 ம் தேதி செய்துங்கநல்லுர் பெத்தையா- செல்லம்மாள் தம்பதியின் குமாரத்தியான பி. விஜயலெட்சுமி என்ற விஜயாள் பி.ஏவிற்கும், சங்கரன்கோவில் பூவிளங்கும் பெருமாள் பேரனும் வரதராஜ பெருமாளின் சிரேஷ்ட பையனும் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் வைகுந்தராமன் பி.காம். டி.கோப் அவர்களுக்கும் சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 10.30 வரையான முகூர்த்ததில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் வைகுந்தராமனின் நண்பர்கள் நுற்றுக்கும் மேற்பட்டவர்களும் விஜயலெட்சுமியோடு படித்த கண்மணி , விமலா என்ற இருவர் மட்டும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் திருமணத்திற்காக நாற்பது பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்க பணமும் ஒரு யமஹா பைக்கும் வாங்கி தருவது என்று நிச்சயக்கப்பட்டிருந்த வண்ணம் யாவும் இனிதாக நிறைவேற்றி வைக்கபட்டது. விருந்தில் விஜயலட்சுமி இன்னொரு அப்பளம் கேட்டபோது வைகுந்தராமன் ஏண்டி சாப்பாட்டுக்கு அலையுறே என்றதும் அவனது குடும்பமே சிரித்தது.
 
திருமணநாளின் மதியத்தில் விஜயலட்சுமியும் வைகுந்தராமனும் புது தலையணை, போர்வை சகிதமாக ஒரு அறையில் தங்க வைக்கபட்டபோது வைகுந்தராமன் அவளிடம் தான் பத்து நாட்களாக ஜிம்மிற்கு போய் உடம்பை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதனால் இன்றிரவு அவள் பலமுறை உடல்உறவுக்கு தயராக இருக்க வேண்டும் என்றும் கூறினான். அவள் பதிலே சொல்லவில்லை.

இரவு அவள் படுக்கைக்கு சென்ற போது அவளது வலதுகையை முறுக்கியபடியே அவன் ஒரே கடியில் முழு ஆப்பிள் ஒன்றை தின்றபோது அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் விருப்பம் கூடுவதற்குள் அவன் தனது செயலை முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பழங்கள் யாவையும் தின்று தீர்கக துவங்கினான். அவள் எழுந்து மூத்திரம் பெய்துவிட்டு வர விரும்பினாள். அதற்கு கதவை திறந்து வெளியே போக வேண்டும். உள்ளே வருதற்குள் போய்விட்டு வந்திருந்தால் என்ன என்று அவன் கத்தினான். அவள் சுருண்டு படுத்து கொண்டாள்.  விடிந்து எழுந்த போது அவளது உடலில் நாலைந்து சிறு காயங்களிருந்தன. அதை விடவும் அவன் பாதி கடித்து போட்டிருந்த ஆப்பிள்சதைகள் ஆங்காங்கே கிடந்தை காணும் போது அருவருப்பாக இருந்தது. அவள் துக்க கலக்கத்தோடு அவசரமாக மூத்திரம் பெய்வதற்காக வெளியே சென்றாள்.

**
திருமணமான பத்து நாட்களுக்கு பிறகு அவர்கள் வைகுந்தராமனின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்கள். அந்த வீடு மிக சிறியது. உள்ளே ஒரு நார்கட்டில் போட்டிருந்தார்கள். அதில் இருவர் படுக்க முடியாது. ஆனாலும் அவனது கட்டாயத்தால் அவள் அதில் ஒட்டிக் கொண்டு படுக்க வேண்டியதாகியது. இரவில் அவனது ஆத்திரத்தால் அவளது கால்முட்டியில் கட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. இந்த கிராமத்தில் எந்த டாக்டரை பார்ப்பது என்று அவன் திட்டியதோடு அப்படியே விட்டுவிட்டான் . அங்கிருந்த மூன்று நாட்களும் அவளால் வலது காலை அசைக்கவே முடியவில்லை.  ஊருக்கு வந்ததுமே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் ஆத்திரத்தில் அவள் காய்ச்சலை பற்றி பொருட்படுத்தாமல் அவளோடு உறவு கொண்டான். மறுநாள் அவள் மருத்துவரிடம் காட்டியபோது அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் படியாக சொன்னார். வைகுந்தராமன் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஊருக்கு போன் செய்து அவளது அப்பாவை வரச்சொல்லிவிட்டு தனக்கு அலுவலக வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி சென்றான்

**
வீட்டு பிரச்சனைகளில் இருந்து மனதை திசைதிருப்புவதற்காக விஜயலட்சுமி  வாடகை நுலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தாள். அங்கே உள்ள புத்தகத்திலே மிக அதிகமான பக்கங்கள் கொண்ட ஏதாவது ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாரக்கணக்கில் படித்து கொண்டிருப்பாள். அப்படி ஒரு நாள் அவள் யாருக்காக மணி ஒலிக்கிறது என்ற புத்தகத்தை எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்த போது  வீட்டு பெண்களை போல அவள் வேலைகள் செய்யாமல் எதற்கு படித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று ஆத்திரமாக கத்திய வைகுந்தராமன் உடனடியாக அந்த நாவலை பிடுங்கி கிழித்து அடுப்பில் போட்ட போது அவள் வேண்டும் என்றே தனது தலையை சுவரில் பலம் கொண்ட மட்டும் முட்டிக் கொண்டாள். ஆனால் அப்போதும் அவளது மண்டை உடையவேயில்லை அத்தோடு அவளது ஆத்திரமும் தீரவில்லை.

**
ஒரு நாள் மதியம் சாப்பாடு போடும்போது தட்டில் ஒரு தலைமயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணம் காட்டி விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் அன்றிலிருந்து அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்று கத்தினார். அதை வைகுந்தராமனும் ஆமோதித்ததோடு அப்போதே அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்றான். அன்றிலிருந்து விஜயலட்சுமி தானாகவே தரையில் சாப்பிட துவங்கினாள். அதை பின்நாட்களில் ஒருவரும் தடுக்கவேயில்லை

**
வைகுந்தராமன் அலுவலகத்திலிருந்து வரும்வரை இரவில் அவள் படுக்கையில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறாள் என்பதால் தேவையற்ற மின்சார செலவு ஏற்படுகிறது என்று மின்விளக்குகளை அணைக்க சொல்லி சண்டையிட்ட பிறகு அவள் தனது அறையில் எப்போதுமே விளக்கு போடாமல் இருட்டிலே இருக்க பழகத்துவங்கினாள். இந்த பழக்கம் பகலிலும் நீண்டுவிடவே அவளாக வீட்டு ஜன்னல்களை ஆணி வைத்து அடித்து ஒரு போதும் திறக்க முடியாதபடி மூடிவிட்டாள்.

**
துணி துவைக்கும் சோப்பு மற்றும் அவளுக்கான எண்ணெய், பவுடர், சீப்பு போன்றவற்றை அவர்கள் தங்களது அலமாரியில் வைத்து பூட்டிக் கொண்ட நாளில் இருந்து அவள் ஒரே உடையில் நாள் கணக்கில் இருக்கவும் குளிப்பதற்கு மறுக்கவும் துவங்கினாள்

***
ஒவ்வொரு முறை கர்ப்பம் கூடி கலைந்த போதும் அவள் தனது பிறக்காத குழந்தைக்கு ஒரு பெயரிட்டு அதை தான் வளர்ப்பது போன்று கற்பனையாக செயல்பட துவங்கினாள். இதற்காகவே அவள் அடிவாங்கியதும் சிலமுறை நடந்தேறியிருக்கிறது.

வைத்தியசாலையில் சில  தினங்கள்

விஜயலட்சுமி வைத்தியசாலைக்கு வந்த நாலு வாரங்கள் யாரோடும் பேசவேயில்லை. ஒரு இரவு அவள் தனது அறையினுள் வந்துவிட்ட தவளை ஒன்றை இரவு முழுவதும் அருகில் உட்கார்ந்து பார்த்து கொண்டேயிருந்தாள். தவளை கண்ணை மூடுவதும் திறப்பதையும் காண்பது வசீகரமாக இருந்தது. விடிகாலையில் அந்த தவளை அறையை விட்டு படியில் தாவி குதித்தது. அப்போது அவளும் படிக்கு வந்து நின்றாள். தவளை இன்னொரு குதி குதித்து செடிக்குள் மறைந்த போது அவள் சந்தோஷத்துடன் கைதட்டினாள்

**
ஒரு நாளிரவு அறையின் ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. விஜயலட்சுமி தனது கைகளை அந்த வெளிச்சத்தில் காட்டினாள். நிலா வெளிச்சம் கைகளில் ஊர்ந்து போக துவங்கியது. நிலா அறையில் நகர நகர அவளும் தன் கைகளை நீட்டிக் கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் உடலில் நடுக்கம் அதிகமானது.

**
ஒரேயொரு முறை அவள் எண்ணெய் குளியல் செய்வதற்காக அழைத்து போகபட்டபோது வழியில் கிடந்த சிவப்பு துணியை காட்டி இது பாம்பில்லை துணி என்ற ஒரேயொரு வார்த்தை பேசினாள். அதன்பிறகு பலவாரங்கள் பேசவேயில்லை.
**
பலாமரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை எறும்புகள் ஏறுகின்றன எத்தனை எறும்புகள் இறங்குகின்றன என்று  பகல் முழுவதும் எண்ணிக்கொண்டேயிருந்தாள். ஏறிய எறும்புகளில் பத்துக்கும் மேற்பட்டவை கிழே இறங்கவேயில்லை என்பது அவளுக்கு வருத்தம் தருவதாக இருந்தது
**
கூட்டு பிரார்த்தனைக்காக அழைத்து போகப்பட்ட போது அவள் மனம் உருகி தான் ஒரு கொசுவாக மாறிவிட்டால் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழலாம் என்று பிரார்த்தனை செய்தாள்.
**
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் மௌனத்திலிருந்து பேச்சிற்கும் அவள் நகர்ந்து வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலானது. ஆனாலும் அவளது உடலில் உள்ள தழும்புகளை கண்ணாடியில் கண்டதும் அவள் முகம் வெளிறி ஒடுங்கி போவதை ராஜ வைத்தியத்தாலும் குணப்படுத்த முடியவேயில்லை

**
பின்குறிப்பு : 21.12.2003 மதியம் இரண்டு மணிக்கு ஆனங்குளத்தில் உள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த ஐம்பது வயதை தாண்டிய நபர் நரைத்த தலைமயிரும் கவலை தோய்ந்த முகமும் கொண்டிருந்தார். அவரது கண்களில் துக்கம் படிந்திருந்தது. நடுங்கும் குரலில் தான் விஜயலட்சுமியின் தகப்பன் என்றும் தங்களிடம் விஜயலட்சுமி படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாக வைகுந்தராமன் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்றும் அவளை தான் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சொன்னார். வைத்திசாலை ஆட்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அந்த வயசாளி தன்னை மீறி அழுதபடியே என் பொண்ணுய்யா என்று கத்தினார்.

வழியில்லாமல் ஒரு முறை அவளை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அவர் பார்த்தபோது சிறிய பச்சைநிற அங்கி அணிந்தபடியே அவள் படியில் உட்கார்ந்திருந்தாள். அவளது தலைமயிர் கொட்டி போயிருந்தது. அவள் தன் அப்பாவை பார்த்ததும் பலவீனமான குரலில் நீயும் இங்கே வந்துட்டயாப்பா என்று கேட்டாள். அவர் பதில் சொல்லமுடியாமல் கதறிஅழுதார்.

அன்றிரவு வைத்தியசாலையில் இருந்த பணிப்பெண்ணிற்கு பணம் கொடுத்து யாரும் அறியாமல் தன் பெண்ணை அவர் அங்கிருந்து கூட்டிப் போய்விட்டார் என்றும் ஒருவேளை அவர்கள் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியிலோ, கர்நாடகாவில் உள்ள கொல்லுரிலோ. மஹாராஷ்டிராவில் உள்ள சீரடியிலோ  காணக்கூடும் என்கிறார்கள்.

உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நமது நற்குடும்பத்தின் சந்தோஷ வாழ்வை எவ்விதத்திலும் தொல்லை செய்யமாட்டார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.

**

- உயிர்மை இதழில் வெளியானது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 11:10:10 AM
இல்மொழி

குறுங்கதை


சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள்.

கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் கடை மூன்றாவது இருந்த கடை கல்கண்டுபால் விற்பது. இதை மூன்றையும் நிர்வாகம் செய்வதற்காக ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.

சுப்பையாவுக்கு தாழையூத்தில் பெண் எடுத்தார்கள். கல்யாணம் ஆனது என்ற பெயர் தானே தவிர அவர்களால் பெண்டாட்டியோடு தனித்திருந்து பேச நேரம் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை பேசிக் கொண்டாலும் அடுத்தவர் காதிற்கு கேட்காமல் பேசுவது சாத்தியமேயில்லை.

சாப்பாடு பரிமாறும் போது வேணாம் போதும் என்று சொல்வது தான் அவர் உபயோகித்த அதிகமான வார்த்தைகள். சுப்பையா தான் படக்கடையை கவனித்து வந்தார். உண்மையில் அதில் கவனிப்பதற்கு என்று தனியே எதுவுமில்லை. சாமிக்கு பயந்தவர்கள் இருக்கும் வரை உறுதியான வியாபாரம். பொம்பளைகள் இருக்கும் வரை குங்குமம் மஞ்சள் விற்பனை. பிறகு என்ன?
கடையை திறந்து வைத்தவுடன் அவர் தினமணியை பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தால் சாப்பிட வீடு வரும்போது தான் முடிப்பார். அப்படி ஒரு நாள் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பாலத்தின் அருகில் தான் அந்த யோசனை உண்டானது.

இந்த சள்ளையை எத்தனை நாள் கொண்டு கழிக்கிறது. பேசாம நாமளா ஒரு பாஷையை உண்டாக்கினா என்ன? யோசித்தவுடன் பளிச்சென்றிருந்தது. வீடு வரும்வரை அந்த பாஷையை பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அன்றிரவு மனைவியிடம் அந்த யோசனைய சொன்னார். அவள் உங்க இஷ்டம் நாலும் யோசிச்சி செய்யுங்க என்றாள். இது வழக்கமாக அவர் எதை பற்றி கேட்கும் போது அவள் சொல்வது தான் என்பதால் மறுநாள் கடைக்கு போகும்வழியில்  கவனமாக சைக்கிளை லாலாகடை அருகில் நிறுத்தி செந்தில்விலாசில் எண்பது பக்க நோட்டு ஒன்றை வாங்கி கொண்டார்.

கடையில் போய் உட்கார்ந்தவுடன் கர்மசிரத்தையாக தான் உருவாக்க போகின்ற மொழியை பற்றி யோசிக்க துவங்கினார். முதலில் அதற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை எழுந்தது. சாமி பெயரிலே இருக்கட்டும் என்று நெல்பா என்று அந்த பாஷைக்கு பெயரிட்டார்.

அதற்கு எழுத்து வடிவம் வேண்டுமே என்று முடிவு செய்து அவராக அ ஆவன்னா போல எழுத்தை உருவாக்கினார். அது போலவே அதற்கு என்று ஒலி குறிப்பு வேண்டும் என்று உச்சரிப்பும் உருவாக்கினார். கடையில் இருந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் அவர் நெல்பாவில் எப்படி வரும் என்று நோட்டில் எழுத துவங்கினார். தினசரி அவர் கணக்கு நோட்டு போட்டு எழுதி வருவதை கண்ட மணியம்பிள்ளை சுப்பையாவின் தகப்பனாரிடம் உம்மபிள்ளை ரொம்ப கணக்காக வியாபாரம் பண்றான் என்று புகழ்ந்து தள்ளினார்.

ஒரு மாசத்திற்கு நோட்டு நிரம்பி போகும் அளவு வார்த்தைகள் அதிகமாகின. அந்த நோட்டை பர்வதத்திடம் தந்து மனப்பாடம் செய்துவிடும்படியாக சொன்னார். அவளுக்கு இந்த மனுசன் வேற கோட்டி புடிச்சி அலையுறானே என்று எரிச்சலாக வந்தது. ஆனாலும் வழியில்லாமல் அந்த பாஷையை பழகிவிட்டாள்.

அதை சோதித்து பார்ப்பதற்காக சாப்பாடும் போடும்போது நெல்பா பாஷையில் அவர் கேட்பார். அவளும் நெல்பாவில் பேசுவாள். இரவில் படுக்கையில் கொஞ்சுவது கூட நெல்பாவிற்கு மாறிப்போனது.  அதன்பிறகு அவர் பெரிய நோட்டாக வாங்கி நெல்பாவிற்கான சொற்களை சேகரிக்க துவங்கினார். ஒரு வருசத்திற்குள் அந்த பாஷை அவர்கள் ரெண்டு பேருக்கும் அத்துபடியாகியது.
வீட்டில் உள்ளவர்கள் மீது ஆத்திரமானால் கூட வெளிப்படையாக நெல்பாவில் பர்வதம் திட்டுவாள். யாருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது. சுப்பையா மிகுந்த சந்தோஷமானார். உலகில் தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மொழி இருக்கிறது என்பது பெரிய விஷயமில்லையா.

ஒரு நாள் கடை திறப்பதற்காக வந்த சுப்பையாவின் அப்பா கடையில் வைத்திருந்த நெல்பா நோட்டுகளை புரட்டி பார்த்துவிட்டு இந்த எழவை கூட்டுறதுக்காகவா கடைக்கு உன்னை வச்சிருந்தேன் என்று கோவித்து கொண்டு எல்லா நோட்டுகளையும் கடையின் முன்னால் போட்டு எரித்ததோடு எல்லோரிடமும் சொல்லியும் காட்டினார். சுப்பையாவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கடையை நம்பி பிழைப்பதால் மனதிற்குள்ளாக நெல்பாவில் திட்டிக் கொண்டார்.

இது நடந்த இரண்டாம் வருசம் சுப்பைவின் அப்பா இறந்து போகவே கடை பாகம் பிரிக்கபட்டது. சண்டை போட்டு படக்கடையை தன்வசமாக்கி கொண்டு சாந்தி நகரில் வேறு வீடு பார்த்து குடிபோய்விட்டார் சுப்பையா.
வீடு மாறியதும் செய்த முதல்வேலை இனிமேல் வீட்டில் நெல்மாவில் தான் பேச வேண்டும்  என்றார். அதன்பிறகு அவர் மட்டுமில்லாது அவரது பிள்ளைகள், பெண்கள் யாவரும் அதை கற்றுக் கொண்டார்கள். எப்போதாவது வீட்டில் சண்டை நடக்கும் போது அவர்கள் நெல்மாவில் கத்தி சண்டையிடுவார்கள். அருகாமை வீட்டில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாது.

ஒரு முறை பங்குனி உத்திரத்திற்கு திருசெந்துர் போவதற்கு பர்வதம் கிளம்பிய போது சுப்பையா கடையில் வேலையிருப்பதாக போக கூடாது என்று தடுத்தவுடன் அவள் கோபத்தில் மடமடவென நெல்மாவில் கத்தினாள். ஆனால் அவள் பேசியதில் பாதி சொற்கள் என்ன வென்று அவர் அறிந்தேயிருக்கவில்லை அவளிடம் எப்படி போய் அர்த்தம் கேட்பது என்று யோசனையும் வலியுமாக கடைக்கு போனார். ஒரு உண்மை அவருக்கு புரிந்திருந்தது. அவள் தனக்காக மட்டும் அந்த மொழியில் சிறப்பு சொற்கள் நிறைய உருவாக்கி கொண்டுவிட்டாள் . இதை வளர விட்டால் தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்று நினைத்தார்.

அன்றிரவே வீட்டில் யாரும் இனிமேல் நெல்மாவில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்கு அவர்களுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் சுப்பையாவின் கோபத்திற்கு பயந்து நெல்மாவை மறந்து போனார்கள். நல்லவேளை பிரச்சனை முடிந்தது என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மதியம் தலைவலி அதிகமாகி அவர் வீடு திரும்பிய நேரம் பர்வதமும் அவரது மகனும் ஏதோவொரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று ஒருவரியும் புரியவில்லை, அவர்கள் சரளமாக பேசிக் கொண்டார்கள். சுப்பையா தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே குடிக்க தண்ணீர் கேட்டார். உள்ளே மகள் சிரிப்போடு அதே புரியாத பாஷையில் தன் அண்ணனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சுப்பையாவிற்கு எரிச்சலாக வந்தது.

அந்த நிமிசம் அவர் தன் அப்பாவை நினைத்து கொண்டார். புத்தி கெட்டு போயி தெரிந்த பாஷையை என்ன எழவுக்கு மாத்தினோம் என்று அவர் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் அதை எந்த பாஷையில் சொல்வது என்று புரியாமல் திகைத்துபோயிருந்தார்.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 11:56:00 AM
விசித்ரி

சிறுகதை


விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.

 அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.


சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஒடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதி படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில்  திருகை அரைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை கண்டதாக சொல்கிறார்கள். வள்ளியம்மை இறந்து போகும்வரை இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.

அப்படி நினைவுபடுத்தும் போது நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே வந்து முடிவில் சித்ரலேகாவை யாரோ துரத்திக் கொண்டு வந்ததையும், உடல் முழுவதும் காயங்களுடன் அவள் அலறியபடியே ஒடி வந்ததையும் அவள் பின்னால் கறுத்த நாய் ஒன்று உளையிட்டபடியே வந்ததாகவும் சேர்ந்து கொண்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சித்ரலேகா இன்று வரை  யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி எட்டைக் கடந்திருக்கிறது.

ஒடிவந்த நாளில் இருந்து அவள் யாரோடும் பேசுவதும் பழகுவதும் குறைந்து போனது. அத்தோடு அன்றிலிருந்து தான் அவளது விநோதப் பழக்கம் துவங்கியது. அவளிடமிருந்த அத்தனை பாவடை சட்டைகளையும் அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ஏதோ பயத்தில் அப்படி செய்கிறாள் என்று அப்படியே உறங்கவிட்டுவிட்டார்கள்.

ஆனால் மறுநாள் காலையில் அவள் அம்மாவின் பழம்புடவைகள், மற்றும் சகோதரிகளின் உடைகள் அத்தனையும் சேர்த்து அணிந்து கொள்ள துவங்கிய போது அவள் முகத்துக்கு நேராகவே சகோதிரிகள் திட்டினார்கள். சித்ரலேகா அதை கண்டு கொள்ளவேயில்லை. அவள் தன் உடலை எப்படியாவது மறைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று தீவிர முனைப்பு கொண்டவள் போல ஒரு உடைக்கு மேலாக மற்றொரு உடையை போட்டு இறுக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஒரு துணிப்பொம்மை போன்ற தோற்றத்திற்கு வந்த போதும் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை.

அத்தனை உடைகளுடன் அவள் உறங்கவும் நடமாடவும் பழகியிருந்தாள். குளிக்கும் நேரத்தில் கூட அவள் இந்த உடைகளில் ஒன்றையும் கழட்டுவதில்லை. ஈர உடைகளுடன் இருந்தால் உடம்பு நோவு கண்டுவிடும் என்று சகோதரிகள் திட்டி அவள் உடைகளை அவிழ்க்க முயன்ற போது ஆத்திரமாகி  இளைய சகோதரி கைகளில் கடித்து வைத்தாள் சித்ரலேகா.

வலி தாங்கமுடியாமல் அவள் அழுதபடியே அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து அவளது ஈர உடைகளை அவிழ்க்க முயன்றார்கள். அவள் கூக்குரலிட்டு அழுததோடு அத்தனை பேரையும் அடித்து உதைக்க துவங்கினாள். அப்படியே இருந்து சாகட்டும் சனியன் என்று அம்மா திட்டியபடியே அவளை தனித்துவிட்டு சென்றாள். ஈர உடைகள் அவளுக்கு பழகிவிட்டன.

ஆனால் அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து தன் உடைகளை அவிழ்த்துவிடுவார்களோ என்று பயந்த அவள் சணல் கயிற்றாலும் ஊக்காலும் ஆடைகளை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துக் கொண்டு உடலோடு கட்டிக் கொள்ள துவங்கினாள். அதன்பிறகு  உடைகளை யாரும் தொடுவதை கூட அவள் அனுமதிக்கவில்லை.

அதுவே கேலிப்பொருளாகி அவர்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அவள் உடைகளை அவிழ்க்க போவதாக பொய்யாக பாவனை செய்த போது சித்ரலேகாவிடமிருந்து அலறல் குரல் பீறிடும். சித்ரலேகாவை சமாதானம் செய்வது எளிதானதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒடி தெருவில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சில நேரம் இரவில் தெருவிலே உறங்கிவிடுவதும் உண்டு.அப்போதும் அவள் கைகள் உடைகளை இறுகப்பற்றிக் கொண்டேயிருக்கும்.

சித்ரலேகாவின் உடை பழக்கம் தான் அவளுக்கு விசித்ரி என்ற பெயரை உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் பின்வந்த நாட்களில் எங்கே எந்த துணி கிடைத்தாலும் அதை எடுத்து உடுத்திக் கொள்ள துவங்கினாள். இதனால் அவள் தோற்றம் அச்சமூட்டுவதாக மாறத்துவங்கியிருந்தது. இருபது முப்பது பாவடைகள். அதன் மீது பத்து சேலைகள், அதன் மீது பழைய தாவணி அதன் மீது கிழிந்த துண்டு என்று அவள் உடலை போர்த்தியிருந்த ஆடைகளை கண்டு பெண்களே எரிச்சல் கொண்டனர்.

ஒருவகையில் அவள் ஊரிலிருந்த மற்ற பெண்களுக்கு தங்கள் உடல் குறித்த கவனத்தை தொடர்ந்து உண்டாக்கி கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை ஒருமுறை கவனம் கொள்வதும் உடைகளை கவனமாக இழுத்து விட்டுக் கொள்வதும் நடந்தேறியது.
விசித்ரியின் இந்த பழக்கம் அறிந்தவர்கள் அவள் எவர் வீட்டிலிருந்து எந்த உடையை எடுத்துக் கொண்டு போன போனதும் அவளிடம் கோவம் கொள்வதேயில்லை. விசித்ரியின் ஆவேசம் பல வருசமாகியும் தணியவேயில்லை.

கோடையின் முற்றிய பகலில் அவள் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. நத்தைகள் சுவரில் ஒட்டிக் கொண்டிருப்பதை போன்று வீட்டு சுவரில் சாய்ந்து ஒடுங்கிக் கொண்டிருப்பாள். சித்ரலேகாவின் மற்ற சகோதரிகள்  திருமணமாகி போன போதும் கூட அவள் வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடந்தாள்.

சில வேளைகளில் அவள் மீது ஆதங்கம் கொண்ட அம்மா அருகில் சென்று உட்கார்ந்து சிறுமிகளை விசாரிப்பது போல தலையை தடவி விட்டுக் கொண்டு அன்னைக்கு என்னடி நடந்துச்சி என்று கேட்பாள். விசித்ரியிடமிருந்து பதில் வராது. அவள் கண்களை மூடிக் கொண்டுவிடுவாள். அல்லது நகத்தை கடிக்க துவங்கி ரத்தம் வரும்வரை கடித்துக் கொண்டேயிருப்பாள். அம்மாவிற்கு அவளை தான் சித்ரவதை செய்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி வந்துவிடும். அப்படியே விலகி போய்விடுவாள்.

விசித்ரியை என்ன செய்வது என்று அவர்கள் குடும்பத்திற்கு இந்த நாள் வரை தெரியவேயில்லை.  வீட்டு பெண்கள் திருமணமாகி சென்று பிள்ளைகள் பெற்று அந்த பிள்ளைகளும் கூட இன்று திருணம வயதை அடைந்து விட்டார்கள். ஆனால் விசித்ரியின் மனதில் நேற்று மதியம் நடந்தது போலவே அந்த சம்பவம் அப்படியே உறைந்து போயிருந்தது. யார் அவள் மனதில் உள்ள அந்த சித்திரத்தை அழிப்பது. எந்த காட்சி அவள் மனதில் அப்படியொரு கறையை உருவாக்கியது என்று உலகம் அறிந்து கொள்ள முடியவேயில்லை.

என்ன நடந்திருக்க கூடும் என்பது குறித்து சில சாத்தியங்களை விசித்ரியின் அம்மா அறிந்திருந்தாள். அதில் அவள் நம்பிய ஒன்று. புளியந்தோப்பில் மதிய நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் சீட்டாடும் நபர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதுவும் சந்தை நடக்கும் நாட்களில் தான் அதிகம் மனிதர்களை காண முடியும். மற்ற நாட்களில் புளியந்தோப்பினுள் நடமாட்டமேயிருக்காது.

அங்கே ஒரு மனிதன் எப்போதுமே உதிர்ந்த புளியம்பழங்களை பொறுக்குவதற்காக  அலைந்து கொண்டிருப்பான். அவனுக்கு வயது முப்பது கடந்திருக்கும். சீனிக்கிழங்கு போல வளைந்து பருத்த முகம். குள்ளமாக இருப்பான். எப்போதுமே அழுக்கடைந்து போன வேஷ்டியொன்றை கட்டியிருப்பான்.மேல் சட்டை அணிந்திருப்பது கிடையாது. அவன் மார்பில் இருந்த நரைத்த ரோமங்கள் காய்ந்த கோரைகளை நினைவுபடுத்தியபடி இருந்தன. அவன் புளியந்தோப்பினுள் உள்ள கிணற்றடியில் படுத்துகிடப்பான். அல்லது புளியம்பழங்களை பொறுக்கி கொண்டிருப்பான்.

அவனுக்கு என்று குடும்பமோ, மனைவியோ இல்லை.  அருகாமையில் உள்ள ஊரை சேர்ந்தவன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவன் புளியந்தோப்பில் பெண்கள் யாராவது தனியே நடந்து செல்வது தெரிந்தால் நாய் பின்தொடர்வது போல பின்னாடியே வருவான். சிலநேரங்களில் நாயை போலவே புட்டத்தை ஆட்டிக் காட்டுவான். பெண்களில் எவராவது அப்படி செய்வதை கண்டு சிரித்துவிட்டால் உடனே தன் வேஷ்டியை விலக்கி ஆண்குறியை கையில் எடுத்து காட்டுவான். அதை கண்டு பெண்கள் பயந்து ஒடிவிடுவார்கள். அது அவனை மிகுந்த சிரிப்பிற்கு உள்ளாக்கும்.

அப்படியொரு முறை சித்ரலேகாவின் அம்மாவின் முன்னால் அவன் தன் ஆண்குறியை காட்டியிருக்கிறான். அவள் தன் இடுப்பில் சொருகி வைக்கபட்டிருந்த கதிர் அருவாளால் அவனை கொத்தப்போவதாக சொன்னாள். அவனோ இடுப்பை ஆட்டியபடியே தன் வேஷ்டியை உறிந்து எறிந்துவிட்டு அவள் முன்னால் ஆடினான். அவள் புளியதோப்பை விட்டு ஒடிவரும்வரை அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். வீட்டிற்கு வந்த போதும் அந்த காட்சி மனதிலிருந்து விலகி போகவேயில்லை. அன்று இரவெல்லாம் நரகலை மிதித்துவிட்டது போன்ற அசூயை அவளுக்கு தந்தபடியே இருந்தது.

அவன் சிறுமிகளிடமும் இப்படி நடந்து கொள்வான் என்பதை கேள்விபட்டிருக்கிறாள். ஒருவேளை அவன் தன்மகளிடம் ஆண்குறி காட்டி பயமுறுத்தியிருக்க கூடும். அவள் ஆத்திரமாகி கல்லால் அடித்துவிடவே அவள் பாவடையை உறித்து எறிந்துவிட்டு அவளை வன்புணர்ச்சி கொள்ள முயன்றிருக்க கூடும் என்று தோன்றியது. அதை பற்றி எப்படி சித்ரலேகாவிடம் கேட்பது என்று அம்மாவிற்கு புரியவில்லை.

இதற்காக ஒரேயொரு முறை சித்ரலேகாவை அழைத்து கொண்டு புளியந்தோப்பின் உள்ளேநடந்து சென்றாள். அப்போதும் அந்த மனிதன் புளியங்காய்களை பொறுக்கி கொண்டு அலைந்தான். அவர்களை பார்த்தவுடன் உடலை குறுக்கியபடிய கும்பிடுறேன் தாயி என்று சொன்னான். அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். விசித்ரி அவனை நேர் கொண்டு பார்த்த போதும் அவள் முகத்தில் மாற்றமேயில்லை. அம்மா அவனை நோக்கி காறி துப்பிவிட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு நடந்து போகத் துவங்கினாள்.

அவர்கள் தொலை தூரம் போன பிறகு அம்மா திரும்பி பார்த்தாள். அவன் வேஷ்டியை அவிழ்த்து கையில் பிடித்தபடியே நிர்வாணமான உடலை அவர்களை பார்த்து ஆட்டிக் கொண்டிருந்தான். அம்மா கிழே குனிந்து மண்ணை வாறி தூற்றினாள். அந்த மனிதன் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனாக இல்லாமலும் இருக்ககூடும் என்று சித்ரலேகாவின் அம்மாவிற்கு ஏனோ தோன்றியது.

விசித்ரி  ஒரு இரவில் தன் உடலோடு சேர்த்து துணியை ஊசி நூலால் தைத்து கொள்ள முயற்சித்தாள். அதனால் ரத்தம் கசிந்து ஒடத்துவங்கியது. ஆனால் அவள் கத்தவேயில்லை. தற்செயலாக அவளை பார்த்த இளையவள்  பயந்து கத்தியபடியே அய்யாவை அழைத்து வந்த போது அவர் செவுளோடு அவளை அறைந்து கையிலிருந்த ஊசியை பிடுங்கினார். அவளோ வெறிநாய் போல ஊளையிட்டபடியே ஊசியை அவரிடமிருந்து மீட்க பார்த்தாள்.

அய்யாவும் ஆத்திரமாகி அவளை காலால் மாறிமாறி மிதித்தார். அவளது கையை முறுக்கிக் கொண்டு அடித்தார். அதில் அவளது வலது கை பிசிகியிருக்க கூடும். நாளைந்து நாட்களுக்கு வீக்கமாக இருந்தது. யாரும் அதை தொட அவள் அனுமதிக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.

அப்போது அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த கொண்டிச்சி சொன்னாள். ஊரில் புதிதாக வந்திருக்க தபால்காரனுக்கு பெண்மோகம் அதிகம் என்றும் கடிதம் கொடுப்பது போல அவன் பெண்களின் மார்பை பிடித்துவிடுகிறான் என்றும் ஒரு முறை அவள் தனியே இருந்த போது அவளிடம் தன்னோடு படுக்கமுடியுமா என வாய்விட்டு கேட்டுவிட்டதாகவும் செங்கல் சூளையில் வேலை செய்யும் செவஸ்தியாளை அவன் கீரைபாத்திகளில் தள்ளி உறவு கொண்டுவிட்டான் என்றும் சொன்னாள்.

அதை அம்மாவால் நம்ப முடியவில்லை.  அவள் தபால்காரனை கண்டிருக்கிறாள். அவனுக்கு ஐம்பது வயதை நெருங்கியிருக்கும். மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் சைக்கிளில் பள்ளிக்கு போய்வருவதை அவளே கண்டிருக்கிறாள்
எதற்காக அந்த மனிதன் பெண்களுக்கு அலைய வேண்டும் என்று கொண்டிச்சியிடம் கேட்ட போது அவன் ஆசை அடங்காதவன். சொன்னால் நம்பமாட்டீர்கள் அவன் மனைவியே இதை எல்லாம் தன்னிடம்  சொல்லி புலம்பினாள் என்றும் அவன் ஒருவனே பின்மதிய நேரங்களில் தனியே அலைந்து கொண்டிருப்பவன் என்றும் சொன்னாள்.

ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்க கூடும். சித்ரலேகாவின் அம்மா வயல்வேலை செய்து கொண்டிருந்த பகல்பொழுதில் அந்த மனிதன் புழுதி பறந்த சாலையில் தனியே போய்க் கொண்டிருப்பதை கண்டிருக்கிறாள். அது போலவே ஒரு நாள் அவள் மூத்திர சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்த போது அந்த மனிதன் அதற்குள் தனியே நின்று கொண்டிருந்தான். அங்கே என்ன செய்கிறான் என்று புரியாமல் அவள் அவசரமாக கடந்து போனாள். ஒருவேளை அவன் சித்ரலேகாவை ஏமாற்றி இது போன்ற மூத்திரசந்திற்கு அழைத்து போய் புணர்ச்சிக்கு மேற்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இந்த சந்தேகம் ஒன்றால் மட்டும் எப்படி அந்த மனிதனிடம் போய் கேட்க முடியும்

சித்ரலேகாவின் அண்ணன் ஊரில் இருந்த ஜவுளிசெட்டி ஒருவன் மீது தனக்கு அதிக சந்தேகம் இருப்பதாக சொன்னான். அந்த ஜவுளி செட்டியின் வீடு மிகப்பெரியது. அதில் அவர்கள் அண்ணன் தம்பி இரண்டு பேர் மட்டுமே வசித்தார்கள். இருவரும் ரங்கூனிலிருந்து திரும்பியவர்கள். அவர்களது மனைவியும் குழந்தையும் பர்மாவில் விட்டுவந்துவிட்டதாக சொல்லிக் கொள்வார்கள். அவர்களே அடிக்கடி பர்மாவிற்கு போய்வருவதாக கிளம்பி சில மாதங்கள் ஆள் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டின் எதிரில் இருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் ஜவுளி செட்டிக்கும் தொடர்பு இருக்கிறது, அந்தப் பெண்களில் பலரும் புதிது புதிதாக ரங்கூன் சேலைகள் கட்டிக் கொள்வது இதனால் தான் என்றும் அந்த செட்டிகள் அடிக்கடி மதுரைக்கு சென்றுவருவது வேசைகளுடன் படுத்து உறங்கி கழிப்பதற்காக மட்டுமே என்று சொன்னான் சித்ரலேகாவின் அண்ணன்.
ஒருவேளை அப்படி செட்டிகளில் ஒருவன் நீலமும் மஞ்சளும் கலந்த பட்டு துணி ஒன்றை தருவதாக சொல்லி சித்ரலேகாவை வீட்டில் தனித்து அழைத்து கட்டி தழுவியிருக்க கூடும். அவள் உடைகளை உருவி எடுத்திருக்க வேண்டும். அதில் பயந்து போய் தான் சித்ரலேகா ஒடிவந்திருப்பாள்.

அவள் ஒடிவந்த திசையில் இருந்த ஒரே வீடு ஜவுளி செட்டியின் வீடு மட்டுமே. அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தால் எதற்காக பகலும் இரவும் அந்த வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டேயிருக்கின்றன என்று கேட்டான் சித்ரலேகாவின் அண்ணன்.


இந்த வாதங்கள் சந்தேகங்கள் எதையும் விசித்ரி கண்டுகொள்ளவேயில்லை. அவள் மண்ணில் புதைத்து வைக்கபட்ட துணி பொம்மை போல முகம் வெதும்பி போய் கண்கள் ஒடுங்க துவங்கியிருந்தாள். அவள் உதட்டில் ஏதோ சில சொற்கள் தட்டி நின்று கொண்டிருந்தன. எதையோ நினைத்து பெருமூச்சு விடுவதும் பின்பு அவளாக கைகளை கூம்பி சாமி கும்பிட்டுக் கொள்வதையும் வீட்டார் கண்டிருக்கிறார்கள்.

ஒரு நாளில் விசித்ரி உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அவளிடம் வம்பு செய்வதற்காக அவள் கால்பாதங்களில் கரித்துண்டை வைத்து தேய்த்திருக்கிறார்கள். கூச்சத்தில் அவள் நெளிந்த போது அவள்  கால்கள் தானே உதறிக் கொண்டன. அவள் எழுந்து தன்பாதங்களை கண்டபோது அதில் கரியால் ஏதோ சித்திரம் போல வரையப்பட்டிருப்பதை கண்டு அலறி கத்தினாள். வீட்டிற்குள் ஒடிப்போய் காலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். அப்படியும் அவள் மனது நிலை கொள்ளவில்லை. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். இரவு வரை கால்பாதங்களை துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

அன்றிரவு வீட்டில் இருந்த சகோதரிகளின் பழைய சேலைகளை கிழித்து தன் காலில் சுற்றிக் கொள்ள துவங்கினாள். அப்படி சுற்றி சுற்றி காலின் மீது பெரிய பொதி போல சேலைகள் இறுகியிருந்தன. அத்தோடு அவள் சேலையை சணலாலும் இறுக்கி கட்டிக் கொண்டாள். காலில் சேலைகள் கட்டியதிலிருந்து அவளால் எழுந்து நடப்பதற்கு சிரமமாக போயிருந்தது. ஆனால் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. மண்டியிட்டபடியே நடந்து போக ஆரம்பித்தாள். அது அவள் தோற்றத்தில் இன்னமும் பயத்தை உருவாக்கியது.

விசித்ரியை இப்படியாக்கியது கனகியாக கூட இருக்க கூடும் என்று சொன்னார் பெட்டிக்கடை வைத்திருக்கும் மகாலிங்கம். அதை சித்ரலேகாவின் அண்ணன்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். கனகியை பற்றி அப்படியான சில கதைகள் ஊரிலிருந்தன. கனகியின் கணவன் ராணுவத்தில் இருந்தான். அவன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் திரும்பிவருவான். மற்ற காலங்களில் கனிகி தனித்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து கடந்திருக்க கூடும். எப்போதும் கூந்தல் நிறைய பூவும் வெற்றிலை சாறுபடிந்த சிவப்பு உதடுகளுமாக இருப்பாள்.

தன்னை அலங்கரித்து கொள்வதில் அவளுக்கு நிகரான ஊரில் எவருமில்லை. முல்லைமொட்டுகளை அவளுக்காக மட்டுமே கொண்டு வந்து தரும் பூக்காரன் ஒருவன் இருந்தான். அவளது உடைகளும் கூட மினுக்கானவை. அவளோடு எப்போதுமே இரண்டு இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்களுடன் வாசல்படிகளில் உட்கார்ந்து அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்போது அவர்கள் சிரிப்பு சப்தம் தெருவெங்கும் கேட்கும்.

அவளுக்கு பகல் உறக்கம் கொள்ளும் பழக்கம் இருந்தது. தனது தோழிகளான இரண்டு இளம்பெண்களுடன் அவள் வீட்டின் கதவை சாத்திக் கொள்வதை சித்ரலேகாவின் அண்ணன் கண்டிருக்கிறான். மாலையில் அந்த வீட்டு கதவு மறுபடி திறக்கும் போது காலையில் பார்த்ததை விடவும் அலங்காரியாக கனகி வாசல்படியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். பின்பு இரவு வரை அந்த பெண்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கனகியின் மீது உள்ளுர் ஆண்கள் அத்தனை பேரும் மோகம் இருந்தது. ஆனால் ஒருவன் கூட அதை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. கனகி முன்பொரு நாள் சித்ரலேகாவோடு பேசிக் கொண்டிருந்ததை அவள் அண்ணன் கண்டிருக்கிறான். ஒருவேளை அவள் தன் தங்கையை மோகித்திருக்க கூடும் என்று அவன் மனது சொல்லியது. ஆனால் கனகியோடு எந்த ஆணுக்கும் தொடர்பில்லை என்பதை ஊரே  அறிந்திருந்தது.

அவள் கணவன் வரும் நாட்களில் அவர்கள் ஒன்றாக பைக்கில் சுற்றியலைவார்கள். அப்போது அவள் கணவன் கனகி பற்றிய கேலியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வான்.

இப்படியாக சித்ரலேகாவை பயமுறுத்தியது நகருக்கு படிக்க சென்று வரும் ஸ்டீபன் சாரின் மகன் மைக்கேல் என்றும், நாவிதர்களில் ஒருவனான கருப்பையா கூட தனியே பெண்கள் கிடைத்தால் நோங்க கூடியவன் என்றும், பள்ளியின் கணித ஆசிரியராக உள்ள வையாளி கூட பெண்கள் விஷயத்தில் துணிந்தவர் எனவும், தண்ணீர் வண்டியோட்டும் ராயன், ரயில்வே தண்டவாள வேலை செய்ய போன சங்கு, நில அளவையாளர் கடிகைமுத்து. நூற்பு ஆலைக்கு வேலை செல்லும் மச்சேந்திரனோ அவனது தம்பியோ கூட காரணமாக இருக்க கூடும் என்றார்கள்.

இந்த சந்தேகம் ஊரில் இருந்த ஆண்கள் பெண்கள் மீது பட்டு தெறித்த போதெல்லாம் அது உடனே மௌனத்தில் புதையுண்டுவிடுவதாக இருந்தது. யாரும் இதை தொடர்ந்து சென்று உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.

விசித்ரியின் முப்பத்திரெண்டாவது வயதில் அவளை ஆறு நாட்கள் உப்பத்தூர் அருகில் உள்ள தர்க்கா ஒன்றில் சிகிட்சைக்காக கொண்டு போய்விட்டுவந்தார்கள். பிராத்தனையும் இரும்பு கம்பியால் போட்ட சூடும், குடம் குடமாக தலையில் தண்ணீர் கொட்டிய போதும் விசித்ரியிடம் ஒரு மாற்றமும் உருவாகவில்லை. அவளை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஊர் வந்த சில நாட்களுக்கு அவள் பசி தாளாதவள் போல சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். அதன்பிறகு அவள் இயல்பாக மாறுவதற்கு ஒரு மாதகாலமானது. அவள் எப்போது போலவே முப்பது ஆடைகள் அணிந்தவளாக இருந்தாள்.

விசித்ரியின் வீடு அவள் இளமையிலிருந்தது போன்ற வளமையை இழந்து போகவே திசைக்கொரு சகோரர்களாக பிரித்து போக துவங்கினார்கள். வீட்டில் அவளும் வயதான அம்மையும் மட்டுமேயிருந்தார்கள். பண்டிக்கைக்கு  ஊருக்கு சகோதரிகள் வருவதும் கூட நின்று போய் நாலு வருசமாகி விட்டது. அவர்கள் வீடு இருந்த தெருவில் இருந்த மனிதர்கள் கூட இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். வாகை மரங்கள் வெட்டி சாய்க்கபட்டு அங்கே தண்ணீர் தொட்டி வைக்கபட்டுவிட்டது. தெருவில் இருந்த வயதானவர்கள் இறந்து அதே ஊரின் மண்ணில் புதையுண்டு அந்த இடங்களில் தும்பை முளைத்தும் விட்டது.

விசித்ரிக்கு போக்கிடம் இல்லை. அவள் எப்போதும் போலவே தன் உடலை சுற்றி முப்பது நாற்பது சேலைகளை சுற்றிக் கொண்டு கால் பெருவிரல் வரை துணியால் கட்டி முடிச்சிட்டு வீட்டிற்குள்ளாகவே இருக்கிறாள். சமையல் அறையின் புகைக்கூண்டை ஒட்டியே வாழ்ந்த பல்லி கருத்து பருத்து போய்  கண்கள் மட்டுமே பிதுங்க இருப்பது போன்று அவள் தோற்றம் மாறிப்போயிருந்தது. ஒருவேளை அவள் இறந்து போன அன்று கூட அப்படியே தான் அவளை புதைக்க கூடும் என்று அம்மா புலம்பிக் கொண்டிருந்தாள்

விசித்ரியின் பனிரெண்டாவது வயதின் கோடை பகலில் என்ன தான் நடந்தது. யார் அவள் உடலில் இருந்த உடைகளை உருவியது. எல்லோரும் உண்மையின் ஏதோவொரு பகுதியை அறிந்திருக்கிறார்கள். உண்மையை முழுமையாக அறிந்த விசித்ரி அதை விழுங்கி புதைத்துவிட்டாள்.


ஆனால் முற்றிய வெயில் காமம் உடையது என்பதையோ, அது  ஒரு மனிதனின் அடக்கப்பட்ட இச்சையை பீறிடச் செய்யக்கூடியது என்பதையும் பற்றி உள்ளுர்வாசிகள் அறிந்தே வைத்திருந்தார்கள். அல்லது வெயிலை காரணம்  சொல்லி தன் மனதின் விகாரத்தை வெளியே நடமாட அனுமதித்திருக்கிறார்கள். அதை வெயில் அறிந்திருக்கிறது. இல்லை இரண்டுமே புனைவாகவோ, இரண்டுமே அறிந்து வெளிப்படுத்தபடாத ரகசியமாகவோ இருக்க கூடும்.

எதுவாயினும் காமம் தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை. அது ஒரு புதைசுழல். கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள். அது தான் பயமாக இருக்கிறது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 12:03:07 PM
காட்சிக் கூண்டு

சிறுகதை

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள்  நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது.

ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். ஆறடிக்கு பத்தடி அளவில் உருவாக்கபட்ட அந்த இரும்பு கூண்டு சர்க்கஸில் சிங்கம்  அடைத்து வைக்கபட்ட கூண்டினை விடவும் சற்றே பெரியதாக இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் அந்த கூண்டில் விரும்புகின்ற யார் வேண்டுமானாரும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்ளவோ, நின்று கொண்டு இருக்கலாம். கூண்டினில் ஆட்கள் சென்ற மறுநிமிசம் தானாக கதவு மூடிக் கொள்ளும்படியாக மின்சாரத்தால் உருவாக்கபட்டிருந்தது. சரியாக  ஐந்துநிமிசங்கள் கூண்டு மூடியிருக்கும். பிறகு கதவு தானே திறந்து கொண்டுவிடும்.

கூண்டில் ஆட்கள் ஏறி மூடிக் கொண்ட மறுநிமிசம் அதிலிருந்து மியமிங்மியமிங் என்று விசித்திரமானதொரு சப்தமிடும். அது பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்க கூடியதாகயிருந்தது. மற்ற நேரங்களில் கூண்டில் எந்த சலனமும் இருக்காது.

கூண்டினை பூங்காவில் பொருத்தபட்ட மூன்று தினங்களுக்கு அதில் எவரும் நுழையவேயில்லை. இவ்வளவிற்கும் கூண்டின் அருகாமையில் பெரியதாக விளம்பர பலகை வைக்கபட்டிருந்தது. முதன்முறையாக அந்த கூண்டில் நடைபயிற்சிக்காக தினமும் பூங்காவிற்கு வரும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருக்கு கூண்டை பார்க்கும் போது அவரது அலுவலக அறை போன்று நினைவிற்கு வந்திருக்க கூடும்.

அவர் தரையில் இருந்து சற்று உயரமாக வைக்கபட்ட கூண்டிற்குள் போவதற்காக  இரண்டு படிகள்  ஏறி கூண்டின் கதவை திறந்து உள்ளே போன போது கதவு தானாக மூடிக் கொண்டது. மறுநிமிசம் மியமிங்மியமிங் என்ற சப்தம் உரத்து கேட்க துவங்கியது. நடை பயிற்சியில் இருந்தவர்கள், பூங்காவில் விளையாண்ட சிறுவர்களுக்கு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வங்கி அதிகாரி கூண்டிற்குள் இருந்தபடியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஒரு நாளும் அந்த பூங்காவை கண்டதேயில்லை.

கூண்டிற்குள் இருப்பது ரொம்பவும் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் கூண்டின் வலுவான இரும்புகம்பிகளை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்த சிலர் நடைபயிற்சியின் ஊடாகவே அவரை பார்த்து சிரித்தபடியே போனார்கள். அவருக்கும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும்  போலிருந்தது. கம்பியில் முகம்பதித்து கொண்டு அவர்  வெளியே பார்த்து சிரித்தார். சிறார்கள் கூண்டின் அருகில் வந்து நின்றபடியே அவரை பார்த்து பரிகாசம்  செய்தார்கள்.

வங்கி அதிகாரி கூண்டிற்குள்ளாகவே அங்குமிங்கும் நடக்க துவங்கினார்.  அப்போது அவரது செல்போன் அடிக்க துவங்கியது. போனில் பேசியபடியே அவர் நடந்து கொண்டிருப்பதை கண்ட ஒரு இளம் பெண் வியப்போடு அவருக்கு கையசைத்தபடியே போனாள்.

தான் கூண்டிற்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று தனக்கு தெரியாதே என்பதால் அவருக்கு திடீர் யோசனை உருவானது. அந்த பெண்ணை கைதட்டி அழைத்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தரும்படியாக செல்போனை நீட்டினார். அந்தப் பெண் கூண்டிற்குள் அவர் நிற்பதை புகைப்படம் எடுத்து தந்தாள். அதை பார்க்கும் போது அவருக்கே சிரிப்பாக வந்தது. இரண்டு மூன்று நிமிசங்களுக்கு பிறகு அவரது கால்கள் வலிப்பது போல இருந்தன.

கூண்டிற்குள்ளாக உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்த்தார்.இருக்கைகள் எதுவும் இல்லை. எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட தரையில் உட்கார்ந்ததேயில்லை.  சரி உட்கார்ந்து பார்க்கலாமே  என்று கூண்டின் தரையில் அவர் உட்கார முயன்ற போது கால் முட்டிகளில் வலி உருவானது. மண்டியிட்டு காலை மடக்கி ஒருவழியாக உட்கார்ந்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது கூண்டின் இசை நின்று கதவு தானே திறந்து கொண்டது. அவ்வளவு தானா என்றபடியே அவர் கூண்டினை விட்டு வெளியே இறங்கி நடக்க துவங்கினார். அன்றைக்கு வேறு எவரும் கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுநாள் பூங்காவிற்கு வழக்கமாக வரும் காதலர்கள் இருவர் கூண்டிற்குள் தங்களை அடைத்து கொண்டார்கள். இருவருக்கும் அது வேடிக்கையாக இருந்தது.  அவர்களை தொடர்ந்து வணிகபிரதிநிதி ஒருவன், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் இரண்டு பேர் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கூண்டிற்குள் அடைத்து கொண்டார்கள்.

ஞாயிற்றுகிழமை காலையில் முதன்முறையாக ஒரு குடும்பம் அந்த கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொண்டது. அது மிக வேடிக்கையானதாக இருந்தது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு மகள்கள், ஒரு பையன் மற்றும்  மகளின் கணவன் மற்றும் கைக்குழந்தை யாவரும் ஒரே நேரத்தில் உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழாவது குறுக்குதெருவில் உள்ள அரசு குடியிருப்பில் இருப்பவர்கள் என்று பூங்காவின் காவலர் சொன்னார்.

நாற்பது வயதை கடந்த அந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினை தொட்டு தொட்டு பார்த்தபடியே நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. வெளிச்சம் கூட எப்படி சீராக விழுகிறது பாருங்கள் என்று கணவனிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவரோ வீட்டிலிருந்து ஏதாவது சமைத்து கொண்டுவந்திருந்தால் அதற்குள் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று ஆதங்கபட்டுக் கொண்டிருந்தாள்.

 கூண்டிற்குள் அடைக்கபட்ட இரண்டு இளம்பெண்களும் கம்பிகளை பிடித்தபடியே வெளியே நடந்து செல்லும் இளைஞர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கூண்டில் ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருந்தால் முகம் பார்க்க உதவியாக இருக்கும் என்று சலித்து கொண்டாள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்த பெண்களை பார்த்து சிரித்தார்கள்.  சிறுவனோ கூண்டின் இசையோடு சேர்ந்து மியமிங்மியமிங் என்று கத்திக் கொண்டிருந்தான். ஆறுநிமிசங்களுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தபோது குடும்பத்துடன் ஒருவரை கைகளை தட்டியபடி ஆரவாரமாக கத்தினார்கள்.

அன்றைக்கு  கூண்டிற்குள் தன்னை அடைத்து கொள்வதற்கு இருநூறு பேர்களுக்கும் மேலாக முன்வந்தார்கள். அது பூங்காவில் பெரிய வேடிக்கையாக இருந்தது. யார் எப்போது கூண்டிற்குள் போவார்கள்.  கதவு மூடப்பட்டவுடன் கூண்டிற்குள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்காகவே பூங்காவிற்கு நிறைய கூட்டம் வரத்துவங்கியது.

கூண்டில் தங்களை தானே அடைத்துக் கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகமானதை கண்டு அதை ஒழுங்குபடுத்தவதற்காக இரண்டு காவலர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அவர்கள் கூண்டிற்குள் போவதற்காக காத்திருப்பவர்களை வரிசையில் நிற்க செய்தார்கள். விடுமுறை நாட்களில் அந்த வரிசை பூங்காவை விட்டு வெளியே சாலை வரை நீண்டு போவதாக மாறியது.

முதன்முறையாக ஒரு வயதானவர் தன் வீட்டிலிருந்து மடக்கு நாற்காலி ஒன்றை கொண்டு வந்து கூண்டிற்குள் போட்டு உட்கார்ந்து கொண்டு நாளிதழ் படித்தார். தன் உடலை செம்மை படுத்துவதில் ஆர்வம் கொண்ட நடுத்தரவயது ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக கூண்டிற்குள்ளாகவே யோகா செய்ய ஆரம்பித்தார்.

புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் மதிய உணவிற்கு பிறகு கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு சீட்டாடினார்கள். அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் தன்னுடைய விசுவாசிகள், நண்பர்கள்  என கூண்டில் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படும் அளவு நாற்பத்தி ஆறு பேர்களுடன் கூண்டினுள் தன்னை பூட்டிக் கொண்டார். அவரிடம் கூண்டிற்குள் குடிநீர் இணைப்பு குழாய் ஒன்று பொருத்தபட வேண்டும் என்பதற்கான புகார் மனு அளிக்கபட்டது. அடர்ந்த தாடி கொண்ட ஒரு இருபது வயதை கடந்த இளைஞன் கூண்டிற்குள் சென்றதும் சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்க துவங்கினான்.

வரலாற்று பேராசிரியர் ஒருவர் அது கடந்த கால நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்வதாகவும், குற்றவாளிக்கூண்டுகள் அமைப்பதை பற்றி மதுராந்தகத்தில் ஒரு சோழர்கால கல்வெட்டு இருப்பதாகவும் உடன் வந்த ஆய்வுமாணவர்களிடம் தெரிவித்தார்.

பூங்கா இரவு பதினோறு மணி இதற்காகவே திறந்து வைக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதியில்  இருந்து கூண்டில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக மக்கள் பயணம் செய்து வந்து பூங்கா திறக்கும் முன்பாகவே காத்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நூறடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தை நடத்துகின்றவர் அந்த கூண்டினை பார்வையிட்டு அதை உருவாக்குவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று விசாரித்து கொண்டிருந்தார். பூங்காவில் காவலர் தனக்கு தெரியவில்லை என்றபோது அந்த கூண்டின் அருகாமையில் தான் ஒரு துரித உணவகபிரிவை துவங்குவதற்கு யோசனையிருக்கிறது என்று சொன்னார்.  பூங்கா காவலனும் அது மிக அவசியமாக ஒன்று வரிசையில் நிற்பவர்கள் சில நேரம் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னான்.

கூண்டின் பாதுகாப்பிற்காக வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை ஒருமுறை கூண்டில் அடைத்துக் கொண்டார். அவருக்கு கூண்டு அவ்வளவு பெரியதாக இருப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. நடக்க இடமில்லாமல் தலைமுட்டும்படியாக அடைக்கபடும் போது தான் கூண்டின் முக்கியத்துவம் தெரியும் என்று அலுத்துக் கொண்டார்.

பல நேரங்களில் மக்கள் வரிசையில் நின்றும் கூண்டுகாலியாக கிடைக்காமல் போவதால்  கூண்டிற்குள் அடைக்கபடும் நேரத்தினை மூன்று நிமிசமாக மாற்றி உத்திரவிட்டது அரசு. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபயிற்சியில் வரும் சில பணம்படைத்தவர்கள் தனியாக தங்களது வீடுகளில் அது போன்ற கூண்டுகளை தாங்களே வடிவமைப்பு செய்து உருவாக்கி கொண்டார்கள்.

காதலர்கள், கஞ்சாபுகைப்பவர்கள், குடுபத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்று அந்த கூண்டு ஒய்வில்லாமல் கத்திக் கொண்டேயிருந்தது.  அந்த கூண்டினை பற்றிய சிறப்பு கட்டுரையை நாளிதழ்கள் வெளியிட்டன .இரண்டு நாட்களின் முன்பாக அந்த கூண்டிற்குள் தொலைகாட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏன்  தங்களை கூண்டில் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள்.

இப்படியாக காட்சிக்கூண்டு அதிமுக்கியத்துவம் அடைய துவங்கியதை கண்டு மாநகராட்சி நகரின் அத்தனை பூங்காங்களிலும் இது போன்ற கூண்டுகளை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை கொரிய அரசின் ஒத்துழைப்போடு உருவாக்க திட்டமிட்டது.

ஆறுமாதங்களில் நகரில் புதிது புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கபட்டன. இந்த கூண்டுகளில் வெறுமனே ஒலிபரப்பாகும் இசைக்கு பதிலாக தங்களது விளம்பரங்களை ஒலிபரப்பலாமே என்று பன்னாட்டு குளிர்பான நிறுவனம் முன்வந்த பிறகு கூண்டுகளின் நிறம் மற்றும் வடிவம் புத்துருவாக்கம் கொள்ள துவங்கின.

மாநகரில் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிக் கூண்டுகள் இருப்பதாகவும் அதன் விளம்பர வருமானம் பதினெட்டு  கோடி என்றும் மாநகராட்சி பெருமையாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கூண்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பதோடு யார் இந்த யோசனையை உருவாக்கியது என்பது குறித்தும் அறிந்து கொள்ளவேயில்லை.

மனவருத்தம் தீராத நாற்பது வயது மனிதன் ஒருவன் ஒரு இரவில் பூங்காவில் நுழைந்து அந்த கூண்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். அதன் காரணமாக நகரில் உள்ள அத்தனை கூண்டுகளுக்கும் உற்றுநோக்கும் கேமிரா பொருத்தபட்டது. அதை கண்காணிக்கும் அலுவலகம். அதற்கான பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், சோதனை அதிகாரிகள், என்று தனித்துறை உருவானது.
நாளடைவில் மக்களுக்கு சலித்து போக ஆரம்பித்தது. எவரும் கூண்டில் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மெல்ல புறக்கணிப்பின் கரங்கள் அதை பற்றிக் கொள்ள மழை வெயிலில் துருவேறிய கூண்டு கவனிப்பாரற்று போக துவங்கியது.

ஆனால் அரசின் கூண்டு பராமரிப்பு துறையோ தன் உயர் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆட்களுடன் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் அதை பற்றி சிறு குறை கூட தெரிவிக்கவில்லை என்பதே அதன் சிறப்பம்சம்
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 10:18:34 PM
அப்பா புகைக்கிறார்

சிறுகதை


தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது.

இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.


அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை கண்டிருக்கிறாள். அவர்கள் முன்னால் தானும் போய் சிகரெட் கேட்பது அவர்களை திகைப்படைய செய்யக்கூடும். ஆனால் அது அவளுடைய நோக்கமில்லை.

அவளுக்கு சிகரெட் ஒன்று வேண்டும். அது புகைப்பதற்காக அல்ல. அவள் ஒரு போதும் சிகரெட் புகைத்ததுமில்லை. ஆனால் அவளுக்கு  சிகரெட்டின் மணம் தெரியும், சிகரெட்டை  நசுங்காமல் எப்படி கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். சிகரெட் புகையின் வளையங்கள் காற்றில் எப்படி கரைந்து போகும் என்பதைக் கூட அறிந்திருக்கிறாள்.

பேக்கரியை ஒட்டியிருந்த பெட்டிக்கடையினுள் அவள் நுழைந்தவுடன் கடைக்காரன் அவள் கேட்காமலே ஷாம்பு வேண்டுமா என்று கேட்டான். மாலையில் யார் ஷாம்பு வாங்க போகிறார்கள் என்று அவளாக நினைத்துக் கொண்டு இல்லை என்றாள். உடனே அவன் விக்ஸ் மிட்டாய், ரீபில், சேப்டி பின் வேண்டுமா என்று கேட்டான்.

அந்தக்கடையில் பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் என்று இந்த நான்கு மட்டும் தான் இருக்கிறது என்று முடிவு செய்திருப்பான் போலும். அவள் கண்ணாடி பாட்டில்களுக்கு பின்னால் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டிகளை பார்த்து கொண்டேயிருந்தாள்

யாரோ ஒரு ஆள் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து பான்பராக் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீதி சில்லறையை அள்ளிக் கொண்டு போனான். சில நிமிச யோசனைக்கு பிறகு ருக்மணி ஐந்து ரூபாய் காசை அவன் முன்னால் நீட்டியபடியே ஒரு சிகரெட் கொடு என்றாள். கடைக்காரனின் முகம் மாறியதை அவள் காணமுடிந்தது. அவன் ஏளனம் செய்வது போன்ற குரலில் என்ன சிகரெட் என்று கேட்டான்.

கடைக்கு ஒரு நாளைக்கு நூறு ஆண்கள் சிகரெட் வாங்க வருகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட இந்த ஏளனத்தை அவன் காட்டியிருக்க மாட்டான் என்று ஆத்திரமாக வந்தது. அவள் பில்டர் சிகரெட் என்று சொன்னாள். கடைக்காரன் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதான் என்ன சிகரெட்டுனு கேட்கிறேன் என்றான்.

வில்ஸ்பில்டர் என்று சொன்னாள்.

கடைக்காரன் சிகரெட் பெட்டியை உருவி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தந்துவிட்டு சில்லறையை கண்ணாடி பாட்டில் மீது வைத்தான்.
அவள் சிகரெட்டை கையில் எடுத்து பார்த்த போது கடைக்காரன் அவனை முறைத்து பார்த்தபடியே இருப்பது தெரிந்தது. அவள் வேண்டும் என்றே இரண்டுவிரல்களுக்கும் நடுவில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டேயிருந்தாள். கடைக்காரன் அவளை கேலி செய்வது போன்று தீப்பெட்டியை எடுத்து முன்னால் நீட்டினான். அவள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறி நடந்தாள்.

கையில் ஒரு சிகரெட்டோடு நடந்து செல்லும் தன்னை பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு தெரிந்தேயிருந்தது. அதைப்பற்றிய கவலையின்றி அவள் சிகரெட்டை கையில் பிடித்தபடியே ரயில் வருவதற்காக காத்திருந்தாள். அவளை கடந்து செல்லும் முகங்கள் சிகரெட்டினை கண்டு அதிர்ந்து போயின. அவள் சிகரெட்டை முகர்ந்து பார்த்தாள். அதே வாசனை. இன்னும் அப்படியே இருந்தது.

கடைக்கு போய் சிகரெட் வாங்குவது ருக்மணியின் பதினாலாவது வயது வரை அன்றாட வேலையாக இருந்தது. அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா கடைகளிலும் அவள் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

ருக்மணியின் அப்பா சிகரெட் பிடிக்க கூடியவர். அப்பா சிகரெட் புகைக்கிறார் என்ற சொற்கள் அவளை பொறுத்தவரை மறக்கமுடியாத ஒரு வடு. அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தலையிலிருந்து கால் வரை குபுகுபுவென ரத்தம் உச்சம் கொள்வதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

எதற்காக தன்னை அப்பா கடைகடையாக போய் சிகரெட் வாங்க சொன்னார் என்று அவளுக்கு புரிந்ததேயில்லை. அந்த நாட்களில் தான் பெண்ணாக தானே இருந்தோம். பத்து வயதில் தவறாக இல்லாதசெயல் இருபது வயதில் ஏன் தவறாக கொள்ளப்படுகிறது. அப்போது தன்னை எவரும் ஒருமுறை கூட இப்படி வேடிக்கை பார்க்கவோ அல்லது கேலி செய்வதோ நடந்தது இல்லையே. அது ஏன் காரணம் சிகரெட் பிடிக்கின்றவர்கள் ஆண்கள். அது அவர்களுக்கு மட்டுமேயான ஆடுகளம்.

ருக்மணியின் அப்பா புள்ளியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒருவரோடு கூட சண்டையே போட்டதில்லை. மிக அமைதியான ஊழியர் என்று சொல்லிக் கொண்டார்கள். வீட்டிலிருந்தே சாப்பாட்டை கொண்டு போய்விடுவார். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கோவிலுக்கு போக கூடியவர். விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சென்று வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் இதுஎல்லாம் வெளி உலகிற்கு. வீட்டில் அப்பா எப்போதும் கத்திக் கொண்டும் அம்மாவோடு சண்டை போட்டபடியும் தானிருந்தார். அம்மாவின் மீதான கசப்புணர்வு அவருக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவளை அடிக்காத நாட்களே இல்லை.  பத்து தடவைக்கும் மேலாக அம்மாவிற்கு மண்டை உடைந்து தையல் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் மறந்துவிட்டு தான் அம்மா அவருக்காக ஒடியோடி சாப்பாடு செய்து தருகிறாள்.  சில வேளைகளில் அம்மாவும் தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி வசையிட்ட போதும் அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவேயில்லை.

அதற்காக தான் அப்பா புகைபிடிக்க துவங்கினாரோ என்னவோ, அம்மாவோடு சண்டையிட்ட பிறகு அப்பா ஆவேசத்துடன் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார். தொடர்ச்சியாக ஏழு எட்டு சிகரெட்களை கூட பிடித்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் போது அவர் முகம் இறுக்கமடைந்து போயிருக்கும். பதற்றமும் எரிச்சலுமாகவே அவர் புகைபிடிப்பார். ஏதோவொன்றை அடக்கி ஆள்வது போன்ற ஆவேசம் அவருக்கு இருக்கும்.

அப்பா பலவருசமாக புகைபிடித்துக் கொண்டுதானிருந்தார். ஆனால் ஒருநாளும் அவர் கடையில் போய் அவருக்காக சிகரெட் வாங்கிக் கொண்டதேயில்லை. காலையில் ஒரு முறையும் மாலையில் இருமுறையும் ருக்மணி தான் கடைக்கு போய் அவருக்காக சிகரெட் வாங்கி வருவாள். சிகரெட் வாங்க கொடுத்த காசில் மீதமிருந்த சில்லறைகளை கூட  அவர் கவனமாக கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். அவர் வழக்கமாக பிடிக்கும் சிகரெட் இல்லையென்றால் எங்கேயாவது போய் தேடி வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கும் அடிவிழும்.

ஒவ்வொரு நாளும் கடைக்கு போய் சிகரெட் வாங்கும் போது அதை ருக்மணி முகர்ந்து பார்ப்பாள். புகையிலையின் மணமது. சிகரெட் பெட்டிகள் இல்லாமல் போன நாட்களில் நாலைந்துசிகரெட்டுகளை ஒன்றாக கையில் பொத்தி கொண்டுவருவாள். அப்போது சிகரெட்டுகள் நழுவி விழந்துவிடுமோ என்று பயமாக இருக்கும்.  சிகரெட் உதிர்ந்து போயிருந்தால் அதற்கும் வசவு விழும்.

இரவில் எத்தனை மணி ஆனாலும் அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கிவர செய்வார் அப்பா. இருள் படிந்த தெருவில் பயமும் நடுக்கமாக கண்ணை மூடிக் கொண்டு ஒடிப்போய் பலமுறை வாங்கி வந்திருக்கிறாள்.
அப்பா சிகரெட் புகையை வீடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்று விரும்புகின்றவரை போல இந்தபக்கமும் அந்தப்பக்கமும் தலையை திருப்பி கொண்டு புகைவிடுவார்.

யார்மீதுள்ள கோபத்தையோ தணித்துக் கொள்வதற்கா புகைபிடிக்கிறார் என்பது போலவே அவரது முகபாவம் இருக்கும். சிகரெட்டின் சாம்பலை தட்டுவதற்காக அவர் கையில் கிடைக்கும் சில்வர் டம்ளர், தட்டு, பவுடர் டப்பாமூடி என எதையும் எடுத்துக் கொள்வார்.

ஒருமுறை அவர் அம்மாவின் உள்ளங்கையை நீட்ட சொல்லி அதில் கூட சிகரெட் சாம்பலை தட்டியிருக்கிறார். காரணம் இந்த வீட்டில் உள்ள எல்லாமும் தான் வாங்கி வந்தவை தானே இதில் எதில் சிகரெட்டின் சாம்பலை தட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்ற எண்ணமே.

அது போலவே சிகரெட்டை அணைத்து வீட்டிற்குள்ளாகவே தூக்கி எறிவார். அவர் புகைக்கும் இடத்தின் அருகில் தான் ஜன்னல் இருந்தது. ஆனால் ஒரு போதும் அவர் ஜன்னலுக்கு வெளியே சிகரெட்டை எறிந்ததேயில்லை.
அம்மா கவனமாக அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டை பொறுக்கி எடுத்து வெளியே போடுவாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வைத்துள்ள தீப்பெட்டியை அவர்கள் அடுப்பு மூட்ட ஒரு போதும் உபயோகிக்க கூடாது. அது அவர் உறங்கும்போது கூட தலையணியின் அருகாமையிலே இருக்கும்.

நள்ளிரவில் கூட எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு அப்பா புகைத்துக் கொண்டிருப்பார். அந்த வாடை நாசியில் ஏறி யாராவது செருமினால் கூட அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விடும். வேண்டும் என்றே முகத்தின் அருகாமையில் ஊதுவார்.

அவர்கள் மீது அவருக்கு உள்ள உரிமையை நிலை நிறுத்துவதற்கு இருந்த ஒரே அடையாளமாக சிகரெட் இருந்தது.

ஒருநாள் அம்மா அவர் சட்டை பையில் வைத்திருந்த சிகரெட்டை துணி துவைக்கும் போது கவனமாக  எடுத்து வைக்க மறந்து துவைத்துவிட்டாள் என்பதற்காக அவளது வலது கையில் சூடு போட்டார் அப்பா. அன்றிரவு அம்மா வீட்டிற்கு உறங்குவதற்கு வரவேயில்லை. அருகாமையில் உள்ள வரலட்சுமி வீட்டில் போய் படுத்துக் கொண்டாள்.

அவளை வீட்டிற்கு கூட்டி வரும்படியாக அப்பா ருக்மணியை அனுப்பி வைத்தார். ருக்மணிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் வரலட்சுமியின் வீட்டு வாசலில் போய் நின்றபடியே வாம்மா வீட்டுக்கு வாம்மா வீட்டுக்கு என்று கூப்பிட்டுக் கொண்டேஇருந்தாள். ஆனால் அம்மாவின் காதில் அந்தக்குரல் விழவேயில்லை. தானும் அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்பது போல அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சில நிமிசங்களில் வரலட்சுமி வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. அவர் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு நின்றிருந்தார். அவரது ஆபாசமான பேச்சை தாள முடியாமல் வரலட்சுமியக்கா அம்மாவை வீட்டிற்கு போகும்படியாக அனுப்பி வைத்தாள். ருக்மணி பயத்துடன் கூடவே நடந்து வந்தாள். அப்பா தன் கையில் இருந்த பத்து ரூபாயை தந்து சிகரெட் வாங்கிக் கொண்டுவரும்படியாக சொல்லிவிட்டு அம்மாவை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு சென்றார்

ருக்மணி இருட்டில் அப்பாவை திட்டியபடியே நடந்து போனாள்.

இருட்டிற்குள்ளாக ஒரு ரிக்ஷாகாரன் அமர்ந்து பீடி புகைத்து கொண்டிருந்தான். பகலும் இரவும் எண்ணிக்கையற்ற ஆண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அந்த புகை பெண்களை நோக்கியே திரும்புகிறது என்று நினைத்தபடியே அவள் நடந்தாள். கடைகள் யாவும் சாத்தியிருந்தன. எங்கே போய் சிகரெட் வாங்குவது என்று தெரியவில்லை.

அவள் மீன்மார்க்கெட் வரை நடந்து போய் பார்த்தாள். அநேகமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. சிகரெட் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா தன்னை அடிக்க கூடும் என்ற பயமாக இருந்தது. அவள் சினிமா தியேட்டர் முன்பாக சிகரெட் கடையிருக்க கூடும் என்று நடந்தாள். இரண்டாவது காட்சி துவங்குவதற்காக பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

ருக்மணி சிகரெட் வாங்கிக் கொண்டு திரும்பும் போது சைக்கிளில் வந்த ஒருவன் பாதி புகைத்த சிகரெட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு தியேட்டர் உள்ளே செல்வது தெரிந்தது. ஒடிப்போய் அந்த சிகரெட்டை எடுத்து பார்த்தாள். பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த சிகரெட்டை அவள் ஒரு முறை இழுத்து பார்த்தாள். நெஞ்சினுள் அந்த புகை சென்றதும் புறை ஏறிக் கொண்டு இருமல் வந்தது. சிகரெட்டை வீசி எறிந்துவிட்டு இருமினாள்.

அடங்கவேயில்லை. அடிவயிறு பிடித்துக் கொண்டுவிடும் போலிருந்தது. பயத்துடன் கண்ணீர் முட்ட தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது  அப்பா வாசலில் ஈஸி சேரை போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவள் சிகரெட்டை அவரிடம் தந்துவிட்டு உள்ளே போய் அம்மா அருகில் படுத்துக் கொண்டாள். சிகரெட்டின் சுவை நாக்கில் அப்படியே இருந்தது. அம்மா அந்த மணத்தை உணர்ந்திருக்க கூடும். அவள் பக்கம் திரும்பி முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆவேசம் ஆனவள் போல சிகரெட் பிடிச்சயாடி. சிகரெட் பிடிச்சயா என்று மாறிமாறி முகத்தில் அறைய துவங்கினாள். ருக்மணி என்னை மன்னிச்சிரும்மா என்னை மன்னிச்சிரும்மா என்று கத்தினாள். ஆனால் அடி நிற்கவேயில்லை.

அப்பா அதை கவனித்தபடியே சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அம்மா கை ஒயும்வரை அடித்துவிட்டு அவளை கட்டிக் கொண்டு அழுதாள். பிறகு இவரும் ஒன்றாக படுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு சிகரெட் வாங்க போகும்போது அந்த வாசனை தன் மீது படிந்து விடக்கூடாது என்று கையை தனியே நீட்டியபடியே போவாள் ருக்மணி.

அவளை போலவே சிகரெட் வாங்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் நிறைய இருந்தார்கள். எதற்காக ஆண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அம்மாவிடம் கேட்டாள். அவரு சம்பாதிக்கிறாரு சிகரெட் பிடிக்கிறாரு அதனாலே என்ன என்று சொன்னாள் அம்மா.

ஆறாம்வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ருக்மணியின் பள்ளிக்கு அப்பாவை அழைத்து வரும்படியாக சொல்லியிருந்தார்கள். அவர்கள் வகுப்பிலிருந்து இரண்டு மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் கலச்சார விழாவில் கலந்து கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு அது. அப்பாவை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு போகும்வழியே தயங்கி தயங்கி ருக்மணி சொன்னாள்.

ஸ்கூல்ல வந்து நீங்க சிகரெட் பிடிக்க கூடாதுப்பா

அப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை. பிரேயர் முடிந்தபிறகு பிரின்ஸ்பலை  சந்திக்கும்படியாக சொல்லிய வகுப்பு ஆசிரியை  அப்பாவை வெளியே காத்திருக்க சொன்னாள்.

அப்பா அதற்குள் புகைக்க துவங்கியிருந்தார். அவ்வளவு மாணவிகளுக்கு நடுவில் நின்றபடியே ருக்மணி கண்ணை மூடி  பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்த போதும் காற்றில் சிகரெட் புகை கரைந்து வந்து கொண்டேயிருந்தது. பிரேயர் முடியும்வரை யாரும் எதுவும் சொல்லவேயில்லை. அப்பாவாக அதற்குள் பிரின்ஸ்பல் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தார். பிரின்ஸ்பல் அறைக்குள் நின்றபடியும் அவர் புகைத்துக் கொண்டுதானிருந்தார்.

பிரின்ஸ்பல் தன் அறையில் புகை பிடிக்க அனுமதியில்லை என்று கடுமையான குரலில் சொன்ன போது அது தன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட பள்ளிக்கு அருகதையில்லை என்று சொல்லியபடியே இன்னொரு சிகரெட்டை எடுத்து புகைக்க துவங்கினார்.

இதற்குள் வகுப்பு ஆசிரியை ருக்மணியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அப்பா நிதானமாக புகை பிடித்துக் கொண்டு தன்மகளை வெளியே அனுப்ப தனக்கு இஷ்டமில்லை பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அந்த அறையில் புகை நிரம்பிக் கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியையும் பிரின்ஸ்பலும் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சில நிமிசங்களில் ருக்மணியை அழைத்து அப்பாவை  வெளியே அழைத்து செல்லும்படியாக சொன்னார்கள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போதும் அவர் புகைத்துக் கொண்டே வந்தார். பள்ளியின் வாசலை தாண்டுவதற்குள் நிச்சயம் தன்னை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள் என்று ருக்மணிக்கு தெரிந்துவிட்டிருந்தது.

அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவர்களது ஆத்திரம் கோபம் வசை எதைப்பற்றியும் ஒரு போதும் கருத்தில் கொண்டதேயில்லை. சிகரெட் பிடிப்பதை தவிர வேறு ஒரு கெட்டபழக்கமும் உங்க அப்பாவுக்கு கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார். ஆபீஸ் விட்டா நேராக வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று அம்மாவே பல நாட்கள் அவரை பாராட்டியும் இருக்கிறார்

ஆனால் அவளுக்கு அப்பாவை பிடிக்காமலே ஆகிப்போனது. அவள் மனதில் எப்போதும் அப்பா புகைக்கிறார் என்ற படிமம் உறைந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ சிகரெட் பிடிக்கின்றவர்களை கண்டாலே அவளுக்கு ஆத்திரமாக வரத்துவங்கியது.

அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அப்பா புகைப்பது மிக அதிகமாகி போயிருந்தது. அதற்கு காரணம் ஒய்வில்லாத சண்டை. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் பயமாக இருக்கும் காரணம் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருப்பாள். அல்லது அடித்துக் கொண்டிருப்பார். அதன் சில நிமிசங்களில் அவள் சிகரெட் வாங்க போக வேண்டியதிருக்கும். பேசாமல் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வரும்போதே கடையில் நாலைந்து சிகரெட்டுகள் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்

அப்படியொரு நாள் வீடு திரும்பும் போது வீட்டில் நிறைய ஆட்கள் திரண்டிருந்தார்கள். அம்மா சுவர் ஒரமாக சாய்ந்து கிடந்தாள். அவள் உடல் தலை கலைந்து கிடந்தது. சேலை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவளை சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா சலனமில்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் அருகாமை வீட்டு ஆண்களில் சிலர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் ருக்மணி வருவதைக்கண்டதும் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி உரத்த குரலில் அழுதபடியே இப்படியொரு பொம்பளை பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு சாகப்போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது என்று அம்மாவை உலுக்கினாள்.

அம்மா அவள் பக்கம் திரும்பவேயில்லை. அம்மா தற்கொலை செய்வதற்கு முயன்றிருக்கிறாள். பக்கத்துவீட்டு பெண்கள் பார்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் செத்துப்போயிருப்பாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

அதை கேட்டவுடன் ருக்மணிக்கு கால்கள் நடுங்க துவங்கியது. அவள் அம்மாவின் அருகில்போய் உட்கார்ந்து கொண்டாள்.  அம்மாவின் கையை எடுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள முயன்ற போது அவள் தள்ளிவிட்டபடியே போ.. போயி உங்கப்பாவுக்கு சிகரெட் வாங்கிட்டு வந்து குடு என்றாள். ருக்மணிக்கு பேசாமல் தான் செத்துப்போய்விடலாம் என்பது போலிருந்தது.

அவள் யூனிபார்மை கூட கழட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு எட்டரை மணி வரை அவர்கள் வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பிறகு அப்பா அவளிடம் பசிக்கிறதா என்று கேட்டார். அவள் இல்லை என்று பொய் சொன்னாள். அப்பா தன் சட்டை பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தந்து அவளுக்கு தேவையான இட்லியும் அவருக்கு சிகரெட்டும் வாங்கிக் கொண்டு வரும்படியாக சொன்னார்.

அவள் எழுந்து பணத்தை கையில் வாங்கிக் கொண்டாள். வாசல்படியை விட்டு இறங்கும் போது அப்பா அழைப்பது போலிருந்தது. அவள் திரும்பி பார்த்த போது அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு அவளை நிறுத்திவிட்டு தானே கடைக்கு போய்வருவதாக சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தானும் கூடவரவா என்று கேட்டாள். அப்பா வேண்டாம் என்றபடியே கிழே இறங்கி நடக்க துவங்கினார்

இரவு பதினோறு மணி வரை அப்பா வீடு திரும்பி வரவேயில்லை. அம்மா அவளை தேடிப்பார்த்து வரும்படியாக சொன்னாள். ருக்மணி ஒவ்வொரு கடையாக போய் எங்கப்பா சிகரெட் வாங்க வந்தாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். அப்பா எங்கேயும் வரவில்லை. இந்த இரவில் எங்கே போயிருக்க கூடும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது அவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை சொருகிக்கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சினிமா தியேட்டர் வரை சென்று பார்த்தாள். ஆனால் அங்கேயும் அப்பா இல்லை.

 நள்ளிரவில் அம்மா தெருவில் நின்றபடியே சப்தமாக  அழுதாள். மாலையில் அவள் வீட்டில் திரண்டிருந்தவர்கள் எவரும் ஆறுதல்படுத்த வரவில்லை. அவளும் அம்மாவும் மட்டும் அழுதார்கள்

அடுத்த நாள் அம்மாவும் அவளும் அப்பாவின் அலுவலகத்திற்கு தேடிப்போய் பார்த்தார்கள். அப்பா அங்கேயும் வரவில்லை. அப்பாவிற்கு தெரிந்த ஒவ்வொருவர் வீடாக போய் அவர்கள் விசாரித்தார்கள். அப்பா எங்கேயும் வரவேயில்லை. அம்மாவின் கோபம் அவள் மீது திரும்பியது.

ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறதுல உனக்குஎன்னடி கௌரவம் குறைஞ்சி போச்சி. உங்கப்பா அதுனாலே தானே அன்னைக்கு கோவிச்சிகிட்டு போயிட்டார் என்று அவளை திட்டத்துவங்கினாள்.

அப்பா காணமல்போய் இன்றைக்கு பதினேழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அப்பா ஏன் அவளை கடைசியாக சிகரெட்வாங்க அனுமதிக்கவில்லை என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அப்பா என்னவாகியிருப்பார். எங்காவது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து போயிருப்பாரா? அல்லது ஏதாவது ஒரு ஊரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்மு தன்னை போலவே வேறு ஒரு சிறுமிக்கு தகப்பனாகி அவளையும் சிகரெட் வாங்க வைத்துக் கொண்டிருப்பாரா? இல்லை பிச்சைகாரர்களில் ஒருவரை போல அலைந்து திரிவாரா? என்று பலநாட்கள் யோசித்திருக்கிறாள்

சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிக்கும் ஆண்கள் அவளது அப்பாவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்பா ஏன் அவ்வளவு மூர்க்கமாக புகைபிடித்தார். அவருக்கு ஏதாவது வேதனை இருந்திருக்குமா. என்ன வேதனை அது.

அப்பா காணாமல் போன சில வருசங்களில் அம்மா தானே உடல் நலிந்து போனாள். அவளை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க துவங்கினாள் ருக்மணி. இப்போது வேலை கிடைத்து சம்பாதிக்க துவங்கிய பிறகும் அவளுக்கு ஹாஸ்டல் அறை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது.

ஆனால் சிகரெட்டின் புகையும் மணமும் அவளுக்குள் அப்பாவின் பிம்பத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அதிலிருந்து மீள்வதற்காக அவள் சிகரெட்டை வாங்கிகொண்டு வந்து அறையில் இருந்த மேஜையில் போட்டு வைக்க துவங்கினாள். என்றைக்காவது அப்பா திரும்பி வந்தால் அவருக்கு இந்த சிகரெட்டுகளை புகைக்க தரலாம் இல்லையா?

அன்றைக்கும் அவள் ரயிலில் சிகரெட்டை கையில் வைத்தபடியே வந்ததை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை ஆயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு பெண் கூட சிகரெட் புகைத்து அவள் பார்த்ததேயில்லை. ஏன் புகைக்க கூடாது என்று ஏதாவது சத்தியம் செய்திருக்கிறார்களா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா?

பொது இடங்களில் நின்றபடியே மூத்திரம் பெய்யும் ஆண்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் ஆண்கள், சாலையோர கடைகளில் நின்றபடியே பஜ்ஜி தின்னும் ஆண்கள், பான்பராக் போடும் ஆண்கள், டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தும் ஆண்கள், வாந்தியெடுத்து குப்பையில் விழுந்து கிடந்து உறங்கும் ஆண்கள், பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்கள், பொதுவெளியில் பெண்களை உரசி பாலின்பம் காணும் ஆண்கள் என அவள் காணும் உலகம் முழுவதும் ஆண்கள் விகாரம் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். அந்த புகைகள் அடுத்த இருக்கையில் உள்ள பெண்கள் மீது, உடன்வசிக்கும் மனைவி மீது, காதலிக்கும் பெண்ணின் உதட்டிற்குள்,  அருகில் உறங்கும் குழந்தைகளின் சுவாச கோளங்களில் சென்று நிரம்புகிறது.

ஆண்கள் புகைக்கிறார்கள். அது வெறும் செயல் அல்ல, அது அவளை போன்ற துயரின் வடுமறையாத சிறுவர் சிறுமிகளை உருவாக்கும் வன்முறை. தன்னை ஆண் என்று காட்டிக் கொள்ள வைக்கும் சாதனம். சிகரெட்டை தூக்கி எறிவதை போல, எவ்விதமான எதிர்ப்பும்இன்றி அணைத்து நசுக்குவதை போல தங்களையும் நடத்த முடியும் என்ற எச்சரிக்கை.

ருக்மணி இப்படியான ஏதேதோ யோசனைகளுடன் அறைக்கு திரும்பி மேஜை டிராயரை திறந்து உள்ளே சிகரெட்டை போட்டாள். நாற்பது ஐம்பது சிகரெட்டுகளுக்கும் மேலாக இருந்தது. அதை பார்த்த போது அப்பா ஏன் கடைசியாக தன்னை சிகரெட் வாங்கிவர சொல்லவில்லை என்ற கேள்வி அவளுக்குள்  இன்றும் தீராமல் இருந்து கொண்டேயிருந்தது.

அப்பா காணாமல்  போனது முதல் அவர் முகம் அவள் நினைவிலிருந்து அழிந்து போக துவங்கியிருந்தது. இப்போது அவரது நினைவாக  மிச்சமிருப்பது சிகரெட் மட்டுமே. தன் கடந்த காலத்தின் நினைவாக மிஞ்சியிருப்பது அந்த சிகரெட்டுகள் மட்டுமே தானே என்று தோணியது.

பின்னிரவில் அவள் படுக்கையில் கிடந்தபடியே முகட்டைவெறித்து பார்த்துக் கொண்டிருந்தபோது அறையெங்கும் சிகரெட் புகை நிரம்பியிருப்பது போல தோன்றியது. அந்த மணத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டிருந்தது. திகைத்து போய் விழித்து  பார்த்தாள். அறையில் அவளை தவிர யாருமேயில்லை.

அத்தனை வருசங்களுக்கு அப்பாலும் அப்பாவின் சிகரெட் புகை அவளுக்குள் கரையாமல் புகைந்து கொண்டேயிருக்கிறது என்பது வருத்தம் தருவதாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். பிறகு தனக்கு தானே பேசிக் கொள்ள துவங்கினாள். அப்போது சட்டென அவளும் தன்னுடைய அம்மா போலவே நடந்து கொள்வதாக தோணியது. அதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 10:26:40 PM
இயல்பு

குமுதம் தீபாவளி மலரில் வெளியான குறுங்கதை.


அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பேக், மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி. ஒட்ட வெட்டப்பட்ட தலை. அகலமான கைகள். காலில் நைக்  ஷீ. உள்ளடங்கிய புன்னகை. சற்றே குழப்பமான நிலையில் என்ன வேண்டும் என்று கேட்டேன்.

அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்றும், கொரியத் தயாரிப்பான அதிநவீன செல்போன் விற்பதற்காகத் தான் வந்துள்ளதாக சொல்லி தயாராக கையில் வைத்திருந்த விளம்பர அறிக்கை ஒன்றை என் முன்நீட்டியது.நான் வியப்புடன் மனிதக்குரங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் மிக நளினமாக அது தன் விற்பனை பொருளின் மேன்மைகளைப் பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருந்தது.

என் மனதிலே அது மனிதக் குரங்கு, மனிதக் குரங்கு என்ற ஒரு ஒற்றைக்குரல் ஒயாமல் எதிரொலித்தபடியே இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்து கொண்டது போல மெல்லிய வெட்கத்துடன் இதன் முன்பு என்னைப் போன்ற பிரதிநதிகளை நீங்கள் கண்டதில்லையா என்று ஆங்கிலத்தில் கேட்டது.

இல்லை என்று தடுமாறியபடியே சொன்னேன். விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். செயற்கை அறிவு கொண்ட ரோபேக்களை விடவும் எங்களைப் பார்த்து தான் அதிகம் பேர் வியப்படைகிறார்கள். அது ஏன் என்றே புரியவில்லை என்றது.

அப்படியெல்லாம் இல்லை. இது என்னுடைய தவறு தான் என்று தயங்கியபடியே சொன்னேன்.

தான் ஹோமேசெபியன் வகை குரங்கு என்றும் தனது மூதாதையர்களான நியான்டர்தால், குரோமகனான் பற்றி நிச்சயம் நான் அறிந்திருப்பேன் என்றபடியே தனது குடும்பம் முப்பது வருசங்களுக்கு முன்பாகவே அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரம் நோக்கி வந்துவிட்டதாகவும் தான் முறையாக பள்ளி கல்வி கற்று, நான்கு மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளதோடு, டெல்லி பல்கலைகழகத்திலிருந்த விற்பனையுத்திகள் குறித்த சான்றிதழ் பட்டயமும் பெற்றிருப்பதாக சொல்லியது.

நான் தயக்கத்துடன் இப்படி ஒருவரை நான் முன்பு சந்தித்ததேயில்லை என்று சொன்னேன். அது தலையசைத்தபடியே இந்த நகரில் என்னைப் போன்றவர்கள் அதிகமில்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். பேராசிரியர்களாக, விமானியாக, ஏன் ஊடக விற்பன்னர்களாக கூட பணியாற்றுகிறார்கள். அங்கே அவர்களை எவரும் பேதமாக நடத்துவதில்லை, கேலி செய்வதில்லை என்றது.

அது சரி தான் என்றபடியே அதன் கைகளை பார்த்து கொண்டிருந்தேன். அகலமான கைகள். விரல்நகங்கள் கவனமாக வெட்டப்பட்டிருந்தன. மனிதக் குரங்கு என் வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டபடியே உங்கள் ப்ரிட்ஜில் முட்டையொன்று உடைந்து போயிருக்கிறது என்றது. அவசரமாக குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து பார்த்தேன். நிஜம் ஒரு முட்டை உடைந்து வழிந்து போயிருந்தது,

அதை எடுத்து வெளியே வைத்தபடியே எப்படி அதற்கு தெரிந்தது என்று கேட்டேன.

மனிதக் குரங்கு சிரித்தபடியே தலைமுறை தலைமுறையாக காட்டில் தான் வாழ்ந்தோம். வாசனையை எங்கிருந்து கசிந்தாலும் அறிந்துவிட முடியும் என்றது.

என்னால் சமையலறையில் இருந்து வரும் வாசனையை கூட எது என்னவென்று பிரித்து அறிய முடியவில்லை என்றேன்.

குரங்கு சிரித்தபடியே வாசனை, சிறு சப்தம், பயம் யாவும் அடிமனதில் அப்படியே தானிருக்கிறது. இன்னும் மறையவில்லை என்றபடியே உங்கள் வீடு இருக்குமிடம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது என்றும் அதில் எண்ணிக்கையற்ற வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு ஏரியின் மீது உறங்குவதை போல உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்டது
அந்த மனிதக் குரங்கு சொல்வது உண்மை. இந்த இடத்தில் நாற்பது வருசங்களுக்கு முன்பு வரை பெரிய ஏரியிருந்தது. அதை மூடி அந்த இடத்தில் தான் புதிய கட்டிடங்கள் கட்டினார்கள். இன்றைக்கும் இதன் நிலப்பதிவுகளில் அந்த ஏரியின் பெயர் குறிப்பிடப்படுகிறது என்று சுட்டிகாட்டினேன்.

மனிதக்குரங்கு சிரித்தபடியே மனிதர்களால் ஆகாசத்தையும் மேகங்களையும் மட்டும் தான் விலைக்கு வாங்க முடியவில்லை. நகரங்கள் அலுப்பூட்டுகின்றன. இங்கே இலைகள் உதிரும் ஒசை கேட்பதில்லை. வண்டின் சிறகொலியோ, பறவைகளின் ரெக்கையடிப்போ, தவளைகளின் புலம்பல்களோ கேட்பதேயில்லை. ஒரே வாகன இரைச்சல். உலகிலே தண்ணீரை விலைக்கு வாங்கும் ஒரே உயிரினம் மனிதர்கள் தான் என்றபடியே தனது பையில் இருந்த மாதிரி செல்போன் ஒன்றை எடுத்து பிரித்தது.

அதற்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டேன்.

குரங்கு சிரித்தபடியே தன்னைக் காதலிக்க இளம் பெண்கள் எவருக்கும் விருப்பமில்லை என்பதால் உறவினர்களிலே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக சொல்லி தனது பர்ஸ திறந்து அதிலிருந்த பெண்குரங்கு ஒன்றின் புகைப்படத்தைக் காட்டியது. எனக்கு அந்த புகைப்படத்தை விடவும் பர்ஸில் வைத்திருந்த இரண்டு கிரிடிட் கார்டுகள் மற்றும் பிரபலமான கிளப் ஒன்றின் உறுப்பினர் கார்டு , வானகம் ஒட்டும் சைலன்ஸ் யாவும் கண்ணில் பட்டது.

நான் அந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலே ஏன் அது விற்பனை பிரதி வேலையை த்தேர்வு செய்தது என்று கேட்டேன். இது தான் சவாலாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எதிர்பாரமல் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள். புதிய சவால்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் அலுப்பூட்டும் வேலைகளில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்து கொள்கிறார்கள். அது என்னால் ஒரு போதும் இயலாது. அந்தந்த நிமிசத்தில் வாழ வேண்டும் அப்படி நம்மால் இயலாமல் போவதற்கு காரணம் நம் நினைவுகள் தான் என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அது சரியென்றே தோன்றுகிறது என்றது.

நான் திகைப்போடு ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறதா என்று கேட்டேன். தனக்கு கிருஷ்ணமூர்த்தியை பிடிக்கும் என்றதோடு டேவிட் போம் என்ற இயற்பியல் அறிஞருடன் ஜேகே காலத்தின் முடிவின்மை பற்றி நிகழ்த்திய உரையாடல் அற்புதமானது என்று சொல்லி வியந்தபடியே தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று மிக அன்புடன் கேட்டது.

நான் பிரிட்ஜில் இருந்த குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து தந்த போது உதட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே சிந்திவிடாமல் அது கவனமாக குடித்துவிட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து உதட்டை துடைத்து கொண்டது. பிறகு தன்னியல்பாக புதியரக செல்போன்களின் சாத்தியபாடுகளை விளக்கி சொல்ல துவங்கியது.

அரை மணிநேர பேச்சிற்கு பிறகு நான் அதனிடமிருந்து ஒரு புதிய போனை வாங்கிக் கொள்வது என்று முடிவானது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த லெதர் பையை எடுத்து அதிலிருந்த பில் புத்தகத்தில் என் பெயர் விலாசம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தது.

நான் அந்த தோள்பையினுள் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு புத்தகம், இசைகேட்பதற்கான சிறிய ஐபேடு. ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் சிறிய வாசனை திரவியப்புட்டி காணப்பட்டது.

அழகான கையெழுத்துடன் சுயவிபரங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்த குரங்கு பையிலிருந்த புத்தகத்தை நான் கவனிப்பதை அறிந்து அதை எடுத்து என்னிடம் நீட்டியபடியே இது நீட்சே.. மிக முக்கியமான சிந்தனாவாதி. சோர்வுறும் போது அடிக்கடி இதை வாசிப்பேன்என்று சொல்லி சிரித்தபடியே படிவத்தில் என்னிடம் கையெழுத்து கேட்டது.
நான் கையொப்பமிட்டபடியே காசோலை ஒன்றினை தந்தேன். மிகுந்த அன்புடன் நன்றிதெரிவித்துவிட்டு தங்கள் கம்பெனி எனக்குரிய புதிய செல்போனை தபாலில் அனுப்பி வைக்கும் என்றபடியே என்னிடமிருந்து விடைபெற்று போனது.

மனிதர்களிடம் கூட காணமுடியாத ஒழுங்கும் அன்பும் மிருதுவான பேச்சும் கொண்டிருந்த அந்த குரங்கை வியந்தபடியே இருந்தேன்.

மின்சாரம் தடைபட்டு இருந்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை போலும் எரிச்சலும் அலுப்புமாக மனிதகுரங்கு லிப்டின்பொத்தான்களை  அமுக்கியபடியே நின்றிருப்பது தெரிந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். மனித குரங்கு லிப்டை வெறித்து பார்த்தபடியே ஆத்திரத்துடன் முணுமுணுத்தது. 

மசிரானுங்க. இவங்க ஒவ்வொருத்தரையும் உருவி உருவி செல்போன் விற்கிறதுக்குல்லே நாக்கு தள்ளி போயிருது. இதுல கரண்ட் மசிரு வேற வேலை செய்யலை என்று ஆத்திரத்துடன் சொல்லியபடியே லிப்டிலிருந்து விலகி நடந்து அங்குமிங்கும் பார்த்தது,
எவரும் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த மறுநிமிசம் எனது வீடிருந்த பனிரெண்டாவது தளத்திலிருந்து ஒரே தாவாக வெளியில் தாவி பூமியை நோக்கி குதித்து எதுவும் நடக்காதது போல தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 05, 2013, 10:40:22 PM
பிழை திருத்துபவரின் மனைவி

சிறுகதை

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை.

காகிதங்கள் கிழிக்கபடும்  போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் எதையும் வெளிப்படுத்துதில்லை. அதைக் கூட அவளால் சகித்து கொள்ள முடிவதில்லை. இதற்காக அவள் காகிதங்களை நீரில் ஊற விட்டுவிடுவாள். அவள் வரையில் அது தான் காகிதங்களுக்குத் தரப்படும் மிக மோசமான தண்டனை. சமையல் செய்யும் போது இரும்பு வாளியில் உள்ள தண்ணீரில் காகிதத்தைப் போட்டுவிட்டால் மாலை பார்க்கும் போது அது கரைந்து துகள் துகளாக மிதந்து தண்ணீரில் கலந்து போயிருக்கும்.

காகிதங்களில் கரையும் போது அதில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எங்கே போய்விடுகின்றன. அந்த வார்த்தைகள்  உப்புத் தண்ணீருக்குள்  கரைந்து போய்விடுவதை போல கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போயிருக்குமா?  அவள் வாளித் தண்ணீரை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சில நேரம் யோசிக்கும் போது வியப்பாக இருக்கும்.

காகிதங்களுக்கும் வார்த்தைகளுக்குள் உள்ள உறவு எத்தகையது. காகிதங்கள் தன் மீது எழுதப்படும் வரிகளுக்கு சம்மதம் தருகிறதா என்ன? காகிதங்களுக்கும் அதில் பதிந்துள்ள சொற்களுக்கும் நடுவில் இடைவெளியிருக்கிறதா? இப்படி யோசிக்க துவங்கியதும் நான் ஏன் இது போன்ற வீண் யோசனைகளை வளர்த்து கொண்டு போகிறேன் என்று அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாக வரும்.

அவள் வீட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் நிரம்பியிருக்கின்றன. அவள் தனது பதினேழாவது வயதில் மந்திர மூர்த்தியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் வரை பாடப்புத்தங்களைத் தவிர வேறு எதையும் கண்டதேயில்லை. அதுவும் அவளது ஊரில் பெண்கள்  உயர்நிலைப் பள்ளி  இல்லை என்பதால் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

ஆறேழு வருடங்கள் அவள் தீப்பெட்டி ஒட்டும் வேலை, ரப்பர்கொட்டை உடைக்கும் வேலைக்கும் போய் கொண்டிருந்தாள். தீப்பெட்டி ஆபீஸில் ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுகள் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் சீட்டு போட்டு ஒரு ரேடியோவைச் சொந்தமாக வாங்கி விடுவதற்கு அவள் ரொம்பவும் ஆசைப்பட்டாள். ஆனால் ஒவ்வொரு முறை சீட்டு எடுக்கும் போதும் ஏதாவது ஒரு செலவு வந்து சேர்ந்துவிடும். இதனால் அவள் திருமணத்தின் போது கட்டயாம் ஒரு ரேடியோ வாங்கித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டுவிட்டாள். ஆனால் மந்திரமூர்த்திக்கு ரேடியோ கேட்பது பிடிக்காது என்பதால் அது எப்போதுமே அணைத்து வைக்கபட்டேயிருந்தது.

திருமணமாகி சென்னைக்கு வந்த சமயத்தில் அவளுக்கு மந்திரமூர்த்தியைக் காணப் பயமாக இருக்கும். அவர் அப்போது ராயல் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பையில் ஒரு பென்சிலும் அழி ரப்பரும் எப்போதுமிருக்கும். சில நேரம் சிவப்பு மை பேனா வைத்திருப்பதை கூட கண்டிருக்கிறாள்.

அவளுக்குப் பிழை திருத்தம் செய்வது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்போதாவது இரவில் மந்திரமூர்த்தி தரையில் தலையணை போட்டு படுத்தபடியே காகிதங்களில் பென்சிலால் சுழிக்கும் போது அவள் கவனமாக பார்த்து கொண்டேயிருப்பாள். அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். சில நேரங்களில் அவர் சப்தமாகச் சிரிப்பது கூட கேட்கும். பின்னிரவு வரை அவர் பிழைத் திருத்தம் செய்து கொண்டிருப்பார். பிறகு எழுந்து பின்கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் மூத்திரம் பெய்து விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்வார்

அவளது உடலில் அவரது விரல்கள் ஊரும் போது பிழை திருத்தம் செய்வது தேவையில்லாமல் நினைவிற்கு வரும். அவர் காமத்தில் பெரிய நாட்டம் கொண்டவரில்லை. அதை ஒரு சம்பிரதாயம் போல ஈடுபடுவதும், உடல் வியர்த்து போனதும் முகம் திருப்பிக் கொண்டு உறங்கி விடுவதும் அவளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகயிருக்கும். உறக்கத்தில் கூட சில நேரம் அவரது விரல்கள் அசைந்தபடி இருப்பதையும் முகம் இறுக்கமடைந்திருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள்.

மந்திரமூர்த்தி யாரோடும் பேசுவது கிடையாது. அவர் காலை ஆறுமணிக்கெல்லாம் பிழை திருத்தத் துவங்கிவிடுவார். திருத்திய காகிதங்களுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறி செல்லும் போது அவரது மஞ்சள் பையில் திருத்திய பிரதிகளும் மதிய உணவுமிருக்கும். அவரது அலுவலகம் ராயப்பேட்டைப் பகுதியில் இருந்தது.

அவருக்கென்று நண்பர்களோ தெரிந்தவர்களோ எவருமோயில்லை. வெளியிலும் அவர் போவது கிடையாது. அவருக்கு இருந்த ஒரே பழக்கம் வெற்றிலை போடுவது. அதற்காக சிறிய லெதர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் இருந்து பத்து நிமிசத்திற்கு ஒரு முறை இரண்டுவெற்றிலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வார்.

ஒரு முறை அவளை தான் வேலை செய்யும் அச்சகத்தில் நடைபெற்ற விழாவிற்காக அழைத்துப் போயிருந்தார்.  அங்கே மிகப்பெரிய இயந்திரம் ஒன்றில் காகிதம் உருளையாக சுற்றப்பட்டிருப்பதையும் அந்தக் காகித உருளையிலிருந்து வெங்காயத்தில் தோல் உரிக்க உரிக்க வந்து கொண்டிருப்பது போல காகிதம் வழிந்து கொண்டேயிருப்பதையும் அவள் மிரட்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.

அந்தக் காகித உருளை முழுவதும் அச்சடிக்கபட்டுவிடும். அத்தனையும் அவர் தான் பிழைத் திருத்தம் செய்ய வேண்டுமில்லையா? அவள் தன் கணவரிடம் அதைப்பற்றி கேட்டதும் அசட்டுதனமாக உளறாதே என்றபடியே அவர் பைண்டிங் செய்யும் பகுதிக்குச் சுற்றி காட்ட அழைத்து சென்றார்

அவள் வயதில் நாலைந்து பெண்கள் காகிதங்களை வரிசை வரிசையாக அடுக்கி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்டாள். மந்திரமூர்த்தி பதில் சொல்லாமல் அது நமக்கு சரிப்படாது என்றார். அச்சகத்தின் கடைசில் இருந்த கழிப்பறைக்கு அவள் போகும் போது வழியில் தரையில் காகிதங்கள் சிதறி கிடந்தன. அதன் மீது யாவரும் மிதித்து நடந்து போய் கொண்டிருந்தார்கள்.

தென்பக்கமாக ஒரு சிறிய இரும்புக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டாள். உள்ளே எட்டிப்பார்த்த போது கழித்து போட்ட உபயோகமற்ற காகிதங்கள் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருந்தன. அவளுக்கு பயமாக இருந்தது. நீருற்று பொங்குவதை போல காகிதங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதா? இந்த காகிதங்கள் எல்லாம் எங்கே போய்சேரும்?  அவள் கழிப்பறைக்கு போனபிறகும் அந்த யோசனையில் இருந்து விடுபட முடியாமலிருந்தாள்.

அந்த அச்சகத்தில் அவளது கணவன் ஒரு ஆள் மட்டுமே பிழை திருத்துபவராக இருந்தார் என்பது ஏன் என்று அவளுக்கு புரியவேயில்லை. ஒரு நாள் மந்திர மூர்த்தி பிழை திருத்தி வைத்திருந்த காகிதங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தாள். அநேகமாக வரிக்கு வரி தவறுகள் அடையாளம் காணப்பட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டும் அடித்து மாற்றியும் இருந்தன.

அவளுக்கு அந்தக் காகிதத்தை பார்க்கும் போது ஏதோ குழந்தை விளையாட்டு போலத் தோணியது. சில வேளைகளில் மந்திரமூர்த்தி எல்லா எழுத்தாளர்களை விடவும் மிகப்பெரிய அறிவாளி போன்று தோன்றினார். ஒரு வேளை தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று கூட அவளுக்கு தோணியது. அவள் பயத்தோடு அந்த காகிதத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு அவருக்கு சாப்பாடு வைத்தாள்.

மந்திரமூர்த்தியின் கண்களில் பிழைகள் எத்தனை சிறியதாக இருந்தாலும் எப்படியோ பட்டு விடுகிறது. இந்த குணம் அவருக்கு காகிதங்களோடு மட்டும் இருக்கிறதா இல்லை தன்னையும் அவர் இது போன்று நுணுக்கிப் பார்த்து கொண்டுதானிருக்கிறாரோ? ஆரம்ப நாட்களில் அவள் மாலை நேரங்களில் வீட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.

வீடு திரும்பும் மந்திர மூர்த்தியின் முகம் அதைக் கண்டதுமே கடுமையடைவதை அவள் கண்டிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்ததும் அவர் தனது பிழைத் திருத்தும் காகிதங்களை எடுத்து வைத்துக் கொள்வார். அவள் தரும் காபியோ, காரத்தையோ அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது. ஏன் அவர் இப்படி எழுத்துக்களுக்குள் தன்னை முடக்கிக் கொண்டுவிட்டார் என்று குழப்பமாக இருக்கும்.

மந்திரமூர்த்திக்கு உணவில் கூட அதிக கவனமிருப்பதில்லை. ஈர வேஷ்டியை கூட சில நேரங்களில் அணிந்து கொண்டு புறப்பட்டு போகின்றவராகயிருந்தார்.  எப்போதாது அவள் தயக்கத்துடன் அவர் வேறு வேலை ஏதாவது பார்க்க கூடாதா என்று கேட்கும் போது அவர் முறைத்தபடியே இந்த வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்பார். அவளால் விளக்கி சொல்ல முடியாது.

மந்திரமூர்த்தி அச்சகத்திற்கு செல்லாமல் ஒரு நாளும் இருந்ததே கிடையாது. அவள் உடல் நலமற்று கிடந்த நாட்களில் கூட கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு அவர் அச்சகத்திற்கு கிளம்பி போய்விடுவார். பாயில் கிடந்தபடியே அவள் பல்லைகடித்து கொண்டுகிடப்பாள். எதற்காக இதை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டோம். ஒரு எழுத்து மாறி போகின்றதைப் பற்றி கவலைப்படும் ஒரு நபர் தன்னை ஏன் கவனிக்க மறந்து போகிறார் என்று ஆத்திரமாக வரும்.

மந்திரமூர்த்தி அதைப் பற்றி யோசிப்பதேயில்லை. எப்போதாவது அவராக சினிமாவிற்கு போய்வரலாம் என்று சொல்வார். அது போன்ற நேரங்களில் அவள் அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வருவாள். திரையரங்கத்தின் வாசலில் நின்றபடியே போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களை, வேர்கடைலை மடித்து தரும் காகிதங்களை கூட அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் அவரது உதடுகள் தவறுகளை முணுமுணுப்பதையும் அவளால் கேட்க முடிந்திருக்கிறது.

சினிமா தியேட்டரில் அவர் சிரித்து அவள் கண்டதேயில்லை. எப்போதும் தீராத யோசனையுடன் அவரது முகம் உறைந்து போயிருக்கும். சினிமா முடிந்த மறுநிமிசமே வீடு திரும்பிவிட வேண்டும் என்பதில் அவருக்கு  மிகுந்த பதட்டமாக இருக்கும். சினிமா பார்த்த வந்த இரவுகளில் அவர் அவளோடு உறவு கொள்வது கிடையாது என்பது ஏன் என அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை

அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது. இப்போது வரை குழந்தைகளில்லை. அவள் தனியாகவே வீட்டிலிருந்து பழகி விட்டிருந்தாள். எப்போதாவது அவளாக ஒரு எலுமிச்சைபழத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தட்சணாமூர்த்தியை தரிசிப்பதற்காகச் சென்று வருவாள்.

அது போன்ற நேரங்களில் அவள் கடவுளிடம் என்ன வேண்டுவது என்பது கூட  அவளுக்கு மறந்து போயிருந்தது. சில நேரங்களில் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு கடவுளை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். ஆத்திரமாகும் நாட்களில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் யாவும் உலகிலிருந்து ஒழிந்து போய்விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பென்சில்களின் மீது. ரப்பரின் மீது என நீண்டு கொண்டே போனது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பகலில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கிழித்தபடியே இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய மந்திர மூர்த்தி காகிதங்கள் இறைந்து கிடந்த அறையை  கண்டதும் சற்றே கோபமான குரலில் தங்கம்மா.. உனக்கு பேப்பரை கிழிக்க ஆசையிருந்தால் குப்பை தொட்டிக்கு போ .அங்கே நிறைய கிடக்கும். இன்னொரு தடவை இது போல செய்யாதே என்றபடியே அவர் தனது மேஜையில் உட்கார்ந்து கொண்டு பையில் இருந்த காகிதங்களை பிழை திருத்தம் செய்ய துவங்கினார்.

அவள் சப்தமாகக் கத்தி அழுதாள். அந்த சப்தம் அவருக்கு கேட்டதாகவே தெரியவில்லை. அவர் திருத்திய காகிதங்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. அவளுக்குக் காகிதங்களில் இருந்து சொற்கள் உதிர்ந்து விழுவது போன்றும் அவளது கையில், கால்களில், உடல்களில் சொற்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும் தோன்றியது.

அதன் பிறகு அவளை மருத்துவரிடம் அழைத்து போனார் மந்திரமூர்த்தி. அவள் கலக்கத்துடன் தனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னாள். ஒருவார காலம் உறங்குவதற்கு மாத்திரைகள் தந்து அனுப்பினார் மருத்துவர். கண்களை அழுத்தும் உறக்கத்தின் ஊடாக கூட ஒரு நிழலைப் போல அவர் பிழைத் திருத்திக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியும். அழுவதற்கு கூட முடியாமல் அவள் உறங்கி போய்விடுவாள்.

ஒரு ஆண்டுகாலம் அவளைச் சொஸ்தப்படுத்துவதற்காக வாரம் தோறும் பொதுமருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அவள் மௌனமாகத் தெருவில் நடந்து வருவாள். மருத்துவமனை வரும் வரை அவர் எதுவும் பேசிக் கொள்ளவே மாட்டார். புறநோயாளிகள் பிரிவில் அவளை உட்கார வைத்துவிட்டு அவர் எதிரில் இருந்த வாகை மரத்தை வெறித்துப் பார்த்தபடியிருப்பார்.

வெள்ளை, மஞ்சள் நிற மாத்திரைகள் சகிதமாக அவர்கள் வீடு திரும்பிய மறுநிமிசம் அவர் தனது அச்சகத்திற்கு புறப்பட்டு போய்விடுவார். மாத்திரைகளில் கூட ஏதோ பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கின்றன. அந்த பெயர்கள் பிழை திருத்தப்பட்டதா இல்லை திருத்தபடாததா என்ற உற்று பார்த்து கொண்டிருப்பாள். மாத்திரைகள் வயிற்றில் கரைந்து போகும் போது இந்த பெயர்களும் தனக்குள் கரைந்து போய்விடும் இல்லையா என்று யோசனை எழும். அவள் கண்களை மூடிக் கொண்டு மாத்திரையை விழுங்குவாள்.

காகிதங்கள் மெல்ல அவளுக்கு வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்து கொண்டேயிருந்தன.  உலகில் உள்ள எல்லா அச்சு எழுத்துக்களையும் அழித்துவிட விரும்பியது போல அவள் ஆவேசப்படத் துவங்கினாள். இதற்காக அவரோடு பேசுவதையும் அவள் தவிர்த்து வந்தாள். எப்போதாவது அவர் தண்ணீர் கேட்கும் போது கூட அவள் அந்த சொல்லைக் கேட்டதேயில்லை என்பது போல அவரைப் பார்த்தபடியே இருப்பாள். அவராக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்

இரவுகளில் உறங்க மனதற்கு அவள் பாயில் உட்கார்ந்துகொண்டேயிருப்பதை அவர் கவனித்த போது கூட தன் வேலையை நிறுத்த மாட்டார். ஒரு நாள் அவள் அவரது முதுகின் பின்னால் வந்து நின்றபடியே அவரது வேலையைக் கவனிக்க துவங்கினாள். ஆவேசமாக மிருகம் ஒன்று தனது இரையை வேட்டையாடுவதை போல அவர் சொற்களை தன் கையில் உள்ள பென்சிலால் அடித்தும் திருத்தியும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.

அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்

காகிதத்தில் அப்படி என்னதானிருக்கிறது ?

அவர் திரும்பி பார்க்காமலே எனக்குத் தெரியவில்லை என்றார். அவள் காகிதங்களை உற்றுப் பார்த்தபோது வார்த்தைகள் உடைந்தும் விலகியும் தனியே நடனமாடுவது போலிருந்தது. திடீரென அவரை கட்டிக் கொண்டு அழுத்துவங்கினாள். அவரது கையில் இருந்த பென்சில் தவறி கிழே விழுந்து முனை உடைந்தது.

அவர்  அவளது கைகளை விலக்கி விட்டுக் கிழே கிடந்த  பென்சிலை எடுத்து மிக கவனமாகச் சீவத் துவங்கினார். அவர் முன்பு ஆயிரம் பக்க புத்தகம் ஒன்று பிழைத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. தங்கம்மாளின் அழுகை வீடெங்கும் கரைந்து ஒடிக்கொண்டிருந்தது.

***


-உயிர்மை இதழில் வெளியானது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on June 06, 2013, 01:11:52 PM
வெறும் பிரார்த்தனை

சிறுகதை

அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது,

வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள்

ஆனால் அப்பா  பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார்,

ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள்,

“அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா.

ரமாவால் பசி தாங்கமுடியாது, அவள் தினசரியும் பள்ளியில் மதியம் பனிரெண்டரை மணிக்கே சாப்பிட்டுவிடுகின்றவள், ஆனால் இன்றைக்கு லீவு போட்டு இருப்பதால் அந்த நேரமானவுடன் அவளுக்கு பசிக்க ஆரம்பித்திருக்க கூடும்,

அப்பா நேற்றிரவு திடீரென்று தான் சாமி கும்பிட பழனிக்கு போக வேண்டும் என்று சொன்னார், காதம்பரிக்கு தான் வேலை செய்யும் பார்மசியில் எப்படி லீவு கேட்பது என்பது தயக்கமாக இருந்தது, ஏற்கனவே இந்த மாசத்தில் இரண்டு நாள் லீவு போட்டுவிட்டாள், இதற்கு மேல் லீவு கேட்டால் பார்மசி ஒனர் சபாபதி கேவலமாகத் திட்டுவார், மீறி லீவு போட்டால் சம்பளத்தைப் பிடித்துக் கொண்டுவிடுவார், அவளது ஒருநாள் சம்பளம் நூற்றுபத்து ரூபாய், அதை எப்படி இழப்பது, தயக்கத்துடன் தான் கோவிலுக்கு வரவில்லை என்று காதம்பரி சொன்னாள்,

“நீ வேலைக்கு போயி சம்பாதிச்ச மசிரு போதும், காலையில நாம பழனிக்கு போறோம், நீ வர்றே, காலைல ஆறுமணி பஸ்ஸை பிடிச்சா தான் வெயில் ஏறுறதுக்குள்ளே கோவிலுக்கு போக முடியும், “ என்று அப்பா கோபத்துடன் சொன்னார்,

மறுத்து பேசினால் அப்பாவின் கோபம் உக்கிரமாகிவிடும், தன்னோடு வேலை செய்யும் விநோதினியைப் பார்த்து யாராவது உறவினர் செத்து போய்விட்டார்கள் என லீவு சொல்லிவிட வேண்டியது தான், என்று முடிவு செய்து கொண்டாள்,

எதற்காக இப்போது உடனே பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லை, அப்பாவின் குணமே அப்படித்தான், திடீரென்று தனக்கு மனசு சரியில்லை, எல்லோரும் உடனே கிளம்புங்க என்று அவர்களை திருப்பரங்குன்றத்திற்கோ, திருச்செந்தூருக்கோ கூட்டிக் கொண்டு போவார், அப்படி கோவிலுக்குப் போய்வருவதற்காக யாரிடமாவது ரெண்டாயிரம் கடன் வாங்குவார், பின்பு அதற்கு வட்டி கொடுக்கமுடியவில்லை என்று குடித்துவிட்டு வந்து அம்மாவை கண்டபடி ஏசுவார், கடன்தொல்லை கழுத்தை நெருக்கும் போது உடனே ஏதாவது ஒரு கோவிலுக்கு கிளம்பிவிடுவார், இன்றைக்கும் அப்படித்தான் நடந்தது,

விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மா எழுந்து குளித்துவிட்டு காதம்பரியை எழுப்பி குளிக்கச் சொன்னாள், டீ போட்டுக் கொண்டு அப்பாவை எழுப்ப முயன்ற போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அம்மா அவரது முதுகை தொட்டு எழுப்ப முயன்ற போது கைகளை தள்ளிவிட்டு சும்மாபோடி நாயே என்று கத்தினார், ஒருவேளை கோவிலுக்குப் போக வேண்டும் என்பதே மறந்து போய்விட்டதோ,

அம்மா டீயை அவரது படுக்கையில் அருகில் வைத்துவிட்டு  பாயில் உருண்டுகிடந்த ரமாவை எழுப்பிவிட்டாள்,  காதம்பரியும் ரமாவும் ஜடை பின்னிமுடித்த போது காலை விடிந்து நல்ல வெளிச்சம் வந்திருந்த்து.

அப்பொழுதும் அப்பா போதையில் உறங்கிக் கொண்டுதானிருந்தார், அவரது முகத்தில் எச்சில் வழிந்து காய்ந்திருந்தது, மயிர் வளர்ந்த அவரது பருத்த தொப்பை சீரற்று ஏறி இறங்கிக் கொண்டிருந்தது, அப்பாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பினாள் ரமா

“யப்பா, கோவிலுக்கு நேரமாச்சி எந்திரிங்க“

ம், ம் என்று மட்டும் ஒலி வந்தது, அவர் எழுந்து கொள்ளவில்லை, அவள் சோர்ந்து போனவளா தண்ணி ஊத்தி எழுப்பிவிடவா என்று அம்மாவிடம்  கேட்டாள்,

“வேணாம், கத்துவாரு, அவரா எந்திரிக்கட்டும்“

என்றபடியே அம்மா சட்னி அரைப்பதற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாள், காதம்பரி தனக்குப் பிடித்தமான ரோஸ்கலர் சுடிதாரை அணிந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள், இந்த சுடிதார் எடுப்பாக இல்லை, லேஸ் வைத்து கறுப்பில் ஒரு சுடிதார் எடுக்க வேண்டும், எப்படியும் அதற்கு ஆயிரம் ரூபா வேணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள், அம்மா சட்னி அரைத்து முடித்து அவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்பா எழுந்து கொள்வதற்காக காத்துக் கொண்டேயிருந்தார்கள், ரமா அலுப்பானவள் போல தான் பள்ளிக்கு கிளம்புவதாக சொன்னாள்.

“உங்கப்பா எந்திரிச்சா என்னை திட்டுவார்“ என்று அம்மா அவளை தடுத்துவிட்டாள்

அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட போது மணி பத்தரையாகியிருந்த்து, அவர் எழுந்து தேநீர் குடித்துவிட்டு  அவர்களை விசித்திரமாக பார்த்தபடியே மெதுவாக குளித்து, டிபன்சாப்பிட்டுவிட்டு, சந்தன கலர் கோடு போட்ட சட்டையை போட்டுக் கொண்டார், அவர்கள் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிய போது வெயில் ஏறியிருந்தது,

பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போகலாம் என்றாள் ரமா, அப்பா அதை கேட்டுக் கொள்ளவேயில்லை, வீட்டிலிருந்து நடந்தே அவர்கள் பேருந்து நிலையத்திற்கு போனார்கள், ரமா முகம் சுண்டிப்போனவளாக, வெயிலின் அசதி மேலிட மெதுவாக நடந்து வந்தாள்,

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, அப்பாவிற்கு தெரிந்த பஸ் டிரைவர் என்பதால் அப்பா டிரைவர் சீட்டுவழியாக ஏறி உள்ளே போய் சீட்டு பிடித்தார், மூன்று பேர் உட்காரும் சீட்டில் அவர்கள் நால்வரும் நெருக்கடித்து உட்கார்ந்து கொண்டார்கள், வெக்கையில் பேருந்தினுள் இருக்க முடியவில்லை, வியர்த்து வழிந்தது. அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல கூட்டத்தை விலக்கி கொண்டு கிழே இறங்கிப் போனார்,

ஒரு வயதான பெண் நிற்கமுடியாமல் அப்பா உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டாள், அப்பா அருகில் உள்ள பெட்டிகடையில் போய் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்து புகைக்க ஆரம்பித்திருந்தார், பேருந்து கிளம்புவதற்காக ஹார்ன் அடிக்கும்வரை அப்பா வரவில்லை, ரமா ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அப்பா , வாங்க, பஸ் கிளம்புது எனறு கத்தினாள்,

அப்பா சாவகாசமாக பேருந்தை நோக்கி வந்து மறுபடியும் டிரைவர் சீட் வழியாகவே உள்ளே வந்தார், அப்படி அவர் ஏறிவருவதை பேருந்தே பார்த்துக் கொண்டிருந்த்து, தனது சீட்டில் உட்கார்ந்திருந்த கிழவியை எழுந்து நிற்கும்படியாக அப்பா திட்டினார்

அந்த பெண் தனக்கு கால்வலி தாங்கமுடியலை என்றாள், கோபம் அம்மா மீது திரும்பியது

“அறிவு கெட்ட நாயி, மனுஷன் கூட்டத்தில முண்டி அடிச்சி சீட் பிடிச்சி குடுத்தா, கொழுப்பெடுத்து அதை ஏன்டி விட்டுக்கொடுத்தே,அப்போ நீ எந்திரிச்சி நில்லுடி, அப்போ தான் புத்தி வரும்“

என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்தார், அம்மா எழுந்து நின்று கொண்டாள், அவர்களின் சண்டைய கண்ட கிழவி முகம் சுருங்கிப்போனவளாக எழுந்து கொண்டு அம்மாவின் கையை பிடித்து உட்கார சொன்னாள்

“பரவாயில்லை நீங்களே உட்காருங்க்ம்மா“ என்றாள் அம்மா

“நான் புளியம்பட்டிவிலக்கில இறங்கிடுவேன், நீ உட்காரும்மா“ என்று அவள் அம்மாவை உட்கார வைத்தாள், அம்மா சீட்டின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள், பேருந்து கிளம்பியது, ரமா ஜன்னலுக்கு வெளியே ஒடும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்தபடியே வந்தாள், அப்பா அவளை சீட் மாறி உட்கார சொல்லிவிட்டு தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டார், ரமாவின் முகம் வாடிப்போனது, அதை உணர்ந்தவளை போல அம்மா அவளது கையை தன்னோடு சேர்த்து வருடத்துவங்கினாள்,

பேருந்து ரயில்வே கேட்டை கடப்பதற்குள் அப்பா உறங்கியிருந்தார், குறட்டை ஒலி பேருந்தையே திரும்பி பார்க்க வைத்த்து, பொது இடத்தில் எப்படி இப்படி குறட்டை விட்டு அவரால் உறங்கமுடிகிறது என்று காதம்பரிக்கு அவமானமாக இருந்தது ரமா ஏதாவது பேச முயற்சி செய்யும் போது அம்மா அப்பா தூங்குகிறார் என்பதால் பேச வேண்டாம் என்று சைகை காட்டினாள்,

சே, அம்மா ஏன் இப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள் என்று காதம்பரிக்கு ஆத்திர ஆத்திரமாக வந்த்து, எழுந்து வேறு சீட்டிற்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்த்து, அப்படி செய்தால் அதற்கும் அம்மா தான் திட்டுவாங்க நேரிடும்,

அம்மா பழகிப்போய்விட்டிருந்தாள், சமையலறை உத்திரத்தில் வாழும் பல்லியை போல எங்கே அப்பா தன்னை துரத்திவிடுவாரோ என்ற பயத்திலே அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள், இவ்வளவிற்கும் அவர்களுக்கு திருமணமாகி பத்தொன்பது வருஷங்கள் முடிந்துவிட்டன,

அப்பாவை திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்து அம்மா நிறைய அழுதிருக்கிறாள், ஆரம்ப நாட்களில் அவரை மாற்றமுயற்சித்து அடியும் வசவும் வாங்கியிருக்கிறாள், அவளது இடதுகையில் அப்பா தோசைகரண்டியால் போட்ட சூட்டு தழும்பு இப்போதுமிருக்கிறது,

சில சமயங்களில் மனக்கஷடத்தை தாங்கி கொள்ள முடியாத போது தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு சப்தமேயில்லாமல் அழுவாள், அப்பா குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நாட்களில் காதம்பரிக்கு ஆத்திரமாக வரும், ஆனால்  ஏதாவது பேசினால் கையில் கிடைத்த் பொருளை வைத்து அடிப்பார் என்று அவளுக்கு தெரியும்,

அப்பாவின் போதை அதிகமாகிவிடும் நாளில் அம்மா, ரமாவையும் காதம்பரியையும் பக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் மாமா வீட்டிற்குள் உறங்குவதற்கு அனுப்பி விடுவாள், பாயை சுருட்டிக் கொண்டு போய் அவர்கள் வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது கூச்சமாகவும் வேதனையாகவும் இருக்கும், உறக்க கலக்கத்தில் மாமா கதவை திறந்துவிட்டு ஒரமாக படுத்துக்கோங்க என்றபடியே உள்ளே போய்விடுவார், சைக்கிள் நிறுத்தும் இடத்தை ஒட்டி விரித்துக் கொண்டு அவளும் ரமாவும் உறங்குவார்கள், அது போன்ற நாட்களில் தூக்கமே வராது,

ஏன் இப்படி அடுத்தவீட்டில் வந்து உறங்குகிறோம், அப்பா ஏன் இப்படி குடித்துவிட்டு பிள்ளைகளிடமே மோசமாக நடந்து கொள்கிறார், என அழுது கொண்டேயிருப்பாள்,

ரமா ஒரு நாள் ஆற்றாமை தாளமுடியாமல் சொன்னாள்

அப்பா செத்து போனா தான்டி நமக்கு எல்லாம் விடிவுகாலம், அப்பா செத்த அன்னைக்கு தான் அம்மா நிம்மதியா தூங்குவா,  ஒருவேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்து போயிட்டா, நாம எல்லாம் தெருவில தான் நிக்கணும், அப்பா நம்மளை அடிச்சே கொன்னுருவார்

என்ன பதில் சொல்வது என தெரியாமல் காதம்பரி அவளை கட்டிக்கொண்டு அழுதாள், ரமாவும் கூட அழுதாள், இருவரது அழுகைச் சப்தம் உறங்கி கொண்டிருக்கும் ராமச்சந்திரமாமா வீட்டோருக்கு கேட்டுவிடக்கூடும் என்று நினைத்து வாயைப்பொத்திக் கொண்டு விம்மினார்கள், நீண்ட கேவலின் பின்பு காதம்பரி சொன்னாள்

“நான் இருக்கேன், நீ ஒண்ணும் பயப்படாதே“

அந்த நிமிசத்தில் தான் அவள் தன்னை முழுமையாக ஒரு அக்காவாக உணர்ந்தாள் அவர்கள் இருவரும் உறக்கமில்லாமல் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு இரவெல்லாம் விழித்துக்கிடந்தனர், காதம்பரி அதற்காகவே பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனே தான் வேலைக்கு போகப்போவதாக சொன்னாள்,

எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று மட்டும் தான் அப்பா கேட்டார்,  என்ன வேலைக்கு போகப்போகிறோம் என அன்று அவளுக்கு தெரியவில்லை,  ரெண்டாயிரம் கிடைக்கும் என்று மட்டும் சொன்னாள்,

நாலு வருசம் நீ சம்பாரிச்சா அதை சேத்து வச்சி உன்னை கட்டிகுடுத்திரலாம் என்று அப்பா சொன்னார்

தான் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று அந்த நிமிசம் மனதில் தோன்றியது, மீனாவின் அண்ணன் தான் அவளுக்காக பார்மசியில் வேலைக்கு ஏற்பாடு செய்தவன், தனக்கு தெரிந்த கடை என்பதால் ஒழுங்காக நடத்துவார்கள் என்று சொல்லி அவளை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்,

பேருந்து நிலையத்தின் வாசலில் அந்த மருந்துகடையிருந்தது, காலை எட்டு மணிக்கு போய்விட வேண்டும்,  இரவு ஒன்பது மணி வரை வேலை செய்ய வேண்டும், கடையில் அவளைப் போல இரண்டு பெண்களும், மூன்று பையன்களும் வேலை செய்தார்கள், மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்று கொண்டேயிருக்க வேண்டும், மூத்திரம் பெய்வதற்கு பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்கு தான் போக வேண்டும், ஆனால் அதற்குள் கால்வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும் அதனாலே  மூத்திரத்தை அடக்கி அடக்கி அவளுக்கு பலநாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது,

காதம்பரி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய்விடுவாள், மதியம் முக்கால் மணி நேரம் ஒய்வு, அந்த நேரத்தில் அவர்கள்  வெளியே போய்வருவார்கள், காதம்பரியும் விநோதினியும் தான் தோழிகள், அவர்கள் சாப்பிட்டுமுடித்தவுடன் ரோஸ்மில்க் குடிப்பதற்காக அருகாமையில் உள்ள பழரசக்கடைக்குப் போவார்கள், அந்த கடையின் சுவரில் மிகப்பெரிய டெலிவிஷன் ஒனறு மாட்டப்பட்டிருந்த்து, அதில் ஒளிபரப்பாகும் பாடலை பார்த்துக் கொண்டே ரோஸ்மில்க் குடிப்பார்கள், சிலநேரம் விநோதினி சாலையில் தென்படும் இளம்பையன்களைப் பற்றி கேலி பேசுவாள், அந்த அரைமணி நேரம் தான் அவளுக்கு விருப்பமான நிமிஷங்கள்,

நாள்முழுவதும் பார்மசி ஒனர் அவர்களை கடுமையாக திட்டுவார், அப்படியிருந்தும் இரவு கடையை விட்டு வெளியே போகும் போது  பத்திரமா போகணும் பாப்பா என்று சொல்லி ஒரு சாக்லெட்டை நீட்டுவார், தலையாட்டியபடியே அதை வாங்கிக் கொள்வாள், பிள்ளையார் கோவிலை தாண்டும் வரை அதை கையிலே வைத்திருப்பாள், கிட்டங்கி தெருவந்தவுடன் அந்த சாக்லெட்டை வாயிலிட்டு சுவைத்தபடியே நடக்க துவங்குவாள், அப்போது தான் வீடு வரை  சாக்லெட் கரையாமல் இருக்கும்,  ஒரு நாளின் மொத்த வலியையும் அந்த சாக்லெட் சுவை கரைத்துப் போகச்  செய்துவிடும்,

அப்பா இரவில்  தாமதமாகவே வீடு வந்து சேருவார், அவர் வருவதற்குள் பிள்ளைகள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் அம்மா கவனமாக இருப்பாள், அப்பா தெருவில் செருப்பு தேயச்  சப்தமிட்டு நடந்து வருவார், அந்த ஒசை தெளிவாக கேட்கும்,

அப்பா வரும்வரை வாசலில் உள்ள லைட் எரிந்து கொண்டிருக்கும் சிலவேளை ,

ஏன்டி களவாணி முண்டை உங்க அப்பனா கரண்டுபில் கட்டுவான் என்று திட்டுவார், லைட்டை அணைத்துவிட்டிருந்தால் ஏன்டி உங்க அப்பன் கரண்டு பில் கட்டுறானா, எதுக்குடி லைட்டை ஆப் பண்ணினே ,இருட்டில தடுமாறி விழுந்து மண்டை உடைச்சி செத்து போகட்டும்னு நினைக்குறயா என்றும் கத்துவார், அம்மா அந்த விளக்கை அதற்காக அணைப்பதேயில்லை, அது எரிந்து கொண்டிருந்தால் இன்னமும்  அப்பா வீட்டிற்கு வந்து சேரவில்லை என்று அர்த்தம்

பலநாட்கள் அப்பா போதை அதிகமாகி அவளது பார்மசிக்கு வந்து ஒனரிடம் சண்டையிட்டு கடன்வாங்கிப் போவதுண்டு, அது போன்ற நேரங்களில் அவளுக்கு தாங்கமுடியாத துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கும், சில நாட்கள் அப்பா நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி முட்டை பரோட்டா சாப்பிடச் சொல்லி பார்சலை பிரித்து வைத்து வற்புறுத்துவார், அவர்கள் பாதி உறக்கத்துட்ன் பரோட்டா சாப்பிடுவார்கள், என் செல்லம், உங்களை விட்ட எனக்கு யாருடா இருக்கா என்று அப்பா அர்த்தமில்லாமல் புலம்புவார், மறுநாள் காலையிலோ ஆத்திரம் அதிகமாகி உங்களை எல்லாம் விஷம்வச்சி கொல்லாம விடமாட்டேன், களவாணிநாய்க என்றும் கத்துவார்.

அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது நினைத்தாற் போல படமெடுத்து சீறுகிறது, அதற்கு இரைபோட ஆட்கள் தேவை, அதற்கு தான் குடும்பம்,

கொத்தி கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர்கள் உடலில் கலந்து விட்டிருக்கிறது, அவரை விலக்கவே முடியாது, தனியாக வேறு எங்கும் போய் வாழவும் முடியாது, பேசாமல் அம்மாவும் அவர்களும் மட்டும் எங்காவது வட இந்தியாவிற்கு ஒடிப்போய் பிழைத்துக் கொண்டால் என்ன, அம்மா வரமாட்டாள், அவளால் அப்பாவை கைவிட முடியாது,

•••

இப்படி காதம்பரி ஏதேதோ யோசனைகளுட்ன் பயணம் செய்து கொண்டிருந்தாள். பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் நின்றது, அப்பா இறங்கி போய் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார், அம்மா கொண்டு வந்திருந்த தண்ணீர்பாட்டிலை திறந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு அவளிடம் நீட்டினாள், காத்ம்பரி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ரமா ரகசியமான குரலில்  கேட்டாள்

“இறங்கி போயி கோன் ஐஸ் வாங்கிட்டு வருவமா“

காதம்பரி வேண்டாம் என்று மறுத்தாள், பேருந்து கிளம்பிய போது அப்பா பஸ்ஸில் ஏறி ஒரு ரோஜாப்பூவை அவர்களிட்ம் நீட்டினார், அம்மா கையில் வாங்கிக் கொண்ட போது சொன்னார்

“சில்லறை மாத்துறதுக்காக வாங்கினேன், தலையில வச்சிக்கோ“

ரோஜா வாடிப்போயிருந்தது, அம்மா காதம்பரியிடம் நீட்டினாள், அவள் வேண்டாம் என மறுத்தபோதும் அம்மா அவளது கூந்தலில் ரோஜாவை சொருகிவிட்டாள்,

யாராவது இப்படி பசிநேரத்தில் காசு கொடுத்து ரோஜாப்பூ வாங்குவார்களா என்று காதம்பரிக்கு எரிச்சலாக வந்த்து, இதற்கு ஒரு இளநீர்வாங்கிவந்தால் கூட வெக்கை தணிய குடித்திருக்கலாம், அப்பா பான்பராக் பாக்கெட் ஒன்றினை பிரித்து வாயிலிட்டபடியே டிரைவருடன் அரசியல் பேச ஆரம்பித்தார், பசியால் ஏற்பட்ட கிறக்கம் அவர்களை சோர்வடைய செய்திருந்தது, அப்பா உற்சாகமாக நாட்டுநலன் குறித்த கவலையுடன் பேசிக்கொண்டே வந்தார்

••

பழனி பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் அந்த உணவகமிருந்த்து, அப்பா அதன் வாசலில் அவர்களை நிற்க சொல்லிவிட்டு சாப்பாடு எவ்வளவு ரூபாய் என்று விலை கேட்பதற்காக உள்ளே போயிருந்தார், அம்மாவும்  காதம்பரியும் பெட்டிகடை ஒரமாக நின்று கொண்டார்கள், ரமா அப்பா கூடவே உணவகத்திற்குள் போனாள், சாப்பாடு முடிந்துவிட்டது என்றும் சப்பாத்தி, தோசை இரண்டு மட்டுமே இருப்பதாக கல்லாவில் இருந்த ஆள் சொன்னார்,

பரவாயில்லை அதையாவது சாப்பிடலாம் என்று ரமா சொன்னாள்,  டாக்சி ஸ்டாண்ட் அருகே வேறு ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று சொல்லிய அப்பா தான் அங்கே போய் பார்த்துவருவதாக சொல்லி அவர்களை நிற்க வைத்து போனார்,

காதம்பரியும் ரமாவும் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், அம்மா ஹோட்டல் வளாகத்தினுள் இருந்த வேப்பமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள், ரமா தனக்குப் பசிக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள்

ஹோட்டலைத் தேடிப்போன அப்பா மணி ஐந்தாகியும் வந்து சேரவேயில்லை, அம்மா போன் பண்ணி கேளுடி என்று காதம்பரியிடம் சொன்னாள், அப்பாவின் செல்நம்பருக்கு போன் செய்தாள் காதம்பரி, ரிங் போய்க் கொண்டேயிருந்த்து, அப்பா போனை எடுக்கவேயில்லை, எங்கே போய் தொலைந்தார் என்று ஆத்திர ஆத்திரமாக வந்த்து, பசி வேறு அவளுக்கு தலைவலியை உண்டுபண்ணியிருந்த்து,

அவர்களை வேப்பமரத்தடி நிழலில் உட்கார சொல்லிவிட்டு அம்மா தான் தேடிப்போய்  பார்த்து வருவதாக சொன்னாள்,

“நீ ஒண்ணும் அலைய வேண்டாம், நான் போயி பாத்துட்டு வர்றேன்“

என்று காதம்பரி சாலையை கடந்து நடக்க ஆரம்பித்தாள், எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை,  நீண்டு செல்லும் பஜாரில் ஆட்கள் முண்டியத்து போய்க் கொண்டிருந்தார்கள், சாலையோரம் மஞ்சள் சேலை கட்டிய இரண்டு பெண்கள் கையில் வேலுடன் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவன் குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான்,

குதிரை வண்டிகள் நின்றிருந்த இடத்தை கடந்து அவள் மேற்குபக்கமாக நீளும் பஜாரினுள் நடந்து போக துவங்கினாள், அருகருகே இரண்டு மூன்று சைவ உணவகங்கள் இருந்தன, இதை விட்டுவிட்டு அப்பா எங்கே போய் தொலைந்தார் என்று எரிச்சலாக வந்தது, ஒரு ஹோட்டலின் உள்ளே போய் அப்பா இருக்கிறாரா என்று தேடிப்பார்த்துவந்தாள், அப்பாவைக்காணவில்லை

காய்கறிகடைகள், வெற்றிலை கடைகள், சந்தனம் பூமாலை விற்கும் கடைகளை தாண்டி பஜார் விரிந்து கொண்டேயிருந்த்து, சிக்னல்வரை நடந்துவிட்டு மறுபடி அப்பாவிற்கு போன் செய்தாள், இப்போது போன் அணைக்கபட்டிருந்த்து,

துப்பட்டாவை தலையில் போட்டபடியே அவள் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பேருந்துகள், ஆட்டோக்களை கடந்து காதம்பரி நடந்து வந்த போது ஒரு டுரிஸ்ட் பஸ் வந்து நின்று ஆட்கள் சோம்பலுடன் இறங்கி போய்க் கொண்டிருந்தார்கள், அங்குமிங்குமாக சுற்றியலைந்து தேடிய போதும் அப்பாவை காணமுடியவில்லை,

ஒருவேளை தான் தேடிச்சென்ற போது அப்பா வந்து சேர்ந்திருந்தால் என தோன்றியது, அவசரமாக அம்மாவும் ரமாவும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு போனாள், அங்கே அவர்கள் இருவரையும் காணவில்லை,  காதம்பரிக்கு திகைப்பாக இருந்தது, எங்கே போய் விட்டார்கள் என்ற ஆத்திரத்துடன் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்,

சாலையின் இடது பக்கமிருந்த சினிமா போஸ்டர் அருகே ரமா மட்டும் தனியே நிற்பது தெரிந்தது, ஆனால் அம்மாவைக் காணவில்லை, காதம்பரி அவளை நோக்கி நேராக நடந்து போய் எரிச்சலான குரலில் கேட்டாள்

“அம்மா எங்கடி போனா“

“அப்பா எங்கயாவது குடிச்சிட்டு விழுந்துகிடப்பாரு, போயி கூட்டிகிட்டு வர்றேனு அப்பவே கிளம்பி போயிட்டா, ஒத்தையில தனியா உட்கார்ந்திருக்க பயமா இருந்துச்சி, அதான் இங்கே வந்துட்டேன்“

அம்மா எந்த மதுபானக்கடையில் போய் அப்பாவைத் தேடுகிறாளோ, ஒரேயொரு முறை காதம்பரி அப்பாவை தேடி டாஸ்மார்க்  கடைக்குள் போயிருக்கிறாள், அப்பா ஒரு பிளாஸ்டிக் ஸ்டுலில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார், அவளைக்கண்டதும் நீ எதுக்குடி இங்கே வந்தே என்று சப்தம் போட்டார், அம்மா குடிபோதையில் கிடக்கும் அப்பாவை பலமுறை தூக்கி கொண்டு வந்திருக்கிறாள், இன்றைக்கும் அப்பா அப்படி எங்காவது குடித்துவிட்டு கிடக்ககூடும், அம்மாவை நினைக்கையில் வருத்தம் கவ்வியது,

“சாப்பிட்டயாடி“ என்று ரமாவிடம் கேட்டாள் காதம்பரி

“நீ போனதும் அம்மா என்கிட்ட இருபது ரூபா குடுத்து சாப்பிட்டு வரச்சொன்னா, நான் தனியா போயி ஒரு தோசை சாப்பிட்டு வந்துட்டேன்“ என்றாள்,

காதம்பரிக்கு அலைந்து திரிந்த அயர்ச்சியில் பசியடங்கி போயிருந்த்து, உடம்பெல்லாம் கசகசப்பும் வியர்வையும் அதிகமாகியிருந்தது, எங்காவது கொஞ்சநேரம் காலை நீட்டி படுத்தால் தேவலை என்பது போல தோணியது, ரமாவை இழுத்துக் கொண்டு மறுபடியும் அதே வேப்பமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள், சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவன் காதம்பரியை வெறித்து பார்த்து உதட்டை கடித்துக்  கொண்டிருந்தான், இவன் ஒருவன் நேரம்காலம் தெரியாமல் காதலித்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. அவர்கள் இருவரும் சாலையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்கள்,

வெயில் மங்கி மழை வரப்போவதைப் போல மேகம் இருட்டிக் கொண்டுவந்தது, , உனக்கு ஒரு டீ வாங்கிட்டு வரட்டுமாக்கா என்று கேட்டாள் ரமா,

வேண்டாம் என்றபடியே நெற்றியை பிடித்தபடியே உட்கார்ந்திருந்தாள் காதம்பரி, சாலையில் செல்லும் யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமா,

நீண்ட நேரத்தின் பிறகு ஒரு ஆட்டோ வேப்பமரத்தடியின் அருகில் வந்து நின்றது, அதன் உள்ளிருந்து அம்மா இறங்கினாள், ஆட்டோவின் உள்ளே அப்பா போதை அதிகமாகி முகம் கோணி சரிந்து கிடந்தார்,  வாந்தி எடுத்திருக்க கூடும், சட்டை ஈரமாக தெரிந்த்து, அம்மா இறங்கிவந்து காதம்பரியிடம் சொன்னாள்

“உங்கப்பா புல்லா குடிச்சிருக்காரு, அவர் தூங்கி எந்திரிச்சா தான் நாம கோவிலுக்கு போக முடியும், எங்காவது ஒரு ரூம்போட்டு தங்கியிருக்க வேண்டியது தான், தேவஸ்தான விடுதியில் ரூம் வாங்கி தர்றேனு ஆட்டோகாரர் செர்ல்லியிருக்கார், வந்து ஏறுங்க,“

ஆட்டோவிற்குள் ரமாவும் காதம்பரியும் ஏறிக் கொண்டார்கள், அம்மா ஒண்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள், அப்பாவின் வாயிலிருந்து பீறிடும் மதுவின் வாசனை முகத்தில் அடித்த்து

அவர்கள் தேவஸ்தான விடுதியில் ரூம் போட்டபோது காதம்பரி தான் கையெழுத்து போட்டாள், அப்பாவை கைத்தாங்கலாக அம்மாவே பிடித்துக் கொண்டு அறைக்குள் கொண்டு போனாள், அவரது கால்கள் துவண்டுபோய் நடக்க மறுத்தன, அவர் தன்னை அறியாமல் எதையோ உளறிக் கொண்டுவந்தார், அறையில் இருந்த மின்விசிறியைப் போட்டு அப்பாவை படுக்க வைத்தாள் அம்மா, அவரது சட்டை பையில் இருந்த பணம் ரசீதுகள் செல்போன் யாவும் கிழே விழுந்தன, அதை எடுத்து அம்மா தனது கூடையில் வைத்துக் கொண்டாள்,

ரமாவும் காதம்பரியும் விடுதியின் வராந்தாவில் கிடந்த மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள், அங்கிருந்து பார்த்தால் மலை நன்றாக தெரிந்த்து, அம்மா அறையின் கதவை ஒரமாக சாத்திவிட்டு வெளியே வந்தாள்,

அம்மா எப்படி அப்பாவை கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை, அவள் அசதியோடு சேலையில் முகத்தை துடைத்துக் கொண்டு சாப்பிட்டயா என்று காதம்பரியை கேட்டாள்,

இல்லைம்மா என்றாள் காதம்பரி

“நீயும் இவளும் போயி சாப்பிட்டு எனக்கு ஒரு கப் காபி வாங்கிட்டு வாங்க,  கிறுகிறுனு வருது“ என்று நூறு ரூபாய் பணத்தையும் சிறிய சில்வர் தூக்குவாளியையும் நீட்டினாள்

அவர்கள் இருவரும் அருகில் இருந்த சிற்றுண்டி நிலையத்திற்கு போனார்கள், சூடாக பூரி போட்டுக் கொண்டிருந்தார்கள், இருவரும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிற்கு பூரியும் காபியும வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்,

அம்மா மரப்பெஞ்சில் களைத்து போய் படுத்துகிடந்தாள், அவளை எழுப்பி சாப்பிடச்சொன்ன போது  பசிவேகத்தில் அவரசரமாக பூரியை இரண்டு மூன்றாக பிய்த்து சாப்பிட்டுவிட்டு காபியை சூட்டோடு குடித்தாள்

தூக்கத்திலே அப்பா பிதற்றும் சப்தம் கேட்டது

அம்மா காபி வாங்கிய தூக்குவாளியை அருகில் இருந்த திருக்கு குழாயில் கழுவிவிட்டு அவர்களிடம் சொன்னாள்

“நீங்க வேணும்னா, மலை ஏறிப்போய் சாமி கும்பிட்டு வர்றீங்களா“

இருவரும் ஒரே நேரத்தில் வேணாம்மா என்றார்கள், அம்மா அவர்களை கட்டாயப்படுத்தவில்லை, அம்மா அறைக்குள் போய் வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்,

இரவாகும்வரை ரமாவும் காதம்பரியும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அருகாமை அறை ஒன்றில் இருந்த மூன்று வயது சிறுமி  பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்,  மலையின் மீது பிரகாசமாக விளக்குகள் எரியத்துவங்கின, படி வழியாக ஏறிப்போகின்றவர்கள் கடந்து போவது தெரிந்த்து, மனம் கனத்து போய்  வேதனையோடு அப்பா உறங்கிக்  கொண்டிருந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள் காதம்பரி,

ஒரு மனிதரால் எத்தனை பேருக்கு துயரம், அப்பா ஏன் இதை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்,

நினைக்க நினைக்க துயரம் பீறிட்டுக் கொண்டிருந்த்து, அம்மா உறக்கம் கலைந்து  எழுந்து முகம்கழுவிட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள், யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை, அவளது கண்களின் அப்பியிருந்த சோகமும் வேதனையும்  காதம்பரியை ரணமாக்கியது

அப்பா இரவு மணி பத்தாகியும் எழுந்து கொள்ளவில்லை, அம்மா அருகில் உள்ள கடையில் போய்  அப்பாவிற்காக நாலு இட்லி வாங்கி வந்து படுக்கை அருகே வைத்துவிட்டு அவளும் படுத்துக் கொண்டாள்,

மீதமிருந்த ஒரு போர்வையை விரித்து காதம்பரியும் ரமாவும் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டார்கள், இருவருக்கும் உறக்கம் கூடவேயில்லை, பேசாமல் இப்படியே செத்துபோய்விட்டால் என்னவென்று காதம்பரிக்கு தோன்றியது, ரமா அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்,

திடீரென  வெளியே மழைக்காற்றும் மின்னல்வெட்டுமாக இருந்த்து.  அம்மா எழுந்து ஜன்னல்களை மூடிவைத்தாள், சட்டென மின்சாரம் துண்டிக்கபட்டது, இருட்டில் அந்த அறை ஒரு சவப்பெட்டி போலவே இருந்தது, அப்பா மின்சாரமில்லாத புழுக்கத்தை உணர்ந்தவரைப் போல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

எப்போது உறங்கினாள் என்று காதம்பரிக்கு தெரியவில்லை, அவள் விழித்து கொண்ட போது வாசற்கதவு திறந்து கிடந்தது, மணி ஆறுக்கும் மேலாக இருக்ககூடும், இன்றைக்கு லீவு சொல்லவில்லை, நிச்சயம் பார்மசி ஒனர் தன்னைத் திட்டி தீர்க்கப்போகிறார், ரமா உருண்டு கட்டிலின் அடியில் போய் கிடந்தாள், படுக்கையில் இருந்த அப்பாவை காணவில்லை, அம்மா எங்கே போனாள என தேடினாள், அவளையும் காணவில்லை, வராந்தாவிற்கு வந்து பார்த்த போது அம்மா தூக்குவாளியில் காபி வாங்கி கொண்டு அவசரமாக நடந்து வருவது தெரிந்த்து,

காதம்பரி அம்மாவை முறைத்தபடி இருந்தாள், அறைக்கதவை திறந்து உள்ளே பார்த்த அம்மா உங்க அப்பா எங்கடி என்று கேட்டாள்

“நான் பாக்கலே“ என்றாள் காதம்பரி

“காபி வாங்கிட்டு வர்றதுக்குள்ளே எங்க போயி தொலைஞ்சார்“ என அம்மா அலுத்துக் கொண்டாள்

இந்த மனுஷனுக்காக எதற்கு அம்மா இப்படி ஒடியோடி உழைக்கிறாள் என்று ஆத்திரமாக வந்தது, அப்பாவைத் தேடி அம்மா வராந்தாவின் கடைசிவரை நடந்த போது காதம்பரி அம்மாவை திட்டினாள்

“நீ இரும்மா, அவரு தானா வருவார், இல்லே அப்படியே போய் தொலையட்டும்“

அம்மா திரும்பிவந்து மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்

காலை எட்டு மணி இருக்கும் போது அப்பா தலையை மொட்டை அடித்து சந்தனம் பூசி கழுத்தில் ஒரு மாலை போட்டுக் கொண்டு நெற்றி நிறைய திருநீறுடன் விடுதியின் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தார்,

ரமாவும் காதம்பரியும் அந்த விசித்திர கோலத்தை முறைத்து பார்த்தபடியே இருந்தார்கள்

“சரஸ்வதி, சாமி கும்பிட்டாச்சி, இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு, நாம ஊருக்கு கிளம்பலாம்லே“ என்றார் அப்பா

அம்மா சரியென தலையாட்டினார், அவர்கள் நடந்து பேருந்து நிலையத்தை நோக்கி போகையில் அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல பாக்கெட்டில் இருந்த திருநீறு பொட்டலத்தை பிரித்து பூசிக்கோங்க என்றார், அவர்கள் மௌனமாக திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்கள்

அப்பா யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டே நடந்தார்

“பேமிலியோட பழனிக்கு வந்து சாமி கும்பிட்டு இப்போ தான் பஸ் ஏறப்போறேன், மதியம் வந்துருவேன், நல்ல தரிசனம், இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும் “

அவர்கள் பேருந்து நிலையத்தினுள் உள்ளே போன போது அப்பா சொன்னார்

“பஸ்ல போற வழியில ஒட்டன்சத்திரத்துகிட்டே டிபன் சாப்பிட்டுகிடுவோம், இங்கே வேணாம் “

அம்மா அதற்கும் சரியென்றே தலையாட்டினாள், அதைக்கேட்டு ரமா கேலியாக காதம்பரியிடம் கண்ஜாடை காட்டினாள், அவளால் சிரிக்கமுடியவில்லை, முட்டிக் கொண்டுவரும் அழுகையை விழுங்கிக் கொண்டு தலைகுனிந்தபடியே தனியே நடந்து கொண்டிருந்தாள் காதம்பரி.

அவர்கள் ஒரு குடும்பமாக போய்க் கொண்டிருந்தார்கள்,

•••

தினகரன் மலரில் வெளியானது.
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on September 29, 2013, 10:25:59 AM
காந்தியோடு பேசுவேன்

சிறுகதை

காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது

ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தன, ஒரு அரிக்கேன் விளக்கு படுக்கையின் அருகில் இருந்த்து,

காந்தி இந்த ஆசிரமத்தில் மின்சாரத்தை பயன்படுத்தினாரா என்று ராகேல் என்னிடம் கேட்டாள்

இல்லை என்றே நினைக்கிறேன், ஆனால் மின்சாரத்தின் வருகை இந்திய கிராமங்களின் இயல்பை மாற்றிய முக்கியமான அம்சம் என்பதை காந்தி நிச்சயம் உணர்ந்திருப்பார்  என்றேன்

காந்தியின் அறையில், மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு அலமாரி, பித்தளை செம்புகள், முக்காலி, இருந்தன, அருகில் ஒரு பழைய மரக்கட்டில், மிகச்சிறிய ஜன்னல்,

தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்,

தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்து வருகிறேன், ஒருவகையில் காந்தியின் மீதான எனது ஈர்ப்பிற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்வேன்

காந்தி வாழ்ந்த  காலத்தில் அந்த அறைக்குள் வந்து நிற்பது பலருக்கும் நெகிழ்வான சம்பவமாக இருந்திருக்கும், ஒரு நிமிசம் மனக்கண்ணில் அந்த காட்சி தோன்றி மறைந்த்து, காந்தி இந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார், காந்தி வெறுமனாக உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கவே முடியாது, ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்து கொண்டேயிருந்திருப்பார், ஏன் அவருக்குள் இத்தனை பரபரப்பு, வேகம், ஒய்வு என்பதை ஏன் அந்த மனிதன் பலவீனமாக கருதுகிறார் என்றெல்லாம் எனக்கு தோன்றியது

காந்தி நிமிசங்களை எண்ணி வாழ்ந்திருக்கிறார்,  நான் அப்படியில்லை, சோம்பலும் எதிலும் திருப்தியின்மையும், தேவையற்ற பயமும் கவலையுமே என்னை உருவாக்கின, நான் கல்வியின் வழியே என் வாழ்வினை உருவாக்கி கொண்டவன், காந்தி படிப்பை கைவிட்டு தனது வாழ்க்கையை முன்னெடுத்து சென்றவர், வாழ்வின் முடிவில் ஒரு எளிய இந்திய விவசாயியை போல தான் அவர் இருந்தார், அதிகமான நம்பிக்கை, அதிகமான ஏமாற்றம் இரண்டும் அவருக்கு பரிசாக கிடைத்தன,

காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப்  போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்,

எனக்கு காந்தியை அறிமுகப்படுத்தியது என்னுடைய அம்மா, என் பனிரெண்டு வயதில் காந்தியை பென்சிலில் படம் வரைந்து முதல் பரிசு வாங்கி வந்ததை கண்டு சந்தோஷப்பட்டபடியே தத்ரூபமா வரைஞ்சிருக்கே, நான் காந்தியை நேர்ல பாத்து இருக்கேன் என்று அம்மா சொன்னார்

என்னால் அதை நம்ப முடியவில்லை, அம்மா எப்படி காந்தியை நேரடியாக பார்த்திருப்பாள், ஒரு வேளை காந்தி அவளது பாட்டைகுளம் கிராமத்திற்கு வந்திருந்தாரா எனக்கேட்டேன்,

என் ஊருக்கு காந்தி வரவில்லை, ஆனா நான்  காந்தியை  அவரது வார்தா ஆசிரமத்திற்கே தேடிப்போய் பார்த்திருக்கேன்  என்றாள்

நிஜமா எனக்கேட்டபோது, அது ஒரு பெரிய கதை, அப்போ நீ எல்லாம் பொறக்கவேயில்லை,  என்றபடியே தனது இடதுகையை நீட்டி காட்டினாள், அம்மாவின் இடதுகை சற்று வளைந்து துருத்திக் கொண்டது போலதானிருந்தது,

இந்த கை காந்திக்காக உடைப்பட்டது, யார் உடைச்சா தெரியும்லே உங்கப்பா, காந்தியை பாக்கப் போனதுக்கு கிடைத்த தண்டனை, உங்கப்பாவுக்கு காந்தியை சுத்தமா பிடிக்காது, உங்கப்பா என்ன பெரும்பான்மை ஆம்பளைகளுக்கு காந்தியை பிடிக்காது, அதிகாரம் பண்ண ஆசைப்படுற ஆம்பளை காந்தியை வெறுக்கதானே செய்வாங்க, ஆனா பெண்களாலே காந்தியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும்,

வார்தாவுக்கு போயி காந்தி முன்னாடி நின்னுகிட்டு இருந்தப்போ அவரை ஒரு ஆணாக வேறுபடுத்தி பாக்க என்னாலே முடியலை, பேச்சு வராமல் நாக்கு தடிச்சி போனது மாதிரி ஆகிருச்சி, என்னை மீறி அழுதுட்டேன், பாபுஜி கருணையான கண்களோட சிரிச்சிகிட்டே என் கிட்டே வந்து ஏதோ சொன்னார், எனக்கு அப்போ ஒரு வார்த்தை இங்கிலீஷ் தெரியாது, ஹிந்தியும் தெரியாது, ஆனா பாபுஜி எனக்கு ஆறுதல் சொல்றாருனு மட்டும் புரிஞ்சது,

அங்கேயே பாபுஜியோட ஆசிரமத்திலே வாழ்நாள் பூரா இருந்திர மாட்டமானு ஏக்கமா இருந்துச்சி, அதுக்கு கொடுத்து வைக்கலே, திடீர்னு ஒரு நாள் உங்கப்பா வந்து இழுத்துட்டு வந்துட்டார்,  ஆசிரமத்தை விட்டு போகமாட்டேனு பிடிவாதம் பண்ணினேன், பாபுஜி என் தலையை தடவி ஊருக்கு போயிட்டு வரச்சொல்லி அனுப்பி வச்சார், அவர் சொல்லுக்கு கட்டுபட்டு தான் உங்கப்பாவோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன் , என்றார்

நீ எதுக்காக அம்மா காந்தியை தேடிப்போனே என்று கேட்டேன்,

அம்மா பதில் சொல்லவில்லை, மௌனமாக இருந்தாள், பிறகு லேசாக தலையை ஆட்டியபடியே அதை பத்தி உனக்கு சொன்னா புரியாது, சொல்றதுல எனக்கும் விருப்பம் இல்லே என்று பேச்சை துண்டித்துவிட்டாள்

அதன்பிறகு ஒன்றிரண்டு முறை காந்தியை பற்றி பேச்சு வரும்போது அம்மா வார்தாவிற்கு ஒடிப்போன கதையின் ஒரு சில நிகழ்வுகளை கேட்டிருக்கறேன், அப்பா ஒரு முறை கோபத்தில் உங்கம்மா ஒரு ஒடுகாலி முண்ட, வேற ஆம்பளையா இருந்தா இந்தநேரம் அவளை வெட்டி கொன்னு புதைச்சிருப்பான் என்று கத்தினார்,

அதை தான் எப்பவோ செய்துட்டீங்களே என்று அம்மா அமைதியாக சொன்னாள், அப்பா அம்மாவை முறைத்தபடியே வெளியேறிப் போய்விட்டார்

பொம்பளைங்க அரசியல் பேசினா உங்கப்பாவுக்கு பிடிக்காது,  அதுவும் படிக்கிற பொம்பளைன்னா அவருக்கு எட்டிக்காய், இதுல காந்திகட்சியில வேற சேந்துகிட்டா, அதான் உங்கப்பாவுக்கு அம்மாவுக்குமான பிரச்சனை என்று ஒரு முறை வெங்கடரத்னம் மாமா என்னிடம் சொன்னார்

அந்த வயதில் இதை வெறும் கணவன் மனைவி சண்டை  என்று மட்டும் தான் நினைத்திருந்தேன், ஆனால் இது குடும்ப சண்டையில்லை, வெறுப்பிற்கும் அன்பிற்குமான ஊசலாட்டம் என்பதை பின்னாளில் தான் புரிந்து கொண்டேன், அம்மாவை குடும்ப வாழ்க்கை இருட்டிற்குள் பிடித்துத் தள்ளிய போது அதிலிருந்து காந்தி தான் அவளை மீட்டிருக்கிறார், தனது உண்மையான செயல்களின் வழியே மற்றவர்களின் ஏளனத்தை கடந்து செல்ல முடியும் என்பதை நிருபணம் செய்திருக்கிறார், தனது மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்றுதந்திருக்கிறார், எல்லாவற்றையும் விட அடுத்தவர் பொருட்டு வாழ்வது எப்போதும் வலிமிக்கதே, ஆனால் அதில் கிடைக்கும் மனசாந்தி பெரியது என்பதை காந்தியே உணர்த்தியிருக்கிறார்

இதைப்பற்றி பேசுகையில் ராகேல் சொன்னாள்

லட்ஸ், உண்மையில் கடவுள் கைவிட்டு போன உலகை காந்தி நிரப்பியிருக்கிறார், அது தான் உன் அம்மா விஷயத்தில் நடந்திருக்கிறது, இரண்டு முறை கர்ப்பசிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள், வறுமை, கூட்டு குடும்பத்தின் அவமானம் இத்தனையும் உனது அம்மாவை மூச்சு திணற அமுக்கும் போது காந்தி மட்டும் தான் அவளுக்கான நம்பிக்கை வெளிச்சமாக இருந்திருக்கிறார், காந்தி என்ற சமூகபோராட்டக்காரனை விட காந்தி என்ற இந்த எளிய நம்பிக்கை அதிகம் வலிமையுடையது, அதை உணர்ந்தவர்கள் காந்தியை எப்போதும் நேசித்து கொண்டுதானிருக்கிறார்கள்

ராகேல் சொல்வது உண்மை, இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு  சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ராகேலுக்கு வன்முறையின் கொடூரம்  தெரியும்,  அவள் யூதப்பெண், எனது மாணவியாக அறிமுகமாகி என்னை திருமணம் செய்து கொண்டவள், அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அதிகம் ஒட்டுதல், அந்த பெண்கள் நித்யமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் என்னிடம் சொன்னது நிஜமான உண்மை

நான் லண்டனுக்கு பொருளாதாரம் படிக்க போய் அங்கேயே வேலை பார்க்க துவங்கிய போது அம்மா ஒரு முறை போனில் கேட்டாள்

ஒரேயொரு தரம் லண்டனுக்கு வரணும்னு ஆசையா இருக்கு லட்சுமா,

அம்மா ஒருத்தி தான் லட்சுமணன் என்ற என் பெயரை லட்சுமா என்று அழைப்பவள், லண்டன்வாசிகள் என்னை லட்ஸ் என்கிறார்கள், அப்பாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் மணா, ஆனால் அம்மா என்னை லட்சுமா என்று அழைக்கையில் அது பெண் பெயர் போலவே இருக்கிறது, அம்மா அப்படி அழைக்கையில் அதில் ஒரு தனியான பிரியம் கலந்திருக்கும்,

அடுத்த முறை ஊருக்கு வரும்போது உன்னையும் லண்டனுக்கு அழைச்சிட்டு வர்றேன்மா என்றேன்

இல்லைடா, நானா.  தனியா லண்டனுக்கு வரணும்னு ஆசை, அதுவும் கப்பல் போகணும்னு ஆசை என்றாள் அம்மா

எனக்கு புரிந்துவிட்டது, இந்த ஆசையின் அடிநாதமாக இருப்பதும் காந்தியின் மீதான பற்றுதல், பத்தொன்பது வயதில் மொழி தெரியாமல் லண்டனுக்கு படிக்க போன காந்தியின் மனதை தானும் அனுபவித்து பார்க்க விரும்புகிறாள், அப்படி என்ன காந்தியின் மீது கிறுக்குதனம்,

நான் சிரித்தபடியே இப்போ கப்பல் பயணம் கிடையாதும்மா, நீ பிளைட்ல தனியா வரலாம் என்றேன்

அப்படித்தான் அம்மா தனி ஆளாக லண்டனுக்கு பயணம் செய்து வந்திறங்கினாள், முற்றிய முதுமை அவளுக்கு தனியான சோபையை தந்திருந்த்து, ஆரஞ்சு நிற சால்வை ஒன்றினை போர்த்தியபடி வெளிர்சிவப்பு வண்ண சேலையை அழகாக உடுத்தியபடியே கொக்கின் வெண்மை போன்ற தலைமுடியுடன், சோகை படிந்த முகத்துடன் அம்மா இறங்கி மெதுவாக கண்ணாடி கதவுகளை தாண்டி நடந்துவந்தாள்,

அவளது கண்களில் ஒரு துளி பயமில்லை, கடந்து செல்லும் பயணிகள் யாரையும் அவள் ஏறிட்டு கூட பார்க்கவில்லை, நிதானமாக, மெதுவாக அவள் வெளியேறும் வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த காட்சி என் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது

இமிகிரேஷனில் ஏதாவது கேட்டார்களா என்று இறுக்கமான குரலில் கேட்டேன்

எதற்காக இந்த பயணம் என்று கேட்டார்கள், நான் சும்மா என்று சொன்னேன், இமிகிரேஷன் அதிகாரி  சிரித்தபடியே சும்மா லண்டனுக்கு வருகின்றவர்கள் இதை விட்டு ஒரு போதும் திரும்பி போக மாட்டார்கள், நீங்களும் அப்படி ஆகப்போகிறீர்கள் பாருங்கள் என்றார்

எனது நினைவுகள் என்னை வெளியூரில் தங்கவிடாது என்று சொன்னேன், அவர் வியப்புடன் கையை உயர்த்தி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்றார், அவ்வளவு தான் நடந்தது என்றபடியே காரின் கண்ணாடி வழியாக தெரியும் பரபரப்பான லண்டன் வீதிகளை பார்த்தபடியே வந்தார்,

அப்பா இறந்து போன கடந்த பத்து வருஷங்களாக அம்மா நாள் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறாள், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மாறிமாறி படிக்கிறாள், சில இரவுகளில் அவள் படிப்பதை காணும் போது ஏதோ பரிட்சைக்கு படிப்பது போல இருக்கும், சில சமயம் நாற்காலியில் சாய்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்து கொண்டு தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பாள், அம்மாவிற்கென தனியான உலகம் ஒன்றிருக்கிறது, அவள் தன்னை சுற்றி தானே ஒரு அரூபவலையை பின்னிக் கொண்டுவிட்டாள்

லண்டனில் அம்மா என்னுடன் இரண்டரை மாதம் தங்கியிருந்தாள், தனியாக அவளாக டியூப் ரயிலில் பயணம் செய்து காந்தி படித்த யூனிவர்சிட்டி காலேஜ், காந்தி நடந்த வீதிகள், காந்தி உறுப்பினராக இருந்த வெஜிடேரியன் சங்கம் என்று ஒவ்வொன்றாக தேடி பார்த்துக் கொண்டிருந்தாள், அதைப்பற்றி என்னிடம் அதிகம் பேசிக் கொண்டது கிடையாது, சிலவேளைகளில் எனது மனைவி ராகேலிடம் காந்தியை பற்றி பேசியிருக்க்கூடும்,

ராகேலும் அம்மாவும் பேசிக் கொள்வது வேடிக்கையாக இருக்கும், அம்மா ராகேலை ஒரு பள்ளிசிறுமியை நடத்துவது போலவே நடத்தினாள்,

ஒரு நாள் ராகேல் என்னிடம் கேட்டாள்

பொதுவாக இந்தியப்பெண்கள் அதிகம் தலையை ஆட்டுவார்கள், உன் அம்மா பேசும்போது அப்படியில்லையே அது ஏன்

நான்  அப்போது தான் அப்படி ஒரு விஷயமிருப்பதை கவனித்தேன்,  என்ன சொல்வது எனப் புரியாமல் சிரித்தபடியே பெண்கள் எந்த ஒன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள், உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றேன்

ராகேல் சொன்னான்

உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பலநேரங்களில் பயமாக இருக்கிறது, அவரது கண்களில் சொல்லப்படாத விஷயங்கள் புதையுண்டுகிடக்கின்றன,  அவர் ஒரு விசித்திரமான  பறவை.

அம்மா ஒரு விசித்திரமான பறவை என்று ராகேல் சொன்னது எனக்கு பிடித்திருந்தது, நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், வெறும் பறவை இல்லை, காந்தியைத் தேடும் பறவை,

அம்மா காந்தி வழியாக என்ன தேடுகிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் அவளுடன் நானும் வருவதாக சொன்னேன், அம்மா மறுக்கவில்லை, இருவரும் ஒன்றாக ரயில் பிடித்துப் போய் டோவர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காபி அருந்திவிட்டு அம்மா வழக்கமாக செல்லும் பழைய நூலகம் ஒன்றிற்கு சென்றோம்,

அம்மா பாதியில் விட்டுவந்த ஒரு புத்தகத்தை எடுத்துவந்து மௌனமாக வாசிக்க துவங்கினாள், அம்மா உட்கார்ந்திருந்த ஜன்னலில் இருந்து லண்டன் நகரம் ஒளிர்வது தெரிந்த்து, படிப்பதற்காக அந்த இடத்தை அம்மா தேர்வு செய்திருக்கவில்லை, அவள் லண்டன் நகரின் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கிறாள்,

இந்த நகருக்கு என்றே ஒளிரும் மஞ்சள் வெளிச்சத்தை, ஈரம் படிந்த காற்றை அவள் தனக்குள் நிரப்பிக் கொள்கிறாள், அம்மா நீண்ட நேரம் மௌனமாக இருந்துவிட்டு சொன்னாள்

“காந்தி லண்டனுக்கு வந்த போது தனது தாயை விட்டு விலகி வந்திருப்பதை அதிகம் உணர்ந்திருப்பார், இந்த நகரம் பிரிவை அதிகமாக உணரவைக்கிறது “

நிஜம் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், பல்கலைகழகத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பனிக்கட்டி உடைவது போல மனதிற்குள் ஏதோவொரு கடந்தகால சம்பவம் உடைபட்டு பிரிந்து போன உறவுகளை பற்றிய நினைவுகள் பீறிடத்துவங்கிவிடும், அந்த மனநிலை ஒன்றிரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருந்து பின்பு வடிந்து போய்விடும்,

அதைப்பற்றி ராகேல் சொல்வாள்

இந்தியர்கள் அதிகம் கடந்த காலத்தை பற்றி  நினைக்கிறார்கள், வருத்தபடுகிறார்கள், அது தான் அவர்களின் பலமும் பலவீனமும்,

அவள் சொல்வது உண்மை, ஆனால் அது வெறும் வருத்தமில்லை, ஆழமான தன்னுணர்வு, ஒரு தோழமை, சொல்லால் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு நிலை,  அது போன்ற நாட்களில் ராகேலுடன் நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன்,

அவள் அதை புரிந்து கொண்டிருப்பாள், அவளைப்போன்ற யூதப்பெண்களுக்கு ஆண்களின் பேச்சை விட மௌனம் அதிகமாக பிடிக்கிறது, எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

அம்மா  நூலகத்தில் வைத்து என்னிடம் சொன்னாள்

காந்தி தனது தந்தையை பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர், தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராக தன்னை உணர்ந்தவர், அவரும் ஒரு நல்ல தந்தையில்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார், தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன, காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளது, அது வலிமையானது, எளிதில் வீழ்ந்துவிடாதது, உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே என்றாள்

அம்மா ஆழ்ந்து பேசுகிறாள், புத்தகங்கள் அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கின்றன, எது எனக்கு வெறும் தகவலாக இருக்கிறதோ, அது அவளுக்கு அனுபவமாக மாறியிருக்கிறது என்று மட்டும் புரிந்த்து,

மற்றபடி காந்தி என்னை பெரிதாக வசீகரிக்கவில்லை

அதன்பிறகு ஒரு நாள் அம்மாவும் நானும் நடந்தே விக்டோரியா பார்க்கிற்கு போனோம், அம்மா அன்று தான் வார்தாவிற்கு தான் ஒடிப்போன கதையை முழுமையாக சொன்னாள்

••

அப்போது அம்மாவிற்கு வயது பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பதினாலு வயதில் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது, திருமணத்திற்கு பிறகு ஆறுமாதம் அவள் அம்மாவீட்டிலே இருந்தாள், அந்த நாட்களில் அப்பா சால்ட் இன்ஸ்பெக்டராக மரக்காணத்தில் வேலையில் இருந்தார்,

முற்றிய கோடைகாலத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு அப்பா கடற்கரையில் தனக்கு ஒதுக்கபட்ட வீட்டிற்கு புதுக்குடித்தனம் போயிருந்தார், ஆள் அரவமற்ற அந்த வீடு, மினுக்கும் உப்பளங்கள், உப்பு காய்ந்து உருகும் மணம், கடற்காகங்களின் பீதியூட்டும் குரல், கொதிக்கும் வெயில் எல்லாமும் ஒன்று சேர்ந்து இரண்டுவாரத்திலே அம்மாவின் உடல்நிலையை மோசமாக்கியது, இருமலும் காய்ச்சலும் ஒன்று சேர்ந்து வாட்டின, உறங்க முடியாமல் இரவெல்லாம் இருமிக் கொண்டே கிடந்தாள், இதை சகித்துக் கொள்ள முடியாமல் அப்பா அவரது அத்தைவீடான கொல்லத்தில் கொண்டு போய் அம்மாவை விட்டுவந்தார்,

அங்கே இருக்கும் போது தான் முதன்முறையாக அம்மா சுதந்திர போராட்ட ஊர்வலங்களை காணத்துவங்கியிருந்தாள், அவளும் நாராயணி என்ற பெண்ணுமாக சாலையில் கொடிபிடித்தபடியே செல்லும் காங்கிரஸ் காரர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள், ஒரு நாள் இருவரும் பகவதி கோவிலில் போய் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள், அதன்பிறகு தான் அம்மா  காந்தியை பற்றி கேள்விபடத்துவங்கினாள், அதுவும் நீலம்மை வழியாக தான் கேட்டறிந்தாள்,

நீலம்மை ஒரு பணிப்பெண், அவள் காந்தியை பற்றி சொல்லும் போது வியப்புடன் சொன்னாள்

சுசிலா கேட்டியோ, அந்த மனுசன் ஆம்பளைக யாரும் கள்ளுக்குடிக்க கூடாதுனு சொல்றார், அது ஒண்ணு போதும் அவர் நல்லவர்ங்கிறதுக்கு, போலீஸ்கிட்ட அடிவாங்கி ஜெயிலுக்கு போயிருக்கிறார், தான் துணியை தானே துவைச்சிகிடுறார், கழிப்பறையை கூட தானே சுத்தப்படுத்துறதா தளியத் முதலாளி சொன்னார், அப்படி ஒரு மனுஷன் நடந்துகிடுறார்னா, அவர் தானே உண்மையான தலைவர்,

நீலம்மை வழியாக காந்தியை பற்றி கேட்டு அறிந்த இரண்டுநாட்களுக்கு பிறகு உள்ளுரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு ரகசியமாக ஒளிந்து போய் கேட்டாள், அதில் தான் காந்தியை பற்றிய பாடலை முதன்முறையாக கேட்டாள், உருக்கமான பாடலது, அந்த பாடல் காந்தியின் பற்றிய ஒரு பிம்பத்தை அவள் மனதிற்குள் உருவாக்கியது,

காந்தி என்பவர் ஒரு மீட்பர், வெள்ளைகாரர்களிடம் இருந்து இந்திய ஜனங்களை மீட்பதற்காக பாடுபடுகின்றவர், எளிமையான மனிதர், ஒயாத போராட்டக்காரர்,  அன்றைய கூட்டத்தில் கூட காந்தியை பற்றி பலரும் புகழ்ந்து, வியந்து பேசினார்கள், கேட்க கேட்க காந்தியை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது

கொல்லத்தில் இருந்த போது அம்மா முதல்முறையாக கர்ப்பிணியானாள், உடனே அவளை சில மாதங்கள் அவளது தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள், அங்கே அவள் சீனுவாச மாமாவிடம் இருந்து காந்தியை பற்றி பிரசுரம் ஒன்றினை வாங்கிவந்து படிக்க துவங்கினாள், படிக்க படிக்க அவளுக்குள் காந்தி என்ற மனிதன் வேர்விட்டு வளரத்துவங்கினார், காந்தியை பற்றி  அவளுக்குள் ஏதேதோ கேள்விகள், எழுந்தன, அவற்றை யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என்றே தெரியவில்லை,

இதற்குள் அவளை மறுபடியும் மரக்காணம் அழைத்துப் போனார், அப்பா, இடமாற்றம், அப்பாவின் தீராத காமஇச்சை இரண்டும் அவளை மிகவும் சோர்வடைய செய்தன, தூரத்து கடற்கரையின் ஒயாத சப்தம், உக்கிரமான வெயில் இரண்டும் அவளுக்கு தலைவலியை அதிகமாக்குவதாக இருந்தது, வெறுமையான பகல்கள், அர்த்தமில்லாத பொழுதுகள் என்று நீண்டன நாட்கள், இதற்கிடையில்  அவளது கர்ப்பம் கலைந்து போனதுடன் அதிக ரத்தம் போக்கும் ஏற்பட்டு அவள் நலிவுறத் துவங்கினாள், அப்பா அவளை போன்ற ஒரு உதவாக்கரையை கட்டிக் கொண்டு தான் அவதிப்படுவதாக மாமனாருக்கு தந்தி அனுப்பி உடனே கூட்டிப்போக செய்தார்

ஒன்றரை வருஷம் அவள் ஊரிலே வாழவெட்டியாக இருந்தாள், அந்த நாட்களில் அவளை மனச்சோர்வில் இருந்து காப்பாற்றியவர் காந்தி, அவள் சதா காந்தியை பற்றிய செய்திகளை கேட்டறிந்து கொண்டும் ராட்டை நூற்றுக்கொண்டுமிருந்தாள், இடையில் ஒருமுறை மரக்காணத்தில் இருந்து அப்பா வந்து சமாதானம் பேசி அவளை அழைத்துக் கொண்டுபோனார், அவர்கள் மதுரை ரயில்கெடி போவதற்குள் வழியில் சண்டை வந்து அப்பா ரோட்டிலே அம்மாவை அடித்து வளையல்களை உடைத்து போட்டதுடன் அவளை அங்கேயே தனியே விட்டுவிட்டு தனி ஆளாக மரக்காணத்திற்கு கிளம்பி போய்விட்டார்

அப்பாவின் கெடுபிடியும் கோபமும் ஆத்திரமும் அம்மாவின் மனநிலையை ஒடுக்க துவங்கின, மனநலம் பாதிக்கபட்டவரை போல அப்பாவின் பெயரை சொன்னாலே நடுங்க துவங்கினாள், அந்த நாட்களில் சீனுமாமா அவளை நூலகத்திற்கு அழைத்துப்போய் புத்தகம் எடுத்துவர உதவி செய்தார், அது தான் அம்மாவின் சகல மாற்றங்களுக்குமான முதற்படி,  வள்ளல் ரத்னம் செட்டியார் நூலகத்திற்கு போய் வரத்துவங்கியது அவளுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது

காந்தியை காண வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் புகைந்து கொண்டிருந்த போது அப்பா இடமாற்றம் ஏற்பட்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தார், தனிமையும் பதவி உயர்வும் அவருக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன, மறுபடி அம்மா கர்ப்பிணி ஆனாள், இந்த முறை பெண் குழந்தை இறந்தே பிறந்த்து, அதை அப்பா ஏறிட்டு கூட பார்க்கவில்லை, அப்படியே புதைத்துவிடும்படியாக சொன்னார், அம்மா தனது குழந்தையை நினைத்து பல நாள் அழுதபடியே கிடந்தாள், அந்த நாட்களில் படுக்கை சுகம் தவிர வேறு எதற்கும் அப்பா அவளை நாடவில்லை,

மறுமுறை கர்ப்பிணியானதும் வீட்டில் பாட்டு கேட்பதற்கு கிராமபோன் பெட்டி ஒன்றினை வாங்கி வைத்தார், அம்மாவிற்கு புத்தகம் மேலிருந்த விருப்பம் இசையின் மீது கூடவில்லை, அவள் புத்தகம் படிக்க மட்டுமே ஆசைப்பட்டாள், அப்பா அதை அனுமதிக்கவேயில்லை, பருப்பு, கடுகு சீரகம், புளி வாங்கி வரும் காகிதங்களை தவிர வேறு காகிதங்கள் அந்த வீட்டில் கிடையாது, அப்பா உள்ளுர் நூலகத்திற்கு  போய் வருவதற்குள் அவளை அனுமதிக்க வில்லை, அப்போது தான் பெரிய அண்ணன் பிறந்தான், அவன் கைக்குழந்தையாக இருந்த போது  அண்டை வீட்டிற்கு வந்த ஜெபமேரியின் ஸ்நேகிதம் கிடைத்தது, அவளுக்காக ஜெபமேரி புத்தகங்ளை வாங்கிவருவாள், அவற்றை அவளது வீட்டில் வைத்தே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்த்து, ஒரு நாள் ஜெபமேரி தனது சகோதரன் நாக்பூரில் இருப்பதாகவும் அவனை பார்த்தால் காந்தியை பார்க்க வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துப்போய் காட்டுவான், அதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றாள்

அப்பா வேதாரண்யத்திற்கு அலுவலக கேம்பிற்காக கிளம்பிய போது அம்மா மனதில் வார்தாவிற்கு போய்விட வேண்டும் என்ற எண்ணம் முளைவிட துவங்கியிருக்க வேண்டும், அப்பா போன மறுநாள் தனது கைக்குழந்தையை ஜெபமேரியிடம் ஒப்படைத்துவிட்டு கோவிலுக்கு போய்வருவதாக கிளம்பினாள்

அதன்பிறகு எப்படி பஸ் பிடித்து மதுரை வந்து அங்கிருந்து ரயிலேறி சென்னை வந்து இன்னொரு ரயில் பிடித்து நாக்பூருக்கு போய் ஜெபமேரியின் சகோதரன் தாவீது வீட்டிற்கு போய் சேர்ந்தாள் என்பது அவளுக்கு நினைவில்லை, ஒரு விசை, கட்டுபடுத்தமுடியாத வேகம், அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டிருக்கிறது,

தாவீது அவளை இரவு தனது வீட்டில் தங்க சொல்லிய போது கூட தான் காந்தியை சந்திக்காமல் எங்கும் தங்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்திருக்கிறாள், இரவிலே அவர்கள் கிளம்பி வார்தாவிற்கு போய்விட்டார்கள், ஆனால் ஆசிரமத்தில் அனைவரும் ஒன்பது மணிக்கு உறங்க போய்விடுவார்கள் என்பதால் அது அமைதியாக இருந்த்து,

எளிய குடில்களுடன் இருந்த அந்த கிராமப்புற இடத்தை அம்மா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், இந்த இருட்டிற்குள் தான் காந்தி வசிக்கிறாரா, வார்தா ஆசிரமம் என்பது இவ்வளவு ஒதுக்குபுறமான ஒன்று தானா, அவர்கள் ஆசிரமவாசியாக இருந்த சியாம்லாலை சந்தித்தார்கள், அவர் விடிகாலையில் பிரார்த்தனையின் போது பாபுஜியை சந்திக்கலாம் என்று சொன்னார்

அன்று தான் பாபுஜி என்ற சொல்லை அவள் முதன்முறையாக கேள்விபடுகிறாள், அவளுக்கு அன்றிரவு தூக்கமில்லை, தனது அருகாமையில் உள்ள ஏதோவொரு குடிலில் காந்தி உறங்கிக் கொண்டிருக்கிறார், பொழுதுவிடிந்தவுடன் அவன் முன்னால் போய் கைகூப்பி வணங்கி தொழு வேண்டும் என்று தோணியது

விடிகாலை நான்கரை மணிக்கு ஆசிரமவாசிகள் எழுந்துவிடுவார்கள்,  நாலே முக்காலிற்கு காலை பிரார்த்தனை துவங்கிவிடும், அதற்குள் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு நடுங்கிய உடலுடன் அம்மா பாபுஜியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்

அந்த ஆசிரமத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள், அதில் ஒரு வெள்ளைகாரப்பெண் தெரிந்தார், அவள் எப்படி காந்தியோடு இணைந்து வேலை செய்கிறாள் என்று அம்மாவிற்கு வியப்பாக இருந்த்து, அவளை போலவே காந்தியை பார்ப்பதற்காக இரண்டு தொழுநோயாளிகள் நின்றிருந்தார்கள், அவர்களை யாரும் வெறுப்புடன் விலக்கவில்லை, அன்பாகவே நடத்தினார்கள், பர்ச்சூரி குடிலில் இன்னமும் வைத்திய சிகிட்சைகள் துவக்கபடவில்லை, மனோகர்ஜி திவான் அங்கே இலவச சிகிட்சைகள் செய்து கொண்டிருந்தார்

மகாதேவ் குடில் என்றொரு சிறிய குடில் காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்த்து, அதில் தான் மகாதேவ் தேசாய் தங்கியிருந்தார், அவர் காந்தியின் உதவியாளர், தீவிர பற்றாளர்

இன்னமும் முழுமையாக விடியாத அந்த இளங்காலையில் பாபுஜி பிரார்த்தனைக்காக எழுந்து வந்திருந்தார்,  முதுமையின் அழகுடன் கூடிய அவர் முகத்தில் உறக்கத்தின் சுவடேயில்லை, அதே மாறாத புன்னகை, குழந்தையின் துறுதுறுப்பு, அவருடன் ரஹீம் என்ற சேவாகிரகவாசி உடன் வந்து கொண்டிருந்தார், காந்தி தனது ஆசிரமவாசிகளை அக்கறையுடன் விசாரித்தபடியே நடந்து வந்த போது தாவீது, அம்மாவை அறிமுகப்படுத்தி உங்க்ளை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஒடிவந்திருக்கிறாள் என்று ஹிந்தியில் சொன்னார்

பாபுஜி வியப்புடன் கேட்டார்

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா

அம்மா பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், தாவீது  சொன்னார்

திருமணமாகி குழந்தையும் இருக்கிறது, அவளுக்கு உங்களை காண வேண்டும் என்ற ஆசை.

என்னிடம் என்ன இருக்கிறது நான் ஒரு சேவகன், பணியாளன், என்றபடியே அம்மாவை அருகில் அழைத்து ஆறுதலாக தலையை தொட்டிருக்கிறார்

அம்மாவிற்கு அந்த ஸ்பரிசம் அவளது மனவேதனையை உடைத்துக் கொண்டு கண்ணீரை பெருகச்செய்தது, அந்த கண்ணீரின் வெதுமையை காந்தி புரிந்திருக்க கூடும், அவர் மெதுவான குரலில் சொன்னார்

உன்னை போல ஆயிரமாயிரம் இந்திய பெண்கள் சொல்லமுடியாத வேதனைகளில் அழுது கொண்டிருக்கிறார்கள், அம்மா உங்களை போன்றவர்களுக்கு அந்த கடவுளால் மட்டுமே ஆறுதல் தர முடியும், ஒன்று மட்டும் சொல்வேன், எனது மனஉறுதியும், போராட்ட குணமும் பெண்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது, உன்னை என் மகளை போலவே நினைக்கிறேன், இது நம் அனைவருக்குமான வீடு, உன் விருப்பமான நாள் வரை நீ இங்கே இருக்கலாம், ஆனால் சொகுசாக இங்கே வாழமுடியாது, வேலை செய்ய வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு மருந்திட வேண்டும், உன்னால் முடியுமா

பாபுஜியின் ஒரு சொல்கூட அம்மாவிற்கு புரியவில்லை, ஆனால் அவள் அத்தனைக்கும் சம்மதம் தெரிவித்து தலை அசைத்தாள், பாபுஜி சிரித்தபடியே வா மகளை பிரார்த்தனையுடன் நாளை துவங்குவோம் என்று அழைத்துக் கொண்டு போனார்

அப்படிதான் அம்மா வார்தா ஆசிரமத்திற்குள் நுழைந்தாள், அம்மா எங்கே போனாள் என்று அப்பா தேடவேயில்லை, அவ்வளவு கோபம், ஒடுகாலி நாய் என்று திட்டியபடியே அவர் குழந்தையை வளர்ப்பதற்காக தனது சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு அம்மாவை மறந்தே போனார்,

இரண்டரை மாதகாலம் அம்மா காந்தி ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறாள், காந்தியின் அருகாமை அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கிறது, அவளது செயல்களில் பேச்சில், பார்வையில் காந்தியின் மென்மை கலந்துவிட்டிருக்கிறது, அம்மா தொழுநோயாளிகளுக்கு சிகிட்சை தரும் செவிலியாக வேலை செய்திருக்கிறாள், மீராபென் அம்மாவிற்கு ஆங்கிலம் கற்றுதந்திருக்கிறாள், ஒருநாள் அம்மாவும் மீரா பென்னும் கோல்வாடா என்ற ஊரில் உள்ள தேவாலயத்திற்கு போன போது மீரா பென் அங்கிருந்த பியானோவில் பீதோவனின் உன்னத சங்கீதம் ஒன்றினை வாசித்து கேட்கையில் அம்மா அழுதிருக்கிறாள், மீரா பென் அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டு பீதோவன் இசையின் கடவுள்,  காந்தி சேவையின் கடவுள் என்று சொல்லியிருக்கிறாள், அம்மா அங்கிருந்த இரண்டரை மாதங்களில் ராட்டை நூற்கவும்  ஆசிரம நடைமுறைக்கும் பழகிவிட்டிருந்தாள்

ஆசிரமத்தில்  நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும், நாலேமுக்காலுக்கு பிரார்த்தனை, ஐந்தே கால் மணி முதல் ஒரு மணி நேரம் படிப்பு, அதன் பிறகு ஆறரை முதல் ஏழரை வரை சமையற்பணிகள், பாத்திரங்களை துலக்குவது, எட்டு மணிக்குள் காலை உணவு, அதன்பிறகு தோட்டவேலை, மருத்துவ சேவை பனிரெண்டு மணிக்கு மதிய உணவு, சாப்பிட்ட பாத்திரங்களை தானே கழுவி வைக்க வேண்டும், அதன்பிறகு ஒய்வு,  பின்பு இரண்டரை முதல் ராட்டை நூற்பது, மீண்டும் படிப்பு, கூட்டுவிவாதம், சில சமயங்களில் சொற்பொழிவு நடைபெறும், மாலை ஐந்தரை மணிக்குள் இரவு உணவு முடிந்துவிடும், சூரியன் அஸ்தமனம் ஆனதும் இரவு பிரார்த்தனை துவங்கிவிடும், பிறகு பரஸ்பரம் பேசிக் கொள்வது, சில வேளைகளில் இசை கேட்பது நடக்கும், ஒன்பது மணிக்கு உறங்கிவிடுவார்கள்

இந்த ஒழுங்கும் எளிமையும் அம்மாவின் மனதை முற்றிலும் மாற்றியிருந்தன, அம்மா தனக்கு கடந்த காலமென ஒன்று இருந்ததை மறந்து போயிருந்தாள், ஒரு நாள் அம்மா காந்தியின் அறைக்குள் தேசாய் கொடுத்து அனுப்பி கடிதம் ஒன்றினை கொடுக்க சென்ற போது பார்த்தாள், காந்தி இரண்டு கிளிஞ்சல்களை  தனது மேஜையில் காகிதம் பறந்து போகாமல் வைத்திருந்தார்,

பாபுஜி இந்த கிளிஞ்சல்கள் அழகாக இருக்கின்றன என்று சொன்னாள்

அதற்கு அவர் இவை போர்பந்தரில் உள்ள கடற்கரையை  சேர்ந்தவை, சிறுவயதில் இருந்தே இந்த கிளிஞ்சல்களை  கூட வைத்திருக்கிறேன், இந்த கிளிஞ்சல்களை  என்னோடு லண்டனுக்கு கொண்டு சென்றிருந்தேன், இவை தான் எனது துணை, இன்றுவரை இவை என் ஊரை, அதன் நினைவுகளை என்னோடு மௌனமாக பகிர்ந்து கெர்ண்டிருக்கின்றன, ஒவ்வொரு மனிதனும் தனது கடந்தகாலத்தினை நினைவுபடுத்தும் ஒரு பொருளை தன்னோடு எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான், அதன் மகத்துவம் மற்றவர்களுக்கு புரியாது என்று சொல்லி சிரித்தார்

பின்பு ஒரு நாள் அப்பா, சீனுவாச மாமாவுடன் வார்தா ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்திருந்தார், அவர்களுடன் ஊருக்கு போக மறுத்த அம்மாவை பிடிவாதமாக அப்பாவும் சீனுவாச மாமாவும் அழைத்துக் கொண்டு போனார்கள், அம்மா ஆசிவாங்குவதற்காக பாபுஜியிட்ம் போனாள்

காந்தி அமைதியான குரலில் சொன்னார்

குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை,  தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன், பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை உணர்கிறேன், ஒரு தாய் மகளிடம் சொல்வதை போலவே சொல்கிறேன், நெருக்கடிக்குள் வாழ்வது ஒரு சவால், அதை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது, இந்த சேவகனிடம் உன்னை போன்ற தூய உள்ளம் கொண்ட பெண்ணுக்கு தருவதற்கு வேறு எந்த ஆலோசனையும் இல்லை, ஆனால் நீயும் மற்றவர்களும் எனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கையில் நான் என்றும் உறுதியாக இருப்பேன், இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்களில் நீயும் ஒருத்தி  என்பதால்  உனக்கு நன்றி கூறுகிறேன்,

அம்மா அழுதாள், முதல்நாள் பாபுஜியை பார்த்தபோது அழுததை விடவும் பலமாக அழுதாள், பாபுஜி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார், அம்மாவை அப்பா இழுத்துக் கொண்டு ஊருக்கு ரயிலேறிய இரவில் அப்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஊருக்கு வந்தபிறகு காந்தியை தேடி ஒடியதற்காக, அம்மாவின் கையை முறித்தது அப்பா  தந்த தண்டனையாக இருந்த்து

••

நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு முடிவில் அம்மா சொன்னாள்

லட்சுமா, ஏதோ நான் ஒருத்திக்கு இது அதியசமாக நடந்த சம்பவம் என்று நினைக்காதே, இதே அனுபவத்திற்கு உள்ளான பலநூறு பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் காந்தியை மறக்கவேயில்லை, அவர்களுக்குள் காந்தி எப்போதும் ஒளிர்ந்து  கொண்டேதானிருக்கிறார்,

வீடு திரும்பி வரும்வரை அம்மா காந்தியை நோக்கி போனதை விடவும் அப்பா அம்மாவை மிக மோசமாக நடத்தியது என்னை உறுத்திக் கொண்டேயிருந்த்து, இதற்கு நான் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தேன், இறந்து போன ஒருவர் மீதான கசப்புணர்வை எப்படி போக்கிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை,

அம்மாவும் ராகேலும் அன்றிரவு ஒன்றாக டிவியில் ஏதோவொரு தமிழ்படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த அந்நியோன்யம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது,

அன்றிரவு படுக்கையில் ராகேலிடம் கேட்டேன்

உனக்கு காந்தியை பிடிக்குமா

இந்தியர்கள் காந்தியை காரணம் இல்லாமலே வெறுக்கிறீர்கள், அது ஒரு சிண்ட்ரோம், காந்தியை பலநேரங்களில் ஒரு டஸ்ட்பின் போல உபயோகிக்கிறீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றாள்

ஏன் அப்படி சொல்றே என்று கேட்டேன்

ராகேல் சொன்னாள்

நான் காந்தியை அதிகம் வாசித்ததில்லை, ஆனால் காந்தியின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோவொரு ஈடுபாடு உண்டாகிறது , களங்கமில்லாத காந்தியின் சிரிப்பை பாருங்கள், இப்படி சிரிக்க முடிந்த ஒரு மனிதன் நிச்சயம் உயர்வான வாழ்வையே வாழ்ந்திருப்பான் என்று உறுதியாக சொல்வேன், அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு தகவல்களே அவரை என் விருப்பத்திற்குள்ளாக போதுமானதாக இருந்தது, ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை,

நான் ராகேலை கட்டிக் கொண்டேன்

பெண்கள் காந்தியை வேறுவிதத்தில்  அணுகுகிறார்கள், ஆழமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது மறுபடியும் நிருபணம் ஆனது போலிருந்த்து

மறுநாள் அம்மாவிடம் நான் காந்தியின் சுயசரிதை படிக்க விரும்புகிறேன் நூலகத்தில் இருந்து எடுத்து வாருங்கள் என்று சொன்னேன்

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

வேகமாக காந்தியை நோக்கி வருகிறவர்கள், வேகமாக வெளியேறி போய்விடுவார்கள்

நானும் சிரித்தேன், அம்மா காந்தியின் சத்திய சோதனையை நூலகத்தில் இருந்து கொண்டுவரவில்லை, லண்டனுக்கு வந்து இருந்து திரும்பிய ஆறேழு மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போனில் பேசும் போது அம்மாவிடம் சொன்னேன்

வார்தாவிற்கு ஒரு முறை போய்வர வேண்டும் நீயும் எங்களுடன் வரவேண்டும் என்று தோன்றுகிறது

உதிர்ந்த சிறகு பறவையோடு மீண்டும் ஒட்டுவதில்லை என்ற கவிதை வரி நினைவிற்கு வருகிறது என்றாள்,

காந்தி இல்லாத ஆசிரமத்திற்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறதா என்று மறுபடி கேட்டேன்

முறிந்த எனது கை ஒவ்வொரு நாளும் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டுதானிருக்கிறது, வார்தாவிற்கு போய் நினைவுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றாள் அம்மா

அம்மா பேசி சம்மதிக்க வைக்க முடியாது என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டேன், ஆனால் அம்மா இறந்து போன பிறகு ராகேல் அதை மறுபடியும் நினைவூட்டினாள்

லட்ஸ், உன் அம்மாவிற்காக நாம் ஒருமுறை வார்தாவிற்கு போய்வருவோம், கடந்த காலத்தை நினைவுபடுத்த ஏதாவது ஒன்று தேவையாக தானே இருக்கிறது

அப்படித்தான் நானும் ராகேலும் வார்தாவிற்கு வந்து இறங்கினோம், இங்கே வந்து இறங்கிய நிமிசம் முதல் அவள் பரபரப்பாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்,

இது தான் வார்தா ஆசிரமம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, காந்தி ஆசிரமத்தை ஏன் இப்படி கைவிடப்பவர்களுக்கான ஆசிரமம் போல வைத்திருக்கிறார்கள், இங்கே உற்சாகமான செயல்பாடுகள் எதையும் காணமுடியவில்லையே,

அங்கே தங்கியருப்பவர்கள், வந்து போகிறவர்கள் ஒருவரிடமும் காந்தியின் மீதான ஈர்ப்பு துளியுமில்லை, அது ஒரு புகலிடம் போலவே இருந்தது

மாலை வரை நானும் ராகேலும் வார்தாவில் இருந்தோம், ,இரவு புறப்படும் போது ராகேல் சொன்னாள்

உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு காந்தி ஒரு விளையாட்டு பொம்மை, அவர்கள் உதைத்து விளையாட விரும்பும் ஒரு கால்பந்து, அவர்களுக்கு புதிராக இருப்பது எவ்வளவு உதைத்தாலும் இந்த பந்து திரும்ப திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பது தான்,

இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,, காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார், அவரது  குரலை இந்த தலைமுறையினர் கேட்டதில்லை, ஒருமுறை அவரது குரலை கேட்டுபாருங்கள், எப்படி சொல்வது, தற்செயலாக ஒரு நாள் இணையத்தில் அவரது குரல்பதிவு ஒன்றினை கேட்டேன், என்னால் முழுமையாக கேட்கமுடியவில்லை, கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது  ஹி இஸ் இம்பாசிபிள்,  எப்படி சொல்வது என்று தெரியவில், ஹி இஸ் ப்யூர்,  ஹி டச் அவர் ஹார்ட்,

அந்த மனிதர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை அவர் எதைச் சொல்லும் போதும் அதில் வெளிப்படும் பரிவும் தன்னமல்லமற்ற தூய்மையான எண்ணமும் தான் அவரை பிடிக்க செய்கிறது, சிலவேளைகளில் அவர் எனது தந்தையை போல இருக்கிறார், சில வேளைகளில் அவர் நாளை பிறக்க போகிற எனது பிள்ளையை போல இருக்கிறார்,  இதற்கு மேல் என்னால் சொல்லமுடியவில்லை

என்று அமைதி அடைந்தாள், ஆனால் அவளிடம் ஆழமான பெருமூச்சு வெளிப்பட்டது,

அந்த நிமிசம் நான் ராகேலிடமிருந்து எனக்கான காந்தியை உருவாக்கி கொள்ள துவங்கினேன், காந்தியை உதைத்து விளையாட விரும்புகிறவர்களில் நானும் ஒருவனாகவே இருந்தேன், காந்தியை வெறுத்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் காரணம் இல்லாமல் காந்தியை விலக்குகின்ற பல்லாயிரம் மனிதர்களில் ஒருவராக இருந்தேன், காந்தியை நெருங்கிச் செல்வதற்கு தான் ஈடுபாடு தேவை, வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கபட்டிருக்கின்றன,

இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளை சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்க கூடுமா என்ன, அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை, ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது  அவரை நேசிக்க செல்வதற்காக ஒரு பயிற்சி தானோ என்னவோ,

அந்தரங்கமாக ஒருவன் தனது மனதினுள் ஆழ்ந்து போனால் அவன் காந்தியின் நெருக்கத்தை உணரவே செய்வான், அவனால் காந்தியை வெறுக்கமுடியாது, அப்படி வெறுப்பதாக நடிப்பதற்கு தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக் கொள்வான், ஆனால் வெளியுலகிற்கு காந்தியை வெறுப்பவர்கள் தேவைப்படுகிறார்கள், அது காந்தியின் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,

ஏதேதோ யோசனைகளுடன் நான் வாங்கியிருந்த சத்தியசோதனை நூலை பயணத்தில் வாசிக்க துவங்கியிருந்தேன், அதன் பிறகு இரண்டுவாரங்கள், மதுரை காந்தி ம்யூசியம், போர்பந்தர், சபர்மதி, டெல்லி என்று சுற்றிவிட்டு மீண்டும் லண்டன் திரும்பியிருந்தேன்

திடீரென காந்திய நூல்களாக எனது வீட்டில் நிரம்பத் துவங்கின, காந்தியைப்பற்றி பலரிடம் நான் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன், ஒருநாள் ராகேல் என்னிடம் சொன்னாள்

லட்ஸ் நீ காந்தியை வழிபட ஆரம்பித்திருக்கிறாய், வழிபடுதல் பரிசோதனைக்கான முறையில்லை, அவரை புரிந்து கொள்ளவும் அது போல வாழவும் முயற்சி செய், உன் அம்மாவை போல,

காந்தி தனது புத்தகத்திற்கு  The Story of My Experiments with Truth என்று பெயரிட்டிருக்கிறார்,    Experiment என்பது வெறும் சொல் கிடையாது, அது ஒரு, செயல்பாடு, அறிவியல்பூர்வமான வேலை, காந்தி என்ற மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானியிருக்கிறார், அவர் தொடர்ந்து மனிதனை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார், இந்தியர்கள் பொதுவில் உடலை மர்மபடுத்தவே விரும்புகிறார்கள், , அப்படி நடந்து கொள்ளாத முதல் இந்தியனாக காந்தியை மட்டுமே கருதுகிறேன்,

காந்தி கைத்தடியை ஊன்றி நடப்பதில்லை, கையில் அதை துணையாக தான் வைத்திருக்கிறார், அவருக்கு கைத்தடி என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவி

லட்ஸ் இருப்பை விட இன்மை தான் அதிகம் நினைவுகளை தூண்டிவிடுகிறது, காந்தி விஷயத்தில் அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி சிரித்தாள்

அந்த சிரிப்பின் ஊடாக அம்மாவின் புன்னகையும் சேர்ந்து வெளிப்படுவதாகவே எனக்குத் தோன்றியது ,அவளை இறுக்கி கட்டிக் கொண்டேன்

••••


உயிர்மை இதழில் வெளியானது
Title: Re: எஸ். ராமகிருஷ்ணன்
Post by: Gayathri on September 29, 2013, 10:34:07 AM
அஸ்தபோவில் இருவர்

சிறுகதை

உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்,

தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன,

நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் கசப்புணர்வு படிவதை முன்தினமே உணர்ந்திருந்தார், அடிவயிற்றை புரட்டிக் கொண்டு குமட்டுவது போல ஒரு உணர்ச்சி நாள்முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது, அத்துடன் யாரோ முதுகில் கைவைத்து அழுத்திபிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு இறுக்கமும் பீடித்திருந்த்து, எண்பத்திரெண்டு வயதில் எதற்காக இப்படி வீட்டை விட்டு விலகி தனியாக ஒடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்மீதே எரிச்சலாக வந்தது,

எப்படியானாலும் இனி ஒரு போதும் வீடு திரும்பக்கூடாது, போதும், ஒரு மனிதன் குடும்பத்தை அமைத்துக் கொள்வதைப் போலவே குடும்பத்தில் இருந்து வெளியேறி தனியனாக போவதும் விரும்பி மேற்கொள்ள வேண்டிய செயலே, வயதான பலரையும் போல தன்னை வீடு வெளியே துரத்திவிடவில்லை, நாமாகத் தானே வெளியேறி வந்தோம், விரும்பி எடுத்த முடிவினை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று சோர்ந்திருந்த தன் மனதை தேற்றிக் கொண்டார்

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அன்றாட வாழ்க்கை மிகுந்த சலிப்பாகிக் கொண்டு வந்தது,  வீடு. மனைவி, பிள்ளைகள், எழுத்து, பதிப்பாளர்கள் என்று  ஒரு மீளமுடியாத ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல ஆயாசமளித்தது, மீதமிருக்கும் நாட்களை ஒரு நாடோடியை போல எங்காவது ஆள் அரவமற்ற இடத்தில் தங்கிக் கொண்டு கழித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீவிரமாக உருவாகியிருந்த்து, வீட்டில் இருந்து எப்படி விடுபடுவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்

ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கி கொள்வதை போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான், அதிலும் தான் வெற்றிபெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது,

இது சாவை தேடிப்போகிற பயணம், அவசரம் காட்டாதே என்று  மனம் உள்ளுற சொல்லி கொண்டிருந்தது, நிஜம் தான், மனிதனைத் தேடி சாவு வருவதை விட சாவைத் தேடி மனிதன் செல்வது துணிச்சலானது தானே, வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை கடந்து வந்த அவருக்கு சாவை நேர் கொண்டு காண புறப்பட்டதும் ஒரு சவாலாகவே தோன்றியது,

இளைஞனாக இருந்த காலத்தில் சூதாடி குடும்ப சொத்துகள் முழுவதையும் இழந்தார் அப்போது வீட்டினை விட்டு வெளியேறி கண்காணாத இடம் நோக்கி போய்விட வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகத் தோன்றியது, ஆனால் வாழ்க்கை தன் பிடிமானத்தை விடமால் அவரை இழுத்து வைத்துக் கொண்டது, பின்பு பலமுறை மனைவி சோபியாவோடு சண்டையிட்ட நாட்களில் வீட்டை துறந்து போவதை பற்றி யோசித்திருக்கிறார், வெளியேறி சென்றுமிருக்கிறார், ஆனால் வீடு தனது அரூபமான கரங்களால் அவரை திரும்ப இழுத்துக் கொண்டது,

இந்த முறை ஒரு கனி பழுத்து மரத்தை விட்டு தானே கிழே விழுவதை போல வெளியேறிவிட்டார், உதிர்ந்த கனிகள் ஒரு போதும் திரும்ப மரத்தில் ஒட்டுவதில்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார்

புகைரயிலின் வேகம் அதிகமில்லை என்ற போதும் ரயிலின் ஜன்னலுக்குள் பனிப்புகை ஊடுருவி குபுகுபுவென வந்து கொண்டிருந்த்து, அவரது கண்கள் மங்கிப்போனதை போல வெளியே கடந்து செல்லும் நிலக் காட்சிகள் தெளிவற்று தெரியத்துவங்கின,

வாழ்வில் எதன்மீதெல்லாம் தான் பற்றுக் கொண்டிருந்தோம் என்று யோசிக்க துவங்கினார், குடி, பெண்கள், யுத்தம் இவையே ஒரு வயதில் பற்றுமிக்கதாக இருந்தன, உண்மையில் தான் ஒரு சுயநலவாதி, தனது சுகங்களை பிரதானப்படுத்தி மட்டுமே வாழ்ந்திருக்கிறோம் என்று பட்டது,   சட்டம் பயின்ற நாட்களில் வேசைகளுடன் குடித்து நடனமிட்டு உல்லாசமாக இருந்த போது உலகம் எடையற்று இலவம்பஞ்சு மிதப்பது போலிருந்தது, அன்று எவரது உறவும் தேவையற்றதாக தோன்றியது,

பெற்றோர்கள் இல்லாமல் உறவினர்களால் வளர்க்கபட்ட காரணத்தால்  வீடு திரும்பமாலே மாஸ்கோவிலும் பீட்டர்ஸ்பெர்கிலும் சுற்றிக் கொண்டிருந்தார் யஸ்னயா போல்யனா பண்ணைக்கு போவது கசப்பான பால்யகாலத்திற்கு திரும்பி போவதை போன்று வலி தருவதாகவே இருந்த்து, அதனால்  வீடு என்பது பலவீனமானவர்களின் புகலிடம் என்று நண்பர்களிடம் கேலி பேசினார்

ஆனால் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துவிட்டவள் சோபியா, அவளை காதலிக்க துவங்கிய பிறகே வீட்டினை  நேசிக்க துவங்கினார், ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போது தான் வீடு அவனுக்குள் முளைவிடத்துவங்குகிறது, காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாகிப் போகிறது, உண்மையில் அது ஒரு வலைப்பின்னல், பெண்களும் வீடும் ஒன்று தான் போலும், எப்போது இடம் தந்து அணைத்துக் கொள்ளும், எப்போதும் விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது

உண்மையில் அவர் சோபியாவை தேடிப்போய் காதலித்தார், அப்போது அவள் சிற்றிளம் பெண், தனது அக்காவை காதலிப்பதற்காக வீடு தேடி வரும் மனிதன் என்றே அவரை நினைத்துக் கொண்டிருந்தாள், தன்னை ஏன் அவர் தேர்வு செய்தார் என்று சோபியாவிற்கு கூட வியப்பாகவே இருந்த்து, அவளது அன்பிற்காக காத்திருப்பதாக மன்றாடினார், அவளை திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு யாஸ்னயா போல்யனா வீடு உருமாறத்துவங்கியது,

பணியாளர்கள் முகங்களில் சந்தோஷம் பீறிடுவதை கண்டார்,  விருந்தும் நண்பர்களின் சந்திப்பும், குழந்தைகளும் அவருக்கு வீட்டின் மேல் தீவிரமான பற்று உருவாக காரணமாக இருந்தது, பதிமூன்று பிள்ளைகளை சோபியா பெற்றிருந்தாள், இதில் நால்வர் பிறந்த சிலமாதங்களிலே இறந்து போய்விட்டார்கள்

இறந்து போன குழந்தைகளைப் பற்றி கூட பலநேரம் அவர் யோசித்திருக்கிறார், அவர்கள் எதற்காக தன் பிள்ளையாக பிறந்தார்கள், கடவுள் தன்னிடம் ஏதோவொன்றை சொல்ல விரும்பி அவர்களை அனுப்பி வைத்தாரோ, என்ன செய்தியது ஏன் அது தனக்கு புரியவேயில்லை என்று குழம்பியிருக்கிறார்,

தன்னை சுற்றிய உலகம், அதன் மனிதர்கள், அவர்களின் அன்றாடப்பிரச்சனைகள் எதையும் விட எழுத்தும் அதில் உருவான மனிதர்களும், தீவிர வாசகர்களும், சக எழுத்தாளர்களும், எழுத்தின் மீதான விமர்சனங்களும் அவரது உலகை முழுமையாக ஆக்ரமிக்க துவங்கின, பலநேரங்களில் தான் எழுதுவதற்காக மட்டுமே உயிர்வாழ்கிறோம் என்று கூட அவருக்கு தோன்றியது,

சோபியா அதை புரிந்து கொண்டிருந்தாள், இல்லாவிட்டால் அவரது நாவலின் கையெழுத்துபிரதிகளை அவள் ஏன் அத்தனை கவனமாக பிரதி எடுத்தி எழுதி தந்தாள், ஆயிரக்கணக்கான பக்கங்களை கையால் பிரதி எடுத்து எழுதுவது எளிதானதில்லை தானே,

சோபியா அவருடன் கதைகளை பற்றி ஒரு போதும் வாதம் செய்தவளில்லை, சில வேளைகளில் அவரது கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களை போலவே இருக்கிறார்கள் என்று அவள் சுட்டிக்காட்டியதுண்டு, எழுதி எழுதி சோர்வுற்ற நேரங்களில் அவருக்கு பிடித்தமான இசைத்தட்டுகளை ஒடவிட்டு அவரை கட்டாயப்படுத்தி ஒய்வெடுக்க சொன்னதுண்டு,  அப்போது எல்லாம் சோபியாவின் அன்பை நினைத்து உருகியிருக்கிறார்

பிள்ளைகள் வளரதுவங்கும் போது பெற்றோர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் துவங்குகிறார்கள், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்க துவங்கியதும் பெற்றோர்கள் தானாகப் பிரிக்கபடுவார்கள், முதுமையை ஆணா. பெண்ணோ தனியாக சந்திக்கவே விரும்புகிறார்கள், அதற்கு மேல் எந்த உறவையும் ஒட்டி வைக்க முடியாது அது தான் உலக இயல்பு என்று சொல்வாள் அத்தை தாத்ரியானா

அது தான் அவரது விஷயத்திலும் நடந்தேறியது, பிள்ளைகள் வளர்ந்து தனித்து போக ஆரம்பித்துவிட்டார்கள், வீடு பிரச்சனைகளின் கூடராமாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் சோபியா அவருடன் சண்டையிட்டாள், சிறிய விஷயங்களில் கூட இருவரும் கோவித்துக் கொண்டார்கள், உணவு மேஜையில் அவர் தனித்து சாப்பிட்டார், சோபியாவின் கோபம் பணியாளர்களையும் விட்டுவைக்கவில்லை, டால்ஸ்டாய் மனச்சோர்வும் ஏமாற்றமும் கொண்டவராகியிருந்தார்,

வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவருக்கு தடையாக இருந்தது அவரது மகள் சாஷா மட்டுமே, அவள் மீதான அதீதமான பாசம் ஒன்றே வீட்டோடு அவரை ஒட்ட வைத்திருந்த்து, முடிவில் அவளிடமே தனது ஆற்றாமையை கொட்டி தீர்த்து விட்டார், அவள் தான் அவரை வழியனுப்பி வைத்தாள்

அந்த இரவு மறக்கமுடியாதது. வழக்கமான நாட்களை போலவே அன்றிரவும் அவர் படுக்கைக்குச் சென்றார், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார், அசையும் சுடர்கள் அவரிடம் இனியும் என்ன தாமதம் என்று  கேட்பது போலவே இருந்தது

அந்த படுக்கை அறையில் அவர் அழுதிருக்கிறார், தன்னை மறந்து உடற்சுகத்தில் கிறங்கி கிடந்திருக்கிறார்,  எழுத வேண்டிய கதைகளை நினைத்துக்கொண்டு புலம்பியிருக்கிறார், காரணமே இல்லாமல் துக்கப்பட்டுக்  கொண்டு தன்னை வருத்திக் கொண்டிருந்திருக்கிறார், இப்படியாக அப் படுக்கை அறை ஒரு பிரார்த்தனை கூடம் போலவே தோன்றியது, அந்த கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்,

அவரது உடல்நலத்தை கருதி இரவில் படுக்கை அறையின் கதவுகளுக்கு தாழ்பாள் போடக்கூடாது என்று சோபியா கட்டளையிட்டிருந்தாள், அதனால் கதவு பாதி திறந்தேயிருந்த்து,

சோபியா அன்றிரவு நெடுநேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு தாமதமாகவே படுக்கைக்கு வந்தாள், படுக்கையில் அயர்ந்துகிடந்தவரை காணும் போது அவளுக்கு வருத்தமாக வந்த்து, அவரது கைகளை மென்மையாக தொட்டு பார்த்தாள், அது வெதுவெதுப்பாக இருந்தது, அன்றிரவு அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்,

பின்னரவில் எழுந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார், சாஷாவை எழுப்பி தான் வீட்டை விட்டு வெளியேறிப்போவதை பற்றி சொன்னார், அவள் அதை முன்னதாகவே எதிர்ப்பார்த்திருந்தவளை போல இப்போதா என்று மட்டும் கேட்டாள்,

வீட்டிலே தங்கி அவருக்காக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் துஷான் எழுந்து வந்து அவரது ரத்தவோட்டத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ரத்தஅழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக கவலையுட்ன் தெரிவித்தார்,

அது தனது பதற்றத்தின் அடையாளம் என்றபடியே அவசரமாக தனது உடைகளை எடுத்துக் கொண்டு சோபியாவிற்கு ஒரு கடிதம் எழுத துவங்கினார்,

ஏற்கனவே அந்த கடிதம் மனதில் முழுமையாக எழுதி முடிக்கபட்டிருந்தது, பலநாட்கள் அந்த கடித்ததில் எந்த வரிகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்திருந்தார் ஆகவே வேகமாக அக் கடிதத்தை எழுதி சாஷாவிடம் ஒப்படைத்தார், குதிரைவண்டிக்காரனை எழுப்பி பயணத்திற்கு தயார் செய்யும்படி உத்தரவிட்டார்

சாஷா அவரது தொப்பியையும் குளிரங்கியையும் எடுத்து வந்து தந்தாள், சாஷாவை முத்தமிட்டு வருத்தமான குரலில் சொன்னார்

உனது அம்மாவை கவனித்துக் கொள்,

அவள் கலஙகிய கண்களுடன் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா என்றாள்,

தெற்கு நோக்கி பயணிப்பது என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருந்த்து, எங்கே போவது என்பதை ரயில் நிலையத்தில் போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்

குதிரை வண்டி தனது பண்ணையை விட்டு கிராமசாலையில் செல்ல துவங்கிய போது ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார், விரிந்து பரந்த அந்த பண்ணை நிலமும், பிரம்மாண்டமான வீடும், நூற்றுக்கணக்கான எளிய விவசாயிகளும், நீர் நிறைந்த குளமும், மரங்களும் குளிர்கால காற்றும் இனி ஒரு போதும் தனக்கானதில்லை, தான் இனி வெறும் ஆள், தான் ஒரு துறவியோ, பிச்சைக்காரனோயில்லை, துரத்தப்பட்ட மனிதன், வீட்டை துரத்து வெளியேறும் ஒரு முதியவன், அவ்வளவு மட்டுமே

ரயில் நிலையத்திற்கு வந்தபோது காலியாக இருந்தது, பின்னரவில் ரயில்கள் இல்லை என்பதால் காத்திருக்க வேண்டியதாகி இருந்தது, பயணிகள் ஒய்வறையில் அவர் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்,

துறவியர்மடத்தில் வசிக்கும் தனது தங்கை மரியாவை தேடிப்போய் சந்திக்கலாமே என்று தோன்றியது, உண்மையில் அது வெறும் சாக்கு, மரியா வசிக்குமிடத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஏதாவது ஒரு குடிசை கிடைத்தால் போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று உள்ளுற நினைத்துக் கொண்டார்

பயணியர் ஒய்வறையில் ஒரு மாணவன் அவரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான், அவன் உற்சாகமான முகத்துடன் அவரை நெருங்கிவந்து வணங்கியபடியே சொன்னான்

உங்களது படைப்புகளால் நான் பெரிதும் ஈர்க்கபட்டிருக்கிறேன், டால்ஸ்டாய் பண்ணை ஒன்றை எனது கிராமத்தில் ஆரம்பிக்க விரும்புகிறேன், உங்கள் எழுத்துகள் எனக்கு வழிகாட்டுகின்றன, உண்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, இப்போது புதிதாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் டால்ஸ்டாய் சொன்னார்

இத்தனை காலம் உலகின் துயரங்களை நான்  கதைகளாக மாற்றிவந்தேன் , ஆனால் இன்றோ எனது வாழ்க்கை உலகிற்கு வெறும் கதையாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது , நான் தோற்றுப்போனவன், ஒருவருக்கும் பயனற்ற ஒரு கிழட்டு குதிரை,

அந்த இளைஞனுக்கு அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று புரியவில்லை, குளிர்தாளமுடியாமல் டால்ஸ்டாய் தனது கைகளை உரசிக் கொண்டார், அந்த இளைஞன் தனது தலையை  சாய்த்து வணங்கி உங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள், நன்றாக ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு கடந்து போய்விட்டான்

ஷமார்டினோ மடாலயத்திற்கு போவதற்கான ரயில் எப்போது வந்துசேரும் எனத் தெரியவில்லை, மனதில் திடீரென காகசஸ் பகுதிக்குப் போனால் என்னவென்று தோன்றியது, அங்கே அவரது சிஷ்யர்கள் பலர் ஒன்று கூடி ஒரு பண்ணையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள், நிம்மதியாக அங்கே போய் தங்கிவிடலாமே என்ற யோசனை உருவாகத்துவங்கியது,

அங்கே போவதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை அவர் தனது தங்கை மரியாவை காண விரும்பினார், அவளை சந்திப்பது  இறந்து போன தாயை மறுமுறை சந்திப்பதை போன்றது, முகம் அறியாத தாயின் மறுவடிவம் போலவே மரியா இருந்தாள், பெண்கள் வயதாக துவங்கியதும் தாயின் சாயலை அடைந்துவிடுகிறார்கள், ஆனால் பையன்கள் தந்தையை போல ஒரு போதும் ஆவதில்லை, அது என்ன புதிர், தாயிடம் நன்றி சொல்லி விடைபெற்றுவிட்டால் போதும் பிறகு எங்கும் தங்கி வாழ்ந்துவிடலாம் என்று அவருக்கு தோன்றியது,,

நீண்ட பல வருஷங்களுக்கு பிறகு நேற்று அவர் தனது தங்கையை மடாலயத்திற்கு சென்று சந்தித்தார், அவள் கணவனை இழந்தவள், கொடுந்தனிமையை தாங்கிக் கொள்ளமுடியாமல் தேவாலய சேவையில் தன்னை ஒப்புக கொடுத்திருந்தாள

இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை, தேவாலயத்திற்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள், பிறகு பசுமையான மரஙகளின் ஊடே இருவரும் நடந்து போனார்கள் வீழ்ந்துகிடந்த மரம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்

மரியா சொன்னாள்

லியோ. உனது செயல்களால் எப்போதுமே அடுத்தவரை வருத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய், உனது பிரச்சனை வீடில்லை,  நீ தான், தேவையில்லாமல் உன்னை அலைக்கழித்துக் கொள்ளாதே, சுற்றியது போதும், உன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு ஒரு துறவியை போல சாந்தம் கொண்டுவிடு, உலகம் நீ அப்படி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது

இல்லை மரியா, என்னால் ஒரு போதும் துறவியாக முடியாது, துறவிகள் தன்னை வருத்திக் கொள்பவர்கள், நான் என்னை கொண்டாட நினைப்பவன், என் மீது எனக்கு அதீதமான நம்பிக்கைகளும், பிடிப்பும் உள்ளன, இதை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் என்றார்

லியோ, நீ ஒரு குழப்பவாதி, எல்லா பிரச்சனைகளையும் நீயே உருவாக்கி கொண்டு அதில் இருந்து தப்பிக்க போரிடுகிறாய், உன்னை ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாய், தெளிவற்ற உனது கண்களில் காணும் குழப்பங்கள் என்க்கு கவலை அளிக்கின்றன என்றாள் மரியா

இந்த உலகம் தூய்மையானதாகயில்லை, கசடுகளும் வெறுப்பும், துவேசமும், அதிகாரவெறியும் கொண்டதாகயிருக்கிறது, அதிகாரம் என்னை ஒரு அற்ப புழுவைப் போல நடத்துகிறது,  உலகின் சகல கசடுகளையும் நானும அள்ளிக்குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, நான் தவறு செய்யாத மனிதனில்லை, ஆனால் சந்தர்ப்பவாதியாக, என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன், என்றார் டால்ஸ்டாய்

நீ உன்னை சுற்றிய எல்லோரிடமும் குறைகள் காண்கிறாய், அதை பெரிது படுத்தி சண்டையிடுகிறாய், உனது கோபம் உனது விருப்ப்படி பிள்ளைகளும் மனைவியும் நடந்துகொள்வதில்லை என்பது தானே, உண்மையில் நீ விரும்புவது போல உனது நிழலை கூட நடந்து கொள்ளாது,  பிறகு எப்படி வீட்டோர் நடந்து கொள்வார்கள், வீடு என்பது சவுக்கடிக்கு பயந்து புலி முக்காலியில் ஏறும் சர்க்கஸ கூடாரமில்லை லியோ என்றாள்,

டால்ஸ்டாய்க்கு ஆத்திரமாக வந்த்து, மரியாவிட்ம் கடுமையான குரலில் சொன்னார்

எனது ஆசைகளை நான் ஒரு போதும் அவர்கள் மீது திணிக்கவில்லை, எனது கோபமெல்லாம் அவர்கள் ஏன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள், அற்பத்தனங்களை ஆசையோடு அரவணைத்து கொள்கிறார்கள், வீண்பேராசைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே, சுருக்கமான சொல்வதாயின் நான் அவர்களை சுயபரிசீலனை செய்து கொள்ள சொல்கிறேன், அது அவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதை மறைத்துக் கொள்ள என்னை கோவிக்கிறார்கள்,

இரும்பை நெருப்பில் போடுவது அதை தண்டிப்பதற்காக இல்லை மரியா, அதை இளக்கி புதிய வடிவம் கொடுப்பதற்கு, நிச்சயம் அது சூடுபடவே செய்யும், ஆனால் நெருப்பை தவிர வேறு எதனால் இரும்பை இளக்க முடியும் சொல்லு என்றார் அவர்

துயரமான குடும்பங்கள் எதுவும் ஒன்று போல இருப்பதில்லை என்று நீயே தான் எழுதியிருக்கிறாய், லியோ, இந்த உலகம் உன்னை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாய் அது தவறு, நீ தான் இன்னமும் இந்த உலகை புரிந்து கொள்ளவில்லை,  என்றாள் மரியா

நான் ஒரு முட்டாள் என்று தானே சொல்கிறாய்  எனக்கேட்டார் டால்ஸ்டாய்

அப்படியில்லை, நீ உன்னை முட்டாளாக்கி கொள்கிறாய் என்றாள் மரியா

அதோ, அந்த மரங்களுக்கு இடையில் உள்ள விவசாயி வீட்டினைப் பார், அவனுக்கு இந்த உலகில் உணவும் உடையும் இருப்பிடமும் மட்டுமே தேவையாக இருக்கிறது, அதுவே போதும் என்ற மனம் கொண்டிருக்கிறான், அவன் தனது உணவிற்காக ஒவ்வொரு பொழுதும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான், பேராசையின் நிழல் கூட அவன் மீது படவில்லை, நான் அப்படி ஒரு மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன், எனது செல்வம் தான் எனது சத்ரு, நான் அவற்றை இழந்துவிடும்போது என்னை சுற்றிய பகட்டு உலகம் தானே விலகி போய்விடும் எனறு நம்புகிறேன் என்றார்  டால்ஸ்டாய்

அது உண்மையில்லை லியோ, நீ அப்படி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்,  அது தவறு, பெரும்பான்மை மனிதர்களை இப்படி முடக்கி வைத்திருப்பது அவர்களின் இயலாமை, அது ஒரு அற்ப காரணம் என்றே சொல்வேன், அவர்கள் இயலாமையை காரணம் சொல்லி ஒதுங்கி கொண்டுவிடுகிறார்கள், அதை கடந்து செல்ல முயன்றவர்கள் மட்டுமே வாழ்க்கையில் விரும்பியதை ஜெயித்திருக்கிறார்கள், என்றாள் மரியா

மரியா எனக்கு போதனைகளை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது  என்றார் டால்ஸ்டாய்

தவறு போதனைகளிடம் இல்லை, அதை கேட்கும் மனதை நீ இழந்துவிட்டாய் என்பதே பிரச்சனை என்றாள் மரியா

எனது தவறுகளை நான் அறிந்து கொண்டுவிட்டேன், அதை பகிரங்கமாக ஒப்பு கொள்கிறேன், அது தான் எனது பிரச்சனை, என்றார் டால்ஸ்டாய்

சரியாக சொன்னாய், உனது தவறுகளை நீ அடையாளம் காண துவங்கும் போது அதற்கு மற்றவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நீ உணர்ந்து கொண்டிருக்கிறாய், அவர்களை வெறுக்க துவங்குகிறாய், எல்லா பிரச்சனைகளும் அங்கிருந்தே துவஙகுகின்றன என்றாள் மரியா

இனி நான் என்னை ஆராய்ந்து கொண்டிருக்கப்போவதில்லை, ஒரு புல்லை போல இயற்கையிட்ம் முற்றாக என்னை ஒப்புக் கொடுக்கப்போகிறேன், என் விதியை இயற்கை தீர்மானிக்கட்டும் போதுமா என்றார்

கடவுளின் ஆசி உன்னோடு இருப்பதாக என்றபடியே மரியா எழுந்து நடக்க துவங்கினாள்,

அவள் மடாலயம் நோக்கி போவதை அவர் பார்த்துக்  கொண்டேயிருந்தார், மரியா அவரிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டுவிட்டாள், எவரிடமிருந்தும் ஒருவர் விடைபெறுதல் எளிதானதில்லை, பிரிவு எப்போதுமே வலிமிக்கதே, இனி அவள் நினைவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பாள், மரியா அவரை தனித்து விட்டுச்சென்ற பிறகு அவர் நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்தபடியே தூரத்து மரங்களை பார்த்துக் கொண்டிருந்தார்,

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் வாழ வேண்டும், அது தான் விதி, அது தான் இயற்கையின் தேர்வு, மனிதர்கள் தனக்கான துணையை தேடிக் கொண்டது அவர்களின் விருப்பம், இயற்கையே முடிவில் வெல்கிறது, முதுமையில் மனிதன் தனிமைப்படுத்தபடுகிறான், இயற்கை அவனது ஆசைகளை கைதட்டி பரிகசித்து மீண்டும் அவனை தனதாக்கி கொள்கிறது,  அது தான் நிதர்சனம் என்று தோன்றியது,

யோசிக்க யோசிக்க மீளமுடியாதவொரு மனச்சோர்வு கூடியது, அன்றிரவு அவருக்கு உறக்கம் கூடவில்லை, என்றோ பாரீஸ் நகரில் கண்ட காட்சி கனவாக வந்த்து, ஒரு குற்றவாளியை பொது இடத்தில் தலையை துண்டிக்கும் தண்டனையை அவர் நேரில் பார்த்திருந்தார், அந்த மனிதனின் கண்கள் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தன, அதில் தனது வாழ்க்கைய ஏன் மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி ஊசலாடிக் கொண்டிருந்த்து,

மனிதன் தனது சுகங்களை பாதுகாத்து கொள்ளவே சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறான் என்று தோன்றியது, அந்த மனிதன் அன்று கனவில் தோன்றி உலகம் கருணையற்றது என்ற சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான், அவர் திடுக்கிட்டு விழித்து எழுந்து கொண்டார்,  அந்த இரவு முழுவதும் அவர் படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார், விடிந்தால் போதும் என்று திணறலாக இருந்தது

அந்த இரவில் வீசிய குளிரும் பனிப்பொழிவும் அவர் உடலை அதிகம் நடுங்க வைத்தன, உறக்கமற்ற காரணத்தால் அவரது முகம் ஒடுங்கிப்போனது, அதன் மறுநாள்  மகள் சாஷா அவரை காண வந்து சேர்ந்திருந்தாள், இருவருமாக தெற்கு நோக்கி செல்ல ரயில் ஏறினார்கள்,

அந்த பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை, மனமும் உடலும் நலிந்து கொண்டே வந்தன, தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து வந்த சாஷாவிடம் அடுத்து ரயில் எங்கே நிற்கும் என்று கேட்டார்

அஸ்தபோவ் என்று சொன்னார் டாக்டர் துஷான்

அங்கே இறங்கி ஒய்வெடுக்க வேண்டும், ஒருவேளை தொடர்ந்து பயணம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் மயங்கிவிழுந்துவிடுவோம் , எங்காவது கதகதப்பான அறை ஒன்றில் சற்று நேரம் அயர்ந்து கண் உறங்க வேண்டும், என்று தோன்றியது,

சாஷா அவரிடம் சொன்னாள்

அப்பா இறங்கி ஒய்வெடுத்து கொள்ளுங்கள், உடல் நலம் சரியானதும் மீண்டும் பயணம் செய்யலாம்

டால்ஸ்டாய் அதை ஏற்றுக் கொண்டவரைப் போல தலையாட்டினார்

ரயில் அஸதபோவிற்கு வந்த போது மாலையாகி இருந்தது, அவர்கள் இறங்கி மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்தார்கள், அஸ்தபோவ் மிகச்சிறிய ரயில் நிலையம், பயணிகளுக்கான தங்குமிடம் என எதையும் காணமுடியவில்லை, அருகில் தங்கும் விடுதிகளோ, ஒய்விடங்களோ எதுவும் தென்படவில்லை,

எங்கே போய் தங்குவது என்ற யோசனையுடன் ரயில் நிலையத்தின் இரும்பு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார், சாஷாவும் டாக்டரும் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டால் ஒய்வறை கிடைக்க கூடும் என்று அவரை காண சென்றிருந்தார்கள்

அவர் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார், யாரோ உறுதியான மனிதர் ஒருவர் நடந்து வருவது போன்ற சப்தம் கேட்டது, கையில் ஒரு துணிமூட்டை ஒன்றுடன் அழுக்கடைந்த கோட் ஒன்றினை அணிந்து கொண்டு ஒரு வயதான மனிதன் நடந்து வந்து அவரது பெஞ்சின் ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டான், அவன்து தாடி நரைத்துகோரையாக இருந்தது, பளுப்போடிய கண்கள், அவன் தனது துணிமூட்டையில் இருந்து ஒரு புட்டியை திறந்து எதையோ குடித்துக் கொண்டான், பிறகு அவரை உற்று நோக்கியபடியே கனவானே குடிப்பதறகு வோட்கா வேண்டுமா என்று கேட்டான்

டால்ஸ்டாய் வேண்டாம் என்று மறுதலித்தார்,

அவன் தனது வோட்கா புட்டியை துணிமூட்டையில் திணித்துவிட்டு கருணையே இல்லாத சாத்தான்கள் என்று யாரையோ திட்டினான்

அவன் யாரை அப்படி சொல்கிறான் என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை, அந்த மனிதன் தானாக அவரிடம் சொன்னான்

டிக்கெட் இல்லாத பயணி என்று என்னை வழியில் இறக்கிவிட்டார்கள், நான் ஒரு விவசாயி, எனது தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸகளை எவ்வளவோ முறை பிச்சைகாரர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறேன், கோச்விக் மடாலயத்திற்கு ஒரு முறை இருபது மூடை தானியங்கள் இலவசமாக தந்தேன், அதை எல்லாம் மறந்துவிட்டு  என்னை ஒடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்,

நான் எதற்காக பயணம் போகிறேன் என்று ஒருவரும் கேட்டுக் கொள்ளவில்லை, சட்டம் பேசுகிறார்கள் சாத்தான்கள், நான் ஒன்றை உறுதியாக சொல்வேன், படித்தவர்கள் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்,

நான் படிக்காதவன், கையில் ஒரு ரூபிள் கூட பணமில்லாதவன், நான் எதற்காக போகிறேன் என்பதை நீங்களாவது கேட்டுக் கொள்ளுங்கள், எனது மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறேன், அது நீவா கிராமத்திலிருக்கிறது, அங்கு தான் அவள் இறந்து போனாள், அந்த கல்லறையை ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்து அவளை நினைத்து பிரார்த்தனை செய்து வருவேன்,

அவள் என்னை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனவள், அதனால் என்ன, அது அவளது விருப்பம், என் மனைவியாக வாழ்ந்த நாட்களில் என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் தானே, அதற்கு கைமாறு செய்ய வேண்டியது என கடமை தானே என்றான்

நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று டால்ஸடாய் அந்த மனிதரிடம் கேட்டார்

லெப்தவோ, துலா பகுதி என்றார்

நானும துலா பகுதியை சேர்ந்தவன் தான் என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் விவசாயியா என்று கேட்டான் அந்த மனிதன்

ஆமாம், எனது பண்ணை அங்கேயிருக்கிறது , யஸ்னயா போல்யனா என்றார் டால்ஸ்டாய்

கவுண்ட் நிக்கோலாயின் பண்ணையது, நீங்கள் அவரது உறவினரா என்று கேட்டான் அந்த மனிதன்

நான் தான் கவுண்ட் நிக்கோலாய் தால்ஸ்தோய் என்றார்

நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விபட்டிருக்கிறேன், என்றான் அந்த மனிதன்

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் டால்ஸ்டாய்

எனது மனைவியின் சகோதரன் ஒரு பாதிரியார், அவன் புத்தகம் படிக்க் கூடியவன், அவன் அடிக்கடி உங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பான், உங்களை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனிதரைப் போலிருக்கிறீர்கள், பிள்ளைகளுடன் சண்டையா என்று கேட்டான் அந்த மனிதன்

யாரும் என்னை துரத்தவில்லை, நானாக வெளியேறி விட்டேன், வீடு என்னை மூச்சு திணறச் செய்கிறது, முதுமையில் ஒரு மனிதன் வேண்டும் அமைதி மட்டுமே என்றார்

உங்கள் மனைவி நீங்கள் வெளியேறியதை  தடுக்கவில்லையா என்று கேட்டான் அந்த மனிதன்

அவள் ஒரு முன்கோபி, அவளது பிடிவாதம் தாங்கமுடியாமல் தான், நான் வெளியேறினேன், ஒரு வளர்ப்பு பிராணி போல அவள் கட்டுபாட்டிற்குள் நானிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றார்

அந்த மனிதன்  வெளிறிய மேகங்களை ஏறிட்டு பார்த்தபடியே சொன்னான்

நீங்கள் ஒரு விவசாயி இருந்திருந்தால் நிச்சயம் வீட்டை விட்டு  வெளியேறி இருக்க மாட்டீர்கள், எழுத்தாளன் இல்லையா, அதனால் தான் கற்பனையான பயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்

டால்ஸ்டாய்க்கு அந்த மனிதன் மீது கோபம் வந்த்து

நான் அறுவடை காலங்களில் விவசாயிகளுடன் ஒன்றாக பாடுபட்டவன், உழைப்பின் வலியை அறிந்தவன், ஒரு போதும் நான் சுகவாசியாக இருந்தவனில்லை, என்றார்

அப்படி தோன்றவில்லை, விவசாயி தன்னை மற்றவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதற்காக வருத்தபடுகின்றவனில்லை, அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவன், நிலம் அதை தான் அவனுக்கு கற்று தந்திருக்கிறது, காத்திருந்தல் தான் விவசாயின் முதல்பாடம் என்றான் அந்த மனிதன்

இத்தனை காலம் நானும் அப்படித்தான் இருந்தேன், ஆனாலும் என்னை வீடு புரிந்து கொள்ளவேயில்லை,   என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் உங்களையே முதன்மைபடுத்தியே பேசுகிறீர்கள், எப்போதில் இருந்து உங்களுக்கு நீங்கள் முக்கியமாக ஆனீர்கள் என்று கேட்டான் அந்த மனிதன்,

அந்த கேள்வி அவருக்கு வியப்பாக இருந்த்து, அது உண்மை தானே, எப்போதுமே தன்னை பற்றியே தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டது, ஆனாலும் அவன் கேலியாக அதை கேட்கவில்லை என்பதை புரிந்து கொண்டவரைப் போல கேட்டார்

ஒருவன் தன்னை பற்றி ஆராயாமல் தனது சரி தவறுகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது

சரி தவறுகள் எல்லாம் மனிதர்கள் உருவாக்கி கொண்ட வரையறைகள், விவசாயிகள் தன்னை சுற்றிய உலகை, மனிதர்களை பற்றியே யோசிக்கிறார்கள், அதற்காகவே வருந்துகிறார்கள், தன்னை நம்பிய குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள், தான் நம்புகிற நிலத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், விவசாயம் என்பதே தன்னை முதன்மைபடுத்தாமல் செய்யும் சேவைதானில்லையா என்றான்

அந்த மனிதன் ஒரு பாதிரியை போல பேசுவது எரிச்சலாக இருந்த்து, அவனோடு எதற்காக வாதம் செய்கிறோம் என்று தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் டால்ஸ்டாய்

அந்த மனிதன் சொன்னான்

நான் ஒரு அதிகபிரசங்கி, இங்கிதம் தெரியாமல் நிறைய உளறிக் கொண்டு தானிருப்பேன், கனவானே உங்களை போல மனதில் தோன்றும் எண்ணங்களை மறைத்து பேச எனக்கு தெரியாது,

அவனோடு பேசியது போதும் என அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்து கொண்டார், அந்த மனிதன் முணுமுணுப்பான குரலில் சொன்னான்

முதுமையில் பெண்களுக்கு கடவுள் தேவைப்படுவதில்லை, ஆண்களுக்கு முதுமையில் தான் கடவுள் தேவைப்படுகிறார்,

டால்ஸ்டாய் வியப்புடன் அந்த மனிதனின் சொற்கள் வீர்யமிக்கதாக இருப்பதை உணர்ந்தபடியே அவனை ஏறிட்டு பார்த்தார்,

அந்த மனிதன்  உற்சாகத்துடன்  அவரது முகத்தை பார்த்து மீண்டும் பேச ஆரம்பித்தான்

நான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்துடன் போராடி வாழ்ந்துவருகிறேன், நிலம் என்னை தாங்கியிருக்கிறது, என்னை ஏமாற்றியிருக்கிறது, என்னை வாழ வைத்திருக்கிறது, நிலம் மிகவும் புதிரானது, அதை எந்த மனிதனாலும் முழுமையாக தன்வசமாக்கிவிட முடியாது, முழுவதும் உரிமை கொண்டாட முடியாது, , அது ஒரு புதிரான உறவு,

கனவானே  உங்கள் கதைகளில் வரும் மனிதர்களை போல உலகமும் உங்கள் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,

வீடு என்பது ஒய்விடமில்லை, அது ஒரு விசித்திரமான தாவரம், தன் விருப்பபடி தான் அது வளரும், அதன் விதி ரகசியமானது, கடந்த காலத்தை மறந்தவர்களால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும்,

வயது தான் மனிதர்களின் ஒரே பலவீனம், காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள், என அனைத்தும் உறுதியாகின்றன, வலிமை கொள்கின்றன, மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான்,

இருபது வயதில் அவனால் சகித்துக் கொள்ள முடிந்த எதையும் எழுபது வயதில் சகித்துக் கொள்ள முடியவில்லை, வயது அவனை அழுத்துகிறது, திணறடிக்கிறது, வயது அவனை மண்டியிடவும் அழவும் வைக்கிறது,

முதுமையில் வசிப்பதற்கு என ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவைப்படுகிறது, அது நத்தையின் முதுகில் உள்ளதை போல ஒரேயொரு ஆள் மட்டுமே வசிக்க கூடிய வீடு, உண்மை நானும் கூட அப்படியொரு வீட்டினை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்,

எனக்கு எவர் மீதும் புகார் இல்லை, ஒருவேளை நான் மற்றவர்களின் தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கையை நானே நரகமாக்கி கொள்வதாக நம்புகிறேன், தன்னை பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன, உங்களை நீங்கள் பகிர்ந்து கொடுங்கள், தண்ணீரை போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள், காற்றை போல எடையற்று இருங்கள் என்றான்

டால்ஸ்டாய் அந்த மனிதன் தனது அனுபவத்தின் சாரத்திலிருந்து பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவரை போல தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் வோட்கா வேண்டும் என்று கேட்டார்

அந்த மனிதன் தனது புட்டியை எடுத்து நீட்டியபடியே சொன்னான்

அஸ்தபோவ் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குவோம் என்று என்றாவது உங்கள் வாழ்க்கையில் நினைத்த்துண்டா என்று கேட்டான்

இல்லை என்றார்

என்னை சந்தித்து இந்த ஒரு மடக்கு வோட்கா அருந்துவோம் என்று யோசித்திருக்கிறீர்களா எனக்கேட்டான்

ஒருபோதுமில்ல என்றார் டால்ஸ்டாய்

எதிர்பாராமை தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது, நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றான்

வோட்கா புட்டியை திறந்து ஒரு மிடறு குடித்தார், உடலில் சூடு பரவ துவங்கியது

அந்த மனிதன் சொன்னான்

உங்களால் நடந்து வர முடியும் என்றால் அருகாமையில் ஒரு துறவியர் மடம் இருக்கிறது, அங்கே போய் தங்கி கொள்ளலாம்

இல்லை என்னால் நடக்க இயலாது, இங்கேயே நான் தங்கிக் கொள்ளப்போகிறேன் என்றார்

உங்களை போல உங்கள் மனைவி வீட்டை துறந்து வெளியேறிப் போயிருந்தால் நீங்கள் புலம்பி தள்ளியிருப்பீர்கள், அவமானத்தில் துடித்திருப்பீர்கள், அப்படி துடித்தவன் நான், ஆனால் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், அன்பு தான் வீட்டின் அடிப்படை, அதை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள், குறை சொல்லாதீர்கள், எவரது அன்பையும் புறக்கணிக்காதீர்கள்,

என்றபடியே அந்த மனிதன் தனது துணிமூட்டையுடன் எழுந்து மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்,

சாஷா அவரை ரயில்வே நிலைய அதிகாரி வீட்டின் ஒரு அறையிலே தங்கி கொள்ளலாம் எனறு அழைத்துப் போனாள்,

சிறிய படுக்கை அறையாக இருந்த்து, அவர் தலையணையில் சாய்ந்து படுத்துக் கொண்டார்

சாஷா அவரிடம் கேட்டாள்

வேறு ஏதாவது தேவையா அப்பா,

உன் அம்மாவிற்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றார் டால்ஸ்டாய்

மனைவி சோபியா வந்து சேரும்வரை அவர் அஸ்தபோவ் ரயில்நிலைய ஊழியரின் வீட்டு படுக்கையில் நிமோனியா காய்ச்சலுடன் படுத்துகிடந்தார், அவருக்கு தெரியும் தன்னை தேடி மனைவி கோபத்துடன் வந்திருப்பாள் என்று, தான் எழுதிய கடித்த்தை அவள் படித்திருப்பாள், அதற்கான தனது தரப்பு நியாயங்களை சொல்வதற்கு அவள் காத்திருப்பாள், அவளை எப்படி முகம் கொடுத்து பார்ப்பது என யோசனையாக இருந்த்து

ஒரே நாளில் உடல் நலிவுற்று பூஞ்சை போலாகியிருந்தது, மூச்சுவிடுவதற்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது, ரயில்வே நிலையத்தை சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் என பலரும் வந்து நிரம்பியிருந்தார்கள், வாழ்வின் கடைசிபடிக்கட்டில் வந்து நிற்கிறோம் என்று அவருக்குப்புரிந்த்து

தன்னை காண்பதற்காக வந்து காத்திருந்த மனைவியிடம் தன்னை மன்னித்துவிடும்படியாக கதறி அழ விரும்பினார், ஆனால் சாஷாவிடம் தனக்கு சோபியாவை பார்க்கவிருப்பமில்லை, அவளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உறுதியான குரலில் சொன்னார்

வெளியே சோபியா அழும் குரல் கேட்டது,

என்னை போல ஒருவனை சகித்துக்கொண்டு அன்பு செலுத்தியதற்கு நன்றி சோபியா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்,

அதன் பிறகு அவர் இறக்கும்வரை சோபியாவிடம் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லை

••••


( உயிர்மை 2013 ஜுலை இதழில் வெளியானது)