Special Category > ஜோதிடம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017 வரை)

(1/3) > >>

Maran:
2014ஆ‌ம் ஆ‌ண்டு சனி பெயர்ச்சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து‌ள்ளா‌ர்.


நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசு தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான் இப்போது பூமிக்காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வதால் வியாபாரம் தழைக்கும். மக்களிடையே ஓரளவு பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் பூமிக்காரகன் செவ்வாய் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் பூமி விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும்.

இயற்கை சீற்றங்களாலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களாலும் வெள்ளப் பெருக்காலும் மண் வளம் குறையும். அதேப் போல மணல் தட்டுப்பாடு உலகெங்கும் அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களுக்கு மணலைப் பயன்படுத்தாமல் வேறு மாற்றுப் பொருள் பயன்பாட்டிற்கு வரும். மணலின் பயன்பாடு குறையத் தொடங்கும். வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட, திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வரும். வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ரசாயனப் பொருட்கள், உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், தழை உரங்கள் பயன்படுத்தி உருவாகும் தானியங்களுக்கு மவுசு அதிகரிக்கும்.

சகோதரக்காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும். சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள். உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும். ஒருபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும், மற்றொரு பக்கம் அதிக விளைச்சல் உருவாகும். பருப்பு வகைகள்  துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.

அறிவியில் அறிஞர்கள், மருத்துவர்கள் பிரபலமடைவார்கள். புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கேன்சருக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்படும். அதேப்போல முடக்குவாதம் மற்றும் வெண் தழும்புகள், தோல் நோய்கள் இவற்றை தடுக்கவும், இந்த நோய்களை குணப்படுத்தவும் புதிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படும். மனித குலத்தை சீரழிக்கக்கூடிய வைரஸ்கள் நிறைந்த ஏவுகணைகள், வெடி மருந்துகள், ரசாயன குண்டுகள் தயாரிப்பில் சில நாடுகள் இறங்கும். உலகெங்கும் எல்லைப் பகுதியில் அறிவிக்கப்படாத யுத்தம் நடந்துக் கொண்டிருக்கும். உலகெங்கும் எல்லைப் பிரச்னைகளால் அமைதிக் குறையும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விலை உயரும். காவல் துறைக்கும், ராணுவத்துறையினருக்கும் ஓய்வின்றி வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். காவல்துறை, ராணுவத்துறை அதிகாரிகள் கடத்தப்படவும், பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய ராணுவத்திற்காக கூடுதல் தொகைகள் ஒதுக்கப்படும். புதிய தளவாடங்கள், ஏவுகணைகளை இந்தியா வாங்கும். சீனாவுடன் சுமூகமான நட்புறவு உண்டாகும். மக்களிடையே சேமிப்புகள் குறையும். சிற்றின்பத்திற்கு பலர் அடிமையாவார்கள். பகை வீட்டில் சனி அமர்வதால் மக்களிடையே மனஅமைதிக் குறையும். மனயிறுக்கம், அழுத்தத்தினால் தற்கொலைகள் அதிகமாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.

சாஃப்ட்வேர், சினிமா துறைகளில் வேலைத் தட்டுப்பாடு அதிகமாகும். பேங்கிங், இன்சூரன்ஸ் துறைகள் வளர்ச்சியடையும். அரசு பங்குகளின் ஒருபகுதி தனியார் மயமாகும். லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதலின் அச்சம் அதிகமாகும். இந்தியாவில் தீவிரவாதிகள் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். என்றாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும். பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். அதேப் போல விலை நிலங்கள், நீர் நிலைகளை பாதுகாக்கவும் சட்டங்கள் வரும். நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள், நதிகளை சுத்தப்படுத்துவதற்கான திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும்.

நாடெங்கும் சாலைகள் சீரமைக்கப்படும். புதிய வழிப்பாதைகளும் அமைக்கப்படும். துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். புது துறைமுகங்கள், விமான நிலையங்களெல்லாம் அமைக்கப்படும். விமானப் போக்குவரத்து இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படும். வயதானவர்களின் எண்ணிக்கை கூடும். வயதானவர்களுக்கு ஆரோக்யமும் அதிகரிக்கும். பலத்துறைகளிலும் இளைஞர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நடுத்தர வயதை தாண்டியவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். சனிபகவான் ரிஷபத்தை பார்ப்பதால் ஆடு, மாடுகளை விநோத நோய் தாக்கும். நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து. ஜெர்சி போன்ற கலப்பின மாடுகள், ஆடுகள், கோழிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

மரபணு மாற்றப்பட்ட காய், கனிகள் சந்தையில் திணிக்கப்படும். பாரம்பரியமான உணவுகளை மக்கள் விரும்பி உண்பார்கள். உணவே மருந்து என்பதையும் மக்கள் உணரக்கூடிய அமைப்பு உண்டாகும். சிவாலயங்கள் பாதிப்படையும். ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். சின்ன சின்ன அறுவை சிகிக்சைகளும் வந்துப் போகும். சிம்ம ராசியையும் சனிபகவான் பார்ப்பதால் உலகெங்கும் ஆளுபவர்களுக்கு அருகிலுள்ளவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். இரண்டாம் மட்ட அதிகார வர்க்கங்களின் கை ஓங்கும். இதய நோயாளிகள் அதிகரிப்பார்கள். இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு இவற்றால் பாதிப்பவர்களும் அதிகமாவார்கள். மக்கள் நிம்மதியைத் தேடி அலைவார்கள். சனிபகவான் தன் வீடான மகரத்தை பார்ப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்.

பழைய தொழிற்சாலைகள் சீரழியும். புதிய பணக்காரர்கள் உருவாகுவார்கள். உலகெங்கும் அரசியலில் மாற்றம் உண்டாகும். பல வருடங்களாக ஆட்சிப் புரிந்த கட்சிகள் வலுவிழந்து புதிய கட்சிகள் வலுவடைந்து ஆட்சி அமைக்கும். சனிபகவான் வி ருச்சிக ராசியில் அமர்வதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாக பரிக்கப்படும். சனிபகவான் 7&ம் பார்வையால் பெண்ணாதிக்க வீடான ரிஷபத்தை பார்ப்பதால் பெண்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகள் மறுதளிக்கப்படும். பெண்களும் மாறுபட்ட வகையில் யோசிப்பார்கள். வியாபாரம் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. முகத்தை பாதிக்கும் நோய்கள் உலகெங்கும் பரவும்.

முக சீரமைப்பு, பல் சீரமைப்பிற்கு நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகும். மலைகள் அதிகமாக பாதிப்படையும். மலைச்சரிவு, மண் சரிவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். குறுந்தொழில்கள் பாதிப்படையும். வியாபாரத்தில் அயல்நாட்டில் இருப்பவர்களின் முதலீடுகள் அதிகமாகும். அதனால் பாரம்பரியமாக இங்குத் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். ராணுவ ரகசியங்கள், அணு உலை ரகசியங்கள், விண்வெளி ரகசியங்கள், செயற்கை கோள் ரகசியங்களை கடத்தும் உளவாளிகள் கண்டறியப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

இந்திய நாட்டின் எல்லைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்படும். பல பெரிய மனிதர்களின் அந்தரங்க தொடர்புகள், அந்தரங்க நட்புகள், அந்தரங்க வாழ்க்கைகளெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். நீதிமன்றங்களின் தீர்ப்பால் சில பிரபலங்களின் வாழ்க்கை சூன்யமாகும். மாணவர்கள், இளைஞர்களிடையே பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். அரவாணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரவாணிகள் பெரிய பதவியில் அமர்வார்கள். அரவாணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். விபச்சாரத்தை தடுக்க புதிய சட்டங்கள் வரும். போதை மருந்து தடுப்புச் சட்டம் கடுமையாகும். நதிகள், கடலில் கலக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்படும். மத்திய அரசில் குழப்பங்கள் உருவாகும். மத்திய அரசில் பெரிய பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும். விபத்துகளாலும் முக்கிய பதவியில் இருப்பவர்கள் உயிரிழக்க நேரிடும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் அதிகரிக்கும். மூன்றணிகள் உருவாகும். தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா சாதிக்கும். விளையாட்டுத்துறை நவீனமாகும். ரத்தத்தை பாதிக்கும் நோய் அதிகரிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்து குறைபாடால் பலருக்கும் புதிய நோய்கள் வரும். பொதுவாக மக்களிடையே தூக்கம் குறையும்.
 
ஆகமொத்தம் இந்த சனி மாற்றம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த பணப்பற்றாக்குறை மற்றும் முடக்கம் இவற்றிலிருந்து விடுபட வைப்பதுடன் உலகெங்கும் தாராளமயமாக்களால் வியாபார அபிவிருத்தி பணப்புழக்கம் அதிகரிப்பு, சாதிக்க வேண்டுமென்ற எண்ணம், போட்டிமனப்பான்மை மற்றும் ஆரோக்யத்தின் மீது அக்கறை போன்ற தன்மைகள் உண்டாகும்.
 
பரிகாரம்

பூமிக்காரகன் மற்றும் சகோதரக்காரகனாகிய செவ்வாய் வீட்டில் சனிபகவான் அமர்வதால் விளைநிலங்களை விற்காதீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடர வேண்டாம். இரத்தத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால் விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்த தானம் செய்வது நல்லது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். செவ்வாய் அதிகாரப் பதவிகளுக்குரிய கிரகமாகும் எனவே அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது நல்லது. பொதுவாக விருச்சிக சனி மக்களிடையே பரபரப்பையும், அதே நேரத்தில் அமைதியின்மையையும், அதிருப்தியையும் உருவாக்கும்.
 
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
 
விசாகம் 4&ல் 16.12.2014 முதல் 24.1.2015 வரை
அனுஷம் 1&ல் 25.01.2015 முதல் 29.04.2015 வரை
 
அனுஷம் 1&ல் 15.3.2015 முதல் 29.4.2015 வரை வக்ரம்
விசாகம் 4&ல் 30.4.2015 முதல் 13.6.2015 வரை வக்ரம்
விசாகம் 3&ல் 14.6.2015 முதல் 05.09.2015 வரை வக்ரம்
 
விசாகம் 3&ல் 01.08.2015ல் முதல் 05.09.2015 வரை வக்ர நிவர்த்தி
விசாகம் 4&ல் 06.09.2015 முதல் 17.10.2015 வரை
 
அனுஷம் 1&ல் 18.10.2015 முதல் 16.11.2015 வரை
அனுஷம் 2&ல் 17.11.2015 முதல் 17.12.2015 வரை
அனுஷம் 3&ல் 18.12.2015 முதல் 19.01.2016 வரை
அனுஷம் 4&ல் 20.01.2016 முதல் 28.03.2016 வரை
 
அனுஷம் 4&ல் 29.03.2016 முதல் 19.05.2016 வரை வக்ரம்
அனுஷம் 3&ல் 20.05.2016 முதல் 17.07.2016 வரை வக்ரம்
அனுஷம் 2&ல் 18.7.2016 முதல் 20.08.2016 வரை வக்ரம்
 
அனுஷம் 2&ல் 12.08.2016 முதல் 20.08.2016 வரை வக்ர நிவர்த்தி
அனுஷம் 3&ல் 21.8.2016 முதல் 15.10.2016 வரை
அனுஷம் 4&ல் 16.10.2016 முதல் 15.11.2016 வரை
 
கேட்டை 1&ல் 16.11.2016 முதல் 15.12.2016 வரை
கேட்டை 2&ல் 16.12.2016 முதல் 16.01.2017 வரை
 
கேட்டை 3&ல் 17.01.2017 முதல் 12.3.2017 வரை
கேட்டை 4&ல் 13.3.2017 முதல் 23.4.2017 வரை
 
கேட்டை 4&ல் 8.04.2017 முதல் 23.4.2017 வரை வக்ரம்
கேட்டை 3&ல் 24.4.2017 முதல் 23.06.2017 வரை வக்ரம்
கேட்டை 2&ல் 24.06.2017 முதல் 13.10.2017 வரை வக்ரம்
 
கேட்டை 2&ல் 05.08.2017 முதல் வக்ர நிவர்த்தி
கேட்டை 3&ல் 14.10.2017 முதல் 18.11.2017 வரை
கேட்டை 4&ல் 19.11.2017 முதல் 17.12.2017 வரை

Maran:
மேஷம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்தாலும் ஓரளவு நிம்மதியையும் தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. எல்லோரும் நல்லவர்கள் என வாரி இரைத்ததையெல்லாம் விட்டு விட்டு சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் புரிந்து செயல்படப்பாருங்கள்.

உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்று பேசுவதெல்லாம் இனி சரி வராது. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உஷாராக இருங்கள். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ, அல்லது உங்களை விமர்சித்துப் பேசினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது.

தோல்விமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.

நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 8-ம் வீட்டில் சனி செல்வதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு கண்டகச் சனியாக 7-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி, ஃவைப்ராய்டு பிரச்னைகள் வந்துப் போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுக்கு உதவுவதாக சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள்.
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயம் வரும். நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள்.
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் ஆரோக்ய குறைவு ஏற்படும். அவ்வப்போது சலிப்பு, சோர்வுடன் காணப்படுவீர்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். ஆனால் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
     
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இளைய சகோதரருக்கு உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரும். தைரியம் குறையும். வழக்கு, கடனை நினைத்து அவ்வப்போது பயம் வந்து நீங்கும்.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய சிக்கல்கள் தீரும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டி சூழல் உருவாகும். ஆனால் நரம்புக் கோளாறு, தூக்கமின்மை, தோலில் அலர்ஜி வந்துப் போகும்.     
 
சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை ஏற்படும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பூர்வீக சொத்தைப் போராடிப் பெறுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
 
வியாபாரத்தில் போட்டிகள் அதிகமாகும். இழப்புகள் ஏற்படும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரர்களில் சிலர் தங்கள் பங்கு பணத்தை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உணவு, கட்டிட உதிரி பாகங்கள், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் குறையும். அறிவியல், கணிதப் பாடங்களில் சூத்திரங்களை ஒருமுறைக்கு இருமுறை நினைவுக்கூர்ந்துப் பார்ப்பது நல்லது. விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.
 
இந்த சனி மாற்றம் விபத்துகளையும், சிக்கல்களையும் ஒருபக்கம் தந்தாலும் மற்றொரு கடினஉழைப்பால் முன்னேற வைப்பதாகவும் அமையும்.
 
பரிகாரம்:

கஞ்சனூர் அருகிருலுள்ள திருக்கோடி காவலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபால சனீஸ்வரரை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது பிரதோஷ நாளில் சென்று பூசணிக்காய் தீபமேற்றி வணங்குங்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

Maran:
ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
உழைப்பால் உயரும் நீங்கள், அடுத்தவர் நிழலில் அமர யோசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து எதிலும் முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். 7-வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி வருகிறாரே? என்று பதட்டப்படாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நன்மையே உண்டாகும். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.

வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று யோசிக்கும் போது காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.

மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, ஹார்மோன் பிரச்னை, முதுகு தண்டில் வலி வந்துப் போகும். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 7-ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அலைச்சல், மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள், சிறுசிறு விபத்துகள், மூச்சு திணறல், வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்துப் போகும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும் காய்ச்சல், சளித் தொந்தரவு, சோர்வு வந்து விலகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நகர எல்லையை ஒட்டியுள்ளப் பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். அவ்வப்போது படபடப்பு, பதட்டம் வந்து நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.       
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சளித் தொந்தரவு, தலை வலி, பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். என்றாலும் புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.   
 
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் விளம்பரத்தில் மயங்கி புது சோப்பு, பேஸ்டு, ஷாம்பு வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் முடி உதிர்வதற்கும், தோலில் நமைச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்திற்கான லைசன்ஸ்சை புதுப்பிக்க தவறாதீர்கள். சிறுசிறு அபராதம் கட்ட வேண்டி வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு டென்ஷன், இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக போகும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த கடன் உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சிலர் உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும்.
 
கன்னிப் பெண்களே! இன்டெர்நெட்டில் அதிக நேரம் அமர வேண்டாம். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
 
இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சனைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள். கை, கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

Maran:
மிதுனம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
சமாதானத்தை விரும்பும் நீங்கள், சச்சரவுகளை தவிர்ப்பீர்கள். இதுவரை உங்களின் 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, பிரச்னைகளையும் தந்து உங்களை நிம்மதியில்லாமல் செய்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் அதிரடி யோகம் தரும் 6-ஆம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், பணவரவையும் அள்ளித் தரவுள்ளார்.

இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! எப்போது பார்த்தாலும் ஒரு குழப்பத்துடன், முகவாட்டதுடன் காணப்பட்டீர்களே! குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவி வந்ததே! பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தென்றல் வீசும். அழகு, ஆரோக்யம் கூடும். சமயோஜித புத்தியாலும், மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாகவும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நண்பர்கள், உறவினர்களெல்லாம் மாறி மாறி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவர்களெல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே! அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் தருவார்கள். கூடாபழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் அடிமனதில் மறைந்துக் கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தள்ளிப் போய் கொண்டே இருந்ததே! இனி கண்ணுக்கு அழகான மணமகன் வந்தமைவார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை சிறுக சிறுக பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்களின் சப்தம-ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 6-ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், மனதில் இனம்புரியாத பயம், ஏமாற்றங்கள், பண விரையம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச் சைகள் வந்துப் போகும். வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். திருமணம் சிலருக்கு தள்ளிப் போகும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை சனி உங்கள் ராசிக்கு 5-ம் வீடான துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் செல்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். கர்ப்பிணிப் பெண் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாதக்கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.  சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.     
   
உங்களின் அஷ்டம-பாக்யாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட வாங்க, சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. தர்மகாரியங்கள் பலவும் செய்வீர்கள்.

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.   
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, முன்கோபம், உறவினர் பகை, அசதி, சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.     
 
சனிபகவான் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் கூடும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். சனிபகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள்.   
 
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இனி மக்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். பிரபலமான இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.   
 
உத்தியோகத்தில் இருந்து வந்த அதிருப்தி விலகும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்துக் கொண்டு பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.     
 
கன்னிப் பெண்களே! கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உடல் ஆரோக்யம் சீராகும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். வேற்றுமாநிலத்தில் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.
 
இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர்யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:

திருச்சி மாவட்டம் உறையூரில் வீற்றிருக்கும் திருக்கோழியூர் அருள்மிகு அழகிய மணவாளப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

Maran:
கடகம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
மனிதநேயம் உள்ள நீங்கள், மரம், செடி, கொடிகளையும் நேசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்கவிடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே!

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்தித்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி வீட்டில் தண்ணீர் பிரச்னை, கழிவு நீர் குழாய் அடைப்பு என பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்ததே! இனி அந்த நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயார் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வலி, வேதனையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாரே! அவரின் ஆரோக்யம் சீராகும்.

நோய் குணமடையும். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தார்களே! இனி அவர்களையெல்லாம் இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கிற்காக கோர்ட், கேஸ் என்று அலைந்து ஓய்ந்துப் போனீர்களே! தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும்.

மனதில் தொக்கி நிற்கும் தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டு பிரிய வேண்டி சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் சஷ்டம-பாக்யாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 5-ம் வீட்டில் சனி செல்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திடீர் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும்.   
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக 4-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாருக்கு எலும்புத் தேய்மானம், கணுக்கால் வலி, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாய்வழி சொத்தைப் பெறுதில் தடைகள், உங்களுக்கும் வீண் பழி, வேலைச்சுமை வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அடகிலிருந்த நகை மற்றும் வீட்டு பத்திரத்தை மீட்க வழி வகைப் பிறக்கும்.
 
உங்கள் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் செலவினங்கள் அதிகமாகும். மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். மனைவிக்கு இரத்த சோகை, முழங்கால் வலி, கழுத்து வலி வந்துப் போகும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிறமொழிப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் தன்னம்பிக்கை குறையும். மனதில் ஒருவிதமான அச்சம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருந்துவீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் நிலையறியாமல் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும்.
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
 
சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் மற்றவர்களை எடுத்தெறிந்துப் பேச வேண்டாம். கண் எரிச்சல், பல் வலி, காது வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். சனிபகவான் லாப வீட்டை பார்ப்பதால் மதிப்பு, மரியாதைக் கூடும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். 
 
வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டங்களை சரி செய்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகளும் வரும். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலைச்சுமையும் குறையும். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்து உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும்.     
 
கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் நீங்கள் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூர் அல்லது ஹஸ்டலில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
 
பரிகாரம்:

தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது தசமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version