Special Category > ஜோதிடம்

மன்மத வருட ராசிப் பலன்கள்!

(1/3) > >>

Maran:

மன்மத வருட ராசிப் பலன்கள் ( 14.04.2015 - 13.04.2016 )

க.ப.வித்யாதரன்


2015 - 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


Maran:


மன்மத வருட ராசிப் பலன்கள் - மேஷம்

அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
 
வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
 
உங்களின் தனாபதி சுக்ரனும் தனஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மனைவிவழியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமையலறை, படுக்கையறையை நவீனமாக்குவீர்கள்.
 
இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால் செயற்கரிய காரியங்களை செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அப்பாயின்மென்ட் ஆர்டர் வராமல் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எல்லாம் இருந்தும் எதையோ ஒன்றை இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணம், காசு, வசதி இருந்தால் தான் எல்லோரும் மதிப்பார்கள், இல்லையென்றால் யாரும் உங்களை சீண்டுவதுக் கூட இல்லையென்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.
 
தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
நிதானமாக யோசித்து எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக் கூறுவார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.   
 
புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் அவர்களுடன் கருத்து மோதல்களும் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம்.
 
ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி மத்தியப் பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷமடைவதாலும் மாசி மாதம் மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் மேற்கண்ட காலக்கட்டங்களில் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கவனமாக செயல்படுங்கள்.

 04.07.2015 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு அசதி, சோர்வு, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடனான மனக்கசப்பு நீங்கும்
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
 
கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சில நாட்கள் தூக்கம் குறையும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சிலர் உத்யோகம், உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமாக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
9-ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். ஆன்மிகப் பெரியோரிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீண் அலைச்சல்கள் குறையும்.       
 
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். காலையில் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ரகசியங்கள் கசியக் கூடும். வேலையாட்களுக்கு நீங்கள், சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும், சலுகைகள் தந்தாலும் அவர்கள் உங்களைக் குறைக் கூறத்தான் செய்வார்கள். பங்குதாரர்கள் அவர்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

 ஆனி, ஆவணி, புரட்டாசி மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களும், திடீர் லாபமும் வரும். புது இடத்திற்கு கடையை மாற்றலாம். பற்று வரவு கணிசமாக உயரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். புது உத்யோக வாய்ப்புகள் ஆனி, ஆவணி மாதங்களில் வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஜீலை மாதம் முதல் சிலருக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தாயாருடனான மோதல்கள் விலகும்.
 
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் பெற முடியும். அலட்சியமாக இருந்தால் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் அதிகப் பணம் கொடுத்து, சிலரின் சிபாரிசில் சேர வேண்டி வரும். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது.   
 
இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனைகளையும் தருவதாக அமையும்.

Maran:


மன்மத வருட ராசிப் பலன்கள் - ரிஷபம்


பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
 
சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அழகு, ஆரோக்யம் கூடும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், கம்பியூட்டர், லேப் டாப் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். வி.ஐ.பியின் அறிமுகம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
 
களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையும் பெரிதாக்க வேண்டாம். பிரிவுகள் வரக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவிக்கு ஃபைப்ராய்டு, ஹார்மோன் பிரச்னைகள் வரக்கூடும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் புதிதாக அறிமுகமாகுபவரை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீது வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. கவனமாக செயல்படுங்கள். வெகுளித்தனமாக பேசுவதாக நினைத்து முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்களை விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள்.
 
04.07.2015 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சில நேரங்களில் எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவதால் முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். என்றாலும் முறையான அரசாங்க அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாருடன் விவாதங்கள் வந்துப் போகும். அவருக்கு மூட்டு வலி, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

 வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். அடுத்தடுத்த பயணங்களாலும் அலைச்சலாலும் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும்.   
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உங்களின் எண்ணங்களை அவர்களிடம் திணிக்க வேண்டாம். மகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். மகனின் பொறுப்பற்ற போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்ரூபமெடுக்கும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பழைக கடன் பிரச்னையை நினைத்து தூக்கம் கெடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
 
கேது ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் பொறுப்புகள் அதிகமாகும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும் வந்துப் போகும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சாலை விதிமுறைகளை மீற வேண்டாம். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம், வேலைச்சுமை, சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்களெல்லாம் நிகழக்கூடும்.
 
ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைக்கட்டும். வேலைக் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

 ஆடி மாதம் 15-ந் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமடைவதால் தொண்டை, கண், பல் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். திடீரென்று வந்து சேரும் வேலையாட்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
 
வட இந்திய வேலையாட்களை பணியில் வைக்கும் போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பணம் பட்டுவாடாக்களை நீங்களே நேரடியாக சென்று செய்யுங்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், ஸ்க்ராப், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பங்குதாரர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.
 
நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்துப் போகும். உங்களை விட தகுதியில், அனுபவத்தில் குறைந்தவர்களுக்கு கீழ் நீங்கள் வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மாசி, பங்குனி மாதங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. கண்டகச் சனி நடப்பதால் சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். கெட்ட பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். கணிதம், வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
 
இந்த தமிழ் புத்தாண்டு பணத்தட்டுப்பாடு மற்றும் பகைமையையும் தருவதாக இருந்தாலும் விடாமுயற்சியாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றியை தருவதாக அமையும்.

Maran:


மன்மத வருட ராசிப் பலன்கள் - மிதுனம்

பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.
 
மற்றவர்களால் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். சிலர் இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு கார் வாங்க வாய்ப்பிருக்கிறது. பெரிய மனிதர்களின் நட்பால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு சிலர் மாறுவீர்கள்.
 
பேச்சில் கனிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்-. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். சிலருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் நன்மை உண்டாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.   
 
4.07.2015 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
5.07.2015 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்துப் போகும். வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வரும்.

 உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், திடீர் பயணங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படும். திட்டமிடாத செலவுகளும் அதிகமாகும். குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். கொழுப்புச் சத்து அதிகமாகும். 
 
ஜனவரி 07.01.2016 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால் அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு படபடப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும்.
 
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.
 
ஆனால் 08.01.2016 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.
 
கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.   
 
சித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் முலமாகவும் அதிக பணம் வரும். மேற்கண்ட மாதங்களில் வேலைக் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. வீடு வாங்குவீர்கள். வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். வெகுநாட்களாக மனதை வாட்டி வதைத்த வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்னை ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். ஆனி, ஆடி, ஆவணி மத்தியப் பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது.

 வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வணிகர் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு தை, பங்குனி மாதங்களில் கடையை மாற்றுவீர்கள்.
 
மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டிட உதிரி பாகங்கள், போர்டிங், லாட்ஜிங், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுக்கு தகுந்தாற்போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள்.
 
என்றாலும் ஜனவரி 7-ந் தேதி வரை கேது 10-ல் நிற்பதால் அலுவலகத்தில் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு சரியாகும். எதிர்பார்த்த உதவிகள் பழைய நண்பர்களிடமிருந்து கிடைக்கும். புதிய நண்பர்களாலும் உற்சாகமடைவீர்கள். உங்கள் தகுதிக் கேற்ப அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். திருமணம் ஏற்பாடாகும்.
 
மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும்.
 
இந்தாண்டு சனிபகவான் சாதகமாக இருப்பதால் சாதிக்க வைத்தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேற வைப்பதாக அமையும்.

Maran:


மன்மத வருட ராசிப் பலன்கள் - கடகம்

நேர்மையை நேசிப்பவர்களே! உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும்.
 
உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனஇறுக்கங்கள் குறையும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
 
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமைக் கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
 
மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும் போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தாயாருடனான பிணக்குகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
 
இந்தாண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். குடும்ப விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
 
அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகன் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். மனைவிக்கு யூரினரி இன்பெக்ஷன், தைராய்டு பிரச்னை, நெஞ்சு வலி வந்துப் போகும். மனைவி உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ள வேண்டாம்.
 
வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விபத்துகள் ஏற்படக்கூடும். பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சில நாட்களில் தூக்கம் குறையும். இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

 04.07.2015 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் காய்ச்சல், மஞ்சள் காமாலை, சளித் தொந்தரவு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வெளி உணவுகள், கார, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிடும் நேரத்தில் மற்றொரு சிக்கல் தலைத்தூக்கும்.
 
வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். "காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
 
5.07.2015 முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். இரக்கப்பட்டு இனி ஏமாறக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். நோய் குணமாகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மழலை பாக்யம் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். அரைக்குறையாக நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
ஜனவரி 07.01.2015 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
9-ம் இடத்தில் கேது நிற்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

 ஆனால் 08.01.2016 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால் பணப்பற்றாக்குறை நீடிக்கும். கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணில் தூசு விழுந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மருந்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.
 
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. கேது 8-ல் மறைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள்.
 
உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுப்படுத்துவீர்கள். கணினி உதிரி பாகங்கள், உணவு, வாகனம், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் முதலில் உங்கள் ஆலோசனைகளை மறுத்தாலும், கடைசியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். முரண்டுப்பிடித்த வேலையாட்களை நீக்கிவிட்டு நல்ல படித்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உயரதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஒரு ஈடுபாடு வரும்.
 
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உயரதிகாரிகளின் கனிவுப் பார்வை உங்கள் மீது திரும்பும். உங்களுடைய கடின உழைப்பையும் புரிந்துக் கொள்வார்கள். எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி, அவதூறு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும்.   
   
கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்து வந்த தோல் அரிப்பு, தடிப்பு விலகும். அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். கல்யாணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.   
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் ஸ்தானமான 5-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் விடைகளை எழுதிப்பாருங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். கணிதம், வரலாறுப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
இந்தப் புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவேற்றுவதாக அமையும்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version