Special Category > ஜோதிடம்

2015 குருப் பெயர்ச்சி பலன்கள்

(1/3) > >>

Maran:


2015 குருப் பெயர்ச்சி பலன்கள்!



குருப் பெயர்ச்சி பலன்களை  ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


Maran:

குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

கற்பூர புத்தி உள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்து, தாயாருடன் கசப்புணர்வுகளையும், அவருக்கு மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுப்பதுடன், உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும்.
 
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவரும் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தும் பல மருந்துவர்களிடம் ஆலோசித்து மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்தீர்களே! இப்போது அழகு, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். பூர்வீக சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். பாகப்பிரிவினை பிரச்னை சுமூகமாகும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும். இனி அவருக்கு ஆரோக்யம் கூடும். முதுகு, மூட்டு வலி, தலைச்சுற்றல் நீங்கும். சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். தாயாருடனான மோதல்கள் விலகும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள்.

நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோவிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக் கடனையும் செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். அவருக்கும் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் எப்போது பார்த்தாலும் உங்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருந்துக் கொண்டேயிருந்ததே! இனி அழகு, இளமைக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். அடகிலிருந்த வீட்டு பத்திரங்கள், நகைகளையெல்லாம் மீட்பீர்கள். வேற்றுமதத்தவர்கள், மாற்று மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள்.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தொழிலதிபர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவர் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். பிதுர்வழி சொத்தை கூடுதல் செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். நீண்ட நாளாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
 
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய தனித்திறமைகளை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் இருந்த பின்னடைவு நீங்கி சாதகமான தீர்ப்பு வரும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிகள் தேடி வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். சில நாட்கள் தூக்கம் குறையும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வீடு கட்டி குடிப் புகுவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அசதி, சோர்வு, செரிமானக் கோளாறு, யூரினரி இன்பெக்ஷன் வந்து நீங்கும். தனிமையில் அமர்வதை தவிர்க்கப்பாருங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.   
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு உண்டு. இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

சிலர் உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். ஆனால் பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.   
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். என்றாலும் மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள்.   
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். வி.ஐ.பிகளுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், சளித் தொந்தரவு, காய்ச்சல், கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். நெடுங்காலமாக நெருங்கிப் பழங்கியவர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் அதிகமாகும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம்.

குருபகவானின் வக்ர கால பயணம்:

20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். அவர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். என்றாலும் வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். முக்கிய கோப்புகளையெல்லாம் கவனமாக கையாளுங்கள்.       
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். சுமூகமாக பேசி தீர்க்கப் பாருங்கள். அதற்காக வழக்கு, வியாஜ்யம் என்று நேரத்தை விணடித்துக் கொண்டிருக்காதீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம், அதிக சுதந்திரம் தரவும் வேண்டாம். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சின்ன சின்ன அபராத தொகை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.     
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக் கூடும். மனைவிக்கு வீண் டென்ஷன், நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்துப் போகும்.             

வியாபாரிகளே! உப்பு விற்க போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக உங்கள் தொழிலை இயற்கைக் கூட சோதித்ததே! எதைச் செய்தாலும் நஷ்டங்கள் தானே மிஞ்சியது, இனி மாறுபட்ட அணுகுமுறையால் அவற்றை யெல்லாம் சரி செய்வீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் வியாபார சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். கடையை விசாலமாக்குவீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

வேலையாட்களும் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொண்டு இனி பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவியால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக வராமலிருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றி விட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.     
 
உத்யோகஸ்தர்களே! நாலாப்புறமும் பந்தாடப்பட்டீர்களே! கடினமாக உழைத்தும் அவமானங்களையும், அவப்பெயர்களையும் சந்தித்தீர்களே! உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களுக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! அதிகாரிகளையும் திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! இனி அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு இனி மாறும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு, வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். போலிக் காதலை உண்மையென நினைத்து ஏமாந்தீர்களே! அந்த மன உளைச்சலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே! என்று வருந்தினீர்களே! இனி உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். கல்வித் தகுதிக் கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடனான மோதல்கள் விலகும். 
 
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சக மாணவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். விளையாட்டு, கலை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் உறுதுணையாக இருப்பார்.       
கலைத்துறையினரே! வெளியிடப்படாமல் இருந்த உங்களுக்கு படைப்புகள் ரிலீசாகும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
 
பரிகாரம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவளைக்கைநாயகி உடனுறை ஸ்ரீவில்வவனேசுவரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Maran:

குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

உழைப்பால் சாதிப்பவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்து கொண்டு, எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்கவிடாமல் முடக்கி வைத்த குரு பகவான் இப்போது 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். தோல்வி என்றால் துவண்டீர்களே! இனி மாற்று வழி யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பிகளுடனான பகைமை விலகும். அவர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்குவீர்கள்.

என்றாலும் நீங்கள் கொஞ்சம் முன்எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதுடன், கொஞ்சம் கடினமாகத் தான் உழைக்க வேண்டி வரும். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் நடத்தை கோலங்கள் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். இடப்பெயர்ச்சி உண்டு. திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.

மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அதேப் போல முறையான அரசாங்க அனுமதியின்றி கூடுதல் தளமோ, அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து இடத்தை விரிவுப்படுத்தி வீடு கட்டுவதோ அல்லது கடையை விரிவுப்படுத்துவதோ வேண்டாம். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தின் பொருட்டு அல்லது கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகளால் பிரிவுகள் ஏற்படக்கூடும். உங்களின் கோபதாபங்களையும், கூடாப்பழக்க வழக்கங்களையும் உங்கள் மனைவி சில சமயங்களில் சுட்டிக் காட்டுவார்.

அதற்காக அவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ளாமல் திருத்திக் கொள்வது நல்லது. உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களை சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். அயல்நாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு, இருக்கும் ஊரை விட்டு அல்லது நாட்டை விட்டு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு குறையும். கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.
 
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளிடம் அதிகம் கெடுபிடி காட்டாமல் அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரிடும். உணவு விஷயங்களில் நாக்கை கட்டுபடுத்துங்கள். எந்த வேலையை செய்தாலும் நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தாய்பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சிலர் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் அல்லது எல்லைப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.   
 
உங்களின் உத்யோகஸ்தமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாக குறையும். மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். பகட்டிற்காகவும், கௌரவத்திற்காகவும் வீண் செலவுகள் செய்துக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம்.
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேகம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். கோவில் கும்பாபிஷேகம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சிலர் காரியம் ஆகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு, காரியம் ஆனப் பிறகு கறிவேப்பில்லையாக தூக்கி எறிகிறார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி முன்னேறுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலைத் தருவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். கடன் தொகையில் அசல் அடைபடவில்லையே, வட்டிப் பணம் மட்டுமே தானே தர முடிகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சோப்பு, ஷாம்புவை மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.     
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தாயாருடன் வீண் விவாதங்கள், அவருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.   
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குருபகவானின் வக்ர கால பயணம்:

20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமண விஷயத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்து விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். பெற்றோருடனான மனவருத்தம் நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீட்டில் கூடுதலாக அரை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாக தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல் ஃபோன் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் பரவும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்கு கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
 
வியாபாரிகளே! கண்ட படி கடன் வாங்கி தொழிலை விரிபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே! அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப்பாருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு, வாயில் தோசை என்று கறாராக இருங்கள். இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் யோசித்து சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து பிறகு கையப்பமிடுவது நல்லது. அவசரப்பட வேண்டாம். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களை முழுமையாக நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளையும், விளம்பர யுக்திகளையும் கையாளுவது நல்லது.
 
உத்யோகஸ்தர்களே! கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். மறைமுகப் பிரச்னைகளும் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். குருபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும், அவற்றை முறியடித்துவிடுவீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது.     
 
கன்னிப்பெண்களே! மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். தாயாருடன் விட்டுக் கொடுத்து போங்கள். பெற்றோரைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வேற்றுமாநிலத்தில், வெளிநாடு தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நயமாகப் பேசுபவர்களையெல்லாம் நம்பி ஏமாற வேண்டாம்.   
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் சந்தேகங்களையெல்லாம் ஆசிரியரிடம் கேட்க தயங்க வேண்டாம். உங்களுடைய மொழியறிவுத் திறன், பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். உயர்கல்விக்காக எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சற்று தள்ளிப் போகும். வேற்றுமொழி வாய்ப்புகளால் பிரபலமாவீர்கள். 
 
பரிகாரம்:

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர்-அந்திலி கிராமம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.

Maran:

குரு பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

இரக்க குணம் அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்களின் தன வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு ஓரளவு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. சவால்களை சமாளிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். எடுத்தோம் கவிழ்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தந்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். புதிய முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். வசதி, செல்வாக்கு உள்ளவர்களின் பேச்சை கண்டு மயங்கி தவறான பாதையில் சென்று விட வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் கூட பெரிய சண்டையில் போய் முடியும். வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். மனைவியிடம் எதையும் மறைக்க வேண்டாம். அவருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். முக்கிய விஷயங்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரையெல்லாம் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். இளைய சகோதரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையெல்லாம் சிலர் பரப்புவார்கள்.

வங்கி சேமிப்புக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வெளிவட்டாரத்திலும் நிதானம் அவசியம். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில நேரங்களில் தன்னம்பிக்கையில்லாமல் போகும். கடந்த காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். இப்போது அது மாதிரியான வாய்ப்புகள் வந்தால் நான் மிக அருமையாக செய்து முடிப்பேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்வீர்கள். போனது போகட்டும் இனி வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். மனைவிக்கு ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்துப் போகும். சிலர் உத்யோகத்தின் பொருட்டு மனைவியை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
உங்களின் 7-ம் வீட்டை குரு தனது 5-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலை உருவாகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. அதிக வட்டிக்கு வாங்கிய கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோமோ என்று முழிபிதுங்கி இருந்தீர்களே! இனி முழு கடனையும் பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு இல்லாவிட்டாலும், ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு வருமானம் உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கும் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்தபடி நல்ல பெண் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.     
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.

உங்களது லாப வீடான 11-வது வீட்டை குரு தனது 9-ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, கூடுதல் தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் உடனே முடிக்க முடியாமல் போகும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் முன்கோபம் குறையும். சாந்தமாவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகன வசதிப் பெருகும். எதிர்பார்த்து ஏமார்ந்துப் போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.     
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள்.

குருபகவானின் வக்ர கால பயணம்:

20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.     
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசுக் காரியங்கள் இழுபறியாகும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வருங்காலம் பற்றிய பயம், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உதவாமல் போக வாய்ப்பிருக்கிறது. எனவே மாற்றுவழி யோசிப்பது நல்லது.   
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்துகள், மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் லேசான தலை வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
 
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புது முயற்சிகளோ, பெரிய முதலீடுகளோ வேண்டாம். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுங்கள். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். விட்டுக் கொடுத்து போங்கள்.
 
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அவர்களிடம் உஷாராக பழகுங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீரயோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் சற்று தாமதமாகும்.       
 
கன்னிப்பெண்களே! கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித்தள்ளுங்கள். இரும்பு, கால்சீயச் சத்து உடம்பில் குறையும். மேலை நாட்டு உணவு தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். ஃபேஸ் புக், இமெயிலை எல்லாம் கவனமாகப் பயன்படுத்துங்கள். வேலைக் கிடைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி வரும்.   
     
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.     
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.
 
பரிகாரம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வை இழந்தவர்களுக்கு உதவுங்கள்.

Maran:

குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம்

புதுமை விரும்பிகளே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சல்களையும், கஷ்ட, நஷ்டங்களையும், டென்ஷனையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! மருந்து, மாத்திரையுமாக உங்களைப் பாடாய்ப்படுத்தினாரே! வாழ்க்கையில் ஒருவித வெறுப்புணர்வையும், எப்போதும் கசப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்தாரே! அவமானங்களாலும், பணப்பற்றாக்குறையாலும் ஓடி, ஒதுங்கினீர்களே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டீர்களே! குடும்பத்தினர் கூட உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்தார்களே! இப்படி பலவகையிலும் உங்களை அலைக்கழித்து, எதிர்காலம் என்னவாகுமோ என்றெல்லாம் அச்சுறுத்திய குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனசில் இருந்த போராட்டங்கள் நீங்கும்.

சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். வீட்டில் சாதாரணமாகப் பேசினால் கூட பிரச்னைகள் வெடித்ததே! இனி இதமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து திணறடித்ததே! இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். உங்களிடம் கடன் வாங்கிவிட்டு இதோ, அதோ என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தொகையை திரும்பித் தருவார்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் சந்தோஷம் குடி கொள்ளும். புயல் வீசிய உங்கள் இல்லத்தில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை தவழும். தோற்றப் பொலிவுக் கூடும்.

ஒன்றுமே இல்லாத சின்ன விஷயத்திற்கு கூட இந்த பிரச்னை இப்படியாகுமோ, அப்படியாகும் என்றெல்லாம் உங்கள் அடிமனதில் ஒரு கவலையுடன் நிம்மதியான சாப்பாடு, தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நிம்மதியாக சாப்பிடுவீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். வங்கியில் அடகு வைத்திருந்த நகை, வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும்.
 
குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். குழம்பிக் கொண்டிருந்த நீங்கள் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையத் தொடங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.   
 
உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் பழைய சொந்தங்கள் தேடி வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் அமையும். விசா பெறுவதில் தடையிருக்காது. மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.   
 
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மீக காரியங்களில் அதிக நாட்டம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது முதலீடுகள் செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். மலையாளம், தெலுங்குப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வழக்கு மூலம் பணம் வரும். மகளுக்கு வரன் அமையும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்களின் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், லேப்-டாப், செல் ஃபோன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும்.   
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணம் வந்துப் போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிப்பது நல்லது.

குருபகவானின் வக்ர கால பயணம்:

20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். சொத்து சேர்க்கை உண்டாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதிக் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். 

08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
 
வியாபாரிகளே! தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளால் கையை சுட்டுக் கொண்டீர்களே! கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனைகள் வெடித்ததே! அந்த அவல நிலையெல்லாம் மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீரும். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாட்கள் உங்களை நிலை குலைய வைத்தார்களே! இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை நீக்கி விட்டு உங்களுக்கு தகுந்தாற் போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், ஸ்டேஷனரி, துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! இரவு பகலாக உழைத்தும் பலனில்லையே! உங்களுடைய திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறினார்களே! இனி அந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுத்தி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 
 
கன்னிப்பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். அலர்ஜி, வயிற்று வலி விலகும். ஆடை அணிகலன்கள் சேரும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியும் என கலங்க வேண்டாம். விரைவிலேயே கெட்டி மேளம் உண்டு.

பெற்றோரின் ஆதரவு கிட்டும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்புக் கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.
 
கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். பழைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும்.
 
பரிகாரம்:

கொல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமூகாம்பிகையை பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version