பத்து மாதம் தான்
என்னையும் சுமந்து
பெற்றிருக்க வேண்டும்
நீ
எல்லா பிள்ளையும் போல
உன் வயற்றில் உதைத்து
விளையாடிருக்க வேண்டும்
நான்
எல்லா தாயையும் போல
எனக்காய் உன் ஆசைகளை
தியாகம் செய்து
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எனக்காய் சிந்தித்து
என்னை வலியினூடே
பிரசவித்திருக்க வேண்டும்
நீ
பிறந்த நாடு முக்கியம்
என்றுணர்ந்த நீ
பெற்ற பிள்ளைக்கு
உன் பாசம் முக்கியம்
என்று உணர
தவறியதேனோ ?
தோள் கொடுப்பான்
தோழன் சரி தான்
பெற்ற தாயின் பாசம்
தர இயலுமோ
என யோசித்தாயா
நீ?
குழந்தையின் அன்பை உதறி
நீங்கள் சொல்லும் காரணங்கள்
எல்லாம்
என் ரணங்களுக்கு
மருந்தாகாது
உறவுகளுக்குள்
சுவர் எழுப்பி
இறகுகளை உதிர்த்து
பறக்க சொல்லுகிறீர்கள்
என்னை
பறந்திடத்தான்
இயலுமோ ?
உங்களை நினைத்து
பீறிட்டு வரும்
என் அழுகையின் சத்தம்
குண்டுகள் தாங்கி பறந்து வரும்
போர் விமானத்தை விட
பேரிறைச்சல் கொண்டது
என அறிவாயா
நீ?
குற்றமே செய்யாத
எனக்கு ஏன்
வாழ்வதே தண்டனையாய்
தந்தாய்
நீ ?