மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆஞ்சநேயர் தேவஸ்தானம். 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் தெற்கு திசை நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் ஆஞ்சநேயர். மூலவர் அருகே ராமர் பாதம், அனுமன் உற்சவர் விக்ரகங்கள் அமைந்துள்ளன. வேணுகோபாலன் விக்ரகம் தனியாக உள்ளது. அனுமன் சன்னதிக்கு அருகே கோதண்ட ராமர் சன்னதி அமைந்துள்ளது. அங்கு சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். மேலும் சக்கரத்தாழ்வார் மற்றும் உற்சவர்கள் அருள் பாலிக்கின்றனர்.
பிரகாரத்தில் தியான மண்டபம், மடப்பள்ளி, ராமர் சன்னதி அமைந்துள்ளது. ராமர் சன்னதி அருகே ஏழுமலையான், அலர்மேலுமங்கை தாயார் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு சங்கல்பம், 8.30க்கு கும்பஸ்தானம், 9.10 மணிக்கு ஹோமம் நடைபெறும். இதே போல், பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு ருக்மணி தாயாருக்கு சூக்த பூஜை நடைபெறும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை தாளில் எழுதி அனுமனின் கைகளில் வைக்கின்றனர்.
இக்கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். மனநலம் பாதித்தவர்கள் குணமடைவார்கள். மாணவர்கள் கல்வி செல்வம் பெற்று அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெறுவார்கள். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பூஜை விபரம்
காலை 6.30க்கு நடை திறத்தல் 7 மணிக்கு திருவாராதனம் 7.30க்கு சாற்றுமுறை 11 மணிக்கு நடைசாத்துதல் மாலை 4க்கு நடை திறப்பு மாலை 5.50 மணிக்கு சந்தி ஆராதனை இரவு 9க்கு திருவாராதனம் இரவு 9.15க்கு நடைசாத்துதல்