அத்தனை கவலைகளுக்கிடையேயும்
நினைத்து மகிழவென்றே
ஏதேனும் சந்தோஷங்களை
மிச்சம் வைத்தே
கரைகின்றது நாட்கள்
கொல்லும் வெறுமைகளுக்கு இடையே
சில நேசப்புன்னகைகளை
நமக்காகவே மலரச் செய்கிறார்
எங்கோ ஒருவர்
நாள் முழவதும்
சோர்ந்து போயிருந்த ஒரு குழந்தை
நம் முகம் பார்த்ததும்
மகிழ்ந்து ஆரவாரம் செய்யத் துவங்குகிறது
நமக்காகவே காத்துகிடக்கும்
யாரோ ஒருவனின் நம்பிக்கை விதைகளை
காலம் நம்கையில் தான்
ஒப்படைத்துப் போயிருக்கிறது
மனிதர்களை மதிப்பீடு செய்வதை
விட்டொழிக்கும் கணத்தில்
வாழ்க்கை அழுத்தங்கள் விடுத்து
அழகுபெறத் துவங்குகிறது
வாழ்தல் என்பது
எப்போதும் நமக்கானது மட்டுமல்ல...