Author Topic: பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்  (Read 18561 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-1
                                                                   

நள்ளிரவில் பிரமிடுக்குள்....
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன் ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். "நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்..."

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்

பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். "நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்"

அந்த உயர் அதிகாரி "அனுமதிக்க முடியாது" என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் "இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்" என்றார்.

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி "நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?"

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

இப்போது அவர் தனிமையில் இல்லை, உடன் துஷ்ட சக்திகளும் உள்ளன என்பதை உணர்ந்த போது அவர் பிரமிடுக்குள்ளே போகப் போவதாகச் சொன்ன போது ஒரு இளம் அரபு நண்பன் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. "அங்கு ஒவ்வொரு அங்குலமும் தீய சக்திகளாலும் ஆவிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அவை ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பட்டாளமே இருப்பதால் இந்த விஷப் பரிட்சைக்கு நீங்கள் போகாமல் இருப்பது நல்லது..."

சிறிது நேரத்தில் அவரால் அந்த துஷ்ட சக்திகளின் மாய உருவங்கள் கூட அலைகளாய், நிழலாய் தென்படத் துவங்கியது. ஓரிரு உருவங்கள் அவர் முகத்தின் வெகு அருகில் வந்து அவரை உசுப்புவது போல் தோன்றியது. பால் ப்ரண்டன் இரவின் தனிமைக்குப் பெரிதும் பழக்கப்பட்டவர் என்றாலும் இந்த அனுபவம் அவர் இரத்தத்தை உறைய வைத்தது. அந்த சக்திகள் அவரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுப்புவதற்கு முயற்சிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு கட்டத்தில் பக்கத்தில் வைத்திருந்த டார்ச் விளக்கைப் போட்டு அந்த சக்திகளை விரட்டுவது நல்லது என்று தோன்றினாலும் பிரமிடுகளின் உள்ளே என்ன தான் இரவில் நிகழ்கின்றது என்பதை அறியும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற எண்ணம் அவரை அவ்வாறு செய்யாமல் தடுத்தது.

(தொடரும்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-2

                                                 
உடலைப் பிரிந்து ஒரு பயணம்

ஒரு கட்டத்தில் அந்த சக்திகளின் பலம் உச்சத்திற்கு சென்றதாய் பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது. ஆனாலும் ஒரு அசாதாரண மனபலத்துடன் பால் ப்ரண்டன் தாக்குப்பிடித்தார். திடீரென்று அந்த துஷ்ட சக்திகளின் போக்குவரத்து நின்று போயிற்று. அவை எல்லாம் மாயமாக மறைந்து போயின. அங்கு ஒரு வித மயான அமைதி நிலவியது. பால் ப்ரண்டனுக்கு சிறிது நேரம் கழித்தே காரணம் விளங்கியது.

இரு புதிய உருவங்களின் அருகாமையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். மிகவும் அமைதியான தெய்வீக சக்தி உடையவையாய் அவை இருந்தன. துஷ்ட சக்திகளைப் போன்ற தெளிவில்லாத நிழல்களாகவோ, அலைகளாகவோ இல்லாமல் அந்த இரண்டு உருவங்களும் ஓரளவு தெளிவாகத் தெரிந்தன. பழங்கால எகிப்திய குருமார்கள் போலத் தெரிந்த அவர்களிடத்தில் விவரிக்க முடியாத தூய்மையை அவர் உணர்ந்தார். அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளத்தை பால் ப்ரண்டன் கண்டார்.

வந்தவர்கள் இருவரும் பால் ப்ரண்டன் அருகில் வந்து சிலைகளைப் போல் நின்றனர். இருவரும் தங்கள் கைக¨ள் மார்பிலே கட்டிக் கொண்டு நின்று பால் ப்ரண்டனை ஊடுருவிப் பார்த்தார்கள். அடுத்ததாக முதலில் மிக அருகில் நின்றவர் உதடுகள் அசைவது தெரிந்தது. ஆனால் வார்த்தைகள் ஒலியாக வெளிவரவில்லை என்று புரிந்தாலும் பேசுவது தெளிவாக பால் ப்ரண்டன் மூளையை எட்டியது.

"ஏனிங்கு வந்தாய்? அபூர்வ சக்திகளைப் பெற வந்தாயா? மானிடர்களின் வழியில் கிடைப்பது போதவில்லையா?"

அந்த வார்த்தைகள் எண்ணங்களாக தன் மூளையில் பதியவில்லை என்பதையும், அவருடைய குரலாய் தான் மூளையில் பதிகிறது என்பதையும் புரிந்த பால் ப்ரண்டனுக்கு அது எப்படி என்பது தான் தெரியவில்லை. பால் ப்ரண்டன் சொன்னார். "போதவில்லை"

"திரும்பிப் போய் விடு. இங்கு ரகசியங்களைத் தேடி வந்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போயிருக்கிறார்கள்"

"நான் தேடி வந்ததை அறியாமல் போக முடியாது"

"எங்களை நெருங்கியவர்கள் சொந்த பந்தங்களை இழந்து தனியராகப் போயிருக்கிறார்கள். அது உனக்கு சம்மதமா?"

"எனக்குத் தெரியவில்லை" என்பதை உண்மையில் பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். ஆனாலும் திரும்பிப் போக முனையவில்லை.

"சரி அப்படியே ஆகட்டும். நீ தேர்ந்தெடுத்த செயலிற்கான பலனை நீயே அனுபவித்தாக வேண்டும்" என்ற அந்த முதல் உருவம் அங்கிருந்து உடனடியாக மறைந்தது. அடுத்த உருவம் பால் ப்ரண்டனை நெருங்கியது. இரண்டாவது உருவத்தின் முகம் மிக மிக வயதானதாக இருந்தது. எவ்வளவு வயதிருக்கும் என்பதை பால் ப்ரண்டனால் அனுமானிக்க முடியவில்லை.

இரண்டாவது உருவத்திடம் இருந்தும் வார்த்தைகள் குரலுடன் பால் பரண்டன் மூளையில் பதிந்தன. "மகனே. இரகசிய சக்திகளின் தலைவர்கள் தங்கள் கைகளில் உன்னை எடுத்துக் கொண்டு விட்டார்கள். நீ ஞான மண்டபத்திற்கு தற்போது அழைத்து செல்லப்படவிருக்கிறாய். நீ அமர்ந்திருக்கும் இந்தக் கல்லில் காலை நீட்டி மல்லாக்கப் படுத்துக் கொள்..."

பால் ப்ரண்டனுக்கு அதன்படி நடப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படியே படுத்துக் கொண்டார். ஆனால் அதன் பின் நடந்ததென்ன என்று பால் ப்ரண்டனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அவருடைய தசைகள் எல்லாம் இறுக ஆரம்பித்தன. அவருடைய உடல் முழுவதும் பக்கவாதம் வந்தது போல் செயல் இழக்க ஆரம்பித்தது. முழு உடலும் பாறையாக கனக்க ஆரம்பித்தது. உடலில் இருந்து உணர்வுகள் மங்க ஆரம்பித்தன. மரணம் நெருங்குவது போல் இருந்தது. ஆனால் பால் ப்ரண்டனின் தத்துவார்த்தமான பக்குவம் அதற்கு பயப்படவில்லை.

ஒருவித இனம் புரியாத சிலிர்ப்பு தண்டுவடத்தில் கீழிருந்து மேலாகப் பரவி கடைசியில் மூளையில் மட்டும் ஏதோ உணர்வு தங்கியது. பால் ப்ரண்டன் நினைவை இழக்க ஆரம்பித்தார். நினைவினை இழக்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் "நாளை என்னுடைய பிணத்தை இந்தப் பிரமிடினுள் பார்ப்பார்கள். இதுவே என் முடிவு" என்ற எண்ணம் வந்து போயிற்று.

உடலெல்லாம் மரத்தாலும் தலையில் மட்டும் லேசான உணர்வு சிறிது நேரம் தங்கியிருந்தது. ஏதோ சூறாவளியில் சிக்கியதைப் போல் ஒரு உணர்வு மூளையில் தங்கி ஏதோ ஒரு துளை வழியாக வெளியேறுவதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். பின் உடலிலிருந்து பரிபூரண விடுதலை பெற்றது போல் உணர்ந்தார். உடலின் கனம் இல்லாமல் லேசானதைப் போன்று தோன்றிய அந்த நேரத்தில் உடல் தானல்ல என்பது அவருக்குப் புரிந்தது. இவ்வளவு நாள் தான் அடைபட்டிருந்த சிறையாகவே உடல் தோன்றியது. உடலை விட்டு வெளியே வந்திருந்த போதும் இன்னும் எல்லாவற்றையும் காணக் கூடிய சக்தியும், உணரக் கூடிய சக்தியும் தன்னை விட்டு போய் விடவில்லை என்பது புரிந்த போது அவருக்குத் திகைப்பு மேலிட்டது. இன்னும் சொல்லப் போனால் முன்னெப்போதையும் விட உணர்வுகள் கூர்மை பெற்றது போல் தோன்றியது.

அவரால் அவர் உடலைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கண்கள் லேசாக மூடிய, இரண்டு கைகளையும் மடித்து மார்பில் வைத்திருந்த தன் உடலை அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஏக காலத்தில் நிற்பதைப் போலவும் மிதப்பதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

அந்த உடலிலிருந்து ஏதோ மங்கலான வெளிர் ஒளி கிளம்பி பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆவி நிலை வந்திருப்பதை அவர் கண்டார். அது என்ன என்பதை பால் ப்ரண்டனால் சொல்ல முடியவில்லை. சுற்றிலும் உள்ள சுவர்களில் கூட மெல்லிய நிலவொளியாய் அது பிரதிபலிக்கக் கண்டார். உடலில்லாமல் உணர்வுகள் மட்டுமாய் ஒரு மிதவை நிலையில் பால் ப்ரண்டன் இருந்தார். பழங்கால எகிப்தியர்கள் மனிதனின் ஆன்மாவை பறவை வடிவத்தில் பல கல்வெட்டுகளில் வரைந்திருப்பதன் பொருள் உயரத்தில் இருக்கும் போது புரிகிறது போல இருந்தது.

உடலை விட்டுப் பிரிந்திருந்த அந்த நேரத்தில் எடையில்லாத மிகவும் லேசானதொரு நிலையை பால் ப்ரண்டன் உணர்ந்தார். தன் உடலைப் பார்க்கையில் பெரியதொரு உண்மை அவருக்குப் புலப்பட்டது. "இது தான் மரண நிலை. உடலை விட்டுப் பிரியும் போது உண்மையாக நான் சாவதில்லை. உடலை விட்டுப் பிரிந்தும் நான் இருக்க முடியும் என்ற உண்மை நிரூபணம் ஆகி விட்டதால் நான் நம்புகிறேன்." அதே நேரத்தில் "இந்த உடலையா நான் "நான்" என எண்ணி இருந்தேன்?" என்ற திகைப்பும் அவருள் எழுந்தது.

புவியீர்ப்பு விசை பாதி அவரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பாதி அந்தரத்தில் மிதப்பது போலிருக்க அந்த நிலையில் அவருக்கு ஆத்மஞானம் கிடைத்தது. "அர்த்தமில்லாத இந்த சதைக் குவியல் நான் அல்ல உண்மையில் இந்த உடல் என்னை இத்தனை காலம் சிறை வைத்திருந்தது" என்ற எண்ணம் அவருக்கு பலப்பட்டது. அப்போது உடன் இருந்த அந்த முதிய குரு அவருடைய எண்ணத்தைப் படித்தது போல சொன்னார். "உண்மையே. மிகப் பெரிய பாடத்தை நீ கற்றாய் மகனே. ஆத்மா அழிவில்லாதது!"

அந்த நேரத்தில் பால் ப்ரண்டன் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போன அரைகுறையாய் நினைவிருந்த ஒரு பெண்ணின் முகத்தையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அவர் நண்பர் ஒருவர் முகத்தையும் ஒரு விபத்தில் அகால மரணமடைந்த ஒரு குழந்தையின் புன்னகை தவழும் முகத்தையும் அண்ட வெளியில் பார்த்தார். அந்த மூன்று முகங்களும் அவரைப் பார்த்தன, பேசின. மிகக் குறுகிய காலமே அவரிடம் பேசிய அந்த முகங்கள் உருகி மறைந்தன.


(தொடரும்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3
                                                               
                                                 

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை!

அந்த குரு அவரிடம் சொன்னார். "நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு வாழ்வது போல் அவர்களும் வாழ்கிறார்கள் மகனே. இங்கு இறைவன் படைத்த அனைத்து உயிர்களின் சரித்திரமும் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் மறைந்து போன ஆரம்ப கால வம்சாவழியினரின் செயல்கள் எல்லாம் கூட இங்கு பதிவாகியுள்ளது. அட்லாண்டிஸ்* நகரம் கற்பனையல்ல. அந்த நகரம் அழிந்ததும் அந்நகர மக்கள் இறைவனை மறந்து வெறுப்பு, தீமைகளின் வழி சென்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் தான். சுயநலமும், ஆன்மீகக் குருட்டுத்தனமும் தான் அட்லாண்டிஸைக் கடலுக்குள் மூழ்க வைத்தது. இறைவன் அன்பு மயமானவன். ஆனால் அவன் ஏற்படுத்திய விதிகளின் படியே உலகம் இயங்குகிறது. அந்த விதிகளின்படி செய்த தவறுகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்பி விட முடியாது. இங்கிருந்து செல்லும் போது இந்த செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துக் கொண்டு போ மானிடனே"

(*அட்லாண்டிஸ் நகரம் குறித்து இந்த இடத்தில் நாம் தெரிந்து கொள்வது நல்லது. சகல சுபிட்சங்களுடனும் அட்லாண்டிஸ் என்ற தீவு நகரம் சுமார் 11000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததாக கிரேக்க ஞானி ப்ளேட்டோ கி.மு.360ல் கூறினார். மிக சக்தி வாய்ந்த மனிதர்கள் வசித்த அந்தத் தீவில் எந்த இயற்கை வளத்திற்கும் குறைவிருக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் மிக அறிவாளிகளாகவும், குணசீலர்களாகவும் இருந்தனர். அவர்கள் வணிகம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் வரை நீண்டதென்றும் அவர்கள் அந்தக் கண்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் தங்கள் பண்புகளிலிருந்தும், அறிவார்ந்த செயல்களிலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்த பின் அவர்களுடைய சிறப்பு குறைய ஆரம்பித்தது. சுயநலம், பேராசை, பொறாமை என்ற வழிகளில் அவர்களின் தவறுகள் மிக அதிகமாகிய போது அந்தத் தீவு கடலில் மூழ்கி அழிந்தது என்று சொல்கிறார்கள். பலரும் கற்பனை என்றும் கதை என்றும் நினைத்த அட்லாண்டிஸ் உண்மையில் இருந்தது என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள். அதையே அந்தக் குருவும் இங்கே சொல்கிறார்.)

"இங்கே வரும் எல்லா மனிதர்களுக்கும் இந்த இரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. ஆனால் உன் ஆர்வமும், விளக்கினால் புரிந்து கொள்ளப்படும் பக்குவமும் உனக்கு இருப்பதால் மட்டுமே உனக்கு இந்த இரகசியங்கள் விளக்கப்படுகின்றன"

பால் ப்ரண்டன் அடுத்த கணம் புவியீர்ப்பு விசை முழுவதும் தனக்கு அற்றுப் போவதை உணர்ந்தார். முழுவதுமாய் காற்றில் மிதப்பது போல இருந்தது.

"உன்னை ஒரு ரகசிய ஞான கருவூலத்திற்கு அழைத்துப் போகப் போகிறேன்...."

அப்படிச் சொன்னவுடன் பால் ப்ரண்டன் ஆர்வம் அதிகப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல விரும்பினார் அவர். அந்தக் குருவின் ஆவி அதைப் படித்தது போல இருந்தது. "எல்லாவற்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது மகனே அவசரப்படாதே. வா என்னுடன்" என்றார் அந்த குரு.

அடுத்த கணம் பால் ப்ரண்டன் ஏதோ கோமாவில் இருப்பவர் போல தன் பெரும்பாலான உணர்வுகள் ஸ்தம்பித்தது போல் உணர்ந்தார். அடுத்ததாக அவர் நினைவு திரும்பிய போது அவர் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

பால் ப்ரண்டன் சென்றடைந்த பாதை மங்கலாய் ஒளிபடர்ந்ததாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த போது விளக்கையோ, சன்னல்களையோ அவர் காணவில்லை. பின் எங்கிருந்து ஒளி வருகிறது என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அந்த மதகுருவின் ஆவி அவரிடம் சொன்னது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் "பின்னால் மட்டும் திரும்பிப் பார்க்காதே. தலையைத் திருப்பாதே" என்றும் அவருக்குக் கட்டளையிட்டது. பால் ப்ரண்டனுக்கு அது பிரமிடுக்குள் உள்ள ரகசியப்பாதை என்று தோன்றியது. கீழ்நோக்கிச் சென்ற அந்தப் பாதையின் முடிவில் தூரத்தில் ஏதோ கோயில் போன்ற அமைப்புடைய வாயில் இருந்தது. அவர் பிரமிடுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருந்தாலும் இந்தப் பாதையையும் தூரத்தில் தெரிந்த அந்தக் கோயில் வாசல் போன்ற ஒரு அமைப்பையும் அவர் பார்த்ததாக அவருக்கு நினைவில்லை. இந்த ரகசியப்பாதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றறியும் ஆவல் அவருக்கு அதிகமாயிற்று. அந்த மதகுரு ஆவி சொன்னதைப் பொருட்படுத்தாமல் பின்னால் அவர் திரும்பிப் பார்த்தார். அந்த நீண்ட பாதையின் இறுதியில் நுழைவாயில் எதுவும் இருக்கவில்லை. ஏதோ ஒரு நுழைவிடம் போல் தெரிந்த இடம் சதுரமான கற்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனால் திரும்பிப் பார்த்ததன் தண்டனையாகவோ என்னவோ பால் ப்ரண்டனை ஏதோ ஒரு பெரும் சக்தி பின்னுக்கு இழுத்தது. அடுத்த கணம் அவர் உடல் கிடந்திருந்த அந்த ஆரம்ப இடத்திற்கே வந்து சேர்ந்தார். பால் ப்ரண்டன் திரும்பிப் பார்க்காதிருந்திருந்தால் அவர் ரகசிய ஞானக் கருவூலத்திற்கு சென்று காணும் பாக்கியம் கிடைத்திருக்கலாம். ஆனால் திரும்பிப் பார்த்த ஒரு தவறு அவரை அந்த வாய்ப்பை இழக்க வைத்தது.

தனது உடலைப் பார்த்தபடி இருந்த அவரை பெருத்த ஏமாற்றம் ஆட்கொண்டது. அந்த மதகுருவின் மெல்லிய குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது. "மகனே ரகசியப்பாதையின் வாசலை நீ காண்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. உன் மனதில் உள்ள ரகசிய ஞானக் கருவூலத்திற்கு உன்னை அழைத்துச் செல்லக் கூடிய ரகசியப்பாதையை நீ காண்பதே முக்கியம். இந்தப் பிரமிடின் ரகசியம் உன் ஆத்மாவின் ரகசியமே. உன் ஆத்மாவில் எல்லா ரகசியங்களும் புதைந்துள்ளன. பிரமிடு சொல்வதெல்லாம் மனிதனை தனக்குள்ளே கவனத்தைச் செலுத்தச் சொல்வது தான். அவன் இதுவரை அறிந்திராத அவனுக்குள் உள்ள மையப்புள்ளியில் அவன் ஆத்மரகசியத்தை அறிவதன் மூலம் அனைத்து ஞானத்தையும் பெறவே மனைதனைப் பிரமிடு வலியுறுத்துகிறது. போய் வருகிறேன்"

ஏதோ ஒரு சக்தி பால் ப்ரண்டனை அவருடைய உடலுக்குள் பலமாக ஈர்க்க அவர் மறுபடியும் தன் உடலுக்குள் நுழைந்தார். மரத்துப் போயிருந்த உடலை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தார். இருள் சூழ்ந்திருந்த பிரமிடின் அந்த அறைக்குள் தனியாக அவர் இருப்பதைக் கண்டார். மதகுருவின் ஆவியைக் காண முடியவில்லை. இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்த நிலையும் போயிற்று.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் டார்ச்சைத் தேடி எடுத்து போட்டுப் பார்த்த போது எல்லாம் அவர் முன்பு விட்டுப் போயிருந்த நிலையிலேயே இருந்தன. கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு. பொழுது புலரும் வரை தன் அனுபவங்களைக் குறித்து பால் ப்ரண்டன் சிந்தித்தபடி இருந்தார். பொழுது புலர்ந்து போலீஸ்காரர் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார்.

மதகுரு கடைசியில் பால் ப்ரண்டனிடம் சொன்ன அறிவுரை நம் நாட்டில் உபநிஷத்துக்கள் சொல்லும் அறிவுரையே என்பது நம் ஆன்மீக நூல்களைப் படித்தவர்களுக்கு விளங்கும்.

(தொடரும்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 4

                                           

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

அக்கால எகிப்திலும் நிஜங்களை விட போலிகள் அதிகமாக இருந்தனர். சக்தி வாய்ந்த சில சித்தர்கள் இருந்தாலும் ஏமாற்று வேலை செய்கிற போலி ஆசாமிகள் நிறைய இருந்தனர். சிலரை எந்த ரகத்தில் எடுத்துக் கொள்வதென்று பால் ப்ரண்டனுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தன் அனுபவங்களை உள்ளது உள்ளபடி அவர் விவரித்திருக்கிறார்.

பால் ப்ரண்டன் சந்தித்த ஒரு மந்திரவாதி அக்காலத்தில் கெய்ரோ நகரில் பிரபலமாக இருந்தார். அவர் பல அற்புதங்கள் செய்து காட்டுபவர் என்று பலரும் சொல்லவே பால் ப்ரண்டன் அவரைக் காணச் சென்றார் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்த மந்திரவாதி சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரிடம் அவர் பிறந்த தேதியையும், நேரத்தையும் கேட்டார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்து அவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவதாக அவர் கூறினார்.

பால் ப்ரண்டன் தான் தன்னுடைய எதிர்காலத்தை அறிய அங்கு வரவில்லை எனவும் அவருடைய சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அதை நேரில் கண்டறிய வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த மந்திரவாதி அவரை விடுவதாக இல்லை. பால் ப்ரண்டனுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டவர் அவருடைய கையையும் ஒரு காகிதத்தில் வைத்து வெளிப்புறத்தை வரைந்து கொண்டு வரைந்ததன் உள்புறத்தில் சில அரபு வார்த்தைகளை எழுதி வைத்துக் கொண்டு ஐந்து நாட்கள் கழித்து வரும்படிக் கூறினார்.

ஐந்து நாட்கள் கழித்து பால் ப்ரண்டன் அவர் சொன்னபடி அவரை மீண்டும் சந்தித்தார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்திருந்த அந்த மந்திரவாதி அதைப் பற்றி அவரிடம் விளக்கி விட்டு பால் ப்ரண்டனின் கைக்குட்டையைக் கேட்டார்.

பால் ப்ரண்டன் அவர் எதற்குக் கேட்கிறார் என்று விளங்காவிட்டாலும் தன் கைக்குட்டையை அவரிடம் தந்தார். வாங்கிய கையோடு அந்தக் கைக்குட்டையை திரும்பித் தந்த அந்த மந்திரவாதி அதை இரண்டாகக் கிழிக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அவர் சொன்னபடியே தன் கைக்குட்டையை இரண்டாகக் கிழித்தார். ஒரு பகுதி கைக்குட்டையை எடுத்து அதில் ஏதோ எழுதிய அந்த மந்திரவாதி அதை மடித்து ஒரு செம்புத் தட்டில் வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்தார்.

அடுத்ததாக ஒரு காகிதத்தை எடுத்த அந்த மந்திரவாதி அதில் ஒரு முக்கோணத்தை வரைந்து அதனுள் ஏதோ அரபு மொழியில் எழுதினார். பின் அதை பால் ப்ரண்டனிடம் தந்து அதை அந்தக் கைக்குட்டையின் மீது வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்த பின் ஏதோ மந்திரங்களைக் கண்களை மூடிக்கொண்டு அந்த மந்திரவாதி உச்சரிக்க ஆரம்பித்தார். பின் மந்திரங்களை நிறுத்தி அந்த மந்திரவாதி கண்களைத் திறந்த அந்தக் கணத்தில் அந்தக் கைக்குட்டை தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனே அந்த அறையில் புகை சூழ்ந்தது. மூச்சு விடக் கஷ்டமாகி இருவரும் அந்த அறையை விட்டு ஓடினார்கள்.

பால் ப்ரண்டனுக்கு அந்த மனிதர் செய்து காட்டியது மேஜிக்கா, அல்லது அவருடைய உண்மையான சக்தியைத் தானா என்ற சந்தேகம் வந்தது. அவர் அந்த மந்திரவாதியிடம் கேட்டார். "கைக்குட்டையில் எப்படித் தீப்பிடிக்க வைத்தீர்கள்"

அந்த மந்திரவாதி சொன்னார். "என் வசத்தில் உள்ள பூதத்தின் உதவியுடன்"

எகிப்தில் இப்படிப் பலரும் சொல்வதை பால் ப்ரண்டன் கேட்டிருக்கிறார். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை.

அந்த மந்திரவாதி அவரிடம் ஒரு வெள்ளைக் கோழியை மூன்று நாட்கள் கழித்து எடுத்து வரச் சொன்னார். பால் ப்ரண்டனுக்கு உதவும் சக்தியை அவர் ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் இது போல் வெள்ளைக் கோழியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஆட்களின் மேலே தெளிக்கும் பழக்கத்தை கேள்விப்பட்டிருந்த பால் ப்ரண்டன் அருவறுப்புடன் மறுத்தார். காரணம் கேட்டு அறிந்து கொண்ட மந்திரவாதி அப்படியெல்லாம் தான் செய்யப்போவதில்லை என்றும் தைரியமாக ஒரு வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு வரும்படியும் கூறினார்.

பால் ப்ரண்டனும் அந்த மந்திரவாதி சொன்னபடியே மூன்று நாட்கள் கழித்து வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு சென்றார். தரையில் போடப்பட்டிருந்த ஒரு கம்பளத்தில் அந்தக் கோழியை வைத்து விட்டு அறையின் மூலையில் புகைந்து கொண்டிருந்த புகையருகே மூன்று முறை பால் ப்ரண்டனை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டனும் அப்படியே செய்தார்.

மந்திரவாதி ஒரு காகிதத்தை எடுத்து அதில் ஒரு சதுரத்தை வரைந்தார். அந்த சதுரத்தை ஒன்பது சிறு சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ எழுதினார். பின் எதோ மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். சொல்லிக் கொண்டே வலது கை சுட்டு விரலை கட்டளையிடுவது போல் அடிக்கடி நீட்டினார். பயந்து போன கோழி பறந்து சென்று அறையின் மூலையில் பதுங்கியது. மந்திரவாதியின் மகன் வந்து அந்தக் கோழியை பழைய இடத்திலேயே வைத்து விட்டுச் சென்றான்.

அந்தக் கோழி மீண்டும் பறந்து செல்ல யத்தனிக்கையில் மந்திரவாதி உறுதியான குரலில் கட்டளையிட அந்தக் கோழி அசையாமல் அப்படியே நின்றது. சிறிது நேரத்தில் கோழி நடுங்க ஆரம்பித்தது. மந்திரவாதி மீண்டும் பால் ப்ரண்டனை அந்த சாம்பிராணி புகைக்கு மூன்று முறை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். அதன் பின்னர் அந்த மந்திரவாதி மந்திரங்களைச் சொல்லியே அந்தக் கோழியை செயலிழக்க வைத்தார். பின் அந்த கோழி இறந்து விழுந்தது.

மந்திரவாதி சொன்னார். "என்னிடம் உள்ள பூதம் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது என்பதற்கு அறிகுறியே இந்தக் கோழியின் மரணம். இந்தக் கோழி சாகவில்லை என்றால் அந்த பூதம் உங்களுக்கு உதவத் தயாரில்லை என்று அர்த்தம். நீங்கள் இந்தக் கோழியை கைக்குட்டை அல்லது காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு போய் நாளை வரை அதைப் பிரிக்காமல் வைத்திருங்கள். பின் இரவு 12 மணியளவில் நைல் நதியில் வீசி விடுங்கள். வீசுவதற்கு முன் ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ளுங்கள். என்னுடைய பூதம் அதை நிறைவேற்றிக் கொடுக்கும்"

அந்தக் கோழியைத் தொடாமலேயே சாகடித்ததை பெரிய அற்புத சக்தியாக பால் ப்ரண்டன் நினைக்கவில்லை. அப்படி ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதிலும் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் கோழியை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பால் ப்ரண்டன் வீட்டில் வேலை செய்த அரபு வேலைக்காரன் அது என்ன என்று கேட்க அது மந்திரவாதி மந்திரசக்தி பிரயோகித்த கோழியின் சவம் என்று சொன்னவுடன் அவன் அது வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கம் வருவதையே தவிர்த்தான். இது போன்ற மந்திரவாதங்களில் அங்குள்ளோருக்கு இருந்த நம்பிக்கையையும் பயத்தையும் பால் ப்ரண்டன் கவனித்தார்.

மறுநாள் மாலை ஒரு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கையில் மந்திரவாதியின் வீட்டில் நடந்ததைப் பற்றி தன்னுடன் இருந்த எகிப்திய நண்பர் மற்றும் அமெரிக்க நண்பர் ஒருவரிடம் விவரிக்க அவர்கள் இருவரும் அந்த மந்திரவாதியையும் பற்றி கிண்டலாகப் பேசி சிரித்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டலில் அனைத்து மின்விளக்குகளும் அணைந்து போயின. ஓட்டல் உரிமையாளர் என்ன முயற்சி செய்தும் மின் விளக்குகள் எரியாமல் கடைசியில் அவர் மெழுவர்த்திகளைப் பற்ற வைக்க வேண்டியதாகிற்று. உடனே பால் ப்ரண்டனின் படித்த எகிப்திய நண்பர், அது வரை கிண்டல் செய்து கொண்டிருந்தவர், பயந்து போனார். "இது அந்த மந்திரவாதியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இருந்திருந்தாற் போல் விளக்குகள் ஏன் அணைய வேண்டும்?"

பால் ப்ரண்டனுக்கு அந்த மின்வெட்டு சம்பவம் மந்திரவாதியின் வேலை தானா இல்லை தற்செயலாக நடந்ததா என்று தீர்மானிக்க முடியவில்லை. பின் அவர் அந்த மந்திரவாதி சொன்னபடி அந்த மந்திரித்த கோழியை நள்ளிரவில் நைல் நதியில் போட்டு விட்டு வந்தார்.

அவர் வீடு திரும்புகையில் அவரது அரபு வேலைக்காரன் அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்காதது போல ஆச்சரியப்பட்டான். "அல்லாவின் கருணையே கருணை" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த மக்களுக்கு இது போன்ற மந்திர தந்திரங்களில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த பால் ப்ரண்டனுக்கு இதெல்லாம் ஆதாரபூர்வமானதா இல்லை மூடநம்பிக்கையா என்றறியும் ஆவல் ஏற்பட்டது.

(தொடரும்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் - 5

                                                       

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?

மீண்டும் அந்த மந்திரவாதியை சில முறை சந்தித்து அவரிடம் இதுபற்றி துருவித் துருவி கேள்விகள் கேட்டார். அந்த மந்திரவாதியோ பிடி கொடுத்து பதில் சொல்லவில்லை. அந்த மந்திரவாதியின் மகனும் பால் ப்ரண்டனிடம் தனியாகக் குறைபட்டுக் கொண்டான். "என் தந்தையிடம் நானும் இந்த வித்தையைக் கற்றுத் தரும்படி பல முறை கேட்டுக் கொண்டேன். அவரோ இது கடினமானது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட. எழுப்பி விட்ட பூதத்தை அடக்க முடியாமல் போன எத்தனையோ மந்திரவாதிகள் பல பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே உனக்கு இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி என்னை சட்டப்படிப்பு படிக்க அனுப்பி விட்டார்"

மகனிடமே அந்த ரகசியங்களை சொல்லாத மந்திரவாதி தன்னிடம் சொல்லாததில் வியப்பில்லை என்று பால் ப்ரண்டன் எண்ணினார். ஆனாலும் இது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் மனதில் எழுந்து கொண்டே இருந்தது. அதைப் புரிந்து கொண்டது போல் ஒரு நாள் அந்த மந்திரவாதி சொன்னார். "உங்களைப் போன்ற மேலை நாட்டினர் புரியாத விஷயங்களை இல்லை என்று ஒரேயடியாக சாதிப்பதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறீர்கள். பழங்கால மந்திரவாதங்கள் உண்மையே. உண்மையில் இது போன்ற கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் இருக்கத்தான் செய்கின்றன."

அவராக அந்தப் பேச்சை எடுத்த பின் பால் ப்ரண்டன் அந்த சந்தர்ப்பத்தை விடவில்லை. "உண்மையில் அவை என்ன?"

மந்திரவாதி சொன்னார். "மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் அவையும் உலகத்தில் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அவற்றைக் காணும் சக்தியைப் பெற்றிருந்த மனிதன் காலப்போக்கில் அந்த சக்தியை இழந்து விட்டான். அவை கண்ணுக்குத் தெரியாத ஆவியுலகில் வசிப்பவை. ஆனால் அவை மனித ஆவிகள் அல்ல. மனிதர்கள் உலகில் வாழ்ந்து முடித்த பின் தான் ஆவியுலகிற்குச் செல்கிறார்கள். ஆனால் அவை அங்கேயே உருவாகி அங்கேயே இருப்பவை. அவற்றின் குணாதிசயங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றிலும் நல்லவை உண்டு. தீயவை உண்டு. தெய்வத்தன்மை வாய்ந்தவையும் உண்டு."

பால் ப்ரண்டனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. "அவற்றை உங்கள் ஆதிக்கத்திற்கு நீங்கள் எப்படிக் கொண்டு வருகிறீர்கள்?"

மந்திரவாதி சொன்னார். "அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஒவ்வொன்றையும் வரவழைக்கவும் கட்டுப்படுத்தவும் முறையான மந்திரங்கள் உண்டு. அவைகளை வந்தமர்த்த சில வடிவங்கள்/எந்திரங்களை வரைய அறிந்திருக்க வேண்டும். அவற்றினுள் சில குறிகளையும், மந்திரங்களையும் எழுத வேண்டும். எல்லாவற்றையும் கற்றுத் தர ஒரு குரு அவசியம். இத்தனையும் அறிய குரு தரும் பயிற்சிகள் எளிமையானவை அல்ல. கடுமையானவை. அதுவும் பொருத்தமானவனா இல்லையா என்றறியாமல் எந்த குருவும் யாரையும் சீடனாக ஏற்றுக் கொள்வதில்லை."

"என்னுடைய குரு என் தந்தையே. எனக்கு இதில் இருந்த ஈடுபாடை அறிந்து, தகுந்தவனா என்று தெளிந்த பிறகு தான் என் தந்தை எனக்கு மந்திர தீட்சையை என் பதினெட்டாம் வயதில் அளித்தார். இருபத்தெட்டு வயது வரை நான் கடும் பயிற்சிகளைச் செய்து, நிறைய படித்து, என்னை சக்தி வாய்ந்தவனாக ஆக்கிக் கொண்ட பின்பே நான் இந்த பூதத்தின் மீது என் ஆதிக்கத்தை ஏற்படுத்தினேன். என் மகன்கள் தங்களுக்கும் சொல்லித் தர வற்புறுத்துகிறார்கள். ஆனால் முக்கியமாக தைரியம் என்ற பண்பு அவர்களிடம் தேவையான அளவு இல்லை என்பதாலேயே நான் மறுத்து வருகிறேன். நான் இறப்பதற்கு முன் யாராவது ஒரு தகுந்த சீடனுக்கு இதை சொல்லித் தந்தே ஆக வேண்டும். அது நான் என் குருவுக்குத் தந்த வாக்குறுதி. அது இந்தக் கலை தொடர நான் செய்ய வேண்டிய கடமை. ஜோதிட வல்லுனரான நான் என் மரணகாலத்தை அறிவேன். அதற்கு முன் என் கடமையை நிறைவேற்றுவேன்."

அந்த மந்திரவாதி இது வரை தன் மந்திரவாதத்தினால் சாதித்த பல செயல்களைச் சொல்ல பால் ப்ரண்டன் ஆர்வத்துடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டு தன் சந்தேகத்தை எழுப்பினார். "நீங்கள் அபாயகரமானது என்று முன்பு சொன்னீர்களே. எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஆதிக்கத்தின் கீழ் வந்த போதிலும் அந்த பூதங்கள் நம் கைப்பாவை அல்ல. அவை மிக புத்திசாலித்தனமானவை. எப்போது நாம் பலவீனராகவும், கட்டுப்பாடில்லாமலும் மாறுகிறோமோ அவை நம் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போகவும் சாத்தியம் உண்டு. நம் சக்திகளை தீய செயல்களுக்கு உபயோகிப்பதும், நாம் வலிமை இழந்து போவதும் அவை நம்மை எதிர்த்து செயல்பட வழி வகுக்கலாம். அந்த நேரங்களில் அவை நம்மை விவரிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாக்கும். சில நேரங்களில் மரணமே சம்பவிப்பதும் உண்டு"

பால் ப்ரண்டன் கேட்டார். "பண்டைய எகிப்தியர்கள் இது பற்றி ஆழ்ந்த ஞானம் உடையவர்களாக இருந்தார்களா?"

"ஆமாம். பண்டைய எகிப்திய மதகுருமார்கள் அவற்றைப் பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல் அவற்றை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ரகசியங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளை அந்த பூதங்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்."

அப்போது பால் ப்ரண்டன் பிரமிடின் உள்ளே தனக்கேற்பட்ட அனுபவங்களைச் சொன்னார். அதற்கு மந்திரவாதி சொன்னார். "உண்மையே. அந்த ஆவிகள் பண்டைய மதகுருமார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. அந்த ரகசியங்களைக் காக்கும் பணியை அவை இன்றும் செய்து கொண்டிருக்கின்றன. யார் அந்த ரகசியங்களை அறிய முற்படுகிறார்களோ அவர்களை பயமுறுத்துதல், ஆசை காட்டுதல், கவனத்தை சிதற வைத்தல் போன்ற வேலைகளைச் செய்து அப்புறப்படுத்தி விடும். அவற்றைக் கட்டுப்படுத்த தெரிந்தால் அந்த ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். துரதிர்ஷ்ட வசமாக அந்த குறிப்பிட்ட பூதங்களை வரவைத்து கட்டுப்படுத்தும் மந்திரங்கள் பண்டைய எகிப்திய குருமார்களுடன் மறைந்து விட்டன. இப்போது அவற்றை அறிந்தவர்கள் யாருமில்லை."

பால் ப்ரண்டன் கேட்டார். "பூதங்களின் உதவியுடன் எதையும் செய்து விட முடியுமா?"

மந்திரவாதி அடக்கத்துடன் ஒப்புக் கொண்டார். "எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. பல விஷயங்கள் செய்ய முடியும் என்றாலும் அதற்கும் மேல் முடியாது. இறைவன் ஒருவனே எல்லை இல்லாதவன். முயற்சிகள் செய்ய மட்டுமே எங்களால் முடியும். எது வரை எந்த அளவு முடியும் என்ற கடைசி முடிவு இறைவனிடம் மட்டுமே இருக்கிறது"


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 6

                                                     

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி!

இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், எகிப்தில் முன்னர் நடந்த ஒரு சம்பவத்தையும் பால் ப்ரண்டனுக்கு நினைவூட்டியது.

இங்கிலாந்தில் ஒரு பாதிரியார் ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபட்டு சர்ச்சால் பதவி விலக்கப்பட்டார். ஆனால் ஹிப்னாடிசமும், சில சித்து வித்தைகளும் தெரிந்த அந்தப் பாதிரியார் தனியாக இயங்க ஆரம்பித்தார். அவர் சக்திகளைக் கண்ட சிலர் அவரைப் பற்றி அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் தன் சக்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தி மற்றவர்களிடம் பணம் பறிக்கவும், தரக்குறைவாக நடந்து கொள்ளவும் செய்தார். இதை பால் ப்ரண்டன் போன்ற பலரும் அறிந்திருந்தாலும் அவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஒரு முறை பால் ப்ரண்டன் அவருக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண்மணி ஒரு இரவில் தூக்கத்தில் நடப்பது போல் தெருவில் நடந்து வரக்கண்டார். அவரை நிறுத்தி விசாரித்த போது அந்தப் பாதிரியார் வரச்சொன்னதாகவும், அவரை சந்திக்கச் செல்வதாகவும் சொன்னார். அந்தப் பெண்மணி பேசிய போது அவர் சுயநினைவில் இல்லை ஏதோ வசியத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது பால் ப்ரண்டனுக்குப் புரிந்தது. அந்த இரவு வேளையில் அந்த நபரிடம் செல்வது நல்லதல்ல என்று பால் ப்ரண்டன் சொல்லியும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் வந்த வேறொரு நண்பரின் உதவியுடன் அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக விட்டார்.

மறுநாள் யோகிகளைப் பற்றிச் சொல்லி தன்னை இந்தியாவுக்கு அனுப்பிய இந்திய நண்பரைக் கண்டு வருத்தத்துடன் இந்தத் தகவலைச் சொன்னார். (சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல் 1 ல் சொல்லப்பட்ட இந்தியர் அவர்.  )அவரே ஒரு யோகி என்பதைப் பின்னாளில் பால் ப்ரண்டன் உணர்ந்திருந்தார். பால் ப்ரண்டன் சொன்ன தகவல் அந்த இந்திய யோகியை ஆத்திரப்பட வைத்தது. இது போன்ற ஆசாமிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு நல்லதல்ல என்று சொன்ன அவர் உடனடியாக ஏதோ மந்திரங்கள் சொல்லி அந்த போலி பாதிரியாரை சபித்தார். இந்தியா வந்து யோகிகளின் சக்திகளைக் கண்கூடாகக் கண்டிருந்த பால் ப்ரண்டன் இது அந்தப் பாதிரிக்கு அபாயமே என்றுணர்ந்தார். பெரியதாக ஒன்றும் செய்யாமல் அந்த பாதிரியாருக்கு புத்திமதி கூறி மிரட்டி ஊரை விட்டே போகும்படி செய்து திருந்த சந்தர்ப்பம் தரலாமே என்று சொன்னார். நீங்கள் உங்கள் வழிப்படி முயற்சி செய்யுங்கள் நான் வழிப்படி முயற்சி செய்திருக்கிறேன் என்று அந்த இந்திய யோகி கூறினார்.

இந்திய யோகிகளின் சக்தியைக் கண்கூடாக இந்தியா வந்திருந்த போது கண்டிருந்த பால் ப்ரண்டன் அந்தப் போலிப் பாதிரியாருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து விரைவாக அந்தப் பாதிரியாரை சந்தித்து புத்தி சொல்லி எச்சரிக்கச் சென்றார். அந்தப் பாதிரியார் தங்கியிருந்த இடத்திற்குப் போன போது உள்ளே இருட்டாக இருந்தது. அந்த இடமே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு விசாரித்த போது அந்தப் பாதிரியார் தன் சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டு இருந்த போது மின்விளக்குகள் திடீரென்று படாரென்று வெடித்தன என்றும் ஏதோ ஒருசக்தி அந்தப் பாதிரியாரை ஆக்கிரமித்தது போல் இருந்தது என்றும் பயத்தில் அந்தப் பாதிரியார் ஏதேதோ பிதற்றிக் கொண்டு ஏதோ சைத்தான் வந்து விட்டதாகவும், இதெல்லாம் சைத்தானின் வேலை என்றும் கத்திக் கொண்டு கீழே மயங்கி விழுந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள். பின் அந்த பாதிரியாரை மருத்துவமனைக்கு விரைவாக அவருடைய சீடர்கள் அழைத்துச் சென்றார்கள்.

பால் ப்ரண்டனுக்கு இது அந்த இந்திய யோகியின் சாபம் செய்த வேலையே என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. அந்த சீடர்களிடம் இது நடந்த நேரத்தைக் கேட்டார். அவர்கள் சொன்ன நேரம் அந்த இந்திய யோகி மந்திரங்களை உச்சரித்து சபித்த அதே நேரம்!. அந்த முட்டாள் சீடர்களில் ஒருவனிடம் அவர்களது குருவின் மயக்கம் தெளிந்தவுடன் தரச் சொல்லி பால் ப்ரண்டன் ஒரு கடிதத்தைத் தந்தார். உடனடியாக அந்த ஊரை விட்டுக் கிளம்ப வேண்டும் என்றும் இல்லா விட்டால் போலீசில் புகாரும் தரப்படும் என்றும் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார். அந்தப் பாதிரியார் பின் அந்த ஊரை விட்டே போய் ஒரு வருடத்திற்குள் ஒரு கிராமத்தில் இறந்து போனார்.

அதே போல் இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) என்பவர் டுடன்காமென் (Tutankhamen) என்ற கிமு பதினான்காம் நூற்றாண்டின் எகிப்திய சக்கரவர்த்தியின் கல்லறையைத் தோண்டிப் பார்க்கும் பணியை 1923ல் மேற்கொண்டார். அந்தக் கல்லறைக்குள் நிறைய செல்வங்கள் உள்ளன என்றும் அந்த செல்வங்கள் மந்திரங்களால் சபிக்கப்பட்ட சாபங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் எகிப்தில் பெருத்த நம்பிக்கை பரவலாக இருந்து வந்தது. பலரும் கார்னர்வான் பிரபுவை அந்தக் கல்லறையை திறக்கப்போவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார்கள். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கல்லறையைத் திறந்து பார்க்கும் பணியை மேற்கொண்டார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் இரண்டே மாதங்களில் ஏதோ விஷக் கொசுக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிட்டது. அன்றும் அவர் கெய்ரோவில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் தெரியக்கூடிய காரணமே இல்லாமல் எல்லா விளக்குகளும் அணைந்தன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து மின்சாரம் திரும்பக் கிடைத்த போது அவருடைய நர்சு அவர் பிணத்தைக் காண நேர்ந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இங்கிலாந்தில் கார்னர்வான் பிரபுவின் செல்ல நாய் விசித்திரமாய் குலைத்து விட்டு செத்து விழுந்தது.

(அந்தக் கல்லறையைத் திறக்கும் வேலையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் பல்வேறு கால கட்டங்களில் துர்மரணத்தையே சந்திக்க நேர்ந்தது அல்லது பெரிய இழப்புகளை சந்திக்க நேரிட்டது என்று கூறுகிறார்கள்.அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி வந்த இது போன்ற மரணச் செய்திகள் பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது)

தன் நேரடி அனுபவம் மூலமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கல்லறை தோண்டப்பட்டதன் விளைவுகளின் பதிவுகளைப் படித்திருந்ததன் மூலமாகவும் அறிந்ததை இந்த சமயத்தில் பால் ப்ரண்டன் நினைவு கூர்ந்தார்.

(தொடரும்)
« Last Edit: December 21, 2011, 06:36:06 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்- 7

                                           

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்


பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்புத சக்தி படைத்த ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிகளை. அந்தத் தம்பதிகள் கெய்ரோ நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பெயர் எட்வர்டு அடெஸ் மற்றும் மேடம் மார்கரைட். எட்வர்டு அடெஸ் தன் மனைவியை ஹிப்னாடிசம் செய்து பல அற்புத செயல்களை நிகழ்த்த வல்லவராக இருந்தார்.

அவர்களை சந்திக்கச் செல்லும் முன் பால் ப்ரண்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரிய அதிகாரியின் மனைவியையும் தன்னுடன் வரச் சொன்னார். அந்தப் பெண்மணி மனைவி இது போன்ற செயல்களை எப்போதும் சந்தேகக் கண்ணால் பார்ப்பவராக இருந்ததால் தாங்கள் காணப்போகும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஏமாற்று வேலை இருந்தால் அவருடைய கூர்மையான பார்வைக்குத் தப்பாது என்று பால் ப்ரண்டன் எண்ணினார்.

எட்வர்டு அடெஸ் அவர்களை வரவேற்று நிறைய நேரம் தங்கள் இருவரைப் பற்றியும் சொன்னார். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதைத் தங்கள் வாழ்வில் கண்டறிந்ததாகச் சொன்னார். மனிதன் தனக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை பகுத்தறிவு என்ற பெயரால் கண்டறியத் தவறுவதாகச் சொன்னார். அவருடைய மனைவி மார்கரைட் அதிகம் பேசாத அமைதியான நபராக இருந்தார்.

எட்வர்டு அடெஸ் ஆரம்பத்தில் தன் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த தனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதாகவும், தொடர்ந்த பயிற்சியால் இப்போது ஓரிரு நிமிடங்களே தேவைப்படுவதாகவும் சொன்னார்.

அவர் தன் வலது கட்டை விரலை தன் மனைவியின் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் சொன்னபடியே மார்கரைட் கண்கள் சொருகி உடனடியாக ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்தார். பால் ப்ரண்டன் எழுந்து சென்று மார்கரைட்டின் கண்ணிமைகளை சற்று விலக்கிப் பார்த்தார். கண்மணிகள் நிஜமாகவே மேலே சென்றிருந்தன. இது அவர் முழு பிரக்ஞையில் இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கவே திருப்தியுற்ற பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிடம் தொடரச் சொன்னார்.

ஆரம்பத்தில் ஓரிரு எளிய ஹிப்னாடிச பயிற்சியாளர்கள் செய்யும் நிகழ்வுகளை செய்து காட்டிய எட்வர்டு அடெஸ் அடுத்தபடியாக பால் ப்ரண்டனிடம் மார்கரைட்டின் கண்களைக் கட்டச் சொன்னார்.

பால் ப்ரண்டன் மார்கரைட்டின் கண்களை டேப் போட்டு ஒட்டி வேறு ஒரு சிவந்த துணியால் நன்றாகக் கட்டியும் விட்டார். என்ன முயன்றாலும் கண்களைத் திறந்து பார்க்க இப்போது வழியில்லை. எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “என்னிடம் ஏதாவது செய்யுமாறு என் காதில் ரகசியமாகச் சொல்லுங்கள். நான் செய்கிறபடியே அவளையும் செய்யச் சொல்கிறேன்.”

பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிற்கு மட்டும் கேட்கும்படி காதில் சொன்னார். “வலது கையை உயர்த்துங்கள்”

வலது கையை உயர்த்தியபடியே எட்வர்டு அடெஸ் மனைவியிடம் சொன்னார். “நான் என்ன செய்கிறேனோ அப்படியே நீயும் செய்”

கண்கள் கட்டப்பட்டிருந்த மார்கரைட்டும் அப்படியே தன் வலது கையை உயர்த்தினார். பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் அந்த அதிசயத்தைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.

அந்த அதிகாரியின் மனைவியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “இப்போது நீங்கள் எதாவது என் காதில் சொல்லுங்கள்”

அந்தப் பெண்மணி அவரிடம் ரகசியமாகச் சொன்னார். “இரண்டு கைகளின் விரல்களையும் பின்னி இணைத்துக் கொள்ளுங்கள்”

எட்வர்டு அடெஸ் அப்படியே விரல்களைப் பின்னி இணைத்துக் கொள்ள மார்கரைட் ஏதோ நேரில் பார்த்துச் செய்வது போல அப்படியே தன் இரு கைவிரல்களையும் பின்னிக் கொண்டார்.

வியப்பில் ஆழ்ந்த பால் ப்ரண்டன் மற்றும் அந்தப் பெண்மணியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “நீங்கள் இது வரை பார்த்தது ஹிப்னாடிசத்தின் முதல் நிலை. இரண்டாவது நிலையில் ஆழ்மனம் இன்னும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வேலை செய்யும்.”

எட்வர்டு அடெஸ் தன் மனைவியை இரண்டாம் நிலை ஹிப்னாடிசத்திற்குக் கொண்டு செல்லவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மார்கரைட்டின் நெற்றியைத் தொட்டுக் கட்டளையிட்டார். பின் அவரை எழுந்து நாற்காலியில் அமரச் சொல்ல மார்கரைட்டும் அமர்ந்தார்.

அங்கு அலமாரியில் வைத்திருந்த பல புத்தகங்களில் ஒன்றை எடுத்துத் தரும்படி எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொல்ல பால் ப்ரண்டன் எழுந்து அந்த அலமாரியில் இருந்து ஒரு பிரெஞ்சு அறிவியல் புத்தகத்தை எடுத்தார். எட்வர்டு அடெஸ் “அதில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்” என்று சொல்ல பால் ப்ரண்டன் 53ஆம் பக்கத்தில் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

அடெஸ் மனைவியிடம் “அவர் தேர்ந்தெடுத்த பத்தியை அப்படியே பார்த்து எழுது” என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தர மார்கரைட் மூடிய கண்களுடன் அந்தப் புத்தகத்தைப் பார்த்து பின் அந்தத் தாளில் எழுத ஆரம்பிக்க பால் ப்ரண்டனும், அந்தப் பெண்மணியும் பிரமித்துப் போனார்கள். பால் ப்ரண்டன் சென்று மீண்டும் மார்கரைட்டின் கண்கள் முழுமையாகத் தெரியாதபடி கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொண்டார். இரண்டிரண்டு திரைகளால் அந்தக் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது உண்மை தான். ஆனாலும் மார்கரைட் இரண்டு மூன்று சொற்களை எழுதி விட்டு மறுபடியும் அந்தப் பக்கத்தைப் பார்த்து மறுபடி திரும்பி தாளில் எழுதுவது என்று பார்த்து எழுதுபவர்களைப் போலவே நடந்து கொண்டார்.


மார்கரைட் எழுதியதில் ஒரே ஒரு சொல்லில் வந்த ஒரு சிறிய எழுத்துப் பிழை தவிர மீதி எல்லாம் அப்படியே எழுதப்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அந்தப் பத்தியில் இரண்டாவது வரியில் இரண்டாவது சொல்லையும், மூன்றாவது வரியில் மூன்றாவது சொல்லையும் கோடிடச் சொன்னார். கண்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் மார்கரைட் அப்படியே அந்த சொற்களைக் கோடிட்டுக் காட்டினார்.

எட்வர்டு அடெஸ் அந்தப் பத்தியை இடது கையால் எழுதிக் காட்டச் சொன்னார். இயல்பில் வலது கையால் எழுதும் பழக்கம் உடைய மார்கரைட் சிறிதும் தயக்கமில்லாமல் இடது கையால் எழுத ஆரம்பிக்க, வலது கையில் எழுதுபவர்களுக்கு இடது கையால் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.

(தொடரும்)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 8



ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...


ஹிப்னாடிசம் செய்யப்பட்ட மார்கரைட்டின் சக்திகள் அத்துடன் முடிந்து விடவில்லை. பால் ப்ரண்டனுடன் வந்திருந்த பெண்மணியிடம் மார்கரைட்டின் கையைப் பிடித்துக் கொள்ள எட்வர்டு அடெஸ் சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

எட்வர்டு அடெஸ் சொன்னார். “யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்”

அந்தப் பெண்மணி தன் கணவரின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மார்கரைட் அந்தப் பெண்மணியின் கணவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய உருவம், குணங்கள், திறமைகள் பற்றியெல்லாம் விவரித்தார். அந்த மனிதர் ஒரு அரசாங்க அதிகாரி என்பதையும் சொன்னார். (அந்தப் பெண்மணியைக் கூட்டி வந்த போது அவர் என் நண்பர் என்று சொன்னாரே ஒழிய வேறு விவரங்கள் சொல்லி இருக்கவில்லை).

(ஆனால் மார்கரைட் இன்னொரு சந்தர்ப்பத்தில் பால் ப்ரண்டனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்ட போது அவை முற்றிலும் தவறாக இருந்ததாக பால் ப்ரண்டன் கூறுகிறார். ஆனால் பால் ப்ரண்டனுடைய எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள் பற்றி எல்லாம் கூற முற்பட்ட போது அவை மிகச் சரியாகவே இருந்தன. இது போன்ற ஹிப்னாடிச நிலைக்குக் கூட எதிர்காலம் புரியாத புதிராகவே இருக்கிறது என்று பால் ப்ரண்டன் நினைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஹிப்னாடிசம் மூலம் மனதில் உள்ளதையும், ஆழ்மனதிற்குத் தெளிவாகத் தெரிந்ததையும் சொல்லலாமே ஒழிய ஆழ்மனமே அறியாத இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் இந்த நிலைக்கு சாத்தியமல்ல. உதாரணத்திற்கு தன் கணவர் குணாதிசயங்கள் அந்தப் பெண்மணிக்கு நன்றாகத் தெரிந்து இருந்ததால் அந்தப் பெண்மணியின் கணவரின் முழு விவரங்களை மார்கரைட்டால் சொல்ல முடிந்தது. அதே போல் பால் ப்ரண்டனின் இலட்சியம் மற்றும் எண்ணங்கள் அவர் அறிந்திருந்ததால் அதையும் அவர் மனம் மூலம் மார்கரைட் அறிய முடிந்தது. பால் ப்ரண்டனின் எதிர்காலம் பால் ப்ரண்டனே அறியாத ஒரு இரகசியமாக இருந்ததால் மார்கரைட்டிற்கு அவர் மனம் மூலம் அதை அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் ஏதோ முயற்சி செய்து அது பொய்யாய் போயிருக்கிறது. எதிர்காலத்தை அறிய ஹிப்னாடிசத்தை விட உயரிய யோக நிலைக்குப் போனால் ஒழிய அது சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்)

அடுத்ததாக ஹிப்னாடிசத்தின் மூன்றாம் நிலைக்குத் தன் மனைவியை எட்வர்டு அரெஸ் அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து மார்கரைட்டின் கையில் குத்தினார். ஊசி அரையங்குலம் உள்ளே சென்றாலும் மார்கரைட் வலியை உணரவில்லை. மாறாக எட்வர்டு கேஸ் ஒரு கோமாளி எதிரே நின்று கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மார்க்கரைட் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்த ஊசியை வெளியே எடுத்த போது குத்திய இடத்தில் இருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளி வரவில்லை என்பது தான் ஆச்சரியம். குத்திய இடத்தில் அடையாளமாக ஒரு கரும்புள்ளி மட்டுமே தெரிந்தது.

பின்னர் எட்வர்டு அடெஸிடம் பேசும் போது இந்த அற்புதமான சக்திகளைப் பற்றி பால் ப்ரண்டன் கேட்டார். ஒரு காலத்தில் ஒரு கல்லூரியில் மனோதத்துவ விரிவுரையாளராக இருந்த எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “உண்மையை சொல்லப் போனால் இந்த சக்திகளைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏன் ஆகிறது, எதனால் ஆகிறது, எப்படி ஆகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த சக்தி புதைந்து கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில பயிற்சிகள் மூலம், சில முறைகள் மூலம் அந்த சக்திகளை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்பது மட்டும் உண்மை”

”இதை உணர்ந்த போது நான் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல ஆரம்பத்தில் என் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்த நிறைய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த முடிந்தது முறையான, தொடர்ந்த பயிற்சியால் தான். ஹிப்னாடிசத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்களை மட்டுமே அதில் ஆழ்த்த முடியும். மேலும் ஹிப்னாடிசம் செய்பவர்களுக்கும் தங்கள் சக்தி மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஒழிய மற்றவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது..”

பால் ப்ரண்டன் கேட்டார். “கண்களைக் கட்டிய பின்பும் அவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்ததும், உங்கள் செயல்களைக் காண முடிந்ததும் எப்படி?”

எட்வர்டு அடெஸ் சொன்னார். “நம் ஐம்புலன்களும் வேலை செய்வது அந்தந்த உறுப்புகளால் தான் என்று நாம் எண்ணினாலும் நம்முடைய ஆழ்மனம் அந்த உறுப்புகளின் உதவியில்லாமலேயே அதை செய்ய முடிகிறது என்பதும் உண்மை தான். அதைத் தான் நீங்களே நேரில் பார்த்தீர்களே. ஆனால் நம் மேலோட்டமான மனதிற்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் நம் மேல்மனம் எத்தனையோ தவறான நம்மை மட்டுப்படுத்துகிற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. ஆழ்மனதின் ஆதிக்கத்திற்குச் செல்லும் போது அந்த நம்பிக்கைகள் அறுபட்டுப் போகின்றன.”

பால் ப்ரண்டன் கேட்டார். “சிலர் ஹிப்னாடிசம் செய்யும் போது ஏதாவது சொல்லிக் கொண்டே கைகளை அசைத்து ஹிப்னாடிசம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யவில்லையே. அப்படி எல்லாம் செய்யத் தேவையில்லையா?”

”அது அந்தந்த நபர்களைப் பொறுத்தது. நான் என் உள்ளே உள்ள சக்தியை நம்புகிறேன். பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அவை அவசியமானதல்ல என்று நான் நினைக்கிறேன்”

எட்வர்டு அடெஸும், மார்கரைட்டும் சித்தர்கள் அல்ல என்றாலும் மனோவசியம் என்ற ஹிப்னாடிச அறிவியல் முறையில் பால் ப்ரண்டனுக்குச் செய்து காட்டிய பல சித்திகள் வியப்பளிக்க வைக்கின்றன அல்லவா?

அடுத்ததாக பால் ப்ரண்டன் சந்தித்த நபர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பக்கிரி. உடலெல்லாம் ஆணியாலும், கத்தியாலும் பல முறை குத்திக் கொண்டும் பாதிக்கப்படாமல் இருந்தவர். தண்ணீரினுள்ளும், மணலின் உள்ளும் மணிக்கணக்காய் ஒரு நாளுக்கும் மேல் புதைந்து கிடந்து பின் பாதிக்கப்படாமல் மேல் எழுந்தவர். பல சர்ச்சைகளில் பேசப்பட்டவர். ஆனால் அலட்சியமாக ஒதுக்க முடியாத மனிதராக அந்தக் காலத்தில் பலர் கவனத்தையும் கவர்ந்தவர். பால் ப்ரண்டன் அந்த பக்கிரியைக் காண ஆவலுடன் சென்றார்.

அந்த பக்கிரி யார் தெரியுமா?


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் – 9



28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

அந்தப் பக்கிரி டெஹ்ரா பே.

ருமேனியா, இத்தாலி போன்ற நாடுகளின் அரசர்களும், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் பல முறை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துப் பேசிய பெருமையுடைவர் அந்தப் பக்கிரி. பலருடைய விமரிசனக்களுக்கு ஆளான போதும் தன் அபூர்வ சக்திகளின் வெளிப்பாடுகளை ஆராய விரும்பியவர்களைத் தட்டிக் கழிக்காதவர் அவர். இந்தியாவில் பல யோகிகளின் சக்திகளையும் ஆப்பிரிக்காவில் சில மனிதர்களின் சக்தியையும் நேரடியாகக் கண்டிருந்த பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே செய்து காட்டியதாகக் கேள்விப்பட்ட தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. முறையாக யோக சக்திகளைப் பயின்றவர்களுக்கு முடியாதது தான் என்ன?

பால் ப்ரண்டன் நேரில் சென்று பார்த்த அந்த பக்கிரி வித்தியாசமானாராகத் தெரிந்தார். தாடியுடன் இருந்த அவர் சராசரிக்கும் குறைவான உயரமானவராகவே இருந்தார். சில சமயம் அரபுகளின் பாரம்பரியமான உடை மற்றும் தலைக் கவசம் அணியும் அந்தப் பக்கிரி சில சமயம் ஐரோப்பியர்களின் உடை மற்றும் தொப்பியுடன் காணப்பட்டார். விடாமல் சிகரெட் பிடிப்பவராகவும் இருந்தார். ஒரு மனிதரை முழுமையாக அறிய அவர் வாழ்க்கையை ஆராய்ந்தால் போதும் என்று நினைத்த பால் ப்ரண்டன் கூர்மையான பார்வை, அமைதியான தன்மை கொண்டிருந்த அந்தப் பக்கிரியிடம் அவரைப் பற்றிச் சொல்லும்படி கேட்க அவர் சொன்னார்.

“நான் 1897ல் நைல் நதிக்கரையோரம் இருந்த டேண்டா என்ற சிறிய நகரத்தில் பிறந்தேன். என்னைப் பிரசவித்த உடனேயே என் தாய் இறந்து விட்டாள். என் தந்தையும் சக்தி வாய்ந்த பக்கிரிகளிடம் தொடர்பு கொண்டிருந்ததால் இளமையிலேயே நான் இந்த அற்புத சக்திகளுக்கு இணக்கமான சூழ்நிலையிலேயே வளர்ந்தேன். என் தந்தையும் சில பக்கிரிகளும் தான் என் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான் தேவையான பயிற்சிகளையும், ஞானத்தையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். அப்போது உள்நாட்டு அமைதியில்லாத சூழ்நிலை காரணமாக நான், என் தந்தை, ஒரு ஆசிரியர் மூவருமாக துருக்கிக்கு சென்று கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தில் வசித்தோம்.”

“அங்கு நான் நவீன கல்வி கற்றேன். மருத்துவம் படித்து டாக்டரானேன். அந்தக் கல்வி எனக்கு மிக உபயோகமாக இருந்தது. என்னுடைய அபூர்வ சக்திகளை நானே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ள எனக்கு மருத்துவக் கல்வி பெரும் உதவியாக இருந்தது. நான் கிரீசில் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து என் சுய ஆராய்ச்சிகளை அங்கே தொடர்ந்தேன்”

“மிகக் குறுகிய காலத்தில் அங்கு நான் செய்து காட்ட முடிந்த அற்புதம் நான் பெற்ற சக்திக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது. 28 நாட்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்க தீர்மானித்த போது அங்குள்ள பாதிரியார்கள் கடுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திடம் சொல்லி தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுவது போல் நான் செய்து காட்ட நினைப்பது என்று எண்ணினார்கள் போல இருந்தது. ஆனால் அரசாங்கம் டாக்டரான எனக்கு செய்யப் போவதன் அபாயத் தன்மையை விளக்க வேண்டியதில்லை என்று சொல்லி என்னைத் தடுத்து நிறுத்த முற்படவில்லை. நான் டாக்டராக இருந்தது அங்கு மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் நான் இது போன்ற நிகழ்வுகளைச் செய்து காட்ட உதவியது. நான் 28 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்து பின் வெற்றிகரமாக வெளியே வந்தேன்.”

“நான் பல்கேரியா, செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று சில நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினேன். இத்தாலியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் அவர்கள் பரிசோதனை செய்யவும் சம்மதித்து ஒரு நிகழ்ச்சியை செய்து காட்டினேன். காரீயத்தால் ஆன சவப்பட்டியில் படுத்துக் கொண்டு என் உடல் எல்லாம் மண்ணால் மூடி, அந்த சவப்பெட்டியை ஆணிகளால் அடித்து மூடி ஒரு நீச்சல் குளத்தின் அடியில் அந்த சவப்பெட்டியை இறக்கினார்கள். ஆனால் அரை மணி நேரத்தில் போலீசார் வந்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்து என்ன வெளியே எடுத்து விட்டார்கள். ஆனால் அரை மணி நேரம் நான் அந்த சவப்பெட்டியில் பாதிக்கப்படாமல் இருந்தேன்”

“பின் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அதே நிகழ்ச்சியைத் தொடரத் தீர்மானித்தேன். அங்குள்ள போலீசாரிடம் முன்பே நான் டாக்டர் என்ற ஆதாரத்தைக் காண்பித்து அனுமதி பெற்றேன். அவர்கள் அனுமதி தந்ததோடு நான் பொது மக்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் இருந்த என் சவப்பெட்டியை 24 மணி நேரமும் வெளியே இருந்து காவல் காத்தார்கள். 24 மணி நேரம் கழித்து அவர்கள் சவப்பெட்டியைத் திறந்த போது நான் உயிருடன் வெளியே வந்தேன்” என்ற டெஹ்ரா பே அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பால் ப்ரண்டனிடம் காட்டினார்.

டெஹ்ரா பே தொடர்ந்தார். “நீங்கள் இந்தியாவிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாக உங்கள் நூலில் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஏமாற்று வேலை நடைபெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். சில போலி யோகிகளும் பக்கிரிகளும் மண்ணில் புதைக்கப்படும் போது மூச்சு விட உதவுகிற ரகசிய சுரங்கப் பாதைகளை உருவாக்கி ஏமாற்றுகிறார்கள் என்ற விமரிசனம் பல இடங்களில் வருவதை நான் கேள்விப்பட்டுள்ளேன். பிரான்சில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் அப்படி எந்த ரகசியப் பாதையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்பதாலும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்திருந்தனர் என்பதாலும் பல விமரிசகர்களும், சந்தேகத்தோடு ஆரம்பத்தில் என்னைப் பார்த்தவர்களும் என்னை முழுமையாக நம்பியதோடு பாராட்டவும் செய்தார்கள்”

"இந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வெளி வந்த ஸ்பெயின் நாட்டின் அரசி எனக்கு அவர்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தார். நான் இதையெல்லாம் பெருமைக்குச் சொல்லவில்லை உண்மையான சித்தர்களும், யோகிகளும், பக்கிரிகளும் இது போன்ற வெளிப்பகட்டுகளில் ஆர்வம் கொள்வதில்லை. விருப்பு வெறுப்பில்லாமல் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது தான் அவர்கள் குறிக்கோள். ஐரோப்பிய சொகுசு வாழ்க்கையில் நான் வாழ்ந்தாலும் உள்ளூர இந்த உண்மையை நான் உணர்ந்தே இருந்தேன். மேலும் பல பக்கிரிகள் மற்றவர்களின் பரிசோதனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள். தங்கள் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். அவர்கள் மேலை நாடுகளின் கல்வியையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் இந்த நிலையில் இருந்து மாறுபட நினைத்தே இந்த மேற்படிப்புகளைப் படித்து, இந்த அதீத சக்திகளையும் வெளிப்படுத்தி பலர் என்னைப் பரிசோதனை செய்ய சம்மதித்தேன். நான் செய்து காட்டியதெல்லாம் இயற்கையின் விதிக்கு உட்பட்டவையே. அதில் எனக்கு ஆழ்ந்த ஞானம் இருந்ததால் எனக்குப் பயமும் சந்தேகமும் இருக்கவில்லை. முக்கியமாக பல டாக்டர்கள் நான் செய்து காட்டிய நிகழ்ச்சிகளில் பின் அதிக ஆர்வம் காட்டினார்கள்”

அந்தப் பக்கிரி சொன்னதை எல்லாம் பால் ப்ரண்டன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதீத சக்திகளை இந்தியாவில் பார்த்தும் கேள்விப்பட்டும் இருந்த பால் ப்ரண்டனுக்கு இது போன்ற அதீத சக்திகள் எல்லாம் நடக்க முடியாத அதிசயங்கள் அல்ல என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மேலை நாடுகளின் படிப்புடன் சித்தர்களின் சக்தியையும் பெற்றிருந்த ஒரு மனிதரை பால் ப்ரண்டன் சந்திப்பது அது தான் முதல் முறை. அது தான் அவருக்கு பெரும் சுவாரசியத்தை அந்த மனிதர் மேல் ஏற்படுத்தி இருந்தது.

பால் ப்ரண்டன் டெஹ்ரா பேயிடம் கேட்டார். “நானும் இந்த சக்திகளில் ஆர்வம் காட்டும் அறிஞர்களையும் டாக்டர்களையும் அழைத்து வருகிறேன். எங்கள் முன் நீங்கள் உங்கள் சக்திகளை வெளிப்படுத்திக் காட்டுவீர்களா?”

ஆர்வத்துடன் கேட்ட பால் ப்ரண்டனிடம் டெஹ்ரா பே சம்மதித்தார்.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10



மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்


அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.


அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.


முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.


முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.


ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.


அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.


டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.


அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.


மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.


அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.


ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்”


அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.


பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.


முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.


ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.


தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.


பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். ”உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.”


ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-11

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


“இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?”


இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்பு குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.


”எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.”


“மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.”


பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?”


டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.”


பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?”


”ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.”


“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?”


”அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன”


டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?”



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 12



உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?


“உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?”  என்ற கேள்விக்கு டெஹ்ரா பே விரிவான விளக்கம் தந்தார்.


”ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவைப் போல எகிப்திலும் இது போன்ற சாகசங்கள் சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் இன்றைய காலத்தைப் போல பணம், பகட்டு, பொருள் மீது மக்களின் கவனம் அதிகமாய் செல்ல ஆரம்பித்திருக்கவில்லை. ஆத்மஞானத்தை அனைவரும் நம்பினார்கள். அதனால் இது போன்ற சாகசங்கள் குறித்து அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.


ஆத்மா உடலல்ல என்பதையும் அது உடலை விட்டும் இருக்கக் கூடிய சக்தி என்பதையும் உடலையும், விழிப்புணர்வையும் இயக்கும் சக்தி என்பதையும் அனைவரும் நம்பினார்கள். உடல் அழிந்து அதன் வேதியியல் அணுக்கள் கார்பன், பொட்டாசியம், ஹைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய வடிவங்களில் திரும்ப மண்ணிற்கே திரும்பச் செல்லும் போது அதை இயக்கிய ஆன்ம சக்தி தன் மூலசக்தியாகிய நாம் முழுவதும் அறியாத, என்றும் நிலைத்திருக்கக் கூடிய, அந்த பெரும் சக்திக்கே திரும்புகிறது. இதை லௌகீகத்தில் மூழ்கி விட்ட இன்றைய மனிதர்கள் உணரத் தவறி விடுகிறார்கள்.


என்னுடைய தந்தை இது போன்ற செயல்களுக்காக என்னை நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்த போதிலிருந்தே தயார்ப்படுத்த ஆரம்பித்து விட்டார். அதனால் இன்று என் விருப்பப்படி பல நாட்கள் மண்ணில் புதைந்திருந்து எந்த பாதிப்பும் அடையாமல் திரும்புவது முடிகிறது”.


பால் ப்ரண்டன் சொன்னார். “ஆனால் சந்தேகப்படுபவர்கள் கேட்கிறார்கள்- “மனிதனால் மூச்சு விடாமல் மண்ணுக்கடியில் வழ்வது எப்படி முடிகிறது?” என்று”


டெஹ்ரா பே பல உதாரணங்களைச் சொன்னார். “கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டிய கடல்களில் முத்து எடுப்பவர்கள் கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது நிமிடங்கள் மூச்சு விடாமல் கடலுக்கடியில் தங்குகிறார்கள். தவளை வேகமாக மூச்சு விடக்கூடியது ஆனால் அது தண்ணீருக்கடியில் இருக்கையில் நான்கு மணி நேரம் மூச்சு விடாமல் இருக்க முடிகிறது. வெளியே இருக்க முடிந்த  கடல் ஆமைகளும் அப்படியே சில மணி நேரங்கள் கடலுக்கடியில் இருக்க முடிகிறது. ஆனால் கடல் ஆமையைக் கட்டாயப்படுத்தி தண்ணீருக்குள் அழுத்தி வைத்தால் அது மூச்சு முட்டி இறந்து போகும். காரணம் கடல் ஆமை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் இருக்க முன்னமே தன்னை தயார் செய்து கொண்ட பிறகு தான் அப்படி மணிக்கணக்கில் இருக்க முடியும்....”


அப்படியே முதலைகளையும் வவ்வால்களையும் கூட மூச்சு விடாமல் நீண்ட காலத்திற்கு அப்படியே இயக்கமில்லாமல் இருக்க முடிவதை டெஹ்ரா பே விளக்கிய போது பால் ப்ரண்டனுக்கு வியப்பாக இருந்தது.


டெஹ்ரா பே கேட்டார். “விலங்குகளாலேயே முடிகிற விஷயம் மனிதனால் ஏன் முயன்றால் முடியாது? அதை எங்களைப் போன்ற பக்கிரிகள் செய்தும் காட்டி நிரூபித்து இருக்கிறோம். ஆனால் கடல் ஆமையைச் சொன்னது போல நானும் முன்னமே தயாராகி அரை மயக்க நிலைக்குச் சென்றால் தான் அப்படி புதைந்து கிடக்க முடியும். இல்லா விட்டால் நானும் பத்து நிமிடங்களில் மூச்சுமுட்டி செத்து விடுவேன்.”


பால் ப்ரண்டன் சற்று யோசித்து விட்டு ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். ”அப்படி புதைந்து கிடக்கையில் உங்கள் ஆத்மா உடலை விட்டு வெளியேறுகிறதா? அப்படி வெளியேறி நீங்கள் சொன்னது போல மூலமான பெரும் சக்தியுடன் கலக்கிறதா? அந்த சமயத்தில் என்ன தான் நடக்கிறது?”


டெஹ்ரா பே நேர்மையுடன் அந்த நேரத்தில் நிகழ்வது என்ன என்பதை தன்னால் சொல்ல முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டார். ”புதைந்த நிலையில் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறோம். நினைவு திரும்பும் போது எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. அந்த மயக்க நிலையில் ஆன்மா நாமறிய முடியாத பயணங்களை மேற்கொண்டு இருக்கக் கூடும். ஆனால் விழிப்புணர்வு முடக்கப்பட்ட அந்த நிலையில் நடப்பது எதுவும் நினைவுக்கு வந்ததில்லை.”


பல முறை அப்படி மண்ணில் புதைந்த மனிதனாலேயே கூட அந்த மயக்க நிலையில் ஆன்மாவின் செயல்பாடு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை என்பது பால் ப்ரண்டனுக்கு ஏமாற்றமாக இருந்தது.


அதைப் புரிந்து கொண்ட டெஹ்ரா பே சொன்னார். “சில யதார்த்த உண்மைகளை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கிட்டத்தட்ட மரணத்தைப் போன்ற நிலையில் விலகி மறுபடி அந்த உடலில் ஆன்மா சேரமுடிவதே அது மரணமில்லாதது, நிலையானது என்பதற்கு ஆதாரமாக எனக்குத் தெரிகிறது”


பால் ப்ரண்டனுக்கு அவருடைய நேர்மை பிடித்திருந்தது. தெரியாததைத் தெரியாது என்று அந்த அளவு சாதனை புரிந்த மனிதரால் சொல்ல முடிந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று எண்ணிக் கொண்டார்.


டெஹ்ரா பே இப்படி உயிரோடு மண்ணில் புதைவதில் இருந்த வெற்றி தோல்விகளையும் மற்ற சாதனையாளர்களை உதாரணம் காட்டி சொன்னார். “நான் சிறுவனாக இருந்த போது எங்கள் நகரத்தில் ஒரு பக்கிரி மண்ணில் புதைந்து பல வருடங்கள் கழித்து குறிப்பிட்ட நாளில் தன்னை எழுப்பச் சொன்னார். அப்படியே பல வருடங்கள் கழிந்து தோண்டி எடுத்த போதும் அவர் உயிரோடு இருந்தார். ஆனால் பேச்சு சக்தி மட்டும் இழந்திருந்தார். ஆறு மாத காலம் கழித்து இறந்து போனார். மூச்சு இல்லாமல் சில நாட்கள் இருப்பது விரத சமயத்தில் வயிற்றைப் பட்டினி போடுவது போல உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி எழும் போது உடலுக்கு அருமையான ஓய்வு கிடைத்திருப்பதால் எத்தனையோ வியாதிகள் கூட குணமாகி இருப்பதைக் கண்டிருக்கிறோம் ஆனால் இப்படி வருடக்கணக்கில் அப்படிச் செய்யும் போது சில அபாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன.”


“எனக்குத் தெரிந்த சையது என்ற 18 வயது பக்கிரி சரியான பயிற்சி பெற்று பல முறை மண்ணில் புதைந்து மறுபடி எழுந்தவன். ஒரு முறை அவன் ஆறு வருடங்கள் மண்ணில் புதைந்து காட்ட முடிவெடுத்து அப்படியே ஒரு பிரத்தியேக சமாதியில் புதைக்கப்பட்டான். அவனுடைய முஸ்லீம் நண்பர்கள் வருடா வருடம் ரம்சான் நோன்பு சமயத்தில் அவன் உடலை எடுத்துப் பார்த்து மறுபடி புதைத்தனர். முதலிரண்டு வருடங்களில் அவன் உடல் நன்றாகவே இருந்தது. மூன்றாம் வருடம் திறந்து பார்க்கையில் அவன் உடல் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.”


“ஏன் அப்படி ஆயிற்று?” பால் ப்ரண்டன் கேட்டார்.


“இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் முன் தகுந்த முன்னேற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். உடலை மென்மையான மெழுகால் பூச வேண்டும். சவப்பெட்டியில் உள்ள தூசிகளை முழுமையாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போன்ற முன்னேற்பாடுகளை சையது செய்யத் தவறி விட்டார். மூன்றாவது வருடம் எகிப்தில் உள்ள சிறிய சக்தி வாய்ந்த பாம்புகளில் ஏதாவது ஒன்று சவப்பெட்டியில் புகுந்திருக்கலாம். இப்படி அரை மயக்க நிலைக்குச் சென்ற உடலில் ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத போது எந்த மைக்ரோப்களும், பூச்சிகளும் தீண்டாமல் இருக்கும். சவப்பெட்டியில் புகுந்த சிறிய பாம்பு சையதின் மூக்கில் நுழைந்திருக்கலாம். அந்த நேரத்தில் சையதின் உடலில் சிறிது ஆக்சிஜன் புகாமலிருக்கும் அளவு கட்டுப்பாட்டை வைக்கத் தவறி இருக்கலாம். அதன் விளைவாக உடல் தன் பாதுகாப்பை இழந்திருக்கலாம். அது புழுக்களும் பூச்சிகளும் படையெடுத்து உடலை உண்ண வழி செய்திருக்கலாம்”


சிறிது ஏமாந்தாலும் இதில் எப்படிப்பட்ட அபாயங்கள் எல்லாம் உள்ளன என்பதை உணர்ந்த பால் ப்ரண்டன் பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருந்த மம்மிகளின் உடலைப் பாதுகாத்திருந்த விதத்தையும், அவற்றை மிக உறுதியான கற்களால் மூடியிருந்த விதத்தையும் நினைவுகூர்ந்தார்.


டெஹ்ரா பே சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். “நான் புதையுண்டிருந்த சமயங்களில் ரகசிய பைப்கள் வழியாக காற்று வரும்படி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டவர்களின் சந்தேகம் அர்த்தமில்லாதது என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்”


பிறகு பால் ப்ரண்டன் அவரிடம் இது போன்ற அற்புதங்களைச் செய்யும் சிலர் அதற்கு மத ரீதியாக விளக்கம் அளிப்பது பற்றி கேட்டார்.


டெஹ்ரா பே தன் கருத்தை வெளிப்படையாகச் சொன்னார். “இது போன்ற சாகசங்கள் உடலியல் அறிவியல் விதிகளுக்கு உட்பட்டு செய்பவை. இதில் ஆழ்மன சக்தியும் சேரும் போது அற்புதங்களாக தோன்றுகின்றன. இதில் மதத்தையோ, மூட நம்பிக்கைகளையோ சேர்த்து விளக்கம் அளிப்பது உண்மை சார்ந்ததாக இருக்காது. அவர்கள் செய்கின்ற அற்புதங்கள் உண்மையானவை என்றாலும் விளக்கங்கள் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதங்களில் இருந்து விடுகிறதை நான் அதிகம் பார்க்கிறேன். அவர்களில் சிலர் தாங்களே இதை நம்புகிறார்கள். பலர் மற்றவர்கள் முன்னால் அசாதாரண மனிதர்களாகவும், கடவுளருள் பெற்றவர்களாகவும் காட்டிக் கொள்ள அப்படி செய்கிறார்கள். உள்ளதை உள்ளபடியே பார்க்க வேண்டுமே ஒழிய இதில் கற்பனைகளை சேர்ப்பதையும், மூட நம்பிக்கையை வளர்ப்பதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை”


டெஹ்ரா பே ஆன்மாவையும் ஆழ்மனசக்தியையும் நம்பிய அளவிற்கு மதக்கோட்பாடுகளை பெரிதாக நம்பவில்லை. அதில் ஈடுபட்டு உண்மையான தெய்வீக உணர்வுகளை அனுபவித்தவர்கள் ஒருசிலர் இருக்கக்கூடும் என்று ஒத்துக் கொண்ட அவர் தன் ஆராய்ச்சிகளும், பயிற்சிகளும் மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்ததாகச் சொன்னார்.


இப்படியாக டெஹ்ரா பேயிடம் பேசிய போது பால் ப்ரண்டன் கேட்டறிந்தது எல்லாமே அறிவியல் ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது. எந்த இடத்திலும் டெஹ்ரா பே தன்னை தெய்வீக மனிதராகச் சொல்லிக் கொள்ளவில்லை என்பதோடு எதிலும் கற்பனை கலக்காமல் தெரிந்ததை விளக்கமாகச் சொல்லியும் தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டும் பால் ப்ரண்டன் மதிப்பில் உயர்ந்து போனார்.


அடுத்ததாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்ட சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்போமா?
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13



ப்ரண்டன் வியந்த இஸ்லாம்


ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்தில் தங்கிய நாட்களில் இஸ்லாமியர்களின் தொழுகை முறையால் மிகவும் கவரப்பட்டார். கிறிஸ்துவராக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக ஞானத்தைத் தேடிய அவருக்கு எல்லா இடங்களில் இருந்தும் கிடைத்த மேன்மையான விஷயங்களை அறியவும், மதிக்கவும் முடிந்தது.


மசூதிகளில் தொழுகை நேரத்தில் ஒரு பரம தரித்திரனுக்கு அருகில் ஒரு பெரும் செல்வந்தன் உட்கார்ந்து தொழுவதை அவர் பல இடங்களிலும் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. புனிதக் குரானின் வாசகங்களை உச்சரித்தபடி அவர்கள் செய்த தொழுகை முறையில் பல்லாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கு அவரைக் கவர்ந்தது. தொழுகை என்பது தினசரி வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த விஷயமாக இருப்பது அவரை வியக்க வைத்தது.


ரயிலில் பயணம் செய்கையில் ப்ளாட்ஃபாரங்களில் கூட குறிப்பிட்ட நேரமானால் சிறிய பாய்களை விரித்து இறைவனுக்காக ஆறேழு நிமிடங்கள் ஒதுக்க முடிந்த இஸ்லாமியர்களின் சிரத்தையை அவரால் சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. ஒரு மதிய வேளையில் ஓட்டலுக்குச் சாப்பிடப் போன போதும் பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் தொழுகை நேரமானவுடன் தொழுகையை ஓட்டலிலேயே ஒரு ஓரத்தில் செய்ய ஆரம்பித்ததையும், இன்னொரு சமயம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது அனுமதி வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி தொழுகையை நடத்தியதையும் தன் நூலில் பால் ப்ரண்டன் குறிப்பிடுகிறார்.


தொழுகை என்பது வழிபாட்டுத்தலங்களில் என்று ஒதுக்கப்பட்டு விடாமல் அந்தந்த நேரங்களில் எந்த இடமானாலும் சரி அந்த இடத்தில் நடத்தப்படும் உறுதியான விஷயமாய் இருப்பது இஸ்லாத்தின் தனித்தன்மையாக பால் ப்ரண்டன் கண்டார். கெய்ரோவில் கண்டது போல் லண்டன், நியூயார்க் போன்ற மேலை நாடுகளில் காணமுடியாதென்பதை ஒப்புக் கொண்டார். இந்த வழிபாட்டு ஒழுங்குமுறையும், உறுதிப்பாடும் இஸ்லாத்திடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்று அவர் நினைத்தார்.


எகிப்தில் இருந்த நாட்களில் இஸ்லாத்தையும் ஆழ்ந்து படித்த பால் ப்ரண்டன் அவர்களது தொழுகை முறையையும் கற்றுக் கொண்டு கெய்ரோ நகர பழமையான மசூதிகளில் தானும் தொழுதார். இறை சக்தி ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்து இல்லாதிருந்த பால் ப்ரண்டனுக்கு அப்படித் தொழுவதில் எந்தத் தயக்கமும் வரவில்லை.


தன்னைப் பின்பற்றுவோர் மனதில் பெருமையான ஒரு இடத்தைப் பெற முகமது நபி தேவையற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் முனையவில்லை என்பதனை இஸ்லாத்தைப் பற்றி விரிவாகப் படிக்கையில் அவர் அறிந்தார். அரேபியாவில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரிக்கையில் சிலர் அவரிடம் சென்று “நீங்கள் ஏதாவது அற்புதம் நிகழ்த்தி நீங்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்று நிரூபியுங்கள்” என்று வற்புறுத்திய போது முகமது நபி வானை நோக்கி பார்வையைச் செலுத்தியவராய் ”இறைவன் என்னை அற்புதங்கள் நிகழ்த்த அனுப்பவில்லை. நான் அல்லாவின் செய்தியை மனிதகுலத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தூதன் மாத்திரமே” என்ற செய்தி அவரை வெகுவாகக் கவர்ந்தது.


இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், மேலும் அறிந்து கொள்ளவும் எகிப்து இஸ்லாமியர்களின் தலைவரும், இஸ்லாமிய கல்விக்கூடங்களின் தலைமைப் பேரறிஞருமான ஷேக் முஸ்தபா எல் மராகியை சந்தித்துப் பேசினார். இறைவன் ஒருவனே என்ற இஸ்லாத்தின் மிக உறுதியான, முக்கியக் கொள்கையில் ஆரம்பித்து எல்லா முக்கிய அம்சங்களையும் ஷேக் முஸ்தபா விளக்கினார். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே வேறொரு நபர் தேவையில்லை என்பதை இஸ்லாம் நம்புகிறது என்றார் ஷேக் முஸ்தபா.


இஸ்லாம் இறைவனை அறிந்து கொள்ளவும், பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளவும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறந்த மனத்துடன் தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளும், புரிந்து கொள்ளலுமே மூட நம்பிக்கைகளையும், புனிதக் கோட்பாடுகளுக்குத் தங்களுக்குத் தேவைப்படும்படி பொருள் கொள்ளும் போக்கையும், அவ்வப்போது விலக்கி ஒரு மதத்தை கலப்படமற்ற புனிதத்துடன் வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தார் ஷேக் முஸ்தபா.


அவரிடம் நீண்ட நேரம் உரையாடிய போது பால் ப்ரண்டன் இஸ்லாம் பற்றிய தன் சந்தேகங்களைத் தயக்கமில்லாமல் கேட்டார். அவர் கேட்ட முக்கிய  கேள்விகளும் ஷேக் முஸ்தபா சொன்ன பதில்களும் இதோ-


”ஆத்மாவைப் பற்றி தங்கள் கருத்து என்ன?”


“குரான் ஆத்மா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. பிற்காலத்திய சில இஸ்லாமிய மகான்களும், அறிஞர்களும் சில அறிவுபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர் என்றாலும் அதை குரானில் சொன்னதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளில், செய்த நன்மைகளுக்கு வெகுமதியும், செய்த தீமைகளுக்குத் தண்டனையும் கிடைப்பது உறுதி என்பதை குரான் தெரிவிக்கிறது. அல்லா கூறுகிறார். “எவனொருவன் அணு அளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குத் தகுந்த வெகுமதியைப் பெறுவான். அதே போல அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்கேற்ற தண்டனையை அடைவான்.”


“இஸ்லாத்தில் மசூதிகள் முக்கியமா?”


“இல்லை. மக்கள் பிரார்த்திக்கும் இடங்கள் அவை, வெள்ளிக்கிழமை அன்று பிரசங்கங்கள் கேட்கச் செல்லும் இடங்கள் அவை என்றாலும் இஸ்லாத்தை பின்பற்ற மசூதிகள் அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய முடியும். சுத்தமான தரை இருந்தால் போதும்..... மசூதிகளைக் கட்டுவது பிரார்த்திப்பதில்  சகோதரத்துவத்தையும், சமூக ஒற்றுமையையும் வளர்த்தவே. அந்த வகையில் தான் மசூதியில் பிரார்த்திப்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.”


“தினமும் ஐந்து முறைத் தொழுகை என்பது அதிகமில்லையா?” என்று பால் ப்ரண்டன் கேட்ட போது ஷேக் முஸ்தபா பொறுமையாக பதில் சொன்னார்.


“இல்லை. தொழுகைகள் இறைவனைப் பிரார்த்திக்கும் கடமை மட்டுமல்ல, அவன் ஆன்மிக முறைப்படி தன்னை நெறிப்படுத்திக் கொள்ள உதவும் அவசியமும் கூட. திரும்பத் திரும்ப இறைவனையும், இறைவனது செய்தியையும் சொல்லும் மனிதன் மனதில் இறை குணங்கள் தானாக ஆழப்படுகின்றன. உதாரணத்திற்கு இறைவனிடம் தொடர்ந்து கருணையை வேண்டும் மனிதன் அதன் அவசியத்தை உணர்ந்தவனாக இருப்பதால் தானும் கருணையுள்ளவனாக சிறிது சிறிதாக மாற ஆரம்பிக்கிறான். எனவே தொழுகைக்காகக் குறித்து வைத்திருக்கும் நேரங்களில் தொழுகை செய்வது வற்புறுத்தப்படுகிறது. ஏதாவது அவசர சூழ்நிலை அந்த நேரத்தில் தொழுகை செய்வதைத் தடுக்குமானால் அந்த சூழ்நிலை முடிந்தவுடனேயே தொழுகை செய்ய வேண்டும்.”


“நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது?”


“நிற்கவோ, மண்டியிடவோ முடியாத நிலையில் ஒருவன் இருந்தால் பிரார்த்தனையைப் படுத்த நிலையிலேயே கூட செய்யலாம். அவனால் கைகளை நெற்றிப் பொட்டு வரை மடக்க முடிந்தால் கூட போதும்....”


“மெக்காவிற்கு செல்வதன் நோக்கம் என்ன?”


“மசூதிக்கு செல்வது எப்படி உள்ளூர் சமூக சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கோ அப்படித்தான் மெக்கா செல்வது உலகளாவிய மனிதகுல சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கு. எல்லோரும் இஸ்லாத்தில் சரிசமமானவர்களே. அல்லாவை நம்பி மசூதியில் கூடினாலும் சரி, ஹஜ் யாத்திரையில் கூடினாலும் சரி அங்கு அவர்கள் சமமாகவே கருதப்படுகிறார்கள். மசூதியிலும் சரி யாத்திரையிலும் சரி ஒரு அரசனுக்கருகில் ஒரு பிச்சைக்காரன்  பிரார்த்தனை செய்யலாம். எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒருமித்துப் போகும் இடமாகவும் சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை அவரவர் நற்செயல்களால் மட்டுமே ஒவ்வொருவரும் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்”


உண்மையான இஸ்லாம் உண்மையை அறிய ஊக்குவிப்பதாகவும், கண்மூடித்தனமான பின்பற்றுதலை கண்டிப்பதாகவும் ஷேக் முஸ்தபா கூறி புனித நூலில் வரும் ஒரு வாசகத்தையும் கூறினார். “இறைவன் சொன்னதைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படும் போது அவர்கள் நாங்கள் எங்கள் தந்தையர் செய்ததைப் பின்பற்றுகிறோம் என்கிறார்கள்.... உங்கள் தந்தையரே அறியாதவர்களாக இருந்தால், வழிநடத்தப்படாதவர்களாய் இருந்தால் என்ன செய்வீர்கள்?”


உண்மை தானே!


நீண்ட நேரம் தொடர்ந்த அவருடைய விளக்கங்களில் பால் ப்ரண்டனுக்கு இஸ்லாத்தை வித்தியாசமான புதுமையான கோணங்களில் அறியவும், முன்பு கொண்டிருந்த சில தவறான அபிப்பிராயங்களைக் களைந்து கொள்ளவும் முடிந்தது.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 14


ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை!



முகமது நபி தோன்றுவதற்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். மிகப் புராதன காலத்திலேயே அவர்கள் ஓசிரிஸ் (Osiris) என்ற கடவுளை வணங்கி வந்தனர். ப்ரண்டனின் ஆன்மீகத் தேடலின் போதும் எகிப்தில் சில இடங்களில் மசூதிகளுக்கு அருகிலேயே ஓசிரிஸின் பழங்காலக் கோயில்கள் இருந்திருக்கின்றன. பால் ப்ரண்டன் அந்தப் பழங்காலக் கோயில்களுக்குச் சென்று அவை சொல்லும் செய்தியை அறிய முற்பட்டார்.


ஒரே இறைவனை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக மனிதர்கள் வழிபட்டார்கள், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என்று பால் ப்ரண்டன் ஆழமாக நம்பினார். மிகப் புராதனமான அந்தக் கோயில்களில் பல, பால் ப்ரண்டனின் காலத்திலேயே சிதிலமாக ஆரம்பித்திருந்த போதிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்ட அந்த தலங்களில் ஆன்மிக அலைகள் பரவியிருந்ததை அவரால் அங்கு சென்ற போது உணர முடிந்தது.   


அப்படி அவர் உணர்ந்த ஒரு சக்தி வாய்ந்த இடம் அபிடோஸ் (Abydos) என்ற இடத்தில் இருந்த புராதனக் கோயில். கோயிலின் புறத்தோற்றம் கால ஓட்டத்தின் சிதைவுகளைக் கண்டிருந்தாலும் அங்கிருந்த பெரிய தூண்களின் சிற்பங்களிலும், மங்கிய சித்திரங்களிலும் விவரிக்கப்பட்டு இருந்த கதைகளில் எத்தனையோ ரகசியங்கள் மறைந்திருந்ததாக பால் ப்ரண்டனுக்குத் தோன்றியது.


எகிப்தின் பழங்காலக் கதைகளின் படி பூமிக்கடவுளுக்கும், ஆகாயத் தேவதைக்கும் பிறந்த முதல் மகன் ஓசிரிஸ். அவன் மனைவி ஐசிஸ். பூமியை ஆண்டு வந்த ஓசிரிஸ் மீது பொறாமைப் பட்டு அவன் தம்பி செட் சூழ்ச்சி செய்து அவனைத் துண்டம் துண்டமாக வெட்டிக் கொன்று விடுகிறான். மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற ஐசிஸ் நீண்ட நாள் பிரார்த்தனைகளும், சடங்குகளும் செய்து துண்டமான உடலை ஒன்று சேர்த்து உயிர் பெறச் செய்து விடுகிறாள். மாண்டவர் உலகிற்குச் சென்று வந்ததால் அனைத்தையும் உணர்ந்து பல மடங்கு சக்தி வாய்ந்தவனாக சில நாட்கள் வாழ்ந்து மனைவி ஐசிஸை கருத்தரிக்க வைத்து விட்டு மறுபடி மாண்டவர் உலகிற்குத் திரும்பி விடுகிறான். ஐசிஸ் பிரசவித்த ஹோரஸ் என்ற அவனுடைய குழந்தை பெரும் சக்தி வாய்ந்தவனாக வளர்ந்து தந்தையைக் கொன்ற சித்தப்பா செட்டை அழிக்கிறான்.


எகிப்தியக் கடவுள்களில் பிரதானமான கடவுளாய் ஓசிரிஸ் இறப்பின் கடவுளாகவும், நியாயத் தீர்ப்பு கடவுளாகவும் எகிப்திய பழங்கதைகளில் சித்தரிக்கப்படுகிறது. ஹோரஸ் தீயவைகளை அழிக்கும் தெய்வமாகவும், எல்லா புதிய நல்ல மாற்றங்களுக்கான தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறது. அந்தக் கதைகளே அந்த கோயிலில் சிற்பங்களிலும், சித்திரங்களிலும் விவரிக்கப் பட்டு இருந்தன.


வழக்கமான கோயில்களில் வழிபாட்டின் போது ஒலிக்கும் இசைக்கருவிகளின் இசையோ, பாடல்களோ பிரதான கடவுளான ஓசிரிஸின் அந்தக் கோயிலில் ஒலிக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஸ்ட்ரேபோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அங்கிருந்த பழமையான எழுத்துக்களில் இருந்த தகவல்களை வைத்துக் கூறுகிறார். மயான அமைதி என்பார்களே அது போன்ற மயான அமைதியே வழிபாட்டு நேரத்தில் கடைப்பிடிக்கப் படுவதாகச் சொல்கிறார்.


அந்தக் கோயிலில் ஆன்மீக ரசியங்களை மிக அபூர்வமான, தகுந்த வெகுசிலருக்கு மட்டும் கற்றுத் தரப்பட்டன என்றும் அதற்கு கடுமையான விதிமுறைகள் இருந்தன என்றும் சில நாட்கள் ரகசிய சடங்குகள் கழிந்த பின்னர் அவர்களுக்கு குருமார்களால் உணர்த்தப்பட்டது என்றும் எகிப்திய பழமையான ஏடுகள் சொல்கின்றன. அந்த சடங்குகள் குறித்த சில சித்திரங்களும் அங்கிருந்தன. மிகப் பெரிய உண்மைகள் ஆரவாரத்திலும், கூட்டங்களிலும் உணரப்படுவதில்லை, பேரமைதியில் ஒருவன் தனக்குள்ளே ஆழ்ந்திருக்கும் போதே உணரப்படுகின்றன என்பதற்காகவே அமைதி அங்கு வலியுறுத்தப்படுகின்றது என்று பால் ப்ரண்டன் நினைத்தார்.


(கற்பனைக் கதைகளாக சித்தரிக்கப்படும் எத்தனையோ கதைகளைக் கற்பனைக் கதைகளாகவே எடுத்துக் கொண்டு பிற்கால உலகத்தினரில் பெரும்பாலானோர் பார்த்தாலும், விஷயமறிந்த சிலர் அதன் பின்னால் உள்ள செய்தியைப் படித்து பலன் அடைகிறார்கள். அந்தப் பலனையும், ஞானத்தையும் கதைகளாய் படித்து விட்டுப் போகிறவர்கள் பெறத்தவறி விடுகிறர்கள்.)


அங்கிருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த சில சங்கேதக் குறிகள் ரகசியக் கலைகள் கற்றவர்களுக்கு மட்டுமே புரியும்படி இருந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சிதிலமடைந்து பாழ்பட்டுப் போன அந்தக் கோயிலை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மன்னன் ஒருவன் புனரமைத்தததோடு எகிப்தில் இருந்த ஹீலியோபோலிஸ் என்ற மிகப்பழங்கால நூலகத்தில் இருந்த ஓசிரிஸ் கோயில் பற்றிய தகவல்களைக் கொண்ட நூல்களை எல்லாம் தக்க அறிஞர்களைக்  கொண்டு ஒன்று திரட்டி அந்தப் பழைய தீட்சைக்கான சடங்குகளை தன் பிற்கால சந்ததிகளுக்கு விட்டுப் போனதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னனால் தான் இன்று அந்த தீட்சைகள் பற்றியும் சடங்குகள் பற்றியும் விரிவாக அறிய முடிகிறது. அந்த நூல்களில் இருந்த தகவல்களின் படியே அதே கட்டமைப்புடன் பல கோயில்களை அந்த மன்னன் புதிதாகக் கட்டினான் என்றும் வரலாறு கூறுகிறது.


ஆனால் பால் ப்ரண்டன் எகிப்திற்குச் சென்ற காலத்தில் அதுவும் பழமையாகிப் போன போதும் முழுவதுமாக அழிந்து விடாமல் தப்பிய ரகசியத் தகவல்கள் பல, அன்றைக்கும் ஆன்மிக வல்லுனர்களை ஈர்த்த வண்ணம் இருந்தன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும் அவ்வப்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆன்மிகத் தேடலுடன் அந்த ரகசிய தீட்சை பெற முயன்றாலும் தக்க குருமார்கள் பல சோதனைகளுக்குப் பிறகு வெகுசிலரையே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த ரகசிய தீட்சை தந்தனர் என்று சொல்லப் படுகிறது. அப்படி ரகசிய தீட்சை பெற்றதாக சொல்லப்படுபவர்களுள் ஒரு சிலர் மிகப்பிரபலமானவர்கள். அவர்கள் யார் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்திய சில ரகசியத் தகவல்களையும் பார்ப்போமா?

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 15



ரகசிய தீட்சை - இரண்டாம் பிறப்பு


ஓசிரிஸ் கோயில்கள் எப்போதும் இரண்டு பகுதிகளாக இருந்தன. முதல் பகுதி பொது ஜனங்கள் வந்து வணங்கிச் செல்வதற்காக இருந்தது. இரண்டாம் பகுதி ரகசிய தீட்சை தரும் இடமாகவும், அதைத் தரத்தக்க குருமார்களின் பயிற்சி, தியானம் மற்றும் பிரார்த்தனை இடமாகவும் இருந்தது. இந்த இரண்டாம் பகுதிக்கு சாதாரண பொது ஜனங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.


ரகசிய தீட்சை பெற சுயகட்டுப்பாடு அதி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அங்கு ரகசிய தீட்சை பெற்று ஆன்மிகப் பேருண்மைகளை அறிய விரும்புபவர்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களைக் கடுமையாகச் சோதித்துப் பார்த்த பின்னரே ரகசிய தீட்சை பெற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர், அல்லது திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படி ரகசிய தீட்சை தருவது கூட எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவரவர் தன்மைக்கும், பக்குவத்திற்கும் ஏற்ப தருவதற்கு பல தரப்பட்ட தீட்சைகள் இருந்தன.


பால் ப்ரண்டன் அபிடோஸ் ஓசிரிஸ் கோயிலில் ரகசிய தீட்சை தரும் இரண்டாம் பகுதியின் சிதிலமடைந்த பகுதியில் உள்ள சிற்பங்களையும், சித்திரங்களையும் ஆராய்வதற்கு முன்பு அங்கு தியானத்தில் அமர்ந்து அங்கிருந்த ஆன்மிக அலைகளில் இருந்து அந்த ரகசிய தீட்சைகளின் சூட்சுமத்தை அறிய முற்பட்டார்.


(எதையும் அறிய முற்படும் போது பல நேரங்களில் உள்ளதை உள்ளபடி எடுத்துக் கொள்ளாமல் நம் மனநிலைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் தக்கபடி எடுத்துக் கொண்டு அதுவே உண்மை என்று கருதும் வழக்கம் நமக்கு உண்டு. அதனால் திறந்த மனத்துடன் நம் சொந்த அபிப்பிராயங்களை ஒதுக்கி விட்டு உண்மையான தகவலையும், ஞானத்தையும் நம்மால் பெற முடியாமல் போகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள ஒரு பழமையான நாகரிகத்தின் தகவலை கலப்படமில்லாத தூய்மையுடன் அறிய வேண்டுமானால் அது மிகவும் கஷ்டமான விஷயமே. எனவே தான் உண்மையான ஞானத்தைப் பெற விரும்பிய பால் ப்ரண்டன் அந்தக் கோயிலில் இரண்டாம் பகுதியில் இருந்த சித்திரங்களையும், சிற்பங்களையும் பார்த்து தனக்குத் தோன்றிய விதத்தில் எடுத்துக் கொண்டு விடக்கூடாது, அதன் உண்மையான தன்மையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அப்படி தியானம் செய்து அந்த பழங்கால மகாத்மாக்கள் தந்த ஞானத்தின் தன்மையை அறிய முற்பட்டார்).


சுமார் இரண்டு மணி நேரங்கள் அங்கு அமர்ந்து தியானித்த அவர் அந்தக் காலத்திற்கே சென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அது மிக அருமையான அனுபவமாக இருந்தது என்று பின்னர் கூறுகிறார். ஓசிரிஸின் துண்டான உடல்கூறுகளும் அவை ஒன்று சேர்ந்து உயிர் பெற்றமையும் காட்சிகளாகத் திரும்பத் திரும்ப அவருடைய தியானத்தின் போது மனத்திரையில் வந்து நின்றன. ரகசிய தீட்சையில் அந்தக் காட்சி மிக முக்கியமான இடம் வகிப்பதாக அவர் நினைத்தார். அது ஏதோ உணர்த்த வருகிறது என்று அவர் உணர்ந்தார். 


பிரமிடுக்குள் ஒரு நள்ளிரவைக் கழித்த போது அவருடைய ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வந்தது. தன் உணர்ச்சியற்ற உடலைக் கண்களின் துணையின்றித் தெளிவாகப் பார்த்ததும் பின்னர் தன் உடலுக்குள் திரும்ப வந்ததும் ஒரு விதத்தில் மரணமும், பின் ஜனனமும் போலவே அல்லவா என்று நினைத்தார். தியானம் முடிந்தபின் உள்ளே ரகசிய தீட்சை நடந்த பகுதிகளில் கண்ட சித்திரங்களும் சிற்பங்களும் அவர் தியானத்தில் உணர்ந்த உண்மைகளுக்கு வலுவூட்டுவதாகவே இருந்தன.


கோயில்களில் முதல் பகுதியில் கூட பூஜை நேரங்களில் கூட சத்தம் ஆரவாரம் எதுவுமில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது என்று முன்பே சொல்லியிருந்தோம். உள்ளே இருந்த இரண்டாம் பகுதியில்  வெளிப்புற அமைதி மட்டுமல்லாமல் மன அமைதியும் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அபிடோஸில் இருந்த ஓசிரிஸின் அந்தப் பிரதான கோயிலில் உட்பக்கம் இருந்த இரண்டாம் பகுதியில் ரகசிய தீட்சை நடக்கும் இடத்தில் இருந்த சித்திரங்களிலும், சிற்பங்களிலும் இருந்த மனிதர்களின் முகத்தில் பேரமைதியைக் கண்டார் பால் ப்ரண்டன்.


அங்கு ஓசிரிஸின் மரணமும், உயிர்த்தெழுதலும் தத்ரூபமாக வரையப்பட்டும், செதுக்கப்பட்டும் இருந்தன. ஓசிரிஸின் உடற்கூறுகள் சிதறிக் கிடந்த காட்சிகளில் கூட அங்கு மரணத்தின் போது இருக்கும் ஒரு துக்ககரமான சூழ்நிலை தெரியவில்லை. மாறாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்கிற, வாழ்கிற ஒரு சூழ்நிலையே அங்கிருந்த குருமார்களின் முகத்திலும், ரகசிய தீட்சை பெற வந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது. ரகசிய தீட்சையின் சடங்குகள் கிட்டத்தட்ட ஓசிரிஸின் மரணம், உயிர்த்தெழுதல் போலவே தெரிந்தன. அங்கு ரகசிய தீட்சைக்கு வந்த அவர்கள் ஒரு விதத்தில் மரணித்து பின் புதிய பிறப்பு எடுப்பது போலவே சித்தரிக்கப்பட்டிருந்தது.


ரகசிய தீட்சை பெறத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவன் அஸ்தமன காலத்திற்குப் பின்னரே கோயிலுக்குள் இருக்கும் இரண்டாம் பகுதிக்கு அனுமதிக்கப் படுகிறான்.  மந்திர தந்திரங்களிலும், ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் போன்ற கலைகளிலும் மிக மிகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த அந்தக் கால எகிப்திய குருமார்கள் தங்கள் சக்தியால் அவனை மிக ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். கிட்டத்தட்ட மரணிப்பது போலவே அந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் ‘எகிப்திய மம்மி’ போலவே கிடக்கும் அவனை ஒரு சவப்பெட்டியில் வைத்து இறுக்கமாக மூடி வைக்கிறார்கள். அவனுக்கு அந்த ஆழ்ந்த மரண நிலை மயக்கத்திலேயே குருமார்கள் பல வித அனுபங்களை ஏற்படுத்தி உண்மை ஞான நிலையை உணர வைக்கிறார்கள். அவனுடைய ஆன்மா வேறொரு மேலான உலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலான உண்மைகளை உணர்த்தப்படுவது போல காண்பிக்கப்படுகிறது.


அந்தக் காட்சிகளின் விளக்கச் சித்திரங்களில் அந்த ஆன்மாவின் பயணங்கள் மிக சக்தியும், நுண்ணிய உணரும் தன்மையும் வாய்ந்த குருமார்களுக்கெ முழுமையாகக் காண முடிவது போல் சித்தரிக்கப்படுகின்றது. அந்தக் குறிப்பிட்ட மாணவனின் தன்மைக்கும் தரத்துக்கும் ஏற்ற நிலைப்படி தான் அவனுக்கு அறிவிக்கப்படுகின்றது. அந்த தீட்சையின் கால அளவும் அதற்கு ஏற்றபடி கூடவோ, குறையவோ செய்கின்றது. அந்த உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் அருகிலேயே குருமார்கள் நிற்கின்றனர். அந்த நேரத்தில் இரவுப் பிரார்த்தனைகளும் மிகுந்த பக்தியுடன் செய்யப்படுகின்றன.


அந்த தீட்சைக்கு உட்படுத்தப்படும் மாணவனின் ஆன்மா ஓசிரிஸின் ஆன்மசக்தியுடன் இணைந்து அறிய வேண்டியவற்றை அறிந்து திரும்புவது போல ஐதிகம். ஓசிரிஸ் மரணித்தது போல அவனும் மரணிக்கிறான். ஆனாலும் உடல் உணர்ச்சியற்று இருப்பினும் ஆன்மாவின் நுண்ணிய பிணைப்பில் இன்னும் உடல் இருக்கின்றது. ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போன்றதே, மரணம் என்பது என்றும் ஆன்மாவிற்கு இல்லை, என்பதை தன் நிஜ அனுபவம் மூலமே அவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறிகிறான். இன்னும் பல்வேறு அனுபவங்களை அடைகிறான், தன் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வேண்டிய உண்மைகளை அறிகிறான். உடலோடு ஆன்மா இணைந்திருக்கும் போது அவன் உணர முடியாத எத்தனையோ ரகசியங்களை அந்த தீட்சையின் போது அவன் உணர்கிறான். தன் இயல்பான எத்தனையோ நன்மைகளையும், சக்தியையும் மறுபடி உணர்கிறான். ஓசிரிஸ் போல பலமடங்கு சக்தியுடன் அவன் மீண்டும் உயிர் பெறுகிறான். 


சடங்குகள் முடிந்து மதகுருமார்களின் அற்புத சக்திகளால் அவன் உணர்வுநிலை திரும்பவும் உடலுக்கு தருவிக்கப்படுகிறது. அந்த சவப்பெட்டியைத் திறந்து அதிகாலையின் சூரிய கிரணங்கள் அவன் மீது விழும் படி வைக்கிறார்கள். அவன் புதிய மனிதனாய் புத்துணர்வுடன் திரும்புகிறான். இந்த ரகசிய தீட்சை பெற்றவர்களை ‘இருமுறை பிறந்தவர்கள்’ அல்லது ‘வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டவர்கள்’ என்று எகிப்தியர்கள் அழைத்தார்கள்.


மதகுருமார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்குவதற்கும், அவனை அந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் மந்திரக்கோல் போன்ற ஒரு தடியை உபயோகப்படுத்துகிறார்கள்.  மதகுருமார்களின் ஹிப்னாடிச சக்திகள் இன்றைய ஹிப்னாடிச சக்திகள் போலவே வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் அவர்கள் சக்திக்கும், இன்றைய ஹிப்னாடிச சக்திக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. இன்றைய ஹிப்னாடிச சக்தியில் அந்த நிலைக்குக் கொண்டு போகப்பட்டவன் விழிக்கும் போது அந்த நிலையில் நடந்த, உணர்ந்த எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அந்த மதகுருமார்கள் ஏற்படுத்தும் ஹிப்னாடிச சக்தியில் அந்த உணர்வற்ற நிலையில் பெற்ற அனைத்து அனுபவங்களும் அவன் உணர்வுநிலைக்குத் திரும்பும் போது நினைவில் தெளிவாக இருக்கின்றன. அவன் இனி வாழப்போகும் நிலைக்கு வழிகாட்டும் உன்னத அனுபவப்பாடங்களாக அமைகின்றன.


ஆரம்பத்தில் எகிப்தியர்களுக்கு மட்டுமே இந்த தீட்சை தரப்பட்டது. பின்னர் காலப் போக்கில் தகுதி வாய்ந்த வெளிநாட்டினருக்கும் அந்த தீட்சைத் தரப்பட ஆரம்பிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டவர்களில் உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் அடங்குவர். அவர்கள் யார் என்பதையும், அவர்கள் அனுபவங்களையும் பார்ப்போமா?