அன்று,
எண்ணில் அடங்கா விஷ ஜந்துக்கள் உலவும் அடர்ந்த பசும் காடு...
எதிரில் தெரியும் உருவம் எதுவென உணர முடியாது...
என் கண்களும் பார்வை இழந்து தவித்தது தடுமாற..
என்னை சுற்றி இருந்த கன்னங்கரிய காரிருள் நடுவே..
என் கடமையை நானும்.. செவ்வனே செய்ய விழைந்தேன்..
அச்சமயம்,
எந்த சூழ் நிலையும் என் மனோ நிலையை பாதிக்காது
எல்லை பாதுகாப்பில்.. நானும் கவனமாக இருந்த போது..
எங்கிருந்தோ இடியென சீறி பாய்ந்து.. என் காதுகளை கிழித்தது..
எந்திர துப்பாகிகளை மாறி மாறி சுடும் சத்தம்.. நானும் விருட்டென
என் செவிகள்.. ஒலி உணர்ந்த.. .திக்கு நோக்கி எழுத்து ஓடினேன்..
அங்கே,
எதிரி நாட்டு படைகளின் முகாமில். ஏதோ ஓர் அசம்பாவிதம்..
என் எண்ணத்தில் 1000 கேள்விகள் எழ.. அங்கே பார்த்தேன்...
என்னால் என்னவென்று யோசித்து.. முடிவுக்கு வருமுன்னே..
எல்லோரும் எங்கெங்கோ சிதறி தலைதெறிக்க ஓடி மறைந்தனர்.
எத்திக்கிலும் ஓசைகள் ஒடுங்கி நிசப்தம் நிலவ.. திரும்பினேன்..
அப்போது,
என் சிறு செவிகளை.. மெல்லியதாக தீண்டியது ஓர் ஓசை..
என்னவாக இருக்கும் என இன்னும் சற்றே நெருங்கி சென்றேன்..
என் சப்த நாடிகளும் ஒரு கணம் அதிர்ந்து ஆட நின்றது..
என் கண்முன்னே நான் கண்ட.. நம்பமுடியாத காட்சி..
எண்ணி பன்னிரண்டு நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை...
அன்னிசையாக,
என் இரு கால்களும்.. என் மனமும் அச்சிசு நோக்கியே..
என்னையறியாமலே.. ஓர் சிறு நடுக்கத்துடன் நடந்து செல்ல..
எதிராளி முகாமின் வெளி பரப்பில்.. சற்றே தொலைவில்
என்ன நடக்கிறது என்று.. கொஞ்சமும் புரிய முடியாத நிலையில்..
என்னை நோக்கி.. தன் சின்ன ரோஸ் இதழ்கள் நெளிய அழுதது...
அந்நொடியில்,
என் கண்களில் நீர் வழிய.. நெஞ்சினில் பாசம் பொங்கி எழ..
என் கைகளில் அள்ளி எடுத்து.. என் தோளில் சாய்த்தேன்...
என் மனதில்.. இது ஓர் எதிரி சிசு என்ற எண்ணம் எழவில்லை..
என் தோள்களே.. தன் ஆனந்த அமைதியான உலகமே..
என்ற எண்ணத்தோடு.. தன் விழிகளை முடி துயிலும் குழத்தையை..
அமைதியாக.. அணைத்தவாறு நடந்தேன்.. என் குடில் நோக்கியே...