பெருநடைக்கு பிறக்கான சலிப்பொன்றை
அடைந்திருந்த மனதிற்குள் ஈரம் வற்றியிருந்தது.
எத்தனை நாட்களோ கடந்துவிட்டது,
நான்
இன்னும் கடந்து செல்ல முடியாத இடத்தில் தொக்கி நின்றிருக்கிறேன்
உன் எல்லா நாடகங்களும் வெறுப்பிற்குரியதாக இருந்தபொழுதும்
நினைவுகளை நிறைத்திருந்த தருணங்களை இழக்க
நான் விரும்பியிருக்கவில்லை.
எத்தனையோ மனிதர்கள் வலிகளை தந்து சென்றிருக்கின்றனர்,
இந்த காயம் ஆற
இன்னும் எத்தனை காலம்
நான் இந்த துன்ப நதியில் நீந்தியிருக்க வேண்டும்?
எல்லாரையும் போல நீ சிரிப்பதில்லை
மிக மென்மயாக, இதழ் விரிக்காமல்
புன்னைகைக்கும் உன் முகம் நினவுகளில் பின்னியிருக்கிறது.
நீ எப்பொழுதும் சிரித்தபடிதான் இருந்திருக்கிறாய்,
முதற் சந்திப்பிலும்,
இறுதி சந்திப்பிலும்,
எதிர்பாராத சந்திப்புகளிலும்,
நினைவுகளை மெல்ல மெல்ல
கூர்மையாக அறுக்கும் உன் சிரிப்பு
எல்லா காலமும் இருந்திருக்கிறது
என்னுடைய எல்லா வெற்றிடங்களிலும்
நீ நிறைந்திருந்தாய்
உன்னிடமிருந்து பிரிந்து செல்வது
இன்னொரு வெற்றிடத்திற்கான இடம் என்பதை
நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன்.
உன் குரலில் இருந்தும்,
உன் கோவங்களில் இருந்தும்,
உன் கர்வ புன்னகைகளிலிருந்தும்,
என்னை விடுவித்துக்கொண்டு
ஓர்
வெற்றிடத்திற்கு வெளியேறிவிட நான் விரும்பவில்லை
என்னிலிருந்து எல்லா நிறமிகளையும் எடுத்து சென்ற பிறகும்
காய்ந்த மர சருகாய்
உன் நிழலிலேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறேன்.
என் சிறகுகளை பிடிங்கிக் கொண்ட பிறகு
உன் வானில் நான் பறப்பது எங்ஙனம்?
தனிமையின் மலர்களை நான் தாங்கி நிற்கிறேன்
ஒருமுறை இதழ் விரிக்கும்
தென்றலாகவேனும் வீசிவிட மாட்டாயா?
உன்னை இழந்துவிட்டதற்காக
நானே என்னிடம் சண்டையிடுகிறேன்
உன்னை இழந்துவிட்டதற்காக
நானே என்னை சமாதானப்படுத்துகிறேன்.
உன்னிடம் இழந்துவிட்ட புன்னகைகளை
மீண்டும் மீட்டெடுக்கப்
பிரயத்தனப்படுகிறேன்.
நினைவுகளின் ஆழத்திலிருந்து
மேலெழும்பி வந்து நீ புன்னகைப்பதிற்காக
ஒரு இடம் ஒதுக்கியிருக்கிறேன்,
வெற்றிடத்தில் இருக்கும் என்னை மீட்டிட
உன் ஒரு துளி புன்னகை மட்டும் போதும்
சகி!