மேகத்தின் இருண்ட வீதிகளில்..
மெல்லிய பனிதுகளின் பொழிவு
காற்றை அளக்க போதுமானதாயில்லை...
நிலவின் முகம் வெண்மையாயினும்
அதன் மறுபுற கறைகளோடு அது
பிரகாசிப்பதை மறைப்பதேயில்லை...
வெண்ணிற நிலா ,மரக்கிளை, குளிர் தென்றல்
எவையும் எரியும்நெஞ்ச தீயை
ஊழிமழையிலும் அணைக்கவிடுவதாயில்லை..
மறந்தும் மரணித்தும் போனவர்களை
வலிய நினைக்கும் வலிநேரங்கள்
ஒருபோதும் தீர்வதாயில்லை...
கூண்டு பறவைகளின் கூடாரத்தில்
பறக்க மறந்த சிறகுகளுக்கு
பரிதவிக்கும் வேலையில்லை...
ஊதிபறக்கும் நீர்குமிழ்களுக்கு..
உயர்ந்த மரம் உச்சி தொட
ஆசையாயினும் முடிவதில்லை..
இமயசிகரங்கள் அதன் முழுநிழல் காண
எப்போது முயன்றாலும் , தவித்தாலும்
எவ்வளவு வளைந்தாலும் முடிவதில்லை...
இதயவெளிகளின் இணையா சிந்துசமவெளிகள் ..
இசைக்கும் திசைகளாய் உருகி உருகி
என்றைக்கும்உறைந்தே போவதில்வலை..
உயிர்ஒளியை தேடித்தவிக்கும் விசைப்படகுகள்
மாய தருணங்களில் மயங்கினாலும்
காற்றை தூது விடவும் தயங்குவதில்லை...
தன் இருப்பை கூவிசொல்லும் குயில்களின்
மென்சோக கீதங்கள் ஒலிகளின் ஆரவாரங்களில்
சிலசமயம் கேட்பதேயில்லை..
காலம் உணர்த்தும் தந்திர புறக்கணிப்பும்
காயம் கொண்ட பாதை ரணங்களும்
நிலை மாறியும் நிறைவதாய் இல்லை!
இரவுகளின் கனத்தை நீக்க
இந்த தனிமையும் மூங்கில் துளை இசையும்
ஒருபோதும் போதுமானதாயில்லை...!