Author Topic: இலக்கியம் பேசுவோம்...  (Read 4606 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
இலக்கியம் பேசுவோம்...
« on: March 08, 2015, 12:39:25 PM »



    அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

    பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

    உரவோர் உரவோர் ஆக!

    மடவம் ஆக; மடந்தை நாமே!



நூல்: குறுந்தொகை (#20)

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்

திணை: பாலை

சூழல்:
காதலன் சம்பாதிப்பதற்காகக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தத் தகவலைக் காதலியிடம் சொல்கிறாள் தோழி. அதற்குக் காதலி சொல்லும் பதில் இந்தப் பாடல்

    என் காதலருக்கு என்மேல் அன்பும் இல்லை, அக்கறையும் இல்லை, காசு சம்பாதிப்பதற்காக என்னைப் பிரிந்து போய்விட்டார்.

    இப்படிப் பணத்துக்காகத் துணையைப் பிரிந்து போவதுதான் புத்திசாலித்தனம் என்றால், அவரே புத்திசாலியாக இருக்கட்டும், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #1 on: March 08, 2015, 12:43:23 PM »



    ’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே

    பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்

    மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!

    விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்


நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாகாண்டம் / நகர்நீங்கு படலம் / பாடல் 129)

பாடியவர்: கம்பர்

சூழல்:
கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் பெறுகிறார். அதன்மூலம் பரதனுக்கு முடிசூட்டவும் ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட லட்சுமணனுக்குக் கோபம். ராமன் அவனை அமைதிப்படுத்துகிற பாடல் இது

    தம்பி, ஒரு நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் அது அந்த நதியின் தவறு அல்ல (மலைமேல் மழை பெய்தால்தானே நதியில் நீர் வரும்?)

    இங்கே நடந்த விஷயமும் அப்படிதான் – வரம் கேட்ட தாய்(கைகேயி)மேலும் தப்பு இல்லை, வரம் கொடுத்த நம் தந்தைமேலும் தப்பு இல்லை, எனக்குப் பதில் முடிசூடப்போகும் பரதன்மேலும் தப்பு இல்லை, விதி செய்த குற்றம், இதற்கு ஏன் கோபப்படுகிறாய்?




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #2 on: March 08, 2015, 12:46:20 PM »



    வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
    உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
    நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
    சுருக்குண்டேன், சோறு(உ)ண்டி லேன்


நூல்: தனிப்பாடல்
பாடியவர்: ஔவையார்
சூழல்: கீழே காண்க


    பாண்டியன் வீட்டில் திருமணம். ஔவையாருக்கு அழைப்பு செல்கிறது. அவரும் புறப்பட்டு வருகிறார். ஆனால் கல்யாண வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். அந்தத் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஔவையாரால் சமாளிக்கமுடியவில்லை. சாப்பிடாமலே புறப்பட்டு வந்துவிடுகிறார்.

    களைப்போடு வரும் ஔவையாரைப் பார்த்து யாரோ கேட்கிறார்கள். ‘என்ன பாட்டி? கல்யாண வீட்டில் சாப்பாடு பலமோ?’

    ‘உண்மைதான்’ என்கிறார் ஔவையார். ‘வளமையான தமிழை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டவன் பாண்டியன் வழுதி, அவனுடைய வீட்டுக் கல்யாணத்தில் நான் உண்ட கதையைச் சொல்கிறேன், கேள்!’

    ’ராஜா வீட்டுக் கல்யாணம் அல்லவா? அங்கே ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் நெருக்குண்டேன், தள்ளுண்டேன் (நெருக்கித் தள்ளப்பட்டேன்), பசியால் சுருக்குண்டேன் (வயிறு சுருங்கினேன்), ஆனால் சோறுமட்டும் உண்ணவில்லை!’




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #3 on: March 08, 2015, 12:51:27 PM »

    கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்

    உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின்

    கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்

    வெகுளி கெடுத்து விடல்


நூல்: நான்மணிக்கடிகை (#81)

பாடியவர்: விளம்பிநாகனார்

சூழல்: நான்மணிக்கடிகை என்பது 106 பாடல்களைக் கொண்ட சிறு நூல். ஒவ்வொரு பாடலிலும் நான்கே வரிகளில் நான்கு கருத்துகளைச் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்வதால் புகழ் பெற்றது. உதாரணமாக, 106 Slides கொண்ட ஒரு powerpoint presentationனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த Slideகள் ஒவ்வொன்றிலும் சரியாக நான்கே நான்கு Bullet Points – அறிமுகம், விளக்கம் என்றெல்லாம் நீட்டி முழக்காமல் சட்டென்று விஷயத்துக்கு வந்து முடிந்துவிடும் அல்லவா? – அதுதான் நான்மணிக்கடிகை. இந்தப் பாடலில் கொடுப்பது, விடுவது, எடுப்பது, கெடுப்பது என்கிற நான்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன:



        * ஒருவருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? சாப்பாடு கொடுங்கள்


        * உங்களுடைய பழக்கங்களில் ஏதாவது ஒன்றை விட்டுவிடவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உயிர்மீது ஆசை, பற்று வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதை விட்டுவிடுங்கள்

        * யாரையாவது ஆதரவு அளித்துக் காப்பாற்றவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய உறவினர்களிலேயே மிகவும் ஏழை யார் என்று பார்த்து அவர்களுக்கு உதவுங்கள்

        * எதையாவது கெடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய கோபத்தைக் கெடுத்துக்கொள்ளுங்கள்



« Last Edit: March 08, 2015, 12:57:51 PM by Maran »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #4 on: March 09, 2015, 06:38:40 PM »



    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

    கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;

    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே;

    ஒருவோர் தோற்பினும், தோற்பது குடியே

    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்

    குடிப்பொருள் அன்று நும் செய்தி; கொடித்தேர்

    நும்மோர் அன்ன வேந்தர்க்கு

    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே!


நூல்: புறநானூறு (#45)

பாடியவர்: கோவூர் கிழார்

திணை: வஞ்சி

துறை: துணை வஞ்சி

சூழல்:
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழ மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போர் செய்யத் தீர்மானிக்கிறார்கள், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக இந்தப் பாடலைப் பாடுகிறார் கோவூர் கிழார்

    ’சுருக்’ விளக்கம்: நீங்க ரெண்டு பேருமே சோழர்கள், அப்புறம் எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறீங்க? உங்கள்ல யார் தோத்தாலும் சோழர் குலத்துக்குதானே அவமானம்? ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்குது, பேசாம சமாதானமாப் போயிடுங்க!

    முழு விளக்கம்:

    சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!

    போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?

    இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #5 on: March 09, 2015, 06:44:13 PM »



    முனிபரவும் இனியானோ – வேத

       முழுப்பலவின் கனிதானோ

    கனியில் வைத்த செந்தேனோ – பெண்கள்

       கருத்துருக்க வந்தானோ

    தினகரன்போல் சிவப்பழகும் – அவன்

       திருமிடற்றில் கறுப்பழகும்

    பனகமணி இருகாதும் – கண்டால்

       பாவையும்தான் உருகாதோ!

    வாகனைக் கண்டு உருகுதையோ – ஒரு

       மயக்கம் அதாய் வருகுதையோ

    மோகம் என்பது இதுதானோ – இதை

       முன்னமே நான் அறிவேனோ

    ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற

       அன்னை சொல்லும் கசந்தேனே

    தாகமின்றிப் பூணேனே – கையில்

       சரிவளையும் காணேனே!



நூல்: திருக்குற்றாலக் குறவஞ்சி

பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர்

சூழல்:
திரிகூடநாதர்மேல் காதல் கொண்ட வசந்தவல்லி பாடுவது

    (பெரும்பாலும் நேரடியாகவே அர்த்தம் புரிந்துவிடும் பாடல்தான் இது. ஆகவே முடிந்தவரை பாட்டில் இருக்கும் சொற்களையே பயன்படுத்தியிருக்கிறேன்)

    இவன் (அகத்திய) முனிவர் வணங்குகிற இனியவனோ, வேதம் என்கிற முழுப் பலாவின் கனியோ, அந்தக் கனிக்குள் இருக்கும் செந்தேனோ, பெண்களின் நெஞ்சை உருக்க வந்தவனோ!

    சூரியனைப்போல் இவனுடைய சிவப்பழகு, கழுத்தில்மட்டும் கருப்பழகு, இரு காதுகளிலும் பாம்பு ஆபரணங்கள்.. இதையெல்லாம் கண்டு இந்தப் பாவை உருகி நிற்கிறாள்!

    அடடா, இந்த அழகனைப் பார்த்து என் மனம் இளகுகிறதே, ஒருமாதிரி மயக்கமாக வருகிறதே, இப்படி ஓர் உணர்வை நான் இதற்குமுன்னால் அறிந்ததில்லையே, மோகம் என்பது இதுதானா?

    இவனைக் கண்டபிறகு, என் உடம்பெல்லாம் பசலை படர்ந்தது, தாய் சொல் கசந்தது, உடம்பெல்லாம் மெலிந்து கை வளையல்கள் கழன்றுவிட்டன, இவன்மேல் கொண்ட காதலைத்தவிர என் உடலில் வேறு ஆபரணங்களே இல்லை!




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #6 on: March 10, 2015, 05:34:46 PM »



    ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே

    இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே

    மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே

    நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே

    ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே

    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.




நூல்: தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல் #571)

பாடியவர்: தொல்காப்பியர்

சூழல்: ஓரறிவு உயிர்களில் தொடங்கி ஆறறிவு உயிர்கள்வரை விவரிக்கும் பாடல்


    உயிர்களை இப்படிப் பிரிக்கலாம்:

        ஓர் அறிவு என்பது, வெறும் உடம்பினால்மட்டும் அறிவது (தொடு உணர்வு). (உதாரணம்: புல், மரம் போன்றவை)

        அதோடு நாக்கு / வாய் (சுவை உணர்வு) சேர்ந்துகொண்டால், இரண்டு அறிவு. (உதாரணம்: சங்கு, சிப்பி)

        இவற்றோடு மூக்கு (நுகர்தல் உணர்வு) சேர்ந்துகொண்டால், மூன்று அறிவு. (உதாரணம்: எறும்பு)

        இவற்றோடு கண் (பார்த்தல்) சேர்ந்துகொண்டால், நான்கு அறிவு. (உதாரணம்: நண்டு, தும்பி)

        இவற்றோடு காது (கேட்டல்) சேர்ந்துகொண்டால், ஐந்து அறிவு. (உதாரணம்: விலங்குகள், பறவைகள்)

        இவற்றோடு மனம் (சிந்தனை) சேர்ந்துகொண்டால், அதுதான் ஆறு அறிவு உயிர்! (உதாரணம்: மனிதன்)




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #7 on: March 10, 2015, 05:39:12 PM »



    என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்

    தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்

    அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்

    மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

    *

    சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

    எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்

    வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற

    கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிது ஓடி வா!

    *

    சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர் அவிழ்த்து

    ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்

    தக்கது அறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே

    மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்!

    *

    அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா

    மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

    குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்

    புழை இல ஆகாதே நின் செவி புகர் மாமதீ!



நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (பெரியாழ்வார் திருமொழி 1-4-2 முதல் 1-4-5 வரை)

பாடியவர்: பெரியாழ்வார்

சூழல்:
குழந்தைக் கண்ணனுடன் விளையாட நிலாவை அழைத்துப் பாடும் யசோதை

    நிலாவே, என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளைக் காட்டி உன்னை அழைக்கிறான், அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா? ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய்? மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா!


    உன்னைச் சுற்றிலும் ஒளிவட்டம், உலகம் எங்கேயும் வெளிச்சத்தைப் பரப்புகிறாய், ஆனாலும்கூட, நீ என் மகன் முகத்துக்கு இணையாகமாட்டாய். வித்தகன், வேங்கடவாணன், அவன் உன்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கை வலிக்க ஆரம்பித்துவிடும், அதற்குள் சீக்கிரமாக ஓடி வா!


    கையில் (சுதர்சனச்) சக்கரம் ஏந்திய கண்ணன், அவன் தன்னுடைய அழகான பெரிய கண்களை விரித்து உன்னையே ஆர்வமாகப் பார்க்கிறான், சுட்டிக்காட்டுகிறான், பார்! இப்போது என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியாதா? நீ குழந்தைகளைப் பெறாதவனா? அவற்றோடு விளையாடி மகிழாதவனா? பிடிவாதம் பிடிக்காமல் சீக்கிரம் வா!


    குழந்தைக் கண்ணன் வாயில் ஊறும் அமுத எச்சில் தெறிக்க, தெளிவில்லாத மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கிறான், அதைக் கேட்டும் கேட்காததுபோல் போகிறாயே, உனக்குக் காது இருந்து என்ன பலன்? அந்தக் காதுகளில் துளை இல்லாமல் போகட்டும்!



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #8 on: March 19, 2015, 08:26:18 PM »



    தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

    துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

    தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

    தெத்தாதோ தித்தித்த தாது?



நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்




    ’சுருக்’ விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?

    முழு விளக்கம்:

    வண்டே,

    தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்

    தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்

    துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்

    துதைது – அடுத்த பூவுக்குச் சென்று

    அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்

    தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #9 on: March 19, 2015, 08:46:44 PM »



    பொல்லாத மூர்க்கர்க்கு எத்தனைதான்

               புத்தி போதிக்கினும்

    நல்லார்க்கு உண்டான குணம் வருமோ?

               நடுச் சாமத்திலே

    சல்லாப் புடவை குளிர் தாங்குமோ?

               பெரும் சந்தையினில்

    செல்லாப் பணம் செல்லுமோ? தில்லை

               வாழும் சிதம்பரனே!



நூல்: தனிப்பாடல்

பாடியவர்: படிக்காசுத் தம்பிரான்

    (நேரடியாகப் படித்தாலே பொருள் புரியக்கூடிய பாடல்தான். இருந்தாலும் ஒரு சாத்திரத்துக்கு விளக்கம் எழுதிவைக்கிறேன்



    சிதம்பரத்தில் வாழும் இறைவனே,

    நடுச்சாமப் பொழுது, நடுங்கவைக்கும் குளிர், அந்த நேரத்தில் ஒரு மெலிதான புடவையை எடுத்துப் போர்த்திக்கொண்டால் குளிர் தாங்குமா? ஒரு பெரிய சந்தையில் செல்லாத பணத்தைக் கொடுத்தால் யாராவது வாங்கிக்கொள்வார்களா? அதுபோல, பொல்லாதவர்களுக்கு நாம் என்னதான் அறிவுரை சொன்னாலும், அவர்களுக்கு நல்லவர்களுடைய குணம் வரவே வராது!




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #10 on: March 21, 2015, 06:32:08 PM »


    பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

    மெய்போலும்மே; மெய்போலும்மே.

    மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்

    பொய்போலும்மே; பொய்போலும்மே.

    அதனால்

    இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே

    இருவரும் பொருந்த உரையார் ஆயின்

    மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்

    மனம் உற மருகி நின்று அழுத கண்ணீர்

    முறை உறத் தேவர் மூவர் காக்கினும்

    வழிவழி ஈர்வது ஓர் வாளாகும்மே.



நூல்: வெற்றிவேற்கை / நறுந்தொகை

பாடியவர்: அதிவீரராமப் பாண்டியர்

சூழல்: ஒரு பிரச்னையை எப்படி விசாரித்து நியாயம் சொல்வது என்பதற்கான வழிமுறையைச் சொல்லும் பாடல் இது


    ’சுருக்’ விளக்கம்: பேச்சில் மயங்கவேண்டாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது நிஜமும் பொய்யும் புரியாது. அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள். தீர விசாரித்து அறிவதே உண்மை.

    முழு விளக்கம்:

    ஒருவருக்கு நல்ல பேச்சுத்திறமை இருந்தால், அவர் பொய்யைக்கூட நிஜம்போல் சொல்லிவிடுவார்.

    இன்னொருவர், உண்மைதான் சொல்கிறார், ஆனால் பாவம், அவருக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை, எனவே அது நமக்குப் பொய்போலத் தோன்றுகிறது.

    ஆக, ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்று வெறும் பேச்சைமட்டும் வைத்து முடிவு செய்வது சரியல்ல.

    உங்கள்முன்னால் ஒரு பிரச்னை வந்து நிற்கும்போது, இருதரப்பினருடைய வாதத்தையும் தலா ஏழு முறை தெளிவாகக் கேளுங்கள். அதன்பிறகு, அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.

    அப்படிச் செய்யாமல் மேலோட்டமான சொற்களில் மயங்கி, அவசரப்பட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால், நியாயம் தவறிவிடும். வழக்கில் தோற்றுப்போனவர் வருந்தி அழுவார். அந்தக் கண்ணீர், தப்பான தீர்ப்புச் சொன்னவரைச் சும்மா விடாது. அவருடைய சந்ததியையே அறுக்கும் வாள் ஆகிவிடும். மூன்று தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட அவர்களைக் காப்பாற்றமுடியாது.



Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #11 on: March 29, 2015, 06:37:36 PM »



    பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்

    தாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை

    முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா! நீ

    என்னையே முற்றாய்? விடு.


    விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்

    கடுவய நாகுபோல் நோக்கித் தொடுவாயில்

    நீங்கிச் சினவுவாய் மற்று.

    நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று ஆங்கு

    வன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.


    யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்

    கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,

    நீ அருளி நல்கப் பெறின்.

    நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்

    கனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்

    மாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்!

    கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்

    வருவையால் – நாண் இலி நீ!


நூல்: கலித்தொகை (முல்லைக்கலி #16)

பாடியவர்: நல்லுருத்திரனார்

சூழல்: கன்றை இழுத்துக்கொண்டு வயல் பக்கம் செல்கிறாள் ஒரு பெண். அவளை வழிமறிக்கிறான் ஒருவன். அங்கே நடக்கும் சுவாரஸ்யமான நாடகம் இது – ஈவ் டீஸிங்காகவும் பார்க்கலாம் – ’கலித்தொகை’ ஓர் ‘அக’ப்பாடல் நூல் என்பதால், சுவையான காதல் விளையாட்டாகவும் பார்க்கலாம், உங்கள் இஷ்டம்


    (முன்குறிப்பு: மேலே பாடலில் தடித்த (bold) எழுத்துகளில் உள்ளவை பெண் சொல்வது, மற்றவை ஆண் சொல்வது)

    அவள்: நான்பாட்டுக்குத் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திடீரென்று என்னை வழிமறிக்கிறாய். என்னுடைய கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வழியை விடு.

    அவன்: ம்ஹூம், நான் வழி விடமாட்டேன். உன்னுடைய எருமைக்கன்றை யாராவது வழிமறித்தால் அது என்ன செய்யும்? முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா? அதுபோல, வேண்டுமென்றால் நீயும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போ.

    அவள்: ச்சீ, இதென்ன பேச்சு? ஒழுங்காக வழியை விடு. தன்னுடைய கன்றிடம் யாராவது வம்பு செய்தால் அதன் தாய்ப்பசு பாய்ந்து வந்து முட்டும். அதுபோல, நீ இங்கே தொடர்ந்து கலாட்டா செய்தால் என்னுடைய தாய் வந்துவிடுவார், உனக்கு நல்ல பாடம் சொல்லித்தருவார்.

    அவன்: உன் தாய் என்ன? இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன், உன் அன்புமட்டும் இருந்தால் போதும், நான் யாரையும் எதிர்த்து நிற்பேன்.

    அவள்: அடப்பாவி, உனக்கு வெட்கமே கிடையாதா? என்ன புத்தி சொன்னாலும் புரியாதா? நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா? நாளைக்கு நான் பால் கறக்கும் பாத்திரத்தோடு பசுவைத் தேடி வயலுக்குச் செல்வேன், அங்கேயும் வந்து இதேபோல் ’தொந்தரவு’ செய்வாயா?




Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இலக்கியம் பேசுவோம்...
« Reply #12 on: April 03, 2015, 08:57:04 AM »
    பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த

    நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

    மாவேறு சோதியும் வானவரும் தாம் அறியாச்

    சேஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

    *

    நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை ஆர் அறிவார்

    வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

    ஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்

    தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ!



நூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)

பாடியவர்: மாணிக்கவாசகர்

சூழல்: வண்டுகளின் அரசனை (கோத்தும்பி) அழைத்து சிவபெருமானின் காலடிக்குச் ‘சென்று ஊதுவாய்’ என அறிவுறுத்தும் பாடல்


    வண்டுகளின் அரசனே,

    (தாமரை) மலரில் அமர்ந்துள்ள பிரம்மன், இந்திரன், திருமால், பிரம்மனின் நாக்கில் தங்கிய அழகிய கலைமகள், நான்கு வேதங்கள், பெருமை மிகுந்த ஒளி வடிவான ருத்திரன், மற்ற தேவர்கள் என யாராலும் அறியமுடியாதவன், காளை வாகனத்தில் ஏறும் சிவபெருமான், அவனுடைய காலடியைச் சென்று நீ வணங்குவாய்!

    *

    தேவர்களின் தலைவன் என்மீது கருணை வைத்தான், என்னை ஆட்கொண்டான், அவன்மட்டும் அப்படி அருள் புரியாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன்! என் உள்ளம், என் அறிவெல்லாம் என்ன நிலைமைக்குச் சென்றிருக்கும்! என்னை யாருக்குத் தெரிந்திருக்கும்? (நான் இன்று கற்றவை, பெற்றவை எல்லாம் அவனால் கிடைத்தது)

    ஆகவே, மாமிசம் ஒட்டியிருந்த மண்டை ஓட்டில் பிச்சை பெற்று உண்கின்ற அம்பலவாணன், அவனுடைய தேன் நிறைந்த தாமரை போன்ற காலடியைச் சென்று நீ வணங்குவாய்!