மழைப் பாடல்
இன்றைக்கும் மழையென
சலித்துக் கொண்டு வீதியில்
இறங்கும் ஒரு நாளில்
புதுதளிர் மலர்ந்த
தெருவோர செடி
மழைத்துளி சூடி நிற்கிறது
கழுவி துடைக்கப்பட்ட
ரோட்டில் முகம் பார்த்துச் செல்கின்றன
ஒவ்வொரு வாகனமும்
பொம்மையின் சாயலில்
தந்தையின் முதுகில் முகம் பதித்து
செல்லும் ஒரு தேவதைக் குழந்தை
மென்முறுவலை ஏந்திக் கொண்டு
நீர் குட்டைகள் தாண்டும்
வண்ணத்துப்பூச்சி பெண்ணொருத்தி
பலநிற குடைக்களுக்கிடையே
புதிதாய் பூத்த ஒற்றை ரோஜா போன்ற
செந்நிற குடையொன்று
பூக்களுக்கு குடைப் பிடித்து
அமர்ந்திருந்த
வெறுப்பின் பாவனையற்ற
மலர் முகம்
சில்லிட்டிருந்த ரயில் கம்பிகளின்
வழி
மிச்சமிருக்கும் நீர்த்துளிகளை
சுவைக்கும்
நகப்பூச்சு அணிந்த பாவை விரல்கள்
தொடர்பறுத்திருந்த
பேரன்பு ஒன்றின் எதிர்பாராத தொலைப்பேசி அழைப்பு
மழை நனைத்த மஞ்சள் நிற
ஊர்தியில் இருந்து
மழையை நனைத்தபடி செல்லும்
பிஞ்சு விரல்கள்
மழை வெறுத்து, மழை நனைத்து
எழுத்தப்படும் கவிதை ஒன்றின்
முடிவில்
பொழியத் துவங்குகிறது
பெருமழையொன்று