உன்னை நேசித்தலொன்றும்
அத்தனை கடிதில்லை..
ஒற்றைப் பார்வையில்
சிறு கலந்துரையாடலில்
முழுதாய் கேட்டுவிட முடியாத
ஒரு முணுமுணுப்பில்
ஒரு புன்சிரிப்பில்
ஒரு கண்சிமிட்டலில்
ஒரு மென்தீண்டலில்
என என் அத்தனையிலும்
கட்டவிழும் ஒரு மொட்டின் இலாவகத்தில்
அன்புணர்கிறாய்.
பூமிதொடும் மழையின் முதல்துளிபோல்
கூடுதல் குறைவுகளின்றி என்னோடு
இயைந்துவிடும் இயல்பு நீ..
விடியல்களை அழகாக்கி
மனம் கிறக்கும் அலுக்காத வாசனையோடு
தினந்தினம் புதிதாய் பூக்கும்
முல்லை அரும்பு நீ.
முற்றத்து முல்லையுன்னை
வாசமில்லையெனச் சொலல் பாவமாகலாம்.
சிறுநடைக்குப் பின் பூக்கும்
முன்நெற்றி வியர்வை போல்
உறுத்தாத துன்புறுத்தல்
உனக்கான தவிப்பு.
இரவின் வானங்களில்
யாரோ விசிறியெறிந்த அலுத்துப்போகாத
நட்சத்திரவரிசையின் அழகியலோடு
ஆக்கிரமித்துக் கொள்கிறாய்
சந்தோஷச் சிதறல்களாய்..
பெருநீர்த் தடாகத்தின் அடிவாரங்களில்
அமிழ்ந்துக்கிடக்கும் சிறுக்கல்லொத்து
சலனங்களேதுமின்றி மூழ்கிக்கொள்கிறேன்
உன் பேரன்பென்னும் சமுத்திரத்தில்.
ஆழிப்பேரலையென வந்து
இழுத்துச்சென்றுவிடு என்னை...