Author Topic: ~ புறநானூறு ~  (Read 71324 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #300 on: November 25, 2015, 07:39:56 PM »
புறநானூறு, 303. (மடப்பிடி புலம்ப எறிந்தான்!)
பாடியவர்: எருமை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை,

உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

அருஞ்சொற்பொருள்:-

பிறக்கிடுதல் = பின்வாங்குதல் (பின்னிடுதல்)
குளம்பு = விலங்குகளின் பாதம்
கடையூஉ = ஊன்றி
கொட்பு = சுழற்சி
மான் = குதிரை
எள்ளுதல் = இகழ்தல்
செகுத்தல் = அழித்தல்
கூர்த்த = கூரிய
வெப்பு = கொடுமை
திறல் = வலி
எஃகம் = வேல்
வடு = புண்
காணிய = காண்பதற்கு
நெருநை = நேற்று
உரை = புகழ்
சால் = நிறைவு (மிகுதி)
முந்நீர் = கடல்
திமில் = படகு (தோணி)
போழ்தல் = பிளத்தல்
கயம் = பெருமை
இலங்குதல் = விளங்குதல்
மருப்பு = கொம்பு (தந்தம்)
எற்கு = எனக்கு

இதன் பொருள்:-

நேற்று, புகழ் மிக்க வேந்தர்கள் கண்முன்னே, கரையை மோதும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும் படகைப்போல் பகைவர் படையைப் பிளந்து அவர்களுடைய பெரிய தலையையுடைய இளம் பெண்யானைகள் தனிமையுற்று வருந்துமாறு, விளங்கும் கொம்புகளையுடைய களிறுகளை (ஆண்யானைகளை) நான் கொன்றேன். நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக் காண்போரைக் கலங்கவைக்கும் குதிரைமேல் வரும் வீரன் தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன். அவன் கூரிய, கொடிய, வலிய வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண்படுத்தி அதிரச் செய்பவன். அவன் என்னை நோக்கி வருகின்றான்.

பாடலின் பின்னணி:-

போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர் எருமை வெளியனார், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

குதிரை வேகமாகச் செல்லும் பொழுது நிலம் பின்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுவதை ”நிலம் பிறக்கிடுதல்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

“உரை” என்பது புலவரால் பாடப்படும் புகழைக் குறிக்கும் சொல்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #301 on: November 25, 2015, 07:45:19 PM »
புறநானூறு, 304. (எம்முன் தப்பியோன்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு

நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கிரும் பாசறை நடுங்கின்று
இரண்டுஆ காதுஅவன் கூறியது எனவே

அருஞ்சொற்பொருள்:-

கொடு = வளைவு
குழை = காதணி
கொடுங்குழை = வளைந்த காதணி
கோதை = மாலை
பனி = குளிர்
களைதல் = போக்குதல்
நாரரி = நார்+அரி = நாரால் வடிகட்டப்பட்ட
வளி = காற்று
ஒழிக்கும் = குறைக்கும்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
நெருநை = நேற்று
தப்பியோன் = கொன்றவன்
அருத்தல் = உண்பித்தல்
மான் = குதிரை
கடவும் = செலுத்தும்
வலம் = வெற்றி
இலங்குதல் = விளங்குதல்
இரு = பெரிய
நடுங்கின்று = நடுக்கம் கொண்டது

இதன் பொருள்:-

கொடுங்குழை=====> ஒராங்கு

வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மலை சூட்டி உன்னை மகிழ்விக்க, நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவை உண்டு, காற்றைவிட விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போருக்குத் தகுந்தவையாகச் (தயார்) செய்வதற்கு நீ விரைந்து சென்றுகொண்டிருக்கிறாய். ”நேற்று, என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும்

நாளை=====> எனவே

நாளை ஒருசேரப் போர்புரிவேன்” என்று கூறி நீ சிறிதளவும் உணவு உண்ணாமல் பல குதிரைகளைப் பெரிதும் ஆராய்கின்றாய் என்று கேள்விப்பட்டு, வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின் விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி நடுங்குகின்றார்கள்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவனின் தமையனைப் பகையரசனின் வீரன் ஒருவன் கொன்றான். கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். இக்காட்சியை, இப்பாடலில் அரிசில் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“செய்குவன் அமர்” என்றது போரில் கொல்வேன் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது. “புன்வயிறு அருத்தல்” என்பதில் உள்ள “புன்” என்ற சொல் ”சிறிதளவு” என்ற பொருளில் வயிற்றைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது. பகை வேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். “இரண்டு ஆகாது அவன் கூறியது” என்றது அவனுடைய சொல்லும் செயலும் இரண்டாக வேறுபட்டில்லாமல், அவன் சொன்னதைச் செய்வான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #302 on: November 25, 2015, 07:50:29 PM »
புறநானூறு, 305. (சொல்லோ சிலவே!)
பாடியவர்: மதுரை வேளாசான்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: பார்ப்பன வாகை.
===========================================

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

அருஞ்சொற்பொருள்:-

வயலை = பசலை
மருங்குல் = இடை
உயவல் = வருத்தம், தளர்வு
பயலை = இளமை
எல்லி = இரவு
சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
மாண் = மாட்சிமையுடைய

இதன் பொருள்:-

பசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.

பாடலின் பின்னணி:-

இளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“சொல்லிய சொல்லோ சிலவே” என்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #303 on: November 25, 2015, 07:52:22 PM »
புறநானூறு, 306. (ஒண்ணுதல் அரிவை!)
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்

ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

(இப்பாடலில் சில சொற்கள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை)
அம்குடி = அழகிய குடி
ஒலித்தல் = தழைத்தல்
பரவல் = வணங்கல், வாழ்த்துதல்
ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும்
விழுப்பகை = சிறந்த பகை

இதன் பொருள்:-

யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் …..

அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.

பாடலின் பின்னணி:-

மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெற்றி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும் வழிபட்டாள். அவள் வழிபடுவதைக் கண்ட புலவர் நன்முல்லையார், தான் கண்ட காட்சியை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர் வரவேண்டும் என்று இப்பாடலில் ஒருபெண் வேண்டுவது, விருந்தோம்பல் மிகவும் சிறந்த நற்பண்பாகவும், இல்லற வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு விருந்தோம்பல் இன்றியமையாத ஒழுக்கமாகவும் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. நடுகல்லைத் தொழுதலும் நமது மரபு என்பதற்குச் சான்றும் இப்பாடல் தருகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #304 on: November 25, 2015, 07:53:21 PM »
புறநானூறு, 307. (யாண்டுளன் கொல்லோ!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: களிற்றுடனிலை. தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒருவீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்.
===========================================

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவீ

அரியல் வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு

வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
பண்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

அருஞ்சொற்பொருள்:-

ஆசு = பற்று
யாண்டு = எங்கு, எப்பொழுது
வம்பலன் = புதியவன்
உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்)
வேனல் = வேனிற்காலம்
வாலம் = வால்
கானம் = காடு
ஊகம் = ஒருவகைப் புல்
உகுதல் = உதிர்த்தல்
வீ = பூ
அரியல் = அறுத்த வைத்த வரிசை
வான் = பெருமை
சுரியல் = சுருண்ட தலைமயிர்
சிறை = பக்கம்
முடம் = நொண்டி
பகடு = எருது
ஏய்ப்ப = போல
தெறுவர் = பகைவர்
எஞ்சல் = இறத்தல்
பண் = புலவர் பாடும் பாடல்
விழ்தல் = விரும்புதல்
புரைமை = உயர்வு

இதன் பொருள்:-

ஆசாகு=====> அதுகண்டு

வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப்போல், காட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள் வரிவரியாகப் பெரிய சுருண்ட தலைமயிரில் தங்குவதால், அவன் அயலான் போலத் தோன்றுகிறான் ( அவனைப் பார்த்தால் அடையாளம் தெரியவில்லை.). அங்கே அவனைப் பார்! மலை போன்ர யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான். முடமாகியதால் உமணர்களால், நீரும் புல்லும் இல்லாமல் கைவிடப்பட்ட, வாழும் திறனில்லாத எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், அவ்வீரன், பகைவர்களின் உயிர்களை எல்லாம் கொன்று அவனும் இறந்தான். அதைக் கண்ட,

வெஞ்சின=====> யோனே

மிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தன், இக்களத்தில் இறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும், புலவர் பாடும் பாடல் பெறுவதர்குரிய அருமையை நினைத்தும், உயிர்மேல் ஆசையின்றிப், போர் செய்து இறக்க விரும்பினான். எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு உளணோ?

பாடலின் பின்னணி:-

போர்க்களத்தில் வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்து தன்னைத் தாக்க வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தான். அதைக் கண்ட அவனுடைய மன்னன் தானும் அவ்வாறு போர் செய்து இறப்பதே சிறந்தது என்று முடிவு செய்தான். அந்தக் காட்சியை இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #305 on: November 25, 2015, 07:54:52 PM »
புறநானூறு, 308. (நாணின மடப்பிடி!)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே

வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
சாந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்திநம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

அருஞ்சொற்பொருள்:-

வார்த்தல் = ஊற்றுதல்
புரி = முறுக்கு
பச்சை = தோல்
மிஞிறு = வண்டு
குரல் = ஓசை
சீறீயாழ் = சிறிய யாழ்
நயவரு = விரும்பத்தக்க
எஃகம் = வேல், வாள் முதலிய படைக் கருவிகள்
சாந்து = சந்தனம்
தார் = மாலை
அகலம் = மார்பு
விறல் = வலிமை
ஓச்சுதல் = எறிதல்
துரத்தல் = எய்தல்
காலை = பொழுது
புன்தலை = சிறிய தலை
மடம் = இளமை
பிடி = பெண்யானை
குஞ்சரம் = யானை

இதன் பொருள்:-

பொன்வார்ந் தன்ன=====> ஏந்துமுகத் ததுவே

பொன்னால் செய்த கம்பிகளைப்போல் முறுக்கமைந்த நரம்புகளையும் மின்னலைப் போன்ற தோலையும், வண்டிசை போன்ற இசையையுமுடைய சிறிய யாழை இசைத்து, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் புலமை நிறைந்த பாணனே! சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல், பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது.

வேந்துஉடன்று=====> புறக்கொடுத் தனவே

பெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய சந்தனம் பூசிய, மாலைகள் அணிந்த மார்பை ஊடுருவியது. மார்பிலே பதிந்த ஒளியுடன் கூடிய விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி மிக்க வலிமையுடைய நம் தலைவன் எறிந்தான். அதைக் கண்ட சிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு பகைவனாகிய பெருவேந்தனின் களிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.

பாடலின் பின்னணி:-

ஒருகால் ஒருசிற்றூர் மன்னனுக்கும் பெருவேந்தனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சிற்றூர் மன்னன் மிகவும் வீரத்தோடு போர் புரிந்ததைப் புலவர் கோவூர் கிழார், சிற்றூர் வீரனின் மனைவியின் கூற்றாக இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #306 on: November 25, 2015, 07:56:17 PM »
புறநானூறு, 309. (என்னைகண் அதுவே!)
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================

இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

அருஞ்சொற்பொருள்:-

இரும்பு = படைக்கலம்
முகம் = நுனி
நூறி = அழித்து
ஒன்னார் = பகைவர்
இரு = பெரிய
சமம் = போர்
கடத்தல் = வெல்லுதல்
ஏனோர் = மற்றவர்
அரா = பாம்பு
மாற்று = ஒழிக்கை
மாற்றுதல் = அழித்தல்
துப்பு = வலிமை
மாற்றார் = பகைவர்
வெருஉ = வெருவு = அச்சம்
ஓர் = ஒப்பற்ற
ஒளி = புகழ்
வலன் = வெற்றி
என்னை = என்+ஐ = என் தலைவன்
கண் = இடம்

இதன் பொருள்:-

இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும், கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும், வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில் உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ், வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி:-

ஒருவீரன் போரில் பகைவர் பலரையும், களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பது ஒரு அரிய செயல் அன்று. அது வீரர் பலருக்கும் பொதுவான செயலே. தன் பெயரைக் கேட்டவுடன் பகைவர்கள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்குபவன்தான் சிறந்த வீரன் என்ற கருத்தைப் புலவர் கோசிகனார் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இரும்பு என்றது ஆகுபெயராகி, இரும்பால் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைக்கருவிகளைக் குறிக்கின்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #307 on: November 25, 2015, 07:57:50 PM »
புறநானூறு, 310. (உரவோர் மகனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே;
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

அருஞ்சொற்பொருள்:-

மடுத்தல் = ஊட்டல்
செறுதல் = சினத்தல்
ஓச்சுதல் = ஓங்குதல்
அஞ்சி = அஞ்சியவன்
உயவு = கவலை
மனனே = மனமே
புகர் = புள்ளி
நிறம் = தோல்
ஆனான் = அமையான்
உன்னிலென் = அறியேன், நினையேன்
மான் = குதிரை
உளை = பிடரிமயிர்
தோல் = கேடகம்
அணல் = தாடி

இதன் பொருள்:-

இளையோனாக இருந்தபொழுது பாலை ஊட்டினால் இவன் உண்ணமாட்டன். அதனால், சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சிப் பால் உண்டவன் பொருட்டு வருந்தும் மனமே! இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக, மார்பில் புண்படுத்தி ஊன்றி நிற்கும் அம்பைச் சுட்டிக் காட்டியபொழுது, ‘அதை நான் அறியேன்’ என்று கூறினான். அவன் இப்பொழுது குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன், குறுந்தாடியுடன் கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கிறான்.

பாடலின் பின்னணி:-

இரு வேந்தர்களிடையே போர் மூண்டது. அப்போரில், முன்னாள் கடுமையாகப் போர்புரிந்து இறந்த வீரன் ஒருவனுடய மகன் பகைவர்களின் யானைகள் பலவற்றைக் கொன்றான். அப்போது, பகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி இறந்தான். அதைக் கண்ட அவன் தாய், அவன் சிறுவனாக இருந்த போது பால் குடிக்க மறுத்ததையும் அதற்காக அவள் ஒரு கோலை எடுத்து அவனை வெருட்டியதற்கு அவன் அஞ்சியதையும் இப்போது நெஞ்சில் அம்பு தைத்தாலும் அஞ்சாமல் போர் புரிந்ததையும் எண்ணிப் பார்த்து வியப்பதை பொன்முடியார் இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #308 on: November 25, 2015, 07:59:05 PM »
புறநானூறு, 311. (சால்பு உடையோனே!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
===========================================

களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

அருஞ்சொற்பொருள்:-

களர் = களர்நிலம்
கூவல் = கிணறு, கேணி
புலைத்தி = வண்ணாத்தி
கழீஇய = வெளுத்த
தூ = தூய்மை
அறுவை = ஆடை
மறுகு = தெரு
மாசுண = மாசு+உண = அழுக்குப் பற்ற
குறை = இன்றியமையாப் பொருள்
தார் = மாலை
மாது, ஓ – அசைச் சொற்கள்
செரு = போர்
தோல் = கேடகம்
சால்பு = நிறைவு

இதன் பொருள்:-

களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருவில் எழும் அழுக்குப் படிய இருந்து, பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்து உதவிய, மலர்மாலை அணிந்த தலைவனுக்குத் துணையாகப் போர்க்களத்தில் ஒருவரும் இல்லை. அவன் தன்னுடைய சிறப்பு மிகுந்த கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைக்கருவிகளைத் தடுக்கும் வலிமை நிறைந்தவனாக உள்ளான்.

பாடலின் பின்னணி:-

பலர்க்கும் பலவகையிலும் உதவியாக இருந்த வீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். அவன் போர் புரியும் ஆற்றலைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த ஒளவையார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தலைப் பற்றிக் கூறும் பாடல்கள் பாண்பாட்டு என்னும் துறையில் அடங்கும். இப்பாடலில் கூறப்படும் வீரன் இறந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #309 on: November 25, 2015, 08:00:34 PM »
புறநானூறு, 312. (காளைக்குக் கடனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

அருஞ்சொற்பொருள்:-

புறந்தருதல் = பாதுகாத்தல்
கடன் = கடமை
தலை = இடம், முதன்மை
சான்றோன் = அறிஞன், வீரன்
வடித்தல் = உருவாக்கல்
நன்மை = மிகுதி
நடை = செல்வம், ஒழுக்கம், நடத்தை
நல்கல் = அளித்தல்
ஒளிறுதல் = விளங்குதல்
சமம் = போர்
முருக்குதல் = அழித்தல், முறித்தல்
எறிதல் = வெல்லுதல்
பெயர்தல் = மீளல்

இதன் பொருள்:-

மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், பொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

’சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, தன் மகனை வீரனாக்குவது தந்தையின் கடமை என்றும் பொன்முடியார் கூறுவதுபோல் தோன்றுகிறது. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடமை. போருக்குச் சென்று பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்பி வருதல் அவ்விளைஞனின் கடமையாகும். ‘நடை’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, யானைகளைக் கொன்ற இளைஞனுக்குப் பரிசாகச் செல்வம் அளிப்பது வேந்தனின் கடமை என்றும் பொருள் கூறலாம். ‘நன்னடை’ என்பதின் பாடபேதமாக “தண்ணடை” என்று சிலநூல்களில் காணப்படுகிறது. ‘தண்ணடை’ என்பதற்கு ‘மருத நிலத்து ஊர்’ என்று பொருள். சிறப்பாகப் போர் புரிந்த வீரர்களுக்கு அரசர்கள் ’தண்ணடை’ அளித்ததாக பாடல் 297-இல் காணலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #310 on: November 25, 2015, 08:02:49 PM »
புறநானூறு, 313. (வேண்டினும் கடவன்!)
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே
எள்ளமைவு இன்றவன் உள்ளிய பொருளே

அருஞ்சொற்பொருள்:-

அத்தம் = வழி
நண்ணுதல் = நெருங்குதல்
கெழு = பொருந்திய
விறல் = வலிமை
நச்சி = விரும்பி
கடவன் = கடப்பாடுடையவன்
ஒய்தல் = இழுத்தல், செலுத்துதல்
சாகாடு = வண்டி
உமணர் = உப்பு வணிகர்
முரிதல் = சூழ்தல்
கழிமுரி = கழிநீர் மோதும்
எள்ளுதல் = இகழ்தல்
எள்ளமைவு = இகழும் தன்மை

இதன் பொருள்:-

எங்கள் தலைவன் பல வழிகள் உள்ள நாட்டையுடைய பெரிய வலிமை மிக்கவன். அவன் கையில் பொருள் யாதொன்றும் இல்லை. ஆனால், பொருளை விரும்பி அவனைக் காணச் சென்ற இரவலர், யானைகளையும் தேர்களையும் விரும்பிக் கேட்டாலும் அவன் தரும் கடப்பாடுடையவன். உப்பை வண்டிகளில் சுமந்து செல்லும் உப்பு வணிகர்களின் செல்வம் உப்பளங்களில் குன்று போல் குவிந்திருக்கும் உப்புதான். அது உப்பங்கழியிலுள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. குன்றுபோல் குவிந்திருந்தாலும், உப்பு வணிகர்கள் அதை வண்டிகளில் சுமந்து செல்லச் செல்ல அது குறையும் தன்மை உடையது; கழி நீரால் கரைக்கவும் படலாம். உப்பளங்கள் கடலால் சூழப்பட்டிருப்பதால் உமணர்கள் மீண்டும் உப்பை விளைவிக்க முடியும். இத்தானைத் தலைவனின் செல்வமும் அத்தகையதுதான். செல்வமிருந்தால் இரவலர்க்கு அளிப்பதால் அவன் செல்வம் குறையும் தன்மையது. செல்வம் குறைந்தால், பகைவருடன் போரிட்டு மீண்டும் பொருள் சேகரித்து, அவன் இரவலர்க்கு அளிப்பவன். ஆகவே, உமணர்களின் செல்வமாகிய குன்றுபோல் குவிந்து கிடக்கும் உப்பும் இத்தானைத் தலைவனின் செல்வமும் ஒரே தன்மையதுதான். அதனால், அவனுடைய செல்வம் இகழ்ச்சிக்கு உரியது அல்ல.

பாடலின் பின்னணி:-

தானைத்தலைவன் ஒருவன் மிகுந்த செல்வம் இல்லாதவனாக இருந்தாலும் தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் களிறுகளையும் தேர்களையும் வழங்கினான். அவனைப் பற்றி வீரர்கள் சிலர் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட புலவர் மாங்குடி கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #311 on: November 25, 2015, 08:04:32 PM »
புறநானூறு, 314. (மனைக்கு விளக்கு!)
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானேதன் இறைவிழு முறினே

அருஞ்சொற்பொருள்:-

வாள் = ஒளி
நுதல் = நெற்றி
முனை = போர்க்களம்
வரம்பு = எல்லை, ஒழுங்கு
பிறங்குதல் = நிறைதல்
உவல் = தழை
பறந்தலை = பாழிடம்
காழ் = விதை
வன்புலம் = புன்செய் நிலம்
மன்னும் – அசைநிலை
நிறை = கட்டு
சிறை = அணை
விழும் = விழுமம் (துன்பம்)

இதன் பொருள்:-

எம் தலைவன், இல்லத்திற்கு விளக்குபோல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன். அவன், போரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய நெடுந்தகை. நடுகற்களும் தழைகளும் நிறைந்த பாழிடங்களும், சிறிய கொட்டைகளையுடைய நெல்லி மரங்கள் உள்ள சிறிய ஊரில் வாழும் குடிமக்களில் அவனும் ஒருவன். தனது அரசனுக்குத் துன்பம் வந்தால், தானே கொடியை உயர்த்திக் கட்டுக்கடங்காது வரும் படையை அணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே.

பாடலின் பின்னணி:-

போரில் பல வெற்றிகளைப் பெற்ற தலைவன் ஒருவனைப் பற்றி அவனுடைய வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஐயூர் முடவனார் இப்பாடலில் தாம் கேட்ட செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #312 on: November 25, 2015, 08:05:36 PM »
புறநானூறு, 315. (இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே

அருஞ்சொற்பொருள்:-

கடவர் = தரக் கடன்பட்டவர்
மடவர் = அறிவு முற்றாத இளைஞர்
செரீஇய= செருகிய
ஞெலிகோல் = தீக்கடை கோல்
கான்றல் = வெளிப்படுத்துதல்
சுனை = நீரூற்று
சுனைஎரி = பற்றி எரியும் தீ

இதன் பொருள்:-

அதியமான் நெடுமான் அஞ்சி மிகுதியாக உண்வு உடையவனாயின் பரிசிலர்க்குக் கொடுத்து எஞ்சியதை உண்ணுபவன். (உணவு குறைவாக இருப்பின் உள்ளதைப் பரிசிலர்க்கு அளித்துத் தான் உண்ணாமலும் இருப்பான்.) தான் யாருக்கெல்லாம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறனோ அவர்களுக்குக் கொடுப்பதைவிட இரவலர்க்கு அதிகமாகக் கொடுப்பான். அறியாச் சிறுவரோடும் மகிழ்ந்து அவர்களுக்குத் துணையாக இருப்பான். அவன் வீட்டு இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோல் போல் தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்; தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டுமிடத்து, தீக்கடை கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைக்களப் புலவராகிய ஒளவையார், இப்பாடலில் அதியமானின் குண நலன்களை எடுத்துரைக்கிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #313 on: November 25, 2015, 08:06:43 PM »
புறநானூறு, 316. (சீறியாழ் பணையம்!)
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன்எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்

சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்து விழுமுறவே

அருஞ்சொற்பொருள்:-

காட்டு = செத்தை, சருகு
மிடைதல் = செறிதல், கலத்தல்
சீத்தல் = தூய்மை ஆக்குதல்
சீயா = தூய்மை செய்யப்படாத
முன்றில் = முற்றம்
செருக்கு = மயக்கம்
அனந்தர் = மயங்கிய நிலை
துஞ்சுதல் = தூங்குதல்
நெருநை = நெருநல் = நேற்று
இரு = பெரிய
புடை = பக்கம்
பணையம் = பந்தயப் பொருள் (பணயம்)
வள்ளி = ஒரு கொடி
மருங்குல் = இடை
வயங்கல் = ஒளி செய்தல்
இழை = அணிகலன்
விழுமுறுதல் = துன்புறுதல்

இதன் பொருள்:-

கள்ளின்=====> மற்றுத்தன்

சிறிய கண்களையுடைய யானையையுடைய பகைவேந்தன் போரில் விழுந்து இறந்தான். அதனால், கள்ளை வாழ்த்தி, செத்தைகள் நிறைந்த , தூய்மை செய்யப்படாத முற்றத்தில் விடியற் காலத்தில் உண்ட கள்ளின் மயக்கத்தால் உறங்குகின்றானே அவன் எம் இறைவன் (அரசன்). நாங்கள் அவனுடைய பாணர்கள். நேற்று, தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணுதற்கு

இரும்புடை=====> விழுமுறவே

தன் பெரிய பழமையன வாளை ஈடு வைத்தான். இது உண்மை என்பதற்காக , நாங்கள் எங்களுடைய கரிய தண்டையுடைய சிறிய யாழைப் பணையமாகக் வைக்கின்றோம். அவன் ஒன்றும் இல்லாதவன் என்று எண்ணாமல், நீயும் கொடிபோன்ற இடையையுடைய உன் பாடினியும் அவனிடம் சென்று அவன் அளிக்கும் விளங்கும் அணிகலன்களை அணிந்து வாய் சிவக்குமாறு விருந்து உண்டு வருக. கள்ளையுடைய கலங்களையுடைய நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் ஒர் அரசன் மற்றொரு அரசனுடன் போரிட்டான். போரில் பகையரசன் இறந்தான். வெற்றிபெற்ற அரசன் விடியற்காலைவரை கள்ளுண்டு மயங்கிக் கிடந்தான். அவனிடம் பரிசில் பெற்றுவரும் பாணர்களின் தலைவன், அவன் வரும்வழியில் வேறு சில பாணர்களைக் கண்டான். அப்பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்களைக் கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #314 on: November 25, 2015, 08:08:32 PM »
புறநானூறு, 317. (யாதுண்டாயினும் கொடுமின்!)
பாடியவர்: வேம்பற்றூர்க் குமரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. ..
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

**(பாடலின் சில பகுதிகள் கிடைக்கப்பெறவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

வென்வேல் = வெற்றி பயக்கும் வேல்
முன்றில் = முற்றம்
களியாளன் = களிப்பேறியவன்
அதள் = தோல்
பாய் = ஓலையால் செய்யப்பட்ட பாய்
வல் = விரைவு
துயில் = தூக்கம்

இதன் பொருள்:-

வெற்றி பயக்கும் வேலோடு வந்து, முற்றத்தில் மிகுந்த களிப்புடன் கிடக்கும் இவனுக்கு, படுப்பதற்குத் தோல், பாய் அல்லது வேறு எது இருந்தாலும் விரைந்து கொடுப்பீர்களாக. இவன் எங்களுக்கும், மற்றவர்களுக்கும், யாவருக்கும் கொடை புரிந்த பின்னர் உறக்கத்தை மேற்கொள்பவன். இவன் வெறுந்தரையில் கிடக்கிறானே!

பாடலின் பின்னணி:-

போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனின் வள்ளல் தன்மையை இப்பாடலில் புலவர் வேம்பற்றுர்க் குமரனார் குறிப்பிடுகிறார். இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

சிறப்புக் குறிப்பு:-

தலைவன் பாணர்களுக்கும், இரவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொருளும் உணவும் பெருமளவில் அளித்து அவர்களை மகிழ்வித்து, அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கும் குணமுடையவன் என்பதையும் அத்தகையவன் முற்றத்தில் வெறுந்தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பாணர் (அல்லது இரவலர்கள்) வருந்துவதையும் இப்பாடலில் காண்கிறோம்.