Author Topic: ~ புறநானூறு ~  (Read 71978 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #60 on: March 17, 2013, 06:49:01 PM »


புறநானூறு, 61.(மலைந்தோரும் பணிந்தோரும்!)
பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
====================================

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து

செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்

எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

கொண்டை = மயிர் முடிச்சு
கூழை = தலை மயிர்
தழை = பச்சிலை
கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள்
நெய்தல் = வெள்ளாம்பல்
கட்கும் = களைந்து எறியும்
மலங்கு = ஒரு வகை மீன்
மிளிர்தல் = ஒளிசெய்தல்
செறு = வயல்
தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி
தடிதல் = அறுத்தல், வெட்டல்
பழனம் = வயல்
வாளை = வாளை மீன்
பரூஉ = பருமை
துணியல் = துண்டு (சதை)
கண்ணுறை = மேலே தூவுவது
விசித்தல் = விம்முதல், வீங்குதல்
மாந்தல் = உண்ணுதல், வருந்துதல்
சூடு = நெற்கதிர்க் கட்டு
வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்)
தெங்கு = தென்னை
விசை = விரைவு
செழுமை = வளமை
கோள் = குலை
பெண்ணை = பனைமரம்
வைகல் = நாள்
யாணர் = புதிய வருவாய்
எஃகு = வேல்
தடக்கை = பெரிய கை
சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி
சிலை = ஒளி
அகலம் = மார்பு
மலைத்தல் = போரிடுதல்
உறுதி = உறப்போவது (நேரப்போவது)
எழு = கணையமரம்
உறழ் = ஒத்தல்
திணி = வலிமை
வழு = தவறு
தாழாது = விரைந்து
திருந்துதல் = ஒழுங்குகாகுதல்.

இதன் பொருள்:-

கொண்டை=====> கண்ணுறை ஆக

கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி,

விலாப்புடை=====> விசைத்தெழுந்து

விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி

செழுங்கோள்=====> யாம்அவன்

பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள்

எழு=====> இலமே

கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.

சிறப்புக் குறிப்பு:-

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே இருக்கும் சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #61 on: March 17, 2013, 06:50:47 PM »


புறநானூறு, 62.(போரும் சீரும்!)
பாடியவர் : சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி.
பாடப்பட்டோன் : சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.
திணை : தும்பை.
துறை: தொகை நிலை.
====================================

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்

பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்

இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!

அருஞ்சொற்பொருள்:-

வரு = வருகின்ற
தார் = தூசிப்படை, படை
அமர் = போர்
மிகல் = வெற்றி
யாவது = எது, எவ்விதம்
ஆண்டு = அங்கு
மைந்தர் = வீரர்
நிறம் = ஒளி
கிளர்தல் = மிகுதல்
அனந்தல் = மந்த ஓசை
பறைச் சீர் = பறைக்குரிய தாளம்
தூங்கல் = ஆடல்
உற்ற = பொருந்திய
செரு = போர்
முனிந்து = வெகுண்டு
மண்டல் = மிகுதல்
துளங்கல் = கலங்கல், அசைதல்
உரை = புகழ்
பைஞ்ஞிலம் = படைத்தொகுதி
தெறு = அச்சம்
பாசடகு = பாசு + அடகு
பாசு = பசுமை
அடகு = கீரைக்கறி
மிசைதல் = உண்ட
நாட்டம் = பார்வை
ஆற்ற = மிக
பொலிதல் = மிகுதல்

இதன் பொருள்:-

வருதார்=====> தூங்க

இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர்.

பருந்து=====> பைஞ்ஞிலம்

இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும்

இடம்கெட=====> ஆங்கமைந் தனரே

இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர்

வாடா=====> நும் புகழே

வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.

சிறப்புக் குறிப்பு:-

இரு வேந்தர்களும் ஒருங்கே இறந்ததைக் கூறுவதால் இப்பாடல் தொகைநிலையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #62 on: March 19, 2013, 06:35:14 PM »


புறநானூறு, 63.(என்னாவது கொல்?)
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
திணை : தும்பை.
துறை: தொகை நிலை.
========================================

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்

தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே

என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

அருஞ்சொற்பொருள்:-

எனை = எவ்வளவு
பல் = பல
துளங்கல் = கலங்கல்
விளைதல் = உண்டாதல்
விறல் = வெற்றி
மாண்ட = பெருமைக்குரிய
புரவி = குதிரை
மறம் = வலிமை
தகை = தகுதி, தன்மை
சான்றோர் = வீரர்
தோல் = கேடயம்
விசித்தல் = இறுகக் கட்டுதல்
பொறுக்கல் = தாங்குதல்
விளிதல் = அழிதல், கெடுதல்
கழனி = வயல்
வள்ளி = கொடி
தொடி = கைவளை
பாசவல்(பாசு + அவல்) பாசு = பசுமை(நல்ல)
முக்கி = உண்டு
யானர் = புதிய வருவாய்
அறா = குறயாத
அறல் = இல்லாமற் போதல் அறா என்பது அறல் என்பதின் எதிர்மறை
வைப்பு = நிலப்பகுதி (ஊர்)
காமர் = அழகு
கிடக்கை = குடியிருப்பு

இதன் பொருள்:-

எனைப்பல்=====> சான்றோர் எல்லாம்

எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன! வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன. தேரில் வந்த வீரர்கள் எல்லாம்

தோல்கண்=====> இனியே

தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர். இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன. சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர்.

என்னா=====> நாடே?

வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான) அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள் அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?

சிறப்புக் குறிப்பு:-

அறவழியில் போர் செய்யும் குணங்களை உடைய வீரர்களைச் “சான்றோர்” என்பது மரபு. தோலில் உள்ள மயிரை நீக்காமல் செய்யபட்ட முரசு “மயிர்க்கண் முரசு” என்று அழைக்கப்பட்டது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #63 on: March 19, 2013, 06:36:45 PM »


புறநானூறு, 64.(புற்கை நீத்து வரலாம்!)
பாடியவர் : நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
======================================

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

அருஞ்சொற்பொருள்:-

ஆகுளி = சிறுபறை
பதலை = மாக்கிணைப்பறை
சுருக்குதல் = கட்டுதல்
தில் - விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல்
கணம் = கூட்டம்
அகன் = அகன்ற
பறந்தலை = போர்க்களம்
கண் = இடம்
எருவை = பருந்து
தடி = ஊன்
மரீஇய = பொருந்திய
கோமான் = அரசன்
புற்கை = கஞ்சி, கூழ்
நீத்தல் = விட்டுவிடுதல்

இதன் பொருள்:-

சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைத் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், வறுமையில் வாடும் விறலி ஒருத்தியைப், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் ஆற்றுப்படுத்துகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #64 on: March 19, 2013, 06:38:19 PM »


புறநானூறு, 65.(நாணமும் பாசமும்!)
பாடியவர் : கழாத்தலையார்.
பாடப்பட்டோன் : சேரமான் பெருஞ்சேரலாதன்.
திணை : பொதுவியல்.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
=======================================

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப

உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்

வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

அருஞ்சொற்பொருள்:-

மண் = முரசுக்குத் தடவப்படும் கருஞ்சாந்து
முழா = முழவு = முரசு
இரு = பெரிய
கண் = இடம்
குழிசி = பானை
இழுது = வெண்ணெய்
சுரும்பு = வண்டு
ஆர்த்தல் = ஒலித்தல்
தேறல் = மது
ஓதை = ஓசை
அகலுள் = தெரு, ஊர், நாடு
சீறூர் = மலை நாட்டுச் சிற்றூர்
உவவு = முழுநிலா
அமையம் = சமயம்
புன்கண் = பொலிவு இழத்தல்
தகை = தகுதி, தன்மை

இதன் பொருள்:-

மண்முழா=====> சீறூர் மறப்ப

முரசு முழங்கவில்லை. யாழ் இசையை மறந்தது. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர். ஊர்ப் புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன

உவவுத்தலை=====> பகலே

முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா

சிறப்புக் குறிப்பு:-

”மண்முழா மறப்ப”, ”பண்யாழ் மறப்ப”, ”குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப” ”சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப”,” உழவர் ஓதை மறப்ப”, ”சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப” என்பவை முறையே, ”முரசு முழங்கவில்லை”, “ யாழ் வாசிக்கப்படவில்லை”, ”தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது”, ”வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை”, ”உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை”, ”சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை” என்பவற்றைக் குறிக்கின்றன.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #65 on: March 19, 2013, 06:39:39 PM »
புறநானூறு, 66.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்
திணை: வாகை
துறை : அரச வாகை

======================================

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே

இதன் பொருள்:-

நளியிரு=====> கடந்தநின் னாற்ற றோன்ற

நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே! மதம் பொருந்திய யானையையுடைய கரிகாற் சோழனே! போருக்குச் சென்று எதிர் நின்று உன் ஆற்றல் தோன்ற வென்றவனே!

வென்றோய்=====> வடக்கிருந் தோனே

தழைத்தலைக் கொண்ட புது வருவாயுடைய வெண்ணியென்னும் ஊர்ப் புறத்துப் போர்க்களத்திற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி உலகத்திற்கு புகழ் மிகப் பெற்று வடக்கிருந்தோன் உன்னைவிட நல்லவனன்றே!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #66 on: March 21, 2013, 10:44:48 AM »


புறநானூறு, 67. (அன்னச் சேவலே!)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.

======================================

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாம் கையறுபு இனையக்

குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்

பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

அருஞ்சொற்பொருள்:-

ஆடு = கொல்லுதல், வெற்றி
அடுபோர் = வெல்லும் போர்
தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்
ஓள் = ஒளி
கோடு = பக்கம்
முகிழ் = குவியும்
மையல் = மயக்கம்
கையறுதல் = செயலற்றிருத்தல்
இனைதல் = வருந்தல்
மாந்துதல் = உண்ணுதல்
கோழி = உறையூர்
குறும்பறை = பேடை (பெண் பறவை)
அசைதல் = தங்குதல்
விடுதல் = நிறுத்துதல்
கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்)
இரு = பெரிய
அடியுறை = அடியேன்
பேடை = பெட்டை

இதன் பொருள்:-

அன்னச் சேவல்=====> இனைய

அன்னச் சேவலே! போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் நல்லோனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுநிலா ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் காலத்தில், நான் செய்வதறியாது வருந்துகிறேன்

குமரிஅம்=====> புக்கு எம்

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து

பெருங்கோ=====> நினக்கே

கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான். (நட்பின் செறிவால் கூறியது இது.)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #67 on: March 26, 2013, 05:45:38 PM »


புறநானூறு, 68. (பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து

மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்

உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

அருஞ்சொற்பொருள்:-

என்பு = எலும்பு
மருங்கு = பக்கம் (விலா)
கடும்பு = சுற்றம்
சில் = சில
பூண் = அணிகலன்
அம் = அழகிய
பகடு = பெரிய, பெருமை
எழில் = அழகு, இளமை
பொறி = புள்ளி
ஆகம் = மார்பு
பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்
பீடு = பெருமை
புனிறு = ஈன்ற அணிமை
இலிற்றுதல் = சுரத்தல்
மலிதல் = மிகுதல்
மன்பதை = மக்கட் கூட்டம்
புரத்தல் = காத்தல்
திறம் = பகுதி
தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை
கடுங்கள் = முதிர்ந்த கள்
உகுத்தல் = சிதறுதல்
வறுமை = வெறுமை
வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை
வரைப்பு = எல்லை
ஓர்த்தல் = கேட்டல்
குருசில் = குரிசில் = அரசன்

இதன் பொருள்:-

உடும்புஉரித்து=====> ஆகத்து

பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில்

மென்மையின்=====> பொருநன்

சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன்

உட்பகை=====> உகுத்த

தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர்

நறுஞ்சேறு=====> செலினே

கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #68 on: March 26, 2013, 05:47:35 PM »


புறநானூறு, 69. (பொற்றாமரை பெறுவாய்!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

கையது கடன்நிறை யாழே; மெய்யது
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்

பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்

புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்
ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்

கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீஅவற் கண்ட பின்றைப் பூவின்

ஆடும்வண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

அருஞ்சொற்பொருள்:-

கடன் = முறை
அரை = இடுப்பு
வேர் = வேர்வை
சிதாஅர் = சிதார் = கந்தை
ஓம்பி = பாதுகாத்து
உயவல் = வருத்தம்
பூட்கை = எழுச்சி, கொள்கை
புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற)
ஒக்கல் = சுற்றம்
பையென = மெல்ல
கோட்டுமா = யானை
தொலைச்சி = கொன்று
கலாம் = போர்
பிறங்கல் = உயற்சி
படர்தல் = செல்லுதல்
தகை = பெருமை, மேம்பாடு
உரு = நிறம்
புரை = ஒப்பு
பூண் = அணிகலன்
வீசுதல் = வரையாது கொடுத்தல்
இமிர்தல் = மொய்த்தல்

இதன் பொருள்:-

கையது=====> யாக்கை போலப்

பாணனே! கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப்

பெரும்புல்=====> தொலைச்சிப்

பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள். கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று

புலாக்களம்=====> பசும்பூண்

புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன்.

கிள்ளி வளவ=====> இலையே

அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானால், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #69 on: March 29, 2013, 08:53:51 PM »


புறநானூறு, 70. (குளிர்நீரும் குறையாத சோறும்)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!

தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்

செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:-

தேம் = தேன்
தீ = இனிமை
தொடை = யாழின் நரம்பு
கயம் = குளம்
காழ் = வலிய கம்பி
தெண் = தெளிந்த
ஆனாமை = நீங்காமை
முதுவாய் = முதிய வாய்மையுடைய
கூழ் = உணவு
வியல் = அகலம்
ஆம்பல் = அல்லி
ஞாங்கர் = மேலே
பாதிரி = ஒரு மரம்
ஓதி = பெண்களின் கூந்தல்
இயலுதல் = நடத்தல்
ஓய்தல் = அழிந்து ஒழிதல் (வெட்டுதல்)
தலைப்பாடு = தற்செயல் நிகழ்ச்சி

இதன் பொருள்:-

தேஎம்=====> இரவல

தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி “இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!

தைத் திங்கள்=====> நல்லிசை யுள்ளி

கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன். அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில்

நாற்ற=====> அவன் தாளே

நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில், வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான். பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால், நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #70 on: April 04, 2013, 10:40:30 PM »


புறநானூறு, 71. (இவளையும் பிரிவேன்)
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன்.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
======================================

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த

பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்

பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த

இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

அருஞ்சொற்பொருள்:-

மடங்கல் = சிங்கம்
மடங்குதல் = மீளுதல், வளைதல், செயலறுதல்
உடங்கு இயைந்து = ஒன்று கூடி
ஆர் = நிறைவு
அமர் = போர்
அமர்தல் = அமைதல், பொருந்துதல்
மெலிகோல் = கொடுங்கோல்
திறன் = தகுதி
களி = செருக்கு, மகிழ்ச்சி
மன்பதை = மக்கட் பரப்பு
வன்புலம் = வளமற்ற நிலம்

இதன் பொருள்:-

மடங்கலின்=====> சிறந்த

சிங்கத்தைப்போலச் சீறிவரும் சினத்தையும், உறுதியான உள்ளத்தையும், வலிமைமிக்க படையையுமுடைய வேந்தர் ஒன்று கூடி என்னோடு போரிடுவேமென்று கூறுகிறார்கள். நான் அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அவர்கள் அலறுமாறு போரிட்டு, அவர்களை அவர்களுடைய தேருடன் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்யேனாயின், சிறந்த

பேரமர்=====> வைப்பின்

பெரிய மையணிந்த கண்களையுடைய இவளிடமிருந்து (என்னுடைய மனைவியிடமிருந்து) நீங்குவேனாக. அறநிலை மாறாத அன்போடு கூடிய என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை இருத்திக் கொடுங்கோல் புரியச் செய்தேனாக. மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில்

பொய்யா=====> கலந்த

பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக்

இன்களி=====> பிறக்கே

களிக்கும் இனிய செருக்குடைய மகிழ்ச்சியை இழந்தவனாவேனாக. நான், மறு பிறவியில் மக்களைப் பாதுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாக.

சிறப்புக் குறிப்பு:-

மனைவியைப் பிரியாமலிருப்பது, கொடுங்கோலன் என்று மக்களால் கருதப்படாமலிருப்பது, நண்பர்களின் நட்பு, மற்றும் பாண்டிய நாட்டை ஆளும் வாய்ப்பு ஆகிய இவையெல்லாவற்றையும் பூதப்பாண்டியன் மிகவும் மேன்மையானயவையாகவும் விருமபத்தக்கவையாகவும் கருதினான் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #71 on: April 04, 2013, 10:44:18 PM »
புறநானூறு, 72. (இனியோனின் வஞ்சினம்!)
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
======================================

நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,

கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:-

மீக்கூறல் = புகழ்தல்
உளைதல் = மிக வருந்துதல்
படு = பெரிய
இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்
பா = பரவுதல்
பணை = பருமை
உறு = மிக்க
துப்பு = வலிமை
செருக்குதல் = அகங்கரித்தல்
சமம் = போர்
அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல்
செல்நழல் = சென்றடையும் நிழல்
வரைதல் = நீக்கல்
புன்கண் = துயரம்
கூர்தல் = மிகுதல்

இதன் பொருள்:-

நகுதக் கனரே=====> யாம் என்று

“இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி

உறுதுப்பு=====> காணாது

எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல்

கொடியன்எம்=====> உறவே

“ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

பாடலின் பின்னணி:-

தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான். இவனது வரலாறு முன்பே நமது பக்கத்தில் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணைப்பு :-

சிறப்புக் குறிப்பு:-

முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தை “ சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை” என்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #72 on: April 10, 2013, 08:03:31 PM »


புறநானூறு, 73. ( உயிரும் தருகுவன்!)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
====================================

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்


உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

அருஞ்சொற்பொருள்:-

சீர் = புகழ், பெருமை
தாயம் = உரிமைச் சொத்து
தஞ்சம் = எளிமை
சிதடன் = குருடன்
மைந்து = வலிமை
வன்திணி = வலிய திண்ணிய
இரு = கரிய
ஒல்லா = பொருந்தாத
முயக்கு = தழுவல், புணர்தல்
குழைக = துவள்க, வாடுக

இதன் பொருள்:-

மெல்ல வந்து என் காலில் விழுந்து “கொடு” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

பாடலின் பின்னணி:-

சோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான். “நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்? என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்; என் உயிரையும் தருவேன். ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன்” என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

விலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்; பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #73 on: April 10, 2013, 08:05:46 PM »


புறநானூறு, 74. (வேந்தனின் உள்ளம்)
பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி .
====================================

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள்:-

குழவி = குழந்தை
தடி = தசை
தொடர்ப்பாடு = பற்று
தொடர் = சங்கிலி
ஞமலி = நாய்
இடர்ப்பாடு = இடையூறு
இரீஇய = இருக்க
கேளல் கேளிர் = பகைவர், அயலார்
வேளாண் = கொடை (உபகாரம்)
சிறுபதம் = தண்ணீர் உணவு
மதுகை = வலிமை (மனவலிமை)
அளவை = அளவு
ஈனுதல் = பெறுதல்

இதன் பொருள்:-

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

பாடலின் பின்னணி:-

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர். இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218342
  • Total likes: 23048
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #74 on: April 10, 2013, 08:11:23 PM »


புறநானூறு, 75. (அரச பாரம்!)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி.
===============================

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!

மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே; மையற்று

விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

அருஞ்சொற்பொருள்:-

கூற்றம் = இயமன், நாட்டின் பகுதி
உய்த்தல் = கொண்டுபோதல், அனுபவித்தல்
பால் = உரிமை
பழவிறல் = பழைய வெற்றி
தாயம் = உரிமைச் சொத்து
புரவு = இறை
கூர் = மிகுதி
மண்டுதல் = நெருங்குதல், அதிகமாதல், உக்கிரமாதல்
பரித்தல் = காத்தல், தாங்குதல்
மதன் = வலி, மாட்சிமை, செருக்கு (மனவெழுச்சி)
நோன்மை = வலிமை
தாள் = முயற்சி
விழுமியோன் = சிறந்தவன்
அறுதல் = இல்லாமற்போதல்
கயம் = குளம்
கிடை = நெட்டி
என்றூழ் = கதிரவன், கோடை, வெயில்
வறல் = சுள்ளி
நொய்மை = மென்மை, மிருது, எளிமை
மை = கறை, இருள், குற்றம்

இதன் பொருள்:-

மூத்தோர்=====> மன்னே

மூத்தோர் மூத்தோர்க்குரிய இடத்தை அடைந்ததால் (இறந்ததால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகளாலுண்டாகிய அரசுரிமயைப் பெற்றதால் பெரிய சிறப்பை அடைந்ததாக எண்ணித் தன் குடிமக்களிடம் (அதிகமாக) வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோன் செயல் சிறந்ததல்ல.

மண்டுஅமர்=====> திருவே

குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அரசாட்சி, துணிந்து போரிடும் மனவெழுச்சியும் வலிய முயற்சியும் உடையவன் பெற்றால், ஆட்சி செய்வது ஆழத்தில் நீர் வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டி போல் மிகவும் சுமையற்றதாகும்.

சிறப்புக் குறிப்பு:-

தகுதியற்றவன் ஆட்சிக்கு வந்து மக்களிடம் அதிகமாக வரி கேட்டு அவர்களைத் துன்புறுத்தி ஆட்சி செய்வது அரசனுக்கு மட்டுமல்லாமல் குடிமக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கும். ஆனால், தகுதி உடையவன் ஆட்சிக்கு வந்தால், அவ்வாட்சி அவனுக்கும் அவன் குடிமக்களுக்கும் சுமை இல்லாததாக இருக்கும் என்பது இப்பாடலின் கருத்து.

"வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு" - (குறள் - 552)

அரசன் அதிகமாக வரி கேட்டு மக்களைத் துன்புறுத்துவது வேலொடு வந்து ஒருவன் கொள்ளை அடிப்பது போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.