நவீன சுயம்வரம்
அங்கேயும் நீ தான்
நாணப்பட்டு தலைகுனிந்து நிற்கிறாய்
காட்சிப் பொருளாக
சகோதரி
உன் திருமணத்தை நீயே
தீர்மானம் செய்
அப்போது தான்
உன் கழுத்தை நெறிக்கும்
பழமைச் சங்கிலிகள்
பொடிப்பொடியாய் நொறுங்கும்
உன் ஆத்மாவின்
அழகிய கனவுகளை
சிந்தும் கண்ணீரில் கரைய வீட்டால்
கடைசியில்
கட்டிக் கொண்டிருக்கும்
புடவையை உனக்கு
புதை குழியாக மாறிவிடும்
இந்த சமூகம் உன்னை
சிறைவைக்கவே திட்டம் தீட்டும்
நீ கண்ணை மூடி
பிராத்தனை செய்தாலும்
செத்து விட்டதாய் கூறி
சவப்பெட்டி தயாரித்து விடும்
சகோதரி
விழிப்பாய் இரு
உன்னை சீதை என்று சொன்னால்
மயங்கி விடாதே
பிறகு
அசோகவனத்தில் உனக்கு சிறை வைத்துவிடும்
இந்தச் சமூகம்
ஆடவன் தயை வேண்டி
அவன் முன்னே
அடிமையாய் நிற்கும் வரை
உன் வாழ்க்கையை சுற்றி
நீயே நச்சு வலை
பின்னிக் கொள்கிறாய்
நீ பூ தான்
உனக்குள்ளே முள்ளும் புதைந்திருப்பதை
பிறர் முன்னே பிரகடனம் செய்
வாழ்க்கைப் போருக்கு
உன் படிப்பு பயன்படாது போனால்
கல்லூரி படிப்பு என்பது
கால விரயமே
உன்
கல்யாண பந்தம்
கரன்சி நோட்டுக்களால்
நிச்சயம் ஆவதை இழிவாக நினை
அது
நேசக்கரங்களாலே நிர்மாணமாகட்டும்
"பெண்மை என்பது
அடிமையாய் கிடைப்பதே"
இது கவைக்குதவா பழமை வாதம்
காலில் போட்டு மிதி
கூட்டத்திலா உன்
துணைவனைத் தேடுகிறாய்
அதை விட்டு
முதலில் ஒரு மனிதனைத் தேடு