நீ நடந்து செல்லும் பாதையதை
நான் தொடர்ந்து செல்ல
வழி காட்டுகிறது
உன் பாதச் சுவடுகள்………………..
நீ கடக்கும் பாதையில்
கிடக்கும் கற்குருணிகள்
உன் பாதமதைக் கிழித்த போதிலும்,
நீ சொரியும் இரத்த வெள்ளத்தில்
நீர் பாய்ச்சி - அமைத்த
புல்வெளி மீது புன்னகையோடு
நான் நடந்திடுவேன்……………….
நீ கரம்பிடித்து முகம் மலர்கையில்
நான் தலை நிமிர்ந்து
நாயகன் என்றேன்………………………..
தரை பார்த்து தவழ்ந்த கைகளை
நீ தலை மீதேற்றி
சுமந்து செல்கையில்
வானையும் தொட்டு விடுகிறேன்………………
நீ தடுமாறும் பாதை
மேடு பள்ளம் ஆயினும் ………………
உன் காலடித் தடம் மாறா நடையில்
தொடரும் எனது பயணமும்………………..
நீ படும் துயரமதன் நிலையை
பொறுத்த போதிலும்
துணிச்சல் கொடுத்து
எனை ஆள்கிறாய்………………….
மீசை முளைக்கும் தருணத்தில்
என் குரலின் ஓசை
ஓங்கி எழும் பொழுது
மௌனமாய் ஓய்ந்து
போகிறாய்…………………..
நீ மௌனிக்கும்
நொடிகள் அனைத்தும்
நான் திசை மாறும்
தருணமாயின்……………………..
நிழலாய் எழுந்து
எனது நிலை அறிந்து
திசை மாற்றி எனை
நீயும் வெல்வாய்.........................
தந்தையெனும் உன்
மந்திரத்தின் தந்திரத்தின்
துணையோடு பயணித்திடுவேன்
அடுத்த தலைமுறை
உன் பாதையைத்தொடர்ந்திட……………