பின்மாலை பொழுதில் ஓர் தார்சாலை மீது
கைகோர்த்து நிற்கிறது நமது காதல்
காத்திருப்புகளும் சந்திப்புகளும் பழகிப் போன
அந்த கைகளின் கதகதப்புகளும்
நிகழத் துடிக்கும் கனவுகளை
எதிர்பார்த்து நிற்கிறது.
நமக்குள் சில கேள்விகள் இருக்கின்றன
சில சந்தேகங்கள் இருக்கின்றன
குற்றசாட்டுகளும், சமாளிப்புகளும்
அதிகமாகவே இருக்கின்றன
இத்தனைக்கும் மேலாக நமது
காதலும் நிறைவாகவே இருக்கின்றது.
என் வெற்றிடங்களை நீயும்
உன் வெற்றிடங்களை நானுமே நிரப்பினும்
காலங்கள் புதிதாக தோன்றுகிறன
கனவுகளும் புதிதாக தெரிகிறன
சொற்களற்று நிற்கும்பொழுது
நம் கண்கள் பேசிக்கொள்கின்றன
பேசி பேசி தீராத பொழுதுகளில்,
முற்றுப் புள்ளி இட்டு....மீண்டும் சில
புள்ளிகளால் கோலமிட்டு
தொடர்கிறது நம் காதல்.
கண்களால் பேசவும், காதுகளால் காணவும் கற்றுக்கொடுத்திருக்கிறது காதல்.
பழக்கங்களை மாற்றி
நினைவுகளை பரிசளித்திருக்கிறது காதல்.
பார்க்கும்பொழுதுகளில் வேகமாய் ஓடுவதாய்
கடிகார முட்களை கடிந்து கொள்கிறோம்
பார்க்காதபொழுதுகளில் மெதுவாய் நகர்வதாய்
மலைத்துக் கொள்கிறோம்
மீண்டும் சந்திக்கும் நாளினை தேடி
நாட்காட்டியின் பக்கங்களை நகர்த்தி பார்க்கிறது
கைகோர்ப்புகளின் கதகதப்புகள்
அத்தனை தொலைவுகள் தாண்டி
காதலுடன் காத்திருக்கிறோம்,
தூரத்தில் பார்வைகள் சந்தித்துக்கொள்ளும்போது
பந்தை கண்ட நாய்குட்டியை போல
உற்சாகம் கொண்டு
கால்களை முந்திக்கொண்டு
மனம் துள்ளி குதித்து ஓடுகின்றது
மீண்டுமொரு முறை கைகளை கோர்த்துக் கொள்கிறோம்,
கனவுகளை பேசிக்கொள்கிறோம்,
எப்பொழுதும்போல கடிகாரத்தின் முட்கள்
நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது
நாம் மட்டும் இந்த சாலையில் உறைந்து நிற்கின்றோம்.
காதல் என்னும் ஒருவழிப் பாதையில்
நாம் இருமனப் பயணம் கொள்கிறோம்
திரும்பி செல்லும் வழியினை தேடாமல் வந்துவிடு
நாம் இங்கேயே தொலைந்து போய்
என்றென்றும் காதலில் திளைத்திருப்போம்