பாடல்-6
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.b]
பொருள்
அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் சொல்லுகின்ற கடுஞ் சொல்லும் துன்பமாம்
வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர் போரின்கண் சோம்பி இருத்தல் துன்பமாம்.
வறுமை உடையாரது ஈகைத் தன்மை,துன்பமாம்.
கொடுமையுடையாரது வாய்ச்சொல் துன்பமாம்.
------------------------------------------------------------------------------------------------------
பாடல்-7
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை.
பொருள்
வலியில்லாதவன் கையிற்பிடித்த படைக்கலம் துன்பமாம்.
மணமில்லாத மலரின் அழகு துன்பமாம்.
தெளிவு இல்லாதவன், துணிவு துன்பமாம்.
அவ்வாறே சொல்லின் கூறுபாட்டினை அறியாதவனது சொல் துன்பமாம்.
-----------------------------------------------------------------------------------------------------
பாடல்-8
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.
பொருள்
ஞாயிறுபோலும் மனமுடையார் பண்பில்லாதிருத்தல்துன்பமாம்.
நகுதலையுடைய, நட்பாளர் அன்பில்லா திருத்தல் துன்பமாம்
போரின்கண் ஏற்றெழுந்தவர் புறங்காட்டியோடுதல் துன்பமாம்.
நீதியில்லாத, நெஞ்சினையுடையாரது; நட்பு துன்பமாம்
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்-9
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு.
பொருள்
கள் இல்லாத பழைமையாகிய ஊர் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவுந் துன்பமாம்.
வள்ளல்கள் இல்லா திருத்தல் இரவலர்க்கு மிகவுந் துன்பமாம்.
ஈகைக்குண மில்லாதவர்களுடைய, அழகு துன்பமாம்.
அவ்வாறே கலனையில்லாத குதிரை தாங்குதல் துன்பமாம்.
---------------------------------------------------------------------------------------------------------
பாடல்-10
பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு..
பொருள்
பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுளியற்றிக் கூ.றுதல் துன்பமாம்.
இருள் மிகுந்த சிறிய வழியிலேதனியாகப் போகுதல் துன்பமாம்
அருள் இல்லார் தண்ணளியில்லாதவரிடத்தில் இரப்போர் செல்லுதல் துன்பமாம்
பொருளில்லாதவர் ஈதலை விரும்புதல் துன்பமாம்