Author Topic: அறநெறிச்சாரம்  (Read 12207 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #15 on: September 18, 2011, 06:33:33 PM »
   

71. கற்றவர்க்குரிய நெறி


தேசுந் திறனறிந்த திட்பமும் தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை-ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றா ரினத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி.



(பதவுரை) தேசும்-கீர்த்தியும், திறன் அறிந்த திட்பமும்-நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து-மெய்ப்பொருளை ஆராய்ந்தறிந்து, மனத்தகத்து மாசு இல்லாமை-மனத்திடைக் குற்றமில்லாமல், ஆசு இன்றிக் கற்றல்-மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், கடன் அறிதல்-தனது கடமையை அறிதலும், கற்றா ரினத்தராய் நிற்றல்-கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி-எல்லையினையுடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.

(குறிப்பு) இல்லாமை: எதிர்மறை வினையெச்சம்.  வரைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.  ஏ: அசைநிலை.  (71)
 
      -----------------------------------------------------------------------------------------------
     

72. மக்கட்குக் கல்வியின் இன்றியமையாமை


எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பிற் பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,


(பதவுரை) எப்பிறப்பாயினும்-வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட்பிறப்பின்-மக்கட் பிறப்பினைப் போல, ஒருவற்கு-ஒருவனுக்கு, ஏமாப்பு-இன்பம் செய்வது, பிறிது இல்லை, - வேறு ஒன்று இல்லை, அப்பிறப்பில்-அம் மக்கட் பிறப்பில், கற்றலும்-கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவை கேட்டலும்-கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்டதன்கண் நிற்றலும்-கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும், கூடப்பெறின்-கூடப் பெற்றால்.

(குறிப்பு) “பெறின்பிறிதில்லை” என முடிக்க. பெறின்: எதிர்கால வினையெச்சம்.  கேட்ட+அதன்கண்=கேட்டதன்கண்: அகரந் தொகுத்தல் விகாரம்.           (72)
 
    ---------------------------------------------------------------------------------------------------------
     

73. கல்விக்கழகு கரவின்றி வாழல்


கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத்-தெற்றென
நெஞ்சத்துட் டீமையெழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று
.


(பதவுரை) கற்றது கற்று ஒருபால் நிற்பவும்-கற்கவேண்டிய நூல்களைக் கற்றதனாலாய அறிவு ஒழுக்கத்திற் கலவாது ஒருபுறம் நிற்கவும், கடைப்பிடி மற்றொருபால் போகவும்-எடுத்தகருமத்தை முடிக்கும் துணிவும் அந்நூற் றுணிபுகளிற் றிறம்பிமற்றொருபுறஞ் செல்லவும், மறித்திட்டு-நல்வழிச் செலவைத் தடுத்து, நெஞ்சத்துள்-மனத்தின்கண்ணே, தெற்றென-கடுக, தீமைஎழுதருமேல்-தீய எண்ணந் தோன்றுமாயின், கஞ்சத்துள்-தின்னப் புகுந்த அப்ப வருக்கத்துள், கல் பட்டால் போன்று-பொருந்திய கல்லே போல, இன்னாது-அது மிகத் துன்பந் தருவதாகும்.


(குறிப்பு) கரவு-தீய எண்ணம். எழுதரல்-எழுதல;் தரு: துணைவினை, கஞ்சத்துள்-அழகியதாய் மலர்ந்துள்ள தாமரைப் பூவினிடத்தே எனலுமாம். (73)
 
     
    --------------------------------------------------------------------------------------------------

74. கற்றவர் செய்யுந் தவற்றினைப் பலரும் காண்பர்


விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு.



(பதவுரை) விதிப்பட்ட நூல் உணர்ந்து-ஒழுக்க நூல்களை உணர்ந்து, வேற்றுமை நீக்கி-அவைகளுக் குடன்பாடாகாதனவற்றைச் செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை-ஞான நூல்களை, கை இகந்து-எல்லையில்லாமல், ஆக்கி-உலகோர் பொருட்டுச் செய்து, பதிப்பட்டு வாழ்வார்-இறைவனையடைய விரும்பி வாழ்கின்றவர், பழியாய செயதல்-பிறர் பழித்தற் கேதுவான செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில் பட்ட மறு-சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே யாகும்.


(குறிப்பு) வேற்றுமை-மதவேறுபாடு முதலியன எனலுமாம்.  பதிப்பட்டு-மனவமைதியுற்று எனலுமாம். வாழ்வார் வினையாலணையும் பெயர்.  (74)
 
      -------------------------------------------------------------------------------------------------
     

75. கற்றறிமூடரைக் கண்டு விலகுக


பற்றொடு செற்றம் பயமின்றிப் பலபொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன-கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவி னாரை
அடையா ரறிவுடை யார்.



(பதவுரை) பற்றொடு செற்றம்பயமின்றி-ஆசையும்பகையும் அச்சமும் இல்லாமல், பல்பொருளும்-பல பொருள்களினியல்பும், முற்ற உணர்ந்தான் மொழிந்தன-விடாது அறிந்த அருகக்கடவுள் கூறியவற்றை, கற்றும்-படித்தும், கடையாய-பழிக்கப்படுவனவற்றை, செய்தொழுகும்-செய்தொழுகின்ற, காரறிவினாரை-அறிவில்லாதவர்களை, அறிவுடையார் அடையார்-அறிவுடை யவர்களைடையார்கள்.

(குறிப்பு) முற்ற உணர்ந்தான்-முழுவது முணர்ந்த இறைவன் எனலுமாம்.  உணர்ந்தான், மொழிந்தன: வினையாலணையும் பெயர்கள்.  கருமை+ அறிவு= காரறிவு, கரிய அறிவு, அறிவின்மை    (75)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #16 on: September 18, 2011, 06:40:42 PM »

76. கல்வி முதலியன செல்வங்கட்குக் காரணமாம்


நல்வினைப்பி னல்லால் நறுந்தா மரையாளும்
செல்லாள் சிறந்தார்பி னுயினும்-நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொழுது மில்.



(பதவுரை) சிறந்தார் பின் ஆயினும்-தன்னை நேசிப்பவர்களிடத்திலாயினும், நல்வினைப் பின் அல்லால்-நல்வினை காரணமாக அதன்பின் செல்வாளே யல்லாமல், நறும் தாமரையாளும்-நல்ல தாமரை மலரில் வாசஞ்செய்கின்ற திருமகளும், செல்லாள்-செல்லாள், நல்லவினை-அந்நல்வினை, ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி-கல்வி ஒழுக்கம் தானம் இம்மூன்றும் உள்ளவிடத்து, ஒருபொழுதும் நீத்தல் இல்-எக்காலத்தும் நீங்குதல் இல்லை.

(குறிப்பு) நறுந்தாமரை-அழகின் நலமிக்க செந்தாமரை,  ஓத்து-ஓதப்படும் கல்வி, காரணப்பெயர்.  வழி ஏழனுருபு.  தானம்-பிறர்க்குதவி செய்தலாகிய தருமம்.          (76)
 
     
    --------------------------------------------------------------------------------------------------------
 

77. தன்னை உயர்த்துங் கருவி தானே யாவன்


தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான்.



(பதவுரை) நெறி நிற்பில்-ஒருவன் நன்னெறிக்கண் நிற்பானாயின், தன்னின் தெய்வம் பிறிதில்லை-அவனின் வேறான தெய்வம் ஒன்று இல்லை, தான் ஒன்றானும் நெறிநில்லானேல்-அவன் ஒருவிதத்திலும் நன்னெறிக்கண் நில்லானாயின், அவனிற்றாழ்ந்தது வேறொன்றில்லை, தன்னை இறைவனாச் செய்வானும் தானே-தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் தானே, தன்னைச் சிறுவனாச் செய்வானும் தான்-தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்துகொள்பவனும் தானே யாவன்.

(குறிப்பு) தானே-ஏ: பிரிநிலைப் பொருள்.  “நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம்.     (77)
 

     
     --------------------------------------------------------------------------------------------------

78. தீவினையை ஒழித்து நல்வினையை நாடுவாயாக


அஞ்சினா யேனு மடைவ தடையுங்காண்
துஞ்சினா யென்று வினைவிடா-நெஞ்சே
அழுதா யெனக்கருதிக் கூற்றொழியா தாற்றத்
தொழுதேன் நிறையுடையை யாகு.



(பதவுரை) நெஞ்சே அஞ்சினாயேனும்-மனமே! துன்பத்தைக் கண்டு அச்சமுற்றாயானாலும், அடைவது அடையும் காண்-வரும் துன்பம் வந்தே சேரும், துஞ்சினாய் என்று வினை விடா-தீவினைப் பயனைப் பொறாமல் இறந்தாயென்று கருதிச் செய்த வினைகள் மறுபிறப்பில் உன்னைத் தொடராமலிரா, அழுதாயெனக் கருதி-இறப்புக் கஞ்சி அழுதாய் என்று கருதி, கூற்று ஒழியாது-வந்த யமன் உயிரைக்  கவராது நீங்கான்: (ஆதலால்), ஆற்றத் தொழுதேன்-உன்னை மிக வணங்குகின்றேன், நிறை உடையை ஆகு-நிறையுடையை ஆகுவாயாக.

(குறிப்பு) நிறை-மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள், ஆகு: ஏவலொருமை வினைமுற்று. (78)
 
     
    ----------------------------------------------------------------------------------------------------

79. தற்புகழ்ச்சியினை யொழிப்பாயாக


பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலாகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
.


(பதவுரை) அலர் கதிர் ஞாயிற்றை-பரந்தகதிர்களையுடைய சூரியனை, கைக் குடையும் காக்கும்-கையிலுள்ள சிறிய குடையும் மறைக்கும்; (ஆதலால்) யாம் பல கற்றோம் என்று-யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் என்று, தற்புகழ வேண்டா-ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளலாகாது, பல கற்றார்க்கு-பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும், அச்சு ஆணி அன்னது ஓர் சொல்-அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல், சில கற்றார் கண்ணும் உளவாம்-சில நூல்களைப் பயின்றாரிடத்து உளவாதலும் உண்டு.


(குறிப்பு) கைக்குடையும், சிலகற்றார் கண்ணும்: உம்மைகள் இழிவு சிறப்புப் பொருளை அச்சு ஆணி-தேர்ச் சக்கரத்தின் இருசில் கோக்கும் ஒருவகை இருப்பாணி; அது சக்கரத்தினைக் கழன்றோடவிடாமல் காக்கவல்லது.   (79)
 
      ------------------------------------------------------------------------------------------------
     
80.   பொறுமையினை மேற்கொள்ளு முறை


தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப்
பின்னை யுரையாப் பெருமையான்-முன்னை
வினைப்பயனு மாயிற்றா மென்றதன்கண் மெய்ம்மை
நினைத்தொழிய நெஞ்சினோ யில்.

 
(பதவுரை)  ஒருவன் தன்னை இகழ்ந்து உரைப்பின்-ஒருவன் தன்னை இகழ்ந்து கூறினால், பின்னை-பின்னர், தான்-தானும், அவனை உரையாப் பெருமையான்-அவனை இகழ்ந்து கூறாத பெருமையை உடையோன், முன்னை வினைப்பயனும் ஆயிற்றாம் என்று-முற்பிறப்பில் தான் செய்த தீவினைப்பயனும் இதனால் முடிந்தது என்று, அதன்கண் மெய்ம்மை நினைத்து ஒழிய-அதன் உண்மையை நினைத்து அதனைக் கருதாதொழிய, நெஞ்சில் நோய் இல்-அவன் மனத்தின் கண்ணும் துன்பம் இலவாம்.

(குறிப்பு) உரையா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  நோய்-வருத்தம்; துன்பம்.  “நெஞ்சினும்” எனற்பாலது தொகுத்தல் பெற்று, ‘நெஞ்சின்’ என நின்றது.  (80)
 

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #17 on: September 18, 2011, 06:45:30 PM »
   
81.    பொறுமையே சிறந்த தவமாகும்


எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும்-மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று* வேண்டா தவம்.

 
(பதவுரை)  பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல்-தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல்.  கொள்ளி வைத்தாற் போல்-நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும்-தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால்-அறிவாகிய நீரால், மெள்ள-அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின்-அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும்-வேறு தவம் ஒன்றும், வேண்டா-செய்ய வேண்டுவதில்லை.

(குறிப்பு) கொள்ளி-எரிகின்ற கொள்ளிக்கட்டை, இன்னாச் சொல்-வசை மொழி; துன்பம் விளைத்தலின் அங்ஙனம் கூறப்பட்டுள்ளது.  மெள்ள: குறிப்புவினையெச்சம்.   (81)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
82.  கடுஞ்சொல் களைகணையும் ஒழிக்கும்


நம்மைப் பிறர்சொல்லும் சொல்லிவை நாம்பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவையென் றெண்ணி
உரைகள் பரியர் துரைப்பாரில் யாரே
களைகண தில்லா தவர்.

 
*பிறிதெனினும்
 
(பதவுரை)  நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை-நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டுமென்று நாம் கருதும் சொற்கள் இவை, நாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை-நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவை, என்று எண்ணி-என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில்-தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொற் கூறுவராயின் அவரைப்போல், யாரே களைகணது இல்லாதவர்-பற்றுக் கோடற்றவர் பிறர் யார்? ஒருவருமிலர்.

(குறிப்பு) களைகண்-ஆதரவு: பற்றுக்கோடு இல்: ஐந்தனுருபு: ஒப்புப்பொருள்.  ஏ: எதிர்றை வினாவிடைச் சொல்.  அது: சாரியை.  (82)
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
     
83.  முற்பகல் செய்வன பிற்பகல் விளையும்


பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத்-தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்து முளவோ பிற.

 
(பதவுரை)  பிறர்க்கு இன்னா செய்தலின்-மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும், பேதைமை இல்லை-அறியாமை வேறு ஒன்று இல்லை, பிறர்க்கு இன்னாது என்று பேரிட்டு-மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னாவித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலின்-தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ-பிற அறியாமைதான் வேறு உண்டோ? நீயே கூறு.

(குறிப்பு) இன்: இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருள்.  “வேலிக்கிடு முள் காலுக்காம்” என்பது பழமொழி.  ஓ: எதிர்மறை வினாவிடைச் சொல்.   (83)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
84.  புறங்கூறலின் இழிவு


முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை

 
(பதவுரை)  தேவர் விழித்து இமையார் நின்ற நிலை-தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன்னின்று-ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக-கல்லும் உருகுமாறு முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து-முகமலர்ந்து வாயால் இன்சொற்கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று-அவள் அகன்ற பின்னர், இழித்துரைக்கும்-அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே-கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும்.

(குறிப்பு) அஞ்சியே: ஏகாரம் தேற்றப்பொருள் கொண்டுள்ளது.  தேவர்கள் இயல்பிலே இமையாமல் நின்ற நிலையினை இங்ஙனத் தொடர்புபடுத்திக் கூறியது தற்குறிப்பேற்ற அணியாம்.  கயவர்களைச் சான்றோர் என்றது இழிவுபறறியாம். (84)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
85.  புறங்கூறாமையின் உயர்வு

பொய்ம்மேற் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேற் படாமைத் தவிர்ப்பானும்-மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை.

 
(பதவுரை)  புறனுரையைத் தன்மேல் படாமை தவிர்ப்பான்-புறங்கூறலாகிய தீமை தன்கண் நிகழாமல் காப்பவன், பொய்ம்மேற்கிடவாத நாவும்-பொய்யை மேற்கொள்ளாத நாவையும், மெய்ம்மேல் பிணிப் பண்பு அழியாமையும்-மெய் பேசுதலில் பிணிப்புண்டிருக்கும் பண்புடைமை நீங்காமையையும், பெற்ற பொழுதே-பெற்றவப்போதே, தணிக்கு மருந்து தலை-பிறவிப் பிணி தணிக்குந் தலையாய மருந்தைப் பெற்றவனாவான்.

(குறிப்பு) “தவிர்ப்பானும்” என்பதன்கண் உள்ள உம்மையைப் பிரித்தெடுத்து, “பண்பழியாமையும்”எனக் கூட்டுக. பொழுதே: ஏகாரம் பிரிநிலைப் பொருளது.  (85)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #18 on: September 18, 2011, 07:10:04 PM »
   
86.  குடியால் உண்டாகுந் தீங்கு


ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடைய ரென்றுரைக்கும் தேசும்-களியென்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து.

 
(பதவுரை)   களி என்னும் கட்டுரையால்-"கட்குடியன்" என்னும் பொருள்சேர் பழிச்சொல்லால், கோதப்படுமேல்-ஒருவன் குற்றப்படுத்தப்படுவானானால், ஒளியும்-எல்லோராலும் நன்கு மதிக்கப்படுதலும், ஒளி சான்ற செய்கையும்-அம் மதிப்பினுக்கேற்ற செயலும், சான்றோர் தெளிவுடையர் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் "இவர் தெளிந்த அறிவினையுடையவர்" என்று கூறும் புகழும், இவையெல்லாம்-ஆகிய இவை யெல்லாம், வேறாய்-வேறுபட்டு, விரைந்து-விரைவில், விட்டொழியும்-அவனை விட்டு நீங்கும்.

(குறிப்பு) கோதப்படல்-குற்றப்படுத்தப்படல்.  களி=கள்+இ; கள்ளினை உட் கொள்பவன்; இ: வினைமுதற்பொருள் தரும் விகுதி.       (86)
 
   -------------------------------------------------------------------------------------------------   
     
87.  சூதுப் போரால் விளையும் தீமை


ஓதலும் ஓதி யுணர்தலும் சான்றோரால்
மேதை யெனப்படும் மேன்மையும்-சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப் படுமேல்
இருளாம் ஒருங்கே இவை.

 
(பதவுரை)   சூது பொரும் என்னும் சொல்லினால்-சூதாடுவான் என்னும் பழியால், புல்லப்படுமேல்-ஒருவன் பற்றப்படுவானாயின், ஓதலும்-அறிவு நூல்களைக் கற்றலும், ஓதி உணர்தலும்-கற்றவற்றை ஆராய்தலும், மேதை எனப்படும் மேன்மையும்-அறிவுடையன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும், இவை ஒருங்கே-ஆகிய இவை முழுதும், இருளாம்-அவனை விட்டு மறையும்.

(குறிப்பு) பொருதல்-போர் செய்தல்; ஆடுதல், சூதுப் போரால் அறிவு மழுங்கி விடும் என்பது கருத்து,       (87)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
88. மானங் கெடின் மடிதலே நன்று


தனக்குத் தகவல்ல செய்தாங்கோ ராற்றால்
உணற்கு விரும்புங் குடரை-வனப்பற
ஆம்பற்றாள் வாடலே போல அகத்தடக்கித்
தேம்பத்தாங் கொள்வ தறிவு.


(பதவுரை) தனக்கு தகவு அல்ல செய்து-தனக்குத் தகுதியல்லாத காரியத்தைச் செய்து, ஓர் ஆற்றால் உணற்கு விரும்புங்குடரை-ஒருவாறு உண்ணுதலை விரும்புகின்ற குடலை, ஆம்பம்தாள் வாடலேபோல-நீரற்றவிடத்தில் ஆம்பற்கொடி வாடுதலே போல, வனப்பு அற-அழகு கெடவும், தேம்ப-இளைக்குமாறும், தாம் அகத்தடக்கிக்கொள்வது-தாம் உள்ளே அடக்கிக்கொண்டிருப்பது, அறிவு-அறிவுடைமையாகும்.

(குறிப்பு) குடர்-குடல்: இறுதிப்போலி.  கொள்வது தொழிற்பெயர்.  வனப்புற என்பதும் பாடம்.  ஆங்கு: அசைநிலை,      (88)

                             
 -----------------------------------------------------------------------------------------------------------
     
     
89. பிறன்மனை விரும்பேல்


அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடைய னென்றுரைக்கும் தேசும்-பிறனில்
பிழைத்தா னெனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை.


(பதவுரை) பிறன் இல் பிழைத்தான் என-அயலான் மனைவியை விரும்பினான் என்று, பிறரால் பேசப்படுமேல்-மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும்-அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும்-அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும்-பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே-இவை முழுவதும், இழுக்கு ஆம்-பழியாம்.

(குறிப்பு) இல்-மனையாள் இடவாகுபெயர்.  அறன் திறன் என்பன அறம், திறம் என்பவற்றின் போலி.  (89)

 
      -----------------------------------------------------------------------------------------------------
     
90. காமக் கருத்தின் கொடுமை


சாவாய்நீ நெஞ்சமே! சல்லிய வென்னைநீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கொட்டாய்-ஓவாதே
கட்டழித்துக் காமக் கடற்கென்னை ஈர்ப்பாயே
விட்டெழுங்கால் என்னாவாய் சொல்.


(பதவுரை) நெஞ்சமே நீ சாவாய்-மனமே! நீ கெடுவாயாக, சல்லிய என்னை-கலக்கமுற்ற என்னை, ஆவதன்கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய்-நன்னெறியில் ஒருசிறிதும் நிற்குமாறு விடாமல், ஓவாதே-ஒழிவின்றி, கட்டு அழித்து-உறுதியைக் கெடுத்து, காமக் கடற்கு-ஆசையாகிய கடலுக்கு, என்னை ஈர்ப்பாய்-என்னை இழுக்கின்றாய், விட்டெழுங்கால்-உன் பற்றைவிட்டு நான் எழுங்கால், நீ என் ஆவாய்-நீ யாது நிலையடைவாய், சொல்-அதனை எனக்குக் கூறு.

(குறிப்பு) ''ஒட்டாய்'' என்பது முற்றெச்சம்.  நிற்க+ஒட்டாய்-நிற்கொட்டாய்: அகரந் தொகுத்தல்.  ஈர்ப்பாயே என்பதில் 'ஏ' ஈற்றசை.  ஓவாதே என்ற எதிர்மறை வினையெச்சத்தில் ஓவு: பகுதி; ஏ: அசைநிலை.    (90)

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #19 on: September 18, 2011, 07:18:22 PM »
   
91. காமக் கருத்தை விலக்கல்


பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழிபெருங் காமநோய் வாங்கி-வழிபடா(து)
ஓடுமன னேவிடுத் தென்னை விரைந்துநீ
நாடிக்கொள் மற்றோ ரிடம்.


(பதவுரை) கழி பெருங் காமநோய் வாங்கி-மிகப் பெரிய ஆசை நோயை உட்கொண்டு, வழிபடாது-என் வழியே இணங்காமல், கன்றி ஓடும் மனனே-பெண்கள்பால் மிக்கு வருந்திச் செல்லுகின்ற மனமே!, நீ பழியொடு பாவத்தைப் பாராய்-நீ பழி பாவங்களைப் பாராய் (ஆதலால்), என்னை விடுத்து-என்னின் நீங்கி, மற்றோரிடம்-சேர்தற்குரிய வேறோரிடத்தை, நீ விரைந்து நாடிக்கொள்-நீ விரைந்து தேடியடைவாயாக.

(குறிப்பு) பழியொடு பாவம்-ஓடு: இடைச்சொல்; எண்ணும்மைப்பொருட்டு.  கழிபெரும்: மீமிசைச் சொல்; ஒரு பொருட் பன்மொழி; கழி: மிகுதிப்பொருள்தரு முரிச்சொல். (91)

 
 -----------------------------------------------------------------------------------------------------
     
     
92. காமிகள் மக்கள் எனக் கருதப்படார்


மக்களும் மக்களல் லாரும் எனஇரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம்-மக்கள்
அளக்குங் கருவிமற் றொண்பொருள் ஒன்றோ
துளக்குறு* வெள்வளையார் தோள்.


(பதவுரை) குண்டு நீர் வையகம்-ஆழமாகிய கடல் சூழ்ந்த உலகம், மக்களும் மக்களல்லாரும் என இரண்டு குப்பைத்தே-மனிதரும் மனிதரல்லாதாரும் என்ற இரண்டு குவியல்களை உடையது, மக்கள் அளக்குங் கருவி-மக்களை அளந்து காட்டுங் கருவிகள், ஒண் பொருள் ஒன்றோ துளக்குறுவெள் வளையார் தோள்-சிறந்த செல்வமும் விளக்குகின்ற சங்கவளையலை யணிந்த மகளிரது தோளுமாம்.

(குறிப்பு) குப்பைத்தே என்பதில் ''ஏ'' அசை, ''மற்று'' அசைநிலை. ''ஒன்றோ'' எண்ணிடைச்சொல். துளக்குறு என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. ''துளக்கறு'' என்ற பாடம் பொருளொடு பொருந்தாமை காண்க. பிறர்பொருள்களையும், பிறர் மனைவியரையும் விரும்பாதவர்களே மக்களாவர் என்பது கருத்து.           (92)

(பா-ம்) *துளக்கறு.
 
      -------------------------------------------------------------------------------------------------
     
93. நன்னெறி காட்டுவோரே நட்பினராவர்


இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக் குய்த்தலால்-மெய்ம்மையே
பட்டாங் கறமுரைக்கும் பண்புடை யாளரே
நாட்டா ரெனப்படு வார்.



(பதவுரை) இம்மை-இப் பிறப்பில், அடக்கத்தைச் செய்து-மன மொழி மெய்களால் அடங்குமாறு செய்து, புகழ் ஆக்கி-புகழினைப் பெருக்கி, உம்மை-மறுபிறப்பில், உயர்கதிக்கு உய்த்தலால்-வீடுபேற்றையடைவித்தலால் பட்டாங்கு-இயல்பாகவே, மெய்ம்மை அறம் உரைக்கும்-அத்தகைய உண்மை யறத்தினை உரைக்கும், பண்புடையாளரே-குணமுடையவர்களே, நட்டார் எனப்படுவார்-நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

(குறிப்பு) ஏகாரமிரண்டும் முறையே ஈற்றசையும், பிரிநிலையுமாம்.  எனப்படுவார்; எழுவாய் வேற்றுமையின் சொல்லுருபுமாம்.  (93)     
 
      -------------------------------------------------------------------------------------------------
     
94. பிறநெறி விளக்குவார் பெருநட்பாளர்


நாட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பலபிறப்புத் துன்பமென்-றொட்டி
அறநெறி கைவிடா தாசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற பவர்.


(பதவுரை) நாடுங்கால்-ஆராயுமிடத்து, நட்டார் எனப்படுவார்-நட்பினரெனப்படுதற்குரியார், வையத்து-பூமியில், பல பிறப்பு-பல பிறவிகளால், துன்பம் பட்டாம்-துன்பமடைந்தோம், என்று-என்று சொல்லி, ஒட்டி-துணிந்து, அறநெறி கைவிடாது- அறநெறியினைச் சோரவிடாது, ஆசாரம் காட்டி-ஒழுக்கத்தினையுணர்த்தி, பிறநெறி போக்கிற்பவர்-தீநெறியினின்றும் நீக்குபவரே யாவர்.

(குறிப்பு) கைவிடாது என்பதில், கைவிடு: பகுதி.  பட்டாம்: தன்மைப்பன்மை வினைமுற்று; தனித்தன்மைப் பன்மையுமாம்.  அறநெறி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (94)
 
      -----------------------------------------------------------------------------------------------------

     
95. தந்நலமற்றோரே தனிப்பெறா நட்பினர்


நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்!
விட்டாரை யல்லால் கொளல்வேண்டா-விட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னன்னாய்! உய்ப்பர்
மறிதர வில்லாக் கதி.


(பதவுரை) நறுமென் கதுப்பினாய்-நறுமணம் பொருந்திய மெல்லிய கூந்தலையுடையாய்!, நட்டாரை வேண்டின்-நட்பினரையடைய விரும்பின், விட்டாரையல்லால் கொளல் வேண்டா-பற்றற்ற பெரியோர்களை யல்லது பிறரை நட்பினர்களாகக் கொள்ள வேண்டா, பொறி சுணங்கு மென்முலை பொன் அன்னாய்-பொலிவினையும் தேமலையும் மென்மையினையுங் கொண்ட கொங்கையினையுடைய இலக்குமி போன்றவளே!, விட்டார்-அப் பற்றற்ற பெரியோர்கள், மறிதரவில்லாக் கதி உய்ப்பர்-பிறவாமைக் கேதுவாகிய வீடுபேற்றினை யடைவிப்பர்.

(குறிப்பு) விடுதல்-ஈண்டுப் பற்றை விடுதல்; தன்னலமற்று வாழ்தல்.  மறிதல்-மடங்குதல்; திரும்புதல்,  கதுப்பினாய், பொன்னன்னாய்: மகடூஉ முன்னிலைகள். (95) 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #20 on: September 18, 2011, 07:22:55 PM »
   
96. தந்நலமற்ற பெரியோர் தாயினை யொப்பர்


காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
பாலொடு நெய்பெய்யும் தாயனையர்-சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகு வார்
.

(பதவுரை) சால-மிக, அடக்கத்தை வேண்டி-அடங்கியிருக்குமாறு செய்யக் கருதி, நாளும்-ஒவ்வொரு நாளும், அறன் வலிது கொடுத்து-அறத்தினைத் தாமாகவே வற்புறுத்திக் கூறி, மேற் கொண்டு ஒழுகுவார்-அடக்கியாளும் பெரியோர், காலொடு கை அமுக்கி-காலையும் கையையும் ஆட்டாதவாறு இறுகப் பற்றிக் கொண்டு, வாய் நெறித்து-வாயைப் பிளந்து, பிள்ளையை-குழைந்தைக்கு, பாலொடு நெய் பெய்யும்-பாலையும் ஆமணக்கு நெய்யையும் அருத்துகின்ற, தாயனையர்-தாய்க்கு நேராவர்.

(குறிப்பு) ஒழுகுவார் தாயனைய ரென்க.  பிள்ளையை: உருபு மயக்கம்.  ''வாய்வெறித்து'' எனவும் பாடம்.  நெறித்தல்-சுண்டித் திறப்பித்தல்.  (96)                                       
 

     
     ----------------------------------------------------------------------------------------------------


97. பெரியோர் நட்பாற் செல்வம் பெருகும்
 

கழியும் பகலெல்லாம் காலை யெழுந்து
பழியொடு பாவம் படாமை-ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு.


(பதவுரை) கழியும் பகலெல்லாம்-கழிகின்ற நாட்களிலெல்லாம், காலை எழுந்து-அதிகாலையில் எழுந்து, பழியொடு பாவம் படாமை-பழி பாவங்களுக்குக் காரணமாகிய செயல்கள் தங்கண் நிகழாமல், ஒழுகினார்-ஒழுகின பெரியோர்களை, உய்க்கும்-தம்மாட்டு அடைவிக்கும், பொறியாரை- திருவுடையாரை, நாடி-தேடி, துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு-அனுபவித்தற்குரிய பொருள்கள் பலவுஞ் சேர்ந்து, உழிதரும்-அடையும்.

(குறிப்பு) பெரியார்களை அடைவிக்கும் நல்வினைச் செல்வமுடையாரைத் தேடி உலகத்திலுள்ள பொருளெல்லாம் தாமே அடையுமென்பதாம்.  படாமை: எதிர்மறை வினையெச்சம்.  ஒழுகினார்: வினையாலணையும் பெயர்.  (97)                                          
 
     
     ---------------------------------------------------------------------------------------------------


98. தீ நட்பினர் திருடர்களே யாவர்
 

காய உரைத்துக் கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம
.

(பதவுரை) காய உரைத்து-சோர்வுற்றவழி மனமழுங்கக்கூறி, கருமஞ் சிதையாதார்-எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தக்கார்க்கு-பெரியோர்களுக்கு, தாயரோடு ஒவ்வாரோ-தாயை நிகர்வர், உள்ளம் உருக-கேட்போர் மனமுருகுமாறு, வாய் பணிந்து உரைத்த-வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, பொருள் கொள்வார்-உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குகின்றவர்கள்; கள்ளரோடு ஒவ்வாரோ-திருடரை நிகர்வர்.

(குறிப்பு) ''ஒவ்வாரோ'' இரண்டெதிர்மறைகள் ஓர் உடன் பாட்டையுணர்த்தின.  தாம்: அசைநிலை.  காய உரைத்தல்-தவறு கண்டவழி இடித்துரைத்தல்.  ஒவ்வுதல்-ஒப்பாதல். (98)   
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     

99. தீ நட்பினர் சேர்க்கை தீங்கே பயக்கும்

 
அறுதொழில் நீ்த்தாரை மெச்சா தவற்றோ(டு)
உறுநரைச் சார்ந்துய்யப் போதல்-இறுவரைமேல்
கண்ணின் முடவன் துணையாக நீள்கானம்
கண்ணிலான் சென்ற துடைத்து.



(பதவுரை) அறு தொழில் நீத்தாரை-அவ்விநயமாகிய அறு தொழில்களையும் விட்டவர்களை, மெச்சாது-விரும்பியடையாமல், அவற்றோடு உறுநரை-அவற்றைச் செய்தொழுகுகின்றவர்களை,சார்ந்து-அடைந்து, உய்யப்போதல்-பிறவிப் பிணியினின்றும் நீங்கக் கருதுதல், இறுவரை மேல்-கற்கள் நெருங்கின மலையின் மேல் உள்ள, நீள் கானம்-நீண்ட காட்டைக் கடத்தற்கு, கண்ணில் முடவன் துணையாக-கண்ணுங் காலுமில்லாத ஒருவனைத் துணையாகக்கொண்டு, கண்ணிலான் சென்றதுடைத்து-குருடன் போவதுபோலும்.

(குறிப்பு) அறுதொழில்:-அச்சம், ஆசை, இலௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம் என்பன.       (99)
                                             
   
     -------------------------------------------------------------------------------------------------------
     
100. தீ நட்பினர் சேர்க்கையால் பெரியோர் விட்டுப் பிரிவர்


குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச்
செற்ற முதலா உடையவரைத்-தெற்ற
அறிந்தாரென் றேத்து மவர்களைக் கண்டால்
துறந்தெழுவர் தூய்க்காட்சி யார்.


(பதவுரை) குற்றத்தை நன்று என்று கொண்டு-தீமையை நன்மையாகக் கருதி, குணமின்றி-நற்குணமென்பது சிறிதுமில்லாமல், செற்ற முதலா உடையவரை-வெகுளி முதலியன உடையவர்களை, தெற்ற-மாறுபட, அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்-அறிவாளிகள் என்று கருதித் துதிப்பவர்களைப் பார்த்தால், தூய்க் காட்சியார்-நல்ஞானமுடையோர், துறந்து எழுவர்-அவர்களை விட்டு நீங்குவர.

(குறிப்பு) தூய்க் காட்சியார் கண்டால், துறந்தெழுவர் என முடிக்க.  தெற்ற-தெளிவாக எனலுமாம்.                                      (100)
 
     
 
« Last Edit: September 18, 2011, 07:25:39 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #21 on: September 18, 2011, 07:34:58 PM »
 
101. ஊனினை ஒழித்தால் ஊறுபாடில்லை


கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்.



(பதவுரை) கொன்று-உயிர்களைக் கொன்று, ஊன் நுகரும்-புலால் உண்ணும், கொடுமையை-தீச்செயலை, உள் நினைந்து-மனத்தாலாராய்ந்து, அன்றே-அப்பொழுதே, ஒழியவிடுவானேல்-புலாலுண்ணலை முற்றிலும் நீக்குவானானால், என்றும் இடுக்கண் என உண்டோ-எக்காலத்தும் அவனைத் துன்பங்களணுகா, இவ்வாழ்க்கைக் குள்ளே படுத்தானாம் தன்னைத் தவம-அவன் இல்லறத்தானாக இருந்தே துறவற நெறியினின்று தவஞ் செய்வாரை நிகர்வன்.

(குறிப்பு) புலாலுண்ணாமையொன்றே தவத்தாலாகும் பயன்களை அடைவிக்கு மென்பதாம்.  ஊன்-இறைச்சி: னகரவொற்றுச் சாரியை.  ஓ: எதிர்மறை வினா. (101)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
102. புலால் உண்ணல் புத்தியற்ற காரியமாம்
 
தன்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர்-அந்தோ!
நடுநின் றுலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு.


(பதவுரை) தம் புண் கழுவி மருந்திடுவர்-தமக்கொரு புண்வரின் உலகத்தவர் அதனை நன்றாகக் கழுவி மருந்திட்டு ஆற்றுவர், தாம் பிறிதின் செம் புண் வறுத்தவறைதின்பர்-ஆனால் அவர்கள் மற்றொன்றினுடைய சிவந்த புண்ணாகிய இறைச்சி வறுத்த வறுவலை விரும்பி உண்பர், அந்தோ-ஐயகோ!, நடு நின்று-நடு நிலையாக நின்று, உலக நயன் இலாமாந்தர்-உலக நீதியை உணராத மனிதர், செய்யும் வழக்கு-செய்யும் முறைமை, வடு அன்றோ-குற்றமேயாகும்.

(குறிப்பு) வறை-ஐ: செயப்படுபொருளுணர்த்தும் விகுதி.  நயம்-நயன்; நீதி: இறுதிப்போலி.  அந்தோ: இரக்கக் குறிப்பு.  அன்று, ஓ: தேற்றப்பொருளன. (102)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
103. நா முதலிய உறுப்புக்களின் தூய்மை

அறங்கூற நாவென்ப நாவுஞ் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர்-பிறன்றாரத்(து)
அற்றத்தை நோக்காத கண்ணென்ப யார்மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு,



(பதவுரை) அறம் கூறும் நா என்ப நாவும்-அறத்தினைக் கூறுகின்ற நாவே நா ஆகும் என்பர், செவியும் புறங்கூற்று கேளாத என்பர்-புறங்கூறுதலைக் கேளாத செவியே செவியாகும் என்பர், பிறன் தாரத்து அற்றத்தை நோக்காத கண் என்ப-அயலான் மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண் என்பர், யார் மாட்டும் செற்றத்தை தீர்ந்ததாம் நெஞ்சு-தீமை செய்வாரிடத்தும் பகைமையின்றி இருப்பதே மனம் ஆகும்.

(குறிப்பு) கூற்று-கூறப்படுவது; சொல், செற்றம்-நெடுங்காலமாகக் கொண்டுள்ள சினம்.    103
 
     --------------------------------------------------------------------------------------------
     
104. பிறர் பெண்டிர் முதலியவற்றை விரும்புவார்க்குத்
தூய்மை முதலியன இலவாம்

 

பெண்விழைவார்க் கில்லை பெருந்தூய்மை பேணாதூன்
உண்விழைவார்க் கில்லை உயிரோம்பல் எப்பொழுதும்
மண்விழைவார்க் கில்லை மறமின்மை மாணாது
தம்விழைவார்க் கில்லை தவம்.



(பதவுரை) பெண் விழைவார்க்கு பெருந் தூய்மை இல்லை-பிற மகளிரை விரும்புவாரிடத்து மாசின்மை இல்லை, பேணாது ஊன் உண் விழைவார்க்கு உயிரோம்பல் இல்லை-அருளை விரும்பாமல் புலாலுண்ணலை விரும்புவாரிடத்து உயிர்களைக் காக்குந் தன்மை இல்லை, எப்பொழுதும் மண் விழைவார்க்கு மறமின்மை இல்லை-எக்காலத்தும் அயலானது நாட்டினைக் கவர விரும்புவாரிடத்து அறம் இல்லை, மாணாது தம் விழைவார்க்கு தவம் இல்லை-பெருமைக் கேலாத செயல்களைச் செய்து தம்மைக் காக்க விரும்புவாரிடத்துத் தவவொழுக்கம் இல்லை

(குறிப்பு) உண்-உண்ணல் முதனிலைத் தொழிற்பெயர்.  மறமின்மை-அறம் மறத்தின் எதிரது அறமாதலின்.       104
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
105. பொல்லாரும் நல்லாரும் இன்னர் என்பது


கல்லான் கடைசிதையும் காமுகன் கணக்காணான்
புல்லான் பொருள்பெறலே பொச்சாக்கும்-நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்
நடுக்கமும் நன்மகிழ்வு மில்.



(பதவுரை) கல்லான் கடை சிதையும்-கல்லாதவன் கடையனாய் அழிவான், காமுகன் கண் காணான்-காமுற்ற ஒருவன் கண் தெரியாதவனாவான், புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும்-அற்பன் பொருள் பெற்ற அளவிலேயே தன் நிலையை மறந்து ஒழுகுவான், நல்லான்-அறிவுடையவன், இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும், நடுக்கமும் நன்மகிழ்வும் இல்-துன்பமுற்றவிடத்து வருந்துதலும் இன்பமுற்றவிடத்து மகிழ்தலும் இலனாவன்.

(குறிப்பு) காமுகன் கண்காணானாதலாவது காம மயக்கத்தால் தான் சேர்தற்குரிய மகளிர் இவரெனவும் சேரத் தகாதார் இவரெனவும் அறியானாய் ஒழுகுதல்.  ''காமத்துக்குக் கண்ணில்லை'' என்பது பழமொழி. அன்றி, அக் கெட்ட வொழுக்கத்தால் உடனிலை கெட்டுக் கண்பார்வையினை இழப்பான் எனலுமாம்.  கடை-கடையன்; இழிந்தவன்: குணவாகுபெயர்.    (105)                               
 
« Last Edit: September 18, 2011, 08:31:26 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #22 on: September 18, 2011, 07:59:50 PM »
   
106. பழிப்பிலாத வாழ்க்கைக்குரியன


தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும்-மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழுந் திறம்.


(பதவுரை) தானத்தின் மிக்க தருமமும்-உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினுஞ் சிறந்த அறமும், தக்கார்க்கு-பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க-அறிவைக் காட்டிலும் சிறந்த, உசாத்துணையும்-ஆராயுந் துணைவனும், மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம்-பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும், இல்லை-இல்லை, பழியாமல் வாழுந் திறம்-இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

(குறிப்பு) உசாவுதல்-கேட்டறிதல், அழியா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.  மிக்கதூஉம்: இன்னிசை யளபெடை. (106)                               
 
     
     .-------------------------------------------------------------------------------------------------------

107. மிகவும் உயர்வாகிய முக்குணங்கள்


தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்* துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை.


(பதவுரை) தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும்-குற்றமில்லாமல் சொல்லுங் குணமும், துன்பங்கள் ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-துன்பமடைந்த விடத்தும் அதனால் தளர்ச்சியடையாதிருக்கும் பொறுமையும், காய்விடத்தும் வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும்-தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை கொள்ளாத உண்மை நிலையும், இம்மூன்றும் சாற்றுங்கால் சாலத்தலை-கூறுமிடத்து இவை மூன்றும் மிக உயர்ந்தனவாகும்.

(குறிப்பு) காய்வு: தொழிலாகுபெயர். சால: உரிச்சொல். கொண்டாடல்-மேற் கொள்ளல்.   (107)
  (பாடம்) *வண்மையும

 
   -----------------------------------------------------------------------------------------------------
   
     
108. உலக வாழ்க்கைக்குரிய மூன்று


வெம்மை யுடைய தடிசில் விழுப்பொருட்கள்
செம்மை யுடையதாஞ் சேவகம்-தம்மைப்
பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
உறவருவ தோர்வதாம் ஓர்ப்பு.




(பதவுரை) வெம்மை உடையது அடிசில்-வெப்பத்தோடு கூடியிருப்பதே உண்டியாகும், விழுப்பொருட்கண் செம்மையுடைய தாம் சேவகம்-மிக்க வருமானத்தோடு நடுவுநிலைமை தவறாமலிருப்பதே உத்தியோகமாகும், தம்மைப் பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை-தம்மை மற்றவாக்ள் நினைத்து வாழ்வதற்கேற்ற ஈகைக் குணத்தோடு வாழ்வதே வாழ்க்கையாகும், இம்மூன்றும் உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு-இம் மூன்றையும் அடைவிப்பதே ஆராய்ந்து தெளிதலாகிய கருமம் முடிக்குந் துணிவாகும்.

(குறிப்பு) அடிசில்: அடப்பட்டது; உண்டி.  ஓர்ப்பு-நினைவு: நினைந்து தீர்மானிக்கும் துணிவினை ஈண்டு உணர்த்தியது.      (108)
 

     

---------------------------------------------------------------------------------------------------

     109. தீமையினை நன்மையினாலே வெல்
 


ஒறுப்பாரை யானொறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப-ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ஓறு.



(பதவுரை) நெஞ்சே! ஒறுப்பாரை யான் ஒறுப்பன்-என்னைத் துன்புறுத்துகின்றவர்களை யான் துன்புறுத்துவே னெனவும், தீயார்க்கும் தீயேன்-கொடியவர்களுக்குக் கொடியவனாவேன் எனவும், வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப-வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் உலகத்தார் கூறுவர்.  ஒறுத்தியேல்-நீ இவற்றை மேற்கொண்டு பிறரை அடக்கக் கருதுவாயாயின், ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்-ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும், ஊர் பகை-நின்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும், நின்கண் ஓறு-ஆதலின் உன்னிடத்து அவை உளவாகாவாறு அடக்கு.

(குறிப்பு) ஊர் பகை: வினைத்தொகை.  ''அடிக்கு அடி; குத்துக்குக் குத்து; பொய்க்குப் பொய்; கோளுக்குக் கோள்;''

என்ற கூற்று மக்களிடைப் பெருங் குழப்பத்தினை உண்டாக்குமாகலின், எக்காலும் பொறுமையினை மேற்கொள்ளல் மக்களுக்கு இன்றியமையாதது என்பது கருதது. (109)


 
      ------------------------------------------------------------------------------------------------
     
110. குலம் குப்பையிலே பணம் பந்தியிலே
 

குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர்-வினைப்பயன்கோல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார்பின் சென்ற நிலை.


(பதவுரை) குலத்துப் பிறந்தார்-உயர்குடியிற் பிறந்தவர்களும், வனப்புடையார்-அழகுடையவர்களும், கற்றார்-கற்றவர்களும், நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர்-மானமழிந்ததை நினைக்குமிடத்து நின்ற இடத்திலேயே உயிர்விடக்கூடியவர்களுமாகிய பெரியோர்கள், கல்லார்-கல்லாதவர்களும், குலமில்லார்-இழிகுலத்தவர்களும், பொல்லார்-தீயவர்களும், தறுகட்பம் இல்லார்-தீவினை செய்ய அஞ்சாதவர்களுமாகிய செல்வமுடைய இழிந்தோர்களை, பின் சென்ற நிலை-வழிபட்டு நிற்பதற்குக் காரணம், வினைப் பயன்கொல்-அவர்கள் முன்செய்த தீவினைப் பயன்தானே?

(குறிப்பு) செல்வமானது சில வேளைகளில் மானிகளையும் மயக்கிவிடுகின்றது என்பது கருத்து.  தறுகட்பம்: பெருமையெனலுமாம்.  கொல்: ஐயவினாப் பொருள்.      (110)

 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #23 on: September 18, 2011, 08:04:47 PM »
   
111. பெண்ணென்றால் விண்ணும் நிறையும்


வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்
கூதற்குக் கூதி ரனைத்து.


(பதவுரை) கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-மூதேவி போன்ற ஒருத்தியைப் பாடுமிடத்து, ஞாலத்தார் விரைந்து ஓடி வேட்டு அவாய்க் கேட்பர்-உலகத்தவர் விரைந்து சென்று அதனை மிக விரும்பி கேட்பர், கோட்டிலா ஓதுமின்-மாறுபாடில்லாத அற நூல்களைக் கற்பீர்களாக, ஓதி அடங்குமின்-கற்று அவற்றிற்குத் தகவொழுகுங்கள், என்னுஞ் சொல்-என்று பெரியோர் கூறுஞ்சொல், கூதற்குக் கூதிரனைத்து-முன்னமே குளிரால் நடுங்கிய உடலினிடத்தே வீசிய குளிர்காற்றை யொக்கும் (வெறுக்கப்படும்.

(குறிப்பு) கிழத்தியைப் பாடுங்கால்: பெண்ணொருத்தி பாடுமிடத்து எனலாம்.  இப்பொருள் முதல் வேற்றுமையினிடத்தே இரண்டாம் வேற்றுமை மயக்கம் கொள்க.  கோட்டில்லா (தன) வினையாலணையும் பெயர்.  கூதற்கு; வேற்றுமை மயக்கம்.  விண்-ஆகாயம்.                          (111)
 
 
      ----------------------------------------------------------------------------------------------------

     
112. உணவொடுங்கினால் உயிரொடுங்கும்


இறையிறை யின்சந்தித் தென்பொடூன் சார்த்தி
முறையின் நரம்பெங்கும் யாத்து-நிறைய
அவாப்பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச்சுருக்கில் பூட்டா விடும.


(பதவுரை) இறை இறையின் சந்தித்து-உறுப்புக்களின் மூட்டு வாய்களை ஒன்றோடொன்று பொருத்தி, என்பொடு ஊன்சார்த்தி-எலும்போடு தசையை இணைத்து, முறையின்-முறையே, நரம்பு எங்கும் யாத்து-நரம்பால் எல்லாவிடங்களையும் உறுதியாகக் கட்டி, நிறைய அவாப் பெய்த பண்டியை-ஆசையாகிய சரக்கை நிறைய ஏற்றிய உடலாகிய வண்டியை, ஊர்கின்ற பாகன்-ஏறிச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், புகாச் சுருக்கில் பூட்டாவிடும்-ஆகாரத்தைக் குறைத்தால் அதனைச் செலுத்துதலைவிட்டு நீக்குவான்.

(குறிப்பு) ''அன்ன மொடுங்கினால் ஐந்து மொடுங்கும்'' என்ற பழமொழியின் பொருளை இங்குக் காண்க.  பூட்டுதல்: பொருத்திச் செலுத்துதல்.                          (112)

 
 ---------------------------------------------------------------------------------------------------------
     
     
113. உடலின் நிலையாமை


ஆசையும் பாசமும் அன்வும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலாலுடம்பு-ஊசல்
கயிறற்றாற் போலக் கிடக்குமே கூற்றத்
தெயிறுற் றிடைமுரிந்தக் கால்
.

(பதவுரை) ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி-பொருள்கள்மேல் வேட்கையையும் உற்றார்பால் தளைப்பட்ட அன்பையும், மனைவிபால் வைத்த காதலையும் உள்ளே அடக்கி, பூசிப்பொதிந்த-தசையால் கட்டிய, புலால் உடம்பு-புலால் நாற்றம் வீசும் உடம்பானது, கூற்றத்து எயிறு உற்று இடை முரிந்தக்கால்-எமனது பல்லில் சிக்கி அழிந்தவிடத்து, ஊசல் கயிறு அற்றால் போலக் கிடக்கும்-கயிறற்றவிடத்து ஊஞ்சலே போல அது செயலற்று வீழ்ந்து கிடக்கும்.

(குறிப்பு) ஏ: அசைநிலை.  முரிந்தக்கால்: எதிர்கால வினையெச்சம்.   (113)

 
 ------------------------------------------------------------------------------------------------------
     
     
114. உலகவாழ்க்கை உறுதியன்று


மறந்தொருவன் வாழுமிம் மாயமாம் வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை--செறிந்தொருவன்
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
கூற்றம் இடைகொடுத்த  நாள்.


(பதவுரை) ஒருவன் மறந்துவாழும் இம்மாயம் ஆம் வாழ்க்கை- ஒருவன் தனது ஆன்ம சொரூபத்தை மறந்து வாழ்வதலாகிய இப்பொய்யாகிய வாழ்க்கை, ஒருவன் அறிந்து வாழுமேல் இல்லை-இவன் ஆன்மவடிவை அறிந்து வாழ்வானாயின் இல்லையாகும்; ஒருவன் செறிந்து ஊற்றம் இறந்து-ஒருவன் மிகவும் பற்றைவிட்டு, உறுதிகொள்ளாக்கால்-ஞானத்தையடையானாயின், கூற்றம் இடைகொடுத்த நாள்-அவன் கூற்றினிடம் அகப்படும் ஞான்று, ஓ கொடிதே-அனுபவிக்கும் துன்பம் மிகக்கொடியதாகும்.

(குறிப்பு) அழியுந்தன்மைத்தாய உடம்பு உள்ளபொழுதே அழிவல்லாத ஞானத்தை முயற்சியா லடையவேண்டுமென்பது கருத்து. ஓ, ஏ: இரக்கப் பொருளன.                         (114)

 
 -----------------------------------------------------------------------------------------------------
     
     
115. இவ்வுலகம்  ஏமாற்றமாகிய மாய வித்தையாம்


தோற்றமும் சம்பிரதம் துப்புரவுஞ் சம்பிரதம்     
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்--தோற்றம்
கடைப்பட்ட வாறறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப்பட்ட நாயகனே போன்று


(பதவுரை) தோற்றமும் சம்பிரதம்-பிறப்பும் சித்தே, துப்புரவும் சம்பிரதம்-பிறந்த உயிர் உலகப் பொருள்களை அனுபவித்தலும் சித்தே, கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம்-உலகில் வாழும் உயிர்களை எமன் கவர்ந்துபோதலும் சித்தே, கற்று அறிந்தார்-அற நூல்களை ஓதியுணர்ந்தவர்கள், தோற்றம் கடைப்பட்டவா றறிந்து-பிறப்பின் இழிவை யறிந்து-படைப்பட்ட நாயகனே போன்று-போர் முனையை அடைந்த சேனாதிபதியேபோல, துஞ்சார்-சோர்வில்லாமல் பிறப்பினை யறுக்க முயல்வர்.

(குறிப்பு) சித்து-வியத்தகு செய்தி; மாயவித்தை. ஏ: அசைநிலை, கடை: இறுதியாகிய இழிவு. (115)

 
     
 
« Last Edit: September 18, 2011, 08:17:48 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #24 on: September 18, 2011, 08:30:13 PM »
   
116. சின்னாள் வாழ்க்கையைத் தெளியார்


தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந் துயிலும் உறீஇப்--பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக்குற் றுண்பார் பலர்.


(பதவுரை) தெரிவு இல் இளமையும்-பொருள்களை ஆராய்தற்கேலாத இளமைப்பருவத்தையும், தீப்பிணியும்-கொடிய நோய்களையும், மூப்பும்-கிழத்தன்மையையும், பிரிவும்-உற்றாரைப் பிரிதலையும், துயிலும்-மரணத்தால் வருந் துன்பங்களையும், உறீஇ-அடைந்து, பருவந்து-வருந்தி, பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு- பயனற்ற சின்னாள் வாழ்க்கைக்கு, வித்துக்குற்று உண்பார் பலர்-உணவை விரும்பும் வேளாளன் அறிவின்றி வித்தையும் அழித்து உண்பதைப்போல வீடுபேற்றுக்கு வித்தாய அறத்தையே அழித்து வாழ முயல்பவரே உலகிடைப் பலராவர்.

(குறிப்பு) ''நனிபேதையே நயனில் கூற்றம்'' என்ற புறநானூற்றுச் செய்யுளில் ''விரகின்மையின் வித்தட்டுண்டனை'' என்னுந் தொடரை நோக்குக. உறீஇ: சொல்லிசையளபெடை.  (116)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
117. மதியிலா மாந்தரின் மயக்கம்
 

பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர்--குறைக்கூடாச்
செல்வம் கிளைபொருள் காமமென் றின்நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு


(பதவுரை) பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இந்நான்கும்- பிறப்பு இறப்பு மூப்பு நோய் என்ற இந்நான்கினையும், மதியிலா மாந்தர் மறப்பர்-அறிவில்லாத மக்கள் மறந்து வாழ்வர்; (அவர் அவைகளை மறத்தற்குக் காரணமாய) குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்று இந்நான்கும்-குறையாத செல்வம், சுற்றம், மக்கள், காதன் மனைவி ஆகிய இந்நான்கும், பொல்லாப் பொறியறுக்கப்பட்டு (போம்)-இடையே தீயுழ்வர ஒழிந்துபோயினும்போம், ஆதலால் அறிவுடையார் பிறப்பு முதலியவற்றை மறவார்.

(குறிப்பு) குறைக்கூடா: விரித்தல் விகாரம். ''குறைகூடாச் செல்வம் கிளைபொருள் காமம் என்றிந் நான்கும் பொல்லாப் பொறியறுக்கப்பட்டுப் போமென்னும் மதியிலாமாந்தர் பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்றிந் நான்கும் மறப்பர்'' எனக் கொண்டு கூட்டலுமாம். பொருள்-மக்கள்; ''தம்பொரு ளென்பதம் மக்கள்'' என்பதனாற் கொளக.   (117)
 
      --------------------------------------------------------------------------------------------------------
     
118. உடற்குறுதி ஒப்பற்ற தவமே


மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு மெல்லாம் சலமிலவாய்--நோக்கீர்
பருந்துக் கிரையாமிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு.


(பதவுரை) மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரல் சாக்காடும் எல்லாம்-மூப்பு நோய் மனைவி மக்களைப் பிரிதல் வறுமை மரணம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும், சலமிலவாய் நோக்கீர்-பொய்யின்றி மெய்யாக ஆராயமாட்டீர், பருந்துக்கு இரை ஆம்-கழுகுகளுக்கு இரை ஆகிய, இவ் யாக்கையைப் பெற்றால்-இவ்வுடலைப் பெற்றால், மருந்து மறப்பதோ மாண்பு-இனி உடலையடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது பெருமையாகுமோ? ஆகாது.

(குறிப்பு) ''பருந்துக் கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால், நோக்கீர், மறப்பதோ மாண்பு'' எனக் கூட்டிப் பொருள் காணலுமாம். யாக்கை-உடல்: தொழிலாகுபெயர். ஓ:எதிர்மறை வினா. (118)
 
     
     ----------------------------------------------------------------------------------------------------

119. மெய்யுணர்வில்லார் மிக நலிவடைவர்


நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும்
இன்பத் தியல்பறி யாதார்.


(பதவுரை) துறந்து எய்தும் இன்பத்து இயல்பு அறியாதார்-பற்று விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை அறியாதவர்கள், நீக்க அருநோய்-தீர்த்தற் கரியநோயும், மூப்பு-கிழத்தன்மையும், தலைப்பிரிவு-மனைவி மக்களைப் பிரிதலும், நல்குரவு-வறுமையும், சாக்கடு-மரணமும், என்ற ஐந்து களிறு உழக்க-ஆகிய ஐந்து யானைகளும் வருத்த, போக்க அரிய துன்பத்துள் துன்பம் உழப்பர்-நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை யனுபவிப்பார்கள்.

(குறிப்பு) ''களிறு உழக்க'' என்பது குற்றுகரப் புணர்ச்சி. சாக்காடு: தொழிற்பெயர்; காடு, தொழிற்பெயர் விகுதி. (119)
 
      ------------------------------------------------------------------------------------------------
     
120. இறத்தல் உறுதி : துறத்தல் பெறுதி !  


எக்காலும் சாதல் ஒருதலையே யானுனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன்--மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தன்மேற் சார்தல் தலை.


(பதவுரை) (நெஞ்சே) எக்காலும் சாதல் ஒருதலையே - எப்பொழுதாவது இறப்பது உறுதி, யான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன்-நான் உனக்கு அழியும் தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக்கொண்டிரேன், மிக்க அறிவினை வாழ்த்தி-உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து, அடவி துணையா-வனத்தைத் துணையாகக் கருதியடைந்து, துறத்தல்மேற் சார்தல் தலை-துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.

(குறிப்பு) புகு+இல்=புக்கில்: உயிர்புகும் வீடு: உடல், துணையா: ஈறு கெட்ட செயவென்வாய்பாட்டு வினையெச்சம். ஒரு தலை-உறுதி; ஒரு சொன்னீர்மைத்து. (120)
 
     
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #25 on: September 18, 2011, 08:36:32 PM »
   
121. உயிர்கள் கூத்தனை யொத்து உழல்கின்றன


அங்கம் அறவாடி அங்கே படமறைத்(து)
அங்கே ஒருவண்ணங் கோடலால் என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு.



(பதவுரை) உயிர்-உயிர்கள், சுழன்றாடு தோற்றப் பிறப்பு-எழுவகைப் பிறவிகளிலும் சுழலுதற்குக் காரணமாகிய தோற்றத்தினையுடைய பிறப்பால், அங்கம் அற ஆடி-உடல் நீங்குந் துணையும் உலகில் ஆடித்தொழில் செய்து,அங்கே பட-பின் உயிர் நீங்க, மறைந்து உலகினின்றும்மறைந்து, அங்கே ஒரு வண்ணங் கோடலால்-அப்பால் வேறொரு வடிவத்தைக் கொள்ளு வதால், என்றும் அரங்காடு கூத்தனே போலும்-நாடகத்திலே அங்கம்முடியுந் துணையும் ஆடியும், பின்பட மறைந்தும்-பின்வேறோர் அரங்கத்தில் வேறோர் வண்ணங்கொண்டுஆடியும் திரிகின்ற கூத்தனை ஒக்கும்.

(குறிப்பு) உயிர்: எழுவாய். கூத்தனே போலும்: பயனிலை. ஏ: தேற்றம். தான்:அசைநிலை.அரங்கு-கூத்தன் ஆடுமிடம்.(121)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
122. தீய மக்களினும் விலங்குகள் மிக நல்லன


இக்காலத் திவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை--மெச்சா(து)
அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக.



(பதவுரை) இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையின்-இவ்வுடல் இப்பொழுதே அழியுந் தன்மையாயிருத் தலையறிந்து,பொச்சாவாப் போற்றி நோற்பாரை-மறவாமல் குறித்துக்கொண்டு மறம் தங்கண் நிகழாவழித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை, மெச்சாது-புகழாமல்,அலந்து-நொந்து, தம் வாய் வந்த கூறும் அவரின்-தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும்,விலங்குகள் மிக நல்ல-மிருகங்கள் மிகநல்லனவாகும்.

(குறிப்பு) ஆல், தாம்: அசைநிலை. இகழ்வால் வரும் பாவத்தையடையாமையின் விலங்குகள் நல்லனவாயின. (122)
 

     
   -------------------------------------------------------------------------------------------------------
 
123. பிறப்பின் கொடுமை கண்டு பின் வாங்குக


எண்ணற் கரிய இடையூ றுடையதனைக்
கண்ணினாற் கண்டுங் கருதாதே-புண்ணின்மேல்
வீக்கருவி பாய இருந்தற்றால் மற்றதன் கண்
தீக்கருமஞ் சோர விடல்



(பதவுரை) எண்ணற்கு அரிய-எண்ணமுடியாத, இடையூறு உடையதனை-துன்பத்துக்கு இடமானது உடல் என்பதனை, கண்ணினால் கண்டும் கருதாதே-கண்ணாற் கண்டும்
பிறப்பினை ஒழிக்க முயலாமல், மற்று அதன்கண் தீக்கருமம் சோரவிடல்-அதன்மேலும் தீய செயல்களில் மனத்தினைச் சோரவிடுதல், புண்ணின்மேல் வீக்கருவி பாய இருந்தற்றால்-புண்ணின்மேல் வாள் தாக்க அதனைத் தடுக்காது இருந்தாற் போலும்
.


(குறிப்பு) வீக்கருவி சாவினை எய்துவிக்கும் கருவி; அன்றி, மலையினின்றும் நீங்கி விழுகின்ற அருவி நீர் எனலுமாம்.வீ-சாவு; நீக்கம். வீக்கு+அருவி=வீக்கருவி; வீக்குதல்-உயர்ந்த இடத்திலிருந்து விழுதல். வீ+கருவி=வீக்கருவி (123)
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
124. உடம்பின் இழிவு


நெடுந்தூ ணிருகாலா நீண்முதுகு தண்டாக்
கொடுங்கோல் விலாவென்பு கோலி--உடங்கியநற்
புன் தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
இன்புறுவ ரேழை யவர்.



(பதவுரை) இரு கால் நெடுந் தூணா-இரண்டு கால்களையும் நெடிய தூண் களாகவும் ஊன்றி, நீள் முதுகு தண்டா-நீண்ட முதுகெலும்பைச் சட்டமாக இட்டு, விலா என்பு கொடுங்கால் கோலி-விலா வெலும்புகளைக் கொடுங்கைகளாக வளைத்து, உடங்கிய-அவை கூடி நிற்றற்கு, நல்புல் தோலால் வேய்ந்த-நல்ல மிருதுவான தோலால் மூடின, புலால் வாய்க் குரம்பையை-இறைச்சிமயமான உடலாகிய சிறிய மனையை, ஏழையவர்-அறிவில்லாதவர்கள், இன்புறுவர்-பார்த்துப் பார்த்து மகிழ்வார்கள்.

(குறிப்பு) உடங்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். குரம்பை-குடில்: சிறு வீடு. (124)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
125. உடலின் தூய் தன்மை


என்புகா லாக இருதோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்றறாத்--துன்பக்
குரம்பை யுடையார் குடிபோக்கு நோக்கிக்
கவர்ந்துண்ணப் போந்த கழுகு.


(பதவுரை) என்பு காலாக-எலும்பையே இரு தூண்களாகவும், இருதோளும் வேயுளா-இரண்டு தோள்களையும் வேய்ந்தமாடமாகவுமுடைய, ஒன்பது வாயிலும்-ஒன்பது வாயில் களிலும், ஊற்று அறா-மலமொழுக்குதலை இடையீடின்றிச் செய்கின்ற, துன்பக்குரம்பையுடையார்-துன்பத்துக்கேதுவான குடிலை (உடலை) யுடையவர்கள், குடி போக்கு நோக்கி -அதிலிருந்து நீங்கியதைப்பார்த்து, கழுகு-கழுகுகள், கவர்ந்து உண்ண-அக்குடிலை பிடுங்கித் தின்ன, போந்த-வந்தன.

(குறிப்பு) வேயுள்: தொழிலாகுபெயர். உள்: தொழிற்பெயர் விகுதி. போந்த: அன்சாரியை பெறாது வந்த பலவின்பால் வினைமுற்று. (125)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #26 on: September 18, 2011, 08:43:22 PM »
   
126. உடலின் இழிவு கண்டும் உலகிற்கு அறிவில்லை


ஒருபாகன் ஊருங் களிறைந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின்--தருகாலால்
பேர்த்தூன்ற லாகாப் பெருந்துன்பங் கண்டாலும்
ஓர்த்தூன்றி நில்லா துலகு.



(பதவுரை) ஒரு பாகன் ஊரும்-மனமாகிய ஒரு பாகன் ஏறிச் செலுத்துகின்ற, களிறு ஐந்தும் நின்ற-ஐந்து புலன்களாகிய யானைகளைந்தும் நின்ற, இருகால்-இரண்டு கால்களோடு கூடிய, நெடுங்குரம்பை - நெடிய உடலானது, வீழின் - வீழ்ந்தால், தருகாலால்-வேறு கால்களால், பேர்த்து ஊன்றலாகா-மீட்டும் நிலைபெறச் செய்யவியலாத, பெருந்துன்பங் கண்டாலும் - மிக்க துன்பச் செயலை நேரில் பார்த்தாலும், உலகு ஓர்த்து ஊன்றி நில்லாது-உலகினர்யாக்கை நிலையாமையை ஆராய்ந்து நன்னெறியில் நிலையாக நில்லார், இஃதென்ன பேதமை?

(குறிப்பு) ஆகா: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உலகு: இடவாகுபெயர். (126)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
127. மக்களின் கடமைகள் இவையென்பது


நீத்தொழிந்த ஆறைந் தடக்கிப்* பின் நிச்சயமே
வாய்த்தமைந்த வாயில்பெண் ஆனையுங்**--கூத்தற்கு
வாளேறோ டோசை விளைநிலம் இவ்வல்லாற்
கேளா யுடன்வருவ தில்.



*அடங்கியபின். **பெண்ணாளையும்.

(பதவுரை) நீத்து-நீந்துதற் றொழிலானது, ஒழிந்த-நீங்கிய, ஆறு-வழியாக நிலை, ஐந்து அடக்கி-தலை கால் முதலிய ஐந்து உறுப்புக்களையும் இடருற்ற காலத்தே ஓட்டினுள் மறைத்துக் கொள்வதாகிய யாமை, பின் நிச்சயமே-பின்பு உறுதியாக, வாய்த்து-பொருந்தி, அமைந்த-திருந்திய, வாயில்-வாசலாகிய கடை;பெண் ஆனையும்-பிடியும், கூத்தற்கு-சிவபெருமானுக்கு, வாள் ஏறு - வாளாயுதம் எறிவதாலுண்டாகிய புண், ஓசை - ஒலிப்பதாகிய இயம்; விளைநிலம்-விளையுங் கழனியாகிய செய்(தலும்) ஆகிய, இவ் அல்லால்-இவ்விரண்டுமன்றி (வேறாக), கேள் ஆய்-உறவாய், உடன் வருவது-மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது, இல்-இல்லையாம்.

(குறிப்பு) ''நிலையாமை கடைப்பிடியும், சிவபுண்ணியஞ் செய்தலுமாகிய இவ் விரண்டும் அன்றி, வேறாக உறவாய் மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது இல்லையாம்'' எனத்தடித்த எழுத்திலிட்ட மொழிகளைக் கூட்டிக் கருத்தினைக் காண்க. இவை குறிப்பால் பொருள்தரு மொழிகளாம். இவற்றை நன்னூல் சொல்லதிகாரம் பெயரியலில், ''ஒன்றொழி பொதுச்சொல்'' என்ற சூத்திரத்தாற் கொள்க. மூலத்தின்கணுள்ள திருத்தங்களையும் அங்குள்ள விருத்தியுரையாற் காணலாம். (127)
 
      ------------------------------------------------------------------------------------------------------
     
128. நாள் சில; பிணி மூப்பு முதலியன பல


வாழ்நாளிற் பாகம் துயில்நீக்கி மற்றவற்றுள்
வீழ்நா ளிடர்மூப்பு மெய்கொள்ளும்--வாழ்நாளுள்
பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ் வுலகு.


(பதவுரை) வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி-ஆயுட்காலத்தில் பாதியை உறக்கத்தில் கழித்து, மற்றவற்றின்-மறுபாதியில்,வீழ் நாள் - தளர்கின்ற காலத்தில், இடர்-துன்பத்துக்குக் காரணமாகிய, மூப்பு-கிழத்தன்மையை, மெய்கொள்ளும்- உடல் அடையும், வாழ்நாளுள்-துயிலும் மூப்பும் போக உள்ள வாழ்நாளில், பல் நோய்கவற்ற-பல துன்பங்கள் வருத்த, பரிந்து குறை என்னை - வருத்துவதனாலாங் காரியம் யாது? இவ்வுலகு அன்னோ அளித்து-இவ்வுலக வாழ்க்கை ஐயோ, இரங்கத்தக்கது.

(குறிப்பு) அன்னோ: இரக்கக் குறிப்பிடைச் சொல். 'எவன்' என்னும் வினாவினைக் குறிப்பு 'என்னை' என மருவியது. (128)
 

     
     ---------------------------------------------------------------------------------------------------

129. தவமில் வாழ்வு அவ வாழ்வு


உடம்புங் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும்--அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்.


(பதவுரை) உடம்பும்-உடலும், கிளையும்-சுற்றமும், பொருளும்- செல்வமும், பிறவும்-மனை முதலியனவும், பின்தொடர்ந்து செல்லாமை கண்டும்-தம்மையுடையவன் இறந்தவிடத்து அவனைப் பின்பற்றிச் செல்லாதிருத்தலைப் பார்த்தும், அடங்கி-மனமொழி மெய்களானடங்கி, தவத்தோடு தானம் புரியாது-தவத்தினையும், தானத்தினையுஞ் செய்யாமல், வாழ்வார்-வாழ்கின்றவர்களுக்கு, கழிகின்ற நாள்-கழிகின்ற நாட்கள், அவத்தம்-வீணேயாகும்.

(குறிப்பு) அவம்+அத்து+அம்=அவத்தம்; அத்து: சாரியை; அன்றி, அபத்தம் அவத்தம் என மாறிய வடமொழியாக்கலுமாம். ஓடு; எண்ணுப் பொருளில் வந்தஇடைச்சொல். (129)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
130. இச்சகம் பேசேல்


போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம்
தோற்றியார் கண்ணெல்லாம் தொண்டேபோல்--ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப(து) எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு.


(பதவுரை) புதுச் செல்வம் தோன்றியார்கண் எல்லாம்-புதிதாகச் செல்வத்தை யடைந்தாரிடத் தெல்லாஞ்சென்று, கொண்டேபோல்-அடிமையைப் போல், போற்றியே போற்றியே யென்று-நீ என்னைக் காத்தல் செய்வாயாக, நீ என்னைக் காத்தல் செய்வாயாக என்று, ஆற்றப் பயிற்றிப் பயிற்றி-மிக பலகாற்சொல்லி, பல உரைப்ப தெல்லாம்-அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாடுவ தெல்லாம், வயிற்றுப் பெருமான் பொருட்டு-வயிறு வளர்த்தற் பொருட்டேயாகும்.

(குறிப்பு) அடுக்குகள் பன்மைகுறித்து நின்றன. வயிற்றுப் பெருமான் என்றது இழிவுப்பொருள் கருதியது.மானிடரைப் புகழ்வது அறமன்று என்றவாறு. (130) 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #27 on: September 18, 2011, 08:50:19 PM »
   
131. உடலினைமட்டும் ஓம்பலாற் பயனில்லை


புகாஉண்பார் அல்லுண்ணார் போகுந் துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும்--அவாவினைப்
பற்றுச்செய் தென்னை பயமின்றால் நன்னெஞ்சே!
ஒற்றி உடம்போம் புதற்கு


(பதவுரை) நன்னெஞ்சே-எனது நல்ல நெஞ்சமே!, புகா உண்பார்-பகலில் சோறுண்டாரும், அல்லுண்ணார் -இரவில் சோறுண்ணவிராது மாய்வர், போகுந் துணைக்கண் -உயிர் நீங்குங்காலத்தில், தவாவினை-தவறாது ஒருவன் செய்த வினையே (அவனை) வந்தடையக் கண்டும்-வந்து சேர்வதை அறிஞர்வாய்க் கேட்டுணர்ந்தும், ஒற்றி உடம்போம்புதற்கு - உடைமையல்லாத இவ் வுடம்பினைப் பாதுகாத்தற்கு, அவாவினைப் பற்றுச் செய்தென்னை-பொருள்களிடத்து ஆசை கொள்ளுதலால் விளைவதென்னை?, பயமின்று - யாதொரு பயனுமில்லை.

(குறிப்பு) தவா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஆல்: அசைநிலை. ஒற்றி - அடைமானமாய்க் கொண்டுள்ளபொருள். (131)
 

     
    ------------------------------------------------------------------------------------------------------
 
132. மூப்பு இறப்புகளின் கொடுமை


புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய்--விழுத்துமிழ்ந்(து)
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நன்னெஞ்சே! நாடாய்காண் நற்கு


(பதவுரை) புழுப்போல் உவர்ப்பு ஊறி - புழுக்கள்போல் வெறுக்கத் தக்க குணங்களும் மிகுதலால், பொல்லாங்கு நாறும்-தீமைகள் பிறப்பதற்கிடமாக இருக்கின்ற, அழுக்கு உடம்பு தன்னுள்-தூயதல்லாத உடம்பினிடத்தே, நல்நெஞ்சே-நல்ல மனமே! வளர்ந்தாய்-நீ வளரா நிற்கின்றாய், விழுத்து உமிழ்ந்து-நீ வளரும் உடம்பு படுக்கையிடை வீழ்ந்து கோழையைக் கக்கி உமிழ்ந்து, இன்ன நடையாய் இறக்கும் வகையினை-இவைபோன்ற பிற ஒழுக்கத்தோடும் இறக்கு மென்பதனை, நற்கு நாடாய்-நன்கு ஆராய்ந்தறிந்து அதன்மீதுள்ள பற்றினை விடுவாயாக.

(குறிப்பு) 'விழுத்து' என்பது விழுந்து என்பதன் விகாரம். நன்கு நற்கு என்றாயது. ''மென்றொடர் மொழியிற் சில வேற்றுமையில் தம்மின வன்றொடர்.'' என்ற விதியாலாம். காண்: முன்னிலையசை. (132)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
133. ஒழுக்கமிலாதான் உயிர்விடுதல் நன்று


ஒழுக்க மிலனாகி ஓர்த்துடைய னேனும்*
புழுப்பொதிந்த புண்ணிற் கொடிதாம்--கழுக்கிரையை
ஓம்பின்மற் றென்னை உறுதிக்கண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று.
*ஓர்த்துடைய யென்னும்.


(பதவுரை) ஓர்த்து உடையனேனும் - அறிவு நூல்களை ஆராய்ந்துணர்ந்த அறிவினனே யெனினும்,புழுப்பொதிந்த-புழுக்கள் நிறைந்த, புண்ணிற்கொடிதாம் கழுக்கிரையை-புண்ணினுங் கொடியதும் கழுகுகளுக் கிரையாவதுமாகிய உடலை, ஒழுக்கமிலனாகி ஓம்பின் - தீயொழுக்கத்தை மேற்கொண்டு வளர்த்து வருவானாயின், மற்று என்னை-அவன் அவ் வறிவாலடையும் பயன் யாது?, உறுதிக் கண் நில்லாக்கால்-நன்னெறிக்கண் நில்லாதவிடத்து, தேம்பி விடுதலே நன்று-அவன் அழிந்துவிடுதலே நல்லது.

(குறிப்பு) கழுகுக்கிரை என்பது கழுக்கிரை எனக்குறைந்தது. கழுகுக்குன்றம் என்பது கழுக்குன்றம் எனவருதல் போல. (133)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
134. உண்மைப் பெரியார் உலக வாழ்க்கையை வெறுப்பர்


முடையுடை அங்கணம் நாடோறும் உண்ட
கடைமுறைவாய் போதரக் கண்டுந்--தடுமாற்றில்
சாவாப் பிறவாஇச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு.



(பதவுரை) முடை யுடை-அழுகல் நாற்றத் தினையுடைய, அங்கணம்-சாக்கடையினைப்போன்று, நாடோறும்-தினந்தோறும், உண்ட-சாபிட்ட உணவுப் பொருள்கள், கடைமுறை-இழிவான நிலையில், வாய் - எருவாய் முதலியவற்றின் வழியாக, போதர - வெளி வருதலைச் செய்ய, கண்டும்-பார்த்திருந்தும், தடுமாறு இல்-(மக்கள்) மனமயக்கத்தினாலே, சாவா-செத்தும், -பிறவா-பிறந்தும்(வாழுகின்ற) இச் சம்பிரத வாழ்க்கைக்கு - இம்மாயமான உலக வாழ்க்கையிடத்தே, மெய்கண்டார் - உண்மைப்பொருளையுணர்ந்த பெரியோர்களின், நெஞ்சு - மனம், மேவாதாம்-பொருந்தாததாகும்.

(குறிப்பு) இல்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளானது. சாவா, பிறவா, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். வாழ்க்கைக்கு: வேற்றுமை மயக்கம். (134)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
135. அறிவாளிகளின் கடமை


வயிறு நிறைக்குமேல் வாவின்மிக் கூறிச்
செயிரிடைப்பா டெய்துமாஞ் சீவன்--வயிறுமோர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன்.



(பதவுரை) வயிறு நிறைக்குமேல் - உணவால் வயிறு நிறைக்கப்படுமாயின், சீவன்-உயிர், வாவின் மிக்கு ஊறி-மிக்கு அவாவினை யடைந்து, செயிரிடைப் பாடு எய்தும்-தீவினைகளிடைக் கேட்டினை யடையும் (ஆதலால்), வயிறும்-வயிற்றையும், ஓர் பெற்றியால் ஆர்த்தி-கரணங்கள் தொழிற்கு உரியனவாகுமாறு சிறிது உண்பித்து, பெரும்பயன் கொள்வதே-இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்து பெரும்பயன் கொள்வதே, கற்று அறிந்த மாந்தர் கடன்-அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

(குறிப்பு) வாவின்: தலைக்குறை. இடை: ஏழனுருபு. ஏ: தேற்றம். (135)
 
     
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #28 on: September 18, 2011, 08:54:57 PM »
   
141. அடக்கம் அனைத்தையும் தரும்


தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை--தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.


(பதவுரை) தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்-தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை-பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்து மில்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்-தன்னைத்தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு-பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத் தகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.

(குறிப்பு) களிறு-ஆண் யானை; பிடி-பெண் யானை. குறுமை+ஏவல்=குற்றேவல்; எளிய வேலைகள். கரி-சான்று, சாட்சி. (141)
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
142. உள்ளத்துயர்வே உயர்வுறும்


உள்ளூர் இருந்துந்தம் உள்ளமறப் பெற்றாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுளார் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூ ருளார்.


(பதவுரை) உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்-இல் வாழ்க்கையை மேற்கொண்டு நடுவூரின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறுவாராயின், கள் அவிழ்சோலை ஆம் காட்டு உளார்-அவர், தேன் சொரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டின்கண்ணே வாழும் துறவியே ஆவர்; காட்டுள்ளும் உள்ளம் அறப்பெறுகல்லாரேல்-துறவறத்தை மேற்கொண்டு காட்டின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறாராயின், நாட்டுள்ளும் நடுவூர் நண்ணி உளார்-அவர் நாட்டின் கண்ணதாகிய நடுவூரில் மனைவாழ்க்கையை மேற்கொண்டிருந்து, தீய செயல்களைப் பொருத்தி வாழும் கயவரையொப்பர்.

(குறிப்பு) உள்ளூர், மக்கள் கூடிவாழும் இடமாதலின் இல்வாழ்க்கையைக் குறிக்கவல்லதாயிற்று. நடுவூர் மக்களிடையே நெருங்கி வாழும் இடமாதலின் தீய செயல்களைச் செய்யப்படுமிடமாகக் கருதப்பட்டது. (142)
 

     
  ---------------------------------------------------------------------------------------------------------

   
143. மனத்தை யடக்குவார் மாபெருஞ் சிறப்படைவர்


நின்னை யறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்--நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ்.


(பதவுரை) நல் நெஞ்சே நின்னை அறப் பெறுகிற்கிலேன்-நல்ல நெஞ்சே! உன்னைச் சிறிதும் என் வசமாக்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றேன்; பின்னை-இனி, யான்-உன்னையே வசமாக்கிக்கொள்ளாத யான், யாரைப் பெறுகிற்பேன்-மற்றையவர்களை எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!, நின்னை அறப்பெறுகிற்பேனேல்-உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின், துறக்கம் திறப்பது ஓர் தாழ்-துறக்க உலகத்தினைத் திறந்துவிட வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை, ஈண்டே பெற்றேன்-இம்மையிலேயே பெற்றவனாவேன்.

(குறிப்பு) கில்: ஆற்றல் இடைநிலை: பெற்றேன்: உறுதிபற்றி வந்த காலவழுவமைதி. மற்று: அசைநிலை. ஏ: பிரிநிலை. (143)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
144, ஐம்பொறிகளும் ஆடம்பரத் தோழர்களாம்


ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர்--தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன்.



(பதவுரை) ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு-அறிவில்லாதவனும் மிக்க மயக்கத்தையுடையவனுமாகிய ஒருவனுக்கு, தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர்-ஐம்பொறிகளாகிய நட்பினரைவரும் இடுக்கண் வந்துழி உதவாத உறவினரேயாவர்: தோழர்-அந்நட்பினர், வெறுப்பனவும்-அறிஞர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக வருவனவற்றையும், உண்டு-உவகையோடு நுகர்ந்து, எழுந்து போனக்கால்-உடம்போடு எழுந்துபோன (மரணத்தின்) பின்னர், உண்ட கடன்-அவர்களை உண்பிக்கத் தான்பட்ட கடனாகிய தீவினையை, ஆதன் இறுக்கும் ஆம்-அவ்வறிவில்லாதவன் அதனால் வரும் துன்பத்தை மறுமையில் அனுபவத்தே தீர்ப்பவனாவான்.

(குறிப்பு) இதனால் அறிவில்லாதவர்கள் மறுமைக்காகச் செய்து கொள்வது துன்பமேயன்றி இன்பமில்லை என்பது பெறப்பட்டது. ‘உண்ட’ என்பது பிறவினைப்பொருளில் வந்தது. (144)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
145. மனத்தை யடக்கியவன் மாபெருந் தெய்வம்


தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல்--என்னை
எழுந்தெண்ணே நோக்கி இருமையுங் கண்டாங்(கு)
அருட்கண்ணே நிற்ப தறிவு.


(பதவுரை) தன்னைப் பின்னை மனம் அறத்தான் பெற்றானேல்-இன்பம் பயப்பது போன்ற தன்னைத் தீநெறிகளில் முன்னர்ச் செலுத்திப் பின்னர் வருந்துகின்ற மனத்தினை ஒருவன் அடக்குவானாயின், தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை-அவனை நிகர்க்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை; எழுத்து எண்ணே நோக்கி என்னை-இலக்கணம் சோதிடம் முதலியவற்றையே ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது, இருமையும் கண்டு-இம்மையிற் புகழும் மறுமையிலின்பமும் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து, அருட்கண்ணே நிற்பது அறிவு-அருளை மேற்கொண்டு ஒழுகுதலே அறிவுடைமையாகும்.

(குறிப்பு) ஆங்கு: அசைநிலை; ஏழனுருபு. (145)
 
« Last Edit: September 18, 2011, 08:57:51 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #29 on: September 18, 2011, 09:28:58 PM »
   
146. அறிவார்க்கும் அறியார்க்கும் கவலை யொன்றே


தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்*
விடுமாற்றந் தேர்ந்தஞ்சித் துஞ்சார்--தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார்தம் ஐம்புலனும்
ஆரும்வகை யாதாங்கொ லென்று.


*தம்மையுடையார்

(பதவுரை) தடுமாற்றம் அஞ்சிய தன்மையுடையார்-கலக்கத்திற்குக் காரண மாகிய பிறப்பு இறப்புகளை அஞ்சிய பெரியோர்கள், விடுமாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார்-அவற்றைப் போக்கும் உபாயத்தினை ஆராய்ந்துகொண்டே அவ்வச்சத்தால் துயிலார், தடுமாற்றம் யாதும் அறியாரும்-பிறப்பு இறப்புகளைச் சிறிதும் சிந்தியாதவர்களும், தம் ஐம்புலனும் ஆரும் வகை யாதாம் என்று துஞ்சார்-தம் ஐம்பொறிகளாலும் இன்பத்தை நுகருதற்கேற்ற உபாயம் யாது? என்று ஆரய்ந்துகொண்டே கவலையால் துயிலார்.

(குறிப்பு) ஆர்தல்-நுகர்தல்; தடுமாற்றம்-தடுமாறுதல்: அம் ஈற்றுத்தொழிற்பெயர். கொல்: ஐயம். 'பாலுக்குச் சர்க்கரையில்லை யென்பார்க்கும் பருக்கையற்ற, கூழுக்குப்போட உப்பில்லை யென்பார்க்கும்......விசனமொன்றே' என்ற தொடர்மொழியின் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (146)
 

     
   ---------------------------------------------------------------------------------------------------
 
147. ஐம்பொறிகளால் ஆங்காலுந் துன்பம், போங்காலுந் துன்பம்


ஆர்வில் பொறியைந்திற் காதி இருவினையால்
தீர்விலநீ கோதாதி சேர்விக்குந்--தீர்வில்
பழியின்மை யெய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலு முண்டு
.


(பதவுரை) நீ ஆர்வில் பொறி ஐந்திற் காதி-நீ செல்வமுற்ற காலத்து நிரப்புதற் கொண்ணாத மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் ஆளாகின்றாய்; இன்மை எய்தின்-நீ வறுமையுற்ற காலத்து, இரு வினையால்-நல்வினை தீவினை என்னுமிருவினைகளால், தீர்வில கோதாதி சேர்விக்கும்-விட்டு விலக இயலாத குற்றமுதலியவற்றில் படிவிக்கும்படியான, தீர்வில் பழி-நீங்குதலில்லாத பழியும், பறையாத பாவம்-இத்தன்மையதென் றியம்ப வொண்ணாத கொடிய நிலையும், வழியும்-அப்பொறிகளின் வழியாக, வருதலும்உண்டு-ஏற்படுதலும்கூடும்.

(குறிப்பு) சேர்விக்கும்: பிறவினைப் பெயரெச்சம். வழியும்-உம்: அசைநிலை, வருதலும்-உம்: எதிர்மறைப்பொருளது. (147)
 
     ----------------------------------------------------------------------------------------------------
     
148. மனத்துறவுள்ளோர் மயக்கில் அகப்படார்


அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலா தாகும்--அலைவிற்
புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே
மலங்கடி வாளா தவர்க்கு.



(பதவுரை) அலை புனலுள் நிற்பினும்-அலைகளையுடைய நீரின் கண்ணே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண்-தாமரையிலையிடத்து, நீர் நில்லாது ஆகும்-நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவிற் புலன்களில் நிற்பினும்-சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு-முனிவர்களை, கடிவுமலம் ஆளா-அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா; பொச்சாப்பு இலர்-அவர்களும் மறதியால் அவற்றின் வயப்படுதலு மிலர்.

(குறிப்பு) 'தவர்க்கு' என்பதில் இரண்டனுருபுக்கு நான்கனுருபு வந்துள்ளது: உருபு மயக்கம். ஏ: ஈற்றசை. அலை புனல்: வினைத்தொகை. (148)
 
    ----------------------------------------------------------------------------------------------------- 
     
149. தன்னலமற்ற அறமே தலையாய அறமாம்


பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண் நில்லா தறஞ்செய்க--மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.


(பதவுரை) பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்-நெஞ்சே! நற்குணமிக்க செயல்களைத் தவறாமல் செய்யக்கருதினால், பற்றின்கண்நில்லாது அறஞ்செய்க-அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக, அது-அவ்வறம், பொன்றாப் புகழ் நிறுத்தி-இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து, போய்ப் பிறந்த ஊர் நாடி-மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி, கன்று உடை தாய்போல் வரும்-தாய்ப்பசு தன் பாலை யருந்தத் தன் கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால் விரைந்து வரும்.

(குறிப்பு) பொன்றா: பொன்றாத என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ''பல்லாவுள'' எனத் தொடங்குகின்ற நாலடியாரின் செய்யுட் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (149)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
150. இன்பமும் துன்பமும் ஒன்றென எண்ணுக


பேறழிவு சாவு பிறப்பின்பத் துன்பமென்
றாறுள அந்நாள் அமைந்தன--தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)
இவையிவை என்றுணரற் பாற்று.



(பதவுரை) பேறு-செல்வம், அழிவு-வறுமையும், சாவு-இறப்பும், பிறப்பு-பிறப்பும், இன்பம்-இன்பமும்,துன்பம்-துன்பமும், என்ற ஆறு-என்று சொல்லப்படுகின்ற ஆறும், அந்நாள் அமைந்தன உள-முன்செய்த வினைகாரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; அவையவை வந்தால்-இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும், விம்மாது-மகிழாமலும், அழுங்காது-வருந்தாமலும், இவை-நம்மை நாடி வந்த இவை, இவை என்று தேறி உணரற்பாற்று-இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்தறிந்து அடங்குதலே செயத்தக்கது.

(குறிப்பு) என்ற+ஆறு=என்றாறு: அகரம் தொகுத்தல். அவை அவை: அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளது. (150)