Author Topic: சிலப்பதிகாரம்  (Read 39850 times)

Offline Anu

சிலப்பதிகாரம்
« on: February 22, 2012, 07:43:55 AM »
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.

மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள். மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள். நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர், குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.

பதிகம்

குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நளங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக் - 5

கமரர்க் கரசன் தமர்வந் தீண்டிஅவள்
காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங்
கட்புலங் காண விட்புலம் போய
திறும்பூது போலுமஃ தறிந்தருள் நீயென
அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் - 10

யானறி குவனது பட்டதென் றுரைப்போன்
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவல னென்பானோர் வாணிகன் அவ்வூர்
நாடக மேத்தும் நாடகக் கணிகையொ -15

டாடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி யென்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு - 20

மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொலலன் றன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லைஈங் கிருக்கென் றேகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் - 25

கண்டனன் பிறனோர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதுஞ்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉயக் கள்வுனைக்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் - 30

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களங் காணாள் நெடுங்கணீர் உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய - 35

பலர்புகழ் பத்தினி யாகு மிவளென
வினைவிளை கால மென்றீர் யாதவர்
வினைவிளை வென்ன விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் - 40

வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழற் சீற்றங் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் - 45

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கம னென்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபங் கட்டிய தாகலின்
வாரொலி கூந்தனின் மணமகன் றன்னை - 50

ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்ட லில்லெனக்
கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென
அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் - 55

உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென - 60

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே யருளுகென் றாற்கவர்
மங்கல வாழ்த்துப் பாடலுங் குரவர்
மனையறம் படுத்த காதையு நடநவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - 65

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதையும்
இந்திர விழவூ ரெடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையுந் தீதுடைக் - 70

கரனாத்திற முரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை
ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை - 75

அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறங் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் - 80

அழற்படு காதையும் அருந்தெய்வந் தோன்றிக்
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு - 85

இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசா லடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். - 90

பதிகம்

அஃதாவது இந்நூலின்கட்போந்த பொருளை நிரலாகத் தொகுத்துக் கூறும் சிறப்புப் பாயிரம் என்றவாறு.

பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுத றானே

என்பதுமுணர்க.

இனி, பதிகம் என்ற சொல் பாயிரம் என்னும் பொருட்டுமாகும் என்பதனை,

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்,

எனவரும் நன்னூற் சூத்திரத்தால் உணர்க.

பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. அவற்றுள் இப்பதிகம் இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரம் ஆகும். சிறப்புப் பாயிரம் நூலாசிரியனாற் கூறப்படாது என்பதும், நூலாசிரியனின் ஆசிரியர் முதலிய பிறராற் செய்யப்படும் என்பதும் நன்னூலால் அறியப்படும்.

ஓருந் தமிழ் ஒருமூன்று முலகின்புற வகுத்துச் சேரன் தெரித்த இச்சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந் தெரியத் தொகுத்துரைத்து இப்பதிகஞ்செய்த சான்றோர் பெயர் முதலியன அறிந்திலேமாயினும், இப்பதிகம் நூலாசிரியராகிய இளங் கோவடிகளாராற் செய்யப்பட்டிலது; பிறசான்றோராற் செய்யப்பட்டது என்பதனை ஈண்டுக் குறிக்கொண்டுணர்க.

இனிப் பதிகம் நூலாசிரிய ரானும் செய்யப்படும் என்பதனைச் சீவக சிந்தாமணி யென்னும் செந்தமிழ் வனப்புநூற்பதிகம் அதனாசிரியராகிய திருத்தக்க தேவராற் செய்யப் பெற்றிருத்தலால் அறிகின்றோமெனினும், பதிகம் நூலாசிரியராற் செய்யப்படாதென்பதற்குக் காரணம் தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்பது கருதியேயாம். ஆகவே, நூலாசிரியன் பதிகம் செய்யுங்கால் அவையடக்கியல்பற்றித் தான் தற்புகழாது தனது நூற்பொருளைத் தொகுத்துக்கூறுதல் அமையும் என்பதும் அவ்விதியாலேயே பெறப்படுதலின் இவ்வாற்றால் திருத்தக்க முனிவர் தம் நூற்குத் தாமே (பாயிரம்) பதிகம் செய்தனர் என்றறிக. இச்சிலப்பதிகாரத்திற்குப் பதிகம் செய்தார் பிறரே; அடிகளார் செய்திலர் என்பதை இப்பதிகத்தின் உரையின்கண் இன்றியமையாத விடத்தே கூறுதும். ஆண்டுக் கண்டுகொள்க.

1-9 : குணவாயில்........அறிந்தருள்நீயென

(இதன்பொருள்) குடக்கோச் சேரல் அரசு துறந்து குணவாயில் கோட்டத்து இருந்த இளங்கோ அடிகட்கு - முத்தமிழ் நாட்டின் கண் குடக்கின்கண் அமைந்த சேர நாட்டிற்கு மன்னனாகிய சேரன் செங்குட்டுவனுக்கும், ஒருகாரணத்தால் தமக்குரிய அரசுரிமையையும் பிறவற்றையும் ஒருங்கே துறந்து திருக்குணவாயில் என்னும் கோயிலின்கண் நோற்றிருந்த சான்றாண்மை மிக்கவரும் அச் சேரலுக்குத் தம்பியாதலின் இளங்கோ என்னும் திருப்பெயருடையாருமாகிய அடிகளார்க்கும், குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி -அவர்தாம் அரசியற் சுற்றத்துடன் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடை கரை இருமணல் எக்கரிடத்தே ஒருங்கிருந்துழி ஆங்கு மலையிடத்தே வாழ்வோராகிய குறவர் எல்லாம் ஒருங்கே திரண்டு சென்று வணங்கியவர் செங்குட்டுவன் திருமுக நோக்கி, கொற்றவ! ஈதொன்று கேட்டருள்க; பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் - எம் மூர்க்கணித்தாகிய நெடுவேள் குறத்தின்கண் பொன்னிறமுடைய பூக்கள் மலிந்தவொரு வேங்கை மரத்தினது நன்மைமிக்க கொழுவிய நீழலிலே; ஒருமுலை இழந்தாள் ஓர் திருமாபத்தினிக்கு -தன் திருமுலைகளுள் ஒன்றனை இழந்தவளாய் வந்து நின்ற திருமகள் போல்வாளும் சிறந்த பத்தினியுமாகிய ஒருத்தியைக் கண்டோம்; யாங் கண்டு நிற்கும் பொழுதே அவள் பொருட்டு; அமரர்க்கரசன் தமர் வந்து ஈண்டி அகல் விசும்புளார் கோமானாகிய இந்திரனுடைய சுற்றத்தார் வானத்தினின்று மிழிந்து வந்து அவள் முன்குழீஇ; அவள் காதல் கொழுநனைக் காட்டி - வல்வினை வந்துறுத்த காலை மதுரைக் கண் அவள் இழந்த கணவனையும் அவட்குக் காட்டி, பீடு கெழு மந்நங்கையின் புகழைப் பாராட்டித் தமது வானவூர்தியின்கண் கணவனோடு ஏற்றி; அவளொடு எம் கண்புலம் காண விண்புலம் போய அது - அத்திருமாபத்தினியோடு அவ்வமரர்கள் வலவனேவா வானவூர்தியின்கண் எளிய மாந்தராகிய எம் ஊன் கண்ணும் கண்கூடாகக் காணும்படி வானிடத்தே சென்ற அக் காட்சியையும் கண்டேம் அக்காட்சி தானும்; இறும்பூது போலும் எளியேங்கட்குப் பெரிதும் மருட்கை தருவதொன்றாயிருந்தது; நீ அறிந்து அருள் என - எம்பெருமான் இந்நிகழ்ச்சியைத் திருவுளம் பற்றியருளுக ! என்று கூறி மீண்டும் வணங்கா நிற்ப என்க.

விளக்கம் 1-3 : குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகள் என இயைக்க. குடக்கோ. தமிழகத்தின் மேற்றிசைக் கண்ணதாகிய சேர நாட்டு மன்னன்; அவனாவான் சேரன் செங்குட்டுவன் என்க. சேரல். சேர மன்னன். சேரல் இளங்கோவடிகள் என்புழிச் சேரனும் இளங்கோவடிகளும் ஆகிய இருவர்க்கும் எனல் வேண்டிய எண்ணும்மையும் ஆக்கச் சொல்லும் தொகைச்சொல்லும் தொக்கன.

இனி, சேரலும் இளங்கோவடிகளும் மலைவளங்காணச் சென்று பேரியாற்றடைகரை யிடுமணல் எக்கரின்கண் ஒருங்கிருந்துழி அவ்விருவர்க்கும் குறவர் வந்து குழீஇக் கூறி பொலம்... அறிந்தருள்நீ எனச் சேரலை நோக்கிக்கூற என்பது கருத்தாகக் கொள்க.

குன்றக் குறவர், குன்றுகளில் வாழ்வோராகிய குறவர். இனி குன்றம், என்றது திருச்செங்குன்று என்னும் மலை என்பர் அடியார்க்கு நல்லார். திருச்செங்கோடு என்பாருமுளர் என்று கூறி, அது பொருந்தாது என்று மறுத்துங் கூறியுள்ளார்.

4. பொலம்பூவேங்கை - பொன்னிறமான பூவையுடைய வேங்கை. திருமாபத்தினிக்கு நிழலாகும் பேறுபெற்றமையின் நலங்கிளர் நிழல் என்று விதந்தார்.

5. தாம் கண்கூடாகக் கண்டமை தோன்ற ஒரு முலையிழந்தாள் என்று குறவர் கூறினர் என்க. மேலும் கண்ணகியாரே இக்குன்றக் குறவர்க்கு மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்துருத்தகாலை கணவனை அங்கிழந்து போந்த கடுவினையேன் யான் என்றறிவித்தமையின் ஓர் திரு மா பத்தினி என மூன்று அடைமொழிகளால் விதந்தோதினர் என்க.

6. அமரர்க்கரசன் தமர் என்றது இந்திரனுடைய அரசியற் சுற்றத்தாரை.

7-9. காதற்கொழுநன் என்றது அப் பத்தினி இழந்த காதற் கணவனை என்பதுபட நின்றது. அமரர்கள் மாந்தர் கண்களுக்குப் புலப்படாராகவும், எங் கண்களுக்குப் புலப்படலாயினர் என்று வியப்பார் எங்கட் புலம்காண என்றார். கட்புலம் காண என்றது கட்குப் புலப்பட என்றவாறு. புலம் ஈண்டு ஒளி. அதாஃவது உருவம். இறும்பூது மருட்கை. இந்நிகழ்ச்சி யாம் கண்கூடாகக் கண்டதேயாயினும் இக் காட்சி மெய்யோ? பொய்யோ? என்று மருள்கின்றோம் என்பார் போய அது இறும்பூது போலும் என்றனர். போய+அது என்று கண்ணழித்துக் கொள்க. போனதாகக் கண்ட அக்காட்சி என்பது பொருள். போலும் . ஒப்பில் போலி.

இனி, அறிந்தருள் நீ என்றது, இங்ஙனம் இந்நாட்டின் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி இந்நாட்டிற்குத் தீங்கு பயக்குமோ? நன்மை பயக்குமோ? யாமேதுமறிகிலேம் அறிந்து ஆவன செய்யும் கடப்பாடுடைய நீ அறிந்தருள்க என்பதுபட நின்றது. என்னை, முலை யிழந்து வந்தமையால் தீமைபயக்கும் என்றும், வானவர்தமர் வந்து கணவனைக் காட்டி அழைத்துப் போனமையால் நன்மை பயக்கும் என்றும், இருவகைக்கும் இந்நிகழ்ச்சி பொருந்துதலால் யாங்கள் இவற்றுள் ஒன்று துணிகிலேம். இவற்றைத் துணியுந் தகுதியுடைய நீயே அறிந்தருள்க என்பதே அக் குறவர் கருத்தாகலின் என்க.

இது மருட்கை என்னும் மெய்ப்பாடு.

10-11 : அவனுழை ........ ...... உரைப்போன்

(இதன் பொருள்.) அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் அது கேட்ட செங்குட்டுவன்றானும் பெரிதும் வியப்புற்றுத் தன் பக்கலிலுள்ளாரை நோக்க அப்பொழுது அவ்வரசன் மருங்கிலிருந்த குளிர்ந்த தமிழ்மொழிப்புலமையுடையோனாகிய சாத்தன் என்பான்; யான் அது பட்டது அறிகுவன் என்று உரைப்போன் அரசனுடைய குறிப்பறிந்து வேந்தர் பெருமானே ! யான் அந்நிகழ்ச்சியினது வரலாற்றினை நன்கு அறிந்துளேன் ஆகலின் கூறுவல் கேட்டருள்க என்று தொடங்கி அதனைக் கூறுபவன் என்க.

(விளக்கம் 1) : அவன் - சேரன் செங்குட்டுவன். அவன் என்பது இளங்கோவடிகளைச் சுட்டியதாகக் கருதுவர் உயர்திரு நாட்டாரவர்கள். அது பொருந்தாது என்னை? இப்பதிகஞ் செய்த சான்றோர் தொடக்கத்தே இளங்கோவடிகள் என அடிகளாரைக்கூறிவைத்து வழக்கினாகிய உயர்சொற்கிளவியாகிய ஒருவரைக் கூறும் அப்பன்மைக் கிளவிக்குப் பொருந்தாத அவன் என்னும் ஒருமைச் சுட்டாற் சுட்டார் ஆதலின் என்க; பின்னும் இவர் அடிகளாரைப் பன்மையாலேயே அடிகள் நீரே அருளுகென்றாற்கு அவர் என்றே சுட்டுதலும் உணர்க. ஈண்டும் குன்றக்குறவர் அறிந்தருள்நீ எனச் செப்பியது சேரன் செங்குட்டுவனுக்குப் பொருந்துவதன்றி அடிகளார்க்குப் பொருந்தாமையும் அறிக. ஆகவே குன்றக்குறவர் சேரனும் அடிகளாரும் ஒருங்கிருந்துழிச் சென்று வணங்கி அவருள் சேரனுக்கே கூறினர் என்னும் எமது கருத்தே பொருத்தமாம்.

இனி, பழையவுரையாசிரியருள் வைத்து அரும்பதவுரையாசிரியர், குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்குக் கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து எல்லா மறிந்தோய் இதனை அறிந்தருள் என்று கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு போந்து அடிகளுழை வந்தசாத்தன் அது பட்டவாறெல்லாம் கூற என்றோதுவர். இதுவும் பொருந்தாமைக்கு முன் கூறிய காரணம் ஒக்கும்; மேலும் செங்குட்டுவனுக்குக் குன்றக்குறவர் கூடிவந்து பேரியாற்றிடுமணல் எக்கரிடைக் கண்டு கூறியவர் மீண்டும் அரசு துறந்திருந்த அடிகளார்க்குக் கூறக் குணவாயிற் கோட்டத்திற்கு ஒருங்குடன் கூடிவந்து போதலும்; பேரியாற்றிடு மணல் எக்கரிடத்தே குறவர் சேரனைக் கண்டு கூறியபொழுது ஆங்கு அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தனே ஈண்டும் அக்குறவர் கூறும் பொழுது வந்திருத்தலும் இன்னோரன்ன பிறவும் நிகழ்தற்கியையா நிகழ்ச்சிகள் (அசம்பாவிதம்) என்க.

இனி, ஆசிரியர் அடியார்க்குநல்லார்தாமும் அரும்பதவுரை யாசிரியர் கருத்துப் பொருந்தாதெனக் கண்டு, தாம் வேறு கூறினர் ஆயினும் அவர் தாமும் குறவர் இளங்கோவடிகளை நோக்கி அறிந்தருள் என்பதும் பொருந்தாதென வறிக.

11. அதுபட்டது - அந்நிகழ்ச்சியினது வரலாறு. அது என்றது ஓரு முலையிழந்தனை என்பார் அடியார்க்கு நல்லார்.

12-20 : ஆரங்கண்ணி.............புகுந்தனன்

(இதன் பொருள்) : ஆரங்கண்ணிச் சோழன் மூதூர் பேரா சிறப்பின் புகார் நகரத்து - வேந்தே ! போந்தை வேம்பே ஆர் எனவரும் மூவகைப்பட்ட பூக்களுள் வைத்து (ஆர் என்னும்) ஆத்திப்பூங் கண்ணியை அடையாளமாகக் கொண்டு தலையிற் சூடிய சோழ மன்னனுடைய பழைய நகரங்களுள் வைத்து எக்காலத்தும் நீங்காத சிறப்பினையுடைய பூம்புகார் என்னும் நகரத்தின்கண் வாழுகின்ற பெருங்குடிவாணிகருள் வைத்து; கோவலன் என்பான் ஓர் வாணிகன்-கோவலன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனிருந்தனன்; அவ்வூர் நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் - அவன் அந்நகரத்திலேயே வாழ்பவளும் நாடகம் என்னும் கலையே தன்னைப் பாராட்டற்கியன்ற புகழொடு நாடகமாடுகின்ற பொதுமகளுமாகிய மாதவி என்னும் நாடகக் கணிகையோடுகூடி யின்புறும் கோட்பாடுடைமை காரணமாக; அரும்பொருள் கேடு உற - தன் தாயத்தார் வழித் தனக்குக் கிடைத்த தேடற்கரிய பொருளெல்லாம் அழிந்தொழிந்தமையாலே பெரிதும் நாணி; மனைவி கண்ணகி என்பாள் - அவ்வாணிகன் மனைக்கிழத்தி கண்ணகி என்னும் பெயருடையவள் ஆவள்; அவள் கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி - அவள்பால் எஞ்சியிருந்த அவளுடைய காலணியாகிய சித்திரச் செய்வினையமைந்த சிலம்புகளை விற்று அப்பொருளை முதலாகக் கொண்டு இழந்த பொருளை ஈட்டவிரும்பி; பாடல் சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன் - புலவர் சங்கமிருந்து பாடிய பாடல் சிறந்த சிறப்பினையுடைய பாண்டியனது மிக்க புகழையுடைய மதுரைமாநகரத்தே தன் மனைவியாகிய அக்கண்ணகியுடனே சென்று புகுந்தனன் என்க.

(விளக்கம் 12) ஆரங்கண்ணி - ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப்பூ. இதனை,
...........உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

எனவருந் தொல்காப்பித்தானும், (பொருள் - 13)

கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமரழுவத்(து) ஆர்

எனவரும் புறப் - வெண்பாவானும், (பொது) அறிக.

15. நாடகம் இவளாற் சிறப்பெய்துதலின் அக்கலையே இவளை ஏத்தும் என்றவாறு. கணிகை - பதியிலாள்; பொதுமகள் (16) ஆடிய கொள்கை - நுகர்ந்த கோட்பாடு. கொள்கையினால் என்க. அரும் பொருள்-ஈட்டுதற்கரிய பொருள். எனவே முன்னை யூழான், தாயப் பொருளாய்க் கிடைத்த பொருள்  என்பதாயிற்று. (17) அவன் மனைவி கண்ணகி என்னும் பெயருடையாள் எனச் சுட்டுப்பெயர் பெய்துரைக்க. நாடகமேத்தும் கணிகை என்றவர் ஈண்டு மனைவி என்றொழியாது பெயரை விதந்து கூறியது அவளே இக்குறவராற் கூறப்பட்டவள் என்றறிவுறுத்தற்கென்க. இது முன்மொழிந்து கோடல் என்னும் உத்தி (18) பண் அமை சிலம்பு இசை பொருந்திய சிலம்புமாம். சிலம்பு பகர்தல் வேண்டி என்றது - எஞ்சிய அணிகலன் அதுவே ஆகலான் அதனைப் பகர்தல் வேண்டி என்பதுபட நின்றது.

19. ஊழ்வினை வந்துருத்தகாலை நல்லவும் தீயவாம் என்றுணர்த்தற்கு, பாடல்சால் சிறப்பின் பாண்டியன் எனவும், பெருஞ்சீர் மாட மதுரை எனவும் பாண்டியனையும் மதுரையையும் விதந்தோதினர்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் சிறப்பிற் பாண்டியனென்றும் பெருஞ்சீர் மாடமதுரையென்றும் அடிகள் புகழ்ந்தார் என்பர். இப்பதிகம் அடிகளாராற் செய்யப்பட்டிலது என்பது வெள்ளிடைமலையென விளங்கிக் கிடப்பவும் அவர் இவ்வாறு கூறியது வியத்தற்குரியதாம்.

20-22 : அதுகொண்டு.......காட்ட

இதன் பொருள் : அதுகொண்டு மன் பெரும் பீடிகை மறுகின் செல்வோன் - அங்ஙனம் முன்னாள் மதுரைபுக்க அக்கோவலன் மறுநாள் அச்சிலம்புகளுள் ஒரு சிலம்பை விற்கும் பொருட்டுக் கையிலெடுத்துக் கொண்டு அந்நகரத்து அங்காடி மறுகுகளில் வைத்து, மிகப்பெரிய மறுகிற் செல்பவன்; பொன்செய் கொல்லன் தன்கைக் காட்ட - ஆங்குத் தன்னெதிரே வந்த பொற்கொல்லன் ஒருவன் கையில் அச்சிலம்பைக் கொடுத்துக் காட்டா நிற்ப என்க.

விளக்கம் : 20-21 : அது கொண்டு என்றார் அவன் கொடு போனது ஒற்றைச் சிலம்பு என்பது தோன்ற. மன்-மிகுதிப் பொருட்டு, மன்னைச் சொல்லுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மிகுதிப் பொருளுண்மை கூறிற்றிலரேனும் இடையியற் புறனடையால் பவணந்தி முனிவர் அச்சொற்கு அப்பொருள் உண்மை ஓதுதலும் உணர்க.

இனி, பெரும் பீடிகைக்கு மன்னைச் சொல்லையும் அடையாக்கியதனால் மக்கள் வழக்குமிக்க அம் மாபெருந்தெருவிற் சென்றும், அவன் ஊழ்வினை அவனை விட்டிலது கண்டீர் என்றிரங்குவது இப்பதிக முடையார் குறிப்பென்று கோடலுமாம். பீடிகை மறுகு-அங்காடித் தெரு.

22. கைக்காட்ட . கையிற் கொடுத்து ஆராய்ந்து காணுமாறு செய்ய என்க. இது, அவன் அதனை நன்கு நோக்கி, இது பெருந்தேவியின் சிலம்பை ஒத்துளது என்று காண்டற்கும் அவ்வழி வஞ்சித்தற்கும் ஏதுவாதல் பற்றிக் கொல்லற்குக்காட்ட என்னாது கொல்லன் கைக் காட்ட என வேண்டா கூறி விதந்தார்.

இனி, அடியார்க்கு நல்லார் அது கொண்டென்றார்; அச்சிலம்பால் மேல்விளைவன தோன்ற; அஃது அநியாயபுரத்தே புகுகின்றவன் கூற்றத்தையும் உடன்கொண்டு புக்கான் என்றாற் போன்றிருந்தது என்பர்.

23-26 : கோப்பெருந்தேவி........கள்வன் கையென

இதன் பொருள் : இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லை - அங்ஙனம் காட்டியபொழுது அப்பொய்த் தொழிற் கொல்லன் அச்சிலம்பினது சித்திரச் செய்வினை யெல்லாம் புரிந்துடன் நோக்கி வஞ்சகமென்று நெஞ்சகத்தே வைத்துக் கோவலனை நோக்கி ஐய! இப் பெருவிலைச் சிலம்பு கோப்பெருந்தேவிக்கே ஆவதன்றிப் பிறர் அணியப் பொருந்துவதன்று காண் ஆதலால், ஈங்கு இருக்கஎன்று ஏகி-யான் சென்று இதுபற்றி விறல் மிகு வேந்தற்கு விளம்பி வருந்துணையும் உதோ விருக்கின்ற என் சிறுகுடிலின் அயலே இருந்திடுக ! என்று கூறிச் சென்று; பண்டு தான் கொண்ட சில் அரிச்சிலம்பினை-அரசனைக் கண்டு அடிவீழ்ந்து கிடந்து தாழ்ந்து பல வேத்தி முன்பு பணிக்களரியில் தான் வஞ்சித்துக் கொண்ட தேவியின் சிலம்பு பற்றி ஆராய்ச்சி சிறிது பிறந்து வருதலால் அவ்வஞ்சம் வெளிப்படா முன்னம் அப்பழியை இவ் வேற்று நாட்டான் மேலேற்றுவல் என்றெண்ணி; கண்டனன் பிறன் ஓர் கள்வன் கையென-வேந்தர் வேந்தே, பண்டு களவு போன தேவியாருடைய சிலவாகிய பரலிடப்பட்ட சிலம்பை இன்று அடிநாயேன் பிறர் நாட்டுக் கள்வன் ஒருவன் கையிற் கண்டேன் என்று கூற என்க.

விளக்கம் 2-3 : யாப்புறவு - பொருந்தும். ஈங்கு என்று சுட்டியது அப்பொற் கொல்லன் குடிலுக்கருகான ஒரு கோயிலை. (25) சில்லரிச் சிலம்பு என்றது, பண்டு தான் வஞ்சித்துக் கொண்டுள்ள தேவியார் சிலம்பினை.

இப்பகுதிக்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார் வகுத்த விளக்கம் மிகவும் இனியன; அவையாவன :- தான் கொண்ட என்றார், தன்னெஞ்சறியத் தான் கொண்டதனை இங்ஙனம் கூறினான் என்பது தோன்ற; ஈங்கிருக்க என்றார், பிறிதோரிடத்தாயின் ஊர்காவலர் ஆராய்வர் என்று கருதினான் என்பது தோன்ற; என்று ஏகி என்றார், அவன் கருத்தும் முயற்சியுந் தோன்ற; சில்லரிச் சிலம்பினை என்றார் தொழிற்பன்மை தோன்ற; (ஈண்டுச் சில்லரி என்பதற்கு இவர் சிலவாகிய சித்திரத் தொழில்கள் எனப் பொருள் கொண்டனர் போலும்) பிறன் ஓர் கள்வன் கையிற் கண்டனன் என்றார், தன்னையும் கள்வன் என்றமை தோன்ற (இஃது ஆற்றவும் இன்பந்தரும் நுண்ணிய விளக்கமாகும்)

27-30 : வினைவிளை.........ஈங்கென

இதன்பொருள் : வினை விளைகாலம் ஆகலின் - அது கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலமாக இருந்தமையாலே; சினை அலர் வேம்பன் யாவதும் தேரான் ஆகி - அரும்புகள் மலர்கின்ற புதிய வேப்பந்தாரணிந்த அப்பாண்டியன் அப்பொய்த் தொழிற் கொல்லன் கூற்றை ஒரு சிறிதும் ஆராயாதவனாய்; கன்றிய காவலர்க் கூய்-தந்தொழிலில் பயின்றடிப்பட்ட திறமுடைய காவலர் சிலரை அழைத்து; அக்கள்வனைக் கொன்று -நீயிர் இக்கொல்லனொடு சென்று இவனாற் காட்டப்படுகின்ற அக்கள்வனைக் கொன்று; அச்சிலம்பு - அவன் கைக்கொண்டுள்ள நம்மரண்மனைச் சிலம்பினை; ஈங்குக் கொணர்க என - இப்பொழுதே இங்குக் கொண்டு வரக்கடவீர் எனக் கட்டளையிடா நிற்ப என்க.

விளக்கம் : வினைவிளை காலமாதலின் எனத் தண்டமிழ்ச் சாத்தனார் கூறியது-கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினை வந்து தன் பயனை நுகர்விக்கும் காலம் அதுவாகலின் என்னும் பொருளுடையதாம். என்னை? பின்னர் வினைவிளை காலம் என்றீர் யாதவர் வினைவிளைவு எனச் சேரன் வினவுதலின் அச்சேரனும் வினை கோவலன் வினை என்றே கருதி வினவினன் என்பதும், அவ்வினாவிற்கு விடை கூறும் சாத்தனாரும், கோவலனுடைய ஊழ்வினையையே மதுரைமா தெய்வங் கூறத் தாங் கேட்டாங்குக் கூறுதலாலும் யாம் கூறுமுரையே பொருத்தமாம்.

இனி, அடியார்க்கு நல்லார் அங்ஙனம், அவன் சொல்லக்கேட்ட பாண்டியன் தான் முற்பவத்திற் செய்த தீவினை வந்து பலிக்கின்ற காலமாதலாலே ஒன்றையுந் தேரானாய் என்று கூறும் உரை பயில்வோர்க்கு மயக்கந்தருவதாயுளது. என்னை? பாண்டியன் தான் செய்த தீவினையாலே மயங்கித் தேரானாயினன் என்பது போன்று அவ்வுரை அமைந்துள்ளது. ஆயினும் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித் தான் என்னும் பொதுப் பெயர் மறுகிற் செல்வோன் என்னும் எழுவாயின் சுட்டுப் பெயர்ப்பொருள் பயந்து கோவலனையே குறித்து நின்றது எனக்கொள்க. பாண்டியனைக் குறித்திலது என்பதனை அவர் அதற்குக் கூறும் விளக்கவுரை புலப்படுத்தும். அவர் இதனானன்றே தென்னவன் தீதிலன் தேவர் கோமான் கோயில். நல்விருந்தாயினான் என்ற கருத்து மெனக் கொள்க எனவும் (38-44) விறலோய்........யானென் என்பதன் விளக்கவுரையில் வினைவிளைவு யாதென்று வினாவினாற்குப் பாண்டியன் வினைவிளைவு கூறிற்றிலர் எனவும், ஓதுதலின் அடியார்க்கு நல்லார் தான் முற்பவத்திற் செய்த தீவினை என்புழித்தான் என்னும் பொதுப் பெயரால் கோவலனையே குறித்தனர் என அமைதி காண்பாம்.

அடியார்க்கு நல்லார் இவன் சொன்ன அக்கள்வனைக் கொல்ல அச் சிலம்பையும் அவனையும் இப்பொழுதே இங்கே கொண்டு வருவீராக வெனச் சொல்லக் கருதினவன் காமபரவசனாய் இச்சிலம்பு இவள் ஊடல் தீர்க்கும் மருந்தாமென்னும் கருத்தால் வாய்சோர்ந்து கொன்று அச்சிலம்பை இப்பொழுதே கொணர்க என்று கூற என்றோதியவுரை நூலாசிரியரின் கருத்துணர்ந்து விரித்தோதிய நுண்ணிய இனியவுரையேயாகும். என்னை, ஆசிரியர் இளங்கோவடிகளாரும், அப்பாண்டியனிடம் பொற்கொல்லன் சென்று வஞ்சம் புணர்க்கும் அச் செவ்விதானும் அவன் காம பரவசனாய் இருக்கும் ஒரு செவ்வியாகவே புனைந்திருத்தலான் ஆசிரியன் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் கருத்துணர்ந் துரைத்த நுண்ணுரையேயாம் என்க.

இனி, அடிகளார் சினையலர் வேம்பன் ஈண்டுத் தான் அரசியல் பிழைத்தான் என்று கருதுகின்றார் இப்பிழையின் வழியே அவனுக்கு அறம் கூற்றாயிற்று என்பது அவர் கொள்கையாகும். அடிகளார் உலகியலில் அரசராவோர் இத்தகைய செய்திகளிலே மிக எளிதாகவே தமது அறத்தினின்றும் வழுவி விடுகின்றனர். அதுவே பின்னே அவர் தம் அரசாட்சியைக் கவிழ்த்து விடுகின்றது. ஆதலால் அரசராயினோர் மிகவும் விழிப்புடனிருந்து ஆட்சிசெய்தல் வேண்டும் என்று அரசர்க்கு அறிவுறுத்தவே அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் வாய்மையையும் இக்காவியப் பொருள் மூன்றனுள் ஒன்றாகக் கொள்வாராயினர். இவ்வாறன்றிப் பாண்டியன் கேடுறற்கும் காரணம் ஊழ்வினையே என்று கொள்வது ஊழ்வினையின் இயல்பறியாதார் கொள்கையேயாம் என்க. என்னை? ஊழ்வினையானது நன்னெறியிற் செல்வாரைத் தீயநெறியிற் புகுத்தும் ஆற்றலுடையதன்று. ஈண்டுப் பாண்டியன் பொன்செய்கொல்லன் தன் சொற் கேட்ட மாத்திரையே ஆராயாது கோவலனைக் கொல்வித்தது அவன் பிழையேயன்றி ஊழின் பிழை என்று கொள்ளற்க. அடிகளார் கருத்தும் பாண்டியன் அரசியல் பிழைத்தான் என்பதேயாம் என நுண்ணிதின் உணர்க.

இனி, அரசராதல் அறங்கூறவையத்தாராதல் வழக்குத் தீர்க்கும் பொழுது அவர் செய்யவேண்டிய அரசியன் முறையை,

தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை ஊழிவை தோலாத் - தொடைவேட்டு
அழிபடல் ஆற்றால் அறிமுறையென் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையான் (273) உணர்க.

அதனாலன்றோ வழக்குரைகாதையில் பாண்டியன் தன் பிழையுணர்ந்துயீர் நீப்பவன் தான் செய்த பிழையை,

பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென

உலகறிய அரற்றி மயங்கி வீழ்ந்தனன்.

இனி, மதுரைமாதெய்வம் கண்ணகியார்க்கு.

தோழிநீ யீதொன்று கேட்டியெங் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதரா யீதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை

என இருவர் வீழ்ச்சிக்கும் ஊழ்வினையே காரணம் எனக் கூறிற்றாலோ எனின் அஃதொக்கும். இரண்டும் ஊழ்வினையே. கோவலன். முற்பிறப்பிற் செய்தது பாண்டியன் அற்றைநாள் முற்பகலிலேயே செய்தது இரண்டும் ஊழே ஆதலின், தெய்வம் அவ்வாறு கூறிற்று என்க. ஆயினும்,

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி

என்பதுபற்றி ஈண்டுக் கோவலன் பழிக்கப்பட்டிலன். அறிவறிந்தும் ஆள்வினையில் வழீஇய அரசனே பழிக்குரியவன் ஆகின்றனன் என்க.

இனி, ஈண்டும் அடியார்க்கு நல்லார் முன்னர்க் கைகுறைத்தல் முதலிய முறைசெய்தோன் இதனைத் தேர்ந்திலன் என்று அடிகள் இரங்கிக் கூறினார் என்பது பொருந்தாமை முற்கூறியது கொண்டுணர்க.

31-36 : கொலைக்கள............இதுளென

இதன்பொருள் : கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-அவ்வேம்பன் பணித்தபடியே அக்காவலராற் கொலையிடத்தே பட்டொழிந்த வணிகனாகிய அக் கோவலனுக்கு மனைவியாகிய கண்ணகி தானும் இச்செய்தி கேட்ட பின்னர்; நிலைக்களம் காணாள் - தனக்கு நிலையிடம் காணாளாய்; பத்தினியாகலின் - அவள் தான் திருமா பத்தினியாகலான்; பாண்டியன் கேடு உற நெடுங்கண் நீர் உகுத்து-அரசியல் பிழைத்த அப்பாண்டியன் உயிர் கேடுறும் படி அவன் முன்னர்ச் சென்று தன் நெடிய கண்ணினின்றும் நீர் உகுத்து; நிலை கெழு கூடல்-அற்றை நாள்காறும் நன்னிலை பொருந்தியிருந்த நான்மாடக்கூடல் என்னும் அவன் நகரத்தை; முத்து ஆரம் மார்பின் முலைமுகந்திருகி நீள் எரி ஊட்டி - சினந்து பண்டு முத்துவடம் பூண்டிருந்த தன்திருமுலைகளுள் ஒன்றைப் பற்றித் திருகி வட்டித்து விட்டெறிந்து தீக்கிரையாகச் செய்தமையாலே; பலர் புகழ்-மதுரைமாதெய்வம் முதலாகப் பலரானும் புகழப்படுகின்ற; பத்தினி ஆகும் இவள் என - திருமாபத்தினியாகிய அக்கண்ணகி நல்லாளே இங்கு இக்குன்றக் குறவராற் கூறப்பட்டவள் என்று சாத்தனார் அறிவியா நிற்ப என்க.

விளக்கம் 30 : கொணர்க ஈங்கெனக், (31) கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி எனவே, அக்காவலர் கோவலனைக் கொன்றமையும்; கண்ணகியார் கோவலனுடன் மதுரைக்கு வந்திருந்தமையும் கூறியவாறாயிற்று. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற்றனிச் சிலம்பும் கண்ணீரும், வையைக்கோன்....உண்டளவே தோற்றான் உயிர் என்று அடிகளார் கூறுதல் கருதி உரையாசிரியர் (அடியார்) அவனுயிர்கேடுறக் கண்ணீர் உகுத்து எனக் கண்ணீரை ஏதுவாக்கினார். கண்ணகி இடமுலை கையாற்றிருகி வட்டித்து மறுகின் விட்டெறிந்த அளவிலே அவர்முன் எரியங்கிவானவன் வந்து தோன்றலின் என்றமையால் தன் முலை முகத்தெழுந்த தீ என்றார் (அடியார்) வாழ்த்துக் காதையுள்ளும் அடிகளார் தொல்லை வினையாற் றுயருழந்தாள் கண்ணினீர் கொல்லவுயிர் கொடுத்த கோவேந்தன் என்றோதலுமுணர்க. ஈண்டு, அல்லற்பட்டாற்றா தழுதகண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை (535) என வருந் திருக்குறளையும் நினைக.

37-38 : வினைவிளை..........என்ன

இதன்பொருள் : வினைவிளை காலம் என்றீர் - அது கேட்ட சேரன் செங்குட்டுவன் அக்கண்ணகியார் பொருட்டுப்பட்ட கவற்சியுடையனாய் ஐய ; நீயிர் வினைவிளை காலம் என்றீரல்லிரோ! அவர் வினைவிளைவு யாது என்ன-அவர்க்கு இத்தகைய மாபெருந்துயரம் வருவதற்குக் காரணமாய் அவர் செய்த தீவினைதான் யாது அது நிகழ்ந்த காலம் யாது? அறிவீராயிற் கூறுதிர் என்று சாத்தனாரை வேண்டவென்க.

விளக்கம் 27 : வினைவிளை காலமாதலின் யாவதுஞ் சினையலர் வேம்பன் தேரானாகி எனச் சாத்தனார் உரைத்தமையுணர்க. வினைவிளை காலமாதலின் வேம்பன் யாவதுந் தேரானாகி என்றமையால் ஈண்டு வினையென்றது கோவலன் செய்த வினையோ? அல்லது வேம்பன் செய்த வினையோ? என ஐயுறுதற்கிடனாயிருந்தமையின் யாது அவர் வினைவிளைவு எனத் தானறிந்த உயர்திணைமருங்கிற் பன்மைச் சுட்டால் சுட்டினான் சேரன். என்னை?

பான் மயக்குற்ற ஐயக் கிளவி
தானறி பொருள்வயிற் பன்மை கூறல் (தொல்-சொல்-23) என்பது இலக்கண விதியாகலான்.

38-54 : விறலோய்...........யானென

இதன்பொருள்: விறலோய் கேட்டி வெற்றிவேந்தே ! கேட்டருள்க; அதிராச்சிறப்பின் மதுரை மூதூர் - பண்டொருகாலத்தும் துன்பத்தால் நடுங்கியறியாத சிறப்பினையுடைய மதுரை யாகிய அந்தப் பழைய நகரத்தின் கண்ணே; கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் - அக்கண்ணகி முலைமுகந் திருகி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கிய அற்றை நாளிரவு யான் அந்நகரத்து மன்றங்களாகிய பொதியிலில்களுள் வைத்துக் கொன்றை வேய்ந்த சடை முடியினையுடைய இறைவன் எழுந்தருளியுள்ள; வெள்ளியம் பலத்துக்கிடந்தேன் -வெள்ளியம்பலம் என்னும் மன்றத்தே அத் தீயினுக்கஞ்சிப் புகுந்து ஆங்கொருசார் கிடந்தேனாக; நள்ளிருள் அவ்விரவின் இடையாமத்தே, அவ்வம்பலம றுகின்கண்; ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன் - பொறுத்தற்கரிய துன்பத்தோடே செல்லா நின்ற மறக்கற்புடைய அக்கண்ணகியார்க்கு முன் வருதற்கு அஞ்சி, மதுரைமாதெய்வம் வந்து தோன்றி - பாண்டியன் குல முதற் கிழத்தியாதலின் மதுராபதி என்னும் தெய்வமகள் அவனுக்குப்பட்ட கவற்சியளாய், அம் மாநகரைத் தீயுண்ணால் பொறாளாய் உருவத்திருமேனிகொண்டு அவரைப் பின்தொடர்ந்துவந்து; சீற்றம் கொங்கையில் அழல் விளைத்தோய்-பெரிய சினத்தாலே நினது கொங்கையினின்றும் கொதிக்கின்ற தீயைப் பிறப்பித்த தெய்வக் கற்புடையோய் ! ஈதொன்றுகேள்; முந்தைப்பிறப்பின்  முதிர்வினை நுங்கட்கு பைந்தொடி கணவனொடு முடிந்தது-முற்பிறப்பிலே செய்யப்பட்டு இதுகாறும் முதிர்ந்த பழைய தீவினை உங்களுக்குப் பசிய தொடியினையுடைய நின் கணவன் முடிவோடு தன்பயனை ஊட்டி யொழிந்தது; ஆதலின் - அங்ஙனமாகலான் இப்பொழுது; முந்தைப் பிறப்பின் சிங்கா புகழ் வண் சிங்கபுரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி முற்பிறப்பிலே குன்றாத புகழையுடைய வளவிய கலிங்க நாட்டுச் சிங்கபுரமென்னும் நகரின்கண் சங்கமன் என்னும் வாணிகனுக்கு மனைவி; இட்டசாபம் கட்டியது ஆகலின் - இட்ட சாபமானது இப்பிறப்பின்கண் வந்து நினக்கு மூண்டுளதாதலான்; வார் ஒலி கூந்தல் நின்மணமகன் தன்னை நீண்டு செறிந்த கூந்தலையுடையோய் ! நீ நின் கணவனை; ஈர்ஏழ்நாள் அகத்து எல்லை நீங்கி-இற்றைநாளினின்றும் பதினாலாநாட் பகல் நீங்கிய பொழுதிற் காண்பாய்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல் என-அங்ஙனம் காணுமிடத்தும் வானவர் வடிவில் (நின் கணவனைக்) காண்பதல்லது மக்கள் வடிவில் காண்டல் இல்லை என்று கூற; கோட்டம் இல் கட்டுரை யான் கேட்டனன் என - அவ்வஞ்சமற்ற கட்டுரையினை யான் எனது செவியாலேயே கேட்டேன் என்று அச்சாத்தனார் கூற என்க.

விளக்கம் : குன்றக்குறவர் அடிகட்குக் கூறினர் என்பார்க்கு ஈண்டு (37) வினைவிளைகால மென்றீர் யாதவர்...காலம் என, பன்மை விகுதியால் அடிகளார் சாத்தனாரை வினவினர் என்பதும் சாத்தனார் அடிகளாரை (38) விறலோய் என ஒருமைக்கிளவியால் விளித்தனர் என்பதும் பொருந்தாமையுணர்க. எனவே, முன்னது அரசன் வினாவும் பின்னது புலவர் விளித்ததும் ஆகும் என்பதே அமையும் என்க.

39. அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் என்றது அற்றை நாள் காறும் அதிராச்சிறப்புடைய மதுரை மூதூர் என அற்றை நாள் அதிர்ந்தமையைக் குறிப்பால் உணர்த்தி நின்றது (40). கொன்றையஞ்சடை முடியையுடைய இறைவன் என்க. இறைவன் எழுந்தருளிய அம்பல மாதலின் கண்ணகியார் ஏவியவாறு தீக்கதுவா தொழிந்தமையான் யான் அதனைப் புகலிடமாகக் கருதி அதனுட் புகுந்து கிடந்தேன் என்பார் (40) சடைமுடி மன்றப் பொதியிலிற் கிடந்தேன் என்றார் என்க. இஃதறியாது பழையவுரையாசிரியர் அவர் துயின்றதாகக் கூறுவது பொருந்தாது என்னை? அற்றை நாள் பிற்பகலிலே அந்நகரம் உரக்குரங் குயர்த்த வொண் சிலையுரவோன் காவெரியூட்டியநாள் போற்கலங்க, தண்டமிழ் ஆசான் சாத்தன் வெள்ளியம்பலத்தே துயின்று கிடந்தான் என்பது வியப்பேயாகும். இனி, கிடந்தேன் என்னும் அச்சொல்தானே தீயினுக் கஞ்சி வெள்ளியம்பலத்தைப் புகலிடமாகக் கொண்டு அதனுட் புகுந்து ஒருசார் திகைத்துக் கிடந்தேன் என்பதுபடக் கிடப்பதனை இலக்கிய நயமூணர்வோர் உணர்வர் என்க. இனி, பௌத்தராகிய சாத்தனார் தாமும் கொன்றைச் சடைமுடி இறைவன் பொதியிலில் கிடக்க நேர்ந்ததூஉம், அவர் தம்மைக் காத்துக் கோடற்பொருட்டு அவர்க் கணித்தாக அதுவே புகலிடமாகக் கண்டமையேயாம் என்க.

42. ஈண்டு ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் உயிர்த்து மறுகிடை மறுகும்.... ஆரஞர்உற்ற வீரபத்தினி முன் என அழற்படு காதைக் கண் அடிகளார் கூறிய சொற்றொடரையே இப்பாயிர முடையாரும் பொன்போற் போற்றிக் கூறுதல் உணர்க (43) சீற்றம்-மிக்கசினம்; சீற்றத்தால் என்க.

45-46 : முதிர்வினை - பயனூட்டத்தகுந்ததாக முதிர்ந்துள்ள பழைய தீவினை முந்தைப் பிறப்பின் முதிர்வினை பைந்தொடி ! நுங்கட்குக் கணவனொடு, முடிந்தது எனமாறுக. முற்பிறப்பின் கட் செய்து முதிர்ந்துள்ள தீவினை உங்கட்குத் தன்பயனை ஊட்டி உன் கணவன் சாவோடு கழிந்தது என்றவாறு. எனவே, உன் கணவன் இம்மைச் செய்த நல்வினையால் வானவன் ஆயினன் என்பது குறிப்புப் பொருள். இங்ஙனம் நுண்ணிதின் உரைகாண மாட்டாது பழையவுரையாசிரியர், முதிர்வினை முடிந்தது என்பதற்கு நுங்கட்கு முற்பட்ட நல்வினை முடிந்ததாகலான் என ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாவுரை கூறி ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதற்குச் செய்யுளிற் சொற் காணாது வறிதே போயினர்.

பைந்தொடி: அண்மைவிளி (47) சிங்காத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது (5) வாரொலி கூந்தல்: விளி. கூந்தால் நின்னை வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டியதாகலின் (51) ஈரேழ் நாளகத்தெல்லை நீங்கி வானோர் வடிவிற் கணவனைக் காண்பதல்லது மக்கள் வடிவிற் காண்டல் இல்லை என்றவாறு. கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் மன்றினும் மறுகினுஞ் சென்றனள் பூசலிட்டு எழுநாளிரட்டி எல்லை சென்றபின்....மலைத்தலை யேறி மால் விசும்பேணியில் கொலைத்தலைமகனைக் கூடுபு நின்றோன் எம்முறுதுயரம் செய்தோரியாவதும் தம்முறுதுயரம் இற்றாகுக என்றே விழுவோள் (49) இட்ட சாபம் கட்டியது ஆதலால், அவள்பட்டன வெல்லாம் நீயும் பட்டு ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றவாறு. நின் கணவன் திறத்தில் அச்சாபம் அவனோடு முடிந்தது நின்திறத்தில் நினக்குரிய கூறு இப்பொழுதே நின்னைக் கட்டியது ஆகலின் என்பது கருத்து (50) வாரொலி...(176) ஈனோர் வடிவிற் காண்ட லில்லென என வரும் நான்கடிகளும் அடிகளார் கூறியாங்கே ஈண்டும் கூறப்பட்டமை அறிக (34) கோட்டம் வளைவு ; ஈண்டு வஞ்சம் என்னும் பொருட்டு. கட்டுரை பொருள் பொதிந்த சொல்.

55-60 : அரைசியல்..............செய்யுளென

இதன்பொருள் : அரைசு இயல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்- இவ்வாறு தண்டமிழ்ச் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்குக் கோவலன் கண்ணகி இருவர்க்கும் பழவினை விளைந்த வாற்றை விளம்பி முடித்தவுடன் ஆங்குக் குன்றக்குறவர் கூறியது தொடங்கிச் சாத்தனார் கூற்று முடியுந் துணையும் தமக்கியல்பான அமைதியோடிருந்து அவர்கள் கூறியவற்றின் மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த இளங்கோவடிகளார் சாத்தனாரை நோக்கி ஐய ! நுமது வாய்மொழியினூடு உள்ளுறையாக யாம் மூன்று வாய்மைகளைக் கண்டோம் அவை தாம் யாவெனின்; நூனெறி நின் றொழுகுதற்குரிய அரசாட்சி ஒழுக்கின்கண்ணே அரசர் சிறிது ஒழுக்கம் பிழைப்பினும் அவரை அறக்கடவுளே கூற்றமாகிக் கொல்லும் என்பதூஉம்; உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் - புகழமைந்த கற்புடைமகளை இவ்வுலகத்து மக்களேயன்றி அமரர் முதலிய உயர்ந்தோரும் சென்று வழிபாடு செய்வர் என்பதூஉம்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் முன் செய்த இருவகை வினைகளும் செய்த முறையானே செய்தவனை நாடிவந்து உருக்கொண்டு நின்று தத்தம் பயனை நுகர்விக்கும் என்பதூஉம் ஆகிய இம் மூன்றுண்மைகளும் சிலம்பு என்னும் அணிகலனைக் காரணமாகக் கொண்டு எமக்குத் தோன்றினவாதலான்; யாம் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டு உடைச் செய்யுள் நாட்டுதும் என-யாம் இவையிற்றை உள்ளுறுத்திச் சிலப்பதிகாரம் என்னும் பெயருடைய இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் பொதுவாகப் பாட்டுக்களையும் செய்யுளையும் உடையதொரு வனப்புநூலை இயற்றி இவ்வுலகத்து மக்கட்கு எப்பொழுதும் நலம்பயக்கும்படி நிலைநிறுத்தக் கருதுகின்றேம் என்று திருவாய்மலர்ந்தருளா நிற்ப வென்க.

விளக்கம் 35 : அரைசியல் என்புழி அகரத்திற்கு ஐகாரம் போலி. அரசியல் செங்கோன்மை. ஈண்டு, சினையலர் வேம்பன் பொய்த்தொழிற் கொல்லன் கூற்றை ஆராயாது நம்புதலும் அவனாற்கள்வன் என்றவனை அழைத்து வினவாமல் கடுந்தண்டம் விதித்தலும் பிறவும் அரசியல் பிழைத்தவாறாம். அவனை வீரபத்தினியின் கண்ணீரே உயிர் போக்கியது அறம் கூற்றான வாறாம் என்க.

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் (குறள் 547)

என்று ஓதுதலான், அரைசியல் பிழைத்தகாலை அச்செங்கோன் முறையே அவனைக் கொல்லும் என்பதும் பெறப்படும். இன்னும்,

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தாற் றானே கெடும்  (குறள் 548)

எனவரும் அருமைத் திருக்குறட்கு இப்பாண்டியன் சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.

56. பத்தினிக்கு இரண்டாவதன்கண் நான்கனுருபு மயங்கிற்று. பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் என்றது குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி திருமாபத்தினிக்கு அமரர்க் கரசன் தமர் வந்து ஈண்டி அவள் காதற் கொழுநனைக் காட்டி அவளோடு எங் கட்புலம் காணவிட்புலம் போயது இறும்பூது போலும் என்றதனானும், சாத்தனார் ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி.........கூறிய கோட்டமில் கட்டுரை கேட்டனன் யான் என்றதனானும் அடிகளார் பெற்ற வாய்மை என்க.

57. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சாத்தனார் மதுரை மாதெய்வம் வந்து தோன்றி, கண்ணகியை நோக்கி நுங்கட்கு முந்தைப் பிறப்பின் முதிர்வினை நின் கணவனொடு முடிந்தது என்றதனானும் வாணிகன் மனைவியிட்ட சாபம் கட்டியது ஆகலின் ஈரேழ் காளகத்து எல்லைநீங்கி நீ நின் கணவனை வானோர் வடிவிற் காண்குவை என்றதனானும் எய்திய வாய்மை என்க.

58. சூழ்வினைச்சிலம்பு என்றது உருத்து வந்தூட்டுதற்குச் சூழும் ஊழ்வினைக்குக் கருவியாகிய சிலம்பு எனவும், சூழ்ந்த சித்திரச் செய்வினை யமைந்த சிலம்பு எனவும் இரு வேறு பொருளும் பயந்து நிற்றல் அறிக.

ஈண்டுச் சிலம்பு என்றது கண்ணகியார் காற்சிலம்பிற்கும் கோப்பெருந்தேவியார்க்குரிய கோயிற் சிலம்பிற்கும் பொது; என்னை? இருவர் சிலம்பும் காரணமாகலின் வாளா சூழ்வினைச் சிலம்பு காரணமாக என அடிகளார் கூறினர் என்க.

59. சிலப்பதிகாரம் - சிலம்பு காரணமாக விளைந்த கதையைக் கூறுகின்ற நூல் (60) பாட்டு-இசைக்கும் நாடகத்திற்கும் பொதுவாகிய உருக்கள். (இவற்றின் இயல்பு (3) அரங்கேற்று காதையுரையிற் காண்க) செய்யுள் இயற்றமிழ்ச் செய்யுள், எனவே, இந்நூலின்கண் இயலிசை நாடகம் என்னும் முத்தமிழும் இடம் பெற்றமையுணர்க. அவற்றை ஆண்டாண்டுக் காட்டுதும்.

61-62 : முடிகெழு...............என்றாற்கு

(இதன்பொருள்) முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவுரிமையுடையதாகும் அன்றோ அடிகள் செய்யக்கருதிய அவ்வனப்பு நூல்; ஆகவே ஆர்வமும் செற்றமும் அகலநீக்கிய அடிகட்கு அச்செயல் பெரிதும் பொருந்துவதேயாகும். ஆதலால்; அடிகள் நீரே அருளுக என்றாற்கு - வினையினீங்கி விளங்கிய அடிகளாராகிய நீவிரே அந்நூலைச் செய்து இவ்வுலகிற்கருளுக என்று வழி மொழிந்து வேண்டிய அத்தண்டமிழ் ஆசான் சாத்தனார்க்கு என்க.

(விளக்கம்) இந்நிகழ்ச்சி நிரலே சோழநாட்டினும் பாண்டியனாட்டினும் சேரநாட்டினும் நிகழ்ந்தமையின் அடிகளார் இந்நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டியற்றும் நூல் மூன்று தமிழ்நாட்டிற்கும் பொதுவுரிமையுடையதாம் என்பார் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்றார். எனவே, இவ்வேண்டுகோள் தம்நாடு பிறர்நாடு என்னும் வேற்றுமையின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள்கையோடு ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய மெய்யுணர்வுடைய அடிகளார் செய்யின் அவ்விலக்கியம் எல்லார்க்கும் பெரும்பயன் விளைக்கும். ஏனைய எம்போல்வார் செய்வது அத்துணைப் பயனுடையதாகாது. ஆதலால், அடிகளாரே செய்தருளுக என்று அப்புலவர் பெருமான் அடிகளாரை வழிமொழிந்து ஊக்கியபடியாம்.

இனி, இவ்வாறன்றி அடியார்க்கு நல்லார் (62) என்றாற்கு - தான் பாடக் கருதி வினாவின சாத்தற்கு; அங்ஙனம் கூறாது இங்ஙனம் கூறினாரென்க. என் சொல்லியவாறேவெனின், - இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது என்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின் யாம் காப்பியம் செய்யக் கடவேமென்பது கருதிநீரே? அருளுக என ஏகாரப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு (உள்ளொன்று வைத்து அப்பொருள் குறிப்பாகப் புலப்படப் புறமொன்று சொன்ன சாத்தற்கு) அவன்(ர்?) கருதிய பொருளிற்கு (குறிப்புப் பொருளிற்கு) உடன்படாது சொல்லிற்கு (வெளிப்படையாகத் தோன்றும் பொருளிற்கு) உடன்பட்டார் என்பதாயிற்று என வுரைத்தனர். இவ்வுரை, நனிநாகரிகத்திற் கொவ்வாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

ஈண்டு இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார் எனவரும் அடியார்க்கு நல்லார் உரையில் தாம் என்னும் பொதுப் பெயர் அடிகளாரைக் கருதிக் கூறப்பட்டது. அது பொருந்தாமை முன்னும் காட்டினோம்.

62- 90 : அவர் ..............மரபென்

(இதன்பொருள்) அவர் - அக்கண்ணகி கோவலருடைய மணத்தில் மகளிர் வாழ்த்திய; மங்கல வாழ்த்துப் பாடலும்......வரந்தரு காதையொடு இவ் ஆறு ஐந்தும்-மங்கல வாழ்த்துப் பாடல்முதலாக வரந்தரு காதையீறாக ஈண்டுக் கூறப்பட்ட முப்பதுறுப்புக்களையு முடைய இப்பொருட் டொடர்நிலைச் செய்யுளிலக்கியத்தை; உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - உரையிடையிட்ட செய்யுளும் பாட்டிடையிட்ட செய்யுளுமாக; உரைசால் அடிகள் அருள - புகழமைந்த இளங்கோவடிகளார் திருவாய் மலர்ந்தருளா நிற்ப; மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரைக் கூலவாணிகனான தண்டமிழாசான் இனிதே கேட்டு மகிழ்ந்தனன்; இது-இந்நூற்குப் புறவுறுப்பாகக் கூறப்பட்ட இது; பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு-சிலப்பதிகாரம் என்னும் இவ்வனப்பு நூலின் உட்பகுதிகளையும் நூலும் நுவலுவோனும் உள்ளிட்ட பிறவகைகளையும் தெரிதற்குக் காரணமான பாயிரத்தின் இலக்கணம் பற்றிச் செய்து நூன்முகத்தே வைக்கப்பட்டது என்க.

(விளக்கம்) (62) அவர் என்றது கண்ணகியும் கோவலனுமாகிய இருவரையும். மங்கலம்-திருமணம். மங்கலவாழ்த்துக்காதை என்னாது பாடல் என்றது, இஃது இசையொடு புணர்த்துப் பாடுதற்கியன்ற உரு என்றறிவித்தற்கு. இக்காப்பியத்தை ஓதத் தொடங்குவோர் இசையினால் வாழ்த்துப் பாடித் தொடங்கவேண்டும் என்பது அடிகளார் கருத்தாகும். எனவே, இஃது இசைத்தமிழ் என்பது பெற்றாம். இவ் வாழ்த்துப் பாடலிலேயே இக்காப்பியக் கதை தோற்றுவாய் செய்யப்படுகின்றது. இதில் கதை நிகழ்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. இதன்கண் கதை தோற்றுவாய் செய்யப்படினும் இறைவனையும் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியையும் வாழ்த்துவதே குறிக்கோளாதல்பற்றி அச்சிறப்பு நோக்கிக் காதை என்னாது பாடல் என்றே குறியீடு செய்தனர். இசைத் தமிழுக்கேற்ற வாரநடையும் கூடைநடையும் திரள் நடையுமாக இதனை அடிகளார் மிக அருமையாக அதற்கியன்ற மயங்கிசைக் கொச்சகக் கலியால் யாத்துள்ளனர். இதற்கியைந்த பண்வகுத்து இசைக் கருவிகளோடு இசைவாணர்கள் இசையரங்குகளிலே பாடினால் இப்பாடல் பேரின்பம் பயக்கும் என்பது எமது துணிபாம்.

(63-4) குரவர் - தாய் தந்தையர். மனையறம் - மனைக்கண்ணிருந்து செய்யும் விருந்தோம்பல் முதலிய அறங்கள். அவற்றை,

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் (சிலப் - 16 : 71 - 3)

எனவரும் கண்ணகியார் கூற்றானுமுணர்க.

(64-5) நடநவின் மங்கை மாதவி - ஆடற்கலையை ஐயாண்டிற்றண்டியம் பிடித்து ஏழாண்டு அக்கலையை நன்குபயின்று ஆடலும் பாடலும் நிரம்பி எஞ்சிய அழகு நிரம்புகின்ற மங்கைப் பருவமெய்திய மாதவி என்றவாறு.

(67) ஊர் இந்திரவிழவு எடுத்த காதை என்க. ஊர் - புகார் நகரம்.

(66) மடலவிழ் கானல் என்புழி மடலவிழ் என்பது கானலுக்கு இயற்கையடை. வரி-இசைப்பாட்டில் ஒருவகை. அதனியல்பு அக்கானல் வரியில் விளக்கப்படும். இக்காதைக்கு இவ்விசைப்பாடல் சிறப்பாய் நிற்றலின் அதுவே பெயராயிற்று.

கானல்வரியில் கதை நிகழாமை யுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரை போலி.

(66-70) வேனில்....காதையும் என்பது வேனிற்காதை என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.

(70-71) பின்னிகழும் தீங்கை யுணர்த்துதலையுடைய கனாத்திறம் என்க.

(71-2) வினாத்திறத்து நாடுகாண் காதை என்றது, அக்காதையின் கண் கண்ணகி மதுரை மூதூர் யாதென வினவுதலும் கவுந்தியடிகள் என்னோ? இங்ஙனம் கருதியது என வினவுதலும், வறுமொழியாளன் கவுந்தியடிகளாரை நொசிதவத்தீருடன் ஆற்று வழிப்பட்டோர் ஆர்? என வினவுதலும், மீண்டும் உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ? என்று வினவுதலும் எனப் பல்வேறு வினாக்களை யுடைமையைக் கருதி என்க.

(73) வேட்டுவ வரி - வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலங்கொண்டு ஆடிய வரிக்கூத்தும் என்க. இதனைக் கோலச்சாரி என்பர் அடியார்க்குநல்லார். இது கூத்தாற் பெற்ற பெயர்.

(73-4) தோட்டலர் - தோட்டையுடைய அலர். தோடலர் தோட்டலர் என விகாரமெய்திற்றெனினுமாம். தோட்டலர் கோதை-அன்மொழித் தொகையாய்க் கண்ணகி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.

இறுத்தல் - தங்குதல்.

(73-5) கறங்கிசையூர் பல்வேறு ஒலிகளும் ஒலிக்கும் மூதூராகிய மதுரை என்க. ஊர் காண்காதைக்கண் அடிகளார்(1) புறஞ்சிறைப்பொழிலும் என்பது தொடங்கி (14) காலை முரசங்கனைகுரலியம்ப என்னுந் துணையும், அந்நகரத்தில் உண்டாகின்ற இசைகளை விதந்தோதுதலை யுட்கொண்டு ஈண்டு, கறங்கிசையூர் என்று அடைதொடுத்தபடியாம்.

(75-6) சீர் - சிறப்பு; புகழ் எனினுமாம். ஈண்டுப் பாயிரமுடையார் அடைக்கலக் காதைக்கண் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்.. பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு எனக் கவுந்தியடிகளார் கண்ணகியின் சிறப்பெல்லாம் மாதவிக்கு எடுத்தோதியதனையும் அவரே இளங்கொடி நங்கை எனக் கண்ணகியைச் சுட்டியதனையும் கருதிச் சீர்சால் நங்கை என்றோதினர். சீர் - அழகு என்னும் பொருட்டு எனினும் ஈண்டு ஆசிரியர் கருதியது அப்பொருளன்று என்க.

(77) ஆய்ச்சியர் - ஆயர்க்குப் பெண்பாற் கிளவி. ஈண்டு மாதரி முதலிய இடைக்குல மகளிர். இக்காதையும் கதை நிகழ்ச்சிக்குறுப்பாகவே நின்றது. ஆயினும் குரவைக்கூத்தே சிறந்து நிற்றலின், ஆய்ச்சியர் குரவை என்றார். எனவே, இது கூத்தாற் பெற்ற பெயர். குரவைக் கூத்தாவது

குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப
எனவும்

குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்  (அடியார்க் - மேற்கோள்)

எனவும் வரும் நூற்பாவானுணர்க. ஈண்டு ஆய்ச்சியரிடத்து நிகழ்தலின் ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. மேலே குன்றத்தின்கண் நிகழ்ந்தது குன்றக் குரவை எனப்படுதலு முணர்க.

(77-8) தீத்திறம் - தீய தன்மையுடையசொல். கேட்டது என்றதனாற் சொல் என்பது பெற்றாம். துன்பமாலை - துன்பத்தின் இயல்பு. மாலை - இயல்பு. இது தன்மையாற் பெற் பெயர்.

(78-9) நண்பகல் நடுங்கிய வூர் சூழ்வரியும் - இக்காதையை அடிகளார் பெரும்பான்மையும் நாடக வழக்கத்தாற் செய்திருத்தலின் இதுவும் கூத்தாற்பெற்ற பெயர் என்க. நடுங்கிய வூர் எனப் பெயரெச்சம் எனினும் அமையும். என்னை? கண்ணகியின் நிலைகண்டு அந்நகரமே நடுங்கியதாகலான் என்க.

(78-80) சீர்சால் வேந்தன் என்றார், தான் செய்த தவறு கண்டுழியே உயிர்விட்டான் ஆகலின். சீர் - ஈண்டு மானம் போற்றிய சிறப்பு என்க. இதனாலன்றோ அடிகளாரும்,

அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிர்ஆணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலின் துஞ்சியது அறியார்

என அழற்படுகாதையில் உளமாரப் பாராட்டி யோதிய தூஉம் என்க.

(80) வஞ்சினமாலை-அஃதாவது : கண்ணகியார் பாண்டியன் முன் சென்று வழக்குரைத்த பொழுது அம்மன்னவன் வழக்கும் ஆருயிரும் ஒருங்கே தோற்ற பின்னரும் சினந்தணியப் பெறாமல் அம்மன்னவன் தேவியை நோக்கிக் கண்ணகி சூள் மொழிந்த தன்மையும் என்றவாறு. வஞ்சினமாவது இன்னது செய்யேனேல் இன்னவாறாகுவல் என்று இயம்புவது. இதுவும் தன்மையாற் பெற்ற பெயர்.

(81) அருந்தெய்வம் தோன்றி என்றது - மக்கள் காண்டற்கரிய இயல்புடைய மதுராபதி யென்னும் மாதெய்வம் கண்ணகியாரை இரந்து அழல் வீடு பெறுதற்பொருட்டு அவர் கண்காண எளிவந்து என்பதுபட நின்றது.

(82-3) மட்டு - தேன். கோதையர் ஈண்டுக் குறத்தியர். குன்றக்குரவை - குன்றத்துத் தெய்வமாகிய முருகவேளை நோக்கி ஆடிய குரவைக்கூத்து. மட்டலர் கோதை குன்றக் குரவை என்று பாட மோதிக் கோதை கண்ணகியெனக் கொண்டு கோதைக்குக் குன்றக் குறத்தியர் எடுத்த குரவை எனினுமாம். இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.

(83) என்றிவை யனைத்துடன் என இவ்விருபத்து நான்கும் கண்ணகியார் வரலாறாகலின் ஒருகூறாக வகுத்தனர். மேல்வருவன சேரன் செங்குட்டுவன் செயலாகலின் அவற்றை வேறுபட வோதினர்.

(84-85) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதை எனவரும் ஆறு காதைகளுள் வைத்து இறுதியினின்ற வரந்தரு காதை ஒழிய ஏனைய காட்சி முதலிய ஐந்து காதைகளும் இளங்கோவடிகளார் பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறி மரபு பற்றி அந்நெறியிற் சிறிதும் பிறழாதவாறு செய்துள்ளனர். காட்சி முதலிய ஐந்தும் புறத்திணை ஏழனுக்கும் பொதுவாகிய துறைகளாம். இவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலுள் (5) வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவின்கண்,

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே

என்றோதுத லறிக. இதற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது.... .... புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று என்று விளக்குதலும் உணர்க.

ஆசிரியர் தொல்காப்பியனார் போர்க்களத்தே அவிப்பலி செய்தல் விழுப்புண் பட்டுவீழ்தல் முதலியவற்றால் அறங்காத்தற் பொருட்டு உயிர்நீத்த மறவர்க்குக் கூறிய இத்துறைகள் கற்பென்னும் பேரறத்தி லொழுகி அதன் தெய்வத்தன்மையால் பாண்டியன் அரசவையேறி அவனொடு சொற்போர் தொடுத்து அரசனை வென்று நகர்தீமடுத்து விண்ணகம்புக்க கண்ணகியார்க்கும் நன்கு பொருந்துமென் றுட் கொண்டு இவற்றிற்கு அத்துறைப் பெயர்களையே நிறுவினர் என்றுணர்க.

இவற்றுள் காட்சி ஈண்டுக் கண்ணகித் தெய்வத்திற்குப் படிவம் செய்தற்குத் தகுந்த கல் இஃதாம் என்று ஆராய்ந்து கண்டது என்க.

அடியார்க்கு நல்லார், கற்காட்சியும் குறவர் பாகுடக் காட்சியும் என்க என்பர். ஈண்டுப் பாகுபடம் என்பது அரசிறை என்னும் பொருட்டு; கையுறை எனினுமாம். குறவர் கொணர்ந்த கையுறை அல்லது அரசிறை இக்காப்பியத்திற்குப் பொருளன்மையானும் ஏனைய துறைப்பெயரே யாதலானும் அப்பொருள் மிகைபடக் கூறலென்றொழிக. கற்காட்சி எனல் வேண்டியது கல் என்னும் சொல் தொக்கது. ஏனையவற்றிற்கும் இஃதொக்கும்.

(84) கால் கோள் - கல்லின்கண் படிவம் சமைக்கத் தொடங்குதல். ஈண்டுக் கால் கோள் என்பதற்குத் தொடங்குதல் என்னும் பொருளே கொள்க அடியார்க்கு நல்லார், கற்கோள் கால்கோள் என விகாரம் என்பர். இளங்கோவடிகளார் கற்கால் கோள் எனப் பல விடத்தும் வழங்குதலின் அவர் கருத்து அஃதன்றென்பது விளங்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கால்கோள் என்பதற்கு (தொல் புறத் 5) கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் எனவும், இது நட்டுக் கால் கொண்டது எனவும் ஓதுதலின் அவர் கருத்தும் அஃதன்றென்பது புலனாம்.

நீர்ப்படை - படிவமாகவைத்த கல்லை நீரில் மூழ்குவித்தல். இஃதொரு சடங்கு, குடமுழுக்குப் போன்று.

நடுதல் என்பது நடுகல் எனவும் நடுதற்காதை என்பது நடுகற் காதை எனவும் ஏடெழுதுவோராற் பிறழ எழுதப்பட்டன என நினைத்தற்கிடனுளது. ஆசிரியர் இளங்கோவடிகளார் கருத்தும் நடுதற் காதை என்பதற்கே பொருந்தும். பழைய உரையாசிரியர் இருவரும் நடுதற்காதை என்றே பாடங் கொண்டனர் என்று கருதவும் இடனுளது. தொல்காப்பியத்தில் நடுதல் என்றும், நடுகல் என்றும் பாட வேறுபாடு காணப்படுதலும் உணர்க.

எனவே, ஏனைய நான்கினும் கல் என்னும் சொல் தொக்கு நின்றாற் போலவே இதனினும் கல்நடுதல் என்பதில் அச் சொல் தொக்கு நின்றதாகக் கோடலே முறையாம். ஆராய்ந்து கொள்க.

(85) வாழ்த்து-கற்படிவமமைத்து நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடைநிறுத்தி வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட கண்ணகித் தெய்வம் விண்ணிடத்தே மின்னுக் கொடிபோல் கடவுள் நல்லணி காட்டிச் செங்குட்டுவனையும் நெடுஞ்செழியனையும் ஆங்கு வந்திருந்த ஏனைய அரசரையும் வாழ்த்தியது என்க. அடியார்க்குநல்லார் பெருங் கிள்ளியையும் என்பர். இஃது ஆராய்ச்சிக்குரியது.

(85) வரந்தருகாதை - அங்ஙனம் வாழ்த்திய தெய்வம் செங்குட்டுவன் முதலியோர்க்கு வரமருளிய காதையோடே என்க.

(86) மேலே (83) இவையனைத்துடன் ஈண்டுக் கூறப்பட்ட காட்சி முதலியனவும் வரந்தருகாதையோடு கூடிய (89) இவ்வாறைந்தும்- முப்பதும் என்றபடியாம்.

(87) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும் இயற்றமிழ்க்கேயுரிய செய்யுள்களையுமுடைய இக்காப்பியத்தை என்க.

(88) உரைசால் அடிகள் - புகழமைந்த அவ்விளங் கோவடிகளார் என்க.

(89) மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - இவர் மணிமேகலையென்னும் பெருங்காப்பியம் செய்த பெரும் புகழுடைய புலவராவார்.

இவரைச் சங்க நூல்களிற் காணப்படுகின்ற சீத்தலைச்சாத்தனார் என்பாரும் அவர் வேறு இவர் வேறு என்பாரும் இருதிறத்தார் உளர்.

(90) இது என்றது இதுகாறுங் கூறிய இப்பகுதி என்றவாறு. அஃதாவது நூன்முகத்தே நின்ற இவ்வுறுப்பு என்றவாறு.

பதிகத்தின் மரபினாற்செய்யப்பட்டது என்றவாறு. இப்பதிகம் அடிகளாரை யாண்டும் படர்க்கையிலேயே கூறுவதனால் இதனைச் செய்த சான்றோர் பிறர் என்பது தேற்றம். அவர் பெயர் முதலியன தெரிந்தில. அடிகளாரே இதனையும் செய்தவர் என்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் கூறும் உரை பொருந்தா என்பது முன்னுங் கூறினாம், கடைப்பிடிக்க.

இனி, இதனை, சேரற்கும் அடிகட்கும் குறவர் குழீஇ வந்து வணங்கி போயது இறும்பூது இதனை நீ அறிந்தருள் என்று அரசனுக்குக் கூற அவனுழை யிருந்த சாத்தன் உரைப்போன் இவனென; வினைவிளைவு யாது என அரசன் வினவச் சாத்தன் விறலோய் கேட்டனன் யான் என ஆங்கு இவற்றைக் கேட்டிருந்த அடிகள் சாத்தனை நோக்கி யாம் இவற்றை உள்ளுறையாக்கிச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் எனச் சாத்தன் அடிகள் நீரே அருளுக என்றாற்கு மங்கல வாழ்த்து முதலாக வரந்தரு காதை யீறாகக் கிடந்த இவ்வாறைந்தும் அடிகள் அருளச் சாத்தன் கேட்டனன் இது பதிகம் என இயைத்திடுக.

இனி இதன்கண் - பதிகத்தின் மரபு வருமாறு:-

பொதுவும் சிறப்பும் எனப் பாயிரம் இருவகைப்படும் என்ப. அவற்றுள் இஃது இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரமாம். பாயிரம் பதிகம் ஒருபொருட் கிளவிகள்.

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே

எனவும்,

காலங் களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரும் உளரே

எனவும் வரும் நன்னூற் சூத்திரங்களால் இப்பதிகத்தின் மரபு இவை என்றுணர்க.

இனி, இதனுள் நிரலே, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகட்கு என்பதனால், இந்நூலாசிரியரின் சிறப்பும், பெயரும்; குன்றக் குறவர் கூடி... இறும்பூது போலும் அறிந்தருணீயென, அரசனுக்கு அறிவிப்ப அவனுழையிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைப்போன்... கட்டுரை கேட்டனன் யானென அது கேட்ட அடிகள் அருள என்றதனால் வழியும் முடிகெழு மூவேந்தர்க்கும் உரியது என்றதனால் எல்லையும் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றதனால் நூற்பெயரும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றமையான் இம்முத்தமிழுக்குமுரிய இலக்கண முணர்வோர் இந்நூல் கேட்டற்குரியார் என யாப்பும் கேட்போரும் அரைசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூஉம் என்றதனால் நுதலிய பொருளும் இம்மூன்று வாய்மைகளையும் இந்நூலின் வாயிலாய்த் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லோர், உள நாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந்தேயத்துக் குறுதுணை தேடுதல் தேற்றமாதல், யாமோர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் என்று அடிகளார் கூறுதலாற் போதருதலின் பயனும், சேரல் இளங்கோ அடிகட்கு எனவே, அவ்வரசன் காலமே இந்நூல் தோன்றிய காலம் எனக் காலமும், நாட்டுதும் என்பதற்கு உலகிற்குப் பயன்படச் செய்து நிறுத்துவேம் என்பது பொருளாகலின் அடிகளார் மக்கள்பால் வைத்த அருளே இது செய்தற்குக் காரணம் எனக் காரணமும், அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்றதனால் அத்தண்டமிழாசான் தலைமை வகித்த சான்றோர் அவைக்களமே இந்நூல் அரங்கேறிய களம் எனக் களமும் ஆகிய பாயிரப் பொருள் பதினொன்றும் போந்தமையுணர்க.

செய்யுள்-சூட்டச் செந்தூக்கு: (அஃதாவது இடையிடையே குறளடியும் சிந்தடியும் விரவி ஈற்றயலடி மூச்சீர்த்தாய் முடிந்த ஆசிரியப்பா என்றவாறு.)

பதிகம் முற்றிற்று.

உரைபெறு கட்டுரை

1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று கள வேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.

2. அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்க ணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.

3. அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத் தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்களகவையி னாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

4. அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.

1. அன்றுதொட்டு...........நோயுத்துன்பமு நீங்கியது

(இதன்பொருள்) அன்று தொட்டு - கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள் வாளெறியக் கோவலன் வெட்டுண்டு புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப, மண்ணகமடந்தை வான்றுயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனனாக அற்றைநாள் முதலாக; பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து - பாண்டியனுடைய நாட்டின்கண் மழையின்மையே மிகாநிற்றலாலே; வறுமை எய்தி-யாண்டும் விளைவுகுன்றி உயிர்களை வருத்தும் பசிப்பிணி முதலியவற்றிற்குக் காரணமான நல்குரவு வந்தெய்தி அது காரணமாக; வெப்பு நோயும் குருவும் தொடர - கொடிய தொழு நோயும் கோடைக் கொப்புளமும் இடைவிடாது மாந்தரை நலியா நிற்றலால்; கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் - அப்பொழுது வடவாரியர் படைகடந்து தென்றமிழ் நாடொருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னர் அப் பாண்டிய நாட்டிற் கரசுரிமையுடையனாய்க் கொற்கைக்கண் அரசு வீற்றிருந்த வெற்றீவேற் செழியன் என்னும் மன்னன் அந் நலிவு தீர்த்தற்பொருட்டு; நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய-திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஒருபதினாயிரவரைப் பலியிட்டு அப்பலிக்களத்திலே வேள்வி செய்யுமாற்றால் விழாவெடுத்து அமைதி செய்தலாலே; நாடுமலிய மழை பெய்து நோயுந் துன்பமும் நீங்கியது- அவன் நாடானது அன்றுதொட்டு மிகவும் மழை பெய்யப்பெற்று முற் கூறப்பட்ட வறுமையும் நோய்களும் நீங்கப்பெற்றது என்க.

(விளக்கம்) நாடு நீங்கியது என இயையும். அன்றுதொட்டு என்றது சினையலர் வேம்பன் யாவதும் தேரானாகி.........கள்வனைக் கொன்று சிலம்பு கொணர்க எனக் காவலருள் கல்லாக் களிமகன் வாளால் எறிந்து கோவலனைக் கொல்ல அவன் குருதி நிலத்தின் மேற் பரந்த அன்றுதொட்டு என்பதுபட நின்றது என்க. வெப்பு நோய் - தொழுநோய் என்பது அடியார்க்கு நல்லார். குரு-கோடைக் கொப்புளம். இதனை இக்காலத்தார் அம்மைநோய் என்பர். கொப்புளிப்பான் என்பதுமது. கொற்கை பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். இவ்வுரை பெறு கட்டுரைக் கண் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய எனவரும் சொற்றொடர் அறிஞருலகத்தைத் துன்புறுத்தும் என்பதில் ஐயமில்லை. அறிவிலா மாக்களுலகத்திற்குக் கழிபேருவகை செய்யும். எனவே, இவ்வுரை பெறு கட்டுரை என்னும் இப்பகுதி நாடெங்கணும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்த பிற்காலத்தே கண்ணகி கதையைப் பொது மக்கட்குக் கூறிவந்த பூசகராற் செய்யப்பட்டு நூன்முகத்தே வைக்கப்பட்டது என்று கருத இடனுளது. இங்ஙனமே நூலினுள் காண்டத் திறுதிகளினும் நூலிறுதியினும் காணப்படுகின்ற கட்டுரைகளும் பிற்காலத்தே செய்யப்பட்டு நூலினுட் செருகப்பட்டன போலும். (முன்னுரையினை நோக்குக) இதன் பயன் ஆராய்ச்சியறிவில்லாத மாக்களை அத்தெய்வத்தினிடம் ஆற்றுப்படை செய்வதாகும் என்க. இவ்வாற்றான் யாமும் சாந்தி பெறுவோமாக. இதற்கு, அரும்பதவுரை யாசிரியர், உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்று கூறும் விளக்கம் ஒரு சான்றாகும். என்னை? இக் கட்டுரை வழிவழியாகக் கூறப்பட்டு வருவதொன்றென்பதே அவர் கருத்தாகலான் என்க.

2. அதுகேட்டு...........மாறாதாயிற்று

(இதன்பொருள்) அதுகேட்டு - வெற்றிவேற் செழியன் நங்கைக்குச் சாந்திசெய்து அவன் நாட்டின்கண் தீங்ககற்றி நன்மையை நிறுவிய அச் செய்தியைக் கேட்டு, கொங்கு இளங்கோசர் கொங்குமண்டிலத்து இளங்கோக்களாகிய கோசரும்; தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய-கண்ணகிக்குத் தம்முடைய நாடாகிய கொங்குமண்டலத்திலும் விழாவெடுத்து அமைதிசெய்யா நிற்பவே; மழை தொழில் என்றும் மாறாதாயிற்று-அந்த நாடும் மழை வளம் பெற்று உழவு முதலிய தொழிலும் மாறாமல் வளமுடையதாயிற்று என்க.

(விளக்கம்) நாடு மழையும் தொழிலும் மாறாதாயிற்று என்க. மழை தொழில் பெய்தற்றொழில் என்பாருமுளர். இளங்கோசர் என்பது சாதிப்பெயர். இவரைக் குறுநில மன்னர் என்பது குறித்து இளங்கோசர் எனப்பட்டார் எனினுமாம்.

3. அதுகேட்டு...............நாடாயிற்று

(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியினைக் கேள்வியுற்று; கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் - கடலாற் சூழப்பட்ட இலங்கையை ஆட்சிசெய்யும் கயவாகு என்னும் வேந்தான்; நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து ஆங்கு - கண்ணகிக்கு நாள்தோறும் பூப்பலி செய்தற்குரிய பலிபீடத்தை முற்படச் செய்து பின்னர்க் கோயிலுமெடுத்து அந்நாட்டினும்; இவள் - இப்பத்தினித் தெய்வம்; அரந்தை கெடுத்து வரம்தரும் என - பசியும் பிணியும் முதலிய துன்பங்களைப் போக்கி யாம் வேண்டும் வரங்களையும் அளித்தருளும் என்று கருதி; ஆங்கு ஆடித்திங்கள் அகவயின் பாடி விழாக்கோள் பல் முறை எடுப்ப - அக்கோயிலின்கண் ஆண்டுதோறும் ஆடித் திங்களிலே அவ்வரசன் தன் உரிமைச் சுற்றத்துடன் சென்று அக்கோயிலின் மருங்கே படவீடமைத்துத் தங்கியிருந்து சிறப்புகள் பன்முறையும் எடாநிற்றாலாலே; மழை வீற்றிருந்து - மழை குறைவின்றி நிலை பெறுதலானே; வளம்பல பெருகி - வளங்கள் பலவும் மல்கி; பிழையா விளையுள் நாடாயிற்று. அந்நாடும் பொய்யாது விளையும் விளைவினையுடைய நாடாயிற்று என்க.

(விளக்கம்) அது கேட்டு என்றது இவ்வாறு பலரும் நங்கைக்குச் சிறப்புச் செய்து நலமெய்தும் அச்செய்தி கேட்டு என்றவாறு. கயவாகு - அக்காலத்தே இலங்கையை ஆட்சிசெய்த அரசன் என்பதும், அவன் சேரன் செங்குட்டுவன்பால் நட்புரிமையுடையவன் என்பதும் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து விழாச் செய்தபொழுது இவனும் அவ்விழாவிற்கு வந்திருந்தனன் என்பதும், அவ்விழாவின்கண் அத்தெய்வத்தின்பால் எம் நாட்டிற்கும் எழுந்தருள வேண்டும் என்று வரம் வேண்டி அங்ஙனமே வரமருளப் பெற்றவன் என்பதும்; அடிகளார்,

அருஞ்சிறை நீங்கிய வாரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரு கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்க ணிமைய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் (157-164)

என வரந்தரு காதையி லோதுமாற்றானு முணர்க.

நாட்பலி பீடிகை - நாள்தோறும் பூப்பலி செய்தற் கியன்ற பீடம். அரந்தை - வறுமை, பிணி முதலியவற்றாலுண்டாகும் துன்பம்.

ஆடித்திங்கள் அகவயின் விழவெடுத்தான் - கண்ணகியார் அத்திங்களிலே தம் தெய்வத்தன்மை காட்டினமையைக் கருத்துட் கொண்டு என்க. என்னை?

ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே  (கட்டுரைகாதை - 133-7)

என மதுரைமாதெய்வம் கூறிற்றாகலின் அக்கால மதுவாதலுணர்க.

பாடி-படவீடு. பாடிவிழா என்றது அரசன் உரிமைச் சுற்றத்தோடு வந்து பாடிவீடமைத்து அதிற் றங்கியிருந்து செய்யும் விழா வென்க. இதனாற் போந்தது கயவாகு கண்ணகிக்கு விழாவெடுப்பதனை அத்துணைச் சிறப்பாகக் கருதினன் என்பதாம்.

இவ்வாறு அரசர்கள் பாடிவிழா வெடுப்பதனைப் பெருங்கதை உஞ்சைக் காண்டத்தினும் காண்க. பாடி-நகரி என்பர். (அடியார்க்)

4. அதுகேட்டு............நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே

(இதன்பொருள்) அதுகேட்டு - அச்செய்தியைக் கேள்வியுற்று; கோழியகத்து - அப்பொழுது சோழ நாட்டிற்குத் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரிடத்தே அரசு கட்டிலில் வீற்றிருந்த சோழன் பெருங்கிள்ளி (பெருநற்கிள்ளி) என்னும் சோழமன்னன்; இவள் எத்திறத்தானும் வரந்தரும் ஓர் பத்தினிக் கடவுள் ஆகும் என- இக் கண்ணகியாகிய நங்கை நமக்கு எவ்வாற்றானும் வரந்தருதற்கியன்றதொரு பத்தினிக் கடவுள் என மகிழ்ந்து; நங்கைக்கு - தன்னாட்டிலே தோன்றித் தெய்வமாகிய அக்கண்ணகிக் கடவுட்கு; பத்தினிக் கோட்டமும் சமைத்து - ஏனையோரினும் சிறப்பப் பத்தினிக்கோட்டமும் எடுப்பித்து; நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே - நாள்தோறும் வேள்வியும் விழாவும் நிகழ்வித்தனன் என்க.

(விளக்கம்) பெருங்கிள்ளி - இவன் புகார் நகரத்தைக் கடல் கொண்டமையால் ஆங்கிருந்துய்ந்துபோன நெடுங்கிள்ளியின் மகன் ஆவான். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கடவுட் படிவம் சமைத்து வேள்வியும் விழவுஞ் செய்த காலத்தில் புகார் நகரம் கடல் கொள்ளப் பட்டழிந்தது. இக்காரணத்தால் இவ்வுரைபெறு கட்டுரையில் புகாரில் கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தி காணப்பட்டிலது. மேலும், புகார்ச் சோழர் வழித் தோன்றலே ஈண்டுக் கூறப்படுகின்ற பெருங்கிள்ளி என்க. இவன் கண்ணகித் தெய்வம் தன்னாட்டிற்றோன்றிய வுரிமைபற்றி இத்தெய்வம் பொதுவாக ஏனைய நாட்டினர்க்கு வரந்தருதல் போலன்றி நமக்குப் பிறப்புரிமைபற்றிச் சிறப்பாகவும் வரந்தருதற்குரியது என்பான், எத்திறத்தானும் வரந்தருமிவள் ஓர் பத்தினிக் கடவுள் என்றான் என்க. காவிரி நாட்டின்கண் பசியும் பிணியுமின்மையின் முன் கூறப்பட்டவாறு கூறாது கோட்டம் அமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோன் என்றுமட்டுமே கூறப்பட்டதென்க.

இனி உரைபெறு கட்டுரை-இவை முற்கூறிய கட்டுரைச் செய்யுள் எனவும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள என்றமையால், சிறுபான்மை இவ்வுறுப்புக்களும் சிலவரும் எனவும் கொள்க என்பர் அடியார்க்கு நல்லார். இதனால் இவ்வுரைபெறு கட்டுரை என்னும் உறுப்பும் இளங்கோவடிகளாரே இயற்றியது என்பது அடியார்க்கு நல்லார் கருத்தென்பது அறியப்படும்.

இதன்கண், பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் சாந்தி செய்ய எனவரும் சொற்றொடரே அடிகளார் இதனைச் செய்திலர் என்பதற்குப் போதிய சான்றாம்


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #1 on: February 22, 2012, 07:48:05 AM »
புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு  5

மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்  10

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான். (மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா) ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய  15

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே.
அதனால்,    20

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான்,    25

போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ,
ஆங்கு,    30

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்,
அவனுந்தான்,    35

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ.
அவரை,    40

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி,    45

முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம்,வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன,
அகலுள்மங்கல அணிஎழுந்தது.
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச்  50

சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்  55

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார் 60

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார், தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை  65

உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

அஃதாவது :- நூலாசிரியர் தாமியற்ற வெடுத்துக்கொண்ட சிலப்பதிகாரம் என்னும் இப்பாட்டைச் செய்யுளாலியன்ற வனப்பு நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டுக் கடவுளை வாழ்த்துவதும், இவ்வனப்பு நூலின் தலைவியாகிய கண்ணகியையும் தலைவனாகிய கோவலனையும் திருமண வேள்விக்கண் கட்டிலேற்றிச் சேம்முதுபெண்டிர் வாழ்த்துவதுமாகிய இருவகை வாழ்த்துக்களையும் உடைய இன்னிசைப்பாடல் என்றவாறு.

1-3 : திங்களை........அளித்தலான்

(இதன் பொருள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் யாம் உலகெலாம் தண்ணொளி பரப்பும் திங்கள் மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்! அஃது ஏனெனின்; கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெள் குடை போன்று - பூந்தாது விரிதற்கிடனான ஆத்திமாலையை யுடைய சோழமன்னனுடைய குளிர்ச்சி யுடைய வெண்கொற்றக் குடைபோன்று; இஅம கண் உலகு அளித்தலான் அஃது இந்த அழகிய இடங்களையுடைய நிலவுலகிற்குத் தண்ணொளி வழங்கிப் பாதுகாத்தலாலே; என்க.

(விளக்கம்) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் எனவரும் அடுக்குச் சிறப்பின்கண் வந்தது; மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்; இது பண்பும் பயனும் கூடின உவமம். கொங்கு பூந்தாது. மாலை ஆத்தி மாலை. சென்னி-சோழன். உவமத்திற்கு வந்த அடையைப் பொருளுக்கும் இயைத்துக் குளிர் வெண்திங்கள் என்க.

4-6 : ஞாயிறு...........திரிதலான்

(இதன்பொருள்) ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் யாம் ஞாயிற்று மண்டிலத்தைக் கைகுவித்து வணங்குவோம்; அஃது ஏனெனின்; காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்-அது தான் காவிரியாறு புரக்கும் நாட்டையுடைய சோழனது ஆணைவட்டம் போன்று பொன்னாகிய கொடுமுடியையுடைய மேருமலையினை இடையறாது வலமாகச் சூழ்ந்து வருதலான் என்க.

(விளக்கம்) திகிரி ஆணைவட்டம். அரசனுடைய ஆணையை ஆழியாக உருவகித்துரைப்பது நூல் வழக்கு. இதனால் சோழமன்னனுடைய ஆணை உலகெலாம் செல்கின்ற சிறப்புடைத்தென்பது பெற்றாம். திரிதல்-இடையறாது செல்லுதன் மேற்று. இது தொழிலுவமம். ஏனைய நாட்டினும் சிறந்த நாடென்பார் அச்சிறப்பிற்குக் காரணமான காவிரியையுடைய நாடன் என்றார். என்னை?

ஏரியு மேற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு

எனவரும் பழைய வெண்பாவினையும் நினைக.

7-9 : மாமழை...........சுரத்தலான்

(இதன் பொருள்) மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - யாம் பெரிய முகிலைக் கைகுவித்து வணங்குவோம், அஃது ஏனெனின்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைக் தருகின்ற கடலாற் சூழப்பட்ட இந்நிலவுலகிற்கு; அவன் அளிபோல் மேல் நின்று தான் சுரத்தலான் - அக்காவிரி நாடன தண்ணளி போன்று மேம்பட்டு நின்று பெயலாலே வளத்தைப் பெருக்குதலாலே என்க.

(விளக்கம்) மழை, ஆகுபெயர்; முகில். மா-பெருமைமேற்று. நாம நீர் வேலி என்புழி நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம்-அச்சம். அவன் என்னும் சுட்டு மேல் காவிரிநாடன் என்பதனைச் சுட்டியவாறு. அளி-அருள். மேனின்று என்பது அரசன் அளிக்கு மேம்பட்டு நின்று எனவும், முகிலுக்கு மேலே நின்று எனவும் பொருள் பயந்து நின்றது.

இனி, ஈண்டு அடிகளார், திங்கள் ஞாயிறு மழை எனும் மூன்று பொருள்களும் இவற்றிற்கு நிரலே உவமையாக வருகின்ற குடை திகிரி, அளி என்னும் மூன்றும் இவற்றையுடைய மன்னனும் ஆகிய இவற்றை வணங்கித் தமது காப்பியத்தைத் தொடங்குதல் அடிகளார்க்கு முன்னும் பின்னும் காணப்படாததொரு புதுமையுடைத்து. இவைதாம் இலக்கண நெறி நின்று ஆராய்வார்க்கு, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலில் பாடாண் திணையின்கண், அமரர்கண் முடியும் அறுவகை யானும் (....................-25) என்றோதினமையின் இவ்வாறு திங்கள் ஞாயிறு மழை என்னும் இவை அவ்விதி பற்றி வணங்கப்பட்டன போலும் எனவும், அன்றியும், புறத்திணைப்பாடாண் பகுதியில் தாவினல் லிசை எனத் தொடங்கும் நூற்பாவின்கண் நடைமிகுத்தேத்திய குடைநிழன் மரபு என்னும் துறைபற்றி ஈண்டுச் சென்னியின் குடை நிழன் மரபினை நடைமிகுத்து ஏத்தப்பட்டது எனவும், மரபு என்றதனால் திகிரியையும் அளியையும் மிகுந்தேத்தினார் எனவும் பண்டையுரையாசிரியர் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் கூறிப் போந்தனர்.

இன்னும் ஈண்டு அடிகளார் வணங்கிய திங்கள் முதலிய மூன்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்னும் நூற்பாவின் பொருளோடு தொடர்புடையன என்று கொண்டு அக் கருத்திற்கேற்ப வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் இத் திங்கள் முதலிய மூன்றுமே என வுரை வகுத்தலுமாம். என்னை? கொடி நிலை என்றது திங்கள் மண்டிலம் எனவும், (நச்சினார்க்கினியர் ஞாயிற்று மண்டிலம் என்று கருதுவர்) கந்தழி என்பது ஞாயிறு மண்டிலம் எனவும், வள்ளி என்பது முகில் எனவும் கோடலுமாம் ஆகலின் என்க.

இவ்வாறு தொல்காப்பியமே முதலிய பழைய இலக்கண நூலானும் இதுதான் இஃதென அறுதியிட்டுக் கூற வொண்ணாக இம்மங்கல வாழ்த்தைப் பின்னும் கூர்ந்து ஆராயுங்கால், இவ்வாழ்த்து அடிகளார் கடவுளை வாழ்த்தும் வாழ்த்தே என்பது புலப்படும். அது வருமாறு: மாந்தர் கட்புலனாகக் காணப்படாத கடவுளை அவனுடைய படைப்புப் பொருளின் வாயிலாகவே காண்டல் கூடும் என்பது அடிகளார் கருத்து. இறைவனுடய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்த பண்பாகலின் அப்பண்பு திங்கள் மண்டிலத்தும், அவனுடைய தெறற்பண்பும் அறிவு விளக்கப் பண்பும் ஞாயிற்று மண்டிலத்தும், அவனுடைய ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்றுவகைத் தொழிற்பாடும் முகிலிடத்தும் காணப்படுதலால் இவற்றின்கண் இக் கடவுட்பண்புகளையே அடிகளார் கடவுளாகக் கண்டு வழிபடுகின்றார் என்பதாம்.

இனி, உயிரில் பொருளாகிய இவற்றினும் உயிர்களிடத்தே கடவுட்பண்பு இறைமைத்தன்மை (அரசத்தன்மை)யாக வெளிப்படுதலின் இவற்றிற் குவமையாகக் காவிரிநாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகின்றனர் என்று கொள்க. இங்ஙனம் கூறவே அடிகளாருடைய கடவுட் கொள்கையையும் யாம் ஒருவாறு அறிந்து கொண்டவராகின்றோம் என்க. இவ்வாறு எப்பொருளினும் கடவுளைக் காணுமியல்பே சமயக்கணக்கர் மதிவழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாய்க் கடவுளைக் கண்டு வழிபடுகின்றவுண்மை நெறியென்று கொள்க. இவற்றை,

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள
நின், தண்மையுஞ் சாயலும் திங்கள்உள
நின், சுரத்தலும் வண்மையு மாரியுள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும்

தீயினுட் டெறனீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

என்றற்றொடக்கத்துப் பரிபாடலானும் மணிவாசகம் முதலிய நூல்களானும் உணர்ந்து கொள்க. ஈண்டு வணங்கிய திங்கள் முதலியன பொதுப் பொருள்களாக இக்காப்பியத்தோடு தொடர்புண்மை கருதி அரசன் என்று பொதுவின் ஓதாது சென்னி என்றும் காவிரிநாடன் என்றும் செம்பியன் ஒருவனையே விதந்தெடுத்தோதுவாராயினர். இது தாம் வழிபடு கடவுளை வாழ்த்தி இக்காப்பியத்திற்கு அவ்வாழ்த்தினூடே கால்கோள் செய்தபடியாம் என நுண்ணிதின் உணர்க.

இனி, திங்களை முற்கூறியது இக் காப்பியத் தலைவியாகிய கண்ணகியாரைக் கருதிக் கூறியபடியாம். என்னை? திங்கள் மண்டிலம் பெண்மைத் தன்மையுடைத்தென்ப வாகலின் என்க. இக்கருத்தேபற்றி அடியார்க்கு நல்லார், இத் தொடர்நிலைச் செய்யுட்குச் சிறந்த முதன்மொழி அதுவே என்றோதினர் போலும். இனி இக் காப்பியத் தலைவியும் தலைவனும் தோன்றிய இடமாகிய பூம்புகாரை வாழ்த்திக் காப்பியக் கதையைத் தொடங்குகின்றனர் என்க.

10-12 : பூம்புகார்............. ஒழுகலான்

(இதன்பொருள்) பூம்புகார் போற்றும் பூம்புகார் போற்றுதும்-யாம் இனி அழகிய புகார் நகரத்தைக் கைகூப்பி மனத்தால் நினைந்து தலையாலே வணங்குவேம்; வீங்குநீர் வேலிக்கு - கடலை வேலியாகவுடைய இந்நிலவுலகின்கண்; அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான் - அக் காவிரிநாடன் குலத்தாருடைய புகழோடு தானும் உயர்ந்து தன்புகழ் இவ்வுலகெங்கும் பரவுமாறு நடத்தலாலே என்க.

(விளக்கம்) பூ-அழகு; பொலிவு. பூப்புகார் எனற்பாலது விகாரத்தால் பூம்புகார் என நின்றது. இது செய்யுளின்பம் கருதி மெலிக்கும் வழி மெலித்தல். ஓங்கிப் பரந்து ஒழுகலான் என்னும் வினைக்கேற்பப் புகழ் என வருவித்தோதுக.

அடிகளார் இக்காப்பியஞ் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் வயிறுபுக்கு மறைந்து போனமை கருதி அந்நகரந்தான் மறைந்து போயினும் அதன் புகழ் அக் காவிரிநாடன் புகழோடு இவ்வுலகுள்ள துணையும் பரந்து ஒழுகும் அத்துணைப் பெருமையுடைத்தாகலான் அதனைப் போற்றுதும் என்றவாறு. இதற்குப் பழைய வுரையாசிரிய ரெல்லாம் அடிகளார் கருத்துணராது வறிய சொற்பொருள் உரை மட்டும் கூறியுள்ளனர். இக் கருத்து, அடுத்துப் பின்னும் விளக்கமுறும்.

13-19 : ஆங்கு................ முழுதுணர்ந்தோரே

(இதன்பொருள்) ஆங்கு-அவ்வாறு வாழ்த்தி வணங்குதலன்றி, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும். தம்பால் தோன்றிய உயர்ந்தோர் புகழோடு ஓங்கிப் பரந்தொழுகும் புகழுடைய பொதியமலை யேயாதல் இமயமலையேயாதல்; பதிஎழுவு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரேயாயினும் - தன்கண் வாழ்வோர் பகையே பசியே முதலியவற்றால் வருந்திக்குடியோடிப் போதலை எஞ்ஞான்றும் அறிந்திலாத படைப்புக் காலந்தொட்டு நிலையுற்று வருகின்ற பழைய குடிமக்களையுடைய தனக்கேயுரிய சிறப்பினையுடைய இந்தப் புகார் நகரமேயாதல், இன்னோரன்ன விடங்களை; முடித்த கேள்வி முழுது உணர்ந்தோர்-கேட்கக்கடவன வெல்லாம் கேட்டுமுற்றிய கேள்வியறிவினாலே அறியற்பாலனவனைத்தையும் ஐயந்திரிபற அறிந்துணர்ந்த சான்றோர்; நடுக்கு இன்றி நிலைஇயர் என்பது அல்லதை - கேடின்றி எஞ்ஞான்றும் புகழுருவத்தே நிலைத்திடுக! என்று உவந்து வாழ்த்துவதல்லது; ஒடுக்கம் கூறார் - அவைதாம் இயற்கை நியதியுட்பட்டு மறைந்தொழிந்தவிடத்தும் அதனைப் பொருளாகக் கருதிக் கூறுவாரல்லர்; எற்றாலெனின; உயர்ந்தோர் உண்மையின்-அவ்விடங்களிலே தோன்றிய சான்றோர் தம் பூதவுடம்பு மறைந்த வழியும் புகழுடம்பிலே எஞ்ஞான்றும் இவ்வுலகிலே நிலைத்திருத்தலாலே; என்க.

(விளக்கம்) அவ்வுயர்ந்தோர் புகழோடு அவ்விடங்களின் புகழுமொன்றி ஓங்கிப் பரந்தொழுகலான் அவை ஒடுங்கியவிடத்தும் அவையிற்றின் ஒடுக்கத்தைப் பொருளாகக் கருதிக் கூறுவதிலர். அவற்றை வாழ்த்துவதே செய்வர் என்றவாறு. இங்ஙனம் கூறியதன் குறிப்பு அடிகளார் இந்நூல் செய்கின்ற காலத்தே புகார் நகரம் கடல் கொள்ளப்பட்டு மறைந்தொழிந்தமையால் அந்நிகழ்ச்சியை அடிகளார் வெளிப்படையானோதாமல் குறிப்பாக உணர்த்துவதாம் என்க. இக் குறிப்பின்றேல் புகார் நகரத்தின் சிறப்பறிவுறுத்த வந்த அடிகளார் நடுக்கின்றி நிலைஇயர் என்பதல்லதை ஒடுக்கங் கூறார் என்பது வெற்றெனத் தொடுத்தலும் மிகைபடக் கூறலுமே யாகும் என்க. வரலாற்றறிவின்கண் கருத்தில்லாத பழைய வுரையாசிரியர் இருவரும் ஈண்டு அடிகளார் ஒடுக்கம் கூறார் என வேண்டாகூறி வேண்டியது முடித்துள்ள அருமையை உணராது போயினர் இக்காலத்துரை செய்தோரும் கண்மூடி வழக்கமாக அப்பழைய வுரையாசிரியர் கூறியதே கூறியொழிந்தனர்.

இனி, தம் வாழ்நாளிலேயே கடல் கோட்பட்ட புகார் நகரம் உயர்ந்தோரை உலகிற்கு வழங்கிய வள்ளன்மைக்கு உவமையாகவே பொதியிலையும் இமயத்தையும் அதனோடு ஒருசேர எடுத்தோதினர்.

இனி, இதனால் உலகின்கண் மூதூர்கள் பல இருப்பினும் உயர்ந்தோரைத் தோற்றுவித்திலவாயின் அவை இருந்தும் இல்லாதவைகளே. மற்றுக் கடல்கோள் முதலியவற்றால் ஒடுங்கியவிடத்தும் சான்றோரை ஈன்ற திருவுடையூர்கள் என்றும் ஒடுங்காமல் நடுக்கின்றி நின்று நிலவுவனவேயாம் என்பது அடிகளார் கருத்தென்பதுணரப்படும். இக் கருத்துடனே,

மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா
தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய்
வீய்ந்தவ ரென்பவர் வீய்ந்தவ ரேனும்
ஈய்ந்த வரல்ல(து) இருந்தவர் யாரே?  (பால-வேள்விப்-30)

எனவரும் கம்பநாடர் செய்யுள் நினைந்தின்புறற் பாலதாம்.

இனி, அடிகளார் காலத்திலேயே புகார் நகரங் கடல் வயிறு புக்கது என்னும் இவ்வரலாற்றுண்மையைத் தண்டமிழாசான் சாத்தனார் ஓதிய மணிமேகலையின்கண்; (25: 175:)

மடவர னல்லாய் நின்றன் மாநகர்
கடல்வயிறு புக்கது காரணங் கேளாய்

என்பது முதலிய பலசான்றுகளானும் உணர்க. மணிமேகலையிற் கிடைக்குஞ் சான்றுகள் இந்நூற்கு அகச்சான்றுகள் என்பது மிகையன்று. மேலும் உரைபெறு கட்டுரைக்கண் கண்ணகியார்க்குப் புகாரின்கண் பத்தினிக் கோட்டம் சமைக்கப்பட்டதெனக் கூறாமைக்கும் காரணம் அந்நகர் கடல் வயிறு புக்கமையே என்றுணர்க.

இனி, பொதுவறு சிறப்பு என்பது இஃதென்றுணர்த்துவார் அதனையே பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறுசிறப்பென அடை புணர்த்து விளக்கினர். நடுக்கின்றிநிலையிய என்பதும் பாடம். அல்லதை, ஐகாரம், அசை. நிலைஇயர் - வியங்கோள்; வாழ்த்துப் பொருளின்கண் வந்தது. கேள்வியினால் முழுதுணர்ந்தோர் என்க.

உயர்ந்தோர் பொதியிலுக்கு அகத்தியனையும், இமயத்திற்கு இருடிகளையும், புகாருக்கு மன்னர்களையும் கற்புடையமகளிரையும் கொள்க. அடியார்க்கு நல்லார், இமயத்திற்கு, இறைவனைக் கொள்வர். இவ்வாறுரை கூறாக்கால் அடிகளார் கூற்று அவர் காலத்தே பொய்யாயொழிதலு முணர்க.

கண்ணகி மாண்பு

20-24 : அதனால்...........அகவையாள்

(இதன்பொருள்) அதனால் - அக்காரணத்தினாலே, நாக நீள் நகரொடும் நாகநாடு அதனொடும் போக-பவணர் வாழ்கின்ற நெடிய நகரத்தினோடும் வானவர் வாழ்கின்ற வானநாட்டினோடும் நம்மனோர் காட்சிக்குப் புலனாகாமல் கேள்விக்கு மட்டும் புலப்படுகின்றதொரு நகரமாய்ப் போகாநிற்ப; நீள் புகழ் என்னும் புகார்நகர் அது தன்னில் - காலந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்னும் அந்த மாநகரத்தின்கண் அக்காலத்தே வாழ்ந்திருந்த உயர்ந்தோருள் வைத்து; மாகவான் நிகர்வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் - வானத்து நின்று மழை பொழிந்து உலகோம்புகின்ற முகிலையே ஒத்த வண்மையுடைய கையையுடைய மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மடமகளாய் அவன் குலமாகிய தருவீன்ற கொழுந்துபோல்வாளும், ஈகை வான் கொடி அன்னாள் - பொற் கொடிபோல்வாளும் ஆகிய நங்கை; ஈர்ஆறு ஆண்டு அகவையாள்-பன்னீராட்டையுட்பட்ட பருவத்தை யுடையளா யிருந்தனள் என்க.

(விளக்கம்) அதனால் என்றது தன்கட்டோன்றிய உயர்ந்தோர் உண்மையால் என்றவாறு. உயர்ந்தோர் உண்மையால் எஞ்ஞான்றும் புகழால் மன்னும் புகார் நகரது தன்னில் என இயையும்.

இனி அஃது அத்தன்மையதாகலான் போகமும் புகழும் நிலைபேறுடைய என்றவாறு என்னும் அடியார்க்குநல்லார் உரை, போகத்திற்குப் புகார் நிலைபேறுடைத்தாதல் காரணம் என்றல் பொருந்தாமையின் போலியாதலறிக. புகாரின் நிலைபேறுடைமை புகழுக்குக் காரணம் என்பதும் காரணகாரிய முறைமையிற் பிறழ்ந்தவுரையாம் என்க. என்னை? புகழே நிலைபேறுடைமைக்குக் காரணம் ஆதலே நேரிதாகலின் என்க.

கடற் கோட்பட்டமையால் புகார் நாகர் நகரோடும் நாக நாட்டோடும் ஒருதன்மையுடையதாய்ப் போக இப்பொழுது புகழான் மட்டும் மன்னுகின்ற (புகார் என்னும்) அந்த நகரிலே கடற்கோளின் முன்னர் வாழ்ந்திருந்த மாநாய்கன் என்பவனுடைய மகள் ஒருத்தி இருந்தனள், அவள் ஈராறாண்டகவையுடையள் ஆயிருந்தனள் என அடிகளார் காப்பியத்தலைவியை முதற்கண் நம்மனோர்க்கு அறிவிக்கின்றனர் என்றுணர்க.

நாகர் நகரோடு நாக நாடதனோடும் ஒருதன்மையதாய்ப் போக என்றது இவ்வுலகத்திற் காணப்படாமல் அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களிலே மட்டும் இருக்கின்றதாகிவிட என்றவாறு.

முன்னர் உயர்ந்தோருண்மைக்குப் பொதியிலையும் இமயத்தையும் உவமை கூறினர் என்றும் ஈண்டுக் கடல் கொள்ளப்பட்ட பின்னர் இலக்கியத்தில் மட்டும் காணப்படுதற்கு நாகர் நகரையும் நாக நாட்டையும் உவமையாக எடுத்தோதினர் என்றுமுணர்க.

இனி, அடியார்க்கு நல்லார், போகம் நீள்புகழ் எனக் கண்ணழித்து இவற்றை எதிர்நிரனிறை எனக் கூறினர். ஆயின் போகம் பவணர்க்குப் பொருந்துமாயினும் சுவர்க்கத்திற்குப் புகழுண்டென்றல் வம்பே, என்னை? புகழ்தானும் ஈகைமேற்றாக அது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்தோம்புநர், நற்றவஞ் செய்வோர், பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர் நாட்டிற்கு உண்டென்பதும் அதுதானும் புகார் நகரத்திற்குப் புகழ்பற்றி உவமையாம் என்பதும் சிறிதும் பெருந்தா வென்றொழிக.

அந்நகரம் இப்பொழுதின்மையான் புகார் நகரம் என்னும் அந்த நகரத்தில் என்பார் புகார் நகரது தன்னில் என்றார். எனவே, அந்நகரம் கடல் வயிறு புகுதற்கு முன்னர் அந்நகரத்தில் மாநாய்கன் என்றொரு பெருங்குடி வாணிகன் இருந்தான். அவனுக்கு மகள் ஒருத்தி இருந்தனள், அவள் பன்னீராண்டகவையினள் ஆயினள் என்றாருமாயிற்று. அவளே இக்காப்பியத் தலைவியாதலின் அவளை மகளாகப் பெறுதற்குரிய அவள் தந்தையின் தகுதிதோன்ற அவனை மாகவான் நிகர்வண்கையன் என்றார்; அவன்றானும் அரசனாற்சிறப்புப் பெயர் பெற்ற பெருந்தகை என்பார் அவனது இயற்பெயர் கூறாது மாநாய்கன் என்னும் சிறப்புப் பெயரால் கூறினர். என்னை? கருங்கடற் பிறப்பினல்லால் வலம்புரி காணுங்காலைப் பெருங்குளத்து என்றுந்தோன்றா எனவும், அட்டு நீர் அருவிக் குன்றக் தல்லது வைரந்தோன்றா எனவும், குட்ட நீர்க்குளத்தினல்லாற் குப்பைமேற் குவளை பூவா எனவும் வருகின்ற திருத்தக்கதேவர் திருமொழியும் காண்க.

குலக்கொம்பர் என்புழி. கொம்பர் ஆகுபெயர். கொழுந்து என்றவாறு. இனி அவளது இயற்கை எழில்தோன்ற ஈகைவான் கொடியன்னாள் என்றார். ஈகை பொன் பொன்னிறமான பூங்கொடிபோல் வாள் என்க. இனி வானவல்லி எனினுமாம். இது கற்பகத்தருவின் மேலன்றிப் பிறதருவிற் படராதென்ப. எனவே அவளது கற்புப் பண்பிற்கு இது குறிப்புவமையாகும் என்க.

ஈராறாண்டகவையாள் என்றது மணப்பருவமெய்தினள் என்றவாறு.

25-29 : அவளுந்தான்.............மன்னோ

(இதன்பொருள்) அவள்தான் - அந்நங்கைதான்; மாதரார் - அந் நகரத்தே வாழுகின்ற உயர்குலத்து மகளிர்கள், இவள் (வடிவு) போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும்-இவளுடைய அழகு செந்தாமரை மலரின்கண் எழுந்தருளியிருக்கின்ற திருமகளுடைய புகழுடைய அழகையே ஒக்கும் என்றும்; இவள் திறம்-இவளுடைய கற்புடைமை, தீது இலா வடமீனின் திறம் என்றும்- குற்றமில்லாத அருந்ததியின் கற்பையே ஒக்கும் என்றும்; தொழுது ஏத்த-தன்னைத் தொழுது பாராட்டா நிற்ப; வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் - விளங்கிய தனது பெருங்குணங்களோடு அந்நகரத்தே வாழும் ஒருவன்பால் காதலுடையவளாகவுமிருந்தனள்; மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ - அவள் கண்ணகி என்று பெயர் கூறப்படுபவள் என்க.

(விளக்கம்) இனி, இங்ஙனமன்றி அடியார்க்கு நல்லார் திருமகளுடைய வடிவு இவள் வடிவை யொக்கு மென்றும் அருந்ததியுடைய கற்பு இவள் கற்பை ஒக்கும் என்றும் மாதரார் தொழுதேத்த என்று உரை வகுப்பர். அவ்வாறு கூறினும் அமையும். என்னை? பொருளே உவமஞ் செயதனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும் என்பது விதி யாகலின் (தொல்-உவம 6) என்க. விதியேயாயினும் அங்ஙனம் கூறுவதனாற் பயன் யாதொன்றுமில்லை ஆகலின் அடிகளார் கருத்து யாம் கூறியதே என்றுணர்க.

அவளும் தான் என்புழி உம்மை இசைநிறை. போது-செந்தாமரை மலர். வடமொழியாளராற் கூறப்படும் பத்தினிமகளிருள் வைத்து அருந்ததி மட்டுமே தீதிலாப் பத்தினி ஆதலால் கண்ணகிக்கு அவள் உவமையாதற்குக் காரணம் கூறுவார் தீதிலா வடமீனின் திறம் என்றார். எஞ்சிய சீதை பாஞ்சாலி முதலிய பத்தினிகள் இழுக்குடையராதல் அவரவர் வரலாற்றான் அறிக.

இனி அக்கண்ணகி தானும் தன்னெஞ்சத்தே ஒருவனைக் காதலித்திருந்தனள் என்பது போதரப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இவ்வாற்றான் கண்ணகியும் கோவலனும் முற்படத் தம்முள் ஒருவரையொருவர் காதலித்திருந்தனர் என்பது அடிகளார் இப்பாட்டிடை வைத்த குறிப்புப் பொருள். உள்ளப் புணர்ச்சியளவிலேயே அவர் காதலிருந்த தென்பது தோன்றப் பெருங்குணத்துக் காதலாள் என்றார். இனி அவளால் காதலிக்கப் பட்டான் இயல்பு மேலே கூறுகின்றார். இங்ஙனம் கொள்ளாக்கால் கண்ணகி கோவலன் மணம் ஒருவரை யொருவர் காதலியாமல் தாய் தந்தையராற் கூட்டுவிக்கப்பட்ட போலி மணமாய் முடிதலறிக. அடிகளார் முன்னர்ப் புகார் நகரின் ஒடுக்கத்தைக் கூறாமல் பிறி தொன்று கூறுவார் போன்று கூறியாங்கே ஈண்டும் கண்ணகியின் காதலையும் பிறிதொன்று கூறுவார் போன்று கூறியிருத்தல் வியந்து பாராட்டற்குரியதாம். இவ்வாறு யாம் பொருள் காணா தொழியின் ஒடுக்கம் கூறார் என்று பண்டு கூறியதும் ஈண்டுக் காதலாள் என்றோதியதும் சொற்றிறந்தேறாது வாய் தந்தன கூறியவாறாம் என்றறிக. மன், ஓ. அசைச் சொற்கள்.

கோவலன்

30-34: ஆங்கு ............அகவையான்

(இதன்பொருள்) ஆங்கு-அப்புகார் நகரின் கண்; பெருநிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் - நெடிய நிலவுலகத்தை முழுவதும் தனது ஒரு குடை நிழலின்கண் வைத்துத் தனியே அருளாட்சி செய்கின்ற மன்னன் குடியை முதற் குடியாக வைத்து நிரலாக எண்ணுதலையுடைய ஒப்பற்ற குடிகளுள் வைத்து மிக்குயர்ந்த செல்வத்தையுடைய குடியின்கண் தோன்றிய வாணிகன் ஒருவன் உளன்; வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்துவான் என்பான்-தனக்குள வொழுக்கினின்று செய்யும் அறுவகைத் தொழிலினாலே தனக்கு ஊதியமாக வருகின்ற பொருள்களை அப்பொருளில்லாத வறியோர்க்கு வழங்கி உண்பிக்கும் அவன் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்; இரு நிதிக்கிழவன்-மேலும் இரு நிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயருமுடையான்; மகன் ஈர் எட்டு ஆண்டு அகவையான்-அவ்வாணிகனுக்கு மகன் ஒருவன் உளனாயினன் அவன் அப்பொழுது பதினாறாட்டை யுட்பட்ட பருவத்தை யுடையவனாயிருந்தனன்; என்க.

(விளக்கம்) பெருநிலம் என்றது சோழநாட்டை ஆளும் பெருமகன் என்றதனால் அரசன் என்பது பெற்றாம். குடியென நோக்குவார்க்கு அரசன் குடியும் ஒரு குடியே ஆகலான் ஆளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகள் என்றார். ஒருதனிக் குடிகள் என்றது மிகவும் உயர்ந்த குடிகள் என்றவாறு. குடிகளோடு என்புழி மூன்றனுருபு ஏழாவதன்கண் மயங்கிற்று. இன்னுருபு என்பர் அடியார்க்கு நல்லார்.

வருநிதி என்றது அறத்தாற்றினின்று தன் குலத்திற்குரிய தொழில் செய்து அதற்கு ஊதியமாக வருகின்ற பொருள் என்றவாறு. முன்னர்ச் செல்வத்தான் என்றமையின் அஃதில்லாத வறியோரைப் பிறர் என்றார். ஆர்த்துதல் - ஊட்டுதல். அங்ஙனம் பிறரையூட்டுதலையே குறிக்கோளாகக் கொண்டவன் என்பது தோன்ற வருநிதி பிறர்க்கு வழங்கும் என்னாது ஆர்த்தும் என்று ஓதினார். எனவே, இவன் தன்குலத்தொழிலின்கண் வாகை சூடியவன் என்றாராயிற்று. என்னை?

உழுதுபயன் கொண் டொலிநிரை ஓம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
ஓதி அழல்வழிப்பட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு (புறப்-மாலை-264)

என்பது வாணிகவாகையின் வரலாறாகலின் என்க.

மாசாத்துவான் : இயற்பெயர் இருநீதிக்கிழவன் : சிறப்புப் பெயர்.

35-39 : அவனுந்தான்...........என்பான் மன்னோ

(இதன்பொருள்) அவனுந்தான்-அம்மாசாத்துவான் மகன்றானும்; மண்தேய்த்த புகழினான் - தன் வள்ளன்மையாலே இந்நிலவுலகம் இடம் சிறிதென்னும்படி பரவிய பெரிய புகழை யுடையவனும்; பண் தேய்த்த மொழியினார்-பண்ணினது இனிமை சிறிதென்னும்படி பேரின்பம் பயக்கும் மொழியினையுடைய; மதிமுக மடவார் - நிறைவெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய பொதுமகளிர் தன்னைக் கண்டுழி; காதலால் - தன்பாலெழுந்த காதல் காரணமாக; கண்டு ஏத்தும் செவ்வேள் என்று கொண்டு - இவன் நம்மனோர் கண்களாலே கண்டு வணங்குதற்பொருட்டு இவ்வாறுருவம் கொண்டு நம்மெதிரே வந்த சிவந்த திருமேனியையுடைய முருகனே என்று நெஞ்சத்திலே கொண்டு; ஆயத்து-தமது தோழியர் குழுவினிடத்தே; பாராட்டி -தனது அழகினைப் பலபடியாகப் புனைந்து; இசை போக்கி-இசை யெழீஇ; ஏத்தும் கிழமையான் - தொழற்குரிய பேரழகுடையவன்; கோவலன் என்பான் மன்னோ - கோவலன் என்று பெயர் கூறப்படுபவன் என்க.

(விளக்கம்) மண்-நிலவுலகம்; அவன் புகழ் இந்நிலவுலகின்கண் அடங்காமையின் மண்ணைத் தேய்த்தபுகழ் என்றார். புகழ் ஈகையால் வருபுகழ், அவன் அன்னாதலைப் பின்னர்க் காட்டுதும். கொடுத்தான் எனப்படும் சொல்(புகழ் அடுக்கிய மூன்றுலகும் கேட்குமே என்றார் பிறரும். மடவார் ஈண்டுப் பரத்தை மகளிர், என்னை? குலமகளிர்க்கும் பிறன் ஒருவனைப் பாராட்டுதல் ஒவ்வாமையின் என்க.

மதிமுக மடவார்.....காதலாற் கொண்டேத்தும் கிழமை கோவலனுக்கு அடிப்பட்டமைந்து கிடந்தமையை இதனால் அடிகளார் குறிப்பாக ஓதினர் என்றுணர்க. இதற்கு மாறாகக் கண்ணகியின்பால் வடமீனின் திறம் (கற்பு) அடிப்பட்டுக் கிடந்தமை முன்னர் ஓதினவையும் உணர்க.

கோவலன் புகழ் பெரிதாயினும் அவனது கண்ணோட்டமில்லாத பரத்தமை யொழுக்கமாகிய பழி தேய்த்தொழித்தமை குறிப்பாகப் புலப்படுமாறு தேய்த்தபுகழ் என்று சொற்றிறம் தேர்ந்து அடை புணர்த்தார். அதுதானும் தேய்க்கப்பட்ட புகழ் என்றும் பிறிதொரு பொருளும் தோற்றுவித்தலறிக. செவ்வேள் - முருகக் கடவுள்; கண்டேத்தும் செவ்வேள்; இல்பொருளுவமை. இசை போக்கி - இசை யெழீஇப் பாடி, இசைபோக்கி என்றது புகழைக்கெடுத்து எனவும் ஒரு பொருள் தோன்ற நிற்றலுணர்க. மன், ஓ : அசைகள்.

அடியார்க்குநல்லார்-இனி மடவார் என்பதற்குப் பூமாதும் கலைமாதும் புவிமாது மென்று கூறி இவர் அழகிற்கும் அறிவிற்கும் ஆண்மைக்கும் இவனென்று உட்கொண்டு ஏத்தும் கிழமையான் எனினும் அமையும் என்பர். இவ்வுரை அமையுமாயிற் கொள்க. மொழியினால். என்பதும் பாடம்.

கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவளே காப்பியத் தலைவியாதலின் முற்கூறினார் எனினுமாம்.

40-44 : அவரை................மணம்

(இதன்பொருள்) அவரை-அந்தக் காதலரிருவரையும்; இரு பெருங் குரவரும் - அவர்தம் காதற் கேண்மையைக் குறிப்பாலுணர்ந்த அவர்தம் தாயரும் தந்தைமாரும்; ஒருபெரு நாளால் மண அணிகாண மகிழ்ந்தனர்-ஒரு நல்ல நாளிலே திருமணக் கோலம் செய்வித்துப் பலருமறிய வதுவைச் சடங்காற்றிக் கண்ணாற் காணவேண்டும் என்று தம் மூட்குழீஇ உறுதி செய்து மகிழ்வாராயினர்; மகிழ்ந்துழி-அவ்வாறு மகிழ்ந்த அப்பொழுதே; அணி இழையார் யானை எருத்தத்துமேல் இரீஇ மணம் மாநகர்க்கு ஈந்தார்-அழகிய அணிகலன அணிந்த மகளிர்சிலரை யானையின் பிடரிலேற்றுவித்துத் தாம் உறுதி செய்த அத்திருமண நாளைப் பெரிய அந்நகரத்தில் வாழ்வோர்க்கெல்லாம் அவர் வாயிலாய் அறிவித்தனர் என்க.

(விளக்கம்) அவரை யென்றது தம்முட் காதல்கொண்டிருந்த அக் கண்ணகியையும் கோவலனையும் என்பதுபட நின்றது. இருபெருங்குரவர் என்றது கண்ணகியின் தாய்தந்தையரையும் கோவலன் தாய் தந்தையரையும் குறித்தவாறாம். இனி, அவ்விருவருடைய தந்தையர் எனக் கோடலுமாம். பெருநாள்-நல்லநாள். மண அணி-மணக்கோலம். மக்கள் மணக்கோலங் காணவேண்டும் என அவாவுதல் முதுகுரவர்க்கியல்பு. காணவேண்டும் எனத் தம்முட்குழீஇ உறுதிசெய்து மகிழ்ந்தனர் என்பது கருத்து. யானை யெருத்தத்து அணியிழையாரை இருத்தி அவர் வாயிலாய்த் திருமணச் செய்தியை அறிவித்தல் அக்காலத்துப் பெருநிதிக்கிழவர் வழக்கம் என்பது இதனாலறியப்படும். மணம்-மணச்செய்தி. ஈதல் - ஈண்டு அறிவித்தல்.

45-47 : அவ்வழி..........எழுந்தது

(இதன்பொருள்) அவ்வழி - அவ்வாறு திருமணச் செய்தி யறிவித்தபின்; முரசு இயம்பின - குறித்த நாளிலே முரசு முதலியன முழங்கின; முருடு அதிர்ந்தன-முழவு முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்கின; பணிலம் முறை யெழுந்தன - சங்குகளின் ஒலி முறைப்படி எழலாயின; வெள்குடை அரசு எழுந்தது ஓர்படி என - மங்கலமரபினவாகிய வெண்குடை முதலியன அரசன் திருவுலாப் போதரும்பொழுது எழுமாறுபோல; எழுந்தன-மிகுதியாக எழலாயின; அகலுள் மங்கல அணி எழுந்தது - இவ்வாற்றால் அப்புகாரினது அக நகரெங்கணும் திருமண விழாவினது அழகு தோன்றலாயிற்று என்க.

(விளக்கம்) இஃது இசைப்பாடலாதலால் (1) திங்களைப்போற்றுதும் என்பது தொடங்கி, (12) ஓங்கிப் பரந்தொழுகலான் என்னும் துணையும், வாரநடையாகவும் (13) ஆங்கு என்பது தொடங்கி (38) ஈந்தார் மணம் என்னுந் துணையும் கூடை நடையாகவும் (39) அவ்வழி முரசியம்பின என்பது தொடங்கித் திரணடையாகவும் படிப்படியாக வுயர்ந்து ஆரோசையாக நடத்தலறிக.

இனி, (41) நீலவிதானத்து என்பது தொடங்கி அமரோசையாய்ப் படிப்படியாக இறங்கி மீண்டும் வாரநடையாகச் செல்லுதலை அவ்வாறு பாடியுணர்க.

முரசு வல்லோசைத் தோற்கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும், முருடு இன்னிசைக் கருவியாதலின் அவ்வினத்துக் கருவிகளையும் இனம் செப்புமாற்றாற் குறித்து நின்றன. இனி, பணிலம் வதுவைச் சடங்குகளின்கண் காப்பணிதல் முதலிய சடங்குதோறும் அவ்வச் சடங்கின் தொடக்கத்தேயும் இறுதியிலேயும் ஒலிக்கப்படுமாகலின் பணிலம் முறை எழுந்தன என்றார். இதனை,

பருத்தமணி முத்தமணல் பாய்சதுர மாகத்
திருத்தியொரு வால்வனை பயின்று திடர்சூழத்
தருப்பையினு னித்தலை வடக்கொடு கிழக்காய்ப்
பரப்பின னதற்குமொரு வால்வளை பயின்றான்

எனவருஞ் சூளாமணியானும் (1069) உணர்க.

இனி, குடை, சிறப்புப்பற்றி மங்கலப் பொருள்களைக் குறித்து நின்றது, அவையிற்றை,

அயின்முனை வாளும் வயிரத் தோட்டியும்
கொற்றக் குடையும் பொற்பூங் குடமும்
வலம்புரி வட்டமும் இலங்கொளிச் சங்கும்
வெண்கண் ணாடியும் செஞ்சுடர் விளக்கும்
கவரியுங் கயலும் தவிசுந் திருவும்
முரசும் படாகையு மரசிய லாழியும்
ஓண்வினைப் பொலிந்த வோமா லிகையுமென்
றெண்ணிரண் டாகிய பண்ணமை வனப்பின்
கடிமாண் மங்கலம் கதிர்வளை மகளிர்
முடிமிசை யேந்தினர் முன்னர் நடப்ப

எனவரும் பெருங்கதையால் (2:5:24-35) உணர்க.

அகலுள் - அகன்ற உள்ளிடம்; அஃதாவது அகநகர். மணமகள் இல்லத்திருந்து முரச முதலியன முழங்க இம்மங்கலப் பொருள் சுமந்து கதிர்வளை மகளிர் மணமகளில்லத்திற்குச் செல்லுதலையே அடிகளார் அகலுள் மங்கல அணி எழுந்தது என்றார் எனக் கோடலுமாம். இனி அரும்பதவுரையாசிரியர், மங்கல அணியெழுந்தது என்பதற்கு, மாங்கலிய சூத்திரம் (நகரை) வலஞ்செய்த தென்பர். அங்ஙனம் வலஞ்செய்தல் மரபாயின் ஆராய்ந்து கொள்க.

அவ்வழி முரசியம்பின........அணியெழுந்தது என்னும் இவ்வடிகள் தம்மோசையாலேயே திருமணவாரவாரத்தைத் தோற்றுவித்து விடுதலும் உணர்க.

48-53 : மாலை...........நோன்பென்னை

(இதன்பொருள்) மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து-மலர்மாலைகள் தூங்கவிடப்பட்ட உச்சியினை யுடையவாய் வயிர மணிகள் பதிக்கப்பட்டனவும் ஆகிய தூண்களையுடையதொரு அழகிய மண்டபத்தின்கண்; நீல விதானத்து நிததிலப் பூம் பந்தர்க்கீழ் - நீலப்பட்டினாலியன்ற மேற்கட்டியின் கீழே முத்து மாலைகளாலே அமைக்கப்பட்ட அழகிய திருமணப்பந்தரின் கீழே; வான் ஊர் மதியம் சகடு அணைய-வானத்திலே இயங்காநின்ற திங்கள் ஆகிய கோளானது உரோகிணி என்னும் விண்மீனைச் சேராநிற்ப அந்த நன்னாளிலே; வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளை - அவ்வானத்தே தோன்றுகின்ற ஒப்பற்ற புகழையுடைய அருந்ததி என்னும் மீனை ஒத்த கற்பென்னும பெருந்தகைமையுடைய அக்கண்ணகியை; கோவலன்-அம்மாசாத்துவான் என்பான் மகனாகிய கோவலன்; மாமுது பார்ப்பான் - அறனறிந்து மூத்த சிறப்புடைய பார்ப்பனன்; மறை வழிகாட்ட-திருமணத்திற்கு மறைநூலிற் சொன்ன நெறியை முன்னின்று காட்டாநிற்ப; தீவலம் செய்வது - திருமணஞ் செய்துகொண்டு அவ்விருவரும் வேள்வித்தீயை வலஞ்செய்யும் இக்காட்சியை; காண்பார் கண் - அங்கிருந்து காண்கின்றவர் கண்கள்தாம்; நோன்பு என்னை முற்பிறப்பிலே செய்த தவந்தான் என் கொலோ? (என்று அடிகளார் வியந்தார்) என்க.

(விளக்கம்) சகடு - உரோகிணி நாள். திங்கள் உரோகிணியோடு சேர்ந்த நாளைத் தமிழ்மக்கள் திருமணச் சடங்கிற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தன என்பது இதனானும், அங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப் பண்ணை யிமிழ வதுவை மண்ணிய, எனவரும் அகநானூறு 139 ஆம் செய்யுளானும் உணர்க.

இனி, மாமுதுபார்ப்பான் என்பதற்கு அடியார்க்குநல்லார் பிதாமகன்: (பிரமன்) புரோகிதனுமாம் என்பர் பிதாமகன் என்பது வேண்டா கூறலாம். காண்பார்கள் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்.

இனி, காண்பார்கண் நோன்பென்னை? என்பது நூலாசிரியர் கூற்றாகக் கோடலே சிறப்பாம். என்னை? இம்மணமகள் போன்று வாழ்க்கைத் துணைவியானவள் தன் கற் பொழுக்கத்தின் மேன்மை காரணமாக வானவர் வந்து எதிர்கொண்டழைப்ப வானவூர்தியிற்றன் கணவனொடு விண்ணகம் புக்க திருமாபத்தினி பிறளொருத்தி உலகிலின்மையால் இவள் கணவனொடு தீவலஞ் செய்யக் கண்டவர் செய்தவம் பெரிதும் உடையராதல் வேண்டும் என அடிகளார் வியந்தவாறாம் என்க.

காண்பார் கண் நோன்பென்னை என்பதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்ட உரையாசிரியர், காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாணென்பாராயும் என வோதிய வுரைக்குச் செய்யுளிடந்தாராமை யறிக.

(1) திங்களைப் போற்றுதும் என்பது தொடங்கி; (46) காண்பார் காணோன் பெண்னை? என்பதீறாக அடிகளார் தாம் தொடங்கும் இப்பேரிலக்கியத்திற்கு ஆக்கமாகத் திங்கள் முதலியவற்றின் வாயிலாய்த் தமக்குப் புலப்படுகின்ற வழிபடுகடவுளை வாழ்த்தி இதனைத் தோற்றுவாய் செய்தமையால் இத்துணையும் கடவுளை வாழ்த்திய மங்கல வாழ்த்துப் பாடல் என்க. இனி, அடிகளார் தோற்றுவாய் செய்த கண்ணகியையும் கோவலனையும் குலமகளிர் கட்டிலேற்றி அவரை வாழ்த்திய மணமங்கல வாழ்த்தினை ஓதுகின்றார் என்று கொள்க.

54-59 : விரையினர்............முகிழ்த்த முரலர்

(இதன்பொருள்) விளங்கு மேனியர்-கண்ணகியின் கைபற்றிக் கோவலன் வேள்வித்தீயை வலஞ்செய்து தொழுத பின்னர் ஆங்குத் தளிரெனத் திகழும் மேனியையுடைய மங்கைப்பருவத்து மகளிர்கள்; விரையினர் மலரினர் உரையினர் பாட்டினர்-விரையேந்தினரும் மலரேந்தினரும் புகழெடுத்தோதுவாரும் வாழ்த்துப்பாடல் பாடுவாரும் ஆகவும்; ஒசிந்த நோக்கினர்-ஒதுங்கிப் பார்க்கும் பார்வையினையுடைய மடந்தைப் பருவத்து மகளிர்கள்; சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்-சாந்தேந்தினரும் புகையேந்தினரும் விளங்குகின்ற மலர் மாலை யேந்தினருமாகவும்; ஏந்து இளமுலையினர்-மதலையின்றமையின் தீம்பால் சுரந்து அணந்த இளமுலையினையுடைய அரிவைப் பருவத்து மகளிர்கள்; இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர்-இடிக்கப்பட்ட சுண்ணமேந்தினரும் விளக்கேந்தினரும் அணிகலன் ஏந்தினரும் ஆகவும்; முகிழ்த்த மூரலர் - தோன்றிய புன்முறுவலையுடைய தெரிவைப் பருவத்து மகளிர்; விரிந்த பாலிகை முளைக் குடம் - விரிந்த முளைகளையுடைய பாலிகை ஏந்தினரும் நிறைகுடம் ஏந்தினரும் ஆகவும்; நிரையினர் - அத் திருமண மக்களை வலம்வந்து குழீ இயினர் என்க.

(விளக்கம்) விளங்கு மேனியர், விரையினராகவும் மலரினர் ஆகவும் உரையினரும் பாட்டினரும் ஆகவும், ஒசிந்த நோக்கினர் சாந்தினர் முதலியோரும் ஆகவும், ஏந்தின முலையினர் சுண்ணத்தர் முதலியோராகவும், மூரலர் பாலிகை ஏந்தினர் முதலியோராகவும் வந்து நிரையினர் என்க. நிரையினர் நிரம்பினர். இவருள் விளங்குமேனியர் என்றது மங்கைப் பருவத்து மகளிரை; ஒசிந்த நோக்கினர் என்றது மடந்தைப்பருவத்து மகளிரை; ஏந்திள முலையினர் என்றது தாய்மை எய்திய அரிவைப்பருவத்து மகளிரை; முகிழ்த்த மூரலர் என்றது தெரிவைப்பருவத்து மகளிரை. இவ்வாறு வேறுபாடு கண்டு கொள்க.

விரை முதலியன மங்கலப் பொருள்கள். மேலே போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார் என்றது பேரிளம் பெண்டிரை. இவரைச் செம்முத பெண்டிர் என்றும் கூறுப. இச்செம்முது பெண்டிரே மணமக்களை மங்கல நல்லமளியேற்றி வாழ்த்துவோர் என்பதுமறிக. இவ்வாற்றால் அடிகளார் எழுவகைப் பருவத்துமகளிருள் வைத்துப் பேதைப் பருவத்து மகளிரையும் பெதும்பைப் பருவத்து மகளிரையும் விடுத்து, ஏனைய ஐவகைப் பருவத்து மகளிரையும் கூறி அவ்வப் பருவத்துக் கேற்ற செய்கையையும் அழகாகக் கூறியுள்ளமை ஆராய்ந்துணர்ந்து கொள்க. பேதைப் பருவத்தினர் தம் பிள்ளைமைத் தன்மையானும் பெதும்பைப் பருவத்தினர் தங் கன்னிமையின் நாணமிகுதியானும் இக்குழுவினுள் கூடவொண்ணாமை யுணர்க.

இனி, விரை முதலியன மங்கலமாக வேந்தி மகளிர் வருதலை,

ஆடி யேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கு மணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்

எனவரும் வழக்குரைகாதையானும் (13-16) உணர்க.

இது திருமணவிழவாகலின் விளக்கும் பாலிகையும் நிறைகுடமும் பிறவும் கூறப்பட்டன. ஏந்தினர் என்னும் சொல் யாண்டும் தந்துரைக்க.

60-64 : போதொடு.........ஏற்றினார் தங்கிய

(இதன்பொருள்) போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடியன்னார்-இங்ஙனம் மங்கலப் பொருளேந்தி வந்த மகளிர் சூழுவொடு வந்த செம்முது பெண்டிராகிய மலரோடு விரிந்த கூந்தலையும் உடைய பொன்னிறமான நறிய வானவல்லியென்னும் பூங்கொடியையே போல்வாராகிய செம்முது பெண்டிர்; அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை - அழகிய இடங்களையுடைய இந்நிலவுலகத்தே தோன்றிய அருந்ததி போல்வாளாகிய கண்ணகியை நோக்கி; காதலன் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அறுக என ஏத்தி இந்நங்கை நல்லாள் தன் காதற் கணவனைக் கண்ணினும் நெஞ்சினும் எஞ்ஞான்றும் பிரியாமற் புணர்வோளாகுக என்றும் இவள் காதலன்றானும் இவளை அகத்திட்ட கை நெகிழாமல் எஞ்ஞான்றும் இவள்பாலே உறைவானாக என்றும், இவ்விருவர்பாலும் தீங்குகள் இல்லையாகுக வென்றும்; சில் மலர் தூவி சிலவாகிய மலர்களைத் தூவித் தம் வழிபடு தெய்வத்தை வாழ்த்தி; தங்கிய மங்கல நல்லமளி ஏற்றினார் - முன்னரே கோவலன் ஏறியிருந்த அழகிய திருமணக் கட்டிலின் மேலேற்றியவர் என்க.

(விளக்கம்) செம்முது பெண்டிராகலின் ஏனைய மகளிர் போலத் தம் கூந்தலைக் கை செய்யாமல் வாளா அள்ளிச்செருகி மங்கலத்தின் பொருட்டு மலர்மட்டும் அக்கூந்தலிற் செருகியிருந்தமை தோன்ற போதொடு விரிகூந்தல் பொலனறுங் கொடியன்னார் என்றனர்.

உலகின் அருந்ததி: இல்பொருளுவமை. தங்கிய நல்லமளி என்க. தங்கிய-கோவலன் ஏறியிருந்த என்க. ஏற்றியவர் - பெயர்.

65-68 : இப்பால்.............எனவே

(இதன்பொருள்) இப்பால்-பின்னர்; செருமிகு சினவேல் செம்பியன் - போரின்கண் எஞ்ஞான்றும் மேம்பட்டு விளங்குகின்ற வெகுளியையுடைய வேற்படையை உடைய நம் மன்னனாகிய சோழன், இமயத்து இருத்திய வாள் வேங்கை - தனது வெற்றிக்கறி குறியாக இமய மலையிலே பொறித்து வைத்த வாள் போலும் வரிகளையுடைய புலியிலச்சினையானது; பொற்கேட்டு உப்பாலை உழையதா-எஞ்ஞான்றும் அம்மலையினது அழகிய பொற் கோட்டினது இப்புறத்ததாயே நிலைபெறுவதாக! என்றும்; எப்பாலும் ஒரு தனி ஆழி உருட்டுவோன என - அவன்றான் எஞ்ஞான்றும் இவ்வுலகத்தின் எப்பகுதியிலும் தனது ஒப்பற்ற சிறப்புடைய ஆணைச்சக்கரத்தைச் செலுத்துவோனாகுக என்றும் வாழ்த்தா நின்றனர் என்க.

(விளக்கம்) இப்பால் என்றது ஏற்றிய பின்னர் என்றவாறு. வாள் போலும் வரிகளையுடைய வேங்கை என்க. உப்பாலை என்றது இப்புறத்தில் (தென்பாலில்) என்றவாறு. அவன் வெற்றி இமயங்காறும் நிலை பெறுக என்பது கருத்து உருட்டுவோன் ஆகுக என்று வாழ்த்தினர் எனச் சில சொற்பெய்து முடிக்க.

மடவார் கற்பும் மாதவர் நோன்பும் பிறவுமாகிய அறமெல்லாம் செங்கோன்மையால் நிலை பெறுதலின் அரசனை வாழ்த்திய வாறாம்.

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்றமையால் உள்ளப் புணர்ச்சி யளவினமைந்த களவு மணமும் இருபெருங் குரவரும் மணவழி காணமகிழ்ந்தனர் என்றமையால் அதன் வழித்தாய கற்புமே ஈண்டுக் கூறப்பட்டன என்க. இதனை, பிரசாபத்தியம் என்பர் அடியார்க்கு நல்லார்.

பா-இது மயங்கிசைக் கொச்சகக்கலிப்பாவி னியன்ற இசைத் தமிழ்ப்பாடல்.

மங்கல வாழ்த்துப் பாடல் முற்றிற்று.
« Last Edit: February 22, 2012, 08:04:47 AM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #2 on: February 22, 2012, 07:51:19 AM »
2. மனையறம்படுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்  5

ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய   10

கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை  15

வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத்  20

திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து,  25

விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்  30

கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்  35

தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்  40

பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க,   45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே  50

அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து  55

நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது  60

உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்  65

எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்?  70

திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே.  75

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று  80

உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்  85

விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.  90

(வெண்பா)

தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.

உரை

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் பலரறிமணம் புரிந்து கொண்ட பின்னர்க் கோவலனுடைய தாய் அவ்விருவரையும் இல்லற வாழ்க்கையில் இனிது பயின்று சிறத்தற்பொருட்டுத் தனித்ததோர் இல்லத்திற் குடிபுகுவித்து அந்நல்லறத்தில் கால் கொள்வித்ததனைக் கூறும் பகுதி என்றவாறு.

1-4 : உரைசால்......வளத்ததாகி

(இதன்பொருள்) முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் - ஆரவாரிக்கின்ற கடலாற் சூழப்பட்ட இந் நிலவுலகத்தின்கண் வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஒருகால் நல்குரவான் நலிந்து ஒரு சேரத் திரண்டு தன்னைப் புகலிடமாகக் கருதி வந்துற்றாலும்; வழங்கத் தவாஅ வளத்ததாகி-அவர்கள் அனைவருக்கும் உண்டி முதலியன வழங்கத் தொலையாத வளத்தையுடைய தாகலின்; உரைசால் சிறப்பின் - ஏனைய நாட்டில் வாழ்வோரெல்லாம் புகழ்தற்கியன்ற தனிச் சிறப்பினையுடைய; அரைசு விழை திருவின் பரதர் மலிந்த - வேந்தரும் விரும்புதற்குரிய செல்வத்தையுடைய பெருங்குடிவாணிகர் மிக்குள்ள; பயம் கெழு மாநகர் - பயன்மிக்க பெரிய அப் பூம்புகார் நகரின்கண் என்க.

(விளக்கம்) இது புகாரின் இயற்கை வளம் கூறிற்று. அஃதாவது, தள்ளா விளையுட்டாதல். என்னை? ஆசிரியர் திருவள்ளுவனார்தாம் நாட்டிலக்கணம் கூறுங்கால் இச்சிறப்பினையே முதன்மையாகக் கொண்டு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்றோதுதலுணர்க. ஈண்டு அடிகளாரும் அவ்வாறே அச்சிறப்பையே முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளம் என்றார். பரதர் என்றது, வாணிகரை, வள்ளுவனார் தாழ்விலாச் செல்வர் என்றதும் வாணிகரையேயாம். இதனை ஆசிரியர் பரிமேலழகர் இக்குறளின் விளக்கவுரைக்கண் செல்வர் - கலத்தினும் காலினும் அரும் பொருள் தரும் வணிகர் என்று விளக்குதலாலறிக. மற்று அவர்தாமும் ஈண்டு அடிகளார் (7) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட என்றோதிய அடியை நினைந்தே அங்ஙனம் விளக்கினர் என்பதூஉம் வெளிப்படை.

இனி, அரைசு விழை திருவின் மாநகர் என நகர்க்கே அடையாக்கில் பிற நாட்டு மன்னரெலாம் விரும்புதற்குக் காரணமான மேழிச் செல்வத்தையுடைய நகர் எனினுமாம். என்னை?

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (குறள் -1034)

என வள்ளுவனாரும் ஓதுதலுணர்க.

உரை - புகழ். உலக முழுவதும் வரினும் வழங்கத்தவாத வளமுடைமையால் இந்நகர்க்கே சிறந் துரிமையுடைய சிறப்பு இஃதென்பது தோன்ற ஏதுவைப் பின்னர் விதந்தோதினர். புகார் நகரம் அத்தகைய புகழமைந்த நகரமாதலை,

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்

என விஞ்சையர் நகரத்துள்ளான் ஒருவன் புகழ்ந்தோதுதலானும் உணர்க. (மணிமே : 17 : 62-5.)

முழங்குகடல்.......வளத்ததாகி என்னும் இதனோடு, பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி எனவரும் திருக்குறளையும் ஒப்புநோக்குக.

மாநகர், புகார் நகரம் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

5-7 : அரும்பொருள்.......ஈட்ட

(இதன்பொருள்) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - அங்கு மிக்கிருந்த வாணிகர்கள் கடலிடையிட்ட நாட்டினும் மலை காடு முதலியன இடையிட்ட நாட்டினும் சென்று முறையே மரக்கலங்களானும் சகடங்களானும் கொணர்ந்து குவித்தலானே; அரும்பொருள் தரும் விருந்தின் தேசம் ஒருங்கு தொக்கு அன்ன- ஈண்டுப் பெறுதற்கரிய பொருளைத் தருகின்ற புதுமையுடைய அவ்வேற்று நாடெல்லாம் ஒருங்கே வந்து கூடியிருந்தாற் போன்ற; உடைப் பெரும் பண்டம் - தம்முடையனவாகிய பெரிய பொருள்களையுடையாரும் ஆகி என்க.

(விளக்கம்) இஃது அப்புகார் நகரத்து வாணிகர் மாண்பு கூறுகின்றது. மேலே பரதர் மலிந்த மாநகர் என்றாராகலின் அப்பரதர் இவ்வாறு ஈட்ட என்க. புகார் நகரத்து வாணிகருடைய அங்காடித் தெரு விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கிருந்தாற்போன்று தோன்றும் என்பது கருத்து. எனவே எந்த, நாட்டிற்றோன்றும் அரும்பொருளும் அவ்வணிகர் பாலுள்ளன என்றாராயிற்று. விருந்தின் தேஎம்-புதுமையுடைய வேற்று நாடு. கடலிடையிட்டுக் கிடந்த நாட்டின் பொருளைக் கலத்தினும் இந்நாவலந் தீவகத்திலே காடு மலை முதலியன இடையிட்டுக் கிடந்த வேற்று நாட்டுப் பொருளைக் காலினும் தருவனர் ஈட்ட என்க. தருவனர்: முற்றெச்சம். ஈட்ட என்னும் செய்தெனெச்சம் பின்னர்க் (அ) கொழுங்குடிச் செல்வர் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. கலம்-மரக்கலம். கால் : ஆகுபெயர். சகடம் - (வண்டி) ஈட்டுதலானே கொழுங்குடி ஆகிய செல்வர் என இயையும்.

இனி, அரும்பொருளாவன - நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும், ஈழத் துணவும் காழகத் தாக்கமும், அரியவும் பெரியவும் என்பன. (பட்டினப் பாலை 185 - 162.)

8-11 : குலத்தின்...........கொழுநனும்

(இதன்பொருள்) குலத்தின் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-தமது குலத்திற்கென நூலோர் வகுத்த அறவொழுக்கத்தே ஒரு சிறிதும் குன்றுதலில்லாதவரும் கொழுவிய குடியிற்பிறந்தோரும் ஆகிய, மாநாய்கனும் மாசாத்துவானும் ஆகிய பெருநிதிக்கிழவர்க்கு நிரலே மகளும் மகனுமாக; அத்தகு திருவின் - அங்ஙனம் அறத்தினால் ஈட்டிய நற்பொருளினாலே; அருந்தவம் முடித்தோர் - செயற்கரிய தலைப்படு தானத்தைச் செய்த சான்றோர் சென்று பிறக்கும்; உத்தர குருவின் ஒப்ப-அவர்தம் கொழுங்குடிகள் உத்தரகுருவென்னும் போக பூமியை ஒக்கும்படி; தோன்றிய - தமது ஆகூழாலே பிறந்த; கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும் அவளால் காதலிக்கப்பட்ட கணவனாகிய கோவலனும் என்க.

(விளக்கம்) குலம் - தமது குலத்திற்கு நூலோர் வகுத்த ஒழுக்கம் என்க. அவையிற்றை, இருவகைப்பட்ட ஏனோர் பக்கமும் எனவரும் தொல்காப்பியத்தானும் (புறத் -...........20) இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும் என்றோதிய உரையானும் உணர்க. இவற்றுள்ளும் அவர்க்கு வாணிக வாழ்க்கையே தலைசிறந்ததாம் என்பார் ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று வரைந்தோதுதலும் அதற்குப் பேராசிரியர் வாணிகர்க்குத் தொழிலாகிய வாணிக வாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையாம் என்று விளக்கியதும் உணர்க. ஈண்டு அடிகளாரும் ஏனைய தொழிலை விடுத்து வாணிக வாழ்க்கையையே விதந்தெடுத்தோதுதலும் உணர்க.

இனி, தங்குலத் தொழிலிற் குன்றாமையாவது நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர், (ஆகி) வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வாழ்தல் என்க. இது (பட்டினப்பாலை 206-22). ஆசிரியர் திருவள்ளுவனாரும், வாணிகர் அவ்வாறு வாழ்தல் உலகிற்கு இன்றியமையாமை கருதி நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில் அவர்க்கென, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் (120) எனச் சிறப்பாக விதந்து அறங்கூறுதலும் உணர்க.

இனி, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்னும் வாய்மையை அறிவுறுத்துதல் இக்காப்பியத்தின் உள்ளுறையுள் ஒன்றாகலின் ஈண்டும் அடிகளார் கண்ணகியும் கோவலனும் முற்பிறப்பிற் செய்த நல்வினை இவ்வாறு அவரைக் கொழுங்குடிச் செல்வர் மனைக்கண் பிறப்பித்துத் தம் பயனாகிய பேரின்பத்தை இங்ஙனம் ஊட்டலாயிற்று எனக் குறிப்பாக வுணர்த்துவார் அக்குறிப்பை உவமைக்கண் வைத்து அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர், உத்தரகுருவின் ஒப்பத்தோன்றிய, கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும என நுண்ணிதின் ஓதுதல் நினைந்து மகிழற்பாலது. என்னை? இக்காதைக்கண் அக்காதலர்களின் ஆகூழாகிய பழவினை அவர்க்கு உருத்துவந்தூட்டுமாறிது வென்று கூறிக் காட்டுதலே ஆசிரியர் கருத்தென்றறிக. நன்றாங்கால் நல்லவாக் காணுமாந்தர் அப்பொழுது அதற்குக் காரணமான நல்வினையை நினைவதிலர். மற்று அவர்தாமே போகூழால் அன்றாங்காற் பெரிதும் அல்லற்பட்டு அந்தோ வினையே என்றழுது வருந்துவர். நல்லூழ் வந்துருத்தூட்டும் பொழுது அதனை நினைவோர் பின்னரும் நல்வினைக்கண் நாட்டமெய்துவர். தீயூழால் வருந்துவோரும் அதனை நினையின் தீவினை யச்சமுடையராய்ப் பின்னர் அது செய்யாதுய்வாருமாவர். ஆகலான், அடிகளார் இருவகை வினையையும் நினைந்தே ஊழ்வினை உருத்துவந் தூட்டும் எனப் பொதுவாக ஓதினர். புகார்க்காண்டத்தே கயமலர்க்கண்ணிக்கும் காதற் கொழுநனுக்கும் நல்வினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுவதனை இக்காதையிற் குறிப்பாக ஓதுகின்றார். மதுரைக் காண்டத்தே தீவினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுதலை யாவரும் உணர ஓதுவர். ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும் மாந்தர்க்கமைந்த இப்பேதைமையை நினைந்தன்றோ?

நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (குறள்-376)

என்று வினவுவாராயினர் என்க.

இனி, உத்தரகுருவின் ஒப்ப-என்புழி உத்தரகுருவாகிய உவமைக்கு (2) மாநகர் என்பதனைப் பொருளாகக் கொண்டனர் அடியார்க்கு நல்லார். யாம் கொழுங்குடிச் செல்வர் என அடிகளார் பாட்டிடை வைத்த குறிப்பினால் அச்செல்வருடைய கொழுங்குடி உத்தரகுருவினை ஒப்ப என்று உரை கூறினாம். இவற்றுள் நல்லது ஆராய்ந்து கொள்க.

அத்தகு திருவின் தவம் என்ற குறிப்பினால் தவம் என்பது தானத்தைக் குறித்து நின்றது. என்னை? திருவினாற் செய்யும் தவம் அதுவேயாகலின் ஏனைத்தவம் திருவினைத் துறந்து செய்யப்படும். தானம் செய்யும் பொருளும் அறத்தாற்றின் ஈட்டிய பொருளாதல் வேண்டும் என்பது போதர அத்தகு திருவின் என்றார். அருந்தவம் என்றார் அத்தானந்தானும் என்பது தோன்ற; இனி அத்தானத்தின் அருமையை,

அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
உள்ளமுவந் தீவ துத்தம தானம்

எனவரும் திவாகரத்தா னறிக.

இனி உத்தரகுரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய மேனிலையுலகம். போகபூமி என்பதுமது. இஃது அறு வகைப்படும் என்ப. அவையிற்றை,

ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம்
ஏம வஞ்சம் இரண வஞ்சம்
தேவ குருவம் உத்தர குருவமெனப்
போக பூமி அறுவகைப் படுமே (திவாகரம்-12)

என்பதனா னறிக. இனி, இவற்றின்கட் பிறந்து போகநுகர்தலை,

பதினா றாட்டைக் குமரனும் சிறந்த
பன்னீ ராட்டைக் குமரியு மாகி
ஒத்த மரபினு மொத்த வன்பினும்
கற்பக நன்மரம் நற்பய னுதவ
ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
போக நுகர்வது போக பூமி  (பிங்கலம் 12)

என்பதனானறிக.

ஈண்டுக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் முன்னைச் செய்தவத்தினளவே ஈண்டும் போகநுகர்ச்சி நின்று பின்னர் இல்லையாதலைக் கருதியே அடிகளார் அதனை உவமையெடுத்தோதினர் என்றுணர்க.

கயமலர் என்புழிக் கய வென்பது பெருமைப் பொருட்டாகிய உரிச்சொல். கோவலன் காதல் இழுக்குடைத்தாதல் கருதிப்போலும் கண்ணியும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும் என்பதுபடக் காதற்கொழுநனும் என்றார். இக்கருத்தாலன்றோ மங்கலவாழ்த்துப் பாடலின்கண் பெருங்குணத்துக் காதலாள் எனக் கண்ணகியைக் கூறிக் கோவலனைப் பிறமகளிர் காதலாற் கொண்டேத்தும் கிழமையான் என்று கூறி யொழிந்ததூஉம் என்க.

இனி, (12) மயன் என்பது தொடங்கி (37) குறியாக் கட்டுரை என்பதுமுடியக் கண்ணகியும் கோவலனும் போகம் நுகர்ந்தமை கூறும்.

(தென்றல் வரவு)

12 - 25 : மயன்...........சிறந்து

(இதன்பொருள்) நெடுநிலை மாடத்து இடை நிலத்து - எழுநிலை மாடத்து மாளிகையின்கண் இடையிலமைந்த நான்காம் மாடத்தின்கண்; மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை - மயன் என்னும் தெய்வத்தச்சன் தன் மனத்தாற் படைத்துவைத்தாற் போன்ற மணியாலியன்ற கால்களையுடைய சிறந்த கட்டிலின்கண் இருந்தவளவிலே; கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் இதழொடியாத முழுப்பூவாகிய செங்கழு நீரும்; அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை - நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்தமையானே வண்டுகள் வந்து முரலாநின்ற தாமரைமலரும் ஆகிய; வயல்பூ வாசம் அளைஇ - மருதப் பரப்பிற் கழனிகளிலுள்ள நீர்ப் பூக்களின் நறுமணத்தைக் கலந்துண்டு, அயல்பூ-அவற்றின் வேறாகிய கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெள் தோட்டு - மணத்தால் மேன்மை தக்கிருக்கின்ற தாழையின் மலர்ந்த வெள்ளிய மடலிடத்தும்; சண்பகப் பொதும்பர் -சண்பகப்பூம் பொழிலினூடே படர்ந்துள்ள; கோதை மாதவி தேர்ந்து தாது உண்டு - மாலைபோல மலருகின்ற குருக்கத்தி மலரினிடத்தும் ஆராய்ந்து அவற்றின் பாலுள்ள தேனைப் பருகிப் போந்து; வாள் முகத்து மாதர் புரிகுழல் அளகத்துப் புகல் ஏக்கற்று - ஒளியுடைய முகத்தையுடைய இளமகளிரினது கை செய்த குழற்சியையுடைய கூந்தலின்கணுண்டாகிய கலவை மணம் பெறவிரும்பி அவர்தம் பள்ளியறைக்கண் புகுதற்கு வழி காணாமல் ஏக்கறவு கொண்டு; செவ்வி பார்த்துத் திரிதரு சுரும்பொடு வண்டொடு - அம்மகளிர் சாளரந்திறக்கும் பொழுதினை எதிர்பார்த்துச் சுழன்று திரிகின்ற பெடை வண்டோடும்; மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து-முத்து முதலிய மணிமாலைகளை நிரல்பட நாற்றி இயற்றிய அழகையுடைய சாளரங்களை அம்மகளிர் திறத்தலாலே செவ்வி பெற்று அச்சாளரங்களின் குறிய புழையாலே நுழைந்து புகுந்த; மணவாய்த் தென்றல் - இயல்பாகத் தனக்குரிய ஊற்றின்பத்தோடே நறு நாற்றவின்பமும் உடைத்தாகிய தென்றலின் வரவினை; கண்டு-உணர்ந்து; மகிழ்வு எய்திக் காதலில் சிறந்த - அவ்வுணர்ச்சியாலே மகிழ்ந்து பின்னரும் அவ்வுணர்ச்சி காரணமாக இருவருக்கும் காமவுணர்ச்சி பெருகுதலானே இருவரும் ஒருபடித்தாக மெய்யுறு புணர்ச்சியை விரும்பி, என்க.

(விளக்கம்) ஆம்பல் எனப் பொதுப்பெயராற் கூறினும் ஈண்டுச் சேதாம்பல் என்று கொள்க வென்றும், இஃது அவற்றோடு ஒருதன் மைத்தாகிய பகற்போதன் றெனினும் அவை விரியுங்காலத்து இது குவிதலின்மையிற் கலந்துண்டு என்றார் என்பர் அடியார்க்குநல்லார். முழுநெறி-இதழொடியாத முழுப்பூ. ஈண்டுக் குவளை - செங்கழுநீர் மலர். தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்புவிடு முழுநெறி எனப் புறப்பாட்டினும் (123) வருதலறிக. கோதைபோல மலரும் மாதவி என்க. ஈண்டுக் கண்ணகிக்கு உத்தரகுருவின் ஒப்பப் பேரின்பம் நல்கும் ஆகூழாகிய நல்வினையின் சிறுமையினையும் அவட்குப் போகூழ் அணித்தாகவே வரவிருத்தலையும் அதுதானும் கோதைமாதவியாக உருத்துவந்திருத்தலையும் நினைந்துபோலும் அடிகளார் இக்காதையிலேயே அவள் பெயரைப் பரியாய வகையில் கோதை மாதவி என்று ஓதினர் போலும். இக்கூற்றுக் கண்ணகிக்கு ஒரு தீநிமித்தம். இவ்வாறு சொல்லிலேயே தீநிமித்தத்தைத் தோற்றுவிப்பது மாபெரும் புலவர் கட் கியல்பு. என்னை? கம்பநாடர் தமது இராமகாதைக்கண் இராமனுக்குத் திருமுடி சூட்டக் கணிகமாக்கள்பால் நன்னாள் வினவும் தயரதன் மைந்தற்கு முடிபுனை கடிகை நாள் மொழிமின் என்று வினவினன் என அவன் கூற்றையே முடிபுனைதலைக் கடிதலையுடைய நாள் எனவும் தீந்பொருளமையச் செய்யுள் யாத்துள்ளமையும் காண்க.

சுரும்பொடு வண்டொடு என இயைத்து எண்ணும்மை விரித்தோதுக. சுரும்பொடும் வண்டொடும் வயற்பூவாசம் அளைஇ உண்டு அயற்பூவாகிய தோட்டினும் மாதவியினும் தேர்ந்துண்டு செவ்வி பார்த்துக் குறுங்கண் நுழைந்துபுக்க மணவாய்த் தென்றல் கண்டு சிறந்து என்க. இனி வாசம் அளைஇ, தாது தேர்ந்துண்டு திரிதரும் சுரும்பொடும் வண்டொடும் புக்க தென்றல் எனினுமாம். புக்கமணவாய்த் தென்றல் என்றது தனக்கியல்பான ஊற்றின்பத்தோடு பூ அளைஇச் செயற்கையானமைந்த மணத்தையும் உடைய தென்றல் என்பது தோன்ற நின்றது. இத்தகைய தென்றல் அவர்தம் காமவேட்கையை மிகுவித்தலின் அதனைக் கண்டமையை ஏதுவாக்ககினார். ஈண்டுக் கண்டென்றது உணர்ந்து என்றவாறு. என்னை? தென்றல் மெய்க்கும் மணமுடைமையால் மூக்கிற்கும் புலனாதலன்றிக் கட்புலனுக்குப் புலனாகாமையின் என்க. காதல் ஈண்டுக் காமத்திற்கு ஆகுபெயர். ஆகவே, காமஞ்சிறந்து என்றவாறு. மணவாய்த் தென்றல் என்புழி இரண்டாவதன் உருபும் பயனும் உடன்தொக்கன. வாய் - இடம். மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல் என்க.

இவை சண்பகத்தோடு மலர்தலின் தேர்ந்துண்டென்றார் என வரும் அடியார்க்குநல்லார் உரை நுணுக்கமுடைத்து. என்னை? சண்பகம் வண்டுணாமலர் ஆகலின் தேர்ந்துண்ணல் வேண்டிற்று என்பது அவர் கருத்தென்க.

இன்ப நுகர்வு

26-27: விரைமலர்.............ஏறி

(இதன் பொருள்) வேனில் விரை மலர் வாளியொடு வீற்றிருக்கும் நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி - அவ்வாறு தென்றல் வரவினால் காமப் பண்பு பெருகப் பெற்ற அக்கண்ணகியும் கோவலனும் உள்ளமொன்றி வாய்ச்சொல்லொன்றுமின்றியே அவ்விடை நிலை மாடத்தினின்றும் மேலே நிரல்பட்ட மாடங்கள் வழியாக அம்மாளிகையின் உச்சியிலமைந்ததூஉம் அவ்விடத்தே வந்தெய்துகின்ற காதலரைக் காமுறுத்தற் பொருட்டு வேனில் வேந்தனாகிய காமவேள் எப்பொழுதும் தனது படைக்கலமாகிய கருப்பு வில்லினது, நாணிற்றொடுத்த மணமுடைய மலராகிய அம்புகளோடும் அவர் தம் வரவினை எதிர்பார்த்திருத்தற் கிடனானதுமான நிலாமுற்றத்தின்மேல் ஏறி என்க.

(விளக்கம்) (25) சிறந்து............(27) அரமியத்தேறி என்றார் அவர் தாம் ஒருவரை ஒருவர் அழையாமலே தம்முணர்ச்சி யொன்றினமை காரணமாகத் தாமிருந்தவிடத்தினின்றும் வாய்வாளாதே சென்றமை தோன்ற. என்னை? இத்தகைய செவ்வியிலே வாய்ச்சொற்கள் என்ன பயனும் இலவாகலின் என்க.

வேனில்: ஆகுபெயர்; காமவேள். இனி, போர் செய்யப்புகுவோர் காலமும் இடனும் வாலிதின் அறிந்து காலங்கருதி இருப்பராதலின் ஈண்டு வேனிலரசன் தனது போர்த்தொழிலைத் தொடங்குதற்கு ஏற்ற இடமாக அவ்வரமியத்தைத் தேர்ந்து படைக்கலன்களோடு தனது ஆணைக்கடங்காத இளைஞராகிய பகைவர் வருகையை எதிர்பார்த்திருந்தான் என்றார். இஃதென் சொல்லியவாறோவெனின் அந்நிலா முற்றத்தின்கட் செல்வோர் யாவரேயாயினும் காமமயக்க மெய்துவர். அத்தகைய சீர்த்த இடம் அந்நிலாமுற்றம் என்றவாறு. விரைமலர் வாளி-மணமுடைய மலர்க்கணை. இனி விரைந்துபாயும் மலர்க்கண் எனினுமாம்.

இனி, அடியார்க்குநல்லார், பகையின்றிக் கல்வியொடு செல்வத்திடை நஞ்சுற்ற காமம் நுகர்ந்திருத்தலின் வாளியும் காமனும் வருந்தாதிருந்தமை தோன்ற வீற்றிருக்கு மென்றார் என்னும் விளக்கம் நூலாசிரியர் கருத்திற்கு முரணாம் என்க. மேலும் வாளியும் காமனும் வருந்தாதிருப்பின் அவ்விருக்கை இக்காதலர் புணர்ச்சிக்கே இழிவாம் என்க.

தகுந்த இடத்தின்கண் படைவலியோடும் துணைவலியோடும் (தென்றல் வரவு) இளைஞரை எய்துவென்று தன் ஆணைவழி நிற்பித்தற்கு அவர் வரவை எதிர்பார்த்து வேனின்வேள் நெடிதிருக்கும் மாடம் என்பதே அடிகளார் கருத்தாம் என்க.

இதுவுமது

28-32 சுரும்புண .......... காட்சிபோல

(இதன் பொருள்) சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கை வண்டுகள் உழன்று திரியாமல் ஓரிடத்திலேயே தாம் தாம் விரும்பும் தேனை நுகர்ந்து மகிழ்தற் பொருட்டுப் பரப்பி வைத்தாற்போன்று கிடந்த நறிய மணமலரானியன்ற படுக்கையின்கண்; முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோல முற்றிய கடலையும் நிலவுலகத்தையும் எஞ்சாமல் உயிரினங்கட்குத் தமது ஒளியாலே விளக்குகின்ற திங்களும் ஞாயிறுமாகிய ஒளிமண்டில மிரண்டும் ஒரு காலத்தே ஓரிடத்தே வந்து கூடியிருந்தாற் போல வீற்றிருந்துழி; பெருந்தோள் கரும்பும் வல்லியும் எழுதி - கோவலன் கண்ணகியின் பெரிய தோளின் கண்ணே சந்தனக் குழம்பு கொண்டு கரும்பினது உருவத்தையும் பூங்கொடியின் உருவத்தையும் அழகுற எழுதி முடித்த பின்னர் என்க.

(விளக்கம்) மலர்களின் செவ்வி கூறுதற்பொருட்டு அடிகளார் சுரும்புணக்கிடந்த நறும்பூஞ் சேக்கை என்றார். இங்ஙனம் கூறியதனால் மலரின் பன்மையும் மிகுதியுந் தோன்றுதலும் உணர்க. கதிர்-திங்களும் ஞாயிறும்; இஃதில் பொருளுவமம். போல வீற்றிருந்துழி எனவும் கோவலன் கண்ணகியின் தோளில் எழுதி முடித்தபின்னர் எனவும் அவாய் நிலையானும் தகுதியானும் ஆங்காங்குச் சில சொற்களைப் பெய்துரைக்க. இவ்வாறு பெய்துரைக்கப்படுவன எஞ்சு பொருட் கிளவிகளாம். அவை சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் இவையெச்சமும் என மூவகைப்படும். பிறாண்டும் இவ்வெச்சக் கிளவிகளாக ஆங்காங்கு உரையின்கட் பெய்துரைக்கப் படுவனவற்றிற்கும் இவ்விளக்கமே கொள்க.

இனி, கயமலர்க்கண்ணியும் காதற்கொழுநனும் தென்றல் கண்டு காதல் சிறந்து நிரை நிலைமாடத் தரமிய மேறிப் பூஞ்சேக்கைக்கண் இருந்துழியும் கண்ணகியின் காமம் நாணம் என்னும் தனது பெண்மை தட்பத் தடையுண்டு நிற்றலான் அந்நாணுத்தாள் வீழ்த்த அவளது அகக்கதவைத் திறத்தல் வேண்டி ஈண்டுக் கோவலன் அவளுடைய பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதுதல் வேண்டிற்று. இத்தகைய புறத்தொழில்களாலே மகளிரின் காமவேட்கையை ஆடவர் தமது வேட்கையளவிற்கு உயர்த்திய பின்னரே புணர்ச்சி பேரின்பம் பயப்பதாம். இதனாலன்றோ ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும்,

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (குறள் - 1289)

என, தலைவனைக் கூறவைத்தனர். ஈண்டுக் கோவலன் மலரினும் மெல்லிய அக்காமத்தின் செவ்வி தலைப்படுதற்கே கண்ணகியின் பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமேலெழுதி என்பதாயிற்று என வகுத்த விளக்கம் பெரிதும் நுணுக்கமுடைத் தென்க. கடலையும் ஞாலத்தையும் விளக்கும் கதிர் என்க.

இதுவுமது

32-37: வண்டுவாய் ......... கட்டுரை

(இதன் பொருள்) வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெள் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு முழுநெறி கழுநீர் பிணையல் பிறழ-வண்டுகள் புரிநெகிழ்க்க வாய் அவிழ்ந்த மல்லிகையினது பெரிய மலர்ச்சியையுடைய மாலையோடே இதழொடியாது முழுப் பூவாக இவ்விரண்டாகப் பிணைத்த செங்கழுநீர் மலர்மாலையும் குலைந் தலையாநிற்ப; தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - கோவலன் மார்பிலணிந்த தாரும் கண்ணகி மார்பிலணிந்த மலர் மாலையும் தம்முள் மயங்கப்பட்டு இருவரும் பேரின்பத்தாலே விழுங்கப்பட்டுச் செயலற்ற புணர்ச்சியிறுதிக் கண்ணே; கோவலன் தீராக் காதலின் திருமுகம் நோக்கி - கோவலன் தனது ஆராவன்பு காரணமாகத் திருமகளைப் போல்வாளாகிய கண்ணகியின் முகத்தை நோக்கி; ஓர் குறியாக் கட்டுரை கூறும் - அந் நங்கையின் பெருந்தகைமையைக் கருதாத நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரையைக் கூறினான் என்க.

(விளக்கம்) மல்லிகைமாலை கண்ணகியணிந்த அழகுமாலை என்றும், செங்கழுநீர்ப் பிணையல் கோவலன் அணிந்திருந்த அடையாளப் பூமாலை என்றும் கொள்க. என்னை? இவற்றையே பின்னர்த் தாரும் மாலையும் என்று பெயர் கூறியதனாற் பெற்றாம். என்னை? ஆசிரியர் தொல் காப்பியனாரும் மரபியலின்கண், தார் என்னும் அடையாளப்பூ அரசர்க்குரித்தென்று கூறிப்பின்னர் வாணிகர்க்கும் கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே என்றோதுதல் உணர்க. ஈண்டுக் கழுநீர்ப்பிணையல் வாணிகர்க்குரிய அடையாளப் பூமாலை என்பது அதனைத் தார் என்றதனாற் பெற்றாம்.

இனி, காப்பியத்தின்கண் இன்பவொழுக்கமாகிய அகப்பொருள் சுட்டித் தலைமக்களின் பெயர் கூறப்படுதலான், அகப்புறம் என்று கொள்ளப்படும். அகப்புறமாயினும் அகவொழுக்கத்திற்குரிய மெய்ப்பாடுகள் ஈண்டும் ஏற்றபெற்றி கொள்ளப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார் சிறப்பு நோக்கிக் களவொழுக்கத்திற்கே யுரியன போலக் கூறிய கூழைவிரித்தல் முதலிய மெய்ப்பாடு கற்பொழுக்கத்தினும் கூட்டந் தோறும் மெல்லியல் மகளிர்பால் காணப்படும். அதனாலன்றோ ஒரு குலமகள் பரத்தையர்க்கு நாணின்மை கண்டு வியப்பவள் பன்னாளும் எங்கணவர் எந்தோண்மேற் படிந்தெழினும் அஞ்ஞான்று கண்டாற் போல் நாணுதும்; இவர்க்கு அத்தகைய நாணம் என்னும் பெண்மை நலம் இல்லா தொழிந்தது என்னையோ? என்று வியப்பாளாயினள் (நாலடி, காமத்துப்பால்). ஈண்டும் கண்ணகியார் தென்றல்கண்டு மகிழ்ச்சியாற் காதல் சிறந்து இடைநிலைமாடத்திருந்து தன் காதற் கொழுநனொடு வாய்வாளாது அம்மாடத்தின் உச்சியிலமைந்த நிலா முற்றத்திற்கேறி அவனோடு நறும்பூஞ் சேக்கைக்கண் வீற்றிருந்தது புகுமுகம் செய்தல் என்னும் மெய்ப்பாடாம் என்று நுண்ணிதின் உணர்ந்துகொள்க. அஃதாவது புணர்ச்சிக்கு நிமித்தமாகிய மெய்ப்பாடாம். புகுமுகம் செய்தலாவது புணர்ச்சி வேட்கையுற்ற மகளிர் தம்மைத் தங்கணவர் நோக்குமாற்றால் இயைந்தொழுகுதல். அவ்வாறு இயைந்தொழுகினும் உட்கும் நாணும் அவர்க்கியல்பாகலின் அவன் விரும்பி நோக்கியவழி அவர்க்கு நுதல் வியர்க்கும். அவ்வழி தாம் புணர்ச்சி வேட்கை யுடையராதலை மறைக்கவே முயல்வர். இதனை நகுநயமறைத்தல் என்னும் மெய்ப்பாடு என்ப. இதன் பின்னரும் வேட்கையுற்ற உள்ளம் சிதையுமாகலின் அச்சிதைவு கணவனுக்குப் புலப்படாமல் மறைத்தலும் அவர்க்கியல்பு. இதனைச் சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடென்ப. அங்ஙனம் மறைத்துழி அகத்திலே வேட்கை பெருகி அதனால் கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த்துடுத்தல் அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் என்னும் மெய்ப்பாடுகள் அவ்வேட்கை பெருகுந்தோறும் ஒன்றன்பின் ஒன்றாக நிழலா நிற்கும். ஆயினும் இவை தோன்றிய பின்னரும் அவர்க்கு இயல்பாகிய நாணம் அவ்வேட்கையைத் தடைசெய்தே நிற்கும்; ஆதலால், அச் செவ்வியினும் மகளிர் புணர்ச்சியை வேண்டாதார் போல்வதொரு வன்மை படைத்துக்கொண்டு தம் வேட்கையை மறைக்கவே முயல்வர். இதனை இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடென்ப. இத்தகைய மெய்ப்பாட்டோடு நறும்பூஞ் சேக்கைக்கண் தன்னொடு வீற்றிருந்த கண்ணகியாரின் நாணநீக்கி அவரது காமவேட்கையைத் தனது வேட்கைக்குச் சமமாகக் கொணர்தற் பொருட்டே ஈண்டுக் கோவலன் சந்தனக் குழம்பு கொண்டு அவரது பெருந்தோளிற் கரும்பும் வல்லியும் எழுதினான் என்க.

இனி, இவ்வாற்றால் கண்ணகியாரின் காமப்பண்பு முழுச்செவ்வி பெற்றமையை அடிகளார் கண்ணகியார்பால் வைத்துக் கூறாமல் அவர் அணிந்திருந்த மல்லிகை மலர்மாலையின் மேல்வைத்துக் குறிப்பாகக் கூறும் வித்தகப்புலமை வேறெந்தக் காப்பியத்தினும் காணப்படாத அருமையுடைத்தென் றுணர்க. என்னை? இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடெய்தியிருந்த கண்ணகியாரின் திருமேனியைத் தீண்டிக் கோவலன் கரும்பும் வல்லியும் எழுதிய அளவிலே அதுகாறும் அவரது காமவேட்கையைத் தளைத்திருந்த நாணமாகிய தளையவிழவே அவரது காமவேட்கை தடை சிறிதும் இன்றி மலர்ச்சியுற்றுத் திகழ்ந்ததனையே அடிகளார் வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை வீரியன் மாலையொடு என எட்டுச் சீர்களைக்கொண்ட இரண்டு அடிகளாலே கண்ணகியார் அணிந்திருந்த மாலையை வண்ணிப்பாராயினர். இதன்கண் வண்டுவாய்திறப்ப என்றது கோவலன் கரும்பும் வல்லியும் எழுதுமாற்றால் அவரது நாணத்தை அகற்றியது என்றும்; நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை என்றது இச்செய்முறையானே அவரது காமவேட்கை பெருக அவர்பால் இருகையும் எடுத்தல் என்னும் மெய்ப்பாடு தோன்றியதனை. அஃதாவது அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானும் தடுக்கப்படாது வேட்கை மிகுதியால் நிறை யழிதலின் கைகள் தாமே முயங்கல் விருப்பத்தான் எழுவன போல்வதொரு குறிப்பு. இக்குறிப்பே அவர்தம் மலரினும் மெல்லிய காமம் செவ்வி பெற்றமைக்கு அறிகுறியாம் என்க. இம்மெய்ப்பாடு தோன்றுங் கால் மெல்லியதொரு புன்முறுவலாகவே வெளிப்படும்; இதனையே நெடுநிலா விரிந்த வெண்தோடு என்றார். காமச் செவ்வி தலைப்பட்ட தலைவன் கூற்றாக வருகின்ற,

அசையியற் குண்டாண்டோர் ஏவர் யானோக்கப்
பசையினன் பைய நகும் ( குறள் 1068)

என்னும் திருக்குறளானும் இதனை உணர்க. இனி, புணர்ச்சி நிமித்தமாக இம்மெய்ப்பாடுகள் தோன்று மென்பதனை,

ஓதியு நுதலு நீவி யான்றன்
மாதர் மென்முலை வருடலிற் கலங்கி
யுள்ளத் துகுநள் போல வல்குலின்
ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது
மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்
யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலின்
இம்மை யுலகத் தன்றியு நம்மை
நீளரி நெடுங்கட் பேதையொடு
கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே

எனவரும் பழம்பாடலான் (தொல்-மெய்ப்-15-உரைமேற்.) உணர்க.

கண்ணகியாரின் காமம் முழுதும் மலர்ச்சியுற்றமையை நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை மாலை என்னாது விரியன்மாலை என விதந்தோது மாற்றால் உணர்த்தினர். இவ்வடிகளில் இங்ஙனம் பொருள் காண்டல் பாட்டிடை வைத்த குறிப்பாற் கண்டவாறாம். இவ்வாறு காணாக்கால் பின்வரும் தாரும் மாலையும் மயங்கி என்பதே அமையும். இவற்றிற்கு இப்பொருளுண்மையால் விதந்தோதி மீண்டும் இவற்றையே அத்தாரு மாலையும் என எதிர்நிரனிறையாகக் கூறினர். முன்னர்ப் பிறழ என்றோதிப் பின்னர் மயங்க என்றோதியதூஉம் முன்னர்ப் புணர்ச்சியின் செயல் நிகழ்ச்சியும் பின்னர் இன்பத்தால், அவசமாகி இருவரும் அவை செறிய முயங்கினமையும் தோற்றுவித்தற்கு என்க.

இனி, இம்மெய்ப்பாடுகள் கண்ணகியார்க்கே சிறந்தவை. கோவலனுக்கு அக்காமச் செவ்வி இயற்கையாலேயே முழுமையுற்றுச் செவ்வியுறுதலின் அவன் அணிந்த தாரினை வாளாது கழுநீர்ப் பிணையல் முழு நெறி என்றோதியொழிந்தார் என்க. கையறுதல் இருவருள்ளமும் இன்பத்தால் விழுங்கப்பட்டுச் செயலறுதல். இவ்வாறு இடக்கரடக்கி அவர்தம் கூட்டத்தை இனிதின் ஓதிய அடிகளார் அக் கையறவிற்குப் பின்னர்த்தாகிய பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு இருவர்க்கும் பொதுவாயினும் கோவலனுக்கே சிறப்புடைத்தாதல் பற்றிக் கூற்று வகையால் கோவலன்பால் வைத்துக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை என்றார். கண்ணகிக்கு இம்மெய்ப்பாடு உள்ளத்தே அவனைப் பாராட்டுந் துணையாய் அமைதலின் அது கூறாராயினர்.

இனி, கோவலன் கூறுமோர் கட்டுரை என்னாது குறியாக்கட்டுரை என்றார். ஈண்டுக் கோவலன் இவ்வுலகத்துக் காதலர் தங்காதலிமாரை நலம் பாராட்டுமாறே பாராட்டினன் அல்லது அத்திருமாபத்தினியின் சிறப்பெல்லாம் குறிக்கொண்டு பாராட்டினன் அல்லன் என்றுணர்த்தற்கு. இஃதென் சொல்லியவாறோவெனின், கோவலன் ஈண்டுக் கூறும் சிறப்பைவிடப் பன்னூறுமடங்கு உயர்ந்தனவாம் அப்பெருந்தகைப் பெண்ணின் சிறப்பு. அவனுரை அவற்றைக் குறியாது வறிதே நலம் பாராட்டுதல் என்னும் பொருள்பற்றி உலகத்துக் காதலர் கூறும்மரபு பற்றிய உரையேயாம், எனக் கண்ணகியாரின் பெருஞ்சிறப்பைக் கருதி அங்ஙனம் ஓதினர். இனி இக்கண்ணகியாரின் சிறப்பெல்லாங் கருதிக் கூறுங் கட்டுரையை அடிகளார், கொற்றவையின் கூற்றாக,

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஓருமா மணியா யுலகிற் கோங்கிய
திருமாமணி (வேட்டுவவரி - 47-50)

என இனிதின் ஓதுவர். ஈண்டு அத்தெய்வம் கூறுங் கட்டுரையே கண்ணகியாரின் சிறப்பை உள்ளவாறே குறிக்கும் கட்டுரையாதல் நுண்ணிதின் உணர்க. இன்னும் அடைக்கலக் காதையின் தவமூதாட்டியாகிய கவுந்தியடிகளார் இக்கண்ணகியாரோடு ஒருசில நாள் பயின்ற துணையானே இப்பெருமகள் தான் மானுடமகளாயினும் தெய்வத்திற்கியன்ற சிறப்பெலாம் உடையள் என மதித்து மாதரி என்பாட்குக் கண்ணகியைக் காட்டி,

ஈங்கு,

என்னொடு போந்த விளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் (அன்னளாயினும்)
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால்.

என வியந்து பாராட்டுதல் கண்ணகியை உள்ளவாறுணர்ந்து அவள் நலங்குறித்த கட்டுரையாகும். இங்ஙனம், தெய்வத்தானும் செய்தவத்தோரானும் வியந்து பாராட்டுதற்குரிய இத்தகைசால் பூங்கொடியின் நலமுழுதும் இவன் உணர்ந்து அவற்றைக் குறித்துப் பாராட்டினனல்லன் என்பார் கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை என்று அடிகளார் இரங்கிக் கூறினர் என்க.

கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுங் கட்டுரை

37-41 : குழவித் திங்கள் ............... ஆகென

(இதன்பொருள்) பெரியோன் குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் - பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் தன்னை அடையாளங் கண்டு தேவர் முதலிய மெய்யடியார் ஏத்துதற்பொருட்டு மேற்கொண்ட அழகிய அருட்டிருவுருவத்திற்கு இதுவும் ஓர் அழகினைத் தரும் என்று தேர்ந்து இளம் பிறையானது அவனால் தனது திருமுடிக்கண் விரும்பி யணியப்பட்ட பெறுதற் கருமையுடைத்தாகிய பேரணிகலமேயாயினும்; நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் - அப்பிறைதானும் நின்னுடன் பிறந்தது என்னும் ஓர் உறவுடைத்தாதலால்; உரிதினின் - அது நினக்கே உரியது என்னும் அறத்தைக் கருதி; திருநுதல் ஆக என - அது நினக்கு அழகிய நுதலாயிருந்து அழகு செய்வதாக என்று கருதி; தருக - (நினக் கருளினன் போலும் அங்ஙனம் ஆயின்) தந்தருளுக அதனால் அவனுக்குப் புகழேயல்லாமல் பழி யொன்றுமில்லை; என்றான் என்க.

(விளக்கம்) பிறை இறைவன் விரும்பியணிந்த பேரணிகலனே ஆயினும் அவன் மன்னுயிர்க்கு அறமுரைத்த பெரியோனாகலின் அப்பிறை தன்னினுங் காட்டில் நினக்கே பெரிதும் உரிமையுடைத்தாதலால் பிறர்க்குரிய பொருளை அவர்க்கே கொடுப்பதுதான் அறமாகும் என்று அது நினக்கு நுதலாயிருந்து அழகு செய்யும்பொருட்டு நினக்குத் தந்தனன் போலும். அவன் செயல் அறத்திற்கும் ஒக்கும் என்றவாறு. இதனால் கோவலன் கண்ணகியையும் அவள் நுதலையும் நிரலே திருமகளோடும் பிறைத்திங்களோடும் அவள் பிறந்தகுடியைத் திருப்பாற் கடலோடும் ஒப்பிட்டுப் பாராட்டினானாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அடியார்க்குநல்லார் தருக என்றது சூடின பிறை இரண்டு கலையாகலின் அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருக என்பது கருத்து எனவும், என்னை? மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப் பசு வெண்டிங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளக்குஞ் சிறுநுதல் (குறுந்-126) என்றாராகலின், எனவும் ஓதினர்.

மேலும், இதனால் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும் அவ்வவ்வுறுப்புக்கட்கு ஏற்பத் திருத்தி ஈக்க, அளிக்க, என்பதாயிற்று. என்றது கரும்பிற்கு நிறனும், வச்சிரத்துக்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு. இஃது எதிரது போற்றலென்னும் தந்திரவுத்திவகை, என்றும் விளக்குவர்.

குழவித்திங்கள் என்றது இளம்பிறையை. ஈண்டுப் பிறையின் இளமைக்குக் குழவிப் பெயர்க்கொடை பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் எனவரும் மரபியற் சூத்திரத்தில் (24) கொள்ளவும் அமையும் என்பதனை எச்சவும்மையாக்கி அமைப்பர் பேராசிரியர். குழவி வேனில் (கலி - 36) குழவிஞாயிறு (பெருங்கதை - 1-33-26) எனப் பிறரும் ஓதுதலறிக.

42-45: அடையார் ........... ஈக்க

(இதன் பொருள்) உருவு இலாளன் - வடிவமில்லாத காமவேள்; ஒரு பெருங் கருப்பு வில் - தான் போர் செய்தற்கு எடுத்த தனது ஒப்பில்லாத பெரிய கரும்பு வில் ஒன்றே யாயினும் அதனையும்; இரு கரும்புருவமாக - நினக்கு இரண்டு கரிய புருவங்களாம்படி; ஈக்க-திருத்தி ஈந்தருளினன் போலும் அங்ஙனம் ஈதல் அவனுக்குரிய கடமையேயாம் ஆதலால் ஈந்தருளுக அஃதெற்றாலெனின், அடையார் முனை யகத்து அமர் மேம்படுநர்க்கு - வேந்தராயினோர் தமது பகைவரோடு போர்எதிரும் களத்தின்கண் மறத்தன்மையாலே தம்மை மேம்படுக்கும் படைஞர்க்கு; படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் - படைக்கலம் வழங்கும் மரபொன்று உண்டாகலான்; அம்மரபுபற்றி அவன் ஈந்தது முறைமையே ஆகலான்; என்றான் என்க.

(விளக்கம்) அடையார் - பகைவர். வழங்குவது என்னும் வினைக்குத் தகுதிபற்றி வேந்தர் என எழுவாய் வருவித்தோதுக. ஒரு பெருங் கருப்புவில் இருகரும் புருவமாக என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க. கருப்புவில் ஒன்றனையும் நினக்குக்கரிய இருபுருவமாகத் திருத்தித்தரக் கடவன் என்று உரைவிரித்த அடியார்க்கு நல்லார், விளக்க வுரைக்கண் இரு கரும்புருவமாக வென்றது சேமவில்லையும் கூட்டி என்பது முறைமறந்தறைந்தபடியாம் என்க.

காமவேளாகிய மன்னனுக்கு மகளிரே படைமறவர் ஆவர் ஆகலின் அவன் செய்யும் போரில் அவனுக்கு வெற்றிதந்து அவனை மேம்படுப்பாய் நீயே ஆகலின் நினக்கு அவன் தன்னொரு பெருவில்லையே வழங்கி விட்டனன் போலும் என்கின்றான். இதனால் நின்னுடைய கண்கள் மட்டும் அல்ல நின் புருவங்களுங்கூடத் தமது அழகாலே எம்மை மயக்குகின்றன என்று அவற்றின் அழகைப் பாராட்டினன் ஆதலறிக.

இனி மன்னர் தம்மை மேம்படுக்கு மறவர்க்குப் படைவழங்கும் மரபுண்மையை, படைவழக்கு என்னும் துறைபற்றி முத்தவிர் பூண்மறவேந்தன், ஒத்தவர்க்குப் படைவழங்கின்று, எனவும், கொடுத்த பின்னர்க் கழன்மறவர், எடுத்துரைப்பினும் அத்துறையாகும், எனவும் வரும் கொளுக்களானும் இவற்றிற்கு,

ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை எஃக மவைபலவும் - மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்

எனவும்,

துன்னருந் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து

எனவும் வரும் வரலாற்று வெண்பாக்களானும் உணர்க. (புறப்-மாலை-64-5)

46-48: மூவா மருந்தின் .......... இடையென

(இதன் பொருள்) தேவர் கோமான் - தேவேந்திரன்; தெய்வக் காவல் படை - தன் கீழ்க்குடிகளாகிய தேவர்களை அசுரர் துன்புறுத்தாமல் காத்தற் பொருட்டுத் தான் அரிதிற்பெற்ற வச்சிரப்படை பெறுதற்கு அருமையுடைத்தாயினும்; மூவாமருந்தின் முன்னர்த் தோன்றலின் - தமக்கு மூவாமையையும் சாவாமையையும் அளித்த அமிழ்தத்திற்கு நீ தவ்வையாகத் திருப்பாற் கடலின்கண் அதற்கு முன்னர்ப் பிறத்தலின் அதனோடும் நினக்கு உடன்பிறப்பாகிய உறவுண்மையால் அதுவும் நினக்குரித்தாதல் கருதி; அதன் இடை நினக்கு இடை என - அவ்வச்சிரப்படையினது இடையானது நினக்கு இடையாகி அழகு செய்வதாக வென்று கருதி; நினக்கு அளிக்க - நினக்கு வழங்கினன் போலும், அங்ஙனம் வழங்கின் வழங்குக அதுவும் அமையும்; என்றான் என்க.

(விளக்கம்) திருப்பாற் கடல்கடையும் காலத்தே வச்சிரப்படையும் திருமகளும் அமிழ்தமும் நிரலே பிறந்தனவாகக் கூறும் பௌராணிகர் மதத்தை உட்கொண்டு இவளைத் திருமகளாக மதித்து வச்சிரம் அமிழ்தம் பிறக்கு முன்னர் நினக்குப் பின்னாகப் பிறத்தலின் அவ்வுடன்பிறப்புண்மையின் நினக்குரித்தென்று நினக்கு இடையாகுக என்று வழங்கினன் போலும். அவன் அரசனாகலின் உரியவர்க்கு உரிய பொருளை வழங்குதல் செங்கோன் முறையாதலின் வழங்கினன் என்றான்.

இங்ஙனம், (திருமகளோடு) வச்சிரமும் அமிழ்தமும் கடல் கடைகின்ற காலத்துப் பிறந்தனவெனப் புராணம் கூறும் என அடியார்க்கு நல்லாரும் ஓதினர்.

இனி, நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம் பிறத்தலால் எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். இதற்கு மூவாமருந்தாகிய நினக்கு முன்னர்ப் பிறத்தலின் எனப் பொருள் காண்க. முன்னிலைப் புறமொழியாகக் கொண்டங்ஙனம் கூறினர் என்க.

இனி, மூவாமருந்து தனக்குச் செய்த நன்றியைக் கருதி அதனுடன் பிறந்த நினக்கு அளித்தான் போலும் எனினுமாம்.

இனி, வச்சிரம் ததீசி முனிவனுடைய முதுகென்பு என்றும் அதனை அம்முனிவர் பெருமான் இந்திரனுக்கு வழங்கினன் எனவும் புராணம் கூறும். இதற்கியைய, வச்சிரம் மீண்டும் பெறுதற் கருமையுடைத்தாயினும் அவ்வருமை கருதாமல் செய்ந் நன்றியைக் கருதி நினக்கு அதனை அளித்தனன் என்றான் எனினுமாம்.

இதனால், கண்ணகியின் பிறப்பின் தூய்மையையும் அவளழகையும் அவளுடைய நுண்ணிடையையும் ஒருங்கே பாராட்டினன் ஆதல் அறிக.

49-52: அறுமுக வொருவன் ......... ஈத்தது

(இதன் பொருள்) அறுமுக ஒருவன் ஆறுமுகங்களையுடைய இறைவன்; ஓர் பெறும் முறை இன்றியும் - முற்கூறப்பட்ட பிறை முதலியவற்றைப் போன்று நினக்குப் பெறுதற்குரிய உரிமை யாதும் இல்லையாகவும்; அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது - தன் கையிலுள்ள அழகிய ஒளியையுடைய வேல் ஒன்றையும் நின் முகத்தின்கண் சிவந்த கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்கள் இரண்டுமாம் படி வழங்கியது; இறுமுறை காணும் இயல்பினின் அன்றே தனக்கியல்பான தொழில்களுள் வைத்து உயிரினங்கள் இறந்து படுதலைச் செய்து காண்பதுவும் ஒன்றாகலால் அன்றோ; அன்றெனின் பிறிதொரு காரணமுங் கண்டிலேன் என்றான் என்க;

(விளக்கம்) பெரியோனும் உருவிலாளனும் தேவர் கோமானும் நிரலே பிறையும் கருப்பு வில்லும் காவற்படையும் வழங்குதற்குக் காரணம் தெரிகின்றது. அறுமுகவொருவன் தனது வேலை நினக்குக் கண்ணாக வென வழங்கியதற்குக் காரணங் கண்டிலேன். ஒரோவழி அவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் தனக்கியல்பாக உடையனாகலின், அவற்றுள் அழித்தற் றொழில் நிகழ்தற் பொருட்டு ஈந்தனன் போலும் என்றவாறு.

இனி, இறுமுறை காணும் இயல்பினினன்றே என்பதற்கு, யான் இறந்துபடு முறைமையைத் தன் கண்ணாற் காண வேண்டுதல் காரணத்தான் என்க என்று உரைவிரித்தார் அடியார்க்கு நல்லார் இதற்கு,

(கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்)
துள்ளுநர்க் காண்மார் (தொடர்ந்துயிர் வெளவலின்)

எனவரும் கலியடியை (4:5) மேற்கோளாகவும் காட்டினார். அரும்பதவுரையாசிரியர் இவ்வாறு ஓர் உரிமையின்றியேயும் குமரவேள் தன்கையில் வேலொன்றையும் இரண்டாக்கித் தந்தது என்னை வருத்தும் இயல்பினானன்றே என்றோதுவர். இவர் தம் முரைகளோடு முருகவேள் இறுமுறை காணும் இயல்பினையுடையான் என்பது பொருந்துமாறில்லையாதல் உணர்க.

இதன்கண் நின்கண் இறுமுறை காணும் இயல்பிற்று என்னுமாற்றால் அது தன்னை வருத்துமியல்பு கூறி அதன் அழகை வேலோடுவமித்துப் பாராட்டினன் ஆதலறிக. ஓக்கிய முருகன் வைவேல் ஒன்றிரண்டனைய கண்ணாள் எனவருஞ் சிந்தாமணியும் (1291) ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. இவையெல்லாம் புகழுவமையணியின் பாற்படும் என்பது அடியார்க்கு நல்லார் கருத்து.

இவற்றால் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான்.

53-61: மாயிரும்பீலி ............ ஒருவாவாயின

(இதன்பொருள்) (55) நல்நுதால் - அழகிய நுதலையுடையோய்; மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை - கரிய பெரிய தோகையினையும் நீலமணிபோன்ற நிறத்தையும் உடைய மயில்கள்; நின் சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் - நின் சாயலுக்குத் தோற்று இழிந்த காட்டிடத்தே போய் ஒடுங்கா நிற்பவும்; அன்னம் மெல் நடைக்கு அழிந்து - அன்னங்கள் தாமும் நினது மெல்லிய நடையழகிற்குத் தோற்று; நல் நீர்ப்பண்ணை நளிமலர்ச் செறியவும் - தூய நீர் பொருந்தின கழனிகளிடத்தே அடர்ந்த தாமரை மலர்களினூடே புக் கொடுங்கா நிற்கவும்; மடநடைமாது - மடப்பங்கெழுமிய நடையினையுடைய மாதே!; சிறு பசுங்கிளிதாமே அளிய நின்னோடுறைகின்ற சிறிய இப்பசிய கிளிகள் மாத்திரமே நின்னால் அளிக்கற்பாலனவாயின காண்; எற்றுக்கெனின்; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும் - வேய்ங் குழலின் இசையினிமையையும் யாழின் இசையினது இனிமையையும் அமிழ்தினது சுவைதரும் இனிமையையும் கலந்து குழைத்தா லொத்த இனிமையையுடைய நின் மழலை மொழியினைக் கேட்டு அவற்றைத் தாமும் கற்றற்குப் பெரிதும் விரும்பி, வருத்தமுடையனவாகியும்; நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின-நின்னுடைய செந்தாமரைபோன்ற அழகிய கையிலிருந்து விலகாமல் நின்னோடு வதிதலைப் பொருந்திப் பிரியாவாயின ஆதலாற்காண்! என்றான் என்க.

(விளக்கம்) மாயிரு என்பது கோயில் என்பதுபோல யகரவுடம்படு மெய் பெற்றது. இதனைப் புறனடைவிதியாலமைத்துக் கொள்க. மா - கருமை. இருமை - பெருமை. மணி - நீலமணி. சாயல் - மென்மை. அஃதாவது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை என்பர் இளம்பூரணர். இதனை, நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்பர் தொல்காப்பியனார் (பொருளியல்-51.) ஐம்பொறியால் நுகரும் மென்மை என்பர் நச்சினார்க்கினியர். ஐம்பொறியானும் நுகரப்படும் ஒண்டொடியார் பால் அஃது எஞ்சாமற் காணப்படும். இதற்கு மயில் ஒருபுடையே அவர்க்கு ஒப்பாகும் என்க. ஈண்டுக் கோவலன் ஐம்பொறியானும் கண்ணகியார்பால் நுகர்ந்த இன்பத்திற்கு வேறுவமையின்மையால், மயிலும் நின் சாயற்கு இடைந்தது என்கின்றான். தண்கான் என் புழித் தண்மை - இழிவு என்னும் பொருட்டு. அஃதப்பொருட்டாதல் பிங்கலந்தை (3607) யிற் காண்க. பண்ணை - கழனி. செறிதல் - புக் கொடுங்குதல். ஒடுங்க வேண்டுதலின் நளிமலர் எனல் வேண்டிற்று. நளி-செறிவு.

இனி குழலும் யாழும் அமிழ்துங்குழைத்த மழலைக் கிளவி என நிகழும் தொடரின்கண் தமிழ் மொழிக்குச் சிறப்பெழுத்தாகிய ழகர, வொலிமிக்கு மொழி யின்பம் பெரிதும் மிகுதலுணர்க. இஃது இல்பொருள் உவமை. கரும்புந் தேனு மமுதும் பாலுங்கலந்த தீஞ்சொல் எனத் திருத்தக்க தேவரும் ஓதுதல் (2438) உணர்க. இனி, குழல் முதலியவற்றைக் குழைத்த (வருத்திய) எனினுமாம். நன்னுதல், மாது என்பன விளி. இவை நன்னுதால் எனவும் மாதே எனவும் ஈற்றயல் நீண்டும் ஏகாரம் பெற்றும் விளியேற்கும்.

இனி, மயிலும் அன்னமும் இடைந்தும் அழிந்தும் தாமுய்யுமிடம் நாடிச் சென்றன. மற்று இச்சிறு கிளிகள் நின் மழலை கேட்டு அழுக்காறு கொள்ளாமல் அவற்றைக் கற்கும் பொருட்டு நின்பால் உடனுறைவு மரீஇ ஒருவா ஆயின; ஆகவே நின்னைப் புகலாகக் கொண்ட அவற்றை அளித்தல் நின்கடன் என்றவாறு. அளியகிளி தாமே என மாறி ஈற்றினின்ற ஏகாரம் பிரிநிலை என்க. தாம் அசைச்சொல். கிளிகள் தம்மனம் போனவாறு பறந்துதிரிதலை விட்டுக் கற்றற்பொருட்டு அடங்கியிருந்தலின் வருந்தினவாகியும் என்றான் என்க. என்னை? கல்வி தொங்குங் காற்றுன்பந் தருமியல்பிற் றென்பது முணர்க. இங்ஙனம் கூறாமல் மழலைக் கிளவிக்குத் தோன்றனவாயும் என்னும் அடியார்க்கு நல்லார் உரை அவை உடனுறைவுமரீஇ ஒருவா வாதற்குச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. கண்ணகியார் வளர்க்குங் கிளி பலவாகலின் பன்மை கூறினான்.

62 - 64: நறுமலர் .......... எவன்கொல்

(இதன் பொருள்) நறுமலர்க் கோதை - நறுமணமுடைய மலர் மாலையையுடையோய்; நின் நலம் பாராட்டுநர் - நினது அழகுக்கு ஒப்பனையால் அழகு செய்கின்ற நின் வண்ணமகளிர்; மறு இல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நின்னுடைய இயற்கை யழகே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல் - அவ்வழகை மறைக்கின்ற வேறு சில அணிகலன்களை நினக்கு அணிவதனாலே பெற்ற பயன்தான் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) எனவே, அவர் பயனில செய்யும் பேதையரே ஆதல் வேண்டும் என்றான் என்க. இதனோடு,

அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்குமா போல்
உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார்
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!

எனவரும் கம்பநாடர் செய்யுள் நினையற்பாலதாம். (கோலங் -3)

கோதை-விளி. மங்கலவணி-இயற்கையழகு. மாங்கலிய மென்பாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லார். எவன்-யாது.கொல்: அசை.

65 - 66 : பல்லிருங்கூந்தல் ................ என்னுற்றனர் கொல்

(இதன் பொருள்) பல் இருங்கூந்தல் சில் மலர் அன்றியும் - ஐம்பாலாகக் கை செய்யப்படும் நினது கரிய கூந்தலில் மங்கலங்கருதி அதற்குரிய மலர் சிலவற்றைப் பெய்தமையே அமைவதாக அவற்றை யல்லாமலும்; எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்-ஒளியோடு மலருகின்ற இந்த மலர்மாலைகள் அக் கூந்தலின்கண் நின்னிடைக்குப் பொறையாக அணிதற்கு அவற்றோடு அவர்கள் எத்தகைய உறவுடையரோ, அறிகின்றிலேன் என்றான் என்க.

(விளக்கம்) இம்மாலைகள் நினது கூந்தலின் இயற்கையழகை மறைப்பதோடல்லாமல் நின் சிற்றிடைக்குப் பெரும் பொறையுமாம் என்பது நினையாமல் நின்றலையின்மேல் அவற்றை ஏற்றுதலால் அவற்றோடு அவர்க்கு உறவுண்டு போலும் என்றவாறு. என்னை? உறவினரை மேலேற்றி வைத்தல் உலகியல்பாகலின் அங்ஙனம் வினவினன் என்க.

சில்மலர் என்றது மங்கலமாக மகளிர் அணியும் கற்புமுல்லை முதலியவை. சீவக சிந்தாமணியில் தேந்தாமம் என்று தொடங்குஞ் செய்யுளில் (680) முல்லைப் பூந்தாமக் கொம்பு என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முல்லை கற்பிற்குச் சூட்டிற்று எனவும் சீவக செய்யுள் 624-ல் முல்லைச் சூட்டுவேய்ந்தார் என்பதற்கு முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டி என்றும் உரை கூறுதலுமுணர்க. சின்மலர் - அருச்சனை மலருமாம் என்பர் அடியார்க்கு நல்லார்.

67-68: நான ............. எவன்கொல்

(இதன் பொருள்) நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவ்வண்ணமகளிர் நினது பல்லிருங்கூந்தலுக்கு நெய்யையுடைய சிறந்த அகிற்புகையை ஊட்டுதலே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - கத்தூரியையும் அணிதற்கு அதன்பால் அவர்க்கு உண்டான கண்ணோட்டத்திற்குக் காரணம் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) நானம் - நாற்றமுமாம்; திருந்து தகரச் செந்நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொளவுயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகை என்பான் (சிந்தா - 346) நல்லகில் நறும்புகை என்றான். அதற்குப் பொறையின்மையின் அஃது அமையும் என்பது கருத்து. மான்மதம்-கத்தூரி. வந்ததை என்புழி ஐகாரம் சாரியை. மான்மதத்தைச் சிறந்த இடத்தில் வைத்தலால் வந்தது என்னும் வினையாலணையும் பெயர் கண்ணோட்டம் என்பது தகுதியாற் கொள்ளப்பட்டது.

69-70 : திருமுலை ............ எவன்கொல்

(இதன்பொருள்) திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர்தாம், நினது அழகிய முலைப்பரப்பின் மேல் தொய்யில் எழுதுதலே மிகையாகவும் அதனை யல்லாமலும்; முத்தம் ஒரு காழொடு உற்றதை எவன்கொல் - முத்தாலியன்ற தனி வடத்தையும் பூட்டிவிட்டமைக்கு அதனோடு அவர்க்குண்டான உரிமைதான் யாதோ? என்றான் என்க.

(விளக்கம்) திரு என்பதற்கு அடியார்க்கு நல்லார் முலைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம், எனப் பொருள் கொண்டனர். சிந்தாமணியில் (171) ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே எனத் திருத்தக்க தேவர் ஓதுதலும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் மேலுறையும் வீற்றுத் தெய்வம் இருப்பிடமாக விருக்கப்பட்டுச் சுணங்கு பரந்தன என உரை விரித்தலும் காண்க. அஃதாவது வேறொன்றற் கில்லாத கவர்ச்சியையுடைய அழகைத் தருவதொரு தெய்வம் என்றுணர்க. காழ்-வடம்.

71-72: திங்கள் ......... என்னுற்றனர் கொல்

(இதன் பொருள்) திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்- அந்தோ நின்னுடைய பிறைபோன்ற நுதலின்கண் வியர்வைத் துளிமுத்துக்கள் போன்று அரும்பா நிற்பவும் நுண்ணிடை வருந்தா நிற்பவும் இங்கு இவை அணிந்தனர் - இங்குக் கூறப்பட்ட பிறிதணி முதலிய இவற்றைப் பொறையின் மேல் பொறையாக அணிந்துவிட்ட அவ்வண்ணமகளிர்; என் உற்றனர் கொல் - என்ன பேய் கொண்டனரோ? என்றான் என்க.

(விளக்கம்) திங்கள், முத்து என்பன சொல்லுவான் குறிப்பினால் முகம் என்றும் வியர்வென்றும் பொருள்படுதலால் இவற்றைக் குறிப்புவமை என்ப; இவற்றைப் பிற்காலத்தார் உருவகம் என்று வழங்குப.

மங்கல வணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலும் ஆகிய, இவையே பொறையாக இவற்றைச் சுமக்கலாற்றாது திங்கள் முத்தரும்பவும் இங்கு இவைகண்டு வைத்தும் மேலும் பொறையாகப் பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தாராகலின் அவர் பேயேறப் பெற்றவரேயாதல் வேண்டும் என்பது கருத்து.

என்னுற்றனரோ என்பதற்கு என்ன பித்தேறினார் எனினுமாம்.

73-81 : மாசறுபொன்னே ............ பாராட்டி

(இதன் பொருள்) மாசு அறு பொன்னே - குற்றமற்ற பொன்னை ஒப்போய்! என்றும்; வலம்புரி முத்தே - வலம்புரிச் சங்கீன்ற முத்தை ஒப்போய்! என்றும்; காசு அறு விரையே - குற்றமற்ற நறுமணம் போல்வோய்! என்றும்; கரும்பே - கரும்பை ஒப்போய்! என்றும்; தேனே - தேன்போல்வோய்! என்றும்; அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவை போல்வோய்! என்றும்; ஆர் உயிர் மருந்தே - மீட்டற்கரிய உயிரை மீட்டுத் தருகின்ற மருந்து போல்வோய்! என்றும்; பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - உயர்ந்த குடிப்பிறப்பாளனாய வாணிகர் பெருமகன் செய்தவத்தாற் பிறந்த மாண்புமிக்க இளமையுடைய நங்காய்! என்றும் (ஒருவாறு உவமை தேர்ந்து பாராட்டியவன்; பின்னர் அவள் நலத்திற்குவமை காணமாட்டாமல்) தாழ் இருங்கூந்தல் தையால் நின்னை-நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை யான்; மலையிடைப் பிறவா மணியே என்கோ! மலையின் கட் பிறவாத மணி என்று புகழ்வேனோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - அல்லது, திருப்பாற்கடலிலே பிறந்திலாத அமிழ்தமே என்று புகழ்வேனோ? யாழ் இடைப் பிறவா இசையே என்கோ - அல்லது, யாழின்கட் பிறந்திலாத இசையே என்று புகழ்வேனோ? என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி - எனச் சொல்லித் தொலையாத அக்கண்ணகியின் நலங்களைப் பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றாலே புகழ்ந்து என்க.

(விளக்கம்) (46) தீராக்காதலாலே முகம் நோக்கி, குறியாக் கட்டுரை கூறும் கோவலன் பெரியோன் தருக என்றும், உருவிலாளன் ஈக்க என்றும், அறுமுக வொருவன் ஈத்தது இறுமுறை காணும் இயல்பினின் அன்றே என்றும் மஞ்ஞை கான் அடையவும் அன்னம் மலர்ச் செறியவும் கிளி ஒருவா ஆயின ஆதலால் அளிய என்றும் கோதாய்! நின் நலம் பாராட்டுநர் பிறிதணியை அணியப் பெற்றதை எவன்? என்றும், மாலையொடு என்னுற்றனர் என்றும், சாந்தொடு வந்ததை எவன்? என்றும், முத்தொடுற்றதை எவன் என்றும், இவை அணிந்தனர் என்னுற்றனர் என்றும், பொன் முதலியன போல்வோய் என்றும், மகளே என்றும், மணியே என்கோ? அமிழ்தே என்கோ? இசையே என்கோ? எனவும், உலவாக் கட்டுரை பலவற்றானும் கண்ணகியின் நலத்தைப் பாராட்டி என்றியையும்.

இனி, (74) கண்ணுக்கு இனிமை பயத்தல் கருதி மாசறு பொன் என்றும், ஊற்றின்பம் கருதியும் மரபின் தூய்மை கருதியும் வலம்புரி முத்து என்றும், உயிர்ப்பின் இனிமை கருதி விரையென்றும், சுவையின்பங் கருதிக் கரும்பென்றும், மொழியின்பம் கருதித் தேன் என்றும் பாராட்டினன் எனவும், இவற்றாற் சொல்லியது ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகலின் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (குறள்-1101) என நலம் பாராட்டப்பட்டன என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும்.

இனி, கண்ணகியின் பால் தானுகர்ந்த ஐம்புல வின்பங்களையும் கருதி அவற்றிற்குத் தனித்தனியே உவமை தேர்ந்து கூறியவன் அவற்றிற்கு அவ்வுவமைகள் உயர்ந்தன வாகாமல் தான் கூறும் பொருள்களே சிறந்தன என்னுங் கருத்தினால், பிறிதோராற்றால் அந்நலங்களைப் பாராட்டத் தொடங்கி அரும்பெறல் பாவாய் என்றும், ஆருயிர் மருந்து என்றும், பெருங்குடி வாணிகன் பெருமட மகளே என்றும், பாராட்டினன். இவற்றுள், கட்கினிமை பயத்தலின் முன்பு மாசறு பொன் என்றவன், காணுமளவிலே தன்னுள்ளம் மயக்குற்றமை கருதி அத்தன்மை பொன்னுக்கின்மையால் அங்ஙனம் மயக்குறுத்தும் கொல்லிப்பாவையே என்றான் என்க. அவ்வாறு மயங்கி அழியுமுயிரைத் தன்கண் களவு கொள்ளும் சிறு நோக்கினால் பெரிதும் தழைப்பித்தலின் ஆர் உயிர் மருந்தே என்றான், என்க. மருந்து மிருதசஞ்சீவினி என்பர், அடியார்க்கு நல்லார். கட்பொறிக்கேயன்றி ஏனைப்பொறிகட்கும் இன்பம் பயத்தலின் மலையிடைப் பிறவாமணி என்பேனோ என்றான் என்க. மணி குழையாமையின் அங்ஙனம் கூறினன் என்பர் அடியார்க்கு நல்லார். இனி, உண்டார்கண் அல்லது அலையிடைப் பிறக்கும் அமிழ்து கண்டார்க்கும் தீண்டினார்க்கும், கழிபேரின்பம் நல்குதலின்மையின் அதிற்பிறவா அமிழ்தே என்பேனோ என்றான் என்க. ஈண்டு உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தி னியன்றன தோள் எனவரும் திருக்குறளையும் (1106) அதற்கு ஆசிரியர் பரிமேலழகர் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினாற் செய்யப்பட்டன என உரைகூறுதலும் காண்க. அமிழ்திற்கு வடிவின்மையின் இங்ஙனம் கூறினன் என்பாருமுளர்.

82-84 : தயங்கிணர் ......... நாள்

(இதன்பொருள்) வயங்கு இணர்த் தாரோன் - விளங்குகின்ற பூங்கொத்துக்களாற் புனைந்த மலர்மாலையை அணிந்த கோவலன்; தயங்கு இணர்க்கோதை தன்னொடு - விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மலர்மாலையணிந்த கண்ணகியோடு; மகிழ்ந்து தருக்கிச் செல்வுழி நாள் - இவ்வாறு பேரின்ப நுகர்ந்து செருக்குற்று ஏறுபோல் பீடுற நடந்து வாழ்கின்ற நாள்களுள் வைத்து ஒருநாள்; என்க.

(விளக்கம்) வயங்கிணர், தயங்கிணர் என்பன ஒரு பொருளுடையன ஆதலால் இத்தொடையைத் தலையாய எதுகைத் தொடையின்பமுடைத்தென்றும், பரியாய வணி என்றும், கூறுவர் அடியார்க்கு நல்லார். இதனைப் பொருட்பின் வருநிலையணி என்பாருமுளர்.

84 - 90 : வாரொலி ........... தனக்கென்

(இதன்பொருள்) வார் ஒலி கூந்தல் பேரியல் கிழத்தி - நீண்டு அடர்ந்த கூந்தலையுடைய பெருமைமிக்க மனைமாண்புடைய மாசாத்துவான் மனைவியாகிய மூதாட்டி; மறப்பருங் கேண்மையோடு - இல்வாழ்வோர் எஞ்ஞான்றும் மறத்தலில்லாத சுற்றந்தழாலோடே; அறப்பரிசாரமும் - அறவோர்க்களித்தலும்; விருந்துபுறந்தரூஉம் பெருந் தண் வாழ்க்கை - விருந்தோம்பலும் இன்னோரன்ன பிற அறங்களையும் உடைய பெரிய குளிர்ந்த இல்வாழ்க்கையை; வீறுபெறக் காண -தாமே நடத்தி அவ் வாழ்க்கையின்கட் சிறப்புறுதலைத் தன் கண்ணாற் கண்டு களிக்க வேண்டி; வேறுபடு திருவின் - தாமீட்டிய பொருளினின்றும் பகுத்துக் கொடுத்த செல்வத்தோடும்; உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க - அவ்வாழ்க்கைக் கின்றியமையாத அடிமைத் திரளோடும், கோவலனும் கண்ணகியுமாகிய தன் மகனையும் மருகியையும் தம்மினின்றும் பிரிந்து வேறாக விருந்து வாழுமாறு பணித்தலாலே; இல்பெருங் கிழமையில் - இல்லறத்தை நடத்துகின்ற பெரிய தலைமைத் தன்மையோடே; காண்தகு சிறப்பின் பிறரெல்லாம் கண்டு பாராட்டத் தகுந்த புகழோடே; கண்ணகி தனக்கு-அக்கண்ணகி நல்லாட்கு; சில யாண்டு கழிந்தன-ஒருசில யாண்டுகள் இனிதே கழிந்தன; என்க.

(விளக்கம்) வார் - நெடுமை. ஒலித்தல் ஈண்டு அடர்தன் மேற்று. பேரியல் - மனைவிக்குரிய பெருங்குணங்கள். அவையாவன:

கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.

என்க; (தொல்-கற்பியல். 11) ஈண்டுப் பேரியற் கிழத்தி என்றது, மாசாத்துவானின் இற்கிழத்தியை (கோவலன் தாய்).

இனி, வாரொலி கூந்தல் பேரியற்கிழத்தி என்பதுவே அடியார்க்கு நல்லார் கொண்ட பாடமாம் ஆயினும் வாரொலி கூந்தல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு (கண்ணகியை) வீரபத்தினியை என்பர் அடியார்க்குநல்லார். பேரியற் கிழத்தி எனினுமமையும் என்றலின் அவர் கொண்ட பாடம் வாரொலி கூந்தல் பேரியற் கிழத்தி என்பது பெறப்படும். வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி என்று காணப்படும் பாடம் பிழைபடக் கொண்டதாம். பேரிற்கிழத்தி என்பது அரும்பதவுரையாசிரியர் கொண்டபாடமாம். இன்னும் அவர் அறப்பரிகாரம் என்று பாடங்கொண்டமை அவர் உரையால் விளங்கும்.

வாரொலி கூந்தற் பேரியற் கிழத்தி என்று பாடங்கொண்ட அடியார்க்கு நல்லார், கூந்தலையுடைய வீரபத்தினி எனப் பொருள் கூறுதல் மிகை. பேரியற் கிழத்திக்குக் கூந்தலை அடையாக்குதலே அமையும். இவர் உரையால் மயங்கிப் பின்னர் ஏடெழுதினோர் வாரொலி கூந்தலை என்றே எழுதி விட்டனர் போலும்.

கேண்மை-எல்லோரிடத்தும் கேளிராந்தன்மையுடையராதல், அன்புடையராந் தன்மை. இஃது இல்லறத்தார்க்கு இன்றியமையாப் பண்பாகலின் அதனை மறப்பருங்கேண்மை என்றார். அறப்பரிசாரம்-அறங்கூறுமாற்றால் ஒழுகுதல். ஈண்டு, (கொலைக்-71-2.) அறவோர்க்களித்தலும் துறவோர்க் கெதிர்தலும் எனக் கண்ணகியார் கூறியவை இதன்கண் அடங்கும். பரிசாரம் என்பது ஏவற்றொழில் செய்தல் என்னும் பொருட்டாகலின் அறவோர் முதலிய இம் மூவரும் ஏவிய செய்வதே இல்லறத்தார் கடனாகலின் இவற்றை அடக்கி வேறு ஓதினர். எஞ்சிய விருந்தோம்பல் முதலியவெல்லாம் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை என்பதன்கண் அடங்கும். இல்லற வாழ்க்கை ஏனையோர்க் கெல்லாம் தண்ணியநிழல் போறலின் அதனைப் பெருந்தண் வாழ்க்கை என்று விதந்தனர். இவையெல்லாம் (கொலைகளக் காதையில்) தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்பதன்கண் அடங்கும். வேறுபடுதிரு - பிரிக்கப்பட்ட செல்வம். கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்தற் பொருட்டுத் தமது பழம் பொருள்களினின்றும் கூறுபடுத்துக் கொடுத்த செல்வம் எனக் கோடலே ஈண்டுப் பெரிதும் பொருந்துவதாம். என்னை? கோவலன் பொருளிழந்த பின்னரும், அவனுடைய இருமுது குரவரும் தமக்கெனப் பொருளுடையராயிருந்தமை, நீர்ப்படைக் காதையில் கோவலன் இறந்தமை கேட்ட மாசாத்துவான் தன்பாலிருந்த மிக்க பொருளையெல்லாம் தானமாக வீந்துபோய்த் துறவியாயினன் என்பதை மாடல மறையோன் கூற்றாக வருகின்ற கோவலன்றாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமாவான் பொருளீத்தாங்கு.... துறவியெய்தவும் என்பதனால் அறியப்படும். ஆதலானும் கனாத்திறம் உரைத்த காதையில் குலந்தருவான்பொருட்குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக் கோவலன் குறிப்பது ஈண்டுத் தமக்கென வேறுபடுத்துக் கொடுத்த பொருளையே ஆதலானும் என்க. இந்நுணுக்க முணரார் நானாவிதமான செல்வம் என்றும், பலபடைப்பாகிய செல்வத்தோடே என்றும் தத்தம் வாய் தந்தன கூறலாயினர். வீறு - மற்றோரிடத்தே காணப்படாத சிறப்பு.

ஒருதனி புணர்க்க என்றது அவள் நடத்தும் இல்லற வாழ்க்கையினூடே தான் சென்று புகாமல் முழுவதும் அவள் தலைமைக்கே விட்டு விட்டதை உணர்த்தும். இற்பெருங் கிழமையில் ஏனையோர் கண்டு பாராட்டத் தகுந்த சிறப்புடைய கண்ணகி என்க. இதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்டார் கூறும் உரைகள் போலியாதலறிக.

இனி இக்காதையினை, செல்வர்க்குத் தோன்றிய கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்சிறந்து ஏறிக் காட்சிபோல இருந்து எழுதப் பின்னர் இருவரும் மயங்கிக் கையற்றுழிக் குறியாக் கட்டுரை கூறுகின்றவன் உலவாக் கட்டுரை பல பாராட்டிச் செல்வுழி ஒருநாள் பேரியற்கிழத்தி புணர்க்க, கண்ணகிக்கு இற்பெருங் கிழமையில் யாண்டு சில கழிந்தன என வினையியைபு காண்க.

(இஃது எல்லாவடியும் நேரடியாய் வந்து முடிதலின்)

நிலைமண்டில ஆசிரியப்பா
வெண்பா

தூம ........ நின்று

(இதன்பொருள்) காமர் மனைவி எனக் கை கலந்து - முற்கூறிய கோவலனும் கண்ணகியும் காமவேளும் இரதியும் போன்று தம்முள் உள்ளப்புணர்ச்சியால் ஒருவருள் ஒருவர் கலந்து; தூம் அம்டணிகள் ஒன்றித் தோய்ந்தால் என - மற்று மெய்யுறு புணர்ச்சிக்கண் காமநுகரும் அழகுடைய பாம்புகள் உடலாற் பிணைந்து புணருமாறு போன்று புணர்ச்சி எய்தி; ஒருவார் - தம்மை ஊழ் கூட்டுவித்த அவ்வொரு சில யாண்டுகளினும் ஒருவரை ஒருவர் பிரியாதவராய்; மண்மேல் நிலையாமை கண்டவர் போன்று- இவ்வுலகின்கண் யாக்கையும் இளமையும் செல்வமும் ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து அவை உளவாயிருக்கும் பொழுதே அவற்றாலாகும் இன்பத்தை நுகர்தற்கு விரைவார் போன்று; நின்று நாமம் தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - அழகிய அவ்வின்பவொழுக்கத்திலே நிலைபெற்று நுகர்ந்து நுகர்ந்தமையாத காதலின்பம் எல்லாவற்றையும் நுகர்ந்தனர்.

(விளக்கம்) தூம் - தூவும்; நுகரும்; துவ்வுதல் என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்த எச்சம். இதன் ஈற்றுயிர் மெய்கெட்டது. இஃது எதிர்மறைக்கண் தூவா என வரும். தூவாக்குழவி எனவருதல், அறிக. ஈண்டுக் காமம் துய்க்கும் பணிகள் என்றவாறு. அப்பணி என்பதன் விகாரம்; அம் - அழகு. பணி-பாம்பு. இவை மெய்யுறுபுணர்ச்சிக்கு உவமம். நாமம்-அழகு. உளபோதே இன்பத்தை நுகர்தற்கு விரைவராதலின் உவமமாயினர்.

இவ்வெண்பா பல பிரதிகளில் காணப்பட்டிலது என்பர்.

மனையறம்படுத்த காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #3 on: February 22, 2012, 07:56:09 AM »
3. அரங்கேற்று காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் காட்டிய செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினு மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி என்றவாறு.

தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய  5

பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்  10

சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு  15

ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்  20

வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்,  25

யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்  30

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்  35

அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து  40

இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே  45

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்  50

ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்,  55

சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்  60

பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி  65

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின்  70

ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத்  75

தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை  80

வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின்  85

முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு  90

யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது  95

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக  100

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்  105

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு  110

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு  115

கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்  120

புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப  125

அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,  130

வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க  135

வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்  140

பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி  145

வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து  150

மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்  155

பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத்  160

தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை,  165

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை  170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்.  175

(வெண்பா)

எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.

உரை

1-7 : தெய்வமால் ........... மாதவிதன்னை

(இதன்பொருள்) தெய்வமால்வரைத் திருமுனி - கடவுட்டன்மையுடைய பெரிய மலையாகிய பொதியிலின்கண் எஞ்ஞான்றும் வதிகின்ற தலைசிறந்த முனிவனாகிய அகத்தியனாலே முன்பொரு காலத்தே சபிக்கப்பட்டு; எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு - தன்னோடு ஒருங்கே எய்திய சாபத்தையுடைய இந்திரன் மகனாகிய சயந்தன் என்பவனோடு மண்ணுலகத்தே பிறப்பெய்தி; அருள - அம்முனிவனே அற்றைநாள் அவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருளியபடியே; தலைக்கோல் தானத்து (இந்திர சிறுவனொடு) சாபம் நீங்கிய - இம்மண்ணுலகத்தே நாடக அரங்கின்கண்ணே (அச்சயந்தனோடு ஒருங்கே) சாபம் நீங்கிப்போன (உருப்பசியாகிய மங்கை மாதவியின் வழிமுதற்றோன்றிய) மலைப்பு அருஞ் சிறப்பின் - ஒப்பில்லாத சிறப்புண்மை காரணமாக; வானவர் மகளிர் சிறப்பின் குன்றாச் செய்கையொடு பொருந்திய - வானவருலகத்து உருப்பசி முதலிய அந்நாடக மகளிர்க்குரிய சிறப்பின் கண் சிறிதும் குறையாத நாடகத் தொழிற்றிறத்தோடு கூடிய; பிறப்பின் குன்றா - அவ்வுருப்பசி மரபிற் பிறந்த பிறப்பு நலங்களானும் ஒரு சிறிதும் குறையாத; பெருந்தோள் மடந்தை-தோள் முதலிய மூன்றுறுப்புக்களும் பெருகிய மடந்தை ஆகிய; தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை - தாதுவிரிகின்ற மலர்களையுடைய கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையை என்க.

(விளக்கம்) தெய்வவரை, மால்வரை எனத் தனித்தனி யியையும். திருமுனி-அகத்தியன். கம்பநாடரும் ஈண்டு அடிகளோதியவாறே தென்றமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் (நாடவிட்ட - 31) என வோதுதல் உணர்க. திரு, ஈண்டுச் சிறப்பின் மேற்று.

இனி இக்காதையில் இவ்வேழடிகளும் பொருட் பொருத்தமின்றி நிற்றலுணர்க. இவற்றுள் சாபம் நீங்கிய என்புழி நீங்கிய என்னும் பெயரெச்சம் (4) வானவர் மகளிர் எனவரும் பெயரையாதல் (7) மாதவி என்னும் பெயரையாதல் கொண்டு முடிதல் வேண்டும். அங்ஙன முடிப்பின் வரலாற்றோடு பொருந்தாது. இங்ஙனம் பொருந்தாமை கண்ட பழைய வுரையாசிரியரிருவரும் பெரிதும் இடர்ப்படுவர். அவருள் அரும்பதவுரையாசிரியர், இந்திரகுமரனோடு என்றதனால் சயந்தகுமாரனோடே உருப்பசியும் சாபம் நீங்கிப்போனாள், என்க, எனவும். வானவர் மகளிர் - தளியிலார் எனவும், உருப்பசி வந்து சாபத்தாற் பிறக்கையால் அவள் வழியுள்ளாரையும் வானவர் மகளிர் என்றார், எனவும் ஓதுவர். இனி அடியார்க்கு நல்லார் வானவர் மகளிர் என்பதற்கு அரம்பையர் எனப் பொருள்கொண்டு, பின்னரும் உருப்பசியாகிய அம்மாதவி மரபில்வந்த... மாதவி என்பர். இவ்வாறு இடப்பாடுறும்படி அடிகளார் செய்யுள் செய்தனர் என்று நினைத்தற்கும் இடமில்லை. ஆகவே, இப்பழைய வுரையாசிரியர் காலத்திற்கு முன்பே நீங்கிய என்னும் பெயரெச்சத்தைக் கொண்ட பெயரும் பிறவும் அடங்கிய ஒன்று அல்லது இரண்டடிகள் விழ வெழுதினர் பண்டு ஏடெழுதியவர் என்று கருதுதல் மிகையன்று.

இனி, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் என்புழி வானவர் மகளிர் என்பதற்குப் பழைய உரையாசிரியரிருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு உரை கூறுதல்தானும் அச்சொல் அவ்விடத்தே நிற்றல் பொருந்தாமை கண்டு இருவரும் இடர்ப்பட்டே ஒருவாறு ஒல்லுமாற்றாற் கூறிய வுரைகளே என்பது தேற்றம். ஆகவே, அச்சொல் வானவர் மகளின் என்னும் ஒருமைச் சொல்லே எழுதுவோர் பிழையால் வானவர் மகளிர் எனப் பன்மைச் சொல்லாய்த் திரிந்தது எனக் கொள்வோமாயின் வானவர் மகள் என்பது உருப்பசியைக் குறிப்பதாய் மேலே சாபநீங்கிய என்புழிக்கிடந்த பெயரெச்சத்திற்கும் பொருத்தமான முடிக்குஞ் சொல்லாவதைக் காணலாம். இங்ஙனம் கொள்ளவே இந்த ஏழடிகளின் பொருளும் இடர்ப்பாடு சிறிதுமின்றி ஆற்றொழுக்காக நடத்தலையும் காண்டல் கூடும். இத்திரிவுதானும் பழைய உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்ததென்றே கொள்ளவேண்டும். இஃது எங்கருத்து மட்டுமேயாகலின் யாமும் பழைய உரையாசிரியர் போன்றே வானவர் மகளிர் என்ற பாடமே கொண்டு அதற்கு அவரினும் சிறப்ப வருவித்தும் வலிந்தும் பொருள் கூறுவோமாயினேம்.

இனி வானவர் மகளின் என்றே பாடங்கொள்ளின், சாபநீங்கிய மலைப்பருஞ் சிறப்பினையுடைய உருப்பசியாகிய வானவர் மகளினுக்குரிய சிறப்பிற்குன்றாச் செய்கையொடு பொருந்திய மரபிற் பிறந்த நலத்திற் சிறிதும் குன்றாத மடந்தையாகிய மாதவி தன்னை, எனப் பொருள் சிறிதும் முட்டுப்பாடின்றி நடத்தலுமுணர்க.

இனி, அகத்திய முனிவன் சாபத்திற்கிலக்காகி உருப்பசி மண்ணகத்தே பிறந்து மாதவியென்னும் பெயருடையளாய்ச் சயந்தனொடு சாபநீங்கிய வரலாற்றினை அடிகளாரே கடலாடு காதைக்கண் ஓதுவர். ஆங்கு அதுபற்றி விளக்கமாகக் கூறப்படும்.

தலைக்கோல் தானம் - நாடக வரங்கு. சிறப்பிற்குன்றாச் செய்கை யென்றது தனக்குரிய இலக்கணத்திற் சிறிதும் குறையாத கூத்துத் தொழிலை. இதனால் அடிகளார் இய மண்ணுலகத்துக் கணிகையரினும் காட்டில், மாதவிக்கே ஆடற்கலை சிறந்துரிமையுடைய மாண்பினை விதங்தார் ஆயிற்று. நாடக மகளிர்க்கியன்ற ஆடல் பாடல் அழகு என்னும் மூன்று பண்புகளுள் ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்புவனவாக அழகு பருவத்தால் நிரம்புவதாகலின் அதுதானும் நிரம்பினமை தோன்ற பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி என விதந்தார். என்னை? தோளின் பருமை கூறவே அகலல்குல் கண்ணென மூவழிப் பெருகினமையும் இனஞ்செப்பு மாற்றால் கொள்ளக் கூறியவாறாயிற்று. பின்னும் மகளிர்க்குப் பேதைப்பருவத்துக்கூழை, கூந்தலாய் வளர்ந்து கடை குழன்று அழகானிரம்புவதும் பெதும்பைப் பருவத்தே ஆகலின் அப் பருவம் வந்தெய்தியமை தோன்றத் தாதவிழ் புரிகுழல் மாதவி என்றார்.

8-9 : ஆடலும் பாடலும் ............ குறைபடாமல்

(இதன்பொருள்) ஆடலும் பாடலும் அழகும் என்று கூறிய இம்மூன்றின் - நாடக மகளிர்க்கு இன்றியமையாதன, கூத்தும் பாட்டும் அழகும் ஆகிய இம்மூன்றுமாம் என்று கூத்தநூலாராற் கூறப்பட்ட இந்த மூன்று நலங்களுள் வைத்து; ஒன்று குறைபடாமல் - ஒன்றேனும் குறைபடாமைப் பொருட்டு என்க.

(விளக்கம்) நாடக மகளிர்க்கு வேண்டுவன வேறு பல நலங்களும் உளவாயினும் அவற்றுள்ளும் இம்மூன்றும் தலைசிறந்த நலங்களாதலின் இவற்றைமட்டும் விதந்தோதினர். இம்மூன்றும் அவர்க்கின்றியமையாவென்பதை,

நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்கு

எனவரும் மணிமேகலையானும் (18 : 103-107) உணர்க.

இஃது, ஏழாண்டியற்றியோரீராண்டிற்....... காட்டல் வேண்டி என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவை குறைவுபடாமைக்குக் காரணம் உடையளாகலின் என்பர் அடியார்க்குநல்லார். அவர் இவள் உருப்பசி மரபில் பிறந்தமை கருதி அக்காரணத்தின் காரியம் இவை என்கின்றார்.

10-11: ஏழாண்டியற்றி.......வேண்டி

(இதன்பொருள்) ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர் ஆறு ஆண்டில்-ஐயாட்டைப் பருவமாகிய பேதைப் பருவத்திலேயே தண்டியம் பிடிப்பித்து ஏழாண்டுகள் இடையறாது பயிற்றுவித்து மேற்கூறிய ஆடலும் பாடலும் பயிற்சியால் நிரம்பா நிற்க இயற்கையான் அழகும் நிரம்பிய பன்னீராட்டைப் பருவமாகிய மங்கைப்பருவத்தே; சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - வீரக்கழல் சூழ்ந்த சோழமன்னனுடைய நல்லவைக்கண் அரங்கேறிக் காட்டுதலை விரும்பி என்க.

(விளக்கம்) இளமையிற் கல் என்பதுபற்றி ஐயாண்டிற்றண்டியம் பிடித்தல் வேண்டிற்று. இதனை,

பண்ணியம்வைத் தானேமுகன் பாதம் பணிந்துநாட்
புண்ணிய வோரை புகன்றனகொண்-டெண்ணியே
வண்டிருக்குங் கூந்தன் மடவரலை யையாண்டில்
தண்டியஞ்சேர் விப்பதே சால்பு (அடியார்க்-மேற்கோள்)

எனவரும் வெண்பாவானுணர்க.

இனி, ஏழாண்டியற்றி என்றதனால் அக்கூத்துக்கலையின் அருமை பெருமைகளும் விளங்கும். இயற்றுதல்-பயிற்றுவித்தல், தண்டியம் பிடித்தல் ஆடற்கலைக்குக் கால்கோள் செய்யும் ஒரு சடங்கு, கல்விக்குக் கால்கோடலை மையோலை பிடித்தல் என்பதுபோல வென்க. தண்டியம் - தண்டு கோல்.

இனி, பரத சேனாபதியார்,

வட்டணையும் தூசியும் மண்டலமும் பண்ணமைய
எட்டுட னீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய
கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச்
சோதித் தரங்கேறச் சூழ்

எனவும்,
நன்னர் விருப்புடையோள் நற்குணமு மிக்குயர்ந்தோள்
சொன்னகுலத் தாலமைந்த தொன்மையளாய்ப் - பன்னிரண்டாண்
டேய்ந்ததற்பின் ஆடலுடன் பாடலழ கிம்மூன்றும்
வாய்ந்தவரங் கேற்றல் வழக்கு

எனவும் ஓதிய வெண்பாக்கள் ஆடற்கலை பயிற்றுமாறும் அக்கலைக்குரிய தலையாய மாணவி மாண்பும் அரங்கேறும் பருவமும் அறிவித்தல் உணர்க.

ஆடலாசிரியன் அமைதி

12-25 : இருவகைக்கூத்தின் ........... ஆசான்றன்னொடும்

(இதன்பொருள்) இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு வேறு வகையாகக் கூறப்பட்ட கூத்துக்களின் இலக்கணங்களையும் ஐயந்திரிபற அறிந்து; பலவகைக்கூத்தும் விலக்கினிற் புணர்த்து - இவ்விரு வகைக் கூத்துக்களினின்றும் விரிவகையால் பல்வேறுவகைப்பட்டு நிகழுகின்ற கூத்துக்களை யெல்லாம் விலக்குறுப்புக்களோடு பொருந்தப் புணர்க்கவும் வல்லனாகி, பதினோராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு-முற்கூறிய இருவகைக் கூத்துக்களையன்றியும், அல்லிய முதற்கொடு கொட்டி யீறாகக்கிடந்த பதினொருவகை ஆரியக்கூத்துக்களையும் அக்கூத்துக்களுக்குரிய பாட்டுக்களையும் அவற்றிற்குரிய இசைக் கருவிகளையும் அவற்றிற்குரிய இலக்கண விதியினால் மாட்சிமையுடைய நூல்களின் வாயிலாய் ஐந்திரிபற நன்றாக அறிந்தவனாய்த் தான் அறிந்தவாறே; ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங் காலை - கூத்தும் பாட்டும் தாளங்களும் அவற்றின் வழிவந்த தூக்குக்களும் தம்மிற்கூடிய நெறியையுடையனவாகிய முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களையும் மாணவர்க்குப் பயிற்றுவிக்கும்பொழுது பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்ட வகை அறிந்து-பிண்டிக்கை பிணையற்கை எழிற்கை தொழிற்கை என்று சொல்லப்பட்ட நான்கனையும் நூலினகத்துக்கொண்ட கூறுபாட்டை யறிந்து; கூத்துவருகாலை - கூத்துக்கள் நிகழுமிடத்தே; கூடை செய்த கை வாரத்துக் களைதலும் - கூடைக்கதியாகச் செய்த கை வராக்கதியுட் புகாமலும்; வாரஞ் செய்த கை கூடையில் களைதலும்- வாரக்கதியாகச் செய்த கை கூடைக்கதியுட் புகாமலும்; பிண்டி செய்தகை ஆடலில் களைதலும் - அவி நயம் செய்த கை ஆடல் நிகழுமிடத்தே நிகழாமலும்; ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும் - அவிநயம் நிகழுமிடத்தே ஆடல் நிகழாமலும் பேணி; குரவையும் வரியும் விரவல செலுத்தி-குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் தம்மில் கலவாதபடி நிகழ்த்தி; ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும் - பயிற்றுந் திறமுடைய ஆடற்கலைக்குச் சிறந்த ஆசிரியனோடும் என்க.

(விளக்கம்) (12) இருவகைக் கூத்தாவன-வேத்தியற் கூத்தும் பொதுவியற் கூத்துமாம். என்னை? வேத்தியல் பொதுவியல் என்று, இருதிறத்தின் (34) என அடிகளாரே பின்னர் விளக்கமாக வோதுதலான் ஈண்டு அடிகளார் கூறிய இருவகைக் கூத்திற்கு இப்பொருளே பொருந்துவதாம். இவரோ டொருகாலத்தவராகிய மணி மேகலையாசிரியர் தாமும் வேத்தியல் பொதுவியல் என்றிருதிறத்துக் கூத்தும், (2.18-16) என இங்ஙனமே ஓதுதலுமுணர்க. இதற்குப் பழைய வுரையாசிரியரிருவரும் கூறும் உரைகள் தம்முள் மாறுபடுவனவாயினும் அவையும் நம்மனோரால் அறியற்பாலனவேயாம் ஆதலால் அவற்றையும் கீழே தருவாம். அரும்பதவுரையாசிரியர் தேசி; மார்க்கம் என இவை என்பர். அடியார்க்கு நல்லார்-இருவகைக் கூத்தாவன-வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வேத்தியல் பொதுவியல்; வரிக்கூத்து, வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து, விநோதக்கூத்து; ஆரியம்; தமிழ்; இயல்புக்கூத்து, தேசிக்கூத்து என, (இவ்விரண்டாகக் கூறப்படுகின்ற) பலவகைய, இவை விரிந்த நூல்களிற் காண்க. எனவும்,

ஈண்டு இருவகையாவன சாந்தியும் விநோதமும்; என்னை? அவை தாம், சாந்திக் கூத்தும் விநோதக் கூத்துமென் றாய்ந்துற வகுத்தனன் அகத்தியன்றானே என்றாராகலின், எனவும்,

இவற்றுள், சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் ஏத்தி நின்றாடிய வீரிரு நடமவை சொக்க மெய்யே அவிநயம் நாடகம், என்றிப்பாற்படூஉம் என்மனார் புலவர், என்பதனால் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்துச் சாந்திக் கூத்தெனப்படும். எனவும் இவற்றுள், சொக்கமென்றது சுத்த நிருத்தம். அது நூற்றெட்டுக்கரணமுடைத்து-மெய்க்கூத்தாவது-தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாகலின் மெய்க்கூத்தாயின. இவை அகச்சுவைபற்றி யெடுத்தலின், அகமார்க்கம் என நிகழ்த்தப்படும் எனவும்,

அகச்சுவையாவன - இராசதம், தாமதம், சாத்துவிகம் என்பன. குணத்தின் வழிய(து) அகக்கூத் தெனப்படுமே என்றார் குண நூலுடையார்; அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே என்றார் சயந்த நூலுடையாருமெனக் கொள்க எனவும்,

அவிநயக் கூத்தாவது: -கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ் செய்யும் பலவகைக்கூத்து, எனவும்.

நாடகம் - கதை தழுவிவருங்கூத்து. எனவும்,

விநோதக் கூத்தாவது-குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பர் எனவும் இவற்றுள்,

குரவையென்பது - காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது; குரவை என்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த வுரைக்கும் இயல்பிற் றென்ப என்றாராகலின் எனவும், குரவை - வரிக்கூத்தின் ஓருறுப்பு. கலிநடம் என்றது கழாய்க் கூத்து. குடக்கூத்து - மேற்பதினொராடலுட் காட்டப்படும் எனவும், கரணமாவது - படிந்த ஆடல். நோக்கென்பது பாரமும் நுண்மையும் மாயமு முதலானவற்றையுடையது. தோற்பாவை என்றது தோலாற் பாவை செய்து ஆட்டுவிப்பது: இன்னும் நகைத்திறச்சுவை யென்பதனோடு கூட்டி ஏழென்பாருமுளர்; அஃதாவது விதூடகக்கூத்து. இதனை வசைக்கூத்தென்பாருமுளர் எனவும்,

வசை. வேத்தியல் பொதுவியலென இரண்டு வகைப்படும். அவை முந்து நூல்களிற் கண்டு கொள்க எனவும், வெறியாட்டு முதலாகத் தெய்வமேறி யாடுகின்ற அத்திறக்கூத்துக்களுங் கூட்டி ஏழென்பாரு முளர். என்னை? எழுவகைக்கூத்து மிழிகுலத்தோரை ஆடவகுத்தனனகத்தியன் றானே என்றாராகலின் எனவும், இவற்றின் இலக்கணங்களாவன - அறுகை நிலையும் ஐவகைக் பாதமும் ஈரெண்வகைய வங்கக்கிரியையும் வருத்தனை நான்கும் நிருத்தக்கை முப்பதும் அத்தகு தொழில வாகும் என்ப, இவை விரிப்பிற் பெருகும், எனவும் ஓதுவர்.

13 - பல்வகைக்கூத்து. வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக் கூத்துக்களினும் விரிவகையாற் பல வேறு வகைப்பட்டு நிகழும் கூத்துக்களையும் என்க.

(அடியார்க் - உரை) பல்வகைக் கூத்தாவன - வென்றிக்கூத்து, வசைக்கூத்து, விநோதக்கூத்து முதலியன. என்னை? பல்வகை யென்பது பகருங்காலை வென்றி வசையே விநோத மாகும் என்றாராகலின்.

அவற்றுள் மாற்றா னொடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக் கூத்தே.

பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட வல்லவனாதல் வசையெனப்படுமே. என இவை (என்று கூறப்பட்ட வென்றிக்கூத்தும் வசைக் கூத்தும்) தாளத்தினியல்பினவாகும் (தாளத்தோடு நிகழும் இயல்) புடையன என்றவாறு).

விநோதக் கூத்து வேறுபா டுடைத்து, வென்றி விநோதக் கூத்தென விளம்புவர். இதன் கருத்து: கொடித்தேர் வேந்தரும் குறுநில மன்னரு முதலாகவுடையோர் பகை வென்றிருந்தவிடத்து விநோதங்காணுங் கூத்தென்பதாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் பல்வகைக்கூத்தும் என்பதற்கு. முற் கூறப்பட்ட இருவகைக் கூத்தினும் வேறாகிய பல வேறு வகைக்கூத்துக்களும் என்பதுபட வுரைத்தாரேனும் இவையெல்லாம் வேத்தியல் பொதுவியல் என்னும் இருவகைக்கூத்தின் விகற்பங்களாகவே கொள்க.

விலக்கு - விலக்கென்னும் உறுப்புக்கள், விலக்கினின் என்புழி இன் சாரியை, இதனைச் சாரியை என்ற பின் மூன்றனுருபு ஐந்தனோடு மயங்கிற்று எனல் மாறுகொளக் கூறலாதலறிக. சாரியை நிற்ப உருபு தொக்க தெனலே நேரிதாம்.

பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தலாவது - நகைக்கூத்து முதலாகப் பலவகைப்பட்ட புறநடங்களையும், வேந்து விலக்கும், படை விலக்கும் ஊர்விலக்கு மென்று சொல்லாநின்ற விலக்குக்களாகிய பாட்டுக்களுக்குறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப்புணர்த்தல். அஃதாவது அவற்றைப் பாட்டுக்களில் வருமாறு செய்தல்.

விலக்குறுப்புக்கள் பதினான்கு வகைப்படும்: அவையிற்றை,

விலக்குறுப் பென்பது விரிக்குங் காலை
பொருளும் யோனியும் விருத்தியும் சந்தியும்
சுவையுஞ் சாதியுங் குறிப்பும் சத்துவமும்
அபிநயம் சொல்லே சொல்வகை வண்ணமும்

வரியுஞ் சேதமும் உளப்படத் தொகைஇ
இசைய வெண்ணின் ஈரே ழுறுப்பே

எனவரும் நூற்பாவான் அறிக. இவ்வுறுப்புக்கள் இசைத்தமிழ் ஆகுங் காலத்தே விலக்குண்டு அப்பாடலே நாடகத் தமிழாகுங் காலத்தே பாட்டொடு புணர்க்கப்படுமாகலின் இப்பெயர் பெற்றன போலும்.

இவற்றுள், (1) பொருள் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு வகைப்படும். இந்நாற் பொருளும் நாடகத்தின்கண் பிரிந்தும் கூடியும் வருமாற்றால் அந்நாடகந்தாமும் நான்கு வகைப்படும். அவையாவன- அறமுதலிய நான்கும் அமைந்தது நாடகம் எனவும், அறம்பொருள் இன்பம் ஆகிய மூன்றமைந்தது பிரகரணப் பிரகரணம் எனவும், அறமும் பொருளுமே அமைந்தது பிரகரணம் எனவும், அறம் ஒன்றுமே அமைந்தது அங்கம் எனவும் கொள்ளப்படும். மேலும் இவற்றை நிரலே அந்தணச் சாதி முதலிய நால்வகைச்சாதி நாடகங்களாகவும் ஓதுப. இவை நான்கும் நாடகம் என்னும் பெயர்க்குரியனவாகும்.

(2) யோனி என்பதும், நான்கு வகைப்படும். அவையாவன-உள்ளோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதொரு பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லதொரு பொருண்மேற் செய்தலும் எனவிவை. என்னை?

உள்ளோற் குள்ளதும் இல்லோற் குள்ளதும்
உள்ளோற் கில்லதும் இல்லோற் கில்லதும்
எள்ளா துரைத்தல் யோனி யாகும்

எனவரும் நூற்பாவும் காண்க.

விருத்தியும் நான்கு வகைப்படும். அவை: சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்பனவாம். இவற்றுள் - சாத்துவதி, அறம்பொருளாகத் தெய்வமானிடர் தலைவராக வருவதாம். ஆரபடி, பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகி, காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி. கூத்தன் தலைவனாகக் கூத்தனும் கூத்தியும் பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவதாம்.

இவற்றுள் பாரதி விருத்தி மூன்றும் போலப் பிறிதின் தலைவர் பிறிது பொருள்பற்றி விருத்தி கூறாது பொருளாலே விருத்தி கூறும் என்பர்.

சந்தி ஐந்துவகைப்படும். அவையாவன: முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பனமாம். இவற்றுள் முகம் எனப்படுவது பண்படுத்தப்பட்ட நிலத்திலிட்ட வித்துப் பருவஞ்செய்து முளைத்து முடிவது போல்வதாம். பிரதிமுகம் - அங்ஙனம் முளைத்தலை முதலாகக் கொண்டு தோடு தோன்றி நாற்றாய் முடிவது போல்வது. கருப்பம்-அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்ப முற்றி நிற்பது போல்வது. விளைவு-கருப்ப முதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய்த்துத் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. துய்த்தல் - விளைந்த பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. இவை ஐந்து சந்தியும் நாட்டியக் கட்டுரை.

சுவை ஒன்பது வகைப்படும்; அவையாவன: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, நடுவுநிலை என்பன.

சாதி நான்கு வகைப்படும், அவையாவன : நாடகம், அந்தணர்சாதி பிரகரணப் பிரகரணம், அரசர்சாதி; பிரகரணம், வணிகர்சாதி; அங்கம் சூத்திரச்சாதி. குறிப்பு, நகை முதலிய சுவையுணர்வு பிறந்தவழி அவற்றால் தோன்றும் உள்ள நிகழ்ச்சி. எனவே, இஃது ஒன்பது வகைப்படும் என்பது பெற்றாம்.

சத்துவம், உள்ளத்தின்கண் சுவையுணர்வு பிறந்தவழி கண்ணீரரும் பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாக வுடம்பின்கண் நிகழும் வேறுபாடுகள். சத்துவம் எனினும் விறல் எனினும் ஒக்கும். விறல் தானும் பத்துவகைப்படும்; அவையாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னுமிவை.

இவ்விறல்களும் சுவையவிநயம் எனவும்படும். அவை வருமாறு:

(1) நகை: நகையி னவிநயம் நாட்டுங் காலை, முகைபடு நகையது பிறர் நகை யுடையது, கோட்டிய முகத்தது.....விட்டுமுரி புருவமொடு விலாவிறுப் புடையது, செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென்றையமில் புலவர் ஆய்ந்தனரென்ப.

(2) அழுகை அவலத் தவிநயம் அறிவரக் கிளப்பின். கவலையொடு புணர்ந்த கண்ணீர் மாரியும், வாடிய நீர்மையும் வருந்திய செலவும். பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும், நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும் பொறையின் றாகலும் புணர்த்தினர் புலவர்.

(3) இனிவரல்: இழிப்பி னவிநய மியம்புங் காலை, இடுக்கிய கண்ணும் எயிறுபுறம் போதலும், ஒடுங்கிய முகமு முஞற்றாக் காலும், சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையும், நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே.

(4) மருட்கை : அற்புத வவிநய மறிவரக் கிளப்பிற், சொற்சோர்வுடையது சோர்ந்த கையது, மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலு மிகவாதென்றையமில் புலவரறைந்தன ரென்ப.

(5) அச்சம்: அச்ச வவிநயம் ஆயுங்காலை ஒடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு மலங்கிய கண்ணும் கலங்கிய வுளனும், கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும், பரந்த நோக்கமு மிசைபன் பினவே.

(6) பெருமிதம்: வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை, முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும், பிடித்த வாளும் கடித்த வெயிறும் மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும், திண்ணென வுற்றசொல்லும் பகைவரை, எண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும், நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே.

(7) வெகுளி: இதற்குரிய நூற்பா மறைந்தொழிந்தது ஆதலான், அதற்குரிய மெய்ப்பாடுகட்கு, கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா மெய்குலையா, வேரா வெகுண்டெழுந்தான் எனவரும் தண்டியலங்காரத்து மேற்கோள் (70) அதற்குப் பொருந்துமாதலின் அதனைக் கொள்க.

( 8) உவகை: காம வவிநயங் கருதுங் காலைத் தூவுள்ளுறுத்த வடிவுந் தொழிலும், காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலு, மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியும் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே.

(9) நடுவுநிலை: (சமனிலை) நாட்டுங்காலை நடுவுநிலை யவிநயம், கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியு, மறந்தரு நெஞ்சமு மாறிய விழியும், பிறழ்ந்த காட்சியு நீங்கிய நிலையும், குறிப்பின் றாகலுந் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ணென வுடைமையும், அளத்தற் கருமையு மன்பொடு புணர்தலும், கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும் விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்.

இனி, இம்மெய்ப்பாடுகள் தாம் அவ்வச் சுவைகளில் எண்ணம் வந்தால் உடம்பிற் றோன்றும் உடம்பினும் காட்டில் முகத்தின்கண் மிகத்தோன்றும்; முகத்தினும் காட்டின் கண்ணில் மிகத்தோன்றும், கண்ணிடத்தும் கடையகத்தே மிகத்தோன்றும் என்பர்.

இனி, அவிநயம் என்றது பாவகத்தை; அஃது இருபத்து நான்கு வகைப்படும் என்ப; அவை வருமாறு:-

(1) வெகுண்டோ னவிநயம் விளம்புங்காலை, கடித்த வாயும் மலர்ந்த மார்பும், துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும், கன்றின வுள்ள மொடு கைபுடைத் திடுதலும், அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே.

(2) பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த (2) ஐயமுற்றோ னவிநய முரைப்பின் வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும், பீடழி புலனும் பேசா திருத்தலும், பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும், அறைந்தனர் பிறவு மறிந்திசி னோரே.

(3) மடியி னவிநயம் வகுக்குங் காலை, நொடியொடு பலகொட்டாவி மிகவுடைமையு, மூரி நிமிர்த்த முனிவொடு புணர்தலும், காரணமின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும், பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப.

(4) களித்தோ னவிநயம் கழறுங் காலை, ஒளித்தவை யொளியா னுரைத்த லின்மையும் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்தசொல்லொடு மிழற்றிச் செய்தலும், களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும், பேரிசை யாளர் பேணினர் கொளலே.

(5) உவந்தோ னவிநய முரைக்குங் காலை, நிவந்தினி தாகிய கண்மலருடைமையும், இனிதி னியன்ற வுள்ள முடைமையும், முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும், இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும் ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே.

(6) அழுக்கா றுடையோ னவிநய முரைப்பின் இழுக்கொடு புணர்ந்த விசைப்பொருளுடைமையும் கூம்பிய வாயுங் கோடிய வுரையும். ஓம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையும் ஆரணங்காகிய வெகுளி யுடைமையும், காரணமின்றி மெலிந்தமுக முடைமையு, மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவரப், பொலியு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(7) இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பில், துன்ப நீங்கித் துவர்த்த யாக்கையும், தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு, மயங்கி வந்த செலவுநனி யுடைமையும், அழகுள்ளுறுத்த சொற்பொலி வுடைமையும், எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையுங், கலங்கள் சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு, நலங்கெழு புலவர் நாடினர் என்ப.

(8) தெய்வ முற்றோ னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையு, மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும், துடித்த புருவமுந் துளங்கிய நிலையுஞ், செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும், எய்து மென்ப வியல்புணர்ந் தோரே.

(9) ஞஞ்ஞை யுற்றோ னவிநய நாடிற் பன்மென் றிறுகிய நாவழிவுடைமையு, நுரை சேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க் குரைப்போன் போல வுணர்விலாமையும், விழிப்போன் போல விழியா திருத்தலும், விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும், வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும், மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர். இஃது ஏமுறு மாக்கள விநயம்; அஃதாவது, மயக்கமுற்றோ னவிநயம் என்க.

(10) சிந்தையுடம் பட்டோ னவிநயத் தெரியின் முந்தை யாயினும், பீடித்தகைமே லடைத்த கவினும், முடித்த லுறாத கரும நிலைமையும் சொல்லுவது யாது முணரா நிலைமையும், புல்லு மென்ப பொருந்து மொழிப் புலவர்.

(11) துஞ்சா நின்றோ னவிநயத் துணியின் எஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு, மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும், அலர்ந் துயிர்ப்புடைய வாற்றலும் ஆகும்.

(12) இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பின், ஒன்றிய குறுங் கொட் டாவியு முயிர்ப்பும், தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும், ஓங்கிய திரிபு  மொழிந்தவுங் கொளலே.

(13) செத்தோ னவிநயஞ் செப்புங்காலை, அத்தக வச்சமும், அழிப்பு மாக்கலும், கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போந்த துணி வுடைமையும் வலிந்த வுறுப்பு, மெலிந்த வகடு மென்மை மிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவ ருணர்ந்த வாறே.

(14) மழை பெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கின், இழிதக வுடைய வியல்புநனி வுடைமையும், மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தோடு புணர்த்தலும், ஒளிப்படு மன்னி லுலறிய கண்ணும், விளியினுந் துளியினு மடிந்த செவி யுடைமையும், கொடுகிவிட்டெறிந்த குளிர்மிக வுடைமையும், நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே. 

(15) பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரின், நடுக்க முடைமையு நகைபடு நிலைமையுஞ், சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும், போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும், நீறாம் விழியுஞ் சேறு முனிதலும், இன்னவை பிறவு மிசைந்தனர் கொளலே.

(16)உச்சிப் பொழுதின் வந்தோ னவிநயம், எச்ச மின்றி யியம்புங் காலை, சொரியா நின்ற பெருந்துய ருழந்து, தெரியா நின்றவுடம் பெரியென்னச் சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே.

(17) நாண முற்றோ னவிநய நாடின், இறைஞ்சிய தலையு மறைந்த செய்கையும், வாடிய முகமுங் கோடிய வுடம்பும், கெட்ட வொளியுங் கீழ்க்க ணோக்கமும் ஒட்டின ரென்ப வுணர்ந்திசி னோரே.

(18) வருத்த முற்றோ னவிநயம் வகுப்பிற், பொருத்த மில்லாப் புன்க ணுடைமையும், சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியும், கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயர்வும், வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பும் உற்ற லென்ப வுணர்ந்திசி னோரே.

(19) கண்ணோ வுற்றோ னவிநயங் காட்டி, னண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும், வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும், வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமும், தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே.

(20) தலைநோ வுற்றோ னவிநயஞ் சாற்றி, னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங், கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு, பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி, ஒடுங்கிய கண்ணொடு பிறவும், திருந்து மென்ப செந்நெறிப் புலவர்.

(21) அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பின், நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும், அழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலும், நிழலு நீருஞ் சேறு முவத்தலும், பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும், நுனிவிர லீர மருநெறி யாக்கலும், புக்க துன்பமொடு புலர்ந்த யாக்கையும், தொக்க தென்ப துணிவறிந் தோரே.

(22) சீத முற்றோ னவிநயஞ் செப்பி, னோதிய பருவரலுள்ளமோ டுழத்தலும், ஈர மாகிய போர்வை யுறுத்தலும், ஆர வெயிலுழந் தழலும் வேண்டலும், உரசியு முரன்று முயிர்த்து முரைத்தலும், தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்.

(23) வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத், தப்பில் கடைப்பீடித் தன்மையுந் தாகமும், எரியி னன்ன வெம்மையோ டியைவும், வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும், நீருண் வேட்கையு நிரம்பா வலியும், ஒருங் காலை யுணர்ந்தனர் கொளலே.

(24) கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும், பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலும். தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர், இன்சொ லியம்புவான் போலியம் பாமையும், நஞ்சுண் டோன்ற னவிநய மென்ப. சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற், புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப, எனவரும்.

இனி, சொல் லென்னும் விலக்குறுப்புத் தானும் மூன்றுவகைப்படும். அவையாவன: உட்சொல், புறச்சொல், தானே கூறல் என்பன. இவற்றை நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல் தஞ்சம்வர அறிவு தானே கூறலென் றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே என வரும் நூற்பாவான் அறிக. இவற்றுள் தானே கூறல் என்பதனை ஆகாயச் சொல் என்பர் (அடியார்க்.)

சொல்வகை நான்கு வகைப்படும். அவையாவன: சுண்ணம் (நான் கடியான் வருவது) சுரிதகம் (எட்டடியான் வருவது) வண்ணம் (பதினாறடியான் வருவது) வரிதகம் (முப்பத்திரண்டடியான் வருவது) என்பன.

இவற்றுள் வண்ணம் என்பது (முப்பத்திரண்டடிகளாலியன்ற பாடல்) ஆறாய் வரின், பெருவண்ணம் எனவும் இருபத்தொன்றாய் வரின் இடை வண்ணம் எனவும், நாற்பத்தொன்றாய் வரின் வனப்பு வண்ணம் எனவும்படும். இவ்வாற்றால் வண்ணம் என்பது சொல்வகையினுள் ஒன்றாதலோடன்றி விலக்குறுப்புக்களுள் பாடல் வகையால் ஓருறுப் பாதலுமறிக.

இனி, வரி எட்டு வகைப்படும். அவையாவன : கண் கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள் வரி என்பன. இவற்றை, கண்கூடுவரி காண்வரி உள்வரி, புறவரி, கிளர்வரியைந்தோ டொன்ற வுரைப்பிற், காட்சி தேர்ச்சி யெடுத்துக் கோளென மாட்சியின் வரூஉ மெண்வகை நெறித்தே எனவரும் நூற்பாவானு முணர்க. இவற்றினியல் பெல்லாம் கானல் வரியினும் வேனிற் காதையினும் கூறப்படும், அவற்றை ஆண்டுக் காண்க.

இனி, இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்து என்பாரு முளர். அவை வருமாறு :-

சிந்துப் பிழுக்கை யுடன்சக்தி யோர்முலை
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி
சூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்
தத்தசம் பாரம் தகுணிச்சங் - கத்து
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்
பறைபண் டிதன்புட்ப பாணம் - இறைபரவு
பத்தன் குரவையே பப்பறை காவதன்
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவருந் கட்களி யாண்டு விளையாட்டுக்
கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து - மூத்த
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி
அழகுடைய பண்ணிவிக டாங்கந் - திகழ்செம்பொன்
அம்மனை பத்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற் கொந்தி - அல்லாத
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்
சாந்த முடைய சடாதாரி - ஏய்ந்தவிடை
தக்கபிடார் நீர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கந்
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க
மலையாளி வேதாளி வாணி குதிரை
சிலையாடு வேடு சிவப்பத் - தலையில்
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்
டிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்
பல்லாங் குழியே பகடி பகவதியாள்
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத
உந்தி யவலிடி யூராளி போகினிச்சி
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ
தாடுங் களிகொய்யு முள்ளிப்பூ வையனுக்குப்
பாடும்பாட் டாடும் படுபள்ளி - நாடறியுங்
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே
துஞ்சாத கும்பைப்பூச சோனக - மஞ்சரி
ஏற்ற வுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்
கோத்தவரிக் கூத்தின் குலம்.

என அடியார்க்கு நல்லார் அரிதின் எடுத்துக்காட்டிய இச்செய்யுளால் சிலப்பதிகாரகாலந் தொடங்கி அவ்வுரையாசிரியர் காலமீறாக இச் செந்தமிழ் நாட்டு மக்கள் மகிழ்ந்தாடிக்களித்த வரிக்கூத்துக்களை அறியலாம். இவையிற்றுட் சில வரிக் கூத்திற்கியன்ற பாடல்கள் இந்நூலகத்துக்கும் வருதலை ஆங்காங்குக் காட்டுதும்.

இனி, சேதம் என்னும் விலக்குறுப்பு ஆரியம் தமிழ் என இருவகைப்படும். வடமொழிக் கதையை யாதல் தமிழ் மொழியிலியன்ற கதையை யாதல் நாடக மாடுதற்கியைய விடவேண்டிய பகுதியை விட்டுக் கொள்ளவேண்டியவற்றைக் கொள்ளுதலால் இதுவும் நாடகத்திற்குறுப்பாயிற்று. பெயர்க் காரணமும் இதனால் விளங்கும் இதனை,

ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்
ஆதிக் கதையை யவற்றிற் கொப்பச்
சேதித் திடுவது சேதமென் றாகும்.

எனவரும் நூற்பாவான் உணர்க. இவையெல்லாம் விலக்குறுப்புகளின் விளக்கமாகும்.

இனி, விலக்குறுப்பு என்ற சொற்குத் தலைவன் செலுத்துகின்ற கதையை (நாடகத்திற்கியைய விலக்க வேண்டுவனவற்றை) விலக்கியும் (கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு) அக்கதையையே நடாத்தியும் (இயற்புலவனால்) முன்பு செய்த இயற்றமிழ் அல்லது ஆரியக் கதைகட்கே நாடகத் தமிழாங்கால் உறுப்பாகுவது என்பதாம்.

(14-15) பதினோராடலும்.......அறிந்தாங்கு என்புழிக் கூறப்பட்ட பதினோராடலாவன:

கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைகுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து

எனவரும் வெண்பாவானறிக. இவற்றைத் தெய்வவிருத்தி என்பர். இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகைப்படும், அவற்றை,

அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்கம்
மல்லுட னின்றாடல் ஆறு

எனவும்,

துடி கடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாடல் ஐந்து

எனவும் வரும் செய்யுள்களானறிக.

இனி இப்பதினோராடலும் அசுரரைக் கொல்ல அமரர் ஆடின என்ப. எனவே, இவை ஆரியக் கூத்துக்கள் என்பது பெற்றாம். அகப் பொருளும் புறப்பொருளும் தழுவிவரும் கூத்துக்களே தமிழ்க் கூத்துக்களாம் என்றுணர்க.

இனி இவற்றிற்குரிய உறுப்புகளையும், இவற்றை அமரர் ஆடியதற் கியன்ற காரணங்களையும்,

அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்
சொல்லுப ஆறாமெனல்

எனவும்,

கொட்டி கொடுவிடையோ னாடிற் றிதற்குறுப்
பொட்டிய நான்கா மெனல்

எனவும்,

அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்
பெறுமுறுப்பு நான்கா மெனல்

எனவும்,

குடத்தாடல் குன்றெடுத்தோ னாடலதனுக்
கடைக்குப வைந்துறுப் பாய்ந்து

எனவும்,

பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்
பாய்ந்தன வாறா மெனல்

எனவும்,

நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

துடியாடல் வேன்முருக னாட லதனுக்
கொடியா வுறுப்போரைந் தாம்

எனவும்,

கடைய மயிராணி யாடிற் றதனுக்
கடைய வுறுப்புக்க ளாறு

எனவும்,

காமன தாடல்பே டாட லதற்குறுப்பு
வாய்மையி னாராயி னான்கு

எனவும்,

மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு
நாமவகை யிற்சொலுங்கா னான்கு

எனவும்,

பாவை திருமக ளாடிற் றதற்குறுப்
போவாம லொன்றுடனே யொன்று

எனவும், வரும் நூற்பாக்கள் ஆடியோர் பெயரும் உறுப்பும் உணர்த்தின.

இனி, அமரர் இவற்றை நிகழ்த்தியதற்கியன்ற காரணங்களை அடிகளார் கடலாடு காதைக்கண் விரித்தோதுவர். அன்றியும்,

புரமெரித்தல் சூர்மாத் துளைபடுத்தல் கஞ்ச
னுரனெரித்தல் வாணனைவா னுய்த்தல் - பெரிய

அரன்முத லாகவே லன்முதன் மாயோன்
அமர்முத லாடிய வாறு

எனவரும் வெண்பாவானு முணர்க.

(14) பாட்டும் என்றது அகநாடகங்கட்கும் புறநாடகங்கட்குமுரிய உருக்களும் என்றவாறு. இவற்றை உருக்கள் என்று வழங்குவது இசை நூலோர் வழக்கும், கூத்த நூலோர் வழக்கும் என்றுணர்க இற்றைநாளும் அவர் உருப்படி என்று வழங்குதல் காணலாம்.

அகநாடக வுருக்கள், கந்தமுதலாகப் பிரபந்த மீறாகவுள்ள இருபத்தெட்டும் என்பர்; இவற்றுள் கந்தம் என்பது அடிவரையறை யுடைத் தாய் ஓருதாளத்தாற் புணர்ப்பது. பிரபந்தம் அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது; புறநாடகங்களுக்குரிய உருக்கள், தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுளீறாகவுள்ள செந்துறை விகற்பங்கள் எல்லாம் என்க.

(14) கொட்டும் என்றது கூத்துக்களுக்குரிய இடைக்கருவிகளை; அவை தாமும் கீதாங்கம் நிருத்தாங்கம் உபயாங்கம் என்பன; இவற்றுள் கீதாங்கம் இசைப்பாவிற்குக் குயிலுவன; நிருத்தாங்கம் கூத்திற்குக் குயிலுவன; உபயாங்கம் இரண்டிற்கும் குயிலப்படுவன.

(15) விதிமாண் கொள்கை - இலக்கண விதியால் மாட்சிமையுடைய நூல் விளங்க அறிதலாவது ஐயந்திரிபற விளங்கும்படி பயின்றறிதல். ஆங்கு - அசையெனினுமாம்.

ஆடல் - கூத்துக்கள். அவை அகக்கூத்தும் புறக்கூத்தும் என முற் கூறப்பட்டன. அவற்றுள் அகக்கூத்திற்குத் தேசிக்குரிய கீற்று கடிசரி முதலிய கால்களும்; சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலிய வடுகிற்குரிய கால்களும் உடற்றூக்கு முதலிய உடல வர்த்தனைகளும் உரியனவாம்.

இனி, சிங்களம் என்று ஒரு கூத்துளது என்றும் அதற்கு அகக்கூத்திற்குரிய கால்களே உரியனவாதலால் அடிகளார் அதனைக் கூறிற்றிலர் என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, தேசி வடுகு சிங்களம் என மூவகைக் கூத்துக்கள் தமிழகத்தே ஆடப்பட்டன என்பது பெற்றாம். தேசி - தமிழ்க்கூத்து.

(15) புறக்கூத்திற்குரிய ஆடல்கள் - பெருநடை, சாரியை பிரமரி முதலாயினவும் முற்கூறப்பட்ட அல்லிய முதலிய பதினோராடலிற் கூத்துக்களுமாம் என்பர். இவ்வகையால் அகக்கூத்துக்களுக்கும் புறக் கூத்துக்களுக்குமுரிய ஆடலை யெல்லாம் விளங்க அறிந்தவனாய் என்றவாறு.

(16) பாடலும் என்றது, பண்ணல் முதலிய எட்டுவகைப்பட்ட குறிக்கோளும், இன்பம் தெளிவு நிறை ஒளி வன்சொல் இறுதி மந்தம் உச்சம் என்னும் எண்வகைப் பயனும் உடைய பாடலின் இயல்பும் என்றவாறு.

பாணி - தாளம், இது மாத்திரை வகையால் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நால்வகைப்படும். இதனை,

கொட்டு மசையும் தூக்கு மளவும்
ஒட்டப் புணர்ப்பது பாணி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க. இவை மாத்திரப் பெயர்கள். இவற்றுள் கொட்டு - அரைமாத்திரை; இதனை க என்னும் குறியீட்டினால் குறிப்பர். அசை - ஒரு மாத்திரை, இதற்கு எ குறியீடு. தூக்கு - இரண்டு மாத்திரை; இதற்கு உ குறியீடு. அளவு - மூன்று மாத்திரை; இதற்கு ஃ குறியீடு. இதனை,

ககரங் கொட்டே எகர மசையே
உகரந் தூக்கே யளவே யாய்தம்

எனவரும் நூற்பாவாலறிக. இவற்றின் தொழில் வருமாறு: கொட்டாவது - அமுக்குதல். அசை-தாக்கி யெழுதல்: தூக்கு - தாக்கித் தூக்குதல். அளவு-தாக்கின வோசை மூன்று மாத்திரை ஒலிக்குமாறு செய்தல்.

இனி, தாளங்களுள் வைத்து, அரை மாத்திரையுடைய ஏகதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதி லோசனம் ஈறாகப் கூறப்பட்ட நாற்பத்தொரு தாளமும் புறக்கூத்திற்குரியன என்ப. ஆறன்மட்ட மென்பனவும், எட்டன் மட்டமென்பனவும் தாள வொரியல் என்பனவும், தனி நிலை யொரியலென்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப்பாணி யீறாகக்கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதனடை வாரமுதலாயினவும் அகக்கூத்திற்குரியன எனவும் கூறுப.

(16) தூக்கும் என்றது, இத்தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கெனப்பட்ட ஏழு தூக்குக்களும் என்ப. இவற்றினியல்பினை,

ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பா மறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்

எனவரும் நூற்பாவான் அறிக.

(17) கூடிய நெறியின - கூத்தும் பாட்டும் தாளமும் தம்மிற் கூடிய நெறியினையுடைய இருவகைக் கூத்துக்கள் என்க.

கொளுத்துதல் - கொள்வித்தல்; பயிற்றுதல்.

(18) பிண்டி - ஒற்றைக்கை. முற்கூறப்பட்ட உட்சொல், புறச்சொல் ஆகாயச்சொல் என்னும் மூன்றனையும் அவிநயத்தோடு நாட்டிச் செய்யுங்கால் அதற்குக் கருவியாவன, கையும் கருத்தும் மிடறும் உடம்பும் என்னும் இந் நான்குமே. இவற்றை,

அவைதாம், கையே கருத்தே மிடறே சரீரமென்
றெய்தமுன் பமைத்த விவையென மொழிப

எனவரும் நூற்பாவினாலறிக. இனி, கையென்பது ஒற்றைக்கை. இரட்டைக்கை என்றும், இரண்டு வகைப்படும். இவற்றை, இணையா வினைக்கை எனவும் இணைக்கை எனவும் வழங்குதலுண்டு. இன்னும், இவற்றோடு, ஆண்கை, பெண்கை, அலிக்கை, பொதுக்கை என்னும் நான்கினையும் கூட்டி ஆறுவகைப்படும் என்பாருமுளர்.

இனி, இவற்றுள் இணையா வினைக்கை (ஒற்றைக்கை) முப்பத்து மூன்று வகைப்படும். அவற்றை,

இணையா வினைக்கை யியம்புங் காலை
அணைவுறு பதாகை திரிபதா கையே
கத்தரிகை தூபம் அராளம் இளம்பிறை
சுகதுண் டம்மே முட்டி கடகம்
சூசி பதும கோசிகந் துணிந்த
மாசில்காங் கூலம் வழுவறு கபித்தம்
விற்பிடி குடங்கை அலாபத் திரமே
பிரமரந் தன்னொடு தாம்பிர சூடம்
பிரகாசம் முகுளம் பிண்டி தெரிநிலை
பேசிய மெய்ந்நிலை உன்னம் மண்டலம்
சதுரம் மான்றலை சங்கே வண்டே
அதிர்வில் இலதை கபோதம் மகரமுகம்
வலம்புரி தன்னொடு முப்பத்து மூன்றென்
றிலங்குமொழிப் புலவ ரிசைத்தனர் என்ப

எனவரும் நூற்பாவிற் காண்க.

இவற்றுள் பிண்டி யென்றது ஒற்றைக்கைக்கு ஆகுபெயர். பிணையல் - இணைதல் ஆதலால் இணைக்கையாயிற்று.

இனி, பிண்டிக்குரிய முப்பத்து மூன்று வகைக் கைகட்கும் செய்முறைகளை வருகின்ற நூற்பாக்களில் காண்க.

1-பதாகை

பதாகை யென்பது பகருங் காலை
பெருவிரல் குஞ்சித் தலாவிர னான்கு
மருவி நிமிரு மரபிற் றென்ப

2-திரிபதாகை

திரிப தாகை தெரியுங் காலை
யறைப தாகையி னணிவிரன் முடக்கினஃ
தாமென மொழிப வறிந்திசி னோரே

3-கத்தரிகை

கத்தரி கையே காண்டக விரிப்பின்
அத்திரி பதாகையின் அணியின் புறத்தைச்
சுட்டக மொட்ட விட்டுநிமிர்ப் பதுவே

4-தூபம்

தூப மென்பது துணியுங் காலை
விளங்குகத் தரிகை விரலகம் வளைந்து
துளங்கு மென்ப துணிபறிந் தோரே

5-அராளம்

அராள மாவ தறிவரக் கிளப்பிற்
பெருவிரல் குஞ்சித்துச் சுட்டுவிரன் முடக்கி
விரல்கண் மூன்று நிமிர்த்தகம் வளைத்தற்
குரிய தென்ப வுணர்ந்திசி னோரே

6-இளம்பிறை

சுட்டும் பேடு மநாமிகை சிறுவிரல்
ஒட்டியகம் வளைய வொசித்த பெருவிரல்
விட்டு நீங்கும் விதியிற் றென்ப

7-சுகதுண்டம்

சுகதுண்ட மென்பது தொழில்பெறக் கிளப்பிற்
சுட்டு விரலும் பெருவிர றானும்
ஒட்டி யுகிர்நுனை கௌவி முன்வளைந்
தநாமிகை முடங்கப் பேட்டொடு சிறுவிர
றான்மிக நிமிர்ந்த தகுதித் தென்ப

8-முட்டி

முட்டி யென்பது மொழியுங் காலைச்
சுட்டு நடுவிர லநாமிகை சிறுவிர
லிறுக முடக்கி யிவற்றின்மிசைப் பெருவிரன்
முறுகப் பிடித்த முறைமைத் தென்ப

9-கடகம்

கடக முகமே கருதுங் காலைப்
பெருவிர னுனியுஞ் சுட்டுவிர னுனியு
மருவ வளைந்தவ் வுகிர்நுனி கௌவி
யொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

10-சூசி

சூசி யென்பது துணியுங் காலை
நடுவிரல் பெருவிர லென்றிவை தம்மி
லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர
வொழிந்த மூன்றும் வழிவழி நிமிர
மொழிந்தன ரென்ப முடிபறிந் தோரே

11-பதுமகோசிகம்

பதும கோசிகம் பகருங் காலை
யொப்பக் கைவளைத் தைந்து விரலு
மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும்

12-காங்கூலம்

காங்கூ லம்மே கருதுங் காலைச்
சுட்டும் பேடும் பெருவிரல் மூன்று
மொட்டிமுன் குவிய வநாமிகை முடங்கிச்
சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும்

இது, குவிகாங்கூலம், முகிழ்காங்கூலம், மலர்காங்கூலம் என மூவகைப்படும். அவற்றுள், இது குவிகாங்கூலமாம். முகிழ்காங்கூலம்-

முகிழ் காங்கூலம் முந்துற மொழிந்த
குவிகாங்கூலம் குவிவிழந் ததுவே

மலர்காங்கூலம்-

மலர்காங்கூல மதுமலர்ந் ததுவே

13-கபித்தம்

கபித்த மென்பது காணுங் காலைச்
சுட்டுப் பெருவிர லொட்டிநுனி கௌவி
யல்ல மூன்று மெல்லப் பிடிப்பதுவே.

14-விற்பிடி

விற்பிடி யென்பது விரிக்குங் காலைச்
சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர
லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல்
விட்டு நிமிரும் விதியிற் றாகும்.

15-குடங்கை

குடங்கை யென்பது கூறுங் காலை
யுடங்குவிரற் கூட்டி யுட்குழிப் பதுவே

16-அலாபத்திரம்

அலாபத் திரமே யாயுங் காலைப்
புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா
வருமுறை யைந்தும் வளைந்துமறி வதுவே.

17-பிரமரம்

பிரமர மென்பது பேணுங் காலை
யநாமிகை நடுவிர லறவுறப் பொருந்தித்
தாம்வலஞ் சாயத் தகைசால் பெருவிர
லொட்டிய நடுவுட் சேரச் சிறுவிரல்
சுட்டு வளைந்துபின் றோன்றிய நிலையே.

18-தாம்பிர சூடம்

தாம்பிர சூடமே சாற்றுங் காலைப்
பேடே சுட்டுப் பெருவிர னுனியொத்துக்
கூடி வளைந்து சிறுவிர லணிவிர
லுடனதின் முடங்கி நிமிரநிற் பதுவே.

19-பசாசம்

பசாசம் என்பது மூன்று வகைப்படும். அவையாவன: அகநிலைப் பசாசம், முகநிலைப் பசாசம், உகிர்நிலைப் பசாசம் என்பன. அவை வருமாறு:-

பசாசம் என்பது பாற்படக் கிளப்பின்
அகநிலை முகநிலை யுகிர்நிலை யென்னத்
தொகநிலை பெற்ற மூன்றுமென மொழிப

அவைதாம்,

சுட்டுவிர னுனியிற் பெருவிர லகப்பட
வொட்டி வளைத்த தகநிலை முகநிலை
யவ்விர னுனிகள் கௌவிப் பிடித்தல்
செவ்வி தாகுஞ் சிறந்த வுகிர்நிலை
யுகிர்நுனை கௌவிய தொழிந்த மூன்றுந்
தகைமையி னிமிர்த்தலம் மூன்றற்குந் தகுமே.

20-முகுளம்

முகுள மென்பது மொழியுங் காலை
ஐந்து விரலுந் தலைகுவிந் தேற்ப
வந்து நிகழு மாட்சித் தாகும்.

21-பிண்டி

பிண்டி யென்பது பேசுங் காலைச்
சுட்டுப் பேடி யநாமிகை சிறுவிரல்
ஒட்டி நெகிழ முடங்கவவற் றின்மிசை
விலங்குறப் பெருவிரல் விட்டுங் கட்டியு
மிலங்குவிரல் வழிமுறை யொற்றலு மியல்பே.

22-தெரிநிலை

தெரிநிலை யென்பது செப்புங் காலை
யைந்து விரலு மலர்ந்துகுஞ் சித்த
கைவகை யென்ப கற்றறிந் தோரே.

23-மெய்ந்நிலை

மெய்ந்நிலை யென்பது விளம்புங் காலைச்
சிறுவிர லநாமிகை பேடொடு சுட்டிவை
யுறுத லின்றி நிமிரச் சுட்டின்மிசைப்
பெருவிரல் சேரும் பெற்றித் தென்ப.

24-உன்னம்

உன்ன நிலையே யுணருங் காலைப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை யிணைய
வருமுறை மூன்று மலர்ந்துநிமிர் வதுவே.

25-மண்டலம்

மண்டல மென்பது மாசறக் கிளப்பிற்
பேடு நுனியும் பெருவிர னுனியுங்
கூடி வளைந்துதம் முகிர்நுனை கௌவி
யொழிந்த மூன்று மொக்க வளைவதென
மொழிந்தன ரென்ப முழுதுணர்ந் தோரே.

26-சதுரம்

சதுர மென்பது சாற்றுங் காலை
மருவிய மூன்று நிமிர்ந்தகம் வளையப்
பெருவிர லகமுறப் பொற்பச் சேர்த்திச்
சிறுவிரல் பின்பே நிமிர்ந்த செவ்வியின்
இறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

27-மான்றலை

மான்றலை யென்பது வகுக்குங் காலை
மூன்றிடை விரலு நிமிர்ந்தக மிறைஞ்சிப்
பெருவிரல் சிறுவிர லென்றிவை நிமிர்ந்து
வருவ தென்ப வழக்கறிந் தோரே.

28-சங்கு

சங்கெனப் படுவது சாற்றுங் காலைச்
சிறுவிரன் முதலாச் செறிவிர னான்கும்
பெறுமுறை வளையப் பெருவிர னிமிர்ந்தாங்
கிறுமுறைத் தென்ப வியல்புணர்ந் தோரே.

29-வண்டு

வண்டென் பதுவே வகுக்குங் காலை
யநாமிகை பெருவிர னனிமிக வளைந்து
தாநுனி யொன்றித் தகைசால் சிறுவிரல்
வாலிதி னிமிர மற்றைய வளைந்த
பாலின தென்ப பயன்றெரிந் தோரே.

30-இலதை

இலதை யென்ப தியம்புங் காலைப்
பேடியுஞ் சுட்டும் பிணைந்துட னிமிர்ந்து
கூடிய பெருவிரல் கீழ்வரை குறுகக்
கடையிரு விரலும் பின்னர் நிமிர்ந்த
நடையின தென்ப நன்னெறிப் புலவர்.

31- கபோதம்

காணுங் காலைக் கபோத மென்பது
பேணிய பதாகையிற் பெருவிர னிமிரும்.

32-மகரமுகம்

மகரமுக மென்பது வகுக்குங் காலைச்
சுட்டொடு பெருவிரல் கூட வொழிந்தவை
யொட்டி நிமிர்ந்தாங் கொன்றா வாகும்.

33-வலம்புரி

வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட
னலந்திகழ் பெருவிர னயமுற நிமிர்ந்து
சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல்
விட்டுநிமிர்ந் திறைஞ்சும் விதியிற் றென்று
கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந் தோரே.

இவை யெல்லாம் பிண்டிக்கை வகை. பிண்டிக்கை எனினும் ஒற்றைக் கை யெனினும் இணையா வினைக்கை யெனினும் ஒக்கும்.

(18) பிணையல் என்னும் இரட்டைக்கை பதினைந்து வகைப்படும். இணைக்கை யென்பதுமது. இவை வருமாறு:

எஞ்சுத லில்லா இணைக்கை யியம்பில்
அஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே
பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம்
நலமாஞ் சுவத்திகங் கடகா வருத்தம்
நிடதந் தோர முற்சங்க மேம்பட
வுறுபுட் பபுட மகரஞ் சயந்த
மந்தமில் காட்சி யபய வத்தம்
எண்ணிய வருத்த மானந் தன்னொடு
பண்ணுங் காலை பதினைந் தென்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

இனி இவ்விணைக்கையின் தொழின் முறைகளை வருகின்ற நூற்பாக்களானறிக. அவையாவன:

1-அஞ்சலி

அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பி
னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையாய்
வந்தகம் பொருந்து மாட்சித் தென்றனர்
அந்தமில் காட்சி யறிந்திசி னோரே

2-புட்பாஞ்சலி

புட்பாஞ் சலியே பொருந்தவிரு குடங்கையுங்
கட்டி நிற்குங் காட்சிய தென்ப

3-பதுமாஞ்சலி

பதுமாஞ் சலியே பதும கோசிக
மெனவிரு கையு மியைந்துநிற் பதுவே

4-கபோதம்

கருதுங் காலை கபோத வினைக்கை
யிருகையுங் கபோத மிசைந்துநிற் பதுவே

5-கற்கடகம்

கருதுங் காலைக் கற்கட கம்மே
தெரிநிலை யங்குலி இருகையும் பிணையும்

6-சுவத்திகம்

சுவத்திக மென்பது சொல்லுங் காலை
மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு
மணிக்கட் டேற்றி வைப்ப தாகும்

7-கடகாவருத்தம்

கருதிய கடகா வருத்தக் கையே
யிருகையுங் கடக மணிக்கட் டியைவது

8-நிடதம்

நிடத மென்பது நெறிப்படக் கிளப்பின்
முட்டி யிரண்டுகை யுஞ்சம மாகக்
கட்டி நிற்குங் காட்சித் தென்ப

9-தோரம்

தோர மென்பது துணியுங் காலை
யிருகையும் பதாகை யகம்புற மொன்ற
மருவி முன்றாழும் வழக்கிற் றென்ப

10- உற்சங்கம்

உற்சங்க மென்ப துணருங் காலை
யொருகை பிறைக்கை யொருகை யராளந்
தெரிய மணிக்கட்டி லேற்றிவைப் பதுவே

11-புட்பபுடம்

புட்பபுட மென்பது புகலுங் காலை
யொத்த விரண்டு குடங்கையு மியைந்து
பக்கங் காட்டும் பான்மைத் தென்ப

12-மகரம்

மகர மென்பது வாய்மையி னுரைப்பிற்
கபோத மிரண்டு கையு மகம்புற
மொன்ற வைப்பதென் றுரைத்தனர் புலவர்

உச்சித்தம் என்பதும் இதனது பெயரேயாம்.

13-சயந்தம்

சயந்த மென்றது .... ..... ....

14-அபயவத்தம்

அபயவத் தம்மே யறிவுறக் கிளப்பின்
வஞ்சமில் சுகதுண்ட மிருகையு மாட்சியின்
நெஞ்சற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே

15-வருத்தமானம்

வருத்த மானம் வகுக்குங் காலை
முகுளக் கையிற் கபோதக் கையை
நிகழச் சேர்த்து நெறியிற் றென்ப

எனவரும். இவை பதினைந்தும் பிணையற்கை யெனக் கொள்க.

இணைக்கை, இரட்டைக்கை, பிணையல் என்பன ஒரு பொருளன.

18 -எழிற்கை - அழகு பெறக் காட்டுங் கை; தொழிற்கை - தொழில் பெறக் காட்டும் கை. உம்மையால், பொருட்கை என்பதுங் கொள்ளற்பாற்று; என்னை?

எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே
பொருட்கை கவியிற் பொருளா கும்மே

என்னும் நூற்பாவுங் காண்க.

19-கொண்ட வகை யறிதலாவது பிண்டியும் பிணையலும் புறக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக் கூத்திற்குக் கொள்ளப்பட்டவை என்று மறிதல்.

20-21: கூடை வாரம் என்பன பலபொருள் ஒரு சொற்கள். ஈண்டு அவற்றுள், கூடை என்பதற்கு, ஒற்றைக்கை என்றும், வாரம் என்பது இரட்டைக்கை எனவும் பழைய வுரையாசிரியர் பொருள் கொள்கின்றனர். இனி, கூடை செய்தகை வாரத்திற் களைதலும் வாரஞ்செய்தகை கூடையிற் களைதலும் என்பதற்குப் பாட்டிற்கியைய ஆடவேண்டுதலின் பாட்டுக் கூடை கதியினதாகக் கையும் அக்கதிக்கியையக் கூடை கதியின தாகச் செய்தல் அன்றி வாரகதியினதாகாமற் பார்த்தும் அங்ஙனமே வாரப்பாடல் நிகழுங்கால் அப்பாட்டிற்கு அபிநயம் கூடைகதி யாகாமல் அவ்வக்கூத்திற் கியையச் செய்தலும் என்பதே அடிகளார் கருத்தாதலும் கூடும் என்று கருதலாம். பாட்டிற்கியன்ற கூடை முதலிய இயக்கங்கள் பின்னர்க் கூறப்படும்.

இதற்கு அகக்கூத்து நிகழுமிடத்து ஒற்றையிற் செய்த கைத் தொழில் இரட்டையிற் புகாமலும், இரட்டையிற் செய்த கைத்தொழில் ஒற்றையிற் புகாமலும் களைதல். இன்னும் தேசியிற் கைத்தொழில் மார்க்கத்துப் புகாமலும் மார்க்கத்துக் கைத்தொழில் தேசியிற் புகாமலும் களைதல் என்றுமாம். ஒற்றையும் இரட்டையும் தேசியிற் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக் கிரட்டையும் வடுகிற் கூறாகலானு மென்க என்பது பழைய வுரை.

22-3. பிண்டி செய்த கை பாட்டின் பொருள் தோன்ற அவி நயங்காட்டிய கை; ஆடல் கூத்தின்பொருட்டுக் காட்டப்படும் ஒற்றைக் கை இரட்டைக் கைகட்கு ஆகுபெயர். இதனாற் கூறியது, ஆடற்குரிய கை காட்டும்பொழுது அவை, அவிநயக் கையாகாமலும் அவிநயங் காட்டும் கைகள் ஆடற் கைகள் ஆகாமற் பேணியும் என்பதாம்.

24. குரவை - குரவைக்கூத்திற்குரிய கால்கள் என்க. அது, காமமும் வென்றியும் பொருளாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது என்ப. இதனை,

குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலு
மெய்த வுரைக்கு மியற்பிற் றென்ப.

எனவும்,

குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்

எனவும் வரும் நூற்பாக்களா னறிக.

வரி - வரிக்கூத்திற்குரிய கால்கள், ஆகுபெயர். வரிக்கூத்து னியல்பினை,

வரியெனப் படுவது வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி வழங்கல்

என வரும் நூற்பாவான் உணர்க.

25. ஆடற்கு அமைந்த ஆசான்றன்னோடும் என்றது, இவ்வாற்றான் கூத்திலக்கணத்தை விளங்க அறிந்தமையாலே அவற்றுடனே பொருந்த ஆடவும் மாணவரை ஆட்டுவிக்கவும் தகுதியுடைய ஆடலாசிரியனோடும் என்றவாறு. அறிந்து புணர்த்து விளங்க அறிந்து செலுத்தி ஆடற்கு அமைந்த அசான் என இறைக்க.

இசையாசிரியரின் அமைதி
« Last Edit: February 23, 2012, 11:50:55 AM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #4 on: February 22, 2012, 08:02:31 AM »
26-36 : யாழுங் குழலுஞ் ......... இசையோன்றானும்

(இதன்பொருள்) யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு யாழ்ப்பாடலும் குழற்பாடலுந் தாளவகைகளும் மிடற்றப் பாடலும் தாழ்ந்த இசையினையுடைய தண்ணுமையும் கூத்தாடுதலும் பயின்று வல்லவனாய், இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து இவற்றோடு பொருந்திய தாகச் செய்யப்பட்ட உருக்களை (இசைப்பாடல்களை) இசை கொள்ளும்படியும் சுவைபொருந்தும்படியும் புணர்க்கவும் வல்லவனாய்; வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி - இசைப்பாட்டிற்கும் கூத்திற்கும் உரிய திணைப் பொருள் தோன்ற மூவகை யியக்கத்தானும் இயக்கவும் வல்லனாய்; தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து-நந்தாய் மொழியாகிய செந்தமிழின் செல்வங்களாகின்ற இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நான்கு வகைப்பட்ட சொற்களினும் செந்தமிழோசையே திகழ்வதைக் கடைப்பிடியாகக் கொண்டு; தேசிகத் திருவின் ஓசையெல்லாம் ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகி - நந்தாய் மொழிக்கியல்பான செப்பலோசை முதலிய இசையிலக்கணங்களையும் குற்றந்தீரப் பயின்றுணர்ந்த அறிவினையும் உடையனாய்; கவியது குறிப்பும் பகுதிப் பாடலும் கொளுத்துங்காலை - இயற் புலவன் நினைவும், நாடகப் புலவன் ஈடு வரவுகளும் இவற்றுக்கு அமைந்த பாடல்களும் தம்மிற் புணர்ப்பிக்குமிடத்தே; வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் - குற்றந்தீர்ந்த நூல்வழக்காலே வகுக்கவும் விரிக்கவும் வல்லனுமாயுள்ள; அசையாமரபின் இசை யோன்தானும் - தளராத ஊக்கத்தையுடைய இசைப்புலவனும் என்க.

(விளக்கம்) யாழ் குழல் என்பன ஆகுபெயர். அவை கருவியாகப் பாடுகின்ற பாடல்களைக் குறித்து நின்றன. யாழ் குழல் என்னும் இவையும் தண்ணுமை முதலியனவும் நந்தமிழகத்திலேயே மிகப் பழைய காலத்திலே தோன்றிய இன்னிசைக் கருவிகளாகும். சங்க நூல்களிலே பேரியாழ் என்றும் சீறியாழ் என்றும் இருவகை யாழ்களும் குழலும் கூறப்பட்டுள்ளன. பெரும்பாணாற்றுப்படையும் சிறு பாணாற்றுப்படையும் பேரியாழும் சீறியாளும் உடைய பாணர்களைப் பற்றிய ஆற்றுப் படைகளேயாகும். பத்துப்பாட்டின்கண் யாழ் குழல் முதலிய இசைக் கருவிகளின் அமைப்பும் அவற்றின் உறுப்புகளும் பல் வேறிடங்களிலே விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றை யன்றி முல்லை நிலத்தில் வாழும் ஆயர் குழலும் வில்வடிவமான யாழும் செய்து அவற்றைக் குயின்று இசைபாடி மகிழ்ந்திருந்த செய்தியும் பத்துப்பாட்டிற் காணப்படுகின்றது. இதனை,

தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஓன்றம ரூடுக்கைக் கூழா ரிடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி

எனவரும் பெரும்பாணாற்றுப் படைப் பகுதியால் அறியலாம் (176-84)

கன்றமர் நிரையொடு கானத்தே வதியும். ஒன்றமர் உடுக்கையோடு கூழ் ஆரும் இவ் வெளிய இடையன் தான் தீக்கடைகின்ற (கொள்ளிக்கட்டை) ஞெலி கோலாலே மூங்கிலிலே பல துளைகளை இட்டுக்கொண்டு பாலைப்பண் என்னும் இசையைப் பாடினன் எனவும் அங்ஙனமே உட்டுளையுடைய குமிழங் கொம்பினை வில்லாக வளைத்து மரற்புரி நரம்பினை நாணாகக் கட்டி அந்த நாணைத் தனது விரலாலே தெறித்துப் பல்வேறிசைகளையும் எழுப்பிக் குறிஞ்சி என்னும் பண்ணை இசைத்தான் எனவும் இச்செய்யுள் கூறுகின்றது. இதனையே வில்யாழ் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

ஒப்பற்ற இசைக் கருவிகளாக வரலாறறியாத காலந்தொட்டுத் தமிழகத்திலே வழங்கி வருகின்ற குழலையும் யாழையும் முதன் முதலாகக் கண்டுபிடித்த பெருமை நிரலே முல்லைநில மக்களாகிய ஆயர்க்கும் குறிஞ்சி நிலமக்களாகிய வேட்டுவர்க்குமே உரியதாம் என்னும் ஓருண்மையை மேலே காட்டிய பெரும்பாணாற்றுப்படையீனின்றும் யாம் தெரிந்து கொள்கின்றோம்.

காட்டின்கண் உலர்ந்த மூங்கிலிலே வண்டுகள் துளைத்த துளையின் வழியே காற்றுப் புகும்போது இன்னிசை பிறப்பதனை அறிந்த ஆயர்கள் அம் மூங்கிலைத் துணித்துத் தாமே தீக்கடை கோலாலே பல துளைகளையிட்டு ஊதிப் பல்வேறு வகையான இசைகளை எழுப்பி மகிழ்வாராயினர். அங்ஙனமே விலங்குகளை வேட்டை யாடுவோர் வில்லினது நாணினின்று அதனை விரலாற்றெறிக்கும் போது இன்னிசை பிறத்தலை அறிந்து அவ்வொலி தானும் உட்டுளையுடைய குமிழங் கொம்பை வில்லாக வளைத்துக்கட்டிய வழி, பின்னும் இனிமையுடையதாதலை யுணர்ந்த பின்னரே அதனையும் ஓரிசைக் கருவியாக ஆயர்கள் பயன்படுத்தலாயினர்.

இனி, குழலிலே பல துளை யிடுவதன் வாயிலாகப் பல்வேறிசைகளை உண்டாக்குதல் கூடுமாகலான் இக் கூழாரிடையன் தானே இயற்றிக் கொண்ட கருந்துளைக் குழலின் குரல் துத்தம் முதலிய பல்வேறு இசைகளை எழுப்பிப் பாலைப்பண்ணை வாசித்தல் பொருந்துமன். குமிழங் கொம்பிற் கட்டிய ஒற்றை நாணில் (நரம்பில்) பல்வேறு இசை வேண்டுகின்ற குறிஞ்சிப்பண்ணை எழுவி இசைத்தான் என்றல் பொருந்தா தென்னின்; அறியாது கூறினை, அவ்வொற்றை நரம்பில் ஏழிசையும் எஞ்சாது பிறப்பித்தல் கூடும். எங்ஙனம் எனின், நாண்குரலைக் குரலிசையாகச் சுதிசெய்து கட்டிய பின்னர் :

வில்யாழினது ஒரு நுனியை மார்பிலே ஊன்றவைத்து மற்றொரு நுனியை இடக்கையாற் றழுவிக்கொண்டு தெறிக்குங்கால் அவ்விடக்கை விரலாலே கீழ்நோக்கி நரம்பை வில்லில் அழுத்த ஒலி வேறுபடுமன்றே? இங்ஙனமே கீழ்க் கீழ் இறங்கி ஆறிடங்களிலே நரம்பை அழுத்தி வலக்கை விரலாற் றெறிக்க எஞ்சிய ஆறிசைகளும் பிறக்குமாகலின் இவ்வாற்றானே அவ்விடையன் குறிஞ்சிப்பண் இசைத்தனன் என்க. இந் நுணுக்கமறியாது ஆசிரியர் விபுலானந்த வடிகளார் இவ்வில்யாழைப்பற்றிப் பயனிலாது தம் மனம் போனவாறு பொருந்தாத கற்பனை பலவும் செய்து போந்துளார். அதனை அவர் தம் யாழ் நூலிலே காண்க.

இனி, முல்லை நிலத்தும் குறிஞ்சியினும் எளிய ஆயரிடத்தும் வேடரித்தும் பிறந்து பின்னர்ப் பல்வேறு சீர்திருத்தங்களும் பெற்ற யாழ்கள் பேரியாழும் சீறியாழும் என இருவகைப்படும். இவற்றுள் பேரியாழ் வலிவும் மெலிவும் சமனுமாகிய மூவகை யியக்கத்திற்கும் இயக்கொன்றிற்கு ஏழ் நரம்பாக மூவேழ் - அஃதாவது இருபத்தொரு நரம்புகளையுடையதாம். சீறியாழ் ஏழ் நரம்புகளை யுடையதாம். ஈண்டு நரம்பென்பது கோல்களை. அவையாவன: நரம்புகளை அழுத்துங் கருவிகளை. அவற்றை இக்காலத்தார் மெட்டுக்கள் என்பர். பேரியாழ் இருபத்தொரு மெட்டுக்களையும் சீறியாழ் ஏழு மெட்டுக்களையும் உடையன என்க. இவை சங்ககாலத்து யாழ்கள்.

இனி, சிலப்பதிகாரத்துக் காலத்தே சீறியாழ் பின்னும் சீர் திருத்தம் செய்யப் பெற்றுப் பதினான்கு கேள்விகளை (மெட்டுக்களை) உடையதாயிற்று. அடிகளார் இங்ஙனம் திருத்தம் பெற்ற யாழினைச் செம்முறைக் கேள்வி என்று குறிப்பிடுவர். இது பதினான்கு கேள்விகளையுடையது. ஆதலால் இதனை ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்பர். இனி, பழைய வுரையாசிரியர் தங்கள் காலத்து வழக்கிலிருந்த யாழ்களைப்பற்றியே உரை விரிக்கின்றனர். அவை அனைத்தும் சிலப்பதிகாரத்திற்குப் பொருந்துவனவாகக் கோடற்கிடமில்லை. பொருந்துவனவற்றைக் கொள்க, பொருந்தாதனவற்றை விடுக. அப்பழைய வுரை வருமாறு:

26. யாழ் நால்வகைப்படும் : அவை பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இவை நாலும் பெரும்பான்மைய. சிறுபான்மையான் வருவன பிறவுமுள. என்னை?

பேரியாழ் பின்னு மகரஞ சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற

என்றாராகலின்

இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழுக்கு இருபத்தொன்றும் மகர யாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாலும் செங்கோட்டியாழிற்கு ஏழுங் கொள்ளப்படும். என்னை?

ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி

என்றாராகலின்

இனி, இவ்வியா ழென்னும் ஒன்றிற்கு அமைந்த பலவுறுப்பாகிய

கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியும்
ஆட்டிய பத்தரின் வகையும் மாடகமும்
தந்திரி யமைதியும் சாற்றிய பிறவும்
முந்திய நூலின் முடிந்த வகையே

என்றொரு நூற்பாவை எடுத்துக்காட்டி அடியார்க்கு நல்லார் வகுக்கப் பட்டனவெல்லாம் கானல் வரியில் குற்றம் நீங்கிய யாழ் என்பதன்கண் விரியக் கூறுதும் என்றனர். அவ்வுரை கிடைத்திலது.

26. குழல் என்றது குழல் கருவியாகப் பாடும் பாடலை. ஆகு பெயர்.

(யாழின் பெயரை வீணை என்ற வடமொழியாக மாற்றி அதனையே இக்காலத்துப் பயில வழங்குதல் போன்று பழைய உரையாசிரியர் காலத்தே குழல் என்னும் இனிய தமிழ்ப்பெயரை விடுத்து அதனை வங்கியம் என்று இசைவாணர்கள் பயில வழங்கியமையால் அடியார்க்கு நல்லார் குழல் என்ற தமிழ்ச் சொல்லிற்கு வங்கியம் எனப் பொருள் எழுதுதல் வேண்டிற்று. இச்சொல் நூலின்கண் யாண்டும் காணப்பட்டிலது.)

(அடியார்க்) குழல் வங்கியம்; அதற்கு மூங்கில் சந்தனம் வெண்கலம் செங்காலி கருங்காலி யென ஐந்துமாம், என்னை?

ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே
பாங்குறுசெங் காலி கருங்காலி - பூங்குழலாய்
கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார்
பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து

என்றாராகலின்

இவற்றுள் மூங்கிலாற் செய்வது உத்தமம். வெண்கலம் மத்திமம் ஏனைய அதமமாம். மூங்கில் பொழுது செய்யும்; வெண்கலம் வலிது; மரம் எப்பொழுதும் ஒத்து நிற்கும்.

இதன்கண் மூங்கில்பொழுது செய்யும் என்றது வெப்பதட்பங்களால் மாறுபடுகின்ற வேனில் முதலிய பெரும் பொழுதுகளையும் வைகறை முதலிய சிறு பொழுதுகளையும், வேய்ங்குழலின் இசை தனது மாற்றத்தாலே காட்டும் என்றவாறு. இதனால் இதுவே தலையாயது என்றவாறு. என்னை? பொழுதுகட்கும் இசைக்கும் இயைபுண்மையால் அவ்வியை பினை வேய்ங்குழலிற் காண்டல் கூடும் என்பது கருத்து என்க.

(அடியார்க்) இக் காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும்; கருங்காலி வேண்டும் என்பது பெரு வழக்கு. இவை (இம் மூன்று வகை மரங்களையும்) கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்று மயங்கின் நாதமில்லை. யாமாதலான், மயங்கா நிலத்தின்கண், இளமையும் நெடும் பிராயமும் (முதுமையும்) ஒரு புருடாயுப்புக்க (நூறாண்டு) பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாக ஓராட்பருமனும் நீளமும் உடையதாகச் செய்து, அதனை நிழலிலே ஆற இட்டுவைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதலின்மையை யறிந்து ஓர் யாண்டு சென்ற பின் இலக்கண வகையான் வங்கியம் செய்யப்படும். என்னை?

உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னான்கின்
மயங்காமை நின்ற மரத்தின் - மயங்காமே
முற்றிய மாமரந் தன்னை முதறடிந்து
குற்றமிலோ ராண்டிற் கொளல்

என்றாராகலின்.

இதன் பிண்டி யிலக்கணம் (பிண்டி-துண்டு) நீளம் இருபது விரல், சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மரனிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி (அணைசு-மூடி) இடமுகத்தை யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். என்னை?

சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு
நல்விரல்க ணாலரையா நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிட மாய
வளைவலமேல் வங்கிய மென்

என்றாராகலின்

இனித் துளையளவிலக்கணம்: - அளவு (நீளம்) இருபது விரல்; இதிலே தூம்பு முகத்தின் இரண்டு நீக்கி முதல்வாய் விட்டு, இம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு, வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவில் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை யென்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழுவிரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்; என்னை?

இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவு துளையெட்டு மன்னும் - பெருவிரல்கள்
நாலஞ்சு கொள்க பரப்பென்ப நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு

என்றாராகலின்

இவ் வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரையென்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல்பற்றி வாசிக்க.

ஏழு விரலாவன - இடக்கையிற் பெருவிரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. என்னை?

வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித்
துளையேழி னின்ற விரல்கள் - விளையாட்
டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா
வடமாரு மென்முலையாய் வைத்து

ஏழிசையாவன: சட்டம் ரிடபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிடாதமென்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண்கள் பிறக்கும். என்னை?

சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

என்றாராகலின். இத்தன்மைத் தாகிய குழலுமென்க.

ஈண்டுக் குழல்பற்றி இதுகாறும் கூறப்பட்டவை அடியார்க்கு நல்லார் உரை விளக்கமாம்.

இனி, இளங்கோவடிகளார் தம் காப்பியத்தின்கண், ஈண்டுச் சட்சம் முதலாகக் கூறப்படுகின்ற இசையின் பெயர்களை யாண்டும் கூறிற்றிலர்.

இவற்றை நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் பெயர்களாற் குறிப்பிடுதலே பண்டைத் தமிழ் நூலோர் வழக்கமாம்.

இனி, அடிகளார் இந்நூலிலேயே கூறியுள்ள முல்லைக்குழல், ஆம்பற்குழல் கொன்றைக்குழல் என்னும் இக் குழல்களைப்பற்றிப் பழைய உரையாசிரியர் யாதும் அறிந்திலாமை ஆய்ச்சியர் குரவைக் கண் இவற்றிற்கு இவர்கள் கூறுகின்ற உரைகளே உணர்த்துகின்றன. அவற்றை ஆண்டுக் காண்பாம்.

26. சீர் - தாளத்தின் அறுதி. இது முத்தமிழ்க்கும் பொதுவாகும். அதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலின்கண் ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீர் இயைந்து இற்றது சீரெனப் படுமே என்றோதுவாராயினர். அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோ ராறே என்றோதியதும் சீர் முத்தமிழ்க்கும் பொதுவாம் என்பதை வலியுறுத்தும். மற்றுத் தாளம் என்பது பாணி தூக்கு சீர் என மூவகை உறுப்புடையதென்ப. பாணி-தாளந் தொடங்குங் காலம். தூக்கு-தாளம் நிகழுங்காலம். சீர்-தாளம் முடியுங்காலம் என்று நுண்ணிதின் இவற்றிற்கு வேறுபாடு கூறுவர்.

இனி, இடைத்தமிழில் சீர் என்பது செம்முறை உறழ்பே மெய்ந் நிலை கொட்டல், நீட்டல், நிமிர்த்தல் என்று கூறப்படுகின்ற வண்ணக் கூறுபாட்டையும் நாடகத் தமிழில் அகக் கூத்திற்கும் புறக்கூத்திற்கும் உரிய இருவகைத் தாளக் கூறுபாட்டையும் குறிக்கும் என்க. இச் சீர் தானே பாலைகளையும் பண்களையும் நிலைப்படுத்துத் தூய்தாகக் காட்டுங் கருவி என்ப. ஈண்டுப் பாலை என்றது குரல் முதலிய கேள்விகளை என்றுணர்க.

26. மிடறு - மிடற்றுப்பாடல். மாந்தர் உடம்பும் இசைக்குத் தலைசிறந்த கருவியாதலின், மிடற்றினைச் சாரீர வீணை என்பர். சரீர வீணை (எனப் பாட வேற்றுமையும் உண்டு) வடமொழியாளர் பிரம வீணை என்பதும் இக்கருத்துடையதே என்க. அஃதாவது இறைவனாற் படைக்கப்பட்ட இசைக்கருவி என்றவாறு. இறைவனாற் படைக்கப்பட்ட மாந்தருடம்பாகிய கருவியில் இசை பிறக்குங்கால்,

உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ பின்னர் மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும் எனவும், இவ்வாறு அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே, எனவும், இசை அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

ஈண்டு நரம்பின்மறையென்றது இசைத்தமிழிலக்கண நூலை என்க.

இயற்கையிலமைந்த இசைக்கருவியாகிய மக்கள் மிடற்றில் இசையைப் பிறப்பிக்குங்கால் மூலாதாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மைகளைப் பிறப்பித்தல் வேண்டும் என்பது அரும்பதவுரையாசிரியர் கூற்றால் அறியப்படும்.

இனி, இங்ஙனம் மூலாதாரந் தொடங்கிய எழுத்தின் நாதம், ஆளத்தியாய்ப்பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம் எனவும்,

பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார்
மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய்
எடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப்
படுத்தமையாற் பண்ணென்று பார்

எனவும், பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை யென்று பெயராம் எனவும் அடியார்க்கு நல்லார் ஓதுவர்.

இதனால் பண் இசை என்பன காரணப் பெயர்கள் என்பது பெற்றாம். பண் எனினும் இராகம் எனினும் ஒக்கும். ஆளத்தி என்பதனை இக்காலத்தார் ஆலாபனம் என்று வழங்குவர்.

இனி, இசையை ஆளத்தி செய்யும்பொழுது மரகவொற்றால் அஃதாவது ம்ம் எனத் தொடங்கிப் பின்னர்க் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் பாரித்துப் பாடவேண்டும் என்பர். இதனை,

மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகருங் குறினெடில்பா ரித்து - நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத் நி
மன்னாவிச் சொல்லின் வகை

எனவரும் வெண்பாவான் உணர்க.

இதன்கண், தென்னா தெனா என்று பாடுவர் என்றதற்கு, தென்னா என்றும் தெனா வென்றும் இரண்டசைகளையும் தனித் தனியும் தென்னாதெனா என்று இரண்டனையும் கூட்டியும் பாடுவர் என்பது கருத்து.

இனி ஆளத்தி செய்தற்குரிய குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம் எனவும், நெட்டெழுத்துக்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்துமாம் எனவும், மெய்யெழுத்துக்களுள் மகரமும் னகரமும் தகரமும் ஆகிய மூன்றுமே ஆளத்திக்குப் பொருந்தும் ஏனைய பதினைந்து மெய்களும் பொருந்தாதனவாம் என்றும் வரையறுத்தோதுவர். இக்காலத்தே தரன்னா, லலா ரார என்றெல்லாம் புகழ்படைத்த இசைவாணரும் பாடக் கேட்கின்றோம். ஆதலால், இவ்வரையறை கைவிடப்பட்டமை அறியலாம், இனி இவ்வரையறை யுண்மையை,

குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும்
நின்றார்ந்த மன்னகரந் தவ்வொடு - நன்றாக
நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க
ஆளத்தி யாமென் றறி

எனவரும் வெண்பாவானுணர்க.

ஈண்டு மந்நகரந் தவ்வொடு எனக் காணப்படுகின்ற (உ-வே-சா. ஐயரவர்கள் பதிப்பு) பாடம் பிழை என்பதும், அது மன்னகரம் எனத் திருத்திக் கோடற்பாலதென்பதும் ஆளத்தி தென்னா தெனா வென்று பாடுவர் என்பதனாலே உணரப்படும். இன்னும், இதனால் இக்காலத்தார் இராக ஆலாபனஞ் செய்யுமிடத்து அதனோடு விரவி வருகின்ற ச, ரி, க, ப, நி என்னும் ஐந்தெழுத்தும் பண்டைத் தமிழிசைக்கு விலக்குண்டமையும் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

இனி பெருந்தானம் எட்டானும்... எடுத்தன் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தலாற் பண் என்று பார் என்றது, நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையும் ஆகிய இசை பிறத்தற்குரிய எட்டானும், எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு என்னும் எண்வகைத் தொழிலானும் பண்ணுதலாலே பண் என்று பெயராயிற்று என்று அறிக என்றவாறாம். பண் பிறக்குமிடம் பலவாயினும் சிறப்புப்பற்றி ஆகுபெயரால் மிடறு என்றோதப்பட்டது.

27. தாழ்குரல் தண்ணுமை-தாழ்ந்த இசையினையுடைய மத்தளம் என்னுந் தோற்கருவி. ஈண்டுத் தண்ணுமை என்றது அதனை யுள்ளிட்ட தோற்கருவிகள் அனைத்தையும் குறித்தபடியாம். அவற்றை,

பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசானம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க றநூலோர் விரித்துரைத் தனரே

எனவரும் நூற்பாவானுணர்க.

இவை, அகமுழவு அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழுவகைப்படும் என்பர்.

அவற்றுள் அகமுழவாவன-முன் சொன்ன மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா என்பனவாம்.

அகப்புற முழவு-முன்சொன்ன மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின.

புறமுழவு-அதமக் கருவியான கணப்பறை முதலாயின.

ஈண்டுக் கூறப்படாத நெய்தற்பறை முதலியன புறப்புறமுழவு எனப்படும்.

பண்ணமை முழவு என்பன-முரசு நிசாளம் துடுமை திமிலை என்னும் நான்குமாம். இவற்றை வீரமுழவு என்றும் விளம்புவர்.

நாண்முழவு - நாட்பறை. அஃதாவது நாழிகைப்பறை.

காலைமுழவு - துடி.

இனி, ஈண்டு அடிகளார் தண்ணுமை என்றது மத்தளத்தை. மத்து-ஓசை; தளம்-இடம். ஆகவே இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தள மாதலான் மத்தளமென்று பெயராயிற்று என்பர் அடியார்க்குநல்லார். இக்காலத்தார் மிருதங்கம் என்பதும் இதுவேயாம். மத்தளம் முதலிய தோற்கருவிகள் மிடற்றுப் பாடல் கேட்போர்க்கு இனிது விளங்குதற் பொருட்டு அப்பாடலிசைக்கு அடங்கி ஒலித்தல் வேண்டுமாதலின் அவற்றைத் தாழ்ந்த இசையுடையனவாகச் சுதி கூட்டிக் குயிலுவர். ஆதலின், தாழ்குரற்றண்ணுமை என்றார். தண்ணுமை முதலிய தோற்கருவிகளைச் சுதிகூட்டுங்கால் அவற்றின் இடக்கண் இளியாய் (ப) வலக் கண் குரலாக (ச)க் கூட்டவேண்டும் என்பர். இதனை,

இடக்க ணிளியாய் வலக்கண் குரலாய்
நடப்பது தோலியற் கருவி யாகும்

எனவருஞ் செய்யுளானும் (சிந்தா-செய் 675-நச்சி உரை) அறியலாம்.

27- வரி- உருக்கள் (இசைப் பாடல்கள்) ஆடல் என்றது முற்கூறப்பட்ட அகக்கூத்தும் புறக்கூத்தும் பிறவுமாகியவற்றை. உரிப்பொருள் என்றது அகத்திற்குரிய புணர்தல் முதலியனவுமாம், புறத்திற்குரிய வஞ்சி முதலியனவுமாம். இசையாசிரியனாகலின் தன திசைக்குயிராகிய இவ்வுரிப்பொருளையும் நன்கு புலப்படுத்த வேண்டுமாகலின் உரிப்பொருளியக்கி என்றார். பழைய வுரையாசிரியர்கள் உரிமைப் பொருளாயமைந்த இயக்கம் நான்குமே ஈண்டு உரிப்பொருள் எனப்பட்டதாகக் கருதுவர்.

30. தேசிகத்திரு-நாட்டு மொழியாகிய செல்வம். அதன் ஓசை கடைப்பிடித்தலாவது, வடமொழி முதலிய வேற்றுமொழி வந்து விரவுங்கால் அவற்றைத் தமிழோசைப்படுத்து இசைத்தலை உறுதியாகக் கடைப்பிடித்தொழுகுதல். இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல் என்று சொல்லப்பட்ட சொற்கள் இசை பூணும் படியைக் கடைப்பிடித் தென்பர் பழையவுரையாசிரியரிருவரும்.

33. கவி-இயற்புலவன். இதனால் இசைவாணர்க்கும் கூத்தர்க்கும் பாடல் யாத்துக்கொடுப்போர் இயற்புலவரே யென்பது பெற்றாம். இயற்புலவன் அப்பாடலாலே வெளிப்படுத்த நினைத்த கருத்தின்னதென அறிந்து கோடல் இசைப்புலவனுக்கு இன்றியமையாமையின் கவியது குறிப்பும்...கொளுத்துங்காலை என்றார்.

34. கொளுத்துதல் - தனதிசை கொள்ளும்படி செய்தல்.

35. கேள்வி : ஆகுபெயர்; நூல் என்க. கேள்விக்கியைய வகுக்கவும் விரிக்கவும் வல்ல இசையோனும் என்க.

கவிஞன் அமைதி

(அஃதாவது மாதவி கூத்திற்குப் பாடலியற்றிய இயற்புலவனுடைய தன்மை என்றவாறு.)

37-38: இமிழ்கடல் ......... தன்மையனாகி

(இதன்பொருள்) இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய - முழங் குதலையுடைய கடல்சூழ்ந்த நிலவுலகத்தின்கண் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு மிந்த நாட்டின்கண் வாழ்கின்ற சான்றோரனைவரானும் அறியப்படுதற்குக் காரணமான; தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி - இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்துத் தமிழ்மொழியையும் எஞ்சாது கற்றுத் துறைபோய அறிவினையுடைய தன்மையையுடையவனாகி என்க.

(விளக்கம்) இமிழ்கடல் - வினைத்தொகை எனினுமாம். கடல் வரைப்பு - நிலவுலகம். நிலவுலகத்துள்ள நாடுகள் பலவற்றுள்ளும் தமிழகம் சிறந்ததொரு நாடு என்பது தோன்ற, இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். தமிழகம் அந்நாட்டின்கண் வாழும் சான்றோர்க்கு ஆகுபெயர். என்னை? அறிவார் அவரேயாதலின்.

இனி, வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறு நல்லுலகம் என்பது தோன்ற கடல்வரைப்பில் தமிழகம் என்றார். கடல் வரைப்பையுடைய நிலவுலகத்துள் வேங்கட முதலிய வரைப்பினையுடைய தமிழகம் என்பது கருத்தென்க.

இனித் தமிழ்தானும் இயல் இசை நாடகம் என முத்திறத்ததாய் முழுதும் அறிதற்கருமைத்தாகலின் அவ்வருமை தோன்றத் தமிழ் முழுதும் அறிந்த தன்மையன் என்றார். இப்பொருட்கு முழுதும் என்ற சொல்லை விதந்தெடுத்தோதி யுணர்க.

36-44: வேத்தியல் ......... நன்னூற்புலவனும்

(இதன்பொருள்) வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின் நாட்டிய நன்னூல் கடைப்பிடித்து - வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் இரு கூறுபடுத்துக் கூறப்பட்ட நாடக நூலிலக் கண விதிகளை நன்றாகக் கடைப்பிடித்து; இசையோன் வக்கிரித்து இட்டத்தை உணர்ந்து - இசைப்புலவன் ஆளத்தி செய்து அதன்கண் அவன் எய்தவைத்த பண்ணினது இயல்பினை நன்குணர்ந்து; ஆங்கு அசையாமரபின் அதுபட வைத்து - அவ்விசைப்புலவன் வைத்தபடியே தளராத இலக்கணமுறைப்படி அப்பண்ணினது நிறம் தனது கவியினிடத்தும் நன்கு விளங்கித் தோன்றவைக்க வல்லனாய்; மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து - பகைவர்களாற் செய்யப்பட்ட வசையின் அளவுகளையும் அறிந்து; நாத் தொலைவு இல்லாத நல்நூல் புலவனும் - அவை தன் கவியிடத்தே புகுதாவண்ணம் நாடகக்கவி செய்யவல்லவனும் அக் காரணத்தாற் பகைவர்க்குத் தோலாதவனும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய நல்ல நூல்களையுணர்ந்த இயற்புலவனு மென்க.

(விளக்கம்) எழுத்துச் சொல் பொருள் முதலிய இயற்றமிழ்க்கியன்ற இலக்கணமெல்லாம் ஏனைய இசைத்தமிழ் நாடகத்தமிழாகிய இரண்டற்கும் வேண்டிய உருக்கள் என்னும் இசைப்பாடல்கட்கும் இன்றியமையாமையின் ஈண்டுக் கூறப்படும் புலவன் முத்தமிழும் கற்றுத்துறை போயவன் என்றார்.

இனி, வேத்தியல், பொதுவியல் என்பன நிரலே அகம்புறம் என்னும் இருவகைப் பொருணெறிப்பட்டவை என்பது அடியார்க்கு நல்லார் குறிப்பானும் உணரலாம்.

40. நாட்டிய நன்னூல் என்பதற்கு வேத்தியல் பொதுவியல் என்றிருவகைப்படுத்து நிறுவிய நல்ல நாடக நூல் எனக் கோடலுமாம். இசையோன் - இசைப்புலவன். வக்கிரித்து அதன்கண் இட்டத்தை என்க. வக்கிரித்தல், ஆளத்தி செய்தல். இட்டதை எனற்பாலது இட்டத்தை என விகாரமுற்றது. இட்டது - வைத்த பண்ணீர்மை என்க. அதனை உணர்தலாவது பண்ணுக்குரிய முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினானும் அறிதல்.

இவற்றுள் முதல் என்பது, குரல் முதலிய ஏழிசைகளுள் வைத்து இன்ன பண்ணுக்கு இன்ன இசை முதலாகும் என்றறிவது. முறை-பண்கள் தோறும் அவ்விசைகள் நிற்கவேண்டிய முறை என்க. முடிவு-ஒவ்வொரு பண்ணையும் முடித்தற்குரிய இசைகள் என்க. நிறை முழுமையுடைய பண்கள். குறை - பண்ணியல் திறம் திறத்திற முதலியன என்க. கிழமை இன்ன பண்ணிற்கு இன்ன இசை பயிலப் பயின்றுவரும் உரிமையுடைத் தென்றறிதலென்க. வலிவு முதலிய மூன்றும் இயக்கவகைகள். வரையறை - இந்தப் பண் இந்தப் பொழுதிற் பாடப்படுவது என்னும் காலவரையறையும் இன்ன திணைக்கு இன்ன பண் உரித்தென்னும் வரையறையும் இன்னோரன்ன பிறவுமாம் என்க. நீர்மை என்றது இலக்கண வகையானன்றி ஒவ்வொரு பண்ணிற்கும் தனித்தனியே அமைந்ததோரின் பப்பண்பு, என்க. பாடலியற்றும் நன்னூற்புலவன் ஈண்டுக் கூறப்பட்ட பண்ணீர்மையறியானாயின் பண்ணுக்கியையப் பாடலியற்றலாகாமையின் இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து ஆங்கு அசையா மரபின் அதுபடவைத்து என்றார். அது என்றது பண்ணீர்மையை. பழைய வுரையாசிரியர் இருவரும் இதனையே தாள நிலையில் எய்த வைத்த நிறம் என்றார். நிறம் போறலின் நிறம் என ஆகுபெயராற் பெயர் மாத்திரையாலோதி யொழிந்தார் என்க. அதுபடவைத்தலாவது, இப்பாட்டிற்கு இந்தப் பண்ணே சிறந்துரிமையுடைய தென்று யாவரும் அறியும்படி பாட்டினை இயற்றுதல் என்க. பண்ணினமைந்த இப்பண்ணீர்மையையே திருவள்ளுவனார் கண்ணோடியைந்த கண்ணோட்டம் போல்வதெனக் கருதி இந்த நீர்மை பாட்டினது நீர்மையோடு இயைதல் வேண்டும் என்னும் கருத்துடையர் என்பதனை பண்ணென்னாம் பாடற்கியைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் எனவரும் திருக்குறளால் உணர்தல் கூடும்.

வசை - பாட்டுடைத் தலைவனுக்குச் சாவு முதலிய தீமைபயக்கும் தீச்சொற்கள். பாட்டினாலே தீமை செய்பவர் பகைவராதலின் மாற்றோர் செய்த வசைமொழி என்றார். அதனை அறிந்தென்றது அறிந்து அத்தகைய தீச்சொல் விரவாமல் பாட்டியற்ற வல்ல நன்னூற் புலவன் என்பதுபடக் கூறியபடியாம். நாத்தொலைதல் - பாட்டின்கண் இழுக்குக் கூறுவார்க்குத் தோற்றல். நாத்தொலைவில்லாமைக்கு நன்னூல் குறிப்பேதுவாய் நின்றது. குற்றமில்லாத வழியும் குற்றங்கூறும் புன்புலவர்க்கு நன்னூல் விதிகாட்டி வெல்லும் ஆற்றலுடைய புலவன் என்பது கருத்தென்க.

இன்னன் அல்லோன் செய்குவ னாயின்
தேற்றா மாந்தர் ஆரியம் போலக்
கேட்டார்க் கெல்லாம் பெருநகை தருமே

எனப் பழையவுரையாசிரியர் எடுத்துக்காட்டிய நூற்பாவும் ஈண்டுணரற்பாற்று.

தண்ணுமையோன் அமைதி

45-55: ஆடல் பாடல் ...... முதல்வனும்

(இதன்பொருள்)ஆடல் பாடல் இசையே தமிழே - முற்கூறப்பட்ட பல்வேறு வகைப்பட்ட கூத்துக்களும் பாட்டுக்களும் பல்வேறு வகைப்பட்ட இசைகளும் இயலிசை நாடகம் என்னும் மூன்று வகைப்பட்ட தமிழ்களும்; பண்ணே பாணி தூக்கே முடமே-எல்லாப் பண்களும் இருவகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குக்களும் இவற்றின் குற்றங்களும்; தேசிகம் - இயற்சொல் முதலிய நால்வகைச் சொற்கூறுபாடு; என்று இவை ஆசின் உணர்ந்து - என்று கூறப்பட்ட இவையிற்றி னியல்பெலாம் நுண்ணிதின் அறிந்து; கூடை நிலத்தைக் குறைவு இன்றி மிகுத்து - இசையாசிரியன் யாதானும் தான் பாடுகின்ற பாட்டினை இரட்டிக் கிரட்டியாகச் சேர்த்துப் பாடிய விடத்தே; அப்பாட்டு நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும்; ஆங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி - அவ்விடத்தே பெறுகின்ற இரட்டியை இசையாசிரியன் பகுத்துப் பாடிய வழி, அவன் பகுத்தவாறே நிற்குமளவு நிறுத்திக் கழிக்க வேண்டுமளவு கழிக்கவும் வல்லனாய்; வாங்கிய வாரத்து யாழுங் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப- இங்ஙனம் பாடப்படுகின்ற பாட்டின்கண் யாழிசையும் குழலிசையும் மிடற்றிசையும் இயைந்து நடக்கின்ற படியைக் கேட்போர் செவிக் கொள்ளும்படி; கூர் உகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி - தனது தண்ணுமையைத் தன் விரற்றொழிலாலே செவ்வியறிந்து முற்கூறப்பட்ட இசைகளோடு சேரும்படி குயின்று; ஆக்கலும் அடக்கலும் - அங்ஙனங் குயிலுங் கால் ஏனைய கருவிகளிற் குறையை நிரப்புதலும் மிகுதியை அடக்குதலும்; மீத்திறப்படாமை செய்து - குயில்வதோடன்றித் தனது தண்ணுமையிசை ஏனைய கருவிகளின் இசைகட்கு மிகாமற் குயிலுதலும் செய்து; சித்திரக்கரணம் சிதைவின்று செலுத்தும் - அங்ஙனம் செய்யுமிடத்துத் தனது கைத்தொழிலும் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய்; அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் - அழகு தக்கிருக்கின்ற தண்ணுமைக் கருவியினையும் பிறராற் செயற்கரிய தொழிற்றிறமும் அமைந்த ஆசிரியனு மென்க.

(விளக்கம்) ஆடல் பாடல் இசை தமிழ் பண் பாணி தூக்கு என்பன அவையிற்றின் இலக்கணங்களுக்கு ஆகுபெயராய் நின்றன. முடம் - குற்றம்.

48. கூடை நிலம் - இசையை இரட்டித்துப் பாடுமிடம் என்க. கூடை - ஐகார விகுதிபெற்ற தொழிற்பெயர். இரட்டிக்கிரட்டி - முன்னர் இரட்டித்ததனையே மீண்டும் இரட்டித்தல்.

49. வாரநிலம் - இரட்டிக்கும் வழி முழுவதும் இரட்டியாமல் ஒரு பகுதியை மட்டும் இரட்டிக்குமிடம் என்க. வாங்குபு வாங்கலாவது அங்ஙனம் பகுத்து இரட்டிக்கும்பொழுது இசையின்பம் கெடாமல் விடுமளவிற்கு விட்டுக்கொள்ளுமளவே கொண்டு இசைத்தல்.

50-52. யாழ் முதலியவற்றின் இசையைத் தனது தண்ணுமையிசை விழுங்கிவிடாமல் அவையோர் அவற்றை நன்கு கேட்கும்படி அடக்கி இசைக்க வல்லனாய் என்பார் வார நிலத்தை ......... சேர்த்தி, என்றார்.

இனி, இங்ஙனம் பிற குயிலுவக் கருவிகளின் இசையைக் கேட்போர் நன்கு கேட்கும்படி தண்ணுமையோன் தனது விரலானும் உகிரானுமே குயில்வதியல்பாகலின் கேட்பக் கூருகிர்க்கரணம் குறியறிந்து சேர்த்தி என்றார்.

53. மீத்திறம்படுதலாவது - தண்ணுமையிசை ஏனைய இசைகளை விழுங்கி விடுமளவிற்கு மிகுதல்.

54. தண்ணுமையோன் தொழில் செய்யும்பொழுது காட்சிக் கினிதாகச் செய்தல் இன்றியமையாமையின் சித்திரக்கரணம் என்றார்.

55. அத்தகு தண்ணுமை என்பதனை அங்ஙனம் குயிலுதற்குத் தகுந்த தண்ணுமை எனவும், அழகு தக்கிருக்கின்ற தண்ணுமை எனவும் இரட்டுற மொழிந்து இருபொருளுங் கொள்க.

குழலோன் அமைதி

56-69: சொல்லிய ............... குழலோன்றானும்

(இதன்பொருள்) சொல்லிய இயல்பினில் - இசை நூல்களிற் சொன்ன முறைமையாலே; சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து - சித்திரப் புணர்ப்பும் வஞ்சனைப் புணர்ப்பும் என்று சொல்லப்பட்ட இரண்டு கூற்றினையும் அறிந்து; புணர்ப்போன் பண்பின் - இசைக் கேள்விகளைப் புணர்க்கும் இசையாசிரியனை ஒத்த இசை யறிவுடையனாகி; வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து - ஏற்றம் இறக்கம் என்னும் இருவகையானும் இயல்கின்ற நான்கு வகைப்பட்ட வர்த்தனைகளானும் நூற்றுமூன்று பண்ணீர்மைகளையும் தந்நிலை குலையாமல் குயின்று காட்டவல்லனாய்; (ஆங்கு) ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினனாகி - இசை கூட்டப்பட்ட குரலும் இளியும் தம்முளியையத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணரும் ஆராய்ச்சி என்னும் தொழில்வன்மையுடையவனும்; பண் அமை முழவின் கண் நெறியறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி - பண்ணுதல் அமைந்த முழவின் இடக்கண் வலக்கண் இசைநெறியினையும் அறிந்து மேலும் தண்ணுமையாசிரியனோடும் தாளநிலையிலே பொருந்தி; வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து - பண்ணீர்மை மிக்க இளிக்கிரமமாக இசையை யாழிடத்தே நரம்பணிந்து; ஆங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை - அவ்வழியே இசையாசிரியன் பாடிய பாட்டின் இயல்பை; வந்தது வளர்த்து வருவது ஒற்றி இன்புற இயக்கி-பாடுகின்ற பண்ணுக்குரியதாக வந்த கேள்வியைக் குறைவுபடாமல் நிறைவுசெய்தும் அப்பண்ணிற்குரியவல்லாத அயற்கேள்விகளின் வரவு நிகழாமற் பார்த்தும் அப்பண்ணிற்குரிய இன்பம் மிகும்படி செய்து; இசைபட வைத்து - இசைக்குரிய இலக்கணம் பதினொன்றனையும் நிரம்பக் காட்டி; வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து-நால்வகை இயக்கங்களுள் கேள்விக்கினிய வாரநடையினை மிகவும் வளர்வித்து; ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழு இன்று இசைக்கும் குழலோன் தானும் - அவ்வாறு வளர்த்துக் குயிலுங்கால் சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமும் பொருள்புலப்பாடு முடைமையால் பண்ணீர்மை மிக்க அவ்வார நடையிடத்தே மிடற்றுப் பாடலிற்போல இசையெழுத்துக்களை எழுத்துருவந் தோன்றுமாறு வழுவின்றிக் குயிற்றவல்லவனும் ஆகிய குழலாசிரியனும் என்க.

(விளக்கம்) (56-7) சித்திரமாகவும் வஞ்சனையாகவும் பொருந்திய புணர்ப்புக்கள் என்க. இவற்றுள் சித்திரப்புணர்ப்பாவது - இசை கொள்ளும் எழுத்துக்களின் மேலே வல்லொற்று வந்தவழி மெல்லொற்றுப்போல நெகிழ்த்துப் பண்ணீர்மையுண்டாக நிறுத்துவது. வஞ்சனைப் புணர்ப்பாவது-இசைகொள்ளா எழுத்துக்களின்மேலே வல்லொற்று வந்தவழி (இசைகொள்ளா எழுத்துக் கரப்ப ஒற்றினை) மெல்லொற்றுப் போல நெகிழ்த்துப் புணர்த்தல். புணர்ப்போன் - பாடலாசிரியன்.

58. வர்த்தனை - குரல் முதலிய ஏழிசைகளையும் படிப்படியாக ஏற்றி இசைத்தலும் அங்ஙனமே படிப்படியாக இறக்கி இசைத்தலுமாம். இவை வலமுறையாக ஏறுதலும் மீண்டும் இறங்குதலும் இடமுறையாக இறங்குதலும் மீண்டும் ஏறுதலும் என நான்காயின என்க. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்னும் பெயர்களானும் வழங்குவர்.

ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக்கேட்கும் உணர்வினன் ஆகி என்றது, இசை கூட்டப்பட்ட குரலிசையானது இளியிசையோடு பொருந்துவதனைத் தனது எஃகுச் செவியால் ஆராய்ந்து கேட்டறிகின்ற சிறந்த இசையுணர்வுடையவனும் ஆகி என்றவாறு. இதனால் ஆராய்தல் என்னும் இசைக்கரணத்திறம் கூறப்பட்டது. இதனைக் கானல் வரியின்கண் விளக்கிக் கூறுவாம்.

62. பண் - பண்ணுதல். அஃதாவது - இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய் இசை கூட்டப்படுதல். இனி, பல்வேறு வகை முழவுகளுள் வைத்துப் பண்பாடுதற்குக் குயில்தற்கமைந்த முழவு எனினுமாம். கண்நெறி அதன் இரண்டு கண்களினின் றெழுகின்ற இசைமுறைமை என்க.

தண்ணுமை, இதனை அடியார்க்கு நல்லார் மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்சம் முதலாயின என மத்திமமான கருவி என்பர். நூலாசிரியர் தண்ணுமையையே முதன்மையாகக் கொள்கின்றனர் என்பது அவர் செய்யுளால் அறியப்படும். இதுவே உத்தமமான மத்தளம் என்று கொள்க.

தண்ணுமை முதல்வன் றன்னொடும் என்ற உம்மையால் பொருந்து இடமும் பொருந்தி என்க.

வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து என்றது இசைகளை இளிக்கிரமமாக யாழின்கண் நிரல்பட அமைத்து என்றவாறு. அஃதாவது- குரல் முதல் தாரம் ஈறாகவுள்ள ஏழு கேள்விகட்குமுரிய நரம்புகள் இளிக்கிரமமாய் ஒலிக்குமானால் அவை பட்டடை எனப்படும் என்க. யாழின் தகைப்பில் ஒலிக்கும் நாண்குரலுக்கு இணைந்து இளியில் ஒலிக்கும் ஒலிக்கியைய ஒரு நரம்பழுத்துங்கோலை (மெட்டினை) வைத்துக் கட்டினால் அஃதொரு பட்டடை ஆகும். இங்ஙனம் வைத்த பட்டடையைக் குரலாகக் கொண்டு அதற்கு இளியாக இணைகின்ற ஒலியை ஆராய்ந்து மற்றுமொரு கோலை அமைத்துக் கட்ட அஃதொரு பட்டடையாகும். இக்கோலில் ஒலி துத்தமாக வமையும். இங்ஙனமே முறைப்படுத்து யாழின்கண் ஏழிசைகளையும் அமைப்பதே பட்டடையை யாழ்மேல் வைப்பதென்றறிக. இவ்வமைப்பினால் ஏழிசைகளும் தத்தம் நிறந்தோன்ற இசைக்குமாதலின் இதனை வண்ணப் பட்டடை என அடிகளார் ஓதினர். பட்டடை - அடிமணை. கோல் என்பதும் திவவு என்பதும் இப்பட்டடைகளையேயாம். இவை பண்டைக்காலத்தே வார்க்கட்டுகளாலே அமைக்கப்பட்டன. இத்திவவுகளில் இசை நரம்பினை அழுத்தி இசையை மாறுபடச் செய்வர் ஆதலின் திவவு நரம்பு துவக்கப்படுவது எனவும்; இத்திவவின்கண் அழுத்துவதனால் நரம்பினது இசை வலிவுபெறுவதலாலே திவ வென்பது - நரம்புகளை வலிபெறக் கட்டும் வார்க்கட்டு எனவும், (ஈண்டு நரம்பு இசைக்கு ஆகுபெயர்) பழையவுரையாசிரியர் உரைவரைந்தனர். இன்னும் இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் எமது ஆராய்ச்சி முன்னுரையில் கண்டுதெளிக. ஈண்டுரைப்பிற் பெருகும். வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்து ஆங்கு இசையோன் பாடிய இசை என இயைக்க.

65. வந்தது - இசையோன் பாடிய இசைக்கு நூன்முறைமையாலே வந்த கேள்வி. (சுரம்) வந்தது - சாதியொருமை. வருவது என்பதுமது.

66. இசை - இசைக்குரிய முதலும் முறையுமுதலாய பதினொரு வகைப்பட்ட இலக்கணம்: ஆகுபெயர்.

67. வாரநிலம் - நால்வகை இயக்கங்களுள் ஒன்று. முதனடை வாரம், கூடை, திரள் என்னும் நான்கும் இசையியக்கங்களாகும். இவற்றுள் முதனடை என்பது மிகவும் தாழ்ந்த செலவினை உடையதாம். அஃதாவது மிகுந்த காலச் செலவினையுடையதாம். இதனை விளம்ப காலம் என்றும் முதற்காலம் என்றும் இக்காலத்தார் கூறுவர். வாரம் என்பது அம்முதனடையினும் சிறிது முடுகி நடப்பது; இதனை, மத்திம காலம் என்றும் இரண்டாங்காலம் என்றும் கூறுவர். திரள் அதனினும் முடுகி நடப்பது. இதனைத் துரிதகாலம் அல்லது மூன்றாங் காலம் என்று வழங்குவர். திரள் மிகவும் முடுகிய நடையுடையது. இதனை, அதிதுரிதகாலம் அல்லது நான்காம்காலம் என்று இக்காலத்தார் கூறுவர். இவற்றுள், முதனடை மிகுந்த காலச் செலவுடையதாய் மெல்ல நடத்தலாலே கேட்போர்க்கு இன்பம் பயவாதொழிவதாம். நான்காவதாகிய திரள் நடை தனது மிகையான முடுகியல் நடை காரணமாகப் பாட்டின் பொருள் புலப்பாடும் இன்பஅமைதியும் இலதாம். ஆகவே இசைவாணரும் கேட்போரும் இடையிலுள்ள வார நடையினையும் கூடை நடையினையுமே பெரிதும் விரும்பிப் பாடுதலும் கேட்டலும் இயல்பாம். இவற்றுள்ளும் வாரப்பாடலை சொல்லொழுக்கமும் பொருள் புலப்பாடும் பெரிதும் இசையமைதியும் உடைத்தாம். இக்காரணத்தால் இவ்வார நடையையே பெரிதும்  பாரித்துப் பாடுவர். கூடைநடை, சொற்செறிவும் இசைச்செறிவும் உடைத்தாயினும் பொருள்புலப்பாடிலதாம். இந்நடையை இடையிடையே இசைவாணர் சிறிது சிறிது மேற்கொள்ளுவர். ஈண்டு வாரநிலத்தைக் கேடின்று வளர்த்து எனவே, கூடை நிலத்தை இன்றியமையாத விடத்தே சுருக்கிப் பாடவேண்டும் என்பதும் கூறினாராயிற்றென்க. ஆங்கு ஈரநிலம் என்றது அவ்வாரநிலமாகிய பண்ணீர்மை கெழுமிய நடையிலே என்றவாறு. இசைமாத்திரையா யொழியாது இசைகட்குரிய எழுத்துருவமும் தோன்றக் குயிலும் ஆற்றலுடைய குழலோன் என்பார், எழுத்தெழுத்தாக வழுவின்றிசைக்கும் குழலோன் என்றார். இதனால் குழல் யாழ் முதலிய குயிலுவக் கருவியாளர் மிடற்றுப்பாடல் போன்று எழுத்துருவம் தோன்றத் தங் கருவிகளைக் குயிலுதல் வேண்டும் என்பது அடிகளார் கருத்தாத லுணரப்படும். ஆசிரியர் திருத்தக்கதேவர் தாமும் சிந்தாமணியின்கண் (காந்தருவதத்தை)

கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா
அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று ரைத்தார்

என்புழி இக்கருத்துடையார் என்பது நுண்ணிதின் உணர்க.

யாழாசிரியன் அமைதி செம்முறைக் கேள்வி

70-71: ஈரேழ் ......... வேண்டி

(இதன்பொருள்) ஈர் ஏழ் தொடுத்த - குரல் முதலிய ஏழிசைகளையும் இரண்டு தொடையலாக அமைத்து யாழ்களில் சிறந்த யாழாகச் செய்யப்பட்டமையாலே; செம்முறைக் கேள்வியின் - செம்முறைக் கேள்வியென்னும் சிறப்புப்பெயர் பெற்று விளங்கும் யாழ்க் கருவியினிடத்தே; ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி - ஒப்பற்ற இனிமையுடைய செம்பாலை முதலிய ஏழு பாலைப் பண்களையும் அவற்றினிடையே பிறக்கும் ஐந்து அந்தரப்பாலை என்னும் பண்களையும் அவற்றிற்குரிய இணைநரம்புகளையும் அணைவுறக் கொண்டு இயைத்து இசைத்தமிழுக்குரிய இலக்கணங்களிற் குறைபாடு சிறிதுமின்றி வட்டப்பாலையாக இசைத்து அந்நல்லவையின் கண் அரங்கேற்றிக் காட்டுதலைப் பெரிதும் விரும்பி என்க.

(விளக்கம்) ஈர் ஏழ் - பதினான்கிசைகள். ஏழிசைகளை இருநிரலாகத் தொடுக்கப்படுதல் தோன்றப் பதினான்கு தொடுத்த என்னாது ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி என்றார். அடிகளார் காலத்திற்கு முற்பட்ட சங்ககாலத்தே சீறியாழ், பேரியாழ் என இருவகை யாழ்களே இருந்தன. சீறியாழ் ஏழிசைகளையே உடையது. பேரியாழோ இருபத்தோரிசைகளை உடையதாயிருந்தது. மெலிவும் சமனும் வலிவும் ஆகிய மூவகை இயக்கங்களுக்கும் ஏழு நரம்புடைய யாழில் மென்மையாக வருடியும் சமனாக வருடியும் வலிந்து வருடியும் இசைவாணர்கள் பண் இசைத்து வந்தனர். இம்முறை முழுமையான இன்பந்தாராமை கண்டு ஓர் இயக்கத்திற்கு ஏழிசையாக மூன்றியக்கிற்கும் இருபத்தோரிசைகளைத் தொடையல் செய்து அமைத்துக்கொண்ட யாழே பேரியாழ் எனப்பட்டது. மற்று இந்த இருபத்தோரிசைகளையும் மிகவும் பயிற்சியுடைய ஆடவர்கள் மட்டுமே ஆரோசையாக மிடற்றும் பாடலிலே இசைக்க முடியும்; மகளிர் பாடுதற்கு இப்பேரியாழ் தகுதியுடையதாக இருக்கவில்லை. இக்காரணத்தாலே பெண்டிரும் எளிதிற் பாடுதற்கேற்றதாக யாழ்க் கருவியைப் பின்னரும் சீர்திருத்தம் செய்தல் இன்றியமையதாயிற்று. அங்ஙனம் சீர்திருத்தம் செய்யப்பட்ட யாழே ஈண்டு அடிகளார் கூறுகின்ற செம்முறைக் கேள்வி என்னும் செவ்விய யாழ் ஆகும். இதனை அடிகளார் ஈரேழ் கோவை என்றும் ஓரோரிடங்களில் செங்கோட்டியாழ் என்றும் வழங்குவர். அடிகளார் காலத்தே சகோடயாழ் என்னும் வழக்கிருந்திலது. இந்நூலில் ஓரிடத்திலேனும் அடிகளார் இப்பெயரை வழங்காமையே இதற்குச் சான்றாம்.

பேரியாழில் மூன்று கோவையாக மெலிவும் சமனும் வலிவுமாக நின்ற மூவகையியக்கமும் இச்செம்முறைக்கேள்வியில் மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய்ப் பதினான் கிசைகளுள் அடங்கி நின்றன. இக்காரணத்தால் மெல்லியலாராகிய பெண்டிர்க்கும் இந்த யாழை யிசைத்துத் தம்மிடற்றானும் இனிதே பாடுதற்குத் தகுதியுடையதாயிருந்தது. மகளிர் பாடுதற் கேற்றதாக்க வேண்டும் என்னும் கருத்தாலேயே யாழ் இங்ஙனம் சீர்திருத்தப்பட்டமையின் பழைய உரையாசிரியரிருவரும் இந்த யாழினை, பெண்டிர்க்குரிய தானமுடைய பரடலியல் பொத்து அமைந்த சிறப்புடைத்து என்றுரை வகுப்பாராயினர் விபுலானந்தரை யுள்ளிட்ட பிற்காலத்து ஆராய்ச்சியாளரும் உரையாசிரியரும் இக் கருத்துணராது இதனைச் சகோட யாழ் எனவும், இது வடவர்நாட்டு இசைக் கருவி எனவும், பிறவும் தத்தம் வாய் தந்தன கூறுவாராயினர்.

இனி ஈர் ஏழ் என்றது இசைகளையே யன்றி நரம்புகளை அன்று. இக்காலத்தே இவை மெட்டுகள் என்று வழங்கப்படுகின்றன. ஆகவே, குரல் முதலிய ஏழிசைகளும் நரம்பு என்று வழங்கப்படும்போது அவ்வவற்றிற்குரிய மெட்டுகள் ஆகுபெயரால் அங்ஙனம் கூறப்படுகின்றன என்று குறிக்கொண்டுணர்ந்து கோடல் வேண்டும். மெட்டுகள் நிரலாகத் தொடுக்கப்படுதலின் அவை கோவை என்றும் தொடை என்றும் வழங்கப்படுதலும் உண்டு. இதுகாறும் கூறியவாற்றால் அடிகளார் கூறும் செம்முறைக் கேள்வி என்பது பதினான்கு மெட்டுக்களமைந்த ஒருவகை யாழ் என்பதுணரப்படும்.

பாலை - பெரும்பாலைகள். பாலை என்பது இசைத்தமிழில் குரல் முதலிய இசைகளையும் இவற்றாலியன்ற பண்களையும் குறிக்கும் என்றுணர்க. என்னை? இந்நரம்பில் பாலை பிறக்குமிடத்துக் குரல் நான்கு மாத்திரை பெறும் என்புழி இசையைக் குறித்தல் காண்க. (ஆய்ச்சியர் குரவை. 14. அடியார்க்குநல்லார் விளக்கவுரை) தாரத்துழை தோன்றப் பாலையாழ் என்புழிப் பண்ணைக் குறித்தலறிக. பாலையைக் கேள்வி என்றும் வழங்குவர். இக்காலத்தார் சுரம் என்பர். ஏழு பாலைகளையும் இக்காலத்தார் இராகம் என்பர். யாழை, வீணை என்னும் வழக்கு அடிகளார் காலந்தொட்டே யுளது. இஃதுணராதார் சிலர் யாழ் வேறு என்றும் வீணை வேறு என்றும் இப்பொழுது இங்குக் காணப்படும் வீணை வடநாட்டவர் கருவி. நமது யாழ் இறந்துபட்டது எனவும் கூறுவர். அவர் அளியரோ! அளியர்! அவர் கூற்று நமது பழைய காலத்து நீர் இறந்துபோயிற்று, இப்பொழுது நமது காவிரியில் ஓடுவது வடவாரியர் கொணர்ந்த சலமே என்றாற்போல்வதொரு பிதற்றுரையேயன்றிப் பிறிதில்லை யென்றொழிக.

இனி, பெரும்பாலைகள் ஏழாம், அவையாவன : செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. இவ்வேழும் ஏழிசைகளானும் இயல்வன ஆதலின் இவற்றைப் பெரும்பாலைகள் என்பர். இக்காலத்தே சம்பூரண இராகங்கள் என்பர்.

இப்பாலைப்பண்கள் ஆயப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை என நால்வகைப்படும். பழைய வுரையாசிரியர் ஈண்டு ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவை என்றது, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் எனக் குரல் முதலாகத் தாரமீறாக நிரல்பட்டு நின்ற இரண்டு நிரல்களை என்க. ஆயப்பாலை எனினும் நேரிசைப்பாலை எனினும் ஒக்கும் ஆயப்பாலைக்கு இசைகள் குரல் முதற் றாரமீறாக நிற்கும் என்பதனை, குரல் முதல் தாரம் இறுவாய்க் கிடந்த நிரல் ஏழும் செம்பாலை நேர் எனவரும் (அடியார்க்கு நல்லார் உரை ஆய்ச்சியர் குரவை - 14) என்பதனால் அறிக.

இனி, ஆயப்பாலையாய் நின்ற இவ்வீரேழ் கோவையை வட்டப் பாலையாக இயக்குங்கால் இவ் வேழுபாலைகளும் பன்னிருபாலைகளாக இயக்கப்படும். ஈண்டு அடிகளார் யாழாசிரியனின் புலமைத் திறத்தை இவ்வட்டப்பாலையை இயக்குமாற்றால் அறிவுறுத்துகின்றார். வட்டப்பாலைகள் பன்னிரண்டாம். அவை பன்னிரண்டிராசிகளிடத்தும் பிறப்பனவாகக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் இராசி மண்டிலங்கீறி அம்மண்டிலத்துள் ஏழு வீடுகளில் குரல் முதலிய ஏழிசைகளும் நிற்பனவாகவும் எஞ்சிய ஐந்து வீடுகளில் அந்தரக் கோல்கள் நிற்பனவாகவும் கருதிக் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளுங்கால் அவை இவ்வாறு நிற்கும்.

இனி இவையிற்றை யாழிற் கொள்ளுமிடத்து யாழினது (மேருவில்) தகைப்பில் இளியும் ஏனைய அதனைத் தொடர்ந்து நிற்பனவாகவும் தகைப்பினின்று இடபவிராசி முதலியன தொடர்ந்து நிற்பனவாகவும் கொள்ளப்படும்.

...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இளி      ---       விளரி   தாரம்   ----      குரல்     ---         துத்தம்  ---   கைக்கிளை உழை  ---
...

என, இங்ஙனம் கொள்க. கோடிட்ட இடங்கள் அந்தரக்கோல்களாகும்.

தாரத் தாக்கம்

72-81 : வன்மையில் ........... செம்பாலையாயது

(இதன்பொருள்) வன்மையில் கிடந்த தார பாகமும் - வட்டப் பாலையின் முடிவிடமாகிய வலிவியக்கில் நின்ற தாரம் என்னும் இசையணங்கிற்குரிய இரண்டலகில் ஓரலகினையும்; மென்மையில் கிடந்த குரலின் பாகமும் - அப்பாலை தொடங்குமிடமாகிய குரல் என்னும் இசைமகளுக்குரிய நாலலகில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கும் இடைநின்ற; மெய்க்கிளை நரம்பில் - அந்தரக் கோலிலே மூன்றலகுடைய இசையை உண்டாக்கிய வழி அவ்விடத்தில்; கைக்கிளை கொள்ள-கைக்கிளை என்னும் இசையணங்கு தோன்றா நிற்பள்; பொற்புடைத் தளராத் தாரம் - பொலிவும் வலிவுமுடைய அத்தாரம் என்னும் இசையன்னை; கைக்கிளை ஒழிந்த பாகமும் விளரிக்கீத்து - அக்கைக்கிளை கொண்டு தன்பால் எஞ்சி நின்ற ஓரலகையும் தன்மருங்கே நின்ற விளரி என்பாளுக்கு வழங்கிவிட்டு; கிளைவழிப்பட்டனள் - தன் மகள் இல்லத்தை எய்தினள்; அங்கே கிளையும் - அவ்வில்லத்து வாழ்ந்த உழை என்பாளும்; தன் கிளை அழிவுகண்டு அவள் வயின் சேர-தன் மகளாகிய குரல் என்பாள் தன தலகில் இரண்டலகை யிழந்து அழிந்தமையாலே அவளிருந்த வீட்டை எய்தினள்; ஏனை மகளிரும் கிளைவழிச் சேர - இங்ஙனமே எஞ்சிய இசைமகளிர் தாமும் தத்தம் கிளைஞர் இல்லத்தை எய்தா நிற்றலாலே; மேலது உழையுளி கீழது கைக்கிளை - பண்டு குரல் முதலாகநின்ற இசை நிரலிரண்டும் இம்மாற்றத்தாலே உழைமுதலாகக் கைக்கிளை இறுதியாக அமைந்து நிரலே மெலிவு நான்கும் சமன் ஏழும் வலிவு மூன்றுமாய் உழைமுதலாக; வம்புறுமரபில் செம்பாலை யாயது-புதியதொரு முறைமையாலே செம்பாலை முதலிய பண்கள் தோன்றுவன வாயின என்க.

(விளக்கம்) 72-81; வன்மையிற் கிடந்த என்பது தொடங்கி அடிகளார் தாரத்தாக்கம் கூறுகின்றார். தாரத் தாக்கமாவது - தார விசையிலிருந்து இசை நிரல்களை மாறுபடுத்திக் கொள்ளுமாறு இசைக்கரணம் என்க. (80) மேலது உழையிளி என்பது, மேலது என்னும் ஒருமையோடு பொருந்தாமையின் இப்பாடம் பிழைபட்ட பாடம் என்று தோன்றுகின்றது. ஆய்ச்சியர் குரவை-14 அரும்பதவுரையில் உழையிளி என்பது உழைக்குப் பெயர், என ஒரு குறிப்புக் காணப்படுதலின் அதுவே, உழையிளி என ஈண்டுத் திரித்து எழுதப்பட்டதாகக் கருத இடனுளது. அதற்குக் காரணம் எமது முன்னுரையிற் காண்க. இனி இஃது என் சொல்லியவாறோ எனின்:

பண்டு குரல் முதலாக நின்ற இசை நிரலின்கண் இறுதியில் நின்ற தாரத்தில் ஓரலகையும் தொடக்கத்தில் நின்ற குரலில் இரண்டலகையும் கூட்டி இரண்டற்கு மிடையே மூன்றலகுடைய கைக்கிளை யிசையைத் தோற்றுவித்தக்கால் தார இசை அழிவுறும். மேனின்ற விளரி தாரத்தில் எஞ்சிய ஓரலகைப்பெற்றுத் துத்தமாகும்; இளி குரலாகும், உழை தாரமாகும், பண்டைக் கைக்கிளை விளரியாகும், துத்தம் இளியாகும், உழைகுரலாகும். இங்ஙனமாதற்கு இவற்றின் அலகுகளும் பொருந்துதலுணர்க. இதன் பயன் ஒவ்வோரிசையையும் ஐந்திடம் மேலேற்றி நிறுத்துதல் என்க. இதனை இக்காலத்தார் ச-ப, முறை என்பர். பண்டைக் காலத்தே வண்ணப்பட்டடை வைத்தல் என்ப. ஈண்டு அடிகளார் இசைகளை மகளிராக உருவகித்து அழகுற ஓதியுள்ளமை உணரற்பாலதாம்.

இசை திரிந்தவழிப் பாலைகள் திரிதல்

82-89 : இறுதியாதி ......... கிடக்கையின்

(இதன்பொருள்) இறுதி ஆதியாக ஆங்கு அவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது-ஈற்றில் நின்ற (தாரத்தாக்கத்தாலே) கைக்கிளை முதலாக இடமுறைப்பாலைகளுக்கு நூல் கூறிய முறைக் கிணங்க அவ்வவ்விசைகள் தாம்தாம் பெறுவதற் கியன்ற முறைமையாலே வந்த தன்மையில் நீங்காமல்; படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என - கைக்கிளை துத்தம் குரல் என்னும் மூன்றிசைகளும் நிரலே படுமலைப் பாலையாகவும் செவ்வழிப் பாலையாகவும் அடுத்துக் கூறப்படுகின்ற அரும்பாலையாகவும்; குரல் குரலாகத் தற்கிழமை திரிந்தபின் - ஒவ்வொன்றும் குரலாகத் தனக்குத் தனக்குரிய பாலைகளாகத் திரிவு பெற்ற பின்னர் (ஆங்கு); முன்னதன் வகையே - அவ்விடத்தே முன் போலவே; இளி முதலாகிய எதிர்படு கிழமையும் - எஞ்சிய இளி முதலிய மூன்றிசைகளும் இடமுறைப் பாலைகளுக்குத் தமக்குரிய முறையாலே; கோடி விளரி மேற்செம்பாலை என - இளிகுரலாக மேற் செம்பாலையும் விளரி குரலாக விளரிப்பாலையும் தாரம் குரலாகக் கோடிப்பாலையும் ஆகத் திரிந்தன; நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் - இவ்வாறு படுமலைப்பாலை முதலாக மேற் செம்பாலை ஈறாகத் தொடர்ந்து கிடந்த இசைத் தொடரையுடைய யாழினிடத்தே என்க.

(விளக்கம்) இறுதி (பண்டு தாரம்) இப்பொழுது கைக்கிளை - ஈறு முதலாக எனவே, இவை இடமுறைப்பாலைகள் என்பது பெற்றாம். செம்பாலை முதலியன இடமுறையினும் வலமுறையினும் ஒரேவகையாகத் தொடர்ந்து வருதலை இதனாலறியலாம். இங்ஙனம் வருதலையே அடிகளார் வம்புறுமரபு என்றார் இஃதுணராது அடிகளார் ஈண்டுக் கூறியது வலமுறைப்பாலை என்பார் உரை போலியாம். இனி இவ்வாறு தாரத் தாக்கம் பெற்றபின்னர் இராசி மண்டலத்தில் இசைகள் மாறி நிற்பதனைக் கீழே காட்டிய இவ்விராசி மண்டிலத்தே காண்க.

...
  --        இணை  ---        ---    இணை  ---     இணை     ---      இணை  ---      ---       இணை
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்     துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி   விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  ------  ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
...

இன்னும் இப்பாலைகளினியல்பை ஆய்ச்சியர் குரவையில் விளக்குதும். ஆண்டுக் காண்க.

இணை நரம்பும் இயக்கும் மரபும்

90-94 : இணை நரம்புடையன ........ புலமையோனுடன்

(இதன்பொருள்) இணைநரம்பு உடையன அணைவுறக்கொண்டு - இந்த ஈரேழ் கோவையில் இணையிசையுடைய இசைகட்கு அவ்வவற்றிற்குரிய இணையிசையையும் இயைத்துக் கொண்டு; ஆங்கு - அவ்வழி, யாழ் மேற் பாலை இடமுறை மெலிய - யாழாசிரியன் தனது யாழின்கண் இயக்கும் அரும்பாலை முதலிய பாலைகளை இடமுறைப் பாலைகளாக இசைத்துச் செல்லாநிற்ப, குழல்மேல் கோடி வலமுறை வலிய-குழலோன் கோடிப்பாலை முதலிய பாலைகளைத் தனது குழலின்கண் வலமுறையாக இசைத்துச் செல்ல; வலிவும் சமனும் மெலிவும் எல்லாம் - வலிவியக்கும் சமனியக்கும் மெலிவியக்கும் என்று கூறப்படுகின்ற மூவகை யியக்கங்களை யுடைய இசைக் கூறுபாடுகளுக்கு எல்லாம்; பொலியக் கோத்த புலமையோனுடன் - நரப்படைவு கெடாமலும் பண்ணீர்மை முதலாயின கெடாமலும் அழகுறப் புணர்க்கவல்லனாய் இசை செய்யவல்ல யாழாசிரியனும் என்க.

(விளக்கம்) 90. இணை நரம்பு - இணைந்து நிற்கும் இரண்டிசைகள். முதலும் முடிவுமாய் நிற்கும் இசையுமாம். இணைநரம்பு எனினும் இணையிசை எனினும் இரட்டை யிசை எனினும் ஒக்கும். இணைகரம் புடையன அணைவுறக் கொண்டெனவே செம்பாலை முதலிய பெரும் பாலைகட்கு ஈற்றினும் தொடங்கிய இசை புணர்க்கப்படும் என்பது பெற்றாம்; மேலும் இணைநரம்பில்ல தனவும் சிலவுள என்பது பெற்றாம். அவை குரலும் இளியுமாம் என்பது பழையவுரையாசிரியர் உரையினாற் பெற்றாம். அது வருமாறு : இணைநரம்புடையன அணைவுறக் கொண்டாங்கென்றது. இப் பதினாற்கோவைப்பாலை நிலையினும் பண்ணுநிலையினும் இரட்டித்த குரல் குரலாகிய அரும்பாலையும், இளிகுரலாகிய மேற் செம்பாலையும்போல அல்லாத ஐந்துபாலையும் உழைகுரலாகச் செம்பாலைக்கு உழை பெய்தும் கைக்கிளை குரலாகப் படுமலைப் பாலைக்குக் கைக்கிளை பெய்தும் துத்தம் குரலாகச் செவ்வழிப் பாலைக்குத் துத்தம் பெய்தும் தாரம் குரலாகக் கோடிப்பாலைக்குத் தாரம் பெய்தும் பாடப்படும் என்றவாறு எனவரும்.

எனவே, குரலும் இளியும் இரட்டிக்கும் என்பது பெற்றாம். பெறவே யாழோன் தாரத்தாக்கத்தால் குரல் குரலாகிய அரும்பாலையிற் றொடங்கி நிரலே கோடிப்பாலை முதலியவற்றைத் தொடர்ந்து இடமுறையாக இசைத்து முடிக்கும்பொழுது அரும்பாலையிலே முடிப்பான் என்பதும் இங்ஙனமே குழலோன் தாரத்தாக்கஞ் செய்யப்படாது நின்ற இளிகுரலாகிய கோடிப்பாலையிற் றொடங்கி விளரிப்பாலை முதலியவற்றை நிரலே வலமுறைப்பாலைகளாக இடையிடையே இசைத்து இறுதியிலே தான் தொடங்கிய கோடிப்பாலையிலே முடிப்பான் என்பதும் பெற்றாம். பாலைநிலையில் இரட்டித்தலாவது - குரல் குரலாகவும் அக்குரலே தாரமாகவும் (ஈறாகவும்) கோடலாம். பண்ணுநிலையிலே இரட்டித்தலாவது அரும்பாலையிலே தொடங்கி முடிக்கும்பொழுதும் அரும்பாலையிலே முடித்தலாம். குழலோன் திறத்திலும் இளியும் கோடிப்பாலையும் இங்ஙனமே இரட்டும் என்க. இக்கருத்தறியாமல் விபுலானந்தர் தமது யாழ் நூலின்கண் இப்பகுதியில் பழையவுரையாசிரியர் மயங்கினார் எனத் தமது மயக்கத்தை அவ்வாசிரியர்பால் ஏற்றினர். இனி யாழோனும் குழலோனும் மாறி மாறி இடமுறையானும் (அவரோகணத்தானும்) வலமுறையானும் (ஆரோகணத்தானும்) மாறி மாறி இயக்குங்காலத்தே பாலைகள் கீழ் வருமாறு பிறப்பனவாம்.

யாழோன், இடமுறை குழலோன், வலமுறை

குரல்-அரும்பாலை .................
தாரம்-கோடிப்பாலை இளி-கோடிப்பாலை
விளரி-விளரிப்பாலை விளரி- விளரிப்பாலை
இளி-மேற்செம்பாலை தாரம்-மேற்செம்பாலை
உழை-செம்பாலை குரல்-செம்பாலை
கைக்கிளை-படுமலைப்பாலை துத்தம்-செவ்வழிப்பாலை
துத்தம்-செவ்வழிப்பாலை கைக்கிளை-படுமலைப்பாலை
குரல்-அரும்பாலை உழை-அரும்பாலை
...........  இளி-கோடிப்பாலை

இப்பாலைகள் வலமுறையானும் இடமுறையானும் ஒன்றிவந்து முதலும் முடிவும் இணைந்து வட்டமாய் முடிவதனைக் கூர்ந்துணர்க. அந்தரக்கோல்களை இயக்கியவழி அவையைந்தும் பிறக்கும் என்க.

இனி அடிகளார் கூறியாங்குத் தாரத்தாக்கம் செய்து இணை நரம்பு அணைவுறக் கொள்ளுங்கால் அவை இராசி மண்டிலத்தே-இவ்வாறமையும்.

...
இடபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு  மகரம்  கும்பம்  மீனம்  மேடம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
குரல்    துத்தம்  துத்தம்  கைக்கி கைக்கி உழை  உழை       இளி    விளரி   விளரி   தாரம்   தாரம்
-------  -------  -----   ------- ------  ------ ----------  ------  -----   -------  ------   -------
  --      அந்தரம்  ---        ---   அந்தரம்  ---    அந்தரம்     ---     அந்தரம்  ---      ---      அந்தரம்
...

பண்டைக் காலத்தே குரல் முதலியனவாகக் கூறப்பட்ட இக்கேள்விகள் இக்காலத்தே சட்சம் முதலிய பெயர்பெற்று நிற்றலைக் காணலாம். பெயர் மாற்றமேயன்றிப் பிற மாறுபாடில்லை. அவை:

குரல்          சட்சம்

துத்தத்தினந்தரம்          சுத்த இடபம்
துத்தம்          சதுசுருதி இடபம்
கைக்கிளை          சாதாரண காந்தாரம்
கைக்கிளையினந்தரம்   அந்தர காந்தாரம்
உழை           சுத்தமத்திமம்
உழையினந்தரம்           பிரதிமத்திமம்
இளி           பஞ்சமம்
விளரியந்தரம்           சுத்ததைவதம்
விளரி           சதுசுருதி தைவதம்
தாரம்           கைசிகி நிடாதம்
தாரத்தினந்தரம்           காகலி நிடாதம்
குரல்            சட்சம்

எனநிற்கும்.

இவற்றை நோக்கின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நந் தமிழிசை இற்றைநாள் இருந்தவாறே இருந்தவுண்மை தெரியவரும்.

இனி மேலே காட்டிய இசைகளில் அந்தரங்களை நீக்கிப் பன்னிருகால் தாரத்தாக்கம் செய்துழி 12*7: 84-ம் இறுதியில் இணைக்கும் பாலைகள் பன்னிரண்டும் இயல்பினமைந்த பாலை ஏழுமாய்ப் பண்கள் நூற்றுமூன்றாதலறிக. இவ்வாறன்றிப் பிறவாற்றானும் கூட்டித் தொகை செய்வாருமுளர்.

அரங்கின் அமைதி

95-113 : எண்ணிய நூலோர் ......... அரங்கத்து

(இதன் பொருள்) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு - ஆராய்ந்து வரையப்பட்ட சிற்ப நூலாசிரியர் இலக்கணங்களிற் சிறிதும் வழுவாதபடி நாடகவரங்கம் அமைத்தற்கு முதற்கண் நிலத்தை ஓரிடத்தே வரையறை செய்துகொண்டு; புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்இடை ஒருசாண் வளர்ந்ததுகொண்டு-பொதியின் மலை முதலாய புண்ணியமுடைய மலைப்பக்கங்களிலே நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிடத்தே ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒருசாணீளமுடைத்தாக வளர்ந்த பகுதியைக் கைக்கொண்டு; நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் இருபத்து நால் விரல் ஆக-சிற்ப நூல்களில் விதித்தமுறைப் படி அரங்கம் அமைத்தற்கு நிலம் அளக்கின்ற கோல் தலையாய வளர்ச்சியை யுடையவன் கைப்பெருவிரல் இருபத்துநாலு கொண்டது ஒருகோலாக நறுக்கி; எழுகோல் அகலத்து எண் கோள் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி-இக் கோலால் எழுகோல் அகலமும் எண்கோல் நீளமும் ஒருகோல் குறட்டுயரமும் உடையதாய்; உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நால்கோல் ஆக-தூணின்மிசை வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலாக உயரங் கொண்டு; ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய - இத்தன்மையவாகிய அளவிற்குப் பொருந்தவமைத்த இரண்டு வாயில்களுடனே விளங்கும்படி; தோற்றிய அரங்கில் செய்யப்பட்ட அவ்வரங்கினிடத்தே; தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல் நிலை வைத்து-கண்டோரெல்லாம் கைகுவித்து வணங்கிப் புகழுமாறு நால்வகை - வருணப்பூதரையும் ஓவியமாக வரைந்து மேலிடத்தே வைத்து, தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து - தூண்களின் நிழல நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் விழாமற் புறத்தே விழுமாறு மாண்புடைய நிலைவிளக்கினை நிறுத்தி; ஆங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்து ஆங்கு - இடத்தூணிலையிடத்தே உருவு திரையாக ஒருமுக எழினியும் இரண்டு வலத்தூணிடத்தும் உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத் திரையாகக்  கரந்துவரல் எழினியும் செயற்றிறத்தோடே வகுத்து; ஓவிய விதானத்து - ஓவியம் பொறிக்கப்பட்ட விதானத்தையும் உடைத்தாக; உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழ்பெற்ற முத்துக்களாலியன்ற சரியும் தூக்கும் தாமமு மாகிய மாலைகளைத் தூங்கவிட்டு; விருந்து படக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து - புதுமை யுடைத்தாக அமைக்கப்பட்ட செயற்கரிய தொழில் மாண்புடைய அவ்வரங்கத்தின்கண்ணே, என்க.

(விளக்கம்) (95) நூலோர் என்றது சிற்ப நூல்வல்லோரை, அவர் தாமும் அரங்கு செய்தற்கு நிலங்கொள்ளுங்கால் தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும் குளனும் காவுமுதலாகவுடையன நீக்கி, அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண், நாற்றமும் மதுரநாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும் உமியும் பரலும் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச் சாம்பல்தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகள் எதிர்முகமாக்கிக் கொள்ளல்வேண்டும் என்க.

இவற்றை:-

தந்திரத் தரங்கிங் கியற்றுங் காலை
அறனழித் தியற்றா வழகுடைத் தாகி
நிறைகுழிப் பூழி குழிநிறை வாற்றி
நாற்றமும் சுவையு மதுரமு மாய்க்கனம்
தோற்றிய திண்மை சுவட துடைத்தாய்
என்புமி கூர்ங்கல் களியுவ ரீளை
துன்ப நீறு துகளிவை யின்றி
ஊரகத் தாகி யுளைமான் பூண்ட
தேரகத் தோடுந் தெருவுமுக நோக்கிக்
கோடல் வேண்டு மாடரங் கதுவே

எனவரும் நூற்பாவான் உணர்க.

இனி நிலந்தான் வன்பால் மென்பால் இடைப்பாலென்று மூன்று வகைப்படும். வன்பாலாவது - குழியின் மண் மிகுவது; மென்பாலாவது - குறைவது; இடைப்பாலாவது - ஒப்பு. இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.

இனி, இதன்கண் நாற்றம் - மண்ணினது நாற்றம்; சுவையும் மண்ணினது சுவையே என்றறிக. மதுரம் - இனிப்பு. மண் இனிப்புச் சுவையுடைத்தாதல் வேண்டும்; வேறு சுவைகள் தீமை பயப்பன என்ப; இதனை,

உவர்ப்பிற் கலக்கமாம் கைப்பின்வருங் கேடு
துவர்ப்பிற் பயமாஞ் சுவைகள் - அவற்றிற்
புளிநோய் பசிகாழ்ப்புப் பூங்கொடியே தித்திப்
பனிபெருகு மாவ தரங்கு

எனவரும் வெண்பாவா னறிக.

இனி, நாற்றம் என்பன கொள்ளிலை, செந்நெல், சண்பகம், சுரபுன்னை என்னும் இவற்றைப்போல் நாற்றமுடைய நிலம் சிறப்பாகும் என்ப. மற்றவை தீமைப்பால என்ப.

97. புண்ணிய நெடுவரை என்றது - பொதியின் மலைபோன்ற கடவுட் டன்மையுடைய மலைகளை.

100. விரல் - ஈண்டுக் கழிய நெடுமையும் கழியக் குறுமையு மில்லாத ஆடவர் கைப்பெருவிரல் என்க. இதனை,

ஒத்த வணுமுத லுயர்ந்துவரு கணக்கின்
உத்தமன் பெருவிரல் இருபத்து நாலுன
கோலே கோடல் குறியறிந் தோரே  - பரதசேனாபதியார்.

எனும் நூற்பாவான் உணர்க.

இனி, அரங்கின் அகலம் நீளம் உயரம் இவற்றின் அளவுகளை,

அக்கோல் ஏழகன் றெட்டு நீண்டும்
ஒப்பால் உயர்வு மொருகோ லாகும்  - செயிற்றியனார்.

என்பதனாலும், இத்தகைய அரங்கிற்கேற்ற வாயில்களின் உயரத்தை,

நற்கோல் வேந்தன் நயக்குறு வாயில்
முக்கோல் தானு முயரவு முரித்தே  - செயிற்றியனார்.

என்பதனானும் அறிக.

105. அரங்கிற்குட் புகவும் புறப்படவும் இரண்டு வாயில் வேண்டுதலின் வாயில் இரண்டுடன் என்றார். ஏற்ற என்பதனை ஆண்டைக்குப் பொருந்திய இடங்கள் பிறவற்றையும் என்று பொருள்கொண்டு அடியார்க்குநல்லார் கரந்து போக்கிடனும் கண்ணுளர் (கூத்தர்) குடிஞைப் பள்ளியும் அரங்கமும் அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும் இவற்றினைச் சூழ்ந்த புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயினவும் கொள்க என்பர்.

106. தோற்றிய - செய்யப்பட்ட. தொழுதனர்; முற்றெச்சம். காண்போர் யாவரும் தொழுது ஏத்த என்றவாறு.

107. பூதர் - வருணப்பூதர், அவர் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்தகேசுரன் எனப்படுவார். இப்பூதர் நால்வரும் நிரலே நால்வகை வருணத்திற்கும் உரியர் என்ப. இப்பூதர்களின் உண்டியும் அணியும் ஆடையும் மாலையும் பிறவும் அழற்படு காதைக் கண் விளக்கமாகக் கூறப்படும். இங்ஙனம் பூதமெழுதி வைத்தலை,

கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங்கு
ஆடுநர்க் கியற்றும் அரங்கின் நெற்றிமிசை
வழுவில் பூத நான்கு முறைப்பட
எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே

எனவரும் நூற்பாவான் உணர்க.

108. புறத்தேயுள்ள விளக்குக் காரணமாக அரங்கின்கண் தூணிழல் வீழ்தலியல்பாகலின் அந்நிழலை அகற்றுதற் பொருட்டு அகத்தே நிலைவிளக்கு வைக்கப்படுமாதலின் தூணிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து என்றார்.

109. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்பன திரைச்சீலைகளின் வகை. இவற்றுள் ஒருமுக எழினி என்பது இடத்தூணிடத்தே தூங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத் தூண் காறுஞ் சென்று மறைப்பது என்றும், பொருமுக எழினி என்பது வலத்தூண்கள் இரண்டின் மருங்கும் தூங்கவிடப்பட்ட இரண்டு திரைகள் என்றும், இவை உருவிய வழி இரண்டு பக்கலினுமிருந்து வந்து நடுவண் ஒன்றனோடொன்று இணையும் என்பதும் கரந்துவரல் எழினி என்பது கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்து நின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த திரைச்சீலை என்றும் பழையவுரையாசிரியர் உரைகளால் ஊகிக்கலாம்.

விதானம்-பந்தல். இப்பந்தலின்கண் ஓவியமெழுதி அழகுசெய்யப்படுதலின் சித்திரவிதானம் எனப்பட்டது.

111. உரைபெறு நித்திலத்து என்புழி உரை - புகழ்.

112. மாலை, தாமம், வளை என்பன முத்துமாலை வகைகள். இவற்றை நிரலே சரி, தூக்கு, தாமம் என்பர் அடியார்க்குநல்லார்.

113. விருந்து - புதுமை.

தலைக்கோல் அமைதி

114-128 : பேரிசை மன்னர் .......... வைத்தாங்கு

(இதன்பொருள்) பேரிமை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெள்குடை காம்பு நனி கொண்டு - பெரிய புகழையுடைய அரசர் எதிர்ந்து வந்து போர் செய்து ஆற்றாமையால் புறமிட்டு ஓடிய விடத்தே அவர் விட்டுப்போன அழகிய இயல்பினையுடைய அவருடைய வெண்கொற்றக் குடையினது காம்பினை நன்கு தலைக்கோலாக நறுக்கி எடுத்து; கண் இடை நவமணி ஒழுக்கி - கணுக்கள் தோறும் ஒன்பான்வகை மணிகளை ஒழுங்குறப் பதித்து; மண்ணிய நாவலம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - தூய்மை செய்த சாம்பூநதம் என்னும் பொன் தகட்டினாலே கணுக்கட்கு இடையிலுள்ள பகுதியை எதிர் எதிராக (வலம் புரியும் இடம் புரியுமாகச்) சுற்றிக்கட்டி; காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் ஆக என-சோழ மன்னனுடைய அரண்மனைக்கண் காப்பமைத்து வைத்து இக்கோல் இந்திரன் மகன் சயந்தன் ஆகுக என்று நினைத்து; வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் - மறை மொழியாலே வாழ்த்தி வழிபடப் பெற்ற அந்தத் தலைக்கோலை; பொற் குடத்துப் புண்ணிய நல்நீர் ஏந்தி மண்ணிய பின்னர் - பொன்னாலியன்ற குடத்தின்கண் புண்ணியம் பயக்கும் காவிரியாற்றின் நீரை முகந்து கொணர்ந்து நீராட்டிப் பின்பு; மாலை அணிந்து - மலர் மாலை சூட்டி; நலம் தரும் நாளால் - இச்சடங்கிற்குப் பொருந்திய நல்ல நாளில்; பொலம் பூண் ஓடை அரசு உவா தடக்கையில் பரசினர் கொண்டு-பொன்னாற் செய்த பூண்களையும் பட்டத்தையுமுடைய பட்டவருத்தனமென்னும் அரச யானையினது கையில் வாழ்த்துடனே கொடுத்து; முரசு எழுந்து இயம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்-வீர முரசு முதலியன மூன்று முரசுகளும் ஒரு சேர எழுந்து முழங்கவும், இன்னிசைக் கருவிகள் பலவும் ஒரு சேர முழங்கவும் அரசனும் அவனோடு தொடர்புடைய அமைச்சர் முதலிய ஐம்பெருங் குழவினோடும்; அப் பட்டத்தி யானையோடும் தேர்வலம் செய்து - அணி செய்து மறுகிலே நிறுத்தப்பட்டுள்ள தேரினை வலம்வந்து; கவி கைக்கொடுப்ப - அத் தேர் மிசை நின்ற கவிஞனின் கையிலே அத்தலைக்கோலை அளிப்ப; ஊர்வலம் செய்து புகுந்து முன் வைத்து ஆங்கு - அக்கவிஞன்றானும் மன்னர் முதலியவரோடே ஊர்வலமாக வந்து அரங்கின்கட் புகுந்து அத்தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின்னர், என்க.

(விளக்கம்) 114-5. பேரிசை மன்னர் என்றது பண்டு பற்பல போர்களினும் பகைவென்று வாகை சூடிப் பெரும்புகழ்படைத்திருந்த மன்னரை என்பதுபட நின்றது.

115. சீரியல் வெண்குடை என்றது - குடை மங்கலம் என்பது தோன்ற நின்றது, அஃதாவது:

தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா வெந் நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம், இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ்.... கோவாய் உயர்த்த குடை எனவரும், (புறப் - வெண்பா 222) பேரிசை மன்னர் என்றதற்கேற்பக் குடைக்கும் மங்கலம் கூறுவார் சீரியல் வெண்குடை என்றார்.

இனி, பேரிசை மன்னராகிய பகைவர் எயிற்புறத்து மிளைக்கண் கொண்ட மூங்கில் எனினுமாம் என்பார் அடியார்க்குநல்லார்.

இங்ஙனம் கூறியது ஆடுதற்குரிய கூத்து வேத்தியல் ஆதலின் பொதுவியலுக்கு மலையிற் கொண்ட மூங்கிலே அமையும் என்பர்.

116. நாவலம் பொலம்தகடு என்றது சாம்பூநதம் என்னும் பொன்னாலியன்ற தகட்டினை. பொற்றகட்டால் மலக்கமாகக் கட்டி என்பர் (அடியார்க்) மலக்கம் - மாறுபாடு; அஃதாவது வலமாகவும் இடமாகவும் சுற்றுதல் என்க.

119. இந்திரன் மகன் சயந்தன் என்பான் திருமுனி சாபத்தால் மண்ணிடை வந்து மூங்கிலாகித் தலைக்கோலுமாகிச் சாபநீங்கினன் என்பது வரலாறாகலின் தலைக்கோலை இந்திரன் மகனாக நினைத்து வழிபாடு செய்வது மரபாயிற்று.

120. இத்தலைக்கோலின் அளவினை,

புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு
கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரும் - எண்ணிய
நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை
நாளிற் றலைக்கோலை நாட்டு  - பரதசேனாபதியார்.

எனவரும் வெண்பாவா னுணர்க.

121. புண்ணிய நன்னீர் என்றது காவிரி முதலிய கடவுட்டன்மை யுடைய யாற்றுநீரை.

122. முற்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் அரங்கத்தின்கண்ணே இத்தலைக் கோலை வைத்துப் பொற்குடத்தால் நீராட்டிய பின் மாலைசூட்டி என்றியையு காண்க.

123. நலந்தரு நாள் என்றது ஆடற்கலைக்கு ஆக்கமான நலந்தரும் நன்னாள் என்றவாறு. அவை, பூராடம் கார்த்திகை பூரம் பரணி இரேவதி திருவாதிரை அவிட்டம் சித்திரை விசாகம் மகம் என்னும் இவை என்ப. நலந்தரு நாள் என்ற இலேசினால், இடபம் சிங்கம் துலாம் கற்கடகம் விருச்சிகம் மிதுனம் ஆகிய ஓரைகளும் கொள்க என்ப. என்னை?

பூராடங் கார்த்திகை பூரம் பரணிகலம்
சீராதி ரைஅவிட்டஞ் சித்திரையோ - டாருமுற
மாசி யிடப மரிதுலை வான்கடகம்
பேசிய தேள்மிதுனம் பேசு  - மதிவாணர்.

என்பவாகலான் என்க.

123. பொலம்பூணும் ஓடையும் என உம்மை விரித்தோதுக. ஓடை - முகபடாம்; பட்டம் என்பதுமது.

124. அரசுவா - பட்டத்தியானை. பரசினர் - முற்றெச்சம்.

125. முரசு எழுந்து இயம்ப பல்லியம் எழுந்து ஆர்ப்ப என ஒட்டுக. எழுந்து இயம்பல் - மிக்கு ஒருசேர முழங்குதல். பல் இயம் என்றது இன்னிசைக் கருவிகளை,

126. அரைசு: போலி. ஐம்பெருங்குழு - அமைச்சர் முதலிய ஐந்துவகையான அரசியற் சுற்றம்.

127. தேரை வலம் செய்து அதன்கணின்ற கவிஞன் கையிற் கொடுப்ப என்க.

128. அரங்கினுட் புகுந்து என்க. இதற்கு,

பிணியுங் கோளு நீங்கிய நாளால்
அணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநீ ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப்
பிண்ட முண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக்
கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
அரசுமுத லான வைம்பெருங் குழுவும்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப

என்றார் செயிற்றியனார் என, அடியார்க்குநல்லார் நூற்பா வொன்றனை எடுத்துக் காட்டியுள்ளார்.

அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு

129-142: இயல்பினின் .............. ஆமந்திரிகை

(இதன்பொருள்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்-அரசன் முதலியோர் யாவரும் தத்தம் தகுதிக்கேற்ற இருக்கைகளில் முறைமைப்படி அமர்ந்த பின்னர்; குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப-குயிலுவக் கருவியாளர் தாம் நிற்கக்கடவ முறைமை தோன்ற அவரவர்க் கியன்றவிடத்தே நிற்ப; வலக்கால் முன் மிதித் தேறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - நாடகக் கணிகையாகிய அரங்கேறுகின்ற மாதவி (அரங்கத்திலே கூத்தியர் வலக்கால் முற்பட இட்டேறிப் பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத்துத் தூணிடத்தே சேர்தல் மரபு என்பதுபற்றி) அவ்விடத்தே சேர்ந்து; இ நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி நூன் மரபிற் கிணங்க ஏறியவாறே இடத்தூண் நிலையிடமாகிய ஒருமுக வெழினியிடம் பற்றிய பழைய நெறியியற்கையையுடைய தோரிய மடந்தையரும்; சீர் இயல் பொலிய நீர் அல நீங்க வாரம் இரண்டும் வரிசையில் பாட - நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் இரண்டினையும் மரபுப்படி பாடாநிற்ப; பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - அத் தெய்வப்பாடலின் இறுதியிலே இசைத்தற்குரிய இன்னிசைக் கருவிகள் எல்லாம் கூடிநின்று இசையா நிற்கும்; (அவை, எவ்வாறிசைத்தனவோ வெனின்) குழல்வழி நின்றது யாழ்-வேய்ங் குழலிசை வழியே யாழ் இசை நின்றது; யாழ்வழி தண்ணுமை தக நின்றது - அந்த யாழிசைக்குத் தக தண்ணுமையாகிய மத்தளவிசை நின்றது; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவு - மத்தளவிசையின் பின்வழியே குடமுழா என்னும் கருவியின் இசை நின்றது; முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை-அம் முழவிசையோடு கூடிநின்று அவ்விசைக் கருவிகளின் இசைக் கூறுகளை ஆமந்திரிகை என்னும் கருவி அமைப்பதாயிற்று; என்க.

(விளக்கம்) 129. இயல்பினின் வழாஅ இருக்கை முறைமை என்றது அரசன் முதலியோர் அரங்கின் முன்னர் அவைக்கண் அவரவர் தகுதிக்கேற்ப வீற்றிருக்கும் முறைமையை என்க.

130. குயிலுவ மாக்கள் என்றது இடக்கை முதலிய தோற்கருவியாளரை. முறைமையிலே நிற்றலாவது. ஆடிடம் முக்கோல் ஆட்டுவார்க்கு ஒருகோல் பாடுநர்க் கொருகோல் குயிலுவர் நிலையிடம் ஒருகோல், என நாடக நூலிற் கூறிய முறைப்படி நிற்றல் என்க.

121-2. நாடகக் கணிகையர் அரங்கேறுங்கால் வலக்காலை முற்பட வைத்தேறி வலத்தூணிடத்தே நிற்றல் வேண்டும் என்பது நூல் வழக்கு ஆதலால் அவ்வழக்கிற் கிணங்க மாதவியும் ஏறினள் என்பது கருத்து.

133-4. மாதவி ஏறியவாறே தோரிய மகளிரும் தமக்கு நூல் கூறிய மரபிற்கேற்ப ஏறி இடத்தூணிடம் பற்றி நின்றனர் என்றவாறு.

தோரிய மகளிர் ஆவார் ஆடிமுதிர்ந்தவர் இதனை,

இந்நெறி வகையால் இடத்தூண் சேர்வோன்
தொன்னெறி மரபிற் றோரிய மகளே

எனவும்;

தலைக்கோல் அரிவை குணத்தொடு பொருந்தி
நலத்தகு பாடலு மாடலு மிக்கோள்
சொலப்படு கோதைத் தோரிய மகளே

எனவும், வரும் நூற்பாக்களானறிக.

135. சீரியல் பொலிய நிரல நீங்க என்பதற்குத் தாளவியல்பு பொலிவு பெறவும் அவதாளம் நீங்க எனவும் பொருள் கோடலுமாம்.

136. வாரம் இரண்டாவன - ஓரொற்றுவாரமும் ஈரொற்று வாரமுமாகிய செய்யுள் இரண்டுமாம். அவை தாளத்து ஒருமாத்திரையும் இரண்டுமாத்திரையும் பெற்றுவரும் என்பர். ஈண்டு வாரம் என்பது தெய்வப் பாடலை. அப்பாடலின் இறுதியிலே கூடிநின்றிசைக் கற்பாலனவாகிய கருவிகள் எல்லாம் இசைத்தன என்பது கருத்து.

தோரிய மகளிர் பாட என்றதனால் மிடற்றுப் பாடலும் கூறியவாறாயிற்று.

142. ஆமந்திரிகை - இடக்கை. இஃது இவ்விசைத் தொடரை முற்றுவிக்கும் ஒரு கருவிபோலும்.

இதுவுமது

« Last Edit: February 23, 2012, 11:46:39 AM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #5 on: February 23, 2012, 11:44:37 AM »
143-159 : ஆமந்திரிகை ........... காட்டினர் ஆதலின்

(இதன்பொருள்) ஆமந்திரிகையோடு அந்தரமின்றி - இந்த ஆமந்திரிகை இசையினோடே முன்சொன்ன குயிலுவக் கருவிகளின் இசையெல்லாம் பருந்தும் நிழலும்போல ஒன்றாய்நிற்ப; கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டில ஆகம்-ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக; கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட தேசியொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக்கூத்தை ஆடிமுடித்து; வந்த முறையின் வழிமுறை வழாமல் - இப்படிச் செய்தல் நாடக நூல்களின் அமைந்த முறைமையாகலான் அம்முறைமை வழுவாமல்; அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டென்னும் இவ்வொத்து ஆடிமுடித்த பின்னர்; மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பால்பட நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப்பண்ணாய் நரப்படைவு முடைத்தாயிருக்கிற பாலைப்பண்ணை அளவு கெடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேல்; நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து - மங்கலச் சொல்லையுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடிலாத உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் நன்கு அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி; மூன்று அளந்து ஒன்று கொட்டி - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஏகதாளத்திலே முடித்து; ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டிலநிலையால்; கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித்து ஒத்தலும இரட்டித்து ஒத்தலுமேயாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடிமுடித்து; ஆறும் நாலும் அம்முறை போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்தையும் தேசியில் ஒத்தைக் காட்டினாற்போல இரட்டிக் கிரட்டியாக ஆடி; கூறிய ஐந்தின் கொள்கைபோலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை - சொல்லிப் போந்த தேசிபோல வடுகும் மட்டதாள முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாகநிலையிலே ஆடிமுடித்த பின்னர்; பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்து என- பொலிவினை யுடையதொரு பொற்கொடியானது கூத்தாடினாற் போல; நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டிலும் நாட்டியம் என்னும் புறநடத்தை நூல்களில் சொன்ன முறைமை வழுவாமல் அவிநயங்காட்டிப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினாலினும் வழுவாமல் ஆடிக்காட்டினளாதலின் என்க.

(விளக்கம்) 143. அந்தரம் - இடையீடு; வேறுபாடு.

144. கொட்டு - பற்று. தேசிக்கூத்து பதினொரு பற்றுடையது என்பது இதனாற் பெற்றாம்.

146. போக்குதல் - செய்து முடித்தல்.

144. அந்தரக் கொட்டு, முகம், ஒத்து என்பன ஒருபொருள் குறித்தன. எனவே, கூத்தாடுவோர் தோற்றுவாய் செய்வது இவ்வந்தரக் கொட்டென்பது பெற்றாம். இக்கூத்தாடிய பின்னரே உருக் காட்டப்படும். ஈண்டு இசற்கு அடியார்க்குநல்லார் முகம் ஆடுதல் திரிலோகப் பொருட்டே என்றொரு நூற்பாவடியை எடுத்துக் காட்டினர்.

145. மீத்திறம்படுதல் - அளவு மிகுதல். வக்காணம்-ஆளத்தி, இதனை ஆலாபனை என இக்காலத்தார் வழங்குவர். இராகவாலாபனம் செய்வோர் அஃது அளவின் மிகுத்துழிக் கேட்போர் உணர்வு சலிக்குமாகலின், மீத்திறம்படாமை வக்காணம் வகுத்து என்றார்.

149. பாலைப்பண் - பெரும்பண் நான்கனுள் ஒன்று. என்னை?
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே

எனவரும் பிங்கல நிகண்டும் நோக்குக.

பாலைப்பண் - மங்கலப்பண்ணுமாம், குரல் முதல் தாரம் இறுவாய் நரப்படைவு முடைத்தாதல் பற்றிப் பாற்பட நின்ற பாலைப் பண் என்றார். பண்களுள் வைத்துச் சிறந்த பகுதிப்பண் என்பது கருத்து என்க.

150. நான்கு - ஈண்டு உக்கிரம், துருவை, ஆபோகம். பிங்கலை என்னும் உறுப்புக்கள் என்க. நான்குறுப்பிற் குறைந்தவை மங்கலத்துக்குப் பொருந்தாமையின் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து என விதந்தோதினர். நான்கின் ஒரீஇயவை என்க. அவை மூன்றுறுப்புடையன முதலியன மங்கலச் சொல்லையுடைத்தாய் உறுப்புக் குறைவிலதாய், உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து என்பது பட நன்கனம் அறிந்து என்றார்.

151. மூன்று - மூன்றொத்துடைய மட்டதாளம் - ஒன்று - ஓரொத்துடைய ஏகதாளம்.

152. ஐது - அழகிய. கொண்ட தேசிப் பகுதியெல்லாம் மண்டில நிலையின் வருதகவுடைத்தே என்பதுபற்றி ஐது.....போக்கி என்றார். கூடை - தேசிக்கூத்து ஒற்றித்தொத்தலும் இரட்டித் தொத்தலுமே உடைத்தாகலின் அவற்றையுடைய கூடை, (தேசி) என்க.

155. ஐந்து, ஆகுபெயர். தேசிக்கூத்து.

158. நாட்டிய நன்னூல்...... ஆதலின் என்பதற்கு இக்கதையிற் கூறிய முத்தமிழ் வகையையும் காட்டினாளாதலின் என்றுமாம் என்பர் பழைய உரையாசிரியரிருவரும்:

மாதவி சிறப்புப் பெறுதல்

149-163 : காவல் ......... பெற்றனள்

(இதன்பொருள்) காவல் வேந்தன் - மன்பதை காக்கும் அச்சோழ மன்னன்பால்; இலைப்பூங்கோதை - அவனது பசும் பொன்னாலியன்ற பச்சைமாலையுடனே, இயல்பினின் வழாமை - மாதவி தன் கூத்துக்கும் பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற முறையில் வழுவாமல்; தலைக்கோல் எய்தி - தலைக்கோலி என்னும் சிறப்புப் பெயரும் சூட்டப்பெற்று; தலையரங்கு ஏறி - முன்னரங்கு ஏறப்பெற்று; விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறை ஆகப் பெற்றனள் - நூலின்கண் விதித்துள்ள கோட்பாட்டிற்கிணங்க ஆயிரத்தெண் கழஞ்சு ஒருநாட் பரியமாகப் பெற்றனள்; என்க.

(விளக்கம்) 160. இலைத்தொழிலமைந்த பொன்னாலியன்ற மாலை என்க, இது மன்னனுடைய மாலை; இலைப் பூங்கோதை - மாதவி எனினுமாம். அரசனுடைய இலைப்பூங்கோதையின் மதிப்பு ஆயிரத்தெண் கழஞ்சு ஆதலால் அதனைப் பெறுமாற்றால் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றாள் என்பது கருத்தாகக் கொள்க. அதுவே நாடக மகளிர்க்கு ஒருநாட்பரியப் பொருளும் ஆகும் என்க. தலைக்கோல்- தலைக்கோல் என்னும் ஒரு சிறப்புப் பெயர். அது பெற்றவர் தலைக்கோலி என்று அழைக்கப்படுவர் என்பது கல்வெட்டுக்கள் வாயிலாய் அறியப்பட்டுளது.

முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்
எட்டொடு புணர்ந்த ஆயிரம் பொன்பெறுப

என்பது நாடக நூல் விதிமுறைக் கொள்கை என்க. ஆயிரம் பரிசத்திற்கும் எண்கழஞ்சு மெய்ப் போகத்தும் ஆக நிச்சயித்து என்க என்பர் அடியார்க்குநல்லார். எண்கழஞ்சு அழிவுக்குமாக என்பர் அரும்பத உரையாசிரியர்.

கோவலன் மாதவியை எய்துதல்

163-175 : அதுவே ......... மறந்தென்

(இதன்பொருள்) அதுவே - அவ்வளவு பொன்னே என்மகட்கு ஒருநாட் பரியம் என்று கருதி மாதவியின் தாய்; வீறுயர் நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த பசும்பொன் பெறுவது இந்த மாலையாம் - மாற்றற்ற ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னை விலையாகப் பெறுவது இந்த மாலையாகும். ஆகவே; மாலை வாங்குநர் நங்கொடிக்குச் சாலும் என - இம்மாலையை அவ்விலைக்கு வாங்கிச் சூட்டுவோர் மாதவியாகிய நங்கள் பூங்கொடிக்கு மணவாளப்பிள்ளையாதற்கு அமையும் என்றுகூறிக் கொடுத்தற் பொருட்டு; நகர நம்பியர் திரிதரு மறுகில் - அந்நகரத்துக் கொழுங்குடி மக்கள் வழங்குதற் கியன்றதொரு பெருந்தெருவிலே; மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக்கொடுத்து - மான்விழி போன்ற அழகிய நோக்குடையாள் ஒரு கூனியின் கையில் அந்த மாலையைக் கொடுத்து; பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த-விலைக்கு விற்பாரைப் போல்வதொரு பண்பினாலே அக்கூனியை நிறுத்தாநிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி-பெரிய தாமரை மலர்போன்ற அழகிய நெடிய கண்ணையுடைய மாதவியின் மாலையாகிய அந்த மாலையைக் கோவலன் அக்கூனி கூறிய அத்துணைப் பொன்னையும் கொடுத்து வாங்கி; கூனி தன்னொடு மணமனை புக்கு-அக்கூனியோடு சென்று அம்மாதவியை மணத்தற்கியன்ற அவள் மனையினுட் புகுந்து; மாதவி தன்னொடு அணையுறு வைகலின் - தான் விரும்பியவாறே அம் மாதவியை மணந்த அப்பொழுதே ஊழ்வினை காரணமாக அயர்ந்து மயங்கி; விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் - அம் மாதவியை விட்டுப்பிரிய வொண்ணாத விருப்பத்தை யுடையவனாயினன் ஆதலாலே; வடுநீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து-குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியாகிய கண்ணகியையும் தான் மேற்கொண்டிருந்த இல்லற வாழ்க்கையையும் துவர மறந்து அம் மாதவியின் மனையிலேயே வதிவானாயினன் என்க.

(விளக்கம்) 163. அதுவே என்றது அவ்வளவு பொன்னே அவட்குப் பரியமாகக் கருதி என்பதுபட நின்றது.

164-5. அப்பரியப் பொருளின் மிகுதி ஓதுபவர் உள்ளத்தே நன்கு புலப்படுதற் பொருட்டு அடிகளார் நூற்றுப்பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும் பொன் என விதந்தெடுத்தோதும் நயம் உணர்க. வீறுயர் - மற்றொன்றற் கில்லாத சிறப்பினால் உயர்ந்த மாற்றற்ற பசும்பொன் என்க. இம்மாலையின் விலை இது இதனை வாங்கிச் சூடுவோர் எங்கள் மாதவிக் கொடிபடர்தற்குக் கொள்கொம் பாகுவர் என்பது தோன்ற மாலை வாங்குநர் சாலும் நங்கொடிக்கு என்றார். என-என்று கூறிக்கொடுத்தற் பொருட்டு என்க. பாட்டிடை வைத்த குறிப்பினால் நிறுத்துதற்குச் சித்திராபதி என்னும் எழுவாய் பெய்து கூறுக. சாலும் என்ற பயனிலைக்கேற்ப மணமகனாதல் அமையும் என்று விரித்தோதுக.

167. மறுகிற் போவார் மயங்கி ஈதென்கொலோ என்று ஆராய்தற் பொருட்டுச் சித்திராபதி மானவர் நோக்குடையாளொரு கூனியைத் தேர்ந்து நிறுத்தினள் என்பது கருத்து.

168. வேறிடங்களில் அவ்வளவு பொன் கொடுப்பார் அரியர் என்பது தோன்ற நகர நம்பியர் திரிதரு மறுகில் என விதந்தோதினர்.

169. பகர்வனர் - விற்போர். பான்மை - பண்பு.

170. மாதவி ஆடிய கூத்தின்கண் அவள் கண்கள் கோவலன் நெஞ்ச முழுவதும் கவர்ந்துகொண்டன எனக் காரணம் தோன்ற மாமலர் நெடுங்கண் மாதவி மாலை என அடிகளார் விதந்தோதுகின்ற நயமுணர்க. அவனையன்றி மற்றொருவனை விரும்பிநோக்காத சிறப்புடைய கண் என்பது நினைந்து அடிகளார் மாமலர் நெடுங்கண் மாதவி என்று விதந்தனர் எனினுமாம்.

171. நல்லோர் நெறிபற்றி அவரொடு படர்தற்குரிய கோவலன் இங்ஙனம் மெய்யும் கோடிய ஒரு கூனியைப் பின்பற்றிக் கொடுநெறிக்கட் செல்வானாயினன் என்பது தோன்றக் கோவலன் வயந்தமாலையொடு புக்கு என்னாது, கூனி தன்னொடு புக்கு என்றார்.

172. மாதவியோடு அணைவுறுமப்பொழுதே தனது குடிப்பெருமையை அயர்ந்தனன் என்க. அவள்பால் மயங்கி என்றது வடுநீங்கு சிறப்பின் தன் மனையையும் அகத்தையும் மறந்து என்பதற்கு ஏதுவாய் நின்றது. அவள் மனையில் அவளோடு வதிவானாயினன் என்பது குறிப்புப் பொருள்.

வெண்பாவுரை

எண்ணும் எழுத்தும் ........ வந்து

(இதன்பொருள்) பூம்புகார்ப் பொற்றொடி - அழகிய புகார் நகரத்தே உருப்பசியாகிய மாதவி மரபின் வந்த பொன்வளையலணிந்த நாடகக் கணிகையாகிய மாதவி என்பாள்; ஆடு அரங்கின் வந்து - கூத்தாடுதற்கியன்ற அரங்கின்கண் புகுந்து; எண்ணும் எழுத்தும் - கணிதத்தின் சிறப்பினையும் எழுத்துக்களின் சிறப்பினையும் அவற்றாலாய; இயல் ஐந்தும் - இயற்றமிழின் ஐந்து கூறுபாட்டையும்; பண் நான்கும் - இசைத்தமிழுக்கியன்ற நால்வகைப் பண்களின் பெருமையினையும்; பண்ணின்ற - அப்பண்களோடுகூடிய; கூத்து பதினொன்றும் - பதினொருவகைக் கூத்துக்களையும் ஆடி; தன் வாக்கினால் - தனது மொழியாலே; மண்ணின் மேற் போக்கினாள் - பாடி இம்மண்ணுலக முழுதும் புகழும்படி செய்தனள்; என்க.

பா - நிலை மண்டிலம்

அரங்கேற்றுகாதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #6 on: February 23, 2012, 11:53:10 AM »
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு நூறுபத்தடுக்கி யெட்டுக் கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் விலையாகக் கொடுத்து வாங்கிக் கூனிதன்னொடு சென்று அம்மாதவி மனைபுகுந்து அணைவுறுதற்கியன்ற அந்த நாளினது அந்திமாலைப் பொழுது முதலிய கங்குற் பொழுதுகளை (நூலாசிரியர்) கிளந்தெடுத்துப் புனைந்தோதிய பகுதி என்றவாறு.

(விளக்கம்) கோவலனை ஆகூழ்காரணமாகப் பெற்ற மாதவிக்கும், போகூழ் காரணமாகப் பிரியலுற்ற கண்ணகிக்கும் அற்றை நாள் தொடங்கிப் பொழுது கழியுமாற்றை ஆசிரியர் இளங்கோவடிகளார் நம்மனோர்க்கு அறிவுறுத்தக் கருதித் தொடக்க நாளாகிய அந்த ஒரு நாளின் அந்திமாலை தொடங்கி இரவு கழிந்த தன்மையை மட்டும் விதந்தெடுத்துக் கூறுகின்றார். என்னை? ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் நியாயம் பற்றி இக்காவியம் ஓதுவோர் அவர்கள் வாழ்க்கைப் போக்கினை உணர்ந்து கோடல் எளிதாகலான் என்க. காமமானது மலரும்பொழுது அந்திமாலைப் பொழுதேயாகலின் அச்சிறப்புப்பற்றி அப்பெயர் பெற்றது இக்காதை; இது, சுருங்கக் கூறி விளங்கவைக்கும் ஓர் அழகாம் என்றுணர்க.

விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள்  5

முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி  10

வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு  15

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென  20

இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி  25

மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த  30

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு  35

குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப்  40

பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக்  45

காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்  50

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப  55

மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து  60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத்  65

துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து  70

விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்  75

காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும்  80

அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.

(வெண்பா)

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.

உரை

1-8: விரிகதிர் ............ அல்லற் காலை

(இதன்பொருள்) திரை நீர் ஆடை இருநில மடந்தை - அலையெறிகின்ற நீர்ப்பரப்பாகிய கடலை ஆடையாக உடுத்துள்ள பெரிய நிலமாகிய தெய்வ நங்கையானவள்; அரைசு கெடுத்து - தன் கொழுநனாகிய ஞாயிற்றுத் தேவனைக் காணப்பெறாமையாலே; திசைமுகம் பசந்து - திசைகளாகிய தனது நான்கு முகமும் பச்சை வெயிலாகிய பசப்பூரப்பெற்று; செம் மலர்க்கண்கள் முழு நீர் வார முழுமெயும் பனித்து - சிவந்த மலர்களாகிய தனது எண்ணிறந்த கண்களினெல்லாம் உள்ள நீர் முழுதும் சோரா நிற்பவும் தனது மெய்முழுதும் பனிப்பவும்; விரிகதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட ஒருதனித்திகிரி உரவோன் காணேன்-ஐயகோ! விரிகின்ற ஒளியாகிய தனது புகழை யாண்டும் பரப்பி உலக மனத்தையும் எஞ்சாது ஆட்சிசெய்தற்குக் காரணமான ஒற்றையாழியையுடைய ஆற்றல்மிக்க என் தலைவனைக் காண்கிலேனே; அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும் திங்கள் அம்செல்வன் யாண்டு உளன் கொல் - அதுவேயுமன்றி, அழகிய வான வெளியிலே அழகிய நிலவொளியை விரித்து விளையாட்டயருமியல்புடையவனும் இளவரசனும் ஆகிய திங்கள் என்னும் என் திருமகன்றானும் யாண்டிருக்கின்றனன் என்றும் அறிகின்றிலேனே என்று புலம்பி; அலம் வரும் அல்லல்காலை - மனஞ்சுழலா நின்ற இடுக்கட் பொழுதிலே, என்க.

(விளக்கம்) இருநிலமடந்தையானவள் கெடுத்துப் பசந்து வாரப் பனிப்பக் காணேன் யாண்டுளன் கொல்லோ என அலம் வரும் அல்லற் காலை என்று இயைத்திடுக.

இனி, (1-8:) ஈண்டு அடிகளார், நிலத்தை, மடந்தை யாகவும் ஞாயிற்றை அவள் கணவனாகவும், திங்களை அவள் மகனாகவும், உருவகித்துக் கூறுகின்றார் என்றுணர்க.

இக்காதையில் கண்ணகியார் கணவனைக் காணப்பெறாது அலம் வந்து அல்லலுறுகின்ற நிலையினை ஓதுதற்குப்புகுந்த அடிகளார் கருப் பொருளாகிய நிலம் ஞாயிறு முதலியவற்றினும் அப்பிரிவினையும் ஆற்றாமையையும் அவலச்சுவை கெழுமப் பாடுகின்ற நுணுக்கம் பெரிதும் உணர்ந்து மகிழற் பாலதாம்.

1. அரசன் என்பதற்கேற்ப - கதிர் என்பதனை - (ஒளி;) புகழ் எனவும் கூறிக்கொள்க. உலகம்; குறிஞ்சி முதலிய உலகங்கள் என்க. என்னை? அவற்றைக் காடுறையுலகமும் மைவரையுலகமும் எனத் தனித்தனி உலகம் என்றே வழங்குதல் உண்மையின் ஏழுலங்களையும் என்பர் பழைய உரையாசிரியர். இனி உலகம் முழுதும் ஆண்ட என்புழி முழுதும் என்பது எஞ்சாமைப் பொருட்டெனினுமாம். மேலே மெய்ம் முழுதும் பனிப்ப என்றாற்போல, முழுதும் என்பதன்கண் முற்றும்மை தொக்கது.

2. ஒரு தனித்திகிரி-ஒப்பற்ற ஒற்றைத்தேராழி, எனவும் ஆணைச் சக்கரம் எனவும் இருபொருளும் பயந்து நின்றது. உரவோன் - ஆற்றலோன், ஞாயிறும் மன்னனும் என இரு பொருளுங் கொள்க. விரிகதிர் என்பது தொடங்கி யாண்டுளன் என்னுந் துணையும் நிலமடந்தை கூற்று, 3-4; திங்களாகிய என்மகன் என்க. செல்வன்-மகன். அவன் இளைஞனாதலின் வானத்து அணி நிலா விரித்து விளையாடும் திங்கட் செல்வன் என விரித்தோதுக. 5-6. திசைமுகம் என்றமையான் நான்கு முகம் என்க. பசத்தல் - மகட்குப் பசலைபூத்தலும் நிலத்திற்கு பச்சை வெயிலால் பசுமையுறுதலும் ஆகும். செம்மலர் - செந்தாமரை முதலிய மலர்கள் - அல்லலுறுதல் பற்றி செம்மலர் என அடைபெய்தனர். மலர் என்பதற் கியைய, கள்+நீர்வார எனவும் மடந்தை என்பதற்கியைய, கண்கள்+நீர்வார எனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க முழு நீர் வார நீர் முழுதும் சொரிந்து வறள என்க. இது கடைகுறைந்து நின்றது. பனித்தல் என்பதற்கும், பனிபெய்யப் பெறுதல்; நடுங்குதல் என இருபொருளும் காண்க. 7. திரைநீர்; அன்மொழித் தொகை; கடல். 8. அரைசு போலி. இதுவும் கொழுநன் எனவும் ஞாயிறு எனவும் இருபொருள் பயக்கும். இப்பகுதியில் வருகின்ற உருவகஅணி சிலேடையணி முதலியன உணர்ந்து மகிழ்க.

9-12 : கறைகெழுகுடி மன்னரின்

(இதன்பொருள்) வலம்படு தானே மன்னர் இல் வழி - வெற்றி விளைக்கும் படைகளையுடைய முடிவேந்தர் இல்லாத அற்றம் பார்த்து; கறை கெழுகுடிகள் கைதலை வைப்ப - அந்நிலத்திலே தமக்குரிய கடமைப் பொருளை இறுத்தற்குப் பெரிதும் மனம் பொருந்தி வாழ்ந்த நற்குடிமக்கள் தமது கொடுங்கோன்மைக்கு ஆற்றாமல் கண்கலங்கி அழுது தலைமேலே கைவைத்து வருந்தும் படி; அறைபோகு குடிகளொடு ஒரு திறம்பற்றி - தம்மாற் கீழறுக்கப்பட்டுத் தமக்குத் துணையாகிய புன்குடிமக்களோடு ஒரு பகுதியைக் கைப்பற்றி அதுவழியாகப் புகுந்து; புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் - அந்நாட்டு விளைநிலனெல்லாம் அழிந்து படும்படி தங்கிய புதுவோராகிய குறுநில மன்னர்களைப்போன்று என்க.

(விளக்கம்) 9. கறை கெழுகுடிகள் இறை செலுத்துதற்குப் பொருந்திய நற்குடி மக்கள், கைதலைவைப்ப - வருந்த - காரணத்தைக் காரியமாக உபசரித்தார். என்னை? வருத்தமுறுவோர் தலையிலடித்துக் கோடல் இயல்பாகலின் என்க. இதற்குத் துயர் உறுதல் என்னும் பொருள் நிகழ்ச்சியைத் தலைமேல் கைவைக்க வென்னும் தொழில் நிகழ்ச்சியாற் கூறினார் என்பர் (பழையவுரை) யாசிரியர், 10-அறைபோகு குடிகள் பகை மன்னரால் கீழறுக்கப்பட்டு அவர் வயப்பட்ட புன்குடிகள், ஒரு திறம் - ஒரு திசை. மாலைப்பொழுது மேற்றிசையினின்று உலகிற்புகுதலும் குறுநில மன்னர் யாதானுமோர் உபாயம்பற்றிப் புகுதலும் பற்றிப் பொதுவாக ஒருதிறம்பற்றி என்றார். புலம்-ஈண்டு விளைநிலம்: இறுத்தல்-வந்து கால் கொள்ளுதல். வலம்படுதானை மன்னர் இல்வழி என்றமையால் ஈண்டு விருந்தின் மன்னர் என்றது அந்நாட்டிற்குப் புதியவராகிய குறுநில மன்னர் என்பது பெற்றாம். மன்னரின் - என்புழி ஐந்தனுருபு உறழ்பொருட்டு.

13-20: தாழ்துணை துறந்தோர் .............. இறுத்தென

(இதன்பொருள்) தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த - தம் மனத்தே தங்கியிருக்கின்ற கொழுநரைப் பிரிந்திருக்கின்ற மகளிர் கறைகெழு குடிகள் போன்று ஒடுங்கித் தனிமையினால் வருந் துயரத்தை எய்தா நிற்பவும்; காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த - தங்காதலரைப் புணர்ந்திருக்கின்ற மகளிர் அறை போகுகுடிகள் போன்று தருக்கி மகிழ்ந்து இன்பமெய்தா நிற்பவும்; குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத-வேய்ங்குழலிலே வளர்கின்ற முல்லை என்னும் பண்ணிலே ஆயரும், மகளிர் கூந்தலிலே வளர்கின்ற முல்லை மலரிலே இனிதாக முரலுகின்ற தும்பியும் வாய்வைத்து ஊதா நிற்பவும்; சிறுகால் செல்வன் அரும்பு பொதிவாசம் அறுகால் குறும்பு எறிந்து மறுகில்தூற்ற - இளைய தென்றலாகிய செல்வன் முல்லை மல்லிகை இவற்றின் நாளரும்புகள் தம்மகத்தே பொதிந்து வைத்துள்ள நறுமணத்தை அவை முகமலர்ந்து ஈதற்கு முன்னே தாமே கால்களாற் கிண்டிக் கவராநின்ற வண்டுகளாகிய பகையைக் கடிந்தோட்டி அளந்து கொடுபோய் நகர மறுகுகள் எங்கும் பரப்பா நிற்பவும்; எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப-ஒளியுடைய வளையலணிந்த மகளிர்கள் இல்லங்கள்தோறும் அழகிய விளக்குகளை ஏற்றித் தொழா நிற்பவும்; மல்லல்மூதூர் மாலை வந்து இறுத்தென - வளமிக்க பழைமையான அப் புகார் நகரத்தே அந்திமாலைப் பொழுது என்னும் குறும்பு வந்துவிட்டதாக என்க.

(விளக்கம்) 13 - தாழ்துணை: வினைத்தொகை. தாழ்தல் - தங்கியிருத்தல். துணை-கொழுநர். களி மகிழ்வு - வினைத்தொகை. களித்து மகிழ. அஃதாவது தருக்கி மகிழவென்க. 15-16 குழல்-வேய்ங்குழல்; கூந்தல். இரட்டுற மொழிதல் என்னும் உத்திபற்றிக் கோவலர்க்கு வேய்ங்குழல் என்றும் தும்பிக்கு மகளிர் கூந்தல் என்றும், நிரலே வளர் முல்லை என்பதற்கு ஆரோசையாக வளர்கின்ற முல்லைப்பண் என்றும் வளர்கின்ற முல்லையினது மலர் என்றும் ஏற்ற பெற்றி பொருள் கூறிக் கொள்க. மழலைத் துபி இன்னிசை முரல்கின்ற தும்பி என்க. தும்பி-வண்டுவகையினுள் ஒன்று.

இனி, வேய்ங்குழலினும் முல்லையினும் கோவலரொடு தும்பி வாய் வைத்தூத என நிரனிறையாகக் கோடலுமாம் 16. அறுகால் : அன் மொழித் தொகை; வண்டு. வண்டைக் குறும்பென்றார் தென்றலால் தளிர்ப்பித்தும் பூப்பித்தும் செய்யப்பட்ட அரும்பு பொதிவாசத்தைக் கொள்ளை கொள்ளுதலால்; அரும்பு - ஈண்டு அப்பொழுது மலர்தற்கியன்ற நாளரும்பு. 18. சிறுகால் - இளந்தென்றல், இஃதஃறிணைச் சொல்லாயினும் உயர்திணைமேற்று, ஆகலின் செல்வன் என்றார். எல்-ஒளி. மகளிர் விளக்கெடுப்ப என்றமையால் இனஞ்செப்புமாற்றால் நெல்லும் மலருந் தூவித் தொழுதென்க. என்னை? அங்ஙனம் தொழுதல் மரபாகலின்; மணி - மாணிக்க மணியுமாம்.

அல்லற்காலை விருந்தின் மன்னரின் தனித்துயர் எய்தவும் களி மகிழ் வெய்தவும் ஊதவும் தூற்றவும் விளக்கெடுப்பவும் மாலை வந்திறுத்தது என வியையும்.

பிறை தோன்றுதல்

21-26: இளையராயினும் ......... விளக்கத்து

(இதன்பொருள்) இளையர் ஆயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆதலின் - தாம் ஆண்டினால் இளைமையுடையோராய விடத்தும் தம்மோடெதிரும் பகைவராகிய பேரரசரையும் எதிர்ந்து புறமிடச்செய்தற் கியன்ற போர் ஆற்றலால் மாட்சிமையுடைய பாண்டிய மன்னருடைய குலத்திற்கு முதலிற்றோன்றுதலாலே; அந்திவானத்து வெண்பிறை தோன்றி-அந்திமாலைக் கண்ணதாகிய செக்கர் வானத்தின்கண் வெள்ளிய இளம்பிறையானது தோன்றி; புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி - உயிர்கட்குத் துன்பத்தைச் செய்கின்ற அம்மாலையாகிய குறும்பைப் பொருது புறமிட்டோடச் செய்து; பான்மையில் திரியாது - தனக்குரிய பண்பாகிய செங்கோன்மையிற் பிறழாமல்; பாற்கதிர் பரப்பி-பால்போலும் தனது ஒளியாகிய அளியை உலகெலாம் பரப்பி; மீன் அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து - அவ்விண்மீன் வேந்தனாகிய திங்கள் ஆட்சிசெய்த வெண்மையான விளக்கத்திலே, என்க.

(விளக்கம்) 21-22. தென்னர் ஆண்டிளைமையுடையராயினும் வலிய பகையரசரையும் கடியும் பேராற்றல் வாய்ந்தவர் அல்லரோ! அப்பண்பு அவர் குலத்திற்கு முதல்வனாகக் கூறப்படுகின்ற திங்களிடத்தும் இருப்பது இயல்பு. ஆதலால் திங்கள் இளம்பிறையாயவிடத்தும் அந்திப் பொழுதில் வந்து உலகைக் கௌவிய இருளாகிய பகையைக் கடிந் தோட்டலாயிற்று என்பது கருத்து. இளையராயினும் என்றதனால் பகையரசு என்றது போர்ப் பயிற்சி மிக்க வல்லரசர் என்பது குறிப்பாற் பெற்றாம். பாண்டியர் இளையராயினும் பகையரசு கடியும் செருமாண் புடையர் என்புழி அடிகளார் இடைக்குன்றூர்க் கிழாஅர் என்னும் புலவர் பெருமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய அரசவாகைத்துறைச் செய்யுளையும் அப்பாண்டியன் சூண்மொழிந்த செய்யுளையும் நினைவு கூர்ந்திருத்தல் கூடும் அவை புறநானூற்றில் 71,72 -ஆம் செய்யுள்களாம். அவற்றை நோக்கியுணர்க.

33. அந்திவானம் - செக்கர்வானம், புன்கண் - துன்பம். குறும்பு - செவ்வி நேர்ந்துழி வேந்தலைக்கும் குறும்பர்; இவர் குறுநில மன்னர் ஆசிரியர் வள்ளுவனார் இவரை வேந்தலைக்கும் கொல் குறும்பு என வழங்குவர். 25. பான்மை - செங்கோன்மை கதிர் ஈண்டு அரசர்க்குரிய அளி என்க. மீனரசு திங்கள். விண்மீன்களுக்குத் தலைவன் என்பது பற்றி அங்ஙனம் ஒரு பெயர் கூறினர். 26. வெள்ளி விளக்கம் என்றது நிலவொளியினை.

27-34 : இல்வளர் ...... மாதவியன்றியும்

(இதன்பொருள்) ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி - தனது மாலையை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூனியொடு தன் மனைபுக்க கோவலனைப் பேரார்வத்தோடு எதிர் கொண்டு மணவாளனாக ஏற்றுக் கொண்டு; இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல் பூஞ்சேக்கைப் பள்ளியுள் பொலிந்து - இல்லத்திலே நட்டு நீர்கால் யாத்து எருப்பெய்து வளர்க்கப் பட்டமையாலே செழித்து வளர்கின்ற முல்லையோடு மல்லிகையும் ஏனைய தாழிக்குவளை முதலிய பல்வேறு மலர்களும் மலர்ந்து மணம் பரப்பாநின்ற மலர்ப்பாயலையுடைய பள்ளியிடத்தே தங்கிக் காதலனை எய்தினமையாலே புதுப்பொலிவு பெற்று; சென்று ஏந்து அல்குல் - உயர்ந்து பூரித்துள்ள தனது அல்குலிடத்தே அணியப்பெற்ற; செந்துகிர்க் கோவை -செவ்விய பவளத்தாலியன்ற கோவையும்; அந்துகில் மேகலை- அழகிய புடைவை மேற் சூழ்ந்த மேகலையும் ஆகிய பேரணிகலன்கள்; அசைந்தன வருந்த - தந்நிலைகுலைந்து வருந்தாநிற்ப; நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்து - நிலவினது பயனை நுகர்தற்கியன்ற நெடிய நிலாமுற்றத்தின்கண்; கலவியும் புலவியும் காதலற்கு அளித்து-ஒருகாற் கலவியையும் மறுகால் புலவியையும் தன் காதலனாகிய கோவலனுக்கு வழங்கி; ஆங்கு - அவ்விடத்தே; கோலங்கொண்ட மாதவியன்றியும்-கலவியாலும் புலவியாலும் குலைந்த ஒப்பனைகளை மீண்டும் வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய அம்மாதவியே யன்றியும்; என்க.

(விளக்கம்) 3-4 : மலரின் செழுமைக்கும் மணமிகுதிக்கும் இல்வளர் முல்லையும் மல்லிகையும் கூறப்பட்டன. என்னை? அவை பொழுதறிந்து நீர்கால்யாத்து எருப்பெய்து வளர்க்கப்படுமாதலின் அவற்றின் மலரும் மணமும் சிறப்புடையனவாதலியல்பாகலின். தாழியில் நட்டுக் குவளைமலர்களும் உண்டாக்குவர் ஆதலின் பழைய உரையாசிரியர் ஒழிந்த தாழிக்குவளை முதலிய பல பூவும் என்றார். இம்மலர்கள் மாலைப் பொழுதில் மலரும் இயல்பின ஆதலின் அவிழ்ந்த பூஞ்சேக்கைப் பள்ளி என்றார். சேக்கைப்பள்ளி-கருத்தொத்து ஆதரவுபட்ட காதலர் சேர்ந்து துயிலும் படுக்கை. சேர்க்கப்பள்ளி எனவும் பாடம் பொலிவு. புதியபொலிவு. காதலர் இருவரும் கூடியிருத்தலால் உண்டாய பொலிவென்றபடி. கோவை மேகலை என்பன அணிகலன்கள். அவற்றை எண் கோவை மேகலை காஞ்சி யெழுகோவை என்பதனாலறிக துகிர் - பவளம் - கோவை மேகலை என்னும் அணிகள் அசைந்தன வருந்த நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலாமுற்றம் என்றது இடக்கரடக்கிக் கூறியவாறாம். ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்பது பற்றிக்கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஎன்றார்.

35-46 : குடதிசை ......... களித்துயிலெய்த

(இதன்பொருள்) காவியம் கண்ணார் - அப் பூம்புகார் நகரத்தே காதலரைப் புணர்ந்திருக்கும் வாய்ப்புடைய நீல மலர்போன்ற அழகிய கண்களையுடைய ஏனைய மகளிர்களுட் சிலர் தத்தம் பள்ளிகளிடத்தே; குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கின் கார் அகில் துறந்து - மேற்றிசையிடத் துண்டான வெள்ளிய கண்டு சருக்கரையோடு கீழ்த்திசையிடத்தே தோன்றிய அகில் முதலியவற்றால் புகைக்கும் புகையைத் துறந்து தங் கணவரோடு கூடுதற்கு விரும்பி; வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து - வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்கட் பிறந்த ஒளிமிக்க வட்டக்கல்லிலே; தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக-பொதிய மலையிலே பிறந்த சந்தனக் குறட்டைச் சுழற்றித் தேய்ப்பவும்; வேறுசிலர் தங் கணவரோடு கலவிப்போர் செய்தமையாலே, தாமரைக் கொழுமுறி தாதுபடு செழுமலர் காமரு குவளை கழுநீர் மாமலர் பைந்தளிர் படலை-தாமரையினது கொழுவிய இளந்தளிரையும் அதன் பூந்தாதுமிக்க வளமான மலரினையும் கண்டார்க்கு விருப்பம் வருதற்குக் காரணமான நீல மலரினையும் கழுநீர் மலரினையும் பச்சிலையுடனே கலந்து தொடுத்த படலை மாலையுடனே; பரூஉக்காழ் ஆரம் - பருத்து கோவையுற்ற முத்துக்களும்; சுந்தர சுண்ணத்துகளொடும் - நிறந்திகழுகின்ற சுண்ணத்தோடு; சிந்துபு அளைஇப் பரிந்த - சிந்திக் கலந்து கிடந்த; செழும்பூஞ்சேக்கை - வளவிய மலர்ப்பாயலிலே; மயங்கினர் - கூட்டத்தால் அவசமுற்றுப் பின்னர்; மந்தமாருதத்து மலிந்து - இளந்தென்றலாலே தெளிவுற்று; ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கி - தம் காதன்மிகுதியால் தமது ஆவிபோலும் தங்கணவருடைய மார்பினிடத்தே பொருந்தி; காவி அம் கண் ஆர் - தங்கள் நீல மலர்போன்ற கண்ணிமைகள் பொருந்துதற்குக் காரணமான; களித் துயில் எய்த - இன்றுயில் கொள்ளா நிற்பவும்; என்க.

(விளக்கம்) 35-6 : குடதிசை அயிர் என்பதற்கு யவனதேசத்து அயிர் என்றார் அடியார்க்கு நல்லார். அயிர் - கண்டு சருக்கரை. அகிலோடு கண்டு சருக்கரையை விரவிப்புகைப்பது மரபு. இதனை, இருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்ப எனவரும் நெடுநல்வாடையானும் (56) உணர்க.

35-8. குடைதிசை. குணதிசை, வெள்ளயிர், காரகில், வடமலை தென்மலை, என்னும் சொற்களில் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுவித்தலுணர்க. 37 வடமலை - இமயமலை; 38 - தென்மலை - பொதியமலை. மறுகுதல் - சுழலுதல். சந்தனக் குறட்டைத் தேய்த்துச் சாந்து செய்தலின் சந்தனம் மறுக என்றார். வேனிற் பருவமாகலின் சந்தனம் அரைத்துத் திமிர்ந்துகொள்ளல் வேண்டிற்று. படலைமாலையும் குளிர் வேண்டிப் புனைந்தபடியாம். படலைமாலையும் பரூஉக் காழ் ஆரமும் சுந்தரச் சுண்ணத்துகளொடும் அளைஇப் பரிந்த பூஞ்சேக்கை என்றது அம்மகளிர் தத்தம் கணவரொடு கலவி நிகழ்த்தியமை குறிப்பாற் றோன்றுமாறு இடக்கரடக்கிக் கூறியபடியாம். இவ்வாறு இடக்கரடக்கிக்கூறுதல் அடிகளார் இயல்பென்பது முன்னும்கண்டாம். இப்பகுதிக்குப் பழைய வுரையாசிரியர் உரைகள் பொருந்தாமையை அவர் உரை நோக்கி யுணர்க.

45-6. ஆவியங்கொழுநர் ....... களித்துயிலெய்த எனவரும் அடிகள் பன்முறை ஓதி இன்புறத்தகுந்த தமிழ்ச்சுவை கெழுமிய வாதலை நுண்ணுணர்வாலுணர்ந்து மகிழ்க.

34. மாதவியன்றியும் அந்நகரத்துப் பல்வேறிடங்களிலே காவியங்கண்ணார் பலரும் சந்தனந்திமிர்ந்து தங்கொழுநரொடு கூடிக்களித்தலாலே படலையும் ஆரமும் தாம் திமிர்ந்த சுண்ணத்தோடு அளைஇ அறுந்துகிடந்த சேக்கைக்கண் மந்தமாருதத்தால் மயக்கந் தீர்ந்து பின்னும் காதன் மிகுதியாலே கொழுநர் அகலத்து ஒடுங்கித் துயிலெய்தா நிற்ப என இயைபு காண்க.

கண்ணகியின் நிலைமை

47-57 : அஞ்செஞ்சீறடி ......... கண்ணகியன்றியும்

(இதன்பொருள்) அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய - ஊழ்வினை காரணமாக அப்புகார் நகரத்தே தாழ்துணை துறந்த தையலருள் வைத்துக் கண்ணகியினுடைய அழகிய சிறிய அடிகள் தமக்கு அழகு செய்யும் சிறப்பைச் சிலம்புகள் பெறாதொழியவும்; மெல்துகில் அல்குல் மேகலை நீங்க - மெல்லிய துகிலையுடைய அல்குல் தன்னை அழகு செய்யும் சிறப்பை மேகலை பெறாதொழியவும்; திங்கள் வாள் முகம் சிறு வியர் பிரிய - நிறைமதி போலும் ஒளியுடைய முகம் தன்னையணியும் சிறப்பைச் சிறுவியர்வை நீர் பெறாது பிரியவும்; செங் கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப - சிவந்து நெடிதான கயல்மீன் போலும் கண் தன்னை அணிசெய்யுஞ் சிறப்பை அஞ்சனம் பெறாது மறந்தொழியவும்; பவள வாள்நுதல் திலகம் இழப்ப - பவளம் போன்று சிவந்த ஒளியுடைய நுதல் தன்னை அணியுஞ் சிறப்பைத் திலகம் பெறாதொழியவும்; தவள வாள் நகை கோவலன் இழப்ப-தன்னைக் கூடினாற் பெறுகின்ற வெள்ளிய ஒளி தவழும் புன்முறுவலைக் கோவலன் பெறாதொழியவும்; மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப-தன்னையணிந்தால் தான்பெறும் கூந்தலின் மணத்தைப் புழுகு நெய் பெறாதொழியவும் இவை இங்ஙனம் ஆகும்படி; கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதாள் - அவள்தானும் தன்முலை முற்றத்தே குங்குமக் குழம்பு கொண்டு எழுதாளாய்; மங்கல அணியிற் பிறிது அணி மகிழாள் - மங்கல அணியை அன்றிப் பிறிதோர் அணிகலனையும் அணிந்து மகிழாளாய்; கொடுங் குழை துறந்து வடிந்து வீழ்காதினள்-வளைந்த குழையை அணியாது துறந்தமையாலே ஒடுங்கித் தாழ்ந்த செவியினையுடையளாகிய; கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - கையற்ற நெஞ்சத்தையுடைய அக்கண்ணகியை யல்லாமலும் என்க.

(விளக்கம்) ஊழ்காரணமாகக் கோவலனைப் பிரிந்த கண்ணகி சிலம்பு முதலிய அணிகலன்களை அணிதலின்றிக் குங்குமம் எழுதாமலும் கூந்தலில் புழுகு முதலியன அணியாமலும் அஞ்சனம் எழுதாமலும் ஆற்றாமையால் செயலற்றுத் திகைத்திருந்தாள் என்றவாறு.

கண்ணகியின் சீறடி முதலிய உறுப்புகளில் அணியப்பெறும் சிலம்பு முதலிய அணிகலன் தாமே அழகுபெற்றுத் திகழ்வனவாம். அந்தச் சிறப்பினை இப்பொழுது அவை பெறாதொழிந்தன எனப் பொருள் கூறுக. என்னை? அவள்தான் எல்லையற்ற பேரழகு படைத்தவள் ஆதலான் இவ்வணிகலன் அவட்குப் பொறையாகி அவள் இயற்கையழகை மறைத்துச் சிறுமைசெய்யுமாகலான் இவ்வாறு பொருள் விரிக்கப்பட்டது. அவை அவ்வாறாதலை மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுபவன்.

62. நறுமலர்க் கோதை நின்நலம் பாராட்டுநர் மங்கல அணியே அன்றியும் பிறிதணியணியப் பெற்றதை எவன் கொல்..... 72 இங்கிவை அணிந்தனர் என்னுற்றனர் கொல் எனப் பாராட்டு மாற்றானும் உணர்க.

இனி, சீறடி முதலியன சிலம்பு முதலிய அணிகளை அணியாதொழியவும் எனப் பொருள் கூறலுமாம்.

48. துகிலல்குல் என்புழித் துகில் அல்குலுக்கு வாளாது அடைமொழி மாத்திரையாய் நின்றது. மேகலை - எண்கோவை. கொங்கை முற்றம் என்றது அவற்றின் மருங்கமைந்த மார்பிடத்தை. பிறிதணி - வேறு அணிகலன். 51. கொடுங்குழை என்புழி கொடுமை - வளைவு என்னும் பொருட்டு. வடிந்து வீழ்காதினள் என்பது அணியாமையினும் பிறந்த அழகு கூறிற்று. 52. வியர் - வியர்வை; ஈறுகெட்டது. இனி வியர்ப்பு+இரிய, எனக் கண்ணழித்தலுமாம். கூட்டமின்மையால் வியர்வை இலதாயிற்றென்க.

53. அழுதழுது கண் சிவந்திருத்தலின் கருங்கயல் என்னாது செங்கயல் நெடுங்கண் என்றார். மற்று இவரே விலங்கு நிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் எனக் (13: 166) கருங்கயலை உவமை கூறுதலும் உணர்க. இவ்வாறு பொருட்கேற்ற உவமை தேர்ந்தோதுவது அடிகளார்க் கியல்பு என்க. 55 தவள வாணகை கோவல னிழப்ப என்னுமிடத்து அடிகளார் கருத்து விளக்கமுறுதலால் சிலம்பு முதலியனவும் தாம் பெறும் அழகை இழப்ப என்பதே அடிகளார் கருத்தாதல் பெற்றாம்.

56. நெய்-புழுகு. கையறுதல் - செய்வதின்னது என்று தெரியாமற்றிகைத்தல். இஃதொரு மெய்ப்பாடு. இஃது அகத்திற்கும் புறத்திற்கும் பொது. (தொல் - மெய்ப் - 12.)

58-72 : காதலர் ......... புலம்புமுத்துறைப்ப

(இதன்பொருள்) காதலர்ப் பிரிந்த மாதர் - கண்ணகியைப்போல அந்நகரத்தே காதலரைப் பிரிந்து தனித்துறைய நேர்ந்த மகளிர் தாமும் பிரிவாற்றாமையாலே; நோதக ஊது உலைக்குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி - தம்மைக் கண்டோர் வருந்துமாறு கொல்லுலைக் களத்தின்கண் ஊதுகின்ற துருத்தியின் உலைமூக்குப் போல அழலெழ உயிர்த்தனராய்ச் செருக்கடங்கி; வேனில் பள்ளி மேவாது கழிந்து - இவ்விளவேனிற் காலத்திற்கென அமைந்த நிலாமுற்றத்திற் செல்லாதொழிந்து; கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து - கூதிர்க் காலத்திற்கென வமைந்த இடைநிலை மாடத்தே ஒடுங்கி அவ்விடத்தும் தென்றலும் நிலாவொளியும் புகுதாவண்ணம் சாளரங்களின் குறிய கண்களைச் சிக்கென வடைத்து; மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்த பொதியின் மலைப்பிறந்த சந்தனமும் கொற்கையிற் பிறந்த மணியாகிய முத்துமாலையும் தம் பரந்த மார்பிடத்தே முலையில் மேவப் பெறாமல் வருந்தவும்; வீழ் பூஞ் சேக்கை தாழிக் குவளையொடு தண்செங்கழுநீர் மேவாது கழிய - தாம் பெரிதும் விரும்புதற்குக் காரணமான சேக்கைப் பள்ளியிடத்தே தாழிக்குவளையும் தண்ணிய செங்கழுநீரும் இன்னோரன்ன பிறவுமாகிய குளிர்ந்த மலர்கள் பள்ளித்தாமமாய் மேவப் பெறாமையாலே வருந்தி யொழியவும்; துணைபுணர் அன்னத் தூவியில் செறித்த இணையணை மேம்பட - தன் சேவலொடு புணர்ந்த பெடையன்னம் அப்புணர்ச்சி யின்பத்தால் உருகி யுதிர்த்த வயிற்றின் மயிரை எஃகிப் பெய்த பல்வகை அணைகள்மீதே மேன்மையுண்டாக; உடைப்பெருங் கொழுநரோடு திருந்து துயில் பெறாஅது - தம்மையுடைய கொழுநரோடு நெஞ்சம் திருந்துதற்குக் காரணமான களித்துயில் எய்தப்பெறாமல்; ஊடற்காலத்து இடைக் குமிழ் எறிந்து கடைக்குழை யோட்டி - அவரோடு முன்பு ஊட்டியபொழுது இடைநின்ற குமிழை வீசிக் கடைநின்ற குழையை ஓடச்செய்து; கலங்கா உள்ளமும் கலங்கக் கடை சிவந்து விலங்கி நிமிர் நெடுங்கண்கள் - போர்க்களத்தினும் கலங்காத திண்மையுடைய அவர்தம் நெஞ்சம் கலங்குமாறு கடைசிவந்து குறுக்கிட்டுப் பிறழ்ந்து வாகைசூடி உவகைக் கண்ணீர் உகுத்த தம்முடைய நெடிய கண்கள் தாமும் அற்றைநாள்; புலம்பு முத்து உறைப்ப - அக்கண்ணகி கண்கள் போன்றே கையறவு கொண்டு துன்பக் கண்ணீரைச் சொரியா நிற்பவும் என்க.

(விளக்கம்) கண்ணகியன்றியும் அந்நகரத்தே தாழ்துணைதுறந்த மாதர் பலரும் அக்கண்ணகியைப்போலவே ஒடுங்கிக் கழிந்து அடைத்து வருந்தக் கழியப் பெறாது - தம்கண் முத்துறைப்ப என இயையும்.

59. ஊதுலைக்குருகு - துருத்தி; வெளிப்படை. அலர் ஆகம் முலையாகம் எனத் தனித்தனி இயையும். ஆகம் - மார்பு. 64. தாழிக் குவளை. இல்லத்தே தாழியில் நட்டு வளர்த்த குவளை மலர்; குவளை செங்கழுநீர் மலர்கட்கு ஆகுபெயர். 65. வீழ்தல் - விரும்புதல். கழிய என்றது வருந்தஎன்னும் பொருட்டாய் நின்றது. 66. மென்மை மிகுதிக்குத் துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த இணையணை கூறப்பட்டது. தூவி -மயிர். இணையணை - இரட்டைப் படுக்கையுமாம். இணைதற்கியன்ற அணையுமாம். இணைதல் - கூடுதல். மேம்பாடு - ஈண்டு அன்பு பெருக்கமடைதல். திருந்துதுயில் - அழகிய துயிலுமாம். உடைப்பெருங் கொழுநர் - தம்மையுடைய கணவர். கொழுநரிற் சிறந்த கேளிர் இன்மையால் பெருங்கொழுநர் என்றார்.

69. இடைக்குமிழ் என்றது இரண்டு கண்களுக்கும் நடுவில்நின்ற குமிழமலர் போன்ற மூக்கினை. குழை - காதணி ஊடற்காலத்தே கண்கள் அங்குமிங்கும் பாயும்பொழுது ஒருகால் நாசியைக் குத்தியும் ஒருகால் காதினைக் குத்தியும் பாயும் என்பது கருத்து. அங்ஙனம் பாய்ந்து சினத்தின் அறிகுறியாகச் சிறிது கடைக்கண் சிவக்குமானால் அவருடைய கணவர் நெஞ்சு கலங்குவர் என்றவாறு.

70. கலங்காவுள்ளம் என்றது போர்க்களத்தே பகைவர் முன்னனரும் கலங்காத உள்ளம் என்பதுபடநின்றது. என்னை? ஒண்ணுதற் கோஓ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு எனவரும் திருக்குறளும் நோக்குக. 71. புலம்புமுத்து - துன்பத்தால் உகுகின்ற முத்துப் போன்ற கண்ணீர்த்துளி. புலம்பு முத்து என்றதனால் அடியார்க்கு நல்லார் இன்பக் கண்ணீரை உவகைமுத்து என இனிதின் ஓதுவர். உறைத்தல் - துளித்தல்.

72-76 : அன்னமென் .......... மலர்விழிப்ப

(இதன்பொருள்) (இனி, இருவகை வினைவயத்தராய் இன்பமும் துன்பமும் எய்திய மாதவியும் கண்ணகியும் பிறமகளிரும் போலாது) அன்ன மெல் நடை - தன்னகத்தே வதியும் அன்னங்களின் நடையாகிய நடையினையும்; தேம் பொதி நறுவிரை நாறும் தாமரை - தேன் பொதிந்துள்ள நறிய மணங்கமழும் தாமரையாகிய; ஆம்பல் நாறும் செவ்வாய் - ஆம்பல் மணநாறும் சிவந்த வாயினையும்; தண் அறல் கூந்தல் - குளிர்ந்த கருமணலாகிய கூந்தலையும் உடைய; நன்னீர்ப் பொய்கை - நல்ல நீராகிய பண்பினையும் உடைய பொய்கையாகிய நங்கை; அவ்விரவெல்லாம் இனிதே துயின்று; பாண் வாய் வண்டு - பாண்தொழில் வாய்க்கப்பெற்ற வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார்; நோதிறம் பாட-புறநீர்மை என்னும் திறத்தாலே வைகறைப் பொழுதிலே பள்ளி எழுச்சி பாட; காண்வரு குவளை கண்மலர் விழிப்ப - துயிலுணர்ந்து அழகு வருகின்ற குவளையாகிய தன்னுடைய கண்மலர்களை விழித்து நோக்காநிற்ப வென்க.

(விளக்கம்) தனக்கென வாழாப் பிறர்க்கென முயலும் பெருந்தகைப் பெண்ணாதலின் பொய்கை நங்கை இன்பமும் துன்பமும் இன்றி அமைதியான துயிலில் ஆழ்ந்திருந்தவள் வண்டு பள்ளி எழுச்சி பாடத் தனது குவளைக்கண் மலர்ந்து துயில் நீத்தனள் என்க. இஃது உருவக அணி.

ஆம்பல் - வாளா வாய்க்கு அடைமொழி மாத்திரையாய் நின்றது; துப்புறழ் தொண்டைச் செவ்வாய் என்புழிப் போல. ஆம்பற்பண் எனினுமாம். 75. பாண்-பாண் தொழில். வாய் வண்டு: வினைத் தொகை. வண்டாகிய பள்ளி எழுச்சி பாடுவார் என்க. நோதிறம் பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தனுள் ஒன்று. அதனை,

தக்கராக நோதிறங் காந்தார பஞ்சமமே
துக்கங் கழிசோம ராகமே - மிக்க திறற்
காந்தார மென்றைந்தும் பாலைத்திறம் என்றார்
பூந்தா ரகத்தியனார் போந்து

எனவரும் வெண்பாவான் உணர்க.

76. குவளைக் கள்மலர் - குவளையாகிய கள்ளையுடைய மலர்; குவளைக்கண் மலருமாயிற்று. விழித்தல் - மலர்தல்; கண்விழித்தலுமாயிற்று.

77-84 : புள்வாய் ...... தனிசிறந்ததுவென்

(இதன்பொருள்) புள் வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப - பறவைகளின் ஆரவாரமாகிய முரசுடனே புள்ளிகளையுடைய தூவியையுடைய கோழிச் சேவலாகிய முள்வாய்த்தலையுடைய சங்கும் முறைமுறையாக முழங்கவும்; உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி - கடல் போலும் பரப்பையும் ஒலியையும் உடைய அம்மூதூரின் வாழ்வோரைத் துயிலுணர்த்தி; இரவுத்தலைப் பெயரும் வைகறை காறும் - முன்னர் நிலமடந்தை அலம்வரும் அல்லற் காலை வந்து புக்க இருள் இவ்விடத்தினின்று நீங்கும் வைகறை யாமமளவும்; மகர வெல் கொடி மைந்தன் - மகரமீன் வரைந்த வெல்லும் கொடியினையுடைய காமன்; விரைமலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி - மணமுடைய மலரம்புகளோடே கரும்பாகிய வில்லையும் ஏந்தியவனாய்; அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - முன் சென்ற நள்ளியாமத்தும் ஒருநொடிப் பொழுதும் துயிலாதவனாய்; திரிதர - திரிதலானே; நகரம் - அந்தப் பூம்புகார் நகரமானது; நனி காவல் சிறந்தது - நன்கு காவலாலே சிறப்பெய்துவதாயிற்று என்பதாம்.

(விளக்கம்) புள்வாயாகிய முரசுடனே என்க. புள்ளொலியாகிய முரசுடன் என்பது பொருந்தாது; பொறிமயிர் வாரணமாகிய முள் வாய்க்கப்பெற்ற சங்கம் என்க. என்னை? கோழிச் சேவலுக்குக் காலில் முள்ளுண்மையின் என்க. 79. ஈண்டு அடிகளார் இரவினது இயற்கை நிகழ்ச்சிகளை மட்டுமே கூறுதலின் புள்வாயாகிய முரசமும் வாரணமாகிய சங்கமும் ஆர்ப்ப என்பதே நேரிய பொருளாம். வாரணத்துச் சங்கம் முள்வாய்ச் சங்கம் எனத் தனித்தனி இயையும். இக்கருவிகள் ஆர்ப்பக் காமன் வைகறை காறும் ஊர்துயிலெடுப்பிப் படைக்கலம் ஏந்தி நனிகாத்தனன் என்பதே அடிகளார் கருத்து: உரவுநீர் - அன் மொழித்தொகை. கடல் - கடல்போன்ற பரப்பையுடைய ஊர் என்க. பிரிந்தார்க்கும் புணர்ந்தார்க்கும் துயிலின்மை காமனால் வருதலின், ஊர் துயில் எடுப்பி என்றார். இரவுத்தலை-என்புழி தகரவொற்று விரித்தல் விகாரம். அரும்பதவுரையாசிரியர் துஞ்சான் எனப் பாடங்கொண்டனர். அடியார்க்கு நல்லார் துஞ்சார் எனப் பாடங் கொண்டனர். பகல் - நள்ளீரவு. பகுக்கப்படுதலின் பகல். இனி, நொடிப்பொழுதும் எனலே சிறப்பு. நொடி காலத்தைப் பகுக்குமொரு கருவி ஆகலின் அதற்கும் அது பெயராம்.

ஆர்ப்ப எடுப்பித் தலைப்பெயரும் வைகறைகாறும் துஞ்சானாய்த் திரிதருதலால் நகரங்காவல் நனி சிறந்தது; என்க.

இனி, இக்காதையை மாதவியன்றியும் காவியங்கண்ணார் களித் துயிலெய்தவும், கண்ணகியன்றியும் பிரிந்த மாதர் உயிர்த்து ஒடுங்கிக் கழிந்து குறுங்கண் அடைத்து ஆரம் முலைக்கண் அடையாது வருந்த, கழுநீர் சேக்கையிலே மேவாது கழிய கண்டுயில் பெறாமல் முத்துறைப்ப வண்டு பாடக் குவளை விழிப்ப ஆர்ப்ப இரவுபோம் வைகறை யளவும் யாமத்தும் பகலுந் துஞ்சானாகி மகரக்கொடி மைந்தன் வாளியொடு வில்லை யேந்தித் திரிதலான் நகரங் காவல் சிறந்தது என முடிக்க.

பா: நிலைமண்டிலம்

வெண்பா வுரை

கூடினார் .......... பொழுது

(இதன்பொருள்) விரிந்து போது அவிழ்க்கும் கங்குல் பொழுது - யாண்டும் பரவி முல்லை மல்லிகை முதலிய மலர்களை மலர்விக்கின்ற இரவுப்பொழுதிலே; வானூர் மதி-விண்ணிலே இயங்குகின்ற திங்கள்; கூடினார்பால் நிழலாய் - தன்னிழலில் எய்தி அடங்குபவர்க் கெல்லாம் குளிர்ந்த நிழலாகியும்; கூடார்பால் - அடங்காது விலகியவர்க் கெல்லாம்; வெய்யதாய் - வெம்மை செய்வதாகியும் தன்னைக் காட்டுகின்ற; காவலன் வெள் குடைபோல் - சோழமன்னனுடைய வெண்கொற்றக் குடைபோன்று: கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் - கோவலனோடு கூடிய மாதவிக்கும் அவனைக் கூடாது தனித் துறைந்த கண்ணகிக்கும் நிரலே நிழலாகவும் வெய்யதாகவும்; காட்டிற்று - தன்னைக் காட்டிற்று என்க.

(விளக்கம்) காட்டும் வெண்குடைபோல் எனவும், கூடாது பிரிந்துறையும் கண்ணகிக்கும் எனவும் வருவித்துக் கூறுக.

அந்திமாலைச் சிறப்புச் செய்காதை முற்றிற்று


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #7 on: February 23, 2012, 11:56:24 AM »
5. இந்திரவிழவூரெடுத்த காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது புகார் நகரத்தே இந்திரனுக்கு விழா நிகழ்த்திய செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி  5

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,  10

கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,  15

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா  20

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்  25

பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்  30

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்  35

வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,  40

பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,  45

திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்  50

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்  55

இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய  60

கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்  65

தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்  70

பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,  75

மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்  80

கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென  85

நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்  90

வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்  95

பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்  100

மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்  105

நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,  110

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்  115

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று  120

வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர்  125

சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்  130

பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து  135

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,  140

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து  145

மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து  150

மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து  155

மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி  160

அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்  165

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்  170

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,  175

நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்  180

திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு  185

எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு  190

இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து  195

நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு  200

திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி  205

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த  210

வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு  215

உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது  220

நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்  225

எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்  230

போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து  235

கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.  240

ஞாயிறு தோன்றுதல்

உரை

1-6 : அலைநீராடை ....... பரப்பி

(இதன்பொருள்) அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து - கடலாகிய ஆடையினையும் மலையாகிய முலையினையும் அந்த முலையினையுடைய மார்பின் மிசை; பேரியாற்று ஆரம் - காவிரி முதலிய பெரிய ஆறுகளாகிய முத்துமாலைகளையும்; மாரிக் கூந்தல் - முகிலாகிய கூந்தலையும்; அகல் கண் பரப்பின் - அகன்ற இடமாகிய அல்குற் பரப்பினையுமுடைய; மண்ணக மடந்தை -நிலவுலகமாகிய நங்கை; புதை இருள் படாஅம் போக நீக்கி - போர்த்துள்ள இருளாகிய போர்வையை எஞ்சாது அகலும்படி விலக்கி; உதய மால்வரை உச்சித் தோன்றி - உதயமால் வரையின் உச்சியிலே தோன்றி; உலகு விளக்கு அவிர் ஒளி பரப்பி - உலகத்துப் பொருள்களெல்லாம் உயிரினங்கட்கு நன்கு விளங்கித் தோன்றுதற்குக் காரணமாய் விளங்குகின்ற தனது ஒளியைப் பரப்பாநிற்ப என்க.

(விளக்கம்) 1. அலைநீர்: அன்மொழித்தொகை; கடல். முலையாகம் - முலையையுடைய மார்பகம். 2. பேரியாற்று ஆரம் என மாறுக. மாரி-முகில். 3. அகல்கண் பரப்பு என மாறி அகன்ற இடம் ஆகிய அல்குற் பரப்பினையும் எனப் பொருள் கூறுக. மடந்தையைப் புதைத்த இருட்படாம் என்க. படாஅம்-போர்வை. 4.5. ஞாயிறு தோன்று முன்னரே இருள் விலகிவிடுவதால் இருட்படாஅம் நீக்கி மால்வரை யுச்சித் தோன்றி என இருணீக்கத்தை முன்னும் ஞாயிற்றின் தோற்றத்தைப் பின்னுமாக ஓதினர். பரப்பி என்பதனைச் செயவெனெச்சமாக்கிப் பரப்ப என்க.

இனி அடியார்க்கு நல்லார் அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் 5-8. திசை முகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர்வார....... அரைசு கெடுத்து அலம்வரும் காலை எனவரும் அடிகளைநினைவுகூர்ந்து அந்நிகழ்ச்சியை இக்காதையோடு மாட்டெறிந்து உரை வகுத்தல் பொருந்தாது. என்னை? ஈண்டு அடிகளார் கூறுகின்ற நாள் அந்த நாளின் மறுநாள் அன்றாகலின் என்க.

மணிமலைப் பணைத்தோள் மாநிலமடந்தை அணிமுலைத் துயல் வரூஉம் ஆரம்போலச் செல்புனலுழந்த சேய்வரற் கான்யாற்று என வரும் சிறுபாண் (1-3.) அடிகள் ஈண்டு நினைவு கூரற்பாலன.

அடியார்க்குநல்லார் மலை பொதியிலும் இமயமும் இவற்றைச் சாதியொருமையாற் கூறினார் பொதியிலும் இமயமும் புணர் முலையாக என்றார் கதையினும் என்பர். மேலும் ஈண்டு ஞாயிற்றை விதந்தோதியது செம்பியன் மரபுயர்ச்சி கூறியவாறாயிற்று எனவும் விளக்குவர்.

புகார் நகரத்து மருவூர்ப்பாக்கம்

7-12 : வேயா மாடமும் ....... இலங்குநீர் வரைப்பும்

(இதன்பொருள்) வேயா மாடமும் - நிலா முற்றமும்; வியன்கல இருக்கையும் -மிக்க பேரணிகலன்கள் பெய்துவைத்த பண்ட சாலையும்; மான்கண் கால் அதர் மாளிகை இடங்களும் - மானின் கண்போலக் கோணம் செய்த சாளரங்களையுடைய மாளிகையையுடைய விடங்களும்; கயவாய் மருங்கின் காண்போர்த் தடுக்கும் பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் - துறைமுகப் பக்கங்களிலே தம்மைக் காண்போர் கண்களை மேற்போகவிடாமல் தடுக்கின்ற ஊதியங் கெடுதலறியாத மிலேச்சர் இருக்குமிடங்களும்; கலம் தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்து இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும் - மரக்கலத்தால் ஈட்டும் செல்வப் பொருட்டால் தம் நாட்டை விட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகர் பலரும் ஒருங்கே கூடி நெருங்கியிருக்கின்ற விளங்குகின்ற அலைவாய்க் கரையிடத்துக் குடியிருப்புக்களும்; என்க.

(விளக்கம்) 7. வேயாமாடம் - தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன என்பர் அரும்பதவுரையாசிரியர். அவையாவன : தென்னையின் கீற்று பனைமடல் முதலியவற்றால் கூரை வேயப்படாத. சாந்து வாரப்பட்ட மேல்மாடங்களையுடையன என்றவாறு. (மாடிவீடுகள்) கலவிருக்கை - பண்டசாலை. 9. கயவாய்-துறைமுகம், புகார் என்பது மது. 10. பயன் - ஊதியம். யவனர் - யவனநாட்டினர்; மேலைநாட்டினர். இவரைச் சோனகர் என்பர் அரும்பதவுரையாசிரியர். 11. கலம்-மரக்கலம். புலம் - தாம் பிறந்த நாடு. புலம் பெயர்மாக்கள் என்றது, வேற்று நாட்டினின்றும் ஈண்டுவந்து பொருளீட்டற் கிருக்கின்ற வணிகரை. அவர் சாதி மதம் மொழி முதலியவற்றால் வேற்றுமை யுடையோராகவிருந்தும் ஒரு நாட்டுப் பிறந்தோர் போன்று ஒற்றுமையுடனிருத்தலின் 12. கலந்திருந்துறையும் என விதந்தார். 12. இலங்கும் நீர்வரைப்பு என்றது, கடற்கரையை.

இதுவுமது

13-15 : வண்ணமும் ........... நகரவீதியும்

(இதன்பொருள்) வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தமும்-தொய்யிற் குழம்பு முதலியவும், பூசுகின்ற சுண்ணமும் குளிர்ந்த நறுமணங் கமழுகின்ற சந்தனக் கலவையும்; பூவும் - பல்வேறு வகைப்பட்ட மலர்களும்; புகையும் - அகில் முதலிய நறுமணப் புகைக்கியன்ற பொருள்களும்; மேவிய விரையும் - தம்முட்பொருந்திய நறுமணப் பொருள்களும்; பகர்வனர் திரிதரு நகர வீதியும்-ஆகிய இன்னோரன்னவற்றைச் சுமந்துசென்று விற்கின்ற சிறுவணிகர் விலைகூறித் திரிகின்ற நகரத் தெருவும் என்க.

(விளக்கம்) 14: பூ-விடுபூவும், தொடைப்பூவும், கட்டுப் பூவும் என மூவகைப்படும். புகை - கூந்தற்குப் புகைக்கும் அகில் முதலியன; அவை அஞ்சனக்கட்டி யரியாசம் பச்சிலை ஆரம் அகில் உறுப்போரைந்து என்பனவாம். விரை - நறுமணப் பொருள்கள். அவை: கொட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம் ஒட்டிய ஐந்தும் எனப் பிங்கலந்தை கூறும். 15. பகர்வனர்-பகர்வோர், விலைகூறி விற்பவர். திரிதரும் என்றதனால் இவர்கள் இப்பொருள்களைச் சுமந்து கொடு திரிந்து விற்கும் சிறுவணிகர் என்பது பெற்றாம். நகரவீதி - இல்லறத்தோர் குடியிருக்கும் வீதி என்க.

(இதுவுமது)

16-21: பட்டினும் ......... நனந்தலை மறுகும்

(இதன்பொருள்) பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண் வினைக் காருகர் இருக்கையும் - பட்டு நூலானும் பல்வேறு மயிராலும் பருத்தி நூலானும் ஊசியால் பிணிக்கின்ற நுண்ணிய தொழில்களையுடைய பட்டுச் சாலியர் இருக்குமிடங்களும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையொடு - பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் குற்றமற்ற முத்தும் ஏனைய மணிகளும் பொன்னுமாகிய இவற்றைக்கொடு சமைக்கப்பட்ட அருங்கலமாகிய செல்வத்தோடே; அளந்து கடை அறியா-இவற்றையெல்லாம் அளந்து காணப்புகுவோர் ஓரெண்ணினும் எண்ணிக் கரைகாண வொண்ணாத; வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும் -வளம் இடந்தோறும் இடந்தோறும் குவிந்து கிடக்கின்ற இடமகன்ற மறுகுகளும்; என்க.

(விளக்கம்) 16. மயிர் - எலிமயிர் என்பர் அடியார்க்குநல்லார். 17. காருகர் - நெய்வோர்; அச்சுக்கட்டிகள் முதலாயினோருமாம். காருகர் இருவகைப்படுவர். ஆடை நெய்வோரும் அவற்றைச் சுமந்து விற்போரும் என, பருத்திநூல் அமைத்து, ஆடையாக்கலும் சுமத்தலும் பிறவும் காருக வினைத்தொழில் (என்பது திவாகரம் 12 ஆவது) 18. தூசு-பட்டு. துகிர் பவளம். ஆரம் - சந்தனம். 19. மணி ஈண்டுக் கூறப்பட்ட பவளமும் முத்துமல்லாத ஏனைய மணிகள் ஏழுமாம். 20. அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலம். வெறுக்கை-செல்வம். அளந்து கடையறியா - அளந்து இவ்வளவென்று அறுதியிட்டுரைக்க வியலாத. ஈண்டுக் கூறப்படும் பொருள்கள் மறுகிற் குவித்து வைத்து விற்கப்படும், ஆதலால், நனந்தலை மறுகு எனல் வேண்டிற்று.

இதுவுமது

22-27: பால்வகை ............ இருக்கையும்

(இதன்பொருள்) பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு-பகுதி நன்கு வேறுபட்டுத் தோன்றுகின்ற முதிரை முதலிய பல்வேறு உணவுப் பொருள்களுடனே; கூலம் குவித்த கூலவீதியும்-எண்வகைக் கூலங்களையும் தனித்தனியே குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; காழியர் - பிட்டுவாணிகரும்; கூவியர் - அப்பவாணிகரும்; கள் நொடை யாட்டியர் - கள்ளை விற்கும் வலைச்சியரும்; மீன்வலைப் பரதவர் - மீன் வலையையுடைய பட்டினவரும்; வெள் உப்புப் பகருநர் - வெள்ளிய உப்பினை விற்கும் உமணரும் உமட்டியரும்; பாசவர் - இலையமுதிடுவாரும்; வாசவர் - ஐவகை மணப்பொருள் விற்போரும்; மைந்நிண விலைஞரொடு ஓசுநர் செறிந்த - ஆட்டு வாணிகருடனே பரவரும் செறிந்த; ஊன்மலி இருக்கையும் - ஊன்மிக்க இருப்பிடங்களும் என்க.

(விளக்கம்) 22. பால்-பகுதி. முதிரை - பருப்பு. 23. கூலம் எண்வகைப்படும். அவை நெல்லுப்புல்லு வரகுதினை சாமை இறுங்கு தோரையொடு கழைவளை நெல்லே யெனுமிவை. கூத்தநூலார் கூலம் பதினெண் வகைத்து என்பர்; கூலம் - பலசரக்கு என்பாரும், கருஞ்சரக்கு என்பாருமுளர்.

24. காழியர்-வண்ணாருமாம்; என்னை? காழியர் கௌவைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழிய எனவரும் அகநானூற்றுச் செய்யுளை நோக்குக; (செய்-89) காரகல் கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் என்பது. பெரும்பாணாற்றுப் படை (377-8) நொடைவிலை மீனொடுத்து நெற்குவைஇ என்பது புறம் (343.25.) பட்டினவர்-பட்டினத்துவாழ்வோர். உப்புப் பகருநர் - அளவருமாம். (அளத்தில் உப்புவிளைப்போர்). 26. பாசவர் - கயிறு திரித்து விற்பாருமாம்; பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்போருமாம் என்பர். வாசம் ஐந்து வகைப்படும் அவை: தக்கோலம் தீம்பூத் தகை சாலிலவங்கம் கப்பூரம் சாதியோடைந்து என்பன. முற்கூறப்பட்ட விரை என்பனவும் இவையும் வெவ்வேறாதல் உணர்க. 26 மை ஆடு. ஆட்டினை இறைச்சியின் பொருட்டு விற்போராகலின் மைந்நிணவிலைஞர் என்றார். 27. ஓசுநர்-எண்ணெய் வாணிகருமாம்.

இதுவுமது

28-34: கஞ்சகாரரும் ........ மாக்களும்

(இதன்பொருள்) கஞ்ச காரரும் - வெண்கலக் கன்னாரும்; செம்பு செய்குநரும்-செம்பு கொட்டிகளும்; மரங்கொல் தச்சரும்-மரம் வெட்டும் தச்சரும்; கருங்கைக் கொல்லரும்-வலிய கையை யுடைய கொல்லரும்; கண்ணுள் வினைஞரும் - ஓவியக் கலைஞரும்; பொன்செய் கொல்லரும் - உருக்குத் தட்டாரும்; நன்கலம் தருநரும் - மணியணிகலமியற்றும் தட்டாரும்; துன்னகாரரும்-சிப்பியரும்; தோலின் துன்னரும் - தோலினால் உறை முதலியன துன்னுவோரும்; கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கிப் பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும் - கிழிகிடை என்பவற்றால் மலர் வாடாமாலை பொய்க்கொண்டை பாவை முதலிய உருப்பிறக்கும் தொழில்கள் பலவற்றையும் பெருக்கிக் குற்றமற்ற கைத்தொழில் காரணமாக வேறுபட்ட இயல்புடையோரும்; என்க.

(விளக்கம்) 28. கஞ்சம்-வெண்கலம். செம்பு செய்வோர்க்குச் செம்பு கொட்டிகள் என்பது பெயர். 29. கொல்லுதல்-ஈண்டு வெட்டுதல். கருங்கை - வன்மையுடைய கை; கொடுந்தொழில் செய்யும் கையும் அப்பெயர் பெறும். என்னை? கொன்றுவாழ் தொழிலினும் வன்பணித்தொழினும் கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படும் என்பவாகலின் (திவாகரம்). ஈண்டு வன்பணியாளராகலின் கொல்லர்க்காயிற்று. 30. நோக்கினார் கண்ணிடத்தே தந்தொழிலை நிறுத்துவோராகலின், ஓவியத்தொழிலாளர் கண்ணுள் வினைஞர் எனப்பட்டார். சித்திரகாரி என்றும் கூறுப. எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்தநோக்கிற் கண்ணுள் வினைஞரும் என மதுரைக்காஞ்சி இவரைப் பெரிதும் விதந்தோ துதலறிக (516-518) மண்ணீடு - சிற்பம். 32. துன்னம்-தைத்தல் தோலினால் படைக்கலங்களுக்கு உறை துன்னுவோராகலின் தோலின் துன்னர் எனப்பட்டார். பறம்பர் முதலியோருமாம் 33. கிழி-துணி கிடை-கிடேச்சு; நெட்டி. கிழியால் படிமை (பதுமை) படம் முதலியவும் நெட்டியால் விலங்கு பறவை பூ பூங்கொத்து முதலியவும் அமைப்போர் கிழித்தொழிலாளரும் கிடைத்தொழிலாளரும் என்க. இதனால் பழைய காலத்தே நனிநாகரிகமிக்க இக் கைத்தொழில்கள் சிறந்திருந்தமை உணரப்படும். இந் நுண்டொழில்கள் பண்பால் ஒன்றாகித் தொழில் வகையால் பலவேறு வகைப்படுதலின் பால் கெழு மாக்கள் என்றார்.

இதுவுமது

35-39: குழிலினும்........மருவூர்ப்பாக்கமும்

(இதன்பொருள்) குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழு இன்று இசைத்து வழித்திறம் காட்டும் - குழல் முதலிய துளைக் கருவிகளானும் யாழ் முதலிய நரப்புக் கருவிகளானும் குரல் முதலாயுள்ள ஏழிசையினையும் நால்வேறு பண்களையும் அவற்றின் வழிப்பட்ட இருபத்தொரு திறங்களையும் குற்றமின்றி இசைத்துக் காட்டும்; பெறல் அரு மரபின் பெரும்பாண் இருக்கையும் - பெறுதற்கரிய இசைமரபை யறிந்த குழலோரும் பாணரும் முதலாகிய பெரிய இசைவாணர் இருக்குமிடங்களும்; சிறு குறுங் கைவினைப் பிறர் வினையாளரொடு - ஒழுக்கத்தில் சிறியராய்ப் பிறர்க்குக் குற்றவேல் செய்துண்ணும் எளிய தொழிலாளரோடே; மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் - குற்றமின்றித் திகழா நின்ற மருவூர்ப்பாக்கம் என்னும் பெயரையுடைய பகுதியும் என்க.

(விளக்கம்) 35. குழல் யாழ் என்பன இனஞ் செப்பி ஏனைய துளைக்கருவிகளையும் நரப்புக் கருவிகளையும் கொள்ளுமாறு நின்றன. குரல் முதலேழாவன - குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன. ஈண்டு அடிகளாரே குரன் முதலேழும் என் றோதுதலாலே அக்காலத்தே இளியே முதலிசையாக நின்ற தென்பார் கூற்றும் உழையே முதலாக நின்ற தென்பார் கூற்றும் போலியாதல் அறிக. 36. வழுவின்று என்புழி இன்றி என்னும் வினையெஞ்சிகரம் உகரமாயிற்று. வழித்திறம் - பண் வழிப்பட்டதிறம். இசையுணர்ச்சி பெறுதற்கரியதாகலின் அரும் பெறன் மரபு என்றார். பெரும்பாண்-பெரிய இசைவாணர். இனி ஈண்டு அடிகளார் யாழ் மட்டுமே கூறுதலின் யாழ் வேறு வீணை வேறு என்றும் யாழ் இறந்தது, வடவர் தந்த வீணையே இப்பொழுதிருப்பது என்று கூறுவோர் கூற்று மயக்கவுரையாதலறிக. 38. குற்றேவல் செய்துண்போரைச் சிறு குறுங் கைவினைப் பிறர்வினையாளர் என்று இகழ்ச்சி தோன்ற விதந்தார் 49. காவிரிப்பூம்பட்டினம் கீழ்ப்பகுதியும் மேற்குப் பகுதியுமாக இருபெரும் பகுதியை யுடையதாயிருந்தது. அவற்றுள் கீழ்பாலமைந்த பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் மற்றொன்று பட்டினப்பாக்கம் என்றும் கூறப்படும். இதுகாறும் கூறியது மருவூர்ப்பாக்க வண்ணனை. இனி பட்டினப்பாக்கத்தினியல்பு கூறுகின்றார் என்றுணர்க.

பாடல் சால் சிறப்பின் பட்டினப்பாக்கம்

40-58: கோவியன் வீதியும்.......பட்டினப்பாக்கமும்

(இதன்பொருள்) கோ இயல் வீதியும் - அரசர்கள் வழங்குதற் கியன்ற அரசமறுகும்; கொடித் தேர் வீதியும் - கொடியுயர்த்த தேரோடுதற் கியன்ற மறுகும்; பீடிகைத் தெருவும் - கடைத் தெருவும்; பெருங்குடி வாணிகர் மாடமறுகும்-கொழுங்குடிச் செல்வராகிய வாணிகர் வாழ்கின்ற மாடமாளிகைகளையுடைய தெருவும்; மறையோர் இருக்கையும்-பார்ப்பனத் தெருவும்; வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பல்முறை இருக்கையும் - ஏனைய குடிகள் எல்லாம் விரும்புதற்குக் காரணமான உழவர் வாழ்கின்ற தெருவும் மருத்துவ நூலோர் வாழும் தெருவும் சோதிட நூலோர் வாழுந்தெருவும் என வேறுபாடு தெரிந்த பல்வேறு தொழின் முறையோரும் தனித்தனி வாழுகின்ற தெருக்களும்; திருமணி குயிற்றுநர் - முத்துக்கோப்பாரும்; சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் - தமக்குச் சிறந்த கோட்பாட்டோடு அழகிய சங்கறுப்போர் வாழும் அகன்ற பெரிய தெருவும்; சூதர் - நின்றேத்துவாரும்; மாகதர் - இருந்தேத்து வாரும்; வேதாளிகரொடு - வைதாளி யாடுவார் என்று சொல்லப்பட்ட இவர்களோடே; நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் பூவிலை மடந்தையர் - அரசனுக்கு நாழிகைக்குக் கவி சொல்லுவாரும்; தாம்கொண்ட கோலத்தானும் கூத்தானும் நலம் பெறுகின்ற சாந்திக் கூத்தரும், களத்திலாடும் கூத்திகளும் அகக் கூத்தாடும் பதியிலாரும் அற்றைப் பரிசங் கொள்ளும் பரத்தையரும்; ஏவற்சிலதியர்-மடைப்பள்ளியாரடியாரும்; பயில் தொழில் குயிலுவர்-இடையறாது பயிலுகின்ற தொழிலையுடைய தோற்கருவி இசைப்பாரும்; பல்முறைக் கருவியர் - படைக்கும் விழாவிற்கும் பிறவும் பல்வேறு நிகழ்ச்சிகட்கும் பறை முதலியன கொட்டுவோரும்; நகை வேழம்பரொடு - நகைச்சுவைபடப் பேசும் நகைக் கூத்தரும் என்னும் இவர்கள் வாழுகின்ற; வகை தெரி இருக்கையும் - அவரவர் இனத்தின் வகை தெரிந்த இருப்பிடங்களும்; கடும்பரி கடவுநர் - கடிய குதிரைகளைச் செலுத்தும் அச்சுவவாரியரும்; களிற்றின் பாகரும் - யானைப் பாகரும்; நெடுந்தேர் ஊருநர்-நெடிய தேர்களை ஊருகின்ற தேர்ப்பாகரும்; கடுங்கண் மறவர் - சினக்கண்ணையுடைய காலாட்படைத் தலைவரும்; இருந்து புறஞ் சுற்றிய பெரும்பாய் இருக்கையும் - என்று கூறப்பட்ட நால்வேறு படை மறவரும்; அரண்மனையைச் குழவிருக்கும் பெரிய பரந்த இருப்பிடங்களும்; பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய - ஆகிய இவ்விடங்களிலெல்லாம் பெருமை பொருந்திய சிறப்பினையுடைய பெரியோர்கள் நிரம்பியுள்ள; பாடல்சால் சிறப்பின் பட்டினப்பாக்கமும் - புலவர் பெருமக்களால் பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்னும் பகுதியும் என்க.

(விளக்கம்) 40. கோவியன் வீதி - அகன்ற அரச வீதியும் எனினுமாம். இதனைச் செண்டுவெளிப்புறத் தெரு என்பர் அரும்பதவுரையாசிரியர். 41. பெருங்குடி வாணிகர் மாடமறுகு என்றது, மாநாய்கனும் மாசாத்துவானும் முதலியோர் வாழும் தெருவினை. இத் தெரு அரசமறுகுக்கு அடுத்துக் கூறப்படுதலு மறிக. மறையோர்-அந்தணர். வீழ் குடி-விரும்பப்படும் குடி. அஃதாவது வேளாண்குடி என்க. வீழ் குடி - காணியாளர் என்பர் அடியார்க்குநல்லார். இவரியல்பினை, கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும், நல்லானொடு பகடோம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியம் பண்ணியம் அட்டியும் பசும் பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசை யுழவர் எனப் பட்டினப்பாலை (199-205) விதந்தோதும். இனி வீழ்குடி என்பது கொடு மேழி நசையுழவர் என்றவாறுமாம்.

46. திருமணி - முத்து. சங்கறுப்போர் வேள்வித்தொழில் மட்டும் ஒழிந்த பார்ப்பனர் என்பவாகலின் அந்தணர்க்குரிய ஏனைய சிறந்த கொள்கையெல்லாம் உடைய என்பார், சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் என்றார். வேளாப் பார்ப்பான் வாளரம் துமித்த எனப் பிறரும் ஓதுதல் உணர்க. 48. வேதாளிக் கூத்தாடுவோர்.

49. நாழிகைக்கணக்கர் - இவரைக் கடிகையார் என்றும் கூறுப.

அவர் அவ்வாறு நாழிகை சொல்லுதலை,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரிதரும் கருவூரா - யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோய் ஒன்றுபோ யொன்று

எனவரும் பழைய வெண்பாவானுமுணர்க.

இவரை, நாழிகை வட்டி லீடுவாரும் என்பாருமுளர். சாந்திக் கூத்தாடுவோர் கண்ணுளர் எனப்படுவார். அவர் கொள்ளும் கோலத்தை,

வாசிகை வைத்து மணித்தோடணி யணிந்து
மூசிய சுண்ண முகத்தெழுதித் தேசுடனே
ஏந்துசுடர் வாள்பிடித்திட் டீசனுக்குங் காளிக்கும்
சாந்திக்கூத் தாடத் தகும்  (மதங்கும்)

எனவரும் வெண்பாவாலறிக.

50. காவற்கணிகையர் இராக்கடைப் பெண்டுகள் என்பாரும் உளர். 51. பூவிலை, இடக்கரடக்கு. அல்குல் விற்போர் என்றவாறு. அன்றன்று பரிசம் பெறுங்கணிகையர் என்பார் அற்றைப் பரிசங் கொள்வார் என்றார் (அடியார்க்) 51. ஏவற்சிலதியர் - பொதுவாகப் பணிமகளிர் எனினுமாம். 52. பன்முறைக்கருவியர்-குயிலுவராகிய தோற்கருவியாளரல்லாத நரப்புக் கருவி முதலிய பல்வேறு முறைமை யுடைய ஏனைய இசைக்கருவியாளர் எனினுமாம்.

53. நகைவேழம்பரை விதூடகர் என்ப. 56. பாயிருக்கை - பரந்த இடப்பிடம். 57-8: பீடுகெழுசிறப்பிற் பெரியோர் என்றது, அரசன் முதலிய நால்வேறு வகைப்பட்டவருள்ளும் இசைவாணர் முதலியோரினும் தொழிலாளருள்ளும் மிகவும் பெருமையுடையோராய் அரசனால் சிறப்புப் பெற்ற பெரியோர் என்றவாறு. இப்பெரியோர் மல்கியதனால் பாடல் சால் சிறப்பினையுடைய பட்டினம் என்க.

நாளங்காடி

59-67 : இருபெருவேந்தர் ........ பீடிகை

(இதன்பொருள்) இரு பெரு வேந்தர் முனை இடம்போல இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய சோலைமிடைமரம் - முடிமன்னர் இருவர் போர்மேல் வந்து தங்கிய பாசறையிருப்பிற்கு இடையிலமைந்த நிலம் போர்க்களம் ஆவது போன்று முற்கூறிய மருவூர்ப்பாக்கமும் பட்டினப்பாக்கமும் என இறுகூறுபட்ட ஊர்களுக்கு இடையிலமைந்த நிலம் (அம்மாநகர்க்கு நாளங்காடியாயமைந்தது அவ்வங்காடி எத்தன்மைத் தெனின்) நிரல்படச் செறிந்த சோலையின் மரங்களையே தூண்களாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்; கொள்வோர் ஓதையும் கொடுப்போர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடியில் - பொருள்களை விலைக்கு வாங்குவோர் தம் ஆரவாரமும் விற்போருடைய ஆரவாரமும் இடையறாது நிலைபெற்ற அந்நாளங்காடியின்; கடைகெழு - வாயிலின் மருங்கமைந்த; சித்திரை சித்திரைத்திங்கள் சேர்ந்தென-பண்டொரு காலத்தே சித்திரை நாளிலே சித்திரைத் திங்களிலே நிறைமதி சேர்ந்ததாக அப்பொழுது; தேவர் கோமான் வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என - தேவர்கட்கு அரசனான இந்திரன் தன் நண்பனாகிய வெற்றி வேலேந்திய முசுகுந்தன் என்னும் சோழ மன்னனுக்கு வருகின்ற இடையூற்றை ஒழிக்கும் பொருட்டு; ஏவலின் - ஏவியதனாலே; போந்த - புகார் நகரத்திற்கு வந்த; காவல் பூதத்துப் பீடிகை - காவற்றொழிலையுடைய பூதத்தின் பலிபீடத்தின் மருங்கே; என்க.

(விளக்கம்) 59-63. அடிகளார் இருபெரு வேந்தர் ........ நாளங்காடி எனக் கூறுகின்ற இவ்விடம் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில் முரண்களரி என்று கூறப்பட்ட இடமாதல் வேண்டும். அவர் காலத்தே ஈண்டு அங்காடி இருந்திலது. அவர் இவ்விடத்தை, அந்நகரத்து இரு கூற்றினும் வாழும் மறவர்கள் கூடித் தம்முள் எதிர்த்து போராடி மகிழும் விளையாட்டரங்கமாக வண்ணித்துள்ளார்: இதனைப் பட்டினப்பாலை 59. தொடங்கி 74. போந்தை என்பதீறாகவுள்ள பகுதியையும் இதற்கு யாம் எழுதிய உரைகளையும் விளக்கங்களையும் ஓதியுணர்க. நாளடைவில் இவ்விடம் நாளங்காடியாகவும் போர் மறவர் பலிக்கொடைபுரியும் இடமாகவும் மாறியது என்று ஊகித்தல் மிகையன்று. நாள் அங்காடி - பகற்பொழுதில் வாணிகஞ் செய்யும் கடை. அல்லங்காடி என்பது முண்டாகலின் இங்ஙனம் கூறினர்.

இருபெரு வேந்தர் முனையிடம் போல ஓதையும் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி என இயையும். இடைநிலமாகிய நாளங்காடி எனவும் கடைகால் யாத்த நாளங்காடி எனவும் நிலைஇய நாளங்காடி எனவும் தனித்தனி கூட்டுக. 62. சோலைக்கடை மிடைமரம் கால்யாத்த அங்காடி என மாறிக் கூட்டுக. சோலைக்கடை என்புழிக் கடை ஏழாவதன் சொல்லுருபு.

64. சித்திரைமீனைச் சித்திரைத் திங்களில் நிறைமதி சேர்ந்ததாக என்றவாறு. எனவே, சித்திரை மாதத்துப் பூரணைநாள் என்பதாயிற்று. இந்நாளிலே இப்பூதத்தை இந்திரன் முசுகுந்தற்குத் துணையாக விடுத்தான் எனவும், அந்நாள் தொட்டு அப்பூதம் இந்நாளங்காடி வாயிலின் மருங்குள்ள பலிபீடத்திருந்து பலிகொள்வதாயிற்று எனவுமுணர்க. 65. வெற்றிவேல் மன்னன் முசுகுந்தன் என்பது பழைய வுரையிற் கண்டது. முசுகுந்தன் சோழ மன்னன் என்பர். உற்றதை-வந்துற்ற இடுக்கணை. ஐகாரம் சாரியை எனலுமாம். 17. பீடிகை-பீடம்; பலிபீடம் என்க.

மறக்குடி மகளிர் பூதத்தை வழிபடுதல்

68-75 : புழுக்கலுந்..........ஓதையிற்பெயர

(இதன்பொருள்) மூதில் பெண்டிர் - மறக்குடிமகளிர்; புழுக்கலும்-புழுக்கலையும்; பொங்கலும் பூவும் - கள்ளையும் பூவையும்; நோலையும் விழுக்கு உடை மடையும் - எட்கசிவினையும் நிணச் சோற்றையும்; சொரிந்து - பலியாக உகுத்து; புகையும் -நறுமணப் புகையையும் காட்டி; மாதர்க்கோலத்துத் துணங்கையர் குரவையர் - அழகிய கோலம் பூண்டு துணங்கைக் கூத்தாடுவாராயும் குரவைக் கூத்தாடுவாராயும்; பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் - பெரிய நிலத்தை ஆளுகின்ற எம் மன்னனாகிய கரிகால் வளவனுடைய பெரிய நிலத்தில் வாழ்கின்ற மன்னுயிர் முழுதிற்கும்; பசியும் பிணியும் பகையும் நீங்கி-பசியும் நோயும் பகைமையும் ஒருங்கே நீங்குமாறு; வசியும் வளனும் சுரக்க என - மழையும் வளங்களும் சுரந்தருள்க என்று கூறி; வாழ்த்தி - வாழத்தெடுத்து; அணங்கு எழுந்து ஆடி - தெய்வமேறப்பட்டு ஆடுதலாலே; வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர - நாணிலிகள்போன்று வாய் சோர்ந்துரைக்கின்ற கொக்கரிப்போடே செல்லா நிற்ப என்க.

(விளக்கம்) 68-75. பீடிகையிடத்தே. 75. மூதிற் பெண்டிர் புழுக்கல் முதலியவற்றைச் சொரிந்து புகைத்துக் கோலத்தோடே துணங்கையும் குரவையும் ஆடியவராய் மன்னன் நிலமடங்கலும் சுரக்கென வாழ்த்தித் தம்மேல், (70) அணங்கெழுந்தாடலாலே வலவையின் உரைக்கும் ஓதையில் பெயர என ஏற்ற பெற்றி கொண்டுகூட்டிப் பொருள் கூறுக.

இங்ஙனமன்றி மூதிற் பெண்டிர் வலவைபோல உரைத்தற்குக் காரணமின்மையான் பிறர்கூறும் உரைகள் போலியாதல் உணர்க. அணங்கெழுந்து ஆட வலவையினுரைக்கும் ஓதை என அணங்கெழுந்தாடலை வலவையினுரைத்தற்குக் காரணமாக்குக.

68. புழுக்கல் - அவித்த அவரை துவரை முதலிய பருப்பு வகைகள். நோலை - எட்கசிவு (எள்ளுருண்டை). விழுக்கு-நிணம். 69. பொங்கல் - பொங்கல் சோறுமாம். புகை என்பதற்கேற்பப் புகையும் காட்டி என்க. துணங்கை குரவை முதலிய கூத்துக்களினியல்பு அரங்கேற்று காதையிற் காண்க. 70. மாதர் - காதல், அணங்கு எழுந்து ஆட என ஏதுப் பொருட்டாக்குக. 71. பெருநில மன்னன் என்பது முடிமன்னன் என்பதுபட நின்றது. இருநிலம் - பெரிய நிலத்து வாழும் உயிர்கள். ஆகுபெயர். 72. நீங்கி என்பதனை நீங்க என்க. 73. வசி-மழை. 74. வலவை - நாணிலி. வல்லபம் என்பாருமுளர். 75. மூதிற் பெண்டிர் -மறக்குடி மகளிர். மூதிற் பெண்டிர் என அடிகளாரே கூறியிருப்பவும், அடியார்க்கு நல்லார் இவர் அகப்பரிசாரமகளிர் என்பது பொருந்தாமையுணர்க.

அவிப் பலியும் பெருமிதச் சுவையும்

76-88 : மருவூர் ......... வான்பலியூட்டி

(இதன்பொருள்) மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் - மருவூர்ப் பாக்கம் என்னும் பகுதியிலுள்ள மறப்பண்பினை மேற்கொண்ட வீரர்களும்; பட்டின மருங்கில் படைகெழு மாக்களும் - பட்டினப்பாக்கம் என்னும் பகுதியிலுள்ள படைக்கலன் ஏந்திய வீரர்களும்; முந்தச் சென்று - ஒரு சாரார்க்கு ஒரு சாரார் முற்பட ஊக்கத்தோடே சென்று; பீடிகை - நம் காவற்பூதத்துப் பலிபீடத் திடத்தே; வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என-வெவ்விய போர்த்திறம் பெற்ற நம் மன்னனாகிய கரிகால் வளவனுக்கு வரும் இடுக்கணைத் தீர்த்தருளுதற் பொருட்டு; முழுப் பலிக்கொடை புரிந்தோர் - பலிக்கொடைகளுள் வைத்து முழுக் கொடையாகிய அவிப்பலி புரிந்தவர்; வலிக்கு வரம்பு ஆக என-மறத்திற்கு மேல்எல்லையாகுவர் என்னும் கோட்பாட்டோடே; கல் உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் பல்வேல் பரப்பினர் - பண்டு போர் மேற்கொண்டு கல்லை உமிழ்கின்ற கவண் உடை யோரும் கரிய பரிசை ஏந்தியோரும், பலவாகிய வேற்படை ஏந்திய பரப்பினையுடையோருமாக; மெய் உறத்தீண்டி அமர்க்களப் பரப்பிலே உடற்கரித்து; ஆர்த்துக்களங் கொண்டோர் ஆரவாரித்துக் களத்தின்கண் வெற்றி கொண்ட காலத்தே; ஆர் அமர் அழுவத்துச் சூர்த்துக் கடை சிவந்த சுடுநோக்குக் கருந்தலை-அப்போர்க்களப்பரப்பிலே தம்மை நோக்கினாரை அச்சுறுத்துக் கடைசிவந்த சுடுகின்ற கொள்ளித் தீப்போலும் பார்வையுடைத்தாகிய தமது பசுந்தலையை; வெற்றிவேந்தன் கொற்றம் கொள்கென - வெற்றியையுடைய எம் வேந்தன் கொற்றம் கொள்க என்று வாழ்த்தும்படி அரிந்து; நல்பலி பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு - நன்மையுடைய அப் பலிபீடம் பேரழகு எய்தும்படி வைத்த அப்பொழுதே; உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி - அக் குறையுடல்கள் தமக்கு வாயின்மையின் தந்தந்தோளிற் பூண்ட மயிர்க்கண் முரசின் வாயால் உயிர்க்கடன் தந்தோய் கொண்மின் என்று கூறி நின்று பலியூட்டா நிற்ப என்க.

(விளக்கம்) இப்பகுதிக்கு அடியார்க்குநல்லார் வகுத்த உரை உயர்வு நவிற்சியாய் மிகைபடத் தோன்றுகின்றது. என்னை? ஆர்த்துக்களங் கொண்ட வீரர் தங் கருந்தலையை அரிந்து பலிபீடத்தே வைப்ப அப்பொழுதே ஏனையோர் முரசமுழக்கி அவ்வான் பலியைப் பூதத்திற்கு ஊட்ட என்பதே அமைவதாகவும் தலைபேசும்படி அரிந்து ஒப்பித்துப் பலி பீடிகையிலே வைத்த அப்பொழுதே அக்குறை யுடல்கள் தமக்கு வாயின் மையின் ......... முரசின் உயிர்க்கடன் தந்தோம் கொண்மினென்று நின்று பலியூட்ட வென்பர் அடியார்க்குநல்லார். இஃது அவர் கருத்தன்றென்பது தேற்றம். ஆயினும், தலையாய பெருமிதச் சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த இக்கருத்துக் கவிச்சக்கரவர்த்தியாகிய செயங்கொண்டார் கருத்தாகும் என்பதனைக் கற்றோர் யாவரும் நன்குணர்வர். மற்று அவ்வுரையாசிரியரே கலிங்கத்துப் பரணியிலமைந்த இக்கருத்தமைந்த செய்யுட்பகுதிகளை ஈண்டு எடுத்துக் காட்டியுமுள்ளார். ஆசிரியர் அடியார்க்குநல்லார் உரையும் விளக்கங்களும் மிகையேயாயினும் கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குதலின் அவர் உரையைத் தழுவியே யாமும் வரைந்தாம். இனி வருவன அப் புலவர்பெருமான் தந்த விளக்கமும் எடுத்துக்காட்டுமாம். அவை வருமாறு :-

கழி - ஊன். பிணி - பிணித்தல். கறை - கறுப்பு. தோல் - பரிசை. மழையென மருளும் பஃறோல் (புறநா, 17-34) என்றாராகலின் கருங்கடகு என்பாருமுளர். மெய்யுறத் தீண்டி-உடற்கரித்து. அழுவம் - பரப்பு. சூர்த்து - அச்சமுறுத்து; என்றது:

நீண்டபழி பீடத்தி லறுத்து வைத்த
நெறிக்குஞ்சித் தலையைத்தன் னினமென் றெண்ணி
ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ
அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ

(கலிங்க - கோயில்: 16) என்றார்போல் வரும்.

சுழன்றென்பாருமுளர். சுடுநோக்கு - சுடுவதுபோலும் நோக்கு. என்றது, கொள்ளிக்கண் கண்ணுட் டீயாற் சுட்டு நீறாக்கி என்றார் (சீவக-807) பிறரும். கருந்தலை - பசுந்தலை. நலங்கௌ வைத்தென்றது - தமது அரிந்த தலையிற் குலைந்த மயிரையும் கோதி முடித்துக் குருதித் திலதத்தையும் நுதலிலே அணிந்து வைத்தென்றவாறு. என்னை?

மோடி முன்றலையை வைப்பரே
முடிகுலைந்த குஞ்சியை முடிப்பரே
ஆடிநின்றுகுரு திப்புதுத்திலத
மம்மு கத்தினி லமைப்பரே

என்பது.

உருமு - இடி. மயிர்க்கண்முரசு - புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர்சீவாமற் போர்த்த முரசு. என்னை ?

புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
கனைகுர லுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன் முரசத்தானைத் தோன்றலைத் தம்மினென்றாள்
நனைமலர் அலங்கற் கண்ணி நந்தனுந் தொழுது சேர்ந்தான்

எனவும்,

கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த
மயிர்க்கண் முரச மோவில கறங்க (மதுரைக், 742-3)

எனவும் சொன்னார் பிறரும். முரசொடு வான்பலியூட்டி - முரசத்தால் உயிர்ப்பலியூட்டி; என்றது,

அடிக்கழுத்தி னுடன்சிரத்தை யரிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரங் கொற்றவையைத் துதிக்கு மாலோ
குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ  (கலிங்க-கோயில்)

எனவும்,

மண்ணி னுளற வறுத்த தங்கடலை
வைத்த பீடிகை வலங்கொள
விண்ணி னாயகிதன் யாக சாலைதொறு
மீளவுஞ் சிலர் மிறைப்பரே

எனவும் வரும் (கலிங் - கோயில்). இவற்றாற் சொல்லியவை அவிப்பலியென்னும் புறப்பொருட் பகுதியும் (புறப் - வெண்- வாகை. 30). காப்பியத்துக்கு அங்கமான நவச்சுவையுள் வீரச்சுவை யவிநயமுமென்க எனவரும்.

கரிகாலன் வடதிசைச் செலவு

89-94 : இருநில மருங்கில் ............. அந்நாள்

(இதன்பொருள்) இருநில மருங்கில் - வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த பெரிய தமிழ்நாட்டின்கண்; பொருநரைப் பெறாஅ - எஞ்சிய பாண்டிய மன்னனும் சேரமன்னனும் தனக்குக் கேளிராய் ஒருமொழிக் குரிமையுடையராதல் பற்றித் தன்னோடு பொருவாரல்லராகலின் வேறு பகைவரைப் பெறமாட்டாமையாலே; திருமாவளவன் - திருமாவளவன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற கரிகான் மன்னன்; செரு வெம் காதலின் இம்மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள் நண்ணார்ப் பெறுக என - தான் போரைப் பெரிதும் விரும்பும் விருப்பம் காரணமாகக் குணக்குங் குடக்கும் தெற்கும் கடலாக எஞ்சிய வடதிசையிடத்தே இந்நில வுலகத்தே; வலிமை பொருந்திய என்தோள் தகுந்த பகைவரைப் பெறுவதாக வேண்டும் எனக் கொற்றவையை மனத்தால் வணங்கி; புண்ணியத் திசைமுகம் - புண்ணியத் திசையென்று சான்றோர் புகழ்கின்ற அவ்வட திசையில் போர்மேற் செலவு குறித்து; வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து - தன் வாட் படையினையும் கொற்ற வெண்குடையையும் சீவாது போர்த்த போர் முரசத்தையும் நல்லதொரு நாளால் புறவீடு செய்து; போகிய அந்நாள் - சென்ற அந்த நாளிலே என்க.

(விளக்கம்) இருநிலம் என்றது வடவேங்கடந் தென்குமரி ஆயிடைக் கிடந்த தமிழ்கூறும் நல்லுலகத்தை. இத்தமிழ் நிலத்து எஞ்சிய முடிவேந்தர் இருவரும் மொழியால் ஒரு குடியினராய்ப் பெண்கோடற்கும் கொடுத்தற்குமுரிய உறவினரும் ஆதலான் இவரொடு பொருதுகொள்ளும் வெற்றி தனக்குச் சிறந்ததொரு வெற்றியாகாமையின் பொரு நரைப்பெறா அன் ஆயினன் என்க. இருநில மருங்கின் என்பதற்கு, தமிழ் அகத்தே எஞ்சிய இரண்டு நிலத்தினும் எனினுமாம். இதற்கு முற்றும்மை பெய்துரைக்க. வாளும் நாளும் பெயர்த்தல் - வாள்நாட் கோள் குடைநாட் கோள் முரசுநாட் கோள் என்னும் போர்த்துறைகள். இவை வஞ்சித்திணையின் பாற்படும். இவற்றுள் வாள் நாட் கோடல், செற்றார்மேற் செலவமர்ந்து கொற்றவாணாட் கொண்டன்று (கொளு) எனவும், அறிந்தவ ராய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன் - எறிந்திலங் கொள்வாளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு, நண்பகலும் கூகை நகும் எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்றானும் உணர்க. குடைநாள்கோள் பெய்தாமம் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று எனவும் (கொளு). முன்னர், முரசிரங்க மூரிக் கடற்றாணை, துன்னரும் துப்பிற் றொழு தெழா - மன்னர், உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடை நாள் இறைவன் கொள, எனவும் (வரலாறு) முரசுநாட் கோள் : இதற்கு மாசற விசித்த....... ஈங்கிது செயலே எனவரும் புறநானூற்றுச் செய்யுளைக் காட்டுவர் அடியார்க்குநல்லார்.

94. வடதிசையைப் ... புண்ணியத்திசை என்பது பௌராணிகர் மதம்.

கரிகாலன் இமயப் பொருப்பில் புலியிலச்சினை பொறித்தது

95-98 : அசைவில்.........பெயர்வோற்கு

(இதன்பொருள்) அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய- ஒரு சிறிதும் மடிந்திராமைக்குக் காரணமான மனவெழுச்சியோடே மேலும் செல்லுதற்கியன்ற எனது வேணவா பின்னிட் டொழியும்படி; இப்பயம்கெழு மலை - பயன்மிக்க இம்மலை; பகை விலக்கியது என - எனக்குப் பகையாகிக் குறுக்கே நின்று விலக்கிற்று என்று சினந்து; இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை-தேவர்கள் வதிகின்ற அவ்விமய மலையினது பிடரின் கண் தன் வெற்றிக் கறிகுறியாக; கொடுவரி யொற்றி - தன திலச்சினையாகிய புலியுருவத்தைப் பொறித்து; கொள்கையில் பெயர்வோற்கு - தனது மேற்கோளாகிய மேற்செலவினின்றும் மீள்கின்ற அக்கரிகாற் பெருவளத்தானுக்கு என்க.

(விளக்கம்) 95. அரசற்கு இன்றியமையாப் பண்புகளுள் ஊக்கமுடைமை தலைசிறந்ததாகலின் கரிகாலனுடைய ஊக்கத்தை அசைவில் ஊக்கம் என விதந்தனர். நசை - வென்றியின்கண் நின்ற வேணவா. பிறக்கொழிதல் - பின்னிடுதல். பிறகு - பின்பு. இதனை பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவு என்பர். (அடியார்க்) தமிழ்ச் சொல்லென்று கொள்ளுதலே நேரிதாம். 96. பயம் - பயன். அஃதாவது பேரியாறுகளுக்குத் தாயாகி வளம் பெருக்குதல். 97. சிமையம்-குவடு; சிகரம். இமயமலைக் குவடுகளில் இமையவர் உறைகின்றனர் என்பது பௌராணிக மதம். இமயமலையின்கண்ணும் ஏறி அதன் சிமையங் கண்டு மீண்டான் என்பது தோன்ற சிமையப் பீடர்த்தலைஒற்றி என்றார். 98. கொடுவரி-புலி (இலச்சினை). கொள்கையில் பெயர்தல் - கொள்கையைக் கைவிட்டு மீள்தல்: ஈண்டுக் கொள்கை - மேற்செலவென்க. கரிகாலன் இமயத்தே புலிபொறித்த செய்தியை,

செண்டு கொண்டு கரிகாலனொரு காலிமையச் சிமைய மால்வரை திரித்தருளி மீள வதனை, பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற் பாய்புலிப்பொறி குறித்தது மறித்த பொழுதே, எனவும், கச்சி வளைக்கைச்சி காமக்கோட் டங்காவல், மெச்சி யினிதிருக்கு மெய்ச் சாத்தன் - கைச்செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் எனவும் வருவனவற்றாலும் (கலிங்க - இராச) உணர்க. ஆசிரியர் சேக்கிழார் தாமும்,

இலங்குவேற்கரி காற்பெரு வளத்தான் வன்றிறல்புலி இமயமால் வரைமேல் வைக்க வேகுவோன் எனக் குறித்தருளினர். (பெரியபு-திருக்குறிப்பு. 85.)

கரிகாலனுக்கு வடவேந்தர் திறையிட்ட பொருள் மாண்பு

99-110: மாநீர்.........மண்டபம்

(இதன்பொருள்) மாநீர் வேலி வச்சிர நல் நாட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் - கடலை அரணாகவுடைய நல்ல வச்சிர நாட்டு வேந்தன் தான் இறுக்கக்கடவ முறையிலே இறைப் பொருளாகக் கொடுத்த அவனது கொற்றத்தால் வந்த முத்தினாலியன்ற பந்தரும்; மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் - மகதம் என்னும் வளமிக்க நாட்டை யாள்கின்ற வாள்வென்றி வாய்த்த மறப்புகழுடைய மன்னவன் பகைத்து வந்தெதிர்ந்து தோல்விமெய்தி அடங்கிய விடத்தே இறையாகத் தந்த பட்டிமண்டபமும்; அவந்தி மன்னன் உவந்தனன் கொடுத்த நிவந்து ஓங்கு மரபின் வாயில் தோரணமும் - பின்னர் அவந்தி நாட்டு வேந்தன் கேண்மையுடைனாய் மகிழ்ந்து கொடுத்த மிகவுமுயர்ந்த தொழிற்றிறமமைந்த முறைமையினையுடைய வாயிற்றோரணமும்; பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின-அவைதாம் பொன்னானும் மணியானும் இயற்றப்பட்டனவே யாயினும், இந்நிலவுலகத்தே பிறந்த நுண்ணிய தொழில்வல்ல கம்மியராலே இயற்றப்பட்டன அல்ல என்று கூறப்படும் வரலாற்றுச் சிறப்பையுடையன - (மற்றிப்பொருள்கள் தாம் பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புத்தான் யாதோ வெனின்;), அவர் தொல்லோர் துயர்நீங்கு சிறப்பின் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின-அவற்றைக் கொடுத்த வச்சிரநாட்டு மன்னன் முதலிய மூவேந்தருடைய முன்னோர்கள் ஓரோர் காலத்து ஓரோரிடத்துச் செய்த உதவிக்குக் கைம்மாறாக மயனால் படைத்துக் கொடுக்கப்பட்டவை (என்ப). இவைதாம் ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபமன்றியும் - இத்தகைய சிறப்புடைய இம்மூன்று பொருள்களும் அக்கரிகாற் பெருவளத்தானாற் கொணரப்பட்டு ஓரிடத்தே சேர்த்து வைக்கப்பட்டிருத்தலால் சான்றோர்களால் புகழ்தற்குக் காரணமாய்க் காண்போர்க்கு அரியதொரு பேறாகவமைந்த இம் மண்டபமும் என்க.

(விளக்கம்) கரிகாலன் இமயத்தே புலிபொறித்து மீள்பவனுக்கு வச்சிரநாட்டு மன்னன் முதலியோர் கொடுத்த முத்தின் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் ஆகிய இம்மூன்று பொருள்களும் அவனது வெற்றிச் சின்னங்களாக மக்கள் காட்சிக்காக ஒரு மண்டபத்தே ஒருசேர வைக்கப்பட்டிருக்கின்றன; ஆதலால், அப்பொருட்காட்சி மன்றமாக அமைந்த மண்டபத்தை உயர்ந்தோ ரேத்தும் அரும் பெறல் மரபின் மண்டபம் என அடிகள்பாராட்டிக் கூறுகின்றனர் என்றுணர்க. இம்மண்டபத்தின் வரலாறு இக்காலத்து நாகரிகத்தைப் பெரிதும் ஒத்திருத்தலுணர்க.

99. மாநீர் - கடல். 100. இறை-திறைப்பொருள். 101. வாள் வாய் - வாள்வென்றி வாய்த்த என்க. 102. பகைப்புறத்துக் கொடுத்த என்றது பகைத்துவந்து போர்செய்து ஆற்றாமையால் அடங்கி அடி வணங்கிக் கொடுத்த என்றவாறு. பகைப்புறம் - அடங்குதல். 103. உவந்தனன் - உவந்து. உவந்தனன் எனவே இவன் நண்பன் என்பது பெற்றாம். 104. தோரணவாயிலும் என மாறுக. 107. அவர்-என்றது வச்சிரநாட்டு வேந்தன் முதலிய மூவேந்தரையும்.

வெள்ளிடை மண்டபம்

110 - 117: அன்றியும்.........வெள்ளிடைமன்றமும்

(இதன்பொருள்) அன்றியும் - இவ் வரும்பெறல் மண்டபமல்லாமலும்; தம் பெயர் பொறித்த - தாம் பொதிந்துள்ள சரக்கின் பெயர் பொறிக்கப்பட்டனவும்; கண் எழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக் கடை முகவாயிலும் - முகவரியாகிய எழுத்துக்களை எழுதிப் போகட்டனவும் இலக்கமிட்டுப் போகட்டனவுமாகிய பல்வேறு மூடைகள் கிடக்கும் பண்டகசாலையின் முகப்பாகிய வாயில் காக்கும் காவலையும்; கருந்தாழ்க் காவலும்-கதவுகளில் இருப்புத் தாழிட்டுக் காக்கும் காவலையும்; உடையோர் காவலும்-தம்மையுடையோர் காக்கும் காவலையும்; ஒரீஇய வாகி - விடப்பட்டனவாய்க் கிடப்பவற்றை; வம்பமாக்கள் கட்போர் உளர் எனின்-யாரேனும் புதியவர் களவு செய்வோர் வருமிடத்து; தலையேற்றி-அவர் களவு செய்யக் கருதிய மூடையை அவராலேயே அவர் தலையில் ஏற்றுவித்துப் பின்னர்; கடுப்பக் கொட்பின் அல்லது - கழுத்துக் கடுப்ப அதைச் சுமந்துகொண்டு அவ்வூர் மறுகிற் சுழற்றுவதல்லது; கொடுத்த லீயாது - அவர் நினைந்தாங்கு அதனைக் கொண்டுபோக விடாதாகலின்; உள்ளுநர்ப் பனிக்கும் - களவென்பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்குவிக்குமியல்புடைய; வெள் இடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் என்க.

(விளக்கம்) 111. வம்பமாக்கள். 115. கட்போருளர் எனின் என்று கொண்டுகூட்டுக. வம்பமாக்கள்-அவ்வூர்க்குப் புதியராய் வந்தவர்கள். அவ்வூரில் வாழுகின்ற பதியெழுவறியாப்பழங்குடிமாக்கள் எல்லாம் அம்மன்றினியல்பறிவார், மேலும் அவரெல்லாம் செல்வர். ஆதலின் களவு செய்ய நினையார் எனவும், பிறநாட்டிலிருந்து வந்தோருட் சிலர் இம்மன்றின் தன்மையை அறியாது களவு செய்ய நினைப்பின் என்பார் வம்பமாக்கள் கட்போர் உளரெனின் என்றார். 113. கடை முகவாயிலும் - பண்டகசாலைக் கட்டிடமமைத்து அதன் வாயிலில் நின்று காக்கும் காவலையும் என்க. கருந்தாழ் - இரும்பாலியன்ற தாழக்கோல்; கருங்காலி முதலிய வன்மரத்தாழுமாம்; வலியதாழுமாம். தாழ்க்காவல், கதவமைத்து அதன் தாழைச் செறித்துக் காக்குங்காவல் என்க. பற்றாயத்துக் கருந்தாழ் என்பர் பழையவுரையாசிரியர் உடையோர் - அப்பொதிகளை யுடையோர். எனவே, வாயிலென்னப் பூட்டென்ன மதில் என்ன வழங்கும் எவ்வகைக் காவலும் இன்றி வெட்டவெளியிலே கிடக்கும் பொதிகள் என்றாராயிற்று. இது கள்வோரிலாமைப் பொருள் காவலுமில்லை என நிகழும் கம்பநாடர் செய்யுளை நினைவூட்டுகின்றது. 114. ஒரீஇய - விட்டன. 115. கட்போர் - களவு செய்வோர் உளராதல் அருமையாதலின், உளரெனின் என்றார். கடுப்ப-மிகுதியாக எனலுமாம். கட்போரைக்கொண்டே அவர் தலைமேல் கடுப்ப ஏற்றிப் புறம்போக விடாமல் அந்தச் சுமையோடே சுழல்விக்கும். இஃது அவ்வெள்ளிடை மன்றத்தின் தன்மை என்றவாறு. 116. கொட்பின்-சுற்றின்; இது பிறவினைப் பொருட்டாய் சுழல் விக்கும் என்னும் பொருள்பட நின்றது. கொடுத்தலீயாது - கொடாது என்னும் பொருட்டாய திரிசொல். 117. ஆதலால், உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடைமன்றம் என்க. பனிக்குமன்றம் - இடத்து நிகழும் பொருளின் தொழில் இடத்தின் மேனின்றது. வம்பமாக்களாகிய உடையோர் எனினுமாம்.

இலஞ்சி மன்றம்

118-121: கூனும்...........மன்றமும்

(இதன்பொருள்) கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகு மெய்யாளரும் - கூனுடையோரும் குறளுருவுடையோரும் ஊமரும் செவிடரும் ஆகிய உறுப்புக் குறையுடையாளரும் தொழு நோயாளரும் ஆகிய பயனில் பிறப்புடைய மாந்தர்; முழுகினர் ஆடி-தன்பால் வந்து முழுகி நீராடியபோதே; பழுது இல் காட்சி நல்நிறம் பெற்று - கூன் முதலிய குறைபாடில்லாத தோற்றத்தையும் நல்ல நிறத்தையும் பெற்று; வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் - மகிழ்ந்து தன்னை வலஞ்செய்து தொழுது போதற்குக் காரணமான கடவுட்பண்புடைய பொய்கையை யுடைமையால் இலஞ்சி மன்றம் என்று கூறப்படும் மன்றமும் என்க.

(விளக்கம்) 118. கூன் முதலிய உறுப்புக் குறைபாடும் தொழு நோய் முதலிய பிணியுடையோரும் என இருவகைக் குறைபாடும் கூறினர். இத்தகைய பிறப்புடையோரை ஊதியமில்லா எச்சப் பிறப்பு என்று கூறும் புறநானூறு. அது வருமாறு:

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்கு
எண்பே ரெச்சம் என்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதியம் இல்  (28)

எனவரும். 119. அழுகு மெய்யாளர் - தொழுநோயாளர். முழுகினர் - முழுகி. காட்சி - தோற்றம். 121. இலஞ்சி - பொய்கை.

நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றம்

122-127: வஞ்சமுண்டு.........மன்றமும்

(இதன்பொருள்) வஞ்சம் உண்டு பகை மயல் உற்றோர் - வஞ்சனையாலே சிலர் தீயமருந்தூட்ட அதனை யறியாதுண்டமையால் தமதறிவிற்குப் பகையாகிய பித்தேறினாரும்; நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர் - நச்சுத்தன்மையுடைய உணவை யுட்கொண்டு தாம் நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தினோரும்; நாகத்து அழல்வாய ஆர் எயிறு அழுந்தினர் - அரவினது நஞ்சுடைய வாயிற் பொருந்தின பற்கள் அழுந்தும்படி கடியுண்ட வரும்; கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர் - பிதுங்கின கண்ணையுடைய பேயாற் பிடிக்கப்பட்டுப் பெருந்துன்ப மெய்திய வரும் என்னும் இவர்கள்; சுழல வந்து தொழத் துயர்நீங்கும் - ஒருகாற் றன்னை வலம்வந்து தொழுந்துணையானே அத்துன்பங்கள் துவர நீங்குதற்குக் காரணமான கடவுட்பண்புடைய; நிழல் கால்-ஒளிவீசுகின்ற; நெடுங் கல் நின்ற மன்றமும் - நெடிய கற்றூண் நிற்றலால் நெடுங்கல்மன்றம் என்னும் மன்றமும் என்க.

(விளக்கம்) 122. வஞ்சம் - ஆகுபெயர்; வஞ்சித் தூட்டிய தீயவுணவு. பகை மயல் என மாறுக. அறிவிற்குப் பகையாகிய மயக்கம்; அது பித்து. அறியாமையாலோ வாழ்க்கையை முனிந்தோ. 123. நஞ்சமுண்டு துயர் உற்றோர் என்க. 124. நாகத்து அழல்வாய் ஆர் எயிறு என்க. அழல்-நஞ்சு; ஆகுபெயர். அழுந்தினர்-அழுந்துமாறு கடியுண்டோர். கழல்-கழற்சிக்காய் எனினுமாம். 127. நிழல்-ஒளி.

பூத சதுக்கம்

128-134: தவமறைந்து ........... சதுக்கமும்

(இதன்பொருள்) தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளரும் - தம்மைப் பிறர் நம்புதற் பொருட்டுத் தவவேடத்தில் மறைந்து நின்று அத் தவநிலைக்குப் பொருந்தாத தீநெறிக்கண் ஒழுகுகின்ற பண்பற்ற பொய் வேடத்தாரும்; மறைந்து அவம் ஒழுகும் அலவல் பெண்டிரும் - தங்கணவர் காணாமல் மறைவாகத் தீய நெறிக்கண் ஒழுகும் அலவலைப் பெண்டிரும்; அறைபோகு அமைச்சர் - கீழறுக்கும் அமைச்சர்; பிறர்மனை நயப்போர் - பிறர் மனைவியரை விரும்பினோர்; பொய்க்கரியாளர் - பொய்ச்சான்று கூறுவோர்; புறங்கூற்றாளர் - புறங்கூறுவோர்; என்னும் இத் தீவினையாளர்களே; என் கைக் கொள் பாசத்துக் கைப்படுவோர் என - யான் என் கையிடத்தே கொண்டுள்ள இக் கயிற்றகத்தேபடுதற் குரியாராவார் என்று; காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி - அவ்வூர் நாற்காத வெல்லையும் கேட்கும்படி தனது கடிய குரலாலுணர்த்தி; பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் - அத்தகைய தீவினையாளரைத் தன் பாசம் கட்டிக் கொணருங்கால் அவரை நிலத்திற் புடைத்துக் கொன்று தின்னும் பூதம் நிற்றலாலே; பூத சதுக்கம் எனப்படும் சதுக்கமும் என்க.

(விளக்கம்) 128. தவம் - தவவேடம். இவ்வேடம் சமயந்தோறும் வேறுபடும். தவமாவது -மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும் மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றாற் றம்முயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களை யோம்புதல். இதனை,

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு  (குறள் - 261)

என்றற் றொடக்கத்துத் திருக்குறளான் அறிக. வேடம் - தலைமயிரைப் பறித்தலும் நீட்டலும் மழித்தலும் துவராடை யுடுத்தலும் பிறவுமாம். இனி, மறைந்தொழுகலாவது: உரனின்மையால் அத்தவத்தோடு பொருந்தாத தீயவொழுக்கத்தை மேற்கோடல். 131. அவம் - பிற ஆடவரை விரும்புதல் முதலிய தீயவொழுக்கம். அலவலைப் பெண்டிர், அலவற் பெண்டிர் என விகாரமெய்தியது. 130. அறைபோதல். கீழறுத்தல். 121. பொய்க்கரி - பொய்ச்சான்று. 132. பாசத்துக்கை - பாசத்திடம். 133. குரலால் உணர்த்தி. 134. சதுக்கம் - நாற்சந்தி.

பாவை மன்றம்

135-138: அரைசு .......... மன்றமும்

(இதன்பொருள்) அரைசு கோல் கோடினும் - அரசன் செங்கோன்மையிற் சிறிது பிறழினும்; அறங்கூறு அவையத்து உரை நூல் கோடி ஒருதிறம் பற்றினும் - அறநூல் நெறிநின்று அறங்கூறும் அறவோர் அவ்வயைத்திலிருந்து தமக்கென்று அறமுரைக்கும் நூனெறி பிறழ்ந்து ஒருமருங்குபற்றிக் கூறினும்; நாவொடு நவிலாது - இத்தீமைகளைத் தன்னாவினாற் கூறாமல்; நவை நீர் உகுத்து - அத்தீமைக்கு அறிகுறியாகக் கண்ணீர் சொரிந்து; பாவை - தெய்வத்தன்மையுடைய படிவம்; நின்று அழூஉம் - தன்பால் நின்று அழுதலாலே; பாவை மன்றமும் - பாவை மன்றம் எனப்படுகின்ற மன்றமும் என்க.

(விளக்கம்) 135. அரைசு - போலி. கோல் - செங்கோன்மை. அறங்கூறவையம்: பொருள் முதலிய காரணம்பற்றித் தம்முட் கலாஅய்த்து வருவார்க்கு நூனெறி நின்று அறங்கூறி வழக்குத் தீர்க்குமிடம். 136. ஒருதிறம்-அறம் நோக்காது உறவு முதலியவை நோக்கி ஒருவர் சார்பில் நின்று தீர்ப்புக் கூறுதல். 137. நாவொடு - நாவால். நவையை அறிவிக்கும் கண்ணீர் என்க. நவை-தீமை. பாவை நின்றழூஉம் மன்றம் என்றது அழும்பாவை நிற்றலால் அப்பெயர் பெற்ற மன்றமும் என்றவாறு.

139-140 : மெய்வகை .......... பலியுறீஇ

(இதன்பொருள்) மெய்வகை தெரிந்த மேலோர் ஏத்தும் - உண்மையின் திறத்தை யுணர்ந்த சான்றோரால் புகழ்ந்து பாராட்டப்படுகின்ற; ஐவகை மன்றத்தும் - முற்கூறப்பட்ட ஐந்துவகைப்பட்ட கடவுட் பண்புடைய வெள்ளிடை மன்றம் முதலிய ஐந்து மன்றத்தும்; அரும் பலி உறீஇ - அரிய பலிகளைக் கொடுத்து என்க.

(விளக்கம்) 110. அரும்பெறன் மண்டபமன்றியும், 117. வெள்ளிடை மன்றம், 121. இலஞ்சி மன்றம், 127. நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம், 134. பூதசதுக்கம், 138. பாவை மன்றம் என்னும் இவ்வைந்து மன்றங் கட்கும் பலிகொடுத்து என்க. அரும்பலி என்றமையால் அவிப்பலி என்பது போதரும்.

இந்திரவிழாவின் முதலும் முடிவும்

ஐராவதத்திற் கறிவுறுத்தல்

141-144 : வச்சிரக் ........ சாற்றி

(இதன்பொருள்) வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் நறுமணம் கெழுமிய வீர முரசத்தை; கச்சையானைப் பிடர்த்தலை யேற்றி - கச்சை முதலியவற்றால் அணி செய்யப்பட்ட களிற்றியானையின் பிடரிடத்தே ஏற்றி; வால் வெள் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - தூய வெள்ளை நிறமுடைய களிற்றுயானைகட் கெல்லாம் அரசனாகிய ஐராவதம் என்னும் யானை என்றும் நின்று விளங்கிய கோட்டத்தின் முன்றிலிலிருந்து; விழவின் கால்கோள் கடைநிலை சாற்றி - இந்திரவிழாவின் தொடக்க நாளையும் இறுதி நாளையும் நகரமெங்கணும் முரசறைந்து அறிவித்து என்க.

(விளக்கம்) 141. வச்சிரக் கோட்டத்து மணம் கெழுமுரசம் என்றதனால், எப்பொழுதும் அந்த முரசம் அக்கோட்டத்தில் இருப்பதாம் என்பதும் பெற்றாம். வீரமுரசம் நாடோறும் மலர் அணிந்து நறும் புகை எடுத்து வழிபாடு செய்யப்படும். ஆதலால் - மணம் கெழுமுரசம் என்றார். மணம் - நறுமணம் (அடியார்க்) மணமுரசு - விழாமுரசு என்றல் பொருந்தாது. பண்கெழு முரசம் என்னும் பாடவேற்றுமையு முண்டென்பது பழையவுரையாலறியலாம். கச்சை - யானைக்குக் கீழ் வயிற்றிற்கட்டும் கச்சை. கச்சை கூறவே அணிசெய்யப்பட்ட களிறு என்றாராயிற்று. விழாவறையத் தொடங்கும் வள்ளுவர் முதன்முதல் ஐராவதக் கோட்டத்தின் முன்றிலினின்றும் தொடங்குதல் மரபு என்பது வால்வெண்......சாற்றி என்பதனாற் பெற்றாம். இந்திரவிழவிற்கு முரசறையுங்கால் ஐராவதக் கோட்டத்தினின்றும் தொடங்கி நகர் முழுதும் அறையப்படும் என்பது மணிமேகலையானும் அறியப்படும். அவ்வாறு செய்வது, ஐராவதம் இந்திரனைக் கொணர்தற்கு என்பர் (அடியார்க்) இஃது இனிய விளக்கம்.

இந்திரவிழவிற்குக் கொடி யேற்றுதல்

145-146 : தங்கிய ........... எடுத்து

(இதன்பொருள்) தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து - தேவேந்திரன் வந்து தங்கிய இடமென்னுமொரு கோட்பாட்டை யுடைய தருக் கோட்டத்தின் முன்னர்; வான் உற மங்கல நெடுங்கொடி எடுத்து - வானத்தைத் தீண்டுமளவு எண்வகை மங்கலங்களோடும் அவ்விழவின் கால்கோட்கு அறிகுறியான ஐராவதம் எழுதப்பட்ட கொடியினை உயர்த்து; என்க.

(விளக்கம்) இந்திரன் வானவர் உலகில் கற்பகக் காவினூடே வதிவானாகலின், அதற்கீடாக இங்கும் அவன் வந்து தங்கியதாக வொரு கோட்பாட்டோடே மலர்ப்பொழிலினூடே அமைக்கப்பட்ட கோட்டம் தருநிலைக் கோட்டம் எனப்பட்டது என்றுணர்க. மங்கலம் - எண்வகை மங்கலப் பொருள்கள். அவையிற்றை சாமரை தீபம் தமனியம் பொற்குடம், காமர் கயலி னிணை முதலாத்-தேமரு, கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரசம், எண்ணிய மங்கலங்கள் எட்டு, என்பதனாலறிக.

தருநிலைக் கோட்டத்தை அணிசெய்தல்

147-156: மரகத ........ வீதியில்

(இதன்பொருள்) மரகத மணியொடு வயிரம் குயிற்றி - மரகதம் வயிரம் என்னும் மணிகளை விளிம்புண்டாக அழுத்தித் தளமாகப் படுத்து; பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் - அவ் விளிம்பின்மீதே பவளத்தாலியன்ற திரண்ட தூண்களை நிரைத்த பசிய பொன்னாலியன்ற திண்ணைகளையும் நெடிய நிலைகளையும் உடைய மாளிகை வாயிலிடந்தோறும்; கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து மங்கலம் பொறித்த மகரவாசிகை தோரணம் நிலைஇய - கிம்புரி செறித்த கொம்பினையுடைய யானையினது அங்காந்த வாயினின்றும் தூங்குகின்ற ஒளிகிளரும் முத்துக் குஞ்சங்களின் வரிசையினையும் சாமரை முதலிய எண்வகை மங்கலப் பொருள்களையும் பொறிக்கப்பட்ட ஓவியங்களையும் உடைய வாசிகை வடிவாக வளையச் செய்த மகரதோரணங்கள் நிலைபெற்ற; தோம் அறு பசும் பொன் பூரண கும்பத்து - குற்றமற்ற பசிய பொன்னாலியன்ற நிறை குடங்களும்; பொலிந்த பாலிகை - முளையாற் பொலிவு பெற்ற பாலிகைகளும்; பாவை விளக்கும் - பாவை விளக்கும்; பசும் பொன் படாகை-பசும் பொன்னாலியன்ற கொடிகளும்; தூ மயிர் கவரி - வெள்ளிய கவரி மயிராலியன்ற சாமரையும்; சுந்தரச் சுண்ணமும் - அழகிய சுண்ணமும்; மேவிய கொள்கை வீதியில் - பிறவும் பொருந்திய அணிகளையெல்லாம் தன்பால் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

(விளக்கம்) 146. மரகதமணியோடு வயிரமணிகளையும் அழுத்தித் தளமிட்டு என்க. 148. வேதிகை-திண்ணை; மேடை. 150. கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்தொழுக்கம் என்றதனால் யானையினது வாயினின்றும் தூங்கும் முத்துக்குஞ்சம் என்பது பெற்றாம். கிம்புரிப் பகுவாய்-மகரவாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். அது பொருந்துமேற் கொள்க. 151-2. மங்கலம் - மங்கலப் பொருள்களின் ஓவியம். மகர வாசிகைத் தோரணம் - மகரவாயினின்றும் புறப்பட்டதாக வளைத்த தோரணம். 154. பாவை கையிலேந்திய விளக்கு. படாகை - கொடி. தூமயிர் - வெண் மயிர். 156. கொள்கை - கொள்ளல். கும்பம் முதலியவாகப் பொருந்தியவற்றைக் கொள்ளுதலுடைய வீதியில் என்க.

156-160: செறிந்து ........ ஈண்டி

(இதன்பொருள்) ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசியற் சுற்றத்தாராகிய ஐம்பெருங் குழுவினரும் எண்வகைப்பட்ட ஆயத்தாரும்; அரச குமரரும் - மன்னர் மக்களும்; பரத குமரரும் - பெருங்குடி வாணிகர் மக்களும்; கவர் பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பரித் தேரினர் - காண்போர் உளங் கவரும் அழகிய பரிப்பினையுடைய குதிரையினை யுடையோரும் களிற்றியானை யூர்ந்துவருந் தொகுதியினரும் விரைந்து செல்லும் குதிரையையுடைய தேரினையுடையோருமாய்; இயைந்து ஒருங்கு (156)ஈண்டி செறிந்து - ஒன்றுபடத் திரண்டு நெருங்கி; ஆங்கு-அப்பொழுதே என்க.

(விளக்கம்) 156. செறிந்து ஆங்கு என்பதனை, 60. ஈண்டி என்பதன் பின்னர்க் கூட்டுக. 157. ஐம்பெருங் குழு - அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாஅத் தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங்குழு வெனப்படுமே, என்னுமிவர்.

எண்பேராயம் - காரணத்தியலவர் கருமகாரர், கனகச் சுற்றம் கடைகாப்பாளர், நகரமாந்தர் நளிபடைத்தலைவர், யானைவீரர் இவுளி மறவர், இனையர் எண்பேராயம் என்ப என்னுமிவர். இனி அரும்பதவுரையாசிரியர் சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுக நெய், ஆய்ந்த விவர் எண்மர் ஆயத்தோர் - வேந்தர்க்கு, மாசனம் பார்ப்பார் மருத்தர் வாழ் நிமித்தரோ டமைச்சர், ஆசில் அவைக்களத்தார் ஐந்து எனக் காட்டுவர். 58. பரதர்-வணிகர். கவர்பரி - ஊர்வோர் வாரைக் கவர்ந்திழுத்தற்குக் காரணமான பரிப்பினையுடைய புரவி யெனினுமாம். பகுத்து விரையும் செலவு என்பாருமுளர். இவர்தல் - இழுத்தல்.

விண்ணவர் தலைவனை விழுநீராட்டல்

161-168 : அரைசு ...... விழுநீராட்டி

(இதன்பொருள்) மா இரு ஞாலத்து - மிகப்பெரிய இந்நிலவுலகத்தின் கண்ணே; அரைசு மேம்படீஇய - தம்முடைய அரசியலானது மேம்படுதற் பொருட்டு; மன்னுயிர் காக்கும் - நிலைபெற்ற உயிர்களைப் புரக்கின்ற குறுநில மன்னருள்; ஆயிரத்து ஓர் எட்டு அரசு - ஓராயிரத்தெண்மர் மன்னர்கள்; தண் காவிரி நறுந் தாது மலிபெருந்துறை - தண்ணிய காவிரிப் பேரியாற்றினது நறிய பூந்தாது மிக்க பெரிய துறைக்கட் சென்று; பொற்குடத்து ஏந்தி - பொன்னாலியன்ற குடங்களிலே முகந்து; தலைக்கொண்ட - தந் தலையாலே சுமந்து கொணரப்பட்ட; புண்ணிய நல்நீர் - புண்ணியம் பயக்கும் நல்ல நீரினாலே; அகநிலை மருங்கில் - பூம்புகார் நகரத்தகத்தே; உரைசால் மன்னவன் கொற்றம் கொள்க என-செங்கோலோச்சிப் புகழமைந்த நம்மன்னன் வெற்றி பெறுவானாக என்றுகூறி; மண்ணகம் மருள வானகம் வியப்ப - இம் மண்ணுலகத்தார் இது மண்ணுலகோ அல்லது விண்ணுலகு தானோ என்று மருட்கை எய்தா நிற்பவும் வானுலகத்தார் நம்முலகினும் மண்ணுலகே சிறந்ததுபோலும் என்று வியவா நிற்பவும்; விண்ணவர் தலைவனை - அவ்விண்ணவர்க்கும் வேந்தனாகிய இந்திரனை; விழுநீர் ஆட்டி - மஞ்சனமாட்டவென்க.

(விளக்கம்) மாயிரு ஞாலத்து அரைசு மேம்படீஇய உயிர்காக்கும் ஆயிரத்தெட்டரசு குடத்தேந்தித் தலைக்கொண்ட புண்ணிய நன்னீரை, அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென வாழ்த்தி மருள வியப்ப விழுநீராட்டி எனக்கொண்டு கூட்டிப் பொருள் கூறுக.

166. வீதியில் குழுவும் ஆயமும் குமரரும் ஈண்டிச் செறிந்து ஆங்கு அரசு தலைக்கொண்ட நீரை வியப்ப வியப்பத் தலைவனை நீராட்டி என இயையும் ஆட்டி - ஆட்ட.

161. படீஇய - படுதற்பொருட்டு. அகனிலை-ஊர். 162. உரை - புகழ். 162. மன்னன் - ஈண்டுச் சோழமன்னன். ஆயிரத் தோரெட்டரசு என்றது குறுநிலமன்னரை-ஆயிரத்தெட்டரசர் தலைக்கொண்ட நீர் எனவே ஆயிரத்தெட்டுக் குடம் நீர்கொண்டு மஞ்சனமாட்டுதல் மரபு என்பதும் பெற்றாம். 167. மண்ணவர் இது மண்ணகமோ விண்ணகமோ என்று மருளவும் வானகத்தார், நம்முலகிலும் மண்ணுலகமே சிறந்தது என்று வியப்பவும் என்க.

168. விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம் என்பர் அடியார்க்குநல்லார். எனவே, இந்நீராட்டு வச்சிரக் கோட்டத்தில் நிகழ்வதென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இந்நிகழ்ச்சி தருநிலைக் கோட்டத்தின்கண் நிகழ்வதென்பதே எமது துணிபு. ஆகவே, விண்ணவர் தலைவனுக்குப் படிவமமைத்து விழுநீராட்டினர் என்க.

இந்திர விழவின்போது புகார்நகரத்தே

நிகழும் பிற விழாக்கள்

169-178: பிறவாயாக்கை ......... சிறந்தொருபால்

(இதன்பொருள்) பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் - என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவனுடைய திருக்கோயிலும்; அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் - ஆறு முகத்தையும் சிவந்த நிறத்தையுமுடைய முருகவேள் கோயிலும்; வால்வளை மேனி வாலியோன் கோயிலும்-வெள்ளிய சங்கு போன்ற நிறமுடைய பலதேவன் கோயிலும்; நீலமேனி நெடியோன் கோயிலும் - நீலமணிபோலும் நிறத்தையுடைய நெடியமால் கோயிலும்; மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்-முத்துமாலை யணிந்த வெள்ளிய குடையையுடைய இந்திரன் கோயிலும்; ஆகிய இக்கோயில்களிடத்தெல்லாம்; மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை யொருபால்-மிகவும் முதுமையையுடைய முதல்வனாகிய பிரம தேவனுடைய வாய்மையிற் பிறழ்தலில்லாத நான்குவகைப்பட்ட மறைகள் கூறுகின்ற முறைப்படி வேள்விச் சடங்குகள் நிகழ்ந்தன ஒருபக்கம்; நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் - நால்வகைப்பட்ட தேவரும் பதினெண்வகைப்பட்ட கணங்களும் என வேற்றுமைப்படத் தெரிந்து வகுக்கப்பட்ட தோற்றத்தையுடைய கடவுளரது விழாக்கள் சிறவாநிற்ப ஒரு பக்கம் என்க.

(விளக்கம்) 169. பிறவா யாக்கை - ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,

குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே

எனவரும் சிவஞானசித்தியார் (பக்கம்-65)ச் செய்யுளால் உணர்க. மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாம்.

170. அறுமுகச் செவ்வேள்கோயில் - தமிழ்நாட்டுக் குறிஞ்சித் திணைத்தெய்வமாகிய முருகன் கோயில். இத்தெய்வம் கடவுள் என்னும் பொருளுடையதாய் முருகு என வழங்கப்பட்டு, பின்னர் ஆண்பால் விகுதி பெற்று முருகன் என்றாகி வடவர் புராணத்திற் கூறப்படும் கந்தனும் இதுவும் ஒரு தெய்வம் என்று கொள்ளப்பட்டு வடவர் புராணங் கூறும் ஆறுமுகம் முதலிய உருவத்தைப் பெற்றுளது என்று தோன்றுகின்றது. இத் தெய்வமே தமிழகத்தார் தனிப்பெருங் கடவுள் ஆகும்.

171. வாலியோன் - வெண்ணிறமுடையோன் என்னும் காரணத்தால் வந்த பெயர். 172. நீலமேனி நெடியோன் - திருமால். இத்தெய்வம் முல்லைத்திணைத் தெய்வமாகக் கொள்ளப்பட்ட வடவர் தெய்வம். 173. மாலை வெண்குடை மன்னன் என்றது இந்திரனை. இத்தெய்வம் மருதத்திணைத் தெய்வம். ஆசிரியர் தொல்காப்பியனாரும் இந்திரனை வேந்தன் என்று குறியீடு செய்தலறிக.

174. மாமுது முதல்வன் என்றது, பிரமதேவனை. சிவபெருமான் என்பாருமுளர். 175. நான்மறை-இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்பன. தீமுறை - வேள்வி. 176. நால்வகைத் தேவர் - முப்பத்து மூவர்; அவராவார்: (1) வசுக்கள் எண்மர், (2) திவாகரர் பன்னிருவர். (3) உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவருமெனவிவர்.

மூவறு கணங்களாவார் - கின்னர்கிம் புருடர் விச்சா தரர் கருடர் - பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர், காந்தருவர் தாரகைகள் காணாப்பசாச கணம், ஏந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபூமி யோருடனே, ஆகாச வாசிகளா வார் எனவிவர். ஆகாசர் நாகர் சித்தர் காந்தருவர் விஞ்சையர் பசாசர் தாரகை போகபூமியோர் கிம்புருடர் சுரர் அசுரர் பூதம் முனிதேவர் கருடர் இராக்கதர் இயக்கர் சாரணர் எனவும் கொள்க.

விழவுக்களின் நிகழ்ச்சிகள்

179-188 : அறவோர் ........... வியலுளாங்கண்

(இதன்பொருள்) அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும் - துறவோர் தம் பள்ளிகளிடத்தும் அறத்தைக் காக்கும் அறக் கோட்டங்களிடத்தும்; ஒருசார் புறநிலைக் கோட்டத்து - ஒரு பக்கத்தே புறநகரத்தே யமைந்த அறநிலையங்களினும்; திறவோர் உரைக்கும் - அறனறிந்து நாத்திறமும் படைத்த சான்றோர் மக்கட்கு அறஞ்செவி யறிவுறுத்தும்; செயல் சிறந்து - செயலாற் சிறப்புறா நிற்ப; ஒருபால் - மற்றொரு பக்கத்தே; கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து - புலிக் கொடியுயர்த்த சோழமன்னனோடு கூடாத பகைமன்னர்க்கிட்ட கால்தளையை நீக்கி விடுகையாலே அம்மன்னனுடைய அருட் பண்பு சிறவாநிற்ப; ஒருபால்-மற்றொருபக்கத்தே; கண்ணுளாளர் கருவிக்குயிலுவர் பண் யாழ்ப்புலவர் பாடல் பாணரொடு எண்அருஞ் சிறப்பின் இசை சிறந்து - மதங்களும் துளைக்கருவி யிசைக்கும் பெரும்பாணரும் தோற்கருவி இசைக்கும் குயிலுவரும் நரப்புக் கருவியிசைக்கும் யாழ்ப்புலவரும்; மிடற்றுக் கருவியாலிசைபாடும் பாடலையுடைய பாணரும் ஆகிய இவர்களால் இசைக்கவல்ல அளந்தறிதலரிய சிறப்பையுடைய இன்னிசை நிகழ்ச்சிகளாலே சிறவா நிற்பவும்; முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் - கங்குலும் பகலும் இங்ஙனம் நிகழ்தலாலே மத்தளத்தின் கண்கள் சிறிதும் அடங்குதலின்றிக் குறுந்தெருக்களினும் நெடிய தெருக்களினும் இந்திர விழவினால் உண்டான மகிழ்ச்சி மிக்க அகன்ற அப்புகார் நகரத்தின்கண் என்க.

(விளக்கம்) 179. அறவோர் என்றதனால், பள்ளி என்பது அருகர் தவப்பள்ளியும் புத்தர் தவப்பள்ளியும் என்பது பெற்றாம். அறவோர் துறவறம் பூண்டோர். அறன் ஓம்படை - அறக்கோட்டம். 180. புற நிலைப் புண்ணியத்தானம் என்றது புறநகரத்தே அமைந்த அறநிலையங்களை. 181. திறவோர் - மெய்யுணர்வொடு நாத்திறமும் ஒருங்கு கைவரப்பெற்ற மேலோர். செயல் - அறிவுரை வழங்குதல். 182. கொடி-ஈண்டுப் புலிக் கொடி. கூடாமன்னர் - பகைமன்னர். 183. அடித்தளை-கால்விலங்கு. நீக்குதலாலே அருள்சிறக்க என்க. 184. கண்ணுளாளர்-மதங்கர்; பெரும்பாணருமாம். இவர் குழலிசையாளர் துளைக்கருவியாளர் எனப் பொதுவிற் கோடலுமாம். கண்-துளை, துளை வழியாக இவர் இசையையாளுதலால் அப்பெயர் பெற்றார் என்க. கருவிக்குயிலுவர்-தோற்கருவியாளர். யாழ்ப்புலவர் என்றது நரப்புக் கருவியாளர் என்றவாறு. பாடல்-மிடற்றுப் பாடல். சாறு சிறந்தொருபால்........இசைசிறந் தொருபால், இவற்றில் வருகின்ற சிறந்து என்னும் எச்சத்தைச் சிறக்க எனத் திரித்துக் கொள்க. 187. முழவுக்கண் என்பதற் கேற்பத் துயிலாது என்றினிதின் இயம்பினர். முடுக்கர்-குறுந்தெரு; சந்திகளுமாம். விழவுக்களி-விழவுகாரணமாக வுண்டான மகிழ்ச்சி.

கோவலன் போல மலய மாருதம் திரிதருமறுகு

189-203 : காதற் .......... மறுகில்

(இதன்பொருள்) காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு - தான் காதலிக்கும் கொழுநனைப் பிரிந்து வேறுபட்டு அதனால் அலர் கூறப்படாத அழகிய மகரக் குழையையுடைய மாதவி என்னும் கணிகையோடும்; இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக்குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து - இல்லத்தே நட்டுவளர்க்கப்பட்ட முல்லை மல்லிகை மயிலை என்னும் இவற்றின் மலர்களோடே தாழியிலிட்டு வளர்க்கப்படும் குவளையும் வண்டுகள் சூழ்தருகின்ற செங்கழுநீர் என்னும் மலர்களும் விரவிப் புனைந்த மாலையை யணிந்து பொலிவு பெற்று; காமக்களி மகிழ்வு எய்தி - காமவின்பத்தாலே செருக்கெய்தி; காமர் நறுவிரை பொதிபூம் பொழிலாட்டு அமர்ந்து - அழகிய நறிய மணத்தைத் தம் மகத்தே பொதிந்துள்ள மலர்களையுடைய பொழிலில் ஆடுதலைப் பெரிதும் விரும்பி; நாள் மகிழ்இருக்கை நாள் அங்காடியில்-நாள்தோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பிடங்களையுடைய நாளங்காடியில்; பூ மலி கானத்துப் புதுமணம் புக்கு - மலர்கள் மிக்குள்ள விடங்களில் அம்மலர்களின் புதிய மணத்தினூடே புகுந்து; புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சந்தனம் என்னும் இவற்றின் செவ்வி யழியாமல் சிறப்புறா நிற்ப; நகை ஆடு ஆயத்து நல்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடு இன்பந்தரும் காமக் குறிப்புடைய நல்ல மொழிகள் பேசி இடையறாது மகிழ்ந்து; குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபில் கோவலன் போல - குரல் என்னும் இசையைப் பாடுகின்ற வாயையுடைய பாணரோடும் அந்நகரத்துக் கழிகாமுகரோடும் திரிகின்ற ஒழுக்கத்தையுடைய கோவலனைப் போன்று; இளிவாய் வண்டினொடும் இன் இளவேனிலொடும் மலய மாருதம் திரிதரு மறுகில் - இளி யென்னும் இசையை முரலுகின்ற வாயை யுடைய வண்டுகளோடும் இனிய இளவேனிற் பருவத்தோடும் பொதியின் மலையிற்றோன்றிய இளந் தென்றலானது உலாவு தலைச் செய்யும் மறுகினிடத்தே என்க.

(விளக்கம்) 189. காதற் கொழுநனை என்பது முதலாக 203-மறுகில் என்பதீறாகச் சிலேடை வகையால் அடிகளார் கோவலனைத் தென்றலுக்குத் திறம்பட வுவமை கூறுமாற்


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #8 on: February 23, 2012, 12:00:49 PM »
189-203 : காதற் .......... மறுகில்

(இதன்பொருள்) காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு - தான் காதலிக்கும் கொழுநனைப் பிரிந்து வேறுபட்டு அதனால் அலர் கூறப்படாத அழகிய மகரக் குழையையுடைய மாதவி என்னும் கணிகையோடும்; இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக்குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து - இல்லத்தே நட்டுவளர்க்கப்பட்ட முல்லை மல்லிகை மயிலை என்னும் இவற்றின் மலர்களோடே தாழியிலிட்டு வளர்க்கப்படும் குவளையும் வண்டுகள் சூழ்தருகின்ற செங்கழுநீர் என்னும் மலர்களும் விரவிப் புனைந்த மாலையை யணிந்து பொலிவு பெற்று; காமக்களி மகிழ்வு எய்தி - காமவின்பத்தாலே செருக்கெய்தி; காமர் நறுவிரை பொதிபூம் பொழிலாட்டு அமர்ந்து - அழகிய நறிய மணத்தைத் தம் மகத்தே பொதிந்துள்ள மலர்களையுடைய பொழிலில் ஆடுதலைப் பெரிதும் விரும்பி; நாள் மகிழ்இருக்கை நாள் அங்காடியில்-நாள்தோறும் மகிழ்ந்திருக்கும் இருப்பிடங்களையுடைய நாளங்காடியில்; பூ மலி கானத்துப் புதுமணம் புக்கு - மலர்கள் மிக்குள்ள விடங்களில் அம்மலர்களின் புதிய மணத்தினூடே புகுந்து; புகையும் சாந்தும் புலராது சிறந்து - அகிற்புகை சந்தனம் என்னும் இவற்றின் செவ்வி யழியாமல் சிறப்புறா நிற்ப; நகை ஆடு ஆயத்து நல்மொழி திளைத்து - நகைத்து விளையாடும் கூட்டத்தோடு இன்பந்தரும் காமக் குறிப்புடைய நல்ல மொழிகள் பேசி இடையறாது மகிழ்ந்து; குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபில் கோவலன் போல - குரல் என்னும் இசையைப் பாடுகின்ற வாயையுடைய பாணரோடும் அந்நகரத்துக் கழிகாமுகரோடும் திரிகின்ற ஒழுக்கத்தையுடைய கோவலனைப் போன்று; இளிவாய் வண்டினொடும் இன் இளவேனிலொடும் மலய மாருதம் திரிதரு மறுகில் - இளி யென்னும் இசையை முரலுகின்ற வாயை யுடைய வண்டுகளோடும் இனிய இளவேனிற் பருவத்தோடும் பொதியின் மலையிற்றோன்றிய இளந் தென்றலானது உலாவு தலைச் செய்யும் மறுகினிடத்தே என்க.

(விளக்கம்) 189. காதற் கொழுநனை என்பது முதலாக 203-மறுகில் என்பதீறாகச் சிலேடை வகையால் அடிகளார் கோவலனைத் தென்றலுக்குத் திறம்பட வுவமை கூறுமாற்றால் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியை மருவிய அற்றை நாள் முதல் பலவாண்டுகளின் பின்னர் நிகழ்கின்ற இற்றைநாள் காறும் அவனுடைய வாழ்க்கை கழிகின்ற தன்மையை நம்மனோர்க்குக் குறிப்பாகப் புலப்படுத்தும் திறம் பெரிதும் போற்றற் பாலதாம்.

இனி, இவற்றைத் தென்றற் கேற்றிக் கூறுமாறு: காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா மாதர்க்கொடுங்குழை மாதவி தன்னொடு-எல்லாரும் காதலிக்கும் கொழுவிய நனையாந்தன்மையை விட்டு முதிர்ந்து அலராகாத வளைந்த அழகிய தளிரை யுடைய குருக்கத்தி மலரோடும்; இல்வளர் முல்லை மல்லிகை பயிலை தாழிக் குவளை சூழ் செங்கழுநீர் பயில் பூங்கோதைப் பிணையலில் பொலிந்து-முல்லை முதல் கழுநீர் ஈறாகக் கூறப்பட்ட பூக்களினாலியன்ற கோதைகளினும் பிணையல்களினும் பயின்று மணமேறப் பெற்ற பொலிவுடனே; நாண்மகிழிருக்கை... ...புக்கு-நாள் தோறும்........புதுமணத்தினூடு புகுந்து; புகையும்.....திளைத்து-அகிற்புகை... இடைவிடாது பயின்று; எனக் கூறிக்கொள்க.

200. பாணர்க்கு வண்டும், பரத்தர்க்கு வேனிலும் கோவலற்கு மாருதமும் உவமம் எனவரும் அடியார்க்கு நல்லார் விளக்கம் வண்டுக்குப் பாணரும் வேனிலுக்குப் பரத்தரும் மாருதத்திற்குக் கோவலனும் உவமம் எனக் கூறுதல் நேரிதாம். ஆயினும், அடிகளார் ஈண்டுக் கோவலன் போல எனக் கோவலனை உவமங் கூறுவார் போலக் கூறினும் அவர் கருத்துக் குறிப்பாகக் கோவலன் ஒழுக்கத்திற்கு மாருதத்தை உவமங்காட்டிக் கூறுதலே ஆதலின், அது கருதி அடியார்க்கு நல்லார் அவ்வாறு கூறினர் எனின் பெரிதும் பொருந்தும் என்க.

189. நனை-அரும்பு. அலர் - பழிச் சொல் -மலர். குருக்கத்தி அலரெய்தாமையாவது - செவ்வி யழியாமை என்க. 190. கொடுங்குழை - வளைந்த குழை என்னும் காதணிகலம்: வளைந்த தளிர். இல்வளர்தல் முல்லை முதலிய எல்லா மலர்க்கும் பொது. மயிலை-இரு வாட்சி. 194 காமர் - அழகு. 195. நறுவிரை பொதி பூம்பொழில் என மாறிக் கூட்டுக. அமர்தல் - விரும்புதல். 197. மிகுதிபற்றிப் பூமலி கானம் என்றார். 200. குரல் - ஓரிசை. பரத்தர் - கழிகாமுகர். குரலுக்குக் கிளையாதல் கருதி வண்டினை இளிவாய் வண்டென்றார்.

201. கோவலன் போல மாருதம் திரிதரும் என்றாரேனும் கோவலன் வம்பப் பரத்த ரொடும் வறுமொழியாள ரொடும் காமக் களியாட்டத்தே தனது வாழ் நாளை வறிதே கெடுத்துத் திரிந்தான் என நம்மனோர்க்கு அடிகளார் கூறாமற் கூறும் வித்தகப் புலமை வியத்தற்குரியதாம்.

வீதிச் சிறப்பு

204-217: கருமுகில்.......உண்டுகொல்

(இதன்பொருள்) அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி - அழகிய இடமமைந்த வானவெளியிலே திரியின் தனக்குப் பகையாகிய பாம்பு எளிதாகத் தன்னைக் கண்டுவந்து விழுங்கும் என்று அஞ்சி ஆங்குத் திரியாமல்; கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்து ஆங்கு இரு கருங்கயலோடு இடை குமிழ்எழுதி - ஒரு பெரிய முகிலைத் தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை யொழித்து அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் எழுதி இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; ஈண்டுத் திங்களும் திரிதலும் உண்டு கொல் - இந் நகரமறுகிலே திங்கள் தானும் வந்து திரிகின்றதோ எனவும்; மீன் ஏற்றுக்கொடியோன் நீர்வாய்திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மெய்பெற வளர்த்த வானவல்லி வருதலும் உண்டுகொல் - மகர மீனாகிய கொடியையுடைய காமவேள் ஈரம் வாய்ப்புப் பெற்ற திங்களாகிய பெரிய நிலத்தின்கண் வித்திட்டு அது தானும் அத்திங்களினது அமிழ் தகலையினது சிறப்பு வாய்ந்த துளிகளாகிய அழகிய நீரைப் பருகி வடிவம் பெறுமாறு வளர்த்த வானவல்லி தானும் இம் மறுகிடத்தே வருதலும் உண்டாயிற்றோ எனவும், இருநில மன்னற்குப் பெருவளம் காட்ட-பெரிய நிலத்தையுடைய ஊக்க மிக்க இச்சோழ மன்னனுக்குப் பெரிய வள முண்டாக்கிக் காட்டற் பொருட்டு; திருமகள் புகுந்தது இச் செழும்பதி ஆம் என - தன்னிடத்தே எழுந்தருளியிருக்கும் திருமகள் தன்னைத் துறந்து அதர்வினாய் வந்து புகுந்தது வளங்கெழுமிய இப்புகார் நகரமே ஆதல் வேண்டும் என்று கருதிப் பிரிவாற்றாமையாலே வருந்தி; எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங்குவளையும் குமிழும் பூத்து ஆங்கு-நெருப்புப் போன்ற நிறத்தை யுடையதோர் இலவ மலரையும் முல்லை முகையையும் தன்னகத்தே பூத்ததோடன்றியும் இரண்டு கரிய பெரிய குவளை மலரையும்  ஒரு குமிழ மலரையும் பூத்து இங்ஙனம் கொண்ட; உள்வரிக் கோலத்து - உள்வரிக் கோலத்தோடே; உறுதுணை தேடி - தன்பால் வீற்றிருக்குந் துணையாகிய அத்திருமகளைத் தேடி; கள்ளக் கமலம் - வஞ்சமுடைய அச்செந்தாமரைத் தெய்வமலர்; திரிதலும் உண்டுகொல் - இம் மறுகிடத்தே திரிதலும் உண்டாயிற்றோ எனவும் என்க.

(விளக்கம்) 204. கருமுகில் - கூந்தற்குவமை. குறுமுயல் - குறிய களங்கம். 205. கருங்கயல் - கண்கட்குவமை. குமிழ்: ஆகுபெயர். குமிழமலர் - இது மூக்குக்குவமை. 206. அரவு - இராகுவும் கேதுவுமாகிய பாம்புகள். அரவுப் பகையஞ்சி என்றதனால், 207. திங்கள்-முழுத்திங்கள் என்பது பெற்றாம். அற்றைநாள் நிறைமதி நாளாதலும் நினைக. திங்கள்-முகத்திற்குவமை. 208. வாய்திங்கள்: வினைத் தொகை. 210. மீனேற்றுக் கொடியோன் - காமவேள். மீன் - மகர மீன். கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே (தொல். உரி-46) என்பதனால் மீன் மகரம் என்பது பெற்றாம். மகரம் - சுறாமீன். 210. மெய்பெற என்பதற்கு அடியார்க்குநல்லார், முன்பு நுதல்விழியான் இழந்த மெய் பெறுவதற்காக என்பர் வானவல்லியால் தன் மெய்யைப் படைத்துக் கோடற்கு என்பது அவர் கருத்துப்போலும். இல்லையேல் வானவல்லி காமவேள் மெய்பெறுதற்குக் காரணமாகாமை யுணர்க: 211. வானவல்லி - மின்னுக்கொடி. 212. திருமகள் தானே வளங்காட்டப் புகுதலின் ஊக்கமிக்க மன்னற்கு எனவும் திருமகன் அதர்வினாய் வந்து புகுந்தது இச்செழும்பதி எனவும் கூறிக்கொள்க. என்னை? ஆக்கம் அதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஊக்கமுடையா னுழை என்பதூஉமுணர்க்க. இனி, கமலம் திருமகள் ஈண்டுளாள் என்று கருதுதற்குச் செழும்பதி என்றது குறிப்பேதுவாயிற்று. 214. இலவம் வாய்க்கும், முல்லை-எயிற்றிற்கும் உவமை. 216. உள்வரிக் கோலம். தன்னைக் கரத்தற்பொருட்டுக் கொள்ளும் வேடம். மன்னன்பால் உள்ளதிருமகளைக் கொடுபோக வருதலின் கமலம் ஒற்றர் காணாமைக்கு உள்வரிக் கோலத்தோடு வருதல் வேண்டிற்று. உறுதுணை - தன்பா லுறுகின்ற துணை.

இதுவுமது

218-224 : மன்னவன் ......... பெற்றியும் உண்டென

(இதன்பொருள்) பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - உலகிற்றோன்றிய பல்வேறுயிர்களையும் தனதொரு பிளந்த வாயினாலேயே உண்டொழிக்கும் கொடுந்தொழிலையுடைய கூற்றுவன்; மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - சோழமன்னனுடைய செங்கோன்மையை மறுத்துத் தனக்கியல்பான ஆணுருவோடு இந் நகரத்துட் புகுதற்கு அஞ்சி; ஆண்மையில் திரிந்து - தனது ஆண் தன்மையில் பிறழ்ந்து; அருந் தொழில் திரியாது - பிறர் செய்தற்கரிய தனது உயிர் பருகுந் தொழிலிலே மாறுபடாமல்; நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி - நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் பொருந்தியதோர் உள்வரிக் கோலத்தோடே புன்முறுவல் தவழும் முகமும் கொண்டு; திவவு யாழ் நரம்பின் பண்மொழி மிழற்றிபெண்மையில் - வார்க் கட்டமைந்த யாழினது நரம்பிற்கண் பிறக்கும் இன்னிசைபோலும் இனிய மழலைமொழிகளைப் பேசிக்கொண்டு பெண்மை யுருவத்தோடும்; திரியும் பெற்றியும் உண்டுகொல் - இந்நகர மறுகில் திரிகின்ற தன்மையும் உண்டாயிற்றோதான் எனவும் கூறி என்க.

(விளக்கம்) 218. செங்கோல் அரசர் ஆட்சி நிகழும் நாட்டில் தீவினை நிகழாமையின் மாந்தர் தமக்கென வரைந்த நூறாண்டு வாழ்ந்து முடிதலின்றி, குறையாண்டில் கூற்றுவன் கைப்படா-அர் ஆகலின் அந்நாட்டில் கூற்றம்புக அஞ்சும் என்பதொரு கோட்பாடு. இதனை, கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் எனவும், (கம்பரா. நாட்டுப்- 39) கூற்றுயிர் கோடலும் ஆற்றாதாக உட்குறு செங்கோல் ஊறின்று - நடப்ப எனவும், (பெருங்கதை 4-2: 55-6) மாறழிந்து ஓடி மறலி ஒளிப்ப முது மக்கட் சாடிவகுத்த தராபதியும் எனவும் (விக்கிர. உலா: 7-8) பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இங்ஙனமாதலின் கூற்றம் மன்னவன் செங்கோலை மறுத்தற்கு அஞ்சி என்பது கருத்து. எனவே, கூற்றமும் இந்நகரத்தில் உள்வரிக் கோலம் பூண்டுவந்து தனக்கியன்ற உயிர் பருகும் கொடுந்தொழில் செய்வதாயிற்றோ என்றவாறாம்.

219. ஆண்மை-அதற்குரிய ஆணுருவம். நாண முதலிய பெண்மைப் பண்புகள் நான்குமுடைய என்க. கோலம்-உள்வரிக் கோலம். 221. புன்முறுவல் தவழும் முகத்தைக் கவிழ்த்து எனலுமாம். 222. திவவு யாழ் நரம்பின் பண் (போன்ற)மொழி என மாறிக் கூட்டுக. பெண்மை-பெண்ணுருவம். 223. உண்டுகொல் என ஈண்டும் அசைச்சொல் பெய்து கொள்க.

இனி, (202) மாருதந் திரிதரு மறுகில், (207) திங்களும், (211) வானவல்லியும், (217) கள்ளக்கமலமும், (219) கூற்றமும், திரிதலும் உண்டுகொல்? வருதலும் உண்டுகொல்? திரிதலும் உண்டுகொல்? பெற்றியும் உண்டுகொல் எனக் கூறி என்க.

இவை, மலயமாருதம் திரிதரு மறுகின்கண் கோவலனொடு திரிகின்ற நகரப்பரத்தர் நகையாடாயத்து மகளிரை நோக்கி நன்மொழி கூறித் திளைத்தவாறாம். இவற்றுள் அற்புத அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி முதலியன வந்து இன்புறுத்துதலறிக.

விருந்தும் மருந்தும்

224-234: உருவிலாளன் ....... நடுநாள்

(இதன்பொருள்) உரு இல் ஆளன் ஒருபெருஞ் சேனை - உருவமில்லாத காமவேளினுடைய ஒப்பில்லாத பெரிய சேனையாகிய பொதுமகளிர்; இகல் அமர் ஆட்டி - ஆடல் காரணமாகத் தம்மோடு மாறுபட்டுத் தொடுத்த போரினை, முன்கூறியவாறு புகழ்ந்து சொல்லுதலாகிய அம்புகளாலே வென்று; எதிர்நின்று விலக்கி - அவர் போகாவண்ணம் எதிர்நின்று தடுத்து முயங்குதலாலே; அவர் எழுது வரிக் கோலம் - அப்பொது மகளிருடைய முலை முதலியவற்றில் எழுதிய தொய்யில் முதலிய பத்திக் கீற்று; முழு மெயும் உறீஇ - தமது மார்ப முழுவதும் பதியா நிற்பவும்; விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடன் உறைவு மரீஇ - அவர்தாம் விருந்தினரோடு வந்து புகுந்தமையானே ஊடுதற்கிடனின்மை கண்டு யாது மறியார் போன்று முகமலர்ந்து வரவேற்று விருந்தோம்பிய பின்னர்ப் பெரிய தோளையுடைய தங்கணவரோடு உறைதலையும் பொருந்தி இவ்வாறு, ஒழுக்கொடு புணர்ந்த - இல்லற வொழுக்கத்தோடு கூடிய; வடமீன் கற்பின் மனையுறை மகளிர் - அருந்ததி போலும் கற்பையுடைய அக்குல மகளிரின் சால்புடைமை கண்ட அக்கணவன்மார் தாமே அவரை நன்கு மதித்தவராய்த் தமது நெஞ்சத்தை நோக்கி; மாதர் வாள் முகத்து மணித் தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை - இம்மாதருடைய ஒளி பொருந்திய முகத்து நீலமணி போலும் இதழையுடைய நீலமலர்கள் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான கரிய கண்களின் கடையில் நமபால் ஊடல் காரணமாக உண்டான சிவப்புத்தான்; விருந்தின் தீர்ந்திலது ஆயின் - நம்மோடு வந்துற்ற அவ்விருந்தினாலே தீர்ந்த தில்லை யாயின்; மாநில வரைப்பு - இறப்பையும் தவிர்க்கும் மருந்துகள் பலவற்றைத் தருகின்ற பெருமையுடைய இந்நிலவுலகந்தானும், மாவதும் மருந்து தருங்கொல்-இதற்கு மாதேனும் ஒரு மருந்தைத் தரவல்லதாமோ? ஆகாதுகாண்! என்று கூறி; கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் - செயலற்று நடுங்காநின்ற அவ்விந்திர விழவின் இடைநாளிலே என்க.

(விளக்கம்) 224. உருவிலாளன் - காமவேள். அவனுடைய பெருஞ் சேனை யென்றது, முன்னர் (198-9) புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து, மறுகிற்றிரியும் நகையாடாயத்துப் பொது மகளிரை இவர் தாம் அனைவருடைய நெஞ்சத்தையும் சுழல்வித்துப் பணிய வைக்க வல்லராதல் பற்றி இச்சேனை மன்னர்தம் மறவர் சேனையினும் சிறந்த சேனை என்பார் ஒருபெருஞ் சேனை என்று விதந்தார். 225. இகலமர் - மாறுபட்டொழுகும் ஊடற் போர். ஆட்டி-வென்று. (ஆடு-வென்றி.) அமர் என்றமையால் இச்சேனையை வெல்லுதற்கு மாயப்பணி மொழிகளாகிய அம்புகளைத் தொடுத்து வென்று என்க. அவையாவன : (204) கருமுகில் சுமந்து என்பது தொடங்கி (223) பெற்றியும் உண்டென நிகழும் இங்கித மொழிகள். 225. ஊடலால் முகங்கொடாது போக முயல்வாரை எதிர்நின்று இங்கிதம் பேசிவிலக்கி என்றவாறு. எதிர்நின்று விலக்கியவழி அவர் ஊடல் தீர்ந்தமை அவர் தம் முறுவற் குறிப்பாலுணர்ந்து மார்போடு மார்புறத் தழுவுதலான் அவர்தம் 226. எழுதுவரிக் கோலம் முழுமெயும் உறப்பெற்று என்றவாறு. 227. மனைவியர் ஊடியிருப்பர் என்றஞ்சி அவ்வூடல் தீர்க்கும் மருந்தாகும் விருந்தினரையும் உடன்கொடு புகுவாரைப் பெருந்தோள் கணவர் என்றது இகழ்ச்சி. 228. பகற் பொழுதெல்லாம் பரத்தையரோடு ஆடிவருதலறிவாரேனும் விருந்தொடு வந்தமையின் ஊடற்கிடமின்றி அவ்விருந்தோம்பும் நல்லறத்தை முகம் மலர்ந்து செய்கின்றமை கருதி அம்மகளிரை மனமாரப் பாராட்டுவார் அடிகளார் அவரை உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் என்று வானளவு உயர்த்துப் புகழ்ந்தார் என்க.

230. விருந்து கண்டமையால் முகமலர்ந்து வரவேற்றமை தோன்ற மாதர் வாண்முகம் என்றார். மணி - நீலமணி. போது - மலர். 231. இவற்றினழகிற்கு யாமொவ்வோம் என்று குவளைப் போது புறங்கொடுத்துப் போகிய கண்கடை என்க. செங்கடை தீர்ந்திலது என்றாரேனும் கடைக் கண்ணின் சிவப்புத் தீராதாயின் என்பது கருத்தாகக் கொள்க.

இனி, பகற் பொழுதெல்லாம் பரத்தையராகிய நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து அவர்தம் எழுதுவரிக் கோலம் தம் மெய்ம் முழுதும் ஏற்றுவந்த இக்காளையர் தாஞ்செய்த தவற்றையும், அவ்வட மீன்கற்பின் மனையுறை மகளிர் அவற்றை ஒரு சிறிதும் பொருட் படுத்தாது விருந்தோம்பித் தம்மோடு உடனுறைவு மருவிய பெருந்தன்மையையும் கருதியவழித் தம் நெஞ்சு தம்மையே சுடுதலாற்றாராய் அம்மவோ இவ்விருந்தினர் இலராயின் நம்நிலை என்னாம் என்று கழிந்தது கருதி இரங்குவாராயினர். கோவலனும் தான் செய்த தவற்றினைக் கண்ணகியார் முன்னிலையிலேயே வறுமொழியாள ரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக்கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப்புண்டு பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ என்றிரங்கிக் கூறிக் கையற்று நடுங்கும் காலம் அண்மையிலேயே வருவதனையும் அடிகளார் ஈண்டு நினைவு கூர்ந்திருப்பர். ஆயினும், அவன் ஊழ்வினை கண்ணகியை நினைய இடந்தந்திலது. மாதவி மனைக்கே சென்றனன். ஊழிற் பெருவலியாவுள.

கண்ணகி நிலைமையும் மாதவி நிலைமையும்

235 - 240: உள்ளக ........... விழவுநாளகத் தென்

(இதன்பொருள்) விண்ணவர் கோமான் விழவு நாள் அகத்து - மேலே நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட அவ்விந்திரவிழவின் அற்றை நாள் நள்ளிரவிலே; உள்ளகம் நறுந்தாது உறைப்ப மீது அழிந்து கள் உக நடுங்கும் கழுநீர் போல - உள்ளேயுள்ள நறிய தாதுகள் தேனை யூறிப் பிலிற்றுதலாலே அகமெலாம் நிறைந்து மேலே பொங்கி வழிந்து அத்தேன் சொரியா நிற்பக் காற்றாலே நடுங்குகின்ற கழுநீர் மலர் போன்ற; கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் - கண்ணகியுடைய கரிய கண்ணும் மாதவி யுடைய சிவந்த கண்ணும்; உள் நிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன - தம்முள்ளத்தே நிறைந்த குறிப்பினை உள்ளத்தினூடேயே மறைத்துக் கொண்டு அவற்றின் விறலாகிய கண்ணீரை மட்டும் சொரியலாயின; எண்ணுமுறை - முன்னிறுத்த முறையானே அவ்விருவர் கண்களும்; இடத்தினும் வலத்தினும் துடித்தன - நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் துடித்தன என்க.

(விளக்கம்) (234.) நல்வினை நடுநாள் என்று கூறப்பட்ட (240) விண்ணவர் கோமான் விழவு நாளிடைப்பட்ட அந்நாளின் நள்ளிரவிலே என இயைக்க. 225-6. கழுநீர் - குவளை. இது கருங்குவளை எனவும் செங்குவளை எனவும் இருவகைப்படும். கண்ணகி கருங்கண்ணிற்கும் மாதவி செங்கண்ணிற்கும் உவமையாதற் பொருட்டு அடைபுணர்த்தாது வாளா கழுநீர் என்றோதினர். இனி, குவளை மலரின் உள்ளகத்துள்ள தாது உறைப்ப என்றார் இருவர் உள்ளத்தும் உள்ள குறிப்புக்கள் வெளிப்படுப்ப அவற்றின் மெய்ப்பாடாகக் கண்ணீர் உகுத்தலின் என்க. மீதழிதல்-மேலே பொங்கி வழிந்து வீழ்தல். கண்ணகிகண் கணவனது பிரிவாற்றாது புற்கென்றிருத்தலின் கருங்கண் என்றார். மாதவி கண்கள் கூட்ட மெய்திச் சிவந்திருத்தலின் செங்கண் என்றார். இருவர் உள்ளத்தும் இக்கண்ணீர்க்குக் காரணமாக நிறைந்துள்ள உணர்ச்சிகளை இருவர்க்கும் பொருந்துமாற்றால் ஆகுபெயரால் நிறை - என்றார். நிறை - நிறைந்த பண்பு. அவையாவன நிரலே துன்பமும் இன்பமும் ஆம் இரண்டின் மெய்ப்பாடுகளும் கண்ணீருகுத்தலேயாம். ஆயினும், ஒன்று துன்பக் கண்ணீர், மற்றொன்று இன்பக் கண்ணீர். இருவகைப்பட்ட உணர்ச்சிகளையும் மறைத்துக்கோடல் மகளிர்க்கியல்பாதல்பற்றி இருவர்க்கும் பொதுவாக உள்நிறை அகத்துக் கரந்து நீருகுத்தன என்றார். இருவர் கண்களும் துடித்தன; ஒருத்திக்கு இடக்கண் துடித்தது. மற்றொருத்திக்கு வலக்கண் துடித்தது. நிரலே இவை நன்னிமித்தமும் தீநிமித்தமுமாகும். கண்ணகி பிரிந்த கணவனை என்றென்றும் பிரிவின்றி எய்த நிற்பவள் ஆதலின் அவட்கு நன்னிமித்தம் ஆயிற்று. மாதவி கோவலனை இனித் துவரப்பிரிபவள் ஆதலின் அவட்குத் தீநிமித்தம் ஆயிற்று.

இனி இக்காதையை (3) மடந்தை (4) போர்த்த படாஅத்தைப் போக நீக்கிப் (6) ஒளி உச்சித் தோன்றி, (6) பரப்ப, (65) சொரிந்து (70) ஆடி (75) பெயர (86) நலங்கொளவைத்து (88) ஊட்ட, (110) மண்டபமன்றியும் (140) மன்றத்தும் பலியுறீஇ (142) ஏற்றிச் (144) சாற்றி (146) எடுத்து (160) ஈண்டிக் (162) கொள்கென (168) ஆட்டக் (188) களிசிறந்த வியலுளாங்கண், (203) திரிதரு மறுகில் (223)  உண்டு கொலென்று (224) சேனை (225) ஆட்டி விலக்கி (226) விலக்கி (226) உறீஇப் (227) புக்க கணவர் (234) நடுங்கு நாளாகிய (240) விழவு நாளகத்துக் (237) கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் (238) கரந்து நீருகுத்தன அவை நிரலே (239) இடத்தினும் வலத்தினும் துடித்தன என வினைமுடிவு செய்க.

இந்திரவிழவூரெடுத்த காதை முற்றிற்று
.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #9 on: February 23, 2012, 01:11:31 PM »
6. கடலாடு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

(விளக்கம்) அஃதாவது - வெள்ளி மால்வரை வியன் பெருஞ் சேடி விச்சாதரனை யுள்ளிட்ட தேவர்களும் கரந்துரு வெய்தி வந்து காண்குறூஉம் இந்திரவிழா நிறைவேறாநின்ற உவா நாளிலே புகார்நகரத்து அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் கடற்கரை யிடத்தே வந்து கூடிக் கடலாடுதலும் மாதவியும் கோவலனும் அக் கடல் விளையாட்டைக் கண்டு மகிழ்வான் போந்து ஆங்குக் கடற்கரையிலே புன்னை நீழற் புதுமணற் பரப்பில் படவீடமைத்துத் தங்குதலும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்  5

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட  10

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்  15

பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய  20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,  25

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்  30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்  35

நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட  40

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,  45

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற  50

சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,  55

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்  60

திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்  65

பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய  70

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்  75

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை  80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,  85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,  90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்  95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,  100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,  105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,  110

உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப  115

வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்  120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப  125

இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்  130

வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,  135

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,  140

இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி  145

இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்  150

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்  155

பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல  160

வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,  165

கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை  170

வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.

(வெண்பா)

வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.

உரை

1-4 : வெள்ளி.........வீரன்

(இதன்பொருள்) வெள்ளி மால்வரை வியன் பெருஞ்சேடி - வெள்ளிப் பெருமலையின்கண் அகன்றுயர்ந்த வட சேடியின்கண்ணே; கள் அவிழ் பூம்பொழில் - தேன் துளிக்கின்ற மலர்கள் நிறைந்த தொரு பூம்பொழிலிடத்தே; கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு - கரிய கயல் மீன்போன்ற நெடிய கண்களையுடைய தன் காதலியுடனே யிருந்து; காமக் கடவுட்கு விருந்து ஆட்டு அயரும் ஓர் விஞ்சை மறவன் - காமவேளாகிய கடவுளுக்குச் சிறப்புவிழா நிகழ்த்தும் ஒரு விச்சாதர மறவன் என்க.

(விளக்கம்) 1. வெள்ளிப் பெருமலையுச்சியில் விச்சாதரருலகுள தென்றும் அது வடசேடி தென்சேடி என இரு கூறுடைத்து என்றும், ஆங்கு நகரங்கள் பலவுள என்றும், அவற்றை ஆளும் விச்சாதர மன்னரும் பலருளர் என்றும் கொள்வது அமண்சமயத்தினர் கோட்பாடு; ஈண்டு அடிகளார் அவர்தம் மதமே பற்றிக் காப்பியஞ் செய்கின்றனர் ஆதலின் வெள்ளிமால்வரை வியன் பெருஞ் சேடி என்றார். இரண்டு சேடிகளுள் வடசேடியே சிறந்ததாகலின் வியன்பெருஞ்சேடி என விதந்தார்.

விச்சாதரர் காம நுகர்ச்சியையே குறிக்கோளாக வுடையர். அவர்க்குக் காமக்கடவுளே முழுமுதற் கடவுளாவான். ஆதலின் ஈண்டு விச்சாதரவீரன் தன்னாருயிர்க் காதலியோடிருந்து காமக்கடவுட்குச் சிறப்புவிழாச் செய்வானாயினான் என்க. 4. விருந்தாட்டு - நித்தல் விழாவன்றி யாண்டுதோறும் நிகழ்த்துஞ் சிறப்புவிழா. ஆட்டயர்தல் - கொண்டாடுதல்.

விச்சாதரன் காதலிக்கு விளம்புதல்

(26) 5-6: தென்றிசை..........நாளிதுவென

(இதன்பொருள்) (26) துவர் இதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே - பவளம் போன்ற இதழையுடைய சிவந்த வாயினையும் உடுக்கை  போன்ற இடையினையும் உடைய என்னாருயிர்க் காதலியே கேள்; இது - வடசேடிக்கண் யாமெடுத்த காமவேள் விழா நிறைவுற்ற இந்த நன்னாள்; தென்திசை மருங்கின் ஓர் செழும்பதி தன்னுள் - இந்நாவலம் பொழிலின்கண் தென்றிசை யிடத்தே தமிழ் கூறும் நல்லுலகத்தே அமைந்த நகரங்களுள் வைத்து ஒரு வளமிக்க நகரத்தின்கண்ணே; இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் என - இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாளுமாகும் என்று கூறி என்க.

(விளக்கம்) (5-6) இவ்விரண்டடிகட்கும் அடியார்க்குநல்லார் கூறும் உரை நூலாசிரியர் கருத்தென்று நினைத்தற்கிடனில்லை. ஆயினும் அவர் கூறும் உரையும் அறிந்து கோடற்பாலதேயாம். அது வருமாறு:

வீரன் பங்குனித் திங்கள் இருபத்தொன்பதில் சித்திரை நாளிலே அவ்விழா முடிதலின் தென்றிசைப் பக்கத்து ஒரு வளவிய நகரிடத்து இந்திரவிழாவிற்குக் கால்கொண்டு கொடியெடுக்கும் நாள் மேலைமாதத்து இந்தச் சித்திரை காண் எனச் சொல்லி யென்க.

இதுவெனச் சுட்டினான், அன்றுஞ் சித்திரையாகலின், ஈண்டுத் திங்களும் திதியும் கூறியது என்னையெனின், கோவலனும் மனைவியும் ஊரினின்றும் போந்த திங்களும் திதியும் வாரமும் நாளும் வழிச் செலவும் ஒழிவும், மதுரையிற் சென்று புக்கு இவன் இறந்துபட்ட திங்கள் முதலாயுள்ளவற்றோடு மாறுகொள்ளாது முடிதற்கெனக் கொள்க. அது யாண்டுமோ எனின் வேனிற் காதையினும் நாடுகாண் காதையினும் காடுகாண் காதை கட்டுரை காதை யென்னும் இவற்றுள்ளும் எனக்கொள்க. எனவரும்.

அவ்வுரையாசிரியர் இவ்வாறு தாமே ஒரு கொள்கையுடையராய் அதனை நிலைநிறுத்தற் பொருட்டு, ஈண்டு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றி இங்ஙனம் கூறிவைத்துப் பிறாண்டும் இதனை வலியுறுத்துவர். அவற்றை ஆங்காங்குக் காண்க. நூலாசிரியர் இத்தகைய கொள்கையுடையர் என்று நினைதல் மிகையேயாம் என்க.

இனி இளங்கோவடிகளார் இந்திரவிழவின் சிறப்பினைப் பின்னும் கூறுதற்கு இவ்விஞ்சை வீரனை ஒரு கருவியாக்கிக் கொள்கின்றனர் என்பது தேற்றம். என்னை? தென்றிசை மருங்கினுள்ள புகார் நகரத்து இந்திரவிழவினை வெள்ளிமலை யுச்சியில் வாழும் விச்சாதரர் முதலியவரும் வந்து கண்டுகளித்தனர் என்பது இவன் வரவினால் அறிவுறுத்தலும் மேலும் இவன் கூற்றாக அவ்விழாவையும் நகரச் சிறப்பையும் ஆடல் முதலிய கலைச்சிறப்பையும் வெளிப்படுத்துரைப்பதுவுமே அடிகளார் கருத்தென்க.

7-13: கடுவிசை .........காண்கும்

(இதன்பொருள்) கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி - மிக்க விரைவினையுடைய அசுரர் கூட்டமாக நெருங்கிவந்து பொரூது; கொடுவரி ஊக்கத்துக் கோ நகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தோற்றனர் ஆகி - புலியினது மனவெழுச்சிபோலும் மனவெழுச்சியுடனே இந்திரனது தலைநகரைக் காத்துநின்ற வீரக்கழல் கட்டிய முசுகுந்தன் என்னும் சோழமன்னனுக்கு ஆற்றாது புறங்கொடுத்தோடுவோராகிய பின்னரும்; நிகர்த்து நெஞ்சு இருள்கூர மேல்விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும்பூதம்-தம்முள் ஒத்துக்கூடி அம்மன்னனது நெஞ்சம் மம்மர் கொள்ளும் படி ஏவிய இருட்கணையைப் போக்கிய மிகப்பெரிய பூதத்தை; தேவன் - தேவேந்திரன்; திருந்து வேல் அண்ணற்கு ஏவ-அறத்தாற்றிருந்திய போரையுடைய வேற்படையையுடைய தலைவனாகிய அம்முசுகுந்தனுக்குக் கைம்மாறாக ஏவுதலாலே; இருந்து பலி உண்ணும் இடனும் காண்கும் - அப்பூதம் வானுலகினின்றும் வந்து அப்புகார் நகரத்திலே தங்கியிருந்து அவிப்பலி முதலிய அரும்பலி கொள்கின்ற இடமாகிய நாளங்காடியிடத்தையும் கண்டு மகிழ்வேம் என்றான் என்க.

(விளக்கம்) இதன்கட் கூறப்படுகின்ற வரலாறு அடியார்க்கு நல்லார் உரையாலும் அவர் காட்டும் மேற்கோட் செய்யுளானும் அறியப்பட்டது. அது வருமாறு:

முன்னா ளிந்திரன்............
காவ லழித்துச் சேவல்கொண் டெழுந்த
வேட்கை யமுத மீட்க வெழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்
நேரிய னெழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கலென் கடனென
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம்
நின்வழி யாகென நிறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிப்
பொருதுபோர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்
தாழ்ந்தநெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேற லரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன்
இருகணும் புதையப் பாய்தலி னொருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் எனவும்,

என் சொல்லிய வாறோ வெனின், அங்ஙனம் விட்ட அம்பு முசுகுந்தன் கண்ணையும் மனத்தையும் புதைத்தலாற் போர்த் தொழிலொழிந்து நின்ற முசுகுந்தற்கு அவ்விருளுடைதற்குக் காரணமாயதொரு மந்திரத்தையருள அதனான் வஞ்சம் கடிந்து அவுணரைக் கொன்று குவித்து நின்றானைக் கண்ட இந்திரன் அவரை எங்ஙனம் கொன்று குவித்தா யென்றாற்கு அவன், இப்பூதத்தின் செயலெனக் கேட்ட இந்திரன் அப்பூதத்தை அவன் பொருட்டு மெய்காவலாக ஏவுதலின் ஆங்குநின்றும் போந்து, ஈங்குப் புகாரினுள்ளிருந்து பலியுண்ணும் நாளங்காடியிடமும் காண்பே மென்பதாம் எனவும் வரும்.

8. கொடுவரி - புலி. ஊக்கம் - மனவெழுச்சி. ஊக்கமுடைமையில் புலி தலைசிறந்ததாகலின் அதனை உவமையாக்கினார் திருவள்ளுவனாரும். பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை, வெரூஉம் புலிதாக் குறின் என ஊக்கமுடைமைக்கு அதனை உவமையாக்குத லுணர்க. நகர் - ஈண்டு அமராவதி. மன்னன் - சோழமன்னனாகிய முசுகுந்தன். நிகர்த்தல்-ஒத்தல். வஞ்சம் - இருட்கணை. அஃதாவது உயிர்களின் கண்ணையும் மனத்தையும் மறைப்பதொரு சத்திபடைத்த அம்பு. (இதனைத் தாமசாத்திரம் என்பர் வடநூலோர்) 12. தேவரேவ என்றும் பாடம்.

இதுவுமது

14-17: அமராவதி ............. காண்குதும்

(இதன்பொருள்) அமராபதி காத்து அமரனின் பெற்று - பண்டு அமரர் கோநகராகிய அமராபதியினை அசுரர் முற்றுகையிட்ட காலத்தே அமரர்க்கு வந்த இடர்நீங்க அவர்க்குத் துணையாய்ச் சென்று அசுரரை நூழிலாட்டிக் காத்தலானே அவ்வ மரர் கோமானால் கைம்மாறாகப் பெறப்பட்டு; தமரில் பெற்று - பின்பு இவன் மரபிலுள்ளாராலே கொண்டுவரப்பட்டு; தகைசால் சிறப்பின் - பெருந்தகைமையுடைய ஒவ்வொரு கடவுட்பண்புடைய சிறப்பினையுடையவாய்; பொய்வகையின்றி - அப் பண்புகள் பொய்க்கும் வகையில்லாமலே; பூமியிற் புணர்த்த - அப்பூம்புகார் நிலத்திலே நிலைபெற வைக்கப்பட்டுள்ள; ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும் - ஐந்து வகையான தன்மைகளையுடைய மன்றங்களின் சிறப்புக்களையும் கண்டு மகிழ்வேம்; என்றான் என்க.

(விளக்கம்) 14. அமரனின் - அமரர்கோமானாலே. தமர் - சோழன் முன்னோர். தகைசால் சிறப்பு - பெருந்தகைமையுடைய கடவுட் பண்பு. அவையாவன: கட்போருளரெனின் கடுப்பத் தலையேற்றிக் கொட்பின் அல்லது கொடுத்த லீயா மை முதலியனவாக முன்னைக் காதை அரங்கேற்று.....115-138யிற் கூறப்பட்டவை. பொய்வகையின்றிப் புணர்த்தலாவது - அக்கடவுட் பண்புகள் பொய்த்துப் போகாவண்ணம் அவற்றிற்குப் பலி கொடுத்தல் முதலிய வழிபாடு செய்வித்து வைத்தல் என்க. ஐவகை மன்றம் - முன்னைக் காதையிற் கூறிய பூதசதுக்க முதலாகப் பாவை மன்றம் ஈறாகவுள்ள மன்றங்கள். அவை வெவ்வேறு வகை ஆற்றலுடையனவாதல் பற்றி ஐந்து மன்றமும் என்னாது ஐவகை மன்றமும் என்றார். அமைதி - சால்புடைமை; இயல்புமாம்.

இதுவுமது

விச்சாதரன் மாதவியின் வரலாறு விளம்புதல்

18-25: நாரதன்.............காண்குதும்

(இதன்பொருள்) உருப்பசி - (காதலியே ஈதொன்று கேள்!) ஒரு காலத்தே வானவர் நாட்டிலே இந்திரன் அவைக்களத்தே நாடகமாடும் அரம்பையருள் வைத்து ஊர்வசி யென்பவள் அவ்விந்திரன் அவைக்களத்தே ஆடுபவள், இந்திரன் மைந்தனாகிய சயந்தனுடைய நோக்கெதிர் நோக்கி நெஞ்சு சுழல்பவளாய்; நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் - யாழாசிரியனாகிய நாரதமுனிவன் யாழின் ஏழிசையின்பமுந் தெரியப் பாடும் பாடலையும் தோரிய மடந்தை வாரம் பாடலையும் உடைய; நாடகம் - தனது நாடகத்தினை; ஆயிரங் கண்ணோன் செவியகம் (கண்ணகம்) நிறைய நல்காள் ஆகி - ஆயிரங்கண்களையுடைய அவ்விந்திரனுடைய செவிகளாரவும் கண்களாரவும் வழங்கமாட்டாளாய்த் தடுமாறா நிற்ப; வீணை மங்கலம் இழப்ப - (அத்தடுமாற்றம் நன்கு தோன்றும்படி கலகத்தை விரும்புவோனாகிய நாரதன்றானும் தனது யாழிசையைப் பகைநரம்புபட இசைத்தலின்; இவ்விருவர் நிலைமையும் உணர்ந்த) திருமுனிவன் இவ்வியாழ் மங்கலமிழப்பதாக எனவும்; இவள் மண்மிசைத் தங்குக - இவ்வூர்வசி நிலவுலகிலே பிறந்து தங்குவாளாக எனவும் சபித்தலானே; சாபம் பெற்ற மங்கை மாதவி - இங்ஙனம் சாபம் பெற்றமையாலே நிலவுலகத்திலே கணிகையர் மரபிற் பிறந்து மாதவி என்னும் பெயருடையவளான அத்தெய்வ மங்கையின்; வழிமுதல் தோன்றிய அரவு அல்குல் ஆடலும் அங்குக் காண்குதும் - மரபிலே பிறந்த அரவின் பணம்போன்ற அல்குலையுடைய மாதவி யென்னும் நாடகம் ஏத்தும் நாடகக்கணிகையின் காண்டற்கரிய நாடகத்தையும் அவ்விடத்தே கண்டுகளிப்பேம் காண் என்றான் என்க.

(விளக்கம்) 22. வீணை - வடசொல். யாழ் என்னும் பொருட்டு. இஃதறியார் வீணை வேறு யாழ் வேறு என்பர். இவர் கூற்று - சலம் வேறு நீர் வேறு என்பதுபோலும் போலி என்க. ஈண்டு அடியார்க்குநல்லார் வீணை என்பதற்கு யாழ் என்றே பொருள் கூறுதலுமறிக. பாடலொடு ஆடல் இயைபுறாமையால் அவையும் இன்பந் தாரா தொழிதலின் அவை நிறையாமைக்கு உருப்பசி நாடகம் நல்காமையை ஏதுவாக்கினர். நாடகம் கண்ணாற்றுய்க்குங் கலையாகலின், அதனை நுகரும் இந்திரனை ஆயிரங்கண்ணான் என்று விதந்தனர். மேலும் நாடகம் நல்காளாகி எனவே கண்ணகம் நிறையாமை அமைதலின் செவியகம் நிறையாமை மட்டுமே கூறினர். இனி, இதன்கண் வானவர் நாட்டு அரம்பையருள் ஒருத்தியாகிய உருப்பசி மண்ணுலகிலே வந்து பிறந்து மாதவியென்னும் பெயருடையவளா யிருந்தாள் என்பதும் ஈண்டுக் கோவலனாற் காமுறப்பட்ட மாதவி என்பவள் அந்த மாதவியின் வழியிற் றோன்றியவள் என்பதுமாகிய வரலாறு கூறப்படுகின்றது. உருப்பசி அகத்தியமுனிவனாற் சபிக்கப்பெற்றமை அரங்கேற்று காதைக்கண் தெய்வ மால்வரைத் திருமுனி யருள..... சாபம் நீங்கிய என்புழிக் கூறினராதலின் ஈண்டு வாளாது சாபம் பெற்ற என்றொழிந்தார்.

இனி, அடியார்க்குநல்லார் உருப்பசியின் சாப வரலாறு என எடுத்துக் காட்டுகின்ற செய்யுள் வருமாறு:

வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய அவையின் இமையவர் வணங்க, இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி, ஆடல் நிகழ்க பாடலோ டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமும் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு மிசையத் திருத்திக், கரந்துவரல் எழினியொடு புகுந்தவன் பாடலின், பொருமுக வெழினியிற் புறந்திகழ் தோற்றம், யாவரும் விழையும் பாவனை யாகலின். நயந்த காதற் சயந்தன் முகத்தில், நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப், பாடன் முதலிய பல் வகைக் கருவிகள், எல்லா நெகிழ்தலின் ஒல்லா முனிவரன், ஒருதலையின்றி இருவர் நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை, மாணா விறலோய் வேணு வாகென, விட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென, மேவினன், காலை கழையு நீயே யாகி, மலையமால் வரையின் வந்துகண்ணுற்றுத், தலையரங்கேறிச் சார்தி யென்றவன், கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பண மாகெனச் சபித்துத் தந்திரி யுவப்புத் தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண்மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக் குறுமுனி யாங்கே, விட்டன னென்ப வேத்தவை யகத்தென் எனவரும்.

இனி, இந்திரன் செவியகங் கண்ணகம் நிறைய நாடகம் நல்காளாகிய உருப்பசியையும் அதற்குக் காரணமாகிய சயந்தனையும் சபித்தமை ஒக்கும்; வீணை மண்மிசைத் தங்குக எனச் சபித்தல் ஒவ்வாதென்பார்க்கு அடியார்க்குநல்லார் கூறும் அமைதி வருமாறு:

நாரதன் கலகப்பிரியன் ஆதலால் தனது யாழைப் பகைநரம்புபட இசைத்தலின், தான் இங்ஙனம் இசைத்தற்குக் காரணமின்றாகவும் இவள் கலங்கினமை தான் நமக்கறிவித்து நம்மால் இவளை முனிவிப்பான் வேண்டி நம்மை மதியானாயினானென அவளொடுஞ் சாபமிடுகின்றவன் வீணை மங்கல மிழக்க மண்மிசைத் தங்குக வெனவே இவனை நீங்காவரத்தின் வந்ததாகலான் இவனும் மண்மிசைத் தங்குக வென்ப தாயிற்று; எனவே இவன் மண்ணிற் பிறவானாதல் உணர்க என்பதாம்.

இனி, அவ்வுரையாசிரியர் பின்னும் வீணையைச் சாரீர வீணையாக்கி மங்கல மிழப்ப என்பதற்கு இவள் இக்கடவுள் யாக்கை யொழிந்து மக்கள் யாக்கையில் தங்குகவெனச் சபித்தான் என்பதும் கொள்க, என்பர். இவ்விளக்கம் நூலாசிரியர் கருத்தொடு மாறுபடுதலின் பொருந்தாதாம். என்னை? நூலாசிரியரே நாரதன் வீணையெனத் தெரித்தோதுதலின் என்க.

25. ஆடலும் அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. அரவல்குல், அன்மொழித்தொகை. மாதவி என்னும் பொருட்டு.

26. துவரிதழ் துடியிடையோயே இவ்வடி முன்னரே எடுக்துக் கூட்டி உரை கூறப்பட்டது.

(26) துடியிடையோயே! தென்றிசை மருங்கில் ஓர் செழும்பதி தன்னுள் இந்திரவிழவு கொண்டு எடுக்கும் நாள் இதுவெனக் கூறியாம் ஆங்குச் சென்று இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலும் காண்குதும்; தலைவனை வணங்குதும் என்றுகூறி என இயையும்.

விச்சாதரன் காதலியுடன் புகார்நகர்க்கு வருதல்

28-34 : சிமையத்து..........காண்போன்

(இதன்பொருள்) சிமையத்து இமயமும் - தன்காதலியோடு விசும்பின்வழியாகப் புகார்நகர் நோக்கி வருகின்ற அவ்விச்சாதரன் வழியின் கண்ணுள்ள குவடுகளோடு கூடிய இமயமலையையும்; செழு நீர்க் கங்கையும் - அவ்விமயத்தே பிறந்து உலகுபுரந் தூட்டுகின்ற வளவிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றினையும்; உஞ்சையம் பதியும் - உஞ்சைமாநகரத்தையும்; விஞ்சத்து அடவியும் - விந்த மலையினையும் அதனைச் சூழ்ந்த காட்டினையும்; வேங்கடமலையும் - வடவேங்கடமாமலையினையும்; தாங்கா விளையுள் காவிரிநாடும் காட்டி - நிலம் பொறாத விளை பொருள்களையுடைய காவிரிப் பேரியாறு புரந்தூட்டும் சோழவளநாட்டையும் தன் காதலிக்கு இஃது இன்னது! இஃது இன்னது என்று சுட்டிக்காட்டிப்; பின்னர் பூவிரி படப்பை புகார் மருங்கு எய்தி - சோழநாட்டுட் புகுந்த பின்னர் மலர்ந்த மலர்களையுடைய தோட்டங்களையுடைய புகார்நகரிடத்தே வந்து; சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி - தான் முன்பு அவட்குக் கூறிய முறைமையினாலே பூதசதுக்கம் முதலியவற்றைத் தான் தொழுமாற்றால் அவளையும் தொழுவித்துக் காட்டி; மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் - முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளமுடைய பழைய நகரமாகிய அப்பூம்புகாரின்கண் நடக்கின்ற மகிழ்ச்சிதருகின்ற இந்திரவிழாக் காட்சியைக் காதலிக்குக் காட்டித் தானுங் காண்கின்ற அவ்விச்சாதரன் என்க.

(விளக்கம்) 28 - சிமையம் -சிகரம்; குவடு. 29-உஞ்சையம்பதி - உச்சயினி நகரம். விந்தம், விஞ்சம் என மருவிற்று. அடவி - காடு. வேலி ஆயிரம் விளையுட்டு என்பதுபற்றித் தாங்கா விளையுள் காவிரிநாடு என்றார். நிலந்தரங்க மாட்டாதபடி மிகுதியாக விளையும் நாடு என்றவாறு. 32. படப்பை - வாழைத்தோட்டம் மாந்தோட்டம் முதலிய தோட்டக் கூறுகள். தொழுதனன் - தொழுது. 34. மகிழ்விழா - மகிழ்தற்குக் காரணமான விழா.

(மாதவியின் ஆடல்கள்)

35-37 : மாயோன்.........பின்னர்

(இதன்பொருள்) மாயோன் பாணியும் - திருமாலை வாழ்த்துகின்ற தேவபாணியும்; வருணப்பூதர் நால் வகைப் பாணியும் - வருணப் பூதர் நால்வரையும் வாழ்த்துகின்ற நால்வகைச் சிறுதேவபாணியும்; நலம் தரும் கொள்கை வான் ஊர் மதியமும் பாடி - மன்னுயிர் பலவற்றிற்கும் தன் ஒளியாலே நன்மைதருவதாம் என்கின்ற கோட்பாடு காரணமாக வானின்கண் இயங்குகின்ற திங்கட் கடவுளை வாழ்த்துகின்ற சிறுதேவபாணியும் ஆகிய இசைப்பாடல்களைப் பாடி என்க.

(விளக்கம்) 35. மயோன் பாணி - திருமாலாகிய பெருங்கடவுளைப் பாடுகின்ற தேவபாணி என்னும் பாட்டு. பாணி - பாட்டு. இது முத்தமிழ்க்கும் பொதுவாம். இஃது இசைத்தமிழில் வருங்கால் கொச்சக வொருபோகாய் வரும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஏனை யொன்றே, தேவர்ப்பராய முன்னிலைக் கண்ணே எனச் செய்யுளியலுள் (138) இலக்கணம் ஓதுதலறிக.

தேவபாணி - பெருந் தேவபாணி சிறு தேவபாணியென இரு வகைப்படும் என்ப.

இனி, இசைத்தமிழில் வருங்கால் தரவு முதலியவற்றை முகநிலை கொச்சகம் முரி என இசை நூலாரும் வழங்குவர். இசைப் பாவானது இசைப்பா எனவும் இசையளவுபா எனவும் இருவகைப்படும். இவற்றுள் தேவபாணி இசைப்பா என்பதன் பாற்படும். அவ்விசைப்பா பத்து வகைப்படும் என்பர். அவையாவன: 1 செந்துறை, 2 வெண்டுறை, 3. பெருந்தேவபாணி, 4. சிறு தேவபாணி, 5. முத்தகம், 6. பெருவண்ணம், 7. ஆற்றுவரி, 8. கானல்வரி, 9. விரிமுரண், 10. தலைபோகுமண்டிலம் என்பனவாம். இதனை,

செந்துறை வெண்டுறை தேவபா ணிய்யிரண்டும்
வந்தன முத்தகமே வண்ணமே - கந்தருவத்
தாற்றுவரி கானல் விரிமுரண் மண்டிலமாத்
தோற்று மிசையிசைப்பாச் சுட்டு  (இசை நுணுக்கம்)

எனவரும் (சிகண்டியார்) வெண்பாவா னுணர்க.

இனி, சுத்தம் சாளகம் தமிழ் என்னும் சாதியோசைகள் மூன்றனோடும் தாளக்கிரியைகளோடும் பொருந்தும் இசைப்பாக்கள் ஒன்பது வகைப்படும் எனப் பஞ்சமரபு என்னும் நூல் செய்த அறிவனார் கூறுவர். அவை சிந்து திரிபதை சவலை சமபாதவிருத்தம் செந்துறை வெண்டுறை பெருந்தேவபாணி சிறுதேவபாணி வண்ணம் என்னும் ஒன்பதுமாம்.

இனி, நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால், பெருந்தேவபாணி பலதேவரையும் சிறுதேவபாணி வருணப்பூதரையும் மூவடிமுக்கால் என்னும் வெண்பாவால் பாடப்படும் எனவும் அங்ஙனம் பாடுங்கால் அவர் அணியும் தாரும் ஆடையும் அவர்தம் நிறனும் கொடியும் வாழ்த்தி அவர்பால் வேண்டுவனவும் கூறிப் பாடப்படும் எனவும் கூறுவர். இதனை,

திருவளர் அரங்கிற் சென்றினி தேறிப்
பரவுந் தேவரைப் பரவுங் காலை
மணிதிகழ் நெடுமுடி மாணிபத் திரனை
அணிதிகழ் பளிங்கின் ஒளியினை யென்றும்
கருந்தா துடுத்த கடவுளை யென்றும்
இரும்பனைத் தனிக்கொடி யேந்தினை யென்றும்
கொடுவாய் நாஞ்சிற் படையோ யென்றும்
கடிமலர் பிணைந்த கண்ணியை யென்றும்
சேவடி போற்றிச் சிலபல வாயினும்
மூவடி முக்கால் வெள்ளையின் மொழிப  (மதிவாணனார்)

எனவரும் நூற்பாவா னறிக.

இனி, கொடு கொட்டி முதலிய பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணி மாயோன் பாணியாம். அது வருமாறு:

மலர்மிசைத் திருவினை வலத்தினி லமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட அடைத்தவன் - இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன் இனநிரைத் தொகை கழை இசைத்தலில் அழைத்தவன் - முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத்தினை யறுத்தவன் - உலகனைத் தையுமொரு பதத்தினில் ஒடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே. இஃது எண்சீரான் வந்து கொச்சக வொருபோகு. பண் - கௌசிகம். தாளம் இரண் டொத்துடைத் தடாரம்.

இனி ஆசிரியர் இளங்கோவடிகளார் சிறுதேவபாணி ஈண்டுக் கூறிற்றில ரெனினும் இனஞ்செப்புமாற்றால் அது வருமாறு கூறப்படும். அஃதாவது

வண்ணமலர்ச் சரங்கோத்து மதனவேள் மிகவெய்யக்
கண்ணளவோர் புலனல்லாக் கனல்விழியா லெரித்தனையால்
எண்ணிறந்த தேவர்களு மிருடிகளு மெழுந்தோட
ஓண்ணுதலான் பாகங்கொண் டொருதனியே யிருந்தனையே

எனவரும் என்க.

மாயோன் காவற் கடவுளாதல்பற்றி முதற்கண் வாழ்த்தப்பட்டனன். இனி, வருணப்பூதர் நால்வகைத் தேவபாணி வருமாறு:

அந்தணர் வேள்வியோ டருமறை முற்றுக - வேந்தன் வேள்வியோ டியாண்டுபல வாழ்க - வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க - பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக - அரங்கியற் கூத்து நிரம்பிவினை முடிக - வாழ்க நெடுமுடி கூர்கவென் வாய்ச் சொலென் - றிப்படிப் பலிகொடுத் திறைவனிற் றொக்குச் - செப்பட வமைத்துச் செழும்புகை காட்டிச் - சேவடி தேவரை யேத்திப் பூதரை - மூவடி முக்கால் வெண்பா மொழிந்து - செவியிழுக் குறாமை வேந்தனை யேத்திக் - கவியொழுக்கத்து நின்றுழி வேந்தன், கொடுப்பன கொடுப்ப வடுக்கு மென்ப எனவரும் (மதிவாணனார்) நூற்பாவாலறிக.

36. மதியமும் பாடி எனவே திங்கட்கடவுளைப் பாடுந்தேவபாணி என்பதாயிற்று. திங்கள் தண்ணிய மண்டில மாதல்பற்றி முற்கூறப்பட்ட தென்பர். இதற்குச் செய்யுள் வருமாறு: குரைகடன் மதிக்கு மதலையை குறுமுயல் ஒளிக்கும் அரணினை - இரவிரு ளகற்று நிலவினை யிறையவன் முடித்த அணியினை - கரியவன் மனத்தின் உதிதனை கயிரவ மலர்த்து மகிணனை - பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே எனவரும். இதற்குப் பண்ணும் தாளமும் முற்கூறப் பட்டனவேயாம்.

திங்கள் மண்டிலம் தனது தண்ணொளியாலே பைங்கூழ் முதலியவற்றை வளர்த்து மன்னுயிர்க்கு நலம் செய்வதாம் என்பதுபற்றி நலம்பெறு கொள்கை (யால்) வானூர் மதியம் பாடி என்றார்.

(37) பாடி.........ஆடும் (69) மாதவி இவள் என ஒருசொற் பெய்து மாதவிக்கு இதனையும் பின்வருவனவற்றையும் அடையாக்குக.

(1) கொடு கொட்டி

37-43: பின்னர் ............. ஆடலும்

(இதன்பொருள்) பின்னர் - இவற்றைப் பாடி முடித்த பின்னர்; நீரல நீங்க சீர் இயல் பொலிய - ஒவ்வாத தாளங்கள் நீங்கவும் பொருத்தமான தாளவியல்பு பொலிவு பெறுமாறும் பதினொரு வகைக் கூத்துக்களையும் (கோவலனுக்கு ஆடிக்காட்டி அவனை மகிழ்விக்கும் மாதவியை விச்சாதரன் அவர்கள் காணாமரபின் நின்று தன்மனைவிக்குச் சுட்டிக்காட்டுகின்றான்) என்க. தேவர் திரிபுரம் எரிய வேண்ட - தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டுதலாலே; எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப-அவ்வேண்டுகோட் கிணங்கிய இறைவனுடைய வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பானது அவ்விறைவன் ஏவிய பணியைச் செய்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்த) பாரதி ஆடிய பாரதி அரங்கத்து - பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; உமையவள் ஒருதிறன் ஆக- தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; ஓங்கிய இமயவன் - தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; ஆடிய கொடுகொட்டி ஆடலும் - வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடலும் என்க.

(விளக்கம்) 39-பாரதி-பைரவி. அவளாடிய அரங்கு, பாரதியரங்கம். சொற்பொருட் பின்வருநிலை யென்னும் செய்யுளின்பம் கருதி பாரதி யாடிய பாரதி யரங்கத்து என்று விதந்தோதினர். 40. தேவர் வேண்ட அம்பு ஏவல் கேட்ப அதனால் திரிபுரம் எரிய ஆங்குண்டான பாரதி யரங்கம் என்க. பாரதியரங்கம் என்பது வாளாது சுடுகாடு என்னும் பொருட்டாய் நின்றது என்க. 41. எரி - ஈண்டு வடவைத்தீ. முகம் - நுனி. உமையவள் ஒரு திறனாக நின்றாட இமையவன் ஒரு திறனாக நின்று ஆடிய கொடுகொட்டி என்க.

43. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது.

பாணியும் தூக்கும் சீரும் என்றிவை மாணிழை அரிவை கரப்ப எனக் கலியிற் கடவுள் வாழ்த்தில் வருதலை நினைந்து அடியார்க்குநல்லார் பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என வுரை விரித்தார்.

(2) பாண்டரங்கம்

44-45: தேர்முன் .............. பாண்டரங்கமும்

(இதன்பொருள்) தேர்முன் நின்ற திசை முகன் காண - வையகமாகிய தேரின்முன் நின்ற நான்முகன் காணுமாறு; பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் - பாரதி வடிவமாகிய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பெரிய பாண்டரங்கக் கூத்தும் என்க.

(விளக்கம்) தேர் என்றதற்கு வானோராகிய தேர் என்பாருமுளர். வையத் தேர் என்பது பரிபாடல் (5-24.) நான்மறைக் கடும்பரி பூட்டி நெடும்புற மறைத்து வார்துகின் முடித்து கூர் முட் பிடித்துத் தேர் முன்னின்ற திசைமுகன் காணும்படி என்பது பழையவுரை.

(3) அல்லியம்

46 - 48: கஞ்சன் ........... தொகுதியும்

(இதன்பொருள்) அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய திருமேனியுடைய கண்ணன் ஆடிய பத்துவகை ஆடலுள் வைத்து; கஞ்சன் வஞ்சம் கடத்தற்கு ஆக-கஞ்சன் செய்த வஞ்சனையினின்றும் நீங்குதற் பொருட்டாக; ஆடிய அல்லியத் தொகுதியும்-ஆடப்பட்ட அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 45. வஞ்சம் - வஞ்சனையாக ஏவப்பட்ட யானை. கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்ச யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்று ஆடிய கூத்து அல்லியக்கூத்து எனப்படும். 46. அஞ்சனவண்ணன் - மாயோன்; கண்ணன். கண்ணன் ஆடிய கூத்துப் பத்துவகைப்படும் என்ப. ஏனைய வந்தவழிக் கண்டுகொள்க. அல்லியக் கூத்து பலதிறப்பட ஆடுதலின் தொகுதி என்றார். முகம் மார்பு கை கால்களின் வட்டணை அவிநயம் முதலியன இருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் தொகுதி எனப்பட்டது என்பது பழையவுரை. ஆடலின்றி நிற்பவை யெல்லாம் மாயோனாடும் வைணவநிலை எனும் நூற்பாவின்கண் ஆடலின்றி நிற்கும் கூத்துக்கள் பலவுள வென்பது பெறுதுமாகலின் தொகுதி என்றது அல்லியக் கூத்துக்களின் தொகுதி யென்றே கோடல் நேரிது. அடியார்க்குநல்லார் விளக்கம் பொருத்தமாகத் தோன்றாமை யுணர்க. அல்லியம் எனினும் அலிப்பேடு எனினும் ஒன்று.

(4) மல்

48-49: அவுணர் ................ ஆடலும்

(இதன்பொருள்) (அஞ்சனவண்ணன் ஆடலுள் வைத்து;) அவுணன் கடந்த மல்லின் ஆடலும்-வாணன் என்னும் அசுரனை வெல்லுதற்பொருட்டு அவன் மல்லனாகி ஆடிய மற்கூத்தும் என்க.

(விளக்கம்) அஞ்சனவண்ணன் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.

(5) துடி

49-51: மாக்கடல் .......... துடியும்

(இதன் பொருள்) மாக்கடல் நடுவண் - கரிய கடலின் நடுவிடத்தே; நீர்த்திரை அரங்கத்து - அக்கடல் நீரின் அலையே அரங்கமாக நின்று; நிகர்த்து முன் நின்ற - நேரொத்து எதிர்நின்ற; சூர்த்திறம் கடந்தோன் - சூரனது வஞ்சகமாகிய சூழ்ச்சித் திறத்தை அறிந்து அவன் போரைக்கடந்த முருகன், ஆடிய துடியும் - அவ்வெற்றிக் களிப்பால் துடிகொட்டியாடிய துடிக்கூத்தும் என்க.

(விளக்கம்) 49. மா - கருமை; பெரிய கடலுமாம். 50. கடல் அலை மேலே நின்றாடுதலின் நீர்த்திரை யரங்கத்து என அதனை அரங்கம் என்றார். நிகர்த்து - நேரொத்து. 51. திறம் - சூழ்ச்சித்திறம். துடிகொட்டி ஆடுதலின் அப்பெயர் பெற்றது.

(6) குடை

52 - 53: படை..............குடையும்

(இதன் பொருள்) அவுணர் படை வீழ்த்துப் பையுள் எய்த - அசுரர்கள் போர் செய்தற்கு ஆற்றாதவராய்த் தம் படைக்கலங்களைக் களத்திலே போகட்டு வருந்தாநிற்ப அம்முருகனே; குடை வீழ்த்து - தனது கொற்ற வெண்குடையைச் சாய்த்துச் சாய்தது; அவர்முன் ஆடிய குடையும் - அவ்வசுரர் முன்னர் ஆடிய குடைக்கூத்தும், என்க.

(விளக்கம்) 52. அவுணர் ஆற்றாமை கண்டு அவரை எள்ளிக் குடையைப் பக்கங்களிலே சாய்த்துச் சாய்த்து ஆடுதலின் அவர் நாணிப் படை வீழ்த்துப் பையுள் எய்தினர் என்பது கருத்து. 53. குவைகொண்டாடலின் அப்பெயர்த்தாயிற்று.

(7) குடம்

54-55 : வாணன் ........... குடம்

(இதன் பொருள்) நீள்நிலம் அளந்தோன் - நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்த மாயோன்; வாணன் பேரூர் மறுகிடை நடந்து - வாணாகரனுடைய சோ என்னும் பெரிய நகர மறுகிலே சென்று அநிருத்தனைச் சிறைவீடு செய்தற் பொருட்டு; ஆடிய குடமும் - குடங்கொண்டு ஆடிய குடக் கூத்தும் என்க.

(விளக்கம்) காமன் மகன் அநிருத்தன் என்பானை வாணாசுரன் மகள் உழை என்பாள் காமுற்று அவனை உறக்கத்தே எடுத்துப்போய்த் தன் உவளகத்தே சிறைவைத்து அவனோடு கூடியிருந்தனள். இச்செய்தி யறிந்த மாயோன் வாணன் நகரத்தே சென்று போராடி வென்று அவனைச் சிறை மீட்டான் என்பர். அவ்வெற்றி காரணமாக மாயோன் அந்நகர மறுகில் குடங்களைக் கொண்டாடினன் என்க. இக்குடங்கள் உலோகங்களானும் மண்ணாலும் இயற்றப்பட்டன என்ப.

இது விநோதககூத்து ஆறனுள் ஒன்று என்பர். இதனை,

பரவிய சாந்தி யன்றியும் பரதம்
விரவிய விநோதம் விரிக்குங் காலைக்
குரவை கலிநடங் குடக்கூத் தொன்றிய
கரண நோக்குத் தோற்பா வைக்கூத்
தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
வென்றியும் விநோதக் கூத்தென விசைப்ப

எனவரும் நூற்பாவானுணர்க.

( 8) பேடி

56-57 : ஆண்மை..............ஆடலும்

(இதன் பொருள்) ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்து - ஆண்மைத்தன்மை திரிந்து பெண்மைத்தன்மை மிக்க கோலத்தோடே; காமன் ஆடிய பேடி ஆடலும்-காமவேள் ஆடிய பேடு என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) இதுவும் அநிருத்தனைச் சிறை மீட்டற்கு வாணாசுரன் நகரமறுகில் மாயோன் ஆடிய குடக்கூத்தோடு அம்மாயோனொடு சென்ற காமன் பேட்டுருக்கொண்டு ஆடிய கூத்தென வுணர்க. இதனை சுரியற்றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவளவொண்ணகை - ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் டோட்டுக் - கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற் - காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை - அகன்ற வல்குல் அந்நுண் மருங்குல் - இகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து - வாணன் பேரூர் மறுகிடை நடந்து - நீணில மளந்தோன் மகன்முன் னாடிய - பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும், எனவரும் மணிமேகலையானு முணர்க. (மணி.3:116-25)

தண்டமிழ் ஆசான் சாத்தனார் அடிகளார் மொழிகளைப் பொன்னே போற் போற்றி வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் என இனிதின் ஓதுதலுணர்க.

(9) மரக்கால்

58-59: காய்சின...........ஆடலும்

(இதன் பொருள்) மாயவள் - கொற்றவை; காய்சின அவுணர் கடுந் தொழில் பொறாஅள் - சுடுகின்ற வெகுளியையுடைய அசுரர் வஞ்சத்தாலே செய்கின்ற கொடிய தொழில் கண்டு பொறாதவளாய்; மரக்கால் ஆடிய ஆடலும் - மரத்தாலியன்ற கால்களின் மேனின்று ஆடிய மரக்கால் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 58. காய்சினம் - வினைத்தொகை. கடுந்தொழில் - தேவர்கட்கு இன்னல் செய்தற்குச் செய்த போர் முதலியன. தன்பாலன்புடைய நல்லோர்க்குச் செய்த இன்னல் கண்டு பொறாதவளாய் என்பது கருத்து. 59. மாயவள் - மாமைநிற முடையவள். அவள் கொற்றவை என்க.

ஆங்குக் கொன்றையும்......... அசுரர்வாட அமரர்க்காடிய குமரிக் கோலத்து ....... ஆய்பொன் னரிச்சிலம்பு சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை ஆடும் போலும் என அடிகளாரே வேட்டுவவரிக்கண் ஓதுவர்.

அவுணர் போரிற் காற்றாமல் வஞ்சத்தால் வெல்லக் கருதிப் பாம்பும் தேளும் பிறவுமாய்ப் போர்க்களத்தே புகுந்து மொய்த்தலின் கொற்றவை அவற்றை உழக்கிக் கொல்லுதற் பொருட்டு மரக்கால் கொண்டு ஆடலின் இஃது அப்பெயர்த்தாயிற்று.

(10) பாவை

60-61 : செரு..........பாவையும்

(இதன் பொருள்) செய்யோள் திருவின் சிவந்த திருமேனியையுடைய திருமகளாலே; அவுணர் செருவெம் கோலம் நீங்க - அசுரர்கள் போராற்றுதற்கு மேற்கொண்ட வெவ்விய கோலம் நீங்கி மோகித்து விழும்படி; ஆடிய பாவையும் - கொல்லிப்பாவை வடிவத்தோடே நின்று ஆடப்பட்ட பாவை என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) 60. செருக்கோலம் - போர்க்கோலம், அது நீங்கலாவது சினமவிந்து மோகித்து மயங்கி வீழ்தல். பாவை - கொல்லிப் பாவை. பாவை வடிவாயாடுதலின் அப்பெயர்த்தாயிற்று.

(11) கடையம்

62-64 : வயலுழை..........கடையமும்

(இதன் பொருள்) வடக்குவாயிலுள் வயல் உழை நின்று - வாணன் என்னும் அசுரனது சோ என்னும் நகரத்தே அரண்மனையினது வடக்கு வாயிலின்கண்அமைந்த கழனியினிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும் - அயிராணி என்னும் தெய்வமடந்தை கடைசி வடிவு கொண்டு ஆடிய கடையம் என்னும் கூத்தும் என்க.

(விளக்கம்) வடக்குவாயில்-சோவரணினது வடக்குவாயில் என்க. அயிராணி - இந்திராணி. கடையம் - கடைசியர் ஆடுங்கூத்து. உழத்தி வடிவங்கொண்டு ஆடலின் அப்பெயர்த்தாயிற்று. கடைசி - உழத்தி.

விச்சாதரன் மனைவியோடு காணாமரபினின்று மாதவியின் பதினொருவகைக் கூத்தையும் கண்டு பின்னர் இவள்தான் மாதவி என மனைவிக்குக் காட்டுதல்.

64-71:  அவரவர் .......... அன்றியும்

(இதன் பொருள்) அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் - இங்ஙனம் கூறப்பட்ட பதினொருவகைக் கூத்துக்களையும் அவற்றை ஆடிய இறைவன் முதலிய அத்தெய்வக் கூத்தர்கட்கியன்ற அணிகளுடனேயும் அவரவர்தம் கோட்பாட்டிற் கியன்ற மெய்ப்பாடுகளுடனேயும்; நிலையும் படிதமும் நீங்கா மரபின் - நின்றாடலும் வீழ்ந்தாடலுமாகிய அவரவரை நீங்காத மரபினொடும் பொருந்தி; பதினோராடலும் - இம்மடந்தை யாடா நின்ற இப்பதினொரு வகைக் கூத்துக்களையும்; பாட்டின் பகுதியும் - அக்கூத்துக்களுக்கியன்ற பண்களின் கூறுபாடுகளையும்; விதி மாண் கொள்கையின் விளங்கக் காணாய் - அக்கூத்துக்களுக்குக் கூத்தநூலிற் கூறப்பட்டுள்ள விதிகள் மாட்சிமைப்படுகின்ற கோட்பாட்டோடு விளங்கா நிற்றலையும் அன்புடையோய் நீ காணுதி மற்று இவள் தான் யார்? எனின்; இவள் யான் தாது அவிழ் பூம்பொழில் இருந்து கூறிய - இவள்தான் யான் நந்தம் வடசேடிக்கண் கள்ளவிழ் பூம்பொழிற் கண்ணேயிருந்து நினக்குக் கூறிய; மாதவி மரபின் மாதவி என - உருப்பசியாகிய மாதவியின் வழியிற் றோன்றிய மாதவி என்பாள் என்று; காதலிக்கு உரைத்து - அக்கூத்துக்களைக் கண்ணுற்றுக் கழிபேருவகையோடிருக்கும் தன் காதலிக்குக் கூறி; கண்டு மகிழ்வு எய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் - தானும் கண்டு மகிழ்ச்சியுற்ற மேம்பாடு தக்க சிறப்பினையுடைய அந்த விச்சாதரனும் அவனன்றியும் என்க.

(விளக்கம்) 64. அவரவர் என்றது, இறைவன் முதலியோரை. அவரவர் அணியுடன் என்றது, இறைவன் முதலியோர் கொடுகொட்டி முதலிய கூத்தை நிகழ்த்துங்கால் கொண்டிருந்த கோலத்தைக்கொண்டு என்றவாறு. இவற்றுள் இறைவன் கொடுகொட்டி யாடுங்காற் கொண்ட கோலத்தை உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத்து இறைவன் ஆகி எனவரும் நச்சினார்க்கினியர் மேற்கோளானும் (கலி.கடவுள்.உரை) அப்பொழுது அணியும் கோலத்தை அடிகளாரே (கட்டுரை காதைக்கண். 1-10)

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை யுண்கட் டவளவாண் முகத்தி
கடையெயி றரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினு மிடக்கால்
தனிச்சிலம் பரற்றுந் தகைமையள்

என உமையவள் மேல்வைத்து அழகுற ஓதுமாற்றானும் அறிக. இங்ஙனமே ஏனையோர் கோலங்களையும் வந்துழிக் கண்டுகொள்க.

அணி-ஆடுங் காலத்துத் தோன்றும் சுவையுடைய அழகு எனினுமாம். கொள்கை - திரிபுரமெரிதல் வேண்டும் என்பது முதலியன.

65. நிலை - நின்றாடல். படிதம் - வீழ்ந்தாடல்; படிந்தாடல். இவற்றுள் ஒன்றாதல் நீங்காத மரபின் என்றவாறு. 17. விதி - கூத்த நூலிலக்கண முறை. இவளது ஆட்டத்தின்கண் விளங்குதலைக் காண்க என்றவாறு. 70. கண்டு மகிழ்வெய்தி என்றது, காதலிக்குக் காட்டித் தானும் கண்டு மகிழ்வெய்தி என்பது பட நின்றது.

72 - 75 : அந்தரத்து...........இருந்தோனுவப்ப

(இதன் பொருள்) அந்தரத்து உள்ளோர் அறியா மரபின் - வானவர்தாமும் மாந்தர் தம்மைக் காண மாட்டாத முறைமையினாலே; வந்து காண்குறூஉம் - மண்ணுலகிலிழிந்துவந்து காண்டற்குரிய சிறப்பமைந்த; வானவன் விழவும் - இந்திரவிழவும்; ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள - மாதவியாடிய பதினொரு வகைக் கூத்தும் அவ்வாடல்களுக்கமைந்த பல்வேறு வகைக் கோலங்களும்; அணியும் - அவற்றிற்பிறந்த அழகும் முடிதலாலே; ஊடலோடு இருந்த கோவலன் உவப்ப - அவற்றை மேலும் தொடராமல் முடித்து விட்டாள் என்பதனால் சிறிது ஊடினான் போல வாய்வாளாதிருந்த கோவலன் உவக்கும்படி என்க.

(விளக்கம்) 72. அந்தரத்துள்ளோர் - ஏனைய விச்சாதரர் எனினுமாம். வானவர் உருவம் மாந்தர்க்குப் புலப்படாமையினால், அறியா மரபின் வந்து என்றார். இனி, தமதுருவம் ஒளிப்பிழம்பாகலின் அதனை மறைத்து அவர் காணாத அருவுடம்போடு வந்து எனினுமாம்.

ஊடற் கோல மோடிருந்தான் என்றதற்குப் பழையவுரையிற் கூறும் விளக்கங்கள், மாதவி கோவலன் இருவருடைய காதலுக்கும் இழுக்குத் தருவனவாகும். என்னை? திருநாள் முடிதலான் வந்த வெறுப்பு மாதவியோடு ஊடியிருத்தற்கு ஏதுவாகாமை யுணர்க. மேலும் ஆடலிற் காலநீட்டித்தலால் ஊடியிருந்தான் எனின் கலையின் அழகுணராப் பேதையாவான் ஆதலானும், இவளைப் பிறர் பார்த்தலின் வந்த வெறுப்பெனின் அவள் அன்புடைமையில் குறைகண்டவனாவான் இதுவும் ஊடற்கு நிமித்தம் அன்று. பிறர்க்கு இவ்வாறாமென்றூடினனாயின் ஆண்மையிற் குறையுடையன் ஆவன் எனவே அவையெல்லாம் போலி.

அவன் ஊடற்குக் காரணம் தான்இனிது சுவைத்திருந்த ஆடல் முதலியவற்றை அவள் முடித்தமையேயாம். வாய்மையில் இஃதூடலன்று; அவளது கலைச்சிறப்பைப் பாராட்டுமோர் உபாயமே ஆகும் இவ்வூடல். என்னை? இத்துணைப் பேரின்பத்தை இடையறுத்தலால் ஊடவே இவன் தன்னாடலைப் பெரிதும் சுவைக்கின்றனன் என மாதவி மகிழ்வள் ஆதலின் என்க. இஃதுண்மையான ஊடலன்றென் றறிவுறுத்தற்கே அடிகளார் ஊடலோடிருந்தானென் றொழியாது ஊடற் கோலமோடிருந்த என்று நுண்ணிதின் ஓதினர் என்றுணர்க. இனி, இவ்வூடல் தீர்த்தற்கு மாதவி தன்னைக்கூடி முயங்குதலே செய்யற்பாலது. ஆகவே கூட்டத்தை விரும்பும் தனது கருத்துக் குறிப்பாகப் புலப்பட இவ்வூடற் கோலத்தைக் கோவலன் மேற்கொண்டான் எனவும் அறிக.

மாதவியின் கூடற்கோலம்

76-79: பத்துத் துவரினும் ............. ஆட்டி

(இதன் பொருள்) பத்துத் துவரினும் - பத்துவகைப்பட்ட துவரினானும்; ஐந்து விரையினும் - ஐந்துவகைப்பட்ட விரையினானும்; முப்பத்திருவகை ஓமாலிகையினும் - முப்பத்திரண்டுவகைப்பட்ட ஓமாலிகையானும்; ஊறின நன்னீர் - ஊறிக் காயவைத்த நல்ல நீராலே; வாசநெய் உரைத்த நாறு இருங்கூந்தல் - மணநெய் நீவிய மணங் கமழுகின்ற கரிய கூந்தலை; நலம் பெற ஆட்டி - நிறந்திகழும்படி ஆட்டி; என்க.

(விளக்கம்) 76. துவர் பத்தாவன: பூவந்தி திரிபலை புணர் கருங்காலி நாவலொடு நாற்பால் மரமே, எனப்படுவன.

77. முப்பத்திருவகை ஓமாலிகையாவன : இலவங்கம் பச்சிலை கச்சோல மேலம், குலவிய நாகணங் கோட்டம் - நிலவிய நாகமதா வரிசிதக்கோல நன்னாரி வேகமில் வெண்கொட்ட மேவுசீர் - போகாத, கத்தூரி வேரி யிலாமிச்சங் கண்டில்வெண்ணெய், ஒத்தகடு நெல்லி உயர்தான்றி - துத்தமொடு, வண்ணக்கச் சோல மரேணுக மாஞ்சியுடன், எண்ணுஞ் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும், புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம், பின்னு தமாலம் பெருவகுளம் - பன்னும், பதுமுக நுண்ணேலம் பைங்கொடுவேரி கதிர்நகையா யோமா லிகை என்னும் இவை.

இதுவுமது

80-90: புகையில் ............. அணிந்து

(இதன் பொருள்) புகையின் புலர்த்திய பூ மெல் கூந்தலை - பின்னர் அகிற்புகையூட்டுதலாலே ஈரம் புலர்த்தப்பட்ட பொலிவினை யுடைய மெல்லிய அக் கூந்தலை; வகை தொறும் மான்மதச் சேறு ஊட்டி - ஐந்துவகையாக வகுத்து ஒவ்வொரு வகுப்பினும் மான்மதமாகிய கொழுவிய குழம்பையும் ஊட்டி; அலத்தகம் ஊட்டிய அம்செஞ்சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ - செம்பஞ் செழுதிய அழகிய சிவந்த சீறடிகளின் அழகிற்குத் தகுந்த மெல்லிய விரலிடத்தே அழகிய அணிகலன்களைச் செறித்து; காலுக்கு பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் அமைவுற அணிந்து - கால்களுக்குப் பாதசாலமும் சிலம்பும் பாடகமும் சதங்கையும் காற்சரியும் என்னும் இவ்வணிகலன்களைப் பொருத்த முறும்படி அணிந்து; குறங்குசெறி திரள்குறங்கினில் செறித்து - குறங்கு செறி என்னும் அணிகலனைத் திரண்ட தொடைகளிற் செறித்து; பிறங்கிய முத்து முப்பத்திருகாழ் - பரிய முத்துக் கோவைகள் முப்பத்திரண்டாற் செய்த விரிசிகையென்னும் மேகலையணியை; நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் அரை உடீஇ - அவற்றின் நிறம் விளங்குதற்குக் காரணமான அழகிய நீலச் சாதருடையின் மேல் இடையின்கண் பண்புற உடுத்து; காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து - கண்டாரைக் காமுறுத்தும் மாணிக்க வளையுடன் நீங்காமல் பொற்சங்கிலியாலே பிணிக்கப்பட்ட முத்தவளையலைத் தோளுக்கு அணிந்து; என்க.

(விளக்கம்) 80. புகை - அகிற்புகை. பூ - பொலிவு. 81. வகை - வகுப்பு. அஃதாவது ஐம்பாலாக வகுக்கப்படுதல். அவையாவன: முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. மான்மதச் சேறு. கத்தூரிக்குழம்பு; சவாதுமாம். 82. அலத்தகம் - செம்பஞ்சிக் குழம்பு. 83. விரல்நல்லணி - மகரவாய் மோதிரம், பீலி, கான் மோதிரம் முதலியன. 84. பரியகம் என்பது பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம், பின்னிய தொடரிற் பெருவிரள் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்துபுணர வைப்பதுவே எனவும், என்னை? அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய்ப் பசும்பொற் பரியக நூபுரம் மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி கௌவிய வேனவும் காலுக்கணிந்தாள் எனவும், வரும் மேற்கோள்களானும் உணர்க. 86. குறங்கு - தொடை. அதன் பாற் செறிக்கப்படும் அணிகலன் குறங்குசெறி எனப்படும். இதனை, குறங்கு செறியொடு கொய்யலங்காரம் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇப் பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் அணிந்த தமைவர வல்குற் கணிந்தாள் எனவரும் மேற்கோளானும் உணர்க. 87 -8. பிறங்கிய முத்து முப்பத் திருகாழ் ......... அரை உடீஇ என மாறுக. 89. காமம் - காமர் என ஈறுதிரிந்து நின்றது. தூமணி - வெண்முத்து. கண்டிகை - முத்தவளை. இதனை, ஆய்மணி கட்டியமைந்த இலைச் செய்கைக் காமர் கண்டிகை வேய்மருள் மென்றோள் விளங்கவணிந்தாள் என்னும் மேற்கோளானும் உணர்க.

இதுவுமது

91-100 : மத்தக ................. அணிந்து

(இதன் பொருள்) மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் - முகப்பிற் கட்டிய மாணிக்கத்தோடே பத்திகளில் வயிரங்கள் அழுத்தப்பட்ட சித்திரத் தொழிலையுடைய சூடகமும்; செம்பொன் கைவளை - சிவந்த பொன்னாலியன்ற கைவளையலும்; பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து - ஒன்பான்மணிகளும் பதிக்கப்பட்ட பரியகம் என்னும் மணிவளையலும் சங்கவளையலும் பல்வேறுவகைப்பட்ட பவழ வளையல்களும் அழகிய மயிரையுடைய முன்கைக்குப் பொருத்தமுற அணிந்து; வாளைப்பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனினது அங்காந்த வாயைப் போன்று நெளித்தல் செய்த நெளி என்னும் மோதிரமும்; கேள்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளி மிகுந்த கதிர்களை வீசுகின்ற சிவந்த மாணிக்கப் பீடம் என்னும் மோதிரமும்; வாங்குவில் வயிரத்துத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - பக்கத்தே வளைந்து சுருள்கின்ற ஒளியையுடைய வயிரஞ்சூழ்ந்த மரகதக்கடை செறி எனப்படும் தாள் செறியும் ஆகிய இவற்றையெல்லாம் காந்தண் மலர் போன்ற கையினது மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து; அம் கழுத்து - அழகிய கழுத்தின் கண்; சங்கிலி நுண்தொடர் பூண் ஞாண் - வீரசங்கிலியும் நேர்ஞ்சங்கிலியும் பூட்டப்படும் பொன்ஞாணும் என்னும் இவற்றோடு; புனைவினை - கையாற் புனையப்பட்ட தொழில்களையுடைய; சவடி சரப்பளி முதலாயுள்ள; அங்கழுத்து ஆரமொடு அணிந்து - உட்கழுத்து முத்தாரங்களோடு ஒருசேர வணிந்து என்க.

(விளக்கம்) 91. மத்தகம் - தலை. ஈண்டு முகப்பு என்க. மணி - மாணிக்கம். 92-93. பரியகம் - சரியுமாம். வால்வளை என்றதனாற் சங்குவளையல் என்பதாயிற்று. வெள்ளிவளை என்பாருமுளர். பவழத்தாற் பல்வேறு சித்திரத் தொழிலமையச் செய்யப்பட்ட பல வளையல்கள் என்க. இனி, இவற்றிற்கு புரைதபு சித்திரப் பொன்வளை போக்கில் எரியவிர் பொன்மணி யெல்லென் கடகம் பரியகம் வால்வளை பாத்தில் பவழம் அரிமயிர் முன்கைக் கமைய அணிந்தாள் என்னும் மேற்கோள் காட்டப்பட்டது. அரியகை முன்கை என்பதும் பாடம். அரிமயிர் - அழகிய மயிர். 95. வாளை மீனினது பிளந்த வாய்போல் நெளித்த நெளி என்னும் மோதிரம் என்க. இஃது இக்காலத்தும் உளது. வணக்குறுதல் - நெளிக்கப்படுதல். வணங்குதலுறும் என்னும் அடியார்க்கு நல்லார் இதனை உவம உருபின் பொருட்டாய்க் கொண்ட படியாம்.

96. கேழ்கிளர் என்ற பின்னும் அக்கேழ் செங்கேழ் எனற்கு மீண்டு மோதியவாறு. 97. வாங்குவில் - வளைத்துக்கொள்ளும் ஒளி. தாள் செறி - பெயர். 99. நுண்தொடர் - நுண்ணிய சங்கிலி. நேர்ஞ் சங்கிலி என்புழியும் நேர்மை - நுண்மையாம். அங்கழுத்தினும் அகவயினும் என்க. கழுத்து அகவயின் என்றது உட்கழுத்து என்றிக்காலத்தார் வழங்குமிடத்தை.

இதுவுமது

101-108 : கயிற்கடை ............ அணிந்து

(இதன் பொருள்) கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையில் சிறுபுறம் மறைத்து அங்கு - கோக்குவாயின்கண் தொடக்கித் தொங்கவிடப்பட்ட முத்தினால் இயற்றத்தகுந்த கோவையாகிய பின்றாலியாலே பிடரை மறைத்து; இந்திர நீலத்து இடை இடை திரண்ட சந்திரபாணி தகை பெறு கடிப்பிணை - முகப்பிற் கட்டின இந்திர நீலத் திடையிடையே பயிலக்கட்டின சந்திரபாணி என்னும் வயிரங்களாலே அழகு பெற்ற நீலக்குதம்பையை; அங்காது அகவயின் அழகுற அணிந்து - வடிந்த காதனிடத்தே அழகுமிகும்படி அணிந்து; தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி - சீதேவியார் என்னும் அணிகலத்தோடு வலம்புரிச் சங்கும் பூரப்பாளையும் வடபல்லி தென்பல்லி என்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலத்தை; மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து - கரிய பெரிய கூந்தலுக்கு அழகுற அணிந்து என்க.

(விளக்கம்) 101. கயிற்கடை - கோக்குவாய்; கொக்கி என இக் காலத்தே வழங்குவதுமது. கொக்கிவாய் என்றும் பழையவுரையிற் பாடவேற்றுமை யுளது. ஒரோவழி அவ்வுரையாசிரியர் காலத்து அங்ஙனம் வழங்கிற்றுப் போலும். ஒழுகுதல் - தொங்குதல். தூக்கமாகச் செய்யப்பட்ட பின்றாலி என்பர் அடியார்க்குநல்லார். அஃதாவது தொங்கலாகச் செய்யப்பட்ட பிடரணியாகிய தாலி என்றவாறு. ஒழுகிய கோவை என இயையும். சிறுபுறம் - பிடர். சங்கிலி நுண்டொடர் பூண்ஞாண் புனைவினைத் தொங்கல் அருத்தித் திருந்துங்கயிலணி, தண்கடன் முத்தின் றகையொரு காழ் எனக்கண்ட பிறவுங் கழுத்துக் கணிந்தாள் எனவரும் மேற்கோளில் தொங்கல் எனவே கூறுதலும் காண்க. 103-104. திரண்ட சந்திரபாணி என்புழிச் சந்திரபாணி என்பது வயிரத்தில் ஒருவகை என்க. 104. கடிப்பு இணை-குதம்பை இணை. நூலவ ராய்ந்து நுவலருங் கைவினைக் கோலங்குயின்ற குணஞ்செய் கடிப்பிணை, மேல ராயினும் மெச்சும் விறலொடு காலமை காதிற் கவின்பெற வணிந்தாள் என்பது மேற்கோள். 106. தெய்வவுத்தி - சீதேவியார் என்னும் ஒருவகைத் தலைக்கோலம். இங்ஙனமே வலம்புரி பூரப்பாளை (தொய்யகம்) தென்பல்லி வடபல்லி (புல்லகம்) என்பனவும் தலைக்கோல அணிகள். கேழ்கிளர் தொய்யகம் வாண்முகப் புல்லகம் சூளாமணியொடு பொன்னரிமாலையும் தாழ்தரு கோதையும் தாங்கி முடிமிசை யாழின் கிளவி அரம்பைய ரொத்தாள் என்பது மேற்கோள்.

இனி அடிகளார் 76 ஆம் அடிமுதலாக 108 ஆம் அடிகாறும் அவர்தம் காலத்து மகளிர் நீராடிக் கோலங் கொள்ளுதற்குரிய அணிகளைத் தமது ஒப்பற்ற சொற்கோவையிலுருவாக்கித் தருதல் அக்காலத்து நந்தமிழகமிருந்த நாகரிகத் தன்மைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகத் திகழ்வதாம். ஈண்டு அடிகளார் கூறிய சொல்லையும் பொருளையும் பொன்னேபோற் போற்றி அவற்றைச் செய்யுள் வடிவில் தந்த புலவர் பெயரும் நூற்பெயரும் தெரிந்திலவாயினும் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தந்திருக்கின்ற அச்செய்யுளும் புதை பொருள் ஆராய்ச்சி நிகழும் இக்காலத்தே போற்றி வைத்துக் கோடற்பாலனவே என்பது பற்றி அவற்றையும் எழுதலாயிற்று.

இனி, இவற்றை ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமை உற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுற மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து என இயைக்க.

மாதவியும் கோவலனும் கூடியும் ஊடியும் உவந்திருத்தல்

109-110 : கூடலும் ................ இருந்தோள்

(இதன் பொருள்) கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து - இவ்வாறு இனிதின் கோலங்கொண்டு கூடலையும் பின்னர்ச் செவ்வியறிந்து ஊடலையும் ஊடற் கோலத்தோடிருந்த அக்கோவலனுக்கு அளித்து; பாடு அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் - படுக்கை அமைந்த கூடும்பள்ளியின் கண்ணே மகிழ்ந்திருந்தவள் என்க.

(விளக்கம்) (75) ஊடற் கோலத்து இருந்தோன் உவப்பக் (106) கூடலையும் பின்னர் ஊடலையும் அவற்களித்து என்பதுபடக் கோவலன் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. கோவலன் ஊடியிருத்தலின் கூடலை முற்கூறல் வேண்டிற்று. துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயு மற்று என்பதுபற்றி ஊடலும் அளித்தல் வேண்டிற்று. கூடியபின்னர் ஊடுதற்கு அவன்மாட்டுக் காரணம் இல்லையாகவும், காதல் கைம்மிகுதலால் நுண்ணியதொரு காரணமுளதாக வுட்கொண்டு அதனை அவன்மேலேற்றி அவள் ஊடுதல். இவ்வாறு ஊடுதலைத் திருக்குறளிற் புலவி நுணுக்கம் (132) என்னும் அதிகாரத்தான் உணர்க. மற்று அடியார்க்குநல்லார் எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப் பெண்மையும் நாணும் அழிந்துவந்து குறையுற்றுக் கூடுந்துணையும் நீயிர் பிரிவாற்றியிருந்தீர்; அன்பிலீர் என ஊடுவது என ஈண்டைக் கேற்ப நுண்ணிதின் விளக்கினர். எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப், பெண்ணின் மிக்கது பெண்ணலதில்லையே, எனவரும் சீவகசிந்தாமணிச் செய்யுள் (998) ஈண்டு நினையற்பாலது.

காதலி ஊடுவதே காதலனுக்குப் பேரின்பமாயிருத்தலால் அதனையும் அளித்தல் என்ற சொல்லால் குறித்தனர். என்னை? ஊடலுவகை எனத் திருவள்ளுவனார் குறியீடு செய்தலும் புலத்தலிற் புத்தேணாடுண்டோ என்பதும் காண்க.

இனி அடிகளார் மாதவி கூடற் கோலம் கோடலைப் பரக்கக்கூறினரேனும் மனையறம்படுத்த காதையிற் கூறியதினும் காட்டிற் சுருக்கமாக அவள் (ஈண்டு மாதவி) கூடிய கூட்டத்தை (ப்பற்றி விரித்துக் கற்பார்க்கும் காமவெறி யெழப் பாரித்துரையாமல்) கூடலும் ஊடலும் கோவலற்களித்து என ஒரே அடியிற் கூறியொழிந்த சான்றாண்மையை எத்துணைப் பாராட்டினும் தகும். கண்ணகியின் காதலனை மாதவி கைப்பற்றிக்கொண்டு செய்யுள் களியாட்டம் எல்லாம் கற்போர் நெஞ்சத்து அவள்பால் வெறுப்பையே உண்டாக்கும் என்பது கருதியே அடிகளார் இங்ஙனம் கூறியொழிந்தனர். என்னை! மற்று மாதவியோ ஏனைய பொதுமகளிரைப் போல்வாளல்லளே! ஒருதிறத்தால் அவள் கண்ணகியை ஒக்கும் கற்புடைத் தெய்வமே ஆவள் ஆகவே அவளைப் பொருட் பெண்டிர்க்குரிய கீழ்மை தோன்ற யாதும் கூறுதல் கூடாது. கூறின் ஓதுவார்க்கெல்லாம் அவள்பால் வெறுப்புணர்வே தோன்றுதல் ஒருதலையாம் என்று கருதியே அடிகளார் இவ்வாறு சுருக்கமாகக் கூறுவாராயினர். மற்று அங்ஙனமே கண்ணகியாரைப் பள்ளியறைக்கண் வானளாவப் புகழ்ந்து நலம் பாராட்டிய கோவலன் இந்த மாதவியைப் பற்றி யாண்டும் ஒரு புகழுரையேனும் கூறாதவண்ணம் அவன் பெருந்தகையையும் நுணுக்கமாகப் போற்றிச் செல்வதனையும் காண்கின்றோம். கோவலன் மாதவியை நலம் பாராட்டத் தொடங்கினால் அவன் கயமையே நம்மனோர்க்குப் புலப்படும் என்பதனை நுண்ணிதின் உணர்க.

மாதவி கடல்விளையாட்டைக் காண விரும்பிக் கோவலனுடன் போதல்

111 - 120 : உருகெழு ........... வையமேறி

(இதன் பொருள்) உவவுத் தலைவந்தென - இந்திரவிழாவிற்குக் கொடி எடுத்த நாள் முதலாக இருபத்தெட்டு நாளும் அவ்விழா நடந்த பின்னர்க் கொடியிறக்கி விழாவாற்றுப் படுத்த மறுநாள் உவாவந்தெய்தியதனாலே; உரு கெழு மூதூர் - பகைவர்க்கு அச்சத்தைப் பொருந்துவிக்கும் பழைய ஊராகிய அப்பூம்புகார் நகரத்தினின்றும்; பெருநீர் போகும் இரியல் மாக்களொடு - கடற்கரைக்கண் இடம் பிடித்தற்கு ஒருவரின் ஒருவர் முந்துற்று விரைந்து செல்கின்ற மாக்களோடு; மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டு காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி - இதழ் விரிகின்ற தாழை புன்னை முதலியவற்றையுடைய கழிக்கானல் பொருந்திய கடல் விளையாட்டைக் காண வேண்டும் என்னும் விருப்பத் தோடே கோவலன் உடன்பாட்டையும் வேண்டினளாக அவனும் அதற்குடம்பட்டமையாலே; பொய்கைத்தாமரைப் புள்வாய் புலம்ப-நீர்நிலைகளிலே தாமரைப் பூஞ்சேக்கையில் துயில்கின்ற பறவைகள் அச்சேக்கை நீங்குதலாற்றாமையான் வாய்விட்டுப் புலம்பவும்; வைகறை யாமம் வாரணம் காட்ட - இப்பொழுது வைகறைப் பொழுது என்பதனைக் கோழிச் சேவல்கள் தங்கூக்குரலாலே அறிவியா நிற்பவும்; வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - அவ் வைகறையிற் செறிந்த இருளை வானத்தே தோன்றிய வெள்ளியாகிய விண்மீனொளி விலக்கவும் அக்காலத்தே; பேர் அணி அணிந்து வான வண்கையன் - மதாணி முதலிய பேரணிகலன்களை அணிந்துகொண்டு முகில் போலும் வண்மையுடைய கைகளையுடைய கோவலன்றானும்; அத்திரி ஏற - கோவேறு கழுதையின் மீதே ஏறாநிற்ப; தாரணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய அக்காதலனோடு போதற்கு; மான் அமர் நோக்கியும் - மானினது நோக்கம் போன்ற நோக்கமுடைய அம்மாதவியும்; வையம் ஏறி - கொல்லாப்பண்டியில் ஏறி என்க.

(விளக்கம்) 111. 25 - அச்சம். நகரத்தின்கண் பன்னாள் நிகழ்ந்த (73) வானவன் விழவும் ஆடலும் அணியும் இழந்திருத்தலாலே அவ்வூர் உருகெழுமூதூர் ஆயிற்றெனினுமாம். உவவு - உவாநாள்; அஃதாவது நிறைமதிநாள். நிறைமதிநாள் கடலாடுதற் குரிய நாள் ஆதலின், 112. பெருநீர் போகும் இரியன் மாக்கள் என்றவாறு. இரியல் - விரைதல். 113. கானலையுடைய கடல் என்க. கானலிலிருந்து காண்டல் விருப்பொடு வேண்டி எனினுமாம். கடலில் மாக்கள் ஆடும் விளையாட்டுக் காண்டல் வேண்டி என்றவாறு. 144. வேண்டினளாக என்க. அதற்கிணங்க (119) வானவண்கையன் அத்திரி ஏற என ஒருசொல் வருவித்தோதுக.

இனி, ஈண்டு அடிகளார் மாதவியும் கோவலனும் கடல்விளையாட்டுக் காணப்புறப்படும் இக்காலம் அவர்கட்குப் போகூழ் உருத்து வந்தூட்டுங் காலமென்பதைக் குறிப்பாக அறிவுறுத்துவார் தமது சொல்லிலேயே தீயவாய்ப்புள் (தீநிமித்தம்) தோன்றச் செய்யுள் செய்வதனை நுண்ணிதின் உணர்க. என்னை? அவர்கள் 115. புள்வாய் புலம்பவும் 116. காட்டவும், 117. கடியவும் ஏறினர் என்பது காண்க. இவ்வாறு செய்யுள் செய்வது நல்லிசைப் புலவர் மரபு என்பது முன்னும் கூறினாம். 119. அத்திரி - கோவேறு கழுதை. இது குதிரை வகையினுள் ஒன்றென்பர். இதனை மன்னரும் ஊர்தியாகக் கொள்வர் என்பது கோவேறு கழுதை என்னும் அடையடுத்த அதன் பெயரே அறிவுறுத்தலுமறிக. வையம் - கூடாரப்பண்டி என்பாருமுளர்.

இதுவுமது

121-127 : கோடி ............... கழித்து

(இதன் பொருள்) கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் மலி மறுகில் - கோடி என்னும் இலக்கத்தைப் பலப்பலவாக அடுக்கிக் கூறுதற்கியன்ற வளவிய நிதிக்குவியலையுடைய மாடங்கள் மிகுந்த தெருக்களையும் அங்காடித் தெருக்களையும் உடைய; மங்கலத்தாசியர் - மங்கலநாணையுடைய பணிமகளிர் சிலர்; மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்த ஆங்கு - முன்னர் அந்தி மாலைப்பொழுதிலே மலர் அணிந்து ஏற்றி வைத்த நெய்விளக்குகளுடனே மாணிக்க விளக்குகளையும் கையிலெடுத்துப் போக வேறுசிலர் அவ்விடத்தே; அலர் கொடியறுகும் நெல்லும் வீசி - மலரையும் கொடிப்புல்லாகிய அறுகையும் நெல்லையும் சிந்திப்போக; தங்கலன் ஒலிப்ப இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் - இவ்வாறு அம்மகளிர் தமது சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலி செய்யும்படி அத்தெருக்களின் இருபக்கங்களினும் திரிந்து போதற்கிடனான; திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து - திருமகள் வீற்றிருத்தற்கு இடனான பட்டினப் பாக்கத்தை நேராகச் சென்று கடந்து என்க.

(விளக்கம்) (இந்திர - 50) பட்டினப்பாக்கத்தில் அமைந்த ஆடற் கூத்தியர் இருக்கையினின்றும் மாதவியும் கோவலனும் கடற்கரை நோக்கிப் போகின்றார் ஆகலின் அப்பாக்கத்திலேயே அமைந்த பெருங்குடி வாணிகர் மாடமறுகினும் அவர்தம் பீடிகைத் தெருவினும் புக்குப் போக வேண்டுதலின் அவற்றை முற்படக்கூறுவாராயினர். இவ்விரண்டு தெருக்களும் வளைவின்றி மருவூர்ப்பாக்கங்காறும் திசைமுகந்து நேரே கிடத்தல் தோன்றச் செவ்வனம் கழித்து என்றார். 127. செவ்வனம் நேராக. இதற்குப் பிறரெல்லாம் பொருந்தாவுரை கூறினர்.

121-2. இந்திர......காதைக்கண் கூறியதற்கு இஃது எதிர்நிரல் நிறையாகக் கூறப்படுதலறிக. அங்குப் பீடிகைத்தெருவும் மாடமறுகும் கூறிப் பின்னர் ஆடற்கூத்தியர் இருக்கை கூறப்பட்டது. ஆதலின் அவ்விடத்தினின்றுஞ் செல்வோர் மாடமறுகினும் பீடிகைத் தெருவினும் செல்லுவது இன்றியமையாமை காண்க. பெருங்குடி வாணிகர் மாடமாதலின் அம்மாடங்களை, 121. கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடம் என்றார். கோடி, எண்ணுவரம்பறியாக் கொழுநிதி என்றற்கு ஓரெண் குறித்தபடியாம். குப்பை-குவியல். இங்ஙனம் கொழுநிதி குவிந்து கிடத்தலின் இத்தெருக்களிரண்டனையும் ஒருசேரத் (127) திருமகளிருக்கை என்றார். இனி அங்குச் செல்லுங்கால் அவ்விரவின் முற்கூற்றில் மலர் அணிந்து ஏற்றிய நெய்விளக்கங்களையும் மணிவிளக்கங்களையும் சுமங்கலியராகிய பணிமகளிர் அகற்றி அவ்விடத்தே மலரும் பூவும் நெல்லும் தூவிச் செல்வோருடைய கலன்கள் ஒலிப்பனவாயின. ஏவற்சிலதியராகலின் மாடங்களினும் கடைகளினும் அங்குமிங்குச் சென்று மலர் முதலியன இடுவாராயினர் என்க. இதனால் இல்லறம் நிகழாத பண்டசாலைகளினும் அங்காடிகளினும் விளக்கேற்றி வைத்து வைகறைப் பொழுதில் அவ்விளக்கை அகற்றி மலரும் அறுகும் நெல்லும் இடும் வழக்கமுண்மையும் அங்ஙனம் செய்யும் மகளிர் (விதவைகள் அல்லாத) மங்கலமகளிராதல் வேண்டும் என்பதும் அறியற்பாலன.

இதுவுமது

128-133: மகரவாரி .............. மருங்குசென்றெய்தி

(இதன் பொருள்) மகர வாரி வளம் தந்து ஓங்கிய நகரவீதி நடுவண் போகி - கடலினது வளத்தைக் கொணர்தலாலே உயர்ச்சிபெற்ற தாழ்விலாச் செல்வர் வாழ்கின்ற நகரவீதியினூடே சென்று; கலம் தருதிருவின் புலம்பெயர் மாக்கள் வேலை வாலுகத்து - மரக்கலங்கள் தந்த செல்வங்களையுடைய தமது நாட்டைவிட்டு வந்துள்ள வேற்றுநாட்டு வணிகமாக்கள் கடற்கரையிடத்து மணன்மேடுகளிடத்தும்; விரிதிரைப் பரப்பின் - அலைவாய் மருங்கினும்; கூலம் மறுகில் - பல்வகைக் கூலங்களையும் குவித்துள்ள மறுகின் கண்ணும்; கொடி யெடுத்து நுவலும்-இன்ன சரக்கு ஈண்டுளதென்று அவற்றிற்கு அறிகுறியாகிய கொடிகளை உயர்த்துமாற்றால் அறிவித்தலையுடைய; மாலைச் சேரிமருங்கு சென்று எய்தி - ஒழுங்குபட்ட சேரிகளையும் கடந்துபோய் என்க.

(விளக்கம்) 128. மகரவாரி - கடல். அதன் வளம் - முத்தும் பவளமும் சங்கும் பிறவுமாம். கலந்தரு திரு - நீரின்வந்த நிமிர்பரி முதலியனவாகப் பலப்பலவாம். புலம் - நாடு. 131. வாலுகம் - மணன்மேடு. 132. கூலமறுகு - பல்வேறு கூலங்களையும் குவித்த மறுகு. இவையெல்லாம் மருவூர்ப்பாக்கத்துள்ளன என்பதை முன்னைக் காதையாலுணர்க. கொடியெடுத்து நுவலுதல், இன்ன இடத்து இன்ன சரக்குளது என்பதற்கு அறிகுறியாகிய கொடிகளை யுயர்த்துமாற்றால் அறிவித்தல். 133. மாலை - ஒழுங்கு.

இதுவுமது

134 - 150 : வண்ணமும் .......... கானல்

(இதன் பொருள்) வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் - தொய்யில் முதலியன எழுதுதற்கியன்ற வண்ணக் குழம்புகளும் சந்தனமும் மலர்களும் பொற்சுண்ணமும் பண்ணிகார வகைகளும் என்னும் இவற்றை விற்போர் வைத்த விளக்குக்களும்; செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் - சித்திரச் செய்தொழில் வல்ல பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் வைத்த விளக்குக்களும்; மோதகத்துக் காழியர் ஊழுறு விளக்கமும் - பிட்டு வாணிகர் நிரல்பட வைத்த விளக்குக்களும்; கார் அகல் கூவியர் குடக்கால் விளக்கமும் - கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடம்போற் கடைந்த தண்டில் வைத்த விளக்குக்களும்; நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும் - பல பண்டங்களையும் விலைகூறி விற்கின்ற மிலேச்சமகளிர் தம் கடைகளில் வைத்த விளக்குக்களும்; இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் - இடையிடையே மீன்விற்போர் வைத்த விளக்குக்களும்; இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் - மொழிமாறுபட்ட வேற்று நாட்டிலிருந்து வருகின்ற மரக்கலங்கள் துறையறியாது ஓடுகின்றவற்றை இது துறையென்று அறிவித்து அழைத்தற்கிட்ட விளக்கும்; விலங்குவலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும் - மீன்களைக் குறுக்கிட்டு மறித்துப் படுக்கும் வலையையுடைய நெய்தனிலமாக்கள் தம் திமிலில் வைத்த விளக்குக்களும்; மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் - மொழி வேறுபட்ட நாட்டினின்றும் வந்துள்ள மாக்கள் வைத்த அவியா விளக்குக்களும்; கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் - மிகப்பெரிய பண்டங்களையுடைய பண்டசாலைகளைக் காக்கும் காவலர் இட்ட விளக்குக்களும்; எண்ணுவரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - ஆகிய எண்ணி இத்துணை என்று அறிதற்கியலாத இவ் விளக்குக்களெல்லாம் ஒருங்கே சேர்ந்து ஒளிபரப்புதலாலே; இடிக்கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் கடிப்பகை காணும் காட்சியது ஆகிய - இடிக்கப்பட்ட மாவைக் கலந்து போகட்டாற் போன்ற மிகவும் நுண்ணிய மணற்பரப்பின்மீதே விழுந்ததொரு வெண்சிறு கடுகையும் காணத்தகுந்த காட்சியை யுடையதாகிய; வீங்கு நீர்ப்பரப்பின் விரை மலர்த் தாமரை மருதவேலியின் மாண்புறத் தோன்றும் - பெருகும் நீர்ப்பரப்பின்கண்ணே மணமுடைய மலராகிய தாமரை பூத்துத் திகழ்கின்ற மருதநிலப் பரப்பினும் அழகுறத் தோன்றா நின்ற; கைதை வேலி நெய்தலங் கானல் - தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்துக் கழிக்கானலிடத்தே என்க.

(விளக்கம்) 134. சுண்ணம் - பொற்சுண்ணம் முதலியன. 135. பண்ணியம். பண்ணிகாரம் (தின்பண்டம்). பகர்தல் - விற்றல். 138. குடக்கால் - குடம்போன்று கடைந்த தண்டு. நொடை நவிலுதல் - விலை கூறுதல். கேட்போர் இல்வழியும் இப்பண்டம் இன்னவிலை கொண்மின்! என்று கூறுபவர் என்பதுதோன்ற நொடைநவில் மகடூஉ என்றார். மகடூஉ - மகளிர். 141. இலங்கு நீர்ப்பரப்பு - கடல். 142. விலங்குதல் - குறுக்கிடுதல். திமில் - தோணி வகையினுள் ஒன்று. 143. தேத்தோர் - தேயத்தோர். 146. இடி - நென் முதலியவற்றை இடித்த மா. மணலுக்குவமை. மணற்குவமையாதலின் (அடியார்க்) தெள்ளாத மா என்றார். ஈரயிர் மணலுமாம். ஈரயிர் என்புழி இருமை பெருமைப்பண்பும் குறிப்பதனால் அடியார்க்குநல்லார் பெரிதும் நுண்ணிய மணல் என்பார், மிகவும் நுண்ணிய மணல் என்றார்.

148-149. ஈண்டுக் கூறப்பட்ட விளக்குகள் தாமரை மலர்கள் போற்றோன்றுதலின் அந் நெய்தற்பரப்பு மருதப்பரப்புப் போன்றது என உவமையும் பொருளும் காண்க.

கடற்கரைக் கம்பலை

151-165: பொய்தல் ....... ஒலிப்ப

(இதன் பொருள்) பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி - தன் விளையாட்டுமகளிர் கூட்டத்தோடு கூடி மாதவியானவள் இக் காட்சிகளைக் கண்டு; நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சிய - வரிசை வரிசையாகக் குவிக்கப்பட்ட குற்றமற்ற காட்சியையுடைய; மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் வளம் தலைமயங்கிய துளங்கு கல இருக்கை - மலை தருகின்ற பல்வேறு பண்டங்களும் கடல் தருகின்ற பல்வேறு பண்டங்களும் ஆகிய வளங்கள் இடந்தோறும் கூடிக் கிடக்கின்ற அசைகின்ற மரக்கலங்களின் இருப்பிடமாகிய கடற் துறைமுகங்களிடமெங்கும்; அரசு இளங்குமரரும் உரிமைச் சுற்றமும் பரதகுமரரும் பல்வேறு ஆயமும் - மன்னர்மக்களாகிய இளங்காளையரும் அவருடைய உரிமைச் சுற்றமாகிய மகளிர் குழுவும் வணிகர் மக்களாகிய இளங்காளையரும் அவருடைய பரத்தை மகளிரும் பணித் தோழியருமாகிய பல்வேறு மகளிர் குழுக்களும்; ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கில் - ஆடல் மகளிரும் பாடன் மகளிரும் குழூஉக் கொண்டிருக்கின்ற இடங்கள்தோறும்; சூழ்தரல் எழினியும் - சூழவளைத்துக்கட்டிய திரைச்சீலைக் கூடாரங்களும் ஆகிய இவையெல்லாம்; விண்பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன்-விசும்பென விரிந்த பெரும்புகழையுடைய கரிகாலன்; தண்பதம் கொள் தலைநாள் போல-காவிரியின்கண் புதுப்புனல் வந்துழி நீராட்டுவிழ வயர்கின்ற முதனாட்போல; வேறு வேறு கோலத்து வேறு வேறு கம்பலை - வேறுவேறு வகைப்பட்ட கோலங்களையுடைய வெவ்வேறு வகைப்பட்ட ஆரவாரங்களும்; சாறு அயர்களத்து - இத்திருவிழா விறுதிபெறும் இவ்விடத்தே; வீறுபெறத் தோன்றி - பெரிதும் சிறப்புற்றுத் தோன்றாநிற்ப; கடல்கரை மெலிக்கும் காவிரிப் பேர்யாற்று இடம்கெட ஈண்டிய - அவையே அன்றிக் கடலினது கரையைக் கரைத்து மெலியச்செய்கின்ற காவிரி என்னும் பேரியாறு கடலொடு கலக்கும் புகார் முகமெங்கும் வறிது இடமின்றாக ஒருசேர வந்து நெருங்கிய; நால்வகை வருணத்து - பால்வேறு தெரிந்த அந்தணர் முதலிய நால்வேறு வகைப்பட்ட வகுப்பினருடைய; அடங்காக் கம்பலை - அடக்க வொண்ணாத ஆரவாரங்கள் எல்லாம்; உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்கே கூடிப் பேராரவாரமாய் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) 151. பொய்தலாயம் - விளையாட்டு மகளிர் குழு. பூங்கொடி - மாதவி. 152. புரை - குற்றம். 153. பல்தாரம், என்னுந்தொடர்நிலைமொழியீறு ஆய்தமாய்த் திரிந்து பஃறாரம் என்றாயிற்று; புணர்ச்சி விகாரம். இதனை, தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும், புகரின் றென்மனார் புலமை யோரே எனவரும் தொல்காப்பியத்தான் (எழுத்து - புள்ளிமயங் - 74) அறிக. தாரம் - பல்வேறு பண்டம். பல்தாரம் என்புழி பல் என்னும் அடைமொழி மிகப்பல என்பதுகுறித்து நின்றது. 134. துளங்குதல் - அசைதல். கலவிருக்கை - மரக்கலம் நிற்குமிடம். அஃதாவது துறைமுகம். ஆகுபெயரால் துறைமுகத்துச் சோலையிடத்தைக் குறித்து நின்றது. 156. அரசகுமரர்க்கு உரிமைச் சுற்றம் கூறியாங்குப் பரதர் உரிமைச்சுற்றம் நீராடல் மரபன்மையிற் கூறாராயினர் என்பர் (அடியார்க்) ஆகவே, பரதகுமரர் ஆயமகளிருடன் சென்றனர் என்பது தோன்ற ஆயமகளிரும் என்றார். அவராவார் பரத்தை மகளிரும் அவர் தம் தோழிமாரும் பணிமகளிரும் என்க. இப்பரதகுமரரையே முன்னைக் காதையில் அடிகளார் நகையாடாயத்து நன்மொழி திளைத்து நகரப் பரத்தரொடு கோவலன் மறுகிற் றிரிந்தான் என்றோதினர். ஈண்டும் கோவலன் ஆயமகளிரோடே வருதலுமுணர்க. ஆயமும் பரத்தையரும் தோழியரும் குற்றேவன் மகளிரும் எனப் பலவகைப்படுதலின் பல்வேறாயமும் என்றார். 157. ஆடுகளமகளிர் - களத்தில் ஆடும் விறலிபர். பாடுகளமகளிர் - களத்தால் பாடும் பாடினமார். களம் - மிடறு. 158. தோடு -தொகுதி. 155-58 அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும் குமரரும் ஆயமும் ஆடுகள மகளிரும் தனித்தனியே தோடுகொண்டுள்ள இடங்களில் சூழ்தரு எழினி என்க. எழினி - திரைச்சீலையால் மறைக்கப்பட்ட கூடாரங்கள். அரசிளங்குமரர் முதலியோர் வேறு வேறு கோலமுடையராக - இவர்தம் குழுவினின்றும் எழும் கம்பலையும் வேறு வேறாக வீறுபெறத் தோன்றா நிற்ப. இத் தோற்றத்திற்குக் கரிகாலன் காவிரிப் புதுப்புனலாடும் நீராட்டுவிழவின் தோற்றம் உவமை என்க.

159. விண்பொரு பெரும்புகழ் - விசும்பை ஒத்த பெரும்புகழ்; (விரிந்த விசும்பு போல விரிந்த பெரும்புகழ்) இதற்கு இங்ஙனம் பொருள் காணமாட்டாது பிறரெல்லாம் பொருந்தா வுரை கூறினர். சாறயர் களம் - கடலாட்டுவிழா நிகழ்த்தும் இந்நெய்தற் பரப்பு. 160. தலை நாட்போல வீறுபெறத் தோன்றி என இயையும். சாறு அயர் களத்து என்பதனை உவமை யென்பாருமுளர். தண்பதம் கொள்ளும் - புதுப் புனலாடும்; வேறு வேறு கோலத்தோடு செய்யும் வேறு வேறு கம்பலை வீறுபெறத் தோன்றாநிற்ப அவை நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை யுடங்கியைந்து ஒலிப்ப என இயையும்.

மாதவி கோவலனொடு கடற்கரையில் வீற்றிருத்தல்

« Last Edit: February 23, 2012, 01:15:15 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #10 on: February 23, 2012, 01:13:53 PM »
166-174 : கடற் புலவு ............. மாதவிதானென்

(இதன் பொருள்) கடல் புலவு கடிந்த மடல் பூ தாழை - கடலினது புலால் நாற்றத்தையும் மாற்றி நறுமணம் பரப்புகின்ற மடல்கள் விரிகின்ற மலரையுடைய தாழைகளாலே; சிறை செய் வேலி அகவயின் - சிறையாகச் சூழப்பட்ட வேலியை யுடையதொரு தனியிடத்தினடுவே; ஆங்கு ஓர் புன்னை நீழல் புதுமணல் பரப்பில் - அவ்விடத்தே நிற்குமொரு புன்னையின் நீழலில் புதுமை செய்யப்பட்ட மணற் பரப்பிலே; ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சித்திரம் வரையப்பட்ட திரையைச் சுற்றி வளைத்து; விதானித்துப் படுத்த வெள்கால் அமளிமிசை - மேற்கட்டுங் கட்டியிடப்பட்ட யானைக் கோட்டாலியன்ற வெள்ளிய கால்களையுடைய கட்டிலின் மேலே; வருந்துபு நின்ற வசந்த மாலை கை-மெல்லிடை வருந்தப் பக்கலிலே நின்ற வசந்த மாலை என்னும் தோழி தன் கையிலேந்திய; திருந்து கோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி - திருத்தமுற்ற நரம்புகளையுடைய ஈரேழ் கோவை என்னும் இசை நலமுடைய யாழினை வாங்கு முறைமையோடு வாங்கி; கோவலன் தன்னொடு - ஆங்கு முன்னரே அமர்ந்திருந்த கோவலனோடு; கொள்கையின் இருந்தனள் - தானும் ஒரு கோட்பாட்டுடனே இனிதின் வீற்றிருந்தனள்; மாமலர் நெடுங்கண் மாதவி - அவள் யாரெனின் பெரிய மலர் போலும் கண்ணையுடையாள் என்று முன் கூறப்பட்ட அம் மாதவி என்னும் நாடகக் கணிகை என்றவாறு.

(விளக்கம்) 966. கடற்புலவு கடிந்த பூந்தாழை எனவே புலால் நாற்றத்தையும் மாற்றும் மாண்புடைய நறுமணம் பரப்பும் மலரை யுடைய தாழை என்பதாயிற்று. புலவும் எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை தொக்கது. 167. சிறைசெய்தல் - தனிமைப் படுத்துதல். புதுமணற் பரப்பு என்றது முன்னரே பணிமாக்கள் பழமணன் மாற்றிப் புதுமணலாம்படி திருத்திய இடம் என்பது தோன்ற நின்றது. 169. கொள்கை - குறிக்கோள். அஃதாவது அந்த அழகிய சூழ்நிலையினூடே தனது செல்வமாகிய இசைக்கலையின் இன்பத்தைத் தன் காதலனோடு கூட்டுண்ணவேண்டும் என்னும் குறிக்கோள். அதற்குக் குறிப்பாகக் கால்கோள் செய்தற்கே வசந்தமாலையின் கையிலிருந்த திருந்துகோல் நல்லியாழைச் செவ்வனம் வாங்கினள் என்க. செவ்வனம் வாங்கியென்றது யாழை வாங்குமுன் அதனைக் கைகுவித்து வணங்கி வாங்கி என்றவாறு. என்னை? கலைவாணர் தங்கள் கருவியைக் கைக்கொள்ளுங்கால் அதனைக் கடவுட்டன்மை யுடையதாகக் கருதித் தொழுது கைக்கொள்ளுதல் மரபு. அம்மரபு இற்றை நாளினும் அருகிக் காணப்படும்.

இனி, அரங்கேற்று காதையில் பூம்புகார்ப் பொற்றொடி மாதவி தன் வாக்கினால் ஆடரங்கின்மிசை வந்து பாடி ஆடியபொழுது அவள் தன் கண்வலைப்பட்டு கோவலன் மாலை வாங்கி அவள் மனைபுகுந்தான் என்பார் அடிகளார், அங்கும் அவளை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே அழைத்தனர். அக் கண்வலையறுத்துப் புறப்படும் இற்றை நாளினும் அவள் மாமலர்க்கண் மாதவியாகவே இருந்தாள் என்பார். மாமலர்க்கண் மாதவி என்றேகுறித்தார். இருந்தும் என்செய, இன்று அவள் ஊழ்வினை வந்துருத்து ஊட்டும் என்றறிவுறுத்தல் இதனாற் போந்த பயன். முன்னர்க்கூடிய நாளின் அந்திமாலையைச் சிறப்பித்து இறுதியில் வெண்பாப் பாடியவர் இற்றை நாள் பிரிவு நாளாகலின் வெங்கதிரோன் வருகையை விதந்து ஈண்டும் ஒரு வெண்பா ஓதியருள்கின்றார் என்றுணர்க.

இனி இக்காதையை,

வெள்ளிமால்வரைக்கண் சேடிக்கண் விருந்தாட்டயரும் விஞ்சை வீரன், இடனுங் காண்குதும்; அமைதியுங் காண்குதும்; ஆடலுங் காண்குதும்; வணங்குதும் யாம் எனக் காட்டிக் காண்போன் காணாய்! மாதவி யிவளென வுரைத்து மகிழ்வெய்திய அவ் விஞ்சையனன்றியும் அந்தரத்துள்ளோர் வந்து காண்குறூஉம் விழவும் ஆடலும் கோலமும் கடைக்கொள இருந்தோன் உவப்ப ஆட்டி ஊட்டிச் செறீஇ அணிந்து செறித்து உடீஇத் தோளுக்கணிந்து அமைவுற அணிந்து கரப்ப அணிந்து ஆரமோடணிந்து சிறுபுறம் மறைத்து அழகுற அணிந்து மாண்புற அணிந்து அளித்து இருந்தோள்; உவவு வந்தென வேண்டினளாகிப் புலம்பக் காட்டக் கடிய அணிந்து ஏற ஏறிச் செவ்வனங்கழிந்து நடுவட்போகி மருங்கு சென்றெய்திப் பொருந்தி வாங்கிக் கோவலன் றன்னொடும் மாதவி வெண்கால் அமளிமிசை யிருந்தனள் என வினை யியைபு செய்க.

வெண்பாவுரை

வேலை மடற்றாழை ............. வெங்கதிரோன் தேர்

(இதன் பொருள்) காமர் தெளிநிற வெம் கதிரோன் தேர் - அழகிய தெளிந்த நிறமுடைய வெவ்விய சுடர்களையுடைய ஞாயிற்றுத் தேவனுடைய ஒற்றை ஆழித் தேரானது; வேலைத் தாழை மடலுள் பொதிந்த வெள் தோட்டு மாலைத் துயின்ற மணி வண்டு - கடற்கரையிலுள்ள தாழையினது புறவிதழ்களாகிய மடல்கள் தம்முள்ளே பொதிந்துள்ள அகவிதழ்களாகிய வெள்ளிய மடல்களினூடே முதல் நாள் அந்தி மாலையில் இன்றுயில் கொண்டிருந்த நீலமணி போலும் நிறமுடைய வண்டானது, காலை களிநறவம் தாதூத அற்றை நாள் விடியற் காலத்தே அவ்விடத்தை நீங்கிக் காலைப்பொழுதில் முகமலர்ந்து தன்னை வரவேற்கும் செந்தாமரை மலர் பிலிற்றும் மகிழ்ச்சி தருகின்ற தேனையும் தாதையும் நுகரும்படி; தோன்றிற்று - கீழ்த்திசையிலே தோன்றா நின்றது.

(விளக்கம்) அடிகளார் இவ்வெண்பாவினாலே, முன்னர் ஊழ்வினையான் மயங்கி மாமலர்க்கண் மாதவி மாலை வாங்கி அவள் மனைக்கட் சென்று இற்றைநாள் காறும் தன் தவறு காணாதவனாய்க் கிடந்தவன் இற்றைநாள் தன் தவறுணர்ந்து மாதவியைக் கைவிட்டுக் கண்ணகியின்பாற் சென்று அவள்தன் புன்முறுவல் பெற்று மகிழ்வதனைக் குறிப்பாக வோதியவாறாகக் கொள்க. காலைக் களிநறவம் தாதூத என்றதனால் செந்தாமரை மலரின்கண் சென்றென்பது பெற்றாம்.

கடலாடு காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #11 on: February 23, 2012, 01:24:05 PM »
7. கானல் வரி

அஃதாவது - நெய்தலங்கானலின்கண் வெண்காலமளி மிசையிருந்து கானல்வரி என்னும் இசைப்பாவினைப் பாட அப்பாட்டின் வழியாக அவ்விருவர்க்கும் ஊழ்வினை உருத்துவந்தூட்டத் தொடங்கியதனைக் கூறும் பகுதி என்றவாறு. வரிப்பாடல் பிறவும் உளவாயினும் சிறப்புக்கருதி, கானல்வரி எனக் குறியீடு செய்தருளினர் என்றுணர்க.

(கட்டுரை)

அஃதாவது - பொருள் பொதிந்த உரைநடையா லியன்ற செய்யுள் என்றவாறு.

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.  1

வேறு (ஆற்று வரி)

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   2

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   3

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.   4

வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)

கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.  5

காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.   6

மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.   7

வேறு (முகம் இல் வரி)

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.   8

(கானல் வரி)

நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   9

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   10

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. 11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.  12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.  13

வேறு (முரிவரி)

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. 16

வேறு (திணை நிலைவரி)

கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.  17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.  18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.  19

வேறு

பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய   20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.  21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.  22

வேறு

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.  23

(கட்டுரை)

ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன் தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல் கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். 24

வேறு (ஆற்று வரி)

மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. 25

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. 26

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. 27

வேறு (சார்த்து வரி)

தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.  28

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.  29

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர்.  30

வேறு (திணை நிலைவரி)

புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.  31

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.  32

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?  33

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? 34

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.  35

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.  36

வேறு (மயங்கு திணை நிலைவரி)

நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ? 37

வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ?  38

புலவுற்று இரங்கி அதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ? 39

வேறு

இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?  40

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? 41

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 42

வேறு (சாயல் வரி)

கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.  43

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.  44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.  45

வேறு (முகம் இல் வரி)

அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.  46

வேறு (காடுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.  47

வேறு (முகம் இல் வரி)

நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.  48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.  49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.  50

வேறு

தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.  51

வேறு (கட்டுரை)

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.  52

உரை

மாதவியின் யாழ் மாண்பு - நூலாசிரியர் கூற்று

1-4 : சித்திரப்படத்துள் .............. வாங்கி

(இதன்பொருள்:) சித்திரம் படத்துள் புக்கு - ஓவியம் பொறிக்கப்பட்ட பல்வேறு வண்ணத்தாற் றிகழும் துகிலாலியன்ற உறையினுட் புகுந்து; செழுங் கோட்டின் மலர் புனைந்து - அழகினால் வளமுடைத்தாகிய தனது கோட்டின் உச்சியிலே நறுமண மலர் மாலை சூட்டப் பெற்று விளங்குவதாலே; மைத் தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பு எய்தி - மை எழுதிய பெருவிழிகளையுடைய புதுமணம் புகுதும் மகளிருடைய திருமணக் கோலம் போன்று காண்போர் கண்கவரும் பேரழகு பெற்று; பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத் திறத்துக் குற்றம் நீங்கிய - பத்தரும் தண்டும் முறுக்காணிகளும் நரம்புகளும் பிறவுமாகிய தன் உறுப்புக்களின் திறத்திலே குற்றம் சிறிதுமில்லாத; யாழ் - வசந்தமாலை கையிலிருந்த தனது யாழினை; தொழுது வாங்கி - கைகுவித்துத் தொழுது தனதிருகைகளாலும் வாங்கிக்கொண்டு, வெண்கால் அமளிமிசை கோவலன் றன்னோடு இன்னிசையின்பம் கூட்டுணவேண்டும் என்னும் கொள்கையோடிருந்த அம் மாமலர் நெடுங்கண் மாதவி என்பாள் பின்னர் என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் (கடலாடு. 171-2) வசந்த மாலைகளைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கி என்றோதிய அடிகளார் மீண்டும் அந்நிகழ்ச்சியையே கானல்வரி என்னும் இக் காதைக்குத் தோற்றுவாயாக்கித் தொடங்குகின்றார், அஃதெற்றுக் கெனின் அந்த யாழினது சிறப்பினையும் மாதவி அதனை இசை கூட்டுந் தன்மையினையும் விதந்தோதற் பொருட்டென்க.

ஈண்டு அடிகளார் யாழின் தோற்றத்திற்குப் புதுமணக் கோலம் பூண்ட மகளிரை உவமையாக்குதலின் அவர் கூறும் யாழ் இக்காலத்தே யாழ்ப்புலவர் கைக்கொண்டுள்ள யாழ்போலவே இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். தவத்திரு விபுலானந்த அடிகளார் வளைந்த காம்பையுடைய அகப்பை வடிவில் சித்திரித்துக் காட்டுகின்ற யாழ் உறையிற் புகுத்திப் பார்க்குமிடத்து யாதானுமொரு மூடையின் வடிவமாகத் தோன்றுவதல்லது மணமகளிரின் கோலம்போல் வனப்புடைத்தாகக் காணப்படா தென்பதனை அவர் யாழ் நூலிற் காட்டியுள்ள யாழ் வடிவங்களை நோக்கியுணர்க. பேரறிஞர் ஒருவர் பெரிதும் முயன்று ஆராய்ந்து எழுதிய பாணர் கைவழி என்னும் யாழ் நூலில் சிலப்பதிகாரக் காலத்து யாழ் இற்றை நாளிற் காணப்படும் யாழ் போலவே இருந்தது என முடிவு செய்துள்ளார். அவர்க்குத் தமிழுலகம் பெரிதும் நன்றி செலுத்தற் பாலதாம். அறிய விரும்புவோர் அந்நூலையோதி அறிக. ஈண்டுரைப்பின் உரை விரியுமென்றஞ்சி விடுத்தோம்.

இனி, அடிகளார் கூறியாங்கே முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப்புலவர் தாமும் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன அஃதாவது புதுமணக் கோலம் பொலிவுபெற்ற மாதரை ஒப்பனை செய்து கண்டாலொத்த வனப்புடைய யாழ் என ஓதியுள்ளார் (பொருநராற்றுப் படை-19)

1. சித்திரப்படம் - ஓவியம் பொறித்த வண்ணத் துகிலாலியன்ற உறை. இதற்கு மணமகளிர் உடுத்திய பூந்துகில் உவமை. கோடு யாழ்த்தண்டு. கோட்டின் உச்சியில் மலர்புனைந்து என்றவாறு. 3. பத்தர் முதலிய நான்கும்யாழின்கட் சிறந்த உறுப்புக்களாதலான் அவற்றையே கூறி யொழிந்தார். யாழ் உறுப்புக்கள் பத்தர் முதலாகப் பதினெட்டுள என்ப. பத்தர் - பத்தல்; இக்காலத்தார் குடம் என்பர். நரம்பினது ஒலியைப் பெருக்கிப் பெரிதும் இனிமையுடையதாய்ச் செய்யும் உறுப்பாகலின் இது சிறந்த உறுப்பாயிற்று கோடு - தண்டு. இஃது அழகினாற் சிறந்திருத்தலைச் செழுங்கோடு என்பதனாற் குறித்தார். என்னை? நுணங்கா நுவரிய நுண்ணீர் மாமைக் களங்கனி யன்ன கதழ்ந்து கிளர்உருவின் வணர்ந்தேந்து கோடு என்பவாகலின் (மலைபடு 35-37) என்க.

ஆணி யாழில் துரப்பமை ஆணி யென்றும் சுள்ளாணி என்றும் இருவகை ஆணிகள் உள, ஈண்டுக் கூறியது நரம்புகளை முடுக்கும் துரப்பாணியை. அளைவாழ் அலவன் கண்கண்டன்ன துளைவாய்தூர்ந்த துரப்பமை ஆணி எனப் பொருநராற்றுப் படையிற் கூறப்படும் ஆணியும் இது. நரம்பு - இசையைப் பிறப்பிக்கும் யாழ் நரம்புகள். இவ்வுறுப்புக்கள் குற்றமுடையனவாயின் இன்னிசை பிறவாது. இவற்றின் குற்றம் குண முதலியன அரங்கேற்று காதைக்கண் கூறப்பட்டன. யாழின்கண் மாதங்கி என்னும் கலைத்தெய்வம் வீற்றிருக்கும் கலைவாணர் கொள்கை ஆதலின் 4. தொழுது வாங்கினள் என்க.

மாதவி எண்வகையால் இசைநலன் ஆராய்தல்

5-9 : பண்ணல் ............. பரிவுதீர்ந்து

(இதன்பொருள்:) பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணியசெலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய - இசை நூலோரால் பண்ணல்முதலாகக் குறும் போக்கு ஈறாக நூலிற் கூறி நிறுவிய; எண்வகையால் இசை எழீஇ - எண்வகைச் செயலால் அந்த யாழ் நரம்பினை ஆராய்ந்து பண்ணுறுத்தி நரம்புகளிலே இசைகளைப் பிறப்பித்து; பண்வகையால் பரிவுதீர்ந்து - நால்வகைப் பண் வகைகளானும் குற்றமின்மை தெளிந்து; என்க.

(விளக்கம்) 5-8. பண்ணல் முதலிய தொழில்கள் எட்டும் யாழ் நரம்புகளில் இசை பிறப்பிக்குந் தொழில்களாம். அவற்றுள்,

(1) பண்ணலாவது - பாடநினைத்த பண்ணுக்கு இணைகிளை பகை நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்.

(2) பரிவட்டணையாவது - அங்ஙனம் வீங்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (வருடி) தடவிப் பார்த்தல்.

(3) ஆராய்தலாவது - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது.

(4) தைவரலாவது - அநுசுருதி யேற்றுதல் (வழியிசை சேர்த்தல்).

(5) செலவாவது - ஆளத்தியிலே (இராக ஆலாபனத்தில்) நிரப்பப் பாடுதல்.

(6) விளையாட்டாவது - பாட நினைத்த வண்ணத்தில் சந்தத்தை விடுதல்.

(7) கையூழாவது - வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல்.

( 8) குறும்போக்காவது - குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இவை சிந்தாமணியில் 657 ஆம் செய்யுள் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கங்களாம். இனி, நிரலே இவற்றிற்குச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் தரும் நூற்பாக்கள் வருமாறு :

வலக்கைப் பெருவிரல் கால் கொளச் சிறுவிரல். விலக்கின்றிளி வழி கேட்டும் ..... இணைவழி யாராய்ந்து, இணை கொள முடிப்பது பண்ணலாகும் எனவும், பரிவட்டணையி னிலக்கணந் தானே. மூவகை நடையின் முடிவிற்றாகி. வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ, இடக்கை விரலி னியைவதாகத் தொடையொடு தோன்றியும் தோன்றாதாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும் எனவும், ஆராய்தலென்ப தமைவரக் கிளப்பிற் - குரன்முத லாக இணைவழி கேட்டும் - இணையிலாவழிப் பயனொடு கேட்டும் - தாரமும் உழையுந் தம்முட்கேட்டும் - குரலும் இளியும் தம்முட் கேட்டும் துத்தமும் விளரியும் துன்னறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும் தளராதாகிய தன்மைத்தாகும் எனவும், தைரைலென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்றும் இயலா தாகியும் நீரவாகும் நிறைய வென்க எனவும், செலவெனப் படுவதன் செய்கை தானே - பாலை பண்ணே திறமே கூடமென - நால்வகை யிடத்து நயத்த தாகி - இயக்கமும் நடையும் எய்திய வகைத்தாய்ப் - பதினோராடலும் பாணியுமியல்பும் - விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே எனவும், கையூழென்பது கருதுங் காலை - எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும் - செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி - நடை நிலை திரியாது நண்ணித் தோன்றி - நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற் படத் தோன்றும் பகுதித் தாகும். எனவும், துள்ளற் கண்ணும் குடக்குத் துள்ளும் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி - கொள்வன வெல்லாம் குறும்போக் காகும். எனவும் வரும். 9. கண்ணிய - கருதிய (செலவு) ; 7. நண்ணிய - அணுகிய. (குறும் போக்கு)

9. பண்வகை - ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் பிறவுமாம். பரிவு - குற்றம். தீர்ந்து - தீர்ந்துள்ளமை தெரிந்து என்றவாறு.

இசையோர் வகுத்த எண்வகை இசைக்கரணங்கள்

10-16 : மரகதமணி ............. செவியினோர்த்து

(இதன்பொருள்:) மரகதமணித் தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் - மரகதமணி அழுத்திய கடைசெறி என்னும் மோதிரஞ் செறிக்கப்பட்ட அழகிய காந்தட் பூப்போலும் மெல்லிய விரல்கள்; பயிர் வண்டின் கிளைபோல - இசை முரலாநின்ற வண்டினம் போன்று ; பல் நரம்பின் மிசைப்படர - பலவாகிய இசை நரம்புகளின் மேலே அங்குமிங்குமாய்த் திரியாநிற்ப; வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப்பட்டடை என - வார்தலும் வடித்தலும் உந்தலும் உறழ்தலும் தாளத்தோடே உருட்டலும் தெருட்டலும் அள்ளலும் எழுச்சியுடைய பட்டடையும் என்று ; இசையோர் வகுத்த எட்டுவகையின் இசைக்கரணத்து - இசைநூலோர் வகுத்துக் கூறிய எட்டுவகையினையுடைய இசைத் தொழில்களாலே; பட்டவகை தன் செவியின் ஓர்த்து - பிறந்த இசைவகையினைத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணர்ந்து ; என்க.

(விளக்கம்) 10. மரகதமணித்தாள் என்பது ஒருவகை மணிமோதிரம். இதனியல்பினை முன்னைக் காதையில் 97 வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி என அடிகளார் கூறியதனையும் அதன் உரையையும் நோக்கி யறிக. 11. பயிர் வண்டின் : வினைத்தொகை. பயிர்தல்-ஈண்டு இசைமுரலுக லென்க. கிளை - இனம். பதினான்கு நரம்புகளாகலின் பன்னரம்பு என்றார் (நரம்பு - ஈண்டு மெட்டு.)

12. 14. வார்தல் - சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல் - சுட்டுவிரலும்பெருவிரலும் கூட்டிநரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல் நரம்புகளைத் (தெறித்து) உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிழிபட்டதும் என்றறிதல். உறழ்தல் - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல். உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும், இருவிரலும் இயைந்துடன் உருட்டலும் ஆம். தெருட்டல் - உருட்டி வருவதொன்றேயாம். இங்ஙனம் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அள்ளல் பட்டடை என்பனவற்றிற்கு விளக்கம் கிடைத்தில. ஆயினும், பட்டடை என்பது இளிக்கிரமத்தில் இசையை வைப்பது எனலாம். என்னை? வண்ணப்பட்டடை யாழ் மேல் வைத்து (63) எனவரும் அரங்கேற்றுகாதைக்கண் இளிக்கிரமத்தினாலே பண்களை யாழ் மேல் வைத்து எனப் பழைய உரையாசிரிய ரிருவரும் கூறுவராதலின் என்க.

மாதவி வேண்டுகோட் கிணங்கிக் கோவலன் யாழ் வாசித்தல்

17-20: ஏவலன்..............தொடங்குமன்

(இதன்பொருள்:) அன்பின் பணி யாது ஏவல் என - பின்னர்க் கோவலனை நோக்கி இனி அன்புடையீர்! யான் செய்யக்கடவ பணி யாதோ? ஏவி யருள்க என்று கூறுவாளாய் மாதவி; யாழ் கோவலன் கை நீட்ட - அத்திருந்துகோல் நல்யாழினைக் கோவலன் கையிற் கொடாநிற்ப; அவனும் - அக்கோவலன்றானும் ஆர்வத்துடன் யாழை வாங்கியவன்; மாதவி மனமகிழக் காவிரியை நோக்கினவும் கடற்கானல்வரிப் பாணியும் வாசித்தல் தொடங்கும் மன் - அம் மாமலர் நெடுங்கண் மாதவியினது நெஞ்சம் பெரிதும் மகிழ்தல் வேண்டிக் காவிரியைக் கருதிய வரிப்பாடல்களையும் கடற்கானலைக் கருதிய வரிப்பாடல்களையும் யாழ்மேல் வைத்து இசைக்கத் தொடங்கினான்; என்க.

(விளக்கம்) 17. அன்பின் பணியாது ஏவல் என மாறுக. அன்பே! நின் பணி யாது என்றவாறு. முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏவல் - ஏவுக: அல்லீற்று வியங்கோள் உடம்பாட்டின்கண் வந்தது; மக்கட் பதடி எனல் என்புழிப் போல, ஏவலன் பின்பணி யாதென கண்ணழித்துக் கொண்டு அரும்பதவுரையாசிரியர் இப்பொழுது இதனை வாசியென்று விதிக்கின்றேனல்லேன்; வாசிக்குந்தாள மியாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக்கொடுத்தாள் என்க, எனவும் ஏவலன் : தன்மை ஒருமை என்றும் விளக்கினர். மேலும், கோவலன் கை யாழ் நீட்ட என்பதற்கு யாழைத் திருத்தித் தான் முற்பட வாசியாதே அவன் தலைமை தோன்றக் கொடுத்தாள் எனவும் நுண்ணிதின் விளக்கினர்.

கோவலன் பாடிய வரிப்பாடல் (காவிரியைக் கருதியவை)

ஆற்றுவரி

(2) திங்கள்மாலை ........ காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரி நங்காய்! நீதானும் ; திங்கள் மாலை வெண்குடையான் - முழு வெண்டிங்கள் போன்ற (தும்) வாகைமாலை சூட்டப்பட்டதுமாகிய கொற்ற வெண்குடையை யுடைய நின்கணவனாகிய; சென்னி - சோழமன்னன்; செங்கோல் அது ஓச்சி-செங்கோன்மை பிறழாது அரசியல் நடாத்தி; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - கங்கை என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தல் அறிந்திருந்தும்; புலவாய் - அவனொடு ஊடுகின்றிலை; கங்கை ......... புலவாதொழிதல் - அவன் அவ்வாறு மற்றொருத்தியைப் புணர்ந்தமை அறிந்துழியும் நீ அவனோடு ஊடாதிருத்தலாலே; மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது நங்கையரின் உயரிய கற்பிற்கியற்கையான பெருந்தன்மையாகும் என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய எங்கள் காவிரி நங்காய் ! நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

(3) மன்னுமாலை ................ காவேரி

(இதன்பொருள்:) கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணை யுடைய காவிரி நங்காய்! நீதானும்; மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுவோச்சி - எஞ்ஞான்றும் நிலைபேறுடைய வாகைமாலையையுடைய கொற்ற வெண்குடை நிழற்றும் நின் கணவனாகிய சோழமன்னன் ஒருபொழுதும் முறை பிறழாத செங்கோல் செலுத்துபவன்; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - நின்னைப் பிரிந்துபோய்க் கன்னி என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தலை நீ அறிந்திருந்தேயும் ; புலவாய் வாழி - நீ அவனோடு ஊடுகின்றிலை நீ வாழ்வாயாக! கன்னிதன்னை ........... புலவாதொழிதல் - அங்ஙனம் அவன் மற்றொருத்தியை மருவுதல் கண்டும் நீ ஊடாமையாலே; மாதர் மன்னும் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது காதல் நிலைபெற்ற கற்பிற் கியற்கையான பெருந்தன்மை என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக ! என்க.

(4) உழவரோதை ...........காவேரி

(இதன்பொருள்:) காவேரி உழவர் ஓதை மதகு உடைநீரோதை தண்பதம் கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் - காவிரி நங்காய் நின் கணவனோடு நீ காரண முள்வழியும் ஊடாதொழிதலேயன்றியும் உழவர் ஏர்மங்கலம் பாடும் ஆரவாரமும் மதகுகள் முழங்கும் ஆரவாரமும் கரையை உடைத்துப் பாயும் நீரினது ஆரவாரமும் விழாவெடுப்போர் நீராடுதலால் எழும் ஆரவாரமும், மேன்மேலும் சிறந்து ஆரவாரிக்கும்படி; நடந்தாய் - நின் கடமையாகிய நல்லொழுக்கத்தின்கண் சிறிதும் மாற்றமின்றி ஒழுகாநின்றனை; இத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி - நீடூழி வாழ்வாயாக; விழவர் ........ நடந்த வெல்லாம் - நீ நின் கணவன்பாற் புலவாமல் நின் கடமையிற் கருத்தூன்றி ஒழுகும் இந்நல்லொழுக்கத்தால் உண்டாகும் பயனெல்லாம்; வாய் காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே - தங்கள் வாயை அடக்குதலில்லாத மறவர் ஆரவாரித்தற்குக் காரணமான சோழ மன்னனுடைய வளமல்லவோ? அவ்வாறு அவனை வளஞ்செய்தலுமுடையை காண்; காவேரி - ஆதலால் அத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி நீடூழி வாழ்க! என்க.

(விளக்கம் ) திங்கள் மாலை என்னும் இப்பாடல் முதலாகக் கோவலன் பாடுகின்ற பாடல்களும் பின்னர் மாதவி பாடும் பாடல்களும் இசைத்தமிழ்ப் பாடல்கள். இவற்றிற்குப் பண் தாளம் முதலியனவும் உள. அவற்றை ஆராய்ந்து கண்டு இசை அரங்குகளிலே பாடிக்காட்டி இவற்றின் இனிமையை மக்கட்குணர்த்தித் தமிழ்மொழியை வளம் படுத்துதல் இசையறி புலவர் கடமையாம். ஈண்டு இவற்றை இயற்றமிழ்ச் செய்யுண் மாத்திரையாகவே கொண்டு பொருள் கூறுகின்றாம் என்றுணர்க.

இனி, இசைத்தமிழின் பாற்பட்ட இவற்றை இசை நூலோர் உருக்கள் என்றும் கூறுவர். திங்கள்மாலை என்னும் செய்யுள் முதலிய இம்மூன்றும் ஒரு பொருண்மேல் அடுக்கி, கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. இம்மூன்று வரிப்பாடலும் காவிரியாற்றைக் கருதிப் பாடப்பட்டமையின் ஆற்றுவரி எனப்பட்டன. அரும்பதவுரையாசிரியர் வரிப் பாடல்பற்றித் தரும் விளக்கம் வருமாறு :

இனி, வரிப்பாடலாவது - பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியுங் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்.

அவற்றுள் தெய்வஞ் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு:

அழலணங்கு தாமரை யருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்
நிழலணங்கு முருகுயிர்த்துநிரந்தலர்ந்து தோடேந்திநிழற்றுமாயின்
தொழிலணங்கு மன்புடையார் சூழொளியும் வீழ்கரியுஞ் சொல்லாவன்றே

இது கூடைச் செய்யுள் கூடையென்பது கூறுங் காலை நான்கடி யாகி இடையடிமடக்கிநான்கடி அஃகி நடத்தற்கு முரித்தே வாரமென்பது வகுக்குங் காலை நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப இவை அடிவரை யிட்டன.

இனி, மக்களைச் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு : திங்கள்மாலை.. காவேரி என்பது போல வருவது எனவரும்.

இனி, ஈண்டுக் கோவலன் மாதவி மனமகிழ யாழ் மேலிட்டுத் திங்கள்மாலை வெண்குடையான் என்று தொடங்கி ஒருபொருள்மேல் அடுக்கி வரும் மூன்று ஆற்றுவரிப் பாடலும் இங்ஙனமே மாதவி பின்னர் (25) மருங்குவண்டு என்பது தொடங்கிப் பாடுகின்ற ஆற்று வரிப்பாடலும் தெய்வஞ் சுட்டிய வரிப்பாடல்களேயாம். என்னை? இந் நூலாசிரியர் இறைவனை அவன்றன் படைப்புப் பொருள்களுள் வைத்துக் கடவுட் பண்புமிக்கு விளங்குகின்ற பொருள்களிலேகண் கூடாகக்கண்டு வணங்குங் கோட்பாடுடையார் என்பதனை நூற்றொடக்கத்தே மங்கல வாழ்த்துப் பாடலின்கண் திங்கள் ஞாயிறு மழை முதலிய பொருள்களை வாழ்த்துமாற்றால் பெற்றாம். ஈண்டும் கோவலனும் மாதவியும் கடவுட் பண்புமிக்கு விளங்கும் காவிரியையும் அப்பேரியாறூட்டும் நாட்டின்கண் வளையாச் செங்கோல் அதுவோச்சும் மன்னனை வஞ்சப் புகழ்ச்சியாகவும் வைத்துப் பாடுகின்ற இப்பாடல்களும் அந்த யாற்றையும் அரசனையும் இறைவனாகக் கருதி வாழ்த்தியபடியேயாம் என நுண்ணிதின் உணர்க. அங்ஙனம் பாடுங்கால் தான் பாடக் கருதிய அகப்பொருள் மரபிற்கேற்ப அரசனையும் ஆற்றினையும் கடவுட் காதலராக வைத்து வியத்தகு முறையில் பாடி வாழ்த்தினன் என்க. இங்ஙனம் கூறாக்கால் யாழ் வாசிக்கத் தொடங்குவோர் கடவுள் வாழ்த்துப்பாடும் மரபினைக் கைவிட்டதாகி இழுக்காம் என்று முணர்க.

இனி, இவை அகப்பொருள் பொதிந்த பாடலாயினும் சென்னி என்றும் காவேரி என்றும் தலைவன் தலைவியர் பெயர் சுட்டிக் கூறப்படுதலான் அகப்புறப் பாடலாயின. அவற்றுள்ளும் காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் புறப்பொருட் பாடாண் திணையில் புரைதீர் காமம் புல்லிய வகையில் பாடப்பட்ட அமரர்கண் முடியும் அறுவகையுள் இவை வாழ்த்தியல் என்பதன்கண் அடங்கும் என்க.

இனி, இவற்றிற்கு அகப்பொருண் மருங்கில் திணையுந் துறையும் கூறுமிடத்து, உறலருங் குரைமையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் (தொல். கற். 5) எனவரும் துறை கொள்க. என்னை? தலைவனும் தலைவியும் நீராடச் சென்றிருந்தாராக ஆற்றங்கரையில் தலைவிக்குப் பாங்காயினார் நின் கணவன் நெருநல் பரத்தையரொடு நீராடினன் என்று கூறக்கேட்டுத் தலைவி அவனோடு ஊடி முகங் கொடாளாயினள். ஆகவே, அவன் தலைவியின் ஊடல் தீர்த்தற்கு அவள் முன்பு தன் பிழையை ஒப்புக்கொண்டு கணவன்மார் தவறு செய்துழியும் பெருங்கற்புடைய மகளிர் அது பொறுத்து அக் கணவனுக்கு இயைந் தொழுகுவர்காண் என அறிவுறுத்துப் பணிமொழி கூறுபவன் இக்கருத்தைக் காவிரியின் மேலிட்டுத் தலைவி கேட்பக் கூறியது என நுண்ணிதின் உணர்க.

இக்கருத்து இப்பாடலின்கண் அமைதலானன்றோ மற்று இக் கோவலனும் மற்றொருத்திமேன் மனம் வைத்து ஒழுகுகின்றான்போலும் அவ்வொழுக்கம் யாமறிய வெளிப்பட்டக்கால் யாம் ஊடாதிருத்தற் பொருட்டு வருமுன் காக்கும் உத்தியால் இங்ஙனம் பாடினன் என்று ஊழின் சூழ்ச்சியால் பிறழவுணர்ந்து மாதவி ஊடியதூஉம் என்க.

(2) திங்கள் மாலை என்று தொடங்கியது மங்கலச் சொல்லால் தொடங்கும் மரபு கருதித் தொடங்கியவாறாம். மாலை - வாகைமாலை. மாலை - இயல்புமாம். சென்னி - சோழமன்னன். செங்கோலதுவோச்சி என்றது முறைசெய்து காப்பாற்றுபவனே முறைபிறழ்ந்தான் எனச் சோழனுடைய பிழையைமிகுத்துக் காட்டும் குறிப்பேதுவாம் பொருட்டு. அடுத்த பாடலில் வளையாச் செங்கோலது வோச்சி என்பதுமது. ஆற்றை நங்கையாக உருவகிப்பவன் அதன்கண்ணுள்ள கயலையே கண்ணாகவும் உருவகித்தான். ஆறென்னின் கயலாகிய கண் எனவும் நங்கையெனின் கயல் போன்ற கண்ணெனவும் பொருள் தருதலுணர்க. கயற்கண்ணாய் என்றது அவளது அருள்பண்பை விதந்தவாறுமாம். மாதர் மங்கை என மாறுக. மாதர் - காதல். இது பெருங்கற்புடைமைக்குக் குறிப்பேதுவாம்.

(3) வளையாச் செங்கோல் என்றது ஒருகாலத்தும் கோடாத செங்கோல் என்றவாறு. 4. தண்பதம் கொள் விழவர். புதுப்புனலாடும் விழாக்கொண்டாடுவோர். வாய்காவா மழவர் என்பது வாயடங்கி நிற்றற்குரிய விடத்தும் அவ்வாறு அடங்காது மறவுரை பேசும் போர்மறவர் என்றவாறு. இதனை மறமுல்லை என்ப. அஃதாவது வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும் - கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று. இது கொளு. வரலாறு:

வின்னவில் தோளானும் வேண்டியகொள் கென்னும்
கன்னவில் திண்டோட் கழலானும் - மன்னன்முன்
ஒன்றான் அழல்விழியா ஒள்வாள் வலனேந்தி
நின்றான் நெடிய மொழிந்து  (புறப்பொரு. வெண். 181)

எனவரும்.

கங்கை - கங்கையாறு. (கங்கை என்னும் நங்கை) அவளைப் புணர்தலாவது: வடநாட்டை வென்றடிப்படுத்துக் கங்கையைத் தனதாக்கி அதன்கண் ணீராட்டயர்தல். கன்னி - குமரி. இதற்கும் அவ்வாறு கூறிக்கொள்க. இவை வஞ்சப்புகழ்ச்சி என்னும் அணி. நடந்ததனால் விளைவன எல்லாம் வளவன்றன் வளனே யன்றோ என்றவாறு. நின் கணவன் நீ பிணங்குதற்கியன்ற தீயவொழுக்கமுடையவனாகவும் நீ அச்சிறுமை கருதாது நினக்கியன்ற நல்லொழுக்கந் தலைநின்று அவனுக்கு வளம் பெருக்குகின்றனை. இத்தகைய பெருந்தகைக் கற்புடைய நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபடியாம்.

சார்த்துவரி



(5) கரியமலர் ....... எம்மூர்

(இதன்பொருள்:) கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல் தெய்வம் காட்டிக் காட்டி - கருங்குவளை மலர்போலும் அழகுடைய நெடிய கண்ணையுடைய எம்பெருமாட்டியின் முன்னிலையில் கடலாகிய இத்தெய்வத்தைச் சுட்டிப் பன்முறையும் காட்டிச் சொன்ன; அரிய சூள் பொய்த்தார் - பொய்த்தற்கரிய கடிய சூண்மொழியைப் பொய்த்தொழுகினர், இவர்தாம்; அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் - அறநெறி நில்லாதவர் ஆவர் என்று பேதையேம் ஆகிய யாங்கள் முன்னரே எவ்வாறு அறியவல்லுநமாவேம்; அறிந்திலேங்காண்! ஐய - பெருமானே!; எம்மூர் - எம்முடைய ஊர்தான்; விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்றே - விளங்குகின்ற வெண்ணிறமுடைய முறுக்குடைய சங்கையும் முத்துக்களையும் கண்டு, இவை விரிகின்ற நிலாவினையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன்களும் ஆகுமென்று மயங்கி; ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே - ஆம்பலின் அரும்புகள் இதழ்விரித்து மலர்தற்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(6) காதலராகிக் ............ எம்மூர்

(இதன்பொருள்:) காதலர் ஆகி - எம்மிடத்தே பெரிதும் காதலுடையவராய்; கையுறை கொண்டு - எமக்குக் கொடுக்கக் காணிக்கையையும் கையிற் கொண்டு; எம்பின் வந்தார் - முன்பு மகளிரேமாகிய எம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்தாமே; ஏதிலர்தாம் ஆகி - இப்பொழுது எமக்கு நொதுமலாளராகி; யாம் இரப்ப நிற்பதை - யாங்களே இரந்து வேண்டாநிற்பவும் இரக்கமின்றி நிற்றலை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே ஏழையுமாகிய யாங்கள் எங்ஙனம் முன்னரே அறியவல்லுநமாவேம், அறிந்திலேங்காண்! எம் ஊர் - யாங்கள் வாழுகின்ற எம்முடைய ஊர்தான்; மாதரார் கண்ணும் நீர் மதிநிழல் இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் அறியாது - மகளிருடைய கண்ணையும் நீரினூடே தோன்றும் திங்களின் நிழலைக் கண்டு இணைந்து நின்று மலர்ந்த நீலமலரும் இன்னதிதுவென்று அறிந்துகொள்ள மாட்டாமல்; வண்டு ஊசலாடும் புகார் - வண்டுகள் அங்குமிங்குமாய்த் திரிதற்கிடனான பூம்புகாரன்றோ காண்! என்க.

(7) மோதுமுது ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - ஐயனே; எம்மூர் - எம்மூரானது; மோது முதுதிரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம் - மோதா நின்ற பெரிய அலைகளாலே தாக்கப்பட்டு வந்து நகர்கின்ற ஒலிக்கும் வாயையுடைய சங்கானது; மாதர் வரிமணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி - மகளிர் வரிவரியாய்க் கிடக்கின்ற அலைவாய்மணற்பரப்பிலே தாம் கோலிய மணல்வீட்டினை அழித்தலாலே வருந்தி; கோதை பரிந்து - தமது மலர்மாலையை அறுத்து; அசைய - அச்சங்கு அப்பால் நகர்ந்து போம்படி; ஓச்சுங் குவளைமாலைப் போது - எறியும் கருங்குவளை மலராற் புனைந்த இணைமாலையின் கண்ணதாகிய மலர்கள்; சிறங்கணிப்ப - சிறங்கணித்துப் பார்த்தாற்போல் கிடப்ப; போவார்கண் போகாப் புகார் - அங்குச் செல்வோர் அவற்றைத் தம்மை நோக்கும் பிறர் கண்கள் என்று கருதி அப்பாற் போகாமைக்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(விளக்கம்) 5. கரிய மலர் - கருங்குவளை மலர்; காரிகை என்றது தலைவியை. கடல் தெய்வம் - கடலாகிய தெய்வம், வருணன் எனினுமாம். அரிய சூள் - சொல்லுதலரிய சூள் எனினுமாம். தப்பிய வழி கேடு பயத்தலின் யாவரும் சொல்லவஞ்சுதலின் சொல்லற்கரிய சூள் என்க. தெய்வஞ் சுட்டிச் செய்த சூள் பொய்ப்பின் அத்தெய்வம் தீங்கியற்றும் என்பதொரு நம்பிக்கை. காட்டிக் காட்டி என்னும் அடுக்குப் பன்மைமேற்று. இதனைத் தீராத் தேற்றம் என்பர். தலைவன் தலைவியின் ஆற்றாமை தீர்தற்கு, இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தெய்வத்தொடு சார்த்திச் சூள் மொழிவன். அங்ஙனம் சூள் செய்தவர் பொய்த்தார்; அப்பொழுது இவர் அறவோர் என்றிருந்தேம். பேதையமாகலின் அறனிலர் என்றறியேமாயினேம். இங்ஙனம் மடம் படுதல் எமக்கேயன்றி எம்மூர்க்கும் இயல்பாயிற்று என்று நொந்து கூறுவாள் விரிகதிர்...... எம்மூர் என்றாள். இது பின்வருவனவற்றிற்கும் கொள்க.

6. முன்னர்க் காதலராகி எம்பின் வந்தார் அவரே இப்பொழுது ஏதிலராகி யாமிரப்பவும் இரங்காராய் நின்றார். இவர் இங்ஙனம் நிற்பார் என்பதனை ஏழையேம் எங்ஙனம் அறியவல்லேம் அறியாதொழிந்தோம் என்று நொந்து கூறியபடியாம். நீருட்டோற்றும் மதியொளி கண்டு மலர்ந்து இணைந்திருந்த நீலத்தை மாதர் கண்ணென்றும் மாதர் கண்ணை நீலமென்றும் அங்குமிங்கும் அலைகின்ற வண்டு என்க. ஈண்டு நீலமும் மடம்பட்டு மலர்ந்தமையும் வண்டுகள் மடம்பட்டமையு முணர்க.

7. முதுதிரை - பெரிய அலைகள். வல்லுடம்பு பெற்ற சங்கினை மலரை எறிந்து ஓச்சுதலும் மடமையாத லுணர்க. முரல்வாய் : வினைத்தொகை. மாதர் - ஈண்டுப் பேதைப் பருவத்து மகளிர். வண்டல் - மணலாற்கோலிய விளையாட்டுவீடு. உழுதல் - ஊர்ந்து நிலத்தைக் கீறிப்போதல். சிறங்கணித்தல் - இமையைச் சுருக்கிப் பார்த்தல். போவார் - ஆண்டுத் தங்காரியத்தின்மேற் போகும் மாந்தர். போவார் கண் அவற்றை நோக்குதலன்றி விட்டுப் போகாமைக்குக் காரணமான மடமையுடைய புகார் என்றவாறு.

இவை மூன்றும் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவந்த வரிப்பாடல். இனி, அரும்பதவுரையாசிரியர் சார்த்துவரி என்பதற்குக் கூறும் விளக்கம் வருமாறு - பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடும் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே அதுதான் முகச் சார்த்து, முரிச் சார்த்து, கொச்சகச்சார்த்து என மூவகைப்படும். அவற்றுள் முகச்சார்த்து : மூன்றடிமுதல் ஆறடி யீறாக முரிந்த வற..... குற்றெழுத்தியலாற் குறுகிய நடையால் பெற்றவடித் தொகை மூன்று மிரண்டும் குற்றமில்லெனக் கூறினர் புலவர். கொச்சகச் சார்த்து : கொச்சகம் போன்றுமுடியும். இவற்றுள் இவை மூன்றும் முகச்சார்ந்து எனவரும். இவை, (1) தோழி தலைமகன் முன்னின்று வரைவு கடாயவை. (2) கையுறை மறையெனினும் அமையும் என்ப.

இவற்றிற்கு வரைவுடன் பட்டோர் கடாவல் வேண்டினும் எனவரும் (தொல் - களவியல். 23.) விதி கொள்க.

முகமில்வரி

( 8) துறைமேய் ............. தீர்க்கும்போலும்

(இதன்பொருள்:) துறை மணல் தோய்ந்துமேய் வலம்புரி உழுத தோற்றம் மாய்வான் - கடற்றுறையிடத்தே மணலின்கண் அழுந்தி இரைதேருகின்ற வலம்புரிச் சங்கு உழுது சென்றமையால் உண்டான சுவடுமறைந்து போகும்படி; பொறை மலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண் தாது போர்க்குங்கானல் - மிக்க சுமையாக மலர்ந்த மலர்களையுடைய புன்னையினது அம்மலர்களினின்றும் உதிர்ந்து நுண்ணிய தாதுக்கள் மூடுதற்குக் காரணமான இக் கடற்கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியினது; நிறைமதிவாள் முகத்து கயல் நேர்கண் செய்த - கலைகள் நிறைந்த திங்கள் போன்ற ஒளிதவழும் முகத்தின்கண்மைந்த கயல்மீன் போன்ற கண்களாலே எம்பெருமானுக்குச் செய்யப்பட்ட; மலி உறை உய்யா நோய் - மிக்க மருந்துகளாலும் போக்க முடியாத நோயை ; சுணங்கு ஊர் மெல்முலையே தீர்க்கும் போலும் - தேமல் படர்ந்த இவளுடைய மெல்லிய முலையே தீர்க்கவல்லனவாம்; என்க.

(விளக்கம்) 8. துறை - கடற்றுறை. மேய்தல் - இரை தேர்தல். மாய்வான் - மறையும்படி. பொறை - சுமை சுமையாமளவு மிக்கபூ என்க. பூவினின்றும் உதிர்ந்து போர்த்தல் - மூடுதல். இத்தலைவியினுடைய என வருவித்தோதுக. கயல் நேர் கண் என்க. இனி, ஒன்றனோடு ஒன்று எதிர்கின்ற கயல்கள் போலும் கண்கள் எனினுமாம். உறை - மருந்திற்கு ஆகுபெயர். மலி உறை என மாறுக. உய்த்தல் - போக்குதலாகலின் உய்யா என்பது அதன் எதிர்மறையாய்ப் போக்க முடியாத எனப் பொருள் தந்தது. சுணங்கு - தேமல். போலும் : ஒப்பில்போலி.

மணலின்மேல் சங்கு செய்த சுவட்டினைப் பூந்தாது மறைப்பது போல இவள் கண் செய்த நோயை முலையே தீர்க்கும் என்றிதன்கண் உள்ளுறை காண்க.

இது குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைவியின் காதன் மிகுதி குறிப்பினான் அறிந்து கூறியது என்ப. இதனை, பேராச்சிறப்பின் என்னும் மிகையால் (தொல் - களவு. 11) அமைத்துக் கொள்க.

கானல்வரி

(9) நிணங்கொள் .......... மன்னோ

(இதன்பொருள்:) நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக - புலர்கின்ற நிணத்தையுடைய மீன் வற்றலின் மருங்கே நின்று அவற்றைத் தின்னவருகின்ற பறவைகளை ஓட்டும் செயலை ஒரு காரணமாகக்கொண்டு; கணங்கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமான வண்டுகள் தம்மிசையாலே ஆரவாரித்துத் திரிதற்குக் காரணமான இளமையுடைய நறிய ஞாழலினது பூங்கொம்பைத் தன் கையிலே பிடித்து; மணம் கமழ் பூங் கானல் மன்னி - மணங் கமழாநின்ற மலர்களையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே நிலைபெற்று; ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன் - அவ்விடத்தே ஒரு தெய்வம் இருக்கும் என்னுமிச் செய்தியை யான் முன்பு அறிந்திலேன்காண்; அறிவேனேல் அடையேன் மன்னோ - முன்னரே அறிந்துளேனாயின் அங்குச் செல்லேன்மன் என்க.

(10) வலைவாழ்நர் ............ மன்னோ

(இதன்பொருள்:) அலைநீர்த் தண் கானல் - அலைநீர் புரளுகின்ற குளிர்ந்த இக் கடற்கரைச் சோலைக்கண்ணமைந்த; வலைவாழ்நர் சேரி வலை உணங்கு முன்றில் - வலை கருவியாக வாழ்க்கை நடத்துகின்ற இப்பரதவர் சேரியின்கண் வலைகள் புலர்த்தப்பட்ட ஓரில்லினது முற்றத்திலே; விலைமீன் உணங்கல் பொருட்டாக - விற்கும் மீன்வற்றலின்கண் வீழும் பறவைகளை ஓட்டுதலை ஒரு காரணமாகக் காட்டி ; மலர் கை யேந்தி - தனக்குரிய கயிறும் கணிச்சியுமாகிய வலிய படைக்கல மேந்தாமல் மெல்லிய மலர்க் கொம்பை ஏந்திக் கொடு; வேறு ஓர் கொலை வேல் நெடுங்கண் கூற்றம் வேண்டுருவம் கொண்டு வாழ்வது - தன் செயலாகிய கொலைத் தொழிலைச் செய்யவல்ல வேல்போலும் நீண்ட கண்களை யுடைய தாய்த் தன்றொழில் நடத்தற்கு வேண்டிய மகளாய் உள்வரிக் கோலம்பூண்டு மற்றொரு கூற்றுவன் வந்து வாழ்வதனை; அறியேன் - யான் முன்னரே அறிந்திலேன்காண்! அறிவேனேல் அடையேன் மன் - முன்னரே அறிந்துளேன் ஆயின் யான் அங்குச் செல்லேன்மன்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கோவலனும் மாதவியும் பாடும் பாடல் அனைத்தும் கானல் வரிப்பாடல்களே ஆயினும் ஆற்றுவரி முதலிய வெவ்வேறடை மொழி பெற்று வருவது ஆறு முதலிய பொருட் சிறப்புப்பற்றிப் போலும். அனைத்தும் கானல்வரிப் பாடல்களே என்பதனை அடிகளார் இப்பகுதிக்குக் கானல்வரி எனக் குறியீடு செய்தமையாற் பெற்றாம்.

9. புலால் - மீன்: ஆகுபெயர். உணங்கல் - வற்றல். தலைக்கீடு - போலிக் காரணம். கன்னி - ஈண்டு இளமை. ஞாழல் - புலிநகக் கொன்றை. ஈண்டு ஞாழலின் பூங்கொம்பு. மற்று : வினைமாற்று. மன்: ஒழியிசை. அறியாமையால் கேடெய்தினேன் என்பதுபட நிற்றலின் என்க. ஓ : அசைச் சொல்.

10. வலைவாழ்நர் - வலை கருவியாக வாழ்பவர். அவராவார் - பரதவர். மலர்கை யேந்தி என்றது தனக்குரிய கயிறு கணிச்சிக் கூர்ம்படை முதலியன துரந்து மெல்லிய மலர்க்கொம்பேந்தி என்பது பட நின்றது. வேண்டுருவம், தன் தொழில் தடையின்றி நிகழ்தற்கியன்ற உருவம். அஃதாவது - பெண்ணுருவம். இதனோடு கன்னி நீர் ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றார் இல்லை போலுமால் - மன்னன் காக்கும் மண்மேற் கூற்றம் வரவஞ்சி இன்னதொன்று படைத்த தாயின் எவன் செய்கோ? எனவரும் பழம்பாடலை ஒப்பு நோக்குக. இந்திரவிழவூ ரெடுத்தகாதைக் கண், மன்னவன் செங்கோலஞ்சி ....... பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென எனவரும் அடிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம். இவ்வாறும் ஒரு கூற்றம் உளது போலும் அதுவுமறியேன் என்பான் மற்றோர் கூற்றம் என்றான்.

இவையிரண்டும் கழற்றெதிர்மறை என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்தன. அஃதாவது - தலைவன் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவியை நினைந்து ஆற்றானாய் மெய்வேறுபாட்டான் பாங்கன்பால் உற்றதுரைப்ப அவன் நின் பெருந்தகைமைக்கு இஃதிழுக்காம் என்றிடித்துரைப்ப அதற்குத் தலைவன் பாங்கனை நோக்கி நீ அவளைக் கண்டாயேல் இங்ஙனம் கூறாய் என எதிர்மறுத்துக் கூறியது என்றவாறு. அத்துணைப் பெருந்துன்பம் செய்வன அவள் உறுப்புகள் என்பான் அணங்கு என்றும் கூற்றம் என்றும் உருவகித்தான். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம் ; கூற்றம் - காலன்.

நிலைவரி

(11) கயலெழுதி ......... வாழ்வதுவே

(இதன்பொருள்:) கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் - கண்கள் என்று சொல்லி இரண்டு கயல் மீன்களையும் எழுதிப் பின் புருவம் என்று சொல்லி இரண்டு குனித்த விற்களையும் எழுதிப் பின்னர் இவற்றிற்கு மேலே கூந்தல் என்று சொல்லி முகிலையும் எழுதி அதன் பின்னர் எழுதொணாத காமவேளின் செயலையும் எழுதிச் சிறிதும் பணிக்குறையின்றி முடித்த அவள் முகத்தை முகம் என்று கூறுதலும் பேதைமை காண்! ஓ - திங்களே காணீர் - அவ்வோவியங்களைத் தன்மேல் வரைந்து கொண்ட திங்கள் மண்டிலமே, ஐயமின்று நீயிரே சென்று காண்பீராக! ஓ திங்களே காணீர் - தேற்றமாக அது திங்கள் மண்டிலமே சென்று காண்மின்! திங்களாயின் எற்றிற்கிங் குற்றது எனின்; அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி - அழகிய இடத்தையுடைய வானத்தே தன்னை எதிர்ப்படும் பாம்பை அஞ்சி; திமில் வாழ்நர் சீறூர்க்கே வாழ்வதுவே - திமில் கொண்டு வாழ்கின்ற இப்பரதவருடைய சிறிய ஊரின்கண் வந்து அவ்வாறுள்வரிக் கோலங்கொண்டு வாழ்வதாயிற்றுப் போலும் என்க.

(12) எறிவளை ............. மகளாயதுவே

(இதன்பொருள்:) எறிவளைகள் ஆர்ப்ப - இவ்வுருவம் அறுத்தியற்றிய தன் கை வளையல்கள் ஒலித்தற்கே மருண்டு ; இருமருங்கும் ஓடும் - வலமும் இடமுமாகிய இரண்டு பக்கங்களினும் பிறழ்ந்து ஓடாநின்ற ; கறை கெழுவேல் - குருதிக் கறைபடிந்த வேல் போன்ற; கண்ணோ கண்ணையுடைய காரிகையோ? இல்லை! இல்லை! கடுங்கூற்றம் காணீர் - கடிய கூற்றுவனே ஐயமில்லை நீயிரே சென்று காண்மின்; கடுங் கூற்றம் - கடுந்தொழிலையுடைய மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி; கடல் வாழ்நர் சீறூர்க்கு - கடலில் மீன்படுத்து வாழ்கின்ற பரதவருடைய இச்சிறிய ஊரிடத்தே வாழுமொரு; மடங்கெழு மெல் சாயல் மகள் ஆயது காணீர் - தனது மறங்கெழுவு வல்லுருவம் மறைத்து மடம் பொருந்திய மெல்லியல்புடைய ஒரு நுளைச்சியாயுள் வரிக்கோலம் பூண்டுளது நீயிரே சென்று காண்மின்; என்க.

(13) புலவுமீன் ............. பெண்கொண்டதுவே

(இதன்பொருள்:) புலவுமீன் வெள் உணங்கல் புள் ஓப்பி - புலானாறும் மீனினது வெள்ளிய வற்றலில் வீழ்கின்ற பறவைகளை ஓட்டி; கண்டார்க்கு அலவ நோய் செய்யும் இது - தன்னைக் கண்டவர் அலந்தலைப்படுதற்குக் காரணமான நோயைச் செய்கின்ற இந்த வுருவம் பெண் அன்று; ஓ அணங்கு காணீர் - தேற்றமாகத் தீண்டி வருத்தும் ஒரு தெய்வமேயாம். இவ்வுண்மையை நீயிரும் ஆராய்ந்து காண்மின்; இஃது அணங்கு காணீர்; தேற்றமாக இஃது அணங்கே காண்மின்; (அணங்கு எற்றிற்கு இங்குற்ற தென்பீரேல்; தானுறையும் காட்டிற்கு வருவார் யாருமின்மையின்) அடும்பு அமர் தண் கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டது-அடும்பு தங்குதற்குக் காரணமான குளிர்ச்சியையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே பெரிதும் (மக்கள் வழக்குண்மை கருதி) செறிந்த நுண்ணிய கூந்தலையுடைய ஒரு பெண்ணாக உள்வரிக் கோலங் கொண்டுளது இதுவே உண்மை என்க.

(விளக்கம்) நிலைவரியாவது:

முகமும்முரியுந் தன்னொடு முடியும்
நிலையை யுடையது நிலையெனப் படுமே

எனவரும் நூற்பாவான் உணர்க.

11. காமனாகிய ஓவியப் புலவன் கயல் முதலியவற்றையும் தன் செயலையும் எழுதி முடித்த முகம் எனினுமாம். தெய்வப் புலவனாகலின் எழுதொணாத தன் செயலையும் எழுதினான் என்க. முகம் முகமன்று திங்களே காணீர் என்றவாறு. ஓகாரங்கள் வியப்பு. திங்களாயின் அது வானத்தை விட்டு இங்கு வருவதேன்? என்னும் கடாவிற்கு விடையாக அங்கண் வானத்து நேர் அரவஞ்சி ஈண்டுவந்து வாழ்வது என்றவாறு. அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி என மாறுக.

12. வளைகள் என்றது தலைவியின் கையிற் சங்குவளையலை. எறிவளை யென்றது பொருட்கேற்ற அடை புணர்த்தவாறு. தன் கை வளையல் ஆர்த்தற்கே மருண்டு இருமருங்கும் ஓடும் கண் என்க. கறை கெழுவேற்கண்: பன்மொழித் தொகை. தலைவிக்குப் பெயராய் நின்றது. கடல் வாழ்நர் கடலில் மீன்படுத்து அதனால் வாழ்கின்ற பரதவர். சீறூர்க்கு: உருபுமயக்கம். கடுங்கூற்றம் தன் கடுங்குணங்களை மாற்றி மடங்கெழு மென்சாயல் மகள் ஆயது என்க.

13. புலவு - புலானாற்றம், அலவநோய் - அலைந்தலைப்படுதற்குக் காரணமான காமநோய். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம். அடும்பு - நெய்தனிலத்துள்ள ஒருவகை மரம். இது குளிர்ந்த நிலத்தினும் நீர்மருங்கும் வளர்ந்து தழைக்கும் ஆதலின் அடும்பு நிற்றற்குக் காரணமான தண்மையையுடைய கானல் எனத் தண்மையை ஏதுவாக்குக. பிணங்குதல்-செறிதல். நேர் - நுண்மை. பெண் - பெண்ணுருவம். கொண்டது - உள்வரிக் கோலங்கொண்டது ஏகாரம் : தேற்றம். இவை மூன்றும் ஒரு பொருண்மே லடுக்கி வந்தன.

இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை, என்பர் அரும்பதவுரையாசிரியர்.

இயலிடம் கூறல் என்னுந் துறையாகக் கோடலே பெரிதும் பொருந்துவதாம். அஃதாவது-கழற்றெதிர் மறுத்த தலைவனுக் கிரங்கி எவ்விடத்து எத்தன்மைத்து நின்னாற் காணப்பட்ட உரு என வினவிய பாங்கனுக்கு இன்னவிடத்து இத்தன்மைத்து என்னாற் காணப்பட்ட உருவம் எனத் தலைவன் கூறுவதாம்.

முரிவரி

(14) பொழில்தரு ........... செய்தவையே

(இதன்பொருள்:) பொழில்தரு நறுமலரே - தோழனே! எனக்கு இடர் செய்தது யாதென்கின்றனை கூறுவல் கேள். பொழில் வழங்க அவள் குடியிருந்த நறிய மலரென்கோ? புதுமணம் விரி மணலே - அவள் நின்ற நாண் மலரின் புதிய மணம் பரவுகின்ற மணற் பரப்பென்கோ?; பழுது அறு திருமொழியே - அவள் மிழற்றிய குற்றமற்ற அழகிய மொழி யென்கோ? பணை இளமுலையே - கணந்தொறும் பருக்கின்ற அவளது இளமையுடைய அழகிய முலை என்கோ?; முழுமதி புரை முகமே - நிறை வெண்டிங்களே போன்ற அவளுடைய முகம் என்கோ? முரி புரு வில் இணையே - வளைகின்ற அவளுடைய புருவம் என்கின்ற இரட்டை விற்கள் என்கோ? எழுதஅரு மின் இடையே-ஓவியர்க்கெழுத வொண்ணாத நுண்மையுடைய மின்னல் போன்ற அவளது இடை என்கோ?; இவை எனை இடர் செய்த - இவை அனைத்துமே என்னை வருத்தினகாண்; என்க.

(15) திரைவிரி...........செய்தவையே

(இதன்பொருள்:) திரைவிரி தருதுறையே - அவள் விளையாட்டயர்ந்த அலைகள் பரவுகின்ற கடற்றுறை யென்கோ? திருமணல் விரியிடமே - அழகிய மணல் பரப்ப இடம் என்கோ? விரை விரி நறுமலரே-அவள் சூடியிருந்த நறுமணம் பரப்பும் மலர் மாலையென்கோ? மிடைதரு பொழில் இடமே - அவள் புக்குநின்ற மரங்கள் செறிந்த பூம்பொழிலிடம் என்கோ? மரு விரி புரிகுழலே - மணங்கமழும் கை செய்யப்பட்ட குழன்ற அவள் கூந்தல் என்கோ? மதிபுரை திருமுகமே - திங்களை யொத்த அழகிய அவள் முகம் என்கோ? இரு கயல் இணைவிழியே - இரண்டு கயல் மீன்களையொத்த அவளுடைய இரண்டு கண்களும் என்கோ? எனை இடர் செய்தவையே - இவையனைத்தும் என்னை வருத்தினகாண் ! என்க
.
« Last Edit: February 23, 2012, 01:31:50 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #12 on: February 23, 2012, 01:35:33 PM »
(16) வளைவளர் ........... செய்தவையே

(இதன்பொருள்:) வளை வளர்தரு துறையே - அவளாடிய சங்குகள் வளர்தற்கிடனான கடற்றுறை யென்கோ? மணம் விரிதரு பொழிலே நறுமணம் பரப்புகின்ற பூம்பொழில் என்கோ? தளை அவிழ் நறுமலரே - கட்டவிழ்ந்து மலர்கின்ற அவள் சூடிய மலர்மாலை யென்கோ? அவள் தனி திரி இடமே அந்நங்கை தமியளாகத் திரிந்த இடம் என்கோ? முளைவளர் இளநகையே - முளைபோன்று வளர்கின்ற அவளுடைய எயிறென்கோ? முழு மதி புரை முகமே - நிறைத் திங்கள்போலும் அவளது திருமுகம் என்கோ? இளையவள் இணைமுலையே - இளமையுடைய அவளுடைய இணைந்த முலை என்கோ? எனை இடர் செய்தவை - இவையனைத்துமே என்னை வருத்தினகாண்! என்பதாம்.

(விளக்கம்) இம்மூன்றும் ஒரு பொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள். முரிவரியாவது: எடுத்த வியலும் இசையும் தம்மில் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே என்ப. 14. ஏகாரங்களுள் ஈற்றில் வருவது  அசை; ஏனைய வினா. உன்னை இடர் செய்தது யாது? என வினாய பாங்கனுக்கு எனையிடர் செய்தது ஒன்றல்ல, பொழில் முதலிய அனைத்துமே இடர் செய்தனகாண் என இறுத்தவாறாம். புரு - புருவம்: விகாரம். நுண்மையால் எழுத வொண்ணாத மின்னிடை என்க.

15. மரு - மணம் இரண்டு கயல்கள் போன்று இணைந்த விழிகள் எனினுமாம். 16. வளை -சங்கு. தளை-கட்டு. முளை - விதையினின்றும் முளைத்த முளை. நகை - எயிறு.

இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை என்ப. அஃதாவது, தலைவனுடைய பிரிவாற்றாத் துயர்கண்டு நினக்குற்றதென்னை என்று வினவிய பாங்கனுக்குத் தலைவன் நெருநல் இத்தகையா ளொருத்தியை இன்னவிடத்தே கண்டே னுக்கு இங்ஙனம் இடர் எய்தியதுகாண் என்று அறிவுறுத்தது என்றவாறு.

திணை நிலைவரி

(17) கடல்புக் .............. கண்டாய்

(இதன்பொருள்:) நின் ஐயர் கடல்புக்கு உயிர் கொன்று வாழ்வர் - நங்காய்! நின் தமையன்மார் கடலில் புகுந்து அங்குள்ள உயிரினங்களைக் கொன்று அதனால் வரும் ஊதியத்தைக்கொண்டு தமது வாழ்க்கையை நடத்து மியல்புடையராவர்; நீயும் - நீதானும்; உடல்புக்கு உயிர் கொன்று வாழ்வைமன் - நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! அஃதென்னெனின் நீ என் கண்வழியே என்னுடம்பினுட் புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று களித்து வாழ்கின்றாய் அல்லையோ? மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் - மறத்தன்மையிலே புகுந்து கட்டுக் கடங்காது நிமிர்கின்ற நின்னுடைய வெவ்விய முலைகள் மிகவும் பெருஞ்சுமையா யமைந்தன காண்; அச்சுமை பொறாது; இடை இடர்புக்கு இடுகும் - நின்னிடை யானது இப்பொழுதே மெலிகின்றது; இழவல் கண்டாய் - நீ இயங்கின் அது முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின், இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே கொள்! என்க.

(18) கொடுங்கண்..........கண்டாய்

(இதன்பொருள்:) உந்தை கொடுங்கண் வலையால் உயிர்கொல் வான்-உன் தந்தையோ வளைந்த கண்களையுடைய வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ - நீதானும் அவனினும் காட்டில் கொடுந்தொழிலையுடைய அஃதென்னெனின்; நீயும் நெடுங்கண் வலையால் உயிர் கொல்வைமன்-நீதானும் நின்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றனை யல்லையோ? வடங்கொள் முலையால் மழை மின்னுப் போல நுடங்கி உகும் மென் நுசுப்பு - நீ இனி இயங்காதே கொள், இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற நின்னினும் கொடிய நின்முலையாலே நின்னிடை முகிலிற் றோன்றும் மின்னல் போன்று வளைந்து முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின்; இழவல் - அவ்விடையை நீ இழந்துவிடாதே கொள்! என்க.

(19) ஓடுந்திமில்.................கண்டாய்

(இதன்பொருள்:) நின்ஐயர் ஓடும் திமில்கொண்டு உயிர் கொல்வர் - நங்காய்! நின்தமையன்மார் நீரில் இயங்குகின்ற படகினைக் கருவியாகக் கொண்டு கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்லா நிற்பர்; நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையை காண்! எற்றாலெனின்; பிறர் பீடும் எவ்வம் பாராய்-பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் கோடும் புருவத்து உயிர் கொல்வாய் அல்லையோ! ஆதலினாலே; முலைசுமந்து சிறு மென்மருங்கு வாடும்- இப்பொழுதே நினது பரிய முலைகளைச் சுமத்தலாலே நின்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது; இழவல் கண்டாய் - அதனையும் இழந்துவிடாதே கொள் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் ஒருபொருண்மே லடுக்கி வந்தன.

17. ஐயர் - தமையன்மார். வாழ்வைமன் என்புழி, மன்: ஒழியிசை. என்னை? இவ்வாறு பிறர்க்குக் கேடு சூழ்வார்க்குத் தங்கேடு தாமே வரும் என ஒழிந்த இசையெச்சப் பொருள் குறித்து நிற்றலின் என்க. அடுத்த பாட்டிற்கும் இஃதொக்கும். மிடல் - வலி. வன்செயலை மேற்கொண்டு என்பான் மிடல்புக்கு என்றான். அடங்காத என்றது கச்சின்கண் ணடங்காத என்றும் அடக்கம் என்னும் அறத்தினை மேற்கொள்ளாத என்றும் இருபொருளும் பயந்தது. வெம்முலை - வெவ்விய (கொடிய) முலை; விருப்பந்தரு முலை; என இருபொருளுங் காண்க. முலை பாரம் அதனைச் சுமக்கலாற்றாது இடர்புக்கு இடுகும் என்க. இடுகுதல் - மெலிதல். இழவல் என்பது நினக்கு இடை ஒன்றேயுளது. ஆதலால், அதனையும் இழந்துவிடாதே கொள் என்பட நின்றது. கண்டாய்: அசைச் சொல்.

18. கொடுங்கண் - வளைந்த கண்கள் (துளை) நெடிய கண்ணாகிய வலை. பாரமான முலை அச்சுமையின்மேற் சுமையாக வடமும் கொண்டது என்றவாறு.

19. திமில் கொண்டு செல்லும் நின்ஐயரினும் நீ சதுரப்பாடு மிகவு முடையை. நீ கோடும் புருவத்தாலேயே கொல்குவை அல்லையோ? என் றசதியாடியபடியாம். எவ்வமும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. சிறுமென் மருங்கு என்றான் பெரிய மிடல்புக்கு அடங்காத வெம்முலை எனக் குறிப்பானுணர்த்தற்கு.

இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்தலுறுவான் ஆற்றாமை கூறியவை: பொய் பாராட்டல் என்பாருமுளர்.

இனி, இவற்றிற்கு அரும்பதவுரையாசிரியர் நின்தமரும் நீயுஞ் செய்கின்ற கொடுமையாலே இடைமுரியவுங் கூடும்; அதற்குட் பகையாய்த் துணைக்காரணமாகிய முலைகளு முளவாதலால் இடையைப் பரிகரி என்பதாம் எனவும்,

பீடு பிறர் எவ்வம் பார்த்தல் - உனக்குப் பெருமையாவது பிறர் எவ்வம் பார்த்தல் எனவும் குறிப்பர். பாரா என்பதும் பாடம். இதற்குப் பாராத முலை என்க. தான் பெருக்கமுறுமதனாற் பிறர் எவ்வம் பாராத முலை என்பது கருத்தாகக் கொள்க.

வேறு

20 : பவள ............... கொடிய

(இதன்பொருள்:) பவள உலக்கை கையால் பற்றித் தளைமுத்தம் குறுவாள் செங்கண் - பவளத்தாலியன்ற உலக்கையைக் கையினால் பற்றி வெள்ளிய முத்துக்களை அரிசியாகக்கொண்டு குற்றுமிவளுடைய சிவந்த கண்களைக் காண்மின்! தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல-செங்கழுநீர் மலர் என்பீராயின் பிழையாம்; எற்றாலெனின்; கொடிய - இவை மிகவும் கொடுந் தொழிலுடையன ஆதலால் என்க.

21 : புன்னை ............... கூற்றம்

(இதன்பொருள்:) புன்னை நீழல் புலவுத் திரைவாய் - புன்னை மரங்களின் நீழலையும் புலானாற்றத்தையும் உடைய அலைவாய்ப் பரப்பின் மேல் - அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - அன்னங்கள் தன்னடையைப் பார்த்து நடத்தற் பொருட்டு நடக்கின்ற இந்நங்கையின் சிவந்த கண், வாய்மையின் கண்ணன்று; அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - வேறென்னையோவெனின்; கொன் வெய்ய கூற்றம் கூற்றம் - தன்றொழிற்றிறத்தே மிகுந்த கொடிய கூற்றங்காண்! தேற்றமாக அவை கூற்றமேயாம்! என்க.

22 : கள்வாய் ............ வெய்ய

(இதன்பொருள்:) கள்வாய் நீலம் கையின் ஏந்தி உணங்கல் வாய்புள் கடிவாள் செங்கண் - தேன் பொருந்திய நீல மலரைக் கோலாகக் கையிற் பற்றி; மீன் வற்றலிடத்தே வீழும் பறவைகளை ஓட்டுமிவளுடைய சிவந்த கண்கள் - வாய்மையிற் கண்களல்ல; உணங்கல்வாய் புள் கடிவாள் செங்கண்(கள்); வெள்வேல் அல்ல-வெள்ளிய வேற்படைகள் என்பீரேல் அவைகளும் அல்ல எற்றாலெனின் ; வெய்ய வெய்ய - அவ்வெள்வேலினுங் காட்டில் இவை மிகவும் வெப்பமுடையன ஆதலால் என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருள் மேலடுக்கி வந்தன.

20. குறுவாள் - குற்றுவாள். குவளை என்றல் பொருந்தாது. எற்றாலெனின் இவை கொடுந் தொழிலையுடையனவாதலால் என்றவாறு.

21. திரைவாய் - அலைவாய்ப் பரப்பு. அன்னம் நடப்ப - அன்னம் இந்நடையொவ்வேமென அவ்விடத்தினின்றும் அகன்று போக எனினுமாம். கொன் - மிகுதி; கூர்மையுமாம். அவை கண்ணல்ல; கூற்றமே என்றவாறு. அடுக்கு - தெளிவுபற்றி வந்தது.

22. உணங்கல் வாய்ப்புள் கடிவாள் என மாறுக, வெள்வேலினும் இவை வெய்யவாதலின் வேலல்ல என்க.

வேறு

23 : சேரல் .............. ஒவ்வாய்

(இதன்பொருள்:) ஊர்திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின் - ஊருகின்ற அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்திலுள்ள மைந்தருடைய மனத்தைக் கலக்கித் திரிகின்ற அக்கன்னியின் பின் சென்று சேரல் மட அன்னம் - அவளைச் சேராதே கொள் (சேர்ந்தாயானால்); நடை ஒவ்வாய் - நடையினாலே நீ அவளை ஒவ்வாதொழிவாய்; சேரல் ...... ஒவ்வாய் - சேராதே கொள்! சேர்ந்தாயானால் நடை யொவ்வாமையால் வருந்துவாய் ஆதலாலே, தேற்றமாக அவளைச் சேராதேகொள் என்க.

(விளக்கம்) நடையால் ஒவ்வாய் அதனால் வருந்துவாய்! தேற்றமாக நடையொவ்வாய் அதனால் சேராதே கொள், என்க. சேரல்: வியங்கோள்.

மடவன்னம் - இளமையுடைய அன்னம். அறியாமையுடைய அன்னம் எனவும் ஒருபொருள் தோன்றிற்று.

இனி, அரும்பதவுரையாசிரியர் - விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு நின்னடையுட னொக்குமென்று சொல்லுவர் புலவர்; ஆயினும், இவள் விளையாட்டொழிந்து தன்னியல் (பால்நடப்பாளாயின்) நீ ஒவ்வாய் அதனாலே சேராதே கொள் என விரிப்பர்.

இது காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது. அஃதாவது - காமக் குறிப்பிற்குத் தகுதியில்லாத பேதைப் பருவத்தாளொருத்தியின்பால் ஒரு தலைவன் இவள் எனக்கு மனைக் கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக்கருதி மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தியவன் கூறியது என்றவாறு; எனவே இது கைக்கிளைக் காமம் என்பது பெற்றாம்.

நூலாசிரியர் கூற்று

கட்டுரை

24 : ஆங்குக் .............. தொடங்குமன்

(இதன்பொருள்:) ஆங்குக் கானல்வரிப் பாடல் கேட்ட - அவ்விடத்தே கோவலன் யாழிலிட்டுப் பாடிய கானல்வரிப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு கேட்டிருந்த; மான் நெடுங்கண் மாதவியும் - மானினது கண்போல நீண்ட கண்ணையுடைய மாதவி தானும்; மன்னும் ஓர் குறிப்புண்டு இவன் தன் நிலை மயங்கினான் என்று - இவன் பாடிய வரிப்பாடல்கள் அனைத்தினும் நிலைபெற்ற ஒரு குறிப்புப் பொருளும் உளது அஃதாவது, இவன் மயங்கித் தனது நிலையினின்றும் மாறுபட்டான் என்பதே அது, என்று கருதியவளாய், கலவியால் மகிழ்ந்தாள்போல்-அவனொடு கூடும் பொழுது மகிழும் அளவு அவன் பாடல் கேட்டு மகிழ்ந்தவள் போன்று புறத்தே காட்டி; புலவியால் யாழ் வாங்கி - அகத்தில் ஊடலோடு கோவலனிடமிருந்து யாழைத் தன் கையில் வாங்கி; தானும் ஓர் குறிப்பினள்போல் - தன்பால் பிறிதொரு மாறுபாடும் இல்லாதிருக்கவேயும் தானும் வேறு குறிப்புடையாள் போன்று கோவலனுக்குத் தோன்றுமாறு; கானல் வரிப் பாடல் பாணி - கானல்வரிப் பாடல் என்னும் இசைப்பாக்களை; நிலத் தெய்வம் வியப்பு எய்த - அந்நெய்தனிலத் தெய்வமாகிய வருணன் மிகவும் வியப்பெய்தவும்; நீள் நிலத்தோர் மனம் மகிழ-நெடிய நிலவுலகத்தே வாழ்கின்ற மாந்தர் மனம் மிகவும் மகிழவும்; கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும் மன் - தான் கைக்கொண்ட யாழிசையோடு இரண்டறக் கலந்து பொருந்திய இசை நலனுடைய தனது மிடற்றினாலே பாடத்தொடங்கினள் என்க.

(விளக்கம்) கோவலன் பாடிய காவிரியை நோக்கினவும் கானல்வரிப் பாணியும் களவொழுக்கத்தே நின்ற தலைவன் கூற்றாக அமைதலின் இவன் தன்மேலன்பிலன்; மனமாறுபட்டு மற்றொருத்தியைக் காதலித்தமையால் அவ்வுணர்ச்சி காரணமாக இங்ஙனம் பாடினன் என்று மாதவி கருதினள். வாய்மையில் ஊழின் வலிமைக்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. ஊழ்வினை உருத்து வந்தூட்டுங்காலத்தே ஊட்டப்படுபவர் மனத்தையே தன்வசமாக்கிக் கொள்ளும் என்பதனைப் பேதைப் படுக்கும் இழவூழ் எனவரும் திருவள்ளுவனார் செம்மொழியானும் உணரலாம்.

ஊழ்வயத்தானே நல்லவை யெல்லாம் தீயவாம் என்னும் அத்தெய்வப்புலவர் திருவள்ளுவனார் அறிவுரைக்கும் ஆற்றவும் இனியனவாகிய கோவலன் பாடிய உருக்களே அவ்விருவர்க்கும் ஆற்றொணா அல்லல் விளைக்கும் கருவியாகவும் மாறி விடுகின்ற இந்நிகழ்ச்சி சிறந்ததோர் எடுத்துக் காட்டாகவும் அமைவதறிக!

அளியளோ! அளியள்! மாமலர் நெடுங்கண் மாதவி. மாசு சிறிதேனும் இல்லாத பேரன்புடையள் கற்புடைத் தெய்வம்; இம்மாதவி, இத்தகைய தூய நெஞ்சுடையாள் தன்னைத் தானே தீயநெஞ்சுடையாளாகக் காட்டத் துணிந்துவிட்டாள்! இவ்வாறு துணிவித்தது அவளுடைய போகூழ், ஈண்டு,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

எனவரும் அருமைத் திருக்குறள் நம்மனோராற் பன்முறை நினைந்து நினைந்து தெளியற் பாலது.

மாதவி ஊழ்வழி நின்று யாழோடு பாடுதல்

ஆற்றவரி

25 : மருங்கு .......... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - தெய்வக் காவிரி நங்காய் நீ! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடையது போர்த்து - இரு பக்கங்களினும் வண்டுகள் மிக்குத் தம்மிசையால் ஆரவாரிப்ப அழகிய மலர்களாலியன்ற ஆடையைப் போர்த்துக்கொண்டு; கருங்கயல் கண் விழித்து ஒல்கி - கரிய கயல்மீனாகிய கண்களை விழித்துக் கொண்டு ஒதுங்கி நடவாநின்றனை; வாழி - நீ நீடுவாழ் வாயாக! இவ்வாறு நீ கருங்கயற் கண்விழித்து ஒல்கி; நடந்த எல்லாம் - பலகாலும் நடந்த நினது நன்னடைகட்கு எல்லாம் காரணமாவது; நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனாகிய சோழமன்னன் ஏந்திய மாந்தர் திருந்துதற்குக் காரணமான செங்கோலானது கோடாமையாகும் என்பதனை யான் அறிந்துளேன் காண்! காவேரி வாழி - காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

26 : பூவர்சோலை ........... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரிநங்காய்! பூவர் சோலை மயில் ஆல குயில்கள் புரிந்து இசைபாட - மலர்கள் நிறைந்த சோலையாகிய கூத்தாட் டரங்குகளிலே மயில்களாகிய கூத்தியர் மகிழ்ந்து கூத்தாடாநிற்பவும்; அக்கூத்திற்கியன்ற தாள முதலியவற்றை உணர்ந்து அக்கூத்திற்கியையக் குயில்களாகிய பாண்மகளிர் இனிய இசையைப் பாடாநிற்பவும்; காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி - நின்பா லன்புடையோர் விரும்பியிட்ட மலர் மாலைகள் நின்னிருமருங்கும் அசையாநிற்பவும் நீ பீடுபெற நடக்கின்றனை நீ நீடுவாழ்வாயாக ! காமர் ........ எல்லாம் - இவ்வாறு நீ காமர்மாலை அருகசையப் பல்லாண்டுகளாக நடந்த நடையெல்லாம்; நின் கணவன் நாமவேலின் திறங்கண்டே - நின் கணவனாகிய வளவன் ஏந்திய பகைவர்க்கு அச்சந்தரும் வேற்படையின் வெற்றித் திறத்தைக் கண்டதனால் அல்லவா? அறிந்தேன் காவேரி வாழி இவ்வுண்மையை யான் அறிந்துகொண்டேன் காண் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

27 :  வாழியவன்றன் ............ காவேரி

(இதன்பொருள்:) காவேரி வாழி - காவிரிநங்காய் ! நீ நீடுவாழ்வாயாக; அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் - நீதானும் வளையாச் செங்கோலும் வெற்றிவேலும் ஏந்திய நின் கணவனாகிய வளவன் காக்கும் வளமிக்க சோழனாடு நும்மிருவர்க்கும் மகவாக நீதான் அம்மகவினைப் பேணி வளர்க்கு நற்றாயே ஆகி ஊழிதோறும் நடத்தி வருகின்ற பேருதவியை ஒரு காலத்தும் தவிர்ந்திலை யல்லையோ? வாழி - நீ நீடூழி வாழ்வாயாக; நீ இவ்வாறு - ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாது; ஒழுகல் அறிந்தேன் - நடத்தற்குரிய காரணத்தை யானும் அறிந்துளேன்காண்! அஃதியாதெனின்; உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே - உயிர்களைப் புறங்காத்தோம்புகின்ற ஆணைச் சக்கரத்தை யுடையவனும் நடுவுநிலை யுடையவனும் யாவரானும் விரும்பப்படுபவனும் நின் கணவனுமாகிய சோழமன்னனது அருளுடைமையே யாம்; காவேரி வாழி - காவேரி யன்னாய் நீ ஊழ்தோறூழி வாழ்வாயாக; என்க.

(விளக்கம்) இவ்வுருக்கள் முன்னர்க் கோவலன் பாடிய ஆற்றுவரிக் கிணையாகப் பாடப்பட்டவை; ஆதலால் அவற்றோடு இவற்றை ஒப்புநோக்கி உணர்க. இதற்குப் பாடாண்டிணைக் கடவுள் வாழ்த்து என்னும் துறைகொள்க. இனி, இதற்கும் களவொழுக்கத்தினிற்கும் தலைவன் தான் குறிப்பிட்டவாறு வந்து ஒழுகுதலாலே ஏமஞ் சான்றவுவகை (தொல் - கள -20) யால் தலைவி அவனை நல்லன் அருளுடையன் என நயந்து தன்னயப்பினைக் காவிரியின் மேலிட்டுத் தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்பக் கூறியது என்று நுண்ணிதின் உணர்க.

25 - மருங்கு - ஆற்றின் இரு பக்கங்கள். நங்கை என்புழி மருங்கு வண்டு - இரு பக்கங்களினும் அமைந்த கையின்கண் வளையல் என்க பூ ஆடை - ஆற்றிற்கு நீர் மேல் உதிர்ந்து ஆடை போன்று நீரை மறைத்துள்ள மலர்கள் நங்கைக்குப் பூத்தொழிலையுடைய மேலாடை என்க. கயற்கண் - ஆற்றிற்குக் கயலாகிய கண். நங்கைக்குக் கயல் போன்ற கண் என்க. இவை சிலேடை. கணவன் : சோழமன்னன். திருந்துதற்குக் காரணமான செங்கோல் என்க. அக்காரணத்தை யான் அறிந்தேன் என்க. இஃது அரசனுடைய அளிச்சிறப்பு.

26 - பூவர் சோலை என்புழி ஆர் - அர் எனக் குறுகியது செய்யுள் விகாரம் . மாலை - யாற்று நீரில் மலர்மாலையிட்டு வணங்குதல் மரபாகலின் அங்ஙனம் அன்புடையோர் இட்ட மாலைகள் என்க. இருமருங்கினும் மாலையிடப்படுதலால் மாலைஅருகு அசைய என்றாள். இவ்வாறு மலர் மாலையிட்டு யாற்றை வழிபடும் வழக்கம் உண்மையை,

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவா ரப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஓண்டொடியார்

எனவரும் பரிபாடலினும் (10-வையை: 92-4) காண்க. நாமவேல் நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம் - அச்சம். வேலின் திறம் - வெற்றி. இஃது அரசனுடைய தெறற் சிறப்பு.

27: அவன் : சோழமன்னன். வளநாடு நினக்கும் நின் கணவற்கும் மகவாக நீ நற்றாயாகி என்க. ஊழிதோறும் அவ்வறத்தை நடத்துதலால் ஊழியுய்க்கும் பேருதவி என்றாள். உயிரோம்பும் வெய்யோன் ஆழி ஆள்வானாகிய வெய்யோன் பகல் வெய்யோன் எனத் தனித் தனியீயையும். ஆழி - ஆணைச்சக்கரம். ஆழியாள்வான் என்பது சக்கரவர்த்தி என்னும் பெயர்போலப் பெயர்த்தன்மை பெற்றது நின்றது அதற்கு நேரிய தமிழ்மொழிபெயர்ப்பு எனலுமாம். சோழன் கதிரவன் மரபினன் என்பதுபற்றி அவனைக் கதிரவனாக உபசரித்த கருத்துத் தோன்றப் பகல் வெய்யோன் என்றார் என்க.

சார்த்துவரி

28 : தீங்கதிர் ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! தீம் கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணி முறுவல் ஓவ்வாவேனும் - நீயிர் கொணருகின்ற இம் முத்துக்கள் காண்டற்கினிய நிலாவினையுடைய திங்கள் போன்ற ஒளியையுடைய திருமுகத்தையுடைய எம்பெருமாட்டியின் சிவந்த வாயகத்தே யமைந்த அழகிய எயிறுகளை ஒவ்வாதனவாகவும் நீயிர் அவற்றைப் பொருளாக மதித்து; மால் மகன் போல வைகலும் நீர் முத்து வாங்கும் என்று வருதிர் - பித்தேறி மயங்கிய ஒருவனைப்போல நாள்தோறும் நீங்கள் இம்முத்துக்களை வாங்கிக் கொண்மின்! என்று கூறிக்கொண்டு சில முத்துக்களைக் கொண்டு வருகின்றீர். யாம் அவற்றை ஏலோம். எற்றால் எனின்; வருதிரைய வீங்கு ஓதம் விளங்கு ஒளிய வெண்முத்தம் தந்து - ஒன்றன்பின் ஒன்றாய்! வருகின்ற அலைகளையுடைய பெருகுகின்ற இக்கடல் தானும் நாள்தோறும் தன்றிரைக்கையால் இவற்றினும் சிறப்ப ஒளியுடையவாகிய வெண்முத்துக்களை எமக்குக் கொணர்ந்து தந்து அவற்றிற்கு மாறாக; விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு - நறுமணங் கமழ்கின்ற இக்கடற்கரைச் சோலையிடத்தே யாங்கள் கொய்து புனைந்த மலர்மாலையைப் பெற்றுக்கொண்டு; விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர் - வணிகர்போல மீண்டு போதற்கிடனான இப் பூம்புகார் நகரம் எங்கள் ஊர் ஆதலாலே ; என்க.

29 : மறையின் ............. எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் - வன்மையுடைய பரதவர் சேரியிலே பிறந்த மடப்பமுடைய மகளிரின் சிவந்த கையினது இறையின்கட் செறித்த வளையல்களே; மறையின் மணந்தாரைத் தூற்றுவதை - களவினாலே தமக்கியன்ற தலைவரைக் கூடிய காலத்தே அம்மகளிர் ஒழுக்கத்தைப் பலருமறியப் பழிதூற்றும் என்பதனை; ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் - முன்னரே பேதை மகளிரேமாகிய யாங்கள் எவ்வாறு எவ்விடத்தே அறிய வல்லுநமாவேம்; அறிந்திலேங்காண், அறிய மாட்டாமைக்குக் காரணமும் உளது, அஃதென்னெனின்; எம்மூர் - யாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்தான்; நீள் புன்னை அரும்பிப்பூத்த பொறைமலி பூங்கொம்பு அன்னம் ஏற - நீண்ட புன்னைமரமானது அரும்பெடுத்து மலர்தலாலே சுமைமிகுந்த அதன் மலர்க்கொம்பின் மேல் அன்னப் பறவை ஏறாநிற்ப; நிறைமதியும் மீனும் என அவ்வன்னத்தை முழுத்திங்கள் என்றும் மலர்களை விண்மீன்கள் என்றும் இஃது அந்திமாலைப் பொழுது போலும் என்றும் கருதி; ஆம்பல் வண்டு ஊதும் புகார் - மலர்ந்துள்ள ஆம்பல் மலரிற் சென்று வண்டுகள் தேனூதுதற்குக் காரணமான இப்புகார் நகரமே யாதலால்; என்க.

30 : உண்டாரை ............... எம்மூர்

(இதன்பொருள்:) வெல்நறா உண்டாரை ஊண் ஒளியாப் பாக்கத்து - கள்ளானது தன்னை உண்டுவைத்தும் உண்டமை புறத்தார்க்குப்புலப்படாமல் மறைப்பேம் என்னும் கோட்பாடுடையார் மனத்திட்பத்தைக் கெடுத்து வென்று தன்வயப்படுத்து அவரைக் கொண்டே தன்னையுண்டமையைப் புறத்தார்க்கு ஒளியாமல் தூற்றுவிக்கு மிடமான இப்பாக்கத்தின் கண்ணே; உறை ஒன்று இன்றித் தண்டாநோய் மாதர்தலைத் தருதி என்பது - மருந்து பிறிதொன்று மில்லாத் தீராத தொருநோயை நீ பேதை மகளிர்க்குத் தருகுவை என்பதனை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே! ஏழையம்யாம் முன்னரே எங்ஙனம் அறியவல்லுநம் ஆவேம்; அறியா தொழிந்தேம் காண்! மேலும்; எம்மூர் - எமதூர்தானும்; வண்டால் திரை அழிப்ப - தாங்கள் கோலிய மணல் வீட்டைக் கடலினது அலைவந்து அழித்துப் போகாநிற்ப; மாதர் - எம்மினத்துப் பேதை மகளிர்; மதிமேல் நீண்ட புண்தோய் வேல் நீர்மல்க-திங்களின் மேலே நீண்டு கிடந்த பகைவர் குருதி தோய்ந்த வேல் போன்ற தங்கண்களினின்றும் நீர் பெருகாநிற்ப; கையால் மணல் முகந்து கடல் தூர்க்கும் புகாரே - தமது சிறிய கைகளாலே மணலை அள்ளிப் பெரிய கடலைத் தூர்த்தற்கு முயலுமிடமான இப்புகார் நகரமே யன்றோ? என்க.

(விளக்கம்) இவற்றோடு கோவலன் பாடிய கரியமலர் முதலிய மூன்று வரிப்பாடலையும் ஒப்பு நோக்குக. இவை அவற்றிற்கு இணையாகப் பாடப்பட்டவை.

28 : இது கையுறைமறை. அஃதாவது: களவொழுக்கத்தில் நிற்கும் தலைவன் தோழியை இரந்து பின்னிற்பவன் தலைவிக்குக் கொடுத்துக் குறைநயப்பித்தற்பொருட்டுக் கொணர்ந்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொள்ள மறுத்தது என்க. தீங்கதிர் - திங்கள்: அன்மொழித் தொகை. திங்கள் போலும் ஒளியுடைய முகத்தாள் என்க. அவளாவாள் தலைவி. கையுறையின் தகுதியின்மை தோன்றச் செவ்வாய் மணி முறுவல் இவை ஒவ்வா என்றாள். மான்மகன் - மால்+மகன் - பித்தேறி மயங்கியவன்; காமவேள் போல எனவும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. முறுவல் - எயிறு. வரைதற்கு முயல்கின்றிலீர் என்பாள் வைகலும் வருதிர் என்றாள். வீங்கு ஓதம் வெண்முத்தம் தந்து கோதை கொண்டு மீளும் என்றாள் இம்முத்து எமக்கு ஆற்றவும் எளிய என உணர்த்தற்கு. அரிய முத்தைத் தந்து எளிய கோதையை எம் முரிக் கடல் பெறுமாறு போல எளிய இம்முத்தைத் தந்து எம் பெருமாட்டியை நீயிர் நுகரக் கருதுதிர் என உள்ளுறை தோன்றிற்று. யாம் அதற்குடம்படேம் வரைந்து கொள்ளுதி என வற்புறுத்தற்கு இங்ஙனம் உள்ளுறுத்துக் கூறினள்.

29 : மறை - களவு. வன்பரதர் பாக்கத்து மடவார் மறையின் மணந்தாரை அவர்தம் வளையே தூற்றும் என்பதனை யாங்கள் முன்பு அறிந்திலேம் என்றவாறு. செங்கை இறை - செங்கையாகிய இறை; இறை - முன்கை. வளைகள் தாம் கழன்றுகுவதனாலே தலைவியின் பிரிவாற்றாமைப் பிறர் அறியும்படி செய்தலை, வளைகள் தூற்றும் என்றாள். இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவியவாறாம். எம்மூரே பேதைமையுடைத்து ஆதலின், யாங்களும் பேதையரேம் ஆயினேம் என்பாள் எம்மூரில் புன்னைப் பூங்கொம்பில் அன்னத்தையும் பூவையும் கண்டு அவற்றைத் திங்களும் விண்மீனும் என்று எண்ணி ஆம்பல் மலரும் என்றாள்.

30: நறா-கள். அஃதுண்டாரை வெல்லுதலாவது - இதனை உண்டு பிறர் அறியாமல் மனத்திட்பத்தோ டிருப்பேமென் றுறுதிகொண்டு உண்டாருடைய அத்திட்பத்தை அழித்துத் தன்வயப்படுத்தி அவரைக் கொண்டே கள்ளுண்டமையைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தி விடுதல். இதனை,

ஒளித்தவர் உண்டு மீண்டிவ் வுலகெலாம் உணர வோடிக்
களித்தவர் (கிட்கிந்தை - 93)

எனவரும் கம்பர் வாக்கானு முணர்க. இதற்கு, களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும் என வரும் (928)-திருக்குறளைக் காட்டுவாருமுளர். இதற்குப் பரிமேலழகருரை இவர் கருத்தை வலியுறுத்துமேனும் ஆசிரியர் திருவள்ளுவனார் கருத்தஃதன்று. மற்று அவர் கருத்து வருமாறு: யான் இப்பொழுது பெருந்துன்பத்திற்கு ஆளாகியுளேன் இத்துன்பத்தை மாற்றும் பொருட்டுக் கள்ளுண்டு அவற்றை அறியேனாகுவன் என்று சிலர் கருதிக் கள்ளுண்ணத் தலைப்படுதலுமுண்டு; அங்ஙனம் கருதியுண்பார்க்கும் அக்கள் உதவி செய்வதில்லை. மேலும் அவர் தம்மியற்கை யறிவாலே அமைதி கண்டுள்ள துன்பங்களையும் கள்வெறி கிளர்ந்தெழச் செய்து முன்னையினுங்காட்டில் மிகுவிக்கும். ஆதலால், அவ்வாற்றானும் கள்ளுண்டல் கூடாது என்பதேயாம். இங்ஙன மாகலின் அவ்வெடுத்துக் காட்டுப் போலி என்றொழிக.

இனிக் கடலைக் கையான் மணன் முகந்து தூர்க்கக் கருதுமளவு பெரும் பேதைமைத்து எம்மூர் அதன்கட் பிறந்து வளர்ந்த யாம் நின் போல்வார் மாதரைத் துன்புறுத்துவர் என்று எவ்வாறு அறிய மாட்டுவேம்: அறியேமாயினேம்: அறியின் இவ்வொழுக்கத்திற் கிசைந்திரேம் என்றவாறு.

இவையிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாராவரைவல் என்றாற்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாஅயவை என்க.

திணைநிலைவரி

31 : புணர்துணை...........உணரேனால்

(இதன்பொருள்:) வணர்சுரி ஐம்பாலோய் - வளைந்து சுருண்ட கூந்தலையுடைய எம்பெருமாட்டியே, ஈதொன்று கேள்; புணர்துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி - தான் புணர்ந்தின் புறுதற்குக் காரணமான தனது காதற்றுணைவியாகிய பெடை நண்டோடு விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஆண்நண்டினைக் கூர்ந்து நோக்கிப் பின்னர், இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி - பூங்கொத்துக்கள் செறிந்த அழகிய சோலையிடத்தே நின்ற என்னையும் கூர்ந்து நோக்கி; உணர்வு ஒழியப் போன - தன்னுணர்ச்சி தன்னைக் கைவிட்டமையாலே ஏதோ கூறக் கருதி யவன் யாதொன்றும் கூறாமல் வாய்வாளாது போன; ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் - முழங்குகின்ற கடலையுடைய இந் நெய்தனிலத் தலைவன்; வண்ணம் உணரேனால் - நிலைமை யாதென்று யான் உணர்கின்றிலேன்; என்க.

இது - அறியேன் என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது. வலிதாகச் சொல்லுதலாவது - உணர்வொழியப் போன சேர்ப்பன் வண்ணம் உணரேன் எனவே; ஒரோவழி அவன் இறந்து படுதலும் கூடும் என்பதுபடக் கூறுதல். ஆகவே, தலைவிக்கு ஆற்றாமை மிக்குக் குறை நேர்வாளாம் என்க.

மேல்வரும் ஐந்து வரிப்பாடலும் இரங்கலும் அதன் நிமித்தமுமாய் நெய்தற்றிணை பற்றியே நின்றன. ஐந்தும் காமமிக்க கழிபடர் கிளவி என்னும் ஒரு துறை பற்றி அடுக்கி வந்தனவாம்.

32 : தம்முடைய ............. மாட்டேமால்

(இதன்பொருள்:) தம்முடைய தண் அளியும் தாமும் தம் மான் தேரும் - எம்பெருமான் தம்முடைய தண்ணிய அருளும் தாமும் தம்முடைய குதிரைகளையுடைய தேரும்; எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க - அளியேமாகிய எம்மைச் சிறிதும் நினையாமல் கைவிட்டுப் போயினரோ? அங்ஙனம் போனாற் போயொழிக: அம்மெல் இணர அடும்புகாள் அன்னங்காள் - அழகிய மென்மையுடைய பூங்கொத்துக்களையுடைய அடும்புகளே! அன்னப் பறவைகளே! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம் ஆல் - (தம்மை மறவாதேமைத் தாம் மறந்து போயினும்) அவரை யாம் மறந்தமைகிலேம் காண்; என்க.

(விளக்கம்) தம்முடைய தண்ணளியும் தாமும் தம் தேரும் விட்டனர் என்பது தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் எண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவ தொரு முறைமை பற்றி வந்தது என்பர் சேனாவரையர். (தொல். சொல். 52. உரை.)

அடும்புகளும் அன்னங்களுமே இப்பொழுது தனக்குத் துணையாயினமைபற்றி அவற்றை விளித்து அவை கேட்பனபோலக் கூறினள். இவ்வாறு செய்யுள் செய்வது புலனெறி வழக்கம். இதனை, நோயும் இன்பமும் எனவரும் (தொல் - பொருள் - பொருளியல் - 2) சூத்திரத்தானும் ஞாயிறு திங்கள் எனவரும் (þ செய்யுளியல் 192) சூத்திரத்தானும் அறிக. மறக்க மாட்டேம் - மறவேம்; (ஒருசொல்)

33 : புன்கண் ............... கண்டறிதியோ

(இதன்பொருள்:) இன்கள்வாய் நெய்தால் - இனிய தேனூறும் வாயினையுடைய நெய்தற்பூவே! புன்கண் கூர் மாலை - துன்பமே மிகாநின்ற இந்த அந்திமாலைப் பொழுதிலேயே; புலம்பும் என் கண்ணே போல் துன்பம் உழவாய் - தனிமையால் வருந்துகின்ற என் கண் போன்று துன்பமடையாமல்; துயிலப் பெறுதி - இனிதே துயிலும் பேற்றையும் பெற்றுள்ளனை; நீ எய்தும் கனவினுள் - இப்பொழுது நீ கனவுகாண்குவை யன்றோ அங்ஙனம் நீ காணுகின்ற அந்தக் கனவிடத்திலேனும்; வன்கணார் - கண்ணோட்டமில்லாத எம்பெருமான்; கானல் வரக்கண்டு அறிதியோ - இந்தக் கடற்கரைச் சோலையிலே வர அவரை நீ கண்டறிகின்றாயோ? அறிந்தால் கூறுதி என்க.

(விளக்கம்) நெய்தால்: விளி. நீ என் கண் போலுதி ஆயினும் என் கண் போல் துன்பமுனக்கிலை; என் கண் துயில்கில; நீ துயிலுதி; அது நீ பெற்ற பேறு என்பாள் துயிலப் பெறுதி என்றாள். யான் அரிதில் எப்போதேனும் துயில் பெற்றால் அப்பொழுதே அவரை என்தோள் மேலராகக் கனவு காண்பேன். நீ துயில்கின்றா யாதலால் கனவு காண்டல் தேற்றம்; நீ எய்தும் அக் கனவினுள் அவர் வரக் காண்கின்றனையோ? என்று வினாயவாறு. அவர் கண்ணோட்டமில்லாதவர் ஆயினும், அவரைக் கண்டால் என்னிலை கூறுதி என்பது குறிப்பு.

இது குறிபிழைத்துழித் தன்வயின் உரிமையும் தலைவன்வழிப் பரத்தமையும் படக்கூறியது என்பர் நச்சினார்க்கினியர் ( தொல் களவு 16).

34 : புள்ளியன்மான் ............ என்செய்கோ

(இதன்பொருள்:) தெள்ளும் நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே! நீதான்; புள் இயல் மான் தேர் ஆழிபோன வழி எல்லாம் சிதைத்தாய் - எம்பெருமான் ஊர்ந்த பறவை போன்று விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஆழிகள் பதிந்த சுவடுகளையுடைய வழிமுழுதும் நினது அலைக்கைகளாலே அழித்தொழித்தாய்! என் செய்கோ - அவற்றைக் கண்டு ஆறுதல் பெறுகின்ற அளியேன் இனி என்செய்தாற்றுகேன்? தெள் - அவ்வாறு வழி சிதைத்த தெள்ளுநீர் ஓதமாகியகடலே நீதான்; எம்மோடு ஈங்குள்ளாரோடு உள்ளாய் - எம்மோடு இவ்விடத்தே இருந்தும் அலர்தூற்றி எமக்கின்னல் சூழ்வாரோடு நீயும் உறவு கொண்டுள்ளனை ஆதலால்; உணராய் சிதைத்தாய் - எமது வருத்தத்தைக் கருதாயாய் எமக்கின்னலாக அவ்வழியைச் சிதைத்தனை போலும்; என்செய்கோ - இனி யான் என்செய்தாற்றுகேன், என்க.

(விளக்கம்) புள்ளியற் கலிமா வுடைமை யான என்பது தொல்காப்பியம். (கற்பு 53) ஈங்குள்ளார் என்றது - அலர் தூற்றும் கொடிதறிமகளிரை. எம்மோடீங்குள்ளார் எம்நோயுணராராய் அலர்தூற்றி இன்னல் செய்தல்போன்று நீயும் உணராயாய் வழிசிதைத்து இன்னல் செய்குதி என்பது கருத்து. தெள்ளுநீர் ஓதம் - கடல் : அண்மைவிளி. என் செய்கு - என்செய்வேன். ஓகாரம் ஈற்றசை.

35 : நேர்ந்த ........... என்னீரே

(இதன்பொருள்:) நம் நேர்ந்த காதலர் - நம்மோடு பொருந்திய நங் காதலர்; நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே - உருளையுடைய நெடிய நமது தேரினைச் செலுத்திய சுவடுகள் சிதைந்தொழியும்படி அவற்றின் மேலே செல்லா நின்ற கடலே; பூந்தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே - மலர்களையுடைய குளிர்ந்த புண்பொழிலே! பெடையுஞ் சேவலுமாய்ப் புணர்ந்து இன்புற்று விளையாடாநின்ற அன்னப் பறவைகளே; ஈர்ந்தண் துறையே - மிகவும் குளிர்ந்த கடற்றுறையே! இது தகாது என்னீரே - நீயிரெல்லாம் எம்மோ டீங்குள்ளீ ரல்லீரோ? அவர் ஈண்டு நின்றும் போம்பொழுது நீயிர் இவ்வாறு பிரிந்து போதல் நுமது பெருந்தகைமைக்குத் தகுதியாகாது என்று எம்பொருட்டு ஒரு மொழியேனும் கூறுகின்றிலீர் இது நுமக்கறமாமோ? என்க.

(விளக்கம்) நேர்ந்த - பாலதாணையால் நம்மைத் தலைப்பட்ட எனினுமாம். நேமி - உருளை. ஓதம் - கடல். கடலும் பொழிலும் அன்னமும் துறையும் தலைவனாற் காதலிக்கப்படுவன ஆதலின், அவற்றையும் உளப்படுத்தி நங்காதலர் என்றாள். தண் பொழிலாயிருந்தும் கூறுகின்றிலை. புணர்ந்தாடுவீராகவும் பிரிவுத்துயர் அறிகுதிர் அறிந்தும் அன்னங்காள் கூறுகின்றிலீர் என்பாள் புணர்ந்தாடும் அன்னமே! என்றாள். ஈர்ந்தண்துறை என்றாள் - ஈரிய அருளுடையையா யிருந்தும் தகாதென்றிலை எனற்கு.

36 : நேர்ந்து .......... கடலோதம்

(இதன்பொருள்:) கடல் ஓதம் - கடற்பெருக்கே! நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி - நம்மோடு பொருந்தின நங் காதலர் ஆழியையுடைய நெடிய திண்ணிய தேரூர்ந்த சுவடும் சிதையும்படி ஊர்ந்தனை நீயே வாழ்ந்து போகுதி; கடல் ஓதம் மற்று எம்மோடு தீர்ந்தாய் போல் - கடற் பெருக்கே! நீதானும் எம்மோடு உறவொழிந்தாய்போல; ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் - அவர் தேரூர்ந்த சுவடு சிதையும்படி ஊர்ந்தனை; வாழி - நீ வாழ்ந்து போதி; தீர்ந்திலையால் - உறவொழிந்த நீ துவர ஒழிந்து போனாயுமல்லை. மீண்டும் நின் ஆரவாரத்தால் இன்னல் செய்கின்றனை, இஃதுனக்குத் தகுவதோ? என்க.

(விளக்கம்) தீர்ந்தாய் போல் தீர்ந்திலை என்பதற்கு உறவு போலிருந்து உறவாயிற்றிலை, காரியத்தால் வேறுபட்டாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். வாழி என்றது, குறிப்புமொழி. பரந்து கெடுவாய் என்னும் பொருட்டு.

மயங்கு திணைநிலை வரி

37 : நன்னித்திலத்தின் ........... என்செய்கோ

(இதன்பொருள்:) நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலஞ்சார் பவளக் கலை உடுத்துச் செந்நெல் பழனக் கழனிதொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப - அழகிய முத்தாகிய அணிகலனை அணிந்து அழகு பொருந்திய பவளமாகிய மேகலையையும் அணிந்து செந்நெற்பயிரையுடைய மருதப்பரப்பிலுள்ள வயல்கள் தோறும் தன் அலைகளோடே உலாவி வருகின்ற கடல் சார்ந்த நெய்தனிலத் தலைவனே! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் - புன்னை மரச் சோலையினூடே மகர மீன் வரைந்த கொடியையுடைய காமவேள் தன் மலர்க்கணையாலே எய்யப்பட்ட புதிய புண்கள்தாம்; என்னைக் காணாவகை மறைத்தால் என்னை அடையாளம் காணமாட்டாதபடி மறைத்தால்; அன்னை காணின் என்செய்கு - இவ்வேறுபாட்டினை எம்முடையதாய் காண்பாளாயின்; யான் என் செய்துய்குவேன்? உய்யேன்காண்! என்க.

38 : வாரித் .................. என்செய்கோ

(இதன்பொருள்:) வண்பவளவாய் மலர்ந்து வாரித் தரள நகை செய்து பரதர்சேரி வலைமுன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப - வளவிய சிவந்த பவளமாகிய வாயைத் திறந்து முத்தாகிய புன்முறுவல் காட்டிப் பரதவர் சேரிக்கண் வலை உணங்கும் முற்றத்தே சென்று அலைகள் உலாவுதற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் பரப்பின் தலைவனே; மடவாள் மாரிப் பீரத்து அலர்வண்ணம் கொள்ள எம்பெருமாட்டி நின் பிரிவாற்றாது கார்காலத்தே மலரும் பீர்க்கம்பூப் போன்ற நிறம் உடையாளாக; அன்னை கடவுள் வரைந்து ஆர் இக் கொடுமை செய்தார் என்று அறியின் என்செய்கு - அதுகண்டு எம்முடைய தாயானவள் முருகனுக்கு வெறியாட்டயர்ந்து என் மகட்கு இந்நோய் செய்தார் யார் என்று வேலனை வினாவி அறிவாளாயின் அப்பொழுது யான் என்செய்வேன்; என்க.

39: புலவுற்று ............... என்செய்கோ

(இதன்பொருள்:) புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண் தலையில் புகுந்து உதிர்ந்த செம்மல் கலவை மணம் கமழத் திரை உலாவு கடல் சேர்ப்ப - தன்மீது புலானாற்றம் பொருந்த அதற்கு வருந்தி அந்நாற்றம் தீர்தற்பொருட்டுப் பூம்பொழிலின்கீழ்க் குளிர்ந்த இடத்தே புகுந்து ஆண்டுதிர்ந்து கிடக்கும் பல்வேறு வகையான பழம்பூக்களின் கலப்புற்ற நறுமணம் தன்மேற் கமழ்தல் கண்டு அலையானது மகிழ்ந்துலாவா நிற்றற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் றலைமகனே! மடவாள் பலவுற்று ஒருநோய் துணியாத படர்நோய் தனி உழப்ப - எம்பெருமாட்டி ஆராய்வார்க்குப் பற்பல நோயாகக் காணப்பட்டு இஃதின்ன நோய் என்று தெளியவொண்ணாத மனநோயாகிய இக்காம நோயைத் தமியளாக நுகராநிற்ப; அறியா நோய் அலவுற்று இரங்கி அன்னை அறியின் என் செய்கோ - இன்ன நோய் என்று அறியப்படாத இந்நோயை அலந்தலைப்பட்டு வருந்தி எம் அன்னை தான் அறிவாளாயின் யான் அவட்கு என் சொல்லுகேன் என்க.

(விளக்கம்) 37 - நல் நித்திலம் - அழகிய முத்து. கலை - மேகலை. உலாப் போவார் அணிகலன் அணிந்து போதல் உண்டாகலின் இங்ஙனம் கூறினள். பழனம் - ஈண்டு மருத நிலம் என்னும் பொருட்டு. ஈண்டு மருதமும் நெய்தலும் மயங்குதலறிக. புன்னைப் பொதும்பர் இயற்கைப் புணர்ச்சி யெய்தியவிடமாகலின் காமவேள் கணை எய்த இடமாகக் குறித்தாள். மகரத் திண்கொடியோன் - காமவேள். அவன் மேலும் மேலும் வருத்துவதனைப் புதுப் புண்கள் என்றாள். காணாவகை மறைத்தலாவது அடையாளந் தெரியாதபடி உடம்பு மாறுபடுதல். இவ்வாறு மெலிவதனை அன்னை காணின் என் செய்வேன் என்றவாறு. என் செய்வேன் என்றது கையறுநிலை. என்னைக் காணாவகை என்றது தலைவியைக் காணாதபடி என்றவாறு. ஈண்டுத் தலைவியைத் தோழி தானாகக் கொண்டு கூறுகின்றாள். இவ்வாறு கூறும் புலனெறி வழக்கம் உண்மையை, தாயத்தின் அடையா என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் (பொருளியல் - 27) அறிக. என் தோள் எழுதிய தொய்யில் என்று தோழி தலைவியின் தோளைத் தன்றோள் என்பது (கலி - 18) இதற்கு எடுத்துக்காட்டு.

38 : வாரித்தரளம் என்புழி வாரி வாளா அடைமாத்திரையாய் நின்றது. கடல் முத்து, பவளவாய் மலர்ந்து தரள நகை செய்து என மாறுக. நகை செய்தலாவது - எயிறு தோன்றப் புன்முறுவல் பூத்தல். உலாப்போவார் பிறர் முன்றிலில் செல்லுங்கால் அங்குள்ளாரைக் கண்டு மகிழ்ந்து வாய் மலர்ந்து முறுவலிப்பதுண்மையின் இங்ஙனம் கூறினள். பீரம் - பீர்க்கு. அலர் - மலர், இதனிறம் பசலைக்குவமை. நின்னை அறியாது தெளிந்தவள் என்பாள் தலைவியை மடவாள் என்றாள். கடவுள் வரைதல் - முருகக் கடவுட்கு வழிபாடு செய்து வினாதல். செய்தார் யார் என்று வினவி அறியின் என்க.

இனி, இம் மூன்றும் வரைவுகடாஅதல் என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்த வரிப்பாடல்கள் (உருக்கள்). இவற்றினுள், 37- நெய்தனிலத்து அலை மருத நிலத்து வந்துலாவும் என்னும் கருப்பொருளில் நீதானும் வரைந்து கொள்ளாமல் இன்னும் ஏதிலனாகவே வந்து மீள்கின்றனை என உள்ளுறை காண்க.

38 - திரை தனக்குரிய கடலை விட்டுப் பரதர் முன்றிலில் வந்து வாளா வாய் மலர்ந்து முறுவலித்து மீண்டும் தன் கடலுக்கே போதல் போன்று நீயும் தலைவியைக் கூடி மகிழ்தற் பொருட்டன்றி அவளை வரைந்து கொண்டு நின் மனைக்கு அழைத்துப் போக நினைக்கின்றிலை என்று உள்ளுறை காண்க.

39. இதன்கண் - அலைதனக்கெய்தியபுலால் நாற்றம்தீரப்பொழிற்றண்டலை புகுந்து கலவை மணங்கமழ உலாவினாற்போல நீயும் இக்களவொழுக்கத்தால் எய்திய பழி தீர வரைவொடு வந்து இவள் வளமனை புகுந்து வதுவை செய்து புகழ் பரவ இல்லறம் நிகழ்த்தல் வேண்டும் என்பது உள்ளுறை என்க.

40 : இளையிருள் ........... மருண்மாலை

(இதன்பொருள்:) எல் செய்வான் மறைந்தனனே இளை இருள் பரந்ததுவே - கதிரவன்றானும் மேலைக்கடலிலே மூழ்கி மறைந்தனனே! அந்தோ அந்திமாலைக்குரிய இளமையுடைய இருள் உலகெங்கும் வந்து பரவிவிட்டதே; கண் களைவு அரும் புலம்பு நீர் பொழீஇ உகுத்தன - என் கண்கள் தாமும் பிறிதோ ருபாயத்தானும் நீக்குதற்கரிய எனது தனிமைத் துயர் காரணமாகப் பெருகிய துன்பக் கண்ணீரை மிகுதியாகச் சொரியலாயினனே! தளை அவிழ் மலர்க்குழலாய் - கட்டவிழ்ந்து மலர்ந்த மலரணிந்த கூந்தலையுடைய என் தோழியே! வளை நெகிழ எரிசிந்தி வந்த இம் மருள் மாலை - என்னுடைய வளையல்கள் நெகிழும்படி காமத்தீயைத் சிதறிக்கொண்டு இங்குவந்த இந்த மயக்கந் தருகின்ற அந்திமாலைப் பொழுது; தணந்தார் நாட்டு உளதாங் கொல் -நம்மைப் பிரிந்துறைகின்ற அவ்வன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளதாமோ உரைத்தி! என்க.

41 : கதிரவன் ............. மருண்மாலை

(இதன்பொருள்:) கதிரவன் மறைந்தனனே - அந்தோ கதிரவன் குடதிசைக் கடலில் மூழ்கி மறைந்தொழிந்தானே! கார் இருள் பரந்ததுவே - உலகெங்கும் கரிய இருள் வந்து பரவிவிட்டதே; எதிர் மலர் புரை உண்கண் - இவ்வந்திமாலையை எதிர்கொள்கின்ற கருங்குவளை மலர்கள் போன்ற என் மையுண்ட கண்கள் தாமும்; எவ்வநீர் உகுத்தனவே - துன்பக் கண்ணீரைச் சொரியலாயினவே; புதுமதி புரை முகத்தாய் - புதிய திங்கள் ஒத்த முகத்தையுடைய தோழியே! மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள் மாலை - நெருநல் விழுங்கிய திங்களை உமிழ்ந்துவிட்டு அதற்கீடாக இற்றைநாட் கதிர்மண்டிலத்தை விழுங்கி இங்கு வந்த இம்மருட்சி தருகின்ற அந்திமாலைப் பொழுதுதான்; போனார்நாட்டு உளதாங்கொல் - நம்மைப் பிரிந்துபோன அவ்வன்கண்ணர் வதிகின்ற நாட்டினும் உளதாமோ? உரையாய்! என்க.

42 : பறவை ........ மருண்மாலை

(இதன்பொருள்:) பகல் செய்வான் மறைந்தனனே எனக்கு ஆற்றுந் துணையாகிய பகற்பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவனும் இப்பொழுது அது செய்யாது மறைந்து போயினன்; பறவை பாட்டு அடங்கின - ஓரோவழி எனக்கு ஆறுதலாகப் பாடிய பறவைகளும் குடம்பை புகுந்து பாட்டடங்கிப் போயினவே; நிறைநிலா நோய்கூர - தன்உறுப்புகள் முழுதும் நிறைந்த திங்கள்தானும் என் நோயை மிகுவியா நிற்றலாலே; நெடுங்கண் - என் நெடிய கண்கள் அந் நோயாற்றாமல்; நீர் உகுத்தனவே -துன்பநீரைச் சொரிகின்றனகாண்; துறுமலர் அவிழ் குழலாய் - செறித்த மலர்கள் மலராநின்ற கூந்தலையுடைய தோழியே! மறவையாய் என் உயிர் மேல்வந்த - மறத்தன்மை யுடையதாய் எனதுயிரைப் பருகுதற்குக் குறிக்கொண்டுவந்த; இம்மருள்மாலை - இந்த மருள் தருகின்ற அந்திமாலைப் பொழுது; துறந்தார் நாட்டு உளது ஆங்கொல் - நம்மைத் துறந்துபோனவன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளது ஆகுமோ? உரைத்தி என்க.

(விளக்கம்) 40. இளைய விருள் - இளையிருள் என விகார மெய்தியது. எல்+செய்வான்-பகல் செய்வான்; ஞாயிறு. களைவு களைதல். புலம்பு - தனிமைத் துன்பம். பொழீஇ - பொழிந்து கண் உகுத்தன என்க தணந்தார்: வினையாலணையும் பெயர் தணந்தார் நாட்டினும் உளதாயின் அவர் நம்மை மறந்துறையார். அங்கில்லை போலும் என்றவாறு. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். எரி - காமத் தீ. மருள் தருகின்ற மாலை.

42. எதிர் மலர் - மலரும் பொழுதை எதிர்கொண்ட மலர் - எதிராகப் பிணைத்த மலருமாம். புரை உவமவுருபு. எவ்வநீர் - துன்பக் கண்ணீர் ஒளி மிகுதி பற்றிப் புதுமதி புரை - முகம் என்றாள். போனார் - பெயர். மதியுமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த விம்மருண்மாலை எனவரும் அடியினது அழகும் அணியும் நினைந்தின்புறுக. மாலையின் கொடுமை மிக்க ஆற்றல் கூறியவாறு. நிறை நிலா - நிறுத்த நில்லா வாய் என்பது அரும்பதவுரை. துறுமலர் - செறித்த மலர் - செருகிய மலர். மறவையாய் - மறத்தன்மையுடையதாய் உயிர் மேல் வருதல் - உயிரைப் பருக வேண்டும் என்று வருதல். மாலையோ வல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது என வரும் திருக்குறளும் (1211) ஈண்டு நினைக.

(37) நன்னித்திலத்தின் என்பது முதல் (42) பறவை பாட்டடங்கினவே என்பதீறாக வரும் ஆறு வரிப்பாடலும் மயங்குதிணை நிலைவரி. செந்நெற் பழனத்துக் கழனிதொறும் திரையுலாவும் என வருவது திணைமயக்கமாம்.

சாயல்வரி

43 : கைதை .............. அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கைதை வேலிக் கழிவாய் வந்து எம்பொய்தல் அழித்துப் போனார் - யாரோ ஒருவர் யாம் விளையாட்டயர்ந்த தாழை வேலியையுடைய கடற்கழி மருங்கே தாமே வந்து யாம் மணலாற் கோலிய எமது சிற்றிலைச் சிதைத்துப் போயினர்காண்; பொய்தல் அழித்துப் போனார் - அவர் எமது சிற்றிலை அழித்துப் போனாரேனும்; அவர் நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - அவர்தாம் இன்னும் எம்முடைய மயக்கமுடைய நெஞ்சத்தைவிட்டுப் போனாரல்லர்காண் !  இந் நெஞ்சம் அவரையே இடையறாது நினைகின்றது, என் செய்கோ என்க.

44 : கானல் ........... அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கானல் வேலிக் கழிவாய் வந்து - யாரோ ஒரு ஆடவர் யாம் விளையாடிய கடற்கரைச் சோலையை வேலியாக வுடைய கழியிடத்தே தாமாகவே வந்து; நீ நல்கு என்றே நின்றார் - நங்கையே நீ எனக்கு அருள் தருதி என்று எம்மையிரந்து நின்றார்; நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் மான் நோக்கம் மறப்பார் அல்லர் - அங்ஙனம் கூறிநின்ற அவர்தாம் நம்முடைய மானநோக்கம் போன்ற நோக்கத்தை மறந்தொழியார் போலும்; அவர் மீண்டும் மீண்டும் வருகுவர்காண்! என்க.

45 : அன்னம் ........... அல்லர்

(இதன்பொருள்:) நென்னல் ஒருவர் (கழிவாய் வந்து ஆங்கு) அன்னம் துணையோடு ஆடக் கண்டு - (யாம் விளையாடும் கழியிடத்தே வந்து) நேற்று ஓராடவர் அன்னச்சேவல் தன்பெடையோடு கூடி விளையாடுதலைக் கண்டு; நோக்கி நின்றார் - அக்காட்சியைக் கூர்ந்து நோக்கி நின்றனர். நென்னல் நோக்கி நின்றார் அவர் நேற்று அங்ஙனம் நோக்கிநின்ற அவ்வாடவர். நம் பொன் ஏர் சுணங்கின் போவாரல்லர் - நம்முடைய பொன்போன்ற நிறமுடைய சுணங்கு நம்மைவிட்டுப் போகாதது போன்று நம்மை விட்டுப் போகார் போல்கின்றார். மீண்டும் மீண்டும் வருவர்காண்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்: அஃதாவது - தலைவியைத் தன்னொடு கூட்டுமாறு தோழியைத் தலைவன் இரந்துபின்னிற்க அவனுக்கிரங்கிய தோழி அவன் குறையைத் தலைவிக்கு மென்மொழியாற் கூறி அவளை உடம்படுத்தல் என்றவாறு. மென்மொழியாற் கூறலாவது - தலைவி குறிப்பாலுணர்ந்து கொள்ளுமாறு பிறிதொன்று கூறுவாள் போற் கூறுதல்.

இனி இவை மூன்றும் தோழியும் தலைவியும் தம்முள் உறழ்ந்து கூறியவை எனக் கொண்டு முன்னிரண்டடியில் தோழி தலைவனை இயற்பழிக்கப் பின்னிரண்டடிகளில் அது பொறாத தலைவி இயற்பட மொழிந்தது எனவும் கொள்ளக்கூடும் என்ப. 43 - பொய்தல் அழித்து என்பதற்கு விளையாட்டை மறப்பித்து எனினுமாம். தம்முள் வேற்றுமையின்மையால் தலைவியை உளப்படுத்தி நம் மனம் நம் நோக்கம் நம் சுணங்கு என்றாள்.

43-44-45 - இம்மூன்றுஞ் சாயல் வரி என்ப.

முகமில்வரி

46: அடையல் ......... கானல்

(இதன்பொருள்:) குருகே எங்கானல் அடையல் குருகே எங்கானல் அடையல் - அன்னமே நீ எம்முடைய கடற்கரைச் சோலைக்கு வாராதே கொள்! அன்னமே! ......... வாராதே கொள்! எற்றுக்கெனின்; உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய் - நீதான் கரையைக் குத்தி உடைக்கின்ற அலையையுடைய நெய்தற் றலைவனாகிய எம்பெருமான் பாற் சென்று யான் பிரிவாற்றாமையாலெய்துகின்ற மிக்க நோய் நிலையைக் கூறுகின்றிலை; குருகே எங்கானல் அடையல் அடையல் - ஆதலால் இனி எம்முடைய கானலுக்கு வாராதே கொள்! வாராதே கொள்!

(விளக்கம்) இது காமமிக்க கழிபடர் கிளவி. குருகு - நாரையுமாம். அடுக்கு வெறுப்பின்கண் வந்தது.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

47 : ஆங்கனம் .................. பெயர்த்தாள்

(இதன்பொருள்:) ஆங்கனம் பாடிய ஆயிழை - அக்கோவலன் பாடினாற் போலக் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் பாடிய ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய அம் மாதவி மடந்தை ; காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர்குரல் தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ - காந்தட்பூப் போன்ற மெல்லிய விரல்களாலே; கைக்கிளை என்னும் இசை குரலாகிய இனிய இசைநிரலையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையைப் பிறப்பித்துப் பாங்கினில் பாடி அம்முறைமையினாலே மிடற்றுப் பாடலையும் பாடி; ஓர் பண்ணுப் பெயர்த்தாள் - பின்னரும் மற்றொரு பண்ணைப் பாடினாள் என்க.

(விளக்கம்) ஆங்கனம் பாடிய - அவன் பாடினாற் போன்று ஆற்றுவரி முதலிய வரிப்பாடல்களைப் பாடிய. கைக்கிளைசேர் குரல் தீந்தொடை என்றது - கைக்கிளைக் குரலாகிய அஃதாவது கைக்கிளையை ஆதார சுருதியாகக் கொண்ட இசைநிரல் என்றவாறு. எனவே செவ்வழிப்பாலை கைக்கிளையைக் குரலாகக் கொண்டு பாடப்படும் என்பது பெற்றாம். இக்காலத்தார் இதனைச் சுத்ததோடி என்பர். அந்தர காந்தாரத்தை ஆதார சுருதியாகக் கொள்ளுமிடத்துச் சுத்ததோடி என வழங்கும் செவ்வழிப்பாலை தோற்றும் என்பர் விபுலானந்த அடிகளார். (யாழ் நூல் பண்ணியல் - பக்கம் 159) இசை எழீஇ அப்பாங்கினில் மிடற்றுப் பாடலும் பாடி என்றவாறு. ஓர் பண்ணுப் பெயர்த்தான் - பின்னரும் வேறொரு பண்பாடினான் என்றவாறு.

முகமில்வரி

48 : நுளையர் ........... பாலை

(இதன்பொருள்:) மாலை - மாலைப் பொழுதே நீ; நுளையர் நொடிதரும் விளரித் தீம்பாலை - நுளையர்க்குரித்தாகிய விளரி என்னும் இனிய பாலைப்பண்ணை யாழிலிட்டுப் பாடுங்கால்; இளி கிளையில்- கொள்ள - இளியென்னும் நரம்பினைத் தடவுதற்கு மாறாக மயங்கி அதன் பகை நரம்பாகிய கைக்கிளை என்னும் நரம்பினைத் தடவுமாறு; இறுத்தாயால் - நீ வந்து உலகின்கண் உறைவாயாயினை; நீ இளி கிளையில் கொள்ள இறுத்தாய் மன் - நீ தான் மயங்கி என்கை சென்று இளிக்கு மாறாகக் கைக்கிளையைத் தடவும் படி ஈண்டு வந்து தங்கினையல்லையோ? அஃதெற்றிற்கு என் உயிர் பருகுதற் கன்றோ? கொளை வல்லாய் மாலை - பிரிந்துறைவார் உயிரைக் கொள்ளை கொள்வதில் வல்லமையுடைய மாலையே நீ இனி; என் ஆவி கொள் - என் உயிரைக் கைக்கொள் பின்னர்; வாழி - நீ நீடூழி வாழ்ந்து போதி; என்க.

49 : பிரிந்தார் ........... மாலை

(இதன்பொருள்:) மாலை - மாலையே நீ; பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருள் நீழல் - தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் தமக்கிரங்கி வருந்தற்க! இன்ன காலத்தே மீண்டும் நும்பால் வருகுவேம் என்று கூறிப்போந்த பெரிய அருளாகிய நீழலிலே ஒதுங்கி; ஏங்கி இருந்து வாழ்வார் உயிர்ப் புறத்தாய் - அக்காலத்தை நோக்கிய வண்ணம் ஒருவாறு ஏங்கி இருந்து உயிர்வாழ்கின்ற எளிய மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனை; நீ உயிர்ப்புறத்தாய் ஆகில் - ஈண்டு நீ மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனையானால்; ஆற்றா உள்வேந்தன் - தன் பகைவனுக்கு ஆற்றாமல் அரணுள்ளே பதுங்கியிருக்கின்ற நொச்சி வேந்தனுடைய, எயிற் புறத்து வேந்தனோடு - மதிலைப் புறஞ்சூழ்ந்து முற்றியிருக்கின்ற வேந்தனாகிய எம்பெருமானுக்கு நீ; என ஆதி - எத்தன்மை யுடையையா யிருக்கின்றாய்? அதனைக் கூறுதி! என்க.

50 : பையுணோய் .............. மாலை

(இதன்பொருள்:) மருள் மாலை - மயக்கந் தருகின்ற மாலைக் காலமே நீதான்; பகல் செய்வான் போய் வீழ பையுள் நோய் கூர - பகற் பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவன் மேற்றிசையிலே போய்க் கடலில் வீழ்ந்து மறைதலாலே உலகின் கண் தனித்துறைவோருடைய துன்பமிக்க காமநோய் மிகா நிற்பவும்; வையம் கண்புதைப்ப - நீ செய்யும் கொடுமையைக் காணப் பொறாமல் நிலமகள் தன் கண்களைப் புதைத்துக் கொள்ளவும்; வந்தாய் - ஈண்டு வந்தனை; மாலை நீ ஆயின் - மாலையை நீதான் இத்தன்மையுடையையாயின்; அவர் மணந்தார் ஆயின் - அவ்வன்கண்ணர் எம்மை மணந்த காதலராயினக்கால்; ஓ மாலை ஓ மாலையே! ஞாலம் நல்கூர்ந்தது வாழி - இந்த வுலகமானது பெரிதும் நல்குரவுடைத்துக் காண்! என்க.

(விளக்கம்) 48 - நுளையர் பாலை நொடிதரும் விளரிப்பாலை எனத் தனித்தனி இயையும். விளரி - நெய்தற்பண் ஆகலின் நுளையர் பாலை என்றார். நொடிதருதல் - சொல்லல் - ஈண்டுப் பாடுதல். தனித்துறையும் மகளிர் அத்தனியை தீரயாழிசைப்பர். அவ்விசையின்கண்மனம் பற்றாது மயங்குதலின் அவர்கை இளிக்கு மாறாக அதன் பகையாகிய கைக்கிளையைத் தடவும் என்றவாறு. அங்ஙனம் மயங்குமாறு வந்திறுத்தாய் என்க. நின்ற நரம்பிற்கு ஆறாநரம்பு பகை. இளிக்குக் கைக்கிளை ஆறாம் நரம்பாகும். நீ இவ்வாறு இறுத்தற்குக் காரணம் என் உயிரைக் கொள்ளை கொள்வதேயன்றோ. அக்காரியத்தை இப்போதே செய்! என வேண்டிக் கொண்டபடியாம். என்னை? இறந்துழித் துன்பமும் ஒழியுமாதலின் இங்ஙனம் வேண்டினள். கொளை - கொள்ளை.

49 - பிரிந்தார்: தலைவன். உரைத்தது - இன்ன காலத்தே வருகுவம் என்று கூறிய தேற்றுரை. உயிரை முற்றுகையிட்டுள்ளாய் என்பாள் உயிர்ப் புறத்தாய் என்றாள். பிரிந்துறையும் மகளிர் என உலகின் மேல் வைத்துரைத்தாள் பிரிந்துறையும் மகளிர்க்கெல்லாம் இத் துன்பம் உண்மையின். நீயாகில் என்றது தனித்துறையும் மகளிர் உயிரைச் சூழ்கின்ற வன்கண்மையுடைய நீ என்பது படநின்றது. நின்னைப் போலவே வன்கண்மையுடையவன் என் கணவன் என்பான் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தன் என்றாள். கணவன் என்னாது அவனது ஏதின்மை தோன்ற வேந்தன் என்றாள். என்னாதி என்றது. என்ன உறவுடையை என்றவாறு. இருவர் தன்மையும் ஒன்றாயிருத்தலின் நீயிரிருவீரும் உடன் பிறந்தீரோ என்று வினவிய படியாம்.

ஆற்றா உள்வேந்தன் - நொச்சியான். எயிற்புறத்து வேந்தன் உழிஞையான்.

50. வையம் நின் கொடுமைகண் டாற்றாது கண்புதைத்தது என்றவாறு. ஞாலம் தன்கண் வாழும் இத்தகைய மகளிரை ஓம்புதற்குப் பிறிதொன்றும் இல்லாதிருத்தலின் நல்கூர்ந்தது என்றாள்.

அரும்பதவுரையாசிரியர் ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கும் ஒக்குமாகத் தனக்குத் தோற்றுதலால் தான்சாக உலகு கவிழும் என்னும் பழமொழிபோல என்பர்.

இவை மூன்றும் மாலைப் பொழுதுகண்டு தலைவி கூறியவை

51 : தீத்துழைஇ................வணங்குதும்

(இதன்பொருள்:) தீ துழைஇ வந்த - நெருப்பினுட் புகுந்து துழாவி அதன் வெம்மையைத் தானேற்றுக்கொண்டு உலகின்கண் வந்த; இச் செல்லல் மருள்மாலை தூக்காது - இத்தகைய துன்பத்தையும் மயக்கத்தையும் செய்கின்ற கொடிய மாலைப் பொழுதும் ஒன்றுண்டென்று ஆராயாமல்; துணிந்த இத்துயர் எஞ்சு கிளவியால் - எம்பெருமானால் துணிந்து கூறப்பட்ட நின்னில் பிரியேன் என்னும் இந்தத் துன்பம் நீங்குதற்குக் காரணமான தேற்றுரையோடு; பூக்கமழ் கானலில் - மலர்மணங் கமழா நின்ற கடற்கரைச் சோலையிடத்தே நின்னைச் சுட்டிக்காட்டிச் செய்த; பொய்ச் சூள பொறுக்க என்று - பொய்சூளின் பொருட்டு (அவரை ஒறுக்காமல்) பொறுத்தருளக என்று வேண்டி; மா கடல் தெய்வம் - பெரிய கடலுக்குத் தெய்வமாகிய வருணனே! நின் மலர் அடி வணங்குதும் - நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை அடியேம் வணங்குகின்றேங்காண்; என்க.

(விளக்கம்) தீயினுட்புகுந்து குடைந்தாடி அதன் வெம்மை முழுதும் ஏற்றுக் கொண்டு வந்த இம் மருள்மாலை என்க. செல்லல் - துன்பம். இத்தகைய மாலைக்காலம் என்பது ஒன்றுண்டு அதுதான் பிரிந்துறையும் மகளிர் உயிருண்ணும் என்று ஆராயாமல்; தலைவன் கானலில் கூறிய பொய்ச் சூள் என்க. பொய்ச்சூள் பொறுக்க என்றாளேனும் சூள் பொய்த்தமை பொறுக்க என்பது கருத்தாகக் கொள்க.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவஞ்சும் தலைவியைத் தேற்றுதற்குத் தலைவன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி அரிய சூள் செய்தனன், அதனை இப்பொழுது பொய்த்தான், அங்ஙனம் பொய்த் தானேனும் அதன் பொருட்டுத் தெய்வமே அவனை ஒறுத்திடேல்! பொறுத்தருள்க! என்று தலைவி கடற் றெய்வத்தை வேண்டுகின்றனள் என்க.

கடற்றெய்வம் - வருணன். வருணன் மேய பெருமண லுலகம் என்பது தொல்காப்பியம். (அகத்திணையியல் - 5.)

இனி கோவலன் பாடிய திங்கள் மாலை வெண்குடையான் என்பது தொடங்கி தீத்துழைஇ என்னும் மாதவி பாடிய இப்பாட்டீறாக அனைத்தும் முகநிலைவரி முரிவரி முதலிய பல்வேறு உறுப்புக்களையுடைய கொச்சகக்கலி என்னும் இசைத்தமிழாலியன்ற கானல் வரிப் பாடலாகும். கொச்சகக் கலி வெண்பாவானாதல் ஆசிரியத்தானாதல் முடிதல் வேண்டும் என்பது விதி ஆகலின், இக்கோவலன் தொடங்கிய கானல்வரியை மாதவி ஈண்டுக் கடவுள் வாழ்த்தோடு முடித்தனள். இனிக்கட்டுரை இடையிட்டுவந்த பாட்டுடைச் செய்யுளாகிய இக் கொச்சகத்தை அடிகளார் இயற்றமிழின் பாற்படுத்து ஆசிரியத்தான் முடிப்பர்.

இனி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல். பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை எனவும், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும் கவிஞர் பெருமான் சுப்பிரமணிய பாரதியார் நெஞ்சாரப் புகழ்ந்து போற்றுதல் ஒரு சிறிதும் மிகையன் றென்பதற்கு அடிகளார் ஈண்டுப் பாடிய கானல் வரிப் பாடல்கள் சிறந்த சான்றாக நின்று திகழ்வதனை உணர்வுடையோர் உணர்தல் கூடும்.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

52 : எனக்கேட்டு ................ அகவையா னெனவே

(இதன்பொருள் :) எனக்கேட்டு என்று மாமலர் நெடுங்கண் மாதவி பாடி முடித்ததனைக் கேட்டு; யான் கானல் வரி பாட - யான் அவள் மனம் மகிழவேண்டும் என்று கருதி அவள் குறிப்பின் படிக் கானல்வரி என்னும் உருக்களைப் பாடாநிற்ப; மாயத்தாள் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து - பொய்ம்மையுடைய கணிகை யாதலின் தான் யான் மகிழ்தலைக் குறிக்கொள்ளாளாய்; பிறிதொரு பொருள்மேல் தன் மனத்தை வைத்துத் தான் விரும்பியபடி பாடாநின்றனள்; என - என்று கருதி; தன் ஊழ்வினை யாழ் இசைமேல் வைத்து - தான் முற்பிறப்பிலே செய்த பழவினையாகிய ஊழ்வினை மாதவி பாடிய யாழினது இனிய இசையைத் தலைக்கீடாகக் கொண்டு; உருத்தது ஆதலின் - அவ்விசை யுருவமாக வந்து தன் பயனை நுகர்விக்கத் தொடங்கியதாதலானே; கோவலன் தான் - அதன் வயப்பட்ட அக்கோவலன்றானும்; உவவு உற்ற திங்கள் முகத்தாளை - உவவுநாள் பொருந்திய முழுத்திங்கள் போன்ற முகமுடைய அம்மாதவி நங்கையை; கவவுக்கை ஞெகிழந்தனனாய் - தனது நெஞ்சத்தினூடே கொண்டொழுகும் தனது ஒழுக்கத்தை நெகிழவிட்டவனாகி; ஈங்குப் பொழுது கழிந்தது ஆதலின் எழுதும் என்று உடன் எழாது - இற்றைப் பொழுது போயிற்றாதலால் இனியாம் மனைக்கு எழுந்து - செல்வேம் என்று அளியள அம்மாதவிக்குக் கூறி அவளும் எழத்தான் அவளோடெழாமல் தானமட்டுமே எழுந்து; ஏவலாளர் உடன் சூழ்தர - தனது ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர அவருடனே; போன பின்னர் - அக் கடற்கானலிடத்தினின்றும் வாய் வாளாது போன பின்னர்; மாதவி கையற்ற நெஞ்சினளாய் தாது அவிழ் மலர்ச்சோலை ஆயத்து ஒலியவித்து - மாதவியானவள் யாதொன்றுஞ் செய்யத் தோன்றாத மம்மர் கொள் நெஞ்சத்தவளாய் ஆங்குப் பூந்துகள் சொரியும் மலர்கள் நிரம்பிய அக்கடற்கரைச் சோலையினிடத்தே ஆரவாரஞ் செய்துநின்ற தன் தோழியர் ஏவன்மகளிர் முதலியோரைக் கை கவித்து அவர்தம் ஆரவாரத்தை அடக்கியவளாய்த் தானும் வாய் வாளாது; வையத்தின் உள்புக்கு - தான் ஊர்ந்துவந்த பண்டியின் அகத்தே புகுந்து; காதலன் உடன் அன்றியே - தனதாருயிர்க் காதலன் தன்னுடன் வரப்பெறாது நல்கூர்ந்து; தன் மனை - தனதில்லத்திற்குச் சென்று; மா இரு ஞாலத்து அரசு தலைவணக்கும் - மிகப் பெரிய இவ்வுலகத்திலுள்ள மன்னரை யெல்லாம் தனக்குத் தலை வணங்கும்படி செய்யும் பேராற்றல் வாய்ந்த; சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் - முகபடாமணிந்த யானையையும் ஒளி வீசும் கொற்றவாட் படையையும் உடைய தங்கள் மன்னனாகிய சோழன்; ஆழி மால்வரை அகவையா - சக்கரவாளம் என்னும் மலையும் தன்னகத்ததாகும்படி மாலை வெள் குடை கவிப்ப - வாகை மாலையினையுடைய தனது கொற்ற வெண்குடையைக் கவித்து நீடூழி வாழ்வானாக! என - என்று வாழ்த்தி; புக்காள்-புகுந்தனள் என்பதாம்.

அடிகளார் இக் கொச்சகக்கலியை ஆசிரியத்தான் முடித்தனர்.

(விளக்கம்) மாயத்தாளாகலின் தான் ஒன்றின் மேல் வைத்துப் பாடினாள் என்று அவள் மனம் மாறுபட்டாளாகக் கருதிய கோவலன், அவள் கணிகையாதலை நினைவு கூர்ந்து அவட்கிஃதியல்பு என வெறுத்துக் கூறினன். அடிகளார் இஃது அவன் பிழையன்று ஊழின்பிழையே என்றிரங்குவார் ஊழ்வினை வந்துருத்தது ஆகலின் என்று ஏதுவை விதந்தோதினர். மற்று மாதவிதான் அளியள் தான் ஒன்றின் மேல் மனம் வைத்தாள் போலத் தனதிசையாலே காட்டினள் அன்றி அவள் நெஞ்சம் சிறிதும் மாறுபட்டாளில்லை என அறிவுறுத்துவார் அவளை உவவு உற்ற திங்கள் முகத்தாள் என்று விதந்தெடுத்தோதுமாற்றால் காதலின் நிறைவைக் காட்டினர். மற்று அடிகளார் ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதைக் கோவலன் மேல் வைத்துக் காட்டும் கருத்தினால் மாதவி குற்றமற்ற கோவலன் வரிப் பாடலில் அவனுக்கேலாத மறுவொன்று கண்டமைக்குக் காரணம் அவளுக்கும் ஊழ்வினை வந்துருத்ததே ஆகும் என யாம் ஊகித்துக் கோடல் அடிகளார் திருவுளத்திற்கும் ஒக்கும் என்க.

இனி இக்கானல் வரியை :

மாதவி குற்ற நீங்கிய யாழ் கையில் வாங்கி, எண்வகையால் இசை எழீஇத் தீர்ந்து, ஓர்த்துக் கோவலன் கைநீட்ட அவனும் நோக்கினவும் பாணியும் வாசித்தல் தொடங்கும், ஆங்குப் பாடல் கேட்ட மாதவியும் இவன் தன்னிலை மயங்கினான் என வாங்கி, கானல்வரிப் பாடற்பாணி வியப்பெய்த மகிழப் பாடத் தொடங்கும். (தொடங்கியவள்) வணங்குதும் எனக் கேட்டு மாயத்தாள் ஒன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள் என உருத்ததாகலின் உடனெழாது கோவலன் போன பின்னர் ஆயத்து ஒலியவித்துப் புக்கு மாதவி தன்மனை வணக்கும் செம்பியன் கவிப்ப என வாழ்த்திப் புக்காள் என்று வினை முடிவு செய்க.

கானல் வரி முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #13 on: February 23, 2012, 01:39:54 PM »
8. வேனிற்காதை

 அஃதாவது - கோவலனுக்கு முற்பிறப்பிற் செய்த பழவினை மாதவி பாடிய யாழிசைமேல் வைத்து வந்துருத்ததாகலின் அவ்வுவ வுற்ற திங்கண் முகத்தாளை வெறுத்துத் தன் ஏவலருடன் போயபின்னர் அப்பருவம் தானும் வேனிற் பருவமாகலின் காதலனுடனன்றித் தமியளாய் ஆயத்தோடு தன் மனைபுகுந்த மாதவி அவனது பிரிவாற்றாமையாலே பட்ட துன்பத்தையும் அதனை ஆற்றியிருத்தற்கு அவள் செய்த செயல்களையும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்  5

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை   10

புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய   15

மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்  20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி  25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,  30

பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்  35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்  40

நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை  45

வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட  50

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு,  55

மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்  60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்  65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்  70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட  75

மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய  80

நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85

கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்  90

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்  95

மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்   100

கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்  105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,  110

அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை.  115

காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

(வெண்பா)

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.

ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.

உரை

வேனில் வரவு

1-7 : நெடியோன் ............ வந்தனனிவனென

(இதன்பொருள்:) நெடியோன் குன்றமும் தொடியோள் பவுவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு - வடக்கின் கண் திருமால் எழுந்தருளிய வேங்கடமலையும் தெற்கின்கண் குமரிக்கடலும் (கிழக்கின்கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களுமே) தமிழ்மொழி வழங்குகின்ற நாட்டிற்கு எல்லையாம் என்று சான்றோரால் அறுதியிடப்பட்ட மூவேந்தருடைய குளிர்ந்த புனலையுடைய நல்ல நாட்டிடத்தே; மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் - மாடங்களாற் சிறந்த மதுரையும் பெருமை பொருந்திய உறந்தையும் மறவரின் ஆரவாரமுடைய வஞ்சியும் முழங்குகின்ற காவிரி நீரையும் கடல் நீரையுமுடைய பூம்புகாரும் என்னும் நான்கு தலைநகரங்களினும்; அரைசு வீற்றிருந்த - தனது ஆணையைச் செலுத்தி அரசனாக வீற்றிருந்த; உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய - புகழமைந்த சிறப்பினையுடைய மன்னனாகிய காமவேள் மகிழ்தற்குக் காரணமான துணைவனாகிய; இன் இளவேனில் இவண் வந்தனன் என - இன்பந்தரும் இளவேனில் என்னும் இளவரசன் இப்பொழுது இவ்விடத்தே வந்து விட்டான் என்று; என்க.

(விளக்கம்) நெடியோன் என்றது நெடுமையால் உலகளந்த பெருமானாகிய திருமாலை. அவன் எழுந்தருளியிருக்கும் குன்றுமாவது திரு வேங்கடம். கிழக்கினும் மேற்கினும் கடல்களே எல்லையாகலின் அவற்றைக் கூறிற்றிலர். பனம்பாரனாரும் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனவே ஓதுதலும் உணர்க. இவ்விரண்டினையும் கூறியதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் ஈண்டுணரற்பாற்று. அது வருமாறு : - நிலங்கடந்த நெடு முடியண்ணலை நோக்கி உலகந்தவஞ் செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினர். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினர். இவ்விரண்டினையும் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லையாயின. குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டதாகலின் கிழக்கும் மேற்கும் கடல் எல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினர் எனவரும்.

இனி குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டது என்னும் வரலாற்றைக் குறிப்பை ஈண்டு அடியார்க்குநல்லார் கூறும் விளக்கத்தால் அறிதல் இன்றியமையாதாம் அது வருமாறு.

தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரி என்பதாயிற்று : ஆகவே தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பவுவமும் என்றது என்னை? யெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீயினார் காய்சின வழுதி முதற் கடுங் கோனீறாகவுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்று மாற்றிற்கும் குமரி யென்று மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகரைநாடும் ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியுந் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும். கடல்கொண்டொழிதலாற் குமரியாகிய பவுவமும் என்றார் என்றுணர்க. இஃதென்னை பெறுமாறெனின் வடிவே லெறிந்த வான்பகை பொறாது -பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள (11 : 18 -20) என்பதனானும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும் பிறவாற்றானும் பெறுதும் எனவரும்.

3. மதுரையை நான்மாடக் கூடல் என்பதுபற்றி மாடமதுரை என்றார். பீடு -பெருமை. 4. கலி-ஆரவாரம். புனல் - காவிரிப் புனலும் கடலும் என்க. 5. உரை - புகழ். 6. மன்னனாகிய மாரன். வேனில், தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியாகலின் பால்பிரிந்து வந்தனன் என உயர்திணை முடிபேற்றது. வந்தது என்பதும் பாடம்.

வந்தனன் என்பது வருவான் என்னும் எதிர்காலச் சொல்லை விரைவு பற்றி இறந்த காலத்தாற் கூறியபடியாம். இதனை,

வாராக் காலத்து நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள வென்மனார் புலவர்  (வினை 44)

எனவரும் தொல்காப்பியத்தான் உணர்க.

அடியார்க்குநல்லார் - காமனுக்குத் தேர் தென்றலும் புரவி கிள்ளையும் யானை அந்தியும் சேனை மகளிருமாதலால் தேர் தென்னர் காவலும் புரவி கிள்ளி காவலும் யானை சேரமான் காவலுமாக்கித் தானும் தன்சேனையும் புகாரில் வீற்றிருந்தான் என்பது கருத்து என்று கூறி இதற்கு :

திண்பரித் தென்றலந் தேரும் தார்புனை
வண்பரிக் கிள்ளையு மாலை யானையும்
கண்கடைப் படுகொலைக் காமர் சேனையும்
எண்படப் புகுந்தன னிரதி காந்தனே

என, ஒரு பழம்பாடலையும் எடுத்துக் காட்டினர்.

இதுவுமது

8-13 : வளங்கெழு ........... கூற

(இதன்பொருள்:) வளம் கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின் - செந்தமிழ் வளமும் சந்தன வளமும் பொருந்திய பொதிய மலைக்கண் எஞ்ஞான்றும் வீற்றிருந்த குறுமுனிவன் ஈன்ற இளமையுடைய தென்றல் என்னும் தூதுவன் வந்து கூறினன். ஆதலாலே; கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் - பூங் கொடிகள் செறிந்த தேமாஞ்சோலையாகிய பாசறைக் கண்ணிருந்த குயிலோன் என்கின்ற படைத்தலைவன் சிறுக்கன் அத்தென்றற் றூதன் அருளிச்செய்த ஆணைக்கிணங்க; மகர வெல் கொடி மைந்தன் சேனை புகார் அறுங்கோலம் கொள்ளும் என்பது போல் - நம் மன்னனாகிய மகரமீன் கொடியுயர்த்த வலிமைமிக்க காமவேளின் படையிலுள்ளீரெல்லாம் குற்றந்தீரப் போர்க் கோலங் கொள்ளுங்கோள் என்றறிவிப்பான் போல; பணிமொழி கூற-யாண்டுங் கூவியறிவியா நிற்ப; என்க.

(விளக்கம்) 8. வளம் - மொழிவளமும்சந்தன முதலிய பொருள் வளமும் என்க. மாமுனி - அகத்தியன். 9. இளங்காலாகிய தூதன் - மெல்லிய தென்றலாகிய தூதன். காற்றூதன் - காலினால் விரைந்து செல்லும் தூதன் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. இத்தகைய தூதனை ஓட்டன் என்பர். மரக வெல்கொடி மைந்தன் - காமவேள் - அவன் வலிமை மிக்கவன் ஆதலின் அப்பொருள் தோன்ற மைந்தன் என்றார். மைந்து - வலிமை. மைந்தன் சேனை என்றது மகளிரை. அவர் கோலங் கோடலாவது - பட்டுநீக்கித் துகிலுடுத்துப் பேரணிகலன் அகற்றி மெல்லணி யணிந்து கூந்தற்குக் கமழ்புகை யூட்டுதல் முதலியன செய்து தங் காதலரோடு நிகழ்த்தும் கலவிப்போர்க்கு அமைதல். இரவிற்கோர் கோலங் கொடியிடையார் கொள்ள என்றவாறு. அக்காலத்திற்கு ஏற்பனவுடுத்து முடித்துப் பூசிப் பூணுதல் என்பார் அடியார்க்குநல்லார். சேனை என்றமையால் கோலம் என்பது போர்க்கோலம் என்பதுபட நின்றது. சோலை - மாஞ்சோலை; அஃதீண்டுப் பாசறை என்பதுபட நின்றது. படையுள்படுவோன் என்றது படைத்தலைவன் கட்டளையை மறவர்க்கு அறிவிக்கும் தொழிலையுடையோன்; அவனைப் படைக்கிழவன் சிறுக்கன் என்பர். இவன் அறிவிக்குங்கால் சின்னம் என்னும் ஒருதுளைக் கருவியை ஊதுமாற்றால் அறிவிப்பன் ஆதலின் இவனுக்குச் சின்னமூதி, காளமூதி என்னும்பெயர்களும் வழங்கும். பணித்தல் - கட்டளையிடுதல்.

மாதவியின் செயல்

14 - 26 : மடலவிழ் ........... இருக்கையளாகி

(இதன்பொருள்) மடல் அவிழ்கானல் கடல் விளையாட்டினுள் - இதழ் விரிகின்ற மலர்கணிரம்பிய கடற்கரைச் சோலையையுடைய கடல் விளையாட்டு நிகழுமிடத்தே; கோவலன் ஊட - மாயத்தாள் பிறிதொன்றன்மேல் மனம் வைத்துப் பாடினள் என்று கருதிக் கோவலன் தன்னோடு ஊடிப்பிரிந்து போனமையின்; கூடாது ஏகிய - அவனைக் கூடும் செவ்வி பெறாது தமியளாய்த் தன் மனைபுகுந்த; மாமலர் நெடுங்கண் மாதவி - கரியமலர் போலும் நெடிய கண்ணையுடைய மாதவி; விரும்பி - குயிலோன் கூறிய பணிமொழியை விரும்பி; வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி - வானிடத்தே மிகவும் உயர்ந்துள்ள மேனிலை மாடத்தின் கண்ணமைந்த ஒரு பக்கத்தமைந்த நிலாமுற்றத்தின் கண் ஏறி; மாண் இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் - மாண்புடைய அணிகலன்களும் கொற்கை முத்தும் பொதியிற் சந்தனமும் அவ்வேனில் வேந்தனுக்குத் தான் இறுக்கும் கடமைப் பொருள்களாகலின்; கொங்கை குங்கும வளாகத்து முன்றில் மை அறு சிறப்பின் கை உறை ஏந்தி - அவ்வேனில் வேந்தன் வீற்றிருக்கும் தனது முலைமுற்றத்தே குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பிலே அவையிற்றை அவ் வேந்தனுக்குக் காணிக்கையாக ஏந்தி அவையிற்றைச் செலுத்திப் பின்னர்த் தொழுது தன் கையில் வாங்கி; ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விரத்தி நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற் கண்ணதாகிய தாமரை யிருக்கையென்னும் நல்ல கூறுபாடமைந்த இருக்கையை உடையளாகி; அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை குலையாத முறைமையினையுடைய தனது யாழினைக் கைக்கொண்டு; மதுரகீதம் பாடினள் மயங்கி - முந்துற மிடற்றினாலே இனிய பண்ணைப் பாடினளாக அதுதான் மயங்குதலாலே என்க.

(விளக்கம்) 16. விளையாட்டே வினையாயிற்று என்னும் பழமொழி பற்றி கடல் விளையாட்டினுள் கோவலன் ஊட என்றார். ஊழ்வினை விளையாட்டையே வினையாக்கி விடுவதனை இராமன் உண்டைவில் விளையாட்டே வினையானமையானும் உணர்க. 15. கூடாதேசிய என்றது கூடுதற்குச் செவ்வி பெறாது சென்ற என்றவாறு. 16. மாதவி குயிலோன் கோலங்கொள்ளும் என்பதுபோற் கூற அங்ஙனம் அவ்வேனிலரசனைக் கோலங்கொண்டு வரவேற்க விரும்பி என்க. 17-18. வேனில்வேந்தனை எதிர்கொள்ளுமிடம் மேனிலை மருங்கில் வேனிற் பள்ளி யாதலின் அதன்கண் ஏறினள் என்க. மாணிழை என்பதனை அன்மொழித் தொகையாக் கொண்டு மாதவி என்றனர் பிறரெல்லாம். மாட்சிமையுடைய அணிகலன்களும் இன்றியமையாமையின் எம் கருத்தே சிறப்புடைத்தாம். மாணிழையும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. 19. சந்து - சந்தனம். 20. தன்கடன் - தான்வேனில் வேந்தனுக்கிறுக்கக் கடவதாகிய கடமைப்பொருள்.

வேனில் வேந்தன் வீற்றிருக்கும் அரண்மனை கொங்கை யாகலின் அதன் முன்றிலிலே இவற்றை ஏந்தினள் என்றவாறு. ஏந்தினள் என்றது இவற்றை முலைக்கண் அணிந்து பூசி என்பதுபட நின்றது. அங்ஙனம் செய்தலே அவனுக்குத் தன்கடன் இறுத்தவாறாம் என்க.

22. கையுறை - காணிக்கை. காணிக்கை செலுத்துவோர் பெறுவோர் முன்றிலிற் கொணர்ந்து செலுத்துவராதலின் கொங்கை முன்றிலில் ஏந்தி என்றார். முலை - வேனிலரசன் வீற்றிருக்கும் அரண்மனை. மார்பு - அதன் முற்றம்.

24. அதிரா மரபின் .... மயங்கி என்னுந் தொடரை, 26. இருக்கையளாகி என்பதன் பின்னாகக் கூட்டுக. 25. விருத்தி - இருக்கை. இருக்கை பல வகைப்படும். அவை திரிதரவுடையனவும் திரிதரவில்லனவும் என இருவகைப்படும். அவற்றுள் திரிதரவுடையன : யானை தேர் புரவி பூனை முதலியனவாம். ஈண்டுக் கூறப்பட்ட ஒன்பது வகை இருக்கையும் திரிதரவில்லனவாம். அவையாவன: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. பதுமுகம் எனினும் பதுமாசனம் எனினும் தாமரையிருக்கை எனினும் ஒக்கும்.

தலைக்கண் விருத்தி என்றது பதுமுகத்தை. இவ்விருக்கை யாழ்வாசிப்போர்க்கு நன்மையுடைய பகுதியை யுடையதாதலின் நன்பாலமைந்த இருக்கையள் என்றார். 23. அதிராமரபு - கோவை குலையாத முறைமை. பிரிவாற்றாமையால் மிடற்றாற் பாடிய இசை மயங்கியது. அதுகண்டு பின்னர் யாழ் இசைக்கத் தொடங்கினள் என்க.

இனி ஈண்டு அடியார்க்குநல்லார் பதுமாசனமாக விருந்தவள் தனக்கு நாயகன் இன்மையில் தியாந நாயகனாக மானதத்தால் நோக்கி எதிர்முகமாக விருந்து வாசித்தலைக் கருதினாள் என்னும் விளக்கம் போலி என்றொழிக. கோவலனிருக்கவே மாதவிக்கு நாயகனில்லை என்றிவர் கூறுவது வியப்பேயாம்.

மாதவி யாழிசைத்தல்

27 - 35 : வலக்கை .......... கேட்டனள்

(இதன்பொருள்) வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி - தனது வலக்கையைப் பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரல் நான்கையும் நிமிர்த்துப் பதாகைக் கையாக்கி யாழினது கோட்டின் மிசைவைத்து அக் கையால் கோடு அசையாதபடி பிடித்து; இடக்கை நால்விரல் மாடகம் தழுவி - இடக்கையினது நான்கு விரலானும் மாடகத்தை உறப்பிடித்து; செம்பகை ஆர்ப்புகூடம் அதிர்வு வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து - செம்பகையும் ஆர்ப்பும் கூடமும் அதிர்வும் ஆகிய வெவ்விய பகைகள் நீங்குதற்குரிய விரகைக் கடைப்பிடித்து அறிந்து; பிழையாமரபின் ஈரேழ் கோவையை - அணியு முறைமையிற் பிழைபடாத நரம்பினாலே பதினான்கு நரம்புகளையும்; உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை நரம்பு முதலாகவும் கைக்கிளை நரம்பு இறுதியாகவும் கட்டி: இணை கிளை பகை நட்பு என்று இந்நான்கின் - இணை நரம்பும் கிளை நரம்பும் பகை நரம்பும் நட்பு நரம்பும் என்று கூறப்படும் இந்த நான்கின் வழிகளிலே; இசை புணர் குறிநிலை எய்த நோக்கி - இசைபுணரும் குறிநிலையைப் பொருந்த நோக்கி; குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் ஆராய்ந்து செவியால் ஓர்ந்து தீதின்மை அறிந்தாள் என்க.

(விளக்கம்) 27. பதாகைக்கையாவது - எல்லா விரலும் நிமிர்த்து இடை இன்றிப் பெருவிரல் குஞ்சித்தல் பதாகையாகும் என்பதனான் அறிக. இதனியல்பு அரங்கேற்று காதையுள் (18) பிண்டிக்கை விளக்கத்துங் கூறப்பட்டது கோடு - யாழின் தண்டு. 28 மாடகம் - நரம்பை வீக்கும் கருவி. (ஆணி). 29 - 30. செம்பகை - தாழ்ந்த இசை. ஆர்ப்பு - தனக்கியன்ற மாத்திரை யிறந்த இசை. அஃதாவது மிக்கிசைத்தல். கூடம் - பகைநரம்பின் இசையினுள் மறைந்து தனதிசை புலப்படாமை. அஃதாவது ஓசை மழுங்குதல். அதிர்வு - இசை சிதறுதல். இவற்றை,

இன்னிசை வழியதன்றி யிசைத்தல் செம்பகையதாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைந்திடுஞ் சுருதியார்ப்பே
மன்னிய இசைவ ராது மழுங்குதல் கூட மாகும்
நன்னுதால் சிதறவுந்தல் அதிர்வென நாட்டி னாரே

எனவரும் செய்யுளானுணர்க. இந்நான்கு குற்றங்களும் மரக்குற்றத்தாற் பிறக்கும். மரக்குற்றமாவன: நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப்பாற்படல் கோண் நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல் சேரினேர் பண்கள் நிறமயக்குப்படும் சிற்றிடையே என்பதனான் அறிக.

31. ஈரேழ் கோவை - பதினான்கு நரம்பு தொடுக்கப்பட்ட யாழ். இதனைச் சகோடயாழ் என்பர் அடியார்க்குநல்லார். சகோடயாழ் என்னும் வழக்கு இளங்கோவடிகளார் காலத்தில்லை என்பதனை முன்னுரையிற் காண்க. அரும்பதவுரையாசிரியர் ஈரேழ் கோவை என்பதற்குப் பதினாலு நரம்பு என்றே குறிப்பிட்டனர்.

மெலிவிற் கெல்லை மந்த வுழையே (குரலே ?) என்பதனால் உழைகுரலான மந்தமும், வலிவிற் கெல்லை வன்கைக் கிளையே øக்கிளை யிறுவாயான வலிவும் ........... பார்த்து கட்டப்பட்ட தென்பர் அரும்பதவுரையாசிரியர். இனி அடியார்க்குநல்லார், இக்குரல் முதல் ஏழினும் முன்தோன்றியது தாரம்;

தாரத்துட் டோன்றும் உழையுழையுட் டோன்றும்
ஒருங்குரல் குரலினுட் டோன்றிச் - சேருமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு

என்பதனால் தாரத்தின் முதற்பிறப்பதாகிய உழை குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற்பிறக்கக் கட்டி யென்க என்பர்.

35. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்குப் பழைய வுரையாசிரியர் இருவரும் குரல்முதலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாள் எனவே கூறினர். கூறவே மாதவி, உழை முதலாகக் கைக்கிளை இறுவாயாகக் கட்டிய இவ்வீரேழ் கோவையில் முதன் முதலாகக் குரல் குரலாகிய செம்பாலை என்னும் பண்ணை யிசைக்கத் தொடங்கிப் பின்னர்த் தாரத்தாக்கஞ் செய்து இடமுறை திரியும் பண்களை இசைத்தாள் எனக் கருதி அடியார்க்குநல்லார் ஈண்டுக் கூறும் விளக்கம் கூர்ந்துணரற்பாலதாம். அது வருமாறு: இனி வட்டப் பாலை இடமுறைத்திரிபு கூறுகின்றார். குன்றாக் குரற்பாதி தாரத்தில் ஒன்று - நடுவண் இணை கிளையாக்கிக் - கொடியிடையாய் தாரத்தில் ஒன்று விளரிமேல் ஏறடவந் நேரத்தில் அதுகுரலாம் நின்று (இஃது) என்னுதலிற்றோ வெனின், உழை குரலாகிய கோடிப்பாலை நிற்க - இடமுறை திரியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை; இதனிலே குரலிற் பாதியும் தாரத்தில் ஒன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின் மேலேறட விளரி குரலாய்ப் படுமலைப்பாலையாம்; இம்முறையே துத்தம் குரலாயது செவ்வழிப்பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம்; கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம்; என அந்தரம் ஐந்தும் நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில் தார நரம்பின் அந்தரக்கோலைத் தாரமென்றது தன்னமுந் தாரமுந் தன்வழிப் படர என்னுஞ் சூத்திரவிதியா னென்க. இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும். அவற்றுட் செம்பாலையுட் பிறக்கும் பண்கள்: பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம், செந்துருத்தி, உதயகிரி யெனவிவை. பிறவும் விரிப்பின் உரை பெருகுமாதலின் அவற்றை வந்தவழிக் கண்டுகொள்க. நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும், பாற்படு திறனும் பண்ணெனப் படுமே என்றார்? எனவரும்.

ஈண்டு அடியார்க்குநல்லார் இனி, வட்டப்பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் என்று தொடங்கிக் கூறும் விளக்கம் இடமுறைப்பாலைக்குப் பெரிதும் பொருந்திய வுரையேயாம். மற்று ஈண்டுக் கூறப்படும் பாலைகள் அரங்கேற்று காதைக்கண் கூறப்படும் அவர் உரைக்கே மாறுபடுகின்றது என்பாரும் பாடந்திருத்துவோரும் இவ்வுரையைக் கூர்ந்து நோக்கியதாகத் தோன்றவில்லை. மற்று ஈண்டுக் உழைமுதலாகக் கோடிப் பாலை முதலிற் பிறக்கக் கட்டப்பட்டமையேயாம். அரங்கேற்றுபாதையில் இளிமுதலாகக் கோடிப்பாலை பிறக்கக் கட்டிய யாழிற்குக் கூறியபடியால் மாறுபட்டுத் தோன்றுகின்றன. இஃது அறியாமல் மயங்கினவர் கூற்றே அஃதென்க.

இனி, அரும்பதவுரையாசிரியர் குறிப்பில் இக் கருத்துளதாகத் தோன்றவில்லை. அவர் (31) பிழையா மரபின் ஈரேழ் கோவையை (32) உழைமுதற் கைக்கிளை யிறுவாய் கட்டி என்றது. உழை முதலாகக் கைக்கிளை யீறாகப்பண்ணி என்றவாறு. இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை உழையே ஏழு நரம்பியன்ற பின்னர் கண்ணிய கீழ்மூன்றாகி மேலும் நண்ணல் வேண்டும் ஈரிரண்டு நரம்பே குரலே துத்தம் இளியிவை நான்கும், விளரி கைக்கிளை மும்மூன்றாகித் தளராத் தாரம் உழையிவை யீரிரண் டெனவெழு மென்ப வறிந்திசி னோரே என்பர்.

மேலும் அரும்பதவுரையாசிரியர், குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்கு, விளக்கம் கூறுமிடத்து, குரல்நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்து அதன் முறையே அல்லாத நரம்புகளையும் ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையைச் செவியாலே ஓர்ந்தாள் என்பர். இங்ஙனம் செய்வதனையே வண்ணப்பட்டடை, யாழ்மேல் வைத்தல் என அரங்கேற்றுகாதைக்கண் கூறப்பட்டதென் றுணர்க.

35 - 42 : அன்றியும் ........ கழிப்பி

(இதன்பொருள்) அன்றியும் - அங்ஙனம் அறிந்ததோடல்லாமல்; வரன்முறை மருங்கின் - இசைநூல் வரலாற்று முறைமைப்படி ஐந்தின் (உம்) ஏழினும் - ஐந்தாம் நரம்பாம் முறைமையினாலே இளி குரலாக ஏழு நரம்புகளினும் வாசித்தாள்; எங்ஙனம் வாசித்தனளோவெனின்; உழைமுதலாகவும் உழையீறு ஆகவும் குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் - உழை குரலாகவும் உழை தாரமாகவும், குரலே குரலாகவும் குரலே தாரமாகவும், நிரலே; அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி- அகநிலை மருதம் புறநிலை மருதம் அருகியல் மருதம் பெருகியல் மருதம் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிப்பண்களையும் அழகும் இனிமையுமாகிய நன்மையுண்டாக இசைத்துப் பார்த்து; மூவகை இயக்கமும் முறையுளி கழிப்பி - வலிவும் மெலிவும் சமனும் என்னும் மூவகைப்பட்ட இசையியக்கங்களையும் வரலாற்று முறையானே இசைத்து அத்தொழிலைக் கழித்தென்க.

(விளக்கம்) 36. வரன்முறை - இசைத்தமிழின் வரலாற்று முறைமை. ஐந்தினும் ஏழினும் என்புழி, ஈரிடத்தும் உம்மை இசை நிறை.

37 - 40. உழைகுரலாகிய அகநிலை மருதமும்; உழைதாரமாகிய (அஃதாவது கைக்கிளை குரலாகிய) புறநிலை மருதமும். குரல் குரலாகிய அருகியன் மருதமும் குரல்தாரமாகிய (அஃதாவது தாரம் குரல் ஆகிய) பெருகியன் மருதமும் என நிரனிறையாகக் கொள்க. இவற்றை அடியார்க்குநல்லார் நிரலே கோடிப்பாலை, மேற்செம்பாலை, செம்பாலை, விளரிப்பாலை எனக் கூறி இவற்றை சாதிப் பெரும் பண்கள் என்றும் ஓதுவர்.

இனி, அரும்பதவுரையாசிரியர் இவற்றிற்குக் கூறும் விளக்கம் வருமாறு:

அகநிலை மருதமாவது: ஒத்த கிழமை யுயர்குரல் மருதம், துத்தமும் விளரியும் குறைவுபெறல் நிறையே - இதன் பாட்டு,

ஊர்க திண்டே ரூர்தற் கின்னே
நேர்க பாக நீயா வண்ணம்

நரம்புக்கு மாத்திரை பதினாறு.

புறநிலை மருதம்: குரல் உழை கிழமை துத்தம் கைக்கிளை குரலாமேனைத் தாரம் விளரி யிளி நிறைவாகும். இதன் பாட்டு,

அங்கட் பொய்கை யூரன் கேண்மை
திங்க ளோர்நா ளாகுந் தோழி.

நரம்பு (க்கு மாத்திரை) பதினாறு.

அருகியன் மருதம்: குரல் கிழமை கைக்கிளை விளரி யிளிகுரல் நிறையா மேனைத் துத்தந் தாரம் இளியிவை, நிறையே. இதன் பாட்டு,

வந்தா னூரன் மென்றோள் வளைய
கன்றாய் போது காணாய் தோழி.

நரம்பு ............ பதினாறு.

பெருகியன் மருதம் பேணுங் காலை அகநிலைக்குரிய நரம்பின திரட்டி, (முப்பத்திரண்டு) நிறை குறை கிழமை பெறுமென மொழிப, இதன் பாட்டு,

மல்லூர் ......... நோவ வெம்முன்
சொல்லற் பாண செல்லுங் காலை
எல்லி வந்த நங்கைக் கெல்லாம்
சொல்லுங் காலைச் சொல்லு நீயே

நரம்பு முப்பத்திரண்டு.

அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி - உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழை குரல் தாரம் இளி தாரம் துத்தம் இளி உழை இவை உரைப்பிற் பெருகும் எனவரும்.

42. மூவகை யியக்கம் : வலிவு மெலிவு சமம் என்பன.

இனி, ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும் (பிங்கலந்தை) என்பவாகலின், ஈண்டுச் சாதிப் பெரும்பண்கள் நான்கற்கும் இருபத்தொரு திறங்கள் அமைந்துள்ளன. இவற்றினுள் பாலை யாழ்த்திறன் ஐந்து குறிஞ்சி யாழ்த்திறன் எட்டு மருத யாழ்த்திறன் நான்கு, செவ்வழியாழ்த்திறன் நான்கு ஆக இருபத்தொன்றாகும்.

இனி, இவைதாம் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என வகைக்கு நான்காகி எண்பத்து நான்காம், பெரும்பண் நான்கும் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்னும் இவற்றாற் பெருக்கப் பதினாறாம். அவையாவன,

ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்
ஆகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
தேவதாளி நிருப துங்க ராகம்
நாகராகம் இவற்றுட் குறிஞ்சியாழ்
செந்து மண்டலி யாழரி மருதயாழ்
ஆகரி சாய வேளர் கொல்லி
கின்னரம் செவ்வழி வேளாவளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண்

எனவரும் (பிங்கலந்தை - 1380).

பெரும்பண் பதினாறும் முற்கூறப்பட்ட எண்பத்துநான்கு திறனும் தாரப்பண்டிறம் (1) பையுள்காஞ்சி (1) படுமலை (1) ஆகப் பண்கள் நூற்றுமூன்றும் எனவும் பிறவாறும் கூறுவாரும் உளர். இவையெல்லாம் இன்னும் ஆராய்ந்து காண்டற்குரியனவேயாம். இசைத் தமிழ் பற்றிய இலக்கண நூல்கள் பல இறந்தொழிந்தமையால் இவற்றை ஆராய்ந்து துணிதலும் செயற்கரிய செயலென்றே தோன்றுகின்றது.

43 - 44 : திறந்து .......... மயங்கி

(இதன்பொருள்) திறத்து வழிப்படுஉம் தெள் இசைக் கரணத்து - திறம் என்னும் பண்கள் பாடுதற்குரிய நெறியிலிசைத்தற்குக் காரணமான தெளிந்த இசையை எழுப்புகின்ற செய்கையின்கண்; ஒரு புறப்பாணியில் - பிறிதொரு பாட்டுவந்து விரவப்பட்டு; பூங்கொடி - பூங்கொடி போல்வாளாகிய மாதவி; மயங்கி - மனமயங்கி; என்க.

(விளக்கம்) முற்கூறிய நால்வகைப் பெரும்பண்களைப் பாடி முடித்துப் பின்னர், திறப்பண்களைப் பாடத் தொடங்கியவள் தான் கருதிய திறத்திற்குப் புறம்பான இசைவந்து விரவுதலாலே மாதவி மயங்கினள் என்க. இம்மயக்கத்திற்குக் காரணம் கோவலன் பிரிவாற்றாமை என்பது கூறாமலே அமையும். ஆற்றாமை மிகுதியாலே அவள் அவ்விசைத் தொழிலைக் கோவலனுக்கு மேலே முடங்கல் வரையத் தொடங்குகின்றாள்.

இனி, புறத்தொரு பாணியில் மயங்கி என்பதற்குப் புறநிலையாகிய மருதப்பண்ணை வாசித்தலிலே மயங்கி என்றும், புறநீர்மை என்னும் திறத்தில் மயங்கி என்றும் உரைப்பாருமுளர்.

மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைதல்

45-53 : சண்பகம் ........... செவ்வியளாகி

(இதன்பொருள்) விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட ஒரு தனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் - மணங்கமழுகின்ற மலர்க்கணைகளாலேயே பெரிய நிலவுலகத்தில் வாழ்கின்ற எல்லா வுயிரினங்களையும் அடக்கித் தன்னடிப்படுத்து ஆட்சி செய்த ஒப்பில்லாத தனிச் செங்கோலையுடைய ஒப்பற்ற வேந்தனாகிய காமவேளினது கட்டளையாலே; ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் - ஒரு திசையன்றி நாற்றிசையினுமுள்ள நாட்டில் வாழ்வோரெல்லாம் கைகுவித்து வணங்கி ஏற்றுக் கொள்ளுதற்குரிய அவனது அழைப்பிதழாகிய முடங்கலை; போக்கும் செவ்வியள் ஆகி - வரைந்து தானே போக்குதற்குரியதொரு நிலையினை எய்தியவளாகி; சண்பகம் மாதவி தமாலம் கருமுகை மல்லிகை வெண்பூ வேரொடு மிடைந்த அம் செங்கழு நீர் ஆய்இதழ் எதிர் கத்திகை - சண்பகப்பூவும் குருக்கத்திப்பூவும் பச்சிலையும் பிச்சிப்பூ மல்லிகையினது வெள்ளிய பூ வெட்டிவேர் என்னும் இவற்றோடு செறித்த அழகிய செங்கழுநீர் மலரில் ஆராய்ந்தெடுத்த இதழ்களையும் உடைத்தாய்த் தான் அணிந்திருந்த கத்திகை என்னும் மலர் மாலையினது; இடைநிலத்து யாத்த - நடுவிடத்தே வைத்துக் கட்டப்பட்ட; எதிர் பூஞ் செவ்வி முதிர்பூ தாழை வெள்தோட்டு முடங்கல் - மேலே கூறப்பட்ட மலர்மணங்களோடு மாறுபட்ட மணத்தையுடைய பருவம் முதிர்ந்ததொரு தாழையினது பூவினது வெள்ளிய இதழாகிய ஏட்டின்கண்; என்க.

(விளக்கம்) 45-6. சண்பக முதலியன ஆகுபெயர். (அவற்றின் மலர்கள்) வேர் - வெட்டிவேர். மிடைந்த - செறிந்த. இங்ஙனம் பல்வேறுவகை மலர்கள் விரவித் தொடுத்த மலர்மாலைக்குக் கத்திகை என்பது பெயர் என்பதும் இதனாற் பெற்றாம். ஆயிதழ் - ஆராய்ந்தெடுத்த இதழ். பூஞ்செவ்வி எதிர் தாழைப்பூ எனினுமாம். முடங்கல் - ஏடு என்னும்பொருட்டு. ஓலையில் எழுதிச் சுருட்டப்படுதலின் திருமுகத்திற்கு முடங்கல் என்பது பெயராயிற்று. முடங்குதல் - சுருளுதல்.

இசை பாடியவள் ஆற்றாமையால் மயங்கிப் பின்னர்த் திருமுகம் போக்கும் செவ்வியளாகி எழுதுவதற்குரிய ஏடு ஆராய்பவள், தான் அணிந்த மாலையின் நடுவிடத்தே கட்டப்பட்டிருந்த தாழை மலரின் வெண் தோட்டை முடங்கலாகக் கொண்டனள் என்க. காமக் குணத்தின் தூண்டுதலாலே எழுதப்படுதலின் இதனைக் காமனுடைய திருமுகம் என்றே ஓதினர். அரசர் கட்டளை வரையும் ஏட்டிற்கே திருமுகம் என்பது பெயராம். இதுவும் காமவேந்தன் கட்டளையாதலின் திருமுகம் எனப்பட்டது. ஏனையோர் எழுதின் வாளா முடங்கல் என்றே பெயர் பெறும் என்க.

53 - செவ்வியளாகி - 45 - சண்பக ............ வெண்தோட்டு என மாறிக் கூட்டுக.

இதுவுமது

54-67 : அலத்தக ............ எழுதி

(இதன்பொருள்) அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு - அதற்கு அயலதாகியதொரு பிச்சியினது வளவிய நாளரும்பை எழுத்தாணியாகக் கையிற் கொண்டு; அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ - அதனைச் செம்பஞ்சின் வளமான குழம்பின்கண் தோய்த்து உதறி எழுதுகின்றவள்; மன் உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன் இளவேனில் (அரசன்) இளவரசன் - உலகின்கண் உடம்பொடு தோன்றி நிலைபெற்ற உயிரினங்களை எல்லாம் தாந்தாம் புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான காதற்றுணையோடு புணர்விக்குந் தொழிலையுடைய இளவேனிற் பருவத்து அரசன்றானும் (அறனறிந்த மூத்த அறிவுடை யரசனல்லன் விளைவறியாத) இளவரசனாவான். ஆதலால், அவன் நெறியறிந்து செய்யான்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் - அவ்விளவரசனுக்குத் துணையாக அந்திமாலை என்னும் கரிய யானையினது ஏறுதற்கரிய பிடரின்கண் ஏறியூர்ந்துவந் துலகில் தோன்றிய திங்களாகிய செல்வன்றானும் நடுநிலையுடையன் அல்லன்; ஒருதலையா யுட்கோட்ட முடையன் கண்டீர் ஆதலால்; புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் - தம்முட் காதலாலே கூடியிருக்கின்ற காதலர்தாமும் தம்முள் ஊடி அது காரணமாகச் சிறிது பொழுது இடையிலே பயனின்றிக் கழிப்பினும் அன்றி ஓதன் முதலிய காரணம் பற்றிப் பிரிந்த காதலர் தாமும் தாம் மேற்கொண்ட காரியத்தின் மேற் கருத்தூன்றித் தம்தம் துணையை மறந்தொழியினும்; நறும்பூ வாளியின் நல் உயிர் கோடல் இறும்பூது அன்று இஃது அறிந்தீமின் என - அவ்விளவேனிலரசன் தன் படைக்கலமாகிய நறிய மரலம்புகளாலே தனித்துறைவாருடைய இன்பம் நுகர்தற்குரிய உயிரைக் கைக்கொண்டு விடுதல் அவனுக்குப் புதிய செயலன்று இதனைப் பெருமானே! அறிந்தருள்க! என்று; எண் எண்கலையும் இசைந்து உடன் போக - அறுபத்து நால்வகைக் கலைகளும் மேண்மையுடைய வாய்த் தனக்குப் பொருந்தித் தன்னோடு நடவா நிற்பவும்; அவற்றுள், பண்ணும் திறனும் புறங்கூறும் நாவின் - பண்களும் அவற்றோடியைபுடைய திறங்களுமே உட்பகையாகிப் புறங்கூறுதற்குக் காரணமான தனது நாவினாலே; தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து - நிறை என்னும் கட்டுத் தன்னிடத்தினின்றும் நெகிழ்ந் தொழிந்தமையாலே தன் வரைத்தன்றித் தனிமையுற்று நெஞ்சைச் சுட்டுருக்குங் காமங் காரணமாக விளையா மழலையின் விரித்து உரை எழுதி - முதிராத தனது மழலைச் சொற்களாலே அவ் வேண்டுகோட் பாடலைப் பேசிப் பேசி எழுதி என்க.

(விளக்கம்) 56. மன்னுயிர் - உடம்பொடு தோன்றித் தத்தமக்கு வரைந்த வாழ்நாள் காறும் உலகத்திலே நிலைபெறுகின்ற உயிர்கள். உயிர் ஈண்டு இயங்கியல் உயிரினத்தின் மேற்று. என்னை? துணையோடு புணர்வன அவையேயாகலின். உயிரெல்லாம் என்றாள் அவனது ஆட்சிப் பரப்பின் பெருமை தோன்ற. துணையொடு புணர்ந்து மகிழ வேண்டும் என்பதே அவன் கட்டளை. இதனைப் பிழைப்பின் அவன் வாளியாலே அவர் தம்முயிரைக் கொள்வன் என்றவாறு. இத்தொழில் அவனுக்கு எஞ்ஞான்றும் உரித்தாகலின் அஃது இறும்பூதன்று என்றாள். எனவே, நீயிர் வந்து துணையாகாதொழியின் யான் உயிர் வாழ்தல் சாலாது என்பது குறிப்புப் பொருளாயிற்று.

57. இன்னிளவேனிலரசன் இளவரசன் என்றொரு சொல் வருவித்து அவ்வரசன் இளவரசன் ஆதலின் அவன் நல்லுயிர் கோடல் இறும்பூதன்றென உயிர் கோடற்கு அவன் இளமையை ஏதுவாக்குக.

58. அந்தியில் திங்கள் தோன்றுதலின் வேனிலரசனுக்குத் துணையாக வருதல் பற்றித் திங்களைப் போர் மறவனாக உருவகித்த அடிகளார் அந்தி மாலையை யானையாக உருவகித்தார். அந்திப் போதகத்து அரும்பிடர்த்தோன்றிய திங்களஞ் செல்வன் என்பதற்கு அடியார்க்கு நல்லார் அந்திப் போதகம் என்பதனை யானையாக்கி அதன் புறக் கழுத்திலே திங்களெனிற் பிறையாம் ஆகவே, நாடுகாண் காதையுள் வைகறை யாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடை நாட்கங்குல், ஊழ்வினை கடைஇ உள்ளந் துரப்ப... நெடுங்கடை கழிந்து என்பதனோடு மாறு கொள்ளும் என்பர். தானாட்டித் தனாது நிறுத்தல் பற்றி அவர் இவ்வாறு கூறல் வேண்டிற்று. இவ்வுரை வேண்டாகூறலாம். என்னை? அடிகளார் ஈண்டு, அந்தியைச் சிலேடை வகையால் யானை என்னும் பொருட்டாகவன்றே பிறசொல்லானன்றி அந்திப் போதகத்து என்றார். அச் சொல் பொழுதின் கண் எனவும் யானையினது எனவும் பொருள் தருதலும் உணர்க. யானை என்புழி யானையில் வருவோர் அதன் பிடரில் ஏறி வருதல் இயற்கையாதலின் அரும்பிடர்த் தோன்றி என்றார். இதுதானும் அடியார்க்கு நல்லார் கூறியாங்கு அந்திப்பொழுதகத்து அரும்பும் இடர்த்தலை என்னும் பொருள்படுதலாயிற்று. பிறையாக அன்றி நிறைமதியாக இரண்டும் அந்திப் போதகத்துத்தோன்றுவனவே ஆகலின், அந்திப்பொழுதகத்தே தோன்றுவது பிறையே ஆதல் வேண்டும் என்று அவர் கூறியது போலியே என்க. அஃதொக்கும் அடியார்க்கு நல்லார் ஆடித்திங்கட் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமிஞான்று...... உரையுமுண்டு என்பதனோடும் மாறுகொள்ளும் என்பதோ எனின் அக்கருத்து நூலாசிரியர் கருத்தென்று கொள்ளல் மிகை என்பார்க்கும் நிறைமதியென்றே கொள்வார்க்கும் அஃது கடாவன்றென விடுக்க.

59. செவ்வியனல்லன் என்பது கோட்டமுடையான் எனப் பொருள் பயந்து அது தானும் கொடியவன் எனச் சிலேடை வகையாலும் பிறிதொரு பொருள் பயந்து நின்றமை யுணர்க.

63. அறிந்தீமின் - அறிமின்; வினைத்திரிசொல். நாடக மகளிர் அறுபத்து நான்கு கலையும் கற்றுத் துறைபோதல் வேண்டும் ஆதலின் இவளும் அங்ஙனம் கற்றுத் துறைபோயவள் என்று அடிகளார் அவட்கு இரங்குவார் எண்ணென் கலையும் ...... நாவின் என்றார். நாடக மகளிர்க்கு அறுபத்து நான்கு கலைகளும் உரியன என்பதனை அடிகளாரே பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் எனவும் (14 : 166-7) எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர், எனவும், (22: 138 -9) ஓதுதலானும் உணர்க.

65 : பண்ணுந் திறனும் இவள் நாவின் மழலைச் சொற்கு ஒவ்வா ஆதலின் அவை அதனைப் புறங்கூறும் என்றவாறு. இனி, பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நாவின் மழலை எனினுமாம். 66 தளைவாய் அவிழ்ந்த காமம்; தனிப்படு காமம் எனத் தனித்தனி இயையும் தளை ஈண்டு நிறை. வாயவிழ்தல் - பூட்டுவிட்டுப் போதல். தனிப்படுகாமம் - சிறந்தார்க்கும் உரைக்கலாவதன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம் (அடியார்க்) தனிமையுற்ற காமம் எனினுமாம். மழலையின் விரித்து என்றதனால் பேசிப் பேசி எழுதி என்பது பெற்றாம்.

மாதவி கோவலனுக்குத் திருமுகமுய்த்தல்

68 - 74: பசந்த ............ அளிப்ப

(இதன்பொருள்) பசந்த மேனியள் - பிரிவாற்றாது பசலை பாய்ந்து ஒளி மழுங்கிய நிறத்தையுடையளாகிய அம்மாதவி தனிமைத் துயர் மிகுகின்ற அவ்வந்திமாலைப் பொழுதிலேயே; வசந்த மாலையை வருக எனக் கூஉய் - தன்னுசாத்துணைத் தோழியாகிய வசந்த மாலையை இங்கு வருக! என்று அழைத்து, தூமலர் மாலையில் துணிபொருள் எல்லாம் கோவலற்கு அளித்து - இந்தத் தூய மலர் மாலையில் யான் வரைந்துள்ள சொற்களாலே தெளியப்படும் பொருளை யெல்லாம் கோவலன் உளங்கொள்ளுமாறு எடுத்துச்சொல்லி; ஈங்குக் கொணர்க என - இங்கு அழைத்துக் கொணர்க! என்று ஏவுதலாலே; மாலை வாங்கிய வேல் அரிநெடுங்கண் - அம்மாலையைத் தன் கையிலேற்றுக் கொண்ட குருதி தோய்ந்த வேல் போலும் செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய அவ்வசந்த மாலைதானும்; கூல மறுகில் கோவலற்கு அளிப்ப - விரைந்து போய்க் கூலக் கடைவீதியிடத்தே அவனைக் கண்டு அம்மாலை முடங்கலையும் அதன்கட் பொறித்த செய்திகளையும் அக்கோவலன் மனங்கொள்ளுமாறு கூறிக் கொடா நிற்ப என்க.

(விளக்கம்) 68- பசந்த மேனியள் என்றது - அப்பொழுதே அவள் ஆற்றாமை மிக்கமையை உணர்த்தற் பொருட்டு. மேலும் அவளது தனிப்படர் மிகுதி கூறுவார் மாலை என்னாது படர் உறு மாலை என்றார். படர் - நினைவின் பின்னினைவாகத் தொடர்ந்து வரும் துன்ப நினைவுகள் - அவையாவன அவன் மீண்டு வருவானோ? வாரானோ? வாரானாயின் யாம் என் செய்வேம் என்றார் போல்வன. உறு - மிகுதி : உரிச்சொல். படர் மிகுதலாலே அப்பொழுது அம் முடங்கலை உய்த்தல் வேண்டிற்று என்பது தோன்ற, படர் உறுமாலை என்று அதனை விதந்தார். கூல மறுகிற் கோவலற்கு என்றது - கூலமறுகிடத்தே காணப்பட்ட கோவலனுக்கு என்றவாறு. இங்ஙனமன்றிக் கூலமறுகினையுடைய கோவலன் எனல் இச் செவ்விக் கேலாமையுணர்க கோவலனை அழைக்கத் தூது செல்வாளும் அத் தொழிற்றகுதி யுடையளே என்றுணர்த்தற்கு, வேலரி நெடுங்கண் என அவளது உருவச் சிறப்பையே விதந்து கூறினார். கோவலன் மீளாமைக்குத் தூதின் பிழையில்லை அவன் ஊழே அங்ஙனம் செய்தது என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருள். தூதர்க்குரிய சிறந்த பண்புகளுள் உருவச் சிறப்பும் ஒன்றாம். இதனை - அறிவுஉருவு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு எனவருந் திருக்குறளானும் உணர்க. இவளுடைய அறிவுடைமையும் கல்வியும் துணிபொருளெல்லாம் அளித்துக் கொணர்க என்று மாதவியால் ஏவப்பட்டமையாற் பெற்றாம்.

கோவலன் அத்திருமுகத்தை ஏலாது மறுத்து மாதவியைப் பழித்தல். 74 - திலகமும் என்பது தொடங்கி 110 - பைந்தொடி தனக்கு என்னுந் துணையும் கோவலன் கூற்றாய் ஒரு தொடராம்.

இதன்கண் - வயந்த மாலாய்! கேள்! அவள்தான் பிரிவாற்றாமையால் பெரும் பேதுறுகின்றனள் ஆதலால் யான் - இன்னே வந்து அளி செய்தல் வேண்டுமென்று என்னை அழைக்கின்றாய்! இன்று மட்டும் அன்று பண்டுதொட்டும் அவள் என்பால் நடந்த நடையெல்லாம் வாய்மையல்ல, வெறும் நடிப்புக்களே என்று யான் இப்பொழுது தான் உணர்கின்றேன். அங்ஙனம் அவள் நடித்த நாடகத்திற் சில கூறுவல் கேட்பாயாக! என்பது வயந்த மாலைக்குப் புலப்படும்படி கோவலன் கூறுகின்றான் என்றுணர்க.

இனி, இளங்கோவடிகளார் இக்கதை நிகழ்ச்சியை ஏதுவாகப் படைத்துக் கொண்டு ஈண்டுக் கோவலன் கூற்றாக வரிக்கூத்துக்களின் இயல்பினை நன்கு விளக்கும் திறம் வியந்து பாராட்டற்குரியதாம். அது வருமாறு :

(1) கண்கூடுவரி

74 - 7 : திலகமும் .............. கண்கூடுவரியும்

(இதன்பொருள்) திலகமும் அளகமும் சிறு கருஞ்சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட மாதர் வாள் முகத்து - ஏடி! வயந்த மாலாய்! கேள்! அவள் தான் திலகத்தையும் கூந்தலையும் சிறிய கரிய இரண்டு விற்களையும் இரண்டு குவளை மலர்களையும் ஒரு குமிழமலரையும் இரண்டு கொவ்வைக் கனிகளையும் தன்பாற் கொண்ட அழகிய ஒளியுடைய முகத்தோடும்; மதைஇய நோக்க மொடு - மதர்த்த நோக்கத்தோடும்; காதலின் தோன்றிய கண் கூடு வரியும் - யான் அவள் மனைபுகுந்த பொழுது யான் அழையாமலே முதன்முதலாக என்மேற் காதலையுடையாள் போலே என்முன் வந்து தோன்றி நின்று நடித்த கண்கூடுவரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) வரிக்கூத்து என்பது - அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையுந் தோன்ற நடித்தல் என்பர். அவ்வரிக்கூத்து எட்டு வகைப்படும். அவையாவன - கண்கூடு வரி, காண் வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சி வரி, எடுத்துக்கோள் வரி எனுமிவைகளாம்.

இவற்றுட் கண்கூடு வரி என்பது - காதலுடையாள் ஒருத்தி தன்னாற் காதலிக்கப்பட்டவன் முன்னர்ப் பிறராற் கூட்டப்படாது தனது காதன் மிகுதி காரணமாகத் தானே வந்து நிற்கும் நிலைமை என்ப; இதனை -

கண்கூ டென்பது கருதுங் காலை
இசைப்ப வாராது தானே வந்து
தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப

எனவரும் நூற்பாவானறிக.

ஈண்டுக் கோவலன் மாதவியின் மாலையை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூலியைப் பின் தொடர்ந்து சென்று மாமலர் நெடுங்கண் மாதவி மணமனை புகுந்தபொழுது அம்மாதவி தானும் கோவலன்பாற் கழிபெருங் காதலுடையவளாகவே அவனை ஆர்வத்தோடு வரவேற்றற் பொருட்டு அவனெதிர் சென்று நின்றனள். அந்நிகழ்ச்சியையே ஈண்டு ஊழ்வினை வலைப்பட்டு நிற்கும் கோவலன் நடிப்பு என்கின்றான்மன். இங்ஙனமே பின்வருவனவற்றையும் கருதுக.

74. திலகம் - பொட்டு. கருஞ்சிலை - கரிய புருவங்கள். 75. குவளை - கண். குமிழ் - மூக்கு. கொவ்வை - உதடுகள்; 76. மாதர் - அழகு. மதைஇய - மதர்த்த.

(2) காண்வரி

78 - 83 : புயல் ............... காண்வரிக் கோலமும்

(இதன்பொருள்) கருநெடுங்கண்ணி புயல் சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியில் - பின்னும் கரிய நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான் தனது கூந்தலாகிய முகிலைச் சுமந்து அப்பொறை யாற்றாது வருந்தி நிலாக்கதிர்களைப் பொழிகின்ற தனது முகமாகிய முழுத் திங்களிடத்தே தன் கண்களாகிய கயல்மீன்கள் மதர்த்துத் திரிகின்ற அழகிய செவ்வியுடையளாய்; பாகு பொதி பவளம் திறந்து - தனது வாலெயிற்றூறுகின்ற நீராகிய தேன் பாகினைப் பொதிந்து கொண்டுள்ள தனது வாயிதழாகிய பவளப் பேழையைச் சிறிதுச் திறந்து; நிலா உதவிய நாகு இள முத்தின் நகை நலம் காட்டி - ஒளியைத் தருகின்ற பெரிதும் இளமையுமுடையனவாகிய எயிறுகளாகிய முத்துக்களின் பாற்றவழும் புன்முறுவலினது பேரழகைச் சிறிது காட்டி; வருக என வந்து - யான் வருக! என்றழைத்த பொழுதெலாம் காலந்தாழ்த்தலின்றி வந்தும்; போக எனப் போகிய - சூழ்நிலை காரணமாக யான் செல்க என்று கூறியவுடனே தடையேதுமின்றிச் சென்றும் அவள் நடித்த; காண்வரிக் கோலமும் - காண்வரி என்னும் கோலம் பூண்ட நடிப்பும் என்க.

(விளக்கம்) 79 - புயல் - முகில் - இது கூந்தலை உருவகித்தது - இங்ஙனமே நிரலே மதியம் முகத்தையும், கயல், கண்களையும் 80 - பாகு - வாயூறலையும், பவளம் - உதடுகளையும், முத்து, பற்களையும் உருவகித்தபடியாம். 79 -காமர் செவ்வி - காமம் வருவதற்குக் காரணமான செவ்வியுமாம். இதற்குக் காமம் வரும் என்பது காமர் என மரீஇயவாறாம். 80-பாகு-தேன்பாகு. நாகிள முத்து: மீமிசைச் சொல், பெரிதும் இளமையுடைய முத்து. ஈண்டு இளமை - புதுமை மேற்று. நகை - புன்முறுவல். நலம் - அழகு, இன்பமுமாம். வருக என வருகெனவும், போக என - போகெனவும், நிலைமொழி ஈறு கெட்டன. போகென என்பது சில செவ்வியில் போக என என்பதுபட நின்றது அத்தகைய செவ்வியாவது நண்பர் ஏதிலார் வரவு முதலியன. மாதவி கோவலன் வருகென அழைத்த பொழுதெல்லாம் புன்முறுவல் தவழ வந்ததும் போகெனப் போனதுமெல்லாம் அன்புச் செயல்களேயாகவும் ஊழ்மயக்குற்ற கோவலன் அவற்றைக் காண்வரி என்னும் நடிப்பு என்கின்றான்.

காண்வரியாவது - காண்வரி என்பது காணுங்காலை - வந்த பின்னர் மனமகிழ் வுறுவன தந்து நீங்குந் தன்மைத் தென்ப என்னும் நூற்பாவான் உணர்க. கோவலன் கூறிய மாதவி செயல் இவ்வரிக் கூத்திற் கியன்றன போலுதலறிக. பிறவும் இங்ஙனமே ஊகித்துணர்க.

(3) உள்வரி

84 - 89 : அந்தி .......... உள்வரியாடலும்

(இதன்பொருள்) அந்திமாலை வந்ததற்கு சிந்தை இரங்கி நோய் கூரும் என் சிறுமை நோக்கி - யான் ஊடிப்பிரிந்து பின்னர் அந்தி மாலைப்பொழுது வந்துறும்போது என் நெஞ்சம் பிரிவாற்றாது வருந்துமாறு காமநோய் மிகா நிற்றலாலே எனது ஆற்றாமையே வாயிலாக மீண்டும் அவள் மனைபுக்கு ஏக்கற்றிருக்கின்ற எனது சிறுமையை அவள் அறிந்துகொண்டு; என்னை அசதியாடி நகைத்தற் பொருட்டு; கிளிபுரை கிளவியும் மட அனநடையும் களிமயில் சாயலும் கரந்தனளாகி - தனக்குரிய கிளிமொழி போன்ற மழலைச் சொல்லையும்; இளவன்னத்தின் நடைபோன்ற அழகிய நடையையும், முகிலைக் கண்டுழிக் களித்தாடுகின்ற மயில்போன்ற தனது சாயலையும் துவர மறைத்தவளாய்; செரு வேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து - போர்வேல் போன்ற நெடிய கண்னையுடைய ஏவன் மகளிர் கோலத்தைக் கொண்டு; ஒரு தனிவந்த - தான் தமியளாய் என்முன் வந்து நின்று நடித்த; உள்வரி யாடலும் - உள்வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) கோவலன் மாலைப்பொழுதில் தனது பிரிவாற்றாது பெரிதும் வருந்தித் தனது வரவு நோக்கி ஏக்கறவு கொண்டிருந்ததனை அறிந்த மாதவி அவனை அசதியாடி நகைத்தலைக் கருதி ஏவன்மகள் போலக் கோலம்பூண்டு அவனெதிர்வந்து ஏதிலாள்போல நின்றாள் என்றும் அவளை ஏவற் பெண்ணாகவே கருதிக் கோவலன் பின்னரும் மாதவி வருகைக்கு ஏக்கறவு கொள்வது கண்டு தன்னுள் மகிழ்ந்து தன்னுருவம் காட்டி அசதியாடி அவனைத் தழுவிக்கொண்டதொரு நிகழ்ச்சியை ஈண்டு அவன் கூற்றாலேயே அறிகின்றாம். இந்நிகழ்ச்சி அவன் இன்பத்தைப் பன்மடங்கு மிகச் செய்திருக்கும் என்பது தேற்றம். ஆயினும் அதனையும் நடிப்பென்றே அவன் இப்பொழுது நினைத்துக் கூறுகின்றான் என்க.

உள்வரியாவது - வேற்றுருக்கொண்டு நடித்தல். இதனை உள்வரி யன்ப துணர்த்துங் காலை மண்டல மாக்கள் பிறிதோருருவம், கொண்டுங் கொள்ளாதும் ஆடுதற் குரித்தே எனவரும் நூற்பாவானுணர்க.

(4) புறவரி

90 - 93 : சிலம்புவாய் ......... புன்புறவரியும்

(இதன்பொருள்) கலம் பெறா நுசுப்பினள் சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - தனக்கியன்ற அணிகலன்களையும் புனைய இடம்பெறாத நுண்ணிடையை யுடையாளாகிய அம்மாதவி தன் சிலம்புகள் வாய்விட்டரற்றவும் மேகலை அணி ஆரவாரிப்பவும்; காதல் நோக்கமொடு - வாய்மையான காதலுடையாள் போல நோக்கும் நோக்கத்தோடு என் பக்கலிலே வந்து; திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் - யான் தனது பிரிவாற்றாமையாலே தன்மை திரிந்து மெய்வேறுபட்டுள்ள எனது துன்பத்தைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் - என்னை முயங்குதலின்றி ஏதிலாள் போன்று புறத்தே நின்று நடித்த புன்மையுடைய புறவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கலம் பெறா நுசுப்பு என்றது, அணிகலத்தை ஏற்றுக் கோடற்கு வேண்டிய இடம் தன்பால் இன்மையால் அவற்றை ஏலாத நுசுப்பு என்றவாறு. புலம்பவும் ஆர்ப்பவும் வந்து என ஒருசொல் வருவித்துக் கொள்க. ஆற்றவும் நுண்ணிதாகலின் நின்னிடை முரியும் ஆதலாலே இயங்காதே கொள்! என்பன போலச் சிலம்பு புலம்பவும்மேகலை ஆர்ப்பவும் நடந்து வந்து என்பது கருத்து.

மாதவி, ஊடியவன் ஊடல் தீர்ந்ததோ இல்லையோ என்றையுற்றுத் தன்பாற் காதல் நோக்கத்தோடு வந்து ஆராய்ந்து நின்றனளாக அதனை புறவரி என்கின்றான் கோவலன். புறவரியாவது - புறவரி என்பது புணர்க்குங் காலை இசைப்ப வந்து தலைவன் முற்படாது புறத்து நின்றாடி விடை பெறுவதுவே என்பதனாலறிக.

(5) கிளர்வரி

94 - 101 : கோதை .............. கிளர்வரிக் கோலமும்

(இதன்பொருள்) நல்நுதல் - அழகிய நுதலையுடையாள்; கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் மின்இடை வருத்தத் தோன்றி - யான் ஊடியிருந்தேனாக அப்பொழுது தனது மலர்மாலையும் குழலாகவும் பூந்துகள்படிந்த அளகமாகவும் கை செய்யப்பட்ட கூந்தற் பகுதிகளும் ஒற்றையாகிய முத்துவடமும் அழகிய தன் முலைகளுமே மின்னல் போன்ற தனது நுண்ணிடைக்குப் பொறையாகி வருத்தாநிற்பவும் புறவாயிலிலே வந்து என்னெதிர்தோன்றி; சிறுகுறுந்தொழிலியர்-சிறிய குறியவாகிய குற்றேவற் றொழில்களைச் செய்யும் ஏவன் மகளிரே மறுமொழி உய்ப்ப - அவள் கூறும் மொழிகளை எனக்குக் கூற யான் அவற்றிற்கு முன்னிலைப் புறமொழியாகக் கூறுகின்ற மறுமொழிகளை அவட்குக் கூற; புணர்ச்சி உள் பொதிந்த கலாம் தரு கிளவியின் - எனது புணர்ச்சி வேட்கையைக் குறிப்புப் பொருளாகத் தம்முட் கொண்டுள்ள என்னூடல் காரணமாக யான் கூறிய அம் மறுமொழியின்கண்; இருபுறம் மொழிப் பொருள் கேட்டனள் ஆகி - இரண்டுபாலோர்க்கும் ஏற்பக் கூறும் பொருளையுடைய மொழியாக வைத்து அதன்கண் தன் கருத்திற்கேற்ற பொருளைக் கேட்டனள் போலக் காட்டி; கிளர்ந்து வேறு ஆகிய அப்பொருள் காரணமாக என்னோடு புலந்து கூடாது மாறுபட்டுப்போன; தளர்ந்த சாயல் தகை மெல்கூந்தல் - தளர்ந்த சாயலையும் அழகிய கூந்தலையும் உடையாளாய் நடித்த; கிளர்வரிக் கோலமும் - கிளர்வரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) 94-96. கோதை முதலியனவே பெருஞ்சுமையாகி இடையை வருத்தும்படி நடந்து வந்த நன்னுதல் என்க. நன்னுதல்: அன்மொழித்தொகை. குழல் அளகம் என்பன கூந்தலைக் கை செய்யப்பட்ட இருபகுதிகள். அங்ஙனம் வந்தவள் தனக்கு முகங்கொடாது தோழிக்குக் கூறுவாளாய் வினவ, அவ்வினாவிற்கு யானும் அவட்கு முகங்கொடாது, சிலதியர் வாயிலாய் மறுமொழி கொடுப்ப அம்மொழிக்கு அவள் வேறு பொருள் கொண்டாள் போன்று காட்டி என்னோடு பின்னும் ஊடிப்போனாள் என்றவாறு.

97 - சிறுகுறுந்தொழிலர் - குற்றேவன்மகளிர். 99 - இருபுற மொழிப் பொருள் - வினவுவோர் கருத்திற் கேற்பவும் இறுப்போர் கருத்திற் கேற்பவும் இரு வேறு பொருள் பயக்கும் சொல். எனது மறுமொழிக்கு யான் வேண்டிய பொருள் கொள்ளாமல் தான் ஊடிப்போதற் கேற்ற பொருளைக் கொண்டு ஊடிப்போயினள் என்றவாறு.

கிளர்வரியாவது நடுநின்றார் இருவருக்கும் சந்து சொல்லக் கேட்டு நிற்பது என்பர். இதனை - கிளர்வரி என்பது கிளக்குங் காலை ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய் இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற் பதுவே என்பதனாலறிக.

(6) தேர்ச்சிவரி

102 - 104 : பிரிந்துறை .......... அன்றியும்

(இதன்பொருள்) பிரிந்து உறை காலத்து - யான் அவனைப் பிரிந்து பொய்ப் பிறிதோரிடத்தில் வதிய நேர்ந்த காலத்திலே; பரிந்தனள் ஆகி - தான் அப்பிரிவாற்றாது பெரிதும் வருந்துவாள் போன்று காட்டி ; என் உறு கிளைகட்கு - என் நெருங்கிய சுற்றத்தார்க்கு; தன் உறுதுயரம் - தான் படுகின்ற மிக்க துன்பத்தை; தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சிவரியும் - தன் மயக்கத்தாலே ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாள் போன்று நடித்த தேர்ச்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கோவலன் யாதானுமொரு காரணம்பற்றி அணுக்கனாகவே பிரிந்துறைய நேர்ந்த பொழுதெல்லாம் மாதவி வாய்மையாகவே அச்சிறுபிரிவினையும் ஆற்றாளாகி அவ்வாற்றாமையைக் கோவலனுக் கணுக்கராகிய கிளையினர் பாற் சொல்லிச் சொல்லி வருந்தும் இயல்பினளாக இருந்தனள் என்பதும் அவ்வருத்தம் கேட்ட கிளையினர் அவள் நிலையை அவனுக்குக் கூறுவர் என்பதும் ஈண்டுக் கோவலன் கூற்றாற் பெற்றாம். அந்நிகழ்ச்சி அன்பின் செயலேயாகவும் ஈண்டுக் கோவலன் அம்மாசில் மனத்து மாதவிக்கு மாசுபட அதுவும் ஒரு நடிப்பேகாண் என்று கூறுகின்றான் என்றறிக.

இனி, தேர்ச்சிவரி என்னும் வரிக் கூத்தின திலக்கணத்தை,

(தேர்ச்சி யென்பது தெரியுங்காலை)
கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன்
பட்டது முற்றது நினைஇ யிருந்து
தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க.

(7) காட்சிவரி

105 - 106 : வண்டலர் ........... வரியும்

(இதன்பொருள்) வண்டு அலர் கோதை - வண்டுகள் கிண்டியலர்த்துதற்கியன்ற முல்லையினது நாளரும்புகளாற் புனைந்த மாலையினையுடைய அம்மாதவி; மாலையுள் மயங்கி - காமநோய் மலருகின்ற அந்திமாலைப் பொழுதினூடே அந்நோயாற் பெரிதும் மயங்கினாள் போல; கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் - என் கிளைஞராய்த் தான் கண்டோரெவர்க்கும் அத்துயரத்தைக் கூறி நடித்த காட்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) வண்டால் அலர்த்தப்படும் அரும்புமாலை என்க. மாலை என்றமையாலும் அவள் தானும் கற்புடையாள் ஆதலானும், அதுமுல்லையரும்பு என்பதும் பெற்றாம். மாலை என்பது காமநோய் மலரவரும் மாலை என்பதுபட நின்றது.

காட்சிவரியின் இலக்கணத்தை , காட்சிவரி என்பது கருதும் காலை கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப் - பட்ட கூறிப் பரிந்துநிற் பதுவே எனவரும் நூற்பாவானறிக.

( 8) எடுத்துக் கோள்வரி

107 - 108 : அடுத்தடுத்தவர் ............. வரியும்

(இதன்பொருள்) அவர் முன் - எனக்கு அணுக்கராகிய என் கிளைஞர் முன்பு; அடுத்து அடுத்து - மேன்மேலும்; மயங்கிய மயக்கம் - என் பிரிவாற்றாது காமநோய் மிக்கு மயங்கி வீழ்வாள் போன்று வீழ்ந்து நடித்த பொய்யாய மயக்கத்தை; அவர் எடுத்துத் தீர்த்த - அக்கிளைஞர் மெய்யாகக் கருதி அவட்குப் பரிந்து எடுத்துத் தீர்த்த; எடுத்துக் கோள் வரியும் - எடுத்துக் கோள் வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) எடுத்து மயக்கம் தீர்த்தலால் அப்பெயர்த் தாயிற்று. அஃதாவது, கூத்தி தான் பிரிவாற்றாது மயங்கி வீழ்வாளாக நடித்து வீழ அவளைப் பிறர் (கூத்தர்) கையாற்றழுவி எடுத்துக் குளிர்ந்த சந்தனம்நீர் சிவிறி முதலியவற்றால் அம்மயக்கத்தைத் தெளிவிப்பார் போன்று நடிப்பது எடுத்துக் கோள்வரி என்னும் கூத்தியல்பு என்றவாறு. இதனை,

எடுத்துக் கோளை யிசைக்குங் காலை
அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர்
எடுத்துக் கோள்புரிந்த தெடுத்துக் கோளே

எனவரும் நூற்பாவானுணர்க.

ஈண்டுத் திருமுகம் கொண்டு சென்ற வயந்தமாலை என்பாள் கோவலனை அழைத்துக் கொடு போதற்கு மாதவி நின் பிரிவாற்றாது நோய் கூர்ந்து அடுத்தடுத்து மயங்கி வீழ்கின்றாள் நின் பிரிவு நீடினால் அவள் இறந்து படுவாள் என்று மாதவியின் நிலையைப் பட்டாங்குக் கூற அது கேட்ட கோவலன் இவ்வாறு அவள் செய்யும் செயலெல்லாம் அவள் பயின்றுள்ள நாடகமாகிய நடிப்புகளே அன்றி வாய்மையல்ல என்று மறுப்பவன் இனம் பற்றி ஏனையவற்றையும் எடுத்தோதியவாறாம்.

கோவலன் திருமுகம் ஏற்க மறுத்துக் கூறல்

109 - 110 : ஆடல்மகளே .......... தனக்கென

(இதன்பொருள்) ஆயிழை - ஆயிழாய்! அப் பைந்தொடி ஆடல் மகளே யாதலின் தனக்குப் பாடு பெற்றன - பசிய பொன்வளையலணிந்த அம் மாதவிதான் பிறப்பினாலும் சிறப்பினாலும் நாடகமேத்துமொரு கூத்தியே ஆதலின் அவள்பால் இந் நடிப்பெல்லாம் வாய்மைபோலவே பெருமை பெற்றனகாண்! என்று இகழ்ந்துகூறி மாலையாகிய அத்திருமுகத்தை ஏலாது மறுப்ப; என்க.

(விளக்கம்) 109 - ஆடல் மகள் - கூத்தி. அப்பைந் தொடி என்றது கோவலன் நெஞ்சம் அம்மாதவியை ஏதிலாளாகக் கொண்டமை குறிப்பாற்றோற்றுவித்தல் நுண்ணுணர்வாலுணர்க. வயந்த மாலை கொடுத்த திருமுகத்தை ஏலாமை குறிப்பெச்சப் பொருள். அதனை மேலே 112 திருமுகம் மறுத்ததற்கிரங்கி என்பதனால் வெளிப்படையானும் பெறுதும்.

வயந்தமாலை மாதவிக்குக் கூறுதலும் மாதவி ஏக்கறவும்

111 - 118 : அணித்தோட்டு ....... மாதவிதானென்

(இதன்பொருள்) அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு - அழகிய பொற்றோடணிந்த திருமுகத்தையும் ஆராய்ந்தணிந்த அணிகலன்களையும் உடைய மாதவி அன்பு ததும்பத் தன் கையினாலேயே எழுதிய அழகிய தாழந் தோட்டு முடங்கலை இவ்வாறு கோவலன் மறுத்ததனாலே; தோடு அலர் கோதைக்கு இரங்கி - இதழ் விரிகின்ற முல்லை நாண் மலர் மாலையணிந்த தன் தலைவியாகிய மாதவிதான் என் செய்தாற்றுவளோ? என்று இரங்கி; வாடிய உள்ளத்து வயந்த மாலை - வாட்டமெய்திய நெஞ்சத்தையுடைய அவ்வயந்த மாலை தானும்; துனைந்து சென்று உரைப்ப - அச்செய்தியை விரைந்து போய் மாதவிக்குக் கூறா நிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவிதான் - அதுகேட்ட கரிய குவளை மலர் போன்ற நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான்; கையறு நெஞ்சமொடு - செய்வதொன்றும் தோற்றாது திகைக்கின்ற நெஞ்சத்தையுடையளாய் வயந்த மாலையை நோக்கி; மாண்இழை - ஏடி வயந்த மாலாய்! மாலை வாரார் ஆயினும் - அவர் அங்ஙனம் கூறினும் இம்மாலைப் பொழுதிலேயே இங்கு வருகுவர் காண்! ஒரோவழி இம்மாலைப் பொழுதில் வாரா தொழியினும்; காலை காண்குவம் என - அவரை நாளைக் காலைப் பொழுதிலேயே ஒருதலையாக ஈண்டுக் காண்பேம் காண்! என்று கூறி; பூமலர் அமளி மிசைப் பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்கின்ற அம்மலர்ப் படுக்கையிலேயே தன் கண்ணிமைகள் பொருந்தாமல் தமியளாய்க் கிடந்தனள் என்பதாம்.

(விளக்கம்)111-112 : அணித்தோட்டுத் திருமுகம்.......மணித் தோட்டுத் திருமுகம் - என்புழி அழகிய எதுகைநலந்தோன்றிச் செய்யுளின்பம் மிகுவதுணர்க. மறுத்ததற்கு மாதவியின் பொருட்டு இரங்கி வாடிய உள்ளம் என்க. 114 - துனைந்து - விரைந்து.

115. மாலை வாராராயினும் காலை காண்குவம் என்னும் மாதவியின் நம்பிக்கையே அவள் உயிர் துறவாது இருத்தற்குப் பற்றுக் கோடாயிற்று. இத்தொடர் அவள் காதலன்பிற்குச் சிறந்த அறிகுறியாகவும் அவளது ஏக்கறவு முழுவதையும் நம்மனோர்க் குணர்த்துவதாகவும் அமைந்து அடிகளாருடைய புலமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகவும் திகழ்தல் உணர்க.

இனி, இதனை - இன்னிளவேனில் வந்தனன் இவண் எனத் தூதன் இசைத்தனன் ஆதலின் படையுள் படுவோன் கூற மாதவி விரும்பி ஏந்தி வாங்கிப் பாடினள் மயங்கிச் சேர்த்தித் தழீஇ அறிந்து கட்டி, கேட்டனள், அன்றியும் ஐந்தினும் ஏழினும் நோக்கிக் கழிப்பி மயங்கிச் செவ்வியளாகி அறிந்தீமின் என எழுதிக் கூஉய்க் கொணர்க என வேலரி நெடுங்கண் அளிப்ப ஆடன்மகளே ஆதலின் பாடு பெற்றன என மறுத்ததற்கிரங்கிச் சென்றுரைப்பக் காண்குவம் என மாதவி வதிந்தனள் என வினையியைபு காண்க.

இது, நிலைமண்டில ஆசிரியப்பா:

வெண்பாவுரை

1. செந்தாமரை ............. மனம்

(இதன்பொருள்) கொந்து ஆர் இளவேனில் - பொழில்களிடத்தே பூங்கொத்துக்கள் நிறைதற்குக் காரணமான இளவேனில் என்னும் பெரும் பொழுது; செந்தாமரை விரியத் தேமாங் கொழுந்து ஒழுக - நீர்நிலைகளிலே செந்தாமரை மலர்கள் இதழ் விரிந்து மலரவும் இனிய மாமரங்களிலே அழகிய தளிர்கள் தூங்கவும்; மைந்து ஆர் அசோகு மடல் அவிழ - அழகு பொருந்திய அசோக மலர்கள் இதழ் விரிந்து மலரவும்; வந்தது - உலகின்கண் வந்துற்றது; இன்று வளவேல் நல் கண்ணி மனம் என் ஆம்கொல் - இற்றைநாள், வளவிய வேல் போலும் அழகுடைய கண்களையுடைய மாதவியின் நெஞ்சம் எந்நிலையினது ஆகுமோ யான் அறிகிலேன்; என்பதாம்.

(விளக்கம்) இஃது வயந்தமாலை மாதவியின் முடங்கல் கொண்டு செல்லும்பொழுது தன்னுள்ளே சொல்லியது; என்ப. கோவலனுக்குச் சொல்லிய தெனினுமாம்.

பெரும் பொழுதுகள் தோன்றும்பொழுது காலை என்னும் சிறுபொழுதே யாகலின் அப்பொழுது மலரும் செந்தாமரையை முற்படக் கூறினள். கொந்து - கொத்து; விகாரம். மைந்து - அழகு. வேனல் - வேனில். கண்ணி - மாதவி.

2. ஊடினீர் ........... காண்

(இதன்பொருள்) ஊடினீர் எல்லாம் - இவ்வுலகின்கண் காதல் வாழ்வு தலைப்பட்டு ஒருவர்க்கொருவர் துணையாவார் தம்முள் இப்பொழுது ஊடியிருப்பீர்கள் எல்லீரும்; கூடுமின் - ஊடலை விடுத்துக் கூடக்கடவீராக; உருவிலான் தன் ஆணை என்று இஃது உருவமில்லாத காமவேள் என்னும் அரசன் கட்டளையாகும் என்று; குயில் கூவ - அவன் படைச் சிறுக்கனாகிய குயிலோன் கூவி அறிவியா நிற்ப; நீடிய வேனல் பாணி - உலகில் வந்துற்ற நெடிய இவ்விளவேனிற் பொழுதின்கண்; கலந்தாள் - நின்னொடு கூடி மகிழ்ந்திருந்த மாதவியினது; மெல்பூந் திருமுகத்தை - மெல்லிய தாழம்பூத் தோட்டில் எழுதப்பட்ட முடங்கலை; கானல் பாணிக்கு அலந்தாய் காண் - அவள் பாடிய கானல்வரிப் பாட்டின் பொருட்டு ஊடிப் பிரிந்து வந்தோங் கண்ணுற்றருள்க ! என்பதாம்.

(விளக்கம்) இது வயந்தமாலை கோவலன்பால் ஓலை கொடுக்கும் பொழுது கூறியதாம். பாணி - பொழுது; பாட்டு. அலந்தாள் திருமுகம் எனக் கோடலுமாம். மென்பூந் திருமுகத்தை என்பது மாதவியின் முகத்தையும் முடங்கலையும் உணர்த்துதலுணர்க.

வேனிற் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #14 on: February 23, 2012, 01:42:57 PM »
9. கனாத்திறம் உரைத்த காதை

அஃதாவது - கண்ணகி நல்லாள் தன் தோழியாகிய தேவந்தி என்னும் பார்ப்பன மகளின்பால் தான் முன்னாளிரவு கண்ட கனவினது தன்மையைக் கூறிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் தேவந்தியின் வரலாறும் கோவலன் கண்ணகியை எய்தியதும் பிறவும் கூறப்படும்.

(கலி வெண்பா)

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்  5

பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்  10

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,  15

ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்  25

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், து஡ய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்  30

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து  35

நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை  45

பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50

ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு  55

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு  60

தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்  65

கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த  70

இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன,
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு
உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்  75

மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

(வெண்பா)

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

உரை

1-4 : அகனகர் ........... தாங்கொள்ள

(இதன்பொருள் :) பகல் மாய்ந்த மாலை கொடி இடையார்தாம் - அற்றை நாள் ஞாயிறு மேற்றிசையிற் சென்று மறைந்த அந்தி மாலைப் பொழுதிலே பூங்கொடி போலும் துவள்கின்ற நுண்ணிடையையுடைய மகளிர்கள்; அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய் - தத்தம் அகன்ற மனையிடங்களின் எல்லாம் நாளரும்புகளாகி இதழ் விரிகின்ற செவ்வியையுடைய முல்லையினது ஒளியுடைய மலர்களை நெல்லோடே விரவித் தூவி; மணி விளக்கங் காட்டி - அழகிய விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்கிய பின்னர்; இரவிற்கு ஓர் கோலம் கொள்ள - அற்றை யிரவின்கண் தத்தம் காதற் கொழுநரோடு கூடி மகிழ்தற் பொருட்டு அச் செயலுக்கேற்ற கோலங்களைக் கொள்ளா நிற்ப; என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில், புகர் அறு கோலம் கொள்ளுமென்பது போல் கொடிமிடை சோலைக்குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, அந்நகரத்தே வாழும் கொடியிடையார் அகல் நகர் எல்லாம் தூஉய் விளக்கங் காட்டி அக்குயிலோன் பணிமொழிக் கிணங்கி இரவிற்குக் கோலங் கொள்ளா நிற்ப என முன்னைக் காதையொடு இயைபு காண்க.

1. அகல் நகர் - அகன்ற மனை. மலரின் செவ்வி கூறுவார், அரும்பவிழ் நிகர் மலர் என்றார். முல்லை மாலைப்பொழுதில் மலர்தல் இயல்பு. 2 - நிகர் மலர் - ஒளியையுடைய மலர். நீர்வார் நிகர் மலர் எனப் பெருங்கதையினும், நிகர்மலர் எனக் குறுந்தொகை (311: 6) யினும், மணிமேகலை (3: 15)யினும், அகநானூற் (11: 12)றினும் வருதல் காண்க. மாலைப் பொழுதில் மகளிர் மலர்தூவி விளக்கேற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்குதல் தமிழ் நாட்டு வழக்கம் - இதனை: நெல்லும் மலரும் தூஉய்கை தொழுது மல்லல் ஆவண மாலையயர எனவரும் நெடுநல்வாடை (33-4) யானு முணர்க. பகல் - ஆகுபெயர்; ஞாயிறென்க. 3. மணியும் விளக்கமும் காட்டி என்பர் அடியார்க்கு நல்லார். மணி - அழகெனவே அமையும். மணிகள் பதித்த அகல்களாகிய விளக்கங்கள் எனினுமாம். விளக்கங்காட்டி என்றது விளக்கேற்றி என்றவாறு. முல்லைமலர் தூவி என்றமையால் தெய்வம் தொழுது என்பது குறிப்பாயிற்று. இரவிற்கோர் கோலம் என்றது இடக்கரடக்கு. இரவிற்கோர் கோலங்கோடலாவது - மகரக்குழை முதலிய பேரணிகலன்களைக் களைந்து ஒற்றைவடம் முதலிய நொய்யன அணிதலும் பட்டு நீங்கித் துகிலுடுத்தலும் தத்தம் கொழுநர் விரும்பும் மணம் மலர் முதலியனவே அணிதலும் பிறவுமாம் என்க.

இனி, (4) மேலோர் நாள் என்பது தொடங்கி (40) கோட்டம் வழிபாடு கொண்டிப்பான் என்பது காறும், தேவந்தியின் வரலாறு கூறப்படுகின்றது.

4 - 8 : மேலோர்நாள் ............ கூறாரென்றேங்கி

(இதன்பொருள் :) மேல் ஓர் நாள் - முன்னர்க் கழிந்தொழிந்த நாள்களுள் வைத்து ஒரு நாளிலே; மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - மாலதி என்னும் பெயருடைய பார்ப்பனி தனது மாற்றாளீன்ற குழவிக்குப் பாலடையினாலே பாலூட்டிய பொழுதில்; பால் விக்கிப் பாலகன்றான் சோர - ஊழ்வினை அங்ஙனம் இருந்தவாற்றால் அப்பாலானது மிடற்றின்கண்ணின்று விக்குதலாலே அக்குழவி அவள் கையிலே இறந்து படாநிற்ப; மாலதியும் பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன இட்டு ஏற்பன கூறார் என்று ஏங்கி - அது கண்ட அம் மாலதி தானும் ஐயகோ! இதற்கு யான் என்செய்கோ! இஃதறிந்தால் என் கணவனாகிய அப்பார்ப்பனனும் அவன்றன் மனைவியும் வஞ்சகமற்ற என்மேல் அடாப்பழி யேற்றி என்னைத் தூற்றுத லொழித்து; உலகம் ஏற்றற்குரியனவாகிய வாய்மைகளைக் கூறுவாரல்லரே அங்ஙனமாயின் அப்பழியை யான் எங்ஙனம் போக்குவேன் என்று தன்னுள் வருந்தி ஏங்கி; என்க.

(விளக்கம்) 5. மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி. மாற்றாள் மகவிற்குப் பாலளிக்க என்றமையால் மாலதி மகப் பேறற்றவள் என்பதும் அக்காரணத்தால் அவள் கணவன் மற்றொருத்தியை மணந்திருந்தான் என்பதும் பெற்றாம்.

தன் கணவன் தன்பாலன்பின்றி ஒழுகுபவன் மாற்றாளும் அத்தகையள் என்பது தோன்ற அவர்களை ஏதிலார் போன்று பார்ப்பானொடு மனையாள் என்றாள். அவர்கள் பால்விக்கிப் பாலகன் சோர்ந்தமையைக் கூறார்; பொறாமையால் இவள் கொலை செய்தனள் என்றே என்மேற் படாத பழியையே கூறுவார் என்பாள் என் மேல்படாதன இட்டு என்றாள். படாதன விட்டு எனக் கண்ணழிப்பர் அடியார்க்கு நல்லார். ஏற்பன - வாய்மை நிகழ்ச்சிகள். வாய்மைக் கேற்பன எனினுமாம். செயலறவினால் ஏங்கி என்க.

மாலதியின் பேதைமைச் செயல்கள்

8 - 15 : மகக் கொண்டு .......... கிடந்தாளுக்கு

(இதன்பொருள் :) மகக் கொண்டு-அக் குழவியினுடம்பைப் பிறர் அறியா வண்ணம் தன் கையி லேந்திக்கொண்டு; அமரர் தருக் கோட்டம்-தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயிலும்; வெள்யானைக் கோட்டம் - இந்திரன் ஊர்தியாகிய ஐராவதம் என்னும் வெள்யானை நிற்கும் கோயிலும்; புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம் - அழகினையுடைய வெண்மையான திருமேனியை யுடைய பலதேவர் எழுந்தருளிய கோயிலும்; பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் - கீழ்த்திசையிலே தோன்றுகின்ற ஞாயிற்றுத் தேவனுக்கியன்ற கோயிலும்; ஊர்க் கோட்டம் - அம் மூதூரின் காவற்றெய்வமாகிய சம்பாபதி எழுந்தருளிய கோயிலும்; வேல் கோட்டம் - வேற்படை ஏந்தும் முருகன் கோயிலும்; வச்சிரக்கோட்டம் - இந்திரன் படைக்கலமாகிய வச்சிரம் நிற்கும் கோயிலும்; புறம்பணையான் வாழ் கோட்டம் - நகர்ப்புறப் பகுதியிடத்தே வாழும் இயல்புடைய மாசாத்தன் கோயிலும் - நிக்கந்தக் கோட்டம் - அருகன் கோயிலும்; நிலாக் கோட்டம் - திங்கட் கடவுளுக்கியன்ற கோயிலும்; புக்கு எங்கும் - என்று கூறப்பட்ட இக் கோயில்தோறும் சென்று புகுந்து; தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று - தெய்வங்களே எமது மிக்க இத்துன்பத்தைத் தீர்ந்தருளுங்கோள் என்று கூறி இரப்பவும்; அவருள் ஒருவரேனும் அவட்கிரங்கி அதனைத் தீரா தொழிதலாலே; மேவி ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு - பாசண்டச் சாத்தன் என்கின்ற ஐயனார் கோயிலுக்குச் சென்று ஆங்கும் தன் துயர் கூறி வரங்கிடந்தாளாக; அம்மாலதி முன்னர்; என்க.

(விளக்கம்) 9 - அமரர் தரு - கற்பகத்தரு. வெள்யானை - ஐராவதம். 10. புகர் - அழகு. வெள்ளை நாகர் - பலதேவர். 10 - 11 - பகல் வாயில் உச்சிக்கிழான் - பகல்தோற்றுகிறவாயிலாகிய கீழ்த்திசை கீழ்த்திசையிற் றோன்றுகின்ற உச்சிக்கிழான் என்க. உச்சிக்கிழான் என்பது ஞாயிற்றிற்கொரு பெயர் என்க. ஊர்க்கோட்டம் என்றது அவ்வூர்க் காவற் றெய்வம் ஆகிய சம்பாபதியின் கோயில் என்றவாறு. இது மணிமேகலையிற் கண்டது. இனி, இதனை ஊர் என்பதற்கு இறைவன் எழுந்தருளியிருக்கும் கைலாயம் எனப் பொருள் கொண்டு கைலாயம் நிற்கும் கோயில் என்பர் பழைய வுரையாசிரியரிருவரும் வேல் நிறுத்தப்பட்டிருக்கும் கோயில் எனினுமாம். இதனை ஆகுபெயராக்கி முருகன்கோயில் எனினுமாம். 12 - வச்சிரக்கோட்டம் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோயில். ஈண்டுக் கூறப்பட்ட தருக்கோட்டம், வெள் யானைக்கோட்டம், வெள்ளை நாகர் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என்பன இந்திரவிழாவூரெடுத்த காதையினும் ஓதப்பட்டமை யுணர்க. புறம்பணையான் என்பது, மாசாத்தன் என்னுந் தெய்வத்திற் கொருபெயர். இத்தெய்வத்திற்கு ஊரின் புறப்பகுதியிலேயே கோயில் எடுத்தலின் அப்பெயர் வழங்கிற்றுப் போலும். இத்தெய்வத்தைச் சாதவாகனன் என்பர். அடியார்க்கு நல்லார் அரும்பதவுரையாசிரியர் மாசாத்தன் என்பர். இவையும் மேலே பாசண்டச் சாத்தன் என்பதும் ஐயனார் என்னும் ஒரே தெய்வத்தின் பெயர்களாகும். ஆகவே - மாலதி மேற்கூறிய கோயில்களிலெல்லாம் புக்கு தேவிர்காள் எம்முறுநோய் தீர்மின் என வேண்டினளாக அவற்றுள் ஒன்றேனும் அத்துயர் தீர்க்க முன் வராமையால் மீண்டும் புறம்பணையான் வாழ் கோட்டம் மேவி அக்கோட்டத்தே வாழும் அத்தெய்வத்திற்குப் பாடு கிடந்தாள் என்பதாயிற்று என்க.

இனி, எம்முறுதுயரம் தீர்ம் என்புழி தீர்ம் என்று ஈற்றுமிசை யுகரம் கெட்டது என்பர் அடியார்க்கு நல்லார். எனவே அது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். அங்ஙனமாயின் இது பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற், செல்லாதாகும் செய்யும் என் முற்றே எனவரும்விதிக்கு முரணாகும். ஆகவே தீர்மின் என்னும் முன்னிலைப் பன்மை ஏவன் முற்றின் மின் என்னும் விகுதி மெய்நிற்கக் கெட்டதென்று கோடலே பொருந்தும். அல்லது தீர்மினென மேவி என இதற்குப் பாட வேற்றுமையுண்டெனக் காட்டப்படுதலின் அப்பாடமே கொள்ளலும் பொருந்துவதாம்.

15 - பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமயசாத்திரத் தருக்கக் கோவை என்ப. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றானாகலின் மகாசாத்திரன் என்பது அவற்குப் பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, சாத்திரன் என்பதே சாத்தன் என மருவி வழங்குவ தென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இப்பெயர்க்கு வேறு காரணங் கூறுவாறு முளர். இனி, சாத்தன் என்னும் இத்தெய்வ வழிபாடு இச் செந்தமிழ் நாட்டில் ஊர்தோறும் நிகழ்ந்து வருவதும் கருதற் பாலதாம். இத்தெய்வத்திற்குப் பெரும் பாலும் ஊர்க்குப் புறம்பாகவே கோயிலெடுத்தலும் மரபாகும். கிடந்தாளுக்கு - கிடந்தாளிடத்து, கிடந்தாளுக்குத் தோன்றி என ஒரு சொல் வருவித்து முடித்தலுமாம்.

இடாகினிப் பேயின் செயல்

16 - 22 : ஏசும்படியோர் ..... மகவை

(இதன்பொருள் :) சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் - அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத் தின்று ஆங்குறைகின்ற இடாகினி என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி ஓர் இளங்கொடி யாய்ச் சென்று - செறிந்த இருளினூடே அம்மாலதி பாடு கிடக்கு மிடத்தே அவள் செயலைப் பழித்து அறிவுறுத்துவாள் போன்ற ஓர் இளநங்கை யுருக்கொண்டு சென்று அவளை நோக்கி; ஆசுஇலாய் செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - குற்றமற்றவளே ! கேள்! செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் என்னும் மூதுரைதானும்; பொய் உரை அன்று பொருள் உரையே - பொய்யான மொழியன்று அஃதுண்மையான மொழியே காண்! ஆதலால், நீ இவ்வாறு பாடுகிடத்தல் பயனில் செயலே யாம்; கையில் படு பிணம் தா என்று - அப்பிணத்தைப் பார்க்க விரும்புவாள் போன்று நங்காய்! நின் கையிலேயே இறந்துபட்ட அக்குழவிப் பிணத்தை என்கையிற் றருவாயாக! என்று கூறி; பறித்தவள் கைக்கொண்டு - அம்மாலதி கொடாளாகவும் வலிந்து பறித்துத் தன் கையாற் பற்றி; வாங்கி மகவை மடியகத்து இட்டாள் - அக்குழவிப் பிணத்தை இழுத்து விழுங்கினள்; என்க.

(விளக்கம்) ஏசுதல் - இகழ்தல் - இகழ்ந்து அறிவுறுத்துவாள்போன்று ஓர் இளநங்கையுருவம் கொண்டு சென்று என்க. படி - உருவம். உலகத்து அழகுடைய மகளிரை யெல்லாம் பழிக்கும் உருவமைந்த ஓர் இளங் கொடியாய் எனினுமாம். ஆசிலாய் என்றது நீ குற்றமற்றவளாயினும் தவமுடையை அல்லையாதலின் வரங்கொடார் என்றற்கு. பொய்யுரையன் றென்றதனை வற்புறுத்தற்கு மீண்டும் பொருளுரையே என்று விதந்தாள். தா என்றது யானும் காண்குவன் தா என்பது பட நின்றது. பறித்தவள் : முற்றெச்சம். வினையாலணையும் பெயரனினுமாம்.

20. சுடுகாட்டுக் கோட்டம் - இது சக்கரவாளக் கோட்டம் எனவும் கூறப்படும். இதன் வரலாற்றை மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதைக்கண் விளக்கமாக வுணர்க. இடுபிணம் - சுடுதலும் தொடுகுழிப் படுத்தலும் தாழ்வயின் அடைத்தலும் தாழியிற் கவித்தலும் ஆகிய சிறப்புத் தொழில் யாதொன்றுமின்றிப் பிணத்திற்குரியவர் வாளாது எயிற் புறத்தே கிடத்திப் போகும் பிணம் என்க. பிணமும் நரி முதலிய உயிரினங்கட்கிரையாகும் என்பது பற்றி இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமயவொழுக்கமாம் என்றுணர்க. இவ்வாறிட்ட பிணத்தையே ஆசிரியர் சாத்தனார், வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டம் என்று கூறி அவற்றை நரி முதலியன தின்பதனைத் தமது நூலில் அழகுறக் கூறுகின்றனர். அவற்றை ஆண்டுக் காண்க.

தூங்கிருள் - செறிந்த இருள். மன்னுயிர் யாவும் தூங்குதற்கியன்ற நள்ளிருள் எனினுமாம். மடி - வயிறு. படியை மடியகத்திட்டான் (நான்மணி - கடவு -2) - என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. பாலகன் என்பது காலவழக்கு என்ப.

22 - 28 : இடியுண்ட .......... தையலாள்

(இதன்பொருள் :) இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அதுகண்டு பெருந்துயர் கொண்டு ஆற்றாதவளாகி இடியோசை கேட்ட மயில் அஞ்சி அகவுமாறுபோலே அழாநின்ற அம்மாலதிக்குப் பரிந்து; அச்சாத்தன் அஞ்ஞை நீ ஏங்கி அழல் - அத்தெய்வம் தாயே நீ ஏக்கறவு கொண்டு அழாதே கொள்! நின்னுறு துயர் யாம் துடைக்குதும்; முன்னை உயிர்க்குழவி காணாய் - நீ செல்லும் வழியிடத்தே அக்குழவியை உயிருடன் காண்பாய்காண்! என்று - என்றுகூறி ஆற்றுவித்துப்பின்னர்; அக் குழவியாய் ஓர் குயில் பொதும்பர் நீழல் குறுக - அச் சாத்தன்றானே இறந்துபட்ட அக்குழவி யுருக்கொண்டு சென்று அவள் செல்லும் வழிமுன்னர்க் குயில்கள் கூவுதற் கியன்றதொரு மாஞ்சோலையிடத்தே சென்று கிடந்தழா நிற்ப; அத் தையலாள் மாயக்குழவி அயிர்ப்பின்றி எடுத்து - அச்சாத்தன் அருளியவாறே அம்மாலதிதானும் வழியிற் கிடந்தழும் அவ்வஞ்சக் குழவியைக் கண்டு அஃது அத் தெய்வத்தாலுயிருடன் மீட்டுக் கொடுத்த தன் குழவியே என்பதில் சிறிதும் ஐயமின்றி அன்புடன் எடுத்து ; மடி திரைத்துத் தாய் கைக்கொடுத்தாள் - தான் புடைவையினது மடியாகிய முன்றானையாலே மறைத்துக் கொடுபோய் யாதொன்றும் நிகழாததுபோன்று அக்குழவியை யீன்ற தாயாகிய தன் மாற்றாள் கையிலே கொடுத்தனள்; என்க.

(விளக்கம்) 22 - இடி. -இடியோசை. உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே (தொல் பொருளியல் 19) என்னும் மரபு பற்றி இடியோசை கேட்பதனை, இடியுண்ட என்றார். நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினாலே சுருக்குண்டேன் என வருதலும் காண்க.

23. மஞ்ஞை - மயில். 24. அஞ்ஞை - அன்னை. அழல் - அழாதே. காணாய் - காண்பாய். 26. - குயிற் பொதும்பர் - குயில் கூவும் சோலை. சிறப்புப் பற்றி மாஞ்சோலை என்க. அயிர்ப்பு - ஐயம். தன் குழவியே என்பதில் ஐயமின்றி என்றவாறு. 27. மாயம் - வஞ்சம். மடியின் கட்டிரைத்து என்க. வயிற்றிலே அணைத்து என்பாருமுளர்.

அம்மாயக் குழவியின் செயல்

28 - 32 : தூய ............ மேயநாள்

(இதன்பொருள் :) தூய மறையோன் பின் (ஆய்) - இவ்வாற்றால் அச்சாத்தன்றானும் மாலதி கணவனாகிய புலன் அழுக்கற்ற அந்தணனுக்கு வழித்தோன்றலாகி; மாணியாய் - பின்னர் மறைபயிலும் பிரமசரிய நிலை எய்தியவனாகி; வான் பொருள் கேள்வித் துறைபோய் - மெய்ப்பொருளை யுணர்தற்குக் காரணமான கல்வி கேள்விகளில் மிக்கவனாகிக் கற்றாங்கு அறநெறிக்கண் பிறழாதொழுகி; அவர் முடிந்த பின்னர் - அம்மறையோன் முதலிய முதுகுரவர்கள் இறந்த பின்னர்; இறையோனும் - கடவுளாகிய அச்சாத்தன்றானும்; தந்தைக்குந் தாயார்க்கும் வேண்டும் கடன் கழித்து - அத்தந்தைக்கும் தாயர் இருவருக்கும் மகன் செய்யக்கடவ இறுதிக் கடன்களைச் செய்துமுடித்து; தாயத்தாரோடும் வழக்கு உரைத்து - பொருள்பற்றித் தன் தாயத்தாரோடு உண்டான வழக்கின்கண் அறங்கூறவையைத் தேறித் தன்பக்கல் வெற்றியுண்டாக வேண்டுவன கூறி வென்று; மேய நாள் - இல்லறத் தினிதமர்ந்து வாழும் நாளிலே என்க.

(விளக்கம்) 29 - மாணியாய் என்பதன்கண் அமைந்த ஆக்கச் சொல்லை மறையோன் பின்னாய் என முன்னும் கூட்டுக. மறையோன் பின்னாய் - மறையோனுக்கு வழித்தோன்றலாகி என்க. பின் -வழி. வான்பொருள் - மெய்ப்பொருள். வான்பொருள் நல்லாசிரியர்பாற் கேட்டுணர்தற்பாலதாகலின் கேள்வி மட்டுமே கூறினரேனும் கல்வி கேள்வி எனக் கல்வியையும் கூறிக் கொள்க. மாணி - பிரமசாரி. மாணி எனவே அந்நிலைக்குரிய வான்பொருட்கேள்வியையும் விதந்தார். 30- துறை போதல் - அறநெறியிலொழுகுதல் - தந்தையும் தாயரும் முடிந்த பின்னர் அவ்வப் பொழுதில் வேண்டும் கடன் கழித்து என்றவாறு. செய்யுளாதலின் அவர் முடிந்த பின்னர் எனச் சுட்டுச் சொல் முன்னர் வந்தது. தந்தை தாயர் முடிந்த பின்னர் அவர்க்குக் கடன் கழித்து என்க. இருவர் ஆதலின் தாயர் என்றார்.

இனி அடியார்க்கு நல்லார், வரந்தரு காதைக்கண்,

தேவந்திகையைத் தீவலஞ் செய்து
நாலீராண்டு நடந்ததற் பின்னர்
மூவா விளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன்  (84-7)

எனவருஞ் சாத்தன் வரலாற்றைக் கருத்துட் கொண்டு, ஈண்டு, மேயநாள் என்பதற்கு எட்டுயாண்டு தன் மனைவியோடே கூடிநடந்தபின் ஒரு நாளிலே எனவுரை வகுத்தனர்.

33 - 40 : தேவந்தி ....... கொண்டிருப்பாள்

(இதன்பொருள்) மனைவி தேவந்தி என்பாள் - அச்சாத்தன் இல்லறம் மேற்கொண்ட காலத்தே அவனுக்கு மனைவியாயமைந்தவள் தேவந்தி என்னும் பார்ப்பனியாவள்; அவளுக்கு - (வாய்மை கூறி மீண்டும் தன் தெய்வத்தன்மையை எய்த நினைத்த அச் சாத்தன்றானும்) மக்களினத்தாளாகிய அத் தேவந்தியினுடைய; பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி - மலர்போன்ற மையுண்ட கண்கள் பொறுத்துக் கொடற்பொருட்டு அவ்வளவிற்றாகத் தன்னொளியைப் படைத்துக் கொண்டு அவள்பாற் சென்று; தன் மூவா இளநலம் காட்டி - தெய்வமான தனக்கியல்பான மூவாமையுடைய இளமையினது அழகினை வெளிப்படுத்துக் காட்டியருளி; நீ எம் கோட்டத்து வா என வுரைத்து - அவள் குறிப்புணர்ந்து இனி நீ எமது கோயிலுக்கு வந்து எம்மைக் காண்பாயாக! என்று தேற்றி; நீங்குதலும் - அம்மாய வுருவினின்றும் நீங்கித் தெய்வமாய் மறைந்தொழியவும்; தூமொழி - தூயமொழியையுடைய அத் தேவந்திதானும்; ஆர்த்த கணவன் எங்கும் தீர்த்தத் துறைபோய்ப் படிவேன் என்று அகன்றனன் - அத்தெய்வத்தின் செயலைப் பிறர் அறியாமைப் பொருட்டும் அவன் கோயிலுக்குத் தான் எப்பொழுதும் போதற்கும் ஊரவர்க்கு ஒரு காரணம் காட்டுவாள்; தெய்வமே ! அளியேனைக் கட்டிய கணவன்றான் இந்நாவலந் தீவிடத்தே எவ்விடத்துஞ் சென்று ஆங்காங்குள்ள புண்ணியத் தீர்த்தங்களிலெல்லாம் ஆடி வருகுவேன் என்று சொல்லி என்னைத் துறந்துபோயினன்; அவனைப் பேர்த்து மீட்டு இங்ஙன் தருவாய் என - அவன் நெஞ்சத்தை மாற்றி மீளவும் இவ்விடத்தே கொணர்ந்து தந்தருள்வாயாக என்று பலருமறிய வாய்விட்டு வேண்டுதலாகிய; ஒன்றன் மேலிட்டு - ஒரு போலிக் காரணத்தைக் காட்டி; கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - நாள்தோறும் அச்சாத்தன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுந் தொழிலைக் கடனாக மேற்கொண்டிருப்பவள்; என்க.

(விளக்கம்) 33 - அச்சாத்தனுக்கு மனைவியாக வாய்த்தவள் தேவந்தி என்னும் பெயருடையாள் ஆவள், என அறிவுறுத்தவாறாம். 34- பூ வந்த உண்கண் என்புழி வந்த என்பது உவமவுருபின்பொருட்டு மக்கள் கண் தெய்வயாக்கையினது பேரொளியைப் பொறாதாகலின் அவள் கண் பொறுக்குமளவிற்றாய்ச் சாத்தன் தன்மேனி யொளியைச் சுருக்கி அவளெதிர்மேவி தனக்குரிய மூவா இளநலம் காட்டி என்றவாறு. அந்தரத் துள்ளோர் அறியா மரபின் வந்து என அடிகளார் ஆறாங் காதையிற் கூறியதும் இக்கருத்துடையதேயாம். ஆசிரியர் சாத்தனார் தாமும் கரந்துரு வெய்திய கடவுளாளரும் (மணிமேகலை: 1- 66) என்றோதுதலு மறிக. ஈண்டுத் தேவந்தி பலருமறியக் கூறும் இம்மொழிகள் பொய்மையேயாயினும் இவற்றால் இவை யாதொன்றும் தீமை பயவாமையின் வாய்மை யிடத்தவேயாம் எனத் தேவந்தியின் தூய்மையை வலியுறுத்துவார் அடிகளார் அவளை (36) தூமொழி என்றே சுட்டும் நயமுணர்க. 37-ஆர்த்த கணவன் - என்னெஞ்சத்தைப் பிணித்த கணவன் எனினுமாம்.

39. ஒன்றன் மேலிட்டு ஒரு காரியத்தைத் தலைக்கீடாகக் காட்டி. வழிபாடு கொண்டிருப்பாள் - பெயர்.

தேவந்தி கண்ணகியின்பாற் சென்று கூறுதல்

40 - 44 : வாட்டருஞ்சீர் ........ என்றாள்

(இதன்பொருள் :) வாடு அருஞ்சீர் கண்ணகி நல்லாளுக்கு உற்றகுறை உண்டு என்று எண்ணிய நெஞ்சத்து இனையள் ஆய் - எக்காலத்தும் யாவரானும் குறைக்க வொண்ணாத பெரும்புகழையுடைய கண்ணகியாகிய நல்ல தன் தோழிக்குக் கணவன் பிரிதலாலே எய்தியதொரு துன்பமுண்டென்று நினைத்த தன்னுடைய நெஞ்சத்தினூடே எப்பொழுதும் துன்பமுடையவளாய் அவள் தன் துன்பந் தீர் தற்பொருட்டு; நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூய் - அச்சாத்தன் கோயிலை நண்ணி அறுகம்புல்லையும் சிறுபூளைப் பூவையும் நெல்லோடு விரவி அச்சாத்தன் றிருவடிக்கண் தூவித் தெய்வமே என் றோழியின் துயர்துடைத்தருளுதி என வேண்டிக் கைதொழுது பின்னர்; சென்று - கண்ணகிபாற் சென்று வாழ்த்துபவள்; கணவனோடு பெறுக என்றாள் - அன்புடையோய் நீ நின்னைப் பிரிந்த கணவனோடு கூடி வாழ்வு பெறுவாயாக! என்று வாழ்த்தினள் என்க.

(விளக்கம்) 40 - வள்ளல் மறவர் முதலியோர் பெற்ற புகழெல்லாம் தம்மின் மிக்கார் தோன்றியவழி, குறைவனவாம். கற்புடைமையில் கண்ணகியின் மிக்கார் தோன்றவியலாமையான் அவள் புகழ் என்றும் குறையாத புகழ் என்பார், வாட்டருஞ் சீர் என்றார். அஃதாவது - பிறராற் குறைக்க வொண்ணாத திண்ணிய புகழ். வாடு - வாட்டென விகார மெய்திற்றெனினுமாம். 41 - கண்ணகி நல்லாளுக் குற்ற குறையை எண்ணிய பொழுதெல்லாம் அவள் நெஞ்சம் துன்புறும் என்பது தோன்ற கண்ணகி....இளையவாய் என்றார். இனைதல் - ஈறுகெட்டு இனை என நின்றது. இனைதல் - துன்புறுதல். கண்ணகி இம்மைச் செய்தது யானறி நல்வினை என்பாள் கண்ணகி என்றொழியாது கண்ணகி நல்லாள் என்றாள். எனவே, அக் குறை உம்மைச் செய்த தீவினையின் பயனாதல் வேண்டும். உம்மை வினைப்பயன் தெய்வத்தாற் றீரற்பாலது என எண்ணி அவள் பொருட்டுத் தானும் தெய்வத்தை வேண்டுவாள் அறுகு முதலிய தூவி வேண்டினள் என்க. பின்னரும் இக் கருத்துண்மையால் கண்ணகியைப் புண்ணியத் துறை மூழ்கவும் காமவேள் கோட்டந் தொழவும் இத் தேவந்தி அழைப்பதூஉம் காண்க.

கண்ணகி தான்கண்ட கனவினைத் தேவந்திக்குக் கூறுதல்

44 - 54 : பெறுகேன் ........... நகையாகும்

(இதன்பொருள் :) (52) செறிதொடீஇ - அதுகேட்ட கண்ணகி தேவந்தியை நோக்கி, செறித்த வளையலையுடையோய்; பெறுகேன் - தூயையாகிய நின் வாழ்த்துரை பொய்யாதாகலின் நீ வாழ்த்தியாங்கு யான் என் கணவனோடு ஏனைய நலங்களும் பெறுவேண்காண்; அதுநிற்க! ஈதொன்று கேள்! என் நெஞ்சம் கனவினால் கடுக்கும் என் நெஞ்சமானது நேற்றிரவு வைகறைப் பொழுதிலே யான் கண்டதொரு கனவு காரணமாக அத்தகைய நலத்தை யான் எய்துவேனோ? எய்தேனோ? என்று பெரிதும் ஐயுறாநின்றது; அக்கனவுதான் யாதோவெனின், என் கைப்பீடித்தனன் போய் ஓர் பெரும்பதியுள் பட்டேம் - என் கணவன் என்னை விரும்பிவந்து அன்புடன் என் கையைப் பற்றினன், பின்னர் யாங்கள் இருவேரும் சென்று யாதோவொரு பெரிய நகரத்தின்கட் புகுந்தேம்; பட்ட பதியில் ஊரார் படாதது ஒரு வார்த்தை என்றன்மேல் இடுதேள் இட்டுக் கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்றது கேட்டு - புகுந்த அவ்விடத்தே அவ்வூர் வாழும் மாந்தர் எமக்குப் பொருந்தாததொரு படிற்றுரையை இடுதேள் இடுமாறுபோல என்மேலிட்டுப் பின்னரும் அவரிடப்பட்ட அப்படிறு காரணமாகக் கோவலனுக்கும் ஒரு தீங்குற்றது என்று சிலர் கூறக்கேட்டு; யான் காவலன் முன் கட்டுரைத்தேன் - அது பொறாமல் பிற ஆடவர்முன் செல்லாத யான் அந்நகரத்து அரசன் முன்னர்ச் சென்று பிறர்முன் யாதொன்றும் உரைத்தறியாதேன் வழக்குரைத்தேன்; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டு ஆல் - அதனால் தீங்குற்ற அவ்வரசனோடன்றி அவ்வூருக்கு உற்ற தீங்கும் ஒன்றுண்டு; தீக்குற்றம் போலும் - அவ்வூர்க்குற்ற தீங்கு யான் செய்த கொடிய குற்றத்தின் பயன்போல் தோன்றுகின்றது ஆதலால்; உரையாடேன் - அதனை யான் நினக்குக் கூறுவேனல்லேன்; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற நல்திறம் கேட்கின் நகையாகும் - இவ்வாறு கொடிய குற்றம் எய்திய என்னோடு பொருந்திய பெருந்தகையானோடு யான் பெற்ற நன்மைகளின் இயல்பை நீ கேட்பாயானால் அது நினக்கு நகைப்பையே உண்டாக்கும் ஆதலால் அவற்றையும் கூறேன்காண்! என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. கணவனோடு நீ வாழ்வு பெறுக ! என்று தேவந்தி வாழ்த்தினளாகலின் - நீதான் தூயையாகலின் நின் வாழ்த்துப் பொய்யாது ஆகலின் யான் அங்ஙனம் பெறுகேன் என்று கூறி அவ்வாழ்த்தினைக் கண்ணகி நல்லாள் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டபடியாம். இதனால் கண்ணகி தேவந்தியின் பால் வைத்துள்ள நன்மதிப்பு விளங்குவதாயிற்று. நின்வாழ்த்தும் என் கனவும் முரணுதலின் யான் ஐயுறுகின்றேன் என்பாள், கனவினால் என்னெஞ்சம் கடுக்கும் என்றாள். 45. கடுக்கும் - ஐயுறும். கடியென்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த முற்றுச் சொல்.

கடியென்கிளவி ............ ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே என்பது தொல்காப்பியம் (உரி - 85 - 6).

தேவந்தி கணவனோடு பெறுக என்றமையால், அவன் வந்து என் கைப்பிடித்தனன். ஆனால், அது கனவு எனச் சிறிது நகையாடியவாறுமாம். அதனைத் தொடர்ந்து கண்ணகி தன் கனாத்திறம் கூறுகின்றாள் என்க. அவன் வந்து கைப்பிடித்தனன் எனவும் 44 - யாம் போய் ஓர் பெரும்பதியுட்பட்டேம் என்றும் வருவித்துரைக்க. முன்னர் அறிந்திலாத பதி என்பாள் ஓர் பெரும்பதி என்றாள். 47. படாதது - எமக்குப் பொருந்தாதது. உரையார் இழிதக்க காணிற் கனா என்பது பற்றிப் பொதுவாகப் படாத தொரு வார்த்தை என்றொழிந்தாள். இடு தேளிட்டென எனல் வேண்டிய உவமவுருபு செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இடுதேளிடுதலாவது, தேள் இடப் படுவார் காணாமே தேளல்லாத தொன்றை மறையக் கொணர்ந்து அவர் மேலே போகட்டுத் தேள் என்று சொல்லி அவரைக் கலங்கச் செய்தல். நகைப் பொருட்டாக இங்ஙனம் இடுதேளிடும் வழக்கம் இற்றை நாளினும் இருக்கின்றது. கணவன் எனத் தான் என வேறாகக் கருதாது அவன் மேலிட்ட பழியையே என் மேலிட்டனர் என்கின்றாள். என்றன் மேலென்புழி தன் அசைச்சொல்.

கோவலற் குற்றதோர் தீங்கென்றது கேட்டு யான் காவலன் முன்னர்க் கட்டுரைத்தேன். அதனால் காவலனும் தீங்குற்றான் எனக் கூறவந்தவள் அதனைக் கூறாது விடுத்து அப்பொருள் தோன்ற, காவலனோடு ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுண்டு என உடனிகழ்ச்சிக்குரிய ஒடுவுருபானும் இறந்தது தழீஇய எச்சவும்மையானும் குறிப்பாக அறிவுறுத்தாள். அவற்றைக் கூறாமைக்குக் காரணம் கூறுவாள் அவை - யான் செய்த தீக் குற்றம் போலும் என்றிரங்கினாள். அவையாவன அரசன் உயிர் நீத்தமையும் மதுரை தீயுண்டமையுமாம். கண்ணகியார் இச் செயல்களைத் தாம் செய்த தீவினைகளாகவே கருதினர் என்பதனை, கட்டுரைக் காதைக்கண்,

அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றிரங்கி

என அடிகளார் அறிவுறுத்துதலானும், மணிமேகலையில் சாத்தனார் கண்ணகி கூற்றாக,

உம்மை வினைவந் துருத்தல் ஒழியாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
.......... .............. ............ ............
அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது  (26 : 32-7)

என்றோதுதலானும் உணர்க. எனவே, ஈண்டுக் கண்ணகியார் கனவிற் கண் தாமே தீவினை செய்ததாகக் காண்டலின் இவ்விழிதகவினை நினக்குரையாடேன் என்கின்றனர். மீண்டுந் தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவன் என்றோதுதலும் அவர் அதற்குப் பரிந்தமையை வலியுறுத்துதலு முணர்க. பிறரெல்லாம் இதற்கு இப் பொருள் காணாது தத்தம் வாய் வந்தன கூறினர். 53. உறுவன் - மிக்கோன் - தாம் வலவனே வா வானவூர்தியில் வானவர் எதிர்கொண்டழைப்பச் சென்றமைக்குக் காரணம் தன் கணவன் செய்த நல்வினையே என்பாள் அவனை உறுவன் என்றோதினள். நற்றிறம் என்றது இறந்த கணவனை உயிரொடு கொணர்ந்து காட்டுதலும் அவனும் தானும் வானவூர்தியில் விண்ணகம் புக்கதும் பிறவுமாம். இவை, நிகழவொண்ணா நிகழ்ச்சிகளாகலின் நகைதரும் என்றாள். இவை இழிதக்கவல்லன வாயினும் நகைதருவன ஆகலின் இவற்றையும் உரையாடேன் காண் என்பது குறிப்பெச்சம்.

கனாத் திறங்கேட்ட தேவந்தி கண்ணகிக்குக் கூறுதல்

54 - 64 : பொற்றொடீஇ .............. பின்னரே

(இதன்பொருள் :) பொற்றொடீஇ - பொன் வளையலையுடைய தோழீ! நீ கண்ட இக்கனவினால் நெஞ்சம் கலங்காதே கொள்! கணவற்குக் கைத்தாயும் அல்லை - நீ தானும் நின் கணவனால் வெறுத்துக் கைவிடப்பட்டாயும் அல்லை; பழம் பிறப்பில் ஒரு நோன்பு பொய்த்தாய் - நீ நின்னுடைய முற்பிறப்பிலே மகளிர் கணவர் பொருட்டு மேற்கொள்ளுதற்குரிய ஒரு நோன்பின்கண் தவறு செய்துள்ளனை போலும்; அத்தவறு காரணமாகவே நீ இப்பிறப்பில் இங்ஙனம் கணவனைப் பிரிந்துறையலாயினை போலும்; போய்க் கெடுக - அத் தவறுதானும் இவ்வளவோடு தொலைந் தொழிவதாக! காவிரி உய்த்துச் சென்று கடலோடு அலைக்கும் முன்றில் - காவிரிப் பேரியாறு தன்னீரைக் கொண்டுசென்று கடலோடு எதிர்த்து அலைத்தற்கிடனான கூடலிடத்தின் அயலே; மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடமுள - தாழைமலர் மடல் விரிந்து மணம் பரப்பும் நெய்தனிலத்துச் சோலையினூடே இரண்டு நீர்நிலைகள் உள; சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கி - சோமகுண்டம் என்றும் சூரியகுண்டம் என்றும் கூறப்படுகின்ற அப்புண்ணிய தீர்த்தங்களின் துறைகளில் முழுகி; காமவேள் கோட்டந் தொழுதார் தையலார்தாம் - அங்குள்ள காமவேள் கோயிலிற் சென்று அதன்கண்ணுறையும் காமக் கடவுளைக் கைகூப்பி வணங்கும் மகளிர்தாம்; உலகத்து கணவரொடு இன்புறுவர் - இந்நிலவுலகத்தே இப்பிறப்பிலுள்ள நாளெல்லாம் தங் கணவரொடும் பிரிவின்றியிருந்து பேரின்ப மெய்தாநிற்பர்; போகம் செய்பூமியினும் போய்ப் பிறப்பர் - பின்னரும் ஆதியரிவஞ்சம் முதலிய போகபூமியினும் தங் கணவரொடு போய்த் தேவராய்ப் பிறந்து நீடூழிப் பேரின்ப நுகரா நிற்பர் என்பது உலகுரையாம்; யாம் ஒருநாள் ஆங்குச் சென்று அத்தீர்த்தங்களிலே ஆடுவேம் காண்! என்று வேண்டிய அத்தேவந்திக்கு; அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - அக் கண்ணகிதானும் அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் எம்மனோர்க்கு இயல்பாகாது காண்! என்று கூறி மறுத்திருந்த பின் அப்பொழுதே; என்க.

(விளக்கம்) 55 - கணவற்குக் கைத்தாயும் அல்லை என மாறுக. கைத்தல் - அறுவகைச் சுவையினுள் ஒன்று. அஃது ஈண்டு அச்சுவையினாற் பிறக்கும் உள்ள நிகழ்ச்சியாகிய வெறுப்பின் மேனின்றது. ஆகவே, நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டு அவனால் கைவிடப்பட்டாயு மல்லை என்றாளாயிற்று. வெறுத்துக் கைவிடப் பட்டிருந்தால் அவனைப் பெறுதல் கூடாது. நீ மீண்டும் பெறுதல் கூடும் என்பது கருத்து இனி நின் கணவன் பிரிதற்குரிய பிழை இம்மையில் நின்பால் யான்கண்டிலேன். ஆகலின் அவன் பிரிதற்குக் காரணம் நின் பழவினையே ஆதல் தேற்றம். புண்ணிய தீர்த்தங்களில் முழுகித் தெய்வந் தொழுவதுவே அதற்குக் கழுவாயாகும் என்பாள், அத்துறைகளின் சிறப் பெடுத்தோதி யாமும் ஒரு நாள் ஆடுதும் என்கின்றாள். தேவந்தியும் கணவற் பிரிந்தவளே யாதலின் யானும் அத்தகைய பழவினையுடையே னல்லனோ யாமிருவேமும் ஆடுதும் எனத் தன்னையும் உளப்படுத் தோதினள்.

கற்புடை மகளிர்க்குக் கணவரே தெய்வமாதலின் அவர் பிறதெய்வம் தொழுதல் இழுக்காம். இதனை,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

எனவரும் திருக்குறளானும் (55) உணர்க.

54. பொற்றொடீஇ : அன்மொழித்தொகை. விளியேற்று நின்றது. காவிரி உய்த்துச் சென்று கடலொடு அலைக்கும் முன்றில் எனமாறுக. முன்றில் - ஈண்டுக் கூடல் முகம். அது முன்றில் போறலின் அங்ஙனம் கூறினர். சோமகுண்டத்துறை மூழ்குவார் இவ்வுலகத்தின் புறுவர் என்றும் சூரிய குண்டத்துறை மூழ்கினர் போக பூமியிற்பிறந்து இன்புறுவர் என்றும் நிரனிறையாகக் கொள்வாருமுளர். அங்ஙனம் கோடலிற் சிறப்பியாது மின்மையுணர்க. பட்டினப்பாலையில் இரு காமத்து இணையேரி, (39) எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் கூறப்பட்டவை இங்குக் கூறப்படும் இருவகைக் குண்டங்களே என்ப.

கோவலன் வருகை

64 - 66 : நீடிய ............. குற்றிளையாள்

(இதன்பொருள் :) ஓர் குற்றிளையாள் கோவலன் வந்து நீடிய நம் நடைத்தலையான் காவலன் போலும் என்றாள்-ஒரு குற்றேவற் சிலதி விரைந்துவந்து கண்ணகியை நோக்கி அன்னாய் நம்பெருமானாகிய கோவலன் உதோ வந்து நெடிய நம் வாயிலிடத்தே வாயில் காப்பான் போலே நிற்கின்றனன் என்று அறிவித்தனள்; என்க.

(விளக்கம் ) ஈண்டுத் தூமொழித் தேவந்தி நீ நின் கணவனொடு வாழ்வு பெறுக! என்ற வாழ்த்தும் கண்ணகி வைகறையிற் கண்ட கனவும் ஒருங்கே பலித்தமை யுணர்க. நீடிய கடைத்தலையான் என ஒட்டுக, கோவலன் இல்லத்துத் தலைவன் போன்று உட்புகுதத் துணிவின்றி வாயிலிலேயே தயங்கி நிற்றலாலே கோவலன் வந்து காவலன் போலக் கடைத்தலையான் என்று அவனை இயற்பழித்துரைகின்றாள். குறும்புடைய அக்குற்றேவற் சிறுமி. அரசர் போல நிற்கின்றார் எனவும் ஒரு பொருள் தோன்றலும் உணர்க.

இனி, பழையவுரையாசிரியர்கள், தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று அணுகினவிடத்து ஐயந்தீர்ந்து கோவலன் என்றாள் எனினும் அமையும் என்பர். தமியனாய்ப் புலம்பு கொண்டு வருகின்றவனை அவள் காவலன் என்று ஐயுற்று நோக்குதல் பொருந்தாமை யுணர்க. நம் கோவலன் நெடுங்காலம் காப்பான் போலே இரா நின்றான் என அவர் கூறும் உரையும் அவள் குற்றேவற் சிலதி யாதலின் பொருந்தாவுரை யேயாம்.

கோவலன் கண்ணகிக்குக் கூறுதல்

66 - 71 : கோவலனும் .............. தருமெனக்கென்ன

(இதன்பொருள் :) கோவலனும் - தன்னெஞ்சமே தன்னைச் சுடுதலானே வாயிலிலே அங்ஙனம் தயங்கிநின்ற அக் கோவலன்றானும் அக் குற்றிளையாளே தன் வரவுணர்த்திருப்பள் என்னும் தனதுய்த்துணர்வே வாயிலாக; பாடு அமை சேக்கையுள் புக்கு - இல்லினுட் சென்று ஆங்குப் புற்கென்று கிடக்கும் அணைகள் பலவற்றை அடுக்கிய தனது சேக்கைப் பள்ளியுட் புகுந்து; தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன்னை முகமலர்ந்து வரவேற்பாளாய் அவனைத் தொடர்ந்துவந்து முன்னின்ற காதலியாகிய கண்ணகியினது திருமேனியினது வாட்டத்தையும் நெஞ்சினது வருத்தத்தையும் கண்கூடாகப் பார்த்து; யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி - எல்லாச் செயல்களிடத்தும் பொய்யை மெய்போலப் பொருந்துவித் தொழுகும் கோட்பாட்டையுடைய மாயத்தாளோடுங் கூடி ஆடிய எனது தீயொழுக்கங் காரணமாக; குலம் தரும் குன்றம் வான் பொருள் தொலைந்த இலம்பாடு எனக்கு நாணுத்தரும் என்ன - நங் குலத்து முன்னோர் தேடித்தந்த மலையளவிற்றாகிய சிறந்த பொருட்குவை யெல்லாம் தொலைந் தொழிந்தன அதனால் உண்டான நல்குரவு இப்பொழுது எனக்குப் பெரிதும் நாணைத் தருகின்றது காண் என்று கூறி இரங்க; என்க.

(விளக்கம்) 66 - கோவலனும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. பாடு அமை சேக்கை - அணைகளை அடுக்கிப் படுத்த சேக்கைக் கியன்ற பள்ளியறை 97 - தன் காதலியாகிய பசிய தொடியினையுடைய கண்ணகியின் வாடிய மேனி என்க. மேனியும் நெஞ்சத்து வருத்தமும் என உம்மை விரித்தோதுக. சலம் - பொய் - வஞ்சமுமாம் யாவும் எல்லாச் செயல்களிடத்தும், எல்லா வொழுக்கத்தினும் வஞ்சகத்தைப் புணர்த்தல் வேண்டும் என்பது அவள் மரபிற்கே ஒரு கோட்பாடு ஆகலின், சலம்புணர் கொள்கைச் சலதி என்றான். குலந்தரும் பொருள்வான் பொருள் எனத் தனித்தனி யியையும். தொன்று தொட்டுக் குல முன்னோர் அறத்தாற்றீட்டிய சிறந்த பொருள் என்பது கருத்து. பொருளின் மிகுதிக்குக் குன்றம் உவமை. சலதியோடு ஆடப் பொருட் குன்றம் தொலைந்த அதனால் உண்டான நல்குரவு நாணுத்தரும் என்றான் என்க. இலம்பாடு - நல்குரவு. நாணுத்தரும் என்றது கெட்டால் மதி தோன்றும் என்னும் வழக்கு.

கண்ணகி கோவலனுக்குக் கூறுதல்

72 - 73 : நலங்கேழ் ............. கொண்மென

(இதன்பொருள் :) நலம் கேழ் நகைமுகம் முறுவல் காட்டி - கணவனுடைய கழிவிரக்க மொழிகளைக் கேட்ட அத்திருமாபத்தினி தானும் கணவன் கருத்தை யாவதும் மாற்றாத கொள்கையை யுடையாளாகலின் கோவலன் மாதவிக்குக் கொடுக்கும் பொருள் முட்டுப்பாட்டினாலே இங்ஙனம் கூறினானாகக் கருதி; அவனுடைய அத்துயர்துடைக்க வழி யாது எனத் தன்னெஞ்சத்துளாராய்ந்து ஒருவழி காணப்பெற்றமையாலே; மெய்யன்பென்னும் நலம் பொருந்துதலாலே புத்தொளி படைத்த தனது திருமுகத்திலே தோன்றிய புன்முறுவலைக் காட்டி; சிலம்பு உள கொண்ம் என - அன்புடையீர் இன்னும் என்பால் சிலம்பு ஓர் இணை உள அவையிற்றைக் கொண்மின் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நலம் - அன்பாகிய நன்மை. அந்நலத்தின் மெய்ப் பாட்டினை நகை என்றார். நகை - ஒளி. இலம்பாடு நாணுத்தரும் என்பது அவன் குறையாகலின் அது தீர்த்தற்குத் தன்னுட் சிறிது சூழ்ந்து தான் அணியாதிருக்கும் பெருவிலைச் சிலம்புகள் இக்குறையை இப் பொழுதைக்குத் தீர்க்கப் போதியன வாகும் என்று அப்பெருந் தகையாள் அவற்றைக் கொண்மின் எனக் கூறும் இச்சிறப்பு அவளது ஒப்பற்ற கற்பினது மாண்பினை நன்கு விளக்கி நிற்றல் உணர்ந்துணர்ந்து மகிழற் பாலதாகும். இது கூறுங்கால் அவன் துயர்க்குத் தான் வாய்மையாகவே வருந்தி அன்பு மேலீட்டால் கூறுதலின் முகம் மலர்ந்து கூறுகின்றாள் என்றுணர்க. அவன் குறை தீர்க்கலாவது அப்பொழுது தன்பாலொன்றுளதாவதனை நினைவு கூர்ந்தவுடன் மகிழ்ச்சியால் அவள் முகமலர்ந்து புன்முறுவலும் தவழ்வதாயிற்று. இஃதியற்கையாம். சிலம்புள கொண்மின் எனவே இவை யொழிந்த அணிகலனெல்லாம் முன்னமே தொலைந்தமை பெற்றாம்.

கோவலன் கண்ணகியோடு மதுரைக்குப் போகத் துணிதல்

73-79 : சேயிழைகேள் ....... கால்சீயாமுன்

(இதன்பொருள்:) சேயிழை கேள் - அதுகேட்ட கோவலன் பின்னரும் அவட்குப் பரிந்து சேயிழையே இப்பொழுது யான் கருதுவதனைக் கூறுவல் கேட்பாயாக! சிலம்பு முதல் ஆக - நீ சொன்ன அச்சிலம்பை யான் வாணிகத் தொழிலுக்கு முதற் பொருளாகக் கொண்டு; மலர்ந்த சீர் மாட மதுரை யகத்துச் சென்று - நாற்றிசையினும் விரிந்த புகழையுடைய மாடங்களாற் சிறந்த மதுரையென்னும் நகரிடத்தே சென்று அத்தொழிலைச் சிறப்பச் செய்து; சென்ற கலனோடு உலந்த பொருள் - யான் முன்பு நின்பால் வாங்கி அழித்த அணிகலன்களையும் என்னாற் றொலைக்கப்பட்ட பொருள்களையும்; ஈட்டுதல் உற்றேன் - தேடித் தொகுக்கத் துணிந்தேன்; ஏடு அலா கோதாய் - இதழ் விரிகின்ற மலர்மாலையையுடையோய்; ஈங்கு என்னோடு எழு என்று - அதற்கு நீ இப்பொழுதே இவ்விடத்தினின்றும் என்னோடு எழுந்து வருவாயாக! என்று சொல்லி; கனைசுடர் கங்குல் கால்சீயா முன் - கதிரவன் தனது மிக்க ஒளியால் உலகின் கண் செறிந்த இருளைப் போக்குதற்கு முற்பட்ட வைகறைப் பொழுதிலே; வினை நீடி கடைக்கூட்ட முற்பிறப்பில் தான் செய்த தீவினையானது பயன்றரும் செவ்வியுறுந்துணையும் தன் னெஞ்சத்துள் நெடிதிருந்து தன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; வியம் கொண்டான் - செவ்வி வந்தெய்தினமையால் அவ்வினை தன்னெஞ்சத்துள் ஏவிய ஏவலை மேற்கொண்டாள் என்க.

(விளக்கம்) சீத்தல் - விலக்குதல்; அகற்றுதல். கனை சுடர் - ஞாயிறு. கால் சீத்தல் : ஒரு சொல் எனினுமாம். சுடர் கால் சீயா முன் எனவே வைகறையாமத்தே என்பதாயிற்று. ஒருவன் செய்த வினை, தனது பயனை விளைத்தற்குத் தகுந்த செவ்வி பெறுமளவும் அவனுடைய நெஞ்சத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு கிடக்கும் என்பது தத்துவ நூல் வழக்கு. ஆதலின் வினை நீடிக் கடைக் கூட்ட என்றார். வியம் - ஏவல் - வினையினது ஏவல்.

பா-கலிவெண்பா

வெண்பாவுரை

காதலிகண்ட .......... சீயாமுன்

(இதன்பொருள்:) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவானது; கரு நெடுங்கண் மாதவி தன் சொல்லை வறிது ஆக்க- கரிய நெடிய கண்களையுடைய மாதவி வயந்தமாலைக்கு காலை காண்குவம் என்று கூறிய சொல்லைப் பயனிலாச் சொல்லாகக் செய்துவிட; மூதை வினை கடைக்கூட்ட - கோவலனுடைய பழவினை அவன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் - ஞாயிறு இருளைப் போக்குதற்குமுன்பே; வியங்கொண்டான் - அவன் அவ்வினையினது ஏவலை மேற்கொண்டனன்; என்க.

(விளக்கம்) அடிகளார் இதுகாறும் மாதவியை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே பலவிடங்களிலும் கூறிவந்து ஈண்டுக் கருநெடுங்கண் மாதவி எனக் கூறுவது கூர்ந்துணரற்பாலதாம். மாதவிக்கு இனி எஞ்ஞான்றும் கூட்டமின்மையால் இங்ஙனம் கூறினர். சொல்லை வறிதாக்குதலாவது பயன்படாமற் செய்தல்.

கனாத்திற முரைத்த காதை முற்றிற்று.