இன்று உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாரிய விபத்துக்குள்ளானவர்களுக்கும், அறுவைச் சிகிச்சைகளின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மற்றும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் போன்றோருக்கும் இரத்தம் தேவைப்படுகின்றது.
இதோ உலகப்பொதுமறையாம் திருமறைக் குர்ஆன் பேசுகின்றது.
‘ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05.32)
அதேவேளை சில சகோதரர்கள் மனமுரண்டாக இரத்ததானம் போன்ற உயிர்காக்கும் உன்னதப் பணியினை விமர்சித்து வருவதாக அறிகின்றோம். அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது உங்களது குழந்தையோ அல்லது உங்களது மிக நெருங்கிய உறவினர்களோ மிகவும் ஆபத்தான கட்டத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது மருத்துவர் அவர்களுக்கு இரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று கூறினால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? உங்கள் மனசாட்சியிடமே கேட்டுப் பாருங்கள். இரத்தம் வழங்குவது கூடாது என்றால் இரத்தம் பெறுவதும் கூடாதுதானே? ஏனெனில், நாம் பெறக் கூடிய இரத்தம் இன்னொருவரால் வழங்கப்பட்டதுதானே?
“நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 05:02)
“நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். (அல்குர்ஆன் 03:92)
இரத்ததானம் உடலுக்கு கேடுவிளைவிக்குமா?
இரத்த அணு உற்பத்தி என்பது மனித உடலில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும், இறைவனின் வல்லமைக்கு சான்று பகரும் ஓர் உன்னத பணியாகும். எனவே, இரத்ததானம் செய்வதால் உடலுக்கு எவ்வித பலவீனமோ, பாதிப்போ ஏற்படுவதில்லை என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அடிக்கடி இரத்ததானம் செய்வதால் புற்றுநோய் ஏற்படும் என்கின்ற தவாறன மனநிலை நம்மில் சிலரிடம் உள்ளது. ஆனால், Dr. Gustaf Edgren என்பவரின் அண்மைய மருத்துவ ஆய்வுகள் இரத்ததானம் செய்வதால் புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கின்றன. மேலும், இரத்தானம் வழங்கும் தடவைகள் அதிகரிக்க அதிகரிக்க ஆண்களுக்கு கல்லீரல், நுரையீரல், குடல், வயிறு மற்றும் தொண்டைப் பகுதிக்கான புற்றுநோய் வாய்ப்புக்கள் குறைவதாகவும் Dr. Gustaf Edgren குறிப்பிடுகின்றார்.
இரத்ததானத்தின் இம்மை, மறுமைப் பயன்கள்:
இரத்ததானம் செய்பவர்கள் அகிலத்தின் இரட்சகனிடம் அளப்பரிய கூலிகளைப் பெற்றுக் கொள்கின்ற அதேவேளை உலகளாவிய ரீதியிலும் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
தானமாகப் பெறப்பட்ட இரத்தம் பரிசோதனையின் பின்னரே இன்னனொருவருக்குப் பாய்ச்சப்படுவதால் நமது இரத்தத்தில் ஏதேனும் நோய்கள் இருப்பின் அவை அடையாளங் காணப்படுவதால் அவற்றுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
இரத்ததானம் செய்பவர்களிடம் ஒரு உயிரைக் காக்கின்ற மனநிலை ஏற்படுகின்ற அதேவேளை, இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்பட்டு அவர்களும் ஆராக்கியமான வாழ்வைப் பெறகின்றார்கள்.
இரத்ததானம் என்பது வாரத்தைகளால் வர்ணிக்க கூடிய விடயமல்ல. மாறாக, உணர்வுகளால் செயற்படுத்தப்படுவது. எனவே, மனித உயிர் காக்கும் மனிதநேயப் பணியை வார்த்தைகளால் அல்லாது இரத்ததானத்தினால் செயற்படுத்தி வல்லோன் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வோமாக!