பெருங்கனவு உடையவனின்
தேடல்களில் வெற்றிக்கு பெரிதாய்
மதிப்பொன்றும் இருப்பதில்லை...
தோல்வி கொல்லாத வேட்கைகளை
சுமந்தலையும் அவன் மனம்
சிறு புறக்கணிப்பையும், நிராகரிப்பையும் கொள்ளாத மென்மையுடையதாயும் இருக்கக்கூடும்..
மேன்மைகளை சுமந்தலைவதாய்
பெருமைகொள்ளும் அவன் மனதிற்கு
அவனுக்கானதான ஆசைகளென அப்படியொன்றும்
பெரியதாய் இருந்து விடுவதில்லை.
அவனுக்கான இழப்புகளாய்
அவன் சொல்லித்திரியும் சுருக்கமான
பட்டியலின் சாராம்சமாய் சில பெயர்களும்,
ஒரு சில ஏக்கங்களும் மட்டுமே மிஞ்சக்கூடும்.
அவன் ஒரு நாடோடியாய் திரிவதாயும்,
தான் ஒரு யாத்ரீகனென்றும் அப்பப்போது
சொல்லிக்கொள்ளும் கூற்றுகளில் எப்படி
உண்மை இல்லையோ, அது போலவே
உண்மை இல்லாமலுமில்லை.
கனவுகள் சுருக்கி இல்லாமையில்
இன்பம் காணும் பேரின்பத்தை
பழக வேண்டுமென்பதாய் சொல்லித்திரியும்
அவன் ஒரு பேராசைக்காரன்.
ஆயினும் அவன் பக்கங்களில்
வெற்றிக்கென்று பெருமதிப்பு
எப்போதும் இருந்ததே இல்லை..