நல்ல பகிர்வு. தாழ்வுமனப்பான்மை பற்றி நான் படித்ததில் எனக்கு பிடித்தது
வேண்டியதில்லை தாழ்வுமனப்பான்மை ; வேண்டியது தன்னம்பிக்கை மட்டுமே.இந்த உலகினில் முதலாளிகளை விடவும்,பெருமைக்குரியவர்கள் கடைநிலை தொழிலாளர்கள்தான் என்றால் அதுமிகையில்லை. அதேபோல் எந்த தொழிலும் இழுக்கினுக்கு உரியதில்லை என்பது நூறு சதவிகிதம் உண்மை. அதனை மெய்ப்பிக்கிற வகையில் ஆபிரஹாம் லிங்கன் அவர்களது வாழ்வினில் நிகழ்ந்ததோர் சம்பவத்தினை கீழே காணலாம்.
ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார்.
"மிஸ்டர் லிங்கன்,உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்" என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார்.
ஆபிரஹாம் லிங்கனோ சற்றும் பதற்றப்படாமல்- "நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனாலும் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.
அது மட்டுமல்ல, இப்போது அந்த செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன்.எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும்,நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்" என்று மிகுந்த பணிவுடன் பேசினார்.
இயலாமையோ, வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மை தவறானது. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கியெறிந்தால் வெற்றி நிச்சயம்.