நான் நினைப்பதை
செய்வேன் என்றான்...!!
என்னை கேட்காமல்
எதையும் செய்வதில்லை என்றாள்...!!
.
எதிலும் என் முடிவுகள்தான்
இறுதி என்றான்...!!
என் முடிவைத்தான்
சொல்கிறார் என்றாள்...!!
.
வாசலில் நான் வந்துவிட்டாலே
வீடு அடங்கிடும் என்றான்...!!
வாசலிலேயே அவர்
அடங்கித்தான் வருவார் என்றாள்...!!
.
என் சப்தத்திற்கே என்
குழந்தைகள் நடு நடுங்கும் என்றான்...!!
என் முன்னால் இயல்பாகவும்
அவரை பார்த்தவுடன் பயந்ததாய்
நடிப்பதும் சகஜமான நிகழ்வு என்றாள்..!!
.
பிடிவாதக்காரனாமே....
அதெல்லாம் வீட்டிற்கு வெளியே என்றாள்....
.
எந்த இன்னலையும் அநாயாசமாய்
கடப்பவன் என்றான்...!!
சிறு பிரச்சினையென்றாலும்
நொடிந்துபோவார் என்றாள்...!!
.
நான் கோபக்காரன் என்றான்
அவர் அன்பானவர் என்றாள்..!!
.
நான் இரக்கிமில்லாதவன் என்றான்...!!
பரிவின் பாஷையே அவர்தான் என்றாள்...!!
.
வாழ்க்கையே அவர்கள்தான் என்றான்...!!
எங்கள் உலகமே அவர்தான் என்றாள்...!!
.
அன்பும் சீற்றமும்
கடிதலும் காதலும்
ஊடலும் நட்புமெல்லாம்
இல்லாதிருத்தல் ஒரு
வாழ்க்கையே இல்லையென்றாள்....!!