FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: MysteRy on January 20, 2013, 07:15:56 PM

Title: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 07:15:56 PM
லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம். ஐம்புலங்களில் ஆக விலைமதிக்க முடியாதது 'கண்'தான். கண் பார்வையிழந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத முடங்கி கிடந்த காலம் உண்டு. அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்து அவர்கள் எழுத, படிக்க ஓர் எளியமுறையை வகுத்துத்தந்த ஓர் அற்புத வரலாற்று மாந்தரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் 'பிரெய்ல்' எனப்படும் எழுத்துமுறையை உருவாக்கித்தந்த லூயி பிரெய்ல் (Louis Braille).

(http://1.bp.blogspot.com/-bG_Uso3cEzI/UPUB93PH4SI/AAAAAAAADKw/c3E6MS3fSDk/s1600/Louis-Braille-Pressebild.jpg) (http://www.friendstamilchat.com)

1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிரான்சில் பிறந்தார் லூயி பிரெய்ல். அவரது தந்தை ஓர் தோல் வியாபாரி பலவித தோல்களை வெட்டி கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றை தைத்து விற்பனை செய்வார் அதுதான் அவர்களது குடும்பத்தொழில். சிறுவயதிலிருந்தே மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவென்றும் இருந்த பிரெயிலுக்கு தந்தையைப் பார்த்து அவரைப்போலவே தோலை வெட்டி தைத்து விளையாடுவதில் அலாதி பிரியம். அவருக்கு மூன்றே வயதானபோது ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பா இல்லாத சமயம் அவர் கத்தி ஊசியுடன் தோல் தைத்து விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று அலறல் சத்தம் சமயலறையிலிருந்து ஓடிவந்து பார்த்த அம்மாவின் இதயத்துடிப்பு சில வினாடிகள் அடங்கிப்போனது. ஒரு கண்ணில் இரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் துடித்துக்கதறினான் பிஞ்சு பாலகன் பிரெய்ல்.

தோலில் துளைபோட உதவும் கூர்மையான ஊசிபோன்ற கருவி அவன் கண்ணை பதம் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த தாய் பதறியடித்துக்கொண்டு பிரெயிலை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். பிரெயிலை பரிசோதித்த மருத்துவரைப் பார்த்துக்கொண்டே பிரார்த்தனையில் மூழ்கினார் அந்த தாய். பிரெய்ல் ஒரு கண்ணில் பார்வை இழக்கப்போகிறான் என்ற செய்தியை மருத்துவரின் கவலை தோய்ந்த கண்கள் அந்த தாய்க்கு உணர்த்தின. ஒரு கண்ணில் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார் மருத்துவர். பிரெயிலுக்கு இருள் என்றாலே பயம் இரவில் தூங்கும்போதுகூட மெழுகுவர்த்தி ஒளியில்தான் தூங்குவான். சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை "அம்மா இருட்டிவிட்டது ஏன் இன்னும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை?" என்று கேட்டான் பிரெய்ல் தாயின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது ஏனெனில் அப்போது பட்டப்பகல் நேரம்.

முதல் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் இரண்டாம் கண்ணும் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்துவிட்டான் பிரெய்ல் என்பதை அறிந்து உள்ளுக்குள்ளேயே அழுதது அந்த தாய் உள்ளம். அப்போது பிரெயிலுக்கு வயது நான்குதான். அன்று அந்த தாய் சிந்திய கண்ணீருக்கு ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமே இன்று நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வயதில் ஏற்பட்ட இயலாமைதான் பார்வையற்றோரின் சரித்திர நாயகனாக பிரெயிலை பிற்காலத்தில் உயர்த்தியது. பார்வையிழந்தும்கூட இரண்டு ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்கு சென்றார் பிரெய்ல். ஆனால் எழுதவும் படிக்கவும் முடியாது என்பதால் பள்ளியை தொடர முடியாமல் போனது.

(http://4.bp.blogspot.com/-DrwqUPHOOq0/UPUDouD3xwI/AAAAAAAADMQ/5nmeGKR6XBA/s1600/Louis_Braille.png)

பிரெயிலுக்கு பத்து வயதானபோது பாரீஸில் (paris) உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர். அந்தப்பள்ளியில் வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது ஆனால் எழுத கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கான எழுத்துகள் தாள்களில் புடைத்திருக்கும் அதனை விரல்களால் தொட்டு உணர்ந்து ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க வேண்டும் அது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு வாக்கியத்தை படித்து முடிக்கும் முன் ஆரம்ப எழுத்துகள் மறந்து போகும். தம்மைப்போன்றோர் வாசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த முறை இருக்க வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினார் பிரெய்ல்.

ஒருமுறை அந்தப்பள்ளிக்கு Charles Barbier என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார். பணிரெண்டு புள்ளிகளை கொண்ட அந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம் அதனை 'sonography' என்று அவர் அழைத்தார். ஆனால் அது சிரமமானது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்த இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது அது பயன்படட்டும் என்று Charles தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார். அதனை ஆராய்ந்த பிரெய்லுக்கு அதில் நிறைய விசயங்கள் அடங்கியிருப்பதாகபட்டது. அதனை கொஞ்சம் எளிமைப்படுத்தினால் ஒரு நல்ல முறையை உருவாக்கலாம் என்று நம்பிய அவர் அடுத்த சில மாதங்களுக்கு சொந்தமாகவே பல சோதனைகளை செய்து பார்த்தார். அதன்பலன் மூன்றே ஆண்டுகளில் அவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார். அதுதான் அவரது பெயரிலேயே 'பிரெய்ல்' முறை என்று இப்போது அழைக்கப்படுகிறது.

(http://3.bp.blogspot.com/-7odbdqz8RLE/UPUEJgt-dGI/AAAAAAAADMg/Obu9tDCeVnU/s1600/braille.gif)

பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம். உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் 'பிரெய்ல்' முறை. அந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்த பிரெய்ல் சில ஆண்டுகளில் கணிதத்திற்கும், இசைக்கும்கூட எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் பிரெய்ல் முறையை அந்தப்பள்ளிக்கூடம் கண்டுகொள்ளவில்லை ஓர் ஆசிரியர் அதற்கு தடைகூட விதித்தார். ஆனால் நாளடைவில் அந்த முறையின் மகிமையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு 'பிரெய்ல்' முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தாம் கற்ற பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் பிரெய்ல். துரதிஷ்டமாக அவருக்கு காசநோய் ஏற்பட்டு 1852-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தனது 43-ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறந்தபிறகுதான் அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது பிரெஞ்சு அரசாங்கம். சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1952-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட புகழ்பெற்ற 'Pantheon' அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது.

(http://3.bp.blogspot.com/-9jr3z3BgnXg/UPUEDDPrcVI/AAAAAAAADMY/hO2i4inlGPU/s1600/A005990-02.jpg)

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் ஒளவையார் கொன்றை வேந்தனில். ஆனால் அந்த கண்களே இல்லாதவர்களுக்குகூட எண்ணையும், எழுத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார் லூயி பிரெய்ல். அவர் தந்த வரத்தால்தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது. பிரெய்ல் நான்கு வயதிலேயே பார்வையை இழந்தபோதும் எல்லாப் பாடங்களிலும் மிகச்சிறப்பாக தேறினார் என்பதும் Chello, Organ ஆகிய இரண்டு இசைக்கருவியையும் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்பதும் நாம் வியக்க வேண்டிய் வரலாற்று உண்மைகள்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவருக்கு இருகண்களாக செயல்பட்டன. நம்மில் பெரும்பாலோர் ஐம்புலங்களும் நன்றாக செயல்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் ஐம்புலங்களில் ஆக முக்கியமான கண்ணை இழந்தபோதும்கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை லூயி பிரெய்ல். ஓர் அபூர்வ கண்டுபிடிப்பால் தன்னைப் போன்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார் அவர். அந்த தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் நம் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் செயல்படுவோருக்கு வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுகூட இயற்கையின் நியதிதான்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 07:51:57 PM
மிக்கைல் கொர்பசோவ் - வரலாற்று நாயகர்!

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Clod War' எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.   

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev). 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் நாள் தெற்கு ரஷ்யாவின் Stavropol வட்டாரத்தில் உள்ள  Privolnoye எனும் கிராமத்தில் பிறந்தார் கொர்பசோவ். அவர் சிறுவயதாக இருந்தபோது ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மோசமான கொடுங்கோலர்களில் ஒருவர் என்று வரலாறு வருணிக்கும் ஸ்டாலினின் ஆட்சியில் ஒன்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் கொர்பச்சொவின் தாத்தா Andreyevich Gorbachev. ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வளர்ந்தார் கொர்பசோவ்.

(http://4.bp.blogspot.com/-sVQeAXAWVqw/UNkaQ-UaFgI/AAAAAAAACvM/rZLEYUvmkfw/s1600/uewb_05_img0308.jpg)

பள்ளியில் சிறந்து விளங்கிய அவர் தமது பதினைந்தாவது வயதிலேயே இளையர் கம்யூனிஷ்டு லீகில் சேர்ந்தார். 1950-ஆம் ஆண்டில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே கம்யூனிஷ்டு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழகத்திலேயே தான் சந்தித்த  Raisa Titarenko என்ற பெண்ணை தான் பட்டம் பெற்ற 1953-ஆம் ஆண்டிலேயே மணந்து கொண்டார். சட்டத்தில் பட்டம் பெற்று தாம் பிறந்த Stavropol வட்டாரத்திற்கு திரும்பிய கொர்பசோவ் கம்யூனிஷ்டு கட்சியின் தலைமைத்துவத்தில் படிப்படியாக முன்னேறி பல பொறுப்புகளை வகுத்தார். 1970-ஆம் ஆண்டு கட்சியின் வட்டார செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்த ஆண்டே மத்திய ஆளும் குழுவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.   

1980-ஆம் ஆண்டு சோவியத் ஆளும் குழுவின் முழு உறுப்பினராக அவர் பதவி உயர்வு பெற்றார். அந்தக்காலகட்டம் வரை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த  Fyodor Kulakov 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது  Andropov-வும், இரண்டு ஆண்டுகளில் அவர் மறைந்தபோது Chernenko-வும் அதிபர் பொறுப்பை ஏற்றனர். 1985-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள்  Chernenko இறந்தபோது அடுத்த நாளே கட்சியின் பொது செயலாளர் பொறுப்பும், அதிபர் பொறுப்பும் கொர்பசொவின் கைகளுக்கு வந்தது. முந்தைய சோவியத் அதிபர்களைப்போல் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு நிறைய பயணங்களை மேற்கொண்டவர் கொர்பசோவ். அதனால் அவரது பார்வையும், அணுகுமுறையும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பதவியேற்றபோது மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது சோவியத் யூனியன். ஆயுத போட்டா போட்டிக்கு அளவுக்கு அதிகமாக சொத்து செலவழிக்கப்பட்டது அதற்கு முக்கிய காரணம்.

(http://3.bp.blogspot.com/-l8cxMtzCDsQ/UNkafsRCJ1I/AAAAAAAACvU/xHN4MZ5Y9po/s1600/448px-Reagan-Gorbachev_shaking_hands_1987-12-07_C44091-30.jpg)

பதவியேற்ற வேகத்திலேயே ஆயுத போட்டா போட்டியை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தார் கொர்பசோவ். அப்போதைய அமெரிக்க அதிபர் Ronald Reagan-னின் அழைப்பை ஏற்று இருவரும் நான்கு உச்ச நிலை சந்திப்புகளை நடத்தினர். அதன் பயனாக 1987-ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அந்தக்கணமே சோவியத் யூனியனின் தலையெழுத்தும் மாறத்தொடங்கி விட்டது என்பதனை உலகம் அப்போது உணரவில்லை. அடுத்த ஆண்டே இன்னொரு முடிவையும் அறிவித்து உலகை அசத்தினார் கொர்பசோவ். ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளை மீட்டுக்கொள்வதாக அவர் அறிவித்தார். முன்னைய தலைவர்கள் அவமானம் கருதி செய்ய மறுத்த செயல் அது. வெறும் வீம்புக்காக படைகளை அங்கே வைத்திருந்து இழப்பை அதிகமாக்கிக் கொள்வதை விட அங்கிருந்து வெளியேறி இழப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது விவேகத்தை உலகம் பாராட்டியது. 

அந்த இரண்டு வெளியுறவுக்கொள்கைகளுக்கும் தந்த அதே முக்கியத்துவத்தை நாட்டின் பொருளியலை சீர்படுத்துவதிலும் தந்தார் கொர்பசோவ். perestroika என்ற பொருளியல் சீர்திருத்தத்தை அவர் அறிவித்தார். அந்த சீர்திருத்தத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் இரும்புப்பிடி தளரத்தொடங்கியது. சில துறைகளில் தனியார்மயத்திற்கு அனுமதி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு Glasnost என்ற திறந்த கொள்கையை அறிவித்தார். அந்தக்கொள்கைதான் கம்யூனிசத்தின் அழிவிற்கு அடிகோலியது. சோவியத் யூனியனில் மூடியிருந்த பல கதவுகளை அது திறந்து விட்டது. தனிமனிதர்களும், பத்திரிக்கைகளும் அச்சமின்றி அரசியல் பேச அனுமதிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு இன்னும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது முதன்முறையாக சோவியத் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியை கைபற்றிய பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தேர்தல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்கேரியா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. அந்தக்கட்சிகள் அனைத்துமே மக்களால் வெறுக்கப்பட்டன. அந்த நாட்டின் கம்யூனிச தலைவர்கள் சோவியத் இராணுவத்தின் துணையுடனும், ரகசிய போலீஸ் துணையுடனும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு இரும்புக்கரங்களுடன் கோலோச்சினர். ஆனால் 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிசயித்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1989-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியில் கொந்தளிப்பு ஏற்பட்டது இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்த பெர்லின் சுவற்றை (Berlin Wall) தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு செல்ல மக்கள் முயன்றனர். அப்போது கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த Erich Honecker வழக்கம்போல் அடக்கு முறையை கையாள நினைத்த அந்த தருணத்தில் பெர்லினுக்கு அவசர வருகை மேற்கொண்டார் கொர்பசோவ்.

(http://2.bp.blogspot.com/-2U_IOJRDZKU/UNkavlX6HqI/AAAAAAAACvc/K8BvEA9_05k/s1600/Bundesarchiv_Bild_183-1986-0421-010,_Berlin,_XI._SED-Parteitag,_Gorbatschow,_Honecker.jpg) (http://www.friendstamilchat.com)


அடக்கு முறையை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ததோடு சீர்திருத்தத்தை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்திய கொர்பசோவ் எந்த அடக்கு முறைக்கும் சோவியத் படைகள் பயன்படுத்தக்கூடாது என்றும் Honecker-ரிடம் கூறினார். அப்போது 380 ஆயிரம் ரஷ்யப்படைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தன. தக்க தருணத்தில் அவர் தலையிட்டதால் ரத்தக்களறி தவிர்க்கப்பட்டது இரண்டே வாரங்களில் Honecker பதவி துறக்க நேரிட்டது. அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் நம்ப முடியாத ஒன்று நடந்தது ஆம் பெரிலின் சுவர் திறந்து விடப்பட்டது. மில்லியன் கணக்கான கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்தனர். வரலாற்றில் ஒரு களங்கமாக இருந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அதன் எதிரொலி மற்ற கம்யூனிச நாடுகளிலும் கேட்கத் தொடங்கியது. பல்கேரியாவில் இரும்புக்கரத்தோடு ஆட்சி செய்து வந்த டோடொ ஜிப்கோப் நவம்பர் 10-ஆம் நாள் பதவி துறக்க நேரிட்டது. ஒரு வாரது கழித்து செக்கோஸ்லவாகியா தலைநகர் ஃப்ராகில் மிகப்பெரிய மக்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஹங்கேரியில் நவம்பர் 26-ஆம் நாள் சுதந்திர தேர்தல் நடைபெற்றது பெரும் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியாளர் தோல்வியைத் தழுவினர். போலந்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டு 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அங்கு சந்தைப் பொருளியல் அறிமுகமானது. தன்னுடைய சகாக்கள் ஒவ்வொருவராக மண்ணைக் கவ்வுவதைப் பார்த்த போதும் ருமேனியாவின் சர்வாதிகாரி விடாப்பிடியாக ஆட்சியைத் தொடர்ந்தார். ஆனால் மக்களின் ஆவேசம் எந்த சர்வாதிகாரியையும் விட்டு வைக்காது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமாக அமைந்தது டிசம்பர் 25-ஆம் நாள் நிகழ்ந்த அந்த சம்பவம். அன்றைய தினம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் சிறை பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சர்வாதிகாரி Sakharov. அதோடு கிழக்கு ஐரோப்பாவின் கடைசி கம்யூனிஸ்டு சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இவற்றையெல்லாம் விரிந்த புருவங்களோடு பார்த்துக் கொண்டிருந்த சில சோவியத் குடியரசுகளும் சுதந்திர கோரிக்கை விடத் தொடங்கின.

(http://3.bp.blogspot.com/-wlWBkRkJNMU/UNka6bEzdhI/AAAAAAAACvk/0QUd3ibwCrI/s1600/Mikhail-Gorbachev-Quotes-3.jpg)

1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர் ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.

சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. அதே ஆண்டு சொந்தமாகவே பதவி விலகினார் கொர்பசோவ் அவர் பதவியேற்று ஆறே ஆண்டுகளில் அத்தனையும் நடந்து முடிந்தது. இருபதாம் நூற்றாண்டை பாதுகாப்பற்றதாக மாற்றிய எத்தனையோ தலைவர்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக அதன் பாதுகாப்பை உறுதி செய்தவர் கொர்பசோவ். இன்று உலகில் ஓரளவுக்கு அமைதி நிலவுவதற்கு வித்திட்டு தேவையற்ற கொள்கைகளை தைரியமாக தூக்கியெறிந்தவர் அவர். கெளரவம் கருதி ஆயுதங்களை குவித்த தலைவர்களுக்கு மத்தியில் பொருளாதாரமும், உலக அமைதியும் கருதி ஆயுத போட்டா போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அவரை வரலாறு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். 'The only disability in life is a bad attitude' தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு. 'Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get' அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி, எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். 
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 09:08:32 PM
வால்ட் டிஸ்னி - வரலாற்று நாயகர்!

உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதில் அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டினார்.

(http://3.bp.blogspot.com/-rsjmxHtXAWo/UMnEgueLldI/AAAAAAAACr8/0FQ-mbJJ770/s1600/images.jpg)

சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள் அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார். தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.

(http://3.bp.blogspot.com/-ynWQtPHraL0/UMnD87caiGI/AAAAAAAACrk/tnbndI3C_Cg/s1600/walt-disney.gif)

அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse' முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.

1932-ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா? ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.

அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலர் ஆரூடங்கள் கூறினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வருணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது.

(http://3.bp.blogspot.com/-9Yn6qBkXseU/UMnEGZNUq6I/AAAAAAAACrs/BH4Nh2UzVBI/s1600/Walt-Disney-Screencaps-The-Walt-Disney-Logo-walt-disney-characters-31865565-2560-1440.jpg) (http://www.friendstamilchat.com)

ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும். இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது? வால்ட் டிஸ்னியே ஒருமுறை அதைப்பற்றி கூறினார்....

"வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan-லிருந்து Hollywood-டிற்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."

கற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய். வால்ட் டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன? அவரே கூறுகிறார் இவ்வாறு.....

(http://1.bp.blogspot.com/-AhEgFGc5L0o/UMnEVWICDpI/AAAAAAAACr0/wx19WsDDON4/s1600/tumblr_lzxvjg6NSr1r80jjso1_500.jpg)

மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளப்பூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள் அதுதான் வெற்றியின் ரகசியம். வால்ட் டிஸ்னிற்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு C மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் வால்ட் டிஸ்னிற்கு கற்பனை என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 09:33:01 PM
யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

கணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதில் ஆச்சரியமில்லைதான். கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த துறையில் மேதைகளாக விளங்கினர். எனினும் உலகுக்கு கணிதத்தின் பல்வேறு கூறுகளை அறிந்து சொன்னவர்களும், விளக்கி கூறியவர்களும் கிரேக்கர்கள்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ போன்ற தலைசிறந்த தத்துவமேதைகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் உதித்தனர் கிரேக்க மண்ணில். அவர்கள் விட்டு சென்ற சொத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் மனுக்குலத்திற்கு மேன்மை தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

அவர் தொகுத்து தந்த எலிமென்ட்ஸ் (Elements) எனப்படும் கணிதத் தொகுப்புதான் உலகின் முதல் பாடப்புத்தகம் (Text Book) என்று புகழப்படுகிறது. 'கணிதத்தின் தந்தை' என வரலாறு போற்றும் அவரது பெயர் யூக்ளிட் (Euclid). கணிதத்தின் பல்வேறு கூறுகளை ஒருமுகப்படுத்தி தந்த யூக்ளிட் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் துல்லியமாகப் பதிந்து வைக்கப்படவில்லை. அவர் பிறந்த வருடம், இறந்த வருடமும்கூட சரிவரத் தெரியவில்லை. அநேகமாக அவர் கிமு.325-ஆம் ஆண்டில் பிறந்து கிமு.265-ஆம் ஆண்டில் அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) இறந்திருக்க வேண்டும் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. எந்த நகரத்தில் பிறந்தார் என்பதுகூட குறிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் கணிதத்தின் மிக முக்கிய கூறுகளில் ஒன்றான 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்தை உலகுக்குத் தந்ததால்தான் இன்றும் அவரது பெயர் வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறது.

(http://2.bp.blogspot.com/-cHAz68XpN4Q/UKopEzKYdfI/AAAAAAAACnQ/xk675UwhB2A/s1600/euclid-1-sized.jpg)

யூக்ளிட் தன் அடிப்படைக் கல்வியை ஏதென்ஸ் நகரத்தில் பிளேட்டோவின் சீடர்களிடம் கற்றதாக நம்பப்படுகிறது. எகிப்தில் நைல் நதிப்படுகையின் மேற்குபகுதியிலுள்ள அலெக்சாண்ட்ரியா (Alexandria) என்ற நகரில் கிமு.300-ஆம் ஆண்டில் யூக்ளிட் கணிதம் போதித்து வந்தார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. கிமு.332-ஆம் ஆண்டில் மாவீரன் அலெக்சாண்டரால் புதுப்பிக்கப்பட்டு புதுப்பெயர் பூண்டது அலெக்சாண்ட்ரியா (Alexandria). அலெக்சாண்டரைப் பற்றி வரலாறு அதிகமாகவே அக்கறைக் காட்டியிருப்பதால் அவரது காலக்கட்டத்தில் வாழ்ந்த யூக்ளிடைப் பற்றிய ஒருசில குறிப்புகளும் பதிவாகியிருக்கின்றன. யூக்ளிடுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சில கணித மேதைகள் கிரேக்க மண்ணில் உதித்திருந்தனர். உதாரணத்திற்கு கிமு.585-ஆம் ஆண்டில் வாழ்ந்த Thales, Miletus ஆகிய கணித மேதைகளை குறிப்பிடலாம்.

அவர்களைப்போன்ற அறிஞர்கள் கணிதத்தின் பல்வேறு கூறுகளையும், 'Theorems' எனப்படும் தேற்றங்களையும், 'proofs' எனப்படும் மெய்ப்பிப்பு அல்லது ஆதாரங்களையும் ஏற்கனவே கண்டுபிடித்து உலகுக்குத் தந்திருந்தனர். ஆனால் வெவ்வேறாக சிதறிக் கிடந்த கணிதத்தின் அத்தனை கூறுகளையும் ஒழுங்குபடுத்தி எளிய உதாரணங்களால் விளக்கி செம்மையாக திட்டமிட்டு அவற்றை ஒரு நூலாக முறைப்படுத்தித் தந்தவர் யூக்ளிட்தான். அவ்வாறு அவர் முறைப்படுத்தி தந்ததுதான் 'Elements' எனப்படும் 'மூலக்கோட்பாடுகள்' என்ற நூல். அந்த நூல்தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கணிதத்தின் சிறந்த பாடநூலாக பயன்பட்டு வருகிறது. இதுவரை எழுதப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் அதுவே மிகச்சிறந்ததாகவும் கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக கணிதம் கற்பிப்பதற்கு அந்த நூல்தான் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

(http://1.bp.blogspot.com/-yCwjtfBIwek/UKopXeq1eNI/AAAAAAAACnY/atGD5vMA3Xs/s1600/euclid_elements_23_definiti.gif)

முன்பிருந்த கணிதக் கோட்பாடுகளை முறைப்படுத்தித் தந்ததோடு மட்டுமல்லாமல் 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்திலும், 'arithmetic' எனப்படும் 'எண்கணித'த்திலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்து தனது முடிவுகளை அந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார் யூக்ளிட். ஒரு தெளிந்த கணித மேதைக்கான இயல்போடு மிக உன்னதமாக அந்த நூலை யூக்ளிட் வடிவமைத்திருந்ததால் அதற்கு முன் எழுதப்பட்ட வடிவியல் பாடநூல்கள் அனைத்தும் வழக்கொழிந்து போயின. யூக்ளிட் கிரேக்கத்தில் எழுதிய மூலக்கோட்பாடுகள் எனும் நூல் பல நூற்றாண்டுகள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது. ஜொஹேன்ஸ் குட்டன்பெர்க் உலகுக்கு அச்சு இயந்திரத்தைத் தந்த முப்பது ஆண்டுகளில் அதாவது 1482-ஆம் ஆண்டு அந்த புத்தகம் முதன் முதலாக அச்சிடப்பட்டு வெளி வந்தது. அதன் பின்னர் அது பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

கடந்த 500 ஆண்டுகளில் அந்த நூலின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் சர்.ஐசக் நியூட்டனின் 'Principia' என்ற புகழ் பெற்ற புத்தகமும் யூக்ளிடின் வடிவியல் கணித முறையைப் பின்பற்றிதான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே யூக்ளிடின் தாக்கம் தற்கால விஞ்ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அறிவியலின் மொழியே கணிதம்தானே எந்தவொரு விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளரும் தங்கள் முடிவுகளை உணர்வதற்கும், அவற்றை மெய்பிப்பதற்கும் கணிதத்தின் துணையையே நாட வேண்டும். எனவே கணிதத்தின் தந்தையான யூக்ளிடை 'அறிவியலின் தந்தை' என்று போற்றினாலும் தகும்.

(http://1.bp.blogspot.com/-omu_7-iNpXk/UKopenHTAxI/AAAAAAAACng/B6EDj65bv0Q/s1600/Euclid-Elements.jpg)

கணிதம் தவிர வேறு பல துறைகளிலும் ஆராய்ந்து மொத்தம் 13 நூல்களை யூக்ளிட் எழுதியிருப்பதாக ஒரு குறிப்பு கூறுகிறது. அவற்றில் மூன்றைத் தவிர வேறு எந்த நூலும் பாதுகாக்கப்படவில்லை. யூக்ளிட் அலெக்சாண்ட்ரியாவில் ஒரு பள்ளியை நிறுவி கணிதம் போதித்து வந்தபோது ஒரு மாணவன் அவரிடம் இதையெல்லாம் படித்து எனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? என்று கேட்டானாம். உடனே யூக்ளிட் தனது பணியாளரை அழைத்து இவன் லாபத்தை எதிர்பார்த்து கற்க வந்திருக்கிறான் இவனுக்கு சிறிது பொருளை கொடுத்து வெளியே அனுப்பி விடுமாறு கூறினாராம். பின்னர் தம் மற்ற மாணவர்களைப் பார்த்து கல்வி என்பதே நமக்குப் பெரிய லாபம்தான் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதும், தெரியாதவற்றை அறிந்துகொள்வதுமே மிகப்பெரிய பலன்தான் என்றாராம். இன்றைக்கும்கூட பொருந்தும் உண்மையல்லவா! அது.

கிரேக்கத்தை ஆண்ட 'Ptolemy' என்ற மன்னனுக்கும் கணிதம் கற்பித்து வந்தார் யூக்ளிட். சிரமப்பட்டு கணிதத்தை கற்க விரும்பாத அந்த மன்னன் யூக்ளிடைப் பார்த்து கணிதத்தைக் கற்க வேறு சுலபமான மார்க்கம் ஏதாவது உண்டா? என்று கேட்டாராம். அதற்கு யூக்ளிட் கணிதத்தைக் கற்க உழைப்பைத் தவிர வேறு வழியே கிடையாது. மன்னாரானாலும் மற்றவர்களைப் போலவே சிரமப்பட்டு, வியர்வை சிந்தியே கற்க வேண்டும் என்றாராம். அந்த உண்மையும் இன்றைக்கும் பொருந்துமல்லவா! எனவே கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் யூக்ளிடின் வாழ்க்கை நமக்கு கூறும் எளிய உண்மைகள் இரண்டுதான். ஒன்று எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இரண்டாவதாக உழைப்புக்கு நிகராண பண்பு வேறு எதுவும் கிடையாது என்பதுதான் அந்த உண்மைகளாகும். யூக்ளிட் கூறியதுபோல் கல்வியும், உழைப்பும் இணையும் போது நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 09:44:21 PM
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) - வரலாற்று நாயகர்!

ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.

(http://2.bp.blogspot.com/-FYDx9hjvmuI/UIJklD46OxI/AAAAAAAAChw/pgyDaziGKH0/s1600/Christopher-Columbus-9254209-1-402.jpg)

1451-ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனோவா( Republic of Genoa) நகரில் பிறந்தார் கொலம்பஸ். நம்மில் சிறுவயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும் ஆனால் கொலம்பஸ் கண்ட கனவு என்ன தெரியுமா? கடல்களை கடந்து புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு தந்த உந்துதலின் பேரில் பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். கடல்வழி மார்க்கம் என்பதே இல்லாத அந்தக்கால கட்டத்தில் பண்டமாற்றும், வணிகமும் தரை வழியாகத்தான் நடந்தன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் அங்கு கூடுவார்கள். தாங்கள் கொண்டு வந்த பேரிச்சைம்பழம், கலை நயமிக்க தரை விரிப்புகள், அரேபிய குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்து விட்டு அவற்றுக்கு ஈடாக பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள், பவளம் கோமிதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழிமார்க்கமாக சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஐரோப்பியர்கள் தங்கம் கொடுத்து அவற்றை வாங்குவார்கள்.

ஐரோப்பாவில் குறிப்பாக மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். ஏனெனில் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை உதவின. அந்த நறுமணப் பொருள்கள் அத்தியாவசிய தேவை என்று உணர்ந்த ஐரோப்பியர்களுக்கு அவை இந்தியாவிலிருந்து வருகின்றன என்று தெரியும். ஆனால் இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது. எவ்வுளவு காலம்தான் அரேபிய இடைத்தரகர்களுக்கு தங்கத்தை கொடுப்பது என்று எண்ணிய அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால் அந்தப் பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். 1476-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால் ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வமாக இருந்தது.

தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் ஆனால் அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த இரு அரசாங்களும் உதவ மறுத்தன. இறுதியில் அவருக்கு கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி கூறினார் ராணி இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களிலிருந்து கொலம்பஸ் கொண்டு வரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

(http://4.bp.blogspot.com/-30wMMYr96Vg/UIJkvQUgVcI/AAAAAAAACh4/hj90GcILKnQ/s1600/columbus.jpg)

1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் தமது 41-ஆவது வயதில் தனது கனவை நோக்கி புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். சுமார் இரண்டு மாதங்கள் நிலப்பரப்பையே காணாமல் கடலில் அலைந்த கொலம்பஸுக்கு அக்டோபர் 12-ஆம் நாள் நிலம் கண்ணில் பட்டது. இந்தியாவையே கனவு கண்டு கொண்டிருந்ததால் தாம் இந்தியாவை அடைந்து விட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைந்தார் கொலம்பஸ். ஆனால் அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல வடஅமெரிக்காவின் 'பகாமஸ் தீவு' என்பது அவருக்கு அப்போதும் மட்டுமல்ல இறந்தபோதும் தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. அதன்பிறகு அவர் மேலும் சில கடல் பயணம் மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார்.

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும், வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. பல தேசங்களைக் கண்டுபிடித்த களிப்பிலும், களைப்பிலும் ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் 1506-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் காலமானார். தனது கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடி புறப்பட்டதால்தான் உலகின் ஆழ அகலத்தை மனுகுலம் உணர முடிந்தது. கியூபா, பகாமஸ், மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் கண்டுபிடித்தனர்.

(http://2.bp.blogspot.com/-BNNTaSWwH5o/UIJk1hDL9_I/AAAAAAAACiA/Yg-B_Rhorpc/s1600/Christopher-Columbus-Quotes-1.jpg)

பூமியின் பல பிரதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய இந்தியா கடைசியாக 1498-ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பஸ் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கனவு காண தயங்ககூடாது என்பதுதான். உலக வரலாற்றின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் ஓர் உண்மை மட்டும் மாறாதிருக்கும். அந்தப் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கனவு கண்டவர்கள் என்பதுதான் அந்த உண்மை. கனவு காணத் துணிந்தவர்களால்தான் சாதித்தும் காட்ட முடிகிறது. உங்கள் கனவு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டபோது எத்தனை பேர் அதனை பகல்கனவு என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். உங்கள் கனவுகளையும் பகல்கனவு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அது இயற்கையின் நியதி உங்களால் மாற்ற முடியாது. ஆனால் கனவு காண்பதோடு அதனை நனவாக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கொலம்பஸுக்கு அமெரிக்கா வசப்பட்டதைப்போல உங்களுக்கு உங்கள் கனவும் அதன் மூலம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 10:06:54 PM
பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாற்று நாயகர்!

கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலைஉலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர்.

அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய பரிணாமத்தைத் தர முடியவில்லை. கேமரா மற்றும் புகைப்படங்களின் வரவு வேறு ஓவியக்கலையை சற்று பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தது. ஓவியர்கள் எவ்வுளவுதான் தத்ரூபமாக வரைந்தாலும் அந்தப் படைப்புகளால் ஒரு புகைப்படத்தின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓவியக்கலை கிட்டதட்ட மரணித்துப்போகுமோ? என்று அச்சம் முளைவிடத் தொடங்கிய அந்தத் தருணத்தில் உதித்தார் ஓர் அற்புத ஓவியர். அவர்தான் 'கியூபிசம்' (cubism) என்ற புதிய ஓவிய பாணியை உலகுக்குத் தந்ததன் மூலம் 'நவீன ஓவியங்களின் பிரம்மா' என்ற புகழைப் பெற்றிருக்கும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso).

(http://4.bp.blogspot.com/-J49DIkCww4A/UG11mK8ejjI/AAAAAAAACZc/yEhpAVBkIIQ/s1600/192px-Pablo_picasso_1.jpg)

1881-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் நாள் ஸ்பெயினில் பிறந்தார் பிக்காஸோ. அவர் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறது ஒரு வரலாற்றுக்குறிப்பு. குழந்தை இறந்தே பிறந்து விட்டது என்று எண்ணிய தாதி குழந்தையை மேசையில் வைத்துவிட்டு சென்று விட்டார். அதனைக்கண்ட அவருடைய மாமா ஓடிப்போய் உடனடியாக மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை வழங்கியதால்தான் உயிர் பிழைத்தார் பிக்காஸோ. பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை வைத்துக்கொண்டு வட்டம் வட்டமாக கிறுக்கிக்கொண்டிருப்பாராம் பிக்காஸோ. அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வளர்த்தார். Malaga கடற்கரையில் மணலில்கூட ஓவியம் தீட்டுவாராம் பிக்காஸோ. பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும் நன்கு கற்றுக்கொண்டார்.

1904-ஆம் ஆண்டு தனது 23-ஆவது வயதில் கலைகளின் தலைநகரம் என்றழைக்கப்படும் பாரிஸூக்கு வந்தார் பிக்காஸோ. அன்றிலிருந்து மரணம் வரை அவர் பிரான்சில்தான் வாழ்ந்தார். அவரது திறமையையும், புகழையும் கண்ட பிரெஞ்சு அரசாங்கம் எத்தனையோ முறை பிரெஞ்சு குடியுரிமைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும் அவர் தனது ஸ்பானிய குடியுரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. பாரிஸூக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அவர் வரைந்த  'Les Demoiselles d'Avignon' என்ற ஓவியம் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. அதில் ஐந்து பெண்களை அவர் வரைந்திருந்த வித்தியாசமான பாணி அவருடைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல நவீன ஓவியத்துறைக்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வளைவுகள் அதிகமின்றி நேர்க்கோடுகளும், முக்கோண வடிவங்களும் கொண்டு அது வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியம்தான் 'கியூபிசம்' என்ற ஓவிய பாணியைத் தொடங்கி வைத்தது.

அதன்பின் பலர் அந்த ஓவிய பாணியை பின்பற்றத் தொடங்கினர். உலகம் முழுவதிலிருந்த ஓவிய விற்பன்னர்களின் மரியாதையை பெற தொடங்கினார் பிக்காஸோ. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் பிக்காஸோவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறுவயதிலிருந்தே ஓவியனாக வரவேண்டும் என்ற நிறைவேறா கனவுகளோடு வளர்ந்த கொடுங்கோலன் ஹிட்லரோ பிக்காஸோவின் ஓவியங்களை ஒரு பைத்தியக்காரன் கிறுக்கியது என்று சொல்லி அந்த படைப்புகளை ஜெர்மனியில் தடை செய்தார். இருப்பினும் ஜெர்மனி பிரான்சின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதுகூட பிக்காஸோவை பகைத்துக்கொள்ள ஜெர்மன் படைகள் தயங்கின. அந்தளவுக்கு பிக்காஸோ உலகப்புகழ் பெற்றிருந்ததே காரணம்.

1936-ஆம் ஆண்டு பிக்காஸோவின் தாய்நாடான ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அப்போது ஹிட்லரின் நாசிப்படைகள் 'Guernica' என்ற நகரின் மீது கடுமையான ஆகாயத்தாக்குதல் மேற்கொண்டன. அந்த தாக்குதலில் Guernica நகர் சின்னாபின்னமாக சிதைந்தது. மரண ஓலம் ஒலித்த அந்த நகரின் வேதனை பிக்காஸோவின் நெஞ்சை பிழிந்தது. தனது உணர்வுகளை அவர் கேன்வஸ் துணியில் ஓவியமாகத் தீட்டி அதற்கு 'Guernica' என்று பெயர் சூட்டினார். தனது நாட்டில் இறந்து போனவர்களுக்காக அவர் தீட்டிய அந்த அதீத ஓவியம் இறவாப்புகழ் பெற்றது. ஹிட்லரின் நாசி ஆட்சியை எதிர்க்கும் சின்னமாக அந்த ஓவியம் கருதப்பட்டது. அந்த சின்னத்தை மட்டுமல்ல உலகிற்கு இன்னும் ஓர் அற்புத சின்னத்தையும் வழங்கினார் பிக்காஸோ.

(http://3.bp.blogspot.com/-HydXdTRT-ww/UG11xFAIByI/AAAAAAAACZs/sKiV08pmDB4/s320/350px-PicassoGuernica.jpg)

கம்யூனிச கொள்கைகளால் கவரப்பட்ட அவர் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அமைதி தொடர்பாக அந்த கட்சி ஏற்பாடு செய்த பல அனைத்துலக கூட்டங்களில் கலந்து கொண்டார். அவ்வாறு 1950-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதி மாநாட்டுக்காக அவர் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். அந்த ஓவியத்தில் அவர் அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப்படுத்தி வரைந்திருந்தார். அற்புதமாக அமைந்திருந்த அந்த ஓவியத்தையே அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது உலகம். சீனா ஒருபடி மேலே சென்று அந்த ஓவிய சின்னத்தை தன் தபால் முத்திரையில் பதித்துக் கொண்டது. ஓவியக்கலையில் மட்டுமின்றி ஆடை வடிவமப்பதிலும் திறமைக் காட்டினார் பிக்காஸோ. ரஷ்யாவின் புகழ்பெற்ற பேலெ நடனக்குழுவுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த நடனக்குழுவில் இடம்பெற்றிருந்த Olga Khokhlova என்பவரை பிக்காஸோ மணந்துகொண்டார். 

ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி சிற்பங்கள் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார் பிக்காஸோ. அவர் புனைந்த சில கவிதைகள்கூட மிகச்சிறந்தவை என்று சமகால கவிஞர்களால் பாராட்டப்பட்டன. 78-ஆண்டுகளில் அவர் உலகிற்கு வழங்கிய படைப்புகளின் எண்ணிக்கை எவ்வுளவு தெரியுமா? சுமார் 13500 ஓவியங்கள், சுமார் 34000 illustration எனப்படும் விளக்கப்படங்கள், சுமார் 400 சிற்பங்கள். அவரது ஒட்டுமொத்த படைப்புகளின் தற்போதைய மதிப்பு சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

(http://4.bp.blogspot.com/-i5mQ0RPY_N4/UG12DTxL40I/AAAAAAAACZ0/AoJAmmjxjxs/s320/pablo-picasso-mobile-wallpaper.jpg)

ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஓவியக்கலைக்கு ஓர் புது உற்சாகத்தைக் கொடுத்த அந்த அற்புத ஓவியன் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தமது 92-ஆவது வயதில் பிரான்சில் காலமானார். தனது படைப்புகளில் பிக்காஸோ பின்பற்றிய சித்தாந்தம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒருமுறை கூறினார் இவ்வாறு....

"ஒரு காட்சியை நமது கண்கள் எப்படி பார்க்கின்றனவோ அதை அப்படியே ஓவியமாக வரைவதில் என்ன புதுமை இருக்க முடியும்? அந்தக் காட்சி நம் மனத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தக்காட்சியின் அசல் பிரதிப்பலிப்பாக இருக்கக்கூடாது".

இப்படி 'Thinking out of the box' எனப்படும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படும் முறையை பின்பற்றியதால்தான் பிக்காஸோவால் உலகப்புகழ் பெற முடிந்திருக்கிறது. 'நவீன ஓவியம்' என்ற வானத்தையும் வசப்படுத்த முடிந்திருக்கிறது. பிக்காஸோவைப் போலவே எதனையும் புதுமையாக சிந்தித்து வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும், துணிந்து செயல்படுவோருக்கும் அவர்கள் விரும்பிய வானமும் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 10:24:26 PM
நெல்சன் மண்டேலா - வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றில் சுதந்திர போராட்டம் என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சமஉரிமைக்காகவும், சமத்துவத்திற்க்காகவும் வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். மற்றொன்று அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு சொந்த ஆட்சி அமைக்க வேண்டி மேற்கொள்ளப்படும் சுதந்திர போராட்டம். இந்த இரண்டு வகை சுதந்திரத்திற்க்காகவும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடியவர்கள் ஏராளம். அவர்களில் மூவரின் பெயர்களை இருபதாம் நுற்றாண்டு வரலாறு பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறது. ஒருவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை ஒழித்து இந்திய மண் சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்து தந்த அண்ணல் காந்தியடிகள். அடுத்தவர் அமெரிக்காவில் நிறவெறி ஒழிய தன் உயிரை பரிசாக தந்த மார்ட்டின் லூதர் கிங். அந்த இருவரையுமே ஏற்கனவே நமது வரலாற்று நாயகர்கள் தொடரில் சந்தித்துவிட்டோம். அவர்கள் இருவருக்குமே துப்பாக்கி குண்டுகளைத்தான் உலகம் பரிசாக தந்தது.


இருபதாம் நூற்றாண்டு வரலாறு நினைவில் வைத்திருக்கும் மூன்றாமவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவரை வாழும் காந்தி என்றுகூட சிலர் வருணிக்கின்றனர். அவர்தான் நவீன இருபதாம் நூற்றாண்டில்கூட இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை. 1918-ஆம் ஆண்டு ஜுலை 18-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் Transkei என்ற பகுதியில் தெம்பு (Thembu) இனத்தலைவருக்கு மகனாக பிறந்தார் நெல்சன் மண்டேலா. ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகத்தான் இருந்தது.

(http://3.bp.blogspot.com/-K_u8Sz-WiGg/UHA2DbumCxI/AAAAAAAACbo/9K4K5GjILeE/s1600/170px-Young_Mandela.jpg)

சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும், கேவலமாக நடத்தப்படுவதையும் பார்த்து சிறுபான்மை வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தைத் தகர்க்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு சிறுவயதிலிருந்தே மனத்தில் பதிந்தது. Fort Hare-பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது ஒருமுறை மாணவர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் அந்தக்கல்வி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெல்சன் மண்டேலா கல்வியை கைவிடவில்லை. Witwatersrand-என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் Walter Sisulu என்ற நண்பருடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் கருப்பின முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். நெல்சன் மண்டேலா பிறந்தபோது தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் அதன் உச்சத்தில் இருந்தது. தொன்று தொட்டு கருப்பர்கள்தான் தென்னாப்பிரிக்கா மண்ணுக்கு சொந்தக்காரர்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் அங்கு வந்து குடியேறிய பிரெஞ்சு டச்சு நாட்டவர்களையும், ஆங்கிலேயர்களையும் வரவேற்றது தென்னாப்பிரிக்க மண். எண்ணிக்கை பெருக பெருக அதிகாரத்தைக் கைப்பற்றி கருப்பினத்தவர்களை கொத்தடிமைகளாக நடத்த எத்தனித்தனர் விருந்தினர்களாக வந்த வெள்ளையர்கள். தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் என்பது விழுக்காட்டினராக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்கள் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பு எவ்வுளவு தெரியுமா? வெறும் பதின்மூன்று விழுக்காடுதான். வெள்ளையர்களுக்கென்று தனி பள்ளிக்கூடங்கள், நூலகங்கள், மருத்துவமணைகள், பூங்காக்கள், கட்டடங்கள். அங்கே கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது. வெள்ளையர்கள் வாழும் பகுதியில் நடப்பதற்குகூட கருப்பினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து என்பது விழுக்காட்டினர் மக்களால் போராடியிருக்க முடியாதா? என்று நீங்கள் கேட்கலாம். வெள்ளையர்கள் புத்திசாலிகள் அவர்கள் மொழிகளின் பெயரால் கருப்பர்களை பிரித்து வைத்திருந்தனர். ஆனால் வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வந்தது ANC எனப்படும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். அப்போது கல்லூரி மாணவராக இருந்த நெல்சன் மண்டேலா காங்கிரசின் இளையர் பிரிவைத் தொடங்கினார். மண்டேலாவின் வருகைக்குப்பிறகு இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1960-ஆம் ஆண்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கருப்பினத்தவரின் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இருபதாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கொதித்தெழுந்த மக்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை தடை செய்தது தென்னாப்பிரிக்க அரசு.

(http://1.bp.blogspot.com/-BXIlSzGDhQQ/UHA2PAZRLJI/AAAAAAAACbw/hkfpRX5BArQ/s320/heads10-1.png)

இனி அகிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும், அவரது நண்பர்களும் ஆயுதம் ஏந்த முடிவெடுத்து ரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். 1962-ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவரை கைது செய்தது தென்னாப்பிரிக்க அரசு. ஆவணங்கள் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார் என்றும், அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்றும் கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒரு தீவுச்சிறையில் அடைத்தது தென்னாப்பிரிக்க அரசு அந்த ஆண்டு 1964. அடுத்த 27-ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் மண்டேலா. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973-ஆம் ஆண்டு மற்றும் 1983-ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்க அதிபர் கேட்டுக்கொண்டும் அதனை ஏற்க மறுத்து விட்டார் மண்டேலா. அவரது மன உறுதி கருப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன.

மண்டேலாவை விடுவிக்க கோரி உலக நாடுகளும் தென்னாப்பிரிக்காவை நெருக்கத் தொடங்கின பணிய மறுக்கவே தென்னாப்பிரிக்காவின் மீது கடுமையான பொருளியல் தடைகளை விதித்தன உலக நாடுகள். உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தமது அட்டுழியங்களை உணர்ந்தது வெள்ளையின சமூகம். 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அப்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் F.W.de Klerk நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்தார். புன்னகையோடு வெளி வந்த அவரை உலகம் அதிசயமாக பார்த்தது. தமது வாழ்க்கையின் கால் நூற்றாண்டை நான்கு சுவருக்குள் கழித்த அவரிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ அறவே இல்லை. அவரது விடுதலைக்குப் பிறகு இன ஒதுக்கல் சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன. கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

1994-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா. அவ்வுளவு கொடுமைகளுக்குப்பிறகு அதிபரான அவர் என்ன சொன்னார் தெரியுமா? தமது மக்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்......

(http://2.bp.blogspot.com/-oyrY4edLBoI/UHA2YpWNuII/AAAAAAAACb4/MZBNVCuKLSk/s320/Mandela__Nelson-speaking.jpg)

'நம்மை ஒடுக்கியவர்களைப் பார்த்து நாமெல்லாம் தென்னாப்பிரிக்கர்கள் பழைய ரணங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்குவோம், எல்லா கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நட்பு கரத்தை நீட்டுகிறேன் இந்த நாட்டை மறுநிர்மாணம் செய்ய உதவுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்'.

இப்படிப்பட்ட உன்னத தலைவர் வாழும் காலத்திலேயே வாழ நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் என்ற அரக்கன் ஒழிய பாடுபட்ட அவருக்கும், அதிபர்  F. W. de Klerk அவர்களுக்கும் 1993-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு அவராகவே அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பல்லாண்டுகள் தனது மக்கள் பட்ட கொடுமைகளையும், 27-ஆண்டுகள் தாம் அனுபவித்த வேதனைகளையும் நினைத்து அதிகாரம் தன் கையில் வந்தவுடன் நெல்சன் மண்டேலா வெள்ளையினத்தவரை பழி வாங்க புறப்பட்டிருந்தாலும் நாம் அதற்கு நியாயம் கற்பித்திருக்கலாம். சராசரி மனிதர்களின் இயல்பு அது. ஆனால் சராசரி மனிதனிலிருந்து அவர் உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள்....

"மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா.... 
இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா"....

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை தந்தாலும் ஒரு பாடம் உயர்ந்து நிற்கிறது. அதுதான் மன்னிப்பு எனும் பாடம். தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்போருக்கும், தவறு செய்தவர்களை மன்னிக்கத் தெரிந்தோருக்கும் நிச்சயம் எந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 20, 2013, 10:45:59 PM
ஜொஹானேஸ் குட்டன்பெர்க் (அச்சியந்திரம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தொடு நின்று விடாமல் செயலிலும் இறங்கினார்.

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சியந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg).

(http://3.bp.blogspot.com/-TqudZwICH2Q/UHE-ngpkUFI/AAAAAAAACco/-zoKdsvowmg/s320/Gutenberg.jpg)

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Menu scripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார்.

(http://1.bp.blogspot.com/-o4vjCZPrmpU/UHE-zKs8VhI/AAAAAAAACcw/sEFcl68JDx8/s320/Gutenberg_2.gif)

குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.

(http://4.bp.blogspot.com/-T50fT5mZqTo/UHE_p7O7AVI/AAAAAAAACdA/WeiGmULHiCw/s320/800px-Metal_movable_type.jpg)

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

(http://4.bp.blogspot.com/--hbgEJMYQlM/UHE_LfxDNzI/AAAAAAAACc4/hWf8R-E_xLM/s320/Gutenberg_Bible.jpg)

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.

(http://1.bp.blogspot.com/-hx8bnegVQfY/UHE_0Tf1jqI/AAAAAAAACdI/U9ijso2cg48/s1600/gutenbergpress.jpg)

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .

(http://3.bp.blogspot.com/-VSiNLgA5-XI/UHE_7VE5nyI/AAAAAAAACdQ/_ollWPavvgg/s320/450px-Printing3_Walk_of_Ideas_Berlin.JPG)

குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 22, 2013, 08:54:24 PM
ரூசோ - வரலாற்று நாயகர்!

உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே  கூர்மையாக செயல்பட்டிருக்கிறது. வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் 'பிரெஞ்சு புரட்சி'யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

வாழும்போது வறுமையுடன் போராடிய அவர் மறைந்தபோது ஒரு சராசரி மனிதனாக கருதப்பட்டு சாதாரண இடுகாட்டில் புதைக்கப்பட்டார். ஆனால் பதினாறு ஆண்டுகள் கழித்து அவருக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கவே புதைக்கப்பட்ட அவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் அலங்கரிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து வர புகழ்பெற்ற Pantheon-அரங்கில்  மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. உலக வரலாற்றில் இப்படிபட்ட மரியாதையை பெற்றவர் அவர் ஒருவர்தான் அவர் பெயர் ரூசோ. 1712-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28-ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐசக் ரூசோ, சுசேன் பெர்னார்ட் ரூசோ தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ரூசோ. பிறந்த ஒருவாரத்திற்குள் அவரது தாயார் காலமானார். எனவே தந்தையின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார் ரூசோ.

(http://2.bp.blogspot.com/-P3goWVKj9do/UEMHLkJ-MXI/AAAAAAAACL8/kgIS8K_JlT0/s320/rousseau.jpg)

தந்தை கடிகாரம் பழுது பார்க்கும் வேலையில் இருந்தார். குடும்பம் ஏழ்மையில் வாடியது. தந்தைக்கு தலைசிறந்த தத்துவ நூல்களைப் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் ரூசோவுக்கும் பரவியது. குடும்ப ஏழ்மை காரணமாக அவர் முறையாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. ரூசோவுக்கு ஏழு வயது நிரம்பும் முன்னே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தார் தந்தை. அந்த சிறிய வயதிலேயே கிரேக்க காவியங்களையும், ரோமின் வரலாற்றையும் மகனுக்கு படித்துக் காட்டுவார் தந்தை. அதனால் பலவித நூல்களை படிக்கும் ஆர்வம் ரூசோவுக்கு இளம்வயதிலேயே ஏற்பட்டது. பதினான்காம் வயதில் ஒரு வழக்கறிஞரிடம் வேலைக்கு சேர்ந்தார் ரூசோ. நீதிமன்ற தீர்ப்புகளை நகல் எடுப்பது அவரது பணி. அந்த வழக்கறிஞர் தன்னை நடத்திய விதம் பிடிக்காமல் போகவே வேலையை விட்டு வெளியேறினார்.   

வறுமை காரணமாக ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை எனவே ஒரு சிற்பியிடம் வேலைக்கு சேர்ந்தார். அந்த சிற்பி ரூசோவை அடிமைபோல் நடத்தியதாலும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் காட்டுமிராண்டித்தனமாக தண்டித்ததாலும் அந்த வேலையை விட்டும் அவர் வெளியேறினார். 'ஒருவனை சார்ந்து வாழ்வதைவிட சாவதே மேல்' என்ற எண்ணம் அவரிடம் தோன்றியது. இருந்தாலும் வறுமை விரட்டியதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பல்வேறு வேலைகளை செய்தார். என்னதான் பிரச்சினை வந்தாலும் அவர் நூல்கள் வாசிப்பதை கைவிட்டதில்லை. எப்போதும் ஏதாவது நூலை படித்துக்கொண்டே இருப்பார். அவர் மனிதர்களோடு பேசியதைவிட புத்தகங்களோடு பேசியதுதான் அதிகம். ஒருமுறை கடையில் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தார் ரூசோ. அதை எப்படியாவது வாங்கி வாசித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஆனால் கையில் பணம் இல்லை என்ன செய்தார் தெரியுமா? தனது உடைகளை விற்று அந்த புத்தகத்தை வாங்கினார். அடுத்த இரண்டு நாட்களுக்கு சாப்பாடு இல்லை இருந்தும் புத்தகத்தை படித்து முடிப்பத்திலேயே அவர் கவனம் செலுத்தினார்.

இப்படி புத்தகங்களை படித்துப் படித்து தன் அறிவை பெருக்கிக்கொண்ட ரூசோ தமது முப்பதாவது வயதில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இத்தாலி, பாரிஸ் என்று இரண்டு இடங்களிலும் சில ஆண்டுகளை கழித்தார். அங்கும் எந்த வேலையிலும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. சுயசிந்தனையும், தன்மான உணர்வும் கொண்ட ரூசோவினால் எவரிடமும் அடங்கிப் பணியாற்ற முடியவில்லை. இடையில் நாடகம் கவிதை என நிறைய எழுதினார். ஒருமுறை பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்று 'அறிவியல் வளர்ச்சி மனிதனின் ஒழுக்கத்தை உயர்த்தியிருக்கிறதா' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. தமது எண்ணங்களை அழகாகவும், தெளிவாகவும் எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினார் ரூசோ. அந்த போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. அதன்பிறகு அவரது எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பாரிசிலேயே பல ஆண்டுகள் தங்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். 

(http://3.bp.blogspot.com/-9wo5iys2bKw/UEMHRw7I8uI/AAAAAAAACME/FwtC9FyGB80/s320/JJR_000.jpg)

ரூசோ எழுதிய மிகச்சிறந்த தத்துவ நூல் 'The Social Contract' எனப்படும் சமுதாய ஒப்பந்தம். "மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமை சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான்" என்ற புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்கும் அந்த நூல் 1762-ஆம் ஆண்டு வெளியானது. அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனாய் உருவானவன். மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற வரையில்தான் அவன் அரசன். அவ்விதிகளை அரசன் மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த விதிகளை மீறலாம் என்பதுதான் அந்த நூலில் அவர் கூறியிருந்த கருத்து. அதன்பிறகு அவர் எழுதிய 'Emile' எனும் நூல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு கல்வி கற்கும் முறை பற்றி எடுத்துரைத்தது அந்த நூல்.

ரூசோவின் வெற்றிகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் அந்த இரண்டு நூல்களுமே சமயத்திற்கு எதிரானது என்ற பிரச்சாரத்தை தொடங்கினர். பிரான்சும், ஜெனிவாவும் அந்த நூல்களை தடை செய்தனர். பிரெஞ்சு அரசாங்கம் அவரது எதிர்ப்புப்போக்கை வெறுத்ததால் பாரிஸ் நீதிமன்றத்திற்கு முன் அவரது நூலை தீயிட்டுக் கொளுத்தியது. ரூசோ கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று அஞ்சி அவரை பிரான்சுக்குள் நுழையக்கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது. பின்னர் தாம் எழுதிய 'Perpetual peace' என்ற நூலில் ஐரோப்பிய நாடுகளுக்கென கூட்டுசங்கம் ஒன்று உருவாக வேண்டும். ஒவ்வொரு நாடும் போரை வெறுக்க வேண்டும். ஏதாவது ஒரு நாடு அவ்வாறு செய்யத்தவறினால் மற்ற நாடுகள் அதனை புறக்கணிக்க வேண்டும். அதோடு ஐரோப்பிய படைகள் அந்த நாட்டை நசுக்க வேண்டும். என்ற கருத்துகளை கூறியிருந்தார் ரூசோ. அந்த கருத்துதான் பல ஆண்டுகள் கழித்து ஐக்கியநாட்டு சபை உருவாக காரணமாக இருந்திருக்கும் என சில வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.   

ரூசோவின் சிந்தனைகள் படித்தவர்கள், இளையர்கள், தொழிலாளிகள் என எல்லாத்தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்றது. தன் எழுத்தாலும் சொல்லாலும் மக்களை சிந்திக்கத் தூண்டியவர் அவர். அப்போது பிரான்சின் சமூக பொருளாதார அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் ஊழலும், அதிருப்தியும், அதிகார துஷ்பிரயோகமும்தான் நிலவின. அரசன் மிகப்பெரிய சர்வாதிகாரி என்று கருதப்பட்ட அந்தக்காலக்கட்டத்தில் மக்களின் நலன் காப்பதை அரசன் மீறும்போது மக்களும் கட்டுப்பாட்டை மீறலாம் என்ற புரட்சிக்கருத்தை வெளியிட்டார் ரூசோ. அதனால்தான் 1789-ஆம் ஆண்டு மக்கள் ஒன்று கூடி அரசனுக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை செய்தனர். அந்த பிரெஞ்சு புரட்சியில் மன்னன் லூயியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு பிறகு உலகில் ஏற்பட்ட ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை போராட்டம் போன்றவற்றுக்கும் ரூசோவின் சிந்தனைகள் உதவியிருக்கின்றன.

(http://1.bp.blogspot.com/-0r1fhfWC1KQ/UEMHaGXam7I/AAAAAAAACMM/nMhnCHUlFMg/s320/rousseau.gif)

அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிக்கு வித்திட்ட ரூசோ 1778-ஆம் ஆண்டு ஜுலை 2-ஆம் நாள் தமது 66-ஆவது வயதில் காலமானார். அவர் இறந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரெஞ்சு புரட்சி வெடித்தது. ரூசோ இல்லாதிருந்தால் பிரெஞ்சு புரட்சியே ஏற்பட்டிருக்காது என்று மாவீரன் நெப்போலியன் கூறியிருக்கிறார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வறுமையில் கழித்தும் வளமான சிந்தனைகளை உலகுக்கு தந்தார் ரூசோ. முறையாக பள்ளிக்கு செல்லாவிட்டாலும் அவரால் உலகம் போற்றும் சிந்தனைகளை தர முடிந்தது. ஒரு தேசத்தையே வீறுகொண்டு எழச்செய்ய முடிந்தது. அதற்கு காரணம் அவரிடம் இருந்த சிந்தனைத்தெளிவும் அடிமைத்தனம் என்பதே இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணமும்தான். ரூசோவைப்போன்று நல்ல எண்ணங்களையும், தெளிவான சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளும் எவராலும் புரட்சிகளை உருவாக்க முடியும் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும். 
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 22, 2013, 08:59:55 PM
ரிச்சர்ட் ட்ரெவிதிக் (இரயில் வண்டி உருவான கதை) - வரலாற்று நாயகர்!

சிங்கப்பூரின் பொது போக்குவரவு முறை உலகத்தரம் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் நம்மில் பெரும்பாலோர் சொகுசாக பயணம் செய்து பழகிவிட்ட MRT (Mass Rapid Transit) எனப்படும் பெருவிரைவு இரயில்கள். நாம் பயணிக்கும் அந்த இரயில்கள் மின் சக்தியினால் இயங்குகின்றன. பல பரிணாம வளர்ச்சிக்குப் பிறகுதான் இரயில்கள் இந்த நிலையை எட்டியிருக்கின்றன. முதன் முதலில் உலகுக்குக் கிடைத்த இரயில் வண்டி எப்படி இருந்தது தெரியுமா? மிகப்பெரிய சத்தத்துடன் கோபமாக பெருமூச்சு விடும் ராட்சஷனைப்போல் இருந்தது காரணம் அந்த இரயில் வண்டி நீராவியால் இயங்கியது. 1700-களின் இறுதியில் 'ஜேம்ஸ் வாட்' என்ற வரலாற்று நாயகர் ஸ்டீம் என்ஜின் ('Steam Engine') எனப்படும் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்று முன்னொரு வரலாற்று நாயகர் தொடரில் தெரிந்து கொண்டோம். 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த அதே நீராவி இயந்திரத்தை அடிப்படையாக கொண்டு ஓடும் இரயில் வண்டியை 1804-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார் இன்னொரு வரலாற்று நாயகர். அந்த கண்டுபிடிப்புதான் உலகம் முழுவதும் நெடுந்தூரத் தரைப்பயணத்திற்கு அடிப்படையை வகுத்து தந்திருக்கிறது. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கும் அந்த வரலாற்று நாயகர் (Richerd Trevithick) ரிச்சர்ட் ட்ரெவிதிக்.

இங்கிலாந்தின் 'Cornwall' என்ற பகுதியில் 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் ரிச்சர்ட் ட்ரெவிதிக். அவருடைய தந்தை வெள்ளிய சுரங்கம் ஒன்றின் நிர்வாகியாக இருந்தார் அதனால் ட்ரெவிதிக்கும் சுரங்கத்தொழிலுக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டது. சிறுவயது முதலே ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை செய்து புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அதனால் எப்போதும் ஏதாவது  இயந்திரங்களை வடிவமைப்பதிலும் அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக அவர் பள்ளிப்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எப்படியோ படிப்பை முடித்து ஒரு சுரங்க பொறியாளராக தேர்ச்சி பெற்றார். அந்தக்காலத்தில் சுரங்கங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்கி விடும். அதனால் சுரங்கப்பணிகள் முடங்கிப்போகும் அப்படி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நீராவி இயந்திரங்கள்தான் பயன்பட்டன.

(http://3.bp.blogspot.com/-cdU-DsYhbvQ/UDnZ8ZNc8UI/AAAAAAAACJ8/8oIrZJrwDBQ/s320/Richard_Trevithick.jpg)

நீராவி இயந்திரங்களின் செயல்பாட்டை  ட்ரெவிதிக் நன்கு அறிந்திருந்ததால் எந்த சுரங்கத்தில் நீராவி இயந்திரங்கள் பழுதானாலும் அவற்றை சரி செய்ய அவர்தான் அழைக்கப்படுவார். அவற்றை பழுதுப்பார்ப்பதோடு நின்று விடவில்லை  ட்ரெவிதிக்கின் ஆர்வம், குறைந்த அழுத்தமுடைய அந்த நீராவி இயந்திரங்களிள் சில முன்னேற்றங்களை செய்து சுரங்கங்களில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரது அன்றாட எண்ணமாக இருந்தது. முதலில் உச்ச அழுத்தமுடையதாக நீராவி இயந்திரத்தை மாற்றி அமைத்தார். பின்னர் அதனை எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லும் அளவுக்கு வடிவமைத்தார். அப்போதுதான் தானாகவே நகர்ந்து செல்லும் ஒரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அப்படிபட்ட ஒரு கருவியை உருவாக்கிவிட வேண்டும் என்று கனவு காணத்தொடங்கினார். அந்தக்கனவை பதினெட்டாம் நூற்றாண்டு மக்களிடம் அவர் சொல்லியிருந்தால் மற்ற சாதனையாளர்களுக்கு கிடைத்தது போன்ற பரிகாசம்தான் அவருக்கும் கிடைத்திருக்கும்.   

தனது கனவை நனவாக்க அயராது உழைத்து 1801-ஆம் ஆண்டு நகரும் நீராவி இயந்திரத்தை அவர் உருவாக்கினார். Cornwall வீதிகளில் அதனை ஓட்டியும் பார்த்தார். ஆனால் எதிர்பாராவிதமாக ஏதோ கோளாற்றினால் அந்த இயந்திரம் தீப்பிடித்து எரிந்து போனது. அதனால் வீதியில் ஓடிய அந்த முதல் நீராவி இயந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு எந்த சான்றும் இல்லாமல் போனது. சோதனைகள் வரும்போது சோர்ந்து போவோருக்கு வாழ்க்கையும், வானமும் வசப்பட்டதில்லையே! வரலாற்றில் நிலைத்து நிற்க விரும்பியதால்  ட்ரெவிதிக்கும் அந்த முதல் தோல்வியால் சோர்ந்து போய் விடவில்லை. இரண்டே ஆண்டுகளில் இன்னொரு நீராவி இயந்திரத்தை உருவாக்கினார். அது இயங்கும் முறையை தன நண்பர்களுக்கு காண்பித்தபோது அது விளையாட்டு பொம்மை என்று கூறினார்கள். ஆனால் அது பொம்மை அல்ல உண்மையான ரயில் வண்டி என்பதை நிரூபிக்க அதனை வீதியில் ஓட்டிக்காட்டினார் ட்ரெவிதிக்.

'குக்' 'குக்'... என்று பேரிரைச்சலுடன் பெருமூச்சு விட்டபடி ஓடிய அந்த வண்டியைப் பார்த்து பயந்துபோன மக்கள் 'Puffing Devil' அதாவது பெருமூச்சு விடும் பேய் என்று அலறியபடி ஓடி ஒளிந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.  ட்ரெவிதிக் உருவாக்கிய அந்த நீராவி இயந்திர இரயில் மணிக்கு எட்டு முதல் ஒன்பது மணி வேகத்தில் ஓடியது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்  ட்ரெவிதிக்கின் அந்த புதிய கண்டுபிடிப்பைக்கண்டு தங்கள் பிழைப்பில் மண் விழப்போகிறது என்று கோபம் அடைந்தனர் குதிரை வண்டிக்காரர்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தரைப்பயணத்திற்கு குதிரை வண்டியைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.  ட்ரெவிதிக்கின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்கூட குதிரை வண்டிக்காரர்கள் திட்டம் தீட்டினர். ஆனால் தனது முயற்சியை தொய்வின்றி தொடர்ந்த  ட்ரெவிதிக் 1804-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் South Wales-ல் நீராவி இயந்திரத்தால் பொருட்களையும், பயணிகளையும் இழுத்து செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டினார்.

(http://1.bp.blogspot.com/-XJ-ag8JDD5E/UDnaOcMw_0I/AAAAAAAACKE/w-SsnSpI5tw/s320/RichardTrevithick_SteamEngine_2.JPG)

70 பயணிகளையும் 10 டன் எடையுள்ள இரும்பையும் ஒன்பது மைல் தூரத்திற்கு இழுத்து சென்றது அந்த இரயில் வண்டி. ஆனால் இன்று போல் அப்போது தண்டவாளங்கள் கிடையாது என்பதால் இரும்புத்தகடு நிரப்பிய பாதையில்தான் அந்த இரயில் வண்டி ஓடியது. இரயில் வண்டியின் கணம் தாங்காமல் அந்த தகட்டுப்பாதை பழுதானது. எனவே அது அதிக செலவு பிடிக்கும் ஒரு சமாச்சாரம் என்று எண்ணி எந்த தொழிலபதிரும் இரயில் கட்டமைப்பில் முதலீடு செய்ய முன்வரவில்லை. அதனால் வெறுப்படைந்த  ட்ரெவிதிக் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரது கண்டுபிடிப்புகளைப்பற்றி நன்கு அறிந்திருந்த தென் அமெரிக்கா அவரை இருகரம் கூப்பி வரவேற்றது. 1816-ஆம் ஆண்டு Peru-விற்கு சென்ற  ட்ரெவிதிக் அங்குள்ள சுரங்கங்களுக்கு நீராவி இயந்திரங்கள் அமைத்துக் கொடுத்தார். சுரங்கங்கள் நல்ல லாபம் ஈட்டத்தொடங்கின.

1826-ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் அமேரிக்கா முழுவதும் பயணம் செய்தார். இருந்தாலும் தனது கனவை நனவாக்க முடியாமல் மீண்டும் இங்கிலாந்து திரும்பினார்  ட்ரெவிதிக் அப்போது தான் கண்டுபிடித்த நீராவி இரயில் சில முன்னேற்றங்களுடன் புழக்கத்திற்கு வந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார். எனினும் தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இரயில் வண்டி உருவானது என்பதால் தனக்கு உதவிப்பணம் தருமாறு அவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேலை இல்லாமல் சிரமபட்ட  ட்ரெவிதிக்குக்கு தனது நிறுவனத்திலேயே வேலை கொடுக்க முன் வந்தார் ஒருவர். அவர் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இயந்திரத்தின் அடிப்படையில் புதிய இயந்திரத்தை வடிவமைத்து பிரபலமான இரயில் வண்டியை உருவாக்கியவர். எனவே நன்றி உணர்வுடன் அவர்  ட்ரெவிதிக்குக்கு அந்த வேலையை தர முன் வந்தார். 

(http://2.bp.blogspot.com/-20_2uSCezQ4/UDnaa43k8TI/AAAAAAAACKM/eF8nvIyG__Y/s320/1291226976-20862-0.jpg)

முதலில் சம்மதித்தாலும் பின்னர் அங்கு வேலை செய்ய மறுத்து விட்டார்  ட்ரெவிதிக். வறுமையிலும், வேதனையிலும் வாடிய அவர் 1833-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் தனது 62-ஆவது வயதில் காலமானார். அவர் வாழ்ந்தபோது கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்றமும் அவருக்குரிய மரியாதையை வழங்காமல் போயிருக்கலாம். மனிதன் தவறு செய்தாலும் வரலாறு தவறு செய்வதில்லை. எனவேதான் ட்ரெவிதிக்கை 'இரயில் வண்டியின் முன்னோடி' என்று இன்றும் அது நினைவில் வைத்து போற்றுகிறது. இப்போது நாம் சொகுசாக பயணம் செய்யும் பெருவிரைவு இரயில்கள் ட்ரெவிதிக் கண்டுபிடித்த நீராவி இரயிலின் வழித்தோன்றல்தான் என்று நன்றியோடு நினைத்துப் பார்த்தாலே அந்த வரலாற்று நாயகருக்கு நாம் மரியாதை செய்தவர்களாவோம்.   

இன்று உலகம் முழுவதும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இரயில்கள் எல்லாமே ட்ரெவிதிக் விட்டு சென்றுள்ள நினைவு சின்னங்களே. தரைப்போக்குவரவு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்க ட்ரெவிதிக் என்ற வரலாற்று நாயகருக்கு உதவிய பண்புகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடும் உழைப்பு, மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம். அந்த பண்புகளை பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமையாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 22, 2013, 09:07:12 PM
மார்ட்டின் லூதர் கிங் - வரலாற்று நாயகர்!

மனுகுல நாகரிகத்திற்கு முரண்பாடான சில விசயங்கள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விந்தை என்னவென்றால் எப்போது நாகரிகம் தோன்றியதோ அப்போதே அநாகரிகமும் தோன்றத் தொடங்கி விட்டன. தொன்று தொட்டே இருந்து வந்த அநாகரிகங்களில் ஒன்று கருப்பினத்தவரை கொத்தடிமைகளாக நடத்தியது. ஆபிரகாம் லிங்கன் என்ற உன்னத மனிதனின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தலை அறுத்தெரியப்பட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் அமெரிக்காவில் அடிமைத்தலை அகன்றதே தவிர அங்கு கருப்பினத்தவருக்கு சம உரிமை மறுக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய அந்த அவலத்தைப் போக்க அரும்பாடுபட்ட ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் அன்னல் காந்தியடிகளின் அகிம்சை வழியைப் பின்பற்றி கருப்பினத்தவர்களின் சம உரிமைக்காகப் போராடி உயிர் துறந்த மார்ட்டின் லூதர் கிங். 

1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார். கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதுமே அரித்துக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.

(http://2.bp.blogspot.com/-CBPIt7mZ7DM/UCMXkGmU7UI/AAAAAAAACDI/tthkM4FrmHo/s320/luthar.jpg)

ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு வெள்ளையர்களின் இடங்களுக்கு அவர்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த அநாகரிகமான விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை நிச்சயம். எவ்வுளவு காலம்தான் பொறுத்துக்கொள்வது. 1955-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி கருப்பர்களின் பொறுமை எல்லைக் கடக்கும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்த தினம் ரோஸா பார்க்ஸ் (Rosa Parks) என்ற கருப்பின பெண் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தார். ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் அதே பேருந்தில் ஏறினர். அப்போது அவர்கள் அமர இருக்கை இல்லாததால் ரோஸா பார்க்கை அந்த இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு அதட்டினார் பேருந்து ஓட்டுனர். எழுந்திருக்க மறுத்ததால் ரோஸா பார்க் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் அவமானங்களைத் தாங்கிக்கொண்டிருந்த கருப்பினத்தவர்கள் இம்முறை விடுவதாக இல்லை. ரோஸா பார்க் சம்பவத்தைக் கண்டித்து சுமார் 50000 கருப்பர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தினர். இருப்பினும் கருப்பினத்தவர்களின் கொந்தளிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது.

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அகிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. அன்னல் காந்தியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்து வணங்கினார். காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த அவர் தனது போராட்டங்களில் வன்முறை தலையெடுக்காமல் பார்த்துக் கொண்டார். சம உரிமைக்கோரும் இயக்கங்களில் அவர் மும்முரமாக ஈடுபட்டார். தனது இயக்கத்தை மிக கன்னியமாக அவர் நடத்திய முறையைப் பார்த்து சில வெள்ளையினத்தவரும்கூட அவரைப் பாரட்டினர். ஆனால் பல எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவரது வீட்டிற்கெதிரே குண்டுகள் வீசினர். அமெரிக்காவின் ரகசிய போலீசார் அவரை தற்கொலை செய்துகொள்ளுமாறு மிரட்டியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் தனது அமைதிப் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தார் லூதர் கிங்.

அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார் லூதர் கிங். அங்கு ஒருமாத காலம் தங்கியிருந்து காந்தியடிகளோடு பழகிய தலைவர்களிடம் அகிம்சை போராட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். மிகச்சிறப்பாகவும் உருக்கமாகவும் பேசக்கூடியவர் லூதர் கிங் அவரது பேச்சுகள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியது இல்லை. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். சுமார் இருநூற்றி ஐம்பதாயிரம் பேர் அங்கு திரண்டனர். அந்த அமைதிப் பேரணியில்தான் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார் மார்ட்டின் லூதர் கிங். உலகை மெய் சிலிர்க்க வைத்த பேச்சில் அவர் இவ்வாறு கூறினார்.....

"எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்".

(http://2.bp.blogspot.com/-TpORHLFJ664/UCMX9p0bfRI/AAAAAAAACDY/_EVF_ktQO40/s320/kingphoto.jpg)

அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டே 1964-ஆம் ஆண்டு சம உரிமைக்காகப் பாடுபட்ட லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேறு வழியில்லாமல் 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம் அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரின் மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். அந்த ஆத்திரம்தான் லூதர் கிங்கின் உயிருக்கு உலை வைத்தது.

டென்னசியில் (Tennessee) 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டான். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 39. இந்தியாவில் வென்ற அகிம்சை அமெரிக்காவிலும் வென்றது. ஆனால் காந்தியடிகளுக்கு கிடைத்தது போலவே மார்ட்டின் லூதர் கிங்கிற்கும் துப்பாக்கி குண்டுதான் வெகுமதியாக கிடைத்தது. லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கருப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது. அன்று அமெரிக்கா முழுவதும் விடுமுறை நாள்.

(http://4.bp.blogspot.com/-dyRLbtsWTjs/UCMX16rA1dI/AAAAAAAACDQ/HSN3I1-4JOw/s320/dr-martin-luther-king-jr-quote.jpg)

சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது. அகிம்சை வெல்லும் என்பதை இந்தியாவில் நிரூபித்தார் காந்தியடிகள். மார்ட்டின் லூதர் கிங் அதே உண்மையை அமெரிக்காவில் நிகழ்த்திக் காட்டினார். லூதர் கிங்கைப் போல் அகிம்சை என்ற அறவழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் வரலாறும், அந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 22, 2013, 09:13:26 PM
ஜார்ஜ் பெர்னாட் ஷா (இலக்கிய மேதை) -வரலாற்று நாயகர்!

நோபல் பரிசைப் பெற்று விட்ட எவரும் தாம் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக நியாயமாக கர்வப்பட்டுக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசு தன்னைத் தேடி வந்தபோது அதை உதாசீனம் செய்யும் திணவும், தைரியமும் ஒரு வரலாற்று நாயகருக்கு இருந்திருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? 1925-ஆம் ஆண்டில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு. வந்த பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதற்கு பதில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த வருடம் நான் ஒன்றும் எழுதவில்லையே? எனக்கு ஏன் இந்த பரிசு? என்று குழுவைக் கேட்டார். அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது. ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார். யார் அந்த அதிசய மனிதர் என்று வியக்கிறீர்களா?! அவர்தான் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் சைவ உணவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கடைப்பிடித்து கிட்டதட்ட 95 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து மறைந்த ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா.

1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் நாள் அயர்லாந்தின் டப்லின் (Dublin) நகரில் பிறந்தார் பெர்னாட் ஷா. இரண்டு சகோதரிகளை அடுத்து மூன்றாவது பிள்ளை அவர். அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவரது தந்தை George Carr Shaw குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை பணம்கூட குடுக்க முடியாமல் கடற்கரையோரம் ஓர் ஓட்டைப்படகில் அவர்கள் வசித்த நாட்களும் உண்டு. குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை பிஞ்சு வயதிலேயே உணர்ந்தார் பெர்னாட் ஷா. எனவே மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார். 1885-ஆம் ஆண்டு தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைத்தார் பெர்னாட் ஷா. அதுவும் சுமார் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது. ஆனாலும் சொந்தமாகவே நூல்கள் வாசிப்பதில் அவருக்கு அலாதி பிரியம்.

(http://1.bp.blogspot.com/-yUhoWuHIpIU/UCNqtUO8H0I/AAAAAAAACEE/HjbzR3FQN_I/s320/GeorgeBernardShaw1.jpg)

பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் அதிக கூச்ச சுபாவம் கொண்டிருந்த அவர் பின்னாளில் உலகப்புகழ் பெறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கி, இருபதாவது வயதில் இங்கிலாந்து வந்த அவர் நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும். எந்த சராசரி எழுத்தாளனும் சோர்ந்து போயிருப்பான். அவருடைய எழுத்துகளை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. ஆனால் தன் எழுத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட பெர்னாட் ஷா தொடர்ந்து எழுதினார். தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். முயற்சி வீண் போகவில்லை அவ்வுளவு நிராகரிப்புகளை சந்தித்தப் பிறகு அவருடைய படைப்புகளுக்கு ஒரு சொல்லுக்கு இவ்வுளவு என்று கணக்கிட்டு சன்மானத் தொகை வழங்கபட்ட நிலையும் வந்தது என்பது வரலாற்று உண்மை. அதுமட்டுமல்ல அவர் என்ன பேசினாலும், செய்தாலும் அது பத்திரிகைகளில் செய்தியானது.

தன் தாயிடமிருந்து இசைக் கற்றுக்கொண்ட பெர்னாட் ஷா இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். அவர் விமர்சனம் எழுதப்போகிறார் என்றாலே இசை கலைஞர்களுக்கு நடுக்கம் எடுக்குமாம். பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் நாமே ஏன் நாடகங்கள் எழுதக்கூடாது? என்று எண்ணி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. அவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின. நாடகங்களில் அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம். தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை சரமாரியாக கலந்து கொடுத்தார் அவர். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் அவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக சில புகழ்பெற்ற சம்பவங்கள் உண்டு.

(http://4.bp.blogspot.com/-AzFAMS62irk/UCNq1DXP6-I/AAAAAAAACEM/266uT89G_hE/s1600/220px-George_Bernard_Shaw_1936.jpg)

ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தாராம், அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றாராம் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். இன்னொரு புகழ்பெற்ற சம்பவம்.. விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பெர்னாட் ஷாவை சந்தித்த ஓர் அழகிய நடிகை நீங்கள் பெரிய அறிவாளி, நான் சிறந்த அழகி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என் அழகும், உங்கள் அறிவும் கொண்ட குழந்தை நமக்கு பிறக்குமல்லவா? என்று கேட்டாராம். அதற்கு புன்னகைத்துக் கொண்டே அந்தக் குழந்தை உங்களுடைய அறிவையும் என்னுடைய அழகையும் கொண்டு பிறந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டாராம் பெர்னாட் ஷா.

மிகப்பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இருந்தது பெர்னாட் ஷாவுக்கு. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றாராம். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். திணவு இல்லாதவர்கள் தடுமாறிப் போயிருப்பார்கள் ஆனால் பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாராம் லாவகமாக. அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. அவர் எழுத்துத் திறனைப் பார்த்து உலகமே வியந்தது.

(http://1.bp.blogspot.com/-n4MgQ0h7FtA/UCNrXDjBnYI/AAAAAAAACEk/R4GVgzHdrBg/s320/shaw352.jpg)

உண்மையில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாதான். அவருடைய நாடகங்கள் சமூக, அரசியல், சமயப் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசின. சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாக சாடின. திட்டமிடப்பட்ட வகுப்புவாதமற்ற சமூகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார். அதனாலயே அவ்வபோது  அவரிடம் தலைதூக்கிய தற்பெருமையையும், ஆணவத்தையும் இலக்கிய உலகம் பெரிதுபடுத்தவில்லை. பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கெளரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார். அவருக்கு 'Order of the Merit' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது அந்த விருதை எனக்கு நானே கொடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன அதனால் இப்போது அது எனக்கு தேவையில்லை என்று கூறினார் பெர்னாட் ஷா.

(http://3.bp.blogspot.com/-rdflOhEPHoM/UCNq9lDPTwI/AAAAAAAACEU/fLTHZQGpK-4/s320/george-bernard-shaw-1.jpeg)

தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை. தினசரி குறைந்தது ஐந்து பக்கங்கள் எழுதுவாராம். தன் வாழ்நாளில் கிட்டதட்ட 50 நாடகங்களையும், 5 நாவல்களையும் எழுதினார் அவர். நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது அவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார். ஆங்கில இலக்கிய உலகின் பெருமதிப்பைப் பெற்றிருந்த பெர்னாட் ஷா 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தமது 94-ஆவது வயதில் காலமானார்.

"ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது".

பெர்னாட் ஷா கூறிய பல பொன்மொழிகளில் இதுவும் ஒன்று. அவர் நீண்டகாலம் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவருக்கு உதவிய பண்புகள்...தோல்வியைக் கண்டு துவளாத மனோபாவமும், நகைச்சுவை உணர்வும், தீயப்பழக்கங்களை வெறுத்து ஒதுக்கியதும்தான். அந்தப் பண்புகளையும், பழக்கங்களையும் நாமும் பின்பற்றினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 22, 2013, 09:19:12 PM
'தமிழ்க் கடல்' மறைமலை அடிகள் - வரலாற்று நாயகர்!

தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் 'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒரு  மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை 'தமிழ்க்கடல்' என்றும், 'தனித்தமிழின் தந்தை' என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த வரலாற்று மாந்தர் மறைமலை அடிகள். 

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் மறைமலை அடிகள். பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம். பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். பிந்நாளில் தமிழ் மொழி மீது ஏற்பட்ட பெரும் பற்றாலும் தனித்தமிழ் மீது இருந்த ஆர்வத்தாலும் வேதாசலம் என்ற தன் பெயரை தூய தமிழில் மாற்ற விரும்பினார். அந்த பெயரை வேதம், அசலம் என்று இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். வேதம் என்ற வடமொழி சொல்லுக்கான தூய தமிழ்ச்சொல் மறை. அசலம் என்பதற்கான தூய தமிழ்ச்சொல் மலை. சுவாமி என்பதற்கான தூய தமிழ்ச்சொல் அடிகள். எனவே சுவாமி வேதாசலம் என்ற பெயர் 'மறைமலை அடிகள்' என்றானது.

(http://2.bp.blogspot.com/-PxQVVwJ3Ufc/UAKKAxijs4I/AAAAAAAAB70/kT7BLA_FVd4/s320/maraimalai-adigal.jpg)

வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினொன் கீழ்கணக்கு போன்ற சிரமமான நூல்களையும் தெளிவாக கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.

நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோம சுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.

மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். காலப்போக்கில் தனக்கு சோறு போட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்தார் மறைமலை அடிகள். தமிழாசிரியர் பணியை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார். வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.

(http://4.bp.blogspot.com/-n7INS-nDpU0/UAKKH72PAbI/AAAAAAAAB78/8iHqwP_y_W4/s1600/maraimalai+adigal2.JPG)

முல்லைப்பாட்டு, பட்டிணப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை அவர் பயன்படுத்தினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தல எனும் காதல் காவியத்தை தமிழில் மொழிப் பெயர்த்தார். மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஹிந்தி மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாகவும், குறியாகவும் இருந்தார். ஹிந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார். ஆனால் தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார். 

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. அந்தத் தூய தமிழுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியது மறைமலை அடிகளுக்குதான். தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் காதலித்த விசயங்கள் இரண்டு ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.

(http://3.bp.blogspot.com/-H8VThiJplUk/UAKKNL5ZNJI/AAAAAAAAB8E/-4Cy1GURzZ8/s1600/MARAIMALAI+ADIGAL.JPG)

'தனித்தமிழ் இயக்கம்' என்ற ஒன்று தேவைதானா? என்று எவர் வேண்டுமானாலும் எளிமையாக கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் ஒரு மொழியின் மீது காதல் கொண்டவர்களால்தான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். தமிழ் மொழிதான் தமிழரின் உண்மையான அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததால்தான் தனித்தமிழ் இயக்கத்தையே ஆரம்பித்தார் மறைமலை அடிகள். அவரைப்போன்றோர் சிந்திய வியர்வையின் பலனாகத்தான் இன்று நமது தமிழ்மொழி செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது. அவருக்கு தமிழுலகம் நன்றி கூறும் அதே வேளையில் அவரிடமிருந்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு வரைதான் கல்வி கற்றிருந்தாலும் ஆசிரியர் பணியை எட்டும் துணிவு அவரிடம் இருந்தது. அந்தத் துணிவால் ஆசிரியர் பணி கிடைத்தும் தன்னுடையக் கொள்கைக்காக அந்தப் பணியை விட்டு விலகி வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பி விட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அவர் தன்னுடையக் கொள்கைகளை வாழ்ந்தும் காட்டினார். இவற்றால்தான் அவருக்கு தமிழ் வரலாற்றில் ஒரு தனி இடம் கிடைத்தது. 'தனித்தமிழ்' என்ற வானமும் வசப்பட்டது. அவரிடம் இருந்த துணிவும், வைராக்கியமும், சிந்தனைத் தெளிவும், கொள்கைகளை வாழ்ந்து காட்டும் திடமும் நமக்கு இருந்தால் நமக்கும் நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 06:51:35 PM
ஜேம்ஸ் வாட் - வரலாற்று நாயகர்!

'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்பை அவர் செய்திருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்! அவரது கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த ஒரு கண்டுபிடிப்பு. இயந்திர சக்தியின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஓர் அற்புத கண்டுபிடிப்பு, உலகம் தொழில்மயமாவதற்கு உதவிய ஓர் அபூர்வ கண்டுபிடிப்பு. 'நீராவி' என்ற இயற்கை சக்திக்கு கடிவாளமிட்டு அதனை மகத்தான சக்தியாக மனுகுலத்துக்கு தந்த அந்த வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட். அவர் கண்டுபிடித்துத் தந்த கருவி 'Steam Engine' எனப்படும் நீராவி இயந்திரம்.

1736-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் Greenock எனும் ஊரில் பிறந்தார் ஜேம்ஸ் வாட். அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம் அந்தக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தில் அடிக்கடி ஆக்ரமிப்பு செய்ததால் நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையில் இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகமாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டுக்கு வரைவது என்றால் கொள்ளை ஆசை. ஆனால் வரைவதற்கு தாள் வாங்கி தரக்கூடாத முடியாத அளவுக்கு குடும்பம் வறுமையில் இருந்தது. அதனால் வீட்டின் தரையில் ஆசை தீர வரைந்து தள்ளுவார் ஜேம்ஸ் வாட். அவர் வரைந்தவை எல்லாம் என்ன தெரியுமா? வட்டங்களும், சதுரங்களும், முக்கோணங்களும் கொண்ட கணித சம்பந்தமான படங்கள். பிறந்ததிலிருந்தே உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்தார் ஜேம்ஸ் வாட். எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் அவரது நிலை இன்னும் மோசமாகும். அந்த நேரங்களில் அவரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார் தாயார்.

(http://1.bp.blogspot.com/-OwEKf0D3GHw/T_rT9anOi1I/AAAAAAAAB5I/l9lg35elX8I/s320/James_Watt-Energy-hero.jpg)

பள்ளிக்கு சென்ற நாட்களில் அவருக்கு 'geometry' என்ற கணிதக்கூறில் அதிக ஆர்வம் இருந்தது. பிந்நாளில் அவர் பொறியியலில் சிறந்து விளங்க அது ஒரு முக்கிய காரணம். அந்தக்காலத்தில் அதாவது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து எப்படி இருந்தது தெரியுமா? எங்கும் அமைதியும் நிசப்தமுமாக இருக்கும். நகர்ப்புறங்களில் குதிரைகளின் குளம்பொலியும், அவை இழுத்துச் செல்லும் வண்டிகளின் சக்கர ஒலியும்தான் கேட்கும். கிராமப்புறங்களில் ஆற்றில் நீர் இறைக்கும் சக்கரங்களின் ஒலி கேட்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகளும் காடுகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு தொழிற்சாலைகள் இருந்தன. அங்கெல்லாம் உடல் உழைப்பினால் பொருட்களை உற்பத்தி செய்தார்கள். pulley, lever ஆகியவற்றால் இயங்கக்கூடிய ஒரு சில இயந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றை இயக்கவும் மனித சக்தி தேவைப்பட்டது.

எந்த வேலையை செய்யவும் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் சக்திகள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி தேவை என்ற தவிப்பு மனுகுலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனுகுலம் தேடி வந்த அந்த சக்தி நீராவிதான் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் ஜேம்ஸ் வாட். அவருக்கு முன்பாகவே 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார். அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன் என்ற ஆங்கிலேயர். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.

(http://1.bp.blogspot.com/-7gFwHxXK6xA/T_rUHK-b0HI/AAAAAAAAB5Q/64qt0jc-Wc0/s320/300px-Watt_James_von_Breda.jpg)

1764-ஆம் ஆண்டு தாமஸ் நியூக்கோமனின் நீராவி இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட்டிற்கு கிட்டியது. அப்போதுதான் அவருக்கு நீராவி சக்தியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பு கிட்டியது. அப்போது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தை பழுது பார்த்து தருமாறு பல்கலைக்கழகம் அவரைக் கேட்டுக்கொண்டது. அந்தக் கருவியில் நிறைய குறைகள் இருந்ததை உணர்ந்தார் ஜேம்ஸ் வாட். குறிப்பாக அதிக சக்தியை விரயமாக்கியது.

விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார். 1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார் ஜேம்ஸ் வாட். சிறு வயதிலிருந்தே அவர் ஆரோக்கியமற்று இருந்ததால் அந்தக்கால கட்டத்திலும் அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அவருக்கு வர்த்தகத் திறமை அவ்வுளவாக இல்லை எனினும் 1775-ஆம் ஆண்டு மேத்யூ போல்டன் என்ற பொறியாளருடன் கூட்டு சேர்ந்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாட்டும் போல்டனும் பல்வேறு நீராவி இயந்திரங்களை தயாரித்து பெரும் செல்வம் சேர்த்தனர்.

(http://4.bp.blogspot.com/-b6YQJL_VToA/T_rURYeZJ4I/AAAAAAAAB5Y/Z53EIAGlGbE/s320/matthew-boulton-and-james-watt-with-one-of-the-patented-steam-engines.jpg)

நீராவி இயந்திரத்தை மட்டுமின்றி வேறு சில கண்டுபிடிப்புகளையும் செய்தார் ஜேம்ஸ் வாட். இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'centrifugal governor' என்ற கருவியையும்,  'pressure age' என்ற அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்துத் தந்த நீராவி இயந்திரம் மனுகுலத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பல தொழில்களுக்கு உதந்தவாறு நீராவி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதுவரை மனிதன் மற்றும் விலங்குகளின் தசை வலிமையையே நம்பியிருந்தது தொழில் உலகம். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. அதனால்தான்  'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் என்று ஜேம்ஸ் வாட்டை பெருமைப்படுத்துகிறது வரலாறு.

ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்பு பல துறைகளில் ஊடுருவியுள்ளது. 1783-ஆம் ஆண்டு ஒரு படகில் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி அதனை இயக்கினார் marques de zafra என்பவர். 1804-ஆம் ஆண்டு Richard Trevithick என்பவர் நீராவி இயந்திரத்தைக் கொண்டு இயங்கும் இரயில் வண்டியைக் கண்டுபிடித்தார். அவையிரண்டும் ஆரம்பத்தில் வெற்றியடையாவிட்டாலும் சில ஆண்டுகளில் நீராவிப் படகும், நீராவி இரயிலும் முறையே கடல் மற்றும் நிலப்போக்குவரவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. நீராவிப் படகுகள் கடல் அலைகளை வெற்றிக் கொண்டன. நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றிக் கண்டன. 'Horsepower' என்ற அளவு முறையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் அது.

ஒரு பலம் வாய்ந்த குதிரை ஒரு சராசரி வேலையை செய்வதற்கு எவ்வுளவு சக்தியைப் பயன்படுத்துகிறதோ அதுதான் ஒரு குதிரை சக்தி. 33000 பவுண்ட் எடையை ஒரு நிமிடத்திற்குள் ஓர் அடி உயரத்திற்கு தூக்குவதற்கு தேவைப்படும் சக்தியை ஒரு குதிரை சக்தி அதாவது ஒரு  'Horsepower' என்று நிர்ணயித்தார் ஜேம்ஸ் வாட். இன்றளவும் எந்த இயந்திரத்தின் வலிமையும் குதிரை சக்தி அளவில்தான் கணக்கிடப்படுகிறது. உலகின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த ஜேம்ஸ் வாட் 1819-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 19-ஆம் நாள் தமது 83-ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.

(http://2.bp.blogspot.com/-ZAIH0vtMrME/T_rUeqzQLqI/AAAAAAAAB5g/0oDpK8GC_lw/s1600/Industrial-Revolution--James-Watt-steam-engineering.jpg)

வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட நோயாளியாகவே வாழ்ந்த ஒரு மனிதனால் மனுகுலத்திற்கு எவ்வுளவு பெரிய சக்தியைக் கொடுக்க முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? வறுமையும் நோயும் அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு வானத்தை வசப்படுத்த உதவிய காரணங்கள் இன்றைக்கும்கூட பொருந்தக்கூடியவைதான். ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும் எப்போதும் எந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 06:56:31 PM
கன்பூசியஸ் (தத்துவ மேதை) - வரலாற்று நாயகர்!

தத்துவம் என்றாலே உலகின் நினைவுக்கு வருவது கிரேக்கமாகத்தான் இருக்கும். அந்த தேசம்தான் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ என்ற மும்மூர்த்திகளை உலகுக்குத் தந்தது. எண்ணிக்கையில் அதிகமான தத்துவஞானிகளை கிரேக்கம் தந்திருந்தாலும், மற்ற தேசங்களும் அந்த துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. வான்புகழ் வள்ளுவனைத் தந்தது தமிழ்நாடு. கன்பூசியஸ் என்ற அறிஞரைத் தந்தது சீனா. இவர்களெல்லாம் வாழ்ந்த காலத்தில் தத்துவம் என்பதே எள்ளி நகையாடப்பட்டது. தத்துவத்தைப் பேசியவர்களை இருட்டறையில் கருப்பு பூனையைத் தேடி அலையும் குருடர்கள் என்று சமுதாயம் முத்திரைக் குத்தியது. அந்த இழிவுகளையெல்லாம் தாண்டிதான் தங்கள் முத்திரைப் பதித்திருக்கின்றனர் உலகம் போற்றும் பல தத்துவ மேதைகள். அவர்களுள் கிட்டதட்ட கடவுள் அந்தஸ்துக்கு வணங்கப்பட்ட ஒருவரைப் பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் சீன தேசம் உலகுத்தத் தந்த பெருங்கொடை கன்பூசியஸ்.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 551-ஆம் ஆண்டில் சீனாவின் Shandong மாநிலத்தில் பிறந்தார் கன்பூசியஸ். அவரது தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார் அந்த மனைவிக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் கன்பூசியஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது தந்தை காலமானார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது அந்த பிஞ்சு வயதிலேயே அவருக்கு குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. பல வேலைகளை செய்து பொருள் ஈட்டினார். சிறு வயதிலேயே தாம் சிரமபட்டதாலோ என்னவோ மனிதனுக்கு துன்பம் ஏன் ஏற்படுகிறது? மக்களின் அறியாமைக்கு என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். பதினாறாவது வயதிலேயே அவர் சாக்ரடீஸைப் போலவே உண்மைகளைத் தேடி அலையத் தொடங்கினார்.

(http://4.bp.blogspot.com/-kAqD9MqzD2U/T_AFBq5QllI/AAAAAAAAB3g/s1WisBP3DbM/s320/chinese-confucius.png)

இளம் வயதில் அவர் வரலாற்றையும், கட்டடக்கலையையும் கற்றறிந்து மிகச்சிறந்த வரலாற்றாசிரியராக விளங்கினார். தமது 20-ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். சமுதாய நலன் பற்றியே அவரது எண்ணங்கள் இருந்ததால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வுளவாக நிறைவைத் தரவில்லை. இருப்பினும் தமது மூன்று பிள்ளைகளை நல்ல பண்புகளுடன் வளர்த்தார். குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வருமானம் தேவை என்பதால் வேலை தேடி அலைந்தார். அவரது அறிவுக்கூர்மையை உணர்ந்த அரசாங்கம் உணவுப்பொருள் கிடங்கை பராமரிக்கும் அதிகாரியாக அவரை வேலையில் அமர்த்தியது. அதில் பல மாற்றங்களை அவர் அறிமுகபடுத்தியதைக் கண்டு மகிழ்ந்த அரசாங்கம் மற்ற அரசாங்க வேலைகளிலும் அவரை பயன்படுத்திக் கொண்டது. 

அரசியலை அறவே வெறுத்தவர் கன்பூசியஸ் ஆனால் அரசியல் நிர்வாகம் அவரைத் தேடி வந்தது. ஓர் அரசாங்கம் சிறப்பாக பணியாற்றத் தேவையான கொள்கைகளை அவர் உருவாக்கித் தந்தார் அதன் மூலம் அவரது மதிப்பு கூடியது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கித் தரும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கல்வியே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் துணையோடு கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அது அரிஸ்டாட்டில் நிறுவிய லைசியம் அகாடமியைப் போன்றதொரு கலைக்கழகமாக செயல்பட்டது. அதில் அரசாங்க நிர்வாகம், சமுதாய முன்னேற்றம், வாழ்க்கைப் பண்புகள், ஒழுக்கம் போன்ற பாடங்களை இளையர்களுக்கு போதித்தார். 

'அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு' என்பதே கன்பூசியஸின் அடிப்படை சித்தாந்தம். அறியாமையைக் களைவதிலும், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும், சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவதிலும் அவரது முனைப்பைக் கண்ட சீனர்கள் அவரை தெய்வமாகவே மதிக்கத் தொடங்கினர். ஆனால் அதனை கன்பூசியஸ் விரும்பவில்லை ஏனெனில் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. மக்கள் மத சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக வெளிப்படையாகவே சொன்னார்.

(http://4.bp.blogspot.com/-BQylDpTDd3Y/T_AFQESIwHI/AAAAAAAAB3w/ArZDE-35HHE/s320/Confucius.jpg)

வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை என்றார் கன்பூசியஸ். பெரும்பாலோர் மதித்தாலும் சில அரசாங்க அதிகாரிகள் அவரை குறை கூற ஆரம்பிக்கவே அரசாங்கப் பணியிலிருந்து விலகினார் கன்பூசியஸ். பல நாடுகளில் சுற்றித் திரிந்து சென்ற இடத்திலெல்லாம் தன் சிந்தனைகளை விதைத்தார். சில குறுநில மன்னர்கள் அவரது மதிப்பை அறிந்து அவருக்கு மானியம் அளிக்க முன்வந்தனர். ஆனால் வறுமையில் வாடியபோதும் அந்த உதவிகளை ஏற்க மறுத்தார் கன்பூசியஸ். அவரது உயர்ந்த லட்சியங்களை உணரத் தொடங்கிய சீன அரசாங்கம் அவருக்கு உயர்ந்த பதவி அளித்து கெளரவிக்க விரும்பியது ஆனால் அதனை அவர் மறுத்து விட்டார்.

ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தமது 70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது கடைசிக் காலத்தை சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். தமது சிந்தனைகளையெல்லாம் ஒருங்கினைத்து "வசந்தமும் இலையுதிர்க் காலமும்" என்ற நூலை உருவாக்கினார். தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விடைபெற்றுக் கொண்டார். அவரது மறைவிற்கு பிறகு அவர்மீது நன்மதிப்பால் அவரது கொள்கைகளை 'கன்பூசியனிஸம்' என்று கிட்டதட்ட ஒரு மதமாகவே மதிக்கத் தொடங்கினர் சீனர்கள். சீனாவில் பெளத்தம், தாவிசம், கம்யூனிசம் என்று எத்தனையோ மதங்களும் மாறுதல்களும் வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கிறது கன்பூசியனிஸம். அதற்கு காரணம் அந்த தத்துவஞானியின் உயரிய சிந்தனைகள்தான்.

ஏழைகள், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு அரசாங்கம் அடைக்கலம் தந்து பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்போதே சொன்னவர் கன்பூசியஸ். எல்லோருக்கும் சமவாய்ப்பும், சமதகுதியும் வழங்கப்பட வேண்டும் அரசாங்கம் கல்வியை கண்ணாக போற்றி வளர்க்க வேண்டும், இளையர்களின் சுதந்திர சிந்தனைகளை தடை செய்யாமல் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் கன்பூசியஸ். நாம் எப்படி வள்ளுவரின் திருக்குறளைப் பெரிதாக மதித்துப் போற்றுகிறோமோ அதே போன்று சீனர்கள் கன்பூசியஸின் கருத்துகளை வேதமாகப் பின்பற்றுகின்றனர். சீனா தந்த அந்த அருந்தவப் புதல்வனின் சில சீரிய சிந்தனைகள் இதோ.....

"இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை".

"உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்".

"சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்".

(http://3.bp.blogspot.com/-WDLxTMORPs8/T_AFI4gmdUI/AAAAAAAAB3o/QEog-BaiWDI/s320/Confucius+551+Bc+479+Bc+-+Confucius+-+Famous+Personalities.jpg)

இப்படிப்பட்ட அறிய பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் கன்பூசியஸ். ஒரு பில்லியன் சீனர்கள் மட்டுமல்ல மற்ற நாட்டவர்களும் இன்றும் அவரை மதிப்பதற்கு காரணம் அவருடைய சிந்தனைத் தெளிவும், செயல் துணிவும்தான். இதுபோன்ற பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் ஏழ்மையில் பிறந்தவர்களுக்குகூட அந்த வானம் வசப்படும் என்பதுதான் தத்துவ மேதை கன்பூசியஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:00:18 PM
'சர்' எட்மண்ட் ஹில்லரி - வரலாற்று நாயகர்!

'இமாலய சாதனை' என்ற சொற்றொடரை கேள்பிப்பட்டிருப்பீர்கள். இமயத்தைத் தொடுவதற்கு நிகரான ஒரு சாதனை என்பதுதான் அதன் பொருள். இந்த சொற்றொடர் 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. ஏனெனில் அந்த ஆண்டில்தான் உலகிலேயே ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்தான் மனிதன். தனிமனித முயற்சிகளிலேயே ஆக சிரமமானது இமயத்தைத் தொடுவதுதான் என்பது 1953-ஆம் ஆண்டுக்கு முன்னும் உண்மையாக இருந்தது. இப்போதும் உண்மையாக இருக்கிறது. அந்த சிகரத்தை முதன் முதலாக தொட்டு மனுகுல முயற்சிகளின் எல்லைகளை அகலப்படுத்திய அந்த அபூர்வ மனிதன் எட்மண்ட் ஹில்லரி. அப்படிப்பட்ட அதிசய மனிதனுக்கு வானம் வசப்பட்ட கதையைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் நாள் உலகத்தின் கண்கள் லண்டன் பக்கம் திரும்பியிருந்தன. ஏனெனில் அன்றைய தினம்தான் இரண்டாம் எலிசபெத்தை இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டும் விழா லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது. அரசியார் முடிசூடிக்கொள்வதற்கு முன்பாக அவருக்கு ஓர் அவசரக் கடிதம் வந்தது. அதில் அடங்கியிருந்த செய்தி அந்த விழாவிற்கு இன்னும் பெருமை சேர்த்தது. இங்கிலாந்தின் ராணியாக தாம் முடிசூடிக்கொள்ளவிருக்கும் இந்த தருணத்தில் மலைகளின் முடிசூடா ராணியான எவரெஸ்ட் சிகரத்தை மனிதன் தொட்டு விட்டான் என்ற செய்தியைத்தான் அந்தக் கடிதம் தாங்கி வந்திருந்தது. அந்த சாதனையை செய்தது பிரிட்டிஷ் காமன்வெல்த் உறுப்பு நாட்டை சேர்ந்த ஒருவர் என்பதுதான் பெருமைக்குக் காரணம்.

(http://3.bp.blogspot.com/-kBCxmzGrEeg/T91Iv4oOV1I/AAAAAAAABzc/G5Zbq62nED4/s320/Edmund-Hillary-n-Tenzing-Norgay.jpg)

1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் நாள் எவரெஸ்ட் உச்சியைத் தொட்டனர் நியூசிலாந்து நாட்டவரான எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் (Tenzing Norgay). அந்த செய்தியே புதிய அரசிக்கு ஏற்ற பரிசாக அமைந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் பிறந்தார் எட்மண்ட் ஹில்லரி. அவரது குடும்பம் தேனீக்களை வளர்த்து தேன் சேகரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தது. ஹில்லரிக்கு பதினாறு வயதானபோது அவரது பள்ளி Mount Ruapehu என்ற எரிமலைக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்றது. அதன் பிறகுதான் மலையேறுவதில் எட்மண்ட் ஹில்லரிக்கு ஆர்வம் பிறந்தது. இருபது வயதானபோது அவர் நியூசிலாந்தின் Mount Cook என்ற பன்னிரெண்டாயிரம் அடி மலையில் ஏறினார்.

இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து ஆகாயப்படையில் சேர்ந்த அவர் வார இறுதியில் அருகிலிருந்த Mount egment என்ற மலையில் ஏறுவார். மலையேறும் துறைக்கு கிட்டதட்ட அடிமையான அவர் அதனைப் பற்றி நிறைய புத்தகங்களை படித்தார். 11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்ட அவருக்கு இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது. 1920 முதல் 1952 வரை இமயத்தைத் தொடுவதற்கான ஏழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. 1952-ஆம் ஆண்டு ஒரு சுவிஸ் குழு எவரெஸ்ட் உச்சிக்கு ஆயிரம் அடி வரை சென்ற பிறகு பலனின்றி திரும்ப வேண்டியாயிற்று. அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராத பிரிட்டிஷ் குழு ஒன்று 1953-ஆம் ஆண்டு ஒரு முயற்சியை மேற்கொண்டது.

(http://3.bp.blogspot.com/-19lhxlL-Ke4/T91JRKFGsHI/AAAAAAAABzs/WAje1m2kRLA/s320/1_HILLARY_461+(1).jpg)

அந்தக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்கள் வெவ்வேறு நிலைகளில் தங்கள் முயற்சியை கைவிட்டனர். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்ற அந்த நிலையில்கூட எட்மண்ட் ஹில்லரியும், ஷெர்ப்பா இனத்தவரான டென்சிங் நோர்கேயும் தன்னம்பிக்கை தளராமல் ஏறினர். மே 29-ஆம் நாள் காலை சுமார் 11:30 மணிக்கு அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தனர். அந்தக்கணம் மனுகுல முயற்சி ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. இமயத்தின் உச்சியைத் தொட்ட அவர்களுக்கு கிடைத்த பரிசு இதுவரை எவரும் எட்டாத உயரத்திலிருந்து அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உலகின் இயற்கையின் அழகை ரசிக்கும் வாய்ப்பு.

எவரெஸ்ட் உச்சத்தைத் தொட்டபோது என்ன நினைத்தீர்கள் என்று பின்னர் அவரை கேட்டபோது எத்தனையோ பேர் சாதிக்க துடித்ததை சாதிக்கும் அதிர்ஷ்டம் தனக்கு கிடைத்ததை நினைத்து பிரமிப்பு ஏற்பட்டதாக சொன்னார். அந்த மிகப் பெரிய சாதனைக்காக தாம் முடிசூடிக்கொண்ட பிறகு எட்மண்ட் ஹில்லரிக்கு 'சர்' பட்டம் வழங்கி கெளரவித்தார் எலிசபெத் ராணி. இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட சிரமங்களிலும், பொருளியல் தட்டுப்பாடுகளிலும் உழன்று கொண்டிருந்த இங்கிலாந்து தேசம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவாலும், எட்மண்ட் ஹில்லரியின் இமாலய சாதனையாலும் புத்துணர்ச்சி பெற்றது என்று வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். எத்தனையோ மலையேற்ற வீரர்களை அதற்கு முன் காவு கொண்டிருந்தும் கம்பீரமான எவரெஸ்ட் மலையால் ஹில்லரியின் தன்னம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

(http://3.bp.blogspot.com/-UioNXPlbTcA/T91JgRGeg1I/AAAAAAAABz0/lgDwEii2svw/s320/sir-edmund-hillary.jpg)

தன் உயிருக்கு பயந்து எட்மண்ட் அந்த முயற்சியை கைவிட்டிருந்தால் மலையை மனிதன் வென்றிருக்க முடியாது. இமயத்தின் உச்சியை தொடுவதெல்லாம் ஒன்றுக்கும் பயன் தராத செயல் என்று எண்ணுவோரும் இருக்கின்றனர். அதைத் தொட்டதால் என்ன கிடைத்து விட்டது என்று அவர்கள் நினைக்கக் கூடும். உண்மைதான் இமயத்தை தொட்டு விட்டதால் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது என்றோ அல்லது நமது பிரச்சினைகள் தீர்ந்து விட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் ஒரு தனிமனிதனின் முயற்சி எத்தனைப் பேருக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அந்த தன்னம்பிக்கை எத்தனை பேரை அவரவர் துறையில் சாதனை படைக்கத் தூண்டியிருக்கும் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் எட்மண்ட் ஹில்லரி நிகழ்த்தியிருக்கும் சாதனையின் உண்மையான ஆழம் புரியும்.

நாம் அனைவரும் இமயத்தைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தேர்ந்தெடுத்திருக்கும் துறையின் உச்சம்தான் நமக்கு இமயம். அந்த உச்சத்தை நோக்கி நாம் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் பயணித்தால் போதும் எட்மண்ட் ஹில்லரியைப்போல் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும். 
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:04:42 PM
ராபர்ட் கால்டுவெல் (திராவிட மொழியியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

மொழி என்பது மனிதனுக்கு மனிதன் தொடர்புகொள்வதற்காக உருவான ஒன்று. சைகை செய்தும், படங்களை வரைந்தும் எண்ணங்களை வெளிப்படுத்திய ஆதிகால மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஒலியிலிருந்து பிறந்தன பல மொழிகள். மொழிகள் பல்கி பெருகியதால் அனைவரும் புரிந்துகொள்வதற்கும், தடையின்றி வர்த்தகம் செய்வதற்கும் ஒரு நடுநிலையான மொழி தேவைப்பட்டது. அந்தத் தேவையை ஆங்கிலம் நிறைவு செய்தது. அது அனைத்துலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொழியை வெறும் தொடர்புக்காக மட்டும் பெரும்பாலோர் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் மொழியின் மீது அதிக பற்றுக் கொண்டு அதனை வழிப்படும் அளவுக்கு செல்கின்றனர். அப்படி வழிபடுவோரும், மொழிச் சேவை செய்வோரும் பொதுவாக தங்களின் தாய்மொழிக்கே அந்த மரியாதையை வழங்குவர். வெகுசிலரே தங்கள் தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழிக்காக சேவை செய்யவும், அதன் மேன்மைக்காக பாடுபடவும் முனைவர். அப்படிப்பட்ட மூன்று அறிஞர்களை தமிழ் மொழி வரலாறு பெருமையுடன் சுமந்து நிற்கிறது.

(http://3.bp.blogspot.com/-x_hnipHF_SM/T9RDYKQzV5I/AAAAAAAAByI/wAZxP4tw6ho/s320/robertcaldwell.jpg)

தமிழைத் தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும் சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பின்னர் தமிழின் மீது காதல் கொண்டு அயராமல் மொழித் தொண்டு செய்த அந்த மூவர் வீரமாமுனிவர், ஜி.யு. போப், ராபர்ட் கால்டுவெல். தேம்பாவணி என்ற காப்பியத்தை தமிழுக்குத் தந்ததோடு தமிழ் 'அகராதியின் தந்தை' என்று போற்றப்படுபவர் இத்தாலியில் பிறந்து தமிழகத்தில் தமிழ்ச் சேவை ஆற்றிய வீரமாமுனிவர். உலகப் பொதுமறையான திருக்குறளையும், நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்ததோடு, தன்னுடைய கல்லறையில் தாம் ஒரு 'தமிழ் மாணவன்' என்று குறிக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்த தமிழறிஞர் ஜி.யு. போப். திராவிடம் எனும் சொல்லை உருவாக்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை திராவிட மொழிகள் என்று கூறி அவற்றுக்கும் சமஸ்கிருதம் உட்பட்ட ஆரிய மொழிகளுக்கும் தொடர்பு கிடையாது என்பதை ஆதாரங்களோடு நிரூபித்தவர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல்.   

ஐரோப்பாவில் பிறந்தும், தமிழராக வாழ்ந்து மறைந்த அந்த அறிஞரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார் ராபர்ட் கால்டுவெல். தன் கல்வி முழுமையையும் அவர் ஸ்காட்லாந்தில் மேற்கொண்டார். கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது மொழியியல் ஆராய்ச்சியில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அங்கு கிரேக்க மொழியைக் கற்றுத்தந்த ஒரு பேராசிரியர். வேறு பல மொழிகளோடு ஒப்பிட்டு கிரேக்க மொழியின் சிறப்பையும், மேன்மையையும் அவர் விரிவுரைகளில் தெளிவாக விளக்கி கூறுவார். மொழிகளுக்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அழகுபட எடுத்துக்கூறிய அந்த விரிவுரைகள் கால்டுவெல்லை வெகுவாக கவர்ந்தன. பிற்காலத்தில் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தையும், முனைப்பையும் அவருக்குள் ஏற்படுத்தின. 

பல்கலைக் கழகத்தில் சிறப்பு தேர்ச்சிப் பெற்று வெளியான கால்டுவெல்லுக்கு சமயப் பணியில் ஆர்வம் ஏற்பட்டது. 1838-ஆம் ஆண்டு தமது 24-ஆவது வயதில் சமயப் பணி புரிவதற்காக தமிழ்நாட்டிற்கு பயணமானார். தமிழகத்தின் தலைநகரமான சென்னை வந்து சேர்ந்தார். அடுத்த 53 ஆண்டுகள் சமயப் பணிகளுக்கு மேலாக தமிழ்ப் பணி ஆற்றப்போகிறோம் என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்காது. அவரது தமிழ்ப் பணி பற்றி தெரிந்து கொள்ளும் முன் இன்னொரு முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டை நோக்கி அன்னை மேரி என்ற கப்பலில் பயணமானார் கால்டுவெல். நடுக்கடலில் திடீரென்று கடும் சுழல்காற்று வீசியது அதில் அலைமோதத் தொடங்கிய அந்த கப்பலின் மீது புயலில் சிக்கித் தவித்த இன்னொரு பிரெஞ்சு கப்பல் மோதவே கால்டுவெல் பயணம் செய்த கப்பல் கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர் கடலில் மூழ்கி மாண்டனர். 

தெய்வாதீனமாக உயிர் தப்பிய அறுவரில் ஒருவர்தான் கால்டுவெல். தமிழ்மொழி செய்த தவப் பயனால்தான் அவர் உயிர் தப்பினார் என்று பல தமிழறிஞர்கள் பின்னாளில் கூறினார்கள். சமயப்பணிக்காக வந்திருந்ததால் மக்களோடு நெருங்கிப் பழகுவதற்காக தமிழ் மொழியைக் கற்க விரும்பினார் கால்டுவெல். மூன்றே ஆண்டுகளில் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டதோடு வடமொழியையும் கற்று இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றார். அதன்பின்னர் சமயப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டதிலுள்ள இடையன்குடி எனும் சிற்றூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது எந்தவித வசதியும் இல்லாமல் ஒரு சிற்றூராக காட்சியளித்தது இடையன்குடி. அந்த ஊரை வசதிகள் நிறைந்த நல்ல ஊராக மாற்றும் பணி முக்கியம் என்று முடிவெடுத்த கால்டுவெல் அரும்பாடுபட்டு அந்த ஊரை சீர்திருத்தினார். அதோடு அங்கு ஒரு கோவிலையும் எழுப்பினார் அந்தக் கோவில் அவர் நினைவாக இன்றும் இடையன்குடியில் செயல்பட்டு வருகிறது.

(http://1.bp.blogspot.com/-wWvCeziR7DU/T9RDhT2x-7I/AAAAAAAAByQ/rrr4lJ-fOT4/s320/509px-Caldwell_close1.jpg)

தன்னை அன்போடு ஏற்றுக்கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த மாவட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்தறிந்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகங்களாக விளங்கிய கொற்கை, காயல் ஆகியவைகளைப் பற்றிய தகவல்கள் கால்டுவெல்லை கவர்ந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்கை திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து ஐந்து மைல் தொலைவில் ஒரு சிற்றூராக இருந்தது. அங்கு சென்று நிலத்தைத் தோண்டி ஆராய்ச்சிகள் செய்து பழைய கொற்கைத் துறை தரைமட்டத்திற்கு எட்டு அடிக்குக் கீழே இருந்தது என்றும், அப்போது அதனருகே கடல் இருந்ததென்றும் கண்டறிந்தார். தாமிரபரணி ஆற்று நீரில் கலந்து வந்த மண்ணும், மணலும் நாளடைவில் துறைமுகத்தைத் தூர்த்து கடலை ஐந்து மைல் தொலைவிற்கு அனுப்பி விட்டது என்று உணர்ந்தார்.

காவிரிப் பூம்பட்டிணத் துறைமுக வழியாக தமிழ்நாட்டின் அரிசி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது வரலாறும் கூறும் உண்மை. நமது அரிசியை கிரேக்க மொழியில் 'அருசா' என்று அழைக்கிறார் என்றும், அந்தச் சொல்லே மருவி ஆங்கிலத்தில் 'Rice' என்றானது என்றும் கால்டுவெல் ஆராய்ந்து சொன்னார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மயிலிறகு தோகை என்று அழைக்கப்பட்டது, ஹிப்ரு மொழியில் கிறிஸ்துவ வேத நூலாகிய பைபிளில் மயிலிறகு துகி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 'தோகை' என்ற சொல்லிலிருந்து மருவியதுதான் 'துகி' என்ற அந்தச் சொல் என்று அவர் விளக்கினார். இவ்வாறு பற்பல ஆராய்ச்சிகள் செய்து பல வரலாற்று உண்மைகளை முதன்முதலாக கண்டு சொன்னார் கால்டுவெல். 

தென்னிந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு ஆகிய ஐந்து மொழிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும், அவற்றுள் ஆகப் பழமை வாய்ந்தது தமிழ் மொழியே என்றும் ஆதாரங்களுடன் விளக்கி அவற்றை 'திராவிட மொழிகள்' என்றழைத்தார் கால்டுவெல். கால்டுவெல் தமிழையும், டாக்டர். குந்தார்கர் என்பவர் மலையாளத்தையும், டாக்டர். கிட்டெல் என்பவர் கன்னடத்தையும், அறிஞர் பிரெவ்ன் என்பவர் தெலுங்கையும் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து 'A comparative grammar of the dravidian languages' அதாவது 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை எழுதினார் கால்டுவெல். அந்த நூல்தான் ஆரிய மொழியின் இலக்கணம் வேறு திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதை ஆதாரங்களுடன் உலகுக்கு உணர்த்தியது.

(http://1.bp.blogspot.com/-HFbT7FOeKN4/T9RDnVClc9I/AAAAAAAAByY/r4o_LACUQa0/s1600/robert.jpg)

தமிழர்கள்கூட செய்யாத அந்த அறிய பணியை மேலை நாட்டவரான கால்டுவெல் செய்ததை தமிழ் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். சுருக்கமாக சொன்னால் திராவிட மொழிகளுக்கு புத்துயிர் அளித்தவர் கால்டுவெல். இன்று தென்னிந்திய பல்கலைக் கழகங்களில் திராவிட மொழிகள் பற்றிய துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் கால்டுவெல்தான். தமிழ்நாட்டில் அவர் வசித்த 53 ஆண்டுகளில் அவர் மூன்றே மூன்று முறைதான் தாம் பிறந்த ஊருக்கு ஓய்வெடுக்க சென்றார். அந்தளவுக்கு அவர் தமிழ்நாட்டையும் தமிழையும் நேசித்தார். ஒரு மேலை நாட்டவரால் மேன்மை அடைந்தது தமிழ் மொழி என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்து காட்டிய கால்டுவெல் கொடைக்கானல் மலையில் இருந்தபோது 1891-ஆம் ஆண்டு தனது 77-ஆவது அகவையில் காலமானார். அவர் சுவாசித்த தமிழும். நேசித்த இடையன்குடியும் இன்றுவரை அவரை மறக்கவில்லை. அவரது நல்லுடல் இடையன்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கட்டியிருந்த கோவிலிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தமிழுக்கு அணி சேர்த்தவர்கள் பட்டியலில் 'கால்டுவெல்' என்ற மாமனிதருக்கு நிச்சயம் ஒரு முக்கியமான இடம் உண்டு. அவரைப் போன்றவர்கள் போட்ட விதைதான் விருட்சமாக வளர்ந்து தமிழ் மொழிக்கு 'செம்மொழி' தகுதியை பெற்றுத் தந்திருக்கிறது. அவருக்கு சமயப் பணி என்ற வானம் வசப்பட்டதை விட தமிழ்மொழி என்ற வானம் நன்றாகவே வசப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் தமிழ் அவரது தாய்மொழிகூட இல்லை. அவரது வாழ்க்கை நமக்கு கூறும் உண்மை எளிமையான ஒன்றுதான். நாம் செய்யும் எந்த காரியத்திலும் அவரைப் போன்று முழுமனத்தோடும், ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் ஈடுபட்டால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அந்த உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:13:39 PM
ஜான் எஃப் கென்னடி - வரலாற்று நாயகர்!

1962-ஆம் ஆண்டு உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கும், அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பெருத்தப் பலப்பரீட்சையாக உருவெடுத்திருந்தது 'கியூபா' நிலவரம். கியூபாவில் இரகசியமாக அணு ஆயுதங்களை நிலை நாட்டி அமெரிக்கா மீது அதனை பயன்படுத்த எத்தனித்திருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா ஆகாய உளவுப்படை அதனை அறிந்ததும் கியூபாவை சுற்றி கடற்படை முற்றுகையை மேற்கொண்டது. எந்த நேரத்திலும் போர் வெடித்து உலகம் அழியக்கூடும் என்று அனைவரும் அஞ்சினர். ஆனால் அந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் தன் ஆயுதங்களை அகற்றி கியூபாவிலிருந்து வெளியேற ஒப்புக்கொண்டது சோவியத் யூனியன். அமெரிக்காவும் தனது முற்றுகையை அகற்ற போர் மேகம் தனிந்து உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. ஒரு துளி இரத்தம்கூட சிந்தமால் ஒரு மாபெரும் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் தனி ஒரு மனிதனின் தைரியமும், தொலைநோக்கும், உன்னதமான தலமையத்துவப் பண்பும்தான். அவர்தான் அமெரிக்க வரலாற்றிலேயே ஆக இளைய வயதில் அதிபர் ஆனவரும், ஆக இளைய வயதில் மரணத்தைத் தழுவியவருமான ஜான் எஃப். கென்னடி (John F Kennedy).

(http://1.bp.blogspot.com/-A_hAHST-6wY/T8NhSCfPxKI/AAAAAAAABvs/Z10-EfBDtj8/s320/John_F._Kennedy,_White_House_photo_portrait,_looking_up.jpg)

அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக பணியாற்றிய அவரை சுருக்கமாக 'JFK' என்று அழைக்கிறது வரலாறு. ஜான் ஃபிட்ஸ் ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy) 1917-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் பாஸ்டன் நகரின் புரூக்லின் (Brookline) என்ற பகுதியில் பிறந்தார். ஒன்பது பிள்ளைகளில் இரண்டாமவர். அவருடைய தாத்தா பத்தொண்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட உருளைக் கிழங்கு பஞ்சத்தை விட்டு அயர்லாந்திருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். தந்தை ஜோசப் கென்னடி ஒரு தொழிலதிபர். ஜான் எஃப் கென்னடியின் பிள்ளைப்பருவம் மகிழ்ச்சியானதாக அமைந்தது. 1940-ஆம் ஆண்டு ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற கென்னடி அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக சேர்ந்தார். 1943-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கென்னடியின் பொருப்பிலிருந்த கடற்படைப் படகை ஜப்பானியப் போர்க்கப்பல் தாக்கி மூழ்கடித்தது. அவர் கடுமையாக காயமடைந்தாலும் ஆபத்தான கடற்பகுதியில் நீந்தி துணிகரமான முறையில் செயல்பட்டு தனக்கு கீழ் இருந்த வீரர்களைக் காப்பாற்றினார்.

காயமடைந்த வீரர் ஒருவரை அவர் சுமார் மூன்று மைல் தூரம் கடலில் இழுத்து வந்து கரை சேர்த்தார். அந்த துணிகர செயலுக்காக அவருக்கு 'Purple Heart' என்ற போர் வீரப்பதக்கம் வழங்கப்பட்டது. போர் முடிந்து வந்ததும் அரசியலில் ஈடுபட்டார் கென்னடி. அமெரிக்க மக்களவையில் டெமேக்ராட்டிக் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1953-ஆம் ஆண்டு Jacqueline Kennedy என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கென்னடி. நீண்ட நாட்கள் குணமடைந்து வந்த போது அவர் 'Profiles in Courage' என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்காக அவருக்கு 1957-ஆம் ஆண்டுக்கான 'Pulitzer Prize' வழங்கப்பட்டது.

(http://1.bp.blogspot.com/-ruFweWhOQaM/T8Nhc2MB5EI/AAAAAAAABv0/JTT0X1JcaKY/s1600/jfk.jpg)

1960-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் 'Republican' பிரிவு வேட்பாளரான ரிச்சர்ட் நிக்ஸனை (Richard Nixon) குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து அமெரிக்காவின் 35-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கென்னடி. அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபரும் அவர்தான் அப்போது அவருக்கு வயது 43. அதிபரான பிறகு அவர் ஆற்றிய முதல் உரையே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 1961-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் நாள் அவர் கூறிய வரிகள்தான் இன்றளவும் நாட்டுப்பற்றுக்கு உதாரணமாக கூறப்படுகிறது."நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கினார் ஜான் எஃப் கென்னடி.

அதிபரான பிறகு அவர் மேற்கொண்ட பொருளியல் நடவடிக்கைகளால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஆக அதிகமான பொருளியல் வளப்பத்தை அமெரிக்க சந்தித்தது. ஏழ்மையைப் போக்க அவர் அதிரடி நடிவடிக்கைக்குத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனது. கென்னடி அதிக அக்கறைக் காட்டிய இன்னொரு துறை அனைவருக்கும் குறிப்பாக கருப்பினத்தவருக்கு சம உரிமை வழங்கும் சட்டதிட்டங்கள். அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்தான் 'கியூபா' பிரச்சினை தலையெடுத்தது. அதனை லாவகமாக கையாண்டு போரை தவிர்த்ததோடு மட்டுமல்லாமல் சோவியத் யூனியனுடான உறவு மேம்படவும் வழிவகுத்தார் கென்னடி. மிக முக்கியமாக அவரது தலமையின் கீழ் 1963-ஆம் ஆண்டு இரு நாடுகளும், பிரிட்டனும் அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

(http://1.bp.blogspot.com/-yP3J1maTq5o/T8NjWikayaI/AAAAAAAABwE/2oVhc11FG9U/s320/Kennedy_motorcade_Dallas.jpg)

நாட்டுக்காக நல்ல காரியங்களில் கவனம் செலுத்திய அவருக்கு எதிரான சில  தீய சக்திகள் உருவெடுத்தன. கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக இருந்த அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று கூறும் முழுப்பக்க விளம்பரம் ஒன்று 'Texas' நியூஸ் பத்திரிகையில் வெளியானது 1963-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள். அதைப் பார்த்து சிரித்த கென்னடி தன் மனைவியைப் பார்த்து நம் நாட்டில் முட்டாள்கள் இல்லாமல் இல்லை என்று தலையாட்டிக் கொண்டே கூறினாராம். அதே தினம் அவர் Texas-க்கு விமான மூலம் சென்றார். அறியாமை என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேச இருந்தார். அந்த இடத்தை நோக்கி ஒரு திறந்தவெளி வாகனத்தில் தன் மனைவியுடன் அவர் பவனி வந்தார். மக்கள் சாலையோரம் நின்று ஆராவாரத்துடன் அவரை வரவேற்றனர். சற்றும் எதிர்பாராத அந்த நேரத்தில் திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு குண்டுகள் அதிபரின் உடலை துளைத்தன. அந்தக்கணமே மனைவியின் மடியில் தலை சாய்ந்து உயிர் நீத்தார் ஜான் எஃப் கென்னடி.

அன்று காலை யாரை முட்டாள்கள் என்று அதிபர் வருணித்தாரோ அவர்களில் ஒருவன்தான் அதிபரை சுட்டுக் கொன்றவன். ஒரு மாபெரும் தலைவனை இழந்து அமெரிக்க தேசம் அழுதது போரை வென்றதற்காக அல்ல போரை தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர் கென்னடி. அவர் அதிபர் பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள். அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் அமெரிக்கர்களுக்கு சுய கெளரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத் தந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நாற்பத்தி ஆறுதான். ஒரு தவனைகூட முழுமையாக அதிபராக இல்லாமல் போனது அவருக்கு அல்ல அமெரிக்காவுக்குதான் பேரிழப்பு. அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக கென்னடி தீட்டியிருந்த உயரிய திட்டங்களை அவருக்குப் பின் அதிபரான லிண்டன் ஜான்சன் நிறைவேற்றினார்.

(http://4.bp.blogspot.com/-RWpPHgWuchc/T8NjKolcKKI/AAAAAAAABv8/u_fE0i5Tnhs/s320/jfk+(1).jpg)

அமெரிக்கா அதிபர்கள் வரலாற்றில் பலர் முத்திரை பதித்திருந்தாலும் ஒரு சிலரைத்தான் அமெரிக்கர்கள் இன்றும் அன்போடு நினைவு கூறுகின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஜான் எஃப் கென்னடி. ஆக இளைய வயதிலும் அமெரிக்காவின் மற்றும் உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க அவருக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தொலைநோக்கு, தெளிந்த சிந்தனை, காரியத் துணிவு, மனசாட்சியைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாத தைரியம், உலக அமைதியே நிரந்தரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவைதான். அந்தப் பண்புகளில் சிலவற்றை நாம் பின்பற்றினால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:18:04 PM
சிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

ஆரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர்களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் 'psycho analysis' என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

1856-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் ஆஸ்திரியாவின் Pribor நகரில் பிறந்தார் ஃப்ராய்ட். அவரது தந்தை ஜேக்கப் ஃப்ராய்ட் கம்பளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய இரண்டாம் மனைவி Amalie-வின் முதல் குழந்தையாக பிறந்தவர்தான் சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Schlomo Freud). ஆரம்பம் முதலே ஃப்ராய்ட் அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்ததால் பெற்றோர் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கினர். அவர் அமைதியாக படிக்க அவருக்கென்று தனி அறையை ஒதுக்கி கொடுத்தனர். ஃப்ராய்ட் கேட்டதெல்லாம் அவருக்கு கிடைத்தது. தொழிற்புரட்சி காரணமாக தந்தையின் சிறு துணி ஆலையால் போட்டியை சமாளிக்க முடியவில்லை. எனவே ஃப்ராய்ட் நான்கு வயதாக இருந்தபோது வியன்னாவுக்கு (Vienna) பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். அங்கும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார் தந்தை. அவர்கள் யூதர்களாக இருந்ததாலும், யூதர்கள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செய்ததாலும் மற்ற ஆஸ்திரியர்களின் வெளிப்படையான வெறுப்புக்கு ஆளாகினர். அதனாலேயே தான் ஒரு மிகச்சிறந்த அறிஞனாக வரவேண்டும் என்ற வைராக்கியம் ஃப்ராய்டின் மனத்தில் வேர் விடத் தொடங்கியது.

(http://3.bp.blogspot.com/-XiQmx4De9ME/T7iukT1Bt_I/AAAAAAAABrw/T4ZfbmBuduw/s1600/freud-214x300.jpg)

ஃப்ராய்ட் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு பல துறைகளை அலசி விட்டு இறுதியில் மருத்துவத்தை தேர்ந்தெடுத்து 1881-ஆம் ஆண்டு அதில் பட்டம் பெற்றார். அவர் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தது நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இயற்கையின் சில புரியாத புதிர்களுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகதான். நரம்பியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அவர் சொந்தமாக மருந்தகத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்திலிருந்தே அவருடைய சிகிச்சை முறைக்கும், கருத்துகளுக்கும் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஃப்ராய்ட் வகுத்துக்கூறிய புதிய எண்ணங்களை எள்ளி நகையாடியது வியன்னா மருத்துவ கழகம். ஃப்ராய்ட் பயன்படுத்திய மனோ வசிய சிகிச்சை முறையை கடுமையாக எதிர்த்த அவருடைய முன்னால் பேராசிரியர் ஃப்ராய்டை தன் 'Cerebral Anatomy Institute' என்ற மூளைக்கூறு கழகத்திலிருந்து தடை செய்தார் அதனால் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கையிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஃப்ராய்டுக்கு. ஆனால் மனம் தளராமல் தன் சொந்த மருத்துவத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 

நரம்பியல் சம்பந்தபட்ட நோய்களுக்கும், மன நோய்க்கும் வித்தியாசமான அனுகுமுறையைப் பயன்படுத்தி சிகிச்சைகளைத் தொடர்ந்தார். மனநோய் என்பது மூளையை பாதிக்கக்கூடிய நோய் எனவே நோயாளியின் மனோபாவங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்து அவர்களின் ஆழ்மனத்தில் பதிந்துள்ள குறைகளை அறிந்து களைய வேண்டும். அவ்வாறு செய்யாதவரையில் எந்த மருந்தாலும் மனநோயை குணப்படுத்த முடியாது என்று முதன் முதலில் கண்டு சொன்னவர் ஃப்ராய்ட்தான். அவ்வாறு அவர் வகுத்துத் தந்த சிகிச்சை முறைதான் 'psycho analysis' என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் அவரது சிகிச்சை முறைகளை ஒதுக்கினாலும் நோயாளிகளுடையே அவர் பிரபலம் அடையத் தொடங்கினார். வெகு விரைவில் பல மனநோயாளிகள் அவரிடம் கொண்டு வரப்பட்டனர். அந்த நோயாளிகளுக்கு அதுவரை வழங்கப்படாத சிகிச்சை முறைகளை அவர் கையாண்ட போது ஏற்பட்ட அனுபவங்களும், அவர் செய்த பரிசோதனைகளும்தான் புகழ்பெற்ற கோட்பாடுகளை வகுக்க அவருக்குத் துணை புரிந்தன.

(http://4.bp.blogspot.com/-T-3rcBuIWhE/T7iuznd0JZI/AAAAAAAABr4/PmTbXOUAr1I/s320/freud+writing+2.jpg)

பத்து வருட பரிசோதனைகளுக்குப் பிறகு ஹிஸ்டீரியா (Hysteria) எனப்படும் இசிவு நோய் பற்றிய தனது முதலாவது நூலை வெளியிட்டார். மருத்துவ உளவியலில் அது ஒரு மைல்கல்லாக அமைந்தது. தனது ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக அவர் மனித மனத்தின் தன்மை பற்றி நிறைய சிந்தித்தார் அப்போதுதான் கனவுகளின் பக்கம் அவரின் கவனம் திரும்பியது கனவுகளுக்கும், ஆழ்மனத்திற்கும், நரம்பியல் நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று நம்பிய ஃப்ராய்ட் தான் தினசரி கண்ட கனவுகளை எழுதி வைத்து அவற்றை ஆராயத் தொடங்கினார். 1900-ஆம் ஆண்டில்  'The Interpretation of Dreams' என்ற கனவுகளின் விளக்கம் பற்றிய நூலை வெளியிட்டார். அந்த நூலில் அவர் ஆழ்மன செயற்பாடுகள் எப்படி கனவுகளின் உள்ளடக்கத்தைப் பாதிக்கின்றன என்று விளக்கியிருந்தார். அதோடு வாய் தவறி வார்த்தைகளைச் சொல்வது, பெயர்களை மறந்துபோவது, தானே விபத்துக்குள்ளாவது போன்றவற்றுக்கும் ஆழ்மனத்திற்கும் தொடர்பு உண்டு என்று அவர் விளக்கினார். அவரது கருத்துகளும், நூலும் அவருக்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

மனநோய் அல்லது நரம்பு கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்ச்சி பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையை வலியுறுத்தினார் ஃப்ராய்ட். பாலுணர்ச்சியும், சிற்றின்ப வேட்கையும் பதின்ம பருவத்தில் அல்ல குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே தோன்றி விடுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் இன்னும் விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவருக்கு உளவியல் உலகில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் Super ego, Ego, Id ஆகிய மூன்று ஆதிக்கங்கள் மனத்தை இயக்குகின்றன என்றும், அவற்றை மூளையின் மூன்று பிரிவுகளாக கொள்ளலாம் என்றும் ஃப்ராய்ட் கூறினார். வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான நிகழ்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவை Id-இல் பதிவாகின்றன.  Super ego, Ego ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் சராசரியாக வாழ்கிறான். Id-இன் ஆதிக்கம் மேலோங்கும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தன்னையறியாமல் தாக்கத் தொடங்கி விடுகிறான். அதனால் நோயாளியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு Id-இல் பதிந்த கொடூர நிகழ்ச்சிகளை தத்துவ முறையில் அழித்து விட்டால் மனநோயை குணப்படுத்தி விடமுடியும் என்பதுதான் ஃப்ராய்டின் தத்துவம்.

(http://4.bp.blogspot.com/-DUwN_8yRjBg/T7iu_c99IeI/AAAAAAAABsA/vm1LXUy-zmI/s320/512px-Sigmund_Freud_statue,_London_1.jpg)

பின்னாளில் ஃப்ராய்டுக்கு தாடை எலும்பில் புற்றுநோய் ஏற்பட்டு முப்பது அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நோய் தந்த வேதனைகளுக்கிடையிலும் அவர் கடுமையாக உழைத்தார். அந்தக்கால கட்டத்தில் ஹிட்லரின் நாசிப் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தன. அப்போது 82 வயதை எட்டியிருந்த நிலையிலும் ஃப்ராய்ட் ஒரு யூதராக இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தன் மனைவி, மகளுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 15 மாதங்களுக்கு பிறகு 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள் தமது 83-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மனம் என்பது புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் அந்த புரியாத மனக் கதவினை திறந்ததால்தான் 'உளவியலின் தந்தை' என்று போற்றப்படுகிறார் ஃப்ராய்ட். வரலாற்றில் பல முன்னோடிகளைப் போலவே அவரையும், அவரது கண்டுபிடிப்புகளையும் உலகம் உதாசீணப்படுத்ததான் செய்தது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் 'உளவியல்' என்ற வானத்தை வசப்படுத்த ஃப்ராய்டுக்கு உதவியிருக்கின்றன. அதே தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த நமக்கும் துணை புரியும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:23:13 PM
எட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்!

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.

(http://3.bp.blogspot.com/-y0ifgmFqpBY/T7ODj4cfZEI/AAAAAAAABqU/HAw2AvQfQyo/s320/jenner2a.jpg)

1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் இங்கிலாந்தின் பெர்க்லி (Berkeley) என்ற நகரில் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். அப்போது தொழிற்புரட்சி ஏற்படாத காலம். பசுமை மாறாத வயல்களையும், பண்ணைகளையும் அந்த பிஞ்சு வயதிலேயே காதலிக்கத் தொடங்கினார் ஜென்னர். இயற்கையை அதிகம் நேசித்த அவர் நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். எனவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் பிஞ்சு வயதிலேயே அவர் மனதில் வளரத் தொடங்கியது. வயல்வெளிகளில் சுற்றும்போது பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்தே அது எந்த பறவை என்பதையும், வயல் ஓரங்களில் இருந்த அத்தனை செடிகளின் பெயர்களையும் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் அவரது சிறந்த பண்புதான் பின்னாளில் 'Vaccination' எனப்படும் அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது.

பனிரெண்டு வயதானபோது அவர் டாக்டர். டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கையை உற்றுக் கவனித்தார்.  'cowpox' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க cowpox நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ள ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத்தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார்.

1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். Gloucestershire என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை அவர் தேடிய விடையை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்த்தால்தானே உலகம் நம்பும் அதற்கும் தயாரானார் 1796-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு மே 14-ஆம் நாள் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர்.  Sarah Nelmes என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு  cowpox நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.

(http://4.bp.blogspot.com/-TOLRelJcgY0/T7OEimZFERI/AAAAAAAABqs/KgqY76Pzlsc/s320/edward_jenner_1749_1823_perfo__br_hi.jpg)

சில வாரங்கள் கழித்து Smallpox கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் எண்ணித் துணிந்ததால் சற்றும் மனம் தளராமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தடுப்பூசியை குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

(http://2.bp.blogspot.com/-xkRWHnAlogw/T7OEsRXlkxI/AAAAAAAABq0/8JfEalMgWjM/s1600/220px-Edward_Jenner_by_James_Northcote.jpg)

மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.

எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்ஸிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன். அதனை அறிந்த ஜென்னர் பிரான்ஸில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது. அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார். முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்.

(http://3.bp.blogspot.com/-nWVKlEQxYbk/T7OEUU4xO5I/AAAAAAAABqk/AI0RrvfNIF0/s320/jenner.jpg)

Catherine Kingscote என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு. தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு, சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு, உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு. இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 27, 2013, 07:30:41 PM
மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.

(http://1.bp.blogspot.com/-30-bUdKh0DE/T7BQW2a8EhI/AAAAAAAABo4/ksjc_DOGB5I/s320/2320-004-F984545E.jpg)

மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.

(http://2.bp.blogspot.com/-3jtApC67i14/T7BQiJt4ceI/AAAAAAAABpA/d_l009v5so4/s320/marconi-3.jpg)

1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி.

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.

(http://1.bp.blogspot.com/-bRnR6sawdTA/T7BReNbli0I/AAAAAAAABpg/q5gHVS_dcPo/s320/marconi-5.jpg)

தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.

(http://1.bp.blogspot.com/-bPuhuPjjPTM/T7BRVpZTdtI/AAAAAAAABpY/VeWzfMvK-v8/s320/marconi-instruments.jpg)

வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 07:20:11 PM
இரவீந்தரநாத் தாகூர் - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே,
நமது இந்திய இலக்கியத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி நோபல் பரிசை வென்றவரும், உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் (இந்தியா, வங்காளதேசம்) தேசிய கீதத்தை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞர், சிந்தனையாளருமான இரவீந்தரநாத் தாகூரின் 150-ஆவது பிறந்த தினமான இன்று மே-07 (07/05/2012) அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்...!

உலகத்தரம் வாய்ந்த அமர இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் பல்வேறு காலகட்டங்களில் தந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியங்களை உலகம் முழுவதும் படித்து ரசிக்க வேண்டுமென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவற்றை அந்தந்த மொழி பேசுபவர்களே ரசிக்க முடியும். தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்திற்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழி பெயர்க்கப்படும்போது அதன் இயற்கை சுவையும், வீரியமும் குறைந்து விடும் என்பது ஓரளவுக்கு உண்மைதான். அப்படிப்பட்ட நிலையிலும் ஆங்கில உலகத்தை கவரும் ஓர் வேற்று மொழி படைப்புதான் பிரசித்திப் பெற்ற நோபல் பரிசுக்குத் தகுதி பெறுகிறது. இந்திய இலக்கியத்தை பொறுத்தமட்டில் இதுவரை ஒரே ஒரு இலக்கியத்திற்குதான் அந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. வங்காள மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்ட அந்த படைப்பு கீதாஞ்சலி. அதனைத் தந்து இந்திய இலக்கிய உலகிற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்த உன்னத கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம்.

1861-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் நாள் கல்கத்தாவில் உள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார் தாகூர். குடும்பத்தில் பதினான்காவது பிள்ளை அவர். பெற்றோர் வசதி மிக்கவர் என்பதால் அனைவரும் செல்வ செழிப்பில் வளர்ந்தனர். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டினார் தாகூர். வேதங்களையும் உபநிடதங்களையும் ஆர்வத்துடன் கற்றார். மொழியாற்றல் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. எனவே பனிரெண்டாவது வயதிலேயே கவிதைகள் புனையத் தொடங்கினார். தாகூரின் குடும்பம் வெளியிட்டு வந்த பாரதி என்ற பத்திரிகையில் அவரது ஆரம்பகால படைப்புகள் இடம்பெற்றன. கவிதைகள் எழுதிய அதே நேரத்தில் வங்காள நாட்டுப்புறப் பாடல்களை பாரம்பரிய இசையோடு கலந்து இசைத்தொகுப்பாகவும் வெளியிட்டார். பிற்காலத்தில் அது 'இரவீந்தர சங்கீதம்' என்று அழைக்கப்பட்டது.

(http://4.bp.blogspot.com/-FQTT_9yaQm4/T6YcBLWmdEI/AAAAAAAABmk/XpcUsBE3zb0/s320/tagore1.jpg)

தாகூர் முறையாக பள்ளி செல்லவில்லை அதற்கு காரணம் பள்ளிக்கூடத்தின் கட்டுப்பாடுகளிலும், சட்ட திட்டங்களிலும் அவருக்கு உடன்பாடு கிடையாது என்பதுதான். கல்வியாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி எதிலுமே சுதந்திரத்தை விரும்பியவர் அவர். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் ஆகியவற்றில் வல்லவராக இருந்தார். தனிமையையும் கவிதையையும் விரும்பிப் போற்றிய தாகூர் தனது மிகச்சிறந்த படைப்புகளை தனிமையின் இனிமையில்தான் எழுதினார். அவரது இலக்கிய பணி சுமார் அறுபது ஆண்டுகள் நீடித்தது. அந்தக்கால கட்டத்தில் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், இருபத்தைந்து நாடகங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் என எழுதிக் குவித்தார்.

இலக்கியம், ஆன்மீகம், சமூகம், அரசியல் ஆகியவைப் பற்றி விழிப்புணர்வூட்டும் பல கட்டுரைகளையும் அவர் எழுதினார். இவையெல்லாம் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரையவும் நேரம் இருந்தது. சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூட பாடதிட்டங்களையும், ஆசிரியர் கற்பிக்கும் முறைகளையும் விரும்பாத தாகூர் அந்தக்கால குருகுல முறைப்படி ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அதில் நன்முறையில் கல்வி கற்பிக்க விரும்பினார். அதன் பயனாக அவர் 1901-ஆம் ஆண்டு தோற்றுவித்த ஒரு கலைக்கழகந்தான் சாந்தி நிகேதன். தன் செல்வத்தையும், எழுத்து மூலம் தான் ஈட்டிய பொருளையும் அந்தக் கல்வி நிலையத்திற்காக செலவிட்டார். அந்த கல்விக்கழகத்தில் மொழிகளும், கலைகளும் இயற்கைச் சூழலில் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கேயே தங்கி கற்பித்தனர், கற்றனர்.

(http://4.bp.blogspot.com/-N56rPLrR5hE/T6YcUc7TkuI/AAAAAAAABm0/F0yPTjFUhQM/s320/Arunan+kapilan30.JPG)

இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் சாந்தி நிகேதனில் கல்வி கற்றனர். அன்னல் காந்தியடிகள் அந்தக் கல்வி நிலையத்திற்கு வருகை புரிந்தார். ஜவஹர்லால் நேரு அந்தக் கல்வி நிலையத்தின் மீது அதிக அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி அந்த நிலையத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடதக்கது. சாந்தி நிகேதன் கலைக்கழகம் சிறிது சிறிதாக வளர்ச்சிப் பெற்று பின்னர் 'விஷ்வ பாரதி' பல்கலைக்கழகம் என்றானது. இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அந்த பல்கலைக்கழத்தில் கல்வி பயில வருகின்றனர்.

இரவீந்தரநாத் தாகூருக்கு அழியாப் புகழை பெற்றுத் தந்தது 103 கவிதைகளின் தொகுப்பாய் அவர் படைத்த அமர காவியமான கீதாஞ்சலிதான். அந்தக் கவிதைகள் உயரிய தத்துவங்களையும், ஆன்மீக சிந்தனைகளையும் அடிப்படையாக் கொண்டவை. முதலில் தனது தாய்மொழியான வங்காளத்தில் எழுதியதுடன் பின்னர் தாமே அவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தார் தாகூர். 1912-ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலியை உலகம் ஆங்கிலத்தில் படித்து வியந்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1913-ல் அந்த இலக்கியத்திற்கு நோபல் பரிசை வழங்கி மகிழ்ந்தது நோபல் குழு. நோபல் பரிசுத் தொகை தாகூருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனைக் கொண்டு சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தின் செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது மேல்நாட்டு உலகம் தன் படைப்பைப் பாராட்டிய பிறகுதான் சொந்த நாட்டு மக்களின் பாராட்டும், கவனமும் தன் நூலுக்கு கிடைத்தது என்பது குறித்து வருந்தினார்.

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கல்கத்தாவில் உள்ள ஒரு வங்கியில் போட்டு வைத்தார். துரதிஷ்டவசமாக அந்த வங்கி நொடித்துப் போனது. தாகூரின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் 1915-ஆம் ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது. ஆனால் 1919-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த விருதை திருப்பி அனுப்பி விட்டார் தாகூர். உலகம் போற்றும் அன்னல் காந்தியடிகளை 'மகாத்மா' என்று முதலில் அழைத்துப் போற்றியவர் தாகூர்தான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

(http://2.bp.blogspot.com/-n4AAryH9L2Q/T6Ych9HoRAI/AAAAAAAABm8/QFQgwi8irus/s320/Arunan+kapilan15.JPG)

ஒருநாட்டின் மிக முக்கியமான பாடலான தேசிய கீதத்தை எழுதும் கெளரவம் மிகச்சிறந்த கவிஞர்களுக்குதான் வழங்கப்படும். அந்த கெளரவத்தைப் பெற்ற இரவீந்தரநாத் தாகூர் எழுதித் தந்த இந்திய தேசிய கீதம்தான் 'ஜன கண மண' இந்தியாவிற்கு மட்டுமல்ல வங்காள தேசத்திற்கும் அவர்தான் தேசிய கீதத்தை எழுதித் தந்தார். உலக வரலாற்றில் இரண்டு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய தனிப் பெருமை இரவீந்தரநாத் தாகூருக்கு மட்டுமே உண்டு. இந்திய இலக்கிய உலகிற்கு அனைத்துலக பெருமையை பெற்றுத் தந்த இரவீந்தரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தனது 80-ஆவது அகவையில் காலமானார்.

தாகூர் நோபல் பரிசை பெற்று கிட்டதட்ட 100 ஆண்டுகள் ஆகப் போகின்றன. வேறு ஒரு இந்திய இலக்கியத்தால் இன்னும் அந்த உச்சத்தை எட்ட முடியவில்லை. அதுவே இரவீந்தரநாத் தாகூரின் பெருமைக்கு அளவுகோல். முறையாக கல்வி பயிலாமலும்கூட தாகூரால் நோபல் பரிசை வெல்ல முடிந்ததென்றால் நம்மால் சாதிக்க முடியாதது எது? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஓர் இலக்கை வகுத்துக் கொண்டு தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் உரமாக விதைத்து தைரியமாக முன்னேறினால் தாகூருக்கு வசப்பட்டதுபோல் நிச்சயம் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 07:27:02 PM
மூலதனத்தின் பிறந்த நாள் (கார்ல் மார்க்ஸ்) - வரலாற்று நாயகர்!

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருகப் பெருக தொழிலாளிகள் நசுக்கப் படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்ற உண்மையை இந்த உலகிற்கு எடுத்துக் கூறிய ஒரு மாமனிதனின் பிறந்த நாளான இன்று (05/05/2011) ஒரு சிறு முயற்சியாக அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

"உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு முதலாளிகள் இணங்க மாட்டார்கள். ஆகவே தொழிலாளிகள் ஒன்று திரண்டு போராடி புரட்சி செய்து தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும்".

இதுதான் பொதுவுடமைக் கொள்கை. இந்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மாபெரும் புரட்சிக்காரரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 'ஜெர்மானிய தாடிக்காரன்' என்று அறிஞர்களால் மரியாதையுடனும், நேசத்துடனும் அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் ஜெர்மனியின் புருசியா என்ற பகுதியில் உள்ள ட்ரையர் எனும் நகரில் பிறந்தார் Karl Heinrich Marx. அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். குடும்பம் வறுமையில் வாடினாலும், மார்க்ஸை சட்டம் படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் வறுமையைப் போக்க வேண்டும் என்று தந்தை விரும்பினார். மார்க்ஸின் பெற்றோர் சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், மார்க்ஸுக்கு இனம், மதம் ஆகியவற்றில் பற்று இல்லை.

(http://3.bp.blogspot.com/-tWHJo-y4VBw/T6SLvOv2DQI/AAAAAAAABlc/p4q2f1X552Y/s320/Karl+Marx.jpg)

மதத்தலைவர்களின் போக்கினை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நம்பினார். இளம் வயதிலேயே அவரது சிந்தனைகள் புரட்சிகரமாக இருந்தன. தன் தந்தையின் எண்ணப்படியே தனது பதினேழாவது வயதில் பான் (University of Bonn) பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்தார் மார்க்ஸ். ஆனால் வரலாற்றிலும், தத்துவத்திலும் அவரது கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடமைத் தத்துவம் வேர் விடத்தொடங்கியது. தனது பொதுவுடமைக் கருத்துகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் பரப்பினார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரை கண்டித்தும் அவர் தொடர்ந்ததால் வேறு வழியின்றி அவரை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியது.

சட்டத் துறையை ஏற்கனவே விரும்பாத மார்க்ஸ் பின்னர் பெர்லின் ( University of Berlin) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் பயின்றார். 1841-ஆம் ஆண்டில் மார்க்ஸுக்கு தத்துவத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. அதன் பிறகு அவரது சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. பல்கலைக்கழக நாட்களில் ஜென்னி என்ற பெண்ணை விரும்பினார் மார்க்ஸ். செல்வந்தர் வீட்டுப் பெண்ணான ஜென்னியும் அவரை விரும்பினார். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த பொருளாதார வேற்றுமைகளை காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஜென்னியின் தந்தை. காதலின் பலம் அவர்களை ஒன்று சேர்த்து வைத்தது. காதலுக்காக செல்வ சுகத்தை தூக்கி எறிந்த ஜென்னி கடைசிவரை கார்ல் மார்க்ஸுக்கு ஆனிவேராக இருந்தார்.

(http://4.bp.blogspot.com/-sUl1KZF8qWw/T6SL2M9YWsI/AAAAAAAABlk/abdWrow7FCQ/s320/karlmarx-jenny.jpg)

முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஜெர்மன் பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக பொறுப்பேற்றார் மார்க்ஸ். ஆனால் அவரது புரட்சிகரமான எழுத்துக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனவே பாரிஸுக்கு சென்றார் அங்கு அரசியல் கட்டுரைகளை பல பத்திரிகைகளில் எழுதினார் அவை ரஷ்ய அரசாங்கத்தை தாக்குவதாக இருந்ததால் ரஷ்யா கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரை நாடு கடத்தியது பாரிஸ். இந்த சமயத்தில் மார்க்ஸுக்கு Friedrich Engels என்பவரின் நட்பு கிடைத்தது. ஒரு முதலாளியின் மகனாக இருந்தும், தொழிலாளர்கள் நலனைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவர் ஏங்கல்ஸ். எனவே இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தொழிலாளர் நலனை மேம்படுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும் திட்டம் தீட்டினர்.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எப்படி போராடி பெறுவது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் இருவரும் வெளியிட்டனர். அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ். 1847-ஆம் ஆண்டு லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (The Communist Manifesto) என்ற கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Workers of All Land Unite) என்ற முழக்கத்தை மார்க்ஸும், ஏங்கல்ஸும் முன்வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849-ஆம் ஆண்டு ஏங்கல்ஸின் உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தமராக குடியேறினார்.

(http://2.bp.blogspot.com/-W5fbGhnne4E/T6SL8mZkreI/AAAAAAAABls/M0eQ8_lNkVo/s320/Marx+Family_and_Engels.jpg)

பெரும்பாலான நேரங்களை அவர் பிரிட்டிஸ் அரும்பொருளகத்தில் நூல்களை படிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் அதிகம் சிந்தித்து எழுதிய அவரது முதல் நூல் கேப்பிடல் (Das Capital) அதாவது மூலதனம்.

"சமுதாயத்தின் இறந்தகால வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, முதலாளிகளின் பொருளாதார பலம் பெருக பெருக தொழிலாளிகள் நசுக்கப்படுகிறார்கள். பொருத்தது போதும் என்று பொங்கியெழுந்து தொழிலாளிகள் ஒன்றுபட்டு முதலாளித்துவ போக்கை மாற்ற வேண்டும். தொழிலாளிகள் தங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள தொழிற்சங்க அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்".

(http://1.bp.blogspot.com/-m6-c1gaqN0c/T6SMIzvmx6I/AAAAAAAABl0/MpX1XOviUWM/s1600/das-kapital.jpg)

இதுதான் மூலதனம் என்ற அந்த நூலில் கார்ல் மார்க்ஸ் வாதிட்ட அடிப்படைக் கருத்து. இன்று உலகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் இருப்பதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ்தான். மார்க்ஸின் பொதுவுடமை கருத்துகள் உலகம் முழுவதும் பரவி வலுப்பெறத் தொடங்கின. மார்க்ஸ் முன்னுரைத்தது போலவே புரட்சிகள் வெடிக்கத் தொடங்கின. 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடந்து லெனின் தலமையில் பொதுவுடமை ஆட்சி (கம்யூனிஸ்ட் ஆட்சி) மலர்ந்தது. அதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக ச்செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா, கிழக்க்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, அல்பீரியா, சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கு கம்யூனிசம் பரவியது.

உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது. பணக்கார குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி, தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார் இவ்வாறு...

"எங்கள் குட்டி தேவதை பிரெஞ்சஸ்கா மார்புச் சளியால் மூன்று நாட்கள் மூச்சு திணறி இறந்தாள். எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவள் பிறந்தபோது தொட்டில் வாங்ககூட எங்களிடம் காசு இல்லை, இறந்தபோது சவப்பெட்டி வாங்ககூட காசு இல்லை".

மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு மருந்து வாங்ககூட முடியாமல் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று கனவு கண்ட மார்க்ஸ். ஜென்னியையும் மரணம் கொண்டு போக நிலைகுலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது 64-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மார்க்ஸின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு பேசிய, அவரது உயிர் நண்பர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மார்ச் 14-ஆம் தேதி மாலை மூன்று மணியாவதற்கு 15 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப் பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது சாய்வு நாற்காலியில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டதைக் கண்டோம்." என்றார்.

(http://3.bp.blogspot.com/-pj7vhuWbOxo/T6SNJsZygjI/AAAAAAAABmE/23m8cwYcuc0/s320/karl-marx-fish.jpg)

பாட்டாளிகளை அவர் அன்புடன் 'காம்ரேட்ஸ்' அதாவது 'தோழர்களே' என்றுதான் அழைத்தார். இன்றும்கூட தொழிற்சங்கங்களில் அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவுடமைக் கொள்கையில் அடிப்படையில் எந்த பிரச்சினையும் கிடையாது. கம்யூனிசத்தின் இன்றைய அழிவிற்கு அது நடைமுறைப் படுத்தப்பட்ட விதம்தான் காரணமே தவிர, அதன் அடிப்படை நோக்கங்கள் அல்ல. அந்த நோக்கங்கள் உயரியவை. மார்க்ஸ் நினைத்தது போலவே அது செயல்படுத்தப் பட்டிருந்தால் அதைவிட ஒரு நியாயமான பொருளியல் சித்தாந்தம் இருக்குமா என்பது சந்தேகமே.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

"உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர! ஆனால்
வெல்வதற்கு  இந்த உலகமே இருக்கிறது!"

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!"
-கார்ல் மார்க்ஸ்
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 07:33:32 PM
புரட்சி நாயகன் லெனின் - வரலாற்று நாயகர்!

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா.
"இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".

என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.

(http://3.bp.blogspot.com/-PgHHjYyp_0Q/T36Ek0E3FTI/AAAAAAAABYw/BQqlrmHJSjc/s320/lenin.jpg)

1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான்.

மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.

(http://1.bp.blogspot.com/-7RivDveOP-g/T36H5XcdF1I/AAAAAAAABZw/k7QoETh3iKE/s1600/vladimir_lenin.jpg)

விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. 

(http://3.bp.blogspot.com/-155Xyk0XT8g/T36HPoUQ9xI/AAAAAAAABZo/HvSQEgm6tZc/s320/leninpravda%5B1%5D.jpg)

ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்.

(http://2.bp.blogspot.com/-sQEJH0UN3tk/T36HDpA_uwI/AAAAAAAABZg/luIIWTXO-s0/s320/110.jpg)

இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.

(http://2.bp.blogspot.com/-Op7NomkZxBs/T36Gpa3shiI/AAAAAAAABZY/i2Dp7lN-zxs/s320/index.png)

கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர், புதுமை காணீர்!

என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 07:41:13 PM
வில்லியம் ஷேக்ஸ்பியர் - வரலாற்று நாயகர்!

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.

1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (Stratford-upon-Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மையில்தான். எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபகரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன் பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதான போது தன்னை விட எட்டு வயது மூத்தவரான ஆன் ஹதாவேயை (Anne Hathaway) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

(http://3.bp.blogspot.com/-s3JlWc0Mps8/T4Duyy29oYI/AAAAAAAABbg/xh5iXravm0o/s320/3162564_f520.jpg)

23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந்தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றை பார்ப்போம்...அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல் காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாடக கொட்டகையின் உரிமையாளருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான். 

ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வரவில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி.நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்பதாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது.

(http://4.bp.blogspot.com/-pj0T3QHVbJU/T4Du6hnPTlI/AAAAAAAABbo/Z0o3wPJEyrY/s320/16339053.jpg)

தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வசனம் பேசினார். அந்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டன் மாநகரம். அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது.

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட இயற்றினார் என்று சொல்ல வேண்டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம்.

A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.

(http://1.bp.blogspot.com/-E9wG3yf73P8/T4DxKLdj18I/AAAAAAAABbw/0ueI2QLs1kk/s320/william_shakespeare_statue.jpg)

இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன. 

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம். நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 07:54:58 PM
'லியொனார்டோ டாவின்சி' - வரலாற்று நாயகர்!

1911-ஆம் ஆண்டு பாரிஸின் புகழ் பெற்ற லூவர் அரும்பொருளகத்திலிருந்து ஓர் ஓவியம் களவு போனது. ஓவியத்தைக் கூடவா திருடுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவல்ல ஆச்சர்யம் அந்த ஓவியம் களவு போன பிறகு அது மாட்டப்பட்டிருந்த வெற்று இடத்தைப் பார்க்கவே அரும்பொருளகத்தில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. ஓவியம் இருந்த இடத்தைப் பார்க்கவே உலகம் ஆசைப்பட்டது என்றால் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது என்று யோசிக்கிறீர்களா? அந்த ஓவியத்தின் பெயரை சொன்னாலே உங்கள் உதடுகள் புன்னகை பூக்கும். சில காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த 'மகா ஓவியம்' இப்போது மீண்டும் அதே லூவர் அரும்பொருளகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பது வேறு விசயம்.   


மாபெரும் ஓவியர், தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுனர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுனர், இராணுவ ஆலோசகர் என பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பிரகாசித்த ஒருவரை எப்படி அறிமுகபடுத்துவது? என்ன சொல்லி கெளரவப்படுத்துவது? அந்தக் கலைஞன் தீட்டிய அந்த அதிசய ஓவியம் மோனலிசா, அந்த தெய்வீக புன்னகையை தன் தூரிகையால் வடித்துத் தந்த மாபெரும் கலைஞன் லியொனார்டோ டாவின்சி. 

(http://3.bp.blogspot.com/-WOo1XgNug9U/T3_0yGGgeWI/AAAAAAAABa8/DsNTxS0thCo/s1600/images.jpg)           (http://2.bp.blogspot.com/-EHPgfAlFemI/T3_pmupuO9I/AAAAAAAABaU/-wzVvsg6wrg/s320/Leonardo-Da-Vinci.jpg)

இத்தாலியின் ப்ளோரன்ஸ் (Republic of Florence) நகருக்கு அருகே இருக்கும் வின்சி (Vinci) என்ற கிராமத்தில் 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் நாள் பிறந்தார் லியொனார்டோ டாவின்சி. அவரது பிறப்பில் கொஞ்சம் களங்கம் வழக்கறிஞரான தந்தைக்கும், விவசாயக் கூலி வேலை பார்த்த தாய்க்கும் திருமணம் ஆகாமலேயே பிறந்தவர்தான் டாவின்சி. அவர் பிறந்ததும் தாயார் வேறு ஒருவரை மணந்து கொண்டு சென்று விட தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் அவர் வளர்ந்தார். சிறு வயதிலேயே வரைவதிலும், மாதிரி வடிவங்களை உருவாக்குவதிலும் ஆர்வம் காட்டினார் டாவின்சி. அவருக்கு இடது கைப்பழக்கம் இருந்தாலும் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் ஓவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் அவரிடம் இருந்தது. அவர் தன் விளக்கக் குறிப்புகளையும், கடிதங்களையும் இடமிருந்து வலமாக எழுதியவர். எனவே அவற்றை படிக்க வேண்டுமென்றால் கண்ணாடி முன் அதை வைத்து கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்பத்தைப் பார்த்து படிக்க வேண்டும்.   

சிறு வயதானபோது சந்தைக்கு சென்று விற்பனைக்காக கூண்டில் அடைக்கப்பட்ட அழகிய பறவைகளை வாங்கி அவற்றை சுதந்திரமாக பறக்க விட்டு அதன் அழகை ரசிப்பாராம். அந்தக் காட்சியை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு ஓவியமாக வரைவார். அந்தளவுக்கு அவருக்கு ஞாபக சக்தி இருந்தது. குதிரைகள் என்றால் டாவின்சிக்கு அலாதி பிரியம். உடல் வலிமையுடன் திகழ்ந்த அவர் குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்கூடிய வலிமையும் பெற்றிருந்தார். இயற்கையை அதிகம் நேசித்த டாவின்சிதான் ஓவியங்களில் இயற்கையை பிரதிபலித்த முதல் ஓவியர் என்கிறது வரலாறு. தன் ஓவியங்களில் எந்த கட்டுப்பாட்டையும், விதிமுறைகளையும் அவர் பின்பற்றியதில்லை. ஓவியங்களில் ஒளியையும், அதன் நிழலையும் தத்ரூபமாக வரைந்து காட்டிய முதல் ஓவியர் டாவின்சிதான். அதோடு அவர் நின்று விடவில்லை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தனியாத தாகம் அவரிடம் இருந்தது.

ஒளியையும், நிழலையும் வரைந்த அவர் அவற்றுக்கு பின் உள்ள இயற்கை நியதிகளை அறிந்து கொள்வதற்காக ஒளியின் தன்மைப் பற்றியும், கண்களின் அமைப்புப் பற்றியும் கற்றறிந்தார். அவர் எழுதி வைத்த குறிப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் பலவற்றை சந்திக்க நாம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்காது. அந்தக் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை புறக்கணிக்கப்பட்டன. அவருடைய குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது உலகம் வியப்பில் ஆழ்ந்தது ஏன் தெரியுமா? விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே வான் குடையைப் பற்றி சிந்தித்து துல்லியமாக வரைந்து வைத்திருக்கிறார் டாவின்சி. கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் அலாரம் பற்றி சிந்தித்திருக்கிறார். 

(http://2.bp.blogspot.com/-n5PFJNHuZJ8/T3_3V63K7AI/AAAAAAAABbM/2zJDNY2C_dY/s320/leonardo-da-vinci-flying-machines-4.jpg)

எந்த அறிவியல் கருவிகளும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்திலேயே ஒரு தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது என்பதை கற்பனை செய்து வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்துக்கும், உண்மை நிலைக்கும் வேறுபாட்டை கான்பது அரிது. ஒளி அலைகளைப் பற்றி அவர் செய்த ஆய்வுதான் பிற்காலத்தில் புகைப்பட கருவிக்கு அடிப்படையாக அமைந்தது. மனிதர்களை ஓவியமாக வரைந்த போது மனிதனின் உடற்கூறியலை ஆராய்ச்சி செய்தார். செடிகளையும், மரங்களையும் வரைந்தபோது தாவரவியலை ஆராய்ந்தார். அந்தக் காலகட்டத்திலேயே விமானத்தின் மாதிரியை வடிவமைத்தார். நீராவி பற்றியும், பீரங்கிகள் பற்றியும், கப்பல் வடிவமைப்பு பற்றியும் சிந்தித்து வரைந்தார்.

பல நூற்றாண்டுகள் கழித்து உருவானவற்றையும், அந்த ஓவியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது விஞ்ஞானிகள் மலைத்தனர். ஏனெனில் எதிர்காலத்தை தத்ரூபமாக சித்தரிந்திருந்தார் டாவின்சி. இவ்வுளவு சிறப்புகள் இருந்தும் டாவின்சியின் பெயரை நமக்கு நினைவு படுத்துவது ’மோனலிசா’ என்ற அந்த மந்திரப் புன்னகை ஓவியம்தான். 1503-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு அந்த அதீத ஓவியத்தை வரைந்து முடித்தார் டாவின்சி. ஓவியத்தின் அழகை கண்டு தன்னைத்தானே நம்ப முடியாமல் அவர் வியந்து போனார் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. ஒரு புகைப்படத்தில்கூட அவ்வுளவு தத்ரூபமாக ஒரு புன்னகையைப் பதிவு செய்ய முடியுமா? என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். அந்தப் படம் வைக்கப்பட்டிருந்த வெற்று இடத்தை பார்க்கத்தான் லூவர் அரும்பொருளகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 

(http://1.bp.blogspot.com/-ZznM7ydNv8E/T3_29rmjmXI/AAAAAAAABbE/SiIzkJMciz8/s320/zp_giampietrinos-the-last-supper-after-leonardo-da-vinci_1520.jpg)

500 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஓவியத்தின் வசீகரம் குன்றவில்லை. டாவின்சிக்கு பெருமை சேர்த்த மற்றொரு ஓவியம் 'The Last Supper' எனப்படும் இயேசுவின் கடைசி விருந்து. 'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலியில் லியொனார்டோ டாவின்சியைப் போல் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அந்த மகா கலைஞனின் புகழ் இத்தாலிக்கும் அப்பால் பரவியது. 1516-ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் தம் நாட்டில் வந்து வசிக்குமாறு அழைப்பு விடுக்கவே பிரான்ஸ் சென்றார் டாவின்சி. அவருக்காகவே வழங்கப்பட்ட ஒரு மாளிகையில் வசித்து வந்தார். 1519-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமது 67-ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

(http://1.bp.blogspot.com/-UtuyVK1xi7o/T3_p7qTqdZI/AAAAAAAABak/bQsijmILJmo/s320/p17.jpg)

பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்கியதால் தசாவதாரம் கண்ட டாவின்சி என்று அவரை என்று வருணிக்கிறது ஒரு குறிப்பு. கடந்த 500 ஆண்டுகளில் அவரைப் போன்ற ஒருவரைத்தான் சந்தித்திருக்கிறது வரலாறு. இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் அவரைப் போன்ற ஒருவரை நாம் சந்திக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். இருப்பினும் பத்து வேண்டாம் ஒரு துறையிலாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்த டாவின்சியின் வாழ்க்கை உதவும். அவரைப் போல பல துறைகளிலும் ஒரே நேரத்தில் நாம் பெயர் போட வேண்டியதில்லை. நமக்கு பிடித்த ஒரு துறையில் நமது முழு பலத்துடனும், விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் நம் வாழ்க்கையும் அந்த மோனலிசாவின் புன்னகையைப் போல் இனியதாக அமையும். அந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 08:02:16 PM
ஜோசப் லிஸ்டர் (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை) - வரலாற்று நாயகர்!

'மரண பயம்' என்பது, ஒன்று சிறைச்சாலைகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளுக்கு ஏற்படும் அல்லது தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். ஆனால் சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும் கூட மரண பயம் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போதெல்லாம் 'உறுப்பு மாற்று' அறுவை சிகிச்சைகளைகூட சர்வ சாதரணமாக செய்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் சாதரண அறுவை சிகிச்சை தேவைப் பட்டவர்கள்கூட உயில் எழுதி வைத்து விட்டுதான் சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு இறந்து விடுவோம் என்ற 'மரண பயம்' அனைவரையும் வதைத்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அறுவை சிகிச்சை செய்து கொண்டவரில் 50 விழுக்காட்டினர் ஒருசில நாட்களில் இறந்து விடுவது சர்வ சாதாரணமாக நடந்த ஒன்று. அவர்களுக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதிகளில் 'செப்ட்டிக் பாய்சனிங்' என்ற விஷம் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்தது என்பது இப்போது நமக்கு தெரியும் உண்மை. ஆனால் அப்போது அதனை அறிந்துகொள்ளாத மருத்துவ உலகம் என்ன செய்வதென்று அறியாது திகைத்தது. பல மருத்துவர்கள் வேறு வழியில்லை என்று சொல்லி சிகிச்சைகளை தொடர்ந்தனர். ஆனால் ஒரு மருத்துவர் மட்டும் அந்த மரணங்களை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்று விரும்பினார். தடுக்க முடியும் என்று நம்பினார். அந்த தனி ஒரு மனிதனின் வைராக்கியமும், விடாமுயற்சியும், மனித உயிர்களை காப்பதுதான் மருத்துவர்களின் கடமை என்ற திடமான நம்பிக்கையும் தான் அவருக்கு 'நவீன அறுவை சிகிச்சையின் தந்தை' என்ற பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜோசப் லிஸ்டர்.

(http://3.bp.blogspot.com/-0VVog2EKEgs/T3xCewtz-JI/AAAAAAAABXk/JvC8VgCI51Q/s320/H4120089-Portrait_of_Joseph_Lister,_English_surgeon-SPL.jpg)

இங்கிலாந்தின் எசக்ஸ் (Essex) மாநிலத்தில் அப்டான் (Upton) எனும் நகரில் 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார் ஜோசப் லிஸ்டர். சிறு வயதிலிருந்தே பிறரின் வேதனைகளைக் கண்டு இரங்கும் குணம் அவருக்கு இருந்தது. நோயினால் அவதியுறுவோரின் வேதனைகளை கேட்டும், சில சமயங்களில் நேரடியாக பார்த்தும் தான் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணத்தை சிறு வயதிலிருந்தே அவர் வளர்த்துக்கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக இல்லாமல் உயிருக்கு உத்தரவாதம் தரும் மருத்துவராக வர வேண்டும் என்று கனவு கண்டார். பல வரலாற்று நாயகர்களைப் போலவே இவரது கனவையும் நனவாக்கிக் காட்டியது வரலாறு.

மருத்துவ படிப்பை முடித்ததும் தான் விரும்பிய அறுவை சிகிச்சைத் துறையிலேயே சிறப்புத் தேர்ச்சி பெற்றார் லிஸ்டர். அப்போது புகழ் பெற்றிருந்த ஜேம்ஸ் சிமி (James Syme) என்ற அறுவை சிகிச்சை நிபுனரிடம் உதவியாளராக சேர்ந்தார். பிந்நாளில் அவரது மகள் ஏக்னஸையே திருமணம் செய்து கொண்டார். மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அவரது போராட்டத்தில் மிகப்பெரிய பலமாக இருந்தவர் அவரது மனைவி ஏக்னஸ். 30 வயதானபோது கிளாஸ்கோ மருத்துவமணையில் அறுவை சிகிச்சை பேராசிரியராக அவருக்குப் பணி கிடைத்தது. அறுவை சிகிச்சை நோயாளிகளின் மரண விகிதத்தை எப்படி குறைப்பது என்பதே அவருடைய அன்றாட சிந்தனையாக இருந்தது. தான் அறுவை சிகிச்சை செய்த ஒரு நோயாளி இறந்து போனால் அது தன்னுடைய தோல்வி என்று கருதினார்.

(http://4.bp.blogspot.com/-ZSppy7PU5UM/T3xDbixxb_I/AAAAAAAABXw/gup2s2x6TyM/s1600/p3961.jpg)

1865-ஆம் ஆண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு லிஸ்டருக்கு கிடைத்தது. பொருட்களை புளிக்கச் செய்யும் உயிருள்ள கிருமிகள் காற்றில் இருக்கின்றன என்றும், அந்தக் கிருமிகளால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்றும் பாஸ்டர் கூறியிருந்தார். அப்படியென்றால் பொருட்களை அழுகச் செய்யும் கிருமிகளை அழிப்பதற்கான விஷ முறிவு மருந்தை அதாவது ஆண்டி-செப்ட்டிக் (Antiseptic) மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று உணர்ந்தார் லிஸ்டர். அப்போதிலிருந்து விஷ முறிவு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கடுமையாக் ஈடுபட்டார். அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும் கார்பானிக் அமிலம் கலந்த கிரியோஸோட் (creosote) என்ற ஒரு திரவத்தை வாங்கினார். அந்த திரவத்தை ஒரு நோயாளி மீது பயன்படுத்திப் பார்த்தார். அந்த நோயாளி இறந்து போகவே மனமுடைந்து போனார் லிஸ்டர்.

(http://2.bp.blogspot.com/-7SqmJDnvBF0/T3xDjbXeOvI/AAAAAAAABX4/ZS7vW1UShIk/s320/1858SA2.jpg)

ஆனால் அவரது மனைவி ஏக்னஸ் தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஊக்கமூட்டினார். தோல்வியடைந்த ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் அதே மருந்தை பயன்படுத்திப் பார்க்க விரும்பினார். கால் எலும்பு முறிந்த ஒரு பதினொரு வயது பையன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். கணவனை இழந்த தன் தாய்க்கும், மற்ற தனது சகோதரர்களுக்கும் நாந்தான் சோறு போட வேண்டும் என்பதால் தன்னை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு லிஸ்டரிடம் முறையிட்டான் அந்தப் பையன். கார்பாலிக் அமிலத்தில் நனைத்த துணியைக் கொண்டு காயத்தில் கட்டுப்போட்டார் லிஸ்டர். நான்காவது நாள் கட்டைப் பிரித்துப் பார்த்தபோது அவர் வியந்து போனார். காயம் சீழ்பிடிக்க வில்லை மாறாக குணமடையத் தொடங்கியிருந்தது. மகிழ்ந்து போனார் லிஸ்டர்.

ரணங்கள் அழுகி விஷமடைவதை தடுக்க முடியும் என்று அவர் நிருபித்துக் காட்டியதை ஏனோ மருத்துவ உலகம் அப்போது ஆர்வமின்றி வரவேற்றது. ஆனால் பாராட்டையெல்லாம் எதிர்பார்க்காத அவர் நோயாளிகளின் உயிரைக் காக்க தன் ஆராய்ச்சிகளையும், மருத்துவமணையில் மாற்றங்களையும் தொடர்ந்தார். அறுவை சிகிச்சை அறையிலும், வார்டிலும் கார்பானிக் அமிலத்தைப் பயன்படுத்திக் காற்றை தூய்மைப்படுத்தினர். மருத்துவ கருவிகள் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மருத்துவமணையில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த வார்டில் மரண விகிதம் குறையத் தொடங்கியது. அப்போதுகூட மருத்துவ உலகம் அவரை பாராட்டாமல் கேலி செய்தது. ஆனால் அவரால் உயிர் பிழைத்தவர்கள் அவரை தெய்வமாக போற்றினர்.

(http://2.bp.blogspot.com/-_pNBLZNRDiI/T3xDpdX_1DI/AAAAAAAABYA/0UIOuFp7cGY/s320/hommedia.png)

சில ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் (King's College London) பேராசிரியராக சேர்ந்தார் லிஸ்டர். அங்கும் மாணவர்கள் அவரை கேலி செய்தனர். அவரை பார்க்கும் போதெல்லாம் கிருமி வருகிறது என்று நகைத்தனர். மருத்துவ சஞ்சிகைகள் சிலர் அவரை 'பொய்யர்' என்றனர். ஆனால் சாதனையாளர்கள் மனம் தளர்ந்ததாக வரலாறு இல்லையே. 1877-ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய அப்போதைய புகழ்பெற்ற மருத்துவர் ஜான் ஹண்டர் (John Hunter) மறுத்து விட்டார். லிஸ்டரின் மருத்துவ முறைகளை கேலி செய்தவர்களில் அவரும் ஒருவர். அவர் செய்ய மறுத்த அறுவை சிகிச்சையை தான் செய்வதாக கூறி வெற்றிகரமாக அதனை செய்தும் காட்டினார் லிஸ்டர். அதிலிருந்து மனம் மாறினார் ஜான் ஹண்டர். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த இரு மருத்துவர்களும் இணைந்து பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவரது சிகிச்சை முறையை உலகம் ஏற்றுக்கொண்ட பிறகு முப்பது ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார் லிஸ்டர். மருத்துவ உலகிலயே அவருக்குதான் 'ஆர்டர் ஆஃப் த மெரிட்' (Order of Merit) என்ற பட்டம் முதன் முதலாக வழங்கப்பட்டது. உலக நோயாளிகளுக்கு மரண பயத்தைப் போக்கிய ஜோசப் லிஸ்டர் 1912-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் தனது 84- ஆவது வயதில் காலமானார். மிகுந்த மதப்பற்று கொண்டிருந்த லிஸ்டருக்கு சமூக வெற்றியோ பணம் சம்பாதிப்பதோ ஒரு பொருட்டாக இல்லை. மனுகுலம் மேன்மை பெற வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

(http://1.bp.blogspot.com/-fQT4IfKtmA4/T3xDyRz2puI/AAAAAAAABYI/9LQ6lCi3U-M/s320/Joseph_Lister_1902.jpg)

அடுத்த முறை உங்களில் யாராவது அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் ஜோசப் லிஸ்டருக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தில் ஜோசப் லிஸ்டர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு அளவிட முடியாதது. அப்படிப்பட்ட மருத்துவ முறையை கண்டுபிடித்த போதும் அவருக்கு ஏற்பட்ட கேலி கிண்டல்கள், அவமானங்களை தாண்டியும், நமது உயிருக்கு உத்தரவாதம் தர அவருக்கு உதவிய பண்புகள்....உயரிய சிந்தனை, தோல்விகளை கண்டு துவளாத மனோதிடம், தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைய விடாமுயற்சியுடன் இறுதிவரை போராடும் தைரியம். ஜோசப் லிஸ்டரைப் போல் நாம் வகுத்துக்கொண்ட இலக்கில் எத்தனை தடைகள் வந்தாலும் இறுதிவரை விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்!
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on January 29, 2013, 08:09:06 PM
பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாற்று நாயகர்!

1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி தெருக்களில் அலைந்தனர். வங்கி முறை கிட்டதட்ட செயலிழந்து போனது. நாட்டின் எதிர்காலத்திற்கு அஞ்சி பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை மீட்டுக்கொள்ள வங்கிகளுக்குப் படையெடுத்தனர். களேபரத்துக்கு அஞ்சி அமெரிக்காவின் அப்போதைய 48 மாநிலங்களில் 38 மாநிலங்கள் தங்கள் வங்கிகளை மூட உத்தரவிட்டன.

அதே தினம் வாஷிங்டெனில் அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான பதவிப் பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பிறகு தங்களுடைய புதிய அதிபர் என்ன சொல்லப் போகிறார் என்று அந்த தேசமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. நம்பிக்கையிழந்திருந்த தேசத்தை நோக்கி அவர் கூறிய வார்த்தைகள்..... "The only thing we have to fear is fear itself" 'அச்சம் என்ற உணர்வுக்குதான் நாம் அச்சப்பட வேண்டும்' என்ற மந்திர வார்த்தைகளை கூறி அடுத்த ஆறே ஆண்டுகளில் அமெரிக்காவை வழக்கு நிலைக்குக் கொண்டு வந்த அந்த மாபெரும் வரலாற்று நாயகரின் பெயர் பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt). அமெரிக்கா வரலாற்றிலேயே ஆகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிபரானவர் அவர். தனது 51-ஆவது வயதில் கிட்டதட்ட ஐந்து மில்லியன் வாக்குப் பெரும்பான்மையில் அமெரிக்காவின் 32-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூஸ்வெல்ட்க்கு வானம் வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

(http://1.bp.blogspot.com/-oJOslpzb8_k/T228gfyIZtI/AAAAAAAABSI/o8_8l0ngT_c/s320/32fr_header_sm.jpg)

1882-ஆம் ஆண்டு சனவரி 30-ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க் எனும் இடத்தில் பிறந்தார் ரூஸ்வெல்ட் அவரது பெற்றோர் செல்வந்தர்களாக இருந்தனர். அதனால் அமெரிக்காவின் மிகச்சிறந்த பள்ளிகளில் ஒன்றான க்ராட்டன் (Groton School) பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். பின்னர் ஹார்வர்ட் (Harvard College) பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொலம்பியா சட்டப் பள்ளியில் சட்டத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1907-ஆம் ஆண்டு 25 வயதானபோது அவர் நியூயார்க்கில் வழக்கறிஞராக பணியாற்றத்தொடங்கினார் அதுவரை அவருக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதில்லை. 1905-ஆம் ஆண்டு தன் உறவுக்கார பெண்ணான Eleanor-ஐ மணந்துகொண்டு ஆறு பிள்ளைகளுக்கு தந்தையானார். 1910-ஆம் ஆண்டு நியூயார்க் மாநிலத்தின் டெமோக்ராடிக் (Democratic) கட்சி சார்பில் செனட் சபைக்கு போட்டியிடுமாறு அழைக்கப்பட்டார் ரூல்வெல்ட். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1912-ஆம் ஆண்டு வுட்ரோ வில்சன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவரை ஆதரித்த ரூஸ்வெல்ட் அரசியலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார். வில்சன் அரசாங்கத்தில் கடற்படையில் உதவி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் கடற்படையை நவீனமயமாக்கினார் ரூஸ்வெல்ட். ஆண்டுதோறும் பல கடற்படை வீரர்கள் கடலில் மூழ்கி மாண்டதை உணர்ந்த அவர் கடற்படையில் சேர விரும்புவோருக்கு நீச்சலை கட்டாயமாக்கினார். 1917-ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் அமெரிக்கா நுழைந்தபோது அதன் கடற்படை மிகச்சிறந்த நிலையில் இருந்ததற்கு ரூஸ்வெல்ட்டே காரணம். அதுவரை ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக நடைபெற்று வந்தது. ஆனால் 1921-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டது.

(http://4.bp.blogspot.com/-AN2FKFX9r_A/T22805kOF6I/AAAAAAAABSQ/cCt1CaOZ5z8/s320/franklin_roosevelt_speaks_on_wgy_radio_1932_sjpg24036.jpg)

தன் மனைவி மற்றும் அவரது ஐந்து பிள்ளைகளுடன் 'கேம்பபெல்லோ' (Campobello Island) என்ற தீவில் விடுமுறைக்கு சென்றிருந்தார் ரூஸ்வெல்ட். அங்கே கடும் குளிராக இருந்த ஃபண்டி கடற்கரையில் நீந்திவிட்டு வந்தவரை 'ஃபோலியோ மைலிட்டிஸ்' எனப்படும் ஒருவகையான முடக்குவாதம் தாக்கியது. ஒரு மாத காலம் வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்ட அவருக்கு இடுப்புக்குக் கீழ் உடல் செயலிழந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்தொன்பதுதான். உடலில் பாதி செயலிழந்து போனாலும் அதனை ஒரு தோல்வியாக எண்ணவில்லை ரூஸ்வெல்ட். மனைவி Eleanor-ன் துணையுடன் போராடத் துணிந்தார். ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த Warm Springs என்ற இடத்திலிருந்த சூடான நீருற்று வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு குணமளிப்பதாக ஒரு நண்பர் கூறவே அங்கு சென்றார் ரூஸ்வெல்ட். அந்த நீருற்றில் நீந்திய பிறகு கால்களில் வலிமை ஏற்படுவதாக உணர்ந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தன் கால்களின் செயல்பாட்டைத் திரும்பப் பெற தொடங்கினார். ஏழே ஆண்டுகளில் அவர் திரும்பவும் வழக்கமான பணிகளை செய்யத் தொடங்கினார். அவரால் சொந்தமாக கார் ஓட்டவும் முடிந்தது. இரும்பு போன்ற அவரது மனவலிமைதான் அத்தனையையும் சாத்தியமாக்கியது. 1928 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் நியூயார்க்கின் ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார் ரூஸ்வெல்ட். அவரது திறமையை உணர்ந்த டெமோக்ராட்டிக் (Democratic) கட்சி 1932-ஆம் ஆண்டு தங்களின் அதிபரின் வேட்பாளாராக அவரை முன்மொழிந்தது. அந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில்தான் ஐந்து மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 32-ஆவது அதிபரானார் ரூஸ்வெல்ட். 1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி பதவியேற்ற போதுதான் அவர் "The only thing we have to fear is fear itself" என்று கூறி அமெரிக்கர்களுக்கு தைரியமூட்டினார்.

(http://1.bp.blogspot.com/-wmnjM2ZWYq8/T22_M-b5mvI/AAAAAAAABSY/-k5CJju2ChU/s1600/froosevelt.gif)

பதவியேற்றதும் உடனடியாக செயலிலும் இறங்கினார். வங்கி பிரச்சினையைத் தீர்க்கவும், மக்களின் பதற்றத்தை தனிக்கவும் மார்ச் 6-ஆம் தேதியை வங்கி விடுமுறை (Bank Holiday) என்று அறிவித்தார். பதவியில் இருந்த முதல் நூறு நாட்களிலேயே வங்கி சீர்திருத்தங்களை அறிவித்து பொதுமக்களிடையே வங்கிகளின் மீது நம்பிக்கையை விதைத்தார். சாலைகள் அமைப்பது, மரங்கள் நடுவது போன்ற பல அரசாங்க பொதுப் பணிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். பொதுப்பணி நிர்வாகம் தேசிய மீட்பு நிர்வாகம் என பல அரசாங்க பணிக் குழுக்களை உருவாக்கி அமெரிக்க பொருளியலை முன் எப்போதும் இல்லாத உந்து சக்தியுடன் முன்னோக்கிச் செலுத்தினார். அவரது மிகச்சிறந்த சில பண்புகளை அந்தக்கால கட்டத்தில் உலகம் பார்த்து வியந்தது.

எந்த திட்டத்தை செயல்படுத்திய போதும் தவறுகள் செய்துவிடுவோமோ என்று அவர் அஞ்சியதே கிடையாது. அப்படியே தவறுகள் நிகழ்ந்த போதும் தனது முடிவுகளை உடனடியாக மாற்றிக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை. அவரது கம்பீரமான ஆட்சியால் 1936-ஆம் ஆண்டு மீண்டும் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இரண்டாவது தவனைக்கு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும், 1944-ஆம் ஆண்டு நான்காவது முறையாகவும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரூஸ்வெல்ட். அமெரிக்க அதிபர் வரலாற்றில் இரண்டு தவனைக்கு மேல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். கிட்டதட்ட பதின்மூன்று ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்து அந்த தேசத்தை வழி நடத்திய ரூஸ்வெல்ட் 1945-ஆம் ஆண்டு ஏப்ரம் 12-ஆம் நாள் தனது 63-ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

(http://1.bp.blogspot.com/-lf2SyrmXEVE/T22_X7TjcMI/AAAAAAAABSg/t6WBn5Uqnfk/s1600/270px-Rooseveltinwheelchair.jpg)

அமெரிக்கா இதுவரை சந்தித்திருக்கும் அதிபர்களில் மூவர் தலைசிறந்தவர்கள் என்று கூறுகின்றனர் வரலாற்று நிபுனர்கள். அந்த மூவர் ஆபிரகாம் லிங்கன், ஜார்ஜ் வாஷிங்டென், ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட். மிகச்சிறந்த ஒரு தலைவனுக்காக ஒரு தேசம் ஏங்கிய அந்த இருட்டு நிமிடங்களில் அஞ்சாமல் தலைமைப் பொறுப்பை ஏற்று அந்த தேசத்திற்கு சுய மரியாதையையும், வளப்பத்தையும் ஏற்படுத்தித் தந்த அதிபர் என்று ரூஸ்வெல்ட்டை உலக வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை அவருக்கு தந்து கெளரவித்துள்ளது டைம் சஞ்சிகை.

முடக்குவாதம் வந்தபோது முடங்கி போயிருக்க வேண்டிய ஒருவர் உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் அதனை கம்பீரமாக வழிநடத்தியதால் வரலாற்றில் இடம்பிடித்தார். ரூஸ்வெல்ட்டின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான். தடைகளை கண்டு தயங்காதோருக்கும், முடக்கு பிணிகளுக்கு முடங்காதோருக்கும், அச்சங்களை துச்சமாக எண்ணித் துணிவோருக்கும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு முன்னோக்கி செல்வோருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் அந்த உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 09:50:17 AM
ஷி ஹூவாங்டி (உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவர் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப் பெருஞ்சுவர்தான் அந்த சிறப்பைப் பெற்ற ஒரே உலக அதிசயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நமக்கு பிரமிப்பூட்டும் அந்த நீள் சுவர் உருவாவதற்கு காரணமாக இருந்த சீன தேசத்துப் பெருமன்னனைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். சீனப் பெருஞ்சுவரை மட்டுமல்ல பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் உலகுக்குத் தந்த அந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi).

உலக வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னனின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் சீனாவின் வரலாற்றுப் பின்னனியை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுகுன்றி சீனா நிறைய சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தது. சிற்றரசர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே போரிட்டு வந்தனர். அதன் காரணமாக சில சிற்றரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயின. அனைத்து சிற்றரசுகளிலும் பலம் பொருந்தியதாக விளங்கியது சின் (Qin) அரசு. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.

(http://2.bp.blogspot.com/-0WSr21JDRI8/T182KO_JaLI/AAAAAAAABMA/_BgHI92Ehb8/s1600/61xkBPT-YpL._SL500_AA300_.jpg)

ஷி ஹூவாங்டி பதின்மூன்றாவது வயதிலேயே அரியனை ஏறினார். ஆனால் 21-ஆவது வயதில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைகளுக்கு வந்தது. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள் மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38-தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி 'முதல் பேரரசர்' என்பது அதன் பொருள். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின் கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு கிடந்ததற்கு காரணம் என்பதை உணர்ந்த அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசு முறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.

(http://4.bp.blogspot.com/-VP241v2zRi4/T182yI2QtJI/AAAAAAAABMY/7mlTxBBsJc4/s320/Qinshihuang.jpg)

இவ்வுளவு சிறப்பான செயல்களை செய்தும், வரலாற்றின் பழிச்சொல்லை சம்பாதிக்கும் ஒரு செயலையும் செய்தார் ஷி ஹூவாங்டி. கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி.

வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை. Zhao  மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறு சிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அவர் மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்யப்பட்டது.

(http://4.bp.blogspot.com/-i0H6CnZ1xGE/T182jlwA7aI/AAAAAAAABMQ/P2In3bcga4g/s320/terracotta_warriors_01.jpg)

சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது.

(http://4.bp.blogspot.com/-i-YWb54tWC8/T1830WThL6I/AAAAAAAABMg/twQqDYoRehk/s320/9771006.jpg)

பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்த பண்புகள் ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவும், முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறனும், எதிரிகளை திணறடிக்கும் தைரியமும், ஒற்றுமையே பலம் என்ற அவரது நம்பிக்கையும்தான். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நமக்கும் எந்த அதிசய வானமும் வசப்படும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 10:51:26 AM
மைக்கலாஞ்சலோ - வரலாற்று நாயகர்!

இன்று நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரை நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக வருணிக்கிறது வரலாறு. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டியதால்தான் அந்த வர்ணனை. அவர் வேறு யாருமல்ல  'Renaissance' எனப்படும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்
காலத்தில் ஓவியத்திற்கும், சிற்பத்திற்கும் உண்மையான மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த மாபெரும் கலைஞன் மைக்கலாஞ்சலோ.

(http://1.bp.blogspot.com/-_zP7jB57rWY/T1WivGeEdWI/AAAAAAAABLQ/DHBKspTZixQ/s320/Michelangelo.jpg)

மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி 1475-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள் இத்தாலியின் Caprese என்ற நகரில் பிறந்தார். அவர் பிறந்த சமயம் அவரது குடும்பம் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தது. மைக்கலாஞ்சலோ சிறு வயதாக இருந்தபோது ஒரு கல்வெட்டியின் வீட்டில் அவரது கண்கானிப்பில் விடப்பட்டார். அப்போதிருந்தே உளியையும், சுத்தியலையும் கையாளத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம் இருந்தது. தந்தையும், மாமன்களும் அவரது கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றுப் போயினர்.

ஓவியக்கலையைக் கற்றுகொள்ள அவர் அப்போது புகழ்பெற்றிருந்த 'Domenico Ghirlandaio' என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். மைக்கலாஞ்சலோவின் திறமையைப் பார்த்து அந்த ஆசிரியரே பொறாமைப்பட்டதாக ஒரு வரலாற்று குறிப்பு கூறுகிறது. மீன் சந்தைக்கு அடிக்கடி சென்று மீன்களின் கண்கள், செவுல்கள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்து பின்னர் அவற்றை தத்ரூபமாக வரைவாராம் மைக்கலாஞ்சலோ. பின்னர் 'Lorenzo de' Medici' என்பவரிடம் சிற்பக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினார் மைக்கலாஞ்சலோ.

ஒருமுறை பளிங்கு கல்லில் ஒரு முதியவர் சிரிப்பதைப்போன்ற சிற்பத்தை வடித்து அதற்கு மெருகேற்றிக்கொண்டிருந்தார் மைக்கலாஞ்சலோ. அதனைப் பார்த்த லொரான்ஸோ கிண்டலாக முதியவருக்கு எல்லாப் பற்களும் இருக்கின்றனவே என்று கேட்க சற்றும் தயங்காமல் உளியையும், சுத்தியலையும் எடுத்து மேல் வரிசையில் இருந்த பல்லை ஒருசில நிமிடங்களில் உடைத்தெடுத்தாராம். அந்த லாவகத்தைக் கண்டு அதிசயித்துப்போன லொரான்ஸோ மைக்கலாஞ்சலோவின் தந்தையின் அனுமதி பெற்று அவரை தன் சொந்த வீட்டிலேயே வைத்துக்கொண்டார். 1492-ஆம் ஆண்டு லொரான்ஸோ இறக்கும் வரை அவர்கூடவே இருந்து தனது சிற்பக்கலையை வளர்த்துக்கொண்டார் மைக்கலாஞ்சலோ.

Lorenzo di Pierfrancesco de' Medici என்ற அழகிய பெண்ணை காதலிக்கத் தொடங்கியபோதுதான் அவருக்குள் இருந்த கவிதை ஊற்று பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவர் பல கவிதைகளை இயற்றினார். 1495-ஆம் ஆண்டில் அவர் 'Sleeping Cupid' என்ற உறங்கும் காமதேவன் சிலையை செதுக்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் உருவாக்கிய 'Pieta' சிற்பம் இன்றும் 'Vatican' தேவாலாயத்தை அலங்கரிக்கின்றன. மைக்கலாஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்த்த சிற்பம் டேவிட் சிலை. ஓர் உருக்குலைந்து போன பளிங்கு கல்லிருந்து அவர் வார்த்தெடுத்த அற்புத சிற்பம்தான் அந்த டேவிட் சிலை. அந்த சிலையை உருவாக்க அவருக்கு பதினெட்டு மாதங்கள் தேவைப்பட்டன.

(http://3.bp.blogspot.com/-ARqJIbxVmjc/T1WjCXLANsI/AAAAAAAABLY/8nXQ-4qMiQM/s320/michelangelo-david.jpg)

1508-ஆம் ஆண்டு அவரது புகழை உலகமெங்கும் பரவச் செய்யப்போகும் ஓர் அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட கட்டளை என்று சொல்லலாம். சிஸ்டீன் தேவாலயம் (Sistine) கட்டப்படத் தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் அப்போது போப்பாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் அந்த தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் பைபிள் காட்சிகளை ஓவியங்களாக தீட்டித்தருமாறு மைக்கலாஞ்சலோவைப் பணித்தார். தான் ஓவியன் அல்ல வெறும் சி்ற்பிதான் என்று மைக்கலாஞ்சலோ எவ்வுளவோ எடுத்துக்கூறியும் போப் நிர்ப்பந்தித்ததால் மிகுந்த தயக்கத்தோடுதான் அவர் அந்த பணியை தொடங்கியதாக வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

ஓவியங்கள் வரைய வேண்டிய பரப்பளவு சுமார் பத்தாயிரம் சதுர அடி. ஐந்து உதைவியாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பணியைத் தொடங்கினார் மைக்கலாஞ்சலோ. ஆனால் அவரது முன்கோபத்தை தாளாத உதவியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக விலக தனி மனிதனாக தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போது இல்லை என்பதால் மின் விளக்குகளும் கிடையாது. வெறும் மெழுகுவர்த்தியின் ஒளியில் உணவு, உறக்கம் மறந்து தனது அதீத ஓவியங்களை தேவாலயத்தின் மிக உயரமான உட்கூரைகளில் தீட்டினார் மைக்கலாஞ்சலோ. பல ஓவியங்களை அவர் படுத்துக்கொண்டே தீட்டியதால் தூரிகையிலிருந்து சிதறிய வண்ணங்கள் அவரது கண்களை பதம் பார்த்தன.

(http://3.bp.blogspot.com/--wX4B0mGLU8/T1WjziSTXoI/AAAAAAAABLw/mDkKRTIbe-4/s320/SA-2.gif)

ஓவியங்கள் தீட்டும்போது இதுபோன்ற சில இடையூறுகள் ஏற்பட்டாலும் எந்த சிரமமும் பார்க்காமல் இரவு பகலாக உழைத்து நான்கு ஆண்டுகளில் தனது ஓவிய உற்சவத்தை நிறைவு செய்தார் மைக்கலாஞ்சலோ. இன்று தங்களை சிறந்த ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பும் எவரும் முதலில் தரிசிக்க வேண்டிய காட்சிக்கூடமாக திகழ்கிறது சிஸ்டீன் தேவாலாயம். மைக்கலாஞ்சலோ வரைந்த 'ஆதாமின் பிறப்பு' என்ற ஓவியம் உலக ஓவியர்கள் இன்றும் பார்த்தும் வியக்கும் ஓர் அற்புத காவியம். இறைவனின் விரல் உயிரற்ற ஆதாமின் விரலைத் தீண்ட ஆதாம் உயிர் பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தில் ஆதாமுக்கே அடையாளம் தந்திருக்கிறார் மைக்கலாஞ்சலோ.

அதேபோன்ற சுமார் 340 ஓவியங்களை சிஸ்டீன் (Sistine) தேவாலயத்தின் சுவர்களிலும், கூரைகளிலும் வடித்து தனது தூரிகையால் ஒரு ஓவிய ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் மைக்கலாஞ்சலோ. அவருக்கு 60 வயதானபோது மைக்கலாஞ்சலோவை வத்திகனின் அரசவை கட்டடக்கலை நிபுனராகவும், சிற்பியாகவும் ஓவியராகவும் நியமித்தார் மூன்றாம் போப். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட மைக்கலாஞ்சலோவின் தூரிகை அடுத்த ஏழு ஆண்டுகளில் தீட்டிக்கொடுத்த ஓர் அற்புத ஓவியம்தான் The Last Judgment. அவருடைய நெருங்கிய நண்பரான Ascanio Condivi மைக்கலாஞ்சலோவை வருணிக்கும்போது இவ்வாறு சொல்கிறார்.

“மைக்கலாஞ்சலோ ஒரு ஓவியத்திலோ அல்லது சிற்பம் செதுக்குவதிலோ ஈடுபட்டால் அவரது கவனத்தை எந்த சக்தியாலும் திசை திருப்ப முடியாது. உணவுகூட அவருக்கு இரண்டாம்பட்சம்தான். பலமுறை உடைகளையும், காலணிகளையும் கழற்றாமலேயே உறங்குவார் வேலை செய்வார். அதனால் சில சமயங்களில் அவர் காலுறையை கழற்றும்போது அவரது தோலும் உரிந்து வரும். தான் செய்யும் வேலையின் மீது அவருக்கு அவ்வுளவு ஈடுபாடு இருந்தது”

திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை தனியாகவே வாழ்ந்த மைக்கலாஞ்சலோவைப் பார்த்து அவரது நண்பர் ஒருமுறை உங்கள் பெயர் சொல்ல உங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று கவலையோடு கேட்டார். அதற்கு மைக்கலாஞ்சலோ என்ன சொன்னார் தெரியுமா?

"ஓவியமும் சிற்பமும்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி, என்னுடைய படைப்புகள்தான் நான் இந்த உலகிற்கு விட்டு செல்லும் எனது குழந்தைகள் அவற்றுக்கு அவ்வுளவாக மதிப்பு இருக்காது என்றாலும் அவற்றில் நான் என்றென்றும் வாழ்வேன்"

(http://2.bp.blogspot.com/-6DrR2OZRks0/T1WkBFFqH2I/AAAAAAAABL4/BnOAWxMRcpQ/s320/Michelangelo_in_his_Studio_1849-1850.jpg)

மதிப்பு இருக்காது என்று அவர் விட்டுச்சென்ற படைப்புகள் இன்று விலைமதிக்க முடியாதவை. மைக்கலாஞ்சலோவை போன்றவர்களை சந்திக்கும்போதுதான் வரலாறு நெஞ்சு உயர்த்திக்கொள்ள முடிகிறது. அந்த மாபெரும் கலைஞன் 1564-ஆம் ஆண்டு தனது 89-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டபோது இனி இப்படி ஒரு கலைஞனை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று எண்ணி அந்த வரலாறும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். அவ்வுளவு திறமைகளையும் வைத்துக்கொண்டு சோம்பித் திரிந்திருந்தால் மைக்கலாஞ்சலோ மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்திருப்பார்.

அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் மிக எளிதான ஒன்றுதான். அவருக்கு வானம் வசப்பட்டதற்கான முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுத்த பணியில் காட்டிய ஈடுபாடு, விடாமுயற்சி, பயபக்தியுடன் கூடிய கடின உழைப்பும்தான். மைக்கலாஞ்சலோவைப்போல் நாம் ஊண் உறக்கம் மறந்து காரியங்களில் ஈடுபடத் தேவையில்லை. நாம் செய்யும் எந்த ஒரு வேலையிலும் நூறு சதவீத ஈடுபாடும், விடாமுயற்சியுன் கூடிய கடின உழைப்பும் இருந்தால் போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 10:56:59 AM
முகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) - வரலாற்று நாயகர்!

எந்த ஒரு துறையிலும் உச்சத்தை எட்டுவோருக்கு 'The Great' அல்லது   'The Greatest' என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்குகிறது வரலாறு. விளையாட்டுத் துறையில் அந்தத் தகுதியை எட்டிய ஒரு வீரரைப் பற்றி தெரிந்துகொள்ளவிருக்கிறோம். விளையாட்டுத் துறையில்  'The Greatest' என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அமெரிக்காவில் ஒரு கருப்பினத்தவர் குடும்பத்தில் பிறந்தார் முகமது அலி. பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.

(http://2.bp.blogspot.com/-EgOu6mjfGyA/T0mWpqt3yZI/AAAAAAAABKw/3mjFN6xRjj8/s320/Muhammad_Ali_NYWTS.jpg)

சிறு வயதிலிருந்தே அவர் உடல் வலிமை மிக்கவராக இருந்தார். அந்த வயதிலேயே மிகவும் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரராக வர வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பின்னர் கருப்பின முஸ்லீம் இயக்கத்தில் சேர்ந்து இஸ்லாமைத் தழுவிய அவர் முகமது அலி என தன் பெயரை மாற்றிக் கொண்டார். பதினெட்டு வயதானபோதே அனைத்துலக குத்துச் சண்டை விருதை வென்றார் அலி. 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட அவருக்கு தங்கபதக்கம் கிடைத்தது. அப்போதுகூட விளையாட்டு உலகம் அவரை சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

(http://2.bp.blogspot.com/-bL_adBmByqo/T0mWxYtAGpI/AAAAAAAABK4/tyllwimDYIE/s320/boxing_muhammad_ali_london_1427819.jpg)

1965-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் நாள்தான் முகமது அலி என்ற புலி வீறுகொண்டு எழுந்து குத்துச் சண்டை உலகில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் முகமது அலி சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி "உலக ஹெவி வெய்ட்" (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றார். குத்துச் சண்டை உலகில் ஒரு மாவீரன் உருவானதை அன்று விளையாட்டு உலகம் கண்டுகொண்டது. 1964 முதல் 1967 வரை "உலக ஹெவி வெய்ட்" குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தார் அலி. அதன் பின்னர் அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது. மீண்டும் அந்த பட்டத்தை வெல்ல அவர் Joe Frazier-யுடன் பொருதினார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.

விளையாட்டில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும் என்பதை உணர்ந்த அலி மனம் தளராமல் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். 1974-ஆம் ஆண்டு மீண்டும் ஜோ பிரேசியருடன் பொருதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் வென்றார். பிறகு Leon Spinks-யுடன் தோல்வியைத் தழுவிய முகமது அலி 1978-ஆம் ஆண்டு அதே Spinks-ஐ வீழ்த்தி உலக விருதை மூன்றாவது முறையாக மீண்டும் கைப்பற்றினார். உலக குத்துச் சண்டை வரலாற்றில் தன்னை வீழ்த்தியவர்களையே வீழ்த்தி உலக விருதை மூன்று முறை வென்ற முதல் வீரர் முகமது அலி என்பது குறிப்பிடதக்கது. அதன் பிறகுதான் அவருக்கு 'The Greatest' என்ற பட்டம் சூட்டப்பட்டது. அவர் 61 முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கியிருக்கிறார். அதில் 56 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவினார்.

(http://4.bp.blogspot.com/--Qyw3Z_wrSA/T0mW4A9-SEI/AAAAAAAABLA/bzlaW9mDRPM/s320/3665751_f520.jpg)

37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது. நான்காவது முறையாக அந்த விருதை வெல்லும் முயற்சியில் Larry Holmes-யுடன் பொருதி தோற்றார் முகமது அலி. அந்த தோல்விக்கு வயதும் ஒரு காரணம். ஆனால் ஏற்கனவே அவருக்கு கிடைத்திருந்த பெயருக்கும், புகழுக்கும் இந்த தோல்வியால் பாதிப்பில்லை. உலகம் முழுவதும் குத்துச் சண்டையைப் பிரபலபடுத்தியதில் முகமது அலிக்கு பெரும் பங்கு உண்டு. அவரைப் பின்பற்றி இப்போது அவரது மகள் லைலா அலி பெண்கள் குத்துச் சண்டை உலகில் கலக்குகிறார். முகமது அலியை மையமாக வைத்து 'The Greatest' என்ற திரைப்படமும் வெளியானது.

தமது பலத்தால் பலரை வீழ்த்திய முகமது அலியை Parkinson's நோய் வீழ்த்தியிருப்பது என்னவோ உண்மைதான். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் குத்துச்சண்டை உலகுக்கு அவர் கொண்டு வந்த புகழையும், வசீகரத்தையும் இன்னொருவர் எட்டிப்பிடிக்க காலம் பல ஆகலாம் என்பதே விளையாட்டு உலகின் கணிப்பு. கருப்பினத்தவர்கள் தோல் உயர்த்தி நடக்க காரணமாயிருந்த பலரில் முகமது அலிக்கு நிச்சயம் முக்கிய பங்கு உண்டு. அவர் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:

(http://1.bp.blogspot.com/-TLQsm4EGjJM/T0mXMecT1pI/AAAAAAAABLI/4U-ykF2CFJ4/s320/Muhammad-Ali.jpg)

"வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்".

உங்கள் மனதிலும் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் உண்டா? திறமைகூட முக்கியம் இல்லை. மனோதிடம் உண்டா? அப்படியென்றால் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடுங்கள். முகமது அலியைப்போல் உங்களுக்கும் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:01:22 AM
'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாற்று நாயகர்!

நம்மில் பலர் இருமொழி ஆற்றலைப் பெற்றிருந்தாலும் நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசிக்கொள்ளும் போது ஏற்படும் உணர்வு ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படுவதில்லை. தாய்மொழியில் பேசிக்கொள்ளும் சுகமே அலாதியான ஒன்று. அது எந்த மொழிப் பிரிவினருக்கும் பொருந்தும். நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதை நினைத்து நாம் நியாயமாக மகிழலாம். ஆனால் மகிழ்வதோடு நின்றுவிட்டால் நாம் நன்றி மறந்தவர்களாவோம். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்ற ஒரு உண்மையே நமது மொழி 'செம்மொழி' தகுதி பெறுவதற்கு போதும் என்றாலும், அதனை அதிகாரப் பூர்வமாக பெற அது பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டியிருந்தது.

பல மேடு பள்ளங்களை கடந்து இன்று நமது மொழி இளமைக் குன்றாமல் இருப்பதற்கான பல காரணங்களுள் ஒன்று நமது மொழியைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்ட தமிழறிஞர்கள். பலரை நாம் நினைவுகூற வேண்டுமென்றாலும் ஒருவர் தனிப்பட்டு நிற்கிறார். அவர்தான் தமிழ் முனிவர் என்றும், தமிழ்த்தாத்தா என்றும் தமிழுலகம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். உ.வே.சா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார் உ.வே.சா. தந்தை பெயர் வேங்கட சுப்பையர், தாயார் சரஸ்வதி அம்மாள். சிறுவயதில் அவர் திண்ணைப் பள்ளியில் ஏடு எழுத்தாணியும் கொண்டு பயின்றார். தமிழில் புலமைப் பெற்றிருந்த தந்தையிடமிருந்தே ஆரம்பத்தில் தமிழ் கற்றார் உ.வெ.சா. நிகண்டு, சதகம் போன்ற பழமையான நூல்களை உ.வே.சா அவர்களுக்கு கற்பித்தார் தந்தை.

(http://4.bp.blogspot.com/-75qK6caz9-c/Tz-GMDeBa3I/AAAAAAAABKU/sL3ox8yM6eI/s320/01THEF_SWAMINATHA_IY_14581a.jpg)

பள்ளிப்படிப்பை முடித்ததும் தமிழின் மீதிருந்த ஆழமான காதலால் தமிழில் புலமை பெற விரும்பிட உ.வெ.சா பல்வேறு தமிழறிஞர்களிடம் தமிழ் கற்றார். தமது 17-ஆவது வயதில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மாணவராக சேர்ந்தார். அவரிடம் ஆறு ஆண்டுகள் இருந்து ஆழமான தமிழ் அறிவைப் பெற்றார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு சுப்ரமணிய தேசிகர் என்பவரிடம் மாணவராக சேர்ந்தார். இப்படி பல அறிஞர்களிடம் பாடம் கற்றறிந்ததால் உ.வே.சா ஒரு தலைசிறந்த தமிழறிஞர் ஆனார். அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லை. பழமையான ஓலைச் சுவடிகள்தான் இருந்தன. அவை அச்சடிக்கப்படாமல் கைகளால் எழுதப்பட்டவை என்பதால் அவற்றை படித்து உணர்வதற்கே தனித் திறமை தேவைப்பட்டது. அதை படிப்பதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களை பிழையில்லாமல் எழுத்தாணி கொண்டு ஓலைகளில் எழுதுவார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

25-ஆவது வயதில் உ.வே.சா அவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அவர் கற்பித்த முறை மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் பல மாணவர்கள் தமிழை நேசிக்கத் தொடங்கினர். 1903-ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இணைந்தார். அவர் சேர்வதற்கு முன் மாணவர்களால் மதிக்கப்படாத இருந்த தமிழ்த் துறைக்கு உ.வே.சா சேர்ந்த பிறகு புது மரியாதை கிடைத்தது. பற்றோடும், பாசத்தோடும் பாடம் கற்பித்த அவரது அணுகுமுறையால் மாணவர்கள் தமிழை மருந்தாக பார்க்காமல் விருந்தாக பார்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் கற்பித்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார் உ.வே.சா.

(http://4.bp.blogspot.com/-86VqZvbdetU/Tz-GRFtKG8I/AAAAAAAABKc/9OqBAmKetlE/s320/uvswami.jpg)

அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடி வடிவில்தான் இருந்தன. அவற்றை படியெடுப்பது சிரமம் என்பதால் ஒவ்வொரு இலக்கியத்திலும் ஒரு படிதான் இருக்கும். பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்தன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சாக வெளியிட்டாலொழிய அவற்றை தமிழுலகம் இழந்து விடும் என்று கலங்கினார் உ.வே.சா. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிக்கும் அரிய பணியை தம் தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். அதற்காக அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒருமுறை திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதை பெறுவதற்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார்.

கிடைத்தற்கரிய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை "என் சரித்திரம்" என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர்.  என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுலதான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்... "ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில...சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்"... என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

(http://2.bp.blogspot.com/-lyq_Y-zU_fo/Tz-GcXXsMVI/AAAAAAAABKk/d5pilazYTJE/s320/uvesa.jpg)

அதன் பிறகு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என பல அரிய நூல்களையும், ஓலைச்சுவடியிலிருந்து மீட்டு புத்தகங்களாக பதிப்பித்தார். அவரின் தமிழ்த்தொண்டை பாராட்டி 1906-ஆம் ஆண்டு  'மஹாமஹோபாத்யாய' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே சுவாசித்த தமிழ்த்தாத்தாவின் உயிர் மூச்சு 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி அவரது 87-ஆவது அகவையில் நின்றது. அந்தக்கணம் இனிமேல் தம்மை யார் காப்பாற்றப்போகிறார் என்று எண்ணி தமிழன்னையும் கலங்கியிருக்க வேண்டும்.

தமிழன்னைக்கு அணி சேர்த்தவர்கள் அணியில் உ.வே.சா என்ற தமிழ்த்தாத்தாவுக்கு நிலையான இடம் உண்டு. அவரது அரும் முயற்சி இல்லாதிருந்தால் பல தமிழ்க் கருவூலங்களை காலம் கரைத்திருக்கும். அந்த தனி மனிதனின் முயற்சியால் தமிழன்னை மெருகேறியிருப்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் செம்மொழியானதற்கு அவரைப் போன்றவர்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். நமது மொழியின் முக்கிய கூறுகள் சிதைந்து போவதை தடுத்து நிறுத்த அவருக்கு உறுதுணையாய் இருந்தவை சிந்தனைத் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், விடாமுயற்சியுடன் எத்தனை இன்னல்கள் வந்தாலும் எண்ணியதை முடிக்கும் துணிவும்தான். அதே பண்புகள் நமக்கும் இருந்தால் உ.வே.சா ஐயாவுக்கு தமிழ் என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கு நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:08:11 AM
சார்லஸ் டார்வின் ( "பரிணாமவியலாரின் தந்தை") - வரலாற்று நாயகர்!

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம்' என்ற சொற்றொடரை நம்மில் பலர் கேட்டிருப்போம். கல் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றி விட்டான் என்பது கேட்பதற்கு சற்று அபத்தமாக இருந்தாலும் தமிழினம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை எடுத்துக்கூற அப்படிப்பட்ட ஒரு மிகையான சொற்றொடர் உருவாக்கப்படிருக்கலாம். சரி கல்லும், மண்ணும் கிடக்கட்டும் மனிதன் எப்படி தோன்றினான் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல்லோருக்கும் உதிக்கும் ஒரு கேள்விதான் அது. கிட்டதட்ட எல்லா மதங்களும் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்கின்றன. எனவே மத நம்பிக்கையற்ற சிறுபான்மையினரைத் தவிர்த்து உலகின் பெரும்பான்மையினர் தங்களை கடவுளின் படைப்பு என்று அன்றும் நம்பினர், இன்றும் நம்புகின்றனர்.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்பபட்டு வந்த அந்த சித்தாந்தத்தை தூக்கி எறிந்தது இன்னொரு சித்தாந்தம் 1859 ஆம் ஆண்டு. “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” ஆறு நாட்களில் கடவுள் மனிதனை படைத்தார் என்ற பைபிளின் கூற்றை நம்பியிருந்த இங்கிலாந்து தேசத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரைத்தான் நாம் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின். 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தின்  Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.

(http://3.bp.blogspot.com/-JIvAa8LXBBU/TzcMi7MTT7I/AAAAAAAABJA/gsAC93TAOAA/s320/Charles_Darwin_Wallpaper__V2_by_CharlesDarwin.jpg)

சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை natural 'theology' அதாவது 'இறையியல்' பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.

தமது 22-ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரினாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

(http://4.bp.blogspot.com/-Jg_JElfL9eU/TzcL753FI2I/AAAAAAAABI4/6ebWVeMgmX0/s320/charlesdarwin.jpg)

ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல்  Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்த பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாக படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளை கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியை பெற்றிருக்கின்றனவா? என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது.

தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30-ஆவது வயதில்  Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்கு பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

(http://1.bp.blogspot.com/-Gd7DiJ4aX8c/TzcNa5A6RWI/AAAAAAAABJI/5hZOAMuwomY/s320/Darwin.jpg)

புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறி விடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859-ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை 'Natural Selection' என்றும் "survival of the fittest" என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

(http://2.bp.blogspot.com/-m3Q5K-9tGiM/TzcNwLyVKDI/AAAAAAAABJY/dQmONOc9lUE/s320/Teor%C3%ADa+sobre+el+origen+de+las+especies+-+Charles+Darwin.jpg)

பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.


டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்துஉயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான். "வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது" என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.

(http://4.bp.blogspot.com/-Cwbaoh8mXCE/TzcNhNxvvhI/AAAAAAAABJQ/p4Epw5CHsWE/s320/charles-darwin.jpg)

"உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்".

மனுகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882-ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் 'விஞ்ஞானிகளின் கார்னர்' என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் எப்போதும் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டுபிடிப்பான பரிணாம கோட்பாட்டிற்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வியாக இருந்தது.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!.

டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

(http://3.bp.blogspot.com/-SnSX4gXNvZY/TzcN5WIxRSI/AAAAAAAABJg/PkL0x-yOoxE/s320/Charles_Darwin_01.jpg)

காண்பனவற்றில் உண்மையைத் தேடும் ஆர்வம், புரியாதவற்றையும் அணுக்கமாக ஆராயும் பொறுமை, மத நம்பிக்கையின் ஆணி வேரையே அசைக்கும் என்றும் தெரிந்தும் தாம் உண்மை என்று நம்பியவற்றை அச்சமின்றியும், தயங்காமலும் உலகுக்கு சொன்ன துணிவு. இவைதான் டார்வின் என்ற மாமனிதனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள். அவருக்கு இருந்த ஆர்வம், பொறுமை, துணிவு, தன்னம்பிக்கை ஆகிய பண்புகள் நமக்கு இருந்தால் நாம் விரும்பும் வானம் நிச்சயம் நமக்கும் தயங்காமல் வசப்படும்!.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:13:25 AM
சார்லஸ் டிக்கென்ஸ் - வரலாற்று நாயகர்!

நாம் உயர்நிலைப்பள்ளியில் பயின்றபோது ஆங்கில பாடத்தில் Oliver Twist என்ற நாவலை மறந்திருக்க முடியாது. குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாக மாறி ஒரு சிறுவன் படும் இன்னல்களை சித்தரிக்கும் ஓர் அற்புத நாவல் அது. 'ஆலிவர் ட்விஸ்ட்' என்ற அந்த கதாபாத்திரமும் அந்த நாவலும் தத்ரூபமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்த கதாசிரியர் தனது சொந்த அனுபவங்களை எழுதியிருப்பதுதான். பொதுவாக கற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவக் கதைகளுக்கு வீரியம் அதிகமாக இருக்கும். அப்படி வீர்யமிக்க பல இலக்கிய படைப்புகளைத் தந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு எழுத்தாளரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

(http://3.bp.blogspot.com/-O_WXLH3G1YU/TyS61dgmgBI/AAAAAAAABIE/7RJTVBU8fVE/s1600/young-charles-dickens.jpg)

ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இரண்டாவது உயர்ந்த நிலையை அவருக்கு தந்திருக்கிறது ஆங்கில இலக்கிய உலகம். ஆம் அவர்தான் உலகபுகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ். 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி இங்கிலாந்தின் Portsmouth என்ற இடத்தில் பிறந்தார் டிக்கென்ஸ். ஏழ்மையான குடும்பம் அவரது தந்தை ஜான் டிக்கென்ஸ் கப்பலில் ஓர் எழுத்தராக பணிபுரிந்தார். வரவுக்கு மீறி செலவு செய்யும் பழக்கம் அவருக்கு இருந்ததால் கடன் தொல்லை காரணமாக அவர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. அப்போது சார்லஸ் டிக்கென்ஸ்க்கு வயது பனிரெண்டுதான். அதுவரை பள்ளியில் நன்கு பாடம் படித்து சார்லஸ்க்கு அதன்பிறகு கல்வியைத் தொடர முடியாத நிலை. அவர் விரும்பி படித்து பாதுகாத்து வந்த கதைப் புத்தகங்களையும், அவருடைய படுக்கையையும்கூட விற்று பணம் சேர்க்க நிலை ஏற்பட்டது.

தந்தை சிறைக்குச் சென்றவுடன் சார்லஸை பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தார் தாயார். பள்ளிக்கூடம் என்றால் கொள்ளைப் பிரியமாக இருந்த சார்லஸ்க்கு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு வந்ததால் வேறு வழியின்றி வேலை செய்தார். அப்போது அவருக்குக் கிடைத்த சம்பளம் வாரத்திற்கு ஆறு சிலிங்குகள் (Shillings) . அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தபோது மிகுந்த சிரமங்களை அனுபவித்தார் சார்லஸ். எலிகள் நிறைந்த ஒரு பழைய கட்டடத்தில் அந்த தொழிற்சாலை அமைந்திருந்தது. சின்ன சிறிய நெஞ்சங்களில் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அங்கு வாழ்க்கை சிரமமாக இருந்தது. அந்த பிஞ்சு வயதில் தான் பட்ட சிரமங்களை எண்ணி அவர் பின்னாளில் நிறைய எழுதினார். அப்படி அவர் எழுதிய பிரபலமான நாவல்தான் 'Oliver Twist'.

(http://3.bp.blogspot.com/-V58GG04vHGM/Ty-8ebuUDtI/AAAAAAAABIo/qyXGYuP7kAw/s320/OliverTwist.jpg)

சில மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். புதிய பள்ளியில் அவர் சிறிய கதைகளை எழுதி தன் நண்பர்களிடம் காட்டுவார், சிறு வயதிலேயே அவருக்கு கதைகள் எழுதுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் மொழி சம்பந்தபட்ட நடவடிக்கைகளுக்கு அவர் மாணவர் தலைவரானார். பதினைந்தாவது வயதில் ஒரு சட்ட நிறுவனத்தில் அவர் ஒரு எழுத்தராக பணிக்கு சேர்ந்து சட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பிறகு The Morning Chronicle, Mirror of Parliament, Joe son போன்ற செய்தித்தாள்களில் நிருபராக பணிபுரிந்தார். நாடாளுமன்ற நிருபராகவும் சிலகாலம் பணிபுரிந்தார். 1837-ஆம் ஆண்டு முதல் 1839 வரை The Pickwick Papers என்ற தலைப்பில் ஒரு சஞ்சிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.

ஆங்கில உலகில் அடுத்த வார இதழ் எப்போது வரும் என்று பலரை எதிர்பார்க்க வைத்த முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்ஸ்தான். அதன் பிறகு அவரது எழுத்துல வாழ்க்கை பிரகாசமானது முழுநேர நாவலாசிரியானார்.  Oliver Twist, Nicholas Nickleby, Barnaby Rudge, A Christmas Carol, Martin Chuzzlewit, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations போன்ற புகழ்பெற்ற சமூக மற்றும் வரலாற்று நாவல்களை அவர் எழுதினார். ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியரை தவிர்த்து நினைவில் நிற்கும் பல உன்னத கதாபாத்திரங்களை உருவாக்கியவர் சார்லஸ் டிக்கென்ஸ் மட்டுமே. சார்லஸ் டிக்கென்ஸின் படைப்புகள் ஆங்கில இலக்கிய உலகின் நிரந்தர கருவூலங்களாக கருதப்படுகின்றன.

(http://2.bp.blogspot.com/-gh6V-RyrN9E/TyS8CVCtE4I/AAAAAAAABIU/CFudUXRpii0/s320/CharlesDickens.jpg)

விறுவிறுப்பான கதையொட்டமும், சுவாரசியமான நகைச்சுவையும், தரமான வசனநடையும், உயிரோட்டமுள்ள கதாபாத்திர அமைப்பும் சார்லஸ் டிக்கென்ஸ் எழுத்தின் பலங்கள். எளியவர்களின் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் துயரங்களை அவர் தத்ரூபமாக எடுத்துக்கூறுவதில் வல்லவர். அதனால்தான் தான் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் மிகவும் விரும்பபட்ட ஒரு நாவலாசிரியராக விளங்கினார். எழுத்துலகில் பிரபலமடைந்ததும் தம் நூல்களை அறிமுகப்படுத்த அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்தார். 1842-ல் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் சென்ற அவர் அங்கு அனைத்துலக பதிப்புரிமைக்காகக் குரல் கொடுத்தார். ஏனெனில் அவரது புத்தகங்களை அனுமதியின்றி அச்சடிப்பதில் அமெரிக்கப் பதிப்பகங்கள் ஈடுபட்டிருந்தன. அதனைத் தவிர்த்து அமெரிக்காவில் அடிமைத்தலையை அகற்றுவதற்கும் அவர் குரல் கொடுத்தார்.

தமது 38-ஆவது வயதில் Household Words என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து All the Year Round என்ற மற்றொரு பத்திரிகையைத் தொடங்கி இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார். 1865- ஆம் ஆண்டு பார்ஸுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடுமையான இரயில் விபத்தில் சிக்கிக்கொண்டார் டிக்கென்ஸ். அந்த விபத்தில் உடல் வலிமை குன்றிப்போனார்.  அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தமது புத்தகங்களை பிரபலபடுத்த அமெரிக்கா சென்றார். அது வெற்றிகரமான பயணமாக அமைந்தாலும் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. 1870-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தமது 58-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டார். இறந்தபிறகு தமது உடல் சாதாரண இடுகாட்டில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு எதிராக அவரது உடல் புகழ்பெற்ற Westminster Abbey-யில் 'Poets Corner' என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

(http://1.bp.blogspot.com/-jz89xJoZT9Q/TyS8KNrPw-I/AAAAAAAABIc/i6B2uTlolsc/s320/Charles_Dickens.jpg)

ஆங்கில இலக்கிய உலகம் கொண்டாடும் சார்லஸ் டிக்கென்ஸ் என்ற நாவலாசிரியர் மிகச்சிரமமான பிள்ளைப் பருவத்தையும், ஏழ்மையையும் சந்தித்ததோடுகுழந்தைத் தொழிலாளி என்ற அவலத்தையும் சுமந்து வந்தவர். அவருக்கு ஏற்பட்ட வடுக்களையும், ரணங்களையும், வலிகளையும் எழுத்தாக மாற்றி இலக்கிய உலகில் உயர்வு கண்டவர். சோதனைக்குள்ளாகும்போது சோர்ந்து போனால் சாதனைகளைப்பற்றி நினைத்துகூட பார்க்க முடியாது என்ற உண்மையைத்தான் அந்த இலக்கிய பிரம்மாவின் வாழ்க்கை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. அதைத்தான் கவிஞர் பா.விஜய் இவ்வாறு கூறுகிறார். "இழப்பு என்பது எதுவுமே இல்லை உன் நம்பிக்கை உன்னிடம் உள்ள வரை" வாழ்க்கையில் நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போடும் எவருக்கும் சார்லஸ் டிக்கென்ஸ்க்கு வசப்பட்டதைப் போன்று நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்!.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:19:27 AM
ஆப்ரா வின்ஃப்ரெ (The Oprah Winfrey Show) - வரலாற்று நாயகி!

"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது"

பிரபலத்தின் உச்சியில் இருந்த ஒரு பெண் தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தக் கதையைக் கூறியபோது ஒரு தேசமே வாயடைத்துப் போனது.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பதுதான் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்பு. அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவரே கூறிய தன் சொந்தக்கதை அது. அதன்பிறகு பலர் தங்களது கருத்துக்களைகூற "குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்" என்று ஒரு புதிய சட்டத்தையே அறிமுகம் செய்தது அந்த தேசம். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் அந்தப்பெண் எதைப்பற்றி பேசினாலும் அந்தக் கருத்துகள் நாடு தழுவிய அளவில் சிந்தனைகளை தூண்டிவிட்டன, பலரின் மனசாட்சிகளை கிண்டிவிட்டன. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் முன் மண்டியிட்டன. அவரது நிகழ்ச்சியில் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளர் தோன்றினால் அடுத்த நாளே அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனை விண்ணை முட்டும். ஒருமுறை மாடுகளுக்கு ஏற்படும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியிருந்த சமயத்தில் தனக்கு 'ஹேம்பர்கர்' சாப்பிட பயமாக இருக்கிறது என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்ன ஒரு வார்த்தையால் அந்த தேசத்தின் மாட்டிறைச்சி வியாபாரமே நொடித்து போகுமளவுக்கு மோசமடைந்தது.

அந்த அதிசயப்பெண் யார்? என்பது இந்நேரம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இன்று 132 நாடுகளில் அவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் மட்டும் தினசரி சுமார் 22 மில்லியன் பேர் சலிப்பு தட்டாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கின்றனர். இத்தனைக்கு அது ஒரு இசை நிகழ்ச்சியோ, விளையாட்டு நிகழ்ச்சியோ, கதம்ப நிகழ்ச்சியோ அல்ல.  Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சி. ஆம் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத சிகரங்களை தொட்டு இன்றும் சின்னத்திரையின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆப்ரா வின்ஃப்ரெயைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

(http://1.bp.blogspot.com/-ZXq2MELe11A/TyP2NCcnkPI/AAAAAAAABHU/q6PWBMFkmyY/s320/oprah-winfrey-network-450kc033011.jpg)

1954 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில்  Kosciusko என்ற ஊரில் பிறந்தார் Oprah Gail Winfrey. திருமணம் செய்து கொள்ளாத Vernon Winfrey & Vernita Lee இருவரும் மகள் ஆப்ரா பிறந்தவுடனேயே பிரிந்தனர். பெற்றோரின் அன்பும் அரவனைப்பும் இல்லாமல் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார் ஆப்ரா. ஆறு வயதானபோது அவர் தாயுடன் வாழச் சென்றார். அந்தக்கால கட்டத்தில்தான் உறவினர்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆப்ரா இளம் குற்றவாளிகளை தடுத்து வைக்கும் இல்லத்திற்கு முதலில் அனுப்பப்பட்டார் அங்கே இடம் இல்லாததால் உடலிலும், மனதிலும் பல ரணங்களை சுமந்து கொண்டு தனது 14 ஆவது வயதில் Nashville-யில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

முடி திருத்தும் வேலை செய்து வந்த தந்தை மிகவும் கண்டிப்பானவர். தனது மகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து அவற்றைப் பின்பற்ற சொன்னார். வாழ்க்கைக்கு வழிகாட்டினார் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி அறிக்கை எழுத வேண்டும். தினசரி ஐந்து புதிய சொற்களை கற்றுக்கொள்ளா விட்டால் ஆப்ராவுக்கு இரவு உணவு கிடையாது. இரவில் வெகுநேரம் வெளியில் இல்லாமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே கட்டுக்கோப்பாக வளர்ந்தார் ஆப்ரா. நிறைய வாசித்ததால் அவருக்கு நன்றாகவும், சுவாரசியமாகவும் பேசும் தைரியம் வந்தது. பள்ளியில் நாடகக் குழுவில் சேர்ந்து சிறந்த பேச்சாளருக்கான ஆயிரம் டாலர் பரிசை வென்றார்.

(http://2.bp.blogspot.com/-Fz0wn34wBrQ/TyP2XEGoXyI/AAAAAAAABHc/OsHX9ekoz7k/s320/Oprah-Winfreys-School-Photo1.jpg)

Nashville - நகரத்தின் Miss Fire Prevention - என்ற தீ தடுப்புப் பட்டத்தை வென்றார். அதனை வென்ற முதல் கருப்பினப் பெண் அவர் என்பது குறிப்பிடதக்கது. 1971- ஆம் ஆண்டில் அவருக்கு 17 வயதானபோது Miss Black Tennessee என்ற கருப்பு அழகி பட்டத்தை வென்றார். அதே ஆண்டு W-VOL என்ற வானொலியில் அவருக்கு பகுதிநேர செய்தி வாசிப்பாளர் வேலை கிடைத்தது. ஒளிப்பரப்புத் துறையில்தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய ஆப்ராவுக்கு படித்துக் கொண்டிருந்தபோதே CBS தொலைக்காட்சியில் இரவு செய்திகள் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியை செய்து கொண்டே 1976 ஆம் ஆண்டு டென்னஸி ஸ்டேட் ( Tennessee State University) பல்கலைக்கழகத்தில் பேச்சுத்தொடர்பு மற்றும் நாடக கலைத் துறைகளில் பட்டம் பெற்றார். அதன் பிறகு Baltimore வந்த ஆப்ரா இன்னொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ABC-யில் ஒரு நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் சேர்ந்தார்.

செய்தி வாசிக்கும்போது எதாவது தவறு செய்தால் மற்றவர்கள் மன்னிக்கவும் என்று சொல்வார்கள். ஆனால் ஆப்ரா கணிரென்று சிரித்து விடுவார். ஒருமுறை விபத்து ஒன்றில் பொதுமக்கள் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் வாசித்த போது அழுது விட்டார். இவற்றால் அவரை செய்திப் பிரிவிலிருந்து தூக்கி Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சிக்கு மாற்றியது நிர்வாகம். எழுதியதை வாசிப்பதை விட பேச்சு நிகழ்ச்சியில் இயல்பாக பேச முடியும் என்பதால் ஆப்ராவின் பல்வேறு பரிணாமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிக்காக்கோ வந்த ஆப்ராவுக்கு பிரபலத்தில் அடிமட்டத்தில் இருந்த AM Chicago என்ற காலை நேர பேச்சு நிகழ்ச்சியை பிரபலமாக்கும் கடினமான பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டின் அதனை சிக்காக்கோவில் அதிக பேர் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாற்றிக் காட்டினார் ஆப்ரா.

(http://2.bp.blogspot.com/-nPqg8-IuKVA/TyP2kSc18zI/AAAAAAAABHk/Crh4GBjY0bo/s320/50913.opahanddaniparents.jpg)

அவரது திறமையைப் பார்த்து மலைத்துப்போன அந்த தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சியை "The Oprah Winfrey Show" என்று பெயர் மாற்றம் செய்தது. 1985 செப்டம்பரில் தொடங்கிய அந்த நிகழ்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் ஓர் அசாதாரண சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் ஒளிபரப்பத் தொடங்கியது. அதன் பிறகு ஆப்ராவும், அவரது நிகழ்ச்சியும் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளை பட்டியலிட நேரம் போதாது. 1985-ஆம் ஆண்டில் 'The Color Purple' என்ற திரைப்படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆப்ரா. 1986-ஆம் ஆண்டு  'Harpo Productions' என்ற தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு தனது சொந்த நிகழ்ச்சியின் உரிமையை வாங்கினார்.

(http://4.bp.blogspot.com/-srjCFY1iO68/TyP3XcqSq7I/AAAAAAAABH8/tz1vFjOn57g/s320/oprahindex.jpg)

வரலாற்றில் 'Talk Show' நிகழ்ச்சியை சொந்தமாக தயாரித்து விநியோகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1993-ஆம் ஆண்டு அவரது உந்துதலின் பேரில்தான் பிள்ளைப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் அப்போதையை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். அந்த சட்டம் "ஆப்ரா மசோதா" என்றே அழைக்கப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு "Oprah's Book Club" என்ற புத்தகச் சங்கத்தை நிறுவினார். அவரது நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்படும் எல்லாம் புத்தகங்களும் அசுர வேகத்தில் விற்று முடியத் தொடங்கின. 1997 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய "Oprah's Angel Network" என்ற அறநிதி அமைப்பு பல்வேறு அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2000-ஆம் ஆண்டு தொடங்கி அந்த அமைப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் "Use Your Life" எனப்படும் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பரிசை வழங்கி வருகிறது.

(http://3.bp.blogspot.com/-WCgdIrEULbw/TyP21Cnw0jI/AAAAAAAABHs/ghN_h8hANZM/s320/osmond1_468x352.jpg)

ஒவ்வொரு வாரமும் தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கைக்கு நன்மை செய்யும் ஒருவருக்கு நூறாயிரம் அமெரிக்க டாலரை பரிசாக வழங்குகிறார் ஆப்ரா. 1998-ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க தேசிய தொலைக்காட்சிக் கழகம். 2000-ஆம் ஆண்டில் தமது சொந்த சஞ்சிகையைத் தொடங்கினார். மாதம் இரண்டரை மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலில் ஆப்ராவுக்கும் இடம் தந்திருக்கிறது டைம் சஞ்சிகை. 2003- ஆம் ஆண்டில் பில்லியனர் அதாவது ஆயிரம் மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆப்ரா என்று அறிவித்தது ஃபாக்ஸ் சஞ்சிகை. அந்த பெருமையை பெற்ற முதல் அமெரிக்க ஆப்பிரிக்கா வம்சா வழி பெண் ஆப்ரா என்பது குறிப்பிடதக்கது.

(http://4.bp.blogspot.com/-7NLZYSlCuqM/TyP3MvRlMAI/AAAAAAAABH0/I8_0ZoQvKnE/s320/Oprah-Winfrey_Charity.jpg)

என்ன மூலதனத்தைக் கொண்டு ஆப்ரா வின்ஃப்ரெ இவ்வுளவு பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார். கருப்பினத்தவர் என்ற பின்னடைவையும், திருமணம் ஆகாதோருக்கு பிறந்தவர் என்ற களங்கத்தையும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர் என்ற வலிகளையும், மற்ற பல ரணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவரால் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்க முடிகிறதென்றால் அதற்கு தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும், சமூகசீர்கேடுகள் தீர வேண்டும் என்ற உயரிய எண்ணமும், சமூக கடப்பாடும் காரணமாக அல்லாமல் வேறு எவை காரணங்களாக இருந்திருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்....ஆப்ரா வின்ஃப்ரெயைப் போன்று நமக்கும் சில ரணங்களும், வலிகளும் இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் உலகில் நம்மாலும் மாற்றங்களை கொண்டு வரமுடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்!.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:41:24 AM
பெஞ்சமின் ஃபிராங்கிளின் - வரலாற்று நாயகர்!

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான சுயசரிதைகளுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்ஸ்க்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் ஆகப் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. அவர்தான் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனுகுலத்தின் மேன்மையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியும், இலக்கியவாதியும், வர்த்தகரும், அரசியல்வாதியுமான பெஞ்சமின் ஃபிராங்கிளின்.

(http://3.bp.blogspot.com/-NPJ_C4sCYiQ/TxUGNXsmoPI/AAAAAAAABGs/6IaN4YBRWAo/s320/franklin2.jpg)

1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்புக் கடிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

வாசிப்பை நேசிப்போம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் புழுவாக படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததாலோ என்னவோ சுவாரசியமாக எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது.

(http://4.bp.blogspot.com/-aXfpEMCQ7Nw/TxUGZNXIIdI/AAAAAAAABG0/OiYiWZBvxYk/s320/Benjamin_Franklin.png)

இங்கு ஒரு சுவாரசியமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டும். ஃபிராங்கிளின் பல கட்டுரைகளை தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்ய சொல்வாராம் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard's Almanack என்ற சஞ்சிகையைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த சஞ்சிகைதான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்கு செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். ஆரம்பத்தில் புறக்கனிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்தவர் மின்னலில்கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அனியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய கண்டுபிடிப்புதான். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பாக்கியமாக கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் இன்னும் என்னவெல்லாம் உலகுக்கு தந்திருக்கிறார் தெரியுமா?

(http://4.bp.blogspot.com/-rHvdtqzhREc/TxUI8-si1mI/AAAAAAAABG8/mn11FWyuimg/s1600/inventor.gif)

நோட்டுப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா முறையில் நூல்களை வாங்கி படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் அவர்தான். Philadelphia-வின் தபால் துறையின் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது. இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான  Pennsylvania பல்கலைக்கழகம் அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளர், நேர்மையானவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது அரசு. அவரும் சட்டமன்ற உறுப்பினர், அரசதந்திரி, தூதர் என பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.

(http://1.bp.blogspot.com/-Son6x3IoJKg/TxUJGsRk28I/AAAAAAAABHE/cXZN_iHHU1c/s320/Benjamin-Franklin.jpg)

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அப்போது உலக நாடுகள் துக்கத்தில் மூழ்கின. அரசாங்க மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் உதிர்த்த பல பொன்மொழிகளை இன்றும் பல பேச்சாளர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அவற்றுள் மிகவும் பிடித்த பொன்மொழி:

"இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள்"

ஆம் வரலாற்றில் மிகவும் பயனுள்ள அர்த்தமுள்ள வழியில் செலவழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அமெரிக்கர்கள் மட்டுமல்ல நாம் அனைவருமே ஒட்டுமொத்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய வரலாற்று மாந்தர் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அவரைப்போல தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முற்படும் எவருக்கும் எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மையாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 05, 2013, 11:46:39 AM
'சர்' ஐசக் நியூட்டன் ( அறிவியல் மேதை 1642 - 1727) - வரலாற்று நாயகர்!

ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை ஒரு கை பார்த்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார்.

(http://2.bp.blogspot.com/-NVITTPJEghM/TvWnFwev8dI/AAAAAAAABEU/kS9XVCe0kI0/s320/00_N-Sir-Isaac-Newton.gif)

சிறுவயதிலேருந்து நியூட்டனுக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்கு பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாக பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் சிறுது காலத்தில் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி (Trinity College) கல்லூரியில் சேர்த்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்ததுதான்.

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள் அளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது (Wools Thorpe) தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மானிடர் அனைவரும் தங்கள் காலகட்டத்தில் பார்த்திருக்கக்கூடிய காட்சிதான் அது. ஆனால் அதனை இயற்கை என்று நினைத்து அப்படியே விட்டு விடாமல் அதைப்பற்றி சிந்தித்தார். ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்திதான் ஆப்பிள் பழத்தை புவியை நோக்கி விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். அவர் நினைத்தது சரிதான். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது இப்போது நாம் அறிந்த உண்மை. அதனை கண்டுபிடித்து சொன்னதுதான் நியூட்டனின் மகத்தான சாதனை.

(http://1.bp.blogspot.com/-CdETnmEzU90/TvWnw6e-1CI/AAAAAAAABEg/3fRqr0EazpA/s320/newton5.jpg)

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன பலம் பொருந்திய தொலைநோக்கிகள்கூட நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.

(http://2.bp.blogspot.com/-rQMJavgV_fQ/TvWn5tf1A_I/AAAAAAAABEs/mQevpNYUm1I/s320/newton3.gif)

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு  "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே ஆகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார்.

(http://1.bp.blogspot.com/-cjka09yYlt4/TvWodhzftDI/AAAAAAAABFM/Gzr9orAPynE/s320/newton+%25281%2529.jpg)

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது...

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது"

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! நியூட்டன் பிறவிலேயே ஒரு மேதை அதனால்தான் அவரால் இயற்கையின் விதிகளை கண்டறிந்து சொல்ல முடிந்தது. இறவாப்புகழும் பெற்று வானத்தை வசப்படுத்த முடிந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் அந்த பிறவி மேதைக்குகூட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். உங்களுக்கும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை தூண்களாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 07:31:07 PM
வாஸ்கோட காமா - வரலாற்று நாயகர்!

புதிய தேசங்களை கண்டுபிடிப்பதிலும், உலகின் ஆழ அகலங்களை அலசுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. பல நாடுகாணும் ஆர்வலர்களின் கவனம் இந்தியா பக்கமே இருந்திருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை இந்தியாவில் மட்டுமே கிடைத்த பல பொருட்களை ஐரோப்பியர்கள் அதிகமாக விரும்பினர். உதாரணத்திற்கு நவரத்தினகற்கள், மயிலிறகு, மிளகு, கிராம்பு போன்ற நறுமணப்பொருட்கள். முன்பெல்லாம் அந்தப்பொருட்கள் தரைமார்க்கமாகத்தான் ஐரோப்பாவுக்கு சென்று சேர முடிந்தது. வழியில் பல இடைத்தரகர்கள் இருந்ததாலும், தரைப்பயணம் நீண்டநெடியதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருந்ததாலும் அந்தப்பொருட்களின் விலை மிக அதிமாக இருந்தது. விமானமும் கண்டுபிடிக்கப்படாத காலகட்டம் அது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து விட்டால் வாணிபம் இன்னும் சுலபமாக இருக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக இருக்கும் என்பதுதான் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பியதன் மிகமுக்கியமான காரணமாக இருந்தது.

1498-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்து ஐரோப்பாவின் கனவை நனவாக்கினார் ஒரு போர்ச்சுக்கீசிய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம் பதித்த வாஸ்கோட காமா. 1460-ஆம் ஆண்டு போர்ச்சுக்கலின் Sines என்ற இடத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் வாஸ்கோட காமா. அவரது தந்தை Estevao da Gama ஒரு நாடுகாண் ஆர்வலராக இருந்தவர். இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றவர்களில் அவரும் ஒருவர் ஆனால் அந்தக்கனவு நிறைவேறாமலேயே அவர் இறந்துபோனார். தன் கனவை தன் மகன் நனவாக்குவான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது. அவரது மறைவிற்கு பிறகு போர்ச்சுக்கீசிய மன்னர் இரண்டாம் John அந்தப் பணியை முடித்துத் தருமாறு வாஸ்கோட காமாவைக் கேட்டுக்கொண்டார்.

(http://2.bp.blogspot.com/-iI85b-9hU8Q/UQZqcfI0kfI/AAAAAAAADOo/WyAVzmJdnxA/s1600/220px-Vasco_da_Gama_-_1838.png)

சிறந்த பள்ளியில் படித்த வாஸ்கோட காமா கடற்படை அதிகாரியாக சிலகாலம் பணியாற்றினார். எனவே இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்து வருமாறு மன்னர் தன்னை பணித்தபோது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க புறப்பட்டார். 1497-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் போர்ச்சுக்கல் தலைநகர் (Lisbon) லிஸ்பனிலிருந்து நான்கு கப்பல்கள் புறப்பட்டன. Sao Gabriel, Sao Rafael, Berrio, starship எனப்பெயரிட அந்த நான்கு கப்பல்களில் மொத்தம் 170 பேர் வாஸ்கோட காமாவின் தலைமையில் இந்தியா நோக்கி புறப்பட்டனர். கிட்டதட்ட 90 நாட்கள் நிலத்தையே காணாமல் கடலில் பயணம் செய்த அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் ஆப்பிரிக்காவில் தென்கோடியிலுள்ள Cape of Good Hope-ஐ அடைந்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவின் கரையோரமாக வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கினர்.

போர்ச்சுக்கீசிய மொழியில் Natal என்றால் கிறிஸ்துமஸ் என்று பொருள். அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நெருங்கியபோது அவர்களின் கப்பல் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையோரம் சென்றது. அந்தப்பகுதிக்கு Natal என்று பெயரிட்டார் வாஸ்கோட காமா. அதே பெயரில் அந்த இடம் இன்றும் அழைக்கப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த Mombasa, Mozambique, Malindi போன்ற துறைகளில் தரையிறங்கினார் வாஸ்கோட காமா. தங்கள் வர்த்தகத்திற்கு தீங்கு விளைவிக்க வந்தவர்கள் என்று கருதிய இஸ்லாமிய வர்த்தகர்கள் வாஸ்கோட காமாவை எதிரியாகப் பார்த்தனர். அவரது கப்பல்களையும் கைப்பற்ற முனைந்தனர். அவற்றையெல்லாம் முறியடித்ததோடு Malindi-யில் ஒரு குஜராத்தி மாலுமியை தன்னோடு சேர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த மாலுமியின் ஆலோசனையுடன் அரேபியப்பெருங்கடலில் பருவநிலை மாற்றங்களை உணர்ந்து 23 நாட்கள் கவனமாக கப்பல்களை செலுத்தி இந்தியாவின் தெற்கு கரையோரமுள்ள கேரளப்பகுதியின் கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வந்து சேர்ந்தார் வாஸ்கோட காமா. அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 10498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி.

(http://3.bp.blogspot.com/-Jz7YQTeEDIM/UQZqhDSYI_I/AAAAAAAADOw/lhHLB1YyDhA/s1600/Vascodagama.JPG)

கேரளாவின் கோழிக்கோடு துறைமுகம்தான் தென்னிந்தியாவின் மிகமுக்கியமான வர்த்தகமையமாக விளங்கியது. அப்போது கோழிக்கோட்டை ஆண்டு வந்த Samudiri (Zamorin) ராஜா வாஸ்கோட காமாவை வரவேற்று விருந்தளித்தார். ஆனால் வாஸ்கோட காமா தனக்கு உகந்த பொருட்களை பரிசாக தராததால் அவர் கோபமடைந்தார் மேலும் உள்ளூர் வர்த்தகர்களோடு பகைத்துக்கொள்ள விரும்பாத அவர் போர்ச்சுக்கீசியர்களோடு வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள மறுத்து விட்டார். இருப்பினும் நிறைய இந்திய நறுமணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் நாள் லிஸ்பன் நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இந்தப்பயணம் மிக கடுமையானதாக அமைந்தது வழியில் அவருடைய வீரர்கள் பலர் scurvy எனும் நோய்க்கு பலியாயினர். கிட்டதட்ட ஓராண்டு பயணத்திற்கு பிறகு சென்ற நான்கு கப்பல்களில் இரண்டு மட்டும் பத்திரமாக போர்ச்சுக்கல் வந்தடைந்தன. கப்பலில் சென்ற 170 பேரில் 55 பேர் மட்டுமே நாடு திரும்பினர்.

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய வாஸ்கோட காமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னர் அவருக்கு பெரும் பொருளை பரிசாக தந்தார். அதோடு இந்தியப்பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தைத்தையும் தந்து கெளரவித்தார். 80 ஆண்டுகளாக காணப்பட்ட கனவு நனவாகிவிட்டதாக மகிழ்ந்தார் மன்னர். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா நோக்கி பயணமானார் வாஸ்கோட காமா. இம்முறை தன்னை எதிர்த்த முஸ்லீம் வர்த்தகர்களை எதிர்த்து சமாளிக்கும் திட்டத்தோடு இருபது கப்பல்கள் புடைசூழ பயணமானார். அந்தப் பயணத்தில் சில கொடூரமான காரியங்களில் அவர் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. போர்ச்சுக்கீசியரோடு வர்த்தகம் புரிய மறுத்த பல இந்தியர்களை கொன்றார். ஒரு சம்பவத்தில் ஒரு கப்பலை வழிமறித்து பொருட்களையெல்லாம் அபகரித்துக்கொண்டு கப்பலில் இருந்த 380 பேரை அங்கயே வைத்து பூட்டி கப்பலை தீயிட்டு கொளுத்தினார் கப்பலிலிருந்த அத்தனை பேரும் பரிதாபமாக மடிந்தனர்.

(http://3.bp.blogspot.com/-KdxkrpT3W6M/UQZqyt7FejI/AAAAAAAADO4/vExm1QoFBlc/s1600/A_steel_engraving_from_the_1850's,_with_modern_hand_coloring.jpg)

இரண்டாவது முறை வாஸ்கோட காமா கோழிக்கோட்டிற்கு வந்த போது முஸ்லீம்களை அங்கிருந்து அகற்றுமாறு Samudiri மன்னரை கேட்டுக்கொண்டார். மன்னர் தயங்கவே வாஸ்கோட காமா ஈவு இரக்கமின்றி 38 பேரை கொன்று உடல்களை கடலில் மிதக்க விட்டார் அதோடு கோழிக்கோடு துறைமுகத்தையும் குண்டுகள் வீசி தாக்கினார். வேறு வழியின்றி அவரோடு வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டார் Samudiri ராஜா. அந்த உடன்படிக்கையோடு போர்ச்சுக்கல் திரும்பும் வழியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல போர்ச்சுக்கீசிய காலனிகளை உருவாக்கினார் வாஸ்கோட காமா.

மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோட காமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539-ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன. கடைசிப்பயணங்களில் அவர் புரிந்த கொடுமைகளையும், வன்முறைகளையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வாஸ்கோட காமாவின் கண்டுபிடிப்பு வரலாற்று சாதனைகளில் முக்கியமான இடத்தைப் பெற வேண்டிய ஒன்று. இந்தியாவிற்கான கடல் மார்க்கத்தை அவர் கண்டுபிடித்த பிறகு உலக நாடுகள் அதன் நேரடி வர்த்தகப் பலனை உணரத்தொடங்கின. இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் நேரடித் தொடர்புகள் ஏற்பட்டன.

(http://1.bp.blogspot.com/-gfRWu98jZNI/UQZrE5h-FAI/AAAAAAAADPA/ee-7L4Dbt1g/s1600/vasco-da-gama-2.jpg) (http://www.friendstamilchat.com)

பல நாடுகளில் போர்ச்சுக்கீசிய காலனிகள் உருவாவதற்கும் வாஸ்கோட காமாவின் முதல் பயணமே வழிவகுத்தது. அவரது பயண அனுபவங்கள் அடங்கிய 'Lusiadas' என்ற நூல் போர்ச்சுக்கலின் தேசிய காவியமாக போற்றப்படுகிறது. கண்டுபிடிக்கப்படாத அல்லது அறியப்படாத ஒன்றை நோக்கி மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நம்மில் எத்தனை பேர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம். ஆபத்துகளை கண்டு நாம் ஒதுங்கினால் சாதனைகளும் நம்மை விட்டு ஒதுங்கும் எல்லா வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையும் நமக்கு சொல்லும் உண்மை அது. புதிய இலக்குகளையும், திசைகளையும் நோக்கி தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிக்கும் எவருக்கும் வாஸ்கோட காமாவைப்போல் நாம் விரும்பிய வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 07:38:01 PM
ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்!

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.

(http://1.bp.blogspot.com/-an_FJm64cts/Tu7H-jLHLiI/AAAAAAAABDM/hKDWfSmiJOU/s1600/JuliusCaesar.jpg)

அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான 'ஜூலியஸ் சீசர்'. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர். அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.

அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.

(http://4.bp.blogspot.com/-2iujMps0I54/Tu6ErURV74I/AAAAAAAABC0/cuhVKr0iUYY/s320/pictures-julius-caesar-4.jpeg)

அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் 'Gaul' என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய 'Gaul' பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும். இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு  ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை 'Ides of March' என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார். நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் "Et tu, Brutes?" ("You too, Brutus?") அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல... வரலாற்று உண்மை!.

(http://2.bp.blogspot.com/-ST5zpifVVw0/Tu7J7dzQpqI/AAAAAAAABDk/qnfo7yvqwhQ/s320/The+Last+Senate+of+Julius+Caesar.jpg)

'ஜூலியஸ் சீசர்' என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

(http://1.bp.blogspot.com/-g119up6cCko/Tu7IYpjR4fI/AAAAAAAABDc/PtSVh8FTzxU/s1600/images.jpg)

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை 'லீப்' ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே 'ஜூலியன் காலண்டர்' என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், 'Gaul' பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை "De Bello Gallico" என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் "I came, I saw, I Conquered" என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

(http://4.bp.blogspot.com/-Zl2fMGCg_WM/Tu7IRoQoi6I/AAAAAAAABDU/v6HvASbLg1Y/s320/ELT200805080508565432390.JPG)

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் 'கைசர்' என்றும் ரஷ்ய அரச பட்டம் 'ஷா' என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே 'சீசர்' என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர்.


பல பிரதேசங்களை கைப்பற்றிய வீரமும், தன்னிடம் வீழ்ந்தவர்களை கெளரவமாக நடத்திய விவேகமும், முறையற்ற ஆணைகளுக்கு அடிபணியாத தைரியமும், ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும், இவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையாக விளங்கிய கட்டொழுங்கும்தான் சீசருக்கு "ரோம சாம்ராஜ்யம்" எனும் வானத்தை வசப்படுத்தின. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீசருக்கு கைகொடுத்த அதே பண்புகள் இப்போது நமக்கும் கைகொடுக்கும், விடாமுயற்சியோடு போராடினால் நாம் விரும்பும் வானத்தை நமக்கும் வசப்படுத்தும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 07:48:05 PM
பிளேட்டோ (தத்துவஞானி) - வரலாற்று நாயகர்!

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார்.

(http://2.bp.blogspot.com/-4dnajRfB36Q/TuWRSnCsCzI/AAAAAAAABCE/emSU9oYBbGQ/s1600/Plato_257.jpg)

கிரேக்கத்தில் அப்போதெல்லாம் கட்டாய ராணுவச் சட்டம் இருந்ததால் பிளேட்டோ சிறிது காலம் ராணுவச் சேவையாற்றினார். போரில் கலந்துகொண்ட அனுபவமும் அவருக்கு உண்டு. தனது இருபதாம் வயதில் சாக்ரடீஸிடம் மாணவராக சேர்ந்து எட்டு ஆண்டுகள் அவரிடம் சீடராக இருந்தார். பிளேட்டோவிற்கு ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாக இருந்ததாலும், சர்வாதிகாரமும் அநீதிகளும் மலிந்திருந்ததாலும் அவருக்கு அரசியலில் வெறுப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் அவரது மானசீக குருவான சாக்ரடீஸூக்கு விஷம் அருந்தி சாகும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரணத்தை தடுத்து நிறுத்த முயன்றவர்களுள் பிளேட்டோவும் ஒருவர்.

சாக்ரடீஸின் மேல் பிளேட்டோவுக்கு இருந்த ஈடுபட்டைக் கண்ட ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள் பிளேட்டோவின் மீது ராஜ துரோகம் குற்றம் சாட்டினர். அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழும் முன் நண்பர்களின் அறிவுரையை ஏற்று ஏதென்ஸை விட்டு வெளியேறினார் பிளேட்டோ. அப்போது அவருக்கு வயது முப்பதுதான். கிமு 399 ஆம் ஆண்டில் ஏதென்ஸை விட்டுச் சென்ற பிளேட்டோ அடுத்த 12 ஆண்டுகள் எகிப்து, இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்த அரசியல் முறைகளையும், சமூக அமைப்புகளையும் கற்றறிந்தார். இந்தியாவுக்கும் வந்த பிளேட்டோ இந்துக்களின் ஆத்ம தியானங்களையும், வருனாசரம தர்மத்தையும் ஆராய்ந்தார்.

(http://3.bp.blogspot.com/-fqaWB1PoHmA/TuWRp19h8tI/AAAAAAAABCU/40br2BRE6CI/s320/Plato_258.jpg)

கிமு 387 ஆம் ஆண்டு தன் தாய்நாட்டிற்கு திரும்பினார் பிளேட்டோ வருங்கால சந்ததிக்கு இளையர்களை தயார்படுத்த விரும்பினார். தனிமனிதனின் அறிவும் பண்பும் வளர கல்வியும் தத்துவ சிந்தனையும் அவசியம் என்பதை உணர்ந்த அவர் "பிளேட்டோ அகாடமி" என்ற கல்வி கலைக்கூடத்தை நிறுவினார். அந்த கலைக்கூடம்தான் உலகில் தோன்றிய முதல் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடதக்கது. கிமு நான்காம் நூற்றாண்டில் கணிதமும், வானியலும் செழித்து வளர்ந்ததற்கு முக்கிய காரணம் பிளேட்டோவின் அந்த அகாடமிதான். அது தொடங்கப்பட்ட இருபது ஆண்டுகளுக்குள் அதன் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அந்த புகழ்மிக்க அகாடமியில் கல்வி பயின்றவர்களுள் முக்கியமானவர் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவஞானி அரிஸ்டாடில்.

தனது அனுபவங்களையும் எண்ணங்களையும் ஒன்று திரட்டி பிளேட்டோ எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் "The Republic" ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் அது எப்படி ஆளப்பட வேண்டும், மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதப்பட்ட நூல்தான் அது. அவர் உருவாக்கித் தந்த அரசியல் சித்தாங்களும், சமூக அமைப்புகளும் இன்றளவும் பொருந்தக்கூடியதாய் இருக்கின்றன. பெண்ணுரிமை என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட சில நாடுகளில் அபத்தமாக மீறப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமையை வலியுறுத்தியிருக்கிறார் பிளேட்டோ.

(http://3.bp.blogspot.com/-fImQT9P7Wb8/TuWRhO4HeMI/AAAAAAAABCM/qsZa-2mPrG4/s320/Plato_834.jpg)

கிரேக்க மொழியில் பிளேட்டோ என்றால் "பரந்த" என்று பொருள். பெயருக்கு ஏற்பவே பரந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தார் அவர். பிளேட்டோ ஏற்க்குறைய என்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய இறுதிக்காலம் அமைதியாகவே கழிந்தது. பிறந்த தினத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது மரணத்தைக் கேட்டு மாணவர்கள் கண்ணீர் சிந்தினர். ஏதென்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோக மயமாக காட்சி அளித்தது. அவரது உடலை சக மரியாதையுடன் ஏதென்ஸ் நகரமே அணிதிரண்டு சென்று அடக்கம் செய்ததாக வரலாறு கூறுகிறது.


"எண்ணமே செயலுக்கு அடிப்படை" என்பதுதான் பிளேட்டோவின் அடிப்படைத் தத்துவம். எண்ணம் உயரியதாக இருந்தால் செயலும் உயரியதாக இருக்கும் என்று அவர் நம்பினார். அவருடைய எண்ணங்கள் உயரியதாக இருந்ததால்தான் உலகின் முதல் பல்கலைக்கழகம் உருவானது. ஒழுக்கமான அரசியல் சிந்தனைகளும் உலகம் முழுவதும் பரவின. "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவரும் அதைதான் வலியுறுத்துகிறார். உங்கள் எண்ணம் உயரியதாக இருந்தால் உங்கள் செயல்பாடுகளும் உயரும். செயல்பாடுகள் உயர உயர உங்களுக்கு நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 07:54:56 PM
பேரரசர் அசோகர் (The Great Indian Emperor) - வரலாற்று நாயகர்!

உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ மாமன்னர்களையும், வீர அரசர்களையும் சந்தித்திருக்கிறது சரித்திரம். பெரும்பாலான மன்னர்கள் பிற தேசங்களை கைப்பற்றியதால் வரலாற்றை வசமாக்கினர். வேறு சிலர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர். இன்னும் சிலர் அரச வம்சத்தில் பிறந்தோம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசாண்டு முடித்தனர். இப்படி எல்லா மன்னர்களையும் அவர்கள் மனுகுலத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வரிசைப்படுத்தினால் ஒருவர் முதல் நிலையை பிடிக்கக்கூடும். உலக வரலாற்றில் ஆயிரமாயிரம் மன்னர்கள் தங்களை தாங்களே மாட்சிமைப் பொருந்திய என்றும், கம்பீரம் நிறைந்த என்றும், மாமன்னன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மின்னி மறைந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை மின்னுவார். என்று கூறுகிறார் ஹெச்.டி.வெல்ஸ் (H.T.WELLS), ஓர் ஆங்கில இலக்கிய மேதை போற்றிய அந்த இந்திய மன்னனின் பெயர் அசோகர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. முதலாவது மெளரிய சாம்ராஜ்யம் சந்திரகுப்த மெளரியர் என்ற மன்னன்தான் அந்த வம்சத்தைத் தொடங்கி வைத்தார். அவரது காலம் கி.மு 324 முதல் கி.மு 300 வரை 24 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலகட்டத்திலிருந்துதான் இந்தியாவின் வரலாறு தெளிவாகிறது. கி.மு 327-ல் மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்து வடமேற்கு பகுதியை கைப்பற்றினார். மஹதநாடு என்ற அந்தப்பகுதியைதான் பின்னர் சந்திரகுப்த மெளரியர் ஆண்டார். சந்திரகுப்த மெளரியருக்கு பிறகு அவரது மகன் பிந்துசாரர் அரியனை ஏறி 27 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்தார். அந்த பிந்துசாரருக்கு மகனாக பிறந்து மெளரிய வம்சத்துக்கும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் புகழைக் கொண்டு சேர்த்தவர்தான் அசோகர்.

(http://4.bp.blogspot.com/-_dXkBdCjSas/Ttxb1T1etaI/AAAAAAAABBM/N1lfHz9HqgI/s320/ashoka2.jpg)

தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது தட்சசீலம், உஜ்ஜயினி என்ற பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் அசோகர். மகாதேவி என்பவரை மணந்து கொண்டு மகேந்திரர், சங்கமித்திரை என்ற பிள்ளைகளுக்கு தந்தையானார். பிந்துசாரரின் மரணத்துக்கு பிறகு கி.மு 273 ஆம் ஆண்டில் அரியனை ஏறினார் அசோகர். அவர் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான் முடிசூட்டு விழா நடந்தது. பிந்துசாரருக்கு அசோகர் உட்பட மொத்தம் நூறு குழந்தைகள் பிறந்தன என்றும், மற்ற 99 சகோதர, சகோதரிகளைக் கொன்று விட்டுதான் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. ஆனால் அதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. மண்ணாசை இல்லாத மன்னர்கள் வரலாற்றில் வெகுசிலரே, அசோகர்கூட பதவியேற்றதும் பெரும்பாலான மன்னர்களைப்போலவே தனது சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். பதவியேற்று 9 ஆண்டுகள் கழித்து அண்டை நாடான கலிங்கத்தின் மீது படையெடுத்து பெரும் வெற்றி பெற்றார்.

(http://2.bp.blogspot.com/-BLRPTG1AgoU/Ttxb9QiAr4I/AAAAAAAABBU/CpD7t-SFB8o/s320/ashoka-CZ52_l.jpg)

அந்த அவரது முதல் போர்தான் அவரது தலையெழுத்தையும், இந்தியாவின் தலைவிதியையும் மாற்றி அமைத்தது. கலிக்கத்துப்போரில் நூற்றி ஐம்பதாயிரம் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். நூறாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த உண்மை அசோகரின் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. போரில் வெற்றிக்கனியை பறித்த எந்த மன்னனும் புளகாங்கிதம் அடைவதும், அந்த வெற்றியைக் கொண்டாடுவதும், உடனே அடுத்த படையெடுப்பைப்பற்றி சிந்திப்பதும்தான் இயல்பு. ஆனால் அசோகர் வேறுபட்டு நின்றார். அந்த மாமன்னனின் ஈரநெஞ்சு போரின் சேதத்தைக் கண்டும், பலியான உயிர்களை எண்ணியும், சிந்தப்பட்ட இரத்தத்தை நினைத்தும் அமைதியாக அழுதது, இனி போரே வேண்டாம் என்று துணிந்தது. அதுவரை விலங்குகளை வேட்டையாடுவதையும், மாமிசம் உண்டு மகிழ்வதையும் பொழுதுபோக்காகக் கொண்டிருந்த அசோகர் மனம் மாறினார். உபகுப்தர் என்பவரின் தூண்டுதலின் பேரில் பெளத்த சமயத்தைத் தழுவினார்.

சில ஆண்டுகளில் புத்த பிக்குவாக மாறிய அவர் தொடர்ந்து அரசனாகவும் நீடித்தார். அசோகரின் கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகளிலிருந்து அவரது சாம்ராஜ்யம் மேற்கே குஷ் மலைப்பிரதேசத்திலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா நதி வரை, வடக்கே இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே சென்னை வரை பரவியிருந்தது தெரிய வருகிறது. அக்பரும், ஒளெரங்கசீப்பும்கூட அந்த அளவு நிலப்பரப்பை ஆண்டதில்லை. போரைத் துறந்த அந்த மாமன்னன் நாட்டை வளப்படுத்துவதில் தனது முழு கவனத்தை செலுத்தத் தொடங்கினார். எல்லா அதிகாரமும் தன் கையில் இருந்தாலும் அதனை தவறாகப் பயன்படுத்தாமல் பார் போற்றும் நல்லாட்சியை வழங்கினார் அசோகர். தனது பரந்து விரிந்த நிலப்பரப்பை ஐந்து மாநிலங்களாகப் பிரித்து அவற்றுக்கு தட்சசீலம், உஜ்ஜயினி, ஸ்வர்ணகிரி, தோஷாலி, பாடலிபுத்திரம் என்ற நகரங்களை தலைநகரங்களாக்கினார்.

(http://3.bp.blogspot.com/-OWexa4oUyFc/Ttxc5DlknFI/AAAAAAAABB0/3B7FBnI3NqM/s320/map5asho.jpg)

மக்கள் நலனுக்காக அதிகம் செய்தார். நீதித்துறை கடுமையாக இருந்தது. ஆனாலும் அவரது இளகிய மனம் தண்டனைகளின் கடுமையைக் குறைத்தது. எல்லா இடங்களிலும் தர்ம மகா மாத்திரர்கள் என்ற அதிகாரிகளை நியமித்தார் அசோகர். நாடு முழுவதும் அறக்கோட்பாடுகளை பரப்புவது அவர்களின் பணி. அசோகரின் கட்டளையின் பேரில் நாடு முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டன. சாலையோரங்களில் பழ மரங்கள் நடப்பட்டன. பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்காக அன்னசத்திரங்களும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. விலங்குகளுக்கும், கால்நடைகளுக்கும்கூட மருத்துவ சாலை அமைத்தார் அசோகர். கலைகளின் புரவலர்களாகவும் விளங்கிய அசோகர் கட்டடக்கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.தலைநகர் பாடலிபுத்திரத்தை எழில் கொஞ்சும் நகராக மாற்றினார். அவரது காலத்தில் 84 ஆயிரம் ஸ்தூபங்கள் கட்டப்பட்டன. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோவில்கள், ஒற்றைக்கால் தூண்கள் எல்லாம் அவர் காலத்தில்தான் கட்டப்பட்டவைதான்.

புத்த மதத்திற்காகவும் நிறைய செய்தார் அசோகர். அவரது ஆட்சியில் பெளத்தக் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.ஆனால் பிறமதங்கள் புறக்கணிக்கப்படவில்லை. புலால் தடைசெய்யப்பட்டது. எல்லோருக்கும் சமநீதி உறுதி செய்யப்பட்டது. மண்ணாசை அறவே ஒழிந்ததால் நாட்டில் அமைதி செழித்தது. பெளத்த மதம் நாடு முழுவதும் பரவியது. அதனை இலங்கை, சீனா, மியான்மார், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவ வைத்த பெருமை அசோகரையேச் சேரும். தனது கடைசி மூச்சு வரை மக்களுக்கு நல்லதையே செய்த அசோகர் தனது 72 ஆவது வயதில் காலமானார் என்று வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

(http://4.bp.blogspot.com/-d5ttY4iiMoo/TtxcG3FVvjI/AAAAAAAABBc/etqrFq1k9e4/s320/edicts_of_ashoka_main.jpg)

சரனாத் என்ற பகுதியில் அசோகர் கட்டிய ஒரு கல்தூண் இருக்கிறது. அதன் உச்சியில் நான்கு சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அந்தச்சின்னம்தான் இன்றும் நமது இந்தியாவின் அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியக்கொடியின் மத்தியில் அசோகசக்கரம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசத்தின் புகழை காலம் உள்ள வரைக்கும் பேச வைத்த அந்த மாமன்னனுக்கு இந்தியா வழங்கியிருக்கும் மிகப்பொருத்தமான கெளரவம் அது. ஆங்கிலத்தில் utopia என்ற ஒரு சொல் உண்டு எல்லாவற்றிலும் மிகச்சிறந்த உச்சத்தைத் தொட்டு குறைகூற முடியாமல் இருப்பதைக் குறிக்கிறது அந்தச்சொல். உலக வரலாற்றில் utopia என்ற சொல்லுக்கு அசோகரின் ஆட்சி மட்டுமே சரியான உதாரணம் என்று சொல்லலாம்.

(http://3.bp.blogspot.com/-hL5M5PpRO6w/Ttxcf5vnMrI/AAAAAAAABBk/EAEK9gmlf3M/s320/ashoka_4_lions.310171851_std.jpg)

ஒரு மன்னன் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ததோடு மட்டுமின்றி, அதற்கு மேலும் பல உன்னத காரியங்களைச் செய்ததால்தான் ஹெச்.டி. வெல்ஸ் (H.T.WELLS) கூறியதுபோல் வரலாறு உள்ளவரை தன் பெயரை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார் அசோகர். இன்னொரு அசோகர் பிறந்து வந்தால்தான் அப்படிபட்ட ஒரு ஆட்சியை வழங்க முடியும் என்றுகூட சொல்லலாம். பாரபட்சமின்றி அனைத்து உயிர்களிடத்தும் காட்டிய அன்பு, முழு அதிகாரம் கையில் இருந்தும் அதனை செம்மையாகப் பயன்படுத்திய பண்பு,நீதிநெறிகளை சமமாக நடைமுறைப்படுத்தியதில் காட்டிய தெம்பு,இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் சமய நல்லிணக்கத்தை அப்போதே கடைப்பிடித்துக்காட்டிய மாண்பு இவைதான் அசோகர் என்ற மாமன்னனுக்கு வானம் வசப்பட்டதற்கான காரணங்கள்.அவர் கடைப்பிடித்த அந்தப்பண்புகளை மனசாட்சியோடு பின்பற்றும் எவருக்கும் எந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 08:04:47 PM
'சர்' ஜகதீஷ் சந்திர போஸ் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!

உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக, 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்றால் அவற்றை உண்பதும் பாவமா? என்ற சர்ச்சைக்கெல்லாம் நாம் போக வேண்டாம். அப்படிப்பட்ட நுணுக்கமான உண்மையை ஆராய்ந்து சொன்ன அந்த விஞ்ஞானிக்கு வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர்' ஜகதீஷ் சந்திரபோஸ்.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி)ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார். இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸ்க்கு கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார்.

(http://4.bp.blogspot.com/-9RDsvF1ER2I/TtRwmGj4vxI/AAAAAAAABAs/wqfUO28SpnM/s320/j-c-bose2.jpg)

அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஒரு ஆங்கிலேயருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெற தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். ஜகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸ்க்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது. "பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பதற்கு அந்த சம்பவம் ஒரு நல்ல சான்று.

அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அடிப்படையில் அவர் ஒரு இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தக்குறிப்பு குறித்து வைத்திருக்கிறது.

(http://3.bp.blogspot.com/-NnuHFpZ9AqU/TtRws6EucOI/AAAAAAAABA0/LsjiugFX5TM/s320/boserscc.jpg)

சரி மீண்டும் நாம் தாவரங்களுக்கு வருவோம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று நம்பிய போஸ் அசைவுகளையும், சலசலப்புகளையும் அளக்கும் பல்வேறு நுண்ணிய உணர் கருவிகளை சொந்தமாக உருவாக்கி அவற்றைக்கொண்டு தாவரங்களின்மீது பல்வேறு சோதனைகளைச் செய்தார். அந்த சோதனைகளின் மூலம் வெப்பம்,குளிர், ஒளி, ஒலி போன்ற stimuli அதாவது புறத்தூண்டுதல்கள் எப்படி மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். போஸ் ஒரு புகழ்பெற்ற பரிசோதனையையும் செய்து காட்டினார் புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை ஊசி மூலம் ஒரு எலிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் அதே தனிமத்தை ஓர் தாவரத்திலும் செலுத்தினார். எலி, தாவரம் இரண்டுமே மரணத்தின் விளிம்பில் போராடியதைக் கண்டு வியந்த அறிவியல் உலகம் போஸின் ஆய்வுகளை கைதட்டி பாராட்டியது.

(http://2.bp.blogspot.com/-2klSNOlKf_w/TtRw8--WUDI/AAAAAAAABA8/ZfuMFbqLxr4/s1600/220px-Jagadish_Chandra_Bose.jpg)

தனது பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு இரண்டு புகழ்பெற்ற நூல்களை வெளியிட்டார் போஸ். (Response in the Living and Non-Living), (The Nervous Mechanism of Plants) என்ற அந்த இரண்டு நூல்களும் சொன்ன கருத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு அவை மனிதர்களைப் போலவே உணவு உண்டு செரிப்பதுடன், இரவில் உறங்கி காலையில் விழிக்கின்றன. தாவரங்களுக்கும்கூட பிறப்பும், இறப்பும் உண்டு, நம்மைப்போலவே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகளும் உண்டு. இவைதான் அந்த நூல்கள் சொன்ன கருத்துகளாகும். தாவரங்களை நேசிப்பவர்கள் ஒன்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம் அவற்றுடன் தினசரி அன்பாக பேசினால் அவை நன்றாக வளருமாம். ஜகதீஸ் சந்திரபோஸின் ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது அந்தக்கூற்றும் உண்மை என்றே தோன்றுகிறது.

அறிவியல் ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ஜகதீஷ் சந்திர போஸ்க்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது அப்போது இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம். 1920 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரைத் தந்த நமது இந்திய தேசம்தான் அந்தப்பயிர்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையைக் கண்டு சொன்னவரையும் தந்திருக்கிறது. அந்த அற்புத விஞ்ஞானி 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் தமது 82 ஆவது வயதில் காலமானார்.

(http://4.bp.blogspot.com/-Fpd3IsT4u4A/TtRxA_iIVDI/AAAAAAAABBE/QjisPV7hDk0/s320/SirJagadisBose_10851.jpg)

தோல்வியிலிருந்துதான் உண்மையான வெற்றி கிடைக்கிறது என்று ஒருமுறை கூறினார் 'சர்' ஜகதீஷ் சந்திர போஸ். “எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டிய அவருக்கு வானம் வசப்பட துணை புரிந்த பண்புகள் ஈடுபாடு, துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கை, சோர்வின்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய பண்புகளாகும். அவர் கடைப்பிடித்தப் பண்புகளில் சிலவற்றைப் பின்பற்றினால்கூட போதும் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 08, 2013, 08:12:18 PM
கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (The Real Superman) -வரலாற்று நாயகர்!

உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (ChristopherReeve). என்பதுகளிலும், தொன்னூறுகளிலும் உலகின் ஆக பலசாலியாக திரையில் வலம் வந்த அவர் ஓர் விபத்தின் காரணமாக தன் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், பலத்தையும் இழப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தன் விரல்களைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப்போனார். அந்த அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு போய் பின்னர் வாழ்க்கையில் போராட முடிவெடுத்து அதன் மூலம் தனது உண்மையான பலத்தையும், உள்ளத்திடத்தையும் உலகுக்குக் காட்டிய அந்த அதிசய மனிதனின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்போம்.

(http://1.bp.blogspot.com/-aidPDtRx9PI/TsngFXKWRYI/AAAAAAAABAM/0QvYvcU4mfY/s320/Christopher+Reeve+-+Nothing+Is+Impossible.jpg)

1952 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் பிறந்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். அவருக்கு நான்கு வயதானபோது அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். தன் சகோதரர் பெஞ்சமினுடனும், தாயாருடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார் கிரிஸ்டோபர். சிறுவயதிலிருந்தே இரு சகோதரர்களுக்கும், நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அட்டைப்பெட்டிகளை கப்பல்கள் போல் பாவித்து அவர்கள் கடற்கொள்ளையர்களாக நடித்து மகிழ்வர். எட்டு வயதானபோதே பள்ளி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இசைமீது ஆர்வம் ஏற்பட்டதால் பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பள்ளிப்பாடகர் குழுவிலும், ஐசாக்கி குழுவிலும் சேர்ந்து பள்ளியில் மிக துடிப்பான மாணவராக விளங்கினார்.

(http://2.bp.blogspot.com/-19nM8jXkCyg/TsnhC0mYBOI/AAAAAAAABAk/-h6LB88HASc/s1600/MV5BMjE1MDYwNjQxMF5BMl5BanBnXkFtZTcwNDE4NzU3MQ%2540%2540._V1._SX214_CR0%252C0%252C214%252C314_.jpg)

உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பிறகு அவர் கார்னெல் (Cornell) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக இறுதியாண்டில் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது. நியூயார்க்கின் உலகபுகழ் பெற்ற ஜூலியட் மேடை கலைப் பள்ளியில் நடிப்புப் பயிற்சிபெற அவரும், இன்னொரு கார்னெல் பல்கலைக்கழக மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த இன்னொரு மாணவரின் பெயர் ராபின் வில்லியம்ஸ். இருவருமே பின்னாளில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்களானது அனைவரும் அறிந்ததே. ஜூலியட் மேடைக் கலைப்பள்ளியில் பயின்றபோதே கிரிஸ்டோபருக்கு பல்வேறு நடிப்பு வாய்ப்புகள் வந்தன. 1976-ல் புகழ்பெற்ற நடிகை கேத்ரின் ஹெப்பர்னுடன் முதன் முதலாக A Matter of Gravity என்ற Broadway என்ற இசை நாடகத்தில் நடித்தார். அதனால் அவரால் நடிப்புப் பள்ளியில் தொடர முடியவில்லை.

1978 ஆம் ஆண்டில்தான் உலகம் அவரை உற்றுப் பார்த்து அதிசயிக்கும் அந்த வாய்ப்பு கிட்டியது. 'சூப்பர்மேன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க உகந்தவரை தேடியது ஹாலிவுட். அதற்காக விண்ணப்பித்த சுமார் 200 பேர் பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பதினெட்டு மாத படப்பிடிப்புக்குப் பிறகு உலகத் திரைகளில் 'சூப்பர்மேனாக' அவதரித்தார் கிரிஸ்டோபர் ரீவ்ஸ்.

(http://1.bp.blogspot.com/-mioI7SNfsyM/TsnfcuA022I/AAAAAAAAA_8/9-YqCLwUo5w/s320/superman_christopher_reeve-12271.jpg)

அவருடைய கட்டான தோற்றமும், வசீகரமான முகமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. முதல் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் மேலும் பதினாறு திரைப்படங்களிலும், பணிரெண்டு தொலைக்காட்சிப் படங்களிலும் சுமார் 150 மேடை நாடகங்களிலும் நடித்தார். மற்ற பெரிய நடிகர்களைப்போல் கதாநாயகன் பாத்திரத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் எந்தப் பாத்திரத்திலும் நடித்தார் ரீவ்ஸ். மிகச் சிரமமான சாகசக் காட்சிகளில்கூட துணை நடிகர்களைப் பயன்படுத்தாமல் சொந்தமாகவே நடித்தார். தான் ஈடுபட்ட எந்தக் காரியத்திலும் அவ்வுளவு ஈடுபாடு இருந்தது அவருக்கு. நடிப்புதான் அவருக்கு உயிர் என்றாலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார் ரீவ்ஸ்.

அவர் என்னென்ன கற்றிருந்தார் என்பதை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், விமானி லைசென்ஸ் பெற்று இரண்டு முறை சிறிய விமானத்தில் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார்,படகோட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார், முக்குளிக்கத் தெரியும், பனிச்சறுக்கு தெரியும், குதிரையேற்றம் தெரியும். 1990 களில் அவருக்கு குதிரையேற்றம் மிகப்பிடித்த விளையாட்டாக இருந்தது. இப்படி மிகத் துடிப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ரீவ்ஸின் வாழ்க்கை தலை கீழாக மாறியது 1995 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி. தன் குதிரை மீது அமர்ந்து அவர் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தபோது சற்று மிரண்டுபோன குதிரை எதிர்பாராத விதமாக முன்பக்கமாக அவரை தூக்கி அடித்தது. குதிரையின் கடிவாளத்தில் ரீவ்ஸின் கைகள் மாட்டிக்கொள்ள அவர் தலைகுப்புற கீழே விழுந்தார். முதுகெலும்பின் முதல் இரண்டு எலும்புகள் நொறுங்கின. அந்தக்கணமே கழுத்துக்கு கீழ் அவரது உடல் செயலிழந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் தவித்த அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படாதிருந்தால் அந்தக்கணமே அவர் உயிர் பிரிந்திருக்கும்.

(http://4.bp.blogspot.com/-gg-wd-FDT4M/Tsngj9-8BUI/AAAAAAAABAc/CO2oWTshzA0/s320/Christopher+Reeve2.jpg)

மிக நுண்ணிய அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை முதுகெலும்போடு இணைத்தனர் மருத்துவர்கள். ஆறு மாதங்கள் நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் இருந்தார் ரீவ்ஸ். தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் சுறுசுறுப்பாகவும், மிகத்துடிப்பாகவும் செலவழித்த ஒரு மனிதன் தன் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாத நிலையை அடையும்போது அது எவ்வுளவு பெரிய வேதனையாக இருக்கும் என்பதை அந்த நிலையில் இருந்தாலொழிய வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எனவேதான் தற்கொலையைப் பற்றியும் சிந்தித்தார் ரீவ். ஆனால் தன் மனைவி பிள்ளைகளுக்காகவும், இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும், உயிருள்ளவரை போராட தீர்மானித்தார். தான் புகழ்பெற்ற நடிகன் என்பதால் தன் மீது அனைத்துலக கவனம் பதிந்திருந்ததை நன்கு அறிந்த ரீவ்ஸ் முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சியில் அதிகம் செலவிடுமாறு அமெரிக்க அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டார்.

உடற்குறையோருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் 1996 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளையை நிறுவி உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளை தொடங்கி வைத்தார். stem cell research எனப்படும் மூல உயிரனு ஆய்வுக்காக குரல் கொடுத்தார். 1998-ல் Still Me என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம்பிடித்தது. 1996 ஆம் ஆண்டு அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அட்லாண்டாவில் நடைபெற்ற உடற்குறையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் அறிவிப்பாளராக கலந்துகொண்டார்.தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் அவரை பேச அழைத்தன. உடல் மறுத்தபோதும், உள்ளம் ஒத்துழைத்தது. தாதியரின் துணையுடன் எல்லா அழைப்பையும் ஏற்றுக்கொண்டு உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார் ரீவ்ஸ்.

(http://3.bp.blogspot.com/-vti9TwYeS3E/Tsnf04l6yqI/AAAAAAAABAE/2yMFUHDUEO0/s1600/250px-Christopher_Reeve_MIT.jpg)

பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது. கழுத்துக்கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறிபோல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப்போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன் இதுபோன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ்க்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட்டிருந்தால் நாமெல்லாம் முடங்கிப் போயிருந்திருப்போம். ஆனால் ரீவ்ஸ் 1996 ஆம் ஆண்டில் 'A Step Toward Tomorrow' என்ற தொலைக்காட்சிப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதே ஆண்டு 'In the Gloaming' என்ற HBO படத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே முதன்முதலாக இயக்கினார். அந்தப்படம் ஐந்து எமி(AMY) விருந்துகளுக்காக முன்மொழியப்பட்டது. Cable Ace விருது வழங்கும் விழாவில் அந்தப்படம் நான்கு விருதுகளை வென்றது. விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டி பல துவண்டுபோன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ் தமது 52 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் மறையாதிருக்கும்.

(http://2.bp.blogspot.com/-9ZLrN-JM11A/TsngRgoNnMI/AAAAAAAABAU/JaIcoB4beuY/s320/05-christopher-reeve-1024x768.jpg)

ரீவ்ஸ்க்கு மரணத்துக்கு பிந்திய கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது நியூஜெர்ஸியின் ரஜ்ஜஸ் பல்கலைக்கழகம். டோனிப்ரூக் பல்கலைக்கழகமும் அவருக்கு கெளரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. கனவுகள் பற்றியும், தன்னம்பிக்கைபற்றியும் அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.....

"நம்முடைய பெரும்பாலான கனவுகள் ஆரம்பத்தில் நிச்சயம் நிறைவேற முடியாததுபோல் நினைக்கத் தோன்றும். சற்று முயன்றால் அவை நனவாகலாமே என்று தோன்றும். பின்னர் நம் முழு பலத்தையும், தன்னம்பிக்கையையும், வரவழைத்து முயலும்போது அதே கனவுகள் நனவாக முடியாமல் போகாது என்ற நிலை ஏற்படும்". ஆம் உண்மைதானே! கிரிஸ்டோபர் ரீவ்ஸ் வாழ்ந்து காட்டியதுபோல் கனவு காணுங்கள் அந்தக் கனவை நனவாக்க தன்னம்பிக்கையை முதலீடு செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படாமல் போகாது.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 07:12:06 PM
மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகி!

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 7- ஆம் நாள் போலந்தின் வார்ஷாவ் நகரில் ஏழ்மையில் பிறந்தார்  Maria Salomea Skłodowska என்ற மேரி கியூரி. மரியாவின் தந்தை ஓர் அறிவியல் ஆசிரியர். அதனாலயே அவருக்கு அறிவியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய மரியா சிறு வயதிலிருந்தே ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பினார். அந்தக்காலத்து பெண்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒன்று அது. ஆனால் தன் கனவை நனவாக்க முடியும் என்று நம்பினார் மரியா. ஏழ்மையைப் போக்கவும், கல்வி கட்டனத்திற்காகவும் அவர் பகுதிநேர துணைப்பாட ஆசிரியராக பணியாற்ற வேண்டியிருந்தது.

(http://1.bp.blogspot.com/-HoXg68cB70A/TsCpMUmFAuI/AAAAAAAAA-s/fBJaWuomTFI/s320/400px-Marie_Curie_c1920.png)

தனது 24 ஆவது வயதில் மேல் கல்விக்காக பாரிஸுக்கு வந்த அவர் ஸாபான் என்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இயற்பியலில் மிகச்சிறப்பாக தேர்ச்சிப்பெற்று பட்டமும் பெற்றார். அந்தக்கால கட்டத்தில் அவர் Pierre Curie என்ற இளையரைச் சந்தித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்ட மரியா மேரி கியூரி ஆனார். கணவன், மனைவி இருவருமே இயற்பியலிலும், வேதியியலிலும் ஆராய்ச்சி செய்ய விரும்பினர். 1897-ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்ற தனிமத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினார் மேரி கியூரி. கணவர் பியரி கியூரியும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல்வேறு தனிமங்களை அவர்கள் ஆராய்ந்தனர். தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்களது தொடர்ச்சியான ஆய்வின் பலனாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்கு, தான் பிறந்த போலந்தின் நினைவாக “பொலேனியம்” என்று பெயரிட்டார் மேரி கியூரி. இரண்டாவது தனிமம்தான் புற்றுநோய்க்கு சிகிச்சைக்குப் பயன்படும் “ரேடியம்”. ஆராய்ச்சியில் அளவிட முடியாத ஆர்வம் காட்டிய அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்லூரிகளில் கற்பிக்க வேண்டியிருந்தது. ஓர் ஒழுங்கான ஆய்வுக்கூடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூட வசதியில்லை. ஒழுகும் கூரையும், போதிய மின்வசதியும் இல்லாத ஓர் அறைதான் அவர்களுக்கு ஆய்வுக்கூடமாக இருந்தது. அந்த ஆய்வுக்கூடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓர் சக விஞ்ஞானி அது ஒரு மாட்டுத்தொழுவம் போல் இருந்தது என்று கூறினார். குளிர்காலத்தில் 6 டிகிரி வரை தட்ப நிலை குறையும். அந்தச் சூழ்நிலையிலும் அயராது ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் அந்த அறிவியல் தம்பதியர். அவர்களுக்கு பண உதவியோ, பொருள் உதவியோ செய்ய எவரும் முன்வரவில்லை.

(http://4.bp.blogspot.com/-4CvxkELlruo/TsCpdRNNEKI/AAAAAAAAA-0/Ha_muZ56I94/s320/800px-Pierre_and_Marie_Curie.jpg)

ரேடியத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் வற்புறுத்தியும் அதனைச் செய்ய மறுத்து விட்டனர் அந்தத் தம்பதியினர். அதற்கு என்ன காரணம் தெரியுமா? கதிரியக்கம் பற்றி உலகின் எல்லா விஞ்ஞானிகளும் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புதிய பலன்களைக் கண்டுபிடிக்க வேண்டும் அதனால் மனுகுலம் நன்மை பெற வேண்டும் என்ற ஒரே காரணம்தான். எதற்குமே உரிமை கொண்டாட விரும்பும் இந்த சுயநல உலகில் இந்த பிரபஞ்சமே நன்மை பெற வேண்டும் என்று சிந்தித்த அந்த அதிசய தம்பதியரை வரலாறு மட்டுமல்ல நாமும் கைகூப்பி வணங்க வேண்டும். ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய பியரி கியூரி தன் உடலின் மேல் அதனைப் பயன்படுத்திப் பார்த்தார். முதலில் எரிச்சல் உண்டானது. பின்னர் புண் ஏற்பட்டது. அதன் பிறகு உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க ரேடியம் பயன்படுத்தப்பட்டது. அதனை “கியூரி தெரபி” என்று அழைத்தனர்.

(http://3.bp.blogspot.com/-kuP2bvxmgJc/TsCrDF4FegI/AAAAAAAAA_M/fAwcXLLAo5Q/s320/Marie_Curie.jpg)

ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 1906 ஆம் ஆண்டு கதிரியக்கத்தின் தாக்கத்தாலும், கடும் உழைப்பாலும் நலிவுற்றிருந்த பியரி கியூரியை எதிர்பார விதமாக ஒரு குதிரை வண்டி மோதித் தள்ளியதில் அவர் காலமானார். தனது ஆராய்ச்சியை தனியாக தொடரும் நிலையும், இரண்டு பிள்ளைகளை தனியாக வளர்த்தெடுக்கும் பொறுப்பும் மேரி கியூரிக்கு ஏற்பட்டது. கணவர் இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி அவர்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு பாரிஸில் அவர் ரேடியக்கழகத்தை நிறுவினார். அதே ஆண்டு முதலாம் உலகப்போர் மூண்டது. X-கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பினார் கியூரி. அதே நேரத்தில் காயம் அடைந்தவர்களை நகர்த்தக்கூடாது என்பதற்காக எக்ஸ்-ரே வாகனத்தை உருவாக்கி சுமார் 150 தாதியர்களுக்கு பயிற்சியும் அளித்தார். ரேடியத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இன்னும் கண்டறிய வேண்டும் என்று விரும்பிய மேரி கியூரி தனது மகள் ஐரினையும்(Irene) ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமூட்டினார்.

(http://1.bp.blogspot.com/-dCRqUSkXvxI/TsCqN1astPI/AAAAAAAAA_E/m7PAQiANSrM/s1600/Marie_Curie_-_Mobile_X-Ray-Unit.jpg)

மேரி கியூரியின் கண்டுபிடிப்புகளால்தான் புற்று நோய்க்கு சிகிச்சை பிறந்தது. ஆனால் எந்த கண்டுபிடிப்பு பல புற்று நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டுத்தர உதவியதோ அதே கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கைக்கே உலை வைத்ததுதான் மிகப் பெரிய அறிவியல் சோகங்களுள் ஒன்று. பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் அவருக்கு கடும் கதிரியக்க தாக்கம் ஏற்பட்டது. மனுகுல மேன்மைக்காக பாடுபட்ட அந்த உன்னத விஞ்ஞானியின் உடலை "லுக்கிமீயா" என்ற புற்றுநோய் அரித்தது. கிட்டதட்ட தனது விரல்களையும், கண் பார்வையையும் கதிரியக்கத்திற்கு காவு கொடுத்த நிலையில் 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 67 ஆவது அகவையில் மரணத்தைத் தழுவினார் மேரி கியூரி அம்மையார்.

(http://4.bp.blogspot.com/-ecmdgWd1gLU/TsCr20MTEQI/AAAAAAAAA_U/2UlTRsbW-n4/s320/marie-curie___484x363.jpg)

தனது தாயின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்த ஐரின் பின்னாளில் செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றார். தாயும், தந்தையும், மகளும் நோபல் பரிசு பெற்றது வரலாற்றில் கியூரி குடும்பத்திற்கு மட்டுமே கிடைத்த தனிப்பெருமையாகும். கியூரி தம்பதிகளின் அஸ்தி பாரிஸின் புகழ் பெற்ற 'பாந்தியன்' (Pantheon) அரங்கில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை அது. ரேடியம் என்ற அரிய தனிமத்தை வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தால் அதனை வைத்து பெரும் பணம் சம்பாதிக்க எண்ணியிருக்கக்கூடும். ஆனால் வறுமையில் உழன்ற போதும் தனது கண்டுபிடிப்பை பணமாக்க எண்ணாத ஓர் உத்தம விஞ்ஞானிதான் மேரி கியூரி அம்மையார். பல புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க தன் உயிரையே பரிசாகத் தந்த அந்த அதிசய அம்மையாரின் வாழ்க்கை நமக்கு சொல்லும் செய்திகள் எளிதானதுதான்.

முதலாவது பிற்போக்கான சமுதாய எண்ணங்களை உதறித் தள்ளும் தன்னம்பிக்கை, இரண்டாவது வறுமையிலும் பிறர் நலம் நாடும் உயரிய சிந்தனை, மூன்றாவது இன்னல்களை தவிடு பொடியாக்கும் கடின உழைப்பு, நான்காவது சுயநலத்தைத் துறந்து பொதுநலத்திற்காக பாடுபடும் பண்பாடு. இந்த நற்பண்புகளை கடைபிடித்து விடாமுயற்சியோடு போரடியதால்தான் அவர் கனவு கண்டது போலவே அறிவியல் என்ற வானம் வசப்பட்டது. மேரி கியூரி அம்மையாரிடம் இருந்த இந்த நான்கு பண்புகளுமே நமக்கு ஒருசேர இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நான்கில் எதாவது ஒரு பண்பை கடைப்பிடித்து விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 07:29:20 PM
'சர்' சி.வி.ராமன் (அறிவியல் மேதை) - வரலாற்று நாயகர்!

வணக்கம் நண்பர்களே, இன்று ஒரு சிறப்பான தினம் நிறைய பிரபலங்களின் பிறந்தநாள் இன்றுதான், இன்று (07/11/2011) பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!. அந்த வகையில் அறிவியல் உலகில் இரு விஞ்ஞானிகளின் பிறந்தநாள் தினம் இன்று. ஒருவர் நோபல் பரிசை இருமுறை வென்ற அறிவியல் மேதை மேரி க்யூரி அம்மையார் அவர்கள், மற்றவர் நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்த அறிவியல் விஞ்ஞானி, நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் 'சர்’ சி.வி. ராமன் அவர்கள். அவரின் பிறந்த நாளான இன்று சிறப்பு பதிவாக 'சர்’சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை குறிப்புகளை பதிவு செய்கிறேன்!

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.

(http://1.bp.blogspot.com/-ErcBq7JDMoY/TreEuDkNeNI/AAAAAAAAA9o/jK4T2Y1yoRA/s1600/C_V_Raman.jpg)

1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.

(http://2.bp.blogspot.com/-cKoSHc-kHJE/TreE0jyhDkI/AAAAAAAAA9w/9p0_VhFbc_c/s320/032_raman_labo.png)

சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.

(http://3.bp.blogspot.com/-52nRTJdXEQE/TreFwAEtZXI/AAAAAAAAA94/_qNxIcAI6Ak/s320/sir+c.v+raman+%252810%2529.jpg)

“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 07:42:25 PM
Dr. வீ கிம் வீ (மக்கள் அதிபர்) - வரலாற்று நாயகர்!

"வாழ்க்கை என்ற அதிர்ஷ்ட குலுக்கில் நாம் எவ்வாறு பிறக்கிறோம் என்பதையோ,பிறந்த பிறகு வரும் அதிர்ஷ்டங்களையோ துரதிர்ஷ்டங்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறோம் என்பது நம் கைகளில் இருக்கிறது. தன்னம்பிக்கை இழக்காமல் முழுமையாக போராடினால் துரதிர்ஷ்டம் நம் பாதையைக் கடந்தாலும் நம்மால் அதனை வெற்றியாக மாற்ற முடியும்".

1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அது. குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரு வரலாற்று நாயகர் அந்தக் கெளரவ பட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் கூறிய கருத்து அது. சிங்கப்பூரர்களின் ஒட்டு மொத்த நன்மதிப்பையும் பெற்றிருந்த அவர் வேறு யாருமல்ல புன்னகை மட்டுமே பூக்கத் தெரிந்தவரும், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தும் சராசரி சிங்கப்பூரர்களோடு சரிசமமாக பழகியவரும், சிங்கப்பூரர்களால் 'மக்கள் அதிபர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான சிங்கப்பூரின் முன்னால் அதிபர் டாக்டர் வீ கிம் வீ.

(http://2.bp.blogspot.com/-YPIOL24lQR4/TrMsIP1-oZI/AAAAAAAAA9A/wmaTT2Ql3os/s320/pic_wkw_home_quote.jpg)

சிங்கப்பூரின் நான்காவது அதிபராக எட்டாண்டு காலம் பணியாற்றியவர். வறுமையில் பிறந்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதை திரு.வீ கிம் வீயின் கதை. 1915 ஆம் ஆண்டு நவம்பர் 4ந்தேதி சிங்கப்பூரில் ஒரு சராசரி குடும்பத்தில் நான்காவதும், கடைசிப் பிள்ளையுமாக பிறந்தார் திரு வீ. அன்புக்கு பஞ்சமில்லாத அந்த வீட்டில் வறுமைக்கும் பஞ்சமில்லை. மிக எளிமையான சூழ்நிலையில் வளர்ந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை 'பெர்ல்ஸ் ஹில்' தொடக்கப்பள்ளியில் பயின்றார். அவருக்கு எட்டு வயதானபோது அவரது தந்தை தொண்டைப் புற்று நோயால் காலமானார். அதனால் குடும்ப நிலமை இன்னும் மோசமானது. எப்படியோ சிரமபட்டு 'ராஃபிள்ஸ்' கல்விக் கழகத்தில் உயர்நிலை படிப்பை மேற்கொண்டார் திரு வீ. ஆனால் குடும்ப வறுமை அலைக்கழிக்க இரண்டு ஆண்டுகள்தான் அவரால் அங்கு நிலைக்க முடிந்தது.

1930 ஆம் ஆண்டில் அவர்  "ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்" பத்திரிக்கையில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். கடுமையாக உழைத்ததால் அவர் பின்னர் விளம்பர பிரிவில் சேர்ந்தார். அதன்பின்னர் நிருபராக அவருக்கு பதவி உயர்வு கிட்டியது. 1941 ல் அவர்  'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷன்(யு.பி.ஏ)'  எனப்ப்டும் அமெரிக்க செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். ஜப்பானிய ஆட்சிக் காலத்தின்போது அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை. ஜப்பானிய இராணுவ அமைப்பில் எழுத்தராக வேலை செய்தார். 1945 ஆம் ஆண்டு ஜப்பானிய ஆட்சியிலிருந்து சிங்கப்பூர் விடுபட்டபோது அவர் மீண்டும் 'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷனில்(யு.பி.ஏ)' சேர்ந்தார். அதில் நல்ல பத்திரிக்கை அனுபவம் கிடைத்ததால் அவர் மீண்டும் 1959 ஆம் ஆண்டில்  "ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில்” சேர்ந்தார். இம்முறை அவருக்கு கிடைத்தது உதவி ஆசிரியர் பணி.

(http://1.bp.blogspot.com/-4oGKAMoxeDA/TrMsQUB7TrI/AAAAAAAAA9I/OU6UyXNXH9k/s1600/wee2.gif)

அந்தக்கால கட்டத்தில் நிருபராக இருந்து பல முக்கிய நிகழ்வுகளை சிங்கப்பூரர்களுக்கு கொண்டு வரும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. குறிப்பாக 1966 ஆம் ஆண்டு இந்தோனோசியாவுக்கும், மலேசியாவுக்கு இடையே நிலவிய 'கான்ப்ரெண்டேஷன் (CONFRONTATION)' எனப்படும் அரசியல் பதற்றத்தின்போது தைரியமாக ஜகர்தாவுக்கு சென்று இந்தோனோசியாவின் முன்னால் அதிபர் சுகார்த்தோவை நேரடியாக பேட்டி எடுத்தார். அடுத்த நாளே மூன்றாண்டு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தோனோசியா விரும்புகிறது என்ற தலைப்புச் செய்தியை உலகுக்குத் தந்தார் திரு வீ கிம் வீ. 1973 ஆம் ஆண்டு அவர் பதவி ஓய்வுபெற இரண்டு ஆண்டுகளே இருந்தபோது அவரை மலேசியாவிற்கான தூதராக நியமித்தது சிங்கப்பூர் அரசாங்கம். மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வேண்டிய அந்த பதவியில் திரு. வீ ஏழு ஆண்டுகள் நீடித்தார். அந்த ஏழு ஆண்டுகளில் சுமூகமான சிங்கப்பூர், மலேசிய உறவுகளுக்கு அவர் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.

அந்தப்பணி முடிந்து 1980 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கான தூதராகவும், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதலாக கொரியாவுக்கான தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அவருடைய அரசதந்திர பணி 1984 ல் முடிவடைந்ததும் முன்னைய சிங்கப்பூர் ஒளிப்பரப்புக் கழக்த்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 1985 ஆகஸ்ட் 30ந்தேதி சிங்கப்பூரின் நான்காவது அதிபராக அவரை தேர்ந்தெடுத்தது நாடாளுமன்றம். அடுத்த எட்டு ஆண்டுகள் அந்தப் பணியை செவ்வெனெச் செய்தார் திரு.வீ கிம் வீ. 1936 ஆம் ஆண்டு 'கோ சாக் ஷியாங்’ என்பவரை மணந்து கொண்ட திரு. வீ அவர்களுக்கு ஒரு ஆண், ஆறு பெண்கள் என எழு பிள்ளைகள் பிறந்தனர். 1966 ஆம் ஆண்டு 'justice of the peace' ஆக நியமிக்கப்பட்டார். 1963-ல் பொதுச்சேவைக்கான நட்சத்திர விருதையும், 1979 ஆம் ஆண்டு மெச்சத்தக்க சேவை விருதையும் வென்றார்.

(http://1.bp.blogspot.com/-QjxjKYrc4iU/TrMsndrA7_I/AAAAAAAAA9Y/RprTi5g53HA/s320/Mns14_SDPF-winners-.jpg)

1993 செப்டம்பர் மாதம் அவர் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். தனது கல்விப் பயணத்தில் பல்கலைக்கழகத்தில் காலடி வைக்க முடியாத திரு.வீ அவர்களுக்கு 1994 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 30ந்தேதி மாதம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் கவுர டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அதனை ஏற்று அவர் ஆற்றிய உருக்கமான உரையில்.... "வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிட்ட எனக்கு பட்டப்படிப்பு படிக்காமலேயே இவ்வுளவு பெரிய கவுரம் கிடைத்தது குறித்து உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சென்ற ஒரே பல்கலைக் கழகம் வாழ்க்கை என்ற பல்கலைக்கழகம்தான்" என்று கூறினார். அதே உரையில் அவர் தன் வாழ்க்கையில் பின்பற்றிய மூன்று கொள்கைகளைப்பற்றி பேசினார். முதல் கொள்கை வாழ்க்கையில் நிறைவு காண வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது.

இந்தக்கொள்கைகளுக்கு உதாரணமாக எட்டு ஆண்டுகள் அதிபராக இருந்தபோது பரந்து விரிந்த "இஸ்தானா" மாளிகையில் வசிக்க வாய்ப்பிருந்தபோதும் சிக்லாப்பில் இருந்த தனது சொந்த வீட்டிலேயே வசித்தார் என்பது குறிப்பிடதக்கது. இரண்டாவது கொள்கை எல்லோரையும், அவர்கள் எவ்வுளவு தாழ்ந்து போனவர்களாக இருந்தாலும் மனிதர்களைப்போல் நடத்த வேண்டும், உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது. இதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததால்தான் அவரை 'மக்கள் அதிபர்' என்று எல்லோரும் அழைத்தனர். மூன்றாவது கொள்கை எப்போதும் பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். Harry Truman என்பவர் அமெரிக்காவின் அதிபரான பிறகும் தன் காலணிகளை சொந்தமாகவே பாலிஷ் செய்துகொள்வார் என்ற கதையைக்கூறி தானும் அதிபரான பிறகுகூட சொந்தமாகவே காலணிகளுக்கு பாலிஷ் செய்துகொள்வதையும், சொந்தமாகவே காஃபிகூட போட்டுக்கொள்வதையும் கடைப்பிடித்தார் டாக்டர். வீ கிம் வீ.

(http://3.bp.blogspot.com/-SLAc8FUkH1g/TrMs7fWt5yI/AAAAAAAAA9g/LyRvhF3oi54/s1600/522289695_42f3daa79a.jpg)

கடைசிவரை அவர் கடைப்பிடித்த எளிமைதான் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு 'Glimpses and Reflections' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் டாக்டர் வீ. அவரது சுயசரிதையைப் படித்துப்பார்த்தால் எவ்வுளவு பெரிய உச்சங்களைத் தொட்ட ஒரு மனிதன் எப்படிப்பட்ட சாதரணமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். நமக்கு ஆச்சரியத்தால் புருவங்கள் விரியும். தன்னுடைய பனிரெண்டாவது வயதில் தலமையாசிரியரிடம் தான் வாங்கிய பிரம்படி எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று அந்தப் புக்கத்தில் சுவைபட கூறியிருக்கிறார் டாக்டர் வீ. மிக எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு நூல். அந்த நூலின் விற்பனை மூலம் கிடைத்த சுமார் அரை மில்லியன் டாலரை எட்டு அறநிறுவனங்களுக்கு வழங்கினார், மனுகுலம் பயன்பெற வேண்டும் என்று விரும்பிய நன்நெஞ்சம் கொண்ட டாக்டர் வீ.   

'மக்கள் அதிபர்' என்று புகழப்பட்ட டாக்டர் வீ கிம் வீ, சில ஆண்டுகளாகவே 'Prostate' எனப்படும் சிறுநீர்ப்பை சுரப்பி புற்றுநோயால் அவதிப்பட்டார். 2005 ஆம் ஆண்டு மே மாதம் 2ந்தேதி தமது 89 ஆவது வயதில் காலமானார். அந்தத் தருணம் தங்களுடைய உறவினர் ஒருவர் இறந்துபோனதுபோன்று உணர்ந்தனர் அவரது அன்பையும், மனித நேயத்தையும், புன்னகை பூக்கும் முகத்தையும் மறக்க முடியாத சிங்கப்பூர் மக்கள். அதனால்தான் நவீன சிங்கப்பூர் வரலாறு காணாத அளவுக்கு பல்லாயிரம் மக்கள் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்த இஸ்தானாவில் வரிசை பிடித்து நின்றனர்.

வாழும்போது எளிமையை விரும்பிய டாக்டர் வீ, மறைந்தபோதும் எளிமையாகவே நினைக்கப்பட விரும்பினார். அதனால் தன்னுடைய அஸ்தியை சராசரி சிங்கப்பூரர்களின் அஸ்திகளுக்கு மத்தியில் வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பொதுவாக அதிபர்கள் 'கிராஞ்சி' சமாதியில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் டாக்டர் வீ அவர்களின் அஸ்தியோ அவரது விருப்பம்போலவே 'மண்டாய்' அஸ்தி மாடத்தில் மற்ற சாரசரி சிங்கப்பூரர்களின் அஸ்திகளோடு அவரது அஸ்தியும் வைக்கப்பட்டுள்ளது.

(http://1.bp.blogspot.com/-parckPK7bPQ/TrMshgUvlyI/AAAAAAAAA9Q/F6MXd8ohJrk/s1600/28d7196c49864890512b09381a2e8b13_1M.png)

நாட்டின் உயர்ந்த பதவியை எட்டியபோதும் அதிகாரமோ, தலைக்கணமோ, அகம்பாவமோ அவரது தலைக்கு ஏறவில்லை. மாறாக எட்டாத தூரத்திலிருந்த ஒரு பதவியை அவர் சாமானிய மக்களுக்கும் எட்டும் உயரத்திற்கு கொண்டு வந்தார். அவரது புன்னகைக்கும், கனிவான பேச்சுக்கும் வசப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏழ்மையில் பிறந்து பட்டப்படிப்பு படிக்காமலேயே சிங்கப்பூரின் ஆக உயரிய பதவியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய நேர்மை, கனிவு, பரிவு, மனிதநேயம், தன்னம்பிக்கை, கடும் உழைப்பு, விடாமுயற்சியும்தான். இவற்றிற்கெல்லாம் மேலாக...

"இந்த உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் ஐந்து அல்லது பத்து சக மானிடர்கள் மகிழ்ச்சியோடு வாழ நான் முயன்றிருந்தால் அதுவே நான் பிறவி எடுத்ததன் பயனாகும்"

என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதனை வாழ்ந்தும் காட்டிய அந்த மாமனிதருக்கு அவர் விரும்பிய வானத்துடன் மனுகுலமும் சேர்ந்தே வசப்பட்டது.வறுமையில் பிறந்தாலும் டாக்டர்.வீ கிம் வீ அவர்கள் வாழ்ந்துகாட்டியதுபோல் எளிமையையே விரும்பி அவர் கடைபிடித்த ஓரிரண்டு பண்புகளைப் பின்பற்றி வாழ்க்கையில் விடாமுயற்சியோடு போராடினால் நமக்கும் நாம் விரும்பும் எந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 07:52:04 PM
ஜெசி ஓவன்ஸ் (Olympic Legend) - வரலாற்று நாயகர்!

ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ். அந்தப் பெயரை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து நிற்கிறது.

ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இன குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். James Cleveland Owens என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். அவர் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று சொல்ல அதனை ஜெசி என்று எழுதிக்கொண்டார் அந்த ஆசிரியர். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது. குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் வாழ்க்கை சிரமமாக இருந்தது. குடும்பத்திற்கு உதவ மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார் ஜெசி. அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவது என்றால் தனக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

(http://2.bp.blogspot.com/-CXsWcyBiEH0/Tq8rQC17GCI/AAAAAAAAA8Y/yH19Z0xkOIY/s1600/jesse-owens11.jpg)

பள்ளியில் ஒருநாள் அறுபது மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசியைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் பயிற்றுவிப்பாளர் ச்சார்லி ரைலி. ஜெசிக்கு நல்ல பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் நிர்பந்தம் இருந்ததால் எப்படி பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார் ஜெசி. அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாக பயிற்சியளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் நூறு மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது அபாரத் திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக் கொள்ள போட்டிப் போட்டனர்.

அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ். அப்போது அமெரிக்காவில் இன ஒதுக்கல் நடப்பில் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்தார் ஜெசி. அவர் கருப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். அல்லது உண்வை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சில சமயங்களில் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் பின் கதவு வழியாகத்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹோட்டலுக்குள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. படிகளில் ஏற வேண்டும்.

இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டும் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25ந்தேதி ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் அவர் மூன்று உலகச் சாதனையை நிகழ்த்தி நான்காவது சாதனையைச் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.

(http://3.bp.blogspot.com/-YuULqW1wD1k/Tq8yh-yrpoI/AAAAAAAAA8g/xc0lWumOBBU/s320/mortgage-rates4.jpg)

ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்ததால் பலர் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அதனை வருணித்தனர். ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்த ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ். உலகின் கண்களுக்கு முன் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ஸ் அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடு வெளிநடப்புச் செய்தார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி ஊக்கமூட்டினர். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.

(http://4.bp.blogspot.com/-Vj_4Xbl-YHM/Tq8zEP5N3SI/AAAAAAAAA84/sXaIYp8JkE0/s320/9938287.jpg)

அப்படிப்பட்ட சாதனையைச் செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதுபோன்ற அநீதிகளால்தான் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சுதந்திர வீரர்கள் அமெரிக்காவில் உதித்தனர். தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்கும் பிடித்திருந்ததால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றை பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளையர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், ஆதரவளித்தும் ஊக்கமூட்டினார்.

(http://3.bp.blogspot.com/-lqMx9vHD3sc/Tq8yrlfmWSI/AAAAAAAAA8o/Lto0qYys0qo/s320/250px-JesseOwens_1936Olympics.jpg)

1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு 'Presidential Medal of Freedom' எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட். பின்னாளில் புற்றுநோய் ஏற்பட்டு 1980 ஆம் ஆண்டு மார்ச் 31ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார் ஜெசி ஓவன்ஸ். தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு Gloria, Beverly, Marlene, என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லினும் இன்றுவரை “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி நிறைந்த ஆனால் வசதி குறைந்த இளையர்களுக்கு இன்றும் நிதியுதவி வழங்குகிறது ஜெசி ஓவன்ஸ் அறக்கட்டளை.

(http://4.bp.blogspot.com/-6P69-blRd80/Tq8y8VUEyVI/AAAAAAAAA8w/ZevvFwbxMh0/s1600/owens.jpg)

வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளைத்தாண்டி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடிந்ததென்றால், நமக்கு தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. பயிற்சித் தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறையல்ல என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும்தான் ஜெசி ஓவன்ஸ்க்கு 'ஒலிம்பிக்ஸ்' என்ற வானத்தை வசப்படுத்தியது. ஓவன்ஸைப்போல் வியர்வை சிந்தவும், விடாமுயற்சியோடு உழைக்கவும் தயங்காதோருக்கு எந்த வானமும் தயங்காமல் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 08:01:23 PM
தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்) - வரலாற்று நாயகர்!

இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. போதுமான மனித வளமும், அறிவு வளமும் அதற்கு நிறையவே இருக்கிறது. அந்த மனித வளத்தையெல்லாம் சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் பயன்படுத்தினால் நமது இந்தியா உலகுக்கே ஒரு முன்னுதாரண தேசமாக விளங்க முடியும். ஆனால் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது இந்தியாவில்தான் பல தேசங்களில் காண முடியாத ஓர் அநாகரிகமும் வேரூன்றி இருக்கிறது. அதுதான் தீண்டாமை, சாதிப்பிரிவினை என்ற அநாகரிகம் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்துகூட விடுதலை பெற்று விட்டது நமது தேசம். ஆனால் காலங்காலமாக தங்களை மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களின் அடக்கு முறையிலிருந்தும், அநாகரிகத்திலிருந்தும் விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றனர் கீழ்சாதி என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்.

மேலை நாடுகளில்கூட தோலின் நிறத்தில் அடிப்படையில்தான் இன ஒதுக்கல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் நமது தேசத்தில்தான் பிறப்பின் அடிப்படையிலும், செய்யும் தொழிலின் அடிப்படையிலும் ஒருவன் மேல்சாதி என்றும், கீழ்சாதி என்றும் தரம் பிரிக்கப்பட்டான் இன்றும் பிரிக்கப்படுகிறான். இந்த அநீதிகளால் கூனிக்குறுகிப் போய் சுய மரியாதையை இழந்து தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வையும் மறந்துபோன உயிர்கள் எத்தனைக்கோடி இருக்கும்? அந்த எண்ணிக்கையை வரலாறுகூட மறந்துபோயிருக்கும். பாதிக்கப்பட்டோரில் பலர் அது நம் விதி என்று ஒதுங்கி நிற்க, அது விதியல்ல ஆதிக்கவர்க்கத்தின் சதி என்று துணிந்து சொன்னார் ஒருவர். அறியாமையும் மூட நம்பிக்கைகளுமே தீண்டாமைக்கும், சாதிக்கொடுமைகளுக்கும் காரணம் என்று நம்பிய அவர் தாழ்த்தப்பட்டவர்களை தூக்கி நிறுத்த சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பிராமநேயம் போன்றவற்றை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர்தான் 'தந்தை பெரியார்' என்று தமிழுலகம் மரியாதையோடு போற்றும் திரு.ஈ.வெ.ராமசாமி.

(http://3.bp.blogspot.com/-HwIUSZfPEUg/TpvKA9xeVhI/AAAAAAAAA6s/QwOTiKU-CSg/s1600/periyar71.jpg)

1879 ஆம் ஆண்டு செம்படம்பர் 17ந்தேதி வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார் ஈ.வெ.ரா எனப்படும் ஈ.வெ.ராமசாமி. குடும்பம் வசதியானது. இருந்தும் அவர் மூன்று ஆண்டுகள்தான் கல்வி கற்றார். இளம் வயதிலேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தையின் வணிக முயற்சிகளில் உதவத் தொடங்கினார். உயர்சாதி என்று கருதிக் கொண்டவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, ஈ.வெ.ராவுக்கு மட்டும் சிறு வயதிலேருந்தே சமத்துவம், சமநீதி என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. சமுதாயப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு 40 வயதானபோது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர் மளிகை வியாபாரம் உட்பட நல்ல வருமானம் தந்துகொண்டிருந்த அத்தனை தொழில்களையும் விட்டுவிட்டு சமூகப்பணியில் ஈடுபடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஈரோடு நகரமன்றத் தலைவர் பதவி உட்பட மொத்தம் 29 பொறுப்புகளிலிருந்தும் ஈ.வெ.ரா விலகினார். காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

(http://2.bp.blogspot.com/-RHmt6NMYWbA/TpvHp2QfIvI/AAAAAAAAA6U/LcKBg1cAWKo/s320/Young_Periyar.JPG)

1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் கீழ்சாதி, மேல்சாதி என்ற பேதமில்லாமல் எல்லோரும் எல்லா கோவில்களிலும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பிராமணர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டத்தில் பின் வாங்காத ஈ.வே.ரா அடுத்த மூன்று ஆண்டுகளில் வைக்கம் (சாதி எதிர்ப்பு போராட்டம்) சத்தியாகிரகம் மேற்கொண்டார். அதன் வெற்றியால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் அச்சமின்றி பொதுச்சாலைகளைப் பயன்படுத்த முடிந்தது. நவீன இந்தியாவின் வரலாற்றில் அதுவே முதல் சமூகப் போராட்டமாக வருணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமையை ஒழிக்க எவ்வுளவோ முயன்றார் ஈ.வெ.ரா சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறை அறிமுகமாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு காந்தியடிகள் மறுப்புத் தெரிவிக்கவே 1925 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகினார் ஈ.வெ.ரா அதே ஆண்டு அவருக்கு மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எரியுமாறு தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்தார். பூசாரிகள் இல்லாமல் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதி வேற்றுமை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளவும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவும் ஊக்கமூட்டினார். கோவில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசிகள் முறையை ஒழிக்க சட்டப்பூர்வமாக ஆதரவு திரட்டினார். குழந்தைகள் திருமணத்தை வன்மையாகக் கண்டித்தார். அவருடைய தொடர்ந்த விடாப்பிடியான முயற்சியால் 1928 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை சென்னை நிர்வாகம் அறிமுகம் செய்தது.

1937 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கினார் அதனை வன்மையாக எதிர்த்த ஈ.வெ.ராவின் உறுதியான தலமையில் 1938 ஆம் ஆண்டு பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது அதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ஈ.வெ.ரா. அவர் சிறையில் இருந்தபோது சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவை இனிமேல் 'பெரியார்' என அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பெயர் நிலைத்தது. சிறையிலிருந்து வந்ததும் சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கினார் பெரியார். அதே நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்தது இறுதியில் 1940 ஆம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி கட்டாய இந்தி மொழிக்கல்வியை மீட்டுக்கொண்டது சென்னை நிர்வாகம். பெரியாரின் தொடர் போராட்டத்திற்கு இன்னொரு வெற்றி கிடைத்தது 1941 ஆம் ஆண்டில் இரயில்வே நிலையங்களில் இருந்த உணவகங்களில் பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனியாக உணவு பறிமாறப்படும் அருவெறுப்பான பழக்கம் அந்த ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டது.

(http://4.bp.blogspot.com/-kBfazHEqhP4/TpvIAdL6LmI/AAAAAAAAA6c/ITxIvvchEXA/s320/Annadurai_and_Periyar.jpg)

1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார் பெரியார். கழக உறுப்பினர்கள் தங்கள் பெயரிகளிலிருந்து குலப்பெயர்களையும், சாதிப்பெயர்களையும் நீக்கிவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 1948 ஆம் ஆண்டு தமது 70 ஆவது வயதில் 30 வயதான மணியம்மையை மணந்து கொண்டார் பெரியார். அதனைக் காரணம் காட்டித்தான் சிலர் திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணாவின் தலமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். 1952 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த ராஜாஜி ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்தார். பள்ளி சிறுவர்கள் காலை நேரங்களில் பள்ளிப் பாடங்களையும், மதிய நேரங்களில் அவர் அவரது பெற்றோர் செய்து வந்த தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். குலக்கல்வி திட்டம் என்று அழைக்கப்பட்ட அது தீண்டாமையைத் தொடரச் செய்யும் ஒரு சூசகமான திட்டம் என்று கொதித்தெழுந்த பெரியார் அதனை மீட்டுக்கொள்ளுமாறு முழங்கினார். அதன் விளைவாக 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ராஜாஜிக்கு ஏற்பட்டது.

அடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்த காமராஜர் உடனடியாக குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தினார். முதிர்ந்த வயதிலும் சமத்துவத்துக்கும், சமநீதிக்குமுமான போராட்டத்தை நிறுத்தவில்லை தந்தை பெரியார். அதன் பலனாக 1971 ஆம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி சாதி, குலம் என்ற அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். பின்னர் 1973 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். கோவில்களில் உள்ள கர்ப்ப கிரகத்துக்குள் எந்த சாதியைச் சேர்ந்த ஒருவரும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அந்த போராட்டத்தின் நோக்கம். இதுபோன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டுமென்று தன் கடைசி மூச்சுவரை போராடி சுய மரியாதை உணர்வை விதைத்து தீண்டாமையை ஒழித்து சாதிக்கொடுமைகளை புறமுதுகிட்டோடச் செய்த தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி தமது 94 ஆவது வயதில் காலமானார். அவரது வீரியமான பேச்சுக்களிலிருந்து இதோ ஒருசில வரிகள்...

(http://1.bp.blogspot.com/-cKnOlJxT16g/TpvIK2l-DAI/AAAAAAAAA6k/cirqTLN-3og/s320/periyar-400.jpg)

"மூடநம்பிக்கைகளை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது"

"சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியாமையாதது, ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்துகொண்டபடியே சொல்லுவது ஆகும். பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்"

தந்தை பெரியாருக்கு 1970 ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு விருது வழங்கிச் சிறப்பித்தது. அந்த விருதில் பொறிக்கப்பட்ட வாசகம் இது...

புதிய யுகத்திற்கான தூதுவர், தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்தத்தின் தந்தை, அறியாமை மூடபழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி...

இந்த அத்தனை வருணனைக்கும் பொருத்தமானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப்போல் தனக்குச் சரியென்று பட்டதை தயங்காமல் சொல்லும் அஞ்சாமையும், எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்கும் பண்பும், சமத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மூடபழக்கவழக்கங்களை தூக்கி எறியும் திணவும் தைரியமும் உள்ள எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 08:59:58 PM
இசை உலகின் பிதாமகன் மாமேதை பீத்தோவன் - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்!
தரவிறக்க (http://www.4shared.com/rar/y9aVJao9/historical_legends_part_-_1.html)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வரலாற்றில் தனது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது ஆஸ்திரியா. தங்கள் தேசத்தை சேர்ந்த பலர் உலகப் புகழ் பெற்றிருக்கின்றனர் என்பதையும், அவர்களின் உடல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் உணர்ந்த ஆஸ்திரியர்கள் அவர்கள் எல்லோரையும் வியன்னாவின் மையப்புற இடுகாட்டில் மறு அடக்கம் செய்ய விரும்பினர். 'grave of honor' என்ற ஒரு பகுதியை ஒதுக்கி வியன்னாவின் புகழை உலகெல்லாம் பரவச்செய்த வரலாற்று நாயகர்களின் மிச்சங்களை அங்கு மறு அடக்கம் செய்தனர்.

ஆண்டுதோறும் வியன்னாவுக்கு செல்லும் பல்லாயிரக் கணக்கானோர் 'grave of honor' என்ற அந்த சமாதிக்கு செல்ல தவறியதில்லை. ஒரு குறிப்பிட்ட கல்லறைக்கு முன் நின்று மரியாதை செலுத்தாமல் போவதில்லை. அந்தக் கல்லறையிலும் வரலாற்று ஏடுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் பீத்தோவன். இசைமேதை மோட்ஸார்ட் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவருடைய பாராட்டையும் பெற்று தனது இசையால் உலகையே வசீகரித்த உன்னத இசைக் கலைஞன் பீத்தோவன்.

(http://3.bp.blogspot.com/-48nzAtzZK1Q/TpKEWrpmh8I/AAAAAAAAA50/JtOOC8316XU/s320/499px-Beethoven.jpg)

1770 ஆம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி ஜெர்மனியின் பான் நகரில் பிறந்தார் லுட்விக் வான் பீத்தோவன். அவரது தாத்தாவும், தந்தையும் இசைக் கலைஞர்கள் தந்தை மதுவுக்கு அடிமையானவர் என்றாலும் பீத்தோவனின் இசைத் திறமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து ஊக்கமூட்டினார். ஜெர்மனியில் சிறு வயதிலேயே 'நீஃப்' என்ற இசைக் கலைஞரிடம் பியானோ இசைக்கக் கற்றுக் கொண்டார் பீத்தோவன். பனிரெண்டு வயதிலேயே அவர் இசைக்கூறுகளை வடிக்கத் தொடங்கினார்.

(http://4.bp.blogspot.com/-FEmTyG1NOeE/TpKHeJvnTcI/AAAAAAAAA6I/x6H7aMyOWBs/s320/beethovenat13.jpg)

அவரது இசைத் திறமை அனைவருக்கும் தெரியவர பதினேழாவது இசைக் கச்சேரி நிகழ்த்த வியன்னா சென்றார். அங்கு பதினான்கு வயது மூத்தவரான மோட்ஸார்ட்டுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நிகழ்த்தி மொஸார்ட்டின் பாராட்டையும் பெற்றார். அப்போது முதல் மோட்ஸார்ட்டும், பீத்தோவனும் இணைந்து பணியாற்றியிருக்கக்கூடும் ஆனால் தாயாருக்கு நோய்வாய்ப் படவே பான் நகர் திரும்பினார் பீத்தோவன். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் அவர் மீண்டும் வியன்னாவுக்கு வர முடிந்தது. அதற்குள் மோட்ஸார்ட் இயற்கை எய்தியிருந்தார்.

(http://3.bp.blogspot.com/-L5anX0PwpIg/TpKFnnm1S6I/AAAAAAAAA54/dBijaE-CEPY/s320/%257B6F51C5C5-BB84-4FA5-8D9D-6FDCB5B10640%257DImg100.jpg)

அந்த இரு இசை மேதைகளையும் ஒன்றாக இணைந்து பணியாற்ற இயற்கை அனுமதித்திருந்தால் இன்னும் பல இசை அதிசயங்களை உலகம் சந்தித்திருக்கக்கூடும். ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் ஆஸ்திரியர்கள் நல்ல புரவலர்களாக இருந்ததால் வியன்னாவில் குடியேறினார் பீத்தோவன். செல்வந்தர்கள் அவரை தத்தெடுத்துக் கொள்ள போட்டி போட்டனர். அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தந்தையிடம் இருந்த குடிப்பழக்கம் அவரிடம் இல்லாவிட்டாலும் வேறு சில கெட்ட குணங்கள் இருந்தன. நேரம் தவறாமையை அவர் கடைப்பிடித்ததில்லை, எளிதில் ஆத்திரமடைவார் எரிச்சலடைவார், பார்ப்பதற்கு தூய்மையாகவும் இருக்க மாட்டார். ஆனால் பியானோவில் அவர் நிகழ்த்திய அதிசயங்களால் அந்தப் பிழைகள் பெரிதாகப் படவில்லை.

(http://3.bp.blogspot.com/-Sv8NNnWE18A/TpKG2tpcCnI/AAAAAAAAA6E/N5jejNjD3A0/s1600/beethoven.png)

பீத்தோவனை உலகம் வியந்து போற்ற ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆரம்பத்தில் எந்த குறைபாடும் இல்லாத அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் குறைந்து கொண்டே போய் பின்னர் முற்றிலுமாக காது கேளாமல் போனது. தன் குறைபாட்டை நினைத்து மிகவும் நொந்துபோன பீத்தோவன் தற்கொலைக்குகூட முயன்றிருக்கிறார் என்பது வரலாற்று உண்மை. கண் தெரியாத ஒருவர் அழகான ஓவியம் தீட்ட முடியும் என்பதை எப்படி நம் மூளையால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல்தான் காது கேளாத ஒருவரால் அற்புத இசையை பிரசவிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசைக்குத் தேவையான புலனே செவிகள்தானே! ஆனால் அதைத்தான் செய்து காட்டினார் அந்த அதிசய மனிதன். ஆம் முழுமையான நிசப்த உலகில் வாழ்ந்து கொண்டே பல அமர படைப்புகளை உருவாக்கினார் பீத்தோவன். பீத்தோவனின் பெயர் சொல்லும் இசைப் படைப்புகள் யாவுமே அவர் கேட்கும் சக்தியை இழந்த பிறகு உருவானவை என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன.

(http://2.bp.blogspot.com/-elK-h41rSFc/TpKGtZKCmgI/AAAAAAAAA6A/s79lFPU7m1I/s320/beethoven-06.jpg)

தான் கேட்டு ரசிக்க முடியாத நிலையில் அவரால் எப்படி மகிழ்ச்சி, காதல், சோகம், வேதனை, விரக்தி, வீரியம், அச்சம், பக்தி, ஹாஸ்யம், எழுச்சி, என பல்வேறு பரிமாணங்களை தன் இசையில் வெளிக்கொணர முடிந்தது என்பதுதான் வரலாற்றுக்குகூட புரியாத புதிராக இருக்கிறது. உலகையே தனது இசையை காதலிக்கச் செய்த அவர் தன் வாழ்நாளில் சில பெண்களை காதலித்தார். ஆனால் ஒரு காதல்கூட கைகூடவில்லை. கடைசி வரை அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது சோர்ந்து போயிருந்த ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்ட உலகப் புகழ்பெற்ற BBC எனப்படும் பிரிட்டிஷ் ஒளிப்பரப்புக் கழகம் என்ன செய்தது தெரியுமா? பீத்தோவனின் எழுச்சியூட்டும் 5th சிம்பொனி எனப்படும் இசைக்கூறின் ஒரு பகுதியை தனது செய்திகளுக்கும், அறிவுப்புகளுக்கும் முன் ஒளிப்பரப்பியது.

(பீத்தோவன் - 5th சிம்பொனி)
http://www.youtube.com/v/_4IRMYuE1hI&wide=1&feature=player_embedded

இந்த இசையை கேட்ட போதெல்லாம் நலிந்திருந்த தேசமே புத்துயிர் பெற்றனர் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். காது கேளாமல் போனதிலிருந்து மேலும் 25 ஆண்டுகள் வாழ்ந்து 1827 ஆம் ஆண்டு மார்ச் 26ந்தேதி தனது 56 ஆவது வயதில் காலமானார் பீத்தோவன். தன் உடற்குறை காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் அவர் வெற்றி பெற்றிருந்தால் இசை உலகம் தோற்று போயிருக்கும் வரலாறும் அவரை மறந்து போயிருக்கும். ஆனால் அவர் மறைந்தபோது பத்தாயிரம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வீட்டிலிருந்து தேவாலயம் சுமார் ஆயிரம் அடி தொலைவில்தான் இருந்தாலும் கூட்ட நெரிசலால் அவரது இறுதிப் பயணம் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாம்.

(http://4.bp.blogspot.com/-IBk_ePoSscc/TpKGZ0WHHLI/AAAAAAAAA58/DdH3NQ3m2CQ/s1600/images.jpg)

காது கேளாமல் போனபோது தன்னம்பிக்கையின் அடி மட்டத்தைத் தொட்டாலும் ஒரு கால் நூற்றாண்டு உதாரண வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் பீத்தோவன். இயற்கை வரம் தர மறுத்தாலும் திறமையான கரமே அவருக்கு வரமாக பட்டது அதன் மூலம் அவர் விரும்பிய வானமும் வசப்பட்டது. நாமும் நம்மிடம் உள்ள குறைகளை எண்ணி துவண்டு கிடக்காமல் திறமைகளைத் தேடி புடம் போட்டுக்கொண்டால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on February 17, 2013, 09:15:38 PM
Ray Kroc (McDonald's உணவகம் உருவான கதை) - வரலாற்று நாயகர்!

அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்குதான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் புலம்ப கேள்விப்பட்டிருப்போம். நாம் சந்திக்கவிருக்கும் வரலாற்று நாயகர் அதிர்ஷ்டத்தை இவ்வாறு விளக்குகிறார். "Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get" அதாவது அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும்தான் நம் உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை அழகாகச் சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டிய ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

(http://1.bp.blogspot.com/-4xqtu5wbcak/TolGD4kz9XI/AAAAAAAAA5c/_txuKmtuzdU/s320/Ray-Kroc.jpg)

பலர் வேலை ஓய்வைப்பற்றி சிந்திக்கும் 52 வயதில் ஒரு தொழிலை தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துச் சேர்த்தவர் அவர். அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர் தொடங்கிய தொழிலின் அல்லது நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் மூன்று வயது குழந்தைகூட குதூகலிக்கும். ஆம் ஹம்பர்கர், ப்ரெஞ்ச்ப்ரைஸ், மில்க்‌ஷேக்ஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் பெயர் மெக்டொனால்ட்ஸாகத்தான் இருக்கும். 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 120 நாடுகளில் முப்பதாயிரம் உணவகங்களாக விரிவடைந்திருக்கிறது. பில்லியன் கணக்கானோரின் உண்ணும் பழக்கத்தையே மாற்றி அமைத்த அந்த உணவகப் புரட்சி எப்படி சாத்தியமாயிற்று? வாருங்கள் 'M' என்ற தங்க வளைவுகளை உலகுக்குத் தந்த திரு. ரே க்ராக்கின் வாழ்க்கையை அலசிப் பார்ப்போம்.

(http://1.bp.blogspot.com/-4-WxK_e7fqs/TokimP_izbI/AAAAAAAAA5M/4KT6lW6M19I/s320/kroc.jpg)

ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 5ந்தேதி சிக்காக்கோவில் பிறந்தார். கல்வியில் அதிக நாட்டமில்லாத அவர் உயர்நிலைக் கல்வியை முறையாக முடிக்காமலேயே வெளியேறினார். பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப்போர் சமயத்தில் அவர் தொண்டூழிய அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக சிலகாலம் பணிபுரிந்தார். சிறிதுகாலம் ஓர் இசைக்குழுவில் இசைக் கலைஞராக இருந்தார். பொருட்களை விற்பனை செய்வதில் அவருக்கு தனி ஆர்வம் இருந்தது. எனவே விற்பனை முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் மில்க்‌ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுதான் உணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.

கலிஃபோர்னியாவில்  San Bernardino என்ற பகுதியில் "Dick" McDonald , "Mac" McDonald என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை 'franchised' எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் Des Plaines என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை  'franchised' அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.

(http://4.bp.blogspot.com/-3tiBOcFk80c/TokjFnkyWFI/AAAAAAAAA5Q/vy6SCjnx1Nw/s320/42840084.jpg)

ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ராக். ஆனால் தங்கள் முதல் San Bernardino உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் என்ன செய்தார் தெரியுமா? அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. இன்று உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு நீங்கள் சென்றாலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸின் இமாயல வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் அதோடு காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. உதாரணத்திற்கு அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

(http://2.bp.blogspot.com/-8JOSL6SbjqA/TolFyX3d8II/AAAAAAAAA5U/N3IIvysosAM/s320/1268755181ray-kroc-and-mcdonalds.jpg)

1977 ஆம் ஆண்டு 'Grinding It Out' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் ரே க்ராக். அதில் அவரது முதல் வரிகள் இவை "I have always believed that each man makes his own happiness and is responsible for his own problems." அதாவது ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக்கொள்கிறான் அதேபோல் அவனது பிரச்சினைகளுக்கும் அவனே பொறுப்பு. மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகப் புரட்சியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டு 'ஹம்பர்கர் கிங்' என்று பெயரெடுத்த ரே க்ராக் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 14 ந்தேதி தனது 82 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார்.

இனி சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்...

Xerox - நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை சம்பாதிக்க அதற்கு 63 ஆண்டுகள் பிடித்தன. அதே தொகையை சம்பாதிக்க IBM - கணினி நிறுவனத்திற்கு 46 ஆண்டுகள் ஆயின. ஆனால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒரு பில்லியன் டாலரை 22 ஆண்டுகளில் ஈட்டியது. தரத்திற்கும், தூய்மைக்கும், சுவைக்கும், விரைவான சேவைக்கும், நியாயமான விலைக்கும் உலகம் தந்த பரிசு அது.

அப்படிப்பட்ட வருமானத்தைக் குவித்த ரே க்ராக் கூறிய இன்னொரு பொன்மொழி என்ன தெரியுமா? "If you work just for money, you'll never make it, but if you love what you're doing and you always put the customer first, success will be yours" பணத்திற்காக நீங்கள் வேலை செய்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆனால் எதையும் ஆழமான விருப்பத்தோடு செய்து வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டால் வெற்றி உங்களுடையது. எவ்வுளவு உண்மை இன்று உலகம் முழுவது 30 ஆயிரம் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் அன்றாடம் 46 பில்லியன் பேர் உணவுண்டு மகிழ்கின்றனர்.

(http://4.bp.blogspot.com/-AHVtRW_ABWM/TolF9f-vl4I/AAAAAAAAA5Y/fTe9-YUS4EQ/s320/Pg3-RayKroc_72dpi.jpg)

அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்துக்கு வரும் ஒன்றல்ல. வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஒன்று என்பதை வாழ்ந்து காட்டியவர் ரே க்ராக். வாய்ப்புகளை கண்டுகொள்ளும் திறமையும், தரம், தூய்மை, விரைவான சேவை, ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதும், உழைப்புதான் உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையும், கனவுகளை நனவாக்கிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்ற தைரியமும்தான் ரே க்ராக் என்ற ஹம்பர்கர் மன்னனுக்கு விரைவு உணவகம் என்ற வானத்தை வசப்படுத்தின. இதே பண்புகளோடும் விடா முயற்சியோடும் செயல்பட்டால் நாமும்கூட நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதில் சந்தேகம் ஏதும் உங்களுக்கு உண்டா?!
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 06, 2013, 09:49:25 PM
மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை) - வரலாற்று நாயகர்!

வரலாற்று நாயகர்கள் (பாகம் - 1) மின்புத்தக வடிவில்!
தரவிறக்க (http://www.4shared.com/rar/y9aVJao9/historical_legends_part_-_1.html)

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.

(http://4.bp.blogspot.com/-jM04FyIFJv0/Tn-5GRmW0BI/AAAAAAAAA4c/c2qISovHMTM/s320/michaelfaraday.jpg)

1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

(http://3.bp.blogspot.com/-K6PWUOmh96k/Tn-5qxcDlFI/AAAAAAAAA4g/x4z4b5V8Fog/s320/OipG1206242709.jpg)

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

(http://4.bp.blogspot.com/-4X9VrkYTI_c/Tn-6qZtOpeI/AAAAAAAAA4s/Lon0MK08J78/s320/What-Did-Michael-Faraday-Invent.jpg)

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

(http://3.bp.blogspot.com/-Azv3I4U080Q/Tn-6F1zGkVI/AAAAAAAAA4k/vqbk0rOvC9g/s320/faraday1.gif)

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

(http://4.bp.blogspot.com/-KBr3b27qvAo/Tn-6WOAfW7I/AAAAAAAAA4o/Z9bY_k5q3cg/s320/2668093_COM_faraday_michael_christmas_lecture_detail.jpg)

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 06:36:03 PM
அணுவைத் துளைத்த விஞ்ஞானியின் கதை - ('சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு') வரலாற்று நாயகர்!
 
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்' என்று திருக்குறளைப் புகழ்ந்துப் பாடினார் ஒளவையார். திருக்குறள் எவ்வுளவு சிறிய வடிவில் எவ்வுளவு பெரிய விசயங்களைச் சொல்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த ஆகச் சிறியப் பொருள் அணுதான். அந்த அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகுத்துவதென்றால் முடியக்கூடியக் காரியமா? ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய ஒளவையாரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே ஆகச்சிறியப் பொருளான அணுவைத் துளைக்க முடியாதா? என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் அணுவையும் துளைக்க முடியும் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.

(http://1.bp.blogspot.com/-uJEcBHXa_Lo/Tm2WxCvHAcI/AAAAAAAAA3Y/Ddo3ohRomec/s320/rutherford-s-atomic-model.jpeg)

அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். அணுவைப் பிளக்கும் கண்டுபிடிப்பு அணுகுண்டு உற்பத்திக்குத் துணையாக இருந்தது என்ற ஒன்றை ஒதுக்கி விட்டு நாம் அந்த கண்டுப் பிடிப்பாளரின் கதையைத் தெரிந்துகொள்வோம். அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 'சர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு'.

(http://3.bp.blogspot.com/-xu_LOlHzeV4/Tm2S5lPUMfI/AAAAAAAAA28/oWaClDiOzqE/s320/Sir+Ernest+Rutherford.jpg)

1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 30ந்தேதி நியூசிலாந்தின் நெல்சன் எனும் இடத்தில் பிறந்தார் ரூதர்ஃபோர்டு. பனிரெண்டு பிள்ளைகளில் நான்காமவர். அவரது குடும்பம் ஓர் எளிய விவசாய குடும்பம். குடும்பப் பண்ணையில் பெற்றோருக்கு உதவியாக இருந்த அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் சிறிய வயதிலேயே அவர் கடும் உழைப்பாளியாக இருந்தார். உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட ரூதர்ஃபோர்டின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். பீரங்கிகள் கம்பீரமாக முழங்குவதைப் பார்த்திருந்த அவர் அதே மாதிரி சத்தம் எழுப்பக் கூடிய ஆனால் அழிவை ஏற்படுத்தாத ஒரு பொம்மை பீரங்கியைச் செய்ய விரும்பினார்.


சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வெடி மருந்தையும் பயன்படுத்தி பொம்மைப் பீரங்கியைச் செய்தார் அதனை இயக்கி விட்டு ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டார். பெரும் சத்தத்துடன் விளையாட்டுப் பீரங்கி வெடித்து ஓய்ந்தது. மகிழ்ந்து போன ரூதர்ஃபோர்டு அதோடு நின்று விடவில்லை அந்த பீரங்கியின் வேகத்தையும் அது எழுப்பும் சத்தத்தையும் மேலும் எப்படி அதிகரிக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி ஓயாமல் சிந்திக்கும் அவரது பண்புதான் பிற்காலத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்தது.

(http://4.bp.blogspot.com/-hr8zMxIOyJU/Tm2Ui0IvjLI/AAAAAAAAA3Q/GzBk15Fz4CM/s320/ernest-rutherford-medium.jpg)

கல்வியில் சிறந்து விளங்கிய ரூதர்ஃபோர்டுக்கு நெல்சன் கல்லூரி உபகாரச்சம்பளம் வழங்கியது. பின்னொரு அந்த உபகாரச் சம்பளத்தைப் பற்றி குறிப்பிட்ட ரூதர்ஃபோர்டு அது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஒரு விவசாயியாக போயிருக்கக்கூடும் என்று கூறினார். கல்லூரி முடிந்து நியூசிலாந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்த அவர் தனது 22 ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழக நாட்களில் மின் காந்த அலைகளின் சோதனையில் முகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார். அந்தத் துறையில் தொடர்ந்து ஆராய்ட்சி செய்ய அவருக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது இங்கிலாந்தின் கேம்ஃபிரிட்ஜ் பல்கலைக்கழகம். 24 வயதில் கேம்ஃபிரிட்ஜ் வந்து சேர்ந்த ரூதர்ஃபோர்டு மின்காந்த அலைகள், மின் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஆராய்ட்சிகள் செய்தார். கெவெண்டிஷ் ஆராய்ட்சிக் கூடத்தில் அவர் யுரேனியம் என்ற தனிமத்தைக் கொண்டும் ஆராய்ட்சிகள் செய்தார். யுரேனியம் வெளியிடும் கதிர்வீச்சை அளக்க ஒரு புதிய கருவியை உருவாக்கினார். அந்தக் கதிர்வீச்சுகளுக்கு ஆல்பா, பீட்டா, காமா என்று பெயரிட்டார். 

(http://3.bp.blogspot.com/-BRsLgH2s9eY/Tm2Tvb4tK5I/AAAAAAAAA3E/hd24F65AEFM/s320/Rutherford.gif)

ரூதர்ஃபோர்டின் ஆராய்ட்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த கனடாவின் Montreal பலகலைக்கழகம் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றும்படி அவருக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று 27 ஆவது வயதில் அங்கு சென்ற ரூதர்ஃபோர்டு தனது ஆராய்ட்சிகளைத் தொடர்ந்ததோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இங்கிலாந்து திரும்பிய ரூதர்ஃபோர்டு இந்த முறை Manchester பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்தார். யுரேனியம் வெளியிடும் அணுக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக ரூதர்ஃபோர்டுக்கு 1908 ஆம் ஆண்டுக்கான இராசயனத்துறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு வழங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் மிக முக்கியமான இன்னொரு கண்டுபிடிப்பைச் செய்தார் ரூதர்ஃபோர்டு. அணு என்பது ஒரு திடப்பொருளல்ல எப்படி சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ அதேபோல் அணுவுக்குள் நியூக்ளியர் என்ற நடுநாயகத்தை எலக்ட்ரான்ஸ் என்பவை சுற்றி வருகின்றன என்பதுதான் அந்த உண்மை.

(http://2.bp.blogspot.com/-_XM3fUWrtpY/Tm2TE0hM5MI/AAAAAAAAA3A/GiVkfc4Nccs/s1600/6300652.gif)

அணுவின் தன்மைப் பற்றி அதுவரை அறியப்படாத உண்மை அது. முதல் உலகப்போரின்போது நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் கருவி ஒன்றை உருவாக்கித் தந்தார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரூதர்ஃபோர்டுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது இங்கிலாந்து அரசு. ரூதர்ஃபோர்டுக்கு அழியாப் புகழ் கிடைத்த ஆண்டு 1919 இந்த ஆண்டில்தான் அவர் அதுவரை முடியாது என நம்ப பட்டதை செய்து காட்டினார் ஆம் அணுவை பிளந்து காட்டினார். யுரேனியத்தில் ஆல்பா துகள்களை செலுத்தினால் எதிர் விளைவுகள் சங்கிலித் தொடர்போல் ஏற்படும் என்பதை விளக்கிக் காட்டினார். அந்த உண்மைதான் பிற்காலத்தில் அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. ஆனால் அவரது ஆராய்ட்ச்சிகளின் நோக்கம் அழிவுக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்வதல்ல. அணுசக்தியால் மனுகுலத்திற்கு நன்மைகள் ஏற்படும் என்று அவர் நம்பினார். அதே நோக்கத்துடன் கடைசி வரை உழைத்த ரூதர்ஃபோர்டு 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார். அவரது அஸ்தி  Westminster Abbey யில் நியூட்டன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

நல்லவேளையாக ரூதர்ஃபோர்டு வாழ்ந்த காலம்வரை அணுகுண்டுகளோ, ஹைட்ரஜன் குண்டுகளோ உற்பத்தி செய்யப்படவில்லை. இல்லையெனில் எளிமையையே விரும்பிய அந்த விஞ்ஞானி மனம் நொந்து போயிருப்பார். இன்று அணுசக்தியால் உலகம் பல நன்மைகளை அனுபவித்து வருகிறது. மின் உற்பத்தி மற்றும் நெடுந்தூர கடல் பயணம் போன்றவற்றிற்கெல்லாம் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. இன்னும் பல ஆக்க சக்திகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டே வருகின்றனர். அந்த நன்மைக்கெல்லாம் உலகம் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுக்குதான் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் பல பட்டங்களையும், விருதுகளையும் வாங்கிக் குவித்தார் ரூதர்ஃபோர்டு. அவரை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடன், ரஷ்யா, கனடா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் ரூதர்ஃபோர்டின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டிருக்கின்றன.

(http://1.bp.blogspot.com/-tCw-I-IOJDo/Tm2VvZpDCRI/AAAAAAAAA3U/OwqkdyI5ON4/s320/dep_2928318-Ernest-Rutherford.jpg)

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்த ரூதர்ஃபோர்டுக்கு உறுதுணையாக இருந்த பண்புகள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும்தான். அப்படி விடாமுயற்சியோடு செயல்பட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதால்தான் அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை வரலாறு பெருமையுடன் நினைவில் வைத்திருக்கிறது. ரூதர்ஃபோர்டைப் போலவே நாமும் இந்த இரண்டு பண்புகளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடினால் நிச்சயமாக வரலாறும் இடம் தரும் அதன் மூலம் நாம் விரும்பும் வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 06:42:06 PM
ஸ்காட் ஹமில்டன் (figure skating championship) - வரலாற்று நாயகர்!
 
நாம் சராசரியாக வாழும் 60 அல்லது 70 ஆண்டுகளில் இந்த பூமிக்கு வெறும் பாரமாக மட்டும் வாழ்ந்துவிட்டு மறைகிறோமா? அல்லது பாரமாக பல சுமைகள் நம் தோள்களில் கனத்தாலும் மற்றவர்கள் நம்மை தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்கிறோமா? என்பதைப் பொருத்துதான் வரலாறு நம் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறது. நம்மில் பெரும்பாலோர் வரையறுக்கப்பட்டப் பாதைகளில் செல்லும் வழிப்போக்கர்களாக மட்டும் இருப்பதால் மக்கள் தொகையில் ஒரு புள்ளி விபரமாகவே இருந்துவிட்டு மறைகிறோம். ஒருசிலர்தான் தங்களுக்கு முன் இருக்கும் முட்புதர்களைக் களைந்து புதியப் பாதைகளை அமைத்து புதிய பயணங்களை மேற்கொள்ளும் போதுதான் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற உண்மையை உலகம் உணருகிறது. அந்த உண்மை விளையாட்டுத் துறைக்கு அதிகமாகவே பொருந்தும்.

குறையில்லாமல் பிறந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்கள் மின்சாரம் பாய்ந்ததும் ஒளிரும் மின்விளக்குப் போன்றவர்கள். கடும் உழைப்பு என்ற மின்சாரம் பாயும்வரை அவர்கள் ஒளிர்வது உறுதி. ஆனால் குறையோடு பிறந்தும் விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்கள் திரிவிளக்கு போன்றவர்கள் தொடர்ந்து எண்ணெய் வார்த்து திரியை மாற்றினாலும் பலத்த காற்று வீசினால் அவர்கள் அணைந்து போகும் அபாயம் உண்டு. அப்படிபார்த்தால் மின்விளக்கு தரும் ஒளியைவிட திரிவிளக்கு தரும் ஒளி அதிக மகிமை வாய்ந்தது அழகு வாய்ந்தது. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர் திரிவிளக்குப் போன்றவர். உடற்கூறை புற்றுநோய் என்ற பலத்த காற்று வீசியபோதும் பிரகாசமாக ஒளிரும் ஓர் உன்னத வீரர். உலக வீரர் பட்டத்தை நான்குமுறை வென்ற அதிசய வீரர். ஆம் அவர்தான் ஸ்காட் ஹமில்டன்.

(http://4.bp.blogspot.com/-Pm48t_XXwfI/TmQp31gHWWI/AAAAAAAAA2A/W23OWp8LcPc/s320/HamiltonCanCare.jpg)

1958 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 28ந்தேதி அமெரிக்காவில் பிறந்தார் ஸ்காட் ஹமில்டன். அவர் பிறந்து ஆறே வாரங்களில் எர்னஸ்ட் ஹமில்டன், டார்த்தி ஹலில்டன் என்ற தம்பதியினர் தத்தெடுத்துக் கொண்டனர். இரண்டு வயதானபோது ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டார் ஸ்காட். அந்த நோய் உடல் வளர்ச்சியைத் தடுக்கும் ஓர் நோய். அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவமனைதான் ஹமில்டனின் இரண்டாவது இல்லமாக இருந்தது. என்னனமோ மருந்துகளை பரிந்துரைத்தனர் மருத்துவர்கள். ஹமில்டனுக்கு இருப்பது சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்று தவறுதலாக கணித்த மருத்துவர்கள் ஹமில்டன் இன்னும் ஆறு மாதங்கள்தான் உயிர் வாழ்வார் என்றும் கெடு கொடுத்தனர். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன்தான் அது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோய் என்பது தெரிந்தது. சிறப்பான உணவுத்திட்டம் மற்றும் உடற்பயிற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம்பெற தொடங்கினார் ஸ்காட்.

ஹமில்டனின் சகோதரி சூசன் பனிச்சறுக்குப் போட்டியில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை அவர் அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த ஹமில்டனுக்கு தானும் சறுக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. ஒருமுறை சறுக்கிப்பார்த்த ஹமில்டனுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆரம்பத்திலிருந்தே தைரியமாகவும் மிகுந்த வேகத்துடனும் சறுக்கத் தொடங்கினார் ஹமில்டன். குளிர்ச்சியான சூழ்நிலையில் அவர் செய்த கடுமையான சறுக்குப் பயிற்சியால் அவரது உடல் அதிசய வேகத்தில் குணமடையத் தொடங்கியது. ஹமில்டன் மூண்டும் வளரத் தொடங்கினார். இருப்பினும் ஒரே ஒத்த வயதுடைய பையன்களுடன் ஒப்பிடும்போது அவரது உயரம் குறைவாகவே இருந்தது. தனது 13 ஆவது வயதில் ஹமில்டன் தேசிய உள்ளரங்கு போட்டியில் கலந்துகொள்வதற்காக பயிற்சி செய்யத் தொடங்கினார். அந்தப் பயிற்சிக்கு செலவு அதிகம் என்பதால் அதிக பணம் சம்பாதிக்க தனக்கு புற்றுநோய் இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவரது தாயார் சிரமப்பட்டு கல்லூரியில் கற்பிக்கத் தொடங்கினார்.

(http://1.bp.blogspot.com/-ZH8SKf3u1HQ/TmQpNbRKk9I/AAAAAAAAA14/yXA-JRI8WoE/s320/220px-Scott-Hamilton-Golf.jpg)

தன் முன்னேற்றத்திற்காக உழைத்த அந்த தாய் புற்றுநோயால் மரணமடைந்தபோது கலங்கிய ஹமில்டன், பனிச்சறுக்குப் போட்டியில் உலக விருதை வெல்வதே தன் தாய் தன்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு தான் செய்யக்கூடிய கைமாறு என்று உறுதி பூண்டார். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு தன் உடலை வருத்தி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். இங்கு அந்த ஜோதியை அணைப்பதற்கு இன்னுமொரு காற்று வீசியது. பனிச்சறுக்குப் போட்டிகளில் நடுவர்களாக இருந்த சிலர் ஹமில்டனைப் பார்த்து உலக அரங்கில் சறுக்குவதற்குரிய உயரமும், கம்பீரமும் அவருக்குக் கிடையாது என்றும் எனவே அந்த விளையாட்டை மறந்துவிடுமாறும் கூறினர். ஏற்கனவே வளர்ச்சிக் கோளாற்றை கடுமையாக போராடி வென்ற ஸ்காட் இந்த நடுவர்களின் கருத்துக் கோளாற்றையும் போராடி வெல்ல வேண்டியிருந்தது. நடுவர்களின் கூற்றை பொய்யாக்கிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இன்னும் கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார் ஸ்காட் அதற்கான உழைப்பு வீண்போகவில்லை.

(http://3.bp.blogspot.com/-9XX1Jj5TlgY/TmQo3wmm4cI/AAAAAAAAA1w/du1gZ-ymNXM/s320/scott-hamilton1.jpg)

1980 ஆம் ஆண்டு ஸ்காட்டிற்கு 22 வயதானபோது தேசிய அளவிலான உள்ளரங்கு பனிச்சறுக்குப் போட்டியில் மூன்றாவது இடத்தை வென்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவிலும் ஓர் இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டு லேக் பிளஸிடில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவது இடத்தை வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற பனிச்சறுக்கு முதல் இடத்தை வென்ற ஹமில்டன் தான் கனவு கண்டதைப் போலவே உலக பனிச்சறுக்குப் போட்டியிலும் முதல் இடத்தை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவரது குள்ளத்தை காரணம் காட்டி உள்ளத்தை முடக்க நினைத்த அந்த நடுவர்கள் அப்போது தோற்றுப்போயினர். அதுமட்டுமல்ல அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெற்ற அனைத்து தேசிய மற்றும் உலகப் போட்டிகளிலும் ஹமில்டனுக்கே முதலிடம். தொடர்ந்து எட்டு விருதுகளை வென்ற அந்தச் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.

(http://1.bp.blogspot.com/-JYfTU1106Bk/TmQpCpOea-I/AAAAAAAAA10/6k8_6FA9HEw/s320/_240_1000_Book.30.cover.jpg)

தனது பனிச்சறுக்கு சாதனைகளின் உச்சகட்டமாக 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றார் ஸ்காட் ஹமில்டன். தங்கபதக்கம் வென்றபோதும் அந்த ஜோதியின் மீது தொடர்ந்து காற்று வீசியது. உள்ளரங்கு பனிச்சறுக்கு விளையாட்டில் பெண்களே சிறக்க முடியும் என்றும், அவர்களாலேயே ரசிகர்களை கவர முடியும் என்று கூறி ஹமில்டனை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தத் தயங்கின பல நிறுவனங்கள். இரண்டு ஆண்டுகள் ஐஸ்கபேப்ஸ் என்ற பனிச்சறுக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அதில் தலமையத்துவ மாற்றம் ஏற்பட்டபோது ஸ்காட் வெளியேற்றப்பட்டார். ஆண் பனிச்சறுக்கு வீரர்களுக்கும் குறிப்பாக தனக்கும் போதிய அங்கீகாரம் கிடைக்காததால் வெறுப்படைந்த ஹமில்டன் என்ன செய்தார் தெரியுமா?! 'The Scott Hamilton America Tour' என்ற தனது சொந்த நிபுனத்துவ பனிச்சறுக்குக் காட்சியை உருவாக்கி அமெரிக்கா முழுவதும் அதனை கொண்டு சென்றார். மிகவும் பிரபலமடைந்த அந்த நிகழ்ச்சிதான் பின்னர் உலக புகழ்பெற்ற 'Stars on Ice' என்ற நிகழ்ச்சியாக மாறியது.

உள்ளரங்கு பனிச்சறுக்கில் ஹமில்டன் கொண்டு வந்த நளினமும், கம்பீரமும் பல புதிய பார்வையாளர்களை அந்த விளையாட்டிற்கு ஈர்த்தது. 12 ஆண்டுகள் அவரை ஒதுக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்னார் அவரைத் தேடி வந்தன. 1984 மற்றும் 1986 ஆம் ஆண்டிலும் உலக 'figure skating championship' விருதை வென்ற ஸ்காட்டின் பெயர் 1990 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒலிம்பிக் சாதனையாளர்களில் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1997 ஆம் ஆண்டு அந்த ஜோதியை அணைக்க மற்றுமொரு காற்று வீசியது. அந்த ஆண்டு மார்ச் 18ந்தேதி ஹமில்டனுக்கு ஆண்விதையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போராட்டத்திற்கு பழக்கப்பட்டுப்போன ஸ்காட் அப்போது கூறியது என்ன தெரியுமா?! "The Only Disability in Life is a Bad Attitude" தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு என்று கூறிய அவர் அந்த புற்றுநோயையும் போராடி வென்றார். 

(http://1.bp.blogspot.com/-4lWtVRWYiAY/TmQpeaWGD-I/AAAAAAAAA18/ah3qLNxbaNA/s320/scott-hamilton.jpg)

வெற்றிகரமான அறுவை சிகிச்சை மற்றும் மூன்றுமாத கெமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஹமில்டன் மீண்டும் பனிச்சறுக்கில் சாகசம் காட்டத் தொடங்கினார். அதோடு நின்றுவிடவில்லை 'Scott Hamilton CARES' என்ற புற்றுநோய் ஆராய்ட்சி அமைப்பை ஏற்படுத்தி அந்த நோய்க்கு தீர்வு காணும் எல்லா முயற்சிகளுக்கும் உதவி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் அந்த அறநிதி அமைப்பு புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், ஆராய்ட்ச்சிக்காவும் சுமார் பத்து மில்லியனுக்கும் மேலான அமெரிக்க டாலர் நிதி திரட்டியிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு 'Landing It' என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ஸ்காட், 2001 ஆம் ஆண்டில் நிபுனத்துவ பனிச்சறுக்கிலிருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் Make a wish Foundation, Special Olympics, Aids அறக்கட்டளை, ஆகிய சமூக அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.

விளையாட்டுத் துறையில் உச்சத்தைத் தொட நல்ல உடல்கட்டு அவசியம் மட்டுமல்ல அடிப்படையும்கூட, அந்த அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையிலும் ஸ்காட் ஹமில்டனால் அவர் விரும்பிய வானத்தை வசப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் தன் உடற்குறை ஒரு பொருட்டல்ல என்ற தன்னம்பிக்கையும், உழைப்பவன் உயர்வான் என்ற உண்மையில் நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும், தன்னால் உலகம் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும்தான். இந்தப் பண்புகள் நமக்கு இல்லாவிட்டாலும்கூட ஸ்காட் ஹமில்டன் கூறியதுபோல "The Only Disability in Life is a Bad Attitude" அதாவது தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு என்பதில் உள்ள உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் விடாமுயற்சியோடு செயல்பட்டாலே போதும் நம்மாலும் அந்த வானத்தை வசப்படுத்த முடியும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 06:45:57 PM
தொலைக்காட்சி உருவான கதை - John Logie Baird (வரலாற்று நாயகர்)
 
உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு. 1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா?! என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird.

(http://2.bp.blogspot.com/-O-EBdZVDyHg/TlxWxcAX8UI/AAAAAAAAA04/9SEneKZJrPI/s320/john_logie_baird_suit_and_tie.jpg)

1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை ஒரு பாதிரியார் குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். பேர்ட்க்கு சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது பணிரெண்டாவது வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

(http://4.bp.blogspot.com/-T7fOh6xePSs/TlxW9IBoIII/AAAAAAAAA08/PcEdlFj_Gxk/s320/Frith.jpg)

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆராய்ட்சிகளை செய்து பார்த்தார்.

(http://2.bp.blogspot.com/-qMUom8Z97qk/TlxXFvvWAZI/AAAAAAAAA1A/506D7bImx6U/s320/Sydenham.jpg)

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆராய்ட்சிக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார்.

(http://3.bp.blogspot.com/-ymQJSkKl60Q/TlxYTYdxsXI/AAAAAAAAA1E/Eb52TR_WSAw/s1600/bairdjohnl.jpg)

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். இன்று தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். ஆனால் 85 ஆண்டுகளுக்கு முன்புவரை அது ஒரு கற்பனையாகவே இருந்தது. ஜான் லோகி பேர்ட் முயன்றதால் அந்தக் கற்பனை நிஜமானது. நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி 1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். ஜான் லோகி பேர்ட் 12 ஆவது வயதிலேயே தொலைக்காட்சிப் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார் என்று கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.

இதே வயதில் உங்கள் பிள்ளைகளும் சிறுவயதிலேயே எதாவது சோதனைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களா!! அவர்களைத் தட்டிகொடுத்து ஊக்கப்படுத்துங்கள். அவர்களைப் போன்றொர்களுக்குதான் வரலாறும் இடம்தர காத்திருக்கிறது. உடல் நலமின்மையும் வறுமையும்கூட ஜான் லோகி பேர்டின் கனவையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் குலைத்து விடவில்லை. இதேபோல் நாமும் நமது வாழ்வில் கனவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியோடு முன்னேறினால் இவற்றுக்கு முன் எந்தத் தடையும் உடையும். எந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 07:35:57 PM
மாவீரன் நெப்போலியன் (ஒரு 'சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்') - வரலாற்று நாயகர்!
 
(http://1.bp.blogspot.com/-1rs1oJaQ6go/TlGQjivRmeI/AAAAAAAAA0Q/b9Istr7qF8E/s320/20269777.jpg)

1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

(http://4.bp.blogspot.com/-L4x5LghFTm4/TlGQb4r-MUI/AAAAAAAAA0M/syt_9QIrTfA/s320/6a00d8341c4f7053ef00e554f632d38834-800wi.jpg)

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதில் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற்குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந்தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடுத்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே  Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது என்று கட்டளையிட்டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்டெழுந்த நெப்போலியன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.

(http://4.bp.blogspot.com/-7IFbLP9Uusg/TlGQ6M5YelI/AAAAAAAAA0Y/mNbxIBt-w1U/s1600/napoleon.jpg)

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண்டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாயினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறையிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண்டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போலியன். புதிய படையை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல்ஜியத்தின் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைப்பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என்ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப்போலியன் என்ற வீரசகாப்தம் முடிவுக்கு வந்தது.

(http://4.bp.blogspot.com/-1OdipBr-x4c/TlGRL56nYgI/AAAAAAAAA0c/s7t7aU1IX-A/s1600/nbwithcrown.jpg)

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தினால் உருவானவர்தான் நெப்போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அமைதி நிலவியது. பொருளாதார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயிண்ட் ஆற்றுக்கு மேல் பாலங்கள் கட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உருவாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவர் வகுத்துத் தந்த Civil Code என்ற புதிய சட்டங்கள். அந்தச் சட்டங்கள் Code of Napoleon என்றும் அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச்சட்டங்கள் மூலம் நெப்போலியனுக்கு கிடைத்தது.

(http://3.bp.blogspot.com/-Mg5cGnd-ess/TlGQvD1nsiI/AAAAAAAAA0U/Susvp1ph4Q0/s1600/napoleon_iii.jpg) (http://www.friendstamilchat.com)

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச்செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது.  “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பிக்கையின் மீதி” இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது. அந்த மந்திரம்தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது நெப்போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடிகொண்டிருந்த துணிவு, நம்பிக்கை, முயற்சி ஆகியவை நமக்கு இருந்தால் நமக்கும் நாம் விரும்பும் வெற்றியும் அதன்மூலம் அந்த வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 07:48:41 PM
மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1
 
(http://2.bp.blogspot.com/-m8MSdYq4nTA/TkhtpI4ZZuI/AAAAAAAAAy0/AW4U1DfP3uQ/s1600/fl.gif)

(http://4.bp.blogspot.com/-ngVChC7XQX8/TkhtvLq1pSI/AAAAAAAAAy4/kYzez7h9sVk/s1600/image006.jpg)

மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா)

உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள். உலக வரலாறு மஹாத்மா எனற பட்டத்தை வழங்கி கவுரவித்திருக்கும் ஒரே சரித்திர நாயகர். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் பிறந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவரது தந்தை காபா கரம்சந்த் காந்தி 25 வயதிலேயே அமைச்சரானவர். தாயார் பெயர் புத்திலிபாய்.

(http://2.bp.blogspot.com/-zvEl8AE6Iic/TkirEKhJw_I/AAAAAAAAAzU/ovT8rssaOJQ/s1600/1.jpg)

சிறுவயதில் 'அரிச்சந்திரா' நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது காந்திக்கு. அந்தப் பிஞ்சு வயதிலேயே அரிச்சந்திரன் கதாபாத்திரம் அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்நாள் முழுவதும் உண்மையையே பேச வேண்டும் என்ற எண்ணத்தையும் அவருக்குள் விதைத்தது. காந்தி தொடக்கப்பள்ளியில் பயின்றபோது ஒருமுறை சோதனை அதிகாரி வந்தார் சில சொற்களைச் சொல்லி எல்லா மாணவர்களையும் எழுதச் சொன்னார். காந்தி ஒரு வார்த்தையை தவறாக எழுதியிருந்ததைப் பார்த்து அவருடைய ஆசிரியர் காந்தியின் காலை மிதித்துப் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும்படி சைகைக் காட்டினாராம். ஆனால் ஆசிரியரே தவறான வழிகாட்டிய போதிலும் அவ்வாறு செய்ய மறுத்து விட்டாராம் காந்தி. தொடக்கப்பள்ளியில்கூட அவர் காட்டிய நேர்மை வியப்பைத் தருகிறதல்லவா!!

(http://1.bp.blogspot.com/-gbkGGx35SoA/TkirRleHIBI/AAAAAAAAAzY/KHMfy2_lfIU/s1600/7.jpg)

அந்தக்காலத்தில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் பரவலாக இருந்ததால் 13 ஆவது வயதிலேயே காந்திக்கு திருமணம் நடைபெற்றது கஸ்தூரிபாய் என்ற பெண்ணை அவர் மணந்துகொண்டார். கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் தன்மகன் கெட்டுப்போய் விடுவான் என்று அஞ்சிய தாயார் காந்தி வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தார். மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துதந்த பிறகே காந்தி இங்கிலாந்து செல்ல அனுமதித்தார் தாய். செளகரியத்திற்காக சத்தியம் செய்யும் பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். ஆனால் சத்தியம் காப்பதற்காகவே பிறந்தவர் என்பதை அந்த இளம் வயதிலேயே வாழ்ந்து காட்டினார் காந்தி. தான் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீறாமல் ஒரு முழுமையான மனிதனாக 1891 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

(http://4.bp.blogspot.com/-R5pMA3YD4Z8/TkipPQO8r-I/AAAAAAAAAzA/FuCZ4QyfRp0/s1600/5.jpg)

மீண்டும் இந்தியா திரும்பி வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம் காந்திக்கு ஏற்பட்டது. 1893 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் அப்போது நிறவெறிக் கொள்கையும், இனஒதுக்கல் கொள்கையும் தலை விரித்தாடியது. அங்கு இந்தியர்கள் அவமானப்படுத்தப் படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார். நம்மில் பெரும்பாலோர் அநீதிகளை கண்டு கலங்குவதோடு நின்று விடுவோம் ஆனால் காந்தி அதனை எதிர்க்க முற்பட்டார். தென்னாப்பிரிக்கவிலேயே தங்கி இந்தியர்களின் சம உரிமைக்காகப் போராட முடிவெடுத்தார்.

(http://2.bp.blogspot.com/-7Idos8ciMeo/TkipyJPjlRI/AAAAAAAAAzI/KNmbvNx-UtU/s1600/8.jpg)

டர்பன் நகரில் நாட்டல் என்ற பகுதியில் ஒன்றல்ல இரண்டல்ல 21 ஆண்டுகள் தங்கி பல சமூக அரசியல் பரிசோதனைகளைச் செய்துப் பார்த்தார். அந்த முயற்சிகளின் மூலம் அவர் உலகுக்குத் தந்த பெரும்கொடைதான் 'சத்தியாக்கிரகம்' என்ற அகிம்சை அறவழிப் போராட்டம். தென்னாப்பிரிக்காவில் புகைவண்டியில் பயணம் செய்யும்போது ஒரு பெட்டியில் ஒரு வெள்ளையர் இருந்தாலும் அந்தப்பெட்டியில் கருப்பரோ, இந்தியரோ ஏறக்கூடாது என்ற சட்டம் இருந்தது. ஒருமுறை ஆங்கிலேயர் இருந்த ஒரு பெட்டியில் காந்தி ஏறினார். உடனடியாக இறங்குமாறு அந்த ஆங்கிலேயர் சொன்னதுக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியை உதைத்து வெளியில் தள்ளினார் அந்த வெள்ளைக்காரர். இந்த மாதிரி பல அவமானங்கள் ஏற்பட்டபோதும் அகிம்சை வழியில் உலகை வெல்லலாம் என்ற அவரது மன உறுதி சற்றும் குலையவில்லை. இறுதியில் காந்தியம்தான் வென்றிருக்கிறது. ஏனெனில் எந்த புகை வண்டி நிலையத்தில் அவர் உதைத்துத் தள்ளப்பட்டாரோ அதே நிலையத்தில் இன்று காந்தியடிகளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

(http://4.bp.blogspot.com/-SZrODUAGtu8/Tkiqgru3MlI/AAAAAAAAAzQ/7QlG9uuC9AE/s1600/Mahatma+Gandhi+Pictures5.jpg)

21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1915 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தி சபர்மதி நதிக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு வாழத் தொடங்கினார். காந்தியை இந்திய அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர். முதலாம் உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி. அதற்குக் காரணம் போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பியதுதான். ஆனால் பிரிட்டிஷ் அரசோ போர் முடிந்த பிறகு ரெவ்ளட் என்ற சட்டம் மூலம் இந்தியர்களின் சுதந்திர உணர்வையும், எதிர்பார்ப்பையும் நசுக்கியது. அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதிய காந்தி வெகுண்டெழுந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

(http://4.bp.blogspot.com/-eF2sovJwu1w/TkiqF6VPZxI/AAAAAAAAAzM/dsf2c0DBhuc/s1600/26.jpg)

பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்தியின் தலைமையில் டெல்லியில் மாபெரும் தீ வளர்த்து விலையுயர்ந்த ஆடைகள் எரிக்கப்பட்டன. அதைப்பார்த்து வேதனைப்பட்ட காந்தியின் ஆங்கிலேயே நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் அந்தத் துணிகளை எரிப்பதற்கு பதில் ஏன் அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது? என்று கேட்டார். அதற்கு காந்தி சொன்ன பதில் ஏழைகளுக்குக்கூட தன்மானம் உண்டு. 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி பூர்னஸ்வரஜ் அதாவது முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி. அப்போது உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது வெகுவாக பாதித்தது. எனவே அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை' மேற்கொண்டார் காந்தி.

(http://4.bp.blogspot.com/-EHgSSkaaTRw/Tkipc15Yv3I/AAAAAAAAAzE/XNhsM_iEIhc/s1600/18.jpg)

அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை அடைந்தார். அங்கு சட்டத்தை மீறி அவர் கடற்கரையிலிருந்து சிறிதளவு உப்பைச் சேகரித்தார் முன் அறிவிப்பு செய்துவிட்டுத்தான் அவர் அந்த உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார். அவருடைய மனோதிடத்தைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி சற்று தடுமாறிப் போனது உண்மைதான். இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் அவரை சிறையில் அடைத்தது. அவரை மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர். பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும், காந்திக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்படவே ஒத்துழையாமை இயக்கத்தை மீட்டுக்கொண்டார் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்டார் ஆனால் ஏமாற்றத்தோடு திரும்பினார்.

(http://4.bp.blogspot.com/-HRabXAmuro0/TkisT_GY-jI/AAAAAAAAAzc/f5U-Vb9rGxw/s1600/16.jpg)

பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி 1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு 1945 ஆம் ஆண்டு லண்டனில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை வன்மையாக எதிர்த்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் ஆட்சி பதவி இழந்தது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தது. தொழிற்கட்சியின் தலைவர் கிளமெண்ட் அட்லி இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தைக் கண்டு மனமிறங்கி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடுவெடுத்தார். ஆனால் எல்லாம் கைகூடி வந்த நேரம் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்றப் பிரிவினைவாதக் கோரிக்கை தலையெடுத்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.

காந்திக்கு அதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கொட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர். ஆனால் அந்தச் சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 07:57:03 PM
மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 2
 
மஹாத்மா காந்தியடிகள் (வரலாற்று நாயகர்) பாகம் - 2:

சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாகப் பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்தப் பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள். அவர் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். சொந்த நிலம், வீடு, சொத்து, வியாபாரம், வேலை, கல்வி, நண்பர்கள் என அனைத்தையும் விட்டு தங்கள் எதிர்காலத்திற்கு அஞ்சி மக்கள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையை கடந்தபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும் அந்த மதக்கலவரக் கொடுமையில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

(http://3.bp.blogspot.com/-kPV6rAHYQtQ/TkkhGL8dsXI/AAAAAAAAAzg/y3UZcgefnao/s1600/India-Pakistan+Partition2.jpg)

தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதுகூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும் அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்த நிலையில் அதனைப் பெற்றுத் தந்தவரின் உயிருக்கு சுதந்திரம் தர எத்தனித்தான் நாதுராம் கோட்ஸே என்ற ஒரு மதவெறியன். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள். சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பை நிராகரித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்து என்ற அந்தப் பின்னனியில் ஜனவரி 30ந்தேதி இன்னொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன். அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார் காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன். மூன்று குண்டுகள் அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள். இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு பிரிந்தது அந்தத் தேசப்பிதாவின் உயிர். தன் கடைசி மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.

(http://3.bp.blogspot.com/-mzNYQl8_H2w/TkkhRELeLuI/AAAAAAAAAzk/Vj1bHQX4Gq8/s1600/Mahatma-Gandhi-Funeral-4.jpg)

தன் வாழ்நாளில் தீண்டாமை ஒழிப்புக்காக அரும்பாடுபட்டார் காந்தியடிகள். தீண்டத்தகாதவர்கள் எவரும் கிடையாது என்று கூறிய அவர் தீண்டாமையைக் கடவுளுக்கு எதிரான பாவச்செயல் என்றும் சாடினார். ஒருமுறை தனது ஆசிரமத்தில் தீண்டத்தகாத ஆசிரியரையும், அவரது குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டபோது அவரது மனைவிகூட அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தீண்டாமையை இந்தியாவின் அவமானம் என்று கூறிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? அவர்கள் இந்த ஆசிரமத்தில் தங்குவதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறலாம் என்று தனது மனைவியைப் பார்த்து கூறினார். கஸ்தூரிபாய் வேறு வழியின்றி அமைதியானார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஹரிஜன்ஸ் என்று பெயரிட்டார் காந்தியடிகள். அதன் பொருள் கடவுளின் பிள்ளைகள் என்பதாகும்.

தனது சத்திய சோதனை என்ற நூலில் காந்தியடிகள் புகழ்பெற்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ஆங்கிலேயர்களை அவர்களில் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையைக் கழுவுமாறு நாம் சொல்வதற்கு முன் இந்துக்களாகிய நாம் நம் கைகளில் படிந்திருக்கும் ரத்தக்கறையை கழுவ வேண்டாமா? என்று தீண்டாமைக் குறித்து ஆதங்கத்தோடு கேள்வியெழுப்பினார் காந்தியடிகள். அவரது போராட்டங்களால் தீண்டத்தகாதவர்களை ஒரு தனிச்சமூகமாகக் கருதி அவர்களுக்கு தனி ஓட்டுரிமை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவெடுத்தது. ஆனால் அவ்வாறு செய்வது பிரச்சினையை இன்னும் மோசமாக்கும் என்று நம்பிய காந்தியடிகள் துணிவான ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ஹரிஜனங்கள் தனிச்சமூகம் என்ற திட்டத்தைக் கைவிடா விட்டால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக பூனா சிறையிலிருந்தவாறே அறிவித்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் பூனா ஒப்பந்தத்திற்கு இணங்கியது. அதன்படி இனிமேல் இந்துக்களில் பிறப்பின் காரணமாக எவரும் கீழ்சாதி என்பது கிடையாது என்று அறிவித்து தனது உண்ணாவிரத்தை முடித்தார் காந்தியடிகள்.

காந்தியடிகள் எவ்வளவு தெளிவான சிந்தனையுடயவர் என்பதற்கு இன்னொரு சம்பவம் தன் ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு கன்றுக்குட்டியின் வேதனையைப் பார்த்து கலங்கிய அவர் அதனை கொன்று விடுமாறு கூறினார். பசுவைக் கொல்வது பாவம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே சில தீவிர இந்துக்கள் அவரைப் பாவி என்று வசைபாடினர். ஆனால் வேதங்களை விட ஓர் உயிரின் வேதனைதான் அன்னலின் கண்களுக்குப் பெரிதாகப்பட்டது. 1922 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியடிகளை சிறையில் அடைத்தது. சிறையிலிருந்தபோது அவர் பைபிள், குர்ரான் போன்ற நூல்களையும், இந்து வேதங்களையும் படித்தார். தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். 1925ல் காங்கிரஸ் தலைமைத்துவத்திலிருந்து விலகிய காந்தியடிகள் அடுத்த மூன்று ஆண்டுகள் கிராமம் கிராமமாக சென்று இராட்டினம் மூலம் சுய தொழில் செய்வதைப் பற்றியும், ஒத்துழையாமைப் பற்றியும் மக்களிடம் பேசினார்.

(http://2.bp.blogspot.com/-enHzdVgqZv4/TkkhdXgLReI/AAAAAAAAAzo/JZjh1TmDSKM/s1600/Mahatma+Gandhi.jpg)

அவ்வாறு ஒருமுறை பேசியபோது கிராம மக்கள் சேர்ந்து காந்தியடிகளுக்கு மலர்மாலை அணிவித்தனர். அப்போது அவர்களைப்பார்த்து இந்த மலர்மாலைக்காக நீங்கள் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் 16 பேர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி தர உதவும் என்று கூறினார். கட்டாயத்தின் பேரில் தான் பால்ய விவாகம் செய்து கொண்டாலும் அதனை வன்மையாக எதிர்த்தார் காந்தியடிகள். பிள்ளைகளின் வாழ்க்கை குலைக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். விதவைகளைப் பார்த்து மறுமணம் செய்துகொள்ளுமாறு கூறினார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் மறுமணம் செய்துகொள்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று முழங்கினார். உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொருவரும் நாக்கைக் கட்டுப்படுத்தினால் உலகில் பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்று நம்பிய காந்தியடிகள் என்ன செய்தார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுவதும் திங்கள் கிழமைகளில் மவுன விரதம் இருந்தார். ஒரு மணிநேரம்கூட மவுனமாக இருப்பது நம்மில் பலருக்கு முடியாத காரியம். ஆனால் அரசியலில் ஈடுபட்டிருந்தபோதுகூட, எவ்வளவு பெரிய நபர்களை சந்திக்க வேண்டியிருந்தபோதும்கூட திங்கள் கிழமை மவுன விரதத்தைக் கைவிட்டதில்லை காந்தியடிகள்.

(http://1.bp.blogspot.com/-C9poxg2QJb4/Tkkh0pVS-jI/AAAAAAAAAzs/9MvUyQcTMA8/s1600/12.jpg)

நாடு முழுவதும் இரயில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் காந்தியடிகள் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தார். சாதரண மக்கள் சிரமப்படும்போது தனக்கு செளகரியங்கள் தேவையில்லை என்பதுதான் அவரது எண்ணம். அதே எண்ணம் அவரது ஆடையிலும் பிரதிபலித்தது. இந்தியர்களின் வறுமை நிலையைப் பார்த்து மனம் வெம்பியதால்தான் காந்தியடிகள் நான்கு முழத் துண்டை மட்டும் ஆடையாக அணியத் தொடங்கினார். இப்படி தன் மக்களுக்காக துயருற்று அவர்கள் அனுபவித்த வேதனைகளை தானும் அனுபவித்து மக்கள் நலனை மட்டுமே குறியாக கொண்டு செயலாற்றிய வேறு ஒரு தலைவர் உலக வரலாற்றில் இருந்திப்பாரா என்பது சந்தேகமே. உண்மை பேசுவதைவிட ஒரு சிறந்த பண்பு இருக்க முடியாது என்று உளமாற நம்பிய காந்தியடிகள் My Experiments with Truth என்ற புகழ்பெற்ற சுயசரிதையையும் எழுதினார். முழுமையாகத் தெரிந்துகொள்ள 'சத்திய சோதனை' என்ற அந்த நூலை படித்துப் பாருங்கள்.

உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். உலகில் ஏற்பட்ட எந்த புரட்சியும் ஆயுதம் ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், உயிர்பலி இல்லாமல் வெற்றி பெற்றதில்லை. அந்த விதியை மாற்றி அமைத்தவர் அன்னல் காந்தியடிகள். கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம், வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம் என அகிம்சை வழியிலேயே ஒரு புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் காந்தியடிகள். அதனால்தான் அன்னல் காந்தியடிகளைப் பற்றி சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர் லீ குவான் யூ ஒருமுறை உரையாற்றும்போது நான் ஒரு இந்திய போப்பாக இருந்திருந்தால் மஹாத்மா காந்திக்கு 'புனிதர்' பட்டம் வழங்கியிருப்பேன் என்று கூறினார். இப்படி உலக தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனுகுலமும் காந்தியடிகளை போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவதற்கு அடிப்படைக் காரணம் அவர் உலகுக்குத் தந்த இரண்டு மாபெரும் கொடைகளான அகிம்சை, வாய்மை.

(http://3.bp.blogspot.com/-WMJ2KxQ6_E8/TkkjfOVj0yI/AAAAAAAAAzw/8mKquQtiNB4/s1600/mahatma+gandhi+wallpapers.jpg)

இந்த அவசர உலகில் அகிம்சைக்கும், வாய்மைக்கும் இடம் உண்டு என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் உலகம் அவரை மட்டும் 'மஹாத்மா' என்றழைக்கிறது. அந்த ஒப்பற்ற ஜீவன் பின்பற்றிய அகிம்சையையும், வாய்மையையும் பின்பற்றும் எவருக்கும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமையாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 08:06:47 PM
வில்லியம் மார்ட்டன் (மருத்துவ உலகின் ஒரு மாமனிதரின் கதை) - வரலாற்று நாயகர்!
 
மருத்துவத்துறையின் மிக முக்கியமான ஒரு கூறு அறுவை சிகிச்சையாகும். மருந்துகளாலும், மாத்திரைகளாலும் மட்டும் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமாகிறது. நோய்களுக்கு மட்டுமல்ல விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகள் சிதைந்துபோனோருக்கும், அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கெல்லாம் மயக்க மருந்து கொடுக்காமல் உடலை அறுத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்க்ககூட சிரமமாக இருக்கிறதல்லவா? சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அது கற்பனையாக அல்ல நிஜமான ஒன்றாகவே இருந்தது. அறுவை சிகிச்சை என்றால் அலறல் மட்டுமே நிச்சயம் என்று இருந்த காலகட்டம் அது. வலியை மறைக்க அல்லது உடல் வலியை உணராமல் இருக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று மருத்துவச்சமூகம் ஏங்கிய அந்தக்கணங்களில் அந்த ஏக்கத்தைப் போக்கினார் ஒருவர்.

அவர் கண்டுபிடித்துத் தந்த மயக்க மருந்தினால் அலறல் ஓய்ந்து மருத்துவர்கள் அமைதியாக தங்கள் அறுவை சிகிச்சை பணியை மேற்கொள்ள முடிந்தது. உடல் வலியை உணராமல் இருக்கச்செய்யும் அந்த அற்புத அருமருந்தை உலகுக்குத் தந்த மாமனிதர் வில்லியம் மார்ட்டன். Sir Stamford Raffles ஆல் சிங்கப்பூர் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1819 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி Massachusettsல் பிறந்தார் William Thomas Green Morton. கல்வியில் சிறப்பாகச் செய்த அவர்  Baltimore பல் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். தனது 23 ஆவது வயதில் அவர் பல் மருத்துவரானார். தனக்குப் பாடம் கற்பித்த Dr. Horace Wells என்பவருடன் சேர்ந்து மார்டன் இரண்டு ஆண்டுகள் ஒரே மருந்தகத்தில் பல் சிகிச்சை வழங்கி வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே மார்ட்டன் தனியாக தொழில் செய்யத் தொடங்கினார்.

(http://2.bp.blogspot.com/-no8oOOAJmf8/TkMRYb0kOII/AAAAAAAAAxk/bQxpdlCe-eY/s1600/fullert02.jpg)

பற்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகள் அனுபவித்த வேதனையை கண்கூடாகப் பார்த்து அந்த வேதனையை தானும் உணர்ந்தார் மார்ட்டன். வலியைப் போக்க மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் அவருக்குள் எழுந்தது. எனவே தன் தொழிலைக் கவனித்த அதே வேளையில் பல்வேறு பரிசோதனைகளையும் செய்துப் பார்க்கத் தொடங்கினார். அதே நேரத்தில் Dr. Horace Wells அவர்களும் வலி போக்கி மருந்துகளைப் பற்றி சிந்தித்து வந்தார். அவர் சிரிப்பு வாயு என்றழைக்கப்பட்ட  நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்த்தார் பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. உற்சாகமடைந்த Dr.Wells அந்த வாயுவின் பலனை பொதுமக்களுக்கு நிரூபித்துக் காட்ட விரும்பினார். அதற்கு மார்டனின் துணையை நாடினார் மார்ட்டனும் உதவவே 1845 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  Massachusetts பொது மருத்துவமனையில் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நைட்ரஸ் ஆக்ஸைடு கொடுத்து ஒருவரின் பல்லைப் பிடுங்கியபோது அவர் வலியால் அலறவே அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவமானம் அடைந்த  Dr.Wells தலை குனிந்தவாறே மருத்துவமனையை விட்டு வெளியேறினார். பல் மருத்துவத்தில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் நிபுனத்துவம் பெற்றிருந்தார் மார்ட்டன். அவ்வாறு செய்வதற்கு பழைய பற்களை வேரோடுப் பிடுங்கி எடுக்க வேண்டியிருக்கும். மயக்க மருந்து இல்லாமல் அதனைச் செய்தால் மரண வேதனைதான் மிஞ்சும். அந்த வலியை மறக்கடிக்க நைட்ரஸ் ஆக்ஸைடு போதாது என்று உணர்ந்த மார்ட்டன் அதிக வலிமைப் பொருந்திய ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். Dr. Charles T. Jackson என்ற மூத்த மருத்துவர் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்ற ஆலோசனையை மார்ட்டனிடம் தெரிவித்தார். ஈத்தருக்கு மயக்க சக்தி உண்டு என்பதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே பேரசூஸஸ் என்ற சுவிஸ் இரசாயணவியலார் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் எந்த மருத்துவரும் அதனை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை. ஈத்தரின் தன்மைகளைப் பற்றி மேலும் ஆராய்ட்சிகளைச் செய்தார் மார்டன். தன் நாய்க் குட்டியின் மீதும் பின்னர் தன் மீதும் ஈத்தரைப் பயன்படுத்திப் பார்த்தார். அதனை ஒரு நோயாளியின் மீது பயன்படுத்திப் பார்க்கும் அற்புத வாய்ப்பு மார்ட்டனுக்கு 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி கிடைத்தது. அன்றைய தினம் தாங்க முடியா பல் வலியுடன் ஈவன் ப்ரோத் என்பவர் மார்ட்டனின் மருந்தகத்திற்கு வந்தார். என்ன செய்தாவது தனது வலியைப் போக்குமாறு மார்ட்டனிடம் கெஞ்சினார். இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று நம்பிய மார்ட்டன் முதலில் அந்த நோயாளியை ஈத்தரை நுகரச் செய்தார். நோயாளி மயக்கமடையவே பல்லைப் பிடுங்கி எடுத்தார். மயக்கம் தெளிந்த நோயாளி தான் எந்த வலியையும் உணரவில்லை என்றார். உலகிற்கு மயக்க மருந்தை தந்துவிட்ட களிப்பில் மகிழ்ந்தார் மார்ட்டன்.

(http://1.bp.blogspot.com/-Z1vEAEN3BDM/TkMR5u0VB4I/AAAAAAAAAxs/TlCzObOU3M4/s1600/800px-Morton_Ether_1846.jpg)

தன் முதல் முயற்சி வெற்றி தந்து அடுத்தநாள் பத்திரிக்கைகளில் அந்தச் செய்தி வெளி வந்திருந்தாலும் மருத்துவ உலகம் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. இன்னும் பெரிய அளவில் ஈத்தரின் தன்மையை விளக்கிக் காட்ட வேண்டும் என்பதை உணர்ந்த மார்ட்டன் பல மருத்துவர்களுக்கு முன்னிலையில் அதைச் செய்துகாட்ட  Massachusetts பொது மருத்துவமனையின் மூத்த அறுவை மருத்துவர் Dr. John Collins Warren ஒரு வாய்ப்புக் கேட்டார்.Dr. John Collins Warren இணங்கவே இரண்டே வாரங்களில் அதாவது 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 11ந்தேதி நிறைய மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கூடினர். அவர்களுக்கு முன்னிலையில் கில்பர் ஆல்பர்ட் என்ற நோயாளிக்கு ஈத்தரைக் கொடுத்தார் மார்ட்டன். அதன் பிறகு அந்த நோயாளின் கழுத்திலிருந்த ஒரு கட்டியை வெட்டி எடுத்தார் Dr. Warren. நோயாளிக்கு எந்தவித வலியும் தெரியவில்லை. மயக்க மருந்து முழுமையாக வேலை செய்ததை மருத்துவ உலகம் கண்டு வியந்தது. மார்ட்டனின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

(http://1.bp.blogspot.com/-E6Inj_R5NTw/TkMRx0eeixI/AAAAAAAAAxo/EMI-CfdTHtc/s1600/hinkley.gif)

மருத்துவ உலகிற்கு மிகத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு (ஈத்தர்) என்பதால் அதற்கான காப்புரிமம் பெறவதற்காக விண்ணப்பித்தார் மார்ட்டன். அவருக்கு காப்புரிமம் கிடைத்தாலும் மயக்க மருந்து கண்டுபிடித்ததில் வேறு சிலரும் உரிமை கொண்டாடினர். நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்தித் தோற்றுப்போன Dr. Horace Wells, ஈத்தரைப் பயன்படுத்திப் பார்க்குமாறு ஆலோசனைக் கூறிய  Dr. Charles T. Jackson இருவரும் அதில் உரிமை கொண்டாடினர். அவர்களைத் தவிர்த்து Dr.  Crawford Williamson Long என்பவர் மார்ட்டன் செய்துகாட்டியதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1842 ஆம் ஆண்டிலயே ஈத்தரைப் பயன்ப்டுத்தி தான் அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அதுபற்றிய அவரது கட்டுரை மார்ட்டனின் வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் வெளிவந்தது. எனவே முதன்முதலாக ஈத்தரை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர் என்று மார்ட்டனின் பெயரையே வரலாறு நினைவில் வைத்துள்ளது.

எனினும் அந்த பெருமையைப் பெற அந்த நான்கு மருத்துவர்களுமே சட்டத்தின் உதவியை நாடினர். அந்த இழுபறி நீடித்த வேளையில் மற்ற மருத்துவர்கள் ஈத்தரைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் மருத்துவமனைகள்  ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையைச் செலுத்த மறுத்தனர். அதனாலும் கண்டுபிடிப்பு உரிமையை நிலைநாட்ட ஆன நீதிமன்றச் செலவுகளாலும் வெறுப்படைந்தார் மார்ட்டன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்த அவர் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்தார். நோயாளிகளின் வலிதீர பாடுபட்ட அவருக்கு இறுதி நாட்களில் மன வேதனையும், ஏழ்மையும்தான் மிஞ்சியது. இறுதியில் 1868 ஆம் ஆண்டு ஜூலை 15ந்தேதி தனது 48ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார். அவரது மனைவிக்கும், ஐந்து பிள்ளைகளுக்கும்கூட எந்த சொத்தையோ, பொருளையோ விட்டுச்செல்லவில்லை.

(http://3.bp.blogspot.com/-wjcFXj43riE/TkMSJYOtI6I/AAAAAAAAAxw/dsOHzqUq8zs/s1600/william-morton.jpg)

தங்கள் கண்டுபிடிப்புகள் மனுகுல மேன்மைக்காகவே அன்றி சொத்து சேர்த்து செல்வந்தர்கள் ஆவதற்கு அல்ல என்று வாழ்ந்த பல வரலாற்று மாந்தர்களுக்கு மத்தியில் மார்ட்டன் தனது கண்டுபிடிப்பின் மூலம் பணமும், புகழும் சேர்க்க விரும்பியது என்னவோ உண்மைதான். ஆனால் அது அவரது கண்டுபிடிப்பின் மகத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது. மார்ட்டன் தைரியமாக உலகுக்குச் செய்து காட்டியதால்தான் கடந்த 165 ஆண்டுகளாக நோயாளிகள் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. இது ஒன்றே மார்ட்டனுக்கு வானம் வசப்பட்டதற்குச் சமம்.

“சுவாசிக்கும் மயக்க மருந்தை உலகுக்குத் தந்து அறுவை சிகிச்சையிலிருந்து வலியை அறுத்தெடுத்தவர், இவருக்கு முன் வலியும் வேதனையும்தான் மிச்சம் இவருக்குப் பிறகுதான் வலியைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டது விஞ்ஞானம்”

என்ற இந்த வாசகங்கள் மார்ட்டனின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மைதானே! அடுத்தமுறை நீங்கள் யாரேனும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்தால் வில்லியம் மார்ட்டனுக்கு நன்றி சொல்லுங்கள். அன்று மார்ட்டன் சிந்திய வியர்வையும், விடாமுயற்சியும்தான் இன்று உலக மக்கள் பலர் வலி இல்லாமல் நிம்மதியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிகிறது. மனத்தை ஒருநிலைப் படுத்தி தன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் விடா முயற்சியோடு பயணம் செய்யும் எவருக்கும் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும் என்பதுதான் மார்ட்டனின் வாழ்க்கை நமக்கு வலி இல்லாமல் சொல்லும் உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 10, 2013, 08:13:48 PM
ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!
 
எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.

1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். ஆறு பிள்ளைகளில் அவரே மூத்தவர். ஃபோர்ட் குடும்பத்திற்கு பெரிய பண்ணை ஒன்று இருந்தது. மற்ற 19ஆம் நூற்றாண்டு சிறுவர்களைப்போல ஃபோர்டும் தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆனால் அவருக்கு பண்ணை வேலை சலிப்பைத் தந்தது. நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலேயே கடிகாரங்களை பழுது பார்க்க கற்றுக்கொண்டார். ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு ட்ராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்தக் கணம்தான் போக்குவரவு வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.

(http://4.bp.blogspot.com/-Aldr5Nw-ISo/TjqBpjTGBEI/AAAAAAAAAwk/JUV3mxa-H0M/s1600/Henry_Ford_400.jpg)

16 வயதானபோது ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரம் செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார். ஃபோர்ட்க்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதே ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம்பளத்திற்கு தலமைப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

(http://2.bp.blogspot.com/-r6l3iea-N40/TjqByWb_iKI/AAAAAAAAAwo/vtjZyRceP2M/s1600/532px-Ford_Edison_Firestone1.jpg)

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார் ஃபோர்ட். 1896 ஆம் ஆண்டு மே மாதம் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ஆனால் அந்த வாகனத்திற்குப் பிரேக் கிடையாது. அதனைப் பின்னோக்கியும் செலுத்த முடியாது. அதற்கு 'Quadricycle' என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள்போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஃபோர்ட் அப்போதுதான் உணர்ந்தார்.

(http://3.bp.blogspot.com/-dwxYi40sPnQ/TjqCQEHt56I/AAAAAAAAAws/11cKWvNV5kg/s1600/quad.jpg)

தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து செங்கல் சுவற்றை இடித்துவிட்டு அந்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். அவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஃபோர்ட் அகமகிழ்ந்து போனார். தொழிலியல் உலகில் அது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford Motor Company’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க பரந்து விரிந்து கிடப்பதால் ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஃபோர்ட் கடுமையாக உழைத்து 1908 ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல. சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார். அப்போது அந்தக் காரின் விலை என்னத் தெரியுமா? வெறும் 500 டாலர்தான்.

(http://4.bp.blogspot.com/-ldXiVr-HXFM/TjqCdlSx-5I/AAAAAAAAAww/LPVumuKwwGs/s1600/ford_2.jpg)

தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான அந்த Model T  வாகனம் ஆயிரக் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது ஃபோர்ட் நிறுவனம். ஃபோர்டின் தொலைநோக்கு  மிக்க தலமையின் கீழ் அந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலபதிராக அவரை உயர்த்தியது. ஃபோர்ட் புரட்சிகரமான இன்னொரு காரியத்தையும் செய்தார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி வேலை நேரத்தைக் குறைத்தார். அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஃபோர்ட் என்ன செய்தார் தெரியுமா? இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.

பல பொருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபரித வளர்ச்சி கண்டது. வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருனையும் ஊற்றெடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும்பங்கை செலவழித்தார் அந்த தொழில் மேதை. போரை அறவே வெறுத்த அவர் முதலாம் உலக்போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பி ஐரோப்பாவுக்கு பயணமும் மேற்கொண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்ட். அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்ட் நிறுவனத்தின் தலமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹென்றி ஃபோர்ட். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஃபோர்ட் தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால் போக்குவரவு துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து செல்வந்தரான ஃபோர்ட் மிகப்பெரிய சமூக கடப்பாட்டைக் காட்டினார். சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கினார்.

(http://4.bp.blogspot.com/-Phg5Yqp1Ijs/TjqEYYx3E2I/AAAAAAAAAw0/3t_I3nzn1GA/s1600/200px-Henry_ford_1919.jpg)

அடுத்தமுறை நீங்கள் வாகனம் ஓட்ட நேர்ந்தால் ஃபோர்டுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவரது ஆய்வுகளும், சோதனைகளும், கடின உழைப்பும், வியர்வையும், தொலைநோக்கும்தான் உங்களது வாகனத்துக்குப் பின்னால் இருப்பவை. சமூகம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைப்பவர்களுக்கும், வசதி வரும்போது அதே சமூகத்திற்காக வாரி வழங்குபவர்களுக்கும் வானத்தை வசப்படுத்துவது வரலாற்றின் கடமை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:12:42 PM
கிரிகோர் மெண்டல் (மரபியலின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
மனுகுலம் உண்மையாக வளர்ச்சி அடையத் தொடங்கியது எப்போது? என்று கேட்டால் அதற்கு அறிஞர்களின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். மனிதன் எப்போது 'ஏன்' என்று கேள்விக் கேட்கத் தொடங்கினானோ அப்போதுதான் மனுகுலம் முன்னேறத் தொடங்கியது. உலகில் இதுவரை நிகழ்ந்திருக்கும் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அத்தனைக்கும் வித்திட்டது 'ஏன்' என்ற கேள்விதான், விதண்டாவாதத்துக்காக எழுப்ப பட்ட கேள்விகள் அல்ல. புரியாததை புரிந்துகொள்வதற்காகவும், அறியாததை அறிந்து கொள்வதற்காகவும் கேட்கப்பட்ட கேள்விகள். அவ்வாறு எழுந்த ஒரு கேள்விதான் ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஏன் ஒரே சாயலாக இருக்கின்றன என்பது.

சிந்திக்கத் தயங்கியவர்களும், மருத்துவர்களும் அது ஆண்டவன் படைப்பு என்று விட்டுவிட்டனர். அவர்களையெல்லாம் வரலாறும் விட்டுவிட்டது. ஆனால் ஒருவர் துணிந்து சிந்தித்தார் உண்மையை உணர்ந்துகொள்ள கடுமையாகவும் கட்டொழுங்கோடும் உழைத்தார். அதன் பலன் வரலாறு அவரது பெயரை தன் ஏடுகளில் பெருமையுடன் பதித்து கொண்டது. ஒரே குடும்பத்தில் பிறப்போர் ஒரே சாயலில் இருப்பதற்கு காரணம் அவர்களது அனுக்களில் உள்ள ஜீன் எனப்படும் மரபுக்கூறு என்ற உண்மையைக் கண்டு சொன்ன மாபெரும் விஞ்ஞானியைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

(http://2.bp.blogspot.com/-LsQawb26Bcg/Tiz9RHR0woI/AAAAAAAAAwE/Eshjj9gfXNw/s1600/Gregor_Mendel.png)

1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி ஆஸ்திரியாவில் Heinzendorf என்ற ஊரில் பிறந்தார் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். குடும்பம் மிக ஏழ்மையானது எனவே அவரை பள்ளிக்கு அனுப்பக்கூட பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதித்து அதை கொண்டு படித்தார் மெண்டல். பள்ளியில் நன்றாக படித்த அவர் தனது 21 ஆவது வயதில் மேல்படிப்புக்காக புனித தாமஸ் மடாலயத்தில் சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் படித்து பாதிரியாரானார் மெண்டல். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பெற்று சான்றிதழ்க்காகத் தேர்வு எழுதினார். உயிரியல், புவியியல் ஆகியப் பாடங்களில் குறைவான மதிப்பென்கள் பெற்று அந்த தேர்வில் தோல்வியுற்றார். இருப்பினும் மடாலயத்தின் உயர் அதிகாரி அவரை வியன்னா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார். அங்கு உயிரியலும், கணிதமும் கற்ற பிறகு 1854 ஆம் ஆண்டு முதல் பிரண்ட் என்ற பள்ளியில் இயற்கை அறிவியல் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கினார்.

(http://2.bp.blogspot.com/-KFGAUDHk5FY/Tiz9zyhI_OI/AAAAAAAAAwQ/p-KeOGVTz_4/s1600/H4130282-Gregor_Mendel%252C_Austrian_botanist-SPL.jpg)

இயற்கையை அதிகம் நேசித்தார் மெண்டல் குறிப்பாக செடி கொடிகளை அதிகம் விரும்பினார். ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்ற கேள்வி அவரை ஆராய்ட்சிகள் செய்யத் தூண்டியது. இருவேறு வண்ணங்களை கலந்தால் இன்னொரு வண்ணம் கிடைப்பதுபோல வெள்ளை மலர்த் தாவரத்தையும், சிவப்பு மலர்த் தாவரத்தையும் இனச்சேர்க்கை செய்தால் அடுத்த தலைமுறைச் செடிகள் ஃபிங்க் வண்ணமாக இருக்கும் என்று பலஎ நம்பி வந்தனர். அதனை நம்ப மறுத்த மெண்டல் ஆராய்ட்சியில் ஈடுபட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மனிதனின் உழைப்பைக் கேட்டால் வியந்து போவீர்கள்.

(http://2.bp.blogspot.com/-5MKofK0Z6Ao/Tiz9vqGK7xI/AAAAAAAAAwM/y1yzZgdtSSg/s1600/gregor+mendel+experiment1.jpg)

தன் ஆய்வுக்காக Pea Plants எனப்படும் பட்டாணிச்செடிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு பல்வேறு விதமான சோதனைகளைச் செய்தார் மெண்டல். உதாரணத்திற்கு குட்டையான செடியையும், உயரமானச் செடியையும் இனக்கலப்பு செய்து வளர்த்தார். வெவ்வேறு வண்ண மலர்கள் கொண்ட செடிகளை இனக்கலப்பு செய்து பார்த்தார். அவ்வாறு தான் செய்த ஒவ்வொரு இனக்கலப்பையும் கவணமாக குறிப்பெடுத்து ஆண்டுக் கணக்கில் ஆராய்ந்தார். ஒவ்வொரு செடியின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் இப்படி மிக நுணுக்கமான விபரங்களை அனுக்கமாக கவணித்துப் பொறுமையாகவும் சோர்ந்து போகமாலும், புள்ளி விபரங்களாகச் சேகரித்தார். சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அவர் வளர்த்து பரிசோதித்த செடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 28000 செடிகள். அத்தனைச் செடிகளையும் ஆராய்ந்த மெண்டல் செடிகளின் உயரம், நிறம், ஆரோக்கியம் போன்ற குணங்களை ஏதோ ஒன்று தீர்மானிக்கிறது என முடிவுக்கு வந்தார்.

அந்த ஏதோ ஒன்றுதான் மரபனு என்ற ஜீன்ஸ் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அப்போது மெண்டல் அதனை கேரக்டர்ஸ் என்று அழைத்தார். அந்த ஆய்வுகளின் மூலம் அவர் கண்டுபிடித்ததுதான் ஹெரிடிட்டி எனப்படும் மரபுவழி விதிகள். 1865 ஆம் ஆண்டு தனது ஆராய்ட்சிகளை விளக்கி பிரண்ட் இயற்கை வரலாற்றுக் கழகத்திடம் சமர்பித்தார். Experiments with Plant Hybrids என்ற தலைப்பில் அவரது கட்டுரை பிரசுரமானது. மூன்று ஆண்டுகள் கழித்து மற்றொரு கட்டுரையையும் எழுதிச் சமர்பித்தார்.உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி இருப்பதற்கு மரபுக்கூறுகள்தான் காரணம் என்று பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு அந்த மரபுக்கூறுகள் செல்கின்றன என்றும், மரபுக்கூறுகள் இணையாகச் செயல்படுகின்றன என்றும் இரண்டு மரபுக்கூறுகள் ஒரு பண்பை நிர்ணயிக்கின்றன என்றும், எந்த மரபுக்கூறு வீரியமாக இருக்கிறதோ அந்த மரபுக்கூறு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்றும் வீரியம் குறைந்த மரபுக்கூறு அடுத்தடுத்த தலைமுறைகளில் வெளிப்ப்டலாம் என்றும் மெண்டல் அந்தக் கட்டுரைகளில் விளக்கியிருந்தார்.

(http://4.bp.blogspot.com/-mvHAqj8Jw0A/Tiz-Au8oFYI/AAAAAAAAAwU/svJKkiPDYEQ/s1600/9828889.gif)

அந்த உண்மைகள்தான் தற்போதைய ஜினெடிக்ஸ் எனப்படும் மரபுவழி பண்பியலுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. இருபதெட்டாயிரம் செடிகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் அந்த முடிவுகளில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தார் மெண்டல். ஆனால் அந்தக் காலத்தின் சிறந்த நிபுனர்களால்கூட  அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மெண்டலின் தத்துவம் சமகால விஞ்ஞானிகளின் சிந்தனையைவிட வெகுதூரம் முன்னேறியிருந்தது. ‘காலத்தை முந்திய கவிஞன்’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மெண்டலோ காலத்தை விஞ்சிய விஞ்ஞானியாக இருந்தார். அதனால் அவரது கட்டுரைகளும் முடிவுகளும் கிட்டதட்ட மறக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டன. அந்த சமயம் மடாலயத்தின் தலமைப் பொறுப்பு மெண்டலுக்கு கிடைக்கவே நிர்வாகப் பணிகள் காரணமாக அவரால் தனது தாவர ஆராய்ட்சிகளைத் தொடர முடியவில்லை.

1884 ஆம் ஆண்டு ஜனவரி 6ந்தேதி தனது 61 வயதில் கிரிகோர் மெண்டல் காலமானபோது அவரது அளப்பறிய ஆராய்ட்சி முடிவுகளை உலகம் கிட்டதட்ட மறந்துபோயிருந்தது. அவர் வாழ்ந்தபோது அவருக்கு எந்த கவுரமும் கிட்டவில்லை. அவர் இறந்து 16 ஆண்டுகள் கழித்து அதாவது 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞான உலகின் அதிசயங்களில் ஒன்று நிகழ்ந்தது. ஹியூகோ டி ரைஷ் என்ற டச்சு விஞ்ஞானி, ஃகால் கொரன்ஸ் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி,  எரிக் வார்ன் டிஷ்மார்க் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி தனித்தனியாக தாவர ஆராய்ட்சிகளை மேற்கொண்டிருந்தனர். மூவருமே மெண்டல் கண்டுபிடித்த விதிகளை தாங்களும் கண்டுபிடித்தனர் என்பதுதான் ஆச்சர்யம். அவற்றைக் கட்டுரையாக எழுத எத்தனித்தபோதுதான் 34 ஆண்டுகளுக்கு முன் மெண்டல் எழுதிய கட்டுரையைப் படித்து வியந்தனர்.

(http://2.bp.blogspot.com/-QDsX4QNNAmI/Tiz-nlz3zhI/AAAAAAAAAwY/1gLqlAsXQsM/s1600/gregor+mendel+experiment3.jpg) (http://www.friendstamilchat.com)

தங்களுடைய ஆராய்ட்சிகள் மெண்டல் கண்டுபிடித்த விதிகளை உறுதி செய்கின்றன என்று மூவருமே தனித்தனியாக கட்டுரைகள் எழுதினர். அதே ஆண்டு மெண்டலின் கட்டுரைப் படித்த வில்லியம் பேட்ஷன் என்ற ஆங்கில விஞ்ஞானி அதனை அறிவியல் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அந்த ஆண்டே மெண்டலின் வியத்தகு ஆராய்ட்சிகளையும், அவர் கண்டு சொன்ன விதிகளையும் போற்றத் தொடங்கியது உலகம். அவரது ‘மெண்டல் விதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்ட அந்த ஆராய்ட்சி முடிவுகள் மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். தற்போதைய நவீன அறிவியல் குறையுள்ள மரபனுக்கூறை தனிமைப்படுத்தி நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியமான உயிர்களைப் பிறப்பிக்கவும், நோய்களே வராமல் தடுக்கவும் முனைப்பாக முயன்றுகொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் வித்திட்டது கிரிகோர் மெண்டல் பொறுமையாக மணிக்கணக்கில் கொட்டிய உழைப்பும், சிந்திய வியர்வையும்தான்.

கிரிகோர் மெண்டலுக்கு வாழும்போது கிடைக்கவேண்டிய மதிப்பும், அங்கீகாரமும் கவுரமும் கிடைக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் உயிர் அறிவியலின் அடிப்படையையே கண்டுபிடித்த அவரை 'ஜினெட்டிக்ஸ் எனப்படும் மரபுவழிப் பண்பியலின் தந்தை’ என்று பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. இது ஒன்றே அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். தேர்வுகள் எழுதுவது என்றாலே நடுக்கம் எடுக்குமாம் மெண்டலுக்கு, அப்படி தேர்வுகளில் தோற்றவர்தான் மனுகுலம் போற்றும் அறிவியல் ஆராய்ட்சிகள் மூலம் அழியாப்புகழ் பெற்றிருக்கிறார். தேர்வுகளில் முதலிடம் வாங்காவிட்டாலும் அவரது ஆராய்ட்சிகளுக்கு முதலிடம் கொடுக்கலாம். நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். நம்மால் சிறப்பாக செய்ய முடிந்த ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு நூறு விழுக்காடு உழைப்பைத் தந்து தன்னம்பிக்கையோடு முன்னேறினால் எந்தத் துறையிலும் முதலிடம் பெறலாம் அதன்மூலம் நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்தலாம்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:20:20 PM
கலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') - வரலாற்று நாயகர்!
 
"உணர்வுகள், ஆறாம் அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்குத் தந்த கடவுளே அவற்றை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது". சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உதிர்க்கப்பட்ட வசனம் இது. ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம் என்பதும், நிலா பூமியை சுற்றுகிறது என்பதும், பூமி சூரியனை சுற்றுகிறது என்பதும் இன்று நாம் அறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்புவரை பூமிதான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்றும், நிலாவும் சூரியனும் பூமியை சுற்றுகின்றன என்றும் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. அது பொய் சூரியனை சுற்றிதான் அனைத்தும் சுழல்கின்றன என்ற உண்மையை துணிந்து சொன்னதற்காக சொல்லனா துயரங்களை அனுபவித்த ஒருவரை பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பிரபஞ்சத்தின் உண்மையான அமைப்பை முதன்முதலில் அறிந்து சொன்ன வானியல் நிபுனர் கலிலியோ கலிலி (Galileo Galilei).

(http://1.bp.blogspot.com/-rwP9VXaBfUE/URzHKGl6IcI/AAAAAAAADRY/K6VM9zYV2HM/s1600/images+(3).jpg)

1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் இத்தாலியில் Pisa-நகரில் பிறந்தார் கலிலி. ஆறு பிள்ளைகளில் மூத்தவர் அவர். அவரது குடும்பம் சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற்ற குடும்பம் என்றாலும் பணக்கார குடும்பம் அல்ல. சிறுவயதிலேயே அறிவுக்கூர்மையும், ஆழமாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தார் கலிலி. அவருக்கு பதினேழு வயதானபோது பிசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதமும், இயற்பியலும் கற்றார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் அவர்தான் அதிகமான கேள்விகள் கேட்ட மாணவராக இருந்திருப்பார். கற்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துகளை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள, கலிலி மட்டும் அதற்கான ஆதாரங்களை கேட்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு எடையுடைய இரண்டு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால் அதிக எடையுடைய பொருள் முதலிலும், லேசான பொருள் பின்னரும் தரையில் விழும் என்று கற்பிக்கப்பட்டது.

அரிஸ்டாட்டில் கூறியிருந்த அந்த கருத்தை அப்படியே கற்பித்து வந்தன பல்கலைக்கழகங்கள் ஆனால் விஞ்ஞான கருத்து எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபட்டிருக்க வேண்டும் என்று நம்பிய கலிலி அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார். அதனால் ஆசிரியர்களின் கண்டனத்திற்கு ஆளானார். பின்னர் பட்டம் பெற்ற பிறகு தமது 25-ஆவது வயதில் அதே பல்கலைக்கழகத்தில் கணித ஆசிரியராக சேர்ந்தார். மாணவனாக இருந்து செய்ய முடியாததை ஆசிரியராக இருந்து செய்வோம் என்று தீர்மானித்த அவர் அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய் என்று நிரூபிக்க விரும்பினார். நிறைய பார்வையாளர்களை அழைத்து பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று இருவேறு எடையுடைய இரண்டு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையில் விழுந்தன.

(http://3.bp.blogspot.com/-rMdxjtndgzk/URzHRBbxJZI/AAAAAAAADRg/WPla8kQI7U4/s1600/images+(2).jpg)

ஓர் எளிய அறிவியல் உண்மையை கண்கூடாக கண்டபோதும் கூடியிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும், இயற்கைக்கு மாறானது என்றும் கூறி நம்ப மறுத்தனர் கலிலியை மந்திரக்காரன் என்று மறுதலித்தனர். அதன்பிறகு கலிலியோவால் பிசா பல்கலைகழகத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.  University of Padua பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். வானியல் ஆய்வில் அதிகம் ஆர்வம் கொண்ட கலிலி 1609-ஆம் ஆண்டில் telescope எனப்படும் உலகின் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார் அதைக்கொண்டு தினமும் விண்வெளியை ஆய்வு செய்தார். அதன்பலனாக விண்வெளியில் அதிசயிதக்க பல கண்டுபிடிப்புகளை செய்தார். முதலில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தை கண்டுபிடித்தார். பின்னர் வியாழன் கோளுக்கு நான்கு துணைக்கோள்கள் அதாவது நான்கு நிலாக்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார்.

சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதையும் அவர் கண்டார். அந்தப்புள்ளிகள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது அவை சூரியனை சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார். சூரியனை சுற்றியே அனைத்தும் சுழல்கின்றன என்ற தனது கருத்தை அதன்மூலம்தான் உறுதி செய்தார் கலிலி. ஏற்கனவே Copernicus அறிந்து சொன்ன கருத்துதான் அது என்றாலும் அதற்கான ஆதாரத்தை கண்டு சொன்னவர் கலிலிதான். அந்தக்கருத்தை சிலர் ஏற்றாலும், கேள்வி கேட்பதே தவறு என்று வாழ்ந்த பழமைவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அது பைபிள் கருத்துக்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவ சமூகமும் கலிலியோவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கலிலி கடவுளை மறுப்பவர் என்றும், சூனியக்காரர் என்றும்கூட பட்டம் கட்டியது ரோமன் கத்தோலிக்க தேவாலயம். 

அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள். தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார் தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார். பின்னர் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்த கலிலி தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆண்டு செல்ல செல்ல பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

(http://3.bp.blogspot.com/-IXx6ybiKpLg/URzHg6GYulI/AAAAAAAADRo/5EdteOEE474/s1600/galileo-galilei-quotes-sayings-meaningful-brainy-teacher.jpg)

ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார். அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவது வலம் வந்து பழமைவாதத்தில் சிக்காத சிலரின் அறிவுக்கண்ணை திறந்தது. கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபடும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை' என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

உண்மை என்று நம்ப படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தாலும் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:25:29 PM
லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை) (1822-1895) -வரலாற்று நாயகர்!
 
மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு பலியானவர்கள்தான் அதிகம் என்கிறது வரலாறு. இயற்கை மனுகுலும் மீது தொடுக்கும் போர்தான் நோய். எனவேதான் அந்த நோய்களை தோற்கடித்து உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகின்றனர்.

நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரின் மருத்துவத்துறை பங்களிப்பு மற்றவர்களைக் காட்டிலும் தலையாயது என்று வரலாற்றில் 'நூறு முக்கியமான மனிதர்கள்' என்ற நூலை எழுதியை Michael Hart கூறுகிறார். அந்த நூலில் இந்த வரலாற்று நாயகருக்கு பதினோராவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அம்மை, ரேபிஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தையும் ஆந்தரக்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்ததோடு பாலை கிருமிநீக்கம் செய்யும் முறையையும் கண்டுபிடித்தார் அவர். அவரது கண்டுபிடிப்புகளின் அடிப்படையைக் கொண்டுதான் பிந்நாளில் பல்வேறு தடுப்பூசிகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்தான் உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞரும், உயிரியல் விஞ்ஞானியுமான லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur).

(http://2.bp.blogspot.com/-ed_al2J_J5o/UTw_XLj-kgI/AAAAAAAADWE/iJDzjwCgvTE/s1600/Louis-Pasteur-9434402-1-402.jpg)

1822-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நாள் கிழக்கு பிரான்சில் உள்ள Dole எனும் ஊரில் பிறந்தார் லூயிபாஸ்ச்சர். சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றும், இயற்கை மீது ஆர்வமிக்கவராக அவர் இருந்தார். அறிவியலும், ஓவியமும் அவருக்கு பிடித்த துறைகள். பதினாறு வயது வரை தாம் பார்த்து ரசித்தவற்றையெல்லாம் ஓவியமாக வரையும் பழக்கம் அவருக்கு இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட பாஸ்ச்சர் தமது இருபதாவது வயதில் அறிவியலில் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவிருந்த அவருக்கு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடத்தில் சராசரி மதிப்பென்கள்தான் கிடைத்தது என்பது ஆச்சரியமான உண்மை. பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் காற்றில்கூட கிருமிகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார் பாஸ்ச்சர். தனது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்கு அவர் ஆல்பஸ் மலையின் தூய காற்றை வடிகட்டியும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். 

புதிதாக கறந்த பாலை அப்படியே வைத்திருந்தால் சிலமணி நேரங்களில் அது புளித்து கெட்டு விடும் என்பது நமக்குத் தெரியும். பாலை புளிக்க செய்வது அதில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள்தான் என்பதை கண்டுபிடித்தார் பாஸ்ச்சர். மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிக்கப்படும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர்  நெய் போன்றவற்றை அதிக காலம் கெடாமல் வைத்திருக்கலாம் என்பதையும் அவர் நிரூபித்துக்காட்டினார். பாலில் உள்ள கிருமிகளை அழித்து அவற்றை பாதுகாப்பாக்கும் முறை அதனை கண்டுபிடித்த பாஸ்ச்சரின் பெயராலேயே 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் அந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கிருமிகள் பற்றிய அந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்பதை மருத்துவ உலகம் உணர்ந்தது. எப்படி பாலை கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிக்கப்படுகின்றனவோ அதேபோல் காச நோய் கிருமிகளை உஷ்ணத்தால் அழிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டனர். எனவே காசநோய்க்கும் மருந்து கிடைத்தது.

(http://1.bp.blogspot.com/-gAHMJxxAZdU/UT23Euh8scI/AAAAAAAADWU/18qEkptDF3w/s1600/louis-pasteur.jpg)

அடுத்து வெறிநாய்க்கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார் பாஸ்ச்சர். அவரது ஆராய்ச்சின் பலனாக அந்த கொடூரமான நோய்க்கான தடுப்பூசி மனுகுலத்திற்கு கிடைத்தது. அந்த ஆராய்ச்சிகளின்போது அவர் அச்சமின்றி பல வெறிநாய்களை வைத்து சோதனை நடத்தினார். வெறிநாய்களின் எச்சிலில்தான் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரிந்தும் ஆராய்ச்சிக்காக ஒருமுறை அவர் ஒரு நாயின் வாயில் குழாய் வைத்து தான் வாயால் அதன் எச்சிலை உரிஞ்சு எடுத்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. தப்பித்தவறி அந்த எச்சில் அவர் வாய்க்குள் சென்றிருந்தால் அவரது நிலமை என்னவாகியிருக்கும்? அப்படி அச்சமின்றி தன் உயிரை துச்சமாக மதித்து போராடியதால்தான் பல உயிர்களை காக்கும் மருந்துகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. வெறி நாய்க்கான மருந்தை கண்டுபிடித்த போது 1888-ஆம் ஆண்டு பாரிசில் Pasteur institute என்ற கழகம் அவரது பெயராலேயே அமைக்கப்பட்டது. பாஸ்ச்சரின் அடிப்படைக் கொள்கைகளை பயன்படுத்தி typhus எனப்படும் சன்னிக்காய்ச்சல், Polio எனப்படும் இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்கும் தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். பாதுகாப்பான தடுப்பூசி மூலம் அந்த நோய்கள் கிட்டதட்ட துடைத்தொழிக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து உலக மக்களின் ஆயுட்காலம் இரட்டிப்பாகி இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படி உயிர்களை காப்பாற்றியதோடு மட்டுமின்றி மனித வாழ்க்கையை நீட்டிப்பதற்கும் முழுமுதற் காரணம் லூயி பாஸ்ச்சர் புரிந்த மருத்துவ சாதனைகளேயாகும். தமது அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் உலக மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கிய மாமனிதர் தங்கள் நாட்டவர் என்று அன்றும் சரி இன்றும் சரி நியாயமாக கர்வப்பட்டுக்கொள்கின்றனர் பிரெஞ்சு மக்கள். அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இதுவரை பிரெஞ்சு தேசம் உருவாக்கியிருக்கும் ஆகச்சிறந்த குடிமக்களில் முதல் இடத்தை லூயி பாஸ்ச்சருக்கு வழங்கி கெளரவித்திருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். மாவீரன் நெப்போலியனுக்கு அந்த பட்டியலில் ஐந்தாம் இடம்தான்.

(http://3.bp.blogspot.com/-763-U1ADvh0/UT23LcJUXSI/AAAAAAAADWc/XWLuG646_vo/s1600/images+(1).jpg)

லூயி பாஸ்ச்சர் என்ற தனி ஒரு மனிதனின் மருத்துவ பங்களிப்பினால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் துல்லியமாக கூற முடியாது என்றாலும் அது மில்லியன் கணக்கில் இருக்கும் என்பதை மட்டும் துணிந்து சொல்லலாம். அப்படி மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை காப்பாற்றித் தந்த அந்த உன்னத விஞ்ஞானி 73-ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார். தன் இறுதி நாட்கள் வரைக்கும் உழைத்துக்கொண்டேயிருந்த அந்த ஜீவன் தனது மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?! உழையுங்கள்.. உழையுங்கள்.. உழைத்துக்கொண்டேயிருங்கள் எக்காரணத்திற்காகவும் உழைப்பதை நிறுத்தாதீர்கள் என்பதுதான். மனுகுலத்திற்கு அளிவிட முடியாத நன்மைகளை செய்த லூயி பாஸ்ச்சர் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் காலமானார். மருத்துவ உலகில் அவருக்கு பிறகு அவர் அளவுக்கு உயர்ந்த பங்களிப்பை செய்த ஒரு விஞ்ஞானியை உலகம் இன்னும் சந்திக்கவில்லை. அதனால்தான் அவரை 'மருத்துவத்தின் தந்தை' என்றும், 'மனுகுலத்தின் இரட்சகர்' என்றும் உலகம் போற்றுகிறது. மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் அவரது புகழ் நிலைத்திருக்கிறது செவ்வாய் கோளிலும், நிலவிலும் உள்ள grates எனப்படும் பள்ளங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நோய் என்ற ஆயுதத்தைக் கொண்டு மனுகுலத்தின் மீது இயற்கையே போர் தொடுத்த போது இயற்கையை வெல்ல முடியாது என்றுதான் பலர் வேதாந்தம் பேசினர். அதற்கும் மனிதனின் இயலாமை என்ற நோய்தான் காரணம். ஆனால் தன்னம்பிக்கையோடு முயன்றால் இயற்கையை மட்டுமல்ல, இமயத்தையும் வெல்லலாம் என வாழ்ந்து காட்டியவர்தான் லூயி பாஸ்ச்சர். "எழுந்தவனுக்கு விரல்களெல்லாம் சாவி, சோர்ந்தவனுக்கு கால்கள் முழுக்க பூட்டு" என்று அழகாக கூறுகிறார் கவிஞர் பா.விஜய் இயற்கைக்கு எதிராக எழுந்து நின்றதால்தான் மனுக்குலத்தின் துன்பங்களான நோய்களை குணப்படுத்தும் சாவிகள் பாஸ்ச்சரின் கைகளுக்கு கிடைத்தன. அவரைப்போல் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் எழுந்து நிற்பவருக்கு அவர்கள் விரும்பும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:36:03 PM
விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)
 
கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:

“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்”  ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...

(http://3.bp.blogspot.com/-pT3SrIiDTiw/TiPl8h7ScHI/AAAAAAAAAvc/hifhn1OEI84/s1600/WrightBros.jpg) (http://www.friendstamilchat.com)

மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.

ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான்  Otto Lilienthal  என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.

(http://1.bp.blogspot.com/-ubIQLPJUC7o/TiPlmZf-pRI/AAAAAAAAAvY/LR-pwtAZK6E/s1600/wright-brothers+%25281%2529.jpg)

பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.  Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.   

ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.

(http://4.bp.blogspot.com/-_lxeS2ZbEK0/TiPejUfMbKI/AAAAAAAAAvM/dVdS30Frdj4/s1600/images.jpg)

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர்.

டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.

(http://1.bp.blogspot.com/-rlsKuu12Ivk/TiPkE2Lir5I/AAAAAAAAAvQ/oQZJylvQ_D0/s1600/wright1901.jpg)

அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது.

(http://4.bp.blogspot.com/-kWxumDjaUS0/TiPkmFZS0JI/AAAAAAAAAvU/SlaIZGeZg4Q/s1600/e-16695.jpg) (http://www.friendstamilchat.com)

இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய வியர்வையும் அந்தக் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியும்தான். ஆனால் ஆரம்பத்தில் அவர்களின் கனவைக் கேட்டு உலகம் என்ன சொன்னது தெரியுமா? 'முட்டாள்கள் இவர்கள் வானத்தில் பறக்கப் போகிறார்களாம்' என்று எள்ளி நகையாடியது. அதேபோல இன்று நீங்கள் கானும் கனவை எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள். ஒருவர்கூட உங்களை தட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வள்ளுவன் கூறியதுபோல, ரைட் சகோதரர்கள் நிகழ்த்திக் காட்டியதுபோல் நிச்சயம் “முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” உங்கள் செயல்களில் தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள் தொய்வின்றி முயல்பவர்களுக்கு எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது வரலாறு சொல்லும் உண்மை.

 “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:47:36 PM
ஹெலன் கெல்லர் (தன்னம்பிக்கையின் மறு உருவம்) - வரலாற்று நாயகி
 
தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உணர்வுப்பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்ற இயற்கை விதியை தெள்ளத் தெளிவாக உணர்த்தும் ஓர் அசாதரணமான கதை. 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள்  அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா எனும் சிற்றூரில் ஒரு குழந்தை பிறந்தது. அழகாகவும் நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இருந்த தங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று எல்லா பெற்றோரைப்போல் அந்த பெற்றோரும் நம்பினர், விரும்பினர். குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிரம்பாத தருணத்தில் திடிரென்று காய்ச்சல் வந்தது. அது என்ன காய்ச்சல் என்பது அப்போதைய மருத்துவர்களுக்கும் தெரியவில்லை குழந்தை இறந்துவிடும் என்றுதான் நினைத்து வருந்தினர். ஆனால் பெயர் தெரியாத அந்த நோய் குழந்தையின் உயிரை பறிக்கவில்லை மாறாக அந்த பச்சிளங்குழந்தையின் பசுமை மாறாத உடலில் இரண்டு கொடூரங்களை நிகழ்த்திக் காட்டியது. முதலாவதாக அந்த மழலையின் செவிகள் செயலிழந்தன. அடுத்து அந்த பிஞ்சுக் குழந்தையின் சின்னஞ்சிறு விழிகள் ஒளியிழந்தன. பேசிக்கூட பழகாத, தன் பெயரையே கேட்டறியாத அந்த பிஞ்சுப்பருவத்திலேயே கண் பார்வையையும், செவிகளையும் இழந்தது அந்த பச்சிளங்குழந்தை.

அந்தக்குழந்தை நீங்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? சிந்தித்தவாறே கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....


உங்கள் விழிகளை நனைக்கப்போகும் இந்தக் கதையின் நாயகியின் பெயர் ஹெலன் கெல்லர். இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுனத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர் என்று எமது முந்தைய வரலாற்று நாயகர் தொகுப்பில் பார்த்தோம். கிரகாம்பெல்  ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆன் சல்லிவன்தான் கும்மிருட்டான, நிசப்தமான ஹெலன் கெல்லர் உலகுக்கு ஒளியையும், ஒலியையும் கொண்டு சேர்த்தார்.

(http://2.bp.blogspot.com/-MoZ2XyU8_Kc/ThEjwyOgGvI/AAAAAAAAAuY/Cgnug4PSAiw/s1600/1+Helen+Keller+Long+Hair.jpg)

பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துக்களையும், சொற்களையும் அறிமுகம் செய்வது? ஹெலன் ஹெல்லரின் உள்ளங்கையில் தன் விரல்களால் எழுதி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்தார் ஆன், அவற்றை விளையாட்டாக எண்ணி கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஆனால் தான் கற்றுக்கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு வாட்டர் (Water) என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார் ஆன் உடனே சட்டென்று மலர்ந்தது கெல்லரின் முகம். முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு அதன் பெயரை உணர்ந்தார். அதே குதூகலத்தில் தனது வலது கையை தரையில் வைத்தார் கெல்லர் அதனை எர்த் என்று இடது கையில் எழுதிக் காட்டினார் ஆன் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினார் கெல்லர். சில நிமிடங்களிலேயே சுமார் முப்பது சொற்களைக் கற்றுக்கொண்டார்.

(http://3.bp.blogspot.com/-Bd29IFOYKMI/ThFOe7boJlI/AAAAAAAAAuc/n4btl1EbHXA/s1600/helen_keller...jpg)

இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டு உணர்ந்தது அந்த எட்டு வயது பட்டாம்பூச்சி. பிறகு சிறிது சிறிதாக எழுத கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!! பிறகு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர ஷேரபுலா என்ற ஆசிரியை உதவினார். எவர் பேசுவதையும்தான் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாதே பிறகு எப்படி அவருக்கு சொல்லித்தருவது? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ தனது ஆசிரியை ஷேரஃபுலா பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளை தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். நம்பமுடிகிறதா? கற்பனை செய்து பார்க்கக்கூட சிரமமாக இருக்கிறதல்லவா? தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் சிரமபட்டு பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாக பேச முடியவில்லை ஆனால் ஒருமுறைகூட மனம் தளரவில்லை ஹெலன் கெல்லர்.

(http://1.bp.blogspot.com/-t5NMYYKbcNM/ThFP2SAJzwI/AAAAAAAAAus/Zdn5dWmJkoY/s1600/helen_keller_4.jpg)

தனியாக பாடங்களை கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார். கெல்லருக்கு குதிரைச் சவாரி தெரியும் இருவர் அமர்ந்து இயக்கும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டத் தெரியும். 1919 ஆம் ஆண்டு அவரது கெல்லரின் கதை ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டபோது அந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கண் பார்வையற்றோர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் அதிகாரப்பூர்வ பேச்சாளாராக கெல்லர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக உடல் ஊனமுற்றோருக்காக பேசிய கெல்லரைப் பல நாடுகள் பேச அழைத்தன.

(http://1.bp.blogspot.com/-WBTpZNIIOQo/ThFPdm4G0aI/AAAAAAAAAuo/yrxLVH0NC1M/s1600/images.jpg)

ஹெலன் கெல்லர் உதிர்த்த சில பொன்மொழிகள்:
1.பறக்க விரும்புபவனால் படர முடியாது.
2.மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
3.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

1930 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியா உட்பட 39 உலக நாடுகளுக்கு சென்று பேசினார் கெல்லர். பேசிய இடங்களிலெல்லாம் கண் பார்வையற்றோருக்காக நிதி சேர்த்தார். 1932 ஆம் ஆண்டு கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது ஸ்காட்லாந்தின் லாஸ்கோ பல்கலைக்கழகம். இரண்டாம் உலகப்போரின்போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி ஊக்கமூட்டினார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசியிருக்கிறார் கெல்லர். 1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் கெல்லருக்கு வழங்கப்பட்டது. தன்னம்பிக்கையின் மறு உருவாக விளங்கிய ஹெலன் கெல்லர் 1968 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87 ஆவது வயதில் காலமானார். உறக்கத்திலேயே கெல்லரின் உயிர் அமைதியாக பிரிந்தது. அவர் பிரிந்து 43 ஆண்டுகள் கடந்து விட்டன என்றாலும் இன்றும் ஹெலன் கெல்லர் அறக்கட்டளை உடல் ஊனமுற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

ஒருமுறை கெல்லரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு கெல்லர்:

“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன். அப்போது நான் அதுகுறித்து மகிழ்வேன்”

(http://3.bp.blogspot.com/-gcn8sHpy6cQ/ThFPDx9DwLI/AAAAAAAAAuk/OfLCZQH5_fU/s1600/g20749_u28958_HelenKeller.jpg)

என்று கூறினார். இன்று நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? ஏதோ ஒரு மனச்சுமை உங்கள் தோள்களில் பெரும்பாரமாக கனக்கிறதா? தீராத மன உளைச்சலில் இருக்கிறீர்களா? 'ஹெலன் கெல்லர்’ என்ற இரண்டு மந்திர சொற்களை சொல்லிப்பாருங்கள்.

கண் பார்வையில்லாமலும், காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா உங்கள் பிரச்சினை பெரியது? சிந்தித்துப் பாருங்கள் இரண்டு முக்கிய புலன்கள் இல்லாமல் ஹெலன் கெல்லரால் இவ்வளவு சாதிக்க முடிந்ததென்றால் நமக்கு தடையாக இருப்பவை எவை? எந்த தடைகளையும் உடைத்தெரிய ஹெலன் கெல்லர் நம் காதுகளில் சொல்லும் உண்மை இரண்டு வார்த்தை மந்திரம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி. முயன்று பாருங்கள் உங்கள் இன்னல்கள் பஞ்சாய் பறக்காவிட்டாலும், 'முயற்சி செய்யும் வரைதான் நாமெல்லாம் மனிதர்கள்' என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை உணர்வீர்கள். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:52:40 PM
லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
1794 ஆம் ஆண்டு 'ஃபிரெஞ்சு ரெவூல்யூசன்' எனப்படும் ஃபிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது ஃபிரான்ஸின் ஆட்சிப் பொருப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ந்தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரும் இருந்தார்.

மனுகுலத்திற்கு அவர் செய்த பங்களிப்பிற்கு ஆயிரம் உயிர்களைக்கூட பரிசாகத் தந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்ற போர்வை கண்களை மறைக்க, அவரை மட்டுமாவது விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கைகளையும் நிராகரித்து அவரது உயிரை பறித்தது புரட்சி அரசாங்கம். அப்படி 51 வயதிலேயே அநியாயமாக உயிர் துறந்த அந்த அறிவியல் மேதையின் பெயர் Antoine Laurent Lavoisier. நவீன 'இரசாயனவியலின் தந்தை’ என்று அவரை போற்றுகிறது வரலாறு. 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ந்தேதி பாரிஸில் பிறந்தார் லவாய்ஸியர். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்ஸியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக இரசாயனவியலில் அதிக ஆர்வம் காட்டினார்.

(http://1.bp.blogspot.com/-WulS626VgiE/Tg7qKXjEDXI/AAAAAAAAAjY/GLa6eojt5dE/s1600/antoine+lavoisier.jpg)

1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று லவாய்ஸியர் கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ட்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர் சோதனைகள் மூலம் நிருபித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இரசாயனவியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கினைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. உதாரணத்திற்கு காற்றும் தண்ணீரும் கம்பவுண்ட்ஸ்(compounds) எனப்படும் கூட்டுப்பொருள்கள் என்பது இப்போது நமக்கு தெரியும். ஆனால் லவாய்ஸியரின் வருகைக்கு முன் அவை Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'ப்ளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால இரசாயனவியலார் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் லவாய்சியர். 'ப்ளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிருபித்தார். இரசாயனக் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை லவாய்ஸியர் கண்டு சொன்னார்.

(http://1.bp.blogspot.com/-U7hn3ph7P1g/Tg7rE6-KszI/AAAAAAAAAjc/a9ZhwoCB7dU/s1600/phlogfire.gif)

நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள பிராணவாயுதான் லவாய்ஸியர் கண்டறிந்தார். ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார். இவையெல்லாம் நமக்கு இப்போது தெரியும் உண்மைகள். ஆனால் லவாய்ஸியர் கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. லவாய்ஸியரின் கண்டுபிடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. லவாய்ஸியர் தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த இரசாயனவியலார்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூறவும், தற்காக்கவும் தயங்கவில்லை லவாய்ஸியர்.

1789 ஆம் ஆண்டில் லவாய்ஸியர் Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். நவீன இரசாயனவியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். அதனை படித்த இளைய இரசாயனவியலார் லவாய்ஸியரின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக லவாய்ஸியர் கண்டு சொன்ன பெரும்பாலான இரசாயனப்பொருட்கள் இன்றைய நவீன இரசாயனவியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்ஸியர் அடுத்து இராசயனவியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் இராசயனவியலுக்கு ஓர் ஒருங்கினைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

(http://4.bp.blogspot.com/-WsBwBLnuvgs/Tg7rLd-oZHI/AAAAAAAAAjg/P1ZHeUhZSA0/s1600/lavoisier.jpg)

உலகம் முழுவதிலும் உள்ள இராசயனவியலார்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இராசயவியல் துறையும் துரிதமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் லவாய்ஸியர். உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் ஸ்லோ கம்பாஷன் (Slow ) அதாவது மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று லவாய்ஸியர் கண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுப்பிடித்த வில்லியம் ஹாபியின் கண்டுப்பிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

பிரான்ஸ் முழுவதும் Weights & Measurements எனப்படும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் லவாய்ஸியர் முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்ஸியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். Firm General என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராக பணியாற்றியதுபோது அந்த அமைப்பு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் ஈடுபாடுதான் அவருக்கு எமனாக அமைந்தது என்று ஒரு குறிப்பு கூறுகிறது. புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்  Firm General அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த 28 பேர்தான் புரட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கிளெட்டின் மூலம் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

(http://1.bp.blogspot.com/-zdY4Bi_9OpM/Tg7rVkcYfxI/AAAAAAAAAjk/XGmGjgRqGNY/s1600/oxyphlog.gif)

லவாய்ஸியர் நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார். அந்த அபத்தமான செயலால் ஒரு மிகச்சிறந்த மாமேதையை இழந்தது உலகம். அந்த மேதையின் தலையை துண்டிக்க ஒரு வினாடிதான் ஆனது. ஆனால் ஒரு நூற்றாண்டு வந்தாலும் லவாய்ஸியரைப்போன்று இன்னொரு மேதையை பெற முடியாது என்று அவரது நண்பரும் சிறந்த கணக்கியலாருமான லெக்ரென்ஞ் அப்போது கூறினார். உண்மைதான் வரலாற்றின் கருப்புப்பக்கங்களில் ஒன்று லவாய்ஸியர் சிரச்சேதம் செய்யப்பட்ட சம்பவம். புரட்சியாளர்கள் அவரைக் கொன்றாலும் அறிவியலும், வரலாறும் லவாய்ஸியருக்கு சாகா வரத்தை தந்துள்ளன. இன்று Chemistry எனப்படும் இராசயனவியலை விரும்பி படிப்பவர்கள் லவாய்ஸியருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவாய்ஸியருக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான். இதே பண்புகளோடு நாமும் செயல்பட்டால் வானத்தை வசப்படுத்த நமக்கும் உதவும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 07:59:42 PM
சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்
 
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை  ரசிகர்களுக்கு 'நகைச்சுவை' எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

(http://1.bp.blogspot.com/-fUBCAdTEyrA/TgWCH56JKlI/AAAAAAAAAiI/dQ-muVcywOs/s1600/chaplin_1.jpg)

1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.

(http://4.bp.blogspot.com/--xxi8Rs5bXs/TgWCOcGU3vI/AAAAAAAAAiM/Rfp9R0QsdhI/s1600/charli_family.jpg)

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும், கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.

(http://4.bp.blogspot.com/-ZgKSSS2EeUw/TgWCycyRKzI/AAAAAAAAAiU/6fQhZOMeGwM/s1600/charlie-chaplin+%25281%2529.jpg)

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு  அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

(http://2.bp.blogspot.com/-NiagLHF6VXI/TgWDNYA206I/AAAAAAAAAic/c_Ry_qqgdPQ/s1600/CharlieChaplineVaslavNijinski1916.jpg)

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

(http://1.bp.blogspot.com/-aA3gMthD_6k/TgWDTXDM92I/AAAAAAAAAig/h538cCqie2U/s1600/CharlieChaplineDouglasFairbanks1918.jpg)

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும்  என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 08:05:03 PM
இசை மேதை மோட்ஸார்ட் (Mozart) - வரலாற்று நாயகர்
 
எதற்கும் மயங்காத உள்ளம் இசைக்கு மயங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகத்திற்கே பொதுவான ஒரு மொழி என்றால் அது இசையாகத்தான் இருக்க முடியும். மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை பாமரனால்கூட ரசிக்க முடியும் ஆனால் ஒரு சிலரால்தான் அற்புதமான உயிரோட்டமுள்ள இசையை உருவாக்க முடியும். அந்த ஒருசிலரில் முக்கியமானவர் தன் வாழ்நாளில் இசைபட வாழ்ந்தவரும் உலகிற்கு ஆஸ்திரியா வழங்கிய இசைகொடையுமான இசைமேதை மோட்ஸார்ட்.

1756 ஆம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் பிறந்தார் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் (Wolfgang Amadeus Mozart). மோட்ஸார்ட் பிறவி மேதை என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தென்பட தொடங்கின. மோட்ஸார்ட்டின் தந்தை லேபோல்ட் மோட்ஸார்ட் ஒரு சிறந்த வயலின் இசைக்கலைஞர். மோட்ஸார்ட்டுக்கு அவர் இசை கற்பித்தார். மோட்ஸார்ட் இசைக்கருவியை வாசிக்க தொடங்கியபோது அவருக்கு வயது மூன்றுதான். நான்காவது வயதில் அவர் இசை நூல்களை படிக்கத் தொடங்கினார். ஐந்தாவது வயதில் அவரே பாடல்களை இயற்றி இசையமைக்கத் தொடங்கினார். ஏழு வயதில் சொனாட்டாக்களை எழுதத் தொடங்கிய அவர் தனது எட்டாவது வயதில் ஒரு சிம்ஃபொனியை எழுதி முடித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!

(http://2.bp.blogspot.com/-jAupvGsSmis/Tf7vCQ2BFTI/AAAAAAAAAh8/3EY7QMf0EKg/s1600/424px-Wolfgang-amadeus-mozart_1.jpg)

மோட்ஸார்ட்டுக்கும் முன்பும் பின்பும் எத்தனையோ இசை மேதைகள் உதித்திருக்கிறார்கள் ஆனால் அவரைப்போல அந்த சிறிய வயதில் அவர்கள் அத்தனை சிகரங்களை தொட்டதில்லை. பத்து வயதுக்குள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொண்ட மோட்ஸார்ட்டை இசை உலகம் அதிசயமாக பார்த்தது. இசை விற்பன்னர்கள் மோட்ஸார்ட்டை ஒரு தவப்புதல்வனாக பார்த்தனர். இசை கச்சேரிகள் நடத்தித் தருமாறு பல தேசங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன. எனவே விளையாடித் திரிய வேண்டிய அந்த பிஞ்சுப் பருவத்தில் ஒவ்வொரு இடமாக பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தினார் மோட்ஸார்ட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் தனது இசையை கேட்டவர்களையெல்லாம் சொக்க வைத்தார் மோட்ஸார்ட். அதே நேரத்தில் அவர் இசைக்கும்போது ஒட்டுமொத்த அமைதியை எதிர்பார்ப்பார். எவராவது இருமினாலோ அல்லது தும்மினாலோகூட அவருக்கு கோபம் பொங்கிவருமாம் அந்தளவுக்கு தனது இசைக்கு மிக முக்கிய அந்தஸ்த்தை கொடுத்திருந்தார் மோட்ஸார்ட்.

(http://1.bp.blogspot.com/-R2GH89seTT8/Tf7vpdOG5hI/AAAAAAAAAiA/8D6bCD6NH28/s1600/Wolfgang01.jpg)

மோட்ஸார்ட்டுக்கு பத்து வயதானபோது அவரது இசைத்திறனைப்பற்றி கேள்விபட்ட வியட்நா மகாராணி மோட்ஸார்ட்டை தனது அரண்மனைக்கு அழைத்து இசை மீட்டச் சொன்னார். அந்த பத்து வயது பாலகனின் இசை பிரபாகத்தை கேட்டு மெய் மறந்துபோன ராணியார் பாராட்ட வார்த்தையின்றி மோட்ஸார்ட்டை தனது மடியில் வைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பனிரெண்டு வயதானபோது ஜெர்மன் மொழியில் ஒரு இசை கச்சேரியை நடத்தி முடித்தார் மோட்ஸார்ட். பதினான்கு வயதில் அவர் இயக்கி வழங்கிய  librettist Lorenzo Da Ponte என்ற ஆப்ரா இசைக்கச்சேரி முடிந்தபோது அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டு வழங்கினர் அந்த வயதில்தான் தியோப்லஸ் என்ற தன் பெயரை அமதியுஸ் என்று மாற்றிக்கொண்டார் மோட்ஸார்ட். அமதியுஸ் என்ற பெயர் அழகாக இருப்பதாக அவர் நினைத்ததே அதற்கு காரணம். அன்றிலிருந்து அவர் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் என்று அழைக்கப்பட்டார்.

மோட்ஸார்ட்டின் இசைத்திறமையை மெச்சிய சால்ஸ்பர்க் இளவரசன் தன் அரண்மனையில் இசைத் தலைவனாக இருக்குமாறு மோட்ஸார்ட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும் தனது தந்தையின் விருப்பத்திற்காக அந்த பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் அரண்மனையில் இருந்தார். ஆனால் இளவரசன் மோட்ஸார்ட்டை ஒரு வேலையாள் போல் நடத்தியதால் தனது 25 ஆவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். 26 ஆவது வயதில் மோட்ஸார்ட் கான்ஸ்டண்ட் என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இசை உலகில் கொடிகட்டி பறந்த அவரது குடும்ப வாழ்க்கையில் சோகத்திற்கு மேல் சோகம். மோட்ஸார்ட் தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பிறந்து சில மணி நேரத்தில் இறந்தனர். இசையால் எவரையும் மசிய வைத்த அந்த மேதையை அந்த மரணங்கள் வெகுவாக பாதித்தன. அவரது கடைசிக் காலத்தில் கடன் தொல்லையால் அவதியுற்றார் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

இசையை கையாண்ட அளவுக்கு மோட்ஸார்ட்டுக்கு நிதியை திறமையாக கையாளத் தெரியவில்லை. இசையில் ஓயாத ஆராய்ட்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சிகள், புதிய இசைக்கூறுகளை உருவாக்குதல் என்று ஒவ்வொரு மணித்துளியையும் இசைக்காகவே செலவிட்டார் மோட்ஸார்ட் அதனால் அவரது உடல்நிலைகூட பாதிக்கப்பட்டது. நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தபோதுகூட அவரது படுக்கையில் ஏதாவது ஒரு இசைக்கருவி இருந்துகொண்டே இருக்கும். கண்மூடியபடி அவர் அந்தக் கருவிகளை மீட்டிக்கொண்டிருப்பார். தன் மரணப்படுக்கையில்கூட அவர் ‘ரெக்யும் மாஸ்’ என்ற இசைக்கூறை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்று தனது மாணவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தாராம். இயற்கையையே தனது இசையால் மசிய வைத்த அந்த இசை மேதையின் வாழ்நாளை பொருத்தமட்டில் இயற்கை பாரபட்சமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

36 வயது நிறைவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது 1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அவரது மூச்சு நின்றது. அப்போது இசை உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்துபோனது. மோட்ஸார்ட்டின் நல்லுடல் ஆராவாரமின்றி கிராமத்து இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இசைக்கு முகவரி தந்த அந்த மேதைக்கு இடுகாட்டில்கூட முகவரி இல்லை. ஏனெனில் அந்தக்கால வழக்கத்தின்படி கல்லறையில் பெயர் பொறிக்காமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். தான் வாழ்ந்த 36 ஆண்டுகளில் இசையின் எல்லாப் பிரிவுகளிலும் அழியா முத்திரைப்பதித்தார் மோட்ஸார்ட்.  The Marriage of Figaro,  Don Giovanni, The Magic Flute ஆகிய மூன்று ஆப்ரா கச்சேரிகள் உலக இசை வரலாற்றில் ஆகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அவரது இசைத் திறமையை மெச்சி அப்போது போப்பாக இருந்த கிளமென்ஸ் மோட்ஸார்ட்டுக்கு “நைட் ஆப் த கோல்டன்ஸ்பர்” என்ற தேவாலயத்தின் செவ்வாலியே விருதை வழங்கி கவுரவித்தார்.

(http://4.bp.blogspot.com/-1CN_v_t8SLk/Tf7v_wNC1HI/AAAAAAAAAiE/R4uX0ydlPX0/s1600/462px-Croce-Mozart-Detail.jpg)

மோட்ஸார்ட் ஒரு பிறவி மேதைதானே அவருக்கு வானம் வசப்பட்டுதானே ஆக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அவ்வளவு ஞானம் இருந்தும் மோட்ஸார்ட் இசையையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்தார். ஊண் உறக்கம் மறந்து அந்த இசையையே சுவாசித்தார். அப்படிப்பட்ட ஒரு முழுமையான ஈடுபாடுதான் அவரை இசை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிறவி மேதை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நமக்கும் எதிலும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு காட்டி முன்னேற்றம் நாடினால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆகவேண்டும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 08:09:28 PM
தொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - வரலாற்று நாயகர்
 
நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

1847 ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் நகரில் பிறந்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். சிறுவயதிலிருந்தே கிரஹாம் பெல் கல்வியில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியை முடித்தபிறகு அவர் காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் கற்பிப்பதில் அதிக கவணம் செலுத்தினார். 1870ல் கனடாவுக்குச் சென்ற பெல் அங்கும் காது கேளாதோருக்கும், பேச முடியாதோருக்கும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பெல் அங்கு காது கேளாதோருக்காக சிறப்புப்பள்ளி ஒன்றை நிறுவினார். 1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பெல்லுக்கு பேராசிரியர் தகுதி கிடைத்தது. அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.  காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

(http://3.bp.blogspot.com/-Ze73eiX2d0I/TfWl8D96p5I/AAAAAAAAAhs/3W5zBlCOtqI/s1600/cover-image-11.jpg)

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார். தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார். பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர். அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன. 1876 ஆம் ஆண்டு மார்ச் 10ந்தேதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார். திடிரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது. வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார். பெல்லின் கனவு நனவானது.

(http://4.bp.blogspot.com/-bMrVNo-87-g/TfWmHbBXcHI/AAAAAAAAAhw/H9eMyCaYvio/s1600/sc0609052g.jpg)

அதே ஆண்டு பெலஃடால்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்திருந்தார் பெல். பெரும்பாலோனோர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரேசிலின் மன்னர் டான்.பெண்ட்ரோ கருவியை காதில் வைத்து சோதித்தார். மறுமுனையில் பெல் “To be or not To be" என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசித்தார். அதனை தெளிவாக கேட்டு அதிசயித்த மன்னர் "My God its Beats" என்று நம்ப முடியாமல் கூறினார். அதன்பிறகு அந்த கண்காட்சியில் பெல்லின் கண்டுபிடிப்பு பலரின் கவணத்தை ஈர்த்தது. அதே காலகட்டத்தில் வேறு சிலரும் தாங்கள்தான் தொலைபேசியை கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டனர். அதனால் பெல் பலமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒவ்வொரு வழக்கிலும் பெல்லுக்கே வெற்றி கிடைத்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

(http://1.bp.blogspot.com/-nE9xMFeh9ow/TfWmosZgMEI/AAAAAAAAAh4/Ud0pJZKMreY/s1600/sc0609052h.jpg)

அதன்பின்னர் பெல் வேறு சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். ஆனால் தொலைபேசிதான் அவரது பெயர் சொல்லும் கண்டுபிடிப்பாக இருந்தது. 1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார். அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை மிகச் சிறந்த மனிதராக வருணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். உதவி தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார். இன்னும் ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பெல்  நேபல் ஹபர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். தொலைபேசியின் தந்தை கிரஹாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர். பெல்லின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.

(http://1.bp.blogspot.com/-QDfqLimb35c/TfWmYuH56fI/AAAAAAAAAh0/I_UHRo6uTX0/s1600/sc0609052k.jpg)

தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லையேச் சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு. உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும் அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 14, 2013, 08:13:51 PM
சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.

(http://2.bp.blogspot.com/-AqGjbbI6GPw/TeySmwgISyI/AAAAAAAAAho/q2DrVFFiDbw/s1600/socrates.gif)

சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.

என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார்  “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.

(http://1.bp.blogspot.com/-elM-pgPShn0/TeyRsHkL_TI/AAAAAAAAAhg/Gnd0wClEfs4/s1600/Socrates+%25281%2529.jpg) (http://www.friendstamilchat.com)

வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன உலகமே வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 06:05:15 PM
சர் ரோஜர் பேனிஸ்டர் ( ' The Miracle Mile Man') - (வரலாற்று நாயகர்)
 
வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் உண்டு. இதுவரை எட்டப்படாத ஓர்  இலக்கை தீர்மானித்து மற்றவர்கள் அந்த இலக்கை அடையுமுன் நாம் அந்த இலக்கை அடைவது அந்த வழிகளில் ஒன்று. எதையுமே முதலில் சாதிப்பவர்களுக்குதான் வரலாறும் முதல் மரியாதை தருகிறது. புதிய இலக்குகளை அடைவது என்பது விளையாட்டு உலகத்திற்கும் பொருந்தும் ஒன்று. ஒரு மைல் தொலைவை ஓடிக்கடக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மைல் ஓட்டத்திற்கு '4 மினிட் ஃபேரியர்' என்ற ஒரு இலக்கு இருந்தது. நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடிக்கடப்பது என்பது பகல் கனவாக இருந்த காலம் அது. தனது திறமையின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர்கள்கூட அதனை அடைய முடியாத ஓர் இலக்காக கருதினர்.

1954ல் ஒருவர் ஓடினார் '4 மினிட் ஃபேரியர்' என்ற சொற்றொடர் காற்றோடு கரைந்தது. அவர் பெயர் ரோஜர் பேனிஸ்டர். 1929 ஆம் ஆண்டு மார்ச் 23ந்தேதி இங்கிலாந்தின் ஹெரோ என்ற நகரில் பிறந்தார் பேனிஸ்டர். அவர் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே திடல் திட போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக படிப்புக்கு பெற்றோரால் உதவ முடியாது என்பது பேனிஸ்டருக்கு புரிந்தது. எனவே எப்படியாவது உபகாரச்சம்பளம் பெற்று மிகச்சிறந்த பல்கலைகழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தார்.

(http://2.bp.blogspot.com/-qT1gEVr2OU0/TeiGnBYAkMI/AAAAAAAAAg8/Gy9GPLpyw3g/s1600/p0093ych_640_360.jpg)

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது பேனிஸ்டரின் குடும்பம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பாத் என்ற நகருக்கு குடி பெயர்ந்தது. அங்கு சென்ற பிறகு தினசரி பள்ளிக்கு ஓடிச்செல்வார் பேனிஸ்டர். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடியே வருவார். படிப்பிலும் அவர் அதிக கவணம் செலுத்தியதால் ஆரம்பத்தில் சக மாணவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு இருந்த திறமையைக்கண்டு அனைவருக்கும் அவர் மேல் நன்மதிப்பு ஏற்பட்டது. அவரது கடும் உழைப்பு அவர் கனவு கண்டதைப்போலவே உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க உபகாரச்சம்பளத்தை பெற்றுத்தந்தது. பல்கலைகழகத்திலும் அவர் திடல்திட போட்டிகளில் ஈடுபட்டார். 1500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஓட்டத்தில் அவர் காட்டிய வேகம் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் கவணத்தை அவர் பக்கம் ஈர்த்தது. ஒரு தேசமே பேனிஸ்டரை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்தது.

ஆனால் கல்விக்கே முதலிடம் தந்த பேனிஸ்டர் 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதற்கான காரணத்தை கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள் பேனிஸ்டர் தனது மருத்துவ படிப்பில் முழு கவணம் செலுத்த விரும்பியது முதல் காரணம், இரண்டாவது காரணம் தன் தேசத்தை பிரதிநிதிக்கும் அளவுக்கு தனக்கு இன்னும் தகுதி இல்லை என்று அவர் நினைத்தது. வாழ்க்கையில் நாம் இதுபோன்ற எத்தனை விளையாட்டு வீரர்களை சந்திக்க முடியும்! அவர் அப்படி சொன்னாலும் ஆனால் அடுத்த மூன்றே ஆண்டுகளில் அதாவது 1951ல் ஒரு மைல் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஆகச்சிறந்த வீரராக உருப்பெற்றார் பேனிஸ்டர். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் என்று உணர்ந்தார்.

ஆனால் 1952 ஆம் ஆண்டில் ஹல்சிங்கி ஒலிம்பிக் போட்டிகளில் கடைசி நிமிட நேர மாற்றங்களால் போட்டிகளுக்கு இடையில் போதிய ஓய்வு இல்லாமல் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவரால் 1500 மீட்டர் ஓட்டத்தில் நான்காவதாகத்தான் வர முடிந்தது. பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அவரை எள்ளி நகையாடின. பாரம்பரிய பயிற்சி முறைகளை பேனிஸ்டர் ஒதுக்கியதால்தான் பேனிஸ்டர் தோற்றார் என்று காரணம் கற்பித்தன. ஆனால் மனம் தளராத பேனிஸ்டர் ஒரு மைல் தொலைவு ஓட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தி பத்திரிக்கையாளர்களின் வாயை அடைக்க விடா முயற்சியோடு செயல்பட்டார். மருத்துவ படிப்பு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் அவரால் ஒரு நாளைக்கு 45 நிமிடத்தைதான் பயிற்சிக்கு ஒதுக்க முடிந்தது. ஆனாலும் தனது விடா முயற்சியில் நம்பிக்கை வைத்து படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்தார்.

(http://3.bp.blogspot.com/-zEcS1oTURVE/TeiHujorgqI/AAAAAAAAAhE/3HHHcIGDZ_4/s1600/roger-bannister-1st-four.jpg)

ஆண்டு 1954 மே திங்கள் 6 ந்தேதி வயது 25 ஆக்ஸ்பர்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரிட்டிஷ் திடல்திட கழகத்தை பிரதிநிதித்து ஒரு மைல் பிரிவில் ஓடினார் பேனிஸ்டர். உலகச்சாதனையை நோக்கி விரைந்த அவரது கால்கள் 3 நிமிடம் 59.4 வினாடியில் கடிகாரத்தை உறைய வைத்தன. பேனிஸ்டருக்கு மூச்சு முட்டியது, விளையாட்டு உலகம் ஒரு கணம் மூக்கின்மேல் விரலை வைத்து மூச்சுவிட மறந்தது. 25 வயதில் வரலாற்றில் தடம் பதித்தார் பேனிஸ்டர். நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவு ஓடுவது மனித உடலுக்கு அப்பாற்பட்டது என்பதுதான் அப்போதைய விளையாட்டு வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அது சாதிக்கக்கூடிய ஒன்று என்று நம்பினார் பேனிஸ்டர். தனது மருத்துவ படிப்பின் மூலம் உடல்கூறுகளை கூர்ந்துகற்ற அவர் ஓடுவதைப்பற்றி நிறைய ஆராய்ட்சிகள் செய்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் அடிப்படையிலான புதிய பயிற்சி முறைகளை வகுத்துக்கொண்டார்.

(http://3.bp.blogspot.com/-CrU-UBXEsRM/TeiHi-VYu9I/AAAAAAAAAhA/DvLWN6WEoYs/s1600/roger_bannister.jpg)

நம்பிக்கையோடு அந்த முறைகளை கையாண்டு வெற்றியும் பெற்றார். பேனிஸ்டர் சாதித்த அடுத்த மாதமே ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்ட் பி என்ற வீரரும் நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தார். அப்போதுதான் தடை உடலுக்கு அல்ல உள்ளத்துக்குதான் என்பதை உலகம் உணர்ந்தது. மிகப்பெரும் சாதனையை செய்த அதே ஆண்டு திடல்திட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று தனது மருத்துவ கல்வியை தொடர்ந்தார் பேனிஸ்டர். பின்னர் சிறப்பாக தேர்ச்சி பெற்று நரம்பியல் மருத்துவரானார். எப்படி ஒரு மைல் சாதனையை நிகழ்த்துனீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டபோது “உங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் திறமைதான்" காரணம் என்று கூறினார் பேனிஸ்டர்.

ஒருமுறை அவரை எள்ளி நகையாடிய பத்திரிக்கைகள் “The man who ran the miracle mile" அதாவது அதிசய மைல் மனிதன் என்று இப்போது பாராட்டின. 1975 ஆம் ஆண்டு பேனிஸ்டருக்கு “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடத்திற்குள் ஓடி முடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே பேனிஸ்டரால் எட்டபட்ட இலக்கைதான் எட்டியிருக்கின்றனர். நான்கு நிமிட இலக்கை முதன்முதலாக முறியடித்ததால்தான் 50 ஆண்டுகள் கடந்தும் பேனிஸ்டரின் பெயரை பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. ஒருவேளை இன்னொரு வீரர் மூன்று நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தால் பேனிஸ்டரின் பெயர் மறக்கப்படலாம், ஆனால் முடியாது என்று கருதப்பட்டதை முடியும் என்று செய்து காட்டியதாலேயே மூன்று நிமிட இலக்கையும் ஏன் முறியடிக்க முடியாது!! என்ற சிந்தனையை பல வீரர்களின் உள்ளங்களில் உருவாக்கியிருக்கிறார் பேனிஸ்டர். இது ஒன்றே பேனிஸ்டரின் வெற்றியாகும்.

(http://4.bp.blogspot.com/-pfGWKBlyPxM/TeiH1NdoFrI/AAAAAAAAAhI/273Vt1jugNw/s1600/bannister_1.jpeg)

உங்கள் வாழ்வில் நீங்கள் வகுத்துக்கொள்ளும் இலக்கு எது? மற்றவர்களின் இலக்குப்போலவே சாதாரணமாக இருந்தால் வாழ்க்கையும் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் பேனிஸ்டரைப்போல் உங்கள் இலக்கும் உயர்வாக இருந்து விடா முயற்சியோடு வியர்வை சிந்தி உழைத்தால் வாழ்க்கையும் உயரும் அதனால் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 06:13:04 PM
புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)
 
நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.

(http://4.bp.blogspot.com/-5hKAbY1XKjg/TeNapcwYyOI/AAAAAAAAAe4/Zxf1lqvmHDg/s1600/Bruce_Lee_Biography.jpg)

1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்'  அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ. 

இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.

அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.

(http://3.bp.blogspot.com/-3jqI16PbQK4/TeNcbB44iSI/AAAAAAAAAfI/3S-mGyKgg3A/s1600/bruce-lee-wallpaper-1.jpg) (http://www.friendstamilchat.com)

தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

(http://2.bp.blogspot.com/-OnDQwDxwZVo/TeNbslv_GLI/AAAAAAAAAfA/wJT-7X77eII/s1600/Bruce-Lee-bruce-lee-120953_690_709.jpg)

அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்”  என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.

“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.

(http://3.bp.blogspot.com/-gJADvwoeoWY/TeNdu4FWRyI/AAAAAAAAAfM/K0zYwbIclWE/s1600/51Q6WG3H75L.jpg)

புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்”  படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.

(http://3.bp.blogspot.com/-MamBrVEYKLo/TeNbkFrAtSI/AAAAAAAAAe8/WibehfnVDs8/s1600/bruce-lee-wallpaper-3.jpg) (http://www.friendstamilchat.com)

அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடா முயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 07:37:24 PM
ஹமில்டன் நாகி - மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை!! (வரலாற்று நாயகர்)
 
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதி தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.அவரது உடலில் இதயம் மட்டும்தான் துடித்துக்கொண்டிருந்தது வேறு எந்த அசைவும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் இதயத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு ஹமில்டனுக்கு ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்தப் பெண்ணை தொடக்கூட முடியாது ஏனெனில் ஹமில்டன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண் டெனிஸ் டார்வால் வெள்ளை இனப்பெண். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் உச்சகட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் வெள்ளையர்களின் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையவோ மருத்துவமனையில் வெள்ளையர்களை தொடவோ அறுவை சிகிச்சை செய்யவோ கருப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஹமில்டனுக்காக மட்டும் ரகசியமாக தனது குருட்டு சட்டங்களை மீற முடிவெடுத்தது அந்த மருத்துவமனை. அதற்கு காரணம் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதில் ஹமில்டனுக்கு இருந்த அசாத்திய திறமைதான்.

(http://3.bp.blogspot.com/-fItKqfUFU4w/TdjS6S-0eOI/AAAAAAAAAeU/CKNz5nbe5UQ/s1600/images+%25281%2529.jpg)

அதுமட்டுமல்ல அன்றைய தினம் மருத்துவ உலகில் ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்த தினம். ஆம் அன்றுதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவர் கிறிஸ்டியான் பெர்னாடின் தலைமையில் நடைபெற்றது. டெனிஸின் இருதயத்தை ஹமில்டன் லாவகமாக அறுத்து எடுக்க அதனை லூயிஸ் வஸ்கான்ஷி என்பவருக்கு பொருத்தினார் கிறிஸ்டியான் பெர்னாட். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

(http://4.bp.blogspot.com/-TYx8xFNyUm8/TdjTRYaO-0I/AAAAAAAAAeY/cume0cUTMo0/s1600/images.jpg)

அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப்போக அதில் ஹமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தாம் அந்த மருத்துவமணை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹமில்டன், அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்கு துப்புறவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறி சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம்.

(http://4.bp.blogspot.com/-OXLLTcuD8wY/TdjVePP6rdI/AAAAAAAAAek/Is1PPQMs75A/s1600/naki-hamilton.jpg)

இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுனர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட் இத்தனைக்கும் உயர்நிலை கல்விகூட படிக்காதவர் ஹமில்டன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா!! இதோ அவரது வாழ்க்கை பயணத்தின் பதிவு...

1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன் என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹமில்டன் நாகி சிரமபட்டு தொடக்கப்பள்ளி கல்வியை முடிந்த ஹமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பரமாரித்து வந்தார். துப்புறவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹமில்டன்.

(http://4.bp.blogspot.com/-xvD7lTZCIrU/TdjTfy3Sv1I/AAAAAAAAAec/ZstMU7FhK70/s1600/Hamilton-Naki.jpg)

1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர், ஹமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் அப்போது ஹமில்டனின் செய்ல்பாடுகளை கவணித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார்.வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார்.அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுனர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

(http://4.bp.blogspot.com/-H8XuyrOMN88/TdjTqtaH8pI/AAAAAAAAAeg/kjoNdBepxsY/s1600/Hamilton-Naki-04.jpg)

ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹமில்டன் ஒரு துப்புறவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். டிப்ளமோகூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் சிரமமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹமில்டன்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார். 

ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது. 2002 ஆம் ஆண்டு ஹமில்டனுக்கு National Orders. The Order of Mapungubwe எனப்படும் தென்னாப்பிரிக்காவின் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கேப்டான் பல்கலைக்கழகம். வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹமில்டன் சிறப்பான அந்த இரண்டு அங்கீகாரங்களைபெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இயற்கை ஹமில்டனுக்கு மிக உன்னதமான திறமையை கொடுத்திருந்தது. அந்த திறமையை மட்டும் விரும்பிய அந்த தேசத்தின் வெள்ளை இன சிறுபான்மையினர் அவரது தோலின் நிறத்தை வெறுத்தனர். கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஹமில்டனுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹமில்டன் நாகிக்கு வானம் என்ன வாழ்க்கைகூட வசப்படவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் போர்க்கொடி தூக்கவில்லை தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக நீதிப்போராட்டம் நடத்தவில்லை தோலின் நிறத்தை அடையாளம் காட்டி உலகம் பாரபட்சம் காட்டினாலும் கடவுள் தனக்குத் தந்த திறமையை பாரபட்சமின்றி பிறர் நலனுக்காக பயன்படுத்திய ஒரு குணத்துக்காகவே ஹமில்டன் நாகி போற்றப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவர்.

ஹமில்டன் நாகியின் வாழ்க்கை வரலாறை படிக்கும்போது சமநீதியில் நம்பிக்கைகொண்ட எந்த வெள்ளை இனத்தவரும் கூனிக்குறுகி போகவும் அதன்மூலம் இதுபோன்ற அநியாங்கள் இனியும் தொடரக்கூடாது என எண்ணித்துணியவும் தயங்கமாட்டார்கள். இது ஒன்றே ஹமில்டன் நாகிக்கு வானம் வசப்பட்டதற்கு சமமாகும். கடவுள் தந்த திறமையை சுயநலமின்றி பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் எவரும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதுதான், வாழும்போது மறக்கப்பட்ட ஆனால் மறைந்த பின்னும் நினைக்கப்படும் ஹமில்டன் நாகியின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மையாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 07:47:36 PM
கெளதம புத்தர் - வரலாற்று நாயகர்
 
செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார். 

(http://1.bp.blogspot.com/-zUry8xM28JY/TdD7uTXobmI/AAAAAAAAAd4/5A0zfUo2ZRc/s1600/buddha.jpg)

தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.

(http://2.bp.blogspot.com/-Ic1uYZ5apU8/TdD7zn1RFwI/AAAAAAAAAd8/ItX232M-t4k/s320/Meditation.jpg)

ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.
நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.


புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார்.

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 07:58:55 PM
நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் (வரலாற்று நாயகர்)
 
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

(http://2.bp.blogspot.com/-t1vWklab8pY/TcdGKkCKVqI/AAAAAAAAAc8/RF5oRfhr6y4/s1600/young_alfred_nobel.jpg)

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார். 

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

(http://2.bp.blogspot.com/-rHofpb97DoQ/TcdGgI7sEvI/AAAAAAAAAdA/7VIYsxfJsbo/s1600/Alfred-Nobel.jpg)

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.

மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

(http://4.bp.blogspot.com/-zeT0uvreGvU/TcdGoHkIUeI/AAAAAAAAAdE/K_Sx3prPczY/s1600/alfred+nobel.jpg)

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

(http://4.bp.blogspot.com/-5VFWQc1o9sY/TcdJ5WDiQ8I/AAAAAAAAAdI/5ayjviBSVq4/s1600/AlfredNobel.jpg)

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை

(http://1.bp.blogspot.com/-RZPmSrbcAIY/TcdKGhktl_I/AAAAAAAAAdM/qSLWTAcg-Ms/s1600/alfred_nobel.jpg)

ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது. 

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு வசப்பட்ட வானம் நமக்கும் வசப்படும், நமது நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தால்..!!i
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 08:11:00 PM
அலெக்ஸாண்டர் ப்ளெமிங் - வரலாற்று நாயகர்
 
நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் மருத்துவமேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த எழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்ககூடும். அவர் வேறு யாருமல்ல பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.

(https://lh6.googleusercontent.com/-pE7esQItrrA/TYSk2mPTi_I/AAAAAAAAAcI/SROjdDk1NDw/s1600/penicillin-man-alexander-fleming-and-the-antibiotic-revolution-13214011.jpeg)

1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் எனும் நகரில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர் ப்ளெமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் ப்ளெமிங் விவசாயத்திலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஓர் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணி புரிந்தார். தமது 20 ஆவது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததால் லண்டனில் செயின் மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 

(https://lh3.googleusercontent.com/-3Le5ebXZ4Qc/TYSjV3eHpeI/AAAAAAAAAb0/3Ak4B-psIYo/s1600/2YOFG00Z.jpg)

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர்தான் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சிபெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளெமிங். தனது பேராசிரியரைப்போலவே தானும் மனுகுலத்துக்கு உதவும் ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆராயத்தொடங்கினார். முதல் உலகப்போரில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கேப்டனாக இருந்தபோது சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது.

அந்தக்கால கட்டத்தில் கார்பாலிக் அமிலந்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளை கொல்லும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அனுக்களையும் சில சமயம் அழித்துவிடுகிறது. முதலாம் உலகப்போரில் சுமார் 7 மில்லியன் வீரர்கள் காயம்பட்டு இறந்தனர். அதன்பிறகுதான் கார்பாலிக் அமிலம் சரியான மருந்து அல்ல என்பதை ப்ளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா? சரியான மருந்தை கண்டுபிடிக்க வேண்டாமா? உலகபோர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ட்சிக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்து வேண்டுமென்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைபற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

(https://lh4.googleusercontent.com/-4GKcEbXvn5I/TYSjv9Mo6wI/AAAAAAAAAb8/yEVEW3IUUIc/s1600/Alexander_Fleming.gif)

எனவே தனக்கு கிருமி தொற்றக்கூடும் என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுவாரம் விடுமுறைக்காக சென்றிருந்தார் ப்ளெமிங். விடுமுறைக்கு செல்லும் முன் அவர் ஓரு ஆய்வுக்கூட வட்டில் ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிம்மோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கிருமி. இரண்டு வாரம் விடுமுறை கழித்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தபோது அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

(https://lh6.googleusercontent.com/-PyVFnWJik-U/TYSjpv3no2I/AAAAAAAAAb4/RwFaBQdb1EM/s1600/fleming+%25281%2529.jpg)

அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது அவருக்கு புரிந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆராய்ட்சிகள் செய்தார் அதன் விளைவாக நமக்கு கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். மனுகுலத்துக்கு உயிர்காக்கும் மாமருந்தை தந்த ப்ளெமிங்கை உலகம் அப்போது பாராட்டவில்லை. இருப்பினும் பெனிசிலின் அருமை உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

(https://lh6.googleusercontent.com/-pE7esQItrrA/TYSk2mPTi_I/AAAAAAAAAcI/SROjdDk1NDw/s1600/penicillin-man-alexander-fleming-and-the-antibiotic-revolution-13214011.jpeg)

அதுவரை தீர்க்கப்படாத முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீரென்று சிகிச்சை அளிக்க முடியும் என்பதை உலகம் கண்டுகொண்டது. பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டு தந்தது பெனிசிலின்தான். மனுகுலத்துக்கு பெனிசிலின் என்ற மாமருந்தை தந்த ப்ளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை அந்த மருந்துக்கு காப்புரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும் அதை அவர் செய்யவில்லை செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகியிருப்பார். இருந்தாலும் அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தந்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

(https://lh5.googleusercontent.com/-mUphHbC6hPc/TYSkIG1YK2I/AAAAAAAAAcA/pIbK7GGjCWw/s1600/fleming.png)

ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. உயிர் விலை மதிக்க முடியாதது என்றால் அந்த உயிரை காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது அல்லவா? அந்த விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11 ந்தேதி லண்டனில் காலமானார். அடுத்தமுறை நீங்கள் ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்ளும்போது ப்ளெமிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். அவர் பொருள் சம்பாதிப்பதற்காக அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை.

(https://lh3.googleusercontent.com/-UwuXSAbJpRc/TYSkttxcLHI/AAAAAAAAAcE/ixnjG6HkL4U/s1600/Sir+Alexander+Fleming%25281881-1955%2529.gif)

உண்மையில் மனுகுலத்திற்கு பயனுள்ள ஒரு பொருளை தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.நோக்கம் உயரியதாக இருந்ததால் ப்ளெமிங்கிற்கு பெனிசிலினும் அதனால் வானமும் வசப்பட்டது. உங்கள் வாழ்க்கையிலும் எண்ணமும் நோக்கம் உயரியதாக இருந்தால் வானம் வசப்படாமலா போகும்..!!
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 08:55:54 PM
ஆர்க்கிமிடிஸ் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)
 
நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது மனநிலையில் இருந்தாலொழிய. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வருணிப்பது சிரமம். 

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறான் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் அந்த விஞ்ஞானி. சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில் யுரேக்கா யுரேக்கா என்று மகிழ்ச்சி கூச்சலிட்டு ஓடினார். யுரேக்கா என்றால் கிரேக்க மொழியில் கண்டுபிடித்துவிட்டேன் என்று பொருள்.

(https://lh4.googleusercontent.com/-1OMxsnjI4DM/TWydkZv6wkI/AAAAAAAAAZ0/6yp9cIBkFrU/s1600/express-submarine-archimedes.gif)

ஞானம் மானத்தைவிட பெரியது என்று நம்பி அவ்வாறு பிறந்த மேனியாக ஓடிய அவர்தான் பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்திபற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ட்சியாளர் குடும்பம் செல்வ செழிப்பில் இருந்தது. தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ட்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

(https://lh5.googleusercontent.com/-9xvj85n6lUc/TWydVuV-wGI/AAAAAAAAAZw/b-u0PwEedNU/s1600/archimedes.jpg)

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னம் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை அளித்து நல்ல கீரீடம் செய்து தருமாறு தன் பொற்கொல்லரை பணித்தார். கிரீடம் வந்ததும் தான் கொடுத்த தங்கத்துக்கு நிகராக அது இருந்ததை கண்டு மகிழ்ந்தார் மன்னர். இருப்பினும் கிரீடத்தில் கலப்படம் ஏதேனும் செய்யபட்டிருக்குமா? என சந்தேகம் மன்னருக்கு எழுந்தது. இந்த பிரச்சினையை ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார் இதைப்பற்றி ஆர்க்கிமிடிஸ் பல நாள் சிந்தித்து கொண்டிருந்த போதுதான் அந்த குளியலறை சம்பவம் நிகழ்ந்தது.

தண்ணீர்த்தொட்டியில் குளிப்பதற்காக அவர் இறங்கியபோது தொட்டி நிறைய இருந்த தண்ணீரில் ஒரு பகுதி வெளியில் வழிந்தது. அது எப்போதுமே நிகழும் ஒன்றுதான் என்றாலும் மன்னரின் கலப்பட பிரச்சினைக்கான தீர்வை அந்த நொடியில் கண்டார் ஆர்க்கிமிடிஸ். அதனால்தான் ஆர்க்கிமிடிஸ் ஆடையின்றி யுரேக்கா என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

(https://lh4.googleusercontent.com/-l3d0wZQm5Jk/TWyeuQS2jqI/AAAAAAAAAaE/LtEXGSWHe5g/s1600/domenico-fetti_archimedes_1620.jpg) (http://www.friendstamilchat.com)

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட On Blotting Bodies என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலாம கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோனங்களையும் வரைந்து ஆராய்ட்சி செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

(https://lh6.googleusercontent.com/-ArTwhRZ4p9Y/TWyeUkcPYII/AAAAAAAAAZ8/ChzIf0sy1-4/s1600/Edouard_Vimont_%25281846-1930%2529_Archimedes_death.jpg) (http://www.friendstamilchat.com)

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார்.   

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர்:

நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்று நான் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுகிறேன்...

(https://lh4.googleusercontent.com/-8OtRXN7SA6I/TWyec_FQ07I/AAAAAAAAAaA/U63NavIL_oA/s1600/images+%25284%2529.jpg)

என்று பதில் சொன்னாராம். எவ்வளவு தைரியம், எவ்வளவு தன்னம்பிக்கை, சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்க்கிமிடிஸின் சுவாசகாற்றாக இருந்தது தன்னம்பிக்கைதான். அதனால்தான் மலையை கூட அசைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

நம்மாலும் முடியும். மலையை அசைக்க முடியாவிட்டாலும் தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும் போராடினால் நாம் விரும்பும் வாழ்க்கையையும் ,வானத்தையும் வசப்படுத்த முடியும். 
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 09:18:49 PM
கல்பனா சாவ்லா - நம்பிக்கையின் மறு உருவம்
 
2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

(https://lh6.googleusercontent.com/-Pc7zWVujgsI/TXL3vRHO61I/AAAAAAAAAbU/1CvrccSyLw4/s1600/chawla_k.jpg)

1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.

(https://lh3.googleusercontent.com/-hqPOxc543Fs/TXL36J9oUtI/AAAAAAAAAbY/mImYS1FhNho/s1600/Kalpanachild_17785+%25281%2529.jpg)

கல்பனா தன் கிராமத்து தெருக்களில் நின்றுகொண்டு ஆகாயத்தை பார்த்து வியப்பார். ஆகாயத்தில் அமைதியை கிழித்துக்கொண்டு போகும் விமானங்களின் பாதையை இமைகொட்டாமல் பார்த்துகொண்டு இருப்பார். தன் சகோதரனின் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் அவரது பார்வை ஆகாயத்தை நோக்கிதான் உயரும். கர்னாவில் உள்ள தாஹூர் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த கல்பனா சண்டிகாரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் பயில விரும்பினார். அந்த துறையில் பயின்ற மற்ற அனைவரும் ஆண்களாக இருந்ததால் முதலில் பெற்றோர்கள் மறுத்தனர்.

(https://lh6.googleusercontent.com/-XVBWQ3V75fM/TXL5znbF79I/AAAAAAAAAbw/i92N2VFJFc8/s1600/kalpana.jpg)

ஆனால் கல்பனாவின் எண்ணத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை. அந்த கல்லூரியில் 1982 ல் இளங்கலை பட்டம் பெற்றார். ஆகாயத்தைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருந்த அவரை அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்ஸஸ் பல்கலைகழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து கொலோராடோ பல்கலை கழகத்தில் அதே பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.  முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தில் சேர்ந்தார். எளிய மொழியில் விளக்குவதற்கு சிரமமான சில ஆராய்ட்சிகளில் ஈடுபட்டார்.

(https://lh4.googleusercontent.com/-zBjQV1OVOCQ/TXL4FUaUw7I/AAAAAAAAAbc/uXdWg88wWDs/s1600/475px-Chawla.jpg)

1993 ல் கல்பனா ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே கல்பனாவின் விண்வெளி கனவு நனவாக தொடங்கியது. விண்வெளி வீரர், வீராங்கனை பயிற்சி பெற விண்ணப்பத்திருந்த சுமார் மூவாயிரம் நபர்களிலிருந்து ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் கல்பனா. ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்கானல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கல்பனா. 

(https://lh3.googleusercontent.com/-mUDDlVN_T3A/TXL4VlwC6sI/AAAAAAAAAbg/LtRWgkNut_4/s1600/chawla_kalpana_1.jpg)

1995 ல் பயிற்சி முடிந்து வின்வெளி வீராங்கனையாக தகுதி பெற்றார். அவரது முதல் வின்வெளி பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ந்தேதி தொடங்கியது. ஆறு வீரர்களுடன் ப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்கு செலுத்தபட்டது கொலம்பியா வான்கலம். அந்த வான்கலத்தின் இயந்திர கரங்களை இயக்கும் முக்கிய பொறுப்பு கல்பனாவுக்கு தரப்பட்டது. 16 நாட்கள் விண்வெளியில் வானத்தையும் நட்சத்திரங்களையும் நலம் விசாரித்த கல்பனா 252 தடவை பூமியை சுற்றியதோடு சுமார் ஆறரை மில்லியன் மைல் தொலைவு பயணம் செய்தார். டிசம்பர் ஐந்தாம் நாள் ஆறு விண்வெளி வீரர்களும் வெற்றியோடு பூமிக்கு திரும்பினர். அன்றைய தினம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் கல்பனா.

(https://lh4.googleusercontent.com/-Foo-SAvD_zM/TXL4n-fW-tI/AAAAAAAAAbk/AXAwXy_KVh4/s1600/srvr.jpg) (http://www.friendstamilchat.com)

முதல் வின்வெளி பயணத்தை முடித்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விண்ணுக்கு செல்ல கல்பனாவுக்கு அழைப்பு வந்தது. முதல் பயணத்தில் அவர்களை பத்திரமாக தரையிறக்கிய அதே கொலம்பியா வான்கலத்தில் 2003 ஆம் ஆண்டு சனவரி 16 ந்தேதி கல்பனா உட்பட ஏழு வீரர்கள் விண்ணுக்கு பாய்ச்சப்பட்டனர். பிப்ரவரி முதல் தேதிவரை அந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 80 அறிவியல் ஆராய்ட்சிகளை அவர்கள் நடத்தினர். அந்த பதினாறு நாள் பயணத்தை முடித்துகொண்டு வெற்றிக்கரமாக தரையிறங்க பதினாறு நிமிடங்கள் இருந்தபோது கொலம்பியா வான்கலம் விண்ணில் வெடித்து சிதறியது. கல்பனா என்ற நம்பிக்கை பூ 41 வயதில் உதிர்ந்தது.

(https://lh6.googleusercontent.com/-RsJwdGrPVB0/TXL4vPfn6LI/AAAAAAAAAbo/PsU6f-h9uvY/s1600/hqdefault.jpg)

கொலம்பியா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில் உங்களுக்கு ஊக்கமூட்டியவர்கள் அல்லது ஊக்கமூட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார்:

முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம் கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம், அவர்களின் பொறுமையைப் பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும்.

கல்பனாவின் விண்வெளி வெற்றியால் இன்று பலர் விண்வெளி கனவுகளை சுமந்துகொண்டு இருக்கின்றனர் இதுதான் கல்பனா இந்த உலகத்திற்கு விட்டு சென்ற சொத்து. அடக்கம் செய்யக்கூட அவரது உடல் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அவரது ஆத்மா அவருக்கு விருப்பமான அந்த விண்வெளியில்தான் உலா வந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு சாதாரன பள்ளியில் படித்தும் பலர் வியக்கும்படி தன் கனவுகளை வாழ்ந்து காட்டினார் கல்பனா. இன்றைய மாணவர்களும் சிறந்த கல்வியோடு தன் கனவுகளை நோக்கி பயணித்தால் கல்பனாவைப் போன்று சாதிக்க முடியாதா?   

(https://lh3.googleusercontent.com/-89w-dxuvirs/TXL5lJg0QNI/AAAAAAAAAbs/AGIaZUR2Yqg/s1600/iapoy6.jpg)

வானத்தை கனவு கண்ட கல்பனா சாவ்லா அந்த வானத்தையே வசமாக்கிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. நாம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா. கனவோடு கலந்த உழைப்பும் முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணுக்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தது. கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கனவுகளை கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு தேவையான உழைப்பை விடா முயற்சியோடும் முழுமனதோடும் கொண்டு செயல்படும் எவருக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 09:39:37 PM
SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்)
 
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

(http://3.bp.blogspot.com/-t3190Ai3h3M/TWYXyZvazQI/AAAAAAAAAZA/DPSRDa3n3No/s1600/morita.jpg)

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.

(http://3.bp.blogspot.com/-n4mir8JAkSg/TWYYJkApCvI/AAAAAAAAAZE/w4nP0qc4ubI/s1600/SonyLogo1.jpg)

இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.

(http://3.bp.blogspot.com/-262_rrIAK5M/TWYYmg2HtZI/AAAAAAAAAZM/ELyEExE2Q4s/s1600/walkman_sony_tps_l2_phonografic_525.jpg)

அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.     

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.   

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.   

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான். 

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.

(http://1.bp.blogspot.com/-embnc-FIob0/TWYYaPTOaSI/AAAAAAAAAZI/LjekFsMYIIE/s1600/Made+In+Japan+-+Cover.jpg)

1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. எதையுமே ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் செய்ததால்தான் அக்யோ மொரிட்டாவுக்கு அந்த வானம் வசப்பட்டது.

மொரிட்டாவைப்போல நாமும் ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி தொலைநோக்கு ஆகியவற்றை காட்டினால் எந்த வானமும் நிச்சயம் நமக்கும் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 26, 2013, 09:48:11 PM
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)
 
இன்று நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் உலகின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

(http://2.bp.blogspot.com/-4-pgsx9xDHE/TWCRE4Mt_SI/AAAAAAAAAYY/l632pu0jufo/s1600/480px-Einstein_1921_portrait2.jpg)

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னாமானது ஹிரோஸிமா, மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாக கிழிந்தது நாகசாகி. ஆயிரம் ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியான அந்த செய்திகேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்து சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது.

(http://3.bp.blogspot.com/-UWGnl8NoiQI/TWCRoZD4wkI/AAAAAAAAAYg/r3WW_5RGhKY/s1600/images+%25281%2529.jpg)

அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என நம்பிய அவர்தான் 20 ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்ததில் பிறந்தார் ஐன்ஸ்டீன் அவர் பிறப்பிலேயே ஓர் மேதை இல்லை உண்மையில் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் சராசரி மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டீனுக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்தபோது வயது 4 ஒருமுறை அவருக்கு காம்பஸ் எனப்படும் திசைகாட்டி கருவியை பரிசாக தந்தார் அவரது தந்தை. அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே கால்க்ளஸ் என்ற கணித கூறை கற்றுகொண்டார் ஐன்ஸ்டீன். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார். அவரது கேள்விகளுக்கு பதில் தர முடியாம ஆசிரியர் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என அஞ்சியதாகவும் ஒரு வரலாற்றுகுறிப்பு கூறுகிறது. சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோலிவி அடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஐன்ஸ்டீனை சேர்த்துகொண்டது அந்த பலதுறை தொழிற்கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சிபெற்றதும் சுவிஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டீன். அவருக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாக பல ஆராய்ட்சிகளை செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுத தொடங்கினார்.

1905 ஆம் ஆண்டு ஸூரிக் பல்கலைகழகத்தில் ஐன்ஸ்டீனுக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்கு புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப்பர்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு அந்த கோட்பாடு மூலம் அவர் உலகுக்கு தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான்:

(http://4.bp.blogspot.com/-kJf1rUp6tAA/TV97E1b7d-I/AAAAAAAAAYQ/Y2vPXbOPgRo/s1600/matter-and-energy-Physics-e%253Dmc2.jpg)

விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பை செய்தபோது ஐன்ஸ்டீனுக்கு வயது 26 தான்.

1921 ஆம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட் என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்துகொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

1939 ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் சேர்ந்து அமெரிக்கா அதிபர் ரூஸ்வெல்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்ஸ்டீன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டை தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகு விரைவில் அணுகுண்டு தயாரிக்ககூடும் என்றும் கடிதத்தில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டீன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.

அதன்விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றை ஒருகனம் இருட்டடிப்பு செய்த நாகசாகி ஹிரோஸிமா சம்பவம். E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்த தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டீனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கருப்பு புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டீனின் கோட்பாட்டால் பல நன்மைகளை பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நீயூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபிலில் பழை ஏற்பாடு என்றால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் பைபிலின் புதிய ஏற்பாடு என ஒரு ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும்படி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதிவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். சுவிட்சர்லாந்தில் படிக்கும்போது மிலவா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இரு குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் மணமுறிவு ஏற்படவே எல்ஸா என்ற உறவு பெண்ணை மணந்து கொண்டார். எல்ஸா சிறிது காலத்திலேயே இறந்துவிட சுமார் 20 ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டீன். 

அணுகுண்டு தயாரிப்பதற்கு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுதான் என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டீன். உலக அமைதிக்காக குரல் கொடுத்த அவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். நவீன அறிவியல் ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாக சிந்திக்ககூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன். 

(http://1.bp.blogspot.com/-iWhwel-8WFk/TWCSeMDEUeI/AAAAAAAAAYk/IOS96uhukzY/s1600/images+%25283%2529.jpg)

ஐன்ஸ்டீனுக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஆழமான சிந்தனை, மற்றொன்று அறியப்படாதவற்றை பற்றிய அளவிட முடியாத தாகம்.  அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 29, 2013, 07:10:46 PM
ஆபிரகாம் லிங்கன் - வரலாற்று நாயகர்!
 
கடந்த இரு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிகம் பலம் வாய்ந்த நபர் யாரென்று கேட்டால் பெரும்பாலோனோர் அந்தந்த காலகட்டத்தின் அமெரிக்க அதிபர்களை குறிப்பிடுவர். ராணுவ பலமும், பொருளியல் வளமும் அமெரிக்க அதிபர்களுக்கு அப்படி ஓர் தகுதியை பெற்றுத் தந்திருக்கின்றன. உலகம் இதுவரை கண்டிருக்கும் 43 அமெரிக்க அதிபர்களும் வெவ்வேறு விதங்களில் தங்கள் முத்திரையை பதித்திருந்தாலும் அவர்களுள் ஒரு சிலர்தான் உலகுக்கு தேவைப்பட்ட முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தனர். மனுகுலத்துக்கு மகிமையைத் தேடிதந்தனர் அவர்களுள் தலையாயவர் ஆபிரகாம் லிங்கன்.

(http://1.bp.blogspot.com/-5gL6H4w6tZA/TVpu41S_l1I/AAAAAAAAAX4/EMvkvnDeAqU/s1600/images.jpg)

1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நேன்ஸி ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது காலமானார், குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அவர் நீல் ஆல்ன்ஸில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் கருப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புகம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாக கொடுமை படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். அந்தக்கனமே அடிமைத்தனத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்து பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து தபால்காரார் ஆனார் அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1834 ஆம் ஆண்டு தமது 25-ஆவது வயதில் (Illinois) இலினோய் மாநில சட்டமன்ற பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1833 ல் ஆண்ட் ரூட்லெஸ் என்ற பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்பட்டு இறந்தார்.

7 ஆண்டுகள் கழித்து லிங்கன் மறுமணம் செய்துகொண்டார். 1834 ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் இலினோய் சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார் லிங்கன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் அவர் தனியார் துறையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1854-ஆம் ஆண்டு லிங்கனை அரசியல் மீண்டும் அழைத்தது. குடிப்பழக்கம் புகைப்பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார்.

1859 ஆம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடாது? என நண்பர் ஒருவரு கேட்டபோது, அந்த தகுதி எனக்கு கிடையாது என்று பணிவாக பதில் கூறினாராம் லிங்கன். ஆனால் அப்படி கூறியவர் அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவின் 16-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 வயதில் தாம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டதாக அப்போது அவர் எண்ணியிருக்ககூடும். ஏனெனில் பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862-ஆம் ஆண்டு அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர் அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம்பிடித்தன. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தலையை அறுத்தெரியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.

நான்கு ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. ஜனவரி 1865 ல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன். இரண்டாவது முறையும் முழுமையாக லிங்கன் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா மேலும் அமைதிபெற்றிருக்கும் உலகம் மேலும் உய்வு கண்டிருக்கும்.

ஆனால் வரலாற்றின் நோக்கம் வேறாக இருந்தது. இரண்டாவது முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே ஆண்டு அதாவது 1865-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் நாள் பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் அவர் 'அமெரிக்கன் கஸன்' என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது அப்போது அவருக்கு வயது 56 தான்.

(http://1.bp.blogspot.com/-nb5252p-uns/TVpvDehLUbI/AAAAAAAAAX8/i0Au5_TaHvI/s1600/Abraham-Lincoln-Shooting.jpg)

மனுகுல நாகரிகத்திற்கு முரன்பாடான அடிமைத்தலையை அகற்றுவதில் ஆபிரகாம் லிங்கன் என்ற தனி ஒரு மனிதனின் பங்கு அளவிட முடியாதது. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்துவிட்டு போவோம் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்போம் என்று லிங்கன் நினைத்திருந்தால் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்க முடியாது. கருப்பினத்தவருக்கு சுதந்திரத்தையும் சுய மரியாதையும் பெற்று தந்திருக்க முடியாது. இன்று அமெரிக்கா ஒரு சுதந்திர தேசம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் ஆபிரகாம் லிங்கன்.

நாம் வாழும் உலகில் நம்மாளும் மாற்றங்களை கொண்டு வர முடியும் அதற்கு தேவைப்படுவதெல்லாம் சிந்தனையில் தெளிவும் செயலில் துணிவும்தான். இவை இரண்டும் இருந்தால் ஆபிரகாம் லிங்கனைப்போலவே நமக்கும் அந்த வானம் வசப்படும்.

"ஆபிரகாம் லிங்கனின்" ஒரு வாரம்

ஆபிரகாம் லிங்கன் பிறந்தது - ஞாயிறு

முதல் முறையாக அமெரிக்க ஜெனாதிபதி ஆனது - திங்கள்

இரண்டாவது முறையாக ஜெனாதிபதி ஆனது - செவ்வாய்

வழக்கறிஞராக தம்மை பதிவு செய்து கொண்டது - புதன்

பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது - வியாழன்

லிங்கன் சுடப்பட்டது - வெள்ளி

லிங்கன் உயிர் நீத்தது - சனி
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 29, 2013, 07:43:45 PM
தாமஸ் ஆல்வா எடிசன் - வரலாற்று நாயகர்!
 
(http://4.bp.blogspot.com/-1FYYzISK9oc/TVTXWI3LMeI/AAAAAAAAAWo/sGCEhreC6A4/s1600/1206070193.jpg) (http://www.friendstamilchat.com)

அதாவது மதிநுட்பம் என்பது 1 விழுக்காடு ஊக்கம் 99 விழுக்காடு வியர்வை என்ற புகழ்பெற்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் வேறு யாருமல்ல அந்த பொன்மொழியை கூறியவரும் வாழ்ந்துகாட்டியவருமான ஈடு இனையற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன்.


ஓர் ஏழை அமெரிக்க குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ந்தேதி பிறந்தார் எடிசன். பள்ளியில் அவர் மந்தமாக இருந்த்தால் படிப்பு ஏறவில்லை ஆனால் இயற்கையிலேயே எதைப் பார்த்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்பதோடு ஆராய்ச்சி செய்து பார்க்கும் துறுதுறுப்பு அவரிடம் இருந்தது.

(http://4.bp.blogspot.com/-FDI7miKTYOk/TVTXlo_JkkI/AAAAAAAAAWs/nM7CI9wwd0E/s1600/taeyoung.jpg)

ஒருமுறை கோழி அடைகாத்து குஞ்சு பொறிப்பதை பார்த்து தானும் முட்டைகள் மேல் அமர்ந்து குஞ்சு பிறக்குமா? என்று முயன்று பார்த்திருக்கிறார் எடிசன். நமக்கு நகைப்பாக இருக்கலாம். ஆனால் பிஞ்சு வயதிலேயே கேள்வி கேட்கும் அவரின் செயல்பாடுகள்தான் பிற்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த அவருக்கு உதவியது.


ஆரம்பித்திலேயே எடிசன் பள்ளியைவிட்டு வெளியேறியதால் அவர் இரயில் வண்டியில் செய்த்தித்தாள் விற்கும் வேலை பார்க்கத்தொடங்கினார். அங்கும்கூட அவர் ஒரு ரயில்பெட்டியில் ஒரு சிறு அச்சு இயந்திரத்தை வைத்து தானே செய்தித்தாள்களை தயாரிக்கத் தொடங்கினார். மேலும் இரயில் வண்டியின் ஒரு சிறிய ஆராய்ட்சி கூடத்தை உருவாக்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெவ்வேறு ஆராய்ட்சிகளை செய்துபார்ப்பார்.

(http://4.bp.blogspot.com/-Mq8CoAfvoqw/TVTX3ov2dOI/AAAAAAAAAWw/QkrtyTiJ0e8/s1600/SuperStock_1746-2529.jpg)

ஒருமுறை இரயில் குலுங்கி நின்றபோது அவரது ஆய்வுகூட்த்தில் இருந்த பாஸ்பரஸ் கீழே கொட்டி இரயில்பெட்டி தீப்பிடித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இரயில் அதிகாரி எடிசனின் அச்சு இயந்திரத்தையும், ஆய்வுகூடப் பொருட்களையும் வீசி எறிந்ததோடு, எடிசனின் கன்னத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தார். அந்த அடியின் தாக்கத்தால் எடிசனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருபக்கம் காதுகேளாமல் போனது என்பது வரலாற்று உண்மை.


அந்த அதிகாரியால் எடிசனின் உடலில் மட்டும்தான் காயம் விளைவிக்க முடிந்ததே தவிர அவரின் உள்ளத்தையும் வைராக்கியத்தையும் துளிகூட அசைக்க முடியவில்லை. அந்த விபத்து நிகழ்ந்த அதே இரயில் நிலையத்தில் ஒரு சிறுவன் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு ரயில்வண்டி விரைவதைக்கண்ட எடிசன் தான் கையிலிருந்த செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிட்டு ஓடிப்போய் தகுந்த நேரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்றினார்.


அந்த ரயில் நிலையத்தின் தலைமை அதிகாரியான அச்சிறுவனின் தந்தை மகிழ்ந்துபோய் எடிசனுக்கு நன்றி சொன்னதோடு அவருக்கு தந்தி அனுப்பும் முறையை கற்றுக்கொடுத்தார். அதனை விரைவாக கற்றுக்கொண்ட எடிசன் தந்தி அனுப்பும் வேலைக்கு மாறினார். அந்த வேலையில் சேர்ந்தபிறகுதான் அவர் ஒவ்வொரு கண்டுபிடிப்பாக நிகழ்த்த தொடங்கினார்.


உதாரணத்திற்கு இரவு நேரங்களில் இரயில் அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் சமிக்ஞை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்த்து. அதனை ஏன் தானியக்க மயமாக்ககூடாது என்று சிந்தித்த எடிசன் அந்த முறையை கண்டுபிடித்தார். பின்னர் ஒரு முறை ரயில் நிலையத்தில் இருந்தபோது அங்கு எலித்தொல்லை அதிகமாய் இருப்பதை பார்த்தார். உடனே எலிகளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார். இப்படி பார்வையில் பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் தீர்வு காணத்தொடங்கினார்.


1876 ல் அவர் மெட்னோ பார்க்கில் புகழ்பெற்ற தனது ஆராய்ட்சிகூடத்தை அமைத்தார். அந்த ஆராய்ட்சிகூடத்தில்தான் உலகம் போற்றும் பல கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தினார். அலெக்ஸாண்டர் கிரகம்பெல் உருவாக்கிய தொலைபேசியை காவர் டிரான்ஸ்மிட்டர் என்ற பாகத்தை கண்டுபிடித்தன் மூலம் எடிசன்தான் செம்மைப் படுத்தினார். அதன்பிறகு ஃபோனோகிராப் என்ற குரல் பதிவு கருவியை கண்டுபிடித்து அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தினார் எடிசன்.

(http://4.bp.blogspot.com/-JndZs8BMk7E/TVTYKekceFI/AAAAAAAAAW0/DsDCbC-ZgsY/s1600/small_thomas-a-edison.jpg)

எடிசனின் கண்டுபிடிப்பிகளிலேயே ஃபோனோகிராப்தான் ஆக பிரசித்திப்பெற்றதாக கருதப்படுகிறது. ஒலிக்கான சாதனத்தை உருவாக்கியபிறகு அவரது கவணம் ஒளியின் பக்கம் திரும்பியது. மின்விளக்குகளைப்பற்றி ஆராயத் தொடங்கினார் ஒரே மின்னலையில் பல விளக்குகளை ஒளிரச் செய்ய முடியுமா? என எடிசன் சிந்தித்தார். நிச்சயம் முடியாது என்று அடித்துக்கூறினர் சமகால விஞ்ஞானிகள்.   


ஆனால் முடியாது என்ற சொல்லையே தனது அகராதியிலிருந்து அகற்றியிருந்த எடிசனுக்கு அது தீர்க்ககூடிய சவாலாகவேபட்டது. அவரும் அவரது 50 உதவியாளர்களும் பணியில் இறங்கினர். எடிசனுக்கு தேவைப்பட்டது மின்சக்தியின் தாக்கத்தை தாங்ககூடிய அதே நேரத்தில் சுற்றளவு குறைவாக உள்ள ஒளிரும் ஒரு பொருள் அதாவது விளக்குகளின் உட்பகுதியில் உள்ள ஃபிளமெண்ட். பல்வேறு கனிமங்களை கொண்டு கிட்டதட்ட 1500 சோதனைகளை செய்துபார்த்தார் எடிசன்.

(http://2.bp.blogspot.com/-oYXlQ4DRBms/TVTYfrXVELI/AAAAAAAAAW4/h2rzKDMoGVE/s1600/Z7RND00Z.jpg)

அதன்மூலம் மின் விளக்குகளைப்பற்றி ஒன்றல்ல இரண்டல்ல சுமார் மூவாயிரம் கோட்பாடுகளை வகுத்தார். அவற்றுள் ஒரே ஒரு கோட்பாடுதான் அவர் தேடிய விடையைத் தரக்கூடியாதாக இருந்த்து. ஒரு நூலிழையில் கார்பன் சேர்த்து ஐந்து மணிநேரம் தீயில் சூடுகாட்டி பின்னர் குளிரவைத்தார். அந்த கார்பன் இழையை காற்று அடைப்பட்ட ஒரு கண்ணாடிக்குள் வைத்து அதனுள் மின்சாரம் பாய்ச்சிபார்ப்பதுதான் எடிசனின் நோக்கம்.


அந்த கார்பன் இழை மிகவும் மெல்லியதாக இருந்ததால் பலமுறை ஒடிந்துபோனது. ஆனால் ஒடியவில்லை எடிசனின் தன்னம்பிக்கை. பலமுறை முயன்று கடைசியாக அந்த கார்பன் இழையை ஒடியாமல் கண்ணாடிக்குள் வைத்து மின் விசையை அழுத்தினார். மின் விளக்கு எறிந்தது. சமகால விஞ்ஞானிகளின் கூற்று சரிந்தது. எடிசனின் அதீத திறமை உலகுக்கு புரிந்தது.

(http://4.bp.blogspot.com/-6qWBgxsbcOs/TVTYyAjC3hI/AAAAAAAAAW8/Zt3PzTIKNTc/s1600/9780394848839.jpg)

நமக்கு மின்ஒளி கிடைத்த அந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் 1879 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள்.அதன்பிறகு டைனோமோ, பல்வேறு அளக்கும் கருவிகள், சினிமா கேமராவின் முன்னோடியான கெனோட்டோகிராப், எக்ஸ்ரே படங்களை பார்க்க உதவும் கருவிகள் என அவரது கண்டுபிடிப்புகள் தொய்வின்றி தொடர்ந்தன. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ந்தேதி 86 ஆவது வயதில் அவரது உயிர் பிரிந்தது, அதுவரை ஆராய்ட்ச்சியும் கண்டுபிடிப்புமே அவரது உயிர் மூச்சாக இருந்தன.

தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? 1300 சரித்திரத்தில் வேறு எந்த கண்டுபிடிப்பாளரும் கிட்டகூட நெருங்க முடியாத எண்ணிக்கை அது. அதனால்தான் அவரை கண்டுபிடிப்புகளின் தந்தை என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.

எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை செய்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாரக மந்திரம் என்ன தெரியுமா? அதனை அவரே ஒரு முறை கூறினார் இவ்வாறு:

“வாழ்க்கைய அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன் ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்”
அந்த உயரிய நல்ல நோக்கத்தின் அளவிடமுடியாத பலன்களை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.அடுத்த முறை நீங்கள் மின்விளக்கு விசையை அழுத்தும்போது எடிசனுக்கு நன்றி சொல்லுங்கள்! ஏனெனில் நீங்கள் அந்த மின் விசையை அழுத்தும்போது உங்களை சுற்றியுள்ள இருளை போக்குவதும் ஒளியை தருவதும் அன்று எடிசன் சிந்திய வியர்வைதான்.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TVTZJYQduAI/AAAAAAAAAXA/qHGLiQAZikI/s1600/young-old-thomas-alva-edison.jpg)

எடிசன் செய்து காட்டியதுபோல 1 விழுக்காடு ஊக்கத்தை முதலீடு செய்து 99 விழுக்காடு வியர்வையை சிந்த நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on March 29, 2013, 08:21:17 PM
தத்துவஞானி அரிஸ்டாடில் - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே!!
 
(http://2.bp.blogspot.com/_JPDD9o7XquM/TVAa3MTIxoI/AAAAAAAAAWU/pdCJz8k-_so/s320/aristotle_stone.jpg)

உலக தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியானது கிரேக்க தத்துவம் அதனை முதலில் உலகுக்கு தந்தவர் சாக்ரடீஸ். அவரை தொடர்ந்து இருவர் தத்துவ உலகிற்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கின்றனர்.  ஒருவர் சாக்ரடீஸின் மாணவர் பிளேட்டோ, மற்றவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாடில். இந்த மூவரையும்தான் கிரேக்க தத்துவ உலகின் மும்மூர்த்திகள் என்று வருணிக்கிறது வரலாறு.

தத்துவ மேதை அரிஸ்டாடிலைப் பற்றி தெரிந்துகொள்வோம் கி.மு 384-ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்டஹிரா என்ற நகரில் பிறந்தவர் அரிஸ்டாடில் அவரது தந்தையும் நன்கு தேர்ந்த மருத்துவருமான நிக்கோ மாக்கஸ் மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸ்க்கு அரச மருத்துவராக செயல்பட்டவர். அந்த தொடர்பு அரிஸ்டாடிலின் வாழ்க்கையில் பெரும் பங்காற்றியது. தனது தந்தையிடமிருந்து உயிரியல் சம்பந்தபட்ட விசயங்களை கற்றுகொண்ட அரிஸ்டாடில் தனது 17-ஆவது வயதில் பிளேட்டோ அகாடமியில் சேர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பிளேட்டோவிடம் பாடம் கற்ற அரிஸ்டாடில் குருவை மிஞ்சும் மாணவனாக இருந்தார். அவரது அறிவுக்கூர்மையை பார்த்து வியந்த பிளேட்டோ அரிஸ்டாடிலை தனது பள்ளியின் அறிவுகளஞ்சியம் என்று போற்றி மகிழ்ந்தார். அரிஸ்டாடிலின் அறிவுத்திறனை அறிந்த மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அழைப்பு விடுத்தார். அந்த மகன் வேறு யாருமல்ல.. கைப்பற்றுவதற்கு இனி தேசங்களே இல்லையே என கலங்கினான் என வரலாறு வருணிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டர்தான்.

அலெக்ஸாண்டரும் வேறு சில முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகளும் அரிஸ்டாடிலிடம் வாழ்க்கைப்பாடங்களை கற்றுகொண்டனர். மாவீரன் அலெக்ஸாண்டர் ஒவ்வொரு தேசமாக கைப்பற்றியபோது அவற்றின் மன்னர்களையும் வீரர்களையும் நல்முறையில் நடத்தியதற்கு அரிஸ்டாடிலின் போதனைகள் முக்கிய காரணமாகும்.

மன்னன் பிலிப்ஸின் மறைவிற்கு பிறகு அலெக்ஸாண்டர் அரியனை ஏரியதும் ஏதென்ஸுக்கு திரும்பிய அரிஸ்டாடில் அங்கு தனது சொந்த பள்ளியை நிறுவினார். அப்போது அவருக்கு வயது 50. தத்துவங்களை போதித்த அந்த பள்ளி லைஸியம் அகாடமி என்று அழைக்கப்பட்டது. தன் வாழ்நாளில் கிட்டதட்ட 400 புத்தகங்கள் எழுதினார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலனவற்றை படித்து மகிழும் பாக்கியம் நமக்கு இல்லை. அரிஸ்டாடில் விட்டுவைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்கு விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிந்தித்தார். அந்த துறைகள் அதுவரை கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகபடுத்தினார்.

அரிஸ்டாடிலை சிந்தனையாளர், அறிவுஜீவி, விஞ்ஞானி என்றெல்லாம் உலகம் போற்றியது. 'மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை' என்று வருணிக்கிறது வரலாறு. மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்ததும் அரிஸ்டாடில் மீது சந்தேகம் கொள்ள தொடங்கினர் கிரேக்க மக்கள் சாக்ரடீஸ்க்கு நேர்ந்த கதியே தனக்கும் ஏற்படும் என்று அஞ்சிய அரிஸ்டாடில் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஜால்ஸிஸ் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தார். சுமார் ஓராண்டு கழித்து அங்கேயே அவர் வயிற்றுக்கோளாறு காரணமாக கி.மு 322 ஆம் ஆண்டு தமது 62-ஆவது வயதில் காலமானார்.   

“தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கிறார்கள், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்”

 “ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்புகொள்ள முடியாது”

“கடவுளைப்போல பிறர் குற்றங்களை பலமுறை மன்னிக்க பழக வேண்டும்”

இவை அரிஸ்டாடில் என்ற தத்துவமேதையின் சில சிந்தனைகள், அரிஸ்டாடில் வாழ்ந்து 2000 ஆண்டுகளுக்குமேல் ஓடி மறைந்திருந்தாலும் அந்த தத்துவமேதையின் சிந்தனைகள் இன்றைய நவீன உலக்குக்கும் பொருந்துவனவாக உள்ளன. தன் வாழ்க்கை முழுவதையும் கற்பதிலும் கற்பிப்பதிலும் செலவிட்டார் அந்த தத்துவ மேதை. 

அரிஸ்டாடில் போன்றவர்கள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உதிக்கின்றனர். அதனால் அவருக்கு அந்த தத்துவம் எனும் வானம் வசப்பட்டதில் ஆச்சரியமில்லைதான். ஆனால் அப்படிபட்ட மாமேதைகூட வாழ்நாள் முழுவதும் தான் கற்பதை கைவிடவில்லை.

அரிஸ்டாடிலைபோல நாமும் வாழ்நாள் கல்வியை நம் தாரக மந்திரமாக ஆக்கிகொண்டால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டுதான் ஆக வேண்டும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 06:36:28 PM
மாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே
 
(http://4.bp.blogspot.com/_JPDD9o7XquM/TTj0ztqOBxI/AAAAAAAAARg/iS0GHTwgrl0/s1600/BEL_ALEXANDER_THE_GREAT.GIF)

மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு:

இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்
வீரமும் விவேகமும் இவன் ஆயுதம்
கம்பீரமும் அழகும் இவன் சக்தி
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க
வைத்த கிரேக்கப்புயல்!
உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில்
உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த
ஓர் இரும்புப்பறவை!
ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன்
எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர்


கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு  மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம்.

பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா? என்று கேட்டார், இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.

அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார் அலெக்ஸாண்டர். நீதிபதிகளுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.

அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.

(http://2.bp.blogspot.com/_JPDD9o7XquM/TTj0tWC7xLI/AAAAAAAAARc/LTQ1J8S_W7o/s1600/alexander-the-great-1.jpg)

மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ்  அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது.

உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய சிந்தனைச் செப்புகளுள் ஒருவரான அரிஸ்டாடிலை தனது 13 ஆவது வயதில் ஆசிரியராக பெற்றார் அலெக்ஸாண்டர்.  என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க, அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர்.

ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதை கவணித்த அரிஸ்டாடில் நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார். கி.மு 336-ஆம் ஆண்டு மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20-ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல் நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவணம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

(http://4.bp.blogspot.com/_JPDD9o7XquM/TTj0lWWsfYI/AAAAAAAAARY/uFTC3_GmgeI/s1600/alexander-the-great.jpg)

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாசிடோனியாவின்  பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர். இந்த கால கட்டத்தில்தான் அவரின் வெற்றிகளுக்கெல்லாம் உறுதுனையாக இருந்த ஃபுஸிபேலஸ் குதிரை இறந்து போனது. அந்த துக்கத்தில் ஒருவாரம் உணவே இல்லாமல் அலெக்ஸாண்டர் துவண்டு கிடந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. அதன் பின்னரும் சில வெற்றிகளை குவித்தார் அலெக்ஸாண்டர்.

5 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட களைப்பிலும் 12 ஆயிரம் மைல்கள் கடந்து வந்த சோர்விலும் அடுத்து ஒரு படி அடியெடுத்து வைக்கமாட்டோம் என்றனர் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள். தன் படையின் பலமே தனது பலம் என்பதை உணர்ந்த அலெக்ஸாண்டர் தனது இலக்குகளை சுருக்கிகொண்டு பாபிலோன் நகர் திரும்புமாறு தனது படைக்கு உத்தரவிட்டார்.  பாபிலோன் திரும்பிய சில நாட்களில் ஒரு மாபெரும் விருந்தில் கலந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அந்த விருந்து நடந்த மூன்றாம் நாள் அதாவது கி.மு 323-ஆம் ஆண்டு ஜூன் 10 ந்தேதி தனது 33-ஆவது வயதில் காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர். விருந்தில் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின. அவர் உண்மையிலேயே விஷத்தால்தான் மாண்டாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற முடியவில்லை.

இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து  அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும், மன்னர்களையும், வீரர்களையும் கன்னியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.

உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை 'அலெக்ஸாண்டர் தி கிரெட்' என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது, விவேகம் புகழை தந்தது. வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால்தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.

(http://4.bp.blogspot.com/_JPDD9o7XquM/TTj0at2kAkI/AAAAAAAAARU/pgoD_wkKg-8/s1600/Alexander_The_Great.jpg)

அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும், கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 06:49:24 PM
சுவாமி விவேகானந்தர்-(வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே
 
(http://1.bp.blogspot.com/_JPDD9o7XquM/TSxy_TR7alI/AAAAAAAAAQ0/pBp20net364/s1600/488.jpg)

1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர்.

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார்.  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார். நரேந்திர நாதர் அவ்வாறு தியானத்தில் இருக்கும்போது சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி, லக்னோ, ஆக்ரா. பிருந்தாவனம், ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது , எங்கு உறங்குவது என தெரியாமல்கூட கடுமையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TSxxA7EXu3I/AAAAAAAAAQs/pulBJQovM5w/s1600/vivekananda.jpg)

அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது அந்தக்கால கட்டத்தில் இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும், சொற்பொழிவையும் கேட்டு அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார், கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே! நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் சேர்ந்த குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயது இளம்பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 வயது இருக்கும். நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார். சுவாமி விவேகானந்தரின் அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண். தன் கண் காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் சுவாமி விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு இராமேஸ்வரம் திரும்பினார் சுவாமி விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு, ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர் சுவாமி விவேகானந்தர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு, பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் "இராமகிருஷ்ண மிஷன்" என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா ?உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா? தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும். உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் சில:-

உன் லட்சியத்தை அடைய ஓராயிரம் முறை முயற்சி செய்!ஆயிரம் முறை தோல்வி வந்தாலும் ,மீண்டும் ஒரு முறைமுயற்சி செய்!
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே சிறந்தது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று அஞ்சி கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உனக்கு முன்னால் உள்ள எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அர்த்தம்.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TSxxG0L1pVI/AAAAAAAAAQw/bZf8uJ5BR5o/s1600/swami.jpg)

39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் விவேகானந்தர் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஓர் உதாரணமான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றிருக்கிறார். சுவாமி கூறியதுபோல் உடல்வலிமை, மனவலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர்கல்வி ஆகியவற்றில் சில பண்புகளை நாம் கடைபிடித்தால்கூட நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 07:03:47 PM
அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - (வரலாற்று மாந்தர்)
 
இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.

(http://4.bp.blogspot.com/_JPDD9o7XquM/TRXcok5XPLI/AAAAAAAAAPU/Nhl8Mka8IRU/s1600/mother_teresa_love.jpg)

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.

அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.

(http://1.bp.blogspot.com/_JPDD9o7XquM/TRXd5CWQK8I/AAAAAAAAAPc/U6SI9NoilUM/s1600/motherteresa.jpg)

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.

(http://1.bp.blogspot.com/_JPDD9o7XquM/TRXdwFMLZ4I/AAAAAAAAAPY/qqcpGWiZ8hE/s1600/mother+teresa+sick+%2526+dying.jpg)

1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு  தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.

1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி  அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....

"சாக்கடையோரச் சந்ததிக்கும்
சாமரம் வீசிய பூமரம்"


என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TRXerAEYuUI/AAAAAAAAAPg/ZwlJPVOs_uE/s1600/mother_teresa_20070820.jpg)

நாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 07:20:18 PM
மகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்!
 
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா!

நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!

நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்!

வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருனைக் கொள்!


இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். 'வரகவி' என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் 'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

(http://1.bp.blogspot.com/_JPDD9o7XquM/TQXFH8dZu6I/AAAAAAAAAN0/3AC1eipxynY/s1600/bha.jpg)

1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர். சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார். 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது.

7-ஆவது வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவிபாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும், கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று கல்வி பயின்றார் பாரதி. படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார் நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார் அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார் அப்போது பாரதிக்கு வயது பதினாறு. தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார். ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம், பெங்காலி, ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி. தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூநூலை அறுத்தெரிந்தார்.

நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராக பணியாற்றினார். 1903 ஆம் ஆண்டு 21-ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார் 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TQXEwY9-Y3I/AAAAAAAAANw/VsCU06UPRqM/s1600/CDNF147534.jpg)

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907-ஆம் ஆண்டில் 'இந்தியா' என்ற வார ஏட்டையும் 'பாலபாரதம்' என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவணம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது. சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவணம் பாரதி பக்கம் திரும்பியது பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைகளை எழுதினார். அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார்.

பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. 1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேரினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TQXFSoDyxgI/AAAAAAAAAN4/SVJQ0_8TDbM/s1600/bharathiar4.jpg)

பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார் அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும், பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது. வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு. “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர், ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி.

இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி. ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவில்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது. அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39-ஆவது வயதில் காலமானார் பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை 'கவிராஜன் கதை' என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர் அதனைப் குறிப்பிடும்போது:

"இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகாகவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ! அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!"

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம், பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காகப் பாடினார் பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார் அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன. அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும்,தமிழனும் வளம் பெற்றிருப்பான். மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின. அந்தக் 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை.

நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டு கால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..! நாமும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடும் விடாமுற்

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 07:36:49 PM
கல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்!
 
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து  அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.

'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.

(http://2.bp.blogspot.com/-N65g2KlE-v4/UAIiQpb45kI/AAAAAAAAB6I/g4kcSC1VQFs/s1600/36.JPG)

இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

(http://2.bp.blogspot.com/-faHIGXanPGU/UAIo30dt4HI/AAAAAAAAB6s/St02jPHITy8/s1600/Kamarajar-simpleman_jpg.jpg)

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில்  நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு

அப்படி அவர் என்ன செய்தார்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.

(http://2.bp.blogspot.com/-JgGJa7x7XhE/UAIpG9X4D5I/AAAAAAAAB60/39kODs-RBrU/s1600/kamarajar.jpg)

அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம்  செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

(http://2.bp.blogspot.com/-pL-A-xSaD8s/UAIpyFTA6bI/AAAAAAAAB68/NzTX5w_HnmE/s1600/slider1.jpg) (http://www.friendstamilchat.com)

காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை  அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.

இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

(http://4.bp.blogspot.com/-iq2NYY8D9uY/UAIp7KkGhvI/AAAAAAAAB7E/JbVIzcFUFWM/s1600/kamarajar-2.jpg)

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

(http://4.bp.blogspot.com/-S7dJkP1H94M/UAIqAgzBNfI/AAAAAAAAB7Q/zcFtg66zU3A/s1600/kamaraj-with-oldlady.jpg)

தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 07:52:00 PM
பில் கேட்ஸ் - வரலாற்று நாயகர்!
 
இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்?

கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...

1955ஆம் ஆண்டு  அக்டோபர் 28-ஆம் நாள் அமெரிக்காவில் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.

(http://3.bp.blogspot.com/-rYKuqpvQt0A/UJEYFGzJ86I/AAAAAAAACk0/FggDYUXxmLI/s1600/1019.jpg)

இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணிநேரம்  செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.

1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து 'ஃமைக்ரோசாப்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

(http://3.bp.blogspot.com/-Gj5LqPGLOac/UJEY3aCwObI/AAAAAAAACk8/FGd0Rz_Lmhs/s1600/bill_gates.jpg)

1977-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற  Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

'மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே' என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான்  ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .

(http://3.bp.blogspot.com/-d-WgQRDAppM/UJEZJtT8gPI/AAAAAAAAClE/0nuoRVf1ZtI/s1600/Bill-Gates-9307520-2-402.jpg)

அது மட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். இணையத்தில்  உலா வர உதவும் (உலவி) 'நெட்கேப்ஸ்' (net cafe) என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே  மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று  ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை. என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை.

1999-ஆம் ஆண்டு 'Business at the speed of thought' என்ற நூலை எழுதினார்  ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும்  அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

(http://1.bp.blogspot.com/-dr0TCwAg_7c/UJEbQrabEXI/AAAAAAAAClM/W54rFqik1v8/s1600/bill_gates-8426.jpg)

குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொறுப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக  கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்...

நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!

ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிவடைகிறது.  விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள்  கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.  இப்பொழுது விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம்.இ(ME) மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே...

(http://3.bp.blogspot.com/_JPDD9o7XquM/TOviiRejeFI/AAAAAAAAAKk/-nwWunpbjRo/s1600/win1.jpg)

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 01, 2013, 08:17:03 PM
வின்செண்ட் வான் கோ - வரலாற்று நாயகர்!
 
தங்கள் வாழ்நாளில் இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இன்னல்களைத்தாண்டி சாதிப்பவர்களைத்தான் வரலாறும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இன்னல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்னலே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகர் அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். வாழ்ந்தபோது அவரது திறமையை துச்சமாக மதித்த உலகம் அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு அவரது திறமையை மற்ற கலைஞர்களுக்கு அளவுகோலாக பயன்படுத்துகிறது. அவரது படைப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறது. அவர்தான் 'Expressionism' என்ற ஓவியபாணியை உலகுக்கு அறிமுகம் செய்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர் வின்செண்ட் வான் கோ (Vincent Van Gogh). 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் Groot-Zundert-ல் பிறந்தார் Vincent Willem van Gogh.

பல வரலாற்று நாயகர்களைப்போல அவரும் ஏழ்மையில்தான் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனதுதான் அந்த சோகத்திற்கு காரணம். அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர் பெற்றோர். அவருக்கு விபரம் தெரிய ஆரம்பித்தபோது ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட ஆரம்பித்தது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற நினைப்பு அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை ஒரு மதபோதகராக இருந்தார் அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.

(http://4.bp.blogspot.com/-uNhGeXsHXiQ/UVUykcgpAII/AAAAAAAADlU/SufHyZim2Fk/s1600/486px-Vincent_van_Gogh_1866.jpg)

வான் கோவிற்கு 16 வயதானபோது தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். ஆனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லை. எனவே வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த உறவினர் வீட்டிற்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் அவருக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இருந்தாலும் அவரை அரித்து வந்த தாழ்வு மனப்பான்மை மனச்சோர்வாக மாறத்தொடங்கியது. அதனால் வாழ்க்கையில் என்ன செய்வது? என்று தெரியாமல் பலமுறை குழம்பினார் வான் கோ. தந்தையைபோல எளிமையாக மதபோதகர் ஆகலாமா என்றுகூட அவர் யோசித்தார். சுமார் ஓராண்டு Wasmes என்ற நிலக்கரி சுரங்க ஊழியர்களின் கிராமத்தில் அவர் மதபோதனையில் ஈடுபட்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டு கடும் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அவரது போதனை முறைகளை ஏற்காத தேவாலாயம் அவரது பதவியை பறித்தது.

பெற்றோரின் அன்பும், உடன் பிறந்தவர்களின் அன்பும் இல்லாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத அந்த சமயத்தில் அவர் பிழைப்புத்தேடி லண்டனுக்கு சென்றார். அன்புக்காக ஏங்கியதாலோ என்னவோ தாம் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்றுக்கொள்ள மறுக்கவே அவரது சோகமும், மனச்சோர்வும் அதிகமானது. அவரது கவனம் விலைமாதர்களின் பக்கம் திரும்பியது. தனக்கென ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்பிய அவர் அவர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. பல ஆண்டுகள் பொருத்த அவர் கடைசியில் மணமுறிவு செய்துகொண்டார்.

(http://2.bp.blogspot.com/-m-YBh7SGS4E/UVUzGZzppsI/AAAAAAAADl0/53vFWRO8X9s/s1600/Vincent-Van-Gogh-9515695-3-402.jpg)

மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு ஓர் ஓவியனாகலாம் என்று முடிவெடுத்தபோது அவருக்கு வயது 33. அப்போதும் அவருடன் கூடவே இருந்தது வறுமை மட்டும்தான். வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. தன் சகோதரன் அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு காலத்தை ஓட்டிய வான் கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். தன் கவனம் முழுவதையும் ஓவியங்கள் மீது பதித்தார். ஆதிகால குகை ஓவியங்கள், Gatwick ஓவியங்கள். Renaissance ஓவியங்கள், Impressionism ஓவியங்கள் இதுதான் ஓவியங்களின் பரினாமங்களாக இருந்தது. அதில் ஒரு புதிய பரினாமத்தை ஏற்படுத்தினார் வான் கோ. 'Expressionism' என்ற புதியபாணியை அவர் தன் ஓவியங்களில் அறிமுகம் செய்தார். அவருடைய ஓவியங்கள் பளிச்சென்று வண்ணமயமாக இருக்கும். அவர் வரைந்த ஓவியங்களில் உலகப்புகழ் பெற்றது சூரியகாந்தி பூ ஓவியம்.

(http://4.bp.blogspot.com/-SvDMBhHCLkU/UVUy7wkHqwI/AAAAAAAADlw/DN-AExKFz0k/s1600/Vincent_Willem_van_Gogh_128.jpg)

வான் கோவின் கடைசி ஆறு ஆண்டுகளில் சுமார் 700 ஸ்கெட்ச் ஓவியங்களையும், 800 Oil Paintings எனப்படும் எண்ணெய் ஓவியங்களையும் வரைந்தார். ஆனால் சோகம் என்னவென்றால் அவற்றில் ஒரே ஒரு ஓவியத்தைதான் அவரால் விற்க முடிந்தது. அதுவும் வீட்டு வாடகை கடனுக்காக அந்த ஓவியத்தை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார் என்று கூறுகிறது ஒரு வரலாற்றுக்குறிப்பு. அவரது ஓவியங்களை உலகம் கண்டுகொள்ளாததற்கு அவரது மனச்சோர்வு ஒரு காரணமாக இருந்திருக்கலாம. ஒருமுறை மனச்சோர்வு முற்றியபோது அவர் என்ன செய்தார் தெரியுமா? கத்தியை எடுத்து தனது ஒரு காதை அறுத்துக்கொண்டார். விசித்திரமாக இருந்தாலும் உண்மை. மனச்சோர்வால் எவ்வுளவு ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர் அந்த காரியத்தை செய்திருப்பார். பின்னாளில் காதில் கட்டுபோட்ட மாதிரி தமது உருவத்தையே வரைந்தார் வான் கோ.

(http://1.bp.blogspot.com/-m2j-NoStJfU/UVUyun2g77I/AAAAAAAADlc/GU1qq7_DhDA/s1600/529px-Vincent_Willem_van_Gogh_106.jpg)

அவரது மனச்சோர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர் மனநிலை மருத்துவமணைக்கு போவதும் வருவதுமாக இருந்தார். வாழ்க்கை முழுவதும் சோகத்திலேயே வாழ்ந்த அவர் 1890 ஆம் ஆண்டு சோகமான முறையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அந்த ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. வாழ்ந்தபோது அவரது படைப்புகளை மதிக்காத உலகம் அவர் இறந்த பிறகு அவற்றை விலை மதிக்க முடியாதவை என்று கூறுகிறது. 1990-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற critics ஓவிய ஏலத்தில் வான் கோவின் 'Portrait of Dr. Gache' என்ற ஓவியம் $100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உலகின் செல்வந்தர்களும், புராதன ஓவியங்களை சேகரிப்பவர்களும் வான் கோ பூர்த்தி செய்யாமல் விட்டுப்போன ஓவியங்களுக்குகூட பல மில்லியன் டாலர் கொடுக்க போட்டி போடுகின்றனர். 

(http://3.bp.blogspot.com/-5gztR70ZZ_I/UVUyz2A8jmI/AAAAAAAADlk/P93x7Rh8FuI/s1600/vg_photo1.jpg)

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களால்கூட உலகை வெல்லும் படைப்புகளை தர முடியும் என்பதுதான் வான் கோவின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மை. நாம் நமது குறைகளை நினைத்து குன்றிப்போகாமல் நிறைகளை நினைத்து நிமிர்ந்து நின்றால் நம்மாலும் குன்றின் மேல் இட்ட விளக்காக மின்ன முடியும். வாழும்போதுதான் வானம் வசப்பட வேண்டுமென்பதில்லை மறைந்த பிறகும் வரலாறு நம்மை நினைத்துப்பார்த்தால் அதுவே வானம் வசப்பட்டதற்கு சமமாகும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on April 21, 2013, 10:14:53 PM
வில்லியம் ஹார்வி - வரலாற்று நாயகர்!
 
"இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும்...
அன்பே என்னை நீ நீங்கினால் ஒருகணம் என்னுயிர் தாங்காது"....

இந்த பாடல் வரிகளில் விஞ்ஞானம் பேசியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இதயம் துடிக்கும் வரைதான் உயிர் இருக்கும் என்பதும், இதயம் ஓயும்போது இரத்த ஓட்டம் நின்று போவதால் உயிரும் நின்று போகிறது என்பதும் அறிவியல் நமக்கு சொல்லும் உண்மை. ஆனால் நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த உண்மை அறியப்படாத ஓர் ஆச்சரியமாக இருந்தது. அந்தக்காலகட்டத்தில் உயிரியல் வல்லுனர்கள்கூட இரத்த ஓட்டம் பற்றியும், இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு நாம் உண்ணும் உணவு இதயத்தில் இரத்தமாக மாற்றப்படுகிறது என்றும், இதயம் இரத்தத்தை சூடாக்குகிறது என்றும், இரத்தநாளங்களில் காற்று நிரம்பியிருக்கிறது என்றும், இரத்தம் சிலசமயங்களில் இதயத்தை நோக்கியும், சிலசமயங்களில் இதயத்திலிருந்து வெளியேயும் பாய்கிறது என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளை கொண்டிருந்தனர். இதயம்தான் இரத்தத்தை உடல்முழுக்க பாய்ச்சுகிறது. இரத்தம் உடலிலேயே திரும்ப திரும்ப பயணிக்கிறது என்று முதன்முதலில் கண்டு சொன்னதன் மூலம் மருத்துவத்துறையின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த ஓர் அற்புத மருத்துவரை பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

(http://3.bp.blogspot.com/-nAe9F7cTAvA/UW_xU-l5KOI/AAAAAAAADmM/HrJBgM4VAhI/s1600/William_Harvey_(_1578-1657).jpg) (http://www.friendstamilchat.com)

பதினைந்து நூற்றாண்டுகளாக நம்பபட்டு வந்தவற்றை பொய் என்று நிரூபித்து உடல்கூறியியல் உலகின் ஆக முக்கியமான நூலை எழுதிய அந்த வரலாற்று நாயகர் வில்லியம் ஹார்வி (William Harvey). 1578-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி இங்கிலாந்தில் Folkestone எனும் ஊரில் பிறந்தார் ஹார்வி. அவரது தந்தை வசதிமிக்க வியாபாரியாக இருந்ததால் புகழ்பெற்ற கிங்க்ஸ் (King's School) பள்ளிக்கூடத்திற்கும், கேம்ப்ரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி தன் மகனை படிக்க வைத்தார். பல்கலைக்கழகத்தில் அவர் அவ்வுளவாக பிரகாசிக்கவில்லை என்பதால் மருத்துவ உலகின் மிகமுக்கியமான உண்மையை அவர் கண்டுபிடிக்கப்போகிறார் என்று அப்போது அவரது பேராசிரியர்கள் எவரும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் பிரகாசிக்கவில்லையென்றாலும் கடுமையாக உழைக்ககூடியவர் ஹார்வி.

1597-ஆம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக அப்போது உலகின் தலைசிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாக இருந்த இத்தாலியின் 'University of Padua' பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மருத்துவ பட்டம் பெற்று இங்கிலாந்து திரும்பினார். மீண்டும் கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்று சொந்தமாக மருத்துவர் பணியாற்றத்தொடங்கினார். 1609-ஆம் ஆண்டு  St. Bartholomew's மருத்துவமணையில் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையளித்த நோயாளிகளிடமிருந்து பல புள்ளி விபரஙக்ளை சேகரிக்கத்தொடங்கினார். உடலில் இரத்தத்தின் வேலை குறித்தும், இரத்த ஓட்டம் குறித்தும் அதுவரை நம்பபட்டு வந்தவைகள் தவறானவை என்று அவர் நம்பினார். ஆனால் அந்த தவறுகள் அவருக்கு உடனடியாக தெரியவில்லை உண்மையை தெரிந்துகொள்ள ஆண்டுகணக்கில் ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தவளைகள், பாம்புகள், எலிகள், முயல்கள் இப்படி பல சடலங்களை அறுத்து பொறுமையுடன் பகுப்பாய்வுகள் செய்தார்.

இரத்தம் பற்றியும், மனித உடற்கூறுகள் பற்றியும் அதுவரை எழுதபட்டிருந்தவற்றை ஒன்றுவிடாமல் கவனமாக படித்தார். இரத்த நாளங்களில் வால்வுகள் இருக்கின்றன என்பதை  Hieronymus Fabricius என்ற மருத்துவரின் மூலம் தெரிந்துகொண்டார். அந்த வால்வுகளின் பணியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இரத்தம் ஒரே திசையில் மட்டுமே செல்வதை அந்த வால்வுகள் உறுதி செய்கின்றன என்பதை ஹார்வி உணர்ந்தார். அடுத்ததாக ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும் இரண்டு அவுன்ஸ் இரத்தத்தை அது வெளியேற்றுகிறது என்று அவர் கணித்தார். இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 தடவை துடிக்கிறது. அப்படியென்றால் ஒரு நிமிடத்திற்கு 144 அவுன்ஸ் அல்லது ஒரு மணி நேரத்தில் 540 பவுண்ட் இரத்தத்தை இதயம் வெளியேற்ற வேண்டும். ஆனால் 540 பவுண்ட் என்பது சராசரி மனிதனின் எடையைக்காட்டிலும் மிக அதிகம். எனவே இரத்தம் இதயத்திலிருந்து பாய்ச்சப்பட்டு உடல் முழுவதும் ஒரே திசையில் பயணித்து மீண்டும் இதயத்திற்குள் நுழைந்து மீண்டும் பாய்ச்சப்படுகிறது என்று அனுமானித்தார்.

(http://1.bp.blogspot.com/-4a3FjafiG5c/UW_xccTQ32I/AAAAAAAADmU/jGhDccdJVbc/s1600/Harvey1654.jpg)

அதாவது இதயம் இயக்க இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறது என்று ஊகித்தார். தன்னுடைய அனுமானத்தை உறுதி செய்ய அடுத்த ஒன்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து இரத்த ஓட்டம் பற்றிய பல்வேறு சோதனைகளை செய்தார். தன்னுடைய கண்டுபிடிப்பை புத்தமாக வெளியிடுவதற்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதுபற்றிய விரிவுரைகளை வழங்கத்தொடங்கினார். ஆனால் ஏளனச்சிரிப்பும், உதாசீனமும்தான் அவருக்கு அப்போது கிடைத்த பரிசுகள். 1628-ஆம் ஆண்டு தனது 50-ஆவது வயதில் "An anatomical disquisition on the motion of the heart & blood in animals" என்ற நூலை வெளியிட்டார். மருத்துவ உலகம் ஸ்தம்பித்து போனது. பதினைந்து நூற்றாண்டுகளாக நம்பபட்டு வந்தவற்றை கேலி கூத்தாக்கியதால் அது கண்டனத்திற்கும் உள்ளானது. ஹார்வியிடம் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறையத்தொடங்கியது. ஆனால் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல் ஹார்வியின் கூற்றை பொய்யாக்க வேண்டும் என்று நினைத்த அத்தனை பேரும் மண்ணை கவ்வத்தொடங்கினர்.

அவர் கண்டுபிடித்து சொன்னது மறுக்க முடியாத உண்மை என்பதை மருத்துவ உலகம் வெகுவிரைவில் உணர்ந்துகொண்டது. அதன்பிறகு ஹார்வியின் செல்வாக்கும், புகழும் வானம் வரை உயர்ந்தது அவருடைய மருத்துவ தொழிலும் பிரகாசிக்கத்தொடங்கியது. இதில் உண்மையிலேயே வியப்பான விசயம் என்ன தெரியுமா? அதுபோன்ற நுண்ணிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், உறுதி செய்யவும் மைக்ரோஸ்கோப் (Microscope) எனப்படும் நுண்கருவி மிக மிக அவசியமானது ஆனால் ஹார்வியின் காலகட்டத்தில் அதுபோன்ற எந்த கருவிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. நவீன ஆராய்ச்சிகருவிகள் எதுவுமின்றி உடற்கூறியியல் வரலாற்றிலேயே ஆக பிரசித்தி வாய்ந்த உண்மைகளை அவர் கண்டுபிடித்து சொன்னது உலகம் உண்மையிலேயே போற்றிப் பாராட்ட வேண்டிய விந்தை.

ஆரம்பத்தில் அவரது கூற்றை வன்மையாக எதிர்த்த ஐரோப்பிய ராயல் மருத்துவகழகம் பின்னர் அந்த மருத்துவமேதைக்கு தலைவணங்கியது. 1654-ஆம் ஆண்டு மருத்துவத்துறையிலேயே ஆக உயரிய கெளரவத்தை அவருக்கு வழங்க விரும்பியது. கழகத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொண்டது. ஆனால் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காத ஹார்வி வயது காரணமாக அந்த கெளரவத்தை மறுத்து விட்டார். அதற்கு பதிலாக அவர் அந்தக்கழகத்திற்கு நல்ல புத்தகங்கள் அடங்கிய நூலகம், அரும்பொருளகம் மற்றும் ஆராய்ச்சி அறை கொண்ட ஒரு புதிய கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தார். உடற்கூறியல் உலகின் மாபெரும் கண்டுபிடிப்பை செய்த ஹார்வியின் உடலை முடக்குவாதம் தாக்கியது. 1657-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் நாள் 79-ஆவது வயதில் அந்த மேதையின் உயிர் பிரிந்தது.

(http://3.bp.blogspot.com/-SAomr1FXOxE/UW_xkkoqpmI/AAAAAAAADmc/d3Am6ciQyx0/s1600/William-Harvey-Quotes-2.jpg)

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைந்தாலும் ஹார்வி தம்பதியிருக்கு பிள்ளைப்பேறு கிட்டவில்லை. எனவே சொத்து முழுவதையும் அவர் ராயல் மருத்துவக்கழகத்திற்கு எழுதி வைத்தார். தொய்வில்லாத ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் இரகசியங்களை கண்டறியுமாறு ராயல் மருத்துவக்கழக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு கழகத்தில் ஆண்டுதோறும் ஒரு விரிவுரை நிகழவும் நிதி ஒதுக்கினார். சுமார் 350 ஆண்டுகளாக இன்றுவரை ஆண்டுதோறும் ஹார்வி விரிவுரை நிகழ்த்தப்படுகிறது. மருத்துவ உலகம் மாமனிதருக்கு செய்யும் வருடாந்திர அஞ்சலி அது. மனித உடல் பற்றிய இரகசியங்களையும், உண்மைகளையும் கண்டறிந்து நமது அறிவை பெருக்கிக்கொள்வதன் மூலம் நோய்களையும், வலியையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதே வில்லியம் ஹார்வியின் வாழ்நாள் இலக்காக இருந்தது.

வகுத்துக்கொண்ட இலக்கை நோக்கி சிந்தனைத் தெளிவோடும், செயல்திறத்தோடும், கடும் உழைப்போடும், விடாமுயற்சியோடும் பயணித்ததால்தான் அந்த மனிதரின் வாழ்க்கை அர்த்தமுள்ளதானது, அவருக்கு மருத்துவ உலகம் என்ற மிகப்பெரிய வானமும் வசப்பட்டது. இன்னும் மனுகுலம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய உண்மைகளும், அடைய வேண்டிய இலக்குகளும் எத்தனையோ இருக்கலாம். அவற்றை நோக்கி தன்னம்பிக்கையொடு பயணிக்கும் எவருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஹார்வி நமக்கு சொல்ல விரும்பும் இதயப்பூர்வமான உண்மையாக இருக்கும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on June 13, 2013, 01:35:00 PM
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் - வரலாற்று நாயகர்!
 
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்போரும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போரும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் பிள்ளைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளகபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த பிள்ளைப்பருவத்தில் வேறு எந்த தொல்லைகளும் இருக்காது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அந்த பருவத்தில்தான் எந்த கட்டுப்பாடுமின்றி கற்பனைகளில் சஞ்சரிக்க முடியும். கனவுலகில் சிறகடிக்க முடியும் என்பது. உங்கள் பிள்ளைப்பருவத்தை சற்று பின்னோக்கிப் பாருங்கள் அந்தப் பருவத்தைப் பற்றி உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயமாக நினைவுக்கு வரும். அதுதான் fairy tales எனப்படும் புனைக்கதைகள். பெரும்பாலும் விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு சின்ன சின்ன நீதிகளையும், கருத்துகளையும் சொல்லும் ஓர் அற்புத புனைக்கதைத் தொகுப்புதான் fairy tales. இன்றும் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களை கட்டிப்போட்டிருக்கும், சிறுவர்களை கவர்ந்திருக்கும் அந்த புகழ்பெற்ற புனைக்கதைகளை நமக்கு தந்தவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் டென்மார்க் தந்த புகழ்பெற்ற கதாசிரியர் Hans Christian Andersen.

1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் பிறந்தார் கிரிஸ்டியன் ஆண்டர்சன். அவரது தந்தை சோகமே உருவான ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அவருக்கு வாய்த்தது சேரிப்புற வாழ்க்கைதான். தினசரி தன் மகனுக்கு எதாவது கதை படித்து சொல்வார் தந்தை. ஆண்டர்சன் சிறுவயதில் உடல் மெலிந்தும், சுத்தமில்லாமலும் இருப்பார். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவரை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. சிறுவயதில் பிள்ளைகளுக்கு நிறைய கனவுகள் இருக்குமல்லாவா! ஆண்டர்சனுக்கும் ஒரு கனவு இருந்தது பெரிய பாடகராக வரவேண்டும் என்று. வறுமையைப் போக்கிக்கொள்ளவும், வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் அவர் தமது பதினான்காம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி டென்மார்க் தலைநகர் Copenhagen வந்து சேர்ந்தார்.

(http://3.bp.blogspot.com/-_l9DHviMbjA/UXOKbkR0gpI/AAAAAAAADms/PjfexBVwLow/s1600/images.jpg)

Copenhagen தெருக்களில் பாட்டு பாடி மக்களை கவர முயன்றார். ஆனால் அவருக்கு பாட்டுப் பாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர, அதற்கான குரலோ ஞானமோ அறவே இல்லை. அதனை சில நாட்களில் புரிந்துகொண்ட ஆண்டர்சன் இசையோடு நடனமாடி நடித்து மக்களை கவர நினைத்தார். அதிலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. ஆனால் எதையாவது செய்து புகழ்பெற வேண்டும் என்ற அவரது எண்ணமும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பாரத ஒரு பலனை அவருக்கு பெற்று தந்தன. அப்போது டென்மார்க்கின் மன்னனாக இருந்தவர் ஆறாம் Frederick அவருக்கு தெரிந்த ஒரு பிரமுகர் ஆண்டர்சனின் முயற்சிகளைப் பார்த்துவிட்டு மனமிறங்கி அவரது கல்விக்காக உதவி செய்யும்படி மன்னரிடம் கேட்டுக்கொண்டார். மன்னரும் ஆண்டர்சனின் கல்விக்காக ஏற்பாடு செய்து தந்தார். 

கல்வி கற்று பெரியவர் ஆனதும் பிள்ளைகளைக் குறியாகக் கொண்டு எழுதத் தொடங்கினார் ஆண்டர்சன். 1828-ஆம் ஆண்டு அவர் சிரிப்பும், பொழுதுபோக்கும் நிறைந்த  A Journey on Foot என்ற நகைச்சுவை கதையை எழுதினார். ஏழு ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய The Improvisatore என்ற நாவல் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுதந்தது. அவரது திறமையை மெச்சிய டென்மார்க் மன்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய ஆண்டர்சனுக்கு நிதியுதவி வழங்கினார். அந்த பயணத்தின்போது பல புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னாளில் Thumbelina, The Little Mermaid, The Emperor's New Clothes,  Picture-Book without Pictures, The Tinderbox,  Fairy Tales போன்ற புகழ்பெற்ற படைப்புகளை வழங்கினார். தம் வாழ்நாளில் சுமார் 350 கதைகளை எழுதினார்.

(http://1.bp.blogspot.com/-dlXch9QPDxU/UXOKhmi24YI/AAAAAAAADm0/rx3ON8anhJs/s1600/images+(1).jpg)

ஆண்டர்சனின் படைப்புகளில் அவருக்கு உலக புகழைப் பெற்று தந்தவை அவர் எழுதிய 'Fairy Tales' என்ற புனைக்கதைகள்தான். அந்த புனைக்கதைகளில் ஒன்று The ugly duckling அதாவது அழகில்லாத வாத்து. அந்த கதையில் மற்ற வாத்துகளைப்போல் தாம் அழகாக இல்லை என்று கவலைப்பட்ட ஒரு வாத்து பின்னர் அன்னமாக மாறுகிறது. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கைக்கும், அந்த கதைக்கும் அவ்வுளவு வேறுபாடு இல்லை. ஆண்டர்சனும் தன் உருவத்தைப் பற்றி கவலைப்பட்டவர்தான். ஆனால் டென்மார்க் மன்னரின் கவனம் கிடைத்தவுடன் தன்னம்பிக்கை பெற்று தாழ்வு மனப்பான்மையை மறந்து பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்தார். வெளித்தோற்றத்தை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது அவர்களது உள்ளம் அழகாக இருக்கும் என்ற கருத்தை அவர் பல கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் இருமுறை காதல் வயப்பட்டார் ஆண்டர்சன். ஆனால் இரண்டுமே ஒருதலை காதலாக இருந்தது. 1875-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் தமது 70-ஆவது வயதில் அவர் தனிமையிலேயே காலமானார். அவரது வாழ்க்கை தனிமையில் முடிந்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் சிறுவர்களின் வாழ்க்கையில் தனிமையில்லாமல் பார்த்துக்கொள்பவை அவர் உருவாக்கித் தந்த Fairy Tales தான். மக்களை குறிப்பாக சிறுவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவைதான் The Fairy Tales. தன்னைபோன்ற சோகமான பிள்ளைப்பருவம் பிறருக்கு வாய்க்கக்கூடாது என்பதும் ஆண்டர்சனின் எண்ணமாக இருந்தது. உலக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்த அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினத்தை 'Odin's story day' என கொண்டாடுகிறது டென்மார்க். புதிய பொருட்கள் வாங்குவதில் அவருக்கு எப்போதுமே பிரியம். ஆனால் ஏழ்மை காரணமாக அவரால் விரும்பியவற்றை வாங்க முடிந்ததில்லை.

(http://4.bp.blogspot.com/-5Jw_XdpU0FA/UXOKqrXS5QI/AAAAAAAADnE/5J4d5CUvmVc/s1600/images+(2).jpg)

ஓர் ஏழையாக பிறந்தாலும் உலக குழந்தைகளை கவரும் உன்னத படைப்புகளை தந்ததால் உலகப் புகழ் பெற்றார் ஆண்டர்சன். பல வரலாற்று நாயகர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துணை வந்த வறுமைதான் இவருக்கும் துணை வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை மெய்ப்பித்ததால்தான் வரலாறு ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் போன்றவர்களை நினைவில் வைத்திருக்கிறது. அவருக்கு 'புனைக்கதைகள்' என்ற வானம் வசப்பட்டதால்தான் அவரது நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனைப் போல் வறுமைய மறந்து திறமையை மூலதனமாக்கி விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on July 22, 2013, 07:30:00 PM
புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp") - வரலாற்று நாயகர்!
 
மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவதுறைதான். அதனால்தான் மருத்துவர்களை சிலசமயம் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு பார்க்கின்றனர் மரணவாயில் வரை சென்று திரும்பியோரும் அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு கிடைக்கும் அந்த கெளரவம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தாதியர்களுக்கு கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரிய ஒன்றுதான். ஆனால் ஆயிரமாயிரம் தன்னலமற்ற தாதியர்களை இந்த உலகம் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்த தாதியர்களுக்கெல்லாம் முன்னொடியாக விளங்கிய ஒரு அதிசய நங்கையைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

'விளக்கேந்திய நங்கை' என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) இத்தாலியின் புளொரன்ஸ் (Florence) நகரில் 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர் பெரும் செல்வந்தர்கள். சமூக மற்றும் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள். தங்களைப்போலவே தங்கள் இளைய மகளும் செளகரியமான செல்வம் கொழிக்கும் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் இல்லாத புளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கண்டார்.

(http://2.bp.blogspot.com/-UMk3xdnPc68/Udesl85WN1I/AAAAAAAAD4c/bJVPf1enrMU/s1600/Florence-Nightingale-9423539-1-402.jpg)

பெற்றோர் ஆரம்பத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும் புளோரன்ஸின் உயரிய கொள்கைக்கு முன் அவர்களின் எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போனது. தமது 31-ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும், சுகபோகங்களையும் துறந்து நோயாளிகளையும், போரில் காயமடைந்தவர்களையும் கவனித்து கொள்ளும் தமது நீண்ட நாள் விருப்பத்தை நோக்கி புறப்பட்டார். இங்கிலாந்தை பொருத்தமட்டிலும் அந்தக்காலத்தில் தாதிமை தொழில் என்பது பலர் அருவெறுத்து ஒதுக்கிய ஒரு துறையாக இருந்தது. சமூகத்தின் விரும்பதகாத பிரிவுகளை சேர்ந்தவர்கள்தான் தாதியராக பணியாற்ற முன்வந்தனர்.

தாதிமை பயிற்சி என்ற ஒன்று அப்போது கிடையாது. தாதியர்களுக்கான சம்பளமும் கூலிகளுக்கு கிடைப்பதைவிட குறைவாக இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் சுத்தம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோர் இவர்களைப்போன்றவர்கள்தான் தாதியர்களாக செயல்பட்டனர். இந்த துறையைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்று துணிந்தார் புளோரன்ஸ்.

ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் தாதியர்களுக்கான அடிப்படை பயிற்சியைப் பெற்றார். அந்த பயிற்சியை வைத்து அவர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க முனைந்தார். ஜெர்மனியில் அவர் பயிற்சி பெற்ற போது தன்னைத்தானே வருத்திக்கொண்டார். அதிகாலை எழுந்து எல்லா பணிவிடைகளையும் செய்து எளிய உணவுகளை பகிர்ந்துகொண்டு தாதியர்களுக்கான விரிவுரைகளுக்கு சென்று வந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிக முக்கியமான அம்சங்கள் தூய்மையும், தூய்மையான காற்றும்தான் என்று நம்பினார் அவர். எனவே அந்தக்கால வழக்கத்திற்கு மாறாக காற்றோட்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக மருத்துவமனை கட்டடங்களில் பெரிய சன்னல்களை அமைக்க வற்புறுத்தினார். மேலும் தற்போதைய தாதிமை தொழிலில் உள்ள பெரும்பாலான நடைமுறைகளை அவர்தான் முதன்முதலில் சிந்தித்து செயல்படுத்தினார்.

அவரது சிந்தனைகளும், கோட்பாடுகளும் நாடு முழுவதும் பரவத்தொடங்கின. ஆனாலும் அவரது மாபெரும் தொண்டை உலகம் அறிய செய்ய ஒரு போர் தேவைப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிரைமியன் போர் (Crimean War) வெடித்தது. போரில் படுகாயமடைந்தவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் கவனிக்கும் முறை என்ற ஒன்றே அப்போது இல்லாமல் இருந்தது. போர் வீரர்களின் அவலநிலை நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சமயம் அவர்களை எப்படி கவனித்து கொள்ளலாம் என்பதை செய்துகாட்ட புளோரன்ஸுக்கு அழைப்பு விடுத்தார் போர்க்கால நாடாளுமன்ற செயலாளர் அதனை ஏற்று இங்கிலாந்தின் விக்டோரியா ராணியும் அவருக்கு ஆசி வழங்கி அனுப்பினார்.

நவம்பர் 4-ஆம் தேதி போர் முகாமான Scutari-ஐ வந்தடைந்தார் புளோரன்ஸ். நாற்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிகளுடன் அவர் தமது பணியைத் தொடங்கினார். நோயாளிகளை நிர்வகிப்பதில் அவர் வகுத்து தந்த திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மிக கடுமையான ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்டவை. அதனை பின்பற்ற தயங்கியோரும், செயல்படுத்த தவறியோரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புளோரன்ஸின் அந்த இரும்புகர நடவடிக்கை அபரிமிதமான பலனைத் தந்தது. அவர் வருவதற்கு முன் 42 விழுக்காடாக இருந்த மரண விகிதம் குறைந்து இரண்டு விழுக்காடானாது.

(http://1.bp.blogspot.com/-IuRyt6E5ckc/Udes6mTZ-gI/AAAAAAAAD4s/mBYYlg-Ycnc/s1600/images+(2).jpg)

ஒரு நாளுக்கு 20 மணி நேரம் வரை நோயாளிகளின் நலனில் செலவிட்டார் புளோரன்ஸ். திட்டங்களை வகுத்து தந்ததோடு மட்டுமின்றி சமைப்பது, மருத்துவகருவிகளை கழுவி சுத்தமாக்குவது, குப்பைகளை அகற்றுவது மற்றும் அனைத்து வேலைகளையும் அவர் கைப்படவே செய்தார். ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு அதிகாலையிலும் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே அவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு அவரை 'விளக்கேந்திய நங்கை' ("The Lady with the Lamp") என்று நினைவில் வைத்திருக்கிறது. நோயாளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற உதவியவர் என்ற இன்னொரு பொருளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

தமது பணியை செம்மைப்படுத்திக்கொள்ள அவர் மூன்று முறை போர் முனைக்கும் செல்ல தயங்கவில்லை. கடுமையாக உழைத்த அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு தனது கூந்தலையும் அவர் இழந்தார். போர்ப்பணி முடிந்து அவர் 1856-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பியபோது அந்த தேசமே அவரை கைகூப்பி வணங்கியது. இங்கிலாந்தின் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். 1858-ஆம் ஆண்டு 800 பக்க ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவே பிரிட்டிஷ் இராணுவ சுகாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

தம் வாழ்நாளில் மருத்துவமனை ஊழியர்களின் பணி, மருத்துவப்பொருட்கள் வாங்குதல், மருத்துவமனை   அறைகலன்களை தேர்ந்தெடுத்தல், தூய்மைப்படுத்துதல், நோயாளிகளுக்கான உடை மற்றும் உணவு ஆகிய அனைத்து மருத்துவமனை சார்ந்த நடவடிக்கைக்கும் தேவையான அடிப்படைகளை வகுத்துத் தந்தார் புளோரன்ஸ். உலகம் முழுவது அவர் வகுத்துதந்த முறைகள் பின்பற்றப்பட்டன. அவர் உருவாக்கித்தந்த முறைகள்தான் இன்றைய நவீன தாதிமைத் தொழிலுக்கும், நவீன மருத்துவமனை வசதிகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.

(http://3.bp.blogspot.com/-pcx-dqCBCeY/Udes16EuydI/AAAAAAAAD4o/GZLePYyG0qI/s1600/images+%25281%2529.jpg)

தாதிமைத் துறையில் அவரது அரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி 'Order of Merit' என்ற ஆக உயரிய பட்டத்தை 1907-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி சிறப்பித்தார். அந்த விருதை பெற்ற முதல் பெண்மனி அவர் என்பது குறிப்பிடதக்கது. அதற்கு அடுத்த ஆண்டு 'Freedom of the City of London' என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் தமது 90-ஆவது அகவையில் இங்கிலாந்தில் காலமானார். அவர் மறைந்தாலும் இன்றும் ஒவ்வொரு தாதியரின் உருவிலும் உலா வந்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு தாதியரை சந்தித்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள். அதற்கும் மேலாக அவரைப் போன்றவர்களை உருவாக்க தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வலுவான அடித்தளம் அமைத்துத்தந்த அந்த விளக்கேந்திய நங்கை புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு நன்றி கூறுங்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேல் போல் மனுகுலத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தி விட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on August 27, 2013, 06:18:48 PM
ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) - வரலாற்று நாயகர்!
 
2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நாம் மறந்திருக்க முடியாது. இயற்கையின் முப்பது வினாடி சீற்றத்தால் குஜராத் மாநிலம் துவண்டு போனபோது அங்கு துயர் துடைப்பிற்காக விரைந்து வந்த முதல் அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். அந்த குஜராத் பூகம்பத்திற்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர் உன்னத அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.

(http://2.bp.blogspot.com/-nUA-IzwH2rw/UhYExmgncFI/AAAAAAAAD9Q/s_iIeODZcUs/s1600/images+(2).jpg)

1828-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் டுனாண்ட். பெற்றோர்கள் மதபற்று கொண்டவர்களாக இருந்ததால் இயற்கையிலேயே டுனாண்டும் மதபற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறிய அவர் சிறிது காலம் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். 26 வயதானபோது அவர் வர்த்தகத் துறையில் அடியெடுத்து வைத்தார். அல்ஜீரியாவுக்கு (Algeria) சென்று சுவிஸ் காலனியான Setif என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அதில் விவசாயம் செய்தும், பண்ணை நடத்தியும் தன் தந்தையைப் போல் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த பண்ணைக்குத் தேவையான தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வரவேண்டியிருந்தது. பக்கத்திலிருந்த நிலப்பகுதியோ பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதி எனவே அங்கு குழாய் போட பிரெஞ்சு அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது.

பலமுறை பிரெஞ்சு அதிகாரிகளை சந்தித்தும் பலன் கிட்டாததால் அப்போது பிரான்சை ஆண்டு வந்த மன்னன் மூன்றாம் நெப்போலியனை நேரில் சந்தித்து அனுமதி பெற முடிவெடுத்தார் டுனாண்ட். அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த சமயம் ஆஸ்திரிய படைகளை இத்தாலியிருந்து துரத்தியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது பிரெஞ்சு இராணுவம். அந்த இராணுவத்தை வழி நடத்தி போரில் ஈடுபட்டிருந்தார் மூன்றாம் நெப்போலியன். இத்தாலியில் அமைந்திருந்த நெப்போலியனின் போர்த்தலைமையகமான  Solferino முகாமுக்கு நேரடியாக சென்றார் டுனாண்ட். நெப்போலியனை சந்திக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்று நம்பியதால் தன்னுடன் நிறைய பணத்தையும் அவர் கொண்டு சென்றிருந்தார் அந்த ஆண்டு 1859. போகும் வழியிலேயே போரின் அவலங்கள் அவரின் கண்களில் பட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன, பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன. எப்படியோ ஒரு மாட்டு வண்டி துணையுடன் Solferino-க்கு அருகிலுள்ள  Castiglione என்ற சிற்றூரை அடைந்தார்.

அந்த சிற்றூரிலிருந்த ஒரு மலை உச்சியிலிருந்து அவர் கண்ட காட்சிகள் அவரை கலங்கடித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக மூர்க்கமான போர்களில் ஒன்றை அவர் நேரடியாக கண்ணுற்றார். போர்க்களத்தில் பத்தாயிரம் பேர் மடிந்தனர் பதினைந்தாயிரம் வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அவலங்களைக் கண்ட டுனாண்டுக்கு வந்த வேலை மறந்து போனது மனிதநேயம் பீறிட்டு எழுந்தது. காயமடைந்த வீரர்களில் சுமார் 500 பேர் அந்த சிற்றூரிலிருந்த தேவலாயத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு விரைந்த டுனாண்ட் எந்தவித மருத்துவ அனுபமும் இல்லாதிருந்தும்கூட முதலுதவி செய்து காயங்களை சுத்தம் செய்யத்தொடங்கினார். அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க சொன்னார். இறக்கும் தருவாயில் இருந்த வீரர்கள் கூறிய விபரங்களை எழுதி வைத்துக்கொண்டு அந்தந்த குடும்பங்களுக்கு செய்திகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தான் கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து உணவு ஏற்பாடு செய்ததோடு இன்னும் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்த்தார்.

(http://3.bp.blogspot.com/-jQDV41KJUao/UhYFFxUNyfI/AAAAAAAAD9Y/Pia8Nv7OqPc/s1600/solferino.jpg)

ஒருமாதம் அங்கேயே தங்கி வீரர்களை கவனித்தார் டுனாண்ட். இறுதியில் நூறு வீரர்கள் மடிந்தனர், நானூறு வீரர்கள் அவரது முயற்சியால் குணமடைந்து இல்லம் திரும்பினர். பின்னர் சுவிட்சர்லாந்து திரும்பிய டுனாண்டுக்கு தன்னுடைய அல்ஜீரியா பண்ணைப் பற்றி முற்றிலும் மறந்து போனது. இரவு பகலாக போர்க்காட்சிகளே அவர் கண்முன் தோன்றின. எத்தனைப் போர்க்களங்களில் எத்தனை வீரர்கள் கவனிப்பின்றி இறந்திருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார். இனி எதிர்காலத்தில் உலகில் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும் அதில் காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்ற ஓர் அனைத்துலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். போரில் தான் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் Solferino- நினைவுகள் எனும் தலைப்பில் நூலாக எழுதினார். 

போரில் காயமடையும் எந்த தரப்பு வீரருக்கும் பாகுபாடின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களும், தாதியர்களும் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும். போர்க்காலத்தின்போது உதவ பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். டுனாண்ட் அச்சிட்டு வெளியிட்ட அந்த நூலில் முதல் இரண்டு பதிப்புகள் விரைவாக விற்று தீர்ந்தன. அதனால் ஊக்கம் பெற்ற டுனாண்ட் அடுத்த பதிப்பில் தனது கோரிக்கையை விரிவுபடுத்தினார். அதன்படி போர்களின்போது மட்டுமின்றி எந்த ஒரு நாட்டில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் அங்கு நேரடியாக நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார். 

(http://2.bp.blogspot.com/-pRFLAtmf5uY/UhYFNROMVZI/AAAAAAAAD9g/ez9IbSjwoT0/s1600/images.jpg)

பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஆதரவு திரட்டினார். அவரது அயராத உழைப்பால் 1864-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் பனிரெண்டு நாடுகள் கூடி ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டன அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது. அந்த சங்கம் சுவிட்சர்லாந்தில் உருவானதால் அந்த நாட்டுக்கொடியின் வண்ணங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே செஞ்சிலுவை சங்கத்தின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த சங்கத்தின் தோற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது சொத்தையெல்லாம் செலவழித்து மிகுந்த எழ்மைக்குள்ளானார் டுனாண்ட். உலகிற்கு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிக்கொடுத்தும் அவரிடம் பணம் இல்லாமல் போனதால் உலகம் அவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனது. சில சமயங்களில் அடுத்த வேளை உனவுகூட இல்லாமல் அவர் சிரமப்பட்டதாக சில வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.

சுமார் முப்பது ஆண்டுகள் ஒதுங்கியே வாழ்ந்த அவரை 1895-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஒரு பத்திரிக்கையாளர். அதன்பிறகு 1901-ஆம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கி கெளரவித்தது நோபல் குழு. தாம் ஏழ்மையில் இருந்தபோது கூட அந்த நோபல் பரிசுத்தொகையை பயன்படுத்தவில்லை. தன் மரணத்திற்கு பிறகு அந்த பரிசுத்தொகையில் ஒரு பாதியை சுவிட்சர்லாந்து ஏழைகளுக்கும், மறு பாதியை நார்வே ஏழைகளுக்கும் கொடுத்து உதவ ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வாழ்நாளின் இறுதிவரை பிறரது நலனையே விரும்பிய அந்த உன்னத மனிதரின் உயிர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் அவரது 82-ஆவது அகவையில் பிரிந்தது.   

(http://3.bp.blogspot.com/-lgKM8K-j5N0/UhYFVGb2R2I/AAAAAAAAD9o/5iYnurY5zq0/s1600/61WejH6v3IL._SL500_SS500_.jpg)

இன்று செஞ்சிலுவை சங்கம் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது. துயர்துடைப்பு என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் அமைப்பு செஞ்சிலுவை சங்கமாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் டுனாண்டின் பிறந்த தினமான மே எட்டாம் நாள் செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது. ஜீன் ஹென்றி டுனாண்ட் வரலாற்றில் இவ்வுளவு பெரிய சுவட்டை பதிக்க முடிந்ததற்கு காரணம்  மனுக்குலத்தின் இன்னல்களை களைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையும், துயர்துடைப்பிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மனிதநேயமும், தடைகளை கண்டு துவண்டு போகாத மனோதையரியமும்தான். டுனாண்டைப் போன்று உயரிய சிந்தனைகளோடு மனிதநேயமும், மனோதைரியமும் இணையும் போது நம்மாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த முடியும்.
Title: Re: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~
Post by: MysteRy on November 13, 2013, 09:35:59 AM
பிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்!
 
உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே அமைதிக்காக அடித்தளமிட்டவர்கள் என்றாலும் அவர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தது.

உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால பெரும் முயற்சி மேற்கொண்டு போரை விரும்பாத நாடுகளை ஒன்றாக அணி சேர்த்து நடுநிலை சமாதான நாடுகள் எனும் அனைத்துலக அமைப்பை உருவாக்கினார். உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை அர்ப்பணித்த அந்த உன்னத மனிதனின் வாழ்க்கையை தெரிந்துகொள்வோம்.

(http://4.bp.blogspot.com/-CrMrVyInwPw/UmzC3WudPPI/AAAAAAAAEvg/4MiSKiumG7k/s1600/download.jpg)

1822-ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் நாள் பாரிஸில் (Paris) பிறந்தார் பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). கல்வியில் சிறந்து விளங்கிய பாஸி சட்டத்துறையில் பட்டம் பெற்று தனது 22-ஆவது வயதில் அரசாங்க சேவையில் ஓர் எழுத்தராக சேர்ந்தார். அந்த வேலை அவ்வுளவு பிடிக்காமல் போனதால் பத்திரிகை நிருபராகவும், பொருளாதார கட்டுரைகள் எழுதும் எழுத்தாளராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தார் பின்னர் கல்லூரி ஒன்றில் பொருளாதார விரிவுரையாளராக பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில்தான் பிரான்சு, இங்கிலாந்து, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ரஷ்யா மீது போர்த்தொடுத்தன. பலத்த உயிருடல் சேதத்தை ஏற்படுத்திய அந்த 'கிரைனியன் போர்' பாஸியின் மனத்தை வெகுவாக பாதித்தது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு உண்மையும் அவருக்கு வேதனையை உண்டாக்கியது.

ஒருமுறை பிரான்சில் பயங்கரமான வெள்ளம் ஏற்பட்டு பலத்த உயிர் சேதமும் பொருளிழப்பும் ஏற்பட்டது. அந்த வெள்ளம் விளைவித்த சேதத்தை உணர்ந்த மக்கள் அது போன்ற இன்னொரு வெள்ள சேதம் ஏற்படுவதற்கு முன் அதிலிருந்த தப்ப பல முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை நிறைவேற்றினர். ஆனால் அதே பிரெஞ்சு மக்களும், பாதிக்கப்பட்ட மற்ற நாட்டு மக்களும் கிரைனியன் போரினால் ஏற்பட்ட உயிருடல் மற்றும் பொருள் சேதங்களைப்பற்றி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போர் என்பது தவிர்க்க முடியாதது ஒன்று என மக்களும், அரசும் கருதியதே அந்த அலட்சியபோக்குக்கு காரணம் என்று நம்பினார் பாஸி. இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனுகுலம் எடுக்கும் முயற்சிகளை செயற்கை போர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். அதனால் 'அனைத்துல சமாதான இயக்கம்' ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் எழுந்தது.

அனைத்துலக சமாதானம் குறித்து அவர் பல பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதினார். பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். தனி அமைப்புகளிடமும் மட்டுமின்றி மற்ற நாட்டு அமைச்சுகளுடனும் தொடர்பு கொண்டு சமாதானத்திற்காக குரல் கொடுத்தார். 1867-ஆம் ஆண்டு 'சமாதான சங்கம்' ஒன்றை தொடங்குவது குறித்து அவர் பாரிஸ் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டார். பொதுமக்களிடையே அதற்கு பலத்த ஆதரவு கிடைக்கவே கட்டுரை பிரசுரமான அறுபதே நாட்களில் 'பிரெஞ்சு சமாதான இயக்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் பாஸி. அந்த அமைப்பின் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1870-ஆம் ஆண்டு பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போரை தடுக்க தனது சமாதான இயக்கம் மூலம் எவ்வுளவோ முயன்றார் பாஸி.

(http://3.bp.blogspot.com/-ktPFqfenILs/UmzCVVAwyYI/AAAAAAAAEvc/2xnPh-Oi50U/s1600/Frederic_Passy.jpg)

பத்திரிகைகளில் எழுதியதோடு மட்டுமின்றி இருநாட்டு அரச தந்திரிகளை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் அது பலனிக்காமல் போகவே போர் மூண்டது. அதில் வேதனையான உண்மை என்னவென்றால் போர் கூடாது என்று நல்லெண்ணத்துடன் போராடிய பாஸியையும், அவரது இயக்க உறுப்பினர்களையும் கண்டால் சுட்டுத்தள்ளுமாறு இரு நாட்டு வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் போரின்போது பாஸி தலைமறைவாக இருக்க நேரிட்டது. போர் முடிந்ததும் மீண்டும் அவர் தையரியமாக சமாதான பணிகளில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சமாதான பணியை விரிவாக்க அது ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தது. அவரது தீவிர முயற்சியால் அமெரிக்காவுக்கும், பிரான்சுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல மற்ற நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாஸி.

பாஸியின் பெரும் முயற்சியால் 1889-ஆம் ஆண்டு பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஹங்கேரி, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி Inter-Parliamentary Union என்ற அனைத்துலக பாராளுமன்றத்தை உருவாக்கினர். அதன் மூன்று தலைவர்களில் ஒருவராக பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சங்கம் நாடுகளுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுநிலை சங்கமாக இன்றும் செயல்பட்டு வருகிறது. 1890-ஆம் ஆண்டு பல நாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளை பாரிசில் ஒன்றுகூட்டினார் பாஸி. அந்தக்கூட்டத்தில் சமாதானமே என்றும் நிம்மதியைத் தரும் எனவே ஒவ்வொருவரும் உயிர் மூச்சு உள்ளவரை சமாதானத்திற்காக போராட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார். அந்த சொற்பொழிவின் விளைவாக அடுத்த ஆண்டே நிரந்தர 'சமாதான தலைமையகம்' உருவானது.     

உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை செலவழித்த பாஸியை 'அமைதியின் தூதுவன்' என்று உலகம் போற்றியது. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியால் உலக நாடுகளில் பெரும்பாலானவை போர்களை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. உலக அமைதிக்காக தனியொரு மனிதனாக கூக்குரல் கொடுத்த பாஸிக்கு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம். அப்போது அவருக்கு வயது 79 அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அந்த வயதிலும் அமைதி மீதான அவரது ஆர்வம் தளரவில்லை. அடுத்த பதினொரு ஆண்டுகளும் அமைதியின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து எழுதினார், கூட்டங்களில் பேசினார். 1912-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் நாள் தொன்னூறாவது வயதில் அந்த அமைதிப்புறாவின் உயிர் பிரிந்தது.

பாஸியின் கொள்கையைப் பின்பற்றிதான் இன்று அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமைதிக்காக ஒருவர் குரல் கொடுத்தே இவ்வுளவு நன்மை விளைந்திருக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நம் உலகம் யுத்தமில்லாத பூமியாக மாறாதா? என்ற சிந்தனைதான் பாஸியின் வாழ்க்கை நமக்கு விட்டு சென்றிருக்கும் காணிக்கை. மனுகுல சமாதானத்திற்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய எண்ணமும், அதற்கான அயராத உழைப்பும்தான் பிரெட்ரிக் பாஸிக்கு அமைதி என்ற வானத்தை வசப்படுத்தின. பாஸியைப் போன்ற உயரிய எண்ணமும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும் நமக்கு நோபல் பரிசை பெற்றுத்தராவிட்டாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தும்.