49
« Last post by Sun FloweR on March 22, 2024, 12:51:10 AM »
சாக்லெட்களின் குவியல்கள்..
ஐஸ்கிரீமின் சாலைகள்..
அப்பாவிடம் கேட்டு அடம்பிடித்த கிரிக்கெட் மட்டைகள் ஒன்றல்ல ஓராயிரம் என்னைச் சூழ்ந்தபடி..
மகிழ்ச்சி கடலில் நீந்திய படியே
நிறைவேறாத என் ஆசைகளை நிறைவேற்றிய வண்ணம் சுழன்று கொண்டிருந்தது எனது கனவு உலகம்..
சட்டென்று விழிப்பு வர அடி வயிற்றில் பூமிப் பந்து சுழல்வது போன்ற உணர்வு..
அம்மா ஏற்கனவே எச்சரித்தாள் தூங்கும் முன் அனைத்தையும் முடித்து விட்டு தூங்கு என்று..
அம்மா சொல்லும் எதையும் சட்டை செய்யாத நான் இதை மட்டும் செய்து விடுவேனா என்ன?
அம்மாவை எழுப்பி விடலாமா?
வேண்டாம். ஸ்டேசன் வந்த ரயில் போல் அலறுவாள்..
நாமே போய்விடலாம் துணிந்து..
எங்கும் இருள் ..
எங்கும் மௌனம்..
நிசப்தத்தின் சாலைகளில்
ஊர்ந்து சென்றது
என் மன ரயில் பூச்சி..
ஆத்திரத்தைக் கூட அடக்கி விட முடிகிறது.. இதை அடக்கி விட முடியவில்லையே..
அடிமேல் அடிவைத்து யாரும் முழித்திரா வண்ணம் ஒரு வழியாக என் பாரம் இறக்கிட
பாத்ரூம் வாசலைத் திறந்தேன்..
அங்கு நான் கண்ட காட்சி ....
அய்யோ.........
இது யார்?
இந்த நேரத்தில் எங்கள் பாத்ரூமில்?
ஒரு வேளை கொல்லி வாய் பிசாசோ ? ரத்தக் கட்டேரியோ?
அதென்ன அதன் கைகளில் கோடாரி போல் தெரிகிறதே?
பயம், பயம், பயம், பயத்தில் "வீல்" என்று அலறினேன் ..
சில நொடிகள் பாலில் விழுந்த சீனியாய் கரைந்தன..
அது.. அது.. ஏன்
இன்னும் நம்மை ஒன்றும் செய்யவில்லை என்ற
ஒரு நீண்ட பெருமூச்சுக்கு பின்
நன்றாக உற்று பார்க்கிறேன் மீண்டும் அந்த உருவத்தை..
அட அது கழற்றி போட்ட எனது ஆடையின் நிழல் தான்..
வந்த வேலையை அவசர கதியில் முடித்து விட்டு வந்த சுவடு தெரியாமல் மீண்டும் என் படுக்கை சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்..
தூக்கம் வரவில்லை..
குப்பென்று வேர்த்த உடலும்
உலர்ந்த உதடுகளும், தாகம் தீர்த்து குளிர வை என்று கதறிக் கொண்டிருந்தன..
பேசாமல் இரு காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று
முணு முணுத்தன
எனது உதடுகள்..