ஓ வாலிபனே
வரதட்சணை என்பது என்ன
உனக்கு நீயே
நிர்ணையிக்கும் விலை தானே
கல்லூரிப் பட்டத்தை
கல்யாண சந்தையில் - நீ
விற்பதை கேள்வியுற்று
வீணை சரஸ்வதியும் விக்கி விக்கி அழுகிறாளாம்
உன் பெற்றோருக்கு
மகனாக இரு
மனைவியை தேர்ந்தெடுக்கும் போது மட்டும்
மறக்காமல்
நீ ஒரு மனிதனாக நடந்துகொள்
ஓடிப்போய் பெற்றோர்கள் பின்னால்
ஒளிந்து கொண்டால்
ஆடையால் மட்டுமே நீ
ஆடவன்
தன நாதத்தையே
நன்கொடையாய் சமர்ப்பிக்கும்
வீணையிடமா
விலை பேசுவது
தன் வாசத்தை
வழங்கவரும் பூவிடமா
வாடகை வசூலிப்பது
உன் இல்லத்தில்
பங்குபெற வரும் பெண்
எடுத்துவரும் இரும்புப் பெட்டியை விட
அவள் சுமந்துவரும்
இதயமே பெரிதென நினை
வரதட்சணை முள் கிழித்த
பாதங்களில்
வடியும் ரத்தத்தோடு
மனைவியாய் ஒரு பெண்
உன் வீட்டினுள் நுழைவதை
விரும்புகிறாயா நீ
கண்ணீரை வரவழைக்கும்
சமுதாய நிர்பந்தங்களை
கொஞ்சம் மீறினால் தான் என்ன
வரதட்சணை விளக்கை
கொழுத்த முடியாத
எத்தனையோ பெண்கள்
தம்மையே கொழுத்திக்கொண்ட வெளிச்சத்தில்
தெரிவது பிரகாசமில்லை
இந்த சமூகத்தின் இருட்டு தான்
பெண்களின் திருமணத்துக்குப் பிறகு
சில பெற்றோர்களுக்கு
சிரிப்பே மறந்து விடுகிறது