சங்காபிஷேக தத்துவம
கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். அவரவர் வசதிப் படி 108, 1008 என்ற ரீதியில் சங்குகளில் அபிஷேகப் பொருள்களை நிரப்புவர்.
சிவன் அபிஷேகப்பிரியர். இவரது தலையில் கங்காதேவி நிரந்தரமாகக் குடியிருந்து குளிர்விக்கிறாள்.
தஞ்சாவூர் அருகிலுள்ள திருவிசலுõர் கிராமத்தில், ஸ்ரீதர அய்யாவாள் என்ற மகான் வசித்து வந்தார். அந்தணரான இவர் ஒருமுறை திதி கொடுக்கச் சென்ற போது, வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவன் மீது இரக்கப்பட்டு, திதிக்காக வைத்திருந்த உணவை அவனுக்கு கொடுத்து விட்டார். இதை சக அந்தணர்கள் எதிர்த்தனர். இந்த பாவத்திற்கு பரிகாரமாக, காசி சென்று கங்கையில் நீராடி வந்தால் தான், அய்யாவாளுக்கு திதி செய்து கொடுப்போம் என கூறிவிட்டனர். காசிக்குப் போய் திரும்ப வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? அய்யாவாள் சிவபெருமானை மனதால் நினைத்து, கங்கையையே திருவிசநல்லுõருக்கு வரவழைத்து விட்டார். அவ்வூர் வழியாக ஆறு பெருகி வந்தது. அய்யாவாள் அதில் நீராடினார். அந்த ஆற்றின் பிரவாகத்தை தாங்க முடியாத அந்தணர்கள், அதை அடக்கியருளுமாறு அய்யாவாளிடம் வேண்டினர். அய்யாவாளும் "கங்காஷ்டகம்' என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, அங்கிருந்த ஒரு கிணற்றில் அதை அடக்கி வைத்தார். இச்சம்பவம் கார்த்திகை சோமவாரத்தன்று நிகழ்ந்தது.
இந்த நிகழ்வின் அடிப்படையில் சங்குகளில் புனிதநீர் நிரப்பி, அத்தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து, கார்த்திகை சோமவாரத்தில் அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு மனிதன் கட்டுப்பட்டவன். அதுபோல், பக்தனுக்கு இறைவனை தன்னுள் அடக்கும் சக்தியுண்டு என்பதை விளக்கும் உயரிய தத்துவம் சங்காபிஷேகத்தின் மூலம் விளக்கப்படுகிறது.
சங்கு செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் என இல்லறத்தாரும், இறைவனின் அருள்செல்வம் வேண்டுமென துறவிகளும் இப்பூஜையின் போது வேண்டுவர். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாக காட்டப்படுகிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குரு÷க்ஷத்ர களமே நடுங்கியது என மகாபாரதம் கூறுகிறது.அபிஷேகத்திற்கு பாத்திரங்களை பயன்படுத்தலாமே! ஏன் சங்கு என்ற கேள்வி எழும். சங்கு இயற்கையாகவும் வெண்மையானது. சுட்டாலும் வெண்மையாகத்தான் இருக்கும். மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கில் பால், பன்னீர், பஞ்சகவ்யம் என எதை நிரப்பி அபிஷேகம் செய்தாலும் அதை கங்கையாக பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும்.
சோமவார விரதமுறை :
* அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னதாக 24 நிமிடங்களுக்கு முன்பு குளித்து விட வேண்டும்.
*குடும்பத்துடன் பூஜையறையில் அமர்ந்து சிவனின் 108 போற்றி அல்லது தேவார, திருவாசகப் பாடல்களை மனமுருக பாட வேண்டும். கூட்டுப்பிரார்த்தனையே முழுபலன் தரவல்லது.
* காலை, மதியம் உணவைத் தவிர்த்து, சிவாலயங்களில் சங்காபிஷேகம் காண வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, கங்கையாக பாவித்து குடிக்க வேண்டும். பணிக்குச் செல்பவர்கள் பழங்கள் சாப்பிடலாம்.
*இரவில் பழங்கள் அல்லது பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
* நாள் முழுவதும் மனதுக்குள் "சிவாயநம' என சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
சங்காபிஷேக பாடல் :
கங்கையே முதலாம் மிக்க
கடவுண்மா நதிகள் தீர்த்தம்
தங்கமா கலசந் தம்மில்
தகுமணம் சேர்த்து வைத்தோம்
அங்கமின் படையும் வண்ணம்
ஆடநீர் அபிஷேகித்தோம்
எங்களை ஆண்டுகொள்வாய்
ஈஸ்வரா தேவி நீயே!