Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 181  (Read 2886 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 181
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 12, 2018, 12:33:18 PM by MysteRy »

Offline thamilan

தமிழ் எனது சுவாசக் காற்று
அதை சுவாசித்தே நான்
உயிர் வாழ்கிறேன்

தமிழ் நான் அருந்திய
தாய்ப்பால்
என் இரத்தத்தில் கலந்திருப்பதும்
அந்த தாய்ப்பாலே

தமிழ் எனது நிழல்
என்னை முன்னும் பின்னும்
வழிநடத்துவது அதுவே

தமிழ் என்னை ஈன்றெடுத்த தாய்
அவள் மடிதனில் என்றும் தவழும்
குழந்தை நான்

தமிழ் எனக்கு தலைக்கவசம்
துவிச்சக்கரம் ஓட்டும்போதும்
அதை அணிந்திருப்பேன்

தமிழ் எனக்கு மூக்குக்கண்ணாடி
குளிக்கும் போதும்
அதை அணிந்த்திருப்பேன்

தமிழ் எனக்கு செய்தித்தாள்
அதை படிக்காமல்
பல்துலக்க மாட்டேன்

தமிழ் எனக்கு சொல்லிடப் பேசி
சொல்லாத ரகசியங்கள் அனைத்தையும்
அதனிடம் சொல்லி வைப்பேன்

தமிழ் எனக்கு சேமிப்பு வங்கி
சொற்காசுகளை அதில்
சேமித்து வைப்பேன்

தமிழ் எனக்கு ஆரம்பப் பள்ளி
அங்கு தான்  ஆ ஈ
கற்றுக் கொண்டேன்

தமிழ் எனக்கு உயர்நிலைக்கல்வி
இங்கு தான் வார்த்தைகளை ஆளும்
வல்லமை பெற்றேன்

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
செந்தமிழ் மல்லிகையாய்
         நறுமணம் வீசும்
   வண்ண மலர் பூங்காவில்
என் மூச்சு தமிழ் என்று
    முதல் மூச்சை காற்றில்
கலக்க வைத்து
    தமிழ்த்தாய் கருவினில் உதித்து
தமிழ் மண்ணைத் தொட்ட
    தூய தமிழச்சி நான்...

நாடி நரம்புகளில் உதிரமாய்
  ஓடுகிறது என் தமிழ்
இதயத்தின் துடிப்புக்களும்
    உச்சரிக்கின்றன என் தமிழ்...

உதடுகள் கொஞ்சிப்
     பேசும் நம் தமிழ்
காது மடல்களில் தேனாய்
     பாய்வதும் நம் தமிழ்...

தமிழச்சி என்று  சொல்கையிலே
     துள்ளி எழுகிறது கம்பீரம்
இறுதிவரை தமிழராய்
     வாழ்வதே நம் வீரம்

வேற்று மொழிகளின்
      மோகம் இடை வந்தாலும்
உண்மை தமிழனுக்கு என்றும்
      அடங்காது தமிழ்த் தாகம்

நம் உயிர் மாண்டிடினும்
      வையகத்திற்கு சேதி கூறு தமிழா!
ஆகாயம் வீழும் வரை
       தமிழ்த்தாய் வைர மகுடத்துடன்
வீறுநடை போடுவாள் என்று...

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
செந்தமிழ்ப் பாட்டிசைத்து  செல்ல மொழியால்
மெல்லக் கதை பேசி எந்தன் மொழியை
உந்தன் குரலால் அறிந்து கொண்டேன்.

நா தவழும்  அன்னை மொழியை
என்னுள் விதைத்து உயிரின் ஓசை அது
தாய்த்தமிழ் என்றேன்.

அகரமறிந்த கருவில் பிறந்து  தனயன் நானும்
தாயவள் அன்பில் அம்மா என்றழைத்தேன்.

வீரக் குலமகர் இனத்தில் பிறக்கையில்
என் மொழியதன் பெருமை பாடிட
தமிழ் உணர்வொடு என் மொழியினை
பேசிடக் கண்டேன்.........

இலக்கிய இலக்கணச்  சுவைகளை
சுவைத்த பின்புதான் மானுட இனமதில்
செருக்கேதுமின்றி தமிழ் மகன் என்ற
தனித்த பெருமை அடைகிறேன்.

பாரதம் போற்றும் பாரதி
கண்கவர் கவி தொடுத்த கம்பன்
தஞ்சை நிலமதில் வானைத்  தொட்ட
ராஜ சோழன்
ஒளடதமாய் என் தமிழைச்  சூடிய ஒளவை

இவர் மத்தியில் கோடி ஆண்டுகள்
தாண்டி  வாழ்ந்திடும் என் தமிழ்.........
அதைச்  சொல்லச்  சொல்ல
இனிக்குமாம்  என் குரல்.........

ஆங்காங்கே தமிழ் ஒலிக்கையில்
பிறந்திடும் புன்சிரிப்பினில்
உணர்கிறேன்
அதுவே என் தாய்த்  தமிழ்.


உயிரினைக் கொடுத்தேனும்
தமிழ் மொழியினைக் காத்திடுவேன்
என் மொழியினை நிந்தனை செய்யும்
பாதகர்யாரும் இருப்பின்.........

வாரும் ஒரு முறை கவி தொடரும்
நிந்தித்த தம் வாய்கள்
என் மொழியாம் செந்தமிழை
வந்தித்துச்  செல்வீர்............

தித்திக்கும் செம்மொழியே
வந்திக்கும் தாய் மொழியே
எத்திக்கும் என் மொழியே
முந்தி வந்த முதன் மொழியே
என் தாய்த் தமிழே
« Last Edit: April 09, 2018, 12:22:45 AM by AnoTH »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
அ என்ற முதலெழுத்தின்
தாய் மொழி
ஆதி அந்தமில்லா மூத்த
குடிகளின்  செம்மொழி

பெயர் கொண்டு பெருமை
சொல்லும் பழம் மொழி
பேசும் வார்த்தைக்கும் அர்த்தம்
கொடுக்கும் உயிர் மொழி

கலைகளுக்கு ஆசானாகிய
காவிய மொழி
சங்ககாலம் தொட்டு அள்ளி வழங்கும்
வள்ளல் மொழி

மரபு வழி போற்றி வந்த
தமிழர் மொழி
அந்நிய மொழிகளுக்கும்
அன்னமிடும் உலக மொழி

பிறப்பு முதல் இறப்பு வரை
இதுவே வாழ்கை மொழி
என்று மார்தட்டி துணிந்து சொல் தமிழா
அதுவே தமிழ் மொழி!!!!

                 **விபு**

Offline யாழிசை

தொப்புள் கொடி உறவே
தொன்மை வாய்ந்த மொழியே
உன்னைக் கொண்டு நானும்
உலகை ஆள வந்தேன்

கருவில் நானும் இருக்கையில்
கருத்தில் கொண்டேன் உன்னை
அன்னை மொழியும் நீதான்
அமுத ஊற்றும் நீயேதான்

திண்ணையில் அமர்ந்து  பேசுகையிலும்
திட்டித் தீர்த்து களிக்கையிலும்
கண்ணை நானும் மூடுகையிலும்
விண்ணை என்னுயிர் தொடுகையிலும்
காதில் ஒலிப்பது நீயல்லவோ
கன்னித்தமிழின் சுவையல்லவோ...

வல்லமை கொண்டதால் வல்லின த'விலும்
மென்மை மனங்கொண்டதால்
மெல்லின மி'யிலும்
இடையிலிருந்து ஒற்றுமையை நாட்டுவதால் இடையின ழ்'லும்
ஒருங்கே கொண்ட
என் தாய்மொழியே
என் உயிருக்கு நேரான தமிழ் மொழியே.
« Last Edit: April 10, 2018, 07:11:57 AM by யாழிசை »

Offline JeGaTisH

என் உயிருக்கு நேர் என் தாய் மொழி
அதை மிஞ்ச உண்டோ வேறு மொழி.

கருவறையில் இருந்து கற்றது தமிழ்
கல்லறை சென்றாலும் மறக்காத தமிழ்.

தமிழ் என்று சொன்னால் நாவும் இனிக்கும்
நீ தமிழன் என்று சொன்னால் உனக்குள் வீரம் பிறக்கும்.

முதல் தோன்றிய மொழி தமிழ் மொழி என்றாலும்
அதற்கு முன்னுரிமை கொடுக்க யாரும் இல்லை.

ஜந்தறிவு கொண்ட கன்று அம்மா என கதறுகிறது
ஆறறிவு படைத்த மனிதஇனம் மம்மி என .கூறுகிறது

தமிழ் மொழியில் உள்ள வார்த்தை
வேறு மொழிகளில் நீ தேடினாலும் கிடைக்காது .

தொப்புள்கொடி சொந்தங்கள்  பிரிந்திருந்தாலும் 
 பிரச்சனை வருகையில்  ஒன்றுகூடும்  தமிழினம்

தமிழ் அது மொழி மட்டும் அல்ல
உன் அடையாளமும் கூட .



      அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்

Offline SweeTie

தமிழே!! உன்னை  எப்படி அழைப்பேன்?
என் கண்ணில்  வாழும் கருவிழியே  என்பேனா?
சுவாசத்தில் இழைந்தோடும் மூச்சே என்பேனா?
நாக்கில் சுரக்கும் உமிழ்நீரே   என்பேனா?
என்னுள் இரண்டற கலந்த இனியவளே  என்பேனா?

விடியலில் நான் கேட்கும் சுப்ரபாதமதில்   நீ 
நடமாடும் வேகத்தில் என் உறக்கமும் கலைந்துவிடும்
மாலையில் மதி மயக்கும் வீணையின் நாதமதில்
கருவாக  ஆட்கொண்டு  என்னை  நீ காத்திருப்பாய்
துயிலாமல் நானும் பின்தொடர்வேன் உன் நிழலை.

தமிழே!  உன்னை அழகான வரிகளில் பாடினார்கள்
அப்பரும் சுந்தரரும்  மாணிக்கவாசகரும்
அதைகேட்ட  பரமனும்  நிலைமறந்து  ஆடிட்டான்
அவ்வையே தமிழில் என்னைப்பாடு  என குமரனும் கேக்கவே
பாடிய அவ்வையும்  பரமபதம் அடைந்திடடாள்.

உயிரையும் மெய்யையும் கொண்ட நம் தமிழ்  மொழி
உயிரோடு மெய்  புணர்ந்து உயிர்மெய்யும் தந்த மொழி
முப்புள்ளி  .ஃ (ஹ் ) தனையும்  சிறப்பெழுத்தாய் கொண்ட மொழி
வேறெந்த மொழிகளிலும் இல்லாத சிறப்பாம்சம்
நம்மொழிக்கு  உண்டென்று போற்றிடுவோம் தமிழ் மொழியை.

தமிழ் மொழிபோல் இனிதான மொழியில்லை  இவுலகில்
கற்றிடுவீர் தமிழ் மொழியை   கல்வியொடு
பாரதத்தின் புகளோங்க  பரப்பிடுவீர் நம்  மொழியை
வீசட்டும் தமிழ் மணம்  எங்கும்!!  பேசட்டும் தமிழ் மொழியை  யாவரும்!!
வாழ்க நம் தமிழ் மொழி !