Author Topic: எஸ். ராமகிருஷ்ணன்  (Read 17725 times)

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #15 on: June 03, 2013, 09:09:26 PM »
குதிரைகள் பேச மறுக்கின்றன

சிறுகதை

ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என் வீட்டின் வாசல்கதவை திறந்து அவர் நிதானமாக  குதிரையை தென்னை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு எதுவும் நடக்காதவரைப் போல சுவரோரம் உள்ள தண்ணீர் குழாயில் காலைக் கழவிவிட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு நாளிதழைப் புரட்டி படிக்கத் துவங்கினார்.

சவரம் செய்தபடியே அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு குழப்பமாக இருந்தது. நான் ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன். குதிரையே தான். எப்படி அது. நாயை கூட்டிக் கொண்டு தானே வாக்கிங் சென்றார். யாருடைய குதிரை. அதை எதற்காக நமது வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார். விலைக்கு வாங்கிவிட்டாரா இல்லை யாராவது சில நாட்கள் வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார்களா என்று ஆயிரம்கேள்விகள் ஒரே சமயத்தில் மண்டையில் மோதின.

சவரம் செய்வதை பாதியில் நிறுத்தவிட்டு மீனாவைச் சப்தமாக கூப்பிட்டேன். அவள் சமையல் அறையில் எதையோ பொறித்தபடியே இருங்க வர்றேன் என்று பதில் தந்தாள். என் அறையை விட்டு வெளியே வந்து குதிரையை நன்றாகப் பார்த்தேன். அது தலைகவிழ்ந்தபடியே நின்றிருந்தது. கறுப்புநிறம். அராபியக்குதிரை போலிருந்தது. நாக்பூரில் இப்படியான குதிரைகளை பார்த்திருக்கிறேன். அந்த ஊரே அரசர் காலத்திலிருந்து மீளமுடியாமல் இருப்பதுபோலதானிருக்கிறது

பெங்களுரில் உள்ள சில பூங்காகளில் கூட வயதான குதிரைகள்  அலைந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டிருக்கிறது. ஆனால் என் வீட்டின் வாசலில் நின்றது வயதான குதிரையில்லை. அது வாளிப்புடன் திண்ணெனவே இருந்தது. அதன் மயிர் அடர்ந்த வால் அசைந்தபடியே இருக்க தலையை வலப்பக்கமாக சாய்த்தபடியே நின்றிருந்தது.

அப்பா நான் பார்ப்பதைக் கண்டு கொள்ளாதவர் போல பேப்பர் படித்து கொண்டிருந்தார். நான் அந்த அலட்சியத்தைத் தாங்கி கொள்ள முடியாமல் என்ன இது என்று கேட்டேன். அவர் திரும்பிப் பார்த்துவிட்டு குதிரை என்று சொல்லி பேச்சை முடித்து கொண்டார். எதற்காக இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவேயில்லை. யாருடைய குதிரை என்று சற்று குரலை உயர்த்தி கேட்டேன். நம் குதிரை தான் என்று சொல்லிவிட்டு குளிப்பதற்காக தன் அறைக்குள் சென்றுவிட்டார்

நமக்கு குதிரை எதற்கு. ஒரு குதிரை என்ன விலையிருக்கும். யாராவது குதிரை வாங்குவார்களா என்ன? இதை வைத்து ஏதாவது புது திட்டம் வைத்திருக்கிறாரா? வீட்டில் குதிரை வளர்ப்பதை வீட்டு ஒனர் அனுமதிப்பாரா? அதை என்ன செய்வது. அதற்கு என்ன உணவு அளிப்பது. நாளை அப்பா ஊருக்கு போய்விட்டால் அதை என்ன செய்வது என்று குழப்பம் ஊற்று எடுக்க துவங்கியது. இதற்குள் மீனா வெளியே வந்து குதிரையின் அருகில் சென்று அதை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

பிறகு என்னிடம் உங்களுக்கு குதிரை ஒட்டத் தெரியுமா என்று கேட்டாள். நான் முறைத்தபடியே எதற்கு என்றேன். உங்களுக்காகத் தானே உங்கப்பா குதிரை வாங்கிட்டு வந்திருக்கார் என்று கேலி செய்தாள். அவளிடம் இந்தக் குதிரையை என்ன செய்வது என்று நீயே கேள் என்று கத்தினேன்.  அவள் மறுபடியும் கேலியாக இதிலேயே உங்கப்பா சொந்த ஊருக்கு கிளம்பிப் போனாலும் போவாரா இருக்கும் என்றாள்.

அப்பாவை அவள் அடிக்கடி பரிகாசம் செய்கிறாள். குத்திக்காட்டுகிறாள் என்று எனக்கு கோபமாக வருகிறது ஆனால் அதைப் பற்றி பேசினால் உடனே சண்டை துவங்கிவிடும் என்பதால் நான் பல்லைக்கடித்தபடியே குதிரையைப் பார்த்து கொண்டிருந்தேன். அப்பா குளித்துவிட்டு ஈரத்தலையைத் துவட்டியபடியே வெளியே வந்து நின்றார். நரைத்து போன தலைமயிர்கள். களைத்து போன கண்கள். அப்பா  குதிரையை மிக பரிவோடு பார்த்து கொண்டிருந்தார்.

நான் அவர் முன்னால் போய்நின்றபடியே நமக்கு எதுக்குப்பா குதிரை என்று கேட்டேன். அவர் நீ எதுக்காக நாய் வளர்த்தியோ அது போல தான் இதுவும் என்றார். நாய் வீட்டை பாதுகாக்கும். குதிரை பாதுகாக்குமா என்று கோபமாக கத்தினேன். பாதுகாக்காது என்று உனக்கு எப்படி தெரியும். நீ எத்தனை குதிரைகள் வளர்த்திருக்கிறாய் என்று அமைதியாக கேட்டார். யாராவது வீட்ல குதிரை வளர்க்கிறார்களா என்று மறுபடி சப்தமிட்டேன்.  நூறு வருசத்திற்கு முன்பு வரை குதிரை வசதியான எல்லோர் வீட்டிலும் இருந்தது தானே என்றார்

என்ன பைத்தியக்காரன தனமான பேச்சிது. வாகனங்கள் இல்லாத காலத்தில் குதிரைகள் வைத்திருத்திருந்தார்கள். அதில் ஏறிப் பயணம் சென்றார்கள். இப்போது தான் விதவிதமான கார்களும் பைக்கும் வந்துவிட்டதே. பிறகு எதற்கு என்று ஆத்திரமாக வந்தது. இந்தக் குதிரை உங்களுக்கு எப்படி கிடைச்சது  இது யாருடையது என்று உண்மையை சொல்லுங்கள். இல்லாவிட்டால் நான் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்று கத்தினேன் . அவர் மிக நிதானமாக இது நம்ம டிங்கி தான். அது தான் குதிரையாக மாறிவிட்டது என்றார்

சின்னபிள்ளையைப் போல பொய் சொல்கிறாரே என்று எரிச்சலும் கோபமும் பீறிட்டது. நாய் எப்பிடிப்பா குதிரையா மாறும் என்று முறைத்தேன். அவர் குதிரையின் அசைந்து கொண்டிருக்கும் இடதுகாதை காட்டி அதில் எல் என்ற எழுத்தை போல உள்ள முத்திரையை சுட்டிக்காட்டி இது டிங்கி காதுலயும் இருந்தது இல்லையா என்றார். அது உண்மையே. என்னுடைய நாயின் காதில் எல் என்ற எழுத்து போல அடையாளம் இருந்தது  அது எப்படி குதிரை காதிற்கு வந்திருக்கிறது.

நான் அருகில் சென்று காதை உன்னிப்பாக் பார்த்தேன். அப்படி அச்சு அசலாக அது நாயின் காதில் இருந்தது போலவே காணப்பட்டது. அத்துடன் குதிரை என்னை பார்த்தவுடன் நட்போடு வாலையும் அசைத்தது.   என்ன கர்மமிது. ஒரு நாய் எப்படிக் குதிரையாக மாற முடியும். அது ஒரு போதும் சாத்தியமில்லை. யாராவது அப்பாவை ஏமாற்றியிருக்கிறார்களா அல்லது அப்பாவிற்கு ஏதாவது மனப்பிரச்சனையா என்று குழப்பமாக இருந்தது.

அப்பா வழக்கம் போல காய்கறிகள் வாங்கிவருவதற்காக கூடையுடன் கிளம்ப தயராக இருந்தார். நான் அவரை வழிமறித்து முதல்ல நாயை என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க என்றேன். அவர் எப்பவும் போல வாக்கிங் கூட்டிக் கொண்டு போனேன் என்றார். எங்கே போனீங்க. என்ன செஞ்சீங்கனு என் கூட கார்ல வந்து காட்டுங்க என்று கத்தியபடியே  காரை வெளியே எடுத்து அப்பாவை ஏற்றிக் கொண்டேன்.

அப்பாவின் முகம் இறுக்கம் அடைந்து போனது. அவர் மெதுவான குரலில் வழி சொல்லிக் கொண்டே வந்தார். முக்கால்வாசி பெங்களுரை சுற்றிவந்து மைசூர் சாலையில் கார் செல்ல துவங்கியது. இவ்வளவு தூரம் அப்பா தினமும் நடந்துவருகிறாரா. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகத்துடன் அவர் சொன்ன வழியில் சென்று கொண்டேயிருந்தேன். சாலை ஒரு இடத்தில் பிரிந்தது. அப்பா அந்தக் கிளைவழியாக செல்லும்படி சொன்னார். கார் மெதுவாக சென்றது. மரங்கள் அடர்ந்த சாலை வரத்துவங்கியது. அதன் உள்ளே சென்றதும் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வரச்சொன்னார்.

பத்து நிமிசம் நடந்திருப்பேன். நாணல புதர்வளர்ந்து போன பகுதியாக இருந்தது. அதை தாண்டி உள்ளே சென்றால் சிறிய ஏரி. அதைச் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். ஜில்லென அந்த இடம் குளிர்ச்சியேறியிருந்தது. ஒரேயொரு வாத்து நீரில் நீந்தியபடியே சென்று கொண்டிருந்தது. ஏரி தண்ணீரில் சலனமேயில்லை. ஆகாசம் நீரில் மின்னிக் கொண்டிருந்தது. இவ்வளவு அமைதியும் அழகுமான இடத்தை அப்பா எப்படிக் கண்டுபிடித்தார். ஆறுவருசமாக பெங்களுரில் எத்தனையோ கிளப்புகள், கொண்டாட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். இது போல ஒன்றை கண்டதேயில்லை. அப்பா எப்போதும் தான் அமரும் கல் என்று ஒன்றை காட்டினார்.

அதில் பாதி தண்ணீருக்குள் முழ்கியிருந்தது. அப்பா அதில் உட்கார்ந்து கொண்டு தன் காலை தண்ணீரில் விட்டு கொண்டார். சட்டென அவருக்கு வயது கலைந்து போய் பத்துவயதுச் சிறுவனை போலதோன்றினார். அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நான் அமைதியாக அந்த இடத்தை பார்த்தபடியே இருந்தேன். கேமிராவை கொண்டுவராமல் போய்விட்டோமே என்று மனதில் தோன்றியபடியே இருந்தது.

வந்த வழியை கவனமாக பார்த்து வைத்து கொண்டுவிட்டால் நாளை மீனாவை அழைத்துகொண்டு வரலாம் என்றும் தோன்றியது. அப்பா என்னிடம் பேசவேயில்லை. அவர் மௌனமாக ஏரியைப் பார்த்தபடியே இருந்தார். அப்படி என்ன இருக்கிறது ஏரியில் என்று தெரியவில்லை. நான் அங்கிருந்த மரங்களின் ஊடே நடந்து சென்றேன். சப்தமேயில்லை அது ஏதோவொரு தனித்தீவு  போல இருந்தது..  அப்பாவை போல பலரும் அங்கே வரக்கூடும் போலும். ஒரு இடத்தில் தூண்டில் ஒன்று சொருகி வைக்கபட்டிருப்பதை கண்டேன்

அரைமணி நேரமாகியிருக்க கூடும். அப்பா தண்ணீரை பார்த்தபடியே இருந்தார். அருகில் போய் நின்று இங்கே நாய் எப்படி குதிரையாக மாறியது என்று கேட்டேன். நாயைத் தனியே அலைய விட்டுவிடுவேன். வீடுதிரும்பும் போது அது தானாக என்னைத் தேடிவந்துவிடும். இன்றும் அப்படி தான் நடந்தது. ஆனால் அது திரும்பிவரும்போது குதிரையாக மாறி இருந்தது என்றார்.

அது தான் எப்பிடி நடந்தது என்று கேட்டேன்.  எனக்கு அதைப் பற்றி யோசிக்க விருப்பமில்லை. அது நமது டிங்கி என்று பார்த்தவுடனே தோன்றியது. வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் என்றார். ஏன் இப்படி முட்டாள்தனமாகப் பேசுகிறார் என்று ஆத்திரமாக வந்தது

அது ஒருவேளை வேறு யாருடைய குதிரையாகவோ இருந்திருந்தால். அவர் நாளை நம்மைத் தேடி வந்து கேட்கமாட்டாரா என்று கேட்டேன். அப்பாவிடம் பதில் இல்லை. நாய் அப்பாவிடமிருந்து தப்பி எங்கோ ஒடிபோயிருக்க கூடும். அதைச் சமாளிக்க அப்பா ஒரு குதிரையை அழைத்து வந்து நாடகம் ஆடுகிறாரோ என்று கூட தோன்றியது. அப்பா ஆனால் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு அவரது பேச்சு அலுத்துப் போகத் துவங்கியது. நாங்கள் வீடு திரும்பிய போது அண்டை அடுக்குமாடி வீட்டில் இருந்தவர்கள் தங்கள் ஜன்னல்களை திறந்து எங்கள் குதிரையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மட்டும் குதிரை அழகாக இருக்கிறது அங்கிள் என்று பாராட்டினாள். நான் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றேன். இதை என்னசெய்வது. எப்படிச் சமாளிப்பது என்று தலைவலிக்க துவங்கியது. மீனாவிற்கு டிங்கிக்கு என்ன ஆனது என்ற கவலை பிடித்து கொண்டது. அந்த நாயை வாங்கியவள் அவள். டிங்கி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்

பகலில் தனியாக இருக்கும் வீட்டினைப்  பாதுகாக்க நாய் தேவைப்பட்டது. நானும் மீனாவும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறோம். வேறு வேறு அலுவலகங்கள். ஆகவே இருவரும் காலை எட்டு இருபதிற்குள் வீட்டில் இருந்து கிளம்பிவிட வேண்டும்.  பகல் முழுவதும் வீட்டைப் பார்த்துக் கொள்வது நாய் மட்டுமே.  அதற்கான உணவும் தண்ணீரும் வெளியே ஒரு தட்டில் போட்டு வைக்கபட்டுவிடும். அது நாள் முழுவதும் வாசல்படியை ஒட்டியே தான் படுத்து கொண்டிருக்கும். பகலில் நாய் என்ன செய்து கொண்டிருக்கும் என்று நாங்கள் யோசித்ததே கிடையாது. நாங்கள் நாயை வெளியே அழைத்து போக நேரமும் இருப்பதில்லை.

டிங்கியை வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக மட்டுமே அப்பா ஊரில் இருந்து கிளம்பி வருகிறாரோ என்று சந்தேகப்படும் அளவில் அப்பா இரண்டுவாரம் ஒரு முறை ஊரிலிருந்து வீட்டிற்கு வந்துவிடுகிறார். தினமும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் அதை நடத்தி கூட்டி கொண்டு செல்வார். முழுபெங்களுரையும் சுற்றிவிட்டு தான் திரும்புவார்கள் போலும். எப்படியும் நடைபயிற்சி முடித்து திரும்பி வர மூன்று மணிநேரமாகும். அதன்பிறகு நாயின் சுபாவம் ஒருவாரத்திற்கு உற்சாகத்துடன் இருக்கும்.

அப்பா எங்களுடன் இல்லை. அவருக்கு இந்த ஏப்ரலோடு எழுபத்திமூன்று வயதாகிறது. அவர் தனியாக சொந்த கிராமமான செவல்பட்டியில் வசிக்கிறார்.  இருபத்தியாறு வயதுவரை தனியாக வசித்து வந்த அவர் நாக்பூரில் அம்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு போதும் தனியாக இருந்ததேயில்லை.

வீட்டில் அம்மாவும் நான்கு குழந்தைகளும் அத்தையும் அவர்களது மூன்று பிள்ளைகளும் என்று நாங்கள் பெரிய குடும்பமாக இருந்தோம். ஐம்பது வருசங்களுக்கு முன்பாக தனி ஆளாக அப்பா நாக்பூருக்கு வந்துசேர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணியில் இருந்த திரவியம் மாமாவின் ஆலோசனையாக இது இருக்க கூடும். அதை பற்றியெல்லாம் அப்பா பேசிக் கொண்டதேயில்லை.

ஆனால் மொழியறியாமல் தன் இருபது வயதில் அப்பா நாக்பூரில் போன்ஸ்லேயின் ஆரஞ்சு மண்டியில் வேலை  செய்திருக்கிறார். தள்ளுவண்டியில் பழங்களை விற்று பிழைத்திருக்கிறார். ரகுஜிராவ் என்ற நண்பரின் உதவியால் அப்பா ஆரஞ்சு ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்த போது வயது இருபத்தியாறு. அதன்பிறகு அவர் வேலை மாறவேயில்லை. ஆனால் நாக்பூருக்கு வந்த ஆறு ஆண்டுகளில் அப்பா எங்கேதங்கியிருந்தார் எப்படி வாழ்ந்தார் என்பதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை.

என் அம்மாவின் பெயர் சாந்த துர்கா, அவர் மராத்தியைச் சேர்ந்தவர். அவரைத் திருமணம் செய்து வைக்க அப்பாவிற்கு உதவியது லட்சுமண் ரானே என்று சொல்வார்கள். வீட்டில் அவரது ஒரு புகைப்படம் இருக்கிறது. நாங்கள் பிறப்பதற்கு முன்பாக அவர் இறந்து போயிருந்தார். அம்மாவின் கிராமத்தில் இருந்து தான் அப்பாவின் மண்டிக்கான ஆரஞ்சு பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தன. அந்த தொடர்பில் அவர் கிராமத்திற்கு சென்றிருக்க கூடும். அம்மாவைப் பற்றி அறிந்திருக்ககூடும். இவை எல்லாம் எங்களது யூகங்கள். அம்மா தன் திருமணத்தின் முன்பு அப்பாவை பற்றி ஒரு வார்த்தை கூட கேள்விபட்டதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறாள்.

எப்படி உங்கள் திருமணம் நடந்தது என்று கேட்டபோது அவளது அப்பா இறந்து போய் மாமாவீட்டில் வசித்து வந்ததால்  திருமணம் பற்றி யாரும் அவளிடம் ஆலோசிக்கவேயில்லை என்று சொல்வார். அப்பாவிற்கு யாரையும் கடிந்து கொள்ளவோ கோபப்படவோ பிடிக்காது. அவர் ஒரு நிழலை போலவே நடந்து கொள்வார்.

அவர் வீட்டிற்குள் வருவதும் போவதும் கூட சப்தமில்லாமல் தான் நடக்கும். யோசனை. தீராத யோசனை அவர் முகத்தில் எப்போதுமிருப்பதை கண்டிருக்கிறேன். நான் வீட்டின் கடைசிபிள்ளை.நான் பிறந்த பிறகே அம்மா மிகவும் நோய்வாக படத் துவங்கினார். அதன்பின்னான ஏழு வருசங்களில் அம்மா இறந்து போனார். எங்களை பார்த்து கொள்வதற்காக ஊரில் இருந்து அத்தையும் குடும்பமும் எங்களுடன் சேர்ந்து வாழ துவங்கினார்கள்.

நானும் அக்காக்களும் நாக்பூரில் படித்தோம். பிறகு நான் டெல்லிக்கு படிக்க சென்றேன். அப்பா ஒரேயொரு முறை என்னைப் பார்க்க டெல்லி என்ஜினியரிங் கல்லூரிக்கு வந்திருந்தார். அன்று நான் காலை ஏழு மணிக்கே பயிற்சிவகுப்பிற்கு சென்று விட்டதால்  விடுதியின் வெளியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் காலை முதல் மாலை ஆறு வரை உட்கார்ந்திருந்திருக்கிறார். அதைப்பற்றி என்னிடம் ஒரு வார்த்தை சலித்து கொள்ளவில்லை. எனக்குத் தேவையான பணத்தை தந்துவிட்டு இரவே அவர் ஊருக்கு புறப்பட்டும் போனார். அவ்வளவு தான் அவரை பற்றிய எனது நினைவுகள் . மற்றபடி அவரை நான் நெருக்கமாக உணரவேயில்லை. எனக்கு வேலை கிடைத்து பெங்களுர் வந்து அப்பாவின் விருப்பபடியே மதுரையில் படித்த தமிழ்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஆறுவருசமாக பெங்களுரில் வசித்து கொண்டிருக்கிறேன்.

அப்பாவிற்கு எங்கள் யாரோடும் சேர்ந்து இருப்பதற்கு பிடிக்கவேயில்லை. அதை என் பெரிய அக்கா ஒரு முறை அவரிடமே சொல்லியும் விட்டாள். அதற்கு அப்பா தூரத்தில் வசிக்கும் போது மட்டும் தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைப்பு வருகிறது. அருகில் இருந்தால் வேறு யாரையோ போலிருக்கிறீர்கள் என்றிருக்கிறார். அப்படிதான் அப்பாவின் பேச்சு எப்போதுமிருக்கும். அது இயல்பானதா அல்லது தன்னை மறைத்து கொள்ள அப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. நானே சில வேளை அப்படி பேசுகிறேன் என்று என் மனைவி சொல்கிறாள். எதற்காக இந்த பழக்கம்.

அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளபடாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும். சொற்ப வருமானத்தில் பெரிய குடும்பம் ஒன்றை வளர்த்து காப்பாற்றிவருவது எளிதானதில்லை. யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது. சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையை தந்து அவரைக் காரில் அழைத்து கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள் வாங்கி தந்து அன்பாக வைத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்தக் கனவுகுமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.

அப்பா வயதாக ஆக எதை எதையோ நம்பத் துவங்குகிறார் என்பதற்கு முதற்சாட்சி நாக்பூரை விட்டு நாங்கள் காலி பண்ணியது. அப்பா திடீரென ஒரு நாள் காலை தான் சொந்த ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியிருக்கப் போவதாக சொன்னார்.  எனக்கும் தங்கைகள் எவருக்கும் அந்த யோசனை பிடிக்கவில்லை.   தன்னுடைய கனவில் அந்த ஊர் திரும்ப திரும்ப வருவதாக  சொல்லிய  அப்பா அடுத்த வாரமே செவல்பட்டிக்கு சென்று வீடு ஒன்று கட்ட துவங்கிவிட்டார். மூன்றே மாதங்களில் நாக்பூரில் நாங்கள் வசித்து வந்த பூர்வீக வீடு விற்கபட்டு எங்களது நாற்பத்தியோறு வருட நாக்பூர் வாழ்க்கை முடிந்து போனது.

சொந்த ஊரில் என்ன இருக்கிறது. அப்பா இருபது வயதில் ஊரைவிட்டு ஒடிப்போனவர் என்பதால் அங்கிருந்த யாருக்கும் அவரோடு உறவில்லை. அப்பாவைத் தவிர மற்ற உறவினர்கள் ஊரை காலி செய்து அருகாமை நகரங்களுக்கு போய்விட்டார்கள். ஆகவே உறவினர்களும் அங்கில்லை. அந்த கிராமத்திற்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே போய்வருகிறது. நிறைய புளிய மரங்கள் அடர்ந்த ஊரது. எதற்காக அங்கே குடியிருக்க வேண்டும். ஏன் இந்த தடுமாற்றம். அப்பா அதைச் சொல்வதேயில்லை. அவராக எதையோ கற்பனை செய்து கொள்கிறார். பேசமறுக்கிறார் என்று ஆத்திரமாகவே இருக்கிறது.

அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே அவர் நாய் தான் குதிரையாக மாறிவிட்டது என்று சொல்வதாக நினைத்தேன். அன்று பகல் முழுவதும் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அப்பா நாள் எல்லாம் குதிரையின் அருகிலே உட்கார்ந்திருந்தார். அதன் உடலை சுத்தம் செய்தார். அதற்குத் தேவையான குடிநீரை வாளியில் பிடித்து வைத்தார். மீனா அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று உறுதியாக சொன்னாள்.

யாரிடம் இதைப்பற்றி பேசலாம் என்று தெரியாமல் என்னோடு வேலைபார்க்கும் வித்யாகருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவன் குதிரையை தனது பையன் நெடுநாட்களாக பார்க்க வேண்டும் என்று சொல்லி மாலை வீட்டிற்கு வருகிறேன். நேரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி பேச்சைத் துண்டித்துவிட்டான்.

மாலை வித்யாகர் குடும்பம் வந்திருந்தது. குதிரையை அவன் வான் உயர புகழ்ந்து தள்ளினான். அது போன்ற குதிரையின் விலை பத்து லட்சமிருக்க கூடும் என்று சொல்லி உன் அப்பா பெரிய அதிர்ஷடத்தை கொண்டுவந்திருக்கிறார் என்று பாராட்டினான். குடும்பமே குதிரையின் முன்பாக புகைப்படம் எடுத்து கொண்டார்கள். அவன் அப்பாவிடம் தனக்கு குதிரைகள் பற்றியுள்ள ஞானம் முழுவதையும் கொட்டித் தீர்த்தான். அப்பா அதில் சலனமடையவேயில்லை.

இரவில் மீனா நாளை நாம் என்ன செய்வது என்று கேட்டாள். எதற்கு என்று புரியாமல் கேட்டேன். காலை ஆறுமணி ரயிலில் உங்கள் அப்பா ஊருக்கு கிளம்பி போய்விடுவார். நீங்கள் ஒருநாள் விடுமுறை எடுத்து கொண்டு இந்த குதிரையைக் காலி செய்யப்பாருங்கள் என்றபடியே புரண்டு படுத்து கொண்டாள். குதிரையை என்ன செய்வது என்ற எண்ணம் மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது. தூக்கம் பிடிக்கவேயில்லை. காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா ஊருக்கு கிளம்பி போயிருந்தார்.

குதிரை அதே இடத்தில் நின்றிருந்தது.  நான் அன்று ஒருநாள் விடுமுறை போட்டேன். என்னிடம் உள்ள ஒவ்வொரு தொலைபேசி எண்ணாக பேசிபேசி குதிரையை என்ன செய்வது என்று திட்டமிட துவங்கினேன். அதைப் பற்றி காவல்துறையில் புகார்செய்ய வேண்டும் என்று ஒரு நண்பன் மிரட்டினான். அதை விற்க முடியாது சிக்கல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை ஏதாவது ஒரு சேவைநிலையத்திற்கு தள்ளிவிடு என்றொரு ஆலோசனை வந்தது. என்ன செய்வது என்று முடிவாக எதுவும் தெரியவில்லை.

திடீரென குதிரை நேற்றில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்ற யோசனை தோன்றியது. குதிரை சாப்பிட என்ன தருவது. எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. வீட்டில் உள்ள காய்கறிகளை ஒரு காகிதத்தில் அள்ளி போட்டு அதன்முன்னே வைத்தேன். அது எதையும் சாப்பிடவில்லை. ஒரு குதிரை என்ன சாப்பிடும் எவ்வளவு சாப்பிடும், எப்போது உறங்கும், என எந்த விபரமும் தெரியவில்லை. அது குதிரை என்ற பெயர் மட்டுமே தெரிந்திருக்கிறது

உடனே கம்ப்யூட்டரில் குதிரையை பற்றிய அடிப்படை விபரங்களை தேடத் துவங்கினேன். ஆயிரமாயிரம் பக்கமாக நீண்டு போய்க் கொண்டேயிருந்தது. குதிரைகளின் வியப்பான சரித்திரத்தை அது என்றாவது நினைவில் கொண்டிருக்குமா. நினைத்து வேதனை அடையுமா என்ற நினைப்போடு குதிரைகளின் புகைப்படங்களை பார்த்தபடியே இருந்தேன். அதில் ஒரேயொரு தகவல் குதிரை சாப்பிடுவதற்கென தனியான புல் மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றிருந்தது. அதன் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு எனது குதிரைக்கான புல்வேண்டும் என்று ஆர்டர்  செய்தேன்.

உண்மையில் என்னுடைய குதிரை என்று சொல்வதற்கு கூச்சமாகவே இருந்தது. இரண்டு மணிநேரம் சென்று ஒரு வேனில் புற்கட்டுகள் வந்து இறங்கியது. ஒரு வயதானவர் அதை எடுத்து வந்து என் குதிரையின் முன்னால் போட்டுவிட்டு குதிரை நன்றாக இருக்கிறது என்ன வம்சமது என்று கேட்டார். நான் அது என் அப்பாவின் குதிரை என்று மட்டும் சொன்னேன். அவர் என் அப்பாவை ஒரு ராஜா போல கற்பனை செய்து கொள்ளக் கூடும். அது ஏனோ எனக்கு பிடித்திருந்தது. இனிமேல் யாராவது கேட்டால் அது என் அப்பாவின் குதிரை என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

குதிரை அமைதியாக புல்லைத் தின்றபடியே நின்றிருந்தது. அதன் அருகாமையில் போய் தொட்டு பார்த்தேன். இதன்மீதேறி தான் மனிதர்கள் நூற்றாண்டுகாலமாக பயணம் செய்திருக்கிறார்கள். சண்டையிட்டிருக்கிறார்கள். பந்தயம் கட்டி ஒட விட்டிருக்கிறார்கள். இன்று இயந்திரங்கள் இந்தக் குதிரைகளை நம் கவனத்தில் இருந்து முழுவதாக அப்புறப்படுத்திவிட்டதே என்று தோன்றியது.

குதிரையின் கண்களை கவனித்தேன். எவ்வளவு சாந்தம். நாயின் கண்களில் இல்லாத அமைதியது. அது சாப்பிடுவதில் கூட அதிக விருப்பம் கொள்ளவேயில்லை. அதன் நெற்றியில் கைவைத்து தடவிவிட்டேன். குதிரையை நெருங்கிப் பார்க்கும் போது நானே சிறுவனாகிவிட்டது போல தோன்றியது. சிறுவயதில் ஒரு மரக்குதிரை ஒட்டியிருக்கிறேன். இப்போது தான் நிஜக்குதிரையை தொட்டு தடவி பார்க்கிறேன். அதன் முதுகு எலும்புகள் இரும்பை போல உறுதியாக இருந்தன.  பகல் முழுவதும் குதிரையைப் பார்த்து கொண்டேயிருந்தேன்.

மீனா அலுவலகம் விட்டு திரும்பியதும் குதிரை அதே இடத்தில் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்தாள். தான் உடனே கிளம்பி ஊருக்கு போகப் போவதாக மிரட்டினாள். உனக்கு எதற்காக குதிரையை பிடிக்கவில்லை என்று கேட்டேன். அவள் அது நாய்போல இல்லையே என்று சொன்னாள். இல்லை இதோடு நாம் இன்னமும்பழகவில்லை என்று சொன்னேன்.  உங்கள் அப்பாவை போலவே பேசாதீர்கள். எனக்கு குதிரைகள் வேண்டாம். நாம் என்ன நெப்போலியனா, இல்லை ராஜாதேசிங்கா குதிரையில் போக என்று கேட்டாள்.

அவள் சொன்னபிறகு தான் பெருமைக்குரிய குதிரை வைத்திருந்தவர்கள் பற்றிய தகவல்கள் மண்டைக்குள் பீறிட துவங்கின. இரண்டு நாளில் அந்தக் குதிரையை எப்படியாவது அனுப்பிவிடலாம் என்று சமாதானம் சொன்னேன். இரவில் அவள் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் போனில் குதிரை பற்றியே பேசிக் கொண்டேயிருந்தாள். நான் மறுபடி அப்பாவை போனில் கூப்பிட்டு இது யாருடைய குதிரை உண்மையை சொல்லிவிடுங்கள் என்று கேட்டேன். அப்பா  அது நமது டிங்கியே தான் என்றார். ஒரே பொய்யை ஏன் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் என்று கத்தினேன். மறுமுனையில் பேச்சேயில்லை.

மறுநாள் நாங்கள் குதிரையை பற்றி யோசிக்க கூடாது என்று முடிவுசெய்து காலை அவசரமாக  வீட்டை பூட்டிக் கொண்டு அலுவலகம் சென்றோம். பகலில் வேலையின் நடுவில் குதிரை என்னவாக இருக்கும் என்ற யோசனை தோன்றி மறையும். ஆனால் அதை பற்றி நினைக்க கூடாது என்று கறாராக இருந்தேன். மாலை வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் பெரிய கூட்டம் நின்றிருந்தது. அத்தனையும் குதிரையை வேடிக்கை பார்க்கும் கூட்டம். அருகாமை வீட்டின் கூர்க்கா தான் கேட்டை தாண்டி போய் குதிரைக்கு குடிதண்ணீர் வைத்ததாக விளக்கம் தந்து கொண்டிருந்தான்.  குதிரையை நானே கொண்டுபோய் எங்காவது விட்டுவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து அதை கையில் பிடித்து கொண்டு நடக்க துவங்கினேன்

வீதியில் குதிரையோடு நான் செல்வதை மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று தோன்றியது. குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துகொண்டு நடப்பது அவமானமாக இருந்தது. அதை சகித்தபடியே நடத்தி கொண்டு சென்றேன். எங்கே கொண்டுபோய்விடுவது என்று தெரியவில்லை. வழியில் ஒரு பயம் வந்தது. ஒருவேளை அப்பா அடுத்தவாரம் திரும்பிவந்து அந்த குதிரை யாருடையது என்ற உண்மையை சொல்லிவிட்டால் திரும்பி கொடுக்க என்ன செய்வது. குதிரையைக் கொடுக்க முடியாவிட்டால் பத்து லட்சம் பணம் அல்லவா தர வேண்டியது இருக்கும். நான் குதிரையோடு வீடு திரும்பிய போது இரவாகியிருந்தது.

குதிரையை நான் ஏன் வெறுக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அன்றிரவு குதிரைகளைப் பற்றி நிறைய படித்தேன். உயிருடன் கம்பீரமாக என் வீட்டின் வாசலில் நிற்கும் அதை ஏன் நான் அலட்சியப்படுத்துகிறேன் என்று குழப்பமாக இருந்தது.

இரண்டுநாட்களில் அந்த குதிரை எங்கள் வீட்டின் அடையாளமாகி போனது. கூரியர் ஆள், காய்கறிவிற்பவன், கேஸ்சிலிண்டர் கொண்டுவருபவன் என எல்லோரும் அதை நேசித்தார்கள். அதற்கு என்ன பெயர் என்று ஆசையாக கேட்டார்கள். அடுத்த மாதம் தனது தம்பி திருமணத்திற்கு அந்த குதிரையை இரவல் தர முடியுமா என்று தபால்காரன் அன்போடு கேட்டான். தலையாட்டிக் கொண்டேன். என் மனைவிக்கு குதிரையை பிடிக்கவேயில்லை. பூனை நாயை கூட பிடிக்கும் அவளுக்கு குதிரை மீது ஏன் இவ்வளவு வெறுப்பு.

குதிரைக்கு தினமும் ஒரு கட்டு புல்லும், குடிதண்ணீரும் வைக்கும் வேலையை நானே ஏற்றுக் கொண்டேன். சிலவேளைகளில் அதன் வயிற்றை தடவிவிடுவேன். நெற்றியில் விரலால் அழுத்தி கொடுப்பேன். குதிரைசாணத்தின் நாற்றத்தை என் மனைவியால் சகித்து கொள்ள முடியவேயில்லை. அதையும் நானே சுத்தம் செய்ய துவங்கினேன். குதிரையை நம்பி வீட்டை விட்டு சென்றேன். குதிரையோ வந்த நாளில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது.

சில நாட்களில் எனக்கு குதிரையைப் பிடித்துபோக துவங்கியது. அதை நேசிக்க ஆரம்பித்தேன். அப்பாவை போல அதை நானும் வாக்கிங் கூட்டி செல்ல முடியுமா என்று நினைத்தேன். சிறுவர்களை குதிரையோடு விளையாட அனுமதித்தேன். அண்டை வீட்டோர் என்னை புரியாமல் பார்த்தார்கள்.

ஒரு வெள்ளிகிழமை இரவு எப்போதும் போல அப்பா பிறகு வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர் குதிரை எப்படியிருக்கிறது என்று தான் கவனித்தார். பிறகு அவர் அதை காலையில் தான் வாக்கிங் அழைத்து செல்வதாக சொல்லியபடியே நெருங்கி உட்கார்ந்து கொண்டார். இரவில் அப்பா குதிரையோடு ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

காலையில் நான் எழுந்து கொள்வதற்குள் அப்பா குதிரையை அழைத்து கொண்டு வாக்கிங் சென்றிருந்தார். என் மனைவி தனது தோழியின் வீட்டிற்கு போக கிளம்பி கொண்டிருந்தாள்.காலை ஒன்பது மணியிருக்ககூடும். அப்பா திரும்பிவருவது தெரிந்தது. அப்பாவின் கையில் டிங்கியிருந்தது. குதிரை எங்கே போனது. எப்படி நாய் திரும்பவந்தது என்று திகைப்பாக இருந்தது.

அப்பா மிக இயல்பாக  நாயை அதன் இடத்தில் கட்டிவிட்டு  வரவேற்பறையில் அமர்ந்து பேப்பர் படிக்க துவங்கினார். தனது நாயை பார்த்த சந்தோஷத்தில் மீனா டிங்கியை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். நான் அப்பாவிடம் குதிரை எங்கே போனது என்று கேட்டேன்.

குதிரை மறுபடியும் நாயாக மாறிவிட்டது என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரிடம் வேறு கேள்விகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. நாயை கண்டுகொள்ளாமல் குளிக்க சென்றேன்.

இரும்பு கேட்டின் வெளியே சிறுவர்கள் குதிரையைத் தேடி வந்து விசாரித்து கொண்டிருப்பது கேட்டது. அப்பா சொல்வது எல்லாம் உண்மை என்று எனக்கு அப்போது தோன்றியது. நாய்களைப் போல ஏன் குதிரை தன் இருப்பை காட்டிக் கொள்ள சப்தமிடுவதோ கத்துவதோ இல்லை என நான்  குதிரையை பற்றியே நினைத்துகொண்டிருந்தேன். என்னை அறியாமல் மனதில் வலி கவ்வியது. அப்பா எப்போதும் போல காய்கறி வாங்க கூடையுடன் வெளியே கிளம்பி போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

**

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #16 on: June 03, 2013, 09:13:19 PM »
சீட்டாட்டம்

சிறுகதை

இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்,

அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற்றும் உணவு அப்படியே சாப்பிடப்படாமல் இருக்கின்றன, சில நேரம் சிகரெட் தேவை என்ற குறிப்பு ஜன்னலில் சொருகப்பட்டிருக்கிறது, அந்தச் சமையற்காரன் உள்ளே விளையாடும் மூவரையும் பார்த்ததேயில்லை ஆனால் அவர்களைப் பற்றி அவனாக நிறையக் கற்பனை செய்து வைத்திருக்கிறான்

அவர்கள் மூவரும் சீட்டாடத்துவங்கிய போது மூன்று நிபந்தனை விதித்தார்கள், முழுமையாக ஒருவர் வெற்றி பெரும்வரை ஆட்டத்தைப் பாதியில் விட்டு எவரும் விலகிப் போக கூடாது. விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது, சீட்டாட்டம் முடிவுக்கு வரும்வரை அந்த அறையின் கதவு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை,

அந்த மூவருக்கும் பெயர்கள் இருந்த போதும் அவர்கள் 3, 6, 9 என அவர்களின் விருப்பமான எண்களால் அழைக்கப்படவே விரும்பினர், மூன்றாம் எண் உள்ள அந்த ஆள் இருபத்தியோறு வயது நிரம்பியிருந்தான், அதிகம் குடித்து அலையும் அவன் நான்குமுறை காதல் தோல்வியடைந்திருந்தான், ஆறாம் எண் உள்ளவன் ஒரு வணிகன், அவன் மனைவி அழகானவள், அவளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான், அவளது அழகு நெருப்பைப் போல காண்பவரைப் பற்றிக் கொண்டுவிடுகிறது என்று சந்தேகம் கொண்டவானயிருந்தான், ஒன்பதாம் எண் உள்ளவன் நாற்பது வயதான ஒரு உயர் அதிகாரி அவன் மற்றவர்களைத் தோற்கடிப்பதில் ஏற்படும் சந்தோஷத்திற்காகவே சீட்டில் ஆர்வம் கொண்டிருந்தான், இவர்கள் மூவரும் ஒன்பதாம் எண் உள்ளவனின் ரகசியத் தோழியான வினி என்பவள் வீட்டினைச் சீட்டு விளையாடத் தேர்வு செய்தார்கள்,

சீட்டாட்டத்தில் அவர்கள் மாறிமாறி ஜெயிப்பதும் தோற்பதுமாக இருந்தார்கள், ஒரு ஆள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற முடியாதபடி விளையாட்டு நீண்டு கொண்டேயிருந்த்து, இந்த விளையாட்டு அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய சில யூகங்களே நிஜத்தை விட முக்கியமானது, அவர்கள் இப்படி எல்லாம் நினைத்திருக்க்கூடும் என்பதே இதன் புதிர்தன்மை,

யூகம் 1 : சீட்டில் ஆறர்ம் எண் கொண்டவன் தோற்றுப்போய்விட்டால் அதற்கு ஈடாக அவன் மனைவியை பறித்துக் கொண்டு அவளுடன் சல்லாபம் செய்யலாம் என்பதைப் பற்றி கற்பனை செய்து கொண்டான், அது சீட்டு விளையாட்டினை விட சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்தான் 3ம் எண் உள்ளவன்

யூகம் 2 : 3ம் எண் உள்ளவன் இன்று தோற்றுப்போய் விட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொண்டுவிடுவான், அவனது சாவின் பிறகு அவனது பழைய காதலிகளை சந்தித்து அவனது கடைசி நிமிசம் பற்றிச் சொல்லி அவர்களோடு நெருங்கிப் பழக அதிக சாத்தியமிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தான் 6ம் எண் மனிதன்

யூகம் 3  :ஒன்பதாம் எண் உள்ளவன் தன் எதிரில் ஆடும் நபர்கள் திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் அவர்களுடன் எப்படி உறவு கொள்ளலாம் என்று கற்பனை செய்தான்

யூகம் 4   : தனது தோல்விக்குக் காரணமான ஒன்பதாம் எண் உள்ளவனை கொல்வதற்கு என்ன ஆயுதங்களை தேர்வு செய்வது எப்படிக் கொல்வது என்று நினைத்தபடியே மௌனமாக விளையாடினான் ஆறாம் எண்

யூகம் 5 : இந்தச் சீட்டுவிளையாட்டு ஒரு சதித்திட்ட்ம் இதைத் தீட்டியவள் 9ம் எண்ணின் கள்ளக்காதலி அவள் மூவரையும ஒழிப்பதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கிறாள்,  இந்தச் சதி அவள் நினைத்த்து போல நடக்க கூடாது, ஆகவே ஆட்ட முடிவில் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்3 எண் உள்ளவன்

யூகம் 6   :கையில் உள்ள சீட்டுக்ள் யாவும் உயிருள்ள பறவைகள் போல பறந்துவிடந்து துடிக்கின்றன, அதைக் கட்டுபடுத்தி வைப்பது சிரம்மானது என்று திகைத்தபடியே சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் ஆறு எண் உள்ளவன்

யூகம் 7  :இரவும் பகலும் மாறிக் கொண்டேயிருக்கிறது, கடிகாரம் இல்லாமல் சீட்டின் உதவியாலே காலத்தை அளக்கமுடிகிறது, இதுவரை எவ்வளவு சீட்டுகள் இறஙகியிருக்கின்ற்ன  எவ்வளவு ஆட்ட்ம் முடிந்திருக்கிறது என்பதை வைத்து நாட்களைக் கணக்கிடுவது ஒரு விசித்திரம். என்றான் 3ம் எண் உள்ளவ்ன்

யூகம் 8  :ஒரு சீட்டினை ஒருவன் கையில் இருந்து கிழே போடுவதற்கும் மற்றவன் அதை எடுப்பதற்கும் இடையில் எண்ணிக்கையற்ற  உலக நிகழ்வுகள் நடக்கின்றன, பலர் பிறக்கிறார்கள் பலர் சாகிறார்கள் பலர் புணர்கிறார்கள் பலர் முத்த்மிட்டுக் கொள்கிறார்கள் பல கொலைகள் நடக்கின்றன பலர் காதலிக்க துவஙகுகிறார்கள் பலர் துரோகம் செய்கிறார்கள், பலர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் சகமனிதனை துன்புறுத்துகிறார்கள், இதற்கு இடையில் தான் சீட்டாட்டம் நடக்கிறது என்றான 9ம் எண் உள்ளவன

யூகம் 9  :ஒரு மலர் உதிர்வதை அல்லது பூப்பதைப் போல ஒரு விந்தையே ஒரு சீட்டை எடுப்பது, சீட்டு விளையாட்டு ஒரு விசித்திரத் தியானம், அங்கே நமது எண்ணங்கள் ஒடுங்கிவிடுகின்றன நாம் கரைந்து போய்விடுகிறோம் கண்களும் கைகளும் மட்டுமே செயல்படுகின்றன என்றான் ஆறாம் எண்

யூகம் 10 : சீட்டுவிளையாட்டு என்பது நமது வெறுப்பு. ஆசை மற்றும் கோபத்தை அளவிட உதவும் ஒரு கருவி. சீட்டு ஆடுகின்றவர்கள் தன்னைப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், சீட்டுவிளையாட்டில் தோல்வியை இயல்பாக ஒருவராலும் எடுத்துக் கொள்ள முடியாது, புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபமடைந்தே தீருவான் என்றாம் 3ம் எண் ஆள்

யூகம் 11  :சீட்டுவிளையாட்டில் மனம் எப்போதுமே இல்லாத விசயங்களைக் கற்பனை செய்கிறது, நடக்காத சாத்தியங்களை நிறைவேற்றி பார்க்கிறது, சீட்டு ஆடுபவர்களுக்கு உலகம் ஒரு இலந்தைபழம் அளவு சுருங்கிப்போய்விடுகிறது என்றான் 9ம் எண் ஆள்

யூகம் 12  :ஒருவர் கையில் உள்ள சீட்டும் மற்றவர் கையில் உள்ள சீட்டும் விநோதமான உறவு கொண்டிருக்கின்றன, அவை மனிதர்களின் வழியே தன் ஒன்ற சேருதலையும் பிரிவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன என்றான் 6ம் எண் மனிதன்

யூகம் 13  :எல்லாச் சீட்டுகளும் ஒன்று போலக் காணப்பட்டாலும் அதன் மதிப்பும் சேர்கையும் ஒன்றுபோல இருப்பதில்லை ஆகவே உலகை கையில் எடுத்து விளையாடுவதன் சிறிய வடிவமே சீட்டாட்டம், ஆகவே சீட்டாடி வெல்ல தெரிந்தவன் உலகை எளிதாக புரிந்து கொண்டுவிடுவான் என்றான் 9ம் எண்மனிதன்

யூகம் 14  :ஒவ்வொரு முறை சீட்டில் தோற்கும் போது காம்ம் பொஙகுகிறது, வென்றவனும் காமத்தை பற்றியே நினைக்கிறான், ஆகவே சீட்டு விளையாட்டின் வெற்றியும் தோல்வியும காமத்தூண்டல்களே, எல்லா விளையாட்டின் வெற்றியும் புணர்ச்சியால் மட்டுமே சாந்தியடைகிறது மனிதன் தனது ஒரே புகலிடமாக பாலின்பத்தையே கொண்டிருக்கிறான் என்றான் 3ம் எண் உள்ளவன்

யூகம் 15  :சீட்டுவிளையாட்டின் போது உருவாகும் மௌனம் தூக்கின் முன்னால் நிற்கும் மௌனம் போல அடர்த்தியானது, அது தொடர்ந்து மனதை வன்முறையை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறது, சீட்டு மனிதன் கண்டுபிடித்த ரகசியமான ஆயுத்ம் என்று நினைத்தான் 6ம் எண் கொண்டவன்

யூகம் 16  :ஏதாவது ஒரு நிமிசம் 3வரும் ஒரே சீட்டைத் தேர்வு செய்வதும் 3வரும் ஒரே சீட்டை கிழே போடுவதும் நடக்கிறது  அப்போது ஒரே ஆள் தான் மூன்று தோற்றத்தில் விளையாடுவது போல உள்ளது என்றான் 9ம் ஆள்.  சீட்டாட்டம் உச்சமடையும் போது நிர்வாணமாக இருப்பது போலேவே தோன்றுகிறது, அறைக்கு வெளியே உள்ள உலகின் சிறு சப்தம் கூட பேரோசையாகி விடுகிறது, ஆகவே சீட்டு விளையாட்டு உலகின் நுண்மையை மனம் அறியும் தருணம் என்றான் 6ம் எண் மனிதன்

யூகம் 17  :சீட்டில் வைக்கப் பணம் இல்லாத போது வீட்டின் அருகாமையில் உள்ள மரங்கள் தெருநாய்கள் காட்டில் உள்ள மிருகங்கள் அருவி ஆறு மலை ஆகாசம் நட்சத்திரம் சூரியன் சந்திரன் என எதையும் பந்தயப்பொருளாக வைத்துச் சூதாடலாம், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே, அதை எவரும் ஆட்சேபணை செய்ய முடியாது. சீட்டுவிளையாட்டு   கணிதத்தின் உன்னத நிலை அதை விளையாடி அனுபவிக்கிறோம் என்றான் 9ம் எண் உள்ளவன்

யூகம் 18  :கள்ளத்தனத்தை கற்றுக் கொள்வதற்கு எளிமையான பயிற்சியே சூதாட்டம், சீட்டு ஆடும் மேஜையில் வைக்கபடும் உணவு பானகம் இரண்டும் ருசியிழந்துவிடுகின்றன, சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது என்றான் 3ம் எண்காரன்

யூகம் 19  :விதியை நேர்கொள்ள விரும்பினால் சூதாடி பார்க்கலாம்,   எல்லா சீட்டுவிளையாட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் விதியும் சேர்ந்து உட்கார்ந்தே ஆடுகிறது, அதன் பரிகாசக்குரலை பல நேரங்களில் நாம் கேட்க முடியும் என்றான் 6ம் எண்

யூகம் 20  :தோற்றுத்திரும்புகின்றவன் அடையும் வலி சொல்லற்றது, அதை புரிந்து கொள்ள சூதாடினால் மட்டுமே முடியும் ஆகவே சூதாட்டம் என்பது வலியை விரும்பி ஏற்றுக் கொள்வது என்றான் 9ம் எண்

இப்படி அவர்கள் நினைத்த யூகங்களைத் தாண்டி அவர்கள் விளையாடிக் கொண்டேயிருந்தார்க்ள் 8365 நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் விளையாடிய போதும் சீட்டாட்டம் முடிவடையவேயில்லை, ஒரு நாள் சமையல்காரன் அந்த அறைகதவை திற்ந்து பார்த்த உள்ள மூன்று காலி நாற்காலிகள் மட்டுமே இருந்தன, அதன் முன்னே உள்ள மேஜையில் சீட்டுகள் சிதறியிருந்தன, அவர்களை காணவில்லை, எங்கே போனார்கள் யார் ஜெயித்தார்கள் எப்போது வெளியேறி போனார்கள் என்பது இன்றுவரை மர்ம்மாக இருக்கிறது, சீட்டுவிளையாட்டினைப் போலவே அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் முடிவில்லாத சாத்தியங்கங்கள் இருக்கின்றன, அதனால் அவர்களை யாரும் தேடவேயில்லை

••

 (உயிர்மை இதழில் வெளியான சிறுகதை)

••

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #17 on: June 03, 2013, 09:18:37 PM »
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது

சிறுகதை

அவர்கள் தன்னை வெறுக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் டக்ளஸ் பிராங் உணர்ந்து கொண்டேயிருந்தான்.

திரிசடைத் தீவு முத்து குளிப்பதற்குப் பிரசித்தி பெற்றது. அங்கு விளையும் முத்துகள் குழந்தைகளின் கண்களைப் போல வசீகரமும் மென்னொளியும் கொண்டவை என்றும் அது போன்ற ஒளிரும் முத்துகள் மன்னார் வளைகுடா பகுதியில் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்றும் கடற்வணிகர்கள் தெரிவித்தனர். அதனினும் கூடுதலாக ஒரு காரணமிருந்தது. அது,  விக்டோரியா மகாராணியின் கவனம் பெறவேண்டுமானால் திரிசடை முத்துகளில் ஒன்று கைவசம் இருந்தால் கூடப் போதும் என்பதே.

லண்டனில் நடைபெற்ற விக்டோரியா மகா ராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது உத்கலா ராஜா காலிப் அலியின் மனைவி பேகம் உம்ரா அணிந்திருந்த வெண் முத்துமாலையின் மீது வசீகரமான மகாராணி, தனக்கு அது போன்ற மாலையொன்று உடனடியாகத் தேவை என உத்தரவிட்டாள்.

அவை மிக அரிதான கேசி முத்துகள் என்றும் தென்னிந்தியாவில் உள்ள திரிசடை தீவில் மட்டுமே கிடைக்கக் கூடியது என்றும் கம்பெனி வணிகர்கள் தெரிவித்தார்கள். முத்துகளைத் தேடி  அதன் மறுநாளே ராயல் ரெஜிமெண்ட்டின் இரண்டு பிரிவுகள் திரிசடை தீவிற்குப் புறப்பட்டன.

ஆனால் ஒன்றரை ஆண்டுகாலமாகியும் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வரவேயில்லை என்பதுடன் அவர்கள் உடல்கள் கூட கிடைக்கவில்லை. மறுமுயற்சியாக, 104வது படைப்பிரிவின் முப்பது வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களாலும் திரிசடை முத்துகளைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்த முப்பது உடல்களும் விஷம் பாரித்த நிலையில் கடலில் மிதந்ததை வணிகக்கப்பல்கள் கண்டு பிடித்தன. அதிலிருந்து திரிசடைக்கு முத்துகளைச் சேகரிக்கச் செல்வது துர்சாபமான செயல் என்று கருதப்பட்டது.

தொடர்ந்த ஏமாற்றத்தால் ஆத்திரமடைந்த கவர்னர் ரபேல் வாலீஸ் இது குறித்து விசாரிக்கும்படி மத ராஸ் கோட்டைக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஒரு வரைபடத்துடன் பதில் வந்திருந்தது. அதில் திரிசடை தீவில் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களால் அந்த முத்துப் படுகையை அறிந்து கொள்வதோ அறுத்து எடுப்பதோ இயலாது  என்றும், அங்கே முத்து கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே துணை நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை கவர்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே தனது படைப் பிரிவில் இருந்து பதினோரு நபர்களைத் தேர்வு செய்து திரிசடைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதில் ஒருவனாகவே டக்ளஸ் தீவிற்குப் புறப்பட்டான். ஒன்பது நாள் கடற்பயணத்தின் ஊடே கப்பலில் அவன் கடலோடிகள் அந்தத் தீவைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகளை வாசித்தபடியே வந்தான். தேவதைக் கதைகளில் வரும் மந்திரத் தீவைப் போன்று எண்ணிக்கையற்ற கதைகள் திரிசடையைப் பின்னியிருந்தன.

திரிசடை தீவில் வசிப்பவர்கள்  கடலுக்குள் நாள் கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள் தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக்கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிக போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.

தீவுவாசிகள் மிக எளிமையானவர்கள். அவர்கள் கடல்நண்டுகளைப் போல தங்கள் வளைக்குள்ளாகவே ஒளிந்து வாழ்பவர்கள். வெளிஉலகம் மீது அவர்களுக்கு ஈர்ப்போ. அக்கறையோ இருப்பதேயில்லை. அந்த தீவு சங்கு போன்ற வடிவத்திலிருக்கிறது. எந்த சப்தமும் அதற்குள் சென்றால் அதிகமாகி விடும். ஆகவே அங்கே ஓசை அடங்குவதேயில்லை.

அதிலொன்று, அந்தத் தீவில் உள்ள கற்களில் ஒன்று கடலில் மிதக்கக் கூடியது என்றும் அதைத்தான் தீவுவாசிகள் படகு போல பயன்படுத்துவதாகவும் சொன்னது. மிகையான கதைகள் என்று டக்ளஸ் சிரித்தபடியே கடலோடிகளின் பயம் தான் கதைகளாக உற்பத்தியாகியிருக்கிறது என்று சக வீரர்களிடம் சொன்னான். ஒன்பது நாள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் திரிசடை தீவுக்கு ஒரு கல் தொலைவில் கப்பலை நிறுத்திக் கொண்டு நான்கு நாட்டுப்படகில் தீவை நோக்கிச் சுமைகளுடன் புறப்பட்டார்கள். அப்போது கோடை துவங்கி இரண்டு வாரமாகியிருந்தது.

திரிசடை தீவு மிகச்சிறியது. அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. முதல் குடும்பம் ‘ஆலா‘ என்று அழைக்கப்பட்டது. அவர்கள் கடலில் முத்துவிளையும் படுகையை அறிந்து சொல்லக் கூடியவர்கள். மற்ற குடும்பம் ‘பட்டங்கட்டி‘ என்று அறியப்பட்டிருந்தது. அவர்களே முத்து அறுத்து எடுத்து வருபவர்கள்.  இரண்டிலுமாகச் சேர்ந்து பதினெட்டு பேர் இருந்தார்கள். அதில் மூன்று குழந்தைகள். ஐந்து பெண்கள்.

நூற்றாண்டு காலமாக அதே தீவில் வசித்து வந்த அந்தக் குடும்பங்கள் ஒன்றுக்குள் ஒன்று திரு மணம் செய்து கொண்டன. இறந்து போனவர்களை அவர்கள் புதைப்பதில்லை. மாறாக, சவத்தோடு பெரியகல் ஒன்றைச் சேர்த்துக்கட்டி கடலின் அடி ஆழத்திற்குக் கொண்டு போய் போட்டுவந்து விடுவார்கள். இறந்தவரின் ஆன்மா ஓளிரும் குமிழ்களாக கடலாழத்தில் மிதந்து கொண்டேயிருக்கும் என்றும் அந்த நீலக்குமிழ்களே முத்துப் படுகைகளை அடையாளம் காட்டுகின்றதாகவும் அவர்கள் நம்பினார்கள்.

இங்கிலாந்திலிருந்து தனது பத் தொன்பதாவது வயதில் இந்தியாவிற்கு வருகை தந்த  டக்ளஸ் பிராங் பெங்கால் ரெஜிமெண்டில் ஐந்தரை வருஷங்கள் வேலை செய்து கொண்டிருந்தான். அவனது துப்பாக்கி சுடும் திறமை அசாத்தியமானது. காற்றில் மிதக்கும் இலையின் நரம்புகளைக் கூட அவனால் குறிவிலகாமல் சுட்டுவிட முடியும். அதன்காரணமாகவே அவனை கவர்னரின் வேட்டைப்பிரிவில் எட்டாம் ஆளாகச் சேர்த்திருந்தார்கள்.

கவர்னர் வாலீஸ் மாதம் ஒருமுறை வேட்டைக்குக் கிளம்பிவிடுவார். அவருக்கு மிருகங்களைச் சுடுவதில் அதிக ஈடுபாடு கிடையாது. மாறாக, கொல்லப்பட்ட மிருகங்களின் தலைமீது தனது காலை வைத்துக் கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். அதற்காகவே அவருடன் ஜான் மெக்கே என்ற புகைப்படக் கலைஞர் இருந்தார்.

கவர்னரின் இந்த வேட்டைப் பிரிவில்  பன்னிரெண்டு துப்பாக்கி வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முழுநிலா நாளில் கவர்னர் தனது வேட்டைக் குழுவினருடன் வனவிஜயம் கிளம்பி விடுவார். அவரை வரவேற்றுக் காட்டிற்குள் அழைத்துப் போவதற்காக நவாப்பின் ஆட்கள் யானைகள், குதிரைகளுடன் தயாராக இருப்பார்கள்.

அந்த வேட்டைக் குழுவில் டக்ளஸ் பிராங்கே அதிக புலிகளைக் கொன்றவன். தான் கொன்ற புலியின் உடலில் இருந்து ஒரு கொத்து மயிர்களை மட்டும் டக்ளஸ் தனியே வெட்டி எடுத்து ஒரு குப்பியில் அடைத்துக் கொள்வான். எப்போதாவது அந்த மயிர்களைக் கையில் தொடும்போது புலியின் சீற்றமான துடிப்பும் மூச்சும் அதில் இருப்பது போலவே உணர்வான்.

மற்றபடி டக்ளஸை வசீகரிப்பது, சுடப்போகும் மிருகத்திற்காக காத்திருப்பது மட்டுமே. அவன் காட்டிற்குள் நுழையும்போதே இன்று தான் எந்த மிருகத்தைக் கொல்லக்கூடும், அது இப்போது என்ன செய்து கொண்டிருக்கும் என்று யோசிக்கத் துவங்கிவிடுவான். எந்தப் புள்ளியில் தானும் அந்த மிருகமும் சந்திக்கப் போகிறோம், அது ஏன் தன் கையால் சாகிறது என்று ஏதேதோ மனதில் தோன்றியபடியே இருக்கும். கவர்னர் யானை மீது அமர்ந்தபடியே வனத்தை ஒரு மாபெரும் விளையாட்டு மைதானம் போல நினைத்து உவகை கொள்வார்.

அவர்கள் காய்ந்துபோன நாணலை மிதித்து நடந்து ஆற்றைக் கடந்து வனத்தின் அடிவயிற்றை நோக்கிச் செல்லும்போது டக்ளஸின் கண்கள் ஒவ்வொரு இலை அசைவையும் ஊடுருவிச் செல்லும். வாசமும் கவனமும்தான் அவனது வழித்துணைகள்.

புலியின் வருகையை அவனது உள்ளுணர்வு எப்போதுமே முன் கூட்டி அறிவித்து விடுகிறது. அவன் புலியின் கண்களைச் சந்திக்கும்வரை எந்த சலனமும் இல்லாமல் காத்துக் கொண்டேயிருப்பான். எங்கிருந்தோ புலியின் பாதங்கள் பூமியில் மிக நிதானமாக நடந்து தன்னை நோக்கி முன்னேறி வருவது அவனால் உணரமுடியும். அந்த நிமிடங்களில் அவன் பரபரப்பு கொள்வதில்லை. மாறாக, சொல்லமுடியாத ஒரு வலியை உணர்வான்.

அந்த வலி சில நிமிஷங்கள் விருட்டென மீனொன்று நீரின் மீது துள்ளி விழுவது  போல அசைந்து ஒடுங்கி விடும். பிறகு அவனுக்குப் புலி, அடித்து வீழ்த்தவேண்டிய வெறும் இலக்கு மட்டுமே. தனது துப்பாக்கியின் விசையை அவன் விரல்கள் அழுத்திய பிறகு அவன் பெருமூச்சிட்டுக் கொள்வான். நிச்சயம் அது புலியைக் கொன்றிருக்கும் என்று  நம்புவான். அவனது நம்பிக்கை ஒருபோதும் பொய்யாகவேயில்லை.

செத்துக் கிடக்கும் புலி அவனை வசீகரிப்பதேயில்லை. புலி தன்னை நோக்கி வரும்வரை காத்திருந்த அந்த அரிய நிமிஷங்களை நினைத்த படியே அவன் ஏதாவது மரநிழலில் படுத்துக் கொள்வான். அவனது சுபாவத்தை கவர்னர் உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ டக்ளஸை பெங்கால் ரெஜிமெண்டில் இருந்து முத்துகளைச் சேகரம் செய்து வருவதற்காக திரிசடை தீவிற்கு அனுப்பி வைத்தார்.

மகாராணியின் விருப்பத்தை நிறைவேற்றினால் நிச்சயம் தான் மதராஸ் ரெஜிமெண்டின் லெப்டினென்டாக நியமிக்கப்படக்கூடும் என்பதற்காகவே டக்ளஸ் திரிசடை பயணத்திற்குத் தலைமை ஏற்க ஒப்புக்கொண்டான். தனது அதிகாரம் மற்றும் வீரத்தால் எதையும் எளிதாக அடைந்துவிட முடியும் என்று நம்பினான். ஆகவே அவனோடு ஐந்து துப்பாக்கி வீரர்களும் ஒரு சமையல் ஆளும் மட்டுமே போதுமானவர்கள். வேட்டைத் துப்பாக்கிகளைத் தவிர வேறு ஆயுதங்கள்  எதுவும் தேவையுமில்லை என்று  உறுதியாகச் சொன்னதோடு, அதன் மறுநாளே கப்பலில் பயணம் கிளம்பினான். அப்போது அவன்  திரிசடை தீவில் ஒன்பது வருஷங்கள் தான் காத்துக்கிடக்கப் போவதை அறிந்திருக்கவில்லை.

திரிசடை தீவிற்கு அருகில் வேறு தீவுகள் இல்லை. அது, கண்ணில் விழுந்த மணல் இமை ஓரமாக ஒதுங்கிக் கொள்வது போல கடலின் கிழக்கு ஓரமாக ஒதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு மீன்பிடிப் படகுகள் எப்போதாவது அதைக் கடந்து போவதுண்டு. திரிசடை தீவின் நடுவே ஒரு சிறிய குன்று இருந்தது. அதன் மேற்குப்பகுதியில் இரண்டு குகைகள் இருந்தன. மழைக்காலத்தில் முத்துக் குளிக்கும் குடும்பங்கள் அந்த குகைக்குள் ஒதுங்கிக் கொண்டு வசித்தனர். மற்ற நாட்களில் அவர்கள் தரையில் இருந்து ஐந்தடி அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மர வீட்டில் வசித்தனர்.

கடற்தாழைகளும் நீர்ச்செடிகளும் மணலெங்கும் வளர்ந்திருந்தன. அந்தத் தீவிலிருந்த அடர்பச்சை நிற தவளைகள் அளவில் மிக சிறியவையாக இருந்தன. அவை எழுப்பும் ஓசை கூட விக்கல் எடுப்பது போன்றே இருந்தது. தீவின் உட்புறத்தில் கருஞ்சுனையொன்று இருந்தது. அதிலிருந்து சொட்டும் தண்ணீரைத் தான் தீவுவாசிகள் குடித்துவந்தார்கள்.

தாமரை இலைகள் போன்று அகன்று விரிந்த இலைகள் கொண்ட சுக்ருதம் என்ற செடிகள் தீவெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதிலிருந்து வீசும் நாள்பட்டு போன சாணம் போன்ற வாசனை எப்போதும் காற்றில் இருந்துகொண்டேயிருந்தது . காற்றில் சுக்ருத இலைகள் எழுப்பும் ஓசை யாரோ கையால் அடித்து தாளமிசைப்பது போன்ற ஒரு அதிர்வைத் தந்தபடியே இருந்தது. தீவின் தென்கிழக்கில் கல்லால் ஆன பந்தல் ஒன்றும் ஒரு பலிபீடமும் காணப்படுகிறது. அதைத் தங்களது குலதெய்வமான சூதனி என்று தீவுவாசிகள் வழிபட்டார்கள்.

டக்ளஸ் வந்து இறங்கிய நாளில் தீவுவாசிகள் எவரும் அவனைத் தடுக்கவோ, வரவேற்கவோ செய்யவில்லை. அவனும் துப்பாக்கி வீரர்களும்  படகிலிருந்து தங்களது பொருட்களைக் கரை இறக்கிக் கொண்டிருக்கும்போது தொலைவில் இருந்து ஒரு சிறுமி அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். பத்து வயதிருக்கக் கூடும். அவளது சுருண்ட கேசம் காற்றில் அசைந்தபடியே இருந்தது. டக்ளஸ் அவளை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தான். அவளிடம் சலனமேயில்லை. மணலில் கால் புதைய அவளை நோக்கி நடக்கத்  துவங்கினான்.  அவள் வெறித்த கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பார்வை அவள் தன்னை வெறுக்கிறாள் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியது. அதைக் கண்டுகொள்ளாதவன்  போல அவளை நோக்கிச் சிரித்தான் டக்ளஸ். பதிலுக்கு அவள் சிரிக்கவில்லை. தன் வெறுப்பைக் கண்களின் வழியே உமிழவிட்டாள். அவன் பொய்க் கோபத்துடன் அடிப்பது போல கையை ஓங்கினான். நிச்சயம் அதற்குப் பயந்து அவள் ஓடிவிடக்கூடும் என்று நினைத்தான். ஆனால் அவள் டக்ளஸைப் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் தீவில் உள்ள மற்றவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்று சைகையில் கேட்டான் டக்ளஸ். அவள் பதில் சொல்லாமல் அவனையே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பற்கள் நறநறவென கடிக்கப்படும் சப்தம் டக்ளஸிற்குக் கேட்டது. அவன் இறுக்கமான முகத்துடன் அவளது தலை மயிரைத் தொட முயன்றான். ஆவேசமாக அவள் அந்தக் கைகளைத் தட்டிவிட்டபடியே அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

படகில் இருந்த பொருட்களைச் சுமந்து வந்தவர்கள் அதை எங்கே கொண்டு செல்வது என்று கேட்டார்கள். டக்ளஸ் அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிய படியே அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து தன்னை அழைத்துப் போகும்படியாகச் சொன்னான். அவள் திமிறிக் கொண்டு முறைத்தாள். டக்ளஸ் அவளைப் புறக்கணித்து நடந்து  மேடேறித் தீவின் உள்ளே நடந்து கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அவன் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள்.

அன்றைய பகலில் டக்ளஸ் அங்கிருந்த இரண்டு குடும்பங்களையும் பார்த்து வந்தான். அவர்களில் ஒருவர் கூட அவனோடு ஒரு வார்த்தை பேசவேயில்லை. வெளியாட்கள் அங்கே வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது அவர்கள் முகத்திலே தெரிந்தது. கடல் தனக்கு விருப்பமில்லாதவர்களுக்கு எதுவும் தருவதில்லை. வெளியாட்கள் கடலை ஒருபோதும் தங்களுக்குள் நிரப்பிக் கொள்வதில்லை. கண் வழியாக இதயத்தில் கடல் நிரம்பாதவரை அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது என்று தீவுவாசிகள் நம்பினார்கள். ஆகவே தங்களது மறுப்பை அவர்கள் பார்வையின் வழியாகவே தெரியப்படுத்தினர்.

பேசாத அந்த உதடுகள் அவன் மீது மௌனமாகவே ஏளனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. தனது முகத்தின் ஆழத்திற்குள் கண்களால் ஊடுருவிப் போய்விட முடியும் என்பது போல அந்த பார்வைகள் இருந்தன. அவர்களது கண்களை டக்ளஸ் உற்றுப் பார்த்தபோது திட்டுத் திட்டாக மேகம் செல்வது போல வெறுப்பு மிதந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்.

டக்ளஸ் தனது ஆட்களுடன் தீவின் வடக்குப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டான். வெளிச்சத்தின் துளி கூட அந்தத் தீவில் இல்லை. கூடாரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கைப் பிடித்துத் தின்பதற்காகவே ஒரு வகை பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அவை ஆசையோடு சுடரை விழுங்கிக் கொண்டு பறந்தன.  தீவுவாசிகள் விளக்கைப் பயன்படுத்துவதேயில்லை. அவர்கள் இருட்டிற்குள்ளாகவே நடமாடப் பழகியிருந்தார்கள்.

தீவில் இருள் கருஞ்சாந்து போன்ற பிசுபிசுப்புடன்  அடர்ந்திருந்தது. அவர்கள் தங்களது கண்களால் இருட்டைத் துளைக்க முடியாததை உணர்ந்தார்கள். டக்ளஸ் படுக்கையில் கிடந்தபடியே இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமாக ஆக தீவு மறைந்து போய் தான் கடலின் மீது உறங்குவது போலவே தோன்றியது. பின்னிரவு வரை விழித்துக் கிடந்த அவனைத் தூக்கம் தன்னையறியாமல் பீடித்தது.

விழித்தபோது காலை வெளிச்சம் கடற்கரையில் பிரகாசம் கொண்டிருந்தது. கடல் நண்டு ஒன்று அவசரமாக நடந்து மணலேறிச் சென்றது. இளவெயிலின் மிருதுவும் நுரை ததும்பும் அலைகளின் மெல்லோசையும் அவன் மனதை சாந்தம் கொள்ளச் செய்வதாக இருந்தது. தனியே கடற்கரையில் நடந்து கொண்டிருந்தான். தாடை போல துருத்திக் கொண்டிருந்த ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலும் தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்ந்தான். முன்பு ஒருபோதும் இவ்வளவு நெருக்கமாக கடலைத் தான் அறிந்ததில்லை என்பது போலிருந்தது. கடல் எதையோ சொல்வது போல தோணியது. என்ன சொல்கிறது என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு நாளைக்குள்ளாகவே முத்து குளிப்பவர்களை எளிதாக மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டான். பிறகு தான் கொண்டு வந்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடி, வாசனை சோப்புகள், அலங்காரத் துணிகள், மெழுகு வர்த்திகள், பீங்கான் கோப்பைகள் போன்றவற்றைப் பரிசாக எடுத்துக் கொண்டு அந்தக் குடும்பங்களைத் தேடிச் சென்றான்.

பட்டங்கட்டியிடம் தான் இங்கிலாந்து மகாராணியின் விருப்பத்தின்படி முத்துகள் வேண்டி வந்திருப்பதாகவும் அதைக் கடலில் இருந்து அறுவடை செய்து தரவேண்டியது அவரது பொறுப்பு என்றும் அன்பான குரலில் சொன்னான்.

பட்டங்கட்டி அதற்கு பதில் பேசவேயில்லை. மாறாக, தரையில் ஒரு குச்சியால் கோடு கிழித்தபடியே பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். செம்பட்டை படிந்த தலை. பருத்த உதடுகள், ஆள் மெலிந்து உயரமானவராக இருந்தார். கழுத்தில் மீன் எலும்பு ஒன்றை மாலையாகப் போட்டிருந்தார்.  அவரது வீட்டுப் பெண்கள் டக்ளஸின் துணைக்கு வந்திருந்த துப்பாக்கி வீரர்களை வெறித்துப் பார்த்த படியே இருந்தனர். பிறகு பட்டங்கட்டி எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

இதுபோலவே தான் ஆலா குடும்பத்திலும் நடந்தது. அவர்களும் டக்ளஸின் பரிசை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆத்திரத்தில் அந்தப் பரிசுகளை கடற்கரையில் வீசி எறிந்து வந்தான் டக்ளஸ். கடலில் விளைவதை அறுவடை செய்து தருவதற்கு எதற்கு இவ்வளவு பிடிவாதம். கடல் முத்துகள் இவர்களது சொத்துக்களா என்ன? அதைத் தனக்குத் தருவதன் வழியே என்ன இழந்துவிடப் போகிறார்கள். ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார்கள் என்று யோசித்தபடியே இருந்தான்.

சில வாரங்கள் அங்கே தங்கி அவர்களது தினசரி வாழ்க்கையை அவதானிப்பதன் வழியே முத்துக் குளிப்பவர்களை வசீகரித்துவிட முடியும் என்று டக்ளஸ் நம்பத் துவங்கினான். அதற்காக அவன் பகலிரவாக அந்தத் தீவில் நடப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு  நாளும் அதிகாலை வெளிச்சம் அந்தத் தீவை ஒரு பெரிய மலரைப் பூக்கச் செய்வதைப் போல ஒளிர்வு கொள்ள வைக்கிறது. புலரியில் ஒரு ஆள் படகில் கிழக்கு நோக்கிப் போவதையும் அந்த ஆள்  திரும்பி வரும்போது படகு நிறைய மீன்களும் கடற்சிப்பிகளும் வந்து சேர்வதையும் டக்ளஸ் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த மீன்கள்தான் தீவுவாசிகளின் பிரதான உணவு. நாளின் பெரும்பான்மை நேரங்கள் அவர்கள் கடலை வெறித்துப் பார்த்தபடியே கரையோரம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.

அவர்கள் கடலோடு பேசுகிறார்கள். கடலும் அவர்களுடன் பேசுகிறது போலும். காற்றையும் இருளையும் வெயிலையும் அவர்கள் வரவேற்கிறார்கள். தாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள். பலநேரங்களில் காற்றில் சிறுசெடியின் இலை அசைவதைப் போல நளினமாக அவர்கள் கடலின் முன்னே நடனமாடுகிறார்கள்.

திரிசடைவாசிகளாக இருந்த பெண்கள் பருத்த ஸ்தனங்களும், குள்ளமான உருவத்துடனும் இருந்தனர். அவர்கள் சங்கு அறுப்பதில் தேர்ச்சி கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மூங்கில் சீப்பைத் தலையில் செருகியிருந்தாள். ஒருவர் சீப்பைப் போல மற்றவரிடம் இல்லை. சீப்பு தலையில் இருந்து நழுவி விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஒவ்வொரு நாளின் மாலையும் அந்தப் பெண்கள் சிவப்பும் மஞ்சளுமான மலர்களைத் தங்களது தலை நிறைய சூடிக் கொண்டு குழந்தையைச் சீராட்டும் குரலில் கடலை நோக்கி எதையோ பாடுகிறார்கள். கடல் அதைக் கேட்டுத் துயில்கிறது போலும். அந்தப் பெண்களில் ஒருத்திக்கு இடது கால் இல்லை. சுறா கடித்துத் தின்றுவிட்டதைப் போல எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.  அவள் டக்ளஸை எங்கே கண்டபோதும் உடனே குனிந்து கைப்பிடியளவு மணலை அள்ளிக் காற்றில் பறக்கவிட்டு எதையோ தனக்குள்ளாக முணு முணுப்பாள். என்ன சொல்ல விரும்புகிறாள் அவள். அதுவும் வெறுப் பின் அடையாளம்தானா?

கோடானு கோடி மணல் துகள்களில் ஒன்றைப் போல அவனது வாழ்க்கையும் விதியின் கைகளால் மட்டுமே அடித்துக் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தான் அவள் உணர்த்துகிறாள் என்று டக்ளஸ் அன்று அறிந்திருக்கவில்லை.

வெயிலேறிய பகலில் பெண்களும் குழந்தைகளும் கடற்சிப்பிகளைச் சுழற்றிப் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் மரநிழலில் ஒன்றாக உட்கார்ந்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதும் நடந்தது.  அவனை தீவுவாசிகள் கண்டுகொள்ளவேயில்லை. தீவைப்பற்றி கடலோடிகள் எழுதியதில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் கற்பனை என்றே தோன்றியது.

ஒரு நாளிரவு துப்பாக்கி வீரர்களில் ஒருவன் தன்மீது ஒட்டிக் கொண்டிருந்த கொசுவைத் துரத்துவது போல கைகளை ஆவேசமாக வீசி எதையோ விரட்டிக்  கொண்டிருந்தான். எதைத் துரத்துகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்த போது அவன் கூக்குரலிட்டுக் கத்தினான். என்ன செய்கிறது என்று மற்றவர்கள் அவனைப் பிடித்து உலுக்கிக்கேட்கவே ‘தீவுவாசிகளின் வெறுப்பு, தன்மீது சாக்கடைப் புழுக்கள் போல ஊர்ந்து  கொண்டேயிருக்கிறது. அந்த வெறுப்பைத் தன்னால் தாங்க முடியவேயில்லை. உடல் முழுவதும் கம்பளிப் பூச்சிகள் அப்பிக் கொண்டிருப்பது போல வெறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது. சிறுவர்களும் கூட நம்மை வெறுக்கிறார்கள். அந்தக் கண்கள் நம் உடலைத் துளைக்கின்றன. ஊசிமுனை போல குத்துகின்றன. அதை என்னால் தாங்க முடியவில்லை‘ என்று அரற்றினான். அந்த உண்மையை யாவருமே உணர்ந்திருந்தார்கள். ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ளாமலே இருந்தார்கள். டக்ளஸை அது ஆத்திரப்படுத்தியது.

மறுநாள் டக்ளஸ் பட்டங்கட்டி குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்துத் தனது கூடாரத்திற்கு இழுத்து வந்து மணலில் பாதி உடம்பு வெளித்தெரியும்படியாக புதைத்து வைத்து அவர்களில் எவராவது தன்னோடு பேசும்வரை அவளை விடப்போவதில்லை என்று கத்தினான். அந்தப் பெண்ணின் கண்களில் பயமேயில்லை. அவளது கூந்தல் காற்றில் அலைந்தபடியே இருந்தது. அதுபோன்ற உக்கிரமான கண்கள் எதையும் டக்ளஸ் கண்டதேயில்லை.

காட்டுப்புலிகள் கூட தன்னை அவன் கொல்ல வந்திருக்கிறான் என்று அறிந்த போதும் இப்படியான வெறுப்பை உமிழ்ந்ததில்லை. ஏன் இவர்களிடம் இத்தனை உக்கிரமான வெறுப்பு. அவன் தன் முன்னே புதையுண்டிருந்த  பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பல்லை உடைக்க வேண்டும் போன்ற ஆத்திரம் உருவானது. ஏன் அவர்களில் ஒருவரும் அவனை எதிர்ப்பதேயில்லை. அவனைத் தாக்கிக் கொல்ல வரும் புலியின் ஆவேசம் அவனுக்குத் தேவைப்பட்டது. அப்போது தான் அவனது ரத்தம் சூடாகும். ஆனால் அவர்கள் தணிந்து போகிறார்கள். உறுதியான தங்கள் மறுப்பைக் கண்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

என்ன தந்திரமிது. ஒருவேளை இந்த யுக்தியால் தன்னை அவர்கள் துரத்திவிடவும் கூடுமோ. அவன் புதையுண்டு கிடந்த பெண் முகத்தருகே குத்துக்காலிட்டு உட்கார்ந்த படியே தன்னோடு ஏதாவது பேசும் படியாகக் கட்டாயப்படுத்தினான். அவள் முகத்தில் அசைவேயில்லை. அவன் தனது கைவிரல்களால் அவள் பற்களைத் திறந்து பேச்சை வெளியே பீறிடும்படி செய்ய முயற்சிப்பவன் போல பலத்தைப் பிரயோகம் செய்தான். அந்தப் பற்கள் திறந்து கொள்ளவேயில்லை. அவள் காதிற்குள் மிக மோசமான வசையைக் கத்தினான். அப்போதும் அவள் தலை கவிழ்ந்தேயிருந்தது.

அன்றிரவு ஆலா குடும்பத்தின் வயதான ஒருவர் ஆமை ஓடு ஒன்றில் அவித்த மீனும் நீரிணிபழத் துண்டுகளும் கொண்டு வந்து டக்ளஸிடம் தந்து, கடலடியில் முத்து விளையும் படுகையைக் காற்றடி காலம் முடிந்த பிறகே அறிந்து வர முடியும் என்றும் சொல்லி அந்தப் பெண்ணைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனார். காற்றடி காலம் எப்போது  என்று டக்ளஸ் கேட்க விரும்பினான். ஆனால் அதற்குள் அந்தப் பெண்ணும் முதியவரும் அங்கிருந்து விலகிப் போகத் துவங்கியிருந்தார்கள்.

அன்றிரவு டக்ளஸ் தான் சுட்டுக்கொன்ற புலியின் ரோமங்களை ஒவ்வொன்றாகக் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தீவுவாசிகளின் செயல்பாடு அவனது புலிவேட்டை சாகசங்களைக் கேலி செய்வது போலவே இருந்தது. திடீரென அவர்களை நள்ளிரவில் தாக்கிக் கொன்றுவிட்டால் என்னவென்று கூட தோன்றியது.

அவன் மனது தடுமாறிக் கொண்டேயிருந்தது. தனது சாகசங்கள் வெறும் கற்பனைகள் தானோ என்று தோன்றத் துவங்கியது. ஒருவேளை புலிகள் தன்னைக் கொல்வதற்கு அவனை அனுமதித்திருக்கின்றன என்பதுதான் நிஜமா?  தனது வேட்டை அத்தனையும் மிருகங்களின் ஒப்புக்கொடுத்தலால் ஏற்பட்டதுதானா? எந்தப் புலியும் ஏன் தன்னைத் தாக்கிக் கொல்ல முயற் சிக்கவேயில்லை. ஏன் ஒரு புலி அவனிடம் சுடப்பட்டுச் சாக விரும்புகிறது. அவனுக்குள் வாழ்வில் முதன் முறையாக பயத்தின் ஒரு துளி கசியத் துவங்கியது. அவன் விடியும்வரை மணலில் படுத்தே கிடந்தான். நல் முத்துகள் இல்லாமல் வெறும்கையோடு திரும்பிப் போகமுடியாது. எப்படியாவது காத்திருக்க வேண்டும். இது புலிக்காகக் காத்திருப்பதைவிட அதிக பொறுமையும் கவனமும் கொண்டது. அதில் தான் தோற்றுப் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த உக்கிரம் கொள்ளத் துவங்கினான்

••


பகுதி 1

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #18 on: June 03, 2013, 09:23:42 PM »
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது – 2

மறுநாள் டக்ளஸ் தன்னிடமிருந்த வானியல் வரைபடங்களைக் கொண்டு காற்றடிக் காலம் துவங்குவதற்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கணித்தான். எழுபத்திமூன்று நாட்கள் மீதமிருந்தன. அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் என்றபடியே அவனும் தீவுவாசிகளைப் போலவே பகலில் மரநிழலில் படுத்துக் கிடக்கத் துவங்கினான். ஆனால் அவனது துப்பாக்கி வீரர்களால் அப்படியிருக்க முடியவில்லை. தன்னோடு பேச மறுப்பவர்களுடன் சண்டையிடவும் சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தவும் முயற்சித்தார்கள். ஒரு துப்பாக்கி வீரன் பட்டங்கட்டி வீட்டுப் பெண் ஒருத்தியின் உதடை அறுத்து எடுத்து விட்டதுகூட நடந்தேறியது. டக்ளஸ் கடலைப் பார்த்தபடியே இருந்தான். கடல், உலகின் ஆதி நிகழ்வுகளின் சாட்சிபோலவே தோன்றியது. கடல் எவ்வளவு மனிதர்களைக் கண்டிருக்கும். எவ்வளவு மாற்றங்களை உள் வாங்கியிருக்கும்.

கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பது துப்பாக்கி வீரர்களுக்குச் சித்ரவதை தருவதாக இருந்தது. ஆரம்ப நாட்களில் தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டிருந்த துப்பாக்கி வீரர்கள் மெல்ல அதைத் தவிர்க்கத் துவங்கினார்கள். சமையற்காரன் தன்னையே வேறு ஆளாக நினைத்துக் கொண்டு பேசிக் கொள்பவனாகிப் போனான்.  மற்றவர்கள் அந்தத் தீவில் உள்ள மரம் செடிகளின் இலைகளோ அல்லது பறக்கும் வண்டுகளில் ஏதோவொன்று தங்களுடன் பேசினால் கூடப் போதும் என்பது போன்ற தீவிர மனநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தீவுவாசிகளுக்குக் கிடைப்பது போன்ற மீன்கள் தங்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என்று அவர்களுடன் சண்டையிட்டார்கள். எதைச் சாப்பிட்ட போதும் நாவில் ஒரே ருசியாக ஏன் இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை.

டக்ளஸ் ஒவ்வொரு நாளும் அந்தத் தீவுவாசிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தபடியே இருந்தான். ஆரம்ப நாட்களில் தொடர்பற்றது போல தெரிந்த பல விஷயங்கள் பிரமாதமான ஒழுங்கு ஒன்றின் வரிசையில் செயல்படுவதை அவன் உணரத் துவங்கினான். அந்தத் தீவு வாழ்க்கை பகலில் செயலற்றது போல தெரிந்தாலும் நூற்றுக்கணக்கான செயல்களால் பின்னப்பட்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. அலைகளை அவதானிப்பது, படகில் செல்வது, மீன்பிடிப்பது, சங்கு அறுப்பது, பிரார்த்தனை செய்வது, மழைக்காலத்திற்கான நெருப்பிற்கு வேண்டி காய்ந்த விறகுகளைச் சேகரிப்பது,  கடினமான மீன் எலும்புகளை அறுத்து கத்தி செய்வது என்று அங்கே ஒரு தினசரி வாழ்க்கை எளிமையாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

காற்றடிக் காலம் துவங்கப் போகிறது என்பதை ஒரு மாலைநேரத்தின்  ஓயாத கடல் அலையின் எழுச்சி காட்டித் தந்தது. அது போன்று உயரமாக அலைகள் சீறுவதை அதன் முன்பு அவன் கண்டதேயில்லை. அலைகள் சீறும்பாம்பின் நாக்கு போல துடித்துக் கொண்டேயிருந்தன. அலை வேகம் கண்டு மணலில் முளைத்த சிறுசெடிகள் கூட வேக வேகமாக நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு காற்று விசை கொள்ளத் துவங்கியது. பெருந்துயரம் ஒன்றின் ஆவேசமான கதறல் போன்று காற்றின் ஊளையிடும் சப்தம் உயர்ந்து கொண்டேயிருந்தது. அது கட்டுக்கடங்காமல் ஆவேசமாகி மொத்த தீவையே பிடுங்கி எறிந்துவிடுவது போலிருந்தது. டக்ளஸின் கூடாரத்தைக் காற்று பிடுங்கி வீசியது. மணலை வாரி அடித்தது. துப்பாக்கி வீரர்கள் தனியே நடப்பதற்குக் கூட பயந்தார்கள். யாரோ பதுங்கி வந்து முதுகில் அடிப்பது போல காற்று வீசியது. காற்றின் வேகம் அலைகளை உயரச் செய்தபடியே இருந்தது. வானம் தெரியாதபடி அலைகள் உயர்ந்தன.

அதன் பிந்திய நாட்களில் பகல் இரவாக காற்று வேகமெடுத்தபடியே சீறியது. ஆனால் காற்றடிக் காலத்திற்குப் பழகிய தீவுவாசிகள் எப் போதும் போல இயல்பாக தங்களது படகில் மீன்பிடிக்கச் செல்வதும் சமைப்பதும் விளையாடுவதுமாக இருந்தார்கள். ஆனால் டக்ளஸிற்கும் அவனது துப்பாக்கி வீரர்களுக்கும் காற்றின் உரத்த சப்தம் கேட்டுக் கேட்டு காது நரம்புகள் சிவந்து போய் துடித்துக் கொண்டிருந்தன. ஓசை அதிகமாகியதும் மண்டைக்குள் நரம்புகள் வெடித்து விடுவது போல வேதனை கொள்ளத் துவங்கின. காற்றில் அங்கிருந்த பாறைகள் கூடப் பறந்து போய்விடுமோ என்பது போலிருந்தது.

தீவுவாசிகள் எப்படிக் காற்றை எதிர்கொள்கிறார்கள் என்று டக்ளஸ் கற்றுக்கொள்ள முயற்சித்தான். ஆனால் அந்த சூட்சுமம் புரியவேயில்லை. காற்றடிக் காலத்தின் பகல் மிக மெதுவாக இருந்தது. உறக்கம், விழிப்பு இரண்டுமே வேதனை தருவதாக மாறியது. உலர்ந்துபோன கண்களுடன் அவர்கள் வெளிறிய வானத்தைப் பார்த்தபடியே இருந்தார்கள். காற்றின் வேகத்தில் கிழித்து எறியப்பட்ட இலைகள் தீவெங்கும் சிதறிக் கிடந்தன. காற்று ஒடுங்கவேயில்லை.

டக்ளஸ் உள்ளுர பயப்படத் துவங்கினான். எதற்காக இந்த வீண் முயற்சி. அவர்களைத் துப்பாக்கி முனையில் கடலில் அழைத்துச் சென்று முத்து குளிக்கும்படியாக வற்புறுத்தினால் என்ன குறைந்து விடப் போகிறது என்று ஒரு குழப்பம் உருவாகத் துவங்கியது. தன்னுடைய மன இயல்பைக் காற்று சிதைத்து வருவதை அவன் உணரத் துவங்கினான். அவனை மீறியே அவன் கோபப்பட்டான். கத்தினான். பசியும் தூக்கமும்காம உணர்ச்சிகளும் கூட தீவைச் சுற்றியிருந்த கடலின்  எழுச்சியால்  தூண்டப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதையும் அவன் அறிந்து கொண்டபோது வியப்பாக இருந்தது. பல நேரங்களில் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமல் இருப்பதற்கு அங்கு வீசும் கடற்காற்றே காரணமாக இருந்தது.

சூறைக்காற்று உச்சத்தை தொட்ட ஒரு நாள் டக்ளஸ் ஆவேசமாகி,  துப்பாக்கியை வானை நோக்கி வெடித்தான். பிறகு வெறி கொண்டவன் போல கத்தினான். இன்றைக்கு அவனுடன் படகை எடுத்துக் கொண்டு முத்துக் குளிக்க அவர்கள் உடனே புறப்பட வேண்டும் என்று மிரட்டினான். தீவுவாசிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. சினத்துடன் அவன் தனது துப்பாக்கியால் பட்டங்கட்டி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளின் பாதங்களில் சுட்டான். ரத்தம் பெருகியோடியபோதும் அந்த ஆள் வலியால் கத்தவேயில்லை. மற்ற ஆண்கள் டக்ளஸை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். காற்றடிக் காலம் முடியும்வரை அவனது மிரட்டல்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவேயில்லை. பின்பு ஒரு நாள் காலை சுக்ருத இலைகள் அசைவற்றுப் போயின. காற்று ஒடுங்கிக் கொண்டு விட்டது. கடல் இப்போது அலைகள் ஒடுங்கித் தணிந்திருந்தது. ஆலா குடும்பத்தின் ஆள் டக்ளஸைத் தேடிவந்து மறுநாள் காலை அவர்கள் முத்துப்படுகையைக் காண கடலுக்குள் போகலாம் என்று சொன்னான்.

விடிகாலையில் அவர்கள் இரண்டு நாட்டுப் படகில் புறப்பட்டார்கள். ஒரு படகில் டக்ளஸ் மற்றும் இரண்டு துப்பாக்கி வீரர்களும்  மற்ற படகில் ஆலா குடும்பத்து மூன்று ஆண்களுமிருந்தார்கள். படகை வலித்தபடியே கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்னால் செல்லச் செல்ல அடிவானம் வேக வேகமாகப் பின்னால் போய்க் கொண்டேயிருந்தது.  திசை அறிய முடியாத கடலின் ஒரு புள்ளியில் அவர்களது படகு நின்றது.

ஆலா குடும்பத்தின் இரண்டு ஆண்கள் பிறை வடிவக் கல்லைக் காலில் கட்டிக் கொண்டு நீண்ட கயிற்றோடு  கடலில் குதித்தார்கள். அவர்களுடன் தானும் காலில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு டக்ளஸ் குதித்தான். கடலின் அடிப்பகுதியை நோக்கி அவர்கள் சென்றபடியே இருந்தனர். கண்ணை யாரோ கையால் பொத்துவது போல நீர் முகத்தை மறைத்துக் கொண்டது. எடையற்ற உடல் சரிந்து அடியாழம் நோக்கி நழுவிக் கொண்டிருந்தது. பவளப்பாறை போல ஏதோ மினுங்கிக் கொண்டிருந்தது.

தன்முன்னே அசையும் நிழல்களைத் துரத்தியபடியே டக்ளஸ் கடலுக்குள் சென்றான். அவன் கண்கள் மெல்லிய வெளிச்சத்தை உணர்ந்தபோது தன்னோடு சேர்ந்து குதித்த இருவரையும் காணவில்லை. எது முத்து விளையும் படுகை, அவர்கள் எங்கே போனார்கள் என எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. எப்படித் தன் கண்ணில் இருந்து மறைந்தார்கள். அவன் கடலுக்குள்ளாகத் தேடி அலைந்தான். ஓய்ந்து சலித்துப் போய் டக்ளஸ் படகிற்கு வந்தபோது  துப்பாக்கி வீரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். டக்ளஸ் தனி ஆளாகப்படகை வலித்தபடியே திரிசடை தீவிற்கு வந்து சேர்வதற்குள் இரவாகியிருந்தது. தனது துப்பாக்கியுடன் அவன் ஆலா குடும்பத்தை நோக்கி ஓடினான். அவர்கள் ஒரு வரும் வீட்டில் இல்லை. கடலுக்குள்ளாகவே மூச்சடக்கி இருக்கக் கூடுமோ என்று தோன்றியது. விடிகாலை அவன் மறுபடியும் நாட்டுப் படகில் புறப்பட்டுச் சென்றான். அவனால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஆனால் அவன் திரும்பி வந்தபோது அதே ஆலா குடும்பத்து ஆண்கள்  மிக இயல்பாக வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை அவர்கள் ஏமாற்றி விட்டதாகக் கத்திக்  கூச்சலிட்டான்.  வயதான மனிதன் மட்டும் பதற்ற மற்ற குரலில் முத்துப்படுகையில் விளைச்சல் இல்லை. காத்திருக்க வேண்டும் என்று சொன்னான். டக்ளஸால் அதை நம்பமுடியவில்லை. அவர்களைக் கொன்று விடப் போவதாக மிரட்டினான். அதை எவரும் சட்டைசெய்யவேயில்லை. கடலின் கூச்சலுக்குப் பழகிப் போனவர்கள் தனது மிரட்டலுக்கா பயப்படப் போகிறார்கள் என்று அவனுக்கே தோன்றியது. தான் இனி  என்ன செய்வது என்று புரியாமல் அவன் குழப்பமடைந்தான்.

காற்றில் கிழிந்துபோன கூடாரத்திற்குப் பதிலாக ஒரு பாறையின் ஓரமாக  மரத்தடுப்பு ஒன்றை உருவாக்கி அதில் தங்கியிருந்த டக்ளஸ் தனது கூடாரத்திற்குள்ளாகவே நாளெல்லாம் படுத்துக்கிடந்தான். அவனது உடல் கொதிப்பு கொண்டது. கண்கள் சிவந்து எரிச்சலூட்டின. மூத்திரம் கூட கடுகடுத்தது.  இரவில் அவன் ஒளிரும் நட்சத்திரங்களைக் கண்டு பயந்து அலறினான். அவனுக்காகத் துப்பாக்கி வீரர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு டக்ளஸ் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான். தீவில் மஞ்சள் வெயிலடித்துக் கொண்டிருந்தது. உடலின் நீர்மை உறிஞ்சப்பட்டு தான் ஒரு  காய்ந்த இலை போல உணர்ந்தான்.

இது நடந்த ஐந்தாம் நாளில் ஒரு துப்பாக்கி வீரன் கடலை நோக்கி ஓடி கத்திக் கூச்சலிட்டபடியே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான். அது மற்றவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. அவர்கள் நடுக்கத்துடன் அந்தத் தீவிலிருந்து கிளம்பிப் போக இருப்பதாகச் சொன்னார்கள். டக்ளஸ் ஆத்திரமடைந்தான். அவர்களைத் தானே கொன்றுவிடப் போவதாகக் கத்தினான். அந்த மிரட்டல்  அவர்களைத் தீவில் தங்க வைக்கப் போதுமானதாகயில்லை. முடிவில் டக்ளஸ் அறியாமல் அவர்கள் இரவோடு தப்பிப் போக முயற்சித்தார்கள். ஆனால் ஓநாய் போல அலைந்து கொண்டிருந்த டக்ளஸ் அவர்களை மடக்கிப் பிடித்து  ஆயுதங்கள் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை விடி காலையில் கிளம்பும்படியாகச் சொன்னான். மறுநாள் காலை துப்பாக்கி வீரர்களின் படகு செல்வதைத் தொலைவில் நின்று தீவுவாசிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டக்ளஸ் மட்டும் தீவிலிருந்து போகவேயில்லை.

அவன் கடல்நண்டுகளைப் பிடித்து சமைத்துத் தின்பதும், காற்றில் அலையும் சுக்ருத இலைகளின் சப்தத்தை ரசித்தபடியும் நாட்களைக் கழித்தான். அந்தத் தீவும் மனிதர்களும் அவனுக்குப் பழகியிருந்தார்கள். தீவுவாசிகளால் தன்னை நேசிக்க முடியாது. தன்னாலும் அவர்களை நேசிக்க முடியாது. ஒருவேளை என்றாவது  மனவேகம் முற்றி அவர்களைத் தானே கொன்று விடக்கூடும் அல்லது அவர்கள் வெறுப்பின் உச்சத்தில் என்றாவது தன்னைக் கொல்லவும் கூடும் என்று அவனுக்குத் தோன்றியது.  இதில் யார் புலி – யார் வேட்டைக்காரன் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலம் துவங்கியது. பகலிரவாக மழைபெய்தபடியே இருந்தது. கடலில் விழும் மழைத்துளிகள் அடையாளமின்றி பிரம்மாண்டத்தில் ஒளிந்து கொண்டுவிடுகின்றன. மிகுமழையில் கடற்கரையே தெரியவில்லை. நுரைத்துப் பொங்கி வழிகிறது கடல். காற்றில்லாத அடர் மழை. நனையாத இடம் என்று உள்ளங்கை அளவு கூட அந்தத் தீவில் இல்லை. முத்துக் குளிப்பவர்கள் ஒண்டியிருந்த குகையின் வாசலை டக்ளஸ் மழைக்குள்ளாகவே ஒரு நாள் கடந்தபோது அவர்கள் தண்ணீருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அப்போதும் அந்தக் கண்கள் அவனை வெறுப்பதையே உணர்ந்தான்.

டக்ளஸின் துப்பாக்கி வீரர்கள் பெங்கால் போய்ச் சேருவதற்குள் நோயுற்றுக் கடலிலேயே இறந்து போனார்கள். அவர்களில் ஒருவனாக டக்ளஸ் இறந்து போயிருக்கக் கூடும் என்று கவர்னர் முடிவு செய்திருக்க வேண்டும். அவனைத் தேடி வேறு படைப்பிரிவுகள்  வரவேயில்லை.  காலம்  உருமாறிக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொரு ஆண்டின் காற்றடிக் காலத்திலும் அவர்கள் முத்துக் குளிக்க கிளம்புவார்கள். முன்பு போலின்றி இப்போது ஒரே படகில் அவர்கள் ஒன்றாகச் சென்றார்கள். டக்ளஸ் அவர்களோடு ஒன்றாகவே குதிப்பான். ஆனால் கடலின் உள்ளே அவனால் ஒருபோதும் முத்துப்படுகையைக் காண முடிந்ததேயில்லை.  அவர்கள் எப்போதும் போல அவனைத் தனித்துவிடுத்துக் கரையேறிப் போய்விடுவார்கள். இன்னமும் முத்து விளையவில்லை என்ற பதில் அவனை அதே தீவில் காத்திருக்க வைத்தபடியே இருந்தது.

அவன் உருமாறிக் கொண்டேயிருந்தான். அவனுக்குள் நல்முத்துகளை அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஆசைகள் அத்தனையும் வடிந்து போயிருந்தன. சில வேளைகளில் அவன் அந்தத் தீவில் அலையும் காட்டுப்பூனையொன்றைப் போலவே தன்னை உணர்ந்தான். சில வேளைகளில் அவன் தன்னை மணலில் துளையிடும் குழி எறும்பு போல நினைத்துக் கொள்வான். அவன் மனதில் இருந்த வேட்கைகள் வடிந்து விட்டன. ஒரேயொரு நெருப்பு. அதுவும் அணையாத பெருநெருப்பாக எரிந்து கொண்டேயிருந்தது. அது நல்முத்துகள் தனக்கு வேண்டும் என்பதே.. அதைத் தான் அறுவடை செய்த மறுநாள் அந்தத் தீவை விட்டு விலகிப் போய்விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதற்காக கடலைப் பார்க்கும் போதெல்லாம் அவன் மனது முத்துகள் விளைந்துவிட்டதா என்று உள்ளூர கேட்டுக் கொண்டேயிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் படகில் ஐந்து வணிகர்கள் அந்தத் தீவிற்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் அன்னாசிப்பழங்களும் காடாத் துணிகளும் சாம்பி ராணியும் ஊதுபத்திகளும் கொண்டு வந்து தீவின் உள்ளே இருந்த சூதனி கோவிலில் வைத்து வழிபட்டார்கள். தீவுவாசிகள் அவர்களை வரவேற்றுக் கடற்சிப்பிகளையும் சங்கையும் அள்ளி அள்ளித் தந்தார்கள்.. தீவுவாசிகள் முத்துகளை ஒருபோதும் விற்பதில்லை என்பதையும் அவர்கள் அறுத்து எடுத்த முத்துகளை மருத்துவம் செய்வதற்காக அருகாமையில் உள்ள சூதனி கோவிலில் வைத்துப் போய்விடுவார்கள் என்றும் வணிகர்கள் சொன்னார்கள்.

டக்ளஸ் கடந்த மூன்று வருஷங்களாக முத்துகளுக்காக காத்திருப்பதாகச் சொன்னான். வணிகர்கள், முத்துகள் கடலில் விழும் கண்ணீர்த் துளிகள் என்றும் சூதனியின் கண்ணீர்த்துளிகள் கடலில் விழுந்தே முத்தாகிறது என்று அந்த மக்கள் நம்புவதாகச் சொன்னார்கள். சிறு வயதில் அப்படியான மாயக்கதையைத் தானும் கேட்டிருப்பதாக டக்ளஸ் சொன்னான். வணிகர்கள் தீவுவாசிகள் தந்த பொருட்களைத் தங்களது படகில் ஏற்றிக்கொண்டு புறப்படும் போது அவன் விரும்பினால் அவர்களோடு கூட வரலாம் என்றார்கள். டக்ளஸ் மறுத்துவிட்டான். அவன் கனவில் முத்துகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

ஒன்பது வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அதிகாலை திரிசடை வாசிகள் முத்துக் குளிப்பதற்காக டக்ளஸை அழைத்துக் கொண்டு கடலுக்குள் போனார்கள். டக்ளஸ் ஒடுங்கியிருந்தான். அவனிடம் பர பரப்பில்லை. கடலில் வீசி எறியப்பட்ட மரத்துண்டு மிதப்பதைப் போலவே தன்னை உணர்ந்தான். கடல் அவனுக்குப் பழகியிருந்தது. கண்ணால் காணும் கடல் வெறும் பொய்த் தோற்றம் என்பது புரிந்திருந்தது.  தான் கடலினுள் முத்தைத் தேடிக் குதிக்கப் போவதில்லை என்று சொல்லி அவர்கள் உடலோடு சேர்த்துக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுப்பவர்களில் ஒருவனாகப் படகில் இருக்கப் போவதாகச் சொன்னான்.

அவர்கள் கடலில் குதித்தார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் கடலின் உள்ளிருந்து ஒருவன் வெளிப்பட்டு முத்து விளைந்துவிட்டதாகவும் மறுநாள் அறுத்துவிடலாம் என்றும் உற்சாகமாகச் சொன்னான். முதன்முறையாக அவர்கள் தன்மீது அக்கறையோடு பேசுவதை டக்ளஸ் உணர்ந்தான். அவனால் நம்ப முடியவில்லை. ஒன்பது வருஷங்கள் காத்திருந்த முத்துகள் நாளை அவன் கைக்கு வந்துவிடும் என்பது மனதைக் களிப்படையச் செய்தது. தனது பயணத்திற்கான நாட்டுப்படகைத் தயார் செய்யத் துவங்கினான்.

மறுநாள் விடிகாலை பட்டங்கட்டியும் இரண்டு ஆண்களும் தயாராக இருந்தார்கள்.  டக்ளஸ் அவர்களுடன் கடலுக்குள் சென்றான். அன்றும் அவன் கயிற்றைப் பிடித்துக் கொள்பவனாகவே இருந்தான். இரண்டு மூங்கில் கூடைகள் நிறைய முத்துகளை அறுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். கரைக்கு வந்த பிறகு அவர்கள் சூதனி கோவில் முன்பாக இருந்த கல்பாறையில் சிப்பிகளைத் திறந்து பார்த்தார்கள். பெரிது பெரிதாக முத்துகள். சுக்ருத இலையொன்றைப் பறித்து அதில் முத்துகளை அள்ளி சூதனி முன்பாகப் படைத்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். டக்ளஸ் முத்துகளை வியப்புடன் பார்த்தபடியே இருந்தான். அதன் வசீகரமும் அழகும் கடித்துத் தின்றுவிடலாம் போலிருந்தது. பிறகு பட்டங் கட்டி அவன் விரும்பினால் அத்தனை முத்துகளையும் அள்ளிக் கொண்டு புறப்படலாம் என்று சொன்னார்.

டக்ளஸ் ஆவேசத்துடன் முத்துகளை அள்ளி அதற்காகவே வைத்திருந்த சுருக்குப் பையிலிட்டுத் தனது இடுப்போடு சேர்த்துக் கட்டிக் கொண்டான். அங்கிருந்த ஒருவரோடும் பேசவில்லை. தனது நாட்டுப் படகை எடுத்துக்கொண்டான். கடலில் அவன் புறப்படத் தயார் ஆனபோது அதே குடும்பங்கள் கரையில் வந்து நின்று அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தன. அந்தக் கண்களில் இப்போது வெறுப்பில்லை. மாறாக ஏளனம், கேலி மட்டுமே ததும்பிக் கொண்டிருந்தது.

அவன் துடுப்பை வேகவேகமாக வலிக்கத் துவங்கினான். தீவு கண்ணை விட்டு மறையத் துவங்கியது. நடுக்கடலுக்கு வந்தபோது தொண்டை காய்ந்து தாகமாக இருந்தது. வெளிர்நீல வானத்தின்கீழ் அவன் மட்டுமே இருந்தான். கடலின் பிரம்மாண்டம் கண்கொள்ள முடியாமலிருந்தது. தனது நீர்க் குடுவையை வாயில் வைத்து உறிஞ்சியபடியே கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கடலின் மீது தயங்கித் தயங்கி வெயில் ஊர்ந்து கொண்டிருந்தது. தீவுவாசிகளின் கேலிப்பார்வை அவன் கூடவே வருவது போலிருந்தது.

எங்கோ அதிகாரத்தில் உள்ள  ஒருவரின் அற்ப சந்தோஷத்திற்காகத் தனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தமற்றுச் செய்துவிட்டதைத் தான்  தீவுவாசிகளின் கேலி வெளிப்படுத்துகிறதா? கடல் இத்தனை நாட்களாக அவனிடம் சொல்ல விரும்பியது இதுதானா? யோசிக்க யோசிக்க தீவுவாசிகளின் பரிகாச முகத்தின் உண்மை அர்த்தம் புரியத் துவங்கியது. துடுப்பு வலிப்பதை நிறுத்தி விட்டு அவன் இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை வெளியே எடுத்து முத்துகளைக் கையில் கொட்டிப் பார்த்தான்.

ஏனோ வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அந்த முத்துகளைத் தடவிப் பார்த்தான். முத்துகளின் மீது தீவுவாசிகளின் தீராத வெறுப்பு பிசுபிசுப்பாகப் படிந்து போயிருப்பதை அவனால் உணர முடிந்தது. தான் ஒரு இழிபிறவி என்று தன்னைத் தானே சபித்துக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதான். அவனை ஆறுதல்படுத்த அங்கே யாருமேயில்லை.

முடிவில் அடங்கமுடியாத மன வலியோடு தன் கையில் இருந்த முத்துகளைக் கடலில் வீசி எறிந்தான். பிறகு எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் கடலை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். காற்று அவன் தலையைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கடற்பறவையொன்று அவனைக் கடந்து மேற்காகச் சென்றது.  நீண்ட யோசனையின் பிறகு மெதுவாக திரிசடை தீவை நோக்கித் தனது படகைச் செலுத்தத் துவங்கினான்.   

****

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #19 on: June 05, 2013, 11:04:28 AM »
பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

சிறுகதை


ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ஆர்யமாலா என்ற பணிப்பெண் மட்டுமே உடனிருந்தார். பி. விஜயலட்சுமிக்கு அளிக்கபட்ட சிகிட்சை பற்றி அவளது பெற்றோருக்கு எதுவும் தெரியாது. அவளது கணவரான வைகுந்தராமன் மட்டும் மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமையில்  அவளை பார்ப்பதற்கு அனுமதிக்கபட்டிருந்தார்; ஆனால் அவர் பெரும்பாலும் வருவதேயில்லை. மருத்துவசெலவிற்கான தொகை மட்டும் மருத்துவமனை பெயருக்கே காசோலையாக அனுப்பபட்டு வந்தது.

சிகிட்சைக்கு கொண்டு வரப்பட்ட நாள்:

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலையில் பி. விஜயலட்சுமி 21.4. 2003 அன்று பின்னிரவில் நாலு மணிக்கு  உள்நோயாளியாக அனுமதிக்கபட்டாள். அன்று அவள் டி.என்.3792 என்ற டாக்சியில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்தாள். அவள் வந்த இரவு கொச்சினை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தால் காரின் ஒட்டுனர் வழி தவறி நெடுங்காடு என்ற இடத்திற்கு சென்று சுற்றியலைந்து விசாரித்த போது அது போல ராமவர்மா வைத்தியசாலை இங்கே இல்லை என்றும் அது அடுத்த ஊரான சர்ப்பக்காவில் இருக்க கூடும் என்றார்கள்.

வயல்வெளிகளில் கார் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த போது பின்சீட்டில் சுருண்டுகிடந்தாள் பி. விஜயலட்சுமி. அவளது காலில் லேசாக குளிர்காற்று உரசிக்கொண்டிருந்தது. தலைமயிர் சுற்றிய பித்தளை வளையம் ஒன்று அவளது இடதுகாலை கவ்விபிடித்தபடியிருந்தது. பித்தவெடிப்பேறிய அவளது பாதங்களை மடக்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்தாள் பரிமளம். யாரோ கதவை தட்டுவது போல மழை காரின் மீது தன் விரல்களால் தட்டியபடியே வந்தது. அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் மட்டுமே வந்திருந்தார்.அவரும் சக்கரைநோயாளி என்பதால் உறக்கத்தை கட்டுப்படுத்துவது இயலாததாக இருந்தது. கார் புனலுர் தாண்டும் போதே உறங்கியிருந்தார்.

காரை ஒட்டிவந்த சுப்பு மட்டும் எப்போதாவது பின்சீட்டில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து கொண்டே வந்தான். ஒரு சாயலில் அவன் குடியிருந்த லயன் வீட்டில் இருந்த கணபதி புலவரின் மகளை போலவே அவள் இருந்தாள். பி. விஜயலட்சுமியின் தோற்றம் உருக்குலைந்திருந்தது.அவளது தலைமயிர் எண்ணெய் வைக்கபடாமல் சிடுக்கேறியிருந்தது. நெற்றி ஏறிப்போய் கழுத்து எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது வலதுகையில் பெரிய காயம் ஒன்று சீல்வடிந்து கொண்டிருந்தது. தண்ணீருக்குள் விழுந்த பஞ்சை போல அவள் உடம்பு சுருங்கிப்போயிருந்தது. அவளது கண்கள் மஞ்சளேறியிருந்தன. இமைகள் பருத்து வீங்கி அவள் பல நாட்களாக உறங்காமலேயிருக்கிறாள் என்பது பார்த்த நிமிசத்திலே தெரிந்தது.

சர்ப்பக்காவில் உள்ள வைத்தியசாலையை தேடி டாக்சியில் சென்று சேர்ந்தபோது வெளிவாசலை மூடியிருந்தார்கள். மழைக்குள்ளாகவும் ஏதோவொரு மூலிகை செடியின் வாசனை கமந்து கொண்டிருந்தது. நோயாளியை உள்ளே கூட்டிக் கொண்டு போய்விடலாமா என தெரியாமல் டிரைவர் வெளியில் இருந்தபடியே ஹார்ன் அடித்து கொண்டிருந்தான். யாரும் வரவில்லை. மழைசப்தத்தில் கேட்காமலிருக்க கூடும் போலிருந்தது. பாதி உறக்கத்தில் இருந்த வரதராஜ பெருமாள் ஹார்ன் சப்தத்தில் விழித்து கொண்டு உள்ளே போய் கேட்டுவரச் சொன்னார்

டிரைவர் மழைக்குள் இறங்கி ஒடத்துவங்கிய போது பி. விஜயலட்சுமி மழைக்குள் அசைந்தபடியே இருக்கும் ஒரு கேந்திபூச்செடியை பார்த்து கொண்டேயிருந்தாள். மழையின் வேகத்தை தாங்கமுடியாமல் கேந்திச்செடி வளைந்து கொண்டிருந்தது. டிரைவர் உள்ளே ஒடியபோது ஒரேயொரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அவன் பலத்த குரலில் சப்தமிட்டான். உள்ளிருந்து அறுபது வயதை கடந்த ஒரு ஆள் வெறும்மேலோடு வெளியே வந்து நின்று யார் வேணும் என்று மலையாளத்தில் கேட்டார். சங்கரன்கோவிலில் இருந்து தான் வருவதாகவும் நோயாளியை கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னான். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அதைபற்றி தனக்கு தெரியாது என்றும் நோயாளி ஒரு பெண் என்றும் சொன்னான். அந்த ஆள் உள்ளேயிருந்த லைட்டை போட்டு பெரிய பேரேடு ஒன்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது அறையின் மூலையில் வைக்கபட்டிருந்த பாடம் பண்ணப்பட்டிருந்த முதலை ஒன்றை கண்டான். அறையில் ஆள் உயர விளக்கு ஒன்று இருந்தது. சுவரில் நடனமாடும் பெண்ணின்  சித்திரம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

மருத்துவமனை ஆள் பொண்ணுக்கு என்ன கோளாறு என்று கேட்டான். டிரைவர் தயங்கியபடியே சித்தபிரம்மை என்று சொன்னதும் அதுக்கு வைத்தியசாலை ஆள் ஆனங்குளம் வைத்தியசாலைக்கு இல்லே நீங்கள் போகணும் என்றான். டிரைவர் அது எங்கேயிருக்கிறது என்று கேட்டதும் நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். இப்படியே நாற்பது கிலோ மீட்டர் கிழக்காக போனால் மெயின்ரோடு வந்து சேரும். அங்கிருந்து மேற்காக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தான்.

டிரைவர் மழைக்குள்ளாகவே வாசலுக்கு வந்தபோது காரின் பின்கதவு திறந்து கிடந்தது. பின்சீட்டில் இருந்த பரிமளம் கிழே இறங்கி போய் ஒரு செடியின் மறைவில் குத்துகாலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். அவளது முதுகில் மழை பெய்து கொண்டிருந்தது. பி. விஜயலட்சுமி அந்த கேந்தி செடியை விட்டு கண்ணை விலக்கவேயில்லை. தலையில் விழுந்த மழைத்துளியை தட்டிவிட்டபடியே பரிமளம் காரில் ஏறிக் கொண்டு என்னப்பா ஆச்சு என்றாள். அந்த ஆஸ்பத்திரி வேற எங்கயோ இருக்காம் என்றபடியே காரை எடுத்தான் டிரைவர்.

பரிமளம் தனது பருத்த கையால் பி. விஜயலட்சுமியின் தலையில் ஒரு அடி கொடுத்தபடியே இந்த எழவை கட்டி இழுக்குறத்துக்குள்ளே என் தாலி அறுந்து போகுது என்றாள். பி. விஜயலட்சுமியின் கவனம் அப்போதும் அந்த செடியின் மீதே இருந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருந்தது.

மிக மெதுவாக கார் ஊர்ந்து சென்றது. ஒரு செக்போஸ்டில் கார் நின்றபோது வரதராஜ பெருமாள் தனக்கு பசிக்கிறது என்றார். டாக்சி டிரைவரும் அவரும் இறங்கி சாலையோர உணவகத்தில் பிஸ்கட் சாப்பிட்டார்கள். ஆனங்குளத்தை தேடி அவர்கள் போய் சேர்ந்த போது மழை பெய்து முடித்திருந்தது.

வைத்தியசாலை நூற்று நாற்பது ஏக்கர் பரப்பில் மிகப்பெரியதாக இருந்தது. நுழைவாயிலில் யானை சிலை ஒன்றிருந்தது. இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து அந்த சிலை நிஜ யானையை போன்றேயிருந்தது. தாழ்வான ஒடு வேய்ந்த கட்டிடங்கள். சிறியதும் பெரியதுமான குடியிருப்புகள். செதுக்கி வளர்க்கட்டிருந்த பெரிய புல்தரை, வளைந்து செல்லும் மரங்கள் அடர்ந்த சாலைகள் என அது ஒரு தனி உலகமாக இருந்தது. கார் உள்ளே சென்ற போது இரவு பணியாளர்கள் விழித்திருந்தனர். ஏதோ தைல எண்ணெய் காய்ச்சிக் கொண்டிருப்பது போல மணம் கமழ்ந்து வந்து கொண்டிருந்தது. வரதராஜ பெருமாள் அவர்கள் நீட்டிய பேரேடுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

முண்டு அணிந்த ஒரு வயதான பெண் காரின் கதவை திறந்து பி. விஜயலட்சுமியை எழுப்பிய போது அவள் அங்கிருந்த கல்வாழையின் இலை அசைவதை  பார்க்க துவங்கியிருந்தாள். முண்டு அணிந்தவள் பரிமளத்திடம் நீங்கள் அவளது அம்மாவா என்று கேட்டாள். அதற்கு பரிமளம் எரிச்சலுடன் அந்த நாய்கள் தன்வேலை முடிச்சிருச்சினு எங்க தலையில கட்டிட்டு போயிட்டாங்க. நாங்க தான் உசிரை கொடுக்கிறோம் என எரிச்சல் அடைந்தபடியே நான் இவ அத்தை என்றாள். முண்டு அணிந்தவள் விஜியை கைகொடுத்து துக்கிய போது ஒரு பள்ளி சிறுமியை துக்குவது போலவே இருந்தது.ஒரே ஜாக்கெட்டை பலமாதமாக அணிந்திருந்த காரணத்தால் அவளது முதுகில் பட்டை போல தடம் விழுந்திருந்தது.பி. விஜயலெட்சுமியின் பொருட்கள் என்று ஒரு பழைய வயர்கூடையில் அடைத்து எடுத்து வரப்பட்டிருந்த பொருட்களை பரிமளம் தன் கையில் எடுத்து கொண்டாள்.

முண்டு அணிந்தவள் மழை தண்ணீர் தேங்கியிருந்த பாதையில் விஜயலட்சுமியை தன்னோடு சாய்த்து கொண்டு நடந்த போது விஜயலட்சுமிக்கு நடக்கவே கால் கூசுவதை உணர்ந்தாள். உடம்பில் பிசுபிசுப்பும் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கிழக்கு பார்த்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே விஜயலட்சுமியை படுக்கையில் உட்கார வைத்த போது பரிமளம் பெருமூச்சுவிட்டபடியே கதவை மூட வேண்டாம் அவ துங்கவே மாட்டா . நிலை குத்தினது மாதிரி உட்கார்ந்தே இருப்பா. என்றாள். முண்டு அணிந்தவள் தலையசைத்தபடியே அறையின் பூட்டை மேஜையின் மீது வைத்து விட்டு வெளியேறினாள்.

வரதராஜ பெருமாள் அந்த அறைக்கு வந்து சேர்ந்தபோது விஜயலட்சுமி சுவரை பார்த்தபடியே ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பரிமளம் இரவிலே கிளம்பி போய்விடுவதா இல்லை காலையில் புறப்படலாமா என்று கேட்டாள். இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள். முன்பு வந்த அதே முண்டு அணிந்த பெண் இப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியும் கொசுவர்த்தி சுருள் ஒன்றும் கொண்டு வந்து வைத்தபடியே ஆம்பளைகள் இங்கே தங்குவதற்கு அனுமதியில்லை என்றாள். வரதராஜ பெருமாள் தாங்கள் இரவிலே கிளம்பவுதாக சொல்லியபடியே இரண்டு நாட்களுக்குள் அவளுக்கு துணையாக யாராவது ஒரு ஆளை ஊரிலிருந்து அனுப்பி வைப்பதாக சொன்னார். முண்டு கட்டியவள் அதைக் கேட்டு கொண்டதாகவே தெரியவில்லை. வரத ராஜ பெருமாள் கிளம்பும் போது அந்த பணிப்பெண்ணிடம் இவளுக்கு பச்சைதண்ணி ஆகாது.. குளிக்க வச்சா கத்துவா என்று சொல்லியபடியே டாக்சியை நோக்கி நடந்தார்.

மழைக்கு பிந்திய இரவு என்பதால் வானில் நட்சத்திரங்களே இல்லை. டிரைவர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்த போது வரதராஜ பெருமாள் இதுக்கு மாசம் ரெண்டாயிரம் ஆகும். இந்த சனியனை கட்டிகிட்டு வந்ததுக்கு என்னவெல்லாம் தொரட்டை அடைய வேண்டியதிருக்கு பாரு என்றார். பரிமளம் பின்சீட்டில் தனி ஆளாக சாய்ந்து படுத்தபடியே மூளைக்கோளாறு ரொம்ப நாளாவே இருந்திருக்கணும். நம்ம தலையில கெட்டி வச்சிட்டாங்க இனிமே இவ செத்தாலும் பிழைச்சாலும் நமக்கென்ன விடு என்றாள்.

கார் பிரதான சாலைக்கு வந்த போது விடிய துவங்கியிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திரும்பவும் பசிக்க துவங்கியிருந்தது. அவர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஹோட்டலில் நிறுத்த சொன்னார். டிரைவர் ஆற்று பாலத்தை கடந்து போன போது அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு குளித்து ஒரு துக்கம் போடலாம் என்று நினைத்தான். காரில் இருந்த இரண்டு பேரும் உறங்கியிருந்தார்கள். சாலை ஈரத்தில் நனைந்து கிடந்தது. ஏனோ அவனுக்கு பி. விஜயலட்சுமியை பற்றிய வருத்தம் உண்டானது. அவன் பாதி துக்கமும் மனதில் வலியுமாக வண்டியை சங்கரன்கோவிலை நோக்கி ஒட்டி போய் கொண்டிருந்தான்

நோய் குறிகள்

பி. விஜயலட்சுமி கடந்த ஒரு வருட காலமாக உளவியல் மருத்துவர் டாக்டர் செல்வமகேந்திரனிடம் சிகிட்சை பெற்றிருக்கிறாள். அவரது மருத்துவகுறிப்பின்படி அவளுக்கு ஏற்பட்டிருப்பது அதீத பயம் மற்றும் மனசிதைவு. இதற்கான காரணங்களாக அவர் கருதுபவை
1) விஜயலட்சுமி திருமணம் நடந்த நாளில் இருந்து ஒரு மாதகாலம் பகலிரவு என பேதமில்லாமல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறாள். அதனால் அவளது பால்உறுப்பு அழற்சி அடைந்திருக்கின்றது. அத்தோடு அவளது உடலில் பதினோரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பல்லில் ஒன்று பாதி உடைபட்டிருக்கிறது
2) விஜயலட்சுமி கடந்த 11.7.2002 முதல் தொடர்ந்து நாற்பத்திரெண்டு நாட்கள் துங்காமல்  இருந்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அவள் படுக்கையில் கிடந்தபடியே உறக்கம் வராமல் புரண்டு படுத்திருக்கிறாள். அதன்பிறகு அவள் படுத்துக்கொள்வதேயில்லை. சுவர் ஒரமாகவே இரவு முழுவதும் நின்று கொண்டேயிருந்திருக்கிறாள். யாராவது அவளை அழுத்தி உட்கார வைத்தால் கூட தானா எழுந்து நின்று கொண்டு விட்டிருக்கிறாள்.  இதற்காக அரசு பொதுமருத்துவனையில் மூன்று நாட்கள் சிகிட்சை அளிக்கபட்டபிறகு அவள் எழுந்து நிற்பதில்லை. மாறாக கர்ப்பசிசுவை போல கைகால்களை ஒடுக்கி கொண்டு உட்காந்திருந்திருக்கிறாள்
3) 2002ம் வருட ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை அவளை திருவந்தியம் கோவிலுக்கு அழைத்து போயிருந்த போது அவள் இடைவிடாமல் மூத்திரம் பெய்தபடியே இருந்திருக்கிறாள். அதனால் ஆத்திரமாகி அவளை அடித்ததில் இடதுதொடையில் பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது
4) பி. விஜயலெட்சுமி திருமணமாகி வந்த இரண்டு மாதங்களில் நாலைந்து முறை  கணவனோடு சண்டையிட்டிருக்கிறாள். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் அவளை கணவனோ அல்லது அவனது வீட்டு ஆட்களோ தாக்கியிருக்கிறார்கள். ஒரு முறை அவளை வீட்டில் உள்ள ஒரு ஆண் ( யார் என்று தெரியவில்லை) தனது ஆண் உறுப்பை அவளது முகத்தில் தேய்த்திருக்கிறார். அன்று அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்து கண்டுபிடிக்கபட்டு சமையல்பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கபட்டிருக்கிறாள்.
5) இரண்டு முறை அவளுக்கு கர்ப்பசிதைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறை திருமணமான நாற்பதாவது நாளும் இரண்டாவதுமுறை கரு வளர்ந்து 95 நாட்கள் ஆன பிறகும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் அவள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டியிருக்கிறாள். சில நேரங்களில் அவள் அழுவது நாள் கணக்கில் நீடித்திருக்கிறது
6) 2002ம் ஆண்டின் மேமாதத்தில் அவள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தனது பதிவு எண்ணை நீடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதை அனுமதிக்க மறுத்ததோடு அவள் தானே கிளம்பி போய்விடக்கூடும் என்று அவளது சான்றிதழ்களை யாவையும் எரித்து விட்டார்கள் என்றும் அன்றிரவு அவள் திரும்புவம் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றபட்டு தயாளன் ஆர்எம்பி என்ற மருத்துவரிடம் சிகிட்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்த சிகிட்சை முடிந்து வந்த சில வாரங்களுக்கு பிறகு அவளது உடலில் ஆங்காங்கே காரணமில்லாமல் பருத்து வீங்க துவங்கியிருந்தது. இதற்கான சிகிட்சை அளிக்கபடவேயில்லை
7) துக்கமின்மை. நடந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்வது. கற்பனையாக பயம் மற்றும் தான் இறந்து போய்விட்டதாக நம்புவது உள்ளிட்ட பல நோய்கூறுகள் அவளிடம் துல்லியமாக வெளிப்படுகின்றன

உளவியில் மருத்துவரின் இந்த நோய்கூறுகள் பற்றிய அவதானிப்புகளை போல அவளது கணவன், மாமனார், மாமியார், சின்ன அத்தை மற்றும் அந்த வீட்டின்  வேலைக்காரி  ஆகியோர் அவதானித்த அவளது நோய் குறிப்புகள்

1) விஜயலட்சுமிக்கு திருமணத்தின் போது இருபத்தைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அதை பெண் வீட்டில் இருபது என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இதை அவளது கணவன் வைகுந்தராமன் சான்றிதழ்களில் இருந்து கண்டுபிடித்தான். அதைபற்றி விஜயலட்சுமியிடம் கேட்டபோது வைகுந்த ராமனுக்குகூட முப்பத்தைந்துவயது முடிந்து விட்டிருக்கிறது, ஆனால் பொய் சொல்லிதானே கல்யாணம் செய்திருக்கிறான் என்று வீண்வாதம் செய்தாள். இதனால் அவளை வைகுந்தராமன்  கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிரவு இந்த சண்டை காரணமாக அவள் உடலுறவு கொள்வதற்கு அனுமதி மறுக்கவே வைகுந்தராமன் அவளை கட்டிலில் இருந்து கிழே தள்ளி வன்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவள் பிடித்து தள்ளியதில் வைகுந்தராமனின் முந்நுறு ரூபாய் பெறுமானமுள்ள ஆல்வோ கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து போனது குறிப்பிட்டதக்கது.
2) விஜயலட்சுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தபாலில் எம்ஏ படிக்க முயன்றிருக்கிறாள். அப்படி அவளுக்கு வந்த பாடப்புத்தகங்களை அவள் ஒளித்து வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கையின் அடியில் வைத்திருந்தை தற்செயலாக அவளது மாமனார் வரதராஜ பெருமாள் கண்டுபிடித்து விசாரித்த போது அவள் படிப்பது தவறு ஒன்றும் இல்லையே என்று வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்த போது அவர் வழியில்லாமல் அவளது செவுளில் இரண்டு அடி தரவேண்டியதாகியது. அன்றிரவும் விஜயலட்சுமி வன்புணர்ச்சிக்கு உள்ளாகினாள். ஆனால் அவள் மற்ற நாட்களை போல இல்லாமல் ஆடைகளே இல்லாமல் வீட்டின் ஹாலுக்கு வந்து தனது மாமனார் முன் நின்றபடியே நீதானடா சொல்லி குடுக்குறே. என்று மரியாதையின்றி கத்தியிருக்கிறாள்.
3) விஜயலட்சுமியின் தம்பி விடுமுறைக்கு வந்த நாளில் அக்காவின் கட்டிலில் ஒரு மதியம் உறங்கி கொண்டிருந்ததை கண்டு வைகுந்தராமன் அவனை அடித்து எழுப்பி விரட்டவே அந்த பிரச்சனையை விஜி பெரிதாக எடுத்து கொண்டு கத்தியிருக்கிறாள். அப்போது அவளை வைகுந்தராமன் அடிக்க முற்பட அதை விஜியின் தம்பி தடுத்திருக்கிறான் வேறு வழியில்லாமல் அந்த பையன் கழுத்தை பிடித்து தள்ளி இனிமேல் அவனோ, அவளது வீட்டு ஆட்களோ அவளை தேடி வரக்கூடாது என்று விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது
4) விஜயலட்சுமிக்கு சினிமா பாட்டுகளை கேட்பதும் பாடுவதுமான பழக்க மிருந்திருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடிக் கொண்டேயிருந்ததால் அதை தடுப்பதற்கு வேறு வழியில்லாமல் அவளது உதட்டில் சூடு போட வேண்டிய நிர்ப்ந்தம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது
5) விஜயலட்சுமி கணவனையும் மற்றவர்களையும் சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு  தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அதை தடுத்து அவளை பொதுமருத்துவமயில் சேர்த்து மின்சார சிகிட்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் செலவு மட்டும் பனிரெண்டாயிரம் ஆனது. அதை மாமனார் வீட்டில் வைகுந்தராமன் பெருந்தன்மையாக கேட்கவேயில்லை

6) கணவரை உடல் உறவில் திருப்தி படுத்த முடியாத தன்மையும், வீட்டில் வேலைகள் செய்யாமல் கற்பனையில் முழ்கி கிடப்பதும் புத்தகம் படிப்பதும் அவளது முக்கிய நோய்குறிகள்.

பி. விஜயலட்சுமியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்

2002ம் வருடம் மார்ச் மாதம் 8 ம் தேதி செய்துங்கநல்லுர் பெத்தையா- செல்லம்மாள் தம்பதியின் குமாரத்தியான பி. விஜயலெட்சுமி என்ற விஜயாள் பி.ஏவிற்கும், சங்கரன்கோவில் பூவிளங்கும் பெருமாள் பேரனும் வரதராஜ பெருமாளின் சிரேஷ்ட பையனும் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் வைகுந்தராமன் பி.காம். டி.கோப் அவர்களுக்கும் சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 10.30 வரையான முகூர்த்ததில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் வைகுந்தராமனின் நண்பர்கள் நுற்றுக்கும் மேற்பட்டவர்களும் விஜயலெட்சுமியோடு படித்த கண்மணி , விமலா என்ற இருவர் மட்டும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் திருமணத்திற்காக நாற்பது பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்க பணமும் ஒரு யமஹா பைக்கும் வாங்கி தருவது என்று நிச்சயக்கப்பட்டிருந்த வண்ணம் யாவும் இனிதாக நிறைவேற்றி வைக்கபட்டது. விருந்தில் விஜயலட்சுமி இன்னொரு அப்பளம் கேட்டபோது வைகுந்தராமன் ஏண்டி சாப்பாட்டுக்கு அலையுறே என்றதும் அவனது குடும்பமே சிரித்தது.
 
திருமணநாளின் மதியத்தில் விஜயலட்சுமியும் வைகுந்தராமனும் புது தலையணை, போர்வை சகிதமாக ஒரு அறையில் தங்க வைக்கபட்டபோது வைகுந்தராமன் அவளிடம் தான் பத்து நாட்களாக ஜிம்மிற்கு போய் உடம்பை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதனால் இன்றிரவு அவள் பலமுறை உடல்உறவுக்கு தயராக இருக்க வேண்டும் என்றும் கூறினான். அவள் பதிலே சொல்லவில்லை.

இரவு அவள் படுக்கைக்கு சென்ற போது அவளது வலதுகையை முறுக்கியபடியே அவன் ஒரே கடியில் முழு ஆப்பிள் ஒன்றை தின்றபோது அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் விருப்பம் கூடுவதற்குள் அவன் தனது செயலை முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பழங்கள் யாவையும் தின்று தீர்கக துவங்கினான். அவள் எழுந்து மூத்திரம் பெய்துவிட்டு வர விரும்பினாள். அதற்கு கதவை திறந்து வெளியே போக வேண்டும். உள்ளே வருதற்குள் போய்விட்டு வந்திருந்தால் என்ன என்று அவன் கத்தினான். அவள் சுருண்டு படுத்து கொண்டாள்.  விடிந்து எழுந்த போது அவளது உடலில் நாலைந்து சிறு காயங்களிருந்தன. அதை விடவும் அவன் பாதி கடித்து போட்டிருந்த ஆப்பிள்சதைகள் ஆங்காங்கே கிடந்தை காணும் போது அருவருப்பாக இருந்தது. அவள் துக்க கலக்கத்தோடு அவசரமாக மூத்திரம் பெய்வதற்காக வெளியே சென்றாள்.

**
திருமணமான பத்து நாட்களுக்கு பிறகு அவர்கள் வைகுந்தராமனின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்கள். அந்த வீடு மிக சிறியது. உள்ளே ஒரு நார்கட்டில் போட்டிருந்தார்கள். அதில் இருவர் படுக்க முடியாது. ஆனாலும் அவனது கட்டாயத்தால் அவள் அதில் ஒட்டிக் கொண்டு படுக்க வேண்டியதாகியது. இரவில் அவனது ஆத்திரத்தால் அவளது கால்முட்டியில் கட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. இந்த கிராமத்தில் எந்த டாக்டரை பார்ப்பது என்று அவன் திட்டியதோடு அப்படியே விட்டுவிட்டான் . அங்கிருந்த மூன்று நாட்களும் அவளால் வலது காலை அசைக்கவே முடியவில்லை.  ஊருக்கு வந்ததுமே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் ஆத்திரத்தில் அவள் காய்ச்சலை பற்றி பொருட்படுத்தாமல் அவளோடு உறவு கொண்டான். மறுநாள் அவள் மருத்துவரிடம் காட்டியபோது அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் படியாக சொன்னார். வைகுந்தராமன் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஊருக்கு போன் செய்து அவளது அப்பாவை வரச்சொல்லிவிட்டு தனக்கு அலுவலக வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி சென்றான்

**
வீட்டு பிரச்சனைகளில் இருந்து மனதை திசைதிருப்புவதற்காக விஜயலட்சுமி  வாடகை நுலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தாள். அங்கே உள்ள புத்தகத்திலே மிக அதிகமான பக்கங்கள் கொண்ட ஏதாவது ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாரக்கணக்கில் படித்து கொண்டிருப்பாள். அப்படி ஒரு நாள் அவள் யாருக்காக மணி ஒலிக்கிறது என்ற புத்தகத்தை எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்த போது  வீட்டு பெண்களை போல அவள் வேலைகள் செய்யாமல் எதற்கு படித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று ஆத்திரமாக கத்திய வைகுந்தராமன் உடனடியாக அந்த நாவலை பிடுங்கி கிழித்து அடுப்பில் போட்ட போது அவள் வேண்டும் என்றே தனது தலையை சுவரில் பலம் கொண்ட மட்டும் முட்டிக் கொண்டாள். ஆனால் அப்போதும் அவளது மண்டை உடையவேயில்லை அத்தோடு அவளது ஆத்திரமும் தீரவில்லை.

**
ஒரு நாள் மதியம் சாப்பாடு போடும்போது தட்டில் ஒரு தலைமயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணம் காட்டி விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் அன்றிலிருந்து அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்று கத்தினார். அதை வைகுந்தராமனும் ஆமோதித்ததோடு அப்போதே அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்றான். அன்றிலிருந்து விஜயலட்சுமி தானாகவே தரையில் சாப்பிட துவங்கினாள். அதை பின்நாட்களில் ஒருவரும் தடுக்கவேயில்லை

**
வைகுந்தராமன் அலுவலகத்திலிருந்து வரும்வரை இரவில் அவள் படுக்கையில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறாள் என்பதால் தேவையற்ற மின்சார செலவு ஏற்படுகிறது என்று மின்விளக்குகளை அணைக்க சொல்லி சண்டையிட்ட பிறகு அவள் தனது அறையில் எப்போதுமே விளக்கு போடாமல் இருட்டிலே இருக்க பழகத்துவங்கினாள். இந்த பழக்கம் பகலிலும் நீண்டுவிடவே அவளாக வீட்டு ஜன்னல்களை ஆணி வைத்து அடித்து ஒரு போதும் திறக்க முடியாதபடி மூடிவிட்டாள்.

**
துணி துவைக்கும் சோப்பு மற்றும் அவளுக்கான எண்ணெய், பவுடர், சீப்பு போன்றவற்றை அவர்கள் தங்களது அலமாரியில் வைத்து பூட்டிக் கொண்ட நாளில் இருந்து அவள் ஒரே உடையில் நாள் கணக்கில் இருக்கவும் குளிப்பதற்கு மறுக்கவும் துவங்கினாள்

***
ஒவ்வொரு முறை கர்ப்பம் கூடி கலைந்த போதும் அவள் தனது பிறக்காத குழந்தைக்கு ஒரு பெயரிட்டு அதை தான் வளர்ப்பது போன்று கற்பனையாக செயல்பட துவங்கினாள். இதற்காகவே அவள் அடிவாங்கியதும் சிலமுறை நடந்தேறியிருக்கிறது.

வைத்தியசாலையில் சில  தினங்கள்

விஜயலட்சுமி வைத்தியசாலைக்கு வந்த நாலு வாரங்கள் யாரோடும் பேசவேயில்லை. ஒரு இரவு அவள் தனது அறையினுள் வந்துவிட்ட தவளை ஒன்றை இரவு முழுவதும் அருகில் உட்கார்ந்து பார்த்து கொண்டேயிருந்தாள். தவளை கண்ணை மூடுவதும் திறப்பதையும் காண்பது வசீகரமாக இருந்தது. விடிகாலையில் அந்த தவளை அறையை விட்டு படியில் தாவி குதித்தது. அப்போது அவளும் படிக்கு வந்து நின்றாள். தவளை இன்னொரு குதி குதித்து செடிக்குள் மறைந்த போது அவள் சந்தோஷத்துடன் கைதட்டினாள்

**
ஒரு நாளிரவு அறையின் ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. விஜயலட்சுமி தனது கைகளை அந்த வெளிச்சத்தில் காட்டினாள். நிலா வெளிச்சம் கைகளில் ஊர்ந்து போக துவங்கியது. நிலா அறையில் நகர நகர அவளும் தன் கைகளை நீட்டிக் கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் உடலில் நடுக்கம் அதிகமானது.

**
ஒரேயொரு முறை அவள் எண்ணெய் குளியல் செய்வதற்காக அழைத்து போகபட்டபோது வழியில் கிடந்த சிவப்பு துணியை காட்டி இது பாம்பில்லை துணி என்ற ஒரேயொரு வார்த்தை பேசினாள். அதன்பிறகு பலவாரங்கள் பேசவேயில்லை.
**
பலாமரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை எறும்புகள் ஏறுகின்றன எத்தனை எறும்புகள் இறங்குகின்றன என்று  பகல் முழுவதும் எண்ணிக்கொண்டேயிருந்தாள். ஏறிய எறும்புகளில் பத்துக்கும் மேற்பட்டவை கிழே இறங்கவேயில்லை என்பது அவளுக்கு வருத்தம் தருவதாக இருந்தது
**
கூட்டு பிரார்த்தனைக்காக அழைத்து போகப்பட்ட போது அவள் மனம் உருகி தான் ஒரு கொசுவாக மாறிவிட்டால் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழலாம் என்று பிரார்த்தனை செய்தாள்.
**
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் மௌனத்திலிருந்து பேச்சிற்கும் அவள் நகர்ந்து வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலானது. ஆனாலும் அவளது உடலில் உள்ள தழும்புகளை கண்ணாடியில் கண்டதும் அவள் முகம் வெளிறி ஒடுங்கி போவதை ராஜ வைத்தியத்தாலும் குணப்படுத்த முடியவேயில்லை

**
பின்குறிப்பு : 21.12.2003 மதியம் இரண்டு மணிக்கு ஆனங்குளத்தில் உள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த ஐம்பது வயதை தாண்டிய நபர் நரைத்த தலைமயிரும் கவலை தோய்ந்த முகமும் கொண்டிருந்தார். அவரது கண்களில் துக்கம் படிந்திருந்தது. நடுங்கும் குரலில் தான் விஜயலட்சுமியின் தகப்பன் என்றும் தங்களிடம் விஜயலட்சுமி படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாக வைகுந்தராமன் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்றும் அவளை தான் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சொன்னார். வைத்திசாலை ஆட்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அந்த வயசாளி தன்னை மீறி அழுதபடியே என் பொண்ணுய்யா என்று கத்தினார்.

வழியில்லாமல் ஒரு முறை அவளை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அவர் பார்த்தபோது சிறிய பச்சைநிற அங்கி அணிந்தபடியே அவள் படியில் உட்கார்ந்திருந்தாள். அவளது தலைமயிர் கொட்டி போயிருந்தது. அவள் தன் அப்பாவை பார்த்ததும் பலவீனமான குரலில் நீயும் இங்கே வந்துட்டயாப்பா என்று கேட்டாள். அவர் பதில் சொல்லமுடியாமல் கதறிஅழுதார்.

அன்றிரவு வைத்தியசாலையில் இருந்த பணிப்பெண்ணிற்கு பணம் கொடுத்து யாரும் அறியாமல் தன் பெண்ணை அவர் அங்கிருந்து கூட்டிப் போய்விட்டார் என்றும் ஒருவேளை அவர்கள் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியிலோ, கர்நாடகாவில் உள்ள கொல்லுரிலோ. மஹாராஷ்டிராவில் உள்ள சீரடியிலோ  காணக்கூடும் என்கிறார்கள்.

உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நமது நற்குடும்பத்தின் சந்தோஷ வாழ்வை எவ்விதத்திலும் தொல்லை செய்யமாட்டார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.

**

- உயிர்மை இதழில் வெளியானது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #20 on: June 05, 2013, 11:10:10 AM »
இல்மொழி

குறுங்கதை


சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள்.

கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் கடை மூன்றாவது இருந்த கடை கல்கண்டுபால் விற்பது. இதை மூன்றையும் நிர்வாகம் செய்வதற்காக ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.

சுப்பையாவுக்கு தாழையூத்தில் பெண் எடுத்தார்கள். கல்யாணம் ஆனது என்ற பெயர் தானே தவிர அவர்களால் பெண்டாட்டியோடு தனித்திருந்து பேச நேரம் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை பேசிக் கொண்டாலும் அடுத்தவர் காதிற்கு கேட்காமல் பேசுவது சாத்தியமேயில்லை.

சாப்பாடு பரிமாறும் போது வேணாம் போதும் என்று சொல்வது தான் அவர் உபயோகித்த அதிகமான வார்த்தைகள். சுப்பையா தான் படக்கடையை கவனித்து வந்தார். உண்மையில் அதில் கவனிப்பதற்கு என்று தனியே எதுவுமில்லை. சாமிக்கு பயந்தவர்கள் இருக்கும் வரை உறுதியான வியாபாரம். பொம்பளைகள் இருக்கும் வரை குங்குமம் மஞ்சள் விற்பனை. பிறகு என்ன?
கடையை திறந்து வைத்தவுடன் அவர் தினமணியை பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தால் சாப்பிட வீடு வரும்போது தான் முடிப்பார். அப்படி ஒரு நாள் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பாலத்தின் அருகில் தான் அந்த யோசனை உண்டானது.

இந்த சள்ளையை எத்தனை நாள் கொண்டு கழிக்கிறது. பேசாம நாமளா ஒரு பாஷையை உண்டாக்கினா என்ன? யோசித்தவுடன் பளிச்சென்றிருந்தது. வீடு வரும்வரை அந்த பாஷையை பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அன்றிரவு மனைவியிடம் அந்த யோசனைய சொன்னார். அவள் உங்க இஷ்டம் நாலும் யோசிச்சி செய்யுங்க என்றாள். இது வழக்கமாக அவர் எதை பற்றி கேட்கும் போது அவள் சொல்வது தான் என்பதால் மறுநாள் கடைக்கு போகும்வழியில்  கவனமாக சைக்கிளை லாலாகடை அருகில் நிறுத்தி செந்தில்விலாசில் எண்பது பக்க நோட்டு ஒன்றை வாங்கி கொண்டார்.

கடையில் போய் உட்கார்ந்தவுடன் கர்மசிரத்தையாக தான் உருவாக்க போகின்ற மொழியை பற்றி யோசிக்க துவங்கினார். முதலில் அதற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை எழுந்தது. சாமி பெயரிலே இருக்கட்டும் என்று நெல்பா என்று அந்த பாஷைக்கு பெயரிட்டார்.

அதற்கு எழுத்து வடிவம் வேண்டுமே என்று முடிவு செய்து அவராக அ ஆவன்னா போல எழுத்தை உருவாக்கினார். அது போலவே அதற்கு என்று ஒலி குறிப்பு வேண்டும் என்று உச்சரிப்பும் உருவாக்கினார். கடையில் இருந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் அவர் நெல்பாவில் எப்படி வரும் என்று நோட்டில் எழுத துவங்கினார். தினசரி அவர் கணக்கு நோட்டு போட்டு எழுதி வருவதை கண்ட மணியம்பிள்ளை சுப்பையாவின் தகப்பனாரிடம் உம்மபிள்ளை ரொம்ப கணக்காக வியாபாரம் பண்றான் என்று புகழ்ந்து தள்ளினார்.

ஒரு மாசத்திற்கு நோட்டு நிரம்பி போகும் அளவு வார்த்தைகள் அதிகமாகின. அந்த நோட்டை பர்வதத்திடம் தந்து மனப்பாடம் செய்துவிடும்படியாக சொன்னார். அவளுக்கு இந்த மனுசன் வேற கோட்டி புடிச்சி அலையுறானே என்று எரிச்சலாக வந்தது. ஆனாலும் வழியில்லாமல் அந்த பாஷையை பழகிவிட்டாள்.

அதை சோதித்து பார்ப்பதற்காக சாப்பாடும் போடும்போது நெல்பா பாஷையில் அவர் கேட்பார். அவளும் நெல்பாவில் பேசுவாள். இரவில் படுக்கையில் கொஞ்சுவது கூட நெல்பாவிற்கு மாறிப்போனது.  அதன்பிறகு அவர் பெரிய நோட்டாக வாங்கி நெல்பாவிற்கான சொற்களை சேகரிக்க துவங்கினார். ஒரு வருசத்திற்குள் அந்த பாஷை அவர்கள் ரெண்டு பேருக்கும் அத்துபடியாகியது.
வீட்டில் உள்ளவர்கள் மீது ஆத்திரமானால் கூட வெளிப்படையாக நெல்பாவில் பர்வதம் திட்டுவாள். யாருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது. சுப்பையா மிகுந்த சந்தோஷமானார். உலகில் தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மொழி இருக்கிறது என்பது பெரிய விஷயமில்லையா.

ஒரு நாள் கடை திறப்பதற்காக வந்த சுப்பையாவின் அப்பா கடையில் வைத்திருந்த நெல்பா நோட்டுகளை புரட்டி பார்த்துவிட்டு இந்த எழவை கூட்டுறதுக்காகவா கடைக்கு உன்னை வச்சிருந்தேன் என்று கோவித்து கொண்டு எல்லா நோட்டுகளையும் கடையின் முன்னால் போட்டு எரித்ததோடு எல்லோரிடமும் சொல்லியும் காட்டினார். சுப்பையாவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கடையை நம்பி பிழைப்பதால் மனதிற்குள்ளாக நெல்பாவில் திட்டிக் கொண்டார்.

இது நடந்த இரண்டாம் வருசம் சுப்பைவின் அப்பா இறந்து போகவே கடை பாகம் பிரிக்கபட்டது. சண்டை போட்டு படக்கடையை தன்வசமாக்கி கொண்டு சாந்தி நகரில் வேறு வீடு பார்த்து குடிபோய்விட்டார் சுப்பையா.
வீடு மாறியதும் செய்த முதல்வேலை இனிமேல் வீட்டில் நெல்மாவில் தான் பேச வேண்டும்  என்றார். அதன்பிறகு அவர் மட்டுமில்லாது அவரது பிள்ளைகள், பெண்கள் யாவரும் அதை கற்றுக் கொண்டார்கள். எப்போதாவது வீட்டில் சண்டை நடக்கும் போது அவர்கள் நெல்மாவில் கத்தி சண்டையிடுவார்கள். அருகாமை வீட்டில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாது.

ஒரு முறை பங்குனி உத்திரத்திற்கு திருசெந்துர் போவதற்கு பர்வதம் கிளம்பிய போது சுப்பையா கடையில் வேலையிருப்பதாக போக கூடாது என்று தடுத்தவுடன் அவள் கோபத்தில் மடமடவென நெல்மாவில் கத்தினாள். ஆனால் அவள் பேசியதில் பாதி சொற்கள் என்ன வென்று அவர் அறிந்தேயிருக்கவில்லை அவளிடம் எப்படி போய் அர்த்தம் கேட்பது என்று யோசனையும் வலியுமாக கடைக்கு போனார். ஒரு உண்மை அவருக்கு புரிந்திருந்தது. அவள் தனக்காக மட்டும் அந்த மொழியில் சிறப்பு சொற்கள் நிறைய உருவாக்கி கொண்டுவிட்டாள் . இதை வளர விட்டால் தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்று நினைத்தார்.

அன்றிரவே வீட்டில் யாரும் இனிமேல் நெல்மாவில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்கு அவர்களுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் சுப்பையாவின் கோபத்திற்கு பயந்து நெல்மாவை மறந்து போனார்கள். நல்லவேளை பிரச்சனை முடிந்தது என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மதியம் தலைவலி அதிகமாகி அவர் வீடு திரும்பிய நேரம் பர்வதமும் அவரது மகனும் ஏதோவொரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று ஒருவரியும் புரியவில்லை, அவர்கள் சரளமாக பேசிக் கொண்டார்கள். சுப்பையா தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே குடிக்க தண்ணீர் கேட்டார். உள்ளே மகள் சிரிப்போடு அதே புரியாத பாஷையில் தன் அண்ணனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சுப்பையாவிற்கு எரிச்சலாக வந்தது.

அந்த நிமிசம் அவர் தன் அப்பாவை நினைத்து கொண்டார். புத்தி கெட்டு போயி தெரிந்த பாஷையை என்ன எழவுக்கு மாத்தினோம் என்று அவர் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் அதை எந்த பாஷையில் சொல்வது என்று புரியாமல் திகைத்துபோயிருந்தார்.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #21 on: June 05, 2013, 11:56:00 AM »
விசித்ரி

சிறுகதை


விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.

 அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.


சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஒடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதி படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில்  திருகை அரைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை கண்டதாக சொல்கிறார்கள். வள்ளியம்மை இறந்து போகும்வரை இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.

அப்படி நினைவுபடுத்தும் போது நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே வந்து முடிவில் சித்ரலேகாவை யாரோ துரத்திக் கொண்டு வந்ததையும், உடல் முழுவதும் காயங்களுடன் அவள் அலறியபடியே ஒடி வந்ததையும் அவள் பின்னால் கறுத்த நாய் ஒன்று உளையிட்டபடியே வந்ததாகவும் சேர்ந்து கொண்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சித்ரலேகா இன்று வரை  யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி எட்டைக் கடந்திருக்கிறது.

ஒடிவந்த நாளில் இருந்து அவள் யாரோடும் பேசுவதும் பழகுவதும் குறைந்து போனது. அத்தோடு அன்றிலிருந்து தான் அவளது விநோதப் பழக்கம் துவங்கியது. அவளிடமிருந்த அத்தனை பாவடை சட்டைகளையும் அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ஏதோ பயத்தில் அப்படி செய்கிறாள் என்று அப்படியே உறங்கவிட்டுவிட்டார்கள்.

ஆனால் மறுநாள் காலையில் அவள் அம்மாவின் பழம்புடவைகள், மற்றும் சகோதரிகளின் உடைகள் அத்தனையும் சேர்த்து அணிந்து கொள்ள துவங்கிய போது அவள் முகத்துக்கு நேராகவே சகோதிரிகள் திட்டினார்கள். சித்ரலேகா அதை கண்டு கொள்ளவேயில்லை. அவள் தன் உடலை எப்படியாவது மறைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று தீவிர முனைப்பு கொண்டவள் போல ஒரு உடைக்கு மேலாக மற்றொரு உடையை போட்டு இறுக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஒரு துணிப்பொம்மை போன்ற தோற்றத்திற்கு வந்த போதும் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை.

அத்தனை உடைகளுடன் அவள் உறங்கவும் நடமாடவும் பழகியிருந்தாள். குளிக்கும் நேரத்தில் கூட அவள் இந்த உடைகளில் ஒன்றையும் கழட்டுவதில்லை. ஈர உடைகளுடன் இருந்தால் உடம்பு நோவு கண்டுவிடும் என்று சகோதரிகள் திட்டி அவள் உடைகளை அவிழ்க்க முயன்ற போது ஆத்திரமாகி  இளைய சகோதரி கைகளில் கடித்து வைத்தாள் சித்ரலேகா.

வலி தாங்கமுடியாமல் அவள் அழுதபடியே அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து அவளது ஈர உடைகளை அவிழ்க்க முயன்றார்கள். அவள் கூக்குரலிட்டு அழுததோடு அத்தனை பேரையும் அடித்து உதைக்க துவங்கினாள். அப்படியே இருந்து சாகட்டும் சனியன் என்று அம்மா திட்டியபடியே அவளை தனித்துவிட்டு சென்றாள். ஈர உடைகள் அவளுக்கு பழகிவிட்டன.

ஆனால் அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து தன் உடைகளை அவிழ்த்துவிடுவார்களோ என்று பயந்த அவள் சணல் கயிற்றாலும் ஊக்காலும் ஆடைகளை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துக் கொண்டு உடலோடு கட்டிக் கொள்ள துவங்கினாள். அதன்பிறகு  உடைகளை யாரும் தொடுவதை கூட அவள் அனுமதிக்கவில்லை.

அதுவே கேலிப்பொருளாகி அவர்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அவள் உடைகளை அவிழ்க்க போவதாக பொய்யாக பாவனை செய்த போது சித்ரலேகாவிடமிருந்து அலறல் குரல் பீறிடும். சித்ரலேகாவை சமாதானம் செய்வது எளிதானதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒடி தெருவில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சில நேரம் இரவில் தெருவிலே உறங்கிவிடுவதும் உண்டு.அப்போதும் அவள் கைகள் உடைகளை இறுகப்பற்றிக் கொண்டேயிருக்கும்.

சித்ரலேகாவின் உடை பழக்கம் தான் அவளுக்கு விசித்ரி என்ற பெயரை உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் பின்வந்த நாட்களில் எங்கே எந்த துணி கிடைத்தாலும் அதை எடுத்து உடுத்திக் கொள்ள துவங்கினாள். இதனால் அவள் தோற்றம் அச்சமூட்டுவதாக மாறத்துவங்கியிருந்தது. இருபது முப்பது பாவடைகள். அதன் மீது பத்து சேலைகள், அதன் மீது பழைய தாவணி அதன் மீது கிழிந்த துண்டு என்று அவள் உடலை போர்த்தியிருந்த ஆடைகளை கண்டு பெண்களே எரிச்சல் கொண்டனர்.

ஒருவகையில் அவள் ஊரிலிருந்த மற்ற பெண்களுக்கு தங்கள் உடல் குறித்த கவனத்தை தொடர்ந்து உண்டாக்கி கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை ஒருமுறை கவனம் கொள்வதும் உடைகளை கவனமாக இழுத்து விட்டுக் கொள்வதும் நடந்தேறியது.
விசித்ரியின் இந்த பழக்கம் அறிந்தவர்கள் அவள் எவர் வீட்டிலிருந்து எந்த உடையை எடுத்துக் கொண்டு போன போனதும் அவளிடம் கோவம் கொள்வதேயில்லை. விசித்ரியின் ஆவேசம் பல வருசமாகியும் தணியவேயில்லை.

கோடையின் முற்றிய பகலில் அவள் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. நத்தைகள் சுவரில் ஒட்டிக் கொண்டிருப்பதை போன்று வீட்டு சுவரில் சாய்ந்து ஒடுங்கிக் கொண்டிருப்பாள். சித்ரலேகாவின் மற்ற சகோதரிகள்  திருமணமாகி போன போதும் கூட அவள் வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடந்தாள்.

சில வேளைகளில் அவள் மீது ஆதங்கம் கொண்ட அம்மா அருகில் சென்று உட்கார்ந்து சிறுமிகளை விசாரிப்பது போல தலையை தடவி விட்டுக் கொண்டு அன்னைக்கு என்னடி நடந்துச்சி என்று கேட்பாள். விசித்ரியிடமிருந்து பதில் வராது. அவள் கண்களை மூடிக் கொண்டுவிடுவாள். அல்லது நகத்தை கடிக்க துவங்கி ரத்தம் வரும்வரை கடித்துக் கொண்டேயிருப்பாள். அம்மாவிற்கு அவளை தான் சித்ரவதை செய்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி வந்துவிடும். அப்படியே விலகி போய்விடுவாள்.

விசித்ரியை என்ன செய்வது என்று அவர்கள் குடும்பத்திற்கு இந்த நாள் வரை தெரியவேயில்லை.  வீட்டு பெண்கள் திருமணமாகி சென்று பிள்ளைகள் பெற்று அந்த பிள்ளைகளும் கூட இன்று திருணம வயதை அடைந்து விட்டார்கள். ஆனால் விசித்ரியின் மனதில் நேற்று மதியம் நடந்தது போலவே அந்த சம்பவம் அப்படியே உறைந்து போயிருந்தது. யார் அவள் மனதில் உள்ள அந்த சித்திரத்தை அழிப்பது. எந்த காட்சி அவள் மனதில் அப்படியொரு கறையை உருவாக்கியது என்று உலகம் அறிந்து கொள்ள முடியவேயில்லை.

என்ன நடந்திருக்க கூடும் என்பது குறித்து சில சாத்தியங்களை விசித்ரியின் அம்மா அறிந்திருந்தாள். அதில் அவள் நம்பிய ஒன்று. புளியந்தோப்பில் மதிய நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் சீட்டாடும் நபர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதுவும் சந்தை நடக்கும் நாட்களில் தான் அதிகம் மனிதர்களை காண முடியும். மற்ற நாட்களில் புளியந்தோப்பினுள் நடமாட்டமேயிருக்காது.

அங்கே ஒரு மனிதன் எப்போதுமே உதிர்ந்த புளியம்பழங்களை பொறுக்குவதற்காக  அலைந்து கொண்டிருப்பான். அவனுக்கு வயது முப்பது கடந்திருக்கும். சீனிக்கிழங்கு போல வளைந்து பருத்த முகம். குள்ளமாக இருப்பான். எப்போதுமே அழுக்கடைந்து போன வேஷ்டியொன்றை கட்டியிருப்பான்.மேல் சட்டை அணிந்திருப்பது கிடையாது. அவன் மார்பில் இருந்த நரைத்த ரோமங்கள் காய்ந்த கோரைகளை நினைவுபடுத்தியபடி இருந்தன. அவன் புளியந்தோப்பினுள் உள்ள கிணற்றடியில் படுத்துகிடப்பான். அல்லது புளியம்பழங்களை பொறுக்கி கொண்டிருப்பான்.

அவனுக்கு என்று குடும்பமோ, மனைவியோ இல்லை.  அருகாமையில் உள்ள ஊரை சேர்ந்தவன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவன் புளியந்தோப்பில் பெண்கள் யாராவது தனியே நடந்து செல்வது தெரிந்தால் நாய் பின்தொடர்வது போல பின்னாடியே வருவான். சிலநேரங்களில் நாயை போலவே புட்டத்தை ஆட்டிக் காட்டுவான். பெண்களில் எவராவது அப்படி செய்வதை கண்டு சிரித்துவிட்டால் உடனே தன் வேஷ்டியை விலக்கி ஆண்குறியை கையில் எடுத்து காட்டுவான். அதை கண்டு பெண்கள் பயந்து ஒடிவிடுவார்கள். அது அவனை மிகுந்த சிரிப்பிற்கு உள்ளாக்கும்.

அப்படியொரு முறை சித்ரலேகாவின் அம்மாவின் முன்னால் அவன் தன் ஆண்குறியை காட்டியிருக்கிறான். அவள் தன் இடுப்பில் சொருகி வைக்கபட்டிருந்த கதிர் அருவாளால் அவனை கொத்தப்போவதாக சொன்னாள். அவனோ இடுப்பை ஆட்டியபடியே தன் வேஷ்டியை உறிந்து எறிந்துவிட்டு அவள் முன்னால் ஆடினான். அவள் புளியதோப்பை விட்டு ஒடிவரும்வரை அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். வீட்டிற்கு வந்த போதும் அந்த காட்சி மனதிலிருந்து விலகி போகவேயில்லை. அன்று இரவெல்லாம் நரகலை மிதித்துவிட்டது போன்ற அசூயை அவளுக்கு தந்தபடியே இருந்தது.

அவன் சிறுமிகளிடமும் இப்படி நடந்து கொள்வான் என்பதை கேள்விபட்டிருக்கிறாள். ஒருவேளை அவன் தன்மகளிடம் ஆண்குறி காட்டி பயமுறுத்தியிருக்க கூடும். அவள் ஆத்திரமாகி கல்லால் அடித்துவிடவே அவள் பாவடையை உறித்து எறிந்துவிட்டு அவளை வன்புணர்ச்சி கொள்ள முயன்றிருக்க கூடும் என்று தோன்றியது. அதை பற்றி எப்படி சித்ரலேகாவிடம் கேட்பது என்று அம்மாவிற்கு புரியவில்லை.

இதற்காக ஒரேயொரு முறை சித்ரலேகாவை அழைத்து கொண்டு புளியந்தோப்பின் உள்ளேநடந்து சென்றாள். அப்போதும் அந்த மனிதன் புளியங்காய்களை பொறுக்கி கொண்டு அலைந்தான். அவர்களை பார்த்தவுடன் உடலை குறுக்கியபடிய கும்பிடுறேன் தாயி என்று சொன்னான். அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். விசித்ரி அவனை நேர் கொண்டு பார்த்த போதும் அவள் முகத்தில் மாற்றமேயில்லை. அம்மா அவனை நோக்கி காறி துப்பிவிட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு நடந்து போகத் துவங்கினாள்.

அவர்கள் தொலை தூரம் போன பிறகு அம்மா திரும்பி பார்த்தாள். அவன் வேஷ்டியை அவிழ்த்து கையில் பிடித்தபடியே நிர்வாணமான உடலை அவர்களை பார்த்து ஆட்டிக் கொண்டிருந்தான். அம்மா கிழே குனிந்து மண்ணை வாறி தூற்றினாள். அந்த மனிதன் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனாக இல்லாமலும் இருக்ககூடும் என்று சித்ரலேகாவின் அம்மாவிற்கு ஏனோ தோன்றியது.

விசித்ரி  ஒரு இரவில் தன் உடலோடு சேர்த்து துணியை ஊசி நூலால் தைத்து கொள்ள முயற்சித்தாள். அதனால் ரத்தம் கசிந்து ஒடத்துவங்கியது. ஆனால் அவள் கத்தவேயில்லை. தற்செயலாக அவளை பார்த்த இளையவள்  பயந்து கத்தியபடியே அய்யாவை அழைத்து வந்த போது அவர் செவுளோடு அவளை அறைந்து கையிலிருந்த ஊசியை பிடுங்கினார். அவளோ வெறிநாய் போல ஊளையிட்டபடியே ஊசியை அவரிடமிருந்து மீட்க பார்த்தாள்.

அய்யாவும் ஆத்திரமாகி அவளை காலால் மாறிமாறி மிதித்தார். அவளது கையை முறுக்கிக் கொண்டு அடித்தார். அதில் அவளது வலது கை பிசிகியிருக்க கூடும். நாளைந்து நாட்களுக்கு வீக்கமாக இருந்தது. யாரும் அதை தொட அவள் அனுமதிக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.

அப்போது அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த கொண்டிச்சி சொன்னாள். ஊரில் புதிதாக வந்திருக்க தபால்காரனுக்கு பெண்மோகம் அதிகம் என்றும் கடிதம் கொடுப்பது போல அவன் பெண்களின் மார்பை பிடித்துவிடுகிறான் என்றும் ஒரு முறை அவள் தனியே இருந்த போது அவளிடம் தன்னோடு படுக்கமுடியுமா என வாய்விட்டு கேட்டுவிட்டதாகவும் செங்கல் சூளையில் வேலை செய்யும் செவஸ்தியாளை அவன் கீரைபாத்திகளில் தள்ளி உறவு கொண்டுவிட்டான் என்றும் சொன்னாள்.

அதை அம்மாவால் நம்ப முடியவில்லை.  அவள் தபால்காரனை கண்டிருக்கிறாள். அவனுக்கு ஐம்பது வயதை நெருங்கியிருக்கும். மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் சைக்கிளில் பள்ளிக்கு போய்வருவதை அவளே கண்டிருக்கிறாள்
எதற்காக அந்த மனிதன் பெண்களுக்கு அலைய வேண்டும் என்று கொண்டிச்சியிடம் கேட்ட போது அவன் ஆசை அடங்காதவன். சொன்னால் நம்பமாட்டீர்கள் அவன் மனைவியே இதை எல்லாம் தன்னிடம்  சொல்லி புலம்பினாள் என்றும் அவன் ஒருவனே பின்மதிய நேரங்களில் தனியே அலைந்து கொண்டிருப்பவன் என்றும் சொன்னாள்.

ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்க கூடும். சித்ரலேகாவின் அம்மா வயல்வேலை செய்து கொண்டிருந்த பகல்பொழுதில் அந்த மனிதன் புழுதி பறந்த சாலையில் தனியே போய்க் கொண்டிருப்பதை கண்டிருக்கிறாள். அது போலவே ஒரு நாள் அவள் மூத்திர சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்த போது அந்த மனிதன் அதற்குள் தனியே நின்று கொண்டிருந்தான். அங்கே என்ன செய்கிறான் என்று புரியாமல் அவள் அவசரமாக கடந்து போனாள். ஒருவேளை அவன் சித்ரலேகாவை ஏமாற்றி இது போன்ற மூத்திரசந்திற்கு அழைத்து போய் புணர்ச்சிக்கு மேற்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இந்த சந்தேகம் ஒன்றால் மட்டும் எப்படி அந்த மனிதனிடம் போய் கேட்க முடியும்

சித்ரலேகாவின் அண்ணன் ஊரில் இருந்த ஜவுளிசெட்டி ஒருவன் மீது தனக்கு அதிக சந்தேகம் இருப்பதாக சொன்னான். அந்த ஜவுளி செட்டியின் வீடு மிகப்பெரியது. அதில் அவர்கள் அண்ணன் தம்பி இரண்டு பேர் மட்டுமே வசித்தார்கள். இருவரும் ரங்கூனிலிருந்து திரும்பியவர்கள். அவர்களது மனைவியும் குழந்தையும் பர்மாவில் விட்டுவந்துவிட்டதாக சொல்லிக் கொள்வார்கள். அவர்களே அடிக்கடி பர்மாவிற்கு போய்வருவதாக கிளம்பி சில மாதங்கள் ஆள் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டின் எதிரில் இருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் ஜவுளி செட்டிக்கும் தொடர்பு இருக்கிறது, அந்தப் பெண்களில் பலரும் புதிது புதிதாக ரங்கூன் சேலைகள் கட்டிக் கொள்வது இதனால் தான் என்றும் அந்த செட்டிகள் அடிக்கடி மதுரைக்கு சென்றுவருவது வேசைகளுடன் படுத்து உறங்கி கழிப்பதற்காக மட்டுமே என்று சொன்னான் சித்ரலேகாவின் அண்ணன்.
ஒருவேளை அப்படி செட்டிகளில் ஒருவன் நீலமும் மஞ்சளும் கலந்த பட்டு துணி ஒன்றை தருவதாக சொல்லி சித்ரலேகாவை வீட்டில் தனித்து அழைத்து கட்டி தழுவியிருக்க கூடும். அவள் உடைகளை உருவி எடுத்திருக்க வேண்டும். அதில் பயந்து போய் தான் சித்ரலேகா ஒடிவந்திருப்பாள்.

அவள் ஒடிவந்த திசையில் இருந்த ஒரே வீடு ஜவுளி செட்டியின் வீடு மட்டுமே. அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தால் எதற்காக பகலும் இரவும் அந்த வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டேயிருக்கின்றன என்று கேட்டான் சித்ரலேகாவின் அண்ணன்.


இந்த வாதங்கள் சந்தேகங்கள் எதையும் விசித்ரி கண்டுகொள்ளவேயில்லை. அவள் மண்ணில் புதைத்து வைக்கபட்ட துணி பொம்மை போல முகம் வெதும்பி போய் கண்கள் ஒடுங்க துவங்கியிருந்தாள். அவள் உதட்டில் ஏதோ சில சொற்கள் தட்டி நின்று கொண்டிருந்தன. எதையோ நினைத்து பெருமூச்சு விடுவதும் பின்பு அவளாக கைகளை கூம்பி சாமி கும்பிட்டுக் கொள்வதையும் வீட்டார் கண்டிருக்கிறார்கள்.

ஒரு நாளில் விசித்ரி உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அவளிடம் வம்பு செய்வதற்காக அவள் கால்பாதங்களில் கரித்துண்டை வைத்து தேய்த்திருக்கிறார்கள். கூச்சத்தில் அவள் நெளிந்த போது அவள்  கால்கள் தானே உதறிக் கொண்டன. அவள் எழுந்து தன்பாதங்களை கண்டபோது அதில் கரியால் ஏதோ சித்திரம் போல வரையப்பட்டிருப்பதை கண்டு அலறி கத்தினாள். வீட்டிற்குள் ஒடிப்போய் காலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். அப்படியும் அவள் மனது நிலை கொள்ளவில்லை. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். இரவு வரை கால்பாதங்களை துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

அன்றிரவு வீட்டில் இருந்த சகோதரிகளின் பழைய சேலைகளை கிழித்து தன் காலில் சுற்றிக் கொள்ள துவங்கினாள். அப்படி சுற்றி சுற்றி காலின் மீது பெரிய பொதி போல சேலைகள் இறுகியிருந்தன. அத்தோடு அவள் சேலையை சணலாலும் இறுக்கி கட்டிக் கொண்டாள். காலில் சேலைகள் கட்டியதிலிருந்து அவளால் எழுந்து நடப்பதற்கு சிரமமாக போயிருந்தது. ஆனால் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. மண்டியிட்டபடியே நடந்து போக ஆரம்பித்தாள். அது அவள் தோற்றத்தில் இன்னமும் பயத்தை உருவாக்கியது.

விசித்ரியை இப்படியாக்கியது கனகியாக கூட இருக்க கூடும் என்று சொன்னார் பெட்டிக்கடை வைத்திருக்கும் மகாலிங்கம். அதை சித்ரலேகாவின் அண்ணன்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். கனகியை பற்றி அப்படியான சில கதைகள் ஊரிலிருந்தன. கனகியின் கணவன் ராணுவத்தில் இருந்தான். அவன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் திரும்பிவருவான். மற்ற காலங்களில் கனிகி தனித்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து கடந்திருக்க கூடும். எப்போதும் கூந்தல் நிறைய பூவும் வெற்றிலை சாறுபடிந்த சிவப்பு உதடுகளுமாக இருப்பாள்.

தன்னை அலங்கரித்து கொள்வதில் அவளுக்கு நிகரான ஊரில் எவருமில்லை. முல்லைமொட்டுகளை அவளுக்காக மட்டுமே கொண்டு வந்து தரும் பூக்காரன் ஒருவன் இருந்தான். அவளது உடைகளும் கூட மினுக்கானவை. அவளோடு எப்போதுமே இரண்டு இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்களுடன் வாசல்படிகளில் உட்கார்ந்து அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்போது அவர்கள் சிரிப்பு சப்தம் தெருவெங்கும் கேட்கும்.

அவளுக்கு பகல் உறக்கம் கொள்ளும் பழக்கம் இருந்தது. தனது தோழிகளான இரண்டு இளம்பெண்களுடன் அவள் வீட்டின் கதவை சாத்திக் கொள்வதை சித்ரலேகாவின் அண்ணன் கண்டிருக்கிறான். மாலையில் அந்த வீட்டு கதவு மறுபடி திறக்கும் போது காலையில் பார்த்ததை விடவும் அலங்காரியாக கனகி வாசல்படியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். பின்பு இரவு வரை அந்த பெண்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கனகியின் மீது உள்ளுர் ஆண்கள் அத்தனை பேரும் மோகம் இருந்தது. ஆனால் ஒருவன் கூட அதை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. கனகி முன்பொரு நாள் சித்ரலேகாவோடு பேசிக் கொண்டிருந்ததை அவள் அண்ணன் கண்டிருக்கிறான். ஒருவேளை அவள் தன் தங்கையை மோகித்திருக்க கூடும் என்று அவன் மனது சொல்லியது. ஆனால் கனகியோடு எந்த ஆணுக்கும் தொடர்பில்லை என்பதை ஊரே  அறிந்திருந்தது.

அவள் கணவன் வரும் நாட்களில் அவர்கள் ஒன்றாக பைக்கில் சுற்றியலைவார்கள். அப்போது அவள் கணவன் கனகி பற்றிய கேலியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வான்.

இப்படியாக சித்ரலேகாவை பயமுறுத்தியது நகருக்கு படிக்க சென்று வரும் ஸ்டீபன் சாரின் மகன் மைக்கேல் என்றும், நாவிதர்களில் ஒருவனான கருப்பையா கூட தனியே பெண்கள் கிடைத்தால் நோங்க கூடியவன் என்றும், பள்ளியின் கணித ஆசிரியராக உள்ள வையாளி கூட பெண்கள் விஷயத்தில் துணிந்தவர் எனவும், தண்ணீர் வண்டியோட்டும் ராயன், ரயில்வே தண்டவாள வேலை செய்ய போன சங்கு, நில அளவையாளர் கடிகைமுத்து. நூற்பு ஆலைக்கு வேலை செல்லும் மச்சேந்திரனோ அவனது தம்பியோ கூட காரணமாக இருக்க கூடும் என்றார்கள்.

இந்த சந்தேகம் ஊரில் இருந்த ஆண்கள் பெண்கள் மீது பட்டு தெறித்த போதெல்லாம் அது உடனே மௌனத்தில் புதையுண்டுவிடுவதாக இருந்தது. யாரும் இதை தொடர்ந்து சென்று உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.

விசித்ரியின் முப்பத்திரெண்டாவது வயதில் அவளை ஆறு நாட்கள் உப்பத்தூர் அருகில் உள்ள தர்க்கா ஒன்றில் சிகிட்சைக்காக கொண்டு போய்விட்டுவந்தார்கள். பிராத்தனையும் இரும்பு கம்பியால் போட்ட சூடும், குடம் குடமாக தலையில் தண்ணீர் கொட்டிய போதும் விசித்ரியிடம் ஒரு மாற்றமும் உருவாகவில்லை. அவளை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஊர் வந்த சில நாட்களுக்கு அவள் பசி தாளாதவள் போல சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். அதன்பிறகு அவள் இயல்பாக மாறுவதற்கு ஒரு மாதகாலமானது. அவள் எப்போது போலவே முப்பது ஆடைகள் அணிந்தவளாக இருந்தாள்.

விசித்ரியின் வீடு அவள் இளமையிலிருந்தது போன்ற வளமையை இழந்து போகவே திசைக்கொரு சகோரர்களாக பிரித்து போக துவங்கினார்கள். வீட்டில் அவளும் வயதான அம்மையும் மட்டுமேயிருந்தார்கள். பண்டிக்கைக்கு  ஊருக்கு சகோதரிகள் வருவதும் கூட நின்று போய் நாலு வருசமாகி விட்டது. அவர்கள் வீடு இருந்த தெருவில் இருந்த மனிதர்கள் கூட இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். வாகை மரங்கள் வெட்டி சாய்க்கபட்டு அங்கே தண்ணீர் தொட்டி வைக்கபட்டுவிட்டது. தெருவில் இருந்த வயதானவர்கள் இறந்து அதே ஊரின் மண்ணில் புதையுண்டு அந்த இடங்களில் தும்பை முளைத்தும் விட்டது.

விசித்ரிக்கு போக்கிடம் இல்லை. அவள் எப்போதும் போலவே தன் உடலை சுற்றி முப்பது நாற்பது சேலைகளை சுற்றிக் கொண்டு கால் பெருவிரல் வரை துணியால் கட்டி முடிச்சிட்டு வீட்டிற்குள்ளாகவே இருக்கிறாள். சமையல் அறையின் புகைக்கூண்டை ஒட்டியே வாழ்ந்த பல்லி கருத்து பருத்து போய்  கண்கள் மட்டுமே பிதுங்க இருப்பது போன்று அவள் தோற்றம் மாறிப்போயிருந்தது. ஒருவேளை அவள் இறந்து போன அன்று கூட அப்படியே தான் அவளை புதைக்க கூடும் என்று அம்மா புலம்பிக் கொண்டிருந்தாள்

விசித்ரியின் பனிரெண்டாவது வயதின் கோடை பகலில் என்ன தான் நடந்தது. யார் அவள் உடலில் இருந்த உடைகளை உருவியது. எல்லோரும் உண்மையின் ஏதோவொரு பகுதியை அறிந்திருக்கிறார்கள். உண்மையை முழுமையாக அறிந்த விசித்ரி அதை விழுங்கி புதைத்துவிட்டாள்.


ஆனால் முற்றிய வெயில் காமம் உடையது என்பதையோ, அது  ஒரு மனிதனின் அடக்கப்பட்ட இச்சையை பீறிடச் செய்யக்கூடியது என்பதையும் பற்றி உள்ளுர்வாசிகள் அறிந்தே வைத்திருந்தார்கள். அல்லது வெயிலை காரணம்  சொல்லி தன் மனதின் விகாரத்தை வெளியே நடமாட அனுமதித்திருக்கிறார்கள். அதை வெயில் அறிந்திருக்கிறது. இல்லை இரண்டுமே புனைவாகவோ, இரண்டுமே அறிந்து வெளிப்படுத்தபடாத ரகசியமாகவோ இருக்க கூடும்.

எதுவாயினும் காமம் தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை. அது ஒரு புதைசுழல். கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள். அது தான் பயமாக இருக்கிறது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #22 on: June 05, 2013, 12:03:07 PM »
காட்சிக் கூண்டு

சிறுகதை

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள்  நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது.

ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். ஆறடிக்கு பத்தடி அளவில் உருவாக்கபட்ட அந்த இரும்பு கூண்டு சர்க்கஸில் சிங்கம்  அடைத்து வைக்கபட்ட கூண்டினை விடவும் சற்றே பெரியதாக இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் அந்த கூண்டில் விரும்புகின்ற யார் வேண்டுமானாரும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்ளவோ, நின்று கொண்டு இருக்கலாம். கூண்டினில் ஆட்கள் சென்ற மறுநிமிசம் தானாக கதவு மூடிக் கொள்ளும்படியாக மின்சாரத்தால் உருவாக்கபட்டிருந்தது. சரியாக  ஐந்துநிமிசங்கள் கூண்டு மூடியிருக்கும். பிறகு கதவு தானே திறந்து கொண்டுவிடும்.

கூண்டில் ஆட்கள் ஏறி மூடிக் கொண்ட மறுநிமிசம் அதிலிருந்து மியமிங்மியமிங் என்று விசித்திரமானதொரு சப்தமிடும். அது பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்க கூடியதாகயிருந்தது. மற்ற நேரங்களில் கூண்டில் எந்த சலனமும் இருக்காது.

கூண்டினை பூங்காவில் பொருத்தபட்ட மூன்று தினங்களுக்கு அதில் எவரும் நுழையவேயில்லை. இவ்வளவிற்கும் கூண்டின் அருகாமையில் பெரியதாக விளம்பர பலகை வைக்கபட்டிருந்தது. முதன்முறையாக அந்த கூண்டில் நடைபயிற்சிக்காக தினமும் பூங்காவிற்கு வரும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருக்கு கூண்டை பார்க்கும் போது அவரது அலுவலக அறை போன்று நினைவிற்கு வந்திருக்க கூடும்.

அவர் தரையில் இருந்து சற்று உயரமாக வைக்கபட்ட கூண்டிற்குள் போவதற்காக  இரண்டு படிகள்  ஏறி கூண்டின் கதவை திறந்து உள்ளே போன போது கதவு தானாக மூடிக் கொண்டது. மறுநிமிசம் மியமிங்மியமிங் என்ற சப்தம் உரத்து கேட்க துவங்கியது. நடை பயிற்சியில் இருந்தவர்கள், பூங்காவில் விளையாண்ட சிறுவர்களுக்கு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வங்கி அதிகாரி கூண்டிற்குள் இருந்தபடியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஒரு நாளும் அந்த பூங்காவை கண்டதேயில்லை.

கூண்டிற்குள் இருப்பது ரொம்பவும் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் கூண்டின் வலுவான இரும்புகம்பிகளை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்த சிலர் நடைபயிற்சியின் ஊடாகவே அவரை பார்த்து சிரித்தபடியே போனார்கள். அவருக்கும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும்  போலிருந்தது. கம்பியில் முகம்பதித்து கொண்டு அவர்  வெளியே பார்த்து சிரித்தார். சிறார்கள் கூண்டின் அருகில் வந்து நின்றபடியே அவரை பார்த்து பரிகாசம்  செய்தார்கள்.

வங்கி அதிகாரி கூண்டிற்குள்ளாகவே அங்குமிங்கும் நடக்க துவங்கினார்.  அப்போது அவரது செல்போன் அடிக்க துவங்கியது. போனில் பேசியபடியே அவர் நடந்து கொண்டிருப்பதை கண்ட ஒரு இளம் பெண் வியப்போடு அவருக்கு கையசைத்தபடியே போனாள்.

தான் கூண்டிற்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று தனக்கு தெரியாதே என்பதால் அவருக்கு திடீர் யோசனை உருவானது. அந்த பெண்ணை கைதட்டி அழைத்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தரும்படியாக செல்போனை நீட்டினார். அந்தப் பெண் கூண்டிற்குள் அவர் நிற்பதை புகைப்படம் எடுத்து தந்தாள். அதை பார்க்கும் போது அவருக்கே சிரிப்பாக வந்தது. இரண்டு மூன்று நிமிசங்களுக்கு பிறகு அவரது கால்கள் வலிப்பது போல இருந்தன.

கூண்டிற்குள்ளாக உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்த்தார்.இருக்கைகள் எதுவும் இல்லை. எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட தரையில் உட்கார்ந்ததேயில்லை.  சரி உட்கார்ந்து பார்க்கலாமே  என்று கூண்டின் தரையில் அவர் உட்கார முயன்ற போது கால் முட்டிகளில் வலி உருவானது. மண்டியிட்டு காலை மடக்கி ஒருவழியாக உட்கார்ந்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது கூண்டின் இசை நின்று கதவு தானே திறந்து கொண்டது. அவ்வளவு தானா என்றபடியே அவர் கூண்டினை விட்டு வெளியே இறங்கி நடக்க துவங்கினார். அன்றைக்கு வேறு எவரும் கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுநாள் பூங்காவிற்கு வழக்கமாக வரும் காதலர்கள் இருவர் கூண்டிற்குள் தங்களை அடைத்து கொண்டார்கள். இருவருக்கும் அது வேடிக்கையாக இருந்தது.  அவர்களை தொடர்ந்து வணிகபிரதிநிதி ஒருவன், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் இரண்டு பேர் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கூண்டிற்குள் அடைத்து கொண்டார்கள்.

ஞாயிற்றுகிழமை காலையில் முதன்முறையாக ஒரு குடும்பம் அந்த கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொண்டது. அது மிக வேடிக்கையானதாக இருந்தது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு மகள்கள், ஒரு பையன் மற்றும்  மகளின் கணவன் மற்றும் கைக்குழந்தை யாவரும் ஒரே நேரத்தில் உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழாவது குறுக்குதெருவில் உள்ள அரசு குடியிருப்பில் இருப்பவர்கள் என்று பூங்காவின் காவலர் சொன்னார்.

நாற்பது வயதை கடந்த அந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினை தொட்டு தொட்டு பார்த்தபடியே நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. வெளிச்சம் கூட எப்படி சீராக விழுகிறது பாருங்கள் என்று கணவனிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவரோ வீட்டிலிருந்து ஏதாவது சமைத்து கொண்டுவந்திருந்தால் அதற்குள் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று ஆதங்கபட்டுக் கொண்டிருந்தாள்.

 கூண்டிற்குள் அடைக்கபட்ட இரண்டு இளம்பெண்களும் கம்பிகளை பிடித்தபடியே வெளியே நடந்து செல்லும் இளைஞர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கூண்டில் ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருந்தால் முகம் பார்க்க உதவியாக இருக்கும் என்று சலித்து கொண்டாள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்த பெண்களை பார்த்து சிரித்தார்கள்.  சிறுவனோ கூண்டின் இசையோடு சேர்ந்து மியமிங்மியமிங் என்று கத்திக் கொண்டிருந்தான். ஆறுநிமிசங்களுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தபோது குடும்பத்துடன் ஒருவரை கைகளை தட்டியபடி ஆரவாரமாக கத்தினார்கள்.

அன்றைக்கு  கூண்டிற்குள் தன்னை அடைத்து கொள்வதற்கு இருநூறு பேர்களுக்கும் மேலாக முன்வந்தார்கள். அது பூங்காவில் பெரிய வேடிக்கையாக இருந்தது. யார் எப்போது கூண்டிற்குள் போவார்கள்.  கதவு மூடப்பட்டவுடன் கூண்டிற்குள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்காகவே பூங்காவிற்கு நிறைய கூட்டம் வரத்துவங்கியது.

கூண்டில் தங்களை தானே அடைத்துக் கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகமானதை கண்டு அதை ஒழுங்குபடுத்தவதற்காக இரண்டு காவலர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அவர்கள் கூண்டிற்குள் போவதற்காக காத்திருப்பவர்களை வரிசையில் நிற்க செய்தார்கள். விடுமுறை நாட்களில் அந்த வரிசை பூங்காவை விட்டு வெளியே சாலை வரை நீண்டு போவதாக மாறியது.

முதன்முறையாக ஒரு வயதானவர் தன் வீட்டிலிருந்து மடக்கு நாற்காலி ஒன்றை கொண்டு வந்து கூண்டிற்குள் போட்டு உட்கார்ந்து கொண்டு நாளிதழ் படித்தார். தன் உடலை செம்மை படுத்துவதில் ஆர்வம் கொண்ட நடுத்தரவயது ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக கூண்டிற்குள்ளாகவே யோகா செய்ய ஆரம்பித்தார்.

புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் மதிய உணவிற்கு பிறகு கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு சீட்டாடினார்கள். அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் தன்னுடைய விசுவாசிகள், நண்பர்கள்  என கூண்டில் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படும் அளவு நாற்பத்தி ஆறு பேர்களுடன் கூண்டினுள் தன்னை பூட்டிக் கொண்டார். அவரிடம் கூண்டிற்குள் குடிநீர் இணைப்பு குழாய் ஒன்று பொருத்தபட வேண்டும் என்பதற்கான புகார் மனு அளிக்கபட்டது. அடர்ந்த தாடி கொண்ட ஒரு இருபது வயதை கடந்த இளைஞன் கூண்டிற்குள் சென்றதும் சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்க துவங்கினான்.

வரலாற்று பேராசிரியர் ஒருவர் அது கடந்த கால நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்வதாகவும், குற்றவாளிக்கூண்டுகள் அமைப்பதை பற்றி மதுராந்தகத்தில் ஒரு சோழர்கால கல்வெட்டு இருப்பதாகவும் உடன் வந்த ஆய்வுமாணவர்களிடம் தெரிவித்தார்.

பூங்கா இரவு பதினோறு மணி இதற்காகவே திறந்து வைக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதியில்  இருந்து கூண்டில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக மக்கள் பயணம் செய்து வந்து பூங்கா திறக்கும் முன்பாகவே காத்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நூறடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தை நடத்துகின்றவர் அந்த கூண்டினை பார்வையிட்டு அதை உருவாக்குவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று விசாரித்து கொண்டிருந்தார். பூங்காவில் காவலர் தனக்கு தெரியவில்லை என்றபோது அந்த கூண்டின் அருகாமையில் தான் ஒரு துரித உணவகபிரிவை துவங்குவதற்கு யோசனையிருக்கிறது என்று சொன்னார்.  பூங்கா காவலனும் அது மிக அவசியமாக ஒன்று வரிசையில் நிற்பவர்கள் சில நேரம் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னான்.

கூண்டின் பாதுகாப்பிற்காக வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை ஒருமுறை கூண்டில் அடைத்துக் கொண்டார். அவருக்கு கூண்டு அவ்வளவு பெரியதாக இருப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. நடக்க இடமில்லாமல் தலைமுட்டும்படியாக அடைக்கபடும் போது தான் கூண்டின் முக்கியத்துவம் தெரியும் என்று அலுத்துக் கொண்டார்.

பல நேரங்களில் மக்கள் வரிசையில் நின்றும் கூண்டுகாலியாக கிடைக்காமல் போவதால்  கூண்டிற்குள் அடைக்கபடும் நேரத்தினை மூன்று நிமிசமாக மாற்றி உத்திரவிட்டது அரசு. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபயிற்சியில் வரும் சில பணம்படைத்தவர்கள் தனியாக தங்களது வீடுகளில் அது போன்ற கூண்டுகளை தாங்களே வடிவமைப்பு செய்து உருவாக்கி கொண்டார்கள்.

காதலர்கள், கஞ்சாபுகைப்பவர்கள், குடுபத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்று அந்த கூண்டு ஒய்வில்லாமல் கத்திக் கொண்டேயிருந்தது.  அந்த கூண்டினை பற்றிய சிறப்பு கட்டுரையை நாளிதழ்கள் வெளியிட்டன .இரண்டு நாட்களின் முன்பாக அந்த கூண்டிற்குள் தொலைகாட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏன்  தங்களை கூண்டில் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள்.

இப்படியாக காட்சிக்கூண்டு அதிமுக்கியத்துவம் அடைய துவங்கியதை கண்டு மாநகராட்சி நகரின் அத்தனை பூங்காங்களிலும் இது போன்ற கூண்டுகளை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை கொரிய அரசின் ஒத்துழைப்போடு உருவாக்க திட்டமிட்டது.

ஆறுமாதங்களில் நகரில் புதிது புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கபட்டன. இந்த கூண்டுகளில் வெறுமனே ஒலிபரப்பாகும் இசைக்கு பதிலாக தங்களது விளம்பரங்களை ஒலிபரப்பலாமே என்று பன்னாட்டு குளிர்பான நிறுவனம் முன்வந்த பிறகு கூண்டுகளின் நிறம் மற்றும் வடிவம் புத்துருவாக்கம் கொள்ள துவங்கின.

மாநகரில் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிக் கூண்டுகள் இருப்பதாகவும் அதன் விளம்பர வருமானம் பதினெட்டு  கோடி என்றும் மாநகராட்சி பெருமையாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கூண்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பதோடு யார் இந்த யோசனையை உருவாக்கியது என்பது குறித்தும் அறிந்து கொள்ளவேயில்லை.

மனவருத்தம் தீராத நாற்பது வயது மனிதன் ஒருவன் ஒரு இரவில் பூங்காவில் நுழைந்து அந்த கூண்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். அதன் காரணமாக நகரில் உள்ள அத்தனை கூண்டுகளுக்கும் உற்றுநோக்கும் கேமிரா பொருத்தபட்டது. அதை கண்காணிக்கும் அலுவலகம். அதற்கான பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், சோதனை அதிகாரிகள், என்று தனித்துறை உருவானது.
நாளடைவில் மக்களுக்கு சலித்து போக ஆரம்பித்தது. எவரும் கூண்டில் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மெல்ல புறக்கணிப்பின் கரங்கள் அதை பற்றிக் கொள்ள மழை வெயிலில் துருவேறிய கூண்டு கவனிப்பாரற்று போக துவங்கியது.

ஆனால் அரசின் கூண்டு பராமரிப்பு துறையோ தன் உயர் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆட்களுடன் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் அதை பற்றி சிறு குறை கூட தெரிவிக்கவில்லை என்பதே அதன் சிறப்பம்சம்

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #23 on: June 05, 2013, 10:18:34 PM »
அப்பா புகைக்கிறார்

சிறுகதை


தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது.

இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.


அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை கண்டிருக்கிறாள். அவர்கள் முன்னால் தானும் போய் சிகரெட் கேட்பது அவர்களை திகைப்படைய செய்யக்கூடும். ஆனால் அது அவளுடைய நோக்கமில்லை.

அவளுக்கு சிகரெட் ஒன்று வேண்டும். அது புகைப்பதற்காக அல்ல. அவள் ஒரு போதும் சிகரெட் புகைத்ததுமில்லை. ஆனால் அவளுக்கு  சிகரெட்டின் மணம் தெரியும், சிகரெட்டை  நசுங்காமல் எப்படி கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். சிகரெட் புகையின் வளையங்கள் காற்றில் எப்படி கரைந்து போகும் என்பதைக் கூட அறிந்திருக்கிறாள்.

பேக்கரியை ஒட்டியிருந்த பெட்டிக்கடையினுள் அவள் நுழைந்தவுடன் கடைக்காரன் அவள் கேட்காமலே ஷாம்பு வேண்டுமா என்று கேட்டான். மாலையில் யார் ஷாம்பு வாங்க போகிறார்கள் என்று அவளாக நினைத்துக் கொண்டு இல்லை என்றாள். உடனே அவன் விக்ஸ் மிட்டாய், ரீபில், சேப்டி பின் வேண்டுமா என்று கேட்டான்.

அந்தக்கடையில் பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் என்று இந்த நான்கு மட்டும் தான் இருக்கிறது என்று முடிவு செய்திருப்பான் போலும். அவள் கண்ணாடி பாட்டில்களுக்கு பின்னால் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டிகளை பார்த்து கொண்டேயிருந்தாள்

யாரோ ஒரு ஆள் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து பான்பராக் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீதி சில்லறையை அள்ளிக் கொண்டு போனான். சில நிமிச யோசனைக்கு பிறகு ருக்மணி ஐந்து ரூபாய் காசை அவன் முன்னால் நீட்டியபடியே ஒரு சிகரெட் கொடு என்றாள். கடைக்காரனின் முகம் மாறியதை அவள் காணமுடிந்தது. அவன் ஏளனம் செய்வது போன்ற குரலில் என்ன சிகரெட் என்று கேட்டான்.

கடைக்கு ஒரு நாளைக்கு நூறு ஆண்கள் சிகரெட் வாங்க வருகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட இந்த ஏளனத்தை அவன் காட்டியிருக்க மாட்டான் என்று ஆத்திரமாக வந்தது. அவள் பில்டர் சிகரெட் என்று சொன்னாள். கடைக்காரன் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதான் என்ன சிகரெட்டுனு கேட்கிறேன் என்றான்.

வில்ஸ்பில்டர் என்று சொன்னாள்.

கடைக்காரன் சிகரெட் பெட்டியை உருவி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தந்துவிட்டு சில்லறையை கண்ணாடி பாட்டில் மீது வைத்தான்.
அவள் சிகரெட்டை கையில் எடுத்து பார்த்த போது கடைக்காரன் அவனை முறைத்து பார்த்தபடியே இருப்பது தெரிந்தது. அவள் வேண்டும் என்றே இரண்டுவிரல்களுக்கும் நடுவில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டேயிருந்தாள். கடைக்காரன் அவளை கேலி செய்வது போன்று தீப்பெட்டியை எடுத்து முன்னால் நீட்டினான். அவள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறி நடந்தாள்.

கையில் ஒரு சிகரெட்டோடு நடந்து செல்லும் தன்னை பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு தெரிந்தேயிருந்தது. அதைப்பற்றிய கவலையின்றி அவள் சிகரெட்டை கையில் பிடித்தபடியே ரயில் வருவதற்காக காத்திருந்தாள். அவளை கடந்து செல்லும் முகங்கள் சிகரெட்டினை கண்டு அதிர்ந்து போயின. அவள் சிகரெட்டை முகர்ந்து பார்த்தாள். அதே வாசனை. இன்னும் அப்படியே இருந்தது.

கடைக்கு போய் சிகரெட் வாங்குவது ருக்மணியின் பதினாலாவது வயது வரை அன்றாட வேலையாக இருந்தது. அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா கடைகளிலும் அவள் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

ருக்மணியின் அப்பா சிகரெட் பிடிக்க கூடியவர். அப்பா சிகரெட் புகைக்கிறார் என்ற சொற்கள் அவளை பொறுத்தவரை மறக்கமுடியாத ஒரு வடு. அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தலையிலிருந்து கால் வரை குபுகுபுவென ரத்தம் உச்சம் கொள்வதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

எதற்காக தன்னை அப்பா கடைகடையாக போய் சிகரெட் வாங்க சொன்னார் என்று அவளுக்கு புரிந்ததேயில்லை. அந்த நாட்களில் தான் பெண்ணாக தானே இருந்தோம். பத்து வயதில் தவறாக இல்லாதசெயல் இருபது வயதில் ஏன் தவறாக கொள்ளப்படுகிறது. அப்போது தன்னை எவரும் ஒருமுறை கூட இப்படி வேடிக்கை பார்க்கவோ அல்லது கேலி செய்வதோ நடந்தது இல்லையே. அது ஏன் காரணம் சிகரெட் பிடிக்கின்றவர்கள் ஆண்கள். அது அவர்களுக்கு மட்டுமேயான ஆடுகளம்.

ருக்மணியின் அப்பா புள்ளியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒருவரோடு கூட சண்டையே போட்டதில்லை. மிக அமைதியான ஊழியர் என்று சொல்லிக் கொண்டார்கள். வீட்டிலிருந்தே சாப்பாட்டை கொண்டு போய்விடுவார். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கோவிலுக்கு போக கூடியவர். விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சென்று வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் இதுஎல்லாம் வெளி உலகிற்கு. வீட்டில் அப்பா எப்போதும் கத்திக் கொண்டும் அம்மாவோடு சண்டை போட்டபடியும் தானிருந்தார். அம்மாவின் மீதான கசப்புணர்வு அவருக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவளை அடிக்காத நாட்களே இல்லை.  பத்து தடவைக்கும் மேலாக அம்மாவிற்கு மண்டை உடைந்து தையல் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் மறந்துவிட்டு தான் அம்மா அவருக்காக ஒடியோடி சாப்பாடு செய்து தருகிறாள்.  சில வேளைகளில் அம்மாவும் தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி வசையிட்ட போதும் அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவேயில்லை.

அதற்காக தான் அப்பா புகைபிடிக்க துவங்கினாரோ என்னவோ, அம்மாவோடு சண்டையிட்ட பிறகு அப்பா ஆவேசத்துடன் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார். தொடர்ச்சியாக ஏழு எட்டு சிகரெட்களை கூட பிடித்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் போது அவர் முகம் இறுக்கமடைந்து போயிருக்கும். பதற்றமும் எரிச்சலுமாகவே அவர் புகைபிடிப்பார். ஏதோவொன்றை அடக்கி ஆள்வது போன்ற ஆவேசம் அவருக்கு இருக்கும்.

அப்பா பலவருசமாக புகைபிடித்துக் கொண்டுதானிருந்தார். ஆனால் ஒருநாளும் அவர் கடையில் போய் அவருக்காக சிகரெட் வாங்கிக் கொண்டதேயில்லை. காலையில் ஒரு முறையும் மாலையில் இருமுறையும் ருக்மணி தான் கடைக்கு போய் அவருக்காக சிகரெட் வாங்கி வருவாள். சிகரெட் வாங்க கொடுத்த காசில் மீதமிருந்த சில்லறைகளை கூட  அவர் கவனமாக கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். அவர் வழக்கமாக பிடிக்கும் சிகரெட் இல்லையென்றால் எங்கேயாவது போய் தேடி வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கும் அடிவிழும்.

ஒவ்வொரு நாளும் கடைக்கு போய் சிகரெட் வாங்கும் போது அதை ருக்மணி முகர்ந்து பார்ப்பாள். புகையிலையின் மணமது. சிகரெட் பெட்டிகள் இல்லாமல் போன நாட்களில் நாலைந்துசிகரெட்டுகளை ஒன்றாக கையில் பொத்தி கொண்டுவருவாள். அப்போது சிகரெட்டுகள் நழுவி விழந்துவிடுமோ என்று பயமாக இருக்கும்.  சிகரெட் உதிர்ந்து போயிருந்தால் அதற்கும் வசவு விழும்.

இரவில் எத்தனை மணி ஆனாலும் அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கிவர செய்வார் அப்பா. இருள் படிந்த தெருவில் பயமும் நடுக்கமாக கண்ணை மூடிக் கொண்டு ஒடிப்போய் பலமுறை வாங்கி வந்திருக்கிறாள்.
அப்பா சிகரெட் புகையை வீடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்று விரும்புகின்றவரை போல இந்தபக்கமும் அந்தப்பக்கமும் தலையை திருப்பி கொண்டு புகைவிடுவார்.

யார்மீதுள்ள கோபத்தையோ தணித்துக் கொள்வதற்கா புகைபிடிக்கிறார் என்பது போலவே அவரது முகபாவம் இருக்கும். சிகரெட்டின் சாம்பலை தட்டுவதற்காக அவர் கையில் கிடைக்கும் சில்வர் டம்ளர், தட்டு, பவுடர் டப்பாமூடி என எதையும் எடுத்துக் கொள்வார்.

ஒருமுறை அவர் அம்மாவின் உள்ளங்கையை நீட்ட சொல்லி அதில் கூட சிகரெட் சாம்பலை தட்டியிருக்கிறார். காரணம் இந்த வீட்டில் உள்ள எல்லாமும் தான் வாங்கி வந்தவை தானே இதில் எதில் சிகரெட்டின் சாம்பலை தட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்ற எண்ணமே.

அது போலவே சிகரெட்டை அணைத்து வீட்டிற்குள்ளாகவே தூக்கி எறிவார். அவர் புகைக்கும் இடத்தின் அருகில் தான் ஜன்னல் இருந்தது. ஆனால் ஒரு போதும் அவர் ஜன்னலுக்கு வெளியே சிகரெட்டை எறிந்ததேயில்லை.
அம்மா கவனமாக அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டை பொறுக்கி எடுத்து வெளியே போடுவாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வைத்துள்ள தீப்பெட்டியை அவர்கள் அடுப்பு மூட்ட ஒரு போதும் உபயோகிக்க கூடாது. அது அவர் உறங்கும்போது கூட தலையணியின் அருகாமையிலே இருக்கும்.

நள்ளிரவில் கூட எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு அப்பா புகைத்துக் கொண்டிருப்பார். அந்த வாடை நாசியில் ஏறி யாராவது செருமினால் கூட அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விடும். வேண்டும் என்றே முகத்தின் அருகாமையில் ஊதுவார்.

அவர்கள் மீது அவருக்கு உள்ள உரிமையை நிலை நிறுத்துவதற்கு இருந்த ஒரே அடையாளமாக சிகரெட் இருந்தது.

ஒருநாள் அம்மா அவர் சட்டை பையில் வைத்திருந்த சிகரெட்டை துணி துவைக்கும் போது கவனமாக  எடுத்து வைக்க மறந்து துவைத்துவிட்டாள் என்பதற்காக அவளது வலது கையில் சூடு போட்டார் அப்பா. அன்றிரவு அம்மா வீட்டிற்கு உறங்குவதற்கு வரவேயில்லை. அருகாமையில் உள்ள வரலட்சுமி வீட்டில் போய் படுத்துக் கொண்டாள்.

அவளை வீட்டிற்கு கூட்டி வரும்படியாக அப்பா ருக்மணியை அனுப்பி வைத்தார். ருக்மணிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் வரலட்சுமியின் வீட்டு வாசலில் போய் நின்றபடியே வாம்மா வீட்டுக்கு வாம்மா வீட்டுக்கு என்று கூப்பிட்டுக் கொண்டேஇருந்தாள். ஆனால் அம்மாவின் காதில் அந்தக்குரல் விழவேயில்லை. தானும் அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்பது போல அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சில நிமிசங்களில் வரலட்சுமி வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. அவர் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு நின்றிருந்தார். அவரது ஆபாசமான பேச்சை தாள முடியாமல் வரலட்சுமியக்கா அம்மாவை வீட்டிற்கு போகும்படியாக அனுப்பி வைத்தாள். ருக்மணி பயத்துடன் கூடவே நடந்து வந்தாள். அப்பா தன் கையில் இருந்த பத்து ரூபாயை தந்து சிகரெட் வாங்கிக் கொண்டுவரும்படியாக சொல்லிவிட்டு அம்மாவை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு சென்றார்

ருக்மணி இருட்டில் அப்பாவை திட்டியபடியே நடந்து போனாள்.

இருட்டிற்குள்ளாக ஒரு ரிக்ஷாகாரன் அமர்ந்து பீடி புகைத்து கொண்டிருந்தான். பகலும் இரவும் எண்ணிக்கையற்ற ஆண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அந்த புகை பெண்களை நோக்கியே திரும்புகிறது என்று நினைத்தபடியே அவள் நடந்தாள். கடைகள் யாவும் சாத்தியிருந்தன. எங்கே போய் சிகரெட் வாங்குவது என்று தெரியவில்லை.

அவள் மீன்மார்க்கெட் வரை நடந்து போய் பார்த்தாள். அநேகமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. சிகரெட் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா தன்னை அடிக்க கூடும் என்ற பயமாக இருந்தது. அவள் சினிமா தியேட்டர் முன்பாக சிகரெட் கடையிருக்க கூடும் என்று நடந்தாள். இரண்டாவது காட்சி துவங்குவதற்காக பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

ருக்மணி சிகரெட் வாங்கிக் கொண்டு திரும்பும் போது சைக்கிளில் வந்த ஒருவன் பாதி புகைத்த சிகரெட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு தியேட்டர் உள்ளே செல்வது தெரிந்தது. ஒடிப்போய் அந்த சிகரெட்டை எடுத்து பார்த்தாள். பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த சிகரெட்டை அவள் ஒரு முறை இழுத்து பார்த்தாள். நெஞ்சினுள் அந்த புகை சென்றதும் புறை ஏறிக் கொண்டு இருமல் வந்தது. சிகரெட்டை வீசி எறிந்துவிட்டு இருமினாள்.

அடங்கவேயில்லை. அடிவயிறு பிடித்துக் கொண்டுவிடும் போலிருந்தது. பயத்துடன் கண்ணீர் முட்ட தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது  அப்பா வாசலில் ஈஸி சேரை போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவள் சிகரெட்டை அவரிடம் தந்துவிட்டு உள்ளே போய் அம்மா அருகில் படுத்துக் கொண்டாள். சிகரெட்டின் சுவை நாக்கில் அப்படியே இருந்தது. அம்மா அந்த மணத்தை உணர்ந்திருக்க கூடும். அவள் பக்கம் திரும்பி முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆவேசம் ஆனவள் போல சிகரெட் பிடிச்சயாடி. சிகரெட் பிடிச்சயா என்று மாறிமாறி முகத்தில் அறைய துவங்கினாள். ருக்மணி என்னை மன்னிச்சிரும்மா என்னை மன்னிச்சிரும்மா என்று கத்தினாள். ஆனால் அடி நிற்கவேயில்லை.

அப்பா அதை கவனித்தபடியே சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அம்மா கை ஒயும்வரை அடித்துவிட்டு அவளை கட்டிக் கொண்டு அழுதாள். பிறகு இவரும் ஒன்றாக படுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு சிகரெட் வாங்க போகும்போது அந்த வாசனை தன் மீது படிந்து விடக்கூடாது என்று கையை தனியே நீட்டியபடியே போவாள் ருக்மணி.

அவளை போலவே சிகரெட் வாங்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் நிறைய இருந்தார்கள். எதற்காக ஆண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அம்மாவிடம் கேட்டாள். அவரு சம்பாதிக்கிறாரு சிகரெட் பிடிக்கிறாரு அதனாலே என்ன என்று சொன்னாள் அம்மா.

ஆறாம்வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ருக்மணியின் பள்ளிக்கு அப்பாவை அழைத்து வரும்படியாக சொல்லியிருந்தார்கள். அவர்கள் வகுப்பிலிருந்து இரண்டு மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் கலச்சார விழாவில் கலந்து கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு அது. அப்பாவை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு போகும்வழியே தயங்கி தயங்கி ருக்மணி சொன்னாள்.

ஸ்கூல்ல வந்து நீங்க சிகரெட் பிடிக்க கூடாதுப்பா

அப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை. பிரேயர் முடிந்தபிறகு பிரின்ஸ்பலை  சந்திக்கும்படியாக சொல்லிய வகுப்பு ஆசிரியை  அப்பாவை வெளியே காத்திருக்க சொன்னாள்.

அப்பா அதற்குள் புகைக்க துவங்கியிருந்தார். அவ்வளவு மாணவிகளுக்கு நடுவில் நின்றபடியே ருக்மணி கண்ணை மூடி  பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்த போதும் காற்றில் சிகரெட் புகை கரைந்து வந்து கொண்டேயிருந்தது. பிரேயர் முடியும்வரை யாரும் எதுவும் சொல்லவேயில்லை. அப்பாவாக அதற்குள் பிரின்ஸ்பல் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தார். பிரின்ஸ்பல் அறைக்குள் நின்றபடியும் அவர் புகைத்துக் கொண்டுதானிருந்தார்.

பிரின்ஸ்பல் தன் அறையில் புகை பிடிக்க அனுமதியில்லை என்று கடுமையான குரலில் சொன்ன போது அது தன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட பள்ளிக்கு அருகதையில்லை என்று சொல்லியபடியே இன்னொரு சிகரெட்டை எடுத்து புகைக்க துவங்கினார்.

இதற்குள் வகுப்பு ஆசிரியை ருக்மணியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அப்பா நிதானமாக புகை பிடித்துக் கொண்டு தன்மகளை வெளியே அனுப்ப தனக்கு இஷ்டமில்லை பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அந்த அறையில் புகை நிரம்பிக் கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியையும் பிரின்ஸ்பலும் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சில நிமிசங்களில் ருக்மணியை அழைத்து அப்பாவை  வெளியே அழைத்து செல்லும்படியாக சொன்னார்கள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போதும் அவர் புகைத்துக் கொண்டே வந்தார். பள்ளியின் வாசலை தாண்டுவதற்குள் நிச்சயம் தன்னை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள் என்று ருக்மணிக்கு தெரிந்துவிட்டிருந்தது.

அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவர்களது ஆத்திரம் கோபம் வசை எதைப்பற்றியும் ஒரு போதும் கருத்தில் கொண்டதேயில்லை. சிகரெட் பிடிப்பதை தவிர வேறு ஒரு கெட்டபழக்கமும் உங்க அப்பாவுக்கு கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார். ஆபீஸ் விட்டா நேராக வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று அம்மாவே பல நாட்கள் அவரை பாராட்டியும் இருக்கிறார்

ஆனால் அவளுக்கு அப்பாவை பிடிக்காமலே ஆகிப்போனது. அவள் மனதில் எப்போதும் அப்பா புகைக்கிறார் என்ற படிமம் உறைந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ சிகரெட் பிடிக்கின்றவர்களை கண்டாலே அவளுக்கு ஆத்திரமாக வரத்துவங்கியது.

அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அப்பா புகைப்பது மிக அதிகமாகி போயிருந்தது. அதற்கு காரணம் ஒய்வில்லாத சண்டை. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் பயமாக இருக்கும் காரணம் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருப்பாள். அல்லது அடித்துக் கொண்டிருப்பார். அதன் சில நிமிசங்களில் அவள் சிகரெட் வாங்க போக வேண்டியதிருக்கும். பேசாமல் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வரும்போதே கடையில் நாலைந்து சிகரெட்டுகள் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்

அப்படியொரு நாள் வீடு திரும்பும் போது வீட்டில் நிறைய ஆட்கள் திரண்டிருந்தார்கள். அம்மா சுவர் ஒரமாக சாய்ந்து கிடந்தாள். அவள் உடல் தலை கலைந்து கிடந்தது. சேலை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவளை சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா சலனமில்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் அருகாமை வீட்டு ஆண்களில் சிலர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் ருக்மணி வருவதைக்கண்டதும் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி உரத்த குரலில் அழுதபடியே இப்படியொரு பொம்பளை பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு சாகப்போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது என்று அம்மாவை உலுக்கினாள்.

அம்மா அவள் பக்கம் திரும்பவேயில்லை. அம்மா தற்கொலை செய்வதற்கு முயன்றிருக்கிறாள். பக்கத்துவீட்டு பெண்கள் பார்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் செத்துப்போயிருப்பாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

அதை கேட்டவுடன் ருக்மணிக்கு கால்கள் நடுங்க துவங்கியது. அவள் அம்மாவின் அருகில்போய் உட்கார்ந்து கொண்டாள்.  அம்மாவின் கையை எடுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள முயன்ற போது அவள் தள்ளிவிட்டபடியே போ.. போயி உங்கப்பாவுக்கு சிகரெட் வாங்கிட்டு வந்து குடு என்றாள். ருக்மணிக்கு பேசாமல் தான் செத்துப்போய்விடலாம் என்பது போலிருந்தது.

அவள் யூனிபார்மை கூட கழட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு எட்டரை மணி வரை அவர்கள் வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பிறகு அப்பா அவளிடம் பசிக்கிறதா என்று கேட்டார். அவள் இல்லை என்று பொய் சொன்னாள். அப்பா தன் சட்டை பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தந்து அவளுக்கு தேவையான இட்லியும் அவருக்கு சிகரெட்டும் வாங்கிக் கொண்டு வரும்படியாக சொன்னார்.

அவள் எழுந்து பணத்தை கையில் வாங்கிக் கொண்டாள். வாசல்படியை விட்டு இறங்கும் போது அப்பா அழைப்பது போலிருந்தது. அவள் திரும்பி பார்த்த போது அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு அவளை நிறுத்திவிட்டு தானே கடைக்கு போய்வருவதாக சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தானும் கூடவரவா என்று கேட்டாள். அப்பா வேண்டாம் என்றபடியே கிழே இறங்கி நடக்க துவங்கினார்

இரவு பதினோறு மணி வரை அப்பா வீடு திரும்பி வரவேயில்லை. அம்மா அவளை தேடிப்பார்த்து வரும்படியாக சொன்னாள். ருக்மணி ஒவ்வொரு கடையாக போய் எங்கப்பா சிகரெட் வாங்க வந்தாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். அப்பா எங்கேயும் வரவில்லை. இந்த இரவில் எங்கே போயிருக்க கூடும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது அவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை சொருகிக்கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சினிமா தியேட்டர் வரை சென்று பார்த்தாள். ஆனால் அங்கேயும் அப்பா இல்லை.

 நள்ளிரவில் அம்மா தெருவில் நின்றபடியே சப்தமாக  அழுதாள். மாலையில் அவள் வீட்டில் திரண்டிருந்தவர்கள் எவரும் ஆறுதல்படுத்த வரவில்லை. அவளும் அம்மாவும் மட்டும் அழுதார்கள்

அடுத்த நாள் அம்மாவும் அவளும் அப்பாவின் அலுவலகத்திற்கு தேடிப்போய் பார்த்தார்கள். அப்பா அங்கேயும் வரவில்லை. அப்பாவிற்கு தெரிந்த ஒவ்வொருவர் வீடாக போய் அவர்கள் விசாரித்தார்கள். அப்பா எங்கேயும் வரவேயில்லை. அம்மாவின் கோபம் அவள் மீது திரும்பியது.

ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறதுல உனக்குஎன்னடி கௌரவம் குறைஞ்சி போச்சி. உங்கப்பா அதுனாலே தானே அன்னைக்கு கோவிச்சிகிட்டு போயிட்டார் என்று அவளை திட்டத்துவங்கினாள்.

அப்பா காணமல்போய் இன்றைக்கு பதினேழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அப்பா ஏன் அவளை கடைசியாக சிகரெட்வாங்க அனுமதிக்கவில்லை என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அப்பா என்னவாகியிருப்பார். எங்காவது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து போயிருப்பாரா? அல்லது ஏதாவது ஒரு ஊரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்மு தன்னை போலவே வேறு ஒரு சிறுமிக்கு தகப்பனாகி அவளையும் சிகரெட் வாங்க வைத்துக் கொண்டிருப்பாரா? இல்லை பிச்சைகாரர்களில் ஒருவரை போல அலைந்து திரிவாரா? என்று பலநாட்கள் யோசித்திருக்கிறாள்

சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிக்கும் ஆண்கள் அவளது அப்பாவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்பா ஏன் அவ்வளவு மூர்க்கமாக புகைபிடித்தார். அவருக்கு ஏதாவது வேதனை இருந்திருக்குமா. என்ன வேதனை அது.

அப்பா காணாமல் போன சில வருசங்களில் அம்மா தானே உடல் நலிந்து போனாள். அவளை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க துவங்கினாள் ருக்மணி. இப்போது வேலை கிடைத்து சம்பாதிக்க துவங்கிய பிறகும் அவளுக்கு ஹாஸ்டல் அறை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது.

ஆனால் சிகரெட்டின் புகையும் மணமும் அவளுக்குள் அப்பாவின் பிம்பத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அதிலிருந்து மீள்வதற்காக அவள் சிகரெட்டை வாங்கிகொண்டு வந்து அறையில் இருந்த மேஜையில் போட்டு வைக்க துவங்கினாள். என்றைக்காவது அப்பா திரும்பி வந்தால் அவருக்கு இந்த சிகரெட்டுகளை புகைக்க தரலாம் இல்லையா?

அன்றைக்கும் அவள் ரயிலில் சிகரெட்டை கையில் வைத்தபடியே வந்ததை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை ஆயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு பெண் கூட சிகரெட் புகைத்து அவள் பார்த்ததேயில்லை. ஏன் புகைக்க கூடாது என்று ஏதாவது சத்தியம் செய்திருக்கிறார்களா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா?

பொது இடங்களில் நின்றபடியே மூத்திரம் பெய்யும் ஆண்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் ஆண்கள், சாலையோர கடைகளில் நின்றபடியே பஜ்ஜி தின்னும் ஆண்கள், பான்பராக் போடும் ஆண்கள், டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தும் ஆண்கள், வாந்தியெடுத்து குப்பையில் விழுந்து கிடந்து உறங்கும் ஆண்கள், பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்கள், பொதுவெளியில் பெண்களை உரசி பாலின்பம் காணும் ஆண்கள் என அவள் காணும் உலகம் முழுவதும் ஆண்கள் விகாரம் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். அந்த புகைகள் அடுத்த இருக்கையில் உள்ள பெண்கள் மீது, உடன்வசிக்கும் மனைவி மீது, காதலிக்கும் பெண்ணின் உதட்டிற்குள்,  அருகில் உறங்கும் குழந்தைகளின் சுவாச கோளங்களில் சென்று நிரம்புகிறது.

ஆண்கள் புகைக்கிறார்கள். அது வெறும் செயல் அல்ல, அது அவளை போன்ற துயரின் வடுமறையாத சிறுவர் சிறுமிகளை உருவாக்கும் வன்முறை. தன்னை ஆண் என்று காட்டிக் கொள்ள வைக்கும் சாதனம். சிகரெட்டை தூக்கி எறிவதை போல, எவ்விதமான எதிர்ப்பும்இன்றி அணைத்து நசுக்குவதை போல தங்களையும் நடத்த முடியும் என்ற எச்சரிக்கை.

ருக்மணி இப்படியான ஏதேதோ யோசனைகளுடன் அறைக்கு திரும்பி மேஜை டிராயரை திறந்து உள்ளே சிகரெட்டை போட்டாள். நாற்பது ஐம்பது சிகரெட்டுகளுக்கும் மேலாக இருந்தது. அதை பார்த்த போது அப்பா ஏன் கடைசியாக தன்னை சிகரெட் வாங்கிவர சொல்லவில்லை என்ற கேள்வி அவளுக்குள்  இன்றும் தீராமல் இருந்து கொண்டேயிருந்தது.

அப்பா காணாமல்  போனது முதல் அவர் முகம் அவள் நினைவிலிருந்து அழிந்து போக துவங்கியிருந்தது. இப்போது அவரது நினைவாக  மிச்சமிருப்பது சிகரெட் மட்டுமே. தன் கடந்த காலத்தின் நினைவாக மிஞ்சியிருப்பது அந்த சிகரெட்டுகள் மட்டுமே தானே என்று தோணியது.

பின்னிரவில் அவள் படுக்கையில் கிடந்தபடியே முகட்டைவெறித்து பார்த்துக் கொண்டிருந்தபோது அறையெங்கும் சிகரெட் புகை நிரம்பியிருப்பது போல தோன்றியது. அந்த மணத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டிருந்தது. திகைத்து போய் விழித்து  பார்த்தாள். அறையில் அவளை தவிர யாருமேயில்லை.

அத்தனை வருசங்களுக்கு அப்பாலும் அப்பாவின் சிகரெட் புகை அவளுக்குள் கரையாமல் புகைந்து கொண்டேயிருக்கிறது என்பது வருத்தம் தருவதாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். பிறகு தனக்கு தானே பேசிக் கொள்ள துவங்கினாள். அப்போது சட்டென அவளும் தன்னுடைய அம்மா போலவே நடந்து கொள்வதாக தோணியது. அதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #24 on: June 05, 2013, 10:26:40 PM »
இயல்பு

குமுதம் தீபாவளி மலரில் வெளியான குறுங்கதை.


அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பேக், மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி. ஒட்ட வெட்டப்பட்ட தலை. அகலமான கைகள். காலில் நைக்  ஷீ. உள்ளடங்கிய புன்னகை. சற்றே குழப்பமான நிலையில் என்ன வேண்டும் என்று கேட்டேன்.

அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்றும், கொரியத் தயாரிப்பான அதிநவீன செல்போன் விற்பதற்காகத் தான் வந்துள்ளதாக சொல்லி தயாராக கையில் வைத்திருந்த விளம்பர அறிக்கை ஒன்றை என் முன்நீட்டியது.நான் வியப்புடன் மனிதக்குரங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் மிக நளினமாக அது தன் விற்பனை பொருளின் மேன்மைகளைப் பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருந்தது.

என் மனதிலே அது மனிதக் குரங்கு, மனிதக் குரங்கு என்ற ஒரு ஒற்றைக்குரல் ஒயாமல் எதிரொலித்தபடியே இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்து கொண்டது போல மெல்லிய வெட்கத்துடன் இதன் முன்பு என்னைப் போன்ற பிரதிநதிகளை நீங்கள் கண்டதில்லையா என்று ஆங்கிலத்தில் கேட்டது.

இல்லை என்று தடுமாறியபடியே சொன்னேன். விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். செயற்கை அறிவு கொண்ட ரோபேக்களை விடவும் எங்களைப் பார்த்து தான் அதிகம் பேர் வியப்படைகிறார்கள். அது ஏன் என்றே புரியவில்லை என்றது.

அப்படியெல்லாம் இல்லை. இது என்னுடைய தவறு தான் என்று தயங்கியபடியே சொன்னேன்.

தான் ஹோமேசெபியன் வகை குரங்கு என்றும் தனது மூதாதையர்களான நியான்டர்தால், குரோமகனான் பற்றி நிச்சயம் நான் அறிந்திருப்பேன் என்றபடியே தனது குடும்பம் முப்பது வருசங்களுக்கு முன்பாகவே அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரம் நோக்கி வந்துவிட்டதாகவும் தான் முறையாக பள்ளி கல்வி கற்று, நான்கு மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளதோடு, டெல்லி பல்கலைகழகத்திலிருந்த விற்பனையுத்திகள் குறித்த சான்றிதழ் பட்டயமும் பெற்றிருப்பதாக சொல்லியது.

நான் தயக்கத்துடன் இப்படி ஒருவரை நான் முன்பு சந்தித்ததேயில்லை என்று சொன்னேன். அது தலையசைத்தபடியே இந்த நகரில் என்னைப் போன்றவர்கள் அதிகமில்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். பேராசிரியர்களாக, விமானியாக, ஏன் ஊடக விற்பன்னர்களாக கூட பணியாற்றுகிறார்கள். அங்கே அவர்களை எவரும் பேதமாக நடத்துவதில்லை, கேலி செய்வதில்லை என்றது.

அது சரி தான் என்றபடியே அதன் கைகளை பார்த்து கொண்டிருந்தேன். அகலமான கைகள். விரல்நகங்கள் கவனமாக வெட்டப்பட்டிருந்தன. மனிதக் குரங்கு என் வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டபடியே உங்கள் ப்ரிட்ஜில் முட்டையொன்று உடைந்து போயிருக்கிறது என்றது. அவசரமாக குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து பார்த்தேன். நிஜம் ஒரு முட்டை உடைந்து வழிந்து போயிருந்தது,

அதை எடுத்து வெளியே வைத்தபடியே எப்படி அதற்கு தெரிந்தது என்று கேட்டேன.

மனிதக் குரங்கு சிரித்தபடியே தலைமுறை தலைமுறையாக காட்டில் தான் வாழ்ந்தோம். வாசனையை எங்கிருந்து கசிந்தாலும் அறிந்துவிட முடியும் என்றது.

என்னால் சமையலறையில் இருந்து வரும் வாசனையை கூட எது என்னவென்று பிரித்து அறிய முடியவில்லை என்றேன்.

குரங்கு சிரித்தபடியே வாசனை, சிறு சப்தம், பயம் யாவும் அடிமனதில் அப்படியே தானிருக்கிறது. இன்னும் மறையவில்லை என்றபடியே உங்கள் வீடு இருக்குமிடம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது என்றும் அதில் எண்ணிக்கையற்ற வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு ஏரியின் மீது உறங்குவதை போல உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்டது
அந்த மனிதக் குரங்கு சொல்வது உண்மை. இந்த இடத்தில் நாற்பது வருசங்களுக்கு முன்பு வரை பெரிய ஏரியிருந்தது. அதை மூடி அந்த இடத்தில் தான் புதிய கட்டிடங்கள் கட்டினார்கள். இன்றைக்கும் இதன் நிலப்பதிவுகளில் அந்த ஏரியின் பெயர் குறிப்பிடப்படுகிறது என்று சுட்டிகாட்டினேன்.

மனிதக்குரங்கு சிரித்தபடியே மனிதர்களால் ஆகாசத்தையும் மேகங்களையும் மட்டும் தான் விலைக்கு வாங்க முடியவில்லை. நகரங்கள் அலுப்பூட்டுகின்றன. இங்கே இலைகள் உதிரும் ஒசை கேட்பதில்லை. வண்டின் சிறகொலியோ, பறவைகளின் ரெக்கையடிப்போ, தவளைகளின் புலம்பல்களோ கேட்பதேயில்லை. ஒரே வாகன இரைச்சல். உலகிலே தண்ணீரை விலைக்கு வாங்கும் ஒரே உயிரினம் மனிதர்கள் தான் என்றபடியே தனது பையில் இருந்த மாதிரி செல்போன் ஒன்றை எடுத்து பிரித்தது.

அதற்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டேன்.

குரங்கு சிரித்தபடியே தன்னைக் காதலிக்க இளம் பெண்கள் எவருக்கும் விருப்பமில்லை என்பதால் உறவினர்களிலே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக சொல்லி தனது பர்ஸ திறந்து அதிலிருந்த பெண்குரங்கு ஒன்றின் புகைப்படத்தைக் காட்டியது. எனக்கு அந்த புகைப்படத்தை விடவும் பர்ஸில் வைத்திருந்த இரண்டு கிரிடிட் கார்டுகள் மற்றும் பிரபலமான கிளப் ஒன்றின் உறுப்பினர் கார்டு , வானகம் ஒட்டும் சைலன்ஸ் யாவும் கண்ணில் பட்டது.

நான் அந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலே ஏன் அது விற்பனை பிரதி வேலையை த்தேர்வு செய்தது என்று கேட்டேன். இது தான் சவாலாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எதிர்பாரமல் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள். புதிய சவால்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் அலுப்பூட்டும் வேலைகளில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்து கொள்கிறார்கள். அது என்னால் ஒரு போதும் இயலாது. அந்தந்த நிமிசத்தில் வாழ வேண்டும் அப்படி நம்மால் இயலாமல் போவதற்கு காரணம் நம் நினைவுகள் தான் என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அது சரியென்றே தோன்றுகிறது என்றது.

நான் திகைப்போடு ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறதா என்று கேட்டேன். தனக்கு கிருஷ்ணமூர்த்தியை பிடிக்கும் என்றதோடு டேவிட் போம் என்ற இயற்பியல் அறிஞருடன் ஜேகே காலத்தின் முடிவின்மை பற்றி நிகழ்த்திய உரையாடல் அற்புதமானது என்று சொல்லி வியந்தபடியே தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று மிக அன்புடன் கேட்டது.

நான் பிரிட்ஜில் இருந்த குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து தந்த போது உதட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே சிந்திவிடாமல் அது கவனமாக குடித்துவிட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து உதட்டை துடைத்து கொண்டது. பிறகு தன்னியல்பாக புதியரக செல்போன்களின் சாத்தியபாடுகளை விளக்கி சொல்ல துவங்கியது.

அரை மணிநேர பேச்சிற்கு பிறகு நான் அதனிடமிருந்து ஒரு புதிய போனை வாங்கிக் கொள்வது என்று முடிவானது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த லெதர் பையை எடுத்து அதிலிருந்த பில் புத்தகத்தில் என் பெயர் விலாசம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தது.

நான் அந்த தோள்பையினுள் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு புத்தகம், இசைகேட்பதற்கான சிறிய ஐபேடு. ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் சிறிய வாசனை திரவியப்புட்டி காணப்பட்டது.

அழகான கையெழுத்துடன் சுயவிபரங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்த குரங்கு பையிலிருந்த புத்தகத்தை நான் கவனிப்பதை அறிந்து அதை எடுத்து என்னிடம் நீட்டியபடியே இது நீட்சே.. மிக முக்கியமான சிந்தனாவாதி. சோர்வுறும் போது அடிக்கடி இதை வாசிப்பேன்என்று சொல்லி சிரித்தபடியே படிவத்தில் என்னிடம் கையெழுத்து கேட்டது.
நான் கையொப்பமிட்டபடியே காசோலை ஒன்றினை தந்தேன். மிகுந்த அன்புடன் நன்றிதெரிவித்துவிட்டு தங்கள் கம்பெனி எனக்குரிய புதிய செல்போனை தபாலில் அனுப்பி வைக்கும் என்றபடியே என்னிடமிருந்து விடைபெற்று போனது.

மனிதர்களிடம் கூட காணமுடியாத ஒழுங்கும் அன்பும் மிருதுவான பேச்சும் கொண்டிருந்த அந்த குரங்கை வியந்தபடியே இருந்தேன்.

மின்சாரம் தடைபட்டு இருந்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை போலும் எரிச்சலும் அலுப்புமாக மனிதகுரங்கு லிப்டின்பொத்தான்களை  அமுக்கியபடியே நின்றிருப்பது தெரிந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். மனித குரங்கு லிப்டை வெறித்து பார்த்தபடியே ஆத்திரத்துடன் முணுமுணுத்தது. 

மசிரானுங்க. இவங்க ஒவ்வொருத்தரையும் உருவி உருவி செல்போன் விற்கிறதுக்குல்லே நாக்கு தள்ளி போயிருது. இதுல கரண்ட் மசிரு வேற வேலை செய்யலை என்று ஆத்திரத்துடன் சொல்லியபடியே லிப்டிலிருந்து விலகி நடந்து அங்குமிங்கும் பார்த்தது,
எவரும் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த மறுநிமிசம் எனது வீடிருந்த பனிரெண்டாவது தளத்திலிருந்து ஒரே தாவாக வெளியில் தாவி பூமியை நோக்கி குதித்து எதுவும் நடக்காதது போல தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #25 on: June 05, 2013, 10:40:22 PM »
பிழை திருத்துபவரின் மனைவி

சிறுகதை

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை.

காகிதங்கள் கிழிக்கபடும்  போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் எதையும் வெளிப்படுத்துதில்லை. அதைக் கூட அவளால் சகித்து கொள்ள முடிவதில்லை. இதற்காக அவள் காகிதங்களை நீரில் ஊற விட்டுவிடுவாள். அவள் வரையில் அது தான் காகிதங்களுக்குத் தரப்படும் மிக மோசமான தண்டனை. சமையல் செய்யும் போது இரும்பு வாளியில் உள்ள தண்ணீரில் காகிதத்தைப் போட்டுவிட்டால் மாலை பார்க்கும் போது அது கரைந்து துகள் துகளாக மிதந்து தண்ணீரில் கலந்து போயிருக்கும்.

காகிதங்களில் கரையும் போது அதில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எங்கே போய்விடுகின்றன. அந்த வார்த்தைகள்  உப்புத் தண்ணீருக்குள்  கரைந்து போய்விடுவதை போல கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போயிருக்குமா?  அவள் வாளித் தண்ணீரை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சில நேரம் யோசிக்கும் போது வியப்பாக இருக்கும்.

காகிதங்களுக்கும் வார்த்தைகளுக்குள் உள்ள உறவு எத்தகையது. காகிதங்கள் தன் மீது எழுதப்படும் வரிகளுக்கு சம்மதம் தருகிறதா என்ன? காகிதங்களுக்கும் அதில் பதிந்துள்ள சொற்களுக்கும் நடுவில் இடைவெளியிருக்கிறதா? இப்படி யோசிக்க துவங்கியதும் நான் ஏன் இது போன்ற வீண் யோசனைகளை வளர்த்து கொண்டு போகிறேன் என்று அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாக வரும்.

அவள் வீட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் நிரம்பியிருக்கின்றன. அவள் தனது பதினேழாவது வயதில் மந்திர மூர்த்தியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் வரை பாடப்புத்தங்களைத் தவிர வேறு எதையும் கண்டதேயில்லை. அதுவும் அவளது ஊரில் பெண்கள்  உயர்நிலைப் பள்ளி  இல்லை என்பதால் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

ஆறேழு வருடங்கள் அவள் தீப்பெட்டி ஒட்டும் வேலை, ரப்பர்கொட்டை உடைக்கும் வேலைக்கும் போய் கொண்டிருந்தாள். தீப்பெட்டி ஆபீஸில் ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுகள் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் சீட்டு போட்டு ஒரு ரேடியோவைச் சொந்தமாக வாங்கி விடுவதற்கு அவள் ரொம்பவும் ஆசைப்பட்டாள். ஆனால் ஒவ்வொரு முறை சீட்டு எடுக்கும் போதும் ஏதாவது ஒரு செலவு வந்து சேர்ந்துவிடும். இதனால் அவள் திருமணத்தின் போது கட்டயாம் ஒரு ரேடியோ வாங்கித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டுவிட்டாள். ஆனால் மந்திரமூர்த்திக்கு ரேடியோ கேட்பது பிடிக்காது என்பதால் அது எப்போதுமே அணைத்து வைக்கபட்டேயிருந்தது.

திருமணமாகி சென்னைக்கு வந்த சமயத்தில் அவளுக்கு மந்திரமூர்த்தியைக் காணப் பயமாக இருக்கும். அவர் அப்போது ராயல் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பையில் ஒரு பென்சிலும் அழி ரப்பரும் எப்போதுமிருக்கும். சில நேரம் சிவப்பு மை பேனா வைத்திருப்பதை கூட கண்டிருக்கிறாள்.

அவளுக்குப் பிழை திருத்தம் செய்வது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்போதாவது இரவில் மந்திரமூர்த்தி தரையில் தலையணை போட்டு படுத்தபடியே காகிதங்களில் பென்சிலால் சுழிக்கும் போது அவள் கவனமாக பார்த்து கொண்டேயிருப்பாள். அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். சில நேரங்களில் அவர் சப்தமாகச் சிரிப்பது கூட கேட்கும். பின்னிரவு வரை அவர் பிழைத் திருத்தம் செய்து கொண்டிருப்பார். பிறகு எழுந்து பின்கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் மூத்திரம் பெய்து விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்வார்

அவளது உடலில் அவரது விரல்கள் ஊரும் போது பிழை திருத்தம் செய்வது தேவையில்லாமல் நினைவிற்கு வரும். அவர் காமத்தில் பெரிய நாட்டம் கொண்டவரில்லை. அதை ஒரு சம்பிரதாயம் போல ஈடுபடுவதும், உடல் வியர்த்து போனதும் முகம் திருப்பிக் கொண்டு உறங்கி விடுவதும் அவளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகயிருக்கும். உறக்கத்தில் கூட சில நேரம் அவரது விரல்கள் அசைந்தபடி இருப்பதையும் முகம் இறுக்கமடைந்திருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள்.

மந்திரமூர்த்தி யாரோடும் பேசுவது கிடையாது. அவர் காலை ஆறுமணிக்கெல்லாம் பிழை திருத்தத் துவங்கிவிடுவார். திருத்திய காகிதங்களுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறி செல்லும் போது அவரது மஞ்சள் பையில் திருத்திய பிரதிகளும் மதிய உணவுமிருக்கும். அவரது அலுவலகம் ராயப்பேட்டைப் பகுதியில் இருந்தது.

அவருக்கென்று நண்பர்களோ தெரிந்தவர்களோ எவருமோயில்லை. வெளியிலும் அவர் போவது கிடையாது. அவருக்கு இருந்த ஒரே பழக்கம் வெற்றிலை போடுவது. அதற்காக சிறிய லெதர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் இருந்து பத்து நிமிசத்திற்கு ஒரு முறை இரண்டுவெற்றிலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வார்.

ஒரு முறை அவளை தான் வேலை செய்யும் அச்சகத்தில் நடைபெற்ற விழாவிற்காக அழைத்துப் போயிருந்தார்.  அங்கே மிகப்பெரிய இயந்திரம் ஒன்றில் காகிதம் உருளையாக சுற்றப்பட்டிருப்பதையும் அந்தக் காகித உருளையிலிருந்து வெங்காயத்தில் தோல் உரிக்க உரிக்க வந்து கொண்டிருப்பது போல காகிதம் வழிந்து கொண்டேயிருப்பதையும் அவள் மிரட்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.

அந்தக் காகித உருளை முழுவதும் அச்சடிக்கபட்டுவிடும். அத்தனையும் அவர் தான் பிழைத் திருத்தம் செய்ய வேண்டுமில்லையா? அவள் தன் கணவரிடம் அதைப்பற்றி கேட்டதும் அசட்டுதனமாக உளறாதே என்றபடியே அவர் பைண்டிங் செய்யும் பகுதிக்குச் சுற்றி காட்ட அழைத்து சென்றார்

அவள் வயதில் நாலைந்து பெண்கள் காகிதங்களை வரிசை வரிசையாக அடுக்கி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்டாள். மந்திரமூர்த்தி பதில் சொல்லாமல் அது நமக்கு சரிப்படாது என்றார். அச்சகத்தின் கடைசில் இருந்த கழிப்பறைக்கு அவள் போகும் போது வழியில் தரையில் காகிதங்கள் சிதறி கிடந்தன. அதன் மீது யாவரும் மிதித்து நடந்து போய் கொண்டிருந்தார்கள்.

தென்பக்கமாக ஒரு சிறிய இரும்புக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டாள். உள்ளே எட்டிப்பார்த்த போது கழித்து போட்ட உபயோகமற்ற காகிதங்கள் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருந்தன. அவளுக்கு பயமாக இருந்தது. நீருற்று பொங்குவதை போல காகிதங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதா? இந்த காகிதங்கள் எல்லாம் எங்கே போய்சேரும்?  அவள் கழிப்பறைக்கு போனபிறகும் அந்த யோசனையில் இருந்து விடுபட முடியாமலிருந்தாள்.

அந்த அச்சகத்தில் அவளது கணவன் ஒரு ஆள் மட்டுமே பிழை திருத்துபவராக இருந்தார் என்பது ஏன் என்று அவளுக்கு புரியவேயில்லை. ஒரு நாள் மந்திர மூர்த்தி பிழை திருத்தி வைத்திருந்த காகிதங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தாள். அநேகமாக வரிக்கு வரி தவறுகள் அடையாளம் காணப்பட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டும் அடித்து மாற்றியும் இருந்தன.

அவளுக்கு அந்தக் காகிதத்தை பார்க்கும் போது ஏதோ குழந்தை விளையாட்டு போலத் தோணியது. சில வேளைகளில் மந்திரமூர்த்தி எல்லா எழுத்தாளர்களை விடவும் மிகப்பெரிய அறிவாளி போன்று தோன்றினார். ஒரு வேளை தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று கூட அவளுக்கு தோணியது. அவள் பயத்தோடு அந்த காகிதத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு அவருக்கு சாப்பாடு வைத்தாள்.

மந்திரமூர்த்தியின் கண்களில் பிழைகள் எத்தனை சிறியதாக இருந்தாலும் எப்படியோ பட்டு விடுகிறது. இந்த குணம் அவருக்கு காகிதங்களோடு மட்டும் இருக்கிறதா இல்லை தன்னையும் அவர் இது போன்று நுணுக்கிப் பார்த்து கொண்டுதானிருக்கிறாரோ? ஆரம்ப நாட்களில் அவள் மாலை நேரங்களில் வீட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.

வீடு திரும்பும் மந்திர மூர்த்தியின் முகம் அதைக் கண்டதுமே கடுமையடைவதை அவள் கண்டிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்ததும் அவர் தனது பிழைத் திருத்தும் காகிதங்களை எடுத்து வைத்துக் கொள்வார். அவள் தரும் காபியோ, காரத்தையோ அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது. ஏன் அவர் இப்படி எழுத்துக்களுக்குள் தன்னை முடக்கிக் கொண்டுவிட்டார் என்று குழப்பமாக இருக்கும்.

மந்திரமூர்த்திக்கு உணவில் கூட அதிக கவனமிருப்பதில்லை. ஈர வேஷ்டியை கூட சில நேரங்களில் அணிந்து கொண்டு புறப்பட்டு போகின்றவராகயிருந்தார்.  எப்போதாது அவள் தயக்கத்துடன் அவர் வேறு வேலை ஏதாவது பார்க்க கூடாதா என்று கேட்கும் போது அவர் முறைத்தபடியே இந்த வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்பார். அவளால் விளக்கி சொல்ல முடியாது.

மந்திரமூர்த்தி அச்சகத்திற்கு செல்லாமல் ஒரு நாளும் இருந்ததே கிடையாது. அவள் உடல் நலமற்று கிடந்த நாட்களில் கூட கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு அவர் அச்சகத்திற்கு கிளம்பி போய்விடுவார். பாயில் கிடந்தபடியே அவள் பல்லைகடித்து கொண்டுகிடப்பாள். எதற்காக இதை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டோம். ஒரு எழுத்து மாறி போகின்றதைப் பற்றி கவலைப்படும் ஒரு நபர் தன்னை ஏன் கவனிக்க மறந்து போகிறார் என்று ஆத்திரமாக வரும்.

மந்திரமூர்த்தி அதைப் பற்றி யோசிப்பதேயில்லை. எப்போதாவது அவராக சினிமாவிற்கு போய்வரலாம் என்று சொல்வார். அது போன்ற நேரங்களில் அவள் அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வருவாள். திரையரங்கத்தின் வாசலில் நின்றபடியே போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களை, வேர்கடைலை மடித்து தரும் காகிதங்களை கூட அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் அவரது உதடுகள் தவறுகளை முணுமுணுப்பதையும் அவளால் கேட்க முடிந்திருக்கிறது.

சினிமா தியேட்டரில் அவர் சிரித்து அவள் கண்டதேயில்லை. எப்போதும் தீராத யோசனையுடன் அவரது முகம் உறைந்து போயிருக்கும். சினிமா முடிந்த மறுநிமிசமே வீடு திரும்பிவிட வேண்டும் என்பதில் அவருக்கு  மிகுந்த பதட்டமாக இருக்கும். சினிமா பார்த்த வந்த இரவுகளில் அவர் அவளோடு உறவு கொள்வது கிடையாது என்பது ஏன் என அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை

அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது. இப்போது வரை குழந்தைகளில்லை. அவள் தனியாகவே வீட்டிலிருந்து பழகி விட்டிருந்தாள். எப்போதாவது அவளாக ஒரு எலுமிச்சைபழத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தட்சணாமூர்த்தியை தரிசிப்பதற்காகச் சென்று வருவாள்.

அது போன்ற நேரங்களில் அவள் கடவுளிடம் என்ன வேண்டுவது என்பது கூட  அவளுக்கு மறந்து போயிருந்தது. சில நேரங்களில் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு கடவுளை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். ஆத்திரமாகும் நாட்களில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் யாவும் உலகிலிருந்து ஒழிந்து போய்விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பென்சில்களின் மீது. ரப்பரின் மீது என நீண்டு கொண்டே போனது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பகலில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கிழித்தபடியே இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய மந்திர மூர்த்தி காகிதங்கள் இறைந்து கிடந்த அறையை  கண்டதும் சற்றே கோபமான குரலில் தங்கம்மா.. உனக்கு பேப்பரை கிழிக்க ஆசையிருந்தால் குப்பை தொட்டிக்கு போ .அங்கே நிறைய கிடக்கும். இன்னொரு தடவை இது போல செய்யாதே என்றபடியே அவர் தனது மேஜையில் உட்கார்ந்து கொண்டு பையில் இருந்த காகிதங்களை பிழை திருத்தம் செய்ய துவங்கினார்.

அவள் சப்தமாகக் கத்தி அழுதாள். அந்த சப்தம் அவருக்கு கேட்டதாகவே தெரியவில்லை. அவர் திருத்திய காகிதங்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. அவளுக்குக் காகிதங்களில் இருந்து சொற்கள் உதிர்ந்து விழுவது போன்றும் அவளது கையில், கால்களில், உடல்களில் சொற்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும் தோன்றியது.

அதன் பிறகு அவளை மருத்துவரிடம் அழைத்து போனார் மந்திரமூர்த்தி. அவள் கலக்கத்துடன் தனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னாள். ஒருவார காலம் உறங்குவதற்கு மாத்திரைகள் தந்து அனுப்பினார் மருத்துவர். கண்களை அழுத்தும் உறக்கத்தின் ஊடாக கூட ஒரு நிழலைப் போல அவர் பிழைத் திருத்திக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியும். அழுவதற்கு கூட முடியாமல் அவள் உறங்கி போய்விடுவாள்.

ஒரு ஆண்டுகாலம் அவளைச் சொஸ்தப்படுத்துவதற்காக வாரம் தோறும் பொதுமருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அவள் மௌனமாகத் தெருவில் நடந்து வருவாள். மருத்துவமனை வரும் வரை அவர் எதுவும் பேசிக் கொள்ளவே மாட்டார். புறநோயாளிகள் பிரிவில் அவளை உட்கார வைத்துவிட்டு அவர் எதிரில் இருந்த வாகை மரத்தை வெறித்துப் பார்த்தபடியிருப்பார்.

வெள்ளை, மஞ்சள் நிற மாத்திரைகள் சகிதமாக அவர்கள் வீடு திரும்பிய மறுநிமிசம் அவர் தனது அச்சகத்திற்கு புறப்பட்டு போய்விடுவார். மாத்திரைகளில் கூட ஏதோ பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கின்றன. அந்த பெயர்கள் பிழை திருத்தப்பட்டதா இல்லை திருத்தபடாததா என்ற உற்று பார்த்து கொண்டிருப்பாள். மாத்திரைகள் வயிற்றில் கரைந்து போகும் போது இந்த பெயர்களும் தனக்குள் கரைந்து போய்விடும் இல்லையா என்று யோசனை எழும். அவள் கண்களை மூடிக் கொண்டு மாத்திரையை விழுங்குவாள்.

காகிதங்கள் மெல்ல அவளுக்கு வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்து கொண்டேயிருந்தன.  உலகில் உள்ள எல்லா அச்சு எழுத்துக்களையும் அழித்துவிட விரும்பியது போல அவள் ஆவேசப்படத் துவங்கினாள். இதற்காக அவரோடு பேசுவதையும் அவள் தவிர்த்து வந்தாள். எப்போதாவது அவர் தண்ணீர் கேட்கும் போது கூட அவள் அந்த சொல்லைக் கேட்டதேயில்லை என்பது போல அவரைப் பார்த்தபடியே இருப்பாள். அவராக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்

இரவுகளில் உறங்க மனதற்கு அவள் பாயில் உட்கார்ந்துகொண்டேயிருப்பதை அவர் கவனித்த போது கூட தன் வேலையை நிறுத்த மாட்டார். ஒரு நாள் அவள் அவரது முதுகின் பின்னால் வந்து நின்றபடியே அவரது வேலையைக் கவனிக்க துவங்கினாள். ஆவேசமாக மிருகம் ஒன்று தனது இரையை வேட்டையாடுவதை போல அவர் சொற்களை தன் கையில் உள்ள பென்சிலால் அடித்தும் திருத்தியும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.

அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்

காகிதத்தில் அப்படி என்னதானிருக்கிறது ?

அவர் திரும்பி பார்க்காமலே எனக்குத் தெரியவில்லை என்றார். அவள் காகிதங்களை உற்றுப் பார்த்தபோது வார்த்தைகள் உடைந்தும் விலகியும் தனியே நடனமாடுவது போலிருந்தது. திடீரென அவரை கட்டிக் கொண்டு அழுத்துவங்கினாள். அவரது கையில் இருந்த பென்சில் தவறி கிழே விழுந்து முனை உடைந்தது.

அவர்  அவளது கைகளை விலக்கி விட்டுக் கிழே கிடந்த  பென்சிலை எடுத்து மிக கவனமாகச் சீவத் துவங்கினார். அவர் முன்பு ஆயிரம் பக்க புத்தகம் ஒன்று பிழைத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. தங்கம்மாளின் அழுகை வீடெங்கும் கரைந்து ஒடிக்கொண்டிருந்தது.

***


-உயிர்மை இதழில் வெளியானது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #26 on: June 06, 2013, 01:11:52 PM »
வெறும் பிரார்த்தனை

சிறுகதை

அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது,

வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள்

ஆனால் அப்பா  பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார்,

ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள்,

“அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா.

ரமாவால் பசி தாங்கமுடியாது, அவள் தினசரியும் பள்ளியில் மதியம் பனிரெண்டரை மணிக்கே சாப்பிட்டுவிடுகின்றவள், ஆனால் இன்றைக்கு லீவு போட்டு இருப்பதால் அந்த நேரமானவுடன் அவளுக்கு பசிக்க ஆரம்பித்திருக்க கூடும்,

அப்பா நேற்றிரவு திடீரென்று தான் சாமி கும்பிட பழனிக்கு போக வேண்டும் என்று சொன்னார், காதம்பரிக்கு தான் வேலை செய்யும் பார்மசியில் எப்படி லீவு கேட்பது என்பது தயக்கமாக இருந்தது, ஏற்கனவே இந்த மாசத்தில் இரண்டு நாள் லீவு போட்டுவிட்டாள், இதற்கு மேல் லீவு கேட்டால் பார்மசி ஒனர் சபாபதி கேவலமாகத் திட்டுவார், மீறி லீவு போட்டால் சம்பளத்தைப் பிடித்துக் கொண்டுவிடுவார், அவளது ஒருநாள் சம்பளம் நூற்றுபத்து ரூபாய், அதை எப்படி இழப்பது, தயக்கத்துடன் தான் கோவிலுக்கு வரவில்லை என்று காதம்பரி சொன்னாள்,

“நீ வேலைக்கு போயி சம்பாதிச்ச மசிரு போதும், காலையில நாம பழனிக்கு போறோம், நீ வர்றே, காலைல ஆறுமணி பஸ்ஸை பிடிச்சா தான் வெயில் ஏறுறதுக்குள்ளே கோவிலுக்கு போக முடியும், “ என்று அப்பா கோபத்துடன் சொன்னார்,

மறுத்து பேசினால் அப்பாவின் கோபம் உக்கிரமாகிவிடும், தன்னோடு வேலை செய்யும் விநோதினியைப் பார்த்து யாராவது உறவினர் செத்து போய்விட்டார்கள் என லீவு சொல்லிவிட வேண்டியது தான், என்று முடிவு செய்து கொண்டாள்,

எதற்காக இப்போது உடனே பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லை, அப்பாவின் குணமே அப்படித்தான், திடீரென்று தனக்கு மனசு சரியில்லை, எல்லோரும் உடனே கிளம்புங்க என்று அவர்களை திருப்பரங்குன்றத்திற்கோ, திருச்செந்தூருக்கோ கூட்டிக் கொண்டு போவார், அப்படி கோவிலுக்குப் போய்வருவதற்காக யாரிடமாவது ரெண்டாயிரம் கடன் வாங்குவார், பின்பு அதற்கு வட்டி கொடுக்கமுடியவில்லை என்று குடித்துவிட்டு வந்து அம்மாவை கண்டபடி ஏசுவார், கடன்தொல்லை கழுத்தை நெருக்கும் போது உடனே ஏதாவது ஒரு கோவிலுக்கு கிளம்பிவிடுவார், இன்றைக்கும் அப்படித்தான் நடந்தது,

விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மா எழுந்து குளித்துவிட்டு காதம்பரியை எழுப்பி குளிக்கச் சொன்னாள், டீ போட்டுக் கொண்டு அப்பாவை எழுப்ப முயன்ற போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அம்மா அவரது முதுகை தொட்டு எழுப்ப முயன்ற போது கைகளை தள்ளிவிட்டு சும்மாபோடி நாயே என்று கத்தினார், ஒருவேளை கோவிலுக்குப் போக வேண்டும் என்பதே மறந்து போய்விட்டதோ,

அம்மா டீயை அவரது படுக்கையில் அருகில் வைத்துவிட்டு  பாயில் உருண்டுகிடந்த ரமாவை எழுப்பிவிட்டாள்,  காதம்பரியும் ரமாவும் ஜடை பின்னிமுடித்த போது காலை விடிந்து நல்ல வெளிச்சம் வந்திருந்த்து.

அப்பொழுதும் அப்பா போதையில் உறங்கிக் கொண்டுதானிருந்தார், அவரது முகத்தில் எச்சில் வழிந்து காய்ந்திருந்தது, மயிர் வளர்ந்த அவரது பருத்த தொப்பை சீரற்று ஏறி இறங்கிக் கொண்டிருந்தது, அப்பாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பினாள் ரமா

“யப்பா, கோவிலுக்கு நேரமாச்சி எந்திரிங்க“

ம், ம் என்று மட்டும் ஒலி வந்தது, அவர் எழுந்து கொள்ளவில்லை, அவள் சோர்ந்து போனவளா தண்ணி ஊத்தி எழுப்பிவிடவா என்று அம்மாவிடம்  கேட்டாள்,

“வேணாம், கத்துவாரு, அவரா எந்திரிக்கட்டும்“

என்றபடியே அம்மா சட்னி அரைப்பதற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாள், காதம்பரி தனக்குப் பிடித்தமான ரோஸ்கலர் சுடிதாரை அணிந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள், இந்த சுடிதார் எடுப்பாக இல்லை, லேஸ் வைத்து கறுப்பில் ஒரு சுடிதார் எடுக்க வேண்டும், எப்படியும் அதற்கு ஆயிரம் ரூபா வேணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள், அம்மா சட்னி அரைத்து முடித்து அவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்பா எழுந்து கொள்வதற்காக காத்துக் கொண்டேயிருந்தார்கள், ரமா அலுப்பானவள் போல தான் பள்ளிக்கு கிளம்புவதாக சொன்னாள்.

“உங்கப்பா எந்திரிச்சா என்னை திட்டுவார்“ என்று அம்மா அவளை தடுத்துவிட்டாள்

அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட போது மணி பத்தரையாகியிருந்த்து, அவர் எழுந்து தேநீர் குடித்துவிட்டு  அவர்களை விசித்திரமாக பார்த்தபடியே மெதுவாக குளித்து, டிபன்சாப்பிட்டுவிட்டு, சந்தன கலர் கோடு போட்ட சட்டையை போட்டுக் கொண்டார், அவர்கள் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிய போது வெயில் ஏறியிருந்தது,

பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போகலாம் என்றாள் ரமா, அப்பா அதை கேட்டுக் கொள்ளவேயில்லை, வீட்டிலிருந்து நடந்தே அவர்கள் பேருந்து நிலையத்திற்கு போனார்கள், ரமா முகம் சுண்டிப்போனவளாக, வெயிலின் அசதி மேலிட மெதுவாக நடந்து வந்தாள்,

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, அப்பாவிற்கு தெரிந்த பஸ் டிரைவர் என்பதால் அப்பா டிரைவர் சீட்டுவழியாக ஏறி உள்ளே போய் சீட்டு பிடித்தார், மூன்று பேர் உட்காரும் சீட்டில் அவர்கள் நால்வரும் நெருக்கடித்து உட்கார்ந்து கொண்டார்கள், வெக்கையில் பேருந்தினுள் இருக்க முடியவில்லை, வியர்த்து வழிந்தது. அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல கூட்டத்தை விலக்கி கொண்டு கிழே இறங்கிப் போனார்,

ஒரு வயதான பெண் நிற்கமுடியாமல் அப்பா உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டாள், அப்பா அருகில் உள்ள பெட்டிகடையில் போய் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்து புகைக்க ஆரம்பித்திருந்தார், பேருந்து கிளம்புவதற்காக ஹார்ன் அடிக்கும்வரை அப்பா வரவில்லை, ரமா ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அப்பா , வாங்க, பஸ் கிளம்புது எனறு கத்தினாள்,

அப்பா சாவகாசமாக பேருந்தை நோக்கி வந்து மறுபடியும் டிரைவர் சீட் வழியாகவே உள்ளே வந்தார், அப்படி அவர் ஏறிவருவதை பேருந்தே பார்த்துக் கொண்டிருந்த்து, தனது சீட்டில் உட்கார்ந்திருந்த கிழவியை எழுந்து நிற்கும்படியாக அப்பா திட்டினார்

அந்த பெண் தனக்கு கால்வலி தாங்கமுடியலை என்றாள், கோபம் அம்மா மீது திரும்பியது

“அறிவு கெட்ட நாயி, மனுஷன் கூட்டத்தில முண்டி அடிச்சி சீட் பிடிச்சி குடுத்தா, கொழுப்பெடுத்து அதை ஏன்டி விட்டுக்கொடுத்தே,அப்போ நீ எந்திரிச்சி நில்லுடி, அப்போ தான் புத்தி வரும்“

என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்தார், அம்மா எழுந்து நின்று கொண்டாள், அவர்களின் சண்டைய கண்ட கிழவி முகம் சுருங்கிப்போனவளாக எழுந்து கொண்டு அம்மாவின் கையை பிடித்து உட்கார சொன்னாள்

“பரவாயில்லை நீங்களே உட்காருங்க்ம்மா“ என்றாள் அம்மா

“நான் புளியம்பட்டிவிலக்கில இறங்கிடுவேன், நீ உட்காரும்மா“ என்று அவள் அம்மாவை உட்கார வைத்தாள், அம்மா சீட்டின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள், பேருந்து கிளம்பியது, ரமா ஜன்னலுக்கு வெளியே ஒடும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்தபடியே வந்தாள், அப்பா அவளை சீட் மாறி உட்கார சொல்லிவிட்டு தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டார், ரமாவின் முகம் வாடிப்போனது, அதை உணர்ந்தவளை போல அம்மா அவளது கையை தன்னோடு சேர்த்து வருடத்துவங்கினாள்,

பேருந்து ரயில்வே கேட்டை கடப்பதற்குள் அப்பா உறங்கியிருந்தார், குறட்டை ஒலி பேருந்தையே திரும்பி பார்க்க வைத்த்து, பொது இடத்தில் எப்படி இப்படி குறட்டை விட்டு அவரால் உறங்கமுடிகிறது என்று காதம்பரிக்கு அவமானமாக இருந்தது ரமா ஏதாவது பேச முயற்சி செய்யும் போது அம்மா அப்பா தூங்குகிறார் என்பதால் பேச வேண்டாம் என்று சைகை காட்டினாள்,

சே, அம்மா ஏன் இப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள் என்று காதம்பரிக்கு ஆத்திர ஆத்திரமாக வந்த்து, எழுந்து வேறு சீட்டிற்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்த்து, அப்படி செய்தால் அதற்கும் அம்மா தான் திட்டுவாங்க நேரிடும்,

அம்மா பழகிப்போய்விட்டிருந்தாள், சமையலறை உத்திரத்தில் வாழும் பல்லியை போல எங்கே அப்பா தன்னை துரத்திவிடுவாரோ என்ற பயத்திலே அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள், இவ்வளவிற்கும் அவர்களுக்கு திருமணமாகி பத்தொன்பது வருஷங்கள் முடிந்துவிட்டன,

அப்பாவை திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்து அம்மா நிறைய அழுதிருக்கிறாள், ஆரம்ப நாட்களில் அவரை மாற்றமுயற்சித்து அடியும் வசவும் வாங்கியிருக்கிறாள், அவளது இடதுகையில் அப்பா தோசைகரண்டியால் போட்ட சூட்டு தழும்பு இப்போதுமிருக்கிறது,

சில சமயங்களில் மனக்கஷடத்தை தாங்கி கொள்ள முடியாத போது தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு சப்தமேயில்லாமல் அழுவாள், அப்பா குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நாட்களில் காதம்பரிக்கு ஆத்திரமாக வரும், ஆனால்  ஏதாவது பேசினால் கையில் கிடைத்த் பொருளை வைத்து அடிப்பார் என்று அவளுக்கு தெரியும்,

அப்பாவின் போதை அதிகமாகிவிடும் நாளில் அம்மா, ரமாவையும் காதம்பரியையும் பக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் மாமா வீட்டிற்குள் உறங்குவதற்கு அனுப்பி விடுவாள், பாயை சுருட்டிக் கொண்டு போய் அவர்கள் வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது கூச்சமாகவும் வேதனையாகவும் இருக்கும், உறக்க கலக்கத்தில் மாமா கதவை திறந்துவிட்டு ஒரமாக படுத்துக்கோங்க என்றபடியே உள்ளே போய்விடுவார், சைக்கிள் நிறுத்தும் இடத்தை ஒட்டி விரித்துக் கொண்டு அவளும் ரமாவும் உறங்குவார்கள், அது போன்ற நாட்களில் தூக்கமே வராது,

ஏன் இப்படி அடுத்தவீட்டில் வந்து உறங்குகிறோம், அப்பா ஏன் இப்படி குடித்துவிட்டு பிள்ளைகளிடமே மோசமாக நடந்து கொள்கிறார், என அழுது கொண்டேயிருப்பாள்,

ரமா ஒரு நாள் ஆற்றாமை தாளமுடியாமல் சொன்னாள்

அப்பா செத்து போனா தான்டி நமக்கு எல்லாம் விடிவுகாலம், அப்பா செத்த அன்னைக்கு தான் அம்மா நிம்மதியா தூங்குவா,  ஒருவேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்து போயிட்டா, நாம எல்லாம் தெருவில தான் நிக்கணும், அப்பா நம்மளை அடிச்சே கொன்னுருவார்

என்ன பதில் சொல்வது என தெரியாமல் காதம்பரி அவளை கட்டிக்கொண்டு அழுதாள், ரமாவும் கூட அழுதாள், இருவரது அழுகைச் சப்தம் உறங்கி கொண்டிருக்கும் ராமச்சந்திரமாமா வீட்டோருக்கு கேட்டுவிடக்கூடும் என்று நினைத்து வாயைப்பொத்திக் கொண்டு விம்மினார்கள், நீண்ட கேவலின் பின்பு காதம்பரி சொன்னாள்

“நான் இருக்கேன், நீ ஒண்ணும் பயப்படாதே“

அந்த நிமிசத்தில் தான் அவள் தன்னை முழுமையாக ஒரு அக்காவாக உணர்ந்தாள் அவர்கள் இருவரும் உறக்கமில்லாமல் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு இரவெல்லாம் விழித்துக்கிடந்தனர், காதம்பரி அதற்காகவே பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனே தான் வேலைக்கு போகப்போவதாக சொன்னாள்,

எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று மட்டும் தான் அப்பா கேட்டார்,  என்ன வேலைக்கு போகப்போகிறோம் என அன்று அவளுக்கு தெரியவில்லை,  ரெண்டாயிரம் கிடைக்கும் என்று மட்டும் சொன்னாள்,

நாலு வருசம் நீ சம்பாரிச்சா அதை சேத்து வச்சி உன்னை கட்டிகுடுத்திரலாம் என்று அப்பா சொன்னார்

தான் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று அந்த நிமிசம் மனதில் தோன்றியது, மீனாவின் அண்ணன் தான் அவளுக்காக பார்மசியில் வேலைக்கு ஏற்பாடு செய்தவன், தனக்கு தெரிந்த கடை என்பதால் ஒழுங்காக நடத்துவார்கள் என்று சொல்லி அவளை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்,

பேருந்து நிலையத்தின் வாசலில் அந்த மருந்துகடையிருந்தது, காலை எட்டு மணிக்கு போய்விட வேண்டும்,  இரவு ஒன்பது மணி வரை வேலை செய்ய வேண்டும், கடையில் அவளைப் போல இரண்டு பெண்களும், மூன்று பையன்களும் வேலை செய்தார்கள், மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்று கொண்டேயிருக்க வேண்டும், மூத்திரம் பெய்வதற்கு பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்கு தான் போக வேண்டும், ஆனால் அதற்குள் கால்வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும் அதனாலே  மூத்திரத்தை அடக்கி அடக்கி அவளுக்கு பலநாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது,

காதம்பரி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய்விடுவாள், மதியம் முக்கால் மணி நேரம் ஒய்வு, அந்த நேரத்தில் அவர்கள்  வெளியே போய்வருவார்கள், காதம்பரியும் விநோதினியும் தான் தோழிகள், அவர்கள் சாப்பிட்டுமுடித்தவுடன் ரோஸ்மில்க் குடிப்பதற்காக அருகாமையில் உள்ள பழரசக்கடைக்குப் போவார்கள், அந்த கடையின் சுவரில் மிகப்பெரிய டெலிவிஷன் ஒனறு மாட்டப்பட்டிருந்த்து, அதில் ஒளிபரப்பாகும் பாடலை பார்த்துக் கொண்டே ரோஸ்மில்க் குடிப்பார்கள், சிலநேரம் விநோதினி சாலையில் தென்படும் இளம்பையன்களைப் பற்றி கேலி பேசுவாள், அந்த அரைமணி நேரம் தான் அவளுக்கு விருப்பமான நிமிஷங்கள்,

நாள்முழுவதும் பார்மசி ஒனர் அவர்களை கடுமையாக திட்டுவார், அப்படியிருந்தும் இரவு கடையை விட்டு வெளியே போகும் போது  பத்திரமா போகணும் பாப்பா என்று சொல்லி ஒரு சாக்லெட்டை நீட்டுவார், தலையாட்டியபடியே அதை வாங்கிக் கொள்வாள், பிள்ளையார் கோவிலை தாண்டும் வரை அதை கையிலே வைத்திருப்பாள், கிட்டங்கி தெருவந்தவுடன் அந்த சாக்லெட்டை வாயிலிட்டு சுவைத்தபடியே நடக்க துவங்குவாள், அப்போது தான் வீடு வரை  சாக்லெட் கரையாமல் இருக்கும்,  ஒரு நாளின் மொத்த வலியையும் அந்த சாக்லெட் சுவை கரைத்துப் போகச்  செய்துவிடும்,

அப்பா இரவில்  தாமதமாகவே வீடு வந்து சேருவார், அவர் வருவதற்குள் பிள்ளைகள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் அம்மா கவனமாக இருப்பாள், அப்பா தெருவில் செருப்பு தேயச்  சப்தமிட்டு நடந்து வருவார், அந்த ஒசை தெளிவாக கேட்கும்,

அப்பா வரும்வரை வாசலில் உள்ள லைட் எரிந்து கொண்டிருக்கும் சிலவேளை ,

ஏன்டி களவாணி முண்டை உங்க அப்பனா கரண்டுபில் கட்டுவான் என்று திட்டுவார், லைட்டை அணைத்துவிட்டிருந்தால் ஏன்டி உங்க அப்பன் கரண்டு பில் கட்டுறானா, எதுக்குடி லைட்டை ஆப் பண்ணினே ,இருட்டில தடுமாறி விழுந்து மண்டை உடைச்சி செத்து போகட்டும்னு நினைக்குறயா என்றும் கத்துவார், அம்மா அந்த விளக்கை அதற்காக அணைப்பதேயில்லை, அது எரிந்து கொண்டிருந்தால் இன்னமும்  அப்பா வீட்டிற்கு வந்து சேரவில்லை என்று அர்த்தம்

பலநாட்கள் அப்பா போதை அதிகமாகி அவளது பார்மசிக்கு வந்து ஒனரிடம் சண்டையிட்டு கடன்வாங்கிப் போவதுண்டு, அது போன்ற நேரங்களில் அவளுக்கு தாங்கமுடியாத துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கும், சில நாட்கள் அப்பா நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி முட்டை பரோட்டா சாப்பிடச் சொல்லி பார்சலை பிரித்து வைத்து வற்புறுத்துவார், அவர்கள் பாதி உறக்கத்துட்ன் பரோட்டா சாப்பிடுவார்கள், என் செல்லம், உங்களை விட்ட எனக்கு யாருடா இருக்கா என்று அப்பா அர்த்தமில்லாமல் புலம்புவார், மறுநாள் காலையிலோ ஆத்திரம் அதிகமாகி உங்களை எல்லாம் விஷம்வச்சி கொல்லாம விடமாட்டேன், களவாணிநாய்க என்றும் கத்துவார்.

அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது நினைத்தாற் போல படமெடுத்து சீறுகிறது, அதற்கு இரைபோட ஆட்கள் தேவை, அதற்கு தான் குடும்பம்,

கொத்தி கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர்கள் உடலில் கலந்து விட்டிருக்கிறது, அவரை விலக்கவே முடியாது, தனியாக வேறு எங்கும் போய் வாழவும் முடியாது, பேசாமல் அம்மாவும் அவர்களும் மட்டும் எங்காவது வட இந்தியாவிற்கு ஒடிப்போய் பிழைத்துக் கொண்டால் என்ன, அம்மா வரமாட்டாள், அவளால் அப்பாவை கைவிட முடியாது,

•••

இப்படி காதம்பரி ஏதேதோ யோசனைகளுட்ன் பயணம் செய்து கொண்டிருந்தாள். பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் நின்றது, அப்பா இறங்கி போய் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார், அம்மா கொண்டு வந்திருந்த தண்ணீர்பாட்டிலை திறந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு அவளிடம் நீட்டினாள், காத்ம்பரி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ரமா ரகசியமான குரலில்  கேட்டாள்

“இறங்கி போயி கோன் ஐஸ் வாங்கிட்டு வருவமா“

காதம்பரி வேண்டாம் என்று மறுத்தாள், பேருந்து கிளம்பிய போது அப்பா பஸ்ஸில் ஏறி ஒரு ரோஜாப்பூவை அவர்களிட்ம் நீட்டினார், அம்மா கையில் வாங்கிக் கொண்ட போது சொன்னார்

“சில்லறை மாத்துறதுக்காக வாங்கினேன், தலையில வச்சிக்கோ“

ரோஜா வாடிப்போயிருந்தது, அம்மா காதம்பரியிடம் நீட்டினாள், அவள் வேண்டாம் என மறுத்தபோதும் அம்மா அவளது கூந்தலில் ரோஜாவை சொருகிவிட்டாள்,

யாராவது இப்படி பசிநேரத்தில் காசு கொடுத்து ரோஜாப்பூ வாங்குவார்களா என்று காதம்பரிக்கு எரிச்சலாக வந்த்து, இதற்கு ஒரு இளநீர்வாங்கிவந்தால் கூட வெக்கை தணிய குடித்திருக்கலாம், அப்பா பான்பராக் பாக்கெட் ஒன்றினை பிரித்து வாயிலிட்டபடியே டிரைவருடன் அரசியல் பேச ஆரம்பித்தார், பசியால் ஏற்பட்ட கிறக்கம் அவர்களை சோர்வடைய செய்திருந்தது, அப்பா உற்சாகமாக நாட்டுநலன் குறித்த கவலையுடன் பேசிக்கொண்டே வந்தார்

••

பழனி பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் அந்த உணவகமிருந்த்து, அப்பா அதன் வாசலில் அவர்களை நிற்க சொல்லிவிட்டு சாப்பாடு எவ்வளவு ரூபாய் என்று விலை கேட்பதற்காக உள்ளே போயிருந்தார், அம்மாவும்  காதம்பரியும் பெட்டிகடை ஒரமாக நின்று கொண்டார்கள், ரமா அப்பா கூடவே உணவகத்திற்குள் போனாள், சாப்பாடு முடிந்துவிட்டது என்றும் சப்பாத்தி, தோசை இரண்டு மட்டுமே இருப்பதாக கல்லாவில் இருந்த ஆள் சொன்னார்,

பரவாயில்லை அதையாவது சாப்பிடலாம் என்று ரமா சொன்னாள்,  டாக்சி ஸ்டாண்ட் அருகே வேறு ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று சொல்லிய அப்பா தான் அங்கே போய் பார்த்துவருவதாக சொல்லி அவர்களை நிற்க வைத்து போனார்,

காதம்பரியும் ரமாவும் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், அம்மா ஹோட்டல் வளாகத்தினுள் இருந்த வேப்பமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள், ரமா தனக்குப் பசிக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள்

ஹோட்டலைத் தேடிப்போன அப்பா மணி ஐந்தாகியும் வந்து சேரவேயில்லை, அம்மா போன் பண்ணி கேளுடி என்று காதம்பரியிடம் சொன்னாள், அப்பாவின் செல்நம்பருக்கு போன் செய்தாள் காதம்பரி, ரிங் போய்க் கொண்டேயிருந்த்து, அப்பா போனை எடுக்கவேயில்லை, எங்கே போய் தொலைந்தார் என்று ஆத்திர ஆத்திரமாக வந்த்து, பசி வேறு அவளுக்கு தலைவலியை உண்டுபண்ணியிருந்த்து,

அவர்களை வேப்பமரத்தடி நிழலில் உட்கார சொல்லிவிட்டு அம்மா தான் தேடிப்போய்  பார்த்து வருவதாக சொன்னாள்,

“நீ ஒண்ணும் அலைய வேண்டாம், நான் போயி பாத்துட்டு வர்றேன்“

என்று காதம்பரி சாலையை கடந்து நடக்க ஆரம்பித்தாள், எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை,  நீண்டு செல்லும் பஜாரில் ஆட்கள் முண்டியத்து போய்க் கொண்டிருந்தார்கள், சாலையோரம் மஞ்சள் சேலை கட்டிய இரண்டு பெண்கள் கையில் வேலுடன் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவன் குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான்,

குதிரை வண்டிகள் நின்றிருந்த இடத்தை கடந்து அவள் மேற்குபக்கமாக நீளும் பஜாரினுள் நடந்து போக துவங்கினாள், அருகருகே இரண்டு மூன்று சைவ உணவகங்கள் இருந்தன, இதை விட்டுவிட்டு அப்பா எங்கே போய் தொலைந்தார் என்று எரிச்சலாக வந்தது, ஒரு ஹோட்டலின் உள்ளே போய் அப்பா இருக்கிறாரா என்று தேடிப்பார்த்துவந்தாள், அப்பாவைக்காணவில்லை

காய்கறிகடைகள், வெற்றிலை கடைகள், சந்தனம் பூமாலை விற்கும் கடைகளை தாண்டி பஜார் விரிந்து கொண்டேயிருந்த்து, சிக்னல்வரை நடந்துவிட்டு மறுபடி அப்பாவிற்கு போன் செய்தாள், இப்போது போன் அணைக்கபட்டிருந்த்து,

துப்பட்டாவை தலையில் போட்டபடியே அவள் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பேருந்துகள், ஆட்டோக்களை கடந்து காதம்பரி நடந்து வந்த போது ஒரு டுரிஸ்ட் பஸ் வந்து நின்று ஆட்கள் சோம்பலுடன் இறங்கி போய்க் கொண்டிருந்தார்கள், அங்குமிங்குமாக சுற்றியலைந்து தேடிய போதும் அப்பாவை காணமுடியவில்லை,

ஒருவேளை தான் தேடிச்சென்ற போது அப்பா வந்து சேர்ந்திருந்தால் என தோன்றியது, அவசரமாக அம்மாவும் ரமாவும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு போனாள், அங்கே அவர்கள் இருவரையும் காணவில்லை,  காதம்பரிக்கு திகைப்பாக இருந்தது, எங்கே போய் விட்டார்கள் என்ற ஆத்திரத்துடன் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்,

சாலையின் இடது பக்கமிருந்த சினிமா போஸ்டர் அருகே ரமா மட்டும் தனியே நிற்பது தெரிந்தது, ஆனால் அம்மாவைக் காணவில்லை, காதம்பரி அவளை நோக்கி நேராக நடந்து போய் எரிச்சலான குரலில் கேட்டாள்

“அம்மா எங்கடி போனா“

“அப்பா எங்கயாவது குடிச்சிட்டு விழுந்துகிடப்பாரு, போயி கூட்டிகிட்டு வர்றேனு அப்பவே கிளம்பி போயிட்டா, ஒத்தையில தனியா உட்கார்ந்திருக்க பயமா இருந்துச்சி, அதான் இங்கே வந்துட்டேன்“

அம்மா எந்த மதுபானக்கடையில் போய் அப்பாவைத் தேடுகிறாளோ, ஒரேயொரு முறை காதம்பரி அப்பாவை தேடி டாஸ்மார்க்  கடைக்குள் போயிருக்கிறாள், அப்பா ஒரு பிளாஸ்டிக் ஸ்டுலில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார், அவளைக்கண்டதும் நீ எதுக்குடி இங்கே வந்தே என்று சப்தம் போட்டார், அம்மா குடிபோதையில் கிடக்கும் அப்பாவை பலமுறை தூக்கி கொண்டு வந்திருக்கிறாள், இன்றைக்கும் அப்பா அப்படி எங்காவது குடித்துவிட்டு கிடக்ககூடும், அம்மாவை நினைக்கையில் வருத்தம் கவ்வியது,

“சாப்பிட்டயாடி“ என்று ரமாவிடம் கேட்டாள் காதம்பரி

“நீ போனதும் அம்மா என்கிட்ட இருபது ரூபா குடுத்து சாப்பிட்டு வரச்சொன்னா, நான் தனியா போயி ஒரு தோசை சாப்பிட்டு வந்துட்டேன்“ என்றாள்,

காதம்பரிக்கு அலைந்து திரிந்த அயர்ச்சியில் பசியடங்கி போயிருந்த்து, உடம்பெல்லாம் கசகசப்பும் வியர்வையும் அதிகமாகியிருந்தது, எங்காவது கொஞ்சநேரம் காலை நீட்டி படுத்தால் தேவலை என்பது போல தோணியது, ரமாவை இழுத்துக் கொண்டு மறுபடியும் அதே வேப்பமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள், சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவன் காதம்பரியை வெறித்து பார்த்து உதட்டை கடித்துக்  கொண்டிருந்தான், இவன் ஒருவன் நேரம்காலம் தெரியாமல் காதலித்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. அவர்கள் இருவரும் சாலையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்கள்,

வெயில் மங்கி மழை வரப்போவதைப் போல மேகம் இருட்டிக் கொண்டுவந்தது, , உனக்கு ஒரு டீ வாங்கிட்டு வரட்டுமாக்கா என்று கேட்டாள் ரமா,

வேண்டாம் என்றபடியே நெற்றியை பிடித்தபடியே உட்கார்ந்திருந்தாள் காதம்பரி, சாலையில் செல்லும் யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமா,

நீண்ட நேரத்தின் பிறகு ஒரு ஆட்டோ வேப்பமரத்தடியின் அருகில் வந்து நின்றது, அதன் உள்ளிருந்து அம்மா இறங்கினாள், ஆட்டோவின் உள்ளே அப்பா போதை அதிகமாகி முகம் கோணி சரிந்து கிடந்தார்,  வாந்தி எடுத்திருக்க கூடும், சட்டை ஈரமாக தெரிந்த்து, அம்மா இறங்கிவந்து காதம்பரியிடம் சொன்னாள்

“உங்கப்பா புல்லா குடிச்சிருக்காரு, அவர் தூங்கி எந்திரிச்சா தான் நாம கோவிலுக்கு போக முடியும், எங்காவது ஒரு ரூம்போட்டு தங்கியிருக்க வேண்டியது தான், தேவஸ்தான விடுதியில் ரூம் வாங்கி தர்றேனு ஆட்டோகாரர் செர்ல்லியிருக்கார், வந்து ஏறுங்க,“

ஆட்டோவிற்குள் ரமாவும் காதம்பரியும் ஏறிக் கொண்டார்கள், அம்மா ஒண்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள், அப்பாவின் வாயிலிருந்து பீறிடும் மதுவின் வாசனை முகத்தில் அடித்த்து

அவர்கள் தேவஸ்தான விடுதியில் ரூம் போட்டபோது காதம்பரி தான் கையெழுத்து போட்டாள், அப்பாவை கைத்தாங்கலாக அம்மாவே பிடித்துக் கொண்டு அறைக்குள் கொண்டு போனாள், அவரது கால்கள் துவண்டுபோய் நடக்க மறுத்தன, அவர் தன்னை அறியாமல் எதையோ உளறிக் கொண்டுவந்தார், அறையில் இருந்த மின்விசிறியைப் போட்டு அப்பாவை படுக்க வைத்தாள் அம்மா, அவரது சட்டை பையில் இருந்த பணம் ரசீதுகள் செல்போன் யாவும் கிழே விழுந்தன, அதை எடுத்து அம்மா தனது கூடையில் வைத்துக் கொண்டாள்,

ரமாவும் காதம்பரியும் விடுதியின் வராந்தாவில் கிடந்த மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள், அங்கிருந்து பார்த்தால் மலை நன்றாக தெரிந்த்து, அம்மா அறையின் கதவை ஒரமாக சாத்திவிட்டு வெளியே வந்தாள்,

அம்மா எப்படி அப்பாவை கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை, அவள் அசதியோடு சேலையில் முகத்தை துடைத்துக் கொண்டு சாப்பிட்டயா என்று காதம்பரியை கேட்டாள்,

இல்லைம்மா என்றாள் காதம்பரி

“நீயும் இவளும் போயி சாப்பிட்டு எனக்கு ஒரு கப் காபி வாங்கிட்டு வாங்க,  கிறுகிறுனு வருது“ என்று நூறு ரூபாய் பணத்தையும் சிறிய சில்வர் தூக்குவாளியையும் நீட்டினாள்

அவர்கள் இருவரும் அருகில் இருந்த சிற்றுண்டி நிலையத்திற்கு போனார்கள், சூடாக பூரி போட்டுக் கொண்டிருந்தார்கள், இருவரும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிற்கு பூரியும் காபியும வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்,

அம்மா மரப்பெஞ்சில் களைத்து போய் படுத்துகிடந்தாள், அவளை எழுப்பி சாப்பிடச்சொன்ன போது  பசிவேகத்தில் அவரசரமாக பூரியை இரண்டு மூன்றாக பிய்த்து சாப்பிட்டுவிட்டு காபியை சூட்டோடு குடித்தாள்

தூக்கத்திலே அப்பா பிதற்றும் சப்தம் கேட்டது

அம்மா காபி வாங்கிய தூக்குவாளியை அருகில் இருந்த திருக்கு குழாயில் கழுவிவிட்டு அவர்களிடம் சொன்னாள்

“நீங்க வேணும்னா, மலை ஏறிப்போய் சாமி கும்பிட்டு வர்றீங்களா“

இருவரும் ஒரே நேரத்தில் வேணாம்மா என்றார்கள், அம்மா அவர்களை கட்டாயப்படுத்தவில்லை, அம்மா அறைக்குள் போய் வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்,

இரவாகும்வரை ரமாவும் காதம்பரியும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அருகாமை அறை ஒன்றில் இருந்த மூன்று வயது சிறுமி  பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்,  மலையின் மீது பிரகாசமாக விளக்குகள் எரியத்துவங்கின, படி வழியாக ஏறிப்போகின்றவர்கள் கடந்து போவது தெரிந்த்து, மனம் கனத்து போய்  வேதனையோடு அப்பா உறங்கிக்  கொண்டிருந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள் காதம்பரி,

ஒரு மனிதரால் எத்தனை பேருக்கு துயரம், அப்பா ஏன் இதை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்,

நினைக்க நினைக்க துயரம் பீறிட்டுக் கொண்டிருந்த்து, அம்மா உறக்கம் கலைந்து  எழுந்து முகம்கழுவிட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள், யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை, அவளது கண்களின் அப்பியிருந்த சோகமும் வேதனையும்  காதம்பரியை ரணமாக்கியது

அப்பா இரவு மணி பத்தாகியும் எழுந்து கொள்ளவில்லை, அம்மா அருகில் உள்ள கடையில் போய்  அப்பாவிற்காக நாலு இட்லி வாங்கி வந்து படுக்கை அருகே வைத்துவிட்டு அவளும் படுத்துக் கொண்டாள்,

மீதமிருந்த ஒரு போர்வையை விரித்து காதம்பரியும் ரமாவும் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டார்கள், இருவருக்கும் உறக்கம் கூடவேயில்லை, பேசாமல் இப்படியே செத்துபோய்விட்டால் என்னவென்று காதம்பரிக்கு தோன்றியது, ரமா அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்,

திடீரென  வெளியே மழைக்காற்றும் மின்னல்வெட்டுமாக இருந்த்து.  அம்மா எழுந்து ஜன்னல்களை மூடிவைத்தாள், சட்டென மின்சாரம் துண்டிக்கபட்டது, இருட்டில் அந்த அறை ஒரு சவப்பெட்டி போலவே இருந்தது, அப்பா மின்சாரமில்லாத புழுக்கத்தை உணர்ந்தவரைப் போல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

எப்போது உறங்கினாள் என்று காதம்பரிக்கு தெரியவில்லை, அவள் விழித்து கொண்ட போது வாசற்கதவு திறந்து கிடந்தது, மணி ஆறுக்கும் மேலாக இருக்ககூடும், இன்றைக்கு லீவு சொல்லவில்லை, நிச்சயம் பார்மசி ஒனர் தன்னைத் திட்டி தீர்க்கப்போகிறார், ரமா உருண்டு கட்டிலின் அடியில் போய் கிடந்தாள், படுக்கையில் இருந்த அப்பாவை காணவில்லை, அம்மா எங்கே போனாள என தேடினாள், அவளையும் காணவில்லை, வராந்தாவிற்கு வந்து பார்த்த போது அம்மா தூக்குவாளியில் காபி வாங்கி கொண்டு அவசரமாக நடந்து வருவது தெரிந்த்து,

காதம்பரி அம்மாவை முறைத்தபடி இருந்தாள், அறைக்கதவை திறந்து உள்ளே பார்த்த அம்மா உங்க அப்பா எங்கடி என்று கேட்டாள்

“நான் பாக்கலே“ என்றாள் காதம்பரி

“காபி வாங்கிட்டு வர்றதுக்குள்ளே எங்க போயி தொலைஞ்சார்“ என அம்மா அலுத்துக் கொண்டாள்

இந்த மனுஷனுக்காக எதற்கு அம்மா இப்படி ஒடியோடி உழைக்கிறாள் என்று ஆத்திரமாக வந்தது, அப்பாவைத் தேடி அம்மா வராந்தாவின் கடைசிவரை நடந்த போது காதம்பரி அம்மாவை திட்டினாள்

“நீ இரும்மா, அவரு தானா வருவார், இல்லே அப்படியே போய் தொலையட்டும்“

அம்மா திரும்பிவந்து மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்

காலை எட்டு மணி இருக்கும் போது அப்பா தலையை மொட்டை அடித்து சந்தனம் பூசி கழுத்தில் ஒரு மாலை போட்டுக் கொண்டு நெற்றி நிறைய திருநீறுடன் விடுதியின் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தார்,

ரமாவும் காதம்பரியும் அந்த விசித்திர கோலத்தை முறைத்து பார்த்தபடியே இருந்தார்கள்

“சரஸ்வதி, சாமி கும்பிட்டாச்சி, இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு, நாம ஊருக்கு கிளம்பலாம்லே“ என்றார் அப்பா

அம்மா சரியென தலையாட்டினார், அவர்கள் நடந்து பேருந்து நிலையத்தை நோக்கி போகையில் அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல பாக்கெட்டில் இருந்த திருநீறு பொட்டலத்தை பிரித்து பூசிக்கோங்க என்றார், அவர்கள் மௌனமாக திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்கள்

அப்பா யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டே நடந்தார்

“பேமிலியோட பழனிக்கு வந்து சாமி கும்பிட்டு இப்போ தான் பஸ் ஏறப்போறேன், மதியம் வந்துருவேன், நல்ல தரிசனம், இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும் “

அவர்கள் பேருந்து நிலையத்தினுள் உள்ளே போன போது அப்பா சொன்னார்

“பஸ்ல போற வழியில ஒட்டன்சத்திரத்துகிட்டே டிபன் சாப்பிட்டுகிடுவோம், இங்கே வேணாம் “

அம்மா அதற்கும் சரியென்றே தலையாட்டினாள், அதைக்கேட்டு ரமா கேலியாக காதம்பரியிடம் கண்ஜாடை காட்டினாள், அவளால் சிரிக்கமுடியவில்லை, முட்டிக் கொண்டுவரும் அழுகையை விழுங்கிக் கொண்டு தலைகுனிந்தபடியே தனியே நடந்து கொண்டிருந்தாள் காதம்பரி.

அவர்கள் ஒரு குடும்பமாக போய்க் கொண்டிருந்தார்கள்,

•••

தினகரன் மலரில் வெளியானது.

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #27 on: September 29, 2013, 10:25:59 AM »
காந்தியோடு பேசுவேன்

சிறுகதை

காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது

ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தன, ஒரு அரிக்கேன் விளக்கு படுக்கையின் அருகில் இருந்த்து,

காந்தி இந்த ஆசிரமத்தில் மின்சாரத்தை பயன்படுத்தினாரா என்று ராகேல் என்னிடம் கேட்டாள்

இல்லை என்றே நினைக்கிறேன், ஆனால் மின்சாரத்தின் வருகை இந்திய கிராமங்களின் இயல்பை மாற்றிய முக்கியமான அம்சம் என்பதை காந்தி நிச்சயம் உணர்ந்திருப்பார்  என்றேன்

காந்தியின் அறையில், மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு அலமாரி, பித்தளை செம்புகள், முக்காலி, இருந்தன, அருகில் ஒரு பழைய மரக்கட்டில், மிகச்சிறிய ஜன்னல்,

தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்,

தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்து வருகிறேன், ஒருவகையில் காந்தியின் மீதான எனது ஈர்ப்பிற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்வேன்

காந்தி வாழ்ந்த  காலத்தில் அந்த அறைக்குள் வந்து நிற்பது பலருக்கும் நெகிழ்வான சம்பவமாக இருந்திருக்கும், ஒரு நிமிசம் மனக்கண்ணில் அந்த காட்சி தோன்றி மறைந்த்து, காந்தி இந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார், காந்தி வெறுமனாக உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கவே முடியாது, ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்து கொண்டேயிருந்திருப்பார், ஏன் அவருக்குள் இத்தனை பரபரப்பு, வேகம், ஒய்வு என்பதை ஏன் அந்த மனிதன் பலவீனமாக கருதுகிறார் என்றெல்லாம் எனக்கு தோன்றியது

காந்தி நிமிசங்களை எண்ணி வாழ்ந்திருக்கிறார்,  நான் அப்படியில்லை, சோம்பலும் எதிலும் திருப்தியின்மையும், தேவையற்ற பயமும் கவலையுமே என்னை உருவாக்கின, நான் கல்வியின் வழியே என் வாழ்வினை உருவாக்கி கொண்டவன், காந்தி படிப்பை கைவிட்டு தனது வாழ்க்கையை முன்னெடுத்து சென்றவர், வாழ்வின் முடிவில் ஒரு எளிய இந்திய விவசாயியை போல தான் அவர் இருந்தார், அதிகமான நம்பிக்கை, அதிகமான ஏமாற்றம் இரண்டும் அவருக்கு பரிசாக கிடைத்தன,

காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப்  போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்,

எனக்கு காந்தியை அறிமுகப்படுத்தியது என்னுடைய அம்மா, என் பனிரெண்டு வயதில் காந்தியை பென்சிலில் படம் வரைந்து முதல் பரிசு வாங்கி வந்ததை கண்டு சந்தோஷப்பட்டபடியே தத்ரூபமா வரைஞ்சிருக்கே, நான் காந்தியை நேர்ல பாத்து இருக்கேன் என்று அம்மா சொன்னார்

என்னால் அதை நம்ப முடியவில்லை, அம்மா எப்படி காந்தியை நேரடியாக பார்த்திருப்பாள், ஒரு வேளை காந்தி அவளது பாட்டைகுளம் கிராமத்திற்கு வந்திருந்தாரா எனக்கேட்டேன்,

என் ஊருக்கு காந்தி வரவில்லை, ஆனா நான்  காந்தியை  அவரது வார்தா ஆசிரமத்திற்கே தேடிப்போய் பார்த்திருக்கேன்  என்றாள்

நிஜமா எனக்கேட்டபோது, அது ஒரு பெரிய கதை, அப்போ நீ எல்லாம் பொறக்கவேயில்லை,  என்றபடியே தனது இடதுகையை நீட்டி காட்டினாள், அம்மாவின் இடதுகை சற்று வளைந்து துருத்திக் கொண்டது போலதானிருந்தது,

இந்த கை காந்திக்காக உடைப்பட்டது, யார் உடைச்சா தெரியும்லே உங்கப்பா, காந்தியை பாக்கப் போனதுக்கு கிடைத்த தண்டனை, உங்கப்பாவுக்கு காந்தியை சுத்தமா பிடிக்காது, உங்கப்பா என்ன பெரும்பான்மை ஆம்பளைகளுக்கு காந்தியை பிடிக்காது, அதிகாரம் பண்ண ஆசைப்படுற ஆம்பளை காந்தியை வெறுக்கதானே செய்வாங்க, ஆனா பெண்களாலே காந்தியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும்,

வார்தாவுக்கு போயி காந்தி முன்னாடி நின்னுகிட்டு இருந்தப்போ அவரை ஒரு ஆணாக வேறுபடுத்தி பாக்க என்னாலே முடியலை, பேச்சு வராமல் நாக்கு தடிச்சி போனது மாதிரி ஆகிருச்சி, என்னை மீறி அழுதுட்டேன், பாபுஜி கருணையான கண்களோட சிரிச்சிகிட்டே என் கிட்டே வந்து ஏதோ சொன்னார், எனக்கு அப்போ ஒரு வார்த்தை இங்கிலீஷ் தெரியாது, ஹிந்தியும் தெரியாது, ஆனா பாபுஜி எனக்கு ஆறுதல் சொல்றாருனு மட்டும் புரிஞ்சது,

அங்கேயே பாபுஜியோட ஆசிரமத்திலே வாழ்நாள் பூரா இருந்திர மாட்டமானு ஏக்கமா இருந்துச்சி, அதுக்கு கொடுத்து வைக்கலே, திடீர்னு ஒரு நாள் உங்கப்பா வந்து இழுத்துட்டு வந்துட்டார்,  ஆசிரமத்தை விட்டு போகமாட்டேனு பிடிவாதம் பண்ணினேன், பாபுஜி என் தலையை தடவி ஊருக்கு போயிட்டு வரச்சொல்லி அனுப்பி வச்சார், அவர் சொல்லுக்கு கட்டுபட்டு தான் உங்கப்பாவோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன் , என்றார்

நீ எதுக்காக அம்மா காந்தியை தேடிப்போனே என்று கேட்டேன்,

அம்மா பதில் சொல்லவில்லை, மௌனமாக இருந்தாள், பிறகு லேசாக தலையை ஆட்டியபடியே அதை பத்தி உனக்கு சொன்னா புரியாது, சொல்றதுல எனக்கும் விருப்பம் இல்லே என்று பேச்சை துண்டித்துவிட்டாள்

அதன்பிறகு ஒன்றிரண்டு முறை காந்தியை பற்றி பேச்சு வரும்போது அம்மா வார்தாவிற்கு ஒடிப்போன கதையின் ஒரு சில நிகழ்வுகளை கேட்டிருக்கறேன், அப்பா ஒரு முறை கோபத்தில் உங்கம்மா ஒரு ஒடுகாலி முண்ட, வேற ஆம்பளையா இருந்தா இந்தநேரம் அவளை வெட்டி கொன்னு புதைச்சிருப்பான் என்று கத்தினார்,

அதை தான் எப்பவோ செய்துட்டீங்களே என்று அம்மா அமைதியாக சொன்னாள், அப்பா அம்மாவை முறைத்தபடியே வெளியேறிப் போய்விட்டார்

பொம்பளைங்க அரசியல் பேசினா உங்கப்பாவுக்கு பிடிக்காது,  அதுவும் படிக்கிற பொம்பளைன்னா அவருக்கு எட்டிக்காய், இதுல காந்திகட்சியில வேற சேந்துகிட்டா, அதான் உங்கப்பாவுக்கு அம்மாவுக்குமான பிரச்சனை என்று ஒரு முறை வெங்கடரத்னம் மாமா என்னிடம் சொன்னார்

அந்த வயதில் இதை வெறும் கணவன் மனைவி சண்டை  என்று மட்டும் தான் நினைத்திருந்தேன், ஆனால் இது குடும்ப சண்டையில்லை, வெறுப்பிற்கும் அன்பிற்குமான ஊசலாட்டம் என்பதை பின்னாளில் தான் புரிந்து கொண்டேன், அம்மாவை குடும்ப வாழ்க்கை இருட்டிற்குள் பிடித்துத் தள்ளிய போது அதிலிருந்து காந்தி தான் அவளை மீட்டிருக்கிறார், தனது உண்மையான செயல்களின் வழியே மற்றவர்களின் ஏளனத்தை கடந்து செல்ல முடியும் என்பதை நிருபணம் செய்திருக்கிறார், தனது மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்றுதந்திருக்கிறார், எல்லாவற்றையும் விட அடுத்தவர் பொருட்டு வாழ்வது எப்போதும் வலிமிக்கதே, ஆனால் அதில் கிடைக்கும் மனசாந்தி பெரியது என்பதை காந்தியே உணர்த்தியிருக்கிறார்

இதைப்பற்றி பேசுகையில் ராகேல் சொன்னாள்

லட்ஸ், உண்மையில் கடவுள் கைவிட்டு போன உலகை காந்தி நிரப்பியிருக்கிறார், அது தான் உன் அம்மா விஷயத்தில் நடந்திருக்கிறது, இரண்டு முறை கர்ப்பசிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள், வறுமை, கூட்டு குடும்பத்தின் அவமானம் இத்தனையும் உனது அம்மாவை மூச்சு திணற அமுக்கும் போது காந்தி மட்டும் தான் அவளுக்கான நம்பிக்கை வெளிச்சமாக இருந்திருக்கிறார், காந்தி என்ற சமூகபோராட்டக்காரனை விட காந்தி என்ற இந்த எளிய நம்பிக்கை அதிகம் வலிமையுடையது, அதை உணர்ந்தவர்கள் காந்தியை எப்போதும் நேசித்து கொண்டுதானிருக்கிறார்கள்

ராகேல் சொல்வது உண்மை, இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு  சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ராகேலுக்கு வன்முறையின் கொடூரம்  தெரியும்,  அவள் யூதப்பெண், எனது மாணவியாக அறிமுகமாகி என்னை திருமணம் செய்து கொண்டவள், அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அதிகம் ஒட்டுதல், அந்த பெண்கள் நித்யமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் என்னிடம் சொன்னது நிஜமான உண்மை

நான் லண்டனுக்கு பொருளாதாரம் படிக்க போய் அங்கேயே வேலை பார்க்க துவங்கிய போது அம்மா ஒரு முறை போனில் கேட்டாள்

ஒரேயொரு தரம் லண்டனுக்கு வரணும்னு ஆசையா இருக்கு லட்சுமா,

அம்மா ஒருத்தி தான் லட்சுமணன் என்ற என் பெயரை லட்சுமா என்று அழைப்பவள், லண்டன்வாசிகள் என்னை லட்ஸ் என்கிறார்கள், அப்பாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் மணா, ஆனால் அம்மா என்னை லட்சுமா என்று அழைக்கையில் அது பெண் பெயர் போலவே இருக்கிறது, அம்மா அப்படி அழைக்கையில் அதில் ஒரு தனியான பிரியம் கலந்திருக்கும்,

அடுத்த முறை ஊருக்கு வரும்போது உன்னையும் லண்டனுக்கு அழைச்சிட்டு வர்றேன்மா என்றேன்

இல்லைடா, நானா.  தனியா லண்டனுக்கு வரணும்னு ஆசை, அதுவும் கப்பல் போகணும்னு ஆசை என்றாள் அம்மா

எனக்கு புரிந்துவிட்டது, இந்த ஆசையின் அடிநாதமாக இருப்பதும் காந்தியின் மீதான பற்றுதல், பத்தொன்பது வயதில் மொழி தெரியாமல் லண்டனுக்கு படிக்க போன காந்தியின் மனதை தானும் அனுபவித்து பார்க்க விரும்புகிறாள், அப்படி என்ன காந்தியின் மீது கிறுக்குதனம்,

நான் சிரித்தபடியே இப்போ கப்பல் பயணம் கிடையாதும்மா, நீ பிளைட்ல தனியா வரலாம் என்றேன்

அப்படித்தான் அம்மா தனி ஆளாக லண்டனுக்கு பயணம் செய்து வந்திறங்கினாள், முற்றிய முதுமை அவளுக்கு தனியான சோபையை தந்திருந்த்து, ஆரஞ்சு நிற சால்வை ஒன்றினை போர்த்தியபடி வெளிர்சிவப்பு வண்ண சேலையை அழகாக உடுத்தியபடியே கொக்கின் வெண்மை போன்ற தலைமுடியுடன், சோகை படிந்த முகத்துடன் அம்மா இறங்கி மெதுவாக கண்ணாடி கதவுகளை தாண்டி நடந்துவந்தாள்,

அவளது கண்களில் ஒரு துளி பயமில்லை, கடந்து செல்லும் பயணிகள் யாரையும் அவள் ஏறிட்டு கூட பார்க்கவில்லை, நிதானமாக, மெதுவாக அவள் வெளியேறும் வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த காட்சி என் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது

இமிகிரேஷனில் ஏதாவது கேட்டார்களா என்று இறுக்கமான குரலில் கேட்டேன்

எதற்காக இந்த பயணம் என்று கேட்டார்கள், நான் சும்மா என்று சொன்னேன், இமிகிரேஷன் அதிகாரி  சிரித்தபடியே சும்மா லண்டனுக்கு வருகின்றவர்கள் இதை விட்டு ஒரு போதும் திரும்பி போக மாட்டார்கள், நீங்களும் அப்படி ஆகப்போகிறீர்கள் பாருங்கள் என்றார்

எனது நினைவுகள் என்னை வெளியூரில் தங்கவிடாது என்று சொன்னேன், அவர் வியப்புடன் கையை உயர்த்தி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்றார், அவ்வளவு தான் நடந்தது என்றபடியே காரின் கண்ணாடி வழியாக தெரியும் பரபரப்பான லண்டன் வீதிகளை பார்த்தபடியே வந்தார்,

அப்பா இறந்து போன கடந்த பத்து வருஷங்களாக அம்மா நாள் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறாள், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மாறிமாறி படிக்கிறாள், சில இரவுகளில் அவள் படிப்பதை காணும் போது ஏதோ பரிட்சைக்கு படிப்பது போல இருக்கும், சில சமயம் நாற்காலியில் சாய்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்து கொண்டு தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பாள், அம்மாவிற்கென தனியான உலகம் ஒன்றிருக்கிறது, அவள் தன்னை சுற்றி தானே ஒரு அரூபவலையை பின்னிக் கொண்டுவிட்டாள்

லண்டனில் அம்மா என்னுடன் இரண்டரை மாதம் தங்கியிருந்தாள், தனியாக அவளாக டியூப் ரயிலில் பயணம் செய்து காந்தி படித்த யூனிவர்சிட்டி காலேஜ், காந்தி நடந்த வீதிகள், காந்தி உறுப்பினராக இருந்த வெஜிடேரியன் சங்கம் என்று ஒவ்வொன்றாக தேடி பார்த்துக் கொண்டிருந்தாள், அதைப்பற்றி என்னிடம் அதிகம் பேசிக் கொண்டது கிடையாது, சிலவேளைகளில் எனது மனைவி ராகேலிடம் காந்தியை பற்றி பேசியிருக்க்கூடும்,

ராகேலும் அம்மாவும் பேசிக் கொள்வது வேடிக்கையாக இருக்கும், அம்மா ராகேலை ஒரு பள்ளிசிறுமியை நடத்துவது போலவே நடத்தினாள்,

ஒரு நாள் ராகேல் என்னிடம் கேட்டாள்

பொதுவாக இந்தியப்பெண்கள் அதிகம் தலையை ஆட்டுவார்கள், உன் அம்மா பேசும்போது அப்படியில்லையே அது ஏன்

நான்  அப்போது தான் அப்படி ஒரு விஷயமிருப்பதை கவனித்தேன்,  என்ன சொல்வது எனப் புரியாமல் சிரித்தபடியே பெண்கள் எந்த ஒன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள், உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றேன்

ராகேல் சொன்னான்

உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பலநேரங்களில் பயமாக இருக்கிறது, அவரது கண்களில் சொல்லப்படாத விஷயங்கள் புதையுண்டுகிடக்கின்றன,  அவர் ஒரு விசித்திரமான  பறவை.

அம்மா ஒரு விசித்திரமான பறவை என்று ராகேல் சொன்னது எனக்கு பிடித்திருந்தது, நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், வெறும் பறவை இல்லை, காந்தியைத் தேடும் பறவை,

அம்மா காந்தி வழியாக என்ன தேடுகிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் அவளுடன் நானும் வருவதாக சொன்னேன், அம்மா மறுக்கவில்லை, இருவரும் ஒன்றாக ரயில் பிடித்துப் போய் டோவர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காபி அருந்திவிட்டு அம்மா வழக்கமாக செல்லும் பழைய நூலகம் ஒன்றிற்கு சென்றோம்,

அம்மா பாதியில் விட்டுவந்த ஒரு புத்தகத்தை எடுத்துவந்து மௌனமாக வாசிக்க துவங்கினாள், அம்மா உட்கார்ந்திருந்த ஜன்னலில் இருந்து லண்டன் நகரம் ஒளிர்வது தெரிந்த்து, படிப்பதற்காக அந்த இடத்தை அம்மா தேர்வு செய்திருக்கவில்லை, அவள் லண்டன் நகரின் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கிறாள்,

இந்த நகருக்கு என்றே ஒளிரும் மஞ்சள் வெளிச்சத்தை, ஈரம் படிந்த காற்றை அவள் தனக்குள் நிரப்பிக் கொள்கிறாள், அம்மா நீண்ட நேரம் மௌனமாக இருந்துவிட்டு சொன்னாள்

“காந்தி லண்டனுக்கு வந்த போது தனது தாயை விட்டு விலகி வந்திருப்பதை அதிகம் உணர்ந்திருப்பார், இந்த நகரம் பிரிவை அதிகமாக உணரவைக்கிறது “

நிஜம் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், பல்கலைகழகத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பனிக்கட்டி உடைவது போல மனதிற்குள் ஏதோவொரு கடந்தகால சம்பவம் உடைபட்டு பிரிந்து போன உறவுகளை பற்றிய நினைவுகள் பீறிடத்துவங்கிவிடும், அந்த மனநிலை ஒன்றிரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருந்து பின்பு வடிந்து போய்விடும்,

அதைப்பற்றி ராகேல் சொல்வாள்

இந்தியர்கள் அதிகம் கடந்த காலத்தை பற்றி  நினைக்கிறார்கள், வருத்தபடுகிறார்கள், அது தான் அவர்களின் பலமும் பலவீனமும்,

அவள் சொல்வது உண்மை, ஆனால் அது வெறும் வருத்தமில்லை, ஆழமான தன்னுணர்வு, ஒரு தோழமை, சொல்லால் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு நிலை,  அது போன்ற நாட்களில் ராகேலுடன் நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன்,

அவள் அதை புரிந்து கொண்டிருப்பாள், அவளைப்போன்ற யூதப்பெண்களுக்கு ஆண்களின் பேச்சை விட மௌனம் அதிகமாக பிடிக்கிறது, எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

அம்மா  நூலகத்தில் வைத்து என்னிடம் சொன்னாள்

காந்தி தனது தந்தையை பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர், தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராக தன்னை உணர்ந்தவர், அவரும் ஒரு நல்ல தந்தையில்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார், தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன, காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளது, அது வலிமையானது, எளிதில் வீழ்ந்துவிடாதது, உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே என்றாள்

அம்மா ஆழ்ந்து பேசுகிறாள், புத்தகங்கள் அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கின்றன, எது எனக்கு வெறும் தகவலாக இருக்கிறதோ, அது அவளுக்கு அனுபவமாக மாறியிருக்கிறது என்று மட்டும் புரிந்த்து,

மற்றபடி காந்தி என்னை பெரிதாக வசீகரிக்கவில்லை

அதன்பிறகு ஒரு நாள் அம்மாவும் நானும் நடந்தே விக்டோரியா பார்க்கிற்கு போனோம், அம்மா அன்று தான் வார்தாவிற்கு தான் ஒடிப்போன கதையை முழுமையாக சொன்னாள்

••

அப்போது அம்மாவிற்கு வயது பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பதினாலு வயதில் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது, திருமணத்திற்கு பிறகு ஆறுமாதம் அவள் அம்மாவீட்டிலே இருந்தாள், அந்த நாட்களில் அப்பா சால்ட் இன்ஸ்பெக்டராக மரக்காணத்தில் வேலையில் இருந்தார்,

முற்றிய கோடைகாலத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு அப்பா கடற்கரையில் தனக்கு ஒதுக்கபட்ட வீட்டிற்கு புதுக்குடித்தனம் போயிருந்தார், ஆள் அரவமற்ற அந்த வீடு, மினுக்கும் உப்பளங்கள், உப்பு காய்ந்து உருகும் மணம், கடற்காகங்களின் பீதியூட்டும் குரல், கொதிக்கும் வெயில் எல்லாமும் ஒன்று சேர்ந்து இரண்டுவாரத்திலே அம்மாவின் உடல்நிலையை மோசமாக்கியது, இருமலும் காய்ச்சலும் ஒன்று சேர்ந்து வாட்டின, உறங்க முடியாமல் இரவெல்லாம் இருமிக் கொண்டே கிடந்தாள், இதை சகித்துக் கொள்ள முடியாமல் அப்பா அவரது அத்தைவீடான கொல்லத்தில் கொண்டு போய் அம்மாவை விட்டுவந்தார்,

அங்கே இருக்கும் போது தான் முதன்முறையாக அம்மா சுதந்திர போராட்ட ஊர்வலங்களை காணத்துவங்கியிருந்தாள், அவளும் நாராயணி என்ற பெண்ணுமாக சாலையில் கொடிபிடித்தபடியே செல்லும் காங்கிரஸ் காரர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள், ஒரு நாள் இருவரும் பகவதி கோவிலில் போய் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள், அதன்பிறகு தான் அம்மா  காந்தியை பற்றி கேள்விபடத்துவங்கினாள், அதுவும் நீலம்மை வழியாக தான் கேட்டறிந்தாள்,

நீலம்மை ஒரு பணிப்பெண், அவள் காந்தியை பற்றி சொல்லும் போது வியப்புடன் சொன்னாள்

சுசிலா கேட்டியோ, அந்த மனுசன் ஆம்பளைக யாரும் கள்ளுக்குடிக்க கூடாதுனு சொல்றார், அது ஒண்ணு போதும் அவர் நல்லவர்ங்கிறதுக்கு, போலீஸ்கிட்ட அடிவாங்கி ஜெயிலுக்கு போயிருக்கிறார், தான் துணியை தானே துவைச்சிகிடுறார், கழிப்பறையை கூட தானே சுத்தப்படுத்துறதா தளியத் முதலாளி சொன்னார், அப்படி ஒரு மனுஷன் நடந்துகிடுறார்னா, அவர் தானே உண்மையான தலைவர்,

நீலம்மை வழியாக காந்தியை பற்றி கேட்டு அறிந்த இரண்டுநாட்களுக்கு பிறகு உள்ளுரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு ரகசியமாக ஒளிந்து போய் கேட்டாள், அதில் தான் காந்தியை பற்றிய பாடலை முதன்முறையாக கேட்டாள், உருக்கமான பாடலது, அந்த பாடல் காந்தியின் பற்றிய ஒரு பிம்பத்தை அவள் மனதிற்குள் உருவாக்கியது,

காந்தி என்பவர் ஒரு மீட்பர், வெள்ளைகாரர்களிடம் இருந்து இந்திய ஜனங்களை மீட்பதற்காக பாடுபடுகின்றவர், எளிமையான மனிதர், ஒயாத போராட்டக்காரர்,  அன்றைய கூட்டத்தில் கூட காந்தியை பற்றி பலரும் புகழ்ந்து, வியந்து பேசினார்கள், கேட்க கேட்க காந்தியை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது

கொல்லத்தில் இருந்த போது அம்மா முதல்முறையாக கர்ப்பிணியானாள், உடனே அவளை சில மாதங்கள் அவளது தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள், அங்கே அவள் சீனுவாச மாமாவிடம் இருந்து காந்தியை பற்றி பிரசுரம் ஒன்றினை வாங்கிவந்து படிக்க துவங்கினாள், படிக்க படிக்க அவளுக்குள் காந்தி என்ற மனிதன் வேர்விட்டு வளரத்துவங்கினார், காந்தியை பற்றி  அவளுக்குள் ஏதேதோ கேள்விகள், எழுந்தன, அவற்றை யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என்றே தெரியவில்லை,

இதற்குள் அவளை மறுபடியும் மரக்காணம் அழைத்துப் போனார், அப்பா, இடமாற்றம், அப்பாவின் தீராத காமஇச்சை இரண்டும் அவளை மிகவும் சோர்வடைய செய்தன, தூரத்து கடற்கரையின் ஒயாத சப்தம், உக்கிரமான வெயில் இரண்டும் அவளுக்கு தலைவலியை அதிகமாக்குவதாக இருந்தது, வெறுமையான பகல்கள், அர்த்தமில்லாத பொழுதுகள் என்று நீண்டன நாட்கள், இதற்கிடையில்  அவளது கர்ப்பம் கலைந்து போனதுடன் அதிக ரத்தம் போக்கும் ஏற்பட்டு அவள் நலிவுறத் துவங்கினாள், அப்பா அவளை போன்ற ஒரு உதவாக்கரையை கட்டிக் கொண்டு தான் அவதிப்படுவதாக மாமனாருக்கு தந்தி அனுப்பி உடனே கூட்டிப்போக செய்தார்

ஒன்றரை வருஷம் அவள் ஊரிலே வாழவெட்டியாக இருந்தாள், அந்த நாட்களில் அவளை மனச்சோர்வில் இருந்து காப்பாற்றியவர் காந்தி, அவள் சதா காந்தியை பற்றிய செய்திகளை கேட்டறிந்து கொண்டும் ராட்டை நூற்றுக்கொண்டுமிருந்தாள், இடையில் ஒருமுறை மரக்காணத்தில் இருந்து அப்பா வந்து சமாதானம் பேசி அவளை அழைத்துக் கொண்டுபோனார், அவர்கள் மதுரை ரயில்கெடி போவதற்குள் வழியில் சண்டை வந்து அப்பா ரோட்டிலே அம்மாவை அடித்து வளையல்களை உடைத்து போட்டதுடன் அவளை அங்கேயே தனியே விட்டுவிட்டு தனி ஆளாக மரக்காணத்திற்கு கிளம்பி போய்விட்டார்

அப்பாவின் கெடுபிடியும் கோபமும் ஆத்திரமும் அம்மாவின் மனநிலையை ஒடுக்க துவங்கின, மனநலம் பாதிக்கபட்டவரை போல அப்பாவின் பெயரை சொன்னாலே நடுங்க துவங்கினாள், அந்த நாட்களில் சீனுமாமா அவளை நூலகத்திற்கு அழைத்துப்போய் புத்தகம் எடுத்துவர உதவி செய்தார், அது தான் அம்மாவின் சகல மாற்றங்களுக்குமான முதற்படி,  வள்ளல் ரத்னம் செட்டியார் நூலகத்திற்கு போய் வரத்துவங்கியது அவளுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது

காந்தியை காண வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் புகைந்து கொண்டிருந்த போது அப்பா இடமாற்றம் ஏற்பட்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தார், தனிமையும் பதவி உயர்வும் அவருக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன, மறுபடி அம்மா கர்ப்பிணி ஆனாள், இந்த முறை பெண் குழந்தை இறந்தே பிறந்த்து, அதை அப்பா ஏறிட்டு கூட பார்க்கவில்லை, அப்படியே புதைத்துவிடும்படியாக சொன்னார், அம்மா தனது குழந்தையை நினைத்து பல நாள் அழுதபடியே கிடந்தாள், அந்த நாட்களில் படுக்கை சுகம் தவிர வேறு எதற்கும் அப்பா அவளை நாடவில்லை,

மறுமுறை கர்ப்பிணியானதும் வீட்டில் பாட்டு கேட்பதற்கு கிராமபோன் பெட்டி ஒன்றினை வாங்கி வைத்தார், அம்மாவிற்கு புத்தகம் மேலிருந்த விருப்பம் இசையின் மீது கூடவில்லை, அவள் புத்தகம் படிக்க மட்டுமே ஆசைப்பட்டாள், அப்பா அதை அனுமதிக்கவேயில்லை, பருப்பு, கடுகு சீரகம், புளி வாங்கி வரும் காகிதங்களை தவிர வேறு காகிதங்கள் அந்த வீட்டில் கிடையாது, அப்பா உள்ளுர் நூலகத்திற்கு  போய் வருவதற்குள் அவளை அனுமதிக்க வில்லை, அப்போது தான் பெரிய அண்ணன் பிறந்தான், அவன் கைக்குழந்தையாக இருந்த போது  அண்டை வீட்டிற்கு வந்த ஜெபமேரியின் ஸ்நேகிதம் கிடைத்தது, அவளுக்காக ஜெபமேரி புத்தகங்ளை வாங்கிவருவாள், அவற்றை அவளது வீட்டில் வைத்தே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்த்து, ஒரு நாள் ஜெபமேரி தனது சகோதரன் நாக்பூரில் இருப்பதாகவும் அவனை பார்த்தால் காந்தியை பார்க்க வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துப்போய் காட்டுவான், அதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றாள்

அப்பா வேதாரண்யத்திற்கு அலுவலக கேம்பிற்காக கிளம்பிய போது அம்மா மனதில் வார்தாவிற்கு போய்விட வேண்டும் என்ற எண்ணம் முளைவிட துவங்கியிருக்க வேண்டும், அப்பா போன மறுநாள் தனது கைக்குழந்தையை ஜெபமேரியிடம் ஒப்படைத்துவிட்டு கோவிலுக்கு போய்வருவதாக கிளம்பினாள்

அதன்பிறகு எப்படி பஸ் பிடித்து மதுரை வந்து அங்கிருந்து ரயிலேறி சென்னை வந்து இன்னொரு ரயில் பிடித்து நாக்பூருக்கு போய் ஜெபமேரியின் சகோதரன் தாவீது வீட்டிற்கு போய் சேர்ந்தாள் என்பது அவளுக்கு நினைவில்லை, ஒரு விசை, கட்டுபடுத்தமுடியாத வேகம், அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டிருக்கிறது,

தாவீது அவளை இரவு தனது வீட்டில் தங்க சொல்லிய போது கூட தான் காந்தியை சந்திக்காமல் எங்கும் தங்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்திருக்கிறாள், இரவிலே அவர்கள் கிளம்பி வார்தாவிற்கு போய்விட்டார்கள், ஆனால் ஆசிரமத்தில் அனைவரும் ஒன்பது மணிக்கு உறங்க போய்விடுவார்கள் என்பதால் அது அமைதியாக இருந்த்து,

எளிய குடில்களுடன் இருந்த அந்த கிராமப்புற இடத்தை அம்மா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், இந்த இருட்டிற்குள் தான் காந்தி வசிக்கிறாரா, வார்தா ஆசிரமம் என்பது இவ்வளவு ஒதுக்குபுறமான ஒன்று தானா, அவர்கள் ஆசிரமவாசியாக இருந்த சியாம்லாலை சந்தித்தார்கள், அவர் விடிகாலையில் பிரார்த்தனையின் போது பாபுஜியை சந்திக்கலாம் என்று சொன்னார்

அன்று தான் பாபுஜி என்ற சொல்லை அவள் முதன்முறையாக கேள்விபடுகிறாள், அவளுக்கு அன்றிரவு தூக்கமில்லை, தனது அருகாமையில் உள்ள ஏதோவொரு குடிலில் காந்தி உறங்கிக் கொண்டிருக்கிறார், பொழுதுவிடிந்தவுடன் அவன் முன்னால் போய் கைகூப்பி வணங்கி தொழு வேண்டும் என்று தோணியது

விடிகாலை நான்கரை மணிக்கு ஆசிரமவாசிகள் எழுந்துவிடுவார்கள்,  நாலே முக்காலிற்கு காலை பிரார்த்தனை துவங்கிவிடும், அதற்குள் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு நடுங்கிய உடலுடன் அம்மா பாபுஜியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்

அந்த ஆசிரமத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள், அதில் ஒரு வெள்ளைகாரப்பெண் தெரிந்தார், அவள் எப்படி காந்தியோடு இணைந்து வேலை செய்கிறாள் என்று அம்மாவிற்கு வியப்பாக இருந்த்து, அவளை போலவே காந்தியை பார்ப்பதற்காக இரண்டு தொழுநோயாளிகள் நின்றிருந்தார்கள், அவர்களை யாரும் வெறுப்புடன் விலக்கவில்லை, அன்பாகவே நடத்தினார்கள், பர்ச்சூரி குடிலில் இன்னமும் வைத்திய சிகிட்சைகள் துவக்கபடவில்லை, மனோகர்ஜி திவான் அங்கே இலவச சிகிட்சைகள் செய்து கொண்டிருந்தார்

மகாதேவ் குடில் என்றொரு சிறிய குடில் காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்த்து, அதில் தான் மகாதேவ் தேசாய் தங்கியிருந்தார், அவர் காந்தியின் உதவியாளர், தீவிர பற்றாளர்

இன்னமும் முழுமையாக விடியாத அந்த இளங்காலையில் பாபுஜி பிரார்த்தனைக்காக எழுந்து வந்திருந்தார்,  முதுமையின் அழகுடன் கூடிய அவர் முகத்தில் உறக்கத்தின் சுவடேயில்லை, அதே மாறாத புன்னகை, குழந்தையின் துறுதுறுப்பு, அவருடன் ரஹீம் என்ற சேவாகிரகவாசி உடன் வந்து கொண்டிருந்தார், காந்தி தனது ஆசிரமவாசிகளை அக்கறையுடன் விசாரித்தபடியே நடந்து வந்த போது தாவீது, அம்மாவை அறிமுகப்படுத்தி உங்க்ளை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஒடிவந்திருக்கிறாள் என்று ஹிந்தியில் சொன்னார்

பாபுஜி வியப்புடன் கேட்டார்

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா

அம்மா பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், தாவீது  சொன்னார்

திருமணமாகி குழந்தையும் இருக்கிறது, அவளுக்கு உங்களை காண வேண்டும் என்ற ஆசை.

என்னிடம் என்ன இருக்கிறது நான் ஒரு சேவகன், பணியாளன், என்றபடியே அம்மாவை அருகில் அழைத்து ஆறுதலாக தலையை தொட்டிருக்கிறார்

அம்மாவிற்கு அந்த ஸ்பரிசம் அவளது மனவேதனையை உடைத்துக் கொண்டு கண்ணீரை பெருகச்செய்தது, அந்த கண்ணீரின் வெதுமையை காந்தி புரிந்திருக்க கூடும், அவர் மெதுவான குரலில் சொன்னார்

உன்னை போல ஆயிரமாயிரம் இந்திய பெண்கள் சொல்லமுடியாத வேதனைகளில் அழுது கொண்டிருக்கிறார்கள், அம்மா உங்களை போன்றவர்களுக்கு அந்த கடவுளால் மட்டுமே ஆறுதல் தர முடியும், ஒன்று மட்டும் சொல்வேன், எனது மனஉறுதியும், போராட்ட குணமும் பெண்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது, உன்னை என் மகளை போலவே நினைக்கிறேன், இது நம் அனைவருக்குமான வீடு, உன் விருப்பமான நாள் வரை நீ இங்கே இருக்கலாம், ஆனால் சொகுசாக இங்கே வாழமுடியாது, வேலை செய்ய வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு மருந்திட வேண்டும், உன்னால் முடியுமா

பாபுஜியின் ஒரு சொல்கூட அம்மாவிற்கு புரியவில்லை, ஆனால் அவள் அத்தனைக்கும் சம்மதம் தெரிவித்து தலை அசைத்தாள், பாபுஜி சிரித்தபடியே வா மகளை பிரார்த்தனையுடன் நாளை துவங்குவோம் என்று அழைத்துக் கொண்டு போனார்

அப்படிதான் அம்மா வார்தா ஆசிரமத்திற்குள் நுழைந்தாள், அம்மா எங்கே போனாள் என்று அப்பா தேடவேயில்லை, அவ்வளவு கோபம், ஒடுகாலி நாய் என்று திட்டியபடியே அவர் குழந்தையை வளர்ப்பதற்காக தனது சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு அம்மாவை மறந்தே போனார்,

இரண்டரை மாதகாலம் அம்மா காந்தி ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறாள், காந்தியின் அருகாமை அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கிறது, அவளது செயல்களில் பேச்சில், பார்வையில் காந்தியின் மென்மை கலந்துவிட்டிருக்கிறது, அம்மா தொழுநோயாளிகளுக்கு சிகிட்சை தரும் செவிலியாக வேலை செய்திருக்கிறாள், மீராபென் அம்மாவிற்கு ஆங்கிலம் கற்றுதந்திருக்கிறாள், ஒருநாள் அம்மாவும் மீரா பென்னும் கோல்வாடா என்ற ஊரில் உள்ள தேவாலயத்திற்கு போன போது மீரா பென் அங்கிருந்த பியானோவில் பீதோவனின் உன்னத சங்கீதம் ஒன்றினை வாசித்து கேட்கையில் அம்மா அழுதிருக்கிறாள், மீரா பென் அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டு பீதோவன் இசையின் கடவுள்,  காந்தி சேவையின் கடவுள் என்று சொல்லியிருக்கிறாள், அம்மா அங்கிருந்த இரண்டரை மாதங்களில் ராட்டை நூற்கவும்  ஆசிரம நடைமுறைக்கும் பழகிவிட்டிருந்தாள்

ஆசிரமத்தில்  நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும், நாலேமுக்காலுக்கு பிரார்த்தனை, ஐந்தே கால் மணி முதல் ஒரு மணி நேரம் படிப்பு, அதன் பிறகு ஆறரை முதல் ஏழரை வரை சமையற்பணிகள், பாத்திரங்களை துலக்குவது, எட்டு மணிக்குள் காலை உணவு, அதன்பிறகு தோட்டவேலை, மருத்துவ சேவை பனிரெண்டு மணிக்கு மதிய உணவு, சாப்பிட்ட பாத்திரங்களை தானே கழுவி வைக்க வேண்டும், அதன்பிறகு ஒய்வு,  பின்பு இரண்டரை முதல் ராட்டை நூற்பது, மீண்டும் படிப்பு, கூட்டுவிவாதம், சில சமயங்களில் சொற்பொழிவு நடைபெறும், மாலை ஐந்தரை மணிக்குள் இரவு உணவு முடிந்துவிடும், சூரியன் அஸ்தமனம் ஆனதும் இரவு பிரார்த்தனை துவங்கிவிடும், பிறகு பரஸ்பரம் பேசிக் கொள்வது, சில வேளைகளில் இசை கேட்பது நடக்கும், ஒன்பது மணிக்கு உறங்கிவிடுவார்கள்

இந்த ஒழுங்கும் எளிமையும் அம்மாவின் மனதை முற்றிலும் மாற்றியிருந்தன, அம்மா தனக்கு கடந்த காலமென ஒன்று இருந்ததை மறந்து போயிருந்தாள், ஒரு நாள் அம்மா காந்தியின் அறைக்குள் தேசாய் கொடுத்து அனுப்பி கடிதம் ஒன்றினை கொடுக்க சென்ற போது பார்த்தாள், காந்தி இரண்டு கிளிஞ்சல்களை  தனது மேஜையில் காகிதம் பறந்து போகாமல் வைத்திருந்தார்,

பாபுஜி இந்த கிளிஞ்சல்கள் அழகாக இருக்கின்றன என்று சொன்னாள்

அதற்கு அவர் இவை போர்பந்தரில் உள்ள கடற்கரையை  சேர்ந்தவை, சிறுவயதில் இருந்தே இந்த கிளிஞ்சல்களை  கூட வைத்திருக்கிறேன், இந்த கிளிஞ்சல்களை  என்னோடு லண்டனுக்கு கொண்டு சென்றிருந்தேன், இவை தான் எனது துணை, இன்றுவரை இவை என் ஊரை, அதன் நினைவுகளை என்னோடு மௌனமாக பகிர்ந்து கெர்ண்டிருக்கின்றன, ஒவ்வொரு மனிதனும் தனது கடந்தகாலத்தினை நினைவுபடுத்தும் ஒரு பொருளை தன்னோடு எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான், அதன் மகத்துவம் மற்றவர்களுக்கு புரியாது என்று சொல்லி சிரித்தார்

பின்பு ஒரு நாள் அப்பா, சீனுவாச மாமாவுடன் வார்தா ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்திருந்தார், அவர்களுடன் ஊருக்கு போக மறுத்த அம்மாவை பிடிவாதமாக அப்பாவும் சீனுவாச மாமாவும் அழைத்துக் கொண்டு போனார்கள், அம்மா ஆசிவாங்குவதற்காக பாபுஜியிட்ம் போனாள்

காந்தி அமைதியான குரலில் சொன்னார்

குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை,  தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன், பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை உணர்கிறேன், ஒரு தாய் மகளிடம் சொல்வதை போலவே சொல்கிறேன், நெருக்கடிக்குள் வாழ்வது ஒரு சவால், அதை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது, இந்த சேவகனிடம் உன்னை போன்ற தூய உள்ளம் கொண்ட பெண்ணுக்கு தருவதற்கு வேறு எந்த ஆலோசனையும் இல்லை, ஆனால் நீயும் மற்றவர்களும் எனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கையில் நான் என்றும் உறுதியாக இருப்பேன், இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்களில் நீயும் ஒருத்தி  என்பதால்  உனக்கு நன்றி கூறுகிறேன்,

அம்மா அழுதாள், முதல்நாள் பாபுஜியை பார்த்தபோது அழுததை விடவும் பலமாக அழுதாள், பாபுஜி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார், அம்மாவை அப்பா இழுத்துக் கொண்டு ஊருக்கு ரயிலேறிய இரவில் அப்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஊருக்கு வந்தபிறகு காந்தியை தேடி ஒடியதற்காக, அம்மாவின் கையை முறித்தது அப்பா  தந்த தண்டனையாக இருந்த்து

••

நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு முடிவில் அம்மா சொன்னாள்

லட்சுமா, ஏதோ நான் ஒருத்திக்கு இது அதியசமாக நடந்த சம்பவம் என்று நினைக்காதே, இதே அனுபவத்திற்கு உள்ளான பலநூறு பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் காந்தியை மறக்கவேயில்லை, அவர்களுக்குள் காந்தி எப்போதும் ஒளிர்ந்து  கொண்டேதானிருக்கிறார்,

வீடு திரும்பி வரும்வரை அம்மா காந்தியை நோக்கி போனதை விடவும் அப்பா அம்மாவை மிக மோசமாக நடத்தியது என்னை உறுத்திக் கொண்டேயிருந்த்து, இதற்கு நான் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தேன், இறந்து போன ஒருவர் மீதான கசப்புணர்வை எப்படி போக்கிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை,

அம்மாவும் ராகேலும் அன்றிரவு ஒன்றாக டிவியில் ஏதோவொரு தமிழ்படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த அந்நியோன்யம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது,

அன்றிரவு படுக்கையில் ராகேலிடம் கேட்டேன்

உனக்கு காந்தியை பிடிக்குமா

இந்தியர்கள் காந்தியை காரணம் இல்லாமலே வெறுக்கிறீர்கள், அது ஒரு சிண்ட்ரோம், காந்தியை பலநேரங்களில் ஒரு டஸ்ட்பின் போல உபயோகிக்கிறீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றாள்

ஏன் அப்படி சொல்றே என்று கேட்டேன்

ராகேல் சொன்னாள்

நான் காந்தியை அதிகம் வாசித்ததில்லை, ஆனால் காந்தியின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோவொரு ஈடுபாடு உண்டாகிறது , களங்கமில்லாத காந்தியின் சிரிப்பை பாருங்கள், இப்படி சிரிக்க முடிந்த ஒரு மனிதன் நிச்சயம் உயர்வான வாழ்வையே வாழ்ந்திருப்பான் என்று உறுதியாக சொல்வேன், அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு தகவல்களே அவரை என் விருப்பத்திற்குள்ளாக போதுமானதாக இருந்தது, ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை,

நான் ராகேலை கட்டிக் கொண்டேன்

பெண்கள் காந்தியை வேறுவிதத்தில்  அணுகுகிறார்கள், ஆழமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது மறுபடியும் நிருபணம் ஆனது போலிருந்த்து

மறுநாள் அம்மாவிடம் நான் காந்தியின் சுயசரிதை படிக்க விரும்புகிறேன் நூலகத்தில் இருந்து எடுத்து வாருங்கள் என்று சொன்னேன்

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

வேகமாக காந்தியை நோக்கி வருகிறவர்கள், வேகமாக வெளியேறி போய்விடுவார்கள்

நானும் சிரித்தேன், அம்மா காந்தியின் சத்திய சோதனையை நூலகத்தில் இருந்து கொண்டுவரவில்லை, லண்டனுக்கு வந்து இருந்து திரும்பிய ஆறேழு மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போனில் பேசும் போது அம்மாவிடம் சொன்னேன்

வார்தாவிற்கு ஒரு முறை போய்வர வேண்டும் நீயும் எங்களுடன் வரவேண்டும் என்று தோன்றுகிறது

உதிர்ந்த சிறகு பறவையோடு மீண்டும் ஒட்டுவதில்லை என்ற கவிதை வரி நினைவிற்கு வருகிறது என்றாள்,

காந்தி இல்லாத ஆசிரமத்திற்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறதா என்று மறுபடி கேட்டேன்

முறிந்த எனது கை ஒவ்வொரு நாளும் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டுதானிருக்கிறது, வார்தாவிற்கு போய் நினைவுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றாள் அம்மா

அம்மா பேசி சம்மதிக்க வைக்க முடியாது என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டேன், ஆனால் அம்மா இறந்து போன பிறகு ராகேல் அதை மறுபடியும் நினைவூட்டினாள்

லட்ஸ், உன் அம்மாவிற்காக நாம் ஒருமுறை வார்தாவிற்கு போய்வருவோம், கடந்த காலத்தை நினைவுபடுத்த ஏதாவது ஒன்று தேவையாக தானே இருக்கிறது

அப்படித்தான் நானும் ராகேலும் வார்தாவிற்கு வந்து இறங்கினோம், இங்கே வந்து இறங்கிய நிமிசம் முதல் அவள் பரபரப்பாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்,

இது தான் வார்தா ஆசிரமம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, காந்தி ஆசிரமத்தை ஏன் இப்படி கைவிடப்பவர்களுக்கான ஆசிரமம் போல வைத்திருக்கிறார்கள், இங்கே உற்சாகமான செயல்பாடுகள் எதையும் காணமுடியவில்லையே,

அங்கே தங்கியருப்பவர்கள், வந்து போகிறவர்கள் ஒருவரிடமும் காந்தியின் மீதான ஈர்ப்பு துளியுமில்லை, அது ஒரு புகலிடம் போலவே இருந்தது

மாலை வரை நானும் ராகேலும் வார்தாவில் இருந்தோம், ,இரவு புறப்படும் போது ராகேல் சொன்னாள்

உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு காந்தி ஒரு விளையாட்டு பொம்மை, அவர்கள் உதைத்து விளையாட விரும்பும் ஒரு கால்பந்து, அவர்களுக்கு புதிராக இருப்பது எவ்வளவு உதைத்தாலும் இந்த பந்து திரும்ப திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பது தான்,

இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,, காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார், அவரது  குரலை இந்த தலைமுறையினர் கேட்டதில்லை, ஒருமுறை அவரது குரலை கேட்டுபாருங்கள், எப்படி சொல்வது, தற்செயலாக ஒரு நாள் இணையத்தில் அவரது குரல்பதிவு ஒன்றினை கேட்டேன், என்னால் முழுமையாக கேட்கமுடியவில்லை, கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது  ஹி இஸ் இம்பாசிபிள்,  எப்படி சொல்வது என்று தெரியவில், ஹி இஸ் ப்யூர்,  ஹி டச் அவர் ஹார்ட்,

அந்த மனிதர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை அவர் எதைச் சொல்லும் போதும் அதில் வெளிப்படும் பரிவும் தன்னமல்லமற்ற தூய்மையான எண்ணமும் தான் அவரை பிடிக்க செய்கிறது, சிலவேளைகளில் அவர் எனது தந்தையை போல இருக்கிறார், சில வேளைகளில் அவர் நாளை பிறக்க போகிற எனது பிள்ளையை போல இருக்கிறார்,  இதற்கு மேல் என்னால் சொல்லமுடியவில்லை

என்று அமைதி அடைந்தாள், ஆனால் அவளிடம் ஆழமான பெருமூச்சு வெளிப்பட்டது,

அந்த நிமிசம் நான் ராகேலிடமிருந்து எனக்கான காந்தியை உருவாக்கி கொள்ள துவங்கினேன், காந்தியை உதைத்து விளையாட விரும்புகிறவர்களில் நானும் ஒருவனாகவே இருந்தேன், காந்தியை வெறுத்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் காரணம் இல்லாமல் காந்தியை விலக்குகின்ற பல்லாயிரம் மனிதர்களில் ஒருவராக இருந்தேன், காந்தியை நெருங்கிச் செல்வதற்கு தான் ஈடுபாடு தேவை, வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கபட்டிருக்கின்றன,

இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளை சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்க கூடுமா என்ன, அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை, ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது  அவரை நேசிக்க செல்வதற்காக ஒரு பயிற்சி தானோ என்னவோ,

அந்தரங்கமாக ஒருவன் தனது மனதினுள் ஆழ்ந்து போனால் அவன் காந்தியின் நெருக்கத்தை உணரவே செய்வான், அவனால் காந்தியை வெறுக்கமுடியாது, அப்படி வெறுப்பதாக நடிப்பதற்கு தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக் கொள்வான், ஆனால் வெளியுலகிற்கு காந்தியை வெறுப்பவர்கள் தேவைப்படுகிறார்கள், அது காந்தியின் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,

ஏதேதோ யோசனைகளுடன் நான் வாங்கியிருந்த சத்தியசோதனை நூலை பயணத்தில் வாசிக்க துவங்கியிருந்தேன், அதன் பிறகு இரண்டுவாரங்கள், மதுரை காந்தி ம்யூசியம், போர்பந்தர், சபர்மதி, டெல்லி என்று சுற்றிவிட்டு மீண்டும் லண்டன் திரும்பியிருந்தேன்

திடீரென காந்திய நூல்களாக எனது வீட்டில் நிரம்பத் துவங்கின, காந்தியைப்பற்றி பலரிடம் நான் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன், ஒருநாள் ராகேல் என்னிடம் சொன்னாள்

லட்ஸ் நீ காந்தியை வழிபட ஆரம்பித்திருக்கிறாய், வழிபடுதல் பரிசோதனைக்கான முறையில்லை, அவரை புரிந்து கொள்ளவும் அது போல வாழவும் முயற்சி செய், உன் அம்மாவை போல,

காந்தி தனது புத்தகத்திற்கு  The Story of My Experiments with Truth என்று பெயரிட்டிருக்கிறார்,    Experiment என்பது வெறும் சொல் கிடையாது, அது ஒரு, செயல்பாடு, அறிவியல்பூர்வமான வேலை, காந்தி என்ற மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானியிருக்கிறார், அவர் தொடர்ந்து மனிதனை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார், இந்தியர்கள் பொதுவில் உடலை மர்மபடுத்தவே விரும்புகிறார்கள், , அப்படி நடந்து கொள்ளாத முதல் இந்தியனாக காந்தியை மட்டுமே கருதுகிறேன்,

காந்தி கைத்தடியை ஊன்றி நடப்பதில்லை, கையில் அதை துணையாக தான் வைத்திருக்கிறார், அவருக்கு கைத்தடி என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவி

லட்ஸ் இருப்பை விட இன்மை தான் அதிகம் நினைவுகளை தூண்டிவிடுகிறது, காந்தி விஷயத்தில் அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி சிரித்தாள்

அந்த சிரிப்பின் ஊடாக அம்மாவின் புன்னகையும் சேர்ந்து வெளிப்படுவதாகவே எனக்குத் தோன்றியது ,அவளை இறுக்கி கட்டிக் கொண்டேன்

••••


உயிர்மை இதழில் வெளியானது

Offline Gayathri

Re: எஸ். ராமகிருஷ்ணன்
« Reply #28 on: September 29, 2013, 10:34:07 AM »
அஸ்தபோவில் இருவர்

சிறுகதை

உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்,

தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன,

நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் கசப்புணர்வு படிவதை முன்தினமே உணர்ந்திருந்தார், அடிவயிற்றை புரட்டிக் கொண்டு குமட்டுவது போல ஒரு உணர்ச்சி நாள்முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது, அத்துடன் யாரோ முதுகில் கைவைத்து அழுத்திபிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு இறுக்கமும் பீடித்திருந்த்து, எண்பத்திரெண்டு வயதில் எதற்காக இப்படி வீட்டை விட்டு விலகி தனியாக ஒடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்மீதே எரிச்சலாக வந்தது,

எப்படியானாலும் இனி ஒரு போதும் வீடு திரும்பக்கூடாது, போதும், ஒரு மனிதன் குடும்பத்தை அமைத்துக் கொள்வதைப் போலவே குடும்பத்தில் இருந்து வெளியேறி தனியனாக போவதும் விரும்பி மேற்கொள்ள வேண்டிய செயலே, வயதான பலரையும் போல தன்னை வீடு வெளியே துரத்திவிடவில்லை, நாமாகத் தானே வெளியேறி வந்தோம், விரும்பி எடுத்த முடிவினை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று சோர்ந்திருந்த தன் மனதை தேற்றிக் கொண்டார்

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அன்றாட வாழ்க்கை மிகுந்த சலிப்பாகிக் கொண்டு வந்தது,  வீடு. மனைவி, பிள்ளைகள், எழுத்து, பதிப்பாளர்கள் என்று  ஒரு மீளமுடியாத ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல ஆயாசமளித்தது, மீதமிருக்கும் நாட்களை ஒரு நாடோடியை போல எங்காவது ஆள் அரவமற்ற இடத்தில் தங்கிக் கொண்டு கழித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீவிரமாக உருவாகியிருந்த்து, வீட்டில் இருந்து எப்படி விடுபடுவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்

ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கி கொள்வதை போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான், அதிலும் தான் வெற்றிபெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது,

இது சாவை தேடிப்போகிற பயணம், அவசரம் காட்டாதே என்று  மனம் உள்ளுற சொல்லி கொண்டிருந்தது, நிஜம் தான், மனிதனைத் தேடி சாவு வருவதை விட சாவைத் தேடி மனிதன் செல்வது துணிச்சலானது தானே, வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை கடந்து வந்த அவருக்கு சாவை நேர் கொண்டு காண புறப்பட்டதும் ஒரு சவாலாகவே தோன்றியது,

இளைஞனாக இருந்த காலத்தில் சூதாடி குடும்ப சொத்துகள் முழுவதையும் இழந்தார் அப்போது வீட்டினை விட்டு வெளியேறி கண்காணாத இடம் நோக்கி போய்விட வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகத் தோன்றியது, ஆனால் வாழ்க்கை தன் பிடிமானத்தை விடமால் அவரை இழுத்து வைத்துக் கொண்டது, பின்பு பலமுறை மனைவி சோபியாவோடு சண்டையிட்ட நாட்களில் வீட்டை துறந்து போவதை பற்றி யோசித்திருக்கிறார், வெளியேறி சென்றுமிருக்கிறார், ஆனால் வீடு தனது அரூபமான கரங்களால் அவரை திரும்ப இழுத்துக் கொண்டது,

இந்த முறை ஒரு கனி பழுத்து மரத்தை விட்டு தானே கிழே விழுவதை போல வெளியேறிவிட்டார், உதிர்ந்த கனிகள் ஒரு போதும் திரும்ப மரத்தில் ஒட்டுவதில்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார்

புகைரயிலின் வேகம் அதிகமில்லை என்ற போதும் ரயிலின் ஜன்னலுக்குள் பனிப்புகை ஊடுருவி குபுகுபுவென வந்து கொண்டிருந்த்து, அவரது கண்கள் மங்கிப்போனதை போல வெளியே கடந்து செல்லும் நிலக் காட்சிகள் தெளிவற்று தெரியத்துவங்கின,

வாழ்வில் எதன்மீதெல்லாம் தான் பற்றுக் கொண்டிருந்தோம் என்று யோசிக்க துவங்கினார், குடி, பெண்கள், யுத்தம் இவையே ஒரு வயதில் பற்றுமிக்கதாக இருந்தன, உண்மையில் தான் ஒரு சுயநலவாதி, தனது சுகங்களை பிரதானப்படுத்தி மட்டுமே வாழ்ந்திருக்கிறோம் என்று பட்டது,   சட்டம் பயின்ற நாட்களில் வேசைகளுடன் குடித்து நடனமிட்டு உல்லாசமாக இருந்த போது உலகம் எடையற்று இலவம்பஞ்சு மிதப்பது போலிருந்தது, அன்று எவரது உறவும் தேவையற்றதாக தோன்றியது,

பெற்றோர்கள் இல்லாமல் உறவினர்களால் வளர்க்கபட்ட காரணத்தால்  வீடு திரும்பமாலே மாஸ்கோவிலும் பீட்டர்ஸ்பெர்கிலும் சுற்றிக் கொண்டிருந்தார் யஸ்னயா போல்யனா பண்ணைக்கு போவது கசப்பான பால்யகாலத்திற்கு திரும்பி போவதை போன்று வலி தருவதாகவே இருந்த்து, அதனால்  வீடு என்பது பலவீனமானவர்களின் புகலிடம் என்று நண்பர்களிடம் கேலி பேசினார்

ஆனால் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துவிட்டவள் சோபியா, அவளை காதலிக்க துவங்கிய பிறகே வீட்டினை  நேசிக்க துவங்கினார், ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போது தான் வீடு அவனுக்குள் முளைவிடத்துவங்குகிறது, காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாகிப் போகிறது, உண்மையில் அது ஒரு வலைப்பின்னல், பெண்களும் வீடும் ஒன்று தான் போலும், எப்போது இடம் தந்து அணைத்துக் கொள்ளும், எப்போதும் விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது

உண்மையில் அவர் சோபியாவை தேடிப்போய் காதலித்தார், அப்போது அவள் சிற்றிளம் பெண், தனது அக்காவை காதலிப்பதற்காக வீடு தேடி வரும் மனிதன் என்றே அவரை நினைத்துக் கொண்டிருந்தாள், தன்னை ஏன் அவர் தேர்வு செய்தார் என்று சோபியாவிற்கு கூட வியப்பாகவே இருந்த்து, அவளது அன்பிற்காக காத்திருப்பதாக மன்றாடினார், அவளை திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு யாஸ்னயா போல்யனா வீடு உருமாறத்துவங்கியது,

பணியாளர்கள் முகங்களில் சந்தோஷம் பீறிடுவதை கண்டார்,  விருந்தும் நண்பர்களின் சந்திப்பும், குழந்தைகளும் அவருக்கு வீட்டின் மேல் தீவிரமான பற்று உருவாக காரணமாக இருந்தது, பதிமூன்று பிள்ளைகளை சோபியா பெற்றிருந்தாள், இதில் நால்வர் பிறந்த சிலமாதங்களிலே இறந்து போய்விட்டார்கள்

இறந்து போன குழந்தைகளைப் பற்றி கூட பலநேரம் அவர் யோசித்திருக்கிறார், அவர்கள் எதற்காக தன் பிள்ளையாக பிறந்தார்கள், கடவுள் தன்னிடம் ஏதோவொன்றை சொல்ல விரும்பி அவர்களை அனுப்பி வைத்தாரோ, என்ன செய்தியது ஏன் அது தனக்கு புரியவேயில்லை என்று குழம்பியிருக்கிறார்,

தன்னை சுற்றிய உலகம், அதன் மனிதர்கள், அவர்களின் அன்றாடப்பிரச்சனைகள் எதையும் விட எழுத்தும் அதில் உருவான மனிதர்களும், தீவிர வாசகர்களும், சக எழுத்தாளர்களும், எழுத்தின் மீதான விமர்சனங்களும் அவரது உலகை முழுமையாக ஆக்ரமிக்க துவங்கின, பலநேரங்களில் தான் எழுதுவதற்காக மட்டுமே உயிர்வாழ்கிறோம் என்று கூட அவருக்கு தோன்றியது,

சோபியா அதை புரிந்து கொண்டிருந்தாள், இல்லாவிட்டால் அவரது நாவலின் கையெழுத்துபிரதிகளை அவள் ஏன் அத்தனை கவனமாக பிரதி எடுத்தி எழுதி தந்தாள், ஆயிரக்கணக்கான பக்கங்களை கையால் பிரதி எடுத்து எழுதுவது எளிதானதில்லை தானே,

சோபியா அவருடன் கதைகளை பற்றி ஒரு போதும் வாதம் செய்தவளில்லை, சில வேளைகளில் அவரது கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களை போலவே இருக்கிறார்கள் என்று அவள் சுட்டிக்காட்டியதுண்டு, எழுதி எழுதி சோர்வுற்ற நேரங்களில் அவருக்கு பிடித்தமான இசைத்தட்டுகளை ஒடவிட்டு அவரை கட்டாயப்படுத்தி ஒய்வெடுக்க சொன்னதுண்டு,  அப்போது எல்லாம் சோபியாவின் அன்பை நினைத்து உருகியிருக்கிறார்

பிள்ளைகள் வளரதுவங்கும் போது பெற்றோர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் துவங்குகிறார்கள், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்க துவங்கியதும் பெற்றோர்கள் தானாகப் பிரிக்கபடுவார்கள், முதுமையை ஆணா. பெண்ணோ தனியாக சந்திக்கவே விரும்புகிறார்கள், அதற்கு மேல் எந்த உறவையும் ஒட்டி வைக்க முடியாது அது தான் உலக இயல்பு என்று சொல்வாள் அத்தை தாத்ரியானா

அது தான் அவரது விஷயத்திலும் நடந்தேறியது, பிள்ளைகள் வளர்ந்து தனித்து போக ஆரம்பித்துவிட்டார்கள், வீடு பிரச்சனைகளின் கூடராமாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் சோபியா அவருடன் சண்டையிட்டாள், சிறிய விஷயங்களில் கூட இருவரும் கோவித்துக் கொண்டார்கள், உணவு மேஜையில் அவர் தனித்து சாப்பிட்டார், சோபியாவின் கோபம் பணியாளர்களையும் விட்டுவைக்கவில்லை, டால்ஸ்டாய் மனச்சோர்வும் ஏமாற்றமும் கொண்டவராகியிருந்தார்,

வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவருக்கு தடையாக இருந்தது அவரது மகள் சாஷா மட்டுமே, அவள் மீதான அதீதமான பாசம் ஒன்றே வீட்டோடு அவரை ஒட்ட வைத்திருந்த்து, முடிவில் அவளிடமே தனது ஆற்றாமையை கொட்டி தீர்த்து விட்டார், அவள் தான் அவரை வழியனுப்பி வைத்தாள்

அந்த இரவு மறக்கமுடியாதது. வழக்கமான நாட்களை போலவே அன்றிரவும் அவர் படுக்கைக்குச் சென்றார், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார், அசையும் சுடர்கள் அவரிடம் இனியும் என்ன தாமதம் என்று  கேட்பது போலவே இருந்தது

அந்த படுக்கை அறையில் அவர் அழுதிருக்கிறார், தன்னை மறந்து உடற்சுகத்தில் கிறங்கி கிடந்திருக்கிறார்,  எழுத வேண்டிய கதைகளை நினைத்துக்கொண்டு புலம்பியிருக்கிறார், காரணமே இல்லாமல் துக்கப்பட்டுக்  கொண்டு தன்னை வருத்திக் கொண்டிருந்திருக்கிறார், இப்படியாக அப் படுக்கை அறை ஒரு பிரார்த்தனை கூடம் போலவே தோன்றியது, அந்த கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்,

அவரது உடல்நலத்தை கருதி இரவில் படுக்கை அறையின் கதவுகளுக்கு தாழ்பாள் போடக்கூடாது என்று சோபியா கட்டளையிட்டிருந்தாள், அதனால் கதவு பாதி திறந்தேயிருந்த்து,

சோபியா அன்றிரவு நெடுநேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு தாமதமாகவே படுக்கைக்கு வந்தாள், படுக்கையில் அயர்ந்துகிடந்தவரை காணும் போது அவளுக்கு வருத்தமாக வந்த்து, அவரது கைகளை மென்மையாக தொட்டு பார்த்தாள், அது வெதுவெதுப்பாக இருந்தது, அன்றிரவு அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்,

பின்னரவில் எழுந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார், சாஷாவை எழுப்பி தான் வீட்டை விட்டு வெளியேறிப்போவதை பற்றி சொன்னார், அவள் அதை முன்னதாகவே எதிர்ப்பார்த்திருந்தவளை போல இப்போதா என்று மட்டும் கேட்டாள்,

வீட்டிலே தங்கி அவருக்காக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் துஷான் எழுந்து வந்து அவரது ரத்தவோட்டத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ரத்தஅழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக கவலையுட்ன் தெரிவித்தார்,

அது தனது பதற்றத்தின் அடையாளம் என்றபடியே அவசரமாக தனது உடைகளை எடுத்துக் கொண்டு சோபியாவிற்கு ஒரு கடிதம் எழுத துவங்கினார்,

ஏற்கனவே அந்த கடிதம் மனதில் முழுமையாக எழுதி முடிக்கபட்டிருந்தது, பலநாட்கள் அந்த கடித்ததில் எந்த வரிகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்திருந்தார் ஆகவே வேகமாக அக் கடிதத்தை எழுதி சாஷாவிடம் ஒப்படைத்தார், குதிரைவண்டிக்காரனை எழுப்பி பயணத்திற்கு தயார் செய்யும்படி உத்தரவிட்டார்

சாஷா அவரது தொப்பியையும் குளிரங்கியையும் எடுத்து வந்து தந்தாள், சாஷாவை முத்தமிட்டு வருத்தமான குரலில் சொன்னார்

உனது அம்மாவை கவனித்துக் கொள்,

அவள் கலஙகிய கண்களுடன் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா என்றாள்,

தெற்கு நோக்கி பயணிப்பது என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருந்த்து, எங்கே போவது என்பதை ரயில் நிலையத்தில் போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்

குதிரை வண்டி தனது பண்ணையை விட்டு கிராமசாலையில் செல்ல துவங்கிய போது ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார், விரிந்து பரந்த அந்த பண்ணை நிலமும், பிரம்மாண்டமான வீடும், நூற்றுக்கணக்கான எளிய விவசாயிகளும், நீர் நிறைந்த குளமும், மரங்களும் குளிர்கால காற்றும் இனி ஒரு போதும் தனக்கானதில்லை, தான் இனி வெறும் ஆள், தான் ஒரு துறவியோ, பிச்சைக்காரனோயில்லை, துரத்தப்பட்ட மனிதன், வீட்டை துரத்து வெளியேறும் ஒரு முதியவன், அவ்வளவு மட்டுமே

ரயில் நிலையத்திற்கு வந்தபோது காலியாக இருந்தது, பின்னரவில் ரயில்கள் இல்லை என்பதால் காத்திருக்க வேண்டியதாகி இருந்தது, பயணிகள் ஒய்வறையில் அவர் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்,

துறவியர்மடத்தில் வசிக்கும் தனது தங்கை மரியாவை தேடிப்போய் சந்திக்கலாமே என்று தோன்றியது, உண்மையில் அது வெறும் சாக்கு, மரியா வசிக்குமிடத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஏதாவது ஒரு குடிசை கிடைத்தால் போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று உள்ளுற நினைத்துக் கொண்டார்

பயணியர் ஒய்வறையில் ஒரு மாணவன் அவரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான், அவன் உற்சாகமான முகத்துடன் அவரை நெருங்கிவந்து வணங்கியபடியே சொன்னான்

உங்களது படைப்புகளால் நான் பெரிதும் ஈர்க்கபட்டிருக்கிறேன், டால்ஸ்டாய் பண்ணை ஒன்றை எனது கிராமத்தில் ஆரம்பிக்க விரும்புகிறேன், உங்கள் எழுத்துகள் எனக்கு வழிகாட்டுகின்றன, உண்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, இப்போது புதிதாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் டால்ஸ்டாய் சொன்னார்

இத்தனை காலம் உலகின் துயரங்களை நான்  கதைகளாக மாற்றிவந்தேன் , ஆனால் இன்றோ எனது வாழ்க்கை உலகிற்கு வெறும் கதையாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது , நான் தோற்றுப்போனவன், ஒருவருக்கும் பயனற்ற ஒரு கிழட்டு குதிரை,

அந்த இளைஞனுக்கு அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று புரியவில்லை, குளிர்தாளமுடியாமல் டால்ஸ்டாய் தனது கைகளை உரசிக் கொண்டார், அந்த இளைஞன் தனது தலையை  சாய்த்து வணங்கி உங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள், நன்றாக ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு கடந்து போய்விட்டான்

ஷமார்டினோ மடாலயத்திற்கு போவதற்கான ரயில் எப்போது வந்துசேரும் எனத் தெரியவில்லை, மனதில் திடீரென காகசஸ் பகுதிக்குப் போனால் என்னவென்று தோன்றியது, அங்கே அவரது சிஷ்யர்கள் பலர் ஒன்று கூடி ஒரு பண்ணையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள், நிம்மதியாக அங்கே போய் தங்கிவிடலாமே என்ற யோசனை உருவாகத்துவங்கியது,

அங்கே போவதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை அவர் தனது தங்கை மரியாவை காண விரும்பினார், அவளை சந்திப்பது  இறந்து போன தாயை மறுமுறை சந்திப்பதை போன்றது, முகம் அறியாத தாயின் மறுவடிவம் போலவே மரியா இருந்தாள், பெண்கள் வயதாக துவங்கியதும் தாயின் சாயலை அடைந்துவிடுகிறார்கள், ஆனால் பையன்கள் தந்தையை போல ஒரு போதும் ஆவதில்லை, அது என்ன புதிர், தாயிடம் நன்றி சொல்லி விடைபெற்றுவிட்டால் போதும் பிறகு எங்கும் தங்கி வாழ்ந்துவிடலாம் என்று அவருக்கு தோன்றியது,,

நீண்ட பல வருஷங்களுக்கு பிறகு நேற்று அவர் தனது தங்கையை மடாலயத்திற்கு சென்று சந்தித்தார், அவள் கணவனை இழந்தவள், கொடுந்தனிமையை தாங்கிக் கொள்ளமுடியாமல் தேவாலய சேவையில் தன்னை ஒப்புக கொடுத்திருந்தாள

இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை, தேவாலயத்திற்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள், பிறகு பசுமையான மரஙகளின் ஊடே இருவரும் நடந்து போனார்கள் வீழ்ந்துகிடந்த மரம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்

மரியா சொன்னாள்

லியோ. உனது செயல்களால் எப்போதுமே அடுத்தவரை வருத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய், உனது பிரச்சனை வீடில்லை,  நீ தான், தேவையில்லாமல் உன்னை அலைக்கழித்துக் கொள்ளாதே, சுற்றியது போதும், உன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு ஒரு துறவியை போல சாந்தம் கொண்டுவிடு, உலகம் நீ அப்படி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது

இல்லை மரியா, என்னால் ஒரு போதும் துறவியாக முடியாது, துறவிகள் தன்னை வருத்திக் கொள்பவர்கள், நான் என்னை கொண்டாட நினைப்பவன், என் மீது எனக்கு அதீதமான நம்பிக்கைகளும், பிடிப்பும் உள்ளன, இதை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் என்றார்

லியோ, நீ ஒரு குழப்பவாதி, எல்லா பிரச்சனைகளையும் நீயே உருவாக்கி கொண்டு அதில் இருந்து தப்பிக்க போரிடுகிறாய், உன்னை ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாய், தெளிவற்ற உனது கண்களில் காணும் குழப்பங்கள் என்க்கு கவலை அளிக்கின்றன என்றாள் மரியா

இந்த உலகம் தூய்மையானதாகயில்லை, கசடுகளும் வெறுப்பும், துவேசமும், அதிகாரவெறியும் கொண்டதாகயிருக்கிறது, அதிகாரம் என்னை ஒரு அற்ப புழுவைப் போல நடத்துகிறது,  உலகின் சகல கசடுகளையும் நானும அள்ளிக்குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, நான் தவறு செய்யாத மனிதனில்லை, ஆனால் சந்தர்ப்பவாதியாக, என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன், என்றார் டால்ஸ்டாய்

நீ உன்னை சுற்றிய எல்லோரிடமும் குறைகள் காண்கிறாய், அதை பெரிது படுத்தி சண்டையிடுகிறாய், உனது கோபம் உனது விருப்ப்படி பிள்ளைகளும் மனைவியும் நடந்துகொள்வதில்லை என்பது தானே, உண்மையில் நீ விரும்புவது போல உனது நிழலை கூட நடந்து கொள்ளாது,  பிறகு எப்படி வீட்டோர் நடந்து கொள்வார்கள், வீடு என்பது சவுக்கடிக்கு பயந்து புலி முக்காலியில் ஏறும் சர்க்கஸ கூடாரமில்லை லியோ என்றாள்,

டால்ஸ்டாய்க்கு ஆத்திரமாக வந்த்து, மரியாவிட்ம் கடுமையான குரலில் சொன்னார்

எனது ஆசைகளை நான் ஒரு போதும் அவர்கள் மீது திணிக்கவில்லை, எனது கோபமெல்லாம் அவர்கள் ஏன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள், அற்பத்தனங்களை ஆசையோடு அரவணைத்து கொள்கிறார்கள், வீண்பேராசைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே, சுருக்கமான சொல்வதாயின் நான் அவர்களை சுயபரிசீலனை செய்து கொள்ள சொல்கிறேன், அது அவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதை மறைத்துக் கொள்ள என்னை கோவிக்கிறார்கள்,

இரும்பை நெருப்பில் போடுவது அதை தண்டிப்பதற்காக இல்லை மரியா, அதை இளக்கி புதிய வடிவம் கொடுப்பதற்கு, நிச்சயம் அது சூடுபடவே செய்யும், ஆனால் நெருப்பை தவிர வேறு எதனால் இரும்பை இளக்க முடியும் சொல்லு என்றார் அவர்

துயரமான குடும்பங்கள் எதுவும் ஒன்று போல இருப்பதில்லை என்று நீயே தான் எழுதியிருக்கிறாய், லியோ, இந்த உலகம் உன்னை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாய் அது தவறு, நீ தான் இன்னமும் இந்த உலகை புரிந்து கொள்ளவில்லை,  என்றாள் மரியா

நான் ஒரு முட்டாள் என்று தானே சொல்கிறாய்  எனக்கேட்டார் டால்ஸ்டாய்

அப்படியில்லை, நீ உன்னை முட்டாளாக்கி கொள்கிறாய் என்றாள் மரியா

அதோ, அந்த மரங்களுக்கு இடையில் உள்ள விவசாயி வீட்டினைப் பார், அவனுக்கு இந்த உலகில் உணவும் உடையும் இருப்பிடமும் மட்டுமே தேவையாக இருக்கிறது, அதுவே போதும் என்ற மனம் கொண்டிருக்கிறான், அவன் தனது உணவிற்காக ஒவ்வொரு பொழுதும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான், பேராசையின் நிழல் கூட அவன் மீது படவில்லை, நான் அப்படி ஒரு மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன், எனது செல்வம் தான் எனது சத்ரு, நான் அவற்றை இழந்துவிடும்போது என்னை சுற்றிய பகட்டு உலகம் தானே விலகி போய்விடும் எனறு நம்புகிறேன் என்றார்  டால்ஸ்டாய்

அது உண்மையில்லை லியோ, நீ அப்படி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்,  அது தவறு, பெரும்பான்மை மனிதர்களை இப்படி முடக்கி வைத்திருப்பது அவர்களின் இயலாமை, அது ஒரு அற்ப காரணம் என்றே சொல்வேன், அவர்கள் இயலாமையை காரணம் சொல்லி ஒதுங்கி கொண்டுவிடுகிறார்கள், அதை கடந்து செல்ல முயன்றவர்கள் மட்டுமே வாழ்க்கையில் விரும்பியதை ஜெயித்திருக்கிறார்கள், என்றாள் மரியா

மரியா எனக்கு போதனைகளை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது  என்றார் டால்ஸ்டாய்

தவறு போதனைகளிடம் இல்லை, அதை கேட்கும் மனதை நீ இழந்துவிட்டாய் என்பதே பிரச்சனை என்றாள் மரியா

எனது தவறுகளை நான் அறிந்து கொண்டுவிட்டேன், அதை பகிரங்கமாக ஒப்பு கொள்கிறேன், அது தான் எனது பிரச்சனை, என்றார் டால்ஸ்டாய்

சரியாக சொன்னாய், உனது தவறுகளை நீ அடையாளம் காண துவங்கும் போது அதற்கு மற்றவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நீ உணர்ந்து கொண்டிருக்கிறாய், அவர்களை வெறுக்க துவங்குகிறாய், எல்லா பிரச்சனைகளும் அங்கிருந்தே துவஙகுகின்றன என்றாள் மரியா

இனி நான் என்னை ஆராய்ந்து கொண்டிருக்கப்போவதில்லை, ஒரு புல்லை போல இயற்கையிட்ம் முற்றாக என்னை ஒப்புக் கொடுக்கப்போகிறேன், என் விதியை இயற்கை தீர்மானிக்கட்டும் போதுமா என்றார்

கடவுளின் ஆசி உன்னோடு இருப்பதாக என்றபடியே மரியா எழுந்து நடக்க துவங்கினாள்,

அவள் மடாலயம் நோக்கி போவதை அவர் பார்த்துக்  கொண்டேயிருந்தார், மரியா அவரிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டுவிட்டாள், எவரிடமிருந்தும் ஒருவர் விடைபெறுதல் எளிதானதில்லை, பிரிவு எப்போதுமே வலிமிக்கதே, இனி அவள் நினைவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பாள், மரியா அவரை தனித்து விட்டுச்சென்ற பிறகு அவர் நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்தபடியே தூரத்து மரங்களை பார்த்துக் கொண்டிருந்தார்,

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் வாழ வேண்டும், அது தான் விதி, அது தான் இயற்கையின் தேர்வு, மனிதர்கள் தனக்கான துணையை தேடிக் கொண்டது அவர்களின் விருப்பம், இயற்கையே முடிவில் வெல்கிறது, முதுமையில் மனிதன் தனிமைப்படுத்தபடுகிறான், இயற்கை அவனது ஆசைகளை கைதட்டி பரிகசித்து மீண்டும் அவனை தனதாக்கி கொள்கிறது,  அது தான் நிதர்சனம் என்று தோன்றியது,

யோசிக்க யோசிக்க மீளமுடியாதவொரு மனச்சோர்வு கூடியது, அன்றிரவு அவருக்கு உறக்கம் கூடவில்லை, என்றோ பாரீஸ் நகரில் கண்ட காட்சி கனவாக வந்த்து, ஒரு குற்றவாளியை பொது இடத்தில் தலையை துண்டிக்கும் தண்டனையை அவர் நேரில் பார்த்திருந்தார், அந்த மனிதனின் கண்கள் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தன, அதில் தனது வாழ்க்கைய ஏன் மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி ஊசலாடிக் கொண்டிருந்த்து,

மனிதன் தனது சுகங்களை பாதுகாத்து கொள்ளவே சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறான் என்று தோன்றியது, அந்த மனிதன் அன்று கனவில் தோன்றி உலகம் கருணையற்றது என்ற சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான், அவர் திடுக்கிட்டு விழித்து எழுந்து கொண்டார்,  அந்த இரவு முழுவதும் அவர் படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார், விடிந்தால் போதும் என்று திணறலாக இருந்தது

அந்த இரவில் வீசிய குளிரும் பனிப்பொழிவும் அவர் உடலை அதிகம் நடுங்க வைத்தன, உறக்கமற்ற காரணத்தால் அவரது முகம் ஒடுங்கிப்போனது, அதன் மறுநாள்  மகள் சாஷா அவரை காண வந்து சேர்ந்திருந்தாள், இருவருமாக தெற்கு நோக்கி செல்ல ரயில் ஏறினார்கள்,

அந்த பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை, மனமும் உடலும் நலிந்து கொண்டே வந்தன, தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து வந்த சாஷாவிடம் அடுத்து ரயில் எங்கே நிற்கும் என்று கேட்டார்

அஸ்தபோவ் என்று சொன்னார் டாக்டர் துஷான்

அங்கே இறங்கி ஒய்வெடுக்க வேண்டும், ஒருவேளை தொடர்ந்து பயணம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் மயங்கிவிழுந்துவிடுவோம் , எங்காவது கதகதப்பான அறை ஒன்றில் சற்று நேரம் அயர்ந்து கண் உறங்க வேண்டும், என்று தோன்றியது,

சாஷா அவரிடம் சொன்னாள்

அப்பா இறங்கி ஒய்வெடுத்து கொள்ளுங்கள், உடல் நலம் சரியானதும் மீண்டும் பயணம் செய்யலாம்

டால்ஸ்டாய் அதை ஏற்றுக் கொண்டவரைப் போல தலையாட்டினார்

ரயில் அஸதபோவிற்கு வந்த போது மாலையாகி இருந்தது, அவர்கள் இறங்கி மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்தார்கள், அஸ்தபோவ் மிகச்சிறிய ரயில் நிலையம், பயணிகளுக்கான தங்குமிடம் என எதையும் காணமுடியவில்லை, அருகில் தங்கும் விடுதிகளோ, ஒய்விடங்களோ எதுவும் தென்படவில்லை,

எங்கே போய் தங்குவது என்ற யோசனையுடன் ரயில் நிலையத்தின் இரும்பு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார், சாஷாவும் டாக்டரும் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டால் ஒய்வறை கிடைக்க கூடும் என்று அவரை காண சென்றிருந்தார்கள்

அவர் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார், யாரோ உறுதியான மனிதர் ஒருவர் நடந்து வருவது போன்ற சப்தம் கேட்டது, கையில் ஒரு துணிமூட்டை ஒன்றுடன் அழுக்கடைந்த கோட் ஒன்றினை அணிந்து கொண்டு ஒரு வயதான மனிதன் நடந்து வந்து அவரது பெஞ்சின் ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டான், அவன்து தாடி நரைத்துகோரையாக இருந்தது, பளுப்போடிய கண்கள், அவன் தனது துணிமூட்டையில் இருந்து ஒரு புட்டியை திறந்து எதையோ குடித்துக் கொண்டான், பிறகு அவரை உற்று நோக்கியபடியே கனவானே குடிப்பதறகு வோட்கா வேண்டுமா என்று கேட்டான்

டால்ஸ்டாய் வேண்டாம் என்று மறுதலித்தார்,

அவன் தனது வோட்கா புட்டியை துணிமூட்டையில் திணித்துவிட்டு கருணையே இல்லாத சாத்தான்கள் என்று யாரையோ திட்டினான்

அவன் யாரை அப்படி சொல்கிறான் என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை, அந்த மனிதன் தானாக அவரிடம் சொன்னான்

டிக்கெட் இல்லாத பயணி என்று என்னை வழியில் இறக்கிவிட்டார்கள், நான் ஒரு விவசாயி, எனது தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸகளை எவ்வளவோ முறை பிச்சைகாரர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறேன், கோச்விக் மடாலயத்திற்கு ஒரு முறை இருபது மூடை தானியங்கள் இலவசமாக தந்தேன், அதை எல்லாம் மறந்துவிட்டு  என்னை ஒடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்,

நான் எதற்காக பயணம் போகிறேன் என்று ஒருவரும் கேட்டுக் கொள்ளவில்லை, சட்டம் பேசுகிறார்கள் சாத்தான்கள், நான் ஒன்றை உறுதியாக சொல்வேன், படித்தவர்கள் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்,

நான் படிக்காதவன், கையில் ஒரு ரூபிள் கூட பணமில்லாதவன், நான் எதற்காக போகிறேன் என்பதை நீங்களாவது கேட்டுக் கொள்ளுங்கள், எனது மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறேன், அது நீவா கிராமத்திலிருக்கிறது, அங்கு தான் அவள் இறந்து போனாள், அந்த கல்லறையை ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்து அவளை நினைத்து பிரார்த்தனை செய்து வருவேன்,

அவள் என்னை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனவள், அதனால் என்ன, அது அவளது விருப்பம், என் மனைவியாக வாழ்ந்த நாட்களில் என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் தானே, அதற்கு கைமாறு செய்ய வேண்டியது என கடமை தானே என்றான்

நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று டால்ஸடாய் அந்த மனிதரிடம் கேட்டார்

லெப்தவோ, துலா பகுதி என்றார்

நானும துலா பகுதியை சேர்ந்தவன் தான் என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் விவசாயியா என்று கேட்டான் அந்த மனிதன்

ஆமாம், எனது பண்ணை அங்கேயிருக்கிறது , யஸ்னயா போல்யனா என்றார் டால்ஸ்டாய்

கவுண்ட் நிக்கோலாயின் பண்ணையது, நீங்கள் அவரது உறவினரா என்று கேட்டான் அந்த மனிதன்

நான் தான் கவுண்ட் நிக்கோலாய் தால்ஸ்தோய் என்றார்

நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விபட்டிருக்கிறேன், என்றான் அந்த மனிதன்

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் டால்ஸ்டாய்

எனது மனைவியின் சகோதரன் ஒரு பாதிரியார், அவன் புத்தகம் படிக்க் கூடியவன், அவன் அடிக்கடி உங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பான், உங்களை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனிதரைப் போலிருக்கிறீர்கள், பிள்ளைகளுடன் சண்டையா என்று கேட்டான் அந்த மனிதன்

யாரும் என்னை துரத்தவில்லை, நானாக வெளியேறி விட்டேன், வீடு என்னை மூச்சு திணறச் செய்கிறது, முதுமையில் ஒரு மனிதன் வேண்டும் அமைதி மட்டுமே என்றார்

உங்கள் மனைவி நீங்கள் வெளியேறியதை  தடுக்கவில்லையா என்று கேட்டான் அந்த மனிதன்

அவள் ஒரு முன்கோபி, அவளது பிடிவாதம் தாங்கமுடியாமல் தான், நான் வெளியேறினேன், ஒரு வளர்ப்பு பிராணி போல அவள் கட்டுபாட்டிற்குள் நானிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றார்

அந்த மனிதன்  வெளிறிய மேகங்களை ஏறிட்டு பார்த்தபடியே சொன்னான்

நீங்கள் ஒரு விவசாயி இருந்திருந்தால் நிச்சயம் வீட்டை விட்டு  வெளியேறி இருக்க மாட்டீர்கள், எழுத்தாளன் இல்லையா, அதனால் தான் கற்பனையான பயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்

டால்ஸ்டாய்க்கு அந்த மனிதன் மீது கோபம் வந்த்து

நான் அறுவடை காலங்களில் விவசாயிகளுடன் ஒன்றாக பாடுபட்டவன், உழைப்பின் வலியை அறிந்தவன், ஒரு போதும் நான் சுகவாசியாக இருந்தவனில்லை, என்றார்

அப்படி தோன்றவில்லை, விவசாயி தன்னை மற்றவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதற்காக வருத்தபடுகின்றவனில்லை, அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவன், நிலம் அதை தான் அவனுக்கு கற்று தந்திருக்கிறது, காத்திருந்தல் தான் விவசாயின் முதல்பாடம் என்றான் அந்த மனிதன்

இத்தனை காலம் நானும் அப்படித்தான் இருந்தேன், ஆனாலும் என்னை வீடு புரிந்து கொள்ளவேயில்லை,   என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் உங்களையே முதன்மைபடுத்தியே பேசுகிறீர்கள், எப்போதில் இருந்து உங்களுக்கு நீங்கள் முக்கியமாக ஆனீர்கள் என்று கேட்டான் அந்த மனிதன்,

அந்த கேள்வி அவருக்கு வியப்பாக இருந்த்து, அது உண்மை தானே, எப்போதுமே தன்னை பற்றியே தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டது, ஆனாலும் அவன் கேலியாக அதை கேட்கவில்லை என்பதை புரிந்து கொண்டவரைப் போல கேட்டார்

ஒருவன் தன்னை பற்றி ஆராயாமல் தனது சரி தவறுகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது

சரி தவறுகள் எல்லாம் மனிதர்கள் உருவாக்கி கொண்ட வரையறைகள், விவசாயிகள் தன்னை சுற்றிய உலகை, மனிதர்களை பற்றியே யோசிக்கிறார்கள், அதற்காகவே வருந்துகிறார்கள், தன்னை நம்பிய குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள், தான் நம்புகிற நிலத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், விவசாயம் என்பதே தன்னை முதன்மைபடுத்தாமல் செய்யும் சேவைதானில்லையா என்றான்

அந்த மனிதன் ஒரு பாதிரியை போல பேசுவது எரிச்சலாக இருந்த்து, அவனோடு எதற்காக வாதம் செய்கிறோம் என்று தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் டால்ஸ்டாய்

அந்த மனிதன் சொன்னான்

நான் ஒரு அதிகபிரசங்கி, இங்கிதம் தெரியாமல் நிறைய உளறிக் கொண்டு தானிருப்பேன், கனவானே உங்களை போல மனதில் தோன்றும் எண்ணங்களை மறைத்து பேச எனக்கு தெரியாது,

அவனோடு பேசியது போதும் என அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்து கொண்டார், அந்த மனிதன் முணுமுணுப்பான குரலில் சொன்னான்

முதுமையில் பெண்களுக்கு கடவுள் தேவைப்படுவதில்லை, ஆண்களுக்கு முதுமையில் தான் கடவுள் தேவைப்படுகிறார்,

டால்ஸ்டாய் வியப்புடன் அந்த மனிதனின் சொற்கள் வீர்யமிக்கதாக இருப்பதை உணர்ந்தபடியே அவனை ஏறிட்டு பார்த்தார்,

அந்த மனிதன்  உற்சாகத்துடன்  அவரது முகத்தை பார்த்து மீண்டும் பேச ஆரம்பித்தான்

நான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்துடன் போராடி வாழ்ந்துவருகிறேன், நிலம் என்னை தாங்கியிருக்கிறது, என்னை ஏமாற்றியிருக்கிறது, என்னை வாழ வைத்திருக்கிறது, நிலம் மிகவும் புதிரானது, அதை எந்த மனிதனாலும் முழுமையாக தன்வசமாக்கிவிட முடியாது, முழுவதும் உரிமை கொண்டாட முடியாது, , அது ஒரு புதிரான உறவு,

கனவானே  உங்கள் கதைகளில் வரும் மனிதர்களை போல உலகமும் உங்கள் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,

வீடு என்பது ஒய்விடமில்லை, அது ஒரு விசித்திரமான தாவரம், தன் விருப்பபடி தான் அது வளரும், அதன் விதி ரகசியமானது, கடந்த காலத்தை மறந்தவர்களால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும்,

வயது தான் மனிதர்களின் ஒரே பலவீனம், காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள், என அனைத்தும் உறுதியாகின்றன, வலிமை கொள்கின்றன, மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான்,

இருபது வயதில் அவனால் சகித்துக் கொள்ள முடிந்த எதையும் எழுபது வயதில் சகித்துக் கொள்ள முடியவில்லை, வயது அவனை அழுத்துகிறது, திணறடிக்கிறது, வயது அவனை மண்டியிடவும் அழவும் வைக்கிறது,

முதுமையில் வசிப்பதற்கு என ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவைப்படுகிறது, அது நத்தையின் முதுகில் உள்ளதை போல ஒரேயொரு ஆள் மட்டுமே வசிக்க கூடிய வீடு, உண்மை நானும் கூட அப்படியொரு வீட்டினை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்,

எனக்கு எவர் மீதும் புகார் இல்லை, ஒருவேளை நான் மற்றவர்களின் தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கையை நானே நரகமாக்கி கொள்வதாக நம்புகிறேன், தன்னை பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன, உங்களை நீங்கள் பகிர்ந்து கொடுங்கள், தண்ணீரை போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள், காற்றை போல எடையற்று இருங்கள் என்றான்

டால்ஸ்டாய் அந்த மனிதன் தனது அனுபவத்தின் சாரத்திலிருந்து பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவரை போல தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் வோட்கா வேண்டும் என்று கேட்டார்

அந்த மனிதன் தனது புட்டியை எடுத்து நீட்டியபடியே சொன்னான்

அஸ்தபோவ் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குவோம் என்று என்றாவது உங்கள் வாழ்க்கையில் நினைத்த்துண்டா என்று கேட்டான்

இல்லை என்றார்

என்னை சந்தித்து இந்த ஒரு மடக்கு வோட்கா அருந்துவோம் என்று யோசித்திருக்கிறீர்களா எனக்கேட்டான்

ஒருபோதுமில்ல என்றார் டால்ஸ்டாய்

எதிர்பாராமை தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது, நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றான்

வோட்கா புட்டியை திறந்து ஒரு மிடறு குடித்தார், உடலில் சூடு பரவ துவங்கியது

அந்த மனிதன் சொன்னான்

உங்களால் நடந்து வர முடியும் என்றால் அருகாமையில் ஒரு துறவியர் மடம் இருக்கிறது, அங்கே போய் தங்கி கொள்ளலாம்

இல்லை என்னால் நடக்க இயலாது, இங்கேயே நான் தங்கிக் கொள்ளப்போகிறேன் என்றார்

உங்களை போல உங்கள் மனைவி வீட்டை துறந்து வெளியேறிப் போயிருந்தால் நீங்கள் புலம்பி தள்ளியிருப்பீர்கள், அவமானத்தில் துடித்திருப்பீர்கள், அப்படி துடித்தவன் நான், ஆனால் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், அன்பு தான் வீட்டின் அடிப்படை, அதை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள், குறை சொல்லாதீர்கள், எவரது அன்பையும் புறக்கணிக்காதீர்கள்,

என்றபடியே அந்த மனிதன் தனது துணிமூட்டையுடன் எழுந்து மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்,

சாஷா அவரை ரயில்வே நிலைய அதிகாரி வீட்டின் ஒரு அறையிலே தங்கி கொள்ளலாம் எனறு அழைத்துப் போனாள்,

சிறிய படுக்கை அறையாக இருந்த்து, அவர் தலையணையில் சாய்ந்து படுத்துக் கொண்டார்

சாஷா அவரிடம் கேட்டாள்

வேறு ஏதாவது தேவையா அப்பா,

உன் அம்மாவிற்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றார் டால்ஸ்டாய்

மனைவி சோபியா வந்து சேரும்வரை அவர் அஸ்தபோவ் ரயில்நிலைய ஊழியரின் வீட்டு படுக்கையில் நிமோனியா காய்ச்சலுடன் படுத்துகிடந்தார், அவருக்கு தெரியும் தன்னை தேடி மனைவி கோபத்துடன் வந்திருப்பாள் என்று, தான் எழுதிய கடித்த்தை அவள் படித்திருப்பாள், அதற்கான தனது தரப்பு நியாயங்களை சொல்வதற்கு அவள் காத்திருப்பாள், அவளை எப்படி முகம் கொடுத்து பார்ப்பது என யோசனையாக இருந்த்து

ஒரே நாளில் உடல் நலிவுற்று பூஞ்சை போலாகியிருந்தது, மூச்சுவிடுவதற்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது, ரயில்வே நிலையத்தை சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் என பலரும் வந்து நிரம்பியிருந்தார்கள், வாழ்வின் கடைசிபடிக்கட்டில் வந்து நிற்கிறோம் என்று அவருக்குப்புரிந்த்து

தன்னை காண்பதற்காக வந்து காத்திருந்த மனைவியிடம் தன்னை மன்னித்துவிடும்படியாக கதறி அழ விரும்பினார், ஆனால் சாஷாவிடம் தனக்கு சோபியாவை பார்க்கவிருப்பமில்லை, அவளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உறுதியான குரலில் சொன்னார்

வெளியே சோபியா அழும் குரல் கேட்டது,

என்னை போல ஒருவனை சகித்துக்கொண்டு அன்பு செலுத்தியதற்கு நன்றி சோபியா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்,

அதன் பிறகு அவர் இறக்கும்வரை சோபியாவிடம் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லை

••••


( உயிர்மை 2013 ஜுலை இதழில் வெளியானது)