அந்தி பதுங்கும் பொழுதினிலே
பனிமழை வரப்போகும் வேளையிலே
மானிடம் ஓய்வு நாடும் நேரத்திலே
மின்னலையே கொய்யும் புன்னகையுடன்
பல ஏக்கங்கள் மனதினுள் தாளமிட
வீடு திரும்புகிறாள் பொண்ணுத்தாயி...
கட்டாந்தரையின் தோல் நெய்யும் வெப்பமும்,
வியர்வையின் நாசி வெறுக்கும் மணமும்
அவளின் இனிப்பான கனவுகளை கலைத்திடக்கூடுமோ...!
உழைப்பின் தீவிர அயற்சியும்,
வறுமையின் அதீத வாட்டமும்
அவளின் வெறிகொண்ட முயற்சிகளை சிதைத்திடக்கூடுமோ...!
கல்வியேட்டின் வாசனையை
தான் நுகராவிடினும்
அவள் வாரிசு நுகரவோ
இப்பாடுபடுகிறாள்...!?
தன் பாதங்கள் ஏந்தும்
சூட்டுக் காயங்களை
அவள் பிஞ்சு ஏந்தாதிருக்கவோ
இப்பாடுபடுகிறாள்...!?
அவளின் கரு இரவுகள்
வெண் பகலாய் மாறுமோ...!
அவளின் இம்சை வாழ்க்கையில்
குதூகலம் குடியேறுமோ...!
ஒரு வரியாய் உள்ள உன் சீவியமும்,
புகழ்பெற்ற காவியமாகுமே...!
ஒரு துளியாய் உள்ள உன்
காலமும்,
ஆனந்தம் நிறைந்த சாகரமாகுமே...!
உன் அயரா முயற்சியால் உன் நகல்,
ஓர் நாள் பெருமையேந்தி விண்ணை வெல்வான்!
உன் உண்மை உழைப்பால் உன் மகன்,
ஓர் நாள் புன்னகையேந்தி மண்ணை ஆள்வான்!
இருளாய் இருக்கும்
உன் வாழ்விலே
ஒளியேற்ற இதுவரை யாருமில்லையோ..?
கலக்கம் கொள்ளாதே தாய்மையே...!
உன் அவலம் கண்டுதானே
ஒளிரும் கதிரவனும்
உன்னோடு வருகிறான்,
உன்னை பதம் பார்க்கும் ஏழ்மைக்கு ஒளியேற்றவல்ல...
நீ விடாது பின்தொடரும்
உன் முயற்சியின் பலனுக்கு ஒளியேற்ற...!!!