)திகில் காட்சிகளைக் காட்டி ரசிகர்களை மிரளவைப்பார்கள் என்று நினைத்து தியேட்டருக்குள் போனால், தில்லாலங்கடி காட்சிகளை காட்டி ரசிகர்களை கிரங்கடிக்க வைக்கிறாள் இந்த 'செளந்தர்யா'.
மக்களின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்கள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை மையமாக வைத்து, இளைஞர்களுக்கு ஒரு மெசஜ் சொல்லும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் சந்திரமோகன்.
ஆயுர்வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவளான செளந்தர்யா, வயதான ஒரு பணக்காரருக்கு வைத்தியம் பார்க்க மூன்று மாதம் ஒரு வீட்டில் தங்குகிறார். அந்த வயதானவருடைய உறவினரான ஹீரோ கோவிந்த், செளந்தர்யாவை தனது மொபைல் போனில் தவறாக படம்பிடித்து, தனது நண்பர்களிடம் காண்பிக்கிறார். மேலும் செளந்தர்யா தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் பொய் சொல்கிறார். இதை கேட்ட அவருடைய நண்பர்கள் நான்கு பேரும் செளந்தர்யாவிடம், குடி போதையில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதனால் தற்கொலை செய்துகொள்ளும் செளந்தர்யா, ஆவியாக வந்து அந்த நான்கு இளைஞர்களையும் எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் 'செளர்ந்தர்யா' படத்தின் கதை.
இதில் செளந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்துஷான், மற்றும் ஹீரோவாக நடித்திருக்கும் கோவிந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் புதுமுகங்கள் தான்.
முழுக்க முழுக்க கவர்ச்சியை மட்டுமே நம்பி இப்படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. ஒரு ஆபாச சீரியலைப் பார்ப்பதுபோல இருந்தது இப்படம்.
இசை, ஒளிப்பதிவு என்று அனைத்துமே பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தாலும், ஹீரோயின் ரித்துஷானின் கவர்ச்சி மட்டும் பட்ஜெட்டையும் தாண்டிய சமாச்சாரமாக இருந்தது.
மொத்தத்தில் திகில் படம் என்ற போர்வையில் வெளியாகியிருக்கும் ஒரு ஆவ்.. படம் தான் செளந்தர்யா. (படத்திற்கு ஏ சான்றிதழ் தாங்க கொடுத்திருக்காங்க)
ஜெ.சுகுமார் (டி.என்.எஸ்)