மறக்க முடியாத
ஓர் குரலோசைக்காக
காத்திருக்கையில்...!
ஓர் திடீர் அழைப்பினை ஏற்படுத்தி, மனம்விட்டுப் பேசி,
இன்பமளிக்க மாட்டார்களா?
தூரமாய் ஒதுங்கி மறைந்து,
ஏக்கச் சிறைக்குள்
தள்ளிவிட்டுச் சென்றவர்கள்...!
ஏதேனும் ஓர் தருணத்தில்
மனமாற்றம் பெற்று,
வந்தடைந்து
சேர்ந்து கொள்ள மாட்டார்களா?
சிறு சிறு தவறுக்கெல்லாம் வெறுத்தொதுக்கி நடப்பவர்கள்...! கொஞ்சமேனும்
இயல்புகளை புரிந்து,
அருகாமை உணர்த்த மாட்டார்களா?
என்றோ ரணங்களோடு
விட்டுச் சென்ற உறவொன்று...!
இப்போது ஏற்கத் தயாராக இருக்கையில்,
மீண்டும் வந்து
ஒட்டிக் கொள்ளமாட்டாதா?
என்ற...!
பெருமூச்சோடு,
யாரோ ஒருவருக்கான...!
ஏக்கங்களும், காத்திருப்புக்களும், இவ்வகிலத்தில் இன்னும்
பலர் மனதில்,
எஞ்சிக் கிடக்கத்தான் செய்கிறது.
மழை வேண்டி நிற்கையில்,
சோவெனக் கொட்டித் தீர்த்தல்,
அலாதியாய் மகிழ்ச்சியளிக்குமெனில்...! வேண்டி வேண்டி உருகி
சலித்துப் போய் நிற்கையில்,
அடர்த்தியாய்...!
திடீரென மழை இறங்குகையில்
மட்டற்ற சிலிர்ப்பு கிடைப்பதை, உணர்ந்திருப்போமல்லவா?
அதே காலத்தின் நியதிகள்
என்றேனும் ஓர் நாள்...!
இந்த அப்பிக் கிடக்கும்
ஏக்கங்களுக்கு,
நிவாரணம் வழங்கக் கூடும்.
மனதின் குமுறலை
கேட்கத் தகுதியான,
யாரோ ஒருவரை...!
என்றாவது காண நேரிடலாம்.
அதுவரை...!
மிகப் பிடித்தவராய்
யாரையும் நாம் உணரப் போவதில்லை.
அந்த ஓர் அதிசயம்
நிகழ்த்தப் போகும்...!
ஆசிர்வதிக்கப்பட்ட
உறவுக்கான_வருகையை,
காலம் எப்படியும்
தனக்குள் ஒளித்து வைத்திருக்கும்.
எந்த மழைத்துளி...!
எக்கடலுக்கான
தாகம் தீர்க்கும் காதலி என?
யாருக்குத் தெரியும்?