126. உடலின் இழிவு கண்டும் உலகிற்கு அறிவில்லை
ஒருபாகன் ஊருங் களிறைந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின்--தருகாலால்
பேர்த்தூன்ற லாகாப் பெருந்துன்பங் கண்டாலும்
ஓர்த்தூன்றி நில்லா துலகு.
(பதவுரை) ஒரு பாகன் ஊரும்-மனமாகிய ஒரு பாகன் ஏறிச் செலுத்துகின்ற, களிறு ஐந்தும் நின்ற-ஐந்து புலன்களாகிய யானைகளைந்தும் நின்ற, இருகால்-இரண்டு கால்களோடு கூடிய, நெடுங்குரம்பை - நெடிய உடலானது, வீழின் - வீழ்ந்தால், தருகாலால்-வேறு கால்களால், பேர்த்து ஊன்றலாகா-மீட்டும் நிலைபெறச் செய்யவியலாத, பெருந்துன்பங் கண்டாலும் - மிக்க துன்பச் செயலை நேரில் பார்த்தாலும், உலகு ஓர்த்து ஊன்றி நில்லாது-உலகினர்யாக்கை நிலையாமையை ஆராய்ந்து நன்னெறியில் நிலையாக நில்லார், இஃதென்ன பேதமை?
(குறிப்பு) ஆகா: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். உலகு: இடவாகுபெயர். (126)
------------------------------------------------------------------------------------------------------
127. மக்களின் கடமைகள் இவையென்பது
நீத்தொழிந்த ஆறைந் தடக்கிப்* பின் நிச்சயமே
வாய்த்தமைந்த வாயில்பெண் ஆனையுங்**--கூத்தற்கு
வாளேறோ டோசை விளைநிலம் இவ்வல்லாற்
கேளா யுடன்வருவ தில்.
*அடங்கியபின். **பெண்ணாளையும்.
(பதவுரை) நீத்து-நீந்துதற் றொழிலானது, ஒழிந்த-நீங்கிய, ஆறு-வழியாக நிலை, ஐந்து அடக்கி-தலை கால் முதலிய ஐந்து உறுப்புக்களையும் இடருற்ற காலத்தே ஓட்டினுள் மறைத்துக் கொள்வதாகிய யாமை, பின் நிச்சயமே-பின்பு உறுதியாக, வாய்த்து-பொருந்தி, அமைந்த-திருந்திய, வாயில்-வாசலாகிய கடை;பெண் ஆனையும்-பிடியும், கூத்தற்கு-சிவபெருமானுக்கு, வாள் ஏறு - வாளாயுதம் எறிவதாலுண்டாகிய புண், ஓசை - ஒலிப்பதாகிய இயம்; விளைநிலம்-விளையுங் கழனியாகிய செய்(தலும்) ஆகிய, இவ் அல்லால்-இவ்விரண்டுமன்றி (வேறாக), கேள் ஆய்-உறவாய், உடன் வருவது-மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது, இல்-இல்லையாம்.
(குறிப்பு) ''நிலையாமை கடைப்பிடியும், சிவபுண்ணியஞ் செய்தலுமாகிய இவ் விரண்டும் அன்றி, வேறாக உறவாய் மறுமைக்குத் தொடர்ந்து வரக்கூடியது இல்லையாம்'' எனத்தடித்த எழுத்திலிட்ட மொழிகளைக் கூட்டிக் கருத்தினைக் காண்க. இவை குறிப்பால் பொருள்தரு மொழிகளாம். இவற்றை நன்னூல் சொல்லதிகாரம் பெயரியலில், ''ஒன்றொழி பொதுச்சொல்'' என்ற சூத்திரத்தாற் கொள்க. மூலத்தின்கணுள்ள திருத்தங்களையும் அங்குள்ள விருத்தியுரையாற் காணலாம். (127)
------------------------------------------------------------------------------------------------------
128. நாள் சில; பிணி மூப்பு முதலியன பல
வாழ்நாளிற் பாகம் துயில்நீக்கி மற்றவற்றுள்
வீழ்நா ளிடர்மூப்பு மெய்கொள்ளும்--வாழ்நாளுள்
பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ் வுலகு.
(பதவுரை) வாழ்நாளில் பாகம் துயில் நீக்கி-ஆயுட்காலத்தில் பாதியை உறக்கத்தில் கழித்து, மற்றவற்றின்-மறுபாதியில்,வீழ் நாள் - தளர்கின்ற காலத்தில், இடர்-துன்பத்துக்குக் காரணமாகிய, மூப்பு-கிழத்தன்மையை, மெய்கொள்ளும்- உடல் அடையும், வாழ்நாளுள்-துயிலும் மூப்பும் போக உள்ள வாழ்நாளில், பல் நோய்கவற்ற-பல துன்பங்கள் வருத்த, பரிந்து குறை என்னை - வருத்துவதனாலாங் காரியம் யாது? இவ்வுலகு அன்னோ அளித்து-இவ்வுலக வாழ்க்கை ஐயோ, இரங்கத்தக்கது.
(குறிப்பு) அன்னோ: இரக்கக் குறிப்பிடைச் சொல். 'எவன்' என்னும் வினாவினைக் குறிப்பு 'என்னை' என மருவியது. (128)
---------------------------------------------------------------------------------------------------
129. தவமில் வாழ்வு அவ வாழ்வு
உடம்புங் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும்--அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்.
(பதவுரை) உடம்பும்-உடலும், கிளையும்-சுற்றமும், பொருளும்- செல்வமும், பிறவும்-மனை முதலியனவும், பின்தொடர்ந்து செல்லாமை கண்டும்-தம்மையுடையவன் இறந்தவிடத்து அவனைப் பின்பற்றிச் செல்லாதிருத்தலைப் பார்த்தும், அடங்கி-மனமொழி மெய்களானடங்கி, தவத்தோடு தானம் புரியாது-தவத்தினையும், தானத்தினையுஞ் செய்யாமல், வாழ்வார்-வாழ்கின்றவர்களுக்கு, கழிகின்ற நாள்-கழிகின்ற நாட்கள், அவத்தம்-வீணேயாகும்.
(குறிப்பு) அவம்+அத்து+அம்=அவத்தம்; அத்து: சாரியை; அன்றி, அபத்தம் அவத்தம் என மாறிய வடமொழியாக்கலுமாம். ஓடு; எண்ணுப் பொருளில் வந்தஇடைச்சொல். (129)
--------------------------------------------------------------------------------------------------------
130. இச்சகம் பேசேல்
போற்றியே போற்றியே என்று புதுச்செல்வம்
தோற்றியார் கண்ணெல்லாம் தொண்டேபோல்--ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப(து) எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு.
(பதவுரை) புதுச் செல்வம் தோன்றியார்கண் எல்லாம்-புதிதாகச் செல்வத்தை யடைந்தாரிடத் தெல்லாஞ்சென்று, கொண்டேபோல்-அடிமையைப் போல், போற்றியே போற்றியே யென்று-நீ என்னைக் காத்தல் செய்வாயாக, நீ என்னைக் காத்தல் செய்வாயாக என்று, ஆற்றப் பயிற்றிப் பயிற்றி-மிக பலகாற்சொல்லி, பல உரைப்ப தெல்லாம்-அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாடுவ தெல்லாம், வயிற்றுப் பெருமான் பொருட்டு-வயிறு வளர்த்தற் பொருட்டேயாகும்.
(குறிப்பு) அடுக்குகள் பன்மைகுறித்து நின்றன. வயிற்றுப் பெருமான் என்றது இழிவுப்பொருள் கருதியது.மானிடரைப் புகழ்வது அறமன்று என்றவாறு. (130)