Author Topic: அறநெறிச்சாரம்  (Read 12154 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #30 on: September 18, 2011, 09:37:31 PM »
   
151. உயர்வுக்குந் தாழ்வுக்கும் ஒருவன் செயலே காரணம்


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி


(பதவுரை) தனக்குப் பகைவனும் நட்டானும் தானே-தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானேயாவான், பிறரன்று; தனக்கு மறுமையும் இம்மையும் தானே-தனக்கு மறுமையின்பத்தையும் இம்மை யின்பத்தையும் செய்துகொள்பவனும் தானே, தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால்-தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால், தனக்குக் கரி தானே-தான்செய்த வினைகளுக்குச் சான்றா வானும் தானேயாவன்.

(குறிப்பு) ஏகாரங்கள் பிரிநிலைப் பொருளன; அன்றி, தேற்றமுமாம். உம்மைகள் எண்ணுப்பொருளன. (151)
 
   ----------------------------------------------------------------------------------------------   
     
152. செய்வினையே ஒருவனுக்குச் சிறந்த துணையாம்


செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருளெல்லாம்--மெய்வினவில்
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு.


(பதவுரை) நெஞ்சு-நெஞ்சே!, செய்வினை அல்லால்-நீ செய்த வினை உனக்குத் துணையாவதன்றி, சிறந்தார் பிறரில்லை-சிறந்த துணைவராவர் பிறரிலர், மற்றைப் பொரு ளெல்லாம்-நிலையானவை யென்று நீ கருதுகின்ற மற்றைப் பொருள்களெல்லாம், பொய்வினை-அழியுந் தன்மையனவே, மெய்வினவில்-உண்மையையறிய விரும்பிக் கேட்பாயாயின், தாய் யார் மனைவி யார் தந்தை யார் மக்கள் ஆர் நீ யார்-தாயும் மனைவியும் தந்தையும் மக்களுமாகிய இவர்கள் நின்னோடு எத்தகைய தொடர்பினையுடையார்? நினை-அவர்கள்நிலையான தொடர்புடையவர்களா? என்பதை ஆராய்ந்து அறிவாயாக.

(குறிப்பு) வாழி: முன்னிலையசை: நினை: முன்னிலை யேவலொருமை வினைமுற்று. (152)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
153. உடம்பின் உண்மைநிலை


உயிர்திகிரி யாக உடம்புமண் ணாகச்
செயிர்கொள் வினைகுயவ னாகச்--செயிர்தீர
எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
எண்ணருநோய் துன்பம் அவர்க்கு.


(பதவுரை) செயிர் கொள் வினை-குற்றம் தரும் வினை, குயவன் ஆக-குலாலனாக நின்று, உயிர் திகிரியாக-உயிர்காற்றையே தண்ட சக்கரமாகவு, உடம்பு மண்ணாக-எழுவகைத்தாதுவையே களிமண்ணாகவுங் கொண்டு, செயிர் தீரா-குற்றத்தின் நீங்காத, எண் அரு நல்யாக்கைக் கலம் வனையும்-நினைத்தற்கரிய உடலாகிய பாண்டத்தைச் செய்யும், அதனுள்-அவ்வுடலுள், அவர்க்கு-அதனை யனுபவிக்கும் சீவர்க்கு எண் அரு நோய் துன்பம்-அளவிடற்கரிய கொடிய நோய்கள் பல உளவாம்.

(குறிப்பு) உயிர், உடம்பு, வினை, யாக்கை, நோய் முதலியன திகிரி, மண், குயவன், கலம், துன்பமாக உருவகிக்கப்பட்டுள்ளது. மற்று: அசை நிலை. (153)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
154. மக்களாகப் பிறந்தோர் மறுமையைக் கருதல்வேண்டும்


முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந் தின்புறா* நின்றவர்--இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகற் பாற்று.
*இப்புறத் தின்புறா.


(பதவுரை) முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் - முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக, நல்லதோர் இல்பிறந்து இன்புறா நின்றவர்-உயர்குடியிற் பிறந்து இன்பத்தை நுகர்கின்றவர்கள், இப் பிறப்பே-இம்மை யின்பத்தையே, இன்னும் கருதுமேல்-இன்னமும் கருதி முயல்வாராயின், ஏதம்-மறுமையில் உறுவது துன்பமேயாகும்; (ஆதலால்) கடிந்து-இம்மையின்பத்தில் செல்லுங் கருத்தை ஒழித்து, அறத்தை முன்னி முயன்று ஒழுகற்பாற்று-மறுமை யின்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைக் கருதி முயன்று செய்தலே தக்கது.

(குறிப்பு) இன்: ஐந்தனுருபு; ஏதுப்பொருளது. ஆநின்று: நிகழ்கால இடைநிலை. ''இற்பிறந் தின்புறா நின்றவ ரிற்பிறப்பே''என்றும் பாடம். (154)
 
      --------------------------------------------------------------------------------------------
     
155. மறுமையறஞ் செய்யார் மாமூட ராவர்

அம்மைத்தாஞ் செய்த அறத்தினை வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர்--உம்மைக்(கு)
அறம்செய்யா(து) ஐம்புலனும் ஆற்றல் நல்லாக்
கறந்துண்பஃ தோம்பாமை யாம்.


(பதவுரை) அம்மை-முற்பிறப்பில், தாம் செய்த அறத்தின் வரு பயனை-தாம் செய்த அறங் காரணமாக வரும் இன்பத்தை, இம்மை-இப்பிறப்பில், துய்த்து-நுகர்ந்து, இன்புறா நின்றவர்-மகிழ்கின்றவர்கள், உம்மைக்கு-மறுமையின்பத்தின் பொருட்டு, அறஞ்செய்யாது-அறத்தினைச் செய்யாமல், ஐம்புலனு மாற்றுதல்-ஐம்பொறிகளாலும் நுகரப்படு மின்பங்களை நுகர்ந்துகொண்டு வாளா இருத்தல், நல் ஆ-நல்ல பசுவினை, கறந்து-பாலைக் கறந்து, உண்டு-மகிழ்ச்சியோடு பருகி, அஃது ஓம்பாமை ஆம்-பின் பசுவை உணவிட்டுக் காவாதிருத்தல் போலாம்.

(குறிப்பு) வருபயன்: வினைத்தொகை. ஓம்பாமை: மையீற்றுத் தொழிற்பெயர். (155)
 
     
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #31 on: September 18, 2011, 09:48:30 PM »
   
156. நல்வினை தீவினைகளே ஒருவரின் நற்பிறப்புத்
தீப்பிறப்புக்குக் காரணம்



இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக--பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து)
எய்தும் வினையின் பயன்.



(பதவுரை) தாம்-மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும், இறந்த பிறப்பில்-முற்பிறப்பில், செய்த வினையை-செய்த நல்வினை தீவினைகளை, பிறந்த பிறப்பாலறிக-பிறந்த இப் பிறவியில் அடைகின்ற இன்ப துன்பங்களால் அறிவார்களாக, இனிப் பிறந்து எய்தும் வினையின் பயன்-இனி வறுமையில் அடையும் இன்ப துன்பங்களையும், பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக-இம்மையில் தாம் பிறந்து செய்யும் நல்வினை தீவினைகளால் அறிவார்களாக.

(குறிப்பு) அறிக: வியங்கோள் வினைமுற்று. (156)
 
      ------------------------------------------------------------------------------------------------
     
157. வீடுறாப் பிறவி விழற்கிறைத்த நீரே


தாய்தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தா
ராய்வந்து தோன்றி அருவினையால்--மாய்வதன்கண்
மேலைப் பிறப்பும் இதுவானால் மற்றென்னை?
கூலிக் கழுத குறை.


(பதவுரை) அருவினையால்-மக்கள் வேறொரு தொடர்பு மின்றித் தத்தம் வினைகாரணமாக, தாய் தந்தை மக்கள் உடன்பிறந்தார் சுற்றத்தாராய் வந்து தோன்றி-(உலகிடைத் தம்முள்) தாயுந் தந்தையும் மக்களும் உடன் பிறந்தாரும் சுற்றத்தாருமாக வந்து பிறந்து, மாய்வதன்கண்-வீடுபேற்றினையடைய முயலாமல் தம்முட் சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்து, மேலைப் பிறப்பும் இதுவானால்-வரும் பிறப்பிலும்அவர் மீண்டும் அங்ஙனம் தோன்றி அவருள் வேறு சிலர் வருந்தச் சிலர் மரணமடைந்தால், கூலிக்கழுத குறை-அவர் வாழ்க்கை ஒருவர்க்கொருவர் கூலியின் பொருட்டு அழுத காரியமாக முடியுமேயன்றி, மற்று என்னை-அதனாலாகும் பயன் வேறு யாது?

(குறிப்பு) மற்று: பிறிது என்னும் பொருளது. (157)
 
     
     -----------------------------------------------------------------------------------------------

158. மாறில்லா மனையறம் தவத்தினும் மாண்டதாம்


வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றான்
மனைவாழ்க்கை நன்று தவத்தின்--புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லன் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லா னெனில்.


(பதவுரை) வினை காத்து-தீவினைகளை விலக்கி, வந்த விருந்து ஓம்பி-தன்பால் வந்த விருந்தினரைப் பேணி, நின்றான்-வரும் விருந்தை எதிர்நோக்கி நிற்பவனது, மனைவாழ்க்கை தவத்தின் நன்று-இல்வாழ்க்கை தவத்தினும் சிறந்ததாகும், புனைகோதை-அழகிய கூந்தலையும், மெல் இயல்-மெல்லிய இயலையுமுடைய, நல்லாளும்-பெண்ணும், விருந்து ஓம்பி-வந்த விருந்தினரைப் பேணி, சொல் - கணவன் சொல்லுக்கு, எதிர் சொல்லாள் எனில்-மாறுபாடாக எதிர்த்தொன்றும் சொல்லா திருப்பாளாயின், நல்லள் - சிறந்தவளே யாவள்.

(குறிப்பு) நின்றான், நல்லாள்:வினையாலணையும் பெயர்கள். கோதை-கூந்தல்; பெண்மயிர்; அன்றிப் பூமாலை யெனினுமாம். (158)
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
159. மனைவியாவாட்குரிய நற்குணங்கள்


கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை--விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போ டுணர்வுடையாள் பெண்.



(பதவுரை) கொண்டாள் குறிப்பு ஒழுகல்-கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், கூறிய நாணுடைமை-மகளிர்க்குக் கூறிய நாணினையுடைமையும், கண்டதுகண்டு விழையாமை-எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், விண்டு வெறுப்பன செய்யாமை-கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையுமாகிய, (இவற்றை) வெஃகாமை-விரும்பாமையாகிய தீக்குணத்தினை, நீக்கி-விலக்கி (அஃதாவது விரும்பி மேற்கொள்ளுதலோடு), உறுப்போடு உணர்வுடையாள் பெண்-உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.

(குறிப்பு) கொண்டான்-மனையின் வாழ்க்கைப் பொறுப்பை மேற்கொண்டவன் (கணவன்): வினையாலணையும் பெயர். (159)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
160. நற்பெண்டிர் இவரென்பது


மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லாருஞ் செய்வர்--படைத்ததனால்
இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிரென் பார்.


(பதவுரை) மடப்பதூஉம்-இளமைப் பருவமாகிய மங்கைப் பருவத்தை யடைதலும், மக்கட் பெறுவதூஉம்-புதல்வர்களைப் பெறுதலும், பெண்பால் முடிப்பதூஉம்-பெண்களுக்குரிய அணிகலன்களை அணிந்துகொள்ளுதலுமாகிய இவற்றை, எல்லாரும் செய்வர்-எல்லா மகளிருஞ் செய்வர்; படைத்ததனால் - பெற்ற பொருள் சிறிதேயாயினும் அதனால், இட்டு- இரப்பார்க்கு இட்டு, தாம் உண்டு-தாமும் உண்டு, இல் வாழ்க்கை புரிந்து - மனை வாழ்க்கைக்குரிய மற்றைய கடன்களையும் விரும்பிச் செய்து, நல் அறத்தே நிற்பாரே-கற்பு நெறியின் வழுவாது நிற்பவர்களே, பெண்டிர் என்பார்-பெண்டிரென்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்.

(குறிப்பு) மடப்பதூஉம், பெறுவதூஉம், முடிப்பதூஉம்:இன்னிசை யளபெடைகள். ஏ: முன்னது ஈற்றிசை; பின்னது பிரிநிலை. (160)  
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #32 on: September 18, 2011, 09:56:20 PM »
   
161. கொண்டாள் தன்னைக் கொண்டாடும் வழி


வழிபா டுடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங்--கெதிருரையா(து)
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து.



(பதவுரை) வழிபாடு உடையாளாய் வாழ்க்கை நடாஅய்-கணவன் கொள்கையைப் பின்பற்றி வாழ்க்கையினை நடத்தி, சொல்லிற்று முனியாது செய்து-அவன் உரைத்ததை வெறுப்பின்றிச் செய்து, எதிர் உரையாது-வெகுண்டு உரைத்தவிடத்தும் எதிர்த்துக் கூறாமல், ஏத்திப் பணியுமேல்-புகழ்ந்து வணங்குவாளாயின், இல்லாளை-மனைவியை, ஆண்மகன்-கணவன், புரிந்து-விரும்பி, போற்றிப் புனையும்-காத்தல் செய்வான்.

(குறிப்பு) நடாஅய்: இசைநிறை யளபெடை, ஆங்கு:அசை நிலை. (161)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
162. கற்பிற்கிழுக்கான காரியங்கள்


தலைமகனில் தீர்ந்துரைதல் தான்பிறரில் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல்--கலனணிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோளழியு மாறு.


(பதவுரை) தலைமகனில் தீர்ந்து உறைதல்-கணவனின் நீங்கி வாழ்தலும், தான் பிறர் இல் சேர்தல்-அடிக்கடி அயலார் வீடுகளைத் தானே அடைதலும், நிலைமை இல் தீப்பெண்டிர்ச் சேர்தல்-நெறியில் நீங்கிய தீய மகளிரைச் சேர்ந்து பழகுதலும், கலன் அணிந்து வேற்றூர் புகுதல்-அணிகளை அணிந்து கொண்டு அயலூரைத் தனியே அடைதலும், விழாக்காண்டல்-தனியே சென்று திருவிழாக் காண்டலும், நோன்பிடுதல்-கணவன் கட்டளையின்றி விரதம் இருத்தலுமாகிய இவை, கோல் தொடியாள் கோள் அழியும் ஆறு-திரண்ட வளையலணிந்த பெண்ணினுடைய கற்பழிதற்குரிய வழிகளாம்.

(குறிப்பு) இல்: முன்னது ஐந்தனுருபு; நீக்கப்பொருள்; இரண்டாவது, வீடு என்னும் பொருளது; மூன்றாவது இன்மைப் பொருளது. (162)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
163. கற்பில் மகளிர் கணவர்க்குக் கூற்றுவர்


அயலூ ரவன்போக அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ஆர எழுதிப்--புயலைம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று.


(பதவுரை) அவன் அயலூர் போக-கணவன் வேற்றூரை யடைந்த சமயம் பார்த்து, அம் மஞ்சள் ஆடி-அழகினைத் தரும் மஞ்சளைப் பூசிக் குளித்து, கயல் ஏர் கண் ஆர எழுதி-கெண்டைமீனையொத்த கண்களுக்கு அழகு பெற மையெழுதி, புயல் ஐம்பால் வண்டோச்சி நின்று உலாம்-கரிய மேகம் போன்ற கூந்தலில் அணிந்த மயிரிலுள்ள தேனை உண்ணவரும் வண்டுகளை ஓட்டிக்கொண்டு வெளியில் நின்று உலாவுகின்ற, வாள் ஏர் தடங்கண்ணாள்-வாள் போன்ற பெரிய கண்களையுடையவள், தண்டு ஓச்சிப் பின் செல்லும் கூற்று-கதாயுதத்தினை ஓங்கிக்கொண்டு அவனறியாவண்ணம் தன்னைக் கொண்டானது பின்சென்று தாக்குகின்ற கூற்றேயாவள்.

(குறிப்பு) ஏர்: உவமவுருபு, ஐம்பால் கூந்தல்: குழல்கொண்டை, சுருள், பனிச்சை, முடி என ஐவகையாக முடிக்கப்படுதலின். (163)
 
     -----------------------------------------------------------------------------------------------------
     
164. இணைபிரியாக் காதலே இல்வாழ்க்கைக் குயிராம்


மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால்--ஒருவரால்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று.



(பதவுரை) மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும்-ஒத்த அன்பினையுடைய மனைவியும் கணவனுமாகிய இருவரும், பூண்டு-மேற்கொண்டு, உய்ப்பின் அல்லால்-செலுத்தினாலன்றி, ஒருவரால்-அவ்விருவருள் ஒருவரால், இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம்-இல்வாழ்க்கையாகிய அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின், தெற்றிற்று நின்று செல்லாது-செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும்.

(குறிப்பு) சகடம்-சகடுகளையுடையது: காரணப் பெயர். சகடு-சக்கரம். (164)
 
      ----------------------------------------------------------------------------------------------
     
165. இல்லறத்தான் இயல்புகள்


பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ--நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு.


(பதவுரை) பிச்சையும் ஐயமும் இட்டு-இரந்தார்க்கும் துறந்தார்க்கும் வேண்டுவனவற்றை ஈந்து, பிறன் தாரம் நிச்சலும் நோக்காது-அயலான் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் ஒரீஇ-பொய்பேசாது, நிச்சலும் கொல்லாமை காத்து-கொலைத்தொழிலை எஞ்ஞான்றும் செய்யாது, கொடுத்து உண்டு வாழ்வதே-விருந்தினரை உண்பித்துத் தாமும் உண்டு வாழ்தலே, இல்வாழ்க்கை இயல்பு என்னும்-இல்வாழ்க்கைக்குரிய இயல்பு என்று நூல்கள் கூறும்.

(குறிப்பு) பிச்சை-இரப்போர்க்கிடுவது, ஐயம்-அறவோர்க்கிடுவது. ஒரீஇ: சொல்லிசையளபெடை. நிச்சல்-நித்தல்; தகர சகரப்போலி. (165)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #33 on: September 18, 2011, 10:03:30 PM »
   
166. இல்லறத்தானாகான் இயல்புகள்


விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான்--பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல்
இல்வாழ்க்க்கை யென்ப திருள்.



(பதவுரை) விருந்து புறந்தரான்-தன்பால் வந்த விருந்தினரை யோம்பாமலும், வேளாண்மை செய்யான்-இரப்பார்க்கு ஒன்று ஈயாமலும், பெருந்தக்கவரையும் பேணான்-பெருமையிற் சிறந்தோரையும் மதியாமலும், பிரிந்துபோய்க் கல்லான்-மனைவி மக்களைப் பிரிந்து சென்று அறிவு நூல்களைக் கல்லாமலும், கடுவினை மேற்கொண்டு ஒழுகுமேல்-தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின், இல்வாழ்க்கை என்பது இருள்-அவனால் நடத்தப்பெறும் மனைவாழ்க்கை அவனுக்கு நரகமேயாகும்.

(குறிப்பு) புறந்தரான், செய்யான்,பேணான்,கல்லான்,என்பன முற்றெச்சங்கள்; எண்ணும்மைகள் தொக்கன. ஒருவன் என்னும் எழுவாயினை வருவிக்க. (166)
 
      -------------------------------------------------------------------------------------------------------
     
167. செயலற்றார்க்குச் செய்யும் அறமே சிறப்பானதாம்


அட்டுண்டு வாழ்வார்க் கதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர்--அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை.



(பதவுரை) அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழ்கின்ற இல்லறத் தார்க்கு, அதிதிகள்-விருந்தினராவார், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அட்டு உண்ணா மாட்சி உடையவர்-சமைத்து உண்ணாத பெருமையினையுடைய துறவறத்தினரே யாவர், அட்டு உண்டு வாழ்வார்க்கு-சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, வாழ்வார்-அவ்வாறு வாழும் இல்லறத்தார், அதிதிகள் என்று உரைத்தல்-விருந்தினராவர் என்று சொல்லுதல், வீழ்வார்க்கு-மலையுச்சியினின்றும் நிலமிசை வீழ்வார்க்கு, வீழ்வார்-அங்ஙனம் வீழா நின்றவர், துணை-துணையாவரென்று கருதுதல் போலாம்.

(குறிப்பு) அட்டுண்ணா மாட்சி-சமைத்தற்கியலாநிலை எனினுமாம். (167)
 
      -----------------------------------------------------------------------------------------------
     
168. கொடுத்துண்டு வாழ்தலே குறையா வாழ்க்கையாம்


நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று.



(பதவுரை) நொறுங்கு பெய்து ஆக்கிய கூழ் ஆர உண்டு-நொய்யாற் சமைத்த கூழினை வயிறார வுண்டு, பிறங்கு இருகோட்டொடு பன்றியும் வாழும்-விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும், அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை-ஆதலால் அறத்தினைச் செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும், மற்றெல்லாம்-அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம், வெறும் பேழை தாழ்க்கொளீஇயற்று-தன்னகத்தொன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டிவைத்தல் போலாம்.

(குறிப்பு) பன்றியும்-உம்மை: இழிவு சிறப்பு. ஏ: பிரிநிலை. மற்று: பிறிது என்னும் பொருளது. கொளீஇ: சொல்லிசையளபெடை. (168)
 
   ------------------------------------------------------------------------------------------------------   
     
169. உடலும் பொருளும் பிறர்க்குதவவே உண்டாயின


உப்புக் குவட்டின் மிசையிருந்(து) உண்ணினும்
இட்டுணாக் காலத்துக் கூராதாம்--தொக்க
உடம்பும் பொருளும் உடையானோர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்


(பதவுரை) உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும்-குன்று போன்ற உப்புக் குவியலின்மீது ஒருவன் அமர்ந்து உணவினை உண்டாலும், இட்டு உணாக்காலத்து கூராது-அவுணவில் உப்பினை இடாது உண்பானாயின் அதன் சுவை உணவில் பொருந்தாது, தொக்க உடம்பும் பொருளும் உடையான்-எழுவகைத் தாதுக்களும் கூடிய உடம்பினையும் செல்வத்தினையும் உடையான், ஓர் நன்மை தொடங்காக்கால்-ஒப்பற்ற அறத்தினை தொடங்கிச் செய்யானாயின், என்ன பயன்-அவற்றால் அவன் ஒரு பயனையும் அடையான்.

(குறிப்பு) கூர்தல்-மிகுதல், நிறைதல். உண்ணினும்: உம்மை உயர்வு சிறப்புப்பொருளது. ஆம்: அசைநிலை. (169)
 
   ---------------------------------------------------------------------------------------------------------   
     
170. கிடைத்தவற்றில் சிறிதினை அவ்வப்பொழுது எளியார்க்குதவுக


பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்(று)
இற்றைநாள் ஈத்துண் டினிதொழுகல்--சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முதனின் றிடைதெரியுங் கால்.


(பதவுரை) நெஞ்சே! பெற்றநாள் பெற்றநாள்-செல்வத்தினை யடையுந்தோறும், பெற்றதனுள்-பெற்ற அச் செல்வத்தில், ஆற்றுவது-செய்வதற்குரிய, ஒன்று-அறத்தினை, இற்றை நாள்-இப்பொழுதே செய்வோமென்று கருதி, ஈத்து-இரப்பவர்க்குக் கொடுத்து, உண்டு-நீயும் உண்டு, இனிது ஒழுகல்-இனிமை பயக்கும் நன்னெறிக்கண் நின்று ஒழுகுவாயாக, அதனை-அவ்வறஞ் செய்தற்குரிய வழியை, முதல்நின்று இடை தெரியுங்கால்-முதலிலிருந்து முழுவதும் ஆராயுமிடத்து, சுற்றும்-எவ்விடத்தும், இதனில்-இதைக் காட்டினும், இலேசு உடை காணோம்-எளியது வேறொன்றும் இல்லை.

(குறிப்பு) பெற்றநாள் பெற்றநாள்: அடுக்குத்தொடர்: பன்மைப்பொருளது. ஒழுகல்: அல்லீற்று வியங்கோள். (170)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #34 on: September 18, 2011, 10:15:05 PM »
   
171. முன் கொடுத்தலால் வந்த செல்வத்தை மேலுங் கொடாதிருப்பது மூடத்தனம்


கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங் கொடாது
விடுத்துத்தம் வீறழிதல் கண்டார்--கொடுப்பதன்கண்
ஆற்ற முடியா தெனினுந்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார்.


(பதவுரை) கொடுத்து-தாம் முற்பிறப்பில் செல்வம் பெற்ற காலத்து வறியோர்க்கு வழங்கியதால், அறம் கொணர்ந்த செல்வம் கொடாது விடுத்து-(விளைந்த) அறம் கொண்டுவந்து கொடுத்த செல்வத்தினை வறியோர்க்குக் கொடாது விடுத்து, தம் வீறு அழிதல் கண்டார்-தம் பெருமை யழிகின்ற பிறரைக் கண்ட பெரியார், கொடுப்பதன்கண் ஆற்ற முடியாதெனினும்-வறுமையால் இரந்தோர்க்கு வள்ளன்மையோடு மிகுதியும் வழங்கமுடியாதெனினும், தாம் ஆற்றுவார்-தம்செல்வநிலைக்கேற்றவாறு கொடுத்துதவுவார், மாற்றார்- இரந்தவர்கட்கு இல்லை என்று கூறார், மறுமை காண்பார் - மறுமையின்பத்தை யடையுமவர்.

(குறிப்பு) கொணர்தல்-கொண்டுவருதல்; கொணா: பகுதி வீறு-மற்றொன்றற் கில்லாச் சிறப்பு. கொணர்ந்த+அறம்=கொணர்ந்தறம்: அகரந் தொகுத்தல். 'அறங் கொணர்ந்த செல்வம்' என பிரித்துக் கூட்டுக. (171)

 
      --------------------------------------------------------------------------------------------------
     
172. பகுத்துண்டு வாழல் பருவுடம்பின் பயன்

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறிந்து
விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம்--ஒட்டிக்
கலாய்க்கொடுமை செய்யாது கண்டதுபாத் துண்டல்
புலாற்குடிலா லாய பயன்.


(பதவுரை) பட்டார்ப்படுத்து-முற்பிறப்பில் அறம் செய்யாது குறைந்த வாழ் நாளை இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், படாதார்க்கு வாட்செறிந்து -முன்னை அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு அவர்க்கு முன் தன் வாளையுறையுள் புதைத்து அவரைக் கொல்லாது, விட்டு-விடுதலை செய்து, ஒழிவதல்லால் - செல்வதல்லாமல், அவ்வெங்கூற்றம்-கொடிய யமன், ஒட்டிக் கலாய்க் கொடுமை செய்யாது-தன்மனம் சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு துன்பம் செய்யான்; ஆதலால், கண்டது பாத்துண்டல்-ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலால் குடிலாலாய பயன் - புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.

(குறிப்பு) புலால்-இறைச்சி. பாத்து-பகுத்து; பிரித்து. (172)
 
---------------------------------------------------------------------------------------------------------     
     
173. அறிவிலார்க்குரிய ஐந்தும், அறிவுடையார்க்குரிய ஐந்தும்



தண்டாமம் பொய்வெகுளி பொச்சாப் பழுக்காறென்(று)
ஐந்தே கெடுவார்க் கியல்பென்ப--பண்பாளா!
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொற்கற்
றாய்தல் அறிவார் தொழில்.


(பதவுரை) பண்பாளா-நற்குணமுடையாய்!, தண்டாமம்-(பெரியோர்களைப் பணியாமைக்குஞ் செய்யத் தகுவனவற்றைச் செய்யாமைக்கும் காரணமாகிய) நன்மையின் நீங்கிய மானமும், பொய்-பொய்யே பேசுதலும்,வெகுளி-கோபித்தலும், பொச்சாப்பு-மறத்தலும், அழுக்காறு - பொறாமையும், என்ற ஐந்து-என்று சொல்லப்படுகிற ஐந்தும்,கெடுவார்க்கு இயல்பு என்ப-அழிகின்றவர்களுக்கு உரிய குணங்களாகுமெனவும், ஈதல்-இரப்ப வர் குறிப்பறிந்து ஈதலும், அறிதல்-நல்லனவற்றை ஆராய்ந்தறிதலும், இயற்றுதல்- அறிந்தவற்றைச் சோர்வின்றிச் செய்தலும், இன்சொல்-யாவர்மாட்டும் இன்சொல் சொல்லுதலும், கற்றுஆய்தல்-அறிவு நூல்களைக் கற்று ஆராய்தலுமாகிய இவ்வைந்தும், அறிவார் தொழில் என்ப-அறிவுடையோர் தொழில்களாகுமெனவுங் கூறுவர் பெரியோர

(குறிப்பு) என்றைந்து: அகரந் தொகுத்தல். ஏ: பிரிநிலை. என்ப: பலர்பால் எதிர்கால வினைமுற்று. ப: பலர்பால் விகுதி. (173)
 
    -------------------------------------------------------------------------------------------------------- 
     
174. துறவிகளை யுண்பிப்பதே தூய அறமாம்


நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்தாற்றி னாரும் உயப்போவார்--நீத்தாற்றிற்
பெற்றிப் புணையன்னார் பேர்த்துண்ணா விட்டக்கால்
எற்றான் உயப்போம் உலகு.


(பதவுரை) நீத்து ஆற்றின் நின்ற நிலையினோர் - பற்றுவிட்டுத் துறவற நெறிக்கண்ஒழுகும் பெரியோர், உண்டக்கால்-உண்பாராயின், ஈத்து ஆற்றினாரும் - அவர்களை உண்பித்து அந் நெறியிடை வழுவாமல் செலுத்தினோரும்; உயப்போவார்-பிறவிப்பிணியின் நீங்கப் பெறுவர், நீத்த ஆற்றின்-தமது துறவொழுக் கத்தால், புணை அன்ன பெற்றியார்-ஏனையோரையும் பிறவிக் கடலினின்று கரையேற்றவல்ல, புணைபோலுந் தன்மையையுற்ற அவர், பேர்த்து-தமது இருக்கையினின்றும் பேர்ந்து, உண்ணா விட்டக்கால்-உண்ணாதொழியின், உலகு என்றான் உயப்போம்-இல்லறநெறியிடைப்பட்ட உலகினர் அக் கடலின் றெங்ஙனம் கரையேறுவர்?

(குறிப்பு) உண்டக்கால்: கால் ஈற்று வினையெச்சம். உலகு: இடவாகு பெயராய் உலகினரை யுணர்த்தியது. ஈந்து: ஈத்து; வலித்தல் விகாரம். (174)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
175. தீயோரை யுண்பிப்பது தீங்காம்


கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்த்தார் உண்ணிற் பெறலாம்--கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு.


(பதவுரை) குணமுடையார்-துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய குணங்களையுடையார், கொடுத்தாரை-தமக்கு உண்டி முதலியன உதவினாரையும், கொண்டு உய்யப்போவார்-பிறவிப் பிணியின் நீக்கத் தாமும் நீங்குவர், அல்லாதார்-அக்குணங்களில்லாதவர்கள், உண்டு-பிறர் கொடுப்பதை உண்டு ஈத்து கிழக்கு வீழ்வார்-தம்மை உண்பித்தாரையும் இழுத்துச்சென்று நரகிடை வீழ்த்துத் தாமும் வீழ்வர்; (ஆதலால்) கொடுத்து உய்யப்போமாறு கொள்வான்-இல்லற நெறிக்கண் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடையக் கருதுகின்றவன், குணத்தில் வடுத்தீர்ந்தார் உண்ணில் பெறலாம்-குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை ஊட்டின் அதனை அடையலாம்.

(குறிப்பு) கிழக்கு-பள்ளம்; ஈண்டு நரகம். ஈர்த்து என்பது ஈத்து என இடைக் குறைந்து. (175)
 
     
 
« Last Edit: September 18, 2011, 10:16:40 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #35 on: September 18, 2011, 10:25:46 PM »
   
176. மூவகை ஈகை


அடங்கினார்க் கீதல் தலையே அடங்கா(து)
அடங்கினார்க் கீதல் இடையே--நுடங்கிடையாய்!
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃதென்ப
தோற்பாவைக் கூத்தினுள் போர்.



(பதவுரை) நுடங்கு இடையாய்-துவளுகின்ற இடையினையுடைய பெண்ணே!, அடங்கினார்க்கீதல் தலை-கொடுப்போர் பணிவுடன் மனம் பொறி வழி போகாது அடங்கினவர்களுக்கு உண்டி முதலியன உதவுதல் தலையாய அறம், அடங்காது அடங்கினார்க் கீதல் இடை-அங்ஙனம் அவர் பணியாது அடங்கின வர்களுக்கு ஈவது இடையாய அறம், ஏற்பானும் தானும் அடங்காக்கால்-தானும் அடங்காது அடங்காதவனுக்கு ஈயின், அஃது-அவ் வீகை, கூத்தினுள் தோற்பாவைப் போர் என்ப-நாடக மேடையில் தோலாற் செய்த பொம்மைகள் ஒன்றோடொன்று போர்புரிதலை யொக்கும் என்று கூறுவர் பெரியோர்.

(குறிப்பு) அடங்காதார் அடங்காதார்க் கீதல் கடை என்ப. இது தோற்பாவைப் போர் எனப்பட்டது. ஏ:முன்னது சிறப்புப் பொருளது; பின்னது தெரிநிலைப் பொருளது. முதலடி ஐஞ்சீர் பெற்றுள்ளது. (176)
 
  ------------------------------------------------------------------------------------------------------   
     
177. ஊண் கொடையே உயர்ந்த கொடையாம்


வாழ்நா ளுடம்பு வலிவனப்புச் செல்கதியும்
தூமாண் நினைவொழுக்கங் காட்சியும்--தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
ஒன்றுங் கொடையொப்ப நில்.


(பதவுரை) மாண்ட உண்டி கொடுத்தான் - மாட்சிமைப்பட்ட உணவினைக் கொடுத்தவன், வாழ்நாள் உடம்புவலி வனப்பு செல்கதி தூமாண் நினைவு ஒழுக்கம் காட்சி கொடுத்தலால்-ஆயுள் உடல்வலிமை அழகு மறுமைப்பயன் தூயசிறந்த எண்ணம் ஒழுக்கம் நற்காட்சி முதலியவற்றையும் அவ் வுணவு வாயிலாகக் கொடுப்பதால், ஊண் கொடையொடு ஒப்பது கொடை ஒன்றும் இல்-பசித்தவர்கட்கு உணவு கொடுத்தலோடு ஒத்த கொடை வேறொன்றும் இல்லை.

(குறிப்பு) 'உண்டி முதற்றே உணவின் பிண்டம்,' என்ற புறநானூற்றடி யீண்டு நோக்கற்பாலது. மாண்ட-மாண்: பகுதி. முதலிரண்டடிகளில் வரும் உம் இரண்டும் பெயர்ச் செவ்வெண்- உண்ணப்படுவது ஊண். (177)
 
    ------------------------------------------------------------------------------------------------------- 
     
178. கொடுப்பவர் கொடையினும் இரப்பவர் கொடை யேற்றமாம்


பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை- இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்த லால்.



(பதவுரை) இரப்பவர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்தலால்-இரப்பவர் இம்மையிற் புகழையும் மறுமையில் இன்பத்தையும் ஈவோருக்கு உதவுதலால், பரப்பு நீர் வையத்துப் பல்லுயிர்கட்கெல்லாம்-கடல் சூழ்ந்த உலகில்உள்ள எல்லா மக்களுயிர்கட்கும், இரப்பாரின் வள்ளல் களுமில்லை-இரப்பார் போன்ற சிறந்த வள்ளல்கள் பிறரிலர்.

(குறிப்பு) இரப்பாரின்: இன் உருபு, ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள். (178)
 
      --------------------------------------------------------------------------------------------------
     
179. செல்வர்கள் செய்ய வேண்டுவன


செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு--நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு.


(பதவுரை) செல்வத்தைப் பெற்றார்-பொருளையடைந்தவர்கள், சினங்கடிந்து-வெகுளியினீங்கி, செவ்வியராய்-காண்டற்கு எளியராய், பல்கிளையும் வாடாமல்-சுற்றத்தார் பலரும் வறுமையால் வாடாவண்ணம், பாத்து உண்டு-அவர்கட்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு, நல்ல ஆம்-இம்மை வறுமைப் பயன்களை யடைவிக்கின்ற, தானம் மறவாத தன்மையரேல்-அறத்தினையும் மறவாது செய்யுந்தன்மையராயின், அஃது வானகத்து வைப்பதோர் வைப்பு என்பர்-அத்தன்மையைமேலுலகத்தில் தமக்கு உதவுமாறு வைக்கின்ற ஒப்பற்றசேமநிதி என்று பெரியோர் கூறுவர்.

(குறிப்பு) வைப்பு-பாதுகாப்பாக வைக்கப்படுவது, பொருள் முதலியன. பாத்து பகுத்து: மரூஉ. (179)

---------------------------------------------------------------------------------------------------
     
180. தானஞ் செய்வார்க்கு வானம் வழி திறக்கும்


ஒன்றாக நல்ல(து) உயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல்--என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து.



(பதவுரை) ஒன்றாக நல்லது உயிரோம்பல்-அறங்களுள் தன்னோடொப்ப தின்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்-அதனையடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன்-இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி யடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது-வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

(குறிப்பு) என்றிரண்டு: அகரந்தொகுத்தல். வருகென்று: அதுவுமது. குன்றா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (180)
 
     
     

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #36 on: September 18, 2011, 10:38:11 PM »
 
181. தன்னைப் போற்றுவதும் தனிப்பெரும் ஈகையே


சோரப் பசிக்குமேல் சோற்றூர்திப் பாகன்மற்(று)
ஈரப் படினும் அதுவூரான்--ஆரக்
கொடுத்துக் குறைகொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல.



(பதவுரை) சோற்றூர்திப் பாகன் சோராப் பசிக்குமேல் ஈரப்படினும் அது ஊரான்-உணவால் நிலைபெறும் உடலாகிய ஊர்தியைச் செலுத்தும் உயிராகிய பாகன் மிக்க பசியை அடையுமாயின் வாளால் அறுப்பினும் அதனைச் செலுத்தான், அதனால் முடிக்கும் கருமம் பல-அவ்வுடலால் செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் பல இருப்பதால், ஆரக் கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும்-அவ்வுடலைத் தொழிற்படுத்தற் கேற்ற நிலைமையில் உண்பித்துக் காரியங்களை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

(குறிப்பு) சோர-சோரும்படி: வினையெச்சம். சோர்தல்-தளர்தல். சோற்றூர்தி-உடல். மற்று: அசைநிலை. (181)
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
182. ஈகையைப்போன்று மறுமைக்கேற்றது எதுவுமில்லை


ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி--மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடமை
பற்று விடுதல் இலர்.
[/color]

(பதவுரை) தம் உடைமை உலகத்தில் யாவரும் கொள்ளாதவாறு - தமது பொருளை உலகில் மற்றை யாவரும் கவரா வண்ணம் காக்கவல்லதும், மேவ அரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுது-அப் பொருளை அடைதற்கரிய மறுபிறவியைத் தாம் அடையுங்காலத்தும் அதனைத் தம்பால் அடைவிக்க வல்லதும், எண்ணி ஓர்ந்து-அறமே என்பதனை ஆராய்ந்தறிந்து, பற்றுவிடுதல் இலர்-அப் பொருளின்கண் வைத்த பற்று நீங்காராய் ஈதலால், ஈவாரின் உலோபர் இல்லை-இரப்பவருக்கு அவர் வேண்டுவதை ஈவார் போன்ற கடும் பற்றுள்ளம் உடையார் வேறு இலர்.


(குறிப்பு) மேலரிய: அகரந்தொக்கது. எண்ணி ஓர்ந்து என்ற வினை யெச்சங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு ஆராய்ந்தறிந்து எனப்பொருள்பட்டன. ஈகையின் சிறப்பினை உயர்த்துக் கூறுவான்,“ஈவாரின் உலோபர் இலர்” என்றார். (182)
 
     ------------------------------------------------------------------------------------------------
     
183. உலோபி தடியடிக் குதவுவன்


இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார்--நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து.



(பதவுரை) பட்ட-தம்பால் உள்ள பொருள்களை, ஈண்டும் இட்டக் கடைத்தரார்-நெருங்கிய நட்பினர்களுக்கும் கொடாமலும், பலிமரீஇ வழங்காத பான்மையார்-பிச்சை யேற்று வாழ்வோருக்கும் ஈயாமலும் வாழும் உலோப குணமுடையார், நட்ட சுரிகையாற்கானும்-உடைவாளால் தம்மைத் தாக்க வருபவனுக்கும், சுலாக்கோலாற்கானும்- தடியைச் சுழற்றிக்கொண்டு அடிக்க வருபவனுக்கும், ஆபோல் சுரந்து சொரிவது ஆம்-பசு கறப்பவனுக்குத் தனது பாலைச் சுரந்து கொடுத்தல்போல அப் பொருளை நிறைய வழங்குதல் உண்டாகும்.


(குறிப்பு) சுரிகையாற்கானும், சுலாக்கோலாற்கானும் என்பதிலுள்ள ‘ஆன்’ இரண்டும் சாரியைகள். மரீஇ: சொல்லிசையளபெடை. (183)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
184. அறிவுப்பொருளை ஈதலும் பெறுதலும்


கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின்--அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து.



(பதவுரை) கொடுப்பான்பசை சார்ந்து கொள்வான் குணத்தில் கொடுக்கப் படுதல் அமையின்-ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப உபதேசிக்க வல்லவனாதல் அமையின், அடுத்தடுத்துச் சென்று ஆங்கு அடைந்து-பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு, களைவினை என்பரே வென்றார் விளங்க விரித்து-‘பிறவிக்குக் காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணறுமாறு விரித்துக் கூறுவர்.

(குறிப்பு) ‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான் கொள்வான் என்பன ஆசிரியனை யும் மாணக்கனையும் முறையே உணர்த்தி நின்றன. அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். பன்மைப் பொருள் தந்துநின்றது. (184) 

--------------------------------------------------------------------------------------------------------
     
185. ஈதலும் ஏற்றலும் இல்லெனில், யாதும் இல்லையாம்


கொடுப்பான் வினையல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால்--அடுத்தடுத்து
நல்லவை யாதாங்கொல் நாடி யுரையாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து.



(பதவுரை) கொடுப்பான்-இவ்வுலகத்திலே கொடுக்குங் கொடையாளி, வினை யல்லன்-கொடுக்குஞ் செயலை மேற்கொள்ளாதவனாயும், கொள்வான்-கொள்பவனாகிய இரவலன், அல்லன்-அல்லாமல் யாவரும் செல்வராயும், கொடுக்கப்படும் பொருளும்-வழங்குவதற்குரிய பொருளும், அன்றால்-வழங்குதற்கல்லாமல் ஓரிடத்தே நிலைத்திருக்குமானால்; நாப்பண்-சன்றோர்களிடையே, அடுத்தடுத்து-அடிக்கடி(ஏற்படவேண்டிய), நல்லவை-நற்காரியங்கள், யாது ஆம்-எங்ஙனம் ஏற்படும் (என்பதை), நீ நயந்து-நீ உலக நன்மையை விரும்பியவனாய், நாடி-ஆலோசித்து, உரையாய்-சொல்வாயாக.

(குறிப்பு) புரவலரும் இரவலருமின்றி உலகமிருக்குமானால் நல்வினைக்கே இடனின்றி யாவும் நிலைத்திணைப்பொருளாய் நிற்குமென இங்கு நினைப்பூட்டலாயினர். ‘கொடுக்கப்படு பொருளுமன்றால்’ என்ற பாடபேதம் திருவாளர் செல்வக்கேசவராய முதலியார் கண்டதாம். இதனைத் தமிழ்ச் செல்வம் என்ற நீதிநூற்றொகையாலும் காணலாம். (185)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #37 on: September 18, 2011, 10:45:31 PM »
   
186. நன்ஞானத்தின் இயல்பு


அறிவு மிகப்பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறியைந்தும் வெல்லும்வாய் போற்றிச்--செறிவினான்
மன்னுயி ரோம்புந் தகைத்தேகாண் நன்ஞானந்
தன்னை உயக்கொள் வது.


(பதவுரை) நன்ஞானம் தன்னை உயக்கொள்வது-நன்ஞானம் தன்னை யுடையவனுக்கு உய்யும் நெறியை யருளுவதாவது, அறிவு மிகப் பெருக்கி-அறிவினை மிகப் பெருகுமாறு செய்து, ஆங்காரம் நீக்கி-ஆங்காரத்தினைப் போக்கி, பொறியைந்தும் வெல்லும் வாய்போற்றி-ஐம்பொறிகளையும் வெல்லும் வழியினை வளர்த்து, செறிவினான்-அடக்கத்தோடு,மன்னுயிர் ஓம்பும் தகைத்து-நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகாவகை காக்கும் தன்மையை உடையனாக்குவதேயாகும்.

(குறிப்பு) காண்: முன்னிலை அசை. வாய்-வழி. ஏ: அசை நிலை. தகைத்து: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று.(186)
 
     ----------------------------------------------------------------------------------------------------
     
187. செயற்கரிய செய்வதே சிறப்பாம்


சோறியாறும் உண்ணாரோ? சொல்லியாருஞ் சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ?--தேறி
உரியதோர் ஞானங்கற் றுள்ளந் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு.


(பதவுரை) சோறு யாறும் உண்ணாரோ, சொல்யாரும் சொல்லாரோ, ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ-சோறு உண்ணுதலையும், அரியன செய்வேனென்று சொல்லுதலையும், ஊர்திகளில் ஏறிச் செல்லுதலையும் உலகத்துள் எல்லாரும் செய்வர், உரியதோர் ஞானங்கற்றுத் தேறி-கற்றற்குரிய ஞான நூல்களைக் கற்றுத் தெளிந்து, உள்ளந்திருத்தி-மனமாசறுத்து, அரிய துணிவதாம் மாண்பு-செயற்கரியன செய்து வீடுபேற்றினையடையக் கருதுவதே பெருமையாகும்.

(குறிப்பு) சோறு+யாரும்=சோறியாரும், இகரம் குற்றியலிகரம். ஏறு: ஏறப்படுவது. அரிய: அன்சாரியை பெறாத பலவின்பால் வினையாலணையும் பெயர். (187)
 
    ---------------------------------------------------------------------------------------------------- 
     
188. ஒரே பொருள் இடவேறுபாட்டால் உயர்வும் தாழ்வும்


பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீர் அமுதமாம்--ஓம்பற்(கு)
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு.


(பதவுரை) பாம்பு உண்ட நீரெல்லாம் நஞ்சு ஆம்(அது போல்)-பாம்புகள் பருகிய நீரனைத்தும் நஞ்சாக மாறுதல் போல, கடையாயார் மாட்டு ஞானம் களியாம்-கயவர்கள்கற்கும் ஞானநூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்; பசு உண்ட தெண்ணீர் தேம்படு அமுதம் ஆம் அதுபோல்-பசுக்கள் பருகிய தெளிந்த நீர் இனிய பாலாக மாறுதல்போல, உயர்ந்தார்கண் ஞானம் ஓம்தற்கு ஒளியாம்-உயர்ந்தோர்கள் கற்கும் ஞான நூல்கள் அவர் மாட்டுப் போற்றுதற்குரிய அறிவினை வளர்க்கும்.

(குறிப்பு) களி-களிப்பைத் தருவது; மயக்கம். தேம்-இனிமை; நல்ல சுவை படுதல்-பொருந்துதல், ''அதுபோல'' என்பதனை ஈரிடத்தும் கூட்டுக.(188)
 
   ---------------------------------------------------------------------------------------------------   
     
189. ஞான நூல்களின் ஆராய்ச்சி எப்பொழுதும் வேண்டும்


கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவது அருளே--அடுத்தடுத்து
உண்ணப் படுவது நன்ஞானம் எப்பொழுதும்
எண்ணப் படுவது வீடு.



(பதவுரை) நாளும் கெடுக்கப்படுவது தீக்கருமம்-எக்காலத்தும் அழிக்கப்படு வது தீவினையே, கொடுக்கப்படுவது அருளே-பிறர் பால் செய்தற்குரியது அருளே, அடுத்தடுத்து உண்ணப் படுவது நன் ஞானம்-பலமுறையும் ஆராய்ந்து இன்புறுதற் குரியது நல்ல ஞான நூலே, எப்பொழுதும் எண்ணப்படுவது வீடு-எஞ்ஞான்றும் மனத்தால் நினைக்கப்படுவது வீடுபேறேயாம்.


(குறிப்பு) வீடு-விடப்படுவது: முதனிலை திரிந்த தொழிற் பெயர். அடுத்தடுத்து: அடுக்குத்தொடர். (189)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
190. வீட்டுலகடைய வேண்டுவோர் இயல்பு


இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே--பந்திப்பர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்து வார்.



(பதவுரை) இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப் படுத்துவார்-இம்மையிற் புகழையும் மறுமையில் வீடுபேற்றையும் தவறாமலடையக் கருது கின்றவர்கள், இந்தியக் குஞ்சரத்தைச் சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே-இந்திரியங்களாகிய யானைகளை உள்ளமாகிய தூணிடைச் சேர்த்து (விலகாவகை) ஞான இருங் கயிற்றால் பந்திப்பர்-ஞானமென்னும் வலியகயிற்றால் இறுகக் கட்டுவர்.


(குறிப்பு) இந்தியம்-இந்திரியம், இந்தியம், ஞானம், சிந்தனை மூன்றும் முறையே குஞ்சரம், கயிறு, தூண்களாக உருவகிக்கப்பட்டுள்ளது. (190)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #38 on: September 19, 2011, 07:38:58 PM »
   
191. பிறவிப் பிணியினைப் பெயர்க்கும் வழி


உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி--உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடைய னாகுமேல்
பேர்கின்ற தாகும் பிறப்பு.


(பதவுரை) உணர்ச்சி அச்சாக உசா வண்டியாக - அறிவை அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி யென்னும் வண்டியில், புணர்ச்சி புலனைந்தும் பூட்டி- ஐம்பொறி களாகிய புரவிகளைந்தையும் சேர்த்துப் பூட்டி, உணர்ந்து அதனை ஊர்கின்ற பாகன்-செலுத்தும் நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், உணர்வு உடையனாகுமேல்-தெளிந்த அறிவினையும் உடையனாயின், பிறப்புப் பேர்கின்றதாகும்-பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.

(குறிப்பு) உணர்ச்சி உசா புலன் இவை முறையே அச்சு வண்டி புரவிகளாக உருவகிக்கப்பட்டுள்ளன. பெயர்தல்-பேர்தல்: மரூஉ. (191)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
192. பிறவியை யொழித்தலே பேரறிவாம்


தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற் கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி.


(பதவுரை) எண்ணின்-ஆராயின், தறுகண் தறுகட்பம் - அஞ்சாமையுள் அஞ்சாமையாவது, தன்னைத்தான் நோவல்-தன்கண் குறையுளதாயின் அதனைக் கண்டு வருந்துதலாம், உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல்-நல்ல செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம், அறிவிற்கறிவாவது ஈண்டு மறுபிறப்பு வாராநெறி-அறிவினுள் அறிவாவது இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய நெறியின்கண் ஒழுகுதலாம்.

(குறிப்பு) தறுகண்-அஞ்சாமை, ''தந்திரிக் கழுகு தறுகண் ஆண்மை'' என்ற தொடரில் இப்பொருள் காண்க. தறுகட்டறு கட்பம்-பெருமைக்கெல்லாம் பெருமை என்பாருமுளர். மற்று: அசைநிலை. (192)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
193. வீட்டுலகினை யுறும்விதம்


உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்றுண்ணும் வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலத்தின் றென்னை?--செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாங்
கூற்றங் குறுகா இடம்


(பதவுரை) உயிர் வித்தி ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை-உயிர்களாகிய விதையை விதைத்து உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக வாழ்க்கையை மெய்யென நம்பி, செயிர் வித்தி - தீமையை விதைத்து, சீலம் தின்று என்னை - நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல் தின்பதால் வரும் பயன் யாது?, செயிரினை மாற்றி- தீவினையை மாற்றி, மறுமை புரிகிற்பின்-மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைச் செய்யின், கூற்றம் குறுகா இடம் காணலாம்-எமன் அணுகாத வீட்டினை அடைந்து இன்புறலாம்.

(குறிப்பு) உயிர், ஊன், இவ்விரண்டும் விதைகளாகவும் விளைபொருளாகவும் கூறப்பட்டுள்ளன. (193)
 
  -----------------------------------------------------------------------------------------------------   
     
194. நல்லொழுக்கமே வீட்டிற்கு வித்தாம்


இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை--கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர்.


(பதவுரை) உலகத்து இயற்கை இருளே-இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,கற்ற அறிவுடைமை இருள் அகற்றும் கைவிளக்கே- ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை அவ் விருளைப்போக்கும் கைவிளக்கேயாகும்; நெஞ்சத்து அருளுடைமை கைவிளக்கின் நெய்யே-மனத்தின்கண்ணுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய நெய்யேயாகும், நெய் பயந்த பால்போல் ஒழுக்கத்தவரே-நெய்க்குக் காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே, பரிவு இல்லா மேல் உலகம் எய்துபவர்-துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) ஒருவன் கல்வியறிவொளியாலும் நெஞ்சத்தருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலக மெய்துவன் என்பது கருத்து. பயந்த-பய: பகுதி. இஃது ஐந்தடிகளான் வந்த பஃறொடை வெண்பா. (194)

 
      -----------------------------------------------------------------------------------------------------
     
195. வீட்டு நெறியின் இயல்பு


ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பார்--நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு.



(பதவுரை) ஆர்வமும் செற்றமும் நீக்கி-காமவெகுளிகளை நீக்கி, அடங்குதல்- மனமொழி மெய்களால் தீயன புரியா தடங்குதல், சீர்பெறு வீட்டுநெறி என்பர்-சிறப்புடைய வீடுபேற்றினை யடைவிக்கும் நெறி என்று ஆன்றோர் கூறுவர், (அவ்வழி அடங்காது) நீர் புகப் பட்டிமை புக்கான் - புனல் மூழ்கித் துறவி வேடமட்டுங் கொண்டான், அடங்கினன் என்பது-அடங்கினனாகப் பாவித்திருத்தல், கெட்டார் வழி வியக்குமாறு-தீயூழினையுடையார் அதனை வியந்து பின்பற்றுவதை யொக்கும்.

(குறிப்பு) என்பர்: பலர்பால் எதிர்கால வினைமுற்று. கெட்டார் வழி வியக்கும் ஆறு-தவறிய ஒழுக்கமுடையார் அவ்வொழுக்கினை வியப்பது எனலுமாம். (195)
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #39 on: September 19, 2011, 07:45:36 PM »
   
196. அற்றது பற்றெனின் உற்றது வீடு


அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும்--தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு.



(பதவுரை) அருளல் அறம் வளரும்-துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது வளரும், ஆள்வினையால் ஆக்கம்-முயற்சியால் பெருவாழ்வு உளதாம், நாளும் பொருளால் பொருள் வளரும்-எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம், தெருளா விழை வின்பத்தால் காமம் வளரும்-மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம விழைவின்மையால் வீடு வளரும்-ஆசையைவிட வீடுபேறு உளதாம்.

(குறிப்பு) தெருள்-அறிவு. இதன் எதிர்மொழி மருள். தெருளா விழைவு-புணர்ச்சி, இணை விழைச்சு. விழைவு-விருப்பம். (196)
 -------------------------------------------------------------------------------------------------------
     
     
197. வீட்டுக்குரிய பொருளை வினவலே செவிப்பயனாம்


பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல--திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம் வீட்டொடு
கட்டுரை கேட்ப செவி.


(பதவுரை) பண் அமை யாழ் குழல் கீதம் என்றின்னவை நண்ணி நயப்ப செவியல்ல-இசையொடு பொருந்திய யாழ் குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை யடைந்து விரும்பிக் கேட்பன செவிகளாகா, திண்ணிதின் - உறுதியொடு, வெட்டெனச் சொல் நீக்கி-பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாது, விண்ணின்பம் வீட்டொடு கட்டுரை கேட்ப செவி - துறக்க இன்பத்தினையும் வீடுபேற்றையும் பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.

(குறிப்பு) இயற்கையிற் செவிக் கின்பஞ்செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால் மகிழ்வுறும் செவி செவியல்ல என்றபடி. (197)
 
   -------------------------------------------------------------------------------------------------   
     
198. அஞ்செவிக் கழகு அறிவுரை கேட்டல்


புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத் தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல--நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்(து) அஞ்ஞான நீக்கி
மறவுரை விட்ட செவி
.


(பதவுரை) புண்ணாகப் போழ்ந்து-புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் பழிப்பத் தாம் வளர்ந்து-புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து, வண்ணப்பூண் பெய்வ செவியல்ல-அழகிய அணிகள் அணியப் படுவன செவிகளல்ல, நுண் அறநூல் உரை கேட்டு உணர்ந்து-நுண்ணிய அறநூற்பொருள்களைக் கேட்டாராய்ந்து, அஞ்ஞானம் நீக்கி - அறியாமையைப் போக்கி, மறவுரை விட்ட செவி-பாவத்துக்குக் காரணமான சொற்களைக் கேளா தொழிவன செவிகளாகும்.

(குறிப்பு) நுண்மை நூல்-நுண்ணூல். போழ்தல்-பிளத்தல்; குத்தல். அறம்xமறம்: எதிர்மொழிகள். அம் - அழகு. (198)
 
      ----------------------------------------------------------------------------------------------
     
199. அறநூலைக் கேட்டறிந்தனவே அழகிய செவிகளாம்


கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல--கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி.


(பதவுரை) கண்டவர் கமுறூஉம் காமருசீர் காதில் குண்டலம் பெய்வ செவியல்ல-பார்த்தவர் விரும்பும் சீரிய அழகினையுடைய காதில் குண்டலங்க ளணியப்படுவன செவிகள் ஆகா, உலகில் மூன்றும் உணர்ந்து கொண்டு-உலகின்கண் அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் நூல்களைக் கேட்டறிந்துகொண்டு, அவற்றின் -அவற்றுள், முன்னது-தலைமையான அறநூலை, முட்டு இன்றி-ஒழிவின்றி, சூன்று சுவைப்ப செவி-கேட்டு ஆராய்ந்து இன்புறுதற்குக் காரணமாவன செவிகளாகும்.

(குறிப்பு) சூன்று: சூல் என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். சூலல்-தோண்டுதல்; ஈண்டு ஆராய்தல். ''நுங்கு சூன்றிட்டன்ன'' நாலடி. காமுறூஉம்: இன்னிசை யளபெடை. (199)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
200. கடவுட் காட்சிகளைக் கண்டனவே கண்களாம்


பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன் றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல--மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்
.


(பதவுரை) பொருள் எனப் போழ்ந்தகன்று-பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து, பொன் மணி போன்று-அழகிய நீலமணிபோல, எங்கும் இருளறக் காண்பன கண் அல்ல -எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா, மருள் அற-காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு, பொய்க்காட்சிநீக்கி-பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து, பொரு அறு முக்குடையான்-ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது, நற்காட்சி காண்பன கண்-நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே கண்களாகும்.

(குறிப்பு) பொரு-ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம். ''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி. (200)
 
     
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #40 on: September 19, 2011, 07:50:44 PM »
   
201.   திருவடிமலர்களைச் சேர்ந்து முகர்வதே மூக்காம்


சாந்தும் புகையும் துருக்கமுங் குங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல--வேந்தின்
அலங்குசிங் காதனத் தண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதா மூக்கு.

 
(பதவுரை)  சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும் மோந்தி்ன்புறுவன மூக்கல்ல-சந்தனம், அகிற்புகை, கத்தூரி, குங்குமப்பூ முதலியவற்றை முகந்து மகிழ்வன மூக்கன்று; ஏந்து இன் அலங்கு சிங்காதனத்து-உயர்ந்து இனிது விளங்குகின்ற சிம்மாதனத்தில் எழுந்தருளியிருக்கும், அண்ணல் அடிக்கீழ் இலங்கு இதழ் மோப்பது மூக்கு ஆம்-அருகனின் திருவடிகளிற் பெய்து விளங்குகின்ற மலர்களை முகந்து இன்புறுவதே மூக்காம்.

(குறிப்பு) அலங்கு-விளங்கு.  இதழ்: சினையாகுபெயர்.    (201)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
202. திருவடிப்புகழைச் செப்புவதே நாவாம்


கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிரதங் கொள்வன நாவல்ல-தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.

 
(பதவுரை)  கைப்பன காப்பு துவர்ப்பு புளி மதுரம் உப்பு இரதங் கொள்வன நா அல்ல-கைப்பு கார்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு உப்பு என்னும் அறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவன நா அல்ல; தப்பாமல் வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும் நின்று துதிப்பது நா ஆம்-தவறாமல் காம வெகுளி மயக்கங்களை வென்ற அருகனின் செய்ய திருவடிகளை எக்காலத்தும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாவாம்.

(குறிப்பு) வேட்டு-வேள் என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகால வினை யெச்சம், செம்மை+அடி=சேவடி.      (202)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
203.  நன்ஞான முயற்சியில் நடப்பனவே கால்களாம்


கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர்மனையிற்
செல்வதூஉஞ் செய்வன காலல்ல-தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்(று)
அறவுரை கேட்பிப்ப கால்.

 
-(பதவுரை)  கொல்வதூஉம் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையிற் செல்வதூஉம் செய்வன கால் அல்ல-பிற வுயிரைக் கொல்லவும் பிறருடைமையைத் திருடவும் அல்லாமல் அயலான் மனைவியிடத்தே விழைந்து கூடவும் செல்வதற்கு உதவுவன கால்களாகா, தொல்லைப் பிறவி தணிக்கும் பெருந்தவர்பாற் சென்று அறவுரை கேட்பிப்ப கால்-துன்பத்தை விளைவிக்கும் பிறவிப் பிணியைப் போக்கி யருளும் மிக்க தவத்தினையுடைய முனிவர்பா லடைந்து அவர் கூறும் அறவுரையைக் கேட்குமாறு செய்வனவே கால்களாகும்.

(குறிப்பு) மனை-மனைவி: இடவாகு பெயர்.  கேட்பிப்ப: பலவின்பால் பிறவினை வினையாலணையும் பெயர்.  தொல்லைப் பிறவி-பழைமையாக வரும்பிறப்பு எனவும் கொள்ளலாம்.  கொல்வதூஉம், கள்வதூஉம், செல்வதூஉம், இன்னிசை யளபெடைகள்.   (203)

 -------------------------------------------------------------------------------------------------
     
     
204.  திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைத்து


குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம்* மறைத்தாங்(கு) அருள்பரப்பி-முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல அல்ல
சிறந்தான்றாள் சேரா தலை.

 
*பூவுலகில் நற்ற.
(பதவுரை)  குற்றம் குறைத்து-காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்து, மூவுலகின் அற்றம் குறைவின்றி மறைத்து-மூவுலகத்தினும் உள்ளவர்களது அச்சமனைத்தும் துடைத்து, அருள்பரப்பி-அவர்கட் கருள்செய்து, முற்ற உணர்ந்தானை-இயல்பாகவே எல்லா முணர்ந்த இறைவனை, பாடாத நா அல்ல-பாடாதன நா அல்லவாம், சிறந்தான் தாள் சேராதலை அல்ல-அவன் திருவடிகளை வணங்காதன தலைகளாகா.


(குறிப்பு) பாடாதே, சேரா பலவின்பால் வினையாலணையும் பெயர்கள்.  குற்றம்-மறுதலை மொழி நற்றம்.     (204)
 
   --------------------------------------------------------------------------------------------------------   
     
205.  உயிருடன் தொடர்ந்து செல்லும் பிணி அறியாமையே


உடன்பிறந்த மூவ ரொருவனைச் சேவித்
திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-இடங்கொண்ட
இல்லத் திருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து.-

 
(பதவுரை)  உடன் பிறந்த மூவர்-உயிர் பிறக்கும்பொழுது உடன் தோன்றிய காம வெகுளி மயக்கங்கள், ஒருவனைச் சேவித் திடங்கொண்டு சின்னாள் இருப்பர்-தம்மை வழிபடுமாறு அதனை அடிமைகொண்டு சிலகாலம் அதனோடு உடலிடை உறையாநிற்கும், இடங்கொண்ட இல்லத்து இருவர் ஒழிய-பின்னர் இடமாகக் கொண்ட உடலொடு காம வெகுளிகள் நீங்க, ஒருவனே அவன் பின் சிறந்து செல்லும்-மயக்கமானது அவ்வுயிரை விடாது தொடர்ந்து செல்லும்.

(குறிப்பு) உயிர்களுக்கு அவிச்சை அநாதியே உள்ளதென்பதும் உடலோடு கூடி நின்றவழியே காம வெகுளிகள் தோன்றுமென்பதும் இதனாற் கூறினார்.  ஏ: பிரிநிலை.  (205)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #41 on: September 19, 2011, 08:38:55 PM »
   
206.  சினத்தை வென்றவர் சிவபதம் பெறுவர்


கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை-வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார்.

 
(பதவுரை)  காய்த்து கட்டெனச் சொல்லியக்கால்-தம்மை வெகுண்டு பிறர் வன்சொற்களைச் சொல்லுமிடத்தும், வெட்டென வரக்கண்டால்-கடுகடுத்துத் தம்மைத் தாக்க வருதலைக் காணுமிடத்தும், கல்பிளப்பில் தீயேபோல்-கல்லை உடைக்குங்கால் அதனிடைத் தோன்றுந் தீயேபோல், பொட்டப் பொடிக்கும் குரோதத்தை-விரைந்து தோன்றும் வெகுளியை, காக்கும் திறலாரே-மேலெழாவண்ணம் அடக்கவல்லவர் யாரோ அவரே, மோக்க முடிவு எய்துவர்-முத்தியின்பத்தினை யடைபவராவர்.

(குறிப்பு) மோக்கம்-மோட்சம்: வடமொழி ஏ: முன்னது இசைநிறைப் பொருளது: பின்னது பிரிநிலைப் பொருளது.       (206)
 -------------------------------------------------------------------------------------------------------
     
     
207.  வீட்டுநெறிகட் குரியன


நல்வினை நாற்கால் விலங்கு நவைசெய்யுங்
கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி.

 
(பதவுரை)  நல் வினை நாற்கால் விலங்கு-நல்வினைகளைச் செய்ய முயல்; நவை செய்யும் கொல்வினை யஞ்சிக் குயக்கலம்-துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி அகல்; நல்ல உறுதி நாட்பேர்-சிறந்த ஆன்மலாபத்தைப் புல்(தழுவு); அல்ல மரப்பேர்-ஆன்மலாபமல்லாதவற்றை, முனி (வெறுத்துவிடு); இறுதியில் இன்பநெறி-இவை வீடுபேற்றினுக்குரிய நெறிகளாகும்.

(குறிப்பு) குயக்கலம்-குயவனால் செய்யப்பட்ட மட்பாண்டமாகிய அகற்சிட்டி; அகல்-விலகு; நாட்பேர்-புல்; அனுடநாள்.  மரப்பேர்-முனி; அகத்திமரம்; அன்றிப் பலாசமரமுமாம்.           (207)
 
    ------------------------------------------------------------------------------------------------------ 
     
208.  மறுபிறப்பினை ஒழிக்க வழி


பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்திண்டு வாரா நெறி.

 
(பதவுரை)  அரும்பொருள் பறவை-இரப்போர்க்கு அரிய பொருள்களை ஈ; இன்சொல் முதிரை-இனிய சொற்களைக் கொள்; உறுதிக்கண் ஊன் உண் விலங்கு-ஆன்மலாபத்துக்கு உரியவற்றைச் செய்யுங்கால் மடங்கல் (நிலை தளராதே); சிறியன நீர்ப்புள்-அற்ப இன்பங்களை உள்ளல் (கருதாதே); புல்லவை குயக்கலம்-அற்பர்களது அவையை அகல் (சேராதே); ஊர்வது பேர்த்து ஈண்டு வாராநெறி-இவற்றை மேற்கொள்வதே மறுபிறவி வாராமல் தடுக்கும் உபாயமாகும்.


(குறிப்பு) ஈ-பறக்கும் சிறிய உயிர்களில் ஒன்று; கொடு.  கொள்-காணம் என்னும் தானியம் கொள்வாய்.  மடங்கல்-சிங்கமாகிய ஊன் உண்ணும் விலங்கு (மிருகம்); பின்வாங்காதே.  உள்ளல்-உள்ளான் என்னும் நீர்வாழ் பறவை; நினைக் (208)
 
     --------------------------------------------------------------------------------------------------
     
209.  அழியாப்பேற்றினை யடைவோர் கருதவேண்டியன


உட்கப் படுமெழுத்(து) ஓரிரண் டாவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே-ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு.

 
(பதவுரை) இமிழ் கடல் தண் சேர்ப்ப-ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்றுறையை யுடையவனே!, விழுச் சார்வு வேண்டுபவர்க்கு-அழியா நிலையையடைய விரும்புவோரால், உட்கப்படுமெழுத்து ஓரிரண்டாவதே-அஞ்சத் தகுவது இரண்டெழுத்துக்களாலாகிய வினையே, நட்கப்படமெழுத்தும் அத்துணையே-விரும்பத்தகுவதும் அவ்விரண்டெழுத்துக்களாலாகிய வீடே ஆகும், ஒட்டி இழுக்கா எழுத்து ஒன்று-நட்பாகக்கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.


(குறிப்பு) வேண்டுபவர்க்கு; வேற்றுமை மயக்கம்.  வினை-நல்வினைகளும், தீவினைகளுமாம்.  வீடு-மோட்சம்.  ஆ-சிவஞானம்.     (209)
 
   ----------------------------------------------------------------------------------------------------   
     
210.  துறவியின் தூய்மையும் பெருமையும்


முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைதம் பேரொழித்து-அப்பால்
பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து)
உறுமவனை எல்லா மொருங்கு.

 
(பதவுரை) முப்பெயர்-மூன்றாகப் பெயர்பெற்ற, மூன்றும்-உலகமூடம், பாசண்டிமூடம், தெய்வமூடம் என்ற மூன்றனையும், உடன் கூட்டி-ஒன்றுசேர்த்து, ஓர் இடத்து-அமைதியான ஒரிடத்திலே அமர்ந்து ஆலோசித்து, தப்பிய பின்றை-அம் மூன்றையு மொழித்து விலக்கிய பிறகு, தம் பேர் ஒழித்து-தம் ஆணவமாகிய பெயரினையும் விலக்கி, அப்பால்-துறவுநிலைக்குப்பின், பெறு பெயரை-பெறக்கடவதாகிய தூயோன் என்ற புகழ்ச் சொல்லையும், காய-வெறுக்க, பெறுபவேல்-மக்கள் பெறுவார்களேயாயின், வையத்து-இவ் வுலகத்திலே, அவனை எல்லாம் ஒருங்கு உறும்-அவ்விதம் பெற்ற அப் பெரியோனை எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்.

(குறிப்பு) துறவிகளுக்குத் தம்பெயர் கூறலும் கூடாவாகலின் பேரொழித்தல் கூறப்பட்டது.  பேர் கூறல் "நான்" எனும் நினைவு தலைப்படுதலாமென்பது சான்றோர் கருத்தாதலின், "ஆணவமாகியபெயர்" எனக் கண்ணழிக்கப்பட்ட தென்க.  இங்ஙனம் உயர்ந்த துறவு நிலைபெறுதல் ஆயிரத்தொருவர்க்கே கூடுமாதலின், "பெறுபவேல்," எனப் பலர்பாற் சொற்கொண்டு தொடங்கி "அவனை" என ஆண்பாற் சொல்லான் முடிக்கலாயினர்.  இது சிறப்புக் கருதி வந்த வழுவமைதி யென்க.     (210)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #42 on: September 19, 2011, 08:46:10 PM »
   
211. உலகோரால் தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம்


ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றா னெனப்பட்டு வாழ்தலின்-மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
நனையில் உடம்பிடுதல் நன்று.


 
(பதவுரை) ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும் தேற்றான் எனப்பட்டு வாழ்தலின்-துன்பங்கள் மிக அறிவில்லாமல் தன்னுயிர்க்காவதோர் உறுதி ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும், மாற்றி மனையின் அகன்று-இல்வாழ்க்கையை விட்டு மனையி னகன்று, மாபெருங் காட்டில் போய்-விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று, நனை இல் உடம்பு இடுதல் நன்று-இனிமை பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.

(குறிப்பு) இன்: ஐந்தனுருபு, எல்லைப்பொருளது.  இடுதல்-போடுதல், இறக்க   (211)
 
   -----------------------------------------------------------------------------------------------------   
     
212. உண்மைச் சுற்றத்தார் இவரென்பது


நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

 
(பதவுரை) நல்லறம் எந்தை-நல்லறமே என் தந்தை, நிறை எம்மை-அறிவே என்தாய், நன்குணரும் கல்வி என்தோழன்-நன்மையை யுணர்தற்குக் காரணமாய கல்வியே என்னுடைய தோழன், துணிவு எம்பி-மனத்தெளிவே என்னுடைய தம்பி, பொருளாய இச் சுற்றத்தாரில் எனக்கு-உறுதிபயக்கும் இச்சுற்றத்தார்போல எனக்கு, அல்லாத பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ-இவையில்லாத தந்தை தாய் தோழன் உடன் பிறந்தவர்களாகிய பொய்ச்சுற்றத்தார் உறுதி பயப்பரோ? பயவார்.


(குறிப்பு) என்+அம்மை=எம்மை.  எம்+தம்பி=எம்பி.  ஓ: எதிர்மறை வினாப்பொருளது.  இல்: ஐந்தனுருபு; ஒப்புப் பொருள்.  நிறை-மனவடக்க மெனினுமாம்.       (212)
 
     
     -----------------------------------------------------------------------------------------------------

213. பொய்ச்சுற்றத்தார் இவரென்பதும், அவரால் வருந்துயரமும்


மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள்-மிக்க
கடும்பகை யாக உழலும் உயிர்தான்
நெடுந்தடு மாற்றத்துள் நின்று.

 
(பதவுரை) மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை ஒக்க உடன்பிறந்தார் என்ற இவர்கள்-மக்களும் மனைவியரும் மருமக்களும் தாய் தந்தையரும் தன்னுடன் பிறந்தாருமாகிய இவர்கள், மிக்க கடும் பகையாக-இன்பம் பயப்போர் போன்றே மிகக் கொடிய துன்பத்தைச் செய்வதால், உயிர்-உயிரானது, நெடுந் தடுமாற்றத்துள் நின்று உழலும்-மிக்க கலக்கத்துக்குக் காரணமாய உலக வாழ்க்கையிடைப் பட்டு வருந்தும்.


(குறிப்பு) என்ற+இவர்கள்=என்றிவர்கள்; அகரத்தொகுத்தல்.  தான்: அசைநிலை.  ஏ: எண்ணுப்பொருளது.  பகையாக: காரணப்பொருளில் வந்த செயவென் வாய்பாட்டு வினையெச்சம்.          (213)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
214. உடலின் இன்றியமையாமை


அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன் றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம்-அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுத லான்.

 
(பதவுரை) அளற்றகத்து ஆய்தாமரை அம்மலர் ஈன்றாங்கு-சேற்றினிடத்து வளர்ந்த தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, அளற்றுடம்பின் நன் ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை-தூயதல்லாத உடம்போடு கூடி நின்றவழியே நன்ஞானம் நல்லறிவு நல்லொழுக்கம் என்பன, தன்னால் தலைப்படுதலான்-ஒருவனால் அடையக்கூடுமாதலால், உடம்பு அளறு ஆம் எனினும் நன்றாம்-உடம்பு மலமயமானதேயெனினும் அதனோடு கூடிவாழ்தலே நல்லது.

(குறிப்பு) ஆங்கு: உலம உருபு, எனினும்: உம்மை இழிவு சிறப்பு.  அளறு-கு (214)
 
      ----------------------------------------------------------------------------------------------------
     
215. மயக்கவுணர்வால் வரும் துன்பங்கள்


தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற நலிவர் இருநால்வர்-ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்பார் மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து.

 
(பதவுரை) தேற்றம் இல்லாத ஒருவனை-உண்மைப்பொருளின் தன்மை இதுவெனத் தெளியாத ஒருவனை, இரு நால்வர் பின்னின்று ஆற்ற நலிவர்-அப்பிரத்தியாக்கியான குரோதம் முதலிய வெட்டும் பின்பற்றி மிக மெலிவிக்கும், ஐவர் நல்லார் போல ஆற்றவும் பகைவளர்ப்பர்-மெய் முதலிய  பொறிகளைந்தும் இன்பம் பயப்பன போன்று மிக்க துன்பத்தையே வளர்க்கும், மூவரால் அவன்பின் சிறந்து செல்லும்-ஐவளி பித்து என்னும் மூன்றன் மாறுபட்டால் அவன் பின் மரணமடைவான்.

(குறிப்பு) "இரு நால்வர்" என்றது எண்வினையை.  அவை அப்பிரத்தி யாக்கியான குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியான குரோதம்-பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்பன.  "பின் சிறந்து செல்லும்" என்பது மங்கல வழக்கு.  இதனால் உண்மை யுணர்வில்வழி வருவதோரிழுக்குக் கூறப்பட்டது.  ஆங்கு: அசைநிலை.          (215)
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #43 on: September 19, 2011, 08:52:26 PM »
   
216. அறிவாளிகட்கே உண்மைப்பொருள் உணர்த்தலாகும்


அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற* விளைவும்-திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க் கல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல் குதர்.


*இருவினையுநின்று. 
(பதவுரை) அருவினையும் ஆற்றுள் வருபயனும்-துறவையும் அத் துறவின்கண் எய்தும் பயனையும், ஆக்கும் இருவினையும் நின்ற விளைவும்-உலகோர் செய்யும் நல்வினை தீவினைகளையும் அவற்றால் எய்த நின்ற இன்ப துன்பங்களையும், திரிவு இன்றிக் கண்டு உணர்ந்தார்க்கல்லது-உள்ளவாறே ஆராய்ந்து அறிய விரும்புவோர்க்கன்றி, காட்டதரும் நாட்டதரும்-உலக நெறியையும், வீட்டு நெறியையும், கொண்டுரைப்பான் நிற்றல் குதர்-உட்கொண்டு சொல்லத் தொடங்குதல் வீணேயாகும்.


(குறிப்பு) அதர்-வழி; நெறி.  உலகப்போக்கு, பல பெருந் துன்பங்கள் மலிந்து நிற்றலின், ?காட்டதர்? எனப்பட்டது.  வீட்டு நெறி; காரண காரியங்களாற் கூறி நாட்டிச் செய்கின்றமையின், ?நாட்டதர்? எனப்பட்டது.    (216)
 
      ---------------------------------------------------------------------------------------------------
     
217. அறநெறிச்சாரத்தால் அறிவு விளங்கும்


ஆதியின் தொல்சீர் அறனெறிச் சாரத்தை
ஓதியுங் கேட்டும் உணர்ந்தவர்க்குச்--சோதி
பெருகிய உள்ளத்த ராய்வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது.

   
(பதவுரை) ஆதியின் தொல்சீர் அறநெறிச்சாரத்தை-முதற்கடவுளால் அருகனது பழமையான புகழை விளக்கும் இவ் அறநெறிச்சாரத்தினை, ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்கு-கற்றும் கேட்டும் அறிந்தவர்கட்கு, கருதியவை கூடல் எளிது-கருதிய காரியங்கள் எளிதில் முடியும், சோதி பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து-அவர் ஞானவொளி பெருகிய மனத்தவராய் இருவகை வினைகளினின்றும் நீங்கப் பெருவதால்.

(குறிப்பு) உணர்ந்தவர், உள்ளத்தவராய், தீர்ந்து கூடல் எளிது என முடிக்கலுமாம் (217)
 
      -------------------------------------------------------------------------------------------------
     
218. அறநெறிச்சாரம் வீட்டினை யடைவிக்கும்


எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து--மெய்ந்நூல்
அறநெறிச் சாரம் அறிந்தான்வீ டெய்தும்
திறநெறிச் சாரந் தெளிந்து.


(பதவுரை) பொய்ந்நூல் எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் அவற்றின் பொருள் தெரிந்து என்செய்யும்-பொய்ந்நூல் களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும் அவற்றின்பொருளையறிதலால் யாது பயன்? மெய்ந்நூல் அறநெறிச்சாரம் அறிந்தான்-உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும் அறிந்தவன், திறநெறிச்சாரம் தெளிந்து-உறுதி பயக்கும் நெறியின் பயனை அறிந்து அந் நெறியில் நின்று, வீடு எய்தும்-வீடு பேற்றினை அடைவான்.

(குறிப்பு) அறிந்தான்: வினையாலணையும் பெயர். (218)
 
     ------------------------------------------------------------------------------------------------------
     
219. சிவனைச் சிந்திக்க அவமேதும் இல்லை


அவன்கொல் இலன்கொலென் றையப் படாதே
சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை--சிவன்றானும்
நின்றுகால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.


   
(பதவுரை) அவன்கொல் இவன்கொல் என்று ஐயப்படாதே சிவன்கண்ணே சிந்தை செய்ம்மின்கள்-இறைவனாவான் அவனோ இவனோ என்று ஐயமுறாமல் சிவன்பாலே சிந்தையை நிறுத்துங்கள், சிவன்றானும்-அச்சிவனும், நின்று கால் சீக்கும்-எப்பொழுதும் அடைந்தாரது இடரைத் துடைக்கும், நிழல் திகழும்-அருள்மிக்க, பிண்டிக்கீழ்-அசோகின்கீழ் எழுந்தருளியிருக்கும், வென்றி-வெற்றியையுடைய, சீர்-சிறந்த, முக்குடையோன்-மூன்று குடைகளுடை யவனாகிய, வேந்து-அருகனே யாவான்.

(குறிப்பு) நின்று கால் சீக்கும் நிழல் திகழும் எண்பதைப் பிண்டிக்கு அடையாக்கி, எப்பொழுதும் அடைந்தாரது வெம்மையைத் துடைக்கும் குளிர்ச்சி மிக்க என்றுபொருள் கூறினும் பொருந்தும். சிந்தையை நிறுத்துதலாவது இடைவிடாது சிந்தித்தல். கொல்: ஐயப்பொருள்.      (219)
 
      ---------------------------------------------------------------------------------------------
     
220. இறைவனைப் பாடிப் பெற்ற பரிசில்


முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி வந்தேற்குத் தந்த பரிசில்
வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்*
நிறைவிளக் குப்போ லிருந்து.


*வந்தோற்கு......நீமீ கென்றான்.   
(பதவுரை) முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்றனை-திருமுனைப் பாடியின்கண் எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மைவாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனை, பாடிவந்தேற்கு-பாடியடைந்த எனக்கு, தந்த பரிசில்-அவன் அருளிய பரிசிலாவது, வினைப்பாடு கட்டழித்து-மிக்க வினைத் தொடர்பை அழித்து, வீட்டின்பம் நல்கி-முத்தியின்பத்தை யருளினதேயன்றி, நிறை, விளக்குப்போலிருந்து-நந்தாவிளக்கே போன்று விளங்கி, நினைப்பாடி வந்தோர்க்கும்-உன்னைப் பாடியடைந்தவர்கட்கும், நீம் ஈக என்றான்-அறிவினை நல்குவாயாக என்று கூறியருளியதுமாகும்.


(குறிப்பு) சூர்-தெய்வம். நீம்: நீமம் என்பதன் இடைக்குறை. நீமம்-ஒளி. நினைப்பாடி-நினைத்து எனலுமாம். இச்செய்யுள் ஐந்தடியால் வந்த பஃறொடை வெண்பா.               (220)




   அறநெறிச்சாரம் மூலமும் விருத்தியுரையும் முற்றும்
 
     
     

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அறநெறிச்சாரம்
« Reply #44 on: September 19, 2011, 08:54:39 PM »
                        பிற்சேர்க்கை

    அருள்வட்ட மாக அறிவு கதிராய்ப்
    பொருள்வட்ட மெல்லாம் விளக்கி--இருள்வட்டம்
    மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
    வேற்றிலிங் கந்தோன்றும் வென்று.                  1   

    மாமாங்க மாடல் மணற்குவித்தல் கல்லிடுதல்
    தாமோங் குயர்வரைமேற் சாவீழ்தல்--காமங்கொண்
    டாடோ டெருமை யறுத்தல் இவையுலக
    மூடம் எனவுணரற் பாற்று.                        2

    சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
    புத்தன் கபிலன் கணாதரனென்--றெத்திறத்
    தேகாந்த வாதிக ளெண்கேட்ட ஆதன்போல்
    ஆகாதாம் ஆத்தன் றுணிவு.                       3

    கடம்பன்றான் றன்னொடு காம்படுதோள் வள்ளி
    உடம்பினுங் கூட்ட மதுவுவந்து கேட்பர்
    கொடுத்துண்மின் கொண்டொழுக்கங் காணுமினென்பார்
                                                  சொல்
    அடுப்பேற்றி யாமைதீந் தற்று.                     4

    நன்ஞான நற்காட்சி நல்லொழுக்க மென்றிவை
    தன்னான் முடித்தறா னில்லையேற் பொன்னேபோல்
    ஆவட்டஞ் செய்த வணிகலந் தேயகிற்போ
    லாய்வட்ட நில்லா துடம்பு.                        5

    நாலிறகிற் கண்ணில தேயெனினு நன்பொருளின்
    பேரிறையா னுண்பெயரிற் பிற்சிறக்கு மோரும்
    இருகண் னுளதே யெனினு மதனை
    வெருண்டு விலங்காமற் கா.                       6



குறிப்பு : இந்த ஆறு செய்யுட்களும் பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வெளியிடப்பட்டன.