FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 18, 2018, 12:17:01 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: Forum on February 18, 2018, 12:17:01 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 174
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/174.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: JeGaTisH on February 18, 2018, 02:33:43 AM
தந்தையின் பாசத்தை பெற்றதால்
மகாராணி என்னும் பட்டமும் பெற்றேன்.

பத்து மாதம் கருவறையில் சுமந்தவள் தாய்
காலமெல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.

எனிடம் பழகிய தோழர்களும் தோற்றுவிடுவார்கள்
என் அப்பா என்னும் தோழன் இருக்கையிலே.

உன் தோள் கொண்டே உலகம் பார்த்தேன்
உன் உதடு அசைவு கொண்டே வார்த்தைகள் உச்சரித்தேன்
உன் கரம் கொண்டே எழுதவும் கற்றுக்கொண்டேன்.

உன் கால் பிடித்து என் நடை பயின்றேன்
குணம் கண்டு என் மனம் திறந்தேன்
பாசப்பிணைப்பாய் இருக்கும் உன் அன்பு
பறவையாய் பறக்க கண்டேன்.

சின்ன சின்ன குறும்பு செய்தல்
சினம் கொண்டு அடிக்க ஓங்கிய கையும்
அடுத்த நொடியில் அரவணைக்கும் மழையாக மாறும்.

இருட்டில் நீ எனக்கு ஒலிகாட்டியாகவும்
வாழ்வில் ஒரு வழிகாட்டியாகவும் இருகிறாய்.

அன்னை என்னும் அன்பு கடலில்  மூழ்கலாம் ஆசை தீர
அப்பா என்னும் ஆகாயம் இருக்கும் வரை.

அயராது உழைத்து அன்பை மட்டுமே பகுர்ந்து
ஆயுளையே எமக்கென தரும் தெய்வம்.

       அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: thamilan on February 18, 2018, 01:49:41 PM
அப்பா அப்பப்பா
அந்த வார்த்தையிலே தான்
எத்தனை வசீகரம்
அம்மா என்ற சொல்லில்
பாசமும் ஒரு மென்மையும்
அப்பா என்ற சொல்லிலோ
அன்பும் ஒரு கம்பீரமும்

தாயின் கருவறை சுமப்பதோ பத்தே மாதங்கள்
தந்தையின் தோள்கள் சுமப்பதோ 
பலப் பல வருடங்கள்
குழந்தை பட்டு மெத்தையில் படுத்ததை விட
தந்தையின் அகன்ற மார்பில்
படுத்துறங்கியதே அதிகம்

சில நேரம் அந்த மார்பில்
தலை சாய்க்க சமர் நடக்கும்
தாய்க்கும் பிள்ளைக்கும்
தாயிடம் அதிகம் ஓட்டுவது
ஆண் குழந்தைகளே
தந்தையின் அரவணைப்பை
அண்டி ஓடுவது பெண் குழந்தைகளே
தந்தையின் தாய்மையை
மகள்களால் மட்டுமே உணர முடியும்

மகள்களின் கள்ளமில்லா
சிரிப்புக்குள்ளும் கொஞ்சலுக்குள்ளும்
அடங்கி விடுகிறது
அப்பாக்களின் கோபமும் கர்வமும்

 மகள்களைப் பெற்ற
அப்பாக்களுக்குத் தான் தெரியும்
கடைசி காலத்தில்
தன் மகள் தான்
தனக்குத் தாய் என

தொப்புள் கொடி உறவு தாயானாலும்
இரத்த உறவு தந்தையன்றோ
ஒரு பெண்ணுக்கு தாய்மை எனும்
அந்தஸ்தை கொடுத்து
இன்னோரு பெண்ணுக்கு மகள் எனும்
பதவியையும் கொடுப்பது தந்தையன்றோ

தாயிடம் அளவுக்கு அதிகமான
அன்பு இருக்கும்
தந்தையிடமோ அன்புடன் கண்டிப்பும் இருக்கும்
ஒரு நல்ல நண்பன்
ஒரு நல்ல ஆசான்
ஒரு நல்ல வழிகாட்டி
இவை அனைத்தும் ஒரு தந்தையன்றோ
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: Mr.BeaN on February 19, 2018, 10:52:47 AM
என் மகளே.....             
பசுமை மாறாத முகமும்.,
அதில் பளிங்கு போல் ஒளிரும் சிரிப்பும்.,
மலர்ந்த ரோஜாவின் மென்மை .,
உன்னோடு இருப்பதுதான் உண்மை!

குதித்து ஓடிடும் மானும்.,
தோகை விரித்து ஆடிடும் மயிலும்.,
நீர் அள்ளி தெளித்திடும் மீனும்.,
குரல் கொண்டு கவி பாடும் குயிலும்.,
யாவும் அழகென சொன்னேன்.,
உனை காணும் முன்னர் நானே!!


அமிழ்து தன்னோடு கொண்டு.,
அதை இயல்பாய் நமக்கள்ளி தந்து.,
தவழ்ந்து விளையாடும் பிள்ளை.,
அகிலத்தில் உனக்கிணை இல்லை!
மழலை பேசிடும் மொழிகள்.,
அதில் தோற்றிடும் பல கவிகள்!!!

கொஞ்சி விளையாடும் மழலை.,
அதைக்கண்ட எனக்கில்லை கவலை!
உனை நெஞ்சில் சுமப்பது ஓர் வரமே!
அது பொங்கும் இன்பத்தை-என்றும் எனக்கு தருமே!!!

  என்னில் பிறந்த இக்கவியை .,எனக்காய் பிறந்த என் கவிக்கு(என் மகள் ரியானா (sl)(K)(H))சமர்பிக்கிறேன்
                                     பாசமிகு தந்தை   திருவாளர் பீன்.....
[/font][/color][/size]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: joker on February 19, 2018, 01:21:46 PM
அப்பா !!!

அப்பா
கண்ணீர் விட்டு கண்டதில்லை
அவரை
நினைத்தால் என் விழியோரத்தில்
கண்ணீர் எட்டி பார்க்க தவறுவதில்லை

பிரசவத்தில் தாய்க்கு வலி
உடலாலும் மனதாலும்
உணர்ந்தவர் பலர்
ஆனால்
தந்தையின் வலி அவர்
சொல்வதில்லை யாரிடமும்

தனக்கு கிட்டாத உலகத்தை
தன் குழந்தைக்கு கிடைக்க
நினைப்பவர் தந்தை

கைக்குழந்தை எனினும்
தோளில் வைத்து உலகத்தை
ரசிக்கவைப்பவர் அவர்

இதுவரை என்னை அடித்ததில்லை
அவர் என்னை அதிகம் கொஞ்சியதாகவும்
நினைவுமில்லை

என் சிக்கல்களை பகிர்ந்துகொள்ள
தாய் உண்டு எனினும்
பக்கபலமாக தந்தை உண்டு என்பதே
அதை எதிர்கொள்ள மனவலிமை
தருகிறது

சைக்கிளில் நீ சென்றாலும்
நான் மோட்டார் வண்டியில்
செல்ல என்னை விட அதிகம்
ஆசைபட்டது நீயல்லவா

புதுதுணி உனக்கு எடுத்தாலும்
அதை என் அலமாரியில் வைக்க
நீ தவறுவதில்லை

பிள்ளைக்கு வேண்டுமென நீ சேர்த்தாய்
பொருளெல்லாம்,
என்றுதான் நினைப்பாயோ
உனக்கென்ன வேணுமென ?!

பிள்ளையின் வெற்றிகளை
மற்றவர்களிடம்
நீயும் பகிர்ந்துகொள்வாய்
என நானறிவேன்

அப்பா, உன் அன்பு அதை என்றும்
வார்த்தையால் நீ சொல்லியதில்லை
அதை வார்த்தையால் விவரிக்க
இந்த கவிதையால் முடியுமோ ?

அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு நீ அப்பா !!!

****ஜோக்கர் ****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: SaMYuKTha on February 19, 2018, 04:13:42 PM
வெண்பொதியாக எனை  கையிலேந்திய தருணத்தை
முகங்கொள்ள பூரிப்புடன் நீ விவரிப்பதை
உன் மடி சேர்ந்து சிலாகித்து கேட்ட
நாட்கள் பல இன்றும் பசுமையாய்...

அன்னையிடம் பெற்ற அடி ஒன்றாக இருந்தாலும்
அழுது ஊரைக்கூட்டி அதனை நூறாக
அவளுக்கு திட்டு வாங்க  வைத்த
நாட்கள் பல இன்றும் இளமையாய்...

இளவரசியாய் ஒய்யாரமாக உன் தோள்சாய்ந்து
வாய்ஓயாமல் கதையளந்து களைத்து உறங்கிய
உன் மார்பின் கதகதப்பு இன்றும் இதமாய்...

இவையாவும் எனக்கே எனக்கென இறுமாந்திருக்கையில்
பெண்பிள்ளைகள் அடங்கியிருக்க வேண்டும் என்ற போதனையா
வயதிற்கே உரித்தான ஒதுக்கமா ஏதோஒன்று
நம்மிடையே மெல்லிய திரையிட்டு
எனை  உன்னிடமிருந்து தூரநிறுத்த முயல
அனைத்தையும் உடைத்தெறிந்து நீர்குமிழியாய் பீறிட்ட
நம் பாசப்பிணைப்பை கர்வத்துடன் களிப்புறுகிறேன்.

உன் வித்தாய் உதித்திட்ட இத்தளிர்
எவ்விடம் பெயர்ந்தாலும் விருட்சமாய் விரவி
உன் பேர்  சொல்லும் பிள்ளையாக
என்றும் உன்னை பேருவகையடைய செய்யும்
பேற்றிற்காக நித்தம் தவமிருக்கிறேன்.

நீயே என்றும் உனக்கு நிகரானவன்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: VipurThi on February 19, 2018, 09:37:44 PM
மழலை மொழியில்
மணிக்கு நூறு முறை
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்
அப்பா

இன்றோ மணிக்கணக்கில்
நேரமிருந்தும் மனம் திறந்து
பேசமுடியா இடைவெளியில்
இருப்பவரும் அப்பா

வார்த்தைகளில் முரண்பாடு
கருத்துகளிலே முட்டி மோதல்
வெவ்வேறு சிந்தனைகள்
அன்று இல்லை இன்று ஏனோ?

அன்பு குறையவில்லை
அரவணைப்பு அகலவில்லை
ஆனாலும் அளவில்லா கோபங்கள்
என்னை உங்களின்
அண்மையில் நிறுத்தவில்லை

உண்மை இன்னும் புரியவில்லை
உணர்த்திடவும் தெரியவில்லை
காலம் தான் கடந்து சென்றுவிட்டால்
முடிந்தவைகளை மாற்ற வழியும் இல்லை

மீண்டும் ஏங்குகிறேன்
உங்கள் மடி தவழும்
குழந்தையாய் மாறிட
வரம் ஒன்றாய் அது போதும்
என் கனவுகளை உங்கள்
துணை கொண்டு நான் ஜெய்த்திட...

                                      **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 174
Post by: சாக்ரடீஸ் on February 20, 2018, 12:11:40 AM
அப்பா
ஒரு தாரக மந்திரம்
மகன்களுக்கு   செலுத்துவதை  விட
மகள்களுக்கே அதிக அன்பு
செலுத்தும்
ஒரு உன்னதமான உயிர்
எனவே என் உயிர் தோழி
தன் தந்தைக்கு எழுதுவதை போல்
ஒரு கற்பனை கிறுக்கல் ....

அப்பா
என் முதல் ஆண் நண்பன்
என் முதல் காதலன்
என் முதல் பாதுகாப்பு வலையம்
என்னை முதலில் முத்தமிட்டவன்
என்னை நேசித்த முதல் ஆண்மகன்
நான் அறிந்த முதல் ஆண் வாசம்
தனக்கென சிந்திக்காமல்
எனக்காகவே சிந்தித்தவன்
என் வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளும்
பேரறிவாளன்
என் தாயும் ஒரு படி கீழ் தான்
நான் சிரித்தால் சிரிப்பதில்
நான் அழுதால் ஆறுதல் சொல்வதில்
இவருக்கு நிகர் இவர் தான்
நான் வருந்தினால் எனக்கு ஆறுதல் சொல்லி
தனியே  சென்று அழும்
தைரியசாலி
எனக்காகவே உழைத்து
ரத்தத்தை வேர்வையாக சிந்திய
தாயுமானவன்
எனக்காக உன் தேவைகளை சுருக்கி
நத்தையாய் மாறியவன்
உன் அன்பு வேண்டும்
உன் சிரிப்பு வேண்டும்
உன் நேசம் வேண்டும்
உன் முத்தம் வேண்டும்
உன் கோபம் வேண்டும்
உன் அரவணைப்பு வேண்டும்
உன் வாசனை வேண்டும்
உன் தவிப்பு வேண்டும்
உன் கண்டிப்பு வேண்டும்
உன்னோடு நான்  செல்ல சண்டை இட வேண்டும்
உன்னோடு நான்  பொய் கோபம் கொள்ள வேண்டும்
பதறிப் போய் என்னை நீ சமாதனப்படுத்த வேண்டும் 
இவை அத்தனையும்
எனக்கே எனக்காக தர
நீ வேண்டும்
ஏங்குகிறேன்
உன் தோளில் சாய்ந்துகொள்ள
ஏங்குகிறேன்
உன் கழுத்தை கட்டி கொண்டு ஆட
ஏங்குகிறேன்
உன் தோழமைக்கு
ஏங்குகிறேன்
என் சிறு சிறு
தவுறுகளை சுட்டி காட்டி
திருத்தும் உன் பாசத்துக்கு
ஏங்குகிறேன்
என் தேவைகளை
நான் சொல்லும் முன்னே
நிறைவேற்றும்
உன் உன்னதமான அன்புக்கு
இவை அனைத்தும்
என் ஏக்கங்களாகவே
என்னுடன் கடைசி வரை ...

உன் அன்பை மீண்டும் பெற்றிட
அடுத்த ஜென்மத்தில் நான் மீண்டும் உன் மகளாக
பிறப்பதில் மிக சிறந்த சுயநலவாதி
இப்படிக்கு உங்கள் அன்பு மகள் .....

என் உயிர் தோழியின் தந்தையே
உங்கள்  பிடிவாதக்காரி  மகளின்
ரணங்கள்
தவிப்புகள்
துன்பங்களை பறித்திட
நீங்கள் மீண்டும் உயிர்த்திட வேண்டும்
என்று இறைவனைத் தொழுகின்றேன்

இந்த கிறுக்கல் என் உயிர் தோழியின் தந்தைக்கு
சமர்ப்பணம் .....