Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 38473 times)

Offline Anu

சாதுவான பீகாரி

மௌலானா மஜ்ருல் ஹக் லண்டனில் வக்கீல் தொழிலுக்குப் படித்துக் கொண்டிருந்த போது அவரை எனக்குத் தெரியும். பிறகு 1915-இல் காங்கிரஸில் அவரைச் சந்தித்தேன். அந்த ஆண்டு அவர் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்தார். அப்பொழுது மீண்டும் பழக்கம் ஏற்பட்டபோது, நான் பாட்னாவுக்கு எப்பொழுதாவது வந்தால் தம்முடன் தங்குமாறு அவர் அழைத்திருந்தார். இப்பொழுது அது எனக்கு ஞாபகம் வந்தது. நான் வந்திருக்கும் நோக்கத்தை அறிவித்து அவருக்கு ஒரு சீட்டு அனுப்பினேன். உடனே அவர் தமது மோட்டாரில் வந்து, தம்முடன் வந்து தங்குமாறு வற்புறுத்தினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு நான் போக வேண்டிய இடத்திற்குப் புறப்படும் முதல் வண்டியிலேயே என்னை அனுப்பும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன். அவ்விடத்திற்கு என்னைப் போன்று முற்றும் புதிதான ஒருவரால் ரெயில்வே வழி காட்டியைக்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, ராஜ்குமார் சுக்லாவுடன் பேசினார். நான் முஜாபர்பூருக்கு முதலில் போக வேண்டுமென்று யோசனை கூறினார். அங்கே போக அன்று மாலையிலேயே ஒரு வண்டி இருந்தது. அதில் அவர் என்னை ஏற்றி அனுப்பினார். பிரின்ஸிபால் கிருபளானி அப்பொழுது முஜாபர்பூரில் இருந்தார்.

ஹைதராபாத்திற்கு (சிந்து) நான் போயிருந்த போதிலிருந்து அவரை நான் அறிவேன். அவருடைய பெரும் தியாகங்களைக் குறித்தும் எளிய வாழ்க்கையைப் பற்றியும், பேராசிரியர் கிருபளானி அளித்து வரும் நிதியைக்கொண்டு தாம் ஆசிரமம் நடத்தி வருவதைப் பற்றியும் டாக்டர் சோயித்ராம் என்னிடம் கூறியிருந்தார். கிருபளானி, முஜாபர்பூர் அரசாங்கக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். நான் அங்கே போவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் அவர் அந்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்து விட்டார். நான் அங்கே வருவது குறித்து அவருக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்தேன். ரெயில், நடுநிசியில் அங்கு போனபோதிலும் ஒரு மாணவர் கூட்டத்துடன் வந்து அவர் என்னை ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தார். அவருக்குச் சொந்த ஜாகை எதுவும் இல்லை. போராசிரியர் மல்கானியுடன் அவர் வசித்து வந்தார். ஆகையால் நானும் மல்கானியின் விருந்தினன் ஆனேன். என்னைப் போன்ற ஒருவனுக்கு, அரசாங்கத்தில் வேலை பார்க்கு பேராசிரியர் ஒருவர் இடம் கொடுத்து உபசரிப்பது என்பது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமாகும்.

பீகாரில் முக்கியமாக திர்ஹூத் பகுதியில் இருந்துவந்த சகிக்க முடியாத மோசமான நிலைமையைக் குறித்துப் பேராசிரியர் கிருபளானி எனக்கு விவரமாகக் கூறினார். நான் மேற்கொண்டிருக்கும் வேலை எவ்வளவு கஷ்டமானது என்பதையும் தெரிவித்தார். அவர் பீகாரிகளுடன் நெருங்கிப் பழகி நல்ல தொடர்பு வைத்திருந்தார். நான் பீகாருக்கு வந்திருக்கும் வேலையைக் குறித்து முன்னாடியே அவர்களுடன் பேசியும் இருந்தார். காலையில் சில வக்கீல்கள் சேர்ந்து என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களில் ஒருவரான ராமநவமிப் பிரசாத்தை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முக்கியமாக அவர் கொண்டிருந்த சிரத்தை என் மனத்தைக் கவர்ந்தது. நீங்கள் என்ன காரியத்திற்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதை நீங்கள் இங்கே (பேராசிரியர் மல்கானியின் வீட்டில்) தங்கினால் செய்யவே முடியாது, நீங்கள் எங்களில் யாராவது ஒருவருடன் வந்து தங்க வேண்டும். கயா பாபு இங்கே பிரபலமான வக்கீல். அவருடன் நீங்கள் வந்து தங்க வேண்டும் என்று அவர் சார்பாக உங்களை அழைப்பதற்காக நான் வந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும் அரசாங்கத்திடம் பயப்படுகிறவர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என்றாலும், எங்களாலான உதவியை நாங்கள் செய்வோம். ராஜ்குமார் சுக்லா உங்களிடம் கூறியவை பெரும்பாலும் உண்மையே.

எங்கள் தலைவர்கள் இன்று இங்கே இல்லாது போனது வருந்தத்தக்கது. ஆயினும், பாபு பிரஸ்கி÷ஷார் பிரசாத், பாபு ராஜேந்திரப் பிரசாத் ஆகிய இருவருக்கும் தந்தி கொடுத்திருக்கிறேன். அவர்கள் சீக்கிரத்திலேயே இங்கே வந்து உங்களுக்குத் தேவையான தகவல்களையெல்லாம் கூறுவதோடு அதிக அளவு உதவியும் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கிறேன். தயவு செய்து கயா பாபுவின் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறி ராமநவமிப் பிரசாத் அழைத்தார். கயா பாபுவுக்குத் தொந்தரவு கொடுப்பானேன் என்று அஞ்சி நான் தயங்கிய போதிலும் இந்த வேண்டுகோளை என்னால் மறுக்க முடிய வில்லை. ஆனால், அப்படி ஒன்றும் தொந்தரவு இல்லை என்று அவர் கூறியதன் பேரில் அவருடன் இருக்கப் போனேன். அவரும் அவருடைய வீட்டினரும் என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டினர். தர்பங்காவிலிருந்து பிரஜ்கி÷ஷார் பாபுவும், பூரியிலிருந்து ராஜேந்திர பாபுவும் இதற்குள் வந்து சேர்ந்துவிட்டனர். லட்சுமணபுரியில் நான் சந்தித்த பாபு பிரஜ்கி÷ஷார் பிரசாத் அல்ல, இந்தப் பிரஜ்கி÷ஷார் பாபு. இத் தடவை பீகாரிகளுக்கு இயற்கையாக உள்ள அடக்கம், எளிமை, நல்ல தன்மை, அளவு கடந்த நம்பிக்கை ஆகியவைகளை அவரிடம் கண்டேன். இவைகள் என்னைக் கவர்ந்ததால், என் உள்ளம் அதிக ஆனந்தமடைந்தது.

பீகார் வக்கீல்கள் அவரிடம் கொண்டிருந்த மதிப்பு, எனக்கு ஓரளவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. இந்த நண்பர்களின் கூட்டத்தோடு ஆயுள் முழுவதற்கும் நட்புத்தளையில் நான் பிணைக்கப்பட்டு வருவதாகச் சீக்கிரத்திலேயே நான் உணர்ந்தேன். அங்கிருந்த நிலைமையைக் குறித்து எல்லா விவரங்களையும் பிரஜ்கி÷ஷார் பாபு எனக்குக் கூறினார். ஏழை விவசாயிகளின் வழக்குகளை அவர் நடத்துவது வழக்கம் என்றும் அறிந்தேன். நான் அங்கே சென்ற போது, அத்தகைய வழக்குகளில் இரண்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தன. அப்படிப்பட்ட வழக்குகளில் அவர் வெற்றி பெற்றுவிட்டால், அந்த ஏழை மக்களுக்குத் தாம் ஏதோ கொஞ்சம் உதவி செய்ததாக எண்ணி அவர் ஆறுதல் அடைவாராம். ஒன்றும் தெரியாத அந்த விவசாயிகளிடம் அவர் கட்டணம் வாங்காமல் இல்லை. வழக்குகளுக்குப் பணம் வாங்காவிட்டால், தாங்கள் குடும்பத்தை நடத்த முடியாது என்றும், அதனால் ஏழைகளுக்குச் சரியானபடி தாங்கள் உதவி செய்ய முடியாது போகும் என்றும் பொதுவாக வக்கீல்கள் எண்ணி வந்தனர். வழக்குகளுக்கு இவர்கள் வாங்கி வந்த கட்டணத் தொகையும், வங்காளத்திலும் பீகாரிலும் பாரிஸ்டர்கள் வாங்கி வந்த கட்டணங்களும் என்னைத் திகைக்கும் படி செய்துவிட்டன.

இன்னாரின் அபிப்பிராயத்தைக் கேட்பதற்காக அவருக்கு ரூ.10,000 கொடுத்தோம் என்று என்னிடம் சொன்னார்கள். யாருக்கும் ஆயிரத்திற்குக் குறைவான தொகையே இல்லை. இதைக் குறித்து நான் அன்புடன் கண்டித்துப் பேசியதை அந்நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். என்னைத் தவறாக அவர்கள் எண்ணிக் கொண்டுவிடவில்லை. அவர்களிடம் நான் கூறியதாவது: நிலைமையை நான் அறிந்துகொண்டதிலிருந்து கோர்ட்டுகளுக்குப் போவது என்பதை நாம் நிறுத்திக்கொண்டுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இத்தகைய வழக்குகளைக் கோர்ட்டுக்குக் கொண்டு போவதால், எந்தவிதமான நன்மையும் இல்லை. விவசாயிகள் இவ்விதம் நசுக்கப்பட்டுப் பயமடைந்திருக்கும் போது, கோர்ட்டுகள் பயனற்றவை. அவர்களுக்கு உண்மையான பரிகாரம், பயத்திலிருந்து அவர்களை விடுவிப்பதே. தீன் கதியா முறையைப் பீகாரிலிருந்து விரட்டியடித்துவிடும் வரையில் நாம் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. இரண்டு நாட்களில் இங்கிருந்து புறப்பட்டுவிட முடியும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், இந்த வேலையை முடிக்க இரண்டு ஆண்டுகளும் ஆகக்கூடும் என்பதை இப்பொழுது நான் அறிகிறேன். அவசியமானால், அவ்வளவு காலம் இருக்கவும் நான் தயாராயிருக்கிறேன்.

நான் செய்ய வேண்டியிருக்கும் வேலை இன்னதென்பதை இப்பொழுது உணருகிறேன். ஆனால், உங்கள் உதவி எனக்கு வேண்டும். பிரஜ்கி÷ஷார் பாபு, இணையற்ற வகையில் நிதானத்துடன் இருந்ததைக் கண்டேன். அவர் அமைதியோடு, எங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் நாங்கள் செய்கிறோம். ஆனால், உங்களுக்கு எந்தவிதமான உதவி தேவை என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள் என்றார். இவ்வாறு நடுநிசி வரையில் உட்கார்ந்து பேசினோம். நான் அவர்களிடம் கூறியதாவது: உங்களுடைய சட்ட ஞானத்தால் எனக்கு ஒருவிதப் பிரயோசனமும் இல்லை. எழுத்து வேலைக்கும், மொழி பெயர்க்கும் வேலைக்குமே எனக்கு உதவி தேவை; சிறை செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்த அபாயத்திற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புவேன். ஆனால், எவ்வளவு தூரம் போகமுடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ
அந்த அளவுக்கு மாத்திரம் நீங்கள் போகலாம். நீங்கள் குமாஸ்தாக்கள் ஆகிவிடுவதும், நிச்சயமற்ற காலம் வரையில் தொழிலை விட்டுவிட வருவதும் சாமான்யமான விஷயமே அல்ல. இப் பகுதியில் பேசப்படும் ஹிந்தியைப் புரிந்து கொள்வது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. செய்தி அல்லது உருது மொழிப் பத்திரிகைகளையும் என்னால் படிக்க முடியாது. இவற்றை மொழிபெயர்த்து எனக்குச் சொல்ல உங்கள் உதவி வேண்டியிருக்கும். இந்த வேலைக்குச் சம்பளம் கொடுத்து ஆள் வைக்க நம்மால் ஆகாது. அன்பிற்காகவும், சேவை உணர்ச்சியின் பேரிலுமே இவைகளெல்லாம் செய்யப்படவேண்டும்.

பிரஜ்கி÷ஷார் பாபு நான் கூறியதை உடனே நன்கு அறிந்து கொண்டார். இப்பொழுது அவர் என்னையும் தமது சகாக்களையும் முறையாகக் கேள்விகள் கேட்டு குறுக்கு விசாரணை செய்தார். தங்கள் சேவை எவ்வளவு காலத்திற்கு வேண்டியிருக்கும், தங்களில் எத்தனை பேர் வேலைக்கு வேண்டும். தாங்கள் முறை போட்டுக் கொண்டு வந்து சேவை செய்யலாமா என்பன போன்ற கேள்விகளையெல்லாம் அவர் கேட்டார். அவற்றின் மூலம் நான் கேட்ட உதவியின் தன்மையைத் தெளிவாக்கிக்கொள்ள முயன்றார். பிறகு தியாகத்திற்குத் தங்களுக்குள்ள சக்தியைக் குறித்து வக்கீல்களைக் கேட்டார். முடிவாக அவர்கள் எனக்கு இந்த வாக்குறுதியை அளித்தார்கள்: எங்களில் இத்தனை பேர் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களில் சிலர், நீங்கள் விரும்பும் காலம் வரையில் உங்களுடனேயே இருப்போம். ஆனால், சிறை செல்வதற்குத் தயாராவது என்பது எங்களுக்குப் புதியதொரு விஷயம். அதற்கும் எங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள முயல்கிறோம்.


Offline Anu

அகிம்சையுடன் நேருக்குநேர்

சம்பாரண் விவசாயிகளின் நிலைமையும், அவுரித் தோட்ட முதலாளிகளுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த குறைகளையும் விசாரித்து அறிந்துகொள்ளுவதே என்னுடைய நோக்கம். ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் சந்தித்தாக வேண்டியது இக்காரியத்திற்கு அவசியமாயிற்று. ஆனால், என்னுடைய விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இவ்விஷயத்தில் தோட்ட முதலாளிகளின் கட்சி இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளுவதும், அந்த டிவிஷனின் கமிஷனரைக் கண்டு பேசுவதும் மிக முக்கியம் என்று கருதினேன். இவ்விருவரையும் கண்டு பேச அனுமதி கேட்டு அதையும் பெற்றேன். தோட்ட முதலாளிகளின் சங்கக் காரியதரிசியைக் கண்டு பேசினேன். நான் வெளியான் என்றும், தோட்ட முதலாளிகளுக்கும் அவர்களுடைய சாகுபடியாளருக்கும் இடையே தலையிடுவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்லி விட்டார். ஆனால், நான் சொல்லிக்கொள்ள வேண்டியது ஏதாவது இருந்தால், அதை எழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ளுமாறும் என்னிடம் கூறிவிட்டார். வெளியான் என்று நான் என்னை எண்ணிக்கொள்ளவில்லை என்றும், சாகுபடியாளர்கள் தங்கள் நிலைமையைப் பற்றி நான் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவார்களாயின் அப்படி விசாரிப்பதற்கு எனக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது என்றும் அவரிடம் பணிவாகச் சொன்னேன்.

கமிஷனரையும் போய்ப் பார்த்தேன். அவர் என்னை உருட்டி மிரட்டத் தொடங்கினார். திர்ஹு த்திலிருந்து உடனே போய் விடுமாறும் அவர் எனக்குப் புத்திமதி சொன்னார். இவையெல்லாவற்றையும் என் சக ஊழியர்களுக்குத் தெரிவித்தேன். மேற்கொண்டும் நான் செல்ல முடியாதபடி அரசாங்கம் என்னைத் தடுத்துவிடக்கூடும் என்றும், ஆகவே நான் எதிர்பார்த்ததற்கும் முன்னாலேயே நான் சிறை சென்று விட நேரலாம் என்றும், நான் கைது செய்யப்பட்டால், அப்படிச் செய்யப்படுவது பேதியாவில் சாத்தியமானால் நடக்க வேண்டும்; அல்லது மோதிகாரியில் நடப்பது மிகச் சிறந்தது என்றும் சொன்னேன். ஆகையால் சாத்தியமான வரையில் சீக்கிரத்திலேயே நான் அந்த இடங்களுக்குப் போவதே நல்லது என்றும் கூறினேன். திர்ஹு த் டிவிஷனில் சம்பாரண் ஒரு ஜில்லா; மோதிகாரி அதன் தலைநகரம். ராஜ்குமார் சுக்லாவின் ஊர் பேதியாவுக்குப் பக்கத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளே, அந்த ஜில்லாவில் மிகவும் ஏழைகள். அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று ராஜ்குமார் சுக்லா விரும்பினார்; நானும் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆகவே, அன்றே என் சக ஊழியர்களுடன் நான் மோதிகாரிக்குப் புறப்பட்டேன். அங்கே பாபு கோரக் பிரசாத் எங்களுக்குத் தம் வீட்டில் தங்க இடம் கொடுத்தார். இதனால் அவர் வீடு ஒரு சத்திரம் போல் ஆகிவிட்டது.

நாங்கள் எல்லோரும் தங்குவதற்கு அந்த வீட்டில் இடம் போதவில்லை. மோதிகாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு விவசாயி துன்புறுத்தப்பட்டார் என்று அன்றே நாங்கள் கேள்விப்பட்டோம். அடுத்த நாள் காலையில் பாபு தரணீதர் பிரசாத்துடன் நான் அங்கே போய் அந்த விவசாயியைப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி யானை மீது ஏறி நாங்கள் அவ்விடத்திற்குப் புறப்பட்டோம். குஜராத்தில் மாட்டு வண்டி எப்படிச் சர்வ சாதாரணமோ அதேபோலச் சம்பாரணில் யானை சர்வ சாதாரணம். பாதி தூரம்கூடப் போயிருக்க மாட்டோம், அதற்குள் போலீஸ் சூப்பரின்டெண்டென்டிடமிருந்து வந்த ஓர் ஆள் எங்களைப் பிடித்தார். போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் தமது வந்தனத்தை எனக்கு அனுப்பியதாக அந்த ஆள் கூறினார். அவர் கூறியதன் கருத்தை நான் அறிந்து கொண்டேன். போக இருந்த இடத்திற்குத் தரணீதர் பிரசாத்தை மாத்திரம் போகச் சொல்லிவிட்டு, அந்த ஆள் கொண்டு வந்திருந்த வாடகை வண்டியில் நான் ஏறிக் கொண்டேன். சம்பாரணிலிருந்து நான் போய்விட வேண்டும் என்ற உத்தரவைப் பிறகு அந்த ஆள் எனக்குச் சாதரா செய்து, என்னை நான் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டார். உத்தரவைப் பெற்றுக் கொண்டதற்குக் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார்.

அந்த உத்தரவுக்கு நான் கீழ்ப்படியப்போவதில்லை என்றும், என் விசாரணை முடியும் வரையில் நான் சம்பாரணிலிருந்து போகப்போவதில்லை என்றும் எழுதிக் கொடுத்தேன். அதன் பேரில் சம்பாரணை விட்டுப் போய்விடவேண்டும் என்ற உத்தரவை மீறிவிட்ட குற்றத்திற்காக விசாரிப்பதற்கு, மறுநாள் கோர்ட்டுக்கு வருமாறு எனக்குச் சம்மன் வந்தது. அன்று இரவு முழுவதும் விழித்திருந்து கடிதங்கள் எழுதினேன்; பாபு பிரஜ்கி÷ஷார் பிரசாத்துக்கு அவசியமான யோசனைகளை எல்லாம் கூறினேன். எனக்கு உத்தரவிடப்பட்டதும் சம்மன் வந்திருப்பதும் காட்டுத்தீபோல் எங்கும் பரவிவிட்டன. மோதிகாரி, இதற்கு முன்னால் என்றுமே கண்டறியாத காட்சியை அன்று கண்டது என்று சொன்னார்கள். கோரக் பாபுவின் வீட்டிலும், கோர்ட்டிலும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரே ஜனக் கூட்டம். அதிர்ஷ்டவசமாக என் வேலைகளையெல்லாம் இரவிலேயே செய்து முடித்து விட்டதால் அப்பெரும் கூட்டத்தைச் சமாளிக்க என்னால் முடிந்தது. என் சகாக்கள் எனக்கு அதிக உதவியாக இருந்தார்கள். நான் போன இடத்திற்கெல்லாம் கூட்டம் பின் தொடர்ந்து வந்துகொண்டு இருந்ததால் அக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் என் சகாக்கள் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர், மாஜிஸ்டிரேட், போலீஸ் சூப்பரின்டெண்டென்ட் ஆகிய அதிகாரிகளுக்கும் எனக்கும் இடையே ஒரு வகையான நட்பு ஏற்பட்டது. எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவைச் சட்ட ரீதியில் நான் ஆட்சேபித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நான் அவற்றை எல்லாம் பெற்றுக் கொண்டேன். அதிகாரிகள் விஷயத்தில் நான் தவறில்லாமலும் நடந்து கொண்டேன். இதிலிருந்து தனிப்பட்ட வகையில் தங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என்றும், அவர்களுடைய உத்தரவைச் சாத்விகமாக எதிர்க்கவே நான் விரும்புகிறேன் என்றும் அவர்கள் கண்டு கொண்டனர். இந்த வகையில் அவர்கள் கவலையற்றவர்களாயினர். என்னைத் தொந்தரவு செய்வதற்குப் பதிலாகக் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு என் ஒத்துழைப்பையும், என் சகாக்களின் ஒத்துழைப்பையும் மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டார்கள். என்றாலும், தங்களுடைய அதிகாரம் ஆட்டம் கண்டு விட்டது என்பதற்கு அது கண்கூடான சாட்சியாக அவர்களுக்கு இருந்தது. அந்த நேரத்தில் மக்கள், தண்டனையைப் பற்றிய பயத்தையெல்லாம் இழந்து விட்டார்கள். தங்கள் புதிய நண்பர்கள் காட்டிய அன்பின் சக்திக்கே பணிந்தனர். சம்பாரணில் யாருக்கும் என்னைத் தெரியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் எல்லோரும் ஒன்றுமே அறியாதவர்கள். சம்பாரண், கங்கைக்கு வடக்கில் வெகு தூரத்திலும், இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திற்குப் பக்கத்திலும் இருப்பதால், இந்தியாவின் மற்றப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப் பகுதியில் இருப்பவர்களுக்குக் காங்கிரஸைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

காங்கிரஸ் என்ற பெயரைக் கேட்டிருப்பவர்கள் கூட, அதில் சேருவதற்கும், அதன் பெயரைச் சொல்லுவதற்கும் கூடப் பயந்து கொண்டிருந்தனர். இப்பொழுதோ, காங்கிரஸு ம் அதன் அங்கத்தினர் களும், காங்கிரஸின் பெயரால் இல்லாவிட்டாலும் அதைவிட இன்னும் அதிக உண்மையான வகையில், அப்பகுதியில் பிரவேசித்து விட்டார்கள். காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டிவந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. காங்கிரஸ் என்பதற்கு, வக்கீல்களின் தந்திரவாதங்கள்; சட்டத்தில் இருக்கும் இடுக்குகளைக் கொண்டு சட்டத்தைப் பின்பற்றாது இருப்பது; வெடி குண்டுக்கு மற்றொரு பெயர்; அராஜகக் குற்றம், தந்திரம், நயவஞ்சகம் - என்றெல்லாம் அவர்கள் பொருள் கற்பித்துக் கொண்டிருந்தனர். இந்த இரு தரப்பாரிடமிருந்தும் இந்தத் தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும். ஆகவே, காங்கிரஸின் பெயரையே சொல்லுவதில்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரிவிப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்து கொண்டோம். காங்கிரஸின் பெயரைவிட அதன் கருத்தை அறிந்து அவர்கள் நடந்து கொண்டாலே போதும் என்று நாங்கள் எண்ணினோம். ஆகையால், காங்கிரஸின் சார்பாகப் பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ அங்கே வேலை செய்து, எங்கள் வருகைக்காக முன்னேற்பாடுகளைச் செய்து வைக்க அங்கே தூதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை.

ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் போய்ப்பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய சக்தியும் ராஜ்குமார் சுக்லாவுக்கு இல்லை. அதுவரையில் அம்மக்கள் இடையே எந்த விதமான ராஜீய வேலையும் நடந்தது கிடையாது. சம்பாரணுக்கு வெளியில் உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாதென்றாலும், ஆயுளெல்லாம் தங்களுக்கு நண்பனாக இருந்தவனைப்போல் அவர்கள் என்னை வரவேற்றார்கள். இவ்விதம் விவசாயிகளை நான் சந்தித்ததில், கடவுளையும், அகிம்சையையும், சத்தியத்தையும் நேருக்கு நேராக நான் தரிசித்தேன் என்று கூறுவது அப்படியே உண்மையேயன்றி எவ்விதத்திலும் மிகைப்படுத்திக் கூறுவது ஆகாது. இந்தத் தரிசனத்தை நான் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது என்பதை நான் ஆராயும்போது, மக்களிடம் கொண்ட அன்பைத் தவிர வேறு எதுவும் அல்ல என்பதைக் காண்கிறேன். இந்த அன்பு, அகிம்சையில் நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதியின் வெளித் தோற்றமேயன்றி வேறு அன்று. சம்பாரணில் அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாள்; விவசாயிகளுக்கும் எனக்கும் அது மிகவும் முக்கியமான நாளாகும். சட்டப்படி விசாரணைக்கு உட்பட வேண்டியவன் நான். ஆனால், உண்மையில், குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றது அரசாங்கமே என்று சொல்ல வேண்டும். என்னைப் பிடிக்க விரித்திருந்த வலையில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்படி செய்வதிலேயே கமிஷனர் வெற்றி பெற்றார்.


Offline Anu

வழக்கு வாபசாயிற்று

விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம் திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டி ரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான் குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப் போய் விடவேண்டும் என்ற உத்தரவை மீறிய குற்றத்தை நான் செய்திருப்பதாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், வழக்கை ஒத்தி வைக்கவேண்டாம் என்று மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். பின்வருமாறு சுருக்கமாக என் வாக்குமூலத்தையும் படித்தேன்: கி. பு. கோ. 144-வது பிரிவின் கீழே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும் இக் கடுமையான நடவடிக்கையை நான் ஏன் மேற்கொண்டேன் என்பதைக் காட்ட, கோர்ட்டாரின் அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகளுக்கும் எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப் பற்றிய விஷயமே இது என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். ஜீவ காருண்ய, தேசிய சேவை செய்வது என்ற நோக்கத்தின் பேரில் நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித் தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர். வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் நான் இங்கே வந்தேன்.

பிரச்னையை ஆராய்ந்து பாராமல் நான் எந்தவிதமான உதவியையும் செய்துவிட முடியாது. ஆகையால், சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள், தோட்ட முதலாளிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராயவே நான் வந்திருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால் பொது ஜன அமைதிக்குப் பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் என்றோ நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. ஆனால், அதிகாரிகளோ, வேறுவிதமாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான் முற்றும் உணருகிறேன். தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜை நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும் முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக வந்திருக்கிறேனோ அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல் செய்துவிட முடியாது.

அவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே அவர்களுக்கு நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து நானாக வலியப் போய்விட முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டிருக்கும் போது, அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை நான் அதிகாரிகளின் மீதே போட முடியும். இந்தியாவின் பொது வாழ்க்கையில் என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர் பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள் இன்று ஒரு சிக்கலான அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம். இதில் சுயமதிப்புள்ள ஒருவன், எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை, நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி, அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதேயாகும். இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க நான் முற்பட்டிருப்பதன் நோக்கம், எனக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளும் முயற்சி அன்று. தடை உத்தரவை மதிக்க நான் மறுத்திருப்பது, சட்டப்படி ஏற்பட்டிருக்கும் அதிகாரத்தினிடம் எனக்கு மதிப்பு இல்லாததனால் அல்ல; சட்டங்களுக்கெல்லாம் மேலான சட்டமாகிய மனச்சாட்சியின் குரலுக்குக் கீழ்ப்படிந்தே இவ்விதம் செய்கிறேன் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.

இவ்விதம் நான் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால் நான் இப்படி வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பாராததனால் மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மாஜிஸ்டிரேட், தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார். இதற்கு மத்தியில் முழு விவரங்களையும் நான் வைசிராய்க்கும், பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன் மோகன மாளவியாவுக்கும், மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன். தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக் கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டர் ஸ்ரீஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜு களை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.

அரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் சம்பாரணில் இருப்பதை அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின் போக்கு, தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை உண்டாக்கிவிட்டது என்பதை அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை அவர்களும் உள்ளூர விரும்பமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால், தவறான, தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கிவிடக்கூடிய செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய குரோதமே மேலும் அதிகமாகும்.

அவர்களுடைய ஆத்திரம் என் மீது பாய்வதற்குப் பதிலாக, இப்பொழுதே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும். அதோடு அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும். இவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு எதிராக விஷமமான கிளர்ச்சிகளையெல்லாம் செய்தார்கள். என்னைப் பற்றியும், என் சக ஊழியர்களைக் குறித்தும் எல்லாவிதமான புளுகுகளும் பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான் மிகவும் தீவிரமான முன் ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரச்சாரம் அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது. பிரஜ்கி÷ஷார் பாபுவின் பெயரைக் கெடுத்துவிடத் தோட்ட முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால், அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அவதூறுகளைக் கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மக்களிடையே மதிப்பு அதிகரித்தது.

இப்படி அதிக ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்த நிலையில், மற்ற மாகணங்களிலிருந்த தலைவர்கள் யாரையும் அழைப்பது சரியல்ல என்று எண்ணினேன். தமக்குத் தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு வாக்குறுதி அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை. இப்போராட்டம் ஒரு ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும்,  முக்கியமான பத்திரிகைகளுக்கும் - பிரசுரிப்பதற்காக அல்ல - அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப்போது சமாச்சாரத்தை அறிவித்து வந்தேன். ராஜீயக் கலப்பில்லாத ஒரு போராட்டத்தின் முடிவு, ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம். ஆயினும், அப்போராட்டத்திற்கு ராஜீயத் தோற்றத்தை அளித்துவிடுவதானால், அதற்குத் தீமையையே உண்டாக்கி விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக் கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே அதற்கு உதவி செய்ய முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும். இந்த உண்மைக்குச் சம்பாரண் போராட்டம் ஒரு ருசுவாகும்


Offline Anu

வேலைமுறைகள்

சம்பாரண் விசாரணையின் முழு விவரத்தையும் கூறுவதென்றால், சம்பாரண் விவசாயிகள் அச்சமயத்தில் இருந்த நிலைமையைப் பற்றிக் கூறுவதாகவே அது ஆகும். ஆனால் இந்த அத்தியாயங்களுக்கு அது பொருத்தம் இல்லாதது. சம்பாரண் விசாரணை, சத்தியம், அகிம்சை ஆகியவற்றில் ஒரு தைரியமான சோதனையேயாகும். அந்த நோக்கத்துடன் பார்க்கும்போது, எழுதத் தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறவைகளை மாத்திரமே நான் வாரந்தோறும் எழுதிக்கொண்டு வருகிறேன். இந்த விசாரணையைக் குறித்து மேலும் விவரமாக அறிய விரும்புவோர், ஹிந்தியில் ஸ்ரீ ராஜேந்திரப் பிரசாத் எழுதியிருக்கும் சம்பாரண் சத்தியாக்கிரகம் என்ற நூலைப் பார்க்கவும். அதன் ஆங்கிலப் பதிப்பும் இப்பொழுது அச்சாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிகிறேன். இந்த அத்தியாயத்திற்கு உரிய விஷயத்தை இனிக் கவனிப்போம். கோரக் பாபு தம் வீட்டைக் காலிசெய்துவிட்டு, வேறிடத்திற்குச் செல்லும்படி செய்யாமல் அவர் வீட்டிலேயே இந்த விசாரணையை நடத்தி வருவது என்பது இயலாத காரியம்.

எங்களுக்குத் தங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுக்கும் அளவுக்கு மோதிகாரி மக்களுக்கு இன்னும் பயம் போய்விடவில்லை. என்றாலும், பிரஜ்கி÷ஷார் பாபு சாமர்த்தியமாக ஒரு வீட்டைப் பிடித்துவிட்டார். அதைச் சுற்றித் திறந்த இடம் நிறைய உண்டு. அவ்வீட்டிற்கு நாங்கள் மாறினோம். பணம் இல்லாமல் வேலையை நடத்திக்கொண்டு போவது என்பதும் சாத்தியமாக இல்லை. இது போன்ற வேலைக்குப் பண உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வெளியிடும் வழக்கமும் இதுவரை இல்லை. பிரஜ்கி÷ஷாரும் அவர் நண்பர்களும் முக்கியமான வக்கீல்கள். அவர்களே பணம் கொடுத்து வந்தார்கள். சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் நண்பர்களிடமிருந்தும் பெற்று வந்தனர். பணம் கொடுக்கக் கூடிய வசதியில் தாங்களும், தங்களைப் போன்றவர்களுமே இருக்கும்போது பண உதவி செய்யுமாறு பொதுமக்களை அவர்கள் எப்படிக்கேட்க முடியும்? அதுவே வாதம் என்று தோன்றியது. சம்பாரண் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான பண உதவியையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்துகொண்டுவிட்டேன். ஏனெனில், தவறான அபிப்பிராயம் ஏற்படுவதற்கு அது நிச்சயம் இடம் கொடுத்துவிடும்.

இந்த விசாரணையை நடத்துவதற்காக என்று பண உதவி கோரிப் பொதுவாகத் தேச மக்களுக்கு வேண்டுகோள் வெளியிடுவதில்லை என்றும் உறுதி செய்துகொண்டேன். ஏனெனில், அவ்விதம் தேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தால், இது அகில இந்திய விஷயமாகவும், ராஜீய விஷயமாகவும் ஆகி விடக்கூடும். பம்பாயிலிருந்து நண்பர்கள் ரூ. 15,000 கொடுப்பதாகக் கூறினர். ஆனால், அவர்களுக்கு வந்தனம் கூறி, அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். பிரஜ்கி÷ஷார் பாபுவின் உதவியைக் கொண்டு சம்பாரணுக்கு வெளியிலிருக்கும் பணக்காரர்களான பீகாரிகளிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசூலித்துக்கொள்ளுவது, மேற்கொண்டும் தேவைப்பட்டால் ரங்கூனிலிருந்த என் நண்பர் டாக்டர் பி. ஜே. மேத்தாவிடம் கேட்பது என்று முடிவு செய்து கொண்டேன். எவ்வளவு தேவைப்பட்டாலும் அனுப்புவதாக டாக்டர் மேத்தா உடனே ஒப்புக்கொண்டார். இவ்விதம் பணத்தைப் பற்றிய கவலையே எங்களுக்கு இல்லாது போயிற்று. சம்பாரணில் வறுமை நிலைமைக்கு ஏற்ற வகையில் மிகவும் சிக்கனமாகவே செலவு செய்வது என்று நாங்கள் உறுதி கொண்டதால், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படுவதற்கும் இல்லை. உண்மையில், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படவில்லை என்பதையே முடிவிலும் கண்டோம். மொத்தத்தில் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் நாங்கள் செலவு செய்யவில்லை என்றே எனக்கு ஞாபகம். நாங்கள் வசூலித்ததில் சில நூறு ரூபாய்களை மீதப்படுத்தியும் விட்டோம்.

ஆரம்ப நாட்களில் என்னுடைய சகாக்கள் விசித்திரமான வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இதைக் குறித்து நான் இடைவிடாமல் அவர்களைப் பரிகாசம் செய்து வந்தேன். அந்த வக்கீல்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைக்காரன், ஒரு சமையற்காரன் ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சமையல், இரவில் நடுநிசியில் கூடச் சாப்பிடுவார்கள். அவர்கள் தங்கள் செலவுக்குத் தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட போதிலும், கால நேர ஒழுங்கின்றி அவர்கள் நடந்துகொண்டு வந்தது எனக்கு ஒரே கவலையாக இருந்தது. நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால், எங்களுக்குள் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுவிடும் என்பதற்கில்லை. நான் பரிகாசம் செய்ததை நல்ல உணர்ச்சியுடனேயே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில், வேலைக்காரர்களையெல்லாம் அனுப்பி விடுவது, எல்லாச் சமையல்களையும் ஒன்றாக்கி விடுவது, குறிப்பிட்ட கால முறையை அனுசரிப்பது என்று ஒப்புக் கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அல்ல. ஆனால் இரண்டு வகைச் சமையல் என்றால் செலவு அதிகம் ஆகும். ஆதலால் சைவச் சமையலே வைத்துக் கொள்ளுவது என்றும் தீர்மானமாயிற்று.

சாப்பாடு எளிமையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அவசியம் என்றும் கருதப்பட்டது. இந்த ஏற்பாடுகள், எங்கள் செலவை அதிக அளவுக்குக் குறைத்துவிட்டன. அதோடு ஏராளமான நேரமும் உழைப்பும் மீதமாயின. இவை இரண்டும் நாங்கள் மேற்கொண்டிருந்த வேலைக்கு மிகவும் தேவையாகவும் இருந்தன. எங்களிடம் வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் கூட்டம்கூட்டமாக வந்தார்கள். அப்படி வந்தவர்களுடன் அவர்களுடைய தோழர்களும் ஏராளமாக வந்தனர். நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றியிருந்த திறந்த வெளியிலும் தோட்டத்திலும் இருக்க இடம் போதாத வகையில் பெருங்கூட்டம் இருந்து வந்தது. என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைக் காப்பதற்காக என் சகாக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அடிக்கடி பயன் பெறுவதில்லை. ஆகையால், குறிப்பிட்ட நேரத்தில் என்னைத் தரிசனத்திற்குக் காட்சிப் பொருள்போல் வைக்கவேண்டியிருந்தது. வாக்குமூலங்களை எழுதிக் கொள்ளுவதற்கு மாத்திரம் ஐந்து முதல் ஏழு தொண்டர்கள் வேண்டியிருந்தது. அப்படியும் வந்தவர்களில் சிலர் வாக்குமூலம் கொடுக்க முடியாமலே மாலையில் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த வாக்குமூலங்கள் எல்லாமே முக்கியமானவை அல்ல; முன்னால் சிலர் சொன்னவற்றையே சிலர் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தார்கள். என்றாலும், தாங்களும் வாக்குமூலம் கொடுக்காவிட்டால், அம்மக்கள் திருப்தியடையமாட்டார்கள். இவ்விஷயத்தில் அவர்களுடைய உணர்ச்சியை நான் பாராட்டினேன்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டவர்கள், சில விதிகளை அனுசரிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியையும் சரியானபடி குறுக்கு விசாரணை செய்து, அந்தச் சோதனையில் திருப்திகரமாக இல்லாதவர்களின் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்விதம் செய்வதில் அதிகநேரம் செலவான போதிலும் பதிவான வாக்குமூலங்களில் பெரும்பாலானவை சிறிதும் ஆட்சேபிக்க முடியாதவைகளாயின. இந்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும் போது, ரகசியப் போலீஸைச் சேர்ந்த ஓர் அதிகாரி எப்பொழுதும் அங்கே இருந்து கொண்டிருப்பார். அவர் அவ்விதம் அங்கில்லாதபடி நாங்கள் தடுத்திருக்க முடியும். ஆனால், ரகசியப் போலீஸ் அதிகாரிகள் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவதோடு, அவர்களை மரியாதையாகவும் நடத்தி, அவர்களுக்குத் தெரிவிக்கக்கூடிய தகவல்களையெல்லாம் தெரிவிப்பது என்றும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் முடிவு செய்திருந்தோம். இதனால் எங்களுக்கு எந்தவிதமான தீங்கும் நேர்ந்து விடவில்லை. இதற்கு மாறாக, ரகசியப் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாலேயே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது,குடியானவர்களை மேலும் பயம் இல்லாதவர்களாக்கியது.

ரகசியப் போலீஸைக் குறித்து விவசாயிகளுக்கு இருந்த அளவு கடந்த பயம் ஒருபுறத்தில் அவர்கள் மனத்தில் இருந்து விரட்டப் பட்டதோடு மற்றோர் புறத்தில் அந்த அதிகாரிகள் இருந்ததால் வாக்குமூலத்தை மிகைப்படுத்திக் கூறிவிடாதிருப்பதற்கும் விவசாயிகளுக்கு அது இயற்கையாகவே ஒரு தடையாகவும் இருந்தது. மக்களை வலையில் சிக்கவைத்து விடுவது ரகசியப் போலீஸ் நண்பர்களின் வேலை. ஆகவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாயிற்று. தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப்பேசுவது என்று வைத்துக்கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.


Offline Anu

என் சகாக்கள்

பிரஜ்கி÷ஷார் பாபுவும் ராஜேந்திர பாபுவும் இணையே இல்லாத ஒரு ஜோடி. அவர்களுக்கு இருந்த அபார பக்தியின் காரணமாக, அவர்களுடைய உதவி இல்லாமல் நான் ஓர் அடியும் எடுத்து வைக்க முடியாமல் இருந்தது. அவர்களுடைய சீடர்கள் அல்லது சகாக்களான சம்பு பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு இவர்களும் மற்ற வக்கீல்களும் எப்பொழுதும் எங்களுடன் இருந்து வந்தனர். விந்தியா பாபுவும் ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எல்லோரும் பீகாரிகள். இவர்களுக்கு இருந்த முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளுவது. பேராசிரியர் கிருபளானியும் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. அவர் சிந்திக்காரர். என்றாலும், பீகாரில் பிறந்தவரைவிட உண்மையான பீகாரியாக அவர் இருந்தார். வேறு மாகாணத்தில் குடியேறி, அந்த மாகாணத்திற்குத் தங்களை அர்ப்பணம் செய்துகொண்டு விடும் ஊழியர்கள் சிலரையே நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் சிலரில் ஆச்சாரிய கிருபளானியும் ஒருவர். வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று யாருமே உணரமுடியாதபடி அவர் செய்து வந்தார். என்னுடைய பிரதான வாசற்காப்பாளர் அவர்.

என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதை அவர் அப்போதைக்குத் தமது வாழ்க்கையின் லட்சியமாகவும் முடிவாகவும் கொண்டிருந்தார். அவருக்கு வற்றாத நகைச்சுவை உண்டு. அந்த நகைச்சுவையின் உதவியைக் கொண்டும், சில சமயங்களில் தமது அகிம்சையோடு கூடிய மிரட்டல்களைக் கொண்டும் ஜனங்களைத் தடுத்து வந்தார். இரவானதும் அவர் தமது உபாத்திமைத் தொழிலை மேற்கொண்டு விடுவார். தமது சகாக்களுக்குத் தமது சரித்திரப் படிப்பையும் ஆராய்ச்சிகளையும் எடுத்துக்கூறி உற்சாகப்படுத்துவார். அங்கே வருகிறவர்களில் பயங்காளியாக இருக்கும் யாரையும் வீரர் ஆக்கிவிடுவார். எனக்கு அவசியமாகும்போது வந்து உதவி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தவர்களில் மௌலானா மஜ்ருல் ஹக்கும் ஒருவர். மாதம் இரண்டொருமுறை அவர் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போவார். அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆடம்பர, ஆர்ப்பாட்ட வாழ்க்கைக்கும் இன்றுள்ள அவருடைய எளிய வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் உண்டு. அவர் எங்களுடன் பழகிய விதம், அவரும் எங்களில் ஒருவரே என்று நாங்கள் எண்ணும்படி செய்தது. ஆனால், புதிதாக வருபவர்களுக்கு அவருடைய நாகரிகப் பழக்கங்களைப் பார்த்துவிட்டு வேறு விதமான எண்ணமே ஏற்படும்.

பீகாரைப் பற்றிய அனுபவம் எனக்கு அதிகமானதும், கிராமக் கல்வி இருந்தாலன்றி நிரந்தரமான வகையில் வேலை எதுவும் செய்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்தேன். விவசாயிகளின் அறியாமையோ மிகப் பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒன்று, இஷ்டம் போல் திரியவிட்டு வந்தார்கள்; இல்லையானால், காலையிலிருந்து இரவு வரையில், தினத்திற்கு இரண்டு செப்புக் காசுக்காக, அவுரித் தோட்டங்களில் உழைக்கும்படி செய்துவந்தார்கள். அந்த நாட்களில் ஓர் ஆண் தொழிலாளிக்கு இரண்டரை அணாவுக்கு மேல் இல்லை. நான்கு அணாச் சம்பாதிப்பதில் யாராவது வெற்றி பெற்று விடுவார்களானால், அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே கருதப்படுவார். என்னுடைய சகாக்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு ஆறு கிராமங்களில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். கிராமத்தினருக்கு நாங்கள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று, உபாத்தியாயர்களுக்கு இருக்க இடத்திற்கும் சாப்பாட்டிற்கும் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், மற்றச் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் என்பதாகும். கிராம மக்களிடம் பணம் என்பதே கிடையாது. என்றாலும், அவர்களால் உணவுப் பொருள்களைத் தாராளமாகக் கொடுக்க முடியும்.

உண்மையில் தானியங்களும் மற்றப் பொருள்களும் கொடுக்கத் தயாராயிருப்பதாக முன் கூட்டியே அவர்கள் தங்கள் சம்மதத்தைக் கூறி விட்டனர். ஆனால், உபாத்தியாயர்களுக்கு எங்கே போவது என்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. சம்பளம் என்பதே இல்லாமல் சாப்பாட்டுக்கு வேண்டியதை மாத்திரமே பெற்றுக்கொண்டு வேலை செய்ய, உள்ளூரில் உபாத்தியாயர்களைக் கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது. சாதாரணமாக உபாத்தியாயர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கவே கூடாது என்பது என் கருத்து. உபாத்தியாயர்களின் ஒழுக்க உறுதி தான் முக்கியமேயன்றி அவர்களுடைய இலக்கியத் தகுதி முக்கியம் அன்று. ஆகவே, தொண்டு செய்ய முன்வரும் உபாத்தியாயர்கள் வேண்டும் என்று பொதுக்கோரிக்கை ஒன்றை வெளியிட்டேன். உடனே பலர் முன் வந்தார்கள். பாபா ஸாகிப் ஸோமன், புண்டலீகர் ஆகிய இருவரையும் ஸ்ரீகங்காதர ராவ் தேஷ்பாண்டே அனுப்பினார். பம்பாயிலிருந்து ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே வந்தார். புனாவிலிருந்து ஸ்ரீமதி ஆனந்திபாய் வைஷம்பாயண் வந்தார். சோட்டாலால், சுரேந்திரநாத், என் மகன் தேவதாஸ் ஆகியவர்களை வருமாறு ஆசிரமத்திற்கு எழுதினேன். இதற்குள் மகாதேவ தேசாயும், நரஹரி பரீக்கும் தத்தம் மனைவியர்களுடன் என்னோடு இருந்து வேலை செய்ய வந்துவிட்டார்கள். கஸ்தூரிபாயும் இவ்வேலைக்காக அழைக்கப்பட்டாள். இவ்விதம் நல்ல தொண்டர் கூட்டம் சேர்ந்துவிட்டது.

ஸ்ரீமதி அவந்திகா பாயும் ஸ்ரீமதி ஆனந்தி பாயும் போதிய அளவு படித்தவர்கள். ஆனால், ஸ்ரீமதி துர்க்கா தேசாய்க்கும் ஸ்ரீமதி மணிபென் பரீக்கும் குஜராத்தி மாத்திரமே எழுதப் படிக்கத் தெரியும். கஸ்தூரிபாய்க்கு அதுவும் தெரியாது. இப் பெண்கள் குழந்தைகளுக்கு ஹிந்தியில் எப்படிப் போதிப்பது? இலக்கணமும், எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் சுத்தமாக இருக்கவேண்டியதையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குப் போதிப்பதே முக்கியம் என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதில் கூட, அவர்கள் நினைக்கிறபடி, குஜராத்தி, ஹிந்தி, மராத்தி மொழிகளின் எழுத்துக்களுக்கு வித்தியாசம் அதிகம் இல்லை. ஆரம்ப வகுப்புக்களைப் பொறுத்த வரையில், எழுத்துக்களையும் எண்களையும் சொல்லிக்கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல என்றும் விளக்கினேன். இதன் பலன் என்னவென்றால், இந்தப் பெண்கள் சொல்லிக் கொடுத்த வகுப்புக்களே மிகவும் வெற்றிகரமானவைகளாக இருந்தன. இந்த அனுபவத்தினால் அவர்களுக்கு நம்பிக்கையும், வேலையில் சிரத்தையும் உண்டாயின. ஸ்ரீமதி அவந்திகா பாயின் பள்ளிக்கூடம், மற்றப் பள்ளிக் கூடங்களுக்கு உதாரணமாக விளங்கியது. அவர் தமது வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டார். தமக்கு இருந்த அரிய ஆற்றல்களை அவர் இவ்வேலையில் உபயோகித்தார். இப் பெண்களின் மூலம் கிராமப் பெண்களை நாங்கள் ஓரளவுக்கு அணுக முடிந்தது. ஆனால், ஆரம்பக் கல்வியை அளிப்பதோடு நின்றுவிட நான் விரும்பவில்லை.

கிராமங்களில் சுகாதாரம் மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது; சந்துகளிலெல்லாம் ஒரே ஆபாசம். கிணறுகளைச் சுற்றிலும் ஒரே சேறும் கும்பி நாற்றமும். முற்றங்களோ சகிக்க முடியாத அளவுக்கு ஒரே ஆபாசமாக இருந்தன. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் முதியவர்களுக்குப் போதனை மிகவும் அவசியமாக இருந்தது. எல்லோருமே பல வகையான சரும நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தனர். ஆகையால், சாத்தியமான வரையில் சுகாதார சம்பந்தமான வேலையைச் செய்து, மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வது என்று முடிவு செய்தோம். இந்த வேலைக்கு டாக்டர்கள் தேவைப்பட்டனர். காலஞ்சென்ற டாக்டர் தேவின் சேவையைக் கொடுத்து உதவுமாறு இந்திய ஊழியர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். ஆறு மாதங்கள் வந்திருந்து சேவை செய்வதாக உடனே ஒப்புக் கொண்டார். உபாத்தியாயர்களான ஆண்களும், பெண்களும் அவருக்குக் கீழிருந்து வேலை செய்ய வேண்டும். தோட்ட முதலாளிகளிடம் அம் மக்களுக்கு இருந்த குறைகள் சம்பந்தமாகவோ, ராஜீய விஷயங்களிலோ தலையிடவே வேண்டாம் என்று அவர்கள் எல்லோருக்கும் தெளிவாக அறிவித்திருந்தோம். ஜனங்களில் யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அவர்களை என்னிடம் அனுப்பிவிட வேண்டும். தங்களுக்கு விதித்திருக்கும் வேலைக்கு அப்பாற்பட்டதில் தலையிடக்கூடாது என்றும் தெரிவித்திருந்தோம். இந்தக் கட்டளையெல்லாம் அற்புதமான விசுவாசத்துடன் அவர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். கட்டுத் திட்டங்களுக்கு மீறிய காரியம் ஒன்றாவது நடந்ததாக நினைவு இல்லை
.


Offline Anu

கிராமங்களுக்குள் பிரவேசம்

சாத்தியமான வரையில் ஓர் ஆண், ஒரு பெண் இவர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் வைத்தோம். இந்தத் தொண்டர்களே வைத்திய உதவி செய்து, சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கிராமப் பெண்களிடையே பெண்கள் மூலம் சேவை செய்ய வேண்டும். மிகவும் சாதாரணமானதே வைத்திய உதவி. விளக்கெண்ணெய், கொயினா,கந்தகக் களிம்பு ஆகியவையே தொண்டர்களிடம் கொடுத்த மருந்துகள். ஒரு நோயாளிக்கு அழலை படித்திருந்தாலோ, மலச்சிக்கல் இருப்பதாக அவர் கூறினாலோ, அவருக்கு விளக்கெண்ணெய் கொடுக்க வேண்டும். ஜு ரம் இருந்தால் முதலில் விளக்கெண்ணெய் கொடுத்துவிட்டுப் பிறகு கொயினா கொடுக்க வேண்டும். கட்டிச் சிரங்கோ, சொறி சிரங்கோ இருந்தால், பாதிக்கப் பட்டிருந்த இடத்தில் நன்றாக அலம்பிவிட்டுக் கந்தகக் களிம்பைத் தடவ வேண்டும். மருந்தை வீட்டுக்கு கொண்டு போக நோயாளி யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நோய் சிக்கலானதாக இருந்தால், டாக்டர் தேவ், வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒவ்வொரு முக்கியமான கிராமத்திற்கும் போய் வருவார். இந்த எளிய வைத்திய உதவியை ஏராளமான மக்கள் பெற்று வந்தனர். கிராம மக்களுக்கு இருந்த நோய்கள் மிகச் சிலவே. நிபுணர்களின் உதவியின்றிச் சாதாரணமான சிகிச்சையினாலேயே குணமாகிவிடக் கூடியவை அவை. இதை நினைவில் வைத்துக் கொண்டால் எங்களுடைய வேலைத் திட்டம் விசித்திரமாகத் தோன்றுவதற்கில்லை.

மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இதனால் அற்புதமான வகையில் நன்மை ஏற்பட்டது. சுகாதாரத்தைப் போதிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது. எதையும் தாங்களே செய்து கொள்ள மக்கள் தயாராயில்லை. வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்கூட, தங்கள் குப்பைகளைத் தாங்களே கூட்டி எடுத்துச் சுத்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், டாக்டர் தேவ் எளிதில் உற்சாகம் இழந்துவிடக்கூடியவர் அன்று. மற்றக் கிராமங்களுக்கெல்லாம் உதராணமாகும் வகையில் ஒரு கிராமத்தை அதிகச் சுத்தமாக வைத்திருப்பதில் அவரும் தொண்டர்களும் தங்கள் முழுச் சக்தியையும் உபயோகித்தனர். சாலைகளையும் வீட்டு வாசல்களையும் பெருக்கி சுத்தம் செய்தனர். கிணறுகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்குப் பக்கத்திலிருந்த குண்டு குழிகளையெல்லாம் மண் போட்டுச் சமப்படுத்தினார்கள். இவ்வேலைகளைச் செய்யத் தங்களுக்குள்ளே தொண்டர்களைத் திரட்டிக் கொள்ளுமாறு அன்போடு கிராமவாசிகளைத் தூண்டினர். சில கிராமங்களில் ஜனங்கள் வெட்கமடைந்து, தாங்களும் இவ்வேலையில் ஈடுபட்டு விடும்படி செய்தனர். மற்றக் கிராமங்களிலோ, மக்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள்.

என் மோட்டார் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுவதற்கான சாலைகளைக்கூடப் போட்டுவிட்டார்கள்! இவ்விதமான இனிய அனுபவங்களுடன் மக்களின் அசிரத்தையினால் உண்டான கசப்பான அனுபவங்களும் இல்லாது போகவில்லை. இத்தகைய வேலைகளைச் செய்வது தங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதென்று கிராமவாசிகளில் சிலர் கூறிவிட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஓர் அனுபவத்தைக் குறித்து இங்கே குறிப்பிடுவது மிகையாகாது. இதைப்பற்றி இதற்கு முன் நான் பல கூட்டங்களிலும் சொல்லி இருக்கிறேன். பீதிகர்வா என்பது ஒரு சிறிய கிராமம்; அங்கே எங்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்திலுள்ள இன்னும் சிறிய ஒரு கிராமத்திற்கு நான் போயிருந்தபோது, சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டேன். அப் பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி என் மனைவியிடம் சொன்னேன். அவள் அவர்களோடு பேசினாள். அதில் ஒரு பெண் என் மனைவியைத் தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள்: வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள்.

எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை ஒன்றுதான்; இதை எப்படித் துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும். இந்தக் குடிசையிலிருந்த இந்த நிலைமை அபூர்வமானது அன்று. இந்தியக் கிராமங்கள் பலவற்றில் இதே போன்ற நிலைமையைக் காணலாம். இந்தியாவில் எண்ணற்ற குடிசைகளில் மக்கள், எந்த விதமான தட்டுமுட்டுச் சாமான்களோ, மாற்றிக் கட்டிக் கொள்ளுவதற்கு வேறு துணியோ இல்லாமல் தங்கள் மானத்தை மறைப்பதற்கு வெறும் கந்தையுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.வேறோர் அனுபவத்தையும் இங்கே குறிப்பிடுகிறேன். சம்பாரணில் மூங்கிலுக்கும் நாணலுக்கும் குறைவே இல்லை. பீதிகர்வாவில் பள்ளிக்கூடத்திற்கு மூங்கிலையும் நாணலையுமே கொண்டே குடிசை போட்டிருந்தார்கள். யாரோ ஒருவர்-பக்கத்துத் தோட்ட முதலாளியின் ஆளாக இருக்கக்கூடும்-ஒரு நாள் இரவு குடிசைக்குத் தீ வைத்து விட்டார். எரிந்து போன குடிசைக்குப்பதிலாக மூங்கிலையும் நாணலையுமே கொண்டு மற்றோர் குடிசை கட்டுவது உசிதமன்று என்று கருதப்பட்டது. ஸ்ரீசோமனும், கஸ்தூரிபாயுமே அப்பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செங்கல் கட்டிடமே கட்டி விடுவதென்று ஸ்ரீ சோமன் முடிவு செய்தார். உழைப்பில் அவர் காட்டிய உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டதால், பலர் அவருடன் ஒத்துழைத்தார்கள். சீக்கிரத்திலேயே ஒரு செங்கல் வீடு தயாராகி விட்டது. இக்கட்டிடம் கொளுத்தப்பட்டுவிடும் என்ற பயமே பிறகு இல்லை. இவ்விதம் தொண்டர்கள், தங்கள் பள்ளிக்கூடங்கள், சுகாதார வேலை, வைத்திய உதவி ஆகியவைகளினால் கிராம மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றனர். அவர்களிடையே இத்தொண்டர்களுக்கு நல்ல செல்வாக்கும் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆக்க வேலையை நிரந்தரமான அடிப்படையில் அமைத்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்பதை வருத்தத்துடன் நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். தொண்டர்கள் எல்லோரும் அங்கே கொஞ்ச காலத்திற்கே ஊழியம் செய்ய வந்தார்கள். ஊதியமின்றி நிரந்தரமாக அங்கிருந்து வேலை செய்யப் பீகாரிலிருந்து தொண்டர்கள் கிடைக்கவில்லை. சம்பாரணில் என் வேலை முடிந்ததுமே, இதற்கு மத்தியில் எனக்காக உருவாகி வந்த வெளி வேலை, என்னை இழுத்துக்கொண்டு போய் விட்டது. என்றாலும், சம்பாரணில் சில மாதங்கள் செய்த வேலை ஆழ வேர்கொண்டு விட்டதால், அதன் பயனை இன்று கூட ஏதாவது ஒருவகையில் அங்கே காணலாம்.


Offline Anu

கவர்னர் நல்லவராகும் போது

முந்திய அத்தியாயங்களில் நான் விவரித்திருப்பதைப் போல் ஒரு பக்கத்தில் சமூக சேவை நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் விவசாயிகளின் குறைகளைப் பற்றிய வாக்குமூலங்களைத் தயார் செய்யும் வேலையும் வேகமாக நடந்துகொண்டு வந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாயின. இதனால், பலன் இல்லாது போகாது. வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் அதிகமாக வரவர, தோட்ட முதலாளிகளுக்குக் கோபம் அதிகமாயிற்று. என்னுடைய விசாரணைக்கு விரோதமாகத் தங்களால் ஆனதையெல்லாம் செய்ய அவர்கள் முற்பட்டனர். ஒரு நாள் பீகார் அரசாங்கத்தினிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. உங்கள் விசாரணை நீண்ட காலத்திற்கு வளர்ந்து கொண்டு போய்விட்டது. அதை முடித்துவிட்டு, இப்பொழுது நீங்கள் பீகாரை விட்டுப் போய்விடலாமல்லவா? என்ற முறையில் அக்கடிதம் இருந்தது. கடிதம் மரியாதையாகவே எழுதப் பட்டிருந்தாலும், அதன் பொருள் என்றும் தெளிவானதே. இதற்கு நான் பதில் எழுதினேன். விசாரணை நீண்ட காலம் நடப்பதாகவே இருக்க முடியும் என்றும், மக்களுக்கு கஷ்ட நிவாரணம் அளிப்பதில் அது முடிந்தாலன்றிப் பீகாரை விட்டுப் போய்விடும் நோக்கம் எனக்கு இல்லை என்றும் அதில் கூறினேன்.

விவசாயிகளின் குறைகள் உண்மையானவை என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களுக்குக் கஷ்ட நிவாரணம் கிடைக்கும்படி அரசாங்கம் செய்யலாம். அல்லது சர்க்காரே உடனே இதில் விசாரணையை நடத்துவதற்கான அவசியத்தை விவசாயிகள் நிரூபித்துவிட்டார்கள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளலாம்; இவ்விதம் செய்வதன் மூலம் என் விசாரணையை அரசாங்கம் முடித்து விடலாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டேன். லெப்டினெட் கவர்னர் ஸர் எட்வர்டு கெயிட், தம்மை வந்து பார்க்குமாறு எனக்கு எழுதினார். விசாரணைக்கு ஏற்பாடு செய்ய விரும்புவதாக அவர் கூறியதோடு விசாரணைக் கமிட்டியில் ஓர் அங்கத்தினனாக இருக்கும்படியும் என்னை அழைத்தார். கமிட்டியின் மற்ற அங்கத்தினர்கள் இன்னார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் ஊழியர்களையும் கலந்து ஆலோசித்தேன். பிறகு ஒரு நிபந்தனையின் பேரில் கமிட்டியில் இருக்கச் சம்மதித்தேன். அந்த விசாரணை நடக்கும்போது என் சகாக்களைக் கலந்து ஆலோசித்துக் கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும்;

கமிட்டியில் அங்கத்தினனாக நான் இருப்பதனால், விவசாயிகளின் கட்சியை எடுத்துக் கூறி வாதிக்கும் உரிமையை நான் இழந்தவன் ஆகமாட்டேன் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இந்த விசாரணையின் பலன் எனக்குத் திருப்தியளிக்காது போகுமானால், பிறகு விவசாயிகள் என்ன நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவும், வழி காட்டவும் எனக்கு உரிமை இருக்க வேண்டும். இவைகளே நான் கேட்ட நிபந்தனைகள். ஸர் எட்வர்டு கெயிட், இந்த நிபந்தனைகள் நியாயமானவை, சரியானவை என்று கூறி அவற்றை ஏற்றுக் கொண்டார். விசாரணையைக் குறித்தும் அறிக்கை வெளியிட்டார். காலஞ்சென்ற ஸர் பிராங்க் ஸ்லையை அக்கமிட்டியின் தலைவராக நியமித்தார். விவசாயிகளின் கட்சி நியாயமானது என்று கமிட்டியினர் கண்டனர். அவர்களிடமிருந்து தோட்ட முதலாளிகள் பணம் பறித்து வந்தது, சட்ட விரோதமானது என்று கமிட்டி கண்டு, அதில் ஒரு பகுதியைத் தோட்ட முகலாளிகள் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்றும் கமிட்டி சிபாரிசு செய்தது. சட்டத்தின் மூலம் தீன் கதியா முறையை ரத்துச் செய்து விட வேண்டும் என்றும் கமிட்டி கூறியது. கமிட்டி, ஒருமனதான ஓர் அறிக்கையை வெளியிடும்படி பார்ப்பதிலும், கமிட்டியின் சிபாரிசுகளை அனுசரித்து விவசாயிகள் மசோதா நிறைவேறும்படி செய்வதிலும் ஸர் எட்வர்டு கெயிட் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார்.

அவர் உறுதியோடு இல்லாமல் இருந்திருந்தால், இவ்விஷயத்தில் தமது சாமர்த்தியம் முழுவதையும் உபயோகிக்காமல் இருந்திருந்தால், கமிட்டியின் அறிக்கை ஒரு மனதாக இருந்திருக்காது. விவசாயிகள் சட்டம் நிறைவேறியும் இருக்காது. தோட்ட முதலாளிகளுக்கிருந்த சக்தி அளவற்றது. கமிட்டியின் அறிக்கையையும் பொருட்படுத்தாமல், மசோதாவை விடாப்பிடியாக எதிர்த்து வந்தனர். ஆனால், ஸர் எட்வர்டு கெயிட் கடைசி வரையில் உறுதியுடன் இருந்தார். கமிட்டியின் சிபாரிசுகளை எல்லாம் நிறைவேற்றி வைத்தார். ஒரு நூற்றாண்டுக் காலம் இருந்துவந்த தீன் கதியா முறை இவ்விதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதோடு, தோட்ட முதலாளிகளின் ராஜ்யமும் ஒழிந்தது. நெடுகவும் நசுக்கப்பட்டுக் கிடந்த விவசாயிகள், இப்பொழுது சுதந்திரமடைந்தனர். அவுரிக் கறையை அழித்து விடவே முடியாது என்ற மூட நம்பிக்கையும் பொய்யாகி விட்டது. இன்னும் பல பள்ளிக்கூடங்களை வைத்து, சரியானபடி கிராமங்களில் புகுந்து வேலை செய்து, சில ஆண்டுகளுக்கு ஆக்க வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும் என்பது என் ஆவல். இதற்கு வேண்டிய அடிப்படையும் போட்டாகிவிட்டது. ஆனால், இதற்கு முன்னால் அடிக்கடி நடந்திருப்பதைப் போல், என்னுடைய திட்டங்கள் நிறைவேறும்படி அனுமதிக்கக் கடவுளுக்கு விருப்பமில்லை. விதி வேறுவிதமாக முடிவுசெய்து, வேறிடத்தில் பணியை மேற்கொள்ள என்னை அங்கே விரட்டிவிட்டது.


Offline Anu

தொழிலாளருடன் தொடர்பு

கமிட்டியில் என் வேலை முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே ஸ்ரீமோகன்லால் பாண்டியா, ஸ்ரீசங்கர்லால் பரீக் இவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கேடா ஜில்லாவில் விளைவு இல்லாது போய்விட்டது என்றும், நிலவரியைக் கொடுக்க முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நான் வழி காட்டவேண்டும் என்றும் அவர்கள் எழுதியிருந்தார்கள். அந்த இடத்துக்கு நேரில் போய் விசாரிக்காமல் யோசனை கூறும் விருப்பமோ, ஆற்றலோ, தைரியமோ எனக்கு இல்லை. அதே சமயத்தில் அகமதாபாத் தொழிலாளர் நிலைமையைக் குறித்து ஸ்ரீமதி அனுசூயா பாயிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. தொழிலாளர் பெற்றுவந்த கூலி மிகக் குறைவு; கூலி உயர்வு செய்யவேண்டும் என்று தொழிலாளர் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்துகொண்டு வந்தனர். முடிந்தால், அவர்களுக்கு வழிகாட்டி நடத்தவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. இந்தச் சிறு காரியத்தையும் அவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு நடத்தும் துணிவு எனக்கு இல்லை. ஆகவே, முதல் வாய்ப்புக் கிடைத்ததுமே அகமதாபாத்துக்குப் போனேன்.

இந்த இரு விஷயங்களையும் சீக்கிரமாகவே முடித்துவிட்டு, சம்பராணில் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆக்க வேலையைக் கண்காணிக்க நான் அங்கே திரும்பிவிட முடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால், நான் விரும்பியவாறு காரியங்கள் துரிதமாக நடை பெறவில்லை. நான் சம்பாரணுக்குத் திரும்பவும் போக முடியாது போயிற்று. இதன் பலனாகப் பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு விட்டன. என் சக ஊழியர்களும் நானும் எத்தனையோ ஆகாயக் கோட்டைகளைக் கட்டி வந்தோம். ஆனால் அவைகளெல்லாம் அப்போதைக்கு மறைந்து போய்விட்டன. நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் கல்வியோடும் சம்பாரணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது. அங்கே பசுப் பாதுகாப்பும், ஹிந்திப் பிரச்சாரமும் மார்வாரிகளுக்கே தனி உரிமையான வேலையாக இருந்து வந்ததை என் பிரயாணங்களின் போது கண்டேன். நான் பேதியாவுக்குச் சென்றபோது, ஒரு மார்வாரி நண்பர், தமது தருமசாலையில் நான் தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார். அவ்வூரிலிருந்த மற்ற மார்வாரிகள், தங்களுடைய கோசாலையை (பால் பண்ணையை) எனக்குக் காட்டி, அதில் எனக்குச் சிரத்தை ஏற்படும்படி செய்தனர். பசுப் பாதுகாப்பைக் குறித்து எனக்குத் திட்டமான எண்ணங்கள் அப்பொழுதே தோன்றிவிட்டன.

இந்த வேலையைக் குறித்து அன்று ஏற்பட்ட எண்ணமே இன்றும் எனக்கு இருந்து வருகிறது. பசுப் பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம். இந்த வேலையில் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக மார்வாரி நண்பர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் சம்பாரணில் நான் நிலைத்துத் தங்க முடியாது போய்விட்டதால், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. பேதியாவில் கோசாலை இன்னும் இருக்கிறது. ஆனால், அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக்கூடிய பால் பண்ணையாக இல்லை. சம்பாரண் காளை மாடுகளிடம்அவைகளின் சக்திக்கு மிஞ்சி, இன்னும் வேலை வாங்கியே வருகிறார்கள். ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுவோர், அப்பரிதாபகரமான பிராணிகளை இன்னும் அடித்துத் துன்புறுத்தித் தங்கள் மதத்திற்கே அவமானத்தை உண்டு பண்ணுகின்றனர். இந்த வேலை நிறைவேறாது போனது எனக்கு எப்பொழுதுமே மன வருத்தத்தை அளித்து வருகிறது. சம்பாரணுக்கு நான் போகும்போதெல்லாம் அங்குள்ள மார்வாரி, பீகாரி நண்பர்கள், கண்ணியமாக இதற்காக என்னைக் கண்டிக்கின்றனர். திடீரென்று கைவிட்டுவிட நேர்ந்த அவ்வேலைத் திட்டத்தை எண்ணி நானும் பெருமூச்சு விடுகிறேன்.

படிப்புச் சம்பந்தமான வேலை மாத்திரமே ஏதேனும் ஒரு வகையில் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் வருகிறது. ஆனால், பசுப் பாதுகாப்பு வேலை நன்றாக வேர் கொள்ளவில்லையாகையால், உத்தேசித்திருந்தபடி அவ்வேலை முன்னேறவில்லை. கேடா விவசாயிகளின் பிரச்னை விவாதிக்கப்பட்டு வந்த சமயத்திலேயே அகமதாபாத் மில் தொழிலாளரின் விஷயத்தை நான் எடுத்துக்கொண்டு விட்டேன். நான் மிகவும் தரும சங்கடமான நிலையிலேயே இருந்தேன். ஆலைத் தொழிலாளரின் கட்சி மிகவும் நியாயமானது. ஸ்ரீமதி அனுசூயா பாய், தமது சொந்தச் சகோதரரும், மில் சொந்தக்காரர்களின் சார்பாக அப்போராட்டத்தை நடத்தி வந்தவருமான ஸ்ரீஅம்பாலால் சாராபாயை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று. ஆலை முதலாளிகளுடன் நான் சிநேகமாகப் பழகி வந்தேன். இதனாலேயே அவர்களுடன் போராடுவது அதிகக் கஷ்டமாக இருந்தது. அவர்களுடன் கலந்தாலோசித்தேன். இத்தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், மத்தியஸ்தர் முடிவுக்கு விடுவது என்ற கொள்கையை அங்கீகரிக்கவே அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகையால், வேலை நிறுத்தம் செய்யும்படி தொழிலாளருக்கு நான் ஆலோசனை கூற வேண்டியதாயிற்று. அப்படி அவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்னால், அவர்களுடனும் அவர்களுடைய தலைவர்களோடும் நான் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டேன். வேலை நிறுத்தம் வெற்றிகரமாவதற்கு உள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.

1. எந்த நிலைமையிலும் பலாத்காரத்தில் இறங்கிவிடவே கூடாது.
2. கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.
3. பிறர் இடும் பிச்சையை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
4. வேலை நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிப்பதாக இருந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும். யோக்கியமாக வேறு எந்த வகையிலாவது உடலை உழைத்து வேலை நிறுத்தக் காலத்தில் ஜீவனத்தை நடத்திக்கொள்ள வேண்டும்.

வேலை நிறுத்தத் தலைவர்கள், இந்த நிபந்தனைகளை நன்கு அறிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படும் வரையில், அல்லது இத் தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட மில்காரர்கள் சம்மதிக்கும் வரையில், தாங்கள் வேலைக்குத் திரும்புவதில்லை என்று தொழிலாளர்கள் பொதுக் கூட்டத்தில் பிரதிக்ஞை செய்துகொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தின் போதுதான் ஸ்ரீவல்லபாய் பட்டேலையும் ஸ்ரீசங்கரலால் பாங்கரையும் நான் நன்றாக அறியலானேன். ஸ்ரீமதி அனுசூயா பாயை இதற்கு முன்னாலேயே எனக்கு நன்றாகத் தெரியும். சபர்மதி நதிக்கரையில் ஒரு மரத்தின் நிழலில் தினமும் வேலை நிறுத்தக்காரர்களின் பொதுக்கூட்டத்தை நடத்தி வந்தோம். இக்கூட்டங்களுக்குத் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் வருவார்கள். என்னுடைய பேச்சில், அவர்களுடைய பிரதிக்ஞையைக் குறித்தும், அமைதியையும் சுயமதிப்பையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைப் பற்றியும் அவர்களுக்கு ஞாபகமூட்டி வந்தேன். இத்தொழிலாளர்கள் தினமும் நகரின் தெருக்களில், பிரதிக்ஞையை அனுசரியுங்கள் என்று எழுதிய கொடியுடன் அமைதியாக ஊர்வலம் வருவார்கள். வேலை நிறுத்தம் இருபத்தொரு நாள் நடந்தது. வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அப்போதைக்கப்போது ஆலை முதலாளிகளைச் சந்தித்துத் தொழிலாளருக்கு நியாயத்தைச் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். எங்களுக்கும் ஒரு பிரதிக்ஞை உண்டு என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மேலும் கூறியதாவது: எங்களுக்கும் தொழிலாளருக்கும் இருக்கும் உறவு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவைப்போன்றது. ஆகவே, மூன்றாமவர்கள் இதில் தலையிடுவதை நாங்கள் எவ்வாறு சகிக்க முடியும்? மத்தியஸ்தத்திற்குதில் எங்கே இடமிருக்கிறது?


Offline Anu

ஆசிரமத்தில் கண்ணோட்டம்

தொழிலாளர் தகராறைப் பற்றி நான் மேலே விவரிப்பதற்கு முன்னால், ஆசிரம விஷயத்தைக் குறித்தும் ஒரு கண்ணோட்டம் செலுத்துவது முக்கியமாகும். சம்பாரணில் நான் இருந்த சமயம் முழுவதிலும், ஆசிரமம் என் மனத்தை விட்டு விலகினதே இல்லை. அவசரமாகச் சில சமயம் அங்கே போய்ப் பார்த்து விட்டும் வருவேன். அச்சமயம் ஆசிரமம் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள கோச்ராப் என்ற சிறு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்தில் பிளேக் நோய் உண்டாயிற்று. அதனால், ஆசிரமக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று கண்டேன். ஆசிரமத்திற்குள் சுத்தத்தின் விதிகளை என்னதான் ஜாக்கிரதையாக அனுசரித்தாலும், சுற்றிலும் உள்ள சுகாதாரக் கேடான நிலைமையினால், ஆசிரமத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படாமல் இருந்துவிட முடியாது. கோச்ராப் மக்கள் இந்தச் சுகாதார விதிகளை அனுசரிக்கும்படி செய்யும் நிலையிலோ, வேறு வகையில் அவர்களுக்குச் சேவை செய்யும் நிலையிலோ நாங்கள் அப்பொழுது இல்லை.

ஆசிரமம், பட்டணத்திற்கும் கிராமத்திற்கும் கொஞ்சம் தூரத்திலேயே இருக்க வேண்டும். என்றாலும், இந்த இரண்டுக்கும் போக முடியாத தொலை தூரத்திலும் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. என்றாவது ஒரு நாள், எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே ஆசிரமத்தை அமைப்பது என்றும் தீர்மானித்திருந்தோம். கோச்ராப்பை விட்டுப் போய்விட வேண்டும் என்பதற்கு அங்கே பரவிய பிளேக் நோயே போதுமான முன்னெச்சரிக்கை என்று எனக்குத் தோன்றிற்று. அகமதாபாத் வர்த்தகரான ஸ்ரீ பூஞ்சாபாய் ஹிராசந்துக்கு ஆசிரமத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புனிதமான, தன்னலமற்ற எண்ணத்தின் பேரில் அவர் பல விஷயங்களிலும் எங்களுக்குச் சேவை செய்து வந்தார். அகமதாபாத் காரியங்களில் அவருக்கு அதிக அனுபவம் உண்டு. எங்களுக்குத் தகுந்த இடம் தேடித் தருவதாக அவர் முன்வந்தார். இடம் தேடிக்கொண்டு நானும் அவருடன் கோச்ராப்புக்குத் தெற்கிலும் வடக்கிலுமாகப் போனேன். மூன்று நான்கு மைல் வடக்கில் ஓர் இடத்தைப் பார்க்குமாறு அவருக்கு யோசனை சொன்னேன். பிறகு அவர், இப்பொழுது ஆசிரமம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த இடம், சபர்மதி மத்திய சிறைக்கு அருகாமையில் இருந்தது, எனக்கு முக்கியமாகக் கவர்ச்சியளித்தது.

சிறைப்படுவதே சாதாரணமாகச் சத்தியாக்கிரகிகளின் கதி என்று கருதப்பட்டதால், இந்த இடம் எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாகச் சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கும் இடங்களையே சிறைச்சாலைகளை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். எட்டு நாட்களில் அந்த நிலத்திற்குக் கிரய சாசனம் பூர்த்தியாகி விட்டது. அந்த நிலத்தில் எந்தவிதக் கட்டிடமோ, மரமோ இல்லை. நதிக்கரையில் இருக்கிறது, ஏகாந்தமான இடத்தில் இருக்கிறது என்பவை முக்கியமான சௌகரியங்கள். முதலில் கூடாரங்கள் போட்டுக்கொண்டு அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவது என்று முடிவு செய்தோம். நிரந்தரமான கட்டிடம் கட்டும் வரையில் சமையலுக்கு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்ளுவது என்றும் தீர்மானித்தோம். ஆசிரமம் மெல்ல வளர்ந்துகொண்டு போயிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பொழுது நாங்கள் நாற்பது பேர். எல்லோருக்கும் பொதுவான ஒரே சமையல். ஆசிரமத்தைப் புது இடத்திற்குக் கொண்டு போய்விடுவது என்ற யோசனை என்னுடையது.

வழக்கம் போலவே அந்த யோசனையை மகன்லால் நிறைவேற்றி வைத்தார். குடியிருக்க நிரந்தரமான வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு முன்னால், நாங்கள் எவ்வளவோ சிரமப்பட வேண்டியதாயிற்று. மழைக் காலம் வரும் சமயம், சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்களை, நான்கு மைல்களுக்கு அப்பால் இருக்கும் அகமதா பாத்திலிருந்து வாங்கி வர வேண்டும். அந்நிலம் வெகுகாலமாகத் தரிசாகக் கிடந்ததாகையால், அங்கே பாம்புகள் அதிகம். இத்தகைய நிலைமையில் அங்கே சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வசிப்பதென்பது பெரிய ஆபத்தாகும். எங்களில் யாரும் இத்தகைய விஷ ஜந்துக்களைப் பற்றிய பயத்தை விட்டொழித்து விட்டவர்கள் அல்ல; இப்பொழுதும் நாங்கள் அவற்றிற்குப் பயப்படாதவர்கள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆயினும், பாம்புகளைக் கொல்வதில்லை என்பது எங்கள் பொதுவான விதி.

விஷ ஜந்துக்களைக் கொல்வதில்லை என்ற விதி, போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றில் பெரும்பாலும், அனுசரிக்கப்பட்டு வந்தது. இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் தரிசாகக் கிடந்த நிலத்திலேயே நாங்கள் குடியேறினோம். என்றாலும், பாம்பு கடித்ததனால் எங்களில் யாரும் இறந்ததில்லை. கருணைக் கடலான கடவுளின் கிருபையையே இதில் நான் நம்பிக்கைக் கண்ணோடு காண்கிறேன். இதைக் கொண்டு, கடவுள் பார பட்சமுடையவராக இருக்கவே முடியாது என்றும், மனிதரின் சாமான்ய விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக் கொண்டிருக்க கடவுளுக்கு அவகாசம் இருக்குமா என்றும் யாரும் குதர்க்கம் பேசக் கிளம்பிவிட வேண்டாம். இவ்விஷயத்தில் இருக்கும் உண்மையை, எனக்கு ஏற்பட்ட ஒரே மாதிரியான இந்த அனுபவத்தை, வேறுவிதமாக நான் சொல்லுவதற்கு இல்லை. கடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல.

அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை - இயலாதவை - என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது. கொல்வதில்லை என்ற வழக்கத்தை அநேகமாக, ஒழுங்காக நாங்கள் அனுசரித்து வந்திருந்தும் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாம்புகளால் எங்களுக்குத் தீமை ஏற்பட்டதே இல்லை என்பது, கடவுள் அருளேயன்றி அதிர்ஷ்டவசமானதொரு சம்பவம் அல்ல என்று கருதுவது ஒரு மூட நம்பிக்கையாக இருந்தாலும், அந்த மூட நம்பிக்கையை இனியும் நான் விடாமல்தான் இருப்பேன். அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்த சமயத்தில் ஆசிரமத்தின் நெசவுக் கொட்டகைக்குக் கடைகால் போட்டோம். ஏனெனில், அச்சமயம் அசிரமத்தில் முக்கியமாக நடந்துவந்த வேலை, கைநெசவு. கையினால் நூற்பதை ஆரம்பிப்பது அதுவரையில் எங்களுக்குச் சாத்தியமாக வில்லை


Offline Anu

உண்ணாவிரதம்

முதல் இரு வாரங்கள் வரையில் ஆலைத் தொழிலாளர்கள் அதிக தீரத்தோடும், தன்னடக்கத்துடனும் நடந்து கொண்டார்கள். தினந்தோறும் பெரிய பொதுக் கூட்டங்களும் நடந்தன. அச்சமயங்களில் அவர்களுடைய பிரதிக்ஞைகளைக் குறித்து அவர்களுக்கு ஞாபகப்படுத்துவேன். உயிரை விட்டாலும் விடுவோமேயன்றி அளித்த வாக்கை மாத்திரம் மீறிவிடமாட்டோம் என்று அவர்கள் உரக்கக்கூறி எனக்கு உறுதி கூறுவார்கள். ஆனால், கடைசியாக அவர்கள் சோர்வின் அறிகுறியைக் காட்டத் தலைப்பட்டு விட்டனர். உடம்பு பலவீனமாக ஆக மனிதன் சீக்கிரத்தில் கோபப்படுவதுபோல, வேலைநிறுத்தம் பலவீனம் அடைவதாகத் தோன்றியதும், கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்கள் விஷயத்தில் தொழிலாளர்கள் கொண்ட போக்கு மேலும் மேலும் ஆபத்தானதாகிக் கொண்டு வந்தது. எங்கேமுரட்டுத்தனமான செய்கைகளில் இறங்கி விடுவார்களோ என்று பயப்பட்டேன். தினந்தோறும் கூட்டத்திற்கு வரும் தொழிலாளரின் தொகையும் குறைந்து வந்தது.

கூட்டத்திற்கு வந்தவர்களும், சோர்வும் கிலேசமும் அடைந்திருந்தார்கள் என்பது அவர்களுடைய முகக்குறிகளிலிருந்து தெரிந்தது. கடைசியாகத் தொழிலாளர் உறுதி குலைந்து வருகின்றனர் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. இதனால், பெரும் கவலையடைந்தேன். இந்நிலைமையில் என் கடமை என்ன என்பதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கலானேன். தென்னாப்பிரிக்காவில் மகத்தானதொரு வேலை நிறுத்தம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், இங்கே எனக்கு ஏற்பட்ட நிலைமை முற்றிலும் மாறானது. நான் கூறிய யோசனையின் பேரிலேயே ஆலைத் தொழிலாளர்கள் பிரதிக்ஞை செய்துகொண்டனர். தினந்தோறும் அதை என் முன்னால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியும் கூறிவந்தார்கள். அப்படியிருக்க அப்பிரதிக்ஞையை மீறி, அவர்கள் நடந்துகொண்டு விடக்கூடும் என்பதை என்னால் நினைக்கவும் முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இந்த உணர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, என் தற்பெருமையா, தொழிலாளர்களிடம் நான் கொண்டிருந்த அன்பா, அல்லது சத்தியத்தினிடம் எனக்கு இருந்த ஆர்வத்தோடு கூடிய பற்றா என்பதை யார் சொல்ல முடியும்?

இவ்வாறு திகைத்துத் தெளிவான வழி காண முடியாமல், நான் தத்தளித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் காலை, ஆலைத் தொழிலாளர்களின் கூட்டத்தில் திடீரென்று எனக்கு ஓர் ஒளி தோன்றிற்று. முன் கூட்டி எண்ணிப் பாராமலே என் நாவில் பின்வரும் சொற்கள் பிறந்தன: வேலை நிறுத்தம் செய்திருப்பவர்கள் திடம் கொண்டு, ஒரு சமரச முடிவு ஏற்படும் வரையில் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினாலன்றி, அல்லது இப்போது வேலைக்குப் போகிறவர்கள் எல்லோரும் ஆலைகளிலிருந்து வெளி வந்துவிடும் வரையில், நான் உணவு கொள்ளப் போவதில்லை என்று அக்கூட்டத்தில் கூறினேன். இதைக் கேட்டதும் தொழிலாளர்கள் இடிவிழுந்ததைப் போல் திகைத்துப் போயினர். அனுசூயா பென்னின் கண்களிலிருந்து நீர் வழிந்து ஓடியது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நாங்கள் உண்ணாமல் இருக்கிறோம். நீங்கள் பட்டினி இருப்பதைப் போன்ற பெருங்கொடுமை வேறு இல்லை. நாங்கள் செய்துவிட்ட தவறுகளுக்கு எங்களை மன்னித்துவிடுங்கள். இனி இறுதிவரையில் பிரதிக்ஞையில் நிச்சயமாக உறுதியுடன் இருக்கிறோம் என்று தொழிலாளர் எல்லோரும் ஒரே முகமாகக் கூறினார்.

நான் அப்பொழுது அவர்களுக்குக் கூறியதாவது: நீங்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய பிரதிக்ஞையிலிருந்து வழுவாமல் நீங்கள் இருந்தாலே போதும். நம்மிடம் நிதி இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சையெடுத்து. அதைக்கொண்டு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போக நாம் விரும்பவில்லை. ஆகையால், வேலை நிறுத்தம் எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து நடந்தாலும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் இருந்து வருவதற்கு ஏதாவது ஒரு வேலையைச் செய்து ஜீவனத்திற்கு வேண்டியதைத் தேடிக்கொள்ள நீங்கள் முயல வேண்டும். என்னுடைய உண்ணாவிரதத்தைப் பொறுத்த வரையில் வேலை நிறுத்தம் முடிந்தபிறகே நான் அதைக் கைவிடுவேன். இதற்கு மத்தியில் வேலை நிறுத்தம் செய்திருந்த தொழிலாளருக்கு முனிசிபாலிடியின் கீழ் ஏதாவது வேலை தேடிக் கொடுப்பதற்கு வல்லபாய் முயன்று வந்தார். ஆனால், இதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு அதிக நம்பிக்கை எதுவும் இல்லை. த்மகன்லால் காந்தி ஒரு யோசனை கூறினார்: நமது ஆசிரம நெசவுப் பள்ளிக்கூட அடித்தளத்தை நிரப்புவதற்கு நமக்கு மணல் வேண்டியிருக்கிறது.

இந்த வேலையில் பலரை அமர்த்திக் கொள்ளலாம் என்றார். இந்த யோசனையைத் தொழிலாளர்களும் வரவேற்றார்கள். அனுசூயா பென், தமது தலையில் முதலில் ஒரு கூடையைச் சுமந்து, அவர்களுக்கு வழிகாட்டினார். அவரைப் பின்பற்றித் தொழிலாளர்கள் வரிசை வரிசையாக ஆற்றிலிருந்து மணலை வாரிக் கூடைகளைத் தங்கள் தலைகளில் சுமந்துகொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருந்தனர். அது காண்பதற்கரிய காட்சியாக இருந்தது. தங்களுக்கு ஏதோ புதிய பலம் வந்திருப்பதாகவே தொழிலாளர்கள் உணர்ந்தனர். அவர்களுக்குச் சம்பளத்தைப் பட்டுவாடா செய்து சமாளிப்பதே கஷ்டமாக இருந்தது. என்னுடைய உண்ணாவிரதத்தில் பெரிய குறைபாடும் இல்லாது போகவில்லை. நான் முந்திய அத்தியாயத்தில் கூறியிருப்பதைப் போல, ஆலை முதலாளிகளிடம் நெருங்கிய தொடர்பும், அன்பான உறவும் எனக்கு இருந்து வந்தது. ஆகவே என்னுடைய உண்ணாவிரதம் அவர்களுடைய தீர்மானத்தைப் பாதிக்காமல் இருக்க முடியாது. அவர்களை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்பதைச் சத்தியாக்கிரகி என்ற வகையில் நான் அறிவேன். தொழிலாளர் செய்திருக்கும் வேலை நிறுத்தம் ஒன்றைக் கொண்டே அவர்கள் சுயேச்சையான முடிவுக்கு வரும்படி விட்டிருக்க வேண்டும். நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது,

ஆலை முதலாளிகள் செய்துவிட்ட தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் பிரதிக்ஞையிலிருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதம் இருந்தேன். அவர்களுடைய பிரதிநிதி என்ற வகையில், அவர்கள் செய்த தவறில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று கருதினேன். ஆலை முதலாளிகளிடம் நான் வேண்டிக் கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு விரோதமாக உண்ணாவிரதம் இருப்ப தென்பது அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகும். என்னுடைய உண்ணாவிரதம் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியே தீரும் என்பதை நான் அறிந்திருந்தும் உண்மையிலேயே அது அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியது. உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று எண்ணினேன். உண்ணாவிரதம் இருக்க வேண்டியதே என் கடமை என்று எனக்குத் தெளிவாகத் தோன்றியது. ஆலை முதலாளிக்குச் சமாதானம் கூற முயன்றேன். உங்களுடைய நிலைமையிலிருந்து எனக்காக நீங்கள் மாறியாக வேண்டிய அவசியம் கொஞ்சமேனும் இல்லை என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆனால், என் வார்த்தைகளால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நயமான மொழிகளால், உள்ளம் வருந்தும்படியாக என்னை ஏளனம் கூடச் செய்தனர். அவ்விதம் செய்ய அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

வேலை நிறுத்தம் சம்பந்தமாக ஆலை முதலாளிகள் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வந்ததற்கு மூலகாரணமாக இருந்தவர், சேத் அம்பாலால். அவருடைய தளராக உறுதியும், கபடமற்ற இயல்பும் அற்புதமானவை. அவை என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரை எதிர்த்துப் போராடுவது என்பதே மகிழ்ச்சி அளிப்பதாகும். ஆகவே, அவரைத் தலைவராகக் கொண்ட எதிர்க்கட்சிக்கு என்னுடைய உண்ணாவிரதம் உண்டாக்கிய சங்கடமான நிலைமையைக் குறித்து நான் அதிக மனவேதனை அடைந்தேன். அவருடைய மனைவி சரளாதேவி, உடன் பிறந்த சகோதரியைப்போல் என்னிடம் அன்பு கொண்டிருந்தார். என்னுடைய செய்கையினால், அவர் மனவருத்தம் அடைந்ததைக் காண என்னால் சகிக்கவில்லை. அனுசூயா பென்னும், நண்பர்கள் பலரும், தொழிலாளரும், முதல் நாள் என்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டும் உண்ணாவிரதம் இருப்பதைக் கொஞ்சம் சிரமத்தின் பேரிலேயே நிறுத்தி விடும்படி செய்தேன். இதனாலெல்லாம் ஏற்பட்ட பலன், எல்லோரிடமும் நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டதாகும். ஆலை முதலாளிகளின் மனமும் இரங்கியது. சமரசத்திற்கான வழியைக்காண அவர்கள் முன் வந்தார்கள். அனுசூயா பென்னின் வீட்டில் அவர்களுடைய விவாதங்கள் நடந்தன. ஸ்ரீ அனந்த சங்கர துருவாவும் இதில் தலையிட்டார். முடிவில் அவரையே மத்தியஸ்தராகவும் நியமித்தனர்.

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தமும் முடிவுற்றது. இந்த நல்ல முடிவைக் கொண்டாடுவதற்காக ஆலை முதலாளிகள், தொழிலாளருக்கு மிட்டாய்கள் வழங்கினர். இவ்விதம் இருபத்தொரு நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பிறகு சமரச முடிவு ஏற்பட்டது. இந்தச் சமரச முடிவைக் கொண்டாடுவதற்காக நடந்த கூட்டத்திற்கு ஆலை முதலாளிகளும் கமிஷனரும் வந்திருந்தனர். இவ்வைபவத்தில் தொழிலாளருக்குப் புத்திமதி கூறிய கமிஷனர், ஸ்ரீ காந்தி கூறும் புத்திமதியை அனுசரித்தே நீங்கள் எப்பொழுதும் நடந்துகொள்ள வேண்டும் என்றார். இந்தச் சம்பவங்களெல்லாம் முடிந்தவுடனேயே இதே கனவானிடம் நான் ஒரு தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால், நிலைமையோ இதற்கு மாறானது; அந்த நிலைமையை அனுசரித்து அவரும் மாறுதல் அடைந்து விட்டார். அப்பொழுது அவர், என் புத்திமதியைக் கேட்டு நடந்துவிட வேண்டாம் என்று கேடா பட்டாதார்களுக்கு எச்சரிக்கை செய்தார்! ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் நான் இந்த அத்தியாயத்தை முடித்துவிடக் கூடாது. அச்சம்பவம் எவ்வளவு வேடிக்கையானதோ அவ்வளவு பரிதாபகரமானதுமாகும். மிட்டாய் வினியோகத்தில் நடந்த சம்பவம் அது. மில் முதலாளிகள் மிட்டாயை ஏராளமாகத்  தருவித்திருந்தார்கள்.பல்லாயிரக்கணக்கான தொழிலாளரிடையே அதை எப்படி வினியோகிப்பது என்பதே பெரிய பிரச்னையாகி விட்டது.

வேறு எந்த இடத்திலும் அவர்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி வைப்பது என்பது முற்றும் அசௌகரியமாக இருந்தது. ஆகையால், திறந்த வெளியில், அதுவும் அவர்கள் எந்த மரத்தின் அடியில், இருந்து பிரதிக்ஞை செய்தார்களோ அதே மரத்தின் அடியில், அவர்களுக்கு மிட்டாயை வினியோகிப்பதுதான் சரி என்று தீர்மானிக்கப்பட்டது. இருபத்தொரு நாட்கள் கண்டிப்பான கட்டுப்பாட்டை அனுசரித்து வந்திருக்கும் தொழிலாளர்கள், எந்தவிதமான கஷ்டமும் இன்றி ஒழுங்காக நின்று வினியோகிக்கப்படும் மிட்டாயை வாங்கிக் கொள்ளுவார்கள், மிட்டாய் வாங்கப் போட்டி போட்டுக் கொண்டு மேலே விழமாட்டார்கள் என்று நிச்சயமாக நம்பி இருந்துவிட்டேன். ஆனால், இதைச் சோதிக்கும் சமயம் நேர்ந்தபோது, வினியோகிப்பதற்கு அனுசரித்த எல்லா முறைகளும் பலிக்காது போயின. வினியோகிக்க ஆரம்பித்த இரண்டு நிமிஷங்களுக்குள் அவர்கள் வரிசையெல்லாம் கலைந்து விடும்; மீண்டும் மீண்டும் குழப்ப நிலைமை உண்டாகிவிடும். மில் தொழிலாளர்களின் தலைவர்கள், ஒழுங்கை நிலை நிறுத்த என்ன முயன்றும் பயனில்லை. குழப்பமும், நெருக்கித் தள்ளுவதும், போட்டியும் முடிவில் தாங்க முடியாதவை ஆகிவிட்டன. இக்குழப்பத்தில் காலில் மிதியுண்டு ஏராளமான மிட்டாய்கள் பாழாயின. கடைசியாகத் திறந்த வெளியில் வினியோகிப்பது என்பதையே கைவிட்டு விட்டனர். மிஞ்சிய மிட்டாய்களைச் சிரமப்பட்டு மிர்ஜா பூரிலிருந்த சேத் அம்பாலாலின் பங்களாவுக்குக் கொண்டு போனோம். மறுநாள் அந்தப் பங்களாத் தோட்டத்தில் எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் மிட்டாய் வினியோகிக்கப் பட்டது.

இச்சம்பவத்தின் வேடிக்கையான அம்சம் தெளிவானதே. ஆனால், இதிலுள்ள பரிதாபப் பகுதியைக் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டும். பின்னால் இதைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியாயிற்று. பிரதிக்ஞை எடுத்துக்கொண்ட மரத்தடியில் மிட்டாய்கள் வினியோகிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிட்ட அகமதாபாத்திலிருந்த பிச்சைக்காரர்கள் எல்லோரும் அங்கே ஏராளமாகப் போய்க் கூடி விட்டார்கள். பட்டினியால் வாடிய அவர்கள் மிட்டாய்களைப் பெற முண்டியடித்துக்கொண்டு போனதே அங்கே ஏற்பட்ட குழப்பத்திற்கும் ஒழுங்கின்மைக்கும் காரணம். நம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.


Offline Anu

கேடாச் சத்தியாக்கிரகம்

கொஞ்சம் ஓய்ந்து மூச்சு விடுவதற்கும்கூட எனக்கு அவகாசமில்லை. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுற்றுவுடனேயே நான் கேடாச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று. கேடா ஜில்லாவில் எங்கும் விளைச்சல் இல்லாது போய்விட்டதனால், பஞ்சம் வரக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அந்த ஆண்டு நிலவரி வசூலை நிறுத்தி வைத்துவிடும்படி செய்வது எப்படி என்பதைக் குறித்துக் கேடாப் பட்டாதார்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளுக்கு நான் திட்டமான ஆலோசனையைக் கூறுவதற்கு முன்பே ஸ்ரீ அமிர்தலால் தக்கர் அங்கிருந்த நிலைமையைப் பற்றி விவாதித்தறிந்து, அப்பிரச்னையைக் குறித்துக் கமிஷனருடன் நேரில் விவாதித்திருந்தார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவும், ஸ்ரீ சங்கரலால் பரீக்கும் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ வித்தல்பாய் பட்டேல். காலஞ் சென்ற ஸர் கோகுலதாஸ் ககன் தாஸ் பரீக் ஆகியவர்களைக் கொண்டு பம்பாய்ச் சட்டசபையில் கிளர்ச்சியையும் ஆரம்பித்திருந்தனர்.

இது சம்பந்தமாகப் பன்முறை கவர்னரிடமும் தூது சென்றனர். இந்தச் சமயத்தில் நான் குஜராத்தி சபைக்குத் தலைவனாக இருந்தேன். இச்சபை, அரசாங்கத்திற்கு மனுக்களையும் தந்திகளையும் அனுப்பியது. கமிஷனர் செய்த அவமரியாதைகளையும், கமிஷனரின் மிரட்டல்களையும் சகித்துக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் நடந்தை மிகக் கேவலமாகவும் கேலிக்கூத்தாகவும் இருந்தது. அவை, இன்று நம்பக் கூடாத அளவுக்கு அவ்வளவு மோசமானவை. விவசாயிகளின் கோரிக்கை, பட்டப்பகல் போல அவ்வளவு தெளிவானது; மிகவும் மிதமானது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் நியாயமாக இருந்தது. மகசூல், சாதாரணமாகக் கிடைக்க வேண்டியதில் கால்வாசியும் அதற்குக் குறைவாகவுமே இருந்துவிடுமானால், அந்த ஆண்டுக்கு நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்கும்படி, நிலத்தீர்வை விதிகளின்படி விவசாயிகள் கேட்கலாம். கால்வாசிக்கும் அதிகமாக மகசூல் இருக்கிறது என்பது சர்க்காரின் கணக்கு.

விவசாயிகளோ,கால்வாசிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருக்கிறது என்றார்கள். ஆனால், இவர்கள் கூறுவதைக் கேட்டுக்கொள்ளும் மனப்போக்கில் அரசாங்கம் இல்லை. மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்ற பொதுஜனக் கோரிக்கை, தங்களுடைய கௌரவத்திற்குக் குறைவானது என்று அரசாங்கம் கருதியது. முடிவாக மனுக்களும் கோரிக்கைகளும் பயனில்லாது போய் விடவே, நான் என் சக ஊழியர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு, சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுமாறு பட்டாதார்களுக்கு யோசனை கூறினேன். இந்தப் போராட்டத்தில் கேடாத் தொண்டர்களே அன்றி எனக்கு முக்கியமான தோழர்களாக இருந்தவர்கள் ஸ்ரீ வல்லபாய் பட்டேல், சங்கரலால் பாங்கர், ஸ்ரீ மதி அனுசூயா பென், ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக், மகாதேவ தேசாய் முதலியவர்களும் மற்றோரும் ஆவர். இப்போராட்டத்தில் சேர்ந்ததால் ஸ்ரீ வல்லபாய் பட்டேல், ஏராளமான வருமானத்தை அளித்ததும், வளர்ந்து கொண்டு வந்ததுமான தமது வக்கீல் தொழிலை நிறுத்தி வைத்து விட நேர்ந்தது. பிறகு அத்தொழிலை அநேகமாக அவர் மேற்கொள்ள முடியாமலே போய்விட்டது.

நதியாத்திலிருந்த அனாதாசிரமத்தை எங்கள் தலைமை ஸ்தலம் ஆக்கிக்கொண்டோம். நாங்கள் எல்லோரும் தங்குவதற்குப் போதுமானதாக இதைவிடப் பெரிய இடம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சத்தியாக்கிரகிகள் கீழ்க்கண்ட பிரதிக்ஞையில் கையெழுத்திட்டனர். எங்கள் கிராமங்களில் மகசூல் கால் பாகத்திற்கும் றைவாக இருக்கிறது என்பதை அறிந்தே அடுத்த ஆண்டுவரையில் நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டோம். ஆனால், எங்களுடைய வேண்டுகோளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால், கீழே கையொப்பம் இட்டு இருப்பவர்களாகிய நாங்கள், இவ்வருஷத்திற்கு முழுத் தீர்வையையோ பாக்கியாக இருக்கும் தீர்வையையோ அரசாங்கத்திற்கு நாங்களாகக் கொடுப்பதில்லை என்று இதன் மூலம் சத்தியம் செய்து கொள்கிறோம். அரசாங்கம், தனக்குச் சரியெனத் தோன்றும் எல்லாச் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதோடு நாங்கள் தீர்வை செலுத்தாததால் ஏற்படக்கூடிய விளைவுகளை மகிழ்ச்சியுடனும் அனுபவிப்போம்.

எங்கள் நிலங்கள் பறிமுதல் ஆகிவிட விட்டு விடுவோமேயன்றி நாங்களாக வலியத்தீர்வையைச் செலுத்தி, எங்கள் கட்சி பொய்யானது என்று கருதப்பட்டு விடுவதற்கோ, எங்கள் சுய மதிப்புக்கு இழுக்கு நேர்ந்துவிடுவதற்கோ, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்றாலும், ஜில்லா முழுவதிலும் நிலத்தீர்வையின் இரண்டாவது தவணையை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசாங்கம் சம்மதிக்குமானால், எங்களில் வரி செலுத்துவதற்குச் சக்தியுள்ளவர்கள், முழு நில வரியையோ அல்லது பாக்கியாக இருக்கும் நிலத்தீர்வையின் மீதத்தையோ செலுத்திவிடுவோம். தீர்வையைச் செலுத்திவிடக் கூடியவர்கள், இன்னும் செலுத்தாமல் இருந்து வருவதற்குக் காரணம், அவர்கள் செலுத்திவிட்டால் ஏழைகளாக இருக்கும் விவசாயிகள் பீதியடைந்து தங்கள் தீர்வைப் பாக்கியைச் செலுத்துவதற்காகத் தங்களிடமிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களையெல்லாம் விற்றோ, கடன்பட்டோ தங்களுக்கு மேலும் துயரத்தைத் தேடிக்கொண்டு விடுவார்கள் என்பதே. இந்த நிலைமையில் ஏழைகளின் நன்மையை முன்னிட்டு வரி செலுத்தச் சக்தியுள்ளவர்கள் கூட, நிலத்தீர்வையைச் செலுத்தாமல் இருப்பது அவர்கள் கடமை என்று நாங்கள் உணருகிறோம். இந்தப் போராட்டத்தைக் குறித்துப் பல அத்தியாயங்களை நான் எழுதுவதற்கில்லை. ஆகையால், இதன் சம்பந்தமான அநேக இனிமையான நினைவுகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு நான் செல்லவேண்டி இருக்கிறது. இந்த முக்கியமான போராட்டத்தைக் குறித்து முழுவதையும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர், கேடாவிலுள்ள கத்தலாலைச் சேர்ந்த ஸ்ரீ சங்கரலால் பரீக் எழுதியிருக்கும் ஆதாரபூர்வமான கேடாச் சத்தியாக்கிரகம் என்ற நூலைப் படிப்பார்களாக.


Offline Anu

வெங்காயத் திருடர்

சம்பாரண், இந்தியாவில் தொலைவான ஒரு முடுக்கில் இருக்கிறது. அங்கே நடந்த போராட்டத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் ஆகவில்லை. அதனால், வெளியிலிருந்து அங்கே அதிகம் பேர் வரவில்லை. ஆனால், கேடாப் போராட்டம் அப்படியல்ல. அங்கே நடந்துவந்தவை யாவும் அன்றாடம் பத்திரிகைகளில் வெளியாகி வந்தன. குஜராத்திகளுக்கு இப்போராட்டம் முற்றிலும் புதியதான ஒரு சோதனை. ஆகையால், அவர்கள் இதில் அதிக சிரத்தை கொண்டிருந்தனர். இந்த லட்சியம் வெற்றியடைவதற்காகத் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்ட அவர்கள் தயாராயிருந்தார்கள். சத்தியாக்கிரகத்தைப் பணத்தினால் மாத்திரமே நடத்திவிட முடியாது என்பதை அவர்கள் சுலபமாக அறிந்து கொள்ள முடியவில்லை. சத்தியாக்கிரகத்திற்குத் தேவையானவற்றில் பணம், கடைசி ஸ்தானத்தையே வகிக்கிறது. வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்த்தகர்கள் எங்களுக்கு அவசியமானதற்கும் அதிகமாகப் பணம் அனுப்பினார்கள். இதனால் அப்போராட்டத்தின் முடிவில் எங்களிடம் கொஞ்சம் பணம் மீதமாக இருந்தது. அதே சமயத்தில் சத்தியாக்கிரகத் தொண்டர்கள், புதிய பாடமான எளிமையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அவர்கள் அப்பாடத்தை முழுவதும் கற்றுக் கொண்டுவிட்டனர் என்று சொல்ல முடியாது. என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றிக் கொண்டார்கள். செய்யவேண்டியிருந்த முக்கியமான காரியம், விவசாயிகளின் பயத்தைப் போக்குவது. அதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவகர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல என்பதை விவசாயிகள் உணரும்படி செய்து அவர்கள் பயத்தைப் போக்க வேண்டியிருந்தது. அஞ்சாமை என்பதை அவர்கள் உணரும்படி செய்வது அசாத்தியமான காரியமாகவே இருந்தது. அதிகாரிகளிடம் அவர்களுக்கு இருந்த பயம் போய்விட்டபிறகு, பதிலுக்குப் பதில் அதிகாரிகளை அவர்கள் அவமதிக்காமல் இருக்கும்படி செய்வது எப்படி? மேலும், மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள முற்பட்டு விடுவார்களாயின், பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்துவிட்டதைப் போன்று சத்தியாக்கிரகம் கெட்டுவிடும். மரியாதையாக நடந்துகொள்ளும் பாடத்தை, நான் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதை நான் பின்னால் அறிந்தேன்.

பிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக்கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும். சத்தியாக்கிரகியின் ஒவ்வொரு செயலிலும் இது வெளிப்படுவதாகவும் இருக்க வேண்டும். ஆரம்பக் கட்டங்களில் மக்கள் அதிகத் தைரியம் காட்டினார் களெனினும், கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்ள அரசாங்கம் விரும்பியதாகத் தோன்றவில்லை. ஆனால், மக்களின் உறுதி தளர்ந்துவிடும் என்பதற்கான அறிகுறி எதுவும் தோன்றாது போகவே அரசாங்கம் அடக்கு முறையைக் கைக்கொள்ளக் கிளம்பியது. ஜப்தி அதிகாரிகள், மக்களின் கால்நடைகளை ஏலம் போட்டனர். அகப்பட்ட ஜங்கம சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்தார்கள்; அபராத அறிவிப்புக்களைப் பிறப்பித்தனர்; சிலருடைய மகசூல்களையும் ஜப்தி செய்தார்கள். இவையெல்லாம் விவசாயிகளின் உறுதியைக் குலைத்துவிட்டன.

சிலர் தங்கள் வரிப்பாக்கியைச் செலுத்திவிட்டார்கள். மற்றும் சிலரோ, தங்கள் வரிப்பாக்கிக்காக ஜப்தி செய்துகொண்டு போகட்டும் என்று, பத்திரமான தங்கள் ஜங்கம சொத்துகள் - அதிகாரிகள் கையில் அகப்படும் வகையில் வைத்துவிட விரும்பினார்கள். ஆனால், இதற்கு மாறாக மற்றும் சிலரோ, கடைசி வரையில் போராடியே தீருவது என்று உறுதியுடன் இருந்தார்கள். இப்படி எல்லாம் நடந்துகொண்டிருந்த சமயம், ஸ்ரீ சங்கரலால் பரீக்கின் சாகுபடியாளர்களில் ஒருவர் தம்மிடமிருந்த நிலத்திற்குரிய தீர்வையைச் செலுத்திவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமது சாகுபடியாளர் செய்துவிட்ட தவறுக்கு ஸ்ரீ சங்கரலால் பரீக் உடனே தக்க பரிகாரம் செய்துவிட்டார். எந்த நிலத்திற்கு வரி செலுத்தப் பட்டுவிட்டதோ அந்த நிலத்தை அவர் தருமத்திற்குக் கொடுத்துவிட்டார். இவ்விதம் அவர் தமது கௌரவத்தைக் காத்துக்கொண்டதோடு மற்றவர்களுக்கும் சிறந்த உதாரணமானார். பயமடைந்துவிட்டவர்களின் உள்ளத்தில் உறுதி ஏற்படும்படி செய்வதற்காக, ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையிலிருந்த மக்களுக்கு நான் ஒரு யோசனை கூறினேன்.

ஒரு நிலத்தில் மகசூல் நியாயமின்றி ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அந்த வயலிலிருந்த வெங்காய மகசூலை அப்புறப் படுத்திவிடும்படி கூறினேன். இதைச் சாத்வீகச் சட்டமறுப்பு என்று நான் கருதவில்லை. இது சாத்விகச் சட்டமறுப்பாகவே இருந்தாலும், நிலத்தில் இருக்கும் மகசூலை ஜப்தி செய்வது சட்டப்படி சரியானதாகவே இருப்பினும், ஒழுக்க ரீதியில் அது தவறானது; கொள்ளையைத் தவிர வேறு எதுவும் அல்ல அது என்று நான் கூறினேன். ஆகையால், ஜப்தி உத்தரவு இருந்தாலும், அந்த நிலத்திலிருந்து வெங்காய மகசூலை அப்புறப்படுத்திவிட வேண்டியது மக்கள் கடமை என்றேன். அபராதம் விதிக்கப்பட்டது அல்லது தண்டனை அடைவது என்பது இத்தகைய சட்ட மறுப்பின் அவசியமான பின்விளைவாகும். ஆகையால், அபராதம் விதிக்கப்படுவது அல்லது தண்டனையை அடைவது என்பதன் மூலம் புதியதொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு மக்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கோ இது மனத்திற்குப் பிடித்த காரியம். சத்தியாக்கிரகக் கொள்கைக்குப் பொருத்தமான வகையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்து சிறைவாச உருவில் துன்பத்தை அனுபவிக்காமல் இப்போராட்டம் முடிந்து விடுவதை அவர் விரும்பவில்லை. ஆகையால், அந்நிலத்திலிருந்த வெங்காய மகசூலைத் தாமே அப்புறப்படுத்தி விடுவதாக அவர் முன் வந்தார். இதில் ற்றும் ஏழு, எட்டு நண்பர்களும் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.

இவர்களைச் சும்மா விட்டுவிடுவது என்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம். ஸ்ரீ மோகன்லாலும் அவருடைய சகாக்களும் கைதானதால் மக்களின் உற்சாகம் அதிகமாயிற்று. ஜெயிலுக்குப் பயப்படுவதென்பது போய்விட்ட பிறகு அடக்கமுறை மக்களுக்குத் தைரியத்தை ஊட்டிவிடுகிறது. விசாரணை நாளன்று கோர்ட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். பாண்டியாவும் அவருடைய சகாக்களும் சொற்ப காலச் சிறைத் தண்டனை அடைந்தார்கள். தண்டனை விதித்தது தவறு என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், வெங்காய மகசூலை அப்புறப்படுத்தியது குற்றச் சட்டத்தின்படி திருட்டு ஆகாது. ஆனால், கோர்ட்டுக்குப் போவதைத் தவிர்ப்பது என்பதே கொள்கையாகையால் அப்பீல் செய்யவில்லை. கைதிகளைச் சிறைக்குக் கொண்டுபோனபோது, அவர்கள் முன்னால் மக்கள் ஊர்வலம் ஒன்றும் சென்றது. அன்று மக்கள் ஸ்ரீ மோகன்லாலுக்கு வெங்காயத் திருடர் என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தனர். இன்னும் அப்பட்டப்பெயர் அவருக்கு இருந்து வருகிறது.


Offline Anu

கேடாச் சத்தியாகிரக முடிவு

இப்போராட்டம் எதிர்பாராத வகையில் முடிவுற்றது. மக்கள் களைத்துப் போய்விட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, பணியாமல் உறுதியுடன் இருந்தவர்களைச் சர்வ நாசத்திற்குக் கொண்டுபோய் விடுவதற்குத் தயங்கினேன். சத்தியாக்கிரகி ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், கௌரவமான முறையில் போராட்டத்தை முடிப்பதற்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத வகையில் அத்தகைய வழி ஒன்று தென்பட்டது. நதியாத் தாசில்தார் எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். பணவசதியுள்ள பட்டாதார்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைகளிடமிருந்து வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றார், அவர். அவ்விதம் செய்யப்படும் என்று எழுத்து மூலம் கொடுக்கும்படி அவரைக் கேட்டேன். அவரும் அப்படியே கொடுத்தார்.

தாசில்தார், தமது தாலுகாவுக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்தவராக இருக்க முடியும். ஜில்லா முழுவதற்கும் கலெக்டரே உறுதிமொழி கொடுக்க முடியும். முழு ஜில்லாவுக்கும் தாசில்தாரின் உறுதிமொழி அமல் ஆகுமா என்று கலெக்டரிடம் விசாரித்தேன். தாசில்தாரின் கடிதத்தில் கண்ட முறையில் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று அவர் பதில் அளித்தார். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது உண்மையானால், மக்களின் பிரதிக்ஞை நிறைவேறி விட்டது. இந்தக் காரியத்தை நோக்கமாகக் கொண்டதே அப்பிரதிக்ஞை என்பது நினைவிருக்கலாம். ஆகவே, உத்தரவில் எங்களுக்குத் திருப்தி என்று அறிவித்தோம். என்றாலும், முடிவு நான் மகிழ்ச்சி அடையும்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முடிவையும் தொடர்ந்து வரவேண்டியதான பெருமிதம் அதில் இல்லை. சமரசத்திற்காகத் தாம் எதுவுமே செய்யாதவரைப் போலவே கலெக்டர் காரியங்களைச் செய்துகொண்டு போனார்.

ஏழைகளிடமிருந்து தீர்வை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால், அந்தச் சகாயம் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஏழைகள் என்பது இன்னார் என்பதை நிர்ணயிப்பது மக்களுக்குள்ள உரிமை. ஆனால், அந்த உரிமையைச் செயல்படுத்த அவர்களால் முடியவில்லை. உரிமையை நிலைநாட்டுவதற்கு வேண்டிய பலம் அவர்களுக்கு இல்லாததைக் குறித்துத் துக்கம் அடைந்தேன். ஆகையால், இப்போராட்டத்தின் முடிவு சத்தியாக்கிரகத்தின் வெற்றி என்று கொண்டாடப்பட்ட தாயினும், முழு வெற்றிக்கு வேண்டிய முக்கியமான அம்சங்கள் அதில் இல்லாததனால், அதைக் குறித்து நான் உற்சாகம் அடைய முடியவில்லை. சத்தியாக்கிரகத்தின் முடிவில் சத்தியாக்கிரகிகள் மேலும் பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிக உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க முடிந்தால்தான் சத்தியாக்கிரகப் போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும். ஆயினும், இப்போராட்டத்தினால் மறைமுகமான பலன்களும் இல்லாது போகவில்லை. இப்பலன்களை இன்று நாம் காணமுடிவதோடு அதன் பயன்களை அனுபவித்தும் வருகிறோம்.

கேடாச் சத்தியாக்கிரகம், குஜராத் விவசாயிகளிடையே விழிப்பு ஏற்படுவதற்கு ஆரம்பமாக இருந்தது. உண்மையான ராஜீயக் கல்விக்கு அதுவே ஆரம்பமாகும். டாக்டர் பெஸன்டின் சிறந்த சுயாட்சிக் கிளர்ச்சி, உண்மையில் விவசாயிகளிடையே ஓரளவுக்கு விழிப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், கேடாப் போராட்டமே, விவசாயிகளின் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளும்படி படித்த பொதுஜன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியது. விவசாயிகளுடன் சேர்ந்தவர்களே தாங்களும் என்பதை அவர்கள் அறியலானார்கள். தங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற இடத்தையும் கண்டுகொண்டனர். அவர்களுடைய தியாகத் திறனும் அதிகரித்தது. இந்தப் போராட்டத்தில்தான் வல்லபாய், தம்மைத் தாமே கண்டு கொண்டார் என்பது, அதனளவில் சாமான்யமான பலன் அன்று. அதன் பலன் எவ்வளவு பிரமாதமானது என்பதைச் சென்ற ஆண்டு நடந்த வெள்ளகஷ்ட நிவாரண வேலையில் இருந்தும், இந்த ஆண்டு நடந்த பார்டோலி சத்தியாக் கிரகத்திலிருந்தும் நாம் அறிய முடியும்.

குஜராத்தில் பொதுஜன சேவை வாழ்க்கை புதிய சக்தியையும், ஊக்கத்தையும் பெற்றது. பட்டாதாரான விவசாயி, தம்முடைய பலத்தை மறக்க முடியாத வகையில் உணரலானார். மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது. இந்தப் பாடம், அழிய முடியாத வகையில் பொதுமக்களின் மனத்தில் பதிந்துவிட்டது. கேடாப் போராட்டத்தின் மூலம் சத்தியாக்கிரகம் குஜராத்தின் மண்ணில் ஆழ வேர் ஊன்றிவிட்டது. ஆகையால், சத்தியாக்கிரகம் முடிவடைந்ததைக் குறித்து நான் உற்சாகமடைவதற்கு எதுவும் இல்லையென்றாலும், கேடா விவசாயிகள் குதூகலமடைந்தார்கள். ஏனெனில், தங்கள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனை அடைந்துவிட்டதாக அவர்கள் அறிந்ததோடு தங்களுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு உண்மையான, தோல்வியே இல்லாத ஒரு முறையையும் அவர்கள் கண்டுகொண்டனர். இதை அவர்கள் அறிந்திருந்தது ஒன்றே, அவர்கள் அடைந்த குதூகலம் நியாயமானது என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது. என்றாலும், சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைக் கேடா விவசாயிகள் முற்றும் அறிந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைக் கொண்டே இதை அவர்கள் கண்டு கொண்டனர். அதைக் குறித்துப் பின்வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்


Offline Anu

ஒற்றுமையில் ஆர்வம்

ஐரோப்பாவில் நாசகரமான யுத்தம் நடந்துகொண்டு வந்த போதுதான் கேடாப் போராட்டம் ஆரம்பமாயிற்று. அப்போராட்டம் முடிந்த பிறகு, யுத்தத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை உண்டாயிற்று. வைசிராய் டில்லியில் ஒரு யுத்த மகாநாட்டைக் கூட்டி, அதற்குப் பல தலைவர்களையும் அழைத்திருந்தார். வைசிராய் லார்டு செம்ஸ்போர்டுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன். அந்த அழைப்பிற்கு இணங்கி நான் டில்லிக்குச் சென்றேன். ஆனால், அம்மகாநாட்டில் நான் கலந்து கொள்ளுவது சம்பந்தமாக எனக்குச் சில ஆட்சேபங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது, அலி சகோதரர்கள் போன்ற தலைவர்களை அம்மகாநாட்டிற்கு அழைக்கவில்லை என்பது. அப்பொழுது அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களைக் குறித்து நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தேனாயினும் இரண்டொரு முறையே அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர்களுடைய சேவையைக் குறித்தும், தீரத்தைப் பற்றியும் என்னிடம் எல்லோரும் மிகவும் பாராட்டிக் கூறியிருந்தார்கள். ஹக்கீம் சாகிபுடன் அப்பொழுது எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் தீனபந்து ஆண்டுரூஸு ம், அவருடைய பெருமையைக் குறித்து என்னிடம் அதிகம் கூறியிருந்தனர்.

ஸ்ரீ ஷு வாயிப் குரேஷியையும் ஸ்ரீ குவாஜாவையும் கல்கத்தாவில் முஸ்லீம் லீகில் சந்தித்திருந்தேன். டாக்டர் அன்ஸாரியுடனும் டாக்டர் அப்துர் ரஹ்மானுடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. உத்தமமான முஸ்லிம்களின் நட்பை நான் நாடினேன். முஸ்லிம்களின் புனிதமான, அதிக தேசாபிமானமுள்ள பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு அதன் மூலம் முஸ்லிம்களின் மனத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆகையால், அப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக, அவர்கள் என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் போவேன். அதற்கு எந்தவிதமான வற்புறுத்தலும் தேவையே இல்லை. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உண்மையான நட்பு இல்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்துகொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விட்டுவிடுவது இல்லை.

முகஸ்துதியாகப் பேசியோ, சுயமதிப்புக்குப் பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக்கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கே விரோதமானது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அதோடு இவ்விஷயமே என்னுடைய அகிம்சையின் சோதனைகளுக்கு மிக விஸ்தாரமான இலக்கை அளிக்கிறது என்றும் அறிந்திருந்தேன். அந்த உறுதியே இன்னும் இருந்துவருகிறது. என் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்திலும் கடவுள் என்னைச் சோதித்து வருகிறார் என்பதையும் உணருகிறேன். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய போது இவ்விஷயத்தில் இவ்விதமான உறுதியான கொள்கையுடன் நான் இருந்ததனால், அலி சகோதரர்களுடன் தொடர்பு பெறுவது மிகவும் முக்கியம் என்று மதித்தேன். ஆனால், நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னால் அவர்களைத் தனிமையில் வைத்து விட்டனர்.

கடிதம் எழுத ஜெயிலர்கள் அனுமதிக்கும் போதெல்லாம் மௌலானா முகமது அலி, பேதூலிலிருந்தும் சிந்து வாடியிலிருந்தும் எனக்கு நீண்ட கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் போய்ப் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பித்துக் கொண்டேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. அலி சகோதரர்கள் சிறைப்பட்ட பின்னரே, கல்கத்தாவில் நடந்த முஸ்லிம் லீக் மகாநாட்டிற்கு முஸ்லிம் நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அங்கே பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோது, அலி சகோதரர்கள் விடுதலையாகும்படி செய்ய வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்று பேசினேன். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இந்த நண்பர்கள், அலிகாரிலுள்ள முஸ்லிம் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பேசுகையில் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதற்காக இளைஞர்கள் பக்கிரிகள் ஆகவேண்டும் என்று அழைத்தேன். பிறகு அலி சகோதரர்கள் விடுதலைக்காக அரசாங்கத்துடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டேன். இது சம்பந்தமாக, கிலாபத் பற்றி அலி சகோதரர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும், அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்தேன்.

முஸ்லிம் நண்பர்களுடனும் விவாதித்தேன். இதனால் ஒன்றை உணர்ந்தேன். நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பனாக வேண்டுமானால், அலி சகோதரர்களின் விடுதலையைப் பெறுவதற்காகவும், கிலாபத் பிரச்னையில் நியாயமான முடிவு ஏற்படுவதாகவும், சாத்தியமான எல்லா உதவிகளையும் நான் செய்யவேண்டும் என்பதே அது. அவர்களுடைய கோரிக்கையில் தரும விரோதமானது எதுவும் இல்லையென்றால், அதன் முழு நியாயங்களையும் குறித்து நான் ஆராய்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தமான விசயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரேவிதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும். கிலாபத் சம்பந்தமான முஸ்லிம்களின் கோரிக்கையில் தருமத்திற்கு விரோதமானது எதுவும் இல்லை என்பதோடு மாத்திரம் அல்ல, முஸ்லிம்களுடைய கோரிக்கையின் நியாயத்தைப் பிரிட்டிஷ் பிரதம மந்திரியே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். ஆகையால், பிரதம மந்திரியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்படி செய்வதற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கருதினேன்.

மிகவும் தெளிவான முறையில் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்ததால், என்னுடைய மனச் சாட்சியைத் திருப்தி செய்துகொள்ளுவதற்கு மாத்திரமே முஸ்லிம்களுடைய கோரிக்கையின் தகுதியைக் குறித்து நான் பரிசீலனை செய்துகொள்ளவேண்டியிருந்தது. கிலாபத் பிரச்னையில் நான் கொண்ட போக்கைக் குறித்து நண்பர்களும் மற்றவர்களும் குற்றஞ் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் கண்டித்திருந்தபோதிலும், என் கருத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. முஸ்லிம்களுடன் ஒத்துழைத்ததற்காக நான வருந்தவும் இல்லை. இதேபோன்ற சமயம் இனி ஏற்படுமானால், அதே போக்கைத்தான் நான் அனுசரிக்க வேண்டும். ஆகையால், நான் டில்லிக்குச் சென்றபோது, முஸ்லிம்களின் கட்சியை வைசிராய்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற முழு எண்ணத்துடனேயே சென்றேன். கிலாபத் பிரச்னை, பின்னால் அது கொண்ட உருவை அப்பொழுது அடைந்து விடவில்லை. ஆனால், நான் டில்லியை அடைந்ததும், மகாநாட்டிற்கு நான் செல்வதிற்கு எதிராக மற்றொரு கஷ்டமும் ஏற்பட்டது.

யுத்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ளுவது தருமமாகுமா என்ற கேள்வியைத் தீனபந்து ஆண்டுரூஸ் எழுதினார். இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தங்களைப்பற்றிப் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நடந்து வந்த விவாதங்களைக் குறித்து அவர் எனக்குக் கூறினார். இன்னுமொரு ஐரோப்பிய வல்லரசுடன் பிரிட்டன் ரகசியமாக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்குமானால், இம்மகா நாட்டில் எப்படி நான் கலந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீ ஆண்டுரூஸ் கேட்டார். ஒப்பந்தங்களைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தீனபந்து ஆண்டுரூஸ் சொன்னதே எனக்குப் போதுமானது. ஆகவே, மகாநாட்டில் கலந்து கொள்ள நான் தயங்குவதன் காரணத்தை விளக்கி லார்டு செம்ஸ்போர்டுக்குக் கடிதம் எழுதினேன். இதைக் குறித்து என்னுடன் விவாதிப்பதற்காக அவர் என்னை அழைத்தார். அவருடனும் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி ஸ்ரீ மாபியுடனும் நீண்ட நேரம் விவாதித்தேன். அதன் பேரில் மகாநாட்டில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். வைசிராய் வாதத்தின் சாராம்சம் இதுதான்: பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொன்றும் வைசிராய்க்குத் தெரியும் என்று நிச்சயம் நீங்கள் நம்பிவிட மாட்டீர்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்று நான் சொல்லவில்லை; யாரும் சொல்லவுமில்லை. ஆனால், மொத்தத்தில் சாம்ராஜ்யம் நல்லதற்கான ஒரு சக்தி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், இந்தியா, பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் மொத்தத்தில் நன்மையடைந்திருக்குமாயின், சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்பதை ஒப்புக் கொள்ளுவீர்களல்லவா? ரகசிய ஒப்பந்தங்களைக் குறித்துப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்ன கூறுகின்றன என்பதை நானும் படித்தேன். இந்தப் பத்திரிகைகள் கூறுவதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். அதோடு, அடிக்கடி பத்திரிகைகள் கதை கட்டிவிடுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பத்திரிகைச் செய்திகளை மாத்திரம் ஆதாரமாக வைத்துக் கொண்டு இது போன்ற ஒரு நெருக்கடியான சமயத்தில் சாம்ராஜ்யத்திற்கு உதவி செய்ய நீங்கள் மறுக்கலாமா? இன்று அல்ல. இந்த யுத்தம் முடிந்த பிறகு, எந்தத் தார்மிகப் பிரச்னையில் வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி நீங்கள் ஆட்சேபங்களைக் கிளப்பி எங்களுக்குச் சவால் விடலாம். வாதம் புதியது அன்று. ஆனால், கூறப்பட்ட முறையினாலும், கூறப்பட்ட நேரத்தின் காரணமாகவும் அது புதிதாக எனக்குத் தோன்றியது. மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்கும் சம்மதித்தேன். முஸ்லிம்களின் கோரிக்கையைப் பொறுத்த வரையில் வைசிராய்க்கு நான் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாயிற்று.


Offline Anu

படைக்கு ஆள் திரட்டல்

ஆகவே நான் மகாநாட்டிற்குச் சென்றேன். படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்பதில் வைசிராய் அதிகச் சிரத்தையுடன் இருந்தார். ஹிந்துஸ்தானியில் நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். என் கோரிக்கைக்கு வைசிராய் அனுமதியளித்தார். ஆனால், நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்று யோசனை கூறினார். நான் நீளமான பிரசங்கம் செய்ய எண்ணவில்லை. பேசினேன். என் பொறுப்பைப் பூரணமாக உணர்ந்தே நான் இத்தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்ற ஒரே வாக்கியமே நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதற்காகப் பலர் என்னைப்பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் தடவை என்றும் அவர்கள் கூறினார்கள். இப்பாராட்டுக்களும், வைசிராய் கூட்டமொன்றில் ஹிந்துஸ்தானியில் முதல் முதல் பேசியது நானே என்பது கண்டு பிடிக்கப்பட்டதும், என்னுடைய தேசிய கௌரவத்தைப் பாதித்தன.

எனக்கு நானே குன்றிப் போய்விட்டதாக உணர்ந்தேன். நாட்டில், நாடு சம்பந்தமான வேலையைப் பற்றிய கூட்டங்களில், நாட்டின் மொழி தடுக்கப்பட்டிருப்பதும், என்னைப் போன்ற யாரோ ஒருவர் அங்கே ஹிந்துஸ்தானியில் பேசிவிட்டது பாராட்டுதற்குரிய விஷயமாக இருப்பதும், எவ்வளவு பெரிய துக்ககரமான விஷயம்! நாம் எவ்வளவு இழிவான நிலைமையை அடைந்திருக்கிறோம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நினைவூட்டுகின்றன. மகாநாட்டில் நான் பேசியது ஒரே ஒரு வாக்கியமேயாயினும் எனக்கு அது அதிக முக்கியமான பொருளைக் கொண்டதாகும். அம்மகாநாட்டையோ, அதில் நான் ஆதரித்த தீர்மானத்தையோ மறந்துவிடுவது எனக்குச் சாத்தியமல்ல. செய்வதாக நான் ஏற்றுக் கொண்டிருந்த ஒரு காரியத்தை டில்லியிலிருந்தபோதே நான் நிறைவேற்றியாக வேண்டியிருந்தது. வைசிராய்க்கு நான் கடிதம் எழுத வேண்டியிருந்தது. எனக்கு இது எளிதான காரியமன்று. அரசாங்கம், மக்கள் ஆகிய இருதரப்பினரின் நன்மையையும் முன்னிட்டு, எப்படி, ஏன் அம்மகாநாட்டுக்கு வந்தேன் என்பதை அக்கடிதத்தில் விளக்கிச் சொல்லி, அரசாங்கத்தினிடமிருந்து மக்கள் எதிர் பார்ப்பது என்ன என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டியது என் கடமை என்பதை உணர்ந்தேன்.

லோகமான்ய திலகர், அலி சகோதரர்கள் போன்ற தலைவர்கள் மகாநாட்டிற்கு அழைக்கப்படாமல் விலக்கப்பட்டிருந்தது குறித்து என் வருத்தத்தை அக்கடிதத்தில் தெரிவித்தேன். மக்களின் குறைந்த பட்ச ராஜீயக் கோரிக்கையைக் குறித்தும், யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக உண்டாகியிருக்கும் முஸ்லிம்களின் கோரிக்கையைப் பற்றியும் அதில் கூறினேன். அக்கடிதத்தைப்பிரசுரிக்கவும் அனுமதி கேட்டேன். வைசிராயும் மகிழ்ச்சியுடன் அனுமதியளித்தார். மகாநாடு முடிந்தவுடனேயே வைசிராய் சிம்லாவுக்குப் போய் விட்டதால், அக்கடிதத்தை அங்கே அனுப்ப வேண்டியிருந்தது. எனக்கோ, அக்கடிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தபால் மூலம் அனுப்புவதாயிருந்தால் தாமதம் ஆகிவிடவும் கூடும். சீக்கிரத்தில் கடிதம் போய்ச்சேர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதைக் கண்டவர்களிடம் கொடுத்தனுப்பி விடவும் எனக்கு மனமில்லை. புனிதமான ஒருவர் அதை எடுத்துச் சென்று வைசிராய் மாளிகையில் அவரிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

கேம்பிரிட்ஜ் மிஷனைச் சேர்ந்த புனித பாதிரியாரான பூஜ்ய அயர்லாந்திடம் கொடுத்தனுப்பலாம் என்று தீனபந்து ஆண்டுரூஸு ம், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் யோசனை கூறினர். கடிதத்தைப் படித்துப் பார்த்து, அது நல்லது என்று தமக்குத் தோன்றினால் அதைக் கொண்டு போவதாக அவர் ஒப்புக்கொண்டார். அக்கடிதம் ரகசியமானதல்லவாகையால் அதை அவர் படித்துப் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. கடிதத்தை அவர் படித்தார்; அது அவருக்குப் பிடித்திருந்தது. அதைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணம் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், இன்டர் வகுப்பில் பிரயாணம் செய்வதுதான் தமக்குப் பழக்கம் என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். இரவுப் பிரயாணமாக இருந்தும் இன்டர் வகுப்பிலேயே சென்றார். அவருடைய எளிமையும், நேரிய, ஒளிவு மறைவு இல்லாத போக்கும் என்னைக் கவர்ந்துவிட்டன. இவ்விதம் தூய்மையான உள்ளம் படைத்த ஒருவர் மூலம் அனுப்பப் பெற்ற கடிதம், நான் எண்ணியவாறே விரும்பிய பலனைத் தந்தது. அது என் மனத்திற்கு ஆறுதல் அளித்ததோடு நான் செல்ல வேண்டிய வழியையும் தெளிவுபடுத்தியது.

செய்வதாக நான் ஏற்றுக்கொண்ட கடமையின் மற்றொரு பகுதி, படைக்கு ஆள் திரட்டுவது. இந்த வேலையைக் கேடாவைத் தவிர நான் வேறு எங்கே ஆரம்பிப்பது? முதலில் சைனியத்தில் சேருபவராக இருக்கும்படி என் சொந்த சக ஊழியர்களைத் தவிர வேறு யாரை நான் அழைக்க முடியும்? ஆகவே, நதியாத்துக்கு நான் போனதுமே வல்லபாயையும் மற்ற நண்பர்களையும் அழைத்துப் பேசினேன். அவர்களில் சிலர், என் யோசனையை எளிதில் ஏற்றுக்கொண்டு விடவில்லை. என் யோசனை பிடித்திருந்தவர்களுக்கோ, அது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. எந்த வகுப்பினருக்கு நான் கோரிக்கை வெளியிட விரும்பினேனோ அந்த வகுப்பாருக்கு அரசாங்கத்தினிடம் அன்பு இல்லை. அரசாங்க அதிகாரிகளிடம் அவர்கள் அடைந்த கசப்பான அனுபவம் அவர்கள் மனத்தில் இன்றும் அப்படியே இருந்து வந்தது. என்றாலும், வேலையைத் தொடங்குவதற்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். என் வேலையை நான் ஆரம்பித்ததுமே என் கண்கள் திறந்துவிட்டன. நான் கொண்டிருந்த நம்பிக்கை, பயங்கரமான அதிர்ச்சியை அடைந்தது. நிலவரிப் போராட்டத்தின் போது மக்கள் தங்கள் வண்டிகளை வாடகை வாங்கிக் கொள்ளாமலேயே தாராளமாகக் கொடுக்க முன்வந்தார்கள். ஒரு தொண்டர் வேண்டுமென்றபோது, இரண்டு பேர் தொண்டர்களாக வந்தார்கள்.

அப்படியிருக்க இப்பொழுதோ வாடகைக்கும் ஒரு வண்டி கிடைக்கவில்லையென்றால் தொண்டர்கள் விஷயத்தைச் சொல்லத் தேவையில்லை. ஆயினும், நாங்கள் அதைரியம் அடைந்து விடவில்லை. வண்டிகளில் போவது என்பதையே விட்டு விட்டு நடந்தே பிரயாணம் செய்வது என்று தீர்மானித்தோம். இவ்விதம் நாங்கள் தினம் இருபது மைல் நடக்க வேண்டியவர்களானோம். வண்டியே கிடைப்பதில்லையென்றால், அம் மக்கள் எங்களுக்குச் சாப்பாடு போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. சாப்பாடு போடுமாறு கேட்பதும் சரியல்ல. ஆகவே, ஒவ்வொரு தொண்டரும் தமக்கு வேண்டிய சாப்பாட்டைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். அது கோடைக்காலம். ஆகையால் படுக்கையோ, போர்வையோ தேவைப்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் கூட்டங்களை நடத்தினோம். அவற்றிற்கு மக்கள் வந்தார்கள். ஆனால், ஒருவர் இருவர்கூட ராணுவத்தில் சேர முன்வரவில்லை. நீங்கள் அகிம்சையை அனுசரிக்கிறவர்கள். அப்படியிருக்க ஆயுதங்களை ஏந்துமாறு எங்களை நீங்கள் எப்படிக் கேட்கலாம்? எங்கள் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அரசாங்கம் இந்தியாவுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? இவைபோன்ற கேள்விகளையெல்லாம் எங்களைக் கேட்டார்கள் என்றாலும், நிதானமாக நாங்கள் வேலை செய்துகொண்டு போனது பயன் தர ஆரம்பித்தது. பலர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். முதல் கோஷ்டி அனுப்பப்பட்டதுமே தொடர்ந்து ஆட்களை அனுப்பிக் கொண்டிருப்பது சாத்தியமாகும் என்று நம்பினோம். படைக்குச் சேரும் ஆட்களை எங்கே தங்கச் செய்வது என்பதைப் பற்றிக் கமிஷனருடன் ஆலோசிக்கவும் தொடங்கினேன்.

டில்லியில் நடந்த மகாநாட்டை அனுசரித்து, ஒவ்வொரு டிவிஷனிலும் கமிஷனர்கள் மகாநாடுகளை நடத்தினார்கள். அத்தகைய மகாநாடு ஒன்று குஜராத்தில் நடந்தது. என் சக ஊழியர்களையும் என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் போயிருந்தோம். ஆனால், டில்லி மகாநாட்டில் எனக்கு இருந்த இடம்கூட இதில் எனக்கு இல்லை என்பதை உணர்ந்தேன். அடிமை உணர்ச்சியே நிலவியிருந்த அச்சூழ்நிலை எனக்குச் சங்கடமாக இருந்தது. அங்கே கொஞ்சம் விரிவாகவே பேசினேன். நான் சொன்னதில் அதிகாரிகளுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடிய இரண்டொரு விஷயங்கள் நிச்சயமாக இருந்தனவேயன்றி அவர்களுக்குத் திருப்தியளிக்கும்படி நான் எதுவும் சொல்ல முடியவில்லை. படையில் சேரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு நான் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு வந்தேன். அவற்றில் நான் உபயோகித்த வாதங்களில் ஒன்று கமிஷனருக்குப் பிடிக்கவில்லை. அந்த வாதம் இதுதான்: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறான பல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே ஆயுதப் பயிற்சி இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது. அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுவதற்கு இருக்கும் தடையும் ரத்தாகிவிடும். கமிஷனர் இதைப்பற்றிக் குறிப்பிட்டு, எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருந்தும் நான் மகாநாட்டிற்கு வந்ததைப் பாராட்டினார். ஆகவே, என்னால் முடிந்த வரையில் மரியாதையுடன் என் கட்சியிலிருக்கும் நியாயத்தை நான் எடுத்துக் கூறவேண்டியதாயிற்று.

வைசிராய்க்கு நான் எழுதிய மேலே குறிப்பிட்டிருக்கும் கடிதம் இதுவே:

26-ஆம் தேதி (ஏப்ரல்) தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கண்ட காரணங்களைப்பற்றிக் கவனமாகச் சிந்தித்ததன் பேரில் நான் மகாநாட்டிற்கு வரமுடியாமல் இருக்கிறது என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதன் பிறகு நீங்கள் எனக்கு அளித்த பேட்டிக்குப் பின்னர் மகாநாட்டில் கலந்து கொள்ளுவது என்று என்னையே திடப்படுத்திக்கொண்டேன். இதற்கு வேறு காரணமில்லாது போயினும், தங்களிடம் நான் கொண்டிருந்த பெரும் மதிப்பே அதற்குக் காரணம். மகாநாட்டிற்கு வருவதில்லை என்று நான் எண்ணியதற்கு ஒரு காரணம் முக்கியமான காரணம் பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு அதிகச் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்று நான் கருதும் லோகமான்ய திலகர், ஸ்ரீ மதி பெஸன்ட், அலி சகோதரர்கள் ஆகியவர்களை அம்மகாநாட்டிற்கு அழைக்காதது தான். மகாநாட்டிற்கு வருமாறு அவர்களை அழைக்காது போனது பெரிய தவறு என்றே நான் இன்னும் கருதுகிறேன். அதைத் தொடர்ந்து மாகாண மகாநாடுகள் நடக்கப் போகின்றன என்று அறிகிறேன். அந்த மகாநாடுகளுக்காவது வந்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறி உதவுமாறு அத்தலைவர்கள் அழைக்கப்படுவார்களானால், நடந்துவிட்ட தவறை நிவர்த்தித்துக் கொள்ள வழி ஏற்படும் என்ற யோசனையைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இத்தலைவர்கள், ஏராளமான பொதுமக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள்.

அரசாங்கத்துடன் மாறுபட்ட கருத்துள்ளவர்களாக அவர்கள் இருந்த போதிலும், எந்த அரசாங்கமும் தலைவர்களை அலட்சியம் செய்துவிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மகாநாட்டின் கமிட்டிகளில் எல்லாக் கட்சிகளும் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக எடுத்துக்கூற அனுமதிக்கப்பட்டது என்பது அதே சமயத்தில் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், நான் இருந்த கமிட்டியிலோ, மகாநாட்டிலோ, வேண்டுமென்றேதான் நான் என் அபிப்பிராயத்தைக் கூறாமல் இருந்துவிட்டேன். மகா நாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு என் ஆதரவை அளிப்பதோடு இருப்பது மாத்திரமே, மகாநாட்டின் நோக்கத்திற்குச் சிறந்த சேவை செய்ததாகும் என்று கருதினேன். அதையே மனப்பூர்வமாகச் செய்தேன். என்னுடைய உதவித் திட்டம் ஒன்றை இத்துடன் தனிக் கடிதத்தில் அனுப்பியிருக்கிறேன். அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமே மகாநாட்டில் நான் கூறியதைக் காரியத்தில் சீக்கரத்தில் நிறைவேற்றலாம் என நம்புகிறேன். மற்றக் குடியேற்ற நாடுகளைப் போன்று நாங்களும், சாம்ராஜ்யத்துடன் கூடிய சீக்கிரத்தில் பங்காளிகளாக ஆகி விட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆகையால், இந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், இப்பொழுது நாங்கள் அளிக்கத் தீர்மானித்திருப்பது போன்று, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூரணமான ஆதரவை அளிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். இவ்வாறு உதவி செய்ய முன்வந்திருப்பதற்குக் காரணம், இன்னும் அதிக விரைவில் நமது லட்சியத்தையடைய முடியும் என்று எதிர்பார்ப்பதுதான் என்பதே உண்மை. அந்த வகையில் கடமையைச் செய்வதானாலும், அப்படிச் செய்வோர், அதே சமயத்தில் உரிமையையும் தானே பெறுகின்றனர். ஆகையால், சீக்கிரத்தில் வரப்போவதாக உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசியல் சீர்திருத்தங்கள், முக்கிய அம்சங்களில் காங்கிரஸ்-லீக் திட்டத்தை அனுசரித்தவையாக இருக்கும் என்று எண்ண மக்களுக்கு உரிமை உண்டு. இந்த நம்பிக்கையே அரசாங்கத்திற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை மகாநாட்டில் அளிக்கும்படி பலரைச் செய்தது என்பதில் சந்தேகமில்லை. முன் வைத்த காலைப் பின் வாங்கிக் கொள்ளும்படி என் தேச மக்களைச் செய்ய என்னால் முடியுமானால், காங்கிரஸ் தீர்மானங்களையெல்லாம் அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டு, யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வரையில் சுயாட்சி, பொறுப்பாட்சி என்ற பேச்சைப் பேசக்கூடாது என்று சொல்லி, அவர்கள் அவ்விதமே செய்யும்படியும் செய்வேன்.

சாம்ராஜ்யத்திற்கு நெருக்கடியான சமயம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், உடல் வலுவுள்ள தம் புதல்வர்கள் எல்லோரையும் இந்தியா, சாம்ராஜ்யத்திற்குத் தியாகம் செய்துவிட முன்வரும்படியும் செய்வேன். இச்செய்கை ஒன்றினாலேயே, சாம்ராஜ்யத்தில் இந்தியா அதிகச் சலுகைகளுடன் கூடிய பங்காளியாகிவிடுவதோடு நிறபேதங்களெல்லாம் என்றோ இருந்தவை என்றாகிவிடும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அனுபவத்தில் படித்த இந்தியர் எல்லோருமே இதைவிடக் குறைந்த பலனுள்ள முறையையே தீர்மானித்திருக்கின்றனர். பொதுமக்களிடையே படித்த இந்தியருக்கு எந்தவிதமான செல்வாக்குமே இல்லை என்று சொல்லிவிடுவது இனியும் சாத்தியமானதன்று. நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியது முதல் விவசாயிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு வருகிறேன். சுயாட்சி ஆர்வம் அவர்களிடையேயும் அதிகமாகப் பரவியிருக்கிறது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். சென்ற காங்கிரஸ் மகாநாட்டிற்குப் போயிருந்தேன். பார்லிமெண்டு நிறைவேற்றும் சட்டத்தின் மூலம் திட்டமாகத் தேதியைக் குறிப்பிட்டு, அந்தக் காலத்திற்குள் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு முழுப் பொறுப்பாட்சியும் அளித்து விட வேண்டும் என்று காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறியதில் என் பங்கும் உண்டு. அதைச் செய்வது தைரியமான காரியமே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், சாத்தியமான அளவு குறைந்த காலத்திற்குள் சுயாட்சியை அடைய முடியும் என்ற திட்டமான எண்ணம் ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் இந்திய மக்களைத் திருப்தி செய்யாது என்பதை நிச்சயமாக அறிகிறேன். இந்த லட்சியத்தை அடைவதற்குச் செய்யும் எந்தத் தியாகமும் பெரியதாகாது என்று எண்ணுகிறவர்கள் இந்தியாவில் அநேகர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

அதே சமயத்தில் எந்தச் சாம்ராஜ்யத்தில் முடிவான அந்தஸ்தை அடைய நினைக்கிறார்களோ, விரும்புகிறார்களோ அந்தச் சாம்ராஜ்யத்திற்காகத் தங்களையே தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் விழிப்புடன் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆகவே, சாம்ராஜ்யத்தை மிரட்டி வரும் அபாயத்திலிருந்து அதைக் காப்பாற்றுவதற்காக மௌனமாகவும் மனப்பூர்வ மாகவும் பாடுபடுவதனால் லட்சியத்தை நோக்கிச் செல்லும் நமது பிரயாணத்தைத் துரிதப்படுத்திவிடலாம் என்று ஆகிறது. சாதாரணமானதான இந்த உண்மையை அறியாது போவது தேசியத் தற்கொலையே ஆகும். சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கு நாம் பணிபுரிந்தால், அப்பணியிலேயே நாம் சுய ஆட்சியை அடைந்தவர்களாகிறோம் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். ஆகையால், சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு நாம் அழைக்கக் கூடிய ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகிறது. ஆனால், பொருளுதவியைப் பொறுத்த வரையில் அவ்வாறு நான் சொல்ல முடியாது என்றே அஞ்சுகிறேன். இந்தியா, தன்னுடைய சக்திக்கு அதிகமாகவே சாம்ராஜ்யத்தின் பொக்கிஷத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று, விவசாயிகளிடம் நான் கொண்டிருக்கும் நெருங்கிய தொடர்பினால் நிச்சயமாகக் கருதுகிறேன். நான் இவ்விதம் கூறுவது, என் நாட்டு மக்களின் பெரும்பான்மையோரின் அபிப்பிராயத்தைக் கூறுவதாகும் என்பதை அறிவேன்.

டில்லியில் நடந்த யுத்த மகாநாடு, பொதுவானதோர் லட்சியத்திற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்து கொள்ளுவதில் ஒரு முக்கியமான காரியம் என்று நான் கருதுகிறேன். எங்களில் மற்றும் பலரும் அவ்வாறே கருதுகிறார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், எங்கள் நிலைமையோ மிகவும் விசித்திரமானது. இன்று நாங்கள் சாம்ராஜ்யத்தில் சம பங்காளிகளாக இல்லை. வருங்காலத்தில் அவ்வாறு ஆகலாம் என்ற நம்பிக்கையின் பேரில் எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம். அந்த நம்பிக்கை என்ன என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் உங்களுக்கு நான் கூறாது போனால், உங்களுக்கும் என் நாட்டிற்கும் உண்மையாக நடந்துகொண்டவனாக மாட்டேன். அது நிறைவேற்றப் பட வேண்டும் என்பதற்காக நான் பேரம் பேசவில்லை. ஆனால், நம்பிக்கையில் ஏமாற்றம் என்பது, நம்பிக்கையையே ஒழிப்பதாகும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் இன்னுமொரு விஷயத்தையும் நான் சொல்லாமல் இருக்கக் கூடாது. நமது சொந்த வித்தியாசங்களையொல்லாம் மறந்து விடுமாறு எங்களை நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். அதிகாரிகளின் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதும் உங்கள் வேண்டுகோளுக்குப் பொருள் என்றால், அதற்கு இணங்க நான் அசக்தனாவேன். கட்டுப்பாடான கொடுமையை நான் கடைசிவரை எதிர்த்தே தீருவேன். ஒருவரைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்றும், இதற்கு முன்னால் செய்து வந்ததைப் போல் அல்லாமல் பொதுஜன அபிப்பிராயத்தை மதித்து அவர்களைக் கலந்து ஆலோசித்து நடக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அந்த வேண்டுகோள் கூற வேண்டும்.

சம்பாரணில் நெடுங்காலமாக இருந்துவந்த கொடுமையை எதிர்த்ததன் மூலம், பிரிட்டிஷ் நீதியின் முடிவான சிறப்பை நான் காட்டியிருக்கிறேன். கேடாவில் அரசாங்கத்தை மக்கள். சபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ உண்மைக்காகத் துன்பங்களை அனுபவிக்கவும் தாங்கள் தயாராகும்போது சக்தி தாங்களே அன்றி அரசாங்கம் அல்ல என்பதை அதே மக்கள் இப்பொழுது உணருகிறார்கள். ஆகவே, அம்மக்களிடமிருந்து மனக்கசப்பு மறைந்து வருகிறது. அநீதிகளை உணரும்போது ஒழுங்கான, மரியாதையான சட்ட மறுப்பை மக்கள் ஆட்சி சகிப்பதால் அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகவே இருக்க வேண்டும் என்று அம்மக்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கின்றனர். இவ்விதம் சம்பாரண், கேடாக் காரியங்கள், யுத்தத்திற்கு நான் நேரடியாக, திட்டமாகச்செய்த விஷேச உதவிகளாகும். அத்துறையில் என்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்பது, என் உயிரையே நிறுத்தி வைத்துவிடுமாறு நீங்கள் கேட்பதாகும், மிகுந்த பலத்திற்குப் பதிலாக ஆன்ம சக்தியை, அதாவது அன்பின் சக்தியை எல்லோரும் அனுசரிக்கும்படி நான் செய்ய முடியுமானால், உலகம் முழுவதும் அதனால் முடிந்ததை யெல்லாம் செய்தாலும், அதையும் எதிர்த்து நிற்கக்கூடிய இந்தியாவை உங்களுக்கு நான் காட்ட முடியும்.

ஆகையால், துன்பத்தைச் சகிப்பது என்னும் இந்த நிரந்தரமான தருமத்தை என் வாழ்க்கையில் வெளிக்காட்டும் வகையில் என்னையே நான் கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்திக் கொள்ளுவேன். அதில் சிரத்தையுள்ளோரெல்லாம் இத்தருமத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உபதேசிப்பேன். நான் வேறு ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவேனாயின், அதன் நோக்கம் இந்தத் தருமத்தின் இணையில்லாத உயர்வைக் காட்டுவதற்கே ஆகும். கடைசியாக முஸ்லிம் ராஜ்யங்கள் சமபந்தமாகத் திட்டமான வாக்குறுதியை அளிக்குமாறு பிரிட்டிஷ் மந்திரிகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு முகம்மதியரும் இவைகளில் ஆழ்ந்த சிரத்தை கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹிந்து என்ற வகையில் நான் அவர்களுடைய விஷயத்தில் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அவர்களுடைய துயரங்கள் எங்கள் துயரங்களாகவே இருக்க வேண்டும். அந்த ராஜ்யங்களின் உரிமைகளை முற்றும் மதிப்பதிலும், முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலங்கள் சம்பந்தமாக அவர்களுடைய உணர்ச்சிகளை மதிப்பதிலும், சுயாட்சி சம்பந்தமான இந்தியாவின் கோரிக்கையை நியாயமாகவும் தக்க காலத்திலும் நிறைவேற்றி வைப்பதிலுமே சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு இருக்கிறது. ஆங்கில நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன். ஆங்கிலேயரிடம் ஒவ்வோர் இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று விரும்புகிறேன். அதனாலேயே இதை எழுதுகிறேன்.