Author Topic: சிலப்பதிகாரம்  (Read 39526 times)

Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #15 on: February 23, 2012, 01:47:10 PM »
10. நாடுகாண் காதை

 அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன்னர் ஊழ்வினை உண்ணின்று செலுத்துதலாலே மாடமதுரை நகர்க்குச் செல்லும்பொருட்டுக் காவிரியின் வளங்கெழுமிய வடகரை வழியாகக் குடதிசை நோக்கிப் போகும் பொழுது காவிரி நாட்டின் கவினும் வளமும் கண்டு கண்டுவந்து தலமூதாட்டியாகிய கவுந்தியடிகளாரையும் வழித்துணையாய்ப் பெற்றுச் செல்வதனைக் கூறும் பகுதி என்றவாறு.

வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும்   5

தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,  10

பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து  15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்  20

பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,  25

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்   30

இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,  35

காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க  40

மதுரை மூதூர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,  45

உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்  50

மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்  55

மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற  60

காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ:  65

வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்  70

கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.  75

கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்  80

கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,  85

குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்  90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை  95

நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்  100

பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்  105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்  110

ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்  115

கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய  120

கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி  125

ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்  130

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,  135

அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு  140

ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து  145

மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்,  150

பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:  155

ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட  160

இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்  165

வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:  170

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்  175

அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்  180

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்  185

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது  190

போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,  195

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்  200

பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது  205

இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்  210

பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி  215

மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்  220

காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்   225

பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,  230

எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு  235

நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,   240
 
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின்  245

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.

(கட்டுரை)

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்  10

பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்  15

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.   20

(வெண்பா)

காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

உரை

1 - 10 : வான்கண் ......... கழிந்து

(இதன்பொருள்:) வான்கண் விழியா வைகறை யாமத்து - உலகிற்குச் சிறந்த கண்ணாகத் திகழும் கதிரவன் தோன்றி விளங்குதலில்லாத வைகறை என்னும் யாமத்திலே; மீன் திகழ் வெள்மதி விசும்பின் நீங்க - விண் மீன்களோடு அழகுபெற்று இயங்காநின்ற வெள்ளிய திங்களானது வானத்தினின்று மேற்றிசையிற் சென்று மறைந்து விட்டமையாலே; கார் இருள் நின்ற கடைநாள் கங்குல் - அந்த நாளின் இறுதிப் பகுதியிலே கரிய இருள் நிற்றற்குக் காரணமான இரவின்கண்; வினை ஊழ் கடைஇ உள்ளம் துரப்ப - இவன் முற்பிறப்பிலே செய்த தீவினையானது முறையானே வந்து உள்ளத்தூடிருந்து செலுத்தி ஓட்டுதலானே; ஏழகத்தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - ஆட்டுக்கிடாயும் எகினம் என்னும் கவரிமானும் தூய மயிரையுடைய அன்னமுமாகிய இவை தம்முள் இனமல்லவாயினும் பழக்கங் காரணமான ஓரினம் போன்று தம்முட் கேண்மை கொண்டு திரிதற்கிடனான; தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள் நெடுவாயில் நெடுங்கடை கழிந்து - செய்யும்பொழுதே தாளோடுகூடச் செய்யப்பட்ட அழகு பொருந்திய சிறப்பினையுடைய மிகவும் பெரிய கதவினையுடைய நெடிய இடைகழியைக் கடந்து சென்று; ஆங்கு அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - அவ்விடத்தே அழகு மிகுகின்ற பாப்பணையின்மீதே கிடந்து அறிதுயில் கொண்டுள்ள நீலமணி நிறத்தையுடைய திருமாலினது கோயிலை வலஞ் செய்து அவ்விடத்தினின்றும் போய்; என்க.

(விளக்கம்) 1 - வான்கண் - சிறந்த கண்; அஃதாவது உயிர்களின் கண்ணுக்குக் கண்ணாகும் சிறப்புடைய கண் என்றவாறு. எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண்ணாவான் இவனேயன்றோ? எனவரும் வில்லிபுத்தூரார் வாக்கும் நோக்குக. (பாரதம் - அருச்சுனன் தவஞ்செய்) விழித்தல் ஈண்டுத் தோன்றுதல். இது முன்னைக் காதையில் கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் என்றதனையே காதையியைபு தோன்ற வழிமொழிவார் செய்யுளின்பந் தோன்ற மற்றொரு வாய்பாட்டாலோதிய படியாம். 2- மீன் -அசுவினி முதலிய நாண் மீன்கள் - மதி நீங்குதலாலே இருள் நின்ற கங்குல் என்றவாறு. கடைநாள் - நாள்கடை எனற்பாலன முன்பின் மாறி நின்றன. கடைக்கண் என்பது போல. அற்றை நாளின் இறுதியாகிய கங்குற் பொழுது என்றவாறு. 4. வினை ஊழ் கடைஇ என மாறுக. ஊழ்-முறை. கடைஇ-செலுத்தி - கடவி. துரப்ப - ஓட்ட. 5. ஏழகத்தகர் - ஆட்டுக் கிடாய். தகர் - ஆட்டின் ஆண்பாற் பெயர், மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே என்பது தொல்காப்பியம் (மரபியல் -48) எகினம் - கவரிமான். ஏழகம் பெண்யாட்டின் பாலும் எகினம். நாய் முதலியவற்றிலும் செல்லாமைக்கு ஏழகத்தகர் என்றும் எகினக் கவரி என்றும் தெரித் தோதியவாறாம். 6 - துணையெனத் திரியும் என்றமையால் துணையல்லாமை போதரும். தாள் - கதவு நிற்றற் கியன்றவுறுப்பு. இதனைக் குருத்து என்றும் வழங்குப. வலிதாதற் பொருட்டுக் குயிற்றுங்கால் தாளோடு குயிற்றப்பட்டது என்றவாறாம். வாயில்: ஆகுபெயர் - கதவு. தகை - அழகு. பெருமையுமாம். வேற்றூர் செல்பவர் கோயில் முதலியன எதிர்ப்படும் பொழுது அவற்றை வலஞ் செய்து போதல் மரபு.

6. அறிதுயில் - யோக நித்திரை. தூங்காமற் தூங்குதல் என்பது மது. 10 - மணிவண்ணன் - திருமால்.

இனி வான்கண்...... கங்குல் என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம்கணித நூலுக்குப் பொருந்தாது என்ப. ஆயினும், பின்னும் அவற்றை ஆராய்வார் பொருட்டு அவர்கூறியாங்கே ஈண்டுத் தருவாம் அது வருமாறு:

என்பது அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் - சோதி. திதி மூன்றாம் பக்கம். வாரம் - ஞாயிறு. இத்திங்களிருபத் தெட்டில்சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற்கொடியேற்றி நாலேழ் நாளினும் என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி யிருபத்தெட்டினிற் பூருவபக்கத்தின்பதின் மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதில் செவ்வாய்க் கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே என்றவாறு எனவரும்.

இந்திர விகாரம் ஏழனையுங் கடத்தல்

11-14 : பணை ...........போகி

(இதன்பொருள்:) ஓங்கிய ஐந்துபணை பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - உயர்ந்த ஐந்து கிளைகளையும் பசிய இலையினையும் உடைய அரைமரத்தினது அழகிய நீழலின்கண்ணிருந்து அறங்களை யுணர்ந்தவனாகிய புத்தபெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடகநூற் பொருள்களை; அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் - சாரணர் கேட்போர் உளத்தே பதியுமாறு உலகமாக்கள் பலருக்கும் செவியறிவுறுத்து மிடங்களான; இந்திர விகாரம் ஏழு உடன் போகி - புத்தாலயத்தின் மருங்கே இந்திரனாலியற்றப்பட்ட அரங்குகள் ஏழனையும் ஒருங்கே வலத்தே வைத்து அவ்விடத்தினின்றும் சென்றென்க.

(விளக்கம்) 11 - பணை - கிளை. புத்த பெருமான் பலகாலம் தவஞ் செய்தும் பெறமாட்டாத மெய்யுணர்வை ஓர் அரைமர நீழலிலிருந்த பொழுது பெற்றனர் என்ப. அவ்வரை மரத்திற்கு ஐந்து கிளைகளிருந்தன என்பது வரலாறு. ஈண்டு அடிகளார் கூறுவதும் அவ்வரை மரத்தையேயாம். பணையைந் தோங்கிய பாசிலைப் போதி என்னும் துணையும் அநவோன் என்பதற்கு அடைமொழியாம். இவ்வடை மொழிகளால் அறவோன் என்பது - புத்த பெருமானை என்றுணர்ந்தாம். இவ்வரை மரத்தைப் பவுத்தர்கள் மஹாபோதி என்று சிறப்பித்துக் கூறி அத்திசை நோக்கி வணங்கா நிற்பர். புத்த பெருமானை அறவோன் என்றும் அவன் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூலைத் திருமொழி என்றும் உளமாரப் பாராட்டிக் கூறுவது அடிகளாருடைய சான்றாண்மைக்கும் நடுவுநிலைக்கும் சிறந்த சான்றுகளாம்.

இனி, 13 - புத்தர் அறங்களை உலகெங்கணும் சென்று மக்கட்குச் செவியறிவுறுத்தும் தொண்டர்களை அந்தரசாரிகள் என்பது மரபு. இவர்கள் பவுத்தரில் (இருத்தி) சித்தி பெற்றவர் என்பர். இவர்தாம் இருத்தியின் ஆற்றலால் விசும்பின்கண் ஏறி வேண்டுமிடங்கட்குச் செல்லுவர்; ஆங்காங்கு நிலத்திலிறங்கி அறங் கூறுவர் எனவும் இன்னோரன்ன வியத்தகு செயல்கள் பிறவுமுடையர் எனவும் கூறுவர். இதனை, சாதுசக்கரன்மீவிசும்பு திரிவோன் ....... தரும சக்கர முருட்டினன் வருவோன் எனவும் (மணிமே - 10 - 24 -6) நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் தோன்ற எனவும் (மணி -24: 46-7) வருவனவற்றா லுணர்க. அறைந்தனர்: முற்றெச்சம். அறைந்து சாற்றும் என்க. அறைந்து சாற்றுதல் - கேட்போர் உளத்திற் பதியுமாறு கூறுதல். பிடக நூலோதி அறிவுறுத்தும் எனினுமாம். விகாரம் - அறங்கூறும் இடம். விகாரம் - கையாற் கருவியாற் பண்ணாது மனத்தால் நிருமித்தல் என்பாரு முளர். புகார் நகரத்தே புத்தசைத்திய மருங்கே ஏழு விகாரங்கள் இருந்தமையை,

பைந்தொடி தந்தை யுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழுமேத் துதலின்

எனவரும் மணிமேகலையானு முணர்க. (26-54-5)

ஐவகை நின்ற அருகத் தானம்

15 - 25 : புலவூண் ............... வலங்கொண்டு

(இதன்பொருள்:) புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய - புலால் உணவைத் துவரக் கடிந்து பொய் கூறாமையாகிய நோன்போடு பொருந்தி அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் முதலிய இழுக்குகளை அறவொழித்துப் பொருள்களினியல்பை உள்ளவாறு ஆராய்ந்தறிந்து; பொறிகள் புலன்களின்பாற் செல்லாது அடங்குதற்குக் காரணமான கோட்பாட்டை யுடையராகி மெய்ப்பொருளினது வகையை யுணர்ந்த சீரியோர் குழுமியுறைதற் கிடனான; அருகத் தானத்து - அருகன் கோயின் மருங்கில்; ஐவகை நின்ற ஐந்து சந்தியும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கி - ஐந்து வகைப்பட்ட பரமேட்டிகளும் உறைதலாலே; ஐந்தாகிய சந்திகளும் ஒன்றுகூடி வந்து பொருந்தியிருக்கின்ற; வான் பெரு மன்றத்து - மிகவும் பெரியதாகிய மன்றத்திடத்தே; பொலம்பூம் பிண்டி நலம் கிளர் கொழுநிழல் - அருகன் ஆணையாலே பூக்கும் பொற்பூவையுடைய அசோகினது அழகு மிகுகின்ற வளமான நீழலின்கண்ணே; நீர் அணி விழவினும் நெடுந்தேர் விழவினும் - அருகக் கடவுளை நீரினால் திருமுழுக்காட்டி அழகு செய்கின்ற விழாக்காலத்தும் நெடிய தேரோடுதற் கியன்ற திருவிழாக் காலத்தும்; சாரணர் வருந்தகுதி உண்டு ஆம் என - அறமறிவுறுத்தும் சாரணர்கள் வரத்தகும் என்று கருதி; உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட - இல்லறத்தே நின்றே தமக்குக் கூறிய நோன்புகளைக் கடைப்பிடித் தொழுகுகின்ற சாவகர் எல்லாம் ஒருங்குகூடி அவர் வந்தக்கால் அமர்ந்திருந்து அறமுரைத்தற் பொருட்டு அமைத்திட்ட; ஒளி இலகு சிலாதலம் தொழுது வலங் கொண்டு - ஒளிமிக்குத் திகழா நின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையினை வலஞ்செய்து தொழுது சென்று என்க.

(விளக்கம்) 15 - சமண் சமயத்தார்க்குத் தலையாய அறம் கொல்லாமையே ஆகும் ஆதலின் கொலைக்குரிய காரணங்களிற்றலையாய புலவூண் துறத்தலை விதந்து முற்பட வோதினர். பவுத்தர்க்கும் கொல்லாமையே தலைசிறந்த அறமாயினும் அவர் விலையூன் உண்ணும் வழக்கமுடையவர் ஆதலின் அவர் திறத்தே கூறுதல் ஒழிந்து அடிகளார் ஈண்டு அவ்வறத்தினை விதந்தோதுவாராயினர் என்க.

16 - அவலம் - துன்பம்; துன்பத்திற்குக் காரணமான அழுக்காறு முதலியவற்றைக் குறித்து நின்றது. ஆகு பெயர். 17 - மெய்வகை யுணர்தலாவது - பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற உண்மையை யுணர்தல். இதனைக் காட்சி என்ப. இதனை,

மானொத்த நோக்கி மருந்தென்றவை மூன்றினுள்ளும்
ஞானத்தின் நன்மை கேட்குவை யாயினக்கால்
ஊனத்தை யின்றி யுயிராதிய உள்பொருள்கள்
தானற் குணர்தல் இதுவாம் அதன்தத்துவமே

எனவரும் நீலகேசியால் (117) அறிக. இவை காண்டல் முதலிய பல்வேறு அளவைகளால் அறியப்படுவன ஆதலின் மெய்யுணர்ந்த என்னாது மெய்வகை உணர்ந்த விழுமியோர் என்றார்.

விழுமியோர் - சீரியோர். அமண் சமயத்து ஐவகைச் சான்றோரும் தனித்தனி வாழும் ஐந்து தெருக்களும் வந்து கூடுமிடமாகலின் சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கிய மன்றம் என்றார். ஐவகைச் சான்றோர் ஆவார், அருகர் சித்தர் ஆசாரியர் உபாத்தியாயர் சாதுக்கள் என்போர் என்க. வேதத்தின் பொருள் உணரப்படும் மன்றமாகலின் வான்பெருமன்றம் என்றார். பொலம்பூ - பொற்பூ; பொன் போன்றபூ அன்று. பொன்னேயாகிய பூ என்க. 22 - நீரணி விழவு - திருமுழுக்கு விழவு. அயனம்சங்கிரமம் புதுப்புனலாட்டு முதலியனவுமாம். சாரணர் - அறங்கூறிச் சமயம் பரப்பும் தொண்டு பூண்ட சான்றோர். உலக நோன்பிகள் - உலக வழக்கொடு பொருந்தி இல்லற மேற்கொண்டு சமயநெறிபற்றிய நோன்புகளையும் மேற்கொள்பவர். இவரைச் சாவக நோன்பிகள் என்பர். இலகு ஒளிச் சிலாதலம் என்றமையால் சந்திர காந்தக் கல்லாலியன்ற மேடை என்பது பெற்றாம்.

இடைகழி, இலவந்திகை காவிரி வாயில் கடைமுகம் முதலியவற்றைக் கடந்து போதல்

26 - 33 : மலைதலைக்கொண்ட ........... கடைமுகங் கழிந்து

(இதன்பொருள்:) மலைதலைக் கொண்ட பேர் யாறுபோலும் உலக இடை கழி ஒருங்கு உடன் நீங்கி - மலையிடத்தே தொடங்குமிடமாகிய தலையையுடையதொரு பேரியாறு போலும் உலகத்து மாந்தர் எல்லாரும் போக்குவரவு செய்தற்கமைந்த ஊர்ப்பொது வாயிலை அக்காலத்தே போவாரொடு கலந்து போய் அதனையும் விட்டு நீங்கி; கலையிலாளன் மன்னவற்கு காமர் வேனிலொடு மலய மாருதம் இறுக்கும் - உருவமிலியாகிய காமவேள் என்னும் குறுநிலமன்னன் முடிமன்னனாகிய சோழ மன்னனுக்கு யாண்டு தோறும் செலுத்தக்கடவ இறைப் பொருளாகிய வேனிற் பருவத்தையும் தனது பொதியிலிடத்துப் பிறக்கின்ற இளந்தென்றலையும் கொணர்ந்து செலுத்துமிடமாகிய; பல்மலர் அடுக்கிய நல்மரப்பந்தர் இலவந்திகையின் எழில்புறம் போகி - பல்வேறு மலர்களையும் நாள்தோறும் அடுக்கித் தளம் படுக்கப்பட்ட அழகிய மரநிழலையுடைய இலவந்திகை எனப்படும் அரசனும் உரிமையும் ஆடுதற்கியன்ற இளவேனில் மலர்ப்பூம் பொழிலினது மதிற்புறத்திலே போய்; காவிரித் தண்பதத் தாழ் பொழில் உடுத்த பெருவழி வாயில் கடைமுகம் கழிந்து - காவிரிப் பேரியாற்றின்கண் மாந்தர் நீராட்டுவிழவிற்குச் செல்லுதற்கியன்ற இருமருங்கும் தழைத்துத் தாழ்ந்துள்ள பூ மரச்சோலை சூழ்ந்த பெரிய வழிமேற் சென்று நீராட்டு வாயிலாகிய திருமுகத்துறை யிடத்தையும் கடந்து போய்; என்க.

(விளக்கம்) கங்கையும் காவிரியும் போன்ற பேரியாறுகள் மலையிடத்தே தோன்றுவனவாம். உலகவிடை கழியாகிய பெருவழிக்கு அத்தகைய ஆறு உவமை. உலக இடைகழி உலகத்து மாந்தர்க்குப் பொதுவாகிய ஊர்வாயில் நகர்க்கு இடையே கழிந்து ஊர்ப்புறத்தே விடுதலின் அப் பெயர்த்தாயிற்று. இல்வாயில் அரண்மனையினது கோபுர வாயிலினின்றும் புறப்பட்டு இருமருங்கும் நிரல்பட்ட மாட மாளிகையினிடையே சென்று நகர்க்குப் புறத்தே வெளியிற் கலத்தலின் மலையிடைத் தோன்றி அலைகடலிலே கலக்கும் பேரியாற்றை உவமை கொள்வதாயிற்று.

28. கலை - உடம்பு - அஃதிலாதான் ; (அநங்கன்) காமவேள் என்க. சோழமன்னன் எல்லாப் பருவங்களையும் ஆள்பவனாதலின் அவற்றுள் ஒன்றாகிய வேனிலை யாளுமரசனாகிய காமவேள் அவனுக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னனாயினன் என்க. காமவேள்  அப்பருவத்தையும் அதன்கண் விளையும் தென்றலையும் கொணர்ந்து திறையாக இறுக்கும் இடமாகிய இலவந்திகை என்க இலவந்திகை நீர் நிலையாற் சூழப்பட்ட பூம் பொழில். இது சோழமன்னன் உரிமையோடு இளவேனிலின்பத்தையும் தென்றல் இன்பத்தையும் நுகர்ந்து விளையாடுமிடமாகலின் அடிகளார் இத்துணை அழகாக இயம்புகின்றனர். அரசனும் உரிமையு மாடு மிடமாகலின் மதில் சூழ்ந்த இடமாயிற்று. இலவந்திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் என மணிமேகலையினும் (3 : 45 - 6) கூறப்படுதலுணர்க.

32 - தழைத்துத் தாழ்ந்த பொழில் என்க. தண்பதப் பெருவழி காவிரியில் நீராடற்குச் செல்லும் பொருட்டு அமைக்கப்பட்ட பெருவழி என்க. அமைக்கப்பட்டதாகலின் இருமருங்கும் அழகிய பூம்பொழிலும் உடைத்தாயிற்று. 33 - காவிரி வாயில் - காவிரியில் இறங்கு துறை. முகக்கடை என்பது கடைமுகம் என முன்பின் மாறி நின்றது.

இனி கடைமுகம் கழிந்தென்றார்; காலையில் நாள் நீராடுவோர் பிறர் முகநோக்காது போதற்கு மறைந்து கழிவர்; இவரும் அவ்வாறு கழிந்தாரென்றற்கு; என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, கோவலன் கண்ணகியோடு உறுகணாளர் போன்று போதற்கு நாணிப் பிறர் காணாமைப்பொருட்டுக் காரிருள் நின்ற கடைநாட் கங்குலில் ஆண்டுச் செல்வோர் தம்முகம் நோக்கலில்லாத தண்பதப் பெருவழியே சென்று காவிரியின் நீராடுதுறையிடத்தையும் நடந்தான் என்பது கருத்தாயிற்றென்க

காவதங் கடக்கு முன்னரே கண்ணகி மதுரைமூதூர் யாதென வினவுதல்

34 - 43 : குடதிசைக் கொண்டு ........... நக்கு

(இதன்பொருள்:) குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து - அப்பால் மேற்றிசையை நோக்கிச் செல்லுதலை மேற்கொண்டு வளவிய நீரையுடைய காவிரியானது பெரிய வடகரைக் கண்ணதாகிய மலர்ந்த பெரிய பொழிலினூடே நுழைந்துபோய்; காவதம் கடந்து - ஒரு காவதத் தொலைவழியை நடந்துபோய்; பூமரப் பொதும்பர் கவுந்திப்பள்ளி பொருந்தி ஆங்கண் - மலர் நிறைந்த சோலையினூடே யமைந்த கவுந்தியடிகளார் உறைகின்ற தவப்பள்ளியை எய்திய பொழுது அவ்விடத்தே; நறும்பல் கூந்தல் இறும்கொடி நுசுப்போடு அடி இனைந்து வருந்தி குறும்பல வுயிர்த்து - நறிய ஐவகைக் கூந்தலையுடைய கண்ணகிதானும் இனி இது முரியும் எனத் தகுந்த கொடிபோலும் நுண்ணிடையும் மெல்லடிகளும் வழிநடை வருத்தத்தால் மிகவும் வருந்தாநிற்றலாலே இளைப்புற்றுக் குறிதாகப் பன்முறை உயிர்த்து; முள் எயிறு இலங்க முதிராக் கிளவியின் மதுரை மூதூர் யாது என வினவ - கோவலனை நோக்கித் தன் முட்கள் போன்று கூர்த்த எயிறுகள் விளங்கும்படி தனது பவளவாய் திறந்து பெரும! உதோ எதிர் தோன்றுகின்ற ஊர்களுள் வைத்து மதுரை என்னும் அப்பழைய ஊர்தான் யாதோ? என்று தனது பெண்மைப் பண்புதோன்ற வினவாநிற்ப; நாறு ஐங்கூந்தல் நம் அகல் நாட்டு உம்பர் ஆறு ஐங் நாதம் நணித்து என நக்கு - அதுகேட்ட கோவலன் அவட்குப் பெரிதும் இரங்கி நாறைங் கூந்தலையுடையோய் நந்தம் அகன்ற சோழநாட்டிற்கு அப்பால் ஆறைங் காவதமேகாண்! அம்மதுரை இனி அணித்தேயாம் என்று கூறிநகைத்து; என்க.

(விளக்கம்) 34 - குடதிசை நோக்கிப் போதலை மேற்கொண்டு போந்து என்க. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது புனல் பரந்து பொன்கொழிக்கும் ஆதலின் கொழும்புனற் காவிரி என்றார். மலர்ப்பொழில் உளவாதற்கேற்ற கோடுஆதல் தோன்றப் பெருங்கோடு என்றார். மலர்ப் பொழிலின் வளந்தோன்ற நுழைந்து காவதங் கடந்து என்றார். காவதமளவும் மலர்ப்பொழில் நுழைந்தே கடந்தனர் என்க. காவதம் - ஒரு நீட்டலளவை. இறும் நுசுப்பு கொடி நுசுப்பு எனத் தனித்தனி கூட்டுக. காண்போர் இஃது இப்பொழுதே இறும் என்றிரங்குதற்குக் காரணமான நுண்ணுசுப்பு என்றவாறு. நுசுப்பும் அடியும் இணைந்து வருந்தி என்க. வருத்தத்தின் மிகுதி தோன்ற இணைந்து வருந்தி என மீமிசைச் சொல்லாலோதினர். நுசுப்புத் துவண்டியை அடி கொப்புளங்கொண்டு வருந்த எனினுமாம். இனைய வருந்த எனத் திரித்துக் கொள்க. நறும்பல் கூந்தல்: அன்மொழித் தொகை. இளைபுற்றுக் குறும்பல வுயிர்த்து என்க. பல உயிர்த்து - பலவாகிய உயிர்ப்புக்களை உயிர்த்து. தனது வருந்தந் தோன்றாமைப் பொருட்டு வினவுங்கால் சிறிது புன்முறுவலுடன் இனிதாக வினவினள் என்பது தோன்ற முள்ளெயிறு இலங்க எனவும் தனக்கியல்பான முதிராக் கிளவியின் எனவும் விதந்தோதினர்.

கண்ணகி தனது பேதைமைகாரணமாக எதிரே தோன்றும் ஊர்களுள் வைத்து மதுரை மூதூர் ஒன்றாதல் கூடும் என்று வினவிய படியாம். இவ்வினாவைக் கேட்ட கோவலன் துயரம் கடலளவு பெருகியிருக்கும் என்பது கூறவேண்டா; அப் பெருந்துன்பத்தை அவளறியாமல் மறைப்பான் நகைத்தனன் என்க. என்னை? அதனை அடுத்தூர்தற்கும் அந்நகையே யன்றிப் பிறி தொன்றுமில்லையாகலின் என்க. ஈண்டு,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்  (குறள் - 621)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைக. ஆறைங்காதம் என்றது அவட்கு ஐந்தாறு காதம் என்றாற்போல அண்ணிதெனத் தோன்றற் பொருட்டு என்க.

கவுந்தியடிகளாரைக் கண்டடி தொழுதல்

44 - 49 : தேமொழி ............... கருதியவாறென

(இதன்பொருள்:) தேமொழி தன்னொடும் - அங்ஙனம் வினவிய இனிய மொழியையுடைய அக் கண்ணகியோடும் கோவலன் அப் பூமரச் சோலையினூடே புகுந்து; சிறை அகத்து இருந்த காவுந்தி அடியையைக் கண்டு அடி தொழலும் - தவவொழுக்கமாகிய சிறைக் கோட்டத்தினுள் அடங்கி ஆங்கண் பள்ளிக்கண்ணிருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அவருடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி நிற்ப; உருவும் குலனும் உயிர்பேரொழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் - அழகும் உயர்குடிப் பிறப்பும் நல்லொழுக்கமும் அருகக் கடவுள் திருவாய்மலர்ந்தருளிய மெய்ந்நூலிற் கூறப்பட்ட நோன்புகளிற் பிறழாமையும் ஆகிய இவற்றையெல்லாம் ஒருதலையாக உடைய மேன்மக்களாகிய நீவிர்; உறுகணாளரின் கடை கழிந்து இங்ஙனம் கருதிய ஆறு என்னோ - தீவினையாளர் போன்று நுங்கள் இல்லந்துறந்து இவ்வாறு வருதற்குக் காரணந்தான் யாதோ? என்று அவர் நிலைக்குப் பரிந்து வினவாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. சிறை - தவவேலி என்னும் அடியார்க்கு நல்லார் உரை ஆற்றவும் இனிதாம். இனித் தவப்பள்ளியிடத்தே யிருந்த எனினுமாம். 45 - காவுந்தி; நீட்டல் விகாரம். ஐயை - ஐயன் என்பதன் பெண்பாற் சொல் - தலைவி என்னும் பொருட்டு.

இனி, கவுந்தியடிகளார் இவரை முன்னர் அறிந்தவரல்லர். அங்ஙனமாகவும், இவர் கோலனையும் கண்ணகியையும் நோக்கிய அளவானே அவர் உருவும் குலனும் உயர் பேரொழுக்கமும் திருமொழி பிறழா நோன்பும் உடைய கொழுங்குடிச் செல்வர் மக்களாவார் என்னும் உண்மைகளை அவ்விருவருடைய மெய்ப்பாடுகளைக் கண்டே ஊகத்தாலறிந்து கூறியவாறாம். இங்ஙனமன்றி இக்கவுந்தியடிகளார் தமது தவ முதிர்ச்சியினாலே முக்காலமும் அறிந்து கூறினார் அல்லர். அடியார்க்கு நல்லார்க்கும் இதுவே கருத்தாதல் பின்னர்க் காட்டுவாம்.

உடைமை குலம் ஒழுக்கம் என்னும் இவற்றிற்கும் இன்னோரன்ன பிறபண்புகட்கும் மெய்ப்பாடுண்டு என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலின்கண் (12) ஆங்கவை ஒருபாலாக ...... அவையலங் கடையே என அறிவுறுத்த நூற்பாவானும் உணர்க.

48. உறுகணாளர் - பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினையாளர். இனி, இதற்கு மிடியாளர் என்பது பொருளாயினும் அப்பொருள் ஈண்டுச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க. கடை கழிந்து இவ்வாறு வரக் கருதியவாறு என்க.

கோவலன் விடை

50 - 51 : உரையாட்டில்லை ......... வேட்கையேன்

(இதன்பொருள்:) உறுதவத்தீர் உரையாட்டு இல்லை - மிக்க தவத்தையுடைய பெரியீர்! தங்கள் வினாவிற்கு மறுமொழி கூறும் நிலையில் யான் இப்பொழுது இல்லை. ஆயினும்; அவ் வினாத் திறத்திலே யான் கூறற்பாலதும் ஒன்றுண்டு, அஃதியாதெனின், யான் மதுரைமூதூர் வரை பொருள் வேட்கையேன் - யான் மதுரையாகிய பழைய நகரத்தே சென்று எங் குலத்தார்க்கு நூல்களில் விதிக்கப்பட்ட வாணிகத் தொழிலைச் செய்து பொருளீட்ட வேண்டும் என்னும் வேட்கையை உடையேன் ஆதலின், இங்ஙனம் வர நேர்ந்தது என்பதேயாம் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) உருவு முதலிய சிறப்பினையுடையீர் உறுகணாளர் போன்று கடைகழிந்து வரக் கருதியதற்குக் காரணம் என்னையோ? என்று வினவிய அடிகளார்க்குக் கோவலன் நேரிய விடை கூறவேண்டின், சலம்புணர் கொள்கைச் சலதியோடாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொல்லைத்தேன் அவ்விலம்பாடு நாணுத்தரும் ஆதலின், மதுரை மூதூர் சென்று உலந்த பொருளீட்டும் வேட்கையேன், ஆதலின், இவ்வாறு வந்தேன் என்றே கூறவேண்டும். ஆயினும், அவற்றை அவர்க்குக் கூறுவது மிகையும் நாணுத் தருவதும் பயனில கூறலும் ஆதல் பற்றி உரையாட்டில்லை என்னும் ஒரு சொல்லினுள் அவற்றை யெல்லாம் திறம்பட அடக்கிச் சொல்லற் பாலதாகிய காரணத்தை மட்டும் கூறுகின்ற தன்மை அவன் நுண்ணறிவைப் புலப்படுத்துதல் காண்க.

கவுந்தியடிகளின் பரிவுரைகள்

52 - 61 : பாடகச்சீறடி ............... கைதொழுதேத்தி

(இதன்பொருள்:) இவள் பாடகச் சீறடி பரல்பகை உழவா - அது கேட்ட அடிகளார் கண்ணகியைக் கூர்ந்து நோக்கியவராய் இவளுடைய மெல்லிய சிறிய அடிகள் தம்மை உறுத்துகின்ற பருக்கைக் கற்களாகிய பகை செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாவே! காடு இடை இட்ட நாடு - நீயிர் செல்லக் கருதிய மதுரைக்குச் செல்லும் வழியோ எனின் செல்லுதற்கரிய காடும் நாடும் இடையிட்ட நெடுவழியாகும்; இவள் செவ்வி நீர் கடத்தற்கு அரிது - இவளுடைய தன்மையை நோக்கின் அவற்றைக் கடத்தற்கு அஃது ஏற்றதன்று ஆதலால் நீங்கள் கடத்தல் அரிதேயாம்; உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் - அதுவேயுமன்றி நுங்கள் குடிப்பிறப்பிற்கும் இச்செலவு உரியதாகாது இவ்வளவோடு இச்செலவினை ஒழிமின் என்று யாம் ஒழிப்பவும் ஒழிகின்றிலீர் ஆகவே; அறிகுநர் யார் - இனி நுங்கட்கியன்ற ஊழ்வினை என் செய்யுமோ? அதனை யாரே அறியவல்லுநர்; அது நிற்க; மறவுரை நீத்த மாசு அறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த - அழுக்காறு அவா வெகுளியாகிய இவற்றோடு இவற்றின் காரியமாகிய இன்னாச் சொல்லையும் துவர நீத்த சிறப்போடு மனத்தின் மாசு அறுதற்குக் காரணமான அருகன் அருளிச்செய்த மெய்ந்நூற் கேள்வியையுமுடைய சான்றோரை அடுத்து அவர்பால் அறவுரைகளைக் கேட்டுணர்ந்து அவ்வுணர்ச்சிக்குத் தகநின்று வாலறிவனாகிய இறைவனை வழிபாடு செய்தற் பொருட்டு; யானும் தென் தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் யானும் தெற்கின் கண்ணதாகிய தமிழ்நாட்டின் தலைநகரமாய்த் தன்கண் வருவார் தம் வினையைத் தீர்க்குந் தெய்வத் தன்மையுடைய அம் மதுரைமாநகர்க்குப் போதல் வேண்டும் என முன்னரே ஒருப்பட்ட உள்ளம் உடையேனாதலாலே; போதுவல் என்ற -யானும் வருகின்றேன் நீயிரும் வம்மின் என்றருளிச் செய்த; காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி - கவுந்தி யடிகளைக் கைகூப்பித் தொழுது நாவால் வாழ்த்தி; என்க.

(விளக்கம்) 52. மதுரைக்குச் செல்வதெங் கருத்தென்ற கோவலன் சொற்கேட்டு அடிகளார் வழியினதருமையும் கண்ணகியின் மென்மையும் கருதிக் கூறுகின்றார். பாடகம் - ஒருவகைக் காலணி. சீறடி பெரிதும் மெல்லியன ஆதலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பரற்பகை உழவா என்றவாறு. பரல் துன்புறுத்துவன வாகலின் பகை என்றார். காடு செல்லுதற்கரிய காடு என்பதுபட நின்றது. இவள் செவ்வி கழிதற்கு ஏற்றதன்றாகலின் கழிதல் அரிது என்க. 54-5. உரியதன்றீங் கொழிகென வொழியீர் ஆதலின், இஃது ஊழினது செயலாதல் வேண்டும் அது யாது செய்யுமோ யார் அறியவல்லுநர் என்றிரங்கியபடியாம்.

56. மறவுரை - இன்னாச் சொல். அதனை நீத்த எனவே அதற்கு முதலாகிய அழுக்காறு அவா வெகுளி யாகியவற்றையும் நீத்தமை கூற வேண்டாவாயிற்று. மாசு - மனமாசு. அல்லது ஐயமும் திரிபுமாகிய குற்றங்கள் தீர்ந்த மெய்க் கேள்வியர் எனினுமாம். 57. அறிவன்-அருகன். 58. தெற்கின் கண்ணதாகிய தமிழ் வழங்கும் நல்ல நாட்டுத் தலைநகரமாகிய மதுரை, தீது தீர் மதுரை எனத் தனித்தனி கூட்டுக. கோவலன் கண்ணகியாகிய இருவருடைய பழவினைகள் தீர்தற்கு இடனான மதுரை எனவும் ஒரு பொருள் தோன்றி, தீதுதீர் மதுரை என்பது வாய்ப்புள்ளாகவும் அமைந்தமை யுணர்க.

கோவலன் மகிழ்ச்சி

62-63 : அடிகள் .................. என

(இதன்பொருள்:) அடிகள் நீரே அருளுதிர் ஆயின் - அடிகளே நீரே இவ்வாறு எமக்கு வழித்துணையாதற் கமைந்து அருளிச் செய்வீராயின்; இத் தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன் என - இவ் வளையலணிந்த தோளையுடையாளுடைய துயரெல்லாம் இப்பொழுதே தீர்த்தேனாயினேனன்றோ! என்று மகிழ்ந்து கூறாநிற்ப என்க.

(விளக்கம்) இங்ஙனம் சிறந்ததொரு வழித்துணை பெறாதவழித்தன் பொருட்டு அவளும் அவள் பொருட்டுத் தானுமாக வழி நெடுக வருந்துவதன்றி மகிழ்தற்கிட னின்மையால் அதுபற்றிப் பெரிதும் தன்னுட் கவன்றிருந்த கோவலன் அடிகளார் வழித்துணையாக யானும் போதுவல் போதுமின் என்றருளக் கேட்டவுடன் அத்துன்பச் சுமையெலாம் ஒருங்கே வீழ்த்தி அயாவுயிர்த்துக் கூறும் இம்மொழிகள் பெரிதும் இயற்கை நவிற்சியாய் இன்புறுத்துதல் உணர்க. அடிகள் வழித் துணையாகும் பேறு தாம் வருந்தியும் பெறற்கரிய தொரு பேறாகலின் அத்தகைய பேற்றினை அவரே எளிவந்தருளிய அருமையைப் பாராட்டுவான் அடிகள் நீரே அருளுதிராயின் என்பது யாம் வேண்டியும் பெறற்கரிய தொன்றனை எமக்கு எளி வந்து அருளுதிராயின் என்பதுபட நின்றது. வழித்துணையினும் மிகச் சிறந்த துணை பெற்றேம் என்பது தோன்ற அடிகள் என்றான். தீர்த்தேன் : தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.

நீயிரே இது செய்வீராயின் என்றது ஒரு வழக்கு என்றார் அடியார்க்கு நல்லார்.

கவுந்தியடிகள் வழியினது ஏதங் கூறுதல்

64 - 75 : கோவலன் ............ பகை யுறுக்கும்

(இதன்பொருள்:) கோவலன் கொண்ட இந் நெறிக்கு யாங்கும் ஏதம் தருவன பல காணாய் கேண்மோ - அதுகேட்ட அடிகளார் கோவலனைப் பரிந்து நோக்கிக் கோவலனே யாம் போவதாக வுட்கொண்ட இக் காவிரியின் வடகரையாகிய இவ்வழியின்கண் செல்வார்க்கு வருத்தம் தருவன எவ்விடத்தும் பலவுள்ளன அவற்றை நீயறியாய் ஆதலின் யான் கூறுவல் கேட்பாயாக; வெயில் நிறம் பொறா மெல்லியல் கொண்டு பூ பயில் தண்தலை படர்குவம் எனின் - வெயிலினது வெப்பத்தைப் பொறுக்கமாட்டாத தளிர் நிறத்தையுடைய மெல்லியல்பு வாய்ந்த இவளை அழைத்துக்கொண்டு அவ் வெயில் நுழையாத மலர்கள் மிக்க இவ் வடகரைப் பொழிலினூடே புகுந்கு செல்குவேம் என்பாயாயின்; மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் - அவ்விடத்தே நிலம் பிளக்கும்படி இடங் கொண்டு வீழ்ந்த வள்ளிக்கிழங்கை அகழ்ந்து கொண்ட குழிகளைச் சண்பக மரங்களினின்றும் உதிர்ந்து நிரப்பிய பூந்துகள் உகுகின்ற பழம் பூக்கள்; பொய் அறைப் படுத்து - பொய்க் குழிப்படுத்து; போற்றா மாக்கட்கு - அவற்றை அறிந்து தம்மைக் காவாது இயங்குகின்ற மாக்களுக்கு; கையறு துன்பம் காட்டினும் காட்டும் பின்பு செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பத்தைத் தோற்றுவித்தல் செய்யினும் செய்யும்காண்! உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் - அவ்வாறு துன்பந்தரும் உதிர்ந்த பழம்பூவினாலியன்ற பொய்க்குழியை மிதியாமைப் பொருட்டு நிலனோக்கி விழிப்புடன் செல்வோரை முதிர்ந்து தேனொழுகும் பலாப்பழங்கள் அவரெதிர் கோட்டின்கண் தூங்குவன பகைபோலத் தலையின்கண் மோதினும் மோதும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து பலவின் செஞ்சுளை பரல் பகை உறுக்கும் - இனி அவற்றிற்கஞ்சி வெள்ளிடைப் போவோமாயின் ஆங்கு மஞ்சள் இஞ்சி முதலியவை தம்முட் டறைலமயங்கிய தோட்டங்களிற் பாத்திதோறும் சருகின் மறைந்துள்ள அவற்றின் வன்முளைகளும் அத்தோட்டத் தொழிலாளர் தின்று கழித்த பலாவினது சிவந்த சுளையின்கண்ணவாகிய காழாகிய பருக்கைகளும் இவள் மெல்லடிக்குப் பகையாய் உறுத்தினும் உறுத்தும் என்றார் என்க.

(விளக்கம்) 64 - கோவலன்; விளி. காணாய் என்றது நீ முன்னர் இவ்வழியிற் சென்றிராய் ஆதலின் கண்டிராய் என்பதுபட நின்றது. இந் நெறி என்றது முன்னர் (35) வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து காவதம் கடந்து, என்றமையால் வடகரை வழிஎன்பது பெற்றாம்.

66-7. வெயிலைத் தனது நிறம் பொறாமைக்குக் காரணமான இம்மெல்லியல் என்க. நிறம் - திருமேனி. வெயில் நிறம் பொறாமெல்லியல் என்றது பயில் பூந்தண்டலைப் படர்தற்குக் குறிப்பேதுவாய் நின்றது. 89 - பொங்கர் - பழம்பூ. அஃதப் பொருட்டென்பது (72) உதிர்பூஞ் செம்மலின் என்பதனாலும் பெறுதும். குழியின் பெருமை தோன்ற (68) மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ்குழி என்றார். குழியை நிறைத்த பொங்கர், தாதுசோர் பொங்கர், சண்பகப் பொங்கர் எனத் தனித்தனி கூட்டுக. பொய்யறைப்படுத்து - மேலே மறைக்கப்பட்டு உட்பொய்யாகிய குழி. கையறுதுன்பம் - செயலறுதற்குக் காரணமான பெருந்துன்பம் - அவையாவன கான் முரிதல் முதலியன. காட்டுதல் - காணச்செய்தல். (72) செம்மல் - பழம்பூ (வாடியுதிர்ந்த பூ.) 73. முதிர் தேம்பழம் - முற்றிய இனிய தெங்கம் பழம் எனினுமாம். முட்டினும் முட்டுவர் என்னும் பாடத்திற்கு, கழிவோரை வினை முதலாகக் கொள்க. மஞ்சள் இஞ்சி முதலிவற்றின் வன்முளைகளும் பலவின் பரலும் உறுத்தும் என்றவாறு. அரில் - பிணக்கம். வலயம் - பாத்திகள். பாத்திகளில் தொழில் செய்வோர் பலவின் செஞ்சுளையைத் தின்று கழித்துப் போகட்ட பரல் என்க. பரல் - ஈண்டுக் காழ். உறுத்தும் என்றமையால் அடிகளை உறுத்தும் எனவும் அடியினது மென்மைக்கு இவற்றின் வன்மை முரணாகலின் அவற்றைப் பகை என்றும் ஓதினர். 

இதுவுமது

76 - 81 : கயனெடுங் ............. காரிகை

(இதன்பொருள்:) கயல் நெடுங் கண்ணி கேள்வ - கயல்போலும் நெடிய கண்களையுடைய இப் பெருந்தகைப் பெண்ணாற் காதலிக்கப்பட்ட கேள்வனே இன்னும் கேட்பாயாக! வயலுழைப் படர்குவம் எனின் - இத் துன்பங்கட்கு அஞ்சி இவ்வழியை விடுத்து வயல் வழியே போகக்கடவேம் என்பேமாயின்; ஆங்குப் பூநாறு இலஞ்சி நீர்நாய் பொருகயல் ஓட்டிக் கௌவிய நெடும் புற வாளை மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின் - அவ்வழியிடத்தும் மருங்கிலுள்ள தாமரை முதலிய மலர்மணங் கமழா நின்ற குளங்களிலே மீன் வேட்டமாடுகின்ற நீர்நாயானது தம்முள்ளே போரிடுகின்ற கயல்மீன்கள் அஞ்சியோடும்படி ஓட்டித் தன் வாயாற் கௌவிய நெடிய முதுகையுடைய வாளைமீன் அதன் வாயினடங்காமற் றுள்ளி அயலிலுள்ள மலங்குகள் பிறழ்ந்து மிளிருகின்ற கழனியின்கண் நாம் செல்லும் வழிக்குக் குறுக்காகப் பாயுமாயின்; இக்காரிகை கலங்கலும் உண்டு - இவள் நெஞ்சம் துணுக்குற்றுக் கலங்குதலும் உளதாம் என்றார் என்க.

(விளக்கம்) 76. கண்ணகியின் பெருந்தகைப் பண்பெல்லாம் அவள் அழகிய கண்களிடத்தே மெய்ப்பாடாகத் தோன்றுதலாலே இத்தகைய சிறப்புடைய குலமகளாலே காதலிக்கப்பட்டமையே கோவலனுக்குப் பெரும் பேறாம் என்பது கருதி அடிகளார் வாளா கோவலன் என விளியாது கயல் நெடுங்கண்ணி காதற் கேள்வ! என்று விதந்து விளித்தனர். 78. தம்முட் போரிடுங் கயல் மீன்கள் வெருவி ஓட ஒட்டி என்க. 79. நீர் நாய்-நீரினும் நிலத்தினும் வாழும் ஒருவகை விலங்கு. இது நீரின் கண் வாழும் உயிரினங்களை வேட்டமாடி உயிரோம்புதல் பற்றி நீர் நாய் எனப்பட்டது போலும். இஃதுருவத்தாற் கீரியைப் போல்வதாம். இது மீன்களுள் வைத்து வாளை மீனையே பெரிதும் விரும்பி வேட்டமாடும் போலும், ஆதலால் சங்க நூல்களுள், வாளை மேய்ந்த வல்ளெயிற்று நீர் நாய் எனவும் (அகம்-9) நாளிரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையோ டுழப்ப எனவும், (அகம் - 336) பொய்கை நீர்நாய் புலவுநா றிரும்போத்து வாளை நாளிரை தேரும் எனவும் (அகம் - 389) ஒண் செங்குரலித் தண்கயங் கலங்கி வாளைநீர்நாய் பெறூஉம் எனவும் (புறம் - 264) வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉ மூரன் எனவும், (குறுந்தொகை - 364) பிற சான்றோரும் ஓதுதலறிக. 80. மலங்கு - ஒருவகை மீன்; பாம்பு போன்ற வுருவமுடையது. இக்காரிகை என்றது கண்ணகியை. (77 - 81) இதனாற் கூறியது அச்சம் என்னும் பெண்மைப் பண்பு மிக்க இக்காரிகை மீனிரை தேரும் நீர்நாய் காணினும் தம்முட் பொருங்கயல்கள் உகளக் காணினும் வாளை பாயக்காணினும் மலங்கு மிளிரக் காணினும் பெரிதும் அஞ்சி நெஞ்சங் கலங்குவள் என்பதாம்.

இதுவுமது

81 - 85 : ஆங்கண் ............ கொள்ளவுங் கூடும்

(இதன்பொருள்:) ஆங்கண் கரும்பின் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் - அஃதன்றியும் அவ்விடத்தே வளர்ந்துள்ள கரும்பின்கண் வண்டுகள் இழைத்துள்ள பெரிய தேனடைகள் காற்றினாலே சிதைவுற்றுழி அவற்றின் கண்ணுள்ள தேன் ஒழுகி வண்டுகள் சூழ்தற்குக் காரணமான தாமரை முதலியவற்றையுடைய நீர்நிலையினது தூய நீரோடு சென்று கலந்துவிடும்; அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் - ஆதலான் அதனை அறியாமல் தணியாத நீர் வேட்கையால் நீயிர் நுமது குடங்கையான் முகந்துகொண்டு பருகவும் கூடும்; என்றார் என்க.

(விளக்கம்) கரும்பலாற் காடொன்றில்லாக் கழனி சூழ் வழியாகலின் 82 - கரும்பிற் றொடுத்த பெருந்தேன் என்றார். தேன் : ஆகு பெயர்; தேனடை. தேனடை சிதைந்துழி அதன்கண்ணுள்ள தேன் ஒழுகித் தூநீர்க்கலக்கும் என்றவாறு. குடங்கையின் நொண்டு கொள்ளல் இருவர்க்கும் ஒக்குமாகலின், பழையவுரையில், இவள்.... பருகவும் கூடும் எனக் கூறியது பொருந்தாது. சமண் சமயத் துறவியாகிய அடிகளார் அச்சமய நூலுள் தேன் உண்ணல் கடியப்பட்டமையின். அறியாமையால் நும்மால் நீரென்று அதனொடு கலந்ததேன் உண்ணப்படும் ஆதலால் அஃதோர் ஏதம் என்று அறிவித்த படியாம். அச்சமயத்தார் தேன் உண்டல் கூடாதென்பதனை,

பெருகிய கொலையும் பொய்யுங் களவொடு பிறன்மனைக்கண்
தெரிவிலாச் செலவுஞ் சிந்தை பொருள்வயிற் றிருகும் பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழிகுத லொழுக்க மென்றான்

எனவரும் யசோதரகாவியத்தானும், (236)

தேனைக் கொலைக் கொப்ப தென்றாய் நமஸ்தே

எனவரும் தோத்திரத்திரட்டு முதலியவற்றாலு முணர்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

அறிவஞர் எய்தி - அறிவு மயங்கி. 86. குடங்கை - ஐந்து விரலுங் கூட்டி உட்குழிக்கப்பட்ட கை. நொள் என்னும் முதனிலையிற் பிறந்த நொண்டு என்னும் எச்சம் முகந்து என்னும் பொருட்டு. இது மொள்; மொண்டு எனவும் வழங்கும்.

இதுவுமது

86 - 93 : குறுநரிட்ட ......... ஒண்ணா

(இதன்பொருள்:) குறுநர் இட்ட குவளைஅம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை - கழனிகளிற் களைபறிப்பார் பறித்து வரம்பிலிட்ட குவளைப்பூவுடனே புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டினம் மதுவுண்ட மயக்கத்தாலே போகவறியாமல் அப்பூவுள் ளொடுங்கிக் கிடக்கின்ற கிடக்கையை; நீர் நெறி செல் வருத்தத்து அஞர் எய்தி அறியாது ஆங்கு அடியிடுதலும் கூடும் - நீவிர் வழிநடந்ததனாலுண்டான துன்பம் காரணமாக உணர்வு மயங்கி அறியாமல் அவற்றின்மேல் அடியிடவும் கூடும்; அன்றியும்; எறிநீர் அடைகரை இயக்கந் தன்னின் -யாம் அலை எறிகின்ற நீரையுடைய பெருவாய்க்காலினது நீரடைகரையின் மேற் செல்லும்பொழுது; பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ் அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் - அக்கரையிடத்தே புள்ளிகளாலே அழகுற்றுத் திகழும் நண்டும் நத்தையும் ஆகிய சிற்றுயிர்கள் இருக்குமிடங்களை நோக்கி ஒதுங்கி நடத்தலின்றி யாம் நமக்கியல்பாயாமைந்த முறையானே நடக்குமிடத்தே அவற்றின் மேலடியிட்டு நடத்தலும் கூடும், அவ்வழி அச்சிற்றுயிர்கள் நம்மாலுறுகின்ற துன்பத்தை நாம் காணின்; தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா - நமக்குச் சிறுமையைத் தருகின்ற அக் கொலைத் துன்பம் நம்மால் பொறுக்கவும் கூடாதாம் என்றார்; என்க.

(விளக்கம்) 86 - குறுநர் - பறிப்போர். குறுநரிட்ட கூம்பு விடுபன் மலர் (பெரும்பாண் - 295.) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. 87 பொறியையும் வரியையும் உடைய வண்டினம் என்க. நீர்-நீவிர். தமக்கு நெறி செல்வருத்தமும் அறிவஞர் எய்துதலும் இன்மை தோன்ற நீர் அஞர் எய்தி அறியாதபடி யிருத்தலுங் கூடும் என்றார். என்னை? அவர் தாமும் சிறந்த தவவொழுக்க முடையாராகலின் வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கி மெல்லடிகள் பரவி நல்லருள் புரிந்துயிர்க் கண் (யசோதர காவியம் - 4) நடப்பவர் ஆகலின் என்க.

90. எறிநீர் அடைகரை என்றமையின் பெருவாய்க்காலினது கரை என்பது பெற்றாம். அக்கரையின்மேல் நண்டு நந்து முதலியன மறைந் துறைதலுண்மையின் நுமக்கு இயல்பாகிய நடை என்பார் ஊழடி ஒதுக்கம் என்றார். எனவே தமக்கு அவ்வகை இயக்க மின்மையும் கூறினாராயிற்று.

கோவலன் கண்ணகி ஒதுக்கத்தால் சிற்றுயிர் உறுநோய் காணுதல் தமக்கு முண்மையின்; உறுநோய் காணில் தாழ்தருதுன்பம் தாங்கவும் ஒண்ணாது எனப் பொதுவினோதினார். தாழ்ச்சியைத் தருகின்ற தீவினையால் வருந்துன்பம் என்க. இதனால் அந்நெறிக்கண் நீயிர் அறியாமல் கொலைத் தீவினையாகிய ஏதம் எய்துதலும் கூடும் என்றறிவுறுத்தவாறு. இவற்றின் கருத்து - இத்தகைய தீவினைகள் நிகழாவண்ணம் குறிக்கொண்டு நடமின் என்று அறங் கூறுதலாம். ஈண்டு,

அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை ( குறள் - 315)

எனவரும் திருக்குறள் நினையற்பாலதாம்.

இயக்கம் என்பதனை ஆகுபெயராக்கி வழி என்பர் அடியார்க்கு நல்லார். 91 - அலவன் - நண்டு நந்து - நத்தை, இனஞ்செப்பித் தவளை முதலிய சிற்றுயிரும் கொள்க. உறுநோய் : வினைத்தொகை; மிக்க நோய் எனினுமாம். காணில் அவற்றின் பால் இரக்கங் காரணமாகவும் நம் அறியாமை காரணமாகவும் நமக்குண்டாகும் துன்பம் என்றவாறு. தீவினை காரணமாக வருந்துன்பமாகலின் தாழ்தரு துன்பம் என்றார். தாழ்தலைத் தருகின்ற துன்பம் என்க.

இக்கொலைப் பாவம் ஒன்றானும் கழுவப்படாது; அதுவேயுமின்றி மறுமைக்கண் நரகத்திலுறும் துன்பமும் நம்மால் தாங்கலா மளவிற்றன்று என்பதனான் (தாங்கவும் என்பதன்கண்) உம்மை எச்சவும்மை யாயிற்று என்பர் அடியார்க்கு நல்லார்.

இதுவுமது

94 - 97 : வயலும் ............. குறுகாதோம் பென

(இதன்பொருள்:) வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை - இத்தகைய துன்பங்கட்குக் காரணமான வயல்வழியும் முற்கூறப்பட்ட துன்பங்கட்குக் காரணமான சோலைவழியும் அல்லது இவற்றிற்கு வேறாகக் கிடக்கும் வழி இனி யாம் செல்லக்கடவ அவ்விடத்தே இல்லை; நெறியிருங்குஞ்சி நீ குறி அறிந்து வெய்யோளொடு அவை அவை குறுகாது ஓம்பு என - ஆதலால் யாம் செல்லும்பொழுது நெறித்த குஞ்சியையுடையோய்! நீ அத்தகைய துன்பந்தருமிடங்களைக் குறிப்பான் அறிந்து அவ்வத்துன்பம் வாராதபடி நின்னை விரும்பிய நின் மனைவியோடே விழிப்புடன் நடப்பாயாக! என அறிவுறுத்த பின்னர் என்க.

(விளக்கம்) 95 - இனிச் செல்லக் கடவ வழியாகலின் ஆங்கு எனச் சேய்மைச் சுட்டாற் கூறினார். இத்துணையும் அடிகளார் தம் பள்ளியிடத் திருந்தே கூறியபடியாம். 96 - நெறியிருங்குஞ்சி; அன்மொழித் தொகை; விளி. நீ வெய்யோளொடு செல்லுங்கால் நுமக்கு அவை அவை குறுகாது ஓம்பு என்றவாறு. வெய்யோள் - நின்னை விரும்பியவள்; நின்னால் விரும்பப் படுபவள் என இரு பொருளும் பயந்து நின்றது. குறி-யாங் கூறிய குறிப்பு. அவையவை எனும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது. அறிவு அஞர் எய்துதலாலே அறியாமல் பொய்யறையில் அடியிட்டு வீழுதல் முதலிய துன்பமும், வண்டினம் நண்டு முதலியவற்றின் மேல் அடியிடுதலாலே வருந் தீவினைத் துன்பமும் என இருவேறுவகைத் துன்பமும் வாராதபடி செல்லுக என்றறிவுறுத்த படியாம்.

பள்ளியினின்றும் கவுந்தியடிகள் புறப்படுதல்

98 - 101 : தோமறு ............ புரிந்தோர்

(இதன்பொருள்:) காவுந்திஐயை - இவ்வாறு கோவலனுக்கு அறிவுறுத்த கவுந்தியடிகளார்; தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் கைப்பீலியும் கொண்டு - அவர்களோடு மதுரைக்குச் செல்லும் பொருட்டுக் குற்றமற்ற கடிஞையும் தோளிலிடும் உறியும் கையின்கட்கொள்ளும் மயிற்பீலியும் முதலியவற்றைக் கொண்டு; மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக என - ஐந்தெழுத்தாலியன்ற மறைமொழிக்குப் பொருளாகிய தெய்வமே நமக்கு வழித்துணையாகுக! என்று இறைவனை நினைந்து போற்றிப் புறப்பட; பழிப்பு அருஞ்சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - அங்ஙனம் புறப்பட்ட அடிகளாரோடு பிறராற் பழித்தல் அரிய ஒழுக்கத்தோடு வழிச்செலவினை மேற்கொண்ட கோவலனும் கண்ணகியும்; என்க.

(விளக்கம்) தோம் - குற்றம். அஃதாவது துறந்தோர் கைக்கொள்ளலாகா எனக் கடியப் பட்டவை. கடிஞை - இரத்தற் கலம். அறுவை - உறி - ஆடை யன்மை தோன்ற, அறுவை என்றொழியாது சுவன் மேலறுவை என்றார். மொழி - மறைமொழி - அஃதாவது ஐந்தெழுத்து மந்திரம். அவையாவன - அ, சி, ஆ, உ, சா என்பன.

இனிக் கொண்டென்பதனைக் கொள்ளவெனத் திரித்து அடிகளார் கடிஞை முதலியவற்றைக் கைக்கொள்ள அதுகண்டு இவர், நமக்கு வழித்துணை ஆக எனக் கருதி மகிழ்ந்து அவரோடு வழிப்படர் புரிந்த கோவலனும் கண்ணகியும் எனினுமாம்.

காவிரி நாட்டின் சிறப்பு

102 - 111 : கரியவன் ............ ஒலித்தல் செல்லா

(இதன்பொருள்:) கரியவன் புகையினும் புகைக் கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - உலகின்கண் மழைவறங் கூர்தற் பொருட்டுக் கோள்களில் வைத்துச் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இவற்றினோடு மாறுபடினும் விசும்பின்கண் தூமக்கோள் தோன்றினும் விரிந்த ஒளியையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெய நினும்; கால் பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடுஞ் சூன்முதிர் கொண்மூ பெயல் வளம் - சுரப்ப - பருவக்காற்றுத் தாக்குதற்கியன்ற உயர்ச்சியையுடைய குடகமலையினது உச்சியிடத்தே கடிய முழக்கத்தையுடைய இடியேற்றோடு சூன்முதிர்ந்த பருவ முகில் தனது பெயலாகிய வளத்தை நிரம்ப வழங்குதலானே; குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு - அக் குடகமலையிற் பிறந்த கொழுவிய பல்வேறு பண்டத்தோடு; கடுவரல் காவிரிப் புதுநீர் - விரைந்து வருதலையுடைய காவிரிப் பேரியாற்றினது புதுப்புனல் வெள்ளமானது; கயவாய் நெரிக்கும் கடல் வளன் எதிர - பெரிய புகுமுகத்தைக் குத்தியிடிக்கும் கடல் தன்கட் பிறந்த கொழுவிய பல பண்டத்தோடு வந்து எதிர்கொள்ளுதலாலே தேங்கி; வாய்த்தலை ஓவிறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது - வாய்த்தலைக்கிட்ட கதவின்மீதெழுந்து குதித்தலானே எழுகின்ற அப் புதுப்புனல் ஒலியல்லது; ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் நீர் ஓங்கு பிழாவும் ஒலித்தல் செல்லா - ஆம்பியும் கிழாரும் மிக்க வொலியையுடைய ஏத்தமும் நீரை முகந்து கொண்டு உயர்கின்ற பிழாவும் என்று கூறப்படுகின்ற நீரிறைக்கும் கருவிகள் ஒருநாளும் ஒலித்தல் இல்லாத என்க.

(விளக்கம்) 102. கரியவன் என்பது சனிக்கோளின் பெயர்களுள் ஒன்று. மைம்மீன் என்பதும் அப்பொருட்டு. புகைதல், ஈண்டு உலகத்தைச் சினந்து ஒழுகுதல் மேற்று. அஃதாவது, உலகில் மழை வறங் கூர்தற்கியன்ற நெறியிலியங்குதல். அடியார்க்கு நல்லார் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனம் என்னும் இராசிகளில் இயைந்தொழுகின் உலகின்கண் மழைவளம் மிகும் எனவும், இவற்றோடு அக்கோள் மாறுபட்டியங்கின் மழைவறங்கூரும் எனவும் கருதுபவர் என்பது அவருரையால் விளங்கும். இன்னும், கோள்களின் இயக்கம் மழைவளமுண்டாதற்கும் அது வறந்து வற்கடம் உண்டாதற்கும் காரணமாம் என முன்னோர் கருதினர் என்பதனை, இதனானும், இங்ஙனமே,

மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
.............. ................. ................. ................
பெயல் பிழைப்பறியாது  (புறநா - 117)

எனவும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட (புறம் - 35)

எனவும்,
வசையில் புகழ் வெண்மீன்
திரை திரிந்து தெற்கேகினும்
.............. .......... ..........
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்யினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி  (பட்டினப்பாலை - 1-6)

எனவும், வரும் சான்றோர் செய்யுள்களாலுமுணர்க.

இனி, மழை வறங்கூர்தற்கு ஏற்பக் கோள்க ளியங்குமிடத்தும் செங்கோல் மன்னர் தம் நாட்டில் மழைவறங் கூர்தலில்லை எனவும், மழை வளம் மிகுதற்கியன்ற நெறியில் கோள்களியங்கினும் கொடுங்கோன் மன்னர் நாட்டில் மாரி வறங்கூரும் எனவும் நம்முன்னோர் கருதுவர். இக் கருத்தினை யாம் பட்டினப்பாலைக்கு எழுதிய உரையின்கண் 1-7. விளக்கங்களால் உணர்க. ஈண்டுரைப்பின் உரை விரிதலஞ்சி விடுத்தாம்.

கரியவன் புகையினும்....காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கும் என்று ஈண்டு அடிகளார் இயம்பியது சோழ மன்னனின் செங்கோன்மையைக் குறிப்பாகச் சிறப்பித்த படியாம். என்னை? ஆசிரியர் கபிலர் தாமும், மைம்மீன் புகையினும்....கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பறியாது எனவும், திருவள்ளுவனார்,

இயல்புளிக் கோலோச்சும் மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு  (குறள் - 545)

எனவும், இந்நூலாசிரியர் தாமும், காவேரி! கருங்கயற் கண் விழித்தொல்கி நடந்த வெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி! எனவும் ஓதுமாற்றானும் அறிக.

புகைக்கொடி - தூமக்கோள், கோள்கள் வட்டம் சிலை நுட்பம் தூமம் (புகை) என்னும் நான்கினும் (தூமக்கோள்) எனவரும் பழையவுரையினால் பழந்தமிழறிஞர் வானநூலறிவு புலப்படும். நிவப்பு: ஆகுபெயர். உயர்ந்த (உச்சி) குவடு. மலைப்பிறந்த தாரம் - தக்கோலந்.......சாதியோடைந்து (5-26) என்பன. கடல் வளம் ஓர்க்கோலை சங்கம் ஒளிர் பவளம் வெண்முத்தம் நீர்ப்படும் உப்பினோடைந்து என்ப.

108-கடுவரல் - விரைந்து வரும் வருகை. ஓ -மதகு நீர் தாங்கும் பலகை. இனி ஓவுதல் இறந்து ஒலிக்கும் எனலுமாம். ஒழிவின்றி ஒலிக்கும் என்றவாறு. ஆம்பி - பன்றிப் பத்தர். கிழார் - பூட்டைப் பொறி. ஏத்தம் ........ பிழா - இடா. நீரிறைக்கும் கூடை. இவை பிறநாட்டில் நீரிறைக்கும் கருவிகள். சோணாட்டில் இக்கருவிகள் வேண்டப்படாமையின் இவற்றின் ஒலி இல்லையாயிற்று. இதனால் சோணாட்டின் நீர்வளம் கூறியபடியாம்.

நீர்ப்பறவைகளின் ஆரவாரம்

112 - 119 : கழனிச் செந்நெல் .............. ஓதையும்

(இதன்பொருள்:) கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கில் பழனப் பைம்பூந் தாமரைக் கானத்து - அங்ஙனம் காவிரிப் புதுப்புனல் ஒலியல்லது நீரிறைக்குங் கருவிகளின் ஒலி ஒருபொழுதும் ஒலித்தலில்லாச் சிறப்புடைய கழனிகளிடத்தே செந்நெற்பயிரும் கரும்புகளும் சூழ்ந்த மருதத்து நீர்நிலைப் பரப்பின்கண் செழித்தோங்கிய பூவையுடைய பசிய தாமரைக் காட்டின்கண்; கம்புள் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் கானக்கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் - சம்பங்கோழியும் மிக்கொலிக்கும் குரலையுடைய நாரையும் சிவந்த காலினையுடைய அன்னமும் பசிய காலினையுடைய கொக்கும் கானாங்கோழியும் நீரில் நீந்துமியல்புடைய நிறமிக்க நீர்க் காக்கையும் உள்ளானும் குளுவையும் கணந்துட் புள்ளும் பெருநாரையும் பிறவுமாகிய நீர்ப்பறவைகள் பலவும் செய்கின்ற; வெல் போர் வேந்தர் முனை இடம் போல - வெல்லும் போர்த் தொழிலையுடைய பகையரசர் இருவர் தம்முட் போரிடுதற்கமைந்த போர்க்களத்திலெழும் ஒலிபோல; பல்வேறு குழூஉக் குரல் பரந்த வோதையும் - பலவேறு வகைப்பட்ட கூறுபட்ட ஒலிகள் ஒன்றுகூடிப் பரவிய ஒலியும் என்க.

(விளக்கம்) 13. பழனம் - ஊர்ப் பொது நிலம். 114 - கம்புட் கோழி - சம்பங் கோழி. கனைகுரல் - மிக்கொலிக்கும் குரல்; ஒலிக்கும் குரலெனினுமாம். செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும் என்புழி இயற்கை நவிற்சியும் முரணும் ஆகிய அணிகள் தோன்றி இன்பஞ் செய்தலறிக. கானக் கோழி - இக்காலத்தார் கானாங்கோழி என்பதுமிது. காட்டுக் கோழி எனல் ஈண்டைக்குப் பொருந்தாது. நீர்க் காக்கை நிறக்காக்கை எனத் தனித்தனி யியைக்க. நிறம் - இயல் பென்பாருமுளர். ஊரல் - நீர் மேலூர்தலினால் குளுவைக்கு ஆகுபெயர். புள்ளு - கணந்துட்புள். புதா - பெருநாரை. மரக்கானாரை என்பதுமிது. புதா என்றே பெருங்கதையினும் காணப்படுகின்றது. இதனைப் போதா என்பதன் விகாரம் என்பர் அடியார்க்கு நல்லார். பல்வேறு பறவைகளின் பலவேறு வகைப்பட்ட ஒலிகளும் கூடி ஒலித்தலின் குழூஉக்குரல் என்றார். போர்க்களத்தினும் பல்வேறு மொழி பேசுவோர் ஒலி கூடியொழுத்தலின் முனையிடத்தொலி உவமையாயிற்றென்க. கம்பநாடரும் பல்வேறு மொழிபேசு மாக்கள் கூடியவிடத்தில் பிறக்கும் ஒலிக்கு இங்ஙனமே,

ஆரிய முதலிய பதினெண் பாடையிற்
பூரிய ரொருவழி புகுந்த போன்றன
ஓர்கில கிளவிக னொன்றொ டொப்பில
சோர்வில விளம்புபுட் டுவன்று கின்றது  (பம்பா - 14)

உவமை எடுத்தோதுதலும் நோக்குக.

காவிரி நாட்டின் உணவு வளம்

120 - 126 : உழாஅ ........... ஒலியேயன்றியும்

(இதன்பொருள்:) உழாநுண் தொளி உள்புக்கு அழுந்திய - உழவரால் உழப்படாமல் வழியிடத்தே எருதுகளும் உழவரும் பிறரும் இயங்குதலானே பட்ட நுண்ணிய சேற்றினுட் சென்று அழுந்திச் சேறு படிந்ததும்; கழாஅ மயிர் யாக்கைச் செங்கண் காரான் - உடையவராற் குளியாட்டப்படாத மயிரையுடைய உடம்பையும் சிவந்த கண்களையும் உடையதுமாகிய எருமை; சொரிபுறம் உரிஞ்ச - தனது அச் சேற்றினது உலர்ந்த பொருக்கினையுடைய முதுகினை உராய்தலானே; புரி நெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின் - வைக்கோற்புரி தேய்ந்து அற்றுப் போன அழியாத நெற்கூட்டினின்றும் சரியாநின்ற; கொழும்பல் உணவு - வளவிய பலவேறு வகைப்பட்ட உணவுகளாகச் சமைக்கப்படுகின்ற பழைய; கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய - கவரித் தொங்கல் போன்று விளைந்து கிடக்கின்ற புதிய செந்நெற்கதிரின் மேலே சொரியாநிற்ப; கருங்கை வினைஞரும் களமரும் கூடிநின்று ஒருங்கு ஆர்க்கும் ஒலியே அன்றியும் - அவ்வழியே செல்லும் வழிய கையினையுடைய உழு தொழிலாளரும் வேளாளரும் அந்நிகழ்ச்சியைக் கண்டு மேற்செல்லாமல் அவ்விடத்திலேயே கூடிநின்று ஒருங்கே ஆரவாரிக்கும் பேராரவாரமும் அஃதல்லாமலும் என்க.

(விளக்கம்) உழாஅநுண் தொளி - மாவும் மாக்களும் இயங்கும் வழியிடத்தேயுள்ள குழியில் உண்டான சேறு என்றவாறு. இத்தகைய சேறு மிகவும் நுண்ணிதாயிருத்தல் இயல்பாகலின் நுண்தொளி என்றார். இத்தகைய சேற்றைக் காணின் எருமை பெரிதும் மகிழ்ந்து அதன்கட் படுத்துப் புரளுதல் இயல்பு. அஃது ஆர்வத்துடன் தானே புகுந்து அழுந்திற் றென்பது தோன்ற, தொளியுட்புக்கு அழுந்திய காரான் என்றார். காரான் - எருமை. அதன் வளம் தோன்றச் செங்கட்காரான் என்றார். எனவே அது சேற்றினுட் புக்கழுந்தியது மாட்டாமையாலன்று மகிழ்ச்சியாலோம் என்பது பெற்றாம்.

இனி, அவ்வெருமை எழுந்தபின்னர் அவன் முதுகிற் படிந்த சேறு உலர்ந்து பொருக்கானமையின் சொரிபுறம் என்றார். சொரிபுறம் - பொருக்குடைய முதுகு இதற்குத் தினவையுடைய முதுகு என்பர் பழையவுரையாசிரியரிருவரும், எருமை உராய்தற்குக் காரணம் தினவு அன்று அப்பொருக்கினை உதிர்ப்பதேயாம் என்க. சேற்றில் வீழ்ந்த எருமையை உடையவர் கழுவிவிடுவர். அவை மிகுதியாக விருத்தலின் இது கழுவப்படாது விடப்பட்டது என்பது கருத்து.

காவிரி நாட்டினர் நெல்லை வைக்கோலின் மேலிட்டுப் புரிச் சுற்றிக் கூடு செய்து பாதுகாப்பது வழக்கம். அவ்வழக்கம் இக்காலத்தேயும் உளது.

இத்தகைய நெற்கூட்டினை இக்காலத்தார் நெற்சேர் என்று வழங்குப. 123. குமரிக் கூடு - நுகராது விடப்பட்ட நெற்கூடு. இக்கூடு கழிந்தயாண்டில் விளைந்த நெற்கூடாம். இது குமரிக் கூடாகவே அந்நாடானது உண்டுதண்டா மிகுவளத்தது என்பது பெற்றாம். மற்று அந்த யாண்டின் விளைந்த நெற்கதிர்தானும் பெரிதும் வளமுடைத் தென்பது தோன்ற, கவரிச் செந்நெல் என்றார்.

125. கருங்கை - வலிய கை. கருங்கை வினைஞர் கருங்கைக் களமர் என இருவருக்கும் இயைக்க. தொழில் செய்து வலிமிக்க கை எனவும், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைக்கும் வலிமையுடைய கைகள் எனினுமாம். வினைஞர் என்றது கூலியாட்களை. களமர் - நெற்களத்திற் குரிமையுடைய வேளாண் மாந்தர். வினைஞர் - பறையர் பள்ளர் முதலாயினார் எனவும், களமர் உழவர் கீழ்க்குடி மக்கள் எனவும் அடியார்க்கு நல்லார் கூறுவர். களமர் - உழுகுடி வேளாளர் என்பது அரும்பதவுரை.

கடைசியர் விருந்திற் பாணி

127 - 131 : கடிமலர் .......... விருந்திற் பாணியும்

(இதன்பொருள்:) செங்கயல் நெடுங்கண் சில் மொழிக் கடைசியர் - சிவந்த கயல்மீன் போன்ற நெடிய கண்களையும் சிறுமையுடைய மொழிகளையும் உடைய உழத்தியர்; கடிமலர் களைந்து - இரவிற் சூடிய நறுமணமலர்களை அகற்றி; முடிநாறு அழுத்தி - உழவர் முடிந்து போகட்ட நாற்று முடியின்கண் நாற்றை நறுக்கித் தமது கோண்டையிலே செருகிக் கொண்டு; தொடிவளைத் தோளும் ஆகமும் சேறு தோய்ந்து ஆடும் கோலமொடு வீறுபெறத் தோன்றி - வளைந்த வளையலையுடைய தோளினும் முலையிடத்தும் சேறு தோயப்பெற்ற கோலத்தோடு அழகுறத் தோன்றி; வெங்கள் தொலைச்சிய - வெவ்விய கள்ளைப் பருகித் தொலைத்ததனால் அறிவு மயங்கப்பெற்று; பாடுகின்ற பண்ணொடு பொருந்தாத விருந்தின் பாணியும் - புதுமையுடைய பாட்டொலியும்; என்க.

(விளக்கம்) கடிமலர் - மண முடைய மலர். அம்மலர் கழிந்த இரவிற்றங் கணவரொடு கூடற் பொருட்டுச் சூடப்பட்டதாகலின் அவற்றைக் களைதல் வேண்டிற்று. முடி - நாற்றுமுடி. நாற்று முடியை நறுக்கிக் கொண்டையிலே சூட்டிக் கோடல் உழத்தியர் வழக்கம்.

இனி, தாம் நாற்று நடும் வயலிற் களையாகும் கடிதற்குரிய குவளை தாமரை முதலிய மலர்களைக் களைந்தகற்றி அவ்விடத்தே முடியின்கண் நாற்றை அலகாக்கி அழுத்தி (நட்டு) எனலுமாம். நாற்று நடுங்கால் அவற்றின் தோகை சேற்றை வாரி வீசுதலின் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றி என்றவாறு. தளிர்மேனியில் கரிய சேறு புள்ளிகளாக அமைதலின் அவைதாமும் அழகு செய்தலின் அவ்வழகோடு தோன்றி என்க.

இனி, அடியார்க்கு நல்லார் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடுதல் - களித்து ஒருவர் மேல் ஒருவர் சேற்றை இறைத்துக் கோடல். வீறு பெறத் தோன்றலாவது - முலைமேற் றெறித்த சேறு கோட்டு மண் கொண்டாற் போன்றிருத்தல். வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்-ஏரிய வாயினு மென்செய்யும் - கூரிய, கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலம், கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள்ளாயிரம்) என்றாற் போல என விளக்குவர். சின்மொழி என்புழிச் சின்மை சிறுமையின் மேற்று. இழிந்த மொழி என்றவாறு. சிலமொழி எனலுமாம். இங்ஙனம் உழத்தியர் பாடும் பாட்டினைப் பெருமுளை என்பாருமுளர். பண்ணொடு படாதேயும் தமது குரலினிமையினால் புதுமையுண்டாகப் பாடுதலின் விருந்திற் பாணி என்றார் எனலுமாம்.

ஏர்மங்கலப் பாடல்

132 - 135 : கொழுங்கொடி ........... ஏர்மங்கலமும்

(இதன்பொருள்:) விளங்கு கதிர் கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த விரியல் சூட்டி - பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்ற செந்நெற் கதிரோடே அறுகம்புல்லையும் குவளை மலரையும் விரவித் தொடுத்த மாலையை மேழியிலே சூட்டி; பார் உடைப்பனர்போல் - நிலத்தை இரண்டாகப் பிளப்பவர் போன்று; பழிச்சினர் கைதொழ - கடவுளை வாழ்த்துவோர் வாழ்த்துக்கூறிக் கைகூப்பித் தொழாநிற்ப; ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும் - பொன்னேர் பூட்டிநின்ற உழவர் எருதுகளைத் தூண்டி யோட்டுங்கால் பாடும் ஏர்மங்கலப்பாட்டின் ஆரவாரமும் என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்படும் உழவர் பொன்னேர் பூட்டி உழுபவர், அவர்தாம் கழனிகளை வறலில் (நீர்பாய்ச்சாத கழனி) உழுவது தோன்ற, பார் உடைப்பனர் போல் என்றார். நீர்கால் யாத்த கழனியாயின் பார் கிழிப்பனர் போல் என்பர். உடைப்பனர் போல் என்பது வறலுழுவார்க் கன்றிச் சேற்றில் உழுவார்க்குப் பொருந்தாமையுணர்க. கழனிகளை நீர்பாயாமுன் பலசால் உழுது மண்ணைக் கிளரி வெயிலில் நன்கு உலர்த்துதல் மரபு. அங்ஙனம் உலர்த்திய நிலம் நன்கு பணைத்து விளையும். இதனை,

தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் (குறள் - 1038)

எனவரும் திருக்குறளானும் உணர்க.

பொன்னேர் - ஒருயாண்டின் தொடக்கத்தே உழுதொழிலுக்குக் கால் கொள்வோர் முதன் முதலாக நன்னாளிற் பூட்டும் ஏர் என்க. பொன்னாராகலின் விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி, கடவுளை வாழ்த்துவோர்; வாழ்ந்த உழுவோர் ஏர்பிடித்து நின்றார் என்க. பழிச்சினர் - வாழ்த்துவோர். அவர் உழுவோரின் முதியவர் என்க. ஏர் மங்கலம் - ஏருழுவோர் கடவுளை வாழ்த்திப் பாடும் பாட்டு.

முகவைப் பாட்டு

136 - 137 : அரிந்துகால் ............. முகவைப் பாட்டும்

(இதன்பொருள்:) அரிந்து கால் குவித்தோர் - நெல்லையரிந்து போர்வு செய்தோர்; அரி கடா உறுத்த பெருஞ் செய்ந் நெல்லின் - சூட்டைக் கடாவிடுதல் செய்த பின்னர் அந்நெல்லை முகந்து தூற்றுபவர் பாடுகின்ற; முகவைப்பாட்டும் - முகவைப்பாட்டொலியும் என்க.

(விளக்கம்) கால் - இடம். அரி - அரிந்து போட்ட சூடு; (கூறு). முகவைப்பாட்டு - பொலிபாடுதல். நெல்லின் மிகுதி தோன்றப் பெருஞ் செய்ந்நெல் என்றார். பொலியை முகந்து தூற்றுவார் பாடுதலின் முகவைப் பாட்டு எனப் பெயர் பெற்றது.

கிணைப் பொருநர் பாட்டு

138-139 : தென்கிணை.................இசையும்

(இதன்பொருள்:) தெண்கிணைப் பொருநர் - தெளிந்த ஓசையையுடைய தடாரியினையுடைய கிணைவர்; செருக்குடன் எடுத்த - கள்ளுண்ட செருக்கோடு தோற்றுவித்த; மண் கணை முழவின் மகிழ் இசை ஓசையும் - மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது கேட்டோர் மகிழ்தற்குக் காரணமான இசையினது ஒலியும் என்க.

(விளக்கம்) இது கனவழி வாழ்த்து என்னும் ஒரு புறப்பொருட்டுறை; இதனை, தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்து புகழ் கிளர்ந்தன்று எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் (186)

பகடுவாழ் கென்று பணிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர்

எனவரும் அதன் வரலாற்று வெண்பாவானும் உணர்க.

கிணை - தடாரி - ஒருவகைத் தோற்கருவி.

கோவலன் கண்ணகியிருவரும் கவுந்தியடிகளாரோடு காவிரி நாட்டின்கண் உண்டாகும் பல்வேறு ஒலிகளையும் கேட்டும் பல வேறிடங்களையும் கண்டும் வழிநடை வருத்தந்தோன்றாமல் இனிதே செல்லுதல்.

140 - 141 : பேர்யாற்றுக் ............ கொள்ளார்

(இதன்பொருள்:) பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு - பெரிய அக்காவிரி யாற்றினது நீரடைகரையிலே ஈண்டுக் கூறப்பட்ட இனிய ஒலிகளை முறையே கேட்டு அவற்றின் புதுமையாலே மகிழ்ந்து; ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார் - மேலும் சேன்று அத்தகைய புதுமைகளைக் கேட்க ஆர்வமுறுகின்ற நெஞ்சத்தோடே வழி நடத்தலால் உண்டாகும் துன்பத்தைக் காணாதவராய் என்க.

(விளக்கம்) காவிரிப் பேரியாற்றின் கரைவழியே செல்லும் பொழுது தமக்குப் புதுமையான நீர்ப்பறவைகளின் ஆரவாரமும் பிறவுமாகிய இசைகளைக் கேட்பதனால் நெஞ்சம் பெரிதும் மகிழ்ந்து செல்லுதலின் அவர்க்கு வழிநடை வருத்தம் புலப்படாதாயிற்று. அங்ஙன மாதல் மனத்திற்கு இயல்பு. இதனை, ஒன்றொழித்து ஒன்றையுன்ன மற்றொரு மனமுமுண்டோ எனவரும் கம்பர் மணிமொழியானும் உணர்க.

(119) பரந்த வோதையும், (124) ஆர்க்கும் ஒலியும், (131.) விருந்திற் பாணியும், (135) ஏர்மங்கலமும், (137) முகவைப் பாட்டும் (139) முழவின் மகிழிசை யோதையும், என்னுமிவற்றைப் பேர்யாற்றடைகரை மருங்கே வழிநெடுக நீர்மையுறக் கேட்டலாலே மேலும் வழிச் செலவின் மேல் ஆர்வ நெஞ்சமுடையராய் அவலங் கொள்ளாராய் (155) பன்னாட்டங்கிச் செல்நாள் என மேலே சென்றியையும்.

காவிரி நாட்டின் மங்கல மறையோர் இருக்கை

142 - 147 : உழைப்புலி ............ இருக்கையன்றியும்

(இதன்பொருள்:) புலி உழைக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு - புலியைத் தன்னிடத்தே வரையப்பட்ட கொடியை யுடைய தேரையுடைய ஆற்றல்மிக்க சோழமன்னனுக்கு வெற்றியையும்; மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில் - அவன் நாட்டு வளத்திற்குத் தலைசிறந்த காரணமாகிய மழைக்குச் சூலையும் தோற்றுவிக்கின்ற வேள்வித் தீ விளங்காநின்ற அமரர்க்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியாகிய வேள்விக்களத்திலே; மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை - பார்ப்பனரால் உண்டாக்கப்பட்ட அவியினது நறுமணங்கமழும் புகை; இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து - இறை உயர்ந்த மாடமாளிகையிடமெங்கும் போர்த்தலானே; மஞ்சு சூழ் மலையின் மாணத்தோன்றும் - முகிலாற் சூழப்பட்ட மலைகள் போன்று மாட்சிமையுடன் தோன்றாநின்ற; மங்கல மறையோர் இருக்கை அன்றியும் - உலகிற்கு மங்கலமுண்டாக்கும் அப் பார்ப்பனருடைய இருப்பிடங்களாகிய ஊர்களும் அவைகளே யன்றியும்; என்க.

(விளக்கம்) புலி உழைக்கொடி எனமாறுக. உழை - இடம். புலிக் கொடித்தேர் உரவோன் என்றமையால் சோழமன்னன் என்பது பெற்றாம். சோழமன்னனின் வெற்றிக்கு அவன் செய்யும் அறமே காரணம் என்பார் அறங்களுட் சிறந்த வேள்வியை அவன் கொற்றத்திற்கு ஏதுவாக்கினார். மற்று, மழைக்குக் கருவைத் தோற்றுவிப்பது ஆவுதி நறும்புகை என்றது அப்புகை தானும் நீராவியாகி முகிலாதல் பற்றிக் கூறியவாறு, இனி, வேள்வியறம் மழையை உண்டாக்கும் ஆதலின் மழைக் கருவுயிர்க்கும் ஆவுதி நறும்புகை என மற்றொரு பொருளும் தோற்றி நிற்றல் நுண்ணிதின் உணர்க. இதனால் நீராவியே முகிலாகின்ற தென்னும் பண்டைத் தமிழர் பூதநூலறிவும் புலப்படுதல் உணர்க.

இனி, மறையோர் அமரர்க்கு அவியுணவு சமைக்குமிட மாகலின் வேள்விக்களத்தை அட்டில் என்றார். அட்டில் - மடைப்பள்ளி. இறை - இல்லின துறுப்பினுள் ஒன்று. இக்காலத்தார் இறப்பு என்பர். மறையோரது செல்வச்சிறப்புத் தோன்ற அவர் இருக்கையை இறையுயர் மாடம் என்று விதந்தார். மஞ்சு - முகில். ஆவுதி நறும்புகைக்கு முகில் உவமை. மாடத்திற்கு மலையுவமை. மங்கலம் - ஆக்கம்.

காவிரிப்பாவையின் புதல்வர் பழவிறல் ஊர்கள்

148 - 155 : பரப்புநீர் ............. ஒருநாள்

(இதன்பொருள்:) நீர் பரப்பு காவிரிப்பாவை தன் புதல்வர் - சோழ நாட்டின்கண் புனல்பரப்பும் காவிரி யென்னும் நங்கையின் மக்களும்; இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழ விடை விளைப்போர் - இரவலருடைய சுற்றத்தையும் உலகுபுரக்கும் வேந்தருடைய வெற்றியையும் தாம் செய்கின்ற உழவுத் தொழிலாலே தோற்றுவிப்போருமாகிய வேளாண்மாந்தர் வாழ்கின்ற; பொங்கழி - தூற்றாத பொலியாகிய நெற்குவியல்கள்; ஆலைப் புகையொடும் பரந்து - கருப்பாலையின்கண் பாகு காய்ச்சுவதனால் எழுகின்ற புகையாலே பரக்கப்பட்டு; மங்குல் வானத்து மலையில் தோன்றும் - இருட்சியையுடைய முகில் தவழ்ந்த மலைகளைப்போலத் தோன்றுதற் கிடனான; பழ விறல் ஊர்களும் - பழைய வெற்றியையுடைய ஊர்களும் ஆகிய; ஊர் இடையிட்ட நாடு உடன் கண்டு இவ்விருவகை யூர்களையும் இடையிட்ட காவிரி நாட்டினது கவினெல்லாம் கண்களிக்க ஒருசேரக் கண்டு இனிதே செல்பவர்; காவதம் அல்லது கடவாராகி - ஒருநாளில் ஒருகாவதத் தொலையைக் கடந்து செல்வதன்றி மிகுதியாகச் செல்லாதவராகி; தங்கி - இடையிடையே தங்குதற்கேற்ற ஊர்களிலே தங்கித் தங்கி இளைப்பாறி; பல்நாள் செல்நாள் ஒரு நாள் - இவ்வாறு பலநாள் செல்லாநின்ற நாளிலே ஒருநாள்; என்க.

(விளக்கம்) குடக மலையிற் பெய்தநீரைக் கொணர்ந்து சோழநாட்டிற் பரப்பும் காவிரி என்க. காவிரிநீரி கங்கை நீராதலின் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் எனவரும் பழையவுரை வேண்டா கூறலாம். வாழி அவன்றன் வளநாடு வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவியொழியாப் வாழி காவேரி என்றாங்கு ஈண்டும் அவ்வளநாட்டுழவரைக் காவிரிப் பாவைதன் புதல்வர் என்றார் என்க. இரவார் இரப்பார்க் கொன்றீவர் கரவாது - கைசெய் தூண்மாலையவர் (குறள் - 1035) என்பது பற்றி இரப்போர் சுற்றம் விளைப்போர் என்றார். ஈண்டு விளைத்தல் உணவு முதலியவற்றால் போற்றி வளர்த்தல்; இனி, பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர். அலகுடை நீழலவர் (குறள் - 1034) என்பதுபற்றிப் புரப்போர் கொற்றம் விளைப்போர் என்றார் எனினுமாம். இத்திருக்குறளுக்கு ஆசிரியர் பரிமேலழகர் இரப்போர்.... விளைப்போர் என்னும் இவ்வடிகளையே எடுத்துக் காட்டுதலும் அறிக. படைப்புக் காலந்தொட்டுச் சோழநாடு வெற்றியாற் சிறப்புற்று வருதலான் அதற்குக் காரணமான ஊர்களைப் பழவிறலூர்களும் என்றார். அந்நாடுதானும் கண்டு தண்டாக் கட்கின் பத்ததாகலின் அதன் கவினெல்லாங் காண்டல் அரிதென்பது தோன்ற ஊரிடையிட்ட நாடுடன் கண்டு என்றார்.

« Last Edit: February 23, 2012, 01:50:12 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #16 on: February 23, 2012, 01:49:21 PM »
151 - பொங்கழி - தூற்றாப் பொலி என்பது பழையவுரை. இனி அழி வைக்கோல் என்னும் பொருட்டாகலின் பரிய வைக்கோற் போர்வுகள் ஆலைப்புகை தவழப் பட்டு மங்குல் வானத்து மலையிற் றோன்றும் எனக் கோடலே நேரியவுரையாம். ஆலை - கரும்பு பிழியும் பொறி. அதன்கட் கருப்பம்பாகு காய்ச்சுதலாலெழும் புகையை ஆலைப்புகை என்றார். அப்புகை முகில்போற் றிரளும் என்பதனால் அதன் மிகுதி கூறினாராயிற்று. இவர்தாமும் இதுகாறும் நடை மெலிந்தோரூர் நண்ணி யறியாராகலின் அரிதின் நடந்து காவதமே கடப்பாராயினர். பன்னாட்டங்கி என்றது வழிநடையா லிளைப்புற்ற விடத்திலெல்லாம் தங்கி என்பதுபட நின்றது.

சாரணர் வருகை

156 - 163 : ஆற்றுவீ ............ சாரணர் தோன்ற

(இதன்பொருள்:) ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகிக் குரங்கு அமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து - அக்காவிரிப் பேரியாற்றை நடுவிருந்து மறைக்கின்ற திருவரங்கத்தின் பக்கலிலே தனித்தனியாக வளைந்த மூங்கில் வேலியாற் சூழப்பட்ட மரம்பயில் அடுக்கத்து மாவும் பலாவு முதலிய பயன்மிகு மரங்கள் மிகுந்த செறிவினூடே; வானவர் உறையும் பூநாறு ஒருசிறை - தேவர்களும் தங்கியிருத்தற் கவாவும் மலர்மணம் கமழாநின்ற ஓரிடத்தே; பட்டினப்பாக்கம் பெரும் பெயர் ஐயர் ஒருங்கு உடன் இட்ட இலங்கு ஒளிச் சிலாதல மேலிருந்தருளி - வான் பெரு மன்றத்துப் பிண்டி நீழற்கண்ணே உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய சமயத் தலைவர்கள் பலரும் ஒருங்குகூடிச் சாரணர் வரூஉந் தகுதியுண்டாநெனக் கருதி இட்டு வைத்த ஒளிதிகழ்கின்ற சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின்மீ தமர்ந்தருளி; பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர் - அருகக் கடவுளாற் செய்யப்பட்ட மூன்றுவகை அதிசயங்களும் தப்பாத மெய்ந்நூலின்கண் அமைந்த அறிவொழுக்கங்களை யாவரும் கேட்டுணரும்படி திருவாய்மலர்ந்தருளுகின்ற சாரணர்; பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா தோன்ற - அப்பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி வந்து கவுந்தியடிகள் முதலிய இவர்கள்முன் தோன்ற என்க.

(விளக்கம்) இதன்கண் கூறியது - கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரை நோக்கிக் காவிரியின் வடகரை வழியே செல்பவர் திருவரங்கத்தின் மருங்கே சென்றனராக. அப்பொழுது அவ்வடகரையிலுள்ள அழகிய ஒரு பூம்பொழிலிடத்தே அவர் முன் சாரணர் வந்து தோன்றினர். அச்சாரணர் தாம் யாவரெனின் பட்டினப்பாக்கத்தே வான்பெரு மன்றத்தே பொலம்பூப் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉந் தகுதியுண்டாமென உலக நோன்பிகள் ஒருங்குடனிட்ட இலகொளிச் சிலாதல த்தின் மேலிருந்து அறங்கூறுஞ் சாரணரே யாவர் என்றவாறு. அச்சாரணர் அப்பட்டினப் பாக்கத்தை விட்டு வேறிடங்களுக்கு அறங்கூறச் செல்பவர் கவுந்தியடிகள் முதலியோர் முன் தோன்றினர் என்றவாறு.

154 - ஆற்றுவீ யரங்கம் - காவிரியாற்றினிடைக் கிடந்த மலர்மிக்க திருவரங்கம் எனினுமாம். அரங்கம் என்பது ஆற்றிடைக் குறையே யாயினும் அவ்வரங்கத்தின் இருபுறமும் அமைந்த கரைகளும் ஆகுபெயரான் அரங்கம் என்றே கூறப்படும், ஆகவே, இவர்கள் காவிரியின் வட கரையிலே அரங்கத்தின் மருங்கே செல்லும்பொழுது வடகரையிடத்தே பூநாறுமொரு சிறை சாரணர் தோன்றக் கண்டனர் என்பது கருத்தாகக் கொள்க. அரங்கம் என்றது திருவரங்கத்தை.

156 - வீற்று வீற்றாக என்பது வேறுவேறாக என்னும் பொருட்டு. இதற்கு இப்பொருள் கொள்ளாமல் வீறு என்பதற்கு மற்றொன்றற்கில்லாத சிறப்பு என்னும் பொருளுமுண்மையின் அடியார்க்குநல்லார் வேறிடத்தில்லாத தன்மைத்தாய் எனப் பொருந்தாவுரை கூறினர். என்னை, வீற்று வீற்றாம் என்னும் அடுக்கிற்கு அப்பொருள் பொருந்தாமை யுணர்க. இனி, காவிரி முதலிய யாற்றின் படுகரிலே தனித் தனியாக வேலிகோலப்பட்ட சோலைகள் உளவாதலை இக்காலத்தும் காணலாம். இங்ஙனம் தனித்தனியே அமைந்த சோலையையே ஈண்டு ஆற்று வீயரங்கத்து (மருங்கில்) வீற்று வீற்றாகி (தனித்தனியே) குரங்கமை உடுத்த அடுக்கத்து (ஒன்றன்கண்) பூநாறொரு சிறை.... சாரணர் என்புழி அடிகளார் கூறினர் என்றுணர்க.

157 - குரங்கமை உடுத்த அடுக்கம் மரப்பயிலடுக்கம் எனத் தனித் தனி கூட்டுக. குரங்கமை - வளைந்த மூங்கில். இங்ஙனம் கூறுதலே அமையும். வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப்பட்ட வேலி என்னல் மிகை; மூங்கில் வேலி எனவே அமையும் என்க. 158 - வானவர் உறையுந்தகுதியையுடைய சிறை; பூநாறு சிறை எனத் தனித்தனி யியையும். 160 -பெரும் ஐயர் என்றது உலக நோன்பிகளுள் வைத்துப் பெரிய புகழையுடைய தலைவர்களை. இவர்கள் நன் முயற்சியாலே இடப்பட்ட சிலாதலம் என்க.

162 - அதிசயம் - சகசாதிசயம் , கர்ம சயாதிசயம், தெய்விகாதிசயம் என மூன்று வகைப்படும் என்ப. வாய்மை - மெய்ந்நூல். அஃதாவது ஈண்டு ஆருகத சமயவாகமம். 163. தருமம் - நல்லொழுக்கம்.

சாரணர் பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி ஈண்டு வந்து இவர் முன்தோன்ற என்க. சாரணர் - சமணத்துறவிகளுள் யாண்டுஞ் சென்று தமது சமயத்தைப் பரப்பும் நற்றொண்டினை மேற்கொண்டவர். அவர், தல சாரணர், சல சாரணர், பல சாரணர், புட்ப சாரணர், தந்து சாரணர், சதுரங்குல சாரணர், சங்க சாரணர், ஆகாச சாரணர் என எண்வகைப் படுவர் என்ப.

கவுந்தியடிகள் முதலிய மூவரும் சாரணத் தலைவனை வணங்குதல்

164 - 169 : பண்டைத் தொல்வினை ............. கொள்ளான்

(இதன்பொருள்:) கண்டு அறி கவுந்தியொடு - அறங்கூறும் அச்சாரணர் வருகையைக் கண்கூடாகக் கண்டறிந்த கவுந்தி அடிகளாரோடு கோவலனும் கண்ணகியும்; பண்டைத் தொல்வினை பாறுக என்று - யாம் முன்செய்த பழவினை யெல்லாம் கெட்டொழிக என்னும் கருத்துடையராய்; காலுற வீழ்ந்தோர் அச்சாரணர் திருவடியிலே தம் முடிதோய வீழ்ந்து வணங்கினாராக அங்ஙனம் வணங்கியவர்; வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும் - அங்கு வருதற்குரிய அவர்தம் பழவினையையும் அவ்வினை மேலும் அவர்க்கு ஊட்டும் துன்பங்களையும், அச்சாரணருள் வைத்துத் தலைவன் விளங்கிய கோட்பாட்யுடைடைய தனது அவதி ஞானத்தாலே நன்கு தெரிந்தவனாயினும்; ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய வீரனாகலின் - விருப்பும் வெறுப்பும் தன்னை விட்டுப் போகும்படி துவர நீக்கிய ஆண்மையாளனாகலின்; விழுமம் கொள்ளான் - அவர்க்குத் தான் வருந்தானாகி என்க.

(விளக்கம்) கவுந்தியொடு கோவலனும் கண்ணகியும் சாரணர் காலுற வீழ்ந்து வணங்கினர் என்க. காலுற வீழ்ந்தோர், பெயர். வீழ்ந்தோராகிய கோவலனும் கண்ணகியும் என்க. காரணம் - அவர் முற்பவத்தே செய்த வினையும் அதன் செயலும். எல்லாம் ஊழின்படியே நிகழ்தலின் அங்ஙனம் நிகழ்தலியற்கை என்று கண்டு அவர் இப்பொழுது எய்தும் துயர்க்கும் இனி எய்த விருக்கும் துயர்க்கும் தம் அருள்காரணமாக வருந்துதலே இயல்பாகவும் தமது மெய்யுணர்வு காரணமாக அவலங் கொள்ளாராயினர் என்பது கருத்து. ஆர்வமும் செற்றமும் நீக்கிய வீரனாகலின் அவற்றின் காரியமாகிய வேண்டுதலும் வேண்டாமையும் இலனாய் விழுமம் கொள்ளானாயினன் என்பது கருத்து. சாரணருள் வைத்துத் தலைவன் காலுற வீழ்தலின் முன்னர்ச் சாரணர் தோன்ற என்றவர், ஈண்டுச் சிந்தை விளக்கிற் றெரிந்தோன் என்றும் விழுமம் கொள்ளான் என்றும் ஒருமைப் பாலாற் கூறினர். சிந்தை விளக்கு என்றது - அவதிஞானத்தை. அஃதாவது முக்கால நிகழ்ச்சியையும் அறியும் அறிவு.

சாரணத் தலைவர் கவுந்தியடிகட்குக் கூறுதல்

170 - 175 : கழிபெரு ......... உயிர்கள்

(இதன்பொருள்:) கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி - (கோவலனும் கண்ணகியும் அறியாவண்ணம் அச்சாரணத் தலைவன் கவுந்தி அடிகளாரை நோக்கி அவர் குறிப்பாக வுணருமாறு) மிகவும் பெரிய தவச்சிறப்பினையுடைய கவுந்தியே! வல்வினை ஒழிக என ஒழியாது ஊட்டும் - முற்செய்த வலிய பழவினையானது எத் தகையோரானும் ஒழிக்க ஒழியாததாய்த் தன் பயனை நுகர்விக்கும் என்னும் வாய்மையினையும்; இட்டவித்தின் எதிர்ந்து வந்து எய்தி - மேலும் அப்பழவினை தானும் விளைநிலத்திட்ட வித்துப் போலத் தான் செவ்விபெற்றுழி உருத்துவந்து தனது பயனை; ஒட்டுங்காலை - ஊட்டுதற்கு முந்துறும் பொழுது; ஒழிக்கவும் ஒண்ணா - அதனை எத்தகைய சூழ்ச்சியானும் தவிர்க்கவும் முடியாது என்னும் வாய்மையினையும்; காணாய் - இவர்கள் வாயிலாய்க் காட்சி யளவையான் கண்டு கொள்ளக்கடவாய்; கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன உடம்பிடை நில்லா உயிர்கள் - கடிய காற்றையுடைய நெடிய வெளியிடத்தே ஏற்றி வைத்த விளக்குப் போன்று ஞெரேலென அப்பழவினை வந்து மோதியபொழுது அவிந்தொழிவதன்றித் தாம் எடுத்த உடம்போடு கூடி நிற்க மாட்டாவாம்; என்றான் என்க.

(விளக்கம்) ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை என்றது முன்னர்க் கவுந்தியடிகளார் கோவலனை நோக்கி உரியதன்று ஈங்கு ஒழிக என்று அறிவுறுத்ததனையும் அதுகேட்டும் அவர் ஒழியாராயினமையும் சிந்தை விளக்கிற் றெரிந்து உலகியன் மேலிட்டோதிய படியாம். வல்வினை என்றது ஒழிகென என்றமையால் கொடிய தீவினை என்னும் பொருட்டாய் நின்றது. என்னை? நல்வினை வந்தூட்டுங் காலை ஒழிகென்பார் யாருமிலர் ஆகலின் என்க.

கழிபெருஞ் சிறப்புடைய தவத்தோர் ஒழிக எனினும் ஊழ்வினை ஒழியாதென்பது தோன்றுதற் பொருட்டு முன்னர் ஒழிக என்ற கவுந்தியைக் கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி! என்று விளித்த படியாம். இனி, இட்ட வித்தின் எதிர்ந்து வந்து ஒட்டுங்காலை அவ்வினையைச் செய்தவர் பிறிதொரு சூழ்ச்சியான் ஒழிக்கவும் ஒண்ணா என்பது கருத்தாகக் கொள்க, ஈண்டு.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்  (380)

எனவரும் திருக்குறளும்,

உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா  (பழவினை -4)

எனவரும் நாலடியும் நினைவுகூர்தற் குரியனவாம்.

இனி, கோவலன் கொலையுண்ணலும் கவுந்தியடிகள் உண்ணா நோன்பின் உயிர்பதிப் பெயர்த்தலும் சிந்தை விளக்கிற் றெரிந்தமையால் அவற்றை வெளிப்பட வுரையாது குறிப்பாக கடுங்கால் நெடு வெளியிடும் சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் எனப் பன்மையாலுலகின் மேலிட்டோதினன் என்க.

இனி, வல்வினை என்பது நல்வினை தீவினை என்னும் இரண்டற்கும் பொதுவாகக் கொள்வாருமுளர்.

விளக்கு உவமித்தார் : நினைவற அழிவதற்கும், புக்குழிப் புலப் படாமைக்கும்; என்பர் அடியார்க்கு நல்லார்.

அருகக் கடவுளின் மாண்பும் ஆகமத்தின் சிறப்பும்

176 - 191 : அறிவன் ............ பொதியரை யோரென

(இதன்பொருள்:) அறிவன் - இயல்பாகவே எல்லாப் பொருளையும் அறியும் வாலறிவினையுடையோனும்; அறவோன் - அறஞ் செய்தலையே தொழிலாக வுடையோனும்; அறிவு வரம்பு இகந்தோன் - யாவர் அறிவிற்கும் அப்பாற்பட்டவனும்; செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இன்பமாயிருப்பவனும்; சினேந்திரன் - எண்வகை வினைகளை வென்றவனும்; சித்தன் - செய்யக்கடவ வெல்லாம் செய்து முடித்தவனும்; பகவன் - முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்பவனும்; தரும முதல்வன் - அறங்கட்கெல்லாம் காரணமானவனும்; தலைவன் - எல்லாத் தேவர்க்கும் தலைவனானவனும்; தருமன் - அறவாழி அந்தணனும்; பொருளன் - மெய்ப்பொருளானவனும்; புனிதன் - தூயவனும்; புராணன் - பழையவனும்; புலவன் - யாவர்க்கும் அறிவாகவுள்ளவனும்; சினவரன் - வெகுளியைக் கீழ்ப்படுத்தியவனும்; தேவன் - தேவர்க்கெல்லாம் முதல்வனும்; சிவகதி நாயகன் - வீட்டுலகிற்குத் தலைவனும்; பரமன் - மேலானவனும்; குணவதன் - குணவிர தங்களையுடையவனும்; பரத்தில் ஒளியோன் - மேனிலையுலகில் ஒளிப்பிழம்பானவனும்; தத்துவன் - மெய்யுணர்வானவனும்; சாதுவன் - அடக்கமுடையோனும்; சாரணன் - வானத்தே வதிபவனும்; காரணன் - உயிர்கள் வீடுபேற்றிற்குக் காரணமானவனும்; சித்தன் - எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்றவனும்; பெரியவன் - எல்லாவற்றானும் பெரியவனும்; செம்மல் - பெருந்தகை யுடையோனும்; திகழ் ஒளி - விளங்குகின்ற அறிவு ஒளியாயிருப்பவனும்; இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்; குறைவு இல் புகழோன் - எஞ்ஞான்றும் குறையாத புகழையுடையோனும்; குணப்பொருட் கோமான் - நற்குணங்களாகிய செல்வத்தையுடையவனும்; சங்கரன் - இன்பஞ் செய்பவனும்; ஈசன் - செல்வனும்; சுயம்பு - தானே தோன்றியவனும்; சதுமுகன் - எத்திசையையும் ஒருங்கே காண்பவனும்; அங்கம் பயந்தோன் - அங்காகமத்தை அருளிச் செய்தவனும்; அருகன் - யாவரானும் வழிபடப்படுபவனும்; அருள் முனி - யாவர்க்கும் வீடு நல்கும் முனைவனும்; பண்ணவன் - கடவுளும்; எண்குணன் - எட்டுக் குணங்களையுடையவனும்; பாத்து இல் பழம்பொருள் - பகுத்தற்கரிய முழுமுதலானவனும்; விண்ணவன் - அறிவு வெளியிலிருப்பவனும்; வேதமுதல்வன் - மூன்றாகமங்கட்கும் ஆசிரியனும்; விளங்கு ஒளி - மெய் விளங்குதற்குக் காரணமான ஒளியாயிருப்பவனும், ஆகிய அருகப்பெருமான்; ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது - அருளிச்செய்த ஆகமமாகிய விளக்கொளியைப் பெற்றாலல்லது; பிறவிப் பொதியறையோர் - பிறவியாகிய சிறையிடைப்பட்ட மாந்தர்; போதார் - அதனினின்றும் வீடுபெறுதல் இலர் என - என்று செவியறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) 176 - அறவோன் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுபவன். 177 - செறிவான் - அலைவில்லாதவன் எனினுமாம். எண்வகை வினைகளாவன - ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயம் எனுமிவை. சித்தன் - கன்மங்களைக் கழுவினவன் என்றுமாம்.

178 - முதல்வன் - காரணன், 179 - ஆகமத்தின் பொருளாயுள்ளவன் எனினுமாம். 180-சிவகதி-வீடுபேறு. 181-குணவதன் என்புழி வதம் - விரதம். அவை அநுவிரதம், குணவிரதம், சிக்கை விரதம் என மூவகைப்படும். அவற்றுள்: குணவிரதம் - திக்குவிரதம், தேசவிரதம், அநர்த்த தண்ட விரதம் என மூன்று வகைப்படும் என்ப. 181 - பரத்தில் - மேனிலை உலகின்கண். 183- சித்தன் - எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கினவன் என்பாருமுளர். 186 - சயம்பு - ஓதாதுணர்ந்தவன் என்றவாறு.

188 - எண்குணமாவன: அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த தரிசனம், அநந்த சுகம், நிர்ந்நாமம், நிராயுஷ்யம், அழியா வியல்பு என்னுமிவை. பாத்து - பகுப்பு, பாத்தில் பழம் பொருள் - ஓட்டமற்ற பொன்னை யொப்பான் என்றுமாம். 189. அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என ஆகமம் மூன்று வகைப்படும்.

191 - பிறவியாகிய பொதியறை என்க. பொதியறை - புறப்படற்குரிய வாயிலுமில்லாத அறை. இதனைப் புழுக்கறை என்றும் கூறுப.

சாரணர் அறவுரை கேட்ட கவுந்தியடிகளார் மகிழ்ந்து கூறுதல்

192 - 208 : சாரணர் ........... இசைமொழி யேத்த

(இதன்பொருள்:) சாரணர் வாய்மொழி கேட்டு - இங்ஙனம் அருளிச்செய்த சாரணப் பெரியார் மெய்ம்மொழியைக் கேட்ட; தவமுதல் கவுந்திகை - தவவொழுக்கத்திற்குத் தலைசிறந்த முதல்வியாகிய கவுந்தியடிகளார் அன்பினாலே நெஞ்சம் நெகிழ்ந்து; தன் கை தலைமேற் கொண்டு - தம் கைகளைக் குவித்துத் தலைக்கு மேலேறக் கொண்டு நின்று கூறுபவர்; ஒரு மூன்று அவித்தோன் ஓதிய திருமொழிக்கு அல்லது என் செவியகம் திறவா - பெரியீர்! காமவெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் துவரக் கெடுத்தவனாகிய இறைவனால் அருளிச் செய்யப்பட்ட மெய்யறிவாகிய திருமொழியைக் கேட்பதற்கல்லது, பிறரால் ஓதப்பட்ட மயக்குரைகளைக் கேட்டற்கு அடிச்சியேனுடைய செவிகள் திறக்கமாட்டாவாம்; என் நா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாமமல்லது நவிலாது - அடிச்சியேனுடைய நாவானது காமனுடைய செயலை வென்றவனாகிய அக்கடவுளுக்கியன்ற ஓராயிரத்தெட்டுத் திருப்பெயர்களைத் தழும்ப வோதிமகிழ்வதல்லது பிறிதொரு கடவுளின் பெயரை ஒருபொழுதும் ஓதமாட்டாது; என் கண் ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா - அடிச்சியேனுடைய கண்கள் தாமும் ஐம்பொறிகளையும் அடர்த்து வென்றவனாகிய நங்கள் அருகக்கடவுளுடைய திருவடிகளைக் கண்டு களிப்பதல்லது; பிறிதொரு கடவுளின் அடியிணை என் கையகத்தே வந்திரு பினும் காணமாட்டாவாம்; என் பொருள் இல் யாக்கை அருள் அறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லது பூமியில் பொருந்தாது - அடிச்சியேனுடைய பயனற்ற யாக்கையானது அருள் என்னும் தலையாய அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட அக்கடவுளுடைய உருவத் திருமேனியை வணங்கற் பொருட்டன்றிப் பிறிதொரு கடவுளை வணங்கற்கு நிலத்தின்கண் பொருந்தாது; அருகர் அறவோன் அறிவோற்கு அல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா - ஆருகதத் துறவோர்க்கு அறத்தைக் கூறுவோனாகிய அவ்வாலறிவனைத் தொழுதற் பொருட்டன்றி அடிச்சியேனுடைய இருகைகளும் தம்முட் கூடித் தலைமேலே ஒருங்கே குவியமாட்டாவாம்; என் தலைமிசை உச்சிதான் மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது அணிப் பொறாஅது - அடிச்சியேனுடைய தலையினுச்சி தானும் தாமரைப் பூவின்மீதே நடந்தவனாகிய அக்கடவுளுடைய மலர்போன்ற அழகிய திருவடிகளை அணிகலனாக அணியப் பொறுப்பதல்லது பிறிதோரணிகலனையும் அணியப் பொறுக்கமாட்டாது; என்மனம் இறுதியில் இன்பத்து இறைமொழிக்கு அல்லது மறுதர ஓதி புடை பெயராது - அடிச்சியேனுடைய நெஞ்சமானது கடையிலா வின்பத்தையுடைய நம் மிறைவன் திருவாய் மலர்ந்தருளிய ஆகமங்களைப் பன்முறையும் ஓதி ஓதி இன்பத்தாலே நெகிழ்வதல்லது; எஞ்ஞான்றும் பிற சமயநூல்களை ஓதி நெகிழமாட்டாது; என்று அவன் இசை மொழி ஏத்த - என இவ்வாறு கூறி அவ்வருகக் கடவுளுடைய புகழையுடைய மொழிகளாலே அக்கடவுளை வாழ்த்தா நிற்ப; என்க.

(விளக்கம்) 193 - காவுந்திகை - கவுந்தியடிகள். காவுந்தியும் எனப் பாடந் திருத்துவாருமுளர். 194 - ஒரு மூன்று - காம வெகுளி மயக்கம்: ஈண்டு,

காம வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்  (குறள் - 310)

எனவரும் திருக்குறள் நினைக்கப்படும்.

196. காமத்தின் குறும்பு தன்பா னிகழாமற் செய்தலையுட் கொண்டு காமனை வென்றோன் என்றோதியபடியாம்.

198 - ஐவர் - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகள்-இகழ்ச்சியால் அஃறிணை உயர்திணையாயிற்று. ஐந்தவித்தான் என வரும் திருக்குறளை ஒப்பு நோக்குக.

199. கடவுட் டொழுது வரமிரப்போர் கண்முகிழ்த்து இருகையும் விரித்துநின்று இரப்பரன்றே? அங்ஙனம் விரிந்த கையகத்து வேறு கடவுள் தன் திருவடியை வலிய வந்து வைப்பினும் அவற்றையும் என்கண் காணா என்றவாறு.

200. அருளறம் பூண்டோன் - அருகன். திருமெய் என்றது ஈண்டுத் திருக்கோயிலிலுள்ள இறைவனது உருவத் திருமேனியை,

201. பொருள் இல் யாக்கை - பொய்ப் பொருளானியன்ற - யாக்கை எனினுமாம். வணங்கற் பொருட்டுப் பூமியிற் பொருந்தாது என்க.

202 - அருகர், ஈண்டு ஆருகதத் துறவோர், அறிவோன் - அறிவுடையவன்.

207. மறுதர வோதுதல் - மீண்டு மீண்டு ஓதுதல். 208 - அவன் - அவ்விறைவன்.

சாரணர் கவுந்தியை வாழ்த்தி வான்வழிப் போதலும்
கவுந்தி முதலியோர் அவணின்றும் போதலும்

208 - 213 : கேட்டதற்கு .......... போந்து

(இதன்பொருள்:) கேட்டு அதற்கு ஒன்றிய மாதவர் - கவுந்தி கூறிய இசைமொழியைக் கேட்டு அக் கேள்வியாலே ஒருமையுற்ற மனத்தையுடைய பெரிய தவத்தையுடைய அச்சாரணர்; உயர்மிசை ஓங்கி ஒருமுழம் நிவந்து ஆங்கு - அவர்கள் இருந்தறங்கூறிய உயரிய அம்மேடையினின்றும் தமது தவவாற்றலாலே ஒரு முழம்வானத்தே உயர்ந்து அவ்விடத்தேயே நின்று; கவுந்தி பவந்தரும் பாசம் கெடுக என்று - கவுந்தியே! நினக்குப் பிறப்பைத் தருகின்ற பற்றறுவதாக! என்றுகூறி வாழ்த்திப் பின்னர்; நீள்நிலம் நீங்கி அந்தரம் ஆறாப் படர்வோர் - நெடிய நிலத்தின் மேலதாகிய வழிமேற் செல்லுதலைத் தவிர்த்து வான்வழியே செல்லாநிற்ப அங்ஙனம் செல்கின்ற சாரணர் போந்திசை நோக்கி; தொழுது பந்தம் அறுக எனப் பணிந்தனர் போந்து - கை குவித்துத் தொழுது நுந் திருவருளாலே எளியேங்கள் பற்றற்றொழிவதாக! என வேண்டிப் பின்னர் நிலத்தின்மிசை அத்திசை நோக்கி வீழ்ந்து வணங்கியவராய்க் கவுந்தி முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் போந்து என்க.

(விளக்கம்) 208 - இசை மொழி ஏத்தக் கேட்டு அம் மொழிக்கு ஒன்றிய மாதவர் என்க. மொழிக்கு ஒன்றுதலாவது - இசை மொழிக்குப் பொருளாகிய இறைவனோடு கலத்தல். என்றது, கவுந்தியடிகள் இறைவன் இசைமொழி கூறுங்கால் அப்பொருளோடொன்றிச் சாரணர் மெய்ம் மறந்து தியான நிலையை எய்தி விட்டனர் என்றவாறு. அவ்வாறு நிகழ்தல் இறையன்பு மிக்கார்க்கியல்பு. 209 - உயர் மிசை சிலாவட்டம் - கல்லாலியன்ற உயர்ந்த மேடை உயிர்மிசையினின்றும் ஒரு முழம் ஓங்கி நிவந்து நின்று என்க. ஓங்கிப் பின் நிவந்து அந்தரம் ஆறாப்படர்வோர் எனினுமாம். படர்வோர் - பெயர். 213 - பந்தம் பற்று. மேற் பவந்தரு பாசம் என்றதை வழிமொழிந்தபடியாம். பந்தம் அறுகென - என்றது அதுவே யாம் வேண்டும் வரமுமாம் என்பது பட நின்றது. என்னை?

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்  (குறள் - 362)

என்பது தமிழ் மறையாகலின்.

கோவலன் முதலியோர் ஓடமேறிக் காவிரியின் தென்கரை சேர்தல்

214 - 218 : காரணி ............. இருந்துழி

(இதன்பொருள்:) கார் அணி பூம்பொழில் காவிரியாற்று நெடுந்துறை நீரணி மாடத்து - முகிலை அணிந்த அழகிய பொழிலை யுடைய அக்காவிரி மாற்றினது நீண்டதொரு ஓடத்துறையின்கண் பள்ளி யோடத்திலேறி; மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் - காதன்மிக்க கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளும் ஆகிய மூவரும் அக் காவிரியாற்றைக் கடந்துபோய்; தீதுதீர் நியமத் தென்கரை எய்தி - தன்னை வலம்வந்து கைதொழுவார் தம் தீவினையைக் கெடுக்கும் சிறப்புடைய திருக்கோயிலையுடைய தென்கரையைச் சென்றெய்தி; ஓர் போதுசூழ் கிடக்கைப் பூம்பொழில் இருந்துழி - ஆங்குள்ளதொரு மலர்கள் சூழ்ந்து கிடக்கின்ற பூம் பொழிலிடத்தே சென்று இளைப்பாற விருக்கின்ற பொழுது என்க.

(விளக்கம்) 214. பொழிலினது வளம் தெரிப்பார் காரணி பூம்பொழில் என்றார். 215 - பேர்யாற்று நெடுந்துறையில் நீரணி மாடத்திலேறி யாற்றைக் கடந்து போய்த் தென்கரை எய்தி என்க. 217 - தீது - வலம் வந்து தொழுவார்தம் தீவினை. நியமம் - கோயில். நியமம் கூறினார் அதுதானும் நாட்டு மக்கள் வந்து நீராடும் பெருந்துறை என்றற்கு.

216. மாதர் காதல் என்னும் பொருட்டாகலின் அப்பண்பிற் றலைசிறந்தவள் என்பது நினைவூட்டற் பொருட்டு வாளா கண்ணகி என்னாது மாதரும் என்றார். அவளது பெருந்தகைமைக்கேற்ப ஊழாற் கூட்டுவிக்கப்பட்ட வழித்துணையின் மாண்பையும் ஈண்டும் நம்மனோர்க்கு நினைவூட்டுவார் வாளா கவுந்தியும் என்னாது மாதவத் தாட்டியும் என்றார். என்னை? அவரது துணைச் சிறப்பு அடுத்துத் தானே விளங்குமாகலின் என்க. மற்றுக் கோவலனுக்குக் கண்ணகிக்குக் கணவனாம் சிறப்பொன்றுமே உண்மையின் அவனையும் அச்சிறப்புத் தோன்றக் கணவனும் என்றோதினர்.

வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும்

219 - 224 : வம்பப்பரத்தை ...... வினவ

(இதன்பொருள்:) வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் - புதுவதாகப் பரத்தமைத் தொழிலில் புகுமொரு பரத்தைமகளும் அவளைக் காமுற்றழைத்தேகும் வறுமொழியாளனாகிய கல்லாக் கயமகன் ஒருவனும் கண்ணகி முதலியோர் இளைப்பாற விருந்த நறுமணம் பரப்புமப் பூம்பொழிலிற் புகுந்து அவர்க்கு அணுக்கராய்ச் சென்றவர்; ஈங்குக் காமனும் தேவியும் போலும் இவர் ஆர் எனக் கேட்டு அறிகுவம் என்றே - இவ்விடத்தே வந்திருக்கின்ற காமவேளையும் அவன் மனைவியாகிய இரதிதேவியையுமே ஒக்கின்ற பேரழகு வாய்ந்த இவர்தாம் யார் என்று கேட்டு அறியக்கடவேம் என்று தம்முட் கூறிக்கொண்டு, அடிகளாரை நோக்கி; நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் ஆற்றுவழிப்பட்டோர் ஆர் என வினவ - விரதங்களை மேற்கொண்டு பட்டினிவிட் டுண்ணுதலாலே உடம்பு மெலிந்த துறவியீரே! நும்மோடு கூடி வழிவந்த இவர்தாம் யாரோ என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வம்பப் பரத்தை - புதுவதாகப் பரத்தமைத் தொழிலிற் புகுந்த பரத்தை என்க. எனவே இளம்பரத்தை என்பதுமாயிற்று. வறுமொழி - பயனில்லாத மொழி. வறுமொழியாளன் - எனவே கல்லாக் கயமகன் என்றாராயிற்று.

220. குறுகினர் - குறுகி - ஏதிலார்பால் குறுகிச் செல்லுதலும் ஒரு கயமைத் தன்மை. அவர் கடிந்து ஒதுக்குமளவில் கண்ணகி முதலியோர்க்கு அணுக்கராய்ச் சென்றனர் என்பார், குறுகினர் சென்றோர் என்றார்.

223. நோற்றுண்டலால் பயன் யாக்கை நொசிதலேயன்றிப் பிறிதொன்றுமில்லை என்னும் கருத்துத் தோன்றுமாறு, நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர் என்றான். யார் - ஆர் என மருவிற்று.

கவுந்தியடிகள் வறுமொழியாளனையும் வம்பப்பரத்தையையும் சபித்தல்

224 -234: என்மக்கள் ............. பட்டதை யறியார்

(இதன்பொருள்:) கண்ணகியையும் கோவலனையும் மிகைப்பட அணுகிநின்று இவ்வாறு தம்மை வினவிய அவ்விருவரையும் நோக்கி அடிகளார்; இவர் எம்மக்கள் காண்மின்! மானிட யாக்கையர் - நீவிர் கூறிய காமனும் இரதிதேவியும் அல்லர். இவர்தாமும், மக்கள் யாக்கை உடையர் ஆதல் கண்டிலிரோ? அதுநிற்க அவர்; பரிபுலம்பினர் - வழிவந்த வருத்தத்தால் பெரிதும் இளைப்புற்றிருக்கின்றனர்; பக்கம் நீங்குமின் - ஆதலால் அவரை அணுகி வருத்தாதே கொண்மின்; அவர் பக்கலினின்றும் விலகிப் போமின் என்று கூறாநிற்ப; அதுகேட்ட அவ்விருவரும், கற்று அறிந்தீர் உடன்வயிற்றோர்கள் ஒருங்கு உடன்வாழ்க்கை கடவதும் உண்டோ என - நூல்களையுங் கற்று அவற்றின் பயனையும் அறிந்த பெரியீரே! ஒரு தாய் வயிற்றில் உடன்பிறந்தவர்தாம் கொழுநனும் மனைவியுமாய் ஒருங்குகூடி வாழக்கடவது என்று நீர் கற்ற நூல்களிற் சொல்லிக் கிடப்பதும் உண்டோ? உண்டாயின் சொல்லுக! என்று கூறி அடிகளை இகழாநிற்ப; கண்ணகி தீ மொழி கேட்டுச் செவி அகம் புதைத்துக் காதலன் முன்னர் நடுங்க - கண்ணகி நல்லாள் இவ்விகழ்ச்சி மொழியைக் கேட்டலாலே தன் செவிகளைக் கையாற் பொத்தித் தன் காதலன் முன்னர் நடுங்காநிற்ப; கவுந்தி - அதுகண்ட கவுந்தியடிகளார்; இவர் என் பூங்கோதையை எள்ளுநர் போலும் முள் உடைக்காட்டில் முதுநரி ஆக என - இக் கயமாக்கள் என் பூங்கோதை போல்வாளை இகழ்கின்றனர். இத்தீவினை காரணமாக இவர்தாம் துடக்கு முட்களையுடைய காட்டில் நுழைந்து திரியும் ஓரிகளாகி உழலக்கடவர் எனத் தம் நெஞ்சினுள்ளே; இட்டது - இட்ட சாபமானது; தவந்தரு சாபம் ஆதலின் கட்டியது - தவத்தின் விளைவாகிய சாபமாதலாலே அவரைத் தன் வயப்படுத்தி அவர்பால் தன் பயனை விளைவிப்பதாயிற்று. ஆகவே, அவர்தாம் ஞெரேலென அவ்விடத்தே காணப்படாராயினர்; பட்டதை அறியார் - இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியை அறியாதவராயினும் என்க.

(விளக்கம்) 221 - அழகினால் காமனும் தேவியும் போல்கின்றார் இவர் யார் எனத் தம்முட் கூறியதனை அடிகளார் கேட்டமையின், இவர் என் மக்கள் காணீர் என்நவர் மீண்டும் நீயிர் கருதுகின்ற அமரர்கள் அல்லர் என்பார் மானிட யாக்கையர் என்றனர். அப்பரத்தையும் வறுமொழியாளனும் மிகையாகக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் அணுக்கராய் வந்து நிற்றலால் அவர் பரிபுலம்பினர் பக்கம் நீங்குமின் என்றார். நீயிர் அத்துணை அணுக்கராய் நிற்றல் அவர்க்குப் பின்னும் வருத்தம் விளைவிக்கும் என்பது குறிப்பு.

227. அவன்றான் வறுமொழியாளன் ஆதலின் உடன் வயிற்றோர் ......... கற்றறிந்தீர் என வறுமொழி கூறி வறிதே வினவுதலும் அறிக. கற்றறிந்தீர் என்றநிகழ்ச்சி. தவத்தாற் கழிபெருஞ் சிறப்புடைய கவுந்தியடிகளாரை இவ்வாறு இகழும் மொழியைக் கேட்கப் பொறாளாய்க் கண்ணகி தன் செவியகம் புதைத்துக் கணவன் பக்கலிலே நோக்கி நடுங்குகின்றாள் என்க.

231. எள்ளுநர் போலும் என்புழி போலும்; ஒப்பில்போலி. என் பூங்கோதை என்றது யான் அணியத் தகுந்த பூங்கோதை போலும் சிறப்புடைய இக்குலமகளை என்பதுபட நின்றது. அடிகள் மனத்தால் நினைத்திட்ட சாபம் ஆதலால், அக்கயவர்கட்கு நிகழ்ந்தது இன்னதென்றறியாராயினர். பட்டதை - நிகழ்ந்ததனை.

கண்ணகியும் கோவலனும் அக்கயவர்க்கிரங்கிச் சாபவிடை செய்தருள வேண்டுதல்

235 - 240 : குறுநரி ............. உரையீரோவென

(இதன்பொருள்:) நறுமலர்க் கோதையும் நம்பியும் குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு நடுங்கி - நறிய மலர் மாலையையுடைய கண்ணகியும் ஆடவருட் சிறந்த கோவலனும் குறிய இரண்டு நரிகள் நீளிதாகியகுரலாலே ஊளையிடுகின்ற ஒலியைக் கேட்டமையாலே இஃது அடிகளாரின் சாபத்தின் விளைவு என்றறிந்து அவர்க்கெய்திய அக்கேட்டிற்குத் தாம் அஞ்சி நடுங்கி; நெறியின் நீங்கியோர் நீர் அலகூறின் அறியாமை என்று அறிதல் வேண்டும் - நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய மக்கள் தாம் நீர்மையல்லாத தீ மொழிகளைக் கூறினும் அதற்குக் காரணம் அவர்க்கியல்பான அறியாமையே ஆகும் என்று மெய்யறிவுடையோர் அறிதல் வேண்டுமன்றோ! அங்ஙனம் அன்றி அடிகளார் சபித்தமை இரங்கத்தக்கதாம் என்றுட் கொண்டு பின்னர் அடிகளாரை நோக்கி; செய் தவத்தீர் திருமுன் பிழைத்தோர்க்கு - செய்து முற்றிய தவத்தையுடையீர் தம் மேலான முன்னிலையிலே பிழை செய்த இவ்வறிவிலிகட்கு; உய்திக்காலம் உரையீர் ஓ என - இக் கடிய சாபம் நீங்கி உய்தற்கும் ஒரு காலத்தைத் திருவாய் மலர்ந்தருள வேண்டும் என்று கூறி இரவா நிற்ப என்க.

(விளக்கம்) அடிகளார் நினைவு மாத்திரத் தானிட்ட சாபம் தவந்தரு சாபமாகலின் உடனே பலித்தலாலே அப்பரத்தையும் வறுமொழியாளனும் மாயமாகத் தம்முருவ மாறி நரிகளாய் ஊளையிட, அதுகண்ட கண்ணகியும் கோவலனும் தமது ஆராய்ச்சி யறிவுகாரணமாகக் கருதலளவையால் இவ்வரிய நிகழ்ச்சிக்குக் காரணம் அடிகளார் இட்ட சாபமேயாம் பிறிதன்றென்று துணிந்தனர் என்க. அவர் இழி பிறப்புற்றமைக்குத் தாமும் காரணமாகி விட்டமை கருதியும் அறியாமையால் அவர்க்குற்ற துயர்க் கிரங்கியும் அம்மேன்மக்கள், அஞ்சியும் இரங்கியும் நடுங்கினர் என்க. கூவிளி - நரியின் குரல். இக்காலத்தே இதனை ஊளையிடுதல் என்பர்.

இனி, அரும்பதவுரையாசிரியர், பின்பு அறிந்தபடி அவர் கண் முன்னே நரியான படியாலும் (முன்பு அவர்) பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்து இவரல்லது வேறு சாபமிடவல்லார் இல்லை யாகலானும் இச்சாபம் இவராலே வந்த தென்று இவர் அறிந்தார். அறிந்து உய்திக்காலம் உரையீரோ என்றார் என விளக்குவர்.

நெறியினீங்கியோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் என்னுந் துணையும் அவருட்கோள். பின்னதை அடிகட்குக் கூறினர் என்பர் அடியார்க்கு நல்லார்.

இனி, இந்நிகழ்ச்சியால் ஊழ்வினை என்பது முற்பிறப்பிலே செய்வது மட்டும் அன்று, நொடிப் பொழுதைக்கு முன் செய்ததூஉம் ஊழ்வினையேயாம் என்பதும், மற்று ஊழ்வினை தான் ஒரு பிறப்பிற் செய்ததும் அவர் தம் மறுப்பிறப்பிற்றான் உருத்து வந்தூட்டும் என்று நினையற்க! ஒரு நொடிப் பொழுதைக்கு முன் செய்தது மறுநொடிப் பொழுதிலே உருத்து வந்தூட்டுதலும் உண்டு என ஊழினது இயல் பொன்றனை இளங்கோ அடிகளார் மிகவும் நுண்ணிதாக வுணர்த்தினாராதலு முணர்க.

கவுந்தியடிகள் சாபவிடை செய்தருளுதல்

241 - 245 : அறியாமையின் ............. விடைசெய்து

(இதன்பொருள்:) அறியாமையின் இன்று இழிபிறப்பு உற்றோர் -இவ்வேண்டுகோள் கேட்ட அடிகளாரும் அதற்கு இணங்கியவராய்த் தமது மனம் மொழி மெய் என்னும் முப்பொறிகளானும் துன்பம் வரும் என்பதனை அறியாமையாலே தம் வாய் தந்தன கூறி இற்றைநாள் இழிந்த பிறப்பாகிய நரிகளான; இவர் இங்கு உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் பன்னிருமதியம் படர்நோய் உழந்தபின் - இவ்விருவரும் ஈண்டு உறையூரினது மதிற்புறத்தே அமைந்த காவற் காட்டின் ஒருபக்கத்தே நரிகளாகவே திரிந்து பன்னிரண்டு திங்கள் முடியும் துணையும் தமக்கெய்திய நிலையினை நினைத்தலாலே வரும் துன்பத்தையும் நுகர்ந்த பின்னர்; முன்னை உருவம் பெறுக எனச் சாபவிடை செய்து - பழைய மாக்கள் உருவத்தைப் பெறுவாராக வென்று அச்சாபத்தினின்றும் விடுதலைக் காலமும் கூறியருளி என்க.

(விளக்கம்) கண்ணகியும் கோவலனும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீர் ! என்று அடிகளாரை வேண்டிய காலத்தே அடிகளார் எற்றே இவர்தம் பெருந்தகைமை? எனத் தம்முள் வியந்திருப்பர் என்பதும் அம்மேன்மக்களைப் பற்றிய நன்மதிப்பு அடிகளார் உளத்தே பன்மடங்கு மிகுந்திருக்கும் என்பதும் மிகையாகா. ஆதலானன்றே அடிகளாரும் ஒரு சிறிதும் தயக்கமின்றியே சாபவிடை செய்யத் தொடங்குபவர் தாமும் அவர்க்கிரங்குவாராய் அறியாமையின் இன்று இழிபுறப்புற்றோர் எனக் கண்ணகியும் கோவலனும் தம்முட் கருதியவாறே அவர் நீரல கூறியது அவர் தம் அறியாமை யென்றே தாமும் அறிந்தவாறோதினர். ஆயினும், அக்கயவர் தாம் அடிகளார் திறத்தன்றித் தம்மால் பாதுகாக்கப்பட்ட கண்ணகி திறத்தே பிழை செய்தலின் அடிகளார் அதனைப் பொறுத்தல் கூடாதாயிற்று. என்னை தீயவர் பிறர்க்கின்னா செயக்கண்டும் பொறுத்தல் பொறையன்று கோழைமையே ஆம் ஆதலின் என்க.

அடிகளார் அக்கயவர் செய்த பிழைக்கு அவர் பன்னிரண்டு திங்கள் துன்புறுதல் சாலும் எனக் கருதியது அடிகளார் அருளுடைமைக்கு அறிகுறியாதலுணர்க. இங்கு கடிதோச்சி மெல்ல எறிக என்னும் வள்ளுவர் அருள்மொழி நம் நினைவில் முகிழ்க்கின்றது.

இனி, பன்னிரு மதியம் படர் நோயுழந்தபின் என்றது, அவர் தாம் சாபத்தால் நரிகளாயினும் ஏனைய நரிகள் போலாது யாம் இன்னம் இன்னபிழை செய்து இவ்விழி பிறப்புற்றேம் என்னும் நினைவுடையராய் அந்நினைவு காரணமாகத் துன்புற்றபின் என்றவாறு. இங்ஙனம் இளங்கோவடிகளார் உளத்தில் ஆழ்ந்திருக்கும் பொருளை அவர் படர் நோய் என்பதனாற் கண்டாம். படர்நோய் - நினைவினால் எய்தும் துன்பம். முன்னையோர் இந்நுண்பொருள் காணாதொழிந்தார். அவ்வாறு படர் நோயுழக்க வேண்டும் எனக் கவுந்தியடிகளார் கருதியதற்குக் காரணம் அப்பட்டறிவு காரணமாக அவர் பின்னும் அத்தகைய பிழை செய்யாதிருத்தற் பொருட்டாம். என்னை; ஒறுத்தலின் பயனும் அதுவே யாகலின். இதனை,

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து  (குறள் - 561)

எனவரும் வள்ளுவர் வாய்மொழியினும் காணலாம்.

ஈண்டு அடியார்க்கு நல்லார் இன்று இழிபிறப்புற்றோரென்றது நெடுங்காலந் தவஞ் செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு வார்த்தையினிழந்து இழிபிறப்புற்றா ரென்றவாறு என்று வரைந்த விளக்கம் பொருந்தாது. என்னை? முற்பிறப்பில் நெடுங்காலம் தவம் செய்தோரும் இத்தகைய கயமாக்களாகவும் பிறப்பர் என்பது அறிவொடு பொருந்தாதாகலின் என்க.

இனி, அவர் யாகாவாராயினும் நாகாக்கப்படல் வேண்டும் என்பதாயிற்று என்றலும்,

ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநகரத் துய்ப்பிக்கும்
காக்கப் படுவன விந்திய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிவெல்லு மாறே  (வளையாபதி).

என எடுத்துக்காட்டலும் இனியனவாம்.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் உறையூரை எய்துதல்

245 - 248 : தவப்பெருஞ் சிறப்பின் ........... புரித்தென்

(இதன்பொருள்:) தவப்பெருஞ் சிறப்பின் காவுந்தி ஐயையும் - தவத்தாலே மிக்க சிறப்பையுடைய கவுந்தியடிகளாரும்; தேவியும் கணவனும் - கண்ணகியும் கோவலனுமாகிய மூவரும்; முன்முறம் செவி வாரணம் சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம் புரிந்து புக்கனர் - முன்னொரு காலத்தே முறம் போன்ற செவியையுடைய யானையைப் போரிலே கெடுத்த பக்கத்தே சிறகுகளையுடைய கோழியின் பெயரமைந்த நகரத்தின்கண்ணே விருப்பத்தோடு புகுந்தனர் என்க.

(விளக்கம்) இங்ஙனம் சாபமிடவும் அதனினின்று வீடு செய்யவும் இயன்ற இத்தகைய தவப் பெருஞ் சிறப்பிற் கவுந்தி என்றவாறு.

247 - முறம் செவி - முறம் போன்ற செவி. வாரணம் - யானை புறஞ்சிறை வாரணம் என்றது கோழியை. கோழி என்பது உறையூருக்கு ஒரு பெயர் இப்பெயர்க்குரிய வரலாறும் தெரித்துதோதுவார், வாளா கோழி என்னாது முறஞ் செவிவாரணம் முன் சமமுருக்கிய புறஞ்சிறை வாரணம் என விரித்தார். இதன் கட்கூறிய வரலாறு வருமாறு :

முற்காலத்தே ஒரு கோழி யானையை எதிர்ந்து போரிற் புறங்கொடுத்தோடச் செய்தது. இந்நிகழ்ச்சியைக் கண்ட சோழமன்னன் இந் நிலத்திற்கு ஒரு சிறப்புண்டென்று கருதி அவ்விடத்தே தன் தலைநகரை அமைத்துக் கொள்பவன் அந்நகர்க்குக் கோழி என்றே பெயர் சூட்டினன் என்பதாம். அந்நகர் தம் நாட்டின் தலைநகருள் ஒன்றாதலான் அதனைக் காணவேண்டும் என்னும் அவாவோடு புகுந்தனர் என்பார் புரிந்து புக்கார் என்றார்.

வாரணம் என்னும் பலபொருளொரு சொல் முறஞ்செவி வாரணம் என்றமையால் யானை என்றும், புறஞ்சிறை வாரணம் என்றதனால் கோழி என்றும் ஆயிற்று.

இனி, அந்நகரம் அமைக்கும் பொழுது கழுத்தும் புறத்தே சிறகுகளுமுடைய கோழியுருவம் பெற அமைத்தலின் புறம்பே சிறையையுடைய கோழி என்றார் என்பாருமுளர். இதற்கு - புறஞ்சிறை என்றது புறஞ்சேரிகளை என்க. இருபுறத்தும் சேரிகள் அமைந்த கோழி என்னும் நகர் என்க.

இனி, இக்காதையை, வைகறை யாமத்து, நீங்கக் கடைஇத் துரப்பக் கழிந்து, கழிந்து போகித் தொழுது வலங்கொண்டு, நீங்கிப் போகிக் கழிந்து, நுழைந்து, கடந்து பொருந்தி (பொருந்த) ஆங்கு, வருந்தி உயிர்த்து வினவ, நணித்தென நக்கு, கண்டு தொழலும், என்னோ? கருதியவாறு என, வரை பொருள் வேட்கையேன், (என) கழிதற்கு அரிது, ஒழிகென ஒழியீர், யானும் போதுவல் போதுமின் என்ற காவுந்தி ஐயையை ஏத்தி, தீர்த்தேன் என, காணாய்! படர்குவம் எனினே காட்டும், முட்டும், உறுக்கும், படர்குவம் எனினே, கலங்கலுமுண்டு. கொள்ளவும் கூடும்; இடுதலும் கூடும்; தாங்கவும் ஒண்ணா. ஓம்பு என அறுவையும் பீலியும் கொண்டு துணை ஆகெனப் படர் புரிந்தோர், ஓதையும் ஒலியே யன்றியும் விருந்திற் பாணியும், ஏர்மங்கலமும் முகவைப்பாட்டும் இசையோதையும் கேட்டு, மறையோர் இருக்கை யன்றியும் ஊர்களும் கண்டு கடவாராகி, ஒருநாள் சாரணர் தோன்ற, வாய்மொழி கேட்டுத்திறவா! நவிலாது. காணா; பொருந்தாது குவியா பொறாஅபுடை பெயராது என்று ஏத்த - கெடுகென்று படர்வோர்த் தொழுது போந்து. போகி எய்தி இருந்துழிச் சென்றோர் வினவ நீங்குமின் புலம்பினர் என வாழ்க்கை கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரி ஆக என, அறியார் கேட்டு நடுங்கி உரையீரோ என ஒதுங்கி உழந்தபின் பெறுக என, விடைசெய்து, புரிந்து புறஞ்செவி வாரணம் புக்கனர் என வினையியைபு காண்க.

இது நிலைமண்டில ஆசிரியப்பா.

நாடுகாண் காதை முற்றிற்று.

கட்டுரை

1-20 : முடியுடை ................. முற்றிற்று

(இதன்பொருள்:) முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவேந்தருள் வைத்து; தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர் - வீரவளை விளங்காநின்ற பெரிய கையினையுடைய சோழர் தம் குலத்திற் பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும், மறமும் - மறச் சிறப்பும்; ஆற்றலும் - வன்மைச் சிறப்பும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவ்வேந்தருடைய பழைய நகரமாகிய பூம்புகார் அருட்பண்பினாலே ஏனைய நகரங்களினுங் காட்டில் மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவு மலி சிறப்பும் - அந்நகரின் கண் பல்வேறு கடவுளர்க்கும் திருவிழா மிக்கு நிகழும் சிறப்பும்; விண்ணவர் வரவும் - ஆங்கு வருகின்ற தேவர்களின் வரவும்; அவர் உறை நாட்டு ஒடியா இன்பத்துக் குடியும் - அவ்வேந்தர் செங்கோலேந்தி வதிகின்ற அச்சோழ நாட்டின்கண் வாழுகின்ற கெடாத இன்பத்தையுடைய குடிமக்களின் மாண்பும்; கூழின் பெருக்கமும் - உணவுப் பொருளின் வளமும்; அவர்தம் தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும் - அவ்வேந்தருடைய கடவுட்டன்மை யுடைய காவிரிப் பேரியாற்றினது தீமையைத் தீர்க்கின்ற சிறப்பும்; பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் - அவர் திறத்தே எஞ்ஞான்றும் பொய்தலில்லாத முகில் புதிய நீரைப் பெய்கின்ற சிறப்பும்; அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் - ஆடலரங்கினது இயல்பும் கூத்தாட்டின் இயல்பும் தூக்கினது இயல்பும் கண்கூடு முதலிய வரிக்கூத்தினியல்பும்; பரந்து இசை மெய்திய பாரதி விருத்தியும் - ஆடற் கலைகளுள் வைத்து உலகெலாம் விரிந்து புகழ் படைத்துள்ள பாரதி விருத்தியாகிய பதினோராடல்களின் இயல்பும்; திணைநிலை வரியும் இணைநிலை வரியும் - திணைநிலை என்னும் வரிப்பாடலியல்பும் சார்த்துவரி என்னும்பாடலினியல்பும்; அணைவு உறக்கிடந்த , யாழின் பகுதியும் - இவையெல்லாம் தம்மொடு பொருந்தக் கிடந்த பல்வேறு யாழ்களினியல்பும்; ஈரேழ் சகோடமும் - அவற்றுள்ளும் தலைசிறந்த பதினான்கிசைக் கோவையாகிய யாழினது சிறப்பும்; இடநிலைப்பாலையும் - இடமுறைப் பாலைப்பண்ணின் இயல்பும்; தாரத்தாக்கமும் தான் தெரிபண்ணும் - தாரம் என்னும் இசையினால் ஆக்கிக் கொள்ளும் பாலைப் பண்களின் இயல்பும் அவற்றின் வழியே தோற்றுவிக்கின்ற நால்வகைப் பெரும்பண் திறப்பண்களின் இயல்பும், ஊரகத்து ஏரும் - புகார் மூதூரின் அழகும்; ஒளியுடைப் பாணியும் - உழத்தியர் பாடும் நிறமிக்க பாடல்களும்; என்று இவை அனைத்தும் - என்று கூறப்பட்ட இப்பொருள்கள் எல்லாவற்றோடும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - ஈண்டு சொல்லாதொழிந்த ஏனைய பொருள்கள் பலவும் கூறிவைத்த வைப்போடு கூடித் தோன்றாநின்ற தனிக்கோள் நிலைமையும் - அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. ஒருபடியாக நோக்கிக் கிடந்த முதலாவதாகிய புகார்க் காண்டம் முற்றியது என்க.

(விளக்கம்) இந்நூலின் பதிகத்தை அடுத்துள்ள உரைபெறு கட்டுரையும் ஈண்டு இக்காண்டத் திறுதியிலுள்ள இக்கட்டுரையும் இங்ஙனமே எஞ்சிய இரண்டு காண்டங்களின் இறுதியிலுள்ள கட்டுரையிரண்டும் நூலிறுதியிலமைந்த நூற்கட்டுரை என்பதும் இளங்கோவடிகளாரால் செய்யப்படாதன. பிற்காலத்தே பிறராற் பாடிச் சேர்க்கப்பட்டன என்று கருதுதற் கிடனுளது. உரைபெறு கட்டுரை அடிகளாராற் செய்யப்பட்ட தன்றென்பதற்கு ஆங்குக் காரணம் கூறினாம். இக்கட்டுரையகத்தே அடிகளார் இந்நூலில் ஓரிடத்தேனும் கூறப்படாத சகோடம் என்னும் சொல் புணர்க்கப் பட்டிருத்தலும் இதுவும் அடிகளாராற் செய்யப்பட்டதில்லை என்பதற்கு ஓரகச் சான்றாகும். இன்னும் இவற்றைப் பற்றிய எமதாராய்ச்சி முடிவை இந்நூலினது ஆராய்ச்சி முன்னுரையிற் கண்டுணர்க.

இக்கட்டுரைக்கண் (14) ஈரேழ் தொடுத்த சகோடமும் - என்பதற்குப் பதினான்கு இசைகளை இணை நரம்பாகத் தொடுத்த ஒலியோடு கூடிய யாழ் எனப் பொருள் கோடலே பொருந்தும். சகோடம் என்ற சொற்குப் பொருள் ஒலியோடு கூடியது என்பதேயாம். எனவே, ஈரேழ் சகோடமும் என்பதற்கு பதினான்கிசையோடு கூடிய ஒரு யாழ் என்பதே பொருளாகும். இத்தொடர் பன்மொழித் தொகையாய்ச் செம்முறைக் கேள்வி என இளங்கோவடிகளாராற் கூறப்படுகின்ற யாழைக் குறிப்பதாயிற்று. பிற்காலத்தே சகோடம் என்பதே பெயர் போல வழங்கப் பட்டதாதல் வேண்டும். அடிகளார் காலத்தே இதனைச் செங்கோட்டியாழ் என்றே வழங்கினர் என்று தெரிகிறது.

1 - முடியுடைவேந்தர் மூவர் - சோழர் பாண்டியர் சேரர்.

3. அறன் - அறங்காவற் சிறப்பு -அது, அறவோர் பள்ளியும் அறனோம்படையும் (5: 179) என்பன முதலியவற்றாற் கூறப்பட்டது.

4. மறன் - மறச்சிறப்பு. அதனை இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை கொடுவரி யொற்றி (5 : 97 - 8) என்பது முதலியவற்றாலறிக. ஆற்றல் - போராற்றலுடைமை. அதனை, அமராபதி காத்து அமரனிற் பெற்றுத் தமரிற்றந்து தகைசால் பிறப்பிற் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியும் என்பது (6: 14-17) முதலியவற்றாலறிக. பழவிறன் மூதூர்ப் பண்பு. பதியெழுவறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் என்பது (மங்கல வாழ்த்து - 15 - 16) முதலியவற்றாலறிக. 5. விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் இந்திரவிழ வூரெடுத்த காதையிற் காண்க. குடியும் கூழின் பெருக்கமும் மனையறம் படுத்த காதை, நாடுகாண் காதை முதலியவற்றிற் காண்க. காவிரியின் சிறப்பைக் கானல் வரியினும் நாடுகாண் காதையினும் பிறாண்டும் காண்க பொய்யாவானம் புதுப்புனல் பொழிதலும் என்பதனை உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக் கருவுயிர்க்கும் ..... ஆவுதி நறும்புகை என்பதன்கண் (10 : 142-44) காண்க. 16-அரங்கும் ஆடலும் அரங்கேற்று காதைக்கட் காண்க. 11. பாரதி விருத்தி, பதினோராடல் இவற்றை, (6) கடலாடு காதைக்கட் காண்க. 12-13. திணைநிலை வரி, இணைநிலை வரி, யாழின் றொகுதி, கானல் வரியிற் காணப்படும். 14. ஈரேழ் சகோடமும் - அரங்கேற்று காதையினும் பிறாண்டும். இடநிலைப் பாலை, தாரத்தாக்கம் தான்தெரிபண், அரங்கேற்றுகாதை, வேனிற் காதைகளிற் காண்க. 16. ஊரகத்தேர், காவிரிப்பூப்பட்டினத்தின் அழகு, இந்திரவிழவூர் எடுத்த காதையினும் பிறாண்டுங் காண்க. ஒளியுடைப் பாணி உழத்தியர் பாடும் விருந்திற் பாணி ஏர் மங்கல முதலிய இவற்றை நாடுகாண் காதையிற் காண்க. பிறபொருள் வைப்பு - யாண்டும் காணலாம். ஒரு பரிசு - ஒரு தன்மை.

வெண்பாவுரை

காலையரும்பி .............. புகார்

(இதன்பொருள்:) வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்துள்ள இந்நிலவுலகாகிய தெய்வ மகளின்; மாலை - இலகு பூண்முலைமேலணிந்த முத்துமாலை என்னும்படி; புகழால் அமைந்த புகார் - உலகுள்ள துணையும் அழியாத புகழாலே அமைந்துள்ள பூம்புகார் நகரமானது; காலை அரும்பி மலரும் கதிரவனும் - விடியற் காலத்தே தோன்றி ஒளியால் விரிகின்ற ஞாயிறு போன்றும்; மாலை மதியமும் போல் - அந்தி மாலைப் பொழுதிலே தோன்றுகின்ற திங்கள் போன்றும்; வாழி அரோ - வாழ்வதாக என்பதாம்.

(விளக்கம்) புகார் நகரம் புகழுருவத்தோடு உலகுள்ள துணையும் வாழ்க என்றவாறு. புகழால் அமைந்த புகார் என்பதற்கு மங்கல வாழ்த்துக் காதையில் நாக நீணகரொடு நாக நாடதனொடு போக நீள் புகழ்மன்னும் புகார் நகர் என்பதற்கு யாம் கூறிய விளக்கத்தை ஈண்டும் கூறிக் கொள்க.

புகார்க் காண்டம் முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #17 on: February 23, 2012, 01:55:19 PM »
மதுரைக் காண்டம் (11. காடுகாண் காதை)

அஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே கண்ணகியோடு இழந்த பொருளீட்டவெண்ணிப் புறப்பட்டவன் வழியிலே காவுந்தியடியைக் கண்டடிதொழுது, அவர் தம்மை வழித்துணையாகவும் பெற்று வருபவன், அந்நெறியில் ஏதந்தருவன இவை இவை என அறிவுறுத்திய கவுந்தியடிகளாரின் மொழி போற்றி, அவரோடும், தன் காதலியோடும் கழனிச் செந்நெற்கரும்பு சூழ் பழனத்தாமரைப் பைம்பூங் கானத்தே பறவைகள் பாடும் பாட்டும், கருங்கைவினைஞரும் களமரும் கூடி ஆரவாரிக்கும், ஆரவாரமும், சின்மொழிக் கடைசியர் கள்ளுண்டு களித்துப்பாடும் விருந்துறு பாடலும், ஏர்மங்கலப் பாட்டும், முகவைப் பாட்டும், கிணைஞர் செய்யும் இன்னிசைமுழ வொலியும், பிறவும் ஆங்காங்குக் கேட்டும் வழியில் அந்நாட்டின் கவினுறு வளம்பலவும் கண்டுமகிழ்ந்தும் மங்கலமறையோர் இருக்கையும், பிறவுமுடைய ஊரிடையிட்ட நாடுடன் கண்டு, நாட்கொரு காவதமன்றி நடவாமல் பன்னாட்டங்கிச் செல்பவன், உறையூர் புக்கு மறுநாள் அங்கிருந்து மதுரை நோக்கிச் செல்லும் காலத்தே அவ்வழியிற் கண்டனவும், அம் மதுரைமா நகரத்துப் புறஞ்சேரி புக்கதும், ஆங்கு இடைக்குல மடந்தை மாதரியின்பால் கவுந்தியடிகளார் கண்ணகியை அடைக்கல மீந்ததும், கோவலன் பின்பு மதுரைமூதூர் கண்டு மீண்டமையும், மறுநாள் கோவலன் சிலம்பு விற்கச்சென்று ஊழ்வினை உருத்து வந்தூட்டலாலே ஆங்குக் கள்வனெனப்பட்டுக் கொலையுண்டதும், அச் செய்தி கேட்டுக் கண்ணகி கொதித்தெழுந்து ஊர் சூழ்வந்து, அரசவை யேறி வழக்குரைத்ததும், அவ் வழக்கில் பாண்டியன் உயிர்நீத்ததும், அவன்றேவி உயிர்நீத்ததும், பின்னரும் கண்ணகி சினந்தணியாளாய், வஞ்சினம்கூறி மதுரை நகரந் தீயுண்ணச் செய்ததுவும், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி, கண்ணகிக்குக் கட்டுரை கூறித் தீவீடு செய்ததுவும், கண்ணகி மேற்றிசைவாயிலிற்புகுந்து வையையின் ஒருகரை வழியாக அத்திசை நோக்கிச் செல்வாள் நெடுவேள் குன்றத்தடிவைத்தேறி நின்ற பதினாலாம்நாளெல்லையில் அமரர் கோமான் தமர் அவளெதிர் வந்து, புகழ்ந்தேத்தி அவள் கணவனையும் காட்டி வரவேற்க வானவூர்தியில் ஏறிக் கோவலனோடு கண்ணகி விண்ணகம்புக்கதும் பிறவுமாகிய செய்தியைக் கூறும் பகுதியென்றவாறு. இவையெல்லாம் மதுரையில் நிகழ்ந்தமையால் இது மதுரைக்காண்டம் என்னும் பெயர் பெற்றதென் றுணர்க.

11. காடுகாண் காதை

அஃதாவது - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் உறையூரினின்றும் புறப்பட்டு மதுரை நோக்கிச் செல்பவர் பாண்டியனாட்டகத்தே புக்கு ஆங்கு ஊரிடையிட்ட காடு பல கண்டு சென்றதும் ஆங்குக் கண்டனவும் கேட்டனவும் பிறவும் கூறும் பகுதி யென்றவாறு.

திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்  5

அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித்
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று  10

வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை  15

ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள  20

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி  25

முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி  30

மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்  35

பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்  40

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு  45

நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய  50

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்  55

வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி  60

வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்  65

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்
நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று  70

கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்
வலம்படக் கிடந்த வழிநீர் துணியின்
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்  75

பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும்  80

கொய்பூந் தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்  85

அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின்
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து   90

திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி   95

விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
பவகா ரணி படிந் தாடுவி ராயிற்   100

பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்
இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின்
ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது  105

சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத்   110

தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்  115

உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர்  120

வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும்  125

உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண் டோதி  130

வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன்  135

புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு  140

அந்நெறிப் படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி   145

இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென
மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட  150

காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்  155

இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய   160

நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்
பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்  165

கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்  170

கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து  175

வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ ராயினும்  180

பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்  185

தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்  190

பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்  195

கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத்   200

தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்  205

மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக்
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்  210

கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி   215
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.

உரை

உறையூரின்கண் எழுந்தருளிய அருகன் சிறப்பு

1-9 : திங்கள் ............ அடங்கி

(இதன் பொருள்) அடுக்கிய மூன்று திங்கள் திருமுக்குடைக் கீழ் - மூன்று முழுத்திங்கள் மண்டிலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக உயர்த்து அடுக்கிவைத்தாற் போலும் அழகு திகழாநின்ற சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் மூன்று குடைகளின்கீழ்; செங்கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து - சிவந்த கதிர்களைப் பரப்பும் இளஞாயிற்றினது ஒளியினுங்காட்டில் சிறந்து விளங்கும் ஒளியோடே; கோதை தாழ் பிண்டிக் கொழு நிழலிருந்த - பிற அசோகுபோலாது மாலையாகவே மலர்ந்து தூங்காநின்ற கடவுட்பண்புடைய அசோக மரத்தினது நீழலின்கண் வீற்றிருந்த; ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி - (உறையூரிற் புகுந்த காவுந்தியடிகளாரும் கண்ணகியும் கோவலனும் ஆகிய மூவரும்) தனக்கு முன்னர்ப் பிறிதுயாதும் தோன்றுதல் இல்லாமையைத் தனக்குத் தோற்றமாகவுடைய மெய்யறிவனாகிய அருகக் கடவுளை அன்புடன் மனமொழி மெய்களாலே வழிபாடு செய்த பின்னர்; மாதவத்தாட்டியும் அந்தில் கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - கவுந்தி அடிகளார் அவ்விடத்தே அவ்வருகன் கோயிலைச் சார்ந்த தவப்பள்ளியில் உறைகின்ற துறவோர்க்கெல்லாம்; அரங்கத்து அகன் பொழில்வயின் - திருவரங்கத்தே அகன்ற பூம் பொழிலிடத்தே தமக்குச் சாரணர் அறிவுறுத்தருளிய; தகைசால் நன்மொழி - அழகுமிக்க மெய்ம் மொழியை; மாண்பு உற மொழிந்து - அவர்கள் மாட்சிமை எய்தும் பொருட்டுச் செவியறிவுறுத்தருளி; ஆங்கு - அவ்விடத்தேயே; அவர் உறைவிடத்து அன்று அல்கினர் அடங்கி - அம் மூவரும் தங்குதற்குரியதோரிடத்தே அற்றைநாளிரவி லினிதே தங்கியிருந்து என்க.

(விளக்கம்) 1. அருகக் கடவுள் முக்குடைக்கீழ் எழுந்தருளியிருப்பின் என்பது சைன நூற்றுணிபு. அக்கடவுளின் குடைக்கு மூன்று முழுத்திங்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கப்பட்டவை உவமை. இஃதில் பொருளுவமை - அடுக்கிய மூன்று திங்களின்-என மாறி இன்னுருபு பெய்துரைக்க. உறழ்பொருட்டாகிய அவ்வுருபு தொக்கது என்பது அடியார்க்கு நல்லார் கருத்து. கோதை தாழ் பிண்டி என்றது - அருகனுக்கு நிழல் தரும் அசோக மரம் ஏனைய அசோக மரங்கள் போலாது மலருங் காலத்தே மாலையாகவே மலரும் என்னும் கருத்துடையதாம். ஆதியில் தோற்றம் என்றது தனக்கு முன்றோன்றியது யாது மில்லாத தோற்றம் என்றவாறு. இனி, தனது தோற்றத்திற்கு முதல் இல்லாத தோற்றமுடையான் என்றுமாம்; அஃதாவது நித்தியன் என்றவாறு. அறிவன் - வாலறிவன். இயல்பாகவே பாசங்களில்லாத மெய்யறிவினை யுடையான் என்ற படியாம். கந்தன் - நிக்கந்தன்: விகாரம். 6. அந்தில் - அவ்விடத்தே. அசைச் சொல்லுமாம்.

அரங்கத்துச் சாரணர் கூறிய தகைசால் மொழி என்றது - நாடு காண் காதையில்,

கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்
ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை யொழிக்கவு மொண்ணா
கடுங்கால் நெடுவெளி விடுஞ்சுட ரென்ன
ஒருங்குட னில்லா உடம்பிடை உயிர்கள்

எனச் சாரணர் கவுந்திக்குச் செவியறிவுறுத்த மொழிகளை. இவை சொல்லானும் பொருளானும் இனியவாகிப் பெரும் பயன்றருவன வாதலின் அவற்றைத் தகைசா னன்மொழி என அடிகளார் வியந்தார். என்னை? இப் பெருங்காப்பியத்தின் கருப்பொருள் மூன்றனுள் இச் செவி யறிவுறூஉம் ஒன்றாதலுமறிக. மாதவத்தாட்டியும் என்புழி உம்மை சிறப்பும்மை. என்னை? அங்ஙனம் செவியறிவுறுத்தலே அவர்க்கு அறமாகலின் என்க. அவர்க்கு அறமாதல் தோன்றும் பொருட்டே அடிகளார் கவுந்தியும் என்னாது மாதவத்தாட்டியும் என விதந்தார். மாண்புற என்றது - அத் துறவோர் மாண்புறுதற் பொருட்டு எனவும் தன் மொழி மாண்புற எனவும் இருபொருளும் பயந்து நின்றது.

9. இல்லறத்தார் துறவோர் பள்ளியில் இரவிற்றங்குதல் மரபன்று என்பது அடியார்க்கு நல்லார் அவரெனக் கடவுளரைச் சுட்டின், அவருறைவிடம் கந்தன் பள்ளியா மாதலானும் ஆண்டு அடங்காமை சொல்ல வேண்டாவாகலானும் அவரென்றது சாவகரை என்னும் விளக்கத்தாற் பெற்றாம். ஆயினும் அவர் என்னும் சுட்டு, சாவகரைச் சுட்டிற்று என்றதும் பொருந்தாது. முன்னர் இயற்பெயர் கூறாதவிடத்தே சுட்டுப் பெயர் மட்டும் வருதலும் அது தானும் அப்பெயரைச் சுட்டும் என்பதும் பொருந்தாது. இனி, அவர் உறைவிடம் என்பதற்கு அக் கவுந்தி முதலிய மூவரும் தாம் உறைதற்குரியதோரிடத்தே தங்கினர் என்பதே அடிகளார் கருத்தாமென்க.

அல்கினர்: முற்றெச்சம். வழிவரு வருத்தம் தீர அவர் இனிது உறங்கினமை தோன்ற அல்கினர் அடங்கி என்றார்.

அடிகளாரும் கண்ணகியும் கோவலனும்
உறையூரினின்றும் மதுரைக்குச் செல்லுதல்

10 - 14 : தென்திசை ........ புக்குழி

(இதன் பொருள்) தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - வைகறையாமத்தே துயிலெழுந்து மேலும் தாம் செல்ல வேண்டிய தென்றிசையிலே சென்று அப்பாலுள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்தலில் விருப்பமுடையராகி; வைகறையாமத்து வாரணம் கழிந்து - அவ் வைகறைப் பொழுதிலேயே உறையூரைக் கடந்து அப்பால் தென்றிசை நோக்கிச் செல்பவர், வெய்யவன் விளங்கித் தோன்ற - தாம் புறப்பட்ட வைகறையாமமும் கழிந்து கீழ்த் திசையிலே தோன்றிய கதிரவன்றானும் வானினுயர்ந்து தனது வெயில் முறுகுதலாலே வெப்பமுடையனாய் விளங்குதலாலே; வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக்கானத்து இருக்கை புக்குழி - அத்துணைப் பொழுதும் வருந்தாது நடந்தவர் தாம் வளமுடைய நீரையுடைய அம் மருத நிலப்பரப்பினிடையே ஒரு பெரிய பொய்கைக் கரையிடத்தே அழகுற்றுத் திகழாநின்ற ஓர் இளமரச் சோலையினூடே வழிப்போக்கர் தங்குதற்கென அமைக்கப்பட்டிருந்த இருப்பிடத்தைக் கண்டு இளைப்பாறுதற் பொருட்டு அதன்கட் சென்று புகுந்த பொழுது என்க.

(விளக்கம்) 10. கண்ணகி முதலிய மூவரும் தமதியல்பிற் கேற்ப மெல்லென நடந்து தமக்குப் புதியனவாகிப் பேரின்பம் பயக்கும் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து ஒரு நாளைக் கொருகாவதமே நடந்து இடையிடையே தங்கித்தங்கி இளைப்பாறி வருகின்றார் ஆதலின் பின்னரும் வழிநடந் தின்புறுதற்கண் வேட்கை பெரிதும் உடையராயிருந்தமை தோன்ற அடிகளார் தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று என இனிதின் ஓதுவாராயினர். வைகறையாமத்து வாரணம் கழிந்து என்றது அவர் நாடோறும் செலவு மேற்கொள்ளும் பொழுதும் அதுவே என்பது குறிப்பாக நம்மனோர்க் கறிவுறுத்துவதுமுணர்க. வைகறையாமத்திலேயே வழிச் செலவை மேற்கொண்டு விடியற்காலமாதற்கு முன்னரே அப் பேரூரை விட்டுச் சென்றனர் என்பது கருத்து. 11. வாரணம் என்றது உறையூரை. 12. குணதிசை வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவர் தாம் புறப்பட்ட அவ் வைகறைப் பொழுதும் அடுத்து வந்த விடியற் பொழுதினும் பெரும் பகுதி கழியுந்துணையும் நடந்து வெயில் முறுகி வெப்ப முறுதலாலே இளைப்பாறி இருத்தற் பொருட்டு அவர் இளமரக் கானத்து இருக்கை புக்கமைக்கு ஏதுவாய் நின்றது. இதுவே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக் கருத்தினை, கதிரவன் முதலிய பிறபெயராற் குறியாமல் அவனை வெய்யவன் என்னும் பெயராற் குறித்து விளக்கினர் என்க. வெய்யவன் விளங்கித் தோன்ற என்றது அவ்வெய்யவன்றானும் தனது வெப்பத்தால் சிறிது முறுகித் தோன்றிய அளவிலே என்றவாறு. முன்னை யுரையாசிரியர் யாரும் அடிகளார் நெஞ்சத்து ஆழ்ந்திருக்கும் இக் கருத்துணராது போயினர். இக் கருத்துணராது விடின் வைகறைப் பொழுதிலே வழிச் செலவை மேற் கொண்டவர் கதிரவன் தோன்று மளவிலே இளமரக் கானத்திருக்கை புகுதற்கேதுவின்மை யுணர்க. 13. உறையூரை அடுத்துள்ள அத் தென்றிசையினும் சோழ நாடுண்மையின், அவ் வழியினும் வளநீர்ப் பண்ணையும் வாவியும் உளவாயின. மேலும், அவ்வாவிக் கரையில் வழிப்போக்கர் நீருண்டு இளைப்பாறி இருத்தற் பொருட்டே அறவோரா லியற்றப் பட்டது அச் சோலை என்பதும் புலப்பட வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த இளமரக் கானத்து இருக்கை என்றார். அவ்விருக்கை, வழிப்போக்கர் தங்கி இளைப்பாறுதற்கியன்ற இடமாதலானன்றே தென்றிசையினின்றும் வடதிசை நோக்கிச் செல்லும் வழிப்போக்கனாகிய மாமறை முதல்வனும் அப்பொழுது அங்கு வந்து புகுகின்றான் என்க.

மாங்காட்டு மறையோன் வரவு

(15 -முதல் 31 -முடிய ஒரு தொடர்)

15 - 22 : வாழ்க ...... வாழி

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - கோவலன் முதலிய மூவரும் அந்த இளமரச்சோலை புகுந்துழி அவ்விடத்தே (31) மாமுது மறையோன் வந்து - சிறந்த பழைய மறைகளை நன்கு ஓதியுணர்ந்தவனாகிய அந்தணன் ஒருவன் தென்றிசையினின்றும் வடதிசைச் செலவை மேற் கொண்டவன் அவ்விளமரக் கானத்திருக்கையுட் புகுந்து வாழ்க எங்கள் அரசனாகிய அரசருள்வைத்துத் தலைசிறந்த பெருந்தகைமையுடையவன்; உலகம் ஊழிதோ றூழிகாக்க - இவ்வுலகத்தை ஊழிகள் பலவும் அவனே காத்தருள்வானாக; அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை பொறாது - பண்டொருகாலத்தே தனது பெருமையினது அளவினை ஏனைய மன்னர்க்குக் காட்டுபவன் காலால் தன்னை மிதித்துக்காட்டியதூஉ மன்றித் தான் பொங்கி எழுந்த காலத்தே தனது வடித்த வேலைத் தன்மீதெறிந்து அடங்கச் செய்ததூஉமாகிய பழைய பகைமையைப் பொறுக்கமாட்டாமல்; கொடுங்கடல் - வளைந்த கடலானது சினந்தெழுந்து; பஃறுளி ஆற்றுடன் பல்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொள்ள - பஃறுளியாறென்னும் பேரியாற்றோடு பலவாகிய பக்கமலைகளையும் உடையதாகிய குமரி மலையையும் விழுங்கித் தன் வயிற்றுட் கொண்டமையாலே; வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு - வடதிசைக்கண்ணவாகிய கங்கைப் பேரியாற்றையும் இமயமலையையும் கைப்பற்றிக் கொண்டு அவ் வடவாரியமன்னர் தன் ஏவல் கேட்ப; தென்திசை ஆண்ட தென்னவன் வாழி -செந்தமிழ் நாட்டின் தென்றிசையை ஆட்சி செய்த பாண்டியமன்னன் நீடூழி வாழ்வானாக எனவும் என்க.

(விளக்கம்) 17. தன் பகையரசர்க்குத் தன் பெருமை கூறுபவன் இத் தென்கடல் எத்துணைப் பெரிது அத்துணைப் பெரிது கண்டீர் என்பவன் கடலைக் கையாற் சுட்டிக் காட்டாமல் கடலினது கடவுட்டன்மையை நினையாமல் அக் கடல் வடிம்பினைத் தன் காலால் மிதித்துக் காட்டினன் எனவும், அது பொறாதாயிற்று எனவும் கருதுக. அதனைப் பொறாமல் அக் கடல் பொங்கி வந்த பொழுதும் அதனை வணங்காமல் தனது வேலை எறிந்து அது சுவறிப் போம்படியும் செய்தான்; ஆகவே இவ்வாறு நெடுங்காலமாக வளர்ந்த பெரும்பகை என்பார் (18) வான்பகை என்றார். கடலை மிதித்து நின்ற பாண்டியனை வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பர். கடல் சுவற வேலெறிந்தவனை உக்கிரகுமார பாண்டியன் எனத் திருவிளையாடற் புராணங்கூறும். மேலே வருவன சிலவும் இவன் செயலாகவே அப் புராணங்கூறா நிற்கும்.

19. கடல் கொண்ட பஃறுளியாற்றிற்கு ஈடாக வடதிசைக் கங்கை யாற்றினையும், குமரிமலைக் கீடாக இமயமலையையும் கைக்கொண்டனன் எனக் கூறியபடியாம். கங்கையும் இமயமும் கொண்டு என்றவர் மீண்டும் தென்றிசை யாண்ட தென்னவன் என்றது, கங்கை நாட்டையும் இமய மலையையும் ஆட்சி செய்த வடவாரியரை வென்று அடிப்படுத்து அவர் தாம் தன்னேவல் வழி நிற்பத் தனக்குரிய தென்னாட்டை ஆட்சி செய்தவன் என்றவாறு.

இனி அடியார்க்கு நல்லார் (கடல் கோட்பட்ட) நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமாநாட்டுக் குண்டூர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னன் என்பர்.

23 - 31 : திங்கட்செல்வன் .............. வந்திருந்தோனை

(இதன் பொருள்) திங்கள் செல்வன் திருக்குலம் விளங்க - இருள் கழிந்து ஒளிப்புகழ் பரப்புகின்ற திங்களாகிய செல்வனுடைய சிறந்த குலமாகிய அப் பாண்டியர் குலத்தின் புகழ் பெரிதும் விளக்கமுறும்படி; செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரள் ஒளி பொங்கு மார்பில் பூண்டோன் வாழி - சிவந்த கண்கள் ஓராயிரமுடைய தேவர் கோமான் பூட்டிய தனது பேராற்றல் பிறர்க்கு விளங்குதற்குக் காரணமான ஆரத்தை ஒளி மிக்க தனது மார்பிலே எளிதாகப் பூண்டவனாகிய பாண்டியன் நீடூழி வாழ்வானாக; இடியுடைப்பெருமழை முதல்வன் சென்னி முடிவளை உடைத்தோன் என்று எய்தாது ஏக - இடியையுடையபெரிய முகில்கள் தாமும் தந்தலைவனாகிய இந்திரன் தலையிலணிந்த முடியணியை ஆழிப்படையால் உடைத்தவன் இவன் என்று கருதி அவன் நாட்டின்கண் மழை பெய்யாமல் வறிதே செல்லக் கண்டு; மழை பிணித்து - அம் முகில்கள் விலங்கிட்டுத் தடுத்துத் தன்னாட்டின்கண்; பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப - தப்பாத விளைவும் ஏனைய வளங்களும் உண்டாகும்படி மழை பெய்வித்து; ஆண்ட மன்னவன் வாழ்க என - அருளாட்சி செய்தருளிய மன்னவன் நீடூழி வாழ்க! எனவும்; தீது தீர் சிறப்பின் தென்னனை - குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய அப் பாண்டிய மன்னனை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தவனைக் கண்டு என்க.

(விளக்கம்) 23. பாண்டிய மன்னர் திங்கட்புத்தேளின் மரபினர் என்பது நூல் வழக்கு. திருக்குலம் என்புழித் திரு சிறப்புப் பொருள் குறித்து நின்றது. தேவராரம் பூண்டமைதானும் பாண்டிய மன்னர் மரபிற்கு ஒரு புகழாய் முடிந்தமையின் குலம் விளங்க ..... ஆரம் பூண்டோன் என்றான். 24 செங்கண் ஆயிரத்தோன் என்றது ஆயிரஞ் செங்கண்ணுடையோன் என்றவாறு. அவன் இந்திரன் என்க. இந்திரன் தானிட்ட ஆரத்தின் பொறையாற்றாது பாண்டியன் அழிந்தொழிக என்னும் கருத்தினாலே பாண்டியனுக்குப் பொறை மிக்கதோர் ஆரத்தைப் பூட்டினனாக, அதனைப் பாண்டியன் மிகவும் எளிதாகவே பூண்டு விளங்கினன், ஆதலின் அஃது அவனுக்குப் புகழாயமைவதாயிற்றென்க. 25. ஒளி பொங்கு மார்பில் என மாறுக. 26. வளை - ஆழிப்படை: (சக்கராயுதம்). 27. பெருமழை - பெரிய முகில். பிணித்தலருமை தோன்ற இடியுடைப் பெருமழை என்று விதந்தான். 28. விளையுள் - விளைச்சல்.

இனி, இப் பெருங் காப்பியத்தில் சோழ மன்னனை மங்கல வாழ்த்துப் பாடலில் வாழ்த்தித் தொடங்கிய இளங்கோவடிகளார் ஈண்டு மதுரைக் காண்டத்தைத் தொடங்குபவர் மாமறை முதல்வன் ஒருவன் வாயிலாகப் பாண்டியனை மனமார வாழ்த்தித் தொடங்கும் நுணுக்கமும், மேலும், இக் காண்டத்துள் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் அவனது பழவினையே அன்றிப் பாண்டிய மன்னனின் கொடுங்கோன்மை யன்று என்று குறிப்பாக வுணர்த்துவார் அம் மன்னனைத் தந்திருவாயானும் (30) தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி என்று முன் மொழிந்து கோடல் என்னும் உத்தி வகையாலே அருளிச் செய்திருப்பதூஉம் கருத்தூன்றி யுணர்ந்து மகிழற்பாலனவாம். அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டு மிகைமக்களான் மதிக்கற்பால என்பதற்கேற்ப ஈண்டுத் தீதுதீர் சிறப்பின் தென்னனைப் புகழ்ந்து வாழ்த்துவான் மாமுதுமறையோன் ஆயினவாறு முணர்க. 31. வந்திருந்தோன் : பெயர்.

(32. முதலாக 56. முடியக் கோவலன் வினாவிற்கு அவ்வந்தணன் கூறும் விடை.)

32 - 34 : யாது நும்மூர்.......உரைப்போன்

(இதன் பொருள்) கோவலன் - கோவலன் அணுகி; நும் ஊர் யாது ஈங்கு வரவு என் எனக் கேட்ப - பெரியீர்! நும்முடைய ஊர் யாது? இங்கு நீயிர் வருதற்குரிய காரணம் என்னையோ? என்று இனிதின் வினவ; குன்றாச்சிறப்பின் மாமறையாளன் - எக்காலத்தும் குறைதலில்லாத சிறப்பினையுடைய பெரிய மறைகளையுணர்ந்த அவ் வந்தணன்றானும் அவன்வினாக்கனிற் பின்னதற்கு விடையாக வருபொருள் உரைப்போன் - தான் அங்கு வருதற்கியன்ற காரணமாகிய பொருளை முதற்கண் கூறுபவன் என்க.

(விளக்கம்) 32. ஈங்கு வரவு என் என மாறுக. வருதற்குரிய காரணம் என் கொலோ? என்று வினவியபடியாம். கோவலன் வினாக்களிரண்டனுள் பின்னதே சிறப்புடைத்தாகலின் அதனை அவ் வந்தணன் முற்படக் கூறுகின்றான் என்க. 34. வருபொருள் - தான் வருதற்குக் காரணமாகிய பொருள்.

திருவமர் மார்பன் கிடந்தவண்ணம்

35 - 40 : நீலமேகம் ............... வண்ணமும்

(இதன் பொருள்) நெடும் பொன் குன்றத்து - உயர்ந்த பொன் மலையின் மீது; நீல மேகம் பால் விரிந்து அகலாது படிந்தது போல - நீலநிறமுடைய முகில் ஒன்று பக்கங்களிலே விரிந்து பரவாமல் படிந்து கிடந்தாற்போன்று; விரித்து எழுதலை ஆயிரம் அருந்திறல் உடை - படம் விரித்து எழுந்த தலைகள் ஓராயிரமும் கிட்டுதற்கரிய ஆற்றலும் உடைய; பாயல் பள்ளி - பாப்பணையாகிய படுக்கைமீது; பலர் தொழுது ஏத்த - அமரரையுள்ளிட்ட பலரும் தன்னைக் கண்டு வணங்கிப் பராவியுய்தற் பொருட்டு; விரிதிரைக் காவிரி வியன் பெரு துருத்தி - விரிகின்ற அலைகளையுடைய காவிரிப் பேரியாற்றிடைக் குறையாகிய திருவரங்கத்திலே; திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பியுறைகின்ற திருமார்பினையுடைய திருமால் கிடந்தருளிய திருக்கோலத்தையும்; என்க.

(விளக்கம்) நீலமேகம் நெடிய பொன்மலையின் மிசை அங்ஙனம் கிடத்தல் அரிதாகலின் இவ்வாறு அடைபுணர்த் தோதினன். நீலமேகம் - திருமாலுக்குவமை. ஆயிரம் குவடுகளையுடைய பொற் குன்றம் எனப் பொருளுக்குப் புணர்த்த ஆயிரந்தலையை உவமைக்குங் கொள்க. அருந்திறல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு அருந்திறலையுடைய பாம்பு என்க; அஃதாவது ஆதிசேடன். பலர் என்றது அமரர் முதலிய பலரும் என்பதுபட நின்றது. ஆற்றிடைக்குறைகளுள் வைத்துத் திருவரங்கம் பெரிதாதல் கருதி வியன்பெருந் துருத்தி என்றார். துருத்தி - ஆற்றிடைக்குறை (அரங்கம்). திரு - திருமகள். திருவமர்மார்பன் - திருமால். கிடந்தவண்ணம் - அறிதுயில் கொண்டு கிடக்கின்ற அழகென்க.

செங்கண் நெடியோன் நின்றவண்ணம்

41 - 51 : வீங்குநீ ரருவி ...... வண்ணமும்

(இதன் பொருள்) வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை - மிகவும் பெருகி வீழாநின்ற கொடிவழித் தீர்த்தம் முதலிய பேரருவிகளையுடைய திருவேங்கடம் என்னும் பெயரையுடைய மலையினது குவடுகளுள் வைத்து மிகவும் உயர்ந்த குவட்டின் மேலே; இருமருங்கு ஞாயிறும் திங்களும் விரிகதிர் விளங்கி - இரண்டு பக்கங்களினும் ஞாயிற்றினின்றும் திங்களினின்றும் விரிகின்ற ஒளிகளாலே விளக்கமெய்தப் பெற்ற; ஓங்கிய இடை நிலைத்தானத்து - உயர்ந்துள்ள அவ்விரண்டு ஒளிமண்டிலங்கட்கும் நடுவண் உளதாகிய ஓரிடத்தே; நல்நிற மேகம் - நல்ல நீலநிறமமைந்த ஒருமுகிலானது; மின்னுக் கோடி உடுத்து - தனது மின்னலாகிய புதிய ஆடையை உடுத்து, விளங்கு வில் பூண்டு - ஒளிதிகழும் தனது இந்திரவில்லையும் அணிகலனாக வணிந்து கொண்டு நின்றாற்போல; பகை அணங்கு ஆழியும் பால் வெள் சங்கமும் நகை பெறு தாமரைக் கையில் ஏந்தி - தனதிருமருங்கினும் பகைவரை வருத்துகின்ற ஆழிப்படையையும் பானிறச் சங்கினையும் அழகு பெறுகின்ற செந்தாமரை மலர்களை யொத்த தன் திருக்கைகளிலே ஏந்திக்கொண்டு; நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு - அழகுதிகழ்கின்ற கவுத்துவமணி மாலையைத் தனது திருமார்பிலே அணிந்துகொண்டு; பொலம் பூவாடையில் போலிந்து தோன்றிய - பொற்பூவாடையை யுடுத்துப் பொலிவுற்றுத் தேவர் முதலிய பலரும் தொழுதுய்தற் பொருட்டு வெளிப்பட்டுத் தோன்றியருளிய; செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - சிவந்த திருக்கண்களையுடைய அந்தத் திருநெடுமாலினது; நின்றருளிய திருக்கோலத்தையும் என்க.

(விளக்கம்) நன்னிற மேகம் இடைநிலைத்தானத்து உடுத்துப் பூண்டு நின்றது போல நெடியோன் உச்சிமீமிசை ஏந்திப் பூண்டு பொலிந்து தோன்றிய நின்றவண்ணமும் என இயையும். இது மயக்க நிரனிறை. உச்சிமீமிசை: ஒருபொருட் பன்மொழி; சிறப்பின்கண் வந்தன.

இனி இதன்கண் மேகம் நெடியோனுக்கும் மின்னுக்கொடி பொன்னாடைக்கும் இந்திரவில் ஆரத்திற்கும் ஞாயிறு ஆழிக்கும் திங்கள் சங்கிற்கும் இடைநிலைத்தானம் மலையினுச்சிக்கும் உவமை என்க. முன்னர்த் திருவரங்கத்திற்குக் கூறிய 38. பலர் தொழுதேத்த என்னும் ஏதுவை ஈண்டும் கூறிக்கொள்க. முன்னர்க் கிடந்த வண்ணத்திற்குத் தகத் திருவமர் மார்பன் எனவும் ஈண்டுநின்ற வண்ணத்திற்குத்தக, செங்கண் நெடியோன் எனவும் அடிகளார் சொற்றிறம் தேர்ந்தோதுதலறிக.

45. கோடி - புத்தாடை. வில் - இந்திரவில். ஞாயிற்றுக்கும் திங்களுக்குமிடை நின்ற மேகம் நிறங்கெடுதல் இயல்பாகலின் அங்ஙனம் கெடாத நிறமுடைய மேகம் ஒன்றுண்டாயின் அந்த மேகம் என்பார் நன்னிறமேகம் என்றார்.

இனி, குன்றாச் சிறப்பின் மாமறையாளன் என அடிகளாராற் சிறப்பித்தோதப் பெற்ற இந்த அந்தணன்றானும் ஈண்டுத் திருவரங்கத்துத் திருமால் கிடந்தவண்ணத்தையும் திருவேங்கடத்துச்சிமீமிசை அந்தச் செங்கண் நெடுமால் நின்ற வண்ணத்தையும் இறையன்பு காரணமாகத் தன் அகக்கண்களிற் கண்டவாறு கூறியபடியாம் என்று நுண்ணிதிற் கண்டு கொள்க பண்டும் இன்றும் இறையன்புமிக்கோர் இத்துணைச் சிறப்பாகவே இறைவன் திருக்கோலங்களைக் கண்டுமிக்க வல்லுவநராவார். அக் காட்சிகளை இலங்கியங்களிலே அவர் கண்ட வண்ணமே கண்டு மகிழும் பேறு அத்தகைய இலக்கியங்களை ஆர்வத்தோடு ஓதுகின்ற திருவுடையார்க்கும் என்றென்றும் உண்டாதல் தேற்றமாம். மற்றுத் திருவரங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் சென்று புறக்கண்களால் மட்டும் காண்பவர் காட்சி இவற்றின் வேறாம் என்பது வெளிப்படை.

இனி இம் மாமறை முதல்வன் நம்மனோர் செவியுஞ் சிந்தையும் குளிர இறைவனுடைய திருக்கோலங்களை ஓதுமாற்றானே அவனது இறைபன்பின் பெருக்கந்தானும் நம்மனோர்க்கும் புலப்படுதலுமுணர்க.

அந்தணனின் இறையன்பின் றிறம்

52 - 53 : எங்கண் ....... வந்தேன்

(இதன் பொருள்) என்கண் காட்டு என - அடியேனுடைய இந்தக் கண்கள் தாம் எமக்குக் காட்டுதி ! எமக்குக் காட்டுதி ! என்று; என் உளம் கவற்ற - என்னெஞ்சத்தை இடையறாது வருத்துதலாலே; வந்தேன் (56) இது என் வரவு - அக் கண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதலின்றியமைகலேனாய் ஈண்டு வந்தேன்காண்! இதுவே என் வரவிற்குரிய காரணம் கண்டாய்; என்றான் என்க.

(விளக்கம்) 52 - என் கண் காட்டு என்று என்னுளம் கவற்ற என்னும் இம் மாமறையோன் மொழி இறையன்பு மிக்க சான்றோர் தம் மனநிலையை மிகவும் திறம்பக் காட்டுதலுணர்க அவைதாம் அம் மறையோனை ஐய! அவ்வண்ணங்களைக் காணாத கண் என்ன கண்ணோ? காட்டுதி காட்டுதி என்று பன்முறையும் அவனை வருந்தின என்பது தோன்ற என் கண் உளம் கவற்ற என்றான். ஈண்டு அவனுளம் இடையறாது இவ்வண்ணங்களைச் சென்று காண்டலாலே அக் கண்கள் எம்மையும் கொண்டு போதி என வருத்தின என்றவாறு. ஈண்டுத் தன் கொழுநன்பால் தன்னெஞ்சு சென்று விடுதலாலே அவனைக் காணாதமைகிலாக் கண்ணுடைய தலைவி அந்நெஞ்சை நோக்கி,

கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று  (குறள் - 1244)

என்று கூறியது நமது நினைவிற்கு வருகின்றது.

53 - 57 : குடமலை ....... கேட்டு

(இதன் பொருள்) குடமலை மாங்காட்டு உள்ளேன் - ஐய! என் ஊர் யாதென வினவினையல்லையோ கூறுவல் யான் குடகமலைச் சாரலகத்தமைந்த மாங்காடு என்னும் ஊரின்கண் உறைகின்றேன் காண்: தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் -யான் வருகின்ற வழியிலமைந்த பாண்டியனாட்டிலமைந்த சிறப்புகள் பலவற்றையும் அம் மன்னனுடைய கொடை அளி முதலிய செயல்களையும் கேட்டலோடன்றி; கண்மணி குளிர்படக் கண்டேன் ஆதலின் - என் கண்ணற் பாவைகள் குளிரும்படி கண்டு வந்தேனாதலாலே; வாழ்த்தி வந்திருந்தேன் என - அம் மன்னனை நெஞ்சார வாழ்த்தி வந்து ஈங்கிருந்தேன் என்று; தீததிறம் புரிந்தோன் - தன்குலத் தொழிலாகிய வேள்விபலவும் செய்துயர்ந்த அவ்வந்தணன்; செப்பக் கேட்டு - தனவினாக்களுக்கு விடையிறுப்ப அவற்றை இனிதாகக் கேட்டு என்க.

(விளக்கம்) 57 - தீத்திறம் - வேள்வி. வேளாப் பார்ப்பனரும் உளராதலின் அவரின் வேறுபடுத்தற்குத் தீத்திறம் புரிந்தோன் என விதந்தார். முத்தீயின் திறத்து மணம் புரிந்தோன் என்னும் அடியார்க்கு நல்லார் உரை சிறவாமையுணர்க. இவை கோவலன் வினவிற்கு விடையாதலின் அப்பொருள் தோன்றச் செப்ப என்றார். செப்பு - விடை. செப்பும் வினாவும் வழ அல் ஓம்பல் என்புழி (தொல். சொல். 13.) அஃதப் பொருட்டாதலறிக. 

கோவலன் அம் மாங்காட்டு மறையோனை
வழித்திறம் வினாதல்

(58 - முதலாக 149 - முடிய வழித்திறங் கேட்ட கோவலனுக்கு மாமறையோன் வழித்திறங் கூறுவதாய் ஒருதொடர்)

58 - 59 : மாமறை ............. உரைக்கும்

(இதன் பொருள்) மாமறை முதல்வ - கோவலன் மீண்டும் அவ்வந்தணனை நோக்கிச் சிறந்த மறைகட்கு எல்லாம் தலைமையுடையோய்! நின் ஊரும் வரவின் காரணமும் அறிந்து மகிழ்ந்தேன் அது நிற்க, இனி; நீ மதுரைக்குச் செந்நெறி கூறு என அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்குச் செல்லும் வழிகளுள் வைத்துச் செவ்விய வழியை எமக்குக் கூறுதி என்று வேண்ட; கோவலற்கு உரைக்கும் - அம் மறையோன் அவனுக்குக் கூறாநிற்பன்; அது வருமாறு :- என்க.

(விளக்கம்) கேட்டு மதுரைச் செந்நெறி கூறு என்றது - கேட்டு மகிழ்ந்து இனி, நீ கண்மணி குளிப்பக்கண்டு வந்த அத்தென்னவன் தலைநகரமாகிய மதுரைக்கியாங்களும் செல்லுதல் வேண்டும் ஆதலின் அதற்குச் செல்லும் நெறிகளுள் நல்லதொரு நெறியை எங்கட்குக் கூறு என்பது தோன்ற நின்றது. செந்நெறி - செவ்விய நெறி.

மறையோன், வழியின் கொடுமை குறித்து இரங்குதல்

60 - 97 : கோத்தொழிலாளரொடு ............ தன்னுடன்

(இதன் பொருள்) கோத்தொழிலாளரொடு - நடுவு நிலையிற் பிறழ்ந்து உள்ளங் கோடிய அமைச்சர் முதலிய அரசியற் றொழிலாளரோடே கூடி; கொற்றவன் கோடி - அரசன்றானும் நாள்தோறும் நாடி முறை செய்யாது கோல் கோடநிற்றலாலே; வேந்து இயல் இழந்த வியன் நிலம் போல - அரசியலை இழந்து கேடெய்திய அகன்ற நிலத்தைப்போல; வேனலம் கிழவனோடு வெங்கதிர் வேந்தன் - தனக்குரிய அறுவகை அமைச்சர்களுள் வைத்து வெப்பமிக்க முதுவேனில் என்னும் கொடிய அமைச்சனோடு கூடிக்கொண்டு வெவ்விய ஒளியையுடைய ஞாயிறு என்னும் வேந்தனானவன்; தான் நலம் திருக - பண்டுதான் செய்த நலங்களைத் தானே அழித்தலாலே; முல்லையும் குறிஞ்சியும் தன்மையில் குன்றி - முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தமக்குரிய பண்புகள் குறையப்பெற்று; முறைமையில் திரிந்து - தங்கண் வாழும் உயிர்கட்குக் தாம் வழங்கும் முறைமையையுடைய நலங்களை வழங்காமல் மாறுபட்டு; நல்லியல்பிழந்து - நல்லியற்கை வளங்கெட்டு; நடுங்கு துயர்உறுத்து - அவை அஞ்சிநடுங்குதற்குக் காரணமான துன்பத்தையே மிகுவித்து; பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - அவ்விரண்டும் பாலை நிலம் என்று கூறப்படும் ஒரே நிலமாகின்ற வடிவை மேற்கொள்ளா நின்ற இம் முதுவேனிற் காலத்திலே; காரிகை தன்னுடன் எய்தினிர் - இம் மெல்லியனல்லாளோடு நீயிர் மதுரைக்குப்போக ஒருப்பட்டு ஈண்டு வந்துளீர் அல்லிரோ ! என்றான் என்க.

(விளக்கம்) 60 - கோத்தொழிலாளரொடு என்புழி ஒடுவுருபு கோடுதற் றொழிலில் உடனிகழ்ச்சிப் பொருட்டாய் நின்றது. கொற்றவனும் கோடி எனல் வேண்டிய இழிவு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. கோடி - கோட எனச் செயவெ னெச்சமாக்குக. கோத்தொழிலாளர் - அமைச்சர் முதலியோர். வேத்தியல் -மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று: அரசினது இயல்; அஃதாவது - செங்கோன் முறைமை என்க.

இனி வேத்தியலிழந்த வியனிலம் போல என்றது - அரசியலிழக் தமையாலே அந்நாடு கேடுற்றாற் போல என்றவாறு. இதனை -

கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையில் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்

எனவரும் சிந்தாமணியானும் (255)

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்  (குறள் - 559)

என்றற் றொடக்கத்துத் திருக்குறள்களானும் உணர்க.

62. வேனலங் கிழவன் - என்றது ஈண்டு முதுவேனிலை. வேந்தன்றான் என்புழி: தான் அசைச்சொல் லெனினுமாம். வெங்கதிர் வேந்தன் கார்ப்பருவ முதலிய அமைச்சரோடு கூடித் தான் செய்த நலங்களைத் தானே திருக என இசையெச்சத்தால் விரித்தோதுக. வெங்கதிர் வேந்தன் நலந்திருகக் காரணம் தீய அமைச்சனாகிய முதுவேனிலோடு கூடினமையேயாம் திருகுதல் - அழித்தல். தன்மை முல்லைக்கும் குறிஞ்சிக்கும் இயல்பாயமைந்த பண்புகள். அவையிற்றை முல்லைப் பாட்டினும் குறிஞ்சிப் பாட்டினும் காண்க. நல்லியல்பு என்பது மது. இரண்டு திணைகளும் திரிந்து பாலை என்னும் ஒரே திணையாகி விடும் காலம் என்பான் பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்றான். இத்தகைய காலத்தே வந்தனிர் என்றது, நீங்கள் இங்ஙனமொரு பாலை நிலவழியைக் கடந்தே மதுரைக்குப் போதல் வேண்டும் என்பது தோன்றக் கூறியவாறாம். பின்னரும் கண்ணகியை நோக்கியவன் இத் தவ மூதாட்டியும் நீயும் ஒரோவழி அவ்வழியைக் கடந்து போதல் கூடும், இக் காரிகை அவ்வழியைக் கடத்தல் அரிது என்பது தோன்ற, காலை எய்தினிர் எனப் பொதுவனோதாது காரிகை தன்னுடன் எய்தினிர் என விதந்து கூறினான். இது கண்ணகியின் மென்மையையும் அவ்வழியின் கொடுமையையுந் தூக்கிக் கூறியவாறென்க. காலை - காலம்.

இனி. அடிகளார் 60. கோத்தொழிலாளரொடு என்பது தொடங்கி .... 66 - பாலையென்பதோர் படிவம் கொள்ளும் என்னும் துணையும் கூறிய சொல்லும் பொருளும் - மதுரைக்கும் இவர்க்கு நிகழவிருக்கும் போகூழினது செயலுக்கும் ஒரு வாய்ப்புள்ளாகவும் அமையும்படி ஓதியுள்ளமை கூர்ந்துணரற்பாலதாம். என்னை ? அங்கு வளையாத செங்கோல் வளையும்படி மன்னன் தன்னரண்மனைப் பணியாளன் சொற் கேட்டலும் காவலருள் கல்லாக்களிமகன் தம்முள் முதியோர் சொற்கேளாது வாளாலெறிதலும் அவ்வழி மாமதுரை வேறொரு படிவம் கொள்ளலும் நினைக.

மறையோன் கூறும் வழித்திறம்

67 - 73 : அறையும் ........... கவர்க்கும்

(இதன் பொருள்) அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்த - பாறையும் துறுகலும் அரிய வழிமயக்கமும் பேய்ததேருமாகிய இவை யான் கூறிய முறையாலே கிடக்கின்ற; இந் நெடும்பேர் அத்தம் நீங்திச் சென்று - இந்த நீண்ட பெரிய பாலைப் பரப்பிற் செல்லும் தொலையாத வழியை நடந்து தொலைத்து அப்பாற் சென்று; கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் - ஆங்கெதிர்ப் படுகின்ற கொடும்பாளூர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்களுக்கும் இடைக்கிடந்த கோட்டகத்துட் புகுந்து சென்றக்கால்; பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும் - இளம்பிறையைத் தலைமிசைக் கண்ணகியாகச் சூடிய பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் தன் றிருக்கையிலேந்திய முக்கூறாக அறுக்கப்பட்ட சூலப்படையினது தலைகளைப் போன்று கடத்தற்கரிய அவ்வழி மூன்று கிளைகளாகப் பிரிந்து போகும்; என்றான் என்க.

(விளக்கம்) அறை - பாறைக்கல். பொறை - சிறிய மண்மலை. துறுகல கொணர்ந்து இட்டது போன்ற கற்பாறை. வழியோ அன்றோ என்று மயங்குதற்குக் காரணமான இடைவழியை ஆரிடைமயக்கம் என்றார். ஆரிடை - அறிதற்குரிய நடுவிடம். இனி ஆரிடை - அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறு செய் விலங்கு முடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாயிருப்பது, என்பர் அடியார்க்கு நல்லார் இவ்வுரை பரஞ்சேரி இறுத்தகாதைக்கண் கோள்வல்..... எங்கணும் போகிய இசையோ பெரிதே (5 - 10) என்பதனோடும் மாறுபடும் என்க.

69. நிறைநீர் வேலி என்றது பேய்த்தேரை என்னும் பழையவுரை சிறந்த வுரையாகும். என்னை? பாலையென்பதோர் படிவங்கொண்ட நிலத்து நெறியாகலின் இகழ்ச்சி தோன்ற அடிகளார் பேய்த்தேரையே அங்ஙனம் கூறினர் என்பதே நுண்ணியவுரையாம். இங்ஙனமன்றி இதற்கு நிறை த நீர்க்கு வேலியாகிய ஏரிக்கரை என்பார் உரை போலியென்க. பேய்த்தேரானது மயங்கியவர்க்கு மிகப்பெரிய நீர்நிறைந்த பொய்கை போன்று அலைகளுடனே தோன்றுதலியல்பாதல் கண்டுணர்க. 71. கொடும்பை - கொடும்பாளூர், நெடுங்களம் என்பதும் ஊர்ப்பெயர். இவையிரண்டும் இணைப்பெயர் பெற்ற ஊர்கள் என்பர். இவ்வாறு இணைப்பெயர் பெற்ற ஊர்கள் இக்காலத்தும் இணைத்தே பெயர் கூறப்படுதல் காணலாம். கோட்டகம் என்பது ஊர்களின் நிலப்பரப்பிற்குப் பெயர். அஃது இக்காலத்தும் கோட்டகம் என்றே வழங்கப்படுகின்றது. 70. நீந்திச்சென்று .......... புக்கால் என்றது கடந்து செல்லல் அரிது என்பது பட நின்றது. 72. பிறை முடிக்கண்ணிப் பெரியோன் - சிவபெருமான்; பிறவாயாக்கைப் பெரியோன் என முன்னர்க் கூறியதும் நினைக. 72. அறைவாய் - அறுக்கப்பட்டவாய். சூலத்து - சூலத்தைப்போல. எனவே அவ்வழி மூன்றாகக் கவர்க்கும் என்றாராயிற்று.

மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமும்

74 - 79 : வலம்படக்கிடந்த ......... கடந்தால்

(இதன் பொருள்) வலம்படக் கிடந்த வழி நீர் துணியின் - ஐய! அம் மூன்று வழிகளுள் வைத்து நீங்கள் வலப்பக்கத்தே கிடந்த வழிமேற் செல்லநினைந்து செல்வீராயின்; அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரி அரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் திரங்கிய வரிபுறம் மரல் கரிகிடக்கையும் - விரிந்த தலையினை யுடைய வெண்கடம்பும் உலர்ந்த தலையினையுடைய ஓமையும் தண்டுலர்ந்து வற்றிய மூங்கிலும் நீரின்றி வற்றிற்திரங்கிய வரிகளையுடைய புறத்தையுடைய மரல் கரிந்து கிடக்கின்ற இடங்களும்; மரன் நீர் நசைஇ வேட்கையின் நின்று விளிக்கும் - உழைமான் கரிந்த அம் மரற் புல்லைத்தின்று பின்னர் நீர்பருக விரும்பி யாண்டும் திரிந்து பார்ததும் நீர் பெறமாட்டாமையால் அந்நீர் வேட்கை மிக்கு இளைப்புற்று நின்று உளைதற்கிடனான; கானமும் - காட்டையும்; எயினர் கடமும் கடந்தால் - இடையிடையே பாலைநிலமாக்கள் குடியிருக்கும் ஊர்களையும் கடந்துசென்றால் அவற்றிற்கும் அப்பால்; என்க.

(விளக்கம்) வலம்படக்கிடந்த நெறி செவ்விய நெறியன்று என்பது தோன்ற நீர்துணியீன் என்றான். மராம் - வெண்கடம்பு. ஓமை உழிஞ்சில் - பாலைநிலத்து மரங்கள். அலறுதல் உலறுதல் இரண்டும் ஒருபொருட் பன்மொழி. பொரியரை - பொருக்குடைய அடிமரம். புல்முளி மூங்கில் தண்டிற்கு ஆகுபெயர். மான் செய்யும் ஒலியை உளைத்தல் என்பது மரபுபோலும். எயினர் - பாலைநிலமாக்கள். கடந்தால் என்பது கடத்தலரிது என்பதுபட நின்றது. இப்பகுதியில் அடிகளார் முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றரிந்த பாலையினது தன்மையை இயற்கை நவிற்சியணியாக வோதயிருக்கும் அழகு நினைந்து மகிழற்பாலதாம்.

தென்னவன் சிறுமலை

80 - 85 : ஐவனவெண்ணெல் ............. தோன்றும்

(இதன் பொருள்) ஐவன வெள் நெலும் அறைக்கண் கரும்பும் - மலைச்சாரலிற் பயிராகும் ஐவன நெல் எனப்படும் வெண்மை நிறமுடைய நெல்லினது பயிரும்; அறுத்துத் துணிக்கும் கணுக்களையுடைய முதிர்ந்த கருப்பஞ்சோலையும்; கொய்பூந் தினையும் -கொய்யும் பருவத்தையுடைய அழகிய தினைகளையுடைய புனங்களும்; கொழும்புன வரகும் - கொழுவிய கொல்லைகளிலே பயிர் செய்யப்பட்ட வரகுப் பயிர்களும்; காயமும் - வெள்ளங்காயமும்; மஞ்சளும் - மஞ்சட் கிழங்கும்; ஆய்கொடிக் கவலையும் - அழகிய கொடியையுடைய கவலையும்; வாழையும் கமுகும் தாழ் குலைத் தெங்கும் - வாழையும் கமுகும் தாழ்ந்த குலைகளையுடைய தெங்கந் தோட்டமும்; மாவும் பலாவும் சூழ் அடுத்து - மாமரங்களும் பலா மரங்களும் தன்னை அடுத்துச் சூழ்தலையுடைய; தென்னவன் ஓங்கிய சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுக்குரிய உயர்ந்த சிறுமலை என்னும் பெயரையுடைய மலை நன்கு விளங்கித் தோன்றுங்காண் என்றான் என்க.   

(விளக்கம்) எயினர் கடத்தைக் கடந்த பொழுதே தென்னவன் சிறுமலை தோன்றும், அம் மலைதான் இத்துணை வளமுடைத்தென்று அறிவுறுத்தபடியாம்: ஐவனம் - மலைச்சாரலில் பயிராகும் ஒருவகை நெல். அதன் நிறம் வெண்மையாதலின் வெண்ணெல் எனத் தெரித்தோதினார். அறைகண் - வரையறையையுடைய கணுக்களையுடைய கரும்பு எனினுமாம். கண் - கணு. தினைக்கதிர் காண்டகு வனப்புடைத்தாகலின் பூந்தினை என்றார். புனம் - கொல்லை. காயம் - வெண்காயமுமாம். வாழை கமுகு தெங்கு மூன்றும் புல் ஆகலின் ஒருசேர வோதினர். மாவும் பலாவும் மரங்கள் தன்னை அடுத்துச் சூழ இடையிலே ஓங்கிய சிறுமலை எனவும் தென்னவன் சிறுமலை எனவும் தனித்தனி யியைக்க. சிறுமலை என்பது அதன் பெயர். (சிறிய மலை என்னும் பொருளில்லை) என்க.

இச் சிறுமலையை அடிகளார் இயற்கை நவிற்சியாக வோதிய அழகும் நினைந்தின்புறற் பாலதாம்.

திருமால் குன்றம்

86 - 91 : அம்மலை .............. செல்விராயின்

(இதன் பொருள்) அம்மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின் - அச் சிறுமலையை நுமக்கு வலப்பக்கத்தே வைத்து இடம் பக்கத்து வழியிற்சென்று நீயிர் செல்லக் கருதிய அகன்ற மதுரைமா நகரினை அடையக்கடவீர்; அவ்வழிப் படரீராயின் - ஈண்டுக் கூறப்பட்ட அவ் வலப்பக்கத்து வழியாகச் செல்லா தொழியின், இடத்து - சூலம்போலக் கவர்த்த வழிகளிலே இடப்பக்கத்து வழிமேல் செல்லுதிராயின்; சிறைவண்டு செவ்வழிப் பண்ணின் அரற்றும் தடம் தாழ் வயலொடு - சிறகுகளையுடைய வண்டுகள் தேன் தேர்பவை செவ்வழிப் பண் போன்று இசை முரலுதற் கிடமான ஏரிகளும் அவற்றின் நீர் பாயுமளவிற்குத் தாழ்ந்து கிடக்கின்ற வயல்களும் இடையிடையே; தண் பூ காவொடு - குளிர்ந்த பூம்பொழில்களும்; கடம்பல கிடந்த காடுடன் கழிந்து - அருநெறிகள் பலவும் தம்முட்கிடந்த காட்டு வழியையும் கடந்து சென்று; திருமால் குன்றத்துச் செல்குவீராயின் - அப்பால் எதிர்ப்படுகின்ற திருமால் குன்றத்தின்கட் செல்வீராயின்; என்க.

(விளக்கம்) இதுகாறும் கூறியது சூலம் போல மூன்றாகக் கவர்க்கும் என்ற வழிகளுள் வைத்து வலப் பக்கத்து வழியினியல்பு இனி ஈண்டு 87. இடத்து என்றது அவற்றுள் இடப்பக்கத்தே கிடந்த வழியை என்க. இடத்து வழி மேல் 91. செல்குராயின் என்றியையும். இவ் வழி முன்னையினும் சிறந்த வழி என்பது தோன்றச் செவ்வழிப் பண்ணின் சிறை வண்டரற்றுதற் கிடனான நீர்ப்பூக்களும் கோட்டுப் பூ கொடிப்பூ முதலியனவும் நிரம்ப மலர்ந்துள்ள தடமும் தாழ் வயலும் தண் பூங்காவு முடைத்திது என்றான். சிறைவண்டரற்றுதல் தடமுதலிய மூன்றற்கும் பொது. இங்ஙனம் கூறவே இவ்வழி நீரும் நிழலுமுடைய இனிய நெறி என்றுணர்த்தினானாம். செவ்வழிப்பண்-நாற்பெரும் பண்களுள் ஒன்று. தடங்களில் மலரும் தாமரை மலரிற்றாதூதும் வண்டுகள் அக் காலைப் பொழுதிற்குரிய பண்ணாகிய செவ்வழிப்பண் பாடும் என்றான். என்னை? அப்பண் அப்பொழுதிற்குரிய பண் என்பதனை,

மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர்  (புறம்)

என்பதனானுமுணர்க.

தடம் - ஈண்டு ஏரி, அதன் நீர்பாய்தல் வேண்டுமாகலின் தாழ் வயல் எனல் வேண்டிற்று. கடம் - காட்டகத்துநெறி. அம் மாமறையோன் வைணவ சமயத்தினன் என்பது முன்னரும் கண்டாம். ஈண்டும் திருமால் குன்றத்தைக் கூறியவன் இங்குள்ள வியத்தகு செய்திகள் பலவும் விரித்தோதுகின்றனன். வழித்திறங் கூறுபவன் இறையன்பு மேலீட்டாலே ஈண்டு மிகையாகக் கேட்போர்திறம் நோக்காது விரித்தோதுகின்றனன். இங்ஙனம் கூறுவது இறையன்புடையார்க்கியல்பு என்பதுணர்த்தவே அடிகளாரும் அவன் பேசுமளவும் பேச விடுகின்றனர். ஆசிரியர் கம்பநாடரும் பித்தரோடு கடவுட்பத்தரையும் ஒரு தன்மையராக்கி பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும். பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ என்பர். ஈண்டு இவ்வந்தணன் கூற்றுக் கேட்டற்கினியன ஆயினும் பன்னப் பெறுபவை அல்ல. இவன் கூற்றைப் பொறுமையோடு கேட்டிருந்த கவுந்தியடிகளாரும் இவன் பேதுறவு பொழிந்தனன் ஆதலின் அவை பன்னப் பெறுபவை அல்ல என்னும் கருத்துடையார் ஆதலை அவர் கூற்றான் உணரலாம்.

61. திருமால் குன்றம் - அழகர் மலை. மேலே இம் மறையோன் கூறுவன மருட்கையணிக்கு எடுத்துக் காட்டாகுந் தன்மையனவாம்.

பெருமால் கெடுக்கும் பிலமும் புண்ணிய சரவணம் முதலிய பொய்கைகளும்

92 - 103 : பெருமால் ............ எய்துவீர் நீரே

(இதன் பொருள்) ஆங்கு பெரும் மால் கெடுக்கும் பிலம் உண்டு - அவ்விடத்தே மாந்தர்க்கியல்பாயுள்ள பெரிய மயக்கத்தைத் தீர்த்து நன்கு தெளிவிக்கின்ற முழைஞ்சும் ஒன்றுளது கண்டீர்! ஆங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகுமரபின் - கடவுட்டன்மையுடைய அம் முழைஞ்சே யன்றியும் அம் முழைஞ்சினூடே அமரரும் தொழுதேத்துஞ் சிறப்புடைய வியக்கத்தகுந்த கடவுட்டன்மையுடைய; புண்ணிய சரவணம் பவகாரணியொடு இட்ட சித்தி யெனும் பெயர் போகி - அவைதாம் நிரலே புண்ணிய சரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் தம் பெயர்கள் திசையெங்கும் பரவப்பெற்று; தமது முட்டாச் சிறப்பின் விட்டு நீங்கா விளங்கிய பொய்கை மூன்றுஉன - முட்டுப்பாடில்லாத கடவுட்டன்மையி னின்றும் ஒருபொழுதும் விட்டு நீங்காமல் விளங்கிய மூன்று நீர்நிலைகள் (தீர்த்தங்கள்) இருக்கின்றன; ஆங்கு - அப் பொய்கைகளுள் வைத்து; புண்ணிய சரவணம் பொருந்துவிராயின் - நீவிர் புண்ணிய சரவணத்தின் கண் நீராடுவிராயின; விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - தேவேந்திரன் அருளிச் செய்த ஐந்திரவியாகரணம் என்னும் சிறந்த இலக்கணநூல் அறிவினை உடையீர் ஆவீர்; பவ காரணியில் படித்து ஆடுவீராயின்; அஃதன்றிப் பவகாரணி என்னும் பொய்கை நீரின் முழுகி ஆடுவீராயின் பவகாரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகிய நுங்கள் பழம்பிறப்புகளை உணர்வீர்; இட்டசித்தி எய்துவிர் ஆயின - அஃதேயன்றி இட்டசித்தி யென்னும் பொய்கைக்கண் நீராடுவீராயின்; நீர் இட்டசித்தி எய்துவிர் - நீவிர் நினைந்தன வெல்லாம் கைவரப்பெறுகுவீர்; என்றான் என்க.

(விளக்கம்) 92. பெருமால் - மிக்கமயக்கம். காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று குற்றங்களுள் ஏனைய இரண்டிற்கும் காரணம் ஆதல்பற்றி பெருமால் என்றான். மால் கெடுக்கும் எனவே காமவெகுளி மயாகம் எனும் மூன்றன் நாமமும் கெடுத்து வீடுபேறு பயக்கும் என்றானாயிற்று. என்னை?

காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்

எனவரும் திருக்குறளும் (360) நோக்குக. பிலம் - (மலைக்குகை) முழைஞ்சு.

97. ஆங்கு - அவற்றுள். 98. பொருந்துதல் - நீராடுதல். 99. விழுநூல் - ஐந்திரவியாகரணம் என்னும் வடமொழியிலக்கண நூல். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என வருதலும் காண்க. (தொல் - பாயிரம்) விழுநூல் எய்துவிர் என்புழி எய்துதல் உணர்தன் மேற்று. மேலே பழம் பிறப்பெய்துவிர் என்பதுமது. நீராடுமாற்றால் இலக்கண முணர்தலும். பழம் பிறப்புணர்தலும்; பவுராணிகமதம். இவை நினைவின்றிப் பெறும்பே றென்பர் அடியார்க்குநல்லார்.

இனி ஈண்டு இம் மறையோனாற் கூறப்படும் இவையெல்லாம் வைதிக நெறிபற்றிய பவுராணிகர் கொள்கைகளே என்றும் அவற்றின் பேதைமையை விளக்கவே அடிகளார் இம் மறையோனை ஒரு கருவியாகக் கொள்கின்றனர் என்றும் கோடலே பொருந்தும் என்க. இவையெல்லாம் பேதைமையே என்பதனைப் பின்னர்க் கவுந்தியடிகளார் மறுப்புரைக்கண் அடிகளார் அறிவுறுத்தலு மறிக.

101. பவம் - பிறப்பு; பாவம் எனக்கொண்டு பாவத்தால் வரும் பிறப்புகளை எனலுமாம் எனவரும் அடியார்க்குநல்லார் (இரண்டாவதாகக்) கூறும் உரை பொருந்தாது. என்னை? வரும்பிறப்பு என்பது பழம்பிறப் பென்பதனோடு இயையாமையினானும், மேலும் புண்ணியமும் பிறப்பிற்குக் காரணமாகலானும் என்க. 103. இட்டம் - விருப்பம் - ஆகுபெயராய் விரும்பிய பொருள் மேனின்றது. சித்தி - பேறு. அணிமா முதலிய எட்டுவகைச் சித்திகளை எனினுமாம்.

பிலம் புகுவார்க்கு எய்தும் நலங்கள்

104 - 111: ஆங்கு ........... தோன்றி

(இதன் பொருள்) ஆங்குப் பிலம் புக வேண்டுதிராயின் - அத்தகைய பிலத்தினூடே புகுந்து மேற்கூறப்பட்ட பேறுகளை எய்தக் கருதி நீவிரும் அந்தப் பிலத்தினூடே புகுவதனை விரும்புவீராயின்; ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது - மிகவும் உயர்ந்த அத் திருமலைக்கண் எழுந்தருளியுள்ள முதல்வனாகிய திருமாலைக் கைகுவித்துத் தொழுது; அவன்றன் சேவடி சிந்தையில் வைத்து - அவ்விறைவனுடைய சிவந்த திருவடிகளை நெஞ்சத்திலே இடையறாது நினைந்து; வந்தனை மும்முறை மலை வலம் செய்தால் - வணக்கத்தோடே மூன்றுமுறை அத்திருமலையை வலம் (வருதர்; அங்ஙனம்) செய்தால்; நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன் தலை - நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த சிலம்பென்னும் ஆற்றினது அகன்ற கரைக் கண் நிற்கின்ற கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து - புதிய நாளரும்புகள் மலர்ந்து மணம்பரப்புகின்ற தோங்கமரத்தின் நீழலிலே; புயல் ஐங்கூந்தல தொடிவளைத் தோள் ஒருத்தி - முகில் போன்ற ஐம்பாலாகிய கூந்தலையும் தொடியையும் வளையலையும் உடைய தோளையுடைய வரையரமடந்தை ஒருத்தி; பொலம் கொடி மின்னின் தோன்றி - பொற்கொடி போல மின்னல் தோன்றுமாறு ஞெரேலென நூல்கள் முன்னர்த்தோன்றி நின்று; என்க.

(விளக்கம்) சிலம்பாறு - அந்த யாற்றின் பெயர். கன்னிகாரம் - கோங்கு. தொடி - ஒருவகை வளையல்: தொடியும் வளையலும் என்க. ஒருத்தி - ஒரு வரையர மடந்தை; இயக்கி என்பாருமுளர்.

வரையரமடந்தையின் வினாக்கள்

112 - 117: இம்மைக்கு.............கதவெனும்

(இதன் பொருள்) இவ்வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் - நும்மை நோக்கி யான் இத் திருமலையின் அடிக்கண் உறைகுவேன் வரோத்தமை என்பது என் பெயராகும்; நீயிர் இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் - நீவிர் இம்மையில் இன்பமாவதும் இம்மைமாறிய மறுமையில் இன்பமாவதும்; இரண்டும் இன்றி ஓர் செம்மையில் நிற்பதும் - இவையிரண்டிடத்துமன்றி எக்காலத்தும் ஒரே தன்மையுடைய தொரு நடுவு நிலையுடைத்தாகிய அழிவின்றி நிற்பதும் ஆகிய பொருள்கள் யாவை? செட்புமின் - இவற்றிற்கு விடை கூறுமின்; உரைத்தார்க்கு உரியேன்-இவற்றிற்கு நுங்களில் விடைகூறியவர் யாவர் அவர்க்கு யான் ஏவிய தொழில் செய்தற்குரியவள் ஆகுவன் கண்டீர்! உரைத்தீராயின் - இவற்றிற்கு விடைகூறுவீராயின்; திருத்தக்கீர்க்கு -அத்தகைய பாக்கியமுடைய நுமக்கு; கதவு திறந்தேன் எனும் - இப்பொழுதே இப் பிலத்தினது கதவைத் திறப்பேன் என்று அறிவிப்பாள்; என்றான் என்க.

(விளக்கம்) இம்மைக்கின்பமாவது - ஈதல்; பொருளுமாம். மறுமைக்கு இன்பமாவது - அறம்; செம்மையில் நிற்பது - வீடுபேறு. இனி இம்மைக்கின்பம் புகழ் என்பாருமுளர். திறந்தேன்: காலமயக்கம்; விரைபொருட்கண் வந்தது; என்னை?

வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்

என்பது இலக்கணமாகலான் என்க.

118-123: கதவந்திறந்து..............பொருளெனும்

(இதன் பொருள்) அவள் கதவம் திறந்து காட்டிய நல் நெறி - நீவிர் விடைகூறின், அவ்வரோத்தமை அப் பிலத்தினது கதவைத் திறந்து அவள் காட்டிய நல்லவழியாகிய; போகு இடைகழியன புதவம் பலவுள - நெடிய இடைகழியின் கண்ணவாகிய கதவுகள் இருமருங்கும் பல உளவாம்; ஒட்டுப்புதவம் ஒன்றுண்டு - அக்கதவுகளைக் கடந்து சென்றால் ஓரிடத்தே இரட்டைக்கதவையுடைய வாயில் ஒன்றுளதாம்; அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அவ்வாயிலின் உச்சியில் ஓவியத்தே வரையப்பட்டதொரு பூங்கொடி போல்வாளாகிய வரையரமடந்தை. உருவங்கொண்டு நுங்கள் முன்தோன்றி; எனக்கு ஈங்கு இறுதி இல் இன்பம் உரைத்தால் - நீவிர் இவ்விடத்தே முடிவில்லாத இன்பமாவது யாது என்பதற்கு விடைகூறின; நீர் பேணிய பொருள் பெறுதிர் போலும் எனும் -நீங்கள் விரும்பிய பொருளை ஒருதலையாகப் பெறுகுவிர் என்று அறிவிப்பாள் என்றான் என்க.

(விளக்கம்) 119. போகு இடைகழியன புதவம் பலவுள என்றமையால் -அப் பிலத்தினூடே செல்லும் நெறியின் இருமருங்கும் நீண்ட இடைகழிகள் பல உள என்பதும் அவை கதவுகளை யுடையனவாயிருக்கும் என்பதும் பெற்றாம். இடைகழி - இடையிலே பிரிந்து செல்லும் வழி. ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவுடைய ஒரு வாயில்; ஆகுபெயர் இதனால் எஞ்சிய வாயில்கள் ஒற்றைக் கதவுடையன என்பதும் பெற்றாம். அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி என்றது. அவ் வாயிலின் மேலே ஓவியத்தில் எழுதப்பட்ட பூங்கொடி போல்வாளாகிய ஒருத்தி உருவங்கொண்டு வந்து தோன்றி என்றவாறு. இனி உவமை மாத்திரமாகவே கொண்டு கூறினும் அமையும். இறுதியில் இன்பம் வீட்டின்பம். போலும்; ஒப்பில் போலி. பேணிய பொருள் - விரும்பிய பொருள்.

இதுவுமது

123-127: உரையீராயினும்............... பெயரும்

(இதன் பொருள்) உரையீராயினும் உறுகண் செய்யேன் - அங்ஙனம் கூறியவள் பின்னரும் நும்மை நோக்கி, இதற்கு விடை தெரியாமையாலே நீயிர் விடை கூறீராயினும் யான் நுமக்குச் சிறிதும்துன்பம் செய்கிலேன்; நும் நெடுவழிப்புறத்து நீக்குவல் எனும் நும்மை நீயிர் செல்ல வேண்டிய வழியின் கண்ணே தடையின்றிச் செல்ல விடுவேன் போமின் என்பாள்; உரைத்தார் உளர் எனின் - அவள் வினாவிற்கு விடை கூறியவர் உளராயவிடத்து; உரைத்தமூன்றின்-முற்கூறப்பட்ட புண்ணிய சரவணம் முதலிய மூன்று பொய்கை கட்கியன்ற; கரைப்படுத்து ஆங்குக் காட்டினள் பெயரும் - கரையின் கண் நும்மைக் கொடுபோய் விடுத்து அவற்றை இஃதின்னதெனக் கூறிக்காட்டி மீள்வாள் என்றான் என்க.

(விளக்கம்) 124-127. இஃது, அம் மறையோன் அங்குத் தோன்றும் வரையர மடந்தை நுமக்கு இன்னல் செய்யாள், பின்னும் உதவியே செய்குவள், அவட்கு நீவிர் அஞ்சவேண்டா என்றறிவுறுத்தவாறாம்.

126. மூன்றின் - புண்ணிய சரவண முதலிய மூன்று பொய்கைகளின். 127. கரைப்படுத்தலாவது - கரையிற் கொடுபோய் விடுதல். காட்டினன்: முற்றெச்சம்.

இதுவுமது

128 -132 : அருமறை...........மற்றவை

(இதன் பொருள்) அருமறை மருங்கின் எழுத்தின் ஐந்தினும் எட்டினும் வருமுறை மந்திரம் இரண்டும் - ஓதவும் உணரவும் அரிய வேதவழிப்பட்ட சமய நெறிபற்றி எழுத்தினுள் வைத்து ஐந்தெழுத்தானும் எட்டெழுத்தானும் வருகின்ற முறைமையினையுடைய இரண்டு மந்திரங்களையும்; ஒருமுறையாக உளங்கொண்டு ஓதி - ஒரே தன்மையனவாக நுமது நெஞ்சத்தே நினைந்து அன்புடன் ஓதி; வேண்டியது ஒன்றின் விரும்பினர் ஆடின - நீவிர் விரும்பியதொரு பொய்கைக்கண் ஆர்வமுடையீராய் ஆடுவீராயின்; மற்றவை காண்தகு மரபின அல்ல - அவற்றால் நீயிர் எய்தும் பயன் தவஞ் செய்வோரும் காணத்தகும் முறையினையுடையவல்லவாம் சான்றான் என்க.

(விளக்கம்) ஈண்டு இம் மாமறை முதல்வன் எழுத்து ஐந்தினும் எட்டினும் இயன்ற மந்திரம் என்றவை சைவசமயத்துத் தருவைந் தெழுத்தும், வைணவ சமயத்துத் திருவெட்டெழுத்து மந்திரமும் ஆதல் வேண்டும்; இவ்விரண்டும் வைதிக சமயமேயாதலால் அருமறை மருங்கின்; ஐந்தினும் எட்டினும் இரண்டையும் வேற்றுமை பாராட்டாமற் கூறினன் எனல் வேண்டும்; அல்லது வைணவ சமயத்தார்க்கே ஐந்திலியன்ற மந்திரமுளதாயின் ஆராய்ந்து கொள்க. இனிக் கேட்குநர் சமண்சமயத்தினராதலால் நுங்கள் மந்திரத்தை ஓதி நீராடினும் அமையும் என்னும் கருத்தால் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம். இங்ஙனம் கொள்வார்க்கு அக்காலத்தே சமயம் பற்றிப் பகைமை இன்மைக்கு இஃதொரு சான்றாதலு முணர்க.

133 - 139: மற்றவை............கேகுமின்

(இதன் பொருள்) மற்று அவை நினையாது - இனி அப் பொய்கைகளில் ஆடுவதனால எய்தும் பேறுகளை நீவிர் கருதாது விடினும்; மலைமிசை நின்றோன் பொன் தாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - அத்திருமலை மீது நின்ற திருக்கோலங் காட்டி நின்ற செங்கணெடியோன் பொற்றாமரைமலரனைய அழகிய திருவடிகளை நுமது நெஞ்சத்தே நினைமின்; உள்ளம் பொருந்துவிராயின் -அங்ஙனம் நினைப்பீராயின் அப்பொழுதே; மற்றவன் புள் அணை நீளகொடி புணர்நிலை தோன்றும் - அவ் விறைவனது கலுழப்புள் எய்திய நெடிய கொடித்தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடத்தையும் நீவிர் காணப்பெறுகுவிர்; தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை என்று துயர் கெடுக்கும் - அக்கொடி நிற்கும் நிலை நுமக்குக் தோன்றிய பின்னர் அவ்விறைவனுடைய இரண்டு பொற்றாமரைகளை ஒரு சேரக் கண்டாற் போன்ற திருவடிகள்தாம் நும்மை வலிந்தெடுத்துப் போய் நுமது துன்பத்தைப் போக்கிப் பேரின்பம் வழங்கும்; இன்பம் எய்தி - அத்தகைய பேரின்பத்தையும் நுகர்ந்து மகிழ்ந்து பின்னர்; மாண்பு உடை மரபின் மதுரைக் கேகுமின் - அங்கிருந்து எவ்வாற்றானும் மாட்சிமை பொருந்திய மதுரை அணிததே யாகலின் இனிதே செல்லுமின் என்றான் என்க.

(விளக்கம்) 133. மற்றவை என்றது அப் பொய்கைகளில் ஆடுவதனாற் பெறக்கிடந்த நலங்களை. மற்றவை நினையாது என்றது மற்று அவற்றைப் பொருட்டாக நினையாதொழியின் என்பதுபட நின்றது. இனி, அப் பேறுகள்தாமும் உறுதிப் பொருள்கள் அல்லவாதலின் அவற்றை விடுத்தொழியினும் ஒழிகுதிர் இனி யான் கூறுவதனை ஒருதலையாகச் செய்ம்மின் என்பான் அங்ஙனம் கூறினன் எனக் கோடலுமாம்.

133 -135. மலைமிசை நின்றோன் தாள் நினைத்தற்கும் இனியன என்பான் பொற்றாமரைத்தாள் என்றான். நெஞ்சத்தே நன்கு நினைமின் என்பான் உள்ளம் பொருந்துமின் என்றான்.

135 - 138. அவன் அடி உள்ளம் பொருந்துமின் பொருந்துவிராயின் கொடிபுணர்நிலை தோன்றும் என்றது அவன் திருவடிகளை நினைந்தேத்தியவாறே மலைமிசை ஏறுதிராயின் முற்பட அவன் கொடி புணர்நிலை தோன்றும் என்றவாறு. கொடிநிலை தோன்றிய பின்னர் நீயிர் அவன் துணைமலர்த்காளினை வணங்கா தொழிவீரல்லீர் அத்துணைக் கடவுட்பண்புடையது அக் காட்சி என்பதும் பின்னர் அவன் தாளிணையே நும்மை வலிந்தெடுத்துப் போய்த் துன்பம் கெடுக்கும் என்றான். அவ்வழி நீங்கள் மெய்யின்பம் தலைப்படுவீர் இது தேற்றம் என்பதும் தோன்றத் தாளிணைகளை எழுவாயாக்கினன். அவன் தாளிணையை நினைவதே அமையும். அத் துணைக்கே அந் நெடியோன் மகிழ்ந்து நும்மை வலிந்தெடுத்துப் போய்ப் பேரின்பம் வழங்குவன், இஃது அப்பெருமான்றிருவருட் கியல்பு என்பது இங்ஙனம் கூறியதனாற் போந்த பயன் என்க. இப்பேறே பிறவிப் பயன் ஆதலால் இதனைச் செய்யாது செல்லற்க! என்றானுமாயிற்று.

மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் என்றது, அத் திருமலையினின்றும் மதுரைக் கேகும் நெறி செவ்விய நெறியாகலின் அப்பால் மாண்புறு மரபில் ஏகுதல் கூடும் என்பதுபட நின்றது. என்னை? மதுரைக்கும் திருமால் குன்றத்திற்கும் இடைக்கிடந்த நெறி பெரு நெறிபாகலான் வழிப்போக்குக்கர்க்கு இன்றியமையாத நீரும் நிழலும் இருக்கைகளும் அவ் வழிக்கண் நிரம்ப உண்டென்பதுபட அங்ஙனம் கூறினன் என்று கொள்க. மேலும் அப்பால் மதுரைதானும் அணித்தேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு வழித்திறம் சிறிதும் கூறாதொழிந்தனன் என்க.

நடுவட் கிடந்த வழியினியல்பு

140-149: காண்டகு.................போகுவல்யானென

(இதன் பொருள்) காண் தகு பிலத்தின் காட்சி ஈது - மதுரைக்குச் செல்வோர் எல்லாம் காணத்தகுந்ததாகிய பிலக்காட்சி இத்தகைய சிறப்பிற்று ஆகலின் அதனை நுங்கட்குக் கூறினேன்; அவ்வழி ஆங்குப் படரீராயின் -அந்த வலப்பக்கத்து வழிமேல் நீயிர் போக நினைந்திலீராயின்; இடையது செந்நெறி ஆகும்-இனி அம் மூன்றனுள் நடுவட் கிடந்த வழியியல்பு கேண்மின் அதுதான் இயல்பாகவே செவ்விய வழியாகும் கண்டீர்; தேம்பொழில் உடுத்த ஊர் இடையிட்ட இனிய சோலைகளாற் சூழப்பட்ட ஊர்கள் பல இவ் வழியிடையே உள; காடுபல கடந்தால் அவ்வூர்கட்கு இடையிடையே கிடந்த காடுகள் பலவும் இனியனவே இவற்றையெல்லாம் நீயிர் இனிதே கடந்து சென்றக்கால்; ஆர் இடை ஓர் ஆர் அஞர்த் தெய்வம் உண்டு அப்பால் கிடக்கும் அரிய வழியிடத்தே வழிப்போக்கரைத் துன்புறுத்தும் தெய்வம் ஒன்றுண்டு; இடுக்கண் செய்யாது - அத்தெய்வம் வழிப்போவாரைத் துன்புறுத்துங்கால் அச்சுறுத்துதல் முதலியன செய்து துன்புறுத்தாது; (பின்னர் எங்ஙனம் துன்புறுத்துமோவெனின்) இயங்குநர் நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி தாங்கும் - வழிப்போவார்க்கு அச்சம் தோன்றாதபடி அவர் ஆர்வமுறும்படி அவர்முன் உருக்கொண்டு தோன்றி மயக்கி அவர் போககைத் தடுக்கும் அத்துணையே; மதுரைப் பெருவழி மடுத்து உடன் கிடக்கும் அதற்கு மயங்காமல் அப்பாற் செல்லின் அவ்விடத்தே பலவழிகளையும் மதுரைக்குச் செல்லும் பெருவழி தன்பாலேற்றுக்கொண்டு ஒன்றுபட்டுக் கிடக்கும்; நீளநிலம் கடந்த நெடுமுடி அண்ணல் தாள் தொழுத கையேன் யான் போகுவல் என - நெடிய இந்நிலவுலகத்தைத் தன்தொரு திருவடியினாலே அளந்தருளிய நெடிய முடியையுடைய முழுமுதல்வனாகிய இறைவனைத் தொழுத கையையுடைய யான் இன்னும் அவன் சேவடியைத் தொழுதுய்யச் செலகுவேன் என்றான் என்க.

(விளக்கம்) 140. காண் தகு பிலம் - எல்லோரானும் விரும்பிக் காணத்தகுந்த சிறப்புகளையுடைய பிலம் என்க. 141. இடையது - நடுவணவாகிய வழி. 142. செந்நெறி - செவ்விய வழி. ஆரிடை-கடத்தற்கரிய இடைவழி; அஃதாவது காட்டினூடு செல்லும் வழி. 144. அஞர்-துன்பம். 145. நடுக்கம்-அச்சம். 146. இயக்குநர்- வழிப்போக்கர். தாங்கும் - தடுக்கும். 147. மடுத்துடன் கிடத்தலாவது - தன்னுளேற்றுக்கொண்டு அவற்றுடன் ஒன்றாகிக் கிடக்கும் என்க. இதனால் இது பெருவழி எனப்பட்டது. தொழுத+கையேன் என்க கண்ணழித்திடுக. தொழு தகையேன் எனக் கோடலுமாம்; இதற்குத் தொழுகின்ற தன்மையுடையேன் என்க. நீவிரும் போமின் யானும் போகுவல் என்பதுபடக் கூறுதலின் யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கதென்க.

அந்தணனுக்குக் கவுந்தியடிகளார் கூறும் கட்டுரை

150 - 162: மாமறை ................. உணர்த்தி

(இதன் பொருள்) மாமறையோன் வாய் வழித்திறம் கேட்ட - இவ்வாறு அந்த முதுமறை யந்தணனுடைய வாய்மொழியாலே மதுரைக்குச் செல்கின்ற வழிகளினியல்பெலாம் கடைபோகக் கேட்டறிந்த; காவுந்தியையை ஓர் கட்டுரை சொல்லும் - கவுந்தியடிகளார் அவன் மிகைபடக் கூறியவற்றிற்கு மறு மொழியாக ஒரு பொருள் பொதிந்த மொழியைக் கூறுவார்; அது வருமாறு: நலம் புரி கொள்கை நான்மறையாள மன்னுயிர்க்கு நன்மை செய்தலையே தமக்குக் கோட்பாடாகவுடைய நான்கு மறைகட்கும் உரிமையுடைய அந்தணனே! பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை -நீதான் பாரித்துக் கூறிய பிலத்தினுட் புகவேண்டும் என்னும் குறிக்கோள் எங்கட்கு இல்லைகாண்! எற்றாலெனின்; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டியற்கையின் விளங்கக்காணாய் நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் இயற்றிய அவ்வியாகரணத்தை எம்முடைய இறைவனாகிய அருகன் அருளிய பரமாகமங்களில் விளக்கமாக நீ காண்கிலையோ! அவ்வாகமத்தை யோதுமாற்றால் யாம் அதனைப் பெறுவேமாதலின் நீ கூறிய புண்ணிய சரவணத்தில் யாங்கள் பொருந்துதல்வேண்டா; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் - முற்பிறப்பின்கண் நீ செய்த வினைகளையெல்லாம்; பிறந்த பிறப்பின் நீ காணாயோ பிறந்த இப்பிறப்பிலே நினக்கு வந்துறுகின்ற நுகர்ச்சிகளின் வாயிலாய் நீ அறியமாட்டாயோ? அறியக்கூடுமாகலான் நின் பவகாரணியிற் படிதலும் வேண்டேம்; வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநாக்கு எய்தா அரும் பொருள் யாவதும் உண்டோ வாய்மை என்னும் அறந்தலை நின்று இவ்வுலகத்தே மன்னிய உயிர்களை ஓம்புகின்ற சான்றாண்மையுடையோர்க்குக் கைவராத அரிய பொருள் யாதொன்றேனும் உண்டோ? இல்லையாகலின் நின் இட்ட சித்தியை எய்துதலும் வேண்டேம்; நீ காமுறு தெய்வம் கண்டு அடிபணியப்போ - இனி நீ பெரிதும் விரும்பிய கடவுளைக் கண்டு அவற்றின் அடிகளிற் பணிதற்குச் செல்வாயாக! யாங்களும் நீள் நெறிப் படர்குதும் இனி யாங்களும் செல்லக்கடவ வழியிலே செல்வேம்காண்! என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி என்றிங்ஙனம் அந்த அந்தணனுக்குப் பொருந்து மொழிகளை அருளிச்செய்து; என்க.

(விளக்கம்) 152. நலம்புரி கொள்கை நான்மறையாள, என்றது நின்கொள்கை நன்றே ஆயினும் நீ கூறும் வழிகள்தாம் பேதைமையுடையன என்பதுபட நின்றது. 154. கப்பம் - கறபம் என்னும் வடமொழிச் சிதைவு: ஊழி என்னும் பொருட்டு. கப்பத்திந்திரன் காட்டிய நூலினை எனல் வேண்டியது: ஈற்றின்கண் இரண்டாவது தொக்கது. நீடூழி வாழ்தலையுடைய இந்திரன் என்றவாறு. 155. மெய்ப்பாட்டியறகை - பரமாகமம் (156)

இறந்த பிறப்பிற்றாஞ் செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன்  (அறநெறிச்சாரம் -59)

என்னும் கோட்பாடுபற்றி இறந்த பிறப்பின் ........ 156) பிறந்த ...... (158) காணாயோ என்றார். 159. வாய்மை - யாதொன்றும் தீமையிலாத செல்லும் கடைப்பிடி. உயிர் ஓம்புதல் கொல்லாமை என்னும் அறத்தின்மேற்று. இவ்விரண்டையும் கடைப்பிடித் தொழுகுவார் தவஞ் செய்வாரினும் தலை சிறந்தவர் ஆதலின் அவர்க்கு எய்தா அரும் பொருள் இல்லையாயிற்று. இவ்வறங்களின் சிறப்பைத் திருக்குறளிற் காண்க.

வியாகரணம் உணர்தலும் பிறவும், பெறுதற்குரிய நெறிகளும் முயற்சியும் வேறு பிறவாக, இவற்றை நீரின் மூழ்கிப் பெறலாம் என்னும் நின் அறிவுரை அறிவொடு பொருந்தா வுரைகாண்; ஆதலால் நீ நின் வழியே போ! யாங்களும் எம் வழியே போகுவம் என்பது இதன் குறிப்புப் பொருள் என்றுணர்க.

160. காமுறு தெய்வம் என்றது காம வெகுளி மயக்கங்களையுடைய நினது தெய்வத்தை என்னும் பொருளும் தோற்றுவித்து நின் கடவுட் கொள்கைதானும் பெரும் பேதைமைத்தே காண்! என அவன் சமயத்தையும் பழித்தவாறுமாத லுணர்க.

கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி மூவரும் மதுரைக்கு வழிக்கொண்டு செல்லுங்கால் இடையில் கோவலன் நீர்நாடிச் சென்று ஒரு பொய்கையை அடைதல்

164 - 170 : குன்றா...........நிற்ப

(இதன் பொருள்) குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் தனது பொருளீட்டல் வேண்டும் என்னும் கொள்கைக்கண் சிறிது ஊக்கம் குறைதலில்லாத கோவலனோடும் (கண்ணகியோடும்) அன்றைய பகல் ஓர் அரும்பதித் தங்கி அற்றை நாள் தாம் தங்குதற்கரியதோர் ஊரின்கண் தங்கியிருந்து; பின்றையும் பெயர்ந்து அவ்வழிச் செல் வழிநாள் - பின்னரும் அவ்வூரினின்றும் புறப்பட்டு அந்த வழியே செல்லாநின்ற மற்றை நாளிலே; (170) நீர்நசை வேட்கையின் - நீரைப் பெரிதும் விரும்பும் வேட்கை காரணமாக; கருந்தடங் கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்துசெல்வருத்தத்து வழிமருங்கு இருப்ப-கரிய பெரிய கண்ணையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளாரும் அவ்வழியின் பக்கத்தே ஒரு நீழலின்கண் வழி நடந்தமையாலே யுண்டான வருத்தஞ் சிறிது தணிதற்பொருட்டு அமர்ந்திருப்பாராகக் கோவலன் தமியனாய்; இடைநெறிக் கிடந்த இயவுகொள் புடை நெறிப் போய் -தாம் வந்த வழியிடையே கிளைத்துக் கிடந்த செலவை மேற்கோடற்குரியதொரு பக்கநெறி மேலே நீர்நிலை நாடிச் சென்றவன்; பொய்கையிற் சென்று மருங்கின்-ஆங்கொரு நீர்நிலையைக் கண்டு அதன் மருங்கு போய்; நெடுந்துறை நிற்ப-அதன் நெடிய துறையிலே நிற்கும் பொழுது; என்க.

(விளக்கம்) 163. குன்றாக் கொள்கை என்றது - மதுரையிற் சென்று வரை பொருளீட்டல் வேண்டும் என்னும் தனது குறிக்கோளை மண்மகளறிந்திலா வண்ணச் சேவடியுடைய மனைவியொடு இத்துணை தூரம் நடந்தும் அவன்றனது கோட்பாட்டிற் குறைந்திலன் என்றார். அங்ஙனம் அவனைச் செலுத்துவது அவன்றன் பழவினை என்பதுணர்த்தற்கு. இங்ஙனம் அன்றிக் குன்றாத வொழுக்கத்தினையுடைய கோவலன் என்ற முன்னையோர் உரை சிறவாமையுணர்க. 164. அரும்பதி என்றது தாம் தங்குதற்கேற்றதாக அரிதிற் கண்டதோர் ஊர் எனினுமாம். 166. வழிநாள் - மறுநாள். 170. நீர்நசை வேட்கையின் எனவரும் ஏதுவை மூவர்க்கும் ஏற்பக் (166) கருந்தடங்கண்ணி என்பதன் முன்னாகக் கூட்டுக. வகுந்து - வழி. இயவு - மாந்தர் இயங்கிய சுவடு. 169. ஒரு பொய்கையைக் கண்டு அதன் நெடுந்துறையிற் சென்று நிற்ப என்க.

வனசாரிணி ஆரிடை,
வயந்தமாலையின் வடிவில் தோன்றுதல்

171-175 : கானுறை .......... உகுத்து

(இதன் பொருள்) கான் உறை தெய்வம்-முன்பு மறையோன் கூறிய அக் காட்டின்கண் வதியும் தெய்வம்; காதலின் சென்று - அவன் பால் எய்திய காமங்காரணமாகச் சென்று; நயந்த காதலின் இவன் நல்குவன் என - இவன்றான் மாதவியைப் பெரிதும் விரும்பிய காதலுடையான் ஆதலின் அவளுடைய தோழியுருவத்தில் இவன்பாற் சென்று மயக்கினால் அத் தொடர்பு பற்றி என்னையும் விரும்பி அளி செய்குவன் என்று கருதி; வயந்தமாலை வடிவில் தோன்றி அவள் தோழியாகிய வயந்தமாலையினது வடிவத்தை மேற்கொண்டு வந்து அவன் முன்தோன்றி; கொடி நடுக்குற்றது போல ஆங்கு அவன் அடிமுதல் வீழ்ந்து பூங்கொடி யொன்று காற்றினாலே நடுங்குதல் போன்று உடல் நடுங்கியவளாய்க் கோவலன் அடிகளிலே வீழ்ந்து, ஆங்கு அருங்கணீர் உகுத்து அங்ஙனமே பொய்க்கண்ணீரைச் சொரிந்து அழுது; என்க.

(விளக்கம்) 171. காதல் - ஈண்டுக் காமம். 172. இவன் பண்டும் பரத்தைமை யொழுக்கமுடையானாகலான் இவன் காதற் பரத்தையின் தோழியாகும் உரிமைபற்றி வயந்தமாலையாய்ச் சென்றால் நம்மையும் நயந்த காதலின் நல்குவன் என்பது அத்தெய்வத்தின் உட்கோள் என்க.

174. வயந்தமாலையே இவள் என்று கோவலன் நம்புதற்பொருட்டு அத்தெய்வம் இனிப் பொய்யாக நடிக்கின்றது என்க. பொய்க்கண்ணீர் என்பது தோன்ற, 175. அருங்கணீர் என்றார்.

கானுறைதெய்வம் மாதவியின் கூற்றாகக் கூறுதலும் பிறவும்

« Last Edit: February 23, 2012, 02:06:26 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #18 on: February 23, 2012, 02:00:20 PM »
176-187: வாசமாலையின் ........... துறந்தனன்

(இதன் பொருள்) மாதவி என்முன் மயங்கி வான் துயர் உற்று-எம்பெருமானே அடிச்சியேன் நீயிர் எம்பெருமாட்டியினது அணித்தோட்டுத் திருமுகத்தை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தீர். பின்னர் நிகழ்ந்தவை கேட்டருளுதிர்! அடிச்சி வறிதே சென்று அச் செய்தியை அம் மாதவிக்குக் கூறினேனாக அது கேட்டலும் அவள்தான் என்கண்முன்பே அளவிலாத் துன்பத்துளழுந்தி; என்னைச் சினந்து நோக்கி ஏடி வயந்தமாலாய்! வாசமாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் - யான் எம் பெருமானுக்கு மணமிக்க மாலையிலே வரைந்து நின் கையிற் கொடுத்த திருமுகத்தின்கண் வரைந்த சொற்களாலே சிறிதும் தவறு செய்திலேன்; பிழை மொழி செப்பினை - நீதான் அவர் முன்னர்த் தவறான மொழி சில கூறினை போலும்; ஆதலின் கோவலன் கொடுமை செய்தனன் - ஆதலாற்றான் அவர் இத்தகைய கொடுமையைச் செய்தொழிந்தார், என்று என்னைக் கடிந்துகூறிப் பின்னரும்; மேலோராயினும் நூலோராயினும் பால்வகை தெரிந்த பகுதியோராயினும் - துறவோரும் கற்றோரும் கல்லாது வைத்தும் இயல்பாகவே நல்லதன் நலனும் தீயதன் தீமையும் பகுத்துணரும் நல்லறிவுபடைத்த சான்றோரும்; பிணி எனக்கொண்டு - இஃது அறியாமையாலே வரும் ஒரு நோயாகும் என்று கருத்தினுட் கொண்டு; பிறக்கிட்டு ஒழியும் - கண்ணெடுத்தும் பாராமற் புறங்கொடுத்துப் போதற்குக் காரணமான; கணிகையர் வாழ்க்கை கடையே போனம் என - யான் வாழுமிந்தக் கணிகையருடைய இல்வாழ்க்கையானது அவர்கள் கருதுமாறு ஒரு கடையாய வாழ்க்கையே போலும் எனத் தனக்குத் தானே கூறிக்கொண்டு; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெள் முத்து உதிர்த்து - தனது செவ்வரிபடர்ந்த வளவிய கடைப்பகுதியையுடைய குளிர்ந்த கண்களினின்றும் வெள்ளிய முத்துக்களை யொத்த கண்ணீர்த்துளிகளை உதிர்த்து; வெள் நிலாத்திகழும் தண்முத்து ஒருகாழ் - வெள்ளிய நிலாவொளியைப் போன்று ஒளி பரப்பித் தன் கழுத்திலே கிடந்து விளங்கா நின்ற குளிர்ந்த முத்துக்களாலியன்ற ஒற்றை வடத்தை; தன்கையால் பரிந்து தன்கையாலேயே அறுத்து வீசியவளாய்; துனியுற்று என்னையும் துறந்தனள் - என்னோடு பிணங்கி ஒருபொழுதும் துறந்தறியாத என்னையும் நீயும் தொலைந்துபோ! என்று கூறி அகற்றி விட்டனள்; என்க.

(விளக்கம்) 176. வாசமாலையின்கண் எழுதிய மாற்றத்தால் யான் தவறிலேன் என்றவாறு. வாசமாலையில் கோவலனுக்குத் திருமுகம் வரைந்தமையை வேனிற் காதையில் (45-67) காண்க. தெய்வமாகலின் அந்நிகழ்ச்சியைத் தெரிந்து கூறுவதாயிற் றென்க. 177. நீ பிழைமொழி செப்பினை என ஒருசொற் பெய்க. மேலோர் என்றது ஈண்டுத் துறவோரை. என்னை? இருமை வகைதெரிந்தீண்டறம் பூண்டார், பெருமை பிறங்கிற் றுலகு (23) எனவரும் திருக்குறளானும் இதற்குப் பரிமேலழகர் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே உலகின்கண் உயர்ந்தது என உரை வகுத்தலானும் உணர்க. 180. பால்-நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய கூறுபாடுகள். 181. பிறக்கிட்டொழிதலாவது - முகங் கொடாது விரைந்து நீங்குதல். 183. வாழ்க்கை என்றது இகழ்ச்சி. போன்ம்-போலும்: ஈண்டு ஒப்பில் போலி. 187. துனி - பிணக்கு. என்னையும் என்றவும்மை நின்னைத் துறந்ததோடன்றி என்னையும் துறந்தனள் என இறந்தது தழீஇய எச்சவும்மை எனக் கோடலுமாம். துறவா என்னையும் துறந்தனள் என்புழிச் சிறப்பும்மையாம்.

இனி நின்னால் எனக்குக் கேடு வந்துற்றது என்பதுபட இத்தெய்வம் கூறுகின்ற நுணுக்கமும் ஈண்டு நினைக்கற்பாலது. என்னை? அவள்பாற் சீற்றங்கொண்ட கோவலன் அங்ஙனம் அவள் நின்னைத் துறந்தாளாயின் ஆகுக! யானே நின்னைப் புரந்திடுவேன் அஞ்சற்க! என அவனை ஏற்றுக்கோடற்கு இவ்வுபாயம் ஏதுவாகலான் என்க.

இதுவுமது

188 - 191: மதுரை..........யாதென

(இதன் பொருள்) ஆதலின் - என்னிலைமை இங்ஙனமாகிவிட்டமையால்; மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது - பின்னர்க் களை கணாவாரைப் பெறாத அடித்தொழிலாட்டியேன் பெருமானீர் மதுரை மாநகர் நோக்கிப் போந்ததனை; ஆங்கு எனக்கு எதிர் வழிப்பட்டோர் உரைப்ப அப் பூம்புகார் நகரத்தேயே நும்மைத் தேடி வருகின்ற எனக்கு எதிரே வழியில் வந்தவர் கூறக்கேட்டு; சாத்தொடு போந்து வாணிகச் சாத்தோடு கூடி வந்து; தனித்துயர் உழந்தேன்- தனிமையால் யான் பெரிதும் துயர் எய்தி இவ்விடத்தே நும்மைக் கண்டேன்; பாத்து அரும்பண்ப-பகுத்தலரிய பேரருளுடையீர் இஃதென்வரலாறாம்; நின் பணிமொழி யாது என - இனி அடிச்சிக்குப் பெருமான் பணிக்கும் மொழி யாதோ அதன்படியே ஒழுகுவல் என்றுகூற; என்க.

(விளக்கம்) 190. சாத்து - வாணிகக்கூட்டம். அக் கூட்டத்தில் என்னையறிவார் யாருமின்மையாலே தனிமையுற்றுத் துயர் உழந்தேன் எனவும், காதற்றுணையின்றித் தனிமையாலே காமப்பிணி யுழந்தேன் எனவும், இருபொருளுந் தோன்றுதற்குத் தனித்துயர் உழந்தேன் என்னும் நயந்தெரிக. பாத்து - பகுத்தல். 191. பாத்தரும் பண்ப என்றது உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்று பகுத்தலில்லாத பேரருளாள என்றும் பிறர்க்கில்லாத நற்பண்பாள என்றும் இருபொருள் தோற்றுவித்தலும் இவற்றுள் முன்னது தன்னை அவன்தோழி என இகழ்ந்து கைவிடாமைக்குக் குறிப்பேதுவாதலும் நுண்ணிதின் உணர்க.

கோவலன் மந்திரங் கூறி வஞ்சம் பெயர்த்தல்

192-200: மயக்குந்தெய்வம்............ஏக

(இதன் பொருள்) இவ் வன்காட்டு மயக்குந் தெய்வம் உண்டு என வியத்தகும் மறையோன் விளம்பினன் ஆதலின் அத் தெய்வம் இவ்வாறு நடிக்கக் கண்ட கோவலன், இந்த வலிய காட்டின்கண் நடுக்கஞ்சாலா நயத்திற் றோன்றி நெஞ்சத்தை மயக்குந் தெய்வம் ஒன்று உண்டு என்று முன்னரே வியக்கத்தகுந்த அந்தணன் அறிவுறுத்தனனாதலால்; வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - அத்தகைய தெய்வங்கள் செய்யும் வஞ்சத்தைத் தீர்த்துத் தெளிவிக்கும் மந்திரத்தாலே; யான் இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவன் என - யான் ஐம்பாலாகப் பகுக்கப்படும் சிலவாகிய கூந்தலையுடைய இவளை அவன் கூறிய தெய்வமகளோ? அன்றி வயந்தமாலைதானோ? யார் என்று அறிந்துகொள்ளக் கடவேன் என்று துணிந்து; கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம் ஆகலின் - அவன் தனது நாவிலே கூறிய அம் மந்திரத்தானும் பாய்ந்து செல்லும் கலையூர்தியாகிய கொற்றவை மந்திரம் ஆதலானே; யான் வனசாரிணி மயக்கம் செய்தேன் - அத் தெய்வம் அச்சமெய்தி ஐய யான் வயந்தமாலையல்லேன்! இக் காட்டிலே திரிகின்ற ஓரியக்கிகாண்; நின்னைக் காமுற்று அறியாமையாலே நின்னை இவ்வாறு நடித்து மயக்கி யொழிந்தேன், இப் பிழையைப் பொறுத்தருளுதி; புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையாது ஏகு என்று ஏக - காட்டகத்து மயில் போலும் சாயலையுடைய கண்ணகிக்கும் அறத்தலைவியாகிய அக் கவுந்தியடிகளார்க்கும் என்னுடைய இவ்விழிந்த செயலை அறிவியா தொழிக! என்றியம்பி மறைந்தொழியா நிற்ப; என்க.

(விளக்கம்) 194 மறையோனது பரந்துபட்ட அறிவுடைமையைப் பாராட்டுவான் வியத்தகு மறையோன் என்றான். 194. தெய்வ முதலியவற்றால் செய்யப்படும் வஞ்சத்தைப் போக்கி உண்மையுணர்த்தும் மந்திரம் என்பது கருத்து. 195 ஓதியாகிய இவள் மானிட மகளோ அல்லது தெய்வமகளோ என்றெழுகின்ற ஐயங்களைந்து உண்மையை உணர்குவேன் என்றுட்கொண்டவாறு. 197. பாயும் கலையை ஊர்தியாகக் கொண்ட கொற்றவை என்க. கலை-மான். வனசாரிணி - காட்டில் திரிபவள். இவளை இயக்கி என்பர் அடியார்க்கு நல்லார். 199. புனமயிற் சாயல்: அன்மொழித்தொகை கண்ணகிக்கும் என்க. புண்ணிய முதல்வி: கவுந்தி. தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின் கண்ணகியை முற்கூறினர் என்பர் அடியார்க்குநல்லார். இவ்விருவரும் குணமென்னும் குன்றேறி நின்றவர் ஆகலின் தவறு கண்டுழிச் சபிப்பர் என்றஞ்சி அவர்க்கு என்திறம் உரையாதொழிக என்று வேண்டுகின்றாள் என்க.

கவுந்தியின் கருத்து

201 - 206: தாமரை ............. அழுவத்து

(இதன் பொருள்) ஆங்குத் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து - அங்ஙனம் அத் தெய்வம் அகன்றபின்னர் அவ்விடத்தே பொய்கைக்கண்ணுள்ள குளிர்ந்த நீரைத் தாமரையினது பசிய இலையைக் குடையாகக் கோலி முகந்து கொண்டுவந்து நீர்வேட்கையான் வருத்த முற்ற கண்ணகியினது வருத்தத்தைத் தீர்த்தபின்னர்; மீது செல்வெங்கதிர் வெம்மையின் தொடங்க- உச்சிவானத்தே இயங்குகின்ற ஞாயிறு மிகவும் வெப்பஞ் செய்தலைத் தொடங்குதலாலே; தீது இயல் கானம் செலவு அரிது - பாலை என்பதோர் படிவம் கொண்டு தன்னையடைந்தோர் நடுங்குதுயர் உறுத்தும் தீமை நிகழாநின்ற இக் காட்டுவழியில் இனிச் செல்லுதல் அரிதாம் என்றுட் கொண்டு; கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து அக் கோவலனோடும் வளைந்த மகரக்குழையையுடைய கண்ணகியோடும் பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாரும் மயங்குதற்குக் காரணமான வழிகளையுடைய அந்தப் பாலைப் பரப்பிடத்தே என்க.

(விளக்கம்) 201. பாசடை - பசிய இலை. தாமரையிலையைக் குடையாகக் கோலி அதன்கண் நீர் கொணர்ந்து என்க. நீர் வேட்கையாகலின் அருந்துயர் என்றார். அடிகளார் உற்றநோய் நோற்கும் ஆற்றல் உடையார் ஆகலின் அவர்க்கு நீர் ஊட்டல் வேண்டாவாயிற்று என்க. தீது முற்கூறப்பட்ட துன்பம்; அஃதாவது, (65) நடுங்குதுயருறுத்தல். அழுவம் - பாலைப்பரப்பு.

மூவரும் கொற்றவை கோயில் எய்துதல்

207 - 216 : குரவமும் ....... ஆங்கென்

(இதன் பொருள்) குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் ஆகிய மரங்கள் விரவிநிற்கின்ற அழகியதொரு சோலையாலே சூழப்பெற்று; விளங்கிய இருக்கை - விளக்கமுடையதோர் இருப்பிடத்தின்கண்ணே; ஆர் இடை அத்தத்து இயக்குநர் வளம் அல்லது மாரி வளம் பெறா வில் ஏர் உழவர். கடத்தற்கரிய இடத்தையுடைய அப்பாலைப் பரப்பிடைக் கிடக்கும் வழிகளின்கட் செல்லும் வழிப்போக்கர் கொணர்கின்ற பொருளைக் கவர்ந்து கொள்ளும் வளத்தையன்றி மழையினால் உண்டாகும் வளத்தைப் பெறாதவரும்; வில் ஏர் உழவர் - தமது விற்றொழிலையே தமது வாழ்க்கைக்கியன்ற உழவுத் தொழிலாகவுடையவரும் ஆகிய மறவர்; கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி வேற்றுப் புலம் போகி - மறலியை யொத்த ஆற்றலோடே வளைந்த விற்படையைக் கையில் ஏந்தித் தம் பகைவர் முனையிடத்தே புகாநிற்ப; நல் வெற்றங் கொடுத்து - அம் மறவர்க்குச் சிறந்த வெற்றியைக் கொடுத்தருளி; கழிபேராண்மைக் கடன் பார்த்திருக்கும் அதற்குக் கைம்மாறாக அம் மறவர் தனக்குச் செலுத்துதற்குரிய மிகப்பெரிய ஆண்மைத் தன்மைக்கு அடையாளமாகிய அவிப்பலியாகிய கடனை எதிர்பார்த்திருக்கின்ற நுதல் விழி குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி நெற்றியின்கண் நெருப்புக் கண்ணையுடைய கன்னிகையும் குற்றமற்ற சிறப்பினையுடையவளும் அமரர்கள் கைதொழுதேத்தும் பாவை போல்வாளும் வானவர் நாட்டையுடையவளும் ஆகிய; ஐயைதன் கோட்டம் கொற்றவையினுடைய திருக்கோயிலை; ஆங்கு அடைந்தனர் அப்பொழுதே சென்றடைந்தனர்; என்பதாம்.

(விளக்கம்) பூம்பொழில் இருக்கைக்கண் அமைந்த ஐயைதன் கோட்டம் எனவும், கடன்பார்த்திருக்கும் ஐயைதன் கோட்டம் எனவும், குமரியும் பாவையும் நாடியும் ஆகிய ஐயைதன் கோட்டம் எனவும் தனித்தனி யியையும். 209. இயக்குநர் வளம் அல்லது என வளம் என்பதனை முன்னும் கூட்டுக. அஃதாவது ஆறு செல்வோர் கொணரும் பொருளைக் கவர்ந்துகொள்வதாகிய வளம் என்றவாறு. கழி பேராண்மைக் கடன் என்பது தன்னைத்தான் இடும்பலி. இதனை இந்திரவிழவு....80 அடியினும் அதனுரையினும் காண்க. நுதல்விழி என மாறுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

காடுகாண் காதை முற்றிற்று
.
« Last Edit: February 23, 2012, 02:04:25 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #19 on: February 23, 2012, 02:12:10 PM »
12. வேட்டுவ வரி

அஃதாவது - வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.

இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.

கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்  5

வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்  10

நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்  15

கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது  20

சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது  25

முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு  30

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி  35

வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்  40

கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்  45

கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்  50

பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்  55

பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி  60

கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்  65

தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை  70

ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
 - உரைப்பாட்டுமடை.

வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன   1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்  2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;

மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்  3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப்  4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;

ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்  5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்  6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்  7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்  8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்  9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக்,    10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப  11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;

உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை  12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;

கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப்  13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர்  14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;

முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்  15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;

கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்  16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்  17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு  18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய  19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட  20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு  21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;

பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்  22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய  23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.

உரை

1-5: கடுங்கதிர் .............. இருந்தனர்

(இதன்பொருள்.) கடுங்கதிர் திருகலின் - கடிய வெப்பமுடைய கதிரவன் வான்மிசை ஏறுதலாலே கதிர்கள் முறுகிப் பெரிதும் வருத்துதலாலே; நறும்பல் கூந்தல் ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறிய பலவகைப்பட்ட கூந்தலையுடைய கண்ணகி அதுகாறும் வழிநடந்த துன்பத்தோடே தன் சீறடிகளும் கொப்புளங் கொண்டு சிவத்தலாலே; குறும்பல் வுயிர்த்து குறியனவாகப் பலகாலும் உயிர்த்து வல்லாநடை யுடையளாதல் கண்டு; வருந்து நோய் தணிய - அவள் வருந்துதற்குக் காரணமான அத்துன்பந் தணிதற்பொருட்டு; ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை இருந்தனர் - முற்கூறப்பட்ட கொற்றவை கோயிலினுட் புகுந்து ஆங்குப் பலரும் தம்மைக் காணவியலாது தனித்ததொரு பக்கத்தே அமர்ந் திளைப்பாறி யிருந்தனராக என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் வெங்கதிர் வெம்மையிற் றொடங்கத் தீதியல் கானம் செலவரி தென்றுட்கொண்டு ஐயைதன் கோட்டம் புக்கனர் என்றறிவுறுத்த அடிகளார் ஈண்டு அக் கடுங்கதிர் திருகலோடன்றி அதுகாறும் வழி நடந்தமையால் கண்ணகியின் வருத்தம் இங்ஙனமிருந்ததென ஆங்குச் சென்றிருத்தல் இன்றியமையாமையையும் விதந்தோதுவாராயினர். 3. உயிர்த்து - உயிர்ப்ப, அதுகண்டு.... இருந்தனர் என்க.

4. எய்யாத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது. பலரும் தம்மைக் காணவொண்ணாத ஒரு மறைவிடத்தே என்க; பலரும் புகுந்தறியாத வோரிடம் என்பது பொருந்தாது. என்னை? அத்தகைய விடமாயின் இவரும் புகுத நினையாராகலின் என்க. இருந்தனர் என்னும் பயனிலைக்கு எழுவாய் அதிகாரத்தாற் பெற்றாம்.

நடுவூர் மன்றத்தே சாலினி தெய்வ மேறப்பெற்று ஆடுதல்

5 - 11: உப்பால் ................ அடிபெயர்த்தாடி

(இதன்பொருள்.) உப்பால் இனி உங்கே எயினர் ஊரிடத்தே; வில் வழங்கு தடக்கை மறக்குடித் தாயத்து - வில்லிடத்தே அம்புகளைத் தொடுத்து மாற்றார்க்கும் வழங்கும் வள்ளன்மை சான்ற பெரிய கையினையுடைய மறவர் தம்குடியிற் பிறந்த உரிமை யுடைமையாலே; பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி - கொற்றவைக்குத் தான் முன்பு நேர்ந்த கடனைச் செலுத்திவந்த முழங்குகின்ற வாயையுடைய சாலினி என்பவள்; தெய்வம் உற்று - ஞெரேலெனத் தெய்வத்தன்மையுற்று; மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்து ஓச்சி மெய்ம்மயிர் சிலிர்த்து மூரிநிமிர்த்த கைகளை ஒற்றையும் இரட்டையும் ஆக்கி விட்டெறிந்து; கானவர் வியப்ப எயினர்கள் வியப்புறும்படி; முள் இடு வேலி ஊர் எயினர் கூட்டு உண்ணும் முள்ளிட்டுக் கட்டிய வேலியையுடைய அவ்வூரின்கண்ணுள்ள எயினர்கள் தாம் ஆறலைத்துக்கொண்ட பொருளை யெல்லாம் ஒருங்கேகூடிப் பகிர்ந்துண்டற்கிடனான; ஊர் நடு மன்றத்து ஊரினது நடுவணமைந்த மன்றத்தின் கண்ணே; அடி பெயர்த்து ஆடி - தாளத்திற் கொப்பத் தன் அடிகளைப் பெயர்த்திட்டு ஆடி என்க.

(விளக்கம்) ஐயை கோட்டத்தே இங்ஙனம் இருப்ப இனி அவ்வூரின் மற்றோரிடத்தே என்பார் உப்பால் (- உங்கே) என்றவாறு. மறக்குடிப் பிறந்த இவர் ஆறலைத்துப் பிறர்பொருள் கவர்தலன்றி அவர் வழங்குவதும் உண்டு. அஃதென்னையோ எனின் தமது வில்லில் வேண்டுமளவு அம்பு தொடுத்துத் தம் மாற்றார்க்கும் வழங்குவர் என்பார், வழங்குவில் தடக்கை என அவர் கைக்கும் வள்ளன்மையை ஏற்றிக் கூறினர். கொற்றவை ஏறுதற்கியன்ற தகுதி கூறுவார், மறக்குடித் தாயத்துச் சாலினி என்றார். சாலினி - தேவராட்டி. மெய்ம்மயிர் நிறுத்தல் கையெடுத் தோச்சுதல் அடி பெயர்த்தாடுதல் வாய் முழங்குதல் இவை தெய்வமுற்றோர் மெய்ப்பாடுகள்.

தெய்வ மேறப்பெற்ற சாலினி கூற்று

12-19: கல்லென்............கடந்தரும் எனவாங்கு

(இதன்பொருள்.) கல் என் பேரூர்க் கண நிரை சிறந்தன - எயினர்காள்! நுங்கள் மாற்றாருடைய கல்லென முழங்குகின்ற பெரிய ஊர்களிடத்தே அவர்தம் செல்வமாகிய திரண்ட ஆனிரைகள் பெரிதும் சிறப்புறுவனவாயின; வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன - வலிய விற்படைகளை யுடையீரா யிருந்தும் எயினர்களாகிய நுங்கள் மன்றங்கள் எல்லாம் பாழ்பட்டுக் கிடவா நின்றன; எயினரும் -நந்தம் மெயினர் தாமும்; மறக்குடித் தாயத்து வழி வளம் சுரவாது-தாம் பிறந்த மறக்குடிக்குரிய ஆறெறி சூறையும் ஆகோளுமாகிய வழிகளிலே தமக்கியன்ற வளங்குன்றி; அறக்குடிபோல் அவிந்து அடங்கினர் - அறக்குடிப் பிறந்த மக்கள் போன்று செருக்கழிந்து மறப்பண்பின்றி ஒடுங்கினர்; இவ்வாறு கேடுற்றமைக்குக் காரணமும் உண்டு கண்டீர்; கலையமர் செல்வி - நங் குல தெய்வமாகிய கலைமான் மிசை அமரும் செல்வ மிக்கவளாகிய கொற்றவைதானும்; கடன் உணின் அல்லது - அவள் கொடுத்த வெற்றிக்கு விலையாகிய உயிர்ப்பலியை நீயிர் அவட்குக் கொடுப்ப உண்டாக்காலல்லது; சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் போரின்கண் நுமக்கு வெற்றியைக் கொடுப்பாளொருத்தி அல்லள்காண்! மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிராயின் நீங்கள் நாள் முழுதும் கள்ளுண்டு களித்தற்கியன்ற வளமான வாழ்க்கையை விரும்புவீராயின்; கட்டுஉண்மாக்கள் கடம் தரும் என - களவுசெய்து அதன்பயனை உண்ணுகின்ற பாலைநில மாக்களே! நீயிர் அத் தெய்வத்திற்குச் செலுத்தக் கடவ பலியைச் செலுத்துமின்! என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) 12. கல்லென் : ஒலிக்குறிப்பு. ஊர் - கரந்தையார் ஊர். இவர் ஆக் கொள்ளுமிடத்தே அவ்வூரார் கல்லென்னும் ஆரவாரம்பட எழுவர் ஆகலின் அவரூரைக் கல்லென்பேரூர் என்றார். இதனைக் கரந்தை யரவம் எனவே புறப்பொருள் வெண்பாமாலை (22) கூறுவது முணர்க. சிறந்தன என்றது எயினர் அடங்கியதனால் அவை வளமுற்றுப் பெருகிவிட்டன என்பதுபட நின்றது. வல்வில் எயினர் என்றது இகழ்ச்சி. 14. மறக்குடித் தாயத்துவழி வளம் என்றது, ஆறெறி சூறையும் ஆ கோளுமாகிய பொருட்பேறுகளை. 16. கடன்-பராவுக் கடனுமாம். 17. சிலையமர் - விற்போர். 18. மட்டு - கள். கட்டு -களவு செய்து. தரும் - தாரும் என்பதன் விகாரம். இவை முன்னிலைப் புறமொழிகள். ஆங்கு : அசை.

சாலினிக்குக் கொற்றவை கோலம் புனைதல்

20 - 30: இட்டுத்தலை .......... உடீஇ

(இதன்பொருள்.) இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத்தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் சுட்டிய பகைவர் தலையைத் தாமே அறுத்து வைத்து எண்ணுவதல்லது தம்மாற் சுட்டப்பட்ட தலை தப்பிப் போகாமைக்குக் காரணமான மறப் பண்புமிக்க எயினர்களது பழைய மறக்குடியிலே பிறந்த இளைமையுடைய சாலினிக்கு; குறுநெறிக் கூந்தல் சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றி நெடுமுடி கட்டி - அவளது குறிய நெறிப்புடைய கூந்தலைச் சிறிய வெள்ளியாலியன்ற பாம்பின் குருளையாகிய கயிற்றினாலே சுற்றி நெடிய முடியாகக் கைசெய்து கட்டி; இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளை வெள் கோடு பறித்து மற்றது - காவற்காடு சூழ்ந்த தமது தோட்டப்பயிரை அழித்த பன்றியினது வளைந்த வெள்ளிய மருப்பைப் பறித்து அதனை; முளை வெள் திங்கள் எனச் சாத்தி - செக்கர் வானத்தே தோன்றுகின்ற வெள்ளிய இளம்பிறை என்னும்படி அணிந்து; மறம் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற வெண்பல்மாலை நிரை தாலி பூட்டி - தறுகண்மையுடைய வலிய புலியினது வாயைப் பிளந்து அதன் பற்களை உதிர்த்துக் கைக்கொண்ட வெள்ளிய பல் லொழுங்கை நிரைத் தாலியாகக் கட்டி; வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - அப் புலியினது வரிகளும் புள்ளிகளும் விரவிய பெரிய புறந்தோலை அவட்கு மேகலையாக வுடுத்தி என்க.

(விளக்கம்) 20-21. தாம் சுட்டிய பகைவர் தலையை என்க. சுட்டுதலாவது இன்னவன் தலையை யான் அறுப்பேன் எனச் சுட்டிச் சூள் கூறுதல். சுட்டியவாறே செய்து முடிப்பதல்லது அத் தலை தப்பிப் போக விடாதவர் என அவர்தம் மறமிகுதி கூறியபடியாம். இனி, தந்தலையைப் போர்க்களத்தே பகைவர் அரிந்து வைக்க வைக்க எண்ணுவதல்லது வாளா இறந்து தந்தலை ஈமத்தே சுட்டழிக்கப்படாமைக்குக் காரணமான மறப்பண்பு மிக்கவர் எனலுமாம். 22. சிறு வெள்ளரவின் குருளை நாண் என்றது பாம்பின் குருளை வடிவாகச் செய்த சிறிய பொன் ஞாண் என்றவாறு. வெள்ளரவின் குருளை என்றமையால் வெண் பொன்னாலியன்ற நாண் எனலுமாம். 24. இளை - காவற்காடு; முள் வேலியுமாம். இழுக்குதல் - அழித்தல். 26. கொற்றவைக்கு முடியில் பிறையும் அரவும் உண்மையின் பன்றிக் கொம்பினைப் பறித்துப் பிறையாக அணிந்தார் என்க. முளை வெண் திங்கள் என்றது இளம்பிறையை. 28. நிரைத்தாலி - ஓர் அணிகலம். 29-30. வான் புறத்து உரிவை பெரிய புறந்தோல். 30. மேகலை - மேலாடை.

இதுவுமது

30 - 35: பரிவொடு ................ பரசி

(இதன்பொருள்.) கரு வில் பரிவொடு வாங்கிக் கையகத்துக் கொடுத்து - புறக்காழ் முதிர்ந்த வலிய வில்லை வருத்தத்தோடு வளைத்து நாண் கொளீ இ அவள் கையிற் கொடுத்து; திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்கேறிய கொம்புகளையுடைய கலைமான் ஊர்தியிலே எழுந்தருளச்செய்து; பாவையும் கிளியும் தூவி அம் சிறைக் கானக்கோழியும் நீல்நிற மஞ்ஞையும் பந்தும் கழங்கும் தந்தனர் பாசி - விளையாட்டுப் பாவையும் கிளியும் தூவியையும் அழகிய சிறகுகளையுமுடைய காட்டுக்கோழியும் நீல நிறமுடைய மயிலும் பந்தும் கழங்குமாகிய இவற்றைக் கையுறையாகக் கொணர்ந்து திருமுன் வைத்துநின்று வழிபாடுசெய்து, பின்னர்; என்க.

(விளக்கம்) கருவில் - வயிரம் பாய்ந்த மூங்கிலாலியன்ற வில். அதன் வலிமை மிகுதியாலே வருந்தி வளைத்து என்றவாறு. பரிவு - வருத்தம். வளைத்து நாண் கொளீஇக் கொடுத்தென்க. திரிதரு கோட்டுக்கலை என்றது ஈண்டுச் சிற்பத்தாலியன்ற கலைமான் வாகனத்தை என்க. பாவை - மதனப்பாவை முதலியன (பொம்மைகள்.) தந்தனர்-தந்து.

வழிபாட்டுப் பொருள்கள்

36 - 44: வண்ணமும் ............ கைதொழு தேத்தி

(இதன்பொருள்.) வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் - குங்குமக் குழம்பு முதலிய வண்ணங்களையும் பொற் சுண்ணத்தையும் குளிர்ந்த நறிய சந்தனத்தையும்; புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் - அவரை துவரை முதலியவற்றின் அவியலும் எட்கசியும் நிணங்கலந்து துழந்தட்ட சோறும் மலர்களும் அகிற்புகையும் இவற்றோடு கூடிய பிற மணப் பொருள்களும் ஆகியவற்றையும்; ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர - ஏவல் செய்யும் எயினமகளிர் ஏந்திக்கொண்டு பின்னர்ச் செல்லாநிற்ப; ஆறு எறி பறையும் சூறைச்சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப - வழிப்போக்கரை அலைத்து அவர் பொருளைக் கவரும்பொழுது கொட்டும் பறையும் களவுகொள்ளும்பொழுது ஊதுகின்ற சின்னமும் துத்தரிக் கொம்பும் குழிக்குழலும் பெருமை பொருந்திய ஒலியையுடைய மணியும் ஆகிய இசைக்கருவிகள் தம்முட் கூடி முழங்காநிற்ப; அணங்கு முன் நிறீஇ - இவ்வனைத்தையும் சாலினியாகிய அக் கொற்றவை திருமுன்னர் நிறுத்த; விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை பரிக்கலை ஊர்தியை - அச் சாலினிதானும், எயின்மறவர் தாமெய்திய வெற்றிக்குக் கைம்மாறாகக் கொடுக்கும் உயிர்ப்பலியை உண்ணுமிடமாகிய அகன்ற பலிபீடத்தை முற்படத் தொழுது பின்னர்க் கோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் விரைந்த செலவினையுடைய கலைமானை ஊர்தியாகக்கொண்ட கொற்றவையையும் கைகுவித்துக் கும்பிட்டு வாழ்த்திப் பின்னர்; என்க.

(விளக்கம்) புழுக்கல் - அவரை துவரை முதலியவற்றின் அவியல். நோலை - எட்கசி; ஆவது எள்ளினாற் சமைத்ததொரு தின்பண்டம். விழுக்கு - ஊன். மடை சோறு. புகை - அகிற்புகை. சாந்தம் - சந்தனம். நிறீஇ - நிறுத்த எனத் திரித்துக்கொள்க. அணங்கு - சாலினி; அணங்கேறிய சாலினி எனினுமாம். விலையாகிய பலி என்க. சின்னம் - காளம் என்னும் ஒருவகைத் துளைக்கருவி. நாகசின்னம் என்னும் வழக்குண்மையும் உணர்க. மணி - ஒலிக்கும்; மணி, வழிபாட்டுக் கருவிகளில் இது தெய்வத்திற்குச் சிறப்புடையதாதலின் பீடுகெழு மணி என்றார். பீடு - பெருமை. துவைத்தல் - முழங்குதல். பரி - விரைந்த செலவு. பரிக்கலை என மாறுக. சாலினி கலையூர்தியை ஏத்த என்க.

சாலினியின் மேலுற்ற கொற்றவை கண்ணகியைப் பாராட்டல்

45-50: இணைமலர்............உரைப்ப

(இதன்பொருள்.) தெய்வம் உற்று இணைமலர்ச் சீறடி இணைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - அச் சாலினியின் மேல் கொற்றவையாகிய அத் தெய்வம் ஏறி இணைந்த தாமரை மலர்கள்போன்ற தன் சீறடிகள் வழிநடை வருத்தத்தால் சிவந்து கொப்புளங் கொண்டமையாலே பெரிதும் வருந்தித் தன்னரும் பெறற் கணவனோடு அக் கோயிலில் ஒருபாலிருந்த கண்ணகியை அணுகச் சென்று தன் கையால் அவளை எயினர்க்குச் சுட்டிக்காட்டிக் கூறுபவள்; இவள் கொங்கச் செல்வி குடமலையாட்டி தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து - நமரங்காள்! உங்கிருக்கும் இவளைக் காண்மின்! இவள் கொங்க நாட்டினை ஆளும் அரசிகாண்! அத்துணையோ? நந் தென்னகத்துச் செந்தமிழ்த் தெய்வஞ் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவளும் இவளொருத்தியே காண்! உலகிற்கு ஒருமாமணியாய் ஓங்கிய திருமாமணி என உரைப்ப - தமிழ் செய்த தவப்பயன் இவளென்றலும் சாலாது கண்டீர்! இவள்தான் பல்வேறு மொழிகளையுடைய இப் பேருலகத்தே எந்த நாட்டினும் பெண்பிறந்தோர் எல்லோரும் எந்தக் காலத்தும் தத்தமக்கு அணியாகக் கொள்ளத் தகுந்ததோர் உயரிய அழகிய முழுமாணிக்கம் என்பேன்! என்று நெஞ்சாரப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் கொற்றவை கண்ணகியின் சிறப்பெல்லாம் கருத்திற்கொண்டு அவள் நலம்பாராட்டினமை நுண்ணிதின் உணர்க. மனையறம்படுத்த காதையில் கண்ணகியை நலம்பாராட்டிய கோவலன் இத்தகைய நலமெல்லாம் பாராட்டினன் அல்லன் ஆகலின் அடிகளார் அவனது உரையைக் குறியாக் கட்டுரை என்றோதினார் என்றாம். ஈண்டு இத் தெய்வம் கூறும் நலம்பாராட்டே குறிக்கொண்ட கட்டுரை ஆவதுமறிக.

இனி, கண்ணகி மக்களுட் டோன்றித் தன் கற்பொழுக்கத்தாலே தெய்வமும் தொழத்தகும் தெய்வமாயுயர்ந்து தன்னை வழிபடுவார்க்கெல்லாம் மழைவளந்தந்து பாதுகாப்பவள் ஆகுவள் எனக் கண்ணகியின் எதிர்கால நிகழ்ச்சியைக் கொற்றவை இவ்வாறு வியந்து கூறினள் என்க.

இனி, இத்தகைய கற்புடையாளைப் பிறநாட்டுக் காப்பியங்களினும் காண்டல் அரிதாகவே இவளைத் தலைவியாகக் கொண்டு காப்பியஞ் செய்த தமிழ்த் தெய்வம் செய்த தவப்பயனே இவள் என்பாள் தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து என்றாள். மற்று இச் சிறப்புஞ் சாலாதென்னும் கருத்தாலே உலகிற்கே ஒருமணியாய் ஓங்கிய திருமணி என்றாள். இஃதென் சொல்லியவாறோ வெனின் இப் பேருலகத்தே மாதராய்ப் பிறந்தவர் எல்லாம் தம்மனத்தே பூண்டு கொள்ளற் கியன்ற ஒரு முழுமாணிக்கமே இவள் என்றவாறு.

கண்ணகி நாணிநிற்றல்

51-53: பேதுறவு ............... நிற்ப

(இதன்பொருள்.) மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள் என்று இங்ஙனம் அச் சாலினி தன்னைச் சுட்டிக் கூறுதல் கேட்ட கண்ணகி அதனைப் பொறாமல் பேரறிவுடைய இத் தேவராட்டி தெய்வ மயக்கத்தாலே ஏதேதோ கூறினள் என்றுட்கொண்டு; அரும் பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி - பெறுதற்கரியவனாகிய தன் கணவன் முன்னரே எழுந்து நின்றவனுடைய பெரியபுறத்தே ஒடுங்கி அவளது பேதைமையை எண்ணிப் புதியதொரு புன்னகையோடு நிற்ப என்க.

(விளக்கம்) 51. மூதறிவாட்டி - இகழ்ச்சி. இல்லது புகழ்வாளாக வுட்கொள்ளலின் இஃதிகழ்ச்சிக்குறிப்பாயிற்றென்க. பலரறியத் தன்னைச் சுட்டிப் புகழ்தலின் நாணினள். அவள் பேதைமை கண்டு எள்ளுங்கருத்தால் அவள் நகையை விருந்தின் மூரல் என்றார். கணவன் புறத்தே ஒடுங்கிநிற்ப என்றமையாலே தெய்வம் தன்னைச் சுட்டிக் கூறத் தொடங்கியவுடன் இருவரும் எழுந்து நின்றமையும் பெற்றாம்.

கொற்றவையின் சிறப்பு

54 - 64:  மதியின் .......... கொற்றவை

(இதன்பொருள்.) மதியின் வெள் தோடு சூடும் சென்னி - திங்களாகிய வெண்டாமரை மலரின் வெள்ளிய இதழாகிய பிறையை அணிந்த முடியையும்; நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து நெற்றியைக் கிழித்துக் காமவேளின்மேல் சினந்து விழித்த இமைத்தலில்லாத நெருப்புக் கண்ணையும் உடையவளும்; பவள வாய்ச்சி - பவளம் போன்று சிவந்த திருவாயினையும்; தவளவாள் நகைச்சி வெள்ளி ஒளியுடைய பற்களையும் உடையவளும்; நஞ்சு உண்டு கறுத்த கண்டி திருப்பாற் கடலிலே வாசுகி யுமிழ்ந்த நஞ்சை உண்டமையாலே கரிய நிறமுடையதாகிய மிடற்றினை யுடையவளும் வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - வெவ்விய சினத்தையுடைய வாசுகியாகிய பாம்பை நாணாகப் பூட்டி நெடிய மேருமலையை வில்லாக வளைத்தவளும், துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பிலிற்றுந் துளைகளமைந்த பற்களையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையவளும்; வளையுடைக் கையில் சூலம் ஏந்தி வளையலணிந்த கையினால் சூலத்தை ஏந்தியவளும்; கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலையாட்டி யானையின் தோலைப் போர்த்துப் பிறவுயிர்கட்கு வருத்தந் தருவதாகிய அரிமானின் தோலை மேகலையாக வுடுத்தவளும்; சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப்பக்கத்தே சிலம்பும் வலப்பக்கத்தே வீரக்கழலும் ஒலிக்குச் சிறிய அடிகளையும் உடையவளும்; வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை மேலான வெற்றியையுடைய வாள்வென்றி வாய்ப்புப் பெற்றவளுமாகிய கொற்றவை என்னும் திருப்பெயரை யுடையவளும் என்க.

(விளக்கம்) 54. இளம்பிறை என்பது தோன்ற மதிசூடும் சென்னி என்னாது மதியின் வேண்டோடு சூடும் சென்னி என்றார். நாள்தோறும் ஒவ்வொன்றாக விரிதலின் மதியாகிய மலர்க்குப் பிறை தோடாயிற்று. தோடு - இதழ். நுதலைத் திறந்து என்னாது நுதல் கிழித்து விழித்த என்றார், அதுதானும் அவள் சினந்துழித் தோன்றியதாகலின் -57. கண்டி - கண்டத்தை யுடையவள். நுதல் விழி- அவள் தீயோரை அழித்தற்றொழிற்கும் கறுத்த கண்டம் அடியாரைப் புரக்குந்தொழிலுக்கும் அறிகுறிகள் ஆகலின் அவற்றை விதந்தெடுத்தோதினர், அவள் இறைவனுக்கு இச்சாசத்தியாகலின் நெடுமலை வளைத்தமை அவள் செயல் என்பதுபட. 58. அரவு....வளைத்தோள் என்றார். 61. அணங்கு ஆகிய - பிறவுயிர்க்குத் துன்பமாகிய. இடப்புறத்துத் திருவடி இறைவியுடையதும் வலப்புறத்துத் திருவடி இறைவனுடையதும் ஆகலின், 63. சிலம்பும் கழலும் புலம்புஞ் சீறடி என்றார். இங்ஙனமே பின்னும் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம் பரற்றும் தகைமையள் என்பர் (கட்டுரை காதை 9-10)

ஈண்டுப் பெண்மைதானும் இக் கொற்றவையின் கூறாகலின் பெண்மையே உயிர்களைப் புரப்பதாயினும் உயிர்கள் முறைபிறழ்ந்துழி அவற்றைச் சினந்து கோறற்கு இங்ஙனம் அஞ்சத்தகுந்த உருவமும் கொள்ளும் என அடிகளார் இவ் வேட்டுவ வரியின்கண் பின்னர்க் கண்ணகியார் மதுரை எரியூட்டுதல் முதலிய கொடுஞ்செயற்கு அமைதி காட்டற்கு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திவகையாலே இறைவியை இங்ஙனம் இக் கொற்றவை யுருவிற் காட்டுகின்றனர் போலும்.

இதுவுமது

65 - 74: இரண்டு ................ வாய்ந்ததாலெனவே

(இதன்பொருள்.) இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் - தலை அஃறிணைக்குரியதாகவும் உடம்பு உயர்திணைக்குரியதாகவும் ஒன்றற்கொன்று பொருந்தாத வடிவத்தையும் திரண்ட தோள்களையும் உடைய மகிடாசுரனுடைய தலையின்மேல் நின்றவளும்; பலர் தொழும் அமரரும் முனிவரும் பிறருமாகிய பலரானும் வணங்கப் பெறுகின்ற, அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி தேவியும் கன்னிகையும் கவுரநிற முடையாளும் போர்க்களத்திற்குரியவளும் சூலப்படை யுடையாளும் நீல நிறத்தை யுடையவளும்; மாலவற்கு இளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப்பாவை - திருமாலின் தங்கையும் தெய்வங்கட்கெல்லாம் தலைவியானவளும், திருமகளும் வெவ்விய வாளையுடைய பெரிய கையினையும் பாய்கின்ற கலைமானூர்தியையும் உடையவளும்; ஆய் கலைப்பாவை - ஆராய்தற்குரிய கலைத் தெய்வமும்; அருங்கலப்பாவை ஏனைத் தெய்வங்கட்கெல்லாம் அருங்கலமாகியவளும்; தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் - அவ்விடத்தே எயினராகிய தஞ்சுற்றத்தார் கைகுவித்துத் தொழத் தனது கொற்றவையாகிய தனது அணியை மேற்கொண்டு வந்த கன்னிகையாகிய அந்தச் சாலினியின் கோலத்திற்கேற்ப அவள் மேலமர்ந்த; குமரியும் அக் கொற்றவை தானும்; வரி உறு செய்கை வாய்ந்தது என இச் சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று மகிழ்ந்து; அருளினள் அவ் வெயினர்க்கெல்லாம் திருவருள் சுரந்தனள்; என்க.

(விளக்கம்) இரண்டு வேறு உருவின் அவுணன் - தலை எருமைக் கடாவின் தலையாகவும் உடம்பு அசுரன் உடம்புமாய் அமைந்த வடிவினையுடையவன்; அவன், மகிடாசுரன் என்க.

65 - 6. அவுணன் தலையைத் துணித்து அதன்மிசை நின்ற தையல் என்றவாறு. 68. மாலுக்கு இளங்கிளை என்றது அவன் தங்கை என்றவாறு.

72. தமர் தொழவந்த குமரி என்றது சாலினியை. அவள் கோலத்து அமர் இளங்குமரி என்றது கொற்றவையை. இவள் எற்றைக்கும் குமரியாதலின் இளங்குமரி என்றார். வரி - வரிக்கூத்திற்கியன்ற கோலம். இதுகாறும் கூறியவை உரைப்பாட்டு மடை - அஃதாவது உரை நடைபோன்ற பாட்டு, அதனை இடையிலே மடுத்தலாவது இடையிடையே வைத்தல். இங்ஙனம் உரைப்பாட்டினை வைத்தல் நாடகத் தமிழ்க்குரியதொரு செய்கை என்க.

முன்றிற் சிறப்பு

அஃதாவது கொற்றவை கோயிலின் முன்றிலிலே வரிக்கூத்தாடத் தொடங்கும் எயினர்கள் முற்பட அக் கோயிலினது முற்றத்தின் சிறப்பைப் பாடுதல் என்க.

1 : நாகம் ........... முன்றிலே

(இதன்பொருள்.) கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே -நெற்றிக் கண்ணனாகிய இறைவனுடைய திருவுடம்பிலே ஒரு பாதியை ஆளுகின்ற சிறப்பினையுடைய எங்கள் கொற்றவை பலி கொள்ளுதற்குரிய இத் திருக்கோயிலினது முற்றத்திலே; எங்கணும் - யாண்டும்; நாறும் மணம் பரப்புகின்ற; நாகம் நரந்தம் நிரந்தன - சுரபுன்னையும் நரந்தையும் நிரல்பட மலர்ந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின; ஆச்சா மரமும் சந்தன மரமும் வானுற வளர்ந்து நின்றன; சேவும் மாவும் செறிந்தன -சேமரமும் மாமரமும் செறிந்து நின்று மலர்ந்தன.

(விளக்கம்) இவ் வன்பாலையிலே இவை இங்ஙனம் வளம்பெற்று மலர்வதற்குக் காரணம் அவளது அருளன்றிப் பிறிதில்லை என்பது குறிப்பெச்சம். இவை பின்வருவனவற்றிற்கும் ஓக்கும்.

2 : செம்பொன் ........... முன்றிலே

(இதன்பொருள்.) இளந் திங்கள் வாழ்சடையாள் திரு மூன்றிலே இளம்பிறை என்றென்றும் இளம்பிறையாகவே நிலைபெற்று வாழுதற்கிடமான அழகிய சடையினையுடைய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்தே; வேங்கை செம்பொன் சொரிந்தன-வேங்கைமரங்கள் தாமும் அவட்குக் காணிக்கையாகச் செவ்விய பொன்களையே பூத்துச் சொரிந்தன; நல் இலவங்கள் கொம்பர் சேயிதழ் குவிந்தன- அழகிய இலவமரங்கள் தாமும் தம் கொம்புகளாகிய கைகளாலே சொரிந்த காணிக்கைகளாகிய சிவந்த மலர்கள் யாண்டும் குவிந்து கிடந்தன; புன்கு - புன்குகள்; பொங்கர் தம் கொம்புகளாகிய கைகளாலே எங்கள் கொற்றவைக்கு; பொரி சிந்தின - தம் மலர்களாகிய வெள்ளிய பொரிகளைச் சொரியாநின்றன; என்க.

(விளக்கம்) செம்பொன்: குறிப்புவமை, பொரியும் அது. வேங்கை முதலியன கொற்றவைக்குக் கையுறையாகச் செம்பொன் முதலியவற்றைச் சொரிந்து குவித்துச் சிந்தின என்க. குவித்தன, குவிந்தன என மெலிந்தது. பொங்கர்: கொம்பு. பொங்கர் வெண்பொரி - பொதுளிய (பருத்த) வெண்பொரி எனினுமாம்.

3 : மரவம்...........முன்றிலே

(இதன்பொருள்.) திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே - திருமாலின் தங்கையாகிய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்திலே; மலர்ந்தன மரவம் பாதிரி புன்னை குரவம் கோங்கம் மணம்கமழ் கொம்பர் மேல் - மலர்ந்து நிற்பனவாகிய வெண்கடம்பும் பாதிரியும் சுரபுன்னையும் குராவும் கோங்குமாகிய இவையிற்றின் நறுமணங்கமழுகின்ற கொம்புகளிடத்தே; வண்டினம் உடன் ஆர்த்து யாழ் அரவம் செய்யும் - வண்டுகள் தம் பெடையோடு ஒருசேர முரன்று யாழினது இசைபோலப் பாடா நிற்கும்; என்க.

(விளக்கம்) திருவமால் என்புழி அகரம் இடைச்சொல். மலர்ந்தனவாகிய மரவ முதலியவற்றின் மணங்கமழ் கொம்பர் மேல் ஆர்த்து யாழரவஞ் செய்யும் எனக் கூட்டுக.

இம்மூன்றும் முன்றிற் சிறப்பு என்னும் ஒருபொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள்.

மறங்கடை கூட்டிய குடிநிலை

அஃதாவது வெற்றித் திருவாகிய கொற்றவையின் கோலங்கோடற்கு உரிமையுடைத்தாகிய மறக்குடியின் சிறப்புரைத்தல் என்க.

4 : கொற்றவை .......... குலனே குலனும்

(இதன்பொருள்.) கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப் பொன்தொடி மாதர் தவம் என்னை கொல்லோ எம் குல தெய்வமாகிய கொற்றவை அணியாகக் கொண்டவற்றை யெல்லாம் அணிந்துகொண்டு அக் கொற்றவைபோலவே ஈண்டு நிற்கின்ற இச் சாலினிதான் இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடைத்தோ? பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த வில் தொழில் வேடர் குலனே குலனும் - பொன் வளையலையுடைய இச் சாலினி பிறந்த மறக்குடியிற் பிறந்த வில்லேருழவராகிய இம் மறவர்தங்குலமே இவ்வுலகிற் றலைசிறந்த குலமாகும்; என்றார் என்க.

5 : ஐயை .............. குலனும்

(இதன்பொருள்.) ஐயை திருவின் அணிகொண்டு நின்ற இப் பை அரவு அல்குல் தவம் என்னை கொல்லோ? எங்குல முதல்வியாகிய இந்தக் கொற்றவையினது அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டு நின்ற அரவினது படம்போன்ற அல்குலையுடைய இச் சாலினி இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடையதோ? பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இவள் பிறந்த குடியிலே பிறந்த எய்யும் வில்லையுடைய எயினர் குலமே உலகின்கட் சிறந்த குலமாம் என்றார்; என்க.

6 : பாய்கலை ............. குலனும்

(இதன்பொருள்.) பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாகவுடைய எங்கள் கொற்றவை அணியும் சிறப்புடைய அணிகலன்களை யணிந்துகொண்டு அவள்போல நிற்கின்ற அழகிய வளையலை யணிந்த இச் சாலினிதானும் இப்பேறுபெறுதற்கு முற்பிறப்பிலே எத்தகைய கடிய நோன்பு செய்தனளோ? ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - அவள் பிறந்த குடியிலே பிறந்த மூங்கிலாலியன்ற வில்லையுடைய இவ் வெயினர் குலமே இம் மாயிரு ஞாலத்திற் றலையாய குலமாம், இதில் ஐயமில்லை! என்றார்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருண்மேலடுக்கி வந்தன. இவை, கூத்தாடுகின்ற மறவர்கள் தங்குடிச் சிறப்புக் கூறுமாற்றால் குறிப்பாகக் கொற்றவையையே புகழ்ந்தவாறாம். இவற்றை வள்ளிக் கூத்தென்பாருமுளர். அவர், இதற்கு,

மண்டமர் அட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமகள் நோற்றாள் பெரிது

என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டுவர்.

இனி இவற்றை வெட்சித்திணையின்கண்,

மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

எனவரும் நூற்பாவினால் இரண்டு துறைகளையும் இணைத்து அடிகளார் இங்ஙனம் ஓதினர் எனக் கோடலே சிறப்புடைத்தாம். இதன்கண் மறக்குடிச்சிறப்பும் அக் குடியின் தெய்வமாகிய கொற்றவையின் சிறப்பும் இணைந்துவருதலு முணர்க. இதனை வள்ளிக்கூத் தென்னல் ஈண்டைக்கு யாதுமியைபின்மையின் பொருந்தாதென்க குடிநிலை என்றதனால் இஃது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதலும் உணர்க. தொல்- இளம்பூரணம். புறத்திணையியல் 62 ஆம் நூற்பாவுரையினையும் நோக்குக.

1 - பொற்றொடி மாதர் - ஈண்டுச் சாலினி.
2 - ஐயை - முதல்வி. பையரவல்குல்: அன்மொழித்தொகை.
3 - பாய்கலைப்பாவை - கொற்றவை. வேய் - மூங்கில்.

கொற்றவை நிலை

7 : ஆனைத்தோல் ............ நிற்பாய்

(இதன்பொருள்.) வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அமரர்கள் வணங்கா நிற்ப; நான்கு மறைகட்கும் அறிய வொண்ணாது மறைந்த பொருளாகி மெய்யுணர்வில் தோன்றும் பொருளாகி அசைதலின்றி நிலைத்து நிற்கும் சிறப்புடைய நீ; புலியின் உரி உடுத்து ஆனைத்தோல் போர்த்து கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் புலியினது தோலை அரைக்கண் உடுத்துக் காட்டகத்தே எருமைக்கடாவினது கரிய தலையின்மேல் நின்றனை. இஃதென்ன மாயமோ? அறிகின்றிலேம் என்றார் என்க.

8 : வரிவளை ............... நிற்பாய்

(இதன்பொருள்.) அரி அரன் பூமேலோன் அகமலர் மேல் என்னும் விரிகதிர் அம் சோதி விளக்கு ஆகி நிற்பாய் - நீதானும் திருமாலும் சிவபெருமானும் தாமரை மலர் மேலுறையும் பிரமனும் ஆகிய முப்பெருங் கடவுளர் தம் நெஞ்சத்தாமரையின் மேலே எஞ்ஞான்றும் நிலைபெறுகின்ற விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளியையுடைய அறிவு விளக்காக நிற்குமியல்பினை யுடையை யல்லையோ அத்தகையோய்; வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடன் செற்றுக் கரிய திரிகோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால் - வரிகளையுடைய வளையலணிந்த பெண்ணுருவமுடையையாகி அக் கையின்கண் வாட் படையையும் ஏந்தி நின்று பொருது பெரிய மகிடாசுரனையும் கொன்றொழித்துக் கரிய முறுக்கேறிய கொம்பையுடைய கலைமான்மீது வீற்றிருந்தருள்கின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

9 : சங்கமும் ........... நிற்பாய்

(இதன்பொருள்.) முடிக்குக் கங்கை அணிந்த கண் நுதலோன் பாகத்து மங்கை உருவாய் விடைமேல் மறை ஏத்தவே நிற்பாய் - தனது சடை முடியின்மிசைக் கங்கையை அணிந்துள்ள நெருப்புக் கண்ணையுடைய நெற்றியை உடையவனாகிய இறைவனுடைய ஒரு பாதித் திருமேனியில் பெண்ணுருவமாகி மறைகள் வழிபாடு செய்தற்பொருட்டு அவை புகழ்ந்து தொழுமாறு அருட்டிருமேனி கொண்டு எருதின்மேல் நிற்கும் நீ; சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் சின அரிமான்மேல் நின்றாயால் - இப்பொழுது சங்கு சக்கரம் என்னுமிவற்றை நினது செந்தாமரை மலர் போன்ற அழகிய கைகளிலே ஏந்திக்கொண்டு சினத்தாலே சிவந்த கண்களையுடைய சிங்கத்தின் மேலே நின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் மருட்கை என்னும் ஒருபொருண்மேல் அடுக்கி வந்தன. 7. இதன்கண் அவள் அருவநிலையையும் உருவநிலையையும் பற்றி மருட்கை பிறந்தபடியாம். மறைகட்கும் அறியப்படாமையால் மறைமேன் மறையாகி நின்றாய் என்றும், மெய்யுணர்விற்குப் புலப்படுதல் பற்றி ஞானக் கொழுந்தாய் நின்றாய் என்றும், யாண்டும் வியாபகமாய் நிற்றல்பற்றி நடுக்கின்றியே நிற்பாய் என்றும் கூறியவாறாம். இஃது அருவத்திருமேனி - இத்தகையவள் (ஏகதேசமாய்) ஓரிடம்பற்றி ஆனைத்தோல் போர்த்துப் புலித்தோல் உடுத்து எருமைத் தலைமேல் நிற்றல் வியத்தற் குரித்தாயிற்று என்க. ஏனையவற்றிற்கும் இங்ஙனமே கூறிக்கொள்க.

8. வரிவளைக்கை ஏந்தத்தகாத வானை ஏந்தி என்பது கருத்து. மயிடன் - மகிடாசுரன். மா - கருமையுமாம்.

அன்பராயினார் நினைந்த வடிவத்தே அவர்தம் நெஞ்சத்தே தோன்றும் அருவுருவத் திருமேனியை, அரி யான் பூமேலோன் அகமலர் மேன் மன்னும் விரிகதிர் அஞ்சோதி விளக்கு என்று விதந்தார். இதன்கண் அவர் செய்யும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலும் நின்னருள் கொண்டே அவரால் நிகழ்த்தப்படுகின்றன என்பது குறிப்புப் பொருள் என்க.

9. சினச் செங்கண் எனவும் கண்ணுதலோன் பாகத்து விடைமேல் நின்றாயால் எனவும் பிரித்துக் கூட்டிக் கொள்க. இனி அரிமான் விடை எனக் கோடலுமாம்; இதற்கு விடை என்றது ஊர்தி என்னும் பொருட்டு. அன்றியும், குரங்கின் ஏற்றினை... கடியலாகா கடனறிந்தோர்க்கே (தொல்.மரபியல் -68) என்புழி கடியலாகா என்றதனால் அரிமானின் ஆண் என்பதுணர்த்தற்கு விடை என்றவாறுமாம். என்னை? வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324) என்றாற்போல என்க. கண்ணுதலோன் பாகத்துமங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய் என்றது உருவத்திருமேனியை. இவை மூன்றும் முன்னிலைப் பரவல்.

வென்றிக் கூத்து

10 : ஆங்கு ................ கூத்துன்படுமே

(இதன்பொருள்.) ஆங்கு - அன்பராயினாரைத் காத்தற் பொருட்டு உருவத் திருமேனி கொண்டு சங்கமும் சக்கரமும் தனது தாமரைக் கையின் ஏந்தியவிடத்தே; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்தமலர் துன்று பிணையல் தோள்மேல் இட்டு - கொன்றை மலரையும் துளபத்தையும் கலந்து தொடுக்கப்பட்ட மலர் செறிந்த மாலையைத் தனது திருத்தோளிலே அணிந்து கொண்டு; ஆங்கு - அசுரர் தம் போர்முனைக் கண்ணே; அசுரர் வாட - தீவினையே நயந்து செய்யும் அசுரர்கள் வாடும்படி; அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரரைப் பாதுகாத்தற் பொருட்டுத் தான் மேற்கொண்ட அக் குமரிக் கோலத்தோடே; கூத்துள்படும் - வாளமலை முதலிய வென்றிக் கூத்தினை ஆடத் தொடங்குவாள் என்றார் என்க.

(விளக்கம்) ஆங்கு என்றது - முன்னர் (9) சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திய பொழுது என்றவாறு. இக் கோலம் அசுரரை அழித்தற்கும் அமரரைக் காத்தற்கும் ஆகக்கொண்ட கோலமாதலின் அழித்தற்குரிய கடவுளாகிய அரனுக்குரிய கொன்றையையும் காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய துளபத்தையும் குழுமத் தொடுத்த பிணையல் தோள் மேலிடல் வேண்டிற்று என்க. அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரர் பொருட்டு மேற்கொண்ட குமரிக்கோலத்தோடே. கோலமாடுதல் - கோலம் கோடல். இக் கருத்துணராதார் ஈண்டுக் கூறும் உரை போலி.

கொற்றவை ஆடிய கூத்தின் சிறப்பு

11 : ஆய்பொன் ................... காட்டும் போலும்

(இதன்பொருள்.) நங்கை - நந்தம் கொற்றவை நங்கைதான் கூத்தியற்றுங் காலத்தே; ஆய் பொன் அரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப அழகிய பொன்னாலியன்ற பரல்கள் பெய்யப்பட்ட சிலம்பும் சூடகமும் தாளத்திற்கியையப் பலகாலும் முரலா நிற்பவும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ - வஞ்சனையாலே போர்க்களத்தே எதிர்த்தலாற்றாமையாலே அசுரர்கள் வஞ்சனையாலே வெல்லக் கருதித் தன்மேல் பாம்பும் தேளும் இன்னோரன்ன பிறவுமாய் உருக்கொண்டு வந்துழி அவரெல்லாம் நசுங்கி மாயும்படி; மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் போலும் - மரத்தாலியன்ற காலின் மேலே நின்று வாளேந்தி நின்று ஆடா நிற்கும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ் நங்கை மரக்கால் மேல் வாளமலை ஆடுமாயின்; நங்கை இவ்வண்ணம் வாட்கூத்தை ஆடுமிடத்தே; காயா மலர் மேனியேத்தி வானோர் கைபெய் மலர் மாரிகாட்டும் போலும் காயாம் பூப்போன்ற அவளுடைய அவ்வருட்டிரு மேனியைப் புகழ்ந்து அமரர்கள் தம் கையாலே அத் திருமேனிமிசைச் சொரியும் கற்பக மலர்கள் காண்போர்க்கு மலர் மழை பெய்தல்போன்று தோன்றும் என்றார் என்க.

(விளக்கம்) ஆய் - ஆராய்ந்தெடுத்த பொன் எனினுமாம். அரிபரல். சூடகம் -வளை. ஆர்ப்ப ஆர்ப்ப என்பது மிகுதிபற்றிய அடுக்கு. வாளவுணர் என்றது இகழ்ச்சி. வீழ என்றது மரக்காலின் மிதியுண்டு அழிய என்றவாறு. வாள் - அமலை - வாள்மறவர் வெற்றியாற் செருக்கி வாளைச் சுழற்றி ஆடும் கூத்து; இது. அமலை - அமலுதல் (நெருங்குதலாகலின்) பகைவரை நெருங்கி நின்றாடுங் கூத்திற்கும் பெயராயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனாரும் பட்டவேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலையும் (தொல் . புறத்திணையியல் -17) என்றோதுதலுமுணர்க. பகைவர் அழிவுகண்டு மகிழ்ந்த அமரர் அவள் காயாம்பூ மேனியை ஏத்தி மலர் சொரிவர் என்க. அம் மலரின் மிகுதி கூறுவார் மாரி காட்டும் என்றார். ஈரிடத்தும் போலும் - ஒப்பில்போலி. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

12 : உட்குடை .................... போலும்

(இதன்பொருள்.) உட்கு உடைச் சீறூர் ஒரு மகன் ஆன்நிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சந் தருதலையுடைய கரந்தையாருடைய சீறூரினிடத்தே சென்று, ஒப்பற்ற மறவன் ஒருவன் அவர்தம் ஆத்திரளைக் கைப்பற்றத் தலைப்பட்ட விடத்தே; வெட்சிமலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - அவனுக்கு அப் போர்க்குரிய வெட்சி மலரைச் சூட்டுதற்கு வெள்ளிய வாளோர் உழத்தியாகிய எம்மிறைவியினது திருவருள் தானும் இன்றியமையாது வேண்டப்படும்; வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - அங்ஙனம் இன்றியமையாத அவளருள் வேண்டப்பட்டபொழுது; வேற்றூர்க் கட்சியில் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்துள்ள காட்டிடத்தே கருங்குருவி என்னும் பறவை தனது கடிய குரலாலே கலுழ்ந்து அவர்க்குப் பின்வரும் கேட்டினை அறிவிக்கும்; இது தேற்றம் என்றார் என்க.

(விளக்கம்) உட்கு - அச்சம். சீறூர் - ஈண்டுக் கரந்தையார் ஊர். இது - வெட்சி.

(வெட்சிதானே) வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்

என வரும் தொல்காப்பியத்தானும் (புறத்திணை 1-2;) உணர்க. ஒருமகன் - ஒப்பற்ற போர்மறவன். வாள் ஏருழத்தி எனற்பாலது வாளுழத்தி என நின்றது விகாரம். உழத்தியும் வேண்டும் என்றது அனளருளும் இன்றியமையாது வேண்டப்படும் என்பதுபட நின்றது. வேண்டின் என்றது வேண்டி அவளருள் பெற்றபொழுது என்பதுபட நின்றது. காரி - கருங்குருவி. கடிய குரல் - தீநிமித்தம் தோன்ற இசைக்கும் குரல். வெட்சி மறவர் தன்னை வணங்கி ஆகோள் கருதிய வழி கொற்றவை அம் மறவர்க்கு முன்சென்று வெற்றியும் தருவாள் ஆதலின் கரந்தையார் ஊரில் அவர்க்குத் தீநிமித்தமாகக் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் என்றவாறு. இதனை,

நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி கலுழ்ம்  (வெட்சி 2)

எனவும்,

ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்  (வெட்சி 9)

எனவும், வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க.

13 : கள்விலையாட்டி ............ போலும்

(இதன்பொருள்.) கள்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் - கள் விற்குமவள் இவன் பழங்கடன் கொடாமையாலே கள் கொடுக்க மறுத்தாளாக, அதனைப் பொறாத அம் மறவன்றான்; புள்ளும் வழிப்படரக் கைவில் ஏந்திப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும் - கழுகும் பருந்தும் ஆகிய பறவைகள் தன்னைப் பின்பற்றிப் பறந்து வாரா நிற்பத் தனது கைக்கியைந்த வலிய வில்லை ஏந்திப் பகைவருடைய ஆனிரைகோடலைக் கருதிச் செல்லா நிற்பன்; புள்ளும் வழிப்படரப் போகுங்காலை - அங்ஙனம் அவன்றான் ஆகோள் கருதிப் போகும்பொழுது; கொற்றவை கொள்ளும் கொடியெடுத்துக் கொடுமரம் முன் செல்லும் போலும் - நங்கள் கொற்றவைதானும் தான் கைக்கொள்ளும் ஆளிமணிக் கொடியை யுயர்த்து அம் மறவன் வில்லின் முன்னே சென்று அவனுக்கு வெற்றி தருவாள் அன்றோ! என்றார்; என்க.

(விளக்கம்) இதனோடு அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல் மறாஅன் மழைத்தடங் கண்ணி - பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையையும் (2) நோக்குக. இதனை - மன்னுறு தொழில் தன்னுறு தொழில் என்னும் இருவகையினுள் தன்னுறு தொழில் என்பர்.

புள்ளும் வழிப்படர என்பதற்குப் புள்நிமித்தமும் தன் கருத்திற் கேற்பச் சேரலின் என்பர் அடியார்க்கு நல்லார். தன்னுறு தொழிற்கு அவ்வுரை பொருந்தாது. இனி, யாம் கூறியாங்கே கொடுவி லிட னேந்திப் பாற்றினம் பின்படர.... ஏகினார் எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையினும் கூறியதுணர்க. (4) புல்லார் - பகைவர்; கரந்தையார்; கொடுமரம் - வில்.

கொடை

14 : இளமா ......... நிறைந்தன

(இதன்பொருள்.) இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய எயினர் மகளே! நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்த ஆனிரைகள் நின் தமையன்மார் நெருநற் சென்று கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள்; கொல்லன் துடியன் கொளை புணர்சீர்வல்ல நல் யாழ்ப்பாணர்தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துக் கொடுத்த கொல்லனும் துடி கொட்டும் புலையனும் பாடவும் புணர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரும் என்னும் இவரது முற்றங்களிலே நிறைந்து நின்றன; இவை காண் - இவற்றையெல்லாம் நீ காண்பாயாக! என்க.

15 : முருந்தேர் ....... நிறைந்தன

(இதன்பொருள்.) முருந்து ஏர் இளநகை - முருந்து போலும் முற்றாத பற்களையுடையோய்; நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - நின் தமையன்மார் நெருநல் கரந்தையார் அலறும்படி கவர்ந்து கொணர்ந்த ஆனினங்கள்தாம்; கள்விலையாட்டி நல்வேய் தெரிகானவன் புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்குமவளும் நல்ல ஒற்றுத் தொழில் தெரிந்த மறவனும் புள் நிமித்தம் தெரிந்து கூறும் கணிவனும்; என்று கூறப்பட்ட இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்துள்ளன காணாய் - நீ இவற்றைக் காண்பாயாக ! என்க.

16 : கயமலர் ............ நிறைந்தன

(இதன்பொருள்.) கயமலர் உண் கண்ணாய் - பெரிய நீல மலர் போலும் அழகிய மையுண்ட கண்ணையுடையோய் ; நின் ஐயர் - நின் தமையன்மார்; அயலூர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் - தமது பகைவரூரின்கண் வாழ்வோர் அஞ்சி அலறும்படி நெருநல் கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள் தாம்; நயன் இல் மொழியின் - நரை முதுதாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன- நயமில்லாத மொழியையும் நரைத்து முதிர்ந்த தாடியையுமுடைய முதிய எயினரும் எயிற்றியரும் ஆகிய இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்து நின்றன; காணாய் - அவற்றை நீ காண்பாயாக! என்க.

(விளக்கம்) 14. இளமா - மாந்தளிர். மாந்தளிர் போன்ற நிறமுடைய எயிற்றி என்றவாறு. ஐயர் - தமையன்மார். தலைநாள் முதனாள். கொளை - பண். 15. முருந்து - மயிலிறகின் அடிப்பகுதி. ஏர்: உவமவுருபு. கரந்தை - கரந்தை சூடிய மறவர். வேய் ஒற்று. புள் வாய்ப்பு - நன்னிமித்தம், கணி - கணிவன்: (சோதிடன்). 16. கய - பெருமை; உரிச்சொல்; உண்கண் - கண்டோர் மனமுண்ணும் கண்ணுமாம்.

இவை மூன்றும் வஞ்சித்திணையின் துறைபற்றி வந்தன. ஆதலால் இவற்றைத் துறைப்பாட்டுமடை என்பர். அஃதாவது துறைப் பாட்டுகளை இடையே மடுத்தல் என்க. இம் மூன்றும் வெட்சித்திணைக் கண் கொடை என்னும் ஒருதுறைப் பொண்மேல் அடுக்கி வந்தன.

பலிக்கொடை

17 : சுடரொடு ............... அமரரும்

(இதன்பொருள்.) சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - கதிரவன் வெப்பம் உலகத் துயிர்களை - வருத்தாவண்ணம் அதனைத் தாமேற்று அக்கதிரவனோடு சுழன்று திரிகின்ற முனிவரும் தேவர்களும் எய்தும் இடர்கள் தீரும்படி திருவருள் வழங்குகின்ற நின்னுடைய திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய யாங்களும் கைகுவித்துத் தொழுகின்றேம்; அடல் வலி எயினர் நின் அடிதொடு - கொலையையும் வலிமையையும் உடைய எயினரேமாகிய அடியேங்கள் நின்னுடைய திருவடியை நெஞ்சத்தாலே நினைந்து செய்த; கடன் நிணன் உகு குருதி கொள் - பராவுக் கடனாகிய பலிப் பொருள் ஆகிய எமது மிடற்றினின்றும் சொரிகின்ற குருதியாகிய இப் பலியினை ஏற்றருள்வாயாக; இது விறல் தரு விலை - மற்றிது தானும் நீ எமக்கருளிய வெற்றிக்கு யாங்கள் கொடுக்கின்ற விலையேகாண்; என்க.

18 : அணிமுடி ..................... விலையே

(இதன்பொருள்.) அமரர் தம் அணிமுடி அரசொடு பணிதரும் மணி உருவினை நின் அமரர்கள் தாம் அழகிய முடியையுடைய தங்கள் கோமானோடு வந்து வணங்கும் சிறப்புடைய நீலமணி போலும் நிறத்தினையுடையோய் நின்னுடைய; மலர் அடி தொழுதேம் -உலகமெலாம் மலர்ந்தருள்கின்ற திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய எயினரேமாகிய அடியேம் கைகுவித்துத் தெழுதேம்; கணநிரை பெறுவிறல் எயின் இடு கடன் பகைவரது ஆனிரையைக் கைப்பற்றிக் கோடற்குக் காரணமான வெற்றிக்கு விலையாகச் செலுத்துகின்ற பராவுக்கடனாகிய நிணன் உகு குருதி கொள் - எமது மிடற்றினின்றும் சொரிகின்ற இக் குருதிப்பலியை ஏற்றுக்கொண்டருள்க; இது அடு நிகர் விலையே - இப் பலிதானும் யாங்கள் எம் பகைவரைக் கொல்லுதற்குக் காரணமான நினதருட்குச் சமமான விலையாகும்; என்க.

19 : துடி ............. மடையே

(இதன்பொருள்.) குமரி - மூவாநலமுடைய எங்களிறைவியே! துடியொடு சிறுபறை வயிரொடு வெடிபடத் துவை செய வருபவர் - துடியும் சிறுபறையும் கொம்பும் செவிகள் பிளந்து செவிபடுமாறு முழங்கும்படி வருபவரும்; அரை இருள் அடுபுலி அனையவர் - நள்ளிரவிலே வேட்டம்புகுந்து களிறு முதலியவற்றைக் கொன்றுண்ணும் புலியே போலும் ஊக்கமும் தறுகண்மையுமுடையவரும் ஆகிய; எயினர்கள் பாலை நில மாக்களாகிய அடியேங்கள்; நின் அடி தொடு கடன் நின் றிருவடிகளைத் தொட்டுச் செய்த வஞ்சினம் பொய்யாமல் பகை வென்று கொண்ட எமது வெற்றிக்கு விலையாகச் செலுத்தும் கடனாகும்; பலிமுக மடை இது பலி - எம்மிடற்றினின்றும் சொரிகின்ற குருதி விரவிய நிணச்சோறு ஆகிய இப்பலி, இதனை ஏற்றருள்வாயாக! என்பதாம்.

(விளக்கம்) 17. சுடரொடு திரிதரும் முனிவரும் என்பதனோடு நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுணவாகச் 9- ரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் எனவரும் புறநானூறும் (45) விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை எனவரும் திருமுருகாற்றுப்படையும் (107) ஒப்பு நோக்கற்பாலன. 

18. நின இணையடி என்புழி (நின் - 8) அகரம் ஆறாவதன் பன்மையுருபு. எயின் - எயினர். அடியைத் தொட்டுச்செய்த வஞ்சினத்திற் றப்பாது பகை வென்றுபெற்ற வெற்றிக்கு விலையாகிய கடன் என்பது கருத்து. மிடறுகு குருதி - என்றமையால் இதனை அவிப்பலி என்பாருமுளர். அஃதாவது தந்தலையைத் தாமே அரிந்து வைக்கும் பலி. இதனியல்பினை இந்திரவிழாவெடுத்த காதையினும் விளக்கினாம். ஆண்டுக் காண்க. (88) நிணன் - நிணம்; போலி.

19. துவைசெய: ஒருசொல். குமரி - மூவாமையுடையவள். மடை - பலிச்சோறு.

பலிக்கொடை யீந்து பராவுதல்

20 : வம்பலர் ........... சேர்த்துவாய்

(இதன்பொருள்.) சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் - சங்கரீ ! அந்தரீ! நீலீ! சடைமுடியிடத்தே சிவந்த கண்ணையுடைய பாம்பினைப் பிறைத்திங்களுடனே ஒருசேரச் சேர்த்து அணிகின்ற இறைவீ! இது அம்பு உடை வல்வில் எயின் கடன் இக் குருதிப் பலிதானும் அம்பினையுடைய வலிய வில்லினையுடைய நின்னடியேமாகிய எயினரேம் நினக்குச் செலுத்தும் எளிய பலியேயாகும்; உண்குவாய் - ஏற்றுக் கொள்ளுதி; வம்பலர் பல்கி வழியும் வளம்பட எற்றுக்கெனின் எமது பாலைநெறியிடத்தே ஆறு செலவோர் மிகுமாற்றால் அங்நெறிகள் வளுமுடையன ஆதற் பொருட்டேகாண்! என்றார்; என்க.

21 : துண்ணென் .............. செய்குவாய்

(இதன்பொருள்.) விண்ணோர் அமுது உண்டும் சாவ - அமரர்கள் திருப்பாற்கடலிலே எழுந்த அமிழ்தத்தை உண்டுவைத்தும் தத்தமக்கியன்ற கால முடிவிலே இறந்தொழியா நிற்பவும்; ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - நீதான் அங்குத் தோன்றிய யாரும் உண்ணாத நஞ்சினை உண்ட பின்னரும் ஒருசிறிதும் ஏதமின்றி அழிவின்றியிருந்து மன்னுயிர்க்குத் திருவருள் வழங்கும் ஒருத்தியல்லையோ? துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரும் கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - கேட்டோர் நெஞ்சம் துண்ணென அஞ்சுதற்குக் காரணமான ஒலியையுடைய துடிமுழக்கத்தோடே சென்று எல்லோரும் உறங்குகின்ற நள்ளிரவிலே பகைவர் தம்மூருட் புகுந்து அங்குள்ளாரைக் கொன்று கொள்ளைகொள்ளும் கண்ணோட்டமில்லாத எயினரேமாகிய அடியேம் செலுத்துகின்ற இப் பலியையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார்; என்க.

22 : பொருள்கொண்டு ............... செய்குவாய்

(இதன்பொருள்.) நின் மாமன்செய் வஞ்சம் மருதின் நடந்து - நின்னுடைய மாமனாகிய கஞ்சன் வஞ்சத்தாலே தோன்றிய இரட்டை மருதமரத்தினூடே நின்னிடையிற் கட்டப்பட்ட உரலோடே நடந்து சாய்த்தும்; உருளும் சகடம் உதைத்து - உருண்டு நின்மேலே ஏறவந்த சகடத்தை உதைத்து நுறுக்கியும் அவ் வஞ்சத்தைத் தப்பி என்றென்றும் நிலைத்திருந்து; அருள் செய்குவாய் - உயிர்கட்கு வேண்டுவன வேண்டியாங்கு திருவருள் வழங்கும் எம்மன்னையே! பொருள்கொண்டு புண்செயின் அல்லதை அடியேங்கள் ஆறலைத்துப் பொருள்பறிப்பதூஉமன்றி அவ்வம்பலர் உடம்பில் புண்செய்யும் செயலையன்றி; யார்க்கும் அருள் இல் எயினர் எவரிடத்தும் சிறிதும் அன்புசெய்தலறியாத எயினரேம்; இடு கடன் உண்குவாய் - ஆயினும் யாங்கள் செலுத்துகின்ற இப் பலிக் கடனையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார் என்க.

(விளக்கம்) சாலினியின் மேலுற்ற தெய்வம் கலையமர் செல்வி கடன் உணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போனல்லள், மட்டுண் வாழ்க்கை வேண்டுதிராயின் கட்டுண்மாக்கள் கடந்தரும் எனப் பணித்தமைக்கிணங்கி மேற்கூறியாங்குத் தம் கடனாகிய குருதிப் பலியீந்த எயினர் அக்கொற்றவை முன்னர் மட்டுண் வாழ்க்கைக்கு வேண்டிய வளந்தரும்படி கொற்றவையை இரக்கின்றனர் என்றுணர்க.

19. வம்பலர் - வழிப்போக்கராகிய புதியவர், அவர் மிக்கவழி ஆறலைத்துக்கொள்ளும் பொருள்களும் மிகுமாதலின் வம்பலர் மல்க வேண்டும் என்றிரந்தபடியாம்.

20. தீயவர்க்கும் நல்லோர்க்கும் ஒருசேர அருள் வழங்குதல் இறைவியினியல்பென்பது தோன்ற செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் என்றார். விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய் என்பது மருட்கை யணி. இது தரும் இன்பம் எல்லையற்றதாத லறிக.

29. இறைவனுடைய காத்தற் சத்தியையே திருமால் எனக் கொள்வர் ஒரு சமயத்தினர். அங்ஙனம் கூறினும் அதுவும் இறைவனுடைய சத்தியேயாம். திருமால் என்பது ஒரு தனி முதல் இல்லை என்பது தத்துவ நூலோர் கருத்தாம். இக் கருத்தை முதலாகக் கொண்டு இறைவியைத் திருமாகலின் தங்கை என்பர் பவுராணிகர். இவ்விருவர் மதங்களையும் மேற்கொண்டு ஈண்டு அடிகளார் திருமாலின் செயலை இறைவியின் செயலாகவே ஓதும் நலமுணர்க. அது மருதின் .......... செய்குவாய் என்பதாம்.

23 : மறை ............... வெய்யோனே

(இதன்பொருள்.) மறை முது முதல்வன் பின்னர் மேய - மறைகளைத் திருவாய்மலர்ந்தருளிய பழம்பொருட் கெல்லாம் பழம் பொருளாகிய இறைவனுக்குத் தம்பி எனத் தகுந்த தமிழ் முதல்வன் அகத்தியன் அவ்விறைவன் ஏவலாலே எழுந்தருளி இருத்தலாலே; பொறை உயர் பொதியில் - பொறையானும் ஏனைய சிறப்புகளானும் பெரிதும் உயர்ந்த பொதியில் என்னும் பெயரையுடைய; பொருப்பன் சிறந்த மலையையுடையவனும்; விறல் வெய்யோன் - வெற்றியையே விரும்பு மியல்புடையவனுமாகிய பாண்டிய மன்னன்; கட்சியும் கரந்தையும் பாழ்பட - பகைவருடைய முனையிடமாகிய காடும் அவர்தம் ஆனிரைகாக்கும் கரந்தை மறவரிருப்பிடங்களும் பாழிடமாகும்படி; வெட்சி சூடுக - எஞ்ஞான்றும் எயினரேம் ஆகிய யாங்கள் ஆக்கமெய்து மாறு வெட்சிமாலையைச் சூடுவானாக! என்றார்; என்க.

(விளக்கம்) 23. மறைமுது முதல்வன் என்றது சிவபெருமானை. அவன்பின்னர் என்றது அவனுக்கு அடுத்து முதல்வன் எனத் தகுந்த சிறப்புடையவன் என்றவாறு. அவனாவான் அகத்திய முனிவன். அவன் மேய பொதியில் என்க. அவன் மேயதனால் பொறையான் உயர்ந்த பொதியில் எனினும் பொருந்தும். பொறையானுயர்தலாவது - இறைவனிருந்த இமயத்தோடு சமவெடையுடையதாய் உயர்தல். இறைவனை மறைமுது முதல்வன் என்றமையால் அவன் பின்னராகிய அகத்தியனைச் செந்தமிழ் முதுமுதல்வன் எனவும் கூறிக்கொள்க.

பொதியிற் பொருப்பன் என்றது பாண்டியனை. அவன் வெட்சி சூடினால் தமக்கு ஆகோள் வளம் கைவருதல் ஒருதலை என்னுங் கருத்தால் எங்கள் மன்னனாகிய பொதியிற் பொருப்பனும் வெட்சி சூடுக! எனக் கொற்றவையை எயினர் பரவியவாறாம். என்னை?

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பன் மேவற்றா கும்  (தொல் . புறத்திணை - 2)

என்பவாகலின். பாண்டியன் பகைவரைப் பொருதக் கருதியவழி அப் பகைவர் தம் நாட்டு ஆக்களைக் களவிற் கொணரத் தம்மையே உய்ப்பன், அங்ஙனம் உய்த்தவிடத்தே தமக்கு வளமும் அரசற்கு விறலும் சேர்வது தேற்றம் என்பதுபற்றிப் பாண்டியனை விறல் வெய்யோன் என்றே கூறினர். மற்றிதுவே அரச வாழ்த்துமாயிற்று.

பா - பஃறாழிசைக் கொச்சகக்கலி

வேட்டுவரி முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #20 on: February 23, 2012, 02:16:08 PM »
13. புறஞ்சேரியிறுத்த காதை

அஃதாவது - உறந்தையினின்றும் மாமதுரைக்குச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரும் வெங்கதிர் வெயின் முறுகுதலாலே வழிநடை வருத்தந் தீர ஐயை கோட்டம் புக்கவர் ஆண்டுநிகழ்ந்த வேட்டுவவரிக் கூத்தைக் கண்ணுற்றுப் பாண்டியர் அருளாட்சி நிகழும் அந்த நாட்டிலே இரவினும் வழிப்போக்கர்க்கு ஏதம் சிறிதும் உண்டாகா தென்றறிந்த வாற்றால் படுகதிரமையம் பார்த்திருந்து இரவின்கண் திங்கள் தோன்றிப் பானிலா விரித்த பின்னர் அவ்விரவிலேயே மேலும் மதுரை நோக்கி நடந்து மதுரையின் மதிற் புறத்ததாகிய புறஞ் சேரியை எய்தி ஆண்டுத் தங்கிய செய்தியையும் அங்ஙனம் செல்லும்பொழுதில் இடையே நிகழ்ந்தவற்றையும் இயம்பும் பகுதி என்றவாறு.

பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா  5

வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே  10

பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்  15

படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்  20

தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து  25

புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக்  30

கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து  35

வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்  40

தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி  45

உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே  50

வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்  55

கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்  60

ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்  65

பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்  70

வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே  75

மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி   80

போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்   85

ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது  90

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்  95

கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய  100

இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து   105

செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்து  110

பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம்  115

நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்  120

போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்  125

பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்  130

பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு  135

பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்  140

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்  145

வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்  150

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்  155

விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்  160

வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி  165

விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி  170

தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது  175

பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி  180

வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்  185

ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்  190

புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்   195
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.

உரை

1 -4 : பெண்ணணி .......... படிந்தில

(இதன்பொருள்.) பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி முற்கூறிய சாலினிமேற் கொண்ட கொற்றவைக் கோலமும் எயினர்கள் கொற்றவைக்குப் பலி கொடுத்துப் பராவி நிகழ்த்திய வரிக்கூத்துகளும் முடிந்த பின்னர்க் கோவலன் துறவறத் தலைவியாகிய கவுந்தி யடிகளாரின் திருத்தமுடைய திருவடிகளைத் தொழுது நோக்கிக் கூறுபவன்; இக் காரிகை வேனில் கடுங்கதிர் பொறாஅள் - பெரியீர்! இவள்தான் இனி இம்முதுவேனிற் பருவத்தே கடியவாகிய ஞாயிற்றின் ஒளியினது வெம்மையைப் பொறுத்துப் பகற் பொழுதிலே நம்மோடு நடக்க வல்லுநள் அல்லள்; சீறடி பரல் வெங்கானத்துப் படிந்தில - அன்றியும் அவள்தன் சிறிய மெல்லடிகள் தாமும் இது காறும் நடந்தமையாலே கொப்புளங் கொண்டிருத்தலாலே பருக்கைக் கற்களையும் வெப்பத்தையுமுடைய இந்தக் கொடு நெறிக் கண் படிந்தில கண்டீர் என்றான் என்க.

(விளக்கம்) 1. பெண் - சாலினி. அவள் கொண்டகோலம் பெயர்ந்த பிற்பாடு எனவே ஐயை திருமுன் எயினர் பலிக்கொடை செய்தலும் வரிக் கூத்தாடுதலும் வரம்வேண்டலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஓய்ந்தமையும் அவர் அகன்றமையும் பெற்றாம். புண்ணியம் ஈண்டு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அருளறமுடைமை. அவ்வறத்தே அடிகளார் தலைசிறந்தமை தோன்றப் புண்ணிய முதல்வி என்றார். திருந்தடி என்றார் நன்னெறியிற் பிறழாதொழுகும் அடிகள் என்பது தோற்றுவித்தற்கு. அவர் அத்தகையராதலை நாடுகாண் காதையில் (86) குறுநரிட்ட .... துன்பந் தாங்கவும் ஒண்ணா என அவர் அறிவுறுத்த மொழிகளானும் அறிந்தாம். அடி பொருந்தி என்றது அவரையணுகித் திருவடியைத் தொழுகு என்பதுபட நின்றது. மேலே நிகழும் கூற்றுகட்கு எழுவாய் கோவலன் என்பது தகுதியாற் பெற்றாம்.

3. இக் காரிகை என்றது இவள் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. சீறடி படிந்திலாமைக்குக் காரணம் அவை கொப்புளங் கொண்டுள்ளன என்பது குறிப்புப் பொருள். இனி இவ்வடிகள் பகற்பொழுதிலே நடக்கவல்லுந அல்லது என்பது தோன்றப் பரற் கானம் என்றொழியாது பரல் வெங்கானம் என்றாள். எனவே பரற் கானமாயினும் தண்ணெனும் இரவில் ஒருவாறு அவை நடத்தல் கூடும் என்றானாம்.

பாண்டிய மன்னன் செங்கோன்மைச் சிறப்பு

5 - 10 : கோள்வல் ........... பெரிதே

(இதன்பொருள்.) செங்கோல் தென்னவர் காக்கும் நாடு - செங்கோன்மை பிறழாத பாண்டிய மன்னராற் காக்கப்படுகின்ற இந்த நாட்டின்கண்; கோள்வல் உளியமும் மேலும் எதிர்வாரைக் கைப்பற்றிக் கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடையவாகிய கரடிகள் தாமும்; கொடும்புற்று அகழா - தாம் அகழக்கடவ கொடிய புற்றினை அகழமாட்டா என்றும்; வாள் வரிவேங்கையும் மான்கணம் மறலா ஒளியுடைய வரிகளையுடைய புலிகள் தாமும் தாம் மாறுபடக் கடவ மானினத்தோடு மாறுபடமாட்டா என்றும்; அரவும் இரைதேர் முதலையும் சூரும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா என அவையேயன்றிப் பாம்பும் தமக்குரிய இரையை ஆராய்கின்ற முதலையும் தீண்டி வருத்தும் தெய்வமும் இடிகளுங்கூடத் தம்மை யணுகியவர்க்கு வருத்தம் செய்யுமியல் புடையவாயிருந்தும் சிறிதும் வருத்தம் செய்யமாட்டா என்றும்; எங்கணும் போகிய இசையோ பெரிது - உலகெங்கணும் பரந்த அவர்தம் அருளாட்சித் புகழ்தான் சாலவும் பெரியதன்றோ? என்றான் என்க.

(விளக்கம்) 5. கோள் - கைப்பற்றிக் கொள்ளுதல். உளியம் - கரடி. பாம்புறைவதுண்மையிற் கொடும்புற்றென்றார். 6. வாள்வரி - வாள்போன்ற வரி எனினுமாம். மறலுதல் - மாறுபடுதல், பகைத்தல். சூர் - தீண்டிவருத்துந் தெய்வம். உரும் - இடி. இவற்றிற்குக் காரணம் பாண்டியருடைய செங்கோன்மையே ஆம் என்றவாறு. இங்ஙனம் கூறவே மேலே இரவிடைக் கழிதற்கு ஏதம் இன்று என்றற்கு ஏதுக் கூறினானாயிற்று.

இனி அடிகளார் பின்னர்ப் பாண்டியன் அரசியல் பிழைத்தமைக்கும் கோவலன் கொலையுண்டமைக்கும் காரணம், பிழையும் ஊழுமே அல்லது பிறிதில்லை என்றற்குக் கோவலன் வாய்மொழியையே குறிப்பேதுவாக முன்மொழிந்து கோடல் என்னும் உத்திபற்றிக் காமத்தான் மயங்கிய பாண்டியன்பால் நம்மனோர்க்கு இரக்கமே தோன்றச் செய்யுமொரு சூழ்ச்சியே ஆதலறிக.

இனி, அடியார்க்குநல்லார் இப் பகுதிக்குக் கூறும் விளக்கமும் அறியத்தகும். அது - இவற்றான் இவன் ஆணையும் ஐவகை நிலத்திற்கு உரிமையும் கூறினார். ஐவகை நிலனென்பது எவற்றாற் பெறுதுமெனின்: கானம் என்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றால் குறிஞ்சியும், வேங்கை என்பதனாற் பாலையும், உருமு என்பதனால் மருதமும் முதலை என்பதனால் நெய்தலும், பெறுதும்; இவ்வகையான் இவனாட்டு இக்காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று எனவரும்.

ஞாயிறு மறைதலும் திங்கள் தோன்றுதலும்

11 - 18 : பகலொளி .......... தோன்றி

(இதன்பொருள்.) பகல் ஒளி தன்னினும் - அடிகளே இவளால் பொறுக்கவொண்ணாத இவ் வேனிற்பருவத்துப் பகற்பொழுதிலே வெயிலிற் செல்லுதலினும் காட்டில்; பல்உயிர் ஓம்பும் நிலவொளி விளக்கின் - தனது தண்ணளியாலே பல்வேறுயிர்களையும் இனிதிற் காத்தருள்கின்ற நிலா வொளியாகிய விளக்கினையுடைய நீளஇடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - நெடிய வழிமேல் இரவின்கண் செல்லுதற்கு வரும் இடுக்கண் யாதும் இல்லையாமே! என்று கூற; குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - அதுகேட்ட கவுந்தியடிகளாரும் அஃதொக்கும் என உடன்பட்ட கொள்கையோடே பொருந்தி; கொடுங்கோல் வேந்தன குடிகள் போலக் கதிர்படும் அமையம் பார்த்து இருந்தோர்க்கு - கொடுங்கோல் மன்னவனுடைய வீழ்ச்சியை எதிர்பார்த்திருக்கும் அவன் குடிமக்கள் போன்று ஞாயிறு மறைகின்ற அந்தி மாலைப் பொழுதினை எதிர்பார்த்திருந்த இவர்களுக்கு தென்னவன் குல முதல்செல்வன் பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பித் தோன்றி - அப் பாண்டிய மன்னவனுடைய குலத்திற்கு முதல்வனாகிய தண்கதிர்த் திங்கட் செல்வன்றானும் இவர்கள் எதிர்பார்த்தற் கிணங்க ஞாயிறு மறைந்து நாழிகை சில சென்ற பின்னர்ப் பலவகைப்பட்ட விண்மீன் கூட்டங்களாகிய படைகளோடே பால் போன்ற தனது நிலா வொளியாகிய தண்ணளியை உலகெங்கணும் பரப்பித் தோன்றி என்க.

(விளக்கம்) 11 பகலொளி - வெயில்; நிலவொளியாகிய விளக்கினையுடைய நீளிடை மருங்கென்க. ஏதம் - இடுக்கண். குரவர் - கவுந்தியடிகள். கொடுங்கோல் வேந்தனுடைய வீழ்ச்சியையும் செங்கோன் மன்னன் வரவினையும் எதிர்பார்த்திருக்கும் குடிகள்போல என விரித்தோதுக. ஈண்டுக் கொடுங்கோல் மன்னர் கடுங்கதிர் ஞாயிற்றுக்கும் செங்கோன் மன்னன் திங்களுக்கும் குடிகள் கோவலன் முதலியோர்க்கும் உவமைகள். தன் மரபினர் காக்கும் நாட்டில் ஆறு செல்லுமிவர்கனைக் காத்தல் தன் கடனெனக் கருதினான் போன்று அக் குல முதல்வன் வந்து தோன்றினான் என்னும் தற்குறிப்புப் புலப்பட ஆசிரியர் அமையம் பார்த்திருந்தோர்க்கு என அப் பொருள்தரும் நான்கனுருபு பெய்துரைத்தார். அவன்றானும் காத்தற்கு வருதலின் தானையொடும் வந்தான் என்பது கருத்து. தோன்றி - தோன்ற. மீன்றானை என்பது தென்னவன் என்பதற் கிணங்கக் கயற்கொடி யுயர்த்திய தானை எனவும் ஒரு பொருள் தோற்றுவித்தது. மதுரை எரியுண்டமை அட்டமி எனப்படுதலின் ஞாயிறு மறைந்த பின்னரும் திங்கள் சில நாழிகை கழிப்பித் தோன்றலின் எதிர்பார்த்திருத்தல் வேண்டிற்றென்க.

நிலமகள் அயாவுயிர்த் தடங்குதல்

19 - 29 : தாரகை ................ அடங்கியபின்னர்

(இதன்பொருள்.) (29) பார்மகள் - திங்களின் வருகை கண்டு மகிழ்ந்த கண்ணகிக்கு நிலமகள் தானும் இரங்கி, (27) பாவை - பாவை போல்வாளே! நின்கணவன் நின்னைப்பிரிந்த காலந்தொட்டு இற்றைநாள் காறும்; தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீர் இளமுலை சேரா தொழியவும் - விண்மீனைக் கோத்தாற் போன்ற ஒளிமிக்க முத்துவடமும் சந்தனக் குழம்பும் பேரழகும் இளமையுமுடைய நின்முலைகளைச் சேராவாய் ஒழியவும்; தாதுசேர் கழு நீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தா தொழியவும் - பல்வகைப் பூந்தாதும் கழுநீர்ப்பிணையலும் நினது முல்லை மலர் மட்டும் பற்றறாத அழகிய கூந்தலின் கண் பொருந்தாவா யொழியவும்; பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறு முறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் - அழகிய பசிய சந்தனத் தளிரோடே பல்வேறு பூக்களின் குறிய இதழ்களும் நினது சிவந்த மாந்தளிர் போலும் திருமேனியைச் சேரப் பெறாவாயொழியவும்; மல்பத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலோடு - பொதியத்துத் தோன்றி மதுரை நகரின்கண் வளர்ந்து நல்லிசைப் புலவர்தம் நாவின்கட் பொருந்திய தென்றற் காற்றுடன்; (பால் நிலா வெண் கதிர்சொரிய - இத்தகைய பால்போலும் வெள்ளிய நிலாவொளி நின்மேற் சொரிதலை நீ வெறுத்திருந்தனையல்லையோ?) இப்பொழுது அந்நிலைமை மாறி; வேனில் திங்களும் வேண்டுதி என்றே - இவ்வேனிற் காலத்து இந்தத் திங்கள் ஒளியை நீ விரும்புகின்றனை அல்லையோ! ஆயின் விரும்பி மகிழக்கடவை என்று மனமார வாழ்த்தியவளாய்; அயாவுயிர்த்து அடங்கிய பின்னர் - அவள் பொருட்டு வருந்தி நெட்டுயிர்ப்புக் கொண்டு அந்நிலமகள் தானும் துயின்றபின்னர் என்க.

(விளக்கம்) ஈண்டுத் திங்கள் தோன்றிய பின்னர் மன்னுயிர் எல்லாம் உறங்கியதனை நிலமகள் உறங்கியதாகக் கூறுகின்றனர். அங்ஙனம் கூறுபவர் புகாரினின்றும் புறப்பட்ட பின்னரும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் புணர்ச்சியின்மையை ஈண்டு நிலமகளின் கூற்றாக நம்மனோர்க் குணர்த்துகின்ற நயம் நினைந்து நினைந்து மகிழற் பாலதாம். இதனாற் போந்தய பயன் கண்ணகியின் குறிக்கோள் இன்ப நுகர்வன்று; அறம் ஒன்றே என்றுணர்த்துவதாம். இவ் வழிச்செலவினூடே கண்ணகி கோவலர்க்குப் புணர்ச்சி நிகழாமைக்கு அதுபற்றி யாண்டும் ஒரு சிறு குறிப்பேனும் காணப்படாமையே சான்றாம் என்க.

கோவலன் முதலிய மூவரும் இரவிடை மதுரை நோக்கிச் செல்லுதல்

30 - 35 : ஆரிடை ......... கழிந்து

(இதன்பொருள்.) ஆர் இடை உழந்த மாதரை நோக்கி - எதிர் பார்த்த வண்ணம் திங்களஞ் செல்வன் தோன்றிப் பால்நிலா விரிக்கக் கண்ட கோவலன், அதுகாறும் கடத்தற்கரிய வழியைப் பெரிதும் வருந்திக் கடந்த தன் காதலியாகிய கண்ணகியை நோக்கி, நங்காய்! இப்பொழுது யாம் செல்லும் வழியிடையே இஃதிரவுப் பொழுதாகலான்; கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியமும் இடிதரும் - புலி உறுமும் கூகை குழறும் கரடியும் இடிக்கும்; இனையாது ஏகு என - இவற்றைக் கேட்புழித்துண்ணென அஞ்சி நடுங்காதே என் பின்னரே வருதி என்றறிவுறுத்து; தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி அவன் துயின் மயக்கமும் தளர்நடையும் தவிர்த்தற் பொருட்டு வளைந்த வளையலையுடைய அவள் தன் சிவந்த கைக்குப் பற்றுக் கோடாகத் தன் தோளைக் கொடுத்துப் பரிவுடன் அழைத்துப் போம்பொழுது; மறவுரை நீத்த மாசு அறு கேள்வி அறவுரை கேட்டு ஆங்கு ஆரிடை கழிந்து - இவர்க்கு வழிநடை வருத்தந் தோன்றாமைக்கும் அறந்தலைப்படுதற் பொருட்டும் இன்னாச் சொல்லைத் துவர நீத்த மனமாசு அறுதற்குக் காரணமான நூற்கேள்வியையுடைய கவுந்தியடிகளார் திருவாய் மலர்ந்தருளுகின்ற அறவுரைகளை வழிநெடுகக் கேட்டவண்ணமே சிறிதும் வருத்தமின்றித் கடத்தற்கரிய வழியை எளிதாகவே கடந்துபோய்; என்க.

(விளக்கம்) கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் உளியம் இடிக்கும் என்பன மரபு என்பது இதனாற் பெற்றாம். கொடுவரி - புலி. குடிஞை - கூகை: பேராந்தை. உளியம் - கரடி. இனையாது - வருந்தாமல். செங்கைக்குப் பற்றுக்கோடாகத் தோளைக் கொடுத்து என்க. மறவுரை - இன்னாச்சொல். மறவுரை நீத்தெனவே அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கனையும் நீத்து என்றவாறாயிற்று. என்னை?

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்  - குறள் - 35.

என்பவாகலின் என்க மாசற்ற கேள்வி எனவும் மாசு அறுதற்குக் காரணமான கேள்வி எனவும் இருபொருளும் கொள்க. கேட்டாங்கு - கேட்டவாறே. மாசறு கேள்வி: அன்மொழித்தொகை. கேள்வியை யுடைய கவுந்தி என்க.

இதுவுமது

36 - 41 : வேனல் ......... சிறையகத்திருத்தி

(இதன்பொருள்.) வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணம் கதிர் வரவு இயம்ப - முதுவேனிற் பருவம் நெடிது நிலை பெற்றிருந்தமையாலே வெந்துகரிந்து கிடக்கின்ற மூங்கிற் காட்டிலே உறையும் காட்டுக் கோழிச் சேவல்கள் கூவிக் கதிரவன் வருகையை அறிவிக்குந்துணையும் நடந்து சென்று; மறைநூல் வழுக்கத்து வரி நவில கொள்கைப் புரிநூல் மரர்பர் உறைபதிச் சேர்ந்து - அவ்விடத் தெதிர்ப்பட்டதொரு மறையோதாது இழுக்கினமையாலே தமக்குரிய அறுதொழிற்குமுரியராகாமல் வரிப்பாடல் முதலிய இசைத்தொழிலைப் பயின்று அதனால் வாழ்க்கை பேணுபவராகிய விரிநூல் கிடந்த மார்பினையுடைய பார்ப்பனர் உறைகின்ற ஊரையடைந்து; மாதவத்தாட்டியொடு காதலி தன்னை ஓர் தீது தீர் சிறப்பின் சிறை அகத்து இருத்தி - அந்த வைகறைப் பொழுதிலே கவுந்தியடிகளுடனே கண்ணகியையும் அவ்வூரினகத்தே குற்றமற்ற சிறப்பினையுடைய அடைப்பகத்தே அமர்ந்திருக்கச் செய்து என்க.

(விளக்கம்) 26. முதுவேனிலாதலின் வேனல் வீற்றிருந்த கானம் என்றார். வேயும் கரியுமளவு வேனல் வீற்றிருந்த கானம் என்பது கருத்து ஈண்டு வேயும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. கானவாரணம் - காட்டுக் கோழியிற் சேவல். கதிர் வரவியம்ப எனவே அற்றை இரவெல்லாம் வழி நடந்தமை பெற்றாம். கோழி கூவுந்துணையும் நடந்து ஆங்கு வழியிடையே ஓர் ஊரினைக் கண்டு அவ்வூரில் நாற்புறமும் சிக்கென அடைக்கப்பட்டிருந்த இருத்தற் கியன்ற ஓரிடத்தே இருத்தி என்றவாறு.

இனி அவ்வூர்தானும் பார்ப்பனர் உறையும் ஊர் என்றது இனி மதுரையும் அணித்தேயாம் என்பது தோற்றுவித்தது. இனி அப் பார்ப்பனர் தாமும் வேளாப்பார்ப்பனர் என்பார் மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் என்றார். வரி - இசைப்பாட்டு. வரிநவில் கொள்கைப் புரிநூல் மார்பர் என்றது மறையோதுதலில் இழுக்கியவிடத்தும் இசைத்தமிழ் பயின்று அதனாலே வாழும் கோட்பாடுடையர் என்றவாறு. இனி, இத்தகைய பார்ப்பனரை வேளாப்பார்ப்பனர் என்றும் கூறுப. இவர் சங்கரியும் தொழில் செய்வர் என்பது வேளாப்பார்ப்பான் வாளரம் துமித்த எனவரும் சான்றாற் பெறப்படுதலின் அரிநவில் புரிநூன் மார்பர் எனக்கொண்டு சங்கரிதற்றொழில் செய்யும் கோட்பாடுடைய பார்ப்பனர் எனினுமாம்.

அடியார்க்கு நல்லார் ஈண்டு புக்கென்னாது சேர்ந்தென்றதனால் அந்தப் பார்ப்பார் இழுக்கிய ஒழுக்கமுடைமை தமது சாவக நோன்பிற் கேலாமையின் ஊர்க்கு அயலதொரு நகரிற் கோயிற் பக்கத்தில் சேர்ந்தார் என்க என்றோதுவர்.

கோவலன் கோசிகமாணியைக் காண்டல்

42 - 47 : இடுமுள் ......... தெரியான்

(இதன்பொருள்.) இடுமுள் வேலி நீங்கி ஆங்கு ஓர் நெடுநெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் - பின்னர்க் கோவலன் இட்டுக் கட்டிய முள்வேலியைக் கடந்துபோய் அவ் விடத்தயலே கிடந்த நெடியதொரு வழிமேற் சென்று அவ் வழியின் பக்கலிலே நீர்நிலை ஒன்றனைக் கண்டு காலைக்கடன் கழித்தற் பொருட்டு அந் நீர் நிலையை அணுகுபவன்; காதலி தன்னொடும் கானகம் போந்ததற்கு - தனதருமைக் காதலியோடு இவ்வாறு காட்டகத்தே புகுந்ததனை நினைந்து வருந்தி; ஊது உலைக்குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவந் திரிய - கொல்லுலையில் ஊதும் துருத்திபோல நெட்டுயிர்ப் பெறிந்து உள்ளங் கலங்கித் தனிமையுற்று உருவமும் மாறுபட்டிருத்தலாலே; கவுசிகன் கட்புல மயக்கத்து - அவனைத் தேடியலைந்து அவ்விடத்தே கண்ட கவுசிகன் என்பான் தனது கட்புலம் மயக்கத்தான் இவன் கோவலனோ அல்லனோ என்றையமுற்று என்க.

(விளக்கம்) 42. இடுமுள் வேலி என்றது - கண்ணகியையும் அடிகளாரையும் இருத்திய சிறையகத்து வேலி; இடுமுள் வேலி என்பதற்கு அடியார்க்கு நல்லார் அவ் வேலியில் இடுமுள் ஒன்றைப் பிரித்து என்பது மிகை; அதனைப் பிரித்துப் போவானேன் புக்கவழியே புறப்படலாம் ஆகலின் அவ்வுரை பொருந்தாது. இடுமுள்ளையுடைய அவ் வேலியகத்தினின்றும் நீங்கி எனலே அமையும் என்க. கோவலன் உருவந்திரிந்திருத்தலான் கவுசிகன் கட்புலம் மயங்கிற்று என்க. தெரியான் என்றது நன்கு அறியாமல் ஐயுற்றவனாய் என்பதுபட நின்றது.

ஐயந்தெளிதற்குக் கவுசிகன் செய்த உபாயம்

48 - 53 : கோவலன் .......... கூறக்கேட்டே

(இதன்பொருள்.) ஓர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி - கோவலன் உருவந்திரிந் திருத்தலானும் தான் சிறிது சேய்மைக் கண் நின்று காண்டலானும் கட்புல மயங்கி ஐயுற்ற அக் கவுசிகன் அவ்வையந் தீர்ந்து தெளிதற்பொருட்டு அயலிருந்த பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த ஒரு பந்தரின்கீழ்ச் சென்று அக் குறுக்கத்தியை நோக்கி ஓ! குருக்கத்தியே நீ தானும்; கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - தன் காதலனாகிய கோவலன் றன்னோடு பிணங்கிக் கைவிட்டுப் பிரிந்துபோனமையாலே ஆற்றாமையால் கொடிய துன்பத்திற்காளாகிய கரிய நெய்தல் மலர்போன்ற நெடிய கண்ணையுடைய மாதவி போலவே; இவ் அருந்திறல் வேனிற்கு அலர்களைந்து உடனே வருந்தினை போலும் - பொறுத்தற்கரிய வெம்மையையுடைய இம் முதுவேனிற் பருவத்து வெயிற் காற்றாது வாடி நின்னை மலர்களாலே அழகு செய்தலையும் விடுத்து அவளோடு ஒருசேர வருத்தமுற்றனை போலும்; நீ மாதவி - அஃதொக்கும் நீ தானும் மாதவிஎன்னும் பெயருடையை அல்லையோ! என்று கூறக் கேட்டே என்று கூற அக் கூற்றைக் கேட்ட கோவலன் என்க.

(விளக்கம்) அருந்திறல் வேனில் என்பதனை மாதவிக்குங் கூட்டி அரிய திறலையுடைய வேனில் வேந்தனுக்குடைந்து எனவும் அலர்களைந்து என்பதனையும் கூட்டி அதற்கு, பிறர் கூறும் அலர்மொழியைப் பொருட்டாகக் கொள்ளாமல் விடுத்து எனவும் பொருள் கூறிக் கொள்க. நீ மாதவி என்றது நீதானும் மாதவியல்லையோ? என்பது பட நின்றது. உடனே அம் மாதவியுடனே. கோசிகமாணி கவுசிகன் என்னும் பிரமசாரி. கூற அதனைக் கோவலன் கேட்டு என்க.

கோவலன் கோசிகனை வினவுதலும் அவன் விடை கூறலும்

54 - 62 : யாதுநீ ................ பெயர்ந்ததும்

(இதன்பொருள்.) நீ இங்கு கூறிய உரை யீது யாது என - அக் கோசிகனை நோக்கி நீ இவ்விடத்தே கூறிய கூற்றிதன் பொருள்தான் என்னையோ? என்று வினவ; கோசிகமாணி - அதுகேட்ட அக் கோசிகன்றானும்; கண்டேன தீது இலன் எனச் சென்றெய்தி - அங்ஙனம் வினவிய குரலாலே இவன் கோவலனே என்று தெளிந்து கண்டேன் ! கண்டேன் ! இனி யான் குறையேதுமிலேன் என்று மகிழ்ந்து விரைந்து சென்று கோவலனை அணுகி; கொள்கையின் உரைப்போன் தான் வந்த காரியத்தினைக் குறிக்கொண்டு அதற்கேற்பக் கூறுபவன்; இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் -கோவலன் தந்தையாகிய மாசாத்துவானும் பெரிய மனைக்கிழத்தியாகிய தாயும் அவன் பிரிவாற்றாது இழத்தற்கரிய தனது மணியை இழந்த நாகப்பாம்பு போல அழகும் ஒளியும் இழந்து ஒடுங்கியதும்; துன்னிய சுற்றம் இன் உயிர் இழந்த யாக்கை என்னத் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தாரெல்லாம் இனிய உயிரை இழந்துவிட்ட யாக்கைபோலச் செயலறவு கொண்டு துன்பமாகிய கடலிலே வீழ்ந்து கிடப்பதும்; ஏவலாளர் யாங்கணும் சென்று கோவலன் கொணர்க எனப் பெயர்ந்ததும் - மாசாத்துவான் தன் பணியாளர் எல்லாம் நாற்றிசையினும் சென்று தேடிக் கோவலனைக் கண்டு அழைத்து வருவாராக என்று கூற அவ் வேவலாளர் அங்ஙனமே தேடிச் சென்றதும்; என்க.

(விளக்கம்) 54. உரை யிதன் பொருள் யாது என இயைக்க. இது: பகுதிப் பொருளது; ஈதென நீண்டு நின்றது. தீது - குறை. இனி யான் தேடிய கோவலன் தீதிலாதிருக்கின்றான் என்று மகிழ்ந்து எனலுமாம். தீது - என்றது. ஐயம் என்பாருமுளர். 56. கொள்கை - கோவலனை மீட்டுக் கொடு போகவேண்டும் என்னும் கோட்பாடு. அதற்கேற்ப உரைப்பவன் என்றவாறு. இருநிதிக் கிழவன் - மாசாத்துவான். பெருமனைக் கிழத்தி என்றது கோவலன் தாயை 58. அருமணியிழந்த நாகம் பெரிதும் அலமரலெய்தும் என்பதனை .......... கருமணிப் பாவை யன்னான் கரந்துழிக் காண்டல் செல்லாள்...... அருமணி யிழந்தோர் நாக மலமருகின்ற தொத்தாள் எனவும், (சீவகசிந் - 1508) நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப எனவும் (மணிமே 7: 131-2) பிறசான்றோர் ஓதுமாற்றானும் உணர்க. 59 - 60 இன்னுயிர் இழந்த யாக்கை என்னச் செயலறவு கொண்டு துயர்க்கடல் வீழ்ந்தனர் என்க 61 - 2: மாசாத்துவான் தேடிக் கொணர்கென என எழுவாய் பெய்துரைக்க.

இதுவுமது

63 - 66 : பெருமகன் .............. பேதுற்றதும்

(இதன்பொருள்.) பெருமகன் ஏவலல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அருங்கான் அடைந்த - இருமுது குரவருள்ளும் பெருங் குரவனாகிய தந்தை ஏவிய பணிவிடையைச் செய்தலே உறுதிப் பொருளாம் அவன் ஏவப் பெறாதவழி யாண்டும் அரசாட்சி செய்தலும் சிறுமைத்து என்று துணிந்துமனைக்கிழத்தியோடும் இளையவனோடும் செல்லுதற்கரிய காட்டகத்தே சென்ற; அருந்திறல் பிரிந்த அயோத்திபோல - இராமனைப் பிரியலுற்ற அயோத்தி நகரத்து மாந்தர் போன்று; பெரும் பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் பெரிய புகழையுடைய பழைய ஊராகிய பூம்புகாரில் வாழும் மாந்தரெல்லாம் பெரிதும் அறிவு மயங்கிய செய்தியும்; என்க.

(விளக்கம்) பெருமகன் - தயரதன். யாங்கணும் என்றது காலத்தின்மேற்று. பெருமகன் ஏவலல்லது அரசாட்சியும் எளிது. எனவே பெருமகன் ஏவியது எத்துணைச் சிறு தொழிலாயினும் உறுதிப்பொருள் என்பது கருத்தாயிற்று. தஞ்சம் - எண்மை; ஈண்டுச் சிறுமை மேற்று. அயோத்தி, மூதூர் இரண்டும் அவற்றுள் வாழும் மாந்தர்க்கு ஆகுபெயர். அருந்திறல்: அன்மொழித் தொகை; இராமன் என்க. பேதுறவு - அறிவு திரிதல்; மயக்கம்.

இதுவுமது

67 - 76 : வசந்தமாலை ............. ஈத்ததும்

(இதன்பொருள்.) வசந்தமாலை வாய் கேட்டு - மணித்தோட்டுத் திருமுகத்தை ஏலாது கோவலன் மறுத்துக் கூறிய மாற்றங்களை வசந்தமாலையிடத்தே கேட்டு; மாதவி பசந்த மேனியள் படர் நோய் உற்று நெடுநிலை மாடத்து இடைநிலத்து - மாதவியானவள் பசலைபாய்ந்த மேனியையுடையளாய்ப் பலப்பல நினைந்து ஆற்றாமையாற் பெரிதும் துன்பமெய்தி உயர்ந்த தனது எழுநிலை மாடத்தின் இடைநிலை மாடத்தின்கண்ணே; ஆங்குஓர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - கிடந்ததொரு படுக்கை அமைந்த கட்டிலிலே கையறவுகொண்டு வீழ்ந்த செய்தியும்; வீழ் துயர் உற்றோர் விழுமம் கேட்டு தாழ்துயர் எய்தித் தான் சென்றிருந்ததும் - அவ்வாறு காமநோய் உற்ற அம்மாதவியின் துன்பநிலையைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரமெய்திய அவளைத் தேற்றக் கருதித் தான் (கோசிகன்) அம் மாதவி மனைக்கட் சென்று அவள் மருங்கிருந்த செய்தியும்; இருந்துயர் உற்றோள் மாதவி - மாபெருந் துன்பமுற்றவளாகிய அம் மாதவி தன்னை நோக்கி அந்தணீர் அடியேன்; இணை அடி தொழுதேன் - நும்முடைய இரண்டு அடிகளையும் தொழுகின்றேன்; வருந்துயர் நீக்கு என அடிச்சிக்கு வந்த இத்துன்பத்தை நீக்கியருள்க என்று வேண்டி; மலர்க்கையின் எழுதி - தனது செந்தாமரை மலர் போன்ற கையாலேயே ஒரு திருமுகம் எழுதி; கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே இத் திருமுகத்தை என் கண்ணிற் கருமணி போல்வானாகிய அக் கோவலனுக்குக் காட்டுக! என்று கூறி; மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - மண்ணிலச்சினை யுடைய அந்தத் திருமுகத்தைத் தன் கையிலே தந்த செய்தியும் என்க.

(விளக்கம்) 67. வசந்தமாலை வாய்க் கேட்டு என்றது பண்டு கோவலன் ஊடிச் சென்ற அற்றை நாளிலே மாதவி தாழந்தோட்டில் எழுதிக் கோவலனுக்கு விடுத்த திருமுகத்தை அவன் மறுத்துக் கூறிய செய்திகளை அது கொடு சென்ற வசந்தமாலை வறிதே மீண்டுவந்து கூறிய செய்தியை அவளிடம் கேட்டு என்றவாறு. 68. படர் நோய் - பல்வேறு நினைவுகளால் மிகுகின்ற காமநோய். 70. படை - படுக்கை. பள்ளி இடம். 72. வீழ்துயர் - விருப்பங் காரணமாக வந்த துன்பம். காமநோய். விழுமம் - இடும்பை. 73. தாழ்துயர் - ஆழ்ந்த துன்பம். இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கு என்றது கோசிகன் மாதவி கூறியதனை அங்ஙனமே கூறியபடியாம். 75. கண்மணியனையான் என மாதவி கோவலனைக் குறித்தபடியாம். 76. மண் - மண்ணிலச்சினை. முடங்கல் - ஓலை. திருமுகம் என்பதுமது.

77 - 82 : ஈத்த வோலை ................ நீட்ட

(இதன்பொருள்.) தீத்திறம் புரிந்தோன் - வேள்வித் தொழிலை விரும்பிய அக் கோசிகன் மாதவி கொடுத்த அம் முடங்கலைக் கைக்கொண்டு கோவலனைத் தேடி இடைநெறிகள் பலவற்றினும் திரிந்து காணப்பெறாமல்; சென்ற தேயமும் - தான் பின்னுந் தேடிச் சென்ற இடங்களும்; வழிமருங்கிருந்து மாசு அற உரைத்து ஆங்கு - தான் அக் கோவலனைக் கண்ட அவ் வழியின் பக்கலிலே அவனோடிருந்து குற்றந்தீரக் கூறிய பின்னர்; அழிவுடை உள்ளத்து ஆரஞராட்டி போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - பிரிவாற்றாமையால் அழிதலைத் தருகின்ற நெஞ்சத்தையும் அந் நெஞ்சகம் நிறைந்த காம நோயையும் உடையாளாகிய நாளரும்புகள் இதழ்விரிகின்ற கை செய்த கூந்தலையுமுடைய அந்த மாதவி தந்த முடங்கலைக் கோவலனுடைய மலர்போன்ற கையிலே கொடாநிற்ப; என்க.

(விளக்கம்) 78. தீத்திறம் புரிந்தோன் என்பது. தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி என்பாருமுளர். இவர் இஃது ஆசிரியர் கூற்றாய் வழாஅநிலையே ஆதலறிந்திலர் என்க. தேயம் - இடம். வழி என்றது ஆங்கோர் நெடுநெறு மருங்கின் நீர்தலைப்படுவோன் (42-3) என்ற நெடுநெறியை கோவலன் மாதவியின்பாற் கற்பனையாலே ஏற்றியிருந்த மாசு இம் மறையோன் கூற்றாலே தீர்ந்ததனைக் கருதி ஆசிரியர் மாசற வுரைத்து என்றனர். ஈதுணராது மாசு அற என்பதற்கு ஒழிவற என்பாருமுளர். கோவலனை மீட்டுக் கொடுபோதல் அவன் குறிக்கோளாகலின் அதற்கியைய மாசற வுரைத்தனன் என்பதே கருத்தென்க.

மாதவி முடங்கல் மாண்பு

83 - 93 : உடனுறை .............. உணர்ந்து

(இதன்பொருள்.) உடன் உறை காலத்து உரைத்த நெய்வாசம் - தான் அம் மாதவியோடு கூடியிருந்த பொழுது அவள் தன் கூந்தலிலே நீவியிருந்த நெய்யினது நறுமணத்தின் தன்மையை; குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆதலின் - அவ்வோலைச் சுருளினது முகப்பின்மேல் அம் மாதவி தனது குறிய நெறிப்பினையுடைய கூந்தலால் ஒற்றப்பட்டிருந்த மண்ணிலச்சினை தனக்கு நன்குணர்த்திக் காட்டியதாதலின்; கைவிடலீயான் - அவ்விலச்சினையைத் தன் கையாலகற்றிவிட மனம் வாராதவனாய்ச் சிறிது பொழுது அதனை நுகர்ந்திருந்து பின்னர்; ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் - அவ் வோலையினுள பொதிந்த அவள் கருத்தைக் காணும் வேணவா மீக்கூர்தலாலே அவ்வோலையினது இலச்சினையகற்றி அதன் சுருணிமிர்த்தி அதன் அகந்தோன்ற விரித்து ஆங்கு அமைந்த அவள் கருத்தை ஓதி அறிபவன்; அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன் - அடிகளார் திருமுன்னர்த் தங்கள் அடிச்சியாகிய யான் வீழ்ந்து வணங்கிக் கூறுகின்ற வடியாக் கிள விமனக் கொளல் வேண்டும் - தேர்ந்து தெளிந்து எழுதப்படாத அடிச்சியின் புன்மொழிகளைத் திருவுளம் பற்றியருளல் வேண்டும்! குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவு இடைக் கழிதற்கு பிழைப்பு என் - தமக்குத் தலைசிறந்த கடமையாகிய தம்முடைய இருமுது குரவர் ஏவிய பணி செய்தலைக் கைவிட்டதல்லாமலும் ஏசாச் சிறப்பின் இசை விளங்கும் உயர்குடிப் பண்புகளை ஆளுமியல்புடைய மனைவியாரோடு பதி யெழுவறியாப் பெருமையுடைய நம் பூம்புகாரினின்றும் அடிகளார் யாருமறியாவண்ணம் இரவிலே புறப்பட்டுப் போதற்கு நிகழ்ந்த தவறு யாதோ? அறியாது நெஞ்சம் கையறும் - அஃதறியாமையாலே அடிச்சியின் நெஞ்சம் அத்தவறு நம்முடையதாகவு மிருக்குமோ? பிறருடையதோ என்றையுற்று ஒன்றிற் றுணிவு பிறவாமையாலே செயலற்றுக் கிடக்கின்றது; ஒரோவழி அடிச்சியின் பிழையாயிருப்பினும் மகளிர் சொல் குற்றமற்றாத சொல்லென்றுட் கொண்டு அதனைப் பொருளாகக் கொள்ளாமல்; கடியல் வேண்டும் - விட வேண்டும்; பொய் தீர் காட்சிப் புரையோய் - மயக்கந் தீர்ந்த நற்காட்சியையுடைய மேன்மையுடையீர், போற்றி - நும் புகழ்க்குக் குறைவாராமற் போற்றுக; என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - என்று அம் மாதவி அம் முடங்கலின்கண் வரைந்துள்ள பாசுரத்தின் பொருளை நன்குணர்ந்து; என்க.

(விளக்கம்) உரைத்த - நீவிய. நெய் - புழுகு நெய். குறுநெறி - அணுக்கமான நெறிப்பு, கூந்தலாலே மண்மேலொற்றிய இலச்சினை என்க கூந்தலாலே ஒற்றப்பட்டமையின் கூந்தலில் நீவிய புழுகு நெய்மணம் அவ் விலச்சினையிற் கமழ அதனை நுகர்ந்தவன் கையால் அவ் விலச்சினை அகற்றிவிடானாய் என்க. கைவிடலீயான்: ஒருசொல். கை விடான் என்னும் பொருட்டு. இச் செயல் கோவலன் அவள்பாற் கொண்டிருந்த அன்பிற்கோர் அறிகுறியாம் இங்ஙனம் கூறவே கோவலன் அவளைக் கைவிட்டமைக்குக் காரணம் ஊழேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தியவாறாயிற்று. கையால் இலச்சினை அகற்றிவிடானாய்ப் பின்னர் ஏட்டகம் விரித்து எனவே சிறிது பொழுது அங்ஙனம் ஏக்கற்றிருந்து பின்னர் அவ்வோலைதரும் செய்தியை உணர விரும்பி அதனை விரித்தான் என்பது பெற்றாம்.

86. ஆல்கு எய்தியது - அம்முடங்கலிலமைந்த செய்தி.

88 - 89. அடிகள் .......... மனக்கொளல் வேண்டும் என்னும் இரண்டடியும் அவ்வோலையின் முகப்பாசுரம் எனவும் ஏனைய அதன் உள்ளுறைப் பாசுரமுமாம் எனவும் கொள்க. அக்காரிகைப் பாசுரம் என்பர் அடியார்க்குநல்லார். மேலும் இருவர் இருமுது குரவரும் ஏவலாளர் மேவல கூறின் இறந்துபடுவர் என்பதூஉம் தேசுடைக் குலத்திற்கு மாசுவரும் என்பதூஉம்; தானிறந்துபடிற் சிறிது புகழே குறைபடுமென்பதூஉம் உணர்த்தியவா றாயிற்று என்றும் விளக்குவர்.

இங்ஙனம் இரவிடைக்கழிதற்கு அடிச்சியேன் பிழை செய்திருப்பினும் அடிச்சியை ஒறுப்பதன்றி அதன் பொருட்டு நீயிர் நுமது குரவரைப் பேணாது ஒழிதலும் குலப்பிறப்பாட்டியொடு போதலும் இரவிடைக் கழிதலும் நுங்குலத்திற்கு மாசு சேர்ப்பதாகாவோ? அங்ஙனம் மாசுபடாது போற்றுக என்று வேண்டினாளுமாயிற்று; இவ் வேண்டுகோள் மாதவியின் மாண்பைப் பலபடியானும் உயர்த்துதலறிக.

கோவலன் கோசிகனுக்குக் கூறுதல்

94 - 101 : தண்றீதிலள் ........... போக்கி

(இதன்பொருள்.) தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி - அதுகாறும் வல்வினை மயக்கத்தாலே மனமயக்குற்று அவளை வெறுத்திருந்த கோவலன் அவள் திருமுகப் பாசுரத்தாலே அவளது தூய்மையுணர்ந்து அவள் தன் தவறு சிறிதும் இலள் எனத் தெளிந்து அவள் தன்னை வஞ்சித்தனள் என்று கருதி அதுகாறும் தான் எய்திய மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றவனாய்; எய்தியது - இங்ஙனம் நிகழ்ந்ததற்கெல்லாம் காரணம்; என் தீது என்றே உணர்ந்து - யான் செய்த தீவினையே என்று தெளிந்து மீண்டும் அதனைக் கூர்ந்து ஓதியவன்; ஆங்கு எற்பயந்தோற்கு இம்மண் உடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருந்தியது - மண் இலச்சினை தகர்க்கப்பட்ட இம்முடங்கல் தானே! புகார் நகரத்தே என்பொருட்டு வருந்தியிருக்கின்ற என் தந்தைக்கு யான் எழுதிய முடங்கலாதற்குப் பெரிதும் பொலிவுடையதாகப் பொருந்தி யுளது என்பதும் கண்டு; கோசிகமாணி - கோசிக்! ஈதொன்று கேள்; நீ கொடுத்த இம்மாதவி யோலைதானே யான் என் தந்தைக்கு எழுதும் ஓலையாதற்கு மிகவும் பொருந்தியிருந்தலாலே, நீ இதனைக் கொடுபோய்; மாசில் குரவர் மலரடி தொழுதேன் - குற்றமற்ற என் இருமுது குரவர்களின் மலரடி களை யான் தொழுதேன் என்று கூறி; காட்டு எனக் கொடுத்து - என் தந்தைக்கு காட்டுவாயாக என்றுகூறி அவ் வோலையை அவன் கையிற் கொடுத்து; அவர் நடுக்கம் களைந்து நல் அகம் பொருந்திய இடுக்கண் களைதற்கு - எம்மிரு குரவர் எய்திய நடுக்கத்தைத் தீர்த்துப் பின்னரும் அவர்தம் நன்னர் நெஞ்சத்தே பொருந்திய துன்பத்தை நினது ஆறுதன் மொழிகளாலே தீர்த்தற்பொருட்டு; ஈண்டு எனப் போக்கி - நீ இப்பொழுதே பூம்புகார்க்கு விரைந்து போதி என்று கூறி அவனைக் போக்கிய பின்னர்; என்க.

(விளக்கம்) 14. தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என்றமையால் மாசிலா மனத்தினளாகிய மாதவிக்கும் இவள் பிறிதொன்றன் மேல் மனம் வைத்தனள் மாயப் பொய்பல கூட்டும் மாயத்தாள் என அடாப்பழி யேற்றிப் பிரிந்தநாள் தொட்டு இற்றைநாள் காறும் அவள் புன்மையை நினைந்து நினைந்து மனந்தளர்ந்திருந்தனன் என்பதும் பெற்றாம். அவள் மாசுடையாள் அல்லள் என்பது அவள் மலர்க்கையாலெழுதிய இவ் வோலைப் பாசுரம் நன்குணர்த்தி விட்டமையாலே அவன் மனத்தை அழுத்திய அத் துன்பப் பொறை அந்நொடியிலேயே அகன்றொழிதலாலே அவன் அயாவுயிர்த்தனன் என்றுணர்ந்தாம். நல்லோர் என நம்பி உயிருறக்கேண்மை கொண்டவர்பால் வஞ்சம் காணின் அக்காட்சியே நெடுங்காலம் உண்ணின்றுழப்பதாம். இம் மன வியல்பு பற்றி அடிகளார் ஈண்டு மிகவும் நுண்ணிதாகக் கோவலன் நெஞ்சத்துத் தளர்ச்சி நீங்கிற்றென்றோதியது பெரிதும் இன்பம் நல்குவதாம். பொய் தீர்காட்சி உடைமையின் இஃது என் தீவினை என்றுணர்ந்தனன் என்க.

இனி, மாதவி ஓலைப்பாசுரமே கோவலன் தந்தைக்கு எழுதும் பாசுரமாகச் சொல்லனும் பொருளானும் மிகவும் பொருந்தியிருத்தல் ஆராய்ந்துணர்ந்து மகிழ்க.

கோவலன் கண்ணகியும் கவுந்தியுமிருந்த இடத்தை யடைதல்

102 - 103 : மாசில் ................ அணைந்து

(இதன்பொருள்.) மாசு இல் கற்பின் மனைவியோடு இருந்த - குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய தன் மனைவியாகிய கண்ணகியோடு அமர்ந்திருந்த; ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து - குற்றமற்ற கோட்பாட்டையுடைய துறவற முதல்வியாகிய கவுந்தியடிகளார்பாற் சென்றெய்தி; என்க.

(விளக்கம்) மாசு இல் கற்பு என்புழி மாசு - பிறர் நெஞ்சுபுகுதல். ஆசு - குற்றம். அறவி - அறத்தை மேற்கொண்டவள்; கவுந்தி.

கோவலன் பாணரொடுகூடி இசைநலங் கூட்டுண்ணல்

103 - 113 : ஆங்கு ............ அவரொடு

(இதன்பொருள்.) ஆங்கு - கண்ணகியும் அடிகளாரும் அமர்ந்திருந்த இடத்தயலே; ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரில் - வெற்றியே தனக்கிலக்கணமாகக் கொண்ட கோட்பாட்டையுடைய கொற்றவையின் போர்க்கோலத்தை வண்ணித்துத் தமிழிசை பாடுகின்ற பாணர்களோடே; பாங்கு உறச் சேர்ந்து தானுமொருவனாகக் கேண்மையோடே கலந்து; செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின் ஈரேழ் கோவையாகச் செவ்விதமாக நரம்பணியப்பட்ட சிவந்த கோட்டினையுடைய அவர் தம் யாழ்க்கருவியிடத்தே; தந்திரி கரத்தொடு திவை உறுத்து யாத்து - தந்திரிகரம் என்னும் உறுப்பினோடே திவவுகளையும் நிலையினெகிழாமல் உறுதியுறக் கட்டி; ஒற்று உறுப்ப உடைமையின் - அவ்வியாழ்தானும் ஒற்றுறுப்புடைத்தாதலாலே; பற்று வழி சேர்த்தி அதனைப் பற்றிற்கு இசை கூட்டி; உழை முதல் கைக்கிளை இறுவாய் - உழை என்னும் இசை குரலாகவும் கைக்கிளை என்னும் இசை தாரமாகவும் பண்ணி; வரல் முறை வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறையாலே வலிவும் மெலிவும் சமனும் ஆகிய மூன்று வகைப்பட்ட தானத்தாலும்; பாய்கலைப் பாவைப் பரணி - பாய்ந்து செல்லும் கலைமானூர்தியையுடைய கொற்றவையைப் பாடுதற்கியன்ற தேவபாணியாகிய இசையை; ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு பாலையாழ் என்னும் பெரும்பண்ணின் திறப்பண்களுள் ஒன்றாகிய ஆசான் திறம் என்னும் பண்ணோடு இயைத்துப் பொருந்துதலுண்டாகச் செவியால் அளந்துணர்ந்து பின்னர்; பாடல் பாணி அளைஇ - அப் பண்ணோடு அத் தேவபாணியை யாழிலிட்டுப் பாடி மகிழ்ந்த பின்னர்; என்க.

(விளக்கம்) 104. ஆடு -வெற்றி. இறைவியின் உருவத் திருமேனிகளுள் கொற்றவையுருவம் வெற்றியின் அறிகுறியாதலின் அவ் வெற்றியே அவட்கிலக்கணம் என்பார் ஆடு இயல் கொள்கை அந்தரி என்றார். கொற்றவை கோலம் எனவே போர்க்கோலம் என்பது பெற்றாம். 105. பாங்குறச் சேர்ந்து என்றது அவர்களுடன் வேற்றுமை யின்றிக் கலந்து என்றவாறு. எனவே கோவலனுடைய எளிமை என்னும் உயர் பண்பு புலனாயிற்று. 106. செந்திறம் புரிதலாவது - ஈரேழ் கோவையாகச் செப்பஞ் செய்தல். அஃது அரங்கேற்றுக் காதையில் விளக்கினாம். தந்திரிகரம் என்பது - நரம்பு துவக்குவதற்குத் தகைப்பொழிய இருசாண் நால்விரல் நீளமாகக் குறுக்கிடத்துச் சேர்த்தமைப்போர் உறுப்பு. அஃதாவது - திவவு அமைத்திற்கு உட்குடைந்த யாழ்த் தண்டினைப் போர்த்தமைக்குமொரு பலகை என்க. திவவு - நரம்புகளை அழுத்தி இசையை வலிதாக்கும் கோல் (மெட்டு), திவவு என்பது நரம்புகளை வலிபெறக் கட்டும் என்பது அடியார்க்குநல்லார் உரை. ஈண்டு நரம்புகள் வலிபெறக் கட்டும் என்பது பிறழவுணர்ந்து நரம்புகளை என இரண்டாவதன் உருபுடையதாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஈண்டு நரம்பு - இசை: ஆகுபெயர். இசை வன்மை யுடையதாதற்கு நரம்புகள் திவவுகளில் அழுத்தப்படுமாதலின் நரம்புகள் (இசைகள்) வலிபெறற் பொருட்டுக் கட்டும் வார்க்கட்டு என்பதே உரையாசிரியரின் கருத்தாகும். திவவுகள் பண்டைக் காலத்தே வார்களாலேயே அமைக்கப்பட்டன. இக்காலத்தே வெண்கலக் கோல்களால் அமைக்கப்படுகின்றன. மெட்டுக்கள் என்று கூறப்படுகின்றன. திவவுகள் மெட்டுக்களே என்பதனை,

அங்கோட்டுச் செறிந்த அவீழ்ந்துவீங்கு திவவின் எனவும் (சிறுபாணா 222) நெடும்பணைத் திரள்தோள் மடந்தைமுன் கைக்குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு (பெரும்பாண் 12 -13) எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளும் அவற்றின் பழைய வுரைகளும் (திவவு என்பன - மெட்டுக்களே என்பதனையே) வலியுறுத்தும் இஃதுணராதார் திவவு என்னும் இவ்வுறுப்பினியல்புணரால் தத்தமக்குத் தோன்றியவாறே கூறுவாராயினர். அவருரை யெல்லாம் போலி யென்றொழிக. 108. ஒற்றுறுப்பு - தாளத்திற்கென அமைத்த வோருறுப்பு: நரம்பு. பற்று - சுதி. செங்கோட்டியாழ் அறுவகை உறுப்புடைத் தென்ப. இதனை,

செங்கோட் டியாழே செவ்விதிற் றெரியின்
அறுவகை யுறுப்பிற் றாகு மென்ப

எனவும்,

அவைதாம் - கோடே திவவே யொற்றே.....
தந்திரி கரமே நரம்போ டாறே

எனவும் வருவனவற்றாலறிக.

இவ் வியாழின்கண் ஒற்றைத் தோற்றுவித்தற்கென மூன்று நரம்புகள் பண்மொழி நரம்புகளினும் வேறாக அமைந்திருப்பன. ஆதலின் இவற்றை விரலாற் றெரிந்து ஒற்றைப் பிறப்பிக்குங் காலத்தே இவற்றில் எழுமொழி பண்மொழி நரம்பிற் கூட்டியுள்ள பற்றிசையோடு இயையுமாறு இவற்றையும் இசை கூட்டுவதனையே ஒற்றுறுப்புடைமையின் பற்றுவழிச் சேர்த்தி என்றார். இந்நரம்புகள் இக்காலத்தே பக்கசாரணி என்று வழங்கப்படுகின்றன. இவையிற்றை பத்தரினின்றும் தாங்கும் ஓருறுப்பே எனப்படுகிறது. இதனை இக்காலத்தே வளைவு ரேக்கு என்பர்.

உழை முதல் கைக்கிளை யிறுவாய் கட்டி எனவே, இதன்கட் பிறப்பது செம்பாலைப் பண் என்பது உழைமுதல் வம்புறு மரபில் செம்பாலையாயது எனவரும் அரங்கேற்று காதையாற் பெற்றாம். மேலும் பாலை யாழ் (பண்) செம்பாலையுட் பிறக்கும் என்பதையும் வேனிற் காதையுள் அடியார்க்குநல்லார் உரையிற் கண்டாம். இஃதுணராது அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்பார் உரை போலி என்க. உழை குரலாக அரும்பாலை பிறப்பது இளிமுதலாக உழையீறாகக் கட்டிய வழியேயாம் என்பதனையும் அவர் கருதாராயினர். 111. பாய்கலைப் பாவைப் பாடற்பாணி என்றது பாலைநிலத் தெய்வமாகிய கொற்றவையைப் புகழ்ந்து பாடும் தேவபாணியைப் பாடி என்றவாறாம். மற்று அதுதானும் பெரும்பண்ணாகிய பாலைப்பண்ணாற் பாடாது, அதன் திறம் ஐந்தனுள் ஒன்றாகிய, ஆசான் திறத்தாற் பாடி அதனை அமைவரக் கேட்டு என்க. பாலைப்பண்ணின் திறங்கள் ஐந்தாம்; அவையாவன: அராகம் நோதிறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்பன. இவற்றை-

அராகம் நோதிறம் உறுப்புக் குறுங்கலி
ஆசான் ஐந்தும் பாலையாழ்த் திறனே

எனவரும் பிங்கலந்தையா லறிக. இவ்வைந்தும் தனித்தனியே அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என நந்நான்காக விரியும். எனவே ஈண்டு ஆசான் திறத்தினது வழிபட்ட நான்கு பண்களையும் (இராகங்களையும்) யாழில் இயக்கிக் கேட்டனன் என்பார் ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு என்றார். இப் பண்களை இயக்கி இவற்றில் பாய்கலைப்பாவைப் பாணியை மிடற்றாற் பாடி அப் பண்களோடு விரவி மகிழ்ந்து என்பாற் பாற் பாணி பாடி என்னாது அளைஇ என்றார். அளை இப் பாடிப் பின்னர் என்க. சிலசொற் பெய்து கொள்க. ஆசான் திறத்தின் சாதிப் பண்கள் அகச்சாதி காந்தாரம் புறச்சாதி சிகண்டி அருகு சாதி தசாக்கரி பெருகுசாதி சுத்தகாந்தாரம் என்பர் அடியார்க்கு நல்லார்.

கோவலன் பாணரை வினவுதலும் அவர் விடையும்

114 - 121 : கூடற்காவதம் .............. பொருந்தி

(இதன்பொருள்.) நீர் கூடல் காவதம் கூறுமின் என - இங்ஙனம் இனிதின் யாழிற் பாடி மகிழ்ந்த கோவலன் அப் பாணர்களை நோக்கி, பாண்மக்களே நீங்கள் இவ்விடத்தினின்றும் கூடல் நகரத்திற்கு எத்துணைக் காவதம்? அதனைக் கூறுமின என்று வினவ; ஆங்குக் காழ் அகில் சாந்தம் கமழ் பூங்குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை - அதுகேட்ட பாணர் ஐய! அம் மதுரையின்கண்ணுள்ள வயிரமேறிய அகிற்சாந்தும் நறுமணங்கமழும் குங்குமப் பூங்குழம்பும் புழுகுக் குழம்பும் மணத்தால் நலங்கொண்ட சந்தனச் சாந்தும்; மான்மதச் சாந்தும் தெய்வத் தேம் மெல் கொழுஞ் சேறு ஆடி - கத்தூரிச் சாந்துமாகிய இவையிற்றின் தெய்வமணம் கமழுகின்ற மெல்லிய வளவிய இனிய சேற்றில் அளைந்து; தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையல் பூ அணை பொருந்தி - பூந்துகள் கெழுமிய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றாலியன்ற மாலைகளோடு குருக்கத்தி மலரும் மல்லிகை மலரும் மனைக்கண் வளர்க்கப்பட்ட வளவிய முல்லையினது நாளரும்புகள் விரியாநின்ற மலர்களாற் றொடுக்கப்பட்ட செவ்வி மாலைகளும் உடைய மலர் அணைகளிலே தவழ்ந்து என்க.

(விளக்கம்) 117. கூடல் - மதுரை. 115. காழ்-வயிரம். குங்குமக் குழம்பும் என்க. 116. நாவி-புழுகு. தேய்வை - சந்தனம். 117. மான்மதம் - கத்தூரி 118. தேம் இனிமை. சேறாடி - சேற்றில் அளைந்து.

இதுவுமது

122 - 126 : அட்டில் புகையும் .......... அளைஇ

(இதன்பொருள்.) அட்டில் புகையும் - அடுக்களையி லெழுகின்ற தாளிப்பு மணங்கமழ்கின்ற புகையும்; அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற அங்காடித் தெருவின்கண் ஒருபொழுதும் முட்டுப்பாடின்றி அப்பவாணிகர் சுடுகின்ற அப்ப வகைகளின் மணங்கமழ்கின்ற புகையும்; மாடத்து மைந்தரும் மகளிரும் எடுத்த அம் தீம் புகையும் - மேனிலை மாடத்தே கொழுங்குடிச் செல்வர் மக்களாகிய ஆடவரும் மகளிரும் தத்தம் ஆடைகட்கும் கூந்தற்கும் ஊட்டுகின்ற அழகிய இனிய மணப்புகையும்; ஆகுதிப் புகையும் - அந்தணர் வேள்விக் களத்தில் அவிசொரிந்து வளர்க்கின்ற தீயினின்றெழுகின்ற நறுமணப் புகையும்; பல்வேறு பூம்புகை அளைஇ - ஆகிய இன்னோரன்ன பலவேறு வகைப்பட்ட பொலிவினையுடைய புகைகளையும் அளாவிக் கொண்டு; என்க.

(விளக்கம்) 122. அட்டில் - மடைப்பள்ளி. அட்டிலிலெழும் பல்வேறு தாளிப்பு மணங்கமழும் புகை என்க. முட்டா - முட்டுப்பாட்டில்லாத; இடையறவில்லாத உணவுப் பண்டமாகலின் முட்டுப்பாடின்மை கூறினார். 124. மாடத் தெடுத்த அந்தீம் புகை எனலால் - கொழுங்குடிச் செல்வர் மைந்தரும் என்பது பெற்றாம். அம்மைந்தரும் மகளிரும் தத்தம் ஆடைக்கும் கூந்தற்கும் ஊட்டும் அழகிய நறுமணப்புகை என்க. ஆகுதிப் புகை - வேள்வியி லெழும் புகை.

இதுவுமது

126 - 134 : வெல்போர் ....... இல்லென

(இதன்பொருள்.) வெல் போர் விளங்குபூண் மார்பின் - வெல்லும் போராற்றலையும் இந்திரனாற் பூட்டப்பெற்றுப் புகழானும் ஒளியானும் விளங்குகின்ற ஆரத்தையும் உடைய; பாண்டியன் கோயிலின் - பாண்டிய மன்னனுடைய அரண்மனையின்கண்; அளந்து உணர்வு அறியா எத்தகைய வித்தகரானும் அளவிடப்பட்டு உணர்ந்தறியப் படாதனவாய்; ஆர் உயிர்ப்பிணிக்கும் கலவைக் கூட்டம் - நுகர்ந்தார் தம் பிணித்தற்கரிய வுயிரையும் பிணிக்கும் சிறப்புடைய கலவைக் கூட்டத்தின் நறு மணமனைத்தையும் தன் மெய்யெலாம் பூசிக்கொண்டு; காண் வர - சேய்மையிடத்தேமாகிய யாமும் நுகர்ந்தறியும்படி; தோன்றி - புலப்பட்டு; புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியில் தென்றல் போலாது - சங்கப்புலவாது செவ்விய நாவாற் புகழ்தற் கமைந்த சிறப்புடைமையாலே பொதியிலினின்றும் வருகின்ற தென்றலைப் போலன்றி; ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இங்கே அதனினும் சிறந்த மதுரைத் தென்றல் வந்து தவழ்தலை அறிந்திலிரோ? அவன் திருமலி முதூர் - அப்பாண்டியனுடைய செல்வமிக்க பழைய மதுரைமா நகரம்; நனி சேய்த்து அன்று - மிகவும் தொலைவின்கண்ணதன்று; அணித்தே தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல்என - தனித்த நீர்மையினராய்ச் சென்றாலும் அச் செலவினைத் தடை செய்வார் யாருமிலர் என்றுகூற; என்க.

(விளக்கம்) 126 - 7. வெல்போர்ப் பாண்டியன், விளங்கு பூண் பாண்டியன் எனத் தனித்தனி இயையும். விளங்குபூண் என்ற இந்திரன் பூட்டிய ஆரத்தை. 128. ஒருகால் நுகருமாயின் பின்னை வீட்டுலகம் கருதித் துறவிற் செல்லவொட்டாது மனத்தைப் பிணித்துக் கொள்ளும் கோயிற் கலவை என்க என்பர் அடியார்க்குநல்லார். கலவை - கலவை மணம். 129. காண்வர என்றது மெய்ப்பொறியானும் மூக்குப் பொறியானும் காண்டலுண்டாக என்றவாறு. காண்டல் - அறிதன்மேற்று. 120. புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பு என்புழி, நிவப்பு சிறப்பின் மேனின்றது. இவற்றைப் பொதியிலுக்கே அடையாக்கலுமாம். பொதியிற் றென்றற்கு இங்ஙனம் பல்வேறு கலவை மணமின்மையின் மதுரைத்தென்றல் அதனினும் சிறப்புடைத்தாயிற்று என்பார் பொதியிற் றென்றல் போலாது மதுரைத் தென்றல் வந்தது என்றார். காணீர் என்பது வினா ஓகாரந் தொக்கது. தென்றலின்கண் மதுரை மணங்கமழ்தலால் இது கேட்கவேண்டா! அந்த மணமே அம் மூதூர் அணித்தென்பதறிந்திலீரோ என்பது கருத்து. இனி ஆறின்னாமை யாதும் இல்லை என்பார். தனிநீர் செல்லினும் தகைக்குநர் இல் என்றார். தனிநீர் - தனித்த நீர்மை.

கோவலன் முதலிய மூவரும் அவ்விடத்தினின்றும் மதுரைக்குப் போதல்

125 - 150 : முன்னாள் ............ எதிர்கொள

(இதன்பொருள்.) முன் நாள் முறைமையின் - அற்றைப் பகற்பொழுதெல்லாம் அப்புரிநூன் மார்பர் உறைபதியிலேயே இருந்து இளைப்பாறி முதல்நாளில் புறப்பட்டாற் போன்றே ஞாயிறு மறைந்து திங்களஞ் செல்வன் பால் நிலாப் பரப்பிய பின்னர்; பின்னையும் - மீண்டும்; இருந்தவ முதல்வியொடு - பெரிய தவத்தலைவியாகிய கவுந்தியடிகளாரோடும் கோவலனும் கண்ணகியும்; அல் இடைப் பெயர்ந்தனர் - குளிர்ந்த இரவுப் பொழுதிலே அவ்வூரினின்றும் புறப்பட்டனராக; பெயர்ந்த ஆங்கு - அங்ஙனம் புறப்பட்டுப் போம்பொழுது அவ்வழி யிடத்தேயே; அருந் தெறல் கடவுள் அகல் பெருங்கோயிலும் பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் அரிய அழித்தற்றொழிலையுடைய இறைவன் எழுந்தருளிய அகன்ற பெரிய திருக் கோயிலினும் பெரிய புகழையுடைய பாண்டிய மன்னனுடைய பெரிய புகழையுடைய அரண்மனையினும்; பால் கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் -பல்வேறு பகுதிப்பட்ட சிறப்பினையுடைய இன்னிசைக் கருவிகளின் இசையோடு கூடிச் சிறப்புற்ற காலை முரசினது மிக்க ஒலியாகிய முழக்கமும்; நால் மறை அந்தணர் நவின்ற ஓதையும் - நான்கு மறைகளையும் அந்தணர்கள் ஓதுவதனாலே எழுந்த ஒலியும்; மாலவர் ஓதி மலிந்த ஓதையும் - பெரிய தவத்தினையுடையோர் கடவுள் வாழ்த்துப் பாடுவதனாலே எழுந்த மிக்க ஒலியும்; வாளோர் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு எடுத்த நாள் அணி முழவமும் - வாட்படை மறவர் பாண்டியனுடைய பிறக்கிடாத வெற்றிச் சிறப்பையுடைய வாழ்த்துப் பாடலோடு தொடங்கிய நாளணிமங்கல முழவினது இன்னிசையும்; போரில் கொண்ட பொரு கரி முழக்கமும் - அம்மறவர் பகைவரைப் போரில் வென்று கைப்பற்றிக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் - அம் மறவர் தாமே காட்டிற் பிடித்துக் கொணர்ந்த போர் யானைகளின் பிளிற்றொலியும்; பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் பந்திகள் தோறும் கட்டப்பட்ட போர்ப் புரவிகள் செருக்கினாலே கனைக்கின்ற பேரொலியும்; கிணை நிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - அரண்மனை வாயிலிடத்தே தடாரிப்பறை கொட்டுகின்ற கிணைவன் வைகறைப் பொழுதிலே அரசனை வாழ்த்திப் பாடுகின்ற பாட்டினது ஒலியும் ஆகிய; கார்க்கடல் ஒலியில் இப்பல்வேறு ஒலியும் விரவிக் கரிய கடலினது ஒலிபோல ஒலித்தலாலே; கலி கெழு கூடல் ஆர்ப்பு ஒலி ஆரவாரம் பொருந்திய மதுரைமா நகரத்து அவ்வாரவாரத்து ஒலியெலாம்; எதிர் கொள - தம்மை எதிர்கொண்டழைத்தலாலே; என்க.

(விளக்கம்) 137 - 40. இறைவன் கோயிலிலும் அரண்மனையினும் வைகறைப் பொழுதிலே குழலும் யாழு முழவு முதலிய இன்னிசைக் கருவிகளும் முழங்குதலுண்மையின் அவற்றோடுகூடிச் சிறப்புற்ற காலை முரசத்தின் கனைகுரல் ஓதல் யென்க. 141. அந்தணர் நவின்ற ஓதை என்றது வேத முழக்கத்தை. 142. மாதவர் ஓதிமலிந்த வோதை என்க. 144. வாளோர் எடுத்த நாள் அணிமுழவம் என்றது வீரமுரசத்தை. குடைநாட்கோள் முதலியனவுமாம். வாரி - யானை பிடிக்கும் காடு. 147. பணை - குதிரைப்பந்தி. 148. கிணை - தடாரிப்பறை. கிணைவன் வைகறை யாமத்தே அரண்மனை முன்றிலில் கிணைப்பறை கொட்டி அரசனை வாழ்த்துதல் மரபு. இதனை,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ள கட்டன்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்

எனவரும் புறப்பொருள் வெண்பாமாலை (பாடாண் - 18) யான் உணர்க. மற்று வாகைத்திணைக்கண் கிணைவன் உழவனைப் புகழ்தலுண்டு. அதனையே பழையவுரையாசிரியர் ஈண்டுக் கூறினர். அத்துறை ஈண்டைக்குப் பொருந்தாமை யறிக. 150. எதிர்கொள என்றது - கோவலன் முதலியோர் நகரிற்குத் தொலைவிலே வரும் பொழுதே இவ்வொலிகளைக் கேட்டனர் என்றபடியாம்.

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

(151 முதலாக 170 - முடிய வையை வண்ணனை)

150 - 161 : ஆரஞர் ........... அல்குல்

(இதன்பொருள்.) ஆர் அஞர் நீங்கி - மதுரை நகரத்து ஆரவாரங்கேட்டபொழுதே அதுகாறும் வழிநடையால் எய்திய துன்பம் எல்லாம் நெஞ்சத்தினின்றும் நீங்கப் பெற்று அப்பால் வையை என்னும் பேரியாற்றின் கரையை எய்தினராக; குரவமும் வகுளமும் கோங்கமும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து - அந்த யாற்றினது கரையின் புறப்பகுதி யெங்கும் குராமரமும் மகிழமரமும் கோங்கமரமும் வேங்கை மரமும் வெண்கடப்பமரமும் சுரபுன்னைமரமும் மஞ்சாடி மரமும் மருதமரமும் உச்சிச் செலுந்தின்மரமும் செருந்திமரமும் சண்பக மரமும் ஆகிய இவை பாதிரிமரத்தோடே மலர்ந்து திகழ்பவையே அவ் வையை என்னும் நங்கை தன்மீதுடுத்த பூந்துகில் ஆகவும்; குருகும் தளவமும் கொழுங்கோடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெள் கூதாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - அகப்பகுதி யெங்கும் குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியையுடைய முசுட்டையும் மலர்ந்த மலர் நிறைந்த மோசி மல்லிகையும் வெள்ளை நறுந்தாளியும் வெட்பாலையும் மூங்கிலும் இவற்றிற் படர்ந்த பெருங்கையாலும்; பிடவமும் மயிலையும் பிணங்கு அரில் மணந்த கொடுங்கரை கோவை மேகலை - குட்டிப்பிடவமும் இருவாட்சியுமாகிய பல மலரும் விரிந்து பூங்கொடிகள் பின்னிப்படர்ந்த கிடப்பவற்றைத் தன்னை மிடைந்து சூழ்ந்த கோவையாகிய மேகலையாகவும் உடைய; கொடுங்கரை அகன்று ஏந்து அல்குல் - வளைந்த கரையாகிய அல்குலையும்; என்க.

(விளக்கம்) 150. தாம் குறிக்கொண்டுள்ள மதுரையை எய்திவிட்டோம் என்னும் மகிழ்ச்சி காரணமாக அதுகாறும் எய்திய துன்பமெல்லாம் மறைந்தன என்பது கருத்து. கரையின் வெளிப்புற மெல்லாம் குரவ முதலிய மரங்கள் வளமுடையனவாய் மலர்ந்து நிற்றலாலே பல்வேறு நிறமுடைய அம்மலர் ஒழுங்கு வையைமகளுடுத்த பல்வேறு நிறமுடைய பூந்துகில் போலத் திகழ்ந்தது என்றவாறு. 153. செண்பக வோங்கல் என்புழி ஓங்கல் - மரம்; ஆகுபெயர் - பகன்றை - பெருங்கையால்; சீந்திலுமாம்.

கரையின் புறவா யெங்கும் மலர்ந்து நிற்கும் பூம்பொழில் வையை மகட்குப் பூந்துகிலாகவும் கரையின் அகவாயெங்கும் பிடவ முதலியனவும் பிற பூங்கொடிகளும் பின்னிப் படர்ந்து மலர்ந்து திகழும் கொடிப்பிணக்கம் அவட்கு மேகலை என்னும் அணிகலனாகவும் வளைந்துயர்ந்தேந்திய கரை அல்குலாகவும் என ஏற்றி பெற்றி சில சொற்கள் பெய்துரைக்க. இவை குறிப்புவமம். உருவகம் என்பதுமது.

இதுவுமது

161 - 170 : வாலுகம் .......... குலக்கொடி

(இதன்பொருள்.) மலர்ப் பூந்துருத்தி - அகற்சியையும் போலிவையுமுடைய இடைக்குறையிலே; பால் புடைக்கொண்டு பல் மலர் ஓங்கிய - பக்கங்களிலே பருத்தலைக் கொண்டு தம்மீது பல்வேறு மலர்கள் உதிர் தலைப்பெற்று உயர்ந்த; குவைஇய - குவிந்துள்ள; எதிர் எதிர் விளங்கிய ஒன்றற்கொன்று எதிர் எதிராக நின்று திகழ்ந்த; வாலுகம் - மணற் குன்றுகளாகிய; கதிர் இள வனமுலை ஒளியுடைய இளமையுடைய அழகிய முலையினையும்; கவிர் கரை நின்று உதிர்த்த இதழ்ச் செவ்வாய் - முருக்க மரங்கள் கரையினின்றுதிர்த்த இதழ் ஆகிய சிவந்த வாயினையும்; அருவி முல்லை அணி நகையாட்டி - அருவி நீரோடும் இடையறாது வருகின்ற முல்லை யரும்பாகிய எயிற்றினையும் உடையவளும்; விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற கயல்களாகிய நெடிய கண்களையும்; விரைமலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் - மணமலர் ஒருபொழுதும் நீங்குதலில்லாத விளங்குகின்ற அறலாகிய கூந்தலையும்; உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகத்தே வாழுகின்ற பல வுயிரினங்களையும் பேணி ஊட்டி வளர்க்கின்ற மிகவும் பெரிய அறிவொழுக்கத்தினையும்; புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - அவ்வொழுக்கங் காரணமாகப் புலவர் பலரும் புகழுமாற்றால் அவருடைய செந்நாவிலே பொருந்தியுள்ள பூங்கொடி போல்பவளும்; வையை என்ற - வையை! வையை ! என்று உலகத்தாராற் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பெயரையுடையவளும் ஆகிய; பொய்யாக் குலக் கொடி - தன தொழுக்கம் ஒருகாலத்தும் பொய்யாதவளும் பாண்டியர் குலத்துப் பெண்ணா யிருப்பவளும் ஆகிய அந்த நங்கையானவள்; என்க.

(விளக்கம்) 161. மலர்களையுடைய துருத்தி எனினுமாம். பால் - இருபக்கங்களினும் எனினுமாம். குவைஇய வாலுகமாகிய முலை என்க. 164. கவிர் - முண்முருக்கு. 165. அருவி கொணர்ந்த முல்லைமலர் என்க. நகை - பல். 165. விலங்கு - குறுக்காக. குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரியும் கருங்கயல் என்க. 167. அவிர் கூந்தல், அறல் கூந்தல் எனத் தனித்தனி யியையும். அவிரும் அறல் எனினுமாம். அவிர்தல் - விளங்குதல். 168. உயர் பேரொழுக்கங் காரணமாகப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி. யாறுகளில் வைத்து வையையாறு புலவர் நாவாற் புகழப்பட்டிருத்தலைப் பரிறபாடலிலே காண்க.

வையை மகள் வருந்துதல்

171 - 173 : தையல் ............... அடக்கி

(இதன்பொருள்.) தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் - மதுரை நகர்க்குக் கணவனோடு வருகின்ற அக் கண்ணகிநல்லாளுக்கு மேல் வருவதற்கிருக்கின்ற துன்பத்தை அவ் வையையென்னும் பொய்யாக் குலக்கொடிதான் முன்னரே அறிந்தவள்போல; புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தன்னைக் கொண்டு வழிபாடு செய்வார்க்குப் புண்ணியம் பயக்குமியல்புடைய நறிய மலராடையாலே தன் மெய்ம்முழுதும் போர்த்துக்கொண்டு; கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - அவட்கு இரங்குதலாலே தன் கண் மல்கிநின்ற நீரைப் புறத்திடின் கண்ணகி முதலியோர் வருந்துவாரென்று உள்ளடக்கிக் கொள்ளாநிற்ப; என்க.

(விளக்கம்) கண்ணகி முதலிய மூவரும் தன்பால் மகிழ்ச்சியுடன் வந்தெய்திய பொழுது தெய்வத் தன்மையுடைய அவ் வையை என்னும் மடந்தை ஊழ் காரணமாக மதுரை நகரத்தே அவட்கு இனி வரவிருக்கின்ற துன்பத்தை அறிந்தவள் போலத் தன் திருமேனி முழுவதும் பூவாடையாலே போர்த்துக்கொண்டு அவள் பொருட்டுத் தன் கண்களில் மல்கிய துன்பக் கண்ணீரையும் அவள் காணாவண்ணம் மறைத்துக் கொண்டனள் என்று அடிகளார் கூறுகின்றார். இது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. இஃதென் சொல்லியவாறோ எனின், வையையாற்றின் இருகரைகளினும் அமைந்த பல வேறுவகைப்பட்ட மரங்களும் செடிகொடிகளும் பூத்துச் சொரிதலாலே அந்த யாற்றின் நீர் தோன்றாதபடி அம் மலர்கள் மறைத்து விட்டன. இந் நிகழ்ச்சியையே அடிகளார் வையை மகள் கண்ணகிக்கு வருவதறிந்து அவள் பொருட்டுத் தானும் வருத்தமுடையவளாய்ப் பூவாடையாலே முக்காடிட்டுக் கொண்டு தன் கண்ணீரையும் அவளறியாமல் மறைத்துக்கொண்டனள் என்கின்றனர் என்க. இதன்கண் கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி என்புழி, தன்னிடத்தே நிறைந்தொழுகுந் தண்ணீரைப் பூவாலே மறைத்தனள் எனவும் தன் கண்களிலே மல்கிய துன்பக் கண்ணீரை அவளறியாம லடக்கினள் எனவும் சிலேடை வகையாற் பொருள் கொள்க. 173. அடக்கி என்பதனை அடக்க எனத் திரித்துக் கொள்க.

கோவலன் முதலிய மூவரும் வையையைப் புணையேறிக் கடத்தல்

174 - 180 : புனல் ............... எய்தி

(இதன்பொருள்.) அனநடை மாதரும் ஐயனும் - அழகிய அவ்வையை யாற்றின் கரைக்கட் சென்று அதன் நீரோட்டத்தின் அழகினைக் கண்ணுற்ற அன்னம் போன்ற நடை யழகினையுடைய கண்ணகி நல்லாளும் அவள் தலைவனாகிய கோவலனும் வியந்து; இது புனல்யாறு அன்று பூம்புனல் யாறு என தொழுது - இத் தெய்வப் பேரியாறு தான் புனல் ஒழுகும் யாறு அன்று பூவொழுகும் யாறு என்று புகழ்ந்து கைகூப்பித் தொழுது; பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும்  அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கில் பெயராது - அவ்வியாற்றினைக் கடப்பவர் பொருட்டு ஆங்குக் குதிரைமுக வோடமும் யானைமுக வோடமும் சிங்கமுக வோடமும் என்னும் சிறந்த ஓடங்களிலே பலரையும் ஏற்றி இயக்குதலையுடைய ஓடக்கோலுக்கும் நிலைத்தலரிய ஆழமான துறையாகிய பெருந்துறைப் பக்கத்தே செல்லாமல்; ஆங்கண் மாதவத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலதாகியதொரு துறையிலே கவுந்தியடிகளோடு தாமூவருமே மரப்புணையிலேறி யாற்றைக் கடந்துபோய்; தேம் மலர் நறும் பொழில் தென்கரை எய்தி - தேன் பொதுளிப மலர் நிரம்பிய நறிய பூம் பொழிலையுடைய தென்கரையில் பலர் செல்லாத வோரிடத்தே சென்றெய்தி யென்க.

(விளக்கம்) 175. அனநடை - அன்னம்போல் நடக்கும் நடை. மாதர் - கண்ணகி. ஐயன் -அவள் தலைவனாகிய கோவலன். 176. அம்பி - ஓடம். பரிமுக அம்பி முதலியன அக் காலத்தின் நாகரிகச் சிறப்பைப் புலப்படுத்தும். 177. அரி - சிங்கம். அருந்துறை - ஓடக்கோலுக்கும் நிலைத்தலில்லாத கடத்தலரிய துறை என்க. ஓடமியக்குவோரால் இயக்கப்படும் பெருந்துறை. 179. இவர்தாம் உயர்குடி மக்களும் துறவியுமாதலின் பலர் செல்லுந்துறையிற் செல்லாது மற்றொரு சிறுதுறையில் மரப்புணை போகினர் என்றவாறு. இனி அடியார்க்கு நல்லார் இவர் பெருந்துறையிற் செல்லாது மற்றொரு துறையிற் சென்றது, முன்னர் வம்பப்பரத்தை வறுமொழியாளனொடு சாபமுறுதலின் என்பர். என்னை? நாடுகாண் காதையில் நீரணி மாடத்துக் காவிரியின் நெடுந்துறை போகி என்றாராகலின் அவர் அங்ஙனம் கூறினர். ஆயினும் ஆங்கு அவர் சாபமுற்றமைக்கு நெடுந்துறை போகியது காரணம் அன்றாகலின் அவ் விளக்கம் போலி என்க.

கோவலன் முதலிய மூவரும் மதுரையை வலங்கொண்டு செல்லுதல்

181 - 183 : வானவர் ............ போகி

(இதன்பொருள்.) வானவர் உறையும் மதுரை வலம் கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என்று - தேவர்களும் வந்து தங்கும் சிறப்புடைய அம் மதுரையை வலம் சுற்றிச் சென்றக்கால் அச் செயல்தானும் மிகப்பெரிய அறச் செயலாம் தகுதியுடையதாம் என்று கருதி; ஆங்கு அரு மிளை உடுத்த அகழி சூழ் போகி - அவ்விடத்தே அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அந் நகரத்து அகழியையும் ஒருசேர வலங்கொண்டு சென்று; என்க.

(விளக்கம்) மற்று அவர் எண்ணித் துணிந்தவாறே மதுரையை வலங்கொண்டு சென்ற அறப்பயனே அங்கு அவர் தம் பழவினை தீரப் பெற்று வானவர் எதிர்கொள வலவனேவா வானவூர்தியில் விண்ணகம் புக்கு விண்ணவர் ஆயினர் என்று கோடலும் தகும் என்க. இது கருதிப் போலும் அடிகளார் மதுரை வலங்கொளத் தான் நனிபெரிதும் தகவுடைத்து என ஒருபொருட் பன்மொழி அடை புணர்த்து ஓதினர் போலும். இன்னும் கண்ணகியார் மண்ணகத்தே பலர்புகழ் பத்தினித் தெய்வமாகத் திகழ்வதும் ஈண்டு நினைக்கத்தகும்.

184 - 190 : கருநெடு ............. காட்ட

(இதன்பொருள்.) கரு நெருங்குவளையும் ஆம்பலும் கமலமும் - அங்ஙனம் அகழியையும் வலங்கொண்டு செல்லும் பொழுது அவ்வகழியின் கண்ணவாகிய கரிய நெடிய குவளைமலரும் ஆம்பன் மலரும் தாமரை மலரும்; தையலும் கணவனும் தனித்து உறு துயரம் - தையலாருட் சிறந்த அக் கண்ணகியும் அவள் கணவனாகிய கோவலனும் தம்முள் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்தனியே அந் நகரத்தே இனி எய்தும் துன்பத்தை; ஐயம் இன்றி அறிந்தன போல - சிறிதும் ஐயமின்றி நன்கு அறிந்து கொண்டவைபோல; பரிந்து பண் நீர் வண்டு இணைந்து ஏங்கி - அவர்கட் கிரங்கிப் பண்களின் தன்மையோடு தம்பால் முரலுகின்ற வண்டுகளாகிய தம் வாயினாலே அழுது ஏங்கி; கண்ணீர் கொண்டு - கண்ணீர் மல்கப்பெற்று; கால் உற நடுங்க - தத்தம் கால்களின் நிலைபெற மாட்டாவாய்ப் பெரிதும் நடுங்காநிற்பவும்; போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி - பகைவர் அழியும் போர்செய்து வாகைசூடி அதற்கு அறிகுறியாகக் கிட்டுதற்கரிய புறமதிலுச்சியிலே உயர்த்திய கொடிச் சிலைகள்; வாரல் என்பன போல் - இந் நகரத்தினுள் வாராதே புறம் போமின் என்று கூறுவன போன்று; கை மறித்துக் காட்ட - துகிலாகிய தமது கைகளாலே மறித்துக் குறிப்பாற் காட்டாநிற்ப என்க.

(விளக்கம்) குவளை முதலிய மலர்கள் பரிந்து தம்பாற் சூழும் வண்டுகளாகிய வாயாலே இனைந்து ஏங்கி என்க. வண்டுகளின் முரற்சியொலி அம் மலர்களின் வாயினின்றும் எழுவதனாலே இங்ஙனம் கூறிய படியாம். கண் நீர் கொண்டு எனவும்; கள் நீர் கொண்டெனவும் கண்ணழித்து இருபொருளும் கொள்க. கால் உற நடுங்க என்பதற்கும் - காற்று உறுதலாலே நடுங்க எனவும் கால் உறுதற்கு (நிலைத்தற் கியலாமல்) நடுங்க எனவும் இருபொருளும் காண்க.

தென்றல் வீசுதலாலே கொடித்துகில் வடதிசை நோக்கி அசைகின்றன. அங்ஙனம் அசைவது தென்றிசை நோக்கி வருவாரை ஈண்டு வாராதொழிமின் எனக் கையை அசைத்துப் போக்குதல் போலுதலுணர்க. இவை தற்குறிப்பேற்றம்.

இனி, ஈண்டு எயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட என்னுமித் தற்குறிப்பேற்ற அணியை -

ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான்
மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும்
காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற

எனவரும் பாரதச் செய்யுளினும் (வி. பாரதம்: வாசுதேவனை) காண்க.

அவர்கள் புறஞ்சேரி புகுதல்

191 - 196 : புள்ளணி ............... புக்கனர் புரிந்தென்

(இதன்பொருள்.) புள் அணி - பறவைகளாலே அழகு செய்யப்பட்ட; கழனியும் பொழிலும் - வயல்களும் பூம்பொழில்களும்; வெள்ள நீர்ப்பண்ணையும் மிக்க நீரையுடைய ஓடைகளும் தோட்டங்களும்; விரி நீர் ஏரியும் - விரிந்த நீரையுடைய ஏரியும்; காய்க்குலைத் தெங்கும் - நிரம்பிய காய்களையுடைய குலைகளையுடைய தென்னையும்; வாழையும் கமுகும் - வாழைத் தோட்டங்களும் கமுகந் தோட்டங்களும்; வேய்த்திரள் பந்தரும் - மூங்கிற்றிரளாலே அமைக்கப்பட்ட தண்ணீர்ப் பந்தரும்; பொருந்தி யாண்டும் அமையப் பெற்று; விளங்கிய இருக்கை - விளங்கிய குடியிருப்புகளை யுடைத்தாய்; அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - துறவற மேற்கொண்டொழுகும் சான்றோரனறிக் கயவர்கள் ஒருபொழுதும் புதுதலில்லாத; மூதூர் புறஞ்சிறை புரிந்து புக்கனர் - அம் மதுரை மூதூரின் புறஞ்சேரிக் கண்ணே தாம் மேற்கொண்டுள்ள கோட்பாட்டிலே மனம் விரும்பி அம் மூவரும் புகுந்தனர் என்க.

(விளக்கம்) இது கீழ்த்திசை வாயிற்கு அயலதொரு முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு நல்லார். புரிந்து புக்கனர் என்று பொதுவாகக் கூறினமையான் கோவலன் கண்ணகியும் தமது குறிக்கோளின்கண் மனம் வைத்தவராய்ப் புக்கனர் என்றும் கவுந்தியடிகளார் தங்குறிக்கோளாகிய அறங்கேட்டலில் விரும்பிப் புக்கனர் என்றும் கொள்க.

இனி இதனை, பெண்ணணிகோலம் பெயர்ந்த பிற்பாடு கோவலன் முதல்வி அடிபொருந்தி இவள் வேனிற் கடுங்கதிர் பொறாஅள் உளியம் அகழா வேங்கை மறலா அரவு முதலியனவும் உறுகண் செய்யாதென்னவர் காக்கும் நாடு எனப் போதிய இசை பெரிது (ஆதலால்) இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என நேர்ந்த கொள்கையின் அமையம் பார்த்திருந்தோர்க்குச் செல்வன் தோன்றிச் சொரிய, பார்மகள் வேண்டுதி என்றே உயிர்த்து அடங்க, கோவலன் மாதரை நோக்கி மறுகும் கப்பிடும் இடிதரும் இனையாதேகெனக் காட்டிக் கேட்டுக் கழிந்து கோழி இயம்ப உறைபதிச் சேர்ந்து இருத்தி நீர்தலைப் படுவோன் புலம்புறுதலின் திரியக் கவுசிகன் தெரியான் கூறக்கேட்டு நீ கூறிய உரையீது எனக் கண்டேன் என எய்திக் கோசிகமாணி உரைப்போன் ஓலைநீட்ட, கைவிடலீயான் விரித்து உணர்வோன் உணர்ந்து நீங்கிக் கொடுத்துப் போக்கிப் பாணரிற் சேர்ந்து, கேட்டு. கூறுமின் என, தென்றல் வந்தது தகைக்குநர் இல்லெனப் பெயர்ந்தனர் எதிர்கொளத் தொழுது மரப்புணை போகி எய்திச் சூழ் போகி நடுங்கக் காட்ட, புறஞ்சிறை மூதூர் புரிந்து புக்கனர் என இயைத்திடுக.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #21 on: February 23, 2012, 02:19:45 PM »
14. ஊர்காண் காதை

அஃதாவது - முற்காதையிற் கூறியவாறு கோவலன் முதலிய மூவரும் மதுரையின்கண் அறம்புரி மாந்தர் அன்றி மற்றோர் சேராத புறஞ்சேரி புகுந்த பின்னர்க் குணதிசையில் ஞாயிறு தோன்றிய பின்னர் அரண்மனைக்கண் காலைமுரச முழங்கிற்றாக, அதுகேட்ட கோவலன் தான் கருதிவந்த தொழில் தொடங்கற் பொருட்டு அந்நகரத்தினூடு புகுந்து அதற்கு ஆவனதேர்ந்து வருதற்குக் கண்ணகியைக் கவுந்தியடிகளார் காப்பினுள் வைத்துத் தான் தமியனாக அந்த நகரத்தினூடு புகுந்து ஆங்குள்ள வீதிகள் பலவற்றையும் சுற்றிப் பார்த்து அந்நகரத்தின் பேரழகைக் கண்டுமகிழ்ந்து மீண்டும் புறஞ்சேரிக்கு வந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன்  5

ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்  10

அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்பக்
கோவலன் சென்று கொள்கையி னிருந்த  15

காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான்  20

தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும்
கவுந்தி கூறுங் காதலி தன்னொடு  25

தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்  30

தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்  35

உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும்
புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்  40

கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு
ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின்  45

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
வல்லா டாயத்து மண்ணர சிழந்து   50

மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவிக் கானகத் தாயிழை தன்னை
இடையிருள் யாமத் திட்டு நீக்கியது  55

வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச்
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
வருந்தா தேகி மன்னவன் கூடல்   60

பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக்   65

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு
ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்
குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின்  70

கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து  75

தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு  80

தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோலந் தகை பாராட்ட
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு  85

அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக்
குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச்
சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு
நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச்  90

செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல்
சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு
மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக்
கலிகெழு கூடற் செவ்வணி காட்டக்  95

காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு  100

குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை
அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்  105

ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்  110

வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்
காவும் கானமும் கடிமல ரேந்தத்
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து  115

மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலைக்
கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க  120

என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக்
காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக்
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள்  125

வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப்  130

பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப்
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு  135

இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப்
புலவிக் காலத்துப் போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன  140

செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத்
திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்  145

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்  150

கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
வாரம் பாடுந் தோரிய மடந்தையும்   155

தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு  160

அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
ஏம வைகல் இன்றுயில் வதியும்   165

பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும்  170

வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏனப் படமும் கிடுகின் படமும்
கானப் படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்  175

வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
காக பாதமும் களங்கமும் விந்துவும்  180

ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்  185

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும்
இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும்  190

ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்காரக னென   195

வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்  200

சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்  205

பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்
அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்
கால மன்றியும் கருங்கறி மூடையொடு  210

கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப்  215

பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக்
கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்.

உரை

ஞாயிறு தோன்றுதல்

1-6 : புறஞ்சிறை ............ துயிலெடுப்ப

(இதன்பொருள்.) புறஞ் சிறைப் பொழிலும் பிறங்கும் நீர்ப் பண்ணையும் இறங்கு கதிர்க் கழனியும் - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளாரோடு விரும்பிப் புகுந்த அம் மூதூர்ப் புறஞ்சேரி யிடத்திலமைந்த பூம்பொழில்களினும் விளங்குகின்ற நீர்மிக்க ஓடையையுடைய பண்ணைகளினும் வளைந்து முற்றிய நெற்கதிர் நிறைந்த வயல்களினும்; புள் எழுந்து ஆர்ப்ப - இரவுப் பொழுதெல்லாம் இனிதினுறைந்த காக்கை முதலிய பல்வேறு வகைப் பறவைகளும் தமதியற்கை யறிவினாலே தனது வருகையை யுணர்ந்து துயில் எழுந்து ஆரவாரியா நிற்ப; வைகறைப் புலரி பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த - வைகறையாமத்தின் இறுதியாகிய இருள் புலர்கின்ற பொழுதே பொய்கைகளிடத்தேயுள்ள தாமரையினது நாளரும்புகளின் புரி நெகிழ்த்து மலர்வித்த; உலகு தொழு மண்டிலம் - உலகத்துச் சான்றோரெல்லாம் தொழுகின்ற சிறப்புடைய ஞாயிற்று மண்டிலமானது தனது வெளிப்பாட்டினாலே; வேந்து தலைபனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - பகை வேந்தர் தம் தலைகள் அச்சத்தாலே நடுங்கும்படி உறை கழித்து விதிர்த்து ஏந்துகின்ற வாளையுடைய பாண்டியனது புகழான் ஓங்கி வண்மையானுமுயர்ந்த அம் மதுரையின் வாழ்வோரை எல்லாம் துயிலுணர்த்தா நிற்ப வென்க.

(விளக்கம்) பறவைகள் வைகறைப் பொழுதிலேயே கதிரவன் வரவுணர்ந்து துயிலெழுந்து ஆரவாரிக்கும் இயல்புடையன ஆதலின் அவற்றை முற்கூறினர். தாமரைமலர்களில் செவ்வியரும்புகள் கதிரவன் தோன்றுகின்ற பொழுதே இளவெயில் கண்டு மலர்தலின் அவற்றை இரண்டாவதாகவும் மாக்கள் கதிரவன் தோன்றிய பின்னரே எழுதலின் இறுதியில் ஊர்துயில் எடுப்ப எனவும் முறைப்படுத்தோதினர். இனி மாக்கள் தாம் கதிரவனாற் றுயிலெழுப்புந் துணையும் துயில்வார். அவர் தம்முட் சான்றோர் பறவைகளோடொப்ப வைகறையாமத்தே துயில் எழுந்து காலைக்கடன் கழித்து நீராடி அவன் தோன்றும்பொழுது அவன் ஒளியிலே இறைவனுடைய அருள் ஒளியினைக் கண்டு அகங்குழைந்து கைகூப்பி வணங்குவர் என்பதும் இஃது எல்லாச் சமயத்தார்க்கும் உடன்பாடாம் என்பதும் தோன்ற உலகு தொழுமண்டிலம் என அடிகளார் விதந்தோததுலுணர்க.

மதுரையில் காலைமுரசம் கனைகுரலியம்பு மிடங்கள்

7 - 14 : நுதல்விழி ............... இயம்ப

(இதன்பொருள்.) நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் - அவ் விடியற் பொழுதிலேயும் இறைவி திருக்கண் புதைத்த பொழுது தனது நெற்றியின்கண் தோற்றுவித்து விழித்த கண்ணையுடைய இறைவனது திருக்கோயிலினும்; உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் - செம்பருந்துச் சேவலைக் கொடியாகவுயர்த்த திருமால் திருக்கோயிலினும்; மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் - மேழியாகிய படைக்கலத்தை வலக்கையின் ஏந்திய பலதேவர் திருக்கோயிலினும்; கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் - கோழிச் சேவலாகிய கொடியையுடைய முருகவேள் திருக்கோயிலினும்; அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் - தத்தம் சமயத்திற் கியன்ற அறங்கள்தாம் தம்மிடத்தேயே விளக்க மெய்தியிருக்கின்ற துறவோர் உறைகின்ற தவப்பள்ளிகளினும்; மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் - மறப்பண்புடைய வஞ்சி முதலிய திணைகளும் அவற்றிற்குரிய துறைகளும் விளங்குதற்கிடனான மன்னவனுடைய அரண்மனையினும்; வால் வெண் சங்கோடு - தூய வெள்ளிய சங்கு முழக்கத்தோடே கூடிய; வகைபெற்று ஓங்கிய காலைமுரசம் கனைகுரல் இயம்ப - பலவகைப் பட்டுச் சிறந்த காலைமுரசங்களினது செறிந்த முழக்கங்கள் முழங்காநிற்ப என்க.

(விளக்கம்) 7. இறைவன் - சிவபெருமான். இறைவன் நுதலின் கண் நெருப்புவிழி புறப்பட விட்டமைக்கு வேறு காரணம் கூறுவாருமுளர். நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலை ஈண்டு அடிகளார் முற்கூறி யிருத்தலும் இங்ஙனமே இந்திரவிழாவெடுத்த காதையில் பூம்புகார் நகரத்தும் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் என்று முற்படக் கூறியிருத்தலானும் அடிகளார் காலத்தே தமிழகத்தே சமயங்கள் பற்பல இருப்பினும் சைவசமயமே அவற்றுள்ளும் தலைசிறந்ததாகத் திகழ்ந்த தென்பது தேற்றமாம். 8. உவணம் - செம்பருந்து (கருடன்). 9. மேழி - கலப்பை. வெள்ளை: ஆகுபெயர் - வெண்ணிறமுடைய பலதேவர். 10. பிற பறவையினத்துச் சேவலை ஒழித்தற்கும் கோழியிற் பெடையை யொழித்தற்கும் கோழிச் சேவல் எனல் வேண்டிற்று. 11. அறத்துறை விளங்கிய அறவோர் என்றது பல்வேறு சமயங்கள் பற்றித் துறவறம் மேற்கொண்டுள்ள துறவிகளை இவர்தம் ஒழுக்கத்தானே அவ்வவர் சமயங்கூறும் அறங்களும் அவ்வவர்பால் விளங்கித் தோன்றுதலாலே அறத்துறை விளங்கிய அறவோர் என்றார். இதனால் அறவோர் தமது கூற்றிற்குத் தாமே சான்றாக நிற்றல் வேண்டும். அங்ஙனமன்றிச் சொல்லால் மட்டும் அறங்கூறுதல் பயனில் செயலாம் என்பது அடிகளார் கருத்தாதல் பெற்றாம். இங்ஙனமே மறத்துறைக்குத் தலைவனாகிய மன்னவன்றானே அம்மறப்பண்பிற்குச் சான்றாகத் திகழ்தல்வேண்டும் என்பதும் அவர், 12. மறத்துறை விளங்கிய மன்னவன் என்றதனாற் போந்தமையும் உணர்க.

13. கோயில்களினும் அரண்மனையினும் அகத்தே முழங்கும் மங்கலச் சங்கொலியோடு விரவிய காலைமுரசங் கனை குரலியம்ப என்க. உலகு தொழுமண்டிலம் ஊர் துயிலெடுப்பக் காலைமுரசம் முழங்க என்றாரேனும் வைகறை யாமத்தே முழங்கத் தொடங்கிய காலைமுரசங்களின் முழக்கம் ஊர் துயிலெழுந்துணையும் இடையறாது முழங்கின என்பதே கருத்தாகக் கொள்க. என்னை? அடிகளார் உலகு தொழுமண்டிலம் தோன்று முன்னரே இம்முரசம் முழங்குதலானன்றோ வைகறைப் பொழுதிலே மதுரைக்கு அணித்தாக வந்த கண்ணகி முதலியோரை அருந்தெறற் கடவுள் அகன் பெருங்கோயில் முதலியவற்றில் முழங்கிய காலைமுரசக் கனைகுரல் ஓதை முதலியவற்றின் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கினர் என்று புறஞ்சேரி இறுத்த காதையினும் ஓதுவாராயினர் என்க - (புறஞ்சேரி - 137 - 50.)

இனி அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் என்னும் அடிக்கு அடியார்க்கு நல்லார் அறமும் அதன் துறையும் விளங்குதற்குக் காரணமான அறவோர்களுடைய இருப்பிடங்களும் என உரைப் பொருள் கூறக் கருதி அதற்கேற்ப விளக்கங் கூறினர். இவ்வுரையும் விளக்கங்களும் பொருந்தாமை பள்ளி என்ற ஒரு சொல்லே காட்டும். இச் சொல் தமது கருத்திற்குப் பொருந்தாதது கண்டு ஈண்டுப் பள்ளி என்றது அவ்விடங்களை எனவும் கூறினர். அவர் கருத்தின்படி இல்லறத்தார் முன்றிலிலுங் காலைமுரசம் இயம்புதல் வேண்டும். அது மரபன்மையின் அவ்வுரை போலியே என்றொழிக.

இனி, 11 - 12. அறத்துறை மறத்துறை என்பவற்றிற்கு அவர்கூறும் விளக்கம் வருமாறு: அறத்துறை - அறமும் அறத்தின் துறையுமென உம்மைத் தொகை. அறமாவது இருவகைத்து: இல்லறமும் துறவறமும் என. அவற்றுள், இல்லறமென்பது கற்புடை மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்.

அதன் துறையாவன - தன்னை யொழிந்த மூவர்க்கும் துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் தேவர்க்கும் முனிவர்க்கும் விருந்தினர்க்கும் சுற்றத்தார்க்கும் பிறர்க்கும் துணையாதலும் வேள்வி செய்தலும் சீலங்காத்தல் முதலியனவும் அருளும் அன்பு முடையனாதலும் பிறவும்.

இனித் துறவறமாவது நாகந் தோலுரித்தால் போல அகப்பற்றும் புறப்பற்றுமற்று இந்திரீய வசமறுத்து முற்றத்துறத்தல்.

அதன் துறையாவன - சரியை கிரியை யோகம் ஞான மென்பன. அவற்றுள் சரியை அலகிடல் முதலியன. கிரியை பூசை முதலியன.

யோகம் எண்வகைய : அவை - இயமம், நியமம், ஆசனம், வளி நிலை, தொகை நிலை, பொறைநிலை, நினைவு, சமாதி என்பன.

அவற்றுள் - பொய் கொலை களவே காமம் பொருணசை இவ்வகை யைந்தும் அடக்கிய தியமம்; எனவும், பெற்றதற் குவத்தல் பிழம்பு நனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு பயனுடை மரபி னியம மைந்தே; எனவும், நிற்றல் இருத்தல் கிடத்த னடத்தலென் றொத்த நான்கினொல்கா நிலைமையொ டின்பம்பயக்குஞ் சமய முதலிய அந்தமில் சிறப்பினாசனமாகும்; எனவும்; உந்தியொடு புணர்ந்த விருவகை வளியும் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை எனவும்; பொறியுணர்வெல்லாம் புலத்தின் வழாமை ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே; எனவும், மனத்தினை யொருவழி புணர்ப்பது பொறைநிலை; எனவும், நிறுத்திய வம்மன நிலைதிரி யாமல் குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே; எனவும், ஆங்ஙனம் குறித்த வம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி, எனவும் வருவனவற்றால் அறிக.

12. மறத்துறை - மறமும் அதன் துறைகளும். இதுவும் உம்மைத்தொகை.

அதன் துறை எழுவகைய. அவை: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பையென வினவ எனவரும்.

இனி இப்பகுதியில் கோயில் நியமம் நகரம் கோட்டம் பள்ளி என ஒருபொருட்குப் பன்மொழி கூறப்பட்டிருத்தல் பரியாய வணி என்பர்.

கோவலன் கவுந்தியடிகளாரை வணங்கிக் கூறுதல்

15 - 24 : கோவலன் ............... ஈங்கென்றலும்

(இதன்பொருள்.) கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தியையையைக் கைதொழுது ஏத்தி - அப்பொழுது கோவலன் ஆங்கொரு சூழலிலே தமது கோட்பாட்டிற் கிணங்க அந்த விடியற்காலையிலே தருமத்தியானம் என்னும் யோகத்தில் அழுந்தி யிருந்த கவுந்தியடிகளார்பாற் சென்று கைகுவித்து வணங்கி; செய் தவத்தீர் - இடையறாது செய்த தவத்தினையுடைய அடிகளே! நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - அடியேன் அறநெறியினின்றும் நீங்கிய கயவர்தம் நீர்மையுடையேன் ஆகி; நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மென்மையுடைய திருமேனியையுடைய இவள் துன்பத்தாலே நடுங்கிப் பெரிதும் துன்பமுறும்படி; அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் கனவினும் கண்டறியாத நாட்டிலே யுற்றேன் - இளிவர வெய்தினேன்; தொல் நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி யான் வருங்காறும் - இந்தப் பழைய நகரத்தின்கண் வாழ்கின்ற எம்மினத்தவராகிய பெருங்குடி வாணிகரைக் கண்டு அடியேனது நிலைமை அறிவித்து மீண்டும் யான் இங்கு வருமளவும்; பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் - இவள்தான் பண்டுபோன்றே அடிகளாரின் திருவடிகளாகிய காவலையுடையள், ஆதலாலே; ஈங்கு ஏதம் உண்டோ - இவ்விடத்தே இவட்கு வரும் துன்பம் யாதும் இல்லையன்றோ! என்றலும் - என்று பணிவுடன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) 15. கொள்கை - அறநினைவினூடு அழுந்துதல். இங்ஙனம் அறக்கோட்பாட்டுகள் மூழ்கியிருத்தலை தர்மத்தியானம் - அல்லது சுபோபயோகம் என்பர் ஆருகதர். இத் தியானம் தீய எண்ணங்கள் தன்கண் நிகழாதவாறு தடுத்துத் தூய எண்ணங்களிலேயே தன் நெஞ்சத்தைப் பயிற்றுவிக்கு மொரு பயிற்சியாம். வியவகார ரத்தினத்திரயபாவனை என்பது மிது. கோவலன் சென்று தொழுதனன் என்றதனால் அடிகளார் தனித்திருந்தமையும் கொள்கையினிருந்த என்றதனால் தியானத்தோடிருந்தமையும் பெற்றாம்.

இனி, முதல்நாள் வழியிடைப் புரிநூன்மார்பர் உறைபதியின்கண் கோசிகமாணி கொடுத்த மாதவி யோலையை ஓதியவழி அவள்தான் நீயிர் குரவர்பாணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு? அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் என்றவள் மலர்க்கையான் எழுதிய வரிகளை யோதியதுமே கோவலன் மாதவி தீதிலள், எனவும் இங்ஙனம் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்குக் காரணம் தன் தீதே என்று அதுகாறும் மாதவி வஞ்சஞ் செய்தாள் என்னும் எண்ணம் நெஞ்சினின் றுழக்கிய தளர்ச்சி நீங்கினன் என அடிகளாரே கூறுதலின் ஈண்டுக் கோவலன் 17 - நெறியின் நீங்கியோர் நீர்மையேனாகி என்றதற்கு இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையோடு பொருந்தினமையானும் ........ அங்ஙனம் கூறினன் என்பார் உரை போலியாம். என்னை? அந்தக் காலத்தே விழுக்குடிப் பிறந்த மைந்தர் தாமும் பரத்தையர் கேண்மையை ஓர் இழுக்கெனக் கொள்ளாமையை இவர்கள் கருதிற்றிலர். மற்று அம் மாதவியே நீயிர் குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதல் நும்குடிக்கு மாசாகாதே என்று வினவிய மாதவியின் வினாவிற்கிணங்க அதனையே ஈண்டு நெறியினீங்கியோர் நீர்மையென்று குறித்தனன் என்றுணர்க. இனி, கனாத்திறம் உரைத்த காதைக்கண் சலம்புணர்கொள்கைச் சலதியோடாடி என மாதவியை வெறுத்துரைத்ததும் அவள் சலம்புணர் கொள்கையினள் என்று அவன் அவளைத் தவறுடையளாகக் கருதினமையாலேதான் என்க. மேலும் கொலைக்களக்காதையினும் தான் அவர் மாதவியோடாடியது தவறு என்று கொள்ளாமையையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியும் மாதவியைக் குறை கூறாப் பெருந்தகைமை யுடையளாதலையும் அக் காதையிற் கூறுதும்.

இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்தன்மையுணர்த்திவருந்துணையும் வெட்கு ஏதுமின்றாகக் காத்தருளவேண்டும் எனக் கருதியவன் தெளிந்து போதுவல் யானும் போதுமின் என்ற வன்றே இவள் நும்பாதமாகிய காவலையுடையள் ஆதலின் இவட்கு இனி ஓரேத முண்டோ! இல்லை, என்று கையெடுத்துக் கூறினானாக வென்க என வகுத்த அடியார்க்கு நல்லார் உரை சாலவும் இனியவுரையாதல் நுண்ணிதின் உணர்க.

இனி, தொன்னகர் மருங்கின் வணிகர்க்கு என்னிலை கூறி யான் வருங்காறும் என்னாது மன்னர் பின்னோர்க்கு என வணிகரைக் குறித்தது தானும் இந்நகரத்துவணிகர் தம்முள்ளும் மாசாத்துவானும் மாநாய்கனும் போலப் பெருநில முழுதாளும் பெருமகன்றலை வைத்த ஒரு தனிக் குடிகளாய் உயர்ந்தோங்கு செல்வத்து வணிகர்க்கு என்றுணர்த்துதற் பொருட்டென்க. ஏதம் உண்டோ என்னும் வினா அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்து நின்றது.

25 - கவுந்தி என்பது தொடங்கி 61 - போதீங்கென்றலும் என்னுந் துணையும் கவுந்தி அடிகளார் மனங்கனிந்து கோவலனுக்குக் கூறும் அமிழ்தனைய ஆறுதன் மொழியாய ஒரு தொடர்.

கவுந்தியடிகளார் கனிவுரைகள்

25 - 32 : கவுந்தி ........... பேதுறுவர்

(இதன்பொருள்.) கவுந்தி கூறும் - இவ்வாறு தன் செயலுக்குத் தானே கழிவிரக்கங் கொண்டு கூறிய கோவலன் மொழியைக் கேட்ட கவுந்தியடிகளார் கூறுவார்; தவம் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் - முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயன் தீர்ந்தவிடத்தே முற்செய்த தீவினைகளின் பயனாகத் தந்தை முதலிய சுற்றத்தாரையும் பொருளையும் பிரிந்து நின் காதலியோடும் இங்ஙனம் வந்து தனிமையுற்றுப் பெரிதும் வருந்திய ஐயனே! ஈதொன்று கேள்! அறத்துறை மாக்கள் - உலகினர்க்கு அறங்களை அறிவுறுத்தும் சான்றோர்தாம்; வல்வினை ஊட்டும் - மக்களே! ஒருவன் செய்த தீவினையானது அதன் பயனாகிய துன்பத்தை அவனை ஒருதலையாக நுகர்வியா தொழியாது கண்டீர்! ஆதலால்; மறத்துறை நீங்குமின் - நீவிரும் நுமக்குத் துன்பம் வாராதொழிதல் வேண்டும் என்னும் கருத்துடையீராயின் பிற உயிர்க்குத் துன்பஞ் செய்யும் தீவினைச் செயலினின்றும் நீங்கி யுய்யுங்கோள்; எனத் திறத்தில் - என்று கேட்போர் அறியு முறையிலே; நா கடிப்பு ஆக வாய்ப்பறை சாற்றி அறையினும் - தமது செந்நாவாகிய குணில்கொண்டு வாயாகிய பறையை முழக்கி அறிவுறுத்திய வழியும்; யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் - மனத்திண்மையற்ற மாக்கள் தமக்கியன்ற இயல்பு காரணமாக அவற்றைக் கொள்ளாதவராய்ப் பின்னும் தீவினையை நயந்து செய்பவரே ஆகின்றனர்; தீது உடை வெவ்வினை - துன்பத்தையே உடைய வெவ்விய அத் தீவினைகள் தாமே; உருத்த காலை - பயனாகத் தோன்றித் துன்புறுத்தும் பொழுதும்; பேதைமை கந்தாப் பெரும் பேது உறுவர் - இவை யாம் செய்ய வந்தன எனும் அறிவுமிலராகித் தமது அறியாமையையே பற்றாகக்கொண்டு பெரிதும் நெஞ்சு கலங்கி அத் துன்பத்துள் மூழ்கிக் கையற வெய்துபவராகின்றனர்; என்றார் என்க.

(விளக்கம்) தீதும் நன்றும் பிறர்தர வாரா ஆகலின் நீ பண்டு நுகர்ந்த இன்பத்திற் தெல்லாம் காரணம் முற்பிறப்பிலே நீ செய்த நல்வினையே ஆதல் வேண்டும். அங்ஙனமே நீ இப்பொழுது நுகரும் துன்பத்திற்கும் பண்டு நீ செய்த தீவினையே காரணம் என்று குறிப்பாலுணர்த்துவார், தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்! என்று அடிகளார் விளிப்பாராயினர். இதனாற் போந்த பயன்,

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்  (குறள் - 379)

இடுக்கண் வருங்கால் நகுக! எனத் தேற்றுதல் என்க.

26 - தவம் என்றது ஈண்டு நல்வினையை. அது தீர்ந்தவழி நுகர்ச்சிக்கு வருவது தீவினைப்பயனே ஆகலின் அதனைத் தவந்தீர் மருங்கு என்றார். 27 - மறத்துறை - தீவினை செய்தற்கியன்ற நெறி. அறத்துறை மாக்கள் என்புழி மக்கள் முதனீண்டது; செய்யுள் விகாரம். அறவோர் தமதருள் காரணமாகக் கைம்மாறு சிறிதும் வேண்டாதவராய் மாந்தர்கட்கு அறிவு கொளுத்தி அவரை உய்விக்கப் பெரிதும் வருந்தியும் முயல்கின்றமை தோன்ற நாக்கடிப்பாக வாய்ப்பறை திறத்திற் சாற்றி அறையினும் என்றார். இனி, சிறியார் உணர்ச்சியுள் பெரியார் அறிவுரை பேணிக் கொள்ளவே மென்னும் நோக்குச் சிறிதும் இல்லை என்றிரங்குவார், யாப்பறை மாக்கள் கொள்ளார் என்றொழியாது இயல்பிற் கொள்ளார் என விதந்தார். 31- செய்வார்க்கும் செய்யப்பட்டார்க்கும் துன்பமே தருமியல்புடையது என்பார் தீவினையை வெவ்வினை யென்றொழியாது தீதுடை வெவ்வினை என வேண்டா கூறி வேண்டியது முடித்தார். வெவ்வினை உருத்தகாலை இது யாம் செய்ய வந்ததே என்று அமையும் அறவுமிலார் என்பது தோன்றப் பேதைமை கந்தாப் பெரும் பேதுறுவர் என்றார்.

ஒரு தனிவாழ்க்கை யுரவோர் மாண்பு

33 - 38 : கற்றறி .................. இல்லை

(இதன்பொருள்.) கற்று அறி மாக்கள் - இனி மெய்ந்நூல்களைக் கற்று உறுதிப்பொருளை ஐயந்திரிபற அறிந்துள்ள மேலோர் தாம்; ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலை - எவ்வாற்றானும் போக்கப் படாத தீவினைப் பயனாகிய துன்பத்தை நுகரும்பொழுது; கையாறு கொள்ளார் - அதற்கிரங்கிச் செயலறவைத் தம் முள்ளத்தே கொள்ளாமல் நுகர்ந்தமைவர்; பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் - இனி, பெண்டிரே உண்டியே பிறவே ஆகிய நுகர்ச்சிப் பொருள்களைப் பிரிதலாலே வரும் துன்பங்களும் அவற்றை எய்துதற் பொருட்டால் வருகின்ற துன்பங்களும்; உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும் - அவற்றைப் பிரிந்த காலத்தே காமனும் நல்குரவென்னும் ஒரு பாவியுமாகிய உருவிலிகள் நெஞ்சத்தே நின்று வருத்துதலாலே வரும் துன்பமும் பிறவுமாகிய துன்பமனைத்தும்; புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது -கைசெய்த கூந்தலையுடைய மகளிரைப் புணர்ந்து மயங்கினார்க் குளவரவனவன்றி; ஒரு தனி வாழ்க்கை உரவோர்க்கு இல்லை- அம்மயக்க மின்மையால் ஒப்பற்ற துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பேரறிவுடையோர்க்கு இல்லையாம் என்றார்; என்க.

(விளக்கம்) 33. ஒய்யா - போக்கப்படாத. ஊழ்வினையைப் போக்குதற்கு யாதோருபாயமுமில்லை என்பார் ஒய்யா வினைப்பயன் என்றார். முன்னர் நாடுகாண் காதையில் சாரணர் ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை ஒழிக்கவும் ஒண்ணா என்று அறிவுறுத்ததனை நினைந்து கவுந்தி அடிகளார் ஈண்டு இங்ஙனம் அடையுணர்த்துக் கூறுகின்றனர் என்க. 36. கற்றறி மாக்கள் என்புழி மாக்கள் விகாரம். 35-36. பிரிதல் புணர்தல் துன்பங்களை மேலே பெண்டிரும் உண்டியும் என்பதற் கிணங்கப் பொருள் கூறுக. உருவிலாளன் என்பதற்கும் இஃதொக்கும். பெண்டிர்க்குக் காமவேள் என்றும் பொருளுக்கு நல்குரவு என்னும் ஒருபாவி என்றும் கூறிக் கொள்க. 38. ஒரு தனி வாழ்க்கைக்கு ஏதுவினை உடம்படுத்துக் கூறுவார் உரவோர்க்கு என்றார். உரவு ஈண்டு அறிவின் மேலும் ஆற்றல் மேலும் நின்றது.

இடும்பையின் பிறப்பிடம்

39 - 45: பெண்டிரும் .............. ஆதலின்

(இதன்பொருள்.) உலகில் பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று கொண்டோர் இங்ஙனமாகவும் இவ்வுலகத்தின்கண் பெண்டிரும் உணவுமே இன்பந்தரும் பொருள்களாம் என்று மயங்கி அவற்றை நெஞ்சத்தாற் பற்றிக் கொண்ட மாந்தர்; உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகி - அவற்றால் எய்தாநின்ற நெஞ்சகம் கொள்ளாத, மாபெருந் துன்பங்களைக் காட்சியளவையானே நன்குணர்ந்து கொண்டவராதலாலே; கடவுளர் வரைந்த காமம் சார்பாக - அவ்வொரு தனி வாழ்க்கையுரவோராகிய துறவோர் துவரக்கடிந்து ஒதுக்கிய அப் பெருந் துன்பங்கட்கெல்லாம் காரணமாய காமத்தையே தமது வாழ்க்கைக்குச் சார்பாகக் கொண்டு; காதலின் உழந்து - அவற்றின்பாலெழும் வேணவாவினாலே தாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக வந்தெய்தும் அம் மாபெருந் துன்பத்திலே கிடந்துழன்று; ஆங்கு ஏமம் சாரா இடும்பை எய்தினர் - அவ்வழி அவற்றிற்குத் தீர்வு காணப்படாத இடும்பையையும் எய்தியொழிந்தோர்; இன்றே யல்லால் - இற்றைநாள் அறியாத் தேயத்து ஆரிடையுழந்து சிறுமை யுறுகின்றேன் என்கின்ற நீயே அன்றியும்; இறந்தோர் பலரால் இறந்த காலத்தோரும் எண்ணிறந்தோர் ஆயினர் காண்; ஆதலில் தொன்றுபட வரும் தொன்மைத்து ஆதலாலே இந்நிகழ்ச்சி தொன்றுதொட்டு நிகழ்ந்து வருமொரு பழைமையுடைத்துக் காண் என்றார்; என்க.

(விளக்கம்) உலகின்கண் அன்பானும் அறத்தானும் அறிவானும் வருவனவே மெய்யாய இன்பங்களாகவும் அஃதுணராமல் அவாவென்னும் மயக்கத்தாலே பெண்டிரும் உண்டியுமே இன்பம் என்று கொண்டோர் என்பது கருத்து. வாய்மையில் அவை இன்பங்களல்ல என்பார் இன்பம் என்று கொண்டோர் என்றார். 40. கொள்ளாத் துன்பம் - நெஞ்சகம் கொள்ள மாட்டாத பெருந்துன்பம். இனி, தாம் எதிர்கொள்ளாத துன்பம் எனினுமாம். என்னை? அவற்றை இன்பம் என்றே கொண்டனர். எனவே அவையிற்றுள் துன்பம் உண்மையை அறிந்து அதுவும் வருக வென்று கொண்டவரல்ல ராகலான் என்க. 41. கடவுளர் - துறவோர். இவர் தாமும் உலகியலைக் கடந்தவர் ஆகலின் அஃது அவர்க்கும் பெயராயிற்று. கண்டனர் ஆகி என்றது கருதல் முதலிய அளவைகளாலன்றிக் காட்சியளவையானே நன்கு கண்டனராகி என்பதுபட நின்றது. கண்டனர் என்றது வரைதற்கு ஏதுவாய் நின்றது. வரைந்த காமம் - தம்பால் நிகழாது கடியப்பட்ட காமம் என்றவாறு. சார்பு - தமது வாழ்க்கைக்குச் சார்பு. 42. காதலின் என்றது அவற்றின் பாலெழும் வேணவாவினால் என்றவாறாம். என்னை? காமம் சார்பாக வருதலின் காதல் ஈண்டு அதன் நேரிய பொருள் குறியாமல் அவாவைக் குறிப்பதாயிற்று. உழந்து என்னும் சொல்லே துன்பமுழந்து என்பதாயிற்று. ஆங்கு - ஏமம் சாரா இடும்பை என்றது, அத்துன்பத்தினின்றும் உய்தி பெறமாட்டாமையாலெய்தும் கையறு நிலையை. இன்றே யல்லால் என்றது இன்று கையாறு கொள்ளும் நின்னையல்லாமலும் என்றவாறு. இறந்தோர் இறந்த காலத்தினர் பலர் ஆதலின் இந்நிகழ்ச்சி தொன்றுபட வரும் தொன்மைத்து என மாறுக.

எடுத்துக்காட்டு (1)

46 - 49 : தாதை ................ அன்றோ

(இதன்பொருள்.) தாதை ஏவலின் மாதுடன் போகி - தன் தந்தையாகிய தயரத மன்னன் ஏவுதலானே அப் பணி தலைமேற் கொண்டு தன் வாழ்க்கைத் துணைவியோடும் அரசாட்சியைத் துறந்து காட்டகத்தே சென்று; காதலி நீங்க - ஆங்கு அரக்கனொருவன் கவர்ந்து கொள்ளுதலாலே தன்பால் காதன்மிக்க அவ் வாழ்க்கைத்துணைவி நீங்க அவளையும் துறந்து; கடுந்துயர் உழந்தோன் - பொறுக்க வொண்ணாத கடிய துன்பத்திலுழந்தோன் தானும்; வேதமுதல்வன் பயந்தோன் என்பது வேதங்களுக்கெல்லாம் தலைவனாகிய நான்முகனை யீன்றவனாகிய திருமால் என்று இவ்வுலகத்துச் சான்றோர் கூறுவது; நீ அறிந்திலையோ - நீ அறிந்திலையோ! நெடுமொழி அன்றோ - அதுதானும் நெடுங்காலம் இவ்வுலகிலே நடக்கின்றதொரு காப்பியக் கதையன்றோ! என்றார்; என்க.

(விளக்கம்) முன்னர்க் காமம் சார்பாக் காதலின் உழந்து ஏமஞ்சாலா இடும்பை எய்தினர் இறந்த காலத்தும் பலர் என்றவர் எடுத்துக்காட்டாக, தேவருள் சிறந்தான் ஒருவனையும் மக்களுள் சிறந்தானொருவனையும் காட்டுபவர் முதற்கண் தேவருட்சிறந்தானைக் காட்டியபடியாம்.

இனி ஈண்டு எடுத்துக் காட்டிய இராமன் வரலாற்றில் அவன் சீதையைப் புணர்தற்கு வில்லேற்றல் முதலிய துன்பமும் பின்னர் அவளைப் பிரிந்தகாலத்தே அவன் நெஞ்சகங் கொள்ளாவா றெய்திய துன்பமும், அங்ஙனமே தயரதன் இராமனுக்குப் பொருள் புணர்த்தலாகிய முடிசூட்டைக் காரணமாகக் கொண்டு எய்திய மாபெருந் துன்பமும் வந்தமை யுணர்க.

49. அறிந்திலையோ? என்னும் வினாவும் அது நெடு மொழியன்றோ என்னும் வினாவும் அதன் எதிர்மறைப் பொருளாகிய நன்குணர்ந்திருப்பாய் என்பது தேற்றம் என்னும் பொருளை வற்புறுத்தி நின்றன. உணர்ந்தவாற்றால் இவையெல்லாம் வினைப்பயன் என்று கருதி அமைதி; யாப்பறை மாக்கள் போன்று பெரும் பேதுறற்க என்பது இதனாற் போந்த பயனாம். மேல் வருவதற்கும் இஃதொக்கும். நெடுமொழி: ஆகுபெயர். தான் பொதிந்துள்ள வாய்மை காரணமாக உலகின்கண் நெடிது நிலைத்து நிற்கும் பெருங்காப்பியம் என்றவாறு.

எடுத்துக்காட்டு (2)

50 - 57 : வல்லாடாயத்து ........... சொல்லாயோ நீ

(இதன்பொருள்.) வல் ஆடு ஆயத்து மண் அரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் - ஐய இன்னும் நிடதத்தார் மன்னவனாகிய நளன் என்பான்றானும் முன் புட்கரனோடு சூதாடுகளத்தே தன் நாட்டைப் பணயம் வைத்து ஆடித் தன் நாடும் அரசும் இழந்து மெல்லியல்புடைய தமயந்தியோடு வெவ்விய காட்டகம் புக்கவன்; காதலிற் பிரிந்தோன் அல்லன் - அத் தமயந்திபாற் றான்கொண்டுள்ள காதலன்பினின்று நீங்கும் சிறுமையுடையவனும் அல்லன்; காதலி தீதொடுபடூஉம் சிறுமையள் அல்லள் - அங்ஙனமே அவன் காதலி தானும் தீயபண்புடன் சார்கின்ற சிறுமையுடையவளும் அல்லள்; ஆயிழை தன்னை - அத்தகைய அக் கற்பின் செல்வியை; அடவிக் கானகத்து இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது - இங்ஙனமாகவும் அவன் அவளை அடவியாகிய காட்டகத்தே அரை இருள் யாமத்திலே உறக்கத்திலே போகட்டுப் பிரிந்துபோம்படி செய்தது யாது? வல்வினை அன்றோ - முன் செய்த தீவினையன்றோ? மடந்தை தன் பிழை எனச் சொல்லலும் உண்டேல் சொல்லாய் - அதனையன்றி அம் மடந்தைதன் பிழை என்று சொல்லுதற்கு வேறு காரணம் உண்டெனின் சொல்லுக என்றார்; என்க.

(விளக்கம்) 50. வல் - சூதாடு கருவி. ஆயம் -தாயம்; சூதுப்போரில் மண்ணை வைத்து ஆடித் தோற்று மண்ணையும் அரசுரிமையும் இழந்து என்க. 51. கானடையும் வன்மையில்லாமை தோன்ற மெல்லியல் என்று பெயர் கூறினர். காட்டை வெங்கானம் என்றதும் அவளொடு செல்லத்தகாத காடு என்றற்கு. 52. பிறிதொரு பொருண்மேற் சென்ற காதலால் அவளைப் பிரிந்தான் அல்லன் என்பாருமுளர். 53. தீது - கூடாவொழுக்கம், சிறுமை - இழிதகைமை. முல்லைக்கானம் அன்றென்றற்கு அடவிக் கானம் என்றார். அஃதாவது மலைசார்ந்த காடு. 54. கைவிட்டு நீங்கவொண்ணாத இடமும் காலமும் விளங்கித் தோன்ற அடவிக்க னகத்து ...... இடையிருள் யாமத்து என்றார். உறக்கத்தே நீத்தமை தோன்ற இட்டு நீக்கியது என்றார். ஆயிழை தன்னை உறக்கத்தினுள் இட்டு நீக்கியது எனினுமாம். நீங்கியது அவன் செயலன்மையின் நீக்கியது என வல்வினையின் செயலா யோதினர்.

ஈண்டும் நளனுக்குப் பெண்டிர் பொருள் இரண்டும் புணர்தற் றுன்பமும் பிரிதற் றுன்பமும் உண்மையுணர்க. உண்டெனிற் சொல்லாய் என்றது இல்லை என்பதனை வற்புறுத்தற்கு. ஈண்டு நளனும் தீதிலன் தமயந்தியுந் தீதிலள் என்றது இம்மையில் நீவிர் நெறியினீங்கா நீர்மையராய விடத்தும் இத் துயர் நுங்கட்கு எய்தியதற்குக் காரணம் நீவிர் உம்மைச்செய்த தீவினைப் பயனேயன்றிப் பிறிதில்லை என்றுணர்த்தற்பொருட்டாம். இது மக்களுள் சிறந்தான் ஒருவனைக் காட்டியவாறு.

இனி, கோவலனுக்கு இராமனும் நளனும் மனைவியரோடு அறியாத் தேயத்து ஆரிடையுழந்தமை ஒத்தலின் உவமங்காட்டிப் பின்னர்க் கோவலன் அவர்க்கெய்தா நலனொன்றுடையனாதலை அறிவுறுத்து அடிகளார் அவனை அமைதி செய்ய முயல்கின்றார்.

அடிகளாரின் தேற்றுரை

57 - 61 : நீ அனையையும் ............. என்றலும்

(இதன்பொருள்.) நீ ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே - இனி நீதானும் அவர்போலப் பொருளிற் பிரிந்து நறுமலர் மேனி நங்கைநல்லாள் நடுங்கு துயர் எய்த அறியாத்தேயத்து ஆரிடையுழத்தலின் ஒப்பாயேனும் அவர்க்கெய்தா நலனொன்றும் உடையை காண், அஃதியாதெனின் அவ்விருவரும் தத்தம் ஆருயிர்க் காதலியரையும் பிரிந்து கொள்ளாத் துன்பமுழந்தனராக, நீ நின் காதலியோடு பிரியாது வாழ்கின்ற இனிய வாழ்க்கையைப் பெற்றனை யல்லையோ! அவ்வாற்றால்; அனையையும் அல்லை - அவர்கள் போல்கின்றிலை, இந்த நலனை நினைக்கின் நீ நன்கு அமைதிபெறுதல் கூடும். அவ்வழி இனி அமைதி யுடையையாய்; வருந்தாது ஏகி - வருத்தம் சிறிதுமின்றிச் சென்று; மன்னவன் கூடல் பொருந்துழி அறிந்து - இம் மன்னவன் மாநகரினூடே நின்குலத்து வாணிகர் வாழுமிடத்தும் நீ மனைவியோடிருந்து சாவக நோன்புடன் இல்லறத்தினிதிருந்து வாழ்தற்கும் நின் குறிக்கோட்கும் குலத்திற்கும் இணங்கப் பொருளீட்டுதற்கும் இடையூறின்றிப் பொருந்துகின்ற இடம் ஒன்றனையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு; ஈங்குப் போது என்றலும் - மீண்டும் இங்கு வருவாயாக என்று அருளிச் செய்தலும் என்க.

(விளக்கம்) 67ஆம் அடியினீற்றிலுள்ள நீ என்பதனை 68 ஆம் அடிக்கட் கூட்டி; நீ அனையையும் அல்லை என இயைத்திடுக. நீ ஓராற்றால் அவர் போல்கின்றிலை, அஃதென்னையோ வெனின் அவ்விருவரும் மனைவியரைப் பிரிந்து வருந்தினராக; நீ நின் மனைவியைப் பிரியா வாழ்க்கை பெற்றனையல்லையோ அதனான் என்றவாறு. 58-9 ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றோ என்றது வருந்தாமைக் கேதுவாகியும் நின்றது. இனி மன்னவன் கூடலில் நினக்குப் பொருந்துழியறிந்து மீண்டும் ஈண்டு வருதி என்பதே கவுந்தியடிகளாரின் கருத்தென்பது தேற்றம். அங்ஙனமாயினும் அவர் கூற்று அவனது ஊழ்வினைத் திறத்தினும் பொருந்திய பொருளுடையதாய் அமைந்துவிட்டமை ஈண்டுணரற்பாற்று. என்னை? பொருந்துழி அறிந்துபோ தீங்கு என்னும் அச் சொற்றொடர் கண்ணழித்துப் பொருள் காண்புழி (நீ மன்னவன் கூடலில்) தீங்கு பொருந்துழி அறிந்து போ எனவும் பொருள் பயந்து நிற்றலான். இஃது அவனுக்குத் தீநிமித்தமாய் ஊழின் திறத்தில் அமைந்ததொரு விழுக்காடாகும்.

இனி, கவுந்தியடிகளார் கோவலன் கண்ணகியாரொடு வழித்துணையாய்ப் புறப்படும்பொழுது யானும், மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த....... மதுரைக்கு ஒன்றியவுள்ளமுடையேனாகலின் போதுவல் போதுமின் என்றுகூறி உடன் வந்தவராதலின், அவர் அப்பொழுதே அவர் கருதியாங்கு அறவுரை கேட்டற்பொருட்டுத் தம்மைப் பிரிந்து போதலும் கூடும். அங்ஙனம் அவரும் பிரிந்தக்கால் ஈண்டுக் கண்ணகிக்குத் துணையாவாரிலரே என்று கவன்று அடிகளாரிடம் சென்று யான் மதுரையுட் புகுந்து மீண்டு வருந்துணையும் அடிகளே இவட்குத் துணையாதல் வேண்டும் என்று கூறுவதே அவன் உட்கிடையாகவும் அங்ஙனம் கூறுதல் அடிகளார் பெருந்தகைமைக்குப் பொருந்தாதென்றுணர்ந்து தன் கருத்துக் குறிப்பாகப் புலப்படுமாறு நனி நாகரிகமாக, தொன்னகர் மருங்கின் மன்னர்பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான் வருங்காறும் பைந்தொடி பாதக்காப்பினள் ஆகலின் ஈங்கு ஏதமுண்டோ? என்று கூறியதும்; அதற்கு அடிகளாரும் நீ வருந்துணையும் இவட்கு யானே துணையாகுவல் என்னும் தமது கருத்தும் வெளிப்படையானன்றிக் குறிப்பாகவே புலப்படுமாறு நீ வருந்தாதே சென்று வருதி என்னும் தேற்றுரையோடு அமையுமாறு கூறியதும் எண்ணி எண்ணி இன்புறற் பாலனவாம்.

கோவலன் புறஞ்சேரியினின்றும் அகநகரத்துட் புகுதல்

62 - 67 : இளைசூழ் ........... புக்கு

(இதன்பொருள்.) இளை சூழ் மிளையொடு -கட்டு வேலியாலே சூழப்பட்ட காவற்காட்டினோடு ஒருசேர; வளைவுடன் கிடந்த - தானும் வளைந்துகிடந்த; இலங்கு நீர்ப்பரப்பின் வலம் புணர் அகழியில் - விளங்குகின்ற நீர்ப்பரப்பினையுடைய வெற்றி பொருந்துதற்குக் காரணமான அகழியின்கண்; பெருங்கை யானை நிரை இனம் பெயரும் - பெரிய கையினையுடைய யானையின் நிரல்பட்ட இனங்களாகிய படைகள் அகத்தே புகுதற்பொருட்டு அமைக்கப்பட்ட; சுருங்கை வீதி மருங்கில் போகி - சுருங்கையையுடைய வீதியைக் கடந்து சென்று; கடிமதில் வாயில் காவலின் சிறந்த - அப்பால் உயர்ந்த மதிலினது வாயிலைக் காக்குந் தொழிலிலே பெரிதும் சிறப்புடைய; அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு - கொல்லும் வாட்படையேந்திய யவனரால் இவன் புதியவன் என்று ஐயப்படாதவண்ணம் சென்று அம் மதில் வாயிலையும் கடந்து அகத்தே புகுந்து என்க.

(விளக்கம்) 62. இளை - கட்டுவேலி. மிளை - காவற்காடு. 63. வலம் - வெற்றி; வெற்றியை மன்னர்க்குப் புணர்க்கும் அகழி என்றவாறு. சுருங்கை - கரந்துபடை. 67. யவனர் - மேலைநாட்டினர், துருக்கர் என்பர் அடியார்க்குநல்லார். அயிராது - ஐயமுறாது; ஐயமுறாதவண்ணம் புக்கு என்க. அஃதாவது நெஞ்சில் வஞ்சமின்மையின் அத்தகு மெய்ப்பாடுகள் சிறிதுமின்றிப் புகுந்தானாதலின் வாயிலோர் அயிராது புக விடுத்தனர் என்பது கருத்து.

கோவலன் மதுரையிற் கண்ட காட்சிகள்

67 - 75: ஆங்கு ................. புனலாட்டமர்ந்து

(இதன்பொருள்.) ஆங்கு - அவ்விடத்தே அமைந்த; ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய் திறந்தன்ன - ஆயிரம் கண்ணையுடைய அமரர் கோமானுடைய பெறுதற்கரிய மணியணிகலங்களைப் பெய்துவைத்த பணிப் பெட்டகத்தின் மூடியைத் திறந்து வைத்தாற்போன்ற வியத்தகு காட்சியமைந்த; மதில் அக வரைப்பில்-மதிலரண் சூழ்ந்த அகநகர்ப் பரப்பின்கண்; குடகாற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் மிகவும் விரைந்தியங்குகின்ற கோடைக்காற்று மோதுதலானே கொடியின்கண் துகில் மிக்கு நுடங்குகின்ற மறுகின்கண் வாழ்வோராகிய; கடைகழி மகளிர் - மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பு கடந்து ஒழுகுகின்ற பொதுமகளிர்; காதல் அம் செல்வரொடு - தாம் விரும்புகின்ற செல்வத்தோடே அழகும் மிக்கவராகிய காமுகரோடு கூடி; வருபுனல் வையை மருது ஓங்கு துறைமுன் - இடையறாது வந்து பெருகும் நீரையுடைய வையைப் பேரியாற்றின்கண்; மருது ஓங்கு துறைமுன் - மருதமரங்கள் மிக்குயர்ந்து நிற்றலானே திருமருத முன்றுறை என்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற நீராடு பெருந்துறையினின்றும்; விரிபூந்துருத்தி வெள்மணல் அடைகரை - மலர்கின்ற பூக்களையுடைய இடைக்குறையினது வெளிய மணலாலியன்ற அடைகரைக்கு; ஓங்கு நீர் மாடமொடு நாவாயியக்கி - உயர்ந்த பள்ளியோடத்தையும் தோணிகளையும் ஏறிச் செலுத்தியும் அவ்விடைக் குறைமருங்கில்; பூம்புணை தழீஇப் புனல் ஆட்டு அமர்ந்து - பொலிவுடைய தெப்பங்களைத் தழுவிக் கொண்டு நீந்தியும் இவ்வாறு நீர்விளையாட்டை விரும்பியும் என்க.

(விளக்கம்) அகநகரத்தே அணியுடன் றிகழும் மாடமாளிகைகளின் செறிவும் அளந்து கடையறியா வளங்கெழு தாரமொடு புத்தேன் உலகம் கவினிக் காண்வர மிக்குப்புகழ் எய்திய மதுரை என்பர் மாங்குடி மருதனார். மற்று ஈண்டு அடிகளார் அந்த மதுரையின் அகநகரை அவரினும் பன்மடங்கு விஞ்சி ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந்தன்ன மதிலக வரைப்பு என வியத்தகுமோருவமை தேர்ந்தோதுதலுணர்ந்து மகிழ்க. 70. ஆடித்திங்கள் என்பது தோன்ற, கோடைக் காற்றுக் கூறினர். 71. கடைகழி மகளிர் என்றது மகளிர்க்கியன்ற அறத்தின் வரம்பைக் கடந்தொழுகும் மகளிர் என்றவாறு. எனவே வரைவில் மகளிர் என்றாராயிற்று. காதல் அம் செல்வர் என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரை ஆற்றவும் இனிதாம். அதனையே யாமும் கூறினாம். 72. மருதோங்கு முன்றுறை என்றது திருமருத முன்றுறை. இத் துறை பண்டைக்காலத்துச் சிறந்திருந்தமை பிற நூல்களானும் உணரலாம். முன்றுறை - முன்பின்னாக மாறிநின்ற தொகைச்சொல். முன்றுறையினின்றும் நீர்மாடத்தும் நாவாயினும் சென்று துருத்தியின் மணலடைகரை எய்தி அவ்விடத்தே புணையான் நீந்தி ஆடினர் என்று கொள்க.

இது - மதுரை மாந்தர் பரத்தையரோடுகூடிச் சிறுபொழுதாறனுள் முதலாவதாகிய காலைப் பொழுதினைப் போக்கும்முறை கூறியவாறாம்.

நண்பகல்

76-82 : தண்ணறு ................ அமர்ந்தாங்கு

(இதன்பொருள்.) தண் நறுமுல்லையும் தாழ்நீர்க் குவளையும் கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி - இனி, குளிர்ந்த நறு மணங்கமழும் முல்லை மலரையும் ஆழ்ந்த நீர்நிலையிலே மலர்ந்த வளவிய குவளைமலரையும் தமது கண்போல மலர்ந்த நெய்தன் மலர்களையும் தமது கொண்டையிலே மிகுதியாகச் செருகி; வெள்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண் செங்கழுநீர்த் தாதுவிரி பிணையல் - வெண்மை நிறத்தாற் றிகழ்கின்ற மல்லிகையின் மலர்ந்த மலர்களோடே குளிர்ந்த செங்கழு நீர்மலரைக் கால் நெருங்கத் தொடுத்தமையாலே தலைமலர்ந்த மாலையை; கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு - தமது கொற்கைத் துறையிற் பிறந்த பெருமுத்தாற் செய்த வடத்தோடே மார்பகத்தே பூண்டு; தெக்கண மலயச் செழுஞ்சேறு ஆடி - தமது நாட்டின் தென்றிசைக் கண்ணதாகிய பொதியமலையிற் பிறந்த வளவிய சந்தனக் குழம்பைத் தமது மேனிமுழுதும் மட்டித்து; பொன்கொடி மூதூர்ப் பொழிலாட்டு அமர்ந்து - பொன்னாற் செய்த கொடிகளையுடைய பழையதாகிய தமது நகர்க்கு அயலவாகிய பூம்பொழில்களிலே புகுந்து ஆடுகின்ற விளையாட்டைப் பெரிதும் விரும்பி; என்க.

(விளக்கம்) 76. தாழ்தல் - ஆழ்தல். 77. கண்ணவிழ் - கண் போன்று மலர்ந்த: உவமவுருபு தொக்கது. கதுப்பு - கொண்டை. விரியல் - மலர்ந்த பூ. 80. கொற்கை - பாண்டியனாட்டில் ஒரு பட்டினம். ஈண்டுக் கிடைக்கும் முத்துச் சிறப்புடையது. முத்து - வடம்; ஆகுபெயர். 81. தெக்கணம் - வடமொழித் திரிபு. மலயத்திற் பிறந்த கொழுவிய சந்தனச் சேறு என்றவாறு. ஆங்கு : அசை. இஃது அவர் நண்பகற்பொழுது கழிக்குமாறு.

*எற்படு பொழுது

83 - 97 : எற்படு ............ காலமன்றியும்

(இதன்பொருள்.) எல் படு பொழுதின் - அந்திமாலைப் பொழுதின் கண் அப் பூம்பொழிலினின்றும் வந்து; இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் தகை பாராட்ட - இளநிலாத் தவழும் மேனிலை மாடத்து நிலாமுற்றத்திலேறி அவ்விடத்தே முன்னர்த் தாம் நீரினும் பூம்பொழிலினும் விளையாடியதனால் இளைத்த தன்மையைத் தங் கொழுநர் நலம் பாராட்டுமாற்றால் தீர்க்க; வீழ்பூஞ் சேக்கை மேல் இனிது இருந்து - ஒருவரையொருவர் பெரிதும் விரும்புதற்கிடனான மலர்ப்பாயலிலே கூடிமுயங்கி இன்பத்துள் அழுந்தியிருந்து; ஆங்கு - அப்பால்; அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇ - துகில் களைந்து சிவந்த பூத்தொழிலமைந்த பட்டாடையைத் தம்மிடையிலுடுத்து; குரல் தலைக்கூந்தல் - பூம் பொழில் விளையாட்டிற் கொய்து சூடிப் பின்னர்க் கூட்டத்தாற் குலைந்த பூங்கொத்துக்களையுடைய இடத்தையுடைய கூந்தலின் கண் அவற்றைக் களைந்து; குடசம் பொருந்தி - செங்குடசப் பூவைப் பொருந்த வைத்து முடிந்து; சிறுமலைச் சிலம்பின் செங்கூதாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாள்மலர் வேய்ந்து - சிறுமலை என்னும் மலையின்கண் அரிதின்மலரும் நறிய மலரையுடைய குறிஞ்சியினது புதுப்பூவைச் சூடி கொங்கையின் குங்கும வருணம் இழைத்து - கொங்கையின் மேலே குங்கும நிறமுடைய வருணத்தாலே கோலம் எழுதி; சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் - சிவந்த நறுமணச்சுண்ணம் அப்பிய மார்பகத்தே; செங்கோடு வேரிச் செழும்பூம் பிணையல் அம் துகிர்க் கோவை அணியொடு பூண்டு - சிவந்த கொடுவேரியின் செழிப்புமிக்க பூவாற்றொடுத்த மாலையினை அழகிய பவளக் கோவையோடு பூண்டு; மலைச் சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு - பறந்து திரியும் மலைகளின் சிறகினை அரிந்த வச்சிரப் படையையுடைய இந்திரனுக்கு; கலி கெழுகூடல் செவ்வணி காட்ட - ஆரவாரம் பொருந்திய அம் மதுரை மாநகரத்தில் தாம் இங்ஙனம் செவ்வணி அணிந்து காட்டற் பொருட்டு; கார் அரசாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் - முகிலை ஆளுகின்ற காலமாகிய அரசன் தன் பணி யாளனாகிய வாடை என்பானோடு வருகின்ற அக்காலமும்; அக் காலம் அன்றியும்; என்க.

(விளக்கம்) 71. கடைகழி மகளிர் காதலம் செல்வரொடு காலைப் பொழுதில், 72. வையைத் துறையில், 75. புனலாட்டமர்ந்து நண்பகலில், 82. பொழிலாட்டமர்ந்து பின்னர், 83. எற்படு பொழுதில் இளநிலா முன்றிலே அச் செல்வர் பாராட்டச் சேக்கைமேலிருந்து பின்னர், அம் முதுவேனிற் பருவம் தீர்ந்தபின் கார்ப்பருவம் முதலியவற்றின்கண் அக் காதலஞ் செல்வரொடு தாம் இன்பநுகருமாற்றை (76 ஆம் அடி முதலாக) தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்வாராக. அடிகளார் அம் மதுரையில் ஏனைய பருவங்களினும் எய்தும் இன்பத்தை விதந்தோதுகின்றனர் என்றுணர்க. இஃதோர் அழகிய புலமை வித்தகமாம். 86. அரை என்பதற்கு ஆகுபெயரான் மேகலை என்று கூறிச் செம்பட்டை மேகலைமீதே உடுத்து என்பர். 87. குடசம் - வெட்பாலை - சிறுமலை: பெயர். தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் என முன்னும் (நாடுகாண்-85) வந்தமை நினைக. நறுமலர் குறிஞ்சி மலர்களினும் செவ்வி மலர் தேர்ந்தணிந்தென்பார் நாண்மலர் அணிந்து என்று விதந்தார். இது பன்னீராட்டைக் கொருமுறை மலரும் என்ப 71. கடைகழி மகளிர் இங்ஙனம் தாம் செவ்வணி அணிந்து கூடலின் கண் வச்சிர வேந்தற்குக் காட்டுதற்குரிய காலமாகிய காரரசாளன் வாடையொடு வருங்காலம் என்க. எனவே ஈண்டுக் கூறப்பட்ட குடசம் முதலிய செம்மலர்கள் கார்ப்பருவத்தே மலர்வன என்பதும் அவற்றை மலர்விக்கும் கார்ப்பருவத்து முகில்கட்கு அரசனாகலின் அச் செய்ந்நன்றி கருதி வச்சிர வேந்தனுக்குக் காட்ட எண்ணினர் என்பதும் பெற்றாம். கார் அரசாளன் என்றது அப் பருவம் நிகழும் காலத்தை.

இது, கார்ப்பருவத்துக் கடைகழி மகளிர் கோலங் கொள்ளுமாற்றைக் கூறியபடியாம்.

கூதிர்ப்பருவ நினைவு

97 - 101 : நூலோர் ............ கூதிர்க்காலையும்

(இதன்பொருள்.) நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடத்து - இனி, சிற்பநூலோர் தம் நூன்முறைப்படி சிறப்பித்துச் செய்யப்பட்ட முகில்களைத் தடவுமாறுயர்ந்த மேனிலைமாடத்துப் பள்ளியறைக்கண் அக்காலத்துக் கொடுங்குளிரை மாற்றித் தம்முடம்பையும் தம்மைத் தழுவும் நம்பியருடம்பையும் வெப்பமேற்றுதற் பொருட்டு; நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு - நறிய சந்தனம் நீவிய மார்பையுடைய அந்நகர நம்பியரோடு ஒருங்கிருந்து; மடவரல் மகளிர்தரு அகில் விறகின் தடவு நெருப்பு அமர்ந்து - மடப்பம் வருதலையுடைய அப் பரத்தை மகளிர் மரக்கலங்கள் கொணர்ந்து தந்த அகிலாகிய நறுமணங் கமழும் விறகிட்டு மூட்டிய தடாக்களிலே கனலாநின்ற தீக்காய்தலை விரும்பி; குறுங்கண் அடைக்கும் - அம் மாடத்தின்கண் குறிய கண்களையுடைய சாளரங்களை வாடைகாற்றுப் புகாவண்ணம் சிக்கென அடைத்தற்குக் காரணமான; கூதிர்காலையும் கூதிராகிய காலமும் என்க;

(விளக்கம்) இது கூதிர்ப்பருவத்தே (பரத்தை மகளிர் தம்மை விரும்பிவரும் நகர நம்பியரோடு) தடவு நெருப்பினால் உடம்பினை வெப்பமேற்றிக்கொண்டு இன்ப நுகருதலை எண்ணியவாறாம். கூதிர் முதலிய குளிர்ப் பருவங்களிலே வெப்பம் காமப் பண்பிற்கு ஆக்கஞ் செய்யும்; மற்று இளவேனில் முதலிய வெப்பமுடைய பருவங்களிலே குளிர் அப் பண்பிற்கு ஆக்கமாம். ஈண்டு மனையறம்படுத்த காதைக் கண் குளிர்தரு தென்றலை விரும்பி மகளிர் சாளரம் திறக்கின்ற செவ்வி பார்த்து, கோலச் சாளரங் ருறுங்கண் நுழைத்து வண்டொடுபுக்க மணவாய்த் தென்றல் கண்டுளஞ் சிறந்து என வருகின்ற அடிகள் நினைவிற் கொள்ளற்பாலன. மற்றுக் கூதிர்ப்பருவத்தே தடவு நெருப்பமர்ந்து என்னுமிதனோடு

கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப (53-7)

எனவும்,

....... .......... .......... ........ ....... .........
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார  (61)

எனவும் வரும் நெடுநல்வாடை அடிகள் நினைவுகூரற்பாலன.

முன்பனிப் பருவ நினைவு

102 - 105 : வளமனை .............. அச்சிரக்காலையும்

(இதன்பொருள்.) வளமனை மகளிரும் மைந்தரும் - வளப்பம் பொருந்திய மனையின்கண் வாழும் மகளிரும் ஆடவரும்; இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரும்பி - இளைதாகிய நிலாவொளியை நுகர்தற்கியன்ற நிலாமுற்றத்திலே ஏறி அந்நிலவொளியை விரும்பாராய் மேலைத்திசையில் வீழ்கின்ற ஞாயிற்றினது பச்சை வெயிலை நுகர்தற்கு அவாவுமாறு; விரிகதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு - ஒளிவிரிக்கின்ற அஞ்ஞாயிற்று மண்டிலம் ஆற்றவும் தென்கிழக்கிலே தோன்றி மறைதற்குக் காரணமாய்; அரிதில் வெண்மழை தோன்றும் - ஒவ்வொரு பொழுதில் வெண்முகில் தோன்றுதற்கிடனான; அச்சிரக்காலையும் - முன்பனிக் காலமும் எவ்விடத்துள்ளன? என்க.

(விளக்கம்) இள நிலா என்றது மாலைப்பொழுதில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்து நிலவுகளை. நுகர்தல் கண்ணாற் பார்த்து அதன் அழகால் உள்ளுள்ளே மகிழ்தல். வெண்மழை - வெள்ளை முகில்; பனிமாசுமாம் எவ்விடத்துள்ளன என ஒரு சொல் வருவிக்க.

பின்பனிக் காலம்

106 - 112 : ஆங்கதன்றியும் ........... யாண்டுளன்

(இதன்பொருள்.) ஆங்கு அது அன்றியும் - அந்த முன்பனிக்காலம் அல்லாமலும்; தொண்டியோர் ஓங்கு இரும்பரப்பின் வங்க சட்டத்து இட்ட - தொண்டிப்பட்டினத்தில் உள்ள வணிகர் கீழ்த்திசையில் உள்ள நாடுகளிற் சென்று தொகுத்து உயர்ந்த அலைகளையுடைய பெரிய நீர்ப்பரப்பையுடைய கடலின்கண் தமது மரக்கலங்களின் தொகுதியுள் இட்டுக்கொணரும்; அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த - அகிலும் பட்டும் சந்தனமும் நறுமணப் பொருளும் கருப்பூரமும் என்னும் இவற்றை அவ்வங்கத்திரளோடு சுமந்து வந்த; கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும் - தன் நண்பனாகிய கொண்டற் காற்றோடு பாண்டியனுடைய மதுரையிலே புகுந்து வெவ்விய கண்ணையுடைய காமவேளுடைய வில் வெற்றி நிகழாநின்ற திருவிழாவைக் கண்டு களிக்கும்; பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன் - பங்குனித் திங்கள் ஈறாகப் பொருந்திய பின்பனிக் காலமாகிய அரசன் எவ்விடத்துளன்? என்க.

(விளக்கம்) இதற்குக் குணதிசைக்கண் தொண்டி என்னும் பதியிலுள்ள அரசரால் வங்கத்திரளோடு திறையிடப்பட்ட அகில் முதலிய பொருள்கள் என அடியார்க்குநல்லார் கூறும் உரை பொருந்தாமை யுணர்க. தொண்டியில் உள்ள வணிகர் கீழ்த்திசையிலுள்ள கடலிடையிட்ட நாடுகளிற் கலத்தொடு சென்று ஈட்டிக்கொணரும் அகில் முதலியன என்பதே சிறந்த உரையாம். கொண்டல் - கீழ்த்திசைக் காற்று - இக்காற்று மரக்கலங்களையும் அவற்றில் கொணரும் அகில் முதலியவற்றின் மணங்களையும் சுமந்து வந்தது என்க. கொண்டற் காற்று பங்குனித் திங்களில் வருவது இயல்பு. ஆதலின் அதனை அக்காலத்திற்கு நண்பன் என்றார், அடியார்க்குநல்லார்.

இனி, அவர் தொரு என்பதனை அகில் துகில் ஆரம் வாசம் கருப்பூரம் முதலியவற்றோடும் தனித்தனி கூட்டி உரைக்கின்ற பொருள் வருமாறு:

அகில் : அருமணவன் தக்கோலி கிடாரவன் காரகில் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாய தொகுதியும், துகில் : கோசிகம் பீதகம் பச்சிலை அரத்தம் நுண்டுகில் சுண்ணம் வடகம் பஞ்சு இரட்டு பாடகம் கோங்கலர் கோபம் சித்திரக்கம்மி குருதி கரியல் பாடகம் பரியட்டக் காசு வேதங்கம் புங்கர்க் காழகம் சில்லிகை தூரியம் பங்கம் தத்தியம் வண்ணடை கவற்றுமடி நூல்யாப்பு திருக்கு தேவாங்கு பொன்னெழுத்து குச்சரி தேவகிரி காத்தூலம் இறைஞ்சி வெண்பொத்தி செம்பொத்தி பணிப்பொத்தியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், ஆரம் : மலையாரம் தீமுரன்பச்சை கிழான்பச்சை பச்சை வெட்டை அரிசந்தனம் வேரச்சுக் கொடியென்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், வாசம் : அம்பர் எச்சம் கத்தூரி சவாது சாந்து குங்குமம் பனிநீர் புழுகு தக்கோலம் நாகப்பூ இலவங்கம் சாதிக்காய் வசுவாகி நிரியாசம் தைலம் என்று சொல்லப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும், கருப்பூரம் : மலைச்சரக்கு கலை அடைவு சரக்கு மார்பு இளமார்பு ஆரூர்க்கால் கையொட்டுக்கால் மாரப்பற்று வராசான்கும டெறிவான் உருக்குருக்கு வாறோசு சூடன் சீனச்சூடன் என்று பெயர் கூறப்பட்ட பலவகைத்தாகிய தொகுதியும் எனத் தொகுத்தும் விரித்தும் பொருளுரைக்க எனவரும்.

இளவேனில்

113 - 117 : கோதை ........... கொல்லென்று

(இதன்பொருள்.) கோதை மாதவி கொழுங்கொடி எடுப்ப - மாலை போல மலருகின்ற குருக்கத்தி வளவிய கொடியை உயர்த்தவும்; காவும் கானமும் கடிமலர் ஏந்த - இளமரக்காவும் நந்தவனமும் மணமுடைய மலர்களை ஏந்தா நிற்பவும்; தென்னவன் பொதியில் தென்றலோடு புகுந்து - பாண்டியனுடைய பொதியமலைக்குரிய தென்றற் காற்றோடு வந்து புகுந்து; மன்னவன் கூடல் மகிழ்துணை தழுவும் - அப்பாண்டியனுடைய மதுரை நகரின்கண் காதலாலே தம்முள் மகிழ்கின்ற காதலர்களைத் தழுவிக்கொள்ளச் செய்கின்ற இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று - இனிய இளவேனில் என்னும் அரசன் எவ்விடத்துளனோ என்று; என்க.

(விளக்கம்) மாதவி - குருக்கத்தி. கானம் - பூம்பொழிலுமாம். தழூஉம் - தழுவுவிக்கும் எனப் பிறவினைப் பொருள் குறித்து நின்றது கொல் : அசை.

118 - 119 : உருவ .................. காலை

(இதன்பொருள்.) உருவக் கொடியோர் உடைப்பெரும் கொழுநரொடு பருவம் எண்ணும் - அழகிய பூங்கொடி போல்பவராகிய மகளிர் தம்மையுடைய பெரிய காதலரோடு இங்ஙனமாகிய இன்பங்களை நுகர்தற்குரிய அவ்வப் பருவ வரவை நினைகின்ற; படர்தீர் காலை - துன்பம் நீங்கிய காலத்தில்; என்க.

(விளக்கம்) உருவம் - அழகு. கொடி - பூங்கொடி. இதுநாறுங் கூறப்பட்ட இவரைப் புறவீதி மகளிராய் முற்கூறிய கடைகழி மகளிர் என்பர் அடியார்க்கு நல்லார்.

முதுவேனிற் காலம்

120 - 125: கன்றமர் .......... நாள்

(இதன்பொருள்.) கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க - கன்றுகளை விரும்புகின்ற பிடிக்கூட்டங்களோடே அவற்றைக் காக்கும் களிற்றியானைக் கூட்டமும் கண்டு அச்சத்தால் நடுங்கும் படி; என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டுக் காடு தீப்பிறப்பகனை எரி பொத்தி - வெயில் நிலைபெற்ற மலைசார்ந்த நல்ல நாடாகிய குறிஞ்சி நிலத்திலேயுள்ள காடுகளில் நெருப்புத் தோன்றச் செய்து அவற்றை முழங்குகின்ற அழலை மூட்டி; கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட வேனில் வேந்தன் - கோடைக் காற்றோடு வந்து புகுந்து மதுரையை ஆட்சி செய்த முதுவேனில் என்னும் அரசன்; வேற்றுப்புலம் படர ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் - தனதாட்சியைக் கைவிட்டு வேறிடங்களுக்குப் போவதற்கு நினைக்கின்ற மிக்க வெயிலையுடைய இறுதி நாளிலே; என்க.

(விளக்கம்) ஆயம் - கூட்டம். கன்றவர் என்றதனால் பிடிக் கூட்டம் என்க. காட்டின்கண் தீமூள அதுகண்டு யானைகள் நடுங்க என்றவாறு. என்றூழ் - வெயில். கோடையில் காட்டுத்தீ தோன்றுதலியல்பு. ஓசனித்தல் - போதற்கு ஒருப்பட்டு முயலுதல்; உடை திரை முத்தஞ் சிந்தவோ சனிக்கின்ற வன்னம் எனவரும் சிந்தாமணியினும் (2652) அஃது அப் பொருட்டாதல் உணர்க. வேற்றுப் புலம்படர என்றதற்கு ஓரோர் தேயத்திற்கு ஓரொரு காலம் மாறி நிகழ்தலின் வேற்றுப் புலம்படர வென்பர் அடியார்க்குநல்லார்.

இதுவுமது

126 - 133 : வையமும் ............... மயங்கி

(இதன்பொருள்.) வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் - கூடாரப் பண்டியும் கடகத்தண்டும் பல்லக்குமாகிய சிவிகைகளும் வரிசையாகப் பெற்றதேயன்றி நீராவிச் சோலைக்கண்ணே தனக்குப் பொருந்திய துணையாய் வந்து விளையாடும் மகிழ்ச்சிக்குக் காரணமான சிறப்பும்; சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும் கூர் நுனை வாளும் - கவரிமயிராலியன்ற சாமரை இரட்டுதலும் பொன்னாலியன்ற அடைப்பை ஏந்துதலும் கூரிய நுனியையுடைய உடைவாள் எடுத்தலும் ஆகிய சிறப்புகளும்; கோமகன் கொடுப்ப - தம் அரசன் தமக்கு வழங்குதலாலே; பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொன்தொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து - அச் சிறப்புகள் வழிவழியாக மாறாமல் வருகின்ற வாழ்க்கையை யுடைய பொன்னாலியன்ற வளையலணிந்த அம் மகளிர் நாள்தோறும் புதியவரோடு மணம் புணர்ந்து; செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம் தீந் தேறல் மாந்தினர் மயங்கி - செம்பொன்னாலியன்ற வள்ளத்தில் ஏவல் மகளிர் ஏந்திக்கொடுக்கும் அழகிய இனிய கள்ளாகிய தேறலைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி; என்க.

(விளக்கம்) வையம் - ஒருவகை வண்டி. சிவிகை - கடகத்தண்டும் பல்லக்கும் என இருவகைப்படும். உய்யானம் - விளையாட்டுப் பொழில். அங்கு நீர்நிலையும் இருத்தலால் நீராவிச்சோலை என்றார் (அடியார்க்கு நல்லார்.) இம்மகளிர் அரசனோடு விளையாடும்பொழுது மெய்தொட்டும் புணைதழுவியும் விளையாடுகின்ற உரிமை பெற்றவர் ஆவர். மேலும் கவரி இரட்டுதலும் அடைப்பை ஏந்தலும் உடை வாள் எடுத்தலும் ஆகிய சிறப்புரிமை பெற்றவரும் ஆவார். இச் சிறப்புகள் வழி வழியாக அவர் மரபுக்கு உரியன என்பது தோன்ற, பிறழா வாழ்க்கை என்றார். செல்வம் என்றது இச் சிறப்புகளை என்க. சாமரை - கவரிமான் மயிராலியன்றது என்பது தோன்ற, சாமரைக் கவரி என்றார். புதுமணம் புணர்ந்தமையால் உண்டான இளைப்புத் தீர்தற்குத் தேறல் பருகுவர் என்றவாறு.

இதுவுமது

134 - 145 : பொறிவரி ............. வீதியும்

(இதன்பொருள்.) காவி அம் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய அம் மகளிர்; பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிது இடம் கடிந்து ஆங்கு - கள் மயக்கத்தால் இமையில் மறைகின்ற தமது விழிகளைப் பூவின் இதழில் மறைகின்ற தமது இனம் என்று கருதிச் சேர்ந்த பொறியையும் பாட்டையும் உடைய வண்டுகளை அகற்றக் கருதியவர் கை சோர்ந்து நறிய மலர் மாலையாலே அவ் வண்டுகள் மொய்த்த இடத்தில் அல்லாமல் வறிய இடங்களிலே புடைத்து முன்னர்; இலவு இதழ்ச் செவ்வாய் இளமுத்து அரும்பப் புலவிக் காலத்து போற்றாது உரைத்த கட்டுரை எட்டுக்கு நாவொடு நவிலா நகைபடு கிளவியும் - இலவ மலர் போலும் தமது சிவந்த வாயின்கண் இளமுத்துப் போன்ற தமது எயிறுகள் அரும்பும்படி தம்முடைய காதலரோடு ஊடிய பொழுது கூறக்கருதியவற்றைக் கூறாமலே விடுத்து மயக்கம் காரணமாகச் செவ்வி தேறாமல் கூறிய புலவிப் பொருள் பொதிந்த சொல்லாகிய எட்டு வகை இடத்தோடும் பொருந்த நாவினாலே எழுத்துருவம்படக் கூறப்பெறாமல் குழறுதலாலே கேட்டோர்க்கு நகைச்சுவை தோற்றுவிக்கும் மொழியும்; அம் செங்கழுநீர் அரும்பு அவிழ்த்து அன்ன செங்கயல் நெடுங்கண் செழுங்கடைப் பூசலும் - அழகிய செங்கழுநீர் அரும்பை நெகிழ்த்துப் பார்த்தாலொத்த சிவந்த கயல்போலும் நெடிய கண்ணினது கடையால் செய்த பூசலும்; கொலை வில் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறு நுதல் அரும்பிய வியரும் - கொலை செய்தற்குக் குனித்த வில்லைப்போன்று புருவத்தின் கோடிகள் வளையாநிற்பத் திலகம் பொருந்திய சிறிய நுதலின்கண் அரும்பிய வியர்வையுமாகிய இவை தீரும்; செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும் - செவ்வி பார்த்து வருந்துகின்ற செழிப்புடைய குடியிற் பிறந்த செல்வரோடே உலகத்தைக் காவல் செய்கின்ற மன்னர்களும் விரும்புதற்குக் காரணமான வீதியும்; என்க.

(விளக்கம்) பொறி - புள்ளி. வரி - வரிப்பாட்டு; கோடு எனினுமாம். புல்லுதல் - தம் இனமென்று கருதித் தழுவுதல். கள்ளுண்டு மயங்கிய மகளிருடைய கண்கள் இமையுள் மூழ்குவது கண்டு அவற்றை வண்டுகள் பூவிதழுள் மறைகின்ற வண்டுகள் என்று கருதிப் புல்லும் எனவும் அவற்றை ஒட்டக் கருதி அம் மகளிர் மாலையாலே புடைப்பவர் அவை இல்லாத இடங்களிலே கைசோர்ந்து புடைப்பர் எனவும் கொள்க. இதனோடு :

ஒருத்தி, கணங்கொண்டவை மூசக் கையாற்றாள் பூண்ட, மணங்கமழ் கோதை பரிவுகொண்டோச்சி (கலி. 92 : 45 - 50) எனவும், ஒருத்தி, இறந்தகளியா ணிதழ்மறைந்த கண்ணள், பறந்தவைமூசக் கடிவாள் கடியும், இடந்தேற்றாள் சோர்ந்தனள்கை (கலி. 92:48-50) எனவும் வருவனவற்றை ஒப்புநோக்குக.

கட்டுரை - புலவிப் பொருள் பொதிந்த வுரை. எட்டு - எண்வகை இடம்; அவையாவன: தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன. இதற்கு எடுக்குநர்; எடுக்கும் எனவும் பாடம்.

கிளவியும் பூசலும் வியரும் தீரும் செவ்விபார்க்கும் செல்வர்; என்க. இம்மகளிர் அரசன் காவன் மகளிர்; என்க.

இதுவுமது

146 - 147: சுடுமண் ............... வாழ்க்கை

(இதன்பொருள்.) வடுநீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடிமனை சுடுமண் ஏறா வாழ்க்கை - கொடுங்கோன்மையாகிய குற்றம் நீங்கும் செங்கோற் சிறப்பினையுடைய முடி சூடிய அரசரும் தங்கி இருத்தற்குரிய காவலையுடைய குற்றப்படாத தூய வாழ்க்கையையுடைய; என்க.

(விளக்கம்) இனி, சுடுமண் ஏறா என்பதனை மனைக்கு அடையாக்கி ஓடு வேயாத மனை என்பாரும் உளர். அவ்வுரை சிறப்பின்று. இனி, கூத்தியர் சாதியில் குற்றப்பட்டால் தலையிலே செங்கல் ஏற்றி ஊர் சூழ்வித்துக் கழித்து விடுதல் மரபு; இதனை, மற்றவன் றன்னால் மணிமேகலைதனைப் பொற்றேர்க்கொண்டு போதேனாகிற் சுடுமணேற்றி யாங்குஞ் சூழ் போகி, வடுவொடு வாழுமடந்தையர் தம் மோரனையேனாகி யரங்கக் கூத்தியர், மனையகம் புகாஅ மரபினன் என, மணிமேகலையிற் (18:31-6) சித்திராபதி வஞ்சினங் கூறுதலானு மறிக.

இதுவுமது

148 - 151 : வேத்தியல் ............ உணர்ந்து

(இதன்பொருள்.) வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து மாத்திரை அறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் - வேத்தியல் பொதுவியல் என்று சொல்லப்பட்ட இருவகைக் கூத்துகளின் தாள அறுதிகளை யறிந்து அவை மயங்காத முறைமையினாலே ஆடுகின்ற ஆடலும் எண் வகையாகிய வரிக்கூத்துகளும்; பாணியும் தூக்கும் கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து - தாளங்களும் இத் தாளங்களின் வழிவரும் எழுவகைத் தூக்குகளும் இவற்றோடுகூடி யிசைக்கும் நால்வகைத் தோற்கருவிகளின் கூறுபாடுகளும் உணர்ந்து; என்க.

(விளக்கம்) கூத்து - ஆடல், வரி, பாணி, தூக்கு, குயிலுவக் கருவி எனவரும் இவற்றின் விளக்கங்களை அரங்கேற்றுகாதையின்கண் விளக்கமாகக் காண்க.

இதுவுமது

152 - 156 : நால்வகை ............ கூத்தியும்

(இதன்பொருள்.) நால்வகை மரபின் அவினயக் களத்தினும் - நால்வகைப்பட்ட மரபினையுடைய அவினய நிலத்தானும்; ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பு அருஞ்சிறப்பின் தலைக்கோல் அரிவையும் - எழுவகைப்பட்ட நிலத்தினும் சென்றெய்தும்படி கோப்புகளை விரித்துப் பாடும் மலைத்தல் அரிய சிறப்பினையுடைய தலைக்கோலி என்னும் பட்டமெய்திய கூத்தியும்; வாரம் பாடும் தோரிய மடந்தையும் - பற்றுப்பாடும் தோரிய மடந்தையும்; தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் - தலைப்பாட்டைப் பாடும் கூத்தியும் இடைப்பாட்டைப் பாடும் கூத்தியும்; என்க.

(விளக்கம்) அவினய நிலம் நான்காவன: நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல் என்பன. எழுவகை நிலமாவன: ச,ரி,க,ம,ப,த,நி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதலாகிய ஏழும்.

வாரம் பாடுதல் - பற்றுப் பாடுதல் பின்பாட்டுப் பாடுதல். தோரிய மடந்தை - ஆடி முதிர்ந்த கூத்தி. தலைப்பாட்டு - இதனை உகம் எனவும், இடைப்பாட்டு - இதனை ஒளகம் எனவும் கூறுவர். இவையிற்றிற்கெல்லாம் முன்னம் அரங்கேற்று காதைக்கண் விளக்கங் கூறப்பட்டன.

இதுவுமது

157 - 167 : நால்வேறு ............. வீதிகளும்

(இதன்பொருள்.) நால்வேறு வகையின் நயத்தகு மரபின் - நால்வகையோடுங் கூடி யாவரும் விரும்பத்தக்க முறைமையினால்; எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு - ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை: முட்டா வைகல் முறைமையின் வழா - நாடோறும் முட்டாது பெறும் முறைமையினின்றும் வழுவாத; தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு - தீண்டி வருத்தும் அணங்குபோல்வாருடைய கண்ணாகிய வலையிலகப்பட்டு; அரும்பெறல் அறிவும் பெரும் பிறிதாக - தமது பெறுதற்கரிய அறிவும் கெட்டொழிய; தவத்தோர் ஆயினும் - தவநெறியில் ஒழுகும் பெரியோராயினும் அல்லது; தகைமலர் வண்டின் நகைப் பதம் பார்க்கும் இளையோர் ஆயினும் - அழகிய மலர்தோறும் தாவித் தாவிச்சென்று அவற்றின் தேனைப் பருகிப் பின் பாராது செல்லும் வண்டுபோல ஒருத்தியிடத்தே தங்காமல் நாள்தோறும் புதிய புதிய பரத்தை மகளிரைப் புணர்ந்து செல்லுகின்ற காமுகராயினும் அல்லது; காம விருந்தின் மடவோர் ஆயினும் - காமவின்பத்திற்குப் புதியோராய் முன்பு நுகர்ந்தறியாத பேதையோர் ஆயினும்; ஏம வைகல் இன்துயில் வதியும் - நாள்தோறும் புணர்ச்சிமயக்கத்தோடு கூடிய இனிய துயிலோடே தங்குதற்குக் காரணமான; பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் எண் எண் கலையோர் இருபெரு வீதியும் பண்களையும் அவற்றின் திறங்களையும் பழித்த இனிய சொல்லையுடைய அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத்துறை போகிய கணிகை மகளிர் உறைகின்ற இருவகைப்பட்ட பெரிய வீதிகளும்; என்க.

(விளக்கம்) நால்வேறு வகை என்றது தலைக்கோலரிவை, தோரிய மடந்தை, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி என்னும் நால்வகையினரையும் என்க. அவருள் அணங்கு அனையார்க்கு ஆயிரத்தெண்கழஞ்சு பொன் ஒருநாளைப் பரியப் பொருள் என்க. எனவே ஏனைய மகளிர்க்கு அவரவர் தகுதிக்கேற்ற பொருள் பரியமாம் என்பது பெற்றாம். இனி இதனை விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒருமுறையாகப் பெற்றனள் எனவரும் அரங்கேற்று காதையானும் (162-3) உணர்க. பெரும் பிறிதாதல் - இறத்தல்; ஈண்டுக் கெடுதல் மேற்று. ஏமம் - மயக்கம். கிளை, கிள்ளை எனினுமாம். இருபெரு வீதி என்றது சிறுபொருள் பெறுவார் வீதியும், பெரும்பொருள் பெறுவார் வீதியும் ஆகிய இருபெரு வீதியும் என்றவாறு.

அங்காடித் தெரு

168 - 179: வையமும் .................. அங்காடி வீதியும்

(இதன்பொருள்.) வையமும் - கொல்லாப் பண்டியும்; பாண்டிலும் - இரண்டுருளையுடைய சகடமும்; மணித்தேர்க் கொடிஞ்சியும் - அழகிய தேர் மொட்டும்; மெய்புகு கவசமும் - மெய் புகுதற்கிடமாகிய கவசமும்; வீழ்மணித் தோட்டியும் - விரும்பப்படும் மணிகள் பதித்த அங்குசமும்; அதள்புனை அரணமும் - தோலாற் செய்யப்பட்ட கைத்தளமும்; அரியாயோகமும் - அரைப்பட்டிகையும்; வளைதரு குழியமும் - வளை தடியும்; வால் வெண்கவரியும் -மிக வெள்ளிய சாமரையும்; ஏனப் படமும் - பன்றி முகக் கடகும்; கிடுகின் படமும் - சிறு கடகும்; கானப்படமும் -காடெழுதின கடகும்; காழ் ஊன்று கடிகையும் - குத்துக் கோல்களும்; செம்பிற் செய்நவும் - செம்பாற் செய்தனவும்; கஞ்சத் தொழிலவும் - வெண்கலத்தாற் செய்தனவும்; வம்பின் முடிநவும் - கயிற்றால் முடிவனவும்; மாலையின் புனைநவும் - கிடையால் மாலையாகப் புனைவனவும்; வேதினத் துப்பவும் - ஈர்வாள் முதலிய கருவிகளும்; கோடுகடை தொழிலவும் - தந்தத்தைக் கடைந்து செய்த தொழிலையுடையவையும்; புகையவும் வாசப் புகைக்கு உறுப்பாயுள்ளனவும்; சாந்தவும் - மயிர்ச்சாந்துக்கு உறுப்பாயுள்ளனவும்; பூவிற் புனைநவும் - பூவாற் புனையப்படும் மாலைகளும் ஆகிய; வகை தெரிவு அறியா - வேறுபாடு தெரிதற்கரிய; வளம் தலை மயங்கிய - இன்னோரன்ன வளங்கள் கலந்து கிடக்கின்ற; அரசு விழை திருவின் அங்காடி வீதியும் - அரசரும் காணவிரும்பும் செல்வத்தையுடைய அங்காடித் தெருவும்; என்க.

(விளக்கம்) 198 - முதலாக, 179 - ஈறாக கம்மியர் முதலாயினாரால் பண்ணப்பட்ட பொருள்கள் விற்கும் அங்காடி கூறுகின்றார். 171. வளைதரு குழியமும் என்பதற்கு வாசவுண்டை என்பாரும் கட்டுக்குழியம் என்பாரும் உளர். கானப்படம் - யானை, சிங்கம் முதலிய ஓவியம் எழுதப்பட்ட கடகு எனினுமாம். 175. வம்பின் முடிந என்றது, அல்லிக்கயிறு, குசைக்கயிறு முதலியன; வம்பு - கயிறுமாம். 176. துப்ப - வலிமையுடைய கருவிகள். இவ்வங்காடியைப் பெரிய கடைத்தெரு என்பாரும் உளர்.

மணிக்கடை

180 - 183 : காக ............... ஒளியவும்

(இதன்பொருள்.) காகபாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி - காகபாதம் களங்கம் விந்து இரேகை என்று கூறப்படுகின்ற பெருங்குற்றங்கள் நான்கும் நீங்கப்பெற்று; நூலவர் நொடிந்த இயல்பிற் குன்றா - நூலோரால் வரைந்து சொல்லப்பட்ட குணங்களிற் குன்றுதல் இல்லாத; நுழை நுண் கோடி - மிகவும் கூர்த்த விளிம்புகளையும் உடைய; நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும் - நான்கு சாதிகளையுடைய நல்ல நிறம் உடையனவும் ஆகிய வயிரங்களும்; என்க.

(விளக்கம்) காகபாதம் முதலிய நான்கும் பெருங்குற்றம் ஆதலின் அவற்றை விதந்தார்.

இனி இவ் வயிரத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறிய விளக்கம் வருமாறு:

இவற்றுட் குற்றம் பன்னிரண்டாவன: சரைமலம் கீற்றுசப்படி பிளத்தல் துளை கரி விந்து காகபாதம் இருத்து கோடியில்லன கோடி முரிந்தன தாரை மழுங்கலென விவை; சரைமலங் கீற்று சப்படி பிளத்தல், துளைகரி விந்து காகபாதம், இருத்துக்கோடிக ளிலாதன முரிதல் தாரை மழுங்க றன்னோ டீராறும் வயிரத் திழிபென மொழிப என்றாராகலின். இனிக் குணங்கள் ஐந்தாவன: எட்டுப் பலகையும், ஆறு கோடியும், தாரையும், சுத்தியும், தராசமுமென விவை; பலகையெட்டுங் கோண மாறும், இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும், ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர், இந்திர சாபத் திகலொளி பெறினே என்றார். நால்வகை வருணத் தொளியாவன: அந்தணன் வெள்ளை யரசன்சிவப்பு, வந்த வசியன் பச்சை சூத்திரன், அந்தமில் கருமையென் றறைந்தனர் புலவர் இனி, மிக்க குற்றங்கள் நான்கின் பயனாவன: காக பாத நாகங் கொல்லும், மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும், விந்து சிந்தையிற் சந்தா பந்தரும், கீற்றுவரவினை யேற்றவர் மாய்வர் எனவரும். இனி, வருண நான்கின் பயனாவன: மறையோ ரணியின் மறையோ ராகிப், பிறவியேழும் பிறந்து வாழ்குவரே, மன்னவ ரணியின் மன்னவர் சூழ, இந்நில வேந்த ராவரெழு பிறப்பும் வணிக ரணியின் மணிபொன் மலிந்து, தணிவற வடைந்து தரணியில் வாழ்வார், சூத்திர ரணியிற் றோகையர் கனகநெல், வாய்ப்ப மன்னி மகிழ்ந்து வாழ்குவரே எனவரும். ஏகை - இரேகை. இயல்பெனவே பலகை எட்டென்பதூஉம், கோடி ஆறென்பதூஉம் பெறுதும். குன்றா வென்பதனை அருத்தா பத்தியாக்கிக் குன்றுதலை யுடையவெனக் குற்றம் நான்கிற்கும் ஏற்றுக. நுழை நுண்கோடி - இருபெயரொட்டாய் மிகவும் கூர்த்த கோடி யென்பதாயிற்று. ஒளியவெனவே குறிப்பெச்சமாய் வலனென்பதாயிற்று.

வயிரம் வலன் என்னும் அவுணனைக் கொன்றுழி அவனுடைய எலும்பினின்றும் உண்டாயின என்பர். இனி, அவன் வயிற்றில் பித்தத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் நகைத்துழி, உமிழப்பட்ட அப்பித்தம் இமயமலை முதலிய பல மலைகளினும் வீழ்ந்து ஊறியதனால் மரகதம் எனும் மணி தோன்றிற்று எனவும், அதனால் அது கருடோற்காரம் என்று பெயர் பெற்றது எனவும் கூறுப.

மரகதமணி

184 - 185: ஏகையும் .................. ஒளியவும்

(இதன்பொருள்.) ஏகையும் மாலையும் இருளொடு துறந்த - ஏகை, மாலை, இருள் என்னும் பெருங்குற்றங்களை நீங்கின; பாசு ஆர் மேனி பசுங் கதிர் ஒளியவும் - பசுமை நிறைந்த உருவத்தையுடைய பச்சையொளி பரவிய மரகதமணி வகைகளும்; என்க.

(விளக்கம்) ஏகை - இரேகை (கீறல்). கீறல் முதலிய இம் மூன்று குற்றங்களும் பெருங் குற்றங்களாம். எனவே அவற்றை விதந்தா; என்க. இனி, இம் மரகதமணிக்குக் குற்றங்களும் குணங்களும் அடியார்க்கு நல்லார் பின்வருமாறு கூறிவர்.

இதற்குக் குற்றமெட்டு உள; அவை : கருகல் கல்மணல் கீற்று பொரிவு தராசம் இறுகுதலென விவை; என்னை? கருகுதல் வெள்ளை கன்மணல் கீற்றுப், பொரிவு தராச மிறுகுகள் மரகதத் தெண்ணிய குற்ற மிவையென மொழிப என்றாராகலின்; இவற்றுள், மிக்க குற்றமுடையன இம்மூன்று மென்றாரென்க. மாலை - தார்; இருள் - கருகுதல். பாசார் மேனிப் பசுங்கதிரொளி யென்ற மிகையானே குணங்களும் எட்டென்பதே பெறுதும்; நெய்தல் கிளிமயிற் கழுத்தொத்தல் பைம் பயிரிற், பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல், பத்தி பாய்தல் பொன்வண் டின்வயி, றொத்துத் தெளிதலோ டெட்டுங் குணமே என்றாராகலினெனக் கொள்க எனவரும்.

மாணிக்கமணி

186 - 187: பதும ............. சாதியும்

(இதன்பொருள்.) விதி முறை பிழையா விளங்கிய - நூல்களில் விதித்த முறையில் பிழைபடாதனவாய் விளங்கிய; பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் சாதியும் - பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிமாணிக்க வகையும்; என்க.

(விளக்கம்) விதிமுறை பிழையாவெனவே பிறப்பிடமும், வருணமும், பெயரும், குணமும், குற்றமும், நிறமும், விலையும் பத்தியு மென்னுமிவையும் பிறவும் அடங்கின; என்னை? மாணிக்கத் தியல் வகுக்குங் காலைச், சமனொளி சூழ்ந்த வொருநான் கிடமும், நால்வகை வருணமும் நவின்றவிப் பெயரும், பன்னிரு குணமும் பதினறு குற்றமும், இருபத்தெண்வகை யிலங்கிய நிறமும், மருவிய விலையும் பத்தி பாய்தலும், இவையென மொழிப வியல்புணர்ந் தோரே என்றாகலின். இவற்றுள், பதுமம் - பதுமராகம்; சாதுரங்க மென்பதும் அது. நீலம் - நீலகந்தி; சவுகந்தி என்பதும் அது. விந்தம் - குருவிந்தம்; இரத்தவிந்து வென்பதுமது. படிதம் - கோவாங்கு; என்னை? வன்னியிற் கிடக்கும் வருணநாற் பெயரும், உன்னிய சாது ரங்க மொளிர் குருவிந்தம், சவுகந்தி கோவாங்கு தானா கும்மே எனவும், தாமரை கழுநீர் சாதகப் புட்கண் கோப மின்மினி கொடுங்கதிர் விளக்குமாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும், ஓதுசா துரங்க வொளியாகும்மே எனவும், திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக் கவிர்மலர் குன்றிமுயலுதி ரம்மே, சிந்துரங்குக்கிற் கண்ணென வெட்டும், எண்ணிய குருவிந்த மன்னிற நிறமே எனவும் கோகிலக்கண் செம் பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம், அசோக பல்லவ மணிமலர்க் குவளை, இலவத் தலர்க ளென்றாறு குணமும், சவுகந் திக்குச் சாற்றிய நிறனே எனவும், கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக், கூறிய நான்குங் கோவாங்கு நிறனே எனவும் சொன்னார். ஒழிந்தனவும் விரிப்பின் உரை பெருகும், வந்தவழிக் கண்டுகொள்க என அடியார்க்கு நல்லார் விளக்கினர்.

புருடராகமணி

« Last Edit: February 23, 2012, 02:28:25 PM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #22 on: February 23, 2012, 02:26:20 PM »
188 : பூச ................... அனையவும்

(இதன்பொருள்.) பூச உருவின் - பூசம் என்னும் விண்மீனினது உருவத்தையுடைய; பொலம் தெளித்து அனையவும் - பொன்னை மாசு நீங்கத் தெளியவைத்தாற்போன்ற புருடராக மணி வகைகளும்; என்க.

(விளக்கம்) பூசம் நாண்மீன்களில் ஒன்று. இனி, பூசையுருவிற் பொலந்தேய்ந்தனையவும் என்று பாடங்கொண்டு, பூனைக்கண் போன்ற பொன்னைத் தேய்த்தாற் போன்றவை புருடராகம் என்பர் அரும்பதவுரையாசிரியர். பொலம் - பொன்.

வைடூரியமணி

189 : தீது ........... உருவவும்

(இதன்பொருள்.) தீது அறு கதிர் ஒளி - குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி எனவும்; தெள் மட்டு உருவவும் - தெளிந்த தேன்துளி எனவும் சொல்லுதற்கு ஒத்த உருவமுடைய வைடூரியம் என்னும் மணி வகையும்; என்க.

(விளக்கம்) இதனை அரும்பதவுரையாசிரியர் கோமேதகம் என்பர்.

நீல மணியும் கோமேதக மணியும்

190 : இருள் ................ உருவவும்

(இதன்பொருள்.) இருள் தெளித்து அனையவும் - இருளைத் தெளிய வைத்தாற்போன்ற நிறமுடைய நீல மணி வகையும்; இருவேறு உருவவும் - மஞ்சளும் சிவப்பும் ஆகிய இருவேறு நிறங்களையும் கலந்தாற்போன்ற நிறமுடைய கோமேதகமணி வகையும்; என்க.

(விளக்கம்) இனி, இவற்றுள் நீலமணிக்குக் குற்றமும் குணமும் அடியார்க்கு நல்லார் கூறுமாறு:

இதற்குச் சாதி நான்கும், குணம் பதினொன்றும், குற்றம் எட்டுமெனக் கொள்க; என்னை? நீலத் தியல்பு நிறுக்குங்காலை நால்வகை வருணமு நண்ணுமா கரமும், குணம்பதி னொன்றுங் குறையிரு நான்கும், அணிவோர் செயலு மறிந்திசி னோரே என்றாராகலின்; வெள்ளை சிவப்பு பச்சை கருமையென், றெண்ணிய நாற்குலத் திலங்கிய நிறமே, கோகுலக் கழுத்துக் குவளை சுரும்பர், ஆகுலக் கண்கள் விரிச்சாறு .... காயா நெய்தல் கனத்தல் பத்தி, பாய்த லெனக்குணம் பதினொன் றாமே என்பன. இனிக் குற்றம் வந்தவழிக் கண்டு கொள்க என்பர்.

ஒரு முதலில் தோன்றிய ஐவகை மணிகள்

191 - 192 : ஒருமை .......... மணிகளும்

(இதன்பொருள்.) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒரு முதலில் தோன்றித் தம்முள் வேறுபட்ட ஐந்துவகை அழகை உடையனவாகிய ஈண்டுக் கூறப்பட்ட மாணிக்கம் புருட ராகம் நீலம் கோமேதகம் வைடூரியம் என்னும்; இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்குகின்ற ஒளி வீசுகின்ற நன்மை பொருந்திய மணிகளும்; என்க.

(விளக்கம்) இவ் வைந்திற்கும் முதலாவது பளிங்கு என்க.

முத்தும் பவளமும்

193 - 198 : காற்றினும் ................ வல்லியும்

(இதன்பொருள்.) காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள் அறத் துணிந்தவும் - காற்றேறு மணலேறு கல்லேறு நீர்நிலை என்னும் இந்த நான்கு பெருங் குற்றங்களும் ஒரு துகளளவும் இல்லையாய்த் தெளிந்த ஒளியை உடையனவும்; சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத்தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல நிரலே வெண்ணிறமும் செந்நிறமும் உடையவாய் உருண்டனவுமான முத்து வகைகளும்; கருப்பத்துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கும் நீங்கிய - கருப்பத்திலேயே துளைபட்டனவும் கல்லிடுக்கில் புகுந்து முடங்கு பட்டனவும் திருகல் முறுகல் உடையனவாய் எழுந்தனவும் என்னும் இக் குற்றங்கள் நீங்கிய; செங்கொடி வல்லியும் - செம்மை மிகுந்து வளம்பெற வளர்ந்த கொடிப்பவள வகையும்; என்க.

(விளக்கம்) முத்திற்குக் காற்று மண் கல் நீர் என்னும் இந்த நான்கானும் உண்டாகும் குற்றங்களே பெருங் குற்றங்கள் என்பது தோன்ற இவற்றையே ஓதி ஒழிந்தார். பிறவும் குற்றங்கள் உள என்க. சந்திரகுரு - வெள்ளி; அஃதாவது கோள். அங்காரகன் - செவ்வாய்க் கோள். வெள்ளி தூய வெண்மை யாதலும், செவ்வாய் சிறிது செம்மை கலந்த வெண்மை யாதலும் உணர்க. இவ்விரண்டும் சிறந்த முத்தின் குணங்கள். வட்டம் என்றது உருண்டை வடிவமுடைய முத்தினை. இதனை ஆணிமுத்து என்றும் கூறுவர்.

இனி, பவளத்திற்கு ஈண்டுக் கூறிய குற்றங்கள் பெருங்குற்றங்களாம். நல்ல பவளங்கள் நிறமும் உருட்சியும் இவற்றால் சிந்துரமும் ஈச்சங்காயும் முசுமுசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போல்வன என்பர்.

199 - 200: வகை ............. வீதியும்

(இதன்பொருள்.) வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி - மேற்கூறப்பட்ட இவ்வொன்பது வகைப்பட்ட மணிகளின் பிறப்பு முதல் சிறப்பீறாகிய வகைகளை ஆராய்ந்து தெரிகின்ற வணிகர் தொகுதியைப் பெற்றுச் சிறப்புற்றுள்ள; பகை தெறல் அறியாப் பயம் கெழு வீதியும் - பகைவராலே அழிக்கின்ற தொழிலை எக்காலத்தும் கண்டறியாத பயன் கெழுமிய மணியங்காடி வீதியும்; என்க.

(விளக்கம்) வகை - மணிகளின் வகையும், அவற்றின் குற்றங் குண முதலிய வகைகளும் என்க. மாக்கள் என்றது வணிகரை.

பொன்னங்காடி

201 - 204 : சாதரூபம் ............... வீதியும்

(இதன்பொருள்.) சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் - சாதரூபமும் கிளிச்சிறையும் ஆடகமும் சாம்பூநதமும் என்று கூறப்படுகின்ற நான்கு வகையாய்ப் பெயர்பெற்றோங்கிய கோட்பாட்டையுடைய; பொலந்தெரிமாக்கள் - பொன்னினது கூறுபாட்டை ஆராய்ந்தறிந்த பொன் வாணிகர்; கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு - பொன் கொள வருவோர் எவ்விடத்து எப்பொன் உளதென்று ஐயுற்றுக் கலங்கும் கலக்கத்தை ஒழித்தற்கு இவ்விவ்விடங்களிலே இந்த இந்தப் பொன் உளதென்றுணர்த்தும்; இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் - விளக்கக் கொடிகள் இடந்தோறும் உயர்த்துதலையுடைய நன்மை பொருந்திய பொன்னங்காடிகளும்; என்க.

(விளக்கம்) பொலம் - பொன். மாக்கள் - பொன் வாணிகர். ஒழித்து - ஒழிப்ப. ஆங்கு - ஆங்காங்கு என்க. இலங்குகொடி - விளங்குதற்கு அறிகுறியான கொடி என்க. நலங்கிளர் - அழகுமிக்க எனினுமாம்.

அறுவையங்காடி

205 - 207: நூலினும் ............... வீதியும்

(இதன்பொருள்.) நுழை நூலினும் மயிரினும் பட்டு நூலினும் - நுண்ணிய பருத்தி நூலினானும் எலி மயிரினானும் பட்டு நூலினானும் நெய்யப்பட்டு; பால் வகை தெரியா - அவற்றின் பகுதியும் வகையும் தெரிந்து அடுக்கிய; பல் நூறு அடுக்கத்து - பலவாகிய நூறுநூறு கொண்ட அடுக்குகளாவன; நறுமடி செறிந்த அறுவை வீதியும் - நறிய மடிப் புடைவைகள் நெருங்கவைத்த புடைவை யங்காடியும்; என்க.

(விளக்கம்) நுழை நூலினும் என மாறுக. நூற்பட்டினும் என்றது. பட்டு நூலினும் என்றவாறு. பால் வகை தெரிந்து அடுக்கிய அடுக்கத்து எனவும் பன்னூறடுக்கத்து எனவும் தனித்தனி இயையும். மடி - புடைவை. புடைவைகளுக்கும் நறுமணப் புகை ஊட்டுதலின் நறுமடி என்றார். அறுவை - துணி. (அறுக்கப்படுவது - அறுவை; துணிக்கப்படுவது - துணி)

கூலக் கடைத்தெரு

208 - 211 : நிறைக்கோல் ................. வீதியும்

(இதன்பொருள்.) நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர் அம்பண அளவையர் - நிறுக்கும் துலாக்கோலையுடையவராகவும் மறிக்கும் பறையை யுடையராகவும் அளக்கும் மரக்காலை யுடையராகவும்; எங்கணும் திரிதர - தரகு செய்வார் அங்குமிங்குமாய் எங்கும் திரிந்துகொண்டிருப்ப; காலம் அன்றியும் கருங்கறி மூடையொடு கூலங்குவித்த கூல வீதியும் - இன்ன கூலம் இன்ன காலத்தில் கிடைக்கும் என்பதின்றி எக்காலமும் கரிய மிளகுப் பொதிகளோடு பல்வேறு வகைக் கூலங்களையும் குவித்து வைத்துள்ள கூலக் கடைத்தெருவும்; என்க.

(விளக்கம்) நிறைத் துலாக் கோலர், பராரைக்கண் பறையர், அளவை அம்பணர், எனற்பாலன இங்ஙனம் கூறப்பட்டன. துலாக்கோல், பறை, அம்பணம் என்பன அளவு கருவிகள். இவற்றுள் பராரைக்கட் பறை என்றது பரிய அறையையும் இரும்பால் வாய்மட்டாகப் பூண்கட்டின கண்ணையுமுடைய பறை என்றபடி; பறை வடிவிற்றாகலின் அப்பெயர் பெற்றதென்க. அம்பணம் - மரக்கால். கருங்கறி - மிளகு; வெளிப்படை. கூலம் - இரண்டு வகைப்பட்டனவாய்ப் பதினாறுவகை என்ப. அவையாவன: நெல் புல் வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன ஓரினத்துக் கூலமாம். மற்றும் (பருப்பு) முதிரை வகைப்பட்ட எள்ளுக் கொள்ளுப் பயறு உழுந்து அவரை கடலை துவரை மொச்சை என்னும் இவை ஒருவகைக் கூலமாம் என்றுணர்க. இவற்றை இந்திரவிழவூரெடுத்த காதையினும் கூலங் குவித்த கூல வீதியும் என இவ்வாறே ஓதினர்.

கோவலன் நகர்கண்டு மீளுதல்

212 - 218 : பால்வேறு ......... புறத்தென்

(இதன்பொருள்.) பால் வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என நூல்களாற் பகுத்துக் கூறியதற்கேற்ப நான்கு வெவ்வேறு வகுப்பினரும் தனித்தனியே உறைகின்ற தெருக்களும்; அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து முச்சந்தியும் நாற்சந்தியும் கோயிலங்காடியும் மன்றங்களும் கவர்க்கும் வழிகளும் தேர் வீதிகளும் ஆகிய இவ்விடங்களினும் இன்னோரன்ன பிறவிடங்களினும் சுற்றத் திரிந்து; விசும்பு அகடு திருகிய வெங்கதிர் நுழையா பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் - ஞாயிறு விசும்பின் நடுவாக நின்று முறுகி ஓடுதலின் அதனுடைய வெப்பமுடைய கதிர்களும் நுழையமாட்டாத புதிய கொடியும் படாகை என்னும் பெருங்கொடியும் ஆகிய இவற்றாலியன்ற பந்தர் நீழல் போன்ற நிழலிடத்தே; காவலன் பேரூர் - மன்னுயிர் காக்கும் காவலனாகிய பாண்டியனது பெரிய தலைநகரத்தை; கோவலன் கண்டு மகிழ்வு எய்தி - கோவலன் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து; கொடி மதில் புறத்துப் பெயர்ந்தனன் - கொடி உயர்த்தப்பட்ட மதிலின் புறத்ததாகிய புறஞ்சேரிக்கு மீண்டு சென்றனன்.

(விளக்கம்) கவலை - முடுக்கு வழிகள். கதிர் மேடவீதியின் நீங்குதலின் விசும்பகடு திருகிய வென்றார். அகடு - நடு. திருகுதல் - முறுகுதல்; தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின் (அகநா. 89:1) என்றார் பிறரும். கொடி - சிறுகொடி. படாகை - பெருங்கொடி.

ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் துயிலெடுப்ப, இயம்பச் சென்று ஏத்திச் சிறுமையுற்றேனென்றலும், கவுந்தியடிகள்; அனையையுமல்லை; பெற்றனையன்றே; வருந்தாதே போதீங் கென்றலும் மருங்கிற்போகி அயிராது புக்கு மகிழ்தரு வீதியும் இருபெரு வீதியும் அங்காடி வீதியும் பயங்கெழு வீதியும் நலங்கிளர் வீதியும் அறுவை வீதியும் கூலவீதியும் நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகுமாகிய இவ்விடங்களில் பந்தர் நிழலில் திரிந்து காவலனூரைக் கோவலன் கண்டு மகிழ்வெய்திப் பெயர்ந்தானென முடித்திடுக.

பா - நிலைமண்டிலம்

ஊர்காண் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #23 on: February 23, 2012, 02:31:43 PM »
15. அடைக்கலக் காதை

அஃதாவது - கோவலன் கண்ணகியைக் கவுந்தியடிகளார் பால் ஓம்படை செய்து மதுரைமூதூர் புகுந்து ஆங்குப் பரத்தையர் வீதியும் அங்காடி வீதியும் பிற வீதிகளும் சந்தியும் சதுக்கமும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து அப் பேரூரைக் கண்டு மகிழ்ந்து மீண்டும் கண்ணகியும் அடிகளாரும் இருந்த புறஞ்சேரிக்கு வந்துற்றனனாக; அப்பொழுது, மாடலன் என்னும் மறையவன் குமரியாடி மீண்டு வருபவன் கோவலன் இருக்குமிடத்தை அடைந்தான்; கோவலன் அவனை வணங்க அம் மறையவன் கோவலனை முன்பே நன்கறிந்தவனாதலின் அவன் நிலைமை கண்டு கழிபேரிரக்கங் கொண்டு அவனது பண்டைய நிலையைப் பாரித்துரைத்து வருந்தியிருப்பப் பின்னர், அம் மறையவனும் கவுந்தியும் கோவலனை நோக்கி இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையில் புகுதுக என்று கூறும்பொழுது ஆயர் முதுமகளாகிய மாதரி என்பாள் அங்கு வந்து கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினள். அதுகண்ட கவுந்தியடிகள் சிறந்த குணம் உடையவளாகிய இம் மாதரியின்பால் கண்ணகியை இருத்துதல் குற்றமின்று என நினைத்து அம் மாதரிக்குக் கண்ணகியின் உயர்வையும் தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளைப் பாதுகாத்தலால் உண்டாகும் பயனையும் எடுத்துக்கூறி அவள்பால் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவித்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட  5

மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித்  10

தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து  15

தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்  20

வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு  25

நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு
இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்  30

நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென  35

விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு  40

செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்  45

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக்
கையகத் தொழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி  50

மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல  55

வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர்  60

மாட மறுகின் மனைதொறு மறுகிக்
கருமக் கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி   65

இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்  70

தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ   75

பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக்
கறைகெழு பாசத்துக் கையகப் படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு  80

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை   85

ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்  90

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவக்
கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்  95

காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்  100

மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் றன்முன்
மணிமேகலையை மாதவி யளிப்பவும்
நனவுபோல நள்ளிருள் யாமத்துக்   105

கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்கட் கல்ல திந்தப்
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக்  110

காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்குக் கூறுங் காலை
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய  115

புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும்
ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்  120

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்  125

தாதையைக் கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன்  130

மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித்
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்  135

தாயும் நீயே யாகித் தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித்  140

தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க் கின்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது  145

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்   150

காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்   155

திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்  160

சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி  165

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப்
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி  170

எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை
அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென
மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக்
காதற் குரங்கு கடைநா ளெய்தவும்   175

தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள்
உத்தர கௌத்தற் கொருமக னாகி
உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப்  180

பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம்
தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப்  185

பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தானந் தன்னால்
ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச்
சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத்  190

தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்  195

இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு
நீட்டித் திராது நீபோ கென்றே
கவுந்தி கூற உவந்தன ளேத்தி   200

வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு  205

செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ
மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்  210

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்  215

கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்.

உரை

1-8 : நிலந்தரு .............. புகுந்து

(இதன்பொருள்) நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி கடம் பூண்டு உருட்டும் கவுரியர் - நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உணவு முதலிய பல்வேறு செல்வங்களையும் தருதற்குக் காரணமான அருளாகிய நிழலிடத்தே நின்று ஆணையாகிய சக்கரத்தைச் செலுத்துகின்ற தமக்குரிய கடமையைச் செவ்விதமாக மேற்கொண்டு செலுத்துகின்ற பண்புடைய பாண்டியருடைய; பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை - பெரிய புகழோடு பொருந்திய செங்கோலினது நடுவுநிலைமையும், குடையினது அளியாகிய குளிர்ச்சியும் வேலினது திறலாகிய வெப்பமும் விளங்குதற்கிடமாகிய கொள்கை காரணமாக; பதி எழுவு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டு ஆங்கு - தன்னிடத்தே வாழும் மக்கள் குடியோடிப்போதலை ஒருபொழுதும் அறியாமைக்குக் காரணமான பண்புடைமையின் மேம்பட்டுத் திகழும் மதுரை மூதூராகிய பெரிய நகரத்தைக் கோவலன் கண்டு மகிழ்ந்து அந்நகரில்; அறம்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து - தமது சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு அறத்தை வழங்குகின்ற நன்னர் நெஞ்சினையுடைய துறவோர் மிகுந்துள்ள மதிலின் புறத்தேயுள்ள பழைய ஊரின்கண் கவுந்தியடிகளும் கண்ணகியும் உறைகின்ற பொழிலின்கண் புகுந்து; என்க.

(விளக்கம்) நிலந்தரு திரு என்றது, உணவு முதலிய பல்வேறு பொருள்களையும்; நிழல் என்றது அருளை, திருவருளின் வழிநின்று நேமி செலுத்தும் அரசனுடைய நாட்டின்கண் உணவு முதலிய பொருள்களெல்லாம் பெருகும் என்பதுபற்றித் திருவிற்கு அருளை ஏதுவாக்கினார்; என்னை? இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545) எனவரும் வள்ளுவர் பொன்மொழியும் நினைக. நேமி - ஆணை. கடம் - கடமை. கவுரியர் - பாண்டியர். அவர் செங்கோன்மைப் புகழ் உலகெலாம் பரத்தலின் பெருஞ்சீர்க்கோல் என்றான். செம்மை - செங்கோன்மைக்கு இன்றியமையாத நடுவு நிலைமை. குடை - மன்னனின் அளியுடைமைக்கு அறிகுறி ஆதலின், குடையின் தண்மை என்றார். வேல் - தெறலுக்கு அறிகுறி ஆதலின் வேலின் கொற்றம் என்றார். பதி எழுதல் - வாழ்க்கைக்கு வேண்டியன கிடைக்கப் பெறாமல் குடிகள் பிறநாட்டிற்கு ஓடிப்போதல். பண்பு நாடாவளத்ததாதன் முதலியன. பதியெழு வறியாப் பழங்குடி கெழுமிய .... புகார் என முன்னரும் இச் சிறப்புடைமையைப் புகாருக்கும் கூறியது நினைக.

9 - 10: தீதுதீர் ................ கூறுழி

(இதன்பொருள்) தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - தீங்குகளெல்லாம் நீங்கி நலத்தொடு திகழும் அம் மதுரையின் சிறப்பையும் அதனை ஆளுகின்ற பாண்டியனுடைய வெற்றிச் சிறப்பினையும்; மாதவத்தாட்டிக்குக் கோவலன் கூறுழி - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளாருக்குக் கோவலன் தான் கண்டாங்கு எடுத்துச் சொல்லும்பொழுது; என்க.

(விளக்கம்) தீது - பழவினை. மதுரை கடவுட் டன்மையுடைய தாய்த் தன்கண் வரும் மக்களுடைய பழவினையெல்லாம் பாறச் செய்வது என்னுங் கருத்தால், தீதுதீர் மதுரை என்றார். இன்னும் கோவலனுடைய பழவினையையும் தீர்த்தருளி அவனைத் தேவனாக்குதலும் குறிப்பால் இது தோற்றுவித்து நிற்றலும் உணர்க. இதற்கு அடியார்க்கு நல்லார் கூறுகின்ற விளக்கம் முன்னரே அமைந்து கிடத்தலின் வேண்டா விளக்கமாதல் அறிக.

மாடலன் வரவு

11 - 19 : தாழ்நீர் .............. வணங்க

(இதன்பொருள்) தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து நால்மறை முற்றிய நலம் புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் - தாழ்ந்த நீரையுடைய அகழியமைந்த தலைச் செங்காடு என்னும் ஊரில் பிறந்தவனும், நான்கு மறைகளையும் ஓதி முடித்தவனும் தான் ஓதியாங்குப் பிறர் நலமே பேணுதலையே குறிக்கோளாகவுடையவனும் அந்தணருள்ளும் முதல்வனும் ஆகிய மாடலன் என்பவன்; மாதவ முனிவன் மலைவலங்கொண்டு குமரி அம் பெருந்துறை கொள்கையின் படிந்து தமர் முதல் பெயர்வோன் -பெரிய தவத்தையுடைய அகத்தியன் உறைகின்ற பொதியின் மலையை வலங்கொண்டு வணங்கிக் குமரித் தீர்த்தத்தின்கண் தனது குறிக்கோளுக்கிணங்க நீராடித் தன்னுடைய சுற்றத்தார் இருக்கும் இடத்திற்கு மீண்டு வருகின்றவன்; தாழ்பொழில் ஆங்கண்-தாழ்ந்த பொழிலையுடைய அப் புறஞ்சேரியிடத்தே; வகுந்து செல் வருத்தத்து வான் துயர் நீங்கக் கவுந்தி இடவயின் புகுந்தோன் தன்னை கோவலன் சென்று சேவடி வணங்க - வழிவந்த வருத்தத்தால் உண்டாய இளைப்புத் தீர்தற் பொருட்டுக் கவுந்தியடிகள் இருந்த பள்ளியிடத்தே வந்து புகுந்தவனை ஆங்கிருந்த கோவலன் கண்டு அவன் எதிர் சென்று சிவந்த அடிகளில் வீழ்ந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) தாழ்ந்த நீர் வேலி - தாழ்ந்த நீர்நிலைகளையுடைய மருத நிலம் சூழ்ந்த எனினுமாம். நலம்புரிதல் - பிறர்க்கு நன்மையே செய்தல். இவன், சோழநாட்டுத் தலைச்செங்காட்டில் பிறந்தவன் ஆதலின் கோவலனுடைய குடும்பத்தாரோடு பெரிதும் கேண்மை யுடையவனாக இருந்தமை பின்னர் இவன் கூற்றால் விளங்கும். இவ்வந்தணர் முதல்வனைக் கோவலன் பண்டே நன்நறிந்தவன் ஆதலின், இவன் வரவு கண்டு மகிழ்ந்து எதிர்சென்று வணங்கினன் என்க. தமர் முதல் - தன் சுற்றத்தார் இருக்குமிடம். வகுந்து - வழி. வரை சேர் வகுந்திற் கானத்துப் படினே (மலைபடுகடாஅம் - 242) என்புழியும் அஃது அப்பொருட்டாதல் அறிக. கோவலன் சென்று சேவடி வணங்க என்றது அவனுக்கு அம் மறையவன்பால் உள்ள அன்பு மிகுதியும் நன்மதிப்பும் ஒருங்கே உணர்த்தி நிற்றல் உணர்க.

மாடலன் கோவலன் நிலைமை கண்டு இரங்கிக் கூறுதல்

(20 - நாவலந்தணன் தான் நவின்றுரைப்போன் என்பது தொடங்கி 94. நீ என வினவ என்பது வரையில் மாடலன் கூற்றாக ஒரு தொடர்.)

20 : நாவல் ................ உரைப்போன்

(இதன்பொருள்) நாவல் அந்தணன் - நாவன்மையுடைய அம் மாடலன் கோவலன் நிலைமை கண்டு; தான் நவின்று - முற்படக் கோவலன் அங்கு வந்துள்ள வரலாற்றை வினவி அறிந்துகொண்டு பின்னர் அவன் நிலைமைக்கு இரங்கி; உரைப்போன் - கூறுகின்றனன்; என்க.

(விளக்கம்) தான் நவின்று அறிந்து இரங்கி எனச் சில சொல் பெய்துரைக்க. நவின்றுரைப்போன் என்பதற்குக் கோவலனது பண்டைய நிலையைப் பாரித்துரைப்பவன் எனலுமாம்.

21 - 27 : வேந்துறு ................... கேட்டாங்கு

(இதன்பொருள்) (94) கோபால - கோவலனே; வேந்து உறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர்மேனி மாதவி மடந்தை - சோழ மன்னன் வழங்கிய மிக்க தலைவரிசையால் சிறந்த புகழைப் பெற்ற மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதவியாகிய மடந்தை; பால் வாய்க் குழவி பயந்தனள் எடுத்து வாலாமை நாள் நீங்கிய பின்னர் - நினக்கு மகளாகப் பிறத்தற்குரிய ஊழ்வினை வாய்த்ததொரு பெண் மகவினை ஈன்றெடுத்து வாலாமையுடைய நாள்கள் கழிந்தபின்னர்; மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்ட ஆங்கு - மிகவும் முதுமையுடைய கணிகை மகளிர் ஒருங்கு கூடி மாதவி ஈன்ற பெண் மகவிற்குப் பெயராகத் தகுந்த அழகிய சொல்லொன்றனை யாம் இப்பொழுது கண்டு நிலைநாட்டுவேமாக என்று தம்முள் துணிந்து பின்னர் அம் மகளிர் தாம் இன்பம் எய்துதற்குரிய அழகிய மொழி ஒன்றனைக் கூறுக என்று நின்னை அணுகிக் கேட்ட பொழுதே அவரை நோக்கி; என்க.

(விளக்கம்) வேந்து : சோழமன்னன். உறு சிறப்பு என்றது மாதவி ஆடற்கலை அரங்கேறிக் காட்டியபொழுது அம் மன்னன் மகிழ்ந்து அவட்கு வழங்கிய பெரும்பரிசிலை. பால் - ஊழ்வினை; பால் வாய்த்த குழவி என்க. பயந்தனள்; முற்றெச்சம். ஈன்று என்க. வாலாமை நாள் - தீண்டப்படாத நாள் (அழுக்குடைய நாள்). மாமுது கணிகையர் என்றது சித்திராபதியை யுள்ளிட்ட வயது முதிர்ந்த கணிகையரை. அவர்தாம் கோவலனையும் உளப்படுத்தியாம் நாமநல்லுரை நாட்டுதும் என்றாராகக் கொள்க. தகைமொழி என்றது அழகிய பெயர்ச்சொல் என்றவாறு. கேட்ட என்றது அத்தகைய மொழி யொன்றனைத் தேர்ந்து தருக என்று கேட்ட என்பதுபட நின்றது.

28 - 37 : இடைஇருள் ............... இடுகென

(இதன்பொருள்) இடை இருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடை கலப்பட்ட எங்கோன் நள்ளிருள் யாமத்தே சூறைக்காற்று எறியப்பெற்ற அலைகளையுடைய பெரிய கடலின்கண் தன்னுடைய உடைந்த மரக்கலத்தில் அகப்பட்டுக்கொண்ட எமது குலமுதல்வன் ஒருவன்; முன்னாள் புண்ணியதானம் புரிந்தோன் ஆதலின் - அவன்றானும் முற்பிறப்பிலே புண்ணியத்தையும் அப்பிறப்பிலே உத்தம தானத்தையும் செய்த சீரியோனாதலின்; நண்ணு வழியின்றி நாள் சில நீந்த - தன்னுயிர்க்கு இறுதி யுண்டாகும் ஊழ் வந்துறாமயாலே ஒரு சில நாள் அந் நல்வினை கைதருதலாலே அக் கடலின்கண், நீந்துவானாக ஒருநாள் அவன் முன் தோன்றிய ஐய; யான் இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமேகலை - யான் தேவேந்திரனுடைய ஏவலாலே அண்மையிலுள்ள தீவில் வாழ்பவரை அசுரர் துன்புறுத்தாதபடி காத்தற்கு இங்கே வாழ்கின்றேன்காண்! உன்னையும் காத்தற்பொருட்டே வந்துள்ளேன் ஆதலால் அஞ்சாதே கொள்! யான் மணிமேகலை என்னும் தெய்வம்காண்; உன் பெருந்தானத்து உறுதி ஒழியாது - நீ பண்டு செய்த பெரிய தானத்தின் பயனும் உன்னைக் காவாதொழியாது காண்; துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழிகென - நீ இப்பொழுது எய்துகின்ற இத் துன்பத்தினின்றும் நீங்கித் துயரந்தரும் இக் கடலினின்றும் கரை ஏறுவாயாக என்று இனிது தேற்றுரை கூறி; விஞ்சையில் பெயர்த்து - தனது வித்தையினாலே அக் கடலினின்றும் கரை ஏற்றி; விழுமம் தீர்த்த எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக என - அவன் துன்பம் தீர்த்து உய்யக்கொண்ட எங்கள் குலதெய்வமாகிய அத் தெய்வப் பெயரையே இங்கு இம் மகவிற்கு இடுமின் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) எறி திரை - காற்றால் எறியப்படும் திரை என்க. உடை கலம் - பார்தாக்கி உடைந்துபோன மரக்கலம். எங்கோன் என்றது கோவலனுடைய மரபில் உள்ளான் ஒருவனை. நண்ணுவழி - கரையைக் கிட்டுதற்கு இடனின்றி எனலுமாம். புண்ணியமும் தானமும் புரிந்தமை கடலினிடையே சிலநாள் நீந்தி உயிரோடிருத்தற்கு ஏதுவாய் நின்றது புண்ணியமும் தானமும் என்க. உறுதி - பயன். விஞ்சை - வித்தை. விஞ்சைபோல எனினுமாம். ஈங்கு - இப்பொழுது எனினுமாம். குல முதல்வனை உய்யக்கொண்டு தன் குலத்தை நிலைபெறச் செய்த நன்றி நினைந்து எங் குலதெய்வம் என்றான். அதன் பெயர் அத்தெய்வத்தின் கூற்றாகவே மணிமேகலை என்று அறிவிக்கப்பட்டமையால் வாளாது தெய்வப் பெயர் என்றொழிந்தான்.

கோவலன் யானை கோட்பட்ட மறையோனைப் பாதுகாத்தமை

38 - 47 : அணிமேகலையார் .......... கைக்கொள

(இதன்பொருள்) அணிமேகலையார் ஆயிரங் கணிகையர் மணிமேகலை என வாழ்த்திய ஞான்று - நீ விரும்பியவாறே அணிந்த மேகலையையுடைய கணிகை மகளிர் எண்ணிறந்தோர் ஒருங்கு கூடிப் பெயர் சூட்டுதற்குரிய விழா வெடுத்து அம் மகவிற்கு மணிமேகலை என்று பெயர் சூட்டி அம் மகவினையும் அரசனையும் நகரையும் வாழ்த்திய அந்த நாளிலே; மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய - நிறைந்த அழகையுடைய மடந்தையாகிய அம் மாதவியினோடு நீ அம் மகவின் ஆக்கங்கருதிச் செம்பொன் முதலியவற்றை வாரி மழைபோலச் சிவந்த கைகளாலே பொழியா நிற்ப; ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் மறையோன் தானம் கொள்ளும் தகைமையின் வீட்டுலகம் சேர்தற்கு நல்ல நெறியாகிய மெய்யுணர்வுக்குத் தானே எல்லையாகிய மறையவன் ஒருவன் நின்பால் தானம் கொள்ளுகின்ற கருத்தோடு; வளைந்த யாக்கை தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வருவோன் தன்னை - மூப்பினால் வளைந்த யாக்கையையும் தளர்ந்த நடையையுமுடையவனாய்த் தண்டினையே காலாக ஊன்றி வருகின்றவனை; பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையின் கைக்கொள - பாகர் அடக்குமுறைச் செயலுக்கு அடங்காமல் அவரினின்றும் நீங்கித் தான் செல்லுமிடமெல்லாம் பறை முழக்கம் உண்டாகும்படி தன்மனம் போனவாறு வருகின்ற மதச் செருக்கினையுடைய யானையொன்று சினத்தோடே தன் கையாற் பற்றிக்கொள்ள; என்க.

(விளக்கம்) ஞானநன்னெறி என்றது சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகளுள் வைத்து ஞானநெறியை. அதுவே வீட்டுலகிற்கு நேரிய வழியாதல்பற்றி நன்னெறி என விதந்தோதியவாறு. ஞானம் - மெய்யறிவு. ஐயந்திரிபற்ற மெய்யுணர்வு கைவரப்பெற்றோன் என்பது தோன்ற நல்வரம்பாயோன் என்றார். மறையவன் ஆதலின் தானம் கொள்ளும் தகைமையினால் வருவோன் என்றார். தகைமை - தானம் கொள்ளுதற்குரிய தகுதிப்பாடு. பாகர்க்கு அடங்காமல் கழிந்து என்க. யாங்கணும் பறைபடுதல் யானை இவ்வாறு மதவெறியால் திரியும்போது அதன் வருகையை அறிவித்தற் பொருட்டு. இங்ஙனம் பறை முழக்கி அறிவித்தல் பண்டைக்காலத்து வழக்கமாம். இதனை -

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறைஅறைந் தல்லது செல்லற்க வென்னா
இறையே தவறுடை யான்

எனவரும் குறிஞ்சிக்கலியானு முணர்க. 20. வேகம் - மதச்செருக்கு. வெம்மை - சினம்.

கோவலனுடைய தறுகண்மை

48 - 53: ஒய்என ............... மறவ

(இதன்பொருள்) ஒய் எனத் தெழித்து ஆங்கு உயர்பிறப்பாளனைக் கை அகத்து ஒழித்து - அவ்வாறு அம் மறையோனை அவ்வியானை கைக்கொண்ட வளவிலே அதுகண்ட நீ (கோவலன்) ஞெரேலென அந்த யானையை உரப்பியவனாய் அப்பொழுதே அங்குச் சென்று நின் கையாலே அம் மறையோனை நீக்கி; அதன் கை அகம் புக்குப் பொய் பொரு முடங்கு கை வெள்கோட்டு அடங்கி - அதன் கையில் நீயே புகுந்து அந்த யானையானது நின்னை வளைத்த பொழுதில் உட்டுளையமைந்த அக் கையினின்றும் நீங்கி அதன் வெள்ளிய கோட்டின்கண் அடங்கி அது பற்றுக்கோடாக ஏறி; மை இருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து - கரிய பெரிய ஒரு குன்றின்மேல் இருந்த விச்சாதரனைப்போல் அதன் பிடரின்மேலிருந்து; பெருஞ்சினம் பிறழாக் கடக்களிறு அடக்கிய கருணைமறவ -பெரிய வெகுளி நீங்காத மதவெறி கொண்ட அக் களிற்றியானையை அடக்கிக் கட்டுவித்து அப் பார்ப்பனனை யுள்ளிட்ட மாந்தரை உய்யக்கொண்ட பேரருளுடைய வீரனே; என்றான் என்க.

(விளக்கம்) ஒய் என என்பது விரைவுக் குறிப்பு. இனி, ஒய் என்பது யானைப்பாகர் வையும் ஆரிய மொழி எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். தெழித்தல் - உரப்புதல். அஃதாவது - அதட்டுதல். பொய் - உட்டுனை. பொருந்தின என்பது ஈறுகெட்டு, பொரு என நின்றது. இச் செயலால் கோவலனுடைய அருளுடைமையும் மறப்பண்பும் ஒருங்கே வெளிப்படுதலின் கருணைமறவ என்று விளித்தான்.

கைக்கொளத் தெழித்து ஒழித்துப் புக்கு அடங்கி அடக்கிய மறவ என இயையும். அடக்கிய என்றது அடக்கிக் கட்டுவித்த என்பதுபட நின்றது.

கோவலனுடைய பிறர்க்கென வாழும் பெருந்தகைமை

54 - 75 : பிள்ளை ............... செல்லாச் செல்வ

(இதன்பொருள்) பிள்ளை நகுலம் பெரும் பிறிதாக எள்ளிய மனையோள் இணைந்து பின் செல்ல வடதிசைப் பெயரும் மாமறையாளன் - ஒரு பார்ப்பனி தான் வளர்த்த கீரிப்பிள்ளை தன் குழவியைக் காத்திருந்த பொழுது ஒரு பாம்பு அணுக அதனைக் கடித்துத் துணித்தமையால் குருதிதோய்ந்த வாயோடு அப்பார்ப்பனியின் வரவு பார்த்து எதிர்கொண்டதாக அதன் வாயில் குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்ததென்று கருதித் தன் கையின் மணையால் புடைக்க அக்கீரி இறந்தமையாலே அத் தீவினை பொறாத அவள் கணவனாகிய பார்ப்பனன் அதற்குக் கழுவாயாகக் கங்கையாடுதற் பொருட்டு வடதிசை நோக்கிச் செல்பவன் தன்னால் இகழப்பட்ட மனைவி வருந்தித் தன்னைத் தொடர்தல் கண்டு அவளை நோக்கி, நின் கைத்தூண் வாழ்க்கை கடவது அன்று - ஏடி! தீவினையாட்டியாகிய நின்னுடைய கையதாகிய உணவை உண்டு வாழ்கின்ற வாழ்க்கை இனி எனக்குப் பொருந்துவதன்று எனக் கூறிப் பின்னர்; வடமொழி வாசகம் செய்த நல் ஏடு கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என - வடமொழியாலே செய்யுள் எழுதப்பட்ட நன்மையுடைய ஓரேட்டினை அவள் கையிற் கொடுத்து இதனை நீ தம் கடமையை அறிகின்ற மாந்தருடைய கையில் கொடுப்பாயாக என்று கூறிப்போயினனாக; பீடிகைத் தெருவில் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறும் மறுகி - அப் பார்ப்பனிதானும் அவ்வேட்டினைக் கைக்கொண்டு பூம்புகார் நகரத்து அங்காடித் தெருவினும் பெருங்குடி வாணிகர் உறையும் மாடமாளிகையையுடைய தெருவினும் வீடுதோறும் சென்று; கருமக் கழிபலம் கொண்மினோ எனும் அருமறையாட்டியை அணுகக் கூஉய் - கருமக் கழிபலம் கொள்ளும் கோள் என்று இரக்கின்ற அப் பார்ப்பனியைக் கண்டுழி நீ தானும் அவளை நின் அருகில்வரக் கூப்பிட்டழைத்து; நீ உற்ற இடர் யாது ஈது என் என - அன்னாய் நீ எய்திய துன்பந்தான் என்னையோ? நீ கைக்கொண்டுள்ள இவ்வேடு என்னையோ? கூறிக் காண்! என வினவினையாக; மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி இப்பொருள் எழுதிய இதழ் இது கைப்பொருள் தந்து வாங்கி என் கடுந்துயர் களைக என -அதுகேட்ட அப் பார்ப்பனி தான் எய்திய பெரிய துயருக்குரிய காரணத்தை நின்னிடத்தே கூறி இச் செய்தியை எழுதிய ஏடு இஃதாம் இதனை நின் கைப்பொருளைத் தந்து வாங்குமாற்றால் என்னுடைய கடிய துன்பத்தைப் போக்கியருள்வாயாக என்று சொல்லி இரவாநிற்ப; அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று - அது கேட்ட நீ அன்னாய்! நீ அஞ்சாதே கொள்! உனது பொறுத்தற்கரிய துன்பத்தை யானே போக்குவல் ஆதலால் நினது நெஞ்சின்கண் மிக்குள்ள துன்பத்தை விடுக என்று தேற்றுரை கூறி; ஆங்கு ஓத்து உடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் தீத்திறம் புரிந்தோள் செய் துயர் நீங்கத் தானம் செய்து அவள் தன் துயர் நீக்கி-அப்பொழுதே மறையையுடைய பார்ப்பனருடைய அறநூல் அத் தீவினைக்குக் கழுவாய் கூறியபடியே கொலைத் தீவினை செய்த அப் பார்ப்பனி அச் செய்கையால் உற்ற துன்பம் துவர நீங்கும்படி தானம் செய்து அவளுடைய நெஞ்சுறு துயரத்தையும் போக்கிப் பின்னர்; கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத்து உறு பொருள் கொடுத்து - அவளை இகழ்ந்து காட்டகம் புக்க அவள் கணவனையும் வரவழைத்து அவளொடு சேர்த்து எஞ்சிய காலத்திலும் அவர் தளராமைக்குக் காரணமான பல படைப்பாகிய செல்வத்தோடே மிக்க கைப்பொருளையும் வழங்கி; நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ - அவர்களை நல்லாற்றுப்படுத்த எஞ்ஞான்றும் தொலையாத திருவருட் செல்வனே; என்றான் என்க.

(விளக்கம்) பிள்ளை நகுலம் - கீரிக்குட்டி. பெரும் பிறிது - சாவு. எள்ளிய - எள்ளப்பட்ட. வடதிசைப் பெயரும் என்பதற்கு வடதிசையை நோக்கிக் கங்கையாடப் போகின்றவன் என்பர் அடியார்க்கு நல்லார். பின்னர், அடிகளார் கானம் போன கணவனை என்றோதுதலின் தவம் செய்தற்குக் காட்டகம் புக்கான் என்பதே அவர் கருத்துப் போலும். கைத்தூண் - கையதாகிய உணவு. வடமொழி வாசகம் - வடமொழிச் செய்யுள். அஃதாவது, அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச்சாத்பவதி ஸந்தாபம் ப்ராஹமணீநகுலம்யதா என்பதாகும்.

கடன் அறி மாந்தர் - பிறர்க்குப் பணிசெய்து கிடப்பதே தங்கடன் என்றுணர்ந்த சான்றோர் என்க. கருமக் கழிபலம் - பிறருடைய தீவினையைத் தீர்த்து விடுவதனால் ஒருவனுக்குண்டாகும் புண்ணியம். கூஉய் -கூவி, ஈதென்னென என்புழி ஈது என்றது அவள் கையிற்கொண்டுள்ள ஏட்டினைச் சுட்டியபடியாம். மாதர் என்பது அவள் என்னும் சுட்டு மாத்திரையாக நின்றது. ஒத்து - மறை. உரைநூற் கிடக்கை-அறநூலில் விதித்த விதி. தீத்திறம் -கொலைத் தீவினை. நல்வழிப் படுத்தலாவது -மீண்டும் அந்தணர்க்குரிய நல்வாழ்க்கையில் ஆற்றுப்படை செய்தல். செல்லாச் செல்வம் என்றது அருளுடைமையை.

இதுவுமது

76-90: பத்தினி ........ செம்மல்

(இதன்பொருள்) பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த- கற்புடையாள் ஒருத்தியின் மேல் பொய்யாகிய பழியை யுண்டாக்குதற்கு; வறியோன் ஒருவன் மற்று அவள் கணவற்கு அறியாக்கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கை அகப்படலும் - நல்கூர்ந்தான் ஒருவன் அப் பத்தினியினுடைய கணவனுக்குச் சார்பாகத் தன் நெஞ்சறியாத தொன்றனைப் பொய்யாக்கரியாகக் கூறியதனால் அத்தகையோரை நிலத்தில் அறைந்து தின்னும் பூதத்தினுடைய கரிய கயிற்றிடத்தே அகப்பட்டுக் கொண்டானாக; பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிது சென்று எய்தி என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என - அங்ஙனம் அகப்பட்டோனுடைய தாய் மகவன்பினாலே படுகின்ற துன்பத்தைக் கண்டு, நீதானும் பொறாமல் அவனைக் கட்டிய கயிற்றினுள்ளே விரைந்து சென்று புகுந்து அப் பூதத்தை நோக்கிப் பூதமே! நீ எனது உயிரைக் கைக்கொண்டு இவ்வேழையின் உயிரைத் தந்தருள்வாயாக! என்று வேண்டா நிற்ப; நல்நெடும் பூதம் நல்காது ஆகிநரகன் உயிர்க்கு நல் உயிர் கொண்டு பரகதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை ஒழிக நின் கருத்து என முன் உயிர்புடைப்ப - அதுகேட்ட நன்மையுடைய நெடிய அப்பூதம் நின் வேண்டுகோட் கிணங்கி அவனை வழங்காதாகி மேலும் உன்னை நோக்கி இக்கீழ் மகனுடைய உயிருக்கு ஈடாக மேன்மகனாகிய உன்னுயிரைக் கைக்கொண்டு அத் தீவினை காரணமாக மேலான கதியை இழந்து விடுகின்ற அறியாமை என்னிடம் இல்லை, ஆதலால் நினது இக் கருத்தைக் கைவிடுக! என்று சொல்லி, நின் கண்முன்னே அவனை நிலத்தறைந்து உயிருண்டு கழிந்ததாக; அழிதரும் உள்ளத்து அவளொடும் போந்து அவன் சுற்றத்தோர்க்கும் தொடர்பு உறும் கிளைகட்கும் -அதுகண்டு அத் தாயின் பொருட்டுத் துன்புறுகின்ற நெஞ்சத்தோடே நீயும் அவளோடு சென்று அவட்கே யன்றியும் இறந்தொழிந்தவனுடைய சுற்றத்தார்க்கும் அவரோடு தொடர்புபட்ட கிளைஞர்களுக்கும்; பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்து நெஞ்சத்தால் நின்னைப்பற்றிய கிளைஞரைப் புரக்குமாறு போல அவர்தம் பசியாகிய நோயைத் தீர்த்து; பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் -பல ஆண்டுகள் காப்பாற்றி யருளிய வறியோர் தம் புரவலனே! என்றான்; என்க.

(விளக்கம்) வறியோன் -நல்குரவாளன். இது கரிபொய்த்தமைக்குக் குறிப்பேதுவாய் நின்றது. இதற்கு அறிவில்லான் என்பர் பழையவுரையாசிரியர். அறியாக்கரி - அறியாத தொன்றனை அறிந்ததாகக் கூறும் பொய்க்கரி. கரி - சான்று. பொய்க்கரி கூறுவோரையும் இன்னோரன்ன கயவர் பிறரையும் பாசத்தாற் கட்டி அறைந்துண்ணும் பூதம் பூம்புகாரின்கண் சதுக்கத்துண்மையை இந்திரவிழவூரெடுத்த காதையில் (128 -134) காண்க. கறை - கருமை. தவ்வை - தாய். நன்மையான கோட்பாடுடைய பூதம் என்பார் நல்நெடும் பூதம் என்றார். நரகன் - நரகம் புகுதற்குரிய தீவினையாளன். நல்லுயிர் -அறவோன் உயிர். பரகதி - மேலான கதி. இல்லோர் செம்மல்-வறியோரைப் புரக்கும் தலைவன்.

மாடலனின் பரிவுரை

91-94: இம்மைச்செய்தன .......... வினவ

(இதன்பொருள்) விருத்த நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை இத்திருத்தகு மாமணிக்கொழுந்துடன் - மூதறிவுடையோய்! நீ இப் பிறப்பில் செய்தன எல்லாம் இத்தகைய நல்வினைகளே யாகவும் இந்தத் திருத்தக்க சிறந்த மாணிக்கக் கொழுந்து போல்வாளாகிய கண்ணகியோடு; ஒருதனி உழந்து போந்தது -ஒரு தனியே நடைமெலிந்து இங்ஙனம் வந்தது; உம்மைப் பயன்கொல் என வினவ -முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகுமோ என்று வினவிய பொழுது; என்க.

(விளக்கம்) இம்மை-இப்பிறப்பு. உம்மை-முற்பிறப்பு. ஏவலரும் ஊர்தியும் இன்றி நடைமெலிந்து போந்தனை என்பான் ஒருதனி உழந்து போந்து என்றான். திருத்தகு-உனக்குச் செல்வம் எனத்தகுந்த எனினுமாம். திருத்தகுமாமணி என்பதற்கு முழு மாணிக்கம் என்பாருமுளர். விருத்த என்றது-விளி. மூதறிவுடையோய் என்றவாறு. கோபாலன் என்பதே கோவலன் என மருவிற்றாகலின் மாடலன் அதன் இயல்புச் சொல்லால் விளித்தான். இதனால் கோவலன் என்பது கோபாலன் என்பதன் மரூஉச் சொல்லே என்பதும் பெற்றாம்.

கோவலன் தான்கண்ட கனவை மாடலனுக்குக் கூறுதல்

95-106 : கோவலன் .............. கடிதீங்குறுமென

(இதன்பொருள்) கோவலன் கூறும் -அதுகேட்ட கோவலன் கூறுவான்: ஓர் குறுமகன் தன்னால்-ஐயனே! ஒரு கீழ்மகனாலே; காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறு ஐங்கூந்தல் நடுங்குதுயர் எய்த -மன்னுயிர் காவலிற் சிறந்த இப் பாண்டிய மன்னனது தலைநகரமாகிய காவலமைந்த இம் மதுரை நகரத்தில் மணம் பொருந்திய ஐவகைக் கூந்தலையுடைய என்மனைவி நடுங்குதற்குக் காரணமான துன்பத்தை எய்தும்படி; கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும் -யான் உடுத்த ஆடை பிறராற் கொள்ளப்பட்டுக் கொம்பினையுடைய எருமைக் கிடாவின் மேலே ஏறா நிற்பவும்; அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் பிணிப்பறுத்தோர் தம் பெற்றி எய்தவும்-அழகு பெற வகுக்கத்தக்க புரிந்த கூந்தலையுடைய அழகிய அணிகலன்களையுடைய இவளோடும் பற்றறுத்தோர் பெறும் பேற்றை யாங்கள் பெறவும்; காமக் கடவுள் மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க -காமவேளாகிய தெய்வம் வெறுப்பினாலே தனது சிறந்த மலர்க்கணைகளை வறிய நிலத்திலே எறிந்துவிட்டுச் செயலற்று ஏங்கி நிற்கும்படி; மாதவி அணிதிகழ் போதி அறவோன் தன் முன் மணிமேகலையை அளிப்பவும்-மாதவி யானவள் அழகு விளங்குகின்ற போதியினையுடைய அறவோனாகிய புத்தபெருமான் திருமுன்னர்க் கொடுபோய் மணிமேகலையை வழங்கா நிற்பவும்; நள்இருள் யாமத்து நனவு போலக் கனவு கண்டேன் ஈங்கு கடிது உறும் என கழிந்த இரவின் செறிந்த இருளையுடைய வைகறை யாமத்தில் மெய் போலக் கனவு கண்டேன் ஆதலான், அது நன்றன்று! அதன் பயன் இப்பொழுதே வந்துறுதல் வேண்டும் என்று சொல்ல; என்க.

(விளக்கம்) இத்தகைய நிகழ்ச்சி இயலாத இடம் என்பான் காவல் வேந்தன் கடிநகர் என்று விதந்தான். நாறைங் கூந்தல்: அன்மொழித்தொகை; ஆயிழை என்பதுமது. கூறை -ஆடை. கோட்டுமா என்றது எருமைக்கிடா என்றவாறு. பிணிப்பறுத்தோர்- துறவோர்: அவர்தம் பெற்றியாவது - மேனிலை உலகம் எய்துதல். காமக் கடவுள் தன் வெற்றிக்குத் தலைசிறந்த கருவியாகிய மணிமேகலையை இழந்ததனால் வெறுப்புற்று மலர் வாளியை வறுநிலத்து எறிந்து கையற்று ஏங்க என்பது கருத்து. போதி அறவோன் -புத்த பெருமான். வைகறை யாமத்துக் கண்ட கனவாதலின் அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்றான். இனி, கோட்டுமா -பன்றி என்பாரும் உளர். இனி இவை தீக்கனா என்பதனை-

களிறுமேல் கொள்ளவும்
கனவி னரியன காணா

எனவும்,

சொல்லத் தகுமுகட் டொட்டகம் வெட்டுந் துணைமருப்பார்
இல்லத் தெருமை கழுதைக ளென்றவை யேறிநின்றே
மெல்லத் தரையி லிழிவதன் முன்னம் விழித்திடுமேல்
கொல்லத் தலைவரு மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றுவனே

எனவும்,

படைத்தமுற் சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே
கிடைத்தபிற் சாம மிகுதிங்க ளெட்டிற் கிடைக்குமென்றும்
இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்ப
கடைப்பட்ட சாமமு நாள்பத்து ளேபலங் கைபெறுமே  (வால்)

எனவும் வருவனவற்றால் அறிக.

கவுந்தியும் மாடலனும் கோவலனைக் கண்ணகியோடு அந்நகரின்கண் புகுமாறு அறிவுறுத்தல்

107-114: அறத்துறை ............. கூறுங்காலை

(இதன்பொருள்) அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது ஆகலின் - துறவறத்தோடு தங்குவோர்க் கல்லது இந்தப் புறஞ்சேரியின்கண் தங்குதல் பொருந்தாது ஆதலால்; அகநகர் மருங்கின் அரைசர் பின்னோர் நின் உரையின் கொள்வர் இங்கு நின் இருப்பு ஒழிக -இந்த அகநகரிடத்தே வாழுகின்ற வாணிகர் நீ மாசாத்துவான் மகன் என்னும் நின் புகழை அறிந்துழியே நின்னை ஆர்வத்துடன் எதிர் கொண்டு ஏற்றுக்கொள்வர் என்பது தேற்றம்; இனி இவ்விடத்தே நினது இருப்பை ஒழிக; காதலி தன்னொடு கதிர் செல்வதன்முன் மாடமதுரை மாநகர் புகுக என-இப்பொழுதே நீ நின் காதலியோடு ஞாயிறு படுவதன் முன்னர் மாடங்களையுடைய இம் மதுரை மாநகரத்தினுள் புகுதலே நன்றென்று; மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங்காலை - கவுந்தியடிகளும் மாடலனும் கோவலனுக்குக் கூறுகின்ற காலத்தே; என்க.

(விளக்கம்) கோவலன் தீக்கனாக் கண்டு அதன் பயன் இப்பொழுதே வந்துறும் என்று கூறக்கேட்டமையால் தீங்குறுதற்குக் காரணமான இப் புறஞ்சேரியில் இவர் சிறிது பொழுதேனும் இருத்தல் வேண்டா என்னுங் கருத்தால் அடிகளாரும் மாடலனும் நீ இனி இங்கிருத்தல் வேண்டா, இற்றைப் பகலிலேயே இவளோடும் அகநகர் புகுதுக என்று அறிவுறுத்தவாறாம். என்னை? தீங்கு நிகழினும் பாதுகாவலான இடத்தில் இருப்பின் அத்தீங்கின் பயனும் சிறிதாய் இருத்தல்கூடும் ஆதலின் என்க. இரவும் தீங்கு நிகழ்தற்கு ஏதுவாம் என்னுங் கருத்தால் கதிர் செல்வதன்முன் புகுக என்றுரைத்தனர், என்க.

மாதரி வரவு

115-119: அறம்புரி .................. தொழலும்

(இதன்பொருள்) ஆயர் முதுமகள் மாதரி என்போள்-ஆயர் குலத்துப் பிறந்த மாதரி என்று பெயர் கூறப்படுகின்ற ஒருமுதுமகள்; அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர் -துறவறத்தைப் பெரிதும் விரும்புகின்ற நெஞ்சினையுடைய துறவிகள் மிகுதியாக உறைகின்ற அப் புறஞ்சேரியாகிய பழைய வூரிடத்தே கோயில் கொண்டருளிய; பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்-மலர் போலும் கண்ணையுடைய இயக்கியாகிய தெய்வத்திற்குப் பாற்சோறு படைத்து வழிபட்ட அன்புள்ளத்தோடு மீண்டு வருபவள்; காவுந்தி ஐயையைக் கண்டு அடிதொழலும்-தான் வரும் வழியில் இருந்த கவுந்தியடிகளாரைக் கண்டு அன்புற்று அவர் திருவடிகளிலே விழுந்து வணங்கி எழுந்து கை கூப்பித் தொழுது நிற்ப; என்க.

(விளக்கம்) இயக்கி - ஒரு பெண் தெய்வம். பால்மடை - பாற்சோறு. பண்பு -ஈண்டு அன்புடைமை. இயக்கி -ஆரியாங்கனை என்பாரும் உளர்.

அடிகளார் தம்முள்ளத்துள் நினைதல்

120-124: ஆகாத்தோம்பி .............. எண்ணினளாகி

(இதன்பொருள்) ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை- அன்புடன் கை தொழுது நின்ற மாதரியை நோக்கிய கவுந்தியடிகளார் தமது நெஞ்சத்துள் நினைபவர் ஆக்களைப் காத்துப் பேணி அவ்வாக்கள் தரும் பயனாகிய பாலைப் பிறருக்கு வழங்கும் தொழிலையுடைய ஆயர்களின் வாழ்க்கையின்கண் யாதொரு தீங்கும் இல்லை; தீது இலன் முதுமகள் செவ்வியள் அளியள் -தீங்கற்ற அவ் ஆயர் குடிப்பிறந்த இம் மாதரியும் தன்னியல்பில் தீதற்றவளும் முதுமையுடையவளும் நடுவு நிலைமையுடையவளும் பிறரை ஓம்பும் தன்மை உடையவளும் ஆதலால்; மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்று என எண்ணினள் ஆகி -இம் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாக இற்றைக்கு வைப்பதனால் வருந் தீங்கு யாதும் இல்லையாம் என நினைத்தவராய்; என்க.

(விளக்கம்) ஆக்களைக் காத்து ஓம்பி என்றது அவை வெருவும் பிணியும் உற்றுழிக் காத்துப் புல்லுள்ள நிலத்தில் வயிறார மேய்த்து, நீர் நிலைகளில் நீரூட்டி நன்கு பேணி என்றவாறு, ஆப்பயன்-பால், தயிர் முதலியன. அளித்தல் - கன்றருத்தி மிக்கதனை யாவருக்கும் வழங்குதல். அளியள் - அளியுடையள்; யாவரானும் அளிக்கத்தக்காள் என்னும் பழையவுரை ஈண்டுப் பொருந்தாது.

கவுந்தி அடிகளார் மாதரியின்பால் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தல்

125-130: மாதரி ............. தந்தேன்

(இதன்பொருள்) மாதரி கேள் இம் மடந்தை தன் கணவன் தாதையைக் கேட்கின் -இங்ஙனம் நினைந்த அடிகளார் மாதரியை நோக்கி மாதரியே! ஈதொன்று கேள்! இம் மடந்தையின் கணவனுடைய தந்தை பெயரைக் கேட்பாராயின்; தன் குலவாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் அவன் குலத்தினராய் இம் மதுரையில் வாழ்பவர் பெறுதற்கரிய பொருளைப் பெற்றாரைப்போல நல்விருந்தாக எதிர்கொண்டு அழைத்துப் போய்க் கரிய பெரிய கண்ணினையுடைய இவளோடு இவள் கணவனையும் தமது காவலையுடைய மனையகத்தே கொண்டு சென்று பேணி வைத்துக்கொள்வார்கள்; உடைப் பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்- அவ்வாறு இவர்பால் ஆர்வம் உடைய பெரிய செல்வருடைய மனையகத்தே இவர் சென்று புகுமளவும்; இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்- கொடும்பாடில்லாத இடைக்குலத்தே பிறந்த உனக்கு யான் இவளை அடைக்கலமாகத் தந்தேன் என்று சொல்லி; என்க.

(விளக்கம்) மடந்தை என்றது கண்ணகியை. தாதை - கோவலன் தந்தையாகிய மாசாத்துவான். அவன் தானும் பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான் ஆதலோடு வருநிதி பிறர்க்கார்த்தும் வள்ளலும் ஆதலின் அவன் புகழ் உலகெலாம் பரவி நிற்றல் ஒருதலை என்று உட்கொண்டு அடிகளார் ஈண்டு இவன் தாதையைக் கேட்கின் இவன் குலவாணர் எதிர்கொண்டு மனைப்படுத்துவர் என்றார். நீ தானும் சிறந்த குலத்து மடந்தையாதலின் நின்பால் அடைக்கலம் செய்யத்தகும் என்று கருதியே தந்தேன் என்பார், நினக்கு என்னாது இடைக்குல மடந்தைக்கு என விதந்தார்.

அடிகளார் மாதரிக்குக் கண்ணகியின் சிறப்புரைத்தல்

(131-ஆம் அடிமுதல் 200 -ஆம் அடி ஈறாக, அடிகளார் கூற்றாக ஒரு தொடர்.)

131 -136: மங்கல ......... தாங்கு

(இதன்பொருள்) மங்கல மடந்தையை நல் நீராட்டி செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி தேம் மெல் கூந்தல் சில் மலர் பெய்து-இயற்கை யழகுடைய இம் மடந்தையை நீ தூய நீரினால் ஆட்டிச் சிவந்த கயல்மீன் போன்ற இவளது நெடிய கண்ணுக்கு மை தீட்டிக் காண்டற்கினிய கூந்தலிலே சில மலர்களைச் சூட்டி; தூமடி உடீஇ -தூய புதுப்புடைவையை உடுத்து; ஆயிழை தனக்கு -இந் நங்கைக்கு; தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் தாயும் நீயே ஆகி தாங்கு- இவளுக்கு இவளோடு பழகிய பழைய சிறப்பினையுடையவராகிய தோழிமாரும் செவிலித் தாயரும் நற்றாயும் நீயேயாகித் தாங்குவாயாக என்றார்; என்க.

(விளக்கம்) மங்கலம்-இயற்கை யழகு. தேம்-தேன் மணமுமாம்; பன்மலர் பெய்யின் இடைபொறாது என்பார் சின்மலர் பெய்து என்றார். தொல்லோர் - இவளுடைய பழைய தோழிமார். காவல்: ஆகுபெயர்; செவிலித்தாய்.

136-138: ஈங்கு ............ அறிந்திலள்

(இதன்பொருள்) ஈங்கு என்னொடு போந்த இளங்கோடி நங்கை தன் -இவ்விடத்தே துறவியாகிய என்னோடு நடையான் மெலிந்து வந்த இளைய பூங்கொடிபோலும் இந்த நங்கையினது; வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் - அழகிய சிறிய அடியை முன்பு நிலமகளும் கண்டறியாள் காண் என்றார்; என்க.

(விளக்கம்) இவள் இல்லத்தை விட்டுப் புறம் போந்து நடந்தறியாள் ஆதலின் மண்மகள் அறிந்திலள் என்றவாறு.

இனி, இவளுடைய அடியினது மென்மையை நிலமகள் அறிந்திலாமையால் அவற்றைக் கொப்புளங் கொள்ளுமாறு செய்தனள் என்றிரங்கியவாறுமாம்.

139-148: கடுங்கதிர் .......... அறியாயோநீ

(இதன்பொருள்) கடுங்கதிர் வெம்மையின் நாப்புலர வாடி - ஞாயிற்றின் வெப்பத்தாலே தனது நாவும் புலரும்படி தன் திருமேனி வாடாநிற்பவும்; காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி - தன் கணவன் மெய் வருந்தியதே என்று அது பொறாளாய் நடுங்குதற்குக் காரணமான பெருந்துயரத்தை எய்தி; தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி - தன் துயர் என்று வேறு காணாத பெருந்தகைமை பொருந்திய பூங்கொடி போல்வாளாகிய; இன் துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்பு உடைத் தெய்வம் யாம் கண்டிலம் ஆல் - தம் காதலர்க்கு இனிய வாழ்க்கைத் துணை ஆகிய மகளிருக்கு ஒருதலையாக வேண்டப்படுகின்ற கற்பினைக் கடமையாகப் பூண்டுகொண்ட இத்தெய்வமே வாய்மையான தெய்வமாவதல்லது வேறு இவளினுங்காட்டில் பொலிவினையுடைய தெய்வத்தின் யாம் கண்டிலேம்; வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும் - அதுவேயுமன்றிக் காலமழை பொய்த்தறியாது வளம் பிழைத்தலையு மறியாது அரசருடைய வெற்றியும் சிதைந்தறியாது அஃது எந்த நாடெனில்; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்று நல்லோர் சொல்லும்; அத்தகு நல்உரை நீ அறியாயோ அத்தகைய நன்மையுடைய அறநூலுரையை நீயும் அறிந்திருப்பாய் அல்லையோ என்றார்; என்க.

(விளக்கம்) தன் நெஞ்சம் முழுவதும் காதலன்பாலே பொருந்தி அவன் எய்தும் துயர்க்கு வருந்துதலாலே தனது துயர் காணாள் ஆயினள் என்க. ஈண்டு ஒன்றொழித் தொன்றை உள்ள மற்றொரு மனமுண்டோ? எனவரும் கம்பநாடர் மொழியும் நினைக. (மாரீசன் -84.) கடம் - கடமை.

தவத்தோர் அடைக்கலத்தின் மாண்பு

149-160: தவத்தோர் ............. நின்றோனை

(இதன்பொருள்) தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும்-தவஞ்செய்யும் சான்றோர் கொடுத்த அடைக்கலம் அப்பொழுது சிறியதாகத் தோன்றினும்; மிகப் பேரின்பம் தரும்- அது பின்னர் மிகவும் பேரின்பத்தைத் தருவதொன்றாம்; அது கேளாய் - மாதரியே அதற்கு எடுத்துக்காட்டாக யாம் கூறுமிதனைக் கேட்பாயாக; படப்பைக் காவிரிப் பட்டினம் தன்னுள் பூவிரி பிண்டிப் பொது நீங்கு திருநிழல் - தோட்டங்களையுடைய காவிரிப்பூம்பட்டினத்தில் மலர்விரிந்த அசோகினது பொதுத்தன்மை நீங்கிய அழகிய நிழலின்கண்; உலக நோன்பிகள் ஒருங்கு உடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி தருமம் சாற்றும் சாரணர் தம் முன் சாவகர் ஒருங்குகூடி அமைத்த விளங்குகின்ற ஒளியையுடைய சந்திரகாந்தக் கல்லாலியன்ற மேடையின் மேல் அமர்ந்தருளி அறங்கூறும் சாரணர் முன்னிலையிலே ஒருநாள்; திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் - வானவில்லைப் போல ஒளிவீசித் திகழ்கின்ற திருமேனியையும் தார் மாலை முதலியவற்றையும் பொன்னாலியன்ற அணிகலன்களையும் நில உலகத்தார் கண்ணிற்குப் புலப்படாத தேவர் பலரானும் தொழப்படுகின்ற வடிவத்தையும் உடையவனும்; ஒரு பாகத்துக் கருவிரல் குரங்கின் கை பெருவிறல் வானவன் தனதிரு கைகளுள் வைத்து ஒருபக்கத்துக் கை கரிய விரலையுடைய குரங்கின் கையாக உடையவனாகிய பேராற்றலுடைய தேவனொருவன்; வந்து நின்றோனை - வந்து நின்றானாக அவனைக் கண்டபொழுது; என்க.

(விளக்கம்) கேளாய் என்றது அதற்கு ஒன்று கூறுவேன் அதனைக் கேளாய் என்பதுபட நின்றது. படப்பைக் காவிரி என மாறுக. படப்பை - தோட்டம். பட்டினம் - காவிரிப்பூம்பட்டினம். பிண்டியின் நிழல் ஏனைய நிழல்போலச் சாயாதே நிற்கும் தெய்வத் தன்மையுடைய நிழல் என்பார் பொது நீங்கு திருநிழல் என்றார். உலக நோன்பிகள் - சாவகர்; அமராவார் சமண சமயத்தைச் சார்ந்து தமக்கு விதித்த நோன்புகளை மேற்கொண்ட இல்லறத்தோர் என்க. இவர் புகார் நகரத்தே இட்ட சிலாதலம் உண்மையை:

பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு - நாடுகாண். 21-25.

என்று ஓதியதனானு மறிக. திருவில் - வானவில்; ஒளியிட்டு என்க. தார் - பூமாலை. மாலை - மணிமாலை எனவும் தார மாலையன் எனப் பாடமோதி மந்தார மாலையை யுடையன் எனினும் அமையும். கண்டபொழுது என ஒருசொல் பெய்க.

இதுவுமது

161-162: சாவகர் ............... கூறும்

(இதன்பொருள்) சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது - அவ்விடத்தே அச் சாரணர் கூறிய அறவுரை கேட்டிருந்த சாவகர் எல்லாம் அச் சாரணரைக் கை தொழுது அடிகளே; ஈங்கு இவன் வரவு யாது என-இவ் விடத்தே இவன் இவ்வாறு வருதற்குக் காரணம் யாது? என வினவ அதுகேட்டு; இறையோன் கூறும் -அச் சாரணருள் தலைவன் கூறுவான்; என்க.

(விளக்கம்) இவ்வாறு என ஒருசொல் பெய்க (அஃதாவது குரங்கின் கையோடு இவன் வருதற்குக் காரணம் என்னையோ என்றவாறு.) இறையோன் - தலைவன்.

இதுவுமது

163-191: எட்டி சாயலன் ......... என்றலும்

(இதன்பொருள்) எட்டி சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில் -எட்டி என்னும் பட்டம் பெற்ற சாயலன் என்னும் வாணிகனொருவன் துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டிக் காமம் சான்ற கடைக்கோள் காலையும் இல்லறத்தின் கண் இருந்தானாக அவனுடைய, உண்ணாவிரதத்தை யுடையோர் பலரும் (அவ் விரதம் முடிந்துழி உண்ணுதற்கு வந்து) புகுதும் மனையின்கண் ஒருநாள்; ஓர் மாதவ முதல்வனை மனைப்பெருங்கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து -பெரிய தவத்தையுடைய முதல்வன் வரக்கண்டு அவனை அம்மனைத் தலைவியாகிய மூதாட்டி தனது தீவினை நீங்கும் பொருட்டு அன்புடன் எதிர்கொள்ளும் பொழுது; ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்கு பால்படு மாதவன் பாதம் பொருந்தி - அவ்வூர் மாக்களாலே அலைக்கப்பட்ட சிறிய குரங்கு ஒன்று அச்சத்தால் ஒதுங்கிவந்து அம் மனையினுள் புகுந்து அங்கிருந்து அருளறத்தின் பாற்பட்ட அம் முனிவனுடைய திருவடிகளிலே விழுந்து; உண்டு ஒழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி எதிர் முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அம் முனிவன் உண்டு கழித்த சோற்றினையும் கைகழுவிய நீரையும் தணியாத விருப்பத்தாலே சிறிது அருந்தியதனால் உண்டான மகிழ்ச்சியோடு முனிவன் எதிரே சென்று தனது நன்றியறிவு புலப்பட அம் முனிவனுடைய முகத்தை நோக்கிய இன்பத்திற்குக் காரணமான அதன் முகச்செவ்வியை; அதிராக் கொள்கை அறிவனும் நயந்து மனைக்கிழத்தி நின் மக்களின் ஓம்பு என நடுங்காத கோட்பாட்டினையுடைய மெய்யறிவுடைய அம் முனிவனும் விரும்பி அவ்வில்லத் தலைவியை அழைத்து அன்னாய் இக் குரங்கினை நின்னுடைய மக்களைப் பேணுமாறு பேணிக்கொள்க என்று கூறி ஓம்படை செய்துபோக; மிக்கோன் கூறிய மெய்ம் மொழி ஓம்பி காதல் குரங்கு கடை நாள் எய்தவும் - அதுகேட்ட அம் மனைக்கிழத்தி தானும் அம்முனிவன் கூறிய வாய்மொழியை ஒருபொழுதும் தப்பாமல் நினைவிற்கொண்டு அக் குரங்கினைப் பேணி வரும் பொழுது தன் அன்பிற்குரிய அக் குரங்கு தானும் முதுமை எய்தி இறந்ததாக; தானம் செய்வுழி அதற்குத் தீது அறுக என்றே ஒரு கூறு செய்தனள் ஆதலின் இறந்த அக் குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்து அச் சடங்கில் தானஞ் செய்யுங்கால் தனது பொருளில் அதற்கும் ஒருகூறு செய்து அவற்றை எல்லாம் அதற்குத் தீவினை கெடுக என்று உட்கொண்டு தானஞ் செய்தனள் ஆதலால்; மத்திம நல் நாட்டு வாரணம் தன்னுள் உத்தர கவுத்தற்கு ஒரு மகன் ஆகி உருவினும் திருவினும் உணர்வினும் தோன்றி - அக் குரங்கு நடு நாட்டகத்தில் வாரணவாசி என்னும் நகரத்தின்கண் உத்தரகவுத்தன் என்னும் அரசனுக்கு ஒரே மகனாக அழகினோடும் திருவோடும் உணர்வினோடும் பிறந்து; பெருவிறல் தானம் பலவும் செய்து ஆங்கு எண் நால் ஆண்டின் இறந்த பிற்பாடு விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் வள்ளன்மையில் பெரிய வெற்றியுடையவனாய்த் தானங்கள் பற்பலவுஞ் செய்து அவ் வரசுரிமையில் முப்பத்திரண்டாண்டு கழிந்த பின்னர்த் தெய்வ வடிவம் பெற்றனன் ஆதலாலே; பெற்ற செல்வப் பெரும்பயன் எல்லாம் தன்காத்து அளித்தோள் தானச் சிறப்பு என பண்டைப் பிறப்பின் குரங்கின் சிறு கை ஒருபாகத்து கொண்டு அவ்வாறு தான்பெற்ற செல்வமும் அச் செல்வத்தால் தான் எய்திய பெரிய பயன்களும் எல்லாம் முன்னர்த் தன்னைப் பாதுகாத்தருளியவள் செய்த தானத்தின் சிறப்புகள் என்று கருதி முற்பிறப்பிலே கருங்குரங்கான வடிவத்திற்கியன்ற சிறிய கையைத் தனது ஒரு பாகத்திற்கொண்டு; கொள்கையின் புணர்ந்த சாயலன் மனைவி தானம் தன்னால் இவ்வடிவு ஆயினன் அறிமினோ என - முனிவர் சொல்லைப் பேணவேண்டும் என்னும் கொள்கையினோடு பொருந்திய சாயலன் என்னும் வணிகன் மனைவி என்பொருட்டுப் பண்டு செய்த தானத்தின் விளைவால் இந்தத் தெய்வ வடிவத்தை யான் பெறுவேனாயினேன் எல்லீரும் அறிந்துகொள்ளுங்கோள் என்று; சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்டத் தேவகுமரன் தோன்றினன் என்றலும் - உலக நோன்பிகளாகிய உங்களுக்கு எல்லாம் விளக்கிக் காட்டுதற்கே இத் தேவகுமரன் இவ்வாறு இவ்விடத்தே தோன்றினன் என்று கூறவும்; என்க.

(விளக்கம்) எட்டி - பட்டப்பெயர். சாயலன் ஒரு வணிகன் இருந்தான் என்றது துறந்தோர்க்குத் துப்புரவு வேண்டித் தான் துறவாமல் இல்லத்திருந்தோன் என்பதுபட நின்றது. இக் கருத்து பட்டினி நோன்பிகள் பலர்புகும் மனை என அவன் மனையை அடிகளார் விதந்தமையால் பெற்றாம். ஏதம் - தீவினை. ஒதுங்கி என்றமையால் அலைக்கப்பட்டு ஆற்றாது என்பது பெற்றாம். பாற்படு மாதவன் - துறவறத்தின் பாற்படும் மாதவன் என்க. முகச் செவ்வி - முகம் மலர்ந்த தன்மை. மனைக்கிழத்தீ: விளி. விகாரமெனினும் அமையும். ஒரு கூறு: தன் மக்களுக்குக் கூறு செய்து கொடுக்குமாறு போலே அக்குரங்கிற்கும் கொடுத்த ஒரு கூறு என்க.

இனி, உத்தரன் கவிப்பதற்கு ஒரு மகனாகி எனப் பாடமோதி இக்குரங்கு உத்தரனென்னும் பெயரோடு கவிப்பனென்னும் வாணிகனுக்கு ஒரு மகனாகப் பிறந்ததென்பாருமுளர் என்பது பழைய உரை. உணர்வு - பழம் பிறப்புணர்ச்சி. எண்ணாலாண்டு என்றது அவன் அரசாட்சி செய்த காலத்தை. சாற்றினன் -சாற்றி.

இதுவுமது

192-197: சாரணர் .............. எய்தினர்

(இதன்பொருள்) சாரணர் கூறிய தகைசால் நல்மொழி ஆர் அணங்குஆக என்று அப்பதியுள் அறந்தலைப்பட்டோர் அருந்தவமாக்களும் - சாரணர் மொழிந்த தகுதியமைந்த நல்ல அறவுரையை அந்நாளில் தெய்வ மொழியாகக் கொண்டு அறத்து வழி நின்றோராகிய அந்நகரத்துக்கண் அரிய தவமுடையோரும்; தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும்; இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும்; முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்-குறைவில்லாத இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்; என்க.

(விளக்கம்) தகை - ஈண்டு வாய்மை. அணங்காக - தெய்வமொழியாக. அறந்தலைப் பட்டோர்: அச் சாரணர் கூறிய அடைக்கலம் பேணும் அறத்தை மேற்கொண்டவர் என்க. தன்தெறல் வாழ்க்கை -தன்னலம் பேணாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை. இனி உண்ணா நோன்பு முதலியவற்றால் தன்னையே ஒறுக்கும் வாழ்க்கை எனினுமாம். முட்டா இன்பம்: குறைபாடில்லாத வின்பம். முடிவுலகு-வீட்டுலகம்.

தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிகப்பேரின்பம் தரும் என்று கூறியதற்கு எடுத்துக்காட்டாக இவ் வரலாற்றினை அடிகளார் ஓதினர் என்க.

இதுவுமது

198-200: கேட்டனை ........... ஏத்தி

(இதன்பொருள்) கேட்டனை ஆயின் நீ தோட்டு ஆர் குழலியொடு நீட்டித்து இராது-இவ்வாற்றால் அடைக்கலத்தின் பயனை நீ கூர்ந்து கேட்டனை எனின் இந்த மலர் பொருந்திய கூந்தலை யுடைய கண்ணகி நல்லாளோடு இனி இவ்விடத்தே காலம் தாழ்த்திராது; நீ போக என்று கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி - நீ விரைந்து போவாயாக! என்று கவுந்தியடிகளார் ஏவா நிற்ப, அதுகேட்ட மாதரி தான் பெற்ற சிறந்த அடைக்கலப் பொருள் பற்றிப் பெரிதும் மகிழ்ந்து அடிகளாரைத் தொழுது அவ்விடத்தினின்றும்; என்க.

(விளக்கம்) தோடு - தோட்டு என விகாரமெய்தியது, அடைக்கலம் பெற்றமை கருதி உவந்தனள் என்க.

மாதரி செயல்

201-206: வளரிள .......... புறஞ்சூழ

(இதன்பொருள்) வளர் இள வனமுலை வாங்கு அமைப்பணைத் தோள் முளை இள வெள்பல் முதுக்குறை நங்கையொடு -வளர்கின்ற இளைய அழகிய முலையினையும் வளைந்த மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் முளைபோன்ற வெள்ளிய எயிறுகளையும் சிறு பருவத்திலேயே வாய்க்கப்பெற்ற பேரறிவினையும் உடைய மாதர்களுள் தலை சிறந்த கண்ணகி நல்லாளோடு; சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து மேற்றிசையின்கண் சென்று வீழ்கின்ற ஞாயிற்றினது அடங்கிய சுடரையுடைய மாலைப் பொழுதிலே; கன்று தேர்ஆவின் கனைகுரல் இயம்ப - மடிபால் சுரந்து தம் கன்றைத் தேடி வருகின்ற ஆக்களின் மிக்க குரல்கள் ஒலிப்பவும்; மறி நவியத்துத் தோள் உறிக் கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறம்சூழ - ஆட்டுக்குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறிகட்டின காவையுமுடைய இடையருடனே கூடச் செறிந்த வளையலணிந்த இடைச்சியரிற் சிலர் இவள் அழகு கண்டு வியப்போடு புறஞ்சூழ்ந்து வாராநிற்பவும்; என்க.

(விளக்கம்) வனம் - அழகு. அமைவாங்கு பணைத்தோள் என மாறி மூங்கிலின் அழகை வாங்கிக்கொண்டு பூரித்த தோள் என்பாருமுளர். முதுக்குறை -பேரறிவு. நங்கை-மகளிருள் தலை சிறந்தவள். செல்சுடர்-உலகினின்றும் தமது மண்டிலத்திற்குச் சென்றடங்கிய சுடர் எனினுமாம். கனை குரல் - பெருங்குரல். நவியம் - கோடரி. கா-காவுதடி. அதன் இரு நுனியிலும் உறி கட்டப்படுதலின் உறிக்கா என்றார். காவுதடி என்பது இக்காலத்தே காவடி என வழங்கப்படும். ஆய்ச்சியர் நங்கைக்குப் பாது காவலாகப் புறஞ்சூழ என்றுமாம்.

இதுவுமது

207-219: மிளையும் ............ புணர்ந்தென்

(இதன்பொருள்) மிளையும் - காவற்காடும்; கிடங்கும் - அகழியும்; வளைவில் பொறியும் - தானே வளைந்து அம்பெய்யும் விற்பொறியும்; கருவிரல் ஊகமும் - கரிய விரலையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறியும்; கல்உமிழ் கவணும் -கல்லை எறிகின்ற கவணும்; பரிவுஉறு வெந்நெய்யும் - காய்ந்து சேர்ந்தார் மேல் இறைத்தால் வருந்துகின்ற நெய்யையுடைய மிடாவும்; பாகுஅடு குழிசியும் - செம்புருக்கிப் பகைவர்மேல் இறைக்கும் மிடாவும்; பொன்காய் உலையும் -இரும்பை உருகக் காய்ச்சிவீசும் உலைப் பொறியும்; கல் இடு கூடையும் - கல்லிட்டு வைக்கப்பட்ட கூடைகளும்; தூண்டிலும் - தூண்டில் வடிவாகப் பண்ணிப் போகட்டு வைத்து அகழியை நீந்திவந்து மதில் பற்றுவாரைக் கோத்திழுக்கும் கருவியும்; தொடக்கும் - கழுக்கோல்போலக் கழுத்திற் பூட்டி முறுக்குஞ் சங்கிலியும்; ஆண்டலை அடுப்பும்- ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிடப் பகைவர் உச்சியிற் கொத்தி மூளையைக் குடிக்கும் பொறிநிரலும்; கவையும் - அகழியினின்றும் ஏறின் தள்ளிவிடும் இரும்பாலியன்ற கவைக்கோலும்; கழுவும் - கழுக்கோலும்; புதையும் - அம்புக் கட்டும்; புழையும் -அம்பேவும் அறைகளும்; ஐயவித்துலாமும் - பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டமும், கையெபர் ஊசியும் - மதிற்றலையைப் பற்றுவார் கையைத் துளைக்கும் ஊசிப்பொறிகளும்; சென்று எறி சிரலும் - பகைவர்மேல் பாய்ந்து கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறியும்; பன்றியும் - மதில் உச்சியில் ஏறினார் உடலைக் கொம்பால் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறியும்; பணையும் - பகைவரை அடித்தற்கு மூங்கில் வடிவாகப் பண்ணிவைத்த பொறியும்; எழுவும் சீப்பும் - கதவுக்கு வலியாக உள்வாயிற் படியிலே நிலத்திலே விழும்படி விடும் மரங்களும்; முழு விறல் கணையமும் - கணைய மரமும்; கோலும் - விட்டேறும்; குந்தமும் - சிறுசவளமும்; வேலும் -வல்லையமும்; ஞாயிலும் - குருவித்தலைகளும்; பிறவும் - சதக்கினி தள்ளி வெட்டி களிற்றுப்பொறி விழுங்கும் பாம்பு கழுகுப்பொறி புலிப்பொறி குடப்பாம்பு சகடப்பொறி தகர்ப்பொறி அரிநூற் பொறி என்பனவும்; சிறந்து - ஆகிய இப் பொறிகளால் சிறப்புற்று; நாள் கொடி நுடங்கும் - நல்ல நாளிலே உயர்த்திய கொடி அசைகின்ற; வாயில் கழிந்து-மதில் வாயிலைக் கடந்து; கோவலர் மடந்தை - கோவலர் குலத்து முதுமகளாகிய அம் மாதரி; கொள்கையில் புணர்ந்து - தனது கொள்கையினோடு உள்ளம் ஒன்றி; தன் மனைபுக்கனளால் - தன்னுடைய மனையின்கண் புகுந்தனள்; என்பதாம்.

(விளக்கம்) வளைவிற்பொறி முதலாகப் பிறவும் என்னும் வரையில் மதில் அரண்மேல் அமைத்துள்ள பொறிகள் என்றுணர்க. 208. கருவிறல் எனவும் பாடம்: ஊகம்-குரங்கு. 209. பாகு - செப்புக் குழம்பு; குழிசி - மிடா; சாணகம் கரைத்துக் காய்கிற மிடாக்களுமாம் என்பாருமுளர். 210: பொன் - இருப்பு வட்டுக்கள். கல்லிடு கூடை - இடங்கணிக்கல் வீசும் கூடை என்றும் கூறுவர். தொடக்கு - கயிற்றுத் தொடக்குமாம். ஆண்டலை - ஆண்மகனது தலைபோல வடிவமுள்ள ஒருவகைப் பறவை. அடுப்பு - அடுக்கு. 212. கழுகும் எனவும் பாடம். புதை மண்ணிற்புதைத்த இருப்பாணியும் என்பர். 213. ஐயவித்துலாம் - கதவை அணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாம்; சிற்றம்புகளை வைத்து எய்யும் இயந்திரமுமாம். பொய்யூசி என்றும் பாடம். சிரல் - சிச்சிலி (மீன் கொத்திப் பறவை). பணை - முரசுமாம். குதிரைப்பந்தியுமாம். எழுவுஞ்சீப்பு - எழுப்பும் சீப்பு என்க. 217: நாள்தோறும் செய்த வெற்றிக்குக் கட்டின கொடியுமாம். 219: கோவலர் மடந்தை என்றது மாதரியை. கோவலர் மடந்தை தவத்தோராகிய கவுந்தியடிகள் தந்த அடைக்கலத்தைப் பேணவேண்டும் என்னும் கொள்கையொடு உள்ளம் பொருந்தி வாயில் கடந்து தன் மனை புக்காள் என்க.

இனி, இதனை மாநகர் கண்டு பொழிலிடம் புகுந்து கோவலன் கூறுழி, மாடலன் என்போன் புகுந்தோன் றன்னைக் கோவலன் வணங்க, அந்தணன் உரைப்போன் கருணை மறவ, செல்லாச்செல்வ, இல்லோர் செம்மல், உம்மைப் பயன் கொல்? போந்தது நீயென வினவ, கோவலன் கனவு கண்டேன் கடிதீங்குறும் என, இங்கு ஒழிக நின் இருப்பு, மதுரை மாநகர் புகுக என, மாதவத்தாட்டியும் மாமறை முதல்வனும் கூறுங்காலை மாதரி என்போள் ஐயையைக் கண்டு அடி தொழலும், எண்ணினளாகி, அடைக்கலம் தந்தேன் மடந்தையைத் தாயும் நீயே ஆகித்தாங்கு, அடைக்கலம் சிறிதாயினும் பேரின்பம் தரும், அது கேளாய், பட்டினந் தன்னுள் சாரணர் முன் குரங்கின் கை யொரு பாகத்து வானவன் வந்து நின்றோன் யாதுஇவன் வரவு என, இறையோன் தேவகுமரன் தோன்றினன் என்றலும், அறந்தலைப்பட்டோர் முடிவுலகெய்தினர்; கேட்டனை யாயின் நீ போகென்று கவுந்தி கூற, நங்கையொடு கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்து, மனைபுக்கனள் என முடிக்க.

பா-நிலை மண்டில ஆசிரியப்பா.

அடைக்கலக் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #24 on: February 27, 2012, 10:26:22 AM »
16. கொலைக்களக் காதை

அஃதாவது - மாதரி என்னும் இடைக்குல மடந்தை கவுந்தியடிகளார் அறிவுறுத்தியபடி கண்ணகியையும் கோவலனையும் தன் மனைக்கு அழைத்துச் சென்று ஆர்வத்துடன் அவர்க்கு வேண்டுவனவெல்லாம் வழங்கக் கண்ணகியும் தனது கைவன்மையால் இனிதுற உணவு சமைத்துக் கணவனுக்கு ஊட்டி அற்றைநாள் இரவின்கண் அங்கிருப்ப; மற்றை நாள் கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்றனை விற்றற் பொருட்டுக் கண்ணகியைத் தேற்றுரை பல கூறி வருந்தாதிருவென்று கூறிச் செல்பவன், மதுரை நகரத்துப் பீடிகைத் தெருவிலே பொற் கொல்லர் நூற்றுவர் பின் வரத் தன்னெதிர் வந்த பொற்கொல்லனைக் கண்டு தன் சிலம்பினை அவன்பால் காட்ட, அவன் பண்டு அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தானாதலால் அச் சிலம்பே இச் சிலம்பென்றும் அதனைக் களவுகொண்ட கள்வனும் இவனே என்றும் அரசனுக்குக் காட்டி அப் பழியைக் கோவலன்மேல் சுமத்தத் துணிந்து கோவலனை நோக்கி இச் சிலம்பு அரசி அணிதற்குத் தகுந்த சிலம்பாதலின் யான் சென்று அரசனுக்கு அறிவுறுத்தி வருமளவும் இவ்விடத்திருப்பீர் என்று கூறிச் சென்றவன், பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந் தேவியின் ஊடல் தீர்க்கச் செல்வான் முன்சென்று வணங்கி, அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன் அடியேன் குடிலில் அச் சிலம்புடன் வந்துளான் என்று சொல்ல, அதுகேட்ட பாண்டியன் ஒரு சிறிதும் ஆராய்தலின்றிக் காவலரைக் கூவி நீவிர் இப் பொற் கொல்லனுடன் சென்று அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பினை ஈண்டுக் கொணர்க என்று பணிப்ப, அவ்வாறே அக் காவலர் பொற்கொல்லனுடன் சென்று அவனால் காட்டப்பட்ட கோவலனைக் கண்டுழி இத்தகையோன் களவுஞ் செய்வனோ! என்று ஆராயும்பொழுது அக் காவலருள் கல்லாக் களிமகன் ஒருவன் தன் கை வாளால் கோவலனை எறிந்துழி, கோவலன் கொலையுண்ட செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்
பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க்  5

காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச்
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக்
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச்  10

செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது
மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி  15

ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச்
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்  20

நெடியா தளிமின் நீரெனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற்
கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்  25

மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்  30

திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கித்
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்  35

கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்  40

தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு  45

ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை  50

விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த  55

மையீ ரோதியை வருகெனப் பொருந்திக்
கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல்  60

மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்  65

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென  70

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்  75

முந்தை நில்லா முனிவிகந் தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப்  80

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக்
குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி  85

நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே   90

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகெனக்
கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா  95

ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான்  100

தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின்
தாதெரு மன்றந் தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய  105

நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக்  110

காவலன் றேவிக் காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக்
கூற்றத் தூதன் கைதொழு தேத்தப்   115

போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற்
சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்  120

கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக்
கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர்  125

தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்
கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்  130

கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத்
தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக்  135

குலமுதல் தேவி கூடா தேக
மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்  140

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக்
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக்
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்   145

கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென்
சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென்   150

தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக்
காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத்  155

தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த
கோவலன் றன்னைக் குறுகின னாகி
வலம்படு தானை மன்னவன் ஏவச்
சிலம்பு காணிய வந்தோர் இவரெனச்
செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம்  160

பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்றுகூறும்
அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக்
கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன்  165

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது
மருந்திற் பட்டீ ராயின் யாவரும்   170

பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்
மந்திர நாவிடை வழுத்துவ ராயின்
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின்
கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர்  175

மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவ ராயின்   180

இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விடத் தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ  185

கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து  190

மாதர் கோலத்து வல்லிருட் புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத்
துயில்கண் விழித்தோன் தோளிற் காணான்  195

உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டிக்
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக்
கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க்  200

குண்டோ வுலகத் தொப்போ ரென்றக்
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர்
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
நிலனகழ் உளியன் நீலத் தானையன்
கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று  205

மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக்
கைவாள் உருவஎன் கைவாள் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன்
அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும்  210

உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக்
கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்  215
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்.

நேரிசை வெண்பா

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை.

உரை

மாதரி கண்ணகிக்குச் செய்யும் அன்புச் செயல்

1-6: அரும்பெறல் ............ மனைப்படுத்து

(இதன்பொருள்) அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பேர் உவகையின் - தனக்கு விருந்தாகப் பெறுதற்கரிய பாவைபோல்வாளாகிய கண்ணகி நல்லாளை மாதவமுடைய கவுந்தியடிகளாலே அடைக்கலம் கொடுக்கப் பெற்றமையால் மிகப் பெரியதாகிய மகிழ்ச்சியை எய்திய; இடைக்குல மடந்தை - கொடும்பாடில்லாத கோவலர் குடியிற் பிறந்த அம் மாதரி தானும்; அளை விலை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு கோவலர் இருக்கை அன்றி - மோர் விற்ற கூலங்களை உணவாக உடைய ஆய்ச்சியரும் ஆயரும் குடி இருக்கும் பழைய இல்லின்கண் கண்ணகியை வைத்தலின்றி; மிளைசூழ் காவல் புனைமாண் பந்தாப் பூவல் ஊட்டிய சிற்றில் கடி மனைப்படுத்து-கட்டுவேலி சூழ்ந்த காவலையும் அழகு செய்யப்பட்டு மாட்சிமை உடைத்தாகிய பந்தலையும் உடைய செம்மண் பூசப்பட்ட சிறிய இல்லமாகிய புதியதொரு மனையிலே வைத்து; என்க.

(விளக்கம்) அளை - மோர். விலை - விலையாகப் பெற்ற நென் முதலியன. மிளை சூழ் காவல் சிற்றில் எனவும். பூவலூட்டிய சிற்றில் எனவும். பந்தர்ச் சிற்றில் எனவும் தனித்தனி கூட்டுக. மிளை - கட்டு வேலி. பூவல் - செம்மண். பூவற் படுவில் கூவற்றோண்டிய (புறம்: 319-1) என்புழியும் அஃதப் பொருட்டாதல் அறிக. கடி - புதுமை.

7-14: செறி வளை .............. தொழுது

(இதன்பொருள்) செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி நறு மலர்க்கோதையை நாள் நீராட்டி - மாதரி தன் சுற்றத்தினராகிய செறிந்த வளையலணிந்த ஆய்ச்சியர் சிலரோடே தானும் முன்னின்று நறுமணங்கமழும் மலர் மாலையினையுடைய கண்ணகியைப் புதிய நீராலே குளிப்பாட்டிப் பின்னர் அவள் திருமுகம் நோக்கி; புனை பூங்கோதை நங்கை - தொடுத்த மலர் மாலையை யுடைய நங்கையீரே! இனி ஒன்றற்கும் கவலாது! என்னுடன் ஈங்கு இருக்க - அடிச்சியாகிய என்னுடன் இங்கு இருந்தருளுக; கூடல் மகளிர் கோலம் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அரு விலை அழிப்பச் செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு - இம் மதுரை நகரத்தே வாழுகின்ற பெருங்குடி மகளிர் அணிந்து கொள்ளுகின்ற ஆடகம் என்னும் பொன்னாற் செய்த அணிகலன்களால் ஆகிய அழகை அழித்தற்கு இங்கு இயற்கை அழகோடு எழுந்தருளிய நுமக்குக் குற்றேவற் சிலதியர் இலரே என்று கருத வேண்டா; என் மகள் ஐயை காணீர் அடித்தொழிலாட்டி - உதோ நிற்பவள் என்னுடைய மகளாவள். ஐயை என்னும் இவளை நோக்குமின் இவள் இனி நும்முடைய குற்றேவல் சிலதியாய் நும்முடனே இருப்பள்; பொன்னீற் பொதிந்தேன் - அடிச்சியும் நும்மை பொன்னைப் பொதிந்து வைத்துப் பேணுமாறு போல எனது உள்ளத்தே பொதிந்து வைத்துப் பேணிக்கொள்வேன்; எனத்தொழுது என்று சொல்லிக் கண்ணகியை மகிழ்ச்சியோடு கை கூப்பித் தொழுது என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது - கூடலின் வாழும் பெருங்குடி மகளிர் என்பதுபட நின்றது. அவரணியும் அணிகலனின் சிறப்புக் கூறுவாள் அரு விலை ஆடகப் பைம்பூண் என்று விதந்தாள். இம் மதுரை நகரத்துத் தான்கண்ட அழகிய மகளிர் அணிகலன்களால் அணிசெய்து கொள்ளும் கோலந்தானும் இவருடைய இயற்கை அழகின் முன் புற்கென்று போம் என்னுங் கருத்தால் கண்ணகியின் அழகினைத் தன்னுள்ளே உவந்து, உவந்து இம் மாதரி வியந்து கூறிய இச் சொற்கள் பெரிதும் இன்பமுடையன ஆதல் உணர்க. செய்யாக் கோலம் - இயற்கை அழகு. நங்கை - நங்கையீர். நங்கை என்பதனை மாமி மருகியை அழைக்கும் முறைப்பெயர் என்பர் அடியார்க்கு நல்லார். (மேலும்) பாதரி கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள் எனவும் இஃது அக்கால வழக்கு எனவும் விளக்கினர்.

வந்தாய்க்கு எனவும் காணின் எனவும் பாடம் உண்டு.

15 - 21: மாதவத் தாட்டி ......... நீரெனக் கூற

(இதன்பொருள்) மாதவத்தாட்டி வழித்துயர் நீக்கி ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள் நும் மகனார்க்கு இனி நோதகவு உண்டோ - பெரிய தவத்தையுடைய கவுந்தியடிகளார் வழியின் கண் நும் பொருட்டுச் சிறிதும் நும் கணவனார்க்குத் துயர் உண்டாகாமல் நீக்கியதோடன்றி இங்கும் துன்பம் இல்லாத இடத்திலே நும்மைச் சேர்த்து வைத்தமையாலே நும்முடைய கணவனார்க்கு இனியும் நும் பொருட்டுத் துன்பம் உளதாமோ? ஆகாது காண்! என்று கூறிக் கண்ணகியை நன்கு தேற்றிப் பின்னர் அங்கு நின்ற ஆய்ச்சியரை நோக்கி; அடிகள் சாவக நோன்பிகள் ஆதலின் நாத்தூண் நங்கையொடு நீர் நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - அடிகள் சாவக நோன்பிகள் ஆதலாலே இந் நங்கையாருடைய நாத்தூணாருடனே நீங்களும் சென்று பகற் பொழுதிலே உண்ணும் அடிசில் சமைத்தற்கு; அமைந்த நல் கலங்கள் நெடியாது அளிமின் எனக் கூற - பொருந்திய நல்ல புதுக் கலங்களைக் காலந்தாழ்க்காமல் கொணர்ந்து கொடுப்பீராக என்று ஏவா நிற்ப; என்க.

(விளக்கம்) நும் மகனார் - நும்முடைய கணவனார்; மகன் மகள் என்னும் சொற்கள் கணவன் மனைவி என்னும் பொருளுடையவையாகப் பூண்டு வழங்கப்பட்டன. இதனை நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம். பண்டும் பண்டும் பலபிறப்புளவாற், கண்ட பிறவியே அல்ல காரிகை (21: 29-32) எனவரும் மணிமேகலையினும் காண்க. வழி வருங்கால் நும் பொருட்டு நும் கணவனார்க்கு வரும் துன்பத்தை அடிகளார் தாமே நீக்கினர்; இங்கும் எம்மிடத்தே அடைக்கலந் தந்தமையால் நும் பொருட்டு ஈண்டும் நும் கணவனார்க்கு வரும் வருத்தத்தை நீக்கினர் என்பது கருத்து. நோதகவு - துன்பம். உண்டோ - என்புழி ஓகாரம் எதிர்மறை. இல்லை என்றவாறு. அடிகள் என்றது கோவலனை. சாவக நோன்பு - இல்லறத்திலிருந்தே விரதம் காத்தல். நங்கை நாத்தூண் என்க - நாத்தூண் என்றது ஐயையை. கணவனுடன் பிறந்தாளை நாத்துணா என்று இக்காலத்திலும் வழங்குவர்.

இனி, நாத்தூண் நங்கையொடு அடிசில் ஆக்குதற்கு எனச் சொற் கிடந்தவாறே பொருள் கோடலுமாம். கண்ணகி தனக்கு மருகி ஆகிய விடத்தே தன்மகள் அவட்கு நாத்தூண் முறையினள் ஆதல் பற்றி அவ்வாறு கூறினள் என்க. நற்கலம் என்றது நல்லனவும் புதியனவும் ஆகிய கலங்கள் என்பதுபட நின்றது. சாவக நோன்பிகள் பகற் பொழுதிலேயே உண்ணும் விரதமுடையர் ஆதலின் நான் வழிப்படூஉம் அடிசில் எனவும். ஞாயிறு படுவதன் முன்னர் உண்ணல் வேண்டுதலின் நெடியாதளிமின் எனவும் ஓதினாள். தனக்கு அற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் நாளாதலின் நீர் அளிமின் என்றாள். இங்குக் கூறியன இவர்கள் சென்ற பிற்பகலினும் அன்றிரவு செய்தனவுமாம். இனி, மற்றைநாளைச் செய்தி கூறுகின்றார்.

இடைக்குல மகளிர் அடிசிற்கு வேண்டுவன கொடுத்தல்

22-28: இடைக்குல ........... கொடுப்ப

(இதன்பொருள்) இடைக்குல மடந்தையர் இயல்பின் குன்றாமடைக்கலம் தன்னோடு - அது கேட்ட அவ் விடைக்குல மகளிர் மாதரி கூறிய தன்மையில் குறைபாடில்லாத அடிசில் சமைத்தற்குரிய கலங்களோடே; மாண்பு உடை மரபின் கோளிப்பாகல் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத்தீங்கனி - மாட்சிமையுடையோர் கொடுக்கும் தன்மை போலப் பூவாது காய்க்கும் பலாவினுடைய கொழுவிய திரண்ட முதிர்ந்த காயும் வளைந்த வரிகளையுடைய வெள்ளரிக்காயும் கொம்மட்டி மாதுளையின் இளங்காயும் மாம்பழமும் இனிய வாழைப்பழமும்; சாலி அரிசி - செந்நெல் அரிசியும் ஆகிய இவற்றை; தம் பால் பயனொடு - தம் குலத்திற்குரிய பாலுடனும் தயிருடனும் நெய்யுடனும்; கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப திரண்ட வளையலை யணிந்த மாதே கொள்வாயாக வென்று சொல்லிக்கொடுக்க; என்க.

(விளக்கம்) மாண்புடை மரபின் என்பதற்கு உணவிற்கு மாட்சிமை யுடைய முறைமையுடைய எனலே அமையுமாயினும் அதனைக் கோளிப் பாகல் என்பதற்கு அடையாக்கி அடியார்க்கு நல்லார் மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபு போலப் பூவாது காய்க்கும் பாகல் என்றது கீழ்வரும் செய்யுளைக் கருதிக் கூறியபடியாம் அச் செய்யுள்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வார் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற்
பலாமாவைப் பாதிரியைப் பார் 

எனவரும். கோளிப் பாகல் - பலா; வெளிப்படை. கனிந்தாய் - கனிக்கு ஆன காய், முதிர்ந்த காய்; இதனை இக் காலத்துச் செங்காய் என்ப. வால்வரிக் கொடுங்காய் எனப் பாடங் கொண்டு; வெள்ளரிக்காய் என்பர் அரும்பதவுரையாசிரியர். கொம்மட்டி மாதுளங்காய் புளிங்கறி ஆக்குதற்குச் சிறந்தது என்பர். பாற்பயன் - பாலாகிய பயன் எனலுமமையும்.

29-34: மெல் விரல் ............. ஆக்கி

(இதன்பொருள்) பல்வேறு பசுங்காய் கொடுவாய் குயத்து மெல்விரல் சிவப்ப விடுவாய் செய்ய - அவ்வாறு அம்மகளிர் கொடுத்த பல்வேறு வகைப்பட்ட பசிய காய்களை வளைந்த அரிவாளால் கண்ணகி தனது மெல்லிய விரல்கள் சிவக்கும்படி அரியா நிற்ப; திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன - பின்னர் அவற்றைச் சமைக்கும் பொழுது அவளுடைய அழகிய முகம் வியர்த்தது; இயல்பாகவே சிவந்த அவளுடைய கண்கள் பெரிதும் சிவந்தன; வை எரி மூட்டிய ஐயை தன்னொடு - சமைக்கும் பொழுது தனக்கு உதவியாக வைக்கோலால் அடுப்பின்கண் தீ மூட்டித் தந்த ஐயையினோடு; கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி - தனது கை பயின்றறிந்த சமையல் தொழில் வன்மையால் தன் காதலனுக்குத் தான் வல்லவாறு உணவு சமைத்து; கரிபுற அட்டில் கண்டனள் பெயர் - புகையால் கரிந்த இடத்தையுடைய அவ் வடுக்களைத் தொழிலை முடித்து வந்த பின்னர்; என்க.

(விளக்கம்) கொடுவாய் குயம் - வளைந்த அரிவாள். விடுவாய் செய்தல் - அரிந்து துணித்தல். அத் தொழிலில் பலயாண்டுகள் கோவலன் தன்னைக் கைவிட்டுப் போனமையால் பயிற்சி இல்லாமையால் அவளது திருமுகம் வியர்த்தது, செங்கண் சேர்ந்தன என்பதே ஈண்டு அடிகளார் கருத்தென்றுணர்க. அட்டில் சமை குமிடம் ஐயை தீ மூட்டிக் கொடுக்குமளவே கண்ணகிக்கு உதவி செய்தனள் என்பது தோன்றவை எரி மூட்டிய ஐயை தன்னொடு என்றார். மடைமைசமையற் றொழில் திறமை. அது தானும் பண்டு அவள் கை நன்கு பயின்றறிந்த திறமை என்பது போதரக் கையறி மடமையின் ஆக்கி என்றார். ஆக்கி அட்டில் கண்டனள் பெயர என இயைத்திடுக.

கண்ணகி கோவலனை ஊட்டுதல்

35-43: தாலப் புல்லின் ........... அடிகளீங்கென

(இதன்பொருள்) தாலப் புல்லின் வால் வெள் தோட்டுக் கைவல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த செய் வினைத்தவிசின் செல்வன் இருந்தபின் பனையினது தூய வெள்ளிய குருத் தோலையாலே கைத்தொழில் திறம் படைத்த மகளாலே மிகவும் அழகாகப் புனைந்து செய்த தொழில் சிறப்பமைந்த (தடுக்கு) இருக்கையின் கண் தன் காதலன் இருந்த பின்னர்; கடி மலர் அங்கையிற் காதலன் சுடு மண் மண்டையில் அடி நீர் தொழுதனள் மாற்றி மணமுடைய செந்தாமரை மலர் போன்ற தன் கைகளைக் குவித்துத் தன் காதலன் சுட்ட மட் பாண்டத்தின் கண்ணுள்ள நன்னீரால் அடிகளைக் கழுவிய நீரைத் தொழுதனளாய் மாற்றி; மண்ணகமடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி நில மகள் எய்திய மயக்கத்தைத் தீர்ப்பவள் போல் நிலத்தில் தண்ணீரைத் தெளித்துத் தன் கையால் வட்டமாக மெழுகி; குமரி வாழையின் குருத்து அகம் விரித்து அடிகள் ஈங்கு அமுதம் உண்க என - குலை ஈனாத இளைய வாழையினது குருத்தை அதன் உள்ளிடம் தோன்ற விரித்திட்டு அதன் அகத்தே அமுதைப் பெய்து அடிகளே அமுது செய்தருளுக என்று வேண்டா நிற்ப; என்க.

(விளக்கம்) தாலப்புல் - பனை; புறக்காழ் உடையதாதலின் புல் என்றார். வால் வெள்தோடு என்றது - பனையின் மிகவும் இளமையான குருத்தோலையை அது சிறந்த வெண்மையுடையதாதலன்றியும் தூய்மையும் உடைத்தாதலின் வால் வெண்டோடு என்றார். மகடூஉ - பெண்பாற் பொதுச் சொல். தவிசு - தடுக்கு. செல்வன் - ஈண்டுக் கணவன் என்னும் பொருட்டு. அடிகழுவிய நீர், அமுதைப் பெய்து என்பன இசை எச்சம். சுடுமண் மண்டை என்றார் புதுக்கலம் என்பது தோன்ற; மண்டை என்றார், பண்டு பொற்கலம் முதலியவற்றால் அடி கழுவும் அவன் இப்பொழுது இழிந்த மண்டையாலும் அது செய்ய நேர்ந்தது என்று புலப்படுத்தற்கு. மண்ணகம்: ஒரு சொல். மாலைப் பொழுதாகலின் நிலமடந்தை மயக்கு ஒழிப்பனள் போல் என்றார். எதிர்வது உணர்ந்து மயங்கினாளை மயக்கொழிப்பாள் போல என்னும் பழையவுரை சிறப்புடைத்தன்று. குமரி வாழை என்பது பெயரின் வந்த சமாதி என்னும் அணி என்பர் (அடியார்க்கு - விரித்தீங்கு என்புழி ஈங்கு அசைச்சொல். ஆக்கி இருந்தபின் மாற்றித் தெளித்துத் தடவி விரித்து அமுதம் உண்க என இயையும்.

44-53: அரசர் ......... ஈங்கென

(இதன்பொருள்) அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் உரிய வெல்லாம் ஒரு முறை கழித்து - வணிகருக்கு ஓதவும் உணரவும் அரிய மறை நூலின்கண் உண்ணுங்கால் செய்தற்குரியனவாக விதிக்கப்பட்ட வாய்ப்பூச்சுப் பலியிடுதல் முதலிய செய்கை எல்லாம் செய்து ஒருவாறு முடித்தபின் கோவலன் அமுதுண்பானாக; ஆங்கு ஐயையும் தவ்வையும் - அவ்விடத்தே புறத்து நின்று நோக்கிய ஐயையும் அவள் அன்னையாகிய மாதரியும் அக் காதலர்களுடைய அழகு கண்டு தம்முள்; ஈங்கு நல் அமுது உண்ணும் நம்பி ஆயர்பாடியின் அசோதை பெற்று எடுத்த பூவை புது மலர் வண்ணன் கொல்லோ - இவ்வாயர்பாடியில் நல்ல அமுதுண்கின்ற இந்நம்பி பண்டு வட மதுரைக்கண் ஆயர்பாடியினிடத்தே யசோதை என்னும் ஆய்ச்சி அருந்தவத்தால் ஈன்று வளர்த்த சாயாவினது புதிய மலர் போன்ற நிறத்தையுடைய கண்ணனோ எனவும்; பல் வளைத்தோளியும் பண்டு நம் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக்கொல் என - இங்கு இவனுக்கு நல்லமூதாட்டித் துயர் தீர்க்கின்ற பலவாகிய வளையலணிந்த இந்நங்கைதானும் பழைய காலத்து நமது குலத்தில் தோன்றி ஆங்குக் காளிநதி யாற்றின்கண் தூயநீல மணி போலும் நிறமுடைய அக் கண்ணனுடைய துயரத்தைத் தீர்த்த குலவிளக்குப் போல்வாளாகிய நப்பின்னை தானோ எனவும் வியந்து; விம்மிதம் எய்தி நமக்கு ஈங்கு இவர் காட்சி கண் கொளா என உவகை பொங்கியவராய் இவ்விடத்தே நாம் காணுகின்ற இவருடைய காட்சி நம்முடைய கண்களின்கண் அடங்கமாட்டா என்று புகழ்ந்து கூறாநிற்ப என்க.   
                                       
(விளக்கம்) கண்ணன் வட மதுரையில் ஆயர்பாடியில் பிறந்து நப் பின்னையை மணந்து அவள் அன்பால் துயர் தீர்ந்தனன். இப்பொழுது இம் மதுரையில் இவ்வாயர்பாடியில் அமுதுண்ணும் இந்நம்பியும் அவனுடைய துயர்தீர்க்கும் இந்நங்கையும் அக் கண்ணனையும் நப்பின்னையையும் போலவே நமக்குக் காட்சி தருகின்றனர் என அவர் அழகினை அன்புடைய இவ்வன்னையும் மகளும் தம்முட் கூறி வியக்கின்றனர் என்க. ஆங்கு ஆயர்பாடியில் என்றது அவ்வட மதுரையில் அவ்வாயர்பாடியில் என்றவாறு. ஈங்கு நல்லமுதுண்ணும் நம்பி என்றது இம் மதுரையின் இவ்வாயர்பாடியில் நல்லமுதுண்ணும் நம்பீ என்றவாறு. பூவைப் புதுமலர் வண்ணன் என்பதும், தூமணி வண்ணன் என்பதும் கண்ணனையும் விளக்கு என்பது நப்பின்னையையும் குறித்து நின்றன. நம்பி: கோவலன். தோளி: கண்ணகி நங்குலத்துத் தூமணி வண்ணன் என்க. விம்மிதம் - வியப்பு; உவகை. இவ்விரு பொருளும் ஈண்டுக் கொள்க.

கோவலன் கண்ணகிக்கு இரங்கிக் கூறும் அன்பு மொழிகள்

54-62: உண்டி .............. அறியேன்

(இதன்பொருள்) உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு அம் மெல்திரையலோடு அடைக்காய் ஈத்த மை ஈர் ஓதியை வருக எனப் பொருந்தி - ஐயையும் மாதரியும் இவர் தம்முள் கண்ணனும் நப்பின்னையுமாகிய தம்முடைய வழிபடு தெய்வங்களையே கண்கூடாகக்கண்டு அப்பாற் சென்ற பின்னர் உணவருந்தி இனிதாக இருந்த பெரும் புகழை யுடைய கோவலனுக்கு அழகிய மெல்லிய வெற்றிலைச்சுருளோடே பிளவையும் (பாக்கினையும்) கொடுத்து நின்ற கரிய பெரிய கூந்தலையுடைய கண்ணகியைக் கோவலன் இங்கு வருக என்று அருகில் அழைத்து அணைத்துக் கொண்டவனாய் அன்புடையோய்; எம்முது குரவர் வெம்முனை அடுஞ்சுரம் போந்ததற்கு எம்முடைய தாயுந் தந்தையுமாகிய முதியோரிருவரும் நீ ஆறலைக்கும் கள்வருடைய வெவ்விய முனைகளை யுடைய பாலைநிலத்து அருவழியில் என்னோடு வந்ததனை நினைத்து; மடந்தை மெல்லடி கல் அதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ என இரங்கி -நம் மருகியினது மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த அருநெறியைக் கடந்துபோதற்குச் சிறிதும் வன்மையுடையன அல்லவே என்று பெரிதும் இரங்கி; என் உற்றனர் கொல் - எத்தகைய துயரத்தை அடைந்தனரோ; யான் உளங்கலங்கி மாயம் கொல்லோ வல் வினை கொல்லோ யாவதும் அறியேன் யான் இப்பொழுது பெரிதும் நெஞ்சம் கலங்கியிருக்கின்றேன் ஆதலால் நாம் இப்பொழுது எய்தியிருக்கும் இந்நிலைமை கனவோ? அன்றெனின் முன் செய்த தீவினையின் விளைவோ? இவற்றின் ஒன்றையும் அறிகின்றிலேன் என்றான்; என்க.

(விளக்கம்) ஐயையும் தவ்வையும் அவ்விடத்தினின்றும் சென்றமை முன்னத்தாற் பெற்றாம். எம்முடைய முதுகுரவர் என்றது தன்னுடைய தாய் தந்தையரை. ஈண்டு உயர்பின் ஆகிய எம் என்னும் பன்மைச் சொல்லால் தொடங்கியவன் தன் கண் இழிவு தோன்றுதலால் யானறிகிலேன் என ஒருமைச் சொல்லால் முடித்தான்.

இனி, உளங்கலங்கி அங்ஙனம் மயங்கக் கூறினான் எனலுமாம். முதுகுரவர் மடந்தை அடி அத்தம் கடக்கவல்லுந கொல்லோ என இரங்கி என்னுற்றனர் கொல் எனக் கூட்டுக. மாயம் - கனவு. அஃதன்றாயின் வல்வினை கொல்லோ என்றவாறு. என்னுற்றனரோ என்றான் கண்ணகி முன்னர் இறந்துபட்டனரோ என்றதற்குத் துணிவின்மையால். யாவதும் - யாதும்.

கோவலன் தனது தீ யொழுக்கத்திற்குத் தானே வருந்திக் கூறுதல்

63-70: வறுமொழி .......... செய்தனை என

(இதன்பொருள்) வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடு நகைப் புக்கு - யான் பயனில்லாத சொற்களைப் பேசித்திரிகின்ற வீணரோடும் காமுகரோடும் கூடிப் பிறர் பழி கூறும் கயவர் கூட்டத்தின்கண் அவருடைய வெடிச் சிரிப்புக்குள்ளாக்கி; பொச்சாப்பு உண்டு - உவகை மகிழ்ச்சியால் சோர்வுற்று; பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ - உறுதிப்பொருளை அறிவுறுத்தும் சான்றோரால் விரும்பப்படும் நல்லொழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனி அத்தீநெறியே அன்றி நன்னெறியும் உளதாமோ? இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன் - இவையேயும் அன்றி என்னுடைய தாய்தந்தையர்க்குச் செய்யும் ஏவல் தொழிலையும் செய்யா தொழிந்தேன்; சிறு முதுக குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - இன்னும் இளமையிலேயே மூதறிவு படைத்த நினக்கும் சிறுமை பலவும் செய்தொழிந்தேன்; வழு எனும் பாரேன் - யான் இங்ஙனம் ஒழுகியும் என்பால் உண்டான குற்றங்களை ஒரு சிறிதும் ஆராய்ந்தறிந்திலேன்; மாநகர் மருங்கின் ஈண்டு எழுக என எழுந்தாய் - யான் நமது புகார் நகரத்தினின்றும் இம் மதுரைக்கு வர நினைத்து எழுக என்று சொல்லிய அளவிலேயே நீ மறுப்பொன்றும் கூறாமலே என்னோடு ஒருப்பட்டு எழுந்தாயே; என் செய்தனை என - நீ என்ன காரியம் செய்து விட்டாய் என்று பெரிதும் இரங்கிக்கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) வறுமொழியாளர் - பயனில்லாத சொற்களைப் பேசித் திரிகின்ற வீணர். வம் பரத்தர் - புதிய புதிய பரத்தை மகளிரைத் தேடி நுகருகின்ற காமுகர். பரத்தர் என்பதற்கு இப்பொருள் உண்மையை பெண்ணியலார் எல்லாருங் கண்ணிற் பொதுவண்பர். நண்ணேன் பரத்த நின் மார்பு (குறள் 1311) என்புழியும் காண்க. குறு மொழிக் கோட்டி - பிறர் பழிதூற்றிச் சிரிப்பதையே இன்பமாகக் கருதும் கயவர் கூட்டம் நெடு நகை வெடிச்சிரிப்பு. அஃதாவது விலா விற (விழுந்து விழுந்து) சிரித்தல். பொச்சாப்பு - உவகை மகிழ்ச்சியால் செய்யத்தகும் அறங்களை மறந்தொழில். நச்சு - விரும்பப்படும் பொருள், அஃதாவது நல்லொழுக்கம் என்க. ஏவலும் பிழைத்தேன். உம்மைசிறப்பு. வழு - குற்றம். எனும் - சிறிதும். நகர் - இல்லமுமாம். நான் எழுக என்றபோது நீ அது முறைமை அலறென மறுத்து இல்லத் திராது என்னோடு எழுந்து ஒரு குற்றம் செய்தனை எனக் கழறியபடியாம்.

முன்னர்ப் புகார் நகரத்தே மாதவியோடு பிணங்கிக் கண்ணகியின்பால்வந்த கோவலன் கண்ணகி வாடிய மேனி வருத்தங் கண்டு யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடி என மாதவியை வைதவன் இங்கே மாதவி தூயள் என்றுணர்ந்துவிட்டபடியால் அவளோடாடிக் கெட்டொழிந்தேன் என்னாமையும், வறுமொழியாளரொடும் வம்பப் பரத்தரொடும் திரிந்தமையும் கண்ணகிக்குச் சிறுமை செய்தமையுமே போற்றா வொழுக்கமாகக் குறிப்பிடுதல் குறிக்கொண்டுணர்தற்பாலதாம். கண்ணகி தானும் மாதவியின் கேண்மையைக் கருதிப் போற்றா வொழுக்கம் என்று கூறிற்றிலள் எனக் கருதலாம்.

கண்ணகி மறுமொழி

71-83: அறவோர்க் களித்தலும் .......... அவள் கூற

(இதன்பொருள்) அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் - சாவக நோன்பிகளை எதிர் கொண்டழைத்து அவர்க்கு வேண்டுவன வழங்குதலும் அந்தணர்களைப் பேணுதலும் துறவறத்தோரை எதிர்கொண்டழைத்து உண்டி முதலியன கொடுத்து வழிபாடு செய்தலும்; தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை - தொன்று தொட்டு இல்லறத்தோர் மேற்கொண்டுள்ள சிறப்பினையுடைய அறமாகிய விருந்தினரை எதிர் கொள்ளுதலும் ஆகிய இவ்வறங்களை எல்லாம் நுமது பிரிவு காரணமாக இழந்திருந்த அடிச்சியை; நும் பெருமகள் தன்னொடு பெரும் பெயர்த் தலைத்தாள் மன் பெருஞ் சிறப்பின் மாநிதிக்கிழவன் - நுமது பெருமைக் குணமிக்க தாயோடும் பெரிய புகழையும் தலையாய முயற்சியினையும் மன்னனால் வழங்கப்பட்ட சிறப்பினையும் உடைய நும் தந்தையும் என்னை ஆற்றுவிக்க வருவாரைக் கண்டு; முந்தை நில்லா முனிவு இகந்தனன் ஆ - யான் நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றும் வெறுப்பினை நீங்கினேனாக; அற்பு உளம் சிறந்த அருள் மொழி அளைஇ என் பாராட்ட - அதனை உணர்ந்த அவர்கள்தாம் உள்ளத்து மிக்குத் தோன்றும் அன்போடு அருள் நிறைந்தமொழிகளைக் கலந்து என்னைப் பாராட்ட - யான் அகத்து ஒளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும் - நான் என்னுள்ளத்து மறைத்த மனக் கவலையையும் மெய்வருத்தத்தினையும் கூறுவது போன்ற; என்வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த - என் வாய்மையல்லாத புன்முறுவலுக்கு அவர் தம் உள்ளத்தினூடே பெரிதும் வருந்தும்படி; போற்றா ஒழுக்கம் புரிந்தீர் - நீர் பெரியோர் வெறுக்கும் தீய வொழுக்கத்தினை விரும்பி ஒழுகினீர் ஆகவும்; யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் உம்முடைய சொல்லை ஒரு சிறிதும் மாற்ற நினையாத குறிக்கோளுடைய நெஞ்சத்தோடு வாழும் வாழ்க்கையை உடையேனாகலான்; யான் ஏற்று எழுந்தனன் என்று அவள் கூற - நான் நீர் கூறியதனை உடன்பட்டு எழுந்தேன் என்று கண்ணகி கூற; என்க.

(விளக்கம்) அறவோர் - சாவக நோன்பிகள்; அவர்கள் உண்ணா நோன்பு முதலியவற்றை மோகொண்டொழுகும்பொழுதும் அந்நோன்பினை முடிக்கும்பொழுதும் உறையுளும் ஆடையும் பின்னர் வழங்குதலை அறவோர்க்களித்தலும் என்றார். இவர் இல்லறத்திருந்து முதுமையுற்றோர். இவர்கள் குல்லகர் எனப்படுவர். இவர் ஓராடை மட்டும் உடுத்தி, அணிகலன் முதலியவற்றை நீக்கித் தூய எண்ணத்துடன் தவவேடம் கொண்டவர். ஆயினும் அப்பிறப்பிலேயே முத்திபெறார் ஆதலின் இவரை இல்லறத்தாராகவே கொள்வது சமண சமயத்துக்கொள்கை. இவரைப் பதினான்கு குணத்தானங்களில் பதினொன்றாம் கானத்தவர் என்பர். ஆகலின், இவரை அறவோர் என்றும் முற்றும் துறந்தோரைத் துறவோர் என்றும் பிரித்தோதினர். அறவோர் தாமும் முற்றத் துறந்தோரைப் போலச் சரிகை சென்று முறைப்படி உணவு ஏற்றுண்பர். இனி, முற்றத் துறந்தோர் தம்மை எதிர்கொண்டு அழைப்பவர் இல்லத்திலேயே உணவு கொள்வர். ஆதலின் துறவோர்க்கு எதிர்தலும் என்று கூறினார். அந்தணர் ஈண்டு அருகன் ஓதிய மறைகளைப் பயின்று ஏனையோர்க்கு அறங்கூறும் தொழிலையுடையோர். இவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர் ஆதலின் அந்தணர் என ஓதப்பட்டார். இவரை உபாத்தியாயர் என்பர். இவரை ஓம்புதலும் இல்லறத்தார் கடன் ஆகலின் அந்தணர் ஓம்பலும் என்று சொற்றிறம் தேர்ந்து கூறப்பட்டது என்றுணர்க.

இனி, எந்தச் சமயத்தினும் இல்லறத்தார்க்குப் பொதுவாய அறம் ஆதலின் விருந்தெதிர் கோடலைத் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் என்று விதந்தார். இவ்விழந்தினர் நல்கூர்ந்தவராய் வரும் புதியவர் என்றறிக. பெருமகள் - கோவலன் தாய்; மாநிதிக் கிழவன் - கோவலன் தந்தை. நொடித்தல் - சொல்லுதல். வாயன் முறுவல் - பொய்ந்நகை. ஆற்றா உள்ள வாழ்க்கையீராகலின் என்பதும் பாடம்.

ஈண்டு இசையெச்சமாக ஏற்ற பெற்றி சில சொற்கள் வருவித்துரை கூறப்பட்டது.

கோவலன் கூற்று

84-93: குடி முதல் ........... ஒழிகென

(இதன்பொருள்) குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி - குடி முதல்வராகிய இருமுது குரவரை யுள்ளிட்ட சுற்றத்தார்களையும் குற்றேவற் சிலதியரையும் அடியார் கூட்டத்தையும் தோழியர் கூட்டத்தையும் துறந்து; நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை ஆக என்னொடு போந்து ஈங்கு என துயர் களைந்த - நாணமும் மடப்பமும் மகளிரால் ஏத்தப்படுகின்ற அழகும் உன்னால் காக்கப்படுகின்ற நினது கற்பும் ஆகிய இந்த நான்குமே துணையாகும்படி யான் எழுக என்னலும் என்னுடன் எழுந்து வந்து இம்மதுரையின்கண் எனது தனிமைத் துன்பத்தைத் தீர்த்த; பொன்னே கொடியே புனை பூங்கோதாய் நாணின் பாவாய் நீள் நில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி - பொன் போல்வாய் பூங்கொடி போல்வாய் அணிந்து கொள்ளும் பூமாலை போல்வாய் நாணம் என்னும் பண்பால் இயன்ற பாவை போல்வாய்! நெடிய நிலத்திற்றோன்றிய மகளிர் குலத்திற்கெல்லாம் மணி விளக்கம் போல்வாய்! கற்பின் கொழுந்து போல்வாய்! அழகிற்குச் செல்வம் போல்வாய்; சீறடிச் சிலம்பின் ஒன்று யான் கொண்டுபோய் மாறி வருவன் மயங்காது ஒழிக என - நின் சீறடிக்கு அணியாகிய சிலம்பினுள் யான் ஒன்றனைக் கைக்கொண்டு இந்நகரத்தினுள் சென்று விற்று வருவேன் யான் வருமளவும் நீ தனிமையால் வருந்தாதே கொள்! என்று சொல்லி; என்க.

(விளக்கம்) குடிமுதற் சுற்றம் - தாய் தந்தை முதலியோர். குற்றிளையோர் - குற்றேவல் செய்யும் மகளிர்; இவரை எடுத்துக்கை நீட்டுவார் என்பர். அஃதாவது எப்பொழுதும் தனக்கு அணுக்கராய் இருந்து தான் கூறும் பணிகளை அவ்வப்பொழுது செய்துமுடிக்கும் சிறுபணி மகளிர் என்றவாறு. அடியோர்பாங்கு அடிமைத் தொழில் செய்வோர் கூட்டம். அவர் செவிலித்தாய் முதலிய ஐவர் என்பர். அவராவார் - ஆட்டுவாள் ஊட்டுவாள் ஒலுறுத்துவாள் நொடி பயிற்றுவாள் கைத்தாய் என்னும் ஐவருமாம். பொன் முதலியவற்றிற்கு உவமம் விரித்துரைக்கப்பட்டன.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து சிலம்பு விற்கச் செல்லுதல்

94-99: கருங் கயல் ............... செல்வோன்

(இதன்பொருள்) கருங் கயல் நெடுங்கண் காதலி தன்னை ஒருங்கு உடன் தழீஇ - கரிய கயல் மீன் போன்று நீண்ட கண்களையுடைய தன் காதலியை அன்புடன் மெய் முழுதும் தழுவிக்கொண்டு; உழையோர் இல்லா ஒரு தனி கண்டு தன் உள் அகம் வெதும்பி வரு பனி காந்த கண்ணன் ஆகி - அவள் பக்கத்திலே துணை யாவார் யாருமின்றித் தனியளாய் இருக்கின்ற நிலைமையைக் கண்டு தனது நெஞ்சின்னுள்ளே துன்புற்று வெதும்புதலாலே பெருகி வருகின்ற கண்ணீரை அவளறியாமல் மறைத்த கண்ணையுடையவனாய் ஒருவாறு பிரிந்து; பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகின் செல்வோன் - பலவாகிய பசுக்களையும் எருமைகளையும் உடைய அவ்விடையர் இல்லத்தினின்றும் புறப்பட்டுத் தன் நெஞ்சத்தோடு ஒத்தியங்காத நடையினை யுடையனாய் அத்தெருவிற் செல்கின்றவன்; என்க.

(விளக்கம்) அற்றை நாள் இரவும் கூட்டமின்மை தோன்றக் கருங்கயல் நெடுங்கட் காதலி என்றார். இக்கருத்து ஆசிரியர் உள்ளத்தின் ஆழ்ந்திருக்கும் கருத்தென்பதனைப் பிறாண்டும் இவர் கூட்டமின் மையையும் உண்மையையும் கருங்கயல். நெடுங்கண், செங்கயல், நெடுங்கண், கருங்கண், செங்கண் எனக் குறிக்கொண்டோதுதலான் உணரலாம். ஒருங்குடன் என்றது எஞ்சாமைப் பொருட்டு, உழையோர் - தோழி முதலியோர். இல்லாத என்னும் பெயரெச்சத்தின் ஈறு கெட்டது. தன் கண்ணீரை அவள் காணின் பெரிதும் வருந்துவள் என்று கரந்தனன் என்க. ஆன் - பசு எருமைகளுக்குப் பொதுச் சொல் வல்லா நடை - மாட்டாத நடை. அஃதாவது மனமின்றிப் பிரிதலின் தன் கருத்திற்கு இணங்கமாட்டாத நடை என்றவாறு. தெரு - இடையர் தெரு. ஆய்ச்சியரெல்லாம் குரவை ஆடப் போனமையின் கண்ணகி தனித்திருத்தல் வேண்டிற்று.

கோவலனுக்கு எதிர்ப்பட்ட தீ நிமித்தம்

100-104: இமிலேறு .......... ஆங்கண்

(இதன்பொருள்) இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் - முரிப்பினையுடைய ஆனேறு தன்னை எதிர்ந்து பாய வந்ததனைத் தீய நிமித்தமென்று அறிந்திலன் அது தனதுகுலம் உணரும் தகுதியினை உடைத்தன்று ஆகலான்; தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து மாதர் வீதி மறுகு இடை நடந்து - பூந்துகளாகிய எருவினையுடைய மன்றமெல்லாங் கழிந்து தளிப்பெண்டுகள் தெருவினூடே நடந்து போய்; பீடிகைத் தெருவின் பெயர்வோன் ஆங்கண் - கடைத் தெருவில் செல்கின்றவன் அவ்விடத்தே; என்க.

(விளக்கம்) இமில் - எருதின் பிடருக்கும் முதுகிற்கும் இடையே பருத்துயர்ந்து திரண்ட ஓர் உறுப்பு: முரிப்பு என்பதுமது. இதனைக் குட்டேறு எனவும் திமில் எனவும் வழங்குப. இக்காலத்தார் கொண்டை என்பர். ஏறு - வழியில் எதிர்ந்து பாய வருதல் தீநிமித்தம் என்பது ஆயர்குலத்தினரே நன்கறிந்ததொன்றாம். வணிகர் அறிதற்கு இடனின்மையின் தன்குலம் அறியும் தகுதி அன்றாதலின் என்றார். மன்றம் - ஊரன்பலம். தாது எரு மன்றம் - பூந்தாதுகள் நாள்தோறும் உதிர்ந்து எருவாகிக் கிடக்கும் மன்றம் என்றவாறு. பீடிகைத் தெரு - கடைத் தெரு.

பொன் வினைக் கொல்லன் வரவு

105-112: கண்ணுள் ............... ஆதியோவென

(இதன்பொருள்) கண்ணுள் வினைஞர் கை வினை முற்றிய நுண் வினைக் கொல்லர் நூற்றுவர் பின் வர - உருக்குத்தட்டாரும் சிற்பத் தொழிலெல்லாம் கற்றுத்துறைபோகிய பணித்தட்டாரும் ஆகிய நூறு பொற்கொல்லர் தன் பின்னே வாரா நிற்ப - மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகி - அரசன் வரிசையாகிய சட்டையை அணிந்து ஒதுங்கி நடக்கும் நடையை உடையவனாய்க் கையின் கண் பிடித்த கொடிற்றையு முடையவனாய்த் தன் எதிர் போந்த ஒரு கொல்லனைக் கண்டனனாகி; இவன் தென்னவன் பெயரொடு சிறப்புப்பெற்ற பொன்வினைக்கொல்லன் எனப் பொருந்தி - இவன் பாண்டியன் பெயரோடு வரிசை பெற்ற பொற் கொல்லன் ஆதல் வேண்டும் என்று கருதி அவன்பால் அணுக; நீ காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி விலை இடுதற்கு ஆதியோ என - நீ அரசனுடைய தேவி அணியும் தகுதியுடையதொரு காற் சிலம்பை விலை மதித்தற்கு வல்லையோ? என்று வினவ; என்க.

(விளக்கம்) கண்ணுள் வினை - சிற்பத் தொழில்; தமது தொழில் நலத்தைக் காண்போர் கண்ணினுள் நிறுத்துபவர் ஆதலின் இவர் அப்பெயர் பெற்றார் இதரை உருக்குத் தட்டாரும் பணித் தட்டாரும் என இருவகைப்படுத்துவர் அடியார்க்கு நல்லார். இவருள் முன்னையோர் யொன்னை உருக்கி வார்ப்பவர் எனவும் பின்னையோர் அணிகலன் செய்பவர் எனவும் உணர்க. நூற்றுவர் என்றது மிகுதிக்கு ஓரெண் கூறிய படியாம். நூற்றுவர் பின்வர வருதலால் அவர்க்கெல்லாம் இவன் தலைவன் என்பது தோன்றிற்று. மெய்ப்பை - சட்டை. இது அரசன் இவன் சிறப்பிற்கு அறிகுறியாக வழங்கியது. கைக்கோல் - பற்றுக்கொடிறு. இக்காலத்தார் இதனை, கொறடு என்பர். இதுவும் அரசன் வழங்கிய வரிசைப்பொருள் ஆதலின் அதனைக் கைப்பற்றி வருகின்றான் என்க. இவ்வடையாளங்களால் கோவலன் இவன் அரசனால் சிறப்புப் பெற்ற கொல்லன் என்று கருதினன் என்பது கருத்து காவலன் தேவி அணியத் தகுந்த சிறந்த சிலம்பென்பான் தேவிக் காவதோர் காற்கணி என்றான். காலுக்கு அணியும் அணி என்க. ஆதியோ என்றது அத்தொழில் வன்மையும் உடையையோ என்றவாறு. எனவே என்பால் அத்தகைய சிலம்பொன்றுளது வல்லையாயின் அதற்கு விலை மதித்திடுக என்றானுமாயிற்று.

பொற்கொல்லனின் பணிமொழி

113-116: அடியேன் .......... அவிழ்த்தனன்

(இதன்பொருள்) அடியேன் அறியேன் ஆயினும் யான் வேந்தர் முடி முதல் கலன்கள் சமைப்பேன் என - அடியேன் மகளிருடைய காலணி கலன்களை விலை மதித்தற்கு அறியேனாயினும் யான் அரசர்க்கு முடி முதலிய பேரருங் கலன்களைச் செய்கின்ற தொழில் உடையேன் கண்டீர் என்று பணிவுடன் சொல்லி; கூற்றத்தூதன் கை தொழுது ஏத்த - கூற்றனால் விடுக்கப்பட்ட தூதனைப்போல வந்த அப்பொற்கொல்லன் கை குவித்துத் தொழுது புகழ்தலாலே; போற்று அருஞ் சிலம்பின் பொதி வாய் அவிழத்தனன் - யாரானும் புகழ்தற்கரிய சிலம்பினைப் பொதிந்த பொதியினது வாயை அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன்; என்க.

(விளக்கம்) அடியேன் அறியேன் என்றது தனது பணிவுடைமையைக் காட்டுதற் பொருட்டு, பின்னரும் யான் அத்தொழிலில் மிகவும் வல்லுநன் என்பது தோன்ற, வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் என்றான். கூற்றத் தூதன் போல வந்த அப்பொற்கொல்லன் என்க. கைதொழு தேத்தியது தனது அன்பைப் புலப்படுத்த என்க. போற்று - புகழ். பொதி - கட்டு. அவிழ்த்து அதனை அவனுக்குக் காட்டினன் என்க.

பொற்கொல்லன் புன்செயல்

117-120: மத்தகமணி ......... நோக்கி

(இதன்பொருள்) மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும் பொன் குடைச்சூல சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் - தலையான மாணிக்கத்தோடு வயிரத்தையும் நிரல்பட அழுத்திய குழிகளையும் பசிய பொன்னால் செய்யப்பட்டு, புடைபட்டு உட்கருவிகளையும் சித்திரத் தொழிலையும் உடைய அச் சிலம்பினது தொழில் நுணுக்கமெல்லாம்; பொய்த்தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி - பொய் விரவிய தொழிலையுடைய அப்பொற்கொல்லன் அச்சிலம்பு தான் மறைத்து வைத்துள்ள அரண்மனைச் சிலம்போடு ஒத்திருத்தலைக் கண்டு விரும்பி நெஞ்சத்தால் அச்சிலம்போடு இதனை ஒத்துப்பார்த்து; என்க.

(விளக்கம்) மத்தகமணி -சிலம்பின் முகப்பில் பதித்த சிறப்பான மாணிக்கமுமாம். பத்திக் கேவணம்-நிரல்பட்ட குழிகள். (மணி யழுத்துங் குழி) பசும்பொன் என்றது கிளிச்சிறை என்னும் ஒரு வகைப் பொன்னை. உள்ளே பரல் உடைமையின் சூல் சிலம்பு என்றார். குடை -குடைபோன்று புறம் புடைத்திருத்தல். சித்திரம் - பூங்கொடி, பறவை, விலங்கு, முதலிய சித்திரங்கள். கேவணச் சிலம்பு, சூற்சிலம்பு, சித்திரச் சிலம்பு எனத் தனித்தனி கூட்டுக; புரிந்து என்பதற்கு இடுவந்தி கூறுதலைப் புரிந்து என்பர். (அடியார்க்) இடுவந்தி - பழி இல்லாதவன்மேல் பழி ஏற்றுதல். இச்சொல் இக்காலத்தும் தமிழ்நாட்டின் வட பகுதியில் வழங்குகின்றது என்ப. பொய்த்தொழில் - பொய் சொல்லுதலையே தொழிலாக உடைய எனினுமாம்.

121-126: கோப்பெருந் ................ புக்கபின்

(இதன்பொருள்) இச்சிலம்பு கோப்பெருந்தேவிக்கு அல்லதை யாப்புறவு இல்லையென - ஐய! பெருவிலையுடைய இந்தச் சிலம்பானது அரசனுடைய பெருந்தேவியார் அணிதற்குப் பொருந்துவதல்லது ஏனை மகளிர்க்குப் பொருத்தமில்லை என்று சொல்லி; யான் முன் போந்து விறல் மிகு வேந்தற்கு விளம்பிவர -ஆதலால் யான் முற்படச் சென்று வெற்றி மிகுந்த நம்மரசனுக்கு இச்சிலம்பின் சிறப்பினைக் கூறி வருமளவும்; நீர் என் சிறுகுடில் அங்கண் இருமின் என - நீவிர் இதோ இருக்கின்ற அடியேனுடைய புன் குடிலின் பக்கத்தே இருப்பீராக என்று கூற; கோவலன் சென்று அக்குறுமகன் இருக்கை ஓர் தேவகோட்டச் சிறை அகம் புக்கபின - அதுகேட்ட கோவலன் அவ்விடத்தினின்றும் போய் அக்கீழ்மகனுடைய குடிலின் பக்கத்தே யமைந்த ஒரு கோயிலின் மதிலினுள்ளே புகுந்த பின்னர், என்க.

(விளக்கம்) அல்லதை, ஐ - சாரியை. யாப்புறவு - வினா; என்பர் (அடியார்க்) முன்போந்து என்றது - உம்மை உடனழைத்துப் போகாமல் யான் மட்டும் முற்படச் சென்று என்றவாறு. அரசனாதலின் செவ்வி அறிதற் பொருட்டு இங்ஙனம் சொல்கின்றான் எனக் கோவலன் உணர்தற்கு இங்ஙனம் கூறினான், என்க. இனி அவன் முன்போந்து என்றதற்குக் காரணம் கூறுகின்றார்.

127-130: கரந்து .............. செல்வோன்

(இதன்பொருள்) யான் கரந்து கொண்ட காலணி ஈங்குப் பரந்து மன்னற்கு வெளிப்படா முன்னம் - யான் முன்பு வஞ்சித்துக் கைக்கொண்டுள்ள கோப்பெருந்தேவியின் சிலம்பு என்னிடத்துள்ள செய்தி இவ்விடத்துள்ளார்பால் பரவி அரசன் அறியுமளவும் வெளிப்படுவதற்கு முன்னமே; புலம் பெயர் புதுவனின் யான் போக்குவன் எனக் கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-வேறொரு நாட்டினின்றும் இங்கு வந்துள்ள இந்தப் புதியவனிடத்தே அப்பழியை ஏற்றி என்பழியை இல்லையாக்குவேன் என்று தன்னுள்ளே நினைக்கின்றவன் மாபெருந் தீவினையாகிய இதனை நினைப்பதனால் ஒருசிறிதும் கலக்கமெய்தாத கொடிய தனது நெஞ்சத்தை மெய்ப்பாடு முதலியவற்றால் பிறர் அறியாத படி சிக்கென மறைத்துக் கொண்டு செல்கின்றவன் என்க.

(விளக்கம்) மன்னற்கு வெளிப்படா முன்னம் என மாறுக. புலம் - வேற்றுநாடு என்பது, பெயர் புதுவன் என்பதனால் பெற்றாம். இப்புதுவனைக் கருவியாகக் கொண்டு என் பழியைப் போக்குவன் என்றவாறு. இங்ஙனம் நினைதலும் சான்றோர்க்குச் சாலாதாகலின் இவன் இதனை நினைக்கும்பொழுது இவனுள்ளம் ஒருசிறிதும் கலங்கிற்றில்லை; அத்துணைக் கயமகன் இவன் என வியப்பார், அடிகளார் கலங்கா உள்ளம் கரந்தனன் என்றார். கரத்தல் - இவ்வஞ்சம் மெய்ப்பாடு முதலியவற்றால் முகமுதலியவற்றில் வெளிப்படாதபடி திறம்பட மறைத்தல் என்க.

பொற்கொல்லன் அரசனைக் காணுதல்

131-141: கூடல் மகளிர் ........... ஏத்தி

(இதன்பொருள்) கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் - பாண்டியன் கோப்பெருந் தேவியோடு ஒருங்கிருந்து நாடகம் காணுங்கால் அம்மதுரை நகரத்து நாடகக்கணிகை மகளிருடைய ஆடலின்கண் தோன்றிய அவரது முகத்தின் அழகும் ஆடலின் அழகும் அவ்வாட்டங்களுக்குப் பொருந்திய பாடல்களின் பொருள் அழகும் அப்பாட்டொடு பொருந்திய பண்களினது அழகுமாகிய இன்பங்கள்; காவலன் உள்ளம் கவர்ந்தன என்று - மன்னனுடைய நெஞ்ச முழுவதையும் கவர்ந்து கொண்டன ஆதலான் அவன் தன்னை நோக்கிற்றிலன் என்று தன்னுள் கருதிக் கொண்டமையாலே; குலமுதல் தேவி தன் ஊடல் உள்ளம் உள கரந்து ஒளித்துத் தலை நோய் வருத்தம் தன்மேல் இட்டுக் கூடாது ஏக - குலப்பிறப் பாட்டியாகிய கோப்பெருந்தேவி ஊடிய தன் நெஞ்சத்தை அவ்வூடல் தோன்றாதபடி தன்னுள்ளே திறம்பட மறைத்து ஊடிச் செல்பவள் தன்செலவிற்குத் தலைக்கீடாகத் தனக்குத் தலை நோகின்றது என்று சொல்லி அரசனொடு பொருந்தி இராமல் உவளகத்தே சென்று புகுந்து விட்டமையால்; மன்னவன் மந்திரச் சுற்றம் நீங்கி - அதுகண்ட அரசன் அமைச்சர் முதலிய தனது அரசியல் சுற்றத்தாரினின்றும் நீங்கித் தேவியின்பால் பெரிதும் காமம் உடையவனாய்; சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு கோப்பெருந்தேவி கோயில் நோக்கி - செவ்வரி பரந்த நெடிய கண்களையுடைய பணிமகளிர் கூட்டத்தோடே ஊடிப் போன அக் கோப்பெருந்தேவியினது உவளக மாளிகையை நோக்கிச் செல்கின்றவனை; காப்பு உடைவாயில் கடைகாண் அகவையின் - காவலையுடைய அம்மாளிகையின் முன்றிலிலே கண்ட பொழுதே; வீழ்ந்தனன் தாழ்ந்து கிடந்து பல ஏத்தி - அம்மன்னனுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கியவன் விழுந்தபடியே கிடந்து மன்னனைப் பற்பல புகழ்ந்து ஏத்திக் கூறுபவன், என்க.

(விளக்கம்) கூடல் மகளிர் என்றது, கூடலிடத்து நாடகக்கணிகை மகளிரை. மகளிர் தோற்றமும், அவர் ஆடல் தோற்றமும் எனத் தோற்றத்தை முன்னுங் கூட்டுக. பாடல் என்றது இசைப்பாட்டுக்களை. பகுதி என்றது அவற்றின் பொருட்பகுதிகளை என்க பண் என்றது - செம்பாலை முதலியனவும் திறம் முதலியனவும் ஆளத்தியும் பிறவும் என்க. பயம் - பயன்; அஃதாவது, இன்பம், இவையெல்லாம் அரசனுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையால் அவன் பக்கத்திலிருந்த தேவியை நோக்காதொழந்தானாக. இவ்வாற்றால் தேவிக்கு ஊடல் பிறந்தது என்க. ஈண்டும், பாண்டியன் நெடுஞ்செழியன் அரசர் காதல் காதல் அறியாமை துய்த்தல் வேண்டும் என்னும் அரசியல் பிழைத்தமை தன்குலமுதற்றேவியும் அறியுமளவில் நுகர்ச்சியுற்றமையால் நுண்ணிதின் உணர்க - இடையே எழுந்துபோகும் தேவி எனக்குத் தலைநோகின்றது என அதனைத் தலைகீடாகச் சொல்லிச் சென்றாள் என்பது கருத்து ஈண்டு அரசன் தவற்றினைக் குறிப்பாக அறிவுறுத்தற்கு அத்தேவியின் சிறப்புக்கூறுவார் அடிகளார் குலமுதற்றேவி என விதந்தனர் என்னை? தேவி தவறிலள் என்பதற்கே, இங்ஙனம் விதந்தனர் என்க. மந்திரச் சுற்றம் நீங்கி என்றது பின்னர் அம் மன்னவன் தவறிழைத்தற்கு ஏதுவாய் நின்றது. இங்கு நிகழ்ந்த கூத்தும் தேவி ஊடிச்சென்றதும் மன்னவன் தேவிபால் காமமுடையவனாய்ச் சிலதியரோடு மந்திரச் சுற்றம் நீங்கி ஊடல் தீர்க்கும் உள்ளத்தோடே சென்றதும், அந்தச் செவ்வியில் பொய்த்தொழில் கொல்லன் அவன் அடிவீழ்ந்து வணங்கியதும் எல்லாம் பின்னர் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு ஏதுவாக ஊழ்வினை முந்துற்றச் செய்த செயல்களேயாம் என்பது உணர்வுடையோர் உணரற்பாலது என்க.

தன்மேல் தவறு சிறிதும் இல்லை என்று மன்னன் அறிந்துகொள்ளவேண்டும் என்று பொற்கொல்லன் அடியில் வீழ்ந்தவன் எழாமல் கிடந்தவாறே பல கூறி ஏத்தினன் என்க. ஊழ்வினை வந்துருத்துங் காலை இவ்வாறே தன் பயனைத் தப்பாமல் நுகர்வித்தற்குரிய சூழ்நிலையைத் தோற்றுவித்துக் கோடல் அதற்கியல்பென்பதும் ஈண்டுணரற்பாற்று.

பொற்கொல்லன் கூற்று

142-147: கன்னகம் ......... இருந்தோன் என

(இதன்பொருள்) கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையெனக்கொண்டு - மன்னர் மன்ன! அடியேன் விண்ணப்பத்தைத் திருச்செவிக் கொண்டருளுக! கன்னக்கோல் இல்லாமலும்; கவைக்கோல் இல்லாமலும் தனது நெஞ்சின்கண் நிலைபெற்ற மந்திரம் ஒன்றனையே தான் செய்யும் களவுக்குத் துணைகருவியாகக் கொண்டு; வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து - நமது அரண்மனை வாயில் காவலர்களை யாதொன்றும் அறியா வண்ணம் மயக்குகின்ற உறக்கத்தே வீழ்த்திப் பின்னர்; கோயில் சிலம்பு கொண்ட கள்வன் - அரண்மனைக்குட் புகுந்து அங்கிருந்த தேவியாருடைய சிலம்பைக் களவாடிய கள்வன்; கல் என் பேரூர்க் காவலர்க் கரந்து - எப்பொழுதும் கல்லென்னும் ஆரவாரத்தையுடைய இம் மதுரை மாநகரத்துக் காவலருடைய கண்ணிற்படாமல் மறைந்து இற்றை நாள்; என் சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன் என- அடியேனுடைய புன்குடிலினிடத்தே வந்து பெரிதும் துணிவுடன் இருக்கின்றான் என்று சொல்லா நிற்ப, என்க;

(விளக்கம்) கன்னகம் - சுவர் அகழும் கருவி; கன்னக்கோல். கவைக்கோல் - கொடிற்றுக்கோல் (கொறடு). இது சுவரின் செங்கல், படைக்கல், முதலியவற்றைக் பறிக்குங்கருவி. குத்துக்கோலென்பாருமுளர். உம்மைகள் சிறப்பு. துணை - துணைக்கருவி. நகருக்குள் கரந்து வருதலின் அருமைதோன்றக் கல்லென் பேரூர் என்றான். கல்லென்: ஒலிக்குறிப்பு. தன்பால் அரசனுக்கு இரக்கம் பிறத்தற்கு என் சில்லைச் சிறுகுடில் என்றான். இருந்தோன் என்புழி ஆ, ஓ வாயிற்றுச் செய்யுளாகலின்.

சினையலர் வேம்பன் செயல்

148-153: வினைவிளை .............. கொணர்கவீங்கென

(இதன்பொருள்) சினை அலர்வேம்பன் - கொம்பின்கண் மலருகின்ற வேப்பமலரால் இயன்ற மாலையினையுடைய அப் பாண்டிய மன்னன்தானும், வினைவிளை காலம் ஆதலின் - கோவலன் முற்பிறப்பிற் செய்த தீவினையானது முதிர்ந்து தன்பயனை நுகர்விக்கும் காலம் அதுவாக இருத்தலாலேயும்; தேரான் ஆகி - தான் காமக்காழ் கொண்ட மனததனாய் இருத்தலாலும் அப் பொற்கொல்லன் பொய்ம்மொழியைத் தெளிந்தவனாய், ஊர்காப்பாளரைக் கூவி-அப்பொழுதே அவ்வூரைக் காக்கும் காவலாளர் ஒரு சிலரை அழைத்துக் கூறுபவன், ஈங்கு என் தாழ்பூங் கோதை தன் காற்சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் - இப்பொழுதே நீவிர் இக்கொல்லன் பின் சென்று என்னுடைய தாழ்ந்த மலர் மாலையணிந்த பெருந்தேவியின் காற் சிலம்பு இக் கொல்லனால் காட்டப்படுகின்ற களவின்கண் காழ்த்த அக் கள்வனின் கையின்கண் உளதானால்; கொன்று அச்சிலம்பு ஈங்கு கொணர்க என - அக் கள்வனைக் கொன்று அந்தச் சிலம்பினை இங்குக் கொணர்வீர் ஆக என்று சொல்லி, என்க.

(விளக்கம்) வினை விளை காலம் என்றது கோவலனுடைய பழவினை விளை காலம் எனக் கோவலன் வினையைக் குறித்தபடியை யாம் பதிகத்தும் விளக்கினாம்.

இனி, வேம்பன் காமத்தால் கதுவப்பட்ட நெஞ்சத்தனாய்த் தனக்குரிய செங்கோன்மை முறைமையினின்று வழுவி இங்ஙனம் காவலர்க்குப் பணித்தான் என்பதே அடிகளார் கருத்து என்க. இங்ஙனம் வேம்பன் தேராமைக்கும் அவ் வேம்பன் வினை விளை காலத்தை ஏதுவாகக் கூறுமிடத்து அடிகளார் இக் காப்பியத்திற்குக் கொண்ட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்னும் கொள்கை பொருளின்றி நின்று வற்றும் என்பதையும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதற்கும் இது கூறியது கூறலாய் மிகையாதலும் நுண்ணிதின் உணர்க. வேம்பன் அப்பொழுதே தன் அரசியல் பிழைத்தான் அதுவே அவனுக்குக் கூற்றாய் முடிந்தது என்பதே அடிகளார் கருத்தென்று துணிக. மேலும், பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து, ஆள்வினை இன்மை பழி (குறள் 618) என்பதற்கிணங்க ஈண்டுப் பாண்டியன் பழிக்கப்படுதலும் கோவலன் பழிக்கப்படாமையும் நோக்குக. கன்றிய - காழ்கொண்ட; செய்து முதிர்ந்த என்றவாறு. ஈங்குக் கொணர்க என்றது தான் தேவியின் ஊடல் தீர்த்தற்கு அச் சிலம்பும் ஒரு கருவியாம் என்று தன் கையில் கொண்டு போதற் பொருட்டு, என்க.

154-161: காவலன் ............ காட்ட

(இதன்பொருள்) காவலன் ஏவக் கருந்தொழில் கொல்லனும் ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்துஎன - அப் பாண்டிய மன்னன் அக் காவலர்களை ஏவாநிற்பக் கொடிய தொழிலையுடைய அக் கொல்லன்றானும் அரசனால் ஏவப்பட்ட உள்ளத்தை யுடையனாய் யான் நினைத்த காரியத்தைச் செய்து முடித்தேன்; எனத் தன்னுள் கருதியவனாய், அக் காவலர் பின் தொடர; தீவினை முதிர்வலைச் சென்று பட்டு இருந்த கோவலன் தன்னைக் குறுகினன் ஆகி- தான் முற்பிறப்பிலே செய்த தீவினையானது தன்பயனை ஊட்டுமளவு முதிர்ந்திருந்த ஊழாகிய வலையின் அகத்தே புகுந்து அதன்வயப்பட்டிருந்த அக் கோவலனை அணுகி அவனுக்கு அக் காவலரைக் காட்டிக் கூறுபவன்; இவன் வலம்படு தானே மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் என -ஐய! இவர்கள் வெற்றி பொருந்திய படைகளையுடைய மன்னவனுடைய பணியை மேற்கொண்டு அவன் கட்டளையிட்டபடி நும்பாலுள்ள சிலம்பினைக் காண்பதற்கு ஈண்டு வந்தவர் என அறிவித்துப் பின்னர்; செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம் பொய்வினைக்கொல்லன் புரிந்து உடன் காட்ட-அதுகேட்ட கோவலன் தன் சிலம்பினைக் காட்டினனாகப் பின்னர் அக் காவலர்க்குத் தொழிலின் சிறப்பாலே திகழுகின்ற அந்தச் சிலம்பினது அருமை பெருமை முதலியவற்றைக் கூறுபவன் போலே அவரைத் தனியிடத்தே யழைத்துப் போய் அப் பொய்த் தொழிற் கொல்லன் அச் சிலம்பு அரண்மனைச் சிலம்பு என அவர் நம்புதற்கு வேண்டுவன வெல்லாம் ஆராய்ந்து ஒரு சேரக் கூறி இஃது அரண்மனைச் சிலம்பே என்று சொல்லிக் காட்டா நிற்ப என்க.

(விளக்கம்) அரசன் காவலரை இவன் பின்னே போமின் என ஏவிய துணையானே தானும் ஏவப்பட்ட உள்ளத்தையுடையவனாய் என்க. எண்ணியது (127) யான் கொண்ட ....... (139) போக்குவன் என்பது . தீவினை முதிர்ந்த (ஊழாகிய) வலை என்க. இவர் சிலம்பு காணிய வந்தோரெனக் கோவலனுக்கு அறிவித்து அவன் அச் சிலம்பினைக் காட்ட அக் காவலர் அதனைக் கண்ட பின்னர் எனவும் அவரைத் தனியிடத்தே யழைத்துப்போய் எனவும் இன்னோரன்ன பிறவும் இசை எச்சமாக வருவித்துக் கூறப்பட்டன.

162-165: இலக்கண .......... உரைப்போன்

(இதன்பொருள்) இலக்கண முறைமையின் ஈங்கு இருந்தோன் - அப் பொய்த் தொழிற் கொல்லன் அக் காவலர்க்கு ஆவனவெல்லாம் கூறி இவன் தான் கள்வன் என்று காட்டிய பொழுது அவர் தாமும் உளம் துணுக்குற்றவராய் ஏடா! இங்கிருக்கும் இவன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் எல்லாம் உடையனாய் அவர் இருக்குமாறு போலே இருக்கின்றான்; இவன் கொலைப்படும் மகன் அலன - இவன்றான் எம்மால் கொலை செய்தற்குரிய கள்வன் ஆகான், நீ பொய் கூறுதி; என்று கூறும் அருந்திறல் மாக்களை என்று மறுத்துக் கூறுகின்ற வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அக் காவலரை; கருந் தொழிற் கொல்லன் அகம் நகைத்து உரைத்து அக் கொடுந் தொழிற் கொல்லன் தன்னுள்ளே அவரை இகழ்ந்து நகைத்துக் கூறுவான்போலே பொய் நகை நாட்டிக் கூறுபவன் நீவிர் கள்வர் தன்மை அறிந்திலீர் என்று கடிந்துரைத்து மேலும்; காட்டினன் உரைப்போன் - கள்வர் தம் இயல்பினைக் களவு நூலில் கூறியவற்றை அவர்க்கு எடுத்துக் காட்டிச் சொல்லுபவன், என்க.

(விளக்கம்) இலக்கணம் - மேன்மக்களுக்குரிய (இலக்கணம்) முறைமை. என்றது அவர் இருத்தலும் மொழிதலும் முதலிய முறைமை என்க. இது கோவலன் அவரை அன்புடன் முகமலர்ந்து வரவேற்றதனையும் சிறிதும் ஐயுறாவகை, சிலம்பினை அவர்க்குக் காட்டியதனையும் முருகவேள் போன்ற அவனது தோற்றப் பொலிவினையும் கண்டு அக் காவலர் கூறியவாறாம். இவ்வாற்றால் அடிகளார் அவருடைய நுண்மாண் நுழைபுலனை வியந்து பாராட்டுவார் அருந்திறல் மாக்கள் என்றார். மாக்கள் என்புழித் தன்பொருள் குறியாது மக்கள் என்னும் பொருட்டாய் நின்றது. அகம் நகைத்து என்றது அகத்தே எள்ளல் காரணமாக நகைப்பார் போலே நகைத்து என்பதும் உரைத்து என்றது நீவிர் கள்வர் தன்மை அறிகிலீர் எனக் கடிந்துரைத்து என்பதும் தோன்ற நின்றன. கருந்தொழில் - பொய்யும் களவும் கொலையும் பிறவுமாகிய கொடுந்தொழில், என்க. காட்டினன்: முற்றெச்சம்.

(164) அகநக எனவும் அகநெக எனவும் (அடியார்க்கு) பாடங்கள் உண்டு. அகநகை - இகழ்ச்சிநகை என்பாருமுளர்.

பொற்கொல்லன் கூறிய கள்வர் இலக்கணம்

166-169: மந்திரம் ............ திரிவது

(இதன்பொருள்) இழுக்குடை மரபின் கட்டு உண்மாக்கள் - குற்றமுடைய ஒழுக்கமாகிய களவை மேற்கொண்டு பிறர் பொருளைக் களவு செய்து உண்டு வாழும் கள்வர்கள்; மந்திரம் தெய்வம் மருந்து நிமித்தம் தந்திரம் இடன் காலம் கருவி என்று எட்டு உடன் அன்றே - மந்திரமும், தெய்வமும், மருந்தும், நிமித்தமும், தந்திரமும், இடனும், காலமும், கருவியும் ஆகிய இந்த எட்டினையும் அன்றோ; துணையெனத் திரிவது - எப்பொழுதும் தமக்குத் துணையாகக் கொண்டு திரிவது என்றான், என்க.

(விளக்கம்) மருந்தே இடனேயென்ற ஏகாரமிரண்டும் எண். அன்றேயென்பது தேற்றம். கட்டுண்மாக்கள் எட்டுடனன்றே துணையெனத் திரிவதென்க.

மருந்து

170-171: மருந்தின் .............. நவைப்பட்டீர்

(இதன்பொருள்) மருந்தின் பட்டீராயின் - நீவிர் காலம் தாழ்த்தலின்றி இவனைக் கொல்விராயின், தப்புவதன்றி, இவனுடைய மருந்தில் அகப்படுவிராயின்; யாவரும் பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப்பட்டீர் - நீவிரெல்லாம் பெரிய புகழையுடைய நம் மன்னவனுடைய ஒறுத்தல் ஆகிய பெரிய துன்பத்தின்கண் இப்பொழுதே அகப்பட்டீர் காண், என்றான் என்க.

(விளக்கம்) தெளிவு பற்றிப் படுவீர் என்னாது பட்டீர் என இறந்த காலத்தில் கூறினான்.

என்னை?

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும்
இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை

(தொல்-சொல். வினை -48.) என்பது விதியாகலின். பெரும் பெயர்-பெரிய புகழ் பெருநவை-ஒருத்தலாகிய பெருந்துன்பம் என்க.

மந்திரம்

172-173: மந்திரம் ......... காண்குவமோ

(இதன்பொருள்) மந்திரம் நா இடை வழுத்துவர் ஆயின் - தாம் பயின்றுள்ள மந்திரத்தைத் தமது நாவினால் உருவேற்றுவாராயின்; இந்திர குமரரின் - தேவகுமாரரைப் போல; யாம் காண்குவமோ - நாம் நம் கண்ணால் காணவல்லேம் அல்லேம் என்றான் என்க.

(விளக்கம்) வழுத்துதல் - உருவேற்றுதல். இந்திரகுமாரரை நாம் காணமாட்டாமை போல இவரையும் காணமாட்டேம் என்றவாறு.

தெய்வம்

174-175: தெய்வம் .......... பெயர்குவர்

(இதன்பொருள்) தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின் - தாங்கள் வழிபடுகின்ற தெய்வத்தை எப்பொழுதும் தமக்கு முன் நிற்கும்படி நெஞ்சத்தால் தெளிந்து நினைப்பாராயின், கை அகத்து உறுபொருள் காட்டியும் பெயர்குவர் -தாம் களவு செய்து தம் கையின்கண் வைத்துள்ள மிக்க பொருளை நமக்குக் காட்டிய பின்னரும் அப்பொருளோடு தப்புவர் என்றான், என்க.

(விளக்கம்) தெய்வம் - வழிபடு தெய்வம். தோற்றம்-அத் தெய்வத்திற்குத் தாம் தம்நெஞ்சத்தே கற்பித்துக் கொண்ட உருவம். கைப்பொருளை நமக்குக் காட்டிய பின்பும் அத் தெய்வம் அவரைத் தப்புவிக்கும் என்பது கருத்து.

மருந்து

176-177: மருந்தின் ........... உண்டோ

(இதன்பொருள்) நம் கண் மருந்தின் மயக்குவராயின் - இத்தகைய கள்வர் தாம் நம்மிடத்தே தமது மருந்தினாலே மயக்கத்தைச் செய்வாராயின்; இருந்தோம் பெயரும் இடனும் மார் உண்டோ-அவரைக் கண் கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற யாம் இருந்த விடத்தின் இருப்பதல்லது ஒரு சிறிதும் புடைபெயர்ந்து செல்லுதற்கும் வழி இல்லையாம் என்றான்; என்க.

(விளக்கம்) அவர் கருவிகள் எட்டனுள் மருந்து நும்மை இப்பொழுது மயக்கிற்றுப் போலும் அதனாற்றான் அவனைப் புகழ்கின்றீர் போலும் என்பான் இவ்வெட்டனுள் மருந்தினை முன்னுங் கூறினன். இப்பொழுது அவன் போவானாயின் அவனை நீயிர் தொடர்ந்து பற்றவும் வல்லீர் அல்லீர் என அச்சுறுத்துவான் மீண்டும் அதனை விதந்தெடுத்தோதினன். இதன்பயன் அவர்தம் காரியத்தைச் செய்தற்கு விரைதலாம் என்க. உண்டோ என்னும் வினா. அதன் எதிர் மறைப்பொருளை வற்புறுத்து நின்றது. மார் : இடைச் சொல்.

நிமித்தம்

178-179: நிமித்தம் ................ புகுதினும்

(இதன்பொருள்) நிமித்தம் வாய்த்திடின் அல்லது - நன்னிமித்தம் வாய்க்கப் பெற்றாலன்றி; அரும் பொருள் வந்து கைப்புகுதினும் யாவதும் புகற்கிலர் - பெறுதற்கரிய பொருள் தானே வந்து தம் கையிற் புகுந்தாலும் சிறிதும் தம் தொழிலிடத்தே புகுதமாட்டார்; என்க.

(விளக்கம்) நிமித்தம் - நன்நிமித்தம். யாவதும் - ஒரு சிறிதும். புகற்கிலர் - புகுதார்.

தந்திரகரணம்

180-181: தந்திர .......... எய்துவர்

(இதன்பொருள்) தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் - தமக்குரிய களவு நூலில் கூறப்பட்டிருக்கின்ற செயல்களை எண்ணி அவ்வாற்றால் களவு கொள்ளப் புகுந்தால்; இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் - தேவேந்திரனுடைய மார்பிலணிந்த முத்து மாலையையும் அவனறியாமல் களவு செய்வர் என்றான், என்க.

(விளக்கம்) தந்திரகரணம் - நூலில் சொல்லும் செயன் முறை. இந்திரன் தனது சுற்றம்சூழ எப்பொழுதும் கண்ணிமையாது விழித்திருப்பவன் ஆதலால் அத்தகையோனுடைய ஆரத்தையும் அவனறியா வண்ணம் களவு செய்யும் திறமுடையார் என்பது கருத்து. தந்திரம் - ஈண்டுக் களவு நூல்.

இடம்

182-183: இவ்விடம் ............ காண்கிற்பார்

(இதன்பொருள்) இப் பொருள் கோடற்கு இவ்விடம் இடம் எனின்-இந்தப் பொருளைக் களவு கொள்ளுதற்கு இந்த இடமே சிறந்த இடம் எனத் துணிந்து அப் பொருளை அவர் களவு கொண்ட பின்னர்; அவ்விடத்து அவரை யார் காண்கிற்பார் - அவ்விடத்தே அவரை யார் தாம் கண்ணாற் காண வல்லார் என்றான்; என்க.

(விளக்கம்) இடம் எனின் -சிறந்த இடம் என்று துணிந்தால் என்க. காண்கிற்பார்: ஒருசொல். கிற்பார்-செய்வார் என்பாருமுளர்.

காலம்

184-185: காலம் ........... உண்டோ

(இதன்பொருள்) அவர் காலம் கருதி பொருள் கையுறின் - அவர் தாம் களவு செய்தற்குச் சீர்த்த காலம் இஃது என்று துணிந்து அக்காலத்தில் களவு கொள்ள எண்ணிப் பொருளைக் கைப்பற்றிவிடின்; மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ - விண்ணவராயினும் அக் களவினை விலக்குதல் கூடுமோ? களவுகொண்டே விடுவர் என்றான்; என்க.

(விளக்கம்) காலம் - சீர்த்த காலம். மேலோர் - விண்ணவர்.

கருவி

186-187: கருவி ........... காண்கிற்பார்

(இதன்பொருள்) அவர் கருவிகொண்டு அரும்பொருள் கையுறின் - அவர் தாம்; கன்னகம் முதலிய கருவிகளைக் கொண்டு களவு கொள்ளுதற்கும் அரிய பொருள்களைக் கைப்பற்றிக் கொள்வாராயின்; இரு நிலம் மருங்கின் யார் காண்கிற்பார் - பின்னர் பெரிய இந் நிலவுலகத்தின்கண் அவரை யாரே காண்பார், என்றான் என்க.

(விளக்கம்) கருவி - கன்னகமும் கவைக்கோலும் பிறவும் என்க.

188-189: இரவே ...............இல்லை

(இதன்பொருள்) இரவே பகலே என்று இரண்டு இல்லை -இவருக்கு இரவென்றும் பகல் என்றும் கூறப்படுகின்ற கால வேறுபாடு இரண்டும் இல்லையாம்; கரவு இடம் கேட்கின் ஓர் புகல் இடம் இல்லை - அவர் களவு செய்யும் இடத்தைக் கேட்கின் நாம் ஓடி ஒளிக்கலாம் இடம் வேறு இல்லையாம்; என்றான் என்க.

(விளக்கம்) இரவு பகல் என்று இரண்டில்லை எனவே இவர் எப்பொழுதும் களவு செய்ய வல்லுநர் என்றவாறாம். கரவிடம் கேட்பின் இவர் களவு செய்யும் இடம் யாது என்று வினவின் அதற்கு விடை கூறுதற்கு ஓரிடமும் இல்லை என்றான் எனினுமாம். எனனே இவர் எவ்விடத்தும் களவு கொள்ள வல்லுநர் ஆவார் என்றான் ஆயிற்று.

பொற்கொல்லன் கள்வர் ஆற்றலுக்குச் சான்றாக ஒரு வரலாறு புனைந்து கூறுதல்

190-202: தூதர் ................. கொல்லல்

(இதன்பொருள்) தூதர் கோலத்து வாயிலின் இருந்து - காவலர்களே! பண்டு ஒருநாள் ஒரு கள்வன் வேற்று நாட்டரசர் தூதர் போலக் கோலங்கொண்டு வந்து நம் மன்னனுடைய அரண்மனை வாயிலின்கண் பகற்பொழுதின்கண் தங்கியிருந்து; வல் இருள் மாதர் கோலத்துப் புக்கு - அப் பகற்பொழுது கழிந்து வலிய இருளையுடைய இரவு வந்துற்றவுடன் யாரும் அறியாமல் அரண்மனைக்குட் புகுந்து; விளக்கு நிழலில் துளக்கு இலன் சென்று - விளக்கு நீழலிலே பள்ளியறையினுள் சிறிதும் அஞ்சாமல் புகுந்து; ஆங்கு இளங்கோ வேந்தன் வெயிலிடு வயிரத்து துளங்கு ஒளி ஆரம் - அவ்விடத்தே இந்நெடுஞ்செழியன் தம்பியாகிய வேந்தன் துயில் கொள்ளும் பொழுது அவன் மார்பில் அணிந்திருந்த வெயிலிடு வயிரத்தையுடைய ஒளிதிகழும் முத்து மாலையை; மின்னின் வாங்க - மின்னல் போன்று விரைந்து கைக்கொண்டானாக; துயில்கண் விழித்தோன் தோளில் காணான் அப்பொழுது துயில் கலைந்து கண் விழித்துப் பார்த்த அவ்விளங்கோ வேந்தன் ஆரத்தைத் தன் தோளில் காணப்பெறானாய்; உடை வாள் உருக - தனது உடை வாளை உருவினானாக, உறை கை வாங்கி எறிதொறும் செறித்த இயல்பிற்கு ஆற்றான் - அதன் உறையைத் தன் கையிற் பற்றித் தான் குத்துந்தோறும் வாளில் உறையைச் செறித்த அத் தன்மைக்குப் பொறானாய்; மல்லிற்காண மணித்தூண்காட்டிக் கல்வியில் பெயர்ந்த கள்வன் தன்னை மற்போரான் அவன் வலியைக் காண விரும்பிய அளவிலே அவ்விடத்து நின்றதொரு மணித்தூணைத் தானாகக் காட்டித் தன் களவு நூற் பயிற்சியினால் மறைந்த கள்வனை; கண்டோர் உளர் எனில் காட்டும்-கண்டோர் உளராயின் அவர்களைக் காட்டுமின்; ஈங்கு இவர்க்கு உண்டோ உலகத்து ஒப்போர் என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல - காட்டுவாரிலர் ஆகலான் இக் கள்வர்க்கு ஒப்பாவார் இவ்வுலகத்துப் பிறர் ஒருவரேனும் உண்டோ என்று அக்கொலைத் தொழிலினையுடைய பொற்கொல்லன் கூற; என்க.

(விளக்கம்) தூதர் - வேற்று நாட்டு அரசரால் விடப்பட்ட தூதர். வாயிலினிருந்து என்பதற்கு மேலே வல்லிருட்புக்கு என்றமையால் வாயிலின்கண் பகல் முடியுந்துணையும் இருந்தான் என்பது பெற்றாம். இளங்கோ நெடுஞ்செழியனுக்குத் தம்பியாகிய அரசன் என்க. வெயிலிடு - வெயில் போல ஒளிவிடுகின்ற; வயிரத்தின் ஒளியால் ஆரத்தைக் கண்டு வாங்க எனினுமாம். பண்டு துயின்றவன் என்பது தோன்ற துயில் கண் என்றார். அரசன் உடைவாளை உருவியவுடன் கள்வன் அவ்வுறையைக் கைப்பற்றி என்றவாறு. அரசன் வாளால் குத்துந்தோறும் கள்வன் தன் கையிலிருந்த உறையின்கண் அவ்வாளை ஏற்றான் என்னும் இஃது அக் கள்வனின் வியத்தகு செயலை உணர்த்துதலுணர்க. மல்லிற்காண என்றது அரசன்தன் வாள் பயன்படாமை கண்டு அதனை ஒழித்து மற்போரினாலே அக் கள்வன் வலியைக் காண்டற்கெழ என்றவாறு. எழுந்த உடன் கள்வன் எதிர்நின்ற தூணின் மறைந்து தப்பினன்; அவ்வழி மன்னன் அக்கள்வன் மறைந்த தூணையன்றிப் பின்னர்க் கள்வனைக் கண்டிலன் என்பது கருத்து. இது, முன்னர் மந்திரம் நாவிடை வழுத்துவராயின் இந்திரகுமரரின் யாங் காண்குவமோ என்பதற்கு எடுத்துக் காட்டாயிற்று.

202-203: ஆங்கோர் .......... கூறும்

(இதன்பொருள்) ஆங்கு ஓர் திருந்து வேல் தடக்கை இளையோன் - அவ்விடத்தே அக்காவலர் தம்முள் வைத்துத் திருந்திய வேலையுடைய பெரிய கையையுடைய ஆண்டால் இளையவனாகிய ஒரு காவலன், கூறும் - தனது பட்டறிவு கொண்டு சொல்லுவான் அஃது யாதெனின் என்க.

(விளக்கம்) ஆங்கு, என்றது அங்ஙனம் அக்கொல்லன் கூறி முடித்த பொழுது எனக் காலத்தின் மேற்று. அக் கள்வன் கூற்றெல்லாம் உண்மை என்றே அக் காவலன் கொண்டனன் என அவன் பேதைமை தோன்ற இளையோன் என்றார்.

இளங்காவலன் எடுத்துக்காட்டு

204-211: நிலனகழ் .................. படையிரென

(இதன்பொருள்) நிலன் அகழ் உளியன் நீலத் தானையன் கலன் நசை வேட்கையின் - நிலத்தை அகழுகின்ற உளிளை யுடையவனாய் நீல நிறமுடைய ஆடையை உடுத்தியவனாய் அணிகலன்களை விரும்பிய விருப்பத்தாலே; கடும் புலி போன்று - இரைதேடி இருளிலே திரிகின்ற கடிய புலியைப்போல; மாரி நடு நாள் வல்இருள் மயக்கத்து ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற - மழையையுடைய கார்காலத்தில் அரையாமத்தில் வலிய இருளால் கண்களை மயக்குவதும் ஊரிலுள்ள மாந்தரெல்லாம் துயில்வதற்கு இடனானதும் ஆகிய ஓர் இரவிலே ஊர் காவல் மேற்கொண்டு செல்லும் என்னெதிரே ஒரு கள்வன் தோன்றினான் அப்பொழுது, கைவாள் உருவ என் கைவாள் வாங்க - யான் அவனை எறிதற் பொருட்டு என் உடை வாளை உருவினேனாக உருவியவுடன் அக்கள்வன் அவ்வாளைத் தன் கையில் பற்றினன்; யான் அவன் எவ்வாய் மருங்கினும் கண்டிலேன் - வாளைப்பற்றிய கள்வன் அப்பொழுதே அவ்வாளோடு மறைந்தொழிந்தானைப் பின்னர் யான் எல்லா இடங்களினும் தேடிப்பார்த்தும் கண்டிலேன்; இவர் செய்தி அரிது - ஆதலால் இவருடைய செய்கையை நம்மனோர் அறிதலும் அரிதேயாம்; வேந்தனும் அலைக்கும் - யாம் செய்யக்கடவ செயலைச் செய்யாது தப்பின் நம்மரசனும் நம்மை ஒறுப்பன் எனவே இங்ஙனம் காலந் தாழ்த்தல் நன்றன்று; உறுபடையீர் - மிக்க படைக்கலத்தை யுடையீர்; உரியது ஒன்று உரைமின் - யாம் இப்பொழுது செய்தற்குரிய செயலொன்றனைத் துணிந்து விரைந்து சொல்லுமின்; என - என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) இதனோடு நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர், மென்னூலேணிப் பன்மாண் சுற்றினர், நிலனகழுளியர் கலனசைஇக்கொட்கும், கண்மாறாடவ ரொடுக்க மொற்றி எனவரும் மதுரைக் காஞ்சியையும் ஒப்பு நோக்குக. கோவலனையும் கள்வனாகக் கொண்டு இவர் செய்கை என்றான்.

உளியனாய்த் தானையனாய்ப் புலி போன்ற ஒருவன் தோன்ற என்க.

கல்லாக் களிமகன் செயல்

212-217: கல்லாக் களிமகன் ............. உருத்தென்

(இதன்பொருள்) கல்லாக் களிமகன் ஒருவன் - திருந்து வேல் தடக்கை இளையோன் வேந்தனும் அலைக்கும் என்று கூறக்கேட்டபொழுது அக் காவலருள் வைத்துக் கல்லாமையை யுடைய களிமகன் ஒருவன் பிறிதொன்றும் நினையானாய் அரசன் அலைக்கும் என்றஞ்சி; கையில் வெள்வாள் எறிந்தனன் - ஞெரேலெனத் தன்கையிற் பற்றி யிருந்த வெள்ளிய வாளால் கோவலனை வெட்டினன்; விலங்கு ஊடு அறுத்தது - அவ்வெட்டுக் குறுக்காகத் துணித்தது; புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப -துணிபட்ட அவ் உடற்குறைப் புண்ணினின்றும் கொப்புளிக்கின்ற குருதி குதித்து எங்கும் பரவா நிற்ப; மண் அக மடந்தை வான் துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய - நிலமகள் தானும் பொறுமை இழந்து பெரிதும் துன்புறா நிற்பவும், அரசனுடைய செங்கோல் வளையவும்; கோவலன் பண்டை ஊழ் வினை உருத்து வீழ்ந்தனன் - கோவலன் இங்ஙனம் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது முதிர்ந்து வந்து ஊட்டுதலாலே வெட்டுண்டு விழுந்தான் என்பதாம்.

(விளக்கம்) ஏனைக் காவலர் கோவலனைக் கண்டபொழுது இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் கொலைப்படு மகன் அலன் என்று தம் கருத்தினைக் கூறியவர் அக்கருந்தொழிற் கொல்லன் கூறியவற்றைக் கேட்டும் கோவலனைக் கொலை செய்யத் துணியாமை கண்டு அவருள் இளையோன் கள்வரைப்பற்றித் தானும் ஒன்று கூறி இப்பொழுது செய்தற்குரியது யாது - அஃதாவது - இவனைக் கொல்வதோ விட்டுச்செல்வதோ என வினவவும் முன்னர் இவன் கொலைப்படுமகனலன் என்றவர் அவ்விளைஞன் வினாவிற்கு விடை கூறுமுன்பே அவருள் ஒருவன் வெட்டினன் என்ற அடிகளார் அங்ஙனம் அவன் வெட்டுதற்கு ஏதுக் கூறுவார் -அவனைக் கல்லாக் களிமகன் என விதந்தெடுத்து ஓதுவாராயினர். அக்கல்லாக் களிமகன் தானும் அங்ஙனம் விரைந்து வெட்டியதற்கும் ஓர் ஏதுவினை முற்கூறிய திருந்து வேல் இளையோன் கூற்றில் காட்டினர். அஃதாவது வேந்தனும் அலைக்கும் என்றது அதற்குக் குறிப்பேதுவாம் என்க. அதுகேட்டு அஞ்சிய இக் கல்லாக்களிமகன் இங்ஙனம் செய்தனன் என்பது அடிகளார் கருத்து. என்னை? அச்சமே கீழ்களது ஆசார மாகலின்.

இன்னும் கோவலனது தீய பழவினையானது உருத்துவந்து ஊட்டுங் காலை இக்கருந்தொழிற் கொல்லனும் இக்கல்லாக் களிமகனும் காம மயக்கங் காரணமாக யாவதும் தேறா மன்னனாகிய நெடுஞ்செழியனும் போல்வாரைத் தனக்குக் கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையும் நினைக. தீவினையாளரை ஊழ் ஊட்டுங்கால் இங்ஙனமே ஊட்டும் இயல்புடையது என்பதும் இங்கு உணர்தற்குரியது; இவ்விடத்தே,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

எனவரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் பொன்மொழியும் நெஞ்சத்தே பதித்துக் கொள்ளற் பாலதாம்.

இனி நிலமகள் பொறுமைக்கு எடுத்துக் காட்டு ஆவாள் எனினும் இத்தகைய தீவினை நிகழுங்கால் அவள் தானும் பொறுமையிழந்து அவலமுறுவள் என்பார் மண்ணக மடந்தை வான்றுயர் கூர என்றோதினர். உருத்து என்னும் எச்சத்தை உருப்ப எனத்திரித்துக் கொள்க.

பா - நிலைமண்டில ஆசிரியப்பா.

நூலாசிரியர் செவியறிவுறூஉ நேரிசை வெண்பா

நண்ணு ............. வினை

(இதன்பொருள்) பண்டை விளைவு ஆகி வந்த வினை - மக்களே! முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகி அப்பயனை நுகர்விக்க வந்த ஊழ்வினையால்; மண்ணில் வளையாத செங்கோல் - இந்நிலவுலகத்தே ஒரு காலத்தும் வளைந்தறியாத செங்கோலும்; கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் வளைந்தது - கண்ணகியின் கணவனாகிய கோவலன் கருவியாக வளையுங்கால் வளைவதாயிற்று ஆதலால்; இருவினையும் நண்ணும் - தீவினையும் நல்வினையுமாகிய இரண்டு வினைகளின் பயனும் அவற்றைச் செய்தவர்பால் வந்து எய்துதல் ஒருதலை; நல்லறமே நண்ணுமின்கள் - இங்ஙனமிருந்தலால் எல்லோரும் நல்வினையையே செய்யுங்கள்! தீவினையைச் செய்யாதொழியுங்கள்! என்றவாறு.

(விளக்கம்) பாண்டியன் முற்பகலில் தன் அரசியலிற் பிழைத்துச் செய்த தீவினை பிற்பகலே வந்தெய்தி அவன் செங்கோலை வளைத்தது; கண்ணகிகேள்வன் முன்பிறப்பில் செய்த தீவினை இப் பிறப்பில் வந்து அவனைக் கொலைக் களத்தே வீழ்த்தியது. வீழ்த்தும் பொழுது அதற்குக் கருவியாக அப்பொழுது பிழைத்த பாண்டியனைக் கருவியாக்கிக் கொண்டது. பாண்டியன் கோலை வளைக்கக் கோவலனைக் கருவியாக்கிக் கொண்டது. இங்ஙனம் கோடல் ஊழினியல்பு என்றவாறு. இவ்வுண்மையை உணர்ந்து கொள்மின்! தீவினையை விட்டொழிமின் ! இங்ஙனமே நல்வினையின் பயன் நன்மையாகவே வந்தெய்தும் ஆதலால் நல்லறமே நண்ணுமின் என்றவாறு.

கொலைக்களக்காதை முற்றிற்று
« Last Edit: February 27, 2012, 10:41:52 AM by Anu »


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #25 on: February 28, 2012, 07:17:37 AM »
17. ஆய்ச்சியர் குரவை

அஃதாவது - கண்ணகியை அடைக்கலம் பெற்ற மாதரி மனைக்கண் அம் மாதரியால் நன்கு பேணப்பட்டுக் கண்ணகியும் கோவலனும் அவ்விடைக்குல மடந்தையின் பூவலூட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றில் ஆகிய கடிமனையின்கண் இனிதிருந்து, மற்றை நாள் விடியற் காலத்தே கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்று கொண்டு அதனை விற்றற்கு மதுரைமா நகரின்கண் புகுவானாக; அற்றை நாள் விடியற் காலத்தே துயிலெழுந்த மாதரி தனது சேரியின்கண் தீ நிமித்தங்கள் பல நிகழ்ந்தமை கண்டு இச்சேரியின்கண் ஏதோ பெருந் தீங்கு நிகழ்தற்கு இவை அறிகுறியாம் என்றுட்கொண்டு, அத்தீங்கு நிகழாமைப் பொருட்டுத் தம் குலதெய்வமாகிய மாயோனை வாழ்த்தி ஏனைய ஆய்ச்சியருடன் குரவைக் கூத்தாடிய செய்தியைக் கூறும்பகுதி என்றவாறு; இது கூத்தாற் பெற்ற பெயர்.

கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட்பப் பாரரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்  5

காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்;  10

உரைப்பாட்டு மடை

குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்  1
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;

உறிநறு வெண்ணெய் உருகா உருகும்  2
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;

நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்  3
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;

கருப்பம்

குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே;

கொளு

காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்  1
வேரி மலர்க் கோதையாள்;

கட்டு

நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்  2
பொற்றொடி மாதராள் தோள்;

மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்  3
முல்லையம் பூங்குழல் தான்;

நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப்  4
பெண்கொடி மாதர்தன் தோள்;

பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந்  5
நற்கொடி மென்முலை தான்;

வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக்  6
கொன்றையம் பூங்குழ லாள்;

தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப்  7
பூவைப் புதுமல ராள்;

எடுத்துக் காட்டு

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவரிளங் கோதை யார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே;

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;

கூத்துள் படுதல்

அவர் தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள்;

பாட்டு

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்  1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்  2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்  3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி  1
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்  2
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

தையல் கலையும் வளையும் இழந்தே  3
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்;

ஒன்றன் பகுதி

கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் 1
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;

மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்  2
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;

ஆடுநர்ப் புகழ்தல்

மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத்
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே;

எல்லாநாம்,
புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும்
உள்வரிப் பாணியொன் றுற்று;

உள்வரி வாழ்த்து

கோவா மலையாரம் கோத்த கடலாரம்  1
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்;

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 2
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்;

முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான்  3
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்;

முன்னிலைப் பரவல்

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்  1
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த 2
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல  3
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே;

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்  1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்  3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;

என்றியாம்,
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

உரை

தோற்றுவாய்

1-10: கயலெழுதிய .............. தோன்றுமன்

(இதன்பொருள்.) இமய நெற்றியின் எழுதிய கயல் அயல் புலியும் வில்லும் எழுதிய - இமயமலையின் நெற்றியின்கண் தான் தன் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்த கயலுக்குப் பக்கத்தில் தம் வெற்றிக்கு அறிகுறியாகப் பொறிக்கப்பட்ட புலிப்பொறியையும் விற்பொறியையும் உடைய சோழனும் சேரனும் ஆகிய அரசர்களும்; நாவலந் தண் பொழில் மன்னர் ஏவல் கேட்ப - இந்த நாவலந் தீவின்கண் செங்கோல் செலுத்துகின்ற பிற பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆகிய எல்லா மன்னரும் தனது ஏவலைக் கேட்டு ஒழுகும்படி; பார் அரசு ஆண்ட மாலை ஏவல் வெண்குடைப் பாண்டியன் கோயிலின் - நில முழுவதும் அரசாட்சி செய்த முத்துமாலை பொருந்திய வெண்கொற்றக் குடையையுடைய பாண்டியனுடைய அரண்மனையின்கண்ணே; காலை முரசம் கனைகுரல் இயம்பும் ஆகலின் - பள்ளி எழுச்சி முரசு முழங்குகின்றது ஆதலாலே; நமக்கு இன்று நெய்ம்முறை ஆல் என்று - நமக்கு இற்றை நாள் அரண்மனைக்கு நெய்யளக்கும் முறை ஆகும் என நினைந்து; ஐயை தன் மகளைக் கூஉய் - ஐயை என்னும் பெயருடைய தன் மகளை அழைத்தவளாய்; இடை முதுமகள் கடை கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றுமன் -இடையர்குலத்துப் பிறந்த முதுமகளாகிய மாதரி தயிர்கடை தற்குக் கருவியாகிய கயிற்றையும் மத்தையும் கையில் எடுத்துக் கொண்டு தயிர்த்தாழி இருக்குமிடத்தே வந்து தோன்றுவாளாயினள் என்க.

(விளக்கம்) கயல், புலி, வில் என்னும் மூன்றும் நிரலே பாண்டியன், சோழன், சேரன் என்னும் மூன்று தமிழ்நாட்டு மன்னர்களின் பொறிகள்; பொறி எனினும் இலச்சினை எனினும் ஒக்கும். முத்திரை என்பதுமது. இது மதுரைக்காண்டமாதலின் பாண்டியனுடைய தலைமைத்தன்மை தோன்ற, கயலின் அயலெழுதிய புலியும் வில்லும் என்றார். புலி, சோழனுக்கும்; வில், சேரனுக்கும் ஆகுபெயர்கள். நாவலந்தண்பொழில் என்றது, இமய முதல் குமரி ஈறாகக் கிடந்த பெரு நிலப்பரப்பினை என்க. இந் நிலப்பரப்பின்கண் தமிழகத்தை ஆளுகின்ற பெருநில மன்னர்களாகிய சோழனும், சேரனும் பிற நாட்டை ஆளுகின்ற பெருநில மன்னர்களும் இவர்தம் ஆட்சியின் கீழ்ப்பட்ட எல்லாக் குறுமன்னர்களும் தன் ஏவல் கேட்கும்படி ஆண்ட பாண்டியன் என்க.

கோயில் - அரண்மனை. காலைமுரசம் - பள்ளி எழுச்சி முரசம். இயம்பும் - இயம்ப அதுகேட்டனள் ஆகலின் இடைமுதுமகள் வந்து தோன்றும் என்றவாறு. நமக்கு இன்று நெய்ம்முறை ஆம் என்றது இடைமுதுமகளின் உட்கோளை: மாதரி. அவள் ஐயை! ஐயை ! எனத் தன்மகளைக் கூவியவண்ணம் வந்து தோன்றும் என்க. வருபவள் கயிறும் மத்துங்கொண்டு வந்து தோன்றினள் என்றவாறு.

இது கூத்தாகலின் கூத்தின்கண் கூத்தர் தலைவன் முன்னுரை கூறுமாறு போலே அடிகளார் இங்ஙனம் கூறுகின்றனர் என்க.

உரைப்பாட்டு மடை

அஃதாவது - உரை போன்ற நடையமைந்த பாட்டினை இடையிலே மடுத்தது என்க.

1: குடப்பால் ........... உண்டு

(இதன்பொருள்.) குடப்பால் உறையா - நாம் பிரையிட்ட தாழிகளில் பாலும் தோயாதொழிந்தன; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சேரரும் -அதுவேயுமன்றி நமது நிரையினிடத்தே திரண்ட முரிப்பையுடைய காளையின் அழகிய கண்களினின்றும் நீர் ஒழுகா நின்றது. ஆதலாலே; வருவது ஒன்று உண்டு - நமக்கு வரும் தீங்கு ஒன்று உளது போலும் என்றாள்; என்க.

(விளக்கம்) குடம் ஈண்டுத் தயிர்த்தாழி. உறைதல் - பால் தயிராதல். பிரை - பால் தயிராதற்பொருட்டு இடும் மோர்.

2: உறி ............ உண்டு

(இதன்பொருள்.) உறி நறு வெண்ணெய் உருகா - உறியின்கண் தாழியிலிட்ட வெண்ணெய்த் திரளைகள் அரண்மனைக்கு அளத்தற்கு உருக்குங்கால் நன்கு உருகா தொழிந்தன; மறிதெறித்து ஆடா உருகும் - அதுவேயுமன்றி ஆட்டுக்குட்டிகளும் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடக்கும்; வருவது ஒன்று உண்டு -ஆதலால் நமக்கு வரும் கேடொன்று உளது போலும்; என்றாள் என்க.

(விளக்கம்) அற்றைநாள் நெய்யளக்கும் முறை ஆதலின் அதற்கு உருக்கிய வெண்ணெய்த் திரளைகள் நன்கு உருகுகின்றில என்றவாறு. மறி - ஆட்டுக்குட்டி, ஆடா: முற்றெச்சம். உருகுதல் - (மறிக்கு) சோர்தல்.

3: நான்முலை ............ உண்டு

(இதன்பொருள்.) நால்முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும் -நான்கு முலைக்காம்புகளையுடைய ஆனினம் காரணமின்றியே உடல் நடுங்கி நின்று கதறும்; மால்மணி வீழும் - அதுவேயுமன்றி ஆக்களின் கழுத்திற் கட்டிய பெரிய மணிகள் தாமும் கட்டற்று வீழா நின்றன; வருவது ஒன்று உண்டு - ஆதலால் நமக்கு வந்துறும் கேடொன்று உளது போலும் என்க.

(விளக்கம்) முலை - ஈண்டுச் சுரை, (காம்புகள்). நடுங்குபு - நடுங்கி. இரங்கும் என்றது கதறும் என்பதுபட நின்றது, மால் - பெரிய.

கருப்பம்

அஃதாவது -இத் தீநிமித்தமெல்லாம் இனி வருங் கேட்டிற்கு கருக்கள் ஆம் என்றவாறு.

(விளக்கம்) கருவாவது - பின்விளைவிற்கு முதலாய் நிற்பது என்க.

1: குடத்துப்பால் ................ எனவே

(இதன்பொருள்.) குடத்துப்பால் உறையாமையும் - தயிர்த்தாழியின் கண் பிரையிட்ட பால் தயிராகத் தோயாமையானும்; குவி இமில் ஏற்றின் மடக்கண் நீர் சோர்தலும் - திரண்ட முரிப்பையுடைய ஆனேற்றின் அழகிய கண்ணினின்றும் நீர் சோர்தலானும்; உறியில் வெண்ணெய் உருகாமையும் - உறியில் தாழியிலிட்ட வெண்ணெய் நன்கு உருகாமையானும்; மறி முடங்கி ஆடாமையும் - ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாமல் சோர்ந்து கிடத்தலானும்; மால்மணி அற்று நிலத்து வீழ்தலும் -ஆவின் கழுத்திற் கட்டிய மணி கயிறற்று நிலத்தின்கண் வீழ்தலானும்; வருவதோர் துன்பமுண்டென -இவை தீநிமித்த மாதலின் நமக்கு வரும் ஒரு துன்பமுண்டு போலும் என்று கூறிய மாதரி; மகளை நோக்கி மனம் மயங்காதே - தன்மகளாகிய ஐயை இது கேட்டு மயங்கி நின்றவளைப் பார்த்து என் அன்பே! இவற்றிற்கு நீ மனம் மயங்குதல் வேண்டா! இவற்றிற்குத் தீர்வும் உளது காண் அஃதியாதெனின்; மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய கண்ணகியும் தான் காண - இந்நிலவுலகத்தின்கண் பெண் பிறந்தோர்க்கெல்லாம் பேரணிகலனாக விளங்குகின்ற நங் கண்ணகிதானும் கண்டு மகிழும்படி; யாம் - இடைக்குல மகளிரேம் ஆகிய யாமெல்லாம் குழுமி நங்குல தெய்வமாகிய; மாயவன் ஆயர் பாடியில் எருமன்றத்துத் தம்முன் உடன் ஆடிய - கண்ணபெருமான் பண்டு ஆயர்பாடியில் தாதெருமன்றத்தில் தமையனாகிய பலதேவனோடு ஆடிய; வாலசரிதை நாடகங்களில் - இளம்பருவத்து வரலாற்று நாடகங்கள் பல உள அவற்றுள்; வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் - வேல்போலும் நெடிய கண்ணையுடைய நப்பின்னையோடு ஆடிய குரவை நாடகத்தை ஆடுவோமாக! அஃது எற்றுக்கெனின்; கறனை கன்று துயர் நீங்குக என என்றாள் - இத் தீநிமித்தம் காரணமாக நம்முடைய கறவைகளும் கன்றுகளும் எய்தும் துன்பம் எய்தாதொழிக என்று அத் தெய்வத்தை வேண்டுதற் பொருட்டேயாம் என்று சொன்னாள்; என்க.

(விளக்கம்) குரவை நாடகமாவது - எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடுங் கூத்து.

கொளு

அஃதாவது - குரவைக் கூத்தின் இயல்பினைத் தன்னுட்கொண்ட பகுதி என்றவாறு.

1. காரி .............. கோதையாள்

(இதன்பொருள்.) காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை - இந்தக் கரிய நிறமமைந்த ஆனேற்றின் சினத்திற்கு அஞ்சாமல் அதன்மேற் பாய்ந்து அடக்கிய ஆயனை; இவ்வேரி மலர்க்கோதை யாள் காமுறும் -இந்தத் தேனிறைந்த மலர்மாலையை யுடையாள் விரும்புவாள்; என்க.

(விளக்கம்) காரி - கரிய நிறமுடையது. கதன் - போலி, சினம். அஞ்சான்; முற்றெச்சம். வேரி - வெட்டிவேருமாம்.

சுட்டு

அஃதாவது - இதுவும் கீழ்வருவனவும் மாதரி குரவை ஆடுதற்குரிய ஆயர்மகளிரைத் தனித்தனி சுட்டிக்காட்டிக் கூறுவன என்றவாறு.

2: நெற்றி ............ தோள்

(இதன்பொருள்.) நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு - இந்த நெற்றியின்கண் சிவந்த சுட்டியையுடைய ஆனேற்றை அடக்கிய ஆயனுக்கு; இப் பொன் தொடி மாதராள்தோள் உரிய - இந்தப் பொன் வளையலணிந்த ஆயமகளின் தோள்கள் உரியனவாம் என்க.

(விளக்கம்) நெற்றிச் செகில் - நெற்றியொழிந்த உறுப்பெல்லாம் சிவந்த ஏறு எனினுமாம்.

3: மல்லல் .............. பூங்குழல்தான்

(இதன்பொருள்.) மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு - இந்த வளனும் இளமையும் உடைய ஏற்றினை அடக்கி அதன் முதுகில் ஏறிச் செலுத்திய ஆயனுக்கு; இம் முல்லை அம் பூங்குழல் தான் உரியள் - இந்த முல்லைப் பூவாகிய அழகிய மலர்மாலை வேய்ந்த கூந்தலையுடைய ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) மல்லல் - வளம். மழ -இளமை. பூங்குழல்: அன்மொழித்தொகை. தான் : அசைச்சொல்.

4: நுண்பொறி ......... தோள்

(இதன்பொருள்.) நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - நுண்ணிய புள்ளிகளையுடைய வெள்ளை ஏற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இப் பெண்கொடி மாதர் தன் தோள் ஆகும் - இந்தப் பெண்ணாகிய பூங்கொடிபோலும் ஆய்ச்சியின் காதல்கெழுமிய தோள்கள் தழுவுதற்குரியன ஆகும்; என்க.

(விளக்கம்) வெள்ளை: ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை. மாதர் - காதல்; அழகுமாம்.

5: பொற்பொறி ............. முலைதான்

(இதன்பொருள்.) பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே - அழகிய புள்ளிகளையுடைய இந்த வெள்ளேற்றினைத் தழுவி அடக்கிய ஆயனுக்கே; இந் நற்கொடி மென்முலை தான் ஆகும்-இந்த அழகிய பூங்கொடிபோலும் ஆயமகளின் மெல்லிய முலை தழுவுதற்குரியதாம்; என்க.

(விளக்கம்) பொன் - அழகு. நற்கொடி: அன்மொழித்தொகை. தான்: அசை.

6: வென்றி .......... பூங்குழலாள்

(இதன்பொருள்.) வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு - எப்பொழுதும் வெற்றியையேயுடைய இந்த இளைய ஏற்றினை வென்று அதன் முதுகிலமர்ந்து செலுத்திய ஆயனுக்கே; இக் கொன்றையம் பூங்குழலாள் உரியள் - இந்தக் கொன்றைப்பழம் போன்ற நிறத்தால் அழகுடைய மலரணிந்த கூந்தலையுடைய ஆயமகள் வாழ்க்கைத் துணைவி ஆதற்குரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) முன்னும் பலர் தழுவ முயன்று தோற்றமை தோன்ற வென்றி மழவிடை என்றாள். கொன்றைப்பழம் கூந்தலுக்கு நிறத்தால் உவமை. கொன்றைப் பழக் குழற் கோதையர் என்பது வளையாபதி.

7: தூநிற ....... மலராள்

(இதன்பொருள்.) தூநிற வெள்ளை அடர்த்தாற்கு - இந்தத் தூய வெள்ளையேற்றினைத் தழுவி வென்ற ஆயனுக்கே; இப்புது பூவை மலராள் உரியள் - இந்தப் புதிய காயாம்பூ மலர் அணிந்த ஆயமகள் வாழ்க்கைத் துணைவியாக உரியவள் ஆவள்; என்க.

(விளக்கம்) தூநிற வெள்ளை என்றது பிறிது நிறம் சிறிதும் விரவாத வெள்ளை நிறத்தையுடைய காளை என்றவாறு. பூவை - காயா.

எடுத்துக்காட்டு

அஃதாவது இவ்வாறு ஒவ்வொரு மகளுக்கும் ஒவ்வொரு காளையைக் குறித்துக்காட்டி வளர்க்கப்பட்டவர் என்க. ஆங்கு - அப்படியே.

தொழுவிடை பெயரிடுவாள்

(இதன்பொருள்.) தொழு இடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவர் இளங்கோதையார் என்று - இங்ஙனம் தத்தம் தொழுவின் கண்ணே ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆனேற்றினைக் குறிப்பிட்டு வளர்க்கப்பட்டவராகிய ஏழு இளமகளிராகிய கோதையணிந்த ஆயமகளிரைச் சுட்டிக் காட்டி; தன்மகளை நோக்கி - தன் மகளாகிய ஐயையை நோக்கி; தொன்றுபடு முறையான் நிறுத்தி இடைமுது மகள் இவர்க்குப் படைத்துக்கோள் பெயர் இடுவாள் - இம் மகளிரைப் பழைய இசை நரம்புகள் நிற்கும் முறைமைகளிலே நிறுத்தி இடையர் குலத்துப் பிறந்த முதியவளாகிய அம் மாதரி இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாளாயினாள்; என்க.

(விளக்கம்) தொன்று படுமுறை - தொன்றுதொட்டுக் கூத்த நூலில் கூறும் முறை. இடை முதுமகள்-மாதரி. இவர் என்றது ஏறு குறித்து வளர்க்கப்பட்ட ஆயமகளிர் எழுவர்க்கும் என்றவாறு. படைத்துக் கோட் -பெயர் புனைபெயர். அஃதாவது ஒருவர்க்குரிய இயற்பெயர் நிற்க, அவர்க்கு ஒரு காரணம்பற்றி அப்பொழுதைக்கு யாதானும் அக்காரணத்திற்குத் தொடர்புடையதாக ஒரு பெயர் வைத்துக் கொள்ளுதல்.

மாதரி ஆயமகளிர்க்குப் படைத்துக்கோள் பெயரிடுதல்

குடமுதல் ........ பெயரே

(இதன்பொருள்.) குடமுதல் இடமுறையா குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என மேற்றிசையில் குரல் நரம்பு முதலாக நிரலே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என இடமுறையால் இவ்வேழு மகளிர்க்கும்; விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர் - மலர்ந்த மலரையுடைய கூந்தலையுடைய மாதரி என்பாள். இட்ட பெயர்களாம்; என்க.

(விளக்கம்) இவை கூத்தாடுங்கால் அவர்களை அழைத்தற்கு அவர்களுக்கிட்ட புனைபெயர்.

இனி, குரல் முதலிய ஏழிசைகளையும் கருவியாகக்கொண்டு பாடுகின்ற பாலைப்பண்கள், ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, வட்டப்பாலை என நான்கு வகைப்படும் எனவும், அவற்றுள் இங்கு ஏழு இசைகளையும் பெயராகக் கொண்டு எழுவரும் கைகோத்து வட்டமாக நின்று அவ்விசை நரம்புகள் நிற்கு முறைப்படி ஆடுங்கால் பாடும் பண்கள் அந்நான்கனுள் வைத்து வட்டப்பாலை யாமெனவுமுணர்க.

இவ் வட்டப்பாலை பற்றிய அடியார்க்குநல்லார் இவ்விடத்தே கூறும் விளக்கம் வருமாறு: வட்டமென்பது வகுக்குங்காலை, ஓரேழ் தொடுத்த மண்டல மாகும் சாணளவு கொண்ட தொருவட்டந் தன்மீது, பேணி யிருநாலு பெருந்திசைக் கோணத் திருகயிறு மேலோட்டி யொன்பாலை மூன்றும் வருமுறையே மண்டலத்தை வை என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், வட்டப்பாலை, மண்டலம் வருமிடத்துச் சாணுக்குச் சாணாக ஒரு வட்டம் கீறிப் பெருந்திசைகளின் மேலே இரண்டு வரம்பு கீறி மண்டலம் செய்து பன்னிரண்டு கோணமாக வகுப்பது நுதலிற்று.

எதிரு மிராசி வலமிடமாக, எதிரா விடமீன மாக - முதிராத, ஈராறி ராசிகளை யிட்டடைவே நோக்கவே ஏரார்ந்த மண்டலமென்றெண் என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் - இட்ட பன்னிரண்டு கோணத்திற் பன்னிரண்டு ராசிகளை நிறுத்தினால் இவற்றுள் நரம்புடன் இயல்வன ஏழென்பது உணர்த்துதல் நுதலிற்று.

ஏத்து மிடப, மலவ னுடன்சீயம், கோற்றனுக் கும்பமொடு, மீளமிவை பார்த்துக், குரன்முதற் றார, மிறுவாய்க் கிடந்த, நிரலேழுஞ் செம்பாலை நேர் இவ்வேழும் இடபம் கற்கடகம் சிங்கம் துலாம் தனுகும்பம் மீனமென இவற்றுள் நிற்கும்.

துலைநிலைக் குரலுந் தனுநிலை துத்தமும் நிலைபெறு கும்பத்து நேர்கைக் கிளையும் மீனத் துழையும் விடை நிலத்திளியும், மானக் கடகத்து மன்னிய விளரியும், அரியிடைத் தாரமு மணைவுறக் கொளலே.

இனி, இந் நரம்புகளின் மாத்திரைகள் வருமாறு: குரல் துத்த நான்கு கிளைமூன் றிரண்டாம். குரையா வுழையிளி நான்கு - விரையா, விளரியெனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார், களரிசேர் கண்ணுற் றவர் எனக் கொள்க.

இவற்றுள், தாரத்துள் உழை பிறக்கும்; உழையில் குரல் பிறக்கும்; குரலுள் இளிபிறக்கும்; இளியுள் துத்தம் பிறக்கும்; துத்தத்துள் விளரிபிறக்கும்; விளரியுட் கைக்கிளை பிறக்குமெனக் கொள்க. இவற்றுள் முதலில் தோன்றிய நரம்பு தாரம்; இவை விரிப்பிற் பெருகும்; வந்தவழிக் கண்டுகொள்க.

இனி, வட்டப்பாலையிலே நாலுபண்ணும் பிறக்கும்; தாரத்துழை தோன்றப் பாலையாழ் தண்குரல், ஒருமுழை தோன்றக் குறிஞ்சியாழ் நேரே இளிகுரலிற் றோன்ற மருதயாழ் துத்தம், இளியிற் பிறக்க நெய்தலியாழ் இவற்றுள் பாலையாழுள்ளே ஏழு பாலையிசை பிறக்கும். குரலிளியிற் பாகத்தை வாங்கியோ ரொன்று, வரையாது தாரத்துழைக்கும் - விரைவின்றி, ஏத்தும் விளரி கிளைக்கீக்க வேந்திழையாய், துத்தங் குரலாகுஞ் சொல்.

இந் நரம்பிற் பாலை பிறக்குமிடத்துக் குரலும் துத்தமும் இளியும் நான்கு மாத்திரை பெறும்; கைக்கிளையும் விளரியும் மூன்று மாத்திரை பெறும்; உழையும் தாரமும் இரண்டு மாத்திரை பெறும்; இவற்றுள் குரல் குரலாய் ஒத்து நின்றது செம்பாலை; இதனிலே குரலிற் பாகத்தையும் இளியிற் பாகத்தையும் வாங்கிக் கைக்கிளை உழை விளரி தாரத்திற்கு ஒரோ வொன்றைக் கொண்டு சேர்க்கத் துத்தம் குரலாய்ப் படுமலைப் பாலையாம்; இவ்வாறே திரிக்க இவ்வேழு பெரும்பாலைகளும் பிறக்கும்; பிறக்குங்கால் திரிந்த குரல் முதலாக ஏழும் பிறக்கும்.

அவை பிறக்குமாறு: குரல் குரலாயது, செம்பாலை; துத்தம் குரலாயது படுமலைப்பாலை, கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை குரலாயது அரும் பாலை; இளி குரலாயது கோடிப்பாலை; விளரி குரலாயது விளரிப்பாலை; தாரம் குரலாயது மேற்செம்பாலையென வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறையென்றாம்; மேற்கே முகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாமெனக் கொள்க. இந்த விளக்கத்தால் வட்டப்பாலையின்கண் இராசிமண்டிலத்தின் இரண்டு முறையாக இசை நரம்புகள் நிறுத்தப்படும் என்று அறியப்படும், மேலும் இட முறைப்பாலைகள் இடப இராசியினின்றும் தொடங்கி, இடமுறையாக மீனம், கும்பம் என நிரலாகப் பாடப்படும் என்பதும் நேரிசைப் பாலைகள் மீனம் தொடங்கி வலமுறையாகப் பாடப்படும் என்பதும் உணரலாம். எதிருமிராசி வலமிடமாக என்பதன் கண் வலஇடபமாக எனத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும் என்று தெரிகிறது.

இனி, இளங்கோவடிகளார் குடமுதல் இடமுறை எனத் தெரிந்து ஓதியிருப்பவும், அடியார்க்குநல்லார் இங்குக் கூறும் விளக்கங்கள் வலமுறைப் பாலைகளுக்கே யாம் என்பது வலமுறையே ஏழுபாலையும் கண்டுகொள்க. இதனை வலமுறை என்றாம் மேற்கேமுகமாக இருந்து திரிதலான். கிழக்கே நோக்கியிருக்கின் இடமுறையாம் எனக் கொள்க எனவரும் அவர் விளக்கத்தால் உணரலாம். குடதிசை இடமுறை என அடிகளார் கூறியதனால், இங்குக் கிழக்கே முகமாக இருந்து திரியும் இடமுறைப் பாலைகளே கொள்ளவேண்டும். இவற்றின் இயல்புகளை யாம் அரங்கேற்று காதைக்கண்ணும், வேனிற் காதையினும் விளக்கமாகக் கூறியுள்ளாம். அவற்றை ஆண்டுக் காண்க. இங்கே எடுத்துக்காட்டப்பட்ட அடியார்க்குநல்லார் விளக்கத்தால் வலமுறைப் பாலைகளின் இயல்பு நன்குணரப்படும்.

மாயவன் என்றாள் .............. முறை

(இதன்பொருள்.) குரலை மாயவன் என்றாள் - குரல் நரம்பினை மாயவன் என்று கூறினாள்; இளி தன்னை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் -இளி நரம்பினை வென்றிமிக்க பலதேவன் என்றாள்; ஆய்மகள் பின்னையாம் என்றாள் ஓர்துத்தத்தை - மாதரி துத்த நரம்பினை நப்பின்னை என்று கூறினாள்; மற்றையார் முன்னையாம் என்றாள் முறை - ஏனை நரம்புகள் முன்னை முறைப்படியே ஏனை ஆயமகளிர் ஆவர் என்றாள்; என்க.

(விளக்கம்) முன்னை முறை ஆம் என மாறுக: முன்னை முறையாவது குரலுக்கு ஐந்தாவது இளியும், இளிக்கு ஐந்தாவது, துத்தமும் போல் ஐந்தாவதான முறை, ஆய்மகள் என்னும் எழுவாயை ஏனையவற்றோடும் கூட்டுக.

மாயவன்சீர் ......... விளரிதான்

(இதன்பொருள்.) மாயவன் சீருளார் பிஞ்ஞையும் தாரமும் - மாயவன் என்று கூறப்பட்ட குரல் என்பாளைச் சேரப் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளும் தாரம் என்பாளும் நிரலே இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் நின்றனர்; வால் வெள்ளை சீரார் உறையும் விளரியும் - பலதேவன் என்று கூறப்பட்ட இளி என்பாளைச் சேர உழை என்பாளும் விளரி என்பாளும் முறையே வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் நின்றனர். கைக்கிளை பிஞ்ஞை யிடத்தாள் - கைக்கிளை என்பாள் பின்னை என்று கூறப்பட்ட துத்தம் என்பாளுக்கு இடப்பக்கத்தே நின்றாள்; நல் விளரிதான் முத்தைக்கு வலத்துளாள் - அழகிய விளரி என்பாள் தாரம் என்பவளுக்கு வலப்பக்கத்தே நின்றாள் என்க.

(விளக்கம்) இவ்வாற்றால் எழுவரும் வட்டமாக நின்றமை அறிக. பிஞ்ஞை என்றது துத்தத்தை. முத்தை முந்தை என்பதன் விகாரம். முந்தை - தாரம். தாரம் ஏழிசைகளுள் முதல் இசை ஆதலின் முந்தை என்றார்; அது முதல்வி என்பதுபட நின்றது.

அவருள் ......... ஆயர் மகள்

(இதன்பொருள்.) அவருள் இவ்வாறு வட்டமாக நிறுத்தப்பட்ட மகளிருள் வைத்து, மாயவன்மேல் வண்துழாய் மாலையை இட்டு - மாயவன் தோளின்மேல் துளபமாலையை அணிந்து; தண்டாக் குரவைதான் உள்படுவாள் - பண்டு வடமதுரைக்கண் கூத்து நூலிற்கு மாறுபடாத குரவைக் கூத்திற்கு உடம்பட்டு அம் மாயவனோடு ஆடுவாள்; கொண்ட சீர் வையம் அளந்தான் - புகழ் கொண்ட உலகளந்த திருமால்; தன் மார்பின் திருநோக்கா - தன்னுடைய திருமார்பின்கண் வீற்றிருக்கின்ற திருமகளை நோக்காமைக்குக் காரணமான பேரழகுடைய; பெய்  வளைக் கையாள் நம்பின்னைதான் ஆம் என்றே - பெய்த வளையலையுடைய கையை யுடையாளாகிய நப்பின்னைப் பிராட்டி ஒருத்தியேயல்லளோ என்று சொல்லி; ஆயர் மகள் ஐ என்றாள் - இடைக்குல முது மகளாகிய மாதரி இறையன்பு மேலீட்டால் பெரிதும் வியந்து நின்றாள்; என்க.

(விளக்கம்) நம்பின்னை - நம்தெய்வமாகிய பின்னைப்பிராட்டி என்க. இனி நப்பின்னை என்பதன் விகாரம் எனினுமாம். ஐ வியப்பாகும் என்பதனால் ஐ என்றாள் என்பது வியந்தாள் என்பதுபட நின்றது. இறைவன்பால் அன்பு மேலீட்டால் மாதரி அங்ஙனம் வியந்தாள் என்க.

கூத்துள் படுதல்

அஃதாவது - குரவைக் கூத்தாடத் தொடங்குதல்

அவர்தாம் .......... பாணி என்றாள்

(இதன்பொருள்.) அவர் தாம் - அங்ஙனம் புனைபெயர் கொண்ட ஆயர் மகளிர்தாம் அப்பொழுதே; செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து - சமநிலை வட்டமாக நின்று நண்டுக் கையை ஒருவரோடொருவர் கோத்து நின்று கூத்தாடுதற்கு; அந்நிலையே ஆடல் சீர் ஆய்ந்து உளார் - அங்ஙனம் நின்ற நிலையிலேயே ஆடுதற்கியன்ற தாள உறுப்பை ஆராய்ந்து கொண்டவராக; முன்னைக்குரல் கொடி அவ்வெழுவருள் முன்னின்ற குரல் என்னும் பெயருடைய பூங்கொடிபோல்பவள்; தன் கிளையை நோக்கி - தனது கிளையாகிய துத்தம் என்னும் பின்னைப் பிராட்டியைப் பார்த்து; பரப்பு உற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தான் - பரந்துகிடந்த கொல்லையின்கண் வஞ்சத்தாலே வந்துநின்ற குருந்த மரத்தை முறித்த மாயவனை; முல்லைத் தீம்பாணி பாடுதும் என்றாள் - முல்லை என்னும் இனிய பண்ணாலே இனி யாம் பாடிப் பரவுவோம் என்று கூறினள், என்க.

(விளக்கம்) செந்நிலை - செவ்விய நிலை; அதாவது சமநிலை. மண்டிலம் - வட்டம். கற்கடகக் கை - நண்டுருவம்பட விரல்களை மடக்கிய கை; அஃதாவது - நடுவிரலும் அணிவிரலும் முன்னே மடக்கி மற்றை இரண்டு விரலுங் கோத்தல். குருந்து - வஞ்சத்தால் கண்ணனைக் கொல்லக் கொல்லையில் வந்து குருந்தமரமாய் நின்றான் ஓர் அசுரன். முல்லைத்தீம் பாணி; என்றது முல்லைப்பண்ணை.

எனா ........... பாட்டெடுப்பாள்

(இதன்பொருள்.) எனா - என்று கூறிய பின்னர்; பாட்டெடுப்பாள் - முல்லைப்பண்ணைப் பாடத் தொடங்குபவள்; குரல் மந்தமாக இளி சமனாக - குரல் என்னும் நரம்பு மெலிவாகவும், இளி என்னும் நரம்பு சமமாகவும்; வரல் முறையே துத்தம் வலியா - வருகின்ற முறைப்படி துத்தநரம்பு வலிவாகவும்; விளரி உரனிலா மந்தம் பிடிப்பாள் அதற்கைந்தாவதாகிய விளரி நரம்பினை வலியை இல்லாத மெலிவாகப் பிடிக்கின்றவள்; அவள் நட்பின் பின்றையைப் பாட்டெடுப்பாள் - தன் நட்பு நரம்பாகிய துத்தம் என்பவளுக்குப் பற்றுப் பாடுகின்றாள்; என்க.

(விளக்கம்) இதன்கண் முல்லைப்பண்ணுக்கு நரம்பு அணியும் முறை கூறப்பட்டது. அஃதாவது - குரல் மெலிவினும் அதற்கு ஐந்தாவதாகிய இளி சமனிலும் அதற்கு ஐந்தாவதாகிய துத்தம் வலிவினும் நிற்ப, அதற்கு ஐந்தாவதாகிய விளரி மீண்டும் மெலிவில் நிற்பது முல்லைப் பண்ணின் நரப்படைவு என்க. நட்பு விளரிக்கு நட்பு அதற்கு நான்காவதாகிய துத்தம் என்க. பற்று - சுதி.

பாட்டு

அஃதாவது - அவர் பாடுகின்ற பாட்டுகள் வருமாறு என்றவாறு.

1: கன்று ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ - தோழியே இனியாம்; கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் - ஆன் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவினது கனிகளை உதிர்த்தவனாகிய மாயவன் இற்றைநாள் நமக்கு இரங்கி நமது ஆனிரைக்குள் வருவான், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில்; கொன்றை அம் தீம் குழல் கேளாமோ - அம் மாயவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற கொன்றையங் குழலோசையை யாம் கேட்போமல்லமோ! என்க.

(விளக்கம்) கன்று, மாயவனைக் காலால் எறிந்து கொல்லுதற்கு ஆனிரைக்குள் ஒரு கன்றின் வடிவாக வந்து நின்றான் ஓர் அசுரன். கனி - விளங்கனி. இவ் விளாமரமும் அங்ஙனமே வஞ்சத்தால் வந்து நின்ற அசுரன் என்ப. கேளாமோ என்னும் வினா கேட்போம் என அதன் உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்து நின்றது. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

2: பாம்பு ........ தோழீ

(இதன்பொருள்.) தோழீ; பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன் - வாசுகி என்னும் பாம்பினையே கடை கயிறாகக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் ஈந்த திருமால் ஈங்கு நம் ஆனுள் வருமேல் - இவ்விடத்தே நமக்கிரங்கி நம்முடைய ஆனிரைக்குள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ - அவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற ஆம்பற் குழலின் இன்னிசையை யாமும் ஒரு தலையாகக் கேட்பேங்காண்; என்க.

(விளக்கம்) பாம்பு -வாசுகி. கயிறு -கடைகயிறு. கயிறாக என்பதன் ஈறுகெட்டது. கடல் - திருப்பாற்கடல்.

3: கொல்லை ........... தோழீ

(இதன்பொருள்.) தோழீ; கொல்லை அம் சாரல் குருந்தொசித்த மாயவன் - புனமாகிய கொல்லையைச் சார்ந்த இடத்தின்கண் வஞ்சனையால் வந்துநின்ற குருந்த மரத்தினை முறித்தொழித்த கண்ணபெருமான் நம் வழிபாட்டிற்கிரங்கி; எல்லை நம் ஆனுள் வருமேல் - இப் பகற்பொழுதிலே இங்குள்ள நம் ஆனிரையுள் வருகுவன், அங்ஙனம் வந்தால்; அவன் வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ - அவனது திருவாயில் வைத்து ஊதுகின்ற முல்லைக் குழலினது இனிய இசையைக் கேட்பேம் அல்லமோ? என்க.

(விளக்கம்) இம் மூன்று தாழிசையினும் நிரலே கொன்றையந் தீங்குழல், ஆம்பலந் தீங்குழல், முல்லையந் தீங்குழல் எனவரும் குழல்களைப் பற்றி அடியார்க்குநல்லார் வகுத்துள்ள விளக்கவுரையின்கண் கீழ்க்காட்டப்படுவன அறியற்பாலனவாம். அவை வருமாறு:

கொன்றை ஆம்பல் முல்லையென்பன சில கருவி; இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண் இல்லை ஆதலானும், கலியுள் முல்லைத்திணையின்கண் ஆறாம் பாட்டினுள், கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண், இமிழிசை மண்டை யுறியொடு தூக்கி, ஒழுகிய கொன்றைத் தீங்குழன் முரற்சியர், வழூஉச் சொற்கோவலர் தந்த மினநிரை, பொழுதொடு தோன்றிய கார்நனை வியன்புலத்தார் (கலி. 106: 1-5) எனக் கருவி கூறினமையானும், அன்றைய பகற்கழிந் தாளின் றிராப்பகற் கன்றின் குரலுங் கறவை மணி கறங்கக், கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலும், ஒன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும் என வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும், இவை ஒரு பொருண்மேல் முன்றடுக்கி வந்த ஒத்தாழிசை யாதலானும் இரண்டு பண்ணும் ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறலானும் அங்ஙனம் கூறுதல் அமையாதென்க.

கஞ்சத்தாற் குமுதவடிவாக அணைசுப்பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழலாயிற் றெனவும் கொன்றைப் பழத்தைத் துருவித் துளைத்து ஊதலிற் கொன்றைக் குழலாயிற்று எனவும், முல்லைக்கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க்கட் செறித்து ஊதலின் முல்லை குழலாயிற் றெனவும் கொள்க என்பர் (அடியார்க்கு நல்லார்.)

இவற்றை ஆம்பன் முதலானவை சில கருவி; ஆம்பல் - பண்ணுமாம். மொழியாம்பல் வாயாம்பல் முத்தாம்பல் என்று சொல்லுவர் பண்ணுக்கு; என்பது அரும்பதவுரை.

நுதலிப் புகுதல்

தொழுனை ....... யாம்

(இதன்பொருள்.) தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னை - யமுனைத்துறையையுடைய கண்ணபெருமானுடையவும் அவனோடு விளையாடிய நப்பின்னையினுடையவும் ஆகிய; அணி நிறம் யாம் பாடுகேம் - அழகையும் நிறத்தையும் இனி யாம் பாடுவேமாக, என்க.

(விளக்கம்) தொழுனை - யமுனை. அணியையும் நிறத்தையும் என்க. இக் குறள் வெண்பா இடைச்செருகல் என்பது அரும்பதஉரையாசிரியர் கருத்து. அவர் தொழுனைக் கணவனோடாடிய எனப்பாடங்கொண்டனர்.

1: இறுமென் ........ யாம்

(இதன்பொருள்.) இறும்என் சாயல் நுடங்க நுடங்கி - கண்டோர் இப்பொழுதே முறிந்தொழியும் என்று கூறுதற்குக் காரணமான மெல்லிய இடையானது நுடங்கும்படி அசைகின்றவளுடைய; அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் - துகிலை மறைத்தவனாகிய கண்ணபெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? யாம், அல்லது; அறுவை ஒளித்தான் அயர அயரும் - அங்ஙனம் துகிலை ஒளித்த அக் கண்ணபெருமான் மயங்கும்படி துகிலைக் காணாமல் மயங்குகின்ற; நறு மெல் சாயல் முகம் என்கோ யாம் - நறிய மெல்லிய சாயலையுடையாளது முகத்தின் அழகென்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கதென யாம் அறிகின்றிலேம், என்க.

(விளக்கம்) மென்சாயல் - மெல்லிய சாயலையுடைய இடை நுடங்க என்க. நுடங்கி: பெயர். அறுவை - துகில். ஒளித்தான் - கண்ணன். என்கோ யாம்: ஒருமைப்பன்மை மயக்கம். மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். நறுமென் சாயலையுடையாள் என்க.

2: வஞ்சம் .......யாம்

(இதன்பொருள்.) தொழுனை புனலுள் வஞ்சம் செய்தான் - யமுனை யாற்றில் நீராடுங்கால் வஞ்சித்துத் துகிலைக் கவர்ந்த கண்ண பெருமானுடைய; நெஞ்சம் கவர்ந்தாள் நிறை யென்கோ யாம் - உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட நப்பின்னைப் பிராட்டியாரது அழகென்று சொல்லுவோமா? அல்லது; நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்-தனது நெஞ்சங் கவர்ந்த அந் நப்பின்னையினது நெஞ்சத்துநிறையையும் கைவளையலையும் ஒருசேரக் கவர்ந்துகொண்ட கண்ண பெருமானுடைய அழகு என்று சொல்லுவோமா? இவற்றுள் எது மிக்கது என்று அறிகின்றிலேம்! யாம் என்க.

(விளக்கம்) வஞ்சஞ் செய்தான் - கண்ணன். நெஞ்சங் கவர்ந்தாள் நப்பின்னை. நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் என்க. நிறையுள் முன்னது, அழகு; பின்னது திண்மை.

3: தையல் .......... என்கோயாம்

(இதன்பொருள்.) கலையும் விளையும் இழந்தே - தனது துகிலையும் வளையலையும் இழந்தமையால்; கையில் ஒளித்தாள் தையல் முகம் என்கோ யாம் - நாணத்தால் தனது கையால் பொத்திக் கொள்ளப்பட்ட நப்பின்னையினது முகம் என்று சொல்லுவோமா? யாம் அல்லது; கையில் ஒளித்தாள் முகம் கண்டு - நாணத்தால் தனது கையால் முகத்தைப் பொத்திக் கொண்டவளுடைய அந்த முகத்தைக் கண்டு; அழுங்கி - இரங்கி; மையல் உழந்தான் -காமத்தால் மயங்கி அல்லலுற்ற அக்கண்ணபெருமானுடைய; வடிவு என்கோ யாம் - உருவம் என்று சொல்வோமா? யாம், இவற்றுள் அழகான் மிக்கது யாதென்றறிகிலேம், என்க.

(விளக்கம்) கையில் ஒளித்தாளாகிய தையல் என்க. கலை -துகில். கவர்ந்தமையால், கலையையும், காமமிகுதியால் வளையலையும் இழந்து நாணத்தால் முகத்தைக் கையால் ஒளித்தாள்என்க. முகம் மறைத்தமை பொறாது அழுங்கி மையல் உழந்தான் எனினுமாம்.

ஒன்றன் பகுதி

அஃதாவது - ஒற்றைத் தாளத்தின் கூறு என்றவாறு.

1: கதிர்திகிரி .......... நரம்புளர்வார்

(இதன்பொருள்.) கதிர் திகிரியால் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளாள் - ஞாயிற்று மண்டிலத்தைத் தனது ஆழியினாலே மறைத்த கடல் போலும் நீலநிறத்தையுடைய கண்ணபெருமானுடைய இடப்பக்கத்தே உள்ளவளும்; மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துஉளாள் -திங்கள் மண்டிலத்தை ஒத்த நறிய வெள்ளை நிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுக்கு வலப்பக்கத்தே உள்ளவளும்; பொதி அவிழ் மலர்க்கூந்தல் - கட்டவிழ்ந்து மலர்கின்ற மாலையை அணிந்த கூந்தலையுடையவளும் ஆகிய; பிஞ்ஞை சீர்புறங்காப்பார் -நப்பின்னையினது தாள ஒற்றறுப்பைப் புறங்காக்கின்றவர்; முது மறைதேர் முந்தைமுறை உளர்வார் நாரதனார் - பழைய மறையினது பொருளை ஆராய்ந்துணர்ந்தவரும் குரல் நரம்பை முறையாக உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் ஆவர் என்பர் என்க.

(விளக்கம்) கண்ணன் கதிரைத் திகிரியால் மறைத்த செய்தியை மகாபாரதத்தில் காண்க. தம்முனோன் -தமையனாகிய பலதேவன். பிஞ்ஞை - நப்பின்னை. சீர் -தாள ஒற்றறுப்பு: முதுமறை - மறையின் உறுப்பாகிய சிக்கை என்பர் (அடியார்க்குநல்லார்). முதல் நரம்பு தார நரம்புமாம்.

2: மயிலெருத்து ................. நரம்புளர்வார்

(இதன்பொருள்.) மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்துளாள் - மயிலினது புறக்கழுத்துப்போன்ற திருமேனியையுடைய கண்ணபெருமானின் வலப்பக்கத்தே உள்ளவளும்; பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்துளாள் - மிகுந்த இதழ்களையுடைய மல்லிகை மலர் போன்ற வெண்ணிறத்தையுடைய அவன் தமையனாகிய பலதேவனுடைய இடப்பக்கத்தேயுள்ளவளும்; கயில் எருத்தம் கோட்டிய நம்பின்னை சீர்புறங்காப்பார் - புறக்கழுத்தாகிய பிடரை வளைத்துநின்ற நப்பின்னைப் பிராட்டியாரது தாளவறுதியைப் புறங்காக்கின்றவர்; குயிலுவருள் கொளைபுணர்சீர் நரம்பு உளர்வார் நாரதனார் - குயிலுவருள் வைத்துச் சிறந்தவராகியவரும், பண்ணோடு கூடிய தாளத்திற்கேற்பத் தமது யாழ்நரம்பினை உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் என்க.

(விளக்கம்) முன்னர்க் கடல்வண்ணன் இடத்துளான் தம்முனோன் வலத்துளாள் என ஓதி, இதன்கண் மாயவன் வலத்துளாள் தம்முனோன் இடத்துளாள் என மாறுபட ஓதுதல் உணர்க. இஃது என் சொல்லியவாறோவெனின் முன்பு கற்கடகக்கை கோத்து நிற்கும் மகளிரெல்லாம் உட்புறம் நோக்கி நின்று வட்டமாக ஆடினர். அங்ஙனம் ஆடுங்கால் குரல் என்னும் பெயருடையாளுக்கு இடப்பக்கத்தே பின்னையாகிய துத்தம் நிற்றலும் இளியாகிய பலதேவனுக்கு அவள்தான் வலப்பக்கத்தே நிற்றலும் உணர்க. மீண்டும் அம்மகளிர் எழுவரும் கோத்த கைவிடாமல் மாறி வெளிப்புறமாக நோக்கி நின்றாடினர். அங்ஙனம் ஆடுங்கால் துத்தம் குரலுக்கு வலப்பக்கத்திலும், இளிக்கு இடத்திலுமாக மாறி நிற்பாராதல் கூர்ந்துணர்க. இங்ஙனம் மாறி ஆடுதலைக் கூறாமலே கூறியவாறாம் என்க. இவ்வாற்றால் அடிகளார் வட்டப்பாலையின் வலமுறை இடமுறை இரண்டனையும் இக் குரவையுட் காட்டினர் என்க. பயில் இதழ் - மிக்க இதழ். மலர் - மல்லிகைமலர்; முல்லை எனினுமாம். கயில் -பிடர். குயிலுவர் - இசைக்கருவி வாசிப்பவர். குயிலுவருள் சிறந்த நாரதனர் என்க. கொளை ஒற்றறுப்பு என்பர் (அடியார்க்குநல்லார்.)

ஆடுநர்ப் புகழ்தல்

அஃதாவது - குரவைக் கூத்தைக் கண்டு இறையன்பு மீக்கூரப் பெற்ற இடைக்குல மடந்தை மாதரி கூத்தாடிய மகளிரைப் புகழ்ந்து பாராட்டியது என்றவாறு.

மாயவன்றம் ...... தகவுடைத்தே

(இதன்பொருள்.) மாயவன் தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் - கண்ணபெருமான் தமையனாகிய பலதேவனோடும் ஓவியம் பொறித்த வளையலை அணிந்த கையினையுடைய நப்பின்னைப் பிராட்டியோடும்; கோவலர் தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர -ஆயர் குலத்திற்பிறந்த இளமகளிர்கள் கூந்தலும் மலர் மாலையும் கட்டவிழ்ந்து புறத்தே வீழும்படி; ஆய்வளைச் சீர்க்கு ஆராய்ந்தணிந்த வளையல்களின் ஒலியாகிய தாளத்திற்கு ஒக்க; அடிபெயர்த்திட்டு - தம் திருவடிகளைப் பெயர்த்து மிதித்து; அசோதையார் தொழுது ஏத்த - அசோதைப் பிராட்டியார் அக்காட்சியைக் கடவுட் காட்சியாகக் கண்டு தம்மை மறந்து கைகளைத் தலைமேற் கூப்பித் தொழுது புகழும்படி; தாது எருமன்றத்து ஆடும் - பண்டு துவாரகையில் பூந்தாதுகளாகிய எருவையுடைய மன்றத்தின்கண் ஆடியருளிய; குரவை - குரவைக் கூத்தேயாம் இப்பொழுது நீங்கள் ஆடுகின்ற இக்கூத்து; ஓ தகவு உடைத்து - ஓ! ஓ!! ஓ!!! பெரிதும் இது பெருமை உடையது காண்மின்! என்றாள்; என்க.

(விளக்கம்) மாயவன் தம்முன்னினோடும் வரிவளைக்கைப் பின்னையொடும் குரவைக் கூத்தாடிய இச்செய்தியை,

மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்  - மணி, 19 : 65-6.

எனவரும் மணிமேகலையினும் காண்க.

எல்லாநாம் ............ உற்று

(இதன்பொருள்.) நாம் எல்லாம் - தோழியே! இனி நாமெல்லாம்; உள்வரிப் பாணி ஒன்று உற்று - இக் குரவைக் கூத்தினுள் உள்வரியாகிய ஒரு பாட்டினால்; புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் - கருடப் பறவையை ஊர்ந்து வருகின்ற செங்கண் நெடுமாலாகிய நமது கடவுளைப் பாடிப் பரவுவோம்! பாடிப் பரவுவோம்! என்றாள்; என்க.

(விளக்கம்) நாம் எல்லாம் என மாறுக; இனி, சொற்கிடந்தவாறே தோழி நாம் எனினுமாம். (எல்லா -தோழி) புள் - கருடப் பறவை. கடவுள் - திருமால். உள்வரிப்பாணி - பிறராகக் கோலம் புனைந்தாடுபவனாக இறைவனைப் பாடுகின்ற ஒருவகைப் பண்.

உள்வரி வாழ்த்து

அஃதாவது - கண்ணபெருமானே பாண்டியனும் சோழனும் சேரனுமாக உள்வரிக் கோலம்பூண்டு வந்து தமிழகத்தைச் செங்கோன்மை செலுத்தி மன்னுயிரை வாழ்வித்தான் என்பதுபட வாழ்த்தியது என்றவாறு. ஈண்டுத் திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் எனவரும் ஆழ்வார் திருவாய் மொழியும் (34 ஆம் திருப்பதிகம் 8.) நினையத்தகும்.

1: கோவா ........... என்பரால்

(இதன்பொருள்.) கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன்பூணாரம் தென்னர்கோன மார்பினவே - கோக்கப்படாத பொதியின்மலை ஆரமாகிய சந்தனமும், கோக்கப்பட்ட கடல் ஆரமாகிய முத்துமாலையும் தேவேந்திரன் பகைத்து இட்ட பேரணிகலனாகிய மணிஆரமும் செந்தமிழ் நாட்டினுள் தென்னாட்டை ஆளுகின்ற பாண்டிய மன்னனுடைய மார்பிடத்தே கிடந்து திகழ்வனவாம்; தேவர்கோன் பூணாரம் பூண்டான் - தேவேந்திரனுடைய பூணார முதலிய முவ்வகை ஆரங்களையும் பூண்டு திகழும் அப் பாண்டிய மன்னன்றான் யாவனோ எனின்; செழுந்துவரை கோகுலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் - வளமுடைய துவாரகையின்கண் ஆனிரைகளை மேய்த்துக் குருந்த மரத்தை முறித்தொழித்த கண்ணபெருமானே என்று முழுதுணர்ந்தோர் கூறுவர்; என்க.

(விளக்கம்) கோவா ஆரம் கோத்த கடலாரம் இரண்டும் வெளிப்படை. முன்னது சந்தனம்; பின்னது முத்து.

ஈண்டுத் தன் கடற்பிறந்த முத்தினாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தினாரமும் இருபே ராரமு மெழில்பெற வணியும், திருவீழ் மார்பிற் றென்னவன் எனவும் (அகநா. 13: 1-6) திண்கா ழார நீவிக் கதிர்விடும், ஒண்கா ழாரங் கவைஇய மார்பு எனவும் (மதுரைக். 715-6) பிறசான்றோர் ஓதுதலும் உணர்க. முத்து - கொற்கை முத்து. தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் பூண்டமையைத் திருவிளையாடற் புராணத்தே காண்க.

2: பொன்னிமய ............... என்பரால்

(இதன்பொருள்.) பொன் இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமய மலையின் கொடுமுடியிலே தனது புலிப்பொறியைத் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொறித்து இந்நிலவுலகத்தை ஆட்சிசெய்தான்; மதில் புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - மதில் சூழ்ந்த பூம்புகார் நகரின்கண் செங்கோன்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர் மன்னன் ஆகிய சோழன்; மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் - அத்தகைய வெற்றியுடைய அச்சோழ மன்னன் யாவனோ வெனின்; பொன் அம் திகிரிப் பொருபடையான் என்பரால் - பொன்னாலியன்ற ஆழியாகிய போர்ப்படையையுடைய கண்ணபெருமானே என்று கூறுவர்; என்க.

(விளக்கம்) வளவன் - சோழன். புகார் காவிரிப்பூம்பட்டினம். திகிரிப்படையான் - கண்ணன்.

3: முந்நீரினுள் ............... என்பரால்

(இதன்பொருள்.) முந்நீரினுள் புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் கடலினுட் சென்று அங்கு மூவாமையையுடைய கடம்பினை வெட்டியவன்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் - வளங்கெழுமிய வஞ்சிநகரத்திருந்து செங்கோண்மை செலுத்தி வாழ்கின்ற வேந்தனாகிய மன்னர்மன்னன் சேரன் என்பர்; வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர் கோச்சேரன் -அச் சேரன்றான் யாவனோ? வெனின்; கல்நவில தோள் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால் - மலையை யொத்த தன் தோள்களைச் செலுத்தித் திருப்பாற்கடலைக் கடைந்த செங்கண் நெடுமால் என்றே சிறந்தோர் கூறுவர் என்க.

(விளக்கம்) முந்நீர் - மூன்று தன்மையையுடைய கடல். நீர் - நீர்மை. அத்தன்மையாவன உலகத்தைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும் ஆகிய மூன்றுமாம். வஞ்சி - சேரன் தலைநகரம். கடல் கடைந்தான்: திருமால் இவை மூன்றும் பூவைநிலை என்னும் ஒரு புறத்திணைத்துறை. இங்கு அடிகளார் இந்நிகழ்ச்சி பாண்டியனாட்டின் கண்ணதாதலால் பாண்டியனை முற்படக் கூறினர்.

முன்னிலைப் பரவல்

அஃதாவது - இறைவனை முன்னிலையாக வைத்து வாழ்த்துவது.

1: வடவரையை ........... மருட்கைத்தே

(இதன்பொருள்.) கடல்வண்ணன் - கடல்போன்ற நீலநிறமுடைய எம்மிறைவனே நீ; வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே - வடக்கின் கண்ணதாகிய மந்தரம் என்னும் ஒருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பெரும் பாம்பினை அம் மத்தினைச் சுற்றி வலிக்கும் கயிறாகக்கொண்டு முன் ஒருகாலத்தில் திருப்பாற் கடலைக் கடைந்தருளினை என்கின்றனர்; மலர்க் கமல உந்தியாய்-நான்முகனை ஈன்ற தாமரை மலரையுடைய திருக்கொப்பூழினை உடைய எம்பெருமானே நீ அவ்வாறு; கலக்கிய கை -கடல் வயிறு கலக்குதற்குக் காரணமான அத்தகைய நினது பெரிய கைகள் தாமே; யசோதையார் கடைகயிற்றால் கட்டுஉண் கை - யசோதையார் என்னும் இடைக்குல மடந்தையின் தயிர் கடையும் சிறிய கயிற்றினாலே கட்டுண்டிருந்த கை என்றும் கூறுப; மாயமோ - இஃது என்ன மாயமோ? மருட்கைத்து - இச்செய்தி எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் உளது; என்க.

(விளக்கம்) வடவரை ஈண்டு மந்தரம் என்னும் மலை. மத்து - தயிர் கடை கருவி. வாசுகி - நிலந்தாங்கும் நீள் அரவின் தம்பியாகிய ஓர் அரவு. நாண் - கடைகயிறு. கடல்வண்ணன்: அண்மைவிளி. கட்டுண்கை - கட்டுப்படுதல் எனினுமாம். மருட்கை - வியப்பு.

2: அறுபொருள் ............... மருட்கைத்தே

(இதன்பொருள்.) வண் துழாய் மாலையாய் - வளவிய துளப மாலையை அணிந்த திருமாலே நின்னை; அறுபொருள் இவன் என்றே அமரர் கணந் தொழுது ஏத்த - பொருளாகக் கண்ட பொருள் அனைத்திற்கும் முதற்பொருள் இத்திருமாலே யாவான் என ஐயமறத் தெளிந்து அமரர்கள் கூட்டமெல்லாம் கைகூப்பித் தொழா நிற்ப; உறுபசி ஒன்று இன்றியே - மிக்க பசிப்பிணி ஒரு சிறிதும் இல்லாமலேயே; உலகு அடைய உண்டனையே - உலகம் முழுவதும் உண்டாய் அல்லையோ; உண்ட வாய் களவினால் உறிவெண்ணெய் உண்ட வாய் - அங்ஙனம் உலகடைய உண்ட அம் மாபெருந் திருவாய்தானோ! எளிய ஆய்ச்சியர் மனையின்கண் களவுசெய்து அவர்தம் உறியின்கண் வைத்த வெண்ணெயையும் உண்ட வாய் என்று அறிஞர் கூறுவது; மாயமோ - என்ன மாயமோ அறிகிலேம்; மருட்கைத்து- இச்செயல் எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் இருந்தது; என்க.

(விளக்கம்) அறுபொருள் - முடிந்த பொருள் எனினுமாம். உண்ணற்கு இன்றியமையாத உறுபசி சிறிதும் இல்லாமலே உண்ணவியலாத பேருலகத்தை முழுவதுமே உண்டாய் என்கின்றனர். அத்தகைய பெருவாயனாகிய நீ ஆற்றவும் சிறிய வெண்ணெயையும் உண்டதெங்ஙனம் என்றவாறு.

3: திரண்டமரர் ......... மருட்கைத்தே

(இதன்பொருள்.) அமரர் திரண்டு தொழுது ஏத்தும் திருமால் - இறவாமையுடைய தேவரெல்லாம் ஒருங்கு குழுமிக் கைகுவித்து வணங்கி வாழ்த்துகின்ற திருமாலே; நின் செங்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே - நின்னுடைய செந்தாமரை மலர்போன்ற இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களும் மயக்கந் தீரும்படி எஞ்சாமல் அளந்தனை யல்லையோ; நடந்த அடி - அவ்வாறு அளந்த அம் மாபெருந் திருவடிகள் தாமே; பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி - பின்பொரு காலத்தே பாண்டவருக்குத் தூது செல்லும்பொருட்டு எண்ணிறந்த முறை பெயர்த்திட்டு நடந்து வருந்திய அடிகள் என்பர்; மடங்கலாய் மாறு அட்டாய் - நரசிங்கமாகித் தூணினின்றும் புறப்பட்டுப் பகைவனாகிய இரணியனைக் கொன்றொழித்த இறைவனே! மாயமோ - என்ன மாயமோ; மருட்கைத்து - இச் செய்திதானும் எமக்குப் பெரிதும் வியப்புடையதாய் இருக்கின்றது; என்க.

(விளக்கம்) திருமால்: அண்மைவிளி. செங்கமல அடி, இரண்டடி, எனத் தனித்தனி கூட்டுக. இரண்டடியால் மூவுலகும் நடந்தனை என்பதன்கண் முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. இருள் - மயக்கம். அஃதாவது  -நீயே முழுமுதல் என்பதனை அறியாத மயக்கம் என்றவாறு. நடந்தனை என்பது அளந்தனை என்பதுபட நின்றது. மூவுலகு - மேலும் கீழும் நடுவுமாகிய உலகங்கள். முன்றுலகையும் எஞ்சாது இரண்டே அடியால் அளந்த நீ மிகவும் சிறிய ஓரூரின்கண் பல்லாயிரம் முறை அவ்வடிகளைப் பெயர்த்திட்டு நடப்பது எங்ஙனம்! என்று வியந்தவாறு. மடங்கல் - சிங்கம்; ஈண்டு நரசிங்கம். மாறு - பகை; இரணியன் என்க.

படர்க்கைப் பரவல்

அஃதாவது இறைவனைப் படர்க்கையிடத்து வைத்து வாழ்த்துதல்.

1: மூவுலகு ............. செவியே

(இதன்பொருள்.) ஈரடியால் மூவுலகும் முறை நிரம்பாவகை முடியத் தாவிய சேவடி சேப்ப - மாவலி கூறியபடி நீ நிலத்தை அளக்குங்கால், நின்னுடைய இரண்டு அடிக்கும் முறையாக நிரம்பாதவண்ணம் மூன்றுலகங்களும் முடிந்து போம்படி பண்டு அளந்தருளிய நினது இயற்கையிலேயே சிவந்த திருவடிகள் பரல் உறுத்துதலாலே கொப்புளங் கொண்டு குருதியால் சிவக்கும்படி; தம்பியொடும் கான்போந்து - நின் தம்பியாகிய இலக்குவனோடும் ஈரேழாண்டுகள் காட்டகத்தினூடே திரிந்து; சோ அரணும் போர்மடிய - சோ என்னும் மதிலரணும் அதன் கண் உள்ள அரக்கரினமும் போர்க்களத்திலே அழிந்தொழியும்படி; தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் - பழையதாகிய இலங்கையினது காவலை அழித்தொழித்தமையால், தம் அன்பருக்குத் தொண்டு செய்தவனாகிய இராமனுடைய; சீர் கேளாத செவி - புகழினைக் கேட்டிலாத செவிதானும்; என்ன செவியே- ஒரு செவியாகுமோ; திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே - அந்தத் திருமாலாகிய இறைவனுடைய திருப்புகழையும் கேட்டிலாத செவியும் ஒரு செவியாகுமோ; என்க.

(விளக்கம்) முறை - மாவலி வழங்கிய மூன்றடி நிலத்தையும் முழுமையாகக் கொள்கையாம். அந்த முறை நிரம்பாமல் இறைவன், அளக்குங்கால் இரண்டடிகளுக்கும் உலக முழுதுமே போதாதபடி அளந்த அடிகள் என்பார், முறை நிரம்பாவகை தாவிய சேவடி என்றார். சேவடி - இயல்பாகவே செந்தாமரை மலர்போலச் சிவந்த திருவடி என்க. சேப்ப - சிவப்ப. அஃதாவது நடந்து திரிதலால் கற்கள் உறுத்தப்பட்டுக் கொப்புளங்கொண்டு சிவக்கும்படி என்றவாறு. சோ - அம் மதிலின் பெயர். மடிய என்றது அரணும் அதனகத்தாரும் ஒருசேர அழிந்தொழிய என்றவாறு. சேவகன் - தொண்டன். இறைவன் இராமனாக நிலவுலகத்தே தோன்றிக் கான் போந்ததும் இலங்கை கட்டழித்ததும் எல்லாம் தன் அன்பராயினார்க்குச் செய்த தொண்டுகளே என்பது தோன்றச் சேவகன் என்றார். மீண்டும் அச்சேவகனுக்கு முதலாயுள்ள இறைவன் புகழும் ஒருதலையாகக் கேட்கப்படவேண்டும் என்பது தோன்ற, திருமால்சீர் கேளாச்செவி என்றார். என்ன செவி என்னும் வினா அத்தகைய செவி பயன்படாச் செவியே ஆகும் என்னும் கருத்தை வற்புறுத்தி நின்றது.

2: பெரியவனை ................ கண்ணே

(இதன்பொருள்.) பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரி கமல உந்தி உடை விண்ணவனை - கடவுளருள் வைத்து முழுமுதலாகிய பெரிய கடவுளாயவனை, நம்மனோர் சிறிதும் அறியவொண்ணாத மாயங்கள் பலவும் செய்யவல்லவனை, ஐம்பெரும் பூதங்களின் கூட்டங்களும் உயிரினங்களும் ஆகிய பெரிய உலகங்கள் எல்லாம் தோன்றி விரிதற்குக் காரணமான பொற்றாமரை பூத்த திருவுந்தித் தடத்தையுடைய விண்ணவனை; கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய -தனது திருஉருவத்தின்கண் திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைத்தலங்களும் திருவாயும் சிவந்தனவாக ஏனைய உறுப்பெல்லாம்; கரியவனை - கரிய நிறமுடையவனாகிய நம் இறைவனுடைய திருஉருவத்தை; காணாத கண் என்ன கண்ணே - காணப்பெறாத கண்கள் என்ன கண்களோ; கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே - அவ்வாறு காணுமிடத்தும் ஆர்வமிகுதியால் கண்ணிமையால் காண்டலின்றிக் கண்களை இடை இடையே இமைத்துக் காண்பார் தம் கண்கள் தாம் என்ன கண்களோ; என்க.

(விளக்கம்) இப் பாட்டிலும் அடியும் கையும் செய்ய கரியவன் எனவரும் செய்யுளின்பமுணர்க. கண் பெற்றதனால் பெறும்பயன் அவன் திருவுருவம் காண்டல் மட்டுமே ஆதலான், அதுகாணப்பெறாத கண் கண்ணாக மாட்டா என்பது கருத்து.

3: மடந்தாழும் ............ நாவே

(இதன்பொருள்.) மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை - அறியாமை தங்கியிருத்தற்கு உறையுளாகிய நெஞ்சத்தையுடைய கஞ்சன் தன்னைக் கொல்லுதற்குச் செய்த பல்வேறு வஞ்சச் செயல்களுக்கும் தப்பி அவனைக் கொன்று வென்றவனும்; நாலதிசையும் போற்ற ஆரணம் படர்ந்து முழங்க - நான்கு திசைகளினும் முனிவர்களும் தேவர்களும் கண்டெய்துதற்கு வழிபாடு செய்யா நிற்பவும் மறைகள் தொடர்ந்து காண்டற்கு முயன்று மாட்டாமையால் முழங்கவும் காண்டற்கரியனாயிருந்தும்; பஞ்சவர்க்கு - தன்பால் அன்பு பூண்டொழுகிய பாண்டவர்க்கு எளியனாகி, அவர் பொருட்டு; நூற்றுவர்பால் - துரியோதனனை உள்ளிட்ட கவுரவரிடத்து; தூது நடந்தானை - தூதுவனாக நிலம்வேண்டி நடந்தருளியவனும் ஆகிய அக் கண்ணபெருமானை; ஏத்தாத நா என்ன நாவே - புகழாத நாக்குத்தான் நாக்கென்னப்படுமோ; நாராயணா என்னா நா என்ன நாவே - அவனுக்குரிய மறை மொழியாகிய நாராயணாயநம வென்னும் திருப்பெயரை இடையறாது கூறாத நாக்குத்தான் என்ன நாக்கோ; என்க.

(விளக்கம்) ஈண்டு, கோளில் பொறியிற் குணமிலவே யெண் குணத்தான், றாளை வணங்காத் தலை எனவரும் திருக்குறளை (9) யும் நோக்குக. மடம் - அறியாமை. கஞ்சன் என்பது செறலின்கண் பால் மயங்கிற்று. என்ன நா என்பது தனக்குரிய பயனைப்பெறாத வறிய நாவே ஆகும். சிறந்த நா ஆக மாட்டா என்பதுபட நின்றது.

குரவைக் கூத்தை முடித்தல்

என்றியாம் ........... முரசே

(இதன்பொருள்.) என்று யாம் கோத்த குரவையின் - என்று கூறி யாம் கைகோத்து ஆடிய இக் குரவைக் கூத்தின் வாயிலாக; ஏத்திய தெய்வம் - நம்மால் வாழ்த்தப்பட்ட நங் குலதெய்வமாகிய கண்ணபெருமான்; நம் ஆழ்த்தலைப்பட்ட துயர்தீர்க்க - நம்முடைய ஆனினங்களிடத்தே காணப்பட்ட இத்தீநிமித்தங்களால் எய்தும் துன்பத்தைத் தீர்த் தருளுக; கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை உடைத்த தொடித்தோள் தென்னவன் - இந்நிலவுலகத்துப் பகைவரை வென்று பெற்ற கொற்றத்தினோடே இடியாகிய படைக்கலத்தையுடைய வானவர் தலைவனாகிய இந்திரனுடைய தலையிலணிந்த முடியையும் உடைத்தமையால் உண்டான கொற்றத்தையும், தொடியையும் உடைய தோளையுடைய நம்மன்னனாகிய பாண்டியனது, கடிப்பு இகு முரசு - குணிலால் அறையப்படுகின்ற வெற்றி முரசமானது; வேத்தர் மருள - இந்நிலவுலகத்து மனன்ரெல்லாம் வியக்கும்படி; வைகல் வைகல் மாறு அட்டு வெற்றி விளைப்பது மன்னோ - நாள்தோறும் நாள்தோறும் பகைவரை வென்று வெற்றியை விளைப்பதாக என்று வாழ்த்தினார் என்க.

(விளக்கம்) கைகோத்த குரவை என்க. இதனை மாதரி கூற்றாகக் கொள்க. ஆத்தலைப்பட்ட தீநிமித்தத்தால் வரும் துயர் என்க. வேத்தர்: தொடையின்பங் கருதி வலிந்தது. மாறு -பகை. மன், ஓ: அசைகள். கொற்றத்தை வானவனுக் கேற்றினுமாம். முடித்தலை என்றாரேனும் தலைமுடி என மாறுக. பாண்டியன் வானவன் முடித்தலை உடைத்த செய்தியைத் திருவிளையாடற் புராணத்தே காண்க. வானவன் - இந்திரன். தொடி - வாகுவலையம். கடிப்பு -குணில். முரசு - வெற்றிமுரசு. முரசம் வெற்றியைச் சாற்றுவதனால் அதன் தொழிலாக முரசு வெற்றி விளைப்பது என்றார். விளைப்பது - ஈண்டு விளைப்பதாக என வியங்கோள் பொருட்டாக நின்றது. கோவலன் கொலையுண்ட அற்றைநாளிலே தான் இக்குரவைக் கூத்தும் நிகழ்ந்தது என்று கொள்க. அரும்பதவுரையாசிரியரும், காலைவாய்த் தழுவினாள் மாலைவாய்க் கண்டாள் என்கையால் குரவையாடியது கோவலனார் கொலையுண்ட அன்றே யென்க என்பர்.

பா - இது கூத்தநூல் இலக்கணம் பற்றி உரைப்பாட்டும் குரவைச் செய்யுளும் விரவி வந்த கொச்சக ஒருபோகு.

ஆய்ச்சியர் குரவை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #26 on: February 28, 2012, 07:20:39 AM »
18. துன்ப மாலை

அஃதாவது - கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட திருமாபத்தினியாகிய கண்ணகியாரின் துன்பத்தின் இயல்பினைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் மாலை என்பது இயல்பு என்னும் பொருட்டு ஆதலால் இது தன்மையால் வந்த பெயர் என்க.

ஆங்கு,
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக்  5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்;   10

எல்லாவோ,
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;  15

நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;

தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்  20
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;

சொன்னது:-
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்  25
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே

எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்  30
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;

இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல்  35
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;

நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப  40
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;

தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45

காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி  50
காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.

உரை

1-7 : ஆங்கு ............. வந்தான் உளன்

(இதன்பொருள்.) ஆங்கு - அக் குரவைக்கூத்து முடிவுற்றபொழுது; ஆயர் முதுமகள் - இடைக்குல மூதாட்டியாகிய மாதரி; ஆடிய சாயலாள் - இறையன்பினால் அசைந்த மென்மைத் தன்மைமிக்கவளாய், பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் - மலரும் நறுமணப்புகையும் பூசும் சாந்தும் தலையில் சாத்துதற்குரிய கண்ணியும் ஆகிய இவற்றோடு; நீடுநீர் வையை நெடுமால் அடிதூவி ஏத்த - இடையறாத ஒழுக்கினையுடைய நீரையுடைய வையைப் பேரியாற்றின் கரையின்மேல் திருக்கோயில் கொண்டருளிய நெடிய திருமாலை வணங்கி அவன் திருவடியிலே மலர் தூவி வழிபாடு செய்தற்பொருட்டு; துறையடியப் போயினாள் - வையைத் துறையின்கண் நீராடச் சென்றாளாக; குரவைமுடிவில் மேவி - குரவைக்கூத்து முடிந்தபொழுது நகரத்திற்சென்று; ஊர் அரவங்கேட்டு - அவ்வகநகரினுள் பிறந்ததொரு செய்தியைக் கேள்வியுற்று; விரைவொடு வந்தாள் - மிகவும் விரைவாக வந்த ஆயமகளுள் ஒருத்தி; உளள் - அக் குரவைக் கூத்தாடிய விடத்தே உளள் ஆயினள்; என்க.

(விளக்கம்) ஆடிய சாயல் - அசைந்த மென்மை, அஃதாவது இறையன்பு காரணமாக நெகிழ்ந்த நெஞ்சத்தின் மென்மை, என்க. அம்மென்மை மெய்ப்பாடாகத் தோன்றப் பெற்ற மாதரி என்பது கருத்து. ஆடிய சாயலாள் - ஐயை என்பாருமுளர். பூ, புகை, சாந்து, கண்ணி முதலியன. நீராடுவாள் வையையை வழிபடுதற்குக் கொடுபோன பொருள் எனலுமாம். என்னை?

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவார் அப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்டொடியார்

எனவரும் பரிபாடலும் (10) காண்க.

வையை நெடுமால் என்றது இருந்த வளமுடையார் என்னும் திருப்பெயருடைய திருமாலை என்பர். குரவை ஆடிய மகளிருள் ஒருத்தி தன் காரியத்தை மேலிட்டு நகருள் மேவி ஆங்கு ஊரரவங்கேட்டு விரைவொடு வந்தாள்; வந்தவள் அச் செய்தியைச் சொல்லுந் துணிவின்றி வாளாது நின்றமை தோன்ற வந்தாள் உளள் என்றார். அரவம் என்றது கோவலன் கொலையுண்ட செய்தியை. நகரத்துள் பலரும் அதனைப் பேசுவதனால் உண்டாகும் அரவம் என்றார் என்க. அச் செய்தியைக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்தவள், சொல்லாது நிற்பாளாயினள் என்பது கருத்து.

8-10: அவள்தான் ............... சொல்லாடுந்தான்

(இதன்பொருள்.) அவள்தான் - அவ்வாறு ஊரரவங் கேட்டுக் கண்ணகிக்குச் சொல்லக் கருதி விரைவொடு வந்த அந்த ஆயமகள் தானும்; சொல்லாடாள் அவளுக்குச் சொல்லுந் துணிவின்றி யாதொன்றும் சொல்லாளாய் வாய்வாளாது நின்றாள்; அந்நங்கைக்கு - அக்கண்ணகிக்கு; சொல்லாடா நின்றாள் - யாதொன்றும் சொல்லாடாமல் நின்ற அவள்தான்; சொல்லாடும் - பின்னர்க் கண்ணகி கேளா வண்ணம் தன்தோழிமார்க்கு மெல்லச் சொல்வாளாயினள்; தான் சொல்லாடும் - அதுகண்ட அக் கண்ணகியே அவளை நோக்கிங் சொல்வாளாயினள்; என்க.

(விளக்கம்) அவள்தான் என்றது சொல்லவந்த அவள்தானும் என்பதுபட நின்றது. சொல்லாடா நின்றாள் - சொல் ஆடாமல் நின்றாள் என்க. ஈறு தொக்கது. அந்நங்கைக்குச் சொல்லாடாள் சொல்லாடும் எனவே தன் தோழிமார்க்குச் சொல்லாடும் என்பது பெற்றாம். சொல்லாடாள் சொல்லாடாள் என்பன சொல்லாள் என்னும் ஒருசொல் நீர்மையன. சொல்லாடும் சொல்லாடும் என்பன சொல்லும் என்னும் ஒருசொல் நீர்மையன. தான் சொல்லாடும் என மாறுக. தான் என்றது கண்ணகியை. பின்வருவன கண்ணகியின் கூற்று.

11-15: எல்லாவோ ............ வாழியோதோழி

(இதன்பொருள்.) எல்லா ஓ - தோழீ! அந்தோ; காதலன் காண்கிலேன் - யான் என் ஆருயிர்க்காதலன் இன்னும் வரக் கண்டிலேன் ஆதலின்; கலங்கி நோய் கைம்மிகும் - என்நெஞ்சம் பெரிதும் கலங்கி, துன்பமும் என்னால் பொறுக்கல்லாது மிகுகின்றது காண்! என் நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் அன்றே - அங்ஙனம் ஆதலின் அன்றே என்நெஞ்சுதானும் என் வரைத்தன்றி ஊதப்படுகின்ற கொல்லன் உலைத்தீயும் தோற்கும்படி வெய்தாய் உயிர்க்கின்றது; என்நெஞ்சு ஊதுஉலை தோற்க உயிர்க்கும் ஆயின் - எனது நெஞ்சம் இங்ஙனம் தீயினும் வெய்யதாய் உயிர்க்குமானால் இனி யான் சிறிதும் பொறுக்ககில்லேன் கண்டாய்; வாழி ஓ தோழி ஏதிலார் சொன்னது எவன் - நீ வாழ்வாயாக அந்தோ தோழி உனக்கு அயலார் சொன்ன செய்தி தான் யாது? அதனை இப்பொழுதே கூறிவிடுதி என்றாள்; என்க.

(விளக்கம்) காதலன் வரவு காணாது நெஞ்சு கலங்கி அவன் வரும் வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்திருந்தவன் அங்கிருந்து விரைவாக வந்தவன் தனக்கு ஏதோ சொல்லக் கருதிப் பின் யாதொன்றும் சொல்லாளாய்க் கவலைதோய்ந்த முகத்தினளாய்த் தன் தோழியர் குழுவினுட் புகுந்து இச் செய்தியை மெல்ல அவர்க்குக் கூற, அது கேட்ட அம் மகளிரெல்லாம் திகைத்துத் தன்னைத் துன்பத்தோடு நோக்குதல் கண்டு கண்ணகி கூறிய சொற்கள் இவை. ஈண்டுக் கூறிய நிகழ்ச்சியை எல்லாம் அடிகளார் இப் பாட்டினூடே நம்மனோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளும்படி செய்யுள் செய்திருக்கின்ற வித்தகத்தை உணர்வுடையோர் உணர்வாராக.

16-19: நண்பகல் ............ தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழியே! அந்தோ! நண்பகல் போதே அன்பனைக் காணாது என் நெஞ்சு அலவும் அன்றே - நடுப்பகலிலேயே என் காதலன் மீண்டுவரக் காணாமையாலே என் நெஞ்சம் சுழலா நின்றது கண்டாய் அன்றே! நடுக்கும் என் மெய்யும் நடுங்கா நின்றது; நோய் கைம்மிகும் - துன்பந்தானும் என் வரைத்தன்றி மிகுகின்றது; என்நெஞ்சு அன்பனைக் காணாது அலவும் ஆயின் - இங்ஙனம் என்நெஞ்சு சுழலுதலாலே; மன்பதை சொன்னது எவன் - நீ நகரத்துப் புக்கபொழுது ஆண்டுள்ள மக்கள் நினக்குக் கூறிய செய்திதான் என்னையோ கூறுதி என்றாள்; என்க.

(விளக்கம்) அந்தப் பொழுது, கதிரவன் உச்சியினின்றும் மேற்றிசையில் சாயும் பொழுதாயிருந்தமையின், உச்சிப்பொழுதிலிருந்தே என் நெஞ்சம் சுழலுகின்றது! உடலும் நடுங்குகின்றது! நோயும் மிகுகின்றது! இவையெல்லாம் என்பால் தாமே தோன்றுகின்ற தீநிமித்தம் போலே யிருந்தன. நீதானும் யாதோ சொல்ல வந்து சொல்லாதொழிந்தனை! நீ நகரம்புக்கு மீண்டனை ஆதலின் நகரத்துள் மன்பதை என் காதலனைப்பற்றிச் சொன்ன செய்தி ஒன்றுண்டு என்று நின் முகமே எனக்குக் கூறுகின்றது! இனி யான் துயர் பொறுக்ககில்லேன் காண். அதனை இப்பொழுதே சொல்லிவிடு! எனக் கண்ணகி விதுப்புற்றுக் கூறியவாறு.

மெய்நடுக்கும் என்க. அலவுதல் - சுழலுதல் மன்பதை - பொதுமக்கள் எவன் என்னும் வினா, அதை இப்பொழுதே சொல்லிவிடு! என்பதுபட நின்றது.

20-23: தஞ்சமோ ............. தோழீ

(இதன்பொருள்.) தோழீ ஓ - தோழீ; அந்தோ ! தலைவன் வரக்காணேன் - யான் என் ஆருயிர்த் தலைவன் வரக்கண்டிலேன்; ஓ வஞ்சம் உண்டு - நீவிரெல்லாம் எனக்கு மறைத்து நும்முள் சொல்லாடுகின்றீர் ஆதலால். அந்தோ நுமக்குள் ஏதோ ஒரு வஞ்சச் செய்தி உளதென்று கருதி; என்நெஞ்சு மயங்கும் அன்றே - என்நெஞ்சம் பெரிதும் மயங்குதல் கண்டீர் அன்றே; வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின் - இங்ஙனம் கருதி என்நெஞ்சம் மயங்குமாயின் அதன் விளைவு; தஞ்சமோ - எளியதொன்றா யிருக்குமோ? இராதன்றே; எஞ்சலார் - உனக்கு அவ்வயலார்; சொன்னது எவன் - சொன்ன செய்திதான் என்னையோ சொல்லிவிடு! சொல்லிவிடு! என்றாள்; என்க.

(விளக்கம்) தஞ்சம் - எளிமை. என்நெஞ்சு இங்ஙனம் மயங்குமாயின் அதன் விளைவு எளிதாயிருக்குமோ என்றது யான் இறந்துபடுவேன் என்பதுபட நின்றது. எஞ்சலார் - அயலார்.

24: சொன்னது.............

(இதன்பொருள்.) சொன்னது - நங்காய் அவர்கள் சொன்னதாவது ...........

(விளக்கம்) இது கண்ணகியாரின் பெருந்துன்பங் கண்ட அவ்வாயமகள், இனி இச் செய்தியை இவட்குக் கூறாதொழியின் இவள் இறந்து படுதலுங்கூடும் என்று சொல்லத் துணிந்து சொல்வதற்குத் தோற்றுவாய் செய்பவள் நங்காய்! அவர்கள் சொன்னதாவது: ............ என்று தொடங்கி மேலே சொல்ல நாவெழாமல் திகைத்து நின்றதனை நம்மனோர்க்கு அறிவுறுத்துதல் உணர்க. இதனை அடிகளார் தனிச் சொல்லாக நிறுத்தினமையே அங்ஙனம் உணர்த்துதற்குக் காரணமாதல் நுண்ணிதின் உணர்க. இனி, அவ் வாயமகள் குரவை முடிவில் ஊரரவங்கேட்டு வந்தவளே என்பதும் உணர்க. மேலே அவள் சொல்லுந் துணிவின்றித் தயங்கித் தயங்கிக் கூறுவதுபோல அவள் கூற்று அமைந்திருத்தலும் குறிக்கொண்டுணரற்பாலதாம்.

25-28: அரைசுறை .............. குறித்தனரே

(இதன்பொருள்.) அரைசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று - மன்னவன் விரும்பி உறைதற்குக் காரணமான உவளக மாளிகையின்கண் இருந்த அழகு பொருந்திய சிலம்பினை ஓசைபடா வண்ணம் கவர்ந்த கள்வள் இவனாம் என்று நினைத்து; கரையாமல் வாங்கிய கள்வன் ஆம் என்று ஒலிபடாமல் கவர்ந்த கள்வன் இவனே என்று துணிந்து; குரைகழல் மாக்கள் கொலை குறித்தனர் - ஒலிக்கும் வீரக்கழலையுடைய காவல் மறவர் கொலை செய்யத் துணிந்தனர்; என்றாள் என்க.

(விளக்கம்) அரசன் கோயில் என்னாது உறைகோயில் என்றது விரும்பித் தங்குகின்ற உவளகம் (கோப்பெருந் தேவியார் மாளிகை) என்பது தோன்ற நின்றது. விரைந்து சொல்லத் துணியாமையால், அணியார் ஞெகிழம் என்றும், கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றும், குரைகழல் மாக்கள் என்றும், வேண்டாதன இடைப்பிற வரலாகச் சொற்கள் பல வளர்த்தனள். கொன்றனர் என்பதற்குத் துணிவு பிறவாமையால் கொல்ல நினைத்தனர் என்பாள்போலக் கொலை குறித்தனர் என ஒருவாறு கூறாமல் கூறிய நுணுக்கம் உணர்க. ஞெகிழம் - சிலம்பு.

கோவலன் கொலையுண்டமை கேட்டபொழுது கண்ணகியார் எய்திய நிலைமை

29: எனக்கேட்டு...........

(இதன்பொருள்.) எனக்கேட்டு - ஊரரவங்கேட்டு விரைவொடு வந்து சொல்லாடாளாய்ப் பொழுது கழிப்பிநின்ற அவ்வாய்ச்சி இங்ஙனம் கூற அக்கூற்றைக் கேட்டலும் என்க.

30-33: பொங்கி .......... மாழ்குவாள்

(இதன்பொருள்.) பொங்கி எழுந்தாள் - துன்ப உணர்ச்சி கரை கடந்து பொங்குதலாலே கண்ணகி அவ்வுணர்ச்சி வயப்பட்டு எழுந்தாள், எழுந்தவள் ஆற்றாமையால்; கதிர்த்திங்கள் பொழிமுகிலோடும் சேண் நிலம் கொண்டு என விழுந்தாள் -ஒளியுடைய திங்கள் மண்டிலமானது மழை பொழிகின்ற முகிலோடும் வானத்தினின்றும் நிலத்தின்மேல் வீழ்ந்தாற்போல நிலத்தில் விழுந்தாள், மீண்டும் எழுந்தாள்; செங்கண் சிவப்ப அழுதாள் - இயல்பாகவே சிவந்த கண்கள் பெரிதும் சிவக்கும் படி அழுதாள் பின்னர்; தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் - தன் காதலனை நினைத்தவளாய் எம்பெருமானே! நீ இப்பொழுது என்னைத் துறந்துபோய் எவ்விடத்தே இருக்கின்றனை காண்? என்று புலம்பி வருந்தி ஏங்கிச் செயலறவு கொண்டு மயங்கினாள்; என்க.

(விளக்கம்) துன்ப உணர்ச்சி பொங்கி என்க. எழுந்தாள் என்றது அவ்வுணர்ச்சி வயப்பட்டெழுந்தாள் என்பதுபட நின்றது. பொழி முகிலோடும் கதிர்த்திங்கள் சேணினின்றும் நிலங்கொண்டென விழுந்தாள் என மாறுக. திங்கள் முகத்திற்குவமை. அவிழ்ந்து சரிகின்ற கூந்தல் முகில் கால்கொண்டு பெய்தல் போலுதலின், பொழிமுகிலோடும் என்று உவமைக்கு அடைபுணர்த்தவாறு. செங்கண் - இயல்பாகவே சிவந்த கண். எங்கணா: ஈறுகெட்டது. மாழ்குதல் - மயங்குதல்.

34-37: இன்புறு ........... கொண்டழிவலோ

(இதன்பொருள்.) இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க - இங்ஙனம் துன்பத்தால் அழுது மயங்கிய கண்ணகி தமக்குற்ற பொய்ப்பழியைப் பொறாது எழுந்த வெகுளியாகிய உணர்ச்சியால் தூண்டப்பெற்றுக் கூறுபவள் தாங்கள் இன்பம் எய்துதற்குக் காரணமான தம்முடைய கணவர் துன்புறுத்தும் நெருப்பின்கண் மூழ்கா நிற்பக் கண்டுவைத்தும்; துன்புறுவன தோற்றுத் துயர் உறும் மகளிரைப்போல் - தாமும் நெருப்பின் கண் மூழ்கி உயிர் நீக்கும் துணிவின்றி உயிர் தாங்கியிருந்து துன்புறுவதற்குக் காரணமான கைம்மை நோன்பு பல மேற்கொண்டு சாந்துணையும் வருந்துகின்ற உயவற் பெண்டிரைப் போல; மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறு இழைப்ப - உலகத்துள் வாழ்கின்ற மக்கட் கூட்டம் தன்னைப் பழி தூற்றும்படி இந்நாட்டு மன்னவன் தனது செங்கோன்மையின் தவறு செய்தமையாலே; அன்பனை இழந்தேன் யான் - காதலனை இழந்தேனாகிய யானும்; அவலங் கொண்டு அழிவலோ - அழுது கொண்டு உயிரோடு இருந்து அழிவாள் ஒருத்தியோ என்றாள்; என்க.

(விளக்கம்) இது, முன்னர்க் கொலையுண்டமை கேட்டு மயங்கி யழுதவள் மீண்டும் கள்வனாம் என்று கொலை குறித்தனர் என்றமை நினைந்து சீற்றங்கொண்டு கூறியவாறு. பின் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். இன்புறுதல் - இம்மையினும் மறுமையினும் இன்புறுதல் என்க. எரி - நெருப்பு. துன்புறுவனவாகிய கைம்மை நோன்புகளை நோற்று என்க. மன்னவன் தவறிழைப்ப அஃதுணராது மன்பதை எம்மை அலர் தூற்ற அவலங்கொண்டழிவலோ எனக் கூட்டினுமாம். ஓகாரம் எதிர்மறை. யானும் எனல்வேண்டிய எச்சவும்மை தொக்கது.

38-41: நறைமலி ................. அழிவலோ

(இதன்பொருள்.) அறன் எனும் மடவோய் - அறக் கடவுள் என்று கூறப்படுகின்ற அறிவிலியே கேள்; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்து - மணமிக்க அகன்ற மார்பினை யுடைய தம் காதலனை இழந்தபின்னரும் அவனோடு தம் உயிரை இழக்கத் துணிவின்றிப் பின்னர்ச் சாந்துணையும் ஏக்கமுற்று; பலதிறம் துறை மூழ்கித் துயர் உறும் மகளிரைப்போல் - பல திறப்பட்ட நீர்த்துறைகள் தோறும் சென்று சென்று தம்முடல் குளிரும்படி மூழ்கி மேலும் மேலும் துன்பம் மிகுவிததுக் கொள்கின்ற பேதை மகளிரைப் போல; மறனொடும் திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப - தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்தமையாலே; யான் -தவறு சிறிதுமில்லாத யானும்; அவலங்கொண்டு அழிவலோ -துன்பத்தை மேற்கொண்டு நெஞ்சழிபவள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) நறை - நறுமணம். நண்பன் - கணவன். பலதிறத்துறை என்க. மறன் - தீவினை; தீவினையோடு கூடித் தன் தன்மை திரிந்த கோல் என்க. அஃதாவது கொடுங்கோல். ஒருவன் தீவினை செய்ய, அதன் பயனை ஏதிலான்ஒருவன் நுகரும்படி செய்தனை என அறத்தைச் சீறுவாள் அறனெனும் மடவோய் என்று விளித்தாள். அறக்கடவுள் உளனாயின் இத்தகைய கொடுமையும் உலகில் நிகழுங்கொல் என ஐயுற்றுவாறு.

42-45: தம்முறு ......... அழிவலோ

(இதன்பொருள்.) தம்முறு பெருங்கணவன் - தம்மோடு பொருந்திய தமக்கு இறைவனினுங் காட்டில் பெரியவனாகிய கணவன்; தழல் எரி அகம் மூழ்க - அழலுகின்ற நெருப்பின்கண் மூழ்கக் கண்டு வைத்தும் அவனோடு ஒருசேர நெருப்பில் மூழ்குந் துணிவின்றி; கைம்மை கூர்துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல் - கைம்மை நோன்பின்கண் மிக்குத் துறைகள் பலவற்றினும் சென்று சென்று தம்மெய் குளிர நீராடுகின்ற இடையறாத கவலையை யுடைய உயவற் பெண்டிரைப் போல யானும்; செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப - நடுவு நிலைமையினின்றும் நீங்கிய கொடுங்கோலையுடைய இப் பாண்டிய மன்னன் தவறு செய்யா நிற்ப அதுகாரணமாக; இனைந்து ஏங்கி - பெரிதும் வருந்தி ஏக்கமுற்றிருந்து; இம்மையும் இசை ஒரீஇ - மறுமை கிடக்க இப்பிறப்பின் பயனாகிய புகழையும் விடுத்து; அழிவலோ - நெஞ்சழிவாள் ஒருத்தியோ என்றாள் என்க.

(விளக்கம்) பெருங் கணவன்: மகளிர்க்குக் கணவன் கடவுளினும் பெரியன் என்றவாறு. தழலெரி: வினைத்தொகை. துறை - புண்ணியத் துறை. செம்மை -நடுவுநிலைமை; இம்மையும் என்றது மறுமையினும் நரகம் புகுதல் என்பதுபட நிற்றலின். உம்மை - எச்சவும்மை. ஓகாரம்: எதிர்மறை.

கண்ணகியின் மறவுரை

46-53: காணிகா ........... ஒருகுரல்

(இதன்பொருள்.) காய்கதிர்ச் செல்வனே -சுடுகின்ற கதிரையுடைய செல்வனாகிய ஞாயிற்றுக் கடவுளே! பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி - பாய்கின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தின்கண் தோன்றுகின்ற பொருள்கள் அனைத்தையும் நீ கண்கூடாகக் கண்டறிவாய் அல்லையோ; காணிகா -நீயே இதனையும் காண்பாயாக; வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின் - தானே வாய்த்த தீநிமித்தங் காரணமாக வந்த குரவைக் கூத்தின்கண் வந்து குழுமிய இடைக்குலத்து இளமகளிரே நீவிர் எல்லீரும் கேளுங்கோள்; ஆய மடமகளிர் எல்லீருங் கேட்டைக்க - அங்ஙனம் வந்து குழுமிய ஆய மகளிர் எல்லீரும் கேட்பீராக; என் கணவன் கள்வனோ - என்னுடைய கணவன் இப் பாண்டிய மன்னன் அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்த கள்வனோ? என வானத்தை நோக்கிக் கண்ணகி வினவினளாக, அப்பொழுது; கருங்கயல் கண் மாதராய் -கரிய கயல் போலும் கண்ணையுடைய நங்காய்! கள்வன் அல்லன் - நின் கணவன் கள்வன் அல்லன் காண்; இவ்வூர் ஒள்எரி உண்ணும் - நின் கணவனைக் கள்வன் என்று கூறிய இந்த மதுரையை ஒளியுடைய நெருப்பு உண்ணாநிற்கும்; என்றது ஒரு குரல் - என்று வானத்தினின்றும் ஒரு தெய்வக்குரல் எழா நின்றது; என்க.

(விளக்கம்) காணிகா: இகவென்னும் முன்னிலையசை இகாவென ஈறு திரிந்து காண்பாயாக என்பதாயிற்று. இச்சொல் கண்ணகி கதிரவனை நோக்கிக் கூறியது என்று கொள்க. வாய்வது என்றது, தானே வாய்த்த தீநிமித்தத்தை. அது காரணமாக வந்த குரவை என்றவாறு. கேட்டீமின் என்றது கேளுங்கள்! என ஏவியபடியாம். மீண்டும் கேட்டைக்க என்றது ஒருதலையாகக் கேட்கக் கடவீர் என வேண்டுகோள் பொருண்மைத்தாய் வந்த வினைத்திரிசொல். இவ்வூர் என்றது நின் கணவனுக்குப் பழிகூறிய இவ்வூர் என்றவாறு. ஒருகுரல் என்றது வானத்திற் பிறந்த ஒரு தெய்வக்குரல் என்பதுபட நின்றது. அஃதாவது காய்கதிர்ச் செல்வன் குரல் என்பது அடுத்த காதைத் தொடக்கத்தே விளங்கும்.

பா- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

துன்பமாலை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #27 on: February 28, 2012, 07:23:01 AM »
19. ஊர்சூழ் வரி

அஃதாவது - நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீயுண்ணுங்காண் என்று வானத்தெழுந்த தெய்வக் குரல் கேட்டவுடன் கண்ணகி சினம் மீக்கூர்ந்து தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் கையிலேந்திக் கொண்டு மதுரை மாநகரத்து வீதி வழியே சென்று இருமருங்கும் தன்னை நோக்கி இரங்கி நிற்கும் பத்தினிப் பெண்டிரை விளித்துப் பல்வேறு வஞ்சினம் மொழிந்து, கோவலன் கொலைப்பட்ட இடத்தை எய்துதலும், ஊர் மாந்தர் அவளைச் சூழ்ந்து இரங்கி ஆரவாரித்தலும், கண்ணகி கணவன் உடம்பினைக் கண்டு அழுதலும், பின்னர் அவன் மார்பின் மீது வீழ்ந்து தழுவிக் கொள்ளுதலும், கொலைப்பட்ட கோவலன் உயிர்பெற்று எழுந்து கண்ணகிக்கிரங்கி, அவள் கண்ணீரைத் தன் கையால் மாற்றுதலும், கண்ணகி அவன் அடிகளைக் கையாற் பற்றி அழுங்கால் நீ இருந்திடுக! என்று மறைந்துபோதலும், இதனால் மருட்சியுற்ற கண்ணகி என் சினந்தணிந்தன்றிக் கணவனோடு கூடுகிலேன். இத்தீவேந்தன் தனைக் கண்டு இங்ஙனம் செய்ததற்குக் காரணம் கேட்பல்! என்று எழுந்து தன் கண்ணீரைத் தானே துடைத்துக் கொண்டு அரசன் அரண்மனை முன்றிலை எய்துதலும், பிறவும் கூறும் பகுதி என்றவாறு. இது கூத்துப் போறலின் கூத்தாற் பெயர் பெற்றது என்க. வரி - கூத்து.

ஊர்சூழ் வரி என்னுந் தொடரை மதுரை மூதூரைக் கண்ணகி சூழ்ந்து சென்றது எனவும், மதுரை மாநகரத்து மாந்தர் கண்ணகியைச் சூழ்ந்தது எனவும் இருவகையானும் விரித்துப் பொருள் கூறுக.

என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன் படாத துயரம் படுகாலை   5

உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று
மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று  10

காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி  15

மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்  20

மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்  25

தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் 30

மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்;
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்  35

கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்
என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ  40

மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ
யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப  45

ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ
கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ  50

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம்  55

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்  60

பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் 65
 
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்  70

தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.  75

உரை

1-4: என்றனன் ....... ஈதொன்று

(இதன்பொருள்.) என்றனன் வெய்யோன் -கண்ணகி கதிரவனை நோக்கிக் காய்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ என வினவியவளுக்கு மாதராய்! நின் கணவன் கள்வன் அல்லன் இவ்வூரை எரியுண்ணும் என்று அக் கதிரவன் விடை இறுத்தானாக; இலங்கு ஈர்வளைத்தோளி நின்றிலள் - அது கேட்டவுடன் விளங்குகின்ற அரியப்பட்ட சங்கு வளையணிந்த கைகளையுடைய அக் கண்ணகி ஒரு நொடிப்பொழுதும் அவ்விடத்தே நின்றாளில்லை; நின்ற சிலம்பு ஒன்று கையேந்தி-தன்பால் எஞ்சியிருந்த ஒற்றைச் சிலம்பினையும் தன் கையகத்தே ஏந்தியவளாய் அவ்விடைச்சேரியினின்றும் மதுரை நகரினுள்ளே விரைந்து போகின்றவள் ஆண்டு இருமருங்கினும் தன்னை நோக்கிக் கண்ணீர் உகுத்து நிற்கும் கற்புடை மகளிரை நோக்கி; முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் - செங்கோன் முறைமை இல்லாத அரசனுடைய ஊரின்கண் இருந்து வாழுகின்ற கற்பையுடைய மகளிர்களே; ஈது ஒன்று - இதோ யான் கைப்பற்றியுள்ள இச்சிலம்பு அச்சிலம்பிற்கு இணையாய மற்றைச் சிலம்பு காண்! இதனைக் காணுங்கோள்! என்றாள்! என்க.

(விளக்கம்) சென்றாள் என்னாது நின்றிலள் என்றது அவ்விடத்தே அக்குரல் கேட்டபின் ஒரு நொடிப்பொழுதும் நின்றிலள் என்றுணர்த்துதற்கு என்க. நின்ற சிலம்பு என்றது கணவன்பால் கொடுத்ததொழியத் தன்பால் எஞ்சியிருந்த மற்றைச் சிலம்பினை. முறையில் அரசன் றன் ஊரிலிருந்து வாழும் பத்தினிப் பெண்டிர்காள் என்றது கொடுங்கோன் மன்னன் ஊரின்கண் வாழும் மகளிர் கற்புடையராய் இரார் என இகழ்ந்தவாறு. பின்னும் நீவிர் கற்புடை மகளிராயின் நும் மன்னன் இங்ஙனம் செங்கோல் பிழையான் என்று இகழ்ந்தவாறுமாம். இதனைப் பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு நீணிலவேந்தர் கொற்றம் சிதையாது எனவரும் கவுந்தியடிகளார் மொழியானும் காண்க. அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப் (நடுகற் காதை, 207-8.) பின்வருதலும் நினைக.

இனி, ஈதொன்று என்பதற்கு - இஃதொரு தீவினை நிகழ்ந்தது காண்மின்! எனக் கோடலுமாம்.

5-8: பட்டேன் ............... ஈதொன்று

(இதன்பொருள்.) பட்டேன் படாத துயரம் யான் இவ்வுலகின் கண் பிறந்தாரொருவரும் படாத பெரும் துயரத்தைப் படுகின்றேன்; படுகாலை உற்றேன் உறாதது உறுவனே - இம் மாலைக் காலத்து இங்ஙனம் பிறர் யாரும் படாத துன்பத்தை யான் உற்றேன் இத்தகைய துன்பத்தினை யான் உறக்கடவேனோ; ஈது ஒன்று - இங்ஙனம் யான் துன்புறச் செய்தது நும்மரசன் கொடுங்கோல், இதுவும் நீயிர் அறியற்பாலதொன்று கண்டீர்! கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே ஈது ஒன்று - என் கணவன் கள்வனல்லன்! எனது காற்சிலம்பின் விலையைக் கொடாது தாம் கைக்கொண்டு விடுதற்பொருட்டுக் கள்வனென்று ஒரு பெயரிட்டு அவனைக் கொன்றார்களே! இதும் நீவிர் அறியற்பாலதொன்று கண்டீர்! என்றாள்; என்க.

(விளக்கம்) உலகிற் பிறந்தார் படாத துயரம் என்க. படுகாலை - இறக்குங்காலத்தில் படும் துயர் எனினுமாம். உறாதது - படத்தகாத துன்பம். உறுவனே என்னும் ஏகாரம் எதிர்மறை. ஈதொன்று - இஃதொரு கொடுமை. யான் ஒரு வணிகன் மனைவி; தான் மன்னனாயிருந்தும் என் காற்சிலம்பு பெற்ற விலையைத் தாராமைப்பொருட்டு கள்வன் அல்லாத என் கணவனைக் கள்வனென்று ஒரு பெயரிட்டுக் கொன்றார்களே, இஃதொரு தீவினை இருந்தபடியை எல்லோரும் அறிமின் என்பாள் கள்வனோ .......... ஈதொன்று என்றாள்.

9-14: மாதர் ............... இதுவொன்றென்று

(இதன்பொருள்.) மாதர்த் தகைய மடவார் கண் முன்னரே - தத்தம் கணவன்மார் காதலிக்கும் தகுதியுடைய கற்புடைப் பெண்டிர்கண் முன்பே; காதல் கணவனை காண்பனே - என்னுடைய காதலை யுடைய கணவனே யான் பண்டுபோல உயிருடையவனாய்க் காண்பேன் காண், ஈதொன்று - இது நுமக்கு ஒரு புதுமையாய் இருக்குமன்றோ அதனையும் காணுங்கோள்; காதல் கணவனைக் கண்டால் - யான் என்காதற் கணவனை அங்ஙனம் கண்டபொழுது; அவன் வாயில் தீது அறு நல்லுரை கேட்பனே ஈது ஒன்று -அவன் என்னை நோக்கித் திருவாய் மலர்ந்தருளுகின்ற குற்றமில்லாத இனிய மொழியையும் நீயிர் காணும்படி ஒருதலையாகக் கேட்பேன் இதுவும் ஒரு புதுமையன்றோ இதனையும் காணுங்கோள்; தீது அறு நல்லுரை கேளாது ஒழிவேனல்  நோதக்க செய்தாள் என்று எள்ளல் இது வொன்று என்று - அங்ஙனம் தீதில்லாத நன்மொழியை அவன் திருவாயால் யான் நும் கண் முன்னே கேளா தொழிவேனாயின் இவள் இங்ஙனம் நிகழ்தற்குக் காரணமான தீவினைகளைச் செய்தவளே போலும் என்று என்னை எல்லீரும் இகழுங்கோள்! இதுவும் நுங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் அன்றோ என்று இவ்வாறு கூறி, என்க.

(விளக்கம்) மாதர் - காதல்; காதலிக்கும் கற்புடை மடவார் என்றவாறு. அவர் கண் முன்னர் இது செய்தால் அவர்க்கும் சிறப்பாம் என்பது தோன்ற இங்ஙனம் கூறினள் என்க. காண்பனே என்றது உயிருடன் காண்பேன் என்று வீரம் பேசியவாறு. என்னை? இவன் தானும் வீரபத்தினியாதலின் என்க. இது வீரமறவர்க்குரிய நெடுமொழி வஞ்சி போல்வதொரு மறத்துறை என்க. அஃதாவது:

ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை எடுத்துரைத் தன்று

எனவரும். (புறப்பொருள் வெண் வஞ்சி -12.) நோதக்க - கணவன் கொலையுண்ணற்குக் காரணமான தீவினைகள் என்க. எள்ளல் - எள்ளுக; அல்லீற்று வியங்கோள், உடன்பாட்டின்கண் வந்தது. இற்றெனக் கிளத்தல் (தொல்.கிளவி-19) என்புழிப்போல. எள்ளல் இது ஒன்று என்றது, இப்பொழுது நுங்களையும் நும்மன்னனையும் இகழுகின்ற என்னை நீவிர் இகழுதற்கு இஃதொரு வாய்ப்பு என்றவாறு.

மதுரை மக்கள் கூற்று

15-22: அல்லலுற்று ........... இதுவென்கொல்

(இதன்பொருள்.) அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு - இங்ஙனமாகப் பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்றவளைக் கண்டு அவள் துயரம் தம்மால் ஆற்றுதற்கு அரிய தொன்றாதலின் செயலறவால்; ஏங்கி - ஏக்கமுற்று; மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி - வளமுடைய அம் மதுரை நகரத்தே வாழ்கின்ற மாந்தரெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்றவர்; இக் காரிகைக்கு களையாத துன்பம் காட்டி-அந்தோ அழகிய இந்நங்கைக்கு எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் தீர்க்கப்படாத துன்பத்தை உண்டாக்குமாற்றால்; வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல்-பண்டு ஒருபொழுதும் வளைந்தறியாத நம் மன்னனுடைய செங்கோலானது வளைந்தொழிந்ததே! இஃது என்னையோ? அறிகின்றிலேம் என்பாரும்; மன்னவர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் - மன்னவர்க்கெல்லாம் மன்னனும் திங்கள் போன்று மன்னுயிரையெல்லாம் மகிழ்விக்கும் கொற்ற வெண்குடையையும் வெற்றிவாளையும் உடைய வேந்தனும் செந்தமிழ் நாடாகிய இத்தென்னாட்டு மன்னவனும் ஆகிய நம்மன்னனுடைய கொற்றமும் சிதைந்தொழிந்ததே ஈதென்னையோ என்று மருள்வாரும்; மண் குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது இது என்கொல் - நிலத்தில் வாழும் உயிர்களின் உளங்களெல்லாம் குளிரச்செய்கின்ற தண்ணளியையும் பகைவர் உளமெல்லாம் நடுங்கச்செய்யும் மறப்பண்புமிக்க வேலாலியன்ற நெடிய தெறலையும் உடைய நம் பெருந்தகை மன்னன் கவித்த குளிர்ந்த வெண்குடை இற்றை நாள் ஆற்றொணாத வெப்பத்தை விளைத்தது இஃதென்னையோ என்பாரும்; என்க.

(விளக்கம்) அல்லல் - துன்பம். அழுவாளை : கண்ணகியை. அவனை ஆற்றுவிக்க மாட்டாமையால் ஏங்கி என்க. களையாத துன்பம் என்றது கணவனை இழத்தலால் வந்த துன்பம் என்றவாறு. அவளது அழகையும் இளமையையும் நோக்கி இக்காரிகை என்றார். பண்டொரு காலத்தும் வளையாத செங்கோல் என்க. கொற்றத்திற்கு அறமே முதலாகலின் அறம் சிதையவே கொற்றமும் சிதைந்தது என்க. இது என்கொல் என்னும் வினாக்கள் யாதொன்றும் அறிகின்றிலேம் என்பது தோன்ற அவர்தம் மருட்கையை உணர்த்தி நின்றன. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

இதனானே மேல் யாது வினையும் கொல்லோ என்றார் என இதுவென் கொல் என்பனவற்றிற்குப் பழைய ஆசிரியர் கூறும் உரை சிறப்பின்று. என்னை? அவர்கள் கண்ணகிக்கு இரங்காமல் இதனால் பின்னர்த் தமக்கு யாது விளையும் கொல்லோ என்று அஞ்சினர் என்பதுபட அவ்வுரை நிற்றலால் என்க.

23-28: செம்பொற் சிலம்பு .......... மாமதுரை

(இதன்பொருள்.) வம்பப் பெருந்தெய்வம் நம் பொருட்டால் செம்பொன் சிலம்பு ஒன்று கையேந்தி வந்தது இது என்கொல் - புதுமையையுடைய பெரிய தெய்வம் ஒன்று செம்பொன்னால் ஆகிய சிலம்பு ஒன்றனைத் தன் கையில் ஏந்திக்கொண்டு நம்மை ஆராய்தற்கு இவ்வாறு வந்ததுபோலும் இஃது என்ன மாயமோ என்பாரும்; ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்கொல் - வியத்தகு செவ்வரி பரந்த மையுண்ட கண்ணையுடையாள் இவள் தெய்வம் அல்லள் இவள்தானும் அழுதலையும் ஏங்கி அரற்றுதலையும் நோக்கின் தெய்வம் ஏறப்பெற்றாள் போலும் தன்மை உடையளாகக் காணப்படுகின்றாள். இஃதென்ன மாயமோ அறிகின்றிலேம் என்பாருமாய்; என்பன சொல்லி - என்று இன்னோரன்ன தத்தம் வாய் தந்தனவெல்லாங் கூறி; இனைந்து ஏங்கி ஆற்றவும் வன்பழி தூற்றும் குடியது மாமதுரை - வருந்தி ஏங்கி மிகவும் அரசனுடைய பெரும் பழியைத் துணிந்து தூற்றா நிற்கும் குடிமக்களை உடையதாயிற்று அற்றை நாள் அம்மதுரை மாநகரம் என்க.

(விளக்கம்) கண்ணகி தானும் இறந்துபோன கணவனை உயிருடன் காண்பேன் என்றும், அவன் வாயில் நல்லுரை கேட்பேன் என்றும், கூறக் கேட்டவருள் ஒருசிலர் இவள் மானுட மகளல்லள் தெய்வமே போலும்! தெய்வம் இங்ஙனம் வந்தது நம்மன்னன் செங்கோன்மையை ஆராய்தற்பொருட்டுப் போலும் என்பார், செம்பொற் சிலம்பு ........... ...... வம்பப் பெருந்தெய்வம் வந்ததிது வென்கொல் என்றார் என்க.

மற்று, அதுகேட்ட வேறு சிலர் கண்ணகியின் கண் முதலிய உறுப்புகளையும் செயல்களையும் நோக்குமின்! அவள் இங்ஙனம் பொருந்தாமை கூறக் காரணம் அவள்மேல் தெய்வம் ஏறினமையே என்பார், தெய்வம் அல்லள் தெய்வம் உற்றாள் போலும் என்றனர் என்க. இவரெல்லாம் பெரிதும் மருட்கை கொண்டவர் என்க. இவ்வாறாக அம் மதுரை நகரத்து மாந்தர் இவள் மானுட மகளாக, தெய்வமேயாக, அல்லது தெய்வம் உற்றாளேயாக, ஆற்றொணாத் துயரந்தரும் இந்நிகழ்ச்சிக்கெல்லாம் மன்னன்கோல் வளைந்ததே காரணம் என்றுட்கொண்டு இதனால் வந்த பழியும் எளியதொன்றன்று மிகவும் பெரிய தொரு பழியே என்று கருதி அற்றைநாள் அம்மதுரைமா நகரத்துக் குடிமக்கள் அனைவரும் அரசனுடைய பழியைத் தூற்றுபவரே ஆயினர் என்பார் அடிகளார் வன்புழி தூற்றும் குடியதே மதுரை என்றார். ஏகாரம் தேற்றப்பொருட்டு. மாமதுரை என்றது அதன் பழம்பெருமை கருதியவாறாம்.

கண்ணகி காதலனைக் கொலைக்களத்தே காண்டல்

29-34: கம்பலை ............. படைத்த தூர்

(இதன்பொருள்.) கம்பலை மாக்கள் தாம் கணவனைக் காட்ட - இவ்வாறு வன்பழி தூற்றி ஆரவாரம் செய்து நின்ற மக்களுள் ஒரு சிலர், தாமே முன்வந்து கண்ணகியை அழைத்துக் கொடு போய்க் கொலையுண்டு கிடந்த கோவலனைக் காட்டா நிற்ப; செம்பொன் கொடி அனையாள் கண்டாளை - செம்பொன்னால் இயன்றதொரு பூங்கொடி போல்வாளாகிய கண்ணகி தன்னைக் கண்டவளை; தான் காணான் - அக்கோவலன் கண்டானிலன் அப்பொழுது; மல்லல் மாஞாலம் இருள் ஊட்டிச் செங்கதிரோன் - வளம் பொருந்திய இப்பேருலகத்தை இருள் விழுங்கும்படி செய்து சிவந்த கதிரையுடைய ஞாயிற்றுக் கடவுள்; கதிர் சுருங்கி - இக்காட்சியைக் காணப்பொறான் போலே சிவந்த தன்ஒளி சுருங்கப்பெற்று; மாமலை மேல் சென்று ஒளிப்ப - பெரிய மேலை மலையின்பால் சென்று மறையா நிற்ப; புல் என் மருள்மாலை பூங்கொடியாள் பூசலிட - பொலிவிழந்த மருட்சியைத் தருகின்ற அந்த மாலைப் பொழுதிலே பூங்கொடிபோல் வாளாகிய கண்ணகி தன் கணவனிடத்திருந்து அழுது புலம்புதலாலே; அவ்வூர் ஒல்லென ஒலி படைத்தது - அவ்வூரார் தாமும் அவட்கிரங்கிப் பற்பல சொல்லிப் புலம்புதலாலே அம்மதுரையில் யாண்டும் ஒல்லென்னும் ஒலியெழுந்தது என்க.

(விளக்கம்) கம்பலை - ஆரவாரம். கம்பலைமாக்கள் என்பதற்கு வேறு சிலர். எனவும் வேறுசில காட்சிகண்டு திரியுமவர் எனவும் வருகின்ற பழையவுரை மிகை. கம்பலை மாக்களுள் சிலர் எனவே அமையும். வன்பழி தூற்றும் குடியதே மாமதுரை என்றமையால் எல்லோரும் கம்பலை மாக்களே என்க. தாம் என்றது தாமே துணிந்து முன்வந்து என்பதுபட நின்றது. என்னை? அங்ஙனம் வருவோர் அரியர் ஆகலான் என்க. தான் காணான் என்றது கொலையுண்டு கிடந்தமையை வேறு வாய்பாட்டாற் கூறியவாறு. மல்லன் மாஞாலம் என்றது இகழ்ச்சி. இங்ஙனம் காணப்பொறாத நிகழ்ச்சியுடைத்து என்னும் வெறுப்பினாலே இவ்வுலகத்தை இருளூட்டி யாம் எத்துணை ஒளி செய்யினும் இம்மாந்தரின் அறியாமை இருள் போக்குதல் அரிது என்னும் எண்ணத்தால் செங்கதிர்ச் செல்வன் தன் கதிர்கள் சுருங்கா நிற்ப இப்பொல்லாக் காட்சியைக் காண்டல் இனி நமக்கொல்லாதாம் என்பான் போலச் சென்றொளிப்ப என்பதுபட இவ்விரண்டடிகளும் நிற்றலுணர்க.

35-38: வண்டார் ........... கடுந்துயரம்

(இதன்பொருள்.) காலை வாய் தழீஅ கொழுநன்பால் வண்டுஆர் அருங்குஞ்சி மாலை தன்வார் குழல் மேல் கொண்டாள் -அற்றைநாள் விடியற் காலத்தே இடைச்சேரியின்கண் பூவலூட்டிய புது மனைக்கண் தன் கணவனைத் தழுவிக்கொண்டு அவன் அதற்குக் கைம்மாறாகக் கொடுத்த அவனுடைய வண்டு ஒலிக்கும் கரிய தலைமயிரில் சூட்டிய மாலையை வாங்கித் தனது நீண்ட கூந்தலின் மேல் அணிந்துகொண்ட கண்ணகி; மாலை வாய் - அற்றை நாள் அந்திமாலைப் பொழுதிலேயே; புண்தாழ் குருதி புறஞ்சோர அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம் கண்டாள் - மெய்யின்கட் புண்ணினின்றும் புறத்தே குதிக்கின்ற குருதியின்கண் கிடக்கும் அவன், தன்னைக் காணாமையாகிய பெரும் துயரத்தைத் தான் கண்டாள் என்க.

(விளக்கம்) ஆர் - ஒலித்தல், குஞ்சி - ஆண் மயிர். கணவன் தன்னைக் காணாததனைத் தான் கண்டாள் என்றது அமங்கலத்தை மங்கலமாகக் கூறியவாறு.

கண்ணகியின் கையறுநிலை

39-42: என்னுறு ............ உரையாரோ

(இதன்பொருள்.) என் உறு துயர் கண்டும் இவள் இடர் உறும் என்னீர் - பெரும! என்னுடைய தனிமை மிக்க துயரத்தைக் கண்டு வைத்தும் யாம் வாய் வாளாது கிடப்பின் இவள் துன்புறுவாள் என்று இரங்குகின்றிலீர்; பொன்உறு நறுமேனி பொடி ஆடிக்கிடப்பதோ - பொற்சுண்ணம் ஆடுதற்கியன்ற நும்முடைய நறிய திருமேனிதான் இவ்வாறு புழுதி படிந்து கிடக்கத் தகுமோ? மன்உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மன்னன் செய்த மிக்க துன்பத்தைச் செய்த தீவினை இத்தகையது என அறியமாட்டாத எனக்கு; என்உறு வினைகாணா இது என உரையாரோ - என் தீவினையே எனக்கு இங்ஙனம் நிகழ்ந்தது காண் என்று இவ்வூரார் சொல்லாரோ, என்றாள் என்க.

(விளக்கம்) பொன் போன்ற மேனி எனினுமாம். பொடி - புழுதி. மன்னனுடைய மறவினை; எனக்குத் துயர் செய்த வினை என இயைக்க. இனி நிலைபெற்ற துயர் செய்த இம்மறவினையை இப்பெற்றியால் முடிந்ததென அறியாதேற்கு எனினுமாம். காணா என்புழி ஆகாரம், அசைச்சொல்.

43-46: யாருமில் ........... உரையாயோ

(இதன்பொருள்.) யாரும் இல் மருள் மாலை - துணையாவார் யாரும் இல்லாத மருட்சியையுடைய இம் மாலைப் பொழுதிலே; இடர் உறு தமியேன் முன் - துன்பமிக்க தமியேனாகிய என் கண் முன்னர்; தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ - மலர் மாலையுள் மூழ்குகின்ற அழகிய நும்முடைய மார்பம் வறிய நிலத்தின்கண் புழுதியில் அழுந்திக் கிடக்கத் தகுவதொன்றோ; பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப - உலகத்திலுள்ளோரெல்லாம் மிகப்பெரிதும் தனது பழியைத் தூற்றும்படி இப்பாண்டிய மன்னன் தவறு செய்தானாகவும்; ஈர்வது ஓர் வினைகாண் ஆ இது என உரையாரோ - இந்நாட்டிலுள்ளார் நின் கணவனை இங்ஙனம் வெட்டுதற்குக் காரணமாக முற்பிறப்பில் நீ செய்த தீவினை காண் இஃது என்று கூறமாட்டாரோ, என்றாள் என்க.

(விளக்கம்) துணையாவார் யாரும் எனவும் கண்முன் எனவும் கூறிக்கொள்க. ஈர்வதோர் வினை வெட்டுவிப்பதற்குக் காரணமான பெரிய தீவினை, என்க.

47-50: கண்பொழி ........... உரையாரோ

(இதன்பொருள்.) கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன் முன் - என் கண்கள் பொழியும் கண்ணீர் இங்ஙனம் இடையறாது சொரிதற்குக் காரணமான கொடிய தீவினையை உடையேனாகிய என் முன்னர் நீவிர்; புண்பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ - வெட்டுண்ட புண்ணினின்றும் குதித்துப் பெருகும் குருதியை உடையீராய் இவ்வாறு புழுதியில் படிந்து கிடப்பது நுமக்குத் தகுவதேயோ; மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறு இழைப்ப - இவ் வுலகத்திலுள்ள மாந்தரெல்லாம் தன் பழியை எவ்விடத்தும் தூற்றாநிற்ப இந்நகரத்து மன்னன் இத் தவற்றினைச் செய்யாநிற்பவும்; இது உண்பது ஓர் வினைகாண் ஆ என உரையாரோ - இதற்குக் காரணம் நீ இங்ஙனம் துன்பம் நுகர்தற்கு உரிய உனது ஊழ்வினையே காண் என்று இந்நாட்டிலுள்ளோர் என்னையும் பழிதூற்றார்களோ என்றாள்; என்க.

(விளக்கம்) கடுவினை - கொடிய தீவினை. கண்முன் என்க. குருதியிர் -குருதியை யுடையீர். மன்பதை - மக்கள் தொகுதி. உண்பது - நுகர்தற்குரிய. வினை என்றது அதன் பயனை. இவையெல்லாம் அழுகையைச் சார்ந்த வெகுளியால் கூறப்பட்டன, மேல் வருவனவும் அன்ன. உண்பதோர் வினை - நின் கணவன் உயிர் உண்பதாகிய பெரிய தீவினை எனினுமாம்.

இவை மூன்றும் முதுபாலை என்னும் காஞ்சித் திணைத்துறை; என்னை? நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து, தனிமகன் புலம்பிய முதுபாலையும் என்பது விதியாகலான் என்க. (தொல், புறத்திணை: 24)

51-61: பெண்டிரும் ........... தழீஇக்கொள்ள

(இதன்பொருள்.) பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டு கொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் - தம்மை மணந்துகொண்ட கணவன்மார் செய்த பெருங்குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும் சால்புடைய; பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கற்புடை மகளிரும் உளரேயோ! கற்புடை மகளிரும் உளரேயோ! சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் - பிறர் ஈன்ற மகவினையும் தம் மகப்போலக் கைக்கொண்டு தாய்போல வளர்க்கின்ற அன்பு முதலிய குணங்களால் நிறைந்த; சான்றோரும் உண்டு கொல்! சான்றோரும் உண்டுகொல் - சான்றோரும் உளரேயோ! சான்றோரும் உளரேயோ! தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!! வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் - கூரிய வாள் உடைய செருக்கினாலே செங்கோன்மையினின்று இழுக்கிய இப் பாண்டியனது இக் கூடலிடத்தே; தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் - தெய்வமும் உளதேயோ! தெய்வமும் உளதேயோ!; என்று இவை சொல்லி அழுவாள் - என்று இன்னோரன்ன பல சொல்லி அழுகின்ற கண்ணகி; கணவன் தன் பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள - தன் கணவனுடைய திருமகள் வீற்றிருக்கும் சிறப்பான மார்பம் தன் மார்போடு பொருந்தும்படி தழுவிக் கொண்டாளாக அவ்வளவில்; என்க.

(விளக்கம்) கற்புடைப் பெண்டிரும் சான்றோரும் தெய்வமும் இக்கூடலில் உண்டாயின் இத்தகைய பெருந்தீவினை நிகழ்ந்திராது ஆதலால் இவர்கள் இங்கு இல்லைபோலும் என்றவாறு. பெண்டிர்- கற்புடைப் பெண்டிர் என்பதுபட நின்றது. கொழுநன் எத்தகைய குற்றம் செய்தாலும் பொறுத்துக்கோடலே கற்புடைப் பெண்டிரின் கடமை என்பது இத்திருமா பத்தினியின் குறிக்கோளாதலின் அக் குறிக்கோளையே கற்புடை மகளிர்க்குச் சிறந்த அடைமொழியாக்கிக் கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் என்றாள். இதுவே கண்ணகியின் உட்கோள் ஆகும் என்பதனை:

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூற

எனவரும் அவள் கூற்றாலேயே (கொலைக்களக், 81-83.) அறிக. எடுத்து வளர்க்குறூஉம் என்றமையால் ஏதிலார் ஈன்ற குழவி என்க. தாமீன்ற குழவியை வளர்ப்பது சால்புடைமைக்கு அறிகுறி என்னல் ஆகாமையும் அறிக. வைவாளில் தப்பிய என்றது கல்லாக் களிமகன் வாளை மன்னன் வாளாகக் கொண்டு கூறியபடியாம். படை வலிமையுண்மையால் பொச்சாப் பெய்திச் செங்கோன்மையிற் றப்பிய எனினுமாம். பொன் - திருமகள். மார்பம் தன்மார்பம் பொருந்தா என்க.

62-67: நின்றான் ......... போனான்

(இதன்பொருள்.) எழுந்து நின்றான் - கோவலன் உயிர்பெற்று எழுந்து நின்றவன்; நிறைமதி வாள்முகம் கன்றியது என்று - நிறைவெண் திங்கள் போன்ற ஒளி பொருந்திய நின் முகம் கன்றியதே என்று வாய் திறந்து பரிந்து சொல்லி; அவள் கண்ணீர் கையால் மாற்ற - அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்து மாற்றா நிற்ப; ஆயிழையாள் ஏங்கி அழுது நிலத்தின் வீழ்ந்து தன் கணவன் தொழுதகைய திருந்து அடியை வளைக்கைத் துணையால் பற்ற - அவ்வளவில் அக் கண்ணகி ஏங்கியழுது நிலத்தின் கண்ணே வீழ்ந்து தன் கணவனுடைய பலரும் தொழத் தகுந்த திருந்திய திருவடிகளை வளையலணிந்த தன் கைகளிரண்டானும் ஆர்வத்தோடு பற்றிக்கொள்ள அவ்வளவில்; பழுது ஒளிந்து எழுந்திருந்தான் - வெட்டுண்டமையினாலுண்டான உடம்பின் பழுது தீர்ந்து உயிரோடு எழுந்திருந்தவனாகிய அக்கோவலன்; எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க எனப்போனான் - ஓவியத்தில் எழுதிய அழகிய மலர் போன்ற மையுண்ட கண்ணையுடையோய்! நீ இருந்திடுக! என்று கூறி மறைந்துபோனவன்; பல் அமரர் குழாத்துளான் - தன்னை எதிர்கொள்ள வந்து வானத்தில் குழுமிய பல தேவர்களுடைய குழுவின்கண் உளன் ஆயினான் என்க.

(விளக்கம்) எழுந்து நின்றான் என மாறுக, அஃது உயிருடன் எழுந்து நின்றான் என்பதுபட நின்றது. கன்றியது என்று என்பது, கன்றியது என்று பரிந்து சொல்லி என்பதுபட நின்றது. ஏங்கியழுது, என மாறுக. தொழுதகைய என்றது பலரும் தொழும் தகுதியையுடைய என்பதுபட நின்றது. கணவன் திருவடியை அவட்குத் தொழுதகைய திருந்தடி என்னல் வேண்டாமை யுணர்க. கைத்துணையால் பற்ற என மாறுக. இஃது ஆர்வத்துடன் பற்ற என்பதுபட நின்றது. பழுது வாளேறுண்டைமையும் குருதி வழிந்தமையும் முதலிய பழுதுகள் என்க. கோவலன் அங்ஙனம் உயிர்பெற்றெழுந்த அவ்வுடம்போடு அமரர் குழுவிற் சேர்ந்தான் என்பதே இளங்கோவடிகளாரின் கருத்தாகும். இக்கருத்தினை முன்னைய உரையாசிரியர்கள் யாரும் அறிந்ததாகத் தோன்றவில்லை கண்ணகியும் கானவர் கட்புலங் காணத் தனதுடம்போடே விட்புலம் புகக் கண்டதாக அக் கானவர் கூறியதனால், இங்கும் அவன் இவ்வுடம்போடு துறக்கம் புக்கான் என்பதே நூலாசிரியர் கருத்தாதல் தேற்றம். அங்ஙனம் கூறலே முறைமையுமாம் என்க. இக் கருத்துணரும் மதுகையின்மையால் இதற்கு முன்னையோர் கூறிய உரைகள் போலி உரை என்றொழிக. செய்யுளும் அவர் கருத்திற் கிணங்காமையால் தத்தம் வாய்தந்தன பிதற்றி யொழிந்தனர்.

அணிசெய் காவியம் ஆயிரம்கற்கினும் கவியுனம் காண்கிலார் என்னும் பாரதியார் செய்யுட்கு இவ்விடத்தே பழைய புதிய உரையாசிரியரனைவரும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வாராயினர் மன்!

68-71: மாயங்கொல் ............... யானென்றான்

(இதன்பொருள்.) மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியது ஓர் தெய்வங்கொல் - கண்ணகி தன் கையாற் பற்றப்பெற்ற அடிகளையுடைய கோவலன் அவட்கு வறுங்கை காட்டி அவள் கண்காணாமல் அவ்வுடம்போடு துறக்கம் புகுவான் மறைந்து போனமையால் மருண்டவளாய் ஈதொரு மாயமோ! இல்லை யெனில் பின் என்னையோ? இவ்வாறு என்னை மருளச்செய்ததொரு தெய்வமும் இங்கு உண்டுகொல்லோ; எங்குப் போய் நாடுகேன் - என் கண் காணாமல் மறைந்துபோன என் காதலனை இனி யான் எங்கே போய்த் தேடிக்காண்பேனோ; பொருளுரையோ இது அன்று - என் காதலன் நீ இங்கு இருந்திடுக என்று பணித்தது பொருளுடையதொரு சொல்லாகுமோ? இல்லை இல்லை அது பொருளுரையன்று! நன்று நன்று; காய் சினந்தணிந்து அன்றிக் கணவனைக் கைகூடேன் - என் உள்ளத்தைச் சுடுகின்ற இச் சினத்தீத் தணிந்தபின் என் கணவனை நாடிப் போய்க் கூடுவதல்லது தணியாமல் அவனைத் தேடிக் கூடுகிலேன்; தீவேந்தன்தனைக் கண்டு - எம்மை இப் பெரும் பழிக்காளாக்கிய கொடுங்கோல் மன்னனாகிய பாண்டியனை நேரில் கண்டு; யான் திறன் கேட்பல் - யான் இதற்குக் காரணங்கேட்டு அறிகுவன்; என்றாள் - என்று வெகுண்டாள், என்க.

(விளக்கம்) மறைந்தவன் எவ்விடத்தான் என்று அறியாமையின் எங்குப்போய் நாடுவேன் என்றாள். தான் மறைந்த பின்னரும் யான் உயிர்தாங்கி இருக்கலாகாமையின் அவன் இருந்தைக்க என்று சொன்ன சொல் வறுஞ்சொல் என்பாள் இதுபொருள் உரை அன்று என்றாள். மன்னவன் தம்மீது அடாப்பழி சுமத்திக் கொன்றான் என்பது கருதி அவன்பால் எழுந்த சினம் மிகுந்துவருதலால் இதற்குத் தீர்வு கண்டன்றி யான் கணவனை நாடிச் சென்றடையேன் என்று தன்னுள் உறுதி கொண்டபடியாம். என்னை?

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்  - குறள். 46.

என்பது, கற்புடை மகளிர்க்கிலக்கணம் ஆகலின் என்க. தீவேந்தன் - கொடுங்கோல் அரசன். இத்திறம் இங்ஙனம் செய்தற்குரிய காரணம். என்றாள் என்பது என்று சினந்தாள் என்பதுபட நின்றது.

கண்ணகி அரண்மனை வாயிலை அடைதல்

72-75: என்றாள் ........... வாயில்முன்

(இதன்பொருள்.) என்றாள் எழுந்தாள் - என்று சினந்தெழுந்த கண்ணகி; இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் - எழுந்தவளுக்குத் தான் ஊரிற்கண்ட தீய கனா தன் நினைவில் வந்துற்றமையால் எழுந்தாங்கு அக்கனவையும் அதனைத் தான் தேவந்திக்குச் சொன்னமையையும் சிறிதுபொழுது நின்று நினைத்துப் பார்த்தாள்; நெடுங்கயல் கண் நீர் சோர நின்றாள் நினைந்தாள் - தனது நெடிய கயல்போலும் கண்களினின்றும் நீர் சொரியும்படி அங்ஙனம் நின்று நினைத்தவளுக்கு அக் கனவிற் கண்டனவெல்லாம் கண்டவாறே நிகழ்ந்து வருதலும் அவற்றிற்கேற்பக் கோவலன் தீங்குற்ற பின்னர்த் தான் காவலன் முன்னர்சென்று கட்டுரைத்தமையும் நினைவில் வந்தமையின் அங்ஙனமே நிகழ்வதாக என்று துணிந்து; நெடுங்கயற்கண் நீர்துடையா - தனது கயல்போலும் கண்ணிற்பெருகி - மறைக்கின்ற நீரைத் துடைத்துக் கொண்டு; அரசன் செழுங்கோயில் வாயில்முன் சென்றாள் - விரைந்து அப்பாண்டிய மன்னனுடைய வளவிய அரண்மனை முன்றிலின் கண் சென்றனள், என்க.

(விளக்கம்) மறைந்தவுடன் வேந்தனைக் கண்டு இத்திறம் கேட்பல் என்று எண்ணி எழுந்த கண்ணகி இவ்வாறே தான் பண்டு கனவு கண்டமையையும், அக்கனாக் காட்சியே இதுகாறும் பலித்து வருவதனையும் நினைத்தாள். அக்கனவில் மன்னன்முன் தான்சென்று வழக்குரைத்தமையும் கண்டிருந்தாளாதலின் அதற்கேற்பவே தனக்கு எண்ணமும் தோன்றுதலால் இனி அதுவே நிகழும் போலும், நிகழவும் வேண்டும், யான் இப்பொழுதே அத் தீவேந்தன்பால் செல்கின்றேன் என்று துணிவு கொண்டு அக்கருத்திற்கேற்ப விரைந்து கோயில் வாயின்முன் சென்றாள் என்க. கண்ணீர் துடைத்தது வழிதெரிதற் பொருட்டு.

பா - மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

ஊர்சூழ் வரி முற்றிற்று


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #28 on: February 28, 2012, 07:25:23 AM »
20. வழக்குரை காதை

அஃதாவது - கண்ணகியார் சீற்றத்துடன் சென்று தம் வருகையை வாயில் காவலருக்கு அறிவிப்ப அவரது சீற்றங் கண்டு வாயில் காவலர் அஞ்சி விரைந்தோடி அரசனுக்கு அறிவித்து அவன் பணித்தபடியே கண்ணகியை அரசன்முன் அழைத்துப் போதலும், கண்ணகியார் அம்மன்னன் அவைக்களத்தேறிச் சீறி நின்று வழக்குரைத்தலும் அதன் விளைவுகளும் கூறும் பகுதி என்றவாறு.

ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா  5
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்

நங்கோன்றன் கொற்றவாயில்   10
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்

வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்  15
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென

ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக்  20
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,
வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து  25
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என

வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி  30
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி  35
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்   40
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என

வருக மற்றவள் தருக ஈங்கென   45
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்

தேரா மன்னா செப்புவ துடையேன்  50
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்  55
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு  60
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை  65
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே

தருகெனத் தந்து தான்முன் வைப்பக்  70
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட

யானோ அரசன் யானே கள்வன்   75
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று  80
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா

அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும்  1
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்  2
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்  3
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

உரை

கோப்பெருந்தேவி தான் கண்ட தீக்கனாவினைத் தன் உசாத்துணைத்தோழிக் குரைத்தல்

1-7: ஆங்கு ........... காண்பென் காண்

(இதன்பொருள்.) ஆங்கு - அவ்வாறு கண்ணகி சீற்றம் சிறந்து அம் மன்னவன் செழுங்கோயில் வாயிலை எய்து முன்னர் அவ்வரண்மனையின்கண் கோப்பெருந்தேவி தான் முதல் நாளின் வைகறை யாமத்தே கண்ட தீக்கனாவினால் கலக்கமெய்தித் தன் தோழிக்குக் கூறுபவள்; எல்லா - தோழீ கேள்! குடையொடு கோல் வீழ - நம்மன்னனுடைய கொற்றவெண் குடையோடு செங்கோலும் ஒருசேர வீழாநிற்ப; கடைமணியின் குரல் நின்று நடுங்கும் காண்பென் காண் - அரண்மனை வாயிலின்கண் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியின் ஒலி இடையறாது நடுங்கி ஒலிக்கவும், கனவு கண்டேன் காண்; அன்றி - இவையே அன்றி; இரு நான்கு திசையும் அதிர்ந்திடும் - எட்டுத் திசையும் நிலம் அதிரா நிற்கும்; கதிரை இருள் விழுங்க காண்பென்காண் -ஞாயிற்றை இருள் மறைக்கவும் கனவு கண்டேன் காண்! எல்லா - தோழீ! இர கொடிவில் இடும் - இரவின்கண் ஒழுங்குபட்ட இந்திரவில் தோன்றவும்; வெம்பகல் கடுங்கதிர் மீன் வீழும் - வெவ்விய பகற்பொழுதிலே மிக்க ஒளியோடு விண்மீன்கள் விழவும் இவை; காண்பென் காண் - இக்கனவுகளையும் கண்டேன் காண்; என்றாள்; என்க.

(விளக்கம்) கடைமணி - முறைவேண்டி வருவோர் ஒலிப்பித்தற் பொருட்டு அரண்மனை முன்றிலில் கட்டப்படுவதொரு பெரிய மணி. குரல் - ஒலி. ஒலி நடுங்குதலாவது இனிதாக ஒலியாமல் கேட்டற் கின்னாவாக ஒலித்தல். நின்று நடுங்கும் என்றது இடையறாது நெடும் பொழுது ஒலிக்கும் என்றவாறு. கதிர் - ஞாயிறு. இர-இரா; குறிய தன் கீழ் ஆகாரம் குறுகி நின்றது. விண்மீன் வீழுங்கால் மிக்க ஒளியோடு வீழக்கண்டேன் என்பாள், கடுங்கதிர் மீன் என்றாள்.

7-12: எல்லா ................ உரைத்துமென

(இதன்பொருள்.) எல்லா -தோழீ! கருப்பம் -இவை எல்லாம் பின்வரும் கேட்டிற்கு முதலாம்; செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து வீழ்தரும் - மன்னவன் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மண்திணிந்த நிலத்தின்கண் சாய்ந்து வீழாநிற்கும்; நம்கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க உள்ளம் நடுங்கும் -நம்மரசனுடைய வெற்றியையுடைய வாயிலின் கண் ஆராய்ச்சி மணி நெடும்பொழுது நடுங்கி ஒலித்தல் கேட்டு என் நெஞ்சமும் அஞ்சி நடுங்கா நின்றது, அன்றியும்; இரவு வில்லிடும் பகல்மீன் விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும்- இரவின்கண் வானத்தே வில் தோன்றும், பகலிலே விண்மீன் வீழும், எட்டுத் திசையும் அதிரா நிற்கும்; இவையெல்லாம் மிகவும் தீய கனாக்களே ஆதலால்; வருவதோர் துன்பமுண்டு - நமக்கு வரவிருக்கின்ற ஒப்பற்ற துன்பம் ஒன்று உளதாதல் தேற்றமாம்; யாம் மன்னவற்கு உரைத்தும் என - யாம் இத் தீக்கனாவீற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இப்பொழுது சென்று நம் மன்னவனுக்கு இவற்றை அறிவிப்பாம் என்று கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) கோப்பெருந்தேவி இவற்றைக் கண்டு தான் அஞ்சுவது தோன்றவும் இதனை அரசனுக்குக் கூறுதல் இன்றியமையாமை தோன்றவும் முற்கூறியதனையே மீண்டும் கூறியவாறாம். கருப்பம் - முதல். முளை எனினுமாம், அறிகுறி என்பது கருத்து. தீக்கனாவிற்குக் கழுவாய் செய்தற்பொருட்டு இவற்றை மன்னவனுக்கு யாம் இப்பொழுதே கூறவேண்டும் என்றவாறு. யாம் உரைத்தும் என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. யாமென்றாள் தம்பிராட்டியாதலால் தன்பெருமிதந்தோன்ற என்பது அரும்பதவுரை. அரசரைத் தம்பிரான் என்றும் அரசர் தேவியைத் தம்பிராட்டி என்றும் வழங்குதல் மலைநாட்டில் இப்பொழுதும் உள்ளது என்பர்.

கோப்பெருந்தேவி தீக்கனாத்திறமுரைப்பத் தன் பரிசனத்துடன் அரசன்பாற் செல்லுதல்

13-17: ஆடியேந்தினர் ..........சூழ்தர

(இதன்பொருள்.) அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் ஆடியேந்தினர் கலன் ஏந்தினர் - ஒளி வீசித் திகழுகின்ற மணி அணிகலன்களை அணிந்த தோழியர் ஆடி ஏந்தியவரும் அணிகலன்களை ஏந்தியவரும்; கோடி ஏந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் - புத்தாடை ஏந்தியவரும் பட்டாடை ஏந்தியவரும்; கொழுவிய வெற்றிலைச் சுருள் பெய்த செப்பை ஏந்தியவரும்; வண்ணம் ஏந்தினர் சுண்ணம் ஏந்தினர் மான் மதத்தின் சாந்து ஏந்தினர் - பல்வேறு வண்ணமுடைய நறுமணச் சாந்தேந்தியவரும் பொற்சுண்ணம் ஏந்தியவரும் கத்தூரிக் குழம்பேந்தியவரும்; கண்ணி ஏந்தினர் பிணையல் ஏந்தினர் கவரி ஏந்தினர் தூபம் ஏந்தினர் - கண்ணி ஏந்தியவரும் பிணையல் ஏந்தியவரும் சாமரை ஏந்தியவரும் நறுமணப் புகை ஏந்தியவரும்; கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர - கூனுடையோரும் குறளரும் மூங்கையரும் ஆகிய இவரோடுங் கூடிய குற்றேவல் புரியும் இளமையுடைய பணிமகளிர் பலர் தன்னை நெருங்கிச் சூழ்ந்து வருமாறு, என்க.

(விளக்கம்) ஆடி - கண்ணாடி. கலன்-அணிகலன். மணியிழையினர் ஆகிய குறுந்தொழில் இளைஞர் எனவும், கூனும் குறளும் ஊமும் கூடிய குறுந்தொழில் இளைஞர் எனவும் தனித்தனி கூட்டுக. இளைஞர் ஆடி முதலியவற்றை ஏந்தினராய்ச் செறிந்து சூழ்தர என இயைத்துக் கொள்க. கோடி-புத்தாடை. திரையல் - வெற்றிலைச் சுருள். சுண்ணம் - பொற்சுண்ணம். மான்மதம்-கத்தூரி விரவிய சாந்தென்க. கண்ணி பிணையல் என்பன மலர் மாலையின் வகை. கூன்குறள் மூங்கை முதலிய உறுப்புக் குறைபாடுடையோர் உவளகத்தே பணிபுரிவோராக இருத்தல் மரபு. இதனை:-

கூனுங் குறளும் மாணிழை மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச்
செலவு கண்ணுற்ற பொழுதின்

எனவரும் பெருங்கதையினும் (1-38. 178-81.) காண்க.

18-23: நரைவிரைஇய ............. கோவே

(இதன்பொருள்.) நரை விரைஇய நறுங்கூந்தலர் பலர் - நரை மயிர் கலந்த நறிய கூந்தலையுடைய செம்முது மகளிர் பலர், உரை விரைஇய வாழ்த்திட - புகழ் விரவிய மங்கல மொழிகளாலே வாழ்த்தா நிற்ப; ஆயமும் காவலும் சென்று - தன்னோடு வருகின்ற மகளிர் கூட்டமும் காவல் மகளிரும் தான் செல்லுந் தோறும் தன் எதிர் சென்று தான் அடிபெயர்த்திடுந்தோறும்; ஈண்டு நீர் வையங் காக்கும் பாண்டியன் பெருந்தேவி வாழ்க எனப் பரசி ஏத்த - கடல் சூழ்ந்த நிலவுலகத்தைக் காக்கின்ற நாங்கள் பாண்டி மன்னனுடைய பெருந்தேவியார் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி, வணங்கிப் புகழா நிற்ப; கோப்பெருந்தேவி சென்று - கோப்பெருந்தேவியானவள் மன்னவன்பாற் சென்று அவன் மருங்கிருந்து; தன் தீக்கனா திறமுரைப்ப - தான் கண்ட தீய கனவுகளின் தன்மையை எடுத்துக் கூற அவற்றைச் செவிமடுத்து; திருவீழ் மார்பின் தென்னவர்கோ- திருமகள் விரும்புதற்குக் காரணமான மார்பினையுடைய தென்னாட்டவர் மன்னனாகிய நெடுஞ்செழியன்; அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன் - சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்தனன் என்க.

(விளக்கம்) ஈண்டு நீர் -கடல். ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் வந்து செறிந்த நீர் நிலையாகிய கடல் என்றவாறு. ஆயம் - மகளிர் குழாம். காவல் - காவல் மகளிர், கஞ்சுகிமாக்களுமாம். தென்னவன் செவிமடுத்து அமளி மிசை இருந்தனன் என்க. திருவீழ் மார்பின் தென்னவர்கோ என்பது திருமகள் கழிகின்ற மார்பையுடைய தென்னவர்கோ எனவும் ஒரு பொருள்தந்து அடிகளார் திருவாயில் தோன்றிய தீய வாய்ப்புள்ளாகவும் நிற்றல் உணர்க.

கண்ணகி தன் வரவினை வாயில் காவலர்க்குக் கூறுதல்

23-29: இப்பால் ............... என

(இதன்பொருள்.) இப்பால் - அரசன் நிலை இங்ஙனமாக முற்கூறிய திருமாபத்தினி அரண்மனை வாயிலை அணுகி ஆங்கு நின்ற வாயில் காவலனை நோக்கி; வாயிலோயே வாயிலோயே -வாயில் காவலனே! வாயில் காவலனே; அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே - தனது நல்லறிவு கீழற்றுப்போன புலங்கெட்ட தீய நெஞ்சத்தாலே செங்கோன்முறைமையின் இழுக்கிய கொடுங்கோன் மன்னனுடைய புல்லிய வாயிலைக் காக்குங் காவலனே! ஈதொன்று கேள்; இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்-இணையாகிய பரலையுடைய சிலம்புகளுள் வைத்து ஒரு சிலம்பினை ஏந்திய கையையுடையளாய்; கணவனை யிழந்தாள் -தன் கணவனை இழந்தவளொருத்தி; கடை அகத்தாள் என்று -அரண்மனை முன்றிலிடத்தே முறைவேண்டி வந்து நிற்கின்றாள் என்று; அறிவிப்பாயே அறிவிப்பாயே என -அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! அக் கொடுங்கோல் மன்னனுக்குச் சென்று சொல்லுதி! என்று கூறா நிற்ப! என்க.

(விளக்கம்) அறைபோதல் - கீழறுத்துப் போதல். அஃதாவது உற்றுழி உதவாமல் கரந்தொழிதல். பொறி - கட்பொறி. அதன் தன்மையாகிய கண்ணோட்டத்தைக் குறித்து அப் பண்பற்ற நெஞ்சத்தின் மேற்றாய் நின்றது. இனி, பொறி - ஆகூழுமாம். இறைமுறை - செங்கோன்மை. இணையரிச் சிலம்பு ஒன்று என்றது, நீ கவர்ந்து கொண்ட அச் சிலம்பிற்கு இணையாகிய மற்றொரு சிலம்பு என்பதுபட நின்றது. கடை - முன்றில். அடுக்கு - சீற்றம்பற்றி நின்றது.

வாயிலோன் மன்னனுக்கு அறிவித்தல்

30-44: வாயிலோன் .............. கடையகத்தாளே

(இதன்பொருள்.) வாயிலோன் - அவ் வாயில் காவலன்றானும் சீற்றம் சிறந்த கண்ணகியின் தோற்றங் கண்டு அஞ்சியவனாய் விரைந்து மன்னன்பாற் சென்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூறுபவன்; வாழி - வாழ்க எம்பெருமான்; எம் கொற்கை வேந்தே வாழி - எம்முடைய கோற்கைத் துறையையுடைய வேந்தனே வாழ்க! தென்னம் பொருப்பின் தலைவ வாழி - தென்றிசைக் கண்ணதாகிய அழகிய பொதியின மலையையுடைய தலைவனே வாழ்க! செழிய வாழி - செழியனே வாழ்க; தென்னவ வாழி - தென்னாட்டை உடைய வேந்தே வாழ்க! பழியொடு படராப் பஞ்சவ வாழி - பழி வருதற்குக் காரணமான நெறியின்கண் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக! செற்றனள் போலும் - நம்பால் கறுவுகொண்டவள் போலவும் அதனால் பெரிதும்; செயிர்த்தனள்போலும் - சினங்கொண்டவள் போலவும்; பொன்தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் - பொன்னாலியன்ற சித்திரச் செய்வினை அமைந்த ஒற்றைச் சிலம்பினைப் பற்றிய கையினளாய்; கணவனையிழந்தாள் - தன் கணவனை இழந்தவள் ஒருத்தி, கடையகத்தாளே- நம் அரண்மனை வாயிலிடத்தே வந்து நிற்கின்றனள், அவள்தான் தோற்றத்தால் மானுட மகள் போல்கின்றாளேனும்; அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந்துணிப பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் - செறிந்து குதிக்கின்ற குருதி அடங்காமையையுடைய பசிய புண்ணையுடைய மயிடாசூரன் என்பானுடைய பிடரோடு கூடிய தலையாகிய பீடத்தின்மேல் ஏறியருளிய இளம் பூங்கொடிபோல்வாளாகிய வெற்றிவேலைப் பற்றிய பெரிய கையினையுடைய கொற்றவை போல்கின்றாள்! ஆயினும் அவளல்லள்; அறுவர்க்கிளைய நங்கை - ஏழு கன்னிகைகளுள் வைத்து ஆறு கன்னிகைகட்கும் இளையவளாகிய பிடாரியோ எனின் அவளும் அல்லள்; இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - முழு முதல்வனாகிய கடவுளைக் கூத்தாடச் செய்தருளிய பத்திரகாளி எனலாமாயினும், அவளும் அல்லள்; சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும் அல்லள் - காட்டினை விரும்பி ஏறிய காளியும் தாருகன் என்னும் அசரனுடைய பெரிய மார்பினைப் பிளந்தருளிய கொற்றவையும் ஆகிய இருவருள் ஒருத்தி என்னலாம் ஆயினும் அவர்களும் ஒருத்தியும் அல்லள்; கணவனை இழந்தாள்- கணவனை இழந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி; கடை யகத்தாளே - நம் அரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள்; கடையகத்தாளே -; நம்மரண்மனை வாயிலின்கண் வந்து நிற்கின்றாள் என்று வாழ்த்துந்தோறும் வாழ்த்துந்தோறும் வணங்கி விதுப்புற்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) கொற்கை - உலகத்திலேயே சிறந்த முத்துப்படும் கடலின் துறைக்கண்ணதாகிய ஒரு பட்டினம். அதன் முத்தினால் அதன் புகழ் அதனையுடைய பாண்டியனுக்காயிற்று. அங்ஙனமே பொதியின் மலையின் சிறப்பும் அவனுக்காயிற்று. ஆதலால் அவற்றை யெடுத்தோதி வாழ்த்தினான், என்க. செழியன் தென்னவன் பஞ்சவன் என்பன அம் மன்னனின் பெயர்கள்.

கண்ணகி உருவத்தாலும் சீற்றத்தாலும் மக்கள் தன்மையில் மிக்கவளாய்க் கொற்றவை முதலிய தெய்வமகளிரே போல்கின்றாள். ஆயினும் பிடர்த்தலைப்பீடம் முதலிய அடையாளங்களின்மையின் அவர்களுள் ஒருத்தி அல்லள் எனத் தெரித்தோதியபடியாம். பசுந்துணி - புதிய புண். பிடர்த்தலை என்றது மயிடாசுரன் தலையை. அறுவர்க்கிளைய நங்கை என்றது பிடாரியை. இறைவன் - அம்பலக் கூத்தன். அணங்கு - பத்திரகாளி. கானக முகந்த காளி - காடுகிழாள். செற்றம் - உட்பகை. செயிர்த்தல் - சினத்தல். கணவனை இழந்தாளாகக் கூறிக்கொள்ளும் ஒருத்தி என்க.

கண்ணகி அரசன் திருமுன் செல்லுதல்

45-47: வருக ........ சென்றுழி

(இதன்பொருள்.) வருக - அங்ஙனமாயின் அவள் இங்கு வருவாளாக! மற்று அவள் தருக ஈங்கு என-அவளை இங்கு அழைத்து வருவாயாக! என்று அரசன் பணித்தமையாலே; வாயில் வந்து கோயில் காட்ட - அவ்வாயிலோன் விரைந்து வந்து கண்ணகியை அழைத்துக் கொண்டுபோய் மன்னவனுடைய அத்தாணி மண்டபத்தைக் காட்டுதலாலே அக்கண்ணகி; கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி - அம் மண்டபத்தின்கண் அரிமானேந்திய அமளிமிசை இருந்த அரசனை அணுகிச் சென்று நின்றபொழுது என்க.

(விளக்கம்) வருக மற்றவன் தருக ஈங்கு என்னுந்தொடர் தனது உடன்பாடும் கட்டளையும் அமைந்த பாண்டியன் மொழி. இவை அம் மன்னன் காட்சிக்கு எளியனும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆதலை நன்குணர்த்துதல் உணர்க. கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை.

அரசன் வினாவும் கண்ணகியின் விடையும்

48-63: நீர்வார் ............ பெயரே என

(இதன்பொருள்.) நீர்வார் கண்ணே எம்முன் வந்தோய் மடக் கொடியோய் நீ யாரையோ - அரசன் கண்ணகியை நோக்கி நீர் ஒழுகுகின்ற கண்ணை உடையையாய் எம்முன்னர் வந்த இளமகளே நீ யார்; என - என்று வினவா நிற்ப அதற்கு விடை கூறும் கண்ணகி; தேரா மன்னா - ஆராய்ச்சியில்லாத அரசனே; சேப்புவது உடையேன் - நின்பால் கூறவேண்டிய குறை ஒன்றுடையேன் காண் யான்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் - சிறிதும் இகழ்தற்கிடனில்லாத சிறப்பினோடே விண்ணவர் தாமும் வியந்து புகழும்படி ஒரு புறாவினது மிக்க துன்பத்தினைத் தீர்த்தருளிய சிபி என்னும் செங்கோல் வேந்தனும் அவனல்லாமலும்; வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் பெறல் அரும்புதல்வனை ஆழியின் மடித்தோன் - அரண்மனை வாயிலிற் கட்டிய ஆராய்ச்சி மணியினது நடுவில் அமைந்த நாக்கு அசையும்படி ஓர் ஆவானது அசைத்து ஒலித்த அளவிலே விரைந்து அங்குச் சென்று அம்மணியை அசைத்த ஆவினது கடைக்கண்ணினின்றும் ஒழுகுகின்ற துன்பக் கண்ணீர் தனது நெஞ்சினைச் சுடுதல் பொறாது அதற்குற்ற குறையை அறிந்தோர்பால் ஆராயந்துணர்ந்து அதற்கிழைத்த குற்றத்திற்கு முறை செய்வான் பெறற்கரும் செல்வமாகிய தன் ஒரே மகனைத் தன் தேராழியின் அடியிற் கிடத்திக் கொன்ற செங்கோல் வேந்தனாகிய மனு நீதிச் சோழன் என்பானும் அருளாட்சி செய்த; பெரும்பெயர் புகார் - பெரிய புகழ் படைத்த பூம்புகார் என்னும் நகரங்காண்; என் பதி -யான் பிறந்து வளர்ந்த இடமாகும்; யான் அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருந்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி- அம்மூதூரின்கண் பிறரால் எட்டியும் சுட்டியும் பழி கூறப்படாத பழஞ்சிறப்பினோடு திகழும் வாணிகர் குடிகளுள் வைத்து வண்மை காரணமாக எழுந்த தனிப்பெரும் புகழ் திசையெலாம் சென்று திகழ்தலையுடைய கொழுங்குடிச் செல்வனாகிய பெருங் குடியிற் பிறந்தவனும் மாசாத்துவான் என்னும் இயற்பெயரோடு மன்னனால் வழங்கப்பட்ட இருதிதிக் கிழவன் என்னும் சிறப்புப் பெயரையு முடையவனும் ஆகிய வணிகனுடைய ஒரே மகனாகப் பிறந்துவைத்தும்; ஊழ்வினை துரப்ப வாழ்தல் வேண்டி - எமது பழவினை செலுத்துதலாலே எங்குலத் தொழில் செய்து நன்கு வாழ்தலை விரும்பி; சூழ்கழல் மன்னா - சுற்றிக் கட்டிய வீரக் கழலையுடைய மன்னனே; நின் நகர்ப் புகுந்து - உனது கோநகரமாகிய இம் மதுரையின்கண் புகுந்து; இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி - இவ்விடத்தே அத் தொழிலுக்கு முதலாக என்னுடைய காற் சிலம்புகளுள் ஒன்றனை விற்றற்கு வந்து; நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி - உன்னாலே கொலைக்களத்தின்கண் வெட்டுண்டு ஒழிந்த கோவலன் என்பவனுடைய மனைவியாவேன் காண்; என் பெயர் கண்ணகி என்பது என - என்னுடைய பெயர் கண்ணகி என்பதுகாண் என்று கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) கண்ணை - கண்ணையுடையாய். யாரையோ என்புழி ஐ -சாரியை. ஓகாரம்: வினா. மடக்கொடியோய் என்றது - இளமகளே என்னுந்துணை. பாண்டியனின் பிழைக்கு அடிப்படையாக அமைந்த ஆராய்ச்சி யின்மையையே அடையாகப் புணர்த்துத் தேரா மன்னா என்ற சொற்றிறம் உணர்க. தேராத எனல் வேண்டிய எச்சம் ஈறுகெட்டது. மன்னா என்றது இகழ்ச்சி. செப்புவது என்றது அறிவிக்கற்பாலது என்பதுபட நின்றது. எள் - எள்ளல்; இகழ்ச்சி. எள்ளறு சிறப்பில் தீர்த்தோன், வியப்பத் தீர்த்தோன், புன்கண் தீர்த்தோன் என அனைத்தையும் தீர்த்தோனுக்கே இணைக்க. புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிபி என்னும் சோழவேந்தன். இதனை:

புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற், சினங்கெழு தானைச் செம்பியன் மருக எனவும், புறவி னல்லல் சொல்லிய கறையடி. யானைவான் மருப்பெறிந்த வெண்கடைக், கோனிறை துலாஅம் புக்கோன் மருக எனவும், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தினேறு குறித்தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின், தபுதி யஞ்சிச் சீரை புக்க, வரையா வீகை யுரவோன் மருக எனவும், நீயே புறவி னல்ல லன்றியும், பிறவும் பலவும் விடுத்தோன் மருகனை எனவும், (புறநா. 34,39,43,46) உடல் கலக்கற வரிந்து தசையிட்டு மொருவன், ஒருதுலைப் புறவொடொக்க நிறைபுக்க புகழும் எனவும்; (கலிங்க, இராச-93) புக்கான் மறா னிறையென்று சரணடைந்த வஞ்சப்புறா நிறைபுக்க புகழோன் எனவும், பிற சான்றோர் கூறுமாற்றானுமுணர்க. ஆவின் கண்ணீர் நெஞ்சு சுடத்தன் புதல்வனை ஆழியின் மடித்து முறைசெய்தோன் மனுநீதிச் சோழன் என்க. இவ் வரலாற்றினைத் திருத்தொண்டர் புராணத்தின்கண் விளக்கமாகக் காணலாம். அன்றியும் சால மறைந்தோம்பிச் சான்றவர் கைகரப்பக், காலை கழிந்ததன் பின்றையு-மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில் (பழமொழி, 3.) எனவரும் வெண்பாவானும் உணர்க. பெரும்பெயர் - பெரிய புகழ். அவ்வூர் என்றது அத்தகைய செங்கோ லரசர் இருந்தினிதாண்ட மூதூர் என்பதுபட நின்றது. ஏசாச் சிறப்பு - பழி கூறப்படாத தொல் சிறப்பு. இசை - கொடையால் வரும் புகழ். மாசாத்து வாணிகன் என்றாள், அவன் புகழ் இம்மன்னன் செவிக்கும் எட்டி இருக்கும் என்னும் கருத்தால், என்னை? அவனுந்தான் மாக வானிகர் வண்கைய னாகலின் என்க. மகனை -ஐ: சாரியை. கோவலன் செல்வம் இல்லாமையால் ஈண்டு வந்தானல்லன்; தன் குல முறைப்படி தானே தொழில் செய்து இனிது வாழ்தல்வேண்டி ஈண்டு வந்தான் என்பது பட, மாசாத்து வாணிகன் மகனையாகியும் வாழ்தல் வேண்டி நின்நகர் புகுந்தான் என்றாள். ஆகியும் எனல் வேண்டிய உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. சூழ்ச்சி நின்கழலுக்கே உளது போலும். செங்கோன்மையில் அது சிறிதும் உடையை அல்லை என்பாள், சூழ்கழல் மன்னா என்றாள். அவன் விற்றற்குக் கொணர்ந்து அவன் மனைவியாகிய என்னுடைய காற்சிலம்பில் ஒன்றே என்று தேற்றுவாள், என் கால்சிலம்பு என்று விதந்தாள். நின்பால் என்றது செங்கோற் சிறப்புச் சிறிதுமில்லாத நின்னிடத்தே என்பதுபட நின்றது. நீ என்னை யார் என்று வினவினாற்போல என் கணவனை வினவச் சிறிதும் முயன்றிலை என்றிகழ்வாள், தேரா மன்னா! யான் அவன் மனைவி என்றாள். அவன் பெயரும் நீ அறியாய் ஆதலின் அவன் பெயர் இது என்பாள் கோவலன் மனைவி என்றாள். ஈண்டு இக்கண்ணகி வழக்குரைக்கின்ற இச்சொற்றிறம் எண்ணியெண்ணி வியக்கற்பாலது ஆதல் உணர்க. அரசன் மீண்டும் தன்னை வினவுதற் கிடனின்றிக் கூற வேண்டியவனைத்தும் எஞ்சாது கூறிவிட்டமை எண்ணுக.

மன்னன் கூற்று

64-65: பெண்ணணங்கே ........... கொற்றங்காணென

(இதன்பொருள்.) பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று - அதுகேட்ட அரசன், நங்காய்! கள்வனைக் கொல்லுதல் செங்கோல் முறைமைக்கு ஒத்ததே அன்றோ? ஆதலால் என்னால் கள்வன் எனத் துணியப்பட்டவனை யான் கொன்றது கொடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம் காண் என - வெள்ளிய வேலாலியன்ற அரசியல் முறைமையே காண் என்று ஒருவாறு கூறா நிற்ப; என்க.

(விளக்கம்) இங்குப் பாண்டியன் கூறிய இச் சொற்கள் கண்ணகி கூற்றை ஆராய்ந்து அதற்கு இயையக் கூறாமல் வேறு வழியின்றி அப்பொழுதைக்குத் தன் வாய் தந்தவற்றைக் கூறியதாதல் உணர்க. கடுங்கோல் - வெம்மை விளைக்கும் கொடுங்கோன்மை. கொற்றம் - அரசு உரிமை.

கண்ணகி கோவலன் கள்வன் அல்லன் எனக் காட்டுதற்குக் கூறும் சான்று

65-67: ஒள்ளிழை ............ அரியேஎன

(இதன்பொருள்.) ஒள்ளிழை - அதுகேட்ட கண்ணகி; நல்திறம் படராக் கொற்கை வேந்தே - நல்ல நெறியிலே ஒழுகாத கொற்கையர் கோமானே! ஈதொன்று கேள்; என்கால் பொன் சிலம்பு மணியுடை அரி என - என்னுடைய காலில் அணியப் பெற்றதும் உன்னால் கைப்பற்றப்பட்டதுமாகிய பொன்னாலியன்ற அந்தச் சிலம்பு தன்னுட் பெய்யப்பட்ட மாணிக்கக் கற்களை உடையது காண் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நின்னுடைய கொற்கையில் வாழ்வோர் உயிருடைய சிப்பிகளைக் கைப்பற்றிக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள முத்துக்களைக் கைக்கொள்ளுவர் அல்லரோ! அவர் வேந்தனாகிய நீயும் அங்ஙனமே செய்தனை என்பாள் மதுரை வேந்தே என்னாது நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்றாள். சிலம்பினுள் மாணிக்கப் பரலிடுதல் அரியதொரு நிகழ்ச்சி ஆகலின் அதனையே சான்றாக எடுத்தோதினள்; பாண்டியன் அரண்மனைச் சிலம்பும் அங்ஙனமிராது என்னும் துணிவு பற்றி என்க.

பாண்டியன் கண்ணகி கூறிய சான்றினைப் பாராட்டுதல்

68-70: தேமொழி .......... முன்வைப்ப

(இதன்பொருள்.) தேம்மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - அதுகேட்ட பாண்டிய மன்னன் நன்று! நன்று! இனிய மொழியையுடைய இந்நங்கை கூறியது செவ்விய நன்மையையுடைய ஒரு மொழியே ஆகும்; யாம் உடைச்சிலம்பு முத்துடைஅரி - எம்முடைய சிலம்பு முத்துக்களைப் பரலாக இடப்பட்டதன்றோ எனத் தன்னுள் கருதிக் கண்ணகியை நன்குமதித்தவனாய் இச் சான்றின் வாயிலாய் உண்மையை உணர விதுப்புற்று; தருக என தந்து தான் முன்வைப்ப - தன் ஏவலரை நோக்கி அச் சிலம்பினை விரைந்து கொணருக என்று பணித்தமையால் அவர் கொணர்ந்து தந்த அச் சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகி முன்னர் வைப்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் - உண்மை உணர்தற்குத் தகுதியான சான்று கூறிய கண்ணகியை இம்மன்னவன் தன்னுள் பெரிதும் பாராட்டி அச் சான்று கொண்டு உண்மை யுணர்தற்கு விதுப்புறுதல் அவனுடைய நடுவு நிலைமையை நன்கு விளக்குதல் உணர்க. உரைத்தது தேமொழி செவ்வை நன்மொழி என மாறி இவள் இப்பொழுது கூறியது இனியமொழி! செவ்விய அழகிய மொழி! எனப் பாராட்டினன் எனலுமாம். உண்மையை உணர்தற்கு அவன் ஆர்வம் உடையதனாலே தான் முன் வைப்ப என்ற இச் சிறு சொற்றொடரே விளக்குதல் உணர்க. அவனுடைய நெஞ்சின் விரைவு நம்மனோர்க்குத் தோன்ற அடிகளார் தருகென தந்து எனச் சொற்சுருங்கச் செய்யுள் செய்தமையுமுணர்க. இன்னும் இவ்வேந்தர் பெருமான் கண்ணகியின் சுடுசொற்களால் சிறிதேனும் சினவாது அமைதியுடையனாய் இருத்தல்தானும் இவன் செவி கைப்பச் சொற்பொறுக்கும் சிறப்புப் பண்புடைய வேந்தன் ஆதலையும் உணர்த்துகின்றது.

கண்ணகி சிலம்பை உடைத்தல்

71-72: கண்ணகி ............ மணியே

(இதன்பொருள்.) கண்ணகி அணிமணி கால் சிலம்பு உடைப்ப - அச் சிலம்பினைத் தன் முன்னர் வைக்கக் கண்டகண்ணகி தானும் விரைந்து தனது அணிகலனாகிய மணிப்பரலைத் தன்னகத்தே யுடைய அச்சிலம்பினைக் கையிலெடுத்து அரசன் முன்னிலையிலேயே பீடத்தில் புடைத்தலாலே; மணி மன்னவன் வாய்முதல் தெறித்தது - அச் சிலம்பினுள் பெய்யப்பட்டிருந்த மணி சிதறுண்டு அரசனுடைய முகத்தினும் பட்டு வீழ்ந்தது என்க.

(விளக்கம்) மணி காற்சிலம்பு-கால் ஈண்டு இடம். மணியைத் தன்னிடத்தே கொண்ட சிலம்பு என்க. இனி மணி பெய்யப் பெற்ற கால் சிலம்பு எனினுமாம். மணி: சாதி ஒருமை.

உண்மையுணர்ந்த பாண்டியன் நிலைமை

72-78: மணிகண்டு .............. வீழ்ந்தனனே

(இதன்பொருள்.) மன்னவன் மணி கண்டு - அப் பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய அம் மாணிக்கப் பரல்களைக் கண்ணுற்ற பொழுதே; தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தனது வெண்கொற்றக் குடை ஒருபால் தாழ்ந்து வீழா நிற்பவும், பிடி தளர்ந்து தனது செங்கோல் ஒருபால் சாயா நிற்பவும்; பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் அவ் வஞ்சகப் பொய்க்கொல்லனுடைய சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? வாய்மையே நோக்கின் இப்பொழுது யானே கோவலனுடைய சிலம்பினைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன்; மன்பதை காக்குந் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது - அந்தோ! மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற இத் தென்றமிழ் நாட்டுச் செங்கோன்முறைமையின் சிறப்பு அறிவிலியாகிய என்னாலே பிழைபட்டொழிந்ததே; என் ஆயுள் கெடுக என - என் வாழ்நாள் இன்னே முடிவதாக! என்று கூறி, மயங்கி வீழ்ந்தனன் - அறிவு மயக்கமுற்று அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தனன்; என்க.

(விளக்கம்) தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் என்றது குடை தாழவும் கோல் தளரவும் என்பதுபட நின்றது. கோவலனுக்குரிய சிலம்பைக் கவர்ந்து கொண்டமையின் யானே கள்வன் என்றான். தென்புலம் காவல் என்புழிக் காவல் செங்கோன்மை மேற்று. என்முதல் - என்னோடு. (என்னால்)

கோப்பெருந்தேவியின் செயல்

78-81: தென்னவன் .......... மடமொழி

(இதன்பொருள்.) தென்னவன் கோப்பெருந்தேவி - பாண்டியன் மருங்கிருந்த கோப்பெருந்தேவி தானும் அவன் மயங்கி வீழ்ந்தமை கண்டு உள்ளங்குலைந்து மெய் நடுங்கியவளாய்; மடமொழி - அவள் தானும் அந்தோ; கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று - தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும்; கணவனை இழந்த கற்புடை மகளிர்க்கு அவ்வாறு சொல்லிக் காட்டுதலும் இயலாமையின் அவ்விழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு இவ்வுலகின்கண் யாதொரு பொருளும் இல்லையே! என் செய்தும்! என்று இரங்கியவளாய்; இணையடி தொழுது வீழ்ந்தனள் - தன் கணவனுடைய இரண்டாகிய திருவடிகளைக் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவாளாயினள் என்க.

(விளக்கம்) தென்னவன் என்பது அவன் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. மருங்கிருந்த கோப்பெருந்தேவி என ஒருசொல் பெய்து கொள்க. கோப்பெருந்தேவி: பெயர். குலைந்தனள்: முற்றெச்சம். குலைந்து நடுங்கிக் காட்டுவது இல் என்று சொல்லிக் கணவன் அடிதொழுது அம் மடமொழி வீழ்ந்தனள் என மடமொழியையும் சுட்டுப்பெயராக்குக.

வெண்பா

1: அல்லவை .......... காண்

(இதன்பொருள்.) பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி - பொல்லாங்குடைய பழியையே தருகின்ற தீவினையைச் செய்த வலிமை மிக்க பாண்டிய மன்னனின் பெருந்தேவியே கேள்; பல் அவையோர் - பல்வேறு அவைகளிடத்தும் சான்றோர்; அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் - தீவினைகளைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே கூற்றமாய் நின்று ஒறுக்கும் என்று விதந்தெடுத்துக் கூறுகின்ற; சொல்லும் பழுது அன்று-செவி அறிவுறூஉவாகிய சொல்லும் பொய்யன்றுகாண்; வாய்மையே! கடுவினையேன் செய்வதூஉம் காண் - இனித் தீவினையாட்டியாகிய யான் செய்கின்ற செயலையும் காண்பாயாக; என்க.

(விளக்கம்) அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் என்பது (நான்மணிக்கடிகை. 83) அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் என்பது மூதுரை. (27) அல்லவை - தீயவை. அவையோர் - அவையிடத்துச் சான்றோர். பழுது - பொய்ம்மை. வடு - பழி. வயவேந்தன் என்றது, வலிமை மட்டும் உடையன் அறமிலாதவன் என்பதுபட நின்றது. கடுவினையேன் என்றது, தான் எய்திய துயரங்களைக் கருதிக் கூறியவாறு. இது கண்ணகியின் கூற்று. பின்வருவன இரண்டும் கண்டோர் கூற்றென்க.

2: காவி .................. கூடாயினான்

(இதன்பொருள்.) காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் - கண்ணகியின் கருங்குவளை மலர் போன்ற கண்களினின்றும் சொரிகின்ற துன்பக் கண்ணீரையும், அவள் கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பினையும் உயிர்நீத்த உடம்பு போன்ற அவள் தன் உருவத்தையும்; காடு எல்லாம் சூழ்ந்த கருங்குழலும் - காடு போன்று அடர்ந்து அவிழ்ந்து சரிநது அவள் உடம்பெல்லாம் சூழ்ந்த அவளது கரிய கூந்தலையும்; கண்டு அஞ்சி - கண்டு அச்சமுற்று; கூடலான் கூடாயினான் - அக் கூடல் நகரத்துக் கோமகன் வறுங்கூடாய்க் கிடந்தான்; பாவியேன் - தீவினையுடையேன் இந்நிகழ்ச்சியைக் கண்கூடாய்க் கண்டேன்; என்க.

(விளக்கம்) இவ்வெண்பா இந்நிகழ்ச்சியை நேரிற் கண்டாரொருவர் கூற்றாக்குக. இந்நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டேன் என அவாய் நிலைபற்றி இசை எச்சமாகச் சில சொல் வருவித்து முடித்துக்கொள்க. காவி - கருங்குவளை மலர். கண்ணுக்கு உவமவாகு பெயர். உடம்பெல்லாம் சூழ்ந்த கருங்குழல். காடுபோலச் சூழ்ந்த கருங்குழல் எனத் தனித்தனி கூட்டுக. கூடாயினான் என்றது அமங்கலத்தை வேறு வாய்பாட்டால் கூறியவாறு.

3: மெய்யில் ............. உயிர்

(இதன்பொருள்.) காரிகை தன் மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் - கண்ணகியினுடைய உடம்பிற் படிந்த புழுதியையும் அவளது விரிந்து கிடந்த கரிய கூந்தலையும்; கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - அவளது கையிலேந்தி வந்த ஒற்றைச் சிலம்பையும் அவள் கண்கள் உகுத்த நீரையும்; கண்டளவே - கண்டபொழுதே; வையைக்கோன் - வையையாறு புரக்கும் பாண்டி நாட்டு மன்னன்; தோற்றான் - வழக்கின்கண் தோல்வியுற்றான்; சொல் செவியில் உண்டளவே - அக்கண்ணகி வழக்குரைத்த சொற்கள் தன் செவியிற் புகுந்தபொழுதே; உயிர் தோற்றான் - உயிரையும் நீத்தான்; என்க.

(விளக்கம்) இதனால், கண்ணகி தன்முன்னர் வந்துற்றபோதே பாண்டியன் நெஞ்சழிந்து போனமையின் அவள் வழக்குரைத்த பின்னரும், கள்வனைக் கோறல் கடுங் கோலன்று வெள்வேல் கொற்றங்காண்! என விளம்பியது வேறு வழியில்லாமையால் ஏதோ ஒன்றனைக் கூறியவாறாதலுணர்க. என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே என்ற பொழுதே அவன் உயிர் நிலைபெயர்ந்தது. உடைத்துழி மணிகண்டு உயிர் போகும் நிலையில் அவன் தன் தவற்றினைத் தானே அரற்றிக்கொண்டு விழுந்து உயிர் நீத்தான் என்றுணர்க. காட்சிக் காதையின்கண்,

செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர்
வஞ்சினஞ் சாற்றிய மாபெரும் பத்தினி

என (73-4) வருதலை யுட்கொண்டு போலும். அரசன் விழ்ந்த பின்னர்க் கண்ணகி தான் ஏந்திச்சென்ற ஒற்றைச் சிலம்பைத் தேவி முன்னே எறிந்தாள் என அரும்பத வுரையாசிரியர் ஈண்டுக் கூறினர்.

வழக்குரை காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #29 on: February 28, 2012, 07:27:47 AM »
21. வஞ்சின மாலை

அஃதாவது பாண்டியன் அரசு கட்டிலில் மயங்கி வீழ்ந்த பின்னர்க் கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி, யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஓட்டேன் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன் என் பட்டிமையும் நீ காண்பாய் என்று வஞ்சினால் கூறிய தன்மையினைக் கூறும் பகுதி என்றவாறு.

கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக  5

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற  10

மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி  15

மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்  20

தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் 25

வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத்  30

தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்  35

பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்  40

யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து  45

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள்  50

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய  55

பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

வெண்பா

பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.

உரை

வஞ்சினங் கூறும் கண்ணகி கோப்பெருந்தேவியை நோக்கிக் கூறுதல்

1-4: கோவேந்தன் ........... பெற்றியகாண்

(இதன்பொருள்.) கோவேந்தன் தேவி -கோப்பெருந்தேவியே கேள்; கொடுவினையாட்டியேன் - கொடிய தீவினையையுடையேனாகிய யான்; யாவும் தெரியா இயல்பினே னாயினும் - இப்பொழுது எவற்றையும் தெரிந்து கொள்ளமாட்டாத தன்மை உடையேனா யிருப்பினும்; பிறன் கேடு முன்பகல் செய்தான் - பிறன் ஒருவனுக்கு முன்பகலிலே தீங்கு செய்தான் ஒருவன்; தன் கேடு - அத் தீமையின் பயனாகத் தனக்கு வரும் தீமைகள் பலவும்; பின்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் - அச் செய்தவனால் அற்றைநாள் பின்பகலிலேயே, காணலுறுகின்ற தன்மையை உடையன காண் என்றாள்; என்க.

(விளக்கம்) தான் கணவனை இழந்து இங்ஙனம் துன்புறுதற்குக் காரணம் தான் முற்பிறப்பிலே செய்த தீவினையே ஆதல்வேண்டும் என்னுங் கருத்தால் கொடுவினையாட்டியேன் எனத் தனக்குப் பெயர் கூறிக்கொண்டனள். என்னை? நோயெல்லா நோய் செய்தார் மேலவாம் (குறள் - 320) என்பதுபற்றி அவ்வாறு கண்ணகி கூறிக்கொள்கின்றனள் என்க. தான் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆளாகி அறிவு மயங்கி இருத்தலால் யான் இப்பொழுது யாவும் தெரியா இயல்பினேன் என்றாள். அங்ஙனமாயினும் நின் கணவனாகிய வேந்தன் செய்தது தீவினையே என்பதில் ஐயமில்லை ஆதலால் அத் தீவினை தானும் இப்பொழுதே தன் பயனை நுகர்விக்கும், பெருந்தீவினை ஆதலால் அவை இப்பொழுது வந்துறும், அதனை நீ அறிந்துகொள் என்று அறிவுறுத்தியவாறு. ஈண்டு - பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும் (குறள், 319); முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் (கொன்றை வேந்தன்); முற்பகல் செய்வினை பிற்பக லுறுநரின் (பெருங்: 1. 56; 259) என்பன ஒப்பு நோக்கற்பாலன.

கண்ணகி எடுத்துக் காட்டிய புகார்நகரத்துப் பத்தினி மகளிர் எழுவர்

(1) 4-6: நற்பகலே ........... மொய்குழலாள்

(இதன்பொருள்.) நற்பகலே வன்னிமரமும் மடைப்பளியும் சான்று ஆக-பிறரெல்லாம் அறிந்து கொள்ளுதற்குக் காரணமான நல்ல பகற்பொழுதிலேயே சான்று ஆகாத அஃறிணைப் பொருள்களாகிய வன்னிமரமும் மடைப்பள்ளியும் தனக்குச் சான்று கூறும் பொருள்களாகும்படி; முன் நிறுத்திக் காட்டிய மொய்குழலாள் - மக்கள் முன்னர்க் கொணர்ந்து நிறுத்திக் காட்டிய அடர்ந்த கூந்தலை யுடையவளும்; என்க.

(விளக்கம்) மக்களெல்லாம் காண்பதற்குரிய பொழுது என்பாள் நற்பகல் என்றாள். சோழநாட்டிலிருந்த ஒரு கற்புடைய மங்கைக்கு வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்று கூறிய வரலாற்றினைத் திருப்புறம்பயத்தும் திருமருகலிலும் இற்றைநாளினும் கூறப்படுகின்றது எனவும், அந்நிகழ்ச்சிக்குரிய அடையாளங்களும் அவ்விடங்களில் இருக்கின்றன எனவும், திருப்புறம்பயத்தில் கோயில் கொண்டருளிய இறைவனுக்குச் சாட்சிநாதர் என்று திருப்பெயருளது எனவும் சான்றோர் கூறுவர். இவ்வரலாறு திருவிளையாடற்புராணத்தும் கூறப்பட்டுள்ளது. திருத்தொண்டர் புராணத்தில் இந்நிகழ்ச்சி திருமருகலில் நிகழ்ந்ததாகச் சிறிது மாறுபாட்டுடன் கூறப்பட்டிருக்கின்றது.

(2) 6-10: பொன்னி .............. மாதர்

(இதன்பொருள்.) கரைப் பொன்னியின் - கரையையுடைய காவிரிப் பேரியாற்றின் நடுவண் சிலமகளிர் விளையாடும்பொழுது; மணற்பாவை நின் கணவன் ஆம் என்று உரைசெய்த - மணற்பாவை செய்து இந்தப் பாவை உன்னுடைய கணவன் ஆகும் என்று ஒருத்திக்கு ஏனைமகளிர் சுட்டிக்கூறி விளையாடா நிற்ப; மாதரொடும் போகான் - அப்பொழுது யாற்றின்கண் புனல் பெருகி வருதல் கண்டு அவ்விடத்தினின்றும் சென்ற அம் மகளிரொடு போகாதவளாய்த் தன் கணவனாகிய அம் மணற்பாவையோடு அவளொருத்தியும் தமியளாய் நின்றாளாக; திரைவந்து அழியாது சூழ்போக - அவளுடைய கற்பிற்கஞ்சி அவ்வியாற்றுநீர் அலையோடு வந்து அம் மணற்பாவையை அழியாமல் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே அம் மணற் பாவையைச் சுற்றிப்போகா நிற்றலால்; ஆங்கு - அவ்விடத்தில் உண்டாகிய; உந்தி நின்ற - ஆற்றிடைக் குறையின்மேல் தன் கணவனாகிய அம் மணற் பாவைக்கும் தனக்கும் தீங்கு சிறிதும் இல்லாதபடி நின்ற; வரிஆர் அகல் அல்குல் மாதர் - வரி பொருந்திய அகன்ற அல்குலையுடைய மடந்தையும்; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லிய வாறோவெனின்: கன்னி மகளிர் சிலர் காவிரியாற்றின் ஓர் இடத்தே மணற்பரப்பில் சிற்றிலிழைத்தும் சிறு வீடு கட்டியும் மணலால் பாவை செய்தும் விளையாடும்பொழுது ஒருத்தி மற்றொருத்தியை நோக்கி இம் மணற் பாவை உன் கணவன் ஆம் என்றாளாக, அவள் அதற்குடன்பட்டு விளையாடியபொழுது, ஆற்று நீர் பெருகி அவ்விடத்தே ஏறுதல்கண்ட மகளிரெல்லாம் விரைந்தோடிக் கரையில் ஏறினராக மணற்பாவையைக் கணவனாகக் கருதிய ஒருத்திமட்டும் அதனைக் கைவிட்டுப் போகத்துணியாளாய் அவ்விடத்தே நிற்பாளாயினள். அவளுடைய கற்புடைமைக்கு அஞ்சிய நீர் அவ்விடத்தை ஒதுக்கிப் பக்கங்களிலே சூழ்ந்து ஓடலாயிற்று. அதனால் அவ்வாற்றிடைக்குறையில் நின்று மணற்பாவையாகிய தன் கணவனைக் காப்பாற்றிய கற்புத்திண்மை யுடையவளும் என்றவாறு. உந்தி - ஆற்றிடைக்குறை. ஆங்கு உண்டான உந்தி என்க. கரைப்பொன்னி என மாறுக.

(3) 10-15: உரைசான்ற ........... போதந்தாள்

(இதன்பொருள்.) உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் - புகழ்மிக்க சோழமன்னனாகிய கரிகாலன் என்னும் திருமாவளவனுடைய மகள்; வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ள - தன் கணவனாகிய சேரமன்னனை நீராடும்பொழுது காவிரிப்பேரியாற்று நீர் கவர்ந்து கொள்ளாநிற்ப; தான் புனலின் பின்சென்று - தன் கணவனைக் காணாது அலமந்து அக் காவிரி நீரின் பின்னே போய்-கல்நவில் தோளாயோ என்ன - கடற்கரையின்கண் நின்று மலையையொத்த தோளையுடைய எம்பெருமானே! என்று பன்முறையும் கூவி அரற்றா நிற்ப; கடல்வந்து முன் நிறுத்திக் காட்ட - அவளது கற்புடைமைக்கு அஞ்சிய கடலானது அவனைக் கொணர்ந்துவந்து அவள் முன்னர் நிறுத்திக் காட்டுதலாலே; அவனைத் தழீஇக் கொண்டு பொன் அம் கொடிபோலப் போதந்தாள் - அக் கணவனைத் தழுவிக்கொண்டு பொன்னாலியன்ற பூங்கொடிபோல மீண்டு வந்தவளாகிய ஆதிமந்தியும்; என்க.

(விளக்கம்) உரை - புகழ், கரிகாலன் வெற்றிப் புகழை இந்திர விழவூர் எடுத்த காதையில் காண்க. கரிகாலன் மகள் ஆதிமந்தி என்னும் பெயருடையவள். வஞ்சிக்கோன் என்றது, இவள் கணவனாகிய சேரமன்னனை. இவன் பெயர் ஆட்டனத்தி என்பதாம். ஆதிமந்தியார் கழார் என்னும் ஊர் மருங்கே காவிரித்துறையில் தன் கணவனாகிய ஆட்டத்தியுடன் நீராடும் பொழுது அவனைக் காவிரி வெள்ளம் கவர்ந்துகொண்டது. ஆதிமந்தி அவனைக் காணாமல் கரை வழியாகத் தேடிச்சென்று கடற்கரையில் நின்று கல்நவில் தோளாயோ என்று கூவி அழைத்து அரற்றும்பொழுது கடல் ஆட்டனத்தியை அவள்முன் கொணர்ந்து நிறுத்தியது என்பர். ஆதிமந்தியின் வரலாற்றினை மள்ளர் குழீஇய விழவி னானும், மகளிர் தழீஇய துணங்கை யானும், யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோராடுகள மகளே யென்கைக், கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த, பீடுகெழு குருசிலு மோராடுகள மகனே (குறுந் -31) என்பதனானும் அகநானூற்றின்கண் (45, 76, 222, 336, 276, 396) செய்யுள்களினும் பரக்கக் காணலாம்.

(4) 15-17: மன்னி ......... நீத்தான்

(இதன்பொருள்.) மணல் பூங்கானல் மன்னி - மணல் மிகுந்த அழகிய கடற்கரைச் சோலையிடத்தே பொருளீட்டுதற்கு மரக்கலத்தில் தன் கணவன் சென்றானாக அப்பொழுதே அக் கானலின் கண் கல்லுருவமாகச் சமைந்திருந்து; வரு கலன்கள் நோக்கி - கரைநோக்கி வந்தெய்துகின்ற மரக்கலன்கள் தோறும் தன் கணவன் வரவினை நோக்கியிருந்து; கணவன்வரக் கல்உருவம் நீத்தாள் - பின்னொரு காலத்துத் தன் கணவன் மரக்கலத்தில் வந்திறங்கியபொழுது அக் கல்லுருவத்தை நீத்துப் பண்டை உருவம் பெற்றவளும்; என்க.

(விளக்கம்) கணவன் மரக்கலமேறிப் பொருளீட்டச் செல்ல அத்துறைமுகத்திலேயே தனது கற்பின் சிறப்பினால் தன்னைக் கல்லுருவமாகச் செய்து அவ்விடத்தேயிருந்து கணவன் மீண்டு வந்தெய்தியவுடன் அக் கல்லுருவத்தைக் கைவிட்டுப் பண்டைய உருவம் பெற்றாள் ஒரு பத்தினி என்க.

(5) 17-19: இணையாய ......... வேற்கண்ணாள்

(இதன்பொருள்.) இணையாய மாற்றாள் குழவி கிணற்றுவீழ - தன் குழந்தைக்கு ஒப்பான தன் மாற்றாளுடைய குழந்தை கிணற்றின்கண்விழுந்துவிட்டதாக அப்பொழுது மாற்றாள் வீட்டிலின்மையால் அப்பழி தன் மேலதாகும் என்று அஞ்சி; தன் குழவியும் கிணற்று வீழ்த்து - தனது குழந்தையையும் அக் கிணற்றினுள்ளே போகட்டாளாக அவள் கற்பின் சிறப்பினாலே இறந்தொழிந்த அக் குழந்தைகள் இரண்டும் உயிர்பெற்றுக் கிணற்றினின்றும் எழுந்து மேலே வருதல் கண்டு; ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் - அக் குழவிகளைத் தன் இரு கையிலும் வாங்கிக் கொண்டு வெளியிலெடுத்துக் கொணர்ந்த வேல்போலும் கண்ணையுடையவளும்; என்க.

(விளக்கம்) மாற்றாள் - தன் கணவனின் மற்றொரு மனைவி. இணையாய குழவி என்க. ஆண்டு முதலியவற்றால் ஒத்த குழவிகள் என்றவாறு. இணையாய மாற்றாள் என்பது மிகை. மாற்றாள் இல்லாத பொழுது அவள் குழவி கிணற்றில் வீழ அப் பழி தன்மேலதாம் என்று அஞ்சித் தன் குழவியையும் கிணற்றில் வீழ்த்த அவள் கற்பின் சிறப்பால் இரண்டு குழவியும் உயிர் பெற்று மேலெழுந்து வர அவற்றைக் கையால் ஏற்றுக் கொண்டு எடுத்தாள் என்க.

(6) 19-23: வேற்றொருவன் ...... பூம்பாவை

(இதன்பொருள்.) வேற்று ஒருவன் - தன் கணவன் வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தபொழுது ஏதிலான் ஒரு காமுகன்; தன் முகத்தின் அழகை; நீள்நோக்கம் கண்டு - நெடிது காமுற்று நோக்குகின்ற நோக்கத்தைப் பார்த்த வளவிலே; நிறைமதி வாள் முகத்தை - முழுத்திங்கள் போன்ற ஒளியுடைய அழகிய தன் முகத்தை; தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று - தானே தன் கற்பின் ஆற்றலால் ஒரு குரங்கின் முகம் ஆவதாக என்று தன்னுட் கருதி அங்ஙனமே யாக்கிக்கொண்டு; போன கொழுநன் வரவே - வேற்று நாட்டிற்குச் சென்ற தன் கணவன் வருமளவும் அக்குரங்கு முகத்தோடே இருந்து அவன் வந்தவுடன்; குரக்குமுகம் நீத்த - அக் குரங்குமுகம் ஒழித்துத் தனக்குரிய பழைய திங்கள்முகத்தைப் பெற்ற; பழுமணி அல்குல் பூம் பாவை - சிவந்த மாணிக்கத்தாலியன்ற மேகலையையுடைய திருமகள் போல்பவளும்; என்க.

(விளக்கம்) வேறொருவன் - அயலான் ஒருவன். நீள்போக்கம் - விடாமல் பார்க்கும் பார்வை. கொழுநன் வருமளவும் இருந்து எனவும், பண்டைய நிறைமதி வாள்முகத்தைப் பெற்ற எனவும் விரித்துக் கூறுக. பூம்பாவை - பூம்பாவை போல்பவள்.

(7) 23-34: விழுமிய ........... பாவை அவள்

(இதன்பொருள்.) விழுமிய தாய் - சிறந்த தன் தாயானவள்; தந்தைக்கு - தன் தந்தையை நோக்கி அன்புடையீர்; திருவிலேற்கு - முன்னை நல்வினை இல்லாத எனக்கு எனது பேதைப் பருவத்தே; யான் வண்டல் அயர்விடத்து - யான் என் தோழியருடன் விளையாடும் பொழுது என்தோழி ஒருத்திக்கு; பெண்ணறிவென்பது பேதைமைத்தே என்று உரைத்த நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே - பெண்ணறி வென்பது பேதையையுடையதேயாம் என்று தேற்றமாகக் கூறிவைத்த நுண்ணறிவுடைய சான்றோர் கருத்தினையும் கருதிப் பாராமல்; எண்ணிலேன் - பின்விளைவினையும் எண்ணிப் பார்த்திலேனாய்; ஒள் தொடியான் ஓர் மகள் பெற்றால் - ஏடீ தோழீ! யான் பிற்காலத்தே ஒரு மகளைப் பெற்றால்; நீ ஓர் மகன் பெறின் - அங்ஙனமே நீயும் ஒரு மகனைப் பெறுவாயானால் அவன்; அவளுக்குக் கொண்ட கொழுநன் - என்னுடைய மகளுக்கு நெஞ்சம்கொண்ட கணவன் ஆகுவன்காண்! இஃது என் உறுதிமொழி ஆகும்; என்று யான் உரைத்த மாற்றம் - என்று யான் அவளுக்குச் சொன்ன மொழியைத் தலைக்கீடாகக் கொண்டு அங்ஙனமே மகனைப் பெற்ற; அவள் கெழுமி உரைப்ப - அத் தோழி என்னை அணுகி அம்மொழியை எடுத்துக் கூறாநிற்ப; கேட்ட விழுமத்தால் - அச்செய்தியை யான் கேட்டமையால் உண்டான இடும்பை காரணமாக; சிந்தை நோய் கூரும் - என் நெஞ்சத்தில் துயரம் மிகுகின்றது கண்டீர்; என்று எடுத்து உரைப்பக் கேட்டாளாய் - என்று இங்ஙனம் தனது அறியாமையால் விளைந்த தவற்றினை எடுத்துக்கூற அச் செய்தியைக் கேட்டவளாய்; முந்தி - தன் தாயின் உறுதிமொழியை நிறைவேற்றுதற்குத் தானே முற்பட்டு; ஓர் கோடிக் கலிங்கம் உடுத்து - திருமணக் கூறையாக ஒரு புத்தாடையைத் தானே உடுத்துக்கொண்டு; குழல் கட்டி - கூந்தலையும் மணமகள் போலக் குழலாகக் கட்டி; நீடித் தலையை வணங்கி - மணப்பெண்போலே நெடிது தன் தலையைக் குனிந்துகொண்டு; தலை சுமந்த - தன் தாயினாலே குறிக்கப்பட்ட அவ்வயலாள் ஈன்ற ஆண் குழந்தையைக் கணவனாகக் கைப்பற்றி அவனைத் தன் தலையிலே சுமந்து கொணர்ந்த; ஆடகப் பூம்பாவை அவள் - பொன்னாலியன்ற திருமகள் போல்வாள் ஆகிய அவளும்; என்க.

(விளக்கம்) இஃது என்சொல்லிய வாறோவெனின்: ஒருத்தி தன் தாயானவள் தன் தந்தையை நோக்கி யான் பேதைப் பருவத்தே விளையாடும்பொழுது விளையாட்டாக என் தோழி ஒருத்திக்கு யான் பிற்காலத்தே மகளைப் பெற்றால் நீ பெறுகின்ற மகனுக்கு அவள் மனைவியாவாள்; இஃது உறுதியென்று கூறியிருந்தேன். நம் மகள் மணப்பருவம் எய்திய பின்னர், அத் தோழி இப்பொழுதுதான் ஒரு மகனைப் பெற்றாள். அவள் என்பால் வந்து அவ் வுறுதிமொழியையும் எனக்கு எடுத்துக்கூறி நினைவூட்டி விட்டாள். அது கருதி யான் வருந்துகின்றேன் என்று கூறினாளாக, அதனைக் கேட்ட அக்கற்புடைய மகள் யான் அச் சிறுவனையே கணவனாகக் கொள்வன் என்று துணிந்து அக் குழந்தையைக் கைப்பற்றித் தான் மணக்கோலம் பூண்டு அக் குழந்தையைத் தன் தலையிலே சுமந்துகொண்டு வந்து புகுந்தனள் என்பதாம்.

ஈண்டுக் கண்ணகியால் எடுத்துக்காட்டிய கற்புடை மகளிரின் வரலாற்றினைக் கீழ்வரும் செய்யுள்களினும் காணலாம். அவை வருமாறு :

கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல் புக்கான்
திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள்
வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள்
புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தாள்
பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையை நுன்கேள்வனெனும்
கன்னியர்க ளொடும் போகாள் திரைகரையா வகைகாத்தாள்
பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி
ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று
மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள்
பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.
முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப்
பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம்
சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள்
பொற்றாவி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே.

(இவை - பட்டினத்துப் பிள்ளையார் புராணம் - பூம்புகார்ச் சருக்கத்திற் கண்டவை.)

கண்ணகியின் சூள்மொழி

34-38: போல்வார் நீடிய .......... விட்டகலா

(இதன்பொருள்.) போல்வார் மட்டு ஆர் குழலார் பிறந்த நீடிய பதிப் பிறந்தேன் -ஆகிய இப் பத்தினி மகளிரும் இவர் போல்வாரும் தேன்பொருந்திய கூந்தலையுடைய பத்தினிமகளிர் பலர் பிறந்த நெடிய பூம்புகார் நகரத்தே பிறந்த; யானும் ஓர் பத்தினியே பட்டாங்கு ஆம் ஆகில் -யானும் அவர்போன்று ஒரு பத்தினியே என்பது உண்மையாக இருக்குமானால்; ஒட்டேன் - இனிதிருக்க விடேன்; அரசோடு மதுரையும் ஒழிப்பேன் - இக்கொடுங்கோல் மன்னனோடு அவனிருந்த இம் மதுரை நகரத்தையும் அழிப்பேன்; என் பட்டிமையும் நீ காண்குறுவாய் - என்னுடைய பட்டிமைச் செயலையும் இனி நீ காண்பாய் காண்; என்னா - என்றுகூறி; விட்டு அகலா - அவ்விடத்தினின்றும் நீங்கி அரண்மனை வாயிலில் வந்துநின்று; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறப்பட்டவரும் இவர் போல்வார் பலரும் பிறந்தபதி என்க. பிறந்தேன்: முற்றெச்சம். பிறந்த யானும் எனவும் பட்டாங்கு ஆமாகில் எனவும் இயைத்துக்கொள்க. இனிதிருக்க என ஒருசொல் வருவித்துக்கொள்க. மதுரையும் என்புழி உம்மை அரசனை ஒழித்ததன்றி மதுரையையும் ஒழிப்பேன் என எச்சப் பொருளுடையது. பட்டிமை - பட்டித்தன்மை. அஃதாவது - அடங்காச் செயல்.

கண்ணகியின் பட்டிமை

39-46: நான்மாட ........... விட்டாளெறிந்தாள்

(இதன்பொருள்.) நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் கேட்டீ மின் - நான்மாடக் கூடல் என்னும் இம் மதுரைமா நகரத்தில் வாழ்கின்ற மகளிரும் ஆடவரும் கேளுங்கள்; இங்குள்ள மாதவரும் பெரிய தவத்தோராகிய அறவோரும்! கேளுங்கள்! வானக் கடவுளரும் கேட்டீமின் - வானத்தே சுடரொடு திரிதரும் முனிவரும் கேளுங்கள்; யான் அமர் காதலன் தன்னை தவறு இழைத்த கோநகர் சீறினேன் - யான் என்னால் விரும்பப்பட்ட என்னுடைய கணவனுக்குத் தவறு செய்த கொடுங்கோன் மன்னனையும் அவன் ஆட்சிசெய்த இந்நகரத்தையும் சினந்து ஒறுக்கின்றேன் ஆதலால்; யான் குற்றமிலேன் என்று - யான் தவறுடையேன் அல்லேன் அறிந்து கொள்மின் என்று கூறி; கையால் இடமுலை திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா - தனது கையாலே இடப்பக்கத்துக் கொங்கையைப் பற்றித் திருகிப் பிய்த்துக் கையில் எடுத்துக்கொண்டு அம் மதுரை நகரத்தை மூன்றுமுறை வலஞ்சுற்றி விரைந்து வந்து; அலமந்து மட்டு ஆர் மறுகில் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் - மனஞ்சுழன்று வண்டினம் தேன் பருகுதற்குக் காரணமான அவ் வாசமறுகினிடத்தே நின்று கையிற் கொண்டுள்ள அழகிய அக்கொங்கையைச் சீற்றத்துடன் சுழற்றி விட்டெறிந்தாள்; என்க.

(விளக்கம்) நான்மாடங்கள் என்பன: திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்பர்; கண்ணி, கரியமால், காளி, ஆலவாய் என்பனவுமாம். வானக் கடவுளர் என்றது தேவமுனிவர்களை. வானவர் எனினுமாம். மாதவர் என்றது அம் மதுரைக்கண் இருந்த துறவோரை. தவறிழைத்த கோவையும் நகரையும் சீறினேன். ஆதலால் யான் குற்றமிலேன் என்றவாறு. மட்டு - தேன். மணி - அழகு. வட்டித்தல் - சுழற்றுதல். விட்டாள் எறிந்தாள்: ஒருசொல்.

கண்ணகி முன்னர்த் தீக்கடவுள் தோன்றிப் பணி வினாதல்

46-52: விளங்கிழையாள் ......... ஈங்கென்ன

(இதன்பொருள்.) விளங்கிழையாள் - கண்ணகி; வட்டித்த - சீற்றத்தோடு வட்டித் தெறிந்தமையால்; எரி மாலை அங்கி வானவன் - தான் பற்றிய பொருளை எரிக்கின்ற தன்மையை யுடைய நெருப்புக் கடவுள்; நீலநிறத்து செக்கர் வார் திரிசடை பால் புரைவெள் எயிற்று பார்ப்பனக் கோலத்து - நீலநிறத்தினையும் சிவந்த நீண்ட முறுக்குண்ட சடையினையும் பால்போன்ற வெள்ளிய பற்களையும் உடைய ஒரு பார்ப்பன வடிவத்தோடு; தான் தோன்றி - தானே எதிர்வந்து; மாபத்தினி - சிறந்த பத்தினிக் கடவுளே! மாண நின்னைப் பிழைத்த நாள் - பெரிதும் நினக்குத் தவறிழைத்த நாளிலே; இந்தப் பதி - இந்த மாமதுரையை; பாய் எரி ஊட்ட; பரவுகின்ற தீயை ஊட்டும் படி; பண்டே ஓர் ஏவல் உடையேனால் - முன்னரே யான் ஓர் ஏவலைப் பெற்றிருக்கின்றேன் ஆதலால் அங்ஙனம் தீயூட்டுங்கால்; ஈங்குப் பிழைப்பார் யார் என்ன - இந்நகரத்தின்கண் அத் தீயில் படாமல் உய்வதற்குரியார் யார்யார் அவரை அறிவித்தருளுக என்று இரப்ப; என்க.

(விளக்கம்) வட்டித்ததனால் அவள் சீற்றத்திற்கஞ்சி அங்கியங் கடவுள் தானே எதிர்வந்து தோன்றி என்க. எரிமாலை அங்கி என மாறுக. மாலை - தன்மை. அங்கி - நெருப்பு. மாண - பெரிதாக என்றவாறு. திண்ணிதாக என்பாருமுளர். யார் என்னும் வினா, யார் யார் என அறிவித்தருளுக என்பதுபட நின்றது. பண்டு - அப் பதி எரியூட்ட ஏவல் பெற்றமை கட்டுரை காதைக்கண் காணப்படும்.

கண்ணகியின் விடை

53-57: பார்ப்பார் ........... கூடல்நகர்

(இதன்பொருள்.) பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு - தீக்கடவுளே! இந்த நகரத்தே வாழுகின்ற பார்ப்பனரும் அறவோரும் ஆக்களும் கற்புடை மகளிரும் முதுமையுடையோரும் குழந்தைகளும் ஆகிய இவரிருப்பிடங்களை அழியாமல் விட்டு; தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று - தீவினையாளர் பகுதிகளில் மட்டுமே எய்துவாயாக என்று; காய்த்திய - அந்நகரினைச் சுடுதற்கு; பொற்றொடி ஏவ - அக்கண்ணகி அந்நெருப்புக் கடவுளை ஏவிய அப்பொழுதே; நல்தேரான் கூடல் நகர் - அழகிய தேரையுடைய பாண்டிய மன்னனுடைய கூடல் என்னும் அம் மதுரை நகரத்தை; அழல் மண்டிற்று - தீப்பிழம்பு பற்றி அழித்தது; என்க.

(விளக்கம்) பார்ப்பார் அறவோர் பசு எனத் திணைவிரவி எண்ணி இவரை என உயர்திணையான் முடிந்தது. தீத்திறத்தார் - தீவினையாளர். காய்த்திய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சுடுதற்கு என்றவாறு. பொற்றொடி : கண்ணகி; (அன்மொழித் தொகை.)

வெண்பா

பொற்பு வழுதியும் ............ மற்று

(இதன்பொருள்.) பொற்பு வழுதியும் பூவையரும் மாளிகையும் வில்பொலிவும் சேனையும் மாவேழமும் கற்பு உண்ண - பொலிவுடைய பாண்டியனும் அவனுடைய பெண்டிரும் மாளிகைகளும் வில்லினாலே பொலிவுறு காலாட்படையும் குதிரைப் படையும் யானைப்படையும் ஆகிய இவற்றை யெல்லாம் கண்ணகித் தெய்வத்தின் கற்புத்தீ உண்ணா நிற்ப; தீத்தரு வெம் கூடல் - அக்கினிக் கடவுள் தருகின்ற வெப்பத்தையுடைய அக் கூடல் நகரத்தினின்றும்; தெய்வக் கடவுளரும் - தெய்வங்களும் முனிவர்களும்; மாத்துவத்தால் மறைந்தார் - தம்முடைய சிறப்புத் தன்மையால் அந்நகரத்தினின்றும் மறைந்து போயினார்.

(விளக்கம்) இவ்வெண்பா பொருட் சிறப்பும் சொல்லழகும் பிறவும் இல்லாத வெண்பாவாகக் காணப்படுதலானும், இது பழைய ஏட்டுப் படிவங்கள் சிலவற்றில் காணப்படவில்லை என்பதனானும் இதனை யாரோ எழுதி இறுதியின்கண் சேர்த்துள்ளார் என்று அறிஞர் கூறுகின்றனர்.

வஞ்சினமாலை முற்றிற்று.