Author Topic: சிலப்பதிகாரம்  (Read 39921 times)

Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #30 on: February 28, 2012, 07:31:04 AM »
22. அழற்படு காதை

அஃதாவது - மதுரை நகரத்தைக் கண்ணகி பணித்தவாறே பார்ப்பார் முதலிய நல்லோரைக் கைவிட்டுத் தீயோர் மருங்கிலே தீப்பற்றி எரிதலும் அப்பொழுது அந்நகரத்தின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்  5

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்  10

ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள   15

நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
(தண்கதிர் மதியத் தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன்  20

நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம்
கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்பச்   25

சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன்
தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன்  30

விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியாத் தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்)
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக் கருவியோடு  35

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்
(வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்  40

தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்  45

பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச்
சாலி அயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) 50

பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி   55

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
(உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன  60

அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி   65

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடொளிப்  70

பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம்
தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக்
கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு  75

நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி
வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப்
பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்  80

சூழொளித் தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு)
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக்  85

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
(கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக்  90

காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச்  95

செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி)
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்   100

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக்
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின்   105

யாமுறை போவ தியல்பன் றோவெனக்
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக்
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்  110

(உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக்
கறவையும் கன்றும் கனலெரி சேரா   115

அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்  120

செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித்
துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம் பரிந்தன பரந்த   125

தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக்
காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத்
திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு
பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி  130

வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத
வருவிருந் தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை  135

கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப்
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல்  140

பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ்  145

ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க்  150

காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்   155
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்.

வெண்பா

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்  160
மதுரா பதியென்னு மாது.

உரை

கோப்பெருந்தேவியின் செயல்

1-7: ஏவல் ................ அறியாது

(இதன்பொருள்.) ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - மதுரையை எரியூட்டுக! எனப் பண்டும் அற்றைநாளும் ஏவல் பெற்றுள்ள அத் தீக் கடவுளின் எரிக்கும்கூறு வெளிப்பட்டு ஆங்காங்குத் தீப்பிழம்பு தோன்றிற்று; காவல் தெய்வம் கடை முகம் அடைத்தன - தொன்றுதொட்டு அந்த நகரத்தைக் காவல் செய்துவந்த தெய்வங்கள் அத் தொழிலைச் செய்யாது தம்முடைய திருக்கோயிற் கதவங்களை அடைத்துக் கொண்டன; அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் - மன்னர் மன்னனும் பகைவரை வெல்லும் போர்த்திறம் உடையவனும் ஆகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; கோல்வளை இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு இருநில மடந்தைக்கு செங்கோல் காட்ட - வளையாத தனது செங்கோல் கோவலன் திறத்திலே வளைந்து கோணிய இடத்தை நிமிர்த்துதற் பொருட்டுத் தனது உயிராகிய ஆணியை வழங்கி அப்பொழுதே அதனை நிமிர்த்துப் பெரிய நிலமகளுக்குப் பண்டுபோலச் செங்கோலாக்கிக் காட்டுதற்கு; புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது - குற்றந்தீர்ந்த கற்பினையுடைய பெருந்தேவியோடு தான் வீற்றிருந்த அரியணையின்மீதே உயிர் துறந்தமை அறியமாட்டாமல்; என்க.

(விளக்கம்) ஏவல் தெய்வம்-தீக்கடவுள். எரிமுகம் திறத்தலாவது - தீப்பற்றிக் கொழுந்துவிட்டு ஒளிர்வது. காவல் தெய்வம் - அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பால்வேறு தெரிந்த வகுப்பினர்க்கும் உரிய நால்வேறு வகைப் பூதங்கள். இனி, இந்திரன், இயமன், வருணன், சோமன் என்பாருமுளர். கடைமுகம் அடைத்தன என்றது, காவாதொழிந்தன என்றவாறு. அரைசர் : போலி. செழியன் தன் செங்கோல் வளைந்த இழுக்கத்திற்குத் தனது உயிராகிய ஆதாரத்தைக் கொடுத்து நிமிர்த்து நிலமகளுக்கு அதனைச் செங்கோலாக்கிக் காட்ட என்க. அவள் புலவாமைப் பொருட்டுக் காட்டியவாறு. மன்னவன் மயங்கி வீழ்தலும் அவன் இணையடி தொழுது வீழ்ந்து வணங்கிய கோப்பெருந்தேவி அவன் அடிவருடி உயிர்நீத்தமை ஈண்டுப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் செழியன் துஞ்சினன் என்பதனால் குறிப்பாகவும் பின்னர்க் காட்சிக்காதையில் (80) தயங்கிணர் ........ (84) மாய்ந்தனள் என வெளிப்படையாகவும் உணர்த்தப்பட்டது. அரைசு கட்டில் - அரியணை. துஞ்சியது - இறந்தது.

அரசியல்சுற்றத்தார் செயல்

8-11: ஆசான் ........... இருப்ப

(இதன்பொருள்.) ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - ஆசிரியனும் பெரிய காலக் கணிவரும் அறக்களத் தலைவர்களும் திருமந்திர ஓலை எழுதுவோரும் ஆகிய இவரோடு; கோயில் மாக்களும் - அரண்மனை அகப்பரிசாரகரும்; குறுந்தொடி மகளிரும் - கோப்பெருந்தேவியைச் சார்ந்த குறிய தொடி யணிந்த மகளிரும் ஆகிய எல்லாரும்; ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப - திகைப்புற்று ஓவியமாக வரையப் பெற்ற அரசியல் சுற்றத்தாரைப் போல வாய்வாளாது செயலறவு கொண்டிராநிற்ப; என்க.

(விளக்கம்) ஆசான் - மன்னனின் நல்லாசிரியன். பெருங்கணி - கணிவர்தலைவன். (கணிவர் -வானநூல் வல்லுநராய்க் காலத்தைக் கணித்தறிவோர்). காவிதி - காவிதிப் பட்டம் பெற்றவர். இவர் தாழ்விலாச் செல்வர் என்க. வரிஇலார் என்பது அரும்பதவுரை. அறக்களம் - அறங்கூறவையம். ஓவியச் சுற்றம் - அரசன் நாளோ லக்கத்தை ஓவியமாக வரைந்தவிடத்து அதன்கண் ஓவியமாக அமைந்த சுற்றம் போல என்க. இவரெல்லாம் கண்ணகியின் சீற்றத்தையும் மன்னனும் பெருந்தேவியும் மயங்கி வீழ்ந்தமையையும் கண்கூடாகக் கண்டமையால் திகைப்புற்று இங்ஙனமிருந்தனர் என்க.

இதுவுமது

12-15 : காழோர் ............. கொள்ள

(இதன்பொருள்.) காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலையுடைய யானைப் பாகரும் குதிரைப் பாகரும் கடிதாகத் தேரினைச் செலுத்தவல்ல தேர்ப்பாகரும் வெற்றி வாய்த்தலையுடைய வாட்படை மறவரும் விரவி மிகுந்து; கோமகன் கோயில் கொற்றவாயில் தீமுகம் கண்டு - அரசனுடைய அரண்மனையினது வெற்றியையுடைய வாயிலின்கண் பற்றி எரியும் தீப்பிழம்பினைக் கண்டு; தாம் மிடை கொள்ள - நிகழ்ச்சி இன்னதென்று அறியாமையால் வேறு காரணத்தால் தீப்பற்றிய தென்று கருதி அதனை அவித்தற்குத் தாமே முற்பட்டு அரண்மனை முன்றிலின்கண் வந்து நெருங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காழ் - குத்துக்கோல். பரிக்கோல் என்பதுமது. வாதுவர் - குதிரைப்பாகர். வாய்த்த வாள் மறவர் என்க. மனம் மயங்கினர் எனினுமாம். தீமுகம் - தீப்பிழம்பு.

வருண பூதங்கள்

(1) பார்ப்பனப் பூதம்

16-36: நித்தில ............ கடவுளும்

(இதன்பொருள்.) நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிர் ஒளி - முத்தாலியன்ற பசிய பூணினது நிலாப்போன்று திகழ்ந்து விளங்கும் ஒளியினையுடைய; (34) முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் - வேள்விக் கருவியோடு மூன்றுவகை வேள்வித் தீயையும் ஓம்புகின்ற தமக்குரிய வாழ்க்கையினது முறைமையினின்றும் தப்பாத மறைமுதல்வனாகிய நான்முகன் வேள்விக்கென வகுத்துக்கூறிய உறுப்புகளோடு கூடிய; ஆதிப்பூதத்து அதிபதிக்கடவுளும் - முதல் வகுப்புப் பூதங்களாகிய பார்ப்பனப் பூதங்களுக்குத் தலைமையையுடைய பார்ப்பனப் பூதக்கடவுளும் என்க.

(விளக்கம்) ஆதிப் பூதம் - பார்ப்பனப்பூதம். அப் பூதத்தின் நிறம் முத்துப்போன்ற வெண்ணிறம் என்க. வேள்விக் கருவியாவன - சமிதை முதலாயின. வேத முதலோன் - நான்முகன்.

குறிப்பு - இக் காதையுள் (............) இங்ஙனம் பகர வளைவுக்குள் அமைக்கப்பட்ட செய்யுட் பகுதிகள் பல ஏட்டுப்படிகளில் காணப்படவில்லை என்பதனாலும், அரும்பதவுரையாசிரியர் இவற்றிலுள்ள அரும்பதங்களில் ஒன்றற்கேனும் உரை வரையாமையானும், இவையெல்லாம் பொருட்சிறப்பு உடையனவாகக் காணப்படாமையானும் இவை பிற்காலத்தே பிறரால் எழுதி இடையிலே சேர்க்கப்பட்டவை என்று அறிஞர் கருதுவதனால் இவற்றிற்கு யாமும் உரை வரையாது விட்டேம். எஞ்சிய பகுதிக்கே உரை ஈண்டு வரையப்பட்டன.

அரச பூதம்

(37-50: ......... )

53-61: பவள .......... கடவுளும்

(இதன்பொருள்.) பவளச் செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - பவளம்போன்ற சிறந்த கதிர் திகழுகின்ற ஒளியையுடைய திருமேனியை உடையவனும்; ஆழ்கடல் ஞாலம் ஆள்வோன் தன்னின் - ஆழ்ந்த கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆளுகின்ற முடிமன்னனைப் போல; முரைசொடு வெள்குடை கவரி நெடுங்கொடி உரைசால் அங்குசம் வடிவேல் வடிகயிறு என இவை பிடித்த கையினனாகி - வெற்றிமுரசும் வெண்கொற்றக் குடையும் வெண்சாமரையும் நெடிய கொடியும் புகழ்மைந்த தோட்டியும் வடித்தவேலும் வடிகயிறும் என்னும் இவற்றை உடைய கையினையுடையவனும்; எண் அருஞ் சிறப்பின் மன்னவர ஓட்டி - எண்ணுதற்கரிய சிறப்புடைய அரசர்களைப் போர்களத்திலே புறங்காட்டி ஓடும்படி செய்து; மண் அகங் கொண்டு - நிலவுலகம் முழுவதையும் தன் ஒரு குடை நீழலின்கண் கொண்டு; செங்கோலோச்சி - செங்கோன்மை செலுத்தி, கொடுந்தொழில் கடிந்து - தீவினை நிகழாமல் விலக்கி; கொற்றங் கொண்டு - வெற்றி கொண்டு; நடும்புகழ் வளர்த்து - என்றும் நிலைபெறுமாறு நாட்டப்பெற்ற தனது புகழை மேலும் மேலும் வளர்த்து; நால் நிலம் புரக்கும் - குறிஞ்சி முதலிய நான்கு வகைப்பட்ட நிலங்களையும் காப்பாற்றியதனால்; உரைசால் சிறப்பின் - பெரும் புகழ் அமைந்த சிறப்பினை உடைமையால்; நெடியோன் அன்ன - நெடியோன் என்று பெயர்பூண்ட பாண்டியனை யொத்த; அரைச பூதத்து அருந்திறல் கடவுளும் - அரசர் வகுப்புப் பூதங்களின் தலைவனாகிய வெல்லுதற்கரிய ஆற்றலுடைய அரச பூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) இப் பகுதிக்கு (52) ஞாலமாள்வோன் என உவமையாகக் கூறப்பட்டவன் அருச்சுனன் என்பர் அரும்பதவுரையாசிரியர். அங்ஙனங் கூறுதற்கு ஈண்டுக் காரணம் காணப்படவில்லை. வாளாது அரசன் எனலே அமையும். முரசம் முதலிய அரசருக்குரிய பொருளெல்லாம் அரச பூதத்திற்கும் உரிய என்று கொள்க. நெடியோன் என்பதற்கு நெடியோனென்னும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்று கூறிப் பொலந்தார் மார்பின் நெடியோன் முன்னீர்விழவின் நெடியோன் எனவரும் அவன் பெயர்களை எடுத்துக்காட்டுவர் உயர்திரு நாட்டார் அவர்கள். இவ்வுரையே ஈண்டைக்குப் பொருத்தமாகத் தோன்றுகின்றது. அரும்பதவுரையாசிரியர் நெடியோன் என்பதனை உலகளந்தோன் எனக் கருதுவர்.

வணிக பூதம்

62-88 : செந்நிற ...... கடவுளும்

(இதன்பொருள்.) செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் - சிவந்த நிறமுடைய புதிய பொன்போன்ற திருமேனியையுடையவனும்; மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி ஒழிய அமைத்த பூணினன் - நிலைபெற்ற சிறப்பினையுடைய மறப்பண்புடைய வேலேந்திய அரசர்களுக்குரிய கோமுடியாகிய அணிகலன் ஒழிய ஏனைய அணிகலம் முழுவதையும் அணிந்தவனும்; வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி- வாணிகர்க்குரிய வணிகத் தொழிலாலே நெடிய இந்நிலவுலகத்தைப் பாதுகாத்து; நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் - கலப்பையினையும் துலாக் கோலையும் ஏந்திய கையினையுடையவனும்; (உரைசால் (67) ......... அளித்தாங்கு (84) .............. ) உழவு தொழில் உதவும் பழுது இல் வாழ்க்கைக் கிழவோன் என்போன் - உழவுத்தொழிலாலே நெல் முதலிய கூலங்களை விளைவித்து உலகில் உள்ள மக்களுக்கு உதவுகின்ற குற்றமற்ற வாழ்க்கைக்கு உரியோன் என்று கூறப்படுபவனும்; கிளர் ஒளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறைவன் வடிவின் - மிகுகின்ற ஒளியினையுடைய தலையின் கண் இளைய பிறைத்திங்களைச் சூடியருளிய இறைவனுடைய வடிவுபோன்ற வடிவத்தையுடையவனும் ஆகிய; ஓர் விளங்கு ஒளிப்பூத வியன்பெருங் கடவுளும் - விளங்குகின்ற ஒளியையுடைய வணிக பூதங்களுக்கு மாபெருந் தலைவனாகிய வணிகபூதமாகிய கடவுளும்; என்க.

(விளக்கம்) அரசர்க்குரிய முடிக்கலன் ஒழிந்த அணிகலன்களும் படைக்கலன்களும் வணிகருக்கும் உள என்பதனை வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய எனவரும் தொல்காப்பியத்தானும் (பொருளதி - 638) உணர்க.

இனி, வணிகருக்கு உழவும் உரியது என்பதனை, மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான எனவரும் தொல்காப்பியத் தானும் (பொருளதி - 633) உணர்க.

செந்நிறப் பசும்பொன் முதலாக வியன்பெருங் கடவுள் ஈறாக வணிக பூதத்தைக் கூறிற்று என்பர் அரும்பத வுரையாசிரியர்.

வேளாண் பூதம்

(89-96: ............... )

97-102: மண்ணுறு .......... தானுந் தோன்றி

(இதன்பொருள்.) மண்ணுறு திருமணி புரையு மேனியன் - கழுவிய நீலமணி போலும் திருமேனியை யுடையவனும்; ஒள் காழக நிறம் சேர்ந்த உடையினன் - ஒளியுடைய கரிய நிறம் பொருந்திய உடையை யுடையவனும்; ஆடற்கு அமைந்த அவற்றொடுபொருந்தி - வேளாண் வாகை சூடுதற்கு வேண்டிய அக்கருவிகளோடு பொருந்தி; பாடற்கு அமைந்த பலதுறை போகி - களம்பாடுவோர் புகழ்ந்து பாடுதற்குரிய பல்வேறு அறத்துறைகளிலும் கடைபோகச் சென்றவனும் ஆகிய; கலிகெழு கூடற் பலிபெறு பூதத்தலைவன் என்போன் தானும் - ஆரவாரமுடைய அம் மதுரை நகரத்திருந்து வேளாண்மாந்தர் இடுகின்ற பலிப்பொருளைப் பெறுகின்ற வேளாண் பூதங்களுக்குத் தலைவன் என்று கூறப்படுகின்றவன் ஆகிய வேளாண்பூதமும் ஆகிய இப்பால் வேறுபட்ட நால்வேறு பூதங்களும்; தோன்றி - வெளிப்பட்டு என்க.

(விளக்கம்) ஆடல் - வெல்லுதல். எனவே வேளாண் வாகை என்பதாயிற்று. அஃதாவது:

மூவரும் நெஞ்சமர முற்றி அவரவர்
ஏவல் எதிர்கொண்டு மீண்டுரையான் - ஏவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவான் உலகுக் குயிர்

என்று வருகின்ற புறப்பொருள் வெண்பா வாலறிக.

அதற்கு அமைந்த பொருள் வித்தும் ஏரும் நிலமும் பிறவும் எனக்கொள்க. பாடல் என்றது, அவர்தம் ஈதல் முதலிய பல அறத்துறைகளையும் பற்றிப் பாடுதல். பாடுதற்கு அமையும்படி அத்துறையில் சிறத்தல் என்க.

இனி, ஆடற்கமைந்தவை வாச்சியங்கள் எனவும் பாடற்கமைந்தவை அவற்றின் பலதுறைகள் எனவும் கூறுவாருமுளர். அங்ஙனங் கூறுவார்க்கு வேளாண்பூதம் என்றல் சாலாது என்க.

மண்ணுறு திருமணி முதலாகப் பலி பெறுபூதத் தலைவன் ஈறாக வேளாண்பூதத்தைக் கூறிற்று. எனவே அவருங் கூறுவர்.

பூதங்க ளந்நகரத்தினின்றும் புறப்படல்

103 - 108: கோமுறை .......... பெயர

(இதன்பொருள்.) கோமுறை பிழைத்த நாளில் இந்நகர் - நம் மன்னன் செங்கோன்மையில் இழுக்கிய நாளிலே இக் கூடல்மா நகரத்தை; தீமுறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது - தீயானது உண்ணும் முறையால் உண்பதற்குரிய தன்மையும் உளதென்பது; ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் - யாம் அறிந்து கொள்ளலாகும் முறைமையாலே அறிந்துள்ளேம் ஆதலால்; யாம் போவது முறை இயல்பன்றோ - அதற்கேற்ப யாம் நம் காவல் கைவிட்டுப் போவது இயற்கையே யன்றோ; என - என்று தம்முள் உடன்பட்டு; கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் - தனது கொங்கையாலே நகரத்தை எரியூட்டக் கருதிய வெற்றியையுடைய கண்ணகி கண்முன்னரே; நால்பால் பூதமும் பால்பால் பெயர-முற்கூறப்பட்ட பார்ப்பனர் வகுப்பு முதலிய நான்கு வகுப்பிற்குமுரிய நால்வேறு பூதங்களும் நகர்காவல் கைவிட்டுத் தத்தமக்கேற்ற இடங்களுக்குச் செல்லாநிற்ப; என்க.

(விளக்கம்) கோ - அரசன். தீயானது அறவோரிடத்தைக் கை விட்டு அல்லாதாரிடங்களை உண்ணுமுறை பற்றி உண்ண என்றவாறு. தெய்வங்களாகிய யாம் எதிர்கால நிகழ்ச்சியையும் அறியக்கூடும் என்பது கருதி ஆமுறையாக அறிந்தனம் என்றவாறு. ஊழ் வினைக்கேற்ப ஒழுகுவது தெய்வங்களுக் கியல்பாதலின் நாம் போவது இயல்பே அன்றோ என்று அப்பூதங்கள் துணிந்தன என்க.

மதுரையின் கலக்கம்

109-112: கூலமறுகு ....... கலங்க

(இதன்பொருள்.) கூலமறுகும் கொடித்தேர் வீதியும் - கூலக் கடைத் தெருவும் கொடியையுடைய தேர் ஓடுகின்ற தெருவும்; பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் - கூறுகூறாக வேற்றுமைப்பட்டுத் தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு வேறுபட்ட மக்கள் வாழுகின்ற தெருவும்; (உரக்குரங்கு உயர்த்த ஒண் சிலை உரவோன் - வலிய குரங்காகிய அநுமக்கொடியை உயர்த்த ஒள்ளிய காண்டிபம் என்னும் வில்லினையுடைய வலியோனாகிய அருச்சுனன்:) கா எரியூட்டிய நாள்போல் கலங்க - காண்டாவனத்தைத் தீ யுண்ணச்செய்த நாளிலே அவ் வனத்தில் வாழ்ந்த உயிரினங்கள் கலங்கினாற்போலக் கலங்காநிற்ப; என்க.

(விளக்கம்) கூலம் - நெல் முதலிய எண்வகைக் கூலங்கள். தேர் வீதி என்றது, அரண்மனை வீதியை. உரக்குரங்கு என்னும் (111) அடி இடைச் செருகல் என்பாருமுளர். எனினும் கா என்றது காண்டாவனத்தையே ஆதலின் அவ்வடி பொருத்தமாகவே தோன்றுகின்றது. மேற்கூறிய தெருவில் வாழும் அறவோரல்லாத தீயோர் மட்டுமே தீயினால் கலங்கினர் என்பது கருத்தாகக் கொள்க.

இதுவுமது

113-118: அறவோர் .............. பெயர்ந்தன

(இதன்பொருள்.) அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - மேற்கூறிய தெருவிடத்தும் பிறவிடங்களினும் அறவோர் வாழும் இடங்களில் அத் தீயானது தன் கொழுந்தினைப் போக்காமல்; மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - தீவினையாளர் சேர்ந்த இடங்களிலெல்லாம் அறிவு மயங்குதற்குக் காரணமான தீ மிக்கெரியா நிற்ப; கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கனலுகின்ற எரியினால் துன்பப்படாமல் அறப்பண்புமிக்க இடையர்கள் வாழுகின்ற அகன்ற தெருக்களை எய்தின; மறவெம் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் மதிற்புறம் பெயர்ந்தன- தறுகண்மையுடைய வெவ்விய களிற்றியானைகளும் இளைய பிடியானைக் கூட்டங்களும் விரைந்து பாயும் குதிரைகளும் தீயினால் ஊறுபடாவண்ணம் மதில் அரணுக்குப் புறத்தேபோய் உய்ந்தன; என்க.

(விளக்கம்) கண்ணகியார் பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர் எனும் இவரைக் கைவிட்டு என்றொழியாது மீண்டும் தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று பணித்தமையால் தீமையற்ற களிறும் பிடியும் குதிரையும் இன்னோரன்ன பிறவும் உய்ந்தன எனக் கொள்க. கறவை - ஆ. அறவை - அறப்பண்பு.

இளமகளிர் செயல்

119 - 127 : சாந்தம் ......... மயங்க

(இதன்பொருள்.) சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை - சந்தனம் திமிர்ந்த அணந்த இளைய அழகிய கொங்கையினையும்; மைத்தடங் கண்ணார் - மை எழுதப்பட்ட பெரிய விழிகளையுமுடைய இளமகளிர்; மைந்தர் தம்முடன் - தத்தம் காதலரோடே; செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுமலர் அவிழ்ந்த நாறு இருமுச்சி - செப்பின்கண் இடப்பட்ட நாளரும்புகள் விரிந்த தேன் பொதுளிய நறிய மணம் பொருந்திய புதிய மலர்களினின்றும் பரவிய மணம் கமழுகின்ற கரிய தமது கூந்தலின்கண்; துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் - செறியக்கட்டிய மலர்மாலைகள் உகுத்த பூந்தாதும்; குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் - குங்குமத்தால் கோலமெழுதப் பட்ட தமது முலைமுற்றத்தின்கண்; பைங்காழ் ஆரம் பரிந்தன  பரந்த பசிய வடத்தின் முத்துக்களும் ஊடலால் அறுக்கப்பட்டு உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற; தூமெல் சேக்கை - தூய மெல்லிய மலர்ப்பாயலின்கண்; துனிப்பதம் பாரா காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க - தம்முடைய ஊடல் தீர்தற்குச் செவ்வி நோக்கி அச் செவ்வி பெற்றுக் காமமாகிய களியாட்டம் ஆடுதற்கு இடம் பெறாது அடங்கித் தீயினால் மயங்கா நிற்பவும்; என்க.

(விளக்கம்) இளமகளிர் - தம் கணவருடன் கலவிசெய்து ஊடிப் பின்னர் அவர் ஊடல் தீர்க்குங்கால் அது தீர்தற்குச் செவ்வி தேர்ந்து இருந்தவர், தம் பள்ளியிலே தீப்பரவியதனாலே அச்செவ்வி பெறாமல் காமக் களியாட்டத்தைக் கைவிட்டுத் தீ முகங்கண்டு அஞ்சி அடங்கி மயங்கினர் என்றவாறு.

தாய்மைப் பருவத்து மகளிர்செயல்

128-131: திதலை ...... போத

(இதன்பொருள்.) திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் - தேமல் படர்ந்த அல்குலினையும் இனிய மணங்கமழும் கூந்தலினையுமுடைய தாய்மைப் பருவத்து மகளிர்கள்; குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைமொழி பேசுகின்ற சிவந்த வாயினையும் குறுகுறு நடக்கும் நடையினையுமுடைய தத்தம் மகார்களை; பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சு நிரைத்த அணையாகிய படுக்கையில் துயிலுகின்ற துயிலினின்றும் எழுப்பி; வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெள்ளிய நரையினையுடைய கூந்தலையுடைய முதிய மகளிரோடு தீயினால் ஊறு சிறிதுமின்றிப் புறம்போகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) குழலியர் என்றது மகப்பெற்று வளர்க்கும் அரிவை தெரிவைப் பருவத்து மகளிர்களை. குதலை - மழலைச்சொல். வால்நரைக் கூந்தல் மகளிர் என்றது தம் மாமியும் செவிலித் தாயரும் பிறரும் ஆகிய முதுமகளிரை - இவரெல்லாம் தீயால் கைவிடப்பட்ட அறவோரல்லாத மகளிர். இல்லம் தீப்பற்றி எரிதலாலே இங்ஙனம் போயினர் என்க.

அறவோராகிய பெருமனைக் கிழத்தியர் செயல்

132 - 137 : வருவிருந்து ........ ஏத்தினர்

(இதன்பொருள்.) வருவிருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி - தம் மனைக்கு வருகின்ற விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று இன்சொற் கூறிஉண்டி உடை முதலியன வழங்கிப் பாதுகாக்கின்ற அறம் முதலிய இல்லின்கண் இருந்து செய்யும் அறங்களில் வழுவாத பெரிய இல்லத்துத் தலைவிமாராகிய கற்புடை மகளிர் கண்ணகியின் வெற்றி கண்டு பெரிதும் மகிழ்ச்சியை அடைந்து; இலங்கு பூண் மார்பின் கணவனை யிழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை - விளங்குகின்ற அணிகலனணிந்த மார்பினையுடைய கணவனை இழந்த அவ்விழப்பிற்குக் காரணமான பாண்டிய மன்னனைத் தமது சிலம்பினால் வென்ற சிறந்த அணிகலன்களையுடைய மகளிர்களுள் தலைசிறந்த கண்ணகியார்; கொங்கைப் பூசல் கொடிதோ அன்று என - தமது கொங்கையால் செய்த இக்கலாம் கொடியதொன்றன்று! இதுதானும் தம்மினத்து மகளிர்க் கெல்லாம் ஏற்றம் தருமொரு நற்செயலே என்று கூறி; பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் - சினந்து எரிகின்ற தீக் கடவுளைக் கைகுவித்துத் தொழுது வாழ்த்துவாராயினர்; என்க.

(விளக்கம்) மனையின்கண் இருந்து செய்யும் அறங்களுள் தலைசிறந்தது விருந்தோம்பும் அறம் ஆதல்பற்றி அதனை விதந்து ஏனையவற்றை மனையறம் என்பதனால் அடக்கினர். அவ்வறங்கள் அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் வருந்தி வந்தோர்க் கீதலும் இன்னோரன்ன பிறவுமாம், என்க. இவ்வறமெலாம் மூட்டாது செய்தற்கியன்ற திருவுடைமை தோன்றப் பெருமனைக்கிழத்தியர் என்றார். கண்ணகியாரின் வெற்றியும் அவர்தம் கொங்கைப் பூசலும் உலகுள்ள துணையும் கற்புடை மகளிரின் சிறப்பிற்குத் தீராத பெருஞ்சான்றாக நின்று நிலவும் என்பது குறித்துப் பெருமகிழ் வெய்தினர் என்பது கருத்து. கற்புடை மகளிர்க்கு உதவியாக அவர் ஏவியபடி ஒழுகுதல் குறித்துத் தீக்கடவுளையும் தொழுதனர் என்க.

நாடக மகளிர் செயல்

138-146: எண்ணான்கு ............. என்ன

(இதன்பொருள்.) எண்ணாண்கு இரட்டி இருங்கலை பயின்ற பண்இயல் மடந்தையர் பயம் கெழு வீதி - அறுபத்து நான்கு பெரிய கலைகளையும் கற்றுத் துறைபோகியவரும் பண்ணுக்கேற்ப விறல் பட நடிப்பவருமாகிய கணிகை மகளிர் வாழுகின்ற கலையினது பயன் பொருந்திய தெருவின்கண்; தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - தண்ணுமையும் முழவமும் இசை தாழ்ந்து முரலுகின்ற இனிய வேய்ந் குழலும் பண்ணும் அவற்றின் திறங்களும் இசைக்கின்ற பண்ணுறுத்தப்பட்ட யாழ்ப் பாடலோடு நடிக்கின்ற அந்நாடக மடந்தையர் தாம் கூத்தாடுகின்ற அரங்குகளையும் தீப்பற்றி எரித்தலாலே அவற்றை இழந்தவராய்ப் புறம்போந்து வீதியிடத்தே வந்து, கண்ணகியாரைக் கண்டு அந்தோ! எந்நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ - இவள் எந்த நாட்டில் பிறந்தவளோ யாருடைய மகளோ; இந்நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந்தப் பாண்டிய நாட்டின்கண் வந்து இம்மதுரை மூதூரின்கண் தன் கணவனையும் இழந்து; தோர மன்னனைச் சிலம்பின் வென்று - ஆராய்ச்சி இல்லாமல் செங்கோன் முறைமை பிழைத்த பாண்டிய மன்னனைத் தனது சிலம்பினாலேயே வென்று; இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள் என்ன - இப் பேரூரை இவ்வாறு தீக்கிரையாக்கிய ஒப்பற்ற இக் கற்புடைமகள்! என்று கண்ணகியார்க்கு இரங்கா நிற்ப என்க.

(விளக்கம்) கலைபயின்ற மடந்தையருடைய வீதியின்கண் தண்ணுமை முதலிய கருவிகளோடு ஆடு அரங்கையும் அந்நாடக மடந்தையர் இழந்து புறம்போந்து ஆங்குக் கண்ணகியைக் கண்ணுற்று இவ்வொரு மகள் எந்நாட்டாள் கொல் யார்மகள் கொல் என்று இரங்காநிற்ப என்று இயைத்துக் கொள்க.

கண்ணகியின் நிலைமையும், அவள் முன் மதுராபதி என்னும் தெய்வம் வந்து தோன்றுதலும்

147-157: அந்திவிழவும் ........ மதுராபதியென்

(இதன்பொருள்.) அந்திவிழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் - நாள்தோறும் நிகழ்கின்ற மாலைக் காலத்துத் திருவிழாக்களும் வேதம் ஓதும் முழக்கமும் செந்தீயின்கண் அவிசொரிந்து பெய்யும் வேள்வியும் திருக்கோயில் தோறும் மக்கள் சென்று தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடுகளும்; மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மனைகள் தோறும் மகளிர் நெல்லும் மலரும் தூவித் திருவிளக் கேற்றுதலும் மாலைப் பொழுதில் விளையாட்டயர்தலும்; வழங்கு குரல் முரசமும்; வழக்கமாக மாலைக் காலத்தே முழங்குகின்ற முரச முழக்கமும்; மடிந்த மாநகர் - இல்லையான அந்தப் பெரிய நகரத்தின்கண்; காதலன் கெடுத்த நோயொடு - தன் கணவனை இழந்தமையால் உண்டான பெருந் துன்பமாகிய தீயினால்; உளம் கனன்று ஊதுஉலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து - நெஞ்சம் வெதும்பி ஊதுகின்ற கொல்லனது உலையினிடத்துத் துருத்தியைப் போல வெய்தாக நெடுமூச் செறிந்து; மறுகிடை மறுகும் கவலையில் கவலும் நெடுந் தெருக்களிடத்தே சுழன்று திரிவாள் குறுந்தெருக்களிடத்தே கவலையுற்றுத் திகைத்து நிற்பாள்; இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் - பின்னர்ச் செல்லுதலும் செய்வாள், சென்றவிடத்தே யாதொன்றும் தோன்றாமல் நின்று மயங்குதலும் செய்வாள்; இவ்வாறாக; ஆர் அஞர் உற்ற வீரபத்தினி முன் - பொறுத்தற்கரிய துன்பமெய்திய சீறிய பத்தினியாகிய அக் கண்ணகியின் முன்; கொந்து அழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள் - அம் மாநகரத்தின்கண் கொத்துக் கொத்தாய்ப் பற்றி எரிகின்ற தழலினது வெப்பத்தையுடைய மிக்க நெருப்பினைக் கண்டு நெஞ்சம் பொறுக்க கில்லாளாய்; மதுராபதி வந்து தோற்றினள் - மதுராபதி என்னும் அந்நகரத்துக் காவல் தெய்வம் உருவங் கொண்டு வந்து தோன்றுவாளாயினள்; என்க.

(விளக்கம்) அந்திவீழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் முரசம் முழங்குதலும் அந்நகரத்தே நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகள். அவையெல்லாம் அற்றை நாள் நிகழா தொழிந்தன என்றவாறு. ஆரணம் - வேதம். வேட்டல் - வேள்வி செய்தல். விளக்குறுத்தல் - திருவிளக்கேற்றுதல். மாலை அயர்தல் - மாலைப்பொழுதில் விளையாடுதல். முரசம் வழங்கு குரலும் என மாறுக. குருகு - துருத்தி. உயிர்த்தனள் உயிர்த்து - உயிர்த்தனளாய் உயிர்த்து என்க. கவலை - சந்திகளுமாம். கவலுதல் - துன்பத்தால் திகைத்தல். இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் என்பன அவற்றின் மிகுதி தோற்றுவித்தன. சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் என்பது மணிமேகலை; (மணி -3; 111-2.) கொந்து - கொத்து. வெம்மையையுடைய எரியைப் பொறாதவளாய் என்க. காவல் தெய்வம் ஆதலின் அந்நகரம் தீப்பற்றி எரிதலைப் பொறுக்கமாட்டாளாய் அதற்குத் தீர்வு காணவேண்டி வீரபத்தினி முன் வந்து தோன்றினள் என்பது கருத்து. 

வெண்பா

மாமகளும் ......... மாது

(இதன்பொருள்.) நாம் முதிராமுலை குறைத்தாள் முன்னர் - அச்சத்தைச் செய்கின்ற இளமையையுடைய தனது கொங்கையில் ஒன்றனைத் திருகி எறிந்த அவ் வீரபத்தினி முன்னர்; மாமகளும் நாமகளும் மாமயிடன் செற்று உகந்த கோமகளும் - திருமகளும் நாமகளும் கரிய மயிடன் என்னும் அசுரனைக் கொன்று மறத்தாலே உயர்ந்த தலைமை சான்ற கொற்றவையும் ஆகிய இந்த மூன்று இறைவிமாரும்; படைத்த கொற்றத்தாள் - எய்தியுள்ள வெற்றி முழுவதும் தானே படைத்துள்ள; மதுராபதி என்னும் மாது வந்தாள் - மதுராபதி என்னும் தெய்வ மடந்தை துணிவோடு வந்தனள் என்க.

(விளக்கம்) மாமகள் - திருமகள். மாமயிடன் என்புழி, மா - கருமை. மகிஷன் என்பது மயிடன் என வந்தது. எருமை உருவம் உடையன் ஆதலின் இவன் மகிடா சுரன் எனப்பட்டான். வீரபத்தினி முன் வருவதற்கு வேண்டும் துணிவுடையாள் இம்மதுராபதி என்றுணர்த்தற்குத் திருமகள் முதலிய மூவருடைய வெற்றியையும் ஒரு சேர உடையாள் இவள் என்றார். எனவே, இவள் இறைவனுடைய ஒரு பாகத்தே யமைந்த இறைவியே ஆதல் பெற்றாம். அடுத்துவரும் காதையின் தொடக்கத்தே அடிகளார் இம் மதுராபதியை வண்ணிக்கு மாற்றாலும் அது விளங்கும்.

அழற்படு காதை முற்றிற்று
.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #31 on: February 28, 2012, 07:36:11 AM »
23. கட்டுரை காதை

அஃதாவது - ஆரஞர் உற்ற வீரபத்தினிமுன் அஞ்சாது வந்து தோன்றிய மதுராபதி என்னும் அம் மாபெருந்தெய்வம் கண்ணகிக்குக் கோவலன் கொலையுண்டமைக்குக் காரணமும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய செங்கோன் முறைமையும் மதுரை தீக்கிரை ஆதற்குக் காரணமும் இனிக் கண்ணகி எய்தும் நிலைமையும் ஆகிய அறிதற்கரிய பொருள் பொதிந்த மொழிகளை அறிவித்து அவட்கு விதிமுறை சொல்லிச் சினந்தணிவித்து மதுரையை அழல் வீடு கொண்ட செய்தியும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

கட்டுரை - பொருள் பொதிந்த உரை. அழல் வீடு கொள்ளல் நகரை மேலும் நெருப்புண்ணாமல் பாதுகாத்தல் (கண்ணகியின் சினத்தீ தணிவித்தலும் கொள்க.)

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்   5

வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக்  10

கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன்  15

முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோவென   20

ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி
பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் 25

வருந்திப் புலம்புறு நோய்
தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை; காதின்   30

மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்  35

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40

இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து  45

மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்   50

உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை
இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை  55

திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்  60

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி   65

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க  70

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்   75

பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி  80

கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்  85

தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்  90

ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து  95

முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப்  100

கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில்  105

புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவந் திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்  110

கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென
ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப
நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி  115

அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்  120

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவந் திறந்தது   125

சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக்  130

கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண  135

உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்   140

காம்பெழு கானக் கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ்  145

செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும்   150

சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்  155

ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ  160

ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்  165

கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ   170

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை  175

ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக்  180

கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு  185

அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்  190

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி  195

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்.  200

வெண்பா

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்  5

ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும்  10

நேரத் தோன்றும் வரியுங் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வடஆரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாணப்   15

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கிக் கிடந்த   20

உரை

மதுராபதியின் மாண்பு

1-10: சடையும் ........... தகைமையள்

(இதன்பொருள்.) சடையும் தாழ்ந்த பிறையும் சென்னி குவளை உண்கண் தவள வாள்முகத்தி - சடையையும் அதனிடத்தே தங்கிய பிறையையும் உடைய தலையினையும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்ணையுடைய வெண்ணிறமான ஒளி பொருந்திய திருமுகத்தையு முடையவளும்; கடை எயிறு அரும்பிய பவளச் செவ் வாய்த்தி - கடைவாயின்கண் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற எயிற்றினையுடைய பவளம் போன்று சிவந்த வாயையுடையவளும்; இடைநிலா விரிந்த நிலத்தில நகைத்தி - அவ் வாயினிடத்தே நிலா ஒளி விரிந்து திகழுகின்ற முத்துக்கோவை போன்ற பல் வரிசையினை யுடையவளும்; இடமருங்கு இருண்ட நீலம் ஆயினும் வலமருங்கு பொன்நிறம் புரையும் மேனியள் - தனது இடப்பாகம் இருண்ட நீலமணிபோன்ற நிறமுடையதாயிருப்பினும் வலப்பாகம் பொன்னினது நிறத்தை ஒக்கும் நிறமுடைய திருமேனியையுடையவளும்; இடக்கை பொலம் தாமரைப்பூ ஏந்தினும் வலக்கை அம்சுடர் கொடுவாள் பிடித்தோள் - தனது இடக்கையின்கண் பொற்றாமரை மலரை ஏந்தியிருப்பினும் வலக்கையின்கண் அழகிய ஒளியையுடைய மழுவை ஏந்தியவளும்; வலக்கால் புனைகழல் கட்டினும் - தனது வலக்காலிடத்தே அழகிய வீரக்கழலை அணிந்திருந்தாளேனும்; இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் - இடக்காலிடத்தே ஒப்பற்ற சிலம்பு கிடந்து ஒலிக்கின்ற தன்மையுடையவளும்; ஆகிய இம் மதுராபதிதானும்; என்க.

(விளக்கம்) தகைமையள் ஆகிய - (13) கிழத்தி என இயையும். முகத்தி, வாய்த்தி, நகைத்தி, மேனியள், பிடித்தோள், தகைமையள் என்பன கிழத்தி என்னும் ஒருபொருள்மேல் பல பெயர்கள் அடுக்கி வந்தன. இவையிற்றை நோக்கின் மதுராபதி என்னும் இத் தெய்வத்தின் உருவம் அம்மையப்பனாம் இறைவனுடைய திருஉருவம் என்பது புலப்படும். இத் தெய்வமே பிற்றைக் காலத்தில் அங்கயற்கண்ணியும் சோமசுந்தரக் கடவுளுமாகக் கொள்ளப்பட்டது போலும். அக்காலத்தே மதுராபதி என்னும் பெயரோடு இத்தெய்வம் பாண்டிய மன்னர் குலதெய்வமாகவும் மதுரை நகரத்தின் காவல் தெய்வமாகவும் கொள்ளப்பட்டது, என்க.

இடக்கால் தனிச்சிலம்பரற்றினும் வலக்கால் புனைகழல் கட்டும் தகைமையள் என்றும் பாடம். கடை எயிறு என்பதற்கு, பன்றிக் கொம்பு போலப் புறப்பட்ட எயிறு என்பது அரும்பதவுரை. கொடுவாள் - மழு.

10-17: பனித்துறை .............. குறையென

(இதன்பொருள்.) பனித்துறைக் கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டுவரம்பன் பொதியிற் பொருப்பன் - சிறந்த முத்தினையுடைய துறையினையுடைய கொற்கைப்பட்டினத்தின் தலைவனும் தென்குமரி என்னும் செந்தமிழ் நாட்டுத் தெற்கெல்லையாகிய கடல் துறையையுடையவனும், பொன்னாகிய குவட்டை யுடைய இமயமலையினைத் தனதாட்சிக்கு வடவெல்லையாக உடையவனும் கன்னித்தமிழ் தோன்றிய பொதியின் மலையினை யுடையவனும் ஆகிய பாண்டிய மன்னனுடைய குலமாகிய; குலமுதல் கிழத்தி ஆதலின் - இறைக் குலத்தை அது தோன்றிய காலந் தொடங்கிக் காத்துவருகின்ற உரிமை உடையாளாதலின்; அலமந்து ஒருமுலை குறைத்த திருமாபத்தினி - தன் கணவனை இழந்தமையாலே பெரிதும் வருந்தித் தனது ஒரு கொங்கையினைத் திருகி வீசி மதுரையை எரியுண்ணச் செய்த திருமாபத்தினியாகிய; அலமருதிரு முகத்து ஆயிழை நங்கைதன் - தனது மனச்சுழற்சி வெளிப்பட்டுத் தோன்றுதற்கிடனான திருமுகத்தையுடைய மாதருள் தலைசிறந்த மங்கையாகிய கண்ணகியின்; முன்னிலை ஈயாள் - முன்னே தோன்றுதற்குத் துணியாதவளாய், பின்னிலைத் தோன்றி - அம் மாபத்தினிக்குப் பின்னர்த் திருவுருக்கொண்டு அவளைத் தொடர்ந்து சென்று; நங்கை - மாதர் மணிவிளக்கே; வாழி - நீ நீடூழி வாழ்வாயாக! என் குறைகேட்டிசின் என - யான் நின்பால் கூறுதற்குரிய என் காரியம் ஒன்றுண்டு அதனைக் கூறுவேன் கேட்பாயாக! என்று கூறி இரவா நிற்ப, என்க.

(விளக்கம்) மதுராபதி என்பது அதிகாரத்தாற் பெற்றாம். ஈண்டும் கொண்கன் துறைவன் வரம்பன் பொருப்பன் என்னும் பல பெயர்கள் பாண்டியன் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்தன. அத் தெய்வம் திருமாபத்தினிமுன் வருதற்குக் காரணம் தெரித்தோதுவார் குலமுதற் கிழத்தியாதலின் என்றார். நங்கையின் சீற்றத்திற்குத் தானும் அஞ்சி முன்னில்லாது பின்னிலைத் தோன்றினள் என்பது கருத்து. குறை - காரியம். இசின்: முன்னிலையசை. தெய்வம் அலமந்து அலமரும் நங்கை பின்தோன்றி எனினுமாம். இதற்குத் தெய்வம் தன் காவலிற்பட்ட மன்னனும் அவன் நகரமும் அழிதற்கு அலமந்தது என்பது கருத்தாகக் கொள்க. அலமருதல் - துன்பத்தால் சுழலுதல்.

கண்ணகி கூற்று

18-20: வாட்டிய .............. என

(இதன்பொருள்.) வாட்டிய திருமுகம் வலவயின் சோட்டி - அம் மதுராபதியின் வேண்டுகோளாகிய மொழியைக் கேட்டலும் அக்கண்ணகித் தெய்வந்தானும் துயரத்தால் வாடிய தனது திருமுகத்தை வலப்பக்கமாகத் திருப்பி அம் மதுராபதியை நோக்கி; என்பின் வருவோய் நீ யாரை - என்பின் வருகின்ற நீதான் யார்; என்னுடை ஆர்அஞர் எவ்வம் அறிதியோ என - நீதான் என்னுடைய பொறுத்தற்கரிய பெருந்துன்பத்தின் தன்மையை உணர்ந்துள்ளாயோ? எற்றிற்குப் பின்வருதி? என்று வினவா நிற்ப என்க.

(விளக்கம்) வாட்டிய - வாடிய; விகாரம். கோட்டுதல் - ஈண்டுத் திருப்புதல். யாரை என்புழி ஐகாரம்: சாரியை. அஞர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி.

மதுராபதியின் விடை

21-30: ஆரஞர் ................ வந்தவினை

(இதன்பொருள்.) அணியிழாய் - நங்காய்! ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் - யான் நினது பொறுத்தற்கரிய மாபெருந்துன்பத்தின் தன்மையை நன்கு அறிந்துள்ளேன் காண்: மாபெருந் கூடல் மதுராபதியென்பேன் - யான் மிகப்பெரிய இக் கூடன்மா நகரத்தின் காவல் தெய்வமாகிய மதுராபதி என்னும் தெய்வங் காண்! கட்டுரை யாட்டினேன் - யான் நின்பால் கூறுதற்குரிய பொருள் பொதிந்த மொழி ஒன்றுடையேன்; நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யானும் நின்னுடைய கணவனின் பொருட்டுப் பெரிதும் துன்பமுடையேன் காண்! பைந்தொடி கேட்டி - பசிய தொடியினையுடைய நங்கையே! எனது கட்டுரையைக் கேட்பாயாக! பெருந்தகைப் பெண் - பெண்டிர்க்குரிய பெருங்குணங்கள் எல்லாம் உடைய பெண்மணியே; என் நெஞ்சம் வருந்திப் புலம்புறும் நோய் ஒன்று கேளாய் -என் நெஞ்சமானது பெரிதும் வருந்தித் தனிமையுறுதற்குக் காரணமான துன்பம் ஒன்றனைக் கேட்பாயாக; தோழி நீ எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக்கடை ஈதொன்று கேட்டி - என் தோழியே! எம்மரசனுக்கு ஊழ்வினை வந்த வகையாகிய ஈதொரு செய்தியையும் கேட்பாயாக! மாதராய் உன் கணவற்குத் தீதுஉற வந்தவினை ஈதொன்று கேள் - பெண்ணே! உன்னுடைய கணவனுக்குத் தீமை உறுதற்குக் காரணமாக வந்துற்ற பழவினையின் செய்தியாகிய பிறிதொன்றனையும் கூறுவல் கேட்பாயாக; என்றாள் என்க.

(விளக்கம்) எவ்வம் அறிதியோ என்னும் வினாவிற்கு எவ்வம் அறிந்தேன் எனவும், யாரை நீ என்னும் வினாவிற்கு யான் மதுராபதி எனவும், பேணி இத் தெய்வம் விடை கூறுதலும், பின்னர் நின்பால் கட்டுரை கூற வந்துளேன் எனவும் அவைதாம் யாவை எனின் என் நோய் ஒன்றும், எம்மரசனுக்கு ஊழ்வினை வந்தபடி ஒன்றும், மேலும் உன் கணவனுக்கு வந்த ஈதொன்றுமாம் என அக் கண்ணகி தன்னை விரும்பித் தான் கூறுவனவற்றைக் கேட்குமாறு தொகுத்தும் வகுத்தும் கூறுகின்ற சொற்றிறம் உணர்ந்து மகிழற்பாலதாம். இனி அத்தெய்வம் இவ்வாறு தோற்றுவாய் செய்த தன்னுடைய கட்டுரையைத் தொகை வகையாற் கூறி மேலே விரிவகையாற் கூறத் தொடங்குகின்றது; என்க.

பாண்டியனின் செங்கோன் மாண்பு

30-34: காதில் ........... அல்லன்

(இதன்பொருள்.) காதில் மறை நா ஓசை அல்லது யாவதும் மணி நாவோசை கேட்டதும் இலன் - எங்கள் அரசர் பெருமான் பாண்டியன் இதுகாறும் தனது செவியால் அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற அவர்தம் வேதமுழக்கத்தைக் கேட்பதல்லாமல் ஒருசிறிதுந் தன்பால்குறை கூற வருவோர் இயக்குகின்ற தனது கடைமணி நாவினது ஓசையை ஒருபொழுதும் கேட்டிருப்பானு மல்லன்! அடிதொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - ஒரோ வழி, தன் அடிகளைத் தொழுது வணங்காத பகைமன்னர்கள் அழுக்காறு காரணமாகத் தம்முள் தன்னைப் பழிதூற்றுதல் அல்லது; குடிபழி தூற்றும் கோலனும் அல்லன் - தனது குடை நிழலில் அமைந்த குடிமக்களே பழிதூற்றுதற்குக் காரணமான கொடுங்கோல் உடையனும் அல்லன் காண்! குடி தழுவிச் செங்கோல் ஓச்சும் மன்னனே எங்கள் கோமகன் கண்டாய் என்றாள், என்க.

(விளக்கம்) மறைநா - மறையோதும் அந்தணர்நா. யாவதும் - சிறிதும். மணிநா - ஆராய்ச்சிமணியின் நாக்கு.

இதுவுமது

35-41: இன்னுங் கேட்டி ............. தாராது

(இதன்பொருள்.) இன்னுங் கேட்டி - நங்காய்! இன்னும் எம்மரசன் பிறந்த குடியினது மாண்பினையும் கேட்பாயாக! ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு - நங்காய்! படைப்புக் காலந்தொட்டு நல்லொழுக்கத்தோடு இடையறாது கூடி வருகின்ற இந்தப் பாண்டிய மன்னருடைய சிறப்பான குடியின்கண் பிறந்தவர்களுக்கு; இளமை யானை கல்விப்பாகன் கை அகப்படாது - இளமைப் பருவம் என்கின்ற களிற்றியானையானது கல்வியாகிய பாகனுடைய அடக்குமுறைச் செயலின்கண் அகப்படாமல்; நல்நுதல் மடந்தையர் மடம் கெழு நோக்கின்- நல்ல நெற்றியையுடைய மகளிரினது மடப்பம் பொருந்திய காமநோக்கங் காரணமாக; மதமுகம் திறப்புண்டு - மதமாகிய வழி நன்கு திறக்கப்பட்டு; இடங்கழி நெஞ்சத்து - எல்லை கடந்த காமம் பெருகிய நெஞ்சத்தோடே; ஒல்கா உள்ளத்து ஓடுமாயினும் குறையாத ஊக்கத்தோடே நெறியல்லாத நெறியின்கண் இயங்குதல் பிறர்க்கெல்லாம் இயல்பேயாயினும்; இழுக்கந் தாராது - அத்தகைய இளம்பருவமும் ஒருசிறிதும் பழியைத் தரமாட்டாது காண் என்றாள், என்க.

(விளக்கம்) இப் பாண்டியருடைய விழுக்குடியிற் பிறந்தோர்க்குப் பிறர்க்கெல்லாம் இழுக்கமுண்டாக்கும் இளமைப் பருவந்தானும் இழுக்க முண்டாக்க மாட்டாது என்று அறிவித்தபடியாம்: என்னை?

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை யியல்பாகச்
செப்பமு நாணு மொருங்கு  (951)

எனவும்,

ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்  (952)

எனவும் வரும் சான்றோர் மொழிபற்றிப் பாண்டியனுடைய குடியை ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடி என்றும், அத்தகைய குடிப்பிறப் புண்மையால் ஏனையோர் இழுக்குப்படும் இளம்பருவத்தினும் இக் குடிப்பிறந்தோர் இழுக்கம் எய்தார் என்றும் தெரித்தோதியவாறு. இங்ஙனங் கூறியது -கண்ணகியார் முறையில் அரசன் தன் ஊர் எனவும், மறனொடு திரியுங்கோல் மன்னவன் எனவும், என் காற் சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே எனவும், பழி கூறியதற்கு, எங்கோமகன் அவ்வாறு இழுக்குவானல்லன் என்று உணர்த்தியவாறு என்க. இடங்கழி நெஞ்சம் -நன்னெறியின் எல்லையாகிய இடத்தைக் கடந்து போன நெஞ்சம். கல்வியாகிய பாகன் என்க. உள்ளம் - ஊக்கம். விழுக்குடி - ஒழுக்கத்தாற் சிறந்த குடி.

பாண்டிய மன்னரின் செங்கோற் சிறப்பு

41-47: இதுவுங்கேட்டி ............... காவாதோவென

(இதன்பொருள்.) இதுவுங் கேட்டி - நங்காய்! இறைக்குடியாகிய இப்பாண்டியர் விழுக்குடிப் பிறந்தோர் செங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒன்று கூறுவேன் அதனையும் கேட்பாயாக; உதவாவாழ்க்கைக் கீரந்தை மனைவி - பிறருக்கு ஏதும் உதவிசெய்ய வியலாத வறுமையையுடைய தனது வாழ்க்கையை நல்வாழ்க்கையாக்கும் பொருட்டுக் கீரந்தை என்னும் அந்தணன் ஒருவன் பொருள் தேடுதற்கு வேற்று நாட்டிற்குச் செல்பவன் தனக்குத் துணையில்லையே என வருந்திய மனைவிக்கு; அன்புடையோய்! அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென - குடிமக்களுக்குச் செங்கோலரசனாகிய வேலியே பாதுகாக்கும் வேலியாவதல்லது அதனினும் காட்டில் சிறந்த வேலி வேறொன்றும் இல்லை. அஞ்சற்க! எனக் கூறிப் போயினனாக; ஒருநாள் புதவக் கதவம் புடைத்தனன் - ஒருநாள் இக் குடிப்பிறந்த மன்னனொருவன் மாறுவேடங் கொண்டு நகரி காவற்பொருட்டு இரவில் வந்தவன் அப் பார்ப்பனி இருந்த வீட்டின் வாயிற் கதவினை இதன்கண் உறைவார் யார் என அறிதற்பொருட்டுக் கையால் தட்டினனாக அவ்வொலிகேட்டு அஞ்சிய பார்ப்பனி அந்தோ நீவிர் (அரைசவேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து) மன்றத்திருத்திச் சென்றீர் நன்கு பாதுகாவலில்லாத இம்மன்றத்தின் கண் என்னை வைத்துச் சென்றீரே இன்று; அவ்வழி அவ்வேலி காவாதோ என - இற்றைநாள் அவ்வாறு அந்த அரசவேலி என்னைப் பாதுகாவாது ஒழியுமோ! என்று சொல்லி அச்சத்தால் தன் கணவனை நினைந்து அரற்றாநிற்க, என்க.

(விளக்கம்) உதவா வாழ்க்கை - பிறர்க்கு உதவிசெய்ய வியலாத வறுமை நிலை. அவ்வாழ்க்கையைப் பொறாமல் பொருள் தேடுதற்கு வேற்றுநாடு சென்ற கீரந்தை என்க. அவன் செல்லுங்கால் தனக்குத் துணையின்மை நோக்கி வருந்திய மனைவிக்கு அரசவேலி நின்னைப் பாதுகாக்கும் அஞ்சாதே என்று சொல்லிப் போயினன் என்க. நகரி காவற்பொருட்டு இரவில் மாறுவேடங்கொண்டு தெருவில் வந்த மன்னன் அவ்வீட்டினைக் கண்டு நன்கு காவலில்லாத இவ்வீட்டில் உறைவார் உளரோ இலரோ என்று அறிந்துகோடற்கு அவ் வீட்டின் கதவைத் தட்டினான் என்க. உள்ளிருந்த மனைவி தன் கணவன் சொல்லியதைச் சொல்லி அவ்வரசவேலி இன்று காவாதோ என்று அஞ்சி அரற்றினள் என்றவாறு. இவ் வரலாற்றினை வேறுவேறு வகையாகவும் கூறுவாரும் உளர். மன்றம் என்றது பாதுகாவலின்மை நோக்கி இகழ்ந்து கூறியவாறு. அரும்பதவுரையாசிரியரும் அரணில்லாத வீடு என்பதுமுணர்க.

48-54: செவிச்சூட்டாணி ................... ஆகுதல்

(இதன்பொருள்.) செவிச்சூட்டாணியில் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று - அப் பார்ப்பனியின் அரற்றுரை கேட்டுத் தனது தவற்றினை உணர்ந்த அப் பாண்டிய மன்னன் அவள் கூறிய அம்மொழி தானும் தனது செவியின்கண் உலையில் காய்ச்சிய புகையும் தீயால் பொதியப்பட்ட இருப்பாணியைப் போல நுழைந்து தனது நெஞ்சினைச் சுடுதலாலே அந்தோ இவளுக்கு நமதுசெயல் பழியைப் பிறப்பிக்குமே என்று அஞ்சி மெய்நடுக்கமெய்தி அத் தவற்றினைச் செய்தமைக்காக; வச்சிரத்தடக்கை அமரர்கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்த கை குறைத்த - வச்சிரப் படையை யுடைய பெரிய கையையுடைய தேவேந்திரனுடைய தலையிற் சூட்டியிருந்த பொன்னாலியன்ற முடியணியை ஒளியுடைய தனது சக்கரப் படையால் உடைத்த பெருமையுடைய தனது கையை அப்பொழுதே தனது வாளால் துணித்த; செங்கோல் - செங்கோன்மைச் சிறப்பினையும்; குறையாக் கொற்றத்து - ஒரு பொழுதும் குன்றாத வெற்றியினையுமுடைய; இறைக்குடிப் பிறந்தோர்க்கு - இப்பாண்டிய மன்னர் குடியில் பிறந்தவர்க்கு; இழுக்கமின்மை ஒருபொழுதும் பழிபிறவாமை; நல்வாய் ஆகுதல் - பேருண்மையே ஆதலை அறிந்துகோடற்கு; இன்னும் கேட்டி - இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) நள்ளிரவில் யாரோ ஒருவன் அப் பார்ப்பனி வீட்டின் கதவைத் தட்டினான் எனப் பிறர் அறிந்தவிடத்து ஏனையோர்க்கு அவன் கற்புடைமையின்கண் ஐயம் பிறத்தல் தேற்றம் என்பதுபற்றி அரசன் அஞ்சி நடுங்கினன் என்பது கருத்து. ஈண்டு,

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்  (428)

எனவும்,

பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு  (1015)

எனவும் வரும் திருக்குறள்கள் நினைவிற் கொள்ளற்பாலனவாம். அப்பார்ப்பனியின் அரற்றுரைக்குப் புகையும் அழலும் பொத்திய சூட்டாணி உவமை என்க. செவியின்கண் சூட்டாணிபோல அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் என்க. அவன் குறைத்த கையின் சிறப்புக் கூறுவாள் அமரர் கோமான் முடி உடைத்த கை என்றாள். இவ்வாற்றால் பாண்டியன் தான்செய்த தவற்றினை உலகறியச் செய்து, பார்ப்பனிக்குப் பழிபிறவாமற் செய்தருளினமை உணர்க. குறைத்தமைக்குக் காரணமான செங்கோல் என்றவாறு. அவ் இறைக் குடியிற் பிறந்த பாண்டியனொருவன் அமரர் கோமான் முடியுடைத்ததனையும் மற்றொருவன் கை குறைத்ததனையும் ஒருங்கே ஈண்டு நெடுஞ் செழியனுக்கு ஏற்றிக் கூறியவாறாம்.

பாண்டியன் கை குறைத்தமையை எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித், தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை, நினைத்துத் தன் கைகுறைத்தான் றென்னவன் காணா, ரெனச் செய்யார் மாணாவினை, எனவும், நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித் தன், ஆடு மழைத்தடக்கை யறுத்துமுறை செய்த, பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் எனவும் வருவனவற்றானும் அறிக.

நெடுஞ்செழியன் ஒற்றாடற் சிறப்பும், முறை செய்தற் சிறப்பும்

(55- பெருஞ்சோறு என்பது தொடங்கி 131 - கொற்ற வேந்தன் என்பது ஈறாக ஒரு தொடர்.)

55-64: பெருஞ்சோறு ...... காண்கென

(இதன்பொருள்.) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறத்தின் இயல்பினை நூல்வாயிலாக அறிந்தாங்குச் செலுத்துகின்ற செங்கோல் முறைமையினையும் போர்நெறியினை அறிந்து அதற்கேற்பப் போராற்றுகின்ற நெடிய வாளினையும் உடைய; புறவு நிறைபுக்கோன் - தன்பால் தஞ்சம் புகுந்த புறாவின் பொருட்டு அதன் நிறைக்கு ஈடாகத் தன் தசையெலாம் அரிந்து வைத்தும் பின்னர்த் தானும் துலாத்தின்கண் புகுந்தவனாகிய சிபி மன்னனும்; கறவை முறைசெய்தோன் - ஒரு பசுவிற்குத் தன் அரும்பெறல் மகனைத் தேராழியிலிட்டு முறைசெய்த மனுநீதிச்சோழனும் ஆகிய; பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் - நீர்ப்பூக்கள் மிகுந்த கழனிகளையுடைய பூம்புகார் நகரத்தையுடைய சோழனுடைய; தாங்கா விளையுள் நல்நாடு அதனுள் - நிலம் பொறாத மிக்க விளைவினையுடைய நல்ல சோழ நாட்டின்கண்; வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - மறைநூல் அறிவின்கண் வல்லவனாகிய பார்ப்பானாகிய பராசரன் என்பவன்; பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை - பாரதப்போரின்கண் பாண்டவர் கவுரவர் ஆகிய பகைவேந்தர் இருவர் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய வள்ளன்மையையும் திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திருமகள் நிலைபெற்ற பெரிய நாளோலக்கத்தினையும் உடைய; குலவுவேல் சேரன் கொடைத் திறம் கேட்டு - தன்னோடு குலவி வருகின்ற வேல்படையினையுடைய உதியன் சேரலாதன் என்னும் சேர மன்னனுடைய வள்ளன்மைச் சிறப்பினைக் கேள்வியுற்று; வண்தமிழ் மறையோர்க்கு வான்உறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன் காண்கு என - வளவிய தமிழ்ப்புலவனாகிய பாலைக்கவுதமன் என்னும் அந்தணனுக்கு மேனிலை உலகத்தின்கண் உறையுளை உண்டாக்கிக் கொடுத்த அந்தத் திண்ணிய ஆற்றலுடைய நெடிய வேற்படையையுடைய சேர மன்னனை யான் சென்று காண்பேன் என்று துணிந்து; என்க.

(விளக்கம்) பாரதப் போர் நிகழ்த்த எண்ணிப் பாண்டவரும் கவுரவரும் தனித்தனியே தன்பால் துணைவேண்டி வந்தாராகச் சேர மன்னன் அவ்விருவர்க்கும் நடுவுநிலை யுடையனாய்ப் பாரதப்போர் நிகழ்ந்து முடியுந்துணையும் இருவர் படைகளுக்கும் தான் ஒருவனே உணவு வழங்குவதாக ஒப்புக்கொண்டு அங்ஙனமே வழங்கினான் எனக் கூறுவர். இக்காரணத்தால் இவன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப்பட்டான். இவ் வரலாற்றினை :

ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் எனவும், (29. ஊசல்வரி); உதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை எனவும், (அகநா. 233: 9-10.) அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப், பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் எனவும், (புறநா.2: 13-6) வருவனவற்றாலுணர்க. நாளிருக்கை - நாளோ லக்கத்து இருக்கை: என்றது கொலுமண்டபத்தை. புறவுநிறை புகுதலும் கறவைமுறை செய்தலுமாகிய புகழ்களை ஒரு சோழன்மேல் ஏற்றிக் கூறுவார், புகார்நகர் வேந்தன் என்றார். வலவை - வல்லமை. வண்டமிழ் மறையோன் என்றது பாலைக் கவுதமனார் என்னும் பார்ப்பனப் புலவரை. இவரை வானின்கண் உறையும்படி செய்த என்றவாறு, இவ் வரலாற்றினை:

நான்மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோன் எனவும், (சிலப். 28. 137-8); பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப் பாட்டு ......... பாடிப்பெற்ற பரிசில். நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டுமெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் பெருவேள்விற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். எனவும், (பதிற். 3 ஆம் பத்து, இறுதி வாக்கியம்;) துறக்கமெய்திய தொய்யா நல்லிசை, முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல் எனவும் (அகநா - 233: 7:8.) வருவனவற்றால் அறிக.

65-73: காடு நாடும் ............ பெயர்வோன்

(இதன்பொருள்.) காடும் நாடும் ஊரும் போகி - இடையே கிடந்த காடுகளையும் நாடுகளையும் ஊர்களையும் கடந்து சென்று அப்பாலுள்ள; நீடு நிலை மலையம் பிற்படச்சென்று - நெடிய நிலையினை யுடைய பொதியமலையும் பின்னே கிடக்கும்படி அப்பாற்சென்று; ஆங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி - வீடுபேறு ஒன்றனையே விரும்பும் கோட்பாட்டினையும் இரண்டு பிறப்பினையும் உடைய அந்தணர்க்குரிய மூன்று வகை வேள்வித் தீயையும் ஓம்புதலாகிய செல்வத்தினையும் நான்கு மறைகளையும் கடைபோக ஓதி உணர்தலும்; ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்து வகைப்பட்ட வேள்விகளையும் செய்தலாகிய தொழிலினையும்; அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - தமக்கியன்ற ஆறுதொழிலினையுமுடைய பார்ப்பனர்கள் தாம்பெற்ற முறைமையினை அப் பராசரனுக்குத் தாமறிந்தபடி வகைப்படுத்திக் கூறா நிற்ப; நாவலங்கொண்டு - அப் பராசரன் தனது நாவன்மையைக் கொண்டு;  அவர்களோடு சொற்போர் புரிந்து வெற்றி கொண்டு; நண்ணார் ஓட்டி - பகைவர்களை அஞ்சி ஓடச்செய்து; பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகை என்னும் சிறப்பினை எய்தி; ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் - தன்னுடைய வெற்றிக்குப் பொருத்தமாகச் சேர மன்னன் பால் நல்ல அணிகலன்களைப் பரிசிலாகப் பெற்றுக்கொண்டு தன் ஊர் நோக்கி மீண்டுவருபவன்; என்க.

(விளக்கம்) சோழ நாட்டிற்கும் சேரன் அரண்மனைக்கும் இடையே கிடந்த காடு நாடு ஊர் இவற்றைக் கடந்து மலையம் முதலியவற்றைக் கடந்து சேரன் அரண்மனைக்கண் சென்று அங்குள்ள ஒன்றுபுரி கொள்கை முதலியவற்றையுடைய பார்ப்பனரோடு ஒன்றுபுரி கொள்கை முதலிய பொருள்பற்றி வாதிட்டு வென்று பார்ப்பன வாகைசூடி அவ் வெற்றிக்கேற்ற பரிசிலாக, சேரமன்னன் வழங்கியவற்றைக் கைக்கொண்டு மீண்டு வருபவன் என்றவாறு. ஒன்று என்றது வீடுபேற்றினை. இருபிறப்பாவது - பூணூல் பூணற்கு (உபநயனத்துக்கு) முன் ஒரு பிறப்பும் அதன்பின் ஒரு பிறப்பும் ஆகிய இருவகைப் பிறப்பு என்க. இதனால் பார்ப்பனரை இருபிறப்பாளர் என்றும் கூறுவர். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன. அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. ஆங்கு உள்ள அந்தணர் பெறுமுறை வகுக்க அவரோடு வாதுசெய்து நாவலம்கொண்டு என்றவாறு. நாவலம் - நாவினால் பெறும்வெற்றி. அஃதாவது சொற்போர் புரிந்து வெல்லுதல். பார்ப்பன வாகையின் இயல்பினை:

கேள்வியாற் சிறப்பெய்தி யானை, வேள்வியான் விறன் மிகுத்தன்று எனவும் ஓதங் கரைதவழ் நீர்வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதம் சுடுசுடர்தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து எனவும் வரும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவானும் வரலாற்று வெண்பாவானு முணர்க. (பு.வெ.163.) இதன்கண் நண்ணார் என்றது சொற்போரின்கண் தன்னோடு மாறுபட்டவரை, என்க.

74-79: செங்கோல் ............ இருப்போன்

(இதன்பொருள்.) செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர் தங்கால் என்றது ஊர் - செங்கோன்மை பிறழாத பாண்டிய நாட்டின்கண் திருந்திய தொழிலையுடைய பார்ப்பனர் வாழுகின்ற திருத்தங்கால் என்னும் பெயரையுடைய ஊரின்கண் வந்து; அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து - அவ்வூரின்கண்ணுள்ள பசிய இலை நிறைந்த அரசமரத்தையுடையதொரு மன்றத்தின்கண் இளைப்பாறுதற் பொருட்டு; தண்டே குண்டிகை வெள்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக்காப்பொடு களைந்தனன் இருப்போன் - தனது ஊன்றுகோலையும் குண்டிகையையும் வெள்ளைக் குடையையும் சமித்துக்களையும் பரிசிலாகப் பெற்ற பண்டங்களையுடைய சிறிய மூடையையும் மிதியடியையும் நிலத்தின்கண் ஒருசேர வைத்து இளைப்பாறி இருந்தனனாக; என்க.

(விளக்கம்) மறையவர் - பஞ்சக்கிராமிகள். தங்கால் - திருத்தங்கால் என்னும் ஊர். மன்றம் - அவ்வூரிலுள்ள போதிமன்றம். அம் மன்றத்தில் இளைப்பாறுதற் பொருட்டுத் தண்டு முதலியவற்றை ஓரிடத்தே வைத்து இளைப்பாறி இருந்தான் என்க. பாதக்காப்பு - மிதியடி. களைந்தனன் : முற்றெச்சம்.

79-87: காவல் வெண்குடை ................ சூழ்தர

(இதன்பொருள்.) காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி - அங்ஙனம் இருந்த பராசரன் தன் தகுதிக் கேற்ற பரிசில் நல்கிப் போற்றிய சேர மன்னனை நினைந்து வாழ்த்துபவன் செங்கோன்மை பிறழாது மன்னுயிரைக் காக்கின்ற கொற்ற வெண்குடையினையும் பல்வேறு இடத்தும் விளைந்து முதிர்ந்த பெரிய வெற்றியினையும் உடைய மன்னர் பெருந்தகை வாழ்வானாக; கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலிடையே கிடக்கும் தீவகத்தில் வாழும் பகைவருடைய கடம்பாகிய காவன் மரத்தைத் தடிந்து அவரைவென்ற வெற்றி வேந்தன் நீடூழி வாழ்வானாக; விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலையின் மிசைத் தனதிலச்சினை யாகிய வில்லினைத் தனது வெற்றிக் கறிகுறியாகப் பொறித்த வேந்தர் வேந்தன் வாழ்வானாக; பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - மலர்களையுடைய தண்ணிய புனலையுடைய பொருநை யாற்றையுடைய பொறையன் வாழ்வானாக; மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலிரும் பொறை என்னும் திருப்பெயரையுடைய மன்னவன் வாழ்வானாக என்று வாய்விட்டுக் கூறி வாழ்த்தாநிற்ப அவ் வாழ்த்தொலியைக் கேட்டலும்; குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலையும் குடுமியையும் மழலை பேசுகின்ற சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடையவராய்க் கூட்டங்கூடி; தமர் முதல் நீங்கி - தம் தாய் தந்தையர் முதலிய சுற்றத்தாரைப் பிரிந்து வந்து; விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர - அம் மன்றத்தின்கண் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர்கள் எல்லாம் அப் பராசரனைச் சூழ்ந்து கொள்ள; என்க.

(விளக்கம்) பராசரன் சேரன் தனக்குச் செய்த உதவியை நினைந்து அச் சேர மன்னனைப் பலவாறு வாழ்த்தினன் என்க. அவ் வாழ்த்தொலி கேட்டு அம் மன்றத்தில் விளையாடுகின்ற பார்ப்பனச் சிறுவர் எல்லாம் வந்து பராசரனைச் சூழ்ந்து கொண்டார் என்க.

பராசரன் அச் சிறுவரை நோக்கிக் கூறுதல்

88-94: குண்டப் பார்ப்பீர் ................ ஓத

(இதன்பொருள்.) குண்டப் பார்ப்பீர் - பார்ப்பனச் சிறுவர்களே! நுங்களில் யாரேனும்; என்னோடு ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின் என - என்னோடு சேர்ந்து மறையினை ஓதவல்லீர் உளீராயின் வம்மின்! வந்து ஓதுமின்! அங்ஙனம் ஓதுவீர் யான் பரிசிலாகப்பெற்ற பொருளையுடைய இச் சிறிய முடையைப் பரிசிலாகப் பெற்றுக் கொண்டுபோவீராக ! என்று கூறாநிற்ப; சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் - அதுகேட்டு அச் சிறுவர்களுள் வைத்துப் புகழினால் தகுந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மகனும் தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவனும் ஆகிய சிறுவன் ஒருவன் அங்ஙனம் ஓதுவதற்குத் துணிந்து முன்வந்து; பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால்மணங் கமழுகின்ற சிவந்த வாயையுடைய தன்னையொத்த ஏனைச் சிறுவர்களின் முன்னர்; தளர்நா ஆயினும் மறைவிளி வழாஅது - தன்னுடைய நாக்குத்தானும் மழலை மாறாத தளர்ச்சியையுடைய நாக்காக விருப்பினும் மறையின் ஒலி சிறிதும் வழுவாதபடி; உளமலி உவகையோடு - தனது உள்ளத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியோடே; ஒப்ப ஓத - அப்பராசரனோடு நன்கு பொருந்த ஓதா நிற்றலால்; என்க.

(விளக்கம்) குண்டன்: குட்டன் என்பதன் விகாரம். சிறுவன் என்னும் பொருட்டு. எனவே குண்டப்பார்ப்பீர் என்றது பார்ப்பனச் சிறுவர்களே! என்றவாறாயிற்று. இனி இதற்குப் பிழுக்கைமாணி காள்; சிறுமாணிகாள் - சிறுபிள்ளைகாள் எனினுமாம் என்பர் அரும்பதவுரையாசிரியர். ஆலமர் செல்வன் பெயர் என்றது தக்கிணாமூர்த்தி என்னும் பெயர் என்றவாறு. படியோர் - ஒத்தவர். மறைவிளி மறையின் ஓசை. பராசரனோடு ஒப்ப ஓத என்க.

தக்கிணாமூர்த்தி பரிசில்பெறுதலும் அதன்விளைவும்

95-103 : தக்கிணன் .............. இட்டனனாக

(இதன்பொருள்.) தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - அங்ஙனம் தன்னோடு ஓதிய தக்கிணாமூர்த்தி என்னும் அப் பார்ப்பனச் சிறுவனைப் பார்ப்பன வாகைபெற்று உயர்ந்தவனாகிய அப் பராசரன் பெரிதும் வியந்து பாராட்டி; முத்தப் பூண் நூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டோடு கையுறை ஈத்து முத்துக்கோவையாகிய பூணூலும் அதற்கேற்ற அணிகலன்கள் பிறவும் கைக்குக் கடகமும் காதிற்குத் தோடும் ஆகிய இவற்றோடு தான்கொணர்ந்த கைப்பொருளாகிய அப் பண்டச் சிறுபொதியையும் அத் தக்கிணாமூர்த்திக்கு வழங்கிவிட்டு; தன்பதிப் பெயர்ந்தனனாக - தன் ஊர்க்குச் சென்றனனாக; கோத்தொழில் இளையவர் - அவ்வூரின்கண்ணுள்ள அரசியற் பணியாளராகிய இளமையுடையோர் சிலர்; நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅர் ஆகி - இவ்வாற்றால் தக்கிணாமூர்த்தியின் குடும்பத்தினர் அழகிய அணிகலன்கள் புனைவனவற்றையும் பூண்பனவற்றையும் கண்டுபொறாமை கொண்டு; வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைப் பிடித்துத் தம் காவலில் வைத்து; கோமுறை அன்றிப் படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன் என - அரசியல் முறைக்கு மாறாகப் புதையல் பொருளைக் கவர்ந்துகொண்ட பார்ப்பனன் இவன் என்று அவன்பால் குற்றங்காட்டி; இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - அரசனுக்குரிய பொருளைக் கைப்பற்றிக் கொண்ட வரை இடுதற்குரிய சிறைக்கோட்டத்தின்கண் இடுவாராயினர்; என்க.

(விளக்கம்) தக்கிணன் - தக்கிணாமூர்த்தி. பராசரன் பார்ப்பன வாகைபெற்றுச் சிறந்தோன் ஆதலோடு வள்ளன்மையாலும் சிறந்தோன் ஆதல்பற்றி மிக்கோன் என்றார். முத்தப்பூணூல் - முத்துகள் கோத்த முப்புரிநூல் ஆகிய பூணூல் என்பாருமுளர். அத்தகு - அழகினால் தகுதியுற்ற எனினுமாம். கடகம் ஒருவகைக் கையணி. தோடு - காதணி. கையுறை என்றது தன் கையகத்ததாகிய பண்டச் சிறுபொதியை. பராசரன் சிறுவனுக்குக் கொடுத்தவை காணிக்கை என்னல் பொருந்தாமை யுணர்க. புனைப - புனைவன. பூண்ப-பூண்பன. இவை அணிகலவகை. கோத்தொழில் இளையவர் பொறார் ஆகி என இயைக்க. படுபொருள் - புதையல். களவுப்பொருள் எனினுமாம். புதையற் பொருள் அரசனுக்குரிய பொருள் ஆதலின் கோமுறையன்றி வெளவினான் என்பது கருத்து. இடுசிறைக்கோட்டம் - கள்வரை இடுகின்ற சிறைக்கோட்டம்.

வார்த்திகன் மனைவி செயல்

104-106: வார்த்திகன் ............ பொங்கினள்

(இதன்பொருள்.) வார்த்திகன் மனைவி கார்த்திகை யென்போள்- சிறையிலிடப்பட்ட வார்த்திகன் என்னும் பார்ப்பனனுடைய மனைவியாகிய கார்த்திகை என்பவள் அச்செயல் கண்டு; அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புரண்டனள் - பெரிதும் வருந்தினள் ஏங்கு அழுதாள் நிலத்தில் வீழ்ந்து புரண்டாள்; பொங்கினள் புலந்தனள் - சினத்தால் பொங்கி எழுந்தாள் செங்கோலை வெறுத்துப் பேசினள்; என்க.

(விளக்கம்) அலந்தனள் வருந்தினள் சினத்தால் பொங்கி எழுந்தாள் என்க. புலந்தனள் என்றது செங்கோலை வெறுத்துப் பேசினாள் என்றவாறு.

106-112: அதுகண்டு .............. அறிந்தீமின்னென

(இதன்பொருள்.) அதுகண்டு மை அறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவாது ஆகலின் - அக் கார்த்திகை என்னும் பத்தினிக்குற்ற நிலைமைகண்டு குற்றமற்ற சிறப்பினையுடைய கொற்றவை என்னும் தெய்வத்தின் கோயிலினது சிற்பச் செய்வினை அமைந்த கதவு திறக்கப்படாததாக ஆனமையின்; திறவாது அடைத்த கதவம் திண்நிலை மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - திறக்கவியலாபடி அடைக்கப்பட்ட திருக்கோயிற் கதவினது திண்ணிய நிலைமையினை மறப்பண்பு மிக்க வேலேந்திய எங்கள் மன்னவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் கேள்வியுற்றபொழுது நெஞ்சம் மயங்கித் தன் ஏவலரை நோக்கி; கொற்றவைக்கு உற்ற இடும்பை - நம் தெய்வமாகிய கொற்றவையின் திருவுள்ளத்தில் இப்பொழுது எய்திய குறையை; அறிந்தீமின் -ஆராய்ந்தறிமின்! யாவதுங் கொடுங்கோல் உண்டுகொல் - மேலும் நமது ஆட்சியின்கண் ஏதேனும் செங்கோன்மைக்கு மாறாக நிகழ்ந்தது உண்டோ? அதனையும் ஆராய்ந்து வந்து கூறுமின்; என - என்று ஏவலருக்குக் கட்டளையிடா நிற்ப; என்க.

(விளக்கம்) கார்த்திகைக்குக் கோத் தொழில் இளையவர் செய்த கொடுமை பொறாது கொற்றவை தன் கோயிற் கதவைத் திறக்க வியலாதபடி செய்தருளினள் என்பது கருத்து. மை - குற்றம். ஐயை-கொற்றவை (துர்க்கை). மன்னவன் என்றது நெடுஞ்செழியனை. தான் அறியாவண்ணம் ஏதேனும் கோமுறை பிழைத்துளதோ என்று மயங்கினான்; என்க.

113-117: ஏவலிளையவர் ............ கடனென

(இதன்பொருள்.) ஏவல் இளையவர் காவலன் தொழுது - அக் கட்டளைபெற்ற இளமையுடைய அப் பணியாளர் மன்னனைப் பணிந்து சென்று, ஒற்றினால் ஒற்றிச் செய்தி தெரிந்து அக் கோத்தொழில் இளையவரால் சிறையிடப்பட்ட; வார்த்திகன் கொணர்ந்து அவ் வாய்மொழி உரைப்ப - வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறைவீடு செய்து அழைத்து வந்து அரசன் முன்னிறுத்தி உண்மையைக் கூறாநிற்ப அதுகேட்ட அரசன் மனம் வருந்தி; இது நீர்த்து அன்று என நெடுமொழி கூறி -இச் செயல் செங்கோன்மைக்குப் பொருந்திய நீர்மையுடைய தனறு எனச் சொல்லி அப் பார்ப்பனனுக்குப் புகழுரை பலசொல்லி; முறை நிலை திரிந்த அறியா மாக்களின் - தமக்குரிய கடமையினின்றும் பிறழ்ந்த அறிவில்லாத மாக்களாகிய என் பணியாளராலே; என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும்கடன் என என்னுடைய அரசியல் முறைமை பிழையுடையதாயிற்று, இப் பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியீராகிய நுமது கடமை என்று சொல்லி; என்க.

(விளக்கம்) காவலனைத்தொழுது போய் ஒற்றினால் ஒற்றி உணர்ந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்து கொணர்ந்து என்க. வாய்மொழி என்றது நிகழ்ந்ததனை உண்மையாக அறிவித்ததனை. நீர்த்து - நீர்மை உடையது. நெடுமொழி - புகழ். முறைநிலை அறியா மாக்களின் என மாறுக. சிறியோர் செய்த பிழையைப் பெரியீராகிய நீயிர் பொறுத்தல் நுங்கடன் என்று வேண்டியவாறு. இறைமுறை - செங்கோன் முறைமை.

118-122: தடம்புனல் .............. தணித்தனனே

(இதன்பொருள்.) தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கி - பெரிய மருதநிலத்து நீர் வளமுடைய கழனிகள் சூழ்ந்த அவன் பிறந்த ஊராகிய திருத்தங்காலோடே குறையாத விளைவினையுடைய வயலூர் என்னும் ஊரினையும் ஒருசேர அப் பார்ப்பனனுக்கு முற்றூட்டாக வழங்கி; கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் - கற்புடையவளாகிய கார்த்திகை என்பவளுக்கும் அவள் கணவனாகிய அவ்வார்த்திகன் என்பவனுக்கும் முன்னிலையிலேயே; இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - பெரிய நிலமடந்தையாகிய தன் தேவிக்குத் தனது அழகிய மார்பினை வழங்கி; அவள் தணியாவேட்கையும் சிறிது தணித்தனன் - அத்தேவியின் குறையாத காமவேட்கையினையும் ஒருசிறிது தணித்தனன் காண் என்றாள்; என்க.

(விளக்கம்) திருத்தங்கால் - அவன் பிறந்தவூராதல் முன்பே பெற்றாம். அவ்வூரோடு வயலூரென்னும் ஊரையும் பரிசிலாக வழங்கினன் என்பது கருத்து. கார்த்திகை ..... திருமார்பு நல்கி என்றது - கற்புடையவளாகிய கார்த்திகையையும் அவள் கணவனையும் அவர்கள் திருவடிகளில் தன் திருமார்பு நிலத்திற்பட வீழ்ந்து வணங்கி என்றவாறு. திருவுடை மன்னனாகிய நெடுஞ்செழியனைத் திருமாலாகக் கொண்டு கூறுகின்றாள் ஆதலின், நிலமடந்தையை அவன் தேவியாகவும் கூறினாள். அவன் மார்பில் எப்பொழுதும் திருமகள் வீற்றிருத்தலால் மற்றொரு தேவியாகிய நிலமகளின் தணியாத வேட்கையை இவ்வாற்றால் ஒரு சிறிது தணித்தனன் என்றாள் என்க. இவ்வரலாற்றின் வாயிலாக நெடுஞ்செழியனைத் தேராமன்னன் என்னும் கோட்பாடுடைய கண்ணகித் தெய்வத்திற்கு அச் செழியனுடைய ஒற்றரால் ஒற்றி உண்மை தேரும் ஆராய்ச்சி வன்மையையும் ஆராய்ந்து கண்டு குறை நேர்ந்துழி, அவன் அதற்குச் செய்யும் செங்கோன் முறைமையையும், இத் தெய்வம் நன்கு திறம்பட விளக்கினமை உணர்க. மன்னன், காலில் வீழ்ந்து வணங்கிய செயலை ஈண்டு அடிகளார் வேறு வாய்பாட்டாற் கூறுகின்ற புலமை நுணுக்கம் நினைந்து நினைந்து மகிழற்பாலது.

இதுவுமது

122-132: நிலைகெழு ............. தகுதியுங்கேள் நீ

(இதன்பொருள்.) நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணுங் கேட்பக் கலை அமர்செல்வி கதவம் திறந்தது - கலக்கமின்றி அமைதியோடு நிற்கும் நிலைமை பொருந்திய இம் மதுரை மாநகரத்துள்ள மிகவும் நெடிய தெருவுகளில் அமைந்த மலையொத்த மேனிலை மாடங்களையுள்ளிட்ட எல்லா இடங்களினும் உறைகின்ற மாந்தர் அனைவரும் கேட்கும்படி மான் ஊர்தியின்மீது அமர்ந்த கொற்றவையின் திருக்கோயிற் கதவம் பேரொலியோடு தானே திறந்து கொள்வதாயிற்று; யானை எருத்தத்து அணி முரசு இரீஇ - இச் செய்தி அறிந்தவுடன் மகிழ்ச்சியால் வள்ளுவரை வருவித்து நீவிர் இப்பொழுதே யானையின் பிடரின்கண் அழகிய அற முரசினை வைத்து; சிறைப்படு கோட்டம் சீமின் - சிறைக்கோட்டத் தலைவர்கள் சிறையிடப்பட்டுள்ள மாக்களைச் சிறைவீடு செய்யுங்கள் எனவும்; கறைப்படு மாக்கள் யாவதும் கறைவீடு செய்மின் - இறைப்பொருள் வாங்கும் பணியாளர்கள் எத்துணையும் இறைப்பொருள் கொள்ளாது இறைவீடு செய்யுங்கள்; இடுபொருளாயினும் படுபொருளாயினும் பெற்றவர்க்கு உற்றவர்க்கு உறுதி ஆம் என - பிறர் வழங்கிய பொருளாயினும் புதையல் எடுத்த பொருளாயினும் நிரலே ஏற்றுக்கொண்டவர்க்கும், கண்ணுற்றெடுத்துக்கொண்டவர்க்கும் உறுதிப் பொருள் ஆகும் எனவும் கூறி முரசு அறைமின் என்று பணித்து; கோல்முறை அறைந்த கொற்றவேந்தன் - தனது செங்கோன் முறைமையை மாந்தர்க் கறிவித்த வெற்றியையுடைய வேந்தனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன்; தான் முறைபிழைத்த தகுதியும் நீ கேள் - தானே செங்கோன் முறைமையில் பிழை செய்தற்குரிய காரணத்தையும் கூறுவன் நங்காய் இதனையும் கேட்கக் கடவாய் என்றாள் என்க.

(விளக்கம்) சிறைப்பணியாளர் சீமின் என வருவித்துக்கொள்க. கறைப்படுமாக்கள் என்றது இறைப்பொருள் கொள்ளும் பணியாளரை என்க. இறை கொடுக்கக்கடவ மாக்களுடைய எனினுமாம். கறை - கடமை. அஃதாவது-இறைப்பொருள். இடுபொருள் - வழங்கும்பொருள். படுபொருள் - புதையற் பொருள். இடுபொருள் பெற்றவர்க்கும், படுபொருள் உற்றவர்க்கும் ஆம் என எதிர் நிரல் நிறை ஆக்குக.

மதுரையும் மன்னனும் கேடுற்றமைக்குக் காரணம்

133-137: ஆடி ................ உண்டே

(இதன்பொருள்.) ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று -இந்த ஆடித் திங்களின்கண் பெரிய இருளையுடைய பகுதியின்கண் அழல்சேர் குட்டத்துக் கார்த்திகை விண்மீனின் குறையினையுடைய எட்டாம் நாளில்; வெள்ளி வாரத்து - வெள்ளிக்கிழமையன்று; ஒள்எரி உண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுஉறும் எனும் உரையும் உண்டு -ஒள்ளிய நெருப்புண்ணுதலாலே புகழமைந்த இம் மதுரை நகரத்தோடே அதனை ஆளும் மன்னனும் கேடெய்துவான் என்னும் ஒரு கணிவன் மொழியும் பண்டே கூறப்பட்டுளதுகாண், இக்காரணத்தினாலேதான் இவை நிகழ்ந்தன என்றாள், என்க.

(விளக்கம்) பேரிருள் பக்கம் என்றது தேய்பிறைப் பகுதியை. அழல் - கார்த்திகை நாள் (விண்மீன்); குட்டம் - குறை. கார்த்திகை நாளில் குறையுடைய எட்டாம் நாள் என்க. பேதைப் படுக்கும் இழவூழ் என்பவாகலின் எம் கொற்ற வேந்தன் இவ்வூழ் காரணமாகக் கோன்முறை பிழைத்தான் அல்லது அவனுக்கு அஃது இயல்பன்று எனவும், நிலமகள் போன்ற பொறையுடைய கற்புடைத் தெய்வமாகிய நீ இங்ஙனம் சீற்றம் எய்தி இந்நகரத்தை எரியூட்டியதற்கும் அதுவே காரணமாதல் வேண்டும் எனவும், அறிவுறுத்திக் கண்ணகியின் சினம் தணிவித்தபடியாம்.

கோவலன் கொலையுண்டமைக்குக் காரணம் கூறுதல்

(137) நிரைதொடி என்பது தொடங்கி (178) வீடுகொண்ட பின் என்னுமளவும், மதுராபதி -கோவலன் கண்ணகி ஆகிய இருவருக்கும் எய்திய துயரங்களுக்குக் காரணமான அவர்தம் முற்பிறப்பில் செய்த பழவினையின் பரிசு கூறுதலாய் ஒரு தொடர்.

137-144: நிரைதொடி ................... பகையுற

(இதன்பொருள்.) நிரைதொடி யோயே - நிரல்பட்ட வளையலையுடைய பெண்ணணங்கே ஈதொன்று கேள்; கடிபொழில் உடுத்த கலிங்க நல்நாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் - நறுமணங்கமழும் பூம்பொழில் சூழ்ந்த கலிங்கம் என்னும் நல்ல நாட்டின்கண் உள்ள வடித்த வேலையுடைய பெரிய கையினை யுடைய வசுவென்பவனும் குமரன் என்பவனும் நிரலே; தீம்புனல் பழனத்துச் சிங்கபுரத்தினும் காம்பு எழுகானக் கபில புரத்தினும் - இனிய நீர்வளமுடைய கழனிகளையுடைய மருதப் பரப்பின்கண் உள்ள சிங்கபுரம் என்னும் நகரத்தினும் மூங்கில் வளருகின்ற காட்டினையுடைய முல்லை நிலத்தில் அமைந்த கபில புரம் என்னும் நகரத்தினும்; அரைசு ஆள் செல்வத்து நிரைதார் வேந்தர் - இருந்து அரசாளுகின்ற செல்வத்தையுடைய நிரல்பட்ட மலர்மாலை யணிந்த அரசர்களாயிருந்தனர்; வியாத்திருவின் விழுக்குடிப் பிறந்த தாயவேந்தர் தம்முள் பகையுற - கெடாத செல்வத்தையுடைய சிறந்த ஒரே குடியிற்பிறந்த தாயத்தார் ஆகிய அவ்வேந்தர் இருவரும் தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டிருத்தலாலே; என்க.

145-157 : இருமுக்காவத் .......... கொல்வுழி

(இதன்பொருள்.) இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - இவ்விரண்டு கோநகரங்களுக்கும் இடைப்பட்ட ஆறுகாவதத் தொலைவுடைய நிலத்தின்கண் எவ்விடத்தும்; செரு வில் வென்றியின் - அம் மன்னரிருவரும் தம்முட் போர்செய்து வலிய வெற்றி பெறுதல் காரணமாக இடையறாது போர் செய்துவந்தமையாலே; செல்வோர் இன்மையின் - வழிப்போவார் யாரும் இல்லாமையால் வறிதே கிடந்த அவ்விடை நிலத்தில்; சிங்கா வண்புகழ் சிங்கபுரத்தின் - குறையாத வளவிய புகழையுடைய சிங்கபுரத்தின்கண்; அரும்பொருள் வேட்கையின் பெறற்கரிய பொருளை ஈட்டும் விருப்பங் காரணமாக; பெருங்கலன் சுமந்து - பெருவிலை அணிகலன்களைச் சுமந்துகொண்டு; கரந்துறை மாக்களின் - ஒற்றர்களைப்போல மாறுவேடம் புனைந்து காதலி தன்னொடு -தான் வாழுகின்ற கபிலபுரத்தினின்றும் புறப்பட்டுத் தன் மனைவியோடு வந்து; அங்காடிப்பட்டு - கடைத்தெருவில் புகுந்து; அருங்கலன் பகரும் -பெறற்கரிய அணிகலன்களை விற்கின்ற; சங்கமன் என்னும் ஓர் வாணிகன் தன்னை -சங்கமன் என்னும் பெயரையுடைய வாணிகன் ஒருவனை; முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவன் - முற்பிறப்பிலே பசிய வளையலை யுடையோய் உன்னுடைய கணவனும்; வெந்திறல் வேந்தற்கு கோத்தொழில் செய்வோன் - வெவ்விய ஆற்றலுடைய வசு என்னும் அரசனிடத்தே அரசியற்பணி செய்பவனும்; பரதன் என்னும் பெயரன் - பரதன் என்னும் பெயரை யுடையவனும் ஆகியிருந்த; அக் கோவலன் - இப்பிறப்பில் நின் கணவனாய் ஈண்டுக் கொலைக்களப்பட்ட அக்கோவலன்; விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - அச் சங்கமன் கொல்லா விரதத்தினின்றும் விலகினமை காரணமாகத் தன்னால் வெறுக்கப்பட்டவனாயிருத்தலாலே; இவன் ஒற்றன் எனப் பற்றினன் -இவன் பகை நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஆவான் என்று சொல்லி அச் சங்கமனைப் பற்றி; கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - கொணர்ந்து வெற்றி வேலையுடைய வசுமன்னனுக்குக் காட்டி அச் சங்கமனைக் கொல்லும் பொழுது; என்க.

(விளக்கம்) இஃதென் சொல்லி வாறோ வெனின்: நின் கணவன் முற்பிறப்பிலே கலிங்க நாட்டுச் சிங்கபுரத்தில் பரதன் என்னும் பெயருடையவனாய் இருந்தான். நீதானும் அவனுக்கு மனைவியாய் இருந்தாய். பரதனுக்குப் பகைவனாய் இருந்த சங்கமன் என்னும் வாணிகன் பகைவர் ஊரிலிருந்து மாறு வேடங்கொண்டு தன்மனைவியோடு சிங்கபுரத்திற் புகுந்து அணிகலன் விற்றுப் பொருளீட்டுவானாயினான். பரதன் என்பவன் அச் சங்கமனைத் தன் பகை காரணமாகப் பிடித்துக் கொண்டு போய் இவன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றன் என அரசனுக்குக் கூறினன். அரசன் அச் சங்கமனைக் கொல்வித்தான் என்றவாறு. பைந்தொடியென்றது : விளி. கரந்துறை மாக்கள் ..... ஒற்றர். சிங்கா - குறையாத. விரதம் நீங்கிய வெறுப்பு - கொல்லா விரதத்தையுடைய தன் சமயத்தினின்றும் நீங்கினமையால் உண்டான பகை. எனவே பகை காரணமாக ஒற்றன் எனப் பொய் சொல்லிக் கொல்வித்தான் என்றவாறாயிற்று.

158-166: கொலைக்கள ............ நின்றோள்

(இதன்பொருள்.) கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்போள் நிலைக்களங்காணாள் - இவ்வாறு கொலைக்களத்தே இறந்தொழிந்த சங்கமன் என்னும் வணிகனுடைய மனைவியாகிய நீலி என்பாள் தான் உயிரோடு நிலைத்து வாழ்தற்கு இடங் காணமாட்டாளாய்; அரசர் முறையோ பரதர் முறையோ ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - அரசர்களே என் கணவனைக் கொன்றது அறமோ? வணிகர்களே இஃது அறமோ? ஊரில் வாழும் மாந்தர்களே! நும் மன்னன் செய்தது அறமோ? தெருவில் உள்ளவர்களே! நும்மன்னன் செய்தது அறமோ? என்று சொல்லி; மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு - அந்நகரத்து மன்றங்களினும் தெருக்களினும் சென்றுசென்று அரற்றி இங்ஙனமே; எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்குநாள் கழிந்த பின்னர்; தொழு நாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - என் கணவனை யான் கண்டு வணங்குகின்ற நாள் இஃது என்று சொல்லி எல்லோரும் அறிய வாயால் தன் கணவனை வாழ்த்தி; ஓர் மால் விசும்பு ஏணியில் மலைத்தலை ஏறி - ஒரு பெரிய வானத்தின்கண் ஏறுதற்குரிய ஏணியைப் போன்ற நெடிய மலையின் உச்சியில் ஏறிப்போய் நின்று; கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - கொலையின்கண் பட்ட தன் கணவனைக் கூடுதற்கு அமைந்து நின்றவள்; என்க.

(விளக்கம்) நீலி மன்றினும் மறுகினுஞ் சென்று விசும்பிற்கிட்ட ஏணி போன்ற ஒரு நெடிய மலையுச்சியில் ஏறி நின்றவள் என்க. மகன் - கணவன், கூடுபு நின்றோள் - கூடுதற்கு அமைந்து நின்றவள் என்க.

167-176: எம்முறு ............. இல்லென

(இதன்பொருள்.) எம்உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இங்ஙனம் மிகவும் துன்பத்தினைச் செய்தவர் இதன் பயனாக, தாம் எய்தும் துன்பமும் இத்தகைய துன்பமே ஆகுக! என்று சொல்லி; விழுவோன் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - அம் மலைத் தலையினின்றும் விழுகின்றவள் இட்ட தப்புதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ஆதலால்; கட்டுரை நீ கேள் - ஆதலாலே யான் கூறுகின்ற உனக்கு உறுதி பயக்கும் என்னுடைய மொழியை இன்னும் நீ கேட்பாயாக; உம்மை வினை வந்து உருத்தகாலைச் செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் வந்து நேர்ந்தபொழுது செவ்விய உள்ளம் இல்லாதவர்களுக்குத் தாம் செய்த தவமானது அத்துன்பத்தைப் போக்குதற்குச் சிறிதும் உதவமாட்டாது ஆதலால்; வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு அடர்ந்த கூந்தலை யுடையோய் நீதானும் உன்னுடைய கணவனை அச் சங்கமன் மனைவியைப் போலவே; ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி - இற்றைநாள் தொடங்கிப் பதினான்கு நாள் முழுவதும் நீங்கிய பின்னர்; வானோர் தங்கள் வடிவின் அல்லதை - தேவர்களுடைய வடிவத்தோடே காண்பதல்லாமல்; ஈனோர் வடிவில் காண்டல் இல் என - இந்நிலவுலகத்தில் வாழ்கின்ற மக்கள் வடிவத்தில் காணுதல் இல்லையாம் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) உம்மை வினை - முற்பிறப்பிற் செய்த தீவினை. செம்மை - நடுவு நிலைமை. நல்லொழுõக்கமுமாம்: உம்மை இம்மை இரண்டிடத்தும் செய்த தவம் உதவமாட்டாது என்பார் செய்தவம் என இருமைக்கும் பொருந்தக் கூறினார். அஃதாவது பழவினை வந்து பயன் நுகர்விக்குங் காலத்தே பழைய நல்வினையும் இப்பொழுது செய்யும் நல்வினையும் சிறிதும் அந்நுகர்ச்சியைத் தீர்க்கமாட்டா என்றவாறு. அச் சங்கமன் மனைவி போன்றே நீயும் நின் கணவனை ஈரேழ் நாள் கழிந்தே காணல் கூடும் என்றவாறு. ஈனோர் - இந்நில வுலகத்தார். ஈண்டு மதுராபதி கண்ணகிக்குக் கூறுகின்ற கோவலனுடைய பழவினை வரலாறு மணிமேகலையின்கண், கண்ணகி மணிமேகலைக்குக் கூறுவாளாக இங்குக் கூறியபடியே கூறப்பட்டுள்ளது. (மணிமே 10-33.)

கண்ணகியின் செயல்

177-185: மதுரை .............. கொண்டாங்கு

(இதன்பொருள்.) மதுரைமா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்டபின் - மதுரை நகரத்துச் சிறந்த காவற் றெய்வமாகிய மதுராபதி ஊழ்வினையின் விளைவினைத் திருமாபத்தினியாகிய கண்ணகிக்குக் கூறுமுறையானே உளங் கொள்ளுமாறு கூறி அந் நகரத்தைத் தீயினாலெய்துங் கேட்டினின்றும் விடுதலை செய்த பின்னர் கருத்து உறு கணவன் கண்ட பின் அல்லது - என் நெஞ்சத்தே நிலைபெற்றுள்ள என் கணவனைக் கண்கூடாகக்கண்ட பின்னர் இருத்தலன்றிக் காணுமளவும்; இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என - எவ்விடத்தும் அமர்ந்திருப்பேனும் அல்லேன் நிற்றல்தானும் செய்கிலேன் என்று துணிந்து; கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து - அம் மதுரையிற் கொற்றவை எழுந்தருளியிருக்கின்ற திருக்கோயிலின் முன்றிலிடத்தே சென்று தன் கையிலணிந்திருந்த அழகிய வளையல்களை யெல்லாம் உடைத்துப் போகட்டு அத் தெய்வத்தை நோக்கிக் கூறுபவள்; கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு என - அன்னையே! அளியேன் இந்நகரத்துத் தலைக்கடைப் பெருவாயிலின்கண் என் ஆருயிர்க்காதலனோடு இனிது வாழக் கருதிப் புகுந்த யான் இப்பொழுது காதலனையும் இம்மை வாழ்வினையும் இழந்து சிறுமையுற்றேனாகி இந்நகரத்துப் புழைக்கடைவாயில் வழியே செல்வேன் காண்! இங்ஙனமிருந்தது என் பழவினைப் பயன் என்று தன்னையே நொந்துகூறி அவ்வாயில் வழியாகப் புறப்பட்டுச் செல்கின்றவள்; இரவும் பகலும் கையற்று மயங்கினள் - இரவும் பகலுமாகிய இரண்டு பொழுதுகளிலும் யாதொன்றுமறியாமல் செயலற்று மயங்கி; உறவு நீர்வையை ஒருகரைக் கொண்டு ஆங்கு - விரைந்தொழுகாநின்ற நீரையுடைய வையைப் பேரியாற்றினது ஒரு கரையினை வழியாகக் கொண்டு நிற்றலும் இருத்தலுமின்றிச் செல்லுங் காலத்தே; என்க.

(விளக்கம்) விதிமுறை - ஊழ்வினை வந்துருத்திய முறையை எனினுமாம். அழல்வீடு - தீப்பற்றி எரியாதபடி விடுதலை செய்தல். அழல்வீடு கொண்டபின் என்றமையால் கண்ணகியின் சினந்தணிந்தமையும் நகரத்தே தீ அவிந்தமையும் பெற்றாம். இவ்வுலகிலில்லாமையால் கருத்துறு கணவன் என்றாள். இருத்தல் - இளைப்பாறியிருத்தல். நிற்றல் - ஓய்ந்துநிற்றல். பெயர்கு - பெயருவேன். பெயர்கெனக் கொற்றவைக்குக் கூறி என்க. இரவென்றும் பகலென்றுமறியாமல் எனினுமாம். உரவு - விரைவு.

186-190: அவலவென்னாள் ....... ஏறி

(இதன்பொருள்.) அவலித்து இழிதலின் மிசைவைத்து ஏறலின் துன்பத்தாலே பதறி இறங்குதலானும் நினைவின்றி அடியினை உயர்த்திவைத்து ஏறுதலானும்; அவல என்னாள் மிசைய என்னாள் -செல்லும் வழியில் குழிகள் உள என்று பாராமலும் மேடுகள் உளவென்று பாராமலும் இறங்கியும் ஏரியும் செல்லா நிற்றலாலே; கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - கடலினது வயிற்றைக் கிழித்துக் குருகுப் பெயர்கொள் குன்றத்தினது நெஞ்சத்தைப் பிளந்து அப்பொழுதே அவுணர்களைக் கொன்று நூழிலாட்டிய ஒளிமிக்க இலையையுடைய நெடிய வேற்படையினை ஏந்திய புகழாலே நீண்ட செவ்வேள் எழுந்தருளிய குன்றத்தின் கண்ணே திருவடியை வைத்து ஏறிப்போய் என்க.

(விளக்கம்) அவலித்திழிதலின் அவல என்னாள் என மாறுக. ஈண்டுக் கண்ணகியார் தாம் நெடுவேள் குன்றத்து ஏறுதல் வேண்டும் என்று நினைந்தேறினார் அல்லர், அவர் செல்லும் வழியிடத்தே எதிர்ப்பட்டது நெடுவேள் குன்றம் ஆதலால் பள்ளம் என்றும் மேடு என்றும் பாராது செல்லுமவர் தானே எதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்து அடிவைத் தேறினர் என்பதும், இதுதானும் அவர்தம் சிறப்பிற்கேற்றதொரு வாய்ப்பே ஆயிற்று என்பதும் தோன்ற அவல என்னாள் மிசைய என்னாள் மிசைவைத் தேறலின் நெடுவேள் குன்றத்து அடிவைத்தேறி எனப் பாராமல் அடியிட்டேறுதலை ஏதுவாக்கினார்.

இனி, அக் குன்றந்தானும் அத் திருமாபத்தினி அடிவைத்தேறி அமரர்க் கரசன் தமர் வந்தேத்தி அவரை வரவேற்றற்குத் தகுந்ததோர் இடமேயாம் என்பது குறிப்பாகத் தோன்றுமாறு கடல்வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த நெடுவேல் நெடுவேள் குன்றம் எனப் பெரிதும் விதந்தோதுவாராயினர். என்னை? பண்டு கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து அவுணரைக் கடந்த நெடுவோலோடு முருகவேளும் அக் குன்றத்தே அமரர்க்கரசன் தமர்வந் தீண்ட அடிவைத்தேறி யமர்ந்தனன். இன்னும் இக்கண்ணகித் தெய்வம் தன் வேல் போலும் கண் உகுக்கும் நீராலே பாண்டியன் நெடுஞ்செழியனுடைய நெஞ்சு பிளந்து அவனது மதுரையாகிய கடல்வயிறு கலக்கி வந்து அடிவைத் தேறுதற்கும் அமரர்க்கரசன் தமர் வந்தீண்டுதற்கும் அக் குன்றஞ் சாலச்சிறந்த தொன்றாதலுணர்க.

அவல மிசைய - பள்ளங்களையுடையனவும் மேடுகளையுடையனவுமாகிய நெறிகள்.

191-200: பூத்த ........ கண்ணகிதான்என்

(இதன்பொருள்.) பூத்த பொங்கர் வேங்கைக் கீழ் யான் ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளை யுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று (அவ்விடத்தே தன்னைக் கண்டு நீவிர் யாவிரோ என்று வினவிய குறமகளிர்க்கு) யான் ஒப்பற்ற தீவினையுடையேன் என்று கூறி ஏங்கி நிற்ப; அமரர்க்கு அரசன் தமர் - அப்பொழுது தேவேந்திரனுடைய அமைச்சர் முதலிய சுற்றத்தார்தாம்; இது எழுநாள் இரட்டி சென்றபின் தொழுநாள் என - இந்த நாள்தான் கண்ணகி கணவனை இழந்தவள் பதினான்கு நாள் கழிந்த எல்லையிலே தன் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் ஆகும் என்றுணர்ந்து; தோன்ற வாழ்த்தி - அக் குறிப்புக் கோவலனுக்குப் புலப்படுமாறு அவனையும் வாழ்த்தித் தம்முடன் அழைத்துக்கொண்டு; ஆங்கு வந்து பீடு கெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி - வானுலகத்தினின்றும் இழிந்து கண்ணகி நிற்கும் அவ்விடத்தே வந்து பெருமை பொருந்திய கண்ணகியினது பெரிய புகழை எடுத்தோதி; வாடா மாமலர் மாரி பெய்து - வாடாத சிறப்பினையுடைய கற்பக மலர்களை மழைபோன்று மிகுதியாகக் கண்ணகியின் மேற்பொழிந்து; ஏத்த - கைகுவித்துத் தொழாநிற்ப; கோநகர்ப் பிழைத்த கோவலன் தோன்ற வாழ்த்தி - பாண்டியன் தலை நகரத்தே மறைந்த கோவலன்றானும் அவ்வமரரோடு தன்முன் வந்து தோன்றா நிற்ப அவனை வணங்கி வாழ்த்தி; கோவலன் தன்னொடு - அக் கோலனோடே ஒருசேர; கான் அமர் பூங்குழல் கண்ணகிதான் - நறுமணங் கமழுகின்ற அக் கண்ணகி நல்லாள் தானும்; வான ஊர்தி ஏறினள் மாதோ - வானவூர்தியின்கண் ஏறி விண்ணவரோடு வானுலகம் புகுந்தனள்; என்க.

(விளக்கம்) ஓர் தீத்தொழிலாட்டியேன் என்று குறமகளிர்க்குக் கூறி என்க. என்னை? கண்ணகியார் அவ்வாறு குறமகளிர்க்குக் கூறுதலை வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில் விரித்தோதுதலை ஆண்டுக் காண்க. அமரர்க்கரசன் தமர் ........... இது எனக் கோவலனுக்குந் தோன்ற அவனை வாழ்த்தி அவனையும் அழைத்துக் கொண்டு வந்து ஏத்த என இசையெச்சத்தாலே சில சொற்கள் விரித்துக் கூறுக.

வாடா மலர் - கற்பகமலர், கோநகரின் கண் (பிழைத்த) தன்கண் காணாவகை மறைந்த கோவலன் என்க. மாது, ஓ: அசைச் சொற்கள்.

வெண்பாவுரை

தெய்வம் ................. விருந்து

(இதன்பொருள்.) மண்அகத்து மாதர்க்கு அணி ஆய கண்ணகி - இந்நிலவுலகத்தே மகளிராய்ப் பிறந்தோரெல்லாருக்கும் பேரணிகலனாகத் திகழா நின்ற கண்ணகி நல்லாள் தானும்; தெய்வம் ஆய் விண் அக மாதர்க்கு விருந்து - மக்கட் பிறப்பினோடே தெய்வத்தன்மையுடையளாய் வானுலகத்து மகளிர்க்கெல்லாம் எஞ்ஞான்றும் எதிர்கொண்டு பேணுதற்குரிய நல்விருந்தாயினள்; தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுவாளை - பிறிதொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதித் தொழுதெழுமியல்புடைய கற்புடைய மகளை; தெய்வம் தொழுந்தகைமை திண்ணிது - தெய்வமும் வணங்கும் தன்மை இக்கண்ணகி வரலாற்றினால் உறுதியாயிற்று என்க.

(விளக்கம்) 
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

என்றோதிய தெய்வப் புலவர் திருவாக்கு இக்கண்ணகியால் திண்ணிய வாக்காயிற்று எனினுமாம்.

வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பதும் இக்கண்ணகியால் திண்ணிதாயிற்று எனவும் கொள்க.

கட்டுரை

முடிகெழு ........ முற்றிற்று

(இதன்பொருள்.) முடி உடை வேந்தர் மூவருள்ளும் - முத்தமிழ் நாட்டை ஆளும் முடியையுடைய பாண்டியர் சேரர் சோழர் என்னும் மூவேந்தருள் வைத்து; படை விளங்கும் தடக்கைப் பாண்டியர் குலத்தோர் - படைக்கலந் திகழாநின்ற பெரிய கையையுடைய பாண்டியர் தம் குலத்திற்பிறந்த வேந்தருடைய; அறனும் - அறங்காக்கின்ற சிறப்பும்; மறனும் - மறச்சிறப்பும்; ஆற்றலும் -வன்மைச் சிறப்பும்; அவர் தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும் - அவர்தம் பழைய வெற்றியையுடைய முதிய மதுரை என்னும் ஊரினது அறப்பண்பு மேம்பட்டுத் திகழும் சிறப்பும்; விழவுமலி சிறப்பும் - அவ்வூரின்கண்ணே திருவிழாக்கள் மிக்கு நிகழுகின்ற சிறப்பும்; விண்ணவர் வரவும் - வானவர் அங்கு வருகின்றதனாலுண்டாகின்ற சிறப்பும்; ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவருடைய நாட்டில் வாழுகின்ற குடிகளின் சிறப்பும் உணவுப் பொருளின் மிகுதிப்பாடும்; அவர் தம் வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - அவருடைய வையை என்னும் பெரிய யாறு தனது நீராலே பல்வேறு வளங்களையும் உண்டாக்கி மன்னுயிரை ஊட்டி ஓம்புமியல்பும்; பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும் - அவர் தம் செங்கோன்மை காரணமாக எஞ்ஞான்றும் பொய்த்தலின்றி முகில்கள் புதிய மழைநீரைப் பொழிகின்ற வியல்பும்; ஆரபடி சாத்துவதி என்று இருவிருத்தியும் நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்று- ஆரபடியும் சாத்துவதியும் என்னும் இருவகை விருத்திகளும் தம்பால் நிகழும்படி தோன்றுகின்ற; வரிக்கூத்தும் குரவைக் கூத்தும் என்று ஈண்டுக் கூறப்பட்ட இவை அனைத்தும்; பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் - இப் பொருள்களோடே அடிகளாருடைய ஒப்பற்ற உட்கோளின் தன்மையும்; வடவாரியர் படை கடந்து தென் தமிழ் நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் - வடநாட்டு ஆரிய மன்னர்களுடைய படையை வென்று வாகை சூடி நாவலந் தண்பொழிலின் தெற்குப் பகுதியிலமைந்த மூன்று தமிழ்நாட்டினும் வாழ்வோரெல்லாம் தன் செங்கோன்மைச் சிறப்பினை ஒருங்கே கண்டு மகிழுமாறு குற்றந்தீர்ந்த கற்பினையுடைய தன் பெருந்தேவியாருடனே; அரைசு கட்டிலின் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு - தான் எழுந்தருளிய அரசு கட்டிலிடத்தேயே வல்வினை வளைத்த கோலைச் செங்கோலாக்கி நிலமடந்தைக்குக் காட்டற் பொருட்டு உயிர்நீத்தருளிய அரசர் பெருமான் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பினோடே; ஒரு பரிசா நோக்கிக் கிடந்த ஒரு தன்மையாகத் தனதுட்கோளாக நோக்கியியன்ற ...... மதுரைக் காண்டம் முற்றிற்று என்க.

(விளக்கம்) பாண்டியர் அறச்சிறப்பு - புறஞ்சேரி இறுத்த காதைக்கண் (5) கோள்வல் உளியமும் .......... செங்கோல் தென்னவன் காக்கும் நாடு என்னும் பகுதியானும் கட்டுரை காதைக்கண் மதுராபதித் தெய்வத்தின் கூற்றானும் பிறாண்டும் உணர்க. மறச்சிறப்பு, காடு காண் காதைக்கண் மாங்காட்டு மாமுது முறையோன் (15) வாழ்க எங்கோ என்பது தொடங்கி (39) மன்னவன் வாழ்கென என்பதீறாகக் கூறுமாற்றாலுணர்க. மூதூர் பண்புமேம்படுதலை ஊர்காண் காதையினும் பிறாண்டும் அறிக. குடியும் கூழின் பெருக்கமும் ஊர்காண் காதை முதலியவற்றாலுணரலாம். வையைப் பேரியாறு வளஞ் சுரந்தூட்டுதலைப் புறஞ்சேரி இறுத்த காதைக்கண் 151 முதல் - 170 வரையில் குரவமும் ............ வையை என்ற பொய்யாக் குலக் கொடி எனவரும் பகுதியாலுணர்க. ஆரபடி சாத்துவதி என்பன கூத்தினுள் விலக்குறுப்பாகிய விருத்தியின் விகற்பம். இவற்றை அரங்கேற்று காதைக்கண் (13) பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்தும் என்புழி விலக்கு என்பதன் விளக்கவுரை நோக்கியுணர்க.

தனிக்கோள் என்றது அடிகளார் இக் காப்பியத்திற்குக் கருப் பொருளாகத் தம்முட் கொண்ட, அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாதலும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதுமாகிய மூன்றுமாம். இம்மூன்றும் இக்காண்டத்திலேயே சிறப்பாக அறிவுறுத்தப்பட்டமையும் உணர்க.

பிறபொருள் என்றது இவற்றைச் சார்ந்து வருகின்ற பல்வேறு வகைப்பட்ட பொருள்களையும் என்க.

கட்டுரைக் காதை முற்றிற்று.

மதுரைக் காண்டம் முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #32 on: February 28, 2012, 07:43:47 AM »
வஞ்சிக் காண்டம்(24. குன்றக் குரவை)

அஃதாவது மதுரையினின்றும் வையை யாற்றினது கரைவழியே, இருத்தலும் இலளாய் நிற்றலும் இலளாய்ச் சென்ற கண்ணகி சேர நாட்டின்கண், நெடுவேள் குன்றத்தின்கண் அடிவைத் தேறி, அங்குப் பூத்துநின்ற வேங்கைமரத்தினது நறுநிழலின் கண் ஏங்கி நின்றாளாக, அப்பொழுது மதுரையில் கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாளாதலின் தேவர்கள் கற்பகமலர் பொழிந்து கோவலன்றன்னொடு வானுலகத்தினின்றும் இழிந்துவந்து கண்ணகிக்குக் கணவனைக் காட்டி அவள் தன் பெரும்புகழைப் பலபடப் பாராட்டி அந் நெடுவேள் குன்றத்து வாழும் குறவர்களும் கண்டுநிற்பவே அவ் வீரபத்தினியைக் கணவனோடு கூட்டி வான்ஊர்தியில் ஏற்றித் தம்முலகுக்குக் கொண்டு போயினார்.

இந்த வியத்தகு நிகழ்ச்சியைக் கண்கூடாகக் கண்டுநின்ற குன்றவாணர் அக் கண்ணகியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு குரவைக் கூத்தாடி மகிழ்ந்தனர். பின்னர், வஞ்சி நகரத்திருந்து மலைவளம் காணுதற்பொருட்டு அக் காட்டகத்தில் வந்திருந்த சேரன்செங்குட்டுவனைக் கண்டு தொழுதற்குக் கையுறையாக அரும்பொருள் பலவற்றைச் சுமந்துசென்று அம் மன்னவன் மலரடி வணங்கியபின்னர்த் தாம் கண்கூடாகக் கண்ட கண்ணகி வர்னஊர்தியேறி விண்ணுலகம் புக்க செய்தியையும் கொல்லோ? யார் மகள் கொல்லோ? யாங்கள் அறிந்திலேம்; மன்னர் மன்னவ! பன்னூறாயிரத்தாண்டு வாழ்க! என்று வாழ்த்தி நின்றனர்.

குன்றவாணர் கூறிய செய்திகேட்டு வியப்புற்ற சேரன் செங்குட்டுவன் தன் அயலிருந்த சான்றோரை நோக்க அங்கிருந்த தண்டமிழ்ப் புலவர் சாத்தனார் அக் கண்ணகியின் வரலாறு முழுவதையும் அம் மன்னனுக்குக் கூறினர். அம் மன்னவன் கோப்பெருந்தேவியை நோக்கினன். அவன் குறிப்பறிந்த தேவியார், அத் திருமாபத்தினிக்கு யாம் திருக்கோயிலெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் எனத் தமது கருத்தை அரசனுக்குக் கூறினர். அதுகேட்ட மன்னர் அப் பத்தினிக்குக் கடவுட்படிவம் அமைத்தற்குக் கல் கொள்ள ஆராய்தலும் அமைச்சர் கூறியபடி இமயமலையில் கல் கொள்ளுதற்கு நாற்பெரும் படையொடு வடதிசை நோக்கிப் புறப்படுதலும் வடவாரிய மன்னரொடு போர்புரிந்து வாகைசூடிப் பத்தினித் தெய்வத்திற்குரிய கல்லை இமயத்தினின்று மெடுத்துக் கனகவிசயர் என்னும் மன்னர்தம் முடித்தலைமே லேற்றிக் கொணர்ந்து கங்கைப் பேரியாற்றில் நீர்ப்படை செய்தலும் அங்கிருந்து வஞ்சி நகரத்திற்குக் கொணர்தலும் கடவுட்படிவம் சமைத்தலும் திருக்கோயிலெடுத்து அப் படிவத்தை நிறுத்துதலும் விழாவெடுத்தலும் கண்ணகி விண்மிசை மின்னல்போன்று தெய்வவுருவில் தோன்றிச் செங்குட்டுவன் முதலியோருக்கு வரம்தருதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு. சேர நாட்டின் தலைநகரமாகிய வஞ்சியின்கண் இருந்து செங்கோன்மை செலுத்திய அரசன் கண்ணகிக்குச் செய்த சிறப்புகளாதலின் இது வஞ்சிக் காண்டம் என்னும் பெயர் பெற்றது.

வஞ்சி- சேரர் தலைநகரம்

24. குன்றக் குரவை (கொச்சகக் கலி)

அஃதாவது-கண்ணகி மதுரையினின்றும் வையையின் ஒரு கரை வழியாகச் சேரநாடு புகுந்து ஆங்கெதிர்ப்பட்ட நெடுவேள் குன்றத்தின்கண் ஏறி ஆங்குப் பூத்துப் பொலிந்து நின்ற ஒரு வேங்கை மரத்தின் நிழலின்கண் நின்றபொழுது, அங்கு வந்த குறமாக்கள் கண்ணகியைக் கண்டு நீவிர் யாவிரோ? என வினவி அவளொடு சொல்லாடி நின்றனராக; அப்பொழுது வானவர் அங்கு வந்து கண்ணகியின் மேல் மலர்மாரி பொழிந்து அவள் கணவனையும் காட்டி வான ஊர்தியில் ஏற்றி அக் குறமாக்கள் கண்டு நிற்பவை விண்மிசைப் போயினர்; அது கண்டு வியப்பெய்திய அக் குன்றவாணர் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்தலும் அம் மகிழ்ச்சி காரணமாகக் குறமகளிர் குரவைக் கூத்தாடுதலும் பிறவும் கூறும் பகுதி என்றவாறு.

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ? என-முனியாதே,
மண மதுரையோடு அரசு கேடுற வல் வினை வந்து உருத்தகாலை,  5

கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள்.
என்றலும், இறைஞ்சி, அஞ்சி, இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர் இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,  10

சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ் சினை வேங்கை நல் நிழல்கீழ், ஓர்
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!  15

தொண்டகம் தொடுமின்; சிறுபறை தொடுமின்;
கோடு வாய் வைம்மின்; கொடு மணி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புகை எடுமின்;
பூப் பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20

ஒரு முலை இழந்த நங்கைக்கு,
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே.  1

கொளுச் சொல்
ஆங்கு ஒன்று காணாய், அணி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அரி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ணம் செறியத் தூய், தேம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் கொண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மலை அருவி ஆடுதுமே.
ஆடுதுமே, தோழி! ஆடுதுமே, தோழி!
அஞ்சல் ஓம்பு என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் சோலை மலை அருவி ஆடுதுமே.  2

எற்று ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்றையார்
உற்று ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.  3

என் ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
பொன் ஆடி வந்த புதுப் புனல்;
பொன் ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
முன் ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே.  4

யாது ஒன்றும் காணேம் புலத்தல், அவர் மலைப்
போது ஆடி வந்த புதுப் புனல்;
போது ஆடி வந்த புதுப் புனல் மற்றையார்
மீது ஆடின் நோம், தோழி! நெஞ்சு-அன்றே. 5

பாட்டு மடை

உரை இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புரை தீர் புனல் குடைந்து ஆடின், நோம் ஆயின்,
உரவுநீர் மா கொன்ற வேல்-ஏந்தி ஏத்திக்
குரவை தொடுத்து, ஒன்று பாடுகம் வா தோழி!  6

சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல்-அன்றே-
பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே.  7

அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும்வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வெள் வேலே. 8

சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.  9

பாட்டு மடை

இறை வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை, அலர் கடம்பன் என்றே,
வெறியாடல் தான் விரும்பி, வேலன், வருக என்றாள்! 10

ஆய் வளை நல்லாய்! இது நகை ஆகின்றே-
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வரும் ஆயின் வேலன் மடவன்; அவனின்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன். 11

செறி வளைக் கை நல்லாய்! இது நகை ஆகின்றே-
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்!
வேலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் ஆயின்.  12

நேர் இழை நல்லாய்! நகை ஆம்-மலை நாடன்
மார்பு தரு வெந் நோய் தீர்க்க வரும் வேலன்!
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின்.  13

பாட்டு மடை

வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து,
நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும்
ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே!  14

கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்-
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே. 15

மலைமகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம்-
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே.  16

குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை தொழுதேம்-
துறைமிசை நினது இரு திருவடி தொடுநர்
பெறுக நல் மணம்; விடு பிழை மணம் எனவே.  17

பாட்டு மடை

என்று யாம் பாட, மறை நின்று கேட்டருளி,
மன்றல் அம் கண்ணி மலைநாடன் போவான் முன்
சென்றேன்; அவன்-தன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்; வாழி, தோழி! 18

கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்தை பொருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்லை; அணி மயில் இல்லை;
குறமகள் இல்லை; செறி தோள் இல்லை;
கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடியோரே.  19

பாட்டு மடை

என்று, ஈங்கு,
அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு,
புலர் வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர் தலை வெற்பன் வரைவானும் போலும்;
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி,
பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலை ஒன்று பாடுதும் யாம்.   20

பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! தோழி! யாம் பாடுகம்;
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்;
தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே.  21

பாடு உற்று,
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே;
பைத்தரவு அல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே.  22

வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்த,
கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே.  23

மறுதரவு இல்லாளை ஏத்தி, நாம் பாட,
பெறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பெற்றி!
பெற்றி உடையதே, பெற்றி உடையதே,
பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்
பெற்றி உடையது, இவ் ஊர்.   24

வாழ்த்து

என்று, யாம்
கொண்டுநிலை பாடி, ஆடும் குரவையைக்
கண்டு, நம் காதலர் கைவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா வைகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே!   25

உரை

உரைப்பாட்டு மடை

அஃதாவது-உரையாகிய பாட்டை இடையிலே மடுப்பது(மடுப்பது-வைப்பது)

குன்றவாணர் கண்ணகியைக் கண்டு வினவுதலும் கண்ணகியின் விடையும்

1-6: குருவி-யானென்றான்

(இதன் பொருள்) குன்றத்துச் சென்று வைகி குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவற்று வருவேம்-முன்-நெடுவேள் குன்றத்தின்கண் பூத்த வேங்கை நிழலின்கண் நின்ற கண்ணகியை அப்பொழுது அங்கு வந்துற்ற ஆடவரும் பெண்டிருமாகிய குன்றவாணர் வியந்து நோக்கிக் கூறுபவர் யாங்கள் எமது மலையின்கண் உள்ள எம்முடைய தினைப்புனத்தின்கண் சென்றிருந்து ஆங்குத் தினைக்கதிரில் வீழும் குருவிகளை ஆயோவெனக் கூவி ஓட்டியும் கிளிகளைத் தழலும் தட்டையும் குளிரும் பிறவும் ஆகிய கிளி கடி கருடிகளைப் புடைத்து வலிந்தகற்றியும் அருவியின்கண் விளையாடியும் சுழன்று வருகின்ற எமக்கு முன்னர்; மலை வேங்கை நறுநிழலின் முலை இழந்து மனம் நடுங்க வந்து நின்றீர் வள்ளி போல்வீர் யாவிரோ என-இம் மலையில் இந்த வேங்கை மரத்தினது நறிய நிழலின்கண் நுமது கொங்கைகளுள் ஒன்றனை இழந்து வந்தமையால் எம்முடைய உள்ளம் நடுங்கும்படி நிற்கின்றீர். நீயிர் எம்முடைய குலத்திற்றோன்றிய வள்ளியம்மையையும் போல்கின்றீர் நீவிர்தாம் யாரோ? என்று வினவினராக; மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலை கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள்-அதுகேட்ட கண்ணகிதானும் சிறிதும் அவர் பால் சினங்கொள்ளாமல் மணமிக்க மதுரைமா நகரத்தோடு அதனை யாளுகின்ற அரசனும் அழிவுறும்படி பழைய தீவினை வந்தெய்தி அதன் பயனை ஊட்டியபொழுது என் கணவனையும் அம் மதுரையிலேயே இழந்து இங்கு வருவதற்குக் காரணமான கொடிய தீவினையையுடைய யான் என்று கூறினளாக; என்க.

(விளக்கம்) தினைக்கதிர்களை அழிப்பதில் கிளிகள் முதன்மையுடையன ஏனைய பறவைகள் சிறப்புடையனவல்ல ஆதலின் குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் எனப் பிரித்தோதினர். ஓப்புதல்-கூவி ஓட்டுதல். கடிதல்-வலிந்தோட்டுதல். அலவுற்று வருதல்-சுற்றித் திரிந்து வருதல். எம்மனம் நடுங்க வந்து நின்றீர் என்றவாறு. கண்ணகியின் சினம் தணிந்துவிட்டமை அறிவித்தற்கு அடிகளார் ஈண்டு முனியாதே என்று விதந்தெடுத்தோதினார், மதுரை இனி அணித்தாக உளது என்பதனைக் கண்ணகி முதன் முதலாக அம் மதுரையின் மணங்களை அவாவி வருகின்ற மதுரைத் தென்றலால் அறிந்தனளாதலின் அத்தகைய மணமதுரைக்கும் வல்வினை கேடு சூழ்ந்ததே என்னும் தன் இரக்கம் தோன்ற மணமதுரை என விதந்தோதினள்; இத்தகைய கேட்டிற்கெல்லாம் தானே காரணமென்பது கருதித் தன்னையே நொந்துகொள்வாள் கடுவினையேன் யான் என்றாள்.

கண்ணகியை விண்ணவர் வானவூர்தியில் அழைத்துப் போதல்

7-9: என்றலும்............போயினார்

(இதன் பொருள்) என்றலும்-என்று இவ்வாறு விடை கூறக்கேட்டு அக் குன்றவாணர்கள்; அஞ்சி இணை விளைக்கை எதிர் கூப்பி இறைஞ்சி நின்ற எல்லையுள்-பெரிதும் அச்சமெய்தித் தம்முடைய இரண்டு வளையல் அணிந்த கைகளையும் கூப்பி அவர் எதிரே வணங்க நின்றபொழுது; வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார்-யாம் முற்கூறியபடி அமரர் கோமான் தமராகிய தேவர்களும் அப் பீடுகெழு நங்கையின் பெரும் புகழையேத்தி அவள் மிசை வாடா மாமலர் மழை பெய்து கணவனையும் காட்டி வானவூர்தியில் அக் கணவனோடு வைத்து அக்குறவர்களும் கண்டு நிற்கும்பொழுதே தம்முலகத்திற்குக் கொண்டு போயினார் என்றார் என்க.

(விளக்கம்) கண்ணகியின் வரலாற்றில் பெரும்பான்மை மதுரையில் நிகழ்ந்தமையால் அவள் விண்ணகம் புக்க செய்தி சேர நாட்டில் நிகழ்ந்ததாயினும் அக் காண்டத்திலேயே கூறி அவ் வரலாற்றினை முடித்தார். கண்ணகி விண்ணகம் புகுதற்கு இக் குன்றவாணர் அவளைக் கண்டமை காரணம் அன்மையின் அடிகளார் இந் நிகழ்ச்சியை அங்குக் கூறாதொழிந்தார். இனி விண்ணகம் புக்க அக் கண்ணகியின் பொருட்டுச் சேர நாட்டின்கண்ணும் பிறவிடங்களினும் நிகழும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இக் குன்றவாணர் கண்ணகியைக் கண்டமையே காரணமாக அமைதலின் அடிகளார் இக் காண்டத்திற்கு அந் நிகழ்ச்சியையே தோற்றுவாயக அமைத்துக்கொள்கின்றார் என்று அறிக.

குன்றவாணர் செயல்

10-15: இவள் போலும்............கொள்ளுமின்

(இதன் பொருள்) சிறுகுடியீரோ சிறுகுடியீரே-குறிஞ்சி நிலத்து ஊராகிய இச் சிறுகுடியின்கண் வாழ்கின்ற குன்றவர்களே குன்றவர்களே; நம் குலக்கு இவள் போலும் இருந்தெய்வம் இல்லை ஆதலின்-தலைசிறந்த குலமாகிய ஒப்பற்ற நமது குறக்குலத்திற்கு இத் திருமா பத்தினி போன்ற மா பெருந் தெய்வம் பிறிதொன்று இல்லை யாதலின் இப் பத்தினித் தெய்வத்தையே; சிறுகுடியீரே தெய்வம் கொள்ளுமின்-குன்றவாணரே! தெய்வமாகக் கொள்ளுங்கோள்; நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின்- நிறமிக்க அருவியை யுடைய நெடுமின் குன்றமாகிய இம் மலையினது தாழ்வரையினிடத்தே மலர்ந்து நறுமணம் கமழுகின்ற இவ் வேங்கை மரத்தினது நல்ல நிழலின்கீழே அப் பத்தினித் தெய்வம் நின்ற இடத்திலேயே அவளைத் தெய்வமாக நிலை நிறுத்திக் கொள்ளுங்கோள் என்றார் என்க.

(விளக்கம்) இவள் என்றது பத்தினித் தெய்வமாகிய இவள் என்பது பட நின்றது. இத் தெய்வம்போன்று இதுகாறும் நம் குலத்திற்கு ஒரு தெய்வம் வாய்த்ததில்லை ஆதலின் இத் தெய்வத்தை நம்குலதெய்வமாகக் கொள்ளுமின் என்று அறிவித்தபடியாம். இக்குற மகளிர் கருத்தோடு

கற்புக் கடம் பூண்ட வித்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்

எனவரும் கவுந்தியடிகளார் பொன் மொழியையும் நினைக (15: 143-4) சிறுகுடி-குறிஞ்சி நிலத்தூர் எனவே குன்றவாணராகிய நமரங்காள் என விளித்த படியாம். இனி, அக் கண்ணகியை அவள் நின்ற அந்த வேங்கையின் நிழலிலே அவ்விடத்திலேயே தெய்வமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்று இடமும் வரைந் தோதுவார் நிறங்கிளர்............கொள்ளுமின் என்றார். பறம்பு-மலை, அஃதாவது நெடுவேள் குன்றம் என்க.

இதுவுமது

15-22: சிறுகுடியீரே..............கரக்கெனவே

(இதன் பொருள்) சிறுகுடியீரே-குன்றவாணராகிய நமரங்கான்! ஒருமுலை இழந்த நங்கைக்கு-தனது ஒரு முலையினை இழந்து நம் குன்றத்திற்கு எழுந்தருளிய இப் பத்தினித் தெய்வத்திற்கு; காப்புக் கடை நிறுமின்-மதிலாகிய அரண் எடுத்துத் திருவாயிலும் செய்து வையுங்கள்; தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடு வாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்-தொண்டகப் பறையை முழக்குமின் சிறுபறையை அறைமின் கடமாக் கொம்புகளை வாயில் வைத்தூதுமின் கொடிய பணியை அசைத்து ஒலித்திடுமின்; குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்ம்மின் பரவலும் பாவுமின் விரவு மலர் தூவுமின்-குறிஞ்சிப் பண்ணைப் பாடுங்கள் நறுமணப் புகையை யேந்துங்கள் மலர்களைப் பலிப்பொருளாகக் குவித்திடுமின்; இத் தெய்வத்தின் விகழ்பாடி ஏத்துதலும் செய்யுங்கள். பல்வேறு மலர்களையும் கலந்து தூவுங்கள். அஃது எற்றுக்கெனின்; பெரும் மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே-நமது பெரிய மலைநிலம் ஒழிவின்றித் தன் வளங்களையெல்லாம் சுரந்து தருவதாக என்று வேண்டிக் கொள்ளுதற் பொருட்டேயாம் என்றார் என்க.

(விளக்கம்) அத் தெய்வத்தின் பெயர் அறியாமையின் தாமே ஒரு முலையிழந்த நங்கை என ஒரு பெயர் வைத்துக்கொண்டார். இப் பெயர் தாமே ஒற்றை முலைச்சி எனப் பிற்காலத்தில் இத் தெய்வத்திற்குப் பல்வேறு இடங்களில் வழங்கி வந்ததாகத் தெரிகின்றது. இப் பெயருடைய தெய்வம் கண்ணகித் தெய்வம் என்றறியப்படாமல் வேறு தெய்வமாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். இத் தெய்வம் மழைவளம்! வேண்டி வழிபாடு செய்யப்பட்டமையின் மாரியம்மன் என்னும் பெயரானும் வழங்கப்பட்டு வருவதாயிற்று என எண்ணாதற்கும் இடமுளது.

கொளுச் சொல்

அஃதாவது-அகப்பொருள் கருத்தைத் தன்னுட் கொண்ட சொற்கள் என்றவாறு.

(2) ஆங்கொன்று.........ஆடுதுமே

(இதன் பொருள்) அணி இழாய் ஆங்கு ஒன்று காணாய்-அழகிய அணிகலன்களையுடையோய்! அதோ சேய்மையில் வீழுகின்ற ஒரு அருவியைப் பார்; ஈங்கு இதுகாண்-(அணித்தாகச் சென்று அவ்வருவியைச் சுட்டிக் காட்டி) தோழி! இந்த அருவியின் அழகினைக் காண்பாயாக; அஞ்சனப் பூழி அரிதாரத்து இன்இடியல் சிந்துரச் சுண்ணம் செறியத்தூய்-கரிய நிறமுடைய புழுதியும் அரிதாரத்தினது காட்சிக்கினிய துகளும் சிந்தூரப் பொடியும் செறியும் படி தூவப் பெற்று; தேம் கமழ்ந்து இந்திரவில்வின் எழில் கொண்டு-தேன் மணம் கமழப் பெற்று வானவில்லினது அழகைத் தன்னிடத்தே கொண்டு, இழுமென்று ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே-கேள்விக்கினிதாக இழுமென்னும் ஓசையுடனே ஓடி வந்து இவ்விடத்திலே வீழ்கின்ற இந்த மலை அருவியின்கண் யாம் இனிது ஆடி மகிழ்வேம் என்றாள் என்க.

(விளக்கம்) இஃது அருவி ஆடுதற்கு விரும்பிய தலைவி தோழிக்குக் கூறியது. சேய்மையில் நின்று ஆங்கொன்று காணாய் என்றவள் அணித்தாகச் சென்றபின் ஈங்கு இதுகாண் என அண்மைச் சுட்டால் சுட்டினாள். அஞ்சனம் அரிதாரம் சிந்துரம் என்பன மலைபடு பொருள்கள், பல்வேறு நிறமுடைய இப் பொருள்களின் துகள்களை வாரிக்கொண்டு வருதலின் அருவி இந்திரவில் போல்கின்றது என்றுவாறு. இந்திரவில்-வானவில். இழுமென்று: ஒலிக்குறிப்பு.

ஆடுதுமே..........ஆடுதுமே

(இதன் பொருள்) ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான்(அது கேட்ட தோழி தலைவியை நோக்கிக் கூறுபவள்) தோழி! நீ விரும்பியவாறே யாம் இம்மலை அருவியின்கண் ஆடி மகிழ்வேமாக! ஒரு தலையாக ஆடி மகிழ்வேமாக! யான் பிரிவேன் என்று அஞ்சாதேகொள் எனத் தேற்றுரை கூறி நமது பெண்மை நலத்தை நுகர்ந்து போய் மீண்டும் வந்து நமக்குத் தண்ணளி செய்திலாத வன்கண்ணனுடைய; மஞ்சு சூழ் சோலை மலையருவி ஆடுதுமே-முகில் சூழ்கின்ற சோலையுடைய மலையினின்றும் வருகின்ற இவ்வருவியின்கண் யாம் நீராடி மகிழ்வேம்(என்றாள்) என்க.

(விளக்கம்) இது தோழி தலைவனை இயற்பழித்தபடியாம். நலன்-பெண்மை நலம். வன்கண்ணனுடைய மலையாயிருந்தும் மஞ்சு சூழ்தல் வியத்தற்குரியதாம் எனவும் அவனுடைய மலையருவியில் ஆட நேர்ந்ததே எனவும் இயற்பழித்தபடியாம்.

சிறைப்புறம்

அஃதாவது- தலைவன் வந்து சிறைப்புறத்தே நிற்பானாகவும் அவன் வரவறியாதாள் போலத் தலைவி தோழி கேட்பக் கூறியது என்றவாறு.

3. எற்றொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலை கல் தீண்டி வந்த புதுப்புனல் எற்று ஒன்றும் காணேம் புலத்தே-தோழி! அவர் நலன் உண்டு நல்காதார் ஆயிடினும் ஆகுக. அவருடைய மலையாகிய கல்லைத் தொட்டு வருகின்ற புதிய இந்த அருவி நீரோடு யாம் ஊடுதற்கு யாதொரு காரணமும் காண்கின்றிலேம் ஆயினும்; தோழி கல் தீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்று ஆடின் நெஞ்சு நோம் அன்றே தோழி! அவருடைய மலையைத் தொட்டு வந்த இப் புதிய நீரின் கண் ஏனைய மகளிர் பொருந்தி ஆடுவாராயின் நமது நெஞ்சம் அது பெறாமல் வருந்தும் அன்றோ? அங்ஙனம் வருந்தாமல் யாமே இதன்கண் ஆடுவோமாக என்றாள் என்க. இங்ஙனமே ஏனைத் தாழிசைகளுக்கும் கூறிக் கொள்க.

4. என்னொன்றும்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் என ஒன்றும் காணேம்-அவ் வன்கண்ணருடைய மலையின்கண் பொன் துகளை அளைந்து வந்த புதிய இவ்வருவி நீரோடு யாம் ஊடுதற்குக் காரணம் யாதொன்றும் காண்கிலேம் தோழி பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையோர் முன் ஆடின் நெஞ்சு நோம் அன்றே-அவர் மலையின்கண் பொன் துகள் அளைந்து வந்த புதிய இந்நீரிலே ஏனை மகளிர் முற்பட ஆடினால் நமது நெஞ்சம் நோகும் அல்லவோ என்றாள் என்க.

(விளக்கம்) என்னொன்றும்-யாதொன்றும். பொன்-பொன்துகள்.

5. யாதொன்றுங்.........நெஞ்சன்றே

(இதன் பொருள்) அவர் மலைப்போது ஆடி வந்த புதுப்புனல் புலத்தல் யாது ஒன்றுங் காணேம்-அவருடைய மலையின்கண் மலர்ந்த மலர்களை அளைந்து வந்த இந்தப் புதிய நீரினோடு ஊடுதற்கு யாம் காரணம் யாதொன்றும் காண்கிலேம் ஆயினும் தோழி போது ஆடி வந்த புதுப்புனல் மற்றையார்மீது ஆடின் நெஞ்சு நோம் அன்றே-தோழி! அவர் மலையின் மலர் அளைந்து வந்த இப்புதிய நீரின்கண் ஏனை மகளிர் மிகைபட ஆடின் நமது நெஞ்சம் நோகும் அன்றோ என்றாள் என்க

(விளக்கம்) இத்தாழிசை மூன்றும் ஒரு பொருள்மேல் அடுக்கிக் கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன

பாட்டு மடை

அஃதாவது-பாட்டினை இடையில் வைத்தல்

6. உரையினி.....தோழி

(இதன் பொருள்) மாதராய் இனி உரை உண்கண் சிவப்புப்புரை தீர் புனல் குடைந்து ஆடினோம் ஆயின்-நங்காய் இனி நீ உன் கருத்தினைக் கூறுவாயாக யாம் நமது மையுண்ட கண்கள் சிவக்கும்படி குற்றமில்லாத இந் நீரின்கண் துழந்து துழந்து ஆடினோம் அல்லமோ இவ்வாட்டம் முடிந்தாதலால் (என்று தோழி வினவ தலைவி கூறுகின்றாள்) தோழி குரவை தொடுத்து உரவு நீர் மா கொறை வேலேந்தி ஏத்திப் பாடுகம் வா-தோழி! இனி யாம் குரவைக் கூத்திற்குக் கைபிணைந்து கடலின்கண் நின்ற மாமரமாகிய சூரபதுமனைக் கொன்றொழித்த வேலேந்தியாகிய முருகனைப் புகழ்ந்து பாடுவோம் என்னுடன் வருவாயாக என்றான் என்க.

(விளக்கம்) மாதராய் என்றது தலைவியை. தலைவனே குற்றமுடையான் என்பது குறிப்புப் பொருளாமாறு அவன் மலை அருவிநீர் குற்றமுடைத்தன்று என்பாள் புரை தீர் புனல் என்றான். உரவு நீர் கடல். மா-சூரபதுமன். வேலேந்தி-முருகன்; பெயர். குரவைக் கூத்திற்குரிய கற்கடகக் கைதொடுத்து என்றவாறு.

தெய்வம் பராஅயது

அஃதாவது-குறிஞ்சித் திணைத் தெய்வமாகிய முருகனை வாழ்த்தியது என்றவாறு.

7. சீர்கெழு..........வேலே

(இதன் பொருள்)  பார் இரும் பவுவத்தின் உள் புக்குப் பண்டு ஒரு நாள் சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேல்-பாறைக் கற்களையுடைய பெரிய கடலின்னுள்ளே புகுந்து பண்டொரு காலத்தே சூரனாகிய மாமரத்தை அழித்த ஒளிபடைத்த இலையையுடைய வெள்ளிய வேல்தான் யாருடைய வேல் என்னின். சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கைவேல் அன்றே-சிறப்புப் பொருந்தி திருச்செந்தூரும் திருச்செங்கோடும் திருவெண்குன்றும் திருவேரகமும் ஆகிய இத் திருப்பதிகளினின்றும் ஒருபொழுதும் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற முருகக் கடவுளினுடைய கையில் அமைந்த வேலே யாகும் என்பர்.

(விளக்கம்) பார்-பாதை. பவுவம்-கடல். சூர்மா-சூரனாகிய மாமரம். சீர்-அழகுமாம். ஏரகம்-சுவாமிமலை என்பாரும் உளர் நச்சினார்க்கினியர் ஏரகம் மலை, நாட்டகத்ததொரு திருப்பதி என்றார் அரும்பதவுரையாசிரியர் வெண்குன்றம் என்பதனைச் சுவாமிமலை என்பர்.

8. அணி.........வேலே

(இதன் பொருள்) பிணிமுக மேல்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம்-மயிலூர்தியின் மேல் ஏறிச் சென்று அசுரர் கூட்டம் பெருமை அழிந்தொழியும்படி; மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேல்-அழகிய விண்ணுலகத்து அரசனாகிய இந்திரன் கைதொழுது ஏத்துதலாலே அவன் பகையைக் கொன்ற வெள்ளிய வேல் யாருடைய வேலோ எனின்; அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர் ஆறு கையும் இணையின்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே-அழகிய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் தனக்குவமை பிறர் இல்லாதபடி தானே உடையவனாகிய முருகப் பெருமான் திருக்கையில் ஏந்திய வேலேயாகும் என்ப; என்க.

(விளக்கம்) ஆறுமுகங்களும் என மாறுக. இணை. உவமை. பிணி முகம்-மயில்; யானை என்பாரும் உளர். மணி-அழகு. மாறு-பகை

9. சரவண...............வேலே

(இதன் பொருள்) வருதிகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து-வளர்ந்து வருகின்ற மலையைச் சுற்றி வருகின்ற அரசனுடைய மார்பைப் பிளத்தற் பொருட்டு; குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேல் -கிரவுஞ்சம் என்னும் பெயரையுடைய மலையைப் பிளந்து வீழ்த்திய நீண்ட வேல் யாருடைய வேலோ எனின்; சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேல் அன்றே-சரவணப் பொய்கையின்கண் மலர்ந்துள்ள தாமரைப் பூக்களாகிய பள்ளி அறையினிடத்துத் தன்னைக் கருவுற்று ஈன்ற தாய்மார்களாகிய கார்த்திகை மகளிர் அறுவருடைய அழகிய முலைப்பாலை யுண்டருளிய முருகப்பெருமானுடைய அழகிய கையில் ஏந்திய வேல் என்று கூறுவர்; என்க

(விளக்கம்) சரவணப் பூம் பள்ளி-இமயமலையின்கண் உள்ள ஒரு நீர் நிலை. அந் நீர் நிலையின்கண் கார்த்திகை மகளிர் அறுவரும் தாமரைப்பூக்களிலே முருகனை ஆறு குழந்தைகளாக ஈன்றனர் எனவும் அக் குழந்தைகள் ஒன்றுபட்டு ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரு கடவுளாயின எனவும் கூறுவர். இதனை ஐந்தாம் பரிபாடலிற் காண்க. வருதிகிரி கோலவுணன் என்பன வினைத்தொகைகள். திகிரி மலை. குருகு-கிரவுஞ்சம் என்னும் ஒரு பறவை. இவை தலைவன் வரைவொடு வருதற்பொருட்டு மகளிர் முருகனை வாழ்த்தியபடியாம்.

பாட்டு மடை

10. இறை..........என்றாள்

(இதன் பொருள்) இறை வளை நல்லாய் கறி வளர் தண் சிலம்பண் செய்த நோய் அறியாள்-தோழீ! மிளகு வளருகின்ற குளிர்ந்த மலையினையுடைய நம் பெருமான் நமக்குச் செய்த நோய் இஃதென்று அறிந்துகொள்ள மாட்டாத; அன்னை அலர் கடம்பன் என்றே-மடவோளாகிய நம்மன்னை இந்நோய் மலருகின்ற கடம்பினையுடைய முருகனால் வந்தது என்று கருதி; தீர்க்க. இந் நோயைத் தீர்க்கும் பொருட்டு; வெறி ஆடல் தான் விரும்பி முருகனுக்கு. வெறியாட்டெடுத்தலைத் தான் மிகவும் விரும்பி; வேலன் வருக என்றாள்-வேல்மகனை அழைத்து வருக என்று கூறினள்; இது நகை ஆகின்று-அன்னையின் இச் செயலை நினைக்குந்தோறும் எனக்கு நகைப்புண்டாகின்றது காண்; என்க.

(விளக்கம்) இது முதல் நான்கு பாடல்கள் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. கறி-மிளகு. சிலம்பன்-குறிஞ்சித் தலைவன் நோய்-காமநோய். கடம்பன்-முருகன்; முருகனால் வந்ததென்று கருதி அது தீர்க்க வேலன் வருகென்றாள் என இயையும்

11. ஆய்வளை............மடவன்

(இதன் பொருள்) ஆய்வளை நல்லாய்-அழகிய வளையலை அணிந்த தோழியே கேள்; மாமலை வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-பெரிய மலைநாடனாகிய நம் பெருமான் நமக்குச் செய்த இந்த நோயைத் தீர்ப்பதற்கு வேலன் வந்தாலும் வருவான்; வேலன் வருமாயின் மடவன்-வேல் மகன் வருவானானால் அவன் அறிவிலியே ஆவான்; குருகு பெயர்க்குன்றம் கொன்றான் வருமாயின் அவனின் மடவன்-அவ் வேலன் அழைக்கும்பொழுது கிரவுஞ்ச மலையை அழித்தவனாகிய முருகக் கடவுள் வருமாயின் அவனினும் காட்டில் தேற்றமாக அக் கடவுளும் அறிவிலியே காண்!; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது என்க.

(விளக்கம்) ஆய்வளை-நுண்ணிய தொழிலையுடைய வளையலுமாம். வருமாயின் என்பதனைப் பின்னும் கூட்டுக.

12. தெறிவளை.....வருமாயின்

(இதன் பொருள்) செறிவளைக்கை நல்லாய்-செறிந்த வளையலணிந்த தோழியே கேள்; வெறிகமழ் வெற்பன் நோய் தீர்க்க வேலன் வரும்-மணம் கமழ்கின்ற மலையினையுடைய நம் பெருமானால் உண்டான இந்த நோயைத் தீர்க்க வேல்மகன் தேற்றமாக வருவான். ஏன் எனின் வேலன் மடவன்-அவ் வேல் மகன் அறியாமையுடையன் ஆதலான்; அல் அமர் செல்வன் புதல்வன் தான் வருமாயின்-வடவாலின்கீழ் அமர்ந்த இறைவனுடைய மகனாகிய அம் முருகன் தானும் அவ் வேலன் அழைக்க வருவானாயின்; அவனினும் மடவன்-அவ் வேல் மகனினும் காட்டில் அறியாமையுடையவனே காண்; இது நகையாகின்று-இது நகைப்பைத் தருகின்றது.

(விளக்கம்) வெறி-மணம். வெற்பன்-தலைவன். தான் : அசைச் சொல். ஆலமர் செல்வன்-தக்கிணாமூர்த்தி

13: நேரிழை.........வருமாயின்

(இதன் பொருள்) நேர் இழை நல்லாய்-நுண்ணிய தொழிலமைந்த அணிகலன்களையுடைய தோழியே கேள்: மலைநாடன் மார்பு தருவெம்நோய் தீர்க்க வேலன் வரும் மலைநாட்டையுடைய நம் பெருமானுடைய மார்பினால் வந்த இந்த வெவ்விய இக் காமநோயைத் தீர்ப்பதற்கு வேலன் தேற்றமாக வருவான்; தீர்க்க வரும் வேலன் தன்னினும்-இந் நோயைத் தீர்க்க வருகின்ற வேலனினும் காட்டின்; கார்க்கடப்பந் தார் எம் கடவுள் தான் வருமாயின் மடவன்-கார்ப்பருவத்திலே மலருகின்ற கடப்ப மலர் மாலையை அணிந்த எம்முடைய திணைத் தெய்வமாகிய முருகன் தானும் அவ்வேலன் வேண்ட வருவானாயின் அறியாமையுடையவனே காண்; நகை ஆம்-ஆகவே அன்னையின் இச் செயல் எனக்கு நகைப்பையே தருகின்றது; என்க.

(விளக்கம்) நேர் இழை என்புழி நேர்மை நுண்மை மேற்று; அழகுமாம். கடப்பந்தார்-முருகனுக்குரிய மாலை. குறிஞ்சிக் கடவுளாதலின் எம் கடவுள் என்றாள். இவை நான்கும் தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது. இனி, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி அவன் கேட்ப வெறியாடல் கூறி வரைவு கடாஅயது எனினுமாம்.

பாட்டு மடை

14: வேலனார்........வேண்டுதுமே

(இதன் பொருள்) வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து-அன்னையின் வேண்டுகோளுக் கிணங்கி அவ் வேலனார் வந்து வெறியாடல் நிகழ்த்துகின்ற வெவ்விய அக்களத்தின்கண்; நீலப் பறவை மேல் நேரிழை தன்னோடும் ஆல் அமர் செல்வன் புதல்வன் வரும்-நீல நிறமான மயிலின்மேல் ஏறி அழகிய அணிகலன்களையுடைய வள்ளி நாச்சியாரோடும் இறைவன் மகனாகிய முருகப்பெருமான் எழுந்தருளுவான்; வந்தால் மால்வரை வெற்பன் மண வணி வேண்டுதுமே-முருகப்பெருமான் வருவானாயின் யாம் பெரிய மூங்கிலையுடைய மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமானுடைய திருமணத்தின்கண் மங்கல அணி பெறுமாறு வேண்டிக்கொள்வேம் காண்; என்க

(விளக்கம்) வேலனார்: இகழ்ச்சி. நீலப்பறவை-மயில். நேரிழை என்றது வள்ளியை. அவள் தம் குலப்பெண்ணாதலின் அவளை மட்டும் கூறினாள். வெறியாடலினும் நமக்கும் ஒரு பயன் உளது, என்றவாறு இஃது ஏனைத் தாழிசைகளுக்கும் ஒக்கும்

15: கயிலை................எனவே

(இதன் பொருள்) கயிலை நம்மலை இறை மகன்ஐ-கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே; அயல் மணம் ஒழி அவர் மணம் அருள் என-எதிலார் மணம் பேசி வருவதனை ஒழித்தருளுக, எம் பெருமானுடைய திருமணம் நிகழுமாறு அருள் செய்திடுக என்று நின்னை வேண்டிக்கொண்டு; நின் மதிநுதல் மயில் இயல் மடவரல் மலையர்தம் மகளார் செயலை மலர்புரை திருவடி தொழுதேம்-நின்னுடையவும் பிறை போன்ற நுதலையும் மயில் போன்ற சாயலையும் மடப்பத்தையுமுடைய குறவருடைய மகளாராகிய வள்ளி நாச்சியாருடையவும் ஆகிய அசோகினது மலரையொத்த அழகிய திருவடிகளைத் தொழுகின்றோம் என்க.

(விளக்கம்) கயிலைமலை இறை-சிவபெருமான் மகனை என்புழி ஐகாரம் சாரியை. மடவரால்-மடப்பம் வருதலையுடையவள். மலையர் குன்றவர். செயலை-அசோகம். நின்னுடையவும் மகளாருடையவும் ஆகிய திருவடி எனக் கூட்டுக. அயன் மணம் எனக் கொண்டு பிரசா பத்தியம் என்பர் அரும்பத உரையாசியர். இவ்வுரை சிறப்பின்று! அயல் மணம் எனக் கொண்டு இதனைப் பிறர் மண வரவு கூறி வரைவு கடாஅதலுக்கு ஏதுவாக்குதலே சிறப்பாம். அவர் மணம் என்றது தலைவன் மணத்தை.

16: மலைமகள்...........எனவே

(இதன் பொருள்) மலைமகள் மகனை நின் மதிநுதல் மடவரல்-இமயமலையின் அரசனுடைய மகளாகிய  உமை அம்மையின் மகனாகிய முருகப்பெருமானே நின்னுடைய பிறை போன்ற நெற்றியையுடைய மனைவியாகிய மடந்தை தானும்; குலமலை உறைதரு குறவர் தம் மகளார்-சிறந்த மலைகளிலே வாழ்கின்ற குறவர் குடியிற் பிறந்த மகளாரேயல்லரோ; நிலை உயர் கடவுள் நின் இணையடி தொழுதேம்-இவ்வாறு பிறந்த குலத்தாலும் பெண் கொண்ட குலத்தானும் சிறப்புற்றுப் பிறகடவுளார் நிலையினும் உயர்ந்திருக்கின்ற கடவுளாகிய உனது இரண்டு திருவடிகளையும் அப் பிறப்புரிமை பற்றி அக் குலத்தே மாகிய யாங்கள் கை கூப்பித் தொழுகின்றேம் அஃதெற்றுக் கெனின்; அவர் பலர் அறி மணம் படுகுவர் என-எம் தலைவர் நின் அருளால் இக்களவு மணத்தைக் கைவிட்டுச் சுற்றத்தார் பலரும் அறிதற்குரிய நல்ல திருமணத்தைச் செய்துகொள்க என்னும் பொருட்டே யாம்; என்க.

(விளக்கம்) மலைமகள்-பார்வதி. குறவர் தம் மகள்-வள்ளி எனவே நீயும் குறத்திமகன் நின் மனைவியும் குறத்தி; இவ்வாற்றால் நின் நிலை ஏனைக் கடவுளினும் உயர்ந்தது என்று பாராட்டியபடியாம். யாங்களும் குறமகளிராதலின் அவ்வுரிமைபற்றி நின் அடி தொழுதேம் என்றவாறு. பலர் அறிமணம்-கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் உறவினர் அறியக் கொடுப்பக் கொள்வது(தொல் கற்பீ-1)

17: குறமகள்.......எனவே

(இதன் பொருள்) குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும் அறுமுக ஒருவன்-குறமகளாகிய அவ் வள்ளி தானும் எம்முடைய குலத்தில் பிறந்தவள் ஆதலால் அவள் திருவடிகளோடு ஆறுமுகங்களையுடைய ஒப்பற்ற இறைவனாகிய; நின் அடியிணை தொழுதேம்-நின்னுடைய திருவடியிணையையும் ஒரு சேரக் கைகுவித்துத் தொழுகின்றேம், அஃதெற்றுக்கெனின்; துறைமிசை நினது இருதிருவடிதொடுநர்-நீர்த் துறையின்கண் நின்னுடைய இரண்டு அழகிய அடிகளையும் தொட்டு எமக்குச் சூள் மொழிந்த எங்காதலர்; நன்மணம் பெறுக பிழை மணம் விடு என-நின் அருளால் பலரறியும் நல்ல திருமணத்தைச் செய்துகொள்வாராகவும் பிழையான இக் களவு மணத்தைக் கைவிடுவாராகவும் என்னும் பொருட்டேயாம்; என்க

(விளக்கம்) வள்ளி எம் குலமகளாதலின் தொழுதேம் எனவே வானோர் மகளாகிய தெய்வயானையின் அடிகளைத் தொழமாட்டேம் என்றாருமாயிற்று. பிழை மணம்-களவு மணம் விடுக என்பதன் ஈறு தொக்கது; செய்யுள் விகாரம்.

பாட்டு மடை

18: என்றியாம்......தோழி

(இதன் பொருள்) என்று யாம் பாட-என்று யாம் இவ்வாறு பாடா நிற்ப; மன்றல் அம் கண்ணி மலை நாடன்-மணங்கமழும் அழகிய மலர் மாலையைத் தலையில் அணிந்திருந்த இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான்; மறை நின்று கேட்டருளிப் போவான் முன் சென்றேன்-நம் பாடல்களை மறைந்து நின்று எஞ்சாமல் கேட்டுப் பின்னர்த் தன்னூர் நோக்கிப் போகின்றவன் முன்னர் யான் தமியளாய்ச் சென்றேன்; அவன் தன் திரு அடி  கைதொழுது நின்றேன்-அவனுடைய அழகிய அடிகளை நோக்கிக் கைக்கூப்பித் தொழுது நின்று; உரைத்தது கேள் தோழி வாழி-யான் அவனுக்குக் கூறியதனை உனக்குக் கூறுவேன் கேட்பாயாக தோழீ நீ நீடுழி வாழ்க; என்றாள் என்க.

(விளக்கம்) மறை நின்று-கரந்து சிறைப்புறமாக நின்று. சென்று நின்ற யான் உரைத்தது கேள்; என்க. வாழி: அசைச் சொல்லுமாம்

19: கடம்பு.........சிறுகுடியோரே

(இதன் பொருள்) கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் இவ்வூர் வருவது-ஐயனே நீ கடப்பமாலையை அணிந்துகொண்டு வேலைக் கையிலேந்தித் தலைவியின் பொருட்டு இந்த வூருக்கு இவ்வாறு வருவது நின்னை முருகன் என்று கருதி ஒதுங்கிப் போவாரல்லது ஐயுறுவார் இலர் ஆகும் பொருட்டன்றே, நின் கருத்து நிறைவேறு மாறில்லை, எற்றாலெனின் உனக்கு; அறுமுகம் இல்லை அணி மயில் இல்லை குறமகள் இல்லை செறிதோள் இல்லை-நின்பால் கடம்பும் உடம்பிடியும் உளவேனும் முருகனுக்குரிய ஆறுமுகங்கள் இல்லை அழகிய மயிலூர்தியும் இல்லை அவன் மருங்கில் உறையும் வள்ளிநாச்சியாரும் இல்லை மேலும் நெருங்கிய தோள்கள் பன்னிரண்டும் இல்லையே! இங்ஙனம் ஆதலின்: கடம்பூண் தெய்வமாக நேரார்-நின்னைக் காண்பவர் உன்னைப் பராவுக் கடன் பூணுகின்ற தங்கள் தெய்வமாகிய முருகனே இவனென்று உடன்படமாட்டார் காண்; இச் சிறுகுடியோர் மன்ற மடவர்-இவ்வூரில் வாழ்கின்ற குறவர் தேற்றமாக அறியாமை யுடையவராதலான் என்று இங்ஙனம் கூறிவிட்டேன் என்றாள்; என்க.

(விளக்கம்) கடம்பு-கடப்ப மாலை. உடம்பிடி-வேல் மடந்தை. தலைவி. முருகன் இறைவனாதலான் கடம்புசூடி உடம்பிடியேந்தி ஒரு முகத்தோடும் இங்ஙனம் தோன்றுதல் கூடும் என்னும் மெய்யறிவு மடவோராகிய இச் சிறு குடியோர்க்கு இல்லை என்று அவரை இகழ்வாள் போல, இச் சிறுகுடியோர் நின்வரவை அறிந்து யாண்டும் பழி தூற்றித்திரிகின்றார். அதற்குக்காரணம் நல்லறிவின்மையே என அலர் மிகுதி அறிவித்தாளும் ஆதல் உணர்க.

பாட்டு மடை

20: என்றீங்கு.....பாடுதும்யாம்

(இதன் பொருள்) என்று ஈங்கு அலர் பாடு பெற்றமை யான் உரைப்பக் கேட்டு-தோழி! இவ்வாறு சொல்லி இவ்வூரின்கண் அலர் மிக்கதனை யான் தலைவனுக்கு எடுத்துக் கூற அதனைக் கேட்டு; புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன-புலர்ந்து வாடுகின்ற தனது நெஞ்சத்தை நம் பக்கலிலே விட்டுப்போன; மலர் தலை வெற்பன வரைவானும் போலும்-விரிந்த இடத்தையுடைய இம் மலைநாட்டுத் தலைவனாகிய நம் பெருமான் வரைவொடு வந்து திருமணமும் செய்துகொள்வான் போலும் இனி யாமும் அத் திருமணம் இனிது நிகழ்தற்பொருட்டு; முலையினால் மாமதுரை கோள் இழைத்தாள் காதல் தலைவனை-தனதொரு முலையினாலே பெரிய மதுரை நகரத்தை தீயுண்ணும்படி செய்தவளுடைய காதலுக்குரிய கணவனை; வானோர் தமராருங் கூடி பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலை ஒன்று பாடுவதும் யாம்-தேவர்களாகிய இந்திரனுடைய சுற்றத்தார்கள் எல்லோரும் கூடி வந்து அத் தேவர் முதலிய எல்லோரும் கைகூப்பித் தொழுதற்கியன்ற நம் பத்தினித் தெய்வத்திற்குக் கண்கூடாகக் காட்டி வழங்கிய சிறப்புத் தன்மையினைச் சுட்டி யாம் இனி ஒரு பாட்டுப் பாடுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடு பெறுதல்-பெருகுதல். புலர்ந்து வாடும் நெஞ்சம் என்க. கோள் இழைத்தல்-கொள்ளுதலைச் செய்தல், என்றது தீ பற்றிக் கொள்ளுதலைச் செய்தால் என்றவாறு. இனி, தீயோரைக் கொன்றழித்தவள் எனினுமாம். வானோராகிய இந்திரன் தருமர் ஆருங் கூடி என்க. தமரார்; ஒரு சொல் எனினுமாம். பெயரறியாமையின் கண்ணகி கூற்றையே வேறு வாய்பாட்டால் கூறி மாமதுரை கோளிழைத்தாள் எனவும், தம் கருத்தால் பலர்தொழு பத்தினி எனவும் பெயர் வழங்கினார்; பின், இவர் கூறும் பெயர்களுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். இவர் யாண்டும் கண்ணகி என அவள் பெயர் கூறாமையும் கருத்திற் கொள்ளற் பாலது

21: பாடுகம்.....வேண்டுதுமே

(இதன் பொருள்) பாடுகம் வா வாழி தோழி யாம் பாடுகம்-தோழி! இனி யாம் அவ்வாறு பாடுவோம் வருவாயாக; கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம்-அரசன் தனது செங்கோன் முறைமையின் நீங்கியதனாலே உண்டான குற்றத்திற்கு அவனது கொடி உயர்த்தப்பட்ட மாட மாளிகைகளையுடைய கூடல் மாநகரத்தைத் தீக்கிரை யாக்கு மாற்றால் முறை செய்தவளாகிய நம் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுவேமாக; தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே-அவ்வாறு தீயால் முறை செய்த பத்தினியைப் புகழ்ந்து பாடும் பொழுதும் யாம் நமது பெரிய மலைநாட்டையுடைய தலைவனுடைய திருமண அணியை அருள வேண்டுமென்று அத் தெய்வத்தின்பால் வரம் வேண்டுவேமாக என்றாள் என்க.

(விளக்கம்) பாடுகம்: தன்மைப் பன்மை வினைமுற்று. இவை இடை மடக்கி வந்தன. தீ முறை செய்தாள்: பெயர். வெற்பன்-தலைவன் என்னும் துணையாய் நின்றது

22: பாடுற்று............ஒழியாரே

(இதன் பொருள்) பாடு உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்து அரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாள்-தீ முறை செய்தமையால் பெருமையுற்று உலகத்திலுள்ள  பத்தினிப் பெண்டிர்கள் எல்லாரும் புகழ்ந்து தொழப் படுகின்ற அரவின் படம் போன்ற அல்குலையுடையா ளொருத்தி பசிய இப் புனத்தின்கண் நமக்குத் தெய்வமாக இருக்கின்றாள்; பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரை ஒழியார்-அத் தெய்வத்திற்கு அவள் கணவனைத் தேவர்கள் கொணர்ந்து கொடுத்த பின்னரும் அவளைப் புகழ்தல் ஒழிந்திலர் என்றாள்; என்க.

(விளக்கம்) பாடு-பெருமை: அஃதாவது பத்தினிப் பெண்டிர்க் கெல்லாம் எடுத்துக்காட்டாகத் திகழ்தல். இக்காரணத்தால் பத்தினிப் பெண்டிரும் பரவித் தொழுவாராயினர், என்க. பைத்தர வல்குல்: அன் மொழித் தொகை. உய்த்துக் கொடுத்தல்-வலியக் கொணர்ந்து கொடுத்தல். உரை-புகழ்

23: வானக.........இல்லாளே

(இதன் பொருள்) வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நூறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே-வானுலகின்கண் வாழுகின்ற சிறந்த வாழ்க்கையையுடைய தேவர்கள் தாமும் கைதொழுது ஏத்தும்படி நமது குறிஞ்சிக் காட்டின்கண்ணுள்ள நறிய இவ் வேங்கை மரத்தின் கீழே தெய்வமாக ஒரு காரிகை எப்பொழுதும் இருப்பாளாயினள்; கான நறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ இல்லாளே-இங்ஙனம் அவள் தானும் வேங்கைக் கீழ் இருப்பாளேனும் தான் தன் கணவனோடும் வானுலகத்தின்கண் இன்புற்றமர்ந்து வாழும் வாழ்க்கையினின்றும் மீளுதல் ஒரு காலத்தும் இல்லாதவளும் ஆவாள்.

(விளக்கம்) மறுதரவு-மீட்சி. அவள் தெய்வமாதலின் இங்கு அங்கு எனாதபடி எங்குமிருப்பாள் என்றவாறு

24. மறுதரவு.......இவ்வூர்

(இதன் பொருள்) மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாட இவ்வூரும் ஓர் பெற்றி பெறுகதில் அம்ம-தனது தெய்வ வாழ்க்கையினின்றும் ஒருபொழுதும் மீள்கிலாத அப் பத்தினித் தெய்வத்தைப் புகழ்ந்து யாம் பாடுதலாலே இந்தக் குன்றவர் ஊரும் ஒரு சிறப்பினைப் பெறுவதாக; இவ்வூர் பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது-இந்த ஊர் ஒருதலையாகப் பெருமையுடையதே பெருமையுடையதே அப் பெருமை தான் யாதோ எனின் பொன் வளையலணிந்த எம் பெருமாட்டிக்கும் அவள் கணவனுக்கும் நிகழவிருக்கின்ற திருமணங் காணலாகின்ற புதியதொரு சிறப்பையுடையதாகலாம்; என்றாள்; என்க

(விளக்கம்) தில்: அசைச் சொல். அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. பெற்றி-தன்மை; அது சிறப்பின் மேனின்றது. அடுக்கு தேற்றம் பற்றி வந்தது. மாதர் என்றது தலைவியை முன்னிலைப் புறமொழி

25: என்றியாம்.............கோவே

(இதன் பொருள்) என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார்-தோழி! இவ்வாறு கூறி யாமெல்லாம் கொண்டு நிலை என்னும் பாட்டினைப் பாடிக் கொண்டு ஆடா நின்ற குரவைக் கூத்தினை மறைய நின்று கண்டு நம் பெருமான் நம் வழிப்பட்டு வரைவொடு வந்தார் காண் இனி நீ வருந்தாதே கொள்! வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குறவர்கோ-தனது பொறியாகிய வில்லினை எழுதிய இமய மலையினோடு கொல்லிமலையினையும் ஒருசேர ஆட்சி செலுத்திய குடநாட்டார் மன்னனாகிய செங்குட்டுவன்; ஆனாவைகலும் ஆனாது உண்டு மகிழ்ந்து வாழியர்-இடையறாது பிறக்கின்ற நாள்கள்தோறும் பூ நறுந்தேறல் பருகி உள்ளம் ஒழிவின்றி மகிழுமாறு நீடுவாழ்வானாக.

(விளக்கம்) கொண்டு நிலை-பொருளைக் கொண்டு நிற்கும் நிலை என்பர் அரும்பதவுரையாசிரியர். மறைய நின்று கண்டு என்க. கைவந்தார்-நம் வழிப்பட்டு வந்தார். அஃதாவது வரைவொடு வந்தார் என்றவாறு. முன்னர்(22) தீ முறை செய்தாளை யேத்தி யாம் மண அணி வேண்டுதும் என்றமையின் யாம் இப்பத்தினித் தெய்வத்தை ஏத்திப் பாடியதனால் நம் காதலர் கை வந்தார் என்றாளாயிற்று, குரவைக் கூத்தாடுவார் கூத்தின் முடிவில் தம் அரசனை வாழ்த்துதல் மரபு-இதனை ஆய்ச்சியர் குரவை இறுதியினும் ஆய்ச்சியர் பாண்டியனை வாழ்த்தி முடித்தலானும் உணர்க.

பா-கொச்சகக்கலி

குன்றக் குரவை முற்றிற்று
.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #33 on: February 28, 2012, 07:46:24 AM »
25. காட்சிக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது கற்புக்கடவுளாகிய கண்ணகிக்குக் கடவுள் படிவம் சமைத்தற்கு இன்ன மலையில் கற்கொள்ள வேண்டுமென நெஞ்சால் ஆராய்ந்து கண்டதனைக் கூறும் பகுதி என்றவாறு.

மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி,  5

துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்,
வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு  10

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்
பொலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த  15

பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று;
கோங்கம், வேங்கை, தூங்கு இணர்க் கொன்றை,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிறொடு வண்டு இனம் பாட,  20

நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்,
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்,  25

தினைக் குறு வள்ளையும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உடைத்த குறவர் ஓதையும்,
பறை இசை அருவிப் பயம் கெழும் ஓதையும்,
புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும்,
கலி கெழு மீமிசைச் சேணோன் ஓதையும்,  30

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்,
இயங்கு படை அரவமோடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கடை அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து,
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது,  35

திறை சுமந்து நிற்கும் தெவ்வர் போல;
யானை வெண் கோடும், அகிலின் குப்பையும்,
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்  40

ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூவை நூறும், கொழுங் கொடிக் கவலையும்,
தெங்கின் பழனும், தேமாங் கனியும்,
பைங் கொடிப் படலையும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி கொடியும்,  45

கொழுந் தாள் கமுகின் செழுங் குலைத் தாறும்,
பெரும் குலை வாழையின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்,
வாள்வரிப் பறழும், மத கரிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும்,  50

வரை ஆடு வருடையும், மட மான் மறியும்,
காசறைக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ஞையும், நாவியின் பிள்ளையும்,
கானக்கோழியும், தேன் மொழிக் கிள்ளையும்;
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-ஆங்கு  55

ஏழ் பிறப்பு அடியேம்; வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்;  60

எந் நாட்டாள்கொல்? யார் மகள் கொல்லோ?
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்! என-
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதலோடு இருந்த  65

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும்
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்,
திண் திறல் வேந்தே! செப்பக் கேளாய்;
தீவினைச் சிலம்பு காரணமாக,
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும்;  70

வலம் படு தானை மன்னன் முன்னர்,
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்;
செஞ் சிலம்பு எறிந்து, தேவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி,
அம் சில் ஓதி! அறிக எனப் பெயர்ந்து, 75

முதிரா முலைமுகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும்;
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன்,  80

மயங்கினன் கொல் என மலர் அடி வருடி,
தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்,
கலக்கம் கொள்ளாள், கடுந் துயர் பொறாஅள்,
மன்னவன் செல்வுழிச் செல்க யான் என
தன் உயிர்கொண்டு அவன் உயிர் தேடினள்போல்,  85

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி, இறைக்கு உரைப்பனள்போல்,
தன் நாட்டு ஆங்கண் தனிமையின் செல்லாள்,
நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று,  90

ஒழிவு இன்றி உரைத்து, ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம் என-
தென்னர் கோமான் தீத் திறம் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற  95

செம்மையின் இகந்த சொல், செவிப்புலம் படாமுன்,
உயிர் பதிப் பெயர்த்தமை உறுக, ஈங்கு என,
வல் வினை வளைத்த கோலை மன்னவன்
செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது
மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்;  100

பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்;
குடி புர உண்டும் கொடுங்கோல் அஞ்சி,
மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, தொழுதகவு இல் என,
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த  105

நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து-ஆங்கு,
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்,
செயிருடன் வந்த இச் சேயிழை-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்தோர் யார்? என,
மன்னவன் உரைப்ப-மா பெருந்தேவி,  110

காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி,  115

நூல் அறி புலவரை நோக்க, ஆங்கு அவர்,
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்,
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்துக்
கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும்;
கங்கைப் பேர் யாற்றினும், காவிரிப் புனலினும்,  120

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று;  125

புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,  130

வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை 135

நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு என, 140

குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,  145

வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-
பல் யாண்டு வாழ்க, நின் கொற்றம்,ஈங்கு! என, 150

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும்:
நும் போல் வேந்தர் நும்மொடு இகலி,
கொங்கர் செங் களத்துக் கொடு வரிக் கயல் கொடி
பகைபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அவை
திகைமுக வேழத்தின் செவிஅகம் புக்கன;  155

கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் வேல் கட்டியர்,
வட ஆரியரொடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேட்டம் என் கண்- புலம் பிரியாது;
கங்கைப் பேர் யாற்றுக் கடும் புனல் நீத்தம்,  160

எம் கோமகளை ஆட்டிய அந் நாள்,
ஆரிய மன்னர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெங் கோலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய  165

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை;
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது
கடவுள் எழுத ஓர் கற்கே; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்  170

தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக, ஈங்கு, என-
நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா;
வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே  175

தம் செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப-
நிறை- அரும் தானை வேந்தனும் நேர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்-   180

வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை!
ஊழிதொறு ஊழி உலகம் காக்க என,
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து, ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்  185

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும்,
விடர்ச் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும்,
கேட்டு வாழுமின்; கேளீர் ஆயின்,
தோள்- துணை துறக்கும் துறவொடு வாழுமின்;  190

தாழ் கழல் மன்னன்- தன் திருமேனி,
வாழ்க, சேனாமுகம்! என வாழ்த்தி,
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி,
அறை பறை எழுந்ததால், அணி நகர் மருங்கு- என்.

உரை

1-9: மாநீர்..........செல்வோன்

(இதன் பொருள்) மா நீர் வேலிக்கடம்பு எறிந்து இமயத்து வானவர் மலைவில் பூட்டிய-கரிய நீரையுடைய கடலை அரணாகக் கொண்டு அக் கடலின் நடுவே நின்ற கடப்ப மரத்தினை வெட்டி வீழ்த்தி மேலும் இமயமலைகாறும் அரசர் பலரையும் வென்று வாகை சூடிச்சென்று அவ்விமய மலையின் நெற்றியின்கண் தேவர்களும் வியக்கும்படி போர் செய்தற்குக் காரணமான தனது விற்பொறியைப் பொறித்துவைத்த; வானவர் தோன்றல் வாய்வாள் கோதை-சேரர்குலத் தோன்றலாகிய வென்றி வாய்த்த வாளேந்திய சேரன் செங்குட்டுவன்; விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாளுடன் இருந்து-விளங்காநின்ற நீராவியையுடைய வெள்ளிமாடம் என்னும் அரசமாளிகையின்கண் இளங்கோ வேண்மாள் என்னும் தன் கோப்பெருந்தேவியோடு இருந்தபொழுது; அருளி-தன் பரிசனங்களுக்கு அருளிப்பாடு செய்து; துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலை மலை காண்குவம் என-இடையறாது முழங்குகின்ற முழவுகள் போல அருவிகள் முழங்குதற்குக் காரணமான முகில் சூழாநின்ற சோலைகளையுடைய மலை வளங்களைச் சென்று கண்டு மகிழ்வேம் எனக் கருதி; பைந்தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி-பசிய பொன்னாலியன்ற வளையலணிந்த மகளிர் கூட்டத்தோடு பரவி ஒருங்கு கூடி; வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்-வஞ்சி நகரத்தின் தனது அரண்மனை முற்றத்தினின்றும் புறப்பட்டும் போகின்றவன்; என்க.

(விளக்கம்) மா நீர்-கடல். சேரன் கடலின் கண் சென்று அங்கு நின்ற கடப்ப மரத்தினை வெட்டினான் என்பதனை, வலம்படு முரசிற் சேரலாதன். முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து எனவும் சால்பெருந்தானைச் சேரலாதன், மால்கடலோடிக் கடம்பறுத்தியற்றிய பண்ணமை முரசு எனவும் வருவனவற்றால் (அகநா, 127. 347) அறிக. வானவர் இரண்டனுள் முன்னது தேவர்; பின்னது சேரர் மலைவில்; வினைத்தொகை. வென்றி வாய்ந்த வாள் என்க. கோதை-சேரன்; ஈண்டுச் செங்குட்டுவன் இலவந்தி-நீராவி; இல்லறத்தினுள் செய்யப்பட்ட நீர் நிலை. இளங்கோ வேண்மாள்-சேரன் செங்குட்டுவன் மனைவியின் பெயர். அருளி என்பது கட்டளையிட்டு என்றவாறு அரும்பதவுரையில் அருளிப்பாடிட்டு என்பது மது. வஞ்சி சேரர் தலைநகரம்

10-16: வளமலர்.......போன்று

(இதன் பொருள்) வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன்-வளமிக்க மலரையுடைய பூஞ்சோலையினூடே அரம்பையரோடு ஆடுகின்ற விளையாட்டினை விரும்பிய வெற்றியையுடைய வேலேந்திய இந்திரனானவன் அவ்விளையாட்டின் பொருட்டு; பொலம் பூங்காவும் புனல் யாற்றுப் பரப்பும் இலங்கு நீர்த் துருத்தியும் இளமரக் காவும்-அழகிய பூம்பொழில்களையும் நீர் நிரம்பிய மாற்றுப் பரப்பினையும் விளக்கமுடைய நீரின் இடைக் குறையாகிய துருத்திகளையும் இளமரச் சோலைகளையும்; அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் (களிற்றுப்) பரப்பி-கூத்தாட்டரங்கையும் பள்ளி இடங்களையும் ஒருசேர யானைகளின் மேலேற்றிய பரப்புதலாலே; ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த-நூற்று நாற்பது யோசனை தூரம் விரிந்தனவாகிய விளையாட்டுப் பொருள்களோடே; பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று-மிகப் பெரிய ஐராவதம் என்னும் களிற்று யானையின் மிசை ஏறியூர்ந்து செல்பவனைப் போல என்க. 

(விளக்கம்) வானவன்-இந்திரன். பொலம் பூங்கா. பொன்னிறமான பூக்களையுடைய கற்பகக்காவுமாம். துருத்தி-ஆற்றிடைக்குறை அரங்கு. நாடகமேடை. பள்ளி-படுக்கை. பூங்கா முதலியவற்றைக் களிற்றின்மேல்பரப்பி, என்க. பெருமால் களிறு என்றது ஐராவதத்தை

17-23: கோங்கம்.............இருப்ப

(இதன் பொருள்) கோங்கம் வேங்கை தூங்கு இணர்க்கொன்றை நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்-கோங்கும் வேங்கையும் தொங்குகின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையும் சுரபுன்னையும் மஞ்சாடியும் நறுமணமுடைய காழுடைய சந்தனமும் ஆகிய; உதிர் பூம்பரப்பின் ஒழுகு புனல் ஒலித்து-இம்மரங்களினின்றும் உதிருகின்ற மலர்களினால் ஆகிய பரப்பினூடே தன்கண் ஒழுகுகின்ற நீர் மறையா நிற்பவும்; மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட-மதுகரமும் வண்டினங்களும் இசை முரலா நிற்பவும்; நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாற்று அடை கரை- திருமாலினது மார்பின்கண் அணிந்த மணி ஆரம் போல, பெரிய மலையைக் குறுக்கிட்டுச் செல்லும் பேரியாறு என்னும் யாற்றினது நீரடை கரையாகிய இடுமணல் எக்கர் இயைந்து ஒருங்கு-நீர் கொணர்ந்து குவித்த எக்கராகிய திடரின்கண் தன் பரிசனங்ளோடே பொருந்தி ஒருங்கு குழுமி இருப்ப; என்க.

(விளக்கம்) கோங்கம்..........ஆரம் என்னும் துணையும் மரத்தின் பெயர்கள் அம் மரத்தினின்றும் உதிருகின்ற பரப்பினுள் தன்பால் ஒழுகு புனல் ஒளிப்ப என்க. மதுகரம் ஞிமிறு வண்டு என்பன வண்டின் வகை. நெடியோன்-திருமால். இவன் பெருமலைக்குவமை. ஆரம் ஆற்றுக்குவமை அடைகரையரகிய எக்கர், இடுமணலாகிய எக்கர் எனத் தனித்தனி கூட்டுக. (9) செல்வோன் வானவர் பெயர் வோன் போன்று சென்று எக்கர் இயைந்து இருப்ப என ஒரு சொல் பெய்து முடித்துக் கொள்க.

24-32: குன்ற............ஒலிப்ப

(இதன் பொருள்) குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்-குன்றத்தின்கண் குரவைக் கூத்தாடும் ஒலியும், குறமகளிர் பாடுகின்ற குறிஞ்சிப்பண் ஒலியும்; வென்றிச் செல்வேள் வேலன் பாணியும்-வெற்றியையுடைய சிவந்த மேனியையுடைய முருகனை வாழ்த்துகின்ற வேன்மகன் பாடுகின்ற தேவபாணியின் ஒலியும்; தினைக்குறு வள்ளையும்-குறத்தியர் தினையைக் குற்றுகின்ற உலக்கைப் பாட்டொலியும்; புனத்து எழுவிளியும்-தினைப்புனங்களிலே காவல் செய்கின்ற மகளிர் எழுப்புகின்ற ஒலியும் நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்-தேனைத் தம்மிடத்தேயுடைய இறால்களை யழித்த குறவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்கின்ற ஒலியும்; பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும்-பறைமுழக்கம் போன்று முழங்கி விழுகின்ற அருவிகளின் பயன் பொருந்திய ஒலியும்; புலியொடு பொருஉம் புகர்முக ஓதையும் புலிகளோடு போரிடுகின்ற யானைகளின் பிளிற்றொலியும்; மீமிசைச் சேணோன் கலிகெழும் ஓதையும்-மரத்தின்மீது அமைத்த பரணின்மேல் இருப்பவனாகிய கானவன் எடுத்த செருக்குடைய பாட்டொலியும்; பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்-தாம் அகழ்ந்த குழியின்கண் வீழ்ந்த யானையைக் கண்ட பாகர்கள் மகிழ்ந்த ஆரவாரிக்கின்ற ஒலியும்; இயங்குபடை வெட்சிப்பூச்சூடிப் பகைப்புலம் நோக்கிச் செல்லுகின்ற படை மறவர் ஆரவாரிக்கின்ற ஒலியோடு கூடி அக்காட்டகத்தின்கண் எவ்விடத்தினும் ஒலியா நிற்ப என்க.

(விளக்கம்) குறிஞ்சி நிலமாதலின் குன்றக்குரவை கூறினார் கொடிச்சியர்-உயர்ந்த குறக்குல மகளிர். பாணி-தேவபாணி குறுவள்ளை-குற்றுகின்ற வள்ளைப் பாட்டு; உலக்கைப் பாட்டு; புனம் தினைப்புனம்; விளி-கூக்குரலுமாம். நறவு-தேன். அருவி-தினை முதலிய பயன் விளைத்தலின் பயங்கெழு மோதை என்றார். புகர்முகம்-யானை. களி. செருக்கு, மீமிசை-உயர்ந்த பரண். சேணோன் மேலிருப்பவன். பயம்பு. யானையை வீழ்த்திப் பீடிக்கும் குழி இயங்கு படைஅரவமென்றது வெட்சித்திணையில் ஒரு துறை

குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குக் கையுறை சுமந்து கொடு வருதல்

33-36: அளந்து.........போல

(இதன் பொருள்) அளந்து கடையறியா அருங்கலம் சுமந்து இவ்வளவென்று கணித்து எல்லை காணுதற்கு இயலாத மதிப்புடைய பேரணிகலன்களைச் சுமந்து கொண்டுவந்து; வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து-பல்வேறு வளங்களும் விரவிக்கிடக்கின்ற வஞ்சி நகரத்து அரண்மனை முற்றத்தின்கண்; இறை மகன் செவ்வி பெறாது யாங்கணும் திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல-சேரன் செங்குட்டுவனைக் காணுதற்குச் செவ்வி கிடைக்கப் பெறாமையால் தாம் கொணர்ந்த அத்திறைப் பொருள்களைச் செவ்வி வந்துறும்பொழுது முந்துற் பொருட்டுச் சுமந்து வண்ணமே நிற்கின்ற பகை மன்னர்களைப்போல, என்க

(விளக்கம்) அருங்கலம்-பெறற்கரிய பேரணிகலன், தலை மயங்குதல்-விரவிக்கிடத்தல் இறை மகன்-அரசன் அத் திறைப் பொருளை என்க. தெவ்வர்-பகைவர். இவர் பின்வரும் குன்றக் குறுவருக்குவமை

குறவர் சுமந்துவரும் பொருள்களின் வகை

37-47: யானை.........தாறும்

(இதன் பொருள்) யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்-யானையினது வெள்ளிய மருப்பும் அகிலின் குவியலும்; மான் மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்-மான் மயிரால் இயன்ற சாமரையும் தேன்குடங்களும் சந்தனக் குறடும் சிந்துரக் கட்டியும்; அஞ்சனத் திரளும் அணி அரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்-அஞ்சனக் கட்டியும் பூசிக்கொள்ளும் அரிதாரமும் ஏலக்கொடியும் கரிய மிளகுக்கொடியும்; கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்-கூவைக்கிழங்கின் நீறும் கொழுவிய கவலைக்கொடியும்; தெங்கின் பழனும் தேமாங்கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்-முதிர்ந்த தேங்காயும் இனிய மாம்பழமும் பசிய கோடியையுடைய பச்சிலையும் பலாவினது இனிய பழங்களும், காயமும் கரும்பும் பூமலிகொடியும் கொழுந்தான் கமுகின் செழுங்குலைத் தாறும்-வெள்ளுள்ளியும் கரும்பும் பூக்கள் மிக்க கொடியும் கொழுவிய அடியினையுடைய கமுகினது வளவிய குலையாகிய தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும். பெரிய குலையினையுடைய மலை வாழையினது பெரும் பழங்களையுடைய தாறும், என்க.

(விளக்கம்) கோடு-மருப்பு (தந்தம்). குப்பை-குவியல் மது-தேன். குறை-குறடு(கட்டை) அஞ்சனம்-ஒருவகை மருந்து மை. அணி-அழகுமாம். நூறு. நீறு(பொடி) கவலை-ஒருவகைக் கொடி. தெங்கு-தென்னை. பழன் என்றது நெற்றினை படலை-பச்சிலை என்னும் ஒரு கொடி. வாழை-மலைவாழை. கமுகம் தாறு-வாழைத்தாறு என்பன மரபுச் சொல்.

குறவர் கொணர்ந்த உயிரினங்கள்

48-55: ஆளியின்............கொண்டாங்கு

(இதன் பொருள்) ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்-ஆளிக்குட்டியும் சிங்கக்குட்டியும் புலிக்குட்டியும் மதயானைக் கன்றும், குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும்-குரங்குக் குட்டியும் வளைந்த காலையுடைய கரடிக்குட்டியும் மலையில் ஏறி விளையாடும் வருடை மான்குட்டியும் அழகிய மான்குட்டியும்; காசறைக் கருவும் ஆசு அறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்-கத்தூரிக்குட்டியும் குற்றமற்ற கீரியும் தோகையையுடைய மயிலும் புழுகுப் பூனைக்குட்டியும்; கானக்கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு-காட்டுக்கோழியும் இனிய மொழியையுடைய கிளியும் ஆகிய இப் பொருள்களையெல்லாம் சேரன் செங்குட்டுவனுக்குக் கையுறையாக அம் மலையின் மேல் வாழுகின்ற மாக்களாகிய குறவர் தங்கள் தலையின் மேல் சுமந்துகொண்டு, வந்து என்க.

(விளக்கம்) அணங்கு, குருளை பறழ் களபம் குட்டி மறி பிள்ளை என்பன அவ்வவற்றின் இளமைப் பெயர்கள் என்றுணர்க. ஆளி அரி என்பன சிங்கத்தின் வகைகள். வாள்வரி-புலி: அன்மொழித் தொகை குடாவடி-வளைந்த கால். வருடை ஒருவகை மான். நாவி-புழுகுப்பூனை

செங்குட்டுவனைக் குறவர் கண்டு கூறியது

55-63: ஆங்கு.......வாழியரென்

(இதன் பொருள்) ஆங்கு-சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்த அவ்விடத்தை அணுகி அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்-ஏழு பிறப்பும் நாங்கள் அடிமையாவேம் வேந்தர் வேந்தே நின்னுடைய அரசுரிமை நெடிது வாழ்வதாக என்று பணிந்த பின்னர் அச் சேரமன்னனை நோக்கிப் பெருமானே! கான வேங்கைக் கீழ் ஓர் காரிகைதான் முலை இழந்து தனித்துயர் எய்தி-நம்முடைய காட்டின் கண்ணதாகிய நெடுவேள் குன்றத்தின் தாழ் வரையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒப்பற்ற அழகினையுடையாளொருத்தி தன் முலைகளில் ஒன்றனை இழந்து பிறர் யாரும் பட்டறியாத பெருந்துன்பத்தை எய்தி நின்றவள்; வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள்-விண்ணுலகத்தினின்றும் இழிந்துவந்த தேவர்கள் அவள் இழந்த கணவனையும் காட்டி மலர்மாரி தூவிப் புகழ்ந்து போற்றி அழைப்ப அக்கணவனொடும் கூடி அவ் வானவர் போற்றி அழைப்ப வானவூர்தியிலேறி எளியேங்கள் கண்டு நிற்கும்பொழுதே விண்ணுலகம் எய்தினள்; எந் நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்-அவள் தான் எந்த நாட்டினளோ? யார் மகளோ? அறிகின்றிலேம் அவளை நின்னுடைய இத்திருநாட்டின்கண் பிறந்தவளோ என்று எவ்வளவு நினைத்துப் பார்த்தபொழுதும் அறிகின்றிலேம்; பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என-மன்னர்-மன்னனே! எம்பெருமான் பற்பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று கூறி வாழ்த்தா நிற்ப; என்க

(விளக்கம்) பெயர் அறியாமையின் காரிகை யென்றொழிந்தார். முலை இழந்தமை கண்கூடாகக் கண்டு கூறியபடியாம். மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து ருத்தகாலைக் கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் எனக் கண்ணகியாரே அறிவித்தமையால் தனித்துயர் எய்தி என்றார். அவள்தான் யாராக இருக்கலாம் என்று யாங்கள் ஆராய்த்து பார்த்தும் அவளை இந் நாட்டினளாக அறிகின்றிலேம் ஆதலால் அவள் எந்நாட்டாளோ யார் மகளோ என்றனர். இந் நிகழ்ச்சி எமக்குப் பெரிதும் வியப்பைத் தருகின்றது என்பது. குறிப்புப் பொருள், என்க.

தண்டமிழ் ஆசான் சாத்தன் செங்குட்டுவனுக்குக் கூறியது

64-66: மண்கிளி...........உரைக்கும்

(இதன் பொருள்) மண் களி நெடுவேள் மன்னவன் கண்டு-நிலவுலகம் மகிழ்வதற்குக் காரணமான நெடிய வேலையுடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனை அப்பொழுது அங்கு வந்து பரிசில் காரணமாகக் கண்டு அவனது தோற்றப் பொலிவினாலே; கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த-தனது கண் களித்தற்குக்  காரணமான மருட்கையோடும் அன்போடும் அவன் பக்கலிலே அமர்ந்திருந்த; தண் தமிழ் ஆசான் சாத்தன். இஃது உரைக்கும்-குளிர்ந்த தமிழ் முழுதும் உணர்ந்த பேராசிரியனாகிய சாத்தன் என்னும் புலவன் குன்றக் குறவர் கூறிய செய்தி கேட்டுத் தன்னை வியந்து நோக்கிய அம்மன்னவனுக்கு இவ் வரலாற்றினைக் கூறுவான்; என்க.

(விளக்கம்) மண்களி மன்னவன் நெடுவேல் மன்னவன் எனத் தனித்தனி கூட்டுக. மன்னவனை நட்புடைமை காரணமாக வந்து கண்டு இருந்த சாத்தன் எனினுமாம் கேட்போர் உள்ளம் குளிர்தற்குக் காரணமான தமிழ் என்க. சாத்தன்-மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் பெரும் புலவர்; இவரே மணிமேகலை யென்னும் பெரும் காப்பியத்தை இயற்றியவரும் ஆவார். இச் சிலப்பதிகாரம் தோன்றுவதற்கும் இவரே காரணமாயிருந்தவர் என்பதனை இக் காதை யானும் இந் நூற் பதிகத்தானும் உணரலாம்.

சாத்தனார் கண்ணகி வரலாறு கூறுதல்

67-77: ஓண்டொடி...........சுட்டதும்

(இதன் பொருள்) திண் திறல் வேந்தே ஒள் தொடி மாதர்க்கு உற்றத்தை எல்லாம் செப்பக் கேளாய்-திண்ணிய ஆற்றலுடைய அரசே! அக் குறவர்களால் குறிப்பிடப்பட்ட விண்ணுலகம் புகுந்த நங்கைக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியை யெல்லாம் யான் அறிகுவன் ஆதலின் அதனை யான் கூறக் கேட்பாயாக என்று தொடங்கி கூறுபவன்; தீவினை சிலம்பு காரணமாக ஆய்தொடி அரிவை கணவற்கு உற்றதும்-முற்பிப்பிற் செய்த தீவினையானது ஒரு சிலம்பு காரணமாக அழகிய வளையலணிந்த அக் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குத் தன் பயனை ஊட்டுதலாலே நிகழ்ந்த நிகழ்ச்சியும்: வலம்படு தானை மன்னன் முன்னர் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்-வெற்றியையே தோற்றுவிக்கும் படைகளையுடைய பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியன் முன்னிலையில் தன்பால் எஞ்சிய சிலம்பை ஏந்திச்சென்ற அக் கண்ணகி உரைத்த வழக்கும்; செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி-பாண்டியன் வழக்குத் தோற்ற பின்னர்த் தன் கையிலிருந்த செம்பொற் சிலம்பினை எறிந்து அக்கோப்பெருந்தேவி முன்னிலையிலே வஞ்சின மொழிகள் பல கூறிய திருமாபத்தினியாகிய கண்ணகி கூந்தலையுடைய கோப்பெருந்தேவியே ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய் என்று கூறி அவ்விடத்தினின்றும் போய்; முதிரா முலைமுகத்து எழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்-தன்னுடைய இளமையுடைய மூலையைக் கையால் திருகி எடுத்துச் சுழற்றியபோது அம்மூலையின் முகத்தினின்று எழுந்த தீயினாலே மதுரை என்னும் பழைய ஊராகிய பெரிய நகரத்தைச் சுட்டொழித்ததும்; என்க

(விளக்கம்) மாதர்-கண்ணகி. உற்றதை-ஐகாரம் சாரியை எல்லாம் எஞ்சாமைப் பொருட்டு, வெயிலெல்லாம் கழிந்தது என்பது போல, இதனை ஒருமைப் பன்மை மயக்கம் என மயங்குவாரும் உளர். அரிவை, சேயிழை என்பன வாளா சுட்டுப் பெயராந் துணையாய் நின்றன. மன்னன்: நெடுஞ்செழியன். ஐம்பால் என்னும் வழக்குப் பற்றி, சில்லோதி என்றார்.

கோப்பெருந்தேவியின் கற்பு மாண்பு

68-86: அரிமான்..............மாய்ந்தனன்

(இதன் பொருள்) அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்-சிங்கம் அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்த திருமகள் விரும்புதற்குக் காரணமான தென்னாட்டவர் மன்னனாகிய தன் கணவன்; தயங்கு இணர்க்கோதை தன் துயர் பொறாஅன் மயங்கினன் கொல்லென-விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மாலையையுடைய கண்ணகியினுடைய துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமையால் இங்ஙனம் மயங்கி வீழ்ந்தான் போலும் என்று நினைத்து; மலர் அடி வருடி-அம் மன்னனுடைய மலர்  போன்ற அழகிய அடிகளைத் தன் கையால் வருடி; தலைத்தாள் நெடுமொழி தன் செவி கேளாள்-அப்பொழுது கண்ணகி கூறிய வீர மொழிகளைத் தன் செவியால் கேளாதவளாகவும்; கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாள்-மன்னவன் உயிர் நீத்தமை கண்டு திகைத்தமையால் அது கருதி நெஞ்சத்தின்கண் கலக்கமும் கொள்ளாதவளாகவும் கணவன் இறந்தமையால் எய்திய கொடுந்துன்பத்தைப் பொறாதவளாகவும்; மன்னவன் செல்வுழிச் செல்கயான் என-அரசன் உயிர் சென்ற இடத்திற்குச் செல்வதாக என்னுடைய உயிரும் என்று துணிந்து; தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் பெருங் கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்-தன்னுடைய உயிரைக் கருவியாகக் கொண்டு மாய்ந்த அம் மன்னனுடைய உயிரைத் தேடிப் போவாள் போல, அப்பாண்டிய மன்னனுடைய கோப்பெருந்தேவி தானும் அம்மன்னவனோடு ஒருசேர உயிர் நீத்தனளாக

(விளக்கம்) அரிமான் ஏந்திய அமளி என்றது அரசு கட்டிலை (சிங்காதனத்தை) திருவீழ் மார்பின் தென்னவர்கோ என(சிலப் 20:22-3) முன்னும் கூறினர். தயங்கிணர்க் கோதை-கண்ணகி, மன்னவன் நிலைமை அக் கோப்பெருந்தேவியின் நெஞ்சம் முழுவதையும் கவர்ந்து. கொண்டமையால் கண்ணகியின் வஞ்சினங்களைக் கேளாதவளாயினன் எனவும் கணவன் இறந்த துன்பம் கையறு நிலைமையை எய்துவித்தலால் கலங்கவும் மாட்டாளாய் அப்பொழுதே அக் கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தனள். அவன் உயிர் நீத்ததறிந்தவுடன் தானும் உயிர் நீத்தலால் தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள்போல் மாய்ந்தனள் என்றார்.

கண்ணகி சேரனாடு வந்தது

87-92: கொற்ற வேந்தன்..........கொற்றமென

(இதன் பொருள்) கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல்-வெற்றியையுடைய பாண்டிய மன்னனது கொடுங்கோல் ஆட்சியின் இயல்பு இத்தன்மைத்து என்று தன்பால் நிகழ்ந்தவற்றையே எடுத்துக் காட்டிச் செங்கோல் மன்னனாகிய உனக்குக் கூறக் கருதியவள் போன்று; தன் நாட்டு ஆங்கண் தனிமையில் செல்லாள்-தான் பிறந்த நாடாகிய சோழநாட்டின்கண் கணவனை இழந்து தமியளாய்ச் செல்ல விரும்பாளாய்; நங்கை நின் பாட்டு அகவயின் அடைந்தனள் என்று-அத்திருமா பத்தினி நினக்குரிய இந்த நாட்டினுள்ளே வந்தெய்தினள் என்று அக் கண்ணகியின் வரலாற்றினை அச் சாத்தனார்; ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழி ஊழி வழி வழி நின் வலம்படு கொற்றம் சிறக்க என-சிறிதும் ஒழிவில்லாமல் கூறி வேந்தர் பெருமானே ஊழிதோ றூழி வழி வழியாக நின்னுடைய வெற்றியுடைய அரசியல் அறம் சிறப்பதாக என்று அச்சாத்தனார் கூறா நிற்ப, என்க.

(விளக்கம்) இற்று-இத்தன்மைத்து; இறை: முன்னிலைப் புறமொழி; இறையாகிய நினக்கு என்க. தன்னாடு என்றது சோழநாட்டினை கணவனை இழந்தமை தோன்ற தனிமையில் செல்லாள் என்றார் ஈண்டு

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று     (231)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும் நங்கை-மகளிருள் தலை சிறந்தவள் ஒழிவின்று குற்றிய லிகரம் உகரமாயிற்றுச் செய்யுளாதலின் வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என வாழ்த்துதல் ஒரு மரபு. இதனை மதுரைக் காஞ்சியினும் காண்க, (194)

சேரன் செங்குட்டுவன் பரிவுரை

93-104: தென்னர்............உரைத்து

(இதன் பொருள்) தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்-தென்னாட்டவர் வேந்தனாகிய நெடுஞ்செழியனுடைய செங்கோல் வளைந்த தீய செய்தியைக் கேட்டருளிய சேர நாட்டு மன்னர் பெருமானாகிய செங்குட்டுவன் தன் நெஞ்சத்தினுள் பெரிதும் வருந்தி அப் புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற புலவரை நோக்கிக் கூறுபவன்; எம்மோரன்ன வேந்தர்க்கு உற்ற செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்-எம்மை யொத்த பிற வேந்தர்களுக்குத் தனக்கு எய்திய நடுவுநிலைமையினின்றும் நீங்கிய இப் பழிச்சொல் செவியின்கண் சென்று புகுவதற்கு முன்னர் அப் பாண்டிய மன்னன்; உயிர்பதிப் பெயர்த்தமை ஈங்கு உறுக என-தன் உயிரைத் தன் உடம்பினின்றும் நீக்கிய இச் செய்தி இப்பொழுதே விரைந்து சென்று புகுவதாக என்று கருதி; மன்னவன் வல்வினை வளைத்த கோலை செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது-அம் மன்னவனுடைய வலிய ஊழ்வினையால் வளைக்கப்பட்ட அவனது கோலை உயிர் அவ்வளைவினை நிமிர்த்து மீண்டும் செங்கோலாக்கிவிட்டது! வாழ்க! அம் மன்னவன் புகழ்; மழை வளம் கரப்பின் வான் பேர் அச்சம் உயிர் பிழை எய்தின் பெரும் பேர் அச்சம்-இயல்பாகவே உலகின்கண் மழை வறந்து வளம் குறைந்தாலும் மக்கள் வன்பழி தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும் உலகின்கண் வாழும் உயிர்கள் தம் ஊழ்வினையாலே வருந்துமிடத்தும் மாந்தர் தம்மைத் தூற்றுவரே என்னும் மிகப் பெரிய அச்சம் தோன்றும்; குடிபுரவுண்டும்-தம் குடிமக்கள் தம்மால் மாந்தர் தம்மைத் தூற்றுவரே-தம் குடிமக்கள் தம்மால் நன்கு புரக்கப்பட்ட வழியும்; கொடுங்கோலாக்கி விடுமோ என ஒவ்வொரு நொடிப்பொழுதும் அஞ்சுதற்குக் காரணமான; மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல் என-இம் மக்கள் தொகுதியைப் பாதுகாக்கின்ற நல்ல அறக்கடமையை மேற்கொண்ட இவ்வரசர் குடியில் பிறத்தலால் ஒருவனுக்கு எய்துவது துன்பமேயல்லது தொழத்தகுந்த சிறப்பு யாதொன்றுமில்லை என்று; துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த நன்னூல் புலவற்கு நன்கனம் உரைத்து-கண்ணகி முதலியோர்க்கு ஊழ்வினை காரணமாக வந்துற்ற துன்பங்களை யெல்லாம் அறிந்து தெளிந்து புலவராகிய அச் சாத்தனாருக்குத் தன் பரிவுரைகளை நன்றாக எடுத்துச் சொல்லிய பின்னர் என்க.

(விளக்கம்) தென்னர் கோமான்-நெடுஞ்செழியன் எம்மோ ரன்ன எம்மையொத்த இதுமுதல் ஈங்கென என்னுமளவும் செங்குட்டுவன் உட்கோள் உயிர்பதிப் பெயர்த்தல்-உயிரை அதன் உறையுளாகிய உடம்பினின்றும் நீக்குதல். உண்ணாநோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும் என்பர் பின்னும்(27: 83) உண்ணா நோன்போ டுயிர் பதிப் பெயர்ப்புழி என்பது மணிமேகலை (14: 95) இகந்த சொல் செவிப் புலம் படுதற்குமுன் உயிர்பதிப் பெயர்த்த இச் செய்தி அவர் செவிப் புலம் புகுதுக என்றவாறு. வல்வினை தீவினைமேற்று. மழைவளம் கரத்தல், இயற்கை நிகழ்ச்சி. உயிர்பிழை எய்துதல், ஊழ்வினையின் செயல். இவற்றிற்குக் கூட உலகோர் தம்மைப் பழிப்பர் என்று அரசர் அஞ்ச நேருகிறது குடிமக்கள் நன்கு தம்மால் பாதுகாக்கப்படும் பொழுதும் வல்வினை தம் செங்கோலை வளைத்துவிடுமோ என்றும் அவர் அஞ்சிக்கிடக்க நேர்கின்றது. இத்தகைய அச்ச்திற்கே இருப்பிடமாகிய அரசர் குடியிற் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லை என இவ்வரசர் பெருமான் தனது பட்டறிவினால் உணர்ந்து கூறுகின்ற இம்மொழிகள் சாலவும் பெருந்தகைமையுடையவாக விருத்தல் உணர்ந்து மகிழற்பாலது துணிந்து-தெளிந்து. புலவன்-சாத்தனார் தனது-பெருந்தகைமை தோன்ற உரைத்தமை கருதி நன்கனம் உரைத்து என அடிகளார் பாராட்டினர்.

செங்குட்வேன் தன் பெருந்தேவியை நோக்கி வினவுதல்

106-110: ஆங்கு...............உரைப்ப

(இதன் பொருள்) நன்னுதல்-அழகிய நுதலையுடையோய்!; ஆங்கு உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்-அம் மதுரையின்கண் தன் கணவன் உயிருடன் தன் உயிரையும் நீத்துப்போன ஒப்பற்ற கற்புடையாளும் சினத்தோடே நமது நாட்டிற்கு வந்த கண்ணகி யென்னும் கற்புடையாளும் ஆகிய இவ்விரண்டு மகளிருள் வைத்து, வியத்தகு நலத்தோர் யார்-நம்மால் வியக்கத்தகுந்த சிறப்புடையோர் யார் என்று; மன்னவன் உரைப்ப-அச்சேரன் செங்குட்டுவன் வினவா நிற்ப, என்க.

(விளக்கம்) இச்சேரன் செங்குட்டுவன் வினவுவதும் ஒரு கற்புடையாளை ஆதலின் தகுந்தவர்பாலே வினவப்பட்டன; இவ்வினாக்களுக்கு விடை கூறுதல் அரிதென்றே நம்மனோர்க்குத் தோன்றுதல் உணர்க. ஆங்கு என்றது மதுரையை. கணவன் உயிருடன் ஒரு சேரத் தன் உயிரும் நீத்துச் சென்ற ஒரு மகள் என்றவாறு. ஒருமகளென்றது அவள் செயலின் அருமை தோன்ற நின்றது.

கோப்பெருந்தேவியின் விடையும் வேண்டுகோளும்

110-114: மாபெருந்தேவி........வேண்டுமென

(இதன் பொருள்) மா பெருந்தேவி காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வானகத்து உறுக-அதுகேட்ட அக்கோப்பெருந்தேவி பெரும! தன் காதலனாகிய அப்பாண்டிய மன்னனுடைய துன்பத்தைக் காணுமுன்பே உயிர்நீத்த அப் பாண்டிமாதேவி கற்புடைமகளிர் பெறுதற்கியன்ற பெருஞ் செல்வத்தை விண்ணவர் உலகத்தின்கண் பெறுவாளாக; அத்திறம் நிற்க-அது கூறவேண்டா; நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என-நம்முடைய அகன்ற இந்நாட்டிற்குத் தானே வந்தெய்திய இக்கற்புக் கடவுளை யாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) காதலன் இறந்துழி இறத்தல் இவ்வுலகத்துக் கற்புடை மகளிர்க்கெல்லாம் இயல்பாதலின் அப் பாண்டியன் தேவியின் செயல் வியத்தற்குரிய தொன்றன்று எனவும். அப் பெருந்தகைச் செயலால் எய்தும் பயனை அவள் எய்துக எனவும் உவந்துரைத்தபடியாம். இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் இவ்விருவருள் வியத்தகும் நலத்தாள் இக்கண்ணகியே என்னும் தன் கருத்தினை உடம்பொடு புணர்த்தி இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என இத்தேவி கூறும் விடையும் வேண்டுகோளும் பெரிதும் பாராட்டுதற்குரியன பாண்டியன் தேவி கற்புடைய மகன். கண்ணகி கற்புடை மகளிர்கெல்லாம் கடவுள்; என்று கூறிய இவ்விடையின் கண் இவருள் வியத்தகு நலத்தோள் இவள் என்னும் தன் கருத்து நன்கு விளங்கிக் கிடத்தலுணர்க இதனோடு

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயி ரீவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு)
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பெறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மா பெரும் பத்தினி   (மணிமே: 2: 42-55)

எனவரும் மாதவி கூற்று நினைவிற் கொள்ளற்பாற்று. நம் அகல் நாடு அடைந்த என்பது நாம் செய்த தவத்தால் நம் அகல் நாடு அடைந்த என்பதுபட நின்றது. கடவுள் ஆதலின் பரசல் வேண்டும் என்றாள். எனவே இக் கற்புக் கடவுளுக்குக் கோயிலெடுத்துப் படிமமும் சமைத்து விழாவெடுத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்பது தேவியின் கருத்தாயிற்று. இக் கருத்துணர்ந்த செங்குட்டுவன் அதற்கிணங்க மேலே கூறுவதும் காண்க.

செங்குட்டுவன் திருவுளக் குறிப்புணர்ந்த அமைச்சர் கூற்று

115-121: மாலை.........உடைத்தௌ

(இதன் பொருள்) மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூல் அறி புலவரை நோக்க-பெருந்தேவியின் கருத்தையுணர்ந்த மலர்மாலை சூட்டப்பெற்ற கொற்ற வெண்குடையை யுடைய அச் சேர மன்னனும் அக் கருத்தினைப் பெரிதும் விரும்பி மருங்கிருந்த அமைச்சர்களை நோக்க; ஆங்கவர்-அப்பொழுது அவ்வமைச்சர் தாமும் அம் மன்னனுடைய குறிப்பறிந்து கூறுபவர்; ஒற்கா மரபின் பொதியில் அன்றியும் வில் தலைக்கொண்ட வியன்பேர் இமயத்து கல் கால் கொள்ளினும் கடவுள் ஆகும்-அழியாமல் நிற்கும் முறைமையினையுடைய பொதியில் மலையிலாதல் அல்லாமலும் விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையிலாதல் கல்லை அடிச்செய்து கைக்கொண்டாலும் இரண்டு கடவுள் படிமம் செய்தற்குத் தகுதியுடையனவே ஆகும்; கங்கைப் பேர்யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என-அங்ஙனம் கற்கொள்ளுமிடத்து இமயக் கல்லாயின் கங்கைப் பேரியாற்று நீரினும் அல்லது பொதியமலைக் கல்லாயின் காவிரிப் பேரியாற்று நீரினும் அமிழ்த்திச் செய்யும் மங்கல நீர்முழுக்குத் தகுதியுடையதாகும் என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) ஒற்கா மரபு-நிலைத்து நிற்கும் இயல்பு. இதனை, பொதியிலாயினும் இமயமாயினும்.....ஒடுக்கம் கூறார் என அடிகளார் கூறுமாற்றானும் (க. மங்கல) உணர்க. இமயமும் தமக்குரியது என உரிமை காட்டுவார் வில்தலை கொண்ட இமயம் என்றார். வில்-சேரர்( இலச்சனை) பொறி. கால் கொள்ளுதல்-வரைத்து அடித்தெடுத்துக் கொள்ளுதல். கங்கைப் பேரியாற்றினும் காவிரிப் புனலினும் என்றது எதிர் நிரனிறை. கல்லை நீரில் மூழ்குவித்துச் செய்யும் ஒரு சடங்காதலின் தங்கிய நீர்ப்படை யென்றார்.

செங்குட்டுவன் கூற்று

122 முதலாக, 149- ஈறாக ஒரு தொடர்

122-130: பொதியில்.......எனின்

(இதன் பொருள்) பொதியில் குன்றத்துக் கல்கால் கொண்டு முது நீர்க் காவிரி முன் துறைப்படுத்தல்-பொதியமலையிடத்தே கல் அடிச்செய்து கைக்கொண்டு பழைமையான நீர்வளமிக்க காவிரிப் பேரியாற்றின்கண் துறையிடத்தே நீர்ப்படை செய்தல்; மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று-மறப் பண்புமிக்க நெடிய வாளையுடைய எம்முடைய சேரர் குடியிற் பிறந்த மன்னர்க்குச் சிறப்போடு பொருந்தி வருகின்றதொரு செயல் ஆகாது; புன மயிர்ச்சடைமுடிப் புலராஉடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச்செல்வத்து இருபிறப்பாளரொடு-புல்லிய மயிரால் தெற்றிய சடையாலியன்ற முடியினையும் ஈரம்புலராத ஆடையினையும் மூன்றாகிய பூணூலையுடைய மார்பினையும் மூன்று வகைப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையும் உடைய அந்தணரோடு; பெரு மலை அரசன் மடவத்தின் மாண்ட மாபெரும் பத்தினிக்குக் கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்-பெரிய மலை அரசன் இளமையிலேயே மாட்சிமையுடைய மிகப் பெரிய பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குப் படிவம் அமைக்க ஒரு கல் நமக்குக் கொடானாயின் என்க.

(விளக்கம்) பொதியில் நம் தமிழகத்து மலையும் காவிரி தமிழகத்து யாறுமாதலின் அம் மலையில் கற் கொண்டு அக் காவிரியில் நீர்ப்படை செய்தல் நம் வீரத்திற்குச் சிறப்பாக மாட்டாது என்பது கருத்து. முத்தீ-ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி. இருப்பிறப்பாளர் அந்தணர். பூணூல் அணிதற்கு முன்னர் மக்கட்டன்மையும், அணிந்த பின்னர்த் தெய்வத் தன்மையும் ஆகிய இருவகைப் பிறப்பினையுமுடையார்; பார்ப்பனர். மடம்-ஈண்டு இளமை. எழுதல்-செய்தல். பெண் கொடுப்போர் பார்ப்பனர் முன்னிலையில் கொடுத்தல் இயல்பாதலின் இரு பிறப்பாளரொடு தாரானெனின் என்றார். மலை அரசன் என்றது இமயமலையை

131-140: வழிநின்று..........ஈங்கென

(இதன் பொருள்) வழிநின்று பயவா மாண்பு இல்வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்-தமது கருத்தின் வழி நிலைத்து நின்று பயன்படாத மக்கள் வாழ்க்கையின் இயல்பை இறந்தோர் இறவாதிருந்தோர்க்கு எடுத்துக் காட்டிய முதுகாஞ்சியும்; முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்-அம் மலை அரசன் பழைய தனது குடியிற் பிறந்த மூவாமையையுடைய உமையைப் பிறைசூடிப் பெருமானுக்கு வழங்கிய மகட்பாற் காஞ்சியும்; தென் திசை என்றன வஞ்சியொடு வடதிசை நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்-தென்திசையினின்றும் மேற் செல்லுதற்கு இடனான என்னுடைய வஞ்சியோடே அம் மலை அரையன் எதிராக நின்று தடுத்த நீண்ட பெரும் காஞ்சியும்; நிலவுக் கதிர் அளைந்த நீள்பெரும் சென்னி அலர் மந்தாரமொடு ஆங்கு அயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை-நிலவின் ஒளி தவழ்ந்த உயர்ந்த பெரிய முடியினிடத்து மலர்ந்த மந்தார மாலையினோடே அவ்விடத்து அதன் பக்கத்தே மலர்ந்த வேங்கை மலரால் புனைந்த விளக்கமுடைய வெற்றிமாலையும்; மேம்பட மலைதலும் ஈங்குக் காண்குவல் என-மேன்மையுண்டாகச் சூடுதலையும் யான் இப்பொழுதே காண்பேனாக என்று கூறி என்க.

(விளக்கம்) கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்றது முதுகாஞ்சியை அஃதாவது நிலையாமையை என்க. இதனைத் தொல் காப்பியனார் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை என்பர். மதி முடி-இறைவன்; பிறை சூடியவன் என்பது பொருள். மகட்பாற் காஞ்சி. இதனை நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு மகட்பாடஞ்சிய வலிந்து வந்த அரசனை முது குடித்தலைவர் எதிர்த்தல், என்க. வஞ்சி தன்னை மதியாத வேந்தனை வஞ்சிப்பூ குடிச்சென்று அடர்த்தல் பெருங்காஞ்சி இதனை

தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று

எனவரும் (புற-மாலை) கொள்வானும் உணர்க. விறல் மாலை-வெற்றி மாலை இமயமலையின் சென்னியில் அமரர் உறைதலின் அவரையும் வென்று இமயக் குன்றிலுறையும் மறவரையும் வென்று மகளாதற்குரிய கல்லை வலிந்துகொள்ளுதலும் ஆகிய வெற்றிக்கு அறிகுறியாகச் சூடப்படுதலின் மந்தார மலரும் வேங்கை மலரும் விரவிச் சூடிக்கொள்ளுகின்ற விறல் மாலை என்றான், காண்குவல் என்பது-செய்து காண்பேன் என்றவாறு.

141-149: குடைநிலை.........சூடுதுமென

(இதன் பொருள்) குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்-குடை நாட்கோளும் கொற்ற வஞ்சியும்; நெடுமாராயம் நிலைஇய வஞ்சியும்-நெடிய மாராயம் நிலைபெற்ற வஞ்சியும்; வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும்-வெற்றிகொண்டோர் விளங்கிய சிறந்த பெருவஞ்சியும்; பின்றாச் சிறப்பின் பெருஞ் சோற்று வஞ்சியும்-தாழாச் சிறப்பினையுடைய பெருஞ்சோற்று வஞ்சியும்; குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்; வடகர் போகிய வான்பனக் தோட்டுடன் புட்கைச்சேனை பொலியச்சூட்டி-இடையே முரிதல்லில்லாத  சிறந்த பனந்தோட்டோடு மேற்கோளையுடைய தானை விளங்க அணிவித்து; பூவாவஞ்சிப் பொன்னகர்ப்புறத்து என்வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என-அழகிய வஞ்சிநகரின் புறத்தே எனது பகைவரைப் பொருத வினைவாய்த்த வாளிற்கு வஞ்சிமாலை சூடுவேம் என்று கூற;

(விளக்கம்) குடை நிலை வஞ்சி-குடை நாட்கோடல்; பெய்தா மஞ்சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக், (பு-வெ. 38) கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று; வையகம் வணங்க வாளாச் சினனெனச்; செய்கழல் வேந்தன் சீர்மிகுத்தன்று( பு-வெ. 42) மாராய வஞ்சி-அரசனாற் சிறப்பெய்து நிலை; மாராயம் பெற்ற நெடு மொழியானும் (தொல். புறத். 8, இளம், 3) மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல் வேலோர் நிலையுரைத்தன்று (பு. வெ. 46) பெருவஞ்சி-பகைவர் நாட்டைக் கொளுத்துதல். முன்னடையார் வளநாட்டைப் பின்னருமுடன் றெரிகொளீஇ யன்று(பு. வெ. 57) பெருஞ்சோற்று வஞ்சியும்-வீரர்களுக்குப் பெருஞ் சோறளித்தல்; பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும்(தொல். புறத். 8, இளம். 3) திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று( பு. வெ 58) கொற்றவள்ளை-அரசன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு அழிந்ததற்கு இரங்கல்; குன்றச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம். 3) மன்னவன் புகழைக் கூறுவதுடன் பகைவர் நாடு குழிந்ததற்கு இரங்கல் குன்றாச் சிறப்பிற்கொற்ற வள்ளையும் (தொல். புறத். 8. இளம்.3) மன்னவன் புகழ்கிளந் தென்னார் நாடழி பிரங்கின்று( பு வெ. 43) வட்கர் போகிய இடையில் முரிதல் இல்லாத; பகைவர்-முதுகிட்டுப் போதற்குக் காரணமான எனினுமாம். வட்கர் போகிய வளர் இளம் போந்தை( புற. நா. 100) என வருதலும் காண்க. அரசர்கள் தமக்குரிய அடையாளப் பூக்களோடு வெட்சி முதலிய உரிப்பொருட்கியன்ற மலரைச் சூடிக்கோடல் வழக்கம். இதனை பொலந்தோட்டுப் பைந்தும்பை மிசை அலங்குளைய உழிஞைப் பவரொடு மிலைந்து, எனவும் வருவனவற்றாலுணர்க. பூட்கை, புட்கை: விகாரம்; மேற்கோள் என்னும் பொருட்டு பூவா வஞ்சி-கருவூர் ஈண்டுச் சேரன் செங்குட்டுவன் யான் இமயமலையின்கண் கல் கொள்ளுமிடத்து ஆண்டுப் பகைவர் தடுப்பார் உளராயின் குடைநிலை வஞ்சி முதலாகப் பெருஞ் சோற்று வஞ்சி ஈறாகத் தன் சேனைக்குச் சூட்டுவேன் என்னும் கருத்தினைப் பொதுவாக, பெருமலை அரசன் கல் தாரான் எனின் இவற்றைச் சூட்டி வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்று கூறினன் என்க. வஞ்சி சூடுதலாவது

வஞ்சி தானே முல்லையது புறனே
எஞ்சா மன்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தனறே

என்பதனாலுணர்க. இவ்வாற்றால் சேரன் செங்குட்டுவன் யாம் இமயத்தில் கல் கால்கோடற்குப் போங்கால் எதிர்க்கும் மன்னரொடு போர் ஆற்றுதற்கு வஞ்சி சூடிச் செல்வேம் என்றானாயிற்று.

வில்லவன் கோதை வேந்தனுக் குரைத்தல்

150-155: பல்யாண்டு..........புக்கன

(இதன் பொருள்) பல்யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு  என வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்-இங்ஙனம் அமைச்சரை நோக்கி அரசன் கூறியவுடன் அவருள் வில்லவன் கோதை என்னும் பெயருடைய அமைச்சன் வேந்தர் பெருமானே உன்னுடைய வெற்றி இந்நிலவுலகத்தில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வதாக! என வாழ்த்தி அவ்வேந்தனுக்குச் சொல்லுவான்; நும் போல் வேந்தர் நும்மோடு இகலி-நும்மோடு ஒத்த வேந்தராகிய சோழனும் பாண்டியனும் ஆகிய இரண்டு மன்னவர்களும் நும்மோடு மாறுபட்டு; கொங்கர் செங்களத்துக் கொடுவரி கயல் கொடி பகைப் புறத்துத் தந்தனராயினும்-கொங்கருடைய நாட்டின்கண் அமைந்த குருதியால் சிவந்த போர்க்களத்தின் கண் நுமக்குத் தோற்றுத் தமக்குரிய புலிக்கொடியையும் மீனக்கொடியையும் பகைத்துப் பொருத அக்களத்திலேயே நுமக்குத் தந்து ஓடினாராயினும்; ஆங்கு அவை திகை முகவேழத்தின் செவிஅகம் புக்கன-அப்போர்க் களத்தில் நிகழ்ந்த வெற்றிப் புகழ்கள் எட்டுத் திசைகளிலும் நிற்கின்ற யானைகளின் செவிகளினூடும் சென்று புகுந்தன; என்றான் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் அரசனே வாழ்த்தித் தொடங்குதல் மரபு ஆதலால் வில்லவன் கோதை என்னும் அமைச்சன் தன் கருத்துரைப்பவன் பல்யாண்டு வாழ்க நன் கொற்றம் என்று வாழ்த்தித் தொடங்குகின்றான். நும்போல் என்புழிப் பன்மை செங்குட்டுவனையும் அவன் முன்னோரையும் உளப்படுத்திய படியாம். கொடுவரி-புலிக்கொடி. கயல்-மீன்கொடி எனவே வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும் என்பது பெற்றாம். பகைபுறம்: வினைத்தொகை; பகைக்கும் இடம்; (போர்க்களம்) திகை-திசை அவை என்றது பலவகைப்பட்ட வெற்றிப் புகழும் என்றவாறு; செவி புகுவன அவையே யாதலின்.

156-167: கொங்கணர்.........இல்லை

(இதன் பொருள்) கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர் வட ஆரியரொடு-கொங்கணரும் கலிங்கரும் கொடிய கன்னடரும் வங்கரும் கங்கரும் பல வேற்படையே யுடைய கட்டிவரும் வடவாரியரு மாகிய இவ்வேற்று நாட்டுப் படைகள் கூடி வந்த போர்க்களத்தின்கண்; வண்தமிழ் மயக்கத்து-வளவிய நம் தமிழ்ப் படை போராற்றுதற்குப் புகுந்து கலந்த பொழுது; உன் கடமலை வேட்டம் என் கட்புலம் பிரியாது-அப்பகைவருடைய கூட்டத்தில் நீ உனது களிற்று யானையின் மேலேறிச் சென்று ஆடிய வேட்டை என்னுடைய கண்ணை விட்டுப் போகாது; எங்கோ மகளை கங்கைப் பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் ஆட்டிய அந்நாள்-எம்முடைய அரச வன்னையைப் பண்டு யாம் கங்கை யென்னும் பேரியாற்றினது விரைந்து வருகின்ற நீராகிய புண்ணிய தீர்த்தத்தில் ஆடச்செய்த அந்த நாளிலே; ஆரிய மன்னர் ஈர் ஐஞ்ஞாற்றுவர்க்கு ஒரு நீயாகிய செருவெங்கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண்-வட ஆரியராகிய அரசர் ஓராயிரவர்க்கு எதிராக நீ தமியையாய் நின்று ஆற்றிய நினது வெவ்விய போர்க் கோலத்தைக் கண்ணை விழித்துப் பார்த்தது தறுகண்மையுடைய கூற்றம் மட்டுமே யன்றோ; இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் ஏற்பவர்-முழங்குகின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தை முழுதும் தமிழ் நாடாகவே ஆக்கும் பொருட்டு இமயத்தில் கல்கால் கொள்ளுதலாகிய இச்செயலை நீ திருவுளங்கொண்டாயாயின் நின்னைப் பகைத்து எதிர்ப்பவர்; முது நீர் உலகின் முழுவதும் இல்லை-கடல் சூழ்ந்த இவ்வுலகின்கண் யாண்டும் யாரும் இல்லை; என்றான் என்க.

(விளக்கம்) வளைந்த கரு நாடருமாம் (கன்னடர்) பங்களர்-வங்காள நாட்டினர், கொங்கணர் முதலாகக் கட்டியர் ஈறாகக் கூறப்பட்ட நாட்டினர். ஆரியர் அல்லர் என்பது தோன்ற வடவாரியரொடு என விதந்தோதினர் இவருள் கங்கரும் கட்டியரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் என்பர். இதனை நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி எனவரும் அகநானூற்றானும் உணரலாம். வண்டமிழ் வளவிய தமிழ் நாட்டுப் படை. கடமலை யானை வேட்டம் என்றது பகைப்படையைக் கொன்று ஒழித்ததனை யான் கண்கூடாக நின்று கண்ட காட்சி என் கண்ணை விட்டகலாது என்றவாறு. ஆட்டிய-நீராட்டிய. எங்கோமகள் என்றது செங்குட்டுவன் தாயை. ஈர் ஐஞ்ஞாற்றுவர், மிகுதிக்கு ஓர் எண் அதற்குக்கடுங்கண் உண்மையால் என ஏதுக் காட்டியபடியாம். பிற தேவரும் மக்களும் அச்சத்தால் கண்ணை மூடிக்கொண்டனர் என்பது கருத்து. ஆக்கிய ஆக்குவதற்கு இது-இக்கல் கொள்ளும் செயல் முது நீர்-கடல்.

148-177: இமைய................ஈங்கென

(இதன் பொருள்) இமைய மால்வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின்-இமயமென்னும் பெரிய மலைக்கு எம்பெருமான் போதல் பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் சமைத்தற்கு ஒரு கல் கொள்ளுதற் பொருட்டேயாதலால்; வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்-வடதிசையின்கண் உள்ள நாடுகள் ஆளும் அரசர்களுக்கெல்லாம்; தென் தமிழ் நல் நாட்டுச் செழுவில் கயல்புலி மண்தலை ஏற்ற ஈங்கு வரைக என-தென்திசையிலுள்ள நல்ல மூன்று தமிழ்நாட்டிற்கு முரிய வளவிய வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றிலச்சினைகளையும் ஒருங்கே இடப்பெற்ற முகப்பையுடைய திருமந்திர ஓலைகளை இப்பொழுதே வரைந்து உய்த்தருளுக என்று வில்லவன் கோதை யென்னும் அவ்வமைச்சன் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) எங்கோன்: முன்னிலைப் புறமொழி எழுத-அமைக்க. கற்கு-கல் கொள்ளுதற்கு. இத் தெய்வமும் தமிழும் சேர சோழ பாண்டிய நாடு மூன்றற்கும் பொதுவாதலின் இப்பணி முத்தமிழ் நாட்டிற்கும் பொது ஆதலால் வடதிசை மன்னர்க்கு வரையும் ஓலையின் கண் வில்லும் கயலும் புலியும் ஆகிய மூன்றையும் பொறித்தல் வேண்டும் என்பது அவ்வமைச்சன் கருத்து என்று உணர்க. மண் -இலச்சினை ஒற்றும் மண், ஈண்டு ஆகுபெயர். இவை வில்லவன் கோதை கூற்று.

அழும்பில்வேள் என்னும் அமைச்சன் கூறல்

173-180: நாவலந்..............புக்கபின்

(இதன் பொருள்) அழும்பில்வேள் நாவல் அம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா-வில்லவன கோதை கருத்துரை கூறிமுடித்தபின் அழும்பில்வேள் என்னும் அமைச்சன் அரசனை நோக்கிக் கூறுபவன், பெருமானே வாழ்க நின் கொற்றம் இந்த நாவலந் தண்பொழிலின்கண் உள்ள நம்முடைய பகை மன்னவருடைய ஒற்றர்கள் நம்முடைய காவல் மிக்க தலைநகரமாகி இவ்வஞ்சியின் முற்றத்திலே எப்பொழுதும் இருப்பர் ஆதலால்; வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவிப்படுக்கும் தகைமைய அன்றோ-கச்சணிந்த யானைகளை யுடைய அப் பகைவருடைய ஒற்றர்களே இச்செய்தியை அவரவர் அரசருடைய செவியின்கண் புகவிடுக்கும் தன்மையை யுடையன ரல்லரோ ஆதலால் அவ்வரசர்களுக்குத் திருமுகம் உய்த்தல் வேண்டா நம் நகரத்திலேயே; பறை அறை என்று உரைப்ப-இச் செய்தியைப் பறை அறைந்து அறிவித்தலே அமையும் ஆதலின் பறை அறைவித்தருளுக என்று அவ்வமைச்சன் தன் கருத்துரையா நிற்ப; நிறை யருந்தானை வேந்தனும் நேர்ந்து-நிறைந்த அரும்பெரும் படைகளையுடைய அவ் வேந்தன்தானும் அவ் விழும்பில் வேளின் கருத்திற் குடன்பட்டு; கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சிமாநகர் புக்க பின்-பகை மன்னவர்மேல் வஞ்சிப்பூச் சூடிச் சென்று அம்மன்னவர் இறுத்த திறைப் பொருளாலே பெரிதும் சிறந்த தன் தலைநகரமாகிய வஞ்சி நகரத் திற்குச் சென்று புகுந்தபின்னர் என்க.

(விளக்கம்) ஒற்று என அஃறிணைவாய்பாட்டால் கூறினமையின் தகைமைய என்று முடிக்கப்பட்டது. ஒற்று-ஒற்றர் இதனால் பிற நாட்டு ஒற்றர்கள் ஒவ்வொரு நாட்டினும் எப்பொழுதும் பல்வேறு வேடம் புனைந்து வதிந்திருப்பர் என்பது பெற்றாம். அழும்பில் வேள் மற்றோர் அமைச்சன். இந் நிகழ்ச்சியால் பண்டைக்காலத்து அரசர் எச் செயலையும் தம் அமைச்சரொடு ஆராய்ந்து துணியும் வழக்கம் உடையரென்பதும் அறியப்படும். கூடார்-பகைவர். வஞ்சிக்கூட்டு-வஞ்சிப்பூச்சூடிப் படையெடுத்துச் சென்று பகைவரிடத்திலிருந்து திறையாகப் பெற்று ஈட்டிய பொருள். அவற்றை உண்டு சிறந்த என்றது அப்பொருளால் பயன் பெற்றுச் சிறந்த என்றவாறு. வாடா வஞ்சி-வெளிப்படை: வஞ்சி நகரம் என்க. காட்டகத்தினின்றும் மீண்டும் நகர் புக்கபின் என்க.

வள்ளுவர் முரசறைதல்

181-194: வாழ்க...............மருங்கென்

(இதன் பொருள்) வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை-வாழ்க எங்கள் அரசனாகிய மன்னவர் மன்னன்; ஊழி தொறு ஊழி உலகங் காக்கென-ஊழிதோறும் ஊழிதோறும் அப் பெருந்தகையே இவ்வுலகத்தைக் காத்தருளுக என்று தொடக்கத்தே மன்னனை வாழ்த்திச் செய்தி கூறும் வள்ளுவர்; எம் காவலன் வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்து ஓர் கல் கொண்டு பெயரும்-எங்கள் மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் பண்டே தனது விற்பொறியைத் தன்னிடத்தே கொண்ட அகன்ற பெரிய இமயமலையின்கண் பத்தினிக் கடவுளுக்கு உருவம் அமைத்தற்கு ஒரு கல்லைக் கைக்கொண்டு மீள்வன்; ஆதலின் வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம் இடுதிறை கொடுவந்து எதிரீர்-இங்ஙனமாதலின் வடதிசையின்கண் உள்ள அரசர்கள் எல்லீரும் எம்மரசனுக்கு இடக் கடவ திறைப் பொருளையும் கொணர்ந்து வந்து எதிர்கொள்ளக் கடவீர்; எதிரீர் ஆயின் கடல் கடம்பு எறிந்த கடும்போர் வார்த்தையும் கேட்டு வாழுமின்-அவ்வாறு எதிர்கொள்ளீராயின் அத்தகையீர் கடலுள் புகுந்து ஆங்கு எங்கள் அரசன் கடலின் கண்ணதாகிய கடம்பினை வெட்டிய கடிய போரினாலே உண்டான புகழையும் அல்லது மலையின்கண் ஏறி எம்பெருமான் அம் மலை முழைஞ்சின்மேல் தனது விற்பொறியைப் பொறித்தமையால் உண்டான பரந்த பெரிய புகழையும் கேட்டு வாழக்கடவீர்; கேளீராயின் தோள்துணை துறக்கும் துறவொடு வாழுமின்-அவ்வாறு அப் புகழ்களைக் கேளாதொழியின் நுங்கள் தோளுக்குத் துணையாக அமைந்த மனைவிமாரைத் துறந்துபோகின்ற துறவறத் தோடு பொருந்தி வாழக்கடவீர்; தாழ்கழல் மன்னன் தன் திருமேனி வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி-பகைமன்னர் வந்து வணங்குதற்குக் காரணமான வீரக்கழலையுடைய எங்கள் அரசனுடைய திருமேனியாகிய சேனாமுகம் வாழ்வதாக, என்று இறுதியினும் தம் மன்னனை வாழ்த்தி; இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி அணிநகர் மருங்கு அறை பறை எழுந்தது-அரச யானையின் பிடரின்கண் ஏற்றி அவ் வள்ளுவர் அழகிய அந் நகரப் பகுதிகளிலே எவ்விடத்தும் முழக்குகின்ற முரசினது ஒலி எழாநின்றது என்க.

(விளக்கம்) அரசனுடைய பணிகளை மக்களுக்கு முரசு அறைந்து அறிவிக்கும் வள்ளுவர் தொடக்கத்திலும் அரசனை வாழ்த்தித் தொடங்குதலும் இறுதியில் வாழ்த்தி முடித்தலும் மரபு. மன்னன் கற்கொண்டு வரும்பொழுது வடநாட்டு மன்னரெல்லாம் திறைப் பொருளோடு வந்து எதிர்கொள்ளல் வேண்டும். எதிர்கொள்ளாதார் கடலில் புகுந்தேனும் மலையில் ஏறியேனும் மறைந்து வாழவேண்டும் அவ்விடங்களிலும் அவன் கடம்பெறிந்த புகழும் சிலை பொறித்த பெரும்புகழும் பேசப்படும் ஆதலால் அதைக் கேட்டே வாழ்தல் வேண்டும். கேட்க மனமில்லாதார் மனைவி மக்களைத் துறந்து வாழவேண்டும். எனவே அவனைப் பகைத்திருப்போர் இவ்வுலகில் வாழ்தல் அரிது என்றவாறாயிற்று. இக் கருத்தினோடு

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்          (895)

எனவரும் திருக்குளையும் நினைக

விடர்-மலை முழை. மலை ஏறி முழையிற் புகுந்து வாழுமின் என்பார் மலையை விடர் என்ற பெயரால் குறிப்பிட்டார் தோட்டுணை-மகளிர் தாழ்கழல்-பகைவர் வணங்கும் அடிகள். திருமேனியாகிய சேனாமுகம் வாழ்க என மாறுக. இறை இகலி யானை- பட்டத்து யானை. பறை, ஈண்டு முரசு.

பா- நிலைமண்டிலம்

காட்சிக் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #34 on: February 28, 2012, 08:29:29 AM »
26. கால்கோள் காதை

 
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-சேரன் செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்று பத்தினித் தெய்வத்திற்குக் கல் எடுத்துவந்த செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் அச் சேரமன்னன் முன்னரே கனகனும் விசயனும் என்னும் ஆரிய மன்னர்கள் தமிழ் அரசரை இகழ்ந்தனர் என்று வடதிசையிலிருந்து வந்த முனிவர் கூறக் கேட்டிருந்தானாதலின் இமயமலையில் எடுக்கும் கல்லை அவ்விரண்டு மன்னர் முடியிலும் ஏற்றிக்கொணர்வேன் என்று வஞ்சினம் கூறி நன்னாளிலே வாளையும் குடையையும் புறவீடு செய்து படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கி யானை முதலிய நாற்பெரும் பகைளோடே வஞ்சிசூடி வடதிசையை நோக்கிச் செல்பவன் முதலில் நீலகிரியில் தங்கினன். அவ்விடத்தே கூத்தர் ஆடிய கூத்துகளைக் கண்டு மகிழ்ந்து அவ்விடத்தே திறைகொணர்ந்து வணங்கிய மன்னர்களோடு அளவளாவி மகிழ்ந்தமையும் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டுக் கங்கையாற்றை அடைந்தமையும் அவ்வாற்றை நட்பரசர் கொணர்ந்த ஓடங்களின் வாயிலாகக் கடந்து, அப்பால் பகையரசர் நாட்டின்கண் சென்று பாசறை அமைத்து அதன்கண் இருந்தமையும் இவன் வரவுணர்ந்த கனகவிசயரை உள்ளிட்ட மன்னர் பலர் வந்து போர்செய்யத் தொடங்கினராக, அப் போரின்கண் அப் பகைவர்களை வென்று அவர்களுள் கனகவிசயரென்னும் அரசர்களைக் கைப்பற்றி வைத்து அவ்விடத்தினின்றும் அமைச்சர்களை ஏவி இமயத்தில் கல் கொண்டு வரச் செய்தமையும் அக் கல்லைக் கனகவிசயர் முடித்தலைமிசை யேற்றிக் கொணர்ந்தமையும் ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

அறை பறை எழுந்தபின், அரிமான் எந்திய
உறை முதல் கட்டில் இறைமகன் ஏற;
ஆசான், பெருங்கணி,அரும் திறல் அமைச்சர்,
தானைத் தலைவர்-தம்மொடு குழீஇ,
மன்னர்- மன்னன் வாழ்க! என்று ஏத்தி, 5

முன்னிய திசையின் முறை மொழி கேட்ப-
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும்
இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி  10

நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திசை மருங்கின் மன்னர்- தம் முடித் தலைக்
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்;  15

செறி கழல் புனைந்த செரு வெங் கோலத்துப்
பகை அரசு நடுக்காது, பயம் கெழு வைப்பின்
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என-
ஆர் புனை தெரியலும், அலர் தார் வேம்பும்,
சீர் கெழு மணி முடிக்கு அணிந்தோர் அல்லால், 20

அஞ்சினர்க்கு அளிக்கும் அடு போர் அண்ணல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ?
இமயவரம்ப! நின் இகழ்ந்தோர் அல்லர்;
அமைக நின் சினம், என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று,  25

ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து,
வெந் திறல் வேந்தே, வாழ்க, நின் கொற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திசைமேல்  30

எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த-
மீளா வென்றி வேந்தன் கேட்டு,
வாளும் குடையும் வட திசைப் பெயர்க்க என-
உரவு மண் சுமந்த அரவுத் தலை பனிப்ப,
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப;  35

இரவு இடங்கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவுக் கொடி அடுக்கத்து நிரயத் தானையொடு
ஐம் பெருங்குழுவும், எண் பேர் ஆயமும்,
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும், கணக்கியல் வினைஞரும், 40

தரும வினைஞரும், தந்திர வினைஞரும்;
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க! என,
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாலை வெண்குடையும்,
புறநிலைக் கோட்டப் புரிசையில் புகுத்தி;  45

புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
அரைசு விளங்கு அவையம் முறையிற் புகுதர-
அரும் படைத் தானை அமர் வேட்டுக் கலித்த
பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி  50

வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து,
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும்
காலை- முரசம் கடைமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி 55

மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து,
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி, வலம் கொண்டு,
மறையோர் ஏந்திய ஆவுதி நறும் புகை
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த,
கடக் களி யானைப் பிடர்த்தலை ஏறினன்-  60

குடக்கோ குட்டுவன் கொற்றம் கொள்க என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,  65

ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி-
நாடக மடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும்
கூடையின் பொலிந்து, கொற்ற வேந்தே!
வாகை, தும்பை, மணித் தோட்டுப் போந்தையோடு  70

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க,
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து,
கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-
மாகதப் புலவரும், வைதாளி கரும்,
சூதரும், நல் வலம் தோன்ற, வாழ்த்த;  75

யானை வீரரும், இவுளித் தலைவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்மேல் தம் பதி நீங்கும்
வானவன் போல, வஞ்சி நீங்கி;
தண்டலைத் தலைவரும் தலைத் தார்ச் சேனையும்  80

வெண் தலைப் புணரியின் விளிம்பு சூழ் போத,
மலை முதுகு நெளிய, நிலை நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் சென்று- ஆங்கு;
ஆலும் புரவி, அணித் தேர்த் தானையொடு
நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு;  85

ஆடு இயல் யானையும், தேரும், மாவும்,
பீடு கெழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்கை, பகல் வெய்யோன் தன்
இரு நிலமடந்தைக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த,  90

பெரும் பேர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப,
விசும்பு இயங்கு முனிவர், வியல் நிலம் ஆளும்
இந்திர திருவனைக் காண்குதும் என்றே,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அவையத்து,  95

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற;
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-
செஞ் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்;
மலயத்து ஏகுதும்; வான் பேர் இமய  100

நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்;
பெரு நில மன்ன! காத்தல் நின் கடன் என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க! என, 105

கொங்கணக் கூத்தரும் கொடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்;
இருள் படப் பொதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாலையர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை,  110

கருங் கயல் நெடுங் கண் காரிகையாரோடு;
இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்செய,
அரும்பு அவிழ் வேனில் வந்தது; வாரார்
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-  115

கோல் வளை மாதே! கோலம் கொள்ளாய்;
காலம் காணாய்; கடிது இடித்து உரறிக்
காரோ வந்தது! காதலர் ஏறிய
தேரோ வந்தது, செய்வினை முடித்து! என,
காஅர்க் குரவையொடு கருங் கயல் நெடுங் கண்  120

கோல் தொடி மாதரொடு குடகர் தோன்ற-
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து,
வாள்வினை முடித்து மற வாள் வேந்தன்
ஊழி வாழி!என்று ஓவர் தோன்ற-
கூத்துள்படுவோன் காட்டிய முறைமையின்  125

ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை  130

நண்ணிய நூற்றுவர் நகை- வேழம்பரும்,
கொடுஞ்சி நெடுந் தேர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யானை ஓர் ஐஞ்ஞாறும்,
ஐ- ஈராயிரம் கொய் உளைப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம்  135

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்,
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞாற்றுவரும்,
சேய் உயர் வில் கொடிச் செங்கோல் வேந்தே!
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப-  140

நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இசைக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்னொடு வருக ஈங்கு என-
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி,  145

ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவரொடு
மாண் வினையாளரை வகை பெறக் காட்டி-
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், கோல் தொழில் வேந்தே!
வட திசை மருங்கின் வானவன் பெயர்வது  150

கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்கொண்டு
வீங்கு நீர்க் கங்கை நீர்ப்படை செய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று,
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க! என- 155

அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தானைக் காவலன் உரைக்கும்:
பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்மொடும் கூடி,  160

அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்கைப் பேர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெரு நிரை செய்க- தாம் என, 165

சஞ்சயன் போனபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞாற்றுவர்;
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும்
தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து;
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன்  170

மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன், ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து;  175

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்கொள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ,
பகைப் புலம் புக்கு, பாசறை இருந்த  180

தகைப்பு- அரும் தானை மறவோன்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்,
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்,
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என,  185

கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம் திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர-
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா
கரிமாப் பெரு நிரை கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் வேல் மன்னர்  190

காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப;
வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடிப் பந்தர்,
வடித் தோல் கொடும் பறை, வால் வளை, நெடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து  195

மயிர்க் கண் முரசமொடு, மாதிரம் அதிர;
சிலைத் தோள் ஆடவர், செரு வேல் தடக் கையர்,
கறைத் தோல் மறவர், கடுந் தேர் ஊருநர்,
வெண் கோட்டு யானையர், விரை பரிக் குதிரையர்,
மண் கண் கெடுத்த இம் மா நிலப் பெரும் துகள்,  200

களம் கொள் யானைக் கவிழ் மணி நாவும்
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும்
நடுங்கு தொழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்செறிய;
தாரும் தாரும் தாம் இடை மயங்க;
தோளும் தலையும் துணிந்து வேறாகிய  205

சிலைத் தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து,
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம்
பறைக் கண் பேய்மகள் பாணிக்கு ஆட;
பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில்
கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட;  210

அடும் தேர்த் தானை ஆரிய அரசர்
கடும் படை மாக்களைக் கொன்று, களம் குவித்து;
நெடுந் தேர்க் கொடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பரிக் குதிரையின் வெரிநும், பாழ்பட;
எருமைக் கடும் பரி ஊர்வோன் உயிர்த் தொகை,  215

ஒரு பகல் எல்லையின், உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலைய-  220

வாய் வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் தேராளரொடு,
செங்குட்டுவன் - தன் சின வலைப் படுதலும்-
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர்,  225

பீடிகைப் பீலிப் பெரு நோன் பாளர்,
பாடு பாணியர், பல் இயத் தோளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர-  230

கச்சை யானைக் காவலர் நடுங்க,
கோட்டுமாப் பூட்டி, வாள் கோல் ஆக,
ஆள் அழி வாங்கி, அதரி திரித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
தொடி உடை நெடுங் கை தூங்கத் தூக்கி,  235

முடி உடைக் கருந் தலை முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன்
தேர் ஊர் செருவும், பாடி; பேர் இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி;  240

பின் தேர்க் குரவைப் பேய் ஆடு பறந்தலை-
முடித் தலை அடுப்பில், பிடர்த் தலைத் தாழி,
தொடித் தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு
மறப் பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், செங்கோல் கொற்றத்து  245

அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க! என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பெரு வாழ்க்கை,
காற்றூ தாளரை, போற்றிக் காமின் என,  250

வில்லவன் கோதையொடு வென்று வினை முடித்த
பல் வேல் தானைப் படை பல ஏவி,
பொன் கோட்டு இமயத்து, பொரு அறு பத்தினிக்
கல் கால் கொண்டனன், காவலன் ஆங்கு- என். 255

சேரன் செங்குட்டுவன் அரியணை ஏறியிருந்து தானைத் தலைவரை நோக்கிக் கூறியது

1-8: அறை பறை..........கூறும்

(இதன் பொருள்) அறை பறை எழுந்தபின் அரிமான் ஏந்திய முறை முதல் கட்டில் இறைமகன் ஏற-வள்ளுவர் அறைந்த முரசினது ஒலி நகரத்திலே யாங்கணும் எழுந்தபின்னர்ச் சிங்கத்தாற் சுமக்கப்பட்ட முறைமையினையும் தலைமைத் தன்மையினையும் உடைய அரசு கட்டிலின்கண் சேரன் செங்குட்டுவன் எழுந்தருளுதலும்; ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ-ஆசாரியனும் பெருமையுடைய நிமித்திகனும் தம் தொழிலில் அரிய ஆற்றலமைந்த அமைச்சரும் படைத்தலைவர்களோடு வந்து அரசவையின்கண் கூடி; மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி-வேந்தர் வேந்தன் நீடுழி வாழ்க என்று வாழ்த்தியபின்; முன்னிய திசையின் முறைமொழி கேட்ப-தத்தமக்கு என்று குறிப்பிடப்பட்ட திசைகளிலே நின்று அவ் வேந்தன் கூறுகின்ற மொழிகளை முறைமையினோடே கேளா நிற்ப ; வியம்படு தானை விறலோர்க்கு எல்லாம் உயர்ந்து ஓங்கு வெள் குடை உரவோன் கூறும்-ஏவிய பணியில் நிற்கின்ற படையின் தலைவர்களாகிய வெற்றியையுடைய தலைவர்களுக்கெல்லாம் புகழால் மிகவும் உயர்ந்த கொற்ற வெண்குடையையுடைய மன்னன் சொல்வான் என்க.

(விளக்கம்) அரிமான்-சிங்கம் முதல் கட்டில்-முதன்மையுடைய அரசு கட்டில். அரசவைக்கணிவன் ஆதலின் பெருங்கணி என்றார் திறல்-அமைச்சுத் தொழில் ஆற்றல். முன்னிய-குறித்த. வியம் படுதல். ஏவிய பணி தலைநிற்றல் தலைவரை விறலோர் என்றார். அவர் தலைமைத் தன்மைக்கு அதுவே காரணமாதலின் ஏனை அரசர் குடையினும் சிறந்த குடை என்பது தோன்ற உயர்ந்தோங்கு வெண்குடை என்றார். உரவோன் செங்குட்டுவன்

செங்குட்டுவன் செப்பும் வஞ்சினம்

9-18: இமைய............ஆகென

(இதன் பொருள்) இமையத் தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய அமையா வாழ்க்கை அரசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவது ஆயின்-இமயமலையினின்றும் வந்த துறவோர் எமக்கு இவ்விடத்தே அறிவித்த பொருந்தாத வாழ்க்கையையுடைய வட நாட்டரசர் வாய் காவாதுரைத்த மொழியானது நம்மிடத்தே மட்டும் கிடக்கும் ஒரு சொல்லாகிவிடின்; ஆங்கு அஃது எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்-அவ்வழி அச் சொல் எம்மையொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு அரசர்களுக்கு எம்மிடத்தே இகழ்ச்சியைத் தோற்றுவிப்பதாம் ஆதலின்; வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலை கடவுள் எழுத ஓர் கல்கொண்டு அல்லது என் வாய்வாள் வறிது மீளும் ஆகில் அவ் வடதிசைக்கண் வாழ்கின்ற அம் மன்னருடைய முடித்தலையின்மேல் பத்தினிக் கடவுளுக்குப் படிவம் அமைத்தற்கு யாம் கொள்ளும் கல்லை ஏற்றிக்கொண்டு மீள்வதல்லது என்னுடைய வெற்றி வாய்ந்த வாள் வறிதே மீண்டுவருமாயின்; செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுக்காது-செறிந்த வீரக்கழல் கட்டிய போர் செய்தற்கியன்ற வெவ்விய கோலத்தோடே சென்று எனது பகை அரசர்களை அச்சத்தால் நடுங்கச் செய்யாமல்; பயம்கெழு வைப்பின் குடி நடுக்குறூஉங் கோலேன் ஆக என-உணவு முதலிய பயன்கள் பொருந்திய எனது நாட்டின்கண் வாழுகின்ற என்னுடைய நன்குடி மக்களைத் துன்பத்தால் நடுங்கச் செய்கின்ற கொடுங்கோல் மன்னன் ஆவேனாக; என்றான் என்க.

(விளக்கம்) தாபதர்-துறவோர். ஈங்கு-இங்கு வந்து தன் செற்றத்திற்கு ஆளானமையின் அவர் வாழ்விழத்தல் ஒருதலை என்பது தோன்ற அமையா வாழ்க்கை அரைசர் என்றான். வாய்காவாது உரைத்த மொழி என்பது தோன்ற மொழியென் றொழியாது வாய் மொழி என்றான். அப் பழமொழி மூவர்க்கும் பொதுவாயினும் நம்பால் கூறப்பட்டதாகலின் பின்னொரு காலத்தே இது கேட்டும் சேரன் அஞ்சிக்கிடந்தான்; யாமாயின் அப்பொழுதே சென்று அவ்வரசர் முடித்தலை கொய்வோம் எனச் சோழனும் பாண்டியனும் எம்மை இகழ்தற்கு இடம் தரும் என்றான் என்பது கருத்து. தமிழ் வேந்தராதலின் அவரை எம்போல் வேந்தர் என்றான். மன்னர் கனகனும் விசயனும் என்க. வாய்வாள்: வினைத்தொகை. நடுங்காது-நடுங்கச் செய்யாது. நடுக்குறூஉம்-நடுங்கச் செய்யும்.

ஆசான் கூற்று

19-24: ஆர் புனை.............கூற

(இதன் பொருள்) ஆசான்-அரசன் கூறிய வஞ்சினம் கேட்ட நல்லாசிரியன் அரசனை நோக்கி; ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் சீர்கெழு மணிமுடிக்கு அணிந்தோரல்லால்-ஆத்தி மலரால் தொடுத்த மாலையையும் மலர்ந்த வேப்பந்தாரையும் அழகு பொருந்திய தம்முடைய மணிமுடிக்  கலனின்மீது அணிந்துள்ள சோழனையும் பாண்டியனையுமே இகழ்ந்ததல்லால்; இமயவரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர்-இமயமலையை எல்லையாகவுடைய ஏந்தால் அவ் வடவாரிய மன்னர் நின்னை இகழ்ந்தாரல்லர்; நின் சினம் அமைக-ஆதலால் நின்னுடைய சினம் தணிவதாக; அஞ்சினர்க்கு அளிக்கும் அடுபோர் அண்ணல் நின் வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ எனக் கூற-நின்பால் அஞ்சிய பகைவர்க்கும் தஞ்சமளிக்கும் கொல்லும் போராற்றல் மிக்க அண்ணலே நீ கூறிய இவ் வஞ்சின மொழியைக் கேட்டு அஞ்சுவ தல்லது நின்னை எதிர்க்கின்ற மன்னர்தாமும் இவ் வையகத்தில் யாரும் இலர்காண் என்று அறிவுறுத்தா நிற்ப என்க.

(விளக்கம்) ஆர்-ஆத்திப்பூ. அலர்தார் வேம்பு-மாலையாகவே மலரும் வேப்பமாலை எனினுமாம். ஆர் புனைந்தவன் சோழன். வேம்பு புனைந்தவன் பாண்டியன்.

பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றத னெஃகு     (குறள். 773)

என்பது பற்றி மறச்சிறப்புக் கூறுவான், அஞ்சினர்க்களிக்கும் அடுபோரண்ணல் என்றான்.

கணிவன் கூற்று

25-31: ஆறிரு............ஏத்த

(இதன் பொருள்) ஆறு இரு மதியினும் காருக அடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து-ஒரு யாண்டின் கண்ணவாகிய பன்னிரண்டு திங்களினும் கோள்கள் நிற்கும் நிலையை ஆராய்ந்து நன்கு பயின்று கணித நூலுக்குரிய ஐந்து உறுப்புகளின் இலக்கணங்களையும் வல்லார்வாய்க் கேட்டு முடித்த பெருங்கணிவன் தானே எழுந்துநின்று கூறுபவன்; வெம்திறல் வேந்தே நின்கொற்றம் வாழ்க-வெவ்விய போராற்றல் வாய்ந்த வேந்தர் பெருமானே நின் வெற்றி நீடுழி வாழ்வதாக: இரு நிலம் மருங்கின் மன்னர் எல்லாம் நின் திருமலர்த் தாமரைச் சேவடிபணியும் முழுத்தம் ஈங்கு இது-பெரிய இந் நிலவுலகில் வாழுகின்ற மன்னரெல்லாம் நின்னுடைய திருமகள் வீற்றிருக்கின்ற மலராகிய செந்தாமரை மலரையொத்த சிவந்த திருவடிகளைப் பணிவதற்கு உரிய நல்ல முழுத்தம் இப்பொழுது நிகழ்கின்ற இம் முழுத்தமேயாகும்; முன்னிய திசைமேல் எழுச்சிப்பாலை ஆக என்று ஏத்த ஆதலால் பெருமான் நினைத்த அவ் வட திசைமேல் படையெழுச்சி செய்யும் அப் பகுதியை உடையை ஆகுக என்று அறிவித்துக் கைகுவித்துத் தொழாநிற்ப என்க.

(விளக்கம்) ஆறிருமதி-சித்திரை முதலிய பன்னிரண்டு திங்கள். காருக அடி-கோள்கள் நிற்கும்நிலை. கோள்கள் இடையறாதியங்கலின் ஆறிருமதியினும் இடையறாது பயிலுதல் வேண்டிற்று. ஐந்து கேள்வி - ஐந்து உறுப்புகளைப்பற்றிய கேள்வி அறிவு. அவ்வுறுப்புகளாவன: திதிவாரம் நாள் (நட்சத்திரம்) யோகம் கரணம் என்பன. பஞ்சாங்கம் பார்த்தல் என்பதுமது. இனி நட்பு ஆட்சி உச்சம் பகை நீசம் என்னும் கோளின் தன்மை ஐந்தும் எனினுமாம். முழுத்தம்-நல்லபொழுது. பாலை-பகுதியையுடையை. இம்முழுத்தம் கழிந்தொழியின் இத்தகைய முழுத்தம் கிடைத்தலரிது என்பதுபற்றி இக் கணிவன் விதுவிதுப் புற்று, அரசன் தன்னை விளிக்கு முன்னரே எழுந்து நின்று அரசனுக்கு முழுத்தம் அறிவித்தல் முறைமையாகாது; முறை தவறியும் இக் கணிவன் இங்கு அரசனுக்குக் கூறுவது அரசனுடைய நலத்தில் அவன் கொண்டிருக்கின்ற விருப்ப மிகுதியை நமக்குப் புலப்படுத்தும்.

சேரன் செங்குட்டுவன் எழுச்சியின் ஆரவாரம்

32-47: மீளாவென்றி.............புகுதர

(இதன் பொருள்) மீளாவென்றி வேந்தன் கேட்டு வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்க என-தன்னைவிட்டு நீங்காத வெற்றி பொருந்திய செங்குட்டுவன் அப் பெருங்கணியின் சொற் கேட்டவுடன் படைத்தலைவரை நோக்கி அங்ஙனமாயின் இந் நன்முழுத்தத்திலேயே நமது வெற்றிவாளையும் கொற்ற வெண்குடையையும் வடதிசை நோக்கிப் புறவீடு செய்வீராக என்று பணிப்ப, அப்பொழுதே; உரவு மண் சுமந்த அரவுத்தலை பனிப்ப பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஆர்ப்ப-வலிமையுடைய இந் நிலவுலகத்தைச் சுமந்துள்ள ஆதிசேடன் என்னும் பாம்பினது ஆயிரம் தலைகளும் பொறை ஆற்றாது நடுங்கும்படி மறவர்கள் செய்யும் ஆரவாரத்தோடே வீரமுரசங்களின் முழக்கமும் எழுந்து ஆரவாரிப்ப; இரவு இடங்கெடுத்த நிரைமணி விளக்கின் விரிவுக்கொடி அடுக்கத்து நிரயத் தானையோடு-இரவினது இருள் உறைதற்கு உரிய இடம் இல்லையாம்படி செய்த நிரல்பட்ட அழகிய விளக்கொளியின்கண் கலந்த கொடி நெருங்கிய பகைவர்க்கு  நரகத்தையொத்த படைகளோடு; ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும்-அமைச்சரையுள்ளிட்ட ஐம்பெரும் குழுவினரும் கரணத்தியலவரை உள்ளிட்ட எண் பேராயத்தினரும்; வெம்பரி யானை வேந்தற்கு ஓங்கிய கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும்-விரைந்து செல்லும் யானையையுடைய அரசனுக்குக் கண்போற் சிறந்தவராகிய சான்றோரும் காலம் கணிக்கும் தொழிலையுடைய கணிக மாக்களும் அரசியல் அறம் கூறுவோரும் படையிடத்துத் தொழில் செய்வோரும் ஆகிய இவரெல்லாம்; மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என-மண் திணிந்த நிலவுலகத்தை ஆள்கின்ற எம் அரசன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துக் கூறி; பிண்டம் உண்ணும் பெருங்களிற்று எருத்தின் மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் புறநிலைக் கோட்டப் புரிசையின் புகுத்தி-அரசன் பிண்டித்துக் கொடுத்த பிண்டத்தை உண்ணும் சிறப்புப் பெற்ற பெரியகளிறாகிய பட்டத்து யானையின் பிடரியின்மேல் மறப்பண்பு மிகுதற்குக் காரணமான வாளையும் மலர்மாலை சூட்டிய கொற்ற வெண்குடையையும் ஏற்றிவைத்து அரண்மனையின் புறத்தே நிற்கின்ற கொற்றவை கோயிலின் மதிலகத்தே புகவிடுத்து; புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர-குற்றமில்லாத வஞ்சிப் பூமாலையைத் தனக்குரிய பனம்பூ மாலையொடு ஒருசேரப் புனைகின்றவனான தம் அரசன் விளங்குதற்கிடனான அவையின்கண் தத்தமக்குரிய முறைமையோடே புகாநிற்ப என்க

(விளக்கம்) பனிப்ப, ஒலிப்ப, தானையோடு குழுவும் ஆயமும் நால்வகை வினைஞரும் ஆள்வோன் வாழ்கென வாழ்த்தி எருத்தின்கண் வானையும் குடையையும் புகுத்திப் பின்னர் அரசவையின்கண் புகாநிற்ப என இயையும்.

பொருநர்-போர்க்களம் பாடும் பொருநருமாம். நிரை மணி விளக்கின்............புகுத்தி என்றமையால் இந் நிகழ்ச்சிகள் அற்றை நாள் இரவின்கண் நிகழ்ந்தமை பெற்றாம். நிரையத்தானை. நரகின்கண் எமபடர் சித்திரவதை செய்யுமாறுபோலே பகைவரைச் சித்திரவதை செய்யும் படை மறவர் என்றவாறு. ஐம்பெருங்குழு-அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற்றூதுவர் சாரணரென்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே எனுமிவர்.

எண்பேராயம்-கரணத்தியலவர் கருமகாரர் கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப எனுமிவர்.

கரும வினைஞர்-சடங்கு செய்வோர். கணக்கியல் வினைஞர்-காலக்கணிதர். கணக்கு எழுதுவோருமாம். தரும வினைஞர்-அறங் கூறுவோர்; (நியாயாதிபதி) புறநிலைக் கோட்டம் என்றது கொற்றவை கோயிலை. மன்னர் நன்னாளிலே இவ்வாறு வாளையும் குடையையும் புறவீடு செய்யும் வழக்கத்தை, குடைநாட்கோள் வாள்நாட்கோள் எனவரும் புறத்திணைத் துறைகளால் உணர்க. வஞ்சி-போர்ப்பூ. போந்தை-அடையாளப்பூ அவையம். அவை

செங்குட்டுவன் வடதிசை யாத்திரை

48-60: அரும்படை..........ஏறினன்

(இதன் பொருள்) அரும்படைத்தானை அமர் வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து-வெல்லுதற்கரிய படைக்கலன்களேந்திய மறவருக்கும் போரைப் பெரிதும் விரும்பி ஆரவாரித்த பெரிய நாற்பெரும் படைத்தலைவர்க்கும் தானே உடனிருந்து பெருஞ்சோற்று விருந்தளித்து; பூவா வஞ்சியிற் பூத்தவஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து-வஞ்சி நகரத்திலே மலர்ந்த வஞ்சிப்பூவால் தொடுத்த மாலையை வென்றிவாய்த்த வாளையுடைய பெரிய புகழையுடைய அவ்வேந்தர் பெருமான் தனது அழகிய முடியின்கண் அணிந்து; ஞாலங் காவலர் இறைபயிரும் நாள் காலை முரசம் கடைமுகத்து எழுதலும்-உலகத்தை யாளும் மன்னர்கள் தாம் செலுத்தக்கடவதிறைப் பொருளைக் கொணர்ந்து இறுத்தற்கு அழைக்கும் அறிகுறியாக விடியற்காலத்தே முழங்கும் முரசம் அரண்மனை வாயிலிலே முழங்காநிற்ப; நிலவுக்கதிர் நீள் இருஞ் சென்னி  உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி-நிலவொளி பரப்பும்யிறையை அணிந்த நீண்ட பெரிய முச்சியினையும் உலகங்களை யெல்லாம் தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருக்கின்ற உருவத்தையும் உடைய ஏனைக் கடவுளரினும் உயர்ந்த முழுமுதல்வனாகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளை; மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு-மறப்பண்பு சேர்தற்கு அறிகுறியான வஞ்சி மாலையொடு ஒருசேர நெஞ்சின் நினைந்து புனைந்து பிறர் யாரையும் வணங்காத தன் தலையால் வணங்கி அவ்விறைவனை வலங்கொண்டு வந்து; மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல் அகம் வருத்த-அந்தணர் தம் கையின் ஏந்திவந்த ஆவுதியின் நறுமணம் கமழும் புகையானது தான் சூடிய தேன்பொருந்திய மலர்மாலையின் அழகிய இடத்தை வருத்தாநிற்ப; கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்-மதவெறியினையுடைய யானையினது பிடரின்கண் ஏறினன்; என்க.

(விளக்கம்) பெருஞ்சோறு வகுத்தலாவது வேந்தன் போர் கருதிப் புறப்படும்பொழுது அப் போர் மறவரொடு தானும் உடன் உண்பான் போல அவரைப் பாராட்டுதற்குப் பிண்டித்து வைத்த உண்டியைத் தன் கையால் வழங்குதல். இதனை பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை எனவரும் தொல்காப்பியத்தால் உணர்க. (புறத் 8) பூவா வஞ்சி-வெளிப்படை. இறைவன் திருவடிகள் தன் தலைமேலனவாக நினைத்து வழிபாடு செய்தலை உயர்ந்தோன் சேவடி வஞ்சி மாலையொடு புனைந்து என்றார். இறைஞ்சாச் சென்னி என்றது இறைவனையன்றிப் பிறரை வணங்காச் சென்னி என்றவாறு. உயர்ந்தோன் என்றது, சிவபெருமானை. உலகத்திலுள்ள எல்லாப் பொருளும் தன்னுள் அடக்கி நிற்றலின் அவ்வாறு கூறினர், இதனை

நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன
இருசுட ரோடிய மானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனுந்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்

எனவரும் மணிமேகலையானும் (27....87. 95) அறிக. வேள்விச் சாலையினின்றும் மறையோர் ஏந்தி வந்த நறும்புகை என்பது கருத்து அதன் மிகுதி கூறுவார் மாலையின் நல்லகம் வருத்த என்றார்.

இதுவுமது

61-67: குடக்கோ............செலவுழி

(இதன் பொருள்) ஆடகமாடத்து அறி துயில் அமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர் குடக்கோக் குட்டுவன் கொற்றங்கொள்க என திருவனந்தபுரத்தில் பொன்னாலியன்ற திருக்கோயிலின் கண் பரப்பணைமிசை அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலுக்கு வழிபாடு செய்யப்பட்ட சேடத்தை அந்தணர் சிலர் கொணர்ந்து செங்குட்டுவன் முன்னின்று சேரநாட்டு அரசனாகிய செங்குட்டுவன் வெற்றி கொள்வானாக என வாழ்த்திக்கொடுப்ப; தெள்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச்சேவடி மணிமுடி வைத்தலின்-தெளிந்த கங்கை நீர் முழுவதும் மறைதற்குக் காரணமான சிவந்த சடையையுடைய இறைவனது அழகிய சிவந்த திருவடிகளை முன்பே தனது அழகிய முடியின்கண் சூட்டியிருத்தலால்; ஆங்கு அது வாங்கி அணி மணிப்புயத்துத் தாங்கினனாகித் தகைமையின் செல்வுழி-அத் திருமால் அடியார் வழங்கிய துளபமாலை முதலிய அச் சேடத்தை வாங்கித் தனது அணிகலன் அணிந்த தோளின்மேல் அணிந்து கொண்டவனாய்த் தனக்கியன்ற பெருந்தகைமையோடே அவ்விடத்தினின்றும் போம்பொழுது என்க.

(விளக்கம்) ஆடக-மாடம்-திருவனந்தபுரத்தில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம். அது பொன் மாடம் ஆதலின் ஆடக மாடம் எனப்பட்டது. சேடம்-ஈண்டுப் பிரசாதம்; அவை துளபமாலை முதலியன. சிலர் என்றது திருமால் அடியாரை. முன்னரே சிவன் திருவடி மலரை முடிக்கணிந்திருத்தலின் பின்னர்க் கொணர்ந்த திருமால் சேடத்தைத் தோளில் அணிதல் வேண்டிற்று என அடிகளார் ஏதுக் கூறினரேனும் செங்குட்டுவன் சைவ சமயத்தினன் என்பதும் வைணவ சமயம் முதலிய பிற சமயங்களை வெறுப்பவனல்லன் என்பதுமாகிய உண்மையையே அடிகளார் இங்ஙனம் நயம்படக் கூறுகின்றார் என்பதுணர்க.

இதுவுமது

68-73: நாடக.............ஆகென

(இதன் பொருள்) நாடகமடந்தையர் ஆடு அரங்கு யாங்கணும் கூடையில் பொலிந்து-நாடகக்கணிகை மகளிர்தாம் ஆடுகின்ற அரங்குகள் எங்கும் கைகூப்பிப் பொலிவுடன் தோன்றி; கொற்ற வேந்தே வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு ஓடை யானையின் உயர்முகத்து ஓங்க-வெற்றியையுடைய வேந்தர் பெருமானே! வாகை மாலையும் தும்பை மாலையும் அழகிய இதழையுடைய போந்தை மாலையோடு முக படாஅம் அணிந்த நினது களிற்றியானையின் உயர்ந்த முகத்தின்கண் உயர்ந்து விளங்கும்படி; வெண்குடைநீழல் எம் வெள்வளை கவரும் கண் களிகொள்ளும் காட்சியை ஆக என-நீ அந்த யானை மிசைக் கொற்ற வெண்குடை நீழலில் வீற்றிருந்து மீண்டுவரும் பொழுது எம்முடைய சங்க வளையல்களைக் கவர்கின்ற எங்களுடைய கண்கள் கண்டு பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுதற்குக் காரணமான தோற்றம் உடையை ஆம் வந்தருளுக! என்று வாழ்த்தா நிற்ப, என்க.

(விளக்கம்) கூடை-இரட்டைக் கை. குவித்துக் கும்பிட்ட கை என்றவாறு. வாகை கூறியது, அரசர் சூடுவன யானைக்கும் சூட்டுதலின், வாகையும் தும்பையும் போந்தையோடு நின் யானை முகத்து ஓங்கித் தோன்ற என்றார். தும்பை பகை அரசனுடன் போர் செய்தலைக் கருதிச் சூடப்படும் பூ. வாகை பகைவனை வென்றபின் சூடுகின்ற பூ. ஆதலின் நீ முதலில் தும்பை சூடிப் பகைவரை வென்று வாகை சூடி மீண்டு வருவாயாக என்பார் வாகை தும்பை போந்தையோடு ஓங்க என்றார். ஓடை-முக படாஅம். வெள்வளை கவரும் காட்சியை எனவும் கண்களி கொள்ளும் காட்சியை எனவும் தனித்தனி கூட்டுக.

செங்குட்டுவன் நீலகிரியை எய்துதல்

74-85: மாகத........ஆங்கு

(இதன் பொருள்) மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல் வலம் தோன்ற வாழ்த்த-மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்ல வெற்றி தோன்றுமாறு வாழ்த்தா நிற்ப; யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வலன் ஏத்த-யானை மறவரும் குதிரை மறவரும் வென்றி வாய்த்த வாள் மறவரும் வாளினால் உண்டாகும் வெற்றியைப் புகழா நிற்ப; தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன்போல வஞ்சி நீங்கி-அசுரர்மேல் போர் செய்தற்குத் தனது தலைநகரமாகிய அமராவதியினின்றும் புறப்பட்டுப் போகின்ற அமரர் கோமானைப்போலத் தன் தலைநகரமாகிய வஞ்சியினின்றும் புறப்பட்டு; தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெள்தலை புணரியின் விளிம்பு சூழ்போத-படைத்தலைவர்களும் முதன்மையுடைய தூசிப்படையும் வெள்ளிய தலையையுடைய கடலினது கரையின்மேல் சூழ்ந்து செல்லாநிற்ப; மலை முதுகு நெளிய நிலை நாடு அதர்பட உலகமன்னவன் ஒருங்கு உடன்சென்று-மலைகள் முதுகு நெளியும்படியும் சமநிலைபெற்ற நாடுகளிலே பெரிய வழிகள் உண்டாகும்படியும் இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அப் படைகளோடே கூடிச் சென்று; ஆலும் புரவி அணித்தேர் தானையொடு ஆங்கு நீலகிரியின் நெடும் புறத்து இறுத்து ஆங்கு-ஆரவாரிக்கின்ற குதிரைப்படை அழகிய தேர்ப்படை முதலிய படைகளோடே அவ்விடத் தெதிர்ப்பட்ட நீலகிரியினது நெடிய பக்கத்திலே தங்கி அவ்விடத்தில் என்க.

(விளக்கம்) மாகதப் புலவர்-இருந்தேத்துவார்; வைதாளிகர் வைதாளி பாடுவோர் சூதர்-நின்றேத்துவார். இவுளி-குதிரை. தானவர்-அசுரர். வானவன்-இந்திரன் புணரி-கடல். விளிம்பு-கரை. மலை முதுகு நெளிய என்றதனால் நிலைநாடு சமமாக நிலை பெற்ற நாடு என்க. நீலகிரி-ஒரு மலை . இறுத்தல்-தங்கி இருத்தல்

இதுவுமது

89-91: ஆடியில்.............பின்னர்

(இதன் பொருள்) ஆடு இயல் யானையும் தேரும் மாவும் பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பின்-அசைகின்ற இயல்பினையுடைய யானையும் தேரும் குதிரையும், பெருங்குடிப் பிறந்த பெருமை மிக்க தொல்படை மறவரும் தத்தம் கடமையில் திரிபில்லாத காவலையுடைய; பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் இருநில மடந்தைக்குத் திரு அடி அளித்து ஆங்கு-படைவீட்டின்கண் நடுவுநிலையைப் பெரிதும் விரும்புகின்ற அம் மன்னவன் தன்னுடைய தேவியாகிய பெரிய நிலமகளுக்குத் தனது அழகிய அடிகளை வழங்கியபொழுது; அருந் திறல் மாக்கள் அடி ஈடு ஏத்தப் பெரும் பேரமளி ஏறியபின்னர்-பகைவரால் வெல்லுதற்கரிய பேராற்றல் பொருந்திய மறவர் தனது திருவடி பெயர்த்திடுந்தோறும் வணங்கி வாழ்த்தா நிற்பச் சென்று; பெருமைமிக்க பெரிய அரசு கட்டிலின்கண் ஏறி அமர்ந்தபின்னர் என்க.

(விளக்கம்) யானை நிற்கும்பொழுது அசைந்த வண்ணமே நிற்கும் இயல்புடையது ஆதலின் ஆடியல் யானை என்றார். மறவர்க்குப் பீடு மறக்குடிப் பிறத்தல். பாடி இருக்கை-கூடாரமிட்டுப் படைகள் தங்கி இருக்குமிடம். பகல்-நடுவு நிலைமை. அரசனைத் திருமாலாகக் கருதுதலின் நிலமகளைத் தேவியாகக் கருதித் தன் இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்றார். இங்ஙனமே கட்டுரை காதையின்கண் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனன் (121-22) எனப் பாண்டியனையும் ஓதுதலுணர்க. இருநில மடந்தைக்குத் திருவடி அளித்து என்பது ஊர்தியினின்றும் நிலத்தின்மேல் இறங்கி என்றவாறு பெரும் பேரமளி என்றது அரியணையை.

முனிவர் சேரன் செங்குட்டுவனைக் காண்டல்

92-104: இயங்குபடை.............பின்னர்

(இதன் பொருள்) இயங்குபடை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப எடுத்துச் செலவினையுடைய அப் படைகளின் முழக்கங்கள் ஒன்று கூடி எழுகின்ற பேரொலியானது வானத்தினும் சென்று ஒலித்தலாலே உணர்ந்த; விசும்பு இயங்கு முனிவர்-அந்தரசாரிகளாகிய முனிவர்கள்; வியல்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்று-அகன்ற நிலத்தை ஆளுகின்ற இந்திரனை யொத்த செல்வமிக்க சேரன் செங்குட்டுவனை யாமும் சென்று காண்பேம் என்னும் கருத்துடையராய்; அந்தரத்து இழிந்து ஆங்கு அரசுவிளங்கு அவையத்து மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற-விண்ணினின்றும் நிலத்தின்கண் இழிந்து அப் பாடியிருக்கையின்கண் அவ்வரசன் அரியணையிலிருந்து திகழுகின்ற அந் நல்லவையின்கண் மின்னலினது ஒளியையும் மழுக்கும் பேரொளி படைத்த திருமேனியோடு எழுந்தருளாநிற்ப; மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை-அம் முனிவருடைய வரவுகண்டு மகிழ்ந்த சேரன் செங்குட்டுவன் அரியணையினின்றும் எழுந்து வணங்கி நின்கின்றவனை-அம் முனிவர்கள் நோக்கி; செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்-சிவந்த சடை முடியையுடைய சிவபெருமானின் திருவருளாலே சேரர்குலம் விளங்கும்படி வஞ்சி நகரத்திலே பிறந்த சேரமன்னவனே! யாம் உனக்குக் கூறுவதொன்றுளது அதனைக் கேட்பாயாக; மலையத்து ஏகுதும்-யாங்கள் இப்பொழுது இமயமலையினின்றும் பொதிய மலைக்குச் செல்கின்றோம்; வான் பேர் இமய நிலையத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின்-உயரிய பெரிய இமயமாகிய மலை நிற்குமிடத்திற்குச் செல்லுதல் உன்னுடைய கருத்தாதலால்; ஆங்கு அருமறை அந்தணர் வாழ்வோர் உளர்-அவ்விமயமலையில் உணர்தற்கரிய மறைகளை ஓதி உணர்ந்த சிறப்புடைய அந்தணர் பலர் வாழுகின்றோர் உளர்; நெருநிலமன்ன பேணல் நின்கடன் என்று பெரிய நில உலகத்தை ஆளுகின்ற வேந்தனே நீ அங்குச் சென்ற பொழுது அவ்வந்தணர்களுக்குத் தீங்கு நேராவண்ணம் குறிக்கொண்டு பாதுகாத்தல் நினக்குரிய தலையாய கடமைகாண் இதுவே யாங்கள் உனக்குக் கூறக்கருதியதாம் என்று அறிவித்து ஆங்கு அவர் வாழ்த்திப் போந்ததன் பின்னர்-அவ்விடத்தினின்றும் அம் முனிவர் அரசனை வாழ்த்திப் போனதன் பின்னர் என்க.

(விளக்கம்) இயங்கு படையென்றது எடுத்துச் செலவினை மேற் கொண்டிருக்கின்ற படை என்றவாறு. யானையின் பிளிற்றொலியும் குதிரையின் கனைப்பொலியும் மறவர் ஆர்ப்பொலியும் ஒன்று சேர்ந்து எழுந்த பேரொலி என்பார் அரவத்தீண்டொலி என்றார். இசைப்ப என்னும் செயவென்னெச்சம் முனிவர் உணர்தற்கு ஏதுப் பொருட்டாய் நின்றது. முனிவர்-அந்தரசாரிகள். இந்திர திருவன்-இந்திரன் போன்ற செல்வமுடையவன். செஞ்சடை வானவன் அருளினில் தோன்றிய வானவ என்றது செங்குட்டுவன் இருமுதுகுரவரும் சிவபெருமான்பால் நோன்புகிடந்து வரமாகப் பெற்ற மகவு என்றுணர்த்தியவாறாம் அக்குலம் விளங்க என்க. வானவ என்றது சேரனே என்றவாறு மலையம்-பொதியில். வான்-வெண்மையுமாம். நிலையம் நிற்குமிடம் ஆண்டுப் போர் நிகழ்தல் கூடும் அந் நிகழ்ச்சியால் அங்கு வாழும் அந்தணர்க்குத் தீங்கு நேராவண்ணம் பேணுக என்று ஓம்படை செய்தபடியாம். இக் கடமை நினக்குரிய கடமையேயாம் ஆயினும் யாமும் நினைவூட்டுகின்றேம் என்பதுபட பெருநில மன்ன! எனவும் பேணல் நின் கடனெனவும் ஓதினர். ஆயின் ஓதாமையே அமையு மெனின் அஃ தொக்கும் ஆயினும் அங்கு அந்தணர் வாழ்வோர் உளர் என்பது செங்குட்டுவன் அறியானாதல் கூடுமாகலின் அறிவித்தல் வேண்டிற்று என்க.

செங்குட்டுவனைக் காணக் கொங்கணக்கூத்தரும் கன்னடக்கூத்தரும் வருதல்

105-115: வீங்குநீர்..........தோன்ற

(இதன் பொருள்) வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என-பெருகிய கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தை ஆள்கின்ற சேரர் பெருமான் நீடூழி வாழ்க என்று வாழ்த்தியவராய் கொங்கணக் கூத்தரும் கொடும் கருநாடரும் தம் குலக்கு ஓதிய தகைசால் அணியினர்-கொங்கண நாட்டுக் கூத்தரும் வளைவுடைய கன்னட நாட்டுக் கூத்தரும் தங்கள் தங்கள் குலத்திற்குக் கூத்த நூலில் ஓதப்பட்ட அழகமைந்த ஒப்பனையுடையராய்; இருள்படப் பொதுளிய சுருள் இருங்குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்-இருளுண்டாகும்படி செறிந்த சுருண்ட கரிய தமது தலைமயிரில் கண்டோர்க்கு வியப்புத் தோன்றும்படி பரப்பப்பட்ட தழைத்த மாலையை யுடையராய்; வடம்சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை கருங்கயல் நெடுங்கண் காரிகையாரோடு-தம்முடைய விறலியராகிய முத்துவடத்தைச் சுமந்துகொண்டு உயர்ந்தபின்னும் வளரும் இயல்புடைய இளைய அழகிய முலையினையும் கரிய கயல்மீன் போன்ற நெடிய கண்ணையும் உடைய அழகிய மகளிரோடே; அரும்பு அவிழ் வேனில் இருங்குயில் ஆல இன வண்டு யாழ்செய வந்தது-எம் காதலர் எமக்குக் குறிப்பிட்டுப் போன நாளரும்புகள் மலருகின்ற இளவேனில் பருவந்தானும் கரிய குயில்கள் கூவவும் தம்மனத்தோடுகூடிய வண்டுகள் யாழிசைபோன்று முரலா நிற்பவும் இதோ வந்துவிட்டது; காதலர் வாரார்-எம்முடைய காதலரோ இன்னும் வந்திலர் என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்ற-என்னும்  பொருளமைந்த மேன்மை தக்கிருக்கின்ற சிறப்பையுடைய காதற்பண்ணாகிய வரிப்பாடலைப் பாடியவாறு அரசன்முன் தோன்றா நிற்ப; என்க.

(விளக்கம்) வீங்கு நீர்-கடல். வளைந்த கன்னட நாடு என வளைவை நாட்டிற்கேற்றுக. குலக்கு-குலத்திற்கு தகை-அழகு. அணி-ஒப்பனை குஞ்சி-ஆண் மயிர். மருள்-வியப்பு. மயக்கம் என்பாரும் உளர். ஒலியல்-தழைத்தல். மாலையர் என்னுமளவும் கூத்தரில் ஆடவரைக் கூறியபடியாம். மேலே அவர் தம் விறலியரைக் கூறுகின்றார். விறலியர்-விறல்பட நடிக்கும் மகளிர் இருங்குயில் என்பது முதல் காதலர் என்பது ஈறாக அக் கூத்தர் பாடிக்கொண்டு வந்த வரிப் பாடல் என்க. அதன் பொருள் காதல் ஆதலின் மாதர்ப்பாணி என்றார். மாதர்-காதல் எனவே காதற் பாட்டு என்பதாயிற்று. வரி-நாடகத் தமிழ்ப் பாடல்; உரு என்பதுமது, இக்காலத்தார் உருப்படி என்பர்.

குடகக்கூத்தர் வருகை

116-121: கோல்வளை.......தோன்ற

(இதன் பொருள்) கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்-திரண்ட வளையலணிந்த எம்பெருமாட்டியே விரைந்து நீ நின்னை அழகு செய்துகொள்வாயாக அஃது எற்றுக்கெனின்; கார்கடிது இடித்து உரறி வந்தது-முகிலோ கடிதாக இவித்து முழங்கிக்கொண்டு உதோ வானத்தின்கண் வந்தது, ஆதலால்; காலம் காணாய்-இதுவே நம் பெருமான் மீண்டுவருவதாக நம்பால் கூறிச்சென்ற காலம் என்பதை நினைத்துப் பார்ப்பாயாக; செய்வினை முடித்து காதலர் ஏறிய தேர் வந்தது என-தாம் கருதிச் சென்ற செய்வினையைச் செய்துமுடித்து நம் காதலர் ஏறிய தேர்தானும் வந்துவிட்டது, ஆதலால் என்னும் பொருளமைந்த; கா அர்க் குரவையொடு-கார்ப்பருவத்தே முல்லை நிலத்து மகளிர் பாடுகின்ற குரவைப் பாட்டைப் பாடியவண்ணம் வருகின்ற; கருங்கயல் நெடுங்கண் கோல் தொடி மாதரோடு குடகர் தோன்ற-கரிய கயல்போன்ற நெடிய கண்ணையும் திரண்ட வளையலையும் உடைய விறலியரோடு குட நாட்டுக் கூத்தர்தாமும் அம் மன்னவன் முன்னர்வந்து தோன்றாநிற்ப என்க.

(விளக்கம்) கோல்-திரட்சி. கோலம்-ஒப்பனை. காலம்-நம் பெருமான் குறித்துச் சென்ற காலம் என்பதுபட நின்றது. இது கார்ப்பருவத்தே பிரிவாற்றாமையால் வருந்துகின்ற தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழியர் குரவைக் கூத்தாடுவார் கார் வரவும் தேர் வரவும் கண்டு தலைவிக்குக் கூறி ஆற்றுவித்ததாகப் பொருளமைந்த குரவைப்பாட்டு. இப் பாட்டினைப் பாடிய வண்ணம் வருகின்ற கூத்திய ரோடு குடகக் கூத்தர் வந்து தோன்றினர் என்க.

ஓவர் வருகை

122-124: தாழ்தரு............தோன்ற

(இதன் பொருள்) தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து வான் வினைமுடித்து-கண்டோர் மனம் தம்மிடத்தே தங்கிக்கிடத்தற்குக் காரணமான ஒப்பனையையுடைய தம் மகளிரோடே மகிழ்ச்சியினால் சிறப்புற்று வாளால் செய்யும் போர்த் தொழிலை வெற்றியுடன் முடித்து; மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற-வீரவாளை ஏந்திய வேந்தன் நீடூழி வாழ்க என்று வாழ்த்துக் கூறியவராய் ஓவர்கள் செங்குட்டுவன்முன் வந்து தொழாநிற்ப என்க.

(விளக்கம்) காதலன் மனம் தம்பால் தாழ்தருதற்குக் காரணமான கோலம் என்க. ஓவர்-ஏத்தாளர் பாடற் கீழ் மக்களுமாம். 

செங்குட்டுவன் செயல்

125-127: கூத்துள்..........இருந்துழி

(இதன் பொருள்) கூத்து உள்படுவோன் காட்டிய முறைமையின் ஏத்தினர்-இவ்வாறு கொங்கணக் கூத்தர் முதலாக ஓவர் ஈறாகத் தன்னைக் காணவந்த கூத்தர்கள் தம்முள் ஒவ்வொரு குழுவினர்க்கும் உரிய ஆடலாசிரியன் கற்பித்த முறைமைப்படி தன்னைப் புகழ்ந்து பாடி ஆடிய அக் கூத்தர்களுக்கெல்லாம் பரிசிலாக அறியா இருங்கலன் நல்கி-அவர்தாம் பண்டு எவ்விடத்தும் பெற்றறியாத பேரணிகலன்களை வழங்கி; வேந்து இனம் நடுக்கும் வேலோன் இருந்துழி-பகைமன்னர்களைத் தம் இனத்தோடே நடுங்கச் செய்கின்ற வெற்றிவேலேந்திய அச் சேரன் செங்குட்டுவன் இனிது வீற்றிருந்தபொழுது என்க.

(விளக்கம்) கூத்துள் படுவோன்-ஆடலாசிரியன். வேலோன்-செங்குட்டுவன்

செங்குட்டுவனுக்கு நண்பராகிய நூற்றுவர் கன்னர் வரவிடுத்தவை

128-140: நாடக.......இசைப்ப

(இதன் பொருள்) நாடக மகளிர் ஈர்ஐம்பத்து இருவரும்-நாடகக் கணிகை மகளிர் ஒருநூற்று இருவரும்; கூடு இசைக் குயிலுவர் இருநூற்று எண்மர்-ஒருங்கு குழுமிய குயிலுவக் கருவி இசைப்போர் இருநூற்று எண்மரும், தொண்னூற்று அறுவகைப் பாசண்டத் துறை நண்ணிய நகை வேழம்பர் நூற்றுவரும் தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரத் துறைகளை நன்கு கற்றுத்தெளிந்த நகைப்பைத் தோற்றுவிக்கும் வேழம்பர் ஒரு நூற்றுவரும்; கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும் கொடுஞ்சிறையையுடைய நூறு நெடிய தேர்களும்; கடுங்களி யானை ஓர் ஐஞ்னூறும்-மிக்க வெறியையுடைய ஐந்நூறு யானைகளும் ஐயீராயிரம் கொய்உளைப் புரவியும்-பதினாயிரம் கத்தரிகையால் கொய்து மட்டம் செய்யப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகளும்; எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண் எழுத்துப் படுத் தன கைபுனை சகடமும்-யாண்டும் காணப்படாது வடநாட்டின்கண் மட்டும் தோன்றுகின்ற வளமான சரக்குகளை அவற்றின் பெயர் அளவு முதலியன குறிக்கப்பட்ட மூடைகளை ஏற்றி அழகு செய்யப்பட்ட இருபதினாயிரம் வண்டிகளும்; சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற கஞ்சுக முதல்வர் ஈர்ஐஞ்னூற்றுவரும்-சஞ்சயன் என்னும் தூதர் தலைவனையுள்ளிட்ட அரசவரிசையாகிய தலை அணி பெற்ற மெய்ப்பைபுக்க தலைவர்கள் ஓர் ஆயிரவரும்; சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே-ஏனைய கொடிகளினும் காட்டில் மிகவும் உயரத்தே பறக்கின்ற விற்கொடியையும் செங்கோன்மையையும் உடைய வேந்தர் பெருமானே; வாயிலோர் என வாயில்வந்து இசைப்ப-நம்முடைய பாடிவீட்டின் முற்றத்திலே வந்து நிற்கின்றனர் என்று வாயில்காவலன் வந்து அரசனுக்குக் கூறாநிற்ப என்க.

(விளக்கம்) குயிலுவர்-இசைக் கருவி வசிப்பவர். தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை-தொண்ணூற்று அறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை இதனைக் கனாத்திறம் உரைத்த காதையி(15ஆம் அடி) னும் விளக்கத்திலும் காண்க. நகை வேழம்பர்-நகைச்சுவைப்பட நடிக்கும் கூத்தர். எய்யாத என்னும் பெயரெச்சத்தீறு கெட்டது. வடவளம்-வடநாட்டில் விளையும் உணவுப்பொருள். தலைக்கீடு-அரசியலில் இன்ன தொழிலைச் செய்பவர் என்பதற்கு அறிகுறியாகிய தலைப்பாகை போன்ற அணி. கஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) வாயில்: ஆகுபெயர். வாயில்காவலன் என்க.

சஞ்சயன் செங்குட்டுவனைக் காணுதல்

141-145: நாடக..........ஏத்தி

(இதன் பொருள்) நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடு இசை குயிலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கு என-அதுகேட்ட மன்னவன் நாடக மகளிரும் ஏனைய கலை நலங்கெழுமிய மக்களும் பொருந்திய இசைக் கருவியாளர்களும் சஞ்சயனோடு வருவாராக இப்பொழுதே என்று கூறாநிற்ப; செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையத்து சஞ்சயன் புகுந்து தாழ்ந்து பல ஏத்தி-செங்கோன்மையுடைய வேந்தனது பணிபெற்றபின் திருமகள் விளங்காநின்ற அவ்வரசவையின்கண் சஞ்சயன் என்னும் அத் தூதர்குழுத் தலைவன் புகுந்து அரசன் அடியில் வீழ்ந்து வணங்கி அவனுடைய பலவேறு புகழ்களையும் எடுத்தோதிய பின்னர் என்க.

(விளக்கம்) வாயிலோன் உரைத்தமை கேட்ட அரசன் அவரெல்லாம் இங்கு வருக என அவ் வாயிலோன் அச் செய்தியைத் தன்பால் வந்து அறிவிக்கக் கேட்ட சஞ்சயன் அவையத்துப் புகுந்து தாழ்ந்து ஏத்தினன் என்க.

சஞ்சயன் கூற்று

149-155: ஆணை..........வாழ்கென

(இதன் பொருள்) ஆணையில் புகுந்த ஈர்ஐம்பத்திருவரொடு மாண் வினையாளரை வகைபெறக் காட்டி-அரசனுடைய கட்டளை பெற்றுத் தன்னோடு வந்து புகுந்த நாடகமகளிர் ஒரு நூற்றிருவரோடே மாட்சிமை மிக்க கலைத்தொழிலாளர்களை மன்னனுக்கு வகை வகையாக இன்னின்ன கலையில் இன்னின்னவர் வல்லுநர் என அறிவித்தபின்னர் அரசனை நோக்கி; கோல் தொழில் வேந்தே-செங்கோன்மைத் தொழிலில் திறமிக்க சேரவேந்தனே; வேற்றுமையின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும்-ஒரு சிறிதும் மனவேற்றுமை இல்லாமல் நின்னோடு நட்புக்கொண்டுள்ள நூற்றுவர் கன்னரும் நினக்குக் கூறுமாறு பணித்த செய்தி ஒன்று உளது. அதனைக் கேட்டருளுக என்று கூறுபவன்; வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவுள் எழுத ஓர் கற்கு ஆகின்-வடக்கு நோக்கிச் சேரமன்னன் செல்லுவது பத்தினித் தெய்வத்திற்குப் படிவம் பண்ணவேண்டிய கல்லின் பொருட்டே எனின்; யாம் ஓங்கி இமயத்து கல் கால்கொண்டு வீங்குநீர் கங்கை நீர்ப்படை செய்து-யாங்களே உயர்ந்த அவ்விமய மலைக்குச் சென்று அதன்பால் கல்லை அடிச்செய்து கைக்கொண்டு வந்து பெருகிய நீரையுடைய கங்கைப் பேரியாற்றின்கண் அதனை நீர்ப் படுத்தும் சடங்கினையும் செய்து முடித்து; ஆங்குத் தரும் ஆற்றலம் என்றனர்-பெருமானே நினது நாட்டிற்கே கொணர்ந்து தருகின்ற வலிமையை உடையேம் என்று இக் கருத்தினை நின்பால் அறிவித்திடுக என்று என்னை ஏவினர்; என்று வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என-என்று அச் சஞ்சயன் வேந்தனுக்குக் கூறிக் கடல்சூழ்ந்த நில உலகம் முழுவதையும் ஆளுகின்ற பெருமானே நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபின் என்க.

(விளக்கம்) ஐம்பத்திருவர் என்றது முன் கூறப்பட்ட நாடக மகளிரை மாண் வினையாளர் என்றது ஏனைய கலைஞரை. நூற்றுவர் கன்னர் என்போர் செங்குட்டுவனோடு கேண்மை பூண்டு ஒழுகும் வடநாட்டு மன்னர் என்க. வானவன்-சேரன். கற்கேயாயின் என்புழி ஏகாரம் பிரிநிலை. கல்லின் பொருட்டேயானால் பெருமான் அங்குப் போதல் வேண்டா, யாமே சென்று அக் கல்லைக் கொணர்ந்து தருவேம் என்பது இதனால் போந்த பொருள்.

செங்குட்டுவன் சஞ்சயனுக்குக் கூறுதல்

156-163: அடல்வேல்..........தாமென

(இதன் பொருள்) அடல்வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் கடல் அம் தானை காவலன் உரைக்கும்-கொலைத்தொழிலையுடைய வேல் ஏந்துகின்ற பகை மன்னருடைய மீண்டும் பெறுதற்கரிய உயிரைப் பருகுகின்ற கடல்போலும் பெரிய அழகிய படைகளையுடைய சேரன் செங்குட்டுவன் சஞ்சயன் கூறிய செய்திகேட்ட பின்னர்ச் சொல்லுவான்; ஆங்கு பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவின் கனகனும் விசயனும்-தூதுவனே நம் படை யெழுச்சி கல்கோள் மட்டும் கருதியது அன்று, பின் எற்றுக் கெனின் அவ் வடநாட்டின்கண் பாலகுமரன் என்னும் ஓர் அரசனுடைய மக்கள் இருவர் உளர், மற்று அவர் தாமும் தமது நாவினைக் காத்துக்கொள்ளும் அறிவின்மை காரணமாகக் கனகனும் விசயனும் ஆகிய அவ் இருமடவோரும்; விருந்தின் மன்னர் தம் மொடுங் கூடி-புதுவோராகிய மன்னர் சிலரோடு கூடியிருந்து அளவளாவுங்கால்; அருந் தமிழ் ஆற்றல் அறிந்திலர் என-பிறரால் வெல்லுதற்கரிய தமிழ் மன்னருடைய பேராற்றலை இன்னும் அறிந்துகொள்ளாதவராய் இருக்கின்றனர் என்பது அவர் சொல்லட்டத்தால் தெரியவந்தது, ஆதலால், இச் சேனை கூற்றுங் கொண்டு செல்வது-அம் மடவோர்க்கு அருந்தமிழ் ஆற்றலை அறிவித்தற் பொருட்டு இத் தமிழ்ப்படை கூற்றத்தைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போவதாம், என்றான் என்க.

(விளக்கம்) அடல்-கொல்லுதல் மன்னர்-பகை மன்னர் காவலன்: செங்குட்டுவன். பால குமரன் மக்கள் இருவர் உளராம் கனகனும் விசயனும் என்பது அவர் பெயராம் அவர் தாம் விருந்தின் மன்னரொடு கூடி அளவளாவும் பொழுது அவர் கூறிய கூற்றுகளால் தமிழாற்றல் அறிந்திலர் என்பது தெரிய வந்தது என்றவாறு. எனவே தமிழ் மன்னரை அவர் இகழ்ந்தமையை மறைத்துப் பிறிதொரு வாய் பாட்டால் கூறினான் ஆயிற்று. எனவே இதற்கு யாமே போதல் வேண்டும் என்பது இதனாற் போந்த பயன் என்க.

இதுவுமது

164-165: நூற்றுவர்..............தாமென

(இதன் பொருள்) நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி தூதனே இச் செய்தியை நீ சென்று என் நண்பராகிய நூற்றுவர் கன்னர்க்கு அறிவித்து மேலும்; ஆங்குக் கங்கைப் பேரியாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை தாம் செய்க என-அவ்விடத்திலுள்ள கங்கையாகிய பெரிய யாற்றினை நமது இப் பெரும் படை கடந்து அக்கரை சேர்தற்கு வேண்டியனவாகிய ஓடங்களின் பெரிய வரிசையை அந் நூற்றுவர் கன்னர்செய்து தருவராக என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) வங்கப் பெருநிரை-ஓடங்களின் பெரிய வரிசை. பெரும் படை கங்கையைக் கடக்க வேண்டுதலின் வங்கங்களின் வரிசையும் நீளமாக இருத்தல் வேண்டும் என அறிவித்தவாறாம் தாம் என்றது நூற்றுவர் கன்னரை.

தென்னவர் திறைப்பொருள் உய்த்தல்

166-172: சஞ்சயன்......பின்னர்

(இதன் பொருள்) சஞ்சயன் போனபின்-சஞ்சயன் அரசன்பால் விடைபெற்றுச் சென்றபின்னர்; எஞ்சா நாவினர் கஞ்சுக மாக்கள் ஈர் ஐஞ்ஞாற்றுவர்-தாம் கூறவேண்டிய கூற்றைக் குறை கிடப்பக் கூறாத நல்ல நாவன்மையை யுடையவராகிய மெய்ப்பை புக்க ஓராயிரம் தூதுவர்; தென்னர் இட்ட சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் திறையொடு கொணர்ந்து-தென்னாட்டு மன்னவர் இறுத்த சந்தனக் குறட்டின் குவியலும் கடல்முத்தும் பிற திறைப் பொருளோடே கொணர; காவல் வேந்தன் கண் எழுத்தாளர்-காத்தல் தொழிலையுடைய வேந்தனாகிய சேரன் செங்குட்டுவனுடைய திருமந்திரவோலை எழுதும் எழுத்தாளர் அவை பெற்றுக்கொண்டமைக்கு; மண் உடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து ஆங்கு-இலச்சினையிடப்பட்ட திருவோலையை அத் தென்னாட்டு மன்னவருக்கு அளித்தபொழுதே; ஆங்கு அவர் ஏகியபின்னர்-அவ்விடத்தினின்றும் அக் கஞ்சுக மாக்கள் சென்ற பின்னர் என்க.

(விளக்கம்) தென்னர்-சேரநாட்டுத் தென்பகுதியை ஆளுகின்ற மன்னர் எனினுமாம். இனிப் பாண்டிய மரபிலுள்ள மன்னர் எனினுமாம். தாழ் நீர் முத்து-கடலின்கட் படும் முத்து. கண்ணெழுத்தாளர் திருமந்திர ஓலை எழுதுவோர். வேந்தன்: செங்குட்டுவன். மன்னவர் தென்னர், அவர்-அக் கஞ்சுமாக்கள்.

செங்குட்டுவன் நீலகிரியினின்றும் புறப்பட்டுக் கங்கையைக் கடந்து வடநாட்டில் புகுதல்

172-181: மன்னிய........தன்முன்

(இதன் பொருள்) மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய நாடு ஆள் செல்வர் நல்வலன் ஏத்த-நிலைபெற்ற கடல்சூழ்ந்த உலகத்தை ஆள்பவனாகிய செங்குட்டுவன் வளத்தால் உயர்ந்த நாடுகள் பலவற்றையும் ஆள்கின்ற அரசர்கள் தனது சிறந்த வெற்றியைப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; பாடி இருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப் பேர்யாற்றுக் கன்னரின் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி-தான் வீற்றிருந்த படைவீட்டினின்றும் புறப்பட்டுச் சென்று கங்கை என்னும் பெரிய யாற்று நீரை நூற்றுவர் கன்னரால் பெறப்பட்ட ஓடங்களின்மேல் ஏறிக்கடந்து அக் கங்கையின் வடகரையை அடைந்து; ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்து ஆங்கு ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ-அவ் வடகரையின்கண் அந்நூற்றுவர் கன்னர் தன்னை எதிர்கொண்டு சிறப்புச் செய்யப் பின்னர் அந்த நாட்டையும் கடந்துபோய் அப்பாலுள்ள பெருகுகின்ற நீரையுடைய மருதப் பரப்பினையுடைய வடநாட்டினை எய்தி; பகைப்புலம் புக்கு-அப்பாலுள்ள பகைவருடைய நாட்டின்கண் புகுந்து; பாசறை இருந்த தகைப்பு அருந்தானை மற்வோன் தன்முன்-அவ்விடத்தே பாசறை அமைத்துத் தங்கியிருந்த பிறரால் தடுத்து நிறுத்துதல் அரிய படைகளையுடைய மற மன்னனாகிய அச் செங்குட்டுவன் முன்னர்; என்க.

(விளக்கம்) ஞாலமாள்வோன்: செங்குட்டுவன். வலன்-வெற்றி. பாடியிருக்கை-படை வீடு கன்னர்-தன் நண்பராகிய நூற்றுவர் கன்னர். கன்னரால் அமைத்துத் தரப்பெற்ற வங்கத்தின் மிகுதி தோன்ற வங்கப் பரப்பின் என்றார். அவர்-நூற்றுவர் கன்னர். நீர் வேலி-நீர் சூழ்ந்த மருதப் பரப்பு என்க.

செங்குட்டுவன் பகைமன்னர் வந்து எதிர்த்தல்

182-187: உத்தரன்.........மேல்வர

(இதன் பொருள்) உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்-உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் என்னும் பெயரையுடைய அவ் வடதிசையின்கண் உள்ள பல்வேறு நாடுகளையும் ஆளுகின்ற அரசர் எல்லாம் ஒருங்கு குழுமி; கனக விசயர் கலந்த கேண்மையின் யாம் தென் தமிழ் ஆற்றல் காண்குதும் என-கனகனும் விசயனும் ஆகிய இரண்டு மன்னரோடும் பொருந்திய நட்புடைமை காரணமாக யாமெல்லாம் கூடிச்சென்று தென்றிசைக் கண்ணதாகிய தமிழ் மன்னனுடைய போராற்றலை அவனுடன் பொருது அளந்து காண்போம் என்று துணிந்து; நிலம் திரைத்தானையொடு நிகர்த்து மேல்வர-நிலவுலகத்தைச் சுருங்கிய தாக்குகின்ற பெரிய நாற்பெரும் படையொடு தம்மூள் ஒத்துச் செங்குட்டுவன்மேல் போருக்கு வர என்க.

(விளக்கம்) உத்தரன் முதலியவர் வடநாட்டு அரசர்கள்; கனக விசயரின் நண்பர்கள்; தென் தமிழ்: ஆகுபெயர்; தமிழ் அரசன் என்றவாறு. நிலம் திரைத்தானை-நிலத்தைச் சுருக்கிக் காட்டும் அளவு பெருகிய படை என்றவாறு. இதனோடு

பார் சிறுத்தலிற் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமு மில்லையே

எனவரும் கலிங்கத்துப் பரணிச் (348) செய்யுளையும் ஒப்பு நோக்குக. நிகர்த்து-மானம் ஊக்கம் இவற்றால் கனக விசயரை ஒத்து என்க நேர்வர எனினுமாம்.

செங்குட்டுவனின் போர்த்திறம்

(இதன் பொருள்) இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமா கரிமாப் பெருநிரைகண்டு உளம் சிறந்து பாய்ந்த பண்பின்-பகைமன்னர் வரவுகண்டு இரை தேர்தற்பொருட்டு வேட்கைக்கு எழுந்து வந்த ஒரு சிங்கமானது தன் எதிரே வருகின்ற யானையினது பெரிய வரிசையைக் கண்டு மனம் மிகவும் மகிழ்ந்து அவ்வியானைக் கூட்டத்தின்மேலே பாய்ந்த தன்மைபோல விரைந்து சென்று; பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப-பலவாகிய வேலையுடைய அவ்வரசர்களால் கொணரப்பட்ட எதிரூன்றிய அப் படைகளோடே சேரன் செங்குட்டுவன் தன் படைகளோடு சென்று போராற்றா நிற்ப என்க.

(விளக்கம்) அரிமா-சிங்கம். கரிமா-யானை. உளம் சிறந்து ஊக்கம் மிகுந்து எனினுமாம். மன்னர் என்றது உத்தரன் முதலியோரை காஞ்சித் தானை-எதிர் வந்து போர் செய்யும் படை. உட்காது எதிர் ஊன்றல் காஞ்சி, எனவரும் பழம் பாடலும் நோக்குக.

இதுவுமது

192-103: வெயிற்கதிர்........செறிய

(இதன் பொருள்) துகிற்கொடிப் பந்தர் வெயில் கதிர் விழுங்கிய இரு திறத்துப் படைகளினும் உயர்த்தப்பட்ட துகிலாலியன்ற கொடிகளின் பந்தல்கள் ஞாயிற்றின் வெயில் ஒளியை மறைத்தொழித்தன; வடித்தோல் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் உயிர்ப்பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமோடு மாதிரம் அதிரவடித்த தோல் டோர்க்கப்பட்ட வளைந்த போர்ப்பறையும் வெள்ளிய சங்கும் நீண்ட கொம்பும் இடிபோன்று முழங்கும் போர் முரசமும் இழும் என்னும் ஓசையையுடைய கஞ்சக் கருவியும் உயிராகிய பலியை உண்ணுகின்ற இடிபோலும் ஒலியையுடைய மயிர் சீவாது போர்த்த கண்ணையுடைய வீரமுரசமும் ஆகிய இவையெல்லாம் ஒருங்குகூடி எட்டுத் திசைகளும் அதிரும்படி முழங்காநிற்பவும்; சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் கறைத்தோல் மறவர் கடுந்தேர் ஊருநர் வெண்டோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் மண்கண் கெடுத்த மாநிலப் பெருந்துகள்-வில்லையுடைய தேளையுடைய மறவரும் போர்வேலை ஏந்திய பெரிய கையையுடைய மறவரும் கருங்கடகுபற்றிய மறவரும் விரைந்தியங்கும் தேரின்கண் ஏறி ஊர்கின்ற மறவரும் வெள்ளிய மருப்புக்களையுடைய யானை ஊர்ந்துவரும் மறவரும் விரைந்த செலவினையுடைய குதிரை ஊர்ந்துவரும் மறவரும், மண்ணினது இடத்தைக் கிண்டிக் கொடுத்தலாலே இந்தப் பெரிய நிலத்தினின்றும் எழும் மிக்க துகள்கள்; களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கு இசை நாவும்-களத்தில் புகுந்த போர்யானைகளுக்குக் கொடியிற்கட்டிய மிக்க இசையையுடைய சங்குகளின் நாக்களும்; நடுங்குதொழில் ஒழிந்து ஆங்கு ஒடுங்கி உள்செறிய-அசைந்து ஒலிக்கும் தொழில் ஒழிந்து ஒடுங்கும்படி அவற்றினுள்ளே புகுந்து நிறையா நின்ப என்க.

(விளக்கம்) கொடிப் பந்தர் கதிரை விழுங்கின என்றவாறு. வடித்தோல்-வடித்த தோல்; பதம் செய்த தோல் என்றவாறு. பறை-போர்ப்பறை. வளை-வெற்றிச் சங்கு. வயிர்-கொம்பு. முரசம்-போர் முரசம் என்பார் இடிக்குரல் முரசம் என்றார். பாண்டில்-வெண்கலத்தால் செய்த தாளம். அதன் ஒலி இழுமென்றிருக்கும் என்க. மயிர்க் கண் முரசம்-மயிர் சீவாது போர்த்த முரசம் என்க. மந்திரம்-திசை. சிலை-வில். கறைத்தோல்-ஒரு வகைக் கடகு. மண்கண் கெடுத்த என்பதற்கு மண்ணுலகத்தில் வாழும் உயிர்களின் கண்ணை அவித்த(துகள்) எனினுமாம். நந்தின் இசைநா என்றமையால் வெண்கலத்தால் சங்கு வடிவமாகச் செய்யப்பட்ட ஒரு வகை மணியின் நா எனக்கொண்டு இம் மணி கொடியின்கண் கட்டப்படும் ஆதலின் கொடி நந்தின் நா என்றார் எனக் கோடல் தகும். நந்து-சங்கு. துகள் செறிதலால், மணிகளின் நா இயக்கமின்றி உள் ஒடுங்கின என்க.

இதுவுமது

204-212: தாகும்......குவித்து

(இதன் பொருள்) தாரும் தாரும் தாம் இடைமயங்கத் தோளும் தலையும் துணிந்து வேறு ஆகிய-இருதிறத்துத் தூசிப்படைகளும் ஒன்றனூடு ஒன்று புக்குத் தம்முள் கைகலந்து போர் ஆற்றுதலாலே தோள்களும் கால்களும் துணிக்கப்பட்டு வேறுபட்டுக் கிடக்கின்ற; சிலைத்தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து-வில்லையுடைய தோளையுடைய அம் மறவருடைய உடற்சுமைகளாலியன்ற மலைகளிலே ஏறி; எறிபிணம் இடறிய குறை உடல் கவந்தம் முன்னரே ஏறண்டுகிடக்கின்ற பிணங்களிலே கால் இடறுண்ட தலையற்ற உடலாகிய கவந்தங்கள்; பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆட-பறைபோன்ற கண்களையுடைய பெண் பேய்கள் தம் கையாலே புடைக்கின்ற தாளத்திற் கிணங்கக் கூத்தாடா நிற்பவும்; பிணம் சுமந்து ஒழுகிய நிணம்படு குருதியில் கணம் கொள் பேய்மகள் கதுப்பு இகுத்து ஆட-பிணங்களைச் சுமந்து கொண் டியங்குகின்ற நிணமாகிய நுரைகளையுடைய குருதிப் பேரியாற்றின்கண் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ள பெண் பேய்கள் தமது கூந்தலைத் தாழ விட்டு நீராடி மகிழா நிற்பவும்; அடுந்தேர்த்தானை ஆரிய அரசன் கடும்படை மாக்களைக் கொன்று களம் குவித்து-பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய தேர் முதலிய நாற்பெரும் படைகளையும் உடைய அவ் வடவாரிய மன்னருடைய கடிய படைமறவர்களையெல்லாம் கொன்று அவர் தம்முடலைப் போர்க்களத்தின்கண்ணே குவித்தமையாலே என்க.

(விளக்கம்) தார்-தூசிப்படை. உடற் பொறை-உடலாகிய சுமை தோளும் தாளும் வேறாகிய உடற் பொறை, எனவும் மறவர் உடற் பொறை எனவும் தனித்தனி கூட்டுக. அடுக்கம்-மலை எறி-பிணம்-வெட்டுண்ட பிணம். தலை துணிபட்ட பின்னரும் இயங்கும் கவந்தங்கள் பிணம் இடறுதலாலே தடையுண்டு நின்று ஆடின அவ்வாட்டம் களித்து ஆடும் பேய் மகளிர் கை கொட்டுகின்ற தாளத்திற் கியைந்தன என்றவாறு. பேய் மகளின் கண்ணுக்குப் பறையுவமை இதனோடு பேய்க் கண்ணன் பிளிறுகடி முரசம் எனவரும் பட்டினப் பாலையையும் நினைக. (234) நிணமாகிய நுரைபடு குருதியாகிய நீரில் என்க. இகுத்தல்-தாழ்த்துதல்; முழுகுவித்து என்றவாறு. குவித்து குவித்தலாலே, (217) ஆரிய அரசர் அறிய என இயையும்.

இதுவுமது

213-218: நெடுந்தேர்......வேந்தன்

(இதன் பொருள்) நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற்று எருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட-தம்முடைய மறவர் வீற்றிருந்த நெடிய தேரின்கண் இருக்கையாகிய கொடுஞ்சியும், கடிய களிற்றியானையின் பிடரும் மறவர்களால் செலுத்தப்பட்டுப் பின்னர் அவர் வீழ்ந்தமையாலே தாமே செல்லும் செலவினையுடைய குதிரைகளின் முதுகும் பாழ்பட்டுக் கிடக்கும்படி; எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது-வருமையாகிய கடிய குதிரையை ஊர்ந்து வருகின்ற கூற்றுவன் உயிர்த் தொகுதிகளை ஒரு நாள் ஒரு பொழுதின் அளவிலே உண்டொழிப்பன் என்னும் உண்மையை; ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய-கனகனும் விசயனும் முதலிய அவ் வாரியவரசர் அப் போர்க்களத்திலே நன்கு அறிந்துகொள்ளுமாறு; நூழில் ஆட்டிய சூழ்கழல் வேந்தன்-கொன்று குவிப்பதாகத் துணிந்து வீரக்கழல் அணிந்த மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன்; என்க.

(விளக்கம்) படை மாக்கள்-படை மறவர்; கொடுஞ்சி-தேரின் கண் தாமரை மலர் வடிவாகச் செய்தமைத்த இருக்கை. கொடுஞ்சியும் களிற்றெருத்தமும் குதிரை வெரிநும் தம் மேலிருந்த மறவர் இறந்து பட்டமையின் பாழ்பட்டன என்க. எருமையாகிய பரியூர்வோன்-கூற்றுவன். தமிழ்ப்படை கொணரும் கூற்றுவன்.........அறிய என்றவாறு. என்னை! அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் எனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது என்றானாதலின் அக் கூற்றமாகிய எருமைக்கடும்  பரியூர்வோன் என்பதே கருத்தாகக் கொள்க.

நூழில் ஆட்டிய-கொன்று குவிக்கக் கருதிய வேந்தன் என்க.

219-224: போந்தை.........படுதலும்

(இதன் பொருள்) போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மலய-தன் அடையாளப் பூவாகிய பனம்பூவோடே விரவிக்கட்டிய செவ்வியையுடைய தும்பைப் பூவை மிகவும் உயர்ந்த தன் தலைமிசைச் சூட்டிக்கொண்டவளவிலே; வாய் வாளாண்மையின் வண் தமிழ் இகழ்ந்த காய் வேல் தடக்கைக் கனகனும் விசயனும்-தம் நாவையடக்கி வாளா திருக்கமாட்டாமையாலே வளவிய தமிழ் மன்னரின் போராற்றலை இகழ்ந்தவராகிய பகைவரைக் கொல்லும் வேலேந்திய பெரிய கையையுடைய கனகன் என்பவனும் விசயன் என்பவனுமாகிய ஆரிய மன்னரிருவரும்; ஐம்பத்து இருவர் கடுந்தேராளரொடு செங்குட்டுவன்தன் சினவலைப் படுதலும்-தம் நட்பினராகிய ஐம்பத்திரண்டு மறவர் கடிய செலவினையுடைய தேரினையுடைய யாரொடு வந்தவர் அப் போர்க் களத்தே செங்குட்டுவனுடைய சினமாகிய வலையினுள்ளெய்துதலும்; என்க.

(விளக்கம்) பருவத் தும்பை-செவ்வியையுடைய தும்பைப்பூ. தும்பைப்பூ போர்க்கறிகுறியாகச் சூடப்படும் இதனை

தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலையழிக்கும் சிறப்பிற் றென்ப

என வருந் தொல்காப்பியத்தான் உணர்க.

ஈண்டுத் தம் மைந்து பொருளாக அருந்தமிழ் ஆற்றல் அறியா நிகழ்ந்து போர்செய்தற்கு வந்து எதிர்ந்த வேந்தரைச் செங்குட்டுவன் சென்று அவர்தம் தலைமை அழித்தலுணர்க. வாய்வாளாண்மை-வாய்வறிது இராமை என்பது அரும்பதவுரை வாயாகிய வாளின் ஆண்மை எனப் பொருள் கூறிப் பின்னும்; வாய் வாளாமை என்பது ஒன்றும் பேசாதிருத்தலாதலின் இச் சொல் அதனின் வேறாகும் என்பர் திரு நாட்டாரவர்கள்.

கனகனும் விசயனும் தமக்குத் துணையாகக் கடுந்தேர் மறவர் ஐம்பத்திருவருடன் வந்தெதிர்ந்தாராயினும் அவன் சினத்திற்காளான பொழுதே அஞ்சித் தப்புதற்குச் செய்த உபாயங்களை இனி அடிகளார் கூறுகின்றனர் தப்பிய போதலரிதாதலின் சினத்தை வலை என்றார்.

கனகவிசயர் முதலியோர் நிலைமை

225-230: சடையினர்...........படர்தர

(இதன் பொருள்) சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன்பாளர் பாடு பாணியர் பல் இயத்தோளினர் ஆடுகூத்தர் ஆகி-சடையை உடையவரும் துவராடை முதலிய துறவோர்க்கியன்ற ஆடைகளை உடுத்தவரும் சாம்பல் முதலிய சமயக் குறியீடுகளை மேற்கொண்டவரும் தருப்பை மான் தோல் முதலிய துறவோர் இருக்கைகளை யுடையவரும் மயிற்பீலியையும் உண்ணா நோன்பு முதலிய பெரிய நோன்புகளையும் உடைய பல்வேறு இன்னிசைக் கருவிகளையுடைய தோளையுடையவருமாகிய கூத்தாடுகின்ற கூத்தரும் என்று கூறப்பட்ட பல்வேறு கோலங்களையும் பூண்டவர்களாய்; ஏந்துவாள் ஒழியத் தாம் துறைபோகிய விச்சைக்கோலத்து வேண்டுவயின் படர்தர-தாம் போர்க்கு வந்தபொழுது தாம் ஏந்திவந்த வாள் முதலிய போர்க் கருவிகள் ஒழியத் தாம் தாம் பண்டு கற்றுவல்ல வித்தைகட்கேற்ற கோலங் கொண்டவராகித் தாம் தாம் வேண்டிய விடத்திற்குச் செல்லா நிற்ப. என்க.

(விளக்கம்) கனகவிசயருடன் வந்த அரசராகிய உத்தரன் முதலிய மன்னரும் அவர்தம் போர்மநவரும் போரிற்பட்டவர் கிடப்ப எஞ்சியவரெல்லாம் தாம் தாம் கொணர்ந்த போர்க் கருவிகளைக் கைவிட்டுச் சடை முதலியவற்றையுடைய துறவோரும் பாணரும் கூத்தரும் ஆகிய இன்னோரன்ன கோலம் புனைந்து அப் போர்க்களத்தினின்றும் தாம் விரும்பிய விடத்திற்கு ஓடிப்போயினர் என்றவாறு. இனி இக் காட்சியோடு கலிங்கத்துப்பரணியில் வருகின்ற வரைக்கலிங்கர் தமைச் சேர மாசை ஏற்றி, வன்தூறு பறித்த மயிர்க்குறையும் வாங்கி. அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் எனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே, எனவும் வேடத்தாற் குறையாது முந்நூலாக வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப் போந்தகப் பட்டேம் என்றே அரிதனைவிட்டுயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே எனவும்வருந் தாழிசைகள் ஒப்பு நோக்கற்பாலன.

இனி, கம்பநாடர் தாமும் தம் காப்பியத்திற்கிணங்க-மீனாய் வேலையை யுற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறு மேய்வுற்றார் ஊனார் பறவையின் வடிவுற்றார் சிலர் சிலர் நான்மறையவ ருருவானார் யானார் கண்ணிள மடவா ராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றாரானார் சிலர் சிலர் ஐயா! நின் சரணென்றார் நின்றவரரியென்றார் என வோதுதலும் ஈண்டு ஒப்புக் காணத்தகும்.

பீடிகை-முனிவர் இருக்கை (தருப்பை மான்றோல் முதலியன) விச்சை-வித்தை பீலிப் பெருநோன்பாளர்-சமணத் துறவோர் பாடு பாணியர்-பாணர். பல்லியத்தோளினர் என்றது-கூத்தரை துறைபோதல்-கற்றுமுதிர்தல்

வாளேருழவன் மறக்களம் வாழ்த்திப் பேயாடு பறந்தலை

231-241: கச்சை........பறந்தலை

(இதன் பொருள்) கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப் பூட்டி வாள் கோலாக-கழுத்தின்கண் கயிற்றை உடைய யானைகளை உடைய படை மன்னர்கள் அச்சத்தால் நடுங்கும்படி மருப்புக்களை உடைய களிற்றியானைகளை எருமைக் கடாக்களாகப் பூட்டி வாளைக் கையின்கண் அக் கடாவைத் தூண்டும் கோலாகக் கொண்டு; ஆள் அழி வாங்கி அதரி திரித்த வாள் ஏருழவன் மறக் களம் வாழ்த்தி-பகை வீரர்களாகிய வைக்கோலை இழுத்துக் களத்திலே விட்டுக் கடாவிட்ட வாளாகிய ஏரை உடைய உழுதொழிலாளனாகிய சேரன் செங்குட்டுவனுடைய போர்க்களத்தின்கண் அவனது வெற்றிப் புகழை வாழ்த்தி; பேய் தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி முடிஉடைக் கருந்தலை முந்துற ஏந்தி-பிணந்தின்னும் பேய்ப் பெண்டிர் வீர வலையம் அணிந்த மறவர்களுடைய நீண்ட கைகள் தூங்கும்படி தம்கையால் தூக்கி முடிக்கலன் அணிந்த கரிய மயிர் செறிந்த அம் மறவருடைய தலை முற்பட்டுத் தோன்றும்படி தம் கையில் ஏந்திக்கொண்டு அம் மகிழ்ச்சி காரணமாக; கடல் வயிறு கலக்கிய ஞாட்புங் கடல்அகழ் இலங்கையில் எழுந்த சமரமுங் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி அவன் பண்டு திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது உண்டான போர்ச் சிறப்பினையும் நான்கு திசைகளிலும் கடல்களையே அகழியாகக் கொண்ட இலங்கையின்கண் உண்டான அரக்கர்களின் போர்களத்தில் உண்டான வெற்றிப் புகழையும் கடல்போன்ற நில நிறமுடைய கண்ணபெருமான் விசயனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து நிகழ்த்திய பாரதப் போரினது சிறப்பினையும் பாடிக்கொண்டு; பேரிசை முதல்வனை முன்தேர்க் குரவை வாழ்த்தி-இவ்வாறு மூன்று பெரும்புகழையும் உடைய திருமாலாகிய சேரன் செங்குட்டுவன் என்னும் தலைவனுடைய தேரின் முன்னின்று குரவைப் பாட்களாலே வாழ்த்தி; பின் தேர்க்குரவை ஆடு பறந்தலை-மீண்டும் வாகைசூடிய அம் மன்னவனுடைய தேர் இயங்கும்பொழுதும் அதன்பின் நின்று அப் பேய்கள் குரவைக் கூத்தாடுதற்கிடனான அவ் வடநாட்டுப் போர்களத்தின்கண் என்க.

(விளக்கம்) கேட்டுமா-யானை. காவலர்-பகை மன்னர். ஆள்-வீரன். அழி-வைக்கோல். அதரி திரித்தல்-கடாவடித்தல் வாளேருழவன் என்றது செங்குட்டுவனை. பேய்தொடியுடைய எனக் கூட்டிக் கொள்க. தொடி-வீரவலையம் எனக் கொண்டு மறவர்கை எனக்கோடலே சிறப்பு. பேய் மறவர் உடலைத் தூக்குங்கால் அம் மறவர் கைகள் தூங்கவும் தலைமுந்துறவும் தூக்கின என்பது கருத்து. செங்குட்டுவனைத் திருமாலாகக் கருதி அவன் கடல் கலக்கிய புகழ் முதலிய மூன்று புகழையும் பாடி என்றவாறு. கடல்வண்ணன் தேரூர் செரு என்றது பாரதப்போரினை. இங்ஙனம் பாடுவது, பூவைநிலை என்னும் ஒரு புறத்துறை இதனை,

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலை

என வெட்சித்திணைப் புறனடையிற் கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை என்பன, தும்பைத் திணையில் வருகின்ற துறைகள்.

மறக்கள வேள்வி

242-247: முடித்தலை.............குட்டுவன்

(இதன் பொருள்) மறப்பேய் வாலுவன் முடித்தலை அடுப்பின் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன் சோறு-வீரமுடைய பேயாகிய மடையன் வீரமன்னர்களுடைய முடியணிந்த தலைகளை அடுப்பாகக் கோலி அவ்வடுப்பின் மேல் வீரர்களுடைய தொடியணிந்த கைகளை அகப்பைகளாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊனாகிய சோற்றினை வயின் அறிந்து ஊட்ட-செவ்விதெரிந்து பேய்களுக்கு ஊட்டும்படி சிறப்பு ஊன் கடியினம் செங்கோல் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-இவ்வாறு சிறப்பான ஊனாகிய உணவினை உண்டு மகிழ்ந்த அப் பேய்க்கூட்டங்கள் தனது செங்கோன்மை பிறழாவண்ணம் செய்த வெற்றியினாலே மறக்களமாகிய போர்க்களத்தையும் எமக்கு விருந்தூட்டி அறக்களமாகச் செய்தவனாகிய செங்குட்டுவன் நீடூழி வாழ்வானாக! என்று வாழ்த்தும்படி மறக்களம் முடித்த வாய்வாள் குட்டுவன்-வடநாட்டின்கண் தனது மறக்கள வேள்வியைச் செய்துமுடித்த வெற்றிவாய்த்த வீரவாளை ஏந்திய சேரன் செங்குட்டுவன் என்க.

(விளக்கம்) முடித்தலை............ஊட்ட என்னும் இப் பகுதியோடு

ஆண்டலையணங்கடுப்பின், வய வேந்த ரொண் குருதி. சினத்தீயிற் பெயர்பு பொங்கத், தெறலருங் கடுந்துப்பின், விறல் விளங்கிய விழுச்சூர்ப்பிற் றொடித் தோட்கை துடுப்பாக ஆடுற்றவூன் சோறு, நெறியறிந்த கடிவாலுவன், அடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர, (மதுரைக், 29-38) எனவரும் பகுதியை ஒப்பு நோக்குக. முடித்தலை என்றது பகை மன்னர் தலையை அடுப்பிற்கு வன்மை வேண்டுதலின் முடித்தலை எனல் வேண்டிற்று. தாழி-பானை. வாலுவன்-சமையற்காரன்; மடையன் என்பதும் அது. வயின் அறிதல்-செவ்விதெரிதல்;(பதம் பார்த்தல்) சிறப்பூண்-விருந்துணவு. கடி-பேய். பேய்கள் போர்களத்தையும் தங்களுக்கு ஊன் சோறு வழங்கு மாற்றால் அறக்களமாகச் செய்தான்; என்று வாழ்த்தின என்ற படியாம்.

செங்குட்டுவன் கல் கால் கொள்ளுதல்

248-254: வடதிசை..............காவலனுங்கென்

(இதன் பொருள்) வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல்வேல்தானைப் படை பல ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடே அவ் வடவாரிய மன்னர் பலரையும் போர் செய்து வென்று தாம் மேற்கொண்டு சென்ற வினையையும் முற்று வித்த பலவாகிய வேல் முதலிய படைக்கலங்களையுடைய மறவர்களோடே தேர் முதலிய படைகள் பலவற்றையும் செலுத்தி; கால் தூதாளரை-மேலும் காற்றுப்போல விரைந்து செல்லும் தூதுவர்களை அழைத்து நீவிர் விரைந்துபோய்; வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை போற்றிக் காமின் என-வடதிசையின் கண் இமயமலைச் சாரலிலே வாழ்கின்ற தமக்குரிய நான்கு மறைகளையும் ஓதி அவ்வாறு ஒழுகுமாற்றால் உலகத்திலுள்ள மன்னுயிர்களை நன்கு பாதுகாக்கின்ற அந்தணர்களது வேள்விக் குழியின்கண் வளர்கின்ற வேள்வித் தீயானது ஒருபொழுதும் அவியாத குளிர்ந்த பெரிய வாழ்க்கையை நம்மனோர் இடையூறு செய்யாவண்ணம் பேணிக் கொள்ளுமின் எனவும் சொல்லிவிட்டமையால்; காவலன் ஆங்கு பொன்கோட்டு இமயத்து-சேரமன்னனாகிய செங்குட்டுவன் பொன்னிறமாக மின்னுகின்ற கோடுகளைஉடைய இமயமலையின் கண்; பொரு அறு பத்தினிக் கல்கால் கொண்டனன்-தனக்குவமை யில்லாத திருமா பத்தினியாகிய கண்ணகிக் கடவுளுக்குத் திருவுருச் சமைத்தற்கு வேண்டிய கல்லை அடித்து எடுத்துக் கைப்பற்றினன் என்க.

(விளக்கம்) வில்லவன் கோதை என்பான், செங்குட்டுவனுக்கு முதலமைச்சன் ஆவான் என்பது, காட்சிக் காதையினும்(151) கண்டாம். வென்று வினை முடித்த தானை என்றது கனகவிசயர் முதலிய வடநாட்டரசரை வென்று தனது வஞ்சினத்தை முடித்த பேராற்றல் படைத்த தானை என்பது தோன்ற நின்றது.

இனி, நீலகிரியின் பக்கத்தில் தான் பாடி வீட்டின்கண் வீற்றிருந்த பொழுது விசும்பில் சென்ற சாரணர் தன் முன் வந்து தன்பால் அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்னன் காத்தல் நின்கடன் என்று ஓம்படை செய்தமையை நினைவு கூர்ந்து தன் படை மறவரால் அவ்வந்தணருக்குத் தீங்கு நேராவண்ணம் தூதரை ஏவினன் என்றவாறு. இதனால் செங்குட்டுவனுடைய நினைவாற்றலும் கடமையுணர்ச்சியும் பொச்சாப்பின்மையும் ஆகிய நற்பண்புகள் விளங்குதல் உணர்க. பொருவது பத்தினி என்றது. உலகிலுள்ள பத்தினி மகளிருள் வைத்தும் தனக்குவமையாவார் ஒருவரும் இல்லாத திருமாபத்தினி என்பதுபட நின்றது.

பா-நிலமண்டில ஆசிரியப்பா

கால்கோட் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #35 on: February 28, 2012, 08:32:37 AM »
27. நீர்ப்படைக் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது செங்குட்டுவன் இமய மலையினின்றும் எடுத்துக் கொணர்ந்த கல்லைக் கங்கைப் பேரியாற்றின்கண் நீர்ப்படை செய்தல் என்னும் சடங்கினை நிகழ்த்திய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு.

இதன்கண் செந்தமிழ் நாட்டரசர் ஆற்றலறியாது இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் ஆகிய இரண்டு அரசர்களின் முடிமேல் பத்தினிக்கல்லை ஏற்றுவித்துக் கங்கையாற்றின்கண் நீர்ப்படை செய்தலும் கங்கையின் தென்கரையில் வந்து படை வீட்டில் வீற்றிருந்து, நிகழ்ந்த போரின்கண் விழுப்புண் பட்டுத் துறக்க மெய்திய மறவர்களுடைய மைந்தர்களுக்குப் பொன்னாலியன்ற வாகைப்பூக்களை வழங்கி இருத்தலும், அங்கு வந்த மாடலன் என்னும் பார்ப்பனனால் தமிழ் நாட்டில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து கொள்ளுதலும் அப் பார்ப்பனனுக்குத் துலாபாரம் புகுதல் என்னும் பெருந்தானத்தைச் செய்தலும் தான் சிறை பிடித்து வந்த கனக விசயரைத் தன்னோடொத்த தமிழரசராகிய சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வருமாறு தன் கோத்தொழிலாளரொடு அம் மன்னரைப் போக்குதலும் பின்னர்த் தன் தலை நகரத்திற்குச் செல்லுதலும் பிறவும் கூறப்படும்

நீர்ப்படை என்பது, புறத்திணைத்துறைகளுள் ஒன்று. அது போரின்கண் புறங்கொடாது நின்று விழுப்புண் பட்டு விண்ணகம் புக்க வீரர்களை வழிபடுதற் பொருட்டுக் கல் எடுத்து அக் கல்லினைப் புண்ணிய நீரின்கண் மூழ்குவித்துத் தூய்மை செய்தலும், பின்னர் அக் கல்லின்கண் அவ் வீரருடைய பெயரும் பீடும் எழுதி நிறுத்தி மங்கல நீராட்டுதலும் ஆம்.

வீர மறவர்க்கியன்ற இம்முறை வீர பத்தினியாகிய கண்ணகிக்கும் பொருந்துமென்று கருதிச் செங்குட்டுவன் தனது பேராண்மை தோன்ற இமயத்தினின்றும் கொணர்ந்த அக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்தனன் என்றுணர்க.

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்  5

அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;  10

வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுளை 15

நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
மன் பெரும் கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும்,  20

பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து,  25

வானவ மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர்;
உலையா வெஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தலையும் தோளும் விலை பெறக் கிடந்தோர்;
நாள் விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து,
வாள் வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்;  30

குழிக் கண் பேய்மகள் குரவையின் தொடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாளொடு மடிந்தோர்;
கிளைகள்- தம்மொடு, கிளர் பூண் ஆகத்து
வளையோர் மடிய, மடிந்தோர்; மைந்தர்-
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய,  35

தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்;
திண் தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழ,
புண் தோய் குருதியிற் பொலிந்த மைந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மணி முடிக் கருந் தலை,
கூற்றுக் கண்ணோட, அரிந்து களம் கொண்டோர்;  40

நிறம் சிதை கவயமொடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பெற, வந்த போர் வாள் மறவர்-
வருக தாம் என, வாகைப் பொலந் தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்து,  45

பாடு துறை முற்றிய கொற்ற வேந்தன்,
ஆடு கொள் மார்போடு, அரசு விளங்கு இருக்கையின்;
மாடல மறையோன் வந்து தோன்றி,
வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல் - பாணி கனக- விசயர்- தம்   50

முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க! என-
பகைப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நகைத் திறம் கூறினை, நான்மறையாள!
யாது, நீ கூறிய உரைப் பொருள் ஈங்கு? என-  55

மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்:
கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன்  60

மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக் களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள்.  65

இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்
மா முனி பொதியின் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின்  70

வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்
வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்; 75

அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ? என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்  80

போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
என்னோடு இவர் வினை உருத்ததோ? என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு  85

என் பதிப் பெயர்ந்தேன் என் துயர் போற்றிச்,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி,  90

மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்; 95

துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;  100

தானம் புரிந்தோன் தன் மனைக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு. நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும்  105

கணிகையர் கோலம் காணாதொழிக என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோ ர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்;  110

மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு! என-
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை,
மன்னவன் இறந்த பின், வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என-  115

நீடு வாழியரோ, நீள் நில வேந்து! என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்;  120

வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து,  125

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞாற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,  130

உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட   135

ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என- 140

மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க,  145

அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன்,
எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க! என்று ஏத்த-  150

நெடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும்பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்  155

சித்திர விதானத்துச், செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு  160

செங்கோல் தன்மை தீது இன்றோ? என-
எம் கோ வேந்தே, வாழ்க! என்று ஏத்தி,
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்
வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்;  165

குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க,
அரிந்து உடம்பு இட்டோ ன் அறம் தரு கோலும்;
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை, செல்லற் காலையும்,  170

காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று
அரு மறை முதல்வன் சொல்லக் கேட்டே-
பெருமகன் மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், தன் நிறை  175

மாடல மறையோன் கொள்க என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க என்று ஏவி-
தாபத வேடத்து உயிர் உய்ந்துப் பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்;   180

சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை,  185

பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞாற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை   190

இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் கொள்ளா அளவை, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடைப்
பயில் இளந் தாமரை, பல் வண்டு யாழ்செய,
வெயில் இளஞ் செல்வன் விரி கதிர் பரப்பி,  195

குண திசைக் குன்றத்து உயர்மிசைத் தோன்ற;
குட திசை ஆளும் கொற்ற வேந்தன்
வட திசைத் தும்பை வாகையொடு முடித்து,
தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிலை நிவந்து  200

கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய,  205

மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம்  210

அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் சென்று,
பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; 215

நறு மலர்க் கூந்தல் நாள் அணி பெறுக என-
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,  220

வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
வட திசை மன்னர் மன் எயில் முருக்கிக்  225

கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்  230

தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்  235

முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டு மிசை இருந்து,
வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர் என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,  240

கோவலர் ஊதும் குழலின் பாணியும்
வெண் திரை பொருத வேலை வாலுகத்துக்
குண்டு நீர் அடைகரைக் குவை இரும் புன்னை,
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து  245

வழங்கு தொடி முன்கை மலர ஏந்தி,
வானவன் வந்தான், வளர் இள வன முலை
தோள் நலம் உணீஇய; தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம் எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும்  250

ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள, 255

உரை

செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது

1-13: வடபேரி..............செங்குட்டுவன்

(இதன் பொருள்) செறிகழல் வேந்தன்-செறியக் கட்டிய வீரக்கழலை உடைய மன்னனாகிய சேரன் செங்குட்டுவன்; வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின் கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்-வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையின் கண் மழை தருவதற்கியன்ற பெருஞ் சிறப்பினை உடைய கடவுளாகிய வீரபத்தினிக்குப் படிவம் சமைத்தற்கு வேண்டிய கல்லை வரை செய்து கைக்கொண்ட பின்னர்; சினவேல் முன்பின் செருவெம் கோலத்துக் கனகவிசயர்தம் கதிர்முடி-ஏற்றி-வெகுளுதற்குக் காரணமான வேற்படையையும் ஆற்றலையும் போர் செய்தற்குரிய வெவ்விய கோலத்தையும் உடைய கனகனும் விசயனுமாகிய அவ்வரசர் ஒளிபொருந்திய முடிக்கலனணிந்த தலையின்மேல் ஏற்றிவைத்து; செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக-கொலைத்தொழிலை உடைய பழையவனாகிய கூற்றுவன் தான் செய்துவருகின்ற அக் கொலைத் தொழில் மிகும் படி; உயிர்த்தொகை உண்ட-இவ்வுலகத்து உயிர்க்கூட்டங்களை உண்டொழித்த போர்கள்; ஒன்பதிற்று இரட்டி என்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் கூட்டி ஈண்டு நீர் ஞாலம் எண் கொள-பதினெட்டு என்று ஓர் எண்ணை நிறுத்தி அதனோடு யாண்டினையும் திங்களையும் நாளையும் நாழிகையையும் கூட்டிக் கடல்சூழ்ந்த இவ்வுலத்திலுள்ள மாந்தர்கள் எண் குறிக்கும்படி; தென் தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை-தென் திசைக்கண்ணதாகிய தமிழகத்து மறவர்களுடைய பேராற்றலின் சிறப்பினை அறியாமையால் அக் கனகவிசயருக்குத் துணையாக வந்து போர்புரிந்த உத்தரன் முதலிய வடவாரிய மன்னரும்; வருபெருந்தானை உயிர்த்தொகை மறக்கள மருங்கின் ஒரு பகல் எல்லை உண்ட செங்குட்டுவன்-அம் மன்னரோடு வந்த நாற்பெரும் படைகளும் ஆகிய உயிர்க் கூட்டங்களைப் போர்களத்தின்கண் ஒரு நாளினது ஒரு பகலினுள்ளும் பதினெட்டும் நாழிகைக்குள் கொன்று குவித்த சேரன் செங்குட்டுவன் என்க.

(விளக்கம்) பேரிமயம்-மலைகளுள் வைத்துப் பெரிய மலையாகிய இமயம் என்றவாறு. வான்: ஆகுபெயர்; மழை என்க. துறக்கம் தரும் சிறப்பு என்பது சிறப்பின்று. கனகவிசயர் முடியின்மேல் கல்லேற்றி வருகுவல் என்பது தான்செய்த வஞ்சினமாதலின் அவ்வாறே அவ்வரசர் முடிமேல் கல்லேற்றினன் என்பது கருத்து. தமிழாற்றல்-தமிழ் மறவர் போராற்றல்-ஆரியமன்னரும் அவரொடு வருபெரும்-தானையும் ஆகிய உயிர்தொகையை உண்ட என்க. திருமாலாகிய செங்குட்டுவன் கூற்றுவன் தொழில் பெருகும்படி உயிர்த்தொகையை உண்ட போர்கள் நான்கு. அவற்றுள் முதலாவது பதினெட்டு யாண்டுகளிலும், இரண்டாவது பதினெட்டுத் திங்களினும், மூன்றாவது பதினெட்டு நாளினும், நான்காவது பதினெட்டு நாழிகையினும் நிகழ்ந்தன என்று உலகத்தார் கூறும்படி வடவாரியரோடு செய்த போர் பதினெட்டு நாழிகையில் முடிவுற்றது என்பது கருத்து, எனவே இது பூவை நிலை என்னும் ஒருபுறத்திணைத்துறை என்றுணர்க, செயிர்த்தொழில் முதியோன் என்றது கூற்றுவனை திருமால் செய்த போர்களாவன :

1-மோகினியாகித் தேவாசுரப் போரை மூட்டி நிகழ்த்தியது.
2-இராமனாகி இலங்கையில் அரக்கரோடு செய்த போர்.
3-கண்ணனாகி நிகழ்த்திய பாரதப்போர்.
4-செங்குட்டுவனாகி வடவாரியரோடு செய்த போர். இவை நிரலே பதினெட்டு யாண்டும் திங்களும் நாளும் நாழிகையும் ஆகிய காலத்தில் நிகழ்ந்தன என்பது கருத்து.

செங்குட்டுவன் பத்தினிக் கல்லைக் கங்கையில் நீர்ப்படை செய்து தென்கரை எய்துதல்

13-24: தன்சினவேல்............புக்கு

(இதன் பொருள்) தன்சின வேல் தானையொடு கங்கைப் பேர்வாற்றுக் கரை அகம் புகுந்து-(செங்குட்டுவன்) தனது வெகுளி மிக்க வேல் ஏந்திய போர் மறவர் முதலிய பெரும் படையோடு அவ் வடதிசையினின்றும் மீண்டு கங்கை என்னும் பேரியாற்றினது கரையகத்தே வந்தெய்தி; பத்தினிக் கடவுளை நூல் திறன் மக்களின் நீர்ப்படை பால்படு மரபின் செய்து-திருமாபத்தினிக்குச் சமைத்த கடவுள் படிமத்தை மெய் நூற் கல்வித்திறன் மிக்க அந்தணர்களைக் கொண்டு நீர்ப்படுத்தும் பகுதியின்பாற்பட்ட முறைமையோடே தெய்வத் தன்மைமிக்க அக் கங்கையாற்றிலேயே நீப்படுத்துதலாகிய மக்கலச் சடங்கினைச் செய்து முடித்துப் பின்னர்; மன் பெருங்கோயிலும் மணிமண்டபங்களும் பொன்புனை அரங்கமும் புனைபூம் பந்தரும்-மன்னன் கொலுவீற்றிருத்தற்குரிய பெரிய அத்தாணி மண்டபமும் அழகிய பிறநண்டபங்களும் பொன்னால் அழகு செய்யப்பட்ட கலை அரங்கங்களும் அழகு செய்யப்பட்ட பூங்கொடிப் பந்தர்களும்; உரிமைப் பள்ளியும் விரிபூஞ்சோலையும் திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும்-அரசர்குரிய துயில்கொள்ளும் பள்ளி யாரையும் அவர் விளையாடுதற்குரிய பரந்த பூம்பொழிலும் நீராடுதற்குரிய தாமரை மலரை உடைய நீர்நிலையும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தற்குரிய மன்றமும்; பேர்இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்-பெரும்புகழ் பெற்ற மன்னர் தங்கியிருத்தற்கு வேண்டுவனவாகிய பிறவும்; ஆரிய மன்னர் அழகுஉற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை ஆங்கண்-தன்பால் நட்புரிமை உடைய ஏனைய ஆரிய மன்னர்கள் ஒருங்கு குழுமித் தன் பொருட்டாக அழகுமிகும்படி அமைத்து வைத்துள்ள தெளிந்த நீரை உடைய அக் கங்கையாற்றினது தென்கரையாகிய அவ்விடத்தே; வெள்ளிடைப்பாடி வேந்தன் புக்கு-ஒரு வெட்டவெளியின் கண்ணதாகிய படவீட்டின்கண்ணே அச் சேரன் செங்குட்டுவன் புகுந்தருளி, என்க.

(விளக்கம்) நீர்ப்படை பாற்படு மரபின் செய்து எனக் கூட்டுக. நூற்றிறன் மாக்கள் என்றது சடங்கறிந்த அந்தணரை. பெருங்கோயில் என்றது அத்தாணி மண்டபத்தை. மணிமண்டபங்கள் என்றது அரசர்க்கு வேண்டிய பிற மண்டபங்களை. அரங்கம் என்றது இசை இயல் முதலிய கலைமன்றங்களை. உரிமைப்பள்ளி என்றது அரசன் புறப் பெண்டிர் பணிசெய்யுமாறு துயிலும் பள்ளி அறையை. போர்மேற் சென்ற அரசர்க்குப் புறப்பெண்டிர் பணிசெய்தலை முல்லைப் பாட்டில் காண்க, வரிகாண் அரங்கம்-கூத்தாடல் காணும் இடம். ஆரிய மன்னர் செங்குட்டுவனோடு கேண்மை ஆரிய மன்னர்கள் வெள்ளிடைப்பாடி-வெட்டவெளியிலே கட்டி அமைத்த படவீடுகள் (கூடாரங்கள்)

செங்குட்டுவன் போரில் விழுப்புண் பட்டு மடிந்த மறவர் மைந்தர்க்குப் பரிசில் நல்குதல்

25-34: நீணில.......மைந்தர்

(இதன் பொருள்) நீள் நில மன்னர் நெஞ்சு புகல் அழித்து வானவ மகளிரின் வதுவை சூட்டயர்ந்தோர்-நெடிய நில உலகத்தை ஆளுகின்ற பகை மன்னருடைய நெஞ்சின்கண் செருக்கினை யொழித்து அப் பகைவருடைய படைக்கலன்களால் விழுப்புண் பட்டு உயிர் நீத்து வீரமறவர்க்குரிய துறக்கமெய்தி ஆங்கு வானவர் மகளிரால் மணமாலை சூட்டப்பெற்ற மறவரும்; உலையா வெம்சமம் ஊர்ந்து அமர் உழக்கித் தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர்-புறங்கொடாத வெவ்விய பகைவருடைய போர்க் களத்தின்கண்ணே தமியராய் முன்னேறிச்சென்று தம் போராற்றலாலே பகைவரைப் பெரிதும் கலக்கி அப் பகைவருடைய வாளேறுண்டு தம் தலையும் தோளும் துணியுண்டு அவை விலைபெறும்படி களத்திலே மாண்டு கிடந்த மறவரும்; நாள் விலைக் கிளையுள் நல் அமர் அழுவத்து வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்- தமது வாழ்நாளைப் புகழுக்கு விலையாகக் கொடுக்கின்ற தம்மை ஒத்த மறக்குடிப் பிறந்த தம் உறவினராகிய மறவர்களோடே கூடிப் பெரிய போர்க்களத்தினூடே புகுந்து வாட்போரை வெற்றியோடே செய்து முடித்து வீரத்தோடே புறக்கிடாது நின்று உயிர்துறந்த மறவோரும்; குழி கண் பேய்மகள் குரவையில் தொடுத்து வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்-உள்குழிந்த கண்ணையுடைய பேய்மகளிர் மகிழ்ந்து ஆடுகின்ற குரவைக் கூத்தின்கண் தாம் பாடுகின்ற பாட்டிற்குப் பொருளாகும்படி தம் புகழைப் புனைந்து தம் கால்வழித் தோன்றல்களையும் வாழ்த்தும்படி கைவாளினோடு போர்க்களத்திலே மடிந்தொழிந்த மறவர்களும்; கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்-தம் சுற்றத்தாரோடு ஒளிர்கின்ற அணிகலன் அணிந்த உடம்பினோடு வளையலணிந்த தம் காதலிமாரும் இறந்தொழியும்படி போர்க்களத்திலே மடிந்த மறவருடைய மைந்தரும் என்க.

(விளக்கம்) மன்னர்-பகை மன்னர். புகல்-செருக்கு. போர்க்களத்திலே புறமிடாது நின்று பட்ட மறவரை வானவர் மகளிர் பெரிதும் காதலித்து மணமாலை சூட்டி வரவேற்பர் என்பதுபற்றி இறந்துபட்ட மறவரை வானவ மகளிரின்..........அயர்ந்தோர் என்றளர். உலையா-புறங்கொடாத. ஊர்ந்தமர் உழக்குதல்-அமரில் முன்னேறிச் சென்று பகைவரைக் கலக்குதல். புறக்கிடாமையால் மறத்தொடு முடித்தோர் என்றார், தாம் மடிந்தமை கேட்டால் அப்பொழுதே தம் கிளைஞரும் காதலிமாரும் மடிவர் என்பது அறிந்திருந்தும் அவர் பொருட்டுப் புறக்கிடாமல் வீரத்தின் பொருட்டு மடிந்த மறவருடைய மைந்தர் என்றவாறு.

இதுவுமது

35-47: மலைத்து............இருக்கையின்

(இதன் பொருள்) மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர்-போர்க்களத்தின்கண் தம்மோடு எதிர்த்து முன்னேறிவந்த பகை மறவர் தமது வாளோடு மடிந்து வீழும்படி போர் செய்து தூசிப்படையிலேயே வாகை மாலையைத் தம் முடியில் அணிந்துகொண்ட மறவரும்; திண்தேர்க் கொடுஞ்சியொடு தேரோர்வீழப் புண்தோய் குருதியில் பொலிந்த மைந்தர்-திண்ணிய தமது தேரினது இருக்கையின் கண் இருந்தவாறே பகைவராகிய தேர்மறவர் தமது வாளேறு பட்டுத் தலை துணிப்புண்டு வீழ்தலாலே அம் மறவருடைய புண்ணினின்றும் குதித்த குருதி படுதலாலே பொலிவுற்றுத் திகழ்ந்த மறவரும்; மாற்று அருஞ் சிறப்பின் மணிமுடிக்கருந் தலைக் கூற்றுக் கண்ணோட அரிந்து களங்கொண்டோர்-விலையிடுதற்கரிய சிறப்பினை உடைய மணிகள் அழுத்தப்பெற்ற முடிக்கலன அணிந்த மாற்றரசருடைய கரிய தலையைக் கையாற் பற்றிக் கூற்றுவனும் இரங்கும்படி தம் கைவாளால் அரிந்து போர்களத்தின்கண் தம் கையிற் கொண்டுவந்த மறவரும் நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம் பெறவந்த போர்வாள் மறவர்தாம் வருக என-பகைவர் படைக்கலன்பட்டு நிறம் சிதைந்தொழிந்த கவசத்தினூடே மார்பிற்பட்ட புண் மிகவும் ஆழ்ந்து தம் முதுகிலே தோன்றும்படி போர் செய்து மீண்டு வந்த போர்வாள் ஏந்திய மறவரும் ஆகிய இவர் தாம் வருவாராக என்று அழைத்து; வாகைப் பொலந்தோடு-அவர் பெற்ற வெற்றிக்குப் பரிசிலாகப் பொன்னால் செய்யப்பட்ட வாகைப் பூமாலைகளை; பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து-சிறப்பு நாளிலே பரிசில் வழங்குதற்கென வரையறை செய்தபொழுது கழிந்த பின்னரும் நெடும்பொழுது இருந்து வழங்கி; தோடு ஆர்போந்தை இதழ் நிரம்பிய பனம்பூ மாலையைத் தும்பைப்பூ மாலையோடு ஒருசேர அணிந்து புலவர் பாடுதற்கு ஏற்ற போர்த்துறையின் வினைகளைச் செய்து முடித்த வெற்றியை உடைய அச் செங்குட்டுவன் வீற்றிருந்த ஆடுகொள் மார்போடு அரசு விளக்கு இருக்கையின்-வெற்றிகொண்டு பொலிந்த மார்பினோடு தனது அரசுரிமையும் இனிது விளங்காநின்ற தனது கொலுவிருங்கைப் பொழுதில் என்க.

(விளக்கம்) தலைத்தாள் வாகை-தூசிப்படையில் நின்றே பகை வரைப் புறங்கண்டு வாø சூடி வருதல். கொடுஞ்சி-தாமரைப்பூ வடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டின் நடுவண் நிறுத்திய இருக்கை . தேர் மறவர் இதன்கண் இருத்தல் மரபு. தேரோர்-தேர் மறவர். மணிமுடிக் கருந்தலை என்றது அரசர் தலை என்றற்கு. கூற்றும் கண்ணோட-எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்காது. தலையை அரிந்து களத்தில் வெற்றி கொண்டோர் என்க. நிறம் இரண்டனுள் முன்னது வண்ணம்; பின்னது மார்பு. பொலம்-பொன். அமயம் பொழுது. புலவர் பாடும் போர்த்துறை என்க. ஆடு-வெற்றி.

மாடலன் வருகை

48-55: மாடல.....ஈங்கென

(இதன் பொருள்) மாடல மறையோன் வந்து தோன்றி-மாடலன் என்னும் பெயரை உடைய அந்தணன் அச் செங்குட்டுவன் முன்னர் வந்து தோன்றி; வாழ்க எம்கோ-நீடூழி வாழ்வானாக எங்கள் மன்னர் பெருமான் என் வாழ்த்தி அரசனை நோக்கிக் கூறுபவன்; முதுநீர் ஞாலம் அடிப்படுத்தாண்ட அரசே-கடல்சூழ்ந்த நில உலகத்தை முழுவதும் வென்று அடிப்படுத்திக்கொண்டு அருளாட்சி செய்த அரசனே ஈதொன்று கேள்; மாதவி மடந்தை கானற்பாணி கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது-மாதவி என்னும் இளமையுடைய நாடகக் கணிகையானவள் கடற்கரையினிடத்துப் பண்டொருநாள் பாடிய கானல்வரிப் பாட்டானது இதோ இங்கிருக்கின்ற கனகனும் விசயனுமாகிய இவ்வரசருடைய முடிகணிந்த தலையை நேரித்தது நினைக்கும்பொழுது எனக்கு வியப்பூட்டுவதொன்றாய் இருந்தது, நீ நீடூழி வாழ்க என்று கூறா நிற்ப; அது கேட்ட செங்குட்டுவன் மாடலனை நோக்கி நான் மறையாள் பகைப்புலத்து அரசர்பால் அறியாநகைத்திறம் ஈங்குக் கூறினை-நான்கு மறைகளையும் கற்றுணர்ந்த அந்தண, நீ நம் பகை நாட்டரசர் பலரும் அறிந்திலாத நகைச்சுவை உடைய தொரு செய்தியை இவ்விடத்தே கூறினாய்; ஈங்கு நீ கூறிய உரைப்பொருள் யாது என-இவ்விடத்தே நீ சொன்ன அச் சொற்றொடரின் பொருள் தான் என்னையோ நீயே கூறுவாயாக என்று அம் மன்னவன் கூற என்க.

(விளக்கம்) கானற்பாணி-கடற்கரையிலிருந்து பாடிய பாட்டு முதுநீர்-கடல். ஒரு மடந்தை பாடிய கானல்வரிப் பாட்டு அரசருடைய முடித்தலையை நெரித்தது, என்ற மாடலன் கூற்று பேதைமையுடையது போல் தோன்றி நகைச்சுவை யுடைத்தாதலுணர்க. இது பிறன் பேதைமை நிலைக்களனாகத் தோன்றிய நகை என்க.

மாடலன் விடை

56-65: மாடல.......ஏறினன்

(இதன் பொருள்) மாடல மறையோன் மன்னவர்க்கு உரைக்கும் அது கேட்ட மாடலன் என்னும் அந்தணன் அச் செங்குட்டுவனுக்குச் சொல்வான்; குடவர் கோவே-சேர நாட்டார் தம்முடைய செங்கோல் வேந்தனே; கானல் அம்தண் துறை கடல் விளையாட்டினுள் மாதவி மடந்தை வரிநவில் பாணியொடு-சோழ நாட்டுக் கடற்கரைச் சோலையையுடைய அழகிய குளிர்ந்த துறையின்கண் நிகழ்ந்த கடல் விளையாட்டின்கண் மாதவி என்னும் நாடகக் கணிகை இசைப்பாட்டாகப் பாடிய கானல்வரிப்  பாட்டுக் காரணமாக ; ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ-நிகழ்ந்த ஊடற்பொழுதின்கண் தனது முற்பிறப்பிலே செய்த தீவினையானது பயனளிப்பதாக அவன் உள்ளத்தே எண்ணமாகிய உருவத்தைக்கொண்டு எழுதலாலே; கூடாது பிரிந்து-மீண்டும் அம் மாதவியுடன் கூடாமல் அவளைத் துவரத்துறந்து; குலக்கொடி தன்னுடன் மாடமூதூர் மதுரை புக்கு-உயர்ந்த குலப் பிறப்பாட்டியாகிய தன் மனைவியாகிய கண்ணகியுடன் மாடமாளிகை களையுடைய பழைய நகரமாகிய மதுரையின்கண் வந்து புகுந்து; ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்த-அந் நகரத்தின்கண் இலை விரவிப் புனைந்த வேப்பந்தாரை அணிந்த பாண்டியனாகிய நெடுஞ்செழியன் அழகிய வானுலகத்தே புகும்படி; கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி-கொலைக்களத்திலே இறந்தொழிந் கோவலன் என்னும் வணிகனுடைய வாழ்க்கைத் துணைவியாகிய அக் கண்ணகி; நின்நாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்-நினக்குரிய சேர நாட்டிலே வந்து புகுந்து வானவர் எதிர்கொள வான் உலகின்கண் ஏறியதன்றியும் தான் தெய்வமாய் வடநாட்டை ஆளுகின்ற கனகனும் விசயனுமாகிய இம் மன்னர்களுடைய அழகிய முடியின்மீதும் கல்லின்கண் திருவுருவம்கொண்டு ஏறினள் அல்லளோ இதுவே யான் குறித்துரைத்த பொருள், என்றான் என்க.

(விளக்கம்) கடல் விளையாட்டு என்றது பூம்புகார் இந்திரவிழாவினிறுதியில் நிகழ்ந்த கடல் விளையாட்டை, வரிநவில்பாணி-வரிப்பாட்டாகப் பாடிய பாட்டு, வடவாரிய மன்னர் அறியாமைப்பொருட்டு நெடுஞ்செழியன் செய்தியைப் பெரிதும் மறைத்து இலைத்தார் வேர்தன் எழில்வான் எய்த என இவ்வேந்தணன் உரைக்கும் நலமுணர்க.

மாடலன் தன் வரலாறு செங்குட்டுவனுக்கு மொழிதல்

66-71: இன்னும்........சென்றேன்

(இதன் பொருள்) இகல் வேல் தடக்கை மன்னர் கோவே இன்னும் யான் வரும் காரணம் கேட்டு அருள்-வெற்றி வேலேந்திய பெரிய கையையுடைய வேந்தர் வேந்தே இன்னும் யான் இங்கு வருவதற்கு அமைந்த காரணம் வியத்தகும் ஒன்றேயாம், ஆதலால் அதனையும் கூறுவேன் திருச்செவி ஏற்றருளுக; ஊழ்வினைப் பயன்கொல்-அக் கோவலனுக்குப்போல எனக்கும் வந்தெய்திய பழவினையின் பயனேபோலும்! யானும்; மாமுனி பொதியின் மலை வலங்கொண்டு குமரியம் பெருந்துறையாடி மீள்வேன் சிறந்த-அகத்திய முனிவன் உறைகின்ற பொதிய மலையை வலம் வந்து வணங்கிக் குமரி என்கின்ற அழகிய பெரிய கடல்துறையிலே நீராடி மீண்டுவருவேன் எமது நாடுநோக்கிச் செல்லாமல்; உரைசால் சிறப்பின் வாள்வாய் தென்னவன் மதுரையிற் சென்றேன்-புகழ்மிக்க சிறப்பினையுடைய வென்றி வாய்த்த வாளையுடைய பாண்டிய மன்னனுடைய தலைநகரமாகிய மதுரையின்கண் சென்றேன், என்றான் என்க.

(விளக்கம்) குமரியில் நீராடி மீளுகின்ற நான் நேரே என்னூருக்கே சென்றிருக்கலாமல்லவோ, யான் செய்த ஊழ்வினை காரணமாக அங்ஙனம் செல்லாமல் மதுரைக்குச் சென்றேன் என இம்மறையோன் தன்னையே நொந்துகொள்கின்றான்.

மதுரை சென்றதனால் தனக்கும் தீவினை பல வந்துற்றமை கருதிக் கோவலனுக்கு ஊழ்வினை வந்தமையாலே மதுரைக்கு வந்தான் என்று கூறியவன் அந்நினைவு காரணமாக ஊழ்வினைப் பயன் கொல்யானும் மதுரையிற் சென்றேன் என்கின்றான்.

இதுவுமது

72-78: வலம்படு...........புக்கதும்

(இதன் பொருள்) வலம்படு தானை மன்னவன் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும்-வெற்றியுடைய படையையுடைய பாண்டிய மன்னனைத் தனது ஒற்றைச் சிலம்பினைச் சான்றுகாட்டி வழக்குரைத்து வெற்றிபெற்றாள் கண்ணகி என்னும் செய்தி கேட்டபொழுதே; தாது எரு மன்றத்து மாதரி எழுந்து கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான்-பூந்தாதுகளே எருவாகிக் கிடக்கும் ஊர் மன்றத்தின்கண் இருந்த மாதிரி என்னும் இடைக்குல மடந்தை துன்பம் பொறாளாய் அவ்விடத்தினின்றும் எழுந்து அந்தோ என் மகன் கோவலன் ஒரு சிறிதும் தீது செய்திலன் என்பது யான் நன்கறிவேன். நம் அரசன் மகனே செங்கோன் முறைமையின் தவறினான் என்பது தேற்றம்; இடைக்குல மாக்காள் குடையும் கோலும் பிழைத்த-தீதறியாத இடைக்குலத்தில் பிறந்த மக்களாகிய ஆயர்களே பண்டொரு காலத்தும் பிழை செய்தறியாத நம் மன்னவனுடைய வெண்கொற்றக் குடையும் வெம்மை செய்தது, செங்கோலும் வளைந்தொழிந்தது அவையேயன்றி; ஓ அடைக்கலமிழந்தேன் என-அந்தோ அடிச்சியும் பேணுதற்குரிய பெரியோர் தந்த அடைக்கலப் பொருளை இழந்துவிட்டேனே இனி யான் உயிர் வாழ்கில்லேன் என்று கதறி; இடையிருள் யாமத்து எரி அகம் புக்கதும்-அற்றைநாள் நள்ளிரவிலேயே தீயினுட் புகுந்து நன்றந்ததும்; என்க. 

(விளக்கம்) பண்டொரு காலத்தும் தோல்வி கண்டறியாத மன்னவன் இன்று தோற்றனன் என்று இரங்குவான் வலம்படுதானை மன்னவன் என்றாள். கண்ணகியின் கற்பின் திறத்தை வியப்பாள் அத்தகைய மன்னனைக் சேயிழை சிலம்பின் வென்றாள் என்றான். தாதெரு மன்றம் என்பது குரவைக் கூத்து நிகழ்ந்த இடத்தை பேணுதற்குரிய அடைக்கலத்தைப் பேணாது இழந்தேன் ஆதலின் கெடுக என் ஆயுள் என மாதிரி எரியகம் புக்கதும் என்க.

இதுவுமது

79-83: தவந்தரு...........பெயர்ந்தேன்

(இதன் பொருள்) தவந்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்-இங்ஙனமே தவத்தின் பயனை எல்லாம் தனது ஒழுக்கத்தினாலே காட்டித் தருகின்ற சிறப்பினை உடைய கவுந்தியடிகளாருக்கு, (கண்ணகி கோவலன் நெடுஞ்செழியன் மதுரைமாநகர் ஆகிய இவர்க்கெல்லாம் நிகழ்ந்தமை தெரிந்தபொழுது கண்ணகிக்கும் கோவலனுக்கும் உற்ற துன்பம் காரணமாக) எழுந்த வெகுளியை; நிவந்து ஓங்கு செங்கோல் நீள்நில வேந்தன் போகு உயிர் தாங்க-மிகவும் உயர்ந்து திகழ்கின்ற செங்கோன் முறைமையினையுடைய நீண்ட பாண்டிய நாட்டினை ஆளுகின்ற நெடுஞ்செழியனுடலினின்றும் தானே புறப்பட்டுப்போன அவனது உயிரின் பெருமை தணித்துவிட்டமையாலே தணிந்த; அப் பொறைசால் ஆட்டி என்னோடு இவர் வினை உருத்ததோ என-அந்தப் பொறுமை என்னும் சால்பினை ஆளுதலையுடைய கவுந்தியடிகளார் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இக் கண்ணகி கோவலருடைய பழவினை உருக்கொண்டுவந்து ஊட்டிற்றுப்போலும், ஆகவே அவர் துயரத்திற்கு யானும் ஒரு காரணமாகின்றேன் என்று வருந்தி; உண்ணத நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்-உண்ணத நோன்போடு இருந்து தம்முடம்பினின்றும் உயிரை அகற்றியதும்; பொன் தேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு உற்றதுமெல்லாம்-பொன்னாலியன்ற தேரை உடைய பாண்டியனுடைய மதுரை மாநகரத்தைத் தீயுண்டமையும் பிறவும் ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும்; ஒழிவு இன்று உணர்ந்து ஆங்கு என்பதிப் பெயர்ந்தேன்-ஒன்றும் ஒழிவில்லாமல் தெரிந்துகொண்டு பின்னர் யான் என் ஊருக்குச் சென்றேன் என்றான் என்க.

(விளக்கம்) கவுந்தியடிகளாரின் சினம் பாண்டியன் தன்தவற்றினை உணர்ந்தபொழுதே உயிர் நீத்தமை கேட்டு அவன்பால் இரக்கமாக மாறி விட்டமையின் அவனது உயிர் தாங்க என்றார். ஆயினும் கோவலனுடைய துன்பத்திற்குத் தானும் ஒரு கருவியானமையின் அத் துன்பத்திற்குரிய தீவினையென்று தன்பாலும் இருத்தல் வேண்டும் என்று கருதி அத்தீவினைக்குக் கழுவாயாக அடிகளாரும் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார் என்றுணர்க. என்னை? நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்(குறள்-320) என்பது திறவோர் காட்சி ஆதலின் என்க. 

இதுவுமது

86-97: என்துயர்...........விடவும்

(இதன் பொருள்) என் துயர் போற்றி-வேந்தர் பெருமானே! மதுரையின்கண் என் ஆருயிர் நண்பனாகிய கோவலன் முதலியோருக்கு நிகழ்ந்த துன்பம் பற்றி என் நெஞ்சில் தோன்றிய துன்பத்தை யான் ஒருவாறு தணித்துக்கொண்டேனாய் செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க-யான் சோழனுடைய பழைய நகரமாகிய காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் சிறந்தவராகிய அவருடைய இருமுது குரவரும் ஏனையோருமாகிய உறவினர்களுக்கும் கூறாநிற்ப; கோவலன் தாதை மைந்தற்கு உற்றதும் மடந்தைக்கு உற்றதும் செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு-இவ்வாற்றால் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவான் என்னும் வணிகர் பெருமகன், மகனாகிய கோவலனுக்கு எய்திய துன்பத்தையும் மருகியாகிய கண்ணகிக்கு எய்திய துன்பத்தையும் இவர்கள் வாயிலாய்ச் செங்கோன்மை தவறாத பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த அழிவினையும் கேள்வியுற்று; கொடுந்துயர் எய்தி-ஆற்றொணாத பெருந் துன்பத்தை அடைந்து; வான் பொருள் மாபெருந்தானமா ஈத்து ஆங்கு-தான் அறநெறி நின்று ஈட்டிய தனது சிறந்த பொருள் முழுவதனையும் உத்தம தானமாக வழங்கிவிட்டு அப்பொழுதே இல்லாம் துறந்துபோய்; இந்திர விகாரம் ஏழுடன் புக்கு-அந் நகரத்திலுள்ள இந்திரனால் அமைக்கப்பட்ட ஏழு அரங்குகளை உடைய தவப் பள்ளியில் புகுந்து; ஆங்கு அந்தர சாரிகள் பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று துறந்தோர் ஆறு ஐம்பதின்மர் தம்முன்-அப் பள்ளியின்கண் விசும்பின்கண் திரிகின்ற வித்தை கைவந்தவரும் தாம் பிறந்துள்ள இவ் வுடம்பிலிருந்தபடியே இனிப் பிறப்பு அற்றுப்போம்படி முயற்சி செய்து இவ்வுலக வாழ்க்கையைத் துறந்தவருமாகிய முந்நூற்றுவர் முனிவர்களுடைய முன்னிலையிலே தானும் துறவறத்தை மேற் கொள்ளா நிற்பவும்; துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாள் இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும்-அங்ஙனம் துறந்த மாசாத்துவான் மனைவியாகிய கோவலன் தாயும் தன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய் எல்லையற்ற துன்பத்தை எய்தி வருந்தி உடம்பினை நீத்து இறந்தொழியவும் என்க.

(விளக்கம்) செம்பியன்-சோழன். மூதூர்-காவிரிப்பூம்பட்டினம் சிறந்தோர்-நெருங்கிய சுற்றத்தார்-செங்கோல் வேந்தன் என்றது நெடுஞ்செழியனை. இந்திர விகாரம்-இந்திரனால் அமைக்கப்பெற்ற அரங்குகள். துறவி-துறவறம். இறந்த துயர்-எல்லைகடந்த துன்பம்.

இதுவுமது

98-102: கண்ணகி..............விடவும்

(இதன் பொருள்) கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணல் அம் பெருந்தவத்து ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து அறங்கொள்ளவும்-இங்ஙனமே கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன்றானும் துறவோர்க்குரிய கோலம் பூண்டு பெருமை மிக்க அழகிய பெரிய தவத்தையுடைய ஆசீவகர் பள்ளியுட்புகுந்து அவர் முன்னிலையில் தன் பொருளை எல்லாம் புண்ணியம் பயக்கும் தானமாக வழங்கி அவர்தம் அறத்தை மேற்கொள்ளா நிற்கவும்; தானம் புரிந்தோன் தன்மனைக்கிழத்தி நாள் விடூஉ நல்லுயிர் நீத்து-அவ்வாறு புண்ணியதானம் புரிந்தவனாகிய மாநாய்கனுடைய மனைவி தானும் இத் துயரம் பொறாளாய்த் தானே வாழ்நாளை விடுகின்ற தனது நல்லுயிரைத் துறந்து இறந்துபடா நிற்கவும் என்க.

(விளக்கம்) கண்ணகி தாதை-மாநாய்கன். கடவுளர் கோலம்-துறவோர் கோலம். ஆசீவகர்-சமண மதத்தில் ஒரு வகுப்பினர் இவர்க்குத் தெய்வம் மறகலி எனவும் நூல் நவகதிர் எனவும் கூறுவர். இம் மதத்தின் இயல்பை மணிமேகலை இருபத்தேழாம் காதையினும் நீலகேசியில் ஆசீவக வாதச்சருக்கத்தினும் (13) விரிவாகக் காணலாம். தானம் புரிந்தோன் மனைக்கிழத்தி என்றது கண்ணகியின் தாயை. துன்ப மிகுதியால் அவள் உயிர் அவள் முயற்சி இன்றியே புறப்படுதலின் நான் விடூஉ நல்லுயிர் என்றும் அதற்கு அவள் பெரிதும் உடன்படுதலின் நீத்து எனவும் ஓதினர்.

இதுவுமது

103-111: மற்றது......ஈங்கென

(இதன் பொருள்) மற்று அது கேட்டு மாதவி மடந்தை-கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த அச் செய்தியைக் கேள்வியுற்று மாதவியாகிய நாடக மடந்தை தானும்; நல் தாய் தனக்கு நல்திறம் படர்கேன்-தன்னை ஈன்ற தாயாகிய சித்திராபதிக்கு அன்னாய் யான் இனி நன்னெறியிலே செல்லத் தொடங்கி விட்டேன் அஃது எற்றுக்கெனின்; மணிமேகலையை வான் துயர் உறுக்குங் கணிகையர் கோலங் காணாது ஒழிக என-என் மகள் மணிமேகலையை மாபெரும் துன்பம் தருகின்ற பொல்லாத இந்த நாடகக் கணிகையர் கோலத்தின்கண் வைத்துக் காணாதொழியும் பொருட்டேயாம் என்றறிவுறுத்து; கோதை தாமம் குழலொடு களைந்து-தான் அணிந்திருந்த கோதையாகிய மலர் மாலையினைக் கூந்தலோடே ஒருசேரக் கலைந்துவிட்டு; போதித்தானம் புரிந்து; அறம் கொள்ளவும்-துறவறத்தை மேற்கொள்ளா நிற்பவும்; என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்-வேந்தர் பெருமானே! கோவலன் கண்ணகிக்கு நிகழ்ந்த இச் செய்தியை என் வாய்மொழி வாயிலாகக் கேட்டவர்களில் இறந்தொழிந்தோரும் பலர் இருத்தலால் அவர் இறப்பிற்குக் காரணம் என் வாய்மொழியே ஆதல் பற்றி அத் தீவினைக்கு யானும் ஒரு காரணமாகி அதனால் எனக்கு வந்தெய்திய தீவினையைப் போக்குதற் பொருட்டு; நல்நீர் கங்கை ஆடப் போந்தேன் புண்ணிய தீர்த்தமாகிய இக் கங்கைப் பேரியாற்றின்கண் நீராடுதற் பொருட்டு இப்பொழுது யான் இங்கு வந்துள்ளேன்; மன்னர் கோவே ஈங்கு வாழ்க என-வேந்தர் வேந்தே! இந் நில உலகத்தின்கண் நீடூழி வாழ்வாயாக! என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) நற்றாய்-மாதவியை ஈன்ற தாய்; சித்திராபதி நற்றிறம்-நன்னெறி; அஃதாவது துறவறம். கணிகையர் கோலம் தனக்கும் பெருந்துன்பம் விளைத்தமையால் இக் கோலம் என்னோடு முடிக. மணிமேகலைக்கு இவ் வாழ்க்கை வேண்டா என்னும் கருத்தால் இங்ஙனம் கூறினள். மணிமேகலை அருந்தவப்படுதல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் என மணிமேகலையினும் (2:55-7) மாதவி ஓதுதல் உணர்க. குழல்-கூர்தல். மாசாத்துவான் மனைவி முதலியோர் இறப்பிற்குத் தான் கூறிய செய்தியே காரணமாதல் பற்றி இத் தீவினையில் தனக்கும் பங்குண்டு என்று இம் மாடல மறையோன் கூறுகின்றான். எனவே இவன் தீவினைக்குப் பெரிதும் அஞ்சுதல் அறிக.

செங்குட்டுவன் மாடலனை வினாதல்

112-115: தோடார்................உரையென

(இதன் பொருள்) தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை-இதழ் நிரம்பிய பனம்பூவைத் தும்பைப்பூவோடு அணிந்த வஞ்சி மாநகரத்துச் சேரர் குலத் தோன்றலாகிய பெருந்தகைமையையுடைய அச் செங்குட்டுவன் அம் மறையோன் வாயிலாகச் சோழ நாட்டுச் செய்தி கேட்டவன் பாண்டிய நாட்டுச் செய்தியையும் கேட்க விரும்பி நான்மறையாளனே மதுரையின்கண்; மன்னவன் இறந்தபின் வளம் கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என-பாண்டியன் நெடுஞ்செழியன் அரசு கட்டிலில் துஞ்சிய பின்னர் வளம் பொருந்திய சிறப்பினையுடைய அப் பாண்டியனுடைய நாட்டின்கண் நிகழ்ந்த செய்தியை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கேட்ப என்க.

(விளக்கம்) வாடாவஞ்சி-வஞ்சி நகரத்திற்கு வெளிப்படை வானவர்-சேரர். மன்னவன் என்றது நெடுஞ்செழியனை நாடு ஆகுபெயர். நாடு செய்தது உரை என்றது நாட்டின்கண் நிகழ்ந்தவற்றைக் கூறுக என்றவாறு.

மாடல மறையோன் செங்குட்டுவனுக்குப் பாண்டியனாட்டுச் செய்தி கூறுதல்

116-126: நீடு வாழியரோ............கேட்டருள்

(இதன் பொருள்) நீள் நில வேந்து நீடு வாழி அரோ என-அது கேட்டு நெடிய இந் நிலவுலகத்தை ஆட்சி செய்கின்ற வேந்தர் பெருமான் நீடூழி வாழ்க என்று அம் மன்னனை வாழ்த்திய; மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்-மாடலன் என்னும் அந்தணன் செங்குட்டுவனுக்குச் சொல்லுவான்; நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்-பெருமானே! நின் மைத்துனனாகிய சோழன் பெருங்கிள்ளியொடு பொருந்தாமையினாலே தம்முள் ஒத்த ஒன்பது மன்னர்களும்; இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்-அப் பெருங்கிள்ளியின் கீழ்த் தரம் இளவரசராக இருத்தலைப் பொறாதவராய் அக் கிள்ளிவளவன் ஏவலையும் கேளாதவராய் நாட்டினுள் கலகம் விளைத்து, அவனுடைய வளம் பொருந்திய நாட்டினை அழித்தலையே தமக்குப் பெருமையென்று கொள்பவர் ஆதலாலே; ஒன்பது குடையும் ஒரு பகலொழித்து அவன் பொன்புனை திகிரி ஒரு வழிப்படுத்தோய்-அப் பகை மன்னர்களுடைய ஒன்பது குடையையும் ஒரு பகற்பொழுதிலேயே அழித்து நின் மைத்துனனாகிய அக் கிள்ளிவளவனுடைய பொன்னால் அழகு செய்யப்பட்ட ஆமைச்சக்கரத்தை ஒரு நெறியுருட்டச் செய்து வாழ்வித்தருளிய வள்ளலே; பழையன் காக்கும் குழை பயில் நெடுங்கோட்டு வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்-பழையன் என்னும் அரசனால் பாதுகாக்கப்பட்டிருந்த தளிர் மிகுந்த நெடிய கொம்புகளையுடைய அவனது காவல் மரமாகிய வேம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய உயர்ந்த வாள் வெற்றியை உடைய பனம்பூ மாலையைப் புனைந்த மலைநாட்டார் கோமானே கேட்டருளுக என்றான் என்க.

(விளக்கம்) மைத்துன வளவன்கிள்ளி என்பவனை, பெருங்கிள்ளி எனவும் பெருநற்கிள்ளி எனவும் வரலாற்று நூலாசிரியர் கூறுவர் பொருந்தாமையால் ஒத்த பண்பினர் என்க. இவ்வொன்பதின்மரும் இளவரசராயிருத்தலைப் பொறார் ஏவல் கேளார், எனவே இவர்கள் கிள்ளிவளவனுக்கு நெருங்கிய தாய்த்தார் என்பது பெற்றாம். இவர் தாயம் வேண்டிக் கலகமுண்டாகி நாட்டின் வளத்தை அழித்தனர் என்பதும், செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்கு மைத்துனனாதலின் தானே நேரிற் சென்று அவ்வொன்பதின்மரையும் அழித்து அக் கிள்ளிவளவனுக்கு அரசுரிமையை நிலைநாட்டினன் என்பதும் பாண்டிய மரபினனாகிய பழையன் என்பானுடைய காவல் மரத்தைச் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினன் என்பதுமாகிய பழைய வரலாற்றுண்மைகள் இம் மாடல மறையோன் மொழியால் பெற்றாம்.

இதுவுமது

127-140: கொற்கை......பெரிதென

(இதன் பொருள்) பொன் தொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர்-பொன்னால் பணிசெய்யும் பொற்கொல்லன் ஓராயிரவர் நம்முள் வைத்து ஒரு பொற்கொல்லன் தீமை செய்தமையால் நம் பழங்குடி பழிபூண்டது என்று நாணி; ஒரு முலை குறைத்த திருமாபத்தினிக்கு-ஒரு முலையைத் திருகி எறிந்த கண்ணகியாகிய அத்திருமா பத்தினித் தெய்வத்திற்கு; ஒரு பகல் எல்லை உயிர்பலி ஊட்டி-ஒரு பகற் பொழுதிலேயே தம் தலையைத் தாமே அரிந்து உயிர்ப்பலி ஊட்ட; உரை, செல வெறுத்த மதுரை மூதூர்-இப்பொற் கொல்லருடைய செயலால் உண்டான புகழ் எங்கும் பரக்கும்படி மிக்க மதுரையாகிய அப் பேரூர்; அரசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை-அரசனை இழந்து சுழலுகின்ற அத் துன்பப் பொழுதிலே; கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன்-கொற்கைப் பட்டினத்தில் இருந்து செங்கோலோச்சிய வெற்றிவேற் செழியன் என்னும் பெயரையுடைய பாண்டியன்; தென்புல மருங்கின் தீது தீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறை-தென்னாட்டின்கண் குற்றம் தீர்ந்த சிறப்பையுடைய மக்களினத்தைக் காக்கும் முறைமை நெடுஞ்செழியனுக்குப் பின்னர்த் தனக்கே உரித்தாதலின்; முதற்கட்டிலின்மேல்; நிரை மணி ஓர் ஏழ் புரவி பூண்ட ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசை-நிரல்பட்ட அழகிய ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற ஒரு சிறந்த உருளையையும் கடவுள் தன்மையையும் உடைய தேரின் மேல்; காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என-தனக்குரிய பொழுதாகிய விடியற் காலத்திலே சிவந்த கதிர்களையுடைய ஞாயிறாகிய கடவுள் ஏறித் தோன்றினாற்போல்; மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்-மாலைப் பொழுதிலே தோன்றும் முறைமையினையுடைய திங்கள் குலத் தோன்றலாகிய அவ் வேந்தன் ஏறாநின்றனன்; ஊழிதோறு ஊழி உலகங்காத்து எங்கோ வாழ்க பெரிது வாழியர் என-ஊழிகள் பலவும் இந் நிலவுலகத்தைக் காவல் செய்து எங்கள் அரசர் பெருமான் வாழ்வானாக மிகவும் வாழ்வானாக என்று அம் மாடல மறையோன் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) இதன்கண் வெற்றிவேற்செழியன் மதுரை மூதூர் அலம்வரும் அல்லற்காலைக் கட்டிலின் ஏறினன் என இயையும். பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ்ஞாற்றுவர் ஒரு முலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலிப்யூட்டி உரை செலவெறுத்த மதுரை மூதூர் எனக் கொல்லரின் செயல் மதுரைக்கு அடைமொழியாக வந்தது. இவை வெற்றிவேற்செழியன் என்னும் எழுவாய்க்கும் முடிக்குஞ் சொல்லாகிய ஏறினன் என்பதற்கும் இடையே வருகின்ற மதுரைக்கு அடைமொழியாய் வந்தது. இக் கருத்தறியாதார் வெற்றி வேற்செழியன் அரியணை ஏறவந்தவன் ஏறுதற்கு முன்னர்க் குற்றம் சிறிதும் இல்லாத ஆயிரம் பொற்கொல்லர்களைப் பிடித்துக்கொணர்ந்து கண்ணகித் தெய்வத்திற்கு உயிர்ப்பலியாக வெட்டிக் கொன்று அரியணையில் ஏறினன் என்பர். இங்ஙனம் பொருள் கொண்டவரே இந்நூல் முகத்திலுள்ள உரை பெறு கட்டுரையின்கண்(1) அன்று தொட்டு.........துன்பமும் நீங்கியது என அவலம் சிறிதுமின்றி வரைவாராயினர். அடிகளாரே இங்ஙனம் கருதியிருப்பார் எனின் அவர் தாமும் குளிக்கப்போய்ச் சேரு பூசிக்கொண்டவரே என்பது தேற்றம். என்னை? ஒரு பொற்கொல்லன் செய்த ஒரு வஞ்சகச் செயலால் அந் நாடு பட்டபாட்டினை வெற்றிவேற்செழியன் அறிந்திலன் என்று யாரே சொல்லத் துணிவர்? ஒரு பொற்கொல்லன் செய்த குற்றத்திற்காகக் குற்றம் சிறுதுமில்லாத ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றவன் எத்துணை அறிவிலியாதல் வேண்டும்? ஈண்டு எம்முரையே அடிகளார் கருத்தாதல் வேண்டும். அஃது என்னையோ வெனின் தம் குடிப்பிறந்த ஒரு பொய்வினைக் கொல்லன் செய்த தீவினையால் அம் மதுரைக்கும் மன்னன் முதலியோருக்கும் எய்திய துன்பத்தையும் தமது பொற்கொல்லர் குடிக்கு எய்திய பழியையும் பொறாத மானப் பண்புமிக்க பொற்கொல்லர் எண்ணிறந்தோர் தம்மைத்தாமே உயிர்ப்பலியாகக் கண்ணகியை நினைந்து உயிர்நீத்தனர். இவ்வருஞ்செயல் பற்றியும் மதுரைக்குண்டான புதுப்புகழ் உலகெல்லாம் பரந்தது. அத்தகைய மதுரையின்கண் வெற்றிவேற்செழியன் காலைக்கதிரவன் தேர்மிசை ஏறுதல்போல அரியணை ஏறினன் என்பதேயாம் என்க.

காலக்கணிவன் செங்குட்டுவனுக்குக் கூறுவது

141-150: மறையோன்........ஏத்த

(இதன் பொருள்) மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்-இவ்வாறு நான்மறையாளனாகிய அம் மாடலன் கூறிய தமிழகத்துச் செய்தியை எல்லாம்; இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள்-வேந்தனாகிய செங்குட்டுவன் கூர்ந்து கேட்டுணந்து அப்படி வீட்டின்கண் இருந்த பொழுது; அகல்வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க பகல் செலமுதிர்ந்த படாகூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க-அகன்ற இடத்தையுடைய உலகத்தை நிறைந்த இருள் விழுங்கிக்கொள்ளும்படி பகற்பொழுது கழிந்து விட்டமையாலே முற்றிய துன்பம் மேலும் மிகும்படி அந்திவானம் என்னும் செந்நெறுப்புப் பரவிய மேலைத் திசையினது முகம் விளக்கமுறும்படி; அந்திச் செக்கர் வெண்பிறை தோன்ற பெருந்தகை பிறை ஏர் வண்ணம் நொக்க-அவ்வந்திப் பொழுதின்கண் செல்வானத்தினிடையே வெள்ளிய இளம்பிறை தோன்றுதலாலே அரசர் பெருந்தகையாகிய செங்குட்டுவன் அப் பிறையினது எழுச்சியுடைய அழகினைக் கூர்ந்து நோக்காநிற்ப; இறையோன் செவ்வியின் கணியெழுந்து உரைப்போன்-அவ் வேந்தனுடைய கூர்ந்த நோக்கத்தின் குறிப்பறிந்த கணிவன் அம் மன்னனுடைய திருமுகச் செவ்வி பெற்றவுடன் எழுந்து கூறுபவன், மண் ஆள் வேந்தே வஞ்சி நீங்கியது எண் நான்கு மதியம் வாழ்க என்று ஏத்த-நில உலகத்தை ஆளும் எம் வேந்தனே! யாம் நமது வஞ்சி நகரத்தினின்றும் வடநாட்டின்கண் வந்தபின்னர்க் கழிந்த காலத்தின் அளவை முப்பத்து இரண்டு திங்கள்கள் ஆம். எம்பெருமான் நீடூழி வாழ்க என்று தொழாநிற்ப என்க.

(விளக்கம்) அகல்வாய்-அகன்ற இடம். பகல்-ஞாயிறுமாம். படர்-காம நோய். காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய் எனவரும் திருக்குறளும் (1227) நினைக. மாலையாகிய செந்தீ என்க. செக்கர்-செவ்வானம். ஏர் எழுச்சி. பெருந்தகை: செங்குட்டுவன். நோக்கத்தின் குறிப்பறிந்து தான் கூறுதற்கு நீங்கியது: சாதியொருமை எனினுமாம்.

செங்குட்டுவன் மாடலனை அழைத்துச் சோழன் நிலைமையை வினாதல்

151-161: நெடுங்காழ்.........ஓவென

(இதன் பொருள்) நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதில் கொடித்தேர் வீதியுள்-நெடிய கழிகளுடனே சேர்த்தமைந்த கண்டத்திரையை வரிசையாக அமைந்த வளைந்த படாஅம் ஆகிய நெடிய மதில் அமைந்த கொடி உயர்த்திய தேரோடும் வீதியின்கண்; குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன-குறுகிய வடிவுடையனவும் நீண்ட வடிவமைந்தனவும் ஆகி மலைகளைப் பார்த்தாற் போன்றனவும் ஆகிய; உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி-இல்லங்களமைந்த குறிய தெருவின் ஒரு பக்கத்தே சென்று; வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் சித்திர விதானத்துச் செம்பொன் பீடிகை-ஓவியப் புலவருடைய கைத் தொழிலாலே விளக்கமுற்ற கோட்பாட்டினையுடைய ஓவியப் பந்தலின் கீழ் அமைந்த செம் பொன்னால் இயன்ற பீடமாகிய; கோயில் இருக்கைக் கோமகன் ஏறி-அரண்மனைக்குரிய இருக்கையாகிய அரசு கட்டிலின் மேல் அவ்வரசர் பெருமான் எழுந்தருளி இருந்து, வாயிலாளரின் மாடலன் கூஉய் இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீது இன்றோ என-வாயில் காவலாளரை ஏவி மாடல மறையோனை அழைப்பித்து அவ்விருவரும் தமியராய் இருந்துழிச் செங்குட்டுவன் மாடலனை நோக்கி அந்தணனே! சோழ நாட்டின் கண் கலாம் விளைத்த இளவரசர் ஒன்பதின்மரும் இறந்தொழிந்த பின் வளம் பொருந்திய அழகிய சோழ நாட்டு மன்னவனாகிய என் மைத்துன வளவன் கிள்ளியின் வெற்றியும் செங்கோலின் தன்மையும் தீதிலவாக இருக்கின்றனவோ? என வினவ என்க.

(விளக்கம்) நெடுங்காழ்க் கண்டம்-நெடிய குத்துக்கோல்களுடனே பல நிறத்தால் கூறுபட்ட திரைச்சீலை; கண்டம்-கூறுபாடு கண்டம் குத்திய மண்டப எழினி எனவும் பிற சான்றோரும்(பெருங்கதை, சீவக) கூறுவர். உறையுள்-வீடு முடுக்கர்-குறுந்தெரு. வித்தகர்-புலவர். கோயிலிருக்கை என்றது அரசு கட்டிலை. தமிழ் மன்னரின் செய்தியை வடவாரியமன்னர் அறியலாகாது என்னும் கருத்தால் செங்குட்டுவன் தனி இடத்தே சென்றிருந்து மாடல மறையவனை அழைத்து வினவிய படியாம். இளங்கோ வேந்தர் என்றது முன்னர்(118) மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் என்றவரை. கொற்றம்-வெற்றி. கொற்றமொடு கூடிய செங்கோற்றன்மை என்றலின் தீதின்றோ என்முடிந்தது.

மாடலன் விடை

162-172: எங்கோ.........கேட்டே

(இதன் பொருள்) மங்கல மறையோன் மாடலன் எங்கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி உரைக்கும்-மங்கலத் தன்மை மிக்க மறையவனாகிய அம் மாடலன் அது கேட்டு எம் வேந்தர் பெருமானே நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்திக் கூறுவான்:-வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும்-வெயில் போன்று ஒளி வீசி விளங்குகின்ற மணியாரம் பூண்ட அமரர்களும் வியக்கும்படி விசும்பில் தூங்கும் மூன்று மதில்களையும் எறிந்து தொலைத்த போர் வேலினது வெற்றியும்; குறு நடைப் புறவின் நெடுந்துயர் தீர எறி தரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்து உடம்பு இட்டோன் அறம் தருகோலும்-குறு குறு நடக்கும் நடையையுடைய ஒரு புறாவினது நெடிய துன்பம் தீரவும் அப் புறாவினைக் கொல்லுதற்குத் துரத்தி வந்த பருந்தினது பசித்துன்பம் ஒருங்கே நீங்கவும் தானே அரிந்து தனது உடம்பின் தசையைத் துலையின்கண் இட்டவனாகிய அச் சோழ மன்னனுடைய உலகிற்கு அறத்தை வழங்குகின்ற செங்கோலின் தன்மையும்; திரிந்து வேறு ஆகுங் காலமும் உண்டோ-தம் தன்மையில் வேறுபட்டுப் போகும் காலமும் ஒன்று உண்டாகுமோ; உண்டாகாதன்றே; செல்லல் காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டு-போகூழால் துன்பம் வந்துற்ற காலத்தும் காவிரிப் பேரியாற்றின் நீரால் பாதுகாக்கப்படுகின்ற அச் சோழ நாட்டிற்கு அரசுரிமை பூண்ட அம் மன்னவனுக்குத் தீது ஒரு சிறிதும் இல்லைகாண் என்று உணர்தற்கரிய நான்கு மறைகளையும் ஓதி உணர்ந்த முதல்வனாகிய மாடலன் என்னும் அந்தணன் கூறக் கேட்டு மகிழ்ந்தபின் என்க.

(விளக்கம்) மங்கலம்-ஆக்கம். எயில்-வானத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று மதில்கள். அவற்றைப் பண்டொரு காலத்தே ஒரு சோழ மன்னன் நுறுக்கி வீழ்த்தினன் என்பது வரலாறு. இதனை 195: தூங்கெயின் மூன்றெறிந்தசோழன் (சிலப். 29 (17) ஒன்னாருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயிலறிந்த நின் னூங்கணோர் (புறநா, 395-6) வீங்குதோட்செம்பியன் சீற்றம் விறல் விசும்பல் தூங்குமெயிலுந் தொலைத்தலால் (பழ-69) ஒன்னா, ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும், தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை, நாடாநல்லிசை நற்றோச் செம்பியன் (மணி1:4) தேங்குதூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன்(மணி1:4) தேங்கு தூங்கெயிலெறிந்தவனும்(கலிங்க. இராச 17) வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத, தூங்கும் புரிசை துணித்த கோன் (இராசராச,13) தூங்குமெயிலெறிந்த சோழனும் (விக்கரம, 9) எனப் பல்வேறிடங்களிலும் வருவற்றாலறிக. புறவின் துயர் தீரவும் பருந்தின் இடும்பை நீங்கவும் உடம்பு அரிந்து இட்டோன சிபி என்னும் ஒரு சோழனாவான்.

செங்குட்டுவன் செயல்

173-178: பெருமகன்...............ஏவி

(இதன் பொருள்) பெருமகன் மறையோன் பேணி ஆங்கு அவற்கு ஆடகப் பெருநிறை ஐ ஐந்து இரட்டி-அரசர் பெருமகனாகிய அச் சேரன் செங்குட்டுவன் அருமறை முதல்வனாகிய அம் மாடல மறையோனைப் பெரிதும் பாராட்டி அப்பொழுது அவ்வந்தணனுக்குப் பொன் கட்டியாகிய பெரிய நிறையையுடைய ஐம்பது துலாம் அளவிற்றாகிய; தன்னிறை-தன் உடம்பின் நிறையாகிய பொற்பரிசிலை; தோடு ஆர் போந்தை வேலோன் மாடல மறையோன் கொள் கென்று அளித்து-இதழமைந்த பனம்பூ மிலைந்த வேலேந்திய அச் செங்குட்டுவன் இத் தானத்தை மாடல் மறையோன் கொள்வானாக என்று வழங்கிப் பின்னர்; ஆங்கு ஆரிய மன்னர் ஐ இருபதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்க என்று ஏவி-அப் பாடிவீட்டின்கண் தன்னோடு இருந்த நண்பராகிய ஆரிய மன்னர் நூற்றுவரையும் சிறப்புப் பொருந்திய அவருடைய நல்ல நாட்டிற்குப் போதுக என்று விடை கொடுத்த பின்னர் என்க.

(விளக்கம்) ஐம்பது துலாம் பொன் ஆகிய தனது உடம்பின் நிறையைஉடைய ஆடகம் என்க-ஆடகம்-பொன். இங்ஙனம் வழங்கும் தானத்தை துலாபாரம் புகுதல் என்பர். ஐயிருபதின்மர் என்றது நூற்றுவர் கன்னரை. அவரவர் நன்னாட்டிற்கு என்க.

இதுவுமது

179-191: தாபத...........ஏவி

(இதன் பொருள்)தாபத வேடத்து உயிருய்ந்து பிழைத்த மாபெருந்தானை மன்ன குமரர்-போரின்கண் புறங் கொடுத்துத் துறவோர் வேடம் புனைந்து அவ்வாற்றால் உயிருடன் தப்பிப் பிழைத்த மிகப் பெரிய படைகளோடு வந்தவராகிய அரசர் மக்களையும்; சுருள் இடு தாடி மருள் படு பூங்குழல் அரி பரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெள் தோடு வெள் நகைத்துவர்வாய்-சுருண்டிருக்கின்ற தாடியையும் மயக்கமுண்டாக்குகின்ற அழகிய கூந்தலையும் செவ்வரி பரவி ஓடிய வளவிய கயல்மீன் போன்ற நீண்ட கண்ணையும் மலர்ந்த வெள்ளிய மலர்மாலையினையும் வெள்ளிய பற்களையும் பவழம் போன்ற வாயையும்; சூடக வரிவளை ஆடு அமைப் பணைந்தோள் வயர் இள வன முலைத் தளரியல் மின் இடை-சூடகம் என்னும் வரிகளை உடைய வளையல்களையும் அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள்களையும் வளருகின்ற இளைய அழகிய முலையையும் தளருகின்ற நடையினையும் மின்னல் போன்ற இடையினையும் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு-சிலம்பணிந்த சிறிய அடிகளை உடைய ஆரிய நாட்டுப் பேடியுடனே; எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ்ஞாற்றுவர்-மறப்பண்பு ஒழியாத பகை மன்னருடைய மேலான மொழியையும் மறுத்துரைக்கும் மன வலிமையோடே கூடிய மெய்ப்பை புகுந்த தலையாய தூதுவர் ஓராயிரவரை; அரியின் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை-பகை மன்னர்களுள் வைத்துப் பனம்பூச் சூடி வருகின்ற அரிய தமிழ் மறவருடைய போராற்றும் திறமையைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் எதிர்த்து வந்து போராற்றிப் புறமிட் டோடிய கனகனும் விசயனுமாகிய ஆரிய மன்னர் இருவரையும்; இருபெருவேந்தர்க்குக் காட்டிட ஏவி-தன்னோடொத்த சோழனும் பாண்டியனுமாகிய இரண்டு முடி வேந்தர்களுக்கும் காட்டிக் கொணருமாறு கட்டளையிட்டு என்க.

(விளக்கம்) தாபத வேடம்-துறவோர் வேடம். மாபெருந்தானை மன்ன குமரர் என்றது இகழ்ச்சி. அரி-செவ்வரி. நகை-பல். துவர்-சிவப்புமாம். கஞ்சுகமுதல்வர்-
தூதர். தூதர் என்பதற்கு அறிகுறியான மெய்ப்பை அணிந்திருத்தல் பற்றி இவர்களைக் கஞ்சுகி மாக்கள் என்பர். சஞ்சுகம்-மெய்ப்பை(சட்டை) இருபெரு வேந்தர் என்றது சோழனையும் பாண்டியனையும்.

செங்குட்டுவன் கண்படை நிலை

192-199: திருந்து.........தானையொடு

(இதன் பொருள்) திருந்து துயில் கொள்ளா அளவை-வடவாரிய மன்னரை வென்று கண்ணகித் தெய்வத்திற்கு கற்கொண்டு பெயர்ந்த செங்குட்டுவன் சினந் தணிந்து பாடிவீட்டின்கண் இன்துயில் கொள்ளும் பொழுது; யாங்கணும் பரம்பு நீர்க் கங்கைப் பழனப் பாசடை எவ்விடத்தும் பரந்து பாய்கின்ற நீரையுடைய கங்கையாற்றின் மருங்கமைந்த பழனங்களிலே பசிய இலையையுடைய; இளந்தாமரை பயில் பல் வண்டு யாழ் செய இளமையுடைய செந்தாமø நாள் மலர்களில் பயிலுகின்ற பலவாகிய வண்டுகள் யாழ்போன்ற இனிய இசையைப் பாடும் படி; வெயில் இளம் செல்வன் விரிகதிர் பரப்பி-வெயில் ஒளியையுடைய காலைக் கதிரவன் விரிகின்ற ஒளியைப் பரப்பி-குணதிசைக் குன்றத்து உயர்மிசை தோன்ற-கிழக்குத் திசையின்கண் உள்ள உதயகிரி என்னும் மலையினது உயர்ந்த உச்சியின் மேல் வந்து தோன்றா நிற்ப; குடதிசை ஆளுங் கொற்ற வேந்தன்-தமிழ் கத்து மேற்றிசையிலுள்ள நாட்டை ஆளுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவன் என்னும் அரசன்; வடதிசைத் தும்பை வாகையொடு முடித்து-வடதிசைக்கண் சென்று வடவாரிய மன்னருடைய போர்களத்தின்கண் தும்பைப் பூச் சூடிப் புகுந்து போராற்றி வென்று வாகைப்பூச் சூடுதலோடே அப் போரினை முடித்து; தென் திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு-தனக்குரிய தென் திசையை நோக்கி மீண்ட வெற்றியை யுடைய நாற்பெரும் படையோடு என்க

(விளக்கம்) திருந்து துயில் என்றது கண்படை நிலை என்னும் வாகைத் திணைத்துறை அஃதாவது மண்கொண்ட மறவேந்தன் கண்படை நிலை மலிந்தன்று எனவரும்( புறப்-வெண்பாமாலை-வாகை-29) கொளுவான் உணர்க.

செங்குட்டுவன் வஞ்சியை நோக்கி வருதல்

200-நிதி துஞ்சு என்பது முதலாக 256-குட்டுவனென் என்னுந்துணையும் ஒரு தொடர்

200-206: நிதிதுஞ்சு..........கட்டில்

(இதன் பொருள்) நிதி துஞ்சு வியல் நகர் நீடுநிலை நிவந்து கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை-பல்வேறு வகைப் பொருள்களும் குவிந்து வாளா கிடக்கின்ற அகன்ற கருவூலத்தோடே நெடிய நிலைகளோடே உயர்ச்சி பெற்று ஞாயிற்று மண்டிலத்தின் இயக்கத்தைத் தடுப்பதுபோன்று உயர்ந்த பொன்னால் இயன்ற மாளிகையாகிய உவளகத்தின்கண்; முத்து நிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய-முத்துக்களைக் கோத்த நிரல்பட்ட சல்லியும் தூக்குமாகிய தொடராலே முழுவதும் வளைக்கப்பட்ட; சித்திர விதானத்து-சித்தரங்கள் எழுதப் பெற்ற மேற்கட்டியினை உடைய; செய்பூங்கைவினை இலங்கு ஒளி மணிநிரை இடை இடை வகுத்த-திறம்படச் செய்யப்பட்ட பொலிவுடைய கைத்தொழில் அழகுடனே விளங்குகின்ற மாணிக்கங்களை வரிசை வரிசையாக இடை இடையே பதிக்கப்பட்ட, விலங்கு ஒளி வயிரமொடு பொலந்தகடு போகிய-பக்கத்திலே பாய்கின்ற ஒளியை உடைய வயிரம் இழைக்கப் பெற்ற பொற்றகட்டினைத் தைத்த; மடையமை செறுவின் வான் பொற்கட்டில்-மூட்டுவாய் நெருங்கும்படி கடாவிய உயரிய பொன்னால் இயன்ற கட்டிலாகிய என்க.

(விளக்கம்) நிதி-பொன்மணி முதலியன. அவை மிக்குக் கிடத்தலின் நிதி துஞ்சும் நகர் என்றார். நகர் ஈண்டுக் கருவூலம். அரண்மனை மாளிகையின் உயர்ச்சியை விதப்பார் கதிர் செலவொழித்த கனக மாளிகை என்றார். மாளிகை ஈண்டு உவளகம். வளைஇய-வளைத்த பொலந்தகடு-பொற்றகடு.

இதுவுமது

207-213: புடை.......வாழ்த்த

(இதன் பொருள்) புடை திரள் தமனியப் பொன்கால் அமளிமிசை-பக்கந்திரண்டுள்ள பொற்குடம் அமைந்த அழகிய கால்களையுடைய படுக்கைக் கட்டிலின் மேல்; இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அணைப் பள்ளி-தன் சேவல் அன்னத்தோடே புணர்ந்த பெடை அன்னம் புணர்ச்சி இன்பத்தால் உள்ளம் உருகி உதிர்த்து விட்ட மெல்லிய தூவிகளைத் திரட்டிப் பஞ்சாக அடைத்த காதல் துணைவர் தம்முள் ஒருவரை ஒருவர் முயங்குவதற்கு இடனான அணைகளையுடைய பள்ளியின் மேல்; துயில் ஆற்றுப் படுத்து-துயிலைப் போக்கி; ஆங்கு எறிந்து களங்கொண்ட இயல் தேர்க் கொற்றம் அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்-அவ் வட நாட்டின்கண் வடவாரிய மன்னரைக் கொன்று குவித்து அப் போர்களத்திலே பெற்ற இயங்குகின்ற தேரினது வெற்றியை உள்ளவாறு உணர்ந்து சொல்லிச் சொல்லிப் பழகிய கூட்டமாகிய செவிலித்தாயார்; தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக எனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்த-நீ இத் துணை நாளும் நினது தோளுக்குப் பொருந்திய நின் வாழ்க்கைத் துணைவியைத் துறந்திருந்தமையாலே உண்டான துன்பத்தை இப்பொழுது தவிர்ந்து இன்புறுக என்று தாம் பாடுகின்ற பாட்டோடு இணைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தா நிற்பவும் என்க.

(விளக்கம்) துணைபுணர் அன்னத்தூவியில் செறிந்த இணை அணை மேம்படத் திருந்து துயில் என அந்திமாலைச் சிறப்பச்செய் காதையினும் வந்தமை அறிக(67-8) ஆற்றுப் படுத்துதல்-போக்கிவிடுதல்.

இதுவுமது

214-224: சிறுகுறு.......பாணியும்

(இதன் பொருள்) சிறு குறுங்கூனும் குறளும் சென்று-அரண்மனையின்கண் பெருந்தேவி மாளிகையில் குற்றேவல் புரியும் சிறிய குறிய கூனுருவமுடையோரும் குறள் உருவமுடையோரும் கோப்பெருந்தேவி இளங்கோ வேண்மாள் முன்னிலையில் விரைந்து சென்று தேவீ; பெருமகன் வந்தான் பெறுகநின் செவ்வி-நம் பெருமான் வடதிசை நோக்கி ஆள்வினை மருங்கின் பிரிந்து சென்றவன் மீண்டு வந்துற்றனன் ஆதலால் அவனை வரவேற்கத்தகுந்த நின்னுடைய செவ்வியை நீ பெறுவாயாக; நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுக என-நினது நறிய மலரையுடைய கூந்தலானது நாட்காலத்திலே செய்கின்ற ஒப்பனையைப் பெறுவதாக எனவும்; அமைவிளை தேறல் மாந்தியகானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட-மூங்கிற்றண்டின்கண் பெய்து முதிர்வித்த தேறலைப் பருகிய குறவன் கவண் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கல்லெறிந்து விலங்குகளை அடிக்கின்ற தனது காவல் தொழிலைக் கைவிட்டமையாலே அச் செவ்வி நோக்கி; வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த-விளைடு பெருகிய தன்மையை உடைய யானையானது தினை உண்ணுதலைக் கைவிட்டு நன்கு தூங்குவதாகிய உறக்கத்தை எய்தும்படி; வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கு என-வாகை மாலையும் தும்பை மாலையும் வடதிசையின் கண் நம் அரசன் சூடுதற்குக் காணமான விரைந்த யானைப் படைகளை மீண்டும் ஊர்ப்புகுதும் வழி இதுவேயாகும் ஆகவே இவ்விடத்தினின்றும் நீங்குவாயாக என்று பொருளமைந்து, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-திறத்திறம் என்னும் அப் பண்ணின்கண் அமைத்து மிகவும் உயர்ந்த பாணின்கண் இருந்து குறமகளிர் பாடிய குறிஞ்சிப்பண்ணும் என்க.

(விளக்கம்) கானவன்-தேறல் பருகியமையால் மயங்கிக் காவலைக் கை விட்டானாக அந்தச் செவ்வி பார்த்து தினையுண்ண வந்த யானை குறத்தியர் பரண்மிசை இருந்து பாடிய குறிஞ்சிப் பண்ணைக் கேட்டு மயங்கித் தான் வந்த காரியத்தை மறந்து நின்றபடியே தூங்கிற்று. அது கண்ட அக் குற மகளிர் மீண்டும் பாடுபவர், யானையே! நீற்குமிடம் யானைப்படை போகும்வழி ஆதலின் அவ்விடத்தை விட்டுப் போய் விடு என்று பாடினர் என்பது கருத்து.

இதுவுமது

225-230: வடதிசை...............பாணியும்

(இதன் பொருள்) பகடே வடதிசை மன்னர் மண் எயில் முருக்கி கவடி வித்திய கழுதை ஏர் உழவன் குடவர் கோமான் வந்தான்-எருதே! எருதே! நீ ஒரு செய்தி கேள்! வடதிசை மன்னராகிய கனகவிசயரை உள்ளிட்ட அரசர்களுடைய நிலைபேறுடைய மதில்களை அழித்து வெள் வாகை விதைத்த கழுதைபூட்டிய ஏரை உழுகின்ற குடநாட்டு அரசனாகிய சேரன் செங்குட்டுவன் வாகை சூடி மீண்டும் வந்தான்; நாளை மன்னர் அடித்தளை நீக்கும் வெள் அணி ஆம்-நாளை பகையரசருடைய கால் விலங்குகளை அகற்றுதற்குக் காரணமான பிறந்த நாள் மங்கல விழா அச் செங்குட்டுவனுக்கு நிகழுமாதலின்; படுநுகம் பூணாய் எனும்-உள் பிடரில் படுகின்ற நுகத்தடியைப் பூண்டு நீ உழவேண்டியதில்லைகாண் என்னும் பொருளமைத்துப் பாடுகின்ற; தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-விளாக்கோலி உழுகின்ற பெரிய உழவர் முழங்குகின்ற ஏர் மங்கலப் பாடலும் என்க.

(விளக்கம்) கவடி-வெள் வரகு. பண்டைக் காலத்துப் பகை மன்னர் அரண்களை அழித்த அரசர் கோவேறு கழுதைகளை ஏரிற் பூட்டி அரண்மனையின் உள்ளே உழுது உண்ணுதற்குதவாத வெள்வரகினை விதைப்பது ஒரு வழக்கம். தொடுப்பு-விளாக்கோலுதல். ஒன்றனோடு ஒன்று தொடர்புடையதாகக் கோலப்படுதலின் அப் பெயர்த்தாயிற்று தொடுப்பு-விதைப்புமாம். உழவர் பாணி. ஏர்மங்கலப் பாட்டு.

இதுவுமது

231-241: தண்ணான்.............பாணியும்

(இதன் பொருள்) தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து-தண்ணிய ஆன்பொருநைப் பேரியாற்றின்கண் நீராடுகின்ற மாந்தர் விடுத்த வண்ணங்களும் சுண்ணப் பொடிகளும் பல்வேறு வண்ண மலர்களும் நீரின்கண் பரவி, விண் உறை வில்போல் விளங்கிய பெருந்துறை-வானத்தே தோன்றுகின்ற இந்திர வில்லைப்போன்று பல்வேறு வண்ணத்தோடு விளங்குகின்ற பெரிய நீராடு துறையின்கண்; வண்டு உணமலர்ந்த மணித்தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்-வண்டுகள் தேனுண்ணும்படி மலர்ந்துள்ள நீலமணிபோலும் நிறமுடைய கருங்குவளைப் பூமாலையை முள்ளிப் பூமாலையோடு சேர்த்து அணிந்திருக்கின்ற தலை மயிரின்கண்; முருகுவிரி தாமரை முழுமலர் தோய-மணம் பரப்புகின்ற தாமரையினது முழுமையான மலரையும் அணிந்துகொண்டு; குருகு அலர் தாழைக் கோட்டுமிசை கொம்பின் மேலே ஏறி இருந்து; வியன்பேரிமயத்து வில்லவன் வந்தான்-அகன்ற பெரிய இமய மலையினின்றும் நம் சேரர் பெருமான் மீண்டு வந்தான்; பல் ஆன் நிரையொடு நீர் படர்குவிர் என-அவன் அத் திசையினின்றும் திறைப்பொருளாகப் பெற்று வருகின்ற பல்வேறு வகைப்பட்ட ஆனிரையோடு சேர்ந்து நீங்களும் செல்லுவீர் என்று கூறி; காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇ-அச் சேரன் செங்குட்டுவனுக்குரிய ஆனிரையை நீருண்ணத் துறையின்கண் செலுத்திநின்று; கோவலர் ஊதும் குழலின் பாணியும்-இடையர்கள் மகிழ்ந்து ஊõதநிற்கும் வேய்ங்குழலிசையும் என்க.

(விளக்கம்) ஆன்பொருநை-ஓர் யாற்றின் பெயர் இக்காலத்தே தாமிரபரணி என்பர். தண் பொருநை என்பதே இவ்வாறு வழங்குகின்றது என்க. விண்ணுறை வில்-இந்திர வில். முண்டகக் கோதை முள்ளிப்பூ மாலை. குஞ்சி-ஆண் மயிர். குருகு போன்று அலர் தாழை என்க. குருகு-கொக்கு. இது வெண்டாழை மலருக்குவமை. வில்லவன் சேரன் இமயத்தினின்று கொணருகின்ற பல்லான் நிரை என்க.

இதுவுமது

242-250: வெண்டிரை...........பாணியும்

(இதன் பொருள்) வெள்திரை பொருத வேலை வாலுகத்துக் குண்டுநீர் அடைகரை குவையிரும் புன்னை-வெள்ளிய அலைகள் மோதப்பெற்ற கடற்கரையின்கண் அமைந்த மணற்குன்றின்மருங்கே ஆழமான நீரையுடைய அடைகரையின்கண் அடர்ந்துள்ள கரிய புன்னை நீழலின்கண்; வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம் வலம்புரிச் சங்கு கருவிலிருந்து ஈன்ற அழகிய விரும்புதற்குக் காரணமான முத்துக்களை; கழங்காடு மகளிர் ஓதை ஆயத்து-கழங்காட்டம் ஆடுகின்ற நெய்தல் நிலத்து மகளிரின் ஆரவாரமுடைய கூட்டத்தின்கண் அம் மகளிர்; வழங்கு தொடி முன்கைமலர ஏந்தி-இயங்குகின்ற வளையலை உடைய முன் கையை அகல விரித்து ஏந்திக்கொண்டு; மடவீர் யாம்-மகளிர்களே இனி யாமெல்லாம்; வானவன் வந்தான் வளர் இள வன முலை தோள் நலம் உணீஇய-நம் சேரர்பெருமான் வாகைசூடி மீண்டு வந்தான். இனி அவன் நம்மைக் காதலித்து வளருகின்ற இளைய அழகிய முலைகள் அவனது தேரளினது ஊற்றின்பத்தை நுகரும்படி; தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் எனும்-வாகை சூடுதற்குக் காரணமான தும்பைப் பூமாலையையும் அவன் அடையாளப் பூவாகிய பனம்பூ மாலையையும் வஞ்சிப்பூ மாலையையும் இனிப் பாடக் கடவேம் என்கின்ற; அம் சொல் கிளவியர் அம் தீம்பாணியும்-அழகிய சொல்லையுடைய மொழியினை உடைய அம் மகளிர் பாடுகின்ற அழகிய இனிய நெய்தற்பண்ணும் என்க.

(விளக்கம்) வேலை-கடற்கரை. வாலுகத்துக் கரை குண்டு நீர் அடைகரை எனத் தனித்தனி கூட்டுக! வாலுகம்-மணற்குன்று குண்டு நீர்-ஆழமான நீர். வலம்புரி ஈன்ற முத்தத்தைக் கழங்காடு மகளிர் முன்கை மலரக் கழங்காக ஏந்தி என்க. வஞ்சி வஞ்சி நகரமுமாம். இதன் கண் குறிஞ்சிப் பாணியும் உழவர் ஓதைப் பாணியும்(மருத நிலப்பண்) குழலின் பாணி(முல்லைப்பண்) அந்தீம்பாணி (நெய்தற்பண்) என நான்கு நிலத்திற்கு முரிய நான்கு பண்களும் வந்தமை உணர்க.

இதுவுமது

251-256: ஓர்த்துடன்.........குட்டுவனென்

(இதன் பொருள்) ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி வால்வளை செறிய -செவியால் ஆராய்ந்து கொண்டிருந்த கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாளின் உடம்பு மகிழ்ச்சியால் பூரிப்படைந்து அவளது வெள்ளிய சங்கு வளையல்கள் செறியா நிற்ப; செங்குட்டுவன் வலம்புரி வலன்எழ மாலை வெண்குடைக்கீழ்-செங்குட்டுவன் என்னும் சேரர் பெருமான் வலம்புரிச் சங்கங்கள் வெற்றியை விளக்கி முழங்கவும் மலர்மாலையணிந்த கொற்ற வெண்குடை நிழலின்கீழ் அமர்ந்து வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து-வாகைமாலை சூடிய முடியையுடையவனாய் விரைந்து வருகின்ற யானையின் பிடரின்மேல் பொலிவுற வீற்றிருந்து: குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள வஞ்சியுட் புகுந்தனன்-மங்கலச் சின்னமாகிய யானை அணி முதலியவற்றோடு தலைநகரத்திலுள்ள சான்றோர் எதிர்கொள்ளும் படி நகரத்தின்கண் புகுந்தான் என்பதாம்.

(விளக்கம்) அரசனுடைய வருகையினைப் பாடும் பாடல்களை ஓர்த்தலால் பிரிவாற்றி இருந்த கோப்பெருந்தேவி என்க. மங்கலத்தின் பொருட்டு அப் பெருந் தேவி பிரிந்துறைந்த காலத்தில் எல்லாம் சங்கு வளையல் ஒன்றுமே அணிந்திருந்தமை தோன்ற வால்வளை செறிய என்றார். வேகயானை-சினமிக்க யானையுமாம். யானையின் பிடரியில் இடப்பட்ட பொன்னிருக்கையின் மேலிருத்தலால் யானையின் மிசை என்றொழியாது யானையின் மீமிசை என்றார். ஒழுகை-அணி. கோநகர்-தலை நகரம் ஆகு பெயர். நகரத்துச் சான்றோர் என்க.

பா-நிலைமண்டில ஆசிரியப்பா

நீர்ப்படைக் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #36 on: February 28, 2012, 08:35:38 AM »
28. நடுகற் காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-கற்புக் கடவுளாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு வடபேரிமயத்தினின்றும் கொணர்ந்த கல்லின்கண் அக் கண்ணகியின் திருவுருவத்தை நடுதலும், மீண்டும் அக் கல்லை நூன் முறைப்படி திருக்கோயிலின்கண் நிறுத்தி வைத்தலும் மீண்டும் அக் கல்லின்கண் கண்ணகித் தெய்வத்தை நிறுத்துதலும் ஆகிய செய்திகளைக் கூறும் பகுதி என்றவாறு.

இனி, இக் காதையின்கண் செங்குட்டுவன் கோப்பெருந்தேவியுடன் கூடி நிலாமுற்றத்தின்கண் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தலும் பின்னர் அத்தாணி மண்டபத்தில் அரசு கட்டில் ஏறி இருத்தலும் கனக விசயரைத் தமிழ் வேந்தர் இருவர்க்கும் காட்டி மீண்டு வந்த கஞ்சுக மாக்கள் சோழனும் பாண்டியனும் செங்குட்டுவனை இகழ்ந்தமையை அறிவுறுத்துதலும் அது கேட்டுச் செங்குட்டுவன் பெரிதும் சினந்தெழுதலும் அப்பொழுது நான்மறை முதல்வனாகிய மாடலன் அவ் வரசனுடைய சினத்தைத் தணித்து இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையுதலில்லாப் பொருள்கள் என்னும் உண்மையைத் திறம்பட அறிவுறுத்துதலும் நல்லறமே செய்யும் நன்னெறியின்கண் செல்லுமாறு அறிவுறுத்துதலும் அவ்வரசனும் மாடலன் மொழிகளாலே மெய்யுணர்டு பெற்றவனாய் அறக்கள வேள்வி முதலியன செய்தலும் கண்ணகித் தெய்வத்திற்குக் கோயில் அமைத்தலும் அத் தெய்வத்திற்குப் படிமம் அமைத்தலும் அப் படிமத்தில் கண்ணகித் தெய்வத்தை நிலை நாட்டுதலும் பிறவும் கூறப்படும்.

தண் மதி அன்ன தமனிய நெடுங் குடை
மண்ணகம் நிழல் செய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் தொடித் தடக் கையின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5

வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர்,
உலக மன்னவன் வாழ்க! என்று ஏத்தி,
பலர் தொழ, வந்த மலர் அவிழ் மாலை-
போந்தைக் கண்ணிப் பொலம் பூந் தெரியல்
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் 10

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்,
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
வை வாள் கிழித்த மணிப் பூண் மார்பமும்,
மைம்மலர் உண் கண் மடந்தையர் அடங்காக்  15

கொம்மை வரி முலை வெம்மை வேது உறீஇ;
அகில் உண விரித்த, அம் மென் கூந்தல்
முகில் நுழை மதியத்து, முரி கருஞ் சிலைக் கீழ்,
மகரக் கொடியோன் மலர்க் கணை துரந்து,
சிதர் அரி பரந்த செழுங் கடைத் தூது  20

மருந்தும் ஆயது, இம்மாலை என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விரிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் செவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர்-தம்மால்  25

ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து;
காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30

வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புணர் புரி நரம்பின் பொருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முறைப் பாலையின்,
துத்தம் குரலாத் தொல் முறை இயற்கையின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின்,  35

மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் போல,
உலகு தொழ, தோன்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க  40

மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப
ஐங் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் சேக்கையும்,
மண்ணீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
வெண் கால் அமளியும், விதான வேதிகைகளும்,  45

தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள-
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்,
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனை மணி அரங்கின்,  50

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வணர் கோட்டு யாழும்,  55

பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வரி வெண் சாந்தும்,
கூனும் குறளும், கொண்டன, ஒருசார்;
வண்ணமும் சுண்ணமும், மலர்ப் பூம் பிணையலும்,
பெண் அணிப் பேடியர் ஏந்தினர், ஒருசார்;  60

பூவும், புகையும், மேவிய விரையும்,
தூவி அம் சேக்கை சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆடையும், அணிதரு கலன்களும்,
சேடியர் செல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்  65

வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி
திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;  70

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்  75

பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்   80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி,
வாயிலாளரின் மன்னவற்கு இசைத்தபின்,
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-
தும்பை வெம்போர்ச் சூழ் கழல் வேந்தே!
செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு, ஆங்கு,  85

வச்சிரம், அவந்தி, மகதமொடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்
அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று, தகை அடி வணங்க,
நீள் அமர் அழுவத்து, நெடும் பேர் ஆண்மையொடு  90

வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை-  95

ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே!
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண,
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல், ஆங்கு,  100

கயந் தலை யானையின் கவிகையிற் காட்டி,
இமையச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பெரும் கோலம் கொண்டோ ர்-தம்மேல்  105

கொதி அழல் சீற்றம் கொண்டோ ன் கொற்றம்
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று,
ஏனை மன்னர் இருவரும் கூறிய
நீள்-மொழி எல்லாம் நீலன் கூற-
தாமரைச் செங் கண் தழல் நிறம் கொள்ளக்  110

கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி
மாடலன் எழுந்து, மன்னவர் மன்னே,
வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின்,
சிறு குரல் நெய்தல், வியலூர் எறிந்தபின்;  115

ஆர் புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச் செரு வென்று;
நெடுந் தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து,
கொடும் போர் கடந்து; நெடுங் கடல் ஓட்டி;
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை, 120

கடும் புனல் கங்கைப் பேர் யாற்று, வென்றோய்!
நெடுந் தார் வேய்ந்த பெரும் படை வேந்தே!
புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த
அரைசர் ஏறே! அமைக, நின் சீற்றம்!
மண் ஆள் வேந்தே! நின் வாழ் நாட்கள்  125

தண் ஆன் பொருநை மணலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய், வாழி!
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும்-
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன் பின்னும், 130

அறக்கள வேள்வி செய்யாது, யாங்கணும்,
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை;
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணி, நின் ஊங்கணோர் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,  135

விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,  140

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,  145

இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோ ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்,
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்-  150

மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின்
செல்வம் நில்லாது என்பதை வெல் போர்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ, காவல் வேந்தே?-
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு  155

உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா,
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரை முதிர் யாக்கை நீயும் கண்டனை-
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;  160

மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர்,
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினும் காணும்;
ஆடும் கூத்தர்போல், ஆர் உயிர் ஒருவழி, 165

கூடிய கோலத்து ஒருங்கு நின்று, இயலாது;
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க, வய வாள் வேந்தே!  170

அரும் பொருள் பரிசிலேன் அல்லேன், யானும்;
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி,
புலவரை இறந்தோய்! போகுதல் பொறேஎன்;
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்,  175

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்,
நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்;  180

இது என வரைந்து வாழு நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை;
வேள்விக் கிழத்தி இவளொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி போற்ற,
ஊழியோடு ஊழி உலகம் காத்து,   185

நீடு வாழியரோ, நெடுந்தகை! என்று
மறையோன் மறை நா உழுது, வான் பொருள்
இறையோன் செவி செறு ஆக வித்தலின்-
வித்திய பெரும் பதம் விளைந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் வேட்கையின், சூழ் கழல் வேந்தன்  190

நான்மறை மரபின் நயம் தெரி நாவின்,
கேள்வி முடித்த, வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி,   195

பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம் பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி,
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பெரு நெடு நகர்ச் சார்வதும் சொல்லி, அம்  200

மன்னவர்க்கு ஏற்பன செய்க, நீ என,
வில்லவன்-கோதையை விருப்புடன் ஏவி-
சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும்,
கறை கெழு நாடு கறைவிடு செய்ம் என,
அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை 205

முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-
அரும் திறல் அரசர் முறை செயின் அல்லது,
பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது என,
பண்டையோர் உரைத்த தண் தமிழ் நல் உரை,
பார் தொழுது ஏத்தும் பத்தினி ஆதலின்,  210

ஆர் புனை சென்னி அரசர்க்கு அளித்து;
செங்கோல் வளைய உயிர் வாழாமை,
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை, யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை  215

வடதிசை மருங்கின் மன்னவர் அறிய,
குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்து;
மதுரை மூதூர் மா நகர் கேடுற,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சினை வேங்கைப்  220

பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து,  225

இமையவர் உறையும் இமையச் செல் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி,  230

பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு என்.

உரை

சேரன் செங்குட்டுவன் வஞ்சிபுகுந்த நாளின் மாலைக்கால நிகழ்ச்சி

1-8: தண்மதி...............மாலை

(இதன் பொருள்) தண்மதியன்ன தமனிய நெடுங்குடை மண்ணக நிழல் செய-குளிர்ந்த முழுவெண் திங்கள்போன்ற வடிவத்தை உடைய காம்பும் முகப்பும், பொன்னால் இயன்ற நெடிய தனது குடையானது இந்நில வுலகத்தின்கண் வாழுகின்ற உயிர்களுக்கெல்லாம் இன்ப வாழ்க்கையாகிய நிழலை வழங்கா நிற்ப; மறவாள் ஏந்திய நிலந்தரு திருவின் நெடியோன் தனது-தன்பகைவரை வெல்லுதற்பொருட்டு மறப்பண்பு மிகுந்த வாளை ஏந்திய காரணத்தால் பகையரசர் தம் நிலத்தினின்றும் கொணர்ந்து அளக்கின்ற திறைப் பொருளாகிய செல்வத்தையும் நீண்ட புகழையும் உடையோனாகிய செங்குட்டுவனுடைய; வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-வடநாட்டு வெற்றி காரணமாக உண்டான புதிய சிறப்பினை உடைய வஞ்சி என்னும் அந்தம் பழைய தலைநகரத்தின்கண்; ஒள்தொடித் தடக்கையின் ஒள் மலர் பிலிதூஉய் வெள்திரி விளக்கம் ஏந்திய மகளிர்-ஒளியுடைய பொன் வளையலணிந்த தமது பெரிய கைகளினாலே ஒள்ளிய முல்லை மலராகிய பலிப்பொருளைத் தூவி வெள்ளிய திரியின்கண் விளக்கினை ஏற்றிக் கையில் ஏந்திய மகளிர்; உலக மன்னவன் வாழ்க என்று ஏத்திப் பலர் தொழவந்த மலர் அவிழ்மாலை-உலகத்தை ஆளுகின்ற மன்னவனாகிய சேரன் செங்குட்டுவன் நீடு வாழ்க என்று வாழ்த்தா நிற்ப, சான்றோர் பலரும் தெய்வந் தொழா நிற்ப வந்தெய்திய மல்லிகை முதலிய மலர்கள் மலர்கின்ற அற்றைநாள் மாலைப்பொழுதின்கண் என்க.

(விளக்கம்) மறவாள் ஏந்தியவனும் நிலந்தரு திருவினை உடையோனும் ஆகிய நெடியோன் என்க. அவன் மூதூரின்கண் மலர்தூவி விளக்கம் ஏந்திய மகளிர் வாழ்கெனப் பலர் தொழவும் வந்த மாலை என்க. ஏத்தி என்னும் எச்சத்தை ஏத்த எனத் திருத்திக் கொள்க.

மறக்குடி மகளிர் செயல்

9-21: போந்தை............ஏத்த

(இதன் பொருள்) போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்-பனம்பூவால் இயன்ற கண்ணியாகிய பொற்பூ மாலையை அணிந்த வராய்ச் சென்று; வேந்து வினை முடித்த ஏந்துவாள் வலத்தர்-தம் அரசன் கருதிய போர்த்தொழிலை முற்றுவித்த தம் கையில் ஏந்திய வாளையும் வெற்றியையும் உடைய மறவர்களுடைய; யானை வெண்கோடு அழுத்திய மார்பும்-பகைவர் யானையின் வெள்ளிய கொம்பு மாய்ந்தமையால் உண்டான புண்ணையுடைய மார்பினையும்; நீள்வேல் கிழித்த நெடும் புண் ஆகமும்-அப்பகைவர் எறிந்த நீண்ட வேல்கள் கிழித்தமையால் உண்டான நெடிய புண்ணையுடைய மார்பினையும்; எய்கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்-அப் பகைவர் எய்த அம்புகள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய பெரிய அழகிய மார்பினையும்; வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்-பகைவருடைய கூரிய வாள் கிழித்தமையால் உண்டான புண்ணையுடைய மணிக்கலன் பூண்ட மார்பினையும்; மைமலர் உண்கண் மடந்தையர்-அம் மறவருடைய காதலிமாராகிய நீலமலர் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர்கள்; அடங்கா-கச்சின் கண் அடங்காத; கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ-பருத்த தேமலையுடைய முலைகளினது வெப்பத்தால் வேது கொண்டு; அகில் உணவரித்த அம் மென் கூந்தல் முகில் நுழை மதியத்து-அகிற் புகையை உட்கொள்ளும்படி விரித்து விடப்பட்ட அழகிய மெல்லிய தமது கூந்தலாகிய முகிலின் உள்ளே நுழைகின்ற தமது முகமாகிய திங்களின்கண் அமைந்த; முரிகருஞ் சிலைக்கீழ்-வளைந்த கரிய புருவமாகிய வில்லின்கீழ் அமைந்த; மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து-மகரமீன் எழுதிய கொடியை உடைய காமவேள் அவர் கண்களாகிய மலரம்புகளை நம்மீது எய்துப் புண்செய்து; சிதர் அரி பரந்த செழுங்கடைத் தூது-சிதரிய செவ்வரி ஓடியவளவிய அவரது கடைக்கண்ணாகிய தூது பண்டு நமக்குத் துன்பம் தருவதாய் இருப்பினும்; இம் மாலைப் பொழுதின்கண் அச் செழுங்கடைக் கண்ணே நம் நெஞ்சின் புண்ணிற்கு மருந்தாகவும் அமைவதாயிற்று என்று அம் மறவர் பாராட்டு எடுப்ப என்க.

(விளக்கம்) வேந்து வினை-அரசன் ஏவிய போர்த்தொழில் போர்த்தொழிலின்கண் யானைக் கோடு முதலியவற்றால் விழுப்புண் பட்ட மறவர்கள் இல்லம் புகுந்தவுடன் அவர்தம் காதலிமார் அன்புடன் முயங்குதலால் அப்புண்கள் வேதுபிடித்தாற் போன்று துன்பம் தாரா தொழிந்தன என்பது கருத்து. பாசறையின்கண் அக்காதலிமாருடைய கூந்தலாகிய முகிலின் கீழ் அமைந்த அவர்தம் முகமாகிய திங்களின்கண் புருவமாகிய வில்லை வளைத்து வில்லின் கீழதாகிய கண்ணாகிய மலர்க் கணையை ஏவி மன்மதன் துன்புறுத்தவும் அவருடைய கடைக்கண் அவர்பால் தம்மை இழுத்துத் துன்புறுத்தவும் கண்டேம். இப்பொழுது அக்கண் பார்வையும் கடைக்கண் தூதும் எமக்கு இன்பமளிக்கின்றன, என்று அம் மறவர் மகிழ்ந்த படியாம்.

இதுவுமது

22-31: இருங்கனி.........தழீஇ

(இதன் பொருள்) இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்கருங் கயல் பிறழுங் காமர் செவ்வியில்-பெரிய கோவைப் பழம் போன்று சிவந்த வாயானது சிறிய நிலவொளியைப் பரப்பக் கரிய கயல்மீன் போன்று பிறழ்கின்ற அழகிய காட்சியோடே திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்-திருத்தமுற்ற பற்களினின்றும் அரும்புகின்ற புதிய புன்னகையும்; மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் ஏந்துபூண் மார்பின் இளையோர்க்கு அளித்து -மாவினது தளிர்போன்ற நிறத்தையுடைய மகளிரால் அணிகலன் அணிந்த மார்பினை உடைய இளைய மறவர்க்கு வழங்கி; காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசு இல்லாள் முகத்து-கத்தூரித் திலகமாகிய கரிய களங்கம் கிடந்ததல்லால் பிறிதொரு களங்கமுமில்லாத ஒளிபடைத்த தமது முகத்தின்கண்; வண்டொரு சுருண்ட குழலுங் கோதையும் கோலமும் காண்மார்-மொய்த்த வண்டுகளோடே- சுருண்டு கிடக்கின்ற தம்முடைய கூந்தலையும் கூந்தலின்கண் அணிந்துள்ள மாலையையும் இவற்றின் அழகையும் காணும்பொருட்டு நிழல்கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி-தமது உருவத்தின் நிழலை வெளிப்படுத்துகின்ற கண்ணாடி மண்டிலத்தை அம் மகளிர் தமக்கு முன்னர் நிறுத்தி; வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ-வளைந்த கோட்டினை உடைய சிறிய யாழை எடுத்து அணைத்துக்கொண்டு என்க.

(விளக்கம்) கனி- கோவைக்கனி துவர்-பவழமுமாம். காமர் அழகு. மாலையானது மடவோர் தம்மால் விருந்தின் மூரல் இளையோர்க்கு அளித்து என்க. காசறை கத்தூரி. கறை-களங்கம் திலகத்தை அன்றி மற்றொரு கறையும் இல்லாத முகம் என்றவாறு மண்டிலம்-ஈண்டுக் கண்ணாடி.

இதுவுமது

32-40: புணர்புரி...............நீங்க

(இதன் பொருள்) புணர்புரி நரம்பின் பொருள்படு பத்தர்-இசையாலே தம்மு ளியைகின்ற நரம்பினையும் இசையின்பமாகிய நுகர் பொருள் தோன்றுதற்கு இடனான பத்தர் என்னும் உறுப்பினையுமுடைய அந்த யாழினின்றும்; குரல் குரலாக வருமுறைப்பாலையில்-குரல் குரலாகப் பிறக்கின்ற செம்பாலை முதலிய பண்ணுடன்; துத்தங்குரலாத் தொல்முறை இயற்கையின் அம்தீம் குறிஞ்சி அகவன் மகளிரின்-துத்தங் குரலாகத் தோன்றுகின்ற படுமலைப் பாலையும் பழைய முறைமையினையுடைய செவ்வழிப் பாலையும் அழகிய இனிய குறிஞ்சிப் பண்ணும் ஆகிய பண்களைப் பாடுகின்ற மகளிர் வாயிலாய்; மைந்தர்க்கு ஓங்கிய வருவிந்தமர்ந்து-அம் மைந்தரக்குச் சிறந்த பெறற்கரிய இசை விருந்தினையும் செய்து; முடிபுறம் உரிஞ்சுங் கழல் கால் குட்டுவன் குடி புறந்த தருங்கால் திருமுகம்போல வணங்குகின்ற பகை மன்னர்களின் முடிக்கலன்கள் தம்மீதிலே உராய்தற்குக் காரணமான வீரக்கழலணிந்த காலையுடைய செங்குட்டுவன் தன் குடிமக்களை அளிசெய்து பேணுங்கால் அவனது அழகிய முகம் விளங்குவது போல விளங்காநின்ற; உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்-சான்றோர்கள் கைகுவித்து வணங்கும்படி வானத்தே தோன்றிய விரிந்த கதிரை உடைய திங்களை, பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க-உலகத்தில் உள்ள சான்றோர் பலரும் புகழா நின்ற பழைய வஞ்சி நகரத்திற்குக் காட்டி மாலைக்காலம் நீங்கா நிற்ப என்க.

(விளக்கம்) பொருள்-இசையாகிய பொருள் இசை மிக்குத் தோன்றுவதற்குப் பத்தர் காரணமாதலின் பொருள்படுபத்தர் என்றார். குரல் குரலாக வரும் முறைப்பாலை என்பது செம்பாலை முதலியவற்றை குரலில் உழை தோன்றக் குறிஞ்சியாழ் என்பர். துத்தங் குரலாகத் தோன்றுவது படுமாலைப்பாலை என்பர். இவற்றின் இயல்புகளை ஆய்ச்சியர் குரவையில் காண்க. மைந்தர் என்றது போர் மறவரை மாலை மடவோர் தம்மால் மூரலையும், அகவன் மகளிரால் இசையையும் மைந்தர்க்கு அளித்து மதியத்தை மூதூர்க்குக் காட்டி நீங்க, என்க. குட்டுவன் குடிபுறந்தருங்கால் இன்முகத்தோடிருத்தலின் அவன் திருமுகம்போல மதியம் என்றார்.

இரவுக்கால நிகழ்ச்சிகள்

41-52: மைந்தரும்........வருவழி

(இதன் பொருள்) மைந்தருள் மகளிரும் வழிமொழி கேட்ப-உலகத்தின்கண் உள்ள ஆடவரும் பெண்டிரும் தன்வழிப்பட்டு நின்று தன் மொழிப்படி ஒழுகா நிற்ப; ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த வெள்நிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்-ஐந்து வகைப்பட்ட மலர்க்கணைகளை உடைய நெடிய காமவேள் கொலுவீற்றிருந்த வெள்ளிய நிலா முற்றத்திலும் காதலர்கள் ஒருவரை ஒருவர் விரும்புதற்கிடனான மலர்ப் பாயல்களினும்; மண் ஈட்டு அரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் வெண்கால் அமளியும் விதான வேதிகைகளும்-சுதை தீற்றிய கூத்தாட்டரங்கங்களிலும், மலரால் இயற்றப்பட்ட பூம் பந்தர்களிலும் யானைக் கொம்புகளால் இயன்ற கால்களையுடைய கட்டில்களிடத்தும் மேற்கட்டி இடப்பட்ட மேடைகளிடத்தும்: தண்கதிர் மதியம் தான்கடி கொள்ள-குளிர்ந்த ஒளியினையுடைய திங்கள் ஒளி மிகவும் விளக்கஞ் செய்ய; படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவின்-கடல்சூழ்ந்த பயன் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்தின் நடுவிடத்தே நின்று உயர்ந்த நீண்ட நிலைமையினையுடைய மேருமலையாகிய பொன்மலைபோன்று; கொடிமதில் மூதூர் நடுநின்றோங்கிய-கொடி உயர்த்தப்பட்ட மதில் சூழ்ந்த வஞ்சி நகரத்தின் நடுநிலத்தே நிலைத்து நின்று உயர்ந்த; தமனிய மாளிகைப் புணைமணி அரங்கின்-பொன்னால் இயன்ற தனது மாளிகையின்கண் அழகுபடுத்தப்பட்ட மணி மேடையின்மேல் செங்குட்டுவனின் வாழ்க்கைத் துணைவியாகிய; வதுவை வேண்மாள் மங்கல மடந்தை மதிஏர் வண்ணங் காணிய வருவழி-வேண்மாள் என்னும் மங்களத் தன்மை பொருந்திய கோப்பெருந்தேவி திங்களினது எழுச்சியில் உண்டான அழகைக் கண்டு மகிழ்தற்கு வருகின்றபொழுது என்க.

(விளக்கம்) மைந்தரும் மகளிரும் என்றது காதற்கேண்மை உடையாரை. வேள்-காமவேள். உலகெங்கும் எவ்வுயிரிடத்தும் அவன் ஆணை செல்லுதலின் அவனது வழிமொழி கேட்ப என்றார். வெண்ணிலா மதியம் முதலிய இடங்களில் மிகுதியும் விளக்கமுறுதலின் மதியம் கடிகொள் என்றார். கடி-விளக்கம்; உரிச்சொல் மனைமாட்சி உடைய பெருந்தேவி என்பார் மங்கல மடந்தை என்றார். என்னை? மங்கலமென்பது மனைமாட்சி எனவரும் திருக்குறளும் காண்க. காணிய-காண்பதற்கு.

இதுவுமது

53-64: எல்வளை........ஒருசார்

(இதன் பொருள்) எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண்டு ஏத்தப் பரந்தன வொருசார்-ஒளியுடைய வளையலணிந்த மகளிரால் ஏந்தப்பட்ட விளக்குகள் அத் தேவியார்க்கு பல்லாண்டு கூறி வாழ்த்துதற்பொருட்டு ஒருபக்கத்தே வந்து பரவின மண்கணைமுழவும் வணர்கோட்டு யாழும் பண்கனி பாடலும் பரந்தன வொருசார்-மண் பூசப்பெற்ற திரண்ட மத்தளமும் வளைந்த தண்டினை உடைய யாழும் ஆகிய இசைக்கருவிகளோடே இசையின்பம் கனிகின்ற பாடல்களும் ஒருபக்கத்தே பரவின; மான் மதச் சாந்தும் வரிவெள் சாந்தும் கூனும் குறளும் கொண்டன-ஒருசார்-கத்தூரிக் குழம்பும் தொய்யில் எழுதுதற்குரிய வெள்ளிய சந்தனமும் கூன் உடையோரும் குறள் உரு உடையோரும் ஒருபக்கத்தே ஏந்திவந்தனர்; வண்ணமும் சுண்ணமும் மலர் பூம்பிணையலும், பெண்அணிப் பேடியர் ஒருசார் ஏந்தின-வண்ணக் குழம்புகளும், சுண்ணங்களும், மலர்ந்த பூமாலைகளும், பெண் இயல்புமிக்க பேடியரால் ஒரு பக்கத்தே ஏந்தப்பட்டன; பூவும் புகையும் மேவிய விரையும் தூவியஞ் சேக்கை சூழ்ந்தன-ஒருசார்-மலர்களும் அகில் முதலிய நறுமணப் புகைகளும் விரும்பப்பட்ட மணப்பொருள்களும் அன்னத் தூவியால் இயன்ற பள்ளியை ஒருபக்கத்தே சூழ்ந்திருந்தன; ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் ஒருசார் சேடியர் செவ்வியன் ஏந்தினர்-கண்ணாடியும் ஆடைகளும் அணிதற்குரிய அணிகலன்களும் ஒருபக்கத்தே அவற்றை வேண்டும் செவ்வி அறிந்து உதவுதற் பொருட்டுப் பணி மகளிர் ஒருபக்கத்தே ஏந்தி நின்றனர் என்க.

(விளக்கம்) எல்-ஒளி. பல்லாண்டு பாடுவோர் கையில் விளக்கேந்திப்-பாடுதல் மரபு. கணை-திரட்சி. வணர்கோடு-வளைந்த யாழ்த்தண்டு. பண்-இன்பம் கனிந்த பாடல் என்க. பெண்ணணிப் பேடியர்-பெண்மையை அவாவிப் பெண்டிர்போல அணிந்துகொள்ளும் பேடியர். ஆடி-கண்ணாடி. ஆடி முதலியவற்றைச் செவ்வி தெரிந்து கொடுப்பதற்காகச் சேடியர் ஏந்தி நின்றனர் என்றவாறு.

அரசனும் தேவியும் கூத்தாட்டுக் கண்டு மகிழ்தல்

45-79- ஆங்கு........பின்னர்

(இதன் பொருள்) ஆங்கு அவள் தன்னுடன் அணி மணி அரங்கம் வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி-அப்பொழுது அக் கோப்பெருந் தேவியோடு அழகிய மணி பதித்த அந்த நிலா முற்றத் தின்கண் கடல் சூழ்ந்த நில உலகத்தை ஆளுகின்ற செங்குட்டுவனும் எறி இனிது வீற்றிருந்து; பாத்தரு நால்வகை மறையோர்-பகுத்துக் காணுதலரிய நான்கு வகைப்பட்ட மறைகளையும் ஓதி உணர்ந்த அந்தணர் வாழுகின்ற; பறையூர்க் கூத்தச் சாக்கையன்-பறையூர் என்னும் ஊரில் பிறந்தவனாகிய கூத்தச் சாக்கையன் என்னும் கலைஞன்; திருநிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்-அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; செங்கையின் பரிதரு படுபறை ஆர்ப்பவும்-சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; செங்கண் ஆயிரம் திருக்குறிப்பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்-சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; பாடகம் பதையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒரு திறன் ஆக-தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் ஆடலின்-ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே; மகிழ்ந்து அவன் ஏத்தி நீங்க-பெரிதும் மகிழ்ச்சியடைந்து அக் கூத்தச் சாக்கையன் பரிசில்பெற்று அரசனையும் தேவியையும் வாழ்த்தி அவ்விடத்தினின்றும் போயினனாக; இருநிலம் ஆள்வோன்-பெரிய நிலத்தை ஆளுகின்ற செங்குட்டுவன்; வேத்து  இயல் மண்டபம் மேவிய பின்னர்-அரசியல் நடத்துதற்குரிய அத்தாணி மண்டபத்தை அடைந்த பின்னர் என்க.

(விளக்கம்) (74) பாத்தரு நால்வகை மறையோர் வாழ்கின்ற பறையூர் என்னும் ஊரில் உள்ள சாக்கையன் என்னும் கூத்தன்தேவி யோடிருந்த அரசன்முன் வந்து இமையவன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினை ஆடிக்காட்ட மகிழ்ந்து என இயைபு காண்க. கொட்டிச்சேதம்-கொடுகொட்டி என்னும் ஒருவகைக் கூத்து; இக் கூத்து இறைவனால் ஆடப்பெற்றது என்பர். ஒரு பக்கத்தில் இறைவியின் உறுப்புகளாகிய கை திருவடி இடை காது முதலியவற்றில் அணிந்துள்ள பாடகம் சூடகம் மேகலை குழை முதலியன ஆடாத வண்ணம் இறைவன் கூற்றிலுள்ள சேவடிச் சிலம்பு புலம்பவும் கையில் பறை ஆர்ப்பவும் கண் குறிப்பருளவும் சடை திசைமுகம் அலம்பவும் இமையவன் இக் கூத்தை ஆடினன். சாக்கையனும் அவ்வாறே ஒருபக்கத்தில் ஆண்கோலமும் மற்றொரு பக்கத்தில் பெண் கோலமும் பூண்டு ஒருபக்கம் அசைவின்றி ஒருபக்கத்தால் மட்டும் ஆடிக்காட்டினன் என்றுணர்க. இக் கூத்தின் இயல்பைத் திரிபுரமெரியத் தேவர் வேண்ட, எரிமுகப் பேரம் பேவல் கேட்ப, உமையவளொரு திறனாகவோங்கிய இமையவனாடிய கொடுகொட்டியாடலும் (சிலப். 6:40-43) கொட்டி கொடுவிடையோ னாடிற்றதற்குறுப் பொட்டிய நான்காமெனல் (சிலப் 3: 14; மேற்) படுபறை பலிவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி யாடுங்கால்............கொண்ட சீர் தருவாளோ(கலி கடவுள் 5-7); கொட்டி யாடற்கேற்ற மொட்டிய, உமையவளொருபாலாக வொருபால், இமையா நாட்டத் திறைவ னாகி, அமையா வுட்கும் வியப்பும் விழைவும், பொலிவும் பொருந்த நோக்கித் தொக்க, அவுண ரின்னுயிரிழப்ப வக்களம், பொலிய வாடின னென்ப (கலி. கடவுள் 5-7, மேற்) எனவருவனவற்றா லறிக.

செங்குட்டுவனைக் கஞ்சுக மாக்கள் வந்து காணுதல்

80-83: நீலன்...........தொழுது

(இதன் பொருள்) நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்-பண்டு பால குமரன் மக்களாகிய காவாநாவின் கனகவிசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வம்மின் என அவருடன் போக்கிய நீலன் என்பவனை உள்ளிட்ட கஞ்சுக மாக்களாகிய தூதர்கள் அப் பணியைச் செய்துமுடித்து மீண்டவர்; மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி-மாடலன் என்னும் அந்தணனோடு வந்து; வாயிலாளரின் மன்னவர்க்கு இமைத்தபின்-தம் வரவினை வாயில் காப்போர் வாயிலாக அரசனுக்கு அறிவித்தபின்னர்; கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது-அம் மன்னவன் விடுத்த அரண்மனைப் பணியாளர் பின்னர்ச் சென்று அரசனுடைய அடிகளில் வீழ்ந்து வணங்கிச் சொல்லுபவர் என்க.

(விளக்கம்) கோயில் மாக்கள்-அரண்மனையின்கண் குற்றேவன் செய்பவர். நீலன் முதலிய தூதுவர் கொணர்ந்த செய்தி தனித்திருந்து அறியற்பாலதாகலின் அரசன் வேறு பணியாளர்கள் ஏவி அவர்களை அழைத்தான் என்பது கருத்து.

சோழன் இகழ்ந்தமையை மன்னனுக்கு அறிவித்தல்

84-95: தும்பை..........பெருந்தகை

(இதன் பொருள்) தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே-வடநாட்டின்கண் சென்று அந் நாட்டு மன்னரோடு போர்க் களத்திலே தும்பைப்பூச் சூடிச்சென்று வெவ்விய போர் செய்து வாகை சூடிய வீரக்கழல் கட்டிய வேந்தனே கேட்டருளுக; செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு ஆங்கு-அடியேங்கள் கனகவிசயரை அழைத்துக் கொண்டு சோழனுடைய பழைய நகரத்தை எய்தி அவ்விடத்தே; வேந்தன் வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத்து இருக்க-அச் சோழமன்னன் வச்சிரநாட்டரசனும் அவந்திநாட்டரசனும் மகதநாட்டு மன்னனும் திறையாக இறுத்த கொற்றடபந்தரும் பட்டி மண்டபமும் தோரணவாயிலும் பிறவுமாகிய அரும்பொரு ளமைந்த சித்திர மண்டபத்தின்கண் இருந்தசெவ்வியறிந்து அங்கு; அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரின் சென்று தகையடி வணங்க-வடநாட்டுப் போரின்கண் புறங்கொடுத்த கனகவிசயரோடும் அவ்வரசனுடைய பணியாளரோடும்கூடி அம் மன்னவனுடைய கட்டளை பெற்று அவன் முன்னிலையிற் சென்று அழகிய அவன் அடிகளை வணங்கி யாம் கொண்டு சென்ற செய்தியையும் அறிவித்தேம். அது கேட்ட அம் மன்னவன்; நீள் அமர் அழுவத்து நெடும் பேர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து கொல்லாக் கோலத்து உயிர் உயர்ந்தோரை-நீண்ட போர்க்களத்தின்கண் எதிர்ந்துவந்து தமது நெடிய பெரிய ஆண்மைத் தன்மையோடே வாளையும், குடையையும் வீரங்கெழுமிய அப் போர்க் களத்திலே ஒழித்துவிட்டுச் சாதற்கு அஞ்சிப் பிறர் கொல்ல வொண்ணாத  தவக்கோலம் பூண்டு உயிர் தப்பி ஓடியவரை; வெல் போர்க்கோடல் வெற்றம் அன்று என-வெல்லுதற்குரிய போர்க்களத்திலே கைப்பற்றிக்கொண்டு வருதல் வெற்றியன்று என்று; தலைத் தேர்த்தானைத் தலைவர்க் குரைத்தனன்-தலைமைத் தன்மையுடைய தேர்ப்படைத் தலைவனுக்குக் கூறினன்; சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை-வில்லையும் ஆத்தி மாலையையும் உடைய மார்பினையுடைய அச் சோழர்குலத் தோன்றலாகிய பெருந்தகை மன்னன் என்றார் என்க.

(விளக்கம்) தும்பை வெம்போர்-வலிமை காரணமாக எதிர்த்து வந்த பகையரசரை எதிர் சென்று போர்செய்து அவர் தலைமைத் தன்மையைக் கெடுத்தல். செம்பியன் மூதூர் என்றது உறையூரை. வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சத்திர மண்டபம் என்றது இந் நாட்டிற்குரிய மூன்று அரசர்களும் திறையிட்ட பந்தர் தோரணவாயில் பட்டிமண்டபம் என்னும் இவற்றோடு கூடிய மண்டபம். இதனைப் பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயர் என்பர். வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன்னாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த, நிவந்தோங்கு மரபிற் றோரண வாயிலும்(சிலப்.5:99-104) என்பதனானுமறிக. தமர்-சோழ மன்னனுடைய பணியாளர். அழுவம்-களப்பரப்பு. கொல்லாக் கோலம்-தவக்கோலம். வெற்றம்-வெற்றி. தேர்த்தானைத் தலைவற்கு உரைத்தனன் என்றது எள்ளியுரைத்தான் என்பதுபட நின்றது. சிலையையும் தாரையும் உடைய செம்பியர் பெருந்தகை என்க, பெருந்தகை என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

அத் தூதுவர் பாண்டியன் கூறியதுரைத்தல்

96-107: ஆங்கு...........என்று

(இதன் பொருள்) அறக்கோல் வேந்தே-அறத்திற் பிறழாத செங்கோன்மையுடைய வேந்தனே; ஆங்கு நின்று அகன்றபின் அடியேங்கள் அவ்வரசனுடைய நாட்டினின்றும் நீங்கிய பின்னர்; ஓங்குநீர் மதுரை மன்னவன் காண உயர்ந்த-புகழையுடைய மதுரையை ஆளுகின்ற பாண்டிய மன்னன்பால் இக் கனக விசயரோடு சென்று காணா நிற்ப; போர்வேல் செழியன்-போர்த் தொழில் வல்ல வேலேந்திய அப் பாண்டிய மன்னன்; ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த சீர் இயல் வெள் குடைக் காம்பு-வடவாரிய மன்னர்களது போர்க்களத்தின்கண் கைப்பற்றிக் கொண்ட அழகு பொருந்திய தமது வெண்கொற்றக் குடையினது காம்பாகிய மூங்கிற்கோலை; ஆங்கு நனி சிறந்த சயந்தனது வடிவினை உடையதாகக் கருதப்படும் தலைக்கோலாகும்படி; கயந்தலை யானையின் கவிகையிற் காட்டி-பெரிய தலையினையுடைய யானையின் மேல் உம்முடைய மன்னன் கவித்த குடைநிழலிலே வைத்துக் காணும்படி செய்து தாங்கள் போர்க்களத்தினின்றும் புறமிட்டோடி; இமைய சிமையத்து இருங்குயிலாலுவத்து  -இமயமலையின் குவட்டிலமைந்த பெரிய குயிலாலுவம் என்னும் இடத்துக் கோயில் கொண்டருளிய; உமை ஒரு பாகத்து ஒருவனை வணங்கி-உமா தேவியார் எழுந்தருளிய ஒரு கூற்றையுடையவனாகிய ஒப்பற்ற கடவுளை வழிபாடு செய்து; அமர்க்களம் அரசனது ஆகத்துறந்து-தங்கள் நாட்டின் கண்ணதாகிய போர்க்களம் நுங்களரசனுக்குரிமையாம்படி உலகினைத் துவரத் துறந்து போய்தவப் பெருங்கோலம் கொண்டோர் தம் மேல்-தவக்கோலமாகியடத்தும் மறக்கள வேள்விகளையே செய்வதன் கண் ஊக்கமுடைமையாய் இருக்கின்றனை; என்றான் என்க.

(விளக்கம்) நெடுந்தார்-நெடிய வாகைமாலை(115) நீ வியலூர் எறிந்த பின்னர் ஒன்பது மன்னரை வென்றது முதலாக ஆரிய மன்னரை வென்றது ஈறாகப் போர்பல செய்து நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தன் ஆதலான் சோழனும் பாண்டியனும் நின்னை இகழ்ந்தமையை இப் பேருலகம் ஏற்றுக்கொள்ளாது. ஆதலால் நின் சீற்றம் அமைக. மேலும் நீ சான்றோரால் மதிக்கப்படும் ஒரு சான்றோன் ஆதலாலும் நின் சீற்றம் அமைக என இம் மாடல மறையோன் ஏதுக்கள் பல கூறுதல் உணர்க. ஆன்பொருநை-ஒருயாறு. யாற்று மணலினும் வாழ்நாட்கள் சிறக்க என்றது வாழ்நாள் எண்ணினால் மிக்கனவாக என்றவாறு. இவ்வாறு வாழ்த்துதல் மரபு. இதனை எங்கோ வாழிய..........பஃறுளி மணலினும் பலவே (புறநா. 9: 8-11) சிறக்க நின்னாயுள், மிக்குவரு மின்னீர்க்காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே (புறநா, 43: 21-3) நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரியலைக்குஞ் செந்தில் நெடுவேணிலை இய காமர்வியன்றுறைக் கடுவளி தொகுப்ப வீண்டிய வடுவா ழெக்கர் மணலினும் பலவே( புறநா. 55: 17-21) என வருவனவற்றானும் உணர்க. அகழ்கடல்-அகழ் போன்ற கடலுமாம். அறக்கள வேள்வி-அறம் நிகழ்தற்கிடனான இராசசூயம் குதிரை வேள்வி முதலியன. மறக்கள வேள்வி-வீரத்தால் போர்செய்த களத்தின்கண் பகைவர் ஊனைப் பேய் முதலியவற்றை உண்பித்தல்.

மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்தல்

133-150: வேந்துவினை...........உணர்ந்தோய்

(இதன் பொருள்) வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி நின் ஊங்கணோர் மருங்கில்-அரசர்களுக்கென அற நூல்களுள் விதிக்கப்பட்ட வினைகளை நன்கு முடித்தவர்களும் ஏந்திய வாளால் பெறுகின்ற வெற்றியையுடையோரும் பனம்பூ மாலையைச் சூடுவோரும் ஆகிய நின்னுடைய முன்னோர்களுள் வைத்துச் சாலச் சிறந்தவராகிய அரசருள்; கடல் கடம்பு எறிந்த காவலனாயினும் விடர்ச்சிலை பொறிந்த விறலோனாயினும்-கடலின்கண் சென்று அங்குப் பகைவர்களுடைய தீவகத்தில் நின்ற கடப்ப மரமாகிய காவல் மரத்தை வெட்டி வீழ்த்திய புகழ்மிக்க வேந்தனாயினும் அன்றி இமயமலையின் முழையமைந்த புறத்தில் தனது இலச்சினை ஆகிய வில்லைப் பொறித்துவைத்த வெற்றி யையுடைய அரசனாயினும் அன்றி; நால் மறையாளன் செய்யுள் கொண்டு மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்-நான்கு மறைகளையும் ஓதிய பார்ப்பனப் புலவன் ஒருவன் தன்னைப் பாடிய செய்யுளை ஏற்றுக்கொண்டு அதற்குப் பரிசிலாக அப் புலவன் விரும்பிய வண்ணம் அறக்கள வேள்வி பலவும் செய்து அவனை மேலுலகத்திற்கே உடம்போடு செல்வித்தவனாயினும்; போற்றி மன்னுயிர் முறையில் கொள்க எனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவன் ஆயினும்-அன்றி, பாதுகாத்தலைச் செய்து இவ்வுலகத்தே நிலைபெற்ற உயிர்களைக் கைக் கொள்ளும் பொழுது அவர்க்கியன்ற அகவைக் காலம் நூறாண்டும் கழிந்த பின்னர்க் கொள்ளுகின்ற முறைமையினாலே கொள்ளக் கடவாய் எனக் கூற்றுவனையும் தனது கட்டளையின் கண் நிறுத்திவைத்த வெற்றி வேந்தன் ஆயினும், வன்சொல் மவனர் வளநாடு ஆண்டு பொன் படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்-கேள்விக்கின்னாத வன்சொல்லைச் சொல்லுகின்ற மவனருடைய வளம் பொருந்திய நாட்டினை வென்று அடிப்படுத்து ஆட்சி செய்து பொன்னாகத் தோன்றுகின்ற நெடிய மேருமலைவரையில் சென்றவனாயினும்; மிகப் பெருந்தானையோடு இருஞ்செரு வோட்டி-மிகவும் பெரிதாகிய படைகளோடே சென்று செய்த பெரிய போரின்கண் பகைவரை ஓடச் செய்து அகப்பா எறிந்த அருந்திறலாயினும்-பகைவர் மதிலை அழித்த அரிய ஆற்றல் படைத்தவனாயினும்; உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் நீரும் ஆடினேன் ஆயினும்-அச்சம் பொருந்துதற்குக் காரணமான பகைவனுடைய அயிரை ஆற்றிலும் சென்று நீராடி மேலும் குணகடல், குடகடல் என்னும் இரண்டு கடல்களிலும் சென்று நீராடிய அரசனாயினும்; சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோனாயினும்-இந்திரனுடைய அமராபதியினின்றும் சதுக்கப் பூதங்களைத் தனது வஞ்சி நகரத்திற்கும் கொண்டு வந்து மதுவருந்துதற்குக் காரணமான வேள்வியைச் செய்தவனாயினும்; மீக் கூற்றாளர் மாவரும் இன்மையின்-இங்ஙனம் ஒவ்வொரு வகையால் புகழ பெற்றிருந்த இவருள் ஒருவரேனும் இல்லாதொழிந்தமையால்; யாக்கை நில்லாதென்பதை உணர்ந்தோய்-இவ்வுலகத்தின்கண் உடம்பு நிலைநிற்க மாட்டாது என்னும் உண்மையை உணர்ந்திருக்கின்றாய் அல்லையோ என்றான் என்க.

(விளக்கம்) ஊங்கணோர்-இச் சேர நாட்டின்கண் இருந்தவராகிய நின் முன்னோர்களாகிய சேரர்கள். கடற்கடம் பெறிந்த காவலன்-கடலிலுள்ள தீவுகளை ஆளுகின்ற ஓர் அரசனுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அம்மன்னனைத் தன்னடிப்படுத்த ஒரு சேர மன்னன் விடர்ச்சிலை பொறித்தவன் என்பான் குடக்கோச்சேரலன். குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் என(மணிமே.28: 103-4) பிறரும் ஓதுதல் உணர்க. நான்மறையாளன் என்றது பாலைக் கவுதமனரை. இவரை மேனிலை உலகம் விடுத்தோன் இமய வரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு சூட்டுவன் என்பர். இவனுடைய வரலாற்றினைப் பதிற்றுப்பத்தில் மூன்றாம்பதிகத்தில் பல்யானைச் செல்கெழு சூட்டுவனைப் பாலைக்கவுதமனார் பாடினார் பத்துப்பாட்டு; பாடிப் பெற்ற பரிசில் நீர் வேண்டியது கொண்மினென யானும் என் பார்ப்பணியும் சுவர்க்கம் புகல் வேண்டு மெனப் பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி கேட்பித்துப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் என்பதனானறிக. கூற்றுவரை நிறுத்தலாவது-மக்களுக்கென வகுத்த நூறாண்டும் வாழ்ந்த பின்னரே அவர் உயிரைக் கவர்தல் வேண்டும் எனக் கூற்றுவனுக்கும் விதிவகுத்து அவ்வாறே நிகழ்வித்தல். இங்ஙனம் ஒரு சேர மன்னன் செய்தான் என்பர். யவனர்நாடு-மேனாட்டிலுள்ள சோனகர் முதலீயோருடைய நாடு. அகப்பா-இதனை அரண் என்பர். கடற்கடம் பெறிந்த காவலன் முதலாக வேள்வி வேட்டோன் ஈறாக உள்ள பேராற்றலும் பெரும்புகழும் உடைய மன்னர்களும் மாண்டொழிந்தமையாலே யாக்கை நில்லாது என்பதை நீயே உணர்ந்திருக்கின்றனை அல்லையோ என்றவாறு. மீக்கூற்றாளர்-பெரும்புகழாளர். இவற்றால் யாக்கை நிலையாமை கூறி. இனிச் செல்வ நிலையாமையும் இளமை நிலையாமையும் கூறுகின்றான்.

151-158: மல்லன்........கண்டனை

(இதன் பொருள்) மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லாது என்பதை-வானம் பொருந்திய இப் பேருலகத்தின்கண் வாழுகின்ற மாந்தர் யாரிடத்தும் செல்வம் நிலைத்து நில்லாது என்னும் உண்மையை; வெல்போர்த் தண் தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோ-சென்ற இடத்திலெல்லாம் வெல்லும் போராற்றல்மிக்க குளிர்ந்த தமிழ் நாட்டுப்படை மறவர்களை அறியாமையால் இகழ்ந்த இக் கனக விசயரை யுள்ளிட்ட ஆரிய அரசரிடத்தே நீ தானும் கண்கூடாகக் கண்டனை யல்லையோ; காவல் வேந்தே-உலகத்தை ஆளுகின்ற அரசனே; இளமை நில்லாது என்பதை ஈங்கு உணர்வுடைய மாக்கள் எடுத்து ஈங்கு உரைக்கல் வேண்டா-இளமைப் பருவம் நிலைத்து நில்லாமல் விரைந்து கழிந்தொழியும் என்னும் உண்மையை இவ்விடத்தே மெய்யுணர்வுடைய சான்றோர்கள் மேற்கோள்கள் எடுத்துக் காட்டிக் கூறிக்காட்டலும் வேண்டுமோ? வேண்டாவன்றோ, எற்றலெனின்; திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே நரை முதிர் யாக்கை நீயுங் கண்டனை-திருமகள் வீற்றிருக்கின்ற திருமார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே நரைத்து முதிர்ந்த உடம்பினை நீயும் இப்பொழுது எய்தினை அல்லையோ? இவ்வுண்மையை நினது பட்ட றிவினாலேயே உணர்ந்து கொண்டிருப்பாய் என்றான் என்க.

(விளக்கம்) கனக விசயர் முதலிய அரசர் நொடிப் பொழுதில் தம் மரச செல்வத்தை இழந்தமையால் கண்டாய். இளமை நில்லாமையை உன்னுடைய நரைத்து முதிர்ந்த யாக்கையே நினக்கு அறிவுறுத்தும் என்றவாறு.

உயிர்போகு பொதுநெறி

159-174: விண்ணோர்.............பொறேஎன்

(இதன் பொருள்) விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்-தேவர் உருவத்திலே பிறந்து தேவர் உலகத்தை அடைந்த நல்ல உயிரானது அவ்வுடம்பை ஒழித்து மீண்டும் மண்ணுலகத்தில் வாழுகின்ற மக்கட் பிறப்பிலே திரும்பினும் திரும்பும்; மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும்-எய்தும் மக்கள் உடம்பெடுத்து நிலவுலகத்தே நிலைத்து வாழுகின்ற உயிரானது வேந்தருள் மேம்பட்டவனே விலங்குடம்பினை எய்திய பிறத்தலும் கூடும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கு அஞர் நரகரைக் காணினுங் காணும்-அவ் விலங்குப் பிறப்பினின்றும் நீங்கிய இனிய உயிரானது நெஞ்சு கலங்குதற்குக் காரணமான துன்பம் பொருந்திய நரகருடைய உடம்பினைப் பெறினும் பெறும் இவ்வாறு; ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது-அரங்கத்தில் ஏறிக் கூத்தாடுகின்ற கூத்தர்களைப் போல அரிய உயிரானது ஓரிடத்தே எய்திய கோலத்தோடே ஒருங்கு கூடி ஓரிடத்திலேயே நிலைத்து நின்று இயங்க மாட்டாது; உயிர் செய்வினை வழித்தாய் செலும் என்பது பொய் இல் காட்சியயோர் பொருளுரை ஆதலின்-உயிரானது தான் செய்த வினைக்குத் தக அவ்வினையின் வழியே இயங்கும் என்பது மருளரு காட்சியோர் கண்டுரைத்த வாய்மையான மொழியே ஆதலால்; எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே-ஏழு மன்னர்களுடைய முடிக்கலனைக் கொண்டு சமைத்த ஆரம் பூண்ட மார்பை உடையோய் நீ நின் திருக்கையில் ஏந்திய ஆணைச் சக்கரம் நின் வழிவழியாகச் சிறப்பதாக! பெரிய வாளை உடைய வேந்தனே; யானும் அரும்பொருள் பரிசிலேன் அல்லேன்-இவ்வறிவுரையைக் கூறுகின்ற அந்தணனாகிய யானும் பெறுதற்கரிய பொருளைப் பரிசிலாகப் பெறுகின்ற அவாவினாலே இவற்றைக் கூறுவேனல்லேன்; புலவரை இறந்தோய்-அறிவின் எல்லையைக் கடந்த பெருமைகளை உடைய வேந்தனே; பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்-பெறுதற்கரிய பெருமையினையுடைய இந்த உடம்பினைப் பெற்ற நல்வினையையுடைய சிறந்த நின்னுடைய உயிர்; மலர்தலை உலகத்து உயிர் போகுபொதுநெறி-விரிந்த இடத்தையுடைய  இந் நிலவுலகத்தின்கண் உடம்பொடு தோன்றிய வாழுகின்ற எளிய உயிரினங்கள் செல்லுகின்ற பொதுவான நெறியிலே; போகுதல் பொறேன்-செல்லுவதனை நின்பால் அன்பு மிக்க யானோ பொறுக்கில்லேன் காண் என்றான் என்க.

(விளக்கம்) தேவ கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரக கதி என நால்வகைக் கதியினும் உயிர்கள் தத்தம் இருவேறு வகை வினைகளுக் கேற்ப மாறிமாறிப் பிறந்துழலும். அங்ஙனம் பிறக்கும் உயிர் நல்வினையின் பயனாகத் தன் வினைக்கேற்ப மக்களாகவே விலங்காகவோ பிறப்பெய்தும். உயிர்கள் தீவினையின் பயனாய் நரகராய்ப் பிறந்துழலும். நரகத்தில் அவ்வினை தீர்ந்தவுடன் விலங்காகவோ மக்களாகவோ பிறக்கும். இங்ஙனம் உயிரெல்லாம் மாறிமாறிப் பிறந்து இன்பதுன்பங்களை நுகர்வதே உயிர்களுக்கியன்ற பொதுநெறி ஆகும் என்பது. இதனால் அம் மாடல மறையோன் செங்குட்டுவனுக்குச் செவியறிவுறுத்த செய்தியாம் என அறிக. உயிர்கள் இவ்வாறு மாறி மாறி உடம்பெடுத்து உழல்வதற்கு ஆடுங்கூத்தர் மாறி மாறி வேடம் புனைந்து வந்து வந்து ஆடுதல் உவமை என்க. எழுமுடி மார்ப என்றது பகை மன்னருடைய ஏழு முடிக்கலன்களைக் கொண்டியற்றிய மணியாரம் பூண்ட மார்பை உடையவனே என்றவாறு. பரிசில் வேண்டி வரும் இரவலர், புரவலர் மகிழும் வண்ணம் புனைந்துரைப்பர்; யான் பரிசில் வேண்டிக் கூறுகின்றேன் அல்லேன். சான்றோனாகிய நீ மக்கட் பிறப்பிற்கியன்ற சிறப்பு நெறியின்கண் செல்ல வேண்டுமென்னும் கருத்தினாலேதான் இங்ஙனம் இடித்துரைக்க நேர்ந்தது என்பான் அரும்பொருள் ..........பொறேஎன் என்றான் என்க.

இதுவுமது

175-178: வானவர்...........வேண்டும்

(இதன் பொருள்) வானவர் வழி நினக்கு அளிக்கும் நான்மறை மருங்கின்-தேவர்களும் விரும்பிப் போற்றுகின்ற வீட்டு நெறியை உனக்கு வழங்குகின்ற சிறப்பு நெறியாகிய; நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்-நான்கு மறைகளிடத்தும் கூறப்பட்ட பல்வேறு வகை வேள்விகளையும் அறிந்த பார்ப்பனனைக் கொண்டு; அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்-உணர்தற்கரிய மறைகளிடத்தே நின்போன்ற அரசர்களுக்கு என விதிக்கப் பட்டிருக்கின்ற உயர்ந்த பெரிய நன்மை தருகின்ற அறக்கள வேள்விகள் பலவற்றையும் இற்றை நாள் தொடங்கி நீ செய்தருள வேண்டும் என்று யான் விரும்புகின்றேன் என்றான் என்க.

(விளக்கம்) வானவர் போற்றும் வழி என்றது வீட்டு நெறியை; பார்ப்பாளைக் கொண்டு என்க. மறையிடத்து அரசர்க்கு விதித்த வேள்விகள் பல ஆதலின் அவற்றை விலக்குதற்கு ஓங்கிய பெருநல் வேள்வி செயல் வேண்டும் என்றான். நீ செயல் வேண்டும் என்றது இற்றைநாள் தொடங்கிச் செய்ய வேண்டும் என்பதுபட நின்றது.

இதுவுமது

179-186: நாளை.........என்று

(இதன் பொருள்) நாளைச் செய்குவம் அறம் எனில் இற்றே கேள்விகல் உயிர் நீங்கினும் நீங்கும்-யாவராயினும் தத்தமக்குரிய அறங்களை எப்பொழுதுமே செய்து கொண்டிருத்தல் வேண்டும், அங்ஙனமின்றி நாளைக்குச் செய்வோம் நாளைக்குச் செய்வோம் எனக் காலம் தாழ்த்திருப்பாராயின் அறக் கேள்வியைக் கேட்டிருக்கின்ற மக்கட்பிறப்பை உடைய நல்ல அவ்வுயிர் தானும் இப்பொழுதே அப் பிறப்பினை நீத்துச் செல்லினும் செல்லும், அன்றியும்; வாழும் நாள் இது என வரைந்து உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை-தாம் வாழுதற்குரிய நாளின் எல்லை இதுவேயாகும் என்று வரையறுத்து அறிந்து கொண்டவர் இதுகாறும் கடல்சூழ்ந்த இந்நில உலகத்தின்கண் யாண்டும் எவ்விடத்தும் இல்லை, ஆதலால் நினக்குரிய அவ்வறத்தினை இன்றே மேற்கொண்டு; வேள்விக்கிழத்தி இளவொடுங் கூடி தாழ் கழல் மன்னர் நின்னடி போற்ற-நீ செய்கின்ற அவ்வறக்கள வேள்விக் களத்தின்கண் தலைவனாகிய நினக்குத் தலைவியாக இருக்கும் உரிமை பூண்ட கோப்பெருந்தேவியாகிய இவ்வரசியாரோடுங் கூடி நின் அடியின் கண் வந்து வணங்குகின்ற வீரக் கழலணிந்த அரசர்கள் பலரும் நின் திருவடியே வணங்கி வாழ்த்தும்படி; நெடுந்தகை ஊழியோடு ஊழி உலகங்காத்து நீடு வாழி அரோ என்று-நெடுந்தகாய் ஊழி ஊழியாக இந்நிலவுலகத்தைப் பாதுகாத்துக் கொண்டு நெடிது வாழ்வாயாக என்று சொல்லி; என்க.

(விளக்கம்) நாளைச் செய்குவோம் என்றது நாளைச் செய்வோம் நாளைச் செய்வோம் எனக் காலந்தாழ்த்திருத்தலைக் கருதிற்று. அறக்கேள்வியுடைய நல்லுயிர் என்க. ஏனைப் பிறப்புகளில் அறத்தைக் கேட்டலும் இயலாமையின் அந் நன்மையையுடைய மக்கள் உயிர் என்பார் கேள்வி நல்லுயிர் என்றார். கேட்டல் மாத்திரையே பயன் தாராமையின் பயனின்றியே அவ்வுயிர் இன்றே நீங்கினும் நீங்கும் என்றவாறு. இனி, கேள்வி மாத்திரையால் உளதாகிய உயிர்  என்பாரும் உளர். முதுநீர்-கடல்........முழுவதும் இல்லையென்றது எப்பொழுதும் எவ்விடத்தும் யாரும் இல்லை என்பதுபட நின்றது.

அறிவுரை கேட்ட அரசன் செயல்

187-194: மறையோன்...........ஏவி

(இதன் பொருள்) மறையோன் மறைநா இறையோன் செவி செறுவாக உழுது வான் பொருள் வித்தலின்-அம் மாடல மறையோன் அம் மறைகளை நன்கு பயின்ற தனது நர்வாகிய ஏரினால் சேரன் செங்குட்டுவனுடைய செவிகளைக் கழனிகளாகக் கொண்டு ஆழ உழுது அக் கழனியிடத்தே அறம் என்னும் சிறந்த பொருளாகிய விதையை விதைத்தமையினாலே; வித்திய பெரும்பதம் விளைந்து பதம்மிகுத்து துய்த்தல் வேட்கையின்-அவ்வாறு விதைக்கப்பட்ட பெரிய உணவாகிய விதை நன்கு விளைந்து அவ்வுணவுமிகுதலாலே அவ்வுணவால் உண்டாகின்ற பயனை நுகரவேண்டும் என்னும் விருப்பங் காரணமாக; சூழ்கழல் வேந்தன் நான்மறை மரபின் நயம் தெரி நாவின் கேள்வி முடித்த வேள்வி மாக்களை-சுற்றிய வீரக்கழலையுடைய அவ் வேந்தன் அப் பொழுதே நான்கு மறைகளையும் ஓதும் முறைமையினாலே ஓதி அவற்றின் சொல்நயம் பொருள்நயம் முதலியவற்றை நன்குணர்ந்த செந்நாவினையுடைய வராய்க் கேட்பனவற்றை யெல்லாம் கேட்டு முடித்த வேள்வி செய்தற்கியன்ற பார்ப்பனர்களை; மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக் கொள ஏவி-அம் மாடல மறையோன் என்னும் அந்தணன் அறிவுறுத்த முறைமைப் படியே அழைத்து வேள்வியாகிய அமைதியினையுடைய விழாவை இயற்றும்படியாக ஏவிய பின்னர் என்க.

(விளக்கம்) நாவாகிய ஏரினை எனவும் செவியைச் செறுவாகக் கொண்டு எனவும் வான் பொருளாகிய விதையை எனவும் கூறிக் கொள்க. பெரும்பதம்-விதைக்கு ஆகுபெயர். பதம்-உணவு. மரபின் ஓதிநயம் தெரிந்த நா எனவும் கேள்வியைக் கேட்டு முடித்த எனவும் கூறிக் கொள்க. வேள்வி உயிர்க்கு அமைதி தருதற் பொருட்டாதலின் வேள்விச்சாந்தி என்றார். விழா-வேள்வி செய்யும் செயல்.

இதுவுமது

195-202: ஆரிய...........ஏவி

(இதன் பொருள்) ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி-கனக விசயரை உள்ளிட்ட வடவாரிய மன்னர்களையும் தப்புதற்கரிய சிறைக்கோட்டத்தினின்றும் விடுதலை செய்து அம் மன்னர்களுடைய தகுதிக்கேற்ப; பேர் இசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ் நீர் வேலித் தண் மலர்ப் பூம்பொழில் வேளாவிக்கோ மாளிகை காட்டி-பெரிய புகழையுடைய வஞ்சி நகரமாகிய தனது பழைய தலைநகரின் பக்கத்தே அமைந்த ஆழ்ந்த நீரையுடைய அகழியையும் குளிர்ந்த மலரையுடைய பூம்பொழில்களையும் உடைய வேளாவிக்கோமாளிகை என்னும் பெயரையுடைய மாடமாளிகையை அவ்வரசருக்கு உறையுனாகக் காட்டி அங்கிருக்கச் செய்து; நன் பெரு வேள்வி முடித்ததன் பின்னாள் தம் பெரு நெடுநகர் சார்வதுஞ்சொல்லி-தான் தொடங்கியிருக்கின்ற பெரிய வேள்விச் சாந்தியாகிய திருவிழாவைச் செய்து முடித்ததன் மறுநாள் அம் மன்னர்கள் தம்முடைய பெரிய நெடிய நகரங்களுக்குச் செல்லலாகும் என்பதனையும் அவர்களுக்குச் சொல்லி; நீ அம் மன்னவற்கு ஏற்பன செய்க என-நீ அக் கனக விசயர் முதலிய வட வாரிய மன்னவர்கள் தகுதிக் கேற்பனவாகிய உதவிகளைக் குறைவின்றிச் செய்வாயாக என்று சொல்லி; வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி-வில்லவன் கோதை என்னும் அமைச்சனை அக் காரியத்தின்கண் ஆர்வத்தோடே ஏவிவிட்டுப் பின்னர் என்க.

(விளக்கம்) இப் பகுதியின்கண் செங்குட்டுவனுடைய நெஞ்சம் மறநெறியைக் கைவிட்டு அறநெறியின்கண் ஊக்கத்தோடே செயற்படுதல் உணர்க. இவற்றில் ஆரிய அரசராகிய பகைவர்க்கும் பேரன்பு காட்டி அவரைச் சிறை வீடு செய்தலோடமையாது தான் எடுத்துள்ள வேள்வி விழா முடியுந்துணையும் அவரும் தன்னுடனிருந்து மகிழ்ந்து செல்ல வேண்டும் என்னும் கருத்தால் அவ்வாரிய மன்னருடைய தகுதிக்கேற்ற மாளிகையைக் காட்டச் செய்தலும் மேலும் அவர்க்கு ஏற்பனவெல்லாம் செய்யும் பொருட்டும் அமைச்சர்களுள் முதல்வனாகிய வில்லவன் கோதையையே ஆர்வத்துடன் ஏவுதலும் ஆகிய இச் செய்திகள் எத்துணை இன்பம் பயப்பனவாயுள்ளன உணர்மின்.

இதுவுமது

203-206: சிறையோர்.............ஏவி

(இதன் பொருள்) சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும் கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம் என-நம் நாட்டகத்திலுள்ள சிறைக் கோட்டங்களில் எல்லாம் சிறை செய்யப்பட்டுள்ள குற்றம் புரிந்தோர்களை யெல்லாம் விடுதலை செய்து விடுமின்! நம் நாட்டின்கண் இறைப்பொருள் கொடாமல் இருக்கின்ற நல்ல ஊர்க்குடி மக்களை யெல்லாம் அவ்விறைப்பொருள் செலுத்துதலினின்றும் விடுதலை செய்துவிடுங்கள் என்று அறிவித்து; அழும்பில் வேளோடு ஆயக்கணக்கரை முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி-அழும்பில் வேள் என்னும் அமைச்சனது தலைமையோடே இறைப்பொருள் கணக்குத் தொழிலாளரையும் சேர்த்து முழங்குகின்ற கடல் சூழ்ந்த பழைய ஊர்கள்தோறும் ஏவி விட்டு என்க.

(விளக்கம்) சிறையோர் கோட்டம்-சிறைக்கோட்டம். கறை- இறைப்பொருள். ஆயக்கணக்கர்-இறைப்பொருள் கணக்கை எழுதுபவர். மூதூர் என்றது தனதாட்சியின் கீழ்ப்பட்ட ஊர்களை.

இதுவுமது

207-217: அருந்திறல்...........களித்து

(இதன் பொருள்) அருந்திறல் அரசர் முறை செயினல்லது-வெல்லுதற்கரிய போராற்றல் மிக்க அரசர் அரியணையிலிருந்து செங்கோல் முறைப்படி ஆட்சி செய்தாலன்றி, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை-பெரிய புகழையுடைய மகளிர்க்கும் கற்பறம் சிறந்து தோன்ற மாட்டாது என்று பண்டைக்காலத்தோர் கூறியருளிய குளிர்ந்த தமிழாலியன்ற அழகிய மொழியின் புகழை; பார் தொழுது ஏத்தும் பத்தினி-ஆகலின்-இவ்வுலகத்தோர் எல்லாம் கைகுவித்துத் தொழுது பாராட்டுகின்ற திருமா பத்தினியாகத் தான் இருத்தலாலே; ஆர்புனை சென்னி அரசற் களித்து-ஆத்தி மாலை சூடுகின்ற சென்னியையுடைய சோழ மன்னனுக்கு வழங்கி; செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலங்காவல் மன்னவற்கு அளித்து-தமது செங்கோல் சிறிது வளைந்தாலும் தாம் உயிர் வாழாப் பெருந்தகைமையாகிய புகழைத் தென்னாட்டரசனாகிய பாண்டியனுக்கு வழங்கி; வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வேந்தர் வெஞ்சினம் விளியார் என்பதை-தாம் கூறிய சூண்மொழி மெய்யாய விடத்தல்லது சிறிதும் சிறந்த குடியிற் பிறந்த அரசர் தமது வெவ்விய சினத்தை விடார், என்னும் புகழை; வடதிசை மருங்கின் மன்னவர் அறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து-வடநாட்டின்கண் ஆட்சி செய்கின்ற ஆரிய மன்னர் நன்கு அறிதற்குக் காரணமான பெரும் புகழை மேற்றிசையின் கண்ணதாகிய சேர நாட்டின்கண் வாழுகின்ற வெற்றியை உடைய செங்குட்டுவனுக்கு வழங்கி என்க.

(விளக்கம்) அருந்திறல் அரசராகிய சோழ மன்னர் செங்கோன் முறைமையின் சிறந்திருந்தமையின் கண்ணகியைப் போன்ற பார் தொழு தேத்தும் பத்தினி அந் நாட்டில் தோன்றினள் என உலகம் புகழுமாதலின் கண்ணகி தனது பத்தினித் தன்மையால் அப் புகழைச் சோழனுக்கு அளித்தான் என்பது கருத்து. மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் என்பது மணிமேகலை(22: 208-9)

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்

என்பது திருக்குறள்(543) எனவரும் இவற்றால் பண்டையோருரைத்த தண்டமிழ் நல்லுரை அங்ஙனமாதல் உணர்க. தென்புலங் காவல் மன்னவன்-நெடுஞ்செழியன். விளியார்-கெடார். சினம் தணியார் என்றவாறு. குடதிசை வாழும் கொற்றவன்-செங்குட்டுவன்.

218: 221: மதுரை.........நங்கையை

(இதன் பொருள்) மதுரை மூதூர் மாநகர் கேடுற-மதுரையாகிய மிகப் பழைய பெரிய நகரம் அழியும்படி: கொதி அழல் சீற்றம் கொங்கையினின்றும் தோற்றுவித்து; நல் காடு அணைந்து நளிர்சினை வேங்கை-நல்ல தனது நாட்டிற்குத் தானே வந்து செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தினது பொன் அணி புது நிழல் பொருந்திய நங்கையை-பொன் போன்ற மலர்ந்த அழகையுடைய புதிய நிழலின்கண் நின்ற திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வத்தை என்க.

(விளக்கம்) கொதி அழலைத் தனது சீற்றத்தால் தன் கொங்கையினின்றும் விளைத்து என்க, அத்தகைய பத்தினித் தெய்வம் தானே தன்பால் வருதற்குக் காரணமான நன்மையை உடைய தன் நாட்டை அடைந்து என்றவாறு. பொன்போல் மலர்ந்து அழகியதாகிய வேங்கையின் புது நிழல் எனினுமாம். புதிதாகத் தளிர்த்து மலர்ந்து நிழல் தருதலின் புது நிழல் என்றார்.

செங்குட்டுவன் பத்தினிப் படிமத்திற்குக் கடவுள் மங்கலம் செய்வித்தல்

222-234: அறக்கள........ஏறென்

(இதன் பொருள்) அறக்களத்து அந்தணர் ஆசான் பெருங்கணி சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று-அறக்கள வேள்வி செய்த அந்தணர்களோடும் தன் நல்லாசிரியனோடும் பெரிய கணிவனோடும் பத்தினிப் படிமமும் திருக்கோயிலும் அமைத்த தம் தொழிலிற் சிறப்பு மிக்க கம்மியரோடும் சென்று; மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து-உயர்ந்தோர் விரும்புகின்ற சிற்ப நூல் நெறியினை அறிந்த அச் சிறப்புடைக் கம்மியர் கோயிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் அமையும்படி இயற்றிய அத் திருமா பத்தினித்தெய்வத்திற்குரிய கோவிலின்கண்; வடதிசை வணங்கிய மன்னவர் ஏறு-தென்தமிழாற்றல் அறியாது இகழ்ந்த வடபுலத்து மன்னர்களை வென்று வணங்கும்படி செய்த அரசர்களுள் வைத்து அரிமான் ஏறு போன்றவனாகிய செங்குட்டுவன் முற்பட; இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச்சென்னித் தெய்வம் பரசி-தேவர்கள் உறைதற்கிடனான இமயமலையின் கண் செங்குத்தான குவட்டின் உச்சியில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபாடு செய்து பின்னர்; கைவினை முற்றிய தெய்வப் படிமத்து-செய்ய வேண்டிய செய்கை யெல்லாம் செய்து முடிக்கப்பட்ட கண்ணகியினது தெய்வத் திருவுருவத்தின்கண்; வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்று இழை நல்கலம் முழுவதும் பூட்டி-அணிகலன் செய்யும் தொழிலின்கண் வித்தகமுடையோரால் இயற்றப்பட்ட விளங்கிய அழகோடு கூடிய தொழில் திறம் முற்றிய இழைகளாகிய நல்ல அணிகலன் முழுவதையும் அணிவித்து; பூப்பலி செய்து-மலர்தூவி வழிபாடு செய்து; காப்புக்கடை நிறுத்தி-காவல் தெய்வங்களையும் கடை வாயிலின்கண் நிறுத்தி; நாள்தோறும் வேள்வியும் விழாவும் வகுத்து-நாள்தோறும் அத் தெய்வத்திற்கு வேள்வி விழாவும் திருவிழாவும் நடைபெறுமாறு அவற்றிற்குரிய வழிகளையும் வகுத்து; கடவுள் மங்கலம் செய்க என ஏவினன்-பத்தினிக் கடவுளையும் அப் படிமத்திலே நிறுத்தும்படி அத் தெழிலுக் குரிய அந்தணர் முதலியோரைப் பணித்தருளினன் என்பதாம்.

(விளக்கம்) அறக்களத்து அந்தணர் என்றது முன்னர் (194) வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவிய அந்தணரை. ஆசான் தன்னுடைய பேராசிரியன். கணி-முன்பு காட்சிக் காதையில் கூறப்பட்ட கணிவன். கம்மியர்-சிற்பியர்; கோட்டமும் படிமமும் சமைத்தவர். தான் வழிபடும் தெய்வமாதலின் இமையத்துச்சியில் உறையும் தெய்வமாகிய சிவபெருமானை முற்பட வழிபாடு செய்வித்தனன் என்க. காப்புக்கடை நிறுத்துதல்-மந்திர விதியால் காவல் தெய்வங்களை வாயிலின்கண் நிறுத்துதல். கடவுள் மங்கலம் செய்தல்-கண்ணகித் தெய்வத்தைப் படிமத்தில் மந்திர விதியால் நிறுத்துதல்.

பா. நிலைமண்டில ஆசிரியப்பா

நடுகற் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #37 on: February 28, 2012, 08:38:38 AM »
29. வாழ்த்துக் காதை

உரைப் பாட்டு மடை

அஃதாவது-இதன்கண் சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குக் கடவுள் மங்கலம் செய்த பின்னர், முன்னரே மாடல மறையோன் வாயிலாகக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த துயரச் செய்திகளை அறிந்தவருள் துன்பம் பொறாமல் இறந்தொழிந்ததோரொழிய எஞ்சிய கண்ணகியின் செவிலியும் தோழியாகிய தேவந்தியும் புகார் நகரத்தினின்றும் புறப்பட்டு மதுரைக்கு வந்து அங்கு மாதரியின் மகளாகிய ஐயையைக் கண்டு அவளோடும் மதுரையினின்றும் புறப்பட்டு வையைக் கரையின் வழியே மலை நாட்டை அடைதலும், அங்குக் கண்ணகிக்குத் திருக்கோயிலெடுத்துக் கடவுட் படிமம் வைத்துக் கடவுள் மங்கலம் நிகழ்வித்து விழாக் கண்டிருந்த செங்குட்டுவனுக்குத் தேவந்தி முதலியோர் தம்மை அறிவித்துக் கண்ணகியை நினைந்து அரற்றுதலும் தேவந்தி கண்ணகித் தெய்வத்திற்கு ஐயையைக் காட்டி அரற்றியவுடன் அங்கிருந்த செங்குட்டுவன் காணும்படி கண்ணகித் தெய்வம் மின்னல் போன்று விண்ணின்கண் தனது கடவுள் நல் அணி காட்டியதும், அக் காட்சியைக் கண்டு செங்குட்டுவன் பெரிதும் வியத்தலும், வஞ்சி மகளிர் கண்ணகித் தெய்வத்தைப் பாடுதலும், தமிழ்நாட்டு மூவேந்தரையும் வாழ்த்துதலும், கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதலும் கூறப்படும். இவ்வாற்றால் இக் காதை இப் பெயர்பெற்றது.

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,
இமய மால் வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி
சேயிழையைக் காண்டும் என்று, மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த செங்குட்டுவன் திறமுரைப்பர் மன்; 1

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  2

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்.  3

தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  4

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ? 5

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
சாவது-தான் வாழ்வு என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை?  6

காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ? 7

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ?  8

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்!  9

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10

வஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்
செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர் என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம்.  11

வானவன், எம் கோ, மகள் என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்.   12

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!  13

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!  14

எல்லா! நாம்-
காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார்.   15

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.  16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  17

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  18

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை  19

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 20

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே.  21

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  23

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  25

தீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.  26

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்  27

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்  28

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க! என்று.   29

உரை

உரைப் பாட்டு மடை

1: குமரியொடு...........திறமுரைப்பர் மன்

(இதன் பொருள்) குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் சினம் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை-தமிழ்நாட்டுத் தென் திசைக்கு எல்லையாகிய தென்குமரி தொடங்கி நாவலம் தண்பொழிலுக்கு வடக்கு எல்லையாய் அமைந்த இமைய மலைகாறும் தனது ஆணையாகிய ஒரு மொழியையே வைத்து உலகினை ஆட்சி செய்த சேரலாதன் என்னும் சேர மன்னனுக்குரிய தேவியருள் விளங்குகின்ற ஒளியை உடைய ஞாயிற்றின் மரபில் தோன்றிய சோழ மன்னனுடைய மகளாகிய கோப்பெருந்தேவி செஞ்சடை வானவன் திருவருளாலே ஈன்றருளிய மைந்தன் கொங்கரொடு குருதியாற் சிவந்த களத்தின்கண் பகைவரை நூழிலாட்டி மறக்கள வேள்வி செய்து வாகை சூடிக் கங்கை என்னும் பேரியாற்றின் தென்கரை வரையில் சென்ற செங்குட்டுவன், எஞ்சிய பகைவர்பாலும் தனது சினத்தை மிகுத்தவனாய் மீண்டும் தனது வஞ்சி நகரத்தினுள் வந்திருந்த காலத்தே; வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி உடன் உறைந்த இருக்கை தன்னில்-வட நாட்டின்கண் ஆட்சி செய்கின்ற அரசர்கள் அவ் வடநாட்டின்கண் ஓர் அரசன் மகளுக்கு மாலை சூட்டும் மண விழாவின் பொருட்டு ஒரு திருமண மன்றத்தின்கண் எல்லோருள் ஒருங்கு குழுமியிருந்த அக் கூட்டத்தின்கண்; ஒன்று மொழி நகையினராய் தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டு புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்குவில் புலி கயல் பொறிந்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லைபோலும் என்ற வார்த்தை-ஒரு கருத்தையே எல்லோரும் ஒத்துக்கொண்டு பேசுகின்ற பேச்சினையும் அப் பேச்சின்கண் தோன்றும் நகைப்பினையும் உடையராய்த் தமக்குள்ளே சொல்லாடிக்கொண்டிருப்பவர்-இந் நாவலம் தீவின் தென்திசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டை ஆளுகின்ற சேர சோழ பாண்டிய மன்னர்கள் போர்த் தொழிலைப் பெரிதும் விரும்பிப் படையொடு வந்து மின்னல் தவழ்தற்கிடனான நமது இமய மலையினது நெற்றியின்கண் இற்றை நாளும் விளங்கும்படி தமது வெற்றிக்கு அறிகுறியான தமதிலச்சினைகளாகிய வில்லையும் புலியையும் கயல்மீனையும் தனித்தனியே பொறித்து வைத்துப்போன அந்தக் காலத்திலே நம்மைப் போன்ற பேரரசர்கள் இவ் வடநாட்டின்கண் இல்லைபோலும், என்று கூறி நகைத்த மொழியை; அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து ஆங்கண்-அம் மணவிழாவிலே அவ்வரசர்கள் கூறிய அம் மொழியை அவ் வடநாட்டின்கண் வாழ்கின்ற முனிவர்கள் வந்து செங்குட்டுவனுக்கு அறிவுறுத்திய பொழுதாகிய அச் செவ்வியிலேயே;

உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமயமால்வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப-தானே உருளும் இயல்புடைய மணியாலியன்ற வட்டினைக் குறுந்தடினைக் கைக்கொண்டு தாக்கிச் செலுத்துவதுபோலே கண்ணகித் தெய்வத்திற்கு இமயம் என்னும் பெரிய மலையின்கண் அமைந்த கல்லே கடவுள் படிமம் சமைத்தற்குத் தகுதியாகும் என்று தன் அவைக்களத்து நூலறி புலவர் கூறிய மொழி அவ்விடத்தினின்றும் தன்னைச் செலுத்துதலாலே; ஆரியநாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக்கல் சுமத்திப் பெயர்ந்து போந்து-படையெடுத்துச் சென்று அவ் வடவாரிய நாட்டு அரசராகிய கனகவிசயரும் உத்திரனும் முதலிய அரசர்களைப் போர்க்களத்தின்கண் புறங்கொடுத் தோடச்செய்து அவருள் கனகவிசயர் என்னம் அரசருடைய முடிக்கலன் அணிதற்குரிய தலையின்கண் கடவுள் படிமமாதற் பொருட்டுக் கைக்கொண்ட பெரிய அவ்விமய மலையினது கல்லைச் சுமத்தி மீண்டு வந்து; நயந்த கொள்கையின் கங்கைப் பேர்யாற்று இருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெம்சினம் தரும் வெம்மை நீங்கி வஞ்சிமாநகர் புகுந்து நீள் முடியால் நில அரசர் பலர் தொழும் படிமம் காட்டி தடமுலைப் பூசலாட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்நாள்-தான் விருபியம் கோட்பாட்டிற் கிணங்கச் கங்கை யென்னும் அப் பேரியாற்றின் கரையின்கண் இருந்து பத்தினித் தெய்வத்திற்குரிய அக்கல்லினை நீர்ப்படை செய்து பண்டு அவ் வடவாரிய மன்னர்பால் எழுந்த வெவ்விய வெகுளி உண்டாக்கிய வெப்பம் தணியப்பெற்று அங்கிருந்து புறப்பட்டுத் தனது வஞ்சிமாநகரத்தின்கண் புகுந்து தமது நீண்ட முடியைத் தாழ்த்தி நிலத்தை ஆளுகின்ற அரசரும் பிறருமாகிய பலராலும் தொழுதற்குரிய கடவுட் படிமமும் சமைத்து அப் படிமத்தின்கண் பெரிய முலையினால் பூசல் விளைத்த கண்ணகித் தெய்வத்தை மறைமொழியினால் கடவுள் மங்கலமும் செய்தருளிய நாளின் வழி நாளின் கண்;

கண்ணகி திருக்கோயிலின் பந்தரிடத்திருந்து அச் செங்குட்டுவன் நிலத்தை ஆளும் அரசர்கள் தனக்கு அளித்த திறைப் பொருள் பற்றி அக் கோத் தொழிலாளரிடத்து வினவி இருந்த பொழுது; கோவலன் தன் வினை உருத்துக் குறு மகனால் கொலை உண்ண-கோவலனுடைய பழவினை உருத்து வந்து ஊட்டியது காரணமாகப் பொய்த் தொழிற் கொல்லனாகிய ஒரு சிறுமையுடையோனால் கொலையுண் டிறந்துபட்டமையாலே; அலம் வந்த மதிமுகத்தில் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில் தன் புறம் புதைப்ப அறம் பழித்து காவலன் தன் இடம் சென்ற கண்ணகி தன் கண்ணீர் கண்டு-சிலம்பு மாறச் சென்ற கணவன் வந்திலாமையால் சுழற்சியுற்ற திங்களை ஒத்த தனது முகத்தின் கண் அமைந்த சில சிவந்த கயன்மீன்கள் போன்ற கண்கள் நீர் உமிழா நிற்பவும்  புழுதி படிந்த கரிய முகில் போன்ற தன் கூந்தல் சரிந்து முதுகை மறைப்பவும் அரசனுடைய செங்கோல் அறத்தைப் பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் அறத்தை பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத்து ஏறி முறை கேட்பச் சென்ற கண்ணகியினது கண்ணீரைக் கண்டபொழுதே; மண் அரசர் பெருந்தோன்றல் உள்நீர் அற்று உயிர் இழந்தமை மாமறையோன் வாய் கேட்டு-நிலத்தை ஆளுகின்ற அரசர் குடியினுள் வைத்துச் சிறந்த குடியில் தோன்றியவனாகிய நெடுஞ்செழியன் தனது நெஞ்சத்தின்கண் அறப்பண்பு அற்றொழிந்தமையின் உயிர் துறந்தமை முதலிய மதுரையில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சிகளை யெல்லாம் சிறந்த அந்தணனாகிய மாடலன் வாயிலாகக் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெரும் துன்பம் எய்தி-கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் துறவறத்தை மேற்கொள்ளவும் தாயாகிய பெருமானைக் கிழத்தி உயிர் துறப்பவும் என்று இன்னோரன்ன பெருந்துன்பங்களை ஒன்றன்மேல் ஒன்றாக எய்தி; காவல் பெண்டும் அடித் தோழியும் கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டும் என்று-புகார் நகரத்திலிருந்த கண்ணகி நல்லாளின் செவிலித்தாயும் கண்ணகியின் உசாஅத் துணைத் தோழியும் அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய கடவுளாகிய சாத்தனோடு வதிந்த தேவந்தியும் ஒருங்கு கூடி நம் சேயிழையாகிய கண்ணகி என்னாயினள் என யாம் அங்குச் சென்று காண்பே மென்றுட் கொண்டு;மதுரை மாநகர் புகுந்து முதிரா முலைப் பூசல் கேட்டு-மதுரை மாநகரத்திற்குச் சென்று அங்குக் கண்ணகி தனது இளமுலையைத் திருகி எறிந்து விளைத்த பூசலைக் கேள்வியுற்று; ஆங்கு அடைக்கலம் இழந்து உயிர் இழந்த இடைக்குல மகளிடம் எய்தி-அந் நகரின் புறஞ் சேரியின்கண் தான் பெற்ற அடைக்கலப் பொருளாகிய கண்ணகியை இழந்தமையாலே தனதுயிரைத் தீயினுள் புகுந்து போக்கிய இடைக்குலத்தில் பிறந்த முதுமகளாகிய மாதிரியின் இருப்பிடத்தை அடைந்து; அவள் மகள் ஐயை யோடும் வையை ஒரு வழிக் கொண்டு மாமலை மீமிசை ஏறி கோமகள் தன் கோயில் புக்கு-அங்குத் தாம் கண்ட அம் மாதிரியின் மகளாகிய ஐயை என்பவளோடும் கூடிப் பண்டு கண்ணகி சென்ற வழியாகிய வையையின் ஒரு கரையையே வழியாகக் கொண்டு சென்று ஆங்கு மலை நாட்டின்கண் தம்மெதிர் தோன்றிய பெரிய நெடுவேள் குன்றத்தின் மேலே மிகவும் ஏறிச் சென்று அங்கு இறைமகள் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற கண்ணகியின் கோயிலின்கண் புகுந்து அவ்விடத்தே; நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்-அத் திருமா பத்தினிக்குத் திருவிழா நிகழ்த்திய செங்குட்டுவனைக் கண்டு அவனுக்குத் தம்முடைய தன்மையைக் கூறுவாராயினர் என்க.

(விளக்கம்) நாவலம் பொழில் முழுவதும் அவன் ஆணை சென்றமையின் குமரியொடு வடவிமயம் என எல்லை கூறினார். ஒரு மொழி என்றது ஆணையை ஞாயிற்றுச் சோழன்-ஞாயிற்று மரபில் பிறந்த சோழன் செங்குட்டுவன் முன்னொரு முறை வடதிசைக்கண் படையெடுத்துச் சென்றவன் கங்கையாற்றின் தென்கரைகாறும் சென்று மீண்டான் எனவும் அப்பொழுது தன் வரவு கேட்டு வந்தடி வணங்காமையின் அப்பாலுள்ள பகைவர் மேல் சினத்தை மிகுத்து மீண்டு வந்து வஞ்சியுள் இருந்தான் என்க. ஒன்று மொழி நகையினர்-ஒரு கருத்தையே எல்லோரும் ஒருமித்துக் கூறி எள்ளி நகைத்தவராய் என்றவாறு. அம் மொழியாவது இக் காலத்தே தமிழர் நம் வடநாட்டின்கண் வரின் அவரை யாம் வென்று புறமிட்டோடச் செய்வேம் என்பது. தமிழ் மன்னர்கள் தனித்தனியே வடதிசைக்கள் வந்து நம்மனோரை வென்று வாகை சூடிய பொழுது இந்த நாட்டின்கண் நம் போன்ற வீர மன்னர் இருந்திலர். இருந்தாராயின் அவர் இமய நெற்றியில் விற்புலி கயல் பொறித்துப் போதல் எங்ஙனம் என்று எள்ளியபடியாம். போலும்: ஒப்பில் போலி மணி வட்டு-மணி இழைத்த உருளை, உருண்டை வடிவமான வட்டுக் காயுமாம். வட்டு-சூதாடு கருவி. குணில் என்பது குறுந்தடி. நீண்முடியால் நீலவரசர் பலர் தொழும் படிவம் என்க. முலைப் பூசலாட்டி-கண்ணகி. அறம் பழித்து என்றதற்கு அறக்கடவுளைப் பழித்து எனினுமாம். குறுமகன்-பொற்கொல்லன். காவற் பெண்டு-செவிலித்தாயருள் ஒருத்தி. அடித்தோழி என்றது செவிலியின் மகளை. அடைக்கலமிழந்து உயிர் இழந்த இடைக்குல மகள் என்றது மாதிரியை. கண்ணகி பின்னர்த் தன்னைப் பாண்டியன் மகளாகக்கூறிக் கொள்ளுதலின் கோமகள் கோயில் என்றார். இனி மகளிர்கெல்லாம் கோவாகிய மகள் எனினுமாம் சிறப்பு-திருவிழா. மன்: அசைச் சொல்.

தேவந்தி சொல்

2: முடி மன்னர்.......கண்டீர்

(இதன் பொருள்) முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ வட பேர் இமய மலையில் பிறந்து-போந்தை வேம்பே ஆர் எனவரும் அடையாளப் பூ மாலையைச் சூடுகின்ற சேரர் பாண்டியர் சோழர் என்னும் மூன்று குலத்தில் பிறந்த முடிமன்னர் மூவராலும் நன்கு காக்கப்படுகின்ற தெய்வங்கள் உறைதற் கிடனான வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையிலே பிறந்து; கடுவரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த-விரைந்து வருதலையுடைய கங்கை யாற்றினது தெய்வத் தன்மையுடைய நீரின்கண் ஆடி இத்திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள; தொடிவளைத் தோளிக்கு நான் தோழி கண்டீர்-தொடியையும் வளையையும் உடைய தோளை உடைய இக் கண்ணகிக்கு நான் தோழி கண்டீர்; சோணாட்டார் பாவைக்கு நான் தோழி கண்டீர்-சோழ நாட்டில் பிறந்தோர்க் கெல்லாம் மகளாகிய பாவைபோலும் இக் கண்ணகிக்கு அடிச்சியும் ஒரு தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தமிழரசர் மூவரும் ஒவ்வொரு காலத்து அவ்விமய மலை வரையில் உள்ள அரசரையெல்லாம் அடிப்படுத்துத் தமது இலச்சினையையும் மலையிற் பொறித்துப் பேணுதலின் மூவருங் காத்து ஓம்பும் மலை என்றாள். மலையிற் பிறத்தலாவது அம் மலையிற் கொண்ட கல்லாலியற்றிய படிமத்தைத் தனதுருவமாகக் கொள்ளுதல். இனி வடபேரிமய மலையிற் பிறந்து அம் மலையிலேயே பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த என இமயமலையிற் பிறத்தலைக் கங்கைக்கும் கண்ணகிக்கும் பொதுவாகக் கொள்க. சோழ நாட்டில் பிறத்தலின் அந் நாட்டினர் எல்லார்க்கும் மகளாகிய பாவைக்கு என்க. சேரணாட்டில் மக்கட் பிறப்பிற் பிறந்து மீண்டும் இமயமலையில் தெய்வப் பிறப்புப் பிறந்து போந்த பாவை என்பது கருத்தாகக் கொள்க.

காவற் பெண்டு சொல்

3. மடம்படு......கண்டீர்

(இதன் பொருள்) மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றி-மடப்பம் பொருந்திய சாயலை உடையவளும் கோவலன் தன்னைப் பிரிதற்குக் காரணமான மாதவி தன்னையும் ஒரு சிறிது வெகுண்டு பேசாதவளும் அம் மாதவி மனையினின்றும் தன் மனைக்கு வந்த காதலையுடைய கணவனாகிய கோவலனைச் சிறிதும் வெறுக்காமல் அவன் கையைப் பற்றிக்கொண்டு; குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த-நீரின்மையால்  குடம் புகுந்தறியாத வறிய கேணியை யுடைய கொடிய பாலை நிலத்திலே வந்த; தடம் பெருங் கண்ணிக்கு நான் தாயர் கண்டீர் தண் புகார்ப் பாவைக்கு நான் தாயர் கண்டீர்-மிகவும் பெரிய கண்களையுடைய இக் கண்ணகிக்கு அடிச்சி செவிலித்தாய் ஆவேன் கண்டீர்! குளிர்ந்த புகார் நகரத்திலே பிறந்த பாவை போல்வாளாகிய இக் கண்ணகிக்கு நான் செவிலித்தாய் கண்டீர் என்றான்; என்க.

(விளக்கம்) மடம்-பெண்மைக் குணங்களுள் ஒன்று. சாயல்-ஐம்பொறிகளாலும் நுகர்தற்கியன்ற மென்மை. சாயலாளும் போந்தவளுமாகிய கண்ணிக்கு என்க. கடம்படாள்-மிகவும்வெகுளாள். தவக்குத் தீமை செய்தமை பற்றி அம் மாதவியை ஒரு காலத்தும் வெறுத்துச் சினவாதவள் என்பது கருத்து. இது தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் மெய்யுணர்வுபற்றிப் பிறக்கும் தெளிவு. கணவனை வெறுமை கூற வேண்டாவாயிற்று. குடம் புகாக் கூவல் என்றது நீரின்மையாகிய காரணத்தை விளக்கி நின்றது. கண்ணகியின் பேரருள் தோன்றுதற்குத் தடம் பெரும் கண்ணி என்று விதந்தாள்.

அடித் தோழி சொல்

4. தற் பயந்தாட்கு............கண்டீர்

(இதன் பொருள்) தன் பயந்தாட்கு (ஓர் சொல்) இல்லை தன்னைப் புறங்காத்த என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை-பூம்புகாரினின்றும் புறப்படும் பொழுது தன்னை ஈன்ற நற்றாய்க்கும் ஒரு சொல் சொன்னாளில்லை. அவ்வாறே பிறந்த நாள் தொடங்கி எடுத்துவளர்த்துப் புறம் புறமே நின்று பேணிய அவள் செவிலித்தாயாகிய என்னை ஈன்றவளுக்கும், பிறந்த நாள் தொடங்கி உடணுண்டு உடனுறங்கி உடன் வளர்ந்த உயிர்த் தோழியாகிய அடிச்சிக்கும் ஒரு சொல் சொன்னாளில்லை; கற்புக் கடம் பூண்டு காதலன் பின் போந்த பொன்தொடி நங்கைக்கு நான் தோழி கண்டீர்-தனக்குரிய கற்பறத்தைப் பேணுவதையே தனது தலையாய அறமாக மேற்கொண்டு தன் காதலன் எழுக என்றவுடன் மறுக்கும் சொல் ஒன்றும் இல்லாமல் அவனைப் பின் தொடர்ந்து வந்த பொன் வளையலணிந்த நங்கையாகிய இக் கண்ணகிக்கு அடிச்சி உயிர்த்தோழியாவேன் கண்டீர்; பூம்புகார்ப் பாவைக்கு நான் தோழி கண்டீர்-அழகிய புகார் நகரத்தே தோன்றிய இக் கண்ணகிக்கு அடிச்சி தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தற் பயந்தாள் என்றது கண்ணகியின் நற்றாயை. தோழி செவிலி மகளாதலின் அவளை எற்பயந்தாள் என்றாள். ஓர் சொல்-தனது பிரிவுபற்றிய ஏதேனும் ஒருசொல். கற்புக் கடம் பூண்டாளுக்குக் கணவனினும் சிறந்த கேளிர் இல்லையாதலினாலும் எமக்குச் சொன்னால் தன் போக்கிற்குச் சிறிது இடையூறு நேர்தல் கூடும் என்பதனாலும் சொல்லாது காதலன் பின் போயினள் என்றவாறு. இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால் எனக் கவுந்தியடிகளாரும் பாராட்டினமை நினைக. (எண் 15. 142-4)

தேவந்தி யரற்று

5. செய்தவம்......தோழி

(இதன் பொருள்) செய்தவம் இல்லாதேன் தீக்கனா கேட்ட நாள் எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன்-தோழீ! முற்பிறப்பிலே தவஞ் செய்திலாத தீவினை யாட்டியேன், நீ என்னிடம் கண்ட தீக்கனாவைக் கூறிய அந்த நாளிலே அக் கனாப் பற்றி ஆழ்ந்து உணராதிருந் தொழிந்தேன் ஐயகோ என்ன காரியம் செய்துவிட்டேன்; மொய்குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்-செறிந்த கூந்தலையுடைய நங்காய் நீ மதுரையிற் செய்த முலைப் பூசலைக் கேட்டபொழுது; அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ-நின் அன்னை உயிர் நீத்த செய்தியையும் நீ யாரேனும் கூறக் கேட்டதுண்டோ? தோழீ; அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ-நின்னுடைய மாமியினது சாவினையும் நீ கேட்டதுண்டோ? என்று அழுதாள்; என்க.

(விளக்கம்) தேவந்தி முதலியோர் செங்குட்டுவனுக்குத் தம்மை அறிவித்த பின்னர்த் துன்பம் பொறாமல் கண்ணகியின் தெய்வப்  படிமத்தை நோக்கி இங்ஙனம் கூறி அழுகின்றனர் என்க. அரற்றுதல். வாய்விட்டுப் புலம்புதல். கண்ணகி தான் கண்ட தீக்கனாவைத் தேவந்திக்குக் கூறியதனைக் கனாத் திறமுரைத்த காதையில் காண்க. எய்த உணர்தல்-ஆழ்ந்து உணர்தல். அங்ஙளம் உணர்ந்திருந்தேனாயின் ஓரோவழி நீ மதுரைக்குப் போகாவண்ணம் தடை செய்திருப்பேன் என்று அன்பு மிகுதியால் தேவந்தி இங்ஙனம் கூறுகின்றனள் என்க. மங்கை: விளி; முன்னிலைப் புறமொழி எனினுமாம். அவ்வை-தாய். அம்மாமி என்பது ஒருசொல். அம்மான் என்னும் ஆண்பாலுக்குப் பெண்பாற் சொல் என்றறிக.

காவற் பெண்டரற்று

6: கோவலன்............வன்னை

(இதன் பொருள்) அன்னை கோவலன் தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப காவலன் தன் உயிர் நீத்தது நான் கேட்டு ஏங்கி-அன்னாய் நின் கணவனாகிய கோவலனைக் கீழ் மகனாகிய பொய்த் தொழில் கொல்லன் கொல்லும்படி செய்யப் பின்னர்த் தன் தவற்றினை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் நீத்த இச் செய்தியைக் கேட்டுத் துயரம் பொறாமல் ஏங்கி, சாவது தான் வாழ்வு என்று தானம் பல செய்து-இனி எனக்கு வாழ்க்கை என்பது இறந்துபடுதலேயாம் என்றுட்கொண்டு தன் வள நிதி அனைத்தையும் கொண்டு பலவேறு தானங்களையும் செய்துவிட்டு; மாசாத்துவான் துறவுங் கேட்டாயோ-நின் மாமனாகிய மாசாத்துவான் என்னும் பெரும் புகழ்படைத்த வாணிகன் துறவறம் மேற்கொண்டமையையும் கேட்டதுண்டோ; அன்னை மாநாய்கன் தன் துறவுங் கேட்டாயோ-அன்னாய் அங்ஙனமே நின் தந்தையாகிய மாநாய்கன் என்பானும் இச் செய்தி கேட்டு அங்ஙமே துறவறம் புகுந்தமையைக் கேட்டதுண்டேயோ! என்று சொல்லி அழுதாள் என்க,

(விளக்கம்) கோள்-கொலை. காவலன்: நெடுஞ்செழியன்.சாவது தான் வாழ்வென்றது இனி இவ்வுலகின்கண் தனக்கு வாழ்க்கை என்ப தொன்றில்லை என்று கருதியவாறாம். துறவு உலக வாழ்க்கையைத் துறத்த லாதலின் அதுவே சாவுமாயிற்று.

அடித்தோழியரற்று

7: காதலன்...........தோழி

(இதன் பொருள்) தோழீ காதலன் தன் வீவும் காதலி நீ பட்ட தூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி தோழியே தனது பெருங்காதலுக்கிடனான கோவலனுடைய மறைவையும் அவனால் பெரிதும் காதலிக்கப்பட்ட நீ பட்ட பெரும் துன்பங்களையும் புகார் நகரத்திலுள்ள அயலோர் கூறும் பழிமொழிகளையும் கேட்டு இத் துன்பங்களைப் பொறாமல் பெரிதும் ஏக்கமெய்தி; போதியின்கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த-அரசமரத்தின்கீழ் இருந்து பெரிய தவத்தைச் செய்கின்ற துறவோர் முன்னிலையிலே தனது பொருளையெல்லாம் புண்ணிய தானமாக வழங்கிய; மாதவி தன் துறவும் கேட்டாயோ-அம் மாதவி தானும் துறவறம் புகுந்த செய்தியை நீ கேட்ட துண்டோ; தோழி மணிமேகலை துறவும் கேட்டாயோ-என் ஆருயிர்த் தோழி  நீ தான் நின் மகளாகிய மணிமேகலை ஆற்றவும் இளம் பருவத்திலேயே துன்பம் ஆற்றாதவாளாய்த் துறவறம் புகுந்த செய்தியைக் கேட்டதுண்டேயோ? என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) இருவர்க்கும் காதலன் ஆதலின் பொதுவாகக் காதலன் என்றாள். மாதவியைத் துறந்தவுடன் கண்ணகியின்பால் எய்துதலின் அவனது காதல் புலப்படுதலின் அவன் காதலியாகிய நீ பட்டதுவும் என்றாள் என்க. பட்டது-பட்ட துன்பம். ஏதிலார்-அயலோர். ஏச்சுரை-பழிச்சொல். மாதவர்-ஈண்டு அறவணவடிகளார். மணிமேகலை துறவும் என்புழி மணிமேகலை துறவும் என்று எடுத்தோதி இரக்கச்சுவை உடையதாக்குக.

தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது

8: ஐயந்தீர்..........தோழீ

(இதன் பொருள்) ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்பவல்லாதேன்-தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் மிகப் பேரின்பம் தரும் என்பதன்கண் சிறிதும் ஐயமில்லாது தெளிந்த மெய்க்காட்சியோடு ஏற்றுக்கொண்ட அடைக்கலப் பொருளை நன்கு காத்துப் பேணுதற்கு வன்மையில்லாத நான்; பெற்றேன் மயல்-இப்பொழுது பித்துற்றொழிந்தேன் என்று அரற்றியவளாய்; உயிர்நீத்த அவ்வை மகள் இவள் தான்-தீப்பாய்ந்து உயிர்விட்ட தாயன்புடைய மாதரியின் மகள் இதோ நிற்கும் இவள்தான்; தோழீ அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையை கண்டாயோ-தோழீ அழகிய திருமணம் நிகழ்த்தப் பெறாத கூரிய எயிற்றையுடைய நின் நாத்தூண் நங்கையாகிய ஐயையைப் பார்த்தனையோ; மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-நின்னுடைய மாமியின் இளமகளாகிய இவளைப் பார்த்தனையோ என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) ஐயந்தீர் காட்சி என்பதனை ஆகுபெயராகக்கொண்டு கவுந்தியடிகள் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மயல்-பித்து அவ்வை என்றது எவ்வுயிரிடத்தும் தாயன்புடைமை கருதி. மாதரி என்க. அம் இசை நிறை எனினுமாம். மணம்பட்டிருக்க வேண்டும் ஆயினும் அவ்வை உயிர்நீத்தலால் மணம்பட்டிலாள் என்றிரங்கிய படியாம். மாமி என்றது நின் மாமி என்றவாறு.

(தேவந்தி முதலியோர் பெரிதும் துன்பமுற்று இங்ஙனம் அழுது புலம்பியபோது வானத்தின்கண் கண்ணகித் தெய்வம் தோன்றுதல்)

செங்குட்டுவன் கூற்று

9: என்னே...............தோன்றுமால்

(இதன் பொருள்) என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே கொல்(விண்ணின்கண் கண்ணகியின் கடவுள் உருவினைக் கண்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்பெய்தி) இஃது என்னையோ! இஃது என்னையோ!!! இஃது என்னையோ!!! இஃது என்னையோ! மீ விசும்பின்-வானத்தின் மிக உயர்ந்த விடத்தே; பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளைக்கை நல் வயிரப் பொன் தோட்டு நாவலம் பொன் இழை சேர்-பொன்னால் இயற்றிய சீறடிச் சிலம்பினோடும் இடையில் அணியப்பட்ட மேகலையோடும் வளையல் அணிந்த கைகளோடும் அழகிய வைரம் வைத்திழைத்த பொன்னோடு கூடிய தோடணிந்த செவிகளோடும் சாம்பூந்தம் என்னும் சிறந்த பொன்னால் இயற்றிய அணிகலன் பிறவும் அணிந்துகொண்டுள்ள; மின்னுக்கொடி ஒன்று தோன்றுமால்-கொடி மின்னல்போலும் ஒரு பொண்ணுருவம் தோன்றுகின்றதே; என்று சொல்லி(செங்குட்டுவன்) வியந்தான் என்க.

(விளக்கம்) வியப்பு மிகுதிபற்றி வந்தது. என்னே இஃது என்பது நான்குமுறை அடுக்கி வந்தது. அவ்வுருவம் இன்னதென்று அறியாமையால் இஃது என்னும் அஃறினைச் சொல்லால் சுட்டினான். இதனால் கண்ணகித் தெய்வம் அணிகலன்கள் பலவற்றோடும் மின்னற் கொடி போன்று செங்குட்டுவனுக்கு வானின்கட் காட்சி அளித்தமை பெற்றாம்.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுணல்லணி காட்டியது

(குறிப்பு: இத் தலைப்பு மேலுள்ள ஒன்பதாம் செய்யுளுக்கு உரியதாய்ச் செங்குட்டுவன் கூற்று என்பதற்கு முன்னர் இருப்பது பொருத்தமாகத் தோன்றுகின்றது)

கண்ணகித் தெய்வத்தின் கூற்று

10: தென்னவன்................வம்மெல்லாம்

(இதன் பொருள்) தோழிமீர் எல்லீரும் என்னோடு லம் எல்லாம் அன்புடைய என்னுடைய தோழியர் எல்லோரும் என்னோடு வாருங்கள்; தென்னவன் தீது இலன் தேவர்கோள் தன் கோயில் நல்விருந்து ஆயினான்-தென்னாட்டு அரசனாகிய பாண்டிய மன்னன் பிழை செய்தானாயினும் அறிந்து செய்திலன் ஆதலின் அவன் தீவினை சிறிதும் இல்லாதவன் ஆயினன். அறியாது தான் செய்த தவற்றினுக்கு அதுவே கழுவாகிய அவன் இப்பொழுது தேவேந்திரனுடைய அரண்மனையின்கண் நல்ல விருந்தாளன் ஆயினான்; நான் அவன் தன் மகள்-யான் இப்பொழுது என் மக்கட் பிறப்பு மாறி அப் பாண்டியன் காரணமாகத் தெய்வப் பிறப்பு எய்தினமையால் யான் அவனுடைய மகளாவேன்; வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்-வென்றியையுடைய வேலை ஏந்திய முருகனுடைய இக் குன்றின்கண் யான் இனி விளையாடுதலை ஒருடொழுதும் ஒழியேன் என்றாள் என்க.

(விளக்கம்) தென்னவன்: நெடுஞ்செழியன். வென்வேலான் : முருகன். யான் விளையாட்டு அகலேன் ஆதலின் என் தோழிமீர் எல்லாம் என்னோடு வந்து விளையாடுமின் என்பது கருத்து. குன்று செங்கோடு என்பது அரும்பதவுரை. 

வஞ்சி மகளிர் சொல்

11: வஞ்சியீர்........வம்மெல்லாம்

(இதன் பொருள்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்து மகளிர்களே; வஞ்சி இடையீர்-வஞ்சிக் கொடி போலும் மெலிந்து துவளும் இடையை உடையீர்; மற வேலான் பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்-வீர வேலேந்திய செங்குட்டுவனுடைய அலத்தகமூட்டிய சிற்றடியை உடைய ஆய மகளிர் எல்லோரும் வாருங்கள், எற்றுக் கெனின்; கொங்கையால் கூடல் பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்-தனது கொங்கையினாலே மதுரை மாநகரத்தை அழித்து வேந்தர் வேந்தனாகிய பாண்டியனைச் செம் பொன்னால் இயன்ற சிலம்பினாலே வென்ற வீர பத்தினியைப் பாடுவோம், எல்லீரும் வாருங்கள்; தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-அப் பாண்டியனுடைய மகளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியர் செங்கோல் வளைய உயிர் வாழார் என்று எங்கோ முறைநா இயம்ப-பாண்டிய மன்னர்கள் தமது செங்கோல் ஊழ்வினையால் வளைந்த விடத்தும் உயிர் துறப்பதன்றி வாழ்கின்ற சிறுமையுடையோர் அல்லர்; என்று பெரிதும் புகழ்ந்து நம் அரசனாகிய செங்குட்டுவனுடைய முறைமை தவறாத செந்நாவினாலே பாராட்டும்படி; இந் நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்-இந்தச் சேர நாட்டை விரும்பி வந்து சேர்ந்த பசிய வளையலை அணிந்த பாவை போல்வாளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-பாண்டிய மன்னனுடைய மகளாகிய இக் கற்புத் தெய்வத்தைப் பாடுவோம் எல்லீரும் வாருங்கள் என்றார் என்க.

(விளக்கம்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்துள்ளீர் எனவும் வஞ்சிக் கொடிபோலும் இடையீர் எனவும் கூறிக்கொள்க. வடவாரியரை வென்றமை கருதி மறவேலான் என்றார்: அவன் செங்குட்டுவன் பஞ்சு-செம்பஞ்சுக் குழம்பு. வம்மெல்லாம் என்றது வம்மின் என்னும் துணையாய் நின்றது. மேல் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். தண்டமிழ் ஆசான் சாத்தன் வாயிலாக நெடுஞ்செழியன் உயிர்நீத்த செய்தியைச் செங்குட்டுவன் அறிந்தபொழுது,

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது டு(காட்சி 95-99

என்று நெஞ்சாரப் பாராட்டியதைக் கருதிச் செங்கோல்............இயம்ப என்றவாறு.

ஆயத்தார் சொல்

12: வானவன்...................மகள்

(இதன் பொருள்) நாம் வானன் எம் கோமகள் என்றாம்-யாம் சேரனாகிய எங்கள் மன்னனுடைய மகள் என்று கூறிப் பாராட்டினோம்; தான் வையையார் கோன் பெற்ற கொடி என்றாள்-கற்புக் கடவுளாகிய அவளோ தான் வையைப் பேரியாறு புனல் பரப்பும் பாண்டிய நாட்டு மன்னனாகிய அந் நெடுஞ்செழியன் ஈன்றெடுத்த மகள் என்று கூறிக்கொள்கின்றாள்; நாம் வானவனை வாழ்த்துவோம் ஆக-வஞ்சி நகரத்து மகளிராகிய நாம் இக் கற்புக் கடவுளுக்குத் திருக்கோயில் எடுத்துத் தெய்வப் படிமம் சமைத்து நிறுவி வேள்விச் சாந்தியும் செய்தருளிய நங்கள் மன்னனாகிய சேரனை வாழ்த்துவோம்; தேவமகள்-தெய்வமாகிய கண்ணகி; வையையார் கோமானை வாழ்த்துவாள்-அப் பாண்டிய மன்னனைத் தானே வாழ்த்துவாளாக என்றார் என்க.

(விளக்கம்) வானவர்-சேரன். வானவனாகிய எங்கோ என்க. தான் கோனவன் பெற்ற கொடி என்றாள் என மாறுக. நாம் என்பதை முன்னும் கூட்டி நாம் வானவன் மகள் என்றாம் எனக் கூட்டுக. ஆதலால் நாம் வானவனை வாழ்த்துவோம் தேவ மகள் கோமானை வாழ்த்துவான் என ஏதுக் கூறியபடியாம்.

வாழ்த்து

13: தொல்லை.........தொல்குலமே

(இதன் பொருள்) தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ-முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாகத் துன்பமுற்ற கண்ணகியினது கண்ணில் நின்றும் உகுகின்ற நீரானது தன்னைக் கொல்லா நிற்பத் தன் உயிரைக் கொடுத்த அரசனாகிய பாண்டிய மன்னன் புகழ் நீடூழி வாழ்வதாக; வருபுனல் நீர் வையை சூழும் மதுரையார் கோமான தன் தொல்குலம்-இடையறாது வருகின்ற புனலாகிய தண்ணீரையுடைய வையைப் பேரியாற்றினால் சூழப்பெற்ற மதுரை மாநகரத்தில் வாழ்வோருடைய கோமானாகிய அப் பாண்டியனுடைய பழைய குலந்தானும்; வாழியர் வாழி-வழிவழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக; என்றார் என்க.

(விளக்கம்) தொல்வினை-பழவினை. துயருழந்தாள்: கண்ணகி கண்ணின் நீர் கண்டளவே தோற்றான் உயிர் என வழக்குரை காதையின்கண்ணும் வருதல் உணர்க. அக் குலத்தில் பிறந்தோரும் அறவோராயிருந்து உலகத்தைக் காப்பார் என்பது பற்றிக் குலத்தையும் வாழ்த்தினர். தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருகின்ற பாண்டியர் குலம். வையையார் கோமானைத் தேவமகள் வாழ்த்துவாள் எனக் கூறினாரேனும் கடவுள் வாழ்த்தாமை கண்டு அப் பாண்டியனை வஞ்சி மகளிர் தாமே வாழ்த்தியபடியாம் இது.

14: மலையரையன்..............தொல்குலமே

(இதன் பொருள்) மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நீலவரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியர்-மலைகளுக்கெல்லாம் அரசாகிய இமயமலை ஈன்றெடுத்த மடப்பமுடைய திருமா பத்தினியை வடநாட்டினை ஆளும் கனகவிசயர் என்னும் அரசருடைய நெடிய முடியின்மேல் ஏற்றிக்கொணர்ந்த ஆற்றலுடைய நம் மன்னர் பெருமான் நீடூழி வாழ்க; வருபுனல் நீர் ஆன் பொருநை சூழ் தரும் வஞ்சியார் கோமான் தன் தொல் குலம்-பொதியமலையினின்றும் வருகின்ற புனலாகிய புண்ணிய நீரையுடைய ஆன்பொருநை என்னும் யாறு சுழன்று வருகின்ற வஞ்சி நகரத்தே வாழ்வோருடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனுடைய பழைய மன்னர் குலம்; வாழியர் வாழி-வழி வழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக என்றார் என்க.

(விளக்கம்) மலையரையன் என்றது இமயத்தை. அம் மலையின்கண் கற்கொண்டு அமைக்கப்பட்ட கடவுட் படிமத்தில் கண்ணகி எழுந்தருளியிருத்தலின் அத் தெய்வத்தை மலையரையன் பெற்ற மடப்பாவை என்றார். அரசர்: கனகவிசயர்.

15: எல்லா நாம்............புகார்

(இதன் பொருள்) எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பூவிரி கூந்தல் புகார் பாடுதும்-தோழி இனி யாம் காவிரி நாட்டையுடைய சோழ மன்னனையும் பாடுவோமாக, அஃது எற்றுக்கெனின்; பூவிரி கூந்தல் புகார்-பூமலர்ந்த கூந்தலையுடைய இக் கண்ணகித் தெய்வம் தோன்றுதற்கிடனாயிருந்தது அம் மன்னனுடைய பூம்புகார் நகரம் அன்றோ? ஆதலால் அந் நகரத்தை பாடுவேம் என்றார் என்க.

(விளக்கம்) எல்லா-விளி, தோழீ என்றவாறு. காவிரி நாடன்: சோழன் பூவிரி கூந்தல்: கண்ணகி. கண்ணகி பிறந்தது அவன் நகரமாதலின் அவனையும் அந் நகரத்தையும் பாடுவோம் என்பது கருத்து செங்கோல் மன்னர் நாட்டிலேதான் இத்தகைய பத்தினி மகளிர் பிறத்தல் கூடும். ஆதலால் கண்ணகியின் புகழில் அம் மன்னனுக்கே முதற் கூறு உரித்தாம் என்பது கருத்து. இக் கருத்தேபற்றி மேல் வருகின்ற பாடல்களிலும் சோழனே முதலிடம் பெறுதல் அறிக.

அம்மானை வரி

அஃதாவது அம்மானை என்பது மகளிர் விளையாட்டினுள் ஒன்று. வரி-பாடல். அம்மானை ஆடுமகளிர் வினாவும் செப்புமாகப் பாடுவது மரபு.

16: வீங்குநீர்..............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை வீங்குநீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் ஓங்கு அரணம் காத்த உரவோன் யார்-அன்னையே! பெருகுகின்ற நீரையுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்திலே பிறந்து செங்கோன்மை பிறழாது அரசாட்சியும் செய்து மேலும் அமரர் கோமானாகிய இந்திரனுக்கு உதவியாகச் சென்று அவனுடைய உயர்ந்த மதில் அரணையுடைய அரண்மனையையும் காத்தருளிய பேராற்றல் உடைய அரசன் யார், நீ அறிவாயோ; அம்மானை ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண்-தாயே! யான் நன்கு அறிவேன். அவ்வாறு ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர்ந்த விண்ணின்கண் இயங்கிக்கொண்டிருந்த அசுரர்களுடைய மதில்கள் மூன்றனையும் தகர்த்தெறிந்த சோழனை காண்; அம்மானை சோழன் புகார் நகரம் பாடல்-தாயே அங்ஙனமாயின் அச் சோழனுடைய பூம்புகார் நகரத்தை இனி வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மானை தாயென்னும் பொருளுடையது. அம்மானை ஆடுவோர் ஒருவரை ஒருவர் அன்னையே என்று விளித்து வினாவியும் செப்பியும் பாடுவாராகக் கொள்க. பாடல்-வியங்கோள்; தன்மையில் வந்தது. ஓர் இசை நிறை.

17: புரவுநிறை.............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை புறவு நிறை புக்கு பொன் உலகம் ஏத்த குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார்-அன்னையே ஒரு புறாவினது எடையைச் சமமாக்கப் புகுந்து வானுலகத்தோர் புகழும்படி உறுப்புக் குறைபாடில்லாத தனது உடம்பின்கண் தசையை எல்லாம் அரிந்து துலாவின்கண் வைத்தருளிய அற வெற்றியை உடைய அரசன் யார் நீ அறிவையோ; அம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த தன் அரண்மனை முன் வந்து ஆராய்ச்சி மணியே அசைத்த கறவை முறை செய்த காவலன் காண்-கற்றாவிற்குத் தன் அரும் பெறல் மகனை ஆழியில் மடித்துச் செங்கோன் முறைமை செய்தவனாகிய சோழ மன்னன்காண்; காவலன் பூம்புகார் பாடல்-அத்தகைய சிறப்புடையோனாயின் அம் மன்னனையும் அவனது பூம்புகார் நகரத்தையும் இனி யாம் பாடுவோமாக.

(விளக்கம்) புறவு-புறா. பொன்னுலகம். வானுலகத்தில் வாழ்வோர்; ஆகுபெயர். குறைவில் உடம்பரிந்த என்பதற்கு; புறவின் நிறைக்குத் தன் தசை குறையும்பொழுதெல்லாம் உடம்பின் தசையை அரிந்த வைத்த கொற்றவன் எனினுமாம். கறவை-கறக்கும் பசு. எனவே கன்றையுடைய பசு என்பதாயிற்று; பாடல்-வியங்கோள் தன்மைப்பன்மையில் வந்தது.

18: கடவரைகள்................அம்மானை

(இதன் பொருள்) அம்மானை கடவரைகள் ஓர் எட்டும் கண்இமையா காண-அன்னையே! மதம் பொழிகின்ற மலைகளை யொத்த திசையானைகள் எட்டும் வியப்பினால் தம் கண்களை இமையாதனவாய் நின்று கூர்ந்து காண எட்டுத் திசைகளையும் வென்று அவ் வெற்றிக்கு அறிகுறியாக; வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார்? வடக்கின்கண்ணதாகிய இமயமலையின் நெற்றிமிசை வாள் போன்ற கோடுகள் அமைந்த புலிப்பொறியை ஒற்றி வைத்தவன் யாரென்று நீ அறிவாயோ; அம்மானை வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்-அன்னாய்! அங்ஙனம் வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றியவன் திக்கு எட்டனையும் தனது ஒரு குடை நிழலின்கண் அடங்கும்படி அடிப்படுத்திக் கொண்டருளிய சோழ வேந்தன் காண்; கொற்றவன் பூம்புகார் பாடல் அத்தகைய புகழ்வாய்ந்த வேந்தனுடைய பூம்புகார் நகரத்தை யாம் பாடுவோமாக.

(விளக்கம்) கடவரை-யானை; வெளிப்படை எட்டும் என்றதனால் திசையானைகள் என்பது பெற்றாம். எட்டுத் திக்குகளையும் வென்றமையால் அவை வியந்து கண் இமையாமல் நோக்கின என்பது கருத்து. வடவரை- இமயம் எட்டுத்திசை அரசர்களையும் வென்றமையினால் அவற்றையும் தன் குடைநிழலில் கொண்டு அளித்தான் என்பது கருத்து.

19: அம்மனை...........அம்மானை

(இதன் பொருள்) அம்மானை அம்மனை தம் கையிற்கொண்டு அங்கு அணியிழையார் தம்  மனையில் பாடும் தகை-அன்னாய் அம்மனைக் காயைத் தம் கையிலே ஏந்திக்கொண்டு அவ்விடத்தே அழகிய அணிகலன் அணிந்த மகளிர் தமது மனையின்கண் இருந்தே பாடுகின்ற தன்மை எற்றிற்கு; அம்மானை தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் கொம்மை வரி முலைமேற் கூடவே-அன்னாய்! அங்ஙனம் அணியிழையார் தம் மனையில் பாடும் தன்மை எல்லாம் வெற்றி மாலை அணிந்த அச் சோழ மன்னன் தமது பருத்த தொய்யிலெழுதப் பெற்ற கொங்கைகளின் மேல் முயங்கித் தம்மைக் கூடுதற் பொருட்டேயாம்; அம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடின்-அன்னாய்! அங்ஙனம் அவ்வரசன் தன்னைப் பாடும் மகளிர் கொம்மை வரிமுலை  மேல் கூடுவானாயின்; குலவேந்தன் அம் என் புகார் நகரம் பாடல்-யாமும் அந்தச் சோழர்குல வேந்தனையும் அவனது அழகு தானாயிருக்கின்றதென்று சொல்லத் தகுந்த அவனுடைய புகார் நகரத்தையும் வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மனை ஈண்டு அம்மனை ஆடுவார் கையில் உள்ள காய். பாடுந்தகையேல் என்றது குறிப்பாக வினவியபடியாம். கொம்மை-பருமை வரி-தொய்யில், தேமலுமாம். அம்மானை வரி நான்கினும்(1) அரணம் காத்தவன் முசுகுந்தன்; (2) உடம்பரிந்தவன் சிபி;(3) வடகரை மேல் வேங்கை ஒற்றியவன் கரிகாலன்; என்க.

கந்துக வரி

20: பொன்னிலங்கு...............பந்தடித்துமே

(இதன் பொருள்) பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய்கோதை வில்லிட-பொன் நிறம் விளங்குகின்ற மலர்க்கொடி போன்ற தோழியே! யாம் நமது பொன்னால் இயன்ற மாலை ஒளி வீசவும்; மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப-மின்னல் போல் விளங்குகின்ற நமது மேகலை அணிகள் ஆரவாரிக்க ஆரவாரிக்க; எங்கணும் சென்று-இக் களத்தில் எவ்விடத்தும் போய்ப் போய்; தென்னன் வாழ்க வாழ்க என்று பந்து அடித்தும்-பாண்டியன் வாழ்க வாழ்க என்று வாழ்த்திப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்தும்-தேவர்களுக்கியன்ற மணியாரத்தைத் தாங்கிய வலிய மார்பையுடைய அப் பாண்டிய மன்னன் வாழ்க என்று சொல்லிப் பந்தினை அடித்திடுவோம் என்றாள் என்க.

(விளக்கம்) பூங்கொடி: அன்மொழித் தொடர் கொடிபோல்வாய் எனத் தோழியை விளித்தவாறு. பொலம்-பொன் . வில்-ஒளி தென்னன்-பாண்டியன். அடித்தும்: தன்மைப்பன்மை. தேவேந்திரன் தான் இட்ட ஆரத்தின் பொறை தாங்காது இவன் அழிந் தொழிக என்று கருதி ஒரு மணியாரத்தை இட்டானாக பாண்டியன் மிக எளிதாகவே அதனைச் சுமந்தான்: ஆதலால் அந் நிகழ்ச்சி அவன் மார்பிற்குப் புகழாயிற்று என்று கொள்க.

21: பின்னும்.............அடித்தும்

(இதன் பொருள்) பின்னும் முன்னும் எங்கணும் பெயர்ந்து வந்து எழுந்து உலாய்-பின்பக்கமும் முன்பக்கமுமாகிய எவ்விடத்தினும் சென்று வந்தும் இருந்தும் எழுந்தும் உலாவியும்; மின்னும் மின் இளங்கொடி வியல் நிலத்து இழிந்து என-ஒளி விடுகின்ற மின்னலாகிய கொடிகள் பெரிய நில உலகத்தின்கண் இறங்கி ஆடுமாப்போலே; சென்று தென்னன் வாழ்க வாழ்க என்று பந்தடித்தும்-அங்குமிங்கும் சென்று பாண்டியன் வாழ்க வாழ்க என்று பாடிப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்தடித்தும் -தேவருக்குரிய மணியாரத்தைப் பூண்ட மார்பினையுடைய பாண்டியன் வாழ்க என்று சொல்லிப் பந்தடித்து ஆடுவோமாக என்க.

(விளக்கம்) எழுந்து என்றமையால் இருந்தும் எழுந்தும் எனக் கொள்க. மின்னு-ஒளி. மின்னிளங்கொடி-கொடி மின்னல்.

22. துன்னி..............அடித்துமே

(இதன் பொருள்) துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலம் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லைதான் என-நமது பந்தாட்டத்தைக் காண்பவர் இப் பந்துகள் நெருங்கிவந்து நமது கையிடத்தே இருந்ததும் இல்லை, நீண்ட நிலத்தினின்றும் வானத்தே எழுந்ததும் இல்லை என்று கூறி மருளும் படி; தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே என்க; 

(விளக்கம்) காண்பவர் பந்துகள் நிலத்தில் இருக்கின்றனவா அல்லது வானத்திலேயே நிற்கின்றனவா அல்லது இப் பெண்களின்  கையின்கண் இருக்கின்றனவா என்று அறியாதவண்ணம் அத்துணை விரைவாகச் சென்று பந்தடிப்போம் என்றவாறு.

ஊசல் வரி

23: வடங்கொண்மணி..............ஊசல்

(இதன் பொருள்) வடங்கொள்மணி ஊசல் மேல் இரீஇ-கயிறுகளைக்கொண்ட அழகிய ஊசலின் மேல் ஏறி இருந்து; ஐயை உடங்கு ஒருவர் கை நிமிர்த்து ஆங்கு ஒற்றை மேல் ஊக்க- நிலத்தில் நிற்கின்ற ஐயையுடனே நிற்பாருள் யாரேனும் ஒருவர் தமது கையை உயர்த்தி ஒற்றைத் தாளத்தை ஒற்றி அக் கையை மேலே தூக்கும்படியாய்; கடம்பு முதல் தடித்த காவலனைப் பாடி பகைவருடைய காவல் மரமாகிய கடம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய சேர மன்னனுடைய புகழ்களைப் பாடிக்கொண்டு; குடங்கை நெடுங்கண் பிறழ ஊசல் ஆடாமோ-உள்ளங்கை அளவிற்றாகிய நமது நெடியகண் பிறழும்படி யாம் ஊசலாடுவோம்; கொடுவில் பொறிபாடி ஊசல் ஆடாமோ-அவ்வரசர் பெருமான் தனது இலச்சினையாகிய வில்லை இமய நெற்றியில் பொறித்த புகழைப் பாடிக்கொண்டு யாம் ஊசல் ஆடுவோம்.

(விளக்கம்) வடம்-ஊசலின் கயிறு. மணி-அழகு. மணிபதித்த ஊசல் எனினுமாம். இரீஇ-இருந்து. உடங்கொருவர்-உடன் நிற்பாரில் ஒருவர். ஒற்றை-ஒற்றைத் தாளம். முதல்-வேர். குடங்கை-உள்ளங்கை. இது கண்ணின் அகலத்திற்கு உவமை. ஆடாமோ: ஓகாரம் வினா. அஃது உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தி நின்றது. விற் பொறி-வில்லைப் பொறித்தமை.

24: ஓரைவர்............ஊசல்

(இதன் பொருள்) ஓர் ஐவர் ஈர் ஐம்பதின்மர் உடன்று எழுந்த போரில்-பாண்டவர் ஐவரும் கவுரவர் நூற்றுவரும் தம்முள் கலாய்த்தமையால் தோன்றிய பாரதப் போரின்கண்; போற்றாது பெருஞ்சோறு தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம் பாடி-பொருள் மிகுதியாகச் செலவாகிவிடுமே என்று கருதி அவற்றைப் பேணிக்கொள்ளாமல் போர் முடியுந்துணையும் இரு திறத்துப் படைகளுக்கும் மிக்க உணவினைத் தான் ஒருவனே வழங்கிய வள்ளலாகிய சேரன் பொறையன் மலையன் என்னும் திருப் பெயர்களையுடைய சேரலாதனுடைய பெருந்தகைமையைப் பாடிக்கொண்டு; கார் செய்குழல் ஆட ஊசல் ஆடாமோ கடம்பு எறிந்த ஆ பாடி ஊசல் ஆடாமோ-முகில் போன்ற நமது கூந்தல் ஆடும்படி யாம் ஊசலாடுவோம் அம் மன்னர் பெருமான் பகைவர் கடம்பினை வெட்டி வீழ்த்திய போர் நெறியினைப் பாடிக்கொண்டு ஊசல் ஆடுவோமாக என்க.

(விளக்கம்) ஐவர்-பாண்டவர். ஈரைம்பதின்மலர்-கவுரவர்கள். இவை எண்ணால் வருபெயர். போற்றாது-பொருளினைப் போற்றிக் கொள்ளுவோம் என்று நினையாமல் எனினுமாம். இருவர் படைக்கும் வழங்குதலின் பெருஞ்சோறு எனல் வேண்டிற்று. இங்ஙனம் செய்தவன் பெருஞ் சோற்றுதியன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரன் என்க. கார் செய்-என்புழி. செய்-உவமவுருபு. எறிந்தவாறு என்பதன் ஈறு தொக்கது.

25: வன்சொல்...................ஊசல்

(இதன் பொருள்) வன்சொல் யவனர் வளநாடு வன் பெருங்கல் தென்குமரி ஆண்ட-வன்சொல்லையுடைய யவனருடைய வளமிக்க நாட்டினையும் வலிய பெரிய மலையாகிய இமயமலை தொடங்கித் தென்திசைக்கண்ணதாகிய குமரித்துறை வரையில் ஆட்சி செய்தமையால்; செருவில் கயல் புலியான்-போர்க் கருவியாகிய வில்லும் கயல்மீனும் புலியும் ஆகிய முத்தமிழ் வேந்தர்க்குமுரிய இலச்சினைகள் மூன்றனையும் தன்னுடையனவாகக் கொண்டவனும்; மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி-மக்கள் இனத்தைச் செங்கோன்மை பிறழாமல் காவல் செய்கின்ற மன்னனும் ஆகிய நம் சேரர் பெருமானுடைய செங்கோன்மையைப் புகழ்ந்து பாடிக்கொண்டு; மின்செய் இடை நுடங்க ஊசல் ஆடாமோ விறல்வில் பொறி பாடி ஊசல் ஆடாமோ-மின் போன்ற நம்மிடை துவள யாம் ஊசலாடுவோம். வெற்றி தருகின்ற அவனது வில் இலச்சினையையும் புகழ்ந்து பாடி யாம் ஊசல் ஆடுவோம் என்க.

(விளக்கம்) வன் சொல்-இயல்பாகவே வல்லோசையை உடைய மொழி என்க. வன் பெருங்கல்-இமயம். இமயம் முதல் குமரி வரையில் ஆட்சி செய்தமையின் முத்தமிழ் வேந்தர்க்கும் உரிய மூன்றிலச்சினைகளையும் தனக்கே உரியனவாக்கிக் கொண்டவன் என்பார் செருவில் கயல் புலியான் என்றார். மன்பதை-மக்கள் தொகுதி.

26: தீங்கரும்பு..........பாடல்

(இதன் பொருள்) தீங்கரும்பு நல் உலக்கையாக செழு முத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்-இனிய கரும்புகளையே அழகிய உலக்கைகளாகக் கையிற் கொண்டு வளவிய முத்துக்களாகிய அரிசியை அழகிய காஞ்சி மரத்தின் நீழலின் கீழே குற்றுபவராகிய பூம்புகார் நகரத்து மகளிர்; ஆழிக் கொடித்திண் தேர்ச் செம்பியன்-உருளைகளையும் கொடியையுமுடைய திண்ணிய தேரை உடைய சோழ மன்னனுடைய; வம்பு அலர்தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல்-புதிதாக மலர்ந்த ஆத்தி மாலையை உடைய விரிந்த பெரிய மலைபோன்ற தோள்களைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்; பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்-அப் புகார் நகரத்து அம் மகளிர் அங்ஙனம் பாடி ஆரவாரிக்கின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம் என்க.

(விளக்கம்) வள்ளைப்பாட்டு-உலக்கைப் பாட்டு. அவைப்பார்-குற்றுபவர். ஆழி-தேரினது உருள். கொடி-புலிக்கொடி. வம்பு. புதுமை. தார்-ஈண்டு ஆத்தித்தார். பாழி-அகலம். பாடலே என்புழி ஏகாரம் பிரிநிலை. ஆரிக்கும்: விகாரம். ஆரவாரிக்கும் என்க.

27: பாடல்...............பாடல்

(இதன் பொருள்) பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாட மதுரை மகளிர்-புலவருடைய பாடலுக்கமைந்த முத்துக்களைப் பவழமாகிய உலக்கையைக் கொண்டு மாடமாளிகைகளையுடைய மதுரை மாநகரத்து மகளிர் குற்றி விளையாடுவர், அங்ஙனம் விளையாடுபவர்; வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன் தன் மீனக்கொடி பாடும் பாடலே பாடல்-தேவேந்திரன் இட்ட மணியாரம் விளங்குகின்ற தோளையுடைய பாண்டியனுடைய கயல் மீன்கொடியைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்: வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்-அவன் அணிந்துள்ள வேப்பமாலை தமது நெஞ்சினை வருத்தும் தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம் என்க.

(விளக்கம்) முத்துக்களுள் பாண்டியனுடைய கொற்கை முத்தே புலவர் பாடுதற்கமைந்த சிறப்புடையதாதலின் அதனையே பாடல் சால் முத்தம் என்றார். குறுவர்-குற்றவார். அங்ஙனம் குற்றுபவர் எனச் சில சொல் பெய்து கொள்க. மீனம்-கயல் மீன். உணக்கும் உலர்த்தும் என்றது வருத்தும் என்றவாறு.

28: சந்துரல்...............பாடல்

(இதன் பொருள்) சந்து உரல் பெய்து தகை சால் அணி முத்தம் வான் கோட்டால் வஞ்சி மகளிர் குறுவர்-சந்தன மரத்தால் இயன்ற உரலின்கண் பெய்து அழகமைந்த முத்துக்களை யானையினது வெள்ளிய மருப்பாகிய உலக்கையால் வஞ்சி நகரத்து மகளிர் குற்றி விளையாடுபவர், அங்ஙனம் ஆடுங்கால் அம் மகளிர் பாடுகின்ற; கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்-பகைவரை வஞ்சியாமல் எதிர்நின்று வெல்லுகின்ற வாகை மாலையையுடைய அச் சேர மன்னன் பகைவருடைய கடம்பினை வெட்டி வீழ்த்திய புகழானது அகன்ற இந் நிலவுலகத்தை முழுவதும் மூடிக்கொண்டமையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம்; பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்-அம் மகளிர் அவன் குடியுள்ள பனம்பூ மாலையானது தமது நெஞ்சினைக் கவருகின்ற தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடல் ஆம்; என்க.

(விளக்கம்) சந்து-சந்தனம். சந்தன மரத்தால் செய்த உரல் என்க. முத்தமாகிய அரிசியைப் பெய்து என்க. வான்கோடு என்றது யானை மருப்பினை. அதனை உலக்கையாகக் கொண்டு குறுவர் என்க, வார்த்தை-புகழ். படர்ந்த நிலம்-விரிந்த நிலம். கவரும் தன்மையைப் பாடும் பாடல் என்க.

கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதல்

29: ஆங்கு..............என்று

(இதன் பொருள்) ஆங்கு-அவ்வழி; நீள் நில மன்னர்-நெடிய இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னருள் வைத்து; நெடுவில் பொறையன் நல் தாள் வாழ்த்தல்-நீண்ட விற் பொறிமையுடைய சேரனுடைய நல்ல திருவடிகளை வாழ்த்துதல்; தாள் தொழார் தமக்கு அரிது-அவனுடைய திருவடிகளை வணங்காத பகை அரசர்களுக்கு மட்டுமே அரியாதொரு செயலாம். ஏனைய மன்னரெல்லாம் வாழ்த்துதல் இயல்பேயாகும், அது கிடக்க; சூழ் ஒளிய எங்கோ மடந்தையும்-தன்னைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டத்தோடு கூடிய எங்கள் சேரன் மகளாகிய கற்புக் கடவுள் தானும் செங்குட்டுவன் நீடூழி வாழ்க என்று ஏத்தினாள்-செங்குட்டுவன் இவ்வுலகில் நீடூழி வாழ்கவென்று சொல்லித் தன்னுடைய தெய்வ மொழியினால் வாழ்த்தினாள் என்பதாம்.

(விளக்கம்) செங்குட்டுவனுடைய அடிகளை வாழ்த்துவோர் இவ்வுலகத்து மன்னருள் பலர் உளர். அவ் வாழ்த்துப் பெறுதல் அவனுக்கு எளிது. இக் கற்புக் கடவுளின் வாழ்த்தே பெறற்கரிய பேறாம். அத்தகைய பேற்றினை எங்கள் அரசன் பெற்றான் எனக் கண்ணகியின் வாழ்த்துப் பெற்றபின் ஆயமகளிர் தம்முள் உவந்து கூறியவாறு. அத் தெய்வம் தன்னை வையையார் கோமான் மகள் என்றாலும் யாங்கள் எங்கள் சேரன் மகள் என்றே கொள்கின்றேம் என்பது தோன்ற எங்கோ மடந்தையும் ஏத்தினள் என்றார். இங்ஙனம் அக் கற்புக் கடவுள் வாழ்த்தினமையாலே அச் செங்குட்டுவனுடைய புகழ் உலகம் உள்ள துணையும் உளதாம் எனபதில் ஐயமில்லை.

பா. கொச்சகக் கலியால் இயன்ற இசைப் பாடல்கள்

வாழ்த்துக் காதை முற்றிற்று.


Offline Anu

Re: சிலப்பதிகாரம்
« Reply #38 on: February 28, 2012, 08:41:34 AM »
30. வரம் தரு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-கண்ணகியாகிய திருமா பத்தினித் தெய்வம் செங்குட்டுவனை உள்ளிட்ட அரசர் பலர்க்கும் அவரவர் விரும்பிய வரத்தை ஈந்தருளிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு இக் காதையின்கண் இடைப்பிறவரலாகக் கண்ணகியின் தோழியாகிய தேவந்தி செங்குட்டுவனுக்கு மணிமேகலை துறவின் வரலாறு கூறதலும், தேவந்தியின்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஏறி ஆடுதலும், அத் தெய்வம் தீர்த்தம் தெளிக்கச் செய்தலும் அவ்வழி அரட்டன் செட்டியின், இரட்டைப் பெண்களும் தம் முற்பிறப்புத் தோன்ற அரற்றுதலும் சேடக் குடும்பியின் சிறிமியும் அவ்வாறு அரற்றுதலும் மாடலன் அரசனுக்குத் தேவந்தியின் வியத்தகு வரலாறு விளம்புதலும், இந்நிகழ்ச்சிகளின் வாயிலாய் மாடலன் அறிவுரை பல அரசனுக்கு அறிவுறுத்தலும் சாலவும் இன்பமும் பயனும் உடையனவாம் இவற்றின் மேலும் இக் காப்பியத் திறுதியின்கண் இளங்கோவடிகளார் இக் காப்பியத்தின் பயனாக நம்மனோர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இவை என அறிவுறுத்துதல் மாபெரும் பயன் தரும் தன்மைத்து.

வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உரை என-  5

கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின்  10

ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின;  15

புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20

குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ? என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
வருக, என் மட மகள் மணிமேகலை! என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு  25

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்-  30

தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள் என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை  35

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றினென் என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40

திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்-  45

கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும்,  50

ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய  55

அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின்,  60

ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
குறிக்கோள் தகையது; கொள்க எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை   65

முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன் என்றலும்- 70

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து,  75

கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக என,  80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர்,  85

மூவா இள நலம் காட்டி, என் கோட்டத்து,
நீ வா என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து,  90

குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
அந் நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்-
மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல்  95

தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி,  100

காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!-
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து,  105

போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!-
வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110

எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ-  115

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
மன்னர் கோவே, வாழ்க! என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;
மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120

உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால்,  125

அஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின்  130

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை-  140

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து,   145

நீடு வாழியரோ, நெடுந்தகை! என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி   150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி,
பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி,  155

உலக மன்னவன் நின்றோன் முன்னர்-
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,  160

எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட-
தந்தேன் வரம்! என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும்,  165

ஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு என்று, 175

உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி,   180

சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து என்று-
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!-  185

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;  190

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;  195

அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;  200

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.

உரை

செங்குட்டுவன் தேவந்திகையை வினாதல்

1-5: வடதிசை............உரையென்

(இதன் பொருள்) வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை-வடநாட்டு மன்னர்களை வென்று தன் அடிப்படுத்த சேரர் குலத்தோன்றலாகிய பெருந்தகைமை மிக்க செங்குட்டுவனுடைய கண்புலம் கடவுட் கோலம் புக்க பின்-கண்ணறிவிற்குக்  கண்ணகியினுடைய தெய்வத்திருவுருவம் தோற்றமளித்த பின்னர் அம் மன்னவன்; தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி-தேவந்திகை என்னும் பார்ப்பன் மகளை நன்கு பார்த்து; வாயெடுத்து அரற்றிய மணிமேகலை யார்? அவள் துறத்தற்கு ஏது யாது ஈங்கு உரையென-அன்னையே! இம் மூதாட்டி இப்பொழுது மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ! என்று வாய்விட்டு அழுவதற்குக் காரணமான அந்த மணிமேகலை என்பவள் யார்? அவள் தானும் துறவி ஆதற்குக் காரணம் தான் யாது? இவற்றை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) வாயெடுத்தரற்றியது அடித்தோழி ஆதலின் இம் மூதாட்டி என வருவித்துக் கூறிக் கொள்க. வானவர்-சேரர். கடவுட் கோலம்-கண்ணகியார் வானத்தின்கண் திருவுருக்கொண்டு காட்டிய காட்சி. கட்புலம்-கண்ணறிவு. அரற்றுதல்-புலம்புதல் ஏது-காரணம்.

தேவந்திகை சேரனுக்கு மணிமேகலையின் வரலாறு செப்புதல்

6-9: கோமகன்..........உரைக்கும்

(இதன் பொருள்) நாடுபெருவளம் சுரக்க என்று ஏத்தி-அதுகேட்ட தேவந்திகை மன்னனை நோக்கி வேந்தர் பெருமானே! நின்னுடைய ஆட்சியிலமைந்த நாடு மிகுந்த வளங்களைத் தருவதாக என்று சொல்லி அரசனைப் பாராட்டிப் பின்னர்; அணிமேகலையார் ஆயத்து ஓங்கிய மணிமேகலை தன் வான்துறவு உரைக்கும்-அழகிய மேகலை முதலிய அணிகலன்களையுடையவராகிய தோழியர் கூட்டத்தினுள் இருக்கும் பொழுதும் உயர்ந்த தனித்தன்மையுடன் விளங்குகின்ற மணிமேகலையினது தூய துறவுக் கோலத்தின் வரலாற்றினைப் பின் வருமாறு கூறுவாள் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் வாழ்த்தித் தொடங்குதல் மரபு. அணி-அழகு; அணிகின்ற மேகலை எனினுமாம். மேகலையாராகிய ஆயம் என்க. ஆயம்-மகளிர் குழாம். ஓங்கிய தோற்றத்தால் உயர்ந்து தோன்றுகின்ற என்றவாறு. துறவு துறவிற்குரிய காரணம்.

இதுவுமது

10-23: மையீரோதி.............உரைப்ப

(இதன் பொருள்) மாதவி நற்றாய்-வேந்தே! மணிமேகலை என்பவள் மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாவாள். கோவலனுக்குற்றது கேட்டு மாதவி துறவு பூண்டாள். அதன் பின்னர் அம் மாதவியின் தாயாகிய சித்திராபதி என்னும் முதிய கணிகை மாதவியின்பாற் சென்று அம் மணிமேகலையின்கண் நிலைமை கூறுபவள் மகளே! கேள் நின் மகள் மணிமேகலைக்கு மைஈர்ஓதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது-அவளது கரிய நெருப்புடைய கூந்தல் கூறுபடுத்துதலாலே உண்டாகும் அழகிற்கேற்ப ஐந்து வகையாக வகுக்கும் பருவத்தை யெய்தியது; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலன் -அவளது செவ்வரி படர்ந்த வளமான குளிர்ந்த கண்ணினது கடைப்பகுதி கண்டோரை மயக்கும் செயலை அறிந்து கொண்டன, அச் செயலை அம் மணிமேகலை இன்னும் அறியாதிருக்கின்றனள்; பவளத்துள் ஒளி ஒத்து ஒளிர் சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின்-இதழ்களாகிய பவளச் செப்பினுள்ளே ஒளியானும் நிரலானும் தம்முள் ஒத்து விளங்குகின்ற முத்துகளைப் போன்ற இளமையுடைய பற்கள் இன்னும் முழுதும் நிரம்பாத அழகினை உடையனவாயின: புணர்முலை விழுந்தன-புணர்தற்குக் காரணமான முலைகள் அடியுற் றெழுந்தன; புல் அகம் அகன்றது தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது-தழுவுதற்குரிய மார்பிடம் விரிந்தது அதற்கேற்பத் தளருகின்ற அவளுடைய இடை பின்னும் நுண்ணிதாகலும் அழகிய அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய தொடைகளிரண்டும் திரண்டன  ஆயினும் அணிகலன்களைப் பொறுக்க மாட்டாவாயின; நிற்கிளர் சீறடி அடிகள் நெய் தோய்க்கப் பெற்ற மாந்தளிர் போல்வனவாயின; தலைக்கோல் ஆசான் பின் உளனாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்-அவளுக்குப் பயிற்றுவிக்கும் ஆடலாசிரியன் முன் வாராமையாலே அவளை உயர்குடியினராகிய நகரமாந்தர் சிறந்த கணிகையாக ஏற்றுக் கொள்கிலர்; இங்ஙனம் ஆதலின்; நின் கருத்து யாது? அவளைப் பற்றிய நின்னுடைய எண்ணந்தான் என்னையோ? என் செய்கு என மாதவிக்குரைப்ப-அவளை ஈன்ற தாயாகிய நீ செய்யக் கடவன செய்யாதொழியின் மிகவும் முதியவளாகிய நான் என் செய்ய மாட்டுவேன், என்று இரங்கி அம் மாதவிக்குக் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) மாதவி நற்றாய் என(23) என்பதனை மையீரோதி (10) என்பதன்முன் கூட்டுக. ஆண்டு இசையெச்சத்தால் கூற வேண்டுவன பலவும் கூறிக் கொள்க. அவ்வியம்-வஞ்சம் முதலிய தீக் குணங்கள். அவள் கண்கள் தம்மைக் கண்டோரை வஞ்சித்து மயக்கும் தன்மையுடையனவாய் விட்டன. அத்தன்மையை அவள் இன்னும் அறிந்திலள் என்றவாறு. பவளம்-வாய் இதழ்களுக்குக் குறிப்புவமம். முலை விழுந்தன என்றது அவை அடியிட்டு எழுந்தன என்றவாறு. மாதர்க்குக் கண்ணும் தோளும் அல்குலும் பெருகியிருத்தல் வேண்டுமென்பர். குறங்கு தொடை. தமது மென்மையால் அணிகலன்களை அத் தொடைகள் பொறா என்றவாறு. தலைக்கோலாசான் என்றது ஆடலாசிரியனை தாயாகிய நீ இங்ஙனம் இருத்தலின் ஆசிரியன் முன் வரத் தயங்கிப் பிண்ணிடுகின்றான் என்பாள் தலைக்கோலாசான் பின்னுளன் ஆக என்றாள். குலத்தலை மாக்கள் என்றது உயர்குடிப் பிறப்பாளராகிய செல்வர் மக்களை. ஆடல் முதலிய கலைப் பயிற்சியுடைய கணிகை மகளிரே சிறந்தோர் என்று உலகம் கொள்ளுதலுண்மையின் நின் மகளை அவ்வாறு உயர்ந்தவளாகக் கருத மாட்டார் என்றவாறு. நின் கருத்து யாது என்றது துறந்தவளாகிய உன்னுடைய கருத்து அவளைப் பற்றி எங்ஙன முளது என்று மணிமேகலைக்கு இரங்கிக் கூறியவாறு. என் செய்கு-யான் என் செய்வேன். தான் மிகவும் முதியவளாதலின் அவட்கு யான் ஏதும் நலன் செய்ய வல்லேனல்லேன் என்று இரங்குவாள் என் செய்கு? என்றாள். இத்துணையும் தேவந்தி மணிமேகலையின் இயல்பு கூறுபவன் அவளைப் பற்றிச் சித்திராபதி கூறியவற்றைக் கூறிய படியாம்.

தேவந்திகை மாதவியின் செயல் கூறியது

24-28: வருக........படுத்தனள்

(இதன் பொருள்) என் மடமகள் மணிமேகலை வருக என்று-அரசே! மாதவி தன் தாயாகிய சித்திராபதி கூறியவை கேட்டு அவள் பேததைமைக் கிரங்கியவளாய் என்னுடைய இளமை ததும்பும் மகளாகிய அம் மணிமேகலை என்பாள் ஈங்கு வருவாளாக வென்றழைத்து; உருவிலாளன் ஒரு பெருஞ் சிலையொடு விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய-உருவமில்லாதவனாகிய காமவேள் தன்னுடைய ஒப்பற்ற பெரிய கருப்பு வில்லோடு மணமுடைய மலராகிய அம்புகளையும் வறிய நிலத்தின்மேல் வீசி விட்டு வருந்தும்படி; கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறம் படுத்தனள்-அம் மணிமேகலையினுடைய மலர் மாலை மணிமாலை முதலிய மாலைகளை அவளது அழகிய கூந்தலோடே களையும்படி செய்து புத்தப்பள்ளியில் விடுத்து விரும்பி அப் புத்தர் அறத்தை மேற்கொள்வித்தனள் என்றாள் என்க.

(விளக்கம்) உருவிலாளன்-அனங்கள்; காமவேள். சிலை-ஈண்டுக் கருப்பு வில். காமவேள் இவளைக் கருவியாகக் கொண்டு தன்னாலே வெல்லுதற்குரிய துறவோர் பலரையும் வெல்லக் கருதியிருந்தானாதலால் அவள் துறவு பூண்டமையால் பெரிதும் வருந்தி வில் முதலியவற்றை வீசியெறிந்தான் என்பது கருத்து போதித்தானம்-பவுத்தப்பள்ளி அறம் படுத்தல்-வைராக்கியம் சொல்லுதல். 

இதுவுமது

29-37: ஆங்கது..........உரைத்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும்-அப் பொழுது மாதவி மணிமேகலையைத் துறவறம் புகுத்த அச் செய்தியைக் கேள்வியுற்ற சோழ மன்னனும் அப் புகார் நகரத்து வாழ்கின்ற மக்களும்; ஓங்கிய நல்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் தாம் துன்பம் நனி எய்த-உயர்ந்த சிறந்த மாணிக்கத்தைப் பெரிய கடலின் நடுவே வீழ்த்தி விட்டவர் போன்று தமக்குள்ளே பெருந் துன்பத்தைப் பெரிதும் எய்தா நிற்ப; செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன் துறவு எமக்குச் சாற்றினர் என்றே-நடுவு நிலைமை உடைய மொழியையுடைய பெரிய தவத்தையுடைய அறவணவடிகளார் சிவந்த அணிகலனை அணிதற்கியன்ற மகளிருள் சிறந்த மணிமேகலை தனது துறவற உறுதி மொழியை எம் முன்னிலையிற் சொல்லினள் என்று அரசர் பெருமானே! அவ்வறவண அடிகளார் தாமே; அன்பு உறு நல்மொழி அருளொடுங் கூறினர்-அன்புமிக்க இந்த நல்ல செய்தியை என்பால் அருளுடைமையால் சொல்லினர் என்று அரசற்கு கூறி அத் தேவந்திகை பின்னரும்; ஆங்கு அரசற்கு பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினளாதலின் அரற்றினென் என்று உரைத்த பின் மீண்டும் அச் செங்குட்டுவனுக்குப் பெருமானே! துறவு பூண்பதற்குரிய பருவம் இல்லாமலேயே பசிய வளையலையணிந்த அம் மணிமேகலை திருமகளும் விரும்புதற்குக் காரணமான தனது பேரழகைத் துறந்தாளாதலாலே அந் நிகழ்ச்சியை நினைந்து அடியேன் அழுதேன் என்று கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) அது-அச் செய்தி அரசன்: சோழ மன்னன். நகரம்-நகர் வாழ் மக்கள்: ஆகுபெயர் வீழ்த்தோர் தம்மின் வீழ்த்தவரைப் போல மாதவர்: அறவணவடிகள். மாதவர், நங்கை எமக்குத் துறவு சொன்னாள் என்று கூறினர் எனக் கூட்டுக. பருவம்-துறத்தற்குரிய பருவம். அஃதாவது காமம் சான்ற கடைக்கோள்காலை திரு-திருமகள் அதனை நினைந்து அரற்றினேன் என்றவாறு.

தேவந்திகை மேல் தெய்வம் ஏறி ஆடுதல்

38-45: குரற்றலை............தான்

(இதன் பொருள்) குரல்தலைக் கூந்தல் குலைந்து பின்வீழ-இவ்வாறு செங்குட்டுவனுக்கு மணிமேகலையின் திறம் உரைத்து நின்ற பொழுது கதுமெனக் கொத்துகளைத் தன்னிடத்தேயுடைய தனது கூந்தல் தானே அவிழ்ந்து முதுகிலே சரியா நிற்ப அத் தேவந்திகை; புருவந் துடித்தனள் துவர் இதழச் செவ்வாய் மடித்து எயிறு அரும்பினள் வருமொழி மயங்கினள்-தன் புருவங்களிரண்டும் துடிக்கப் பெற்றனள், பவளம் போன்ற இதழ்களையுடைய தனது சிவந்த வாயை மடித்துப் புன்முறுவல் பூத்தனள்; தானே புறப்படுகின்ற மொழிகள் மயங்கப் பெற்றனள்; திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்-தனது அழகிய முகத்தில் வியர்வை துளிக்கப் பெற்றனள்-இயல்பாகவே சிவந்த தன் கண்கள் மேலும் சிவப்பேறப் பெற்றனள்; கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்-தன் கைகளை ஒற்றையும் இரட்டையுமாகித் திசைகளிலே விட்டெறிந்தனள், கால்களை நின்ற நிலையினின்றும் பெயர்த்து ஆடினள்; பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் உலறிய நவினள் உயர் மொழி கூறி-அங்கு நின்ற மக்கள் பலரும் அறிய வொண்ணாத தெளிவும் மயக்கமும் உடையவளாய் நீர் வற்றிய நாவினை உடையவளாய் உயர்ந்த மொழிகளைக் கூறிக் கொண்டு; தெய்வம் உற்று எழுந்த தேவந்திகைதான்-தெய்வமேறப் பெற்று எழுந்தாடிய அத் தேவந்திகை என்னும் பார்ப்பனி தானும் என்க.

(விளக்கம்) குரல்-கொத்து. எயிறு அரும்புதல்-புன்முறுவல் பூத்தல். தெய்வத்தினருளால் தானே தோன்றும் மொழி என்பார். வருமொழி என்றார். இப் பகுதியில் தெய்வம் ஏறி ஆடுவோர் இயல்பை இயற்கை நவிற்சியாக அடிகளார் ஓதியிருத்தலுணர்க. இதனோடு தெய்வ முற்றே னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்தகலக்க முடைமையு மடித்தெயிறு கவுவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமுந் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப வியல்புணர்ந் தோரே என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் ஒப்ப நோக்கற்பாலது.

தேவந்திகை செங்குட்டுவனுக்கு முன்பு மாடலனுக்குக் கூறுகின்ற தெய்வ மொழிகள்

46-52: கொய்தவிர்............ஈங்குளள்

(இதன் பொருள்) கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்துகட்டிய தளிர் விரவிய குறிஞ்சிப் பூமாலையையுடைய அரசர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன் முன்னிலையிலே மாடலனைநோக்கிக் கூறுபவன் மாணிழையோருள்-கற்புடைக் கடவுளாகிய கண்ணகியின் மங்கல விழாக் காண வந்த அழகிய மொழியையுடைய மாட்சிமையுடைய அணிகலனணிந்த இம் மகளிர் கூட்டத்தினுள்; அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்-அரட்டன் செட்டி என்னும் வணிகனுடைய மனைவி ஈன்ற இரட்டையாகப் பிறந்த அழகிய பெண்களிருவரும் இருக்கின்றனர் அவர்களையல்லாமலும்; ஆடக மாடத் தரவணைக்கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குள்ள-திருவனந்தபுரத்தின்கண் அரவணையின்மிசை அறிதுயில் கொண்டு கிடந்தருளிய திருமாலுக்குத் திருத்தொண்டு புரிகின்ற குடும்பத்தலைவனது இளமகள் ஒருத்தியும் இங்கு வந்திருக்கின்றனள் என்றாளென்க.

(விளக்கம்) இவை செங்குட்டுவன் முன்னிலையிலே தேவேந்திகை என்னும் பார்ப்பனியின் மேலேறிய தெய்வத்தின் மொழிகள். கொய்தற்குரிய தளிரையுடைய குறிஞ்சி தழைத்துள்ள மலை நாட்டுக் கோமான் எனினுமாம். கடவுள்-கண்ணகிக் கடவுள். அரட்டன்: பெயர். ஆயிழை, மனைவி என்னும் பொருட்டு இரட்டைப் பெண்கள்-ஒரே கருவிலிருந்து பிறந்த இரண்டு பெண்கள். ஆடகமாடம் என்பது திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலை குடும்பி-குடும்பத்தையுடையவன். சிறுமகள்-ஆண்டிளையாள்.

இதுவுமது

53-60: மங்கல..........ஆகுவர்

(இதன் பொருள்) மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்-மங்கலா தேவியின் கோயிலமைந்துள்ள அவ்விடத்தே செங்கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பின்-செங்குத்தாக உயர்ந்துள்ள குவடுகளையும் உயர்ந்து வளர்ந்த மூங்கிலையும் உடைய தாய் மிகவும் உயர்ந்திருக்கின்ற மலையின்கண்! பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை-மயில் போன்ற உருவமைந்ததொரு பாறையின்மேல்; நிரம்பிய அணி கயம் பலவுள-நீரான் நிரம்பிய அழகிய சுனைகள் பலவுள்ளன; ஆங்கு அவை இடையது கடிப்பகை நுண்கலுங் கவிர் இதழ்க் குறுங்கலும் இடிக்கலப்பு அன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனை-அவ்விடத்தே அச் சுனைகளின் நடுவண் உளதாய் வெண் முருக்கம்பூவினது இதழ்களைப் போன்ற குறிய செந்நிறக் கற்களும் பன்னிற மாவுகளையும் விரவினாற் போன்ற நிறமுடையதாய் நெகிழ்ந்து வீழ்கின்ற நீரினையும் உடையதாய் உளது ஒரு சுனை; அதன் உள் புக்காடினர் பண்டைப் பிறவியராகுவர்-அச் சுனையின்கண் புகுந்து நீராடியவர்கள் பழைய பிறப்பினது நினைவினை உடையராகிவிடுவர் என்றாள் என்க.

(விளக்கம்) மங்கல மடந்தை என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் மங்கலாதேவி என்று பொருள் கூறினர். எனவே இத் தெய்வம் பிறிதொரு தெய்வம் என்றே கொள்ளற்பாலது. இத் தெய்வத்தைக் கண்ணகி என்று கொள்வாருமுளர். அவர் உரை பொருந்தாமை தேவந்திகையின் மேலேறிய சாத்தன் என்னுந் தெல்வம் ஈண்டுக் கூறுஞ் செய்திகள் இறந்த காலத்தன், ஆதலினாலென்க. கோட்டம் கோயில். செங்கோடு-செங்குத்தாக வுயர்ந்த குவடு. பிணிமுகம்-மயில் கயம்-சுனை. கடிப்பகை-வெண் சிறுகடுகு. கவிரிதழ்-முருக்கம் பூவின் இதழ். இது வண்ணமும் வடிவமும் பற்றி உவமை. பண்டைப் பிறவியர்-முற்பிறப்பின் நினைவுகளை உடையவர்.

இதுவுமது

60-70: ஆதலின்.............என்றலும்

(இதன் பொருள்) ஆதலின் ஆங்கு அது கொணர்ந்து-அங்ஙன மாதலின் அவ்விடத்துள்ள அச் சுனைநீரைக் கொண்டுவந்து; ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கு இருங்கோட்டி இருந்தோய்- அப்பொழுது அம் மங்கலாதேவியின் கோயிலினது உயர்ந்த பெரிய மாட வாயிலின்கண் நீ இருந்தனையாதலின்; உன் கைக்குறிக்கோள் தகையாது கொள்க எனத் தந்தேன்-உன்னுடைய கையில் கொடுத்த யான் இந்நீர் தெய்வத் தன்மையுடையதாதலின் நின்னால் குறிக்கொண்டு போற்றி வைத்துக் கொள்ளும் தன்மையது என்று சொல்லி இதனைக் கொள்வாயாக என்று கொடுத்தேன் அல்லனோ! அந் நீரையுடைய; உறித்தாழ் கரகமும் உன் கையது அன்றே-உறியின்கண் வைக்கப்பட்ட அந் நீர்க் கரகமும் இப்பொழுது உன் கையின்கண் உளதன்றோ; கதிர் ஒழி காறும் கடவுள் ஆட்டின்-ஞாயிறும் திங்களும் அழிந்தொழியுங்காறும் அந் நீரினது கடவுட்டன்மை முதிர்ந்தொழியாது அற்றை நாள்போலவே இருப்பதாம், அத்தகைய அந்த நீரை யான் முன் கூறிய அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும் சேடக் குடும்பியின் சிறு மகளுமாகிய அம் மூன்று மகளிரின் தலையில் தெளித்து நீராடினால்; இச்சிறு குறுமகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்-இம்மூன்று சிறிய குறிய மகளிரும் முற்பிறப்பின் உணர்ச்சியை உடையராகுவர். இவ்வுண்மையை நீ அங்ஙனம் செய்து காண்பாயாக!; மாடல மறையோய் யான் பாசண்டன் பார்ப்பனி தன்மேல் வந்தேன் என்றலும்-மாடல மறையோனே! யான் பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் காண்! என்னோடு தொடர்புடைய இந்தத் தேவந்தியாகிய பார்ப்பனியின் மேல் வந்துள்ளேன் என்று தேவந்திகையின் மேல் வந்த அத் தெய்வம் கூறுதலும் என்க.

(விளக்கம்) அது-அந்நீர். ஆயிழை என்றது மங்கலா தேவி யென்னும் தெய்வத்தை. கோட்டத்துக் கோட்டி-கோயில் வாயில். ஞாயிறும் திங்களும் என்பார் கதிர் எனப் பொதுமையில் ஓதினர் மூன்று மகளிரும் மூவகைத் தனித் தன்மையுடையராதலின் முத்திற மகளிர் எனப்பட்டனர். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு. காணாய் என்றது அங்ஙனம் செய்து காண்பாயாக என்றவாறு. பாசண்டன்-பாசண்டச் சாத்தன் என்னுந் தெய்வம். பார்ப்பனி என்றது என்னோடு தொடர்புடைய பார்ப்பனி என்பதுபட நின்றது.

மாடலன் அத் தெய்வக் கூற்றினை மன்னனுக்கு விளக்குதல்

71-80: மன்னவன்.............ஒழிகென

(இதன் பொருள்) மன்னவன் விம்மிதம் எய்தி அம் மாடலன் தன்முக நோக்கலும்-தேவந்திகையின் தெய்வ மொழி கேட்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்படைந்து அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்குதலும்; தான் நனி மகிழ்ந்து இது கேள் மன்னா நின் தீயது கேடுக-அரசனுடைய குறிப்பறிந்த மாடல மறையோன் பெரிதும் மகிழ்ந்து இச் செய்தியை யான் கூறுவேன் கேட்டருள்க! அரசே! நினக்குத் தீமை ஒழிவதாக; மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்டப் பழவினை யுருத்துக் கூற்று உயிர்கொள்ள-பூம்புகார் நகரத்திலே மாலதி என்னும் பெயரையுடைய பார்ப்பனி ஒருத்தி தன் மாற்றாளுடைய மகவின் பால் அன்புடையளாய் இருந்தமையால் அவள் கொங்கைகளிலே பால்  சுரப்ப அதனை அம் மகவிற்கு ஊட்டா நிற்ப அம் மகவினது ஊழ்வினை வந்து உருத்துதலாலே கூற்றுவன் அக் குழவி பால் விக்கின்மை ஏதுவாக அதன் உயிரைக் கவர்ந்து கொள்ளாநிற்றலால் அம் மாலதி என்பாள், குழவிக்கு இரங்கி ஆற்றாத் தன்மையளாய் ஆர் அஞர் எய்தி-இறந்துபோன அம் மகவின் பொருட்டு எய்திய துன்பம் ஆற்றொணாத தன்மை உடையவளாய்ப் போக்குதற்கரிய பெருந்துன்பத்தை அடைந்து பிறர் அறியாமல் அம் மகவினைக் கைக்கொண்டு சென்று; பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு-பாசண்டச் சாத்தன் கோயிலிற் சென்று அக் குழந்தை உயிர் பெற வரம் வேண்டி நோன்பு கிடந்தாளுக்கு இரங்கி; ஆசுஇல் குழவி அதன் வடிவாகி-அப் பாசண்டச் சாத்தன் தானே குற்றமற்ற அம் மகவினது உருவத்தைக் கொண்டு; அன்னை வந்தனன் நீ வான்துயர் ஒழிக என-தாயே இதோ யான் வந்தேன் நீ நினது பெரிய துன்பத்தை விடுக என்று கூறி என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறிய வரலாற்றினைக் கனாத்திறம் உரைத்த காதையின்கண் விளக்கமாகக் காணலாம். மாலதி மகப் பேறற்றவள்; அவள் மாற்றாள் குழவியினிடத்து அன்பு மிகுதி கொண்டமையால் அவள் கொங்கையில் பால் சுரப்பதாயிற்று எனவும் அப் பாலினை அக் குழவிக்கு ஊட்டுங்கால் ஊழ்வினை காரணமாக பால் விக்கி அக் குழவிமரித்தது எனவும் கொள்க. அன்புடைமையாலும் பழிக்கு அஞ்சியும் இரங்கிப் பெருந்துயரெய்தினளென்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிப்பட்டினி கிடத்தல். காசு-குற்றம். வான் துயர்-பெருந்துன்பம்.

இதுவுமது

81-94: செந்திறம்............கூறினன்

(இதன் பொருள்) செந்திறம் புரிந்தோன்-இவ்வாறு செவ்விய அருளைச் செய்த அச் சாத்தன்; செல்லல் நீக்கி-அப் பார்ப்பனியின் துயரத்தைப் போக்கி; பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்ப்பால் காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து-அம் மாலதியாகிய பார்ப்பனியோடும் இறந்த குழவியின் பழைய தாயாகிய அம் மாற்றாளிடத்துச் சென்று காப்பியக்குடி யென்னும் சிறப்புப் பெயர் பெற்ற அப் பழைய குடி தன்னாலே அழகுறும்படி வளர்ந்து; தேவந்திகையைத் தீவலஞ் செய்து நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்-தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியை மறைவிதப்படி தீவலஞ் செய்து மணந்துகொண்டு இல்லறம் மேற்கொண்டு எட்டாண்டுகள் கழிந்த பின்னர்; மூவா இளநலங் காட்டி நீ என் கோட்டத்து வா என்றே நீங்கிய சாத்தன்-ஒருநாள் தேவந்திகைக்குத் தனக்கியல்பான மூவரமையும் இளமையுமுடைய அழகினைத் தனித்துக் காட்டி இனி நீ என் கோயிலில் வந்து என்னைக் காண்பாயாக! என்று சொல்லி அம் மானிட உருவத்தை நீங்கி மறைந்துபோன அச் சாத்தன் என்னுந் தெய்வம்; மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண் அங்கு உறை மறையோனாகத் தோன்றி-அரசே! பண்டொருநாள் யான் மங்கலாதேவியின் கோயில் வாயிலில் இருக்கும்பொழுது அவ்விடத்தே வாழும் ஒரு பார்ப்பனன்போல வடிவுகொண்டு என் கண்முன் தோன்றி; உறித்தாழ்க் கரகமும் என் கைத்தந்து-உறியின்கண் வைக்கப்பட்ட தெய்வத் தன்மையுடைய அந் நீர்ப்பாண்டத்தையும் என் கையிற் கொடுத்து; குறிக்கோள் கூறி கோயினன் வாரான்-அதனைக் குறிக்கொண்டு போற்றிக்கொள்ளும்படியும் சொல்லி மறைந்து போயினன் மீண்டும் வந்தலன் யானும்; ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்-அவ்விடத்தே அதனை ஏற்றுக்கொண்டு அதனோடு இங்கு வந்துளேன் ஆதலால்; அறிந்தோன் ஈங்கு இம் மறையோன் தன்மேல் தோன்றி அந்நீர் தெளி என்று கூறினன்-முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்னும் அத் தெய்வமே இவ்விடத்தே அவனுக்கு மனைவியாம் உரிமையுடைய இப் பார்ப்பனியின் மேலேறி அத் தெய்வத் தன்மையுடைய நீரினை அம் மகளிர் மேல் தெளித்திடுமாறு கூறினான் என்றான் என்க.

(விளக்கம்) செந்திறம் புரிந்தோன் என்பதற்கு மிக்க கல்விகளையும் கேள்விகளையும் கற்றும் ஒழுகியும் துறைபோய்ச் செவ்விய பண்புடையோன் ஆகிய சாத்தன் எனினுமாம். செல்லல்-துன்பம். பண்டைத் தாய் என்றது இறந்த குழவிக்குத் தாயாகிய மாற்றானை.  காப்பியக் குடியாகிய தொல்குடி எனக் குடியை முன்னும் கூட்டுக. இனி, தொல்காப்பியக் குடி எனக் கொண்டு அப் பெயருடைய ஒரு குடி பண்டைக் காலத்துப் புகார் நகரத்திலிருந்தது எனக் கோடலுமாம். ஒரோவழி ஆசிரியர் தொல்காப்பியனார் இக் குடியிற் பிறந்தவர் எனக் கருதுதலும் கூடும். தீவலஞ்செய்து என்றது திருமணஞ் செய்து கொண்டு என்றவாறு. மூவா இளநலம் என்றது தெய்வத்திற்குரிய அழகினை, மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் உறை மறையோனாகத் தோன்றி என்றமையால் மங்கல மடந்தை கண்ணகியல்லாமை காண்க, அறிந்தோன் என்றது முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்றவாறு.

மாடலன் அம் மகளிர்மேல் நீர் தெளித்தலும் அம் மகளிர் முற்பிறப் புணர்ச்சியுடைய ராதலும்

95-97: மன்னர்...........ஆதலின்

(இதன் பொருள்) மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-வேந்தர் பெருமானே; அம் மகளிரின் மேல் அத் தெய்வத் தன்மையுடைய நீரினைத் தெளித்து இவ்விடத்தே அதன் தெய்வத்தன்மையை யாமும் அறிவோமாக என்று சொல்லி அம் மாடல மறையோன் அம் மகளிரின் மேல் அந் நீரைத் தெளியா நிற்ப; ஒளித்த பிறப்பு வந்து உற்றதை யாதலின்-அந் நீரின் சிறப்பினால் அம் மகளிர்க்கு முற்பிறப்பின் உணர்ச்சி வந்து எய்தியது ஆதலாலே என்க.

(விளக்கம்) மடந்தையர் என்றது, ஈண்டுப் பருவம் குறியாமல் மகளிர் என்னும் பொருட்டாய் நின்றது. அவன்-அம் மாடல மறையோன். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு உற்றதை என்புழி ஐகாரம் சாரியை.

அம் மகளிர் பழம்பிறப் புணர்ச்சியோடே அரற்றுதல்

98-103: புகழ்ந்த..............வாராய்

(இதன் பொருள்) புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் நிகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்-உலகத்தாரால் புகழப்பெற்ற நின்னுடைய கணவனாருடைய சான்றோர் போற்றுதலில்லாத தீய ஒழுக்கம் காரணமாக நினக்கு நிகழ்ந்த துன்பத்தை நோக்கி நின் பொருட்டு வருந்தியிருக்கும் என்னையும் நோக்கினாயில்லை; ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி-தொடர்பில்லாத பிற நல்ல நாட்டிடத்தே துணையாவார் ஒருவரும் இல்லாத மிக்க தனிமையையுடைய; நின் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய்-நின் காதலனோடு வந்து கடிய துன்பத்தை எய்தினாய்; யான் பெறுமகளே-எளியேன் தவம் செய்து பெற்ற அரும் பெறல் மகளே! என் துணைத்தோழீ-எனக்குத் துணையாயிருந்த தோழியைப் போன்றவளே; வான்துயர் நீக்கும் மாதே வாராய்-எனது மகப்பேறில்லாத பெருந்துயரத்தை நீக்கிய என் மகளே என்முன் வரமாட்டாயோ என் செய்வேன் என்று அழுதாள் அவருள் ஒருத்தி என்க.

(விளக்கம்) இவை முற்பிறப்பிலே கண்ணகியின் தாயாய் இருந்து இப் பிறப்பிலே அரட்டன் செட்டியின் மகளாகியவள் கூற்று என்றுணர்க. மண் தேய்த்த புகழினான் ஆதலின் கோவலனைப் புகழ்ந்த காதலன் என்றாள். புகழ்ந்த-புகழப்பட்ட. போற்றா வொழுக்கம் என்றது, கோவலனுடைய பரத்தைமை ஒழுக்கத்தை. அது காரணமாக நிகழ்ந்தது என்றது கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு வருந்தி இருந்தமையை. நீ பேரன்புடையளாய் இருந்தும் நின்னைப் பிரிந்தால் யான் இறந்து படுவேன் என்று எண்ணாமல் பிரிந்து போயினை என்பாள் என்னையும் நோக்காய் என்றாள். நன்னாடு என்றது இகழ்ச்சி. கடுந்துயர் என்றது கணவன் கொலையுண்டமையால் கண்ணகி எய்திய துன்பத்தை. வான்துயர்-மிகப் பெருந்துயர். வராய்-வருகின்றிலை. 

செட்டியின் மற்றொரு பெண் அரற்றுதல்

104-107: என்னோடு............வாராய்

(இதன் பொருள்) என் மகன்-என் மகனே!; என்னோடு இருந்த இலக்கு நங்கை தன்னோடு இடை இருள் தனித்துயர் உழந்து நீதான் நின் தாயாகிய என்னோடே இல்லத்திலிருந்த விளங்குகின்ற அணிகலன் அணிதற்குரிய மகளிருள் சிறந்தவளாகிய என் மருகியாகிய கண்ணகியோடே இடை யாமத்துப் பேரிருளிலே புறப்பட்டு ஒப்பற்ற துன்பம் எய்தி நகரத்தை விட்டு; போனதற்கு இரங்கிப் புலம்பு உறும் நெஞ்சம்-நீ எம்மைத் துறந்து போனதற்கு ஆற்றாமல் வருந்திப் புலம்பா நின்றது என்னுடைய நெஞ்சம்; யான் அது பொறேஎன்-யான் அத் துன்பத்தை ஆற்றுகிலேன்; வாராய்-என் நிலைமை கண்டு வைத்தும் நீதானும் என்பால் வருகின்றிலை என் செய்கேன் என்று மற்றொரு பெண் அரற்றினள் என்க.

(விளக்கம்) இது கோவலன் தாய் கூற்று. நங்கை என்றது கண்ணகியை. தனித்துயர்-ஒப்பற்ற பெருந் துன்பம். வாராய்-வருகின்றிலை. வர மாட்டாயோ எனினுமாம்.

சேடக் குடும்பியின் சிறுமகள் அரற்று

108-115: வருபுனல்.........நின்றழ

(இதன் பொருள்) வருபுனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன் வந்தேன்-இடையறாது வருகின்ற நீரினையுடைய வையைப் பேரியாற்றின் சிறந்த துறைக்கு நீராடுதற் பொருட்டுப் போனேன், நீராடி மீண்டு வந்தேன்; மனையிற் காணேன்-உன்னை என புதுமனையிடத்தே காணேனாய்ப் பின்னர்; உருகெழு மூதூர் குறுமாக்களின் கேட்டேன்-அழகு பொருந்திய பழைய நகரமாகிய மதுரை மாநகரத்தில் சிறுவர் வாயிலாய் நினக்குற்ற செய்தியைக் கேள்வியுற்றேன்; எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ-என் அப்பனே! இளமையுடையோனே! நீதான் எங்குச் சென்று மறைந்தாயோ அறிகிலேன்; என்று ஆங்கு அரற்றி என்று இன்னன கூறி அழுது; இனைந்து இனைந்து ஏங்கிக்குதலைச் செவ்வாய் குறுந்தொடி மகளிர்-வருந்தி வருந்தி ஏங்கி மழலை மாறாத சிவந்த வாயினையும் குறிய தொடியினைமுடைய அம் மகளிர் மூவரும்; பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்-திருமகள் வதிகின்ற மார்பினையும் போர்த் தொழிலின்கண் விருப்பத்தையுமுடைவனாகிய செங்குட்டுவனின் முன்னிலையிலே; முதயோர் மொழியின்-முதிய மகளிர் கூறுதற் கியன்ற மொழியைக் கூறி; முன்றில் நின்றழ-கண்ணகி கோயிலின் வாயிலின்கண் நின்று அழா நிற்ப என்க.

(விளக்கம்) வருபுனல்: வினைத்தொகை. வான் துறை-சிறந்த நீராடு துறை. உறு-அச்சமுமாம். குறுமாக்கள் என்றது சிறுவரை பொன்-திருமகள். வெய்யோன்-விருப்ப முடையோன். குதலை-மழலைச் சொல். முதியோர். முதிய மகளிர். முன்றில்-கோயில் வாயில்.

மாடலன் கூற்று

116-125: தோடலர்...............அதனால்

(இதன் பொருள்) தோடு அலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன் முகம் நோக்க-இதழ் விரிந்த பனம்பூ மாலையினையும் கட்டப்பட்ட வீரக்கழலினையும் உடைய வேந்தனாகிய செங்குட்டுவன் இந் நிகழ்ச்சியானும் பெரிதும் வியப்புற்றவனாய் மீண்டும் அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்கா நிற்ப; முந்நூன் மார்பன் மன்னர் கோவே வாழ்க என்ற ஏத்தி-அதுகண்ட அம் மாடலன் அம் மன்னவன் குறிப்புணர்ந்து வேந்தர் வேந்தே! நீடு வாழ்வாயாக என்று அம் மன்னனை வாழ்த்தி; முன்னியது உரைப்போன்-அவ் வேந்தன் அறியநினைத்ததனைக் கூறுபவன் அரசே! மறையோன் உற்ற வான் துயர் நீங்க உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி தன்மேல் காதலர் ஆதலின்-தன்பால் தானம் பெறுதற்பொருட்டு வந்து யானையால் பற்றப் பட்ட அந்தணன் எய்திய பெருந்துன்பம் நீங்கும்படி மதம் பெய்கின்ற கவுளையுடைய அந்த யானையின் கையகத்தில் தானே சென்று புகுந்து அவ்வந்தணனைப் பாதுகாத்த நல்வனை காரணமாகக் கொலையுண்ட பொழுதே அமரவடிவம் பெற்றவனாகிய கோவலனும் அவன் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற அன்புமிக்க கண்ணகியும் ஆகிய இருவர் மேலும் பெரும் பேரன்புடையராதலின்; அவருடன் மேனிலை உலகத்துப் போகும் தாவா நல் அறஞ் செய்திலர் அதனால்-அக் கோவலன் கண்ணகி என்னும் இருவருடனும் தாமும் வானுலகத்திற்குப் போதற்கு வேண்டிய கெடாத நல்ல அறத்தை இவர் செய்திலர் ஆதலால் முற்பிறப்பிலே அவ்வன்பு காரணமாக இறந்தொழிந்த இம் மகளிர் அதனால் என்க.

(விளக்கம்) முன்னியது-நினைத்தது. கோவலன் மறையோன் ஒருவனுடைய துயர் நீங்கும் பொருட்டு வேழத்தின் கையகம் புக்கமையை அடைக்கலக் காதையின்கண் காண்க. கொலையுண்ட பொழுதே கோவலன் அமரன் ஆவதற்குக் காரணம் இத்தகைய நல்வினைகளே ஆதலின் அவற்றுள் சிறப்புப்பற்றி ஒன்றனைக் கூறி ஏதுவாக்கினர். வானோர் வடிவம் பெற்றவன் மேலும் அவன் பெற்ற காதலி தன் மேலும் காதலர் என இயையும். மேனிலையுலகம் வானுலகம். அதனால் உயிர் துறந்த அம் மகளிர் என வருவித்தோதுக.

இதுவுமது

129-135: அஞ் செஞ்சாயல்...........ஆயினள்

(இதன் பொருள்) பொற்கொடி தன்மேல் பொருந்திய காதலின் அன்புளம் சிறந்து ஆங்கு-அம் மூவரும் கண்ணகி தன்பால் தமக்குண்டான அன்பு காரணமாக மேலும் அவள்பால் அவ்வன்புள்ளம் மிகுந்து அவ்வழி; அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கின்-அழகிய செவ்விய சாயலையுடைய அக் கண்ணகி வேற்றரசர் நாடெனச் சிறிதும் அஞ்சாது வந்தெய்திய இந் நாட்டின்கண்  வஞ்சி என்னும் பழைமை மிக்க நமது பெரிய நகரத்தின்கண்ணே; அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனம் மகிழ்சிறப்பின் உடன் வயிற்றோராய் ஒருங்கு உடன் தோன்றினர்-அரட்டன்செட்டி என்னும் வணிகனுடைய மடப்பமுடைய மொழியையுடைய மனைவியானவள் மனம் மிகவும் மகிழ்தற்குக் காரணமான சிறப்போடே அவள் வயிற்றில் ஒரு கருப்பத்தினராய் ஒரு பொழுதிலே (கண்ணகியின் தாயும், மாமியும்) இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் வேந்தே!; போய பிறப்பின் ஆயர் முதுமகள்-கழிந்த பிறப்பில் இடைக்குல மடந்தையாய் முதியளாய் இருந்த மாதிரி என்பவளும் அங்ஙனமே-ஆயிழை தன்மேல் அமைந்த அன்பு காரணமாகவும் அவள் அப் பிறப்பிலே ஆடிய குரவைக் கூத்துக் காரணமாகவும்; அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஆயினள்-நின்னுடைய நாட்டின் கண் ஆடக மாடத்தின்கண் அரவப் பாயலின்கண் அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலின் அடித்தொண்டு பூண்ட குடும்பத் தலைவனுக்குச் சிறிய மகளாகத் தோன்றினாள் என்றான் என்க.

(விளக்கம்) அம் சாயல் செஞ்சாயல் எனத் தனித்தனி இயையும் பொற்கொடி: கண்ணகி. அற்புளம்-அன்புளம்: மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று. கண்ணகியின் தாயும் மாமியும் அரட்டன் செட்டி மனைவியின் வயிற்றில் இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் என்பது கருத்து. ஒருங்குடன் தோன்றுதல்-ஒருங்கே இரட்டையராய்ப் பிறத்தல். ஆயர்முதுமகள்: மாதிரி போயபிறப்பு-கழிந்த பிறப்பு. மாதிரி கண்ணகியின்பால் அன்பு காரணமாக அவன் அணுகிய நாட்டின் கண்ணும் திருமாலுக்கு அன்புடையளாய்க் குரவைக்கூத்து எடுத்தமையால் மேலும் அத்திருமாலுக்குத் தொண்டு பூண்டு ஒழுகும் குடும்பத்தினும் தோன்றினாள் என்றவாறு.

இதுவுமது

135-147: ஆதலால்.............மகிழ்த்து

(இதன் பொருள்) நல்திறம் புரிந்தோர் பொன்படி எய்தலும்-வேந்தர் பெருமானே! இங்ஙனம் ஆதலாலே நல்லறங்களை விரும்பிச் செய்தவர் பொன்னுலகத்தை எய்துதலும்; அன்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்-ஒருவர்பால் அன்புள்ளத்தினாலே சிறந்தவர்கள் அவ்வன்பினாலே பற்றப்பட்டவர் சென்ற வழியிற்சென்று பிறத்தலும்; அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்-ஒருவர் செய்த நல்வினையின் பயன் அவருக்கே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும்; பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்-இந் நிலவுலகத்திலே பிறந்து வாழ்பவர் இறந்தொழிதலும் அவ்வாறே இவ்வுலகத்து இறந்தொழிந்தவர் மீண்டும் பிறத்தலும் ஆகிய இவையெல்லாம்; புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை-உயிர்களுக்குப் புதியனவாகிய செய்கை அன்று, படைப்புக்காலம் தொடங்கி நிகழ்ந்து வருகின்றதொரு வாழ்க்கையே யாகும்; ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்-நீதான் காளையை ஊர்ந்து வருகின்ற இறைவனுடைய திருவருளாலே சேர மன்னவர் குடியில் தோன்றி இப் பெரிய நில வுலகத்தை அறத்தினாலே விளக்கமுறச் செய்த அரசனாதலால்; செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத் தன்போல் கண்டனை அன்றே-சான்றோர் செய்யும் தவத்தின் பயன்களையும் உயர்ந்தோருடைய உருவங்களையும் நின் அகங்கையில் உள்ள பொருள்களைக் காணுமாறே நன்கு அறிந்துகொண்டனையல்லையோ; நெடுந்தகை ஊழிதோறூழியுலகங் காத்து நீடு வாழியரோ யென்ற-வேந்தே! நெடுந்தகாய் பற்பல ஊழிகள் இருந்த இந் நிலவுலகத்தை நன்கு காவல் செய்து நீடு வாழ்வாயாக என்று வாழ்த்திய; மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து-மாடலன் என்னும் அவ்வந்தணனோடு பெரிதும் மகிழ்ந்து என்க.

(விளக்கம்) நற்றிறம்-நல்வினை. புதுவது: ஒருமைப் பன்மை மயக்கம். ஆனேறு ஊர்ந்தோன்-சிவபெருமான். கையகத்தன-கையின்கண் உள்ள பொருள். நெடுந்தகை: அன்மொழித்தொகை.

செங்குட்டுவன் செயல்

148-156: பாடல்..............முன்னர்

(இதன் பொருள்) பாடல் சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக் கலிகெழு கூடல் கதழ் எரி மண்ட-புலவர்கள் பாடுதற்கமைந்த பெருஞ்சிறப்பினையுடைய பாண்டியாகிய நல்ல நாட்டின் தலை நகரமாகிய ஆரவாரம் பொருந்திய மதுரை விரைகின்ற தீப்பிழம்புகள் பற்றி மிக்கெரியும்படி; முலை முகம் திருகிய மூவாமேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து-தனது இடக்கொங்கையைத் திருகி வட்டித் தெறிந்த மூவாத தெய்வத்திருமேனியையுடைய திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வம் உறையும் கோயிலுக்கு வேண்டிய அருச்சனாபோகம் என்னும் பொருளைவரையறுத்துவைத்து அத் தெய்வத்திற்கு; நித்தல்விழா அணிநிகழ்க என்று ஏவி பூவும் புகையும் மேவிய விரையும் தேவந்திகையைச் செய்க என்று அருளி-நாள்தோறும் நிகழ்த்தும் திருவிழா வரிசையும் நிகழ்க என்று அதற்குரிய பணியாளர்களையும் ஏவிவிட்டுத் தெய்வத்திற்கு மலரணிதலும் நறுமணப்புகை எடுத்தலும் அதற்குரிய மணப்பொருட்களை அணிதலும் முதலிய அணுக்கத் தொண்டுகளை அத் தெய்வத்தின் திருமேனியைத் தீண்டித் தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியே செய்க என்று பணித்து; வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர்-அப் பத்தினிக் கோட்டத்தை வலமுறையாக மூன்றுமுறை சுற்றிவந்து வணங்கியவனாய் இந் நிலவுலகத்து மன்னவனாகிய அச் சேர மன்னன் நின்றானாக அங்ஙனம் நின்றவன் முன்பு என்க.

(விளக்கம்) பாடல்-புலவர் பாடும் பாட்டு. கலி-ஆரவாரம். கூடல்-நான்மாடக் கூடல் என்னும் மதுரை. கதழ்எரி-விரைந்து பற்றும் நெருப்பு. தெய்வத்திருமேனி பெற்றமை தோன்ற மூவாமேனிப் பத்தினி என்றார். படிப்புறம்-அருச்சனாபோகம் என்பர் அரும்பத உரையாசிரியர்; அஃதாவது கோயில் வழிபாடு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள் வருவாய்க்கு நில முதலியன விடுதல். நித்தல் விழா-நாள்தோறுஞ் செய்யுஞ் சிறப்பு. அச் சிறப்புகள் நிரல் படச் செய்தலின் விழாவணி என்றார். அணி-நிரல். வந்தனன் முற்றெச்சம். மன்னவன் நின்றானாக அவன் முன்னர் என்க.

கண்ணகி வரந் தருதல்

157-164: அருஞ்சிறை..............ஒருகுரல்

(இதன் பொருள்) அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைகோட்டம் பிரிந்த மன்னரும்-தாமே கடத்தற்கரிய சிறையினின்றும் விடுவிக்கப்பட்ட கனக விசயரையுள்ளிட்ட வடவாரிய மன்னரும் கண்ணகிக் கடவுள் மங்கலத்தின் பொருட்டுச் சிறை வீடு செய்தமையால் பெரிய சிறைக்கோட்டத்தினின்றும் வெளிவந்த பிறமன்னரும்; குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்-செங்குட்டுவனாலே இம் மங்கல விழாவிற்கு அழைக்கப்பட்ட குடகநாட்டுக் கொங்கர்களும் மாளுவ நாட்டு மன்னர்களும் நாற்றிசையிலும் கடல் சூழப்பெற்ற இலங்கைத் தீவின் அரசனாகிய கயவாகு என்னும் அரசனும்  அக் கற்புடைத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கி; எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பன் இந் நல்நாள் செய்த நாளணிவேள்வியின் யாங்கள் எங்கள் நாடாகிய அவ்விடத்தே நினக்கெடுக்கும் திருக்கோயில்களினும் இமய மலையை எல்லையாகக் கொண்ட இச் செங்குட்டுவன் இந்த நல்ல நாளின்கண் நினக்கு நிகழ்த்திய இம் மங்கலமுடைய அழகிய இவ் வேள்வியின்கண் நீ எழுந்தருளி வந்தாற் போன்றே; வந்தீக என்றே வணங்கினர் வேண்ட-எழுந்தருளி வரவேண்டும் என்று வணங்கி வேண்டா  நிற்ப அப்பொழுது; தந்தேன் வரம் என்று  எழுந்தது ஒருநூல்-அங்ஙனமே தந்தேன் வரம் என்று வானத்தின்கண் எழுந்தது ஒரு தெய்வத் தீங்குரல் என்க.

(விளக்கம்) அருஞ்சிறை நீக்கிய ஆரிய மன்னர் என்றது முன்னர் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் போற்றப்பட்டவரை. இதனை (நடுகல் 195-202 ஆரிய..................ஏவி) என்பதனாலுணர்க. பெருஞ்சிறைக்கோட்டம் பிரிந்த மன்னர் என்றது பண்டு பல்வேறு காலங்களில் சிறைக்கோட்டத்தினிடப்பட்டுக் கண்ணகி விழாவின்பொருட்டுச் சிறைவீடு செய்யப்பட்ட மன்னர்களை. குடகக்கொங்கரும் மாளுவவேந்தரும் கயவாகு வேந்தனும் சேரன் செங்குட்டுவன் அழைப்பிற்கிணங்கி வந்திருந்த அரசர்களென்றுணர்க. எம் நாட்டினிடத்தே யாம் நினக்குச் செய்யும் வேள்வியில் இற்றைநாள்  செய்த இவ்வேள்வியில் நீ வந்தாற்போலவே வந்தருளுக என்று வேண்டியவாறாம். இமயவரம்பனிந் நன்னாட்செய்த என்புழி வரம்பன் இந் நல்நாள் செய்த எனக் கண்ணழித்துக் கொள்க. இதன்கண் (வரம்பனின்) சிறப்பு னகர மெய் பதிப்பித்திருத்தல் தவறு. அதனைப் பொதுநகரமெய்யாகத் திருத்திக்கொள்க. இதுவே பாடம் என்பதற்குச் செய்த நாளணி என இறந்த காலத்தாற் கூறியிருத்தலே சான்றாதல் உணர்க. நாளணி வேள்வியின்(ல்) என என்றும் பாடந் திருத்துக. இன் ஐந்தாவதன் உருபு. உறழ் பொருட்டு. வேள்வியில் வந்தாற்போல வருக என்பது கருத்து. இந் நுணுக்கம் உணராதார் இவற்றிற்குப் போலியுரை கூறியொழிந்தார்.

அரசர்கள் செங்குட்டுவனை வணங்குதல்

165-170: ஆங்கது..............போந்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்ட அரசனும்  அரசரும் ஓங்கு இருந் தானையும் உரையோடு ஏத்த-அத் தெய்வத் தீங்குரலைச் செவியுற்ற செங்குட்டுவனும் ஆரிய மன்னரை உள்ளிட்ட அரசர்களும் புகழாலுயர்ந்த பெரிய படைத்தலைவரும் அத் தெய்வத்தைப் புகழோடே வாழ்த்தித்தொழா நிற்ப; வீடு கண்டவர்போல் அக் குரல் கேட்ட அம் மன்னவர்கள் அந்தமிலின்பத்து அழியாத வீட்டின்பத்தை யடைந்தவர்போல; மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து-வாய்மை நெறியையே விரும்பும் இயல்புடைய மாடல மறையோன் என்னும் அந்தணனோடுங் கூடி மகிழ்ந்து; வேந்தன்-செங்குட்டுவன்; தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற-வீரக்கழல் கட்டிய ஏனைய அரசரெல்லாம் தன் திருவடிகளைப் போற்றி வணங்கும்படி; வேள்விச் சாலையின் போந்தபின்-அத் திருக்கோயில் வாயிலினின்றும் வேள்விச்சாலையின்கண் அமைந்த தன் இருக்கைக்குச் சென்றபின் என்க.

(விளக்கம்) அது என்றது அக் குரலை. அரசனும் அரசரும் என்றது செங்குட்டுவனும் ஏனைய மன்னரும் என்றவாறு. தானை-தானைத் தலைவருக் காகுபெயர். உரை-புகழ். மன்னர் வீடுகண்டவர்போல மகிழ்ந்து என்க. மன்னர் தன் அடி போற்ற வேந்தன் மறையோனொடுங் கூடி வேள்விச் சாலையின் போந்தபின் என்று இயைத்துக் கொள்க.

இளங்கோவடிகளார் தமியராய்ச் சென்று கண்ணகித் தெய்வத்தை வணங்குதலும் அத் தெய்வம் அவரைப் பாராட்டுதலும்

171-184: யானும்.................சென்றேன்

(இதன் பொருள்) யானும் அக் கண்ணகித் தெய்வத்தை வணங்கும் பொருட்டுத் தமியேனாய் அத் தெய்வத்திருமுன்னர்ச் சென்றேன். அங்ஙனம் சென்றுழி அத் தெய்வந்தானும்; தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி என் எதிர் எழுந்து-தன் தோழியாகிய தேவந்திகையின்மேல் ஏறி மெய்ப்பாடுகளுடனே விளங்கித் தோன்றி அவள் வாயிலாய் எனக்கு எதிரே எழுந்து வந்து என்னை நோக்கி; வஞ்சிமூதூர் மணிமண்டபத்திடை நுந்தைதாள் நிழல் இருந்தோய் நின்னை-நீ வஞ்சி நகரத்தில் அரண்மனையின்கண் அழகிய திருவோலக்க மண்டபத்தின்கண் நின் தந்தையாகிய சேரலாதனின் மருங்கே இருந்தோதியாகிய நின்னை ஒரு நிமித்திகன் நோக்கி, அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்ற உரை செய்தவன்மேல்-இவ்விளங்கோவிற்கு அரசுக்கட்டிலில் ஏறியிருந்து புகழ்பெறுவதற்குக் காரணமான சிறப்பிலக்கணம் உள்ளது என்று கூற அங்ஙனம் கூறிய அந் நிமித்திகன் முகத்தினை: உருத்துநோக்கி-நீ சினந்துநோக்கி; கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித் தேர்த்தானை செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க-மணம் விரிந்த நறிய மாலையினையும் கொடியுயர்த்திய தேர் முதலிய படைகளையுமுடைய உன் தமையனாகிய செங்குட்டுவனுடைய மனத்துன்பம் நீங்கும்படி; பகல் செல் வாயிற் படியோர் தம்முன்-குணவாயிற் கோட்டத்தின் கண் இருந்த துறவோர்களின் முன்னிலையிலே; அகலிடப்பாரம் அகல நீக்கி-அகன்ற நிலவுலகத்தையாளும் பெருஞ்சுமை நின்னிடத்தினின்றும் அகலும்படி துறந்துபோய்; சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்தம் இல் இன்பத்து அரசு ஆள்வேந்து என்று-உள்ளமும் செல்லமாட்டாத மிகவும் நெடுந்தொலைவிலுள்ள முடிவில்லாத இன்பமாகிய வீட்டுலகத்தை அரசாட்சி செய்திருக்கின்ற வேந்தன் ஆயினை நீ என்று; என் திறம் உரைத்த-எனது தன்மையை யெடுத்துக் கூறிய: இமையோர் இளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி-தேவர்களின் மகளாகிய கண்ணகித் தெய்வத்தின் தன்மையைக் கூறிய அழகு பொருந்திய நல்லமொழிகளை (யுடைய இக் காப்பியத்தினை) என்க.

(விளக்கம்) யானும் சென்றேன் என்றது இளங்கோவடிகளார் தம்மையே குறித்த படியாம். முன்னர்ச் செங்குட்டுவன் முதலிய அரசர்களும் தானைத் தலைவரும் கோயில் முன்றிலின்கண் குழுமி நின்றமையின் அடிகளார் அக் கூட்டத்துடன் கலந்து கொள்ளாதவராய் அவர்கள் சென்றபின்னர்த் தாம் மட்டும் தமியராய்ச் செல்லல் வேண்டிற்று. துறவறம் போற்றுகின்ற அடிகளார்க்கு அங்ஙனம் தமித்துச் செல்லுதல் பொருத்தமாதல் உணர்க. தேவந்திகைமேல்  கண்ணகித் தெய்வத்தின் ஆவியுருவம் ஏறி என் எதிர் எழுந்து வந்தது என்றவாறு. தெய்வம் ஏறினமைக்கு அறிகுறியான மெய்ப்பாடுகள் எல்லாம் தேவந்திகைமேல் காணப்பட்டமையின் தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி என்றார். (173) வஞ்சிமூதூர் என்பது தொடங்கி (182) அரசாள் வேந்து என்பது ஈறாகத் தேவந்திகையின் வாயிலாய் அக் கண்ணகித் தெய்வம் கூறியவற்றை அடிகளார் கொண்டு கூறிய படியாம். நுந்தை-உன் தந்தை இருந்தோயாகிய நின்னை என்க. திருப்பொறி-சிறந்த இல்க்கணம். திருவுண்டாக்கும் ஊழ்வினை எனினுமாம். உரைசெய்தவன்-நிமித்திகன். உருத்துநோக்குதல்-சினந்து நோக்குதல். மூத்தோன் இருக்க இளையோன் அரசாளல் கோத்தருமம் அன்மையின் செங்குட்டுவன் அந் நிமித்திகன் கூற்றைக் கேட்டு வருந்துவனல்லனோ! அவ் வருத்தம் நீங்கும்பொருட்டு என்பது படச் செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க என்றபடியாம் பகல்செல் வாயில் என்றது குணவாயில் கோட்டத்தை. படியோர்-நோன்புடையோர். அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்று உரை செய்த நிமித்திகன் மொழியினை அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தனாகும் ஆற்றல் மெய்ம்மையாக்கினை என அத் தெய்வம் பாராட்டினபடியாம். இளங்கொடி என்பது மகள் என்னும் பொருட்டாய் நின்றது. அவள் தன்றிறம். இக் கண்ணகியின் வரலாறு. தகைசால் நன்மொழி என்றது இக் காப்பியத்திற்கு ஆகுபெயர். 

இளங்கோவடிகளார் இக்காப்பியம் கேட்டமையின் பயன் இவையென அறிவுறுத்துதல்

185-202: தெரிவுற.................ஈங்கென்

(இதன் பொருள்) தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்-நன்கு பொருள் தெளிவுறும்படி கேட்டமையால் உண்டாகும் அறிவுச் செல்வத்தின் தகுதியைப் பெற்றுள்ள நன்மையுடையீரே!; பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்-போகூழ் காரணமாகப் பொருள் முதலியன இழப்பு நேருமிடத்தும் பிறரால் துன்பம் நேருமிடத்தும் பரிவுறுதலும் இடுக்கணுறுதலும் நுமக்கு அயலாகும்படி விலகிவிடுமின்; தெய்வந் தெளிமின்-தெய்வம் உண்டு என்பதனையும் அதன் நியதிப்படியே இவ்வுலகியல் நிகழ்கின்றது என்னும் உண்மையையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்மின்; தெளிந்தோர்ப் பேணுமின்-அவற்றைத் தெளிந்திருக்கின்ற பெரியோரைப் போற்றி அவர்தம் அறிவுரையின் படி ஒழுகுமின்; பொய்யுரை அஞ்சுமின்-எஞ்ஞான்றும் பொய் கூறுதற்கு அச்சம் கொள்ளுமின்; புறம்சொல் போற்றுமின்-புறங்கூறுதல் ஒழித்துக் தூயராகுமின்; ஊன் ஊண் துறமின்-ஊன் உண்ணுதலை விட்டொழியுங்கள்; உயிர்க்கொலை நீங்குமின்-உயிர்களைக் கொல்லுந் தொலினின்றும் விலகுமின்; தானம் செய்மின்-இயலுந்துணையும் வழங்குமின்; தவம்பல தாங்குமின்-நோன்புகள் பலவற்றையும் மேற்கொள்ளுங்கள்; செய்ந்நன்றி கொல்லன்மின்-பிறர் உமக்குச் செய்த நன்மையை மறந்து விடாதீர்கள்; தீநட்பு இகழ்மின்- கூடா நட்பினை இகழ்ந்து கைவிடுமின்; பொய்க்கரி போகன் மின்-பொய்ச்சான்று கூறுதற்கு அறங்கூறவையம் ஏறப் போகா தொழியுங்கள்; பொருள் மொழி நீங்கன்மின்-உறுதிப் பொருள் பயக்கும் அறவோர் மொழிக்கு மாறாக ஒழுகன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்-அறவோர்கள் குழுமியிருக்கின்ற அவையிடத்தை ஒருபொழுதும் அகலாமல் அணுகி இருமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர் மின்-தீவினையாளர் கூட்டத்தினின்றும் எங்ஙனமாயினும் தப்பிப் போய்விடுமின்; பிறர்மனை யஞ்சுமின் -பிறர்மனைவியை நோக்குதற்கும் அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்-துன்புறுகின்ற உயிரினங்களைப் பாதுகாவல் செய்மின்; அறமனை காமின்-அறத்தாற்றில் மணந்துகொண்ட மனைவியைக் கைவிடாது போற்றுமின்; அல்லவை கடிமின்-வரைவின் மகளிரை மருவுதல் முதலிய தீய ஒழுக்கங்களைக் கைவிடுமின்; கள்ளுங்களவும் காமமும் பொய்யும் வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்-கள்ளுண்ணுதலையும் களவுகொள்ளுதலையும் பிற மகளிரைக் காமுறுதலையும் பொய்மொழிதலையும் வறுமொழியாளரொடு கூடியிருத்தலையும் எவ்வகை உபாயத்தினாலேனும் ஒழித்து விடுமின்; மல்லல் மா ஞாலத்து வாழ்வீர்-வளம் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்திலே பெறுதற்கரிய மக்கள் யாக்கை பெற்று வாழ்கின்ற மாந்தர்களே நீவிர் எல்லாம்; ஈங்கு இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா-நீங்கள் பெற்றிருக்கின்ற இவ்வுடம்பும் அதன் இளமைப் பருவமும் இவற்றிற்கு இன்றியமையாத பொருள்களும் நும்மிடத்தே நிலைத்திருக்கமாட்டா, ஆதலாலே; உளநாள் வரையாது-நுமக்கென நுமது ஊழ்வினை வகுத்துள்ள நுமது வாழ் நாள்களை வீழ்நாளாகச் செய்யாமல்; ஒல்லுவது ஒழியாது-நும்மால் செய்யக்கடவ நல்லறங்களை இடையறாமல் செய்து; செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்-இவ்வுலகினின்றும் இறந்து இனி நீர் செல்லவிருக்கின்ற இடத்தின்கண் நுமக்கு மிக்க துணையாகின்ற அறத்தையே தேடிக்கொள்வீராக என்பதாம்.

(விளக்கம்) பரிதல்-இழப்பிற்கு வருந்துதல். இடுக்கண்-தாம் செய்யும் வினைக்குத் தடையுண்டாதல் முதலிய துன்பங்கள். பாங்கு பக்கம். இவற்றிற்கு உள்ளத்தில் இடங்  கூடக் கொடுத்தல் வேண்டா என்பார் அவை நுமக்குப் பக்கத்திலே போம்படி அவற்றை நீங்கள் நீங்கிப்போமின் என்பது கருத்து. தெய்வம்-ஊழ்வினை. அது தெய்வத்தின் ஆணையேயாதலின் ஆகுபெயர். தெளிந்தோர்-மருளறு காட்சியுடைய மேலோர். புறஞ்சொல்லாமல் நும்மைப் போற்றிக்கொள்ளுமின் என்றவாறு. ஊன் உண்ணுதலும் கொலைக்குடன்படும் குற்றமாகலின் ஊனூண் துறமின் என்றார். தானம்-சான்றோர்க்கு வழங்குதல். இளம்பற்றி இரவலர்க்கு வழங்கும் ஈதலும் கொள்க. தவம் நோன்பு. அவை கொல்லாமை பொய்யாமை ஊனுண்ணாமை முதலியனவாகப் பலவகைப் படுதலின் தவம் பல தாங்குமின் என்றார். தாங்குதல்-மேற்கொள்ளுதல். செய்ந்நன்றி கொல்வார்க்கு உய்வின்மையின் செய்ந்நன்றி கொல்லன்மின் என்றார். தீ நட்பு-தீயோர் நட்பு. அது தீவினைக்குக் காரணமாதலின் துவர விடுமின் என்பார் இகழ்மின் என்றார். பொய்க்கரி-பொய்ச்சான்று. பொருள் மொழி-அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் பயக்கும் மொழி. அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். மனம் தீவினை நயத்தலும் நல்வினை நயத்தலும் இனம்பற்றி வருதலின் அறவோர் அவைக்களம் அகலாதணுகுமின் எனவும் பிறவோரவைக் களம் பிழைத்துப் பெயர்மின் எனவும் அறிவுறுத்தினார். பிழையுயிர்-இன்னலுறும் உயிர். அவற்றை ஓம்புதலாவது உணவும் மருந்தும் வழங்கிக் காத்தல். அறமனை-அறத்தாற்றில் மணஞ்செய்து கொண்ட மனைவி. அல்லவை-அறமல்லாதவை. அவை வரைவின் மகளிர் முதலியோரைக் காமுறுதல் முதலியன. வெள்ளைக் கோட்டி- அறிவிலிகள் கூட்டம். தாம் விட்டொழித்தாலும் அவர் தாமே வந்து அணுகுதலும் உண்டாகலின் ஏதேனும் உபாயத்தால் அவர் கூட்டத்தைத் துவரக் கைவிட்டொழியும் என்பார் விரகினில் ஒழிமின் என்றார். விரகு-உபாயம். உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது என்பதற்கு அறுதியிட்டுள்ள வாழ்நாள் கழிதலைக் கைவிடாது சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது என்பாருமுளர். அவ்வுரை போலி நுமக்கென வரைந்த வாழ்நாளில் சிலவற்றை வரையாமலும் இயலும் அறத்தை ஒழியாமலும் செய்து செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் என்க.

பா. நிலைமண்டில ஆசிரியப்பா

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,  5

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய  10

மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15

1-15: முடியுடை..............முற்றிற்று

(இதன் பொருள்) முடியுடைய வேந்தர் மூவருள்ளும்-வடவேங்கடம் தென் குமரி ஆயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகத்தை ஆளுகின்ற முடியுடைய வேந்தர்களாகிய சோழரும் பாண்டியரும் சேரரும் ஆகிய மூன்று மன்னர்களுள் வைத்து; குடதிசை யாளுங் கொற்றங் குன்றா ஆர மார்பிற் சேரர் குலத்து உதித்தோர்-மேற்றிசைக் கண்ணதாகிய சேரநாட்டினையாளும் வெற்றி குறையாத மணியாரம் அணிந்த மார்பினையுடைய சேரர் குலத்துப் பிறந்த வேந்தருடைய; அறனும் மறனும் ஆற்றலும்-அறப்பண்பாடும் மறச்சிறப்பும் இவற்றில் அவர்களுக்குரிய ஆற்றலும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்-அச் சேரருடைய பழைய வெற்றியையுடைய பழைய நகரமாகிய வஞ்சி மாநகரத்தின் தலைமைப்பண்பு மேம்பட்டுத் திகழ்தலும் விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்-அம் மாநகரின்கண் திருவிழாக்கள் மிக்குள்ள சிறப்பும் தேவர்கள் வருதலும்; ஒடியா இன்பத்து அவருறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும்-கெடாத இன்பங்களையுடைய அவர் வாழுகின்ற நாட்டின்கண் வழிவழியாக வாழ்ந்து வருகின்ற நற்குடிகளின் செல்வச்சிறப்பும் உணவுப் பொருள்களின் பெருக்கமும், ஆகிய இவற்றோடே; வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்-பாடலும் ஆடலும் தம்முள் விரவிய கோட்பாட்டினையுடைய; புறத்துறை மருங்கின்-புறத்திணைக்குரிய துறைகளுக்கேற்ப அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த-அறத்தோடு கூடிய போர்களைச் செய்து முடித்த; வாள்வாய் தானையொடு பொங்கு இரும்பரப்பின் கடல் பிறக்கோட்டி-வாள்வென்றி வாய்த்த படைகளோடே சென்று பொங்குகின்ற பெரிய பரப்பினையுடைய கடலில் வருகின்ற பகைவரொடு போர் செய்து புறங்கொடுத்தோடும்படி செய்து பின்னரும்; கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய-கங்கை என்னும் பேரியாற்றினது கரையின் வழியாக இமயமலை வரையில் போர் மேற்சென்ற செங்குட்டுவன் என்னும் சிறந்த மன்னனோடு; ஒரு பரிசு நோக்கிக்கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று-ஒரு தன்மையாக நோக்கும்படி கிடந்த வஞ்சிக் காண்டம் என்னும் இம் மூன்றாம் பகுதியும் முற்றிற்று என்க.

(விளக்கம்) இக் காண்டத்திற் கூறும் செய்தியெல்லாம் செங்குட்டுவனோடு தொடர்புபட்டுக் கிடத்தலின் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் என்றார். இச் சேரருடைய அறப் பண்பும் மறப்பண்பும் ஆற்றற்சிறப்பும் இக் காண்டத்தில் ஆங்காங்கு வருதல் காண்க. விழவு மலி சிறப்பு வாழ்த்துக் காதையால் உணர்க பிறவும் அன்ன.

வரந்தரு காதை முற்றிற்று

வஞ்சிக் காண்டம் முற்றிற்று

நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும்   5

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாணியும்  10

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வரியும், குரவையும், சேதமும், என்று இவை
தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம்  15
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.

1-18: குமரிவேங்கடம்...................முற்றும்

(இதன் பொருள்) குமரி வேங்கடம் குண குட கடலா மண் திணி மருங்கில் தண் தமிழ் வரைப்பில்-தென்றிசைக்கண் குமரித்துறையும் வடதிசைக்கண் திருவேங்கட மலையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக இவ்வெல்லைக்குள்ளமைந்த மண் திணிந்த நிலைப்பகுதியாகிய குளிர்ந்த தமிழ்மொழி வழங்குகின்ற இந் நாட்டின்கண்; செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிருபகுதியின்-செந்தமிழ் நாடும் கொடுந்தமிழ் நாடும் என்று இரு கூறு பட்ட நிலத்தின்கண்; ஐந்திணை மருங்கின்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகைப்பட்ட நிலங்களிலே வாழ்வார்க்கு; அறம் பொருள் இன்பம்-உறுதிப் பொருளாகிய அறமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றனையும்; மக்கள் தேவர் என இருசார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர-உயர்திணை என்று கூறப்படுகின்ற மக்களும் தேவருமாகிய இருதிறத் தார்க்கும் பொருந்திய முறைமையோடே கூடிய ஒழுக்கத்தோடு சேரும்படி; எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்தில் எழுபொருளை எழுத்தும் அவ்வெழுத்துக்களோடு கூடிய சொல்லும் அச் சொற்களினின்றும் தோன்றுகின்ற பொருள்களும்; இழுக்கா யாப்பின்-வழுவில்லாத செய்யுளாலே; அகனும் புறனும் அகப்பொருளும் புறப்பொருளுமாகிய இருவகைப் பொருளும்; அவற்று வழிப் படூஉஞ் செவ்வி சிறந்து ஓங்கிய-அவ்விருவகைப் பொருள் வழிப்படுகின்ற அழகு சிறந்து உயர்ந்த; பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்-பாட்டும், யாழும், பண்ணும்; தாளமும், அரங்கு விலக்கு ஆடல் என்று அனைத்தும்-கூத்தாட்டரங்கமும், விலக குறுப்பும், கூத்தும் என்று கூறப்படுகின்ற இவையெல்லாம்; ஒருங்கு உடன் தழீஇ உடன்படக் கிடந்த-ஒருசேரத் தழுவிக் கொண்டு ஒன்றுபட்டுக் கிடந்த; வரியும் குரவையும் சேதமும் என்றிவை-வரிப்பாடலும், குரவைக் கூத்தும் சேதமும் என்னும் இவை எல்லாம்; தெரிவுறு வகையால்-யாவர்க்கும் விளங்கும் ஒரு முறைமையாலே; செந்தமிழ் இயற்கையின்-செந்தமிழுக்குரிய இலக்கணத்தோடே; ஆடி நன்னிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல்-கண்ணாடியின் தெளிந்த நிழலின்கண் உயர்ந்த பெரிய மலையின்துருவத்தை நன்கு காட்டுவார்போல்; கருத்து வெளிப்படுத்து-நூலாசிரியரின் கருத்துக்களையும் நன்கு வெளிப்படுத்திக் காட்டி; மணிமேகலை மேலுரைப் பொருண்முற்றிய-மணிமேகலை என்னும் மற்றொரு காப்பியத்திலே சென்று தான் உரைக்கவேண்டிய பொருள்களுள் இறுதியில் நின்ற வீடு என்னும் பொருள் முற்றுப்பெறுதற்குக் காரணமான; சிலப்பதிகார முற்றும்-இளங்கோவடிகளார் செய்த சிலப்பதிகாரமென்னும் இப் பெருங்காப்பியம் இனிது முற்றுப் பெற்றது.

(விளக்கம்) இக் கட்டுரை நூலாசிரியராலன்றிப் பிறராற் செய்யப் பட்டது. ஏனைக் காண்டங்களுக்கும் இங்ஙனம் வருகின்ற கட்டுரைகளும் நூல்முகப்பில் நின்ற உரைபெறு கட்டுரையும் பிறராற் செய்யப்பட்டன என்பதே எமது துணிவு. இவ்வாற்றால் இக் கட்டுரையின்கண் வரியும் குரவையும் சேதமும் என்பன போலப் பொருத்தமில்லாத தொடர்கள் வருதலும் காண்க. மேலும் இச் சிலப்பதிகாரத்திலேயே வீடுபேறும் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இதன் பொருள் மணிமேகலையிற் சென்று முற்றும் என்பது பொருந்தாக் கூற்று.

நூற் கட்டுரை முற்றிற்று.

சிலப்பதிகாரம் முற்றிற்று.