தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

(1/5) > >>

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! - 1
                                                                             
                                                                               

சீக்கிரமே படியுங்கள்!

வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு உண்மையை நாம் உணர்வதில்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் வரை வரலாறு மட்டுமல்ல, வாழ்க்கையும் தான் திரும்பத் திரும்ப ஒரே வித அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.


ஜனனத்தில் ஆரம்பித்து மரணம் வரை கிடைக்கும் பாடங்களை யார் விரைவாகக் கற்றுத் தேறுகிறானோ அவனே வெற்றிவாகை சூடுகிறான். அவனே வாழ்க்கையில் நிறைவைக் காண்கிறான். அவனே கால மணலில் தன் காலடித் தடத்தை நிரந்தரமாக விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பி வாழ்ந்து மடியும் போது அவன் மட்டுமே வாழ்க்கையை ரசித்து திருப்தியுடன் விடை பெறுகிறான்.


இந்த வாழ்க்கைப் பள்ளிக் கூடத்தில் ஒரு பிரத்தியேக வசதி இருக்கிறது. நாம் அடுத்தவர் பாடத்தையும் படித்துத் தேர்ந்து விடலாம். அப்படித் தேர்ந்து விட்டால், ஒழுங்காகக் கற்றுக் கொண்டு விட்டால் நாம் அந்தப் பாடத்தைத் தனியாகப் படித்துப் பாடுபட வேண்டியதில்லை.


உதாரணத்திற்கு ஒரு சாலையில் ஒரு குழி இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் அது தெரியாது. அந்தக் குழியைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அதில் விழுந்து எழுந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை. நமக்கு முன்னால் போகும் ஒருவர் அதில் விழுந்ததைப் பார்த்தாலே போதும் பின் எப்போது அந்தப் பாதையில் போகும் போதும் சர்வ ஜாக்கிரதை நமக்குத் தானாக வந்து விடும். இந்தப் பாதையில் இந்த இடத்தில் ஒரு அபாயமான குழி இருக்கிறது. கவனமாகப் போக வேண்டும் என்ற பாடம் தானாக மனதில் பதிந்து விடும். இனி எந்த நாளும் அந்தக் குழி நமக்கு பிரச்னை அல்ல.


ஆனால் ”நான் அடுத்தவர் விழுவதைப் பார்த்தாலும் கற்றுக் கொள்ள மாட்டேன், நானே விழுந்தால் தான் எனக்குப் புரியும்” என்று சொல்லும் நபர் தானாகப் படிக்க விரும்பும் அறிவுக்குறைவானவர். அவர் விழுந்து எழுந்து தான் கஷ்டப்பட வேண்டும். நானே ஒரு தடவை விழுந்தாலும் அதிலிருந்து கற்றுக் கொள்ள மாட்டேன். ஏனோ அப்படியாகி விட்டது. அடுத்த தடவை அப்படியாக வேண்டும் என்பதில்லை” என்று ஒவ்வொரு தடவையும் அதே குழி அருகில் அலட்சியமாக நடந்து விழுந்து எழும் நபர் முட்டாள். அவர் கஷ்டப்படவே பிறந்தவர்.


இந்தக் குழி உதாரணம் படிக்கையில் இப்படியும் முட்டாள்தனமாக யாராவது இருப்பார்களா என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நம்மில் பலரும் அப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எத்தனை பேர் சூதாட்டத்தில் பல முறை தாங்கள் சூடுபட்டும் திருந்தாதவர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் பல பேர் சூதினால் சீரழிவதைப் பார்த்த பின்னும ”எனக்கு அப்படி ஆகாது” என்று நினைத்து திரும்பத் திரும்ப சூதாடி அழிந்து போனவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள் புரியும்.


தீயைத் தொட்டுத் தான் அது சுடும் என்று உணர வேண்டியது இல்லை. அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்களைப் பார்த்தும் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி படிப்பது தான் புத்திசாலித்தனம்.


ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அனுபவித்தே கற்க வேண்டும் என்றிருந்தால் நம் வாழ்க்கையின் நீளம் சில பாடங்களுக்கே போதாது. அதில் நிறைய சாதிக்கவும் முடியாது. நம் வாழ்க்கையில் கிடைக்கும் பாடங்களை முதல் தடவையிலேயே ஒழுங்காகப் படிப்பது முக்கியம். அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்தும் நிறையவற்றை கூர்மையாகப் பார்த்துக் கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.


வாழ்க்கைப் பள்ளிக்கூடத்திற்குள் ஒரு முறை நுழைந்து விட்ட பின் தப்பிக்க வழியே இல்லை. எனவே எதையும் புத்திசாலித்தனமாக சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டி வராது. அந்தப் பாடம் உங்களுக்குப் பாரமாகவும் இருக்காது.


மேலும் படிப்போம்....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2

                                                                       
முக்கியமானதை முதலில் படியுங்கள்!

வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதே போல “எனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் இனி படிக்க வேண்டிய அவசியம் இல்லை” எந்த முதியவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. கடைசி மூச்சு வரை நீடிக்கும் இந்த வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கத் தவறினால் தோல்வியின் உரசல்களில் காயப்பட்டு வருந்த நேரிடும்.

வாழ்க்கைப் பள்ளியில் தேர்வு முறை வித்தியாசமானது. சாதாரண பள்ளிகளில் வைப்பது போல தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வைக்கப்படுவதில்லை. தேர்வுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. என்னேரமும் வாழ்க்கை உங்களை பரீட்சித்துப் பார்க்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் தயாராக இருந்து அந்தத் தேர்வில் தேற வேண்டும். எனவே என்னேரமும் பரீட்சிக்கப் படலாம் என்ற உண்மை உணர்ந்து தயார்நிலையில் இருப்பது அறிவுடைமை.

முதலில் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். எதெல்லாம் அவசியத் தேவைகளோ, எதெல்லாம் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியமோ அதையெல்லாம் படித்துத் தேறுபவன் எந்தக் காலத்திலும் பாஸ் மார்க் வாங்கி முன்னேறிக் கொண்டே போகலாம். அதைக் கற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டி விடக்கூடாது. அதை விட்டு விட்டு மற்றவற்றை எவ்வளவு அறிந்து வைத்திருந்தாலும் அது யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

ஒரு கர்வம் பிடித்த அறிவாளி ஆற்றில் பயணித்த கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அந்த அறிவாளி ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர். பல விஞ்ஞானக் கோட்பாடுகளை நுணுக்கமாக அவரால் விவாதிக்க முடியும். பல மொழிகளில் அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவன். என்ன தலைப்பை அவருக்குத் தந்தாலும் அவரால் அதைப் பற்றி விரிவாக விளக்க முடியும். அதனால் அவனுக்கு நிறையவே கர்வம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர் அறியாதவற்றைக் கேட்டு அவர் திணறுவதை ரசிப்பார்.

ஒருமுறை அவர் ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆற்றில் பயணித்தார். படகோட்டியைப் பார்த்தாலே படிக்காதவன் என்பது அவருக்குப் புரிந்தது. அவன் தன் படகில் எப்படிப்பட்ட அறிவுஜீவியை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதை அவனுக்கு அவர் உணர்த்த விரும்பினார். அவனிடம் அவர் அது தெரியுமா, இது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அவனோ பலவற்றின் பெயரைத் தன் வாழ்க்கையில் இது வரை கேட்டறியாதவன். அவன் தெரியாது, தெரியாது என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே வந்தான். இதெல்லாம் தெரியாத உன் வாழ்க்கை வீண் என்பதைப் பல விதங்களில் அந்த அறிவாளி அவனுக்கு உணர்த்திக் கொண்டே வந்தார்.

திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தில் அந்தப் படகு தத்தளித்தது. படகோட்டி அவரைக் கேட்டான். “ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

அந்த அறிவுஜீவிக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. வேறொன்றுமே தெரியா விட்டாலும் நீச்சல் தெரிந்த அந்த படகோட்டி நீந்தி உயிர்பிழைத்தான். ஆனால் அது தவிர எத்தனையோ தெரிந்திருந்த அந்த அறிவாளி வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். எத்தனை தெரியும் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அந்தந்த காலத்திற்குத் தேவையான முக்கியமானவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பது முக்கியம். அது தெரியாமல் அதைத் தவிர பாக்கி எல்லாமே தெரிந்து வைத்திருந்தாலும் மற்றவர்கள் உங்களை மேலாக நினைக்க அவை உதவலாமே ஒழிய வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட காலத்தை சமாளிக்க அவை உதவாது.

எனவே வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை முதலில் கற்றுத் தேறுங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அத்தியாவசியமோ அதைத் தேவையான அளவு பெற்றிருங்கள். எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.

எந்தக் குறையால் ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை என்று யோசியுங்கள். உடனடி பதிலாக விதி, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அரசாங்கம் என்று எடுத்துக் கொண்டு பொறுப்பை அந்தப் பக்கம் தள்ள முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குறையை உணருங்கள். நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. முன்பு சொன்னது போல சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதை விட்டு விட்டு கல்வி, செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறதால் அனைத்தும் அடைந்து விட்டதாக ஒரு கற்பனை உலகில் இருந்தால் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன அறிவுஜீவியைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் துரும்பாக அலைக்கழிக்கப் படுவீர்கள்.

மேலும் படிப்போம் .....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-3

                                                   

சரியானதைப் படியுங்கள்
மகாத்மா காந்தி சிறு வயதில் பார்த்த ஹரிச்சந்திரன் நாடகம் அவர் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் பல முறை சொல்லி இருக்கிறார். மன்னனாக இருந்த ஹரிச்சந்திரன் அப்பழுக்கற்ற சத்தியவானாக இருந்ததால் சத்ய ஹரிச்சந்திரன் என்றழைக்கப்பட்டவன். அவனைப் பொய் சொல்ல வைக்கிறேன் என்று சூளுரைத்து விட்டு வந்த விசுவாமித்திர முனிவர் செய்த சூழ்ச்சியால் அவன் நாட்டை இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து இடுகாட்டில் வெட்டியானாக மாறி, மகன் பிணத்தையே மனைவி புதைக்க எடுத்து வந்த போதும் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததை விவரிக்கும் நாடகம் அது. கடைசியில் விசுவாமித்திர முனிவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அனைத்தையும் அவனுக்குத் திருப்பிக் கொடுத்ததில் முடியும் அந்த நாடகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற சிறுவன் மனதில் விதைத்த விதை அந்த சிறுவனை மகாத்மா காந்தியாக பிற்காலத்தில் வளர்த்து விட்டது. அதே நாடகத்தைப் பார்த்து விட்டு இத்தனை கஷ்டங்கள் பட வேண்டிய அவசியம் என்ன, ஒரு பொய் சொல்லி விட்டுப் போயிருக்கலாமே, எதையும் இழக்க வேண்டியிருந்திக்கவில்லையே என்ற ஒரு சராசரி மனிதனின் மன ஓட்டம் காந்தி மனதில் ஓடியிருக்குமானால் மகாத்மா காந்தியாக அவர் உருவெடுத்து இருக்க முடியாது.

எனவே ஒரு பாடத்தில் இருந்து சரியான படிப்பினை பெறுவது மிக முக்கியம். ஹரிச்சந்திரன் கதையைப் படித்து விட்டு உண்மை சொன்னால் இத்தனை பிரச்னைகள் வரும் என்று படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சத்தியத்தை கைவிடலாகாது என்ற படிப்பினையைப் பெறவும் முடியும். சரியான படிப்பினையைப் பெறுகிறோமா தவறான படிப்பினையைப் பெறுகிறோமா என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் வெற்றி தோல்விகளும், உயர்வு தாழ்வுகளும் அமைகின்றன.

வாழ்க்கைப் பள்ளிக்கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பலதரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். ஒரு குடிகாரத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்தக் குடிகாரத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான். ஒரு காலகட்டத்தில் ஒரு மதுக்கடை கேஷியரைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான். இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிகாரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான். இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.

குடிகார மகன் சொன்னான். “அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது”. நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். “சிறு வயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்”. ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.

ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை-

Two men looked out from prison bars,

One saw mud, the other saw stars.

(சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்)

இருக்கின்ற இடம் ஒன்றே ஆனாலும் பார்க்கின்ற பார்வைகள் வேறாகின்றன. பார்வைகள் மாறும் போது வாழ்க்கையே மாறுகின்றன. இது மிகப்பெரிய உண்மை.

நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளும், மனிதர்களும் நமக்கு பாடங்களே. நாம் சரியான பாடம் கற்கத் தயாராக இருப்போமானால் நமக்கு நிறைய நல்லதைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள். நாம் மாற்றிப் படித்துக் கொண்டு விடக்கூடாது. அதே போல ஒரே மனிதன் சில விஷயங்களில் இப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தையும், சில விஷயங்களில் இப்படி இருக்கக் கூடாது என்ற பாடத்தையும் கற்பிக்கக் கூடும். ஏனென்றால் மனிதர்கள் அனைவரும் பலம் பலவீனம் கொண்டவர்கள் தானே. சரியானதை மட்டும் கற்க நாம் கற்றுக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள அனைத்துமே நமக்கு ஆசானாக இருக்க முடியும்.

ஒருவர் சிறந்த கலைஞராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். அதே நபர் தனிப்பட்ட முறையில் நம்பத்தகாத நபராகவும், மோசக்காரராகவும் கூட இருக்கலாம். அந்த நபரை ஒட்டு மொத்தமாகப் பின் பற்ற முடியுமா? அந்தக் கலையையும், விளையாட்டையும் பொறுத்த வரை அவரை முழுமையாக பின்பற்றலாம். மற்ற விஷயங்களில் எப்படி இருக்கக்கூடாது என்ற பாடத்தையே அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இந்த அறிவு இல்லாமையே இன்றைய காலத்தில் பெரிய சாபக்கேடு. ஒரு துறையில் திறமை படைத்தவன் எல்லா விஷயத்திலும் திறமை படைத்தவன் என்று நம்பும் முட்டாள் தனமான “ஹீரோ வர்ஷிப்” நம்மிடையே நிறைய இருக்கிறது.

இருக்கும் கட்சித் தலைமையானாலும் சரி, கவர்ந்த கதாநாயகனானாலும் சரி, பிடித்த விளையாட்டு வீரனானாலும் சரி அவர்கள் செய்வதெல்லாம் சரி, அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே நம் வழி என்று இருக்காமல் எது நல்லதோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு நல்லதல்லாதவற்றை ஏற்றுக் கொள்ளாமல் விலக்குவதே சரியான பாடங்களைப் படிக்கும் முறை. அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரித்து பாலை மட்டுமே குடிக்கும் திறமை கொண்டது என்று சொல்வார்கள். அது போல நாமும் எல்லாவற்றில் இருந்து சரியானதை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியுமானால் நாம் அடைய முடியாத சிகரங்கள் இல்லை.

மேலும் படிப்போம்....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – 4  

                                                             

சரியாகப் படியுங்கள்!
”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும்.

குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு இதற்கு மேல் முடியாது, எனக்குப் படிப்பே வராது என்று குழந்தை இருந்து விடுவதில்லை. எழுதும் கலையில் தேர்ச்சி பெறும் வரை குழந்தை அப்படித்தான் எழுதும். ஆனால் தொடர்ந்து முயன்று பயிற்சி செய்தால் விரைவில் எழுதக் கற்றுக் கொண்டு விடும். அதன் பிறகு பென்சிலை சரியாகப் பிடிப்பதும் ஒழுங்காக எழுதுவதும் அதற்கு இயல்பான ஒன்றாகி விடும். இனி பென்சிலையும் பேனாவையும் தவறாகப் பிடிப்பதும் எழுத்துக்களைத் தவறாக எழுதுவதும் தான் அந்தக் குழந்தைக்குக் கஷ்டமான காரியம். இதைப் போலத்தான் வாழ்க்கைப் பாடங்களையும் சரியாகப் படிப்பதற்கு ஆரம்ப காலங்களில் புதிய முயற்சிகளும், அதிகப் பயிற்சிகளும் தேவை.

அப்படிச் செய்யாமல் தவறாகவே ஒன்றைப் படித்துக் கொண்டு அதையே சரியென்று நம்பி இருந்து விட்டால் அந்தத் தவறான பாடங்களால் தவறாக எதையும் படிப்பது தான் இயல்பாகி விடும். ஒரு காகிதத்தை நாலாக மடியுங்கள். பின் அந்த காகிதத்தை நாம் அப்படி மடிப்பது தான் சுலபமாக இருக்கும். பல முறை மடித்த பின் அந்தக் காகிதமே அப்படி மடிப்பதற்கு ஏதுவாகத் தான் தானாக மடங்கி நிற்கும். அது போலத் தான் நாம் நம் அனுபவங்களை எடுத்துக் கொள்ளும் விதமும். தவறாகவே எடுத்துக் கொண்டு பழகி விட்டால் பின் தவறாக நம்புவதே இயல்பாகி விடும். அந்த தவறான அஸ்திவாரத்தின் மேல் நாம் எழுப்பும் எல்லாமே தவறுகளாகவே மாறி விடும். நம் வாழ்க்கையையும் அடுத்தவர் வாழ்க்கையையும் நாம் நரகமாக்கி விட முடியும். இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு இந்தத் தவறான பாடம் கற்றலே காரணமாக இருக்கிறது என்பது உண்மை.

எதையும் சரியாகப் படிப்பது கஷ்டமான காரியம் இல்லை. உள்ளதை உள்ளபடி பார்த்து, உணர்ந்து முடிவுகளை எட்டுவது முக்கியம். அப்படிப் படிப்பது தான் சரியாகப் படிக்கும் முறை. முதலிலேயே ஒரு அபிப்பிராயத்தை மனதினுள்ளே வைத்துக் கொண்டு பார்த்தால் அதற்குத் தகுந்தது போலத் தான் நாம் படிக்கும் பாடங்கள் இருக்கும். அது தவறாகப் படிக்கும் முறையாகும்.

பெரும்பாலும் இந்தத் தவறான முறையில் தான் மனிதனைப் படிக்கிறோம், சூழ்நிலைகளைப் படிக்கிறோம், மதங்களைப் படிக்கிறோம், ஏன் நம்மையே அப்படித்தான் படிக்கிறோம். அதன் விளைவுகளை நம்மைச் சுற்றியும் பார்த்து குமுறுகிறோம். ஏன் இப்படியெல்லாம் ஆகின்றன? ஏன் இப்படியெல்லாம் இருக்கின்றனர்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் மனிதர்களால் சரியாகப் படித்து புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.

பரிட்சையில் சரியாக மார்க் வாங்க முடியவில்லை என்றால் சரியாகப் படிக்கவில்லை, அந்தப் பரிட்சைக்குத் தேவையான தயார்நிலையில் இருந்திருக்கவில்லை என்று உணர்பவன் அடுத்த பரிட்சைக்கு சரியாகப் படித்துக் கொள்ள முடியும், தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கேள்வித்தாள் கடினமானது, ஆசிரியர் சரியில்லை, படிக்கும் சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் எடுத்துக் கொண்டால் அந்த மாணவன் தன் பாடத்தைத் தவறாகப் படித்தவனாகிறான். ஒவ்வொரு முறை பரிட்சைக்கும் படித்துத் தயாராவதை விட காரணங்களுடன் தயாராக இருக்கக் கற்றுக் கொள்வான்.

இன்றைய மதக்கலவரங்களுக்குக் காரணம் மனிதர்கள் தங்கள் மதத்தைச் சரியாகப் படிக்காதது தான். எதைக் கடவுள் வாக்காக எடுத்துக் கொள்ளலாம், எதை சைத்தான் வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சிந்தனா சக்தி கூட இல்லாதது தான்.

ஒரு பையனுக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லை. அவன் புத்தகத்தை எடுத்து படிக்கப் போகிறான், அல்லது விளையாடப் போகிறான். அவன் தந்தை சொல்கிறார் ”பேசாமல் போய் தூங்கு”. அந்தப் பையன் குணமான பின்னும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று சதா தூங்கிக் கொண்டே இருந்தால் அவனை நல்ல பிள்ளை என்று பாராட்டுவோமா? எதை எதனால் சொல்கிறார் என்றறியாமல் கண்மூடித்தனமாக ஒரு அறிவுரையைப் பின்பற்றுவது முட்டாள்தனம் அல்லவா? அதே போல ஒரு காலகட்டத்தில் ஒரு சூழ்நிலையை மனதில் கொண்டு சொல்லப்படும் அறிவுரை எல்லா கால கட்டங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. இது போலவே ஒரு மதநூலில் ஒரு வாசகத்தை வைத்து கடவுள் சொல்படி நடக்கிறோம் என்று சொல்வதும் கேலிக் கூத்தே. தங்கள் மதத்தினை சரியாகப் படிக்கவில்லை என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் அதற்கு எத்தனை விலை தர வேண்டி இருக்கிறது, எத்தனை அழிவைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய 90 சதவீதப் பிரச்னைகளுக்கு மனிதர்கள் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்க தவறுவதே காரணம். மேலோட்டமாகப் படித்து அதில் முழுமையாக அறிந்து கொண்ட நினைப்புடன் இருந்து விடுவதே காரணம். அந்த ஆரம்பத் தவறு அடுத்த தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது. பின் ஏற்படுவதெல்லாம் அனர்த்தம் தான். எனவே எதையும் சரியாகப் படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். முன் படித்தவை தவறாக இருந்திருக்கின்றன என்பதை உணரும் பட்சத்தில் உடனடியாகத் திருத்தி சரி செய்து கொள்ளுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதில் கௌரவம் பறி போய் விடும் என்று தவறாக எண்ணாதீர்கள்.

சரியாகப் படிப்பதே சரியாக வழிகாட்டும். சிறப்பாக வழிநடத்தும்.

மேலும் படிப்போம்....

Global Angel:
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்-5

                                                                                                                
ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்!
ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு.

இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று கூறுவதுண்டு. அதே போல உடல் வலிமையிலும், போரிடும் திறமையிலும் கூட இராமனையே வியக்க வைத்தவன். வேதங்களாகட்டும், கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் கரைத்துக் குடித்தவன். கடைசியில் காமம் என்ற பலவீனத்தால் அவன் அழிந்து போனான். அவனுக்கு இருந்த அத்தனை பெருமைகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்க சிறிய துளை போதும். அது போல சில சமயங்களில் ஒரு மனிதனை அழிக்க அவனது ஒரு பலவீனம் போதும். எத்தனையோ திறமையாளர்கள், நாம் வியந்து போகிற அளவு விஷய ஞானம் உள்ளவர்கள் ஒரு பலவீனத்தால் ஒன்றுமில்லாமல் அழிந்து போவதை நாம் நம்மைச் சுற்றிலும் பார்க்கலாம்.

ஒரு இசைக் கலைஞர் நல்ல குரல் வளமும், கர்னாடக இசை ஞானமும் உள்ளவர். வயலின், கீ போர்டு ஆகிய இசைக்கருவிகளிலும் மிக அருமையாக வாசிக்கக் கூடியவர். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு இணையான மாணவனை தன் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று அவருடைய குருவால் பாராட்டப்பட்டவர். அப்படிப்பட்ட அவர் தன் குடிப்பழக்கம் அத்துமீறிப் போனதால் இன்று வறுமையால் வாடுகிறார். பலர் கச்சேரிகளுக்கு ஆரம்பத்தில் அழைத்துப் பார்த்தனர். முன்பணம் வாங்கிக் கொண்டு அதில் குடித்து கச்சேரி நாளில் எங்காவது விழுந்து கிடப்பாராம். பின் எல்லோரும் அவரைக் கூப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார்கள். இன்று தெரிந்தவர்களிடம் ஐம்பது நூறு என்று வாங்கிக் குடித்துக் கொண்டு இருக்கிறார். அவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பெண் முடிகிற வரை தாக்குப் பிடித்து விட்டு ஒரே குழந்தையை எடுத்துக் கொண்டு அவரை விட்டுப் போய் விட்டாள். ஒரு மாபெரும் இசைக்கலைஞராக உலகிற்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய ஒரு நபர், புகழோடு பணத்தையும் சேர்த்துக் குவித்து வெற்றியாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இன்று அடையாளமில்லாமல், ஆதரவில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறார். காரணம் ஒரே ஒரு மிகப்பெரிய பலவீனம் கட்டுப்பாடில்லாத குடிப்பழக்கம்.

அதே நபருடன் சேர்ந்து வயலின் மட்டும் கற்றுத் தேர்ந்த ஒரு கலைஞர் இன்று கச்சேரிகளுக்கும் போகிறார், வீட்டில் குழந்தைகளுக்கும் வயலின் டியூஷன் சொல்லித் தருகிறார். நல்ல வருமானத்துடன் கௌரவமாக தன் குடும்பத்துடன் வாழ்கிறார்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு நபர் மிக நல்லவர். நன்றாகப் படித்தவர். நல்ல புத்திசாலி. அரசாங்க வங்கியில் வேலையில் இருந்தார். சொந்தமாய் வீடு, வாகனம் எல்லாம் இருந்தது. ஒரு சமயம் இரண்டு கம்பெனிகளின் ஷேர்கள் வாங்கி விற்று பெரிய லாபம் சம்பாதித்தார். அந்த லாபம் அவரை ஒரேயடியாக மாற்றி விட்டது. இப்படி ஒரே நாளில் சம்பாதிக்க முடியும் போது மாதாமாதம் உழைத்து சம்பாதிக்கும் இந்த வருமானம் அவருக்குத் துச்சமாகத் தோன்ற ஆரம்பித்தது. வங்கியில் எல்லாக் கடன்களும் வாங்கி ஷேர்களில் போட்டு நஷ்டமடைந்தார். எல்லா வங்கிகளிலும் க்ரெடிட் கார்டுகள் வாங்கி அதில் பணம் எடுத்து ஷேர்களில் போட்டார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிவுரையைக் கேளாமல் அடுத்ததாக தன் பைக்கை விற்று அதில் போட்டார். பிறகு வீட்டையும் விற்று வந்த பணத்தை அதில் போட்டார். எல்லாப் பணத்தையும் இழந்தார். கடைசியில் உடல்நலம் காரணம் சொல்லி வங்கிப்பணியையும் ராஜினாமா செய்தார். வந்த ப்ராவிடண்ட் ஃபண்டு, கிராடியுட்டி எல்லாவற்றையும் கூட அதில் போட்டார். எல்லாம் போய் விட்டது. கடன்காரர்கள் தொல்லை தாளாமல் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடிப்போனார். இன்று தூர ஏதோ ஒரு ஊரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒரு சிறிய வேலையில் இருக்கிறார். மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்பான அரசாங்க உத்தியோகம், நல்ல சம்பளம், வீடு வாசல், வாகனம் என்றிருந்த ஒருவரை ஒரு பலவீனம் எப்படி அழித்து விட்டது பாருங்கள்.

அதே நேரத்தில் இன்னொரு நபரைப் பற்றியும் பார்ப்போம். அவர் எனக்கு உறவினரும் கூட. படிப்பு கிடையாது. பரம சாது. சூட்சுமமான விஷயங்கள் அவர் தலையில் ஏறாது. சமையல்காரர்களுக்கு எடுபிடியாகப் போவார். மாவாட்டுவார், காய்கறி நறுக்குவார், சப்ளை செய்வார். பல வருடங்கள் இதையே செய்து வந்த அவர் தனியாக சமைக்கவெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மனிதர் தன் சம்பாத்தியம் அப்படியே வீட்டுக்குக் கொண்டு போய் மனைவியிடம் கொடுத்து விடுவார். அந்த சம்பாத்தியத்தில் ஒரே மகளை டீச்சருக்குப் படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுத்து, தங்களுக்காக ஒரு சிறிய வீட்டையும் கட்டிக் கொண்டு ஓரளவு சேமிப்பையும் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறுபது வயதைத் தாண்டியும் இன்னும் அந்த வேலைக்குப் போய் கொண்டிருக்கிறார். எந்தத் திறமையும் இல்லா விட்டாலும் உழைத்து சம்பாதித்து கௌரவமாக அவர் வாழ்கிறார்.

எத்தனையோ திறமையாளர்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும் ஒரு பலவீனத்திற்கு பலி கொடுத்து அழிந்து போகிற போது பிரத்தியேக திறமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் தங்களை அழிக்கக் கூடிய பலவீனங்கள் இல்லாதவர்கள் உழைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மனிதனுக்கு பலம், பலவீனம் இரண்டும் இருப்பது இயல்பே. பலவீனமே இல்லாதவனாய் இருந்து விடுதல் சுலபமும் அல்ல. ஆனால் அந்த பலவீனம் அவன் வாழ்க்கையையே அழித்து விடும் அளவு வளர்ந்து விடக்கூடாது. அவனுடைய எல்லா நன்மையையும் அழித்து விடக் கூடடிய தீமையாக மாறி விட அவன் அனுமதிக்கக் கூடாது. ஆரம்பத்தில் அந்த பலவீனம் பெரிய விஷயமல்ல என்றும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். ஆனால் அதில் ஏமாந்து விடக்கூடாது. மூன்றடி மண் கேட்ட வாமனன் கடைசியில் மூவுலகும் போதவில்லை என்றது போல ஒரு சாதாரணமாகத் தோன்றும் தீய பழக்கமோ, பலவீனமோ விஸ்வரூபம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிப்போம்....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version