Author Topic: கீதை காட்டும் பாதை  (Read 29525 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கீதை காட்டும் பாதை
« on: September 04, 2011, 12:18:03 AM »

நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

செல்வதற்கு முன்…

(பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்படுகிறேன். கீதோபதேசம் அர்ஜுனனிற்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது.

மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.

கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன். இது அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.




கீதை காட்டும் பாதை 1

நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.

அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும் பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்பு பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் முழு சாராம்சத்தையும் பகவத் கீதையில் தந்துள்ளார். குருட்டு மன்னன் திருதராஷ்டிரன் “தர்மக்‌ஷேத்ரமான குருக்‌ஷேத்திரத்தில்” என்ன நடக்கிறது என்று சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீதையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை எந்த மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை, விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த பொருள்களில் எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி ஒருவன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம். அப்படி இருக்கும் வரையில் மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர் அமைதிக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த தர்ம நெறியில் இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து பிறர்க்கும் தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும் இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும்.

கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன் தர்மம் மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாக அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன் தேரை ஓட்டிச் சென்று நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான் கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார். இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச் செலுத்துகிறான். உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள் முதலானோரே இருபக்கமும் இருக்கக் கண்டான். அனைவரும் தன்னுயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் தயாராக உறுதியுடன் கூடி இருக்கும் நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே விவரிக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி பெறக்கூடிய வெற்றி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின. கையிலிருந்து காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம் என்று முடிவு செய்கிறான்.

கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம் பெருகும், மக்கள் மனம் போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம் அதிகரிக்கும், பஞ்சம் வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள் புதிதல்ல. அவன் கொன்று குவித்த ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம் வீரம் நிரம்பியே இருந்தது. அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக தனியொருவனாக நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத ஞானோதயம் இப்போது அவனுக்கு வரக் காரணம் இந்த மகத்தான யுத்தத்தில் பலருடைய மரணத்தின் மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி இறக்கப் போகிறவர்கள் அவனுடைய பாசத்திற்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது. இறந்தவர்கள் அவனது உறவினர்கள் அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக் காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட துக்கமும், போரின் வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர வைத்ததும் மன ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம் அப்படிப்பட்டதல்ல. கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு உறவுகளையும், அன்பு வைத்த மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம் அவனுடையது.

சூதினாலும், சூழ்ச்சியினாலும் கவர்ந்த இராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா விட்டாலும் ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக அதிகமாகத் தாழ்ந்து வந்த போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன் என்று அகம்பாவத்தோடு மறுத்தவன் துரியோதனன். அவனைப் போன்றவனிடம் அவர்களுடைய இராஜ்ஜியத்தை விட்டு விட்டால் அவன் ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும் துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல் தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா? அதை விடப் பெரிய அதர்மம் என்ன இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த விதத்தில் தர்மம்?

மனம் பலவீனமாக இருக்கின்ற நேரத்தில் செயல்பட வேண்டிய மனிதன் செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய நல்லவை, கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே பகவானிடம் கொட்டிய அர்ஜுனன் கடைசியில் தன் குதிரையின் கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன் மனதின் கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். “நான் சிறியவன். குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு மயங்குகிறது. அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்”

வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும் அர்ஜுனன் செய்ததையே செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன் இருக்கிறார். அவர் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும், சிக்கல்களையும், துக்கங்களையும் அவர் முன் வைத்து வழி காட்ட வேண்டும் என்று வேண்டி சரண் அடைவோம். அவர் கண்டிப்பாக வழி காட்டுவார்!

அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் ஞானமும் தெளிவும் பெறத் தயாராவோமா?

தொடர்வோம் ....


« Last Edit: September 04, 2011, 12:29:39 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்த துக்கம் அர்த்தமற்றது!
« Reply #1 on: September 09, 2011, 04:09:08 PM »
இந்த துக்கம் அர்த்தமற்றது!

கீதை காட்டும் பாதை 2

இந்த துக்கம் அர்த்தமற்றது!

ஒருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும். அதே போல அறிவுரையை யாருக்கும், எப்போதும், இலவசமாக அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம். கேட்டால் மட்டுமே, தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை சொல்ல முற்படுவதும் அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான் கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது. திடீரென்று தத்துவஞானியாக மாறிய அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம் சூழும் என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவன் ”உன்னை சரணடைகிறேன், எது தர்மம் என்று சொல்” என்று சொன்ன பின்னரே தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.

பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் பதினோராம் சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஆரம்பமாகிறது.

“யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய். விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள்.

நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை. இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.

உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை அடைவதும் (அதாவது மறுபிறப்பும்). விவேகி இதற்கு மயங்குவதில்லை.

இந்த ஆன்மா ஒரு போதும் பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது இல்லாதிருந்து பின் உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது, புராதனமானது. உடல் கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.

கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல் ஆத்மா சிதைந்து போன உடம்புகளைக் களைந்து விட்டு புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது”

என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின் நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.

ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண முற்படும் போது அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி உடலையே “நான்” என்றும் “மற்றவர்” என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே. எனவே தான் பகவான் கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக் காட்டுகிறார்.

நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான செல்கள் பிறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி இருப்பதில்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி உடல் இயங்கத் தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக இருப்பதிலை. இன்று “நான்” என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல் ஒரு நாள் தாவரத்தின் ’நானாக’ இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின் ‘நானாக’ இருக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது நம்முடையது? கணந்தோறும் மாறுவதும், கணந்தோறும் அழிவதுமான உடல் தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பார்வைக்கு உடல் தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயதுப் பருவம், வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல் மாறிக் கொண்டே போகிறதே இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.

மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது ஆன்மா அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப் போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால் மரணம், அது யாருடையதானாலும், நம்மை வருத்தாது. தினம் தினம் உடை மாற்றுகிறோமே அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?

நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட முடியாது. நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள் உபயோகிக்கும் கருவி தான் இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது அந்த அடையாளம் அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு சேர்ந்து விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது நண்பர்கள் என்று அந்த ‘நானு’டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே சேரும் போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம் நம்மைப் பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி, எனது செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய ‘நானு’டன் சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட நம்மைப் பாடாய் படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய காரணங்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான் கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான இந்த உடலை நானாக நினைக்கும் அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறார். அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.

பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

“இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும் அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?”

பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல் தான் நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி தான் இது.

“நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு”
என்று திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை வாழ்ந்தவனும் திடீர் என்று இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா? பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமல்லவா?

கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல ”இந்த உலகத்திற்கு வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம் சகித்துக் கொள்ளவே வேண்டும்” அல்லவா?

எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இந்த விதிக்கு நாமும் கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இது இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இதை எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில் நிகழும் போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த உண்மைகளை எல்லாம் சொல்வது ஒருவன் ‘கல் மனம்’ கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல. மரணம் நிகழும் போது, இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல் சாதாரண மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீளுதல் மிக முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கு பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து, அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம். நம்மை சில இழப்புகள் செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற இந்த உண்மைகள் நமக்கு பேருதவியாக இருக்கும்.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தின் மிக முக்கியமான தத்துவம் ஒன்றை, வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரு மனிதனும் பின் பற்ற வேண்டிய ஒரு தத்துவத்தை, சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன என்று பார்ப்போமா?....

« Last Edit: September 09, 2011, 04:27:14 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சுதர்மமே சிறந்தது!
« Reply #2 on: September 09, 2011, 04:13:41 PM »
சுதர்மமே சிறந்தது!

கீதை காட்டும் பாதை 3

                                                       

இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.

பகவத்கீதையின் ஆரம்பம் ”தர்மம்” என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிகிறது. ’மம’ என்றால் “என்னுடைய” என்று அர்த்தம். “தர்மம்” மற்றும் “என்னுடைய” என்ற சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள் “என்னுடைய தர்மம்” என்பதன் விளக்கமே பகவத் கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே. அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின் மிக முக்கியமான தத்துவம்.

ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.

இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.

பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீன்களிடம் ‘நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்’ என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.

அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.

இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.

எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.

எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.

கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.

ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.

பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.

இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.

எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.

சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே பகவான் கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் “சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதே” என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.

இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.

கீதை சொல்லும் சுதர்மம் குறித்து இன்னும் விரிவாகப் பார்ப்போம்...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எதெல்லாம் சுதர்மம்?
« Reply #3 on: September 09, 2011, 04:26:14 PM »
எதெல்லாம் சுதர்மம்?


கீதை காட்டும் பாதை 4
                                                         
சுதர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே. தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்‌ஷேத்திர பூமியில் மடியப் போகும் உறவுகளைக் கண்டு சுதர்மத்தை விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான் கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.

சுதர்மத்தின் அடுத்த படி என்ன? மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும் பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ அவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி ஆகின்றன. இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும் முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று நாம் வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம் நம் கடமைகளும் கூடவே இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இது ஒரு வழிப் பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ, வேறு வழியாகவோ நாம் நிறைய பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது. அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன் தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச் செய்யாமல் கோடி கோடியாய் திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது ஒருவருடைய கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.

சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை தேவையான அளவே செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும். மேலும் அளவுக்கு மீறி ஒன்றைச் செய்கையில், செய்ய வேண்டிய இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா? சில நல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள் நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம். ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக் காட்டி வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு கடந்த பாசம் அவனை உறுதியுடன் பிள்ளைகளின் தவறுகளைக் கண்டித்து திருத்த விடவில்லை. அது கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா வழி வகுத்தது? திருதராஷ்டிரனும், காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லாமல் இல்லை. ஆனால் ஏதோ பேருக்கு புத்தி சொன்னார்களே ஒழிய அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி இருக்கவில்லை. புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்கவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு தங்கள் கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான விளைவை ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது சுதர்மம் ஆகாது, அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.

(சில அறிஞர்கள் திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும் உருவகம் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன். காந்தாரியோ கணவன் காணாத உலகத்தைத் தானும் காண விரும்பாமல் கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம் விருப்பு வெறுப்புகளின் தன்மை உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத் தன்மை உடையது. அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே மாறுமானால் அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக வியாக்கியானம் செய்கிறார்கள்.)

வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு உறவிலும், வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீகக் கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு அங்கமே. அந்தக் கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த மனிதன் எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான். அதற்கும் மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப் போன்ற தர்மவான் இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை ஏந்தியும் இருக்கிறார். அவனிடம் தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு புண்ணியாத்மாவான கர்ணன் நண்பன் துரியோதனன் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு போனதை நண்பனாக சுதர்மம் தவறியதாகச் சொல்லலாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

என்கிறார் திருவள்ளுவர். இதில் “மேற்சென்று” என்ற சொல் பொருள் பொதிந்தது. கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன் எடுத்து விடக் கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச் சென்று இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம். அவன் சொன்னால் துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம். நியாயமற்ற செயல்களைச் செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற செயல்களைச் செய்யும் நண்பனைத் திருத்த முற்படுவதன் மூலம் அவனை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா? இப்படி சுதர்மம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட முடிந்த சொல் அல்ல. சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட நுணுக்கமான சொல்.

முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும் சுதர்மம் அல்லாத செயல். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு நடக்கும் மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது இருக்கக்கூடிய மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால் டிக்கெட் முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த அறையில் அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப் பேனா, ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை தன் சுதர்மத்தைப் பின் பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த மகனின் ஏழெட்டு வயதில், உண்மையிலேயே அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு இருக்கக்கூடிய காலத்தில், அவர் இதைச் செய்திருப்பது அவர் கடமை . ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச் செய்வது அவனுக்குத் தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து அவனுடைய வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு கண்கூடாகப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

சிலர் தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்கள் வீட்டில் ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில் புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச் சொல்லலாமே ஒழிய சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.

அது போல சில விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில் மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை வரும் போது அவருடைய உடன் பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக் கரையேற்றி விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள் நமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு பொறுப்பற்ற முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன் பிறந்தவர்களின் தர்மம், சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கடைசியில் அவர்களும் உதவ முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் தலைமறைவாகிற நிலை வந்து விட்டது.

எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு தெளிவில்லையானால் சுதர்மம் என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு அது காரணமாகி விடும். சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் செய்ய நேர்ந்து விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அதன் விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல்படுவதும் முக்கியம். நம் உதவி அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும் ஆக்குமானால் அது கண்டிப்பாக சுதர்மம் அல்ல.

பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம் கண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது. அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது. உலகில் ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடைபிடிப்பார்களேயானால் இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்ததாக பகவான் கிருஷ்ணர் இன்னொரு அற்புதமான உபதேசத்தைச் செய்கிறார். அதைப் பார்ப்போமா


« Last Edit: September 10, 2011, 07:05:46 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
           அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

கீதை காட்டும் பாதை 5

!                                                                   

சாங்கியம் என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம். வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்” தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.

சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும் வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை என்றே சொல்ல வேண்டும்.

“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர். இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள் போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள். அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய் விடுகிறது”

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம் என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால் சாடுகிறார்.

இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.

மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப் படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம் உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத் தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும் வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மேலும் உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன் ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.

ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில் சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில் வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.

இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச் செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப் படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது பேதைமையே.


அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது. அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள், சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள், சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச் செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார். புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ இருப்பதில்லை என்கிறார் அவர்.

ஸ்ரீகிருஷ்ணர் எதையும் சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம் சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார். நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில் இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின் மிகப்பெரிய சிறப்பம்சம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில் இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப் பொருத்தமற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப் பின்பற்றி பலனடைய முடியும்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின் பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும் தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன் எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச் சடங்குகளாலும்”.

இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள் போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள். இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம் என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும் முட்டாள்தனம் என்கிறார்.

வெறுமனே வேதங்களைப் படித்து வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன். அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப் படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும் என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும் தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால் கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.

அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன் ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார். ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும் கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம் வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து துக்கத்தில் ஆழ்கிறார்.

எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம் இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?

வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம் கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச் செல்கிறது கதை.

ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும் புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும் முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம் இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இனி கீதையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப் பார்ப்போம்.

பாதை நீளும்.....
« Last Edit: September 21, 2011, 01:39:42 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உயர்ந்த செயலின் ரகசியம்
« Reply #5 on: September 12, 2011, 02:37:23 AM »
உயர்ந்த செயலின் ரகசியம்

கீதை காட்டும் பாதை – 6                                                                                                                                                           



கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்), பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும் செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.

தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது

பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல் புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார் என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது. விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால் விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார் இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல் திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில் பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய் சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால் பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப் போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல் செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.

ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும் அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக் கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள் என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.


அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப் படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில் அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.

அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள் ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன. பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான் பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக் குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள் செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ் கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன் தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது. “என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன் தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)

தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன 18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார். அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?

பாதை நீளும்....
« Last Edit: September 18, 2011, 03:14:07 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிலைத்த அறிவுடையவன் யார்?
« Reply #6 on: September 18, 2011, 03:12:05 AM »
நிலைத்த அறிவுடையவன் யார்?


கீதை காட்டும் பாதை 7


வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான். தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும் இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.

“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்

துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது”


இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.

1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்


ஆசைகளைத் துறத்தல்:

ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும் ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)

ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான் கீதையிலும் பார்க்கிறோம்.


2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:

இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில் ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.

இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.

இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க ஆரம்பிக்கிறார்.

பாதை நீளும் .....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆசையிலிருந்து அழிவு வரை ...
« Reply #7 on: September 21, 2011, 01:38:30 AM »
ஆசையிலிருந்து அழிவு வரை ...

கீதை காட்டும் பாதை 8

                                                               

நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.

”புலன்களுக்கான சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல் எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது. மனமயக்கத்தால் மறதி ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு அழிகிறான்”

எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உயர்விற்கும் அழிவிற்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே. புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப் பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.

விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார் என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும் அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின் மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.

எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம் எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின் கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும். எனவே கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கிறது.

புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம் கூறுகிறார். இங்கு விழிப்புணர்வு தான் விளக்காக உதாரணம் காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள் நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

விழிப்புணர்வு என்பது நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும். அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல் கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான் எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சொல்கிறார். “புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம் அடித்துச் சென்று விடுகிறது.” இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில் சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறான்.


கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ் ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். “சுக்கானில்லாத கப்பலை அலைகள் அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக் கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”

இந்த படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப் பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம் பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். ‘ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே’ என்று கவிஞர் பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல் சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.

சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார். “மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல் அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதுவா ஆனந்த அனுபவம். அது நமது மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம் எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன் முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள் நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்”.

ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம் ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன் துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.

சில சமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்திற்கும், அழிவிற்கும் மூலகாரணமாகி விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும் துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.

மேலும் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும் என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள் சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான யயாதி.

எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும், அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது. கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள் நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும் நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.

பாதை நீளும்.....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நேரெதிர் கோணங்கள்
« Reply #8 on: September 21, 2011, 07:19:58 PM »

நேரெதிர் கோணங்கள்

கீதை காட்டும் பாதை 9

                                                                     

நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.

“சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்”

நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.

சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.

மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்திற்கான தூண்டில்கள் என்றும், என்னேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.

சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.


ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான். அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.

“நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை.அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை”

இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். “ஆன்மா மாகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை.”

நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிட்ம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.

சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.

அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.

இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்.....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #9 on: September 24, 2011, 07:50:23 PM »
செயலில் பாவனை மிக முக்கியம்!


கீதை காட்டும் பாதை 10

                                                                               

ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனிற்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் ”செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்” என்று பொறுமையிழந்து சொல்கிறான்.

வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனிற்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.

“பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.

ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.

எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது”

ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.

இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. ‘கள் குடித்த குரங்கிற்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை’யை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.

உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.

எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவிற்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.

மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: ”கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்”.

போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.

இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.

“ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா

பேதையின் பேதையார் இல்.”

உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். ”உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.

பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்”

மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.

முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது. டால்ஸ்டாய் கூறுகிறார். “மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!”.

எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். “கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்திற்கு மதிப்பில்லை”

ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான். “கல்லுடைத்துக் கொண்டிருக்கிறேன்”. இரண்டாமவன் சொன்னான். “வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்”. மூன்றாமவன் சொன்னான். “கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்”. மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?

பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும்.

ஒவ்வொரு கடமையையும் ’இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்
.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
போதிப்பவனே முன்மாதிரியாய்...!
« Reply #10 on: October 02, 2011, 08:49:47 PM »
போதிப்பவனே முன்மாதிரியாய்...!
 

கீதை காட்டும் பாதை 11

                                                                     

செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

“சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.

பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்

நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்”

யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை. இக்காலத்தில் எத்தனையோ சீரழிவுகளுக்கு நல்ல முன்மாதிரிகள் நமக்கிடையே மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும் அதன் படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?

அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லா விட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம் பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன் தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.

அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.

இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பதை வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளை எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.

இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்கா விட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.

அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் சாரதி தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.

இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.

அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஸ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.

தன் பக்தனின் சேவையை மெச்சிய விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை. ”என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன் இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்” என்று கூறிய புண்டலீகன் விட்டலனும், ருக்மணியும் அழுக்கு நீரில் கால்கள் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.

துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:

“என்ன பைத்தியக்கார அன்பிது

விட்டலனை நிறுத்தி வைத்ததே

என்ன முரட்டுத் துணிவிது

விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே”

தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தனக்கும் அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?

இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. “என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை”

பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படும் சுமையே. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.

இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

பாதை நீளும்….
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உபதேசம் தவிர்ப்போம்....உதாரணமாக இருப்போம்!


கீதை காட்டும் பாதை 12


ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:


”பாரதா பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.


கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.


ஞானி கூட அவனது இயல்பின் படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப் படுத்துவதால் என்ன பயன்?”


இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.


எல்லோரும் அவரவர் இயல்பின் படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில் எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான். அறிவுக்கெட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பதை ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின் படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன் வாழ்க்கை ஓட்டத்தை, அறிந்தவன் அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கி விடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.


அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டு விடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது? இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் கூறுகிறார்- நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.


இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிக்கையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!


இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிரா விட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.


வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.


எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.


அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். என்னால் தானே இப்படி முடிந்தது என்கிற எண்ணம் வந்து விட்டால் பின் கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். ’நான்’ என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும். எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:


”இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.


தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும் அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே எல்லாம் இயற்கையின் இயக்கமே என்று பற்றில்லாமல் இருப்பான்.”


எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் “எல்லாம் அவன் செயல்” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.


அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: ”உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் “எனது” என்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்”


செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.


இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. “யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்.” (குரான் 31.22)


எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.


பாதை நீளும்....


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #12 on: November 02, 2011, 04:46:43 AM »
பாவம் செய்யத் தூண்டுவது எது?


கீதை காட்டும் பாதை 13

                                                 

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.


அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?”


இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”


ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.


 “அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள்.


புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.


ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.


புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”


காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.


சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.


உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது  தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.


இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.


சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.


இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.


புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடயே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.


அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.


கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.


காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும். 


தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கின்றன. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கின்றன. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகின்றன. 


சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.


”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.


புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.


தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!”


ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.


ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.


எனவே ஆசை புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.


பாதை நீளும்.....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #13 on: November 17, 2011, 05:23:19 PM »
தர்மம் நிலைநாட்டப்படும் விதம்

கீதை காட்டும் பாதை 14

                                              இது வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல அர்ஜுனனிற்கு சந்தேகம் வருகிறது. “நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே உபதேசித்திருக்க முடியும்” என்று கேட்கிறான்.


கீதையின் மிகப் பெரிய சிறப்பு ’நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ கேட்டுக் கொண்டே வா” என்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான். எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணரிடம் எழுப்பவில்லை.


ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.


”அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜன்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.


நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும் ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.


பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.


நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்.”


அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல. எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனிற்கு அவை குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.


கீழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள் அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான ’நான்’ என்பதை அவன் உணரும் முன் எத்தனையோ பொய்யான ’நான்’களை அந்தப் பிறவிகளில் பாவித்து பின் அதெல்லாம் ‘நான்’ அல்ல என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் அனுபவிக்க மீதி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி தேவைப்படுகிறது.


இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன் இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும் அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால் இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக் கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகக் கூறுகிறார்.


தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால் இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட-தர்மத்தைக் கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும் நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன் தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல் உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.


அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும். அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி கர்வத்துடன் அதர்மம் அத்துமீற ஆரம்பிக்கும் போது ’நல்லதிற்குக் காலமில்லை’ என்ற விரக்தியையும் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவதுண்டு.


அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன் தோன்றுவதாக கீதை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன் தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர் மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.
அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீறிய சக்தி அவர்களை உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.


பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது. ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம் எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.


அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும் காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புறையோடிப் போயிருக்கையில், ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.


மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.


”அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்.”


இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு  மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.


”பிறவாமை வேண்டும்” என்று காரைக்கால் அம்மையாரும்,  ”இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா” என்று பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப் பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.


பாதை நீளும்....
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #14 on: December 17, 2011, 09:21:41 PM »
கீதை காட்டும் பாதை 15
                                                   

நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்

அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லா விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.


”விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன்
ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.”


பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ, செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடா விட்டால் ஏதாவது பிரச்னையை உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின் காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.


ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம் இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும், செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவீனமான நிலையில் இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?


இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும் சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.


அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது. ”மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான் அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும் மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.”


இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக, சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும் காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.


இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.


அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.


இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம் மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம் ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது, வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில் குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம் பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை அனுக்கிரகிக்கிறார்.


இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும், கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை. அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை. ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக் காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வழி  தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப நாயனாரும் இறைவைனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும், கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான் சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கே அல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.


அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். “மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.”


முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல் என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும் வேலையும் நடக்கிறது. ’நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச் செய்கிறேன்’ என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும் வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீழ்மட்டம் என்றெதுவும் இல்லை. எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.


ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக் காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். ’அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...” என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.


பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். ”நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல”


ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.


ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச் சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல் செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீக எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார்.


ஏன் லௌகீக செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா? கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால் நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான் நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன் சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான் விரைவில் பலன் தருகிறார்.


இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத் தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல. கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்து “இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா குப்பைகளைச் சேர்க்காதீர்கள்” என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து வீசிப்பாருங்கள். ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட பிறகு அதைத் தானாகவே வெளியே வீசி விடுவார்கள். கிளிஞ்சல்கள் விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள் விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.


மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது. அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால் பொருளல்லாத மற்ற உயர்ந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக் கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு சொற்பமே.


பாதை நீளும்....