எங்கோ தூரத்தில் வெடிக்கும் ஒற்றை வேட்டில்
துயில் கலைந்து,
தீபாவளியின் நினைவுகளும், கனவுகளுமாய்
உறக்கமின்றி புரள்கிறேன்.
புதுவருட நாட்காட்டியை பிரித்ததும்
அக்டோபருக்கும் நவம்பருக்குமென
பரபரக்கும் கைகள்.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே
மனம் குதூகலமாய்,
கணக்கிடத் துவங்கும் நாட்களை.
எப்பொழுது நிறுத்திக் கொண்டேன்
நான்
தீபாவளியை தேடுவதை?
வருடத்தில் இரண்டாம் முறை
புது உடை வாங்கவென
கடைக்கு அழைத்துச்
சென்று,
இதுவா அதுவா என பார்த்து பார்த்து
நாம் ஒன்றை நினைத்து ஏங்க,
அப்பா அம்மா நமக்காய் ஒரு உடை எடுக்க,
நாம் முகத்தை திருப்பி நிற்க,
பிறகு நமக்கு பிடித்த உடையை எடுக்கவென,
மீண்டும் அந்த உடையை அணியும் வரை
எடுத்து எடுத்து தடவி பார்த்து,
சின்னதொரு நாடகங்களை
நடத்திடும் அந்த நாட்களே
அலாதியாக இருந்தது.
வருடம் முழுக்க உடைகளாய் எடுத்து
நிறைந்திருக்கும் அலமாரிகள்
இன்னுமொரு உடை சேருவதை நினைத்து
ஏளனமாக சிரிக்கிறது.
அப்பாவுடன் கைக்கோர்த்து நடந்து,
அலாதியாய் ரோட்டோர பட்டாசுக் கடையில்,
புஸ்வாணம் வேணும், சங்குசக்கரம் வேணும்
என நான் ஒரு பட்டியலிட
சரவெடியும், அணுகுண்டும், ராக்கெட்டுமாய் நீளும்
அண்ணனின் பட்டியல்.
ஒருபுறம் பரபரக்க பணத்தை எண்ணிடும் அப்பா,
எங்கள் முகம்பார்த்து
இன்னும் ஒரு வெடி சேர்த்து வாங்கக் கொள்ள
சொல்லும் தருணம் மத்தாப்பாய்
மலர்ந்திடும் எங்கள் முகங்கள்.
இன்னும் சற்று நேரத்தில்,
அக்கம் பக்கத்து வாண்டுகளின்
உற்சாகக் குரல்களோடு
வெடிக்கத் துவங்கும் பட்டாசுகள்.
பட்டாசு என்பது தீபாவளியின்
கட்டாயமில்லை என எப்பொழுதிருந்து
வேடிக்கை மட்டும்
பார்க்கத் துவங்கினேன்?
வட்ட வட்டமாய் மருதாணியிடும் அம்மாவின் வளையல் கரங்கள்,
'அரிக்கிதுப்பா சொரிஞ்சிவிடு' என அப்பாவிடம் கொஞ்சிக் கொள்ளும் மூக்கு,
பார்த்து பார்த்து பக்குவமாய் புரண்டு
உறங்கி,
காலையில் தங்கையுடன் போட்டிபோடும்
கைவிரல் சிவப்புகள்.
'மருதாணி வைக்கலாமா மா'?
என வினவுகிறாள் அம்மா,
'ம்ம்ச் எங்க போய்ம்மா மருதாணிய தேடுறது' என நான்
எப்பொழுதிருந்து சலிப்படைய துவங்கினேன்?
கைகளில் பிசுபிசுத்திருக்கும் முறுக்கின் எண்ணை வாசனை கூறிடும் எத்தனை முறை பலகாரம் வைத்திருக்கும்
அறைக்கு சென்று வந்திருப்போமென.
இரண்டொருவர் பகிர்ந்துகொள்ளும்
பலகாரங்களுக்கு மீண்டும் பலகாரங்கள் கொடுக்கவென
கடையில் வாங்கி வந்த 'ஸ்வீட் பாக்ஸ்கள்' ஏளனமாய் எனை பார்த்து
சிரிக்கின்றது.
வெறுமையாக நகரும் இந்த நாளும் மற்றொமொரு நாளென
கடந்து செல்ல பழகிக்கொண்டிருக்கும் வேளையில்
வேருக்குள் புதிதாய் விழும் நீர்த்துளி போலே
நண்பர்கள் அரட்டை அரங்கத்தில்
புது தோழிகளும், நண்பர்களும், சொந்தங்களுமாய்,
பேச்சும், அரட்டையுமாய்,
பண்டிகையின் ஆராவரத்தோடு நிகழ்ச்சிகளுக்கு தயாராக்கிக் கொண்டிருப்பது
எங்கோ, என்றோ தொலைந்த
என் பால்ய கால தீபாவளியை
மீட்டிருக்கும் சாத்தியத்தில்
நிம்மதியாய் உறங்கச் செல்கிறேன்
மற்றுமொரு சாதாரண நாளாய் கடந்திடாமல்
என் வாழ்வில் புது ஒளி வீசிடச் செய்த
எனதினிய FTC சொந்தங்களுக்கு
இனிய தீபவொளி திருநாள் நல்வாழ்த்துகள்