FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 28, 2018, 12:33:34 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: Forum on January 28, 2018, 12:33:34 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 173
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/173.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: JeGaTisH on January 28, 2018, 04:43:03 PM
கணவன் கை பிடிக்கும் ஆசையில்
கால்களோ தரையில் இல்லை ....

கணவன் என்றாலே கண்ணைப் போன்றவன்
அவன் வழியே  உலகை காண்பவள் மனைவி ....

பூக்களைக்  கோர்த்து பரிசளிக்க நினைத்தேன்
வார்த்தைகளில் அன்பு சேர்த்து பேசு அது போதும் என்றாள் ...

வாழ்கையின் ரகசியமே புரிதல்
அதை நீ உணர்த்துகிறாய் உன் பாசத்தால் ....

கடலினில் வந்து போகும் அலைகளைப்  போல
காதலும் அவ்வப்போது வந்து சென்றால் கசக்காது வாழ்க்கை ....

இரு மனங்கள் இணைய  எத்தனையோ  மனங்கள்
உறவென உங்களை வாழ்த்தும்.

நிலவில் மண் எடுத்து நெத்திசுட்டி செய்பவன் அல்ல
நிலவையே தன் மனைவியாக்கிக்  கொள்ளும் மணமகன் .

உயிரை உருக்கி மோதிரமாக உன் கையிலிட்டேன்
எப்போதும் நான் உன்னோடு இருக்கவேண்டும் என்பதால்...

உண்மையான அன்பு உறவில் மட்டும் அல்ல
உணர்விலும் வேண்டும் அப்போது தான்
உறவில்  உயிரோட்டம் இருக்கும்.

இரு கைகள் இணைவது போல்
இரு மனங்களும் ஓர் மனதாகி
வாழ்க்கையை  இணைந்து வாழுங்கள்.


   அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: thamilan on January 28, 2018, 11:39:38 PM
கோடி ஆண்டுகள்
கூடிய தவத்தால்
தேடி வந்த என் தேவதை பெண்ணே
பேரழகான பெண்ணை விடவும்
ஓரளவான உந்தன் அழகே
இருவிழி நுழைந்து
இதயம் பிளந்து
பருவச் சிறகினால் பறக்க வைத்தது
 
கன்னியர் பலரைக் கண்டன
என் கண்கள்
உன்னிடம் தான் என்
உயிரைக் கண்டன
எந்தன் வாழ்வில் நீ இணைந்தாய்- அதன் பின்
நந்தவனமாய் நானிங்கு  ஆனேன்   
எல்லா பூக்களும் என்னில் பூத்தன
சொல்லாக் கதைகளை சொல்லிச் சிரித்தன

வாள்துளைத் தாலும் வளைந்திடா மனம் - உன்
வாள்விழி  பட்டதும் வளைந்து போனது
சருகாய் கிடந்தவன் சரித்திர மானேன்
இறகாய் உதிர்ந்தவன் சிறகெனப் பறந்தேன்

இணையாக ஒரு துணை இல்லாத போது
இணையில்லா இணையாய் இணைந்தவள் நீயே
அணையா விளக்காய் அன்பை ஏற்றி
அணையா திருக்க உன் உயிரை
காவலாய் நிறுத்திய காதலி உனக்கொரு
கோவிலை கட்டினால் கும்பிடும் காதலே

அனலாய் கிடந்தேன் அடியேன் வழியில்
புனலாய் புறப்பட்டு என்னை குளிர்வித்தவள் நீ
கேள்வியாய் இருந்தேன்  கிளியே நீ தான்
வேள்விகள் செய்து விடைகளை தந்தாய்

 காற்றடைத்த பலூன்கள் உன் கைகளில்
 உன்  கை பிடித்ததும் நானும் ஆனேன்
 காற்றடைத்த பலூனாய்
பறக்க நினைக்கிறேன்
சிறகாக நீ வருவாயானால்
மிதக்க நினைக்கிறேன்
காற்றாக நீ வருவாயானால்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: சாக்ரடீஸ் on January 29, 2018, 08:45:23 PM
நான் ஒரு
ஆணாக இருப்பினும்
இப்புகைப்படத்தை
ஒரு பெண்ணின்
விழி வழியே
பார்க்க விரும்புகிறேன் ....

கணவனை பற்றி
மனைவி எழுதும் கிறுக்கல்களைப்  போல்
ஒரு புது முயற்சியில்
கிறுக்கும் கிறுக்கல் இது ...
என்னக்கு நானே வைத்துக்கொள்ளும்
ஒரு தேர்வு இது
தேர்ச்சி பெறுவேனா? ?என்று
பார்ப்போம் ....

என்னவனே
உன்னை பார்த்ததும்
உன்னுடன்  பேசியதும் எனக்கு ஞாபகம் இல்லை
உன் கண்களை கண்ட பின்
என்னை நானே தொலைத்தேனடா...

உன் வியர்வையில்
பூவின் வாசம் கண்டேனடா
உன் மூச்சு காற்றில்
தென்றல் காற்றை கண்டேனடா
உன் குரலில்
கம்பீரத்தை கண்டேனடா
என் காதோரம்
உன் முணுமுணுப்புகளில்
தமிழ் மொழியின் இனிமையை கண்டேனடா ...
உன் விரல்களில்  தழுவலில்
குழந்தையின் சிரிப்பை கண்டேனடா
உன் அரவணைப்பில்
உன்னில் என் தந்தையை கண்டேனடா
உன் ஆறுதல் பேச்சில்
என் தாயின் தாலாட்டை கண்டேனடா
மழைநீரில் வாசம்
மண்ணில்  இருப்பது  போல்
என்னுள் உன் வாசம்
பிரித்து எடுக்க முடியாத  அளவிற்கு
புதைந்து கிடக்கிறது ...

நீ என்னை சீண்டுகையில்
ச்சீய் பொறுக்கி என்று நான் கூற
நீ சற்றும்  கோபம்  கொள்ளாமல்
பொறுக்கி செய்யும் வேலையை பாரு என்று
என்னை நீ சுண்டி இழுக்க
என் வெட்கமும்
உன் எதிர்பார்ப்புகளும்
போட்டி போடும் நேரம் இது ...
இந்த சந்தோஷத்துக்கு நிகரான
வேறு எந்த சந்தோஷமும் இல்லை
இவ்வுலகில் ...

நான் சற்றும்
எதிர் பார்க்காத நேரத்தில்
நீ தரும்
ஒவ்வொரு முத்தங்களும்
கல்வெட்டாய்
என் இதயத்தில் ....

என் கனவுகளை
நிஜமாக்க வந்தவனே ...என்னவனே..!!
உன் அருகாமையில்
நான் திசை தெரியாத உலகில்
அழகாய் தொலைந்து போகிறேனடா ...

உனக்காகவே மண்ணில் பிறந்தேனோ...
உன்னக்காகவே பிறவி எடுதேனோ ...
உன் நேசம் எனக்கு மட்டும் தான் சொந்தம்
என்ற சுயநலத்தோடு ..
உன் அன்பை தனிமையில் அனுபவிக்க
விண்ணில் பறக்க முயல்கிறேன்   ...
முடியமால்
இந்த காற்றடைத்த பலூனை கொண்டு
நான் பறந்து கொண்டிருக்கிறேன் ...விண்ணில் ......
உன் நேசத்தை நேசித்தபடி ....

எங்கிருந்து வந்தாயடா என்னவனே ...!!!

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: MaSha on January 30, 2018, 09:07:15 AM
காற்றடைத்த பலூன்கள்
என் கைகளில்
உன் அன்பு அடைத்த நெஞ்சம் என்னுள்ளே
நீ அருகில் இருக்கையில்
காற்றாகி பறக்கிறேன்
உன் அன்பில் கசிந்துருகி
என் இதயம் பலுனை விட லேசாகி
அந்தரத்தில் மிதக்கிறேன்

உன்னைத் தெரியாத நானும்
என்னைத் தெரியாத நீயும்
ஒன்றாக இணைத்தோம் காதலாலே
இரு மனங்கள் ஒன்றாகின  அன்பாலே
உன்னில் நானும் என்னில் நீயும்
சங்கமமானோம் நம் உணர்வுகளாலே   

உன் சுண்டுவிரல் என்மீது பட்டாலும் கூட
மின்சாரம் பாய்கிறது என்னுள்ளே
நீ என்னை தொட்டு அணைக்கையில் 
கொதிக்கும் எரிமலையாகிறது எனதுடம்பு

உன் பார்வை அப்பப்பா
என் குருதி நாளங்களை ஊடுருவிச் சென்று
என் இதயத்தை தாக்கிடும்
காதல்  ரசம் கொட்டும் உன் பார்வையில்
தேன் உண்ட வண்டாக
மயங்கிப் போனவள் நானடா

நீ நடந்தால் நடை அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் பேச்சழகு
நீ ஒருவன் தான்
இந்த உலகில் எனக்கழகு

நீ என் துணையிருந்தால்
துணிவுடன் எதிர் கொள்வேன் எமனையும்
என் மனம் இன்று இல்லை என்வசம்
என் உடல் பொருள் ஆவி அனைத்தும்
தஞ்சம் உன்வசம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: joker on January 30, 2018, 01:08:29 PM
என்றும் போல்
அன்றும் சூரியன்
கிழக்கே தான் உதித்தது

ஆனால் அன்று
என்றும் போல்
இல்லை எனக்கு

இனிமையாய் கேட்ட
கொலுசொலி என்னை
திரும்பி பார்க்க வைத்தது

கண்டது தேவதை என
நான் உணரும்முன்
கணக்கின்றி காதல்
விதைகளை வீசி சென்று விட்டாள்

திரும்ப உனை  காண
கள்ளேறிய காளையாய் நான்
உன் அவிழ்த்துவிடப்பட்ட
கேசத்தில் அலைக்கழிந்து 
சுற்றிக்கொண்டிருகிறேன்

என் எழுதுகோலும்
உன் பெயரை கவிதையாய்
எழுத காத்திருக்கிறது

இருண்டிருந்த வீதியில்
மின்மினி வெளிச்சம் போல
என் வாழ்வில் வந்தவள்

என் மூச்சுகாற்று தினம்
உன் பெயரையே
உச்சரித்து கொண்டிருக்கும்

சொல்லவியலா சோகங்கள்
மறக்க செய்யும் வித்தை
மழலைக்கு பின் இம்மண்ணில்
என்னவளின் சிரிப்புக்கு மட்டுமே உண்டு

உலகின் எந்த திசைக்கு
நீ பறந்தாலும் அன்பே
காற்றடைப்பட்ட பலூனாய்
உன்னுடன் கை கோர்த்து
பயணிக்க நானிருப்பேன்

           ****ஜோக்கர் ****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: Mr.BeaN on January 30, 2018, 04:51:58 PM
நீல வானம் எங்கும் விரிய...
நெடுங்கடலும் என்முன் கிடக்க!
தென்றல் காற்றின் குளுமை முழுக்க,
திசைகள் யாவையும் குளிரால் நிறைக்க!
என்னவள் கரம்பற்றி நடக்கிறேன் நானே,
நடப்பதாய் நினைத்து பறக்கிறேன் தானே!!!

இறக்கையை விரித்து பறந்து செல்லும்..,
அவளின் அழகோ இயற்கையை வெல்லும்!
பகலின் ஒளிபோல் முகமும் மலர!
இரவின் அழகாய் விழியும் தெரிய!
பகலை வெல்லும் பால்போல் சிரிப்பும்.,
காண்பவர் யாரையும் அவள்பால் ஈர்க்கும்!

அவளின் அழகினை முழுவதும் சொல்ல.,
உலகினில் பொருத்தமாய் உவமைகள் இல்லை!
அவளது அருகினில் வாழ்ந்திடும் போது.,
அகிலமும் புள்ளி போல் இருப்பதாய் தோன்றும்!
இயற்கையை அழகாய் படைத்திட்ட இறைவன்.,
இவளையும் அழகாய் படைத்ததன் நோக்கம்.,

ரசனை இன்றி பிறந்தவன் என்னை.,
ரசனையால் அவள்பால் ஈர்க்கத் தானோ!!!
காதலுடன்  பீன்...
[/font][/size][/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: SweeTie on January 30, 2018, 08:23:17 PM
ஆழக்  கடலின் நீலம்  அழகு
கரையை வருடும் அலைகள் அழகு
அந்திநேரத்து  அடிவானம்  அழகு
வானில் பறக்கும் வர்ண பலூன்கள் அழகு

கால்களை வருடும் கடலின் அலைகள்
மனதை வருடும் அவனின் நினைவுகள்
கண்ணால் தீண்டி குறும்புகள் செய்வான்
காதலைச் சொல்ல ஏனோ   தயக்கம்

காலம்  போனால் திரும்பி வராது
காதல் வலியின்  வேதனை கொடிது
சொல்லாக் காதல்  மண்ணாய் போகும்
சொல்லிட  மனசு  துடியாய் துடித்தது

காதலைச் சொல்ல நாழிகை  பார்த்தேன்
காதலர் தினமும்  கூடவே  வந்தது
நாணத்தில் வதனம்  மேலும் சிவந்தது 
என் காதலை சொன்னது  ஒற்றை ரோஜா

அவன் விழிகளில் நான் சிறைக்கைதியானேன்
மன்மத  அம்புகள் கணையாய் பாய்ந்தன
ஊமை விழிகள் நீரை சொரிந்தன
பட்டாம்பூச்சிகள்  சிறகடித்து பறந்தன 

விருந்துக்கு வந்த பருந்தாய் ஆனான்
முட்களில்  சிக்கின ரோஜா இதழ்கள்
என்னை மறந்தேன்  விண்ணில் பறந்தேன்
தன்னிகரில்லா  பெருமையில் மிதந்தேன்

காதல்  சொல்லும்  வர்ண பலூன்கள்
எம் மூச்சு காற்றை  சுமந்து பறந்தன
உயர உயர  பறந்தன பலூன்கள்
ஒன்றாய் கலந்தன காதல் இதயங்கள்.

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 173
Post by: KoDi on January 31, 2018, 03:35:11 AM
பறக்கும் பாவை

நீல வானில்
நீந்தும் விண்மீனாய்
காற்றுப் பல்லக்கில்
வெண்ணாடை உடுத்தி
இறங்குகிறாய் வெண்பனியாய்

நீர்க்கொண்ட மேகமாய்
காதலில் கரைந்து
காதலால் குளிர்ந்து
இன்பமெனும் மழையாய் நீ பொழிய
அதை உட்கொள்ளும் 
கடற்கரை மணலாய்  நான் மாற 

கரை தொடா அலைகள்
தரை தொடா கால்கள் 
காற்றாடி நெஞ்சமென
கரம் கோர்த்து  பறக்கின்றாய் 
உன்னவன் காதல் கவிதையாய்!
காதல் தேவதையாய் !